ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவேங்கட மாலை –81-100-

நாரியர் தம் கூந்தலினும் நாலும் அருவியினும்
வேரினறும் சாந்து ஒழுகும் வேங்கடமே -பாரினுளார்
அற்ப சுவர்க்கத்தார் அறிவு அரியார் முன் மேய்த்த
நல்பக வர்க்கத்தார் நாடு –81-

(இ – ள்.) நாரியர்தம் கூந்தலினும் – மாதர்களுடைய கூந்தலினின்றும்,
வேரி நறு சாந்து ஒழுகும் – வாசனையையுடைய நல்லமயிர்ச்சாந்து ஒழுகப்பெற்ற:
நாலும் அருவியினும் – கீழ்நோக்கி வருகின்ற நீரருவிகளிலும்,
வேரின் அறும் சாந்து ஒழுகும் – வேரோடும்அற்ற சந்தனமரங்கள் அடித்துக்கொண்டு ஓடிவரப்பெற்ற:
வேங்கடமே -,-
பாரின் உளார் – பூமியி லுள்ளவர்களாலும்,
அற்ப சுவர்க்கத்தார் – இழிவாகிய சுவர்க்கலோகத்தி லுள்ளவர்களாலும்,
அறிவு அரியார் – அறியமுடியாதவரும்,
முன் – முன்பு (கிருஷ்ணாவதாரத்தில்), மேய்த்த -,
நல் பசு வர்க்கத்தார் – நல்லபசுக்களின் தொகுதியையுடையவருமான திருமாலினது,
நாடு – திவ்வியதேசம்; (எ – று.)

“வேரினறுஞ்சாந்து” என்ற தொடரின் முதற்பொருளில் சிறப்பு னக ரத்தைப் பொதுநகரமாக அமைத்துக்கொள்ளவேண்டும்;
பொது நகரமும் சிறப்புனகரமும் ஒலிவடிவில் அபேதமாயிருத்தல்பற்றி, இவ்வாறு புணர்த்தினார்.
இங்ஙனமே வரும் மற்றைப்பாடல்களும் காண்க. மயிர்ச்சாந்து – மயிரிற் பூசப்படும் வாசனைக்கலவை; வாசனைத் தைலமுமாம்.
நாலும் என்ற எதிர்காலப் பெயரெச்சத்தில், நால் – வினைப்பகுதி. மலையருவி வெள்ளத்தின் விசையால் அங்குள்ள
சந்தனம் முதலிய மரங்கள் வேரோடு அறுத்துத் தள்ளப்பட்டு வருதல் இயல்பு .
பாரினுளார் – மனிதர். சுவர்க்கத்தார் – தேவர். சிற்றின்பத்தையே யுடையதான சுவர்க்கம் நிரதிசயப்
பேரின்பத்தையுடைய பரம பதத்தை நோக்க எளிமைப்படுதலால், “அற்பம்” எனப்பட்டது.
அல்ப ஸ்வர்க்கம், பசுவர்க்கம் – வடசொற்றொடர்கள். கண்ணன் திருவாய்ப்பாடியில் வளர்ந்தபொழுது
தான் வளர்கிற குலத்திற்கு ஏற்ப ஆநிரை மேய்த்தமை பிரசித்தம்.

————-

மாதரார் கண்ணும் மலைச் சாரலும் காமர்
வேத மாற்கம் செறியும் வேங்கடமே -பாதம் ஆம்
போதைப் படத்து வைத்தார் போர் வளைய மாற்றரசர்
வாதைப் படத்து வைத்தார் வாழ்வு –82-

(இ – ள்.) மாதரார் கண்ணும் – மகளிர்களுடைய கண்களும்,
காமர் வேதம் மாற்கம் செறியும் – காமநூல்வழியைப் பொருந்தப்பெற்ற:
மலை சாரலும் – மலைப்பக்கங்களும்,
காமர் வே தமால் கம் செறியும் – அழகிய மூங்கில்கள் தமது உருவத்தால் வானத்தை நெருங்கப்பெற்ற:
வேங்கடமே -,-
பாதம் ஆம் போதை – (தமது) திருவடிகளாகிய தாமரைமலர்களை,
படத்து வைத்தார் – (காளியனென்னும் பாம்பின்) படத்தில் ஊன்றவைத்தவரும்,
போர் – யுத்தத்தில்,
மாறு அரசர் வளைய – பகையரசர்கள் வளைந்து கொள்ள,(அவர்களை),
வாதை பட துவைத்தார் – துன்பப்படுமாறு அழித்தவருமான திருமால்,
வாழ்வு – எழுந்தருளியிருக்குமிடம்; (எ – று.)

“மாதர் காதல்” என்ற தொல்காப்பிய உரியியற் சூத்திரத்தால் மாதர் என்பது – ஆசையென்னும்பொருளை
யுணர்த்தும் உரிச்சொல்லாதல் அறிக. மாதரார் – விரும்பப்படும் அழகுடையார். காமர் – காமன்; மன்மதன்: உயர் வுப்பன்மை:
அவனுடைய வேதமென்றது, காமசாஸ்திரத்தை. மாதர்கண்கள் காமவேதமார்க்கம் செறிதலாவது – பார்வையழகால் ஆடவரைக்
காம வசப்படுத்துதல். மார்க்கம் என்ற வடசொல், சிலேடைநயம்நோக்கி மாற்கம் என விகாரப்பட்டது.
தமால் – தம்மால்; தொகுத்தல். கம் – வடசொல்.

பாதமாம் போது – உருவகம். திருவடிக்குத் தாமரையுவமை, செம்மை மென்மை அழகுகளில்.ழுபாதத்தைப்படத்துவைத்தார்” என்றது,
காளியன் முடியில் தமதுதிருவடிபதிந்த தழும்பு என்றும்நிலையாக இருக்கும்படி அழுந்த வைத்தவரென்ற பொருளை விளக்கும்;
“ஓ சர்ப்பராசனே! நீ கருடனுக்குப் பயப்படவேண்டாம்; உன் சிரசில் என் திருவடி பொறித்த வடு இருத்தலைக் கண்டு
உன்னை அவன் ஒன்றும் செய்யமாட்டான்” என்று கண்ணன் காளியனுக்கு வரமளித்தமை காண்க.
இந்நூலின் முதற்செய்யுளில் “பையரவின் சூட்டிற் சிரமபதநாட்டினான்” என்றதிலும் இக்கருத்து அமைந்துளது.
“போர்” என்றது – பாரதயுத்தம் முதலியவற்றையும், “மாற்றரசர்” என்றது – துரியோதனாதியர் முதலியோரையுங் குறிக்கும்.
“போர்விளைய” என்ற பாடத்துக்கு – போர் உண்டாக என்க. மாற்றரசர் – மாறுபாட்டையுடைய அரசர்.
பாதா என்ற வடமொழி, வாதையென விகாரப்பட்டது.

——————

எத்திக்கும் காம்பும் எயினரும் ஆரத்தினையே
வித்திக் கதிர் விளைக்கும் வேங்கடமே –தித்திக்கும்
காரி மாறன் பாவார் காதலித்தார் தம் பிறவி
வாரி மாறு அன்பு ஆவார் வாழ்வு –83-

(இ – ள்.) எ திக்கும் – (அம்மலையின்) எல்லாப்பக்கங்களிலும், –
காம்பும் – மூங்கில்களும்,
ஆரத்தினையே வித்தி கதிர் விளைக்கும் – முத்துக்களையே உண்டாக்கி ஒளியைவீசப்பெற்ற:
எயினரும் – வேடர்களும்,
ஆர தினையே வித்தி கதிர் விளைக்கும் – மிகுதியாகத் தினையையே விதைத்துக் கதிர்களை விளையச்செய்தற் கிடமான:
வேங்கடமே -,-
தித்திக்கும் – இனிமையான,
காரி மாறன் பாவார் – காரியென்பவரது திருக்குமாரரான நம்மாழ்வாருடைய பாசுரத்தைப் பெற்றவரும்,
காதலித்தார்தம் – (தம்மை) விரும்பின அடியார்களுடைய,
பிறவி வாரி – பிறப்பாகிய கடல்,
மாறு – நீங்குதற்குக் காரணமான,
அன்பு ஆவார் – அருளின் மயமாகுபவருமான திருமால்,
வாழ்வு – எழுந்தருளியிருக்குமிடம்; (எ – று.)

“எத்திக்கும்” என்பதை, சிலேடைப்பொருளிரண்டுக்குங் கூட்டுக. சிறந்த சாதி மூங்கில் முற்றினபொழுது
அதன் கணுக்கள் வெடிக்க அவற்றினின்று நல்லமுத்துப் பிறக்குமென்றல், கவிமரபு.
(முத்துப்பிறக்கு மிடங்கள்இன்னவையென்பதை, “தந்தி வராகமருப் பிப்பி பூகந் தழைகதலி, நந்து சலஞ்சல மீன்றலை
கொக்கு நளின மின்னார், கந்தரஞ் சாலி கழை கன்னலா வின்பல் கட்செவி கார்,
இந்து வுடும்பு கரா முத்தமீனு மிருபதுமே” என்பதனால் அறிக.)
ஆரம் – ஹாரம் என்ற வடசொல்லின் விகாரம். தினை – ஒருவகைத்தானியம். ஏ – இசைநிறை.
தினைவித்திக் கதிர்விளைத்தல் – தினைப் பயிரிடுதல்.

பாண்டிய நாட்டில் தாமிரபர்ணி நதிதீரத்தி லுள்ள திருக்குருகூரிலே வேளாள வருணத்தவரான திருவழுதி வளநாட ரென்பவரது
சந்ததியில் காரியென்பவர்க்கு உடைய நங்கையாரது திருவயிற்றிலே அவதரித்தவ ராத லால், நம்மாழ்வார், “காரிமாறன்” எனப்பட்டனர்.
இவர் பிறந்தபொழுதே தொடங்கி அழுதல் பால்குடித்தல் முதலிய லோகவியாபாரம் ஒன்றுமின்றி உலகநடைக்கு மாறாக இருந்ததனால்,
இவர்க்கு மாற னென்று திருநாம மாயிற்று. வலிய வினைகளுக்கு மாறாக இருத்தலாலும், பாண்டிய நாட்டில் தலைமையாகத்
தோன்றியதனாலும் வந்த பெய ரென்றலும் உண்டு;
மாறன்பா – திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி, திருவாய் மொழி என்னும் நான்கு திவ்வியப்பிரபந்தங்கள்.
காதலித்தார் – காதலென்னும் பெயரினடியாகப் பிறந்த தெரிநிலை வினையாலணையும் பெயர். வாரி – வடசொல்:
நீர்; கடலுக்கு இலக்கணை. காரணகாரியத் தொடர்ச்சியாய் எல்லைகாண வொண்ணாது மாறிமாறி வருதலாலும்,
அச்சந்தருதலாலும், கடத்தற் கரிதாதலாலும், பிறப்பு, கடலெனப்பட்டது. மாறு என்ற வினைத்தொகை, இங்குக் காரியப்பொருளில் வந்தது.

————–

பார் ஓடு கான்யாரும் பல் களிறும் நந்தவனம்
வேரோடலைத் தீர்க்கும் வேங்கடமே –கார் ஓதம்
சுட்ட கருவில் படையார் தொண்டரை மீண்டு ஏழு வகைப்
பட்ட கருவில் படையார் பற்று –84-

(இ – ள்.) பார் ஓடு கான் யாறும் – (அம்மலையினின்று) பூமியைநோக்கி ஓடிவருகிற காட்டாறுகளும்,
நம் தவனம் வேர் ஓடலை தீர்க்கும் – நமது தாகம் நிலைத்திருத்தலை நீக்கப்பெற்ற:
பல் களிறும் – பல மதயானைகளும்,
நந்தவனம் வேரோடு அலைத்து ஈர்க்கும் – பூந்தோட்டத்திலுள்ள மரங்களை வேருடன் அசைத்து இழுக்கப்பெற்ற:
வேங்கடமே -,-
கார் ஓதம் சுட்ட – கரு நிறமான கடலை வெதும்பச்செய்த,
கரு வில் படையார் – பெரிய வில்லாகிய ஆயுதத்தை யுடையவரும்,
தொண்டரை – (தமது) அடியார்களை,
மீண்டு – மறுபடி –
ஏழு வகை பட்ட கருவில் படையார் – ஏழுவகைப்பட்ட பிறப்பில் தோன்றச் செய்யாதவரு மான திருமால்,
பற்று – விரும்பி யெழுந்தருளி யிருக்குமிடம்; (எ – று.)

ஓடு – வினைத்தொகை. தவனம் – தபநமென்ற வடசொல்லின் விகாரம். நந்தவனம் – ஆனந்தத்தை விளைக்குஞ் சோலை.
காட்டாறுகள், வனம் நந்த – காடுகள் வளர. வேர் ஓடலை தீர்க்கும் – (அருகில் வருவாரது உடம்பில்)
வேர்வையோடுதலை (த் தனது தண்மையால்) ஒழிக்கப்பெற்ற என்று உரைத்தலும் ஒன்று.
வனம் நந்த – காடுகள் அழிய எனினுமாம். நந்தல் – அழிதலும், வளர்தலும். வேர்ஓடலைத்தீர்க்கும் – சிரமஹரமாயிருக்கும் என்றபடி.
இனி, காட்டாறுகள் பூந்தோட்டம் வேரூன்றுதலை யொழிக்கு மென்றும், யானைகள் நந்தவனமென்னும்
இந்திரனது பூஞ்சோலையை வேருடன் அசைத்து இழுக்கு மென்றும் உரைத்தலுமாம்;
இவ்வுரைக்கு, நந்தநவன மென்பது நந்தவனமென விகாரப்பட்ட தென்க.

விற்படை – இருபெய ரொட்டுப் பண்புத்தொகை. இராமனது வில், கோதண்ட மெனப்படும்.
அடியார்கட்கு மீளவும் பிறப்பில்லாதபடி கருமமொழித்து முத்தியளிப்பவரென்பது கருத்து.
கரு – கர்ப்பமென்னும் வட சொல்லின் சிதைவு.
எழுவகைப்பிறப்பு – தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்பன.
படையார் என்பது – மூன்றாமடியில் படையென்னும் பெயரின்மேற் பிறந்த உடன்பாட்டுக் குறிப்புவினையா லணையும்பெயரும்,
நான்காமடியில் படையென்னும் வினைப்பகுதியின்மேற் பிறந்த எதிர்மறைத் தெரிநிலை வினையாலணையும் பெயருமாம்.

—————

நன்காமர் வண்டினமும் நல்வாய் மதகரியும்
மென்காமர முழக்கும் வேங்கடமே -புன்காமம்
ஏவார் கழலார் எனது உளத்தில் என் தலைவை
பூ ஆர் கழலார் பொருப்பு –85-

(இ – ள்.) காமர் நல் வண்டு இனமும் – அழகிய சிறந்த சாதி வண்டுக ளின் கூட்டமும்,
மெல் காமரம் முழக்கும் – இனிமையான இசையை வாய் விட்டுப் பாடப்பெற்ற:
நால்வாய் மதம் கரியும் – தொங்குகிற வாயையுடைய மதயானைகளும்,
மெல் கா மரம் உழக்கும் – அழகிய சோலைகளிலுள்ள மரங்களைப் பெயர்த்து அசைக்கப்பெற்ற:
வேங்கடமே -,-
புல் காமம் ஏவார் – (தமது அடியார்களை) இழிவான காமவழியிற் செல்ல விடாதவரும்,
எனது உளத்தில் கழலார் – (அடியவனான) என்னுடைய மனத்தினின்று நீங்காத வரும்,
என் தலை வை பூ ஆர் கழலார் – அடியேனுடைய தலையின்மேல் வைத்த தாமரைமலர் போன்ற திருவடிகளை யுடையவருமான திருமாலினது,
பொருப்பு – திருமலை; (எ – று.)

நல்வண்டு – நல்ல மணத்தே செல்லும் வண்டு. மென்மை – செவிக்கு இனிமை. காமரம் – பண்.
முழக்கும் – முழங்கு மென்பதன் பிறவினை. நால்வாய் – வினைத்தொகை: நான்றவாய், நால்கிற வாய், நாலும் வாய் என விரியும்;
நால் – வினைப்பகுதி: நாலுதல் – தொங்குதல். கரம் – கை; இங்கே துதிக்கை: அதனையுடையது கரீ என வடமொழிக் காரணக்குறி.
அது, கரியென ஈயீறு இகரமாய் நின்றது. இதற்கு – கருமையுடையதெனத் தமிழ் வகையாற் காரணப்பொருள் கூறலாகாது,
வடசொல்லாதலின். மென்மை – கண்ணுக்கு இனிமை; குளிர்ச்சியுமாம். கா – பாதுகாத்தற்கு உரியது.
உழக்கும், உழக்கு – பகுதி; உழக்குதல் – கலக்குதல், வருத்தல்;
இதனை உழ என்னும் தன்வினைப்பகுதி “கு” என்னும் விகுதி பெற்ற பிறவினை யென்னலாம்.

புல்காமம் ஏவார் – தமது அடியார்களை இழிந்த சிற்றின்ப வழியிற் செல்ல விடாமல் உயர்ந்த பேரின்பநெறியிற் செலுத்துபவ ரென்க.
மேவார் எனப் பதம் பிரித்து உரைத்தல் மோனைத்தொடைக்குப் பொருந்தாது. “மலர் மிசையேகினான்” என்றபடி
அன்பால் நினைவாரது உள்ளக்கமலத்திற் கடவுள் அவர் நினைந்த வடிவத்தோடு சென்று வீற்றிருத்தலால்,
‘கழலா ரென துளத்தில்’ என்றார். ‘பூவார்கழல்’ என்பது – திருவேங்கட முடையானது திருவடிக்குச் சிறப்பாக வழங்கும்.
கழலார் என்பது – மூன்றாமடியில் கழல் என்னும் வினைப்பகுதியின்மேற் பிறந்த எதிர்மறைத் தெரிநிலை
வினையா லணையும் பெயரும், நான்காமடியில் கழல் என்ற பெயரின்மேற் பிறந்த உடன்பாட்டுக் குறிப்பு வினையாலணையும் பெயருமாம்.

————-

பாம்பும் குளிர் சந்தின் பக்கத்தில் நிற்கின்ற
வேம்பும் மருத்துவக்கும் வேங்கடமே காம்புகரம்
ஆனவரை நன்குடையார் ஆளாய்த் தொழுது ஏத்தும்
மானவரை நன்கு உடையார் வாழ்வு -86-

(இ – ள்.) பாம்பும் – பாம்புகளும்,
மருத்து உவக்கும் – காற்றை விரும்பி உணவாகக் கொள்ளப்பெற்ற:
குளிர்சந்தின் பக்கத்தில் நிற்கின்ற வேம்பும் – குளிர்ந்த சந்தனமரங்களின் அருகிலே நிற்கின்ற வேப்பமரங்களும்,
மரு துவக்கும்- (அவற்றின் சேர்க்கையால்) நறுமணம் வீசத்தொடங் கப்பெற்ற:
வேங்கடமே -,-
கரம் காம்பு ஆன – தமது கையையே காம்பாகக் கொண்ட,
வரை நல் குடையார் – கோவர்த்தந கிரியாகிய நல்ல குடை யையுடையவரும்,
ஆள் ஆய் தொழுது ஏத்தும் மானவரை நன்கு உடையார் – (தமக்குத்) தொண்டராய் வணங்கித் துதிக்கின்ற
மனிதர்களை மிகுதி யாகவுடையவருமான திருமால்,
வாழ்வு – வாழுமிடம்; (எ – று.)

பாம்பு வாதாசந மாதலால், ‘மருத்துஉவக்கும்’ என்றார்; அது இம்மலையி னின்று வீசுகின்ற நறுமணமுள்ள
குளிர்ந்தகாற்றை நல்லுணவாக விரும்பி யேற்று உட்கொள்ளு மென்க.
சந்தின்பக்கத்தில் நிற்கின்ற வேம்பும் மருத்துவக்கும் – “சந்தனத்தைச் சார் தருவும் தக்கமணங் கமழு” மென்க.
துவக்கும், துவக்கு – பகுதி; துவக்குதல் – தொடங்குதல்.

‘காம்புகரமான வரை நன்குடையார்’ –
“செப்பாடுடைய திருமாலவன் தன்செந்தாமரைக்கைவிர லைந்தினையுங்,
கப்பாகமடுத்து மணிநெடுந்தோள் காம்பாகக்கொடுத்துக் கவித்த மலை,…… கோவர்த்தனமென்னுங் கொற்றக் குடையே” என்ற
பெரியாழ்வார்திருமொழியை அறிக.
நன்குடை – எத்தனை மழைக்குஞ் சலியாத குடை; மிகப்பல ஆயர்களையும் ஆக்களையும் வருந்தாத படி பாதுகாத்த குடை;
பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் எட்டிமேயலாம் படி புல்முதலிய உணவுகளைக் கொடுத்த குடை.
மாநவர் – காசியபமுனிவனது மனைவியருள் மநுவென்பவளது மரபில் தோன்றியவர்; வடமொழித் தத்திதாந்தநாமம்.

————–

சாரும் அருவிதவழ் சாரலும் செஞ்சனத்தின்
வேரும் அரவம் அறா வேங்கடமே -நேரும்
மதுகையிடவர்க் கறுத்தார் மா மலரோன் சாபம்
மதுகை இடவர்க்கு அறுத்தார் வாழ்வு –87-

(இ – ள்.) சாரும் அருவி தவழ் சாரலும் – பொருந்திய நீரருவிகள் பெருகப்பெற்ற மலைப்பக்கங்களும்,
அரவம் அறா – ஓசை நீங்காதிருக்கப் பெற்ற:
செம் சந்தனத்தின் வேரும் – செந்நிறமான சந்தனமரங்களின் வேரும்,
அரவம் அறா – பாம்புகள் நீங்காதிருக்கப்பெற்ற:
வேங்கடமே -,-
நேரும் – எதிர்த்த,
மது கையிடவர் – மது கைடபன் என்னும் அசுரர்களை,
கறுத்தார் – கோபித்து அழித்தவரும்,
மா மலரோன் சாபம் – சிறந்த (திரு நாபித்) தாமரைமலரில் தோன்றிய பிரமனது சாபத்தை,
மதுகை இடவர்க்கு அறுத்தார் – வலிமையுள்ள ருஷபத்தையுடையவராகிய சிவபிரானுக்கு நீக்கினவருமான திருமால்,
வாழ்வு – வாழுமிடம்; (எ – று.)

அரவம் – ஒலியென்னும் பொருளில், ரவம் என்ற வட சொல்லின்விகாரம், மதுகைடப ரென்பவர், ஆதிசிருஷ்டிகாலத்தில் தோன்றினவர்.
மகா பலசாலிகளான இவ்வசுரரிருவரும் செருக்கிக் கடலில் இழிந்து திருமாலை யெதிர்த்துப் பெரும்போர்புரிய,
இவர்களை அப்பெருமான் துடையால் இடுக்கிக் கீழேதள்ளிக் கால்களால் மிதித்துத் துவைத்து வதைத்தனனென வரலாறு உணர்க.

மதுகைடபர் என்ற வடமொழித்தொடர், யமகநயத்திற்காக மதுகையி டவரென விகாரப்பட்டது.
இத்தொடர், உயர்திணையும்மைத்தொகையாத லால், பன்மைவிகுதிபெற்றது.
மதுகைடவர்க்கறுத்தார் – உயர்திணைப் பெயரின்முன் வலிமிக்கது, இரண்டாம்வேற்றுமைத்தொகை யாதலால்; “இயல்பின் விகாரம்.
” கரு என்ற பண்படி கறுஎன விகாரப்பட்டு வினைத்தன்மை யடையும்போது கோபித்தலென்னும் பொருளையும் உணர்த்துதலை
“கறுப்பும் சிவப்பும் வெகுளிப்பொருள” என்ற தொல்காப்பியத்தால் அறிக.

மலரோன்சாபம் இடவர்க்கு அறுத்தார் – பிரமனிட்டசாபத்தாற் கையை விட்டு நீங்காமல் ஒட்டிக்கொண்ட பிரமக
பாலத்தை யேந்திச் சிவபிரான் உலகமெங்கும் அலைந்து இரத்தலைத் திருமால் தவிர்த்தருளினன்.
(திருக் கண்டியூரில் எழுந்தருளியிருக்கின்ற திருமாலின் திருநாமம், “அரன்சாபந்தீர் த்த பெருமாள்” என வழங்கும்.
“பிண்டியார் மண்டையேந்திப் பிறர்மனை திரிதந்துண்ணு, முண்டியான் சாபந்தீர்த்த வொருவன்” என்றார் திருமங்கை யாழ்வாரும்.)
சாபம் மதுகை – சாப வலிமையை, இடவர்க்கு அறுத்தார் என்றலும் ஒன்று.
இனி, மலரோன்சாபமது – அந்தப்பிரமனது சாபத்தை, இடவர்க்கு – சிவனுக்கு, கை – கையினின்று,
அறுத்தார் – தவிர்த்தவர் என்று உரைப்பாருமுளர். “மாமரையோன்” என்றும், “மாமறையோன்” என்றும் பாடங்க ளுண்டு.
சாபம் – வடசொல். ருஷபம் என்ற வடசொல், இடப மென விகாரப்பட்டது; அதனையுடையவர், இடவ ரென்க.

————-

மண் மட்டுத் தாழ் சுனையும் வட்டச் சிலா தளமும்
விண் மட்டுத் தாமரை சேர் வேங்கடமே எண் மட்டுப்
பாதம் உன்னி நைந்தார் பரம பதம் சேர்க என்று
போதமுன் நினைந்தார் பொருப்பு –88-

(இ – ள்.) மண் மட்டு தாழ் சுனையும் – தரையளவும் ஆழ்ந்துள்ள சுனைகளும்,
விள் – மலர்ந்த,
மட்டு – தேனையுடைய,
தாமரை – தாமரைமலர்,
சேர் – பொருந்தப்பெற்ற:
வட்டம் சிலாதலமும் – வட்டவடிவமான கல்லினிடமும்,
விண்மட்டு – மேலுலகத்தினளவும்,
தாம் – தாவுகிற,
மரை – மான்,
சேர் – பொருந்தப்பெற்ற:
வேங்கடமே -,-
பாதம் – (தமது) திருவடியை,
எள் மட்டு உன்னி – எள்ளளவேனும் தியானித்து,
நைந்தார் – மனமுருகினவர்கள்,
பரமபதம் சேர்க – பரமபதம் அடையக்கடவர், என்று -,
போதம் – தமது அறிவினால் (தமது திருவுள்ளத்தில்),
முன் – முன்பு (அநாதிகாலமாக),
நினைந்தார் – எண்ணியருளிய திருமாலினது, பொருப்பு –
திருமலை; (எ – று.)

விள் – வினைத்தொகை. வட்டச்சிலாதலம் மரை சேர் – “வண்மைதிகழ் வெண்பளிங்கு வட்டத்திற் கண்டுயில் மான்” என்றார். 50 – ஆஞ் செய்யுளிலும்.
சிலாதலம் – வடமொழித்தொடர். தாம் – தாவும் என்னுஞ் செய்யுமெ னெச்சத்து ஈற்றுயிர்மெய் சென்றது.
எள் – மிக்க சிறுமைக்கு எடுத்துக் காட்டிய அளவை “காண விரும்பினர்மேல் நான் மடங்காம் ஆர்வத்தார்” என்றபடி
அடியவரது பக்தியினளவினும் பலமடங்கு அதிகமான பரமகாரு ணியத்தையுடைய கடவுளாதலால்,
தமது திருவடியை எள்ளளவேனும் சிந்தித்து உருகியவர் பரமபதஞ்சேர்வாராக வென்று திருவுள்ளம்பற்றும் இயல்பினரென்க.
முன்னியென்றும் பதம்பிரித்து உரைக்கலாம். “பாதமுன்னி நைந்தார்,” “போதமுன்னினைந்தார்” என்றவிடத்து
நகரவேறுபாடு திரிபு நயத்தின்பொருட்டுக் கொள்ளப்பட்டிலது. பரமபதம் – சிறந்தஇடம். போத எனப் பதம்பிரித்து, மிகுதியாக என்றலும் ஒன்று.
முன் – அவர் எண்ணுவதற்கு முன்னமே யென்றுமாம். போத முன் – அவர்கள் வருவதற்கு முன் என்றுமாம்.

————-

போதா இரு சுடரும் போதுதற்கும் ஓதுதற்கும்
வேதா வினால் முடியா வேங்கடமே -மாதாவின்
வீங்கு தனத்துக்கு இனியான் விம்மி அழாது ஆட்கொண்டான்
தாங்கு தன் நத்துக்கு இனியான் சார்பு –89-

(இ – ள்.) போதா – (கற்பகாலமளவும்) அழியாத,
இரு சுடரும் – சூரிய சந்திரர் இருவரும்,
போதுதற்கும் – (ஆகாயவீதியிலே) செல்லுவதற்கும்,
வே தாவினால் முடியா – மூங்கில்கள் அளாவி வளர்தலால் இயலாத:
ஓதுதற்கும் – (தனது மகிமையைச்) சொல்லுவதற்கும்,
வேதாவினால் முடியா (நான்கு முகமுடைய) பிரமனாலும் நிறைவேறாத:
வேங்கடமே -,-
மாதாவின் – தாயினது,
வீங்கு தனத்துக்கு – பருத்த தனங்களை யுண்ணுதற்பொருட்டு,
இனி யான் விம்மி அழாது – இனிமேல் நான் ஏங்கி யழாதபடி,
ஆள்கொண்டான் – (என்னை) அடிமைகொண்டவனும்,
தாங்கு தன் நத்துக்கு இனியான் – கையி லேந்தியுள்ள தனது (பாஞ்சஜந்ய மென்னுஞ்) சங்கத்துக்கு இனியவனுமான திருமால்,
சார்பு – சார்ந்திருக்குமிடம்; (எ – று.)

போதா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்: போது – பகுதி.
இதற்கு – (அல்லும் பகலும் அநவரதமும் சஞ்சாரம்) ஒழியாத என்று உரைப்பினுமாம். சுடர் – ஒளி, சோதி.
தாவினால் – தாவு என்ற முதனிலைத் தொழிற் பெயரின் மூன்றாம்வேற்றுமை விரி; இன் – சாரியை;
இதனை எதிர்கால வினையெச்சமாகக் கொள்ளின் சிறவாது. முடிதல் – இயலுதலும், முற்றுதலும், வேதா, மாதா – வடசொற்கள்.

இனி எனக்குப் பிறப்பில்லாதபடி அடிமைகொண்டவ னென்பது, மூன்றாமடியின் கருத்து.
“வீங்கு தனம்” என்றது, வெறுப்பைக் காட்டும். நந்து என்பது நத்துஎன மென்றொடர் வன்றொடராயிற்று.
“நத்துக்கு இனியான்” என்றது, அதனை எப்பொழுதும் கைவிடாமையும், வேண்டும்பொழு தெல்லாம் வாய்
வைத்துக் கொள்ளுதலும் முதலியன பற்றி. இச்சிறப்பை வெளியிட்டு ஆண்டாள்
“சந்திரமண்டலம்போல் தாமோதரன் கையில், அந் தரமொன்றின்றி யேறி யவன்செவியில்,
மந்திரங்கொள்வாயே போலும் வலம்புரியே, இந்திரனு முன்னோடு செல்வத்துக்கேலானே” என்றும்,
“உன் னோ டுடனே யொருகடலில் வாழ்வாரை, இன்னாரினையாரென் றெண்ணு வாரில்லைகாண்,
மன்னாகிநின்ற மதுசூதன்வாயமுதம், பன்னாளு முண்கின் றாய் பாஞ்சசன்னியமே” என்றும்,
“உண்பதுசொல்லி லுலகளந்தான் வாயமுதம், கண்படைகொள்ளிற் கடல்வண்ணன் கைத்தலத்தே,
பெண்படையா ருன்மேற் பெரும்பூசல் சாற்றுகின்றார், பண்பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே” என்றும்,
“பாஞ்சசன்னியத்தைப் பற்பநாபனோடும், வாய்ந்த பெருஞ் சுற்றமாக்கிழுக் கூறியமை காண்க.
இனி, தாங்கு தனத்துக்கு இனியான் என்று எடுத்து, கைகளில் நிரம்பக்கொண்டு செலுத்திய காணிக்கைப் பொருளுக்கு
இனியவனென்று உரைப்பினும் அமையும்;
அடியார்கள் பிரார்த்தனையாகக் கொடுக்கும் பொருளைக் கைம்மாறாகப் பெற்றுக்கொண்டு
அவர்கட்கு வேண்டும் பயனை யளித்தல், திருவேங்கட முடையானது சங்கல்பம்.

—————

பேய்க்கும் ஒரு பேய் போன்று பித்து ஆயத் திரிவோர்க்கும்
வேய்க்கும் அணி முத்து வரும் வேங்கடமே -வாய்க்கு அமுது ஊர்
வண்மைப் பேர் ஆயிரம் தான் மன்னினான் மாவலி பால்
தண்மைப் பேராய் இரந்தான் சார்பு –90-

(இ – ள்.) பேய்க்கும் ஒரு பேய் போன்று பித்து ஆய் திரிவோர்க்கும் – பேயின் கண்ணுக்கும் ஒருபேய்போலத் தோன்றுமாறு
பெரும் பைத்தியங் கொண்டு திரிகிறவர்களுக்கும்,
அணி முத்தி வரும் – (அங்குவந்த மாத்திரத் தால்) அழகியமோக்ஷம் சித்திக்கும்படியான:
வேய்க்கும் – மூங்கில்களிலும்,
மணி முத்து இவரும் – அழகிய முத்துக்கள் மிகுதியாகத் தோன்றப்பெற்ற:
வேங்கடமே -,-
வாய்க்கு அமுது ஊர் – (உச்சரிப்பவருடைய) வாய்க்கு அமிருதம்போன்ற இனிமை சுரக்கிற,
வண்மை பேர் ஆயிரம் – வளமான ஆயிரந்திருநாமங்கள்,
மன்னினான் – பொருந்தியவனும்,
மாவலிபால் – மகாபலியி னிடத்து,
தண்மை பேய் ஆய் இரந்தான் – எளியவனாய் (மூன்று அடிநிலத்தை) யாசித்தவனுமான திருமால்,
சார்பு – சாருமிடம்; (எ – று.) – தான் – அசை.

பேய்க்குமொருபேய்போன்று – பெரும்பேய்போல என்றபடி. அங்ங னம் பித்தாய்த் திரிவோர்க்கும் வேங்கடமலைக்கு வந்த
மாத்திரத்தில் முத்தி சித்தித்தலை, இந்நூலுரைத் தொடக்கத்திற் காட்டிய மாதவனென்னும் அந்தணனது வரலாற்றினாலும் அறிக.
இனி, “பேயரே யெனக்கு யாவரும் யானு மோர், பேயனே எவர்க்கும் இதுபேசியென்,
ஆயனே யரங்காவென் றழைக்கின்றேன், பேயனாயொழிந்தே னெம்பிரானுக்கே”,
“அரங்கனுக் கடியார்களாகி யவருக்கே, பித்தராமவர் பித்தரல்லர்கள் மற்றையார் முற்றும்பித்தரே” என்றபடி
பேயாழ்வார்போன்று உலகநடையிற் கலவாமல் பகவத்பாகவத விஷயங்களிற் பக்திப்பித்துக்கொண்டு திரிகின்ற
அடியார்களுக்கு முக்தி கைவருவதற்கு இடமான என்று உரைப்பினும் அமையும்.
முக்தி என்ற வடசொல் – பற்றுக்களைவிட்டு அடையு மிடமெனப் பொருள் படும்.
வேய்க்கு என்பதில் நான்கனுருபு ஏழனுருபின் பொருளில் வந்தது, உருபுமயக்கம்.

பேர்க்கு வண்மை – உச்சரித்தமாத்திரத்தில் அருவினைதொலைத்து நற்பயன்பலவும் அளிக்குந்திறம்;
அதனை, “குலந்தரும் செல்வந்தந்திடும் அடி யார்படு துயராயினவெல்லாம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அரு ளொடு பெருநிலமளிக்கும்,
வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்றதாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னு நாமம்” என்று திருமங்கையாழ்வார் வெளியிட்டுள்ளார்.
பேர்ஆயிரம் – ஸஹஸ்ரநாமம். மாவலி – வடசொற்சிதைவு, தண்மைப்பேராய் – யாசகனாய், எளிய வாமநனாய்.

————–

வாழ்க்கை மனை நீத்தவரும் வாளரியும் மாதங்க
வேட்கை மறந்திகழும் வேங்கடமே –தோள் கை விழ
மா கவந்தனைக் கவிழ்த்தார் வாழ் இலங்கைப் பாதகரை
லோக வந்தனைக்கு அழித்தார் ஊர் –91-

(இ – ள்.) மனை வாழ்க்கை நீத்தவரும் – இல்லறவாழ்வைத் துறந்த முனிவர்களும்,
மாது அங்கம் வேள் கைமறந்து இகழும் – மாதர்களின்உடம் பினிடத்துக் காதலை முற்றும் ஒழித்து அதனை இகழப்பெற்ற:
வாள் அரியும் – கொடியசிங்கங்களும்,
மாதங்கவேட்கை மறம் திகழும் – யானையைக் கொல்ல வேண்டுமென்னும் விருப்பத்தோடு வீரம் விளங்கப்பெற்ற:
வேங்கடமே -,-
மா கவந்தனை – பெரிய கபந்தனென்னும் அரக்கனை,
தோள் கை விழ கழித்தார் – தோள்களோடு கூடிய கைகள் அற்று விழும்படி வெட்டித் தள்ளின வரும்,
இலங்கை வாழ் பாதகரை – இலங்காபுரியில் வாழ்ந்த பாவிகளானராவணன் முதலியோரை,
லோகவந்தனைக்கு அழித்தார் – உலகத்தார் தம்மை வழிபட்டதற்கு இரங்கிக் கொன்றவருமான திருமாலினது,
ஊர் – திருப்பதி.(எ – று)

மாது அங்க வேள் கைமறந்து இகழும் – பெண்ணாசையை அறக்கை விட்ட என்றபடி.
மா தங்கம் வேள் கைமறந்து இகழும் எனக்கொண்டு மிக்க பொன்னாசையை அறத்தொலைத்த வென உரைப்பினுமாம்.
கைமறந்து என்பதில், கை என்பது – தனியே பொருளொன்றுமுணர்த்தாமல் வினைக்குமுன் வந்த தமிழுபசர்க்கம்;
கைவிடுதல், கைகூடுதல் என்பவற்றிலும் இது. வாள் அரி – ஒளியையுடைய சிங்கமுமாம். ஹரி – வடசொல்;
யானை முதலிய விலங்குகளை அரிப்பது: அரித்தல் – அழித்தல்.
மாதங்கம் என்ற வடசொல் – யானையைக் குறிக்கும்போது மதங்க முனிவரிடத்தினின்று ஆதியில் உண்டானதெனக் காரணப்பொருள்படும்.

கவந்தன் – தநுஎன்னும் யக்ஷனதுமகன்; இவன் ஸ்தூலசிரஸ்என்னும் முனிவரது சாபத்தால் அரக்கனாகிப்
பிரமனருளால் தீர்க்காயுசு பெற்றுத் தேவேந்திரனோடு எதிர்த்து அவனது வச்சிராயுதத்தாற் புடைபட்டுத்
தனது தலை வயிற்றில் அழுந்தியமைபற்றிக் கவந்தம் போலத் தோற்ற முடையனா யிருந்ததனால், இப்பெயர் பெற்றான்.
கபந்தம் என்ற வடசொல்லுக்கு – தலை யற்றதும் தொழிலுடன் கூடியதுமான உடலென்பது பொருள்.
“உலக மென்பது உயர்ந்தோர் மாட்டே” என்பதற்கு ஏற்ப, இங்கே “லோகவந்தனைக்கு” என்பதற்கு –
தண்டகாரணியவாசிகளான மகாமுனிவர்களுடைய வேண்டுகோளினாலென்க. வந்தனைக்கு – உருபுமயக்கம்.

————-

கூட்டு தவத்தரும் கோளரிகளின் தொகையும்
வேட்டு வரம் பொழியும் வேங்கடமே –மோட்டு மதத்
தந்திக்கு அமலத்தார் தாம் பெறூ உம் வீடு அளித்தார்
உந்திக் கமலத்தார் ஊர் –92-

(இ – ள்.) கூட்டு தவத்தவரும் – மேன்மேற் செய்துசேர்த்த தவத்தை யுடைய முனிவர்களும்,
(அப்பெருந்தவத்தின் சித்தியால்),
வேட்டு வரம் பொழியும் – விரும்பி (அன்புடனே) (தம்மிடம் வேண்டுவார் வேண்டிய வரங்களை மிகுதியாகக்கொடுத்தற்கிடமான:
கோள் அரிகளின் தொகையும் – வலிமையுள்ள சிங்கங்களின் தொகுதியும்,
வேட்டுவர் அம்பு ஒழியும் – வேடர்கள் எய்கிற பாணங்கள் (தம்மேற்படாதபடி தந்திரமாக அவற்றிற்கு) விலகப் பெற்ற:
வேங்கடமே -,-
மோடு மதம் தந்திக்கு – உயர்ச்சியையுடைய மத யானைக்கு,
அமலத்தார்தாம் பெறூஉம் வீடு அளித்தார் – நிர்மலரான ஞானிகள் பெறுதற்கு உரிய முத்தியைக் கொடுத்தருளியவரும்,
உந்தி கமலத்தார் – திருநாபித்தாமரையையுடையவருமான திருமாலினது,
ஊர் – திருப்பதி.

கூட்டு – பிறவினை வினைத்தொகை. வேட்டுவர் – வேடுஎன்னுந் தொழிலையுடையார்;
வேடு – மிருகபக்ஷிகளைப் பிடித்துவருத்துதல். வேட்டுவரம்பு ஒழியும் – வேடர்களுடைய அம்புகள் பட்டதனால் அழியப்பெற்ற எனினுமாம்.
தந்தீ என்ற வடசொல் – தந்தத்தை யுடைய தென்று காரணப்பொருள்படும்.
அமலத்தார் – காமம் வெகுளி மயக்க மென்னும் மலங்க ளில்லாதவர்; மலம் – குற்றம். தாம் – அசை.
பெறூஉம் – செய்யுளோ சைகுன்றாதவிடத்தில் இன்னிசைதருதற்பொருட்டுக் குறில் நெடிலாய் நீண்டு அளபெடுத்தது.

————-

வஞ்சம் மடித்திருப்பார் வாக்கும் கலைக்கோடும்
விஞ்ச மடித்திருக்கு ஆர் வேங்கடமே –கஞ்சப்
பிரமா நந்த தான் பிரபஞ்சம் மாய்த்த
பரமா நந்தத்தான் பதி –93-

(இ – ள்.) வஞ்சம் மடித்து இருப்பார் வாக்கும் – வஞ்சனையையொழித் திருக்கின்ற அந்தணர்களுடைய வாயும்,
விஞ்ச – மிகுதியாக,
மடித்த இருக்கு ஆர் – மடித்து மடித்துச் சொல்லப்படுகின்ற வேதங்கள் நிரம்பப்பெற்ற:
கலை கோடும் – கலைமான்கொம்பும்,
விஞ்ச – மிகுதியாக,
மடி திருக்கு ஆர் – வளைவோடுகூடிய முறுக்குப் பொருந்தப்பெற்ற:
வேங்கடமே -,-
கஞ்சம் பிரமா நந்த – (தனது நாபித்) தாமரைமலரில் தோன்றிய பிரமனும் அழிய,
தான் -,
பிரபஞ்சம் மாய்த்த – (கல்பாந்தகாலத்தில்) உலகங்களை அழித்த,
பரம ஆநந்தத்தான் – எல்லா ஆனந்தங்களிலும் மேலான பேரானந்தத்தை யுடையவனான திருமாலினது,
பதி – ஊர்; (எ – று.)

வஞ்சம் அடித்து என்றும் பதம் பிரிக்கலாம்; அடித்தல் – ஒழித்தல். வாக் – வடசொல்.
மடித்த இருக்கு என்பது, மடித்திருக்கு எனப் பெயரெச்ச வீறு தொக்கது; வேட்டகம், புக்ககம், வந்துழி என்றவற்றிற் போல.
க்ரமம், ஜடை, கநம் முதலிய சிலவகைகளால் வேதச்சொற்கள் மடித்து மடித்துச் சொல்லப்படுதலால், “மடித்திருக்கு” எனப்பட்டது.
ருக் என்ற வடமொழி, இருக்கு என விகாரப்பட்டது;
இது, நான்குவேதங்களில் ஒன்றற்குப் பெய ராதலேயன்றி எல்லாவேதங்களுக்கும் பொதுப்பெயராகவும் வழங்கும்.
கஞ்சம் என்ற வடசொல் – நீரில் தோன்றியதென்று காரணப் பொருள்படும்; தாமரைக்குக் காரணவிடுகுறி.
ப்ரஹ்மா, ப்ரபஞ்சம், பரமாநந்தம் – வட சொற்கள். பரமாநந்தம் – தீர்க்கசந்தி பெற்றது.
பரமாநந்தத்தான் – பரம பதத்து நிரதிசய இன்பத்தைத் தனது அடியார்க்குத் தருபவன்.

————-

சேல் அஞ்சும் கண் மடவார் தேம் குழலும் கோங்கினமும்
மேலஞ்சு வர்க்கம் ஆர் வேங்கடமே -கோலம் சேர்
மாரில் அலங்கு அரத்தார் மற்றும் பல பூண் அணிந்த
காரில் அலங்காரத்தார் காப்பு –94-

(இ – ள்.) சேல் அஞ்சும் கண் – சேல் மீன்கள் (ஒப்புமைக்கு முன் நிற்கமாட்டாமல்) அஞ்சி விலகத்தக்க கண்களையுடைய,
மடவார் – மாதர் களின்,
தேம் குழலும் – நறுமணமுள்ள கூந்தலும்,
மேல் அஞ்சு வர்க்கம் ஆர் – மேன்மையான ஐந்துவகை பொருந்தப்பெற்ற:
கோங்கு இனமும் – கோங்குமரங்களின் தொகுதியும்,
மேல் அம் சுவர்க்கம் ஆர் – (மிக்கஉயர்ச்சி யால்) மேலேயுள்ள அழகிய சுவர்க்கலோகத்தை அளாவப்பெற்ற:
வேங்கடமே -,-
கோலம் சேர் மாரில் அலங்கு ஆரத்தார் – அழகு பொருந்திய திருமார்பில் அசைகின்ற ஆரங்களை யுடையவரும்,
மற்றும் பல் பூண் அணிந்த – (அவ்வாரம் மாத்திரமே யன்றி) மற்றும் பல ஆபரணங்களைத் தரித்த,
காரில் அலங்காரத்தார் – காளமேகம் போன்ற அழகுடையவரு மான திருமால்,
காப்பு – (உயிர்களைப்) பாதுகாக்கு மிடம்; (எ – று.)

சேலஞ்சுங்கண் – பிறழ்ச்சியிலும் அழகிலும் சேலைவென்றகண். மடவார் – மடமையை யுடையவர்;
மடமை – இளமை, அல்லது மகளிர்க்கு உரியதான பேதைமைக்குணம்.
அஞ்சு வர்க்கம் – முடி, குழல், கொண்டை, பனிச்சை, சுருள் என்னும் மயிர் முடியின் வகைகள்:
மயிரை உச்சியில் முடித்தல், முடி. சுருட்டி முடித்தல், குழல், மயிரை முடிந்துவிடுதல், கொண்டை. பின்னி விடுதல்,
பனிச்சை, பின்னே செருகல், சுருள், வர்க்கம், ஸ்வர்க்கம், ஹாரம், அலங்காரம் – வடசொற்கள்.
அலங்கு ஆரம் – வினைத்தொகை. ஆரம் – பொன் மணி மலர்களா லாகிய மாலை.
திருமாலின் திருமேனிக்குக் காளமேகம் நிறத்தில் உவமம்.

—————

கொய்யும் மலர்ச்சோலைக் கொக்கும் பிணி யாளர்
மெய்யும் வடுத்த விரும் வேங்கடமே -நையும்
சனனாந் தகனார் தலையிலி தோள் சாய்த்த
சினநாந் தகனார் சிலம்பு –95-

(இ – ள்.) கொய்யும் மலர் சோலை கொக்கும் – பறித்தற்கு உரிய மலர்களையுடைய சோலையிலுள்ள மாமரமும்,
வடுத்து அவிரும் – பிஞ்சுவிட்டு விளங்கப்பெற்ற:
பிணியாளர் மெய்யும் – நோயாளிகளுடைய உடம்பும்,
வடு தவிரும் – (அங்கு வந்தமாத்திரத்தால்) உடற்குற்றமாகிய அந்நோய் நீங்கப் பெற்ற:
வேங்கடமே -,-
நையும் சனன அந்தகனார் – (உயிர்கள்) வருந்துதற்குக் காரணமான பிறப்பை (அடியார்க்கு) ஒழிப்பவரும்,
தலை இலி தோள் சாய்த்த – கபந்தனுடைய தோள்களை வெட்டித்தள்ளின,
சினன் – கோபத்தையுடைய,
நாந்தகனார் – நந்தகமென்னும் வாட்படையையுடையவருமான திருமாலினது,
சிலம்பு – திருமலை; (எ – று.)

மாமரத்தை “கொக்கு” என்பது – துளுவநாட்டார் வழங்குங் திசைச் சொல். வடுத்தல் – இளங்காய் அரும்பல்.
நையும்என்ற பெயரெச்சம் – காரியப் பொருளது. ஜநநாந்தகன் – பிறப்புக்கு யமனாகவுள்ளவன்;
பிறப்பையொழித்து முத்தி யருள்பவ னென்றபடி; தீர்க்கசந்திபெற்ற வடமொழித்தொடர்.
தலையிலி – தலையில்லாதவன்; தலை வெளித்தெரியாது வயிற்றினுள் அடங்கியமைபற்றி, கவந்தன் தலையிலி யெனப்பட்டான்.
சினன் – சினம் என்பதன் இறுதிப்போலி. நந்தகமென்ற வடசொல், நாந்தகமென விகாரப்பட்டது.
பிணியாளர் மெய் வடுத்தவிர்தல் –
“பித்து மல டூமை முடம் பேய் குருடு கூன் செவிடு, மெய்த்துயர் நோய் தீர்த்தருளும் வேங்கடமே” என முன்னர்க் கூறப்பட்டது.

————

நேர்க்க வலை நோயினரும் நீடு சிலை வேடுவரும்
வேர்க்க வலை மூலம் கல் வேங்கடமே –கார்க்கடல் மேல்
தாண்டும் காலத்து இறப்பார் தம்மை விழுங்கி கனி வாய்
மீண்டும் காலத் திறப்பார் வெற்பு –96-

(இ – ள்.) நேர் கவலை நோயினரும் – மிகுதியான கவலையைத் தருகிற நோயையுடையவர்களும், (அந்நோய் நீங்குதற்பொருட்டு),
வேர்க்க – (பக்தி மிகுதியால் தம் உடல்) வியர்வையடைய,
அலை மூலம் கல் – திருப்பாற்கடலிற் பள்ளிகொண்டருளுகிற ஆதிமூலப்பொருளைத் துதிக்கப்பெற்ற:
நீடு சிலை வேடுவரும் – நீண்ட வில்லையுடைய வேடர்களும்,
வேர் கவலை மூலம் கல் – வேரோடு கவலைக் கிழங்கைத் தோண்டப்பெற்ற:
வேங்கடமே -,-
கார் கடல் – கருநிறமுடையதான கடல்,
மேல் தாண்டும் – பொங்கி மெலெழுந்து பரவுகிற,
காலத்து – பிரளயகாலத்தில்,
இறப்பார்தம்மை விழுங்கி – இறக்கிற உயிர்களையெல்லாம் உட்கொண்டு தமது திருவயிற்றினுள் வைத்து,
மீண்டும் கால – (பிரளயம் நீங்கியபொழுது) மீளவும் (அவற்றை) வெளிப்படுத்துமாறு,
கனி வாய் திறப்பார் – கொவ்வைப்பழம்போற் சிவந்த (தமது) திருவாயைத் திறந்தருள்பவரான திருமாலினது,
வெற்பு – திருமலை; (எ – று.)

கவலை – கவற்சி; கிலேசம்; ‘ஐ’ விகுதி பெற்ற தொழிற்பெயர். வேர்த்தல் – பக்திமிகுதியாலாகும் மெய்ப்பாடு.
அலை – கடலுக்குச் சினையாகுபெயர். மூலம் – முதற்பொருள். கற்றல் – திருநாமங்களை இடைவிடாமல் உருவிட்டு ஜபித்தல்.
குறிஞ்சிநிலக் கருப்பொருளாகிய கவலையென்னுங் கொடியின்கிழங்கு, அந்நிலத்துமாக்கட்கு உணவாவதற்கு உரியது.
இறப்பார் என்ற உயர்திணை, அஃறிணைக்கும் உபலக்ஷணம். கால – செயவெனெச்சம்.

————-

தண் தாமரைச் சுனையில் சாதகமும் வேடுவரும்
விண்டாரை நாடும் வேங்கடமே –தொண்டு ஆக்கி
ஏவத் தனக்கு உடையார் என்னை முன் நாள் எடுத்த
கோவத்தனக் குடையார் குன்று –97-

(இ – ள்.) தண் தாமரை சுனையில் – குளிர்ந்த தாமரையை யுடைய சுனையில் வாழ்கின்ற,
சாதகமும் – சாதகமென்னும் பறவையும்,
விண் தாரை நாடுகின்ற – மேகத்தின் மழைத்தாரையை விரும்பி உணவாகக்கொள்ளப் பெற்ற:
வேடுவரும் – வேடர்களும்,
விண்டாரை நாடுகின்ற – (உடற்கொழுப் பினாற் போர் செய்தற்குப்) பகைத்தவரைத் தேடப்பெற்ற;
வேங்கடமே -,-
தொண்டு ஆக்கி ஏவ – தாசனாக்கி அடிமைகொள்ளுமாறு,
என்னை தனக்கு உடையார் – என்னைத் தமக்கு உடைமையாக்கிக்கொண்டவரும்,
முன் நாள் எடுத்த கோவர்த்தனம் குடையார் – முன்னாளில் (கிருஷ்ணாவதாரத்தில்) எடுத்துப் பிடித்த
கோவர்த்தநமலையாகிய குடையையுடையவருமான திரு மாலினது,
குன்று – திருமலை; (எ – று.)

மேகத்தினின்று தரையில் விழுந்த நீர் சாதகப்புள்ளுக்கு விஷமாகுத லால், அப்பறவை அந்நீரை உட்கொள்ளாது
மேகத்தினின் றுவிழும் மழைத்தாரையை நாவில் ஏற்றுப்பருகும்.
விண்டார் – இறந்தகாலவினையாலணையும் பெயர்; விள் – பகுதி; விள்ளுதல் – மனம் மாறுபடுதல்.
தனக்கு உடையார் – ஒருமைப் பன்மை மயக்கம். ஏவ – குற்றேவல் செய்யுமாறு கட்டளையிட,
கோவர்த்தநம் என்ற வடமொழிப் பெயர் – பசுக்களை வளர்ப்ப தென்று பொருள்படும்.
எடுத்த கோவத்தனக் குடையார் – கோவர்த்தநகிரியைக் குடையாக எடுத்துப் பிடித்தவர்.

————-

வாழ் அரியும் சந்தனம் தோய் மாருதமும் தாக்குதலால்
வேழ மருப்புகுதும் வேங்கடமே –நீழல் அமர்
பஞ்சவடி காட்டினான் பார் அளப்பான் போல் எவர்க்கும்
கஞ்ச அடி காட்டினான் காப்பு –98-

(இ – ள்.) வாழ் அரியும் – (வலிமைகொண்டு) வாழ்கின்ற சிங்கங்களும்,
தாக்குதலால் – மோதியடித்தலால்,
வேழம் மருப்பு உகுதும் – யானைகளின் தந்தம்சிந்தப்பெற்ற:
சந்தனம்தோய்மாருதமும் – சந்தனமரத்தின் மேற்பட்டு வருகிற காற்றும்,
தாக்குதலால் – மேற்படுதலால்,
வேழம் மரு புகுதும் – மூங்கில்களும் நறுமணம் பொருந்தப்பெற்ற:
வேங்கடமே -,-
நீழல் அமர் – நிழல் பொருந்திய,
பஞ்சவடி காட்டினான் – பஞ்சவடியென்னுங் காட்டிடத்தில் வசித்தவனும்,
பார் அளப்பான் போல் – உலகங்களை அளப்பவன்போல,
எவர்க்கும் – எல்லோர்க்கும்,
கஞ்சம் அடி – தாமரைமலர்போன்ற திருவடியை,
காட்டினான் – காட்சிதந்தருளியவனு மான திருமால்,
காப்பு – (உயிர்களைப்) பாதுகாக்குமிடம்; (எ – று.)

“சந்தனந்தோய்மாருதந் தாக்குதலால் வேழம்மருப்புகுதும்” என்றதை 86 – ஆம் பாட்டில்
“குளிர்சந்தின் பக்கத்தில் நிற்கின்ற வேம்பும் மருத்துவவக்கும்” என்பதனோடு ஒப்பிடுக. மாருதம் – வடசொல்.
உகுதும், புகுதும் என்றவற்றில், து – சாரியை. பஞ்சவடீ – ஐந்து ஆலமரங்களின் தொகுதி;
அதனையுடைய இடத்துக்கு ஆகுபெயர்: இது, தண்டகாரணியத்தில் அகண்ட கோதாவரிக் கரையில்
நாசிகாதிரியம்பகத்துக்குச் சமீபத்தி லுள்ளது. இராமபிரான் வனவாசஞ்செய்கையில் அகஸ்தியமுனிவர் சொன்னபடி
இவ் விடத்தில் நெடுநாள்வசித்தனன். பஞ்சவடிக்காட்டினான் என வரற்பாலது, திரிபுநயம் நோக்கிக் ககரவொற்றுத் தொக்கது.
காட்டினான் என்பது – மூன்றாமடியில் காடுஎன்ற பெயரின்மேற் பிறந்த குறிப்பு வினையாலணையும் பெயரும்,
நான்காமடியில் காட்டு என்ற பிறவினைப் பகுதியின்மேற் பிறந்த இறந்தகாலத் தெரிநிலை வினையாலணையும் பெயருமாம்.

————

எவ்விடமும் ஆறு தோய்ந்து எல்லாரும் பல் பாம்பும்
வெவ்விடரின் நீங்கி எழும் வேங்கடமே –தெவ்விடை ஏழ்
அட்டவன் நாகத்து அணையான் ஆதி மறை நூல் மார்க்கம்
விட்டவன் ஆகத்து அணையான் வெற்பு –99-

(இ – ள்.) எல்லோரும் -, எ இடமும் – (அம்மலையில்) பலவிடத்தும் உள்ள,
ஆறு – நதிகளில்,
தோய்ந்து – முழுகி. (அம்மாத்திரத்தால்,)
வெம் இடரின் நீங்கி எழும் – கொடிய (பிறவித்) துன்பத்தினின்று நீங்கி எழப்பெற்ற:
பல் பாம்பும் – பலபாம்புகளும்,
வெம் விடரின் நீங்கி எழும் – வெவ்வியமலை வெடிப்புக்களினின்று புறப்பட்டு மேலெழுந்து வரப்பெற்ற:
வேங்கடமே -,-
தெவ் விடை ஏழ் அட்டவன் – பகைமையையுடைய ஏ” எருதுகளை வலியழித்து வென்றவனும்,
நாகத்து அணையான் – ஆதிசேக்ஷனாகிய சயநத்தை யுடையவனும்,
ஆதி மறை நூல் மார்க்கம் விட்டவன் ஆகத்து அணையான் – பழமையான வேதசாஸ்திரங்களிற்கூறிய நன்னெறியை
விலகினவனுடைய மனத்திற் சேராதவனுமாகிய திருமாலினது,
வெற்பு – திருமலை; (எ – று.)

“ஆறு தோய்ந்து இடரின் நீங்கி யெழும்” எனவே, அங்குள்ள ஆறுகள் தம்மிடத்து ஒருகால் மூழ்கினவளவிலே
வினைத்துன்பங்களை யெல்லாம் தீர்க்கும் மகிமையுடையனவென்று விளங்கும்.
வெவ் – வெம்மையென்ற பண் புப்பெயர் ஈறுபோய் முன்நின்ற மகரமெய் வகரமாயிற்று.
எல்லோர் – எல்லார் என்பதன் ரகர வீற்றயல் ஆகாரம் ஓவாயிற்று. தெவ் – பகைமையுணர்த்தும் உரிச்சொல்;
“தெவ்வுப் பகையாகும்” என்பது, தொல்காப்பியம்.

விடையே ழடர்த்த விவரம்: – கண்ணன் நப்பின்னைப் பிராட்டியைத் திருமணஞ் செய்துகொள்ளுதற்காக,
அவளது தந்தை கந்யாசுல்கமாகக் குறித்தபடி, யாவர்க்கும் அடங்காத அசுராவிஷ்டமான ஏழெருதுகளையும்
ஏழுதிருவுருவக்கொண்டு சென்று வலியடக்கித்தழுவின னென்பதாம். விடை – வ்ருஷம் என்ற வடசொல்லின் சிதைவு.
நாகம் என்ற வடசொல் – கால்க ளால் நடவாத தென்றும், மலைகளில் அல்லது மரங்களில் வாழ்வ தென்றும் காரணப்பொருள் படும்.
வேத சாஸ்திரங்களிற் கூறியபடி நடவாதவரை உபேட்சித்தல், திருமாலின் இயல்பு.
அணையான் என்பது – மூன்றாமடியில் அணைஎன்னும் பெயரின்மேற் பிறந்த உடன்பாட்டுக்குறிப்பு
வினையாலணை யும்பெயரும், நான்காமடியில் அணைஎன்னும் வினைப்பகுதியின்மேற் பிறந்த
எதிர்மறைத் தெரிநிலை வினையாலணையும் பெயருமாம்.

———-

பாடும் மதுகரமும் பச்சைத் தழைக் குடிலின்
வேடும் மணம் மருவும் வேங்கடமே -நீடு
மகராலயம் கடந்தார் வாழ் வாசு தேவர்க்கு
மகர் ஆலயங்கள் தந்தார் வாழ்வு –100-

(இ – ள்.) பாடும் மதுகரமும் – இசைபாடுவதுபோல ஒலிக்கின்றவண்டு களும்,
மணம் மருவும் – (மலர்களின்) நறுமணம் பொருந்தப்பெற்ற:
பச்சை தழை குடிலின் – பசுமையான தழைகளால் அமைக்கப்பட்ட குடிசைகளில்,
வேடும் – வேடர்களும்,
மணம் மருவும் – கலியாணம் செய்யப்பெற்ற:
வேங்கடமே -,-
நீடு – நீண்ட,
மகராலயம் – கடலை,
கடந்தார் – தாண்டியவரும்,
வாழ் வசுதேவர்க்கு மகர் – வாழ்வையுடைய வசுதேவர்க்குப் புதல்வரானவரும்,
ஆலயங்கள் தந்தார் – கோயில்களைத் தந்தருளியவருமான திருமால்,
வாழ்வு – வாழுமிடம்; (எ – று.)

மதுகரம் – வடசொல்; தேனைச் சேர்ப்ப தென்று காரணப்பொருள்படும். பச்சை – ஐவிகுதிபெற்ற பண்புப்பெயர்:
பசு என்ற பண்படி தன்னொற்று இரட்டிற்று. வேடு – சாதிப்பெயர். வேடர்கள் குடிசைகளில் அடிக்கடி மணம் நிகழ்கின்றன வென்க.
மகராலயம் என்ற வடசொல் – மகர ஆலயம் என்று பிரிந்து, மகரங்களுக்கு இடமான தென்று பொருள்படும்;
மகரம் – சுறாமீன். கடல் கடந்தது, இராமாவதாரத்தில் இலங்கைக்குச் செல்லுதற்பொருட்டு.
வசுதேவர் – கண்ணனைப்பெற்ற தந்தை. மகர் – மகன் என்பதன் உயர்வுப்பன்மை.
ஆலயங்கள்தந்தார் – பலவிடங்களிற் கோயில் கொண்டு எழுந்தருளியிருந்து சேதநர்க்குச் சேவைசாதிப்பவர்.

————-

நாந்திச் செய்யுள் –

ஆதி திருவேங்கடம் என்று ஆயிரம் பேரான் இடம் என்று
ஓதிய வெண்பா ஒரு நூறும் -கோதில்
குணவாள பட்டர் இரு கோகனைத் தாள் சேர்
மணவாள தாசன் தன் வாக்கு —

(இ – ள்.) ஆதி திருவேங்கடம் என்று – சிறப்புள்ள திருவேங்கடமென் றும்,
ஆயிரம் பேரான் இடம் என்று – ஆயிரந்திருநாமங்களை யுடையவனான திருமாலினது இடமென்றும்,
ஓதிய – சொன்ன,
வெண்பா ஒரு நூறும் – நூறு வெண்பாக்களும், –
கோது இல் – குற்றமில்லாத,
குணம் ஆள – நற்குணங்களை யுடையவரான,
பட்டர் – பராசரபட்ட ரென்னும் ஆசாரிய ருடைய,
இரு கோகனகம் தாள் – தாமரைமலர்போன்ற இரண்டு திருவடிகளை,
சேர் – சரணமாக அடைந்த,
மணவாளதாசன்தன் – அழகியமணவாள தாசனுடைய,
வாக்கு – வாய்மொழியாம்; (எ – று.)

“ஆதிதிருவேங்கடம்” என்றது – இந்நூற் செய்யுள்களின் முன்னிரண் டடியின் வாய்பாட்டையும்,
“ஆயிரம்பேரா னிடம்” என்றது – பின்னிரண் டடியின் வாய்பாட்டையுங் குறிக்கும்.
குணவாளர் + பட்டர் = குணவாள பட்டர்; உயர்திணைப் பெயரீறு கெட்டது.
கோகநதம் என்ற வடசொல் – சக்கரவாகப் பறவைகள் தன்னிடம் விளையாடப் பெறுவ தென்று காரணப் பொருள்படும்;
கோகம் – சக்கரவாகம். தாசன்றன், தன் – சாரியை.

இச்செய்யுள், நூலாசிரியர் தாமே தம்மைப்பிறன்போலும் பதிகங்கூறியது; பிரயோகவிவேகநூலார்,
“இது, தன்னைப் பிறன்போலும் நாந்தி கூறுகின்றது”,
“வடநூலார் தாமே பதிகமும் உரையும் செய்வார்,”
“இனிச் சம்பந்தர் சடகோபர் முதலாயினாரும் திவாகரரும் பதினெண்கீழ்க்கணக்குச் செய்தாரும்
முன்னாகப் பின்னாகப் பதிகங்கூறுவதும் காண்க” என்றவை காண்க.

————–

திருவேங்கடமாலை முற்றிற்று.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading