ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவரங்கத்து மாலை. – -21-40-

பின்னைக்கு இனிய பெருமாள் அரங்கர் பெறாது பெற்ற
முன்னைப் பிரமனை வாழ்விக்க வேண்டி முன் நாள் கவர்ந்த
அன்னம் திரு உரு உள்ளே வளர்ந்ததற்கு ஓர் அண்டம் ஆம்
என்னச் சிறந்தது மூதண்டம் யாம் என் இயம்புவதே –21-

(இ – ள்.) பின்னைக்கு – நப்பின்னைப்பிராட்டிக்கு,
இனிய – பிரியமுள்ள கொழுநரான,
பெருமாள் அரங்கர் – திருவரங்கநாதராகிய நம் பெரிய பெருமாள்,
முன்னை – முன்பு (கற்பத்தொடக்கத்தில்),
பெறாது பெற்ற -அருமையாகப் பெற்ற மகனான, பிரமனை -,
வாழ்விக்க வேண்டி – உய்வித் தற்பொருட்டு,
முன் நாள் கவர்ந்த – முன்பு ஒரு காலத்திற் கொண்ட,
அன்னம் திரு உரு – சிறந்த அன்னப்பறவைவடிவம்,
உள்ளே வளர்ந்ததற்கு -,
ஓர் அண்டம் ஆம் – ஒரு முட்டையாகும்,
என்ன – என்று சொல்லும்படி,
மூது அண்டம் – பழமையான அண்டகோளம்,
சிறந்தது – சிறப்படைந்தது;
(என்றால்), யாம் என் இயம்புவது – (அவ்வன்னத் திருவுருவத்தின் பெருமையைக் குறித்து) நாம் யாதுசொல்வது! (எ – று.)

(“மன்னுமாநிலனும் மலைகளுங் கடலும் வானமுந் தானவருலகுந்,
துன்னுமாயிருளாய்த் துலங்கொளிசுருங்கித் தொல்லைநான்மறைகளும் மறையப்,
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் பிறங்கிருள் நிறங்கெடவொருநாள்,
அன்னமா யன்றங்கருமறைபயந்தா னரங்கமாநக ரமர்ந்தானே,” “முன்னுலகங்களேழுமிருள்மண்டியுண்ணமுதலோடுவீடுமறி யாது, என்னிதுவந்ததென்றன் விமையோர் திசைப்ப

வெழில்வேத மின்றி மறையப், பின்னையும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள்தீர்ந்திவ்வைய மகிழ,
அன்னமதாயிருந்தங்கறநூலுரைத்த வதுநம்மையாளுமரசே,”

“முன்னிவ்வேழுலகுணர்வின்றியிருள்மிக வும்பர்கள் தொழுதேத்த,
அன்னமாகி யன்றருமறைபயந்தவனே” என்றார் திருமங்கையாழ்வார்.)

பாலும் நீரும் கலந்தவிடத்து அவற்றைப்பகுத்து நீரையொழித்துப்பாலை யுட்கொள்ளுந் திறம், வெண்ணிறம்,
பறவைகளிற்சிறத்தல், அழகியவடிவம், நடையழகு, சேற்றில் வெறுப்பு, தாமரைமலரில் வீற்றிருத்தல்
என்னு மிவற்றையுடைய அன்னப்பறவை – ஸாராஸாரங்களைப் பகுத்துணர்ந்து அஸாரத்தைத் தள்ளி
ஸாரத்தைக் கொள்ளுமியல்பு, சுத்தஸத்வகுணபூர்த்தி, மற்றையோரினும்மேம்பாடு, விலக்ஷணமானதன்மை,
நல்நடக்கை, கலக்கத்தில் விருப்பமின்மை, பத்மாஸநத்திலிருப்பு என்னு மிவற்றையுடைய நல்லாசிரியர்க்கு ஏற்ற
உவமையாகச் சிறத்தலால், எம்பெருமான் பிரமனுக்கு வேதங்களை யுபதேசிக்கும் பரம குருவாவதற்கு
அன்ன பறவையுருவத்தை ஏற்ற வடிவமாகக் கொண்டன னென்னலாம்.

“அசுரர்களோடேகலந்து உருமாய்ந்து போன வேதத்தைப் பிரிக்கைக்கு உடலாக,
நீரையும் பாலையும் பிரிக்கவல்ல அன்னத்தின் வடிவைக் கொண்டு” என்றார் பெரியாரும்.

“அண்டம்” என்ற வடசொல்லுக்கு – உலகவுருண்டையென்றும், முட்டையென்றும் பொருள்க ளுண்டு.
பறவைகள், முட்டையினின்று பிறப்பன வாதலால், அண்டஜ மெனப்படும்.
திருமால்கொண்ட ஹம்ஸரூபம் உள்ளே வளர்வதற்கு அண்டகோளம் அண்டமாய் (முட்டையாய்)ச் சிறந்த தென்று,
அண்டமென்ற சொல்லின் நயம்பற்றிக் கற்பனைகூறினர்.
உருண்டைவடிவமான முட்டையில் அன்னப்பறவை வளர்ந்து எழுமாறுபோல,
திருமாலின் ஹம்ஸரூபம் அண்டகோளத்தில் வளர்ந்து தோன்றிற்று என ஒப்புமை யமையும்.

“யாம் என் இயம்புவது” என்றது, எம்மாற்சொல்லமுடியா தென்றபடி,
“யாம்” என்றது, கவிகட்குஉரிய இயற்கைத்தனித்தன்மைப்பன்மை;
மற்றை யோரையுங் கூட்டிய உளப்பாட்டுத்தன்மைப்பன்மையுமாம்.
முன்னைப் பெற்ற என இயையும்.
“முன்னைப் பிரமன்” என்றே எடுத்து, (மற்றைத் தேவர் முதலியோர்க்கு) முதல்வனாகிய பிரம னென்றலுமாம்.
“பெறாப் பேறு” என்றாற் போல, அருமைவிளங்க “பெறாதுபெற்ற பிரமன்” என்றார்.
இந்த அடைமொழி, இயல்பாய் மைந்தனிடத்துத் தந்தைக்குஉள்ள பேரன்பை விளக்கும்.
எல்லாப் பிராணிகளுக்கும் பரமபிதாவான எம்பெருமான்.

தனது முதற்படைப்பான பிரமனிடத்துக் கொண்ட வாத்ஸல்யத்தால், அம்மைந்தனை வாழ்விக்க வேண்டி,
தன் மேன்மையையும் சிரமத்தையும் பாராமலே, அதற்கேற்றதொரு பக்ஷிரூபத்தைக் கொண்டனனென்க.
இனி, திருமால் பிரமனைப்படைக்கவேண்டு மென்னும் பிரயத்தின பூர்வகமான செய்கை சிறிதுமில்லாதிருக்கையிலே
அப்பெருமானது திருநாபித்தாமரை மலர்ந்தமாத்திரத்திற் பிரமன் அதிலிருந்து தானே பிறந்தமை தோன்ற,
“பெறாது பெற்ற பிரமன்” என்றாருமாம்; கீழ் 19 – ஆஞ் செய்யுளை நோக்குக.

பின்னை – நப்பின்னை; ஸ்ரீகிருஷ்ணனது மனைவியரில் தலைமையுடையவள்:
கும்ப னென்னும் இடையர்தலைவனது மகள். இவளை மணஞ்செய்து கொள்ளுதற்காக, இவள்தந்தை கந்யாசுல்கமாகக்குறித்தபடி
யாவர்க்கும்அடங்காத அசுராவேசம்பெற்ற ஏழுஎருதுகளையும் கண்ணபிரான் ஏழுதிருவுருக் கொண்டு சென்று வலியடக்கித்
தழுவின னென்று நூல்கள் கூறும்; இங்ஙனம் இவள்பக்கல் பெருமான் மிக்ககாதல்கொண் டருளியமைபற்றி,
“பின்னைக்கு இனிய பெருமாள்” என்றார்;

(“பின்னைமணாளன்,”
“அம்பொனாருலகமேழுமறிய ஆய்ப்பாடிதன்னுட், கொம்பினார்பின்னை கோலங் கூடுதற் கேறுகொன்றான்,”
“பின்னைநெடும்பணைத்தோள்மகிழ்பீடுடை, முன்னையமரர்முழுமுதல் தானே,”
“பின்னைதன்காதலன்” என்றார் ஆழ்வார்களும்.
“கிருஷ்ணாவதாரத்து ப்ரதாநமஹிஷி இவளாகையாலே, நப்பின்னைப்பிராட்டியை முன்னிடுகிறார்கள்,”
“இவ்வவதாரத்துக்கு ப்ரதாநமஹிஷி இவளிறே. மேன்மைக்கு ஸ்ரீய:பதியென்னுமாபோலேயிறே,
நீர்மைக்கு இவளுக்குவல்லபனென்கிறதும்” என்ற வியாக்கியானவாக்கியங் களும் அறியத்தக்கன.)

இவள் கண்ணபிரானிடத்து மிக்ககாதல்கொண்டிருந் தமையும், “பின்னைக்கினிய பெருமாள்” என்ற தொடரில் தோன்றும்;
“நப்பின்னையாம், விரகதத்தைக்குவிடையேழ்தழுவின வேங்கடவன்,
குரகதத்தைப் பிளந்தான் தோள்களாகிய குன்றங்களே” என்பர் திருவேங்கடத் தந்தாதியிலும்.
இவள், திருமாலின் தேவியருள் நீளாதேவியின் அம்ச மெனப்படுவள்.
இனி, திருப்பாற்கடல்கடைந்தபோது அக்கடலினின்று முன்னே மூதேவி தோன்றப் பின்னே இலக்குமி தோன்றின ளாதலால்,
இலக்குமிக்கு “பின்னை” என்று ஒருபெயர் வழங்கும்; பின்பிறந்தவளென்க:
அத்திருமகளுக்கு இனியபெருமா ளென்ற பொருளில் “பின்னைக்கினிய பெருமாள்” என்றன ரென்றலு மொன்று.

ப்ரஹ்மா, ஹம்ஸம், ரூபம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. வேண்டி – விரும்பி யென்க.
இனி, அன்னத்திருவுருவத்தினுள்ளே வளர்ந்து அதற்கு ஓர் அண்டமாம் (அவ்வன்னத்திற்கு ஒருமுட்டையாம்)
என்னும்படி சிறந்தது மூதண்ட மென்று உரைப்பாரு முளர்.

————-

சூழிக் களிறு வெவ்வாய் முதலை துனித்த உக்ர
பாழித் திகிரிப் படை அரங்கேசர் படைப்ப வன்தன்
ஊழிப் பொழுது ஒரு சேல் ஆய் ஒரு செல் வுள் கரந்த
ஆழிப் பெரும் புனல் காணாது தேடுவர் அவ்விடத்தே –22–

(இ – ள்.) சூழி – தடாகத்தில் இறங்கிய,
களிறு – யானை (கஜேந்திராழ்வான்),
உய்ய – பிழைக்கும்படி,
வெவ் வாய் முதலை துணித்த – கொடிய வாயையுடைய முதலையைத் துண்டுபடுத்திய,
உக்ரம் – பயங்கரமான,
பாழி – வலிமையுள்ள,
திகிரி படை – சக்கராயுதத்தையுடைய,
அரங்க ஈசர் – ரங்கநாதர் –
படைப்பவன்தன் ஊழி பொழுது – சிருஷ்டிகர்த்தாவாகிய பிரமனது தினமான ஒருகற்பத்தின் முடிவில்,
ஒரு சேல் ஆய் – ஒப்பற்றதொரு மீன்வடிவமாகி, –
ஒரு செலு உள் கரந்த ஆழி பெரும் புனல் – (தனது) ஒருபுறமுள்ளினகத்தே யடங்குகின்ற பெரிய கடல்வெள்ளத்தில்,
காணாது – (வேதங்களையும் அவற்றைக்கவர்ந்துசென்ற சோமுகாசுரனையுங்) காணாமல்,
அ இடத்து தேடுவர் – அந்தஇடத்திலே (அவற்றைத்) தேடுபவராயினர்.

“தேவுடைய மீனமாயாமையாயேனமா யரியாய்க் குறளாய், மூவுருவி லிராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய்
முடிப்பான் கோயில்” என்றபடி முக்கியமான தசாவதாரங்களின் மகிமைகளை இதுமுதற் கூறுகின்றார்.

(“நிலையிடமெங்குமின்றிநெடுவெள்ளமும்பர்வளநாடுமூட விமையோர்,
தலையிடமற்றெமக்கொர்சரணில்லையென்னவரணாவனென்னு மருளா,
லலை கடல்நீர் குழம்பவகடாடவோடி யகல்வானுரிஞ்சமுதுகில்,
மலைகளைமீது கொண்டுவருமீனைமாலை மறவாதிறைஞ்சென்மனனே,”

“வானோரளவும் முதுமுந்நீர்வளர்ந்தகாலம் வலியுருவின்,
மீனாய்வந்துவியந்துய்யக்கொண்டதண் டாமரைக்கண்ணன்” என்பன, பெரியதிருமொழி.

“தேவர்களெல்லையளவுஞ் செல்லக்கடல்வெள்ளம் பரந்தநாள், அத்தையடையத் தன்னுடை ஒருசெலுவிலே அடக்கவல்ல
மிடுக்கையுடைய மத்ஸ்யமாய் வந்து” என்ற வியாக்யாந வாக்கியமும் நோக்கத்தக்கது.

“அருமறையா ரிருக் கெசுர் சாமத்தினோடு மதர்வணமாகியசதுர்வேதங்கள்தம்மைத்,
திருடியெடுத்துக்கொண்டேயுததி சேருந்தீயனுக்காமச்சாவதாரமாய் நீ, ஒருசெலுவிற் சமுத்திரத்தைச் சுருக்கியே
வைத்துச்சிரத்தாற்சோமுகாசுரனைக்கொன்றிட், டிருளறவேவிதிபடைக் கவவ்வேதத்தை யிரங்கி
யளித்தனை யரியே யெம்பிரானே” என்றார் பின் னோரும்.)

செலு – மீனின்உடற்புறத்தேயுள்ள முள்; செதிள் எனவும்படும்: செலு உள் – அவ்வகைமுட்களின் இடையே குழிந்துள்ள இடம்.
இனி, செலு – மீன் செட்டை யெனப்படும் மீன்சிறகு என்றுங் கொள்வர்.

“மானயோசனையள வொழிமெய்யுருவாய்ந்த, மீனமாயின னெடுங்கடற்பரவையின்வீழ்ந்து,
கானவெண்டிரைக்கருங்கடலளறெழக்கலக்கிப், “போனவாளெயிற்றசுரனைத்தட வுறும்புகுந்து” (கந்தபுராணம் – உபதேசகாண்டம்),

“பரமன், உரைசெயற் கரியபருமநீளத்தோ, டொப்பிலாவகுலியாயடைந்தான்” (மகாபாகவதம்) என்றபடி,
எம்பெருமான் எண்ணிடற்கரிய மிகப்பலயோஜனை நீளமும் அதற்கேற்ற பருமனும் வாய்ந்த பெருமீனான போது
அந்தமற்சியத்தின் ஒருசெலு வினகத்தே கடல்வெள்ளம்முழுவதும்ஒடுங்கும்படியிருந்ததென அதன்பெருமையைக் கொண்டாடுவார்

“ஒருசெலுவுட்கரந்த ஆழிப்பெரும்புனல்” என்றும், இங்ஙனம் தான் கொண்ட பெருமீன்வடிவைப்பார்க்கிலும்
கடல் மிகச்சிறிதாயிருக்கவும் அதில் வேதங்களையும் அசுரனையுங் காணாதவர்போலத் தேடினது
பாவனையாற்கொண்ட விளையாட்டே யெனக்கருதி அந்தத் திவ்வியலீலலையில் ஈடுபடுவார்
“காணாது தேடுவ ரவ்விடத்தே” என்றுங் கூறினார்.
“காணாது தேடுவர்” என்றதற்கு ஏற்ற செயப்படுபொருள் வருவித்து உரைக்கப்பட்டது.

இனி, திருமால் ஒருபெருமீன்வடிவானபோது அதனது ஒருசெலுவினகத்தே அவாந்தரப்பிரளயவெள்ளம்முழுவதும் அடங்கினதாக
அப்பெரும்புனலைக்காணாது வியந்து ஸப்தரிஷிகள் முதலியோர் அங்குத் தேடுவாராயின ரென உரைத்தலு மொன்று;

“முடங்குதெண்டிரையபௌவ முற்றுமோர்செலுவுட்சென்று, மடங்கியதுணரகில்லார் மயர்ந்தனர்
நேடியன்னோ, ரொடுங்கினரேத்தி நின்றா ருயர்வொப்பிலாதமேலோன், தடங் கொள்
சேலுருவின்மாண்பியாவரேசாற்றுநீரார்” என்ற ஸ்ரீபாகவதத்தைக் காண்க:
இவ்வுரைக்கு, ஏற்றஎழுவாய்வருவித்தல்வேண்டும். ஆய் = ஆக என எச்சத்திரிபாம்.
இனி, எழுவாய்செயப்படுபொருள்கள் வருவித்தலின்றி, அரங்கேசர் ஊழிப்பொழுதில் ஒருசேலாகித் தனது
ஒருசெலுவினகத்தே கரந்த ஆழிப்பெரும்புனலைக் காணாமல் அவ்விடத்துத்தேடுவாராயின ரென உரைத்தலும் அமையும்;
(இது, இந்நூலாசிரியரது ஆசார்யரான ஸ்ரீபராசரபட் டர் அருளிச்செய்த ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில்
“பக்ஷநிகீர்ணோத்கீர்ண மஹாப்தி ஸ்தல ஜல விஹரண ரத கதி ரசத:” என்றதை ஒருசார்உட்கொண்ட தாம்.)
இனி, ஆழிப்பெரும்புனலை ஒருசெலுவினகத்தே கரந்த (மிகப்பெரிய) ஒருசேலா யென்று அந்வயித்து உரைத்தலுமாம்.

களிறுய்யமுதலைதுணித்த வரலாறு, உயர்திணையோடு அஃறிணையோடு பேதமற அடிமைப்பட்ட உயிர்களை
அன்போடு துயர்தீர்த்துப் பாதுகாத்தருள்கின்ற எம்பெருமானது கருணைமிகுதியைக் காட்டும்.
அங்ஙனம் தனது அடிமையான பிராணியினிடத்து அருளினால் அதற்குத்துன்பஞ்செய்தபிராணியின் விஷயமாகப்
பெருமான் தனது குளிர்ந்ததிருவுள்ளத்திலே கொடிய கோபத்தைக்கொண்டருளிய மகாகுணத்தில் ஈடுபட்டு இதனை யெடுத்துக் கூறினர்.

கஜேந்திராழ்வானை முதலைவாயினின்று காத்தருளுதற்பொருட்டு அதுகூப்பிட்டபின்பு மடுவின் கரைதேடிஓடிவந்ததுபோல
வரவேண்டாமல் நம்மை ஐம்பொறிவாயினின்று உடனேபாதுகாத்தற்பொருட்டு நாமிருக்கிற இந்த நிலவுலகத்திலே
கோயில்கொண்டருளின னென்பது தோன்ற,
“களிறுய்ய வெவ்வாய்முதலைதுணித்த வுக்ரபாழித்திகிரிப்படை யரங்கேசர்” என்றார்.
“முதலையும் மூர்க்கனுங் கொண்டதுவிடா” என்றபடி வாயினாற்பிடித்தபிடிவிடாத கொடியஇயல்பினதாதலால்,
“வெவ்வாய்முதலை” எனப்பட்டது;
யானையின் காலையேயன்றி அதற்கு இறைவனான எம்பெருமானது மனத்தையும் புண்படுத்திய கொடிய வாயையுடைய தென்றவாறுமாம்:
“கொடியவாய்விலங்கு” என்றார் திருமங்கையாழ்வாரும்.
இவ்வகையான கொடியபிராணியை எளிதிற்கொல்லுதற்கேற்ற மிகக்கொடிய வலிய படைக்கல மென்பது விளங்க,
“உக்ர பாழித் திகிரிப்படை” எனப்பட்டது.
“உய்ய” என்றது, இம்மையில் உயர்வாழ்தலையேயன்றி மறுமையில் வீடுபெற்றுவாழ்தலையும் உணர்த்தும்.

சூழி – குளம், நீர்நிலை. “சூழிக் களிறு” என்பதற்கு – முகபடாத்தை யணிந்த யானை யென்றுஉரைக்கலாகாது,
காடுமலைகளில் யதேச்சையாய்த்திரிந்துகொண்டிருந்த யானை யாதலால். அன்றி, முகபடாத்தையணிதற் கேற்ற
யானை யென இயற்கையடைமொழி கொண்டதுமாம்.
இனி, தன் இனமாகிய பல பெண்யானைகளினாற் சூழப்பட்டிருந்ததான ஆண்யானை யென்றலு மொன்று.
“உக்கிர” எனத் திரியாது “உக்ர” எனவே கொண்டது, செய்யுளோசைநோக்கி. உக்ரபாழி – நிலைமொழி வடமொழி யாதலின்,
அதன் முன் வருமொழிமுதல்வலி இயல்பாயிற்று. படுக்குங்கருவி; படுத்தல் – அழித்தல்; ஐ – கருவிப்பொருள்விகுதி.
படைப்பவன் – படைத்தற்றொழிற்கடவுள். படைப்பவன்தன் ஊழிப்பொழுது – பிரமனது பகலெனப்படுகின்ற கல்பத்தின் முடிவில்
நேர்ந்த அவாந்தரப்பிரளய காலத்தில்; இதுவே நைமித்திகப்பிரளய மெனப்படுவதும்

——–

(இதுமுதல் மூன்று கவிகள் – ஸ்ரீகூர்மாவதார வைபவம்.)

பாட்டுக்கும் முத்தமிழ் வில்லிபுத்தூர் வரும் பாவை குழல்
சூட்டுக்கும் நல்லவர் தென் அரங்கேசர் தொடு கடல் வாய்
மோட்டுக் கமடத் திரு உருவாகி முது முதுகில்
கோட்டுச் சயிலம் உழுவது என்னாத் துயில் கொண்டனரே –23-

(இ – ள்.) முத் தமிழ் – (இயல் இசை நாடகம்) என மூன்று வகைப்பட்ட தமிழும் வழங்குகின்ற,
வில்லிபுத்தூர் – ஸ்ரீவில்லிபுத்தூரில்,
வரும் – (பெரியாழ்வார் திருமகளாராய்) வந்து திருவவதரித்த,
பாவை – ஆண்டாளுடைய,
பாட்டுக்கும் – பாமாலைக்கும்,
குழல் சூட்டுக்கும் – (அவள்) தன்திருக்கூந்தலிலே சூடிக் கொடுத்த பூமாலைக்கும்,
நல்லவர் – திருவுள்ளமுகந்தவராகிய,
தென் அரங்க ஈசர் – அழகிய திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கின்ற தலைவரான நம்பெருமாள், –
தொடு கடல்வாய் – கடையப்படுகின்ற திருப்பாற்கடலில்,
மோடு கமடம் திரு உரு ஆகி – உயர்ந்த சிறந்த ஆமைவடிவமாகி,
முது முதுகில் கோடு சயிலம் உழுவது என்னா – வலிய (தனது) முதுகிலே சிகரங்களையுடைய மந்தரபர்வதம் தினவுசொறிவ தென்றெண்ணி,
துயில்கொண்டனர் – யோகநித்திரை கொண்டருளினர்; (எ – று.)

பாற்கடல்கடைந்தபொழுது, மத்தாகிய மந்தரகிரி கடலினுள்ளே அழுந்திவிட, தேவர்கள்வேண்டுகோளினால் திருமால்
பெரியதோர் ஆமைவடிவ மெடுத்து அம்மலையின்கீழேசென்று அதனைத் தனது முதுகின்மீது கொண்டு தாங்கி
அம்மலை கடலில் அழுந்திவிடாமற் கடைதற்கு உபயோகமாம் படி அதற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்தன னென்பது பிரசித்தம்.
(“அந்தரத்துறையமரரு மசுரருங் கடையும், மந்தரத்தினை மறுகுமவ்வாரிதி மருவிச்,
சுந்தரப்பெருங்கமடமாய் முதுகினிற் சுமந்தான், சுந்தரத்தினிற்கவுத்துவங்கவினிய கண்ணன்” என்றது, பாகவதம்;

“மந்தரமத்தமிழ்ந்தாமற் பாற்கடற்குள் வளர்ந் தாதிகூருமமாய் மலையைத்தாங்கிச்,
சுந்தரவாசுகியை வடமாகச் சுற்றிச் சுராசுரர் நின் றமிர்தங் கடைந்த வந்நாள்” என்றார் பின்னோரும்.

அங்ஙனமிருக்கும்போது, விசைபடக்கடைகையில், பெரிய வலிய மந்தரகிரி தன்முதுகின் பரப்பெல்லாங் கொண்டு சுழன்றுவர,
அதனைத் தினவுசொறிகின்றவாறுபோலக் கொண்டு, துடைகுத்த உறங்குவார்போல, ஸ்ரீமகாகூர்மரூபியான பகவான்
இனிது துயின்றனனென, அப்பரமனது ஆற்றலையும் இளைப்பின்மையையும் எடுத்துக்காட்டினர்.

“செருமிகு வாளெயிற்ற வர வொன்று சுற்றித் திசைமண்ணும் விண்ணு முடனே,
வெருவரவெள்ளைவெள்ளமுழுதுங்குழம்பவிமையோர்கள் நின்று கடையப்,
பருவரையொன்றுநின்றுமுதுகிற்பரந்துசுழலக் கிடந்து துயிலும்,
அருவரையன்னதன்மையடலாமையான திருமால் நமக்கொரரணே” என்ற பெரியதிருமொழிப்பாசுரத்தின் கருத்தையுட்கொண்டது, இச்செய்யுள்.

“அழியும்பணிவெண்டிரைபுரட்டு மாழிவயிறுகிடங்கெழுந்து,
கிழிய நெடுமால்வரைதுளங்கிக் கீழ்வீழ்ந்திடலுந் தனிநின்று,
சுழலும்பசும் பொற்கிரிமுதுகுசொறிந்தாங்கணிதினிளநறவ,
முழுகுந்துளவோன்மோட் டாமையுருவமெடுத்துந்தாங்கினனால்” என்ற ஸ்ரீபாகவதத்தையுங் காண்க.

“இயல்புடைக்கமடம் வெரினிடைத்தினவங்கொழிந்தில ததனிலை யெளிதோ” என்றது, மகாபாகவதம்.

எப்படிப்பட்ட பெரிய பாரத்தையும் மிகஎளிதிற் பரிக்கவல்லவன் எம்பெருமா னென்பது இதிற் போதரும்.
உழுதலாவது – பூமியைக் கீறுதல்; இங்கே, இலக்கணையாய், தினவுசொறிதலைக் குறித்தது.
கலப்பை கொண்டுஉழுதலாற் பூமி வருந்தாதவாறு போல மலைதிரிதலாற் பெருமான் வருந்தாதிருந்தன னென்பதும்,
“உழுவது” என்றசொல்லினது ஆற்றலால் விளங்கும்.

ஸ்ரீவில்லிபுத்தூராண்டாள் தனதுகூந்தலிற்சூடிக்கொடுத்த பூமாலைகளையும் பாமாலைகளையும் திருமால் திருவுள்ளமுகந்து
ஏற்றுக்கொண்டதனால், “வில்லிபுத்தூர்வரும் பாவை பாட்டுக்கும் குழற்சூட்டுக்கும் நல்லவர்” என்றார்.
“அன்னவயற்புதுவையாண்டா ளரங்கற்குப், பன்னு திருப்பா வைப்பல்பதியம் இன்னிசையாற்,
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை, சூடிக்கொடுத்தாளைச் சொல்லு” என்ற பெரியாரருளிச்செயலும்,
அதன் வியாக்கியானத்தில் “பெரியபெருமாளுக்கு வாசிக காயிக ரூப மாலாப்ரதையாய்” என்றதும் காணத்தக்கன.

வில்லிபுத்தூர் – பாண்டியநாட்டுத் திவ்வியதேசங்கள் பதினெட்டில் ஒன்று. மத்திமதீபமாக, “ஸ்ரீவில்லிபுத்தூர்வரும்பாவை” என்றதை,
முன்நின்ற பாட்டுக்கு என்றதனோடுங் கூட்டுக. இனி, பாட்டுக்கு – (அடியார்கள் பாடும்) பாடல்களுக்கு எனப் பொதுப்படக் கொள்ளுதலுமாம்.
பாடுவது, பாட்டு, சூடுதற்குரியது, சூட்டு. அகத்தியமுனிவரும் பாண்டியராசர்களும் சங்கப் புலவர்களும்
தமிழ்ப்பாஷையைத்தழைத்தோங்கச்செய்ததேசமான பாண்டி வளநாட்டிலுள்ள ஊராதலாலும்,
சங்கத்தமிழ்மாலைமுப்பதுந்தப்பாமே சொன்ன ஆண்டாளுக்கும் தமிழின்னிசைமாலைக ளுரைத்த பெரியாழ்வார்க்கும்
திருவவதாரஸ்தல மாதலாலும், “முத்தமிழ் வில்லிபுத்தூர்” எனப்பட்டது;
“செந்தமிழ்த்தென்புதுவை” என்றார் பெரியாழ்வாரும். முத்தமிழ்ப் பாட்டு என்று கூட்டவுமாம்.
பாவை – சித்திரப்பதுமைே்பா லழகியவள்; கண் மணிப்பாவைே்பா லருமையானவள்; உவமையாகுபெயர்.
நல்லவர் – இனியவர். தொடுகடல் – ஆழ்ந்த கடல் எனினுமாம்.

“மோட்டுக் கமடம்” என்றது, முதுகின் உயர்வுபற்றி. கமடம் – வடசொல். கமடத்திருவுரு = ஸ்ரீகூர்ம ரூபம்.
சயிலம் – ஸைல மென்ற வடசொல்லின் விகாரம்; கல்மயமான தென்பது காரணப்பொருள். என்னா – உடன்பாட்டெச்சம்.
துயில் – முதனிலைத்தொழிற்பெயர். முது முதுகு – முதிர்ந்த முதுகு.
“சயிலம் உழுவது என்னா” என்பதற்கு – மலை தன்முதுகின்மேல் ஊர்வ தென்றேனும் எண்ணாமல் என்று உரைத்தலுமாம்;
இப்பொருளில், “என்னா” என்பது – ஈறுகெட்டஎதிர்மறைவினையெச்சமாம்.

எம்பெருமானது பேரருளுடைமையும், வரம்பிலாற்றலுடைமையும் இதிற் கூறப்பட்டன.

———–

திரிக்கின்ற பொற் குன்று அழுந்தாமல் ஆமைத் திரு உரு ஆய்
பரிக்கின்றதில் பெரும் பாரம் உண்டே பண்டு நான் மறை நூல்
விரிக்கின்ற உந்தி அரங்கேசர் தம் திருமேனியின் மேல்
தரிக்கின்றது மகரக் கடல் ஆடைத் தரா தலமே –24-

(இ – ள்.) மகரம் கடல் ஆடை தராதலமே – சுறாமீன்களையுடைய கடலை (உடுக்கும்) ஆடையாகக் கொண்ட (கடலாற் சூழப்பட்டதான) இந்தப் பூலோகம்முழுவதுமே,
பண்டு – பழமையாய் (அநாதிகாலமாய்),
நால்மறை நூல் விரிக்கின்ற உந்தி அரங்கேசர் – நான்குவகைப்பட்ட வேதங்களாலும் சாஸ்திரங்களாலும் விரிவாகப்புகழ்ந்துகூறப்படுகின்ற திருநாபியையுடைய திருவரங்கநாதர், தம் திருமேனியின்மேல் தரிக்கின்றது – (ஆதிகூர்மரூபியான) தமது திருமேனியின்மீது கொண்டு தாங்கப்பெறுகின்றது;
(என்றால், இப்பொழுது),
திரிக்கின்ற பொற் குன்று அழுந்தாமல் ஆமை திருஉரு ஆய் பரிக்கின்றதில் – கடைந்துக கடையறப்படுகின்ற பொன்மயமான மந்தரமலை (கடலில்) அழுந்திவிடாதபூமியினை கூர்மரூபியாய் (அதனை)ச் சுமப்பதில்,
பெரும் பாரம் உண்டே – அதிகபாரம் உண்டோ ? (இல்லையென்றபடி).

கீழேழுலகங்களுக்கும் கீழே அஷ்டதிக்கஜங்களும் அஷ்டமகாநாகங்களும் நாகராஜனான ஆதிசேஷனும் இருந்து உலகங்களைத் தாங்க,
அவ்விடத்திற்குக்கீழே திருமால் ஆதிகூர்மரூபியாய் எழுந்தருளியிருந்து அவையனைத்தையும் எளிதில் ஒருமலரைப்போலவும்
அணுவைப்போலவும் தன்முதுகின் மீது கொண்டு தாங்குகின்றன னென்பது, நூற்கொள்கை;
மேல் 12 – ஆஞ் செய்யுளில் “தொல்லைக்கமடத்தல நவகண்டந் தொடுகடல்நீர்” என்பதுங் காண்க.
அங்ஙனம்ஈரேழுலகங்களையும் அவற்றைத்தாங்கும் பலவற்றையும் ஆதிகூர்மரூபியாய் எப்பொழுதும் எளிதில்தாங்குகின்ற
ஸ்ரீமந்நாராயணனது வரம்பிலாற்றலுக்கு, அப்பதினான்குஉலகங்களுள்ஒன்றான நிலவுலகத்திலே யுள்ள பலமலைகளில் ஒன்றாகிய
மந்தரகிரி யொன்றைக் கடலில் அழுந்தாதபடி கூர்மரூபங்கொண்டு சிறிதுபொழுது தாங்குதல் ஒருபொருளாமோ? என்பது கருத்து.
அதனைப்பரித்தவனுக்கு இது எவ்வளவு? எனத் தொடர்நிலைச் செய்யுட் பொருட்பேறணி தொனிக்கின்றது.

பொன் குன்று – பொன்னையுடைய மலை; அழகிய மலை யெனினுமாம். பாரம், மகரம், தராதலம் – வடசொற்கள்.
பண்டு தரிக்கின்றது என இயையும். உண்டே, ஏகாரம் – எதிர்மறை. மறை நூல் – உம்மைத் தொகை;
மறையாகிய நூல் என இருபெயரொட்டுப்பண்புத்தொகையுமாம்.
“கடல் வாழ் சுறவு” என்றபடி மகரமீன் கடலிலேயே வாழு மியல்பின தாதலால், “மகரக்கடல்” என்றார்.
பூமியைச் சூழ்ந்துள்ளதான கடலை, பூமியாகிய பெண் உடுக்கும் ஆடையாக வருணித்தல், கவிசமயம்.

———–

ஓர் உரு வெற்பைத் தரித்தது -தானவர் உம்பர் உள்ளாய்
ஈர் உரு நின்று கடைந்தது வேலை -இதனுடை ஓர்
பேர் உரு இன் அமுதோடு பிறந்தது பெண்மை கொண்டு ஓர்
நார் உரு நின்றது அரங்கா இது என்ன நல் தவமே –25-

(இ – ள்.) அரங்கா – ரங்கநாதனே! (திருப்பாற்கடல்கடைகின்ற காலத்தில்),
ஓர் உரு – (உனது) வடிவமொன்று,
வெற்பை தரித்தது – மந்தரமலையைத் தாங்கியது;
ஈர் உரு – (உனது) இரண்டு வடிவங்கள்,
தானவர் உம்பர் உள் ஆய் நின்று – அசுரர்களுள்ளும் தேவர்களுள்ளும் பொருந்தி நின்று,
கடைந்தது – (அக்கடலைக்) கடைந்தன;
ஓர் பேர் உரு – (உனது) மற்றொரு பெரிய வடிவம்,
வேலையிதன் இடை – அக்கடலின்நடுவில்,
இன் அமுதோடே – இனிய அமிருதத்துடனே,
பிறந்தது – தோன்றியது;
ஓர் நார் உரு – அன்புசெய்யத்தக்க (உனது) மற்றொருவடிவம்,
பெண்மை கொண்டு நின்றது – பெண் தன்மையைக்கொண்டு நின்றது;
இதுஎன்ன நல்தவம் – இப்படி நீ ஒருகாலத்திற் பலவடிவங்களைக்கொண்டு அநுக்கிரகித்தது என்ன நல்ல தவத்தின் பயனோ! (எ – று.)

பாற்கடல்கடைகின்றபோது ஸ்ரீமந்நாராயணன் அக்கடலினிடையே மகாகூர்மரூபத்தைத் தரித்து
மந்தரபர்வதத்திற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்ததனால் “ஓருரு வெற்பைத்தரித்தது” என்றும்,
அப்பொழுது வாசுகியின்வாலைப் பிடித்துக்கொண்ட தேவர்களும் தலையைப் பிடித்துக்கொண்ட அசுரர்களும் ஆகிய
இருதிறத்தாரும் அதனை வலியப்பிடித்து இழுத்துக் கடையவல்ல வலிமையற்றவராய் நிற்க அதுநோக்கி
அத்திருமால் தான்ஒரு திருமேனியைத் தரித்துத் தேவர்கள்பக்கத்திலேயும்
வேறொருதிருமேனி யைத்தரித்து அசுரர்கள்பக்கத்திலேயும் நின்று வாசுகியின் வாலையும் தலையையும் பிடித்து
வலமும் இடமுமாக இழுத்துக் கடைந்ததனால், ‘தானவரும்பருள்ளாய் ஈருரு நின்றுகடைந்தது” என்றும்,
அப்பால் அந்தஸ்ரீமகாவிஷ்ணு தந்வந்திரியென்னுந் தேவரூபத்தைத் தரித்து அமிருதபூர்ணமான கமண்டலத்தைக்
கையிலெடுத்துக்கொண்டு அந்த க்ஷீரசமுத்திரத்திலிருந்து உதயமானதனால் “வேலையிதனிடை ஓர் பேருரு இன்னமுதோடே பிறந்தது” என்றும்,
அப்பொழுது அசுரர்கள் தந்வந்திரியின்கையிலிருந்த அமிருத கலசத்தைப் பலாத்காரமாகப் பிடுங்கிக்கொள்ள
அந்த எம்பெருமான் ஜகந் மோஹநகரமான ஒருஸ்திரீரூபத்தைத் தரித்து அசுரர்களை வஞ்சித்து அமுதத்தைக்
கைக்கொண்டு அமரர்கட்குப் பிரசாதித்ததனால் “பெண்மை கொண்டு ஓர்நாருரு நின்றது” என்றுங் கூறினர்.

“அரங்கா இதுஎன்ன நல்தவம்” என்றது, இப்படி நீ ஏககாலத்தில் அநேகரூபங்களைக்கொண்டுசேவை
சாதித்துப் பலவாறுஉதவும்படி அத்தேவர்கள் என்னநல்தவஞ்செய்திருந் தார்களோ வென வியந்தவாறாம்.
இவ்வரலாற்றால், தன்சிரமம் சிறிதும்பா ராட்டாமலே சமயோசிதமானரூபங்களைக்கொண்டு
தன்னைச்சரணமடைந்த வரைப் பரிபாலிக்கும் பகவானது கருணை வெளியாம்.

தாநவரென்ற வடசொல் – (காசியபமுனிவரது மனைவியருள்) தநுவென்பவளது சந்ததியா ரென்று பொருள்படும்;
தத்திதாந்தநாமம். உம்பர் என்ற மேலிடத்தின்பெயர் – இடவாகுபெயராய், மேலுலகத்தில் வசிக்கின்றவர்களான தேவர்களைக் குறிக்கும்.
“ஈருரு கடைந்தது” என்றது, பன்மையொ ருமை மயக்கம்; “இரண்டுகண்ணுஞ் சிவந்தது” என்றாற்போல; (தனித்தனி) கடைந்த தென்க.
“வேலையிதனிடை” என்றதில் “இது” என்றது – பகுதிப் பொருள்விகுதியாய் நின்றது; அன் – சாரியை.
இனி, வேலைகடைந்தது என்று இயைத்துவிட்டு, இதனிடை என்று எடுத்தலுமாம், நார் – அன்பு.

—————

இது முதல் 3 பாசுரங்கள் ஸ்ரீ வராக அவதார வைபவம் –

ஆருக்கு இவரை அளவிடல் ஆம் -தென் அரங்கர் இந்தப்
பாருக்கு அரந்தை தவிர்ப்பதற்காக பழிப்பு இல் பெரும்
சீர் உற்ற செங்கண் கரும்பன்றி ஆகி திருக் குலம்பின்
மேரு கண கணமா தலை நாளில் வினோதிப்பரே –26-

(இ – ள்.) தென் அரங்கர் – அழகிய திருவரங்கத்தில் எழுந்தருளியிருப் பவரான எம்பெருமான், –
தலைநாளில் – முன்னொருகாலத்திலே,
இந்த பாருக்கு அரந்தை தவிர்ப்பதற்குஆக – இந்தப்பூமிக்குஉண்டாகிய துன்பத்தை யொழிப்பதற்காக,
பழிப்பு இல்பெருஞ் சீர் உற்ற செம் கண் கரும் பன்றி ஆகி – குற்றமில்லாத மிக்க சிறப்புப் பொருந்தியதும் சிவந்த கண்களையுடையதும் கருநிறமுள்ளது மான வராகாவதாரமாய், திரு குளம்பில் மேரு கணகணம்ஆ – தமது திருவடிக்குளம்பின்கீழே மகாமேருகிரி மிகவுஞ் சிறியதொருபொருளாகும்படி,
வினோதிப்பர் – விளையாடியருளினர்;
(ஆதலால்), இவரை அளவுஇடல் ஆருக்கு ஆம் – இவருடைய பெருமையை அளவிட்டுச்சொல்லுதல் யார்க்குக்கூடும்?
(இவர் பெருமையை உள்ளபடி மதித்துச் சொல்லுதல் எத்துணை வல்லவர்க்கும் அரிய தென்றபடி); (எ – று.)

பூமியைப் பாயாகச்சுருட்டி யெடுத்துப்போன இரணியாக்கனைக் கொன்று பூமியைக் கொணர்ந்து பழையபடிவிரிப்பதற்காகவும்,
பூமிக்குநேர்ந்த பிரளயாபத்தைப் போக்கியருளுதற்காகவும் எடுத்த திருவவதார மாதலால்,
“பாருக்கு அரந்தை தவிர்ப்பதற்காக” என்றார்.
இழிந்தபிறப்பென்னுங் குற்றம் இந்தத் திவ்வியவராகமூர்த்திக்கு இல்லை யென்பது விளங்க, “பழிப்பில் பெருஞ்சீருற்ற” எனப்பட்டது.
குழந்தை கிணற்றில் விழுந்தால் உடனே அதிற்குதித்துக் குழந்தையையெடுக்குந் தாய்போலப் பூமி கடலினுட்புக்க வளவிலே
நீருக்குஞ்சேற்றுக்கும்பின்வாங்காத வராகரூபமாய்க் கடலினுட் புக்குப் பூமியை மேலேயெடுத்து நிறுத்திய
மகோபகாரகனே பிறவிப்பெ ருங்கடலினின்று உயிர்களை ஈடேற்றுதற்குத் தஞ்சமாகத்தக்கவ னென்றது இங்குத் தொனிக்கும்;

“ஏனத்துருவா யுலகிடந்த வூழியான் பாதம் மருவாதார்க் குண்டாமோ வான்”,
“வராகத், தணியுருவன் பாதம் பணியு மவர் கண்டீர், மணியுருவங் காண்பார் மகிழ்ந்து,”
“எறிதிரைவையமுற்றும், எனத்துருவாயிடந்தபிரா னிருங்கற்பகஞ்சேர், வானத்தவர்க்கு மல்லாதவர் க்கு
மற்றெல்லாயவர்க்கும், ஞானப்பிரானை யல்லா லில்லை நான்கண்ட நல்லதுவே” என்றார் ஆழ்வார்களும்.
கொடிய அசுரன்மீது கோபத்தாற் கண்கள்சிவந்தன வென்க. புண்டரீகாக்ஷனான திருமாலின் அவதார மாதலால்,
செந்தாமரைமலர்போன்ற கண்க ளென்னவுமாம்.
“மலர்ந்தசெந்தா மரைமலரை யொத்த திருக்கண்களுடையவனும், கருநெய்தற்பூவையொத்து விளங்குந்
திருமேனியுடையவனுமான மகாவராகரூபமுடைய ஸ்ரீமந் நாராயணன் கோட்டுநுனியாலே பூமியைஉயரவெடுத்து
மகாநீலமலைபோலப் பாதாளத்தினின்றும் எழுந்தருளினான்” என்றது, விஷ்ணுபுராணம்.

“நீலவரை யிரண்டுபிறைகவ்வி நிமிர்ந்ததொப்பக், கோலவராகமொன்றாய் நிலங்கோட்டிடைக்கொண்ட வெந்தாய்” என்று
ஆழ்வார்அருளிச்செய்த படி, நீலவராக மாதலால், “கரும்பன்றி” எனப்பட்டது.
சிவ புராணங்களிற் கூறியபடி சுவேதவராகத்தைக் குறிப்பதாயின், கருமை – பெருமை யென் னலாம். குளம்பு – குரம்.
“திருக்குளம்பில் மேரு கணகணம்ஆ” என்பதற்கு – காற்குளம்பின்கீழே மேருகிரி
(அகப்பட்டுச் சிலம்பென்னுங் காலணியினுள்ளே யிடப்பட்ட சிறிய பருக்கைக்கற்கள் போலக்)
கணகணவென்று ஒலிக்கும்படி யென்றும் உரைக்கலாம்; கணகணத்தல் – ஈரடுக்கு ஒலிக்குறிப்பு; சப்தாநுகரணம்.
“சூரமத்யகதோ யஸ்ய – மேரு: கணகணாயதே,”
“சிலம்பி னிடைச் சிறுபரல்போற் பெரியமேரு திருக்குளம்பிற் கணகணப்பத் திருவாகாரங், குலுங்க
நிலமடந்தைதனை யிடந்து புல்கிக் கோட்டிடைவைத்தரு ளிய வென்கோமான் கண்டீர்,”
“தீதறுதிங்கள் பொங்குசுட ரும்ப ரும்ப ருலகேழினோடு முடனே, மாதிர மண்சுமந்த வடகுன்று நின்ற மலையாறு மேழுகடலும்,
பரதமர்சூழ்குளம்பி னகமண்டலத்தி னொருபா லொடுங்க வளர்சே, ராதிமுனேனமாகி யரணாய மூர்த்தியது நம்மையாளுமரசே” என்பன காண்க.

ஆருக்கு ஆம் எனஇயையும். ஆருக்கு அளவிடல் எனஇயைத்து, இவரை(த் திருவுருவத்தின்பெருமையில்)
யார்க்கு ஒப்புச்சொல்லலாகு மென்னவுமாம். பார் – பார்க்கப்படுவது என்றாவது பருமையுடையதென்றாவது பொருள்படும் காரணக்குறி.
“செங்கட்கரும்பன்றி” என்றவிடத்துத் தொடைமுரண் காண்க. “தலைநாளில் வினோதிப்பர்” என்றது, இயல்பினால் வந்த காலவழுவமைதி;
“இறப்பே யெதிர்வே யாயிருகாலமுஞ், சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி” என்ற தொல்காப்பியச்சூத்திரத்தின் உரையில்
“இவர் பண்டு இப்பொழிலிடத்து விளையாடுவர்” என்பது உதாரணங் காட்டப்பட்டுள்ளது.

——–

மருமலர்க் கோயில் மடமான் விரும்பும் மதில் அரங்கர்
பெருமையை பேசுவது எப்படி நாம் பிறைவாள் எயிற்றுக்
கரு முகில் கோலப் பெரும் பன்றி ஆய களேபரத்தின்
ஒரு மயிர்க்காலடி யூடே கடல் புக்கு ஒளிந்தனவே –27-

(இ – ள்.) பிறை – பிறைச்சந்திரன்போன்ற,
வாள் எயிறு – ஒளியுள்ள பற்களையும்,
கரு முகில் – காளமேகம்போன்ற (கருநிறமுள்ள),
கோலம் – திருமேனியையு முடைய,
பெரும் பன்றி ஆய – மகாவராகமாகிய,
களேபர த்தின் – திருமேனியினது,
ஒரு மயிர்க்கால் அடிஊடே – ஒருமயிர்க்காலினது அடியிடத்திலேயே,
கடல் புக்கு ஒளித்தன – (ஏழு) கடல்களும் பிரவேசித்து மறைந்தன; (என்றால்), –
மரு மலர் – வாசனையுடைய செந்தாமரைமலரை,
கோயில் – இருப்பிடமாகவுடைய,
மட மான் – மடப்பத்தையுடைய மான் போன்றவளாகிய திருமகள்,
விரும்பும் – விரும்பப்பெற்ற,
மதில் அரங்கர் – மதில்கள்சூழ்ந்த திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவரான எம்பெருமானு டைய,
பெருமையை – மகிமையை,
நாம் பேசுவது எப்படி – நாம் புகழ்ந்து சொல்வது எவ்வாறு? (எ – று.)

மகாவராகமூர்த்தியின் பெருமை நம்மால் அளவிட்டுச் சொல்லுதற்கரிது என்பதாம்.
பிறை – வளைந்த வடிவிலும், வெண்மையான ஒளியிலும் வக்கிர தந்தத்திற்கு உவமை;
“நீலவரையிரண்டுபிறைகவ்வி நிமிர்ந்ததொப்பக், கோல வராகமொன்றாய்” என்றது காண்க.
வாள் எயிறு – வாள்போலக் கூரிதாய் விளங்கும் பல் லெனினுமாம். களேபரம் – வடசொல்.
மயிர்க்கால் – ரோமத்வாரம், ரோமகூபம், மடமை – இளமையும், பேதைமையுமாம். மான் – உவமையாகுபெயர்.
மருண்டநோக்கில் மகளிர்க்கு மான் உவமை கூறப்படும். மான்விரும்பும் அரங்கர் எனஇயையும்:
திருமகளால் விரும்பப்படும் அரங்கர்; திருமகளை விரும்பும் அரங்கர் எனினுமாம்.
எப்படி – வினா, எதிர்மறைகுறித்தது; முன்செய்யுளிலும், பின்செய்யுள்களிரண்டிலுங்காண்க;
“செம்பொன் மதி லேழுடுத்த திருவரங்கப் பெருங்கோயில்” என்கிறபடி ஸப்தப்ரகாரங்கள்சூழ்ந்த தென்பது தோன்ற,
மதிலரங்க மெனப்பட்டது. அடியூடே, ஏ – இழிவுசிறப்பு.
கடல் – பால்பகா அஃறிணைப்பெயராய் இங்குப்பன்மைகுறித்தலால், “ஒளித்தன” என்னும் பன்மைமுற்றைக் கொண்டது.

————

நிறக்கும் செழும் சுடர்க் கோடும் இப்பாரும் நிசா முகத்துச்
சிறக்கும் பிறையும் களங்கமும் போலும் எனில் சிறு கண்
மறக் குஞ்சரம் செற்ற மாயோன் அரங்கன் வராகம் அது ஆயப்
பிறக்கும் பிறப்பின் பெருமை எவ்வாறு இனிப் பேசுவதே –28-

(இ – ள்.) நிறக்கும் – நிறங்கொண்ட,
செழுஞ் சுடர் – மிக்க ஒளியையுடைய,
கோடும் – (ஸ்ரீவராகமூர்த்தியினது) வக்கிரதந்தமும்,
இ பாரும் – (அதனாற் குத்தியெடுக்கப்பட்ட) இந்தப்பூமியும், (முறையே),
நிசாமுகத்து சிறக்கும் பிறையும் – இராப்பொழுதின்தொடக்கமாகிய மாலைப்பொழுதிலே சிறப்பாய் விளங்குகிற பிறைச்சந்திரனையும்,
களங்கமும் – (அதனிடத்துள்ள) மறுவையும்,
போலும் – ஒக்கும்:
எனின் – என்றால், –
சிறு கண் – சிறிய கண்களையும்,
மறம் – வலிமையையுமுடைய,
குஞ்சரம் – (குவலயாபீடமென்னும்) யானையை,
செற்ற – கொன்ற,
மாயோன் – கண்ணபிரானாகிய,
அரங்கன் – ரங்கநாதன்,
வராகம்அது ஆய் பிறக்கும் – பன்றிவடிவமாகத் தோன்றிய,
பிறப்பின் – திருவவதாரத்தின்,
பெருமை – பெருமையை,
இனி பேசுவது எ ஆறு – இனி (நாம்) சொல்லுவது எப்படி? (இயலா தென்றபடி); (எ – று.)

இந்நூலாசிரியர்தம் ஆசாரியரான பராசரபட்டரது திருத்தந்தையாராகிய ஸ்ரீகூரத்தாழ்வான் அருளிச்செய்த ஸுந்தரபாஹுஸ்தவத்தில்
“புராவராஹஸ்ய தவேயமுர்வரா தம்ஷ்ட்ராஹ்வயேந்தோ: கில லக்ஷ்ம லக்ஷிதா” என்றதை அடியொற்றியது இச்செய்யுளென்னலாம்;

“கிளரகன்புனலுணின்றரி யொர்கேழலாய், இளையெனுந் திருவினை யெய்தினானரோ,
உளைவரும் பெருமையோரெயிற்றினுட்புரை, வளரிளம்பிறையிடை மறுவிற் றோன்றவே” என்ற கம்பராமாயணமுங் காண்க.
வக்கிர தந்தத்தாற் குத்தியெடுக் கப்பட்டதான பெரிய பூமி அதிலே பிறையினிடத்துக்களங்கம்போல மிகச் சிறிதாய்க் காணப்பட்ட தென,
அந்தமகாவராகரூபத்தின் பருமையை விளக்கியவாறாம்;

“பன்றியாய்ப் படியெடுத்த பாழியா யென்ப ரது, வென்றி யாருனதெயிற்றின் மென்றுகள் போன் றிருந்ததால்”
என்பர் திருவரங்கக் கலம்பகத்தில்:
“ஏனமொன்றாய் மண்துகளாடி” என்றது, திருவிருத்தம்;
“மஹாவராஹத்தினுடைய திருவெயிற்றுக்கு, ப்ரளயார்ணவகதையான பூமி, ஒருகஸ்தூரிபிந்துவாலே
அலங்காரமிட்டாற்போலே யிருக்கை” என்றது, அதன் வியாக்கியானம்.

“சுறவமெறிகடல்வலயமுழுவது மோர்நுண்டுகளிற் றுலங்குகோட்டி, னுறைவதனைத் தனிநோக்கி” என்ற கூர்மபுராணத்தையும்,
“கருமையிற் றவழக் கலையினிற்றெறிசேதகமெனக் காசினி கோட்டின்,
மருவ வாண்டிருணியாகியபரம னெழுந்து தான் வருகின்றவெல்லை” என்ற மகாபாகவதத்தையும்,

“செய்யதாமரைநான்முகன்செய்தருள், வையம் யர்வு மருப்பிற் றுகளென, வெய்துகொண்டு விரிக்கு மொராயிரம்,
பையரா முடியுச்சி பதித்ததால்” என்ற கந்தபுராணத்து உபதேசகாண்டத்தையுங் காண்க.
“கோடும் பாரும், பிறையுங் களங்கமும் போலும்” என்றது, உவமையணி.
கோடு பிறையையும், பார் களங்கத்தையும் போலும் என முறையே சென்று இயைதலால் முறைநிரனிறைப்பொருள்கோள்;
நிரனிறையணி யெனவும்படும்: க்ரமாலங்கார மென்பர் வடநூலார்.

நிஸாமுகம், களங்கம், குஞ்ஜரம், வராஹம் – வடசொற்கள். கண்சிறுத் திருத்தல், யானைக்கு உத்தமவிலக்கணம்;
“தீயுமிழ் சிறுகணூஞ் செம்புகரு முடைத்தாய்” என்ற அரசயானையிலக்கணத்தைக் காண்க. மறம் – கோபமும், கொலையுமாம்.
குஞ்சரம் என்பது – காட்டுப்புதர்களிற் சஞ்சரிப்ப தென்றும், துதிக்கையையுடையதென்றும் காரணப்பொருள்படும்;
குஞ்சம் – புதரும், துதிக்கையும். மாயோன் – மாயையையுடையவன்; மாயையாவது – செய்தற்கு அரியன செய்யுந்திறம்:
பிரபஞ்சகாரணமான மூலப்பிரகிருதியுமாம்; ஆச்சரியகரமான குணங்களுஞ் செயல்களு மென்னலுமாம்.
“வராகமது” என்றதில், “அது” என்பது – பகுதிப்பொருள்விகுதி.

—————

இது முதல் நான்கு பாசுரங்கள் ஸ்ரீ நரசிம்மாவதார வைபவம் –

ஆடும் அரவில் துயில் அரங்கேசன் அரு மகற்கா
நீரும் தறியில் உதித்திலனேல் நிகிலப் பொருள்கள்
ஊடும் புறத்தினும் உண்மை எவ்வாறு இவ்வுலகு அறியும்
ஈடும் எடுப்பும் இலா ஒரு தெய்வம் இவன் எனவே –29-

(இ – ள்.) ஆடும் – படமெடுத்து ஆடுகின்ற,
அரவில் – ஆதிசேஷனிடத் தில்,
துயில் – யோகநித்திரைசெய்தருள்கின்ற,
அரங்கஈசன் – ரங்கநாதன்,
அரு மகற்கு ஆ – (பெறுதற்கு) அரிய மகனாகிய பிரகலாதனுக்காக,
நீடும் தறியில் உதித்திலன் ஏல் – நீண்ட தூணினின்று (நரசிங்காவதாரமாய்த்) தோன்றியிலனானால், –
ஈடும் எடுப்பும் இல்லா ஒரு தெய்வம் இவன் என – (தனக்கு) ஒப்பானபொருளும் (தன்னிலும்) மேம்பட்டபொருளு மில்லாத ஒன்றான கடவு ளிவனே யென்று (எல்லாரும்) நிச்சயிக்கும்படி,
நிகிலம் பொருள்கள் ஊடும் புறத்தினும் உண்மை – எல்லாவஸ்துக்களினுடைய உள் ளிலும் வெளியிலும் (அத்திருமால்) உளனாந்தன்மையை,
இ உலகு எ ஆறு அறியும் – இந்தஉலகம் எப்படி அறியும்? (அறியா தென்றபடி); (எ – று.)

(“அளந்திட்ட துணை யவன்தட்ட வாங்கே, வளர்ந்திட்ட வாளுகிர்ச் சிங்க வுருவாய்,
உளந்தொட் டிரணிய னொண்மார்பகலம், பிளந்திட்ட கைகள்,”
“எங்கு முளன் கண்ணனென்ற மகனைக் காய்ந், திங்கில்லையா லென்றிரணியன் தூண்புடைப்ப,
அங்கப்பொழுதே யவன் வீயத் தோன்றிய வென், சிங்கப்பிரான் பெருமை யாராயுஞ் சீரமைத்தே” என்றார் ஆழ்வார்களும்.)

வேறேயொரு தூணிலிருந்து நரசிங்கமூர்த்தி தோன்றினால் “முன்னமே ஒரு நரசிங்கத்தை உள்ளேவைத்து நாட்டிய தூண் அது”
என்று சங்கிக்கக் கூடுமாதலால் அதற்கு இடமில்லாதபடி அவ்விரணியன்தானே தனது உயரம் பருமனுக்குப் பொருந்தப் பார்த்து
அளந்து நாட்டின அவன் வாயில் தூணிலிருந்தே திருமால் நரசிங்கமாய்த் தோன்றின னென்பதும்,
வேறுயா ரேனும் கையால்தட்ட அத்தட்டியஇடத்திலிருந்து தோன்றினால்
“அவர் தம்கையில் நரசிங்கத்தை அடக்கிக் கொண்டுவந்து தூணிலே பாய்ச்சினர்” என்று சொல்லக்கூடு மாதலால்
அதற்குஇடமில்லாதபடி அவ்விரணியன் தானே தன்கையால் தட்டியவளவில் திருமால் தோன்றின னென்பதும்,
அவன் ஓரிடத்தில்தட்ட மற்றோரிடத்திலிருந்து நரசிங்கம் தோன்றினால் “எங்கும்உளன்” என்று பிரகலாதன் செய்த பிரதிஜ்ஞை தவறி
“நீ சொல்லுகிறவன் இங்கு இல்லை” என்று இரணியன் செய்த பிரதிஞ்ஞை நிலைநிற்கு மாதலால் அதற்கு இடமில்லாதபடி
அவன் தட்டின இடத்திலிருந்தே திருமால்தோன்றி னனென்பதும்,
அவன் தட்டினபின்பு சிறிது நேரங்கழித்து நரசிங்கம் தோன்றினால் “நான் தட்டினபொழுது திருமால் அங்கு இல்லை” என்று
அவன் சொல்லித் திருமால் எங்கும் எப்பொழுதும் எல்லாப்பொருள்களிலும் உள்ளும் புறமும் வியாபித்திருக்கின்ற உண்மை
நிலையை மறுக்கக்கூடு மாதலால் அதற்குமிட மில்லாதபடி கர்ப்பம் கருமுதிர்தல் பிரஸவம் முதலியனவும்
குழந்தையாய்ப் பிறத்தல் பிறகு நாளடைவில்வளர்தல் என்பனவும் இல்லாமல் அவ்வெதிரியினும் பருத்து வளர்ந்த
வடிவையுடையவனாய் அப்பொழுதே தோன்றின னென்பதும், அங்ஙனம் தோன்றியவிடத்தும் இரணியன் வெல்லவும்
நரசிங்கமூர்த்திதோற்கவுமானால் “எங்கும்உளன்” என்ற உண்மை நிலைத்தாலும் பரத்வம் ஸித்தியாமற்போய்விடுதல்பற்றி
அதனினும் தோன்றாதிருத்தலே நலமாதலால் அங்ஙனமாகாதபடி அக்கொடியவனைத் தவறாதுஅழித்தன னென்பதும்,
தேவர் மனிதர் விலங்கு தாவரம் என்னும் நால்வகைப் பிறப்புக்களி லுள்ளவற்றில் ஒவ்வொன்றினாலும்
தனித்தனி சாகாதபடியும் பிரமசிருஷ்டிக்குஉட்பட்ட எந்தப்பிராணியினாலும் சாகாதபடியும் அவன் பிரமருத்திராதிகளிடத்துப் பெற்ற
பெருவரம் பழுதுபடாதிருத்தல் வேண்டி நரங்கலந்த சிங்கமாய்த் தன்னைத்தானே தோற்றுவித்துக்கொண்டு தோன்றின னென்பதும்,
அஸ்திரசஸ்திரங்களில்ஒன்றினாலும் சாகாதபடியும் ஈர முள்ளதனாலும் ஈரமில்லதனாலும் இறவாதபடியும் பெற்ற வரம்
வீண்போகாதவாறு நகங்களினாற்கீண்டு கொன்றனனென்பதும், பகலிலும்இரவிலும் சாகாதபடி பெற்ற வரம் பொய்படாதவாறு
அப்பகலிரவுகளின்சந்தியாகிய மாலைப்பொழுதிற் கொன்றனனென்பதும், பூமியிலும் வானத்திலும்சாகாத படி பெற்ற வரத்தை
ஒதுக்குமாறு தன்மடிமீதுவைத்துக் கொன்றனனென்பதும், வீட்டின் அகத்திலும் புறத்திலும் இறவாதபடி பெற்ற வரத்திற்கு விரோதமின்றி வாயிற்படியின்மீதுவைத்துக்கொண்டுகொன்றன னென்பதும் முதலியன – அருமையாகக் கருதத்தக்க விஷயங்கள்.

“சுர ரசுரர் முனிவர் நரர் கையிற் பாரிற் சுடர்வானிற் பக லிரவி லுள் புறம்பிற், பெரும் படையிற் றான்
சாகாவிரண்யன்றனைப் பிரகலாதன் தர்க்கித்துண்டென்ற தூணில்; நரகரியாய்ப்பொழுதுபுகுநேரந்தன்னில் நாடியுதித்
துயர்வாசற்படிமீதேறி, இரணியனைத்தொடைமிசைவைத் துகிரினாலே யிருபிளவாக்கினை யரியே யெம்பிரானே” என்பர் பின்னோரும்.

ஸர்வவ்யாபியான பரம்பொருள் ஸ்ரீமந்நாராயணனே யென்ற உண்மை இத்திருவவதாரத்தின் செயல்களால்
நன்குவிளங்கியதை இப்பாசுரத்தில் எடுத்துக்காட்டினர்.
கடவு ளுண் டென்பதும், அக்கடவுள் திருமாலே என்பதும் இவ்வவதாரத்தினாற் சாதிக்கப்பட்டமை வெளிப்படை.
உயிர்கள் உய்தற்பொருட்டு இவ்வுண்மையைப் பிரதியக்ஷமாக்கியருளினன் எம்பெரு மான்.
அங்ஙனந்தோன்றாமற்போனால் இறைவன் தா னென்பது ஒழியு மென்க.

(“நாரணப்பெயரினா னவையிலாதொளிர்செகற், பூரணச்செயலி னைப்பொலிவுசெய்தருள்வதோர்,
காரணத்தினி னெடுங்கதிர்மணித்தறியில் வந், தாரணத்தினை வளர்த் தவுணனைக்கொன்ற நாள்” என்னும்
இருசமய விளக்கத்தையுங் காண்க.)

“அருமகன்” என்றது, தந்தைக்கு மைந்தனிடம் இயல்பாக இருத்தற்கு உரிய அன்புவிசேடத்தைக் காட்டும்;
அன்றி, “எங்குமுளன் கண்ணன்” என்ற அருமையான பரமார்த்தத்தை எளிதில்வெளியிட்ட மகோபகாரகனான
புதல்வ னென்ற பொருளில் “அருமகன்” என்றாருமாம்.
தனது இளமைப்பருவ முடையகுழந்தை அசங்கதமானதொருவார்த்தையைச் சொன்னாலும் அந்த மழலைச் சொல்லைச்
செவிக்கின்பமாகக்கேட்டு மகிழ்தலும், அவ்விளமகன் தானே தக்கதொருவார்த்தையைக்கூறினால் அதற்கு
மிகமகிழ்ந்து மகனைப் பாராட்டுதலு மாகிய தந்தையியல்பிற்கு மாறாக
இரணியன் பிரகலாதனைப் பகவந்நாமஞ்சொன்ன துவே ஏதுவாக “இவன் என்புத்திர னன்று” என்று கைவிட்டிருக்கவும்,
எம்பெருமானுக்கு அந்தப் பிரகலாதன்பக்கல் உண்டான புத்திரவாத்ஸல்யமும், பகவந்நாமஞ்சொன்னவர்களைத்
தமக்கு எல்லாவகை யுறவினராகவுங் கொள்ளுகின்ற தமதுஇயல்பும்பற்றி, ‘அருமகன்’என்றன ரென்னலாம்.
அவன் தாய்வயிற்றிலிருக்கும்பொழுதேதொடங்கித் தன்சித்தத்தை எம்பெருமான்பக்கல் வைத்த
மகாபாகவதோத்தம னாத லாலும் இங்ஙனங் கூறத்தகும்.

ஈடு மெடுப்பு மில்லா வொருதெய்வம் – “ஒத்தார் மிக்காவை யிலையாய மாமாயா” என்றார் திருவாய்மொழியிலும்.
திருவாய்மொழியில் “ஈடு மெடுப்பு மி லீசன்” என்றதற்கு – சிலரைத் தாழ்ந்தவரென்று உபேக்ஷித்து இட்டு வைக்கையும்
வேறு சிலரை உயர்ந்தவரென்று அங்கீகரித்து எடுத்துக்கொள்ளுதலு மில்லாமல் எல்லார்க்கும் ஸமாநனான
நடுவு நிலைமையுடையவ னென்று பொருள்செய்திருத்தலால், அங்ஙனங் கொள்ளவுந் தகும்.
“உலகு” என்றது, உலகத்துஉயிர்களை; அறிதற்குரியன அவையே யாதலால். புறத்தின், இன் – ஏழனுருபு,
நரசிங்கமூர்த்தியாகிய சூரியன் தோன்றுதற்குத் தூண் உதயபர்வதமாயிருந்த தென்ற கற்பனை, “உதித்திலன்” என்ற சொல் லாற்ற லாற் போதரும்.

————

மறந்த மறையும் மழுங்கிய மந்திரமும் மகமும்
இறந்த தெய்வங்களும் எல்லாம் முன் எங்கு உறைந்து எங்கு இயன்ற
அறம் தரும் கோயில் அரங்கன் அவ் ஆள் அரிக்கு ஆளரியாய்ப்
பிறந்த பின் அன்றோ பிறந்து பெருகிப் பிறங்கியதே –30-

(இ – ள்.) மறந்த மறையும் – மறக்கப்பட்ட வேதங்களும்,
மழுங்கிய மந்திரமும் – விளங்காமற்போன மந்திரங்களும்,
மகமும் – யாகங்களும்,
இறந்த தெய்வங்களும் – ஒழிந்துபோன தெய்வங்களும்,
எல்லாம் – ஆகிய இவையெல்லாம்,
முன் – முன்பு,
எங்கு உறைந்து எங்கு இயன்ற – எங்குத் தங்கி எவ்விடத்திற் சஞ்சரித்தன!
அறம் தரும் கோயில் அரங்கன் – தருமத் தை நிலைநிறுத்துகின்ற திருவரங்கம்பெரியகோயிலிலெழுந்தருளியிருப்பவனான எம்பெருமான்,
அ ஆள் அரிக்கு ஆள் அரி அய் – அந்தப் பராக்கிரமத் தையுடைய பகைவனான இரணியனை யழிப்பதற்காக நரசிங்கவடிவமாய்,
பிறந்த பின் அன்றோ – திருவவதரித்தபின்பன்றோ,
பிறந்து பெருகி பிறங் கியது – (அதெல்லாம்) தோன்றிப் பெருக்கமடைந்து விளங்கிற்று!! (எ – று.)

இரணியன் பிறந்து வளர்ந்து அருந்தவம்புரிந்து பெருவரங்கள்பெற்றுத் தலையெடுத்துச் செருக்கி உலகத்திலே எவரும்
பழையகிரமப்படி வேத மோதவும் மந்திரஜபங்கள்செய்யவும் யாகங்கள்புரியவும் தெய்வங்களை வழி படவுங் கூடா தென்றும்,
தன்னையே கடவுளாகக் கொண்டு அனைவரும் துதித்து வந்தித்து வழிபடவேண்டு மென்றும் கட்டளையிட்டு
அவ்வாணையை எங்குந் தவறாமற் செலுத்திவந்தகாலத்தில் வேதமுதலியன யாவும் இருக்கின்ற இடமும்தெரியாதபடி மறைந்திருந்ததையும்,
இப்படிசிலகாலம்கழி ந்த பின்னர் எம்பெருமான் நரசிங்காவதாரஞ்செய்து இரணியனைத்தொலைக்க அதன்பிறகு
அவ்வேதமுதலியவனைத்தும் தலையெடுத்ததையும் எடுத்துக் காட்டி,
“துஷ்டநிக்கிரகஞ்செய்து வேதங்களையும்வைதிக கருமங்களையும் நிலை நிறுத்திச்சகலதேவர்களையும் வாழ்விப்பவன்
எம்பெருமானே யென்ற உண்மையை உணர்த்தினார்.

“முக்கணானெண்கணானுமுளரியாயிரங்கணானுந்,
திக்கணாந்தேவரோடு முனிவரும் பிறருந் தேடிப்,
புக்கநாடறிகுறாமற்றிரிகின் றார் புகுந்துமொய்த்தார்,
எக்கணாற்காண்டுமெந்தையுருவமென்றிரங்கிநின்றார்” என்ற கம்பராமாயணத்து இரணியன்வதைப்படலம் இங்குநோக்கத் தக்கது.
மறந்த மறை – அத்தியயனமில்லாமையால் மறந்துபோனவேதங்கள்.

“மழுங்கிய” என்பதனை மகத்துக்குங் கூட்டுக; செய்பவரெவருமில்லா மையால் மழுங்கிப்போன யாகங்கள்.
பிழைத்திருத்தல் தெரியாமையால், “இறந்த தெய்வங்கள்” எனப்பட்டன.
(“தரையின்மீதுபோய் மாயவனுரு வெனச்சாற்றும், அரியவேள்வியேமுதலியவறங்களையழித்துப்,
புரியுமந்த ணர்ப்பொன்றுறப்புரிமினோ புரியின், கரியவன்வலிகெடு முலப்பார்கடவுள ரே,”
“என்னவோதலுஞ் சம்பரன்முதலினோரேகித், துன்னும்வேள்வியே முதலியவறங்களைத்தொலைத்து,
மன்னுயிர்க்குழுமாயநன்மனையெரி யூட்டிப், பொன்னினாட்டினும் புலவரைப்புடைத்தனர்புகுந்தே” என்ற ஸ்ரீபாகவ தம், இங்கு நோக்கத்தக்கது.
“அமரரை வதைத்து நீங்கள் விரிவுறுவேதமெல்லாமழிய வேள்வியைச்சிதைத்துத்,
தரையினின்முனிவரெல்லாந்தவஞ்செ யாதியற்று மென்றான்” என்பர் மகாபாகவதத்திலும்.)

இனி, “இரணியன், அநேக வரங்களைப் பெற்று, கர்விதனாகி, திரிலோகங்களையும், ஸ்வாதீநமாக்கிக்கொண்டு,
இந்திரன் சூரியன் வாயு அக்கினி வருணன் சந்திரன் யமன் முதலானார் செய்கிற அதிகாரங்களைத் தானே செய்துகொண்டு,
யாகங்களிலே அவர்களுக்கான அவிர்ப்பாகங்களைத் தானே கைக்கொண்டு, மூன்று லோகங்களையும் ஏகாதிகாரமாய்த்
தானே ஆண்டுகொண்டிருந்தான்; அப்போது, இந்திராதிதேவதைகள், அந்தமகாசூரனுக்குப் பயந்து சுவர்க்க லோகத்தை விட்டு,
மனிதவேஷம்பூண்டு பூமியிற் சஞ்சரித்துக்கொண்டிருந் தார்கள்” என்று ஸ்ரீவிஷ்ணுபுராணம் கூறுதலாலும், இங்ஙனங்கூறத்தகும்.

மந்த்ரம், மகம் தைவம் – வடசொற்கள். மந்திரமும்மகமும், மகரவொற்று – விரித்தல்விகாரம். இழிவுதோன்ற,
தெய்வங்களை அஃறிணையாக்கினர். முன் – காலமுன்; இரணியன்வாழ்ந்தநாளில் என்க.
இயன்ற – “அன்” சாரியைபெறாத பலவின்பால்முற்று. தொகுதியொருமையால், “பிறங்கியது” என்றார்;
“பிறங்கிய” எனப் பன்மையாகப் பாடமோதுவாரும் உளர். ஆள் அரி – ஆண் மையையுடைய பகைவன்.
அரி – வடசொல். ஆள் அரி – நரங்கலந்த சிங் கம். அரி – ஹரி என்ற வடசொல்லின் சிதைவு;
(யானை முதலிய பெரியபிராணிகளையும்) அழிக்கவல்ல தென்பது காரணப்பொருள்.
“அந்தியம்போதி லரியுருவாகி யரியையழித்தவனை” என்று பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாடியதனை அடியொற்றி
“ஆளரிக்கு ஆளரியாய்” என்றார்
வாள் அரி என்று எடுத்து, வாள்போலக்கொடிய பகைவனென்றும், வாளாயுதத்தையேந்திய பகைவனென்றும்,
(பொன்னிறமான வடிவையுடைமையால் இரணியனென்று பெயர்பெற்ற) ஒளியையுடைய பகைவ னென்றுங் கொள்ளவுமாம்.
அறம்தரும் அரங்கன் என இயையும். அறம் தரும் – தொலைந்துபோன தருமத்தைக் கொணர்ந்துகொடுக்கின்ற என்க.
இங்கு “அறந்தரும்” என்றது – ஸாபிப்ராயவிசேஷண மாதலால், கருத்துடையடைமொழியணி.

————

அடிக்கண்டிலர் அதலத்தவர் ஐம்முகனோடு அமரர்
கடி கண்டிலர் மலை வான் இவர்ந்ததும் கமலத்து அயனார்
முடி கண்டிலர் அண்ட மா முகடு ஏறியும் மூதுணர்ந்தோர்
படி கண்டிலர் அரங்கேசர் கொள் சிங்கப் படி தனக்கே –31-

(இ – ள்.) அரங்க ஈசர் – ரங்கநாதர்,
கொள் – கொண்ட,
சிங்கம் படி தனக்கு – நரசிங்கவுருவத்திற்கு,
அதலத்தவர் – கீழுலகத்திலுள்ளவர்,
அடி கண்டிலர் – திருவடிகளைக் கண்டாரில்லை;
ஐம்முகனோடு அமரர் – சிவனும் (மற்றைத்) தேவர்களும்,
மலை வான் இவர்ந்தும் – (முறையே) கைலாசகிரி யின்மேலும் சுவர்க்கலோகத்திலும் உயரவிருந்தும்,
கடி கண்டிலர் – திருவரை யைக் கண்டாரில்லை;
கமலத்து அயனார் – (அத்திருமாலின்திருநாபித்) தாமரை மலரில் தோன்றிய பிரமதேவர்,
அண்டம் மா முகடு ஏறியும் – அண்ட கோளத்தினது மிகவுயர்ந்த உச்சியிடத்தில் ஏறியிருந்தும்,
முடி கண்டிலர் – திருமுடியைக் கண்டாரில்லை;
முது உணர்ந்தோர் – (பலவற்றையும் அறிந்த) பழைய பெரியோரும்,
படி கண்டிலர் – அளவைக் கண்டாரில்லை; (எ – று.)

நரசிங்கமூர்த்தி கொண்ட விசுவரூபத்தின் பெருமையைக் கூறியது, இப்பாசுரம்.
அதனை, கம்பராமாயணத்து இரணியன்வதைப்படலத்திலும்
“பிளந்ததுதூணு மாங்கேபிறந்ததுசீயம்பின்னை,
வளர்ந்ததுதிசைகளெட்டும் பகிரண்டமுதலமற்று,
மளந்த தப்புறத்துச்செய்கையாரறிந்தறையகிற்பார்,
கிளர்ந்ததுககனமுட்டை கிழிந்ததுகீழுமேலும்,”

“மன்றலந்துளபமாலைமா னுடமடங்கல் வானிற்,
சென்றது தெரிதல்தேற்றாம் சேவடிபடியிற்றீண்ட,
நின்றதோர்பொழுதி னண்ட நெடுமுகட்டிருந்தமுன்னோன்,
அன்றவனுந்தி வந்தானாமெனத்தோன்றினானால்,”

“நோக்கினார்நோக்கினார் முன்னோக்குறு முகமுங்கையும்,
யாக்கையுந்தாளுமாகியெங்கணுந்தானேயாகி,
வாக்கினான் மனத்தினான்மற்றறிவினா வளக்கவாரா,
மேக்குயர்சீயந்தன்னைக்கண்டனர் வெருவுகின்றார்” எனக் காண்க.

“விண்டிடுதூணினெழுந்தெழிலார்நரமீளி வளர்ந்தசெய,
லெண்டவராலு முணர்ந்தறிதற்கரி தென்றிடில் யாரறிவார்,
அண்டமுகட்டின்வயங்கியமர்ந்திடுமாதியிவ்வரியினொளிர்,
முண்டக வுந்தியின் வந்தது போன்றனன் மூடிவறைதற்கெளிதோ” என்பர் மகா பாகவதத்திலும்.

ஈற்றிலுள்ள “சிங்கப்படிதனக்கு” என்பதை எல்லாவாக்கியங்களிலுங் கூட்டுக; கடைநிலைத்தீவகம்.
அடி – பாதம், கண்டிலர் – எதிர்மறைப்பலர் பாலிறந்தகாலமுற்று. அதலம் – கீழேழுலகங்களிலொன்று;
இங்கு, கீழுலகமென்ற மாத்திரமாய் நின்றது.
ஐம்முகன் – ஐந்துமுகங்களையுடையவன்; சதாசிவ மூர்த்தியாகிய சிவபிரானுக்கு ஐந்து முகங்க ளுண்டு:
ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோசாதம் என்று அவற்றிற்குப் பெயர்கூறுவர்; ஒடு – எண்ணுப்பொருளது.
ஐம்முகன் மலையிலும், அமரர் வானிலும் இவர்ந்தும் என முறையேசென்று இயைதலால், முறைநிரனிறைப்பொருள்கோள்.
உயர்ந்த இடங்களில் இருந்துங் கண்டாரில்லை யென்றற்கு இதுகூறினார்.
அவர்கட்குக் கைலாசகிரியும் வானுலகமும் உறைவிட மென்பது, வெளிப்படை. இவர்தல் – ஏறுதல்.
“வானிவந்தும்” என்ற பாடத்திற்கு, வான் நிவந்து என்று பிரிந்து இப்பொருளேபடும். நிவத்தல் – உயர்தல்.
கடி – இடை; வடசொல். அயன் – அஜனென்றவடசொல்லின் விகாரம்; திருமாலிடத்தினின்று தோன்றியவ னென்று பொருள்படும்;
அ – விஷ்ணு; “அகாரார்த்தோ விஷ்ணு:” ஆர் என்றபலர்பால்விகுதி, உயர்த்தற்பொருளில்வந்தது,
முடி – சிரசு. “அண்டமாமுகடு” என்றது, மேலேழுலகங்களுள்ளும் மேலதான சத்தியலோகத்தை. அது, பிரமன்வாழுமிடம்.
பிரமனது ஆதிசிருஷ்டியில் உண்டானவர்களும் தத்துவஞானமுடையவர்களுமான ஸநகர்முதலிய யோகிகள், “மூது ணர்ந்தோர்” எனப்பட்டனர்.
படி – ஒப்பும், தன்மையுமாம். சிங்கம் – ஸிம்ஹமென்ற வடசொல்லின் விகாரம்;
(யானைமுதலிய பெரியபிராணிகளையும்) ஹிம்ஸிக்கவல்ல தென்பது காரணப்பொருள்.
“படிதனக்கு” என்பதைப் படியினது என உருபுமயக்க மாக்கியும் உரைக்கலாம்.

———–

அறியின் அரங்கர் முன் ஆளரி ஆகிய அப்பொழுது
கொறியின் அவுணர் தம் வெள்ளங்கள் கோடியும் கொன்றதிலோ
தறியின் வயிற்றின் தகுவன் நெஞ்சும் சரபத்து உடலும்
நெறியின் வகிர்ந்த பின் அன்றோ தணிந்தது நீள் சினமே –32-

(இ – ள்.) அறியின் – ஆராய்ந்து அறியுமிடத்து, –
அரங்கர் – ரங்கநாதர்,
முன் – முன்பு,
ஆள் அரி ஆகிய அ பொழுது – நரசிங்கமாக அவதரித்த அப்பொழுது,
கொறியின் அவுணர்தம் வெள்ளங்கள் கோடியும் கொன்றதிலோ – ஆடுகள்போன்ற அசுரர்களுடைய கோடிவெள்ளங்களையும் கொன்றதனாலோ,
(நீள் சினம் தணிந்தது) – (அந்தநரசிங்கமூர்த்தியினுடைய) மிக்ககோபம் ஆறிற்று
(அவ்வளவினால் ஆறவில்லையென்றபடி); (பின்னை எப்பொழுது ஆறிற் றென்றால், -)
தறியின் வயிறின் – (தான்தோன்றிய) தூணினது நடுவிடத்தை (ப் பிளந்தாற்) போலவே,
தகுவன் நெஞ்சும் – அசுரனான இரணியனது மார்பையும்,
சரபத்து உடலும் – (சிவபிரானாகிய) சரபத்தினது உடம்பையும்,
நெறியின் வகிர்ந்த பின் அன்றோ – முறையே பிளந்தபின்பன்றோ,
நீள் சினம் தணிந்தது – (அச்சிங்க பிரானது) மிக்ககோபம் தணிந்திட்டது; (எ – று.)

நரசிங்கமூர்த்தி இரணியன் கட்டுத் தூணைப்பிளந்துகொண்டு அதிலிரு ந்துதோன்றியவுடனே,
இரணியன் சபையிலிருந்தவர்களும் அவனைச்சார் ந்தவர்களுமானமிகப்பலகோடிக்கணக்காகிய கொடிய அசுரர்களையெல்லாங்
கொன்று அதன்பின்பு இரணியனை வதைத்தனனென்பதும்;
மூவுலகத்திற்கும் பெருந்தீங்கு செய்துவந்த இரணியனை அழித்தற்குத் தேவர்கள்வேண்டு கோளினால் தோன்றிய
திருமாலின் அவதாரமான அச்சிங்கப்பிரான் இரணியனை மார்புகீண்டு அழித்தபின்பும் கோபந்தணியாமல் உக்கிரம் மேலிட்டிருக்க,
அந்தப்பெருங்கோபத்தைக்கண்டு அதனால்உலகமழியுமென்று மயங்கி அஞ்சிய தேவர்கள் ஓடிச் சிவபிரானைச் சரணமடைதலும்,
அக்கடவுள் அவர்கட்கு அபயமளித்து மிகப்பெரியதொரு சரபவடிவங்கொண்டு மிகஆரவாரித்து நரசிங்கத்தை எதிர்த்துவர,
நரசிங்கப்பெருமான் அச்சிவசரபத்தையும் இரணியனைப்போலவே பலவாறு சின்னபின்னப்படுத்தி யழித்து,
பிறகு பிரகலாதன் பணிந்து பிரார்த்தித்ததனாலும், தேவர்கள் துதித்ததனாலும்,
இலக்குமி சமீபித்ததனாலும் சினந்தணிந்தன னென்பதும், இங்கு அறியவேண்டியவை.

(“வாழ்குமரன்மேற் கனகவஞ்சகன்மே லோர்முகத்தே,
சூழ்கருணையும் முனிவுந் தோன்றியவாற் –
கேழ்கிளரும், அங்கவேள்குன்ற வழல்சரபத்தைப்பிளந்த, சிங்கவேள்குன்றத்தினார்க்கு” என்று நூற்றெட்டுத்திருப்பதியந்தாதியிலும்,

“புக்ககருடனை யோர்புன்மசகம்வென்றதிற, மொக்குங் கனகனுரங்கீண்ட –
மிக்கதிற, லாளரியைப் பொன்னுக்காயஞ்சிக்கிடந்த சிவன், கோள்விளைத்தா னென்னுங் குறி,”

“பொன்னனுரங்கீண்டதனாற் பொங்குசினமாறிற்றோ, துன்னுசிவசரபஞ்சோரவுயிர் –
அன்னதனைப், பற்றி வகிர்ந்தபின்னர்ப் பாழிநரமடங்க, லுற்றசினந் தணிந்த தூங்கு” என்று பர ப்ரஹ்மவிவேகத்திலுங் கூறுவர்.)

“தன்னைக்கொல்லவந்த சிவசரபத்தை நர சிங்கப்பிரான் இரணியனைப்போலவே நகங்களாற்பிளந்திட்டனன்” என்றும்,
“யாதொரு நரசிங்கமூர்த்தியினுடைய கோபாக்கினியிலே சிவனுருவமான சரபம் சலபமாயிற்றோ” என்றும்
வடமொழிப்புராணங்களில் வருதலும் காண்க; (ஸலபம் – விட்டில், விளக்குப்பூச்சி.)

(இருசமயவிளக்கத்தில் “அன்னவன்சேனையாமவுணர்பல்கோடிபேர், துன்னுவெஞ்செருவிடைத் துகள்படுத்தருளினான்,
பின்னையும்பின்னையும் பெருகுகோபானலம், முன்னையின்பொழுதினும் மும்மடங்காயதால்,”
“வடவையைத்தின்றிடும் வளைகுலக்கிரிகளைப், பொடிபடப்பிசையு மம்புதி களைப் பருகும் வான்,
வெடிபடக்குரல்விடும் விழிநெருப்பெரியு மக், கடையு கத்திடியெனக்கடியபற்கதுவுமால்” என்று பிரமருத்திரேந்திராதி சரபாவ தாரப்பரிச்சேதத்திலும், “அச்செருத்தொடர்விடத்தழல்விழிச்சரபமங், கெய் ச்சிரைத்திடவெடுத்தெற்றியெற்றிப்பெரு,
வச்சிரத்துகிர்களான்மருவவங்கந் தொறும், பச்சிரத்தம்படப் பரிபவம்பண்ணியே,”
“ஈண்டுமாளரிவெகுண் டிரணியன்றனதுடல், கீண்டவாகீண்டு மெய்கிளர்கையாயிரமுறப்,
பூண்டு சுற்றிப்பெரும்பொன்வரைப்புறனுறத், தூண்டினானென்புடன்றோலும் வேறாகவே,”
“கரமுறிந் தேகுதிண்கான்முறிந் தெரிமுகச், சிரமுறிந் திருவகை ச்சிறைகளின்றிறமுறிந்,
துரமுறிந் துடன்முறிந் துக்கதா லென்றுமுப், புர முறிந்தெரிபுகப்பொருதவன்சரபமே” என்று சரபசங்காரப்பரிச்சேதத்திலும் வருவனவுங் காண்க.

இச்சரித்திரத்திற்கு மேற்கோள் -ழுஇத்திறத் தால்விரித்தியானிசைத்தனவெலாம், மைத்தடங்கண்ணினாய்வாமனீயத்து மா,
தித்தியந்தன்னிலுந் தெளிவுறச்செப்பிடும், பத்தியா லின்னமும்பகர்புரா ணங்கள்கேள்,”
“ஒத்தகாருடமிரண்டென்னுநூறாயசீ, ரத்தியாயத்திலே யறையு மாக்கினியமும்,
சுத்தமாநாற்பதிற்சொல்லு நீணாரசிங், கத்துடன் பற்பபாகவதமும்பகருமே” என அந்நூலிலேயே கூறப்பட்டுள்ளது)

சரபம் – இரண்டு தலைகளையும், சிறகுகளையும், கூரியநகமுள்ள எட்டுக் கால்களையும், மேல்நோக்கிய
கண்களையு முடையதொரு மிருகவிசேஷம்; இதனைப் பறவையென்றலு முண்டு. இது, சிங்கத்தை எளிதிற்கொல்லுந்திறமுடையது.
வெறுஞ்சிங்கமன்றி நரசிங்கமாதலாலும், ஸாமாந்யஸிம்ஹமன்றி வரம்பிலாற்றலையுடைய புருஷோத்தமனது
அவதாரமான திவ்விய ஸிம்ஹ மாதலாலும், சரபத்தைக் கொன்றிட்டது.

நல்லன தீயன பகுத்துணராமையும், ஒன்றுபோனவழியேஎல்லாம்போ தலும், உடனே தமக்குவரும்
பெருந்தீங்கையறியாதுமகிழ்ந்திருத்தலு மாகிய ஒப்புமைபற்றி. “கொறியி னவுணர்” என்றார். இன் – ஐந்தனுருபு, ஒப்பு.
வெள்ளம் – ஒரு பெருந்தொகை. “கோடியும்” என்ற உம்மை – முற்றுப்பொ ருளது.
கொன்றதில், இல் – ஐந்தனுருபு, ஏது. தறியின், இன் – சாரியை. வயிறு – இலக்கணையாய், நடுவிடத்தைக் குறித்தது;
“கள்ளிவயிற்றி னகில் பிறக்கும்” என்றவிடத்துப்போல. மேலே நெஞ்சு உடல்களைக் கூறுதலால்,
அவற்றோடுஇயையுமாறு “வயிறு” என்ற சொல்லாற் குறித்தனர்; இவ்வாறு வருவது – ரத்நாவளியலங்காரத்தின்பாற்படும்: கவிசமத்காரம்.
இவற்றை “நெறியின்” என்றதனோடு சேர்த்து நயங் காண்க. இன் – ஐந்தனுருபு, ஒப்பு .
“வயிறின்” எனச் சிறுபான்மை உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்தின் றகர வொற்று இரட்டாதுநின்றது;
“கறைமிட றணியலு மணிந்தன்று” என்ற விடத்திற் போல. “வயிற்றின்” என்று பாடமோதுவாரு முளர்.
தகுவன் – அசுரன். ஸரபம் – வடசொல். நெறியின் வகிர்தல் – ஒன்றன்பின் ஒன்றாக (கிரமமாய்)ப் பிளத்தல்.
அன்றோ – தேற்றம். முதலடி – முற்றுமோனை. முன்நாள் அரியாகிய என்று பிரித்து உரைத்தலுங் கூடும்.
நெஞ்சு மார்புக் குத் தானியாகுபெயர். சிங்கத்திற்கு ஆடுகளைக்கொல்லுதல் மிகஎளிதாதல் போல,
சிங்கப்பிரானுக்கு அசுரர்களைக் கொல்லுதல் மிகஎளிதாயிருந்த தென்பது, இரண்டாமடியிற் போதரும்;
ஆடுகளைக்கொல்வதுபோல அசுர வெள்ளங்கள்கோடியையுங் கொன்றன னென்க.
“தணிந்தது நீள்சினம்” என்பது, முந்தினவாக்கியத்திலுங் கூட்டப்பட்டது.
தறியின்வயிற்றோடு தகுவன்நெஞ்சோடு சரபத்து உடலோடு வாசியில்லை சிங்கப்பிரானால் எளிதில் வகிரப்படுதலி லென்க.

இப்பாசுரத்தில், எம்பெருமானது பரத்வம், வெளியிடப்பட்டது.

————

இது முதல் ஐந்து கவிகள் திருவிக்ரமான வாமன திருவவதார வைபவம் அருளுகிறார் –

தார் ஏற்ற வெண் குடை மாவலி வார்க்கவும் தாமரை மேல்
சீர் ஏற்ற தொல் நான் முகத்தோன் விளக்கவும் செம்பொன் முடிக்
கார் ஏற்ற மேனி அரங்கேசர் கையும் கழலும் ஒக்க
நீர் ஏற்ற வண் திருக் குறள் ஆகி நிமிர்ந்த அன்றே -33-

(இ – ள்.) வள் திரு குறள் ஆகி – வளத்தையுடைய ஸ்ரீவாமநமூர்த்தி யாகி,
நிமிர்ந்த அன்று – (உடனே திரிவிக்கிரமனாய்) நிமிர்ந்துஉயர்ந்த அந் நாளில், –
தார் ஏற்ற வெள் குடை மாவலி வார்க்கவும் – வெற்றிமாலையைத் தரித்தவனும் ஒற்றைவெண்கொற்றக்குடையையுடையவனுமான மகாபலி சக்கரவர்த்தி (நீர்த்தாரையை) வார்த்துத் தத்தஞ்செய்துகொடுக்கவும்,
தாமரை மேல் சீர் ஏற்ற தொல் நால்முகத்தோன் விளக்கவும் – (திருமாலினது திருநாபித்) தாமரைமலரில் தோன்றியவனும் சிறப்புப்பொருந்தியவனு மாகிய பழமையான பிரமன் (தன்கையிலுள்ள கமண்டலத்தின் தீர்த்தத்தாற்) கழுவிவிளக்கவும்,
செம் பொன் முடி கார் ஏற்ற மேனி அரங்கஈசர் – சிவந்த (மாற்றுயர்ந்த) பொன்மயமான கிரீடத்தையும் காளமேகத்தையொத்த திரு மேனியையுமுடைய ரங்கநாதரது,
கையும் – திருக்கையும்,
கழலும் – திரு வடியும்,
ஒக்க நீர் ஏற்றன – சமகாலத்திலே நீரையேற்றன; (எ – று.)

(“தன்னுருவ மாரு மறியாமல் தானங்கோர், மன்னுங் குறளுருவின் மாணியாய் மாவலிதன்,
பொன்னியலும் வேள்விக்கண் புக்கிருந்து போர் வேந்தர், மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி,
என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண், மன்னா தருகென்று வாய்திறப்ப மற்ற வனும்,
என்னால் தரப்பட்ட தென்றலுமே யத்துணைக்கண், மின்னார் மணி முடிபோய் விண்தடவ மேலெடுத்த,
பொன்னார் கனைகழற்கா லேழுலகும் போய்க்கடந்தங், கொன்னா வசுரர் துளங்கச் செலநீட்டி,
மன்னிவ் வகலிட த்தை மாவலியை வஞ்சித்துத், தன்னுலக மாக்குவித்த தாளானை” என்ற ஆழ்வார் அருளிச்செயல் அறியத்தக்கது.)

வாமநமூர்த்தி மகாபலியினிடஞ் சென்று தவஞ்செய்தற்குத் தன்காலடியால் மூன்றடியிடம் வேண்டி, அது கொடுத்தற்கு இசைந்து
அவன் தத்தஞ்செய்த நீரைக் கையில்ஏற்று, உடனே திரிவிக்கிரமனாக ஆகாயத்தையளாவி வளர்ந்தபொழுது,
மேலே சத்திய லோகத்துச் சென்ற அப்பிரானது திருவடியைப் பிரமன் தன்கைக் கமண்டலதீர்த்தத்தாற் கழுவிவிளக்க.
அந்த ஸ்ரீபாததீர்த்தமாகக் கங்காநதி பெருகியதும், இங்கு அறியத்தக்கது. பிரமன் திரிவிக்கிரமமூர்த்தியின் திருவடியை விளக்கியது,
தனது இருப்பிடத்திற்கு வந்த பெரியோர்க்குச் செய்ய வேண்டிய ஷோடஸ (பதினாறுவகை) உபசாரங்களிற் பாத்யமென்னும் உபசாரமாம்;
அது, நீர்கொண்டு கால்கழுவுதல்.

கையில் தானஜலத்தை யேற்றவுடனே சிறிதுங்காலதாமமின்றி அதி விரைவில் மேலுலகைத் தாவியளந்து
காலில் நீரையேற்றன னென்னுங் கருத்து நன்குவிளங்க, “கையும் கழலும் ஒக்க நீரேற்றன” என்றார்; ஒக்க – ஒருங்கு.
கைநீரேற்றலாகிய காரணமும், கழல்நீரேற்றலாகிய காரியமும் ஒரேகாலத்தில் நிகழ்ந்தனவாகச் சொல்லுதலால்,
முறையிலுயர்வுநவிற்சியணி; அக்ரமாதிசயோக்தி யென்பர் வடநூலார்.
“காலமொன்றிற் காரண காரியம், நிகழத் தொடுத்தல் முறையிலி யென்ப” என அதன்இலக்கணங் காண்க.
இதில், காரணத்திற்கும் காரியத்திற்கும் முன்பின்தோன்றுகைத் தன்மையில், ஒருகாலத்து உண்டாகுகை கற்பிக்கப்பட்டது.
இது, காரிய விரைவை யுணர்த்துவது.

“மண்தாவெனவிரந்து மாவலியை – ஒண்தாரை, நீரங்கைதோயநிமிர்ந்திலையே நீள்விசும்பி, லாரங்கைதோயவடுத்து” என்ற
பொய்கையாழ்வாரருளிச்செயலின் பொருளை அடியொற்றியது இச்செய்யு ளென்னலாம்:
அதன் உரையில் “உதகஜலமும் திருவடிவிளக்கின ஜலமும் ஏகோதகமாம்படி வளர்ந்திலையோ?” என்றதுங் காண்க.

இங்ஙனம் விரைந்தது, அவன் மனம்மாறாத முன்னம் அளந்துகொள்ளவேண்டுமென்னுங் கருத்தினா லென்பர்.
“அளியினான்மூவடியளந்துகோடியென், றொளிகொளு மா வலியுதகம்பண்ணவே,
களைகணா யுலகினைக் காக்கும் வித்தகன், கிளர்முடி யுயரண்டங்கிழிய வோங்கினான்” என்ற மகாபாகவதத்தைக் காண்க.

மாவலி வார்க்கக் கைநீரேற்றது, நான்முகத்தோன் விளக்க கழல்நீரேற்றது என முறையே சென்று இயைதல், முறைநிரல்நிறைப்பொருள்கோள்.
குறளுக்கு வண்மை – “ஆலமர் வித்தி னருங்குற ளானான்” என்றபடி
மூவுலகத்தையும் ஈரடியிலே அளக்கவல்ல பேருருவைத் தன்னுள் அடக்கிக்கொ ண்டிருத்தல்;
எல்லாவுயிர்களின் முடியிலும் தானாக அடிவைத்து அவற்றை ஆட்கொண்டருளும் உதாரகுணமுமாம்.
நான்முகத்தோனாற் கழல் விளக்கப்படும் மகிமையை யுடையவன் தன்னைச்சரணமடைந்த இந்திரனது குறையைத் தீர்த்தற்காகத்
தான் இரவலனாகி உலகங்களைப்பெற்றுக் கொண்டு பின்னர் அவற்றை இந்திரனுக்குக் கொடுத்தருளின னென
இச் செய்யுளில் எம்பெருமானது பரத்வமும் ஸௌலப்யமும் தந்திரமும் வண்மையும் விளங்குதல் காண்க.

மாவலி – மஹாபலி என்ற வடசொல்லின் விகாரம். “தாரேற்ற,” “வெண்குடை”, “மா” என்ற மூன்றும் – பலிக்கும்,
“தாமரைமேல்”, “சீரேற்ற,” “தொல்” என்ற மூன்றும் – நான்முகத்தோனுக்கும்,
“முடி,” “மேனி” என்ற இரண்டும் – அரங்கேசர்க்கும் அடைமொழிகள். தார் – இங்கு வாகைப்பூமாலை.
முடி, தான் எல்லாவற்றிற்கும் இறைவனென்பதை விளக்குதற்கு அணிந்தது.
“காரேற்ற மேனி” என்றவிடத்து, “ஏற்ற” என்றது – உவமவாசகம்; மேகத்தின் தன்மையைக் கொண்டமேனி யென்றலுமாம். குறள் – குறுகியவடிவம்.

————–

தேமிக்க பச்சைத் துழாய் அரங்கேசர் திருக் குறள் ஆயத்
தாம் இப்புவனம் கிடந்த அந்நாள் மணல் சாகரம் சூழ்
பூமிப் புடை அளவிட்ட பொற்றாமரைப் பூம் கழற்கு
நேமிச் சிலம்பு திருச் சிலம்பு ஆகி நிலை பெற்றதே –34-

இ – ள்.) தேன் மிக்க – மிகுதியான தேனையுடைய,
பச்சை துழாய் – பசுநிறமான திருத்துழாய்மாலையை யணிந்த,
அரங்க ஈசர் – ரங்கநாதர்,
திரு குறள் ஆய் – ஸ்ரீவாமநமூர்த்தியாகி,
இ புவனம் கடந்த அ நாள் – இந்த உலகங்களை அளந்த அப்பொழுது,
மணல் சாகரம் சூழ் பூமி புடை அளவிட்ட – மணலையுடைய கடலினாற் சூழப்பட்ட பூமியினிடத்தை யளந்த,
பொன் தாமரை பூ கழற்கு – அழகிய தாமரைமலர்போன்ற திருவடிக்கு,
நேமி சிலம்பு – (பூமியைச்சூழ்ந்த கடலைச் சுற்றி யுள்ளதாகிய) சக்கரவாள பருவதமானது,
திரு சிலம்பு ஆகி நிலைபெற்றது – அழகிய சிலம்பென்னும் அணியாகி நிற்றலைப் பெற்றது; (எ – று.) – தாம் – அசை.

எம்பெருமான் உலகமளந்தபொழுது “மண்ணொடுங்கத் தானளந்த மன்”,
“நின்றகால் மண்ணெலாம்நிரப்பி யப்புறஞ், சென்றுபாவிற்றிலை சிறிதுபாரெனா”,
“அகலகங்காலினுக் கவனிபோந்தில, ககனமுள்ளடியினிற் கமலத்தாயின, சகலலோகங்களுந் தாளிரண்டினிற்,
புகுதவே நிவந்தனன் புயல்கொண்மேனியான்” என்றபடி பூமியினளவினும்பரந்துவளர்ந்து அதனை யளந்துநின்ற
ஒருதிருவடிக்கு, அப்பூமியைச்சூழ்ந்த கடலைச்சுற்றியுள்ளதான சக்கரவாளகிரி சிலம்பென்னும் அணிபோலிருந்த தெனக் கற்பனை கூறினார்.

பதினாயிரம்யோஜனையுயரமும் பதினாயிரம்யோஜனைபரப்புமுள்ள சக்கரவாள பருவதம் அத்திருவடிக்குச் சிலம்பென்னும் அணி
போன்ற தென்றதனால், அத்திருவடியின் வளர்ச்சி நன்குவிளங்கும்.
“சிலம்பு” என்ற சொல் மலை யென்றும் நூபுரமென்றுங் காலணியென்றும் பொருள்படுதலால், அச்சொல் நயம்பற்றி,
“சிலம்பு சிலம்பாகி நிலைபெற்றது” என்றார்;
முன் (21) “அண்ட மாமென்னச்சிறந்தது மூதண்டம்” என்றாற் போல: சொற்பின்வருநிலை
யணியும் உவமையணியுஞ் சேர்ந்துவந்த சேர்வையணி. ஆகி – உவமவுருபு – காலணியென்ற பொருளில்,
சிலம்புவது சிலம்பு எனக் காரணக்குறி; சிலம்புதல் – ஒலித்தல்.

தேன் + மிக்க = தேமிக்க: “தேன்மொழி மெய்வரி னியல்பும் மென்மை, மேவி னிறுதியழிவும்” என்றார் நன்னூலார்.
தேம் மிக்க என்று எடுத்து, வாசனை மிக்க என்றலுமாம். புவநம், ஸாகரம், பூமி – வடசொற்கள்.
ஸாகரம் – ஸகரசக்கரவர்த்தியினது புத்திரர்களால் தோண்டப்பட்டது; வடமொழித்தத்திதாந்தநாமம்.
சூரியகுலத்துச் சகரமகாராஜன் அசுவமேத யாகஞ்செய்தபொழுது பூமிப்பிரதக்ஷிணத்திற்காகச்செலுத்திய குதிரையை,
பொறாமைகொண்ட தேவேந்திரன் மாயையால் ஒளித்துக்கொண்டு சென்று, பாதாளலோகத்தில் தவஞ்செய்துகொண்டிருந்த
கபிலமுனிவர்பின்னே கட்டிவைக்க, அவ்வேள்விக்குதிரையை நாடிச்சென்ற சகரபுத்திரர் அறுபதினாயிரம்பேர்
பூமிமுழுதுந்தேடிக்காணாது, பாதாளலோகத்திற்குப் போதற்பொருட்டுப் பெருவழியாகப் பரதகண்டத்தில்
வடகிழக்குப்பக்கத்தில் தோண்டிச் சென்ற பெரும்பள்ளமே, பின்பு கங்கை முதலியவற்றின்நீரினால் நிறைந்து
ஸாகரமென்னும் பெயர்பெற்றுக் கடலோடு கூடித்தானும் கடலின்பாற்பட்ட தென்பது வரலாறு.
இது, இங்கு, பொதுப்படக் கடலென்றமாத்திரமாய்நின்றது; சிறப்புப்பெயர் பொதுப்பொருளின்மேலும்,
பொதுப்பெயர் சிறப்புப்பொருளின்மேலும் நிற்றல் பாஷைநடை.
“சகரர்தொட்டலாற் சாகரமெனப் பெயர்தழைப்ப, மகரவாரிதி சிறந்தது” என்றது, கம்பராமாயணம்.

————

பூமரு பொங்கர் புடை சூழ் அரங்கர் பொலாங்கழலால்
பாமரு மூவுலகும் கொண்ட போது பழிப்பு இல் பெரும்
காமரு மோலிச் சிகா மணி ஆகி கவுத்துவம் ஆய்
தேமரு நாபி அம் தாமரை ஆனது செஞ்சுடரே –35-

(இ – ள்.) பூ மரு – பொலிவு பொருந்திய (அல்லது மலர்கள்நிறைந்த),
பொங்கர் – சோலைகள்,
புடை சூழ் – எல்லாப்பக்கங்களிலுஞ் சூழ்ந்திருக்கப் பெற்ற,
அரங்கர் – திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கின்றவரான எம்பெருமான்,
பொலம் கழலால் – அழகிய திருவடிகளினால்,
பா மரு மூ உலகும் கொண்ட போது – பரப்புப் பொருந்திய மூன்றுஉலகங்களையும் அளந்து தமதாக்கிக்கொண்டபொழுது, –
செம் சுடர் – சிவந்த கிரணங்களையுடைய தான சூரியமண்டலமானது, (முதலில் அப்பெருமானுக்கு),
பழிப்பு இல் – குற்றமில்லாத,
பெரு – பெரிய,
காமரு – அழகிய,
மோலி – முடியிலுள்ள,
சிகாமணி ஆகி – சிரோரத்தினம் போன்றிருந்து, (அதன்பின்),
கவுத்துவம் ஆய் – (திருமார்பிலணிந்த) ஸ்ரீகௌஸ்துபரத்தினம் போன்று, (பிறகு),
தேன் மரு நாபி அம் தாமரை ஆனது – தேன்பொருந்திய அழகிய திருநாபித்தாமரைமலர் போன்றது; (எ – று.)

வாமநமூர்த்தியாகிய திருமால் திரிவிக்கிரமனாக வானத்தையளாவி மேன்மேலோங்கிவளர்ந்தபொழுது,
சூரியன் வரவரக்கீழ்ப்பட்டுப் பலவாறு உவமைகூறுதற்கு உரியனாயின னென்க.
எம்பெருமான் திரிவிக்கிரமனாக நிமிரத்தொடங்கியபொழுது சூரியன் முதலில் திருமுடிமணிபோன்றும்,
இன்னும்சற்றுநிமிர்ந்தவளவில் திருமார்பின்மணியான கௌத்துவம்போன்றும், மற்றும்சற்றுநிமிரவே
திருவுந்தித்தாமரைமலர்போன்று மிருந்தன னென்பது கருத்து.

“மலருந்திமேல்விழமெய்நெரித்தான் வையமேழுந் துஞ்சா,
மலருந்தினா னரங்கன் குறளாய் மண்ணளந்த வந்நாள்,
மலருந் திவாக்கதிர் வண்குடையாய் முடிமாமணியாய்,
மலருந்தியாய்த் திருத்தாள் விரலாழிமணியொத்ததே” என்பர் திருவரங்கத்தந்தாதியிலும்,

தண்டியலங் காரவுரையில் உபமாதீபகவணிக்குஉதாரணமாகக்காட்டிய
“முன்னங்குடை போல் முடிநாயகமணிபோல், மன்னுந்திலகம்போல் வாளிரவி –
பொன்ன கலந், தங்குகவுத்துவம்போ லுந்தித்தடமலர்போ, லங்கணுலகளந்தாற்காம்” என்ற செய்யுளிலும் இக்கருத்து நிகழ்தல் காண்க.

“கவிகையாய் மவுலி யாய்க் கவின்கொண்மார்பினி, லவிர்மலிகவுத்துவமாகியே மருங்,
குவிலுறு நாண்மணியாகிக் கோதிலா, வுவமையிலலரிகீழொளிரவோங்கினான்” என்ற மகாபாகவதமுங் காண்க.

“சேயொளிபரப்பிவையத்திருளறச்சிதைக்குந்தெய்வக், காய்கதிர்க்கடவுள் மற்றோர்கவுத்துவநிகர்ப்பதம்மா” என்றது,
கந்த புராணத்து உபதேசகாண்டமும். உவமையணி.
செந்நிறமான ஆயிரங்கிரண ங்களோடு மலர்ந்து விளங்குஞ் சூரியமண்டலம்,
ஆயிரம் இதழ்களையுடைய செந்தாமரைமலரையொக்கும். மற்றையுவமைகட்கு, வட்டவடிவமும் விளக்கமும் பொதுத்தன்மைகள்.
மோலிச் சிகாமணி – கிரீடத்திலுள்ள நடுநாயக ரத்தினம்.

“மூவுலகு” என்றது, மேல் கீழ் நடு என்ற நோக்கத்தால். மண்ணுலகத் தையளந்ததில் அதன்கீழுலகமும் அடங்குதலால்,
மூவுலகத்தையும் அளந்ததாம். எம்பெருமானுக்கு உரியனவான உலகங்களைத் தன்னுடையன வென்று அபிமானித்த
மகாபலியினது மமகாரம் நீங்கப் பெருமான் அவற்றைத் தமதுஅடியின்பாற்படுத்துத் தம்முடையனவாக்கிக்கொண்டு காட்டியமை தோன்ற,
“கழலால் மூவுலகுங் கொண்டபோது” என்றார்.
மௌலி, சிகாமணி, கௌஸ்துபம், நாபி – வடசொற்கள். கவுத்துவம் – முதற்போலி: இது,
திருமால்மார்பில்அணியும் திவ்வியரத்தினம்; திருப்பாற் கடல்கடைந்தபொழுது அதனினின்றுதோன்றியது.
மரு – மருவு என்பதன் விகாரம். பொங்கர் – (நெடுந்தூரத்திலுள்ளாருங் காணும்படி) உயர்ந்து விளங்குவதென்று காரணப்பொருள்படும்;
அர் – பெயர்விகுதி. ஆகி, ஆய், ஆனது – உவமவாசகங்கள். செஞ் சுடர் – பண்புத்தொகை யன்மொழி யென்றாவது,
அடையடுத்த சினையாகுபெய ரென்றாவது கொள்ளத்தக்கது.

————

ஓதப் புனல் பொன்னி நல் நீர் அரங்கர் உலகு அளந்த
பாதத்து நீர் விண் படி பிலம் மூன்றிலும் பால் புரை வெண்
சீதத் தரங்க மந்தாகினி ஆகி செழும் கங்கை ஆய்
மேதக்க போகவதி ஆகி நாளும் விழுகின்றதே –36-

(இ – ள்.) ஓதம் புனல் – வெள்ளமாகிய நீரையுடைய,
பொன்னி – திருக் காவேரிநதியினது,
நல் நீர் – நல்ல நீரினாற் சூழப்பட்ட,
அரங்கர் – திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கின்றவரான எம்பெருமானுடைய,
உலகு அளந்த பாதத்து – மேலுலகத்தையளந்த திருவடியினின்று பெருகிய,
நீர் – தீர்த்தமானது, – விண் படி பிலம் மூன்றிலும் – சுவர்க்கலோகம் பூலோகம் பாதாளலோகம் என்ற மூன்றுஇடங்களிலும்,
(முறையே), பால் புரை வெள் சீதம் தரங்கம் மந்தாகினி ஆகி – பால்போன்ற வெண்ணிறமான குளிர்ந்த அலைகளையுடைய மந்தாகினியாகியும்,
செழுங் கங்கை ஆய் – செழிப்புள்ள கங்கை யாகியும்,
மேதக்க போகவதி ஆகி – மேன்மைபொருந்திய போகவதியாகியும்,
நாளும் – எந்நாளும், விழுகின்றது-; (எ – று.)

திருமாலின் மேலுலகளந்ததிருவடியைப் பிரமன் கமண்டலதீர்த்தத்தாற் கழுவிவிளக்கிய ஸ்ரீபாததீர்த்தம்
சுவர்க்கலோகத்திற்பாய்வதற்கு மந்தாகினியென்றும், பூலோகத்திற்பாய்வதற்குக் கங்கையென்றும்,
பாதாளலோகம்நோக்கிப்பாய்வதற்குப் போகவதியென்றும் பெயரென உணர்க;

“பரமன டிப்புன லுலகைப் பாவனஞ்செய்திடும்பொருட்டுப் பண்டைமேரு,
சிரமதனி லளகநந்தையெனவிழுந் திவ்வுலகு கங்காதேவியாகித்,
தரமதனின்மிகுதேவ ருலகினின்மந்தாகினியாய்ச் சக்ரிநேமிப்,
புரமதனிற்போகவதியெனப்பொ லிந்த திந்தநதி’ பின்னுங்கேட்டி” என்றது, பாத்மோத்தரபுராணம்.

சூரிய குலத்துப் பகீரதசக்கரவர்த்தி, கபிலமுனிவனது கண்ணின்கோபத்தீக்கு இலக்காகி உடலெரிந்து சாம்பலாய் நற்கதியிழந்த
தனதுமூதாதையரான சகரபுத்திரர் அறுபதினாயிரவரைநற்கதிபெறுவித்தற்பொருட்டு, நெடுங்காலந் தவஞ்செய்து,
தேவகங்காநதியை மேலுலகத்திலிருந்து பூமிக்குக் கொணர்ந்து, பாதாளலோகத்திற்கும் கொண்டுபோயின னாதலால்,
மூவுலகத்திலும் அத்தீர்த்தம் உளதாயிற்று. பிரமன் ஸ்ரீபாததீர்த்தஞ்சேர்த்த நீர் சிலநாள் தேவலோகத்துத் தங்கியிருந்து
பின்னர்ப் பகீரதன்கொணர்கின்றபோது கீழுலகங்கட்கும் வந்ததென்க. விண்ணில் மந்தாகினியாகி, படியிற் கங்கையாய்,
பிலத்திற் போகவதியாகி என முறையே சென்றுஇயைதலால், முறைநிரல்நிறைப்பொருள்கோள்.

“ஓதப்புனல்” என்றது, பொன்னிக்கு இயற்கையடைமொழியாய் நின்றது. ஓதம் – குளிர்ச்சியும், அலையும், பெருக்குமாம்.
ஓதம் புனல் – கடலை நோக்கிச்சென்றுசேரும் நீ ரெனினுமாம்.
“மலைத்தலைய கடற்காவிரி, புனல் பரந்து பொன்கொழிக்கும்” என்றபடி தான்பெருகும்பொழுது பொன்னைக்
கொழித்துக்கொண்டுவருதலால், காவேரிக்கு “பொன்னி” என்று பெயர்;
இ – உடைமைப்பொருள் காட்டும் பெண்பால்விகுதி. பாதம், பிலம், சீதம், தரங்கம், மந்தாகிநீ, கங்கா, போகவதீ – வடசொற்கள்.
புரை – உவம வாசகம். கங்கை, வெண்ணிறமான நீரை யுடையது. நாளும், உம்மை – தொறுப்பொருளது.
கங்கைக்குச் செழுமை – நீர்மிகுதியும்,
“எழுமையுங்கூடி யீண்டியபாவ மிறைப்பொழுதளவினி லெல்லாங், கழுவிடும் பெருமைக் கங்கை” என்றபடி
தன்னிடத்து நீராடுபவர்க்குத் தீவினைதீர்த்து நற்கதியருளுதலும்; இச்சொல்லுக்கு – அழகென்ற பொருளும் உண்டு.

———–

ஓலப் புனல் அரங்கேசர் பொற்றாள் பட்டு உடைந்த அண்ட
மேலக் காடாகத் தொளை வழியாக விழும் புனல் போய்
கோலத் திரு உருக் கொண்ட அந்நாள் குரம் பட்டு உடைந்த
மூலக் கடாகத் தொளையால் விழுந்தது முன் புனற்கே –37-

(இ – ள்.) ஓலம் புனல் அரங்கஈசர் – ஆரவாரத்தைச்செய்கிற (காவேரி) நீரினாற் சூழப்பட்ட திருவரங்கத்தின் தலைவரான எம்பெருமானது,
பொன் தாள் – (திரிவிக்கிரமாவதாரத்தில் மேலுலகத்தையளந்துசென்ற) அழகிய திருவடி,
பட்டு – பட்டதனால், உடைந்த -,
அண்டம் மேலக் கடாகம் – அண்டகோளத்தினது மேற்பக்கத்துமூடியில் உண்டான,
தொளை வழி ஆக – துளையின் வழியாக,
விழும் – (பெரும்புறக்கடலினின்று) உள்ளேவிழுந்த,
புனல் – நீரானது, –
கோலம் திரு உரு கொண்ட அ நாள் – (அப்பெருமான்) ஸ்ரீவராகரூபத்தைக் கொண்ட அக்காலத்தில்,
குரம் பட்டு – (அந்த வராகநாயனாரது) திருக்குளம்பு பட்டதனால்,
உடைந்த -, மூலம் கடாகம் – (அண்டகோளத்தினது) அடிப்பக்கத்து மூடியின்,
தொளையால் – துளைவழியாக,
போய் – சென்று,
முன் புனற்கே விழுந்தது – பழமையான அக்கடலிலேயே விழுந்திட்டது; (எ – று.)

“பலிசக்கரவர்த்தியின்யாகத்தில் திரிவிக்கிரமவடிவங்கொண்டு உலகத் தையளந்த விஷ்ணுபகவானுடைய
வாமபாதத்தினது கட்டைவிரல்நுனி யாற் பிளக்கப்பட்ட மேற்பாகத்தையுடைய அண்டகடாகத்தின் தொளை வழியாய் உள்ளே
பிரவேசித்த புறக்கடலின்நீர்ப்பெருக்கு” என்று ஸ்ரீபாக வதத்திலும்,

“ஸ்ரீயஜ்ஞவராகமூர்த்தியினுடைய குளம்பு தாக்கினதனாலே பிளந்த அண்டகடாகத்தினுள்ளே” என்று ஸ்ரீவிஷ்ணுபுராணத்திலும் வருதல் காண்க.

“பாரளவு மோரடிவைத் தோரடியும் பாருடுத்த, நீரளவுஞ் செல்ல நிமிர்ந்ததே” என்று பொய்கையாழ்வாரருளிச்செய்ததும் காணத்தக்கது.

“அண்டம் மோழை யெழ முடிபாதமெழ வப்ப, னூழியெழ வுலகங் கொண்டவாறே” என்றார் நம்மாழ்வாரும்.

“நண்ணுபொற்றுகளெனநாகர் நாட்டொடு, மண்ணகம்பொதிந்த தோர்பத மற்றோர்பதம்,
விண்ணகங்கட ந்துபோய் விரிஞ்சனாடுறீஇ, ஒண்ணிறவண்டமு முடைய நீண்டதே,”

“செங் கண்மால்மலர்ப்பதஞ் சென்றமோழையிற், றுங்கவண்டத்தினைச்சூழ்ந்தநீள் கடற்,
பொங்கவிழ்ந்தொழுகிய புனலை யன்றுகொல், கங்கையென்றின்ன முங் கழறுகின்றதே” என்ற கூர்மபுராணச் செய்யுள்களையும் காண்க.

புனல் – ஆவரணஜலம். பொன் தாள் – பொன்மயமான வீரக்கழலை யணிந்த திருவடி யென்றுமாம்;
“மேலெடுத்த, பொன்னார்கனைகழற்கா லேழு லகும்போய்க் கடந்து” என்றார் திருமங்கையாழ்வாரும்:
அடியார்களைப் பாதுகாத்தற்கென்று கட்டிய கழ லென்க; இவ்வுரைக்கு, பொன் – கருவி யாகுபெயர்.
முன்புனல் – முன்கூறிய புனல் எனினுமாம். அந் நாள் – பூர்வ காலத்தி லென்றபடி.

கீழ்க் கூறிப்போந்த வராகாவதாரத்தின் வைபவத்தோடு சேர்த்துத் திரிவிக்கிரமாவதாரவைபவத்தைக் கொண்டாடியது, இப்பாசுரம்;
உலகத்தை எடுத்தும் அளந்தும் ஆண்ட அவதாரங்கட்கு ஒற்றுமை யுண்டிறே. மேலக்கடாகம், அ – சாரியை.
கடாஹம், கோலம், குரம், மூலம் – வடசொற் கள். கடாகம் – ஓடு;
விளாஞ்சதையை விளாவோடுபோலவும் தேங்காயைத் தேங்காயோடுபோலவும் பதினான்குஉலகங்களையும்
மேலும் கீழும் பக்கங்களிலும் சூழ்ந்திருக்கின்ற அண்டகபாலம்; அண்டகோளத்தின் ஓடு,
அண்டமேலக்கடாகம் – அண்டகடாகத்தில் மேலிடம். மூலக் கடாகம் – அதிற்கீழி டம்.
கோலம் – பன்றி. புனற்கு = புனலில்; உருபுமயக்கம். பட்டு – படுத லால்: காரணப்பொருட்செயவெனெச்சமாகிய பட என்றதன்திரிபு.

———-

ஸ்ரீ பரசுராம அவதார வைபவம் –

மறிக்கும் கயல் கண்ணி பங்காளன் வாழ் வெள்ளி மால் வரையைப்
பறிக்கும் கபடன் பணிப் புயமோ அவன் பைங்கடகம்
செறிக்கும் புயம் செற்ற ஆயிரம் திண் புயமோ அவற்றைத்
தறிக்கும் திறல் மழுவோ அரங்கா சயத்தார் உடைத்தே –38-

(இ – ள்.) அரங்கா – திருவரங்கனே!
மறிக்கும் – பிறழ்கின்ற,
கயல் – கயல்மீன்போன்ற,
கண்ணி – கண்களையுடையவளான அம்பிகையை,
பங்கு ஆளன் – (தனது இடப்) பக்கத்திலுடையவனான சிவபிரான்,
வாழ் – வசிக்கின்ற,
மால் – பெரிய,
வெள்ளிவரையை – வெள்ளிமயமான மலையாகிய கைலாசத்தை,
பறிக்கும் – அடியோடு பெயர்த்தெடுத்த,
கபடன் – வஞ்சகனான இராவணனது,
பணை புயமோ – பருத்த (இருபது) கைகளோ, –
அவன் – அவ்விராவண னுடைய,
பைங் கடகம் செறிக்கும் புயம் – பசும்பொன்னாலாகிய கடகமென் னும்வளையை யணிந்த கைகளை,
செற்ற – வலியழித்து நெருக்கிக் கட்டிய,
திண் – வலிய,
ஆயிரம் புயமோ – (கார்த்தவீரியார்ச்சுனனது) ஆயிரங் கைகளோ,
அவற்றை தறிக்கும் – அவ்வாயிரங்கைகளையும் வெட்டித் தள்ளிய,
திறம் மழுவோ – (பார்க்கவராமனாகிய நினது) வலிமையையுடைய கோடா லிப்படையோ, –
சயம் தார் உடைத்து – (இவற்றில் எது) வெற்றிமாலையை யுடையது? (எ – று.)

மழுவே வெற்றிமாலையையுடைய தென்பதாம்.
சிவபிரானது கைலாச கிரியைப் பெயர்த்தெடுத்த இராவணன் மிகவலியவனென்றும்,
அவனிலும் கார்த்தவீரியன் வலியவ னென்றும்,
அவனிலும் பரசுராமன் வலியவ னென் றும் கூறியதாயிற்று.

விஷத்தையுண்டு கங்கையைத்தரித்து மேருவில்வளைத்துத் திரிபுரமெரித்து மன்மதனைத்தகித்து யமனையுதைத்து
அழித்தல் தொழில் நிகழ்த்தும் பேராற்றலையுடைய உக்கிரமூர்த்தியாவான் உருத்திர னென்பது பிரசித்தம்.
அக்கடவுள் வீற்றிருக்கின்ற கைலாசகிரியை இராவணன் வேரோடுபெயர்த்தன னென்பதும்,
அங்ஙனம் மிகவலியனாய்த் திக்கு விசயஞ்செய்து திக்கஜங்களையும் வென்ற இராவணனைக்
கார்த்த வீரியார்ச்சுனன் கட்டிச் சிறையிலிட்டன னென்பதும்,
அவ்வருச்சுனனைப் பரசுராமபிரான் தோள்துணித்துத் தொலைத்திட்டன னென்பதும்,
இதிகாசபுராணங்களால் விளங்குகின்றன: ஆகவே, பரசுராமபிரானது வலிமையும் வெற்றியும்
மிகமேம்பட்டன வென்பது நன்குவிளங்கும்;
ஆனதுபற்றி, இங்ஙனம் வினாவுகின்றவகையால் அப்பெருமானது மகிமையை வெளியிட்டார்.
இருபதைவென்ற ஆயிரத்தைத் துணித்த ஒன்று மிகமேம்பட்ட தென நயங் காண்க.
மேல்மேல் ஒன்றினும்ஒன்றுஉயர்ந்ததைச் சொல்லுதலால், மேன்மேலுயர்ச்சியணி; இதனை வடநூலார் ஸாராலங்கார மென்பர்.

“திசையுறுகரிகளைச்செற்றுத் தேவனும், வசையுறக்கயிலையைமறித்து வானெலா,
மசையுறப்புரந்தரனடர்த்ததோள்களி, னிசையினைத் தும்புருவிசையினேத்தவே,”
“ஈசனாண்டிருந்தபேரிலங்குமால்வரை, ஊசிவேரொடும் பறித்தெடுக்கு மூற்றத்தான்,”
“அரண்தருதிண்டோள்சாலவுளவெனி னாற்றலுண்டோ,
கரண்டநீரிலங்கைவேந்தைச் சிறைவைத்த கழற்கால்வீரன்,
திரண்டதோள்வனத்தையெல்லாஞ்சிறியதோர் பருவந்தன்னி,
லிரண்டுதோ ளொருவனன்றோ மழுவினாலெறிந்தா னென்றாள்” என்ற கம்பராமாயணம் இங்கு நோக்கத்தக்கது.

மகளிர்கண்ணுக்குக் கயல் – பிறழ்ச்சியில் உவமம். கயற்கண்ணி – மீநாக்ஷி.
“கயற்கண்ணிபங்காளன் வாழ் வெள்ளிமால்வரையைப் பறிக்குங் கபடன்” என்றதனால்,
பக்கத்திலுள்ள அம்பிகை அஞ்சி மருண்டுநோக்கிச் சிவபிரானைத் தழுவிக்கொள்ளும்படி
இராவணன் கைலாசகிரியைப் பெயர்த்தன னென்பதைக் குறிப்பித்தவாறாம்;
(“அருவியங்குன்றமரக்கன் பெயர்ப்ப, வெருவியவெ ற்பரையன்பாவை – பெருமா, னணியாகமாரத்தழுவினாள்” என்பது காண்க.)
வெள்ளி – வெண்ணிறமுடையது; காரணக்குறி: இ – பெயர்விகுதி.
“எட்டினாற் குடுமியைப்பிடிப்பது, எட்டாவிட்டாற் காலைப்பிடிப்பது” என்பதாக, முன்னும் பின்னும் சிவபிரானை வணங்கிப்
பிரார்த்தித்துப் பற்பலவரங்கள்பெறுப வனாயிருந்தும் இடையில் நன்றி கெட்டவனாய்ச் செருக்கி
அப்பெருமான் வாழ்கின்ற இடத்தைக் களையத்தொடங்கின துரோகி யென்பார். “கபடன்” என்றார்;
சீதாபிராட்டியை வஞ்சனையாற் கவர்பவ னாதல்பற்றி இங்ஙனங் கூறினாரு மாம்.
கபடம், புஜம், கடகம், ஜயம் – வடசொற்கள்.
கடகம் – ஒருவகைக் கைவளை. பைங் கடகம் – பொன்னின் பசுமை, கடகத்தின்மேலேற் றப்பட்டது.
செறித்தல் – சேர்த்தல். அணிந்த கடகம் புயத்தின்வளர்ச்சியால் அழுந்தப்பெற்ற வெனக் கொள்ளலுமாம்;
நாளொருவண்ணம் பொழுதொருமேனியாக அவன்புயங்கள் கொழுத்துச் செழித்துப் பருக்கின்றன வென்க.

“வெள்ளிமால்வரையைப்பறிக்குங் கபடன்” என்றதனால் “இராவணன்” என்பதும்,
“அவன்புயஞ்செற்ற ஆயிரம்புயம்” என்றதனால் “கார்த்தவீரிய னது” என்பதும்,
“அவற்றைத்தறிக்கும் மழு” என்றதனால் “பரசுராமனது” என்பதும் விளங்கின.
சயத் தார் – வெற்றிக்கு அறிகுறியான வாகைப்பூ மாலை; “போர்க்களத்து மிக்கோர் செருவென்றது வாகையாம்” என்பது காண்க.
‘திறம’ சயத்தாருடைத்துழு – “வென்றிமாமழுவேந்தி,”
“செரு நுதலூடுபோகி யவராவி மங்க மழுவாளின் வென்ற திறலோன்” என்றார் திருமங்கையாழ்வாரும்.

இராவணன் – பிரமபுத்திரரான புலஸ்தியமகாமுனிவரது குமாரராகிய விச்சிரவ முனிவருடைய மகன்;
குபேரனுக்குத் தம்பிமுறையானவன்; கேகசியென்னும் இராக்கதமாதினிடம் பிறந்தவன்;
பத்துத்தலைகளையும் இருபதுகைகளையும் உடையவன்; இலங்கைநகரத்தில் வாழ்ந்த ராக்ஷஸராஜன்;
அரியபெரியதவத்தைச்செய்து பெருவரங்கள் பெற்றுச் செருக்கியவன்; திரிலோகாதிபதியான இந்திரனையுமுட்பட வென்று அடக்கி ஆண்டவன்.

கார்த்தவீரியார்ச்சுனன் – சந்திரவம்சத்து யயாதிமகாராசனது மூத்த குமாரனாகிய யதுவினது குலத்தவனாகிற கிருதவீரியனுடைய குமாரன்;
பலபராக்கிரமங்களிற் சிறந்தவன்; நாராயணாம்சமாய் அத்திரிகுமாரராய் விளங்குகின்ற தத்தாத்திரேயமகாமுனிவரை ஆராதித்து
அவருடைய அநுக் கிரகத்தினால் ஆயிரந்தோள்களுடைமை, போரில் வெற்றி, பூமியை முறைப்படி பாதுகாத்தல்,
பகைவர்களால் அவமானப்படாமை, சகலலோகங்களுங் கொண்டாடும்படியான மகாபுருஷனால் மரணம் முதலிய பல வரங்களைப் பெற்று,
அநேக யாகங்களைச் செய்து, மாகிஷ்மதிநகரத்திற் பலகாலம் அர சாட்சிசெய்தவன்.
இவனிடம் விஷ்ணுவினுடைய சக்தி ஆவேசித்திருந்தது. (அதுபற்றிய விவரம் அடுத்தசெய்யுளுரையிற் காண்க.)

பரசுராமன் – உலகத்திலே எவரும் அழிப்பவரில்லாமையாற் கொழுத் துத்திரிந்து கொடுமையியற்றிவந்த
க்ஷத்திரியவம்சங்கள் பலவற்றை நாசஞ் செய்தற்பொருட்டு நாராயணமூர்த்தி ஜமதக்கினிமுனிவரது மனைவியான
ரேணுகையினிடம் இராமனாய்த் திருவவதரித்து, பரசுஎன்னுங் கோடாலிப் படையை ஆயுதமாகக்கொண்டு,
அதனாற் பரசுராமனென வழங்கப்பெற்றுத் தனது தந்தையின் ஓமதேனுவைக் கவர்ந்து அவனைக்கொன்றிட்டது
காரண மாகக் கார்த்தவீரியார்ச்சுனனையும் அவனதுகுமாரர்களையுங் கொன்று அத னாலேயே க்ஷத்திரிய வம்சம்
முழுவதன்மேலுங் கோபாவேசங்கொண்டு உலகத்திலுள்ள அரசர்கள் பலரையும் இருபத்தொருதலைமுறை பொருது ஒழித்திட்டான்;
ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவன் இவன்.

————

இது முதல் எட்டு பாசுரங்கள் ஸ்ரீ ராமாவதார வைபவம்

மாதண்டம் மேவும் கரத்தர் அரங்கர் வடமிதிலைக்
கோதண்டம் வேகம் பிறப்பித்த போது குவட்டு வெள்ளி
வேதண்டம் மேய மழுவாளி நாணினன் வென்றி கண்டு
மூதண்டம் அஞ்சும் மழுவாளி கோபம் முதிர்ந்ததுவே –39-

(இ – ள்.) மா தண்டம் மேவும் கரத்தார் – பெரிய (கௌமோதகி யென்னுங்) கதாயுதம் பொருந்திய திருக்கையை யுடையவராகிய,
அரங்கர் – திருவரங்கநாதர்,
வட மிதிலை – வடக்கிலுள்ள மிதிலாபுரியிலே,
கோதண்டம் வேகம் பிறப்பித்த போது – வில்லை வளைத்து முறித்து அதிலிருந்து உக்கிரமான ஓசையை யுண்டாக்கியபொழுது, –
குவடு வெள்ளி வேதண்டம் மேய மழு ஆளி நாணினன் – சிகரத்தையுடைய வெள்ளிமலையாகிய கைலாசத்திற் பொருந்திவாழ்கின்ற மழுவென்னும்ஆயுதத்தையுடையவனான சிவபிரான் வெள்கினான்;
வென்றி கண்டு – (ஸ்ரீராமபிரானது) அவ்வெற்றியை நோக்கி,
முது அண்டம் அஞ்சும் மழுஆளி கோபம் முதிர்ந்தது – பழமையான அண்ட கோளத்திலுள்ளவரனைவரும் அஞ்சும்படியான கோடாலிப்படையையுடை யவனாகிய பரசுராமனது கோபம் மிக்கது; (எ – று.)

விதேகதேசத்து மிதிலாபுரியில் வாழ்கின்ற ஜநகமகாராஜன், தனது குலத்துப்பூர்விகராஜனான தேவராதனிடம்
சிவபிரானால் வைக்கப்பட்டிருந்த தொரு பெரிய வலிய வில்லை எடுத்து வளைத்தவனுக்கே தான் வளர்த்த மகளான
சீதையைக் கல்யாணஞ்செய்துகொடுப்ப தென்று கந்யாசுல்கம் வைத்திருக்க,
வேள்விமுடித்த விசுவாமித்திரமுனிவனுடனே மிதிலைக்குச்சென்ற ஸ்ரீராமபிரான் அவ்வில்லை யெடுத்து வளைத்து நாணேற்றுகையில்,
அது பேரொலிபடுமாறு முறிந்திட, அதனாற் சனகன் இராமனாற்றலைக்கண்டு மிக்ககளிப்புக்கொண்டு
சீதையை இராமனுக்கு மணம்புரியலாயின னென்பதும்;
சீதாகல்யாணத்தின்பின் தசரதசக்கரவர்த்தி தனதுகுமாரர்களுடன் மிதிலையினின்று அயோத்திக்கு மீண்டுவருகையில்,
பரசுராமன் வலியச் சென்று இராமபிரானை யெதிர்த்து
“முன்பு ஹரிஹரயுத்தத்தில் இற்றுப் போன சிவதநுசை முறித்த திறத்தை யறிந்தேன்; அதுபற்றிச் செருக்க டையவேண்டா:
வலிய இந்த விஷ்ணுதநுசை வளை, பார்ப்போம்” என்று அலக்ஷ்யமாகச்சொல்லித்
தான்கையிற்கொணர்ந்த வில்லைத் தசரதராமன் கையிற் கொடுக்க, அப்பெருமான் உடனே அதனைவாங்கி
எளிதில்வளைத்து நாணேற்றி அம்புதொடுத்து “இந்தப்பாணத்திற்கு இலக்கு யாது?” என்று வினாவ,
பரசுராமன் அதற்குஇலக்காகத் தனது தபோபலம் முழுவதையும் கொடுக்க,
அவன் க்ஷத்திரியவம்சத்தைக் கருவறுத்தவனாயிருந்தாலும் வேத வித்தும் தவவிரதம்பூண்டவனுமாயிருத்தல்பற்றி
அவனைக்கொல்லாமல் அவ னதுதவத்தைக்கவர்ந்தமாத்திரத்தோடு ஸ்ரீராமன் விட்டருளின னென்பதும், இங்கு அறியவேண்டியவை.

விஷ்ணுவின் தசாவதாரங்களுள் ஆறாம்அவதாரமான பரசுராமன் ஏழாம்அவதாரமான தசரதராமன்மீது கோபித்தலும்,
இவ்விருவரும் ஒருவ ரோடொருவர் பொருதலும், அவர்களில் ஒருவர் மற்றொருவரை வெல்லு தலும் பொருந்துமோ வெனின், –
துஷ்டர்களாய்க் கொழுத்துத்திரிந்த அரசர்களைக் கொல்லுதற்பொருட்டுப் பரசுராமனிடத்தில் ஆவேசித்திருந்த
விஷ்ணுசக்திவிசேஷம் அக்காரியம்முடிந்தபின்பு அவ்விஷ்ணுவின் அம்சா வதாரமான தசரதராமனாற் கவர்ந்து
கொள்ளப்பட்ட தாதலிற் பொருந்து மென்க. இதனால், ஆவேசாவதாரத்தினும் அம்சாவதாரத்திற்கு உள்ள ஏற்றம் விளங்கும்.

ஸ்ரீமந்நாராயணனது விபவாவதாரங்கள் அளவற்றன. அவை, முக்கியம், அமுக்கியம் என இருவகைப்படும்.
இவற்றில், முந்தியது – சிறந்தது; பிந்தியது – அதனிலும் தாழ்ந்தது.
முக்கியமாவது – ஸாக்ஷாதவதாரம். அமுக் கியமாவது – ஆவேசாவதாரம்.
ஆவேசந்தான், ஸ்வரூபாவேசமென்றும் சக்தி யாவேசமென்றும் இருவகையதாம்.
ஸ்வரூபாவேசமாவது – சேதகருடைய சரீரங்களில் எம்பெருமான் தன்னுடையரூபத்துடன் ஆவேசித்து நிற்றல்;
பரசுராமன், பலராமன் போல்வார் இத்திறத்தவர்.
சக்தியாவேசமாவது – சேதநர்பக்கல் காரியகாலத்திலே எம்பெருமான் சக்திமாத்திரத்தால் தோன்றி விளங்குதல்;
கார்த்தவீரியார்ச்சுனன், அருச்சுனன், வியாசர் போல்வார் இத்திறத்தவர்.

இவற்றிற் சக்தியாவேசத்தினும் ஸ்வரூபாவேசம் பிரபலம். இவற்றின் உண்மை நிலையை விஷ்வக்ஸேந ஸம்ஹிதை
முதலிய ஸ்ரீபாஞ்சரா த்ரஸம்ஹிதைகளிலும், தத்வத்ரயத்திலும், அதன் வியாக்கியானத்திலும் பரக்கக் காணலாம்.
தசாவதாரங்களுள் பரசுராமாவதாரமும் பலராமா தாரமும் – ஸ்வரூபாவேசாவதாரங்கள். மற்றவை – ஸாக்ஷாதவதாரங்கள்.
வில் லுங் கையுமாய் உலகத்தை நன்றாய்ஆளுகைக்காகக் கார்த்தவீரியார்ச்சுன னிடம் திருமாலின்சக்தி சிறிது ஆவேசித்திருந்தது.
துஷ்ட க்ஷத்ரியநிரஸநார் த்தமாகப் பரசுராமரிடம் திருமால்தானேசக்திவிசேஷத்தால் ஆவேசித்திரு ந்தான்.
தசரதராமாவதாரம் – ராவணவதத்தின் பொருட்டுத் திருமால்தானே நேராய் அவதரித்தது.
(இவற்றில் முந்தினஇரண்டும் – அஹங்காரயுக்தஜீவர் களை அதிஷ்டித்துநின்றவை.)
இவற்றில் ஒன்றைக்காட்டிலும் ஒன்றற்குஉள்ள உயர்வை, கார்த்தவீரியனைப் பரசுராமன் கொல்ல,
அப்பரசுராமனைத் தசரத ராமன் வென்றதனால் நன்கு விளங்கக் காணலாம்.

(“ஸ்வரூபாவேசாவதார மாய்த் தசாவதாரமத்யே ஸஹபடிதனாய்ப்போருகிற அப்பரசுராமன்தான் நிரஸ்தனானபடி எங்ஙனே யென்னில், –
ஸ்வரூபாவேசத்திலும் ஸாக்ஷாதவ தாரம் ப்ரபலமாகையாலே, அத்யுத்கடத்வமுண்டானபோது இதனாலே அது நிரஸ்தமாகக் குறையில்லை.
சக்த்யாவேசத்தில் ஸ்வரூபாவேசம் ப்ரபலமான வோபாதி, ஸ்வரூபாவேசத்தில் ஸாக்ஷாதவதாரம் ப்ரபலமாகத் தட்டில்லை யிறே.
சக்த்யாவேசத்தில் ஸ்வரூபாவேசம் ப்ரபலமாகையாலேயிறே, ஸஹ ஸ்ரபாஹ்வர்ஜுநன் பரசுராமனாலே நிரஸ்த னாய்த்து”
என்ற வியாக்கியான வாக்கியங்கள் காணத்தக்கன.)

சிவபிரான் தான் அருமையாகக் கைக்கொண்டு ஆண்டு பகைவென்று வந்த மிகவலிய வில்லை ஸ்ரீராமன்
வெகுஅலக்ஷ்யமாக இடக்கையாலெடுத்து நிறுத்தி வளைத்து முறித்தமைபற்றி நாணின னென்க.
ஸ்ரீராமன் அவ்வில்லில் நாணேற்றி அந்நாணியைத்தெறித்துச் சத்தமுண்டுபண்ணி இழுக்கும் பொழுது அவ்வில் முறிகையில்,
அதிலிருந்து பேரிடிமுழக்கம்போலவும் மலை பிளந்தாற்போலவும் அண்டகோளம் அதிரும்படி பெரியசத்தம் எழுந்துபரவி யதை
“கோதண்டவேகம்பிறப்பித்தல்” என்றார். க்ஷத்ரியவம்சநாசகரனான பரசுராமன் அவ்வோசையைக்கேட்டவுடனே
க்ஷத்ரியவம்சந்தளிர்ப்பதைக் குறித்துப்பெருங்கோபங்கொண்டு ஓடிவந்ததனால் “வென்றிகண்டு மழுவாளி கோபமுதிர்ந்தது” எனப்பட்டது. (“சரியில்மன்னிறுத்தவல்வில்லொலியினை ச்சகியமென்னும், வரைமிசையதனிற்கேட்டு மனமுறுசினத்தினோடும்,
பரசு ராமன்றா னெய்திப் பழிப்பிலாவிராமன் றன்னோ, டுருமெனவுலகமஞ்சவுரு த்திவையுரைத்தானம்மா” என்ற
மகாபாகவதம் இங்கே நோக்கத்தக்கது.)

மஹாதண்டம், கரம், மிதிலா, கோதண்டவேகம், வேதண்டம், கோபம் – வடசொற்கள்.
மிதிலை எவ்விடத்திலுள்ள தென்றால், வடக்கி லுள்ளதென வேண்டுதலின், அதனை ‘வடமிதிலை’ என விளங்கக்கூறினார்;
“வடவேங்க டந் தென்குமரி” என்றாற்போல. எனவே, இங்கு ‘வடக்கு’ – இனம்விலக்க வந்த அடைமொழியன் றென்க.
மிதிலை யென்பதற்கு – மிதியென்பவனால் ஏற்படுத்தப்பட்ட நகரமென்பது பொருள்.
மிதியென்பது, ஜநககுலத்தலை வனான ஓரரசனுக்குப் பெயர்; கடைந்ததனாலுண்டானமைபற்றியது.
வேத ண்டம் -மலை. மழு ஆளி – மழுவை ஆள்பவன்: வாளி – மழுவாகிய படைக் கலத்தையுடையவன்.
மழு – எரியிரும்புப்படையும், கோடாலியும்: இதனை வலக்கையிற் கொண்டுள்ளார்.
“வென்றிகண்டு” என்பதை, மத்திமதீபமாக, முன்வாக்கியத்தோடும் கூட்டலாம்; மேம்பாட்டைநோக்கி யென்க.
இனி, மூதண்டம் வென்றிகண்டு அஞ்சும் மழுவாளி யென்னவுமாம். இருபத்தொருமுறை உலகைச்சுற்றிவந்து
க்ஷத்திரியசங்காரஞ்செய்தவ னாதலால், “அண்டமஞ்சும் மழுவாளி” எனப்பட்டான்.
தண்டம் ஏவும் எனப்பிரித்து, கதாயுதத்தைப் (பகைவெல்லுமாறு) பிரயோகிக்கின்ற என்றலு மொன்று. அண்டம் – இடவாகுபெயர்.

இப்பாசுரத்தால், ஸ்ரீராமபிரானது பேராற்றலும், பரத்வமும் கூறப்பட்டன.

————–

மாகம் பிலம் திக்கு இமையோர் உலகம் மழுவுடையோன்
நாகம் நல் நாடு அளவாக பல் நாகம் நடுங்க அம்பு
வேகம் கொடு தொடர பறந்து ஓடியும் மீண்டு வந்து
காகம் சரண் என்ன நம் பெருமாள் உயிர் காத்தனரே –40-

(இ – ள்.) காகம் – காகாசுரன்,
பல் நாகம் நடுங்க அம்பு வேகம் கொடு தொடர – பலதிசைகளிலுள்ள பிராணிகளும் அஞ்சி நடுங்கும்படி (இராம பிரானது) பாணம் வேகங்கொண்டு (தன்னைத்) தொடர்ந்துவருதலால்,
மாகம் – பெரிய ஆகாயமும்,
பிலம் – பாதாளலோகமும்,
திக்கு – திசைகளும்,
இமையோர் உலகம் – தேவலோகமும்,
மழுஉடையோன் நாகம் – மழுவென் னும்ஆயுதத்தையேந்தியவனான சிவபிரானது (கைலாச) கிரியும்,
நல் நாடு – நல்ல இந்தப்பூலோகமும்,
அளவு ஆக – ஆகிய இவற்றின் எல்லையுள்ளவரையிலும்,
பறந்து ஓடியும் – பறந்து ஓடிப்போய்ப் பார்த்தும், (தனக்குப்புக லிட மொன்றும் வாய்க்காமையால்),
மீண்டு வந்து – திரும்பி வந்து,
சரண் என்ன – “(உனது திருவடியே) சரணம்” என்று அடைக்கலம்புக,
நம்பெருமாள் உயிர் காத்தனர் – ஸ்ரீரங்கநாதனாகியஅவ்விராமபிரான்தானே (அந்தக் காகாசுரனது) உயிரைப் பாதுகாத்தருளினர்; (எ – று.)

“சித்திரகூடத் திருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட,
அத்திரமேகொண் டெறிய வனைத்துலகுந் திரிந்தோடி,
வித்தகனே யிராமாவோ நின்னபய மென்றழைப்ப,
அத்திரமே யதன்கண்ணை யறுத்தது மோரடையாளம்” என்ற பெரியாழ்வார்திருமொழி, இங்கே நோக்கத்தக்கது.

(அதன் வியாக் கியானத்தில் “முந்துறப் பித்ருக்ருஹத்திலே சென்றவளவில் பிதாவாலும் மாதாவாலும் கைவிடப்பட்டு,
பந்துக்களானவர்கள் கைக்கொள்ளுவர்களோ வென்று அவர்கள்பக்கலிலே சென்றவளவில் அவர்களாலும் பரித்யக்தனாய்,
ஆந்ருஸம்ஸ்யப்ரதாநரான ருஷிகள்தான் கைக்கொள்ளுவர்களோ வென்று அவர்கள்பக்கலிலே சென்றவளவில்
அவர்களும் கைவிடுகையாலே, திறந்து கிடந்த வாசல்கள்தோறும் ஒருகால்நுழைந்தாற்போலே
ஒன்பதின்கால் நுழைந்து மூன்று லோகங்களையும்வளைய ஓடித்திரிந்தவிடத்திலும் ஒருவரும் கைக்கொள்ளாமையாலே
“தமேவ ஸரணம் கத:” என்கிறபடியே “சீறி னாலும் காலைக்கட்டிக்கொள்ளலாம்படியிருக்கும் க்ருபாவா னாகையாலே
விஸ்மயநீயனாய் எல்லாரையும் குணத்தாலே ரமிப்பிக்கவல்லவனே!” என்று சரண்யரான பெருமாள் குணத்தைச் சொல்லி
ஓ!” என்று தன்னுடைய அநந்ய கதித்வத்தை முன்னிட்டுக்கொண்டு “உனக்கு அபயம்” என்று ஸரணாகத னானமை தோற்றக் கூப்பிட,
இப்படி ஸரணம்புகுகையாலே,…….க்ருபையாலே பெருமாள் ரக்ஷித்தருளுகிறவளவில்,
காகத்துக்கு ப்ராணப்ரதா நம்பண்ணி, அஸ்த்ரத்துக்கு ஒரு கண்ணழிவு கற்பிக்கையாலே,
முன்பு தலை யறுப்பதாகத்தொடர்ந்த அஸ்த்ரம்தானே அதனுடைய ஒருகண்ணை அறுத்து விட்டது” என்றதும் காண்க.)

“அங்கதஞ்சிநடுங்கி யயன்பதியண்மி, இங்குநின்வரவென்ன வெனக்கனல்வெய்த,
மங்கைபங்கனொடெண்டிசை யுஞ்செல மற்றோர், தங்கள் தங்களிடங்கள் மறுத்தமை தைப்பாய்” என்ற கம்பராமாயணத்தாலும்,
அக்காகம் எங்கும்சரண்பெறாமை விளங்கும்.
பெருமாளுடைய கோபத்திற்கு இலக்கான இதனை ஏற்றுக்கொண்டால் நமக்கு முட்பட என்வருமோ வென்னும் அச்சத்தாலும்,
ஆற்றலில்லாமையாலும், எவரும் அதற்குப் புகலிடமாகவில்லை யென்க. பெருமான் கிருபையாலே மந்தகதியாகச் செலுத்த
அங்ஙனமே மெதுவானநடையுடன் காகத்தை அஸ்திரம் பின்தொடர்ந்து சென்றிருக்கவும்
“அம்பு வேகங்கொடு தொடர” என்றது, அஞ்சியோடுவதும் இயல்பில் விரைந்த நடையில்லாததுமான
காக த்தின் கருத்தாலே யென்க;
“காகமொன்றை முனிந் தயல்கல்லெழு புல் லால், வேகவெம்படைவிட்டது” என்றார் கம்பராமாயணத்திலும்.
இனி, வேகம் – உக்கிரத்தன்மையுமாம்.

மாகம் – மஹாகம் என்ற வடசொல்லின் விகாரம். திக், நாகம், வேகம், காகம் – வடசொற்கள்.
நாகம் – மலை யென்ற பொருளில், இடம்விட்டுப் பெயராத தென்று காரணப்பொருள்பெறும்.
சுவர்க்கத்தை யடைகின்றவர்களுக்கும் மோக்ஷத்தை யடைகின்றவர்களுக்கும் பிரவிருத்தி நிவிருத்தி கர்ம ஸாதநபூமி
இதுவே யாதலால், “நல்நாடு” என்றார். ‘மாகம்’ என்றது, புவர் லோகத்தை.
“இமையோருலகம்” என்றது, ஸுவர்லோகம் முதலியவற்றை. “நல்நாடு” என்றது, பிரமனது சத்தியலோகத்தையு மாகலாம்.
இமையோர் – கண்இமையாதவர்; எதிர்மறைப் பலர்பால் வினையாலணையும்பெயர்: எதிர் மறையாகாரம் புணர்ந்துகெட்டது:
விகுதி முதல் ஆகாரம் ஓகாரமாயிற்று. மாகம் – திசை: திசைகளிலுள்ள பிராணிகளுக்கு இடவாகுபெயர்.
இனி, மலையென்றுங் கொள்ளலாம். நடுங்குதல் – அச்சத்தால் உள்ளமும் உடலும் நடுங்குதல்.
காகம் – காஎன்று கத்துவதெனப் பொருள்படுங் காரணக்குறி.
சரண் – ஸரண மென்ற வடசொல்லின் விகாரம்; பாதுகாப்பவ னென்பது பொருள்.

இப்பாசுரத்தால், ஸ்ரீராமபிரானது ஆற்றலும், அருளும், சரணாகதரக்ஷ கத்வமும், பரத்வமும் கூறப்பட்டன.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading