ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய- ஸ்ரீ ரங்க நாயகர் ஊஞ்சல் –

சீரங்கநாயகரூசல்.

சீரங்கநாயகரைப்பற்றிப் பாடிய ஊசல் என விரியும்.
ஊசலாவது – ஆசிரியவிருத்தத்தாலாதல், கலித்தாழிசையாலாதல்,
‘ஆடிரூசல்,’ ‘ஆடா மோவூசல்,’ ‘ஆடுகவூசல்’ என ஒன்றால் முடிவுறக் கூறுவது;
இது, தொண் ணூற்றாறுவகைப்பிரபந்தங்களுள் ஒன்று.

——-

தனியன் –

அண்டப் பந்தரில் பற்று கால்களாக அறிவு விட்டம் கரணம் சங்கிலிகள் ஆக
கொண்ட பிறப்பே பலகை வினை அசைப்போர் கொடு நரகம் ஸ்வர்க்கம் பூ வெளிகள் தம்மில்
தண்டல் இல் ஏற்றம் இறக்கம் தங்கல் ஆக தடுமாறி இடர் உழக்கம் ஊசல் மாற
தொண்டர்க்கு ஆம் மணவாளர் பேரர் கூடித் தொகுத்திட்டார் திருவரங்கத்து ஊசல் தானே —

(இ – ள்.) அண்டம் பந்தரில் – உலகமாகிய பந்தலிலே,
பற்று – பாசமே, கால்கள் ஆக – (விட்டத்தைத்தாங்குவதற்குஉரிய) தூண்களாகவும், –
அறிவு – அறிவே, விட்டம் (ஆக) – (சங்கிலியைமாட்டுதற்குஉரிய) உத்தரமாகவும், –
கரணம் – இந்திரியங்களே, சங்கிலிகள் ஆக – சங்கிலிகளாகவும், –
கொண்ட பிறப்பே – எடுத்த பிறவியே, பலகை (ஆக) – ஊஞ்சற்பலகையாகவும், –
வினை – இருவினைகளே, அசைப்போர் (ஆக) – (அவ்வூஞ்சலை) ஆட்டுபவராகவும், –
கொடு நரகம் – கொடிய நரகமும், சுவர்க்கம் – சுவர்க்கமும், பூ – பூமியும், (ஆகிய)
வெளிகள் தம்மில் – வெளியிடங்களில் (செல்லுதலே), இறக்கம் -இறங்குதலும்,
தண்டல் இல் ஏற்றம் – தடையின்றி ஏறுதலும், தங்கல் – நிலைபெறுதலும், ஆக – ஆகவும், –
(இவ்வாறு), தடுமாறி – அலைந்து, இடர் உழக்கும் – துன்பமனுபவிக்கின்ற,
ஊசல் – ஊசலாட்டம்,
மாற – நீங்கும்படி, –
தொண்டர்க்கு ஆ – அடியார்கள் அநுசந்திக்குமாறு, –
மணவாளர் – அழகியமணவாளதாசரும்,
பேரர் – (அவரது) திருப்பேரனாராகிய கோனேரியப்பனையங்காரும்,
கூடி – சேர்ந்து,
திருவரங்கத்து ஊசல் – ஸ்ரீ ரங்கத்தைக் குறித்ததான ஊசலென்னும் பிரபந்தத்தை,
தொகுத்திட்டார் – பாடியருளினார்; (எ – று.)

இது சீரங்கநாயகரூசல் சீரங்கநாயகியாரூசல் என்ற இரண்டு பிரபந் தங்கட்குந் தனியனாகும்:
அதுபற்றியே, ‘திருவரங்கத்தூசல்’ எனப் பொதுப்படக் கூறினர்.
பிள்ளைப்பெருமாளையங்கார் பாடியது – சீரங்கநாயகரூசல் என்றும்,
அவரது திருப்பேரனாராகிய கோனேரியப்பனையங்கார் பாடியது – சீரங்கநாயகியாரூசல் என்றும் அறிக.
உயிர் ஊசலாடுவதுபோல அலைகிற பிறவித் தடுமாற்றத்தினின்று நீங்கித் தொண்டர்கள் உய்யுமாறு
இந்த இரண்டு பிரபந்தங்களும் செய்யப்பட்டன வென்க.
ஊசல்நீங்க ஊசல்பாடினார் என்ற நயம் கருதத்தக்கது; இது – தொடர்பின்மையணி யெனப்படும்.
வடநூலார் இதனை அஸங்கத்யலங்கார மென்பர்: ஒன்றைச்செய்யத் தொடங்கி அதற்குமாறான செயலைச் செய்தல்,
இதன் இலக்கணம். பிறவித்தடுமாற்றத்தை ஊசலாக உருவகஞ்செய்ததற்கு ஏற்ப, அண்டத்தைப் பந்தலாகவும்,
பற்றைக் கால்களாகவும், அறிவை விட்டமாகவும், கரணங்களைச் சங்கிலிகளாகவும், பிறப்பைப் பலகையாகவும்,
வினைகளை ஆட்டுபவராகவும், நரக சுவர்க்க பூமிகளிற் செல்லுதலை இறக்கம் ஏற்றம் தங்குதலாகவும்
உருவகஞ் செய்தன ரென்க; முற்றுருவகவணி.
நரக சுவர்க்க பூ வெளிகள் என்றதற்கு ஏற்பக் கூறாது ஏற்ற மிறக்கம் தங்கல் என மாற்றிக் கூறியது – எதிர்நிரனிறைப்பொருள்கோள்.
தான், ஏ – ஈற்றசைகள்.

———-

காப்பு –

புதுவை நகர்ப் பட்டர் பிரான் சரண்கள் போற்றி பொய்கை பூதன் பேயார் பாதம் போற்றி
சது மறைச் சொல் சடகோபன் சரணம் போற்றி தமிழ்ப் பாணன் தொண்டர் அடிப் பொடி தாள் போற்றி
முது புகழ் சேர் மழிசையர் கோன் பதங்கள் போற்றி முடிக் குல சேகரன் கலியன் கழல்கள் போற்றி
மதுர கவி எதிராசன் கூரத் தாழ்வான் வாழ்வான பட்டர் திருவடிகள் போற்றி —

(இ – ள்.) புதுவை நகர் – ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவவதரித்தருளிய,
பட்டர்பிரான் – பெரியாழ்வாருடைய,
சரண்கள் – திருவடிகள்,
போற்றி – வாழ்வனவாக;
பொய்கை – பொய்கையாழ்வாரும்,
பூதன் – பூதத்தாழ்வாரும்,
பேயார் – பேயாழ்வாரும், (ஆகிய முதலாழ்வார்களுடைய),
பாதம் – திருவடிகள், போற்றி -;
சது மறை சொல் – வடமொழி நான்குவேதங்களின் பொருளையும் தமிழ்ச்சொல்லாற் பாடியருளிய,
சடகோபன் – நம்மாழ்வாரது,
சரணம் – திருவடிகள், போற்றி -;
தமிழ் பாணன் – செந்தமிழ்ப்பாடலில்வல்ல திருப்பாணாழ்வாரும்,
தொண்டர் அடி பொடி – தொண்டரடிப் பொடியாழ்வாரும் ஆகிய இவர்களது,
தாள் – திருவடிகள், போற்றி -;
முது புகழ் சேர் – பழமையாகிய கீர்த்தி பொருந்திய,
மழிசையர்கோன் – திருமழி சைப்பிரானுடைய,
பதங்கள் – திருவடிகள், போற்றி -;
முடி குலசேகரன் – கீரிடமணிந்த (அரசரான) குலசேகராழ்வாரும்,
கலியன் – திருமங்கையாழ்வாரும், (ஆகிய இவர்களது),
கழல்கள் – திருவடிகள், போற்றி -;
மதுரகவி -மதுரகவியாழ்வாரும்,
எதிராசன் – உடையவரும்,
கூரத்தாழ்வான் – கூரத்தாழ்வானும்,
வாழ்வு ஆன பட்டர் – நல்வாழ்வுபெற்ற பட்டரும், (ஆகிய இவர்களது), திருவடிகள் -, போற்றி -; (எ – று.)

————

திரு வாழ திரு ஆழி சங்கம் வாழ திரு அனந்தன் கருடன் சேனையர் கோன் வாழ
அருள் மாறன் முதலாம் ஆழ்வார்கள் வாழ அளவில் குணத்து எதிராசன் அடியார் வாழ
இரு நாலு திரு எழுத்தின் ஏற்றம் வாழ ஏழ் உலகும் நான் மறையும் இனிது வாழ
பெரு வாழ்வு தந்தருள் நம் பெருமாள் எங்கள் பெரிய பெருமாள் அரங்கர் ஆடீர் ஊசல் –1-

(இ – ள்.) திரு – இலக்குமி, வாழ – வாழவும், –
திரு ஆழி சங்கம் – சங்க சக்கரங்கள், வாழ -,-
திரு அனந்தன் – திருவனந்தாழ்வானும்,
கருடன் – பெரியதிருவடியும்,
சேனையர்கோன் – சேனைமுதலியாரும், வாழ -,-
அருள் மாறன் முதல் ஆம் ஆழ்வார்கள் – (எம்பெருமானது) திருவருளைப் பெற்ற நம்மாழ்வார் முதலாகிய ஆழ்வார்கள் பன்னிருவரும், வாழ -,-
அளவு இல் குணத்து எதிராசன் – எல்லையில்லாத நற்குணங்களையுடைய எம்பெருமானாரும்,
அடியார் – (அவரது) அடியார்களும், வாழ -,-
இரு நாலு திருவெழுத்தின் ஏற்றம் – திருவஷ்டாக்ஷரமகாமந்திரத்தின் சிறப்பு, வாழ -,-
ஏழ் உலகும் – மேலேழ் கீழேழ் என்ற பதினான்கு லோகங்களும்,
நால்மறையும் – நான்குவேதங்களும்,
இனிது வாழ – இனிமையாக வாழவும், –
பெரு வாழ்வு தந்தருள் – பெரியவாழ்ச்சியைக் கொடுத்தருள்கின்ற,
நம்பெருமாள் – நம்பெருமாளே!
எங்கள் பெரிய பெருமாள் – எமது பெரியபெருமாளே!
அரங்கர் – திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் – ஊசலாடு வீராக; (எ – று.)

‘வாழ’ என்னும் எச்சங்கள் யாவும் ‘பெருவாழ்வுதந்தருள்’ என்பத னோடு இயையும். வாழ ஊசலாடிர் என இயைப்பினுமாம்.

————————————————–

உயரவிட்ட கற்பகப் பூம் பந்தர் நீழல் ஒண் பவளக் கால் நிறுவி ஊடு போட்ட
வயிரவிட்டத்து ஆடகச் சங்கிலிகள் நாற்றி மரகதத்தால் பலகை தைத்த ஊசல் மீதே
தயிரிலிட்ட மத்து உழக்கும் வெண்ணெய்க்கு ஆடி தட மறுகில் குடமாடி தழல் வாய் நாகம்
அயரவிட்டு அன்றாடிய நீர் ஆடீர் ஊசல் அணி அரங்க நம்பெருமாள் ஆடீர் ஊசல் –2-

———-

மீன் பூத்த விசும்பது போல் தரளம் கோத்து விரித்த நீலப்பட்டு விதானம் தோன்ற
வான் பூத்த கலை மதி போல் கவிகை ஓங்க மதிக்கதிர் போல் கவரி இரு மருங்கும் வீச
கான் பூத்த தனிச் செல்வன் சிலையுள் மின்னல் கரு முகில் போல் கணமணி வாசிகையின் நாப்பண்
தேன் பூத்த தாமரையாள் மார்பில் ஆட தென் அரங்க மணவாளர் ஆடீர் ஊசல் –3-

(இ – ள்.) மீன் பூத்த விசும்பு அது போல் – நட்சத்திரங்கள் விளங்குகிற ஆகாசம்போல,
தரளம் கோத்து விரித்த நீலப்பட்டு விதானம்தோன்றமுத்துக்கள் கோக்கப்பெற்றுப் பரப்பிய நீலப்பட்டினாலியன்ற மேற்கட்டு விளங்கவும், –
வான் பூத்த கலை மதி போல் – ஆகாயத்தில்தோன்றி விளங்குகின்ற பதினாறுகலைகளும் நிரம்பிய பூரணசந்திரன்போல,
கவிகை ஒங்கவெண்கொற்றக்குடை உயர்ந்துவிளங்கவும், –
மதி கதிர் போல் – சந்திரனுடைய கிரணங்கள்போல, கவரி இரு மருங்கும் வீச-வெண்சாமரங்கள் இரண்டுபக்கத்திலும் வீசப்பெறவும்,-
கான் பூத்த தனி செல்வன் சிலையுள்கற்பகக்காட்டில் விளங்குகின்ற ஒப்பற்ற செல்வத்தையுடையவனான இந்திரனது தநுசின் மத்தியில் தோன்றுகின்ற,
கரு முகில் மின்னல் போல்காளமேகத்து மின்னற்கொடிபோல, கணம் மணி வாசிகையின் நாப்பண்கூட்டமாகிய நவரத்தினங்களினாலியன்ற மாலையி னிடையிலே,
தேன் பூத்த நாமரையாள் – தேன்நிறைந்த செந்தாமரைமலரில்வாழ்கின்ற பெரியபிராட்டியார்,
மார்பில் ஆட – (தேவரீரது) மார்பில் அசையாநிற்கவும், –
தென் அரங்க மணவாளர் – தெற்கின்கணுள்ள திருவரங்கம்பெரியகோயிலி லெழுந்தருளிய அழகியமணவாளரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

கான்பூத்ததனிச்செல்வன்சிலை –
இந்திரதநுசு. பல நிறங்களையுடைய இந்திரதநுசு – பலவகையிரத்தினங்களினாலியன்ற வாசிகைக்கும்,
கருமுகிலில் தோன்றும் மின்னல் – அத்திருமாலினதுமார்பில்தோன்றுகின்ற பெரிய பிராட்டியார்க்கும் உவமை.

————-

பூசுரரும் புரவலரும் வான நாட்டுப் புத்தேளிர் குழுவும் அவர் பூவை மாரும்
வாசவனும் மலரவனும் மழு வலானும் வணங்குவான் அவசரம் பார்த்து இணங்கு கின்றார்
தூசுடைய கொடித் தடந்தேர் மானம் தோன்று அச்சுடர் இரண்டும் பகல் விளக்காத் தோன்ற தோன்றும்
தேசுடைய திருவரங்கர் ஆடீர் ஊசல் சீ ரங்க நாயகியோடு ஆடீர் ஊசல் –4-

(இ – ள்.) பூசுரரும் – பூமியில் தேவர்போல விளங்குகின்ற பிராமணரும்,
புரவலரும் – காத்தல்தொழிலில்வல்ல அரசர்களும்,
வானம் நாட்டுபுத்தேளிர் குழுவும் – வானுலகத்தவரான தேவர்களின் கூட்டமும்,
அவர் பூவைமாரும் – அத்தேவர்களது மனைவியரும்,
வாசவனும் – (அத்தேவசாதியார்க்குத்தலைவனான) தேவேந்திரனும்,
மலர் அயனும் – (திருமாலின்நாபித்) தாமரைமலரில் தோன்றி பிரமதேவனும்,
மழு வலானும் – மழுவென்னும் ஆயுதத்தை யேந்திய சிவபிரானும், (ஆகிய இவர்கள்யாவரும்),
வணங்குவான் – (தேவரீரைத்) தொழுதற்காக,
அவசரம் பார்த்து – சமயத்தை எதிர்நோக்கிக் கொண்டு,
இணங்குகின்றார் – கூடுகின்றார்கள்; (அவர்கள்சேவிக்கும்படி), –
தூசு உடைய கொடி தட தேர் – சீலையினாலியன்ற துவசங்கள் கட்டிய பெரியதேரின்மீதும்,
மானம் – விமானத்தின்மீதும்,
தோன்று – காணப்படுகின்ற,
அ சுடர் இரண்டும் – (சூரியன் சந்திரன் என்ற) அந்த இருசுடர்களும்,
பகல் விளக்கு ஆ தோன்ற – பகற்காலத்தில் ஏற்றிய விளக்குப்போல (த் தேவரீரது ஒளிக்குமுன்னே) ஒளிமழுங்கும்படி,
தோன்றும் – விளங்கிக்காணப்படுகின்ற,
தேசு உடைய – பேரொளியையுடைய,
திருவரங்கர் – ஸ்ரீரங்கநாதரே!
ஊசல்ஆடிர் -; சீரங்கநாயகியோடு ஊசல் ஆடிர் -; (எ – று.)

தேரின் மீது வருகின்ற சூரியனும், விமானத்தின் மீது வருகின்ற சந்திரனும், கோடிசூரியபிரகாசரான பெருமானது
பேரொளிக்குமுன்னே பகல்விளக்குப்போலத் தோன்றுவ ரென்க. அ – உலகறிசுட்டு. மானம் – விமான மென்பதன் முதற்குறை.

———–

மலை மகளும் அரனும் ஒரு வடம் தொட்டு ஆட்ட வாசவனும் சசியும் ஒரு வடம் தொட்டு ஆட்ட
கலை மகளும் அயனும் ஒரு வடம் தொட்டு ஆட்ட கந்தனும் வள்ளியும் கலந்து ஓர் வடம் தொட்டு ஆட்ட
அலை மகரப் பாற் கடலுள் அவதரித்த அலர் மகளும் நில மகளும் ஆயர் காதல்
தலை மகளும் இரு மருங்கில் ஆட எங்கள் தண் அரங்க மணவாளர் ஆடீர் ஊசல் –5-

(இ – ள்.) மலைமகளும் – பார்வதியும்,
அரனும் – (அவளதுகணவனான) சிவபிரானும்,
ஒரு வடம் தொட்டு ஆட்ட – ஒருசங்கிலியைப் பிடித்து ஆட்ட, –
சசியும் – இந்திராணியும்,
வாசவனும் – (அவளதுகணவனான) இந்திரனும்,
ஒரு வடம் தொட்டு ஆட்ட -, –
கலைமகளும் – சரசுவதியும்,
அயனும் – (அவளது கணவனான) பிரமனும்,
ஒரு வடம் தொட்டு ஆட்ட -, –
வள்ளியும் – வள்ளியம்மையும்,
கந்தனும் – (அவளதுகணவனான) சுப்பிரமணியமூர்த்தியும்,
கலந்து – ஒன்றுகூடி,
ஓர் வடம் தொட்டு ஆட்ட -, –
அலைமகரம் பாற்கடலுள் அவதரித்த அலர்மகளும் – அலைகளையும் சுறாமீன்களையுமுடைய திருப்பாற்கடலில் (கடைந்தபோது)
தோன்றியவளாகிய தாமரை மலரில் வாழ்கின்ற திருமகளும்,
நிலமகளும் – பூமிப்பிராட்டியும்,
ஆயர் காதல் தலைமகளும் – இடையராற் பெற்றுவளர்க்கப்பட்ட அன்பிற்குஉரிய தேவியாகிய நீளாதேவியும்,
இரு மருங்கில் ஆட – (தேவரீரது) இருபக்கத்திலும் உடனிருந்து ஆடும்படி,
எங்கள் தண் அரங்கம் மணவாளர் – எமது குளிர்ந்த ஸ்ரீரங்கத்தி லெழுந்தருளியுள்ள அழகியமணவாளரே!
ஊசல் ஆடிர் -;

—————————————————————————–

திருவழுதி வளநாடன் பொருனைச் சேர்ப்பன் சீ பராங்குச முனிவன் வகுளச் செல்வன்
தரு வளரும் குருகையர் கோன் காரி மாறன் சடகோபன் தமிழ் வேதம் ததியர் பாட
கருணை பொழி முக மதியம் குறு வேர்வு ஆட கரிய குழல் கத்தூரி நாமத்து ஆட
அருகிருக்கும் தேவியர்கள் அது கொண்டாட அணி அரங்கத்து எம்பெருமான் ஆடீர் ஊசல் –6-

(இ – ள்.) திரு வழுதி வளம் நாடன் – வளப்பமுள்ள பாண்டியநாட்டில் திருவவதரித்தவரும்,
பொருநை சேர்ப்பன் – தாமிரபர்ணிநதியின் கரையில் வாழ்பவரும்,
சீபராங்குசமுனிவன் – (அந்யமதஸ்தராகிய யானைகட்கு அங்குசம்போன்றிருத்தலால்) ஸ்ரீபராங்குசனென்று திருநாமம்பெற்ற யோகியும்,
வகுளம் செல்வன் – மகிழமலர்மாலையையணிந்த சிறப்புடையோரும்,
தரு வளரும் குருகையர் கோன் – மரச்சோலைகள் ஓங்கிவளர்தற்கு இடமான திருக்குருகூரி லுள்ளார்க்குத் தலைவரும்,
காரி மாறன் – காரியென்பவர்க்குத் திருக்குமாரராய் மாறனென்று ஒருதிருநாமம்பெற்றவரும்,
சடகோபன் – சடகோபனென்னுந் திருநாமமுடையவருமான நம்மாழ்வார் அருளிச்செய்த,
தமிழ்வேதம் – வடமொழி வேதத்தின்சாரமாகித் தமிழ் மொழியினாலியன்ற திருவாய்மொழி முதலிய திவ்யபிரபந்தங்களை,
ததியர்(ததீயர்) பாட – பாகவதர்கள் பாடாநிற்கவும், –
கருணை பொழி முகம் மதியம் – திருவருளைச் சொரிகின்ற பூர்ணசந்திரன்போன்ற திருமுகத்திலே,
குறுவேர்வு ஆட – சிறிய வேர்வைநீர் தோன்றி அசையவும்,
கரிய குழல் கத்தூரி நாமத்து ஆட – கருங்குழற்கற்றையும் கத்தூரித்திருநாமமும் ஒருசேர அசையவும், –
அருகு இருக்கும் தேவியர்கள் அது கொண்டாட – இருமருங்கிலுமுள்ள தேவிமார்கள் அந்தவைபவத்தைக் கண்டு கொண்டாடவும், –
அணி அரங்கத்து எம்பெருமான் – அழகிய திருவரங்கநாதனே!
ஊசல் ஆடிர் -;

நம்மாழ்வார் அருளிச்செய்த திவ்யப்ரபந்தங்கள் திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி, திருவாய்மொழி என நான்காம்.

——————————————————————-

வையம் ஒரு பொன் தகட்டுத் தகளியாக வார் கடலே நெய்யாக அதனுள் தேக்கி
வெய்ய கதிர் விளக்காக செஞ்சொல் மாலை மெல்லடிக்கே சூட்டினான் மேன்மையாட
துய்ய மதி மண்டலத்தின் மறுவே ஒப்பச் சோதி விடு கத்தூரி துலங்கு நாமச்
செய்ய திரு முகத்து அரங்கர் ஆடீர் ஊசல் சீ ரங்க நாயகியோடு ஆடீர் ஊசல் –7-

(இ – ள்.) வையம் – நிலவுலகத்தையே,
ஒரு பொன் தகடு தகளி ஆக – ஒப்பற்ற பொன்தகட்டினாற் செய்த அகலாகக்கொண்டு,
வார் கடலே – நீண்ட சமுத்திரத்தையே,
நெய் ஆக -,
அதனுள் தேக்கி – அவ்வகலில் நிறைத்து,
வெய்ய கதிர் – உஷ்ணகிரணனான சூரியனையே,
விளக்கு ஆக – விளக்காகக்கொண்டு (இவ்வாறானபொருளைத் தெரிவிக்கின்ற பாடலைத் தொடங்கி),
செஞ் சொல் மாலை – செவ்விய தமிழ்ச்சொற்களினாலாகிய பாமாலையை,
மெல் அடிக்கே சூட்டினான் – மேன்மையான (தேவரீரது) திருவடிகளில் அணிந்தவராகிய பொய்கையாழ்வார் அருளிச்செய்த,
மேன்மை – (தேவரீரது) மேன்மையைத் தெரிவிக்கின்ற திவ்யப்ரபந்தத்தை,
பாட – (ததீயர்)எடுத்துப்பாடாநிற்க, –
துய்ய மதி மண்டலத்தின் மறுவே ஒப்ப – பரிசுத்தமாகிய சந்திரமண்டலத்திலுள்ள களங்கத்தைப் போல,
சோதி விடு கத்தூரி நாமம் துலங்கு – ஒளிவிடுகின்ற கஸ்தூரிதிலகம் விளங்கப்பெற்ற,
செய்ய திருமுகத்து – அழகிய திருமுகத்தையுடைய,
அரங்கர் – திருவரங்கநாதரே!
ஊசல் ஆடிர் -;
சீரங்கநாயகியோடு ஊசல் ஆடிர் -; (எ – று.)

முதலாழ்வார்மூவரும் திருக்கோவலூரில் ஓர்இடைகழியில் மழைக்காலத்து ஒருநாளிரவில் தங்கியிருக்கையில்,
எம்பெருமான் இருட்டில் அவர்களோடு தானும் ஒருவனாய் நின்று நெருக்க, அப்பொழுது பொய்கையாழ்வார்
“வையந் தகளியா வார்கடலே நெய்யாக, வெய்யகதிரோன் விளக்காகச் செய்ய,
சுடராழியானடிக்கே சூட்டினேன் சொன்மாலை, யிடராழிநீங்குகவே யென்று” என்று முதல்திருவந்தாதிப் பிரபந்தத்தைத் தொடங்கி
வெய்யகதிரினால் விளக்கேற்றின ரென்க.
கீழ்ச்செய்யுளில், ‘சடகோபன்தமிழ்வேதம் ததியர்பாட’ என்று கூறியதற்கு ஏற்ப, இச்செய்யுளிலும் ‘ததீயர்’ என்று
வருவித்துப் பொருளுரைக்கப்பட்டது; மேலும் இங்ஙனமே கூறப்படும்.
இப்பொருளில், மேன்மை – மேன்மையான பிரபந்தத்திற்கு, இலக்கணை;
இனி, பொய்கையாழ்வார் தேவரீரது மேன்மைகளைப் பாட என்றும்,
பொய்கையாழ்வாரது மேன்மையைத் ததீயர்பாட என்றும் கூறுவாரு முளர்; மேலும் இங்ஙனமே காண்க.

————

அன்பு என்னும் நன் பொருள் ஓர் தகளியாக ஆர்வமே நெய்யாக அதனுள் தேக்கி
இன்புருகு சிந்தை இடுதிரியா ஞானத்து இலகு விளக்கு ஏற்றினான் இசையைப் பாட
பொன் புரையும் புகழ் உறையூர் வள்ளி யாரும் புதுவை நகர் ஆண்டாளும் புடை சேர்ந்து ஆட
முன்பிலும் பின்பு அழகிய நம்பெருமாள் தொல்லை மூ வுலகுக்கும் பெருமாள் ஆடீர் ஊசல் –8-

(இ – ள்.) அன்பு என்னும் நல் பொருள் – அன்புஎன்கிற நல்ல பொருளையே,
ஓர் தகளி ஆக – ஒரு அகலாகக் கொண்டு,
ஆர்வமே – பக்தியையே,
நெய் ஆக -,
அதனுள் தேக்கி – அவ்வகலுள் நிறைத்து,
இன்பு உருகு சிந்தை – ஆனந்தத்தினாலே உருகுகின்ற மனத்தையே,
இடு திரி ஆ – அதிலிட்ட திரியாகக்கொண்டு,
ஞானத்து இலகுவிளக்கு ஏற்றினான் – தத்துவஞானத்தினால் விளங்குகின்ற விளக்கை ஏற்றினவராகிய பூதத்தாழ்வாருடைய,
இசையை – புகழ்பெற்ற திவ்யப்ரபந்தத்தை,
பாட – (ததீயர்) பாடாநிற்கவும், –
பொன் புரையும் புகழ் உறையூர் வல்லியாரும் – பெரியபிராட்டியாரைப் போன்ற கீர்த்தியையுடைய திருவுறையூர்நாச்சியாரும்,
புதுவைநகர் ஆண்டாளும் – ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவவதரித்த ஆண்டாளும்,
புடை சேர்ந்து ஆட – தேவரீரது இருபக்கத்திலும் சேர்ந்து ஆடவும், –
முன்பிலும் பின்பு அழகிய நம்பெருமாள் – முற்பக்கத்திலும் பிற்பக்கம் அழகியவரான நம்பெருமாளே!
தொல்லை மூவுலகுக்கும் பெருமாள் – பழமையான மூன்று லோகங்களுக்கும் நாயகரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

“அன்பே தகளியா வார்வமேநெய்யாக, இன்புருகுசிந்தையிடுதிரியா –
நன்புருகி, ஞானச்சுடர்விளக்கேற்றினேன் நாரணற்கு, ஞானத்தமிழ் புரிந்த நான்” என்பது,
பூதத்தாழ்வார் அப்போது அருளிச்செய்த இரண்டாந்திருவந்தாதியின் முதற்பாசுரம்.

——————————————————-

திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் என்ற திகழ் அருக்கன் அணி நிறமும் திகிரி சங்கும்
இருள் கொண்ட கருங்கங்குல் இடையே கோவல் இடை கழியில் கண்ட பிரான் ஏற்றம் பாட
மருக்கொண்ட கொன்றையான் மலரின் மேலான் வானவர் கோன் முதலானோர் மகுட கோடி
நெருக்குண்ட தாள் அரங்கர் ஆடீர் ஊசல் நீளைக்கு மணவாளர் ஆடீர் ஊசல் –9-

(இ – ள்.) இருள் கொண்டகருங் கங்குலிடையே – அந்தகாரம் மிகுந்த கரிய நடுராத்திரியில்,
கோவல் இடைகழியில் – திருக்கோவலூரிலுள்ள ஓர் இடைகழியிலே,
“திரு கண்டேன் – இலக்குமியைக் கண்டேன்,
பொன்மேனி கண்டேன் – அழகிய திருமேனியைக் கண்டேன்,
திகழ் அருக்கன் அணி நிறமும் – விளங்குகின்ற சூரியன்போன்ற அழகிய திரு நிறத்தையும்,
திகிரி சங்கும் – (திவ்வியாயுதங்களாகிய) சக்கரத்தையும் சங்கத்தையும்,
(கண்டேன்-“) என்ற – என்று பாடினவரும்,
கண்ட – (திரு முதலானவர்களை நேரில்) தரிசித்தவருமாகிய,
பிரான் – தலைவரான பேயாழ்வாருடைய,
ஏற்றம் – சிறப்புள்ள பிரபந்தத்தை,
பாட – (ததீயர்) பாடாநிற்க, –
மரு கொண்ட கொன்றையான் – வாசனையையுடைய கொன்றைமலர்மாலையைத் தரித்த சிவபிரானும்,
மலரின்மேலான் – தாமரைமலரில் வீற்றிருப்பவனாகிய பிரமனும்,
வானவர் கோன் – தேவராசனாகிய இந்திரனும்,
முதலானோர் – முதலிய அடியவர்களது,
மகுடம் கோடி – கிரீடங்களின் வரிசைகள்;
நெருக்குண்ட – (அந்தத் தேவர்கள் கீழ்வீழ்ந்து தேவரீரைச் சேவிக்கும்போது) நெருங்கப்பெற்ற,
தாள் – திருவடிகளையுடைய,
அரங்கர் – திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் -;
நீளைக்கு மணவாளர் – நீளாதேவிக்கு மணவாளரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

“திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் றிக”, மருக்கனணிநிற முங்கண்டேன் –
செருக்கிளரும், பொன்னாழிகண்டேன் புரிசங்கங்கைக் கண்டேன், என்னாழிவண்ணன்பாலின்று” என்பது,
பேயாழ்வார் அருளிச் செய்த மூன்றாந்திருவந்தாதியின் முதற்பாசுரம்.

———————————————————————-

நான்முகனை நாரணனே படைத்தான் அந்த நான்முகனும் நக்க பிரானைப் படைத்தான்
யான்முகமாய் அந்தாதி அறிவித்தேன் என்று யார்க்கும் வெளியிட்ட பிரான் இயல்பைப் பாட
பால் முகம் ஆர்வளை நேமி படைகள் காட்ட பாசடைகள் திரு மேனிப் படிவம் காட்ட
தேன் முக மா முளரி அவயவங்கள் காட்ட செழும் தடம் போல் அரங்கேசர் ஆடீர் ஊசல் –10-

(இ – ள்.) ‘நாரணனே – நாராயணனே,
நான்முகனை – நான்கு முகங்களையுடைய பிரமதேவனை,
படைத்தான் – சிருஷ்டித்தான்;
அந்த நான்முகனும் – அந்தப் பிரமனும்,
நக்கபிரானை படைத்தான் – சிவபிரானைச் சிருஷ்டித்தான், (என்கிற இந்த அர்த்தவிசேஷத்தை),
யான் – (எம்பெருமானதுநல்லருளாலே தத்துவஞானம் உதிக்கப்பெற்ற) நான்,
முகம் ஆய் – (பிரசாரஞ்செய்வதில்) முக்கியனாய்க்கொண்டு,
அந்தாதி – அந்தாதி யென்னும்பிரபந்தத்தினால்,
அறிவித்தேன் – (அஜ்ஞான உலகத்தோர்க்குத்) தெரிவிக்கலானேன்,’
என்று – என்றுதொடங்கி,
யார்க்கும் வெளியிட்ட – யாவர்க்கும் (தத்துவத்தை) வெளியிட்டருளிய,
பிரான் – திருமழிசைப் பிரானது,
இயல்பை – சிறந்த தன்மையுள்ள பிரபந்தங்களை,
பாட – (ததீயர்) பாடாநிற்க, –
பால் முகம் ஆர் வளை – பால்போன்ற வெண்ணிறத்தைக் கொண்டுள்ள சங்குபூச்சிகளும்,
நேமி – சக்கரவாகப் பறவைகளும்,
படைகள் – (தேவரீரது) திவ்வியாயுதங்களை,
காட்ட – காட்டாநிற்கவும்,
பசு அடைகள் – பசிய தாமரையிலைகள்,
திருமேனி படிவம் காட்ட – (தேவரீரது) திருமேனிநிறத்தைக் காட்டாநிற்கவும்,
தேன் முகம் மா முளரி – தேனைக் கொண்ட சிறந்த தாமரைமலர்கள்,
அவயவங்கள் காட்ட – (தேவரீரது திருக்கை திருவடி முதலிய) திருவவயவங்களைக் காட்டாநிற்கவும்,
செழுந் தடம் போல் – செழித்த தடாகத்தை யொத்திருக்கிற,
அரங்கேசர் – ஸ்ரீரங்கராஜரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

“நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனுந், தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான் –
யான்முகமாய், அந்தாதிமேலிட்டறிவித்தே னாழ்பொருளைச், சிந்தாமற்கொண்மினீர் தேர்ந்து” என்பது,
திருமழிசைப்பிரான் அருளிச்செய்த நான்முகன்றிருவந்தாதியின் முதற்பாசுரம்.
இதுவன்றி, இவ்வாழ்வார் திருச்சந்தவிருத்தம் என்னும் பிரபந்தமும் அருளிச்செய்திருக்கின்றனர்.
“மாயக்கூத்தா வாமனா வினையேன்கண்ணா கண்கைகால்,
தூயசெய்ய மலர்களாச் சோதிச்செவ்வாய் முகிழதாச்,
சாயச் சாமத்திருமேனி தண்பாசடையாத் தாமரைநீள்,
வாசத்தடம்போல் வருவானே யொருநாள் காணவாராயே” என்ற பாசுரம் பின்னிரண்டடிகளில் கருதத்தக்கது.

————

மருள் இரிய மறம் இரிய அனைத்து உயிர்க்கும் மயல் இரிய வினை இரிய மறையின் பாடல்
இருள் இரிய என்று எடுத்துத் தொண்டர் தங்கள் இடர் இரிய உரைத்த பிரான் இட்டம் பாட
அருள் இரிய அறம் இரிய உலகை ஆண்ட ஆடகத்தோன் அகம் பரன் என்று அபிமானித்த
பொருள் இரிய சொல் இரிய மார்வம் கீண்ட பொன்னி சூழ் திரு வரங்கர் ஆடீர் ஊசல் –11–

(இ – ள்.) அனைத்து உயிர்க்கும் – எல்லாச்சீவராசிகளுக்கும்,
மருள் இரிய – அஜ்ஞாநம் நீங்கவும்,
மறம் இரிய – கொடுமை நீங்கவும்,
மயல் இரிய – (அஜ்ஞாநத்தினால் விளைகின்ற) மதிமயக்கம் நீங்கவும்,
வினை இரிய – இருவினைகளும் நீங்கவும்,
மறையின் பாடல் – வேதத்தின் பொருளமைந்த பாடல்களை,
இருள் இரிய என்று எடுத்து, – “இருளிரிய” என்றுதொடங்கி,
தொண்டர்தங்கள் இடர் இரிய – (அதனைப்பாடுகின்ற) அடியார்களது பிறவித்துன்பமெல்லாம் நீங்கும்படி,
உரைத்த – (பிரபந்தத்தைத்) திருவாய்மலர்ந்தருளிய,
பிரான் – குலசேகரப்பெருமாளுடைய,
இட்டம் – விருப்பான பெருமாள் திருமொழியென்னும்பிரபந்தத்தை,
பாட – (ததீயர்)பாடா நிற்க, –
அருள் இரிய – கருணையில்லாமற்போக,
அறம் இரிய – தருமம் விலகும்படி,
உலகை ஆண்ட – மூவுலகங்களையும் (தானொருவனாகவே) தனியரசாட்சிசெய்த,
ஆடகத்தோன் – இரணியன்,
அகம் பரன் என்று அபிமானித்த பொருள் இரிய – ‘நான்தான் பரதேவதை’ என்று செருக்கியிருந்த தன்மை ஒழியுமாறும்,
சொல் இரிய – (அப்பொருளுக்கு இடமாகிய) சொற்களும் ஒழியுமாறும்,
மார்வம்கீண்ட – (அவ்வசுரனது) மார்பத்தை (நரசிங்கரூபியாய்த்தோன்றிப்) பிளந்தழித்த,
பொன்னிசூழ் திருவரங்கர் – காவேரிநதியினாற் சூழப்பெற்ற திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் -; (எ – று,)

“இருளிரியச் சுடர்மணிகளிமைக்குநெற்றி யினத்துத்தியணிபணமாயி ரங்களார்ந்த,
அரவரசப் பெருஞ்சோதி யனந்தனென்னு மணிவிளங்குமுயர் வெள்ளையணையைமேவித்,
திருவரங்கப் பெருநகருள், தெண்ணீர்ப்பொன்னி திரைக்கையாலடிவருடப் பள்ளிகொள்ளுங்,
கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண் டென்கண்ணிணைக ளென்றுகொலோ களிக்குநாளே” என்பது,
குலசேகராழ்வார் அருளிச்செய்த பெருமாள்திருமொழியின் முதற்பாசுரம்.
ஹாடகம் – பொன். நரசிங்கமூர்த்தியாய் இரணியாசுரனது மார்பைக் கீண்டமாத்திரத்தில்
அகம்பர னென்ற சொல்லும் பொருளும் ஒழிந்தன வென்க.

——-

அரன் என்றும் அயன் என்றும் புத்தன் என்றும் அலற்றுவார் முன் திரு நாரணனே ஆதி
பரன் என்று மறை உரைத்து கிழி அறுத்த பட்டர் பிரான் பாடிய பல்லாண்டு பாட
கரன் என்ற மாரீசன் கவந்தன் என்ற கண்டகரார் உயிர் மடியக் கண்டு இலங்கா
புரம் வென்ற சிலை அரங்கர் ஆடீர் ஊசல் புகழ் உறையூர் வல்லியோடு ஆடீர் ஊசல்-12–

(இ – ள்.) (பரதேவதை), அரன் என்றும் – சிவபெருமானே யென்றும்,
அயன் என்றும் – பிரமதேவனே யென்றும்,
புத்தன் என்றும் – புத்தனே யென்றும்,
அலற்றுவார் முன் – (இவ்வாறு தமக்குத்தோன்றியவாறெல்லாம் வாயினாற்) பிதற்றுகின்ற அந்யமதஸ்தர்கட்கு எதிரில்,
திருநாரணனே ஆதிபரன் என்று – ‘ஸ்ரீமந்நாராயணனே முதலாகிய பரதேதைவ’ என்று,
மறை உரைத்து – (அதற்கு ஆதாரமாகிய) வேதபிரமாணங்களை எடுத்துக்கூறி,
கிழி அறுத்த – (வல்லபதேவபாண்டியன் வித்யாசுல்கமாகக்கட்டிவைத்த) பொற்கிழியை அறுத்துக்கொண்ட,
பட்டர்பிரான் – (அவ்வாறு அந்யமதஸ்தரரீன வித்துவான்களையெல்லாம் வென்றிட்டதனால்) பட்டர்பிரானென்று பட்டப்பெயர்பெற்ற பெரியாழ்வார்,
பாடிய – திருவாய்மலர்ந்தருளிய, பல்லாண்டு. ‘திருப்பல்லாண்டு’ என்னுந் திவ்யப்ரபந்தத்தை,
பாட – (ததீயர்) பாடாநிற்க, –
கரன் என்ற (கண்டகன்) – கரனென்று சொல்லப்பட்ட கொடியவனும்,
மாரீசன் கவந்தன் என்ற கண்டகர் – மாரீசன் கவந்த னென்ற கொடியவரும்,
ஆர் உயிர் மடிய கண்டு – அருமையான உயிர் மடியும்படி கொன்று,
இலங்காபுரம் வென்ற – இலங்காபட்டணத்தைச் சயித்த,
சிலை – (கோதண்டமென்னும்) வில்லையேந்திய,
அரங்கர் – திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் -;
புகழ் உறையூர் வல்லியோடு – புகழ்பெற்ற உறையூர்நாச்சியாரோடு, ஊசல் ஆடிர் -; (எ – று.)

பல்லாண்டு – முதற்குறிப்பால், ‘பல்லாண்டு’ என்றுதொடங்கிய பிரபந்தத்தைக் காட்டும்.
இவர்பாடிய பிரபந்தங்கள் – திருப்பல்லாண்டும், பெரியாழ்வார் திருமொழியும்.

—————————————————————————

மருமாலைப் பசுந்துளவத் தொடைகளோடு வைகறையில் வந்து திருத் துயில் உணர்த்தித்
திரு மாலை திருவடிக்கே சூட்டி நிற்கும் தரு மண்டங்குடிப் பெருமான் சீர்மை பாட
பெருமாலை அடைந்து உலகம் மதி மயங்க பேணாதார் படக் கதிரோன் காணாது ஏக
ஒரு மாலை பகலில் அழைத்து ஒளித்த நேமி ஒளி உள்ளார் அரங்கேசர் ஆடீர் ஊசல் –13-

(இ – ள்.) மரு மாலை – (திருமகளோடு) மருவியுள்ள திருமாலை,
பசுந்துளவம் தொடைகளோடு – பசுமையாகிய திருத்துழாய்மாலையுடனே,
வைகறையில் – விடியற்காலத்தில்,
வந்து – (சந்நிதிக்கு) வந்து,
திருதுயில் உணர்த்தி – (திருப்பள்ளியெழுச்சிபாடித்) துயிலுணரச்செய்து,
திரு மாலை – திருமாலையென்னுந் திவ்வியபிரபந்தத்தை,
திருவடிக்கே சூட்டி நிற்கும் – திருவடிகளிற் சமர்ப்பித்துநிற்கின்ற,
திருமண்டங்குடி பெருமான் – திருமண்டங்குடியில் திருவவதரித்த தொண்டரடிப்பொடியாழ்வாராது,
சீர்மை – சிறப்புள்ள பிரபந்தங்களை,
பாட – (ததீயர்) பாடாநிற்க, –
உலகம் – உலகத்திலுள்ளார்,
பெரு மாலை அடைந்து – பெரிய மயக்கத்தை யடைந்து,
மதி மயங்க – அறிவு கலங்கவும்,
பேணாதார் பட – பகைவர்கள் அழியவும்,
கதிரோன் காணாது ஏக – சூரியன் தோன்றாது மறையவும்,
ஒரு மாலை – ஓரிரவை,
பகலில் – பகற்பொழுதிலே,
அழைத்து – வருவித்து,
ஒளித்த – (சூரியனை) மறைத்த,
ஒளி நேமி உள்ளார் – கோடிசூரியபிரகாசமான திருவாழியாழ்வானை யுடையவராகிய,
அரங்கேசர் – திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

இனி, மருமாலைப்பசுந்துளவத்தொடைகளோடு – நறுமணமுள்ள மாலைகளாகிய திருத்துழாய்மாலைகளோடு
என்று பொருளுரைப்பாருமுளர்,
தொண்டரடிப்பொடியாழ்வார், ஸ்ரீரங்கநாதனுக்குத் திருத்துளவத்தொண்டு செய்து வந்ததோடு, திருப்பள்ளியெழுச்சி, திருமாலை
என்னுந் திவ்வியப்ரபந்தங்களையும்பாடின ரென்க.
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவவதாரஸ்தலமாகிய திருமண்டங்குடியென்னுந் தலம்,
சோழநாட்டில் கபிஸ்தலத்திற்கு வடகிழக்கேயுள்ளது.
‘நிரவதிகதேஜோரூபமான திருவாழியாலே ஆதித்யனை மறைத்தாலும் லோகத்துக்கு மிகவும் வெளிச்சிறப்பு உண்டா மித்தனையன்றோ?
ஆதித்யன் அஸ்தமித்தானென்னும்படி கண்களுக்கு இருண்டுதோற்றுவான் என்’ என்னில், –
இந்தஆதித்யனுடைய தேஜசு கண்ணாலே முகக்கலாம்படி அளவுபட்டிருக்கையாலே தமஸ்ஸு போம்படியாயிருக்கும்;
அங்ஙனன்றிக்கே, திருவாழியாழ்வானுடைய தேஜசு நேர்கொடுநேர் கண்கொண்டு பார்க்கவொண்ணாதபடி
மிக்கிருக்கையாலே பளபளத்துக் கண்ணையிருளப் பண்ணிற்று’ என்ப வாதலால்,
‘ஒருமாலை பகலிலழைத்தொளித்த நேமியொளியுள்ளார்’ என்றார்.

————-

கார் அங்கத் திரு உருவம் செய்ய பாத கமலம் முதல் முடி அளவும் கண்டு போற்ற
சாரங்க முனியை ஊர்ந்து அமலன் ஆதி தனை உரைத்த பாண் பெருமாள் தகைமை பாட
ஆரம் கொள் பாற் கடல் விட்டு அயன் ஊர் ஏறி அயோத்தி நகர் இழிந்து பொன்னி ஆற்றில் சேர்ந்த
சீ ரங்க மணவாளர் ஆடீர் ஊசல் சீ ரங்க நாயகியோடு ஆடீர் ஊசல் –14-

(இ – ள்.) கார் அங்கம் திருஉருவம் – காளமேகம்போன்ற திருவுருவத்தை,
செய்ய பாத கமலம் முதல் – செந்நிறமாகிய திருவடித்தாமரையென்ற உறுப்புமுதல்,
முடிஅளவும் – திருமுடிவரையிலும்,
கண்டுபோற்ற – சேவித்துத்துதிக்கும்படி,
சாரங்கமுனியை ஊர்ந்து – லோகசாரங்கமகாமுனிவர்மேல் ஏறிவந்து,
அமலனாதிதனை உரைத்த – ‘அமலனாதிபிரான்’ என்று தொடங்கும் பிரபந்தத்தைப்பாடியருளிய,
பாண்பெருமாள் – திருப்பாணாழ்வாரது,
தகைமை – பெருமையுள்ள (‘அமலனாதிபிரான்’ என்னும்) பிரபந்தத்தை,
பாட – (ததீயர் எடுத்துப்) பாடாநிற்க, –
ஆரம் கொள் பாற்கடல் விட்டு – முத்துக்களையுடைய திருப்பாற்கடலை விட்டுநீங்கி,
அயன் ஊர் ஏறி – பிரமதேவனது நாடாகிய சத்தியலோகத்திற் சென்றிருந்து,
அயோத்திநகர் இழிந்து – திருவயோத்தியில் இறங்கிச் சிலகாலம் வாழ்ந்து, (பின்பு),
பொன்னி ஆற்றில் சேர்ந்த – உபயகாவேரியின் மத்தியிற் சேர்ந்த,
சீரங்கமணவாளர் – ஸ்ரீரங்கக்ஷேத்திரத்தி லெழுந்தருளிய அழகியமணவாளரே!
ஊசல் ஆடிர் -; சீரங்கநாயகியோடு ஊசல் ஆடிர் -; (எ – று.)

லோகசாரங்கமகாமுனிவர் திருவரங்கநாதனுக்குத் திருமஞ்சனம் சமர்ப்பித்துவரும்நாளில் ஒருகால் திருமஞ்சனங்கொணருமாறு
தென்திருக்காவேரிக்குச் செல்லுகையில், வீணையுங் கையுமாய் மெய்ம்மறந்து ஸ்ரீரங்கநாதனைப் பாடிக்கொண்டிருந்த
திருப்பாணாழ்வார் திருவடிகளில் அபசாரப்பட்டு, அந்தஅபசாரம் தீருமாறு ஸ்ரீரங்கநாதனது நியமனத்தால்
அவ்வாழ்வாரைத்தமதுதோளின்மேலெழுந்தருளப்பண்ணிக்கொண்டு ஸ்ரீரங்கநாதனது திருமுன்பேவிட,
அவ்வாழ்வார் “அமலனாதிபிரானடியார்க்கென்னையாட்படுத்த,
விமலன்விண்ணவர்கோன்விரையார்பொழில் வேங்கடவன்,
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீண்மதிளரங்கத்தம்மான்,
திருக்கமலபாதம் வந்து என் கண்ணினுள்ளன வொக்கின்றவே” என்று தொடங்கிப் பாதாதிகேசாந்தமாக அப்பிரானை அநுபவித்தனரென்க.
பிரமதேவன் திருப்பாற்கடலினின்று ஆவாகநம்பண்ணிப்பிரதிஷ்டைசெய்த விஷ்ணுமூர்த்தியைத் திருவாராதனஞ்செய்து கொண்டிருக்க,
பின்பு, சூரியவமிசத்துத்தோன்றிய இக்ஷ்வாகுமன்னன் அப்பிரமனிடத்தினின்று அப்பெருமானைப்பெற்றுத்
திருவயோத்தியில் திருவாராதனஞ்செய்துவர, பிறகு குலமுறையாகத் தனக்குக்கிடைத்த அப்பெருமானை இராமபிரான்
தனக்கு அந்தரங்கனான ஸ்ரீவிபீஷணாழ்வானுக்குத் தந்தருள, அவன் அப்பிரானை எழுந்தருள்வித்துக் கொண்டு
தனது இலங்கைநோக்கிச் செல்லுகையில், அப்பெருமான் இடைவழியில் உபயகாவேரி மத்தியிலே புடைபெயராது
விமானத்துடனே நிலைநின்றருளினான்; அவ்விடமே ஸ்ரீரங்க மெனப்படுவது.

———————————————————————————

விழி பறித்து வெள்ளியை மா வலியை மண்ணும் விண்ணுலகும் பறித்த குறள் வேடத்து உம்மை
வழி பறித்து மந்திரம் கொண்டு அன்பர் தங்கள் வல்வினையைப் பறித்த பிரான் வண்மை பாட
சுழி பறித்த கங்கை முடி அடியில் தோயத் தொழுது இரக்கும் முக்கணன் நான் முகனைச் செய்த
பழி பறித்துப் பலி ஒழித்தார் ஆடீர் ஊசல் பள்ளி கொண்ட திரு அரங்கர் ஆடீர் ஊசல் –15–

(இ – ள்.) வெள்ளியை – சுக்கிராசாரியனது,
விழி – ஒற்றைக்கண்ணை,
பறித்து – (தருப்பைப்புல்நுனியாற்) குத்திக்கிளறி,
மாவலியை – மகாபலிசக்கரவர்த்தியினிடத்தினின்றும்,
மண்ணும் – பூலோகத்தையும்,
விண் உலகும் – தேவலோகத்தையும்,
பறித்த – தன்னுடையனவாக்கிக்கொண்ட,
குறள் வேடத்து – வாமநவடிவத்தையுடைய,
உம்மை, தேவரீரை,
வழிபறித்து – (மணவாளக்கோலத்தோடு திருமணங்கொல்லையிற்சென்றபோது) இடைவழியே மடக்கி (த் தேவரீரது) பொருள்களைக் கவர்ந்து,
மந்திரம் கொண்டு – (தேவரீரிடத்தில்) திருமந்திரோபதேசம் பெற்றுக்கொண்டு, (அந்தத்திருமந்திரத்தினால்),
அன்பர்தங்கள் வல் வினையை பறித்த – அடியார்களது கொடிய இருவினைப்பற்றையும் ஒழித்தருளிய,
பிரான் – திருமங்கையாழ்வாரது,
வண்மை சிறந்தபாடல்களை,
பாட – (ததீயர்) பாடாநிற்க, –
சுழி பறித்த கங்கை முடிசுழிகளினாற் கல்லுந் தன்மையுள்ள (சுழிகளையுடைய) கங்காநதியைத் தரித்த சிரசானது,
அடியில் தோய – திருவடியிற் பொருந்தும்படி,
தொழுது இரக்கும் – (தேவரீரை) வணங்கிப்பிரார்த்திக்கின்ற,
முக்கணன் – மூன்றுகண்களையுடைய சிவபிரான்,
நான்முகனை செய்த – நான்குமுகங்களையுடைய பிரமனது சிரசைக் கொய்ததனா லுண்டாகிய,
பழி – பிரமகத்திதோஷத்தை,
பறித்து – நீக்கி,
பலி ஒழித்தார் – (அச்சிவபிரான் தனது பிரமகத்திதீருமாறு செய்த) பிக்ஷாடநத்தைத் தீர்த்த நம்பெருமாளே!
ஊசல் ஆடிர் -;
பள்ளி கொண்ட திருவரங்கர் – (திருவநந்தாழ்வான்மீது) பள்ளிகொண்டருளிய திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

திருமங்கையாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய திவ்யப்ரபந்தங்கள் – பெரியதிருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம்,
திருவெழுகூற்றிருக்கை, சிறியதிருமடல், பெரியதிருமடல் என்னும் ஆறுபிரபந்தங்கள்;
இவை – நம்மாழ்வார் நான்குவேதங்களின் சாரமாக அருளிச்செய்த நான்கு திவ்யப்ரபந்தங்கட்கு ஆறுஅங்கம்போலு மென்பர்.
விழிபறித்து மண்ணும் விண்ணும் பறித்த தேவரீரிடத்துத் திருமங்கையாழ்வார்
வழிபறித்து உலகோர் இருவினையைப் பறித்தார் என்னும் நயமும்,
மாவலியினிடத்து இரந்த தேவரீர் சிவபிரானது இரத்தலைப் போக்கினீர் என்னும் நயமும் கருதத்தக்கன.
பறித்த என்ற சொல் ஒருபொருளிற் பலமுறை பயின்றுவந்தது – சொற்பொருட்பின்வருநிலையணியாம்.

———

போதனார் நெட்டு எழுத்தும் நமனார் இட்ட குற்று எழுத்தும் புனல் எழுத்தாய்ப் போக மாறன்
வேதம் ஆயிரம் தமிழும் எழுதி அந்நாள் மேன்மை பெறு மதுரகவி வியப்பைப் பாட
ஓதம் ஆர் மீன் வடிவாய் ஆமை ஏனத்து உருவாகி அரி குறள் மூ இராமராகி
கோது இலாக் கண்ணனாய் கற்கி ஆகும் கோயில் வாழ் அரங்கேசர் ஆடிர் ஊசல் –16-

(இ – ள்.) போதனார் நெட்டெழுத்தும் – தாமரைமலரில் வாழ்கின்ற பிரமன் விதித்துஎழுதிய நெட்டெழுத்தும்,
நமனார் இட்ட குற்றெழுத்தும் – யமன் எழுதிய குற்றெழுத்தும்,
புனல் எழுத்து ஆய் போக – நீரில் எழுதிய எழுத்துப்போல மறைந்து விடும்படி, –
மாறன் வேதம்ஆயிரம் தமிழும் எழுதி – நம்மாழ்வார் அருளிச்செய்த தமிழ்வேதமாகிய திருவாய்மொழி ஆயிரம்பாசுரங்களையும் பட்டோலைகொண்டு எழுதி,
(அதனால்), அ நாள் மேன்மை பெறு – அக்காலத்திற்பெருமைபெற்ற,
மதுரகவி – மதுரகவிகளது,
வியப்பை – கொண்டாடத்தக்க பாடல்களை,
பாட – (ததீயர்) பாடா நிற்க, –
ஓதம் ஆர் மீன்வடிவு ஆய் – கடலில் திரிகின்ற மத்ஸ்யத்தின் வடிவாகியும்,
ஆமை ஏனத்து உரு ஆகி – கூர்மம் வராகம் இவற்றின் உருவமாகியும்,
அரி குறள் மூ இராமர் ஆகி – நரஸிம்ஹமும் வாமநமும் பரசுராமரும் தசரதராமரும் பலராமரும் ஆகியும்,
கோது இலா கண்ணன் ஆய் – குற்றமில்லாத கிருஷ்ணனாகியும்,
கற்கி ஆகும் – கல்கியாகத் திருவவதரிக்கவும் போகின்ற,
கோயில் வாழ் அரங்கேசர் – திருவரங்கம் பெரியகோயிலில் வாழ்கின்ற ஸ்ரீரங்கராஜரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

ஓருயிர் பிறப்பதுமுதல் இறக்குமளவும் அநுபவிக்கவேண்டியவை முழுவதையும் விதித்துப் பிரமன் எழுதியது
விரியுமாதலால், அதனை ‘நெட்டெழுத்து’ என்றும்;
யமன் தண்டனை விதித்தற்பொருட்டாக அவனது கணக்கனாகிய சித்திரகுப்தனென்பவன் ஓருயிர்செய்கின்ற
பாவத்தைமாத்திரங் குறித்துக்கொள்வது பிரமனது எழுத்துப்போல அத்துணை விரியாதாகலின், அதனை ‘குற்றெழுத்து’ என்றுங் கூறினார்.
நம்மாழ்வார் வேதத்தின் சாரமாக அருளிச்செய்த திருவாய்மொழி ஆயிரம்பாசுரங்களையும்
அவரது சீடரான மதுரகவியாழ்வார் பட்டோலைகொண்டன ரென்க.
மதுரகவியாழ்வார் அருளிச்செய்த பிரபந்தம், கண்ணிநுண்சிறுத்தாம்பு எனப்படும்.
இது பகவானது அமிசமான நம்மாழ்வாரைப் பற்றிப் பாடியது ஆதலாலும், நம்மாழ்வார் எம்பெருமானுக்குப் புத்ரஸ்தாநீயராதலாலும்,
இப்பாசுரத்தைப் பாடுவதனால், ஸ்ரீரங்கநாதர் திருவுள்ளமுவப்பரென்க.
“தேவுடைய மீனமாயாமையா யேனமா யரியாய்க் குறளாய்,
மூவுருவிலிராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில், …… அரங்கமே” என்ற பெரியாழ்வார் பாசுரத்தை
அடியொற்றியன, இச்செய்யுளின் பின்னிரண்டடிகள்.

————–

ஆர் அமுதின் இன்பமிகு சடகோபன் சொல் ஆயிரமும் தெரிந்து எடுத்தே அடியார்க்கு ஓதி
நாரதனும் மனம் உருக இசைகள் பாடும் நாதமுனி திருநாம நலங்கள் பாட
பாரதனில் பாரதப் போர் முடிய மூட்டி பகை வேந்தர் குலம் தொலைய பார்த்தன் தெய்வத்
தேரதனில் வரும் அரங்கர் ஆடீர் ஊசல் சீ ரங்க நாயகியோடு ஆடீர் ஊசல் –17–

(இ – ள்.) ஆர் அமுதின் – அருமையாகிய தேவாமிருதத்தைக்காட்டிலும்,
இன்பம்மிகு – இன்சுவைமிக்க,
சடகோபன் சொல் ஆயிரமும் நம்மாழ்வார்திரு வாய்மலர்ந்தருளிய ஆயிரம்பாடல்களையும்,
தெரிந்து எடுத்து – கண்டுஎடுத்து,
அடியார்க்கு ஓதி – பக்தர்களுக்கு (அவற்றை) உபதேசித்து,
நாரதனும் மனம்உருக இசைகள் பாடும் – (இசைபாடுதலில்வல்ல) நாரதமுனிவனும் மனங்கரையும்படி தேவகானத்தாற்பாடுகின்ற,
நாதமுனி – ஸ்ரீமந்நாதமுனிகள் அருளிச்செய்துள்ள,
திருநாமம் நலங்கள் – (எம்பெருமானது) திருநாம வைபவத்தைப்புலப்படுத்துகின்ற பாடல்களை,
பாட – (ததீயர்) பாடாநிற்க, –
பார் அதனில் – பூமியிலே,
பாரதம் போர் முடிய மூட்டி – பாரதயுத்தத்தை (ப் பூமிபாரம்) தொலையும்படி மூள்வித்து,
பகை வேந்தர் குலம் தொலைய – பகையரசர்களாகிய துரியோதனாதியரது வம்சம் அழியும்படி, (ஸ்ரீகிருஷ்ணாவதாரத்திலே),
பார்த்தன் தெய்வம் தேர்அதனில் வரும் – அருச்சுனனது (அக்கினியாற் கொடுக்கப்பட்டுத்) தெய்வத்தன்மை யமைந்த தேரின்மீது ஏறிச் சாரத்தியஞ்செய்த,
அரங்கர் – திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் – சீரங்கநாயகியோடு ஊசல்ஆடிர் -; (எ – று.)

மதுரகவிகள் அருளிச்செய்த கண்ணிநுண்சிறுத்தாம்பு என்னுந் திவ்ய ப்ரபந்தத்தை நாதமுனிகள் பன்னீராயிரம் உரு
தேவகானத்தாற் பாடி நம்மாழ்வாரது திருவருளைப் பெற்று அவர்முகமாகத் திருவாய்மொழி முதலானவற்றை யடைந்து
உலகோர்க்கு உபகரித்தன ரென்க. நாதமுனி திருநாம நலங்கள் என்பதற்கு – நாதமுனிகளது திருநாமச்சிறப்பை யென்று பொருள்கூறினுமாம்.

————

வம்பமரும் சிகை முந்நூல் தரித்த ஞானி வாதியரை வெல் ஆளவந்தார்க்கு அன்பாம்
எம்பெருமானார்க்கு எட்டும் இரண்டும் பேசி இதம் உரைத்த பெரிய நம்பி இரக்கம் பாட
தும்புரு நாரதர் கீதம் பாட தொண்டர் குழாம் இயல்பாட சுருதி பாட
நம்பெருமாள் திருவரங்கர் ஆடீர் ஊசல் நான்முகனார் தாதையார் ஆடீர் ஊசல் –18-

(இ – ள்.) சிகை – குடுமியையும்,
முந்நூல் – யஜ்ஞோபவீதத்தையும்,
தரித்த -, வம்பு அமரும் – புதுமை பொருந்திய,
ஞானி – தத்துவஞான முடையவராகிய,
வாதியரைவெல் – (தம்மோடு) வாதஞ்செய்யவருபவர்களை யெல்லாம் வென்ற,
ஆளவந்தார்க்கு – ஸ்ரீஆளவந்தாரிடத்தில்,
அன்புஆம்-பக்தியுடையவராகிய,
எம்பெருமானார்க்கு-உடையவர்க்கு,
எட்டும்- திருவஷ்டாக்ஷரமகாமந்திரத்தையும்,
இரண்டும் – திருத்வயத்தையும்,
பேசி – உபதேசித்து,
இதம் – நன்மைபயக்கத்தக்க சரமச்லோகத்தையும்,
உரைத்த – உபதேசித்த,
பெரியநம்பி – பெரியநம்பியென்னும் ஆசாரியர் அருளிச்செய்த,
இரக்கம் – (பகவானது) கிருபாவிசேஷத்தைத் தெரிவிக்கும் பாடல்களை,
பாட – (ததீயர்) பாடாநிற்கவும், –
தும்புரு நாரதர் – தும்புரு நாரதர் என்கின்ற இருவரும்,
நாத கீதம் பாட – இன்னோசையுள்ள கீதங்களைப் பாடவும், –
தொண்டர் குழாம் – அடியார்களின் கூட்டங்கள்,
இயல் பாட – இயலுக்கென்று அமைந்த திவ்யப்ரபந்தங்களை யெடுத்துப்பாடவும், –
(பின்னும் சில அடியார்களின் கூட்டங்கள்), சுருதிபாட – வேதபாராயணஞ்செய்யவும், –
நம்பெருமாள் – நம்பெருமாளே! திருவரங்கர் – ஸ்ரீரங்கநாதரே! ஊசல் ஆடிர் -;
நான்முகனார் தாதையார் நான்குமுகங்களையுடைய பிரமனுக்குத் தந்தையாரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

விஸிஷ்டாத்வைதஸந்யாஸிகள்மற்றைச்சன்னியாசிகள் போலவல்லாமல் சிகாயஜ்ஞோபவீதங்களைப் பெற்றிருப்ப ராதலால்,
அவ்வகையிற்சேர்ந்த ஸ்ரீஆளவந்தாரை “சிகை முந்நூல் தரித்த ஞானி’ என்றார்.
வம்பமரும் ஞானிக்கு அடை, அவர் வாதியரை வென்றமையை, ஆக்கியாழ்வானை
வென்று ஆளவந்தாரென்று பெயர். பெற்றவிடத்துங் காண்க.
ஆளவந்தார் திருநாடலங்கரித்தபோது அவர்கொண்டிருந்த மூன்றுகுறைகளையும் எம்பெருமானார் நீக்கியவ ராதலால்,
“ஆளவந்தார்க்கன்பாமெம்பெருமானார்’ என்றார்.

பெரியநம்பி ஸ்ரீராமாநுசனுக்குத் திருவிலச்சினைசாதித்துத் திருமந்திரம் யவற்றை உபதேசித்தன ராதலால்,
“எம்பெருமானார்க்கு எட்டு மிரண்டும் பேசி யிதமுரைத்த பெரியநம்பி’ எனப்பட்டார்.
இங்குக் கூறியவற்றின் விவரங்களையெல்லாம் குருபரம்பாராப்ரபாவத்திற் பரக்கக்காணலாம்.
எட்டு இரண்டு என்பன – எண்ணலளவையாகுபெயர்கள்.
இதமுரைத்த என்பதற்கு – ஆத்மஹிதமான அர்த்தவிசேஷங்களை உபதேசித்த என்று பொருள்கூற இடமுண்டு.
இயல்என்பது – இயற்பா; அன்றி, எம்பெருமானுக்கு முன்பு சேவிக்கப்படுகின்ற தமிழ்வேதபாராயணமுமாம்.
பெரியநம்பிஇரக்கம் – பெரியநம்பிகளது கிருபாவிசேஷத்தை, பாட – (ததீயர்) பாடாநிற்க என்று உரைத்தல் சாலும்

————

ஐங்கோலும் ஒரு கோலும் நீர்க் கோலம் போல் அழிய முனிந்து அறு சமயம் அகற்றி எங்கள்
செங்கோலே உலகு அனைத்தும் செல்ல முக்கோல் திருக்கையில் கொள் எதிராசன் செயத்தைப் பாட
சங்கு ஓலம் இடும் பொன்னித் துறையின் நின்றே தவழ்ந்து ஏறி மறுகு தொறும் தரளம் ஈனும்
நம் கோயில் நம் பெருமாள் ஆடீர் ஊசல் நக்கன் மூதாதையர் ஆடீர் ஊசல் –19–

(இ – ள்.) ஐங்கோலும் – (மன்மதனது) பஞ்சபாணங்களும்,
ஒருகோலும் – (அத்வைதஸந்யாஸிகட்குஉரிய) ஏகதண்டமும்,
நீர் கோலம் போல் அழிய – நீரிலிட்ட கோலம்போல அழியும்படி,
முனிந்து – கண்டித்து,
அறு சமயம் அகற்றி – (புறச்சமயங்களாகிய) ஷண்மதங்களையும் நிரஹித்து, –
எங்கள் செங்கோலே – வைஷ்ணவர்களாகிய எங்களது செவ்விய ஆட்சியே (வைஷ்ணவமதமே),
உலகு அனைத்தும் செல்ல – உலகமுழுதுஞ் சென்றுபரவும்படி,
முக்கோல் திரு கையில் கொள் – திரிதண்டத்தைத் தமது திருக்கையிற் கொண்டுள்ள,
எதிராசன் – ராமாநுஜமுனிவரது,
செயத்தை – வெற்றியை,
பாட – (ததீயர்) எடுத்துப்பாடாநிற்க, –
சங்கு – சங்குப்பூச்சிகள்,
ஓலமிடும் பொன்னி துறையினின்று – ஒலிக்கின்ற காவேரியின் துறையிலிருந்து,
தவழ்ந்து ஏறி – ஊர்ந்துஏறிவந்து,
மறுகு தொறும் – தெருக்களிலெல்லாம்
தரளம் ஈனும் – முத்துக்களைப் பெறுதற்கு இடமான,
நம் கோயில் – நமது திருவரங்கம்பெரியகோயிலி லெழுந்தருளியுள்ள, நம்பெருமாள் -! ஊசல் ஆடிர் -;
நக்கன் மூதாதையார் – சிவபெருமானுக்குப் பாட்டனாரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

உடையவர் மன்மதபாணங்கட்கு இலக்காகாது விரக்தராய், அத்வைத நிரஸநம் செய்து வேதபாஹ்யமதங்களின்
கொண்டாட்டத்தையும் ஒழித்து, உலகமெங்கும் வைஷ்ணவமதத்தைப் பரவச்செய்து தமது ஜயஸ்தம்பத்தை
ஸ்ரீரங்கத்தில் நாட்டியமை முதலிரண்டடிகளில் விளக்கப்பட்டது.
எதிராசன் செயத்தை என்பதற்கு – உடையவர் அருளிச் செய்த (எம்பெருமான்விஷயமான) வெற்றிப்பாடல்களைத்
ததீயர்பாடாநிற்க என்று உரைப்பாரு முளர். நக்கன் = நக்நன்; திகம்பரன்.

———–

அவத்தப் புன் சமயச் சொல் பொய்யை மெய் என்று அணி மிடறு புழுத்தான் தன் அவையின் மேவி
சிவத்துக்கு மேல் பதக்கு உண்டு என்று தீட்டும் திருக் கூர வேதியர் கோன் செவ்விட பாட
பவத்துக்கம் பிணி நீங்க நரகம் தூர பரம பதம் குடி மலிய பள்ளி கொள்ளும்
நவத்துப்புச் செங்கனி வாய்க் கரிய மேனி நம்பெருமாள் அரங்கேசர் ஆடீர் ஊசல் –20-

(இ – ள்.) அவத்தம் புல் சமயம் சொல் பொய்யை – பயனற்றதும் இழிந்ததுமாகிய சைவசமயத்தைச்சார்ந்த பொய்ச்சொற்களையெல்லாம்,
மெய் என்று – மெய்ப்பொருளென்று நம்பி, (அதனால் ஸ்ரீஉடையவர் திருவடிகளில் அபசாரப்பட்டு, அத்தீவினையின்பயனாக),
அணிமிடறு புழுத்தான் தன் – அழகிய கழுத்துப்புழுத்தவனாகிய க்ரிமிகண்டசோழனது,
அவையில் – சபையிலே,
மேவி – தாம் எழுந்தருளி,
“சிவத்துக்கு மேல் பதக்கு உண்டு’ என்று -, தீட்டும் – எழுதின,
திரு கூர வேதியர் கோன் – திருக்கூரமென்னும் ஊரிற் பிறந்த பிராமணசிரேஷ்டரான கூரத்தாழ்வானது,
செவ்வி – சிறப்புக்களை,
பாட – (ததீயர் எடுத்துப்) பாடாநிற்க, –
பவம் துக்கம் பிணி நீங்க – இப்பிறவியில்நேரக்கூடிய துன்பமும் நோயும் நீங்கவும்,
நரகம் தூர-நரகக்குழிகள் தூர்ந்துபோகவும்,
பரமபதம் குடி மலிய – பரமபதத்தில் குடிகள் நிறையவும்,
பள்ளிகொள்ளும் – சயனத்திருக்கோலமாகச் சேவைசாதிக்கின்ற,
நவம் துப்பு செங் கனி வாய் – புதிய பவழத்தையும் செந்நிறமுள்ள கொவ்வைக்கனிபோன்ற வாயையும்,
கரிய மேனி – கார்நிறமுள்ள திருமேனி நிறத்தையுமுடைய, நம்பெருமாள் -! அரங்கேசர் -! ஊசல் ஆடிர் -; (எ – று.)

ஒருசோழன் கள்ளப்பொய்ந்நூலாகிய சைவாகமத்தை மெய்யென்றுநம்பி, சிவனுக்கு மேற்பட்ட பரம்பொருள்இல்லை
என்னும் பொருளுள்ள “சிவாத்பரதரம் நாஸ்தி’ என்னும் வாக்கியத்தை எழுதி வித்வான்களிடம் நிர்ப்பந்தித்துக்
கையெழுத்துவாங்கிவருகையில், தன்சபைக்குவருவித்த கூரத்தாழ்வானையும் அதனிற்கையெழுத்திடும்படி நிர்ப்பந்திக்க,
சிவமென்பதற்கு – குறுணியென்னும் பொருளும் உள்ள தாதலால்,
அச்சிவத்துக்குமேல் பதக்கு என்பது உண்டு என்னும் பொருளுள்ள “த்ரோணம் அஸ்தி தத: பரம்’ என்னும் வாக்கியத்தை எழுதிக்
கூரத்தாழ்வான் கையெழுத்திட்டன ரென்க.
சோழன் செய்கின்ற உபத்திரவம் தாங்கமாட்டாது ஸ்ரீஉடையவர் அவன் மிடறு புழுத்துச் சாகும்படி அபிசாரம் செய்ததனால்,
அவன் மிடறுபுழுத்து க்ரிமிகண்டனாயின னென்பது, இங்கு அறியத்தக்கது.
“திருக்கூரவேதியர் கோன்செவ்விபாட’ என்பதற்கு – கூரத்தாழ்வான் அருளிச்செய்த அழகிய தோத்திரப்
பாடல்களைத் ததீயர் பாடாநிற்க என்று பொருள்கூறவும் இடமுண்டு.

————–

சந்து ஆடும் பொழில் பூதூர் முக்கோற் செல்வன் தன் மருகனாகி இரு தாளுமான
கந்தாடைக் குலதீபன் முதலியாண்டான் கடல் ஞாலம் திருத்தி யருள் கருணை பாட
கொந்தாரும் துளவாட சிறை வண்டாட குழலாட விழி ஆட குழைக்காது ஆட
நந்து ஆட கதை ஆட திகிரி ஆட நல் மாடத் திருவரங்கர் ஆடீர் ஊசல் -21-

(இ – ள்.) சந்து ஆடும் பொழில் – அழகுநிறைந்த சோலைகளையுடைய,
பூதூர் – ஸ்ரீபெரும்பூதூரில் திருவவதரித்த,
முக்கோல் செல்வன்தன் – திரிதண்டத்தை யேந்திய உடையவரது,
மருகன் ஆகி – மருமகனாய்,
இரு தாளும் ஆன – (அவரது) இரண்டு திருவடிநிலைகளுமாகிய,
கந்தாடை குலம் தீபன் முதலியாண்டான் – கந்தாடைக்குலத்திற்கு விளக்குப்போன்ற முதலியாண்டான்,
கடல் ஞாலம் திருத்திஅருள் – கடலினாற் சூழப்பெற்ற நிலவுலகத்தி லுள்ளாரை (வைஷ்ணவராகுமாறு) சீர்திருத்தியருளிய,
கருணை – கிருபாவிசேஷத்தை,
பாட – (ததீயர் எடுத்துப்) பாடாநிற்க, –
கொந்து ஆரும் துளவு ஆட – கொத்துக்கொத்தாக நிரம்பிய திருத்துழாய்மாலை அசையவும்,
சிறை வண்டு ஆட – (அந்தத்திருத்துழாய்மாலையில் மொய்க்கின்ற) சிறகுகளையுடைய வண்டுகள் அசையவும்,
குழல் ஆட – (அத்திருத்துழாய்மாலையைச்சூடிய) திருக்குழற்கற்றை அசையவும்,
விழி ஆட – திருக்கண்கள் அசையவும்,
குழை காது ஆட – குண்டலமணிந்த திருச்செவிகள் அசையவும்,
நந்து ஆட – (இடப்பால் மேல்திருக்கையிலேந்திய பாஞ்சசந்யமென்னுஞ்) சங்கு அசையவும்,
கதை ஆட – (இடப்பாற்கீழ்க்கரத்திலேந்திய கௌமோததீயென்னுங்) கதாயுதம் அசையவும்,
திகிரிஆட – (வலப்பால் மேல்கரத்தில் தரித்துள்ள சுதரிசனமென்னுஞ்) சக்கராயுதம் அசையவும்,
நல் மாடம் திருவரங்கர் – அழகிய மாளிகைகள் நிறைந்த ஸ்ரீரங்கத்திலெழுந்தருளியிருப்பவரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

எம்பெருமானாரது திருவடிநிலைகளை முதலியாண்டானென்று வழங்குவது, சம்பிரதாயம். மருகன் – உடன்பிறந்தாள் குமாரன்.

————-

திருக் கலியன் அணுக்கர் திருப்பணி செய் அன்பர் சீ ரங்க நான் மறையோர் உள்ளூர்ச் செல்வர்
தருக்கும் இசைப் பிரான்மார் பார் அளந்தார் பாதம் தாங்குவோர் திருக் கரகம் தரித்து நிற்போர்
இருக்கு முதல் விண்ணப்பம் செய்வோர் வீரர்க்கு இறையவர்கள் சீ புண்டரீகர் மற்றும்
பெருக்கம் உள்ள பரிசாரங்கள் தொழுது ஆட்செய்ய பிரமமாம் திருவரங்கர் ஆடீர் ஊசல் –22-

(இ – ள்.) திருக்கலியனணுக்கர் – திருக்கலியனணுக்கரும்,
திருப்பணி செய் அன்பர் – திருப்பணிசெய்யன்பரும்,
சீரங்கநான்மறையோர் – சீரங்கநான்மறையோரும்,
உள்ளூர்ச் செல்வர் – உள்ளூர்ச்செல்வரும்,
தருக்கும் இசைப்பிரான்மார் – (இசைபாடுவதிற்) சிறந்தோரான இசைப்பிரான் மாரும்,
பார் அளந்தார் பாதம் தாங்குவோர் – (திரிவிக்கிரமனாகி) உலகங்களையளந்த நம்பெருமாளது ஸ்ரீபாதந்தாங்குவோரும்,
திருக்கரகம் தரித்து நிற்போர் – திருக்கரகந் தரித்து நிற்பவரும்,
இருக்கு முதல் விண்ணப்பம் செய்வோர் – இருக்கு முதலிய வேதவிண்ணப்பஞ் செய்பவர்களும்,
வீரர்க்கு இறையவர்கள் – வீரர்க்கிறையவர்களும்,
சீபுண்டரீகர் – ஸ்ரீபுண்டரீகரும், (ஆகிய பத்துக்கொத்துப் பரிஜநங்களும்),
மற்றும் பெருக்கம் உள்ள பரிகரங்கள் – மற்றும் மிகத்தொகுதியான அனைத்துக் கொத்துப் பரிஜநங்களும்,
தொழுது – வணங்கி, ஆள் செய்ய – (தம்தமது) கைங்கர்யங்களைச் செய்துகொண்டிருக்க,
பிரமம் ஆம் திருவரங்கர் – பரப்பிரமமாகிய திரு வரங்கநாதரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

திருக்கலியனணுக்கர் என்ற கொத்து – குறட்டுமணியகாரர் முதலிய பிரதாந கைங்கரியபரர்கள் அடங்கிய தொகுதி யென்று தோன்றுகின்றது.
திருப்பணிசெய் அன்பர் என்ற கொத்து – இப்போது ஆயனார்கொத்துஎன் னும் பெயரோடு நீர்தெளித்தல் முதலிய கைங்கரியங்களைச்செய்யுங் கொத்து என்பர். சீரங்கநான்மறையோர் – அத்யாபகர். உள்ளூர்ச்செல்வர் – ஸ்தலத்தார்- இசைப்பிரான்மார் -அரையர். பாதந்தாங்குவோர் – ஸ்ரீபாதந்தாங்கிகள்.
திருக்கரகம் தரித்துநிற்போர் – பரிசாரகர்என்னலாம்.
இருக்குமுதல் விண்ணப்பஞ்செய்வோர் – பட்டர். வீரர்க்குஇறையவர் – வாளும் கையுமாய் எம் பெருமானுக்குத் திருமேனிக்காவல் புரிபவர்.
ஸ்ரீபுண்டரீகர் – பந்தம்பிடித்தல் முதலிய கைங்கரியங்களைச் செய்யுந் தாசநம்பிகள் என்பர்.
இவர்கள் பத்துக்கொத்தாக ஸ்ரீஉடையவர்காலத்தில் தொகுக்கப்பெற்றார்கள்: அம்முறை காலக்கிரமத்திலே சிற்சில மாறுபாடுகளை யடைந்தது.
மற்றும் பெருக்க முள்ள பரிகரங்கள் என்பது – வேத்ரபாணியுத்யோகம் ஸம்ப்ரதியுத்யோகம் அமுதுபடியளந்து
கொண்டுவரும் உத்யோகம் முதலிய கைங்கரியங்களைச் செய்யும் அடியார்களின் வகைகளைக் குறிக்கும்.

————–

உடுத்திரளோ வானவர்கள் சொரிந்த பூவோ உதித்து எழுந்த கலை மதியோ உம்பர் மாதர்
எடுத்திடு கர்ப்பூர ஆரத்தி தானோ யாம் தெளியோம் இன்று நீள் திருக்கண் சாத்திப்
படுத்த திருப் பாற் கடலுள் நின்று போந்து பாமாலை பூமாலை பாடிச் சூடிக்
கொடுத்த திருக் கோதையுடன் ஆடீர் ஊசல் கோயில் மணவாளரே ஆடீர் ஊசல் –23–

(இ – ள்.) (வானத்தில் இப்போது திரள்திரளாகத் தோன்றுபவை), – உடு திரளோ – நட்சத்திரங்களின் கூட்டங்களோ? (அன்றி),
வானவர்கள் சொரிந்த பூவோ – (தேவரீரைச்சேவிக்கின்ற) தேவர்கள் (மிக்கஅன்போடு) சொரிந்த மலர்களோ? –
(இப்போதுஒளிப்பிழம்பாகத்தோன்றுவது), – உதித்து எழுந்த கலை மதியோ – உதயமாகிவிளங்குகின்ற பதினாறுகலைகளும் நிரம்பிய சந்திரனோ? (அன்றி),
உம்பர் மாதர் எடுத்திடு கர்ப்பூரம் ஆரத்தி தானோ – தேவமாதர்கள் (மங்களார்த்தமாக) எடுத்துச்சுழற்றிய கர்ப்பூர வாரத்தித்தட்டேயோ?
யாம் தெளியோம் – யாம் இன்னதென்று உணர்ந்திலோம்; (இப்படிப்பட்ட பெருவிபவத்துடன்),
இன்று – இப்போது, –
நீள் திருக்கண் சாத்தி படுத்த – நீண்ட திருக்கண்கள் மூடி யோகநித்திரை செய்வதற்கு இடமான,
திருப்பாற்கடலுள் நின்று – திருப்பாற்கடலிலிருந்து,
போந்து – எழுந்தருளிவந்து, (சேவைசாதிக்கின்ற நம்பெருமாளே!)
பாமாலை பூமாலை பாடி சூடி கொடுத்த – பாமாலைகளையும் பூமாலைகளையும் (முறையே) பாடியும் சூடியும் சமர்ப்பித்த,
திருக்கோதையுடன் – ஸ்ரீஆண் டாளோடு, ஊசல்ஆடிர்-;
கோயில் மணவாளரே – ஸ்ரீரங்கத்தி லெழுந்தருளிய அழகியமணவாளரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

இரவில் வானத்தில் தோன்றும் நக்ஷத்திரக்கூட்டங்களை உடுத்திரளோ? வானவர்கள் பக்தியோடு திருவரங்க
நாதனுக்காகச் சொரிந்த பூத்திரளோ? என்று ஐயவணிதோன்றக் கூறினர்.
“உடுத்திரளோ வானவர்கள்சொரிந்த பூவோ’ என்ற தொடர்,
“இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்த வந்நாள்,
மறைமுறையால் வானாடர் கூடி – முறைமுறையின்,
தாதிலகிப் பூத் தெளித்தா லொவ்வாதே தாழ்விசும்பின்,
மீதிலகித் தான்கிடக்கும் மீன்”என்ற பாசுரத்தை ஒருவாறு ஒத்துவந்தது.
இவ்வாறே, வானத்தில் தோன்றிய முழுமதியைத் தேவமாதர்கள் ஸ்ரீரங்கநாதனுக்கு மங்களார்த்தமாக எடுத்துச்
சுழற்றிய கர்ப்பூரவாரத்தித்தட்டேயோ முழுமதியோ எனக் கூறினர்.
இந்தஐயவணியால், அந்தஎம்பெருமான் தேவர்களும் தேவமாதர்களும் வழிபடுமாறு உள்ளா னென்பது, தொனிக்கும்.

————————————————————————–

வென்றி வேல் கரு நெடும் கண் அசோதை முன்னம் வேர்வாட விளையாடும் வெண்ணெய் ஆட்டும்
குன்று போல் நால் தடம் தோள் வீசி ஆடும் குரவைதனைப் பிணைந்து ஆடும் கோள் அறு ஆட்டும்
மன்றினூடு உவந்து ஆடும் மரக்கால் ஆட்டும் வலி அரவில் பாய்ந்து ஆடும் வடு இல் ஆட்டும்
அன்று காணா இழந்த அடியோம் காண அணி அரங்க ராசரே ஆடீர் ஊசல் –24–

(இ – ள்.) அணி அரங்கராசரே -! (நீர்), வென்றி வேல் கரு நெடுங் கண் – வெற்றி பெற்ற வேலாயுதம்போன்று கருமையாகி நீண்ட கண்களையுடைய,
அசோதை – யசோதையினது,
முன்னம் – எதிரில்,
வேர்வு ஆட – வேர்வை யுண்டாகும்படி,
விளையாடும் – விளையாடின,
வெண்ணெய் ஆட்டும் – வெண்ணெய்க்கு ஆடின கூத்தாட்டையும், –
குன்றுபோல் – மலைகள்போல,
நால்தட தோள் – (தேவரீரது) நான்குபெரியதோள்களையும்,
வீசி ஆடும் – வீசிக் கொண்டு கூத்தாடுவதற்கு உரியதான,
பிணைந்து – (பலமங்கையரோடு) சேர்ந்து,
குரவைதனை ஆடும் – குரவைக்கூத்தை ஆடுகின்ற,
கோள்அறுஆட்டும் – குற்றமற்ற ஆட்டத்தையும், –
மன்றின் ஊடு உவந்து ஆடும் – (பலர்கூடும்) பொது விடத்தில் மனமகிழ்ந்து ஆடுகின்ற,
மரக்கால் ஆட்டும் – மரக்கால்கூத்தையும், –
வலி அரவில் பாய்ந்து ஆடும் – வலிமையையுடைய (காளியனென்னும்) பாம்பின்மீது தாவியாடின,
வடு இல் ஆட்டும் – குற்றமற்ற நர்த்தனத்தையும்,
அன்று – அவ்வவ்வாடல்கள் நடந்த காலங்களில்,
காணா (து) – தரிசிக்கப் பெறாமல்,
இழந்த -, அடியோம் – அடியோங்கள்,
காண – (இன்று) தரிசிக்கும்படி, ஊசல் ஆடிர்-; (எ – று.)

முன்பு தேவரீர் பலஆடல்களை ஆடியுள்ளீர்; அவ்வாறு ஆடிய ஆடல்களை அவ்வக்காலத்தில் தரிசிக்கப்பெறாத
அடியோங்களது குறை தீருமாறு இன்று ஊசலாடவேண்டு மென்பதாம்.
“மரக்காலாட்டு’ என்பது, பதினோ ராடலுள் ஒன்று.
“கோளராட்டு’ என்ற பாடத்துக்கு – (மாதரிடத்துப்) பற்றுள்ளவர் ஆடுகின்ற குரவைக்கூத்தை என்றும்,
“வடிவு இல் ஆட்டு’ என்ற பாடத்திற்கு – குறைதலில்லாமல் தொடர்ச்சியாக ஆடுகின்ற கூத்தை என்றும் பொருள்கூறுவர்.
“[மடுவிலாட்டும்’ என்று பாடம் ஓதுவாரும் உளர்.

————

ஆரணங்கள் ஒரு நான்கும் அன்பர் நெஞ்சும் அணி சிலம்பும் அடிவிடாது ஊசல் ஆட
வாரணங்கு முலை மடவார் கண்ணும் வண்டும் வண் துளவும் புயம் விடாது ஊசல் ஆட
காரணங்களாய் அண்டர் அண்டம் எல்லாம் கமல நாபியில் படைத்துக் காத்து அழிக்கும்
சீரணங்கு மணவாளர் ஆடீர் ஊசல் சீ ரங்க நாயகனார் ஆடீர் ஊசல் –25–

(இ – ள்.) காரணங்கள் ஆய் – மூவகைக்காரணங்களுமாகி,
அணடர் – அண்டங்களிலிருப்பவர்களும்,
அண்டம் – உலகவுருண்டைகளும்,
எல்லாம் – ஆகிய எல்லாவற்றையும்,
கமலம் நாபியில் படைத்து – திருவுந்தித்தாமரையிற் சிருஷ்டித்து,
காத்து – பாதுகாத்து,
அழிக்கும் – (பிரளயகாலத்தில்) ஸம்ஹாரஞ்செய்கின்ற,
சீர் அணங்கு மணவாளர் – சிறப்புப்பொருந்திய தெய்வமகளாகிய இலக்குமிக்குக் கணவரே! –
ஆரணங்கள் ஒரு நான்கும் – நான்குவேதங்களும்,
அன்பர் நெஞ்சும் – அடியார்களது மனமும்,
அணி சிலம்பும் – அழகிய சிலம்புகளும்,
அடி விடாது – (தேவரீரது) திருவடிகளை விடாமலிருந்து,
ஊசல் ஆட – ஊசலாடவும், –
வார் அணங்கு முலை மடவார் கண்ணும் – (தமது சம்பந்தத்தாற்) கச்சு நிறம்பெறும்படியான
(தம்மீது அணியப்பெறுதலாலே கச்சுக்கு அழகையுண்டாக்குகிற) தனங்களையுடைய இளமகளிரது கண்களும்,
வண்டும் – வண்டுகளும்,
வள் துளவும் – வளப்பமான திருத்துழாய்மாலையும்,
புயம் விடாது – திருத்தோள்களை விடாமலிருந்து,
ஊசல் ஆட – ஊசலாடவும், ஊசல் ஆடிர் -! சீரங்கநாயகனார் – ஸ்ரீரங்க நாதரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

வேதங்கள்நான்கும் அடிவிடாதிருத்தலாவது – நான்குவேதங்களும் எம்பெருமானது ஸ்வரூபத்தையே நாடிச்சொல்லுதலாம்.
திருவடியைச் சொன்னது – திருமேனிக்கும் உபலக்ஷணம்.
ஸேஷபூதர் (அடியவர்) இழியுந்துறை ஸேஷியின் (தலைவனது) திருவடியே யாதலால், அன்பர்நெஞ்சு அந்தப்பரமனது
திருவடியை விடாது பற்றுவதாயிற்று. அணிசிலம்பு – அப்பெருமானது திருவடியி லணியப்பெற்ற அழகிய பாததண்டைகள்.
இளமகளிர் எம்பெருமானதுதோளழகில் ஈடுபட்டு அவற்றையே கண்டுகொண்டு நிற்றலால், மடவார் கண் ஊசலாடும்புய மென்றார்.
வண்டு – திருத்துழாய் மலர்மாலையில் மொய்த்தற்காக வந்த வண்டு என்றாவது,
தலைமகளிரால் தூதுவிடப்பட்ட வண்டு என்றாவது கொள்க.
சீரணங்குமணவாளர் என்பதற்கு – தமதுகுணங்களால் (யாவரையும்) விரும்பும்படி செய்கின்ற அழகிய மணவாளரே! என்றும் பொருளுரைக்கலாம்.

காரணங்கள் மூன்றுவகைப்படும்; அவையாவன – முதற்காரணம் துணைக்காரணம் நிமித்தகாரணம் என்பன.
முதற்காரணமாவது – பானையுண் டாவதற்கு மண்போல உபாதானமாயிருப்பது;
துணைக்காரணமாவது – அப்பானையுண்டாவதற்குத் தண்டசக்கரங்கள்போல ஸஹகாரியாயிருப்பது;
நிமித்தகாரணமாவது – அப்பானையுண்டாவதற்குக் குயவன் போல நிமித்த மாயிருப்பது:
இவ்வாறே ஸ்தூலமான சித் அசித் என்ற இவற்றுடன் கூடிய இவ்வுலகம் உண்டாவதற்குப் பரப்பிரமம் மூன்று காரணமாயும் இருக்குமென்றும்,
அவற்றுள் ஸூக்ஷ்மமான சித் அசித் என்ற இவற்றுடன் கூடிய பிரமம் முதற்காரணமா மென்றும்,
ஜ்ஞாநம் சக்தி முதலிய குணங்களுடன் கூடிய பிரமம் துணைக்காரணமா மென்றும்,
“பஹுஸ்யாம் (பகுவாக ஆகக்கடவேன்)” என்ற ஸங்கல்பத்துடன் கூடிய பிரமம் நிமித்தகாரணமா மென்றும் வேதாந்தங்களினால் உணரலாம்.

———————————————————–

அடித்தலத்தில் பரிபுரமும் சிலம்பும் ஆட அணி மார்பில் கௌத்துவமும் திருவும் ஆட
தொடித் தலத்தில் மணி வடமும் துளவும் ஆட துணைக்கரத்தில் சக்கரமும் சங்கும் ஆட
முடித்தலத்தில் கரும் குழலும் சுரும்பும் ஆடமுகமதியில் குறு வேர்வும் குழையும் ஆட
கடித்தலத்தில் அரை நாணும் கலையும் ஆட காவிரி சூழ் அரங்கேசர் ஆடிய ஊசல் –26-

(இ – ள்.) காவிரி சூள் அரங்கேசர் திருக்காவேரிநதியாற் சூழப்பெற்ற திருவரங்கத்திற்குத் தலைவரே! –
அடி தலத்தில் – திருவடிகளில்,
பரிபுரமும் – கிண்கிணிகளும்,
சிலம்பும் – பாததண்டைகளும்,
ஆட – அசைந்தாடவும், –
அணி மார்பில் – அழகிய திருமார்பில்,
கௌத்துவமும் – கௌஸ்துபரத்தினமும்,
திருவும் – இலக்குமியும்,
ஆட – அசைந்தாடவும், –
தொடி தலத்தில் – திருத் தோள்களில்,
மணி வடமும் – இரத்தினவாரமும்,
துளவும் – திருத்துழாய் மாலையும்,
ஆட – அசைந்தாடவும், –
துணை கரத்தில் – இரண்டு திருக்கைகளிலும்,
சக்கரமும் சங்கும் – திருவாழியுந் திருச்சங்கமும்,
ஆட – அசைந்தாடவும், –
முடி தலத்தில் – திருமுடியில்,
கரு குழலும் – கரிய மயிர்முடியும்,
சுரும்பும் – (அதில்அணிந்துள்ள மலர்மாலைகளில் மொய்க்கின்ற) வண்டுகளும்,
ஆட – அசைந்தாடவும், –
முகம் மதியில் – பூர்ணசந்திரன்போன்ற திருமுகமண்டலத்தில்,
குறு வேர்வும் – சிறுத்து அரும்புகின்ற வேர்வை நீரும்,
குழையும் – காதணிகளும்,
ஆட – அசைந்தாடவும், –
கடி தலத்தில் – திருவரையில்,
அரைநாணும் -, கலையும் – திருப்பரியட்டமும்,
ஆட – அசைந்தாடவும், சல் ஆடில் -; (எ -று.)

——————————————————-

பரந்து அலைக்கும் பாற் கடலுள் பசும் சூல் கொண்டல் படிந்ததென கிடந்த படி படி மேல் காட்டி
வரம் தழைக்க இரண்டு ஆற்றின் நடுவே தோன்றி மண் உலகை வாழ வைத்த வளத்தைப் பாட
புரந்தரற்கும் பெருமாளே ஆடீர் ஊசல் போதனுக்கும் பெருமாளே ஆடீர் ஊசல்
அரன் தனக்கும் பெருமாளே ஆடீர் ஊசல் அணி அரங்கப் பெருமாளே ஆடீர் ஊசல் –27-

(இ – ள்.) பரந்து அலைக்கும் பாற்கடலுள் – பரவி அலைவீசுகின்ற திருப்பாற்கடலிலே,
பசு சூல் கொண்டல் படிந்தது என – கரிய நீர்கொண்ட மேகம் படிந்தாற்போல,
கிடந்த – சயனத்திருக்கோலமாக எழுந்தருளியுள்ள,
படி – தன்மையை,
படிமேல் காட்டி – நிலவுலகத்திற் பிரதியக்ஷமாக்கி,
வரம் தழைக்க இரண்டு ஆற்றின் நடுவே தோன்றி – (அன்பர்களது) வேண்டுகோளை மிகுதியாகத்
தந்தருளுமாறு உபயகாவேரிமத்தியில் (ஸ்ரீரங்க க்ஷேத்திரத்தில் அர்ச்சாரூபியாக) ஆவிர்ப்பவித்து,
மண் உலகை வாழவைத்த – நிலவுலகத்தை வாழச்செய்த,
வளத்தை – பெருமையை,
பாட – (அடியோங்கள்) பாடாநிற்க, –
புரந்தரற்கும் பெருமாளே – தேவேந்திரனுக்குந் தலைவரே! ஊசல் ஆடிர் -;
போதனுக்கும் பெருமாளே – பிரமதேவனுக்குந் தலைவரே! ஊசல் ஆடிர் -;
அரன்தனக்கும் பெருமாளே – சிவபெருமானுக்குந் தலைவரே! ஊசல் ஆடிர் -;
அணி அரங்கம் பெருமாளே – ஸ்ரீரங்கநாதரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

—————————————————————–

உடுமாய கதிர் உதிர சண்ட வாயு உலகு அலைப்ப வடவை சுட உத்தி ஏழும்
கெடுமாறு திரி தருகால் உயிர்கள் எல்லாம் கெடாது வயிற்ருள் இருந்தும் கீர்த்தி பாட
நெடுமாயப் பிறவி எல்லாம் பிறந்து இறந்து நிலத்தோடும் விசும்போடும் நிரயத்தோடும்
தடுமாறித் திரிவேனை அருள் செய்து ஆண்ட தண் அரங்க நாயகனார் ஆடீர் ஊசல் –28-

(இ – ள்.) உடு மாய – நக்ஷத்திரங்கள் அழிந்தொழியவும்,
கதிர் உதிர – சூரியசந்திரர்கள் உதிரவும்,
சண்ட வாயு – பிரசண்டமாருதம்,
உலகு அலைப்ப – வீசிஉலகங்களை யழிக்கவும்,
வடவை சுட – வடவாமுகாக்கினி எரித்தழிக்கவும்,
உததி ஏழும் – கடல்களேழும்,
கெடும் ஆறு – (இவ்வண்ட மெல்லாம்) அழியும்படி,
திரிதரு கால் – பொங்கிப்பரவுங் காலத்தில்,
உயிர்கள் எல்லாம் – (அவற்றிலுள்ள) ஜீவராசிகளெல்லாவற்றையும்,
கெடாது – அழியாமல்,
வயிற்றுள் இருத்தும் – திருவயிற்றில்வைத்துப் பாதுகாக்கின்ற,
சீர்த்தி – (தேவரீரது) பெருங்கீர்த்தியை,
பாட – (அடியோங்கள்) எடுத்துப்பாடாநிற்க, –
நெடு மாயம் பிறவி எல்லாம் – பெரிய மாயையையுடைய எல்லாப் பிறவிகளிலும், பிறந்து -, இறந்து -,
நிலத்தோடும் – நிலவுலகத்திலும்,
விசும்போடும் – வானுலகத்திலும்,
நிரயத்தோடும் – நரகத்திலும்,
தடுமாறி திரிவேனை – தடுமாறித்திரிகின்ற என்னை,
அருள் செய்து ஆண்ட – கருணைசெய்து ஆட்கொண்ட,
தண் அரங்க நாயகனார் – குளிர்ந்த ஸ்ரீரங்கத்தி லெழுந்தருளியுள்ள ஸ்ரீரங்கநாதரே! ஊசல் ஆடில் -; (எ – று.)

அநாதியான புண்யபாபங்களினாலும் பிறந்து இறக்கும்போது இடையிடையே நேர்கிற புண்ய பாபங்களினாலும்
சுவர்க்க மத்திய பாதாளங்களிற் பலபிறவி பிறந்து இறந்து அலைச்சற்பட்ட தமதுநிலையைப் பின்னிரண்டு அடிகளினால் விளக்கினார்.

———————————————————–

முருகன் உறை குறிஞ்சித் தேன் முல்லை பாய முல்லை நிலத் தயிர் பால் நெய் மருதத்து ஓட
மருத நிலக் கொழும் பாகு நெய்தல் தேங்க வரு புனல் காவிரி சூழ்ந்த வளத்தைப் பாட
கரு மணியே மரகதமே முத்தே பொன்னே கண் மணியே ஆர் உயிரே கனியே தேனே
அருள் புரிவாய் என்றவர் தம் அகத்துள் வைகும் அணி அரங்க மாளிகையார் ஆடீர் ஊசல் –29-

(இ – ள்.) “கரு மணியே – நீலமணிபோன்றவனே!
மரகதமே – பச்சை யிரத்தினம்போன்றவனே!
முத்தே – முத்துப்போன்றவனே!
பொன்னே – பொன்போல் அருமையானவனே!
கண்மணியே – கண்ணிற்குள்ளிருக்குங் கருவிழிபோன்றவனே!
ஆர் உயிரே – அருமையான உயிர்போன்றவனே!
கனியே – இனிய கனிபோன்றவனே!
தேனே – தேன்போல் மதுரமானவனே!
அருள் புரிவாய் – (எம்மீது) கருணைபுரிவாயாக,
‘ என்றவர் தம் – என்று பிரார்த்தித்தவரது,
அகத்துள் – மனத்தில்,
வைகும் – (அவர்நினைந்த வடிவோடு) தங்கியிருக்கின்ற,
அணி அரங்கமாளிகையார் – அழகிய திருவரங்கந்திருப்பதியி லெழுந்தருளியுள்ள எம்பெருமானே! –
முருகன் உறை குறிஞ்சி தேன் – முருகக்கடவுள் வாழ்கின்ற குறிஞ்சிநிலக்கருப்பொருளாகிய தேன்,
முல்லை பாய – முல்லைநிலத்திற் பாயவும், –
முல்லைநிலம் – முல்லை நிலத்துக்கருப்பொருளாகிய,
தயிர் பால் நெய் – தயிரும் பாலும் நெய்யும்,
மருதத்து ஓட – மருதநிலத்திற் பெருகியோடவும், –
மருதம் நிலம் கொழும்பாகு – மருதநிலத்தில் விளைகின்ற கரும்பின்சாற்றைக் காய்ச்சியதனாலாகிய வளமுள்ள வெல்லப்பாகு,
நெய்தல் தேங்க – நெய்தல்நிலத்தில் தேங்கிநிற்கவும்,
வரு – பெருகுகின்ற,
புனல் – நீரையுடைய,
காவிரி – காவேரிநதியினாலே,
சூழ்ந்த – சூழப்பெற்றுள்ள,
வளத்தை – வளப்பத்தை,
பாட – (அடியோங்கள்) பாடாநிற்க, ஊசல் ஆடிர் -; (எ – று.)

இதனால், காவிரிபாயப்பெற்ற இந்நாட்டில் நான்குநிலங்களும் அமைந்திருத்தல் கூறினார்.
தொல்காப்பியத்தில், “முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச், சொல்லியமுறையாற் சொல்லவும்படுமே” என்றவிடத்து,
சொல்லாதமுறையாற் சொல்லவும்படு மென்று பொருள்படுதல் பற்றி, குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என முறைப்பட வைத்தார்;
கலித்தொகையிலும், ஐங்குறுநூற்றிலும் பிறவற்றிலும் வேறுபடக்கோத்தவாறுங் காண்க.
நெடுந்தூரத்தும் விளங்குதலின் மலையாகிய குறிஞ்சிநிலத்தை முன்னும், மலையைக் காடும், காட்டை நாடும்,
நாட்டைக் கடலும் அடுத்துண்மையால், அவற்றை அதனதன்பின்னும் வைத்தன ரென்க.
நீரும் நிழலு மில்லாத பாலைநிலம் மனிதசஞ்சாரத்திற்கு இடமாகாது ஆதலின், நீக்கப்பட்டது.
பாலைக்கு நிலமில்லை யென்றும், மற்றைநிலங்கள் தம்நிலைதிரியின் அதுவே பாலையா மென்றும் சில ஆசிரியர் கொள்கை.
“சேயோன்மேய மைவரையுலகமும்” என்பதனால், முல்லைக்கு முருகன் தெய்வமாதல் பெறப்படும்.

—————————————————————-

புண்டரிகத் தவன் தவம் செய்து இறைஞ்சும் கோயில் புரி சடையோன் புராணம் செய்து ஏத்தும் கோயில்
பண்டு இரவி குலத்து அரசர் பணிந்த கோயில் பரிந்து இலங்கைக் கோன் கொணர்ந்து பதித்த கோயில்
மண்டபமும் கோபுரமும் மதிலும் செம்பொன் மாளிகையும் தண்டலையும் மலிந்த கோயில்
அண்டர் தொழும் திருவரங்கம் பெரிய கோயில் அமர்ந்து உறையும் பெருமானார் ஆடீர் ஊசல் –30-

(இ – ள்.) புண்டரிகத்தவன் – (திருமாலின்) நாபீகமலத்தில் தோன்றி யவனான பிரமதேவன்,
தவம் செய்து -,
இறைஞ்சும் – பிரதிஷ்டைபண்ணித் திருவாராதனஞ்செய்து வணங்கின,
கோயில் – கோயிலும், –
புரி சடையோன் – முறுக்கிவிட்ட சடைமுடியையுடைய சிவபிரான்,
புராணம் செய்து -,
ஏத்தும் – துதித்த,
கோயில் – கோயிலும், –
பண்டு – முன்னே,
இரவி குலத்து அரசர் – சூரியகுலத்து ராஜாக்கள்,
பணிந்த – வணங்கிய,
கோயில் – கோயிலும், –
இலங்கை கோன் – இலங்கைக்கு அரசனாகிய விபீஷணாழ்வான்,
பரிந்து – விரும்பி,
கொணர்ந்து பதித்த – கொண்டுவந்து தாபித்த,
கோயில் – கோயிலும், –
மண்டபமும் – மண்டபங்களும்,
கோபுரமும் – கோபுரங்களும்,
மதிலும் – மதில்களும்,
செம் பொன் மாளிகையும் – சிவந்த பொன்னினாற் செய்யப்பட்ட மாளிகைகளும்,
தண்டலையும் – சோலைகளும்,
மலிந்த – நிறைந்துள்ள,
கோயில் – கோயிலுமான,
அண்டர் தொழும் – தேவர்கள் யாவரும் வணங்குகின்ற,
திருவரங்கம் பெரியகோயில் – திருவரங்கம் பெரியகோயிலில்,
அமர்ந்து உறையும் – பொருந்தி நித்தியவாசஞ் செய்கின்ற, பெருமானார் – நம்பெருமாளே! ஊசல் ஆடில் -; (எ – று.)

இங்கு “கோயில்’ என்று கூறியது, அத்திருப்பதியி லெழுந்தருளிய ஸ்ரீரங்கநாதனையும், உபலக்ஷணவகையாற் குறிக்கும்.
பிரணவாகாரமான ஸ்ரீரங்கவிமானத்திலே ஆதிசேஷசயநத்தில் திருமகளும் நிலமகளும் திருவடிவருடப் பள்ளிகொள்ளுந்
திருமால் ஆதியிற் சத்தியலோகத்தில் பிரமனது திருவாராதனத்திருவுருவமாக இருந்ததனால்,
“புண்டரிகத்தவன்தவஞ் செய்து இறைஞ்சுங்கோயில்’ என்றார்.
சிவபிரான் ஸ்ரீரங்கமாஹாத்ம்யத்தை நாரதமுனிவர்க்கு எடுத்துக்கூறியதாகப் புராணம் இருப்பதால்,
‘புரிசடையோன் புராணஞ்செய்து ஏத்துங் கோயில்’ எனப்பட்டது.
சூரியகுலத்து மநுகுமாரனான இக்ஷ்வாகுமகாராஜன் பிரமனைக்குறித்துப் பலகாலம் அரும்பெருந்தவம்புரிந்து
அத்தேவனருளால் அவ்வெம்பெருமானைத் தான் பெற்றுத் திருவயோத்திக்கு எழுந்தருளப்பண்ணிக்கொண்டுவந்து
பிரதிஷ்டைசெய்து திருவாராதநஞ்செய்து வந்தனன்; அந்தஸ்ரீரங்கநாதனே இக்ஷ்வாகுமுதல் இராமபிரான்வரையிலுள்ள
இரவிகுலமன்னவரெல்லார்க்குங் குலதெய்வமாகி விளங்கினா னாதலால் “பண்டிரவிகுலத்தரசர் பணிந்த கோயில்’ என்றும்,
இராமபிரான் வனவாசஞ்சென்று விபீஷணனுக்கு அபயமளித்துக் கடல்கடந்து இலங்கை சேர்ந்து
இராவணாதி ராக்ஷஸ சங்காரஞ் செய்து திருவயோத்திக்கு மீண்டு பட்டாபிஷேகஞ்செய்துகொண்டபின்பு
சுக்கிரீவன் முதலிய அனைவர்க்கும் விடைகொடுத்து அவரவரை ஊர்க்கு அனுப்பும்பொழுது,
தனது திருவாராதனமூர்த்தியான நம்பெருமாளைத் தனக்கு மிகவும்அந்தரங்கனாகிய விபீஷணாழ்வானிடங் கொடுத்து
ஆராதித்துவரும்படி நியமித்துஅனுப்ப, அங்ஙனமே அவ்வரக்கர்பெருமான் அவ்வமரர்பெருமானை அவ்விமானத்துடனே
எழுந்தருளப்பண்ணிக்கொண்டு இலங்கைநேக்கிச் செல்லும்பொழுது இடைவழியில் உபயகாவேரிமத்தியிலே
பெருமான் புடைபெயராது விமானத்துடனே நிலைநின்றருளினனாதலால், “பரிந்திலங்கைக்கோன் கொணர்ந்து பதித்த கோயில்’ என்றுங் கூறினார்.

———————————————————————-

அருவரங்கள் தரு பராங்குசனே ஆதி ஆழ்வார்கள் தம்பிரான் ஆடீர் ஊசல்
இருவர் அங்க ஒளிக்கு அகலா இருள் அகற்றும் எதிராசன் தம்பிரான் ஆடீர் ஊசல்
தருவரங்கர் நீள் பொழில் கூரத்து வேதா சாரியனார் தம்பிரான் ஆடீர் ஊசல்
திருவரங்கத்து அணி அரங்கன் திரு முற்றத்துத் தெய்வங்கள் தம்பிரான் ஆடீர் ஊசல் –31-

(இ – ள்.) அரு வரங்கள் தரு – (தன்னையடைந்த அடியார்க்கு) அரிய வரங்களைக் கொடுக்கின்ற,
பராங்குசனே ஆதி – நம்மாழ்வார் முதலாகிய,
ஆழ்வார்கள் – ஆழ்வார்கட்கு,
தம்பிரான் – தலைவரே!
ஊசல் ஆடிர் -;
இருவர் அங்கம் ஒளிக்கு அகலா – (சூரிய சந்திரர் என்னும்) இருவருடைய மேனியிலிருந்துவீசுகிற (வெயில் நிலவு என்கின்ற) ஒளிக்கும் போகாத,
இருள் – அஜ்ஞாந அந்தகாரத்தை,
அகற்றும்- நீக்குகின்ற,
எதிராசன் – எம்பெருமானார்க்கு,
தம்பிரான் – தலைவரே! ஊசல் ஆடிர்-;
தரு வரங்கள் நீள் பொழில் – சிறந்தமரங்கள் மிகுதியாக நீண்டுவளரப்பெற்ற சோலைகள்சூழ்ந்த,
கூரத்து – திருக்கூரமென்னுந் தலத்தில் அவதரித்த,
வேத ஆசாரியனார் – வேதத்தில் தேர்ந்த ஆசிரியராகிய கூரத்தாழ்வானுக்கு,
தம்பிரான் – தலைவரே! ஊசல் ஆடிர் -;
திருவரங்கத்து – திருவரங்கம் பெரிய கோயிலிலேயுள்ள,
அணி அரங்கன் திருமுற்றத்து தெய்வங்கள் – திருவரங்கன்திருமுற்ற மென்னும் இடத்தில் வந்து வணங்குகின்ற
தெய்வங்கட்கெல்லாம், தம்பிரான் – தலைவரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

—————————————————————–

உணராத முதலை இளங்குதலைச் சொல்லை உளமுருகித் தந்தை தாய் உவக்கு மா போல்
தணவாமல் கற்பிப்பார் தம் சொற் கேட்டுத் தந்தை உரைத்தத்தை ஆதரிக்குமா போல்
பணவாள் அரா முடி மேல் படி ஏழ் போற்றும் பட்டர் திருத் தாட்கு அடிமைப் பட்ட காதல்
மணவாள தாசன் தன் புன் சொல் கொண்ட மதில் அரங்க மணவாளர் ஆடீர் ஊசல் –32–

(இ – ள்.) உணராத – நன்றாகப்பேசத்தெரியாத,
மதலை – சிறுகுழந்தையின்,
இள குதலை சொல்லை – நிரம்பாத மழலைச்சொல்லை,
தந்தை தாய் – (அக்குழந்தையைப்பெற்ற) தாய்தந்தையர்,
உளம்உருகி – மனங்கரைந்து,
உவக்கும் ஆ போல் – சந்தோஷிப்பதுபோலவும், –
தணவாமல் – இடைவிடாமல்,
கற்பிப்பார் – கற்பிப்பவர்,
தம் சொல் கேட்டு – தாம் சொன்ன சொற்களைக் கேட்டுக்கொண்டு,
தத்தை உரைத்தத்தை – கிளி பேசினதை,
ஆதரிக்கும் ஆ போல் – விரும்பிமகிழும் விதம்போலவும், –
பணம் வாள் அரா முடிமேல் – படமும் ஒளியு முடைய ஆதிசேஷனது முடிமேலுள்ள,
படி ஏழ் – ஏழுதீவுகளிலுள்ளாரும்,
போற்றும் – வணங்கித்துதிக்கின்ற,
பட்டர் திருத்தாட்கு – ஸ்ரீபராசரபட்டரது திருவடிகட்கு,
அடிமைப்பட்ட – அடிமையாகிய,
காதல் – பக்தியையுடைய,
மணவாளதாசன்தன் – அழகிய மணவாளதாசனென்னும் அடியேனது,
புல் சொல் – இழிவான சொல்லாகிய பிரபந்தங்களையும்,
கொண்ட – ஏற்றுக்கொண்டருளிய,
மதில் அரங்கம் மணவாளர் – ஸப்தப்ராகாரங்கள் சூழ்ந்த திருவரங்கத்தி லெழுந்தருளிய அழகியமணவாளரே! ஊசல் ஆடிர் – ; (எ – று.)

தாம்பாடிய பிரபந்தங்களை ஸ்ரீரங்கநாதன் அங்கீகரித்தருளியதற்கு, சிறுகுழந்தையின் குதலைச்சொற்களைப் பெற்ற
தாய்தந்தையர்கேட்டு மகிழ்தலையும், கிளியின்சொற்களைக் கற்பிப்பவர் கேட்டு உவத்தலையும் உவமை கூறினர்.
மணவாளதாசன் – தன்மைப்படர்க்கை.

——————————————————————–

தற்சிறப்புப் பாசுரம்

போதாரு நான் முகனே முதலா யுள்ள புத்தேளிர் தொழு நாதன் புவனிக்கு எல்லாம்
ஆதாரமாம் தெய்வ மான நாதன் அனைத்து உயிர்க்கு நாதன் அணி யரங்க நாதன்
சீதார விந்த மலர்த் திரு வினாதான் திரு ஊசல் திரு நாமம் ஒரு நால் எட்டும்
வேதா சாரிய பட்டர்க்கு அடிமையான வெண் மணிப் பிள்ளைப் பெருமாள் விளம்பினானே —

(இ – ள்.) போது ஆரும் நான்முகனே முதல் ஆய் உள்ள – தாமரை மலரில் வாழ்கின்ற நான்குமுகங்களையுடைய பிரமதேவன் முதலான,
புத்தேளிர் – தேவர்கள்யாவரும்,
தொழும் – வணங்குகின்ற,
நாதன் – தலைவனும்,
புவனிக்கு எல்லாம் – எல்லாவுலகங்கட்கும்,
ஆதாரம் ஆம் தெய்வம் ஆன – ஆதாரமாகவுள்ளதெய்வமாக இருக்கின்ற,
நாதன் – தலைவனும்,
அனைத்து உயிர்க்கும் – ஜீவவர்க்கங்களெல்லாவற்றிற்கும்,
நாதன் – தலைவனும்,
சீத அரவிந்தம் மலர் திருவின் நாதன் – குளிர்ந்த தாமரைமலரில் வாழ்கின்ற இலக்குமிக்குத் தலைவனுமான,
அணி அரங்கம் நாதன் – அழகிய திருவரங்க நாதனைப்பற்றி,
திருவூசல் திருநாமம் ஒரு நால் எட்டும் – திருவூசல் என்று பெயர்பெற்ற முப்பத்திரண்டுபாடல்களையும்,
வேதஆசாரியபட்டர்க்கு அடிமைஆன வெள்மணிபிள்ளைப்பெருமாள் – வேதத்தில்தேர்ந்த ஆசாரியரான பட்டர்க்குச் சிஷ்யராகிய
வெண்மைநிறமுள்ள மணிபோலச் சத்துவகுணம் மிகுந்த பிள்ளைப்பெருமாளையங்கார்,
விளம்பினான் – பாடினார்; (எ – று.)

நூலாசிரியர் தம்மைப் பிறன்போலக் கூறிய தற்சிறப்புப்பாயிரம், இது. கூரத்தாழ்வானது திருக்குமாரர்க்கு
வேதாசார்யபட்டரென்று ஒரு திருநாம முண்டெனக் கொள்ளினுமாம்.

சீரங்கநாயகரூசல் முற்றும்.

அஷ்டபிரபந்தம் முற்றிற்று.

—————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading