ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவரங்கத்து மாலை. – 81-112-

திருவெட்டு எழுத்து -பெரிய திருமந்திரம்

நம் பெருமாள் எழுத்து எட்டின் பெருமை நவிலுமதோ
சம்பரன் மாயம் புரோகிதர் சூழ் வினை தார் அணிவாள்
வெம்படை மாசுணம் மா மத வேழம் விடம் தழல் கால்
அம்பரமே முதலானவை பாலனுக்கு அஞ்சினவே –81-

(இ – ள்.) சம்பரன் – சம்பரனென்னும் அசுரனது,
மாயம் – மாயையும்,
புரோகிதர் சூழ் வினை – புரோகிதர்கள் (கொல்லும்படி) ஆலோசித்துச் செய்த செயல்களும்,
தார் அணி வாள் வெம் படை – வெற்றிமாலையை யணிந்த வாள் முதலிய கொடிய ஆயுதங்களும்,
மாசுணம் – பெரும் பாம்பு களும்,
மா மதம் வேழம் – பெரிய மதயானைகளும்,
விடம் – விஷமும்,
தழல் – அக்கினியும்,
கால் – காற்றும்,
அம்பரம் – கடலும், முதலானவை -,
பாலனுக்கு – (திருவஷ்டாக்ஷரத்தின்மகிமையை அறிந்து உச்சரித்த) சிறுவனாகிய பிரகலாதாழ்வானுக்கு,
அஞ்சின – பயந்து நடந்தன; (என்றால்), –
நம்பெருமாள் – அந்த நம்பெருமாளது,
எட்டு எழுத்தின் – ஸ்ரீ அஷ்டாக்ஷர மந்திரத்தினது,
பெருமை – மகிமை,
நவிலுமதோ – (என்போல்வாராற்) சொல்லுந் திறமுடையதோ? (எ – று.)

புரோகிதர் – பின்னே வரும் நன்மைதீமைகளை முன்னேதெரிந்து சொல்பவர். இரணியன் பேச்சைக்கேட்டுப் பிரகலாதனைக்
கொல்லும்படி மகாமா யாவியான சம்பராசுரன்செய்த மாயைகளையெல்லாம் ஸ்ரீமந்நாராயணனது நியமநத்தினாலே
திருவாழியாழ்வான் அவனைப் பாதுகாக்கும்பொருட்டு அங்கே யெழுந்தருளித் தகித்துச் சாம்பராக்கிவிட்டதனால், சம்பரன் மாயமும்;
மிகவும் பயங்கரமாகக் காணப்படும்படி புரோகிதர் உண்டாக்கி மேலே யேவின கிருத்தியை வந்து ஒன்றுஞ் செய்யமாட்டாதே
திரும்பிப்போய் அப்புரோகிதர்மேலேவிழுந்து தகிக்க ஆரம்பித்ததனால், புரோகிதர்சூழ்வினையும்;
அங்கிருந்த அசுரர்களெல்லாரும் ஒன்றாய்ச்சேர்ந்து பலவித ஆயுதங்களை
யெடுத்துப் பிரகரித்துவதைக்கும்படி யத்தனிக்க அவன் அவற்றினாற் கிஞ்சித்தும் வேதனையுறாமல் விளங்கியதனால்,
தாரணிவாள்வெம்படையும்; தக்ஷகன் முதலான கொடிய மகாசர்ப்பங்கள் உக்கிரமான விஷங்களைக் கக்கிக் கொண்டுவந்து
அவனுடைய சகல அவயவங்களிலுங் கடிக்கவும் அவனுடையதேகத்திலுள்ள தோலிற் கிஞ்சித்தாயினுஞ் சேதமுண்டாகவில்லை யாகையால், மாசுணமும்;
திக்கஜங்கள் அவனைப் பூமியிலேவீழ்த்தித் தந்தங்களினாலேபாய்ந்து இடிக்க அத்தந்தங்கள் முறிந்து பொடியாய்ப் போனதனால், மாமதவேழமும்;
பாகஞ்செய்வோர் போஜனங்களிலெல்லாங் கலந்து கொடுத்த மகா விஷமானது அந்த நமோச்சாரணப்பரபாவத்தாலே நிர்வீரியமாகி
அவனுடைய உதரத்தில் ஜீர்ணமாய்விட்டதனால், விடமும்; அசுரர்கள் அக்கினியை வளர்த்தி அவனை அதிலே மறையவைத்து
அனலை மூட்டிக் கொளுத்த அவ்வக்கினி கொஞ்சமாகிலும் அவனைத் தகிக்கமாட்டாமல் அதிசீதளமானதனால், தழலும்;
ஸம்சோஷகனென்ற வாயு அதிகசீதளமும் அதிக உக்கிரமு முள்ளவனாகிச் சகிக்கக்கூடாத விதமாய்ப் பிரகலாதனுடைய
திருமேனிக்குள்ளே பிரவேசிக்க அந்தச் சம்சோஷகனை அவனதுஇருதயத்தி லெழுந்தருளி யிருந்த ஸ்ரீமதுசூதனன் விழுங்கி
ஒரு க்ஷணமாத்திரத்திலே நாசஞ்செய்தரு ளினதனால், காலும்; தைத்தியர்கள் நாகபாசங்களினாலே கட்டிக் கடலிலே போகட
அவன் அதில்வீழ்ந்து அசைந்துகொண்டு அதனைவிட்டுப் புறப்பட்டு வெளியில் வந்துவிட்டதனால், அம்பரமும் அஞ்சின வென்க.

இதனால், அநிஷ்டநிவாரணத்திற்குத் தப்பாத உபாயமான படியை விளக்கினாரென்க.
“முதலானவை” என்றதனால், பருவதம் முதலியன கொள்க.

பெரியதிருமந்திரத்தின் மகிமைக்கு ஓர் உதாரணம் எடுத்துக்காட்டிய வாறு; அதன் மகிமையை,
வேதங்களும் ருஷிகளும் ஆழ்வார்களும் சிறப்பித்துக் கூறியிருப்பனவற்றைச் சம்பிரதாய நூல்களிற் காணலாம்.
“ஸர்வவே தாந்தஸாரார்த்தஸ் ஸம்ஸாரார்ணவதாரக:- கதிரஷ்டாக்ஷரோந்ரூணா மபுநர்ப்பவகாங்க்ஷிணாம்”,
“ஆர்த்தாவிஷண்ணாஸ்ஸிதிலாஸ்சபீதா: கோரேஷு சவ்யாதிஷுவர்த்தமாநா:-
ஸங்கீர்த்ய நாராயண ஸ்ப்தமாத்ரம்விமுக்தது: காஸ்ஸுகிநோபவந்தி”,
“நாராயணேதிஸப்தோஸ்திவாகஸ்திவஸவர்த்திநீ – தாபிநரகேகோரேபதந்தீதிகிமத்புதம்” என்னும்
வடநூல் மேற் கோள்களால் அம்மந்திரோச்சாரணத்தின்பயனை அறிக.
“குலந்தரும் செல்வந்தந்திடும் அடியார்படுதுயராயினவெல்லாம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளொடு பெருநிலமளிக்கும்,
வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்றதாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ்சொல்லை நான்கண்டுகொண்டேன் நாராயணா வென்னும்நாமம்” என்ற பெரியதிருமொழிப் பாசுரமும் இங்குக் கருதத்தக்கது.

————

துவாதசாஷர மகா மந்திரம் –

அத்தா அரங்கத்து அமர்ந்தவனே எழுத்து ஆறு இரண்டின்
வித்து ஆய நின் அருள் கொண்டு அல்லவோ -விளைவு ஓன்று அறிய
உத்தான பாதன் மகன் சலியாது உலகு உள்ளளவும்
எத்தார கைக்கும் முனிவர்க்கும் மெல் சென்று இருக்கின்றதே –82-

(இ – ள்.) அத்தா – தலைவனே!
அரங்கத்து அமர்ந்தவனே – திருவரங்கத்தில் எழுந்தருளி யிருக்கின்றவனே! –
விளைவு ஒன்று அறியா – உண்டாவதனைச் சிறிதும் அறியாத,
உத்தான பாதன் மகன் – உத்தானபாதமகாராசனது குமாரனாகிய துருவன்,
சலியாது – சஞ்சலமில்லாமல்,
உலகு உள்ள அளவும் – லோக முள்ளவரையிலும்,
எ தாரகைக்கும் முனிவர்க்கும் மேல் சென்று இருக்கின்றது – எல்லாநக்ஷத்திரங்களுக்கும் இருடிகளுக்கும் மேலான ஸ்தாநத்திற் போய் அடைந்திருக்கின்றது, –
எழுத்து ஆறு இரண்டின் – ஸ்ரீ துவாதசாக்ஷரமகாமந்திரத்தினது,
வித்து ஆய – விதையாகிய,
நின் அருள்கொண்டு அல்லவோ – உனது கருணையினாலன்றோ? (எ – று.)

துவாதசாக்ஷரமகாமந்திரத்தின் பிரபாவத்திற்கு ஓர்உதாரணம் எடுத்துக் காட்டியவாறு. அம்மந்திரம் –
“நிறைந்தமகிமை துணிவு கீர்த்தி ஐசுவரியம் ஞானம் வைராக்கியம் என்பவற்றையுடையனான வாசுதேவனுக்கு நமஸ்காரம்”
என்னும் பொருளையுடையது. தன்னை உச்சரித்து ஜபிப்பவர்க்கு இஷ்டசித்தியைக் கொடுக்கவல்லது.
துருவன் அந்தமந்திரத்தின் மகிமையால் விமானத்தின்மீது ஏறிக்கொண்டு தேவயாநமார்க்கமாய் நவக்கிரகங்களுக்கும்
மூன்றுலோகத்திற்கும் ஸப்தருஷிகளுடையஸ்தாநத்துக்கும் மேலேயுள்ள விஷ்ணுபதமென்கிற
இடத்திற் சேர்ந்தானென்பதை ஈற்றடியால் விளக்கினர்.
காமவெகுளிமயக்கங்களை யொழித்துப் பரம்பொருளினிடத்தே மனத்தை உறுதிப்படுத்திய யோகிகளுக்கு
இருவினைத்தொல்லைகள் யாவும் தொலைந்தபோது அடையத்தக்க இடம் அது.
அங்குச்சென்றவர்கள் மறுபடி பிறப்படையாமற் பிரமனுடனே முக்திபெறுவார்கள் என அறிக.
உத்தானபாதன் – சூரியகுலத்தில்தோன்றிய பிரசித்திபெற்ற ஓர் அரசன்.

விளைவு ஒன்று அறியா – இன்னது செய்தால் இன்னது வருமென்று அறியாத. இது – துருவனுக்கு அடைமொழி.
இவ்வடைமொழி, துருவனது தவஞ்செய்தற்குத் தகாத மிக்க இளமையைக் காட்டும்.
இனி, இவ்வடை மொழியை உத்தானபாதனுக்கே கூட்டவுமாம்; தனது மனைவியர் இருவரில் இளையாளிடத்து அன்புமிக்குப்
பக்ஷபாதமாகநடப்பது பெருந்தீங்கிற்குக் காரணமென்பதைப் பகுத்துணராமல் நடந்துகொண்டனனாதலின். “சலியாது” என்றது,
பிரமகற்பம்வரையில் துருவன் சிறிதும் ஊறடையாது நின்றமையை வற்புறுத்தும். உள்ளளவு – விகாரம்.

—————-

திருவாயுதங்கள்-

புடைக்கும் குடமுலைப் பூ மகளார் தம் பொருட்டு முந்நீர்
அடைக்கும் பெரிய பெருமாள் அரங்கர் அவர் கரத்துப்
படைக்கும் கமலம் அளிக்கும் மின் ஆழிப்படை படைக்கும்
துடைக்கும் கதை முத்தி மாற்றாது நல்கும் சுரி சங்கமே –83-

(இ – ள்.) புடைக்கும் – (மேன்மேற்) பருக்கின்ற,
குடம் முலை – குடம் போன்ற தனங்களையுடைய,
பூமகளார்தம் பொருட்டு – (இராவணனால் அபகரிக்கப்பட்ட) ஜாநகிப்பிராட்டியை மீட்பதற்காக,
முந்நீர் – கடலை,
அடைக்கும் – திருவணை கட்டியருளிய,
பெரிய பெருமாள் அரங்கர் அவர்-நம்பெருமாளது,
கரத்து – திருக்கையில்,
படைக்கும் – தரிக்கின்ற,
கமலம் – தாமரைமலர்,
அளிக்கும் – காக்கும்;
மின் ஆழி படை – மின்னல் போல விளங்குகின்ற சக்கராயுதம்,
படைக்கும்- (உலகங்களைச்) சிருஷ்டிக்கும்;
கதை – கதாயுதம்,
துடைக்கும் – அழிக்கும்;
சுரி சங்கம் – உள்ளே சுழியைக் கொண்ட வலம்புரிச்சங்கம்,
முத்தி – பரமபதத்தை,
மாற்றாது – கைம்மாறு கருதாமல்,
நல்கும் – கொடுக்கும்; (எ – று.)

பூமகள் – தாமரைப்பூவிலுள்ள திருமகள்; சீதாபிராட்டி இலக்குமியின் அம்சமானவளென்பதுபற்றி, இவ்வாறு கூறியது;
அன்றிக்கே, பூ- வடசொல் லாய், பூமியின்மகள்; இது, அப்பிராட்டி கலப்பை யுழு படைச்சாலினின்று தோன்றியவளென்பதைச் சுட்டும்.
“யோகிகள் ஸ்ரீமகாவிஷ்ணுவைத் தியானிக்கும் போது சதுர்ப்புஜபக்ஷத்தில், சங்கசக்கரகதைகளும்
தாமரைமலரும் ஏந்தியதாய்த் தியானிக்கவேண்டும்” என்று ஸ்ரீவிஷ்ணுபுராணத்திற் கூறுமாறு காண்க.

———

திருச் சக்கரப்படை –

ஞாலத் திகிரி முது நீர்த் திகிரி நடாத்தும் இந்தக்
காலத் திகிரி முதலான யாவும் -கடல் கடைந்த
நீலத் திகிரி அனையார் அரங்கர் நிறைந்த செங்கைக்
கோலத் திகிரி தலை நாளினில் கொண்ட கோலங்களே –84-

(இ – ள்.) ஞாலம் திரிகி – பூசக்கரமும்,
முதுநீர் திகிரி – ஜலசக்கரமும்,
நடாத்தும் – (இவற்றை) நடத்துகின்ற,
இந்த காலம் திகிரி – இந்தக்காலசக்கரமும்,
முதலான – முதலிய,
யாவும் – எல்லாம், –
கடல் கடைந்த – திருப்பாற் கடலைக் கடைந்தருளிய,
நீலம் திகிரி அனையார் – நீலமலையை யொத்தவராகிய,
அரங்கர் – அரங்கநாதரது,
நிறைந்த – (உத்தமவிலக்கணங்கள்) அமைந்த,
செம் கை – சிவந்த வலத்திருக்கையிலே தரித்த,
கோலம் திகிரி – அழகிய சக்கரம்,
தலைநாளினில் – முற்காலத்தில்,
கொண்ட – எடுத்த,
கோலங்கள் – திருவுருவங்களாம்; (எ – று.)

இதனால், காலசக்கரம் முதலிய எல்லாவற்றிற்கும் திருவாழியாழ்வானே முதற்காரணமென்று கூறியவாறு.
முன்செய்யுளால் திருமால் தமது திருக்கைகளிலேந்திய ஆயுதங்களின்தன்மைகளைப் பொதுவாகக்கூறி,
இச்செய்யுளினாலும் அடுத்த செய்யுளினாலும் திருச்சக்கரத்தின் தன்மையைச் சிறப்பாகக் கூறுகின்றன ரென்க.

வட்டவடிவாயிருத்தலாலும், வட்டமாகச் சூழ்ந்திருத்தலாலும், மாறி மாறிச் சுழன்றுவருதலாலும் –
ஞாலமும், நீரும், காலமும், “திகிரி” எனப்பட் டன. முதுநீர் – கடல்; பழைய நீர்.
“காலத்தினாலேயே மலைகள் சமுத்திரங்கள் முதலான சகல சராசரங்களுக்கும் வளர்தல் நசித்தல் முதலானவை உண்டாகும்” என்று
புராணங்களிற் கூறுதலால், “நடாத்துமிந்தக் காலத்திகிரி” என்றார்.
“முதலான” என்றதனால், சிம்சுமாரசக்கரம் முதலியன கொள்க.

————–

இதுவும் அது –

மோதித் திரை தவழ் நல் நீர் அரங்கர் முடி முதலாம்
சாதிக் கதிர் மணிப் பேர் அணி ஆகி தனஞ்செயன் போர்
பேதித்து இரவு பகல் ஆக விண்ணில் பிறழ்ந்து செங்கேழ்ச்
சோதித் திகிரி திருமேனி எங்கும் சுடர் விடுமே –85-

(இ – ள்.) திரை மோதி தவழ் – அலை யெறிந்து வருகின்ற,
நல் நீர் – நல்ல காவேரிநதியாற் சூழப்பட்ட,
அரங்கர் – திருவரங்கத்துநாதரது,
செம் கேழ் சோதி – சிவந்த நிறமமைந்த ஒளியையுடைய,
திகிரி – சக்கரமானது, –
முடி முதல் ஆம் -கிரீடம்முதலிய,
சாதி கதிர் மணி பேர் அணி ஆகி – சிறந்த ஆகரத்தில்தோன்றிய ஒளியையுடைய இரத்தினங்களாலாகிய பெரிய ஆப ரணகோடியிலேயாகி,
தனஞ்சயன் போர் – அருச்சுனனுடைய (பதினான்கா நாள்) யுத்தத்தில்,
பகல் இரவு ஆக – பகல் இரவாகும்படி,
பேதித்து – வேறுபடுத்தி,
விண்ணில் – ஆகாயத்தில்,
பிறழ்ந்து – விளங்கி,
திருமேனி எங்கும் – (அவரது) திருமேனி முழுவதிலும்,
சுடர் விடும் – ஒளிவீசும்; (எ – று.)

எம்பெருமானது திவ்வியாயுதங்கள் அன்பர்கட்கு ஆபரணகோடிகளா கத் தோன்றி அல்லாதார்க்கு ஆயுதமாக நின்று
நிரசனஞ்செய்யு மென்னும் வரலாறு விளக்கப்பட்டது. தநஞ்ஜயன் – சயத்தையே தனமாகவுடையவன்; வடசொல்:
தருமபுத்திரன்செய்த இராஜசூயயாகத்திற்காக அருச்சுனன் பலதேசத்தரசர்களையும் வென்று
மிக்கபொருள் கொண்டுவந்ததனால், அவனுக்குத் தநஞ்ஜயனென்று பெயர்.

———

திரு வநந்த வாழ்வான் –

ஓல் ஆழி சூழ் புவி உச்சியில் ஏந்தும் உகக் கடையில்
கால் ஆன நற்குண மூர்த்தியைக் காலும் அக்காலம் எல்லாம்
மேலா விளங்கும் புவி மீதில் என் தன் விழுத்துணை ஆம்
மால் ஆம் அரங்க மணவாளர் கண் துயில் மாசுணமே –86-

(இ – ள்.) என்தன் விழு துணை ஆம் – எனது சிறந்த துணையாகிய,
மால் ஆம் – ஆச்சரிய குணசேஷ்டிதரான,
அரங்கம், மணவாளர் – திருவரங்கத்தி லெழுந்தருளியிருக்கின்ற அழகியமணவாளப்பெருமாள்,
கண் துயில் – யோகநித்திரை செய்தற் கிடமாகிய,
மாசுணம் – பெரும்பாம்பு (ஆதிசேஷன்), –
ஓல் ஆழி சூழ் புவி – ஆரவாரத்தையுடைய கடல் சூழ்ந்த பூமியை,
உச்சியில் ஏந்தும் – (தனது) முடிமேல் தாங்கும்;
உகம் கடையில் – யுகாந்த காலத்தில்,
கால் ஆன நல் குணம் மூர்த்தியை காலும் – (தன்) சுவாசத்தினின்றும் பொருந்திய நல்ல குணங்களையுடைய காலாக்கினிருத்திர மூர்த்தியை உண்டாக்கும்;
அ காலம் எல்லாம் – அந்தப்பிரளயகாலமுழுதும்,
புவிமீதில் மேலா விளங்கும் – பூமியின்மேல் வந்து விளங்கும்; (எ – று.)

பிரளயகாலத்தில் ஆதிசேஷன் தன்சுவாசத்தினின்றும் பகவானுடைய அம்சமாகிய காலாக்கினிருத்திரனை யுண்டாக்கிப்
பாதாளங்களை யெல்லாந் தகித்துக்கொண்டு பூமிக்கும் வந்து அதனையுங் கொளுத்திவிடு மென்பதாம்.
ஓல் – ஓலம் என்பதன் கடைக்குறை. விழு – விழுமம் என்ற உரிச்சொல்லின் சிதைவு;
“விழுமம் சீர்மையுஞ் சிறப்பு மிடும்பையும்” என்பது தொல்காப்பியம்.

———-

இதுவும் அது –

சென்றால் குடை ஆம் கடல் புணை ஆம் திருத் தீவிகை ஆம்
நின்றால் இரு திருப் பாதுகை ஆம் நித்திரைக்கு அணை ஆம்
குன்றா மணி ஒளி ஆசனம் ஆம் புனை கோசிகை ஆம்
அன்று ஆலிலையில் துயில் அரங்கேசற்கு அரவு -அரசே –87-

(இ – ள்.) அன்று – அக்காலத்தில் (பிரளயகாலத்தில்),
ஆல்இலையில் -, துயில் – யோகநித்திரை செய்தருளுகின்ற,
அரங்கேசர்க்கு – திருவரங்கநாதனுக்கு, –
அரவு அரசு – (அவரும் பெரியபிராட்டியாருங் கூடிக் கண்ணற்றுத் துகைத்துப் பரிமாறுகைக்கு யோக்கியமான வடிவையுடைய) திருவனந்தாழ்வான், –
சென்றால் – (உகப்புக்குப் போக்குண்டாக அவர்) உலாவியருளப் புக்கால்,
குடை ஆம் – (மழை வெயில் படாதபடி) குடையாகும்;
கடல் – கடலிலே (கண்வளர்ந்தருளும் போதைக்கு),
புணை ஆம் – திருப்பள்ளிமெத்தை யாகும்;
திரு தீவிகை ஆம் – (ஏதேனுமொன்றை விளக்கிட்டுக்காண அபேக்ஷிதமான போது) மங்களதீபமாகும்;
நின்றால் – (ஸ்வேச்சையாலே) எழுந்தருளி நின்றால்,
இரு திரு பாதுகை ஆம் – இரண்டு திருவடிநிலைகளாகும்;
நித்திரைக்கு அணை ஆம் – (சாய்ந்தருளின போதைக்குப் பிராட்டிமார் சீறுமாறு என்னும்படி) திருவணையாகும்;
குன்றா மணி ஒளி ஆசனம் ஆம் – (தன்னிச் சையாலே எழுந்தருளியிருந்தாற்) குறைவுபடாத ஒளியினையுடைய இரத்தினமயமான திவ்விய சிங்காசனமாகும்;
புனை கோசிகை ஆம் – (சாத்தியருளத் திருப்பரியட்டம் அபேக்ஷிதமான சமயத்தில் பும்ஸ்த்வாவஹமாகிய) அழகிய திருப்பரியட்டமாகும்; (எ – று.)

திருவநந்தாழ்வான் எம்பெருமானுக்குப் பலவகைக் கைங்கரியங்களை யுஞ் செய்தலை இங்கு எடுத்துக் கூறினார்.

“சென்றாற் குடையாம் இருந்தாற் சிங்காசனமாம்,
நின்றான் மரவடியாம் நீள்கடலு – ளென்றும்,
புணையாம் மணிவிளக்காம்பூம்பட்டாம்புல்கு,
மணையாம் திருமாற் கரவு” என்றார் பெரியாரும்.

இப்படித் திருவனந்தாழ்வான் மிக்க உவப்போடு பலவடிவங்களை யெடுத்துக்கொண்டு எம்பெருமானுக்கு
ஸேஷவ்ருத்திகளை (அடிமைத்தொழில்களை)ச் செய்வதனால்தான், “சேஷன்” எனப்படுகின்றான்;
இங்கு, “நிவாஸ ஸய்யா ஸந பாதுகாம்ஸீக உபதாநவர்ஷாதபவாரணாதிபி:
ஸரீர பேதைஸ் தவ ஸேஷதாம்கதை: யதோசிதம் ஸேஷ இதீர்யதேஜநை:” என்ற ஆசார்ய ஸூக்தியும் உணர்க.
புணை – தெப்பம். தீவிகை – தீபிகை. பாதுகை – மரவடி. கோசிகை – பட்டாடை. அரவரசு – சர்ப்பராஜன்

இச்செய்யுளில் “அரங்கேசர்க்குஅரவரசு” என்னுஞ் சொற்கள் முன்னர்ப் பலவிடத்துஞ்சேர்ந்து கடைநிலைத்தீவகவணியின்பாற்படும்.

———–

பெரிய திருவடி

சிரம் சேதனன் விழி தேகம் சிறை பின் சினை பதம் கந்
தரம் தோள்கள் ஊரு வடிவம் பெயர் எசுர் சாமமும் ஆம்
பரந்தே தமது அடியார்க்கு உள்ள பாவங்கள் பாற்றி அருள்
சுரந்தே அளிக்கும் அரங்கர் தம் ஊர்திச் சுவணனுக்கே–88-

(இ – ள்.) தமது அடியார்க்கு – தமது பக்தர்களுக்கு,
பரந்து உள்ள – பரவி யிருக்கின்ற,
பாவங்கள் – தீவினைகளை,
பாற்றி – அழியச்செய்து,
அருள் சுரந்து அளிக்கும் – கருணை பொழிந்தருளுகின்ற,
அரங்கர்தம் – நம்பெருமாளது,
ஊர்தி – வாகனமாகிய,
சுவணனுக்கு – பெரிய திருவடிக்கு, –
சிரம் – தலை,
சேதனன் – உயிர்,
விழி – கண்கள்,
தேகம் – உடல்,
சிறை – சிறகுகள்.
பின் சினை – பின்புறம்,
பதம் – பாதங்கள்,
கந்தரம் – கழுத்து,
தோள்கள் -,
ஊரு – தொடை,
வடிவம் – உருவம்,
பெயர் – திருநாமம், (இவைகளெல்லாம்),
எசுர் சாமமும் ஆம் – யஜுர்வேதம் ஸாமவேதம் இவற்றின் ஸ்வரூபங்களாம்; (எ – று.)

கருடன் வேதமயனானதனால், இவ்வாறு கூறினார். “வேதாத் மாவிஹகே ஸ்வர:” “வன்னாதப்புள்” என்றார் பெரியாரும்.
“கருத்மானுக்கு த்ருவ்ருத் தென்பது சிரஸ், ஸ்தோமமென்பது ஆத்மா, காயத்ரினென்பது கண்,
ஸாமமென்பது உடல், ப்ருஹத் ரதந்தரம் என்பவை இரண்டும் இரண்டு சிறகுகள்,
யஜ்ஞாயஜ்ஞியமென்பது தோகை, மற்றைச் சந்தஸுகள் மற்றையவுறுப்புக்கள், பெயர் யஜுஸுக்கள்” என்று
வேதத்திலேயே கூறப் பட்டிருக்கின்றது; ஆகவே, இச்செய்யுள் மறைப்பொருளாதல் காண்க.
கந்தரம் – தலையைத் தரித்துநிற்பது எனக் கழுத்துக்குக் காரணப்பெயர்; கம் – தலை.
சுவணன் – ஸுபர்ணன் என்பதன் சிதைவு; அழகிய இறகுகளை யுடையவனென்பது அவயவப்பொருள்.
ஊர்தி – ஏறிநடத்தப்படுவதெனக் காரணக்குறி.

————-

சேனை முதலியார் –

ஆளில் அமரர் அரங்கேசர் சேவைக்கு அணுகும் தொறும்
கோளின் திரளை விலக்கும் பிரம்பின் கொனை படலால்
தோளில் அடித் தழும்பு உண்டு அச்சுரர்க்கு அச்சுரர் தொழலால்
தாளில் முடித் தழும்பு உண்டு நம் சேனைத் தலைவருக்கே –89-

(இ – ள்.) அமரர் – தேவர்கள்,
ஆளில் – அடிமைசெய்வதற்காக,
அரங்கேசர் – நம்பெருமாளது,
சேவைக்கு -,
அணுகும் தொறும் . சமீபிக்கும் பொழுதெல்லாம்,
கோளின் – வலிமையுடைய,
திரளை – கூட்டத்தை,
விலக்கும். விலக்குகின்ற,
பிரம்பின் -(ஸ்ரீசேனைமுதலியாரது திருக்கையில் தரித்த பிரம்பினது,
கொனை – நுனி,
படலால் – தாக்குதலால், –
அ சுரர்க்கு – அந்தத் தேவர்களுக்கு,
தோளில் -,
அடி தழும்பு – அப்பிரம்படிபட்ட காயம், உண்டு –
அ சுரர் தொழலால் – அத்தேவர் வணங்குதலால், நம் சேனைத்தலைவருக்கு நமது சேனைமுதலியாருக்கு,
தாளில் – திருவடிகளில்,
முடி தழும்பு – (அத்தேவர்களது) கிரீடங்கள் பட்ட காயம், உண்டு -; (எ – று.)

சேனைத்தலைவர் – பரமபதத்திலுள்ள நித்தியமுக்தர்களின் திரளுக்குத் தலைவர், சேனாபதியாழ்வார்:
இவர், விஷ்வக்ஸேநரென்றுங் கூறப்படுவர் எக்காரியம் தொடங்கினாலும் அத்தொடக்கத்தில் விக்கின நிவிருத்தியின்
பொருட்டுச் சைவர்கள் விநாயகபூஜைசெய்வது போல வைஷ்ணவர்கள் விவ்வக்ஸேநாராதநஞ் செய்யவேண்டுதல் மரபாதலை அறிக.
நமதுகுருபரம்பரையில் எம்பெருமான் பிராட்டிகட்குப்பின்னே நம்மாழ்வார்க்கு முன்னேவிளங்கும் பிரதான ஆசாரியர் இவர்.
எம்பெருமானது திருவோலக்கத்தில் சேவிப்பதற்கு நெருங்கிவரும் தேவர்களின் திரளை விலக்கும்போது
இவரது கைப்பிரம்பினடி அத்தேவர்களின் தோள்களிலும், அவர்கள் இவரைச் சாஷ்டாங்கமாக வணங்குகையில்
அவர்களதுமுடித்தழும்பு இவரதுதிருவடிகளி லும் விளங்குமென்று சமத்காரமாகக் கூறப்பட்டது.

————-

சிறிய திருவடி –

ஆதித் திரு எழுத்து ஐந்து உடைத்தாயும் அரா அணிந்தும்
சோதித் திருக் கண்கள் மூன்றுடன் தோன்றும் சுருதி சொன்ன
நீதிக்கு இசைய நடவா மனிதரை நேமி கொண்டு
வாதித் தருளும் பெருமாள் அரங்கர் தம் வாகனமே –90-

இ – ள்.) சுருதி சொன்ன – வேதங்கள் கூறிய,
நீதிக்கு – விதிவிலக் குக்களுக்கு,
இசைய – பொருந்தும்படி,
நடவா – நடவாத,
மனிதரை -,
நேமி கொண்டு – சக்கரத்தால்,
வாதித்தருளும் – அழித்தருளுகின்ற,
பெருமாள் அரங்கர்தம் – நம்பெரியபெருமாளது,
வாகநம் – வாகனமாகிய சிறியதிருவடி, –
ஆதி திரு எழுத்து ஐந்து உடைத்துஆயும் – முதன்மையாகிய பஞ்சாக்ஷரமகா மந்திரத்தை யுடையதாகியும்,
அரா அணிந்தும் – சர்ப்பங்களை ( ஆபரண மாக) அணிந்தும்,
சோதி திரு கண்கள் மூன்றுடன் – (சூரிய சந்திர அக்கினிக ளென்னும்) முச்சுடர்வடிவமாகிய மூன்று திருக்கண்களோடும், தோன்றும் -; (எ – று.)

திருவெழுத்தைந்து – பஞ்சாக்ஷரமகாமந்திரம்; இது, சிவபிரானுக்கு உரியது. சோதித்திருக்கண்கள்மூன்று-
“இறைவனுக்குக் கண்மூன்றும் முச் சுடர்.” இராவணனது இம்சையைப் பொறுக்கமாட்டாமல் தேவர்கள்
யாவரும் திருமாலைச் சரணமடைய, அப்பெருமான் தான் தசரதமகாராஜனுக்குப் புத்திரனாகத் திருவவதரிப்பதாக வாக்களித்து,
தேவர்களை அக்காலத்துத் தனக்குத்துணையாக உதவும்படி கட்டளையிட்டபடியே தேவர்கள் வானரசாதியிற் பலபடியாகப் பிறக்கையில்
சிவபெருமான் தனது அம்சத்தினால் அநுமானை உண்டாக்கினனென்பது, வரலாறு.
சிறியதிருவடி பரமசிவனது அம்சமாதலால், இவ்வாறு கூறினார்;
அதனை, “புராரிமற் றியானே வாத, சேயெனப்புகன்றான்” எனக் கம்பராமாயணத்திற் கூறியதனாலு முணர்க.
இனி, வாதித்து அருளும் எனப் பிரித்து, துஷ்டர்களை நிக்கிரகித்துச் சிஷ்டர்களைப் பரிபாலிப்பவ ரென்றுமாம்.
ஸ்ருதி என்ற வடசொல்லுக்கு – எழுதாக்கிளவியாய்க் குருசிஷ்யகிரமத்திற் கர்ணபரம் பரையிற் கேட்டேவருவது என்று அவயவப்பொருள்.
வாஹநம் – வடசொல்; தாங்குவது என்று பொருள்.

———-

இதுவும் அது –

வல் ஆம் முலைத் திருவின் பெருமான் விட்ட வாகனம் போய்
தொல் ஆழி நீரைக் கடந்தது தாளின் சுடர் இரண்டும்
செல்லாத ஊரைத் திரி புரம் கண்டது சேனை வெள்ளம்
எல்லாம் உயக் கொண்டது மருந்து ஆர் கிரி ஏந்தி வந்தே –91-

(இ – ள்.) வல் ஆம் முலை – சூதாடுகருவியை யொத்த தனங்களையு டைய,
திருவின் – திருமகளுக்கு,
பெருமான் – தலைவனாகிய நம்பெருமாள்,
விட்ட – (ஸ்ரீராமாவதாரத்திற் சாநகியைத் தேடுவதற்காக) அனுப்பிய,
வாகனம் – தமது வாகனமாகிய சிறிய திருவடி, –
போய் -,
தொல் ஆழி நீரை – பழைய சமுத்திரஜலத்தை,
தாளின் – தனது பாதங்களால்,
கடந்தது – தாண்டிற்று;
சுடர் இரண்டும் செல்லாத ஊரை – சூரியசந்திரர் இருவரும் (இராவணாஜ்ஞையாலே) நுழைந்து மறியாத இலங்கையை,
திரிபுரம் கண்டது – திரிபுரங்களைப்போல எரியச்செய்தது; (அவ்விலங்கையில் யுத்தம்நடந்த பொழுது),
மருந்து ஆர் கிரி – (ஸஞ்சீவிநியென்னும்) ஓஷதியுள்ள (துரோணமென்னும்) மலையை,
ஏந்தி வந்து – எடுத்துக்கொண்டுவந்து,
சேனை வெள்ளம் எல்லாம் – (ஸ்ரீராமபிரானது எழுபது) வெள்ளஞ் சேனைகளையும்,
உய கொண்டது – பிழைக்கச்செய்தது; (எ – று.)

இச்செய்யுளில் அநுமான்செய்த செயற்கருஞ்செயல்களுள் மூன்றைக் கூறி அவனது பேராற்றலை விளக்கியவாறு.
வல் – மெய்யுவமை; இனி, வலிமையாகிய என்றுமாம். “சுடரிரண்டுஞ்செல்லாத” என்றது,
சூரிய சந்திரர்கள் பிறவிடங்களிற்போலத் தமது மிக்கவெப்பத்தோடுந் தட்பத்தோடுஞ் செல்லாமல்
இலங்கையில் இராவணனிடத்து அச்சத்தால் ஒடுங்கிச்செல்வ ரென்னுங் கருத்தால். முச்சுடர்களுள் இருசுடர் செல்லாத ஊரை
அநுமான் மற்றொரு சுடருக்கு வசமாக்கினன் என்பதாம். அநுமான் மருந்து மலையை ஏந்தி வந்தது,
இராமன் முதலியோர் இந்திரஜித்தின் அஸ்திரங்களால் மூர்ச்சித்துக்கிடந்தபொழுதி லென்க. வெள்ளம் – ஒருபெருந்தொகை.

————-

ஸ்ரீ வைகுண்டம் –

தொல்லைக் கமடத் தலம் நவ கண்டம் தொடு கடல் நீர்
எல்லைக் கிரி தனக்கு இப்புறத்து எண் கிரி அப்புறத்தின்
மல்லைப் பரிதியின் மண்டலம் நாகம் அவ்வான் முகட்டூ ஊர்
அல் அப்புறத்து வைகுந்தம் பொற் கோயில் அரிக்கு இடமே –92-

(இ – ள்.) (முதலில்), தொல்லை கமடம் தலம் – ஆதிகூர்மந் தாங்குகின்ற கீழுலகம்;
நவ கண்டம் – (அதன்மேல்) ஒன்பது கண்டங்கள்;
தொடு கடல் நீர் – (அவற்றைச் சூழ்ந்த) சமுத்திர ஜலம்;
எல்லை கிரி – (அவற்றைச் சூழ்ந்த) சக்கரவாள பருவதம்;
தனக்கு – அதற்கு,
இப்புறத்து – இப்புறத்தில்,
எண்கிரி – அஷ்டகுல பர்வதங்கள்;
அப்புறத்தில் -,
மல்லை பரிதியின் மண்டலம் – வட்டமாகிய சூரியமண்டலம்;
நாகம் – (அதன்மேல்) சுவர்க்கலோகம்;
அ வான் முகடு ஊர் – (அதன்மேல்) அம்மேலுலகங்களினுச் சியிலுள்ள சத்தியலோகம்;
அல் – (அதற்கு வெளியில்) அந்தகாரம்;
அப்புறத்து அதற்குமே லுள்ள,
வைகுந்தம் – ஸ்ரீவைகுண்ட மென்னும் நகரமானது -,
பொன் கோயில் அரிக்கு – அழகிய திருவரங்கத்தி லெழுந்தருளியிருக்கின்ற நம்பெருமாளுக்கு,
இடம் – (பரத்துவம் விளங்கும்படி) எழுந்தருளியிருக்கும் தலமாம்; (எ – று.)

ஐயங்கார் வைகுண்டம் இன்னவிடத்திலுள்ளதென்று ஒருவாறு ஊகித் துணர்தற்பொருட்டுப் பூகோளநிலையை
இப்பாசுரத்திற் சுருக்கிக் கூறுகின்றார்;
எல்லாவற்றிற்குங் கீழிருந்துகொண்டு உலகங்களையெல்லாம் ஆதிகூர்மம் தாங்குகின்றது;
அவற்றையடுத்து அதலம் முதலிய கீழேழுலகங்கள் இருக்கின்றன:
அவற்றிற்குமேல் அஷ்டகுலாசலங்களோடுங் கூடிய ஜம்பூ த்வீபம் முதலிய நவத்வீபங்களைக் கொண்ட பூமி
பெரும்புறக்கடலினாலும் சக்ரவாளமலையினாலும் சூழப்பட்டதாயிருக்கின்றது;
இதற்குமேல் சூரிய மண்டலமும் அப்பால் புவர்லோகம் முதல் ஸத்யலோகம் ஈறாக வுள்ள லோகங்களும் இருக்கின்றன:
இவ்விடத்தோடு ப்ரக்ருதிமண்டலம் முடிந்திடுத லால் அந்தகாரமயமான வெளியொன்று அங்கு இருக்கின்றது;
அப்பால், தேஜோமயமாயும் ஆநந்தமயமாயு முள்ள திருமாலின் ஸ்ரீவைகுண்டலோக மென்பது இருக்கின்ற தென்பதாம்;
இம்முறையே உலகம் அமைந்திருப்ப தென்பதை ஸ்ரீவிஷ்ணுபுராணம் முதலிய நூல்களிற் காணலாம்.

எம்பெருமானது ஐவகைநிலைகளுள் பரத்துவநிலை விளங்குந் தானம் இது.
வைகுந்தம் – வைகுண்டம் என்ற வடசொல்லின் திரிபு.
தடையென்னும் பொருளுடைய “குடி” என்னும் வடமொழித்தாதுவினடியாப்பிறந்து “வி” என்னும் எதிர்மறை
யுபசர்க்கம்பெற்ற “விகுண்டா:” என்ற பதம் ஞானசக் தியாதிகளில் தடையில்லாத நித்தியசூரிகளைக் குறிக்கும்;
அவர்கள் வாழ்கி ன்றதானம் – வைகுண்டம்;
இனி, ஞானசக்தியாதிகளில் தடையில்லாத எம்பெருமானது தானமென்றும் பொருள்கூறுவர் ஆன்றோர்.
இன்னும், இச்சொல்லுக்கு – ஒருகாலத்தில், திருமால் தன்னைப் புதல்வனாகப்பெற விரும்பித் தன்னைக்
குறித்துத்தவஞ்செய்த சுப்பிரமுனிமனைவியான விகு ண்டை யென்பவளிடத்தில் ஒரு குமாரனாக அவதரித்ததனால்,
அப்பெருமா னுக்கு “வைகுண்டன்” என்று ஒருதிருநாமம்.
அப்பெயர்தானே அவளது வேண்டுகோளின்படி அவனது உலகத்துக்கும் பெயராக இட்டு வழங்கப் பட்டது என்று கூறப்படுவதும் காண்க.

நவகண்டம் – இந்திரம், கசேரு, தாமிரபருணம் கபஸ்திமான், நாகம், சவுமியம், காந்தருவம், வாருணம், பாரதம்என்பன;
கீழ்விதேகம், மேல் விதேகம், வடவிதேகம், தென்விதேகம், வடவிரேபதம், தென்னிரேபதம், வடபரதம், தென்பரதம், மத்திமம் என்பாருமுளர்.
அரி – ஹரி, (அடியவர் அருவினைகளை) அழிப்பவன்; அன்றிக்கே, (துஷ்டர்களை) நிக்கிரகிப்பவன்.
தொடுகடல் – (சகரபுத்திரர்களால்) தோண்டப்பட்ட கடல்.

————

இதுவும் அது

எந்த உலகத்தும் மேலது நித்திய இன்பத்தது
பந்தம் நசிப்பது நித்தரும் முத்தரும் பாரிப்பது
முந்தை மறையின் நின்று அல்லாது எத்தேவர்க்கும் முன்ன அரிது
அந்தம் இலது அரங்கன் மேவு வைகுண்ட மானதுவே –93-

(இ – ள்.) அரங்கன் -, மேவு – எழுந்தருளியிருக்கின்ற,
வைகுந்த மானது – ஸ்ரீவைகுண்ட லோகமானது –
எந்த உலகத்தும் மேலது – எல்லாவுலகங்கட்கும் மேலிடத்திலுள்ளது;
நித்தியம் இன்பத்தது – எப்பொழுதும் அழியாதுள்ள பேரின்பத்தையுடையது;
பந்தம் நசிப்பது – (அங்குச் செல்பவர்க்கு) ஸம்ஸார பாசபந்தம் அழியப்பெறுவது;
நித்தரும் முத்தரும் பாரிப்பது – நித்தியர்களும் முக்தர்களும் வாழப்பெறுவது;
முந்தை மறையின் நின்று அல்லாது – பழமையாகிய வேதங்களைக்கொண்டல்லாமல், (வேறு வகையால்),
எ தேவர்க்கும் – எத்தகைய தேவர்களுக்கும்,
முன்ன அரிது – நினைத்தற்கும் அரிய தன்மையது;
அந்தம் இலது – அழிவில்லாதது; (எ – று.)

மேலது – மேற்பட்ட தன்மைய தென்றுமாம். நித்தியவின்பம் – என்றும் அழியாத நிரதிசயப்பேரின்பம்.
பந்தம் – கட்டு; பந்தமாவது – மனைவி மக்கள் வீடு செல்வம் முதலிய சம்பந்தமுடைய பொருள்களிடத்து உண்டாகும் மனப்பிணிப்பு.
வேதம் எல்லா நூல்கட்கும் மூலகாரணமானதாதலின், அதனை, “முந்தைமறை” என்றார்.
நித்தியர் – ஸ்ரீவைகுண்டத்திலே நிலையாக வாழ்கின்ற அநந்த கருட விஷ்வக்ஸேநாதியர்.
முக்தர் – இவ்வுலகங்களினின்று வீடுபெற்றவர். சிந்தையும் மொழியுஞ் செல்லாநிலைமைத் தாதலால், “முன்னவரிது” என்றார்.
வேதங்களின் உதவியினாலேயே முக்தியுலகம் கிடைக்கக்கூடியதென்பது, மூன்றாமடியின் கருத்து.

————-

திருப் பாற் கடல் –

காவும் சுரபியும் சிந்தா மணியும் கடிக் கமலப்
பூவும் பணிலமும் பொங்கு இள மாவும் புகர்த்தடக்கைம்
மாவும் பிறையும் அமுதமும் எங்கன் மதில் அரங்கர்
மேவும் தரங்கக் கடல் இல்லை யாகில் இவ் விண்ணகர்க்கே –94-

(இ – ள்.) மதில் அரங்கர் – ஏழு மதில்கள் சூழ்ந்த திருவரங்கத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்,
மேவும் – (வியூகநிலையிற்) பள்ளிகொண்டருளு கின்ற,
தரங்கம் கடல் – அலைகளையுடைய திருப்பாற்கடல்,
இல்லைஆகில் -,
இ விண்ணவர்க்கு – இந்தத்தேவர்களுக்கு,
காவும் – கற்பகச்சோலையும்,
சுரபியும் – காமதேனுவும்,
சிந்தாமணியும் – சிந்தாமணி யென்னு மிரத்தினமும்,
கடி கமலம் பூவும் – வாசனையையுடைய தாமரைமலரின் பேர்கொண்ட பதுமநிதியும்,
பணிலமும் – சங்கநிதியும்,
பொங்கு இள மாவும் – விளங்குகின்ற இளைய (உச்சைச்சிரவமென்னுங்) குதிரையும்,
புகர் தட கை மாவும் – செம்புள்ளிகளையுடைய பெரிய துதிக்கையையுடைய (ஐராவதமென்னும்) யானையும்,
பிறையும் – சந்திரனும்,
அமுதமும் -,
எங்ஙன் – (இவையெல்லாம்) எங்கிருந்து உண்டாகும்? (எ – று.)

எம்பெருமான் திருப்பாற்கடலிற் பள்ளிகொண்டிருத்தலின் அவனது சம்பந்தத்தால் பாற்கடலினின்று தேவர்கட்கு
இன்றியமையாத எல்லாப் பொருள்களும் உண்டாயின என்பதாம்.
திருப்பாற்கடல் – திருமாலினது ஐவகைநிலையுள் வியூகநிலை விளங்குந் தானம்.
கடி – விளக்கமுமாம். கமலப்பூ திருமகளுக்கு ஆசனமாகவிருந்த செந்தாமரைமல ரென்றுமாம்.
இவையெல்லாம், எம்பெருமான்திருவருளால் அவனது சயனத்தலமான திருப்பாற்கடலைக் கடையும்போது
அதனினின்று உண்டான தேவலோகத்துச் செல்வங்கள்.

———-

ஏழு மதில்களும் திருவரங்க விமானமும்

அருமறை ஓதிய ஓர் எட்டு எழுத்தும் அயன் படைத்த
இரு நில மீதினில், யாவரும் காண இலங்குதுத்திக்
குரு மணி நாகத்தில் எம் கோன் விழி துயில் கொண்டருள
திரு மதில் ஏழும் விமானமும் ஆகிச் சிறக்கின்றவே –95-

(இ – ள்.) அரு மறை ஓதிய – அறிதற்கரிய வேதங்களிற் கூறிய,
ஓர் எட்டு எழுத்தும் – ஒப்பற்ற திருவஷ்டாக்ஷரமும்,
அயன்படைத்த – பிரமன் சிருஷ்டித்த,
இரு நிலம் மீதினில் – பெரிய நிலவுலகத்தில்,
யாவரும்-,
காண – சேவிக்கும்படி,
இலங்கு துத்தி – விளங்குகின்ற படப்புள்ளிகளையும்,
குரு மணி – பெரிய மாணிக்கங்களையுமுடைய,
நாகத்தில் – திருவனந்தாழ் வான்மேல்,
எம் கோன் – நம்பெருமாள்,
விழி துயில் கொண்டருள – யோக நித்திரை செய்தருளும்படி,
திரு மதில் ஏழும் விமானமும் ஆகி – ஏழுதிரு மதில்களும் திருவரங்கவிமானமுமாகி,
சிறக்கின்ற – மேன்மைப்படுகின்றன. (எ – று.)

அருமறையோதியஓரெட்டெழுத்து – விஷ்ணுகாயத்ரியில் தலைமையாக எடுத்துக்கூறப்பட்டுள்ள
ஸகலவேதஸாரமான திருமந்திர மென்றபடி. குரு – நிறமுமாம்.
திருவஷ்டாக்ஷரமகாமந்திரத்தை ஆராய்பவர்க்குக் கடவுளின் தன்மை புலப்படுவதுபோல, ஸ்ரீரங்கத்திற்செல்பவர்க்கும்
கடவுள் நேரே புலனாவனாதலால், அத்திருப்பதியை அந்தத்திருமந்திரமாகவே உத்ப்ரேக்ஷிக்கின்றனர்:
அஷ்டாக்ஷரத்திருமந்திரத்துள் பிரணவம் – விமானமும், மற்றையேழு திருவெழுத்துக்களும் – ஏழுமதில்களுமாயின வென்க.
திருவரங்கவிமானம் பிரணவாகாரமாக இருத்தல், இவ்வாறு உத்பிரேக்ஷித்துக் கூறுவதற்குக் காரணம்.
விழிதுயில் – விழியாநின்று செய்யுந் துயிலென நிகழ்காலவினைத்தொகை: துயிலாத்துயில், யோகநித்திரை.
இருள்தருமாஞாலத்தில் ஞானசூனியர்களான மனிதரும் சேவித்துத் தத்துவஞானம் பெறுமாறு அத்திருப்பதியில்
எம்பெருமான் எழுந்தருளியிருக்குந் தன்மையைப் பாராட்டி “இரு நிலமீதினில் யாவருங்காண….. சிறக்கின்ற” என்றார்.

——————

இதுவும் அது –

தாழாது இபம் சொல்ல வந்தார் அரங்கர் தயங்கு செம் பொற்
கேழா விமானம் கிளர் செம் பொன் மேரு கிரி -நிகர்த்த
ஏழ் ஆ வரணத்து இடை இடைத் தீவுகள் இவ் அனைத்தும்
சூழ் ஆறு மா கடல் எவ்வாறு நாம் இனிச் சொல்லுவதே –96-

(இ – ள்.) இபம் – கஜேந்திராழ்வான்,
சொல்ல – (ஆதிமூலமேயென்று) கூப்பிட,
தாழாது வந்தார் – காலம்நீட்டியாது (உடனே) அங்கு எழுந்தருளி (அதன் துன்பத்தைத் தீர்த்தருளிய),
அரங்கர் – நம்பெருமாளது,
தயங்கு செம்பொன் கேழ் ஆ விமானம் – விளங்குகின்ற செம்பொன்மயமாகிய விமானம்,
கிளர் செம் பொன் மேரு கிரி – விளங்குகின்ற சிவந்த பொன்மயமான மகாமேருமலையையும், –
ஏழ் ஆவரணத்து இடை – ஏழு மதில்களின் நடுவிலுள்ள இடங்கள்,
இடை தீவுகள்- (கடலின்) நடுவிலுள்ள ஸப்தத்வீபங்களையும், –
இ அனைத்தும் சூழ் ஆறு – இவ்வெல்லாவற்றையுஞ் சூழ்ந்த காவேரி நதி,
மா கடல் – பெரிய கடலையும்,
நிகர்த்த – ஒத்தன;
இனி நாம் எ ஆறு சொல்லுவது – இனிமேல் நாம் (விமானம் முதலியவற்றைப்பற்றி) வேறு எவ்விதமாக வருணித்துக் கூறுவது? (எ – று.)

ஸ்ரீரங்கத்தைச்சுற்றிச்செல்லுங் காவேரிநதி கடலையும், ஸப்தப்ராகார மத்தியிலுள்ள இடங்கள் கடலினிடையேயுள்ள
ஏழுதீவுகளையும், நடுவிலுள்ள பிரணவாகாரமான பொன்மயமாகிய ஸ்ரீரங்கவிமானம் பூமிமத்தியிலுள்ள
மேருபருவதத்தையும் போலு மென்பதாம். “எவ்வாறு நாமினிச் சொல்லுவது” என்றதனால்,
பூலோக வைகுண்டமாகிய திருவரங்கத்தின் மகிமை வருணித்துச் சொல்வதற்கு எவ்வாற்றாலும் இயலாது என்றவாறு.
இபம் -வடசொல். “ஆம் விமானம்” என்றும் பாடம்.

————-

சயனத் திருக் கோலம்

ஞாலத் திகிரி பகல் இரவு ஆக நடத்தும் இந்தக்
காலத் திகிரி நடக்க வற்றோ வெங்கனல் உமிழ்வாய்
ஆலப் பணி அணை மீதே அரங்கத்து அமர்ந்து உறையும்
நீலக் கடல் கண் விழித்து உறங்கா விடின் நிச்சமுமே –97–

(இ – ள்.) அரங்கத்து – திருவரங்கத்தில்,
வெம் கனல் உமிழ் வாய் – கொடிய நெருப்பை யுமிழ்கின்ற வாயினையும்
ஆலம் – விஷத்தையுமுடைய,
பணி – திருவனந்தாழ்வானாகிய,
அணைமீதே – சயனத்தில்,
அமர்ந்து உறையும் – விரும்பி யெழுந்தருளி யிருக்கின்ற,
நீலம் கடல் – நீலநிறமாகிய கடல் போன்ற நம்பெருமாள்,
நிச்சமும் – தினந்தோறும்,
கண்விழித்து உறங்கா விடின் – யோகநித்திரை செய்து விழியாவிட்டால், –
ஞாலம் திகிரி – பூமி சக்கரத்தை,
பகல் இரவு ஆக – பகலும் இரவுமாக,
நடத்தும் – நடத்துகின்ற,
இந்த -,
காலம் திகிரி – கால சக்கரம்,
நடக்க வற்றோ – இடையறாது நடத்தற்கு வன்மையையுடைய தாகுமோ? (ஆகாது என்றபடி); (எ – று.)

யாவும் நம்பெருமாளது சங்கல்பத்தின்படியே நடக்குமென்றவாறு.
நீலக் கடல் கண்விழித்து உறங்குதல் – கரியகடல்போன்ற திருமேனியையுடைய நம்பெருமாள் (ஜகத்ரக்ஷணசிந்தையோடு)
செய்யும் அறிதுயிலென்க. இங்ஙனம் எம்பெருமான் உலகத்தை ரக்ஷிக்கவேணுமென்னுஞ் சங்கல்பத்து டனே
யோகநித்திரை செய்வதனால்தான் இவ்வுலகில் பகலிரவுகள் தோன்றி இவ்வுலகத்துஉயிர்களை வாழ்விக்கின்றன என்பதாம்.
யோகநித்திரை என்ற தொடர் உலகத்தைப் பாதுகாத்தற்கு உபாயத்தைத் தேடுகின்ற துயில் என்று பொருள்படுதலும்அறியத்தக்கது;
“உறங்குவான் போல் யோகு செய்த பெருமான்” என்று நம்மாழ்வார் அருளிச்செய்திருத்தலுங் காண்க.
வற்று – வல் என்னும் பண்படியாப் பிறந்த குறிப்பு முற்று. நிச்சம் – நித்யம் என்ற வடசொல்லின் திரிபு. நீலக்கடல் – உவமவாகுபெயர்.

————–

இதுவும் அது –

தாம் அக் கடை யுகத்துள்ளே விழுங்கி தரித்த பழம்
சேமப் புவனம் செரிக்கும் என்றே சிவன் மா முடிக்கு
நாமப் புனல் தந்த பொற்றாள் அரங்கர் நலம் சிறந்த
வாமத் திருக்கரம் மேலாகவே கண் வளர்வதுவே –98-

(இ – ள்.) சிவன் மா முடிக்கு – சிவபிரானது பெரிய தலைக்கு,
நாமம் புனல் – பரிசுத்தமாகிய கங்காதீர்த்தத்தை,
தந்த – உண்டாக்கிக்கொடுத்தருளிய,
பொன் தாள் – அழகிய திருவடிகளையுடைய,
அரங்கர் -,
நலம் சிறந்த – அழகுமிக்க,
வாமம் திரு கரம் – இடத்திருக்கை,
மேல் ஆக – (தமக்கு) மேலாயிருக்க,
கண் வளர்வது – பள்ளிகொண்டருளுவது, –
தாம் -,
அ கடை யுகத்துள்ளே – அந்த யுகாந்தகாலத்தில்,
விழுங்கி – உட்கொண்டு,
தரித்த – தமதுவயிற்றில் வைத்திருக்கின்ற,
பழ சேமம் புவனம் – தம்மாற் காக்கப்படுகின்ற பழைய உலகங்கள்,
செரிக்கும் என்றே – ஜீர்ணித்துவிடு மென்னுங் கருத்தாலேயாம்; (எ – று.)

“வாமத் திருக்கர மேலாக” என்றதனால், வலத்திருக்கரம் கீழாகக் கண் வளர்ந்தருளுகின்றனர் என்றதாயிற்று;
“மின்னிலங்கு தொடிவலய வியன் வலக்கை கீழ்கொடுத்துத்,
தென்னிலங்கைத் திசைநோக்கித் திருநயனந் துயில்வோய்” என்பர் திருவரங்கக்கலம்பகத்தில்.
இடக்கை கீழ் கொடுத்து வலக்கை மேலாகக் கண்வளர்ந்தருளினால், தமது வயிற்றில் இடப்பக்கத்திலுள்ள
ஜாடராக்கினியின் சுவாலை பட்டு அங்குத் தரிக்கப்பட்டிருக்கின்ற அண்டங்களெல்லாம் அழிந்துவிடு மென்று கருதி,
நம்பெருமாள் அங்ஙன மன்றி வலக்கை கீழ்கொடுத்து இடக்கை மேலாகக் கண்வளர்ந்தருளின ரென்பதாம்.
இது, திருவரங்கநாதன் இயற்கையில் வலக்கை கீழாகவும் இடக்கை மேலாகவும் பள்ளிகொண்டிருத்தற்கு
ஓர் ஏதுவைக் கற்பித்துக் கூறியதனால், ஏதுத்தற்குறிப் பேற்றவணியாம்; தேற்றேகாரம், இதன் உருபாகும்:
இவ்வணியினால். எம்பெருமான் காத்தற்றொழிலிற் கருத்தாயிருக்குந்தன்மை வெளியாம்.
என்றே என்னும் ஏகாரத்தை வினாவாகக் கொண்டு பொருளுரைத்தலுமாம்.
திரிவிக்கிரமாவதாரகாலத்தில் மேலேசென்ற திருமாலினது திருவடியைப் பிரமன் தனது கைக் கமண்டல
தீர்த்தத்தாற் கழுவிவிளக்க, அத்தீர்த்தமே கங்காநதியாகப் பெருகி வானத்தினின்று பூமிக்கு வருகையில்
சிவபிரான் தனது சடைமுடியில் ஏற்றன னாதலால், “சிவன்மாமுடிக்கு நாமப்புனல்தந்த பொற்றாளரங்கர்” என்றார்.
இனி, நாமப்புனல் – பிரசித்திபெற்ற கங்காநதி யெனினுமாம்.

—————

திருக்கைகள் –

கதிர் ஆரும் நீள் முடி சேர்ந்த கைப்போது எக்கடவுளர்க்கும்
அதிராசன் ஆனமை காண்மின் என்றே சொல்லும் ஆய பொன்மா
மதில் ஆர் அரங்கர் பொற்றாள் ஆர் திருக்கரம் மற்று இதுவே
சதுரானன் முதல் எல்லா உயிர்க்கும் சரண் என்னுமே –99-

(இ – ள்.) பொன் ஆய மா மதில் ஆர் அரங்கர் – பொன்னாலாகிய பெரிய மதில்கள் பொருந்திய திருவரங்கத்து நாதரது,
கதிர் ஆரும் நீள்முடி சேர்ந்த – ஒளி நிறைந்த நீண்ட கிரீடத்தைப் பொருந்திய,
கை போது – தாமரைமலர்போன்ற வலத்திருக்கையானது, –
“எ கடவுளர்க்கும் – எல்லாத் தேவர்களுக்கும்,
அதிராசன் ஆனமை – (இப்பெருமான்) தலைவனான தன்மையை,
காண்மின் – பாருங்கள்,” என்றே சொல்லும் -;
பொன் தாள்ஆர் – அழகிய திருவடிகளைப் பொருந்திய,
திரு கரம் – இடத் திருக்கையானது,
“இதுவே – இத்திருவடியே,
சதுர்ஆனனன் முதல் – நான்குமுகமுடைய பிரமன் முதலிய, எல்லா உயிர்க்கும் -,
சரண் – புகலிடம்,”
என்னும் – என்று சொல்லும்; (எ – று.)

சயனத்திருக்கோலத்தில் நம்பெருமாளது திருமுடியைச்சேர்ந்த முட க்கிவைத்த வலத்திருக்கையானது
“எல்லாத்தேவர்க்கும் இவனே இறைவன்” என்பதையும், திருவடியைச்சேர்ந்த நீட்டிவைத்த இடத்திருக்கையானது
“பிரமன் முதலிய எல்லாவுயிர்கட்கும் இத்திருவடிகளே புகலிடம்” என்பதையும் குறிப்பிக்கு மென்பது கருத்து.
எம்பெருமான் திருக்கைகளை வைத்திருக்குந்தன்மைக்கு ஏற்றவாறு ஒவ்வொருகருத்தைக்கற்பித்துக்கூறும்
மரபுக்கு ஏற்ப இவ்வாறு இங்குக் கூறுகின்றனரென்க. கிரீடம் தலைமைக்கு அறிகுறியாதல், கருதத்தக்கது.
“கதிர்” என்னுஞ் சொல் ஆகுபெயரால் ஆயிரங் கிரணங்களையுடைய சூரியனை யுணர்த்துமெனக் கொண்டு,
“கதிராருநீண்முடி” என்ற தொடர்க்கு – சூரியனையொத்துவிளங்குகின்ற நீண்டகிரீடம் என்று உரைப்பினுமாம்;
“கதிராயிரமிரவி கலந்தெறித்தாலொத்த நீண்முடியன்” என்ற பெரியார் பாசுரத்தையுங் காண்க.
பிரமனை ஜீவாத்மாக்களுள் ஒருவனாக வைத்துக்கூறியதனால், திருமால் யாவரினும் மேம்பட்ட பரமாத்மா வென்பது தெற்றென விளங்கும்.

———–

வியூக மூர்த்தியே ஸ்ரீ ரெங்க நாதன் –

மோகத் துயில் புரி மெய் போலக் கண்ட முறையினுக்கு இங்கு
ஏகத் திரு உரு என்று அறிந்தேன் இந்திரியை அன்போடு
ஆகத்து வைத்தருள் தென் அரங்கா அங்கும் இங்கும் ஒக்கப்
போகத்துக் கொண்ட பண நாகம் ஓன்று பொறுத்த பின்னே –100-

(இ – ள்.) அன்போடு – அன்புடனே,
இந்திரையை – பிராட்டியை,
ஆகத்து – திருமார்பில்,
வைத்தருள் – வைத்தருளுகின்ற,
தென்அரங்கா – ! –
அங்கும் – திருபாற்கடலிலும்,
இங்கும் – திருவரங்கத்திலும்,
ஒக்க -,
போக த்து கொண்ட – தனது உடலின்மேற் கொண்ட,
பணம் நாகம் ஒன்று – படங்களையுடைய திருவனந்தாழ்வான்,
பொறுத்தபின் – தாங்கியபின்பு (தாங்கியதனால்), –
மோகம் துயில் – பொய்த்துயிலை (யோகநித்திரையை)
மெய் புரி (துயில்) போல கண்ட – மெய்யாகச்செய்கின்ற துயிலைப்போலச் செய்தருளுகின்ற,
முறையினுக்கு – தன்மைக்கு,
இங்கு -,
ஏகம் திரு உரு என்று – (அதுவும் இதுவும்) ஒரு ரூபமே யென்று, அறிந்தேன் -; (எ – று.)

திருப்பாற்கடலில் எழுந்தருளியுள்ள வியூகரூபமும் திருவரங்கத்தில் எழுந்தருளியுள்ள அர்ச்சாரூபமும் ஒன்றேயென்பது விளக்கப்பட்டது.
இருவகைநிலையிலும் திருவனந்தாழ்வானே திருப்பள்ளிமெத்தை யென்க கண்ட – செய்த;
காணுதலென்பது செய்தலென்னும் பொருளதாதலை “திருநகரங்கண்டபடலம்” என்ற விடத்துங் காண்க.
பாம்பினுடலுக்கு “பேகம்” என்று பெயர். இனி, பணம்கொண்ட நாகம் போகத்துப்பொறுத்தபின் என்றுமாம்.

———–

எம்பெருமானது திருமேனியின் நிறம் நீல நிறம்

சோதித் திரு உரு ஆகாயம் ஆக சுருதி நன்னூல்
சாதித்து நின்று தெளிந்து விட்டேன் மிக்க தானவரைச்
சேதித்த நேமித் திரு அரங்கா சங்கை தீர உன் தன்
ஆதித் திரு உருவின் பேர் அணி நிறம் ஆன பின்னே –101-

(இ – ள்.) மிக்க தானவரை – மிகுந்த (பெருங்கூட்டமான) அசுரர்களை,
சேதித்த – அழித்த,
நேமி – சக்கரத்தையுடைய,
திரு அரங்கர் – !
உன்தன் – உன்னுடைய,
ஆதி – முதன்மையாகிய,
திரு உருவின் – திருவுருவத்தினது.
பேர் அணி நிறம் ஆன பின் – பெரிய அழகிய நிறமாகிய பின்பு, –
சுருதி நல் நூல் சாதித்து நின்று – சிறந்த வேதசாஸ்திரங்களைப் பழகிநின்று, –
சோதி திரு உரு – (உனது) தேஜோமயமான அழகிய ரூபம்,
ஆகாயம் ஆக – ஆகாசம் போன்ற தென்று,
சங்கை தீர – ஐயமற,
தெளிந்துவிட்டேன் – தெளிவுகொண்டேன்; (எ – று.)

நினதுதிருமேனியின்நிறம் ஐம்பெரும்பூதங்களுள்ளும் முதலதாகிய ஆகாயம்போல நீலநிறமான தென்பதாம்.
இவ்வாறுகூறியது – ஆகாயம் எங்கும் வியாபித்திருப்பதுபோல எம்பெருமானும் ஸர்வவியாபியென்பதையும்,
மற்றை உலகத்துப்பொருள்களெல்லாம் ஐம்பெரும்பூதங்களுள் முதலதாகிய ஆகாயத்தினின்று தோன்றுவதுபோலப்
பிரமன்முதலிய எல்லாப்பொருள் களும் அப்பெருமானிடத்தினின்றே தோன்றுமென்பதையும் விளக்கியபடியாம்.
வேதத்தில் எம்பெருமானை ஆகாயமாகவே கூறியிருக்கின்றது; அவ்வாறு கூறியதற்குக் காரணம் –
எம்பெருமானது ஸ்வரூபம் எங்கும் ஒளிவீசுந் தன்மையதாதலா லாகும்; மிக்கபேரொளியுடைமைபற்றி வேதத்தில்
எம் பெருமானை ஆகாசமாகக்கூறியிருப்பதற்கு, திருமேனிநிறம் ஆகாசம்போல நீலநிறமுடைமையால்தான்
அவ்வாறுகூறியதாக இங்குக் கவி சமத்காரமாக வேறொருகாரணங்கற்பித்துக் கூறினரென்க;
இவ்வாறு ஒருகாரணம்பற்றி ஒன்றற்கு ஒருபெயர் கூறியிருப்ப, அப்பெயர்வந்ததற்கு வேறொருவகையாகக் காரணங்கற்பித்துக்கூறுவது –
பிரிநிலைநவிற்சியணியின் பாற்படும்; இதனை வடநூலார் நிருக்தியலங்கார மென்பர்.
எம்பெருமானை ஆகாசமென்றுகூறி யிருப்பதை உக்காமீமாம்ஸையில் ஆகாசாதிகரணத்தின் ஸ்ரீபாஷ்யத்தால் தெளிக.
ஆகாயம் – ஆகாசம். தெளிந்துவிட்டேன் – ஒருசொல். மிகுதல் – திரளுதலாகவேனும், செருக்குதலாக வேனுங் கொள்க.

———-

இது முதல் ஐந்து பாசுரங்கள் ஆனந்த அனுபவம்

ஓங்கார வட்டத்து மாசுணப் பாயில் உலோகம் உண்ட
பூங்கார் விழிக்குப் புலப்பட்டதால் எப்பொழுதும் என்னை
நீங்காது இடர் செய்யும் தீ வினை காள் இனி நின்று நின்று
தேங்காது நீர் உமக்கு ஆன இடத்தே சென்று சேர்மின்களே –102-

(இ – ள்.) எப்பொழுதும் – எக்காலத்தும்,
என்னை நீங்காது – என்னைவிட்டுப் பிரியாமல்,
இடர் செய்யும் – வருத்தத்தை (மேன்மேலுஞ்) செய்கின்ற,
தீவினைகாள் – பாவங்களே! –
ஓங்காரம் வட்டத்து – பிரணவாகார விமான த்துள்,
மாசுணம் பாயில் – ஆதிசேஷனாகிய சயனத்தில்,
உலோகம் உண்ட – லோகங்களை வயிற்றில் வைத்தருளிய,
பூ கார் – அழகிய காளமேகம்,
விழிக்கு – (எனது) கண்களுக்கு,
புலப்பட்டது – விளங்கிற்று;
ஆல் – ஆதலால்,
இனி -,
நீரும் – நீங்களெல்லாரும்,
நின்று நின்று தேங்காது – இங்கு நிரைந்து நிற்காமல்,
அ கானிடத்தே – அந்தக் காட்டினிடத்தே,
சென்று சேர்மின்கள் – போய்ச் சேருங்கள்; (எ – று.)

இதுவரையில் நீங்கள் என்னைத் துன்பப்படுத்தியது போல எம்பெரு மான்திருவருளுக்கு இலக்கான என்னை
இனிப் படுத்தமுடியா தென்று தீவினைகளை ஒறுத்தன ரென்பதாம்.
“நெய்க்குடத்தைப்பற்றியேறுமெறும்பு கள்போல் நிரந்துஎங்குங், கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்
காலம்பெற வுய்யப்போமின், மெய்க்கொண்டுவந்து புகுந்து வேதப்பிரானார் கிடந்தார்” என்ற திருப்பதிகத்தை அடியொற்றியது இச்செய்யுள்,
வட்டம், கார் – ஆகு பெயர்கள். அக்கான் – சேர்தற்கரிய காடு என்றபடி.
இங்குக் கேளாத தீவினைகள் கேட்பதுபோலச் சொல்லப்பட்டன; மரபுவழுவமைதி.

———–

விண் இட்ட சோலை அரங்கத்து மேவிய மெய்ப் பொருளை
கண்ட இட்ட பார்வையின் கட்டி என் கண் வரக் கண்டு உடலாம்
புண் இட்ட வண்ணக் குழியுள் பொதிந்து புறத்து வெள்ளை
மண் இட்டு இலச்சினை இட்டு விள்ளாது உள்ளம் வைத்தேனே –103-

(இ – ள்.) விண் இட்ட சோலை – ஆகாயத்தை யளாவிய சோலைகளை யுடைய,
அரங்கத்து – திருவரங்கத்தில்,
மேவிய – விரும்பி யெழுந்தருளியி ருக்கின்ற,
மெய் பொருளை – பரதத்துவத்தை,
என்கண் வர கண்டு – என்னிடத்தே வரப் பார்த்து,
கண் இட்ட பார்வையின் – கண்வைத்த பார்வையினால்,
கட்டி -,
புண் இட்ட – ஊன் பொருந்திய,
உடல் ஆம் – சரீரமாகிய,
வண்ணம் கிழியுள் – அழகிய சீலையுள்ளே,
பொதிந்து – வைத்துமூடி,
புறத்து – வெளியே,
வெள்ளை மண் இட்டு – வெண்மையாகிய மண்ணை அப்பி,
இலச்சினை இட்டு – முத்திரைவைத்து,
விள்ளாது – விட்டு நீங்காதபடி,
உள்ளம் – மனத்திலே,
வைத்தனென் – வைத்திட்டேன்; (எ – று.)

கட்டிப்பொன்கிடைத்தால் அதனைக் கட்டிக்கொணர்ந்து கிழியில்வைத்துப் பத்திரப்படுத்தி நம்முடையதென்று
தெரிவித்தற்காக அக்கிழியின்வெளியில் மண்ணை யப்பி முத்திரைவைக்கின்ற இயல்பை மனத்திற்கொண்டு இவ்வாறு கூறினர்.
ஸ்ரீரங்கத்து எம்பெருமானைப் பொற்கட்டியாகவும், அவர்தமக்குச்சேவைசாதித்ததை அப்பொன் காணக்கிடைத்ததாகவும்,
தாம் கண்ணாரச்சேவித்துத் தன்மனத்தே பதியவைத்ததனை அப்பொற்கட்டியைக் கட்டிக்கொணர்ந்து
பொற்கிழியிலே பத்திரப்படுத்தியதாகவும், அப்பெருமான் எழுந்தருளியுள்ள உடலின்மேற்புறத்தில் தான்
திருமண்காப்புத்தரித்தலைப் பொற்கிழியின்மேல் மண்ணை அப்பியதாகவும்,
தாம்திருவிலச்சினை தரிப்பதை முத்திரை வைப்பதாகவும், உருவகஞ்செய்தன ரென்க: இது, ஸாவயவரூபகவணியாகும்.
“உன்னைக்கொண்டென்னுள்வைத்தேன்” என்றார்ஆழ்வாரும்.
திருவரங்கநாதனை ‘மெய்ப்பொருள்’ என்றதற்கேற்ப இவ்வாறு கூறினார்.
மெய்ப்பொருள் – நிலையாகிய செல்வம், பரம்பொருள். பார்வையின் – பார்வையாகிய கயிற்றால்.
கிழி – நிதிவைக்குஞ் சீலை வண்ணக்கிழி – வர்ணச்சீலை யென்றுமாம்.
வெள்ளைமண்இடுதல் – திருமண்காப்பிடுதல் (புண்டரம்);
இலச்சினையிடுதல் – தோள்களிற் சங்க சக்ர சின்னந் தரித்தல் (ஸமாஸ்ரயணம்) என்கண் – என் கண்ணினிடத்தே யென்றுமாம்.

———

கைத்து பழ வினை தித்திக்க என் தன் கருத்தினுள்ளே
பைத்துத்தி மெத்தையின் மீதேயிலும் பைங்கேழ் எறிந்து
மைத்து குளிர்ந்து மதுரித்து மெத்தென்று மா மணத்து
நெய்த்து புகர்ந்து நிகர்க்கும் பொன் மேனி நெடுங்கடலே –104-

(இ – ள்.) பைங் கேழ் எறிந்து – பசிய ஒளியை வீசி,
மைத்து – கறுத்து,
குளிர்ந்து -,
மதுரித்து – இனியதாகி,
மெத்தென்று – மிருதுவாய்,
மா மணத்து – மிக்கவாசனைவீசப்பெற்று,
நெய்த்து – பளபளப்புக்கொண்டு,
புகர்த்து – கபிலநிறமுடையதாய்,
நிகர்க்கும் – (இத்தன்மையெல்லாம்) ஒத்திருக்கின்ற,
பொன் – பொன்போன்ற,
மேனி – திருமேனியையுடைய,
நெடுங்கடல் – பெரிய கடல் (நம்பெருமாள்),
பழ வினை கைத்து – பழைய இருவினைகளைப்போக்கி,
என்தன் கருத்தினுள்ளே – எனதுமனத்திலே,
தித்திக்க – இனிக்கும்படி,
பை துத்தி மெத்தையின்மீதே – படங்களையும் புள்ளிகளையுமுடைய (திருவனந்தாழ்வானாகிய) சயனத்தின்மேலே,
துயிலும் – யோகநித்திரைசெய்தருள்வர்; (எ – று.)

“ஸர்வகந்தஸ்ஸர்வரஸ:” என்றபடி எம்பெருமான் எனக்கு எவ்விதத்திலும் இனிமைதருபவ னென்று கருத்து.
தாம் அழகியமணவாளனை ஸ்ரீரங்கத்திலே கண்டு ஸேவித்து ஆட்பட்டது முதல் அப்பெருமான் ஐயங்காருடைய
மனத்தி லெழுந்தருளியிருத்தலினால் ‘என்றன் கருத்தினுள்ளே பொன்மேனி நெடுங்கடல் துயிலும்’ என்றார் எனினுமாம்;
“பனிக்கடலுட் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்து என், மனக்கடலுள் வாழவல்ல மாய மணாள நம்பீ” என்றார் பெரியாழ்வாரும்:
‘உகந்தருளின நிலங்களெல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீரைகதேஸத்திலே பண்ணும்;
அங்குத்தை வாஸம் ஸாதநம், இங்குத்தை வாஸம் ஸாத்யம்’ என்ற ஸ்ரீவசநபூஷணமும் கருதத்தக்கது.
கைத்தல் – கோபித்தல்; இங்கு, காரியத்தைக் காரணமாக உபசரித்தார். நெய்த்து – செழித்து, அல்லது வழுவழுத்து என்றுமாம்.
மேனியாகிய கடலென்றுமாம். இனி, நிகர்க்கும் என்பதனை முற்றாகவுங் கொள்ளலாம்.

————

கருட சேவை –

தெள்ளா வரும் பொன்னி சூழ் அரங்கா ஒரு தேவரையும்
உள்ளாது எனது உள்ளம் யான் என் செய்வேன் விண்ணில் ஓர் உவணப்
புள் ஆகி வேதப் பொருள் ஆகி உன்னைத் தன் பொற் கழுத்தில்
கொள்ளா வருகின்ற கோலம் உள்ளே கண்டு கொண்ட பின்னே –105–

(இ – ள்.) தெள்ளா வரும் பொன்னி சூழ் அரங்கா – தெளிவில்லாமல் (மிகக்கலங்கி) வருகின்ற காவேரிநதி சூழ்ந்த திருவரங்கத்து நாதனே!
விண்ணில் – ஆகாசத்தில்,
ஓர் உவணம் புள் – ஒப்பற்ற பெரியதிருவடி,
வேதம் பொருள் ஆகி – வேதார்த்த ஸ்வரூபியாய்,
தன் பொன் கழுத்தில் – தனது ஸ்வர்ணமயமான கழுத்தின்மேல்,
உன்னை -,
கொள்ளா – எழுந்தருளப்பண்ணிக்கொண்டு,
வருகின்ற – விரைந்தோடி வருகின்ற,
கோலம் – அழகை,
உள்ளே – என்மனத்திலே,
கண்டுகொண்டபின் – சேவித்தபின்பு, –
எனது உள்ளம் – என்னுடைய மனம்,
ஒரு தேவரையும் – வேறொரு தேவரையும்,
உள்ளாது – (ஒருதெய்வமாக) மதியாது;
யான் என் செய்வேன் -? (எ – று.)

பரதேவதையாகிய உன்னைக் கண்கூடாகக்கண்டு களித்தபின்பு அபர தேவதைகளும் பொற்பில்லாதவரும்
கீர்த்தியில்லாதவரும் ஆற்றலில்லாத வருமான மற்றை க்ஷுத்ர தேவதைகளை நான் ஒருபொருளாக மதியேன் என்பதாம்.
இதனால், கவி, தமது அநந்யசரணத்வத்தை (வேறொருகடவுளுக்கு ஆட்படாமையை) வெளியிட்டார்.
தெள்ளாவரும் பொன்னிசூ ழரங்கன் – “தெளிவிலாக் கலங்கல்நீர்சூழ் திருவரங்கத்துள் ளோங்கு, மொளியுளார்” என்றார் பெரியாரும்.
இனி, தெள்ளிவருகின்ற பொன்னி யென்றுமாம். உவணப்புள் – கருடப்பறவை. ஆகி – அசை.

————–

முன்பு ஆலிலை மகவு ஆகிய போது இந்த மூதண்டங்கள்
உன்பால் ஒடுங்கி இருந்தது போலும் உத்தி மங்கைக்கு
அன்பா அரங்கத்து என் ஆர் அமுதே அணுவாய் இருந்தும்
என் பால் அகண்டமும் ஆகிய நீ வந்து இருக்கின்றதே –106-

(இ – ள்.) உததி மங்கைக்கு அன்பா – திருப்பாற்கடலில் தோன்றிய திருமகளுக்குக் கணவனே!
அரங்கத்து – திருவரங்கத்தி லெழுந்தருளியிருக்கின்ற,
என் ஆர் அமுதே – எனது கிடைத்தற்கரிய தேவாமிருதமே!
அணு ஆய் இருந்தும் – (எனது மனம்) மிகச்சிறுமையாயிருந்தும்,
என்பால் – அந்த என்மனத்தினிடத்து,
அகண்டமும் ஆகிய – எல்லாமாகிய, நீ -,
வந்து இருக்கின்றது – வந்து எழுந்தருளியிருக்கின்ற தன்மை, – (நீ),
முன்பு – முன்னே,
ஆல் இலை – ஆலிலையில்,
மகவு ஆகிய போது – சிறுகுழந்தையாய்க் கிடந்தருளினபோது,
இந்த முது அண்டங்கள் – இந்தப் பழைய அண்டங்க ளெல்லாம்,
உன்பால் – உன்னிடத்து,
ஒடுங்கி இருந்தது – அடங்கியிருந்த தன்மையை,
போலும் – ஒக்கும்; (எ – று.)

ஸர்வவியாபியாய் மிகப்பேருருவமுடைய நீ எனதுமிகச்சிறுமனத்தில் எழுந்தருளியிருக்குந் தன்மை,
பிரளயகாலத்தில் சிறுகுழந்தைவடிவான உனது வயிற்றினுள் எல்லாப்பிரபஞ்சமும் ஒடுங்கியிருப்பது போலும் என்பதாம்.
ஆதாரமாகிய ஆலிலை அணுக்களை விட, ஆதேயமாகிய பரம்பொருளுக்குப் பருமைதோன்றக் கூறியது, மிகுதியணியின்பாற்படும்.
மக – இளமை. உததி – கடல்; நீர் நிறைந்து தங்குமிடம்: இங்கு, பாற்கடல்.
உததிமங்கை – அதனிடத்துத் தோன்றிய மங்கையெனத் திருமகள்; உததியாற்சூழ்ந்த மங்கையென நிலமகளாகவுமாம்.

——

பகவானைப் பிரார்த்தித்தல் –

வலைப்பால் விடம்பிணைக் கண்ணியர் போகத்தில் மாலுரும் என்
தலைப்பால் கழல் அருள் -தார் அரங்கா பல தாயார் தந்த
முலைப்பாற் கடல் உன் திருக் கழல் ஆணி வெண் முத்து எறியும்
அலைப்பாற் கடலில் அளவு ஆம் எனின் மற்று அதுவும் அன்றே –107–

(இ – ள்.) தார் – திருத்துழாய்மலையையுடைய,
அரங்கா -!-
பல தாயர் தந்த – (இதுவரையில் பல பிறப்புக்களிலும்) பல தாய்மார்கள் கொடுத்த,
முலை பால் கடல் – முலைப்பாலினது வெள்ளம், –
உன் திரு கழல் – உனது திருவடிகளில்,
ஆணி வெள் முத்து – மேன்மையான வெள்ளிய முத்துக்களை,
எறியும் – வீசுகின்ற,
அலை – அலைகளையுடைய,
பால் கடலின் – திருப்பாற்கடலினது,
அளவு ஆம் எனின் – அளவினதாகு மென்றால்,
அதுவும் அன்றே – அதுவும் ஒப்பாகமாட்டாது; (அலைப்பாற்கடலினும் முலைப்பாற்கடல் மிகவும் பெரியது என்றபடி);
(ஆதலால், இனி அப்பால்குடிக்குமாறு பிறவாதபடி) –
வலை – வலையும்,
பால் – அமிருதமும்,
விடம் – விஷமும்,
பிணை – பெண்மான் கண்ணும், (ஆகிய இவைபோன்ற),
கண்ணியர் – கண்களையுடைய மகளிரது,
போகத்தில் – சிற்றின்பத்தில்,
மால் உறும் – பெருமயக்கமடைகின்ற,
என் – எனது,
தலைப்பால் – தலையின்மீது,
கழல் – (உனது) திருவடிகளை,
அருள் – வைத்தருள்வாய்; (எ – று.)

எம்பெருமானைச் சரணமாகப்பற்றும்போது ஜீவாத்மாக்கள் தம்முடைய குற்றங்களையே காணிக்கைப் பொருளாகக் கொண்டு
சரணமடையும் மரபின்படியே ஐயங்காரும் மூன்றடிகளினால் தமது குற்றத்தைக் கூறிச் சரண்புகுந்து,
இரண்டாமடியால் தம்மை யாட்கொண்டு எம்பெருமான் தனது திருவடிகளைத் தமதுமுடியின்மீது பொறித்தருளுமாறு வேண்டுகின்றனரென்க.
“முன்னம்பிறந்த பிறப்போ முடிவில்லை” என்றபடி பலபிறப்பெடுத்து உழன்று வருந்திய என்னை இனிப் பிறப்பற்று
முத்தியடையுமாறு அருள்செய்ய வேண்டுமென்று வேண்டியபடி.
“உன்திருக்கழ லாணிவெண்முத்தெறியும்” என்றது, பாற்கடலானது தன்னிடத்திற்சயனித்துள்ள உனது திருவடிகளில்
சிறந்த முத்துக்களை அலைகளாற்கொழிக்கு மென்றவாறு.
கண்ட ஆடவர்களைக் கவர்தலால் வலையும், இன்பஞ் செய்தலாற் பாலும், துன்பஞ் செய்தலால் விடமும்,
மருட்சி பொருந்திய பார்வையாற் பிணையும் – மகளிர்கண் கட்கு உவமை கூறப்படும்;
இனி, சுற்றிடம் விளர்த்திருத்தலாற் பாலும், நடுவிடம் கறுத்திருத்தலால் விடமும் உவமையாகவுமாம்.
பாலும், விடமுஞ் சேர்த்துச் சொல்லப்படுதலால், அவை பாற்கடலிற் பிறந்த தேவாமிருதமும், ஆலாகலவிடமுமாம். பிணை – ஆகுபெயர்.

———-

இதுவும் அது –

தொடை மாறனும் தமிழ் சொல் மாறனும் தொழ துத்தி வெள்ளைக்
குடை மா சுணத்தில் துயில் அரங்கேச குலவு வை வேல் படைமாறு
கொண்ட மைக் கண்ணியர் பால் வைத்த பாச நெஞ்சை
மடை மாறி உந்தன் திருவடிக்கே வர வைத்தருள் –108-

(இ – ள்.) தொடை மாறனும் – (வேப்பம்பூ) மாலையையுடைய பாண்டியனும்,
தமிழ் சொல் மாறனும் – தமிழினாற் சொல்லுகின்ற (பாமாலையையுடைய) நம்மாழ்வாரும்,
தொழ – தொழும்படி,
துத்தி – படப்புள்ளிகளையுடைய,
வெள்ளை – வெண்மையாகிய,
குடை – குடைபோலக் கவிந்துகொண்டிருக்கின்ற,
மாசுணத்தில் – திருவனந்தாழ்வான்மேல்,
துயில் – பள்ளிகொண்டருளுகின்ற,
அரங்கேச -!-
குலவு – விளங்குகின்ற,
வை – கூர்மையாகிய,
வேல் படை – வேலாயுதத்தோடு,
மாறு கொண்ட – பகைமைகொண்ட (ஒத்த),
மை கண்ணியர்பால் – மையூட்டிய கண்களையுடைய மகளிரிடத்து,
வைத்த -,
பாசம் நெஞ்சை – அன்பினையுடைய (எனது) மனத்தை,
மடைமாறி – மாற்றி,
உன்தன் திருவடிக்கே வர – உனது திருவடிகளுக்கே ஆட்படும்படி,
வைத்தருள் – அன்புவைத்தருள்வாயாக; (எ – று.)

பாண்டியன் – ஸ்ரீவல்லபதேவ னென்பர். குடைமாசுணம் – சென்றாற் குடையாகும் மாசுண மென்றுமாம்.
பிறந்தபொழுதே தொடங்கி அழுதல் பாலுண்ணுதல் முதலியன செய்யாமல் உலகநடைக்கு மாறாயிருந்ததனால்,
நம்மாழ்வார்க்கு ‘மாறன்’ என்று ஒரு திருநாமம். பகைவர்க்கு மாறாயிருந்து வெல்பவனாதலால், பாண்டியன் ‘மாறன்’ எனப்படுவன்.
நெஞ்சு விஷயங்களிற் பாய்ந்துசெல்லுந் தன்மைய தாதலால், அதனைப் பெருக்காகக் கொண்டு, ‘மடைமாறி’ என்றனர்.
மடைமாறுதல் – ஓரிடத்திற் பாயும் நீரை மற்றோரிடத்துப் பாய்வதற்காக நீர்மடையை மாற்றுதல்.

————-

அநந்ய கதித்வமும் பிரார்த்தனையும் –

கரணம் தவிர்ந்து விழி போய்ச் சுழன்று கலங்கும் என் தன்
மரணம் தனில் வந்து உதவு கண்டாய் கொற்ற வாளி ஒன்றால்
அரணம் கடந்தவன் காணா அரங்க என் ஆர் உயிர்க்கு உன்
சரணம் சரணம் ஒழிந்து இல்லை வேறு இத் தராதலத்தே –109-

(இ – ள்.) கொற்றம் வாளி ஒன்றால் – வெற்றியையுடைய ஒரு பாணத்தினால்,
அரணம் கடந்தவன் – முப்புரங்களையும் வென்ற பரமசிவனும்,
காணா – கண்டறியாத,
அரங்க -!-
என் ஆர் உயிர்க்கு – எனது அருமையான உயிருக்கு,
உன் சரணம் ஒழிந்து – உனதுதிருவடி யன்றிக்கே,
வேறு சரணம் – வேறு அடைக்கலம்,
இ தராதலத்து – இவ்வுலகத்தில்,
இல்லை -; (ஆதலால், நீ), –
கரணம் தவிர்ந்து – கரணங்கள் நிலைகுலைந்து,
விழி போய் – கண்பார்வை மழுங்கி,
சுழன்று – மனஞ் சுழன்று,
கலங்கும் – கலங்குகின்ற,
என்தன் – எனது,
மரணம்தனில் – மரணகாலத்தில்,
வந்து – எழுந்தருளிவந்து,
உதவு – காத்தருள்வாய்; (எ – று.)

நான் அந்திமகாலத்தில் யமபாதையினாற் செயலற்று ஒடுங்குஞ் சமயத்தில் நீ அஞ்சேலென்று அபயமளித்துக்
காக்கவேண்டு மென்பதாம்; அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் என்றபடி.
கரணம் – ஐம்பொறிகளென்றாயினும், திரிகரணங்க ளென்றாயினும், அந்தக்கரணமென்றாயினுங் கொள்க.
அரணம் – மதில். வாளி – விஷ்ணுஸ்வரூபமாகிய அம்பு. “துப்புடையாரை யடைவதெல்லாஞ் சோர்விடத்துத் துணையாவரென்றே,

ஒப்பிலேனாகிலு நின்னடைந்தே னானைக்குநீயருள்செய்தமையால்,
எய்ப்பென்னை வந்து நலியும்போ தங்கேது நானுன்னை நினைக்கமாட்டேன்,
அப்போதைக்கிப்போதே சொல்லிவைத்தே னரங்கத்தரவணைப்பள்ளியானே” என்ற பதிகத்தின் கருத்துக் கொண்டது,
இச்செய்யுள். உபாயாந்தரநிஷ்டர்க்குப்போல, ப்ரபந்நர்க்கு அந்திமஸ்மிருதி வேண்டுமென்ற நியமமில்லை யாதலால், இவ்வாறு கூறுகின்றனர்.

———

ஒன்றிலும் விருப்பம் இன்மை -நைரபேஷ்யம்-

நீடும் திகிரிப் படையாய் உனைக்கற்று நின்னை என்றும்
பாடும் படித் தமிழ்ப் பாடல் தந்தாய் பழ நான் மறை நூல்
தேடும் திரு அரங்கா அடியேன் உயிர் செல்லும் அந்நாள்
வீடும் தர இருந்தாய் எனக்கு எது இனி வேண்டுவதே –110–

(இ – ள்.) நீடும் திகிரி படையாய் – (விரோதிகளளவே விரைந்து) ஓடுகின்ற சக்கராயுதத்தை யுடையவனே! –
பழ நால் மறை நூல் தேடும் – பழைய நான்கு வேதசாஸ்திரங்க ளெல்லாந் தேடுகின்ற,
திருவரங்கா -!-
உனை கற்று – உன்னைப் படித்து,
என்றும் – எந்நாளும்,
நின்னை – உன்னை,
பாடும்படி – (அடியேன்) பாடித்துதிக்கும்படி,
தமிழ் பாடல் – தமிழ்ப் பாடல்களை,
தந்தாய் – ஈந்தருளினாய்;
அடியேன் -,
உயிர் செல்லும் அ நாள் – உயிர் விடுகின்ற அக்காலத்தில்,
வீடும் – மோக்ஷசாம்பிராச்சியத்தையும்,
தர இருந்தாய் – (அடியேனுக்குக்) கொடுக்க இருந்தாய்;
எனக்கு இனி வேண்டுவது ஏது – அடியேனுக்கு இனிமேல் ஒன்றும் பெறவேண்டுவதில்லை; (எ – று.)

தமது ஜாயமாநகடாக்ஷத்தால், எம்பெருமான் தம்மிடத்து நிர்ஹேதுகமாக அருள்செய்தமைபற்றி இனித் தமக்கு
ஒன்றுங் குறையில்லாமையால், இதனால் தம்முடைய நைரபேக்ஷ்யத்தை (ஒன்றிலும் விருப்பின்மையை) வெளியிடுகின்றனரென்க.
உனைக்கற்று – உன்திருநாமங்களையும் வைபவங்களையுங் கற்றறிந்து என்றபடி.
பாடல்தருதல் – பாடும்படி அநுக்கிரகித்தல். தெளிவுபற்றி, இருந்தா யென இறந்தகாலத்தாற்கூறினார்; காலவழுவமைதி.
பேறு தப்பா தென்று துணிந்திருத்தல், பிரபந்நனுக்கு அவசியாபேக்ஷித மென்று மேலோர் அருளிச்செய்திருத்தல் காண்க.

———–

பிற தேவர்க்கு அடிமைப் பட்டு இராமை -அந்ய சேஷத்வ வ்ருத்தி-

ஆவைக் கல் ஆவை எதிர் என்று சொல்லி அழுக்கு அடைந்த
நாவைப் பரிசுத்தம் பண்ணியவே கஞ்ச நஞ்சன் விட்ட
கோவை சகட்டை பகட்டை பொருதிய கோயிலில் வாழ்
தேவைப் பகர்ந்த செஞ்சொல் திரு நாமங்கள் சிற் சிலவே –111-

(இ – ள்.) கஞ்சன் நஞ்சன் விட்ட – விஷம்போன்ற துஷ்டசுவபாவத்தையுடைய கம்ஸன் ஏவியனுப்பிய,
கோவை – எருதையும்,
சகட்டை – சகடா சுரனையும்,
பகட்டை – (குவலயாபீடமென்னும்) யானையையும்,
பொருதிய – கொன்று வென்ற,
கோயிலில் வாழ் தேவை -திருவரங்கம் பெரிய கோயிலில் நித்தய வாசம் பண்ணுகின்ற திருவரங்கநாதனை,
பகர்ந்த – சொல்லித் துதித்த,
செம் சொல் திருநாமங்கள் சில சில – சிலசில செஞ்சொற்களாகிய திருநாமங்கள், –
ஆவை – உண்மையான பசுவையும், கல் ஆவை –

கல்லினாற்செய்யப்பட்ட பசுவையும், எதிர் என்று சொல்லி – ஒப்பென்று கூறி, அழுக்கு அடைந்த – அசுத்தமாகிய,
நாவை – (எனது) நாக்கை, பரிசுத்தம் பண்ணிய – முழுதும் சுத்தமாக்கின; (எ – று.)

ஆவைக் கல்லாவை எதிரென்று சொல்லுதல் – பரதேவதையாகிய ஸ்ரீமந்நாராயணனையும், தேவதாந்தரங்களையும் ஒப்பென்னுதல்.
பெயர் சொல்லித்துதித்தமாத்திரத்தில் காமதேனுவைப்போல எல்லாப்பயனையும் அளிக்கவல்ல எம்பெருமானைத்துதியாமல்
எவ்வளவுகாலம் துதித்து முறையிட்டாலும் சிறிதும்பயன் தருந்திறமையில்லாத கல்லாற்செய்த பசுவையும் மலட்டுப்பசுவையும்
போன்ற தேவதாந்தரங்களைத் துதித்தலால், வாய்வலிப்பேயல்லாமல் அபரிசுத்தமும் நேரிடுமென்க.
முன்பெல்லாம் தேவதாந்தரங்களைப் போற்றி எனதுவாய். அபரிசுத்தமாயிற்று;
இப்போது எம்பெருமானது திருநாமங்களிற் சிலவற்றைச் சொல்லி அதனால் அவ்வெச்சில்வாயைப் பரிசுத்தமாக்கிக்கொண்டே னென்பதாம்.
இதனால், யான் இனிப் பிறதேவர்க்கு ஒருபோதும் அடிமைப்பட்டு அவரைத்துதியே னென்பது பெறப்படுதல் காண்க.
கோ – விருஷபவேஷம் பூண்டுவந்த அரிஷ்டாசுரன். சகடு – பண்டியில் வந்துஆவேசித்த அசுரன் (சகடாசுரன்.)

————-

மனிதக் கவி மொழியா மங்கை வாள் மணவாள வள்ளல்
புனிதக் கவி கொண்டு மாலை செய்தான் புயல் போல் முழங்கும்
தொனி தக்க சங்கம் திருச் சக்கரம் சுடர் வாள் முசலம்
குனி தக்க சார்ங்கம் தரித்தார் அரங்கர் பொற் கோயிலுக்கே –112-

(இ – ள்.) புயல் போல் முழங்கும் – மேகம்போல முழங்குகின்ற,
தொனிதக்க – போரொலி மிக்க,
திரு சங்கம் – அழகிய பாஞ்சசந்நியத்தையும்,
சக்கரம் – சுதரிசனத்தையும்,
சுடர் வாள் – ஒளியையுடைய நந்தகத்தையும்,
முசலம் – கௌமோதகியையும்,
குனி தக்க சார்ங்கம் – வளைவு பொருந்திய சார்ங்கத்தையும்,
தரித்தார் – தாங்கியருளியவரான,
அரங்கர் – திருவரங்கநாதரது,
பொன் கோயிலுக்கு – அழகிய கோயிலுக்கு, –
மனிதக்கவி மொழியா – நரஸ்துதியாகக் கவிபாடாத,
மங்கை வாழ் – திருமங்கையில் வாழ்கின்ற,
மணவாளவள்ளல் – அழகியமணவாளதாசன்,
புனிதம் கவி கொண்டு – பரிசுத்தமாகிய பாக்களால்,
மாலை செய்தான் – ஒருமாலையைச் செய்தான்; (எ – று.)

தொனி – த்வநி. முசலம் – முஸலம்; இருப்புலக்கை. மனிதக்கவி – நரகவனம். மனிதக்கவிமொழியா மணவாளவள்ளல்.
“நாக்கொண்டு மானிடம் பாடவந்தகவியேனல்லேன்” என்றது காண்க.
இது, தன்னைப்பிறன்போலும் நாந்தி கூறுகின்ற பதிகச்செய்யுள்;
சடகோபர் சம்பந்தர் முதலாயினாரும், திவாகரரும், பதினெண்கீழ்க்கணக்குச்செய்தாரும், வடநூலாரும்
முன்னாகப் பின்னாகப் பதிகங்கூறுவது காண்க. இது, தற்சிறப்புப்பாயிர மெனப்படும்.

—————-

திருவரங்கத்துமாலை முற்றிற்று.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading