ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவரங்கத்து மாலை. – -1-20-

ஸ்ரீ திருவரங்கத்து மாலை நூலின் புறமாக முதலிற்கூறிய காப்புச்செய்யு ளொன்றும்,
இறுதியிற் கூறும் தற் சிறப்புப் பாயிரச்செய்யுளொன்றும் நீங்கலாக
நூற்றுப் பதினொரு செய்யு ளுடையது,
இந்நூல், கட்டளைக் கலித்துறையினால் அமைந்தது.

சிறப்புப் பாயிரம் -அபியுக்தர் அருளிய தனியன் –

மறைப் பொருளோ அச்சிரப் பொருளோ மனுவே முதலாம்
முறைப் பொருளே இதிகாகச புராண முதுப் பொருளோ
இறைப் பொருளாம் நம் பெருமாளுடைத் திரு எட்டு எழுத்துள்
உரைப் பொருளோ மணவாளர் தம் மாலையின் உட் பொருளே –

மணவாளர் தம் – அழகிய மணவாள தாசருடைய,
மாலையின் – திருவரங்கத்து மாலையினது,
உள் – உள்ளே யமைந்திருக்கின்ற,
பொருள் – பொருளானது, –
மறை பொருளோ – வேதங்களின் பொருளேயோ?
அ சிரம் பொருளோ – அவ்வேத முடிவுகளின் பொருளேயோ?
மனுவே முதல் ஆம் – மநு ஸ்மிருதி முதலான,
முறை – தரும சாஸ்திரங்களின்,
பொருளோ – பொருளேயோ?
இதிகாச புராணம் முது பொருளோ – இதிகாசங்கள் புராணங்கள் என்னு மிவற்றினது தேர்ந்த பொருளேயோ?
இறை பொருள் ஆம் – பரதத்துவமாகிய,
நம் பெருமாளுடை – நம்பெருமாளுடைய,
திரு எட்டு எழுத்து – ஸ்ரீஅஷ்டாக்ஷரமந்திரத்தினது,
உள்உறை – உட் கருத்தாகிய,
பொருளோ – பொருளேயோ? (என்றவாறு.) – ஏகாரம் – ஈற்றசை.

இங்ஙனம் ஐயந்தோன்றப் பலவாறு விகற்பித்துக் கூறினாராயினும்,
வேதம் வேதாந்தம் தரும சாஸ்திரம் இதிகாசம் புராணம் அஷ்டாக்ஷரம் என்னும் இவை யெல்லாவற்றினது பொருளும்
இத்திருவரங்கத்துமாலையில் அடங்கியிருக்கின்றன வென்பது கருத்தாம்.
எனவே, இவ்வாறு பலவகையாக ஐயப்பட்டது, இன்னதென்று ஒன்றன்மையாலே வரை யறுத்துச் சொல்லத் தெரிந்திலே னென்ற தல்லது,
தேர்ந்து தெளியாமையாற் சொன்ன தன்றென்று அறிக.

புகழு நல் ஒருவன் என்கோ-பொருவில் சீர் பூமி என்கோ –
திகழும் தண் பரவை என்கோ -தீ என்கோ வாயு என்கோ
நிகழும் ஆகாசம் என்கோ நீள் சுடர் இரண்டும் என்கோ –
இகழ்வில் இவை யனைத்தும் என்கோ –என்றால் போலே ஈடு பட்டு வியந்து சங்கை போலே அருளிச் செய்கிறார் இங்கு

இதனால், இந்நூலின் சிறப்பையும், இந்நூலாசிரியரது வேத சாஸ்திர பாண்டித்திய விசேஷத்தையும் விளக்கியவாறாம்.
மறைப்பொருள் முதலிய யாவும் இந்நூலில் இருத்தலை வெளிப்படையாகக் காணலாம்;
குறிப்பால் நுண்ணிதின் உய்த்து உணரத்தக்க இடங்களும் உண்டு.

(ஓதலாகாதென்று சிலர்க்கு) மறுக்கப்படுதல் பற்றி, மறையென்று பெயர்; மறு – பகுதி, ஐ – செயப்படுபொருள் விகுதி.
இனி, இச்சொல்லுக்கு – (எளிதிலுணரலாகாதபடி) மறைந்துள்ள பொருள்களையுடைய தென்று காரணப் பொருள் கூறவுமாம்.
அவ்வேதந்தான், ருக் யஜுஸ் ஸாமம் அதர்வணம் என நான்கு வகையது.
பொருள் – அர்த்தம். வேதத்தின் பிரிவு இரண்டனுள், யாகாதி கிரியைகளைக் கூறுவதும் கர்ம காண்டமெனப்படுவதுமான
பூர்வ பாகத்தின் பொருளை “மறைப்பொருள்” என்றும்,
பகவானைக் குறித்ததும் உபநிஷத்தென்றும் வேதாந்தமென்றும் பிரம காண்டமென்றுங் கூறப்படுவதும்
வேதத்தின் தேர்ந்த கருத்துமான உத்தர பாகத்தின் பொருளை “அச்சிரப்பொருள்” என்றுங் கூறினர்.
அச்சிரம் – வேதசிரம் என்றபடி.

செய்யா மொழியாதலாற் சிறந்த பிரமாணமாகிற வேதத்தின் பொருளை ஐயந்திரிபற நிச்சயிப்பதற்கு உரிய ஸாதநங்கள்,
ஸ்மிருதிகளும் இதிகாச புராணங்களுமாம். ஆதலால், அவை வேதத்திற்கு உப ப்ரும்ஹணங்க ளெனப்படும்;
அவற்றுள், பெரும்பாலும் வேதத்தினது பூர்வ பாகத்தின் அர்த்தம் ஸ்மிருதிகளாலும்,
உத்தர பாகத்தின் அர்த்தம் இதிகாச புராணங்களாலும் நிச்சயிக்கத் தக்கது;
இதிகாசபுராணங்களுட் புராணங்களினும் இதிகாசம் பிரபலமான பிரமாணமாம் என்பது உணர்க.
இதுவே, மறைப்பொருள் முதலியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்திய முறைமைக்குக் காரணம்.

(“வேதார்த்தம் அறுதியிடுவது, ஸ்ம்ருதீதிஹாஸபுராணங்களாலே; ஸ்ம்ருதியாலே, பூர்வபாகத்திலர்த்தம் அறுதியிடக்கடவது;
மற்றையிரண்டாலும், உத்தரபாகத்திலர்த்தம் அறுதியிடக்கடவது. இவையிரண்டிலும் வைத்துக்கொண்டு இதிஹாஸம் ப்ரபலம்;
அத்தாலே, அது முற்பட்டது” என்ற ஸ்ரீவசநபூஷண வாக்கியங்களும், அவற்றின் வியாக்கியானங்களும் இங்கு நோக்கத்தக்கன.)

வேதத்தின் பொருளை நினைத்துச் செய்யப்பட்டன வாதலால் ஸ்ம்ருதிகளென்று பெயர் பெற்றனவும்,
ஆப்தர்களான மநு அத்ரி விஷ்ணு ஹாரீதர் யாஜ்ஞ வல்க்யர் பராசரர் முதலானவர்களாற் சொல்லப்பட்டனவுமான
தரும சாஸ்திரங்கள், “மனுவே முதலாம் முறை” எனப்பட்டன;
அவை, பதினெட்டு. அவையெல்லாவற்றினுள்ளும் மநுஸ்ம்ருதியே மிகச்சிறத்தலால், “மனுவே முதலாம்” என்று
அதனையே தலைமையாக எடுத்துக்கூறினர்;

(எல்லா ருஷிகளும் ஒருதட்டும், மநு ஒரு தட்டுமாம்” என்றும்,
“மநுஸ்ம்ருதிக்கு மாறாக மற்றைப் பதினேழு ஸ்ம்ருதிகளும் ஒரேவாக்காய்ச் சொல்லியிருந்தாலும் அது ஒப்புக்கொள்ளத்தக்கதன்று” என்றும்,
“மநுஸ்ம்ருதிக்கு விரோதமான ஸ்ம்ருதி புகழையடையாது” என்றும் பல இடங்களில் அந்நூலின் சிறப்புக் கொண்டாடப்பட்டிருத்தல் காணலாம்.)

இதிஹாஸங்களாவன – பூர்வசரித்திரத்தைக் கூறுவனவான ஸ்ரீராமாயணம், மகாபாரதம் முதலியன.
புராணங்களாவன – ஸ்ருஷ்டிக்கிரமம் முதலிய ஐந்துலக்ஷணங்களுடன் கூடியவையான பிராம்மம் பாத்மம் வைஷ்ணவம் முதலிய பதினெட்டாம்.

(புராணத்திற் காட்டில் இதிஹாஸத்துக்கு ப்ராபல்யம் – பரிக்ரஹாதிசயம், மத்யஸ்தசை, கர்த்துராப்ததமத்வம் ஆகிற இவற்றாலே” என்பர் ஆன்றோர்;
இதன் விவரத்தை, தத்வ நிர்ணயம், ஸ்ரீஸஹஸ்ரநாம பாஷ்யம், ஸ்ரீவசநபூஷண வியாக்கியானம் முதலியவற்றிற்
கண்டும், கற்றுங் கேட்டு முணர்ந்த ஆன்றோர்பக்கல் கேட்டும் உணர்க; இங்கு விரிப்பிற் பெருகும்.)

இறைப் பொருள் – தலைமையாகிய பொருள். “முதலாவார் மூவரே யம்மூவருள்ளும், முதலாவான் மூரிநீர் வண்ணன்” என்றபடி
எம்பெருமான் தேவாதி தேவனும் ஸர்வேச்வரனு மாதலால், “இறைப்பொருளாம் நம்பெருமாள்” என்றார்.
“இறைப்பொருளாம்” என்றதைத் திருவெட்டெழுத்திற்கு அடைமொழியாகவுங் கொள்ளலாம்.
எட்டுத்திருவக்ஷரமாய் மூன்றுபதமாயிருப்பதும் நாராயணநாமத்தையுட் கொண்டதுமான பெரியதிருமந்திரம்
ஸகலவேதாந்ததாத்பர்யமாய் எல்லாமந்திரங்களினும் பிரதான மாதலால், “இறைப்பொருளாம் திருவெட்டெழுத்து” எனத்தகும்.

“ஸகலதைவங்களிலும் ஸர்வேஸ்வரன் ப்ரதாநனாகிறாப்போலே, ஸகலமந்த்ரங்களிலும் இம்மந்த்ர விசேஷம் ப்ரதாநமாயிருப்ப தொன்று”
என்று ஆன்றோர் அருளிச் செய்திருப்பதை நோக்குமிடத்து “இறைப்பொருளாம்” என்றதை
நம்பெருமாள், திருவெட்டெழுத்து என்ற இரண்டனோடுஞ் சேர்த்தல் இனிதாம்.

நம்பெருமாள். ஸ்ரீரங்கநாதன். இத்திருநாமம், உயர்ச்சியைவிளக்கும்;
“நம் பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை, யென்ப ரவரவர்த மேற்றத்தால், அன்புடையோர் சாற்று திருநாமங்கள்”
என்ற உபதேசரத்தினமாலையைக் காண்க.
பதரிகாச்சிரமத்தி லெழுந்தருளியிருக்கின்ற நாராயணனது திருவெட்டெழுத்தை “நம்பெருமாளுடைத்திருவெட்டெழுத்து” என்றது,
திவ்வியதேசத்து எம்பெருமான்களில் நம்பெருமாளுக்கு உள்ள தலைமைபற்றி யென்க.
ஸ்ரீரங்கதிவ்வியதேசத்து மூலமூர்த்தியைப் பெரியபெருமாளென்றும், உத்ஸவமூர்த்தியை நம்பெருமாளென்றும் வழங்குவது, ஸம்பிரதாயம்;
இருவர்க்கும் பொதுப்படக் கூறுதலும், “எம்பெருமான்” என்றாற்போல நமதுகடவுளென்றபொருளில் திருமாலை “நம்பெருமாள்” என்றலும் உண்டு.

“ஸம்ஸாரிகள் தங்களையும் ஈச்வரனையும் மறந்து ஈச்வர கைங்கர்யத்தையும் இழந்து இழந்தோமென்கிற இழவு மின்றிக்கே
ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபட, ஸர்வேச்வரன் தன் க்ருபையாலே இவர்கள் தன்னை யறிந்து
கரைமரஞ்சேரும்படி தானே சிஷ்யனுமாய் ஆசார்யனுமாய் நின்று திருமந்த்ரத்தை வெளியிட்டருளினான்”
ஆதலால், “நம்பெருமாளுடைத் திருவெட்டெழுத்து” எனப்பட்டது.
இங்கு, ஆறாம் வேற்றுமையுருபு செய்யுட்கிழமைப் பொருளின்பாற்படும்.
ஆதியில் பதரிகாச்சிரமத்திலே நாராயணனால் நரனுக்கு உபதேசிக்கப்பட்ட திருமந்திர மென்க.
இனி, விஷயமாக வுடைமையை ஆறாம் வேற்றுமைப் பொருளாகிய கம்பந்த மெனக் கொண்டு, நம்பெருமாள் விஷயமான
அதாவது ஸ்ரீமந் நாராயணனை யுணர்த்துகின்ற திருமந்திர மென்றலு மாம்.

திருவெட்டெழுத்துள்ளுறைப்பொருள் – பரமாத்மஸ்வரூபம், ஜீவாத்மஸ்வரூபம், இவ்விருவர்க்குமுள்ள ஸம்பந்தத்தின் ஸ்வரூபம் முதலியன.
(“இத்தால், ஈச்வரன் ஆத்மாக்களுக்குப் பதியாய் நின்று ரக்ஷிக்கு மென்கிறது.
ஆக, திருமந்த்ரத்தால், எம்பெருமானுக்கே யுரியேனான நான் எனக்கு உரியனன்றிக்கே யொழிய வேணும்;
ஸர்வ சேஷியான நாராயணனுக்கே எல்லா வடிமைகளுஞ் செய்யப் பெறுவேனாக வேணு மென்ற தாய்த்து” என்ற முழுக்ஷுப்படியைக் காண்க.)

ஓகாரங்கள் – ஐயப்பொருளன. ஸிரஸ், மநு, இதிஹாஸ புராணம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
இங்கு “மனு” என்றது – சுவாயம் புவமநுவினாற் செய்யப்பட்ட நூலைக் குறித்தது; கருத்தாவாகுபெயர்:
“திருவள்ளுவர்” என்றாற் போல. ஏகாரம் – உயர்வுசிறப்பு; அசையுமாம்.
முறையை (ஒழுக்கத்தை) யுணர்த்தும் நூலை “முறை” என்றது, காரிய வாகுபெயரின் பாற்படும்.
முறையென்ற சொல்லுக்கு நூலென்ற பொருளும் உண்டு.

இதிகாச புராணங்களைச் சேர்த்துக்கூறியதன் காரணம், இரண்டும் வேதாந்தப் பொருளைத் தெளிவிப்பனவாதல்.
“இதிஹாஸபுராணம்” என்னும் உம்மைத் தொகை, வடநூல் முடிபு.
“குறைந்த உயிரெழுத்துக்களையுடைய சொல்லாவது சிறப்புடைய சொல்லாவது உம்மைத் தொகையில் முந்திநிற்பதாதல் வேண்டும்” என்ற
வடமொழி வியாகரணநூலார் கொள்கையில் முதல் வகையின்படி “புராணேதிஹாஸம்” என்ன வேண்டி யிருக்க
அங்ஙனங்கூறாது “இதிஹாஸபுராணம்” என அதிக உயிரெழுத்துக்களையுடைய இதிஹாஸ பதத்தை முன்நிறுத்தியது,
அதன் சிறப்பினா லென்க.
“இதிகாச புராண முழுப்பொருளோ” என்ற பாடத்திற்கு – இதிகாசபுராணங்களின் பூர்ணமான அர்த்தமோ வென்பது பொருள்.

மூன்றாமடியின் முதலில் “இறைப்பொருளோ” என்று பாடமாயின்,
இவையெல்லாவற்றிலுஞ் சிறந்ததொரு பொருளோ வென்று உரைக்க.
நம் பெருமாள் – நமது தலைவர். இங்கு “நம்” என்ற தன்மைப் பன்மை, எல்லாவுயிர்களையும் உளப்படுத்தியது.
பெருமாள் = பெருமான்: பெருமையை யுடையவன். இதில், பெருமை யென்ற பண்புப்பகுதி
ஈற்று ஐகாரம்மாத்திரங் கெட்டு “பெரும்” என நின்றது; ஆன் என்ற ஆண்பால் விகுதி, “ஆள்” என ஈறுதிரிந்தது:
ஆள் என்ற பெண்பால் விகுதியே சிறுபான்மை ஆண்பாலுக்கு வந்த தென்றலும் ஒன்று.
அன்றி, பெருமையை ஆள்பவனெனக் கொண்டால், ஆள் என்ற வினைப்பகுதி கருத்தாப் பொருள் விகுதி புணர்ந்துகெட்ட தெனவேண்டும்.

(பெருமாள் என்பதன் பெண்பால், பெருமாட்டி.) “உடைய” என்னும் ஆறாம் வேற்றுமைச் சொல்லுருபு ஈறு தொக்கு “உடை” என நின்றது.
எட்டு எழுத்து – பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாய், அத்தனை யெழுத்துக்களை யுடைய மந்திரத்தைக் குறித்தது.

உள் உறைப் பொருள் – உள்ளே உறுவதாகிய பொருள். உறை – உறு – பகுதி, ஐ – கருத்தாப் பொருள் விகுதி.
உள்ளுறையெனினும், உட்கிடையெனினும் ஒக்கும். முதுப்பொருள். இறைப்பொருள், உள்ளுறைப்பொருள் – பண்புத்தொகைகள்.
இனி, உள்ளே உறைதலையுடைய பொருளென்றுங் கொள்ளலாம்; இப் பொருளில், உறை – முதனிலைத்தொழிற்பெயர்.
இரண்டாம்வேற்றுமையுரு பும்பயனுந்தொக்கதொகை.
ஒரு பெயரின் ஒரு பகுப்பைக் கொண்டு அப் பெயர்முழுவதையுங் குறிப்பதொரு மரபு பற்றி, அழகியமணவாளதாசரை “மணவாளர்” என்றார்;
(இதனை, வடநூலார், “நாமைகதேஸே நாமக்ரஹணம்” என்பர்.)

தம் – அசை. “மணவாளர் தம் மாலை” என்றவிடத்துத் தொக்கு நின்ற ஆறாம் வேற்றுமையுருபு – செய்யுட்கிழமைப்பொருளது;
கூர்மபுராணம், கபிலரகவல், கம்பராமாயணம், “பற்றற்றான்பற்று” என்றவற்றிற் போல:
அழகிய மணவாள தாசரால் இயற்றப்பட்ட மாலை யென்க.
இனி, விஷ்ணு புராணம், விநாயகரகவல், சீவகசிந்தாமணி என்றாற் போல, “மணவாளர்தம் மாலை” என்றதை
அழகியமணவாளனென்று திருநாமமுடைய ஸ்ரீரங்கநாதன் விஷயமான மாலையென்றுங் கொள்ளலாம்;
திருவரங்கத்துமாலை யென்ற நூற்பெயரின் பரியாய நாமமாம்.
“கோயிலில் வந்த வந்த, மணவாளர் பொற்றிருப்பாதாம்புயங்கட்கு மாலையென, மணவாளர் சூடும்” மாலை யாதலால்,
இருவகையும் ஏற்கும். “மணவாளர்” என்ற பன்மை, உயர்வு பற்றியது. “மாலையினுள்” என்றவிடத்து, உள் – ஏழுனுருபுமாம்.

இச்செய்யுளில் “மணவாளர்” என ஆக்கியோன் பெயரும், “மணவாளர் தம் மாலை” என நூற்பெயரும்,
நுதலிய பொருளும், “மறைப்பொருளோ” என்பது முதலாக விகற்பித்துக் கூறியவாற்றால் நுதலிய பொருளும்,
இவ்வொரு நூலுணர்ந்தவர் அப் பல நூற் பொருள்களையும் ஒருங்கே யுணர்வரென நூற்பயனும்,
அம்மறை முதலியவற்றின் வழி நூலிதுவென நூல்வந்த வழியும், பரந்து கிடந்த அந்நூற்பொருள்கள்
பலவற்றைத் தொகுத்துக் கூறிய நூலிதுவெனத் தொகுத்தலாகிய நூல் யாப்பும்,
அம்மறைப்பொருள் முதலியவற்றை யுணரும் விருப்பமுடையார் பலரும் இந்நூல் கேட்டற்குரிய அதிகாரிகளெனக் கேட்போரும்,
அப்பொருள்கள் பலவற்றையும் சில் வாழ் நாட் பல் பிணிச் சிற்றறிவினராகிய மனிதர்கள் எளிதில் உணர்ந்து உய்யும்படி
ஒருங்கே சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் வேண்டுமென்று ஆசிரியர் கொண்ட அருளே
இந்நூல் செய்ததற்கு ஏது வெனக் காரணமும் பெறப்பட்டன.

“ஆக்கியோன் பெயரேவழியேஎல்லை, நூற்பெயர் யாப்பேநுதலியபொருளே,
கேட்போர் பயனோடு ஆயெண்பொருளும், வாய்ப்பக்காட்டல் பாயிரத்தியல்பே,”

“காலங் களனே காரண மென்றிம், மூவகை யேற்றி மொழிநரு முளரே” என்ற
சிறப்புப்பாயிரத்திலக்கணத்தில் மற்றவை குறிக்கப் படுவன உய்த்துணர்ந்துகொள்க

இக்கவி, அபியுக்தரி லொருவர் செய்தது. இது, வைஷ்ணவசம்பிரதாயத்தில் “தனியன்” எனப்படும்;
(நூலினுட்சேராது) தனியே பாயிரமாக நிற்றல்பற்றியது, அப்பெயர்.
உயர்திணை யாண்பால் விகுதி சிறுபான்மை அஃறிணைக்கும்வருதலை, கடுவன், கோட்டான், தோளுக்கினியான் என்ற விடங்களிற் காண்க;
நாலடியார், சிவஞான சித்தியார் என்ற இடங்களில் “ஆர்” விகுதி போல இங்கு “அன்” விகுதி உயர்வுகுறிப்ப தென்றலுமாம்.

———

காப்பு -திருவரங்க நாதனது திருமேனி திவ்ய அவயவங்களும் திவ்ய பஞ்சாயுதங்களும் –

காப்பு – காத்தல்; அது, இங்கு, காக்கின்ற கடவுளின் விஷயமான வணக்கத்தைக் குறிக்கும்:
ஆகவே, கவி தமக்கு நேரிடத்தக்க இடையூறுகளை நீக்கித் தமது எண்ணத்தை நிறைவேற்ற வல்ல
தலைமைப் பொருளின் விஷயமாக உயர்ந்தோர் வழக்கத்தின் படி செய்யுந் தோத்திர மென்பது கருத்து.

நாளும் பெரிய பெருமாள் அரங்கர் நகை முகமும்
தோளும் தொடர்ந்து என்னை ஆளும் விழியும் துழாய் மணக்கும்
தாளும் கரமும் கரத்தில் சங்கு ஆழியும் தண்டும் வில்லும்
வாளும் துணைவருமே தனியேனை வளைந்து கொண்டே –

பெரியபெருமாள் அரங்கர் – பெரியபெருமாளென்று ஒரு திருநாமமுடையவரான ஸ்ரீரங்கநாதருடைய,
நகை முகமும் – மலர்ச்சியை யுடைய திருமுகமும்,
தோளும் – திருத் தோள்களும்,
என்னை தொடர்ந்து ஆளும் விழியும் – என்னை விடாது தொடர்ந்து அடிமை கொள்ளக் கடாக்ஷிக்கின்ற திருக்கண்களும்,
துழாய் மணக்கும் தாளும் – திருத்துழாய் மணம் வீசுகின்ற திருவடிகளும்,
கரமும் – திருக்கைகளும்,
கரத்தில் – அக் கைகளில் ஏந்துகின்ற,
சங்கு ஆழியும் – சங்க சக்கரங்களும்,
தண்டும் – கதையும்,
வில்லும் – தனுசும்,
வாளும் -,
தமியேனை வளைந்து கொண்டு – வேறு துணையுங் கதியுமில்லாத என்னைச் சூழ்ந்து கொண்டு,
நாளும் – தினந்தோறும் (எந்நாளும்),
துணை வரும் – துணையாக வரும்; (எ – று.) – வருமே என்பதில், ஏகாரம் – தேற்றம். ஈற்றுஏகாரம் – அசை.

இங்ஙனம், தமது வழிபடு கடவுளும், எடுத்துக் கொண்ட இப் பிரபந்தத்திற்கு ஏற்புடைக் கடவுளுமாகிய திருவரங்க நாதனது
திருவவயவங்களையும் ஐம்படையையும் தமக்கு நீங்காத துணையாகக் கொண்டமை கூறியதனால்,
எடுத்துக் கொண்ட இந்நூல் இடையூறின்றி இனிது முடியுமென்பது கருத்து.

திருவரங்கத்திற்குப் பெரியகோயிலென்றும், அங்கு எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானுக்குப் பெரிய பெருமாளென்றும் திருநாமங்கள் வழங்கும்,
பெருமாள் – இராமபிரான்; (இளையபெருமாள் – லக்ஷ்மணன்:) இராம பிரானால் முன்பு திருவாராதநஞ் செய்யப் பெற்றமை பற்றி,
ஸ்ரீரங்கநாதனுக்கு “பெரியபெருமாள்” என்று திருநாமம். அரங்கர் – ரங்கமென்னும் விமானத்தில் எழுந்தருளியிருப்பவர்.
நகை முகம் – புன்சிரிப்பையுடைய முக மென்றும், ஒளியையுடைய முகமென்றுங் கொள்ளலாம்.
தொடர்தல் – தேடிப்பின் தொடர்தலுமாம்.

துழாய் மணக்குந்தாள் – அடியார்கள் அருச்சித்த திருத்துழாயின் வாசனை வீசப்பெற்ற திருவடி;
இடத்து நிகழ் பொருளின் தொழில், இடத்தின்மேற் சார்த்தப்பட்டது. அன்றி,
துழாயினால் மணக்குந் தா ளென்றும், துழாயோடு இயற்கைநறுமணம்வீசுந் தா ளென்றும் கூறலாம்.
இனி, திருத்துழாய் வாசனை வீசுதற்குக் காரணமான திருவடி யென்றல் சிறக்கும். இப்பொருளில், பெயரெச்சம் – காரியப்பொருளது:
“நோய் தீரும் மருந்து” என்றாற் போல, “ஸர்வகந்தன்” என்று பெயர் பெறும்படி
இயற்கைத் திவ்விய பரிமளமுடைய கடவுளாதலால், இங்ஙனங்கூறுதல் ஏற்கும்.
திருத்துழாய் அங்குரித்தது முதல் என்றும் மாறாத நறுமணமுடைய தாதலால்,
என்றும் மாறாத இயற்கை நறுமணமுடைய திருமாலுக்கு உரியதாய்ச் சிறக்கும்.

திருமாலின் சங்கம் – பாஞ்சஜந்ய மென்றும், சக்கரம் – சுதர்சந மென்றும், கதை – கௌமோதகீ யென்றும்,
வில் – சார்ங்க மென்றும், வாள் – நந்தக மென்றும் பெயர்பெறும்.
இவை துஷ்டநிக்கிரகஞ்செய்யுங் கருவியாய்ச் சிறத்தலால், இவற்றைத் தமது இடையூறு தவிர்க்குங் காப்பாகக் கொண்டார்;
அன்றியும், இவை, எம்பெருமானுக்குக் குற்றேவல் செய்யும் பரிஜனங்களாய் எப்பொழுதும் அவனருகில் விடாது நின்று
அவனது திருவுள்ளக் கருத்தின்படி தொழில் செய்யும்:

திருவரங்கத்தந்தாதிக்காப்பில்
அரங்கர் காராழி வண்ணப் பெருமாள் அந்தாதிக்கு காப்பு உரைக்கில் —-
கூராழி சங்கம் திருக்கதை நாந்தகம் கோதண்டமே–என்றதுங் காண்க.

நகைமுகம் முதலியவற்றைக் காப்பாகக்கொண்டது, அவை சிஷ்டபரிபாலனஞ்செய்தற்கு உறுப்பாதலால்.
ஒரு திருக்கை திருச்சங்கையும், அதற்கேற்ற மற்றொரு திருக்கை திருவாழியையுந் தரித்தல் இயல்பாதலால்,
அவற்றை “சங்காழி” எனச் சேர்த்துக்கூறினர்.

“நாளும்” என்ற உம்மை, தொறுப்பொருளது. மற்றை உம்மைகள் – எண்ணுப் பொருளன.
அரங்கர் – உயர்வுப்பன்மை. முகம், கரம் – வடசொற்கள். சங்கு, தண்டு – ஸங்கம், தண்டம் என்ற வடசொற்களின் விகாரம்.
நகை.. நகுத லென “ஐ” விகுதி பெற்ற தொழிற்பெயராகவேனும், நகைத்தலென முதனிலைத்தொழிற்பெயராகவேனுங் கொள்ளத்தக்கது.
துழாய் – துளஸீ என்னும் வடசொல்லின் சிதைவு.
சங்காழி – பன்மைவிகுதி பெறாத அஃறிணையும்மைத்தொகை. ஆழி – வட்டவடிவமாக வுள்ளது;
(அசுரர் முதலிய கொடியவர்களை) அழிப்பதென்று இதற்குக் காரணப் பொருள் கூறவுமாம்.
வரும் – செய்யுமென்முற்று; இது நிகழ்காலமுணர்த்துதலை
“பல்லோர்படர்க்கை முன்னிலை தன்மை, அவ்வயின் மூன்று நிகழுங் காலத்துச், செய்யு மென்னுங் கிளவியொடு கொள்ளா”
என்னுந் தொல்காப்பியச் சூத்திரம் நோக்கி யுணர்க.

அரங்கரது நகைமுகம் முதலியன தமக்குத் துணையாய் வருதல் முக்காலத்தினும் உளதாதலால், நிகழ் காலத்தாற் கூறப்பட்டது.
“முந்நிலைக் காலமுந் தோன்று மியற்கை, எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து, மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும்”
என்ற தொல்காப்பியச் சூத்திரத்தின் உரையில் “நிகழுங்காலத்து மெய்ந்நிலைப்பொதுச்சொல்” என்றதற்கு
“நிகழ்காலத்திற்கு உரித்தாய் நின்றும் ஏனைக்காலங்களையும் உள்ளடக்கி நிற்கும் பொருள் நிலைமையினை யுடைய செய்யுமென்னுஞ் சொல்”
என்று பொருள்கூறி, “மலை நிற்கும், தீச்சுடும், ஞாயிறு இயங்கும், திங்களியங்கும்” என்றவற்றை உதாரணங் காட்டினர் நச்சினார்க்கினியர்;
சேனாவரையர்கருத்தும் இதுவே.

தமியேன் – தனித்துள்ள யான்;
இது, தனிமைப்பொருள் குறித்த தமியென்னும் வினைப்பகுதியடியாப்பிறந்து பணிவையுணர்த்துந் தன்மையொருமைப் பெயர்.
“வளைந்துகொண்டு” என்பது, ஒருசொல்நீர்மைத்து; “என்றுகொண்டினையகூறி” என்றவிடத்துப் போல;
“கிளந்தவல்ல வேறுபிற தோன்றினுங், கிளந்தவற்றியலா னுணர்ந்தனர்கொளலே” என்னுந் தொல்காப்பியத்து
இடைச்சொல்லியற் புறனடைச்சூத்திரத்தால் “கொண்டு” என்னும் அசை கொள்ளலும் அமையும்.

———-

திருவாழி சங்கு திரு ஆழி வாழி சிறந்த கொண்டல்
உரு வாழி யோகத் திருத் துயில் வாழி உலகு அளந்த
மரு ஆர் மது மலர்த் தாள் வாழி வாழி வணங்கும் அன்பர்
பெரு வாழி அனைய பெருமாள் அரங்கப் பெரும் செல்வமே –1-

திரு – ஸ்ரீமகாலக்ஷ்மி,
வாழி – வாழக் கடவன்;
சங்கு திரு ஆழி – ஸ்ரீ சங்க சக்கரங்கள்,
வாழி – வாழக் கடவன;
சிறந்த கொண்டல் உரு – சிறந்த காளமேகம் போன்ற (திருமாலின்) திருமேனி,
வாழி – வாழக் கடவது;
திரு யோகம் துயில் – (அப்பெருமானது) சிறந்த யோக நித்திரை,
வாழி – வாழக் கடவது;
உலகு அளந்த – உலகங்களை (இரண்டு அடியாக) அளவிட்ட,
மரு ஆழ் மது மலர் தாள் – வாசனை நிறைந்த தேனை யுடைய தாமரை மலர் போன்ற திருவடிகள்,
வாழி – வாழக் கடவன;
வணங்கும் அன்பர் பெரு வாழ்வு அனைய – நமஸ்கரிக்கின்ற மெய்யடியார்கட்குப் பெரிய வாழ்க்கை போன்ற,
பெருமாள் – பெரிய பெருமாளுடைய,
அரங்கம் பெருஞ் செல்வம் – ஸ்ரீரங்கத்துப் பெரிய ஐசுவரியம்,
வாழி – வாழக் கடவது; (எ – று.)

எம்பெருமானது தரிசனத்தைப் பெற்ற போது, அந்தத் தேவாதிதேவனுடைய முற்றுணர்வு, வரம்பிலாற்றல்,
யாவரையும் பாதுகாக்குந் திறம், அழியா வியல்பு முதலிய திவ்விய குணங்களைக் கருதுதற்கு முன்னே அப்பெருமானது
திவ்விய சௌந்தரியத்திற் கண் செலுத்தி அதனையே சேவித்து அதில் ஈடுபட்டு ஆழ்ந்து பக்தி பரவசராகி,
அதனால் தம் நிலையையும் எம்பெருமான் நிலையையும் மறந்து,
“காலாதீதமான வைகுண்டத்திலே யிருக்கின்ற இந்த அரும் பொருள் காலம் நடையாடப் பெற்ற இவ்வுலகத்திலே
கண்ணுக்கு இலக்காகுதலால், திருஷ்டி தோஷங்காரணமாக இதற்கு என்ன தீங்கு வருமோ! என்று தமக்கு உள்ள ஆதராதிசயத்தால்
அநாவசியமாக அதிக பயசங்கை கொண்டு
“இத்திருமேனிக்கு எவ்வாற்றாலும் ஒருகுறையும் வராதிருக்க வேணும்” என்று வாழ்த்துபவராய்
“திருப்பல்லாண்டு” என்னுந் திவ்வியப்பிர பந்தம் பாடி, இங்ஙனம் பொங்கும் பரிவுடையரானதனாற் பெரியாழ்வாரென்று
பெயர்பெற்ற விஷ்ணுசித்தர் போலவே, இந்த அழகியமணவாள தாசரும் திருவரங்கநாதனைச் சேவித்தவுடனே முதலில் வாழ்த்துக் கூறலானார்.

இதனால், இவரது அன்பின்மிகுதி விளங்கும். எம்பெருமானைக் கண்டவளவிலே அடிமைத் தொழில்கள் செய்து
தமக்கு வேண்டுவனவற்றை வேண்டிப்பெற நினையாமல் அவனது வாழ்வையே தமக்குப்
பரம புருஷார்த்தமாக நினைத்தலின் அருமை பெருமைகளை உணர்க.

பெரியபெருமாளைக் கண்ணெதிரிலே காணும் போது, அப்பெருமானைச் சார்ந்துள்ள செம்பொன்னிறத்தவளான
பெரியபிராட்டியினது திருமேனியொளி காளமேகத்திற் கொடிமின்னல் போலக் கண்களைக் கவரும்படி மிக விளங்குதலால்,
“பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாக்களுக்கும் ஸர்வமங்களங்களை யுஞ்செய்பவளான இத்திருமகளது சேர்க்கை நித்யமாயிக்கவேணும்” என்று
மங்களாசாஸநஞ்செய்பவராய், முதலில் “திருவாழி” என்றார்.

பொய்கையாழ்வார் சூரியதீபத்தையேற்றியும் பூதத்தாழ்வார் ஞானதீபத்தையேற்றியுங் காட்ட
எம்பெருமானைக் காண்கின்ற பேயாழ்வார் முதலில் “திருக்கண்டேன்” என்றமை காணத்தக்கது.

ஒருவன் எம்பெருமானை ஆசிரயிக்கப்புக்கால் அப்பொழுது அவன் குற்றம் பாராமல் அவனைத் தன்நிழலிலே வைத்துச்
சமயமறிந்து எம்பெருமான்திருமுன்பே கொண்டுவிட்டு இவன்குற்றத்தைப் பொறுப்பிப்பதற்குப் பிராட்டியின் புருஷகாரம்
இன்றியமையா தாதலால்
“அந்தமில்சீர்ப், பொற்பாவை தன்னருளாற் பொன்னரங்கர் தாள் பணிந்து, நற்பாலடைந்துய்ந்தேன்நான்” என்றபடி
பிராட்டிமுன்னாகப் பெருமாளையடைய வேண்டியதாதல்பற்றியும் அவளை முதலில்வாழ்த்துதல் ஏற்கும்.

அநந்தரம் சற்று உற்று நோக்குமிடத்து, சந்திரசூரியமண்டலங்கள்போல விளங்குகின்றனவாய் முறையே
அவனது இடத்திருக்கையிலும் வலத்திருக் கையிலுமுள்ள சங்கசக்கரங்களின் சோதி காணப்படுதலால்,
“எம்பெருமானது திருமேனிக்குக் காவலாய்த் துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனத்துக்கு உறுப்பாக வுள்ள
இத் திவ்வியாயுதங்கள் என்றும் அழிவின்றி வாழவேண்டும்” என்று ஆசாஸிப்பவராய் “சங்கு திருவாழி வாழி” என்றனர்.

மற்றும்ஊன்றிப் பார்க்கையில், அப்பரமனது முடிவில்லதோரெழில் நீலமேனியும் அத்திருமேனி பள்ளிகொண்டிருக்கிற கிடையும்
கட்புலனாதலால், அவற்றை வாழ்த்தலாயிற்று. எம்பெருமான்திருமேனி நீர்கொண்ட மேகம்போலக் காண்பவர் கண்களைக் குளிரச்செய்து
அவர்கள்தாபந்தவிர்த்து அவர்களை உய்விப்பதாதலால் அதற்கும்,
அந்த அமலனது யோகநித்திரை எல்லாவுயிர்களும் உய்யும்வகையைச் சிந்திப்ப தாதலால் அதற்கும் வாழ்த்துக்கூறல் வேண்டிற்று.

திருமேனியைக் கண்ணுற்றபின்னர் அந்தஆதிமூர்த்தியைத் திருப்பாணாழ்வார்போலத் திருவடிமுதல் திருமுடியீறாகச் சேவித்து
அநுபவித்து ஆனந்தமடையத் தொடங்குகின்றா ராதலால், “தாள்வாழி” என்றார்.
இவ்வளவு அநுபவத்திற்குங் காரணம் கோயில்வாசமென்பது கொண்டு, ஈற்றில் “அரங்கப்பெருஞ்செல்வம்” வாழ்த்தப்பட்டது.

“சங்குதிருவாழி” என்று சேர்த்துக்கூறியதன் காரணம் காப்புச்செய்யு ளுரையிற் கூறப்பட்டது.
யோகநித்திரை – எல்லாவற்றையும் அறிந்து கொண்டே லோகரக்ஷணசிந்தையுடனே தூங்குகின்றது போலப்
பிறர்க்குத் தோன்றவைக்கும் நிலை; இது – அறிதுயில், விழிதுயில், துயிலாத்துயில், பொய்த்துயில், மாயத்துயில் எனவும்படும்.
“மருவார்” என்றது – மலர்க்கும் தாளுக்கும், “வணங்குமன்பர்பெருவாழ்வனைய” என்றது –
பெருமாளுக்கும் அரங்கத்திற்கும் அடைமொழியாகத்தக்கது.

திருவாழி சங்குதிருவாழி வாழி –
“வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு,
வடிவார்சோதிவலத்துறையுஞ்சுடராழியும் பல்லாண்டு,
படைபோர்க்குமுழங்குமப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே” என்றார் திருப்பல்லாண்டில்,
தாள்வாழி –
“உன்செவ்வடிசெவ்விதிருக்கா ப்பு” என்றது திருப்பல்லாண்டு.
வாழி பெருமாளரங்கப்பெருஞ்செல்வம் – “ஸ்ரீரங்க ஸ்ரீஸ்ச வர்த்ததாம்” என்ற வடமொழி மேற்கோளைக் காண்க.

திரு – பெரியபிராட்டியார். வாழிய என்னும் வியங்கோள்வினை முற்று, ஈற்று யகரவுயிர்மெய் கெட்டு “வாழி” என நின்றது.
அதன்முன் வருமொழி முதல்வலி இயல்பாம்: வியங்கோள் ஐம்பால்மூவிடங்கட்கும் பொதுவாத லுணர்க.
“சங்கு திருவாழி” என்ற தொடரின் இடையிலுள்ள “திரு” என்ற அடைமொழியை, மத்திமதீபமாக,
முன்நின்ற “சங்கு” என்றதனோடுங் கூட்டுக;
இவை ஆயுதகோடியில்மாத்திரமன்றி ஆபரண கோடியிலுஞ் சேர்தலால், அழகிய சங்கசக்கரங்க ளெனவுந் தகும்.
“சிறந்த” என்ற விசேஷணம், உபமானமாகிய கொண்டலோடும், உபமேயமாகிய உருவோடும் இயையும்.

கொண்டலுக்குச் சிறப்பு – உலகமும் அதற்குஉறுதி யாகிய அறம்பொருளின்பங்களும் நடத்தற்கு ஏதுவாதலும்,
குளிர்ந்தவடி வுடைமைபற்றிக் கண்டோரால் விரும்பப்படுதலும்.
உருவிற்குச் சிறப்பு –
“அண்டர்கோ னணியரங்க னென்னமுதினைக், கண்ட கண்கள் மற்றொன் றினைக்காணாவே” என்றபடி
கண்டவர் கண்களைக் கவர்தலும், அவரது பிறவிப் பெருங்கடலைப் போக்குதலும்.

உரு – வடிவும், நிறமுமாம். ஆர்மலர் – வினைத்தொகை: மரு வார் என்று எடுத்து, வாசனைநீண்ட என்றலு மொன்று;
நெடுந்தூரமளவும் வாசனைவீசுகின்ற என்று கருத்து.
தாளுக்கு, மது – இனிமை மிகுதி. (“அம்ருதஸ்யந்திநிபாதபங்கஜே” என்பது காண்க.)
அடைமொழி கொடாமல் “மலர்” என்றால், அது, எல்லாமலர்களினுஞ் சிறந்ததாகிய தாமரைமலரைக் குறிக்கும்.
அது – திருவடிகட்கு, செம்மை மென்மை அழகுகளில் உவமம்.

அன்பர் – அன்பையுடையவர்; பக்தர். அவர்கட்கு எல்லாநன்மைகளும் திருவரங்கநாதனாலும் ஸ்ரீரங்கம்கிமையாலும் உண்டாதல்பற்றி,
“அன்பர் பெருவாழ்வனைய பெருமாளரங்கப் பெருஞ்செல்வம்” எனப்பட்டது.
கொண்டல் – நீர்கொண்ட மேகத்திற்குத் தொழிலாகுபெயர்; கொள் – பகுதி, தல் – விகுதி, ளகரதகரங்கள் ணகரடகரங்களானது – சந்தி.
உரு – ரூபமென்ற வடசொல்லின் சிதைவு. யோகம், மது – வடசொற்கள்.

“பெருமாள்” என்பதை, திரு, சங்கு திருவாழி, உரு, துயில், தாள் என்றவற்றோடுங் கூட்டுக.
“பெருமாள் அரங்கப்பெருஞ்செல்வம்” என்பதற்கு – பெரியபெருமாளாகிய ஸ்ரீரங்கத்திலுள்ள பெருஞ்செல்வ மென்றலும் அமையும்;

“உங்கள் பூர்வர்கள் தேடிவைத்த மஹாநிதி இதுகாணும்” என்றுசொல்லி ஆளவந்தார்க்கு மணக்கால்நம்பி
பெரியபெருமாளைச் சுட்டிக்காட்டிய வரலாற்றை யுணர்க;
“ஸ்ரீரங்கமங்களநிதி.” “பெருவாழ்வு” என்றது, அழியாத முத்தியுலகத்துப் பேரின்பவாழ்வுமாம்.

இச்செய்யுள் – தண்டியாசிரியர் கொள்கைப்படி “வாழ்த்து” என்னும் அலங்காரமாம்;
“இன்னார்க் கின்னதியைக வென்று தாம், முன்னியது கிளத்தல் வாழ்த்தென மொழிப” என அதனிலக்கண முணர்க.
முதலிடை கடைகளில் மங்கலவாழ்த்தையுடைய காப்பியம் அழிவின்றி நின்று சிறப்புறு மென்பது
ஆன்றோர்கொள்கை யாதலால், முதலில் வாழ்த்துக்கூறினர்;

“ஆதியு மந்தமு நடுவு மங்கலம், ஓதிய முறைமையி னுரைப்ப ராயிடின், ஏதமி லிருநிலக் கிழத்தி யின்புற,
நீதியம் பனுவல்கள் நிலவு மென்பவே” என்பது காண்க.
எல்லாநூல்களும் மங்கலமொழி முதல்வகுத்துக் கூறவேண்டுவது மரபாதலால், “திரு” என்று தொடங்கினார்;
“வழிபடு தெய்வவணக்கஞ் செய்து, மங்கலமொழி முதல்வகுத், தெடுத்துக்கொண்ட விலக்கண விலக்கியம்,
இடுக்க ணின்றி யினிது முடியும்,”

“சீர் மணி பரிதி யானை திரு நிலம் உலகு திங்கள், கார் மலை சொல் எழுத்துக் கங்கை
நீர் கடல் பூத் தேர் பொன், ஏருறு மிவை மூவாறும் இதன் பரியாயப்பேரும்,
ஆரு மங்கலச் சொல் செய்யு ளாய்ந்து முன்வைக்க நன்றாம்” என்பன நோக்குக.

————-

படுப்பவரைப் பணி மெல் அணையாகப் பரு வரையால்
தடுப்பவரைப் பண்டு மண்டு கல் மாரி தரணி இடந்து
எடுப்பவரைத் தம் அடியார் இடும் பச்சிலைக்கு முத்தி
கொடுப்பவரை செம் பொற் கோயிலுள்ளே கண்டு கொண்டனனே –2-

பணி – திருவனந்தாழ்வான் (ஆதிசேஷன்),
மெல் அணை ஆக – மெத்தென்ற படுக்கை யாக,
படுப்பவரை – (அதன்மேற்) பள்ளிகொண்டருள்பவரும், –
பண்டு – முன்னே (கிருஷ்ணாவதாரத்தில்),
மண்டு கல்மாரி – (இந்திரன்பெய்வித்த) மிகுதியான கல்மழையை,
பரு வரையால் – பருத்த (கோவர்த்தனமென்னும்) மலையைக்கொண்டு,
தடுப்பவரை – தடுத்தருளியவரும், –
தரணி – (ஹிரண்யாக்ஷனாற் கவர்ந்துகொள்ளப்பட்ட) பூமியை,
இடந்து எடுப்பவரை – (வராகாவதாரமாகிக்) கோட்டினாற்குத்தி யெடுத்தருளியவரும், –
தம் அடியார் இடும் பசுஇலைக்கு – தமதுதிருவடிகளைச்சரணமடைந்த மெய்யடியார்கள் (அத்திருவடிகளில்)
அருச்சிக்கின்ற பசுமையான திருத்துழாய்த்தளத்திற்காக,
முத்தி கொடுப்பவரை – (அவ்வடியார்கட்குத் தமது) பெருவீட்டைக் கொடுத்தருள்பவருமான பெரியபெருமாளை, –
செம்பொன் கோயிலுள்ளே – சிவந்தபொன்மயமான திருவரங்கம் பெரியகோயிலினுள்ளே,
கண்டுகொண்டனன் – தரிசிக்கப்பெற்றேன்; (எ – று.)

எம்பெருமானுக்குச் சகலவித கைங்கரியங்களையுஞ் செய்கின்றவனும் நித்தியர்களிலொருவனும் சர்ப்பராஜனுமான ஆதிசேஷன்,
“புல்கும்அணை யாந் திருமாற்கு அரவு” என்றபடி, அப்பெருமான் சயனிக்கத்திருவுளங் கொண்டபோது
அவனது மென்மைக்குஏற்ற புஷ்பசயனம்போன்ற திருப் பள்ளிமெத்தையாக, அதில் அப்பரமன் பள்ளிகொண்டருளுதலால்,
“பணி மெல்லணையாகப் படுப்பவரை” என்றார்.

“இருளிரியச்சுடர்மணிகளிமைக்கு நெற்றியினத்துத்தியணிபணமாயிரங்களார்ந்த,
அரவரசப்பெருஞ் சோதியனந்தனென்னு மணிவிளங்குமுயர்வெள்ளையணையைமேவித்,
திருவரங்கப்பெரு நகருள் தெண்ணீர்ப்பொன்னி திரைக்கையாலடிவருடப் பள்ளிகொள்ளுங்,
கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண் டென்கண்ணிணைக ளென்று கொலோ களிக்கு நாளே” என்று
பெரியார் பலகாலுங் காணவிரும்பிய திருமூர்த்தி யாதலால்,
அந்தத்திவ்வியமங்களவிக்கிரகத்தைத் தாம் காணப்பெற்ற பேற்றை
“பணிமெல்லணையாகப்படுப்பவரை….. செம்பொற்கோயிலுள்ளே கண்டுகொண்டனன்” என்று வெளியிட்டார்.

தமக்குக்கட்புலனான வடிவமாதலால் “படுப்பவரைப் பணிமெல்லணையாக” என்று அர்ச்சாவதாரத்தை முதலிலும்,
விபவாவதாரங்களுள் வராகாவதாரம் கிருஷ்ணாவதார த்துக்குமுந்தியதாயினும்
தமக்கு ஸந்நிஹிதமானதுபற்றிக் கிருஷ்ணாவதாரத்தை முதலிலும், அதற்குமுற்பட்ட வராகாவதாரத்தை அதன்பின்னும்,
அடியவர்க்கெளியனாகின்ற ஸௌலப்யமாகிற பொதுநிலையை அதன்பின்னு மாகக் கூறின ரென்க.

“பருவரையாற் பண்டு மண்டு கன்மாரி தடுப்பவர்” “தரணியிடந்தெடுப்பவர்” என்ற இரண்டு விசேஷணங்களும்,
துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலன சீல ரென்பதை விளக்கின.
“வாதாசநம்” என்று ஒரு பெயர் பெறும்படி காற்றைஉணவாகக்கொள்வதான பாம்பு அக்காற்றை உச்சுவாசநிச்சு வாசங்களினால்
உட்கொள்ளும்போதும் வெளிவிடும்போதும் உடற்பூரிப்பையும் உடல்தளர்ச்சியையுங் கொள்வதாய்க் காற்றடைத்தமெத்தைபோன்று
இனிதுபள்ளிகொள்ளுதற்குப் பாங்காதல் தோன்ற, “பணி மெல்லணையாக” எனப்பட்டது;

“அடலாயிரவாய்ப்பொருந்து வந்தார் பணிப் பாயார்” என்பர் அழகரந்தாதியிலும்.

(“மகரத்திற்சூரியன்வந்துதித்தகாலில் வந்திக்க விந்திரனைநோக்கிப் பொங்கல்,
மிகவிட்டுக்கயிலைமலைபோலேவைக்க விளையாட்டா யத்தனையு நீயேயுண்ணக்,
ககனத்திலிந்திரனும் வந்துபார்த்துக் கன்மழையை நிரை மீதில் விடுத்தமட்டில்,
இகபரத்திற்கிறையவனே நிரைக்காக் குன்றையெடு த்துமழைதடுத்தனையே யெம்பிரானே” என்பது காண்க.)

திரிலோகாதிபதி யென்று பேர்படைத்தவனான தேவேந்திரன் தானே அவ்வுலகத்தில் ஒரு சார் நிரபராதியாயுள்ள சில
உயிர்கட்கு நலிவுசெய்யப்புக் கவிடத்து எம்பெருமான் தான் அருள்கொண்டு பாதுகாத்தன னென்பதை விளக்கும்,
இவ்வரலாறு; “நாம் கோவர்த்தனமலையை ஆராதித்தோம்: அதனால்நேர்ந்த தீங்கைப் போக்கிக் கண்ணன் காத்தருளினான்” என்று
இடையர்கள் நினைக்க வொண்ணாதெனக் கருதி, அவர்கள் ஆராதித்த மலையைக்கொண்டே காத்தருளின னென்க.
இந்திரன் கல்மழை பொழிந்திட்டதனால், அதனைக் கற்கொண்டுதடுத்தான்;
அன்றி நீர் மழையையே பொழிந்திருப்பானாயின் அதனை நீரைக்கொண்டே தடுக்கவல்ல
ஸர்வசக்த னென்பது தோன்ற, “வரையாற் கல்மாரிதடுப்பவர்” என்றார்.

“கன்மாரியாகையாலே, கல்லையெடுத்து ரக்ஷித்தான்; நீர்மாரியாகில், கடலையெடுத்து ரக்ஷிக்குங்காணும்” என்று
பட்டர் அருளிச்செய்வர்; இத்தால், இன்னதைக்கொண்டு இன்னகார்யஞ் செய்யக் கடவோமென்னும்நியதியில்லை:
ஸர்வசக்தனென்கை” என்ற வியாக்கியான வாக்கியம், இங்கு அறியத்தக்கது.

(“புண்ணியந்தெய்வதமுஞ் சேர்பூலோகத்தைப் புற்பாய்போற்சுருட்டிக் கொண்டே பாதாளம்,
நண்ணிரணியாட்சனைப் பின் தொடர்ந்தே யேகி நலமுடனே யாதிவராகத்தேவாகி,
மண்ணுலகமனைத்துமிடந்தெடுத் தோர் கோட்டில்வைத்துவர வவன்மறிக்க வதைத்துத் தேவ,
ரெண்ணவுலகீ ரேழும்படியப்பண்ணா யிறைவாநாராயணனே யெம்பிரானே” என்பர் பின்னோரும்.)

இப்பொழுதுநடக்கிற சுவேதவராக கல்பத்துக்கு முந்திய பாத்ம கல்பத்தைப் பற்றிய பிரளயத்தின் இறுதியில்
ஸ்ரீமந்நாராயணன் ஏகார்ணவமான பிரளயஜலத்தில் முழுகியிருந்த பூமியை மேலேயெடுக்க நினைத்து
ஸ்ரீவராகாவதாரத்தைச் செய்தருளிக் கோட்டுநுனியாற் பூமியை யெடுத்து வந்தனனென்ற வரலாறும் உண்டு.

இயல்பிலே தமக்கு அடிமையான எல்லாவுயிர்களிடத்துங் காரண மின்றியெழுங் கருணையையுடையவனான கடவுள்
அவர்கட்குத் தனது பேரின்பப்பெருவீட்டையளித்தருளுதற்கு ஒருவியாஜமாக அவர்களிடுவதொரு துளஸீதளத்தை
யெதிர்நோக்குகின்றனனென்பது விளங்க, “தம் அடியாரிடும் பச்சிலைக்கு முத்திகொடுப்பவர்” என்றார்.
பயனாகிய அந்தப் பரமபதத்தின் பெருமைக்கு இவர்களிடும் பச்சிலை ஏற்றஸாதநமன்றாதலை நோக்குமிடத்து,
அவனது திருவருள் காரணமின்றியெழுந்ததாத லுணர்க.

“பத்திரத்தையும் புஷ்பத்தையும் பழத்தையும் ஜலத்தையும் எவன் எனக்குப் பக்தியுடன் கொடுக்கின்றானோ,
சுத்தமான மனத்தையுடையனான அவனது பக்தியினாற் கொடுக்கப்பட்டதாகிய அதனை நான் அங்கீகரிக்கின்றேன்” என்று
ஸ்ரீகீதையிற் கண்ணபிரான் தானே அருளிச்செய்திருத்தல் இங்கு உணரத்தக்கது;

“அச்சுத நின்மெய்யடியாருகந்தேயிட்டதணுவெனினுமக மேருவாகக்கொள்வாய்,
நிச்சயமாயுனைநம்பியெண்ணாமூடர்நினைத்திடிலோ நூற்றையொன்றாவுங்கொள்ளாயால்” எனப் பின்னோர் கூறியதுங் காண்க.

“தம்மடியாரிடும் பச்சிலைக்கு முத்திகொடுப்பவர்” என்ற தொடரில், சிறியதைப் பெற்றுக் கொண்டு பெரியதைக் கொடுத்தலாகிய
பரிவர்த்தநாலங்காரந் தோன்றுதல் காண்க;
அதனிலக்கணத்தை, தண்டியலங்காரத்தில் “பொருள்பரிமாறுதல் பரிவருத்தனையே” எனக் காணலாம்;
இது, மாற்றலணி என்றுஞ் சொல்லப்படும்.
“இலைக்கும்” எனப் பிரித்து இழிவுசிறப்பும்மையாகக்கொள்ளுதலு மொன்று. அடியார்கள் எம்பெருமானை வசப்படுத்தும்
பச்சிலையாகின்றது திருத்துழா யென்பதும் இங்குத் தோன்றும்;
ஆகவே, அதனால் அவர்கள்வசப்பட்டு அவர்கட்குப் பெருவீடுதந்திடுகின்றன னென்க.

படுப்பவர் கொடுப்பவர் என்றவற்றில், பகரவொற்றிடைநிலை – எதிர்கால முணர்த்தாமல் தன்மையுணர்த்திற்று;
படுக்குமியல்பினர் கொடுக்குமியல்பினர் என்று பொருள்.
“பண்டு தடுப்பவர்” என்றது, இயல்பினால் இறந்த காலம் எதிர்காலமாகச் சொல்லப்பட்ட காலவழுவமைதி,
“யாம் பண்டு விளையாடுவது இச்சோலை” என்றாற் போல. “பண்டு” என்பதை, “எடுப்பவர்” என்பதனோடுங் கூட்டுக;
அதுவும் அவ்வகைக் காலவழுவமைதியே. படுப்பவரை, தடுப்பவரை, எடுப்பவரை, கொடுப்பவரை என்றவை –
ஒருபொருளின்மேல் வந்த பலபெயர்கள்;
இவை, “கண்டுகொண்டனன்” என்னும் ஒருவினையைக் கொண்டன.
விசேஷணச்சொற்கள், விசேஷ்யச் சொல் இவையனைத்திலும் வேற்றுமையுருபு விரியவைப்பது, வடமொழி நடை.
இங்கே “படுப்பவரை” என்றதை விசேஷ்யமாகவும், மற்றைமூன்றையும் விசேஷணமாகவுங் கொள்ளுதல் சாலும்.
பணம் – படம்; அதனை யுடையது பணீ யென வடமொழிக்காரணக்குறி; அது ஈறுகுறுகிற்று. மெல் அணை – பண்புத்தொகை.

“வரையால்” என்பதில், “ஆல்” உருபு – கருவிப் பொருளது. கல்மாரி – சிலாவர்ஷம்; ஆலாங்கட்டிமழை. தரணி – வடசொல்;
(பொருள்களைத்) தரிப்ப தென்றறு காரணப்பொருள்படும். இடந்து,இட – பகுதி. அடியார் – அடிமை யென்னும் பண்பினடியாப் பிறந்த பெயர்.
பசுமை + இலை = பச்சிலை: பண்புப்பெயர், ஈறுபோய்த் தன்ஒற்றுஇரட்டிற்று.

முக்தி என்ற வடசொல்லுக்கு – (பற்றுக்களை) விட்டு அடையு மிடமென்பது உறுப்புப்பொருள்;
வீடு என்ற தமிழ்ப்பெயரும் இப்பொருள் கொண்டதே.
செம்பொன் – மாற்றுயர்ந்த பொன். கோயில் = கோவில்: இலக்கணப்போலி; கோ இல் – இறைவனது இடம், தலைமையான இடம்;
இது தேவாலயங்கட்கெல்லாம் பொதுப்பெயராயினும், நூற்றெட்டுத்திருமால் திருப்பதிகளுள் திருவரங்கம் தலைமைபெற்ற தாதலால்,
அதனை “கோயில்” எனச் சிறப்பாகவழங்குவது, வைஷ்ணவசம்பிரதாயம்;
இது, காரணவிடுகுறி யின்பாற்படும். கண்டுகொண்டனன் – “அன்” விகுதி, தன்மையொருமைக்கு வந்தது.

———-

ஆள் ஆனவர் கண் களி கூர் அரங்கத்து அரவணை மேல்
காள அசலம் எனக் கண்டு கொண்டேன் -மறை காண ஒண்ணாத்
தாள் ஆயிரம் செம்பொன் மா முடி ஆயிரம் தாம நெடும்
தோள் ஆயிரம் திருக் கண் ஆயிரம் கொண்ட சோதியையே –3-

மறை காண ஒண்ணா – வேதங்களாலும் அறியமுடியாத,
தாள் ஆயிரம் – ஆயிரம் திருவடிகளையும்,
செம் பொன் மா முடி ஆயிரம் -சிவந்த பொன்மயமான அழகிய கிரீடத்தைத் தரித்த ஆயிரம்திருமுடிகளையும்,
தாமம் நெடுந் தோள் ஆயிரம் – மாலையைத்தரித்த பெரிய ஆயிரம் திருத்தோள்களையும்,
திரு கண் ஆயிரம் – ஆயிரம் திருக்கண்களையும்,
கொண்ட – தன்னிடத்திற் கொண்ட,
சோதியை – ஒளிவடிவமான ஸ்ரீமந்நாராயண மூர்த்தியை,
ஆள் ஆனவர் கண் களி கூர் அரங்கத்து – அடியார்கள் (கண்டு) கண் களிப்பு மிகுதற்குக் காரணமான திருவரங்கம் பெரிய கோயிலில்,
அரவு அணைமேல் – ஆதிசேஷனாகிய சயனத்தின்மேல்,
காள அசலம் என கண்டு கொண்டேன் – கருநிறமுள்ளதொரு மலை (கிடந்தாற்) போல(ச் சயனத் திருக்கோலமாயிருக்க)க் காணப்பெற்றேன்; (எ – று.)

எல்லாப்பொருள்களையும் உள்ளபடி உணர்ந்து உரைக்கின்ற வேதங்களாலுங் காணமுடியாத பரஞ்சோதி ஸ்வரூபமான
பரமாத்மாவை இந்நிலவுலகத்திலே திருவரங்கத்திருப்பதியில் திருவனந்தாழ்வானாகிய திருப்பள்ளி மெத்தையில்
“பச்சைமாமலைபோல்மேனி பவளவாய் கமலச்செங்கண், அச்சுதா” என்றபடி ஒருநீலமலைபோலே
பள்ளிகொண்டிருக்கக் காணப் பெற்றேன் என்று, பிறர்களுக்கு அரியவித்தகனான எம்பெருமான்
பத்துடையடியவர்க்கு எளியனாகின்ற இயல்பையும், தமது பாக்கியவிசேஷத்தையும்,
கீழ்ச்செய்யுள்போலவே இச்செய்யுளும் கொண்டாடிக்கூறியதாம்.

“மறை காணவொண்ணா” என்றது, சோதியோடு இயையும்;
பரப்ரஹ்மஸ்வரூபத்தைத் தான் முழுவதுங் காணமாட்டாமையை, வேதம் தானே கூறுகின்றது.
தேஜோரூபி யாதலால், “சோதி” என்றார்; அடுத்தசெய்யுளில் “ஒண்சுடர்” என்பதுங் காண்க.

ஆள் ஆனவர் – அடிமைப்பட்டவர்.
கண்களிகூர் – கண்களாற்காணுத லால் மனம்களிகூர்தல், அக்கண்களின்மேல் ஏற்றிக்கூறப்பட்டது; ஒருவகை உபசாரவழக்கு.
ஆளானவர்கண்களிகூர் அரங்கம் – “கூர்” என்ற வினைத்தொகை – காரியப்பொருளதாய், காரணப்பெயரைக் கொண்டது.
கூர் – மிகுதிகுறிக்கும் உரிச்சொல். அரவணை – ஸர்ப்பசயநம். அர அணை என்றும் பிரிக்கலாம்.
அரா என்னும் குறியதன்கீழ் ஆகாரம், குறுகியும் அதனோடு உகரமேற்றும் நிற்கும்.
காள + அசலம் = காளாசலம்: தீர்க்கசந்திபெற்ற வடமொழித்தொடர்; பண்புத்தொகை.
காளம் – கருநிறமானது. அசலம் – சலியாதது என மலைக்குக் காரணக்குறி. காளாசலம் – நீலகிரி:
காளமேகம்படிந்ததொரு பெருமலையென்றுங் கொள்ளலாம். என – உவமவுருபு.
காளாசலம் – நிறத்திற்கும், கம்பீரமாகிய தோற்றத்திற்கும் உவமையாம்.
ஒண்ணா – ஒன்றா என்பதன் மரூஉ; ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்.
“செம்பொன்மாமுடி” என்றதை அன்மொழித்தொகையாகவாவது அடையடுத்தஆகுபெயராகவாவது கொள்ளவே, சிரசை யுணர்த்தும்.
“செம்பொன்” என்பதை அதனாலாகிய கிரீடத்துக்குக் கருவியாகுபெய ரெனக் கொண்டு, முடி – சிரசு என்றலுமாம்.
மா முடி – பெரிய கிரீடமுமாம். தாமம் – வடசொல்; திருத்துழாய்மாலை, மலர்மாலைகள், பொன்மணிகளாலாகிய ஆரங்கள்,
வனமாலை யென்னுந்திவ்வியமாலை இவைகளையெல்லாங் குறிக்கும்.
தாமம் எனக்கொண்டு, ஒளியென்னவுமாம். “திரு” என்ற அடைமொழியை, தாள் முடி தோள் என்றவற்றிற்குங் கூட்டலாம்.

இங்கே “ஆயிரம்” என்றது, அளவில்லாததென்னும் பொருளது. அங்ஙனங்கொள்ளாவிடின்,
தாளாயிரம் முடியாயிரம் முதலியன சேராவாம். ஆகவே, அளவற்ற பாதம் முதலிய சகல அங்கங்களையு முடையவ னென்பதாம்.
அபரிமிதமாய் அற்புதமாயிருக்கிற மகாஞானமும் மகாசக்தியு முள்ளவன் எம்பெருமான் என்பது, தேர்ந்தபொருள்.
பெருமான் சகல இந்திரியங்களாலே யாதல் ஓர் இந்திரியத்தாலேயாதல் திருமேனியாலேயாதல்
திவ்யாத்மஸ்வரூபத்தாலேயாதல் எல்லாவற்றையும் எப்போதும் எல்லா விதத்திலும்
அறிகின்றவனும் செய்கின்றவனுமா யிருக்கின்றா னென்பது, முக்கியமான கருத்து.
இங்ஙனமேயன்றி, அநேகம் திருமுடிகள் திருக்கண்கள் திருக்கைகள் திருவடிகள் முதலாகிய அவயவங்களாற்
செறிந்திருக்கின்றான் பகவா னென்பது கருத்தன்று.
அளவில்லாத கண் முதலியவற்றை யுடையவன் எப்படி அளவில்லாத காட்சி முதலானவற்றை யுடையனாயிருப் பனோ
அப்படியே பகவானும் என்று எடுத்துக்காட்டினபடியாம்.
மற்றும், விசுவரூபங்காட்டுகிற சமயங்களில்மாத்திரம் எம்பெருமான் பல அவயவங்களைக் கொள்ளுதலும் உண்டு.
இங்கு, சிலர், உலகமெல்லாம் பகவானுடைய சொரூப மாதலால் உலகத்திலுள்ளோருடைய முடி புயம்
முதலியவையெல்லாம் அவனுடையவையா மெனக் கருத்துக்கூறுவர்; அது பலவிதத்திலும் பொருந்தா தென அறிக.
இது, திவ்யாத்மஸ்வரூபம் கூறியபடி.

—–

பூங்கா விரிப்புனற் கோயிலுள்ளே மிக்க போகம் எல்லாம்
யாம் காண யோகத்துயில் கொண்டவாறு எள்ளும் எண்ணெய் யும் போல்
நீங்காது உலகத்து உயிர்க்கு உயிர் ஆகி நியாமகன் ஆய்
ஓங்காரம் ஆய் அதன் உட்பொருளாய் நின்ற ஒண் சுடரே –4-

(இ – ள்.) எள்ளும் எண்ணெயும் போல் -,
நீங்காது – இடையறாமல்,
உலகத்து உயிர்க்கு உயிர் ஆகி – உலகத்திலுள்ள ஜீவாத்மாக்களுக்கு அந்த ராத்மாவாகியும்,
நியாமகன் ஆய் – (அந்த ஜீவாத்மாக்களுக்கெல்லாம்) தலைவனாகியும்,
ஓங்காரம் ஆய் – பிரணவமந்திரஸ்வரூபியாகியும்,
அதன் உள் பொருள் ஆய் – அம்மந்திரத்தினது உள்ளேயடங்கிய பொருளாகியும்,
நின்ற – (எந்நாளும் அழிவின்றி ஒரேதன்மையதாய்) நிலைபெற்ற,
ஒள் சுடர் – பிரகாசிக்கின்ற சோதியானது,
பூ காவேரி புனல் கோயிலுள்ளே – அழகிய காவேரி நதியின் நீரினாற் சூழப்பெற்ற திருவரங்கம் பெரியகோயிலினகத்தே,
மிக்க போகம் எல்லாம் யாம் காண – மிகுதியான போகங்க ளெல்லாவற்றையும் நாம் காணும்படி,
யோகம் துயில் கொண்ட ஆறு – யோகநித்திரையைக் கொண்டிருக்கின்ற விதம், (என்ன ஆச்சரியம்!) (எ – று.)

உடலினுள்ளே உயிர் அதற்குத் தாரகமாய் நியாமகமாயச் சேஷியாய்த் தங்கியிருத்தல்போலப்
பரமாத்மா ஜீவாத்மாக்களினுள்ளே அந்தர்யாமியாய் அவற்றிற்குத் தான் தாரகனாய் நியாமகனாய்ச் சேஷியாய்
விடாது வீற்றிருத்தலால், “நீங்காது உலகத்து உயிர்க்குஉயிராகி நியாமகனாய்” என்றார்.
“எள்ளும் எண்ணெயும் போல்” என்றா ராயினும், எள்ளினுள் எண்ணெய் போ லென்பது கருத்து;
அது பிரிந்து காட்டாமல் எங்கும் பரந்து மறைந்துநிற்றற்கு உவமை.
எள் – ஜீவாத்மாவுக்கும், எண்ணெய் – பரமாத்மாவுக்கும் உபமானம். “எள்ளுமெண்ணெயும்போல்” என்றதனால்,
எல்லாம் தானாகியும் அல்லதுமாகியும் இறைவன் நிற்கின்ற நிலையைத் தோன்றவைத்தன ரென்னலாம்.

“உலகம்” என்றது, அசித்துக்களை. “உயிர்” என்றது, சித்துக்களை. “உயிர்க்குஉயிர்” என்றது, ஈசுவரனை.
“உலகத்து உயிர்க்கு உயிராகி நியாமகனாய்” என்றதனால், சித்துக்களுக்குப்போலவே அசித்துக்களுக்கும்
பரமாத்மா தாரகனும் நியாமகனும் சேஷியு மாதல் தோன்றும்.
சித் அசித் ஈச்வரன் – தத்துவத்திரயம். இதுவே, விசிஷ்டாத்வைத சித்தாந்தம் எனப்படும்.

“கருதரிய வுயிர்க்குயிராய்க் கரந்தெங்கும்பரந்துறையும், ஒரு தனிநாயக மென்றா லுன்புகழ்க்கு வரம்பாமோ”
என்பர் திருவரங்கக் கலம்பகத்திலும்.
(“திடவிசும்பெரிவளி நீர்நிலமிவைமிசைப், படர்பொருள்முழுவதுமா யவையவைதொறும்,
உடன்மிசையுயிரெனக்கரந்தெங்கும் பரந்துளன்,”
“பரந்ததண்பரவையுள்நீர் தொறும்பரந்துளன், பரந்த வண்டமிதென நிலவிசும் பொழிவறக்,
கரந்தசிலிடந்தொறு மிடந்திகழ் பொருடொறுங், கரந்தெங்கும்பரந்துளன்” என்றார் நம்மாழ்வாரும்.)

“எள்ளு மெண்ணெயும் போல் நீங்கா துலகத்துயிர்க் குயிராகி” –
“எண்ணுமெண்ணெயுமியைய மற்றெப்பொருளகத்தும், நண்ணுநாரணன்” என்ற பாகவதத்தையும் காண்க.

“ஓங்காரமா யதனுட்பொருளாய் நின்ற வொண்சுடர்” –
“எப்பொழுதும் தியானஞ்செய்துகொண் டிருக்கின்ற யோகிகள், தங்களுடைய பாபபுண்யரூபமான கர்மங்கள் நசித்தவுடனே,
எந்தச் சொரூபத்தைப் பிரணவப்பொருளாகக் காண்கின்றார்களோ,”
“உன்னுடைய ஆராதநரூபமான யாகங்களும், வஷட்காராதிகளும், சகலவேத மூலமான பிரணவமும் நீயே” என்றது விஷ்ணுபுராணம்.
தாரகன் – தாங் குபவன், வாழச்செய்பவன். நியாமகன் – நியமிப்பவன், நடத்துபவன். சேஷி – தலைவன், உடையவன்.

சொல்லும் பொருளும் ஆகிய இரண்டுமாய் நிற்பவன் எம்பெருமானே யாதலால்,
“ஓங்காரமாய் அதனுட்பொருளாய் நின்ற” என்றார்; “ஓங்காரோ பகவாந் விஷ்ணு:” என்றது காண்க.
“ஓங்காரம்” என்றதில், “காரம்” என்பது – சாரியை;
அகாரம், ஆகாரம் என்றவற்றிற் போல. பிரணவம், அகார உகார மகாரங்க ளாகிய
மூன்று ஓரெழுத்தொருமொழிகள் கூடிய தோ ரெழுத்தாம்.
அது ஸகலவேதகாரணமும், ஸகலவேதஸங்க்ரஹமும், ஸகலவேதஸாரமு மாதலால், தலைமைபற்றி எடுத்துக் கூறப்பட்டது.
அதன் பொருள், ஸர்வரக்ஷகனான திருமாலுக்கே உரியபொருள் ஜீவாத்மா என்பது;
இதில், பகவானுக்கே பிராதானியந் தோன்றுதலால், பகவான் பிரணவத்தின் பொருளாவன்:
“ப்ரணவோ பகவத்வாசீ ப்ராதாந்யாதர்த்தஸம்பவாத்” என்பது காண்க.

ஒண்சுடர் – சூரிய சந்திர அக்கினிகளாகிய முச்சுடர்களின் ஒளியினும் மேம்பட்ட பேரொளி;
புறவிருளையே போக்குகின்ற அவ்வொளி களினுஞ்சிறக்குமாறு அகவிருளையும் அகற்றும் ஞானவொளி;
தோற்றக்கேடுகளும் மிகுதிகுறைவுகளுமின்றி என்றும் ஒருபடிப்பட விளங்கும்ஒளி.
இப்படி சேதநாசேதநங்களுக்கு வியாபகனும் அந்தர்யாமியும் மந்த்ரார்த்தஸ்வரூபியும் தேஜோரூபியுமான பரமாத்மா
சில்வாழ்நாட்பல்பிணிச் சிற்றறிவினராகிய நாமெல்லாம் எளிதிற்சேவித்து ஈடேறுமாறு இவ்வுலகத்தில்
திருவரங்கம் பெரிய கோயிலிலே பள்ளிகொண்ட திருக்கோலமாய்க் காட்சிதந்தருள்கின்ற
திருவருட்பெருமை என்னே! என்று கொண்டாடியவாறாம். முடிக்குஞ்சொல், வருலித்து உரைக்கப்பட்டது.
விதத்தை யுணர்த்துகின்ற “ஆறு” என்ற சொல் வருமிடங்களில் முடிக்குஞ்சொல் கூறப்படாது எஞ்சிநிற்பதை
இலக்கியங்களிற் பலவிடத்துங் காணலாம்; இது, இசையெச்சம்.
இப்படி “ஆறு” என்ற சொல் முடிபின்றி வியப்புவிளக்குதலை,
“வெள்ளைவாகனக்குரிசில்வின்மை வல்லப மிருந்தவாறே” என்ற வில்லபுத்தூரார் பாரதத்திலுங் காண்க.

“பூங்காவிரிப்புனல்” என்ற அடைமொழி, “தெளிவிலாக்கலங்கல்நீர் சூழ் திருவரங்கம்” என்றபடி தலத்தின் நீர்வளவாய்ப்பைக் காட்டும்.
திருவரங்கம் போகமண்டபமெனப்படுதலின், “மிக்கபோகமெல்லாம் யாம்காண யோகத்துயில்கொண்ட ஆறு” எனப்பட்டது;
மூன்னும் “பெருமா ளரங் கப்பெருஞ்செல்வம்” என்றார். போகம் – வைபவம்: செல்வமும், சுகானுபவமும்.
அங்கு எம்பெருமானுக்கு எல்லா ஐசுவரியங்களும் குறைவறவிருத்தலும்,
அப்பெருமான் தெண்ணீர்ப்பொன்னி திரைக்கையாலடி வருட இனிது பள்ளிகொள்ளுதலுங் காண்க.
இனி, “மிக்கபோகமெல்லாம் யாம்காண” என்பதற்கு – (எம்பெருமானைச் சேவித்ததன்பயனாக இம்மைமறுமைவீடுகளில்)
மகாபாக்கியங்களையெல்லாம் நாம் அனுபவிக்கும்படி யென்றும் பொருள் கொள்ளலாம்.
மிக்கபோகம் – வரம்பிலின்ப மெனப்படும் நிரதிசயசுகாநுபவ மென்றலுமாம்.

காவிரி – காவேரீ என்ற வடசொல்லின் விகாரம்; அப்பெயர் – கவேரனென்ற அரசனது மகள் என்று பொருள்படும்.
போகம், யோகம், நியாமகன். ஓங்காரம் – வடசொற்கள். தம்மைப்போன்ற அடியார்களையுஞ் சேர்த்துக்கொண்டு,
உளப்பாட்டுத்தன்மைப்பன்மையாக, “யாம்” என்றார்; கவிகளுக்கு உரிய இயற்கைத்தனித்தன்மைப்பன்மையுமாம்.
எண்ணெய் – எள் நெய்: எள்ளின் சாரம். ஒள் – ஒண்மை யென்ற பண்பின் அடி.
ஒள் + சுடர் = ஒண்சுடர்: பண்படிகளின் லகார ளகாரங்கள் வலிவர னகார ணகாரங் களாம்.
போகம், யோகம், நியாகுபவன், வாழச்செய்பவன். நியாமகன் – நியமிப்பவன், நடத்துபவன். சேஷி – தலைவன், உடையவன்.

———-

கறங்கு ஆழி நாள் எட்டு இலக்கம் இயோசனைகட்செவியின்
பிறங்கு ஆகம் மும்மை இலக்கம் இயோசனை பேர் உலகில்
இறங்கு ஆழி மேகம் எனவே அரங்கத்தில் எந்தை அதில்
உறங்கு ஆகம் நீளம் ஐந்து ஐம்பதினாயிரம் ஒசனையே–5–

(இ – ள்.) கறங்கு – ஆரவாரிக்கின்ற,
ஆழி – திருப்பாற்கடலினது,
(நீளம்) -, நால் எட்டு இலக்கம் யோசனை – முப்பத்திரண்டுலக்ஷம் யோஜனை யளவாம்;
கட்செவியின் – (அதனிடையேயுள்ள) திருவனந்தாழ்வானுடைய,
பிறங்கு ஆகம் – விளங்குகின்ற திருவுடம்பினது,
(நீளம்) -, மும்மை இலக்கம் யோசனை – மூன்றுலக்ஷம் யோஜனையாம்;
பேர் உலகில் இறங்கு ஆழி மேகம் எனவே – பெரிய இந்நிலவுலகத்தி லிறங்கிவந்த சக்கராயுதத்தையு டையதொரு மேகம்போல,
அரங்கத்தில் எந்தை அதில் உறங்கு – திருவரங்கத்தி லெழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான்
அந்தத் திருவனந்தாழ்வான் மேலே (பள்ளிகொண்டு) யோகநித்திரைசெய்தருள்கின்ற,
ஆகம் – திருமேனியினது,
நீளம் -நீட்சி,
ஐந்து ஐம்பதினாயிரம் ஓசனை – இரண்டரை லக்ஷம் (இரண்டுலக்ஷத்து ஐம்பதினாயிரம்) யோஜனையாகும்; (எ – று.)

எம்பெருமானுக்கு உரிய பரத்வம், வியூகம், விபவம், அந்தர்யாமித்வம், அர்ச்சை என்ற
ஐவகைநிலைகளுள் வியூகநிலை, இதிற் குறிக்கப்பட்டது.
பிரமன் முதலியதேவர்கள் வணங்கி வழிபடுந்தெய்வமாய் எல்லா அவதாரங்களுக்கும் முதலாய்ப்
படைத்தல் காத்தல் அழித்தல் தொழில்களுக்குக் கர்த்தாவாய்த் திருப்பாற்கடலிலே வாசுதேவ ஸங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்தர்களாகிய
நான்கு ரூபத்துடன் எழுந்தருளியிருக்கின்ற நிலை, வியூக மெனப்படும்.
அந்த நான்குமூர்த்திகளுட் பிரதானமாகிய வாசுதேவமூர்த்தியின் திருமேனிவளத்தைக் கூறுபவராய்,
அதற்கு அங்கமாகப் பாற்கடலின் நீளமே தொடங்கிக் கூறலானார்.

“ஆழி” என்று பொதுப்படக்கூறினாரேனும், சந்தர்ப்பத்தால், பாற்கடலைக் குறித்தது. நாலெட்டு – பண்புத்தொகை.
“ஆசறவயங்குஞ் சாகநற்றீவி னகல நாலெட்டிலக்கத்தி, னோசனையனந்தன்மிசை யரியுறும்பாலுவரியு மன்னதேயாம்” என்ற
மகாபாகவதத்தாலும் பாற்கடற் பரப்பின் எல்லையை உணரலாம்.
இதனால், “நாலெட்டு” என்பதற்கு – உம்மைத்தொகையாக, பன்னிரண்டுஎனப் பொருள்கொள்ளுதல் பொருந்தாமை, வெளிப்படை.
யோசனை – நான்குகுரோசங் கொண்டது; அவ்வளவை,
“அங்குலமறுநான் கெய்தினதுகரம் கரமோர்நான்கு, தங்குதல் தனுவென்றாகும் தனுவிரண்டது வோர்தண்டம்,
இங்குறுதண்டமானவிராயிரங்குரோ சத்தெல்லை, பங்கமில்குரோசநான் கோரியோசனைப்பாலதாமே” என்பதனாற் காண்க.
யோசனை, சற்று ஏறக்குறையக் காதவளவாம்.

கறங்காழி – வினைத்தொகை; கறங்குதல் – ஒலித்தல். ஆழ்ந்துள்ளது ஆழி யெனக் காரணக்குறி;
இ – கருத்தாப்பொருள்விகுதி. இலக்கம் – லக்ஷமென்ற வடசொல்லின் விகாரம். இலக்கம் – நூறாயிரம்.
யோசனை, ஓசனை – யோஜநா என்ற வடசொல்லின் விகாரங்கள். இலக்கம் + யோசனை = இலக்கமியோசனை:
தன்னொழிமெய்ம்முன் யகரம்வர இகரம் தோன்றிற்று;
இனி, இலக்கம் இயோசனை என்றுபிரித்து, இகரத்தை “யவ்விற்கு, இய்யும் மொழிமுதலாகி முன்வருமே” என்றபடி
யகரத்தை முதலிலேயுடைய வடமொழியின்முன் வந்ததாகக் கொள்ளுதலும் ஒன்று.
கட்செவி – கண்செவி: கண்களாகிய காதுகளையுடையது; பண்புத்தொகைப்புறத்துப்பிறந்த. அன்மொழித்தொகை:
கண்களையே காதுகளாகவு முடைய தென்று கருத்து;
பாம்புகட்குக் கண்ணாகிய பொறியொன்றிலேயே காணுதலுங் கேட்டலுமாகிய புலனறிவிரண்டும் அமைந்திருத்தல் காண்க:
இதுபற்றி, வடநூலார் பாம்புக்கு “சக்ஷுஸ்ரவஸ்” என்று ஒருபெயர் கூறுவர்; “கோகனநாகம்” என்றார் வில்லிப்புத்தூராரும்.
“தெரிமாண் தமிழ்மும்மைத் தென்னம்பொருப்பன்” என்றவிடத்துப்போல,
இங்கு “மும்மை” என்பது – மூன்றின் தன்மையை யுணர்த்தாமல் மூன்றென்னும் எண்ணையே உணர்த்தியது:
“இருமைவகை தெரிந் தீண் டறம் பூண்டார்” என்ற திருக்குறளில் “இருமை” என்றதும் இத்திறத்ததே:
இதில், “மை” விகுதி – தன்மையை யுணர்த்தாமல் தன்மையையுடைய பொருளையே உணர்த்தியதனால், பகுதிப்பொருள்விகுதியாம்;
இதனை வடநூலார் ஸ்வார்த்தபாவதத்திதப்ரத்யய மென்பர்.

எம்பெருமானது திருமேனிக்கு மேகம் – நிறத்திலும், கண்டவர் கண் குளிரச்செய்யுந்திறத்திலும்,
அடுத்தவரிளைப்புத்தவிர்த்தலிலும் உவமை.
சக்கராயுதத்தைக் கையிலுடைய திருமாலுக்கு உவமையாதற்பொருட்டு “ஆழி மேகம்” என்றார்; அது – இல்பொருளுவமை.
திருப்பாற்கடல் இந்நிலவுலகத்திலுள்ள தாதலால், மேகத்திற்கு “பேருலகிலிறங்கு” என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.
மேகம் – வடசொல். ஏ – தேற்றம். எந்தை – எமது பரமபிதா: யாம் என்ற பகுதி, “எம்” என விகாரப்பட்டது;
தை – விகுதி. எந்தை = நம்பெருமாள். நீளம் – நெடுமை.
ஐந்தைம்பதினாயிரம் – பண்புத்தொகைப் பன்மொழித்தொடர்; இருநூற்றைம்பதினாயிரம்.
கடலிற் படிந்து அதன்நீரை யுட்கொண்டு கருவுற்ற நீலமேக மென்ற பொருளில் “ஆழி மேகம்” என்றாருமாம்.
இனி, “ஆழி மேகம்” என்றதைப் பன்மைவிகுதிபெறாத அஃறிணையும்மைத்தொகை யென்று கொண்டு,
கடலும் மேகமும் போலவென்று தனித்தனி உவமையாக உரைப்பர் ஒருசாரார்.
பேருலகில் ஆழிஇறங்கு மேகம் என மொழிமாற்றி, பெரிய இவ்வுலகத்திலே அப்பாற்கடலிலிறங்கிப் படிந்ததொரு
மேகம்போல வென்று பொருள்கொள்ளுதலும் அமையும். “நீளம்” என்றதனைப் பிறவற்றிற்குங் கூட்டுக; கடைநிலைத்தீவகம்.
“யோசனை” என்றது, பெயர்ப்பயனிலையாய் நின்றது.

—————

பாற் கடல் நாள் எட்டு இலக்கம் இயோசனை பாற் கடலுள்
மால் கவி கோயில் அகலமும் ஈர் ஐந்து வான் அளவும்
தீற்கம் ஓர் ஏழ் திகழ் பணி மூன்று சிறந்த அகலம்
ஏல்கவின் ஒன்றரை உத்தமர் நீளம் இரண்டரையே –6-

(இ – ள்.) பால் கடல் – திருப்பாற்கடலினது,
(நீளம்) -, நால் எட்டு இலக்கம் யோசனை – முப்பத்திரண்டுலக்ஷம் யோஜனையாம்;
பால் கடலுள் – அந்தத் திருப்பாற்கடலினிடையே,
மால் கவி கோயில் – திருமாலை வளைந்துகொண்டிருக்கின்ற திருக்கோயிலினது,
அகலமும் -, ஈர்ஐந்து (இலக்கம் யோசனை) – பத்துலக்ஷம் யோஜனையாம்;
வான் அளவும் தீற்கம் – ஆகாயத்தை யளாவுகின்ற (அத்திருக்கோயிலின்) உயரம்,
ஒர் ஏழு (இலக்கம் யோசனை) – ஏழுலக்ஷம் யோஜனையாம்;
திகழ் பணி – விளங்குகின்ற திரு வனந்தாழ்வானது,
(நீளம்) -. மூன்று (இலக்கம் யோசனை) – மூன்றுலக்ஷம் யோஜனையாம்;
சிறந்த அகலம் – மேன்மையுற்ற (அத்திருவனந்தாழ்வானது) அகலம்,
ஏல் கவின் ஒன்றுஅரை (இலக்கம் யோசனை) – பொருந்திய அழகையுடைய ஒன்றரைலக்ஷம் யோஜனையாம்;
உத்தமர் – (அதிற்பள்ளி கொண்டருள்கின்ற) புருஷோத்தமரான எம்பெருமானுடைய,
நீளம் – (திருமேனியின்) நீட்சி, இரண்டரை (இலக்கம் யோசனை) – இரண்டரைலக்ஷம் யோஜனையாம்; (எ – று.)

“அகலம்” “தீற்கம்” என்ற சொற்க ளில்லாத இடங்கட்கெல்லாம், “நீளம்” என்பது, தகுதிபற்றி,
முந்தினசெய்யுளிற்போல எடுத்துக்கூட்டப் பட்டது.
“தீற்கம்” என்பதை “பாற்கடல்,” “பணி” என்றவற்றோடுங்கூட்டி, அதற்கு அவ்விடங்களில் நீளமென்று பொருள் கொள்ளுதலுமாம்.
“இலக்கம்,” “யோசனை” என்ற சொற்கள் எடுத்து எல்லா வாக்கியங்களிலுங் கூட்டப் பட்டன; முதனிலைத்தீவகம்.

“பாற்கடல் நாலெட்டிலக்கமியோசனை, “திகழ் பணி மூன்று,” “உத்தமர்நீள மிரண்டரை” என்ற
மூன்று விஷயங்கள் கீழ்ச் செய்யுளிற் கூறியனவே யானாலும்,
“பாற்கடலுள்மாற்கவிகோயிலகலமு மீரைந்து,” “வானளவுந்தீற்க மொரேழு”, “சிறந்தகல மேற்கவினொன்றரை” என்ற
மூன்றுவிஷயங்கள் புதியன வாதலால், இச்செய்யுள் கூறியதுகூற லென்னுங் குற்றத்தின்பாற்படா தென்க.
முன்சொன்ன மூன்று விஷயங்களை இங்கு மீளவுஞ்சொன்னது, அவற்றைச்சார்ந்த விஷயங்களனைத்தையும்
ஒருங்கே தொகுத்துணர்த்தவேண்டு மென்னுங் கருத்தினா லென்க;
“கூறியது கூறினுங் குற்றமில்லை, வேறொரு பொருளை விளைக்கு மாயின்” என்பது காண்க.
வெவ்வேறு நூல்களிற் கூறியவற்றின் மொழிபெயர்ப்பாக இங்ஙனம் தனித்தனி கூறினர்போலும்.

மால் – பெருமை, அடியார்கள்பக்கல் அன்பு, திருமகளிடத்துக் காதல், மாயை, கருநிறம் இவற்றை யுடையவன்;
தன்னையடைந்தவர்க்குத் தன்பக்கல் மோகத்தை விளைப்பவ னென்றும் பொருள்கொள்ளலாம்.
மாற் கவி – இரண்டாம்வேற்றுமைத்தொகை யாதலின், உயர்திணைப்பெயரீறு திரிந்தது, “இயல்பின் விகாரம்”,
உம்மை – எச்சப்பொருளது, ஈரைந்து – பண்புத்தொகை. அளவும் – அளாவும் என்பதன் விகாரம்.
இனி, “வான் அளவும்” என்பதற்கு – ஆகாயம்வரையிலும் என்று உரைத்தல் சிறப்பன்று.
“தீர்க்கம்” என்ற வடசொல் எதுகைநோக்கி, “தீற்கம்” என்று விகாரப்பட்டது.
சிறந்தகலம் – சிறந்தஅகலம் என்றதன் தொகுத்தல்.
“ஏல் கவின்” என்ற வினைத்தொகையில், லகரம் திரிந்தது, எதுகைநயம்நோக்கி யென்க.
இனி, ஏல் என்பதை முதனிலைத்தொழிற்பெயரென்று கொண்டு, இரண்டாம் வேற்றுமையுருபும்பயனுந் தொக்கதொகை யாக்கி,
ஏற்றலையுடைய அழகென்றலு மொன்று.
நீளத்துக்குஏற்ற அகலமாய் அமைந்து அழகுசெய்து சிறப்ப தென்பது தோன்ற, “சிறந்தகலம்” என்றும், “ஏற்கவின்” என்றுங் கூறின ரென்க.
உத்தமர் – சிறந்தவர்; உத்தமபுருஷர்.
“மால் கவி” என்பதற்கு – மேகங்கள் படிகின்ற வென்று உரைப்பாரு முளர்; பெருமையோடு கவிந்த வென்பர் ஒருசாரார்.

இனி, இச்செய்யுளை ஊன்றி நோக்குமிடத்து, இது இந்நூலாசிரியர் செய்ததன்றி வேறியாரோ செய்து
இந்நூலினிடையே சொருகுகவியாகச் சேர்த்ததென்று சொல்லவும் இடமுண்டு; இத்தன்மையதை வடநூலார் “ப்ரக்ஷிப்தம்” என்பர்.
இங்ஙனம் ஊகித்தற்குஉரிய காரணங்கள்: –
(1) இவ்வகைப் பிரபந்தத்திற் செய்யுள்தோறும் பிரபந்தத்தலைவன் பெயரையேனும் தலப் பெயரையேனுங் கூறும்
மரபிற்கு மாறாக “உத்தமர்” என்ற பொதுப்பெயரைக் கூறுதல்.
(2) கீழ்ச்செய்யுளோடு இச்செய்யுள் ஒருசார் கூறியது கூறலாதல்.
(3) இப்பிரபந்தச்செய்யுள்களின்தொகை 110 என முழுத்தொகையாகாது, இச்செய்யுளைச்சேர்க்குமிடத்து 111 – எனச் சொச்சத்தொகை கொள்ளுதல்.
(4) “நீளம்” என்ற சொல்லைக் கடைநிலைத் தீபகமாக முன்வாக்கியங்களிலும்
“தீற்கம்” என்பதை இடைநிலைத்தீபகமாக முன்பின்வாக்கியங்களிலுங் கூட்டுதற்கு இடமின்றி
“அகலம்” என்ற சொல் இடையிடையேவந்துநின்று “பாற்கடல்,” “பணி” என்றவற்றிற்கு இன்ன அளவென விளங்கவொட்டாமை.
(5) “மாற்கவி” என்ற சொற்றொடரும் “தீற்கம்” என்ற சொற்பிரயோகமும் சிறவாமை.
(6) அவற்றோடு, “சிறந்தகலம்,” “ஏற்கவின்” என்ற தொடர்கள் சொல்லமைப்பிலும் பொருள்வளத்திலுஞ் சிறப்பின்றித்
திவ்வியகவியான ஐயங்காரது செய்யுள்நடையழகிற்கு ஏலாமை.
(7) “வானளவும்” என்றது பயனின்றிநிற்றல்.
இவை முதலாக “குன்றக்கூறல், மிகைபடக்கூறல், கூறியதுகூறல், வழூஉச்சொற்புணர்த்தல், மயங்கவைத்தல்,
வெற்றெனத்தொடுத்தல், நின்றுபயனின்மை” என்ற நூற்குற்றங்களும், பிறவும் உய்த்துணர்ந்து கொள்க.
ஐயங்காரது செய்யுள்களின் சொற்பொருள்வளங்கள்
“தேனையு மமுதையு மனைய தீஞ்சொலோர்ந், தானையின்கன்றென வமைக்கும் பாடலான்,
ஏனைய பாட லொன்றேனு மோதிலான், பூனைபோல்வஞ்சனைப் புந்திகொண்டிலான்” என்று கொண்டாடும்படியிருத்தல், பிரசித்தம்.

———-

அடித்தலம் அந்த அதலம் பொரு திரை ஆழி வையம்
கடித்தலம் நேமிக்கிரி உடை ஆடை கபாலி முன் நாள்
மிடித்து அலமந்தது ஒழித்தான் அரங்கன் விழி இரு கோள்
முடித்தலம் அண்ட முகடு இனி யாம் என் மொழிவதுவே –7-

(இ – ள்.) முன்நாள் – முற்காலத்தில்,
கபாலி – (பிரமனது) தலையோட்டை(க் கையிலே) யுடையவனாகிய சிவன்,
மிடித்து – (அப்பிரமதேவனது சாபத்தால்) வறுமையுற்று,
அலமந்தது – (கண்டஇடமெங்கும் இரந்து) திரிந்து வருந்தியதை,
ஒழித்தான் -போக்கியருளியவனான,
அரங்கன் – திருவரங்க நாதனுக்கு, –
அடி தலம் – திருவடிக ளிருக்குமிடம்,
அந்த அதலம் – அந்த (கீழுலகமாகிய) அதலலோகமாம்:
கடி தலம் – திருவரை யிருக்குமிடம்,
பொரு திரை ஆழி வையம் – மோதுகின்ற அலைகளையுடைய கடலாற் சூழப் பட்ட பூலோகமாம்;
உடை ஆடை – (அத்திருவரையில்) உடுக்கப்படுவதாகிய வஸ்திரம்,
நேமி கிரி – (அப்பூலோகத்தைச் சூழ்ந்திருக்கின்ற) சக்கரவாள பர்வதமாம்;
விழி – திருக்கண்கள்,
இரு கோள் – சூரிய சந்திரர்களாம்;
முடி தலம் – திருமுடி யிருக்குமிடம்,
அண்டம் முகடு – அண்டகோளத்தின் உச்சியாம்; (என்றால்),
இனி யாம் மொழிவது என் – (அப்பெருமானது திருவுருவத்தின் பெருமையைக் குறித்து) இனி நாம் சொல்லத்தக்கது யாதுஉளது!

எம்பெருமானது விராட்ஸ்வரூபத்தின் அல்லது விசுவரூபத்தின் மகத்துவத்தைச் சிறிதுஎடுத்துக்காட்டி,
அது முழுவதுங்கூறுதற்கரிதென்று அதன் அருமைபெருமைகளை விளக்கியது,
இது. சிவபிரான் இரத்தலைத் திருமால் ஒழித்த வரலாற்று முகத்தால், எம்பெருமானுடைய பரத்துவத்தை வெளியிட்டவாறு.

அதலம் – கீழேழுலகங்களி லொன்று; இங்கே, கீழுலகமென்றமாத்திர மாய்நின்றது.
“அந்த” என்று சேய்மைச்சுட்டாற் குறித்தனர், அது பலயோ சனைதூரங்கட்கு அப்பாலுள்ளதனால்; உலகறிசுட்டுமாம்.
வையம் – (பொருள்களை) வைக்குமிட மெனக் காரணப்பொருள்படும்.
நேமிக் கிரி – ஏழுமகா த்வீபங்களைச் சூழ்ந்திருக்கின்ற ஏழு பெருங்கடல்களுக்கும் அப்பாற் கோட்டைமதில்போலச் சூழ்ந்துள்ளதொரு பெருமலை.
சக்ராகாரமாக (வட்டமாக) ப்பூமியைச் சூழ்ந்திருத்தல்பற்றி, அதற்குச் சக்ரவாளமென்று பெயர். அதன் பரியாயநாமமாக “நேமிக்கிரி” என்றார்.
நேமி – சக்கரம், கிரி – மலை. உடை, உடு – பகுதி: ஐ – செயப்படுபொருள்விகுதி.
அலமந்தது – இறந்தகாலத்தொழிற்பெயர்; அலமா – பகுதி; ஈறுகுறுகிற்று. ஒழித்தான் – பெயர்.
கோள் – க்ரஹமென்ற வடமொழிப்பெயர்க்கு ஏற்ற தமிழ்ச்சொல்.
இருசுடரிற் சூரியன் வலக்கண்ணும், சந்திரன் இடக்கண்ணுமாம். தலம், கடி, நேமி, கிரி, கபாலீ, அதலம், அண்டம் – வடசொற்கள்.

————

திண் சுடர் ஆழி அரங்கேசர் திக்கு திருச் செவியில்
மண் கழலில் சத்ய லோகம் சிரத்தில் மருத்து உயிரில்
தண் கதிர் உள்ளத்தில் வான் உந்தியில் செந்தரணி கண்ணில்
ஒண் கனல் இந்திரன் வாழ் முகப் போதில் உதித்தனரே –8-

(இ – ள்.) திண் சுடர் ஆழி அரங்கேசர் – வலிமையையும் ஒளியையு முடைய சக்கராயுதத்தை யேந்திய திருவரங்க நாதரது,
திரு செவியில் – அழகிய காதிலிருந்து,
திக்கு – திக்குக்களும்,
கழலில் – திருவடிகளிலிருந்து,
மண் – பூமியும்,
சிரத்தில் – திருமுடியிலிருந்து,
சத்யலோகம் – சத்தியலோகமும்,
உயிரில் – உயிரிலிருந்து,
மருத்து – வாயுவும்,
உள்ளத்தில் – மனத்திலிருந்து,
தண் கதிர் – குளிர்ச்சியான கிரணங்களையுடைய சந்திரனும்,
உந்தியில் – திருநாபியிலிருந்து,
வான் – ஆகாயமும்,
கண்ணில் – திருக்கண்ணிலிருந்து,
செம் தரணி – செந்நிறமுள்ள சூரியனும்,
வாழ் முகம் போதில் – சிறப்புற்ற தாமரைமலர்போன்ற திருமுகத்திலிருந்து,
ஒள் கனல் இந்திரன் – ஒளியுள்ள அக்கினியும் இந்திரனும்,
உதித்தனர் – (ஆதியில்) தோன்றினார்கள்; (எ – று.)

இது – புருஷஸூக்தத்திற் கூறிய விஷயம்; ‘மறைப்பொருள்.’ அங்குக் கூறிய முறை –
“தண்கதிர் உள்ளத்தில், கண்ணில் தரணி, முகத்தில் இந்திரன் கனல், உயிரில் மருத்து, உந்தியில் வான்,
சிரத்திற் சத்யலோகம், கழல்களில் மண், திக்குக்கள் திருச்செவியில்” என்றுஉள்ளது.
இவ்விஷயம், இதிஹாஸபுராணாதிகளிலும் காணப்படுகின்றது.
“கண்ணிலே சூரியனும், மனத்திலே சந்திரனும், பிராணனிலே வாயுவும், முகத்திலே அக்கினியும், நாபியிலே அந்தரிக்ஷமும்,
சிரத்திலே மேலுலகமும், கர்ணத்திலே திசையும், பாதங்களிலே பூமியும் உண்டாயின” என்றது, விஷ்ணுபுராணம்.
பிறவும் இங்ஙனம் கண்டுகொள்க; விரிப்பிற் பெருகும்.

திக்கு, மண், சத்யலோகம், மருத்து, தண்கதிர், வான், தரணி, கனல், இந்திரன் என
அஃறிணையும் உயர்திணையும் கலந்து எண்ணி, மிகுதியால், ‘உதித்தனர்’ என உயர்திணைப்பன்மைமுடிபைப் பெற்றன;
“பார்ப்பா ரறவோர் பசுப்பத்தினிப்பெண்டிர், மூத்தோர் குழவி யெனுமிவரை” என்றவிடத்துப் போல,
திக்கு மண் சத்யலோகம் வான் என அஃறிணைப்பொருள் நான்காக,
மருத்து தண்கதிர் தரணி கனல் இந்திரன் என உயர்திணைப் பொருள் ஐந்தாதலால், மிகுதி யெனப்பட்டது;
அன்றி அஃறிணையும் உயர்திணையும் விரவிச் சிறப்புப்பற்றி உயர்திணையால் முடிந்தன வெனினும் அமையும்;
“பொன்னனும் குதிரையும் வந்தார்கள்” என்றாற் போல: அஃறிணையினும் உயர்திணை சிறந்ததென்பது வெளிப்படை.
இத்திணைவழுவமைதியை “திணை பால்பொருள் பல விரவின சிறப்பினும், மிகவினும் இழிபினும் ஒருமுடிபினவே” எனக் கூறினர் நன்னூலார்.
மருத்து, தண்கதிர், தரணி, கனல் என்ற சொற்கள் – தேவர்களைக் குறித்தலால், உயர்திணையாம்;
ஆகவே, “உதித்தனர்” என்ற பாடம் வழு வென்று கொண்டு ‘உதித்தன’ என்று திருத்துதல் குற்சிதமாத லுணர்க.
இனி, ப்ரத்யேகாந்வயமாக, “உதித்தனர்” என்ற முற்றை அதற்கு ஏற்ப ‘உதித்தன’, ‘உதித்தது’, ‘உதித்தனன்’
என மாற்றித் தனித்தனிகூட்டிமுடித்தலும் இலக்கணமே.

ரங்கேஸர், திக், ஸத்யலோகம், ஸிரஸ், மருத், தரணி, இந்த்ரன், முகம் – வடசொற்கள்.
ரங்க + ஈசர் = ரங்கேசர்: வடமொழிப்புணர்ச்சி, குணசந்தி: அ ஆ முன் இ ஈ வரின், அவ்விரண்டுங் கெட ஓர்ஏகாரம் தோன்றும்.
“செவியில்” முதலியவற்றில், இல் – ஐந்தனுருபு, நீக்கப்பொருளது. திருவை மற்றைத்திருவவயவங்களுக்குங் கூட்டுக.
சத்யலோகம் – மேலேழுலகங்களுள் மேலது; அதுவே பிரமலோகம்.
தண் கதிர் – பண்புத்தொகை யன்மொழி.
கனல் இந்திரன் – உம்மை தொக்குப் பன்மை விகுதி பெறாது வந்ததனால், உயர்திணைப் பெயர்ச்செவ்வெண்.
வாழ்தல் – மேம்படுதல், முகப்போது – முன் பின்னாகத்தொக்க உவமைத்தொகை.
“வாழ்” என்பதைப் போதிற்கு அடை மொழியாக்கி, இங்கே போதிற்கு வாழ்வு – காலபேதத்தால் வாடுதலும் குவிதலும் இன்றி
எப்பொழுதும் மலர்ந்தபடியே விளங்குத லென்னலாம்.
அங்ஙனம் ஒருமல ருண்டானால் அதுவே எம்பெருமானது திருமுகத்திற்கு உவமையாகு மென இல்பொருளுவமை கூறியவாறாம்.
அரங்கரது நகை முகத்திற்கு உவமையாதற்கு ஏற்ப “வாழ்போது” என்றன ரென்க.
இனி, “வாழ்” என்ற வினைத்தொகையைக் காரணப்பொருளதாக்கி முகத்தோடு இயைத்து,
(அடியவர்) பேரின்பவாழ்வடைதற்குக் காரணமான முக மென்றலுமாம்.
திண்மை – ஆழிக்கு அடைமொழி. ஆழிக்குத் திண்மை – எவ்வளவு வலிமையையுடைய கொடியவரையும் தவறாது அழித்தல் முதலியன.
ஆழிக்குச் சுடர் – ஆயிரங்கோடி திவாகரன்போ லொளிர்தல்.
இனி, திண்சுடர் – மிக்கவொளி யென்னவுமாம். தரணிக்குச் செம்மை – இனம்விலக்க வந்ததல்லாத இயற்கையடைமொழி.
இந்த்ரன் என்பது – பரமைசுவரிய முடையவ னென்று பொருள்படும்.
செய்யுளோசையின் பொருட்டு, “சத்தியலோகம்” என்னாது “சத்யலோகம்” என்றார்.

———-

புரம் ஆயிரம் திருக் கண் மலர் ஆயிரம் புண்டரிகக்
கரம் ஆயிரம் கழற் கால் மலர் ஆயிரம் கண்ணி முடிச்
சிரம் ஆயிரம் திரு நாமமும் ஆயிரம் செய்ய கையில்
அரம் ஆயிரம் கொண்ட திண் திறல் ஆழி அரங்கருக்கே–9–

(இ – ள்.) செய்ய கையில் – சிவந்த (வலத்) திருக்கையிலே,
அரம் ஆயிரம் கொண்ட திண் திறல் ஆழி – ஆயிரம்அரங்களைக்கொண்ட மிக்கவலிமையையுடைய சக்கராயுதத்தை யேந்திய,
அரங்கருக்கு – திருவரங்கநாதர்க்கு, –
புரம் ஆயிரம் – திருமேனி ஆயிரமாம்;
திரு கண் மலர் ஆயிரம் – செந்தாமரைமலர் போன்ற திருக்கண்கள் ஆயிரமாம்;
புண்டரிகம் கரம் ஆயிரம் – செந்தாமரைமலர்போன்ற திருக்கைகள் ஆயிரமாம்;
கழல் கால் மலர் ஆயிரம் – வீரக்கழலையணிந்த செந்தாமரைமலர்போன்ற திருவடிகள் ஆயிரமாம்;
கண்ணி முடி சிரம் ஆயிரம் – மலர்மாலையையும் கிரீடத்தையுந் தரித்த திருமுடிகள் ஆயிரமாம்;
திருநாமமும் ஆயிரம் – திருப்பெயர்களும் ஆயிரமாம்.

“தோள்களாயிரத்தாய் முடிகளாயிரத்தாய் துணைமலர்க்கண்களாயி ரத்தாய்,
தாள்களாயிரத்தாய் பேர்களாயிரத்தாய் தமியனேன்பெரியவப்பனே” என்றார் நம்மாழ்வார்.

“வேதஞ்செப்பும், பேராயிரந் திண்பெரும்புயமாயிரம் பெய்துளவத், தாரார்முடியாயிரம்” என்றார் கம்பரும்.
இதன் கருத்து, மூன்றாஞ்செய்யுளினுரையிற் கூறப்பட்டது.

*”நமோஸ்த்வநந்தாய ஸஹஸ்ரமூர்த்தயே, ஸஹஸ்ரபாதாக்ஷிசிரோ ருபாஹவே,
ஸஹஸ்ரநாம்நே புருஷாய” என்ற வடநூல்மேற்கோளையுங் காண்க.

புரம், புண்டரீகம், கரம், நாமம், அரம் – வடசொற்கள்.
கண்மலர், கான்மலர் – முன்பின்னாகத்தொக்க உவமைத்தொகைகள்.
புண்டரீகமென்பது வெண்டாமரைக்குப் பெயராக நிகண்டுகளிற் கூறப்பட்டிருப்பினும், “புண்டரீகாக்ஷன்” என்ற இடத்திற் போல,
இங்கே, செந்தாமரையைக் குறித்தது; கொடியின் பெயர், இங்கு, மலர்க்கு இலக்கணை.
கழல் – வீரர் தமது வீரத்திற்கு அறிகுறியாகக் காலிலணிவது; வள்ளல்கள் தமது கொடைக்கு அறிகுறியாக அணிவது முண்டு.
துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலனங்களைத் தான் செய்தருளுதல் விளங்க,
எம்பெருமான் திருவடியிற்கழல்கட்டிக் கொண்டிருக்கின்றன னென்க.
இனி, கான்மலர் – நறுமணத்தையுடைய மலர் போன்ற, கழல் – திருவடி யென்றலுமாம்.
கண்ணி – முடியிற்சூடும் மாலை. நாமமுமாயிரம் – இறந்தது தழுவிய எச்சவும்மை யாதலால், இறுதியில் வைக்கப்பட்டது.
அரம் – சக்கரத்தின் ஆர். திண், திறல் – ஒருபொருட்பன்மொழி.
ஆழிக்குத் திண்திறலாவது – அசுரர் அரக்கர் முதலிய கொடியவ ரனைவரையும் கருதியமனத்தினுங்
கடுகச்சென்று கருவறுத்து உயிர்கவரும் ஆற்றல்.
திண் திறல் – வலிய போர்செய்யவல்ல என்றலு மொன்று. கண்ணி – திருத் துழாய்மாலையுமாம்.

———–

முன் நாள் விசும்பும் புவியும் திசையும் முறை வகுத்த
அன் நான்முகன் தனது ஆவி எல்லாம் மலர் ஆசனை ஆம்
மின் ஆர் மழை முகில் நல் நாகம் மீதில் விழி துயில் கூர்
எம் நாதனுக்கு ஒரு மூச்சு என்று வேதம் இசைக்கின்றதே –10-

(இ – ள்.) முன் நாள் – முற்காலத்தில் (மகாப்பிரளயம் நீங்கியவுடனே தான் எம்பெருமானது திருநாபிக் கமலத்திலிருந்து தோன்றிய காலத்தில்),
விசும்பும் – ஆகாயத்தையும்,
புவியும் – பூமியையும்,
திசையும் – மற்றை யெட்டுத் திக்குகளையும்,
முறை வகுத்த – (அந்தஎம்பெருமானது திருவயிற்றினுள்ளே தான்கண்ட) கிரமத்தின்படி வகைப்படுத்துச் சிருஷ்டித்த,
அ நான் முகன்தனது – நான்குமுகங்களையுடையவனான அந்தப்பிரமனது,
ஆவிஎல்லாம் – உயிர்முழுவதும் (வாழ்நாளெல்லாம்), –
மலர் ஆசனை ஆம் – செந்தாமரைமலரை (த் தான்வீற்றிருக்கும்) பீடமாகவுடையவளான திருமகளாகிற,
மின் – மின்னல்,
ஆர் – பொருந்திய,
மழை முகில் -கார்காலத்து மேகம் (நீலமேகம்) போன்ற திருமேனியையுடையவனான,
நல் நாகம்மீதில் விழிதுயில் கூர் எம் நாதனுக்கு – சிறந்த ஆதிசேஷன்மேல் திருக்கண்வளர்ந்த ருள்கின்ற நம்பெருமாளுக்கு,
ஒரு மூச்சு – ஓர்உயிர்ப்பாம் (ஒரு சுவாசமாம்),
என்று -, வேதம் இசைக்கின்றது – வேதம் சொல்லுகின்றது; (எ – று.)

பத்துத்திக்குகளுள் மேலை “விசும்பு” என்றும், கீழை “புவி” என்றும், மற்றையெட்டையும் “திசை” என்றுங் குறித்தார்.
ஐம்பெரும்பூதங்களுள் முதலதாகிய விசும்பையும், ஈற்றதாகிய புவியையுங் கூறவே, மற்றைப் பூதங்களையுங் கூறியவாறாயிற்று.
இவற்றைக் கூறியது, மற்றைச் சராசரப்பொருள்களுக்கும் உபலஷணம். அகரச்சுட்டு, பிரசித்தி பற்றியது.
மிகவிளங்குகின்ற மெல்லிய வடிவுபற்றி, திருமகளை மின்ன லென்றார்.
மார்பில் திருமகளையுடைய நீலநிறமுள்ளதிருமால், மின்னல்பொருந்திய நீர்கொண்டகாளமேகம் போல்வன்.
ஆதிசேஷனுக்கு நன்மை – எப்பொழுதும் பலவகைக் கைங்கரியங்களைச் செய்தலும், அழிவில்லாமையும் முதலியன.
இனி, நல்ல பாம்பென்னும் வழக்குப்பற்றி, “நன்னாகம்” என்றாருமாம்.
ஆவியெல்லாம் ஒருமூச்சு – பிரமனது உயிர்வாழ்க்கைநாளெல்லாம் எம்பெருமானுக்கு ஒரு மூச்சுவிடுங் கால மென்க.
இதனால், மிகநீண்டஆயுளையுடையவனென்று பிரசித்தனான பிரமதேவனது ஆயுளெல்லை காலவரையறைக்கு உட்படாத
திருமாலுக்கு ஒருமூச்சுவிடுங்காலவளவே யென்று எம்பெருமானது மேன்மையை விளக்கியதாம்.
படைப்புக்குள்ளான பிரமன் முதலிய ஜீவகோடிகளெல்லாம் காலவசப்பட்டனவே யென்பதும்,
காலவசப்படாதவன் எம்பெருமான் ஒருவனேயென்பதும் விளங்க, இதுகூறினார்.
கற்பங்கழிவதனால், எம்பெருமானது ஆயுள் கழிவதில்லையென்க. “ஒருமூச்சு” என்றதும் உபசார வழக்கே.

“கருடவாகனனுக் குலப்பிலாப்பிரமர் கழியும்நாள் கணத்துக்கும் பற்றா,”
“கமலரெண்ணிலர்க ளமர்ந்திடும் பதத்தைக் கழிந்திடுங்காலத்தைக் கடக்கும், விமலன்” என்ற மகாபாகவதமும்,
“ஓரிருபரார்த்தங் கழியுமேல் மலர்வீட்டுறைதரு நான்முக னுலக்கும், ஏர்கெழுபரார்த்த மிரண்டு வெண்டரங்கமெடுத்தெறி
தடங்கடன்முகட்டிற், கார்முகில்கமலக்காடுபூத்துறங்கு காட்சிபோற்கண்வளர் துளவத்,
தாரவன்றனக் கோரிமையென வுரைப்பர் சாற்று மவ்வுரை யுபசாரம்” என்ற ஸ்ரீபாகவதமும், காணத்தக்கன.

புவி, திஸா, நாகம், நாதன், வேதம் – வடசொற்கள். புவியென்பது வடமொழியில் ஏழாம்வேற்றுமைவிரி யாயினும்,
தமிழிற் பெயர்மாத்திரமாய் நிற்கும்.
வேதம் என்பது – (அறியவேண்டியவைகளையெல்லாம்) அறிவிப்பது என்று காரணப்பொருள்பெறும்.
“எந்நாதன்” என்றது, நம்பெருமாளென்ற திருநாமத்தின் பரியாயநாமமாய் நின்றது;
ஆகவே, பிரபந்தவிலக்கணப்படி இச்செய்யுளிற் பிரபந்தத்தலைவனதுபெயர் கூறியதாம்.
முதலடியிலும் மூன்றாமடியிலும் சிறப்புனகரமாகவும், இரண்டாமடியிலும் நான் காமடியிலும் பொதுநகரமாகவும் எதுகையமைத்தன ரென்க;
இவ்வாறு அமைத்தல், ஒருவகைநயம். இதனைப் பலவிடங்களிற் காணலாம்.
இனி, “என்னாதன்” என்ற பாடமும், என் நாதன் என்று பிரிந்து, எனக்குத் தலைவனென அத்திருவரங்கநாதனையே குறிக்கும்;
மந்நாதனென்பது, இதற்கு ஏற்ற வடமொழித்திருநாமமாம்.

—————-

எண்ணில் திகிரிப் பிறப்பிடம் ஆனதும் எண்ணுமவர்
நண்ணிச் சிறக்க இருப்பிடம் ஆனதும் நாசம் இல்லா
விண்ணின் பதிக்குக் கடைத்தலை ஆனதும் விண்ணவர் தம்
கண்ணில் சிறந்ததும் -மா நீர் அரங்கர் தம் கண்ணில் ஒன்றே -11–

(இ – ள்.) எண்ணில் – ஆராய்ந்துபார்க்குமிடத்து, –
திகிரி பிறப்பு இடம் ஆனதும் – சூரியனுக்குப் பிறந்த இடமாகியதும்,
எண்ணுமவர் நண்ணி சிறக்க இருப்புஇடம் ஆனதும் – (தன்னைத்) தியானஞ்செய்யும் அடியார்கள் பொருந்தி மேன்மைப்படுதற்குக் காரணமானதும்,
நாசம் இல்லா விண்ணின் பதிக்கு கடைத்தலை ஆனதும் – (எக்காலத்தும்) அழிதலில்லாத பரம பதத்திற்குச் செல்லும் வழிக்குத் தலைவாயிலாகியதும்,
விண்ணவர்தம் கண்ணின் சிறந்ததும் – தேவர்களுடைய கண்களைக்காட்டிலும் மேன்மைப்பட்டதும்,
மா நீர் அரங்கர்தம் கண்ணில் ஒன்றே சிறந்த காவேரிதீர்த்தத்தாற் சூழப்பட்ட திருவரங்கத்திலே யெழுந்தருளியிருக்கின்றவரான
நம்பெருமாளுடைய திருக்கண்களுள் ஒன்றேயாம் (வலக்கண்ணாம்); (எ – று.)

புருஷஹூக்தம் முதலியவற்றிற் கூறியபடி சூரியன் எம்பெருமானது திருக்கண்ணிலிருந்து ஆதியில் உண்டானதனால்,
“திகிரிப்பிறப்பிடமானது அரங்கர்தங்கண்ணிலொன்று” என்றார்;
முன்னும் (8) “செந்தரணி கண்ணில்” என்றமை காண்க.
(7) “அரங்கன்விழி யிருகோள்,”
“சந்த்ர ஸூர்யௌச நேத்ரே” என்றபடி எம்பெருமானுக்கு வலக்கண் சூரிய னென்பது பற்றி, மற்றை மூன்று விஷயங்கள் கூறுகின்றார்.
சூரியனைத் தியானித்தல் முதலியன செய்பவர். இம்மை மறுமைகளிற் பலவகைநன்மைகளையடைந்து மேம்படுதல்பற்றி,
“எண்ணுமவர் நண்ணிச் சிறக்க இருப்பிடமானது” எனப்பட்டது;
சூரியபகவானுக்கு அவ்வகைமகிமையிருத்தல், “ஆதித்யஹ்ருதயம்” முதலியவற்றால் விளங்கும்.
இருப்பிடம்” என்றது, காரண மென்ற பொருளில் வந்தது; இலக்கணைவழக்கு.
விருப்பு இடம் என்று எடுத்து, விரும்பப் படுவதாகிய விஷய மென்று பொருள்கொள்ளலுமாம்.

“உறுகால்கிளர்பூதமெலா முகினும், மறுகா நெறி” என்றபடி பலவும் அழியுங் கற்பாந்தகாலங்களிலும்
பரமபதம் அழியாது நித்தியமாயிருத்தலால், “நாசமில்லா விண்” என்றார்; “கலங்காப்பெருநகரம்” எனப் பெரியாரும் பணித்தார்.
ஜீவாத்மாக்கள் அர்ச்சிராதிகதியாகிற மார்க்கத்தாற் பரமபதத்திற்குச் செல்லும்பொழுது சூரியமண்டலத்தைப் பிளந்துகொண்டு
அதன்நடுவினாற் செல்லுதலால், “நாசமில்லா விண்ணிற்பதிக்குக் கடைத் தலையானது” எனப்பட்டது;

(“இருளகற்று மெறிகதிரோன் மண்டலத்தூடேற்றி வைத் தேணிவாங்கி,
அருள்கொடுத்திட் டடியவரையாட்கொள்வா னமருமூ ரணியரங்கமே,”
“வெங்கதிர்ப் பரிதிவட்டத் தூடுபோய் விளங்குவாரே,”
“காரார் புரவியேழ் பூண்ட தனியாழித், தேரார் நிறைகதிரோன் மண்டலத்தைக்கீண்டுபுக்,
காராவமுத மங்கெய்தி யதினின்றும், வாரா தொழிவதொன் றுண்டே,”
“மன்னுங் கடுங்கதிரோன் மண்டலத்தி னன்னடுவு, ளன்னதோ ரில்லியி னூடுபோய் வீடென்னுந்,
தொன்னெறிக்கட் சென்றார்” என்ற ஆழ்வாரருளிச்செயல்களைக் காண்க.)

“அந்தச்சூரியபகவான் தான், இராப்பகல்களின் ஏற்பாட்டிற்குக் காரணமாயும், யோகிகளுக்குச் சகலகிலேசங்களும்
விடுபட்டுப்போகுங்காலமாகிய முடிவுகாலத்தில் தேவயாநமார்க்கமாயு மிருக்கின்றான்” என்றது, ஸ்ரீவிஷ்ணுபுராணம்.

தேவயாநமெனினும், அர்ச்சிராதிமார்க்கமெனினும் ஒக்கும்;
அதாவது – முதலில் அக்கினி, பின்பு முறையே பகல், பூர்வபக்ஷம், உத்தராயணம், வருஷம், காற்று, சூரியன்,
சந்திரன், மின்னல், வருணன், இந்திரன், பிரமன் என்பவர்களுடைய எல்லைகளாம்;
மோக்ஷமடைபவர்கள் போகும் வழி இது. இதன் விவரத்தை, ஸ்ரீபிள்ளைலோகாசாரியர் அருளிச்செய்த
அர்ச்சிராதி யென்னும் ரஹஸ்யக்ரந்தம் முதலியவற்றிற் பரக்கக்காணலாம்.
சூரியமண்டலத்தைக் கீண்டு புக்கு ஊடுருவி அப்பாற்செல்லுதல் அண்டகடாகத்தைப்பேதித்துப் புறப்படுவதற்கு முற்பட்ட தாகையால்,
சூரியனை முக்திமார்க்கத்திற்குத்தலைவாயி லென்றார். கடைத்தலை = தலைக்கடை: முன்பின்னாகச்சொல்நிலை மாறியது, இலக்கணப்போலி,
முதலிலேயுள்ள வாயில் அல்லது முதலாகிய வாயில் என்க. தலை – முதல், கடை – வாயில்.

தேவாதிதேவனாகிய எம்பெருமானுக்கு வலக்கண்ணாகிற சூரியன் அப் பெருமானுக்கு அடிமையாகிற தேவர்களுடைய
கண்களினும் மிகப்பலமட ங்குசிறத்தலால், ‘விண்ணவர்தங் கண்ணிற் சிறந்தது’ எனப்பட்டது.
மற்றும், “கண்ணாவா னென்றும், மண்ணோர் விண்ணோர்க்குத், தண்ணார் வேங்கட, விண்ணோர் வெற்பனே,”
“சக்ஷுர்மித்ரஸ்ய வருணஸ்யாக்நே:” என்றபடி.
மண்ணுலகத்தவர்க்கேயன்றி விண்ணுலகத்தவரான சூரியன் முதலிய தேவர்கட்கும் கண்போன்றவனான எம்பெருமானுக்கு
“கண்ணிற் சிறந்த வுறுப் பில்லை”, “ஸர்வேந்த்ரியாணாம் நயநம் ப்ரதாநம்” என்றபடி
சிறந்த கண்ணென்னும் உறுப்பாகின்ற சூரியனை அவ்விண்ணவர்களுடைய கண்ணினுங் சிறந்ததென்று சொல்லுதல் ஏற்கும்.

அன்றியும், “ஜகச்சக்ஷு:” என்றபடி உலகத்து உயிர்கட்கெல்லாங் கண்ணாயிருக்குந்தன்மை சூரியனுக்குஉளதே யன்றி
மற்றைத்தேவர்களுடைய கண்களுக்கு இல்லை யாகையால், அரங்கர் தங்கண்ணிலொன்றாகிய சூரியன்
விண்ணவர்தங்கண்ணிற் சிறந்ததெனத்தகுவன்.

“புரவியே ழொருகா லுடைய தேரிலே திருச்சக்கரமொத்துக் காலசக்கரச்செங்கோல்நடாவி
ஜ்யோதிஸ்சக்ரவொளிசுருக்கி அக்நீஷோ மீயதேஜோம்ருதத்துக்குஊற்றும் மந்தேஹர்க்குச்செந்தீயும்
முக்திமார்க்கத் தலைவாசலும் கண்ணாவான் கண்ணிற்பிறந்த கண்மணியும் த்ரயீமயமுமான மண்டலத்திலே”
என்ற ஆசார்யஹ்ருதயும் இங்கு நோக்கத்தக்கது.

திகிரி – வட்டம், வட்டவடிவமான சூரியனுக்கு, வடிவுப்பண்பாகுபெயர். நாஸம் – வடசொல்.
“நாசமில்லா விண்” எனவே, பரமபத மென நன்கு விளங்கிற்று; சுவர்க்கலோகம்முதலியன கற்பந்தோறும்அழியு மென அறிக.
“விண்” என்று தேவலோகமாகிய சுவர்க்கத்திற்கும் பெயருண்டாதலால், அதனை விலக்குதற்கு “நாசமில்லா” என்ற
அடைமொழி கொடுக்கவேண்டிய தாயிற் றென்க. விண் – ஆகாயம்: இங்கே, பரமாகாசம்;
இன் – சாரியை. பதி – வழி. விண்ணிற்பதி – நான்கனுருபும்பயனுந்தொக்கதொகை.
இனி, “விண்ணிற்பதி” என்றதை இருபெயரொட்டுப்பண்புத்தொகையாகக் கொண்டு, பரமபதமாகிய நகர மென்றலுமாம்;
பதி – ஊர். இன் அல்லது இல் – ஏழனுருபு எனக் கொண்டு, பரமபதமென்ற திவ்வியலோகத்தி லுள்ள
ஸ்ரீ வைகுண்டநகர மென வகுத்துரைத்தலும் அமையும்.
விண்ணவர்தம் – தம். சாரியை. கண்ணின், இன் – ஐந்தனுருபு, எல்லைப்பொருளது.
காவேரிதீர் த்தத்திற்குச் சிறப்பு – தன்னில்நீராடியவர்க்கும் தன்கரைகளில்வாழ்பவர்க் கும் மாத்திரமே யன்றித்
தனதுதீர்த்தத்திற் பரிசித்த காற்றுச் செல்லுமிட மவ்வளவும் உள்ளார்க்கும் முத்திதரவல்ல மகிமை.
இருப்பிடம் – உறையு மிடம் என்றுகொண்டு, சூரியனைத் தியானித்தவர் அந்தத் தியானத்தின் பயனாகச்
சூரிய லோகத்தையடைவ ரென்னும் பொருளைக் கூறியதாக்கலு மொன்று.
மா நீர் – அரங்கத்திற்கு அடைமொழி. அரங்கர்க்கு அடைமொழியாக்கி சிறந்த தன்மையையுடைய
(திருக் கல்யாண குணங்களை யுடைய) ரங்கநாத ரென்னவுமாம்: இப்பொருளில், நீர் – நீர்மை யென்ற பண்பின் அடி,

————

புறக்கன்று புல் இதழ் முந்நீர் பிரசம் பொரு இல் செம்பொன்
நிறக்குன்று கன்னிகை எண் கிரி தாது நிலம் அதனுள்
பிறக்கும் துகள் முது மாசுணம் நாளம் பிரமன் வண்டு
சிறக்கும் திகிரி அரங்கேசர் உந்திச் செழு மலர்க்கே –12-

(இ – ள்.) சிறக்கும் – மேன்மையுற்ற,
திகிரி – சக்கராயுதத்தை யேந்திய,
அரங்க ஈசர் – திருவரங்கநாதரது,
உந்தி – திருநாபியில் தோன்றிய,
செழுமலர்க்கு – செழுமையான தாமரைமலர்க்கு, –
புறம் குன்று – (பூமியைச்சூழ்ந்த கடலுக்கு) அப்பால் (மதில்போலச்) சூழ்ந்திருக்கின்ற சக்கரவாளபர்வதம்,
புல் இதழ் – புறவிதழாம்;
முந்நீர் – கடல்,
பிரசம் – தேனாம்;
பொருவு இல் – ஒப்பில்லாத,
செம் பொன் – சிவந்த பொன்மயமான,
நிறம் குன்று – ஒளியையுடைய மகாமேருபர்வதம்,
கன்னிகை – கொட்டையாம்;
எண் கிரி – அஷ்ட குலபர்வதங்கள்,
தாது – அகவிதழ்களாம்;
நிலம் – பூமி,
அதனுள் பிறக்கும் துகள் – அம்மலரினுள்ளே தோன்றும் மகரந்தப்பொடியாம்;
முது மாசுணம் – பழமையான பெரும்பாம்பு (ஆதிசேஷன்),
நாளம் – தண்டாம்;
பிரமன் – பிரமதேவன்,
வண்டு – வண்டாவன்; (எ – று.)

இதிற் கூறிய உவமை, தோற்றங் காரணமாகக் கற்பித்தது; மெய்யுவமை.
திருமாலின் திருநாபியினின்று பிரமனுடன் தோன்றிய அண்டகோ ளத்தையே நாபித் தாமரைமலராகக் கொண்டு கற்பனை கூறலாயினர்.

“எல்லாத்தீவுகட்கும் நடுவிலுள்ளதான ஜம்பூத்வீபத்திற்கு நடுவில், மேருவென்கிற சுவர்ணபர்வதமானது –
எண்பத்துநாலாயிரம்யோஜனை உயரமுள்ளதும், பதினாறாயிரம்யோஜனை பூமிக்குள்ளே உருவியதும்,
முப்பத்தீராயிரம்யோஜனை தலையில்விரிந்ததும், பதினாறாயிரம்யோஜனை அடியில்விரிந்ததுமாகி,
பூமியென்னுந் தாமரைமலர்க்குக் கர்ணிகைபோல விளங்குகின்றது” என்றது, ஸ்ரீவிஷ்ணுபுராணம்.

(“கமலமென்பொகுட்டின், நடுவுறை மேருவெனும்வரை யுடைத்தாய் நாவலந்தீவு வாய்த்திடுமே” என்ற ஸ்ரீபாகவதத்தையும்,
“பூமியென்னுங் கமலத்தின் பொகுட்டுப் போலும் பொலங்கிரி” என்ற மகாபாகவதத்தையும்,
“விண்ணுயர் சம்புத்தீவி னடுவுநின்ற மேருவரை செங்கமலப்பொகுட்டுப்போல, நண்ணும்” என்ற கந்தபுராணத்தையும் காண்க.)
புல் இதழ் – (மலரின் வெளியே) புல்லுகின்ற (சார்ந்துள்ள) இதழ் என வினைத்தொகை; புல்லுதல் – சார்தல்.
இனி, (நிறம் மணம் மென்மை அழகு இவற்றில் அகவிதழ்போலச் சிறப்புறாமையாற்) புல்லிதாகிய இதழ் எனப் பண்புத்தொகையுமாம்;
புல்லிது – புன்மையுடையது: இப்பொருளில், புல் – புன்மை யென்ற பண்பின் அடி; புன்மை – சிறுமை.
அண்டத்திற் பூமி கடல்களுக்குப் புறத்தேயுள்ள குன்றைப் புறவிதழென்றும்,
அவற்றினகத்திலுள்ள குன்றுகளை அகவிதழென்றுங் கூறினார்.

கடல், திரவபதார்த்தமாதலால், இங்கே தேனெனப்பட்டது.
மகாமேருவைக் கொட்டையென்றது, நிறமும், “பரந்தும்பர்நிமிர்ந்திடு பைம்பொன்வரை” என்றபடி உயர்ந்து தலை விரிந்த வடிவமும்பற்றி.
எண்கிரி – மால்யவாந், கந்தமாதநம், நிஷதம், ஹேமகூடம், இமயம், நீலம், சுவேதம், சிருங்கம் என்பன;
சிறிது வேறுபடக் கூறுதலு முண்டு.

பூமி, துகள்மயமாதலால், இங்கே பூந்துக ளெனப்பட்டது.
இனி, தாது – கேஸரமென்றும் கிஞ்ஜல்கமென்றுங் கூறப்பட்டு இதழ்களின் உட்புறத்திலே கர்ணிகையைச் சுற்றி
மெல்லிய கம்பிகள்போலவும் பட்டு நூல்கள்போலவுமுள்ள பூந்தாது என்றும்,
அத்தாதிற்பிறக்குந்துகள் – புஷ்ப தூளியெனப்படும் மகரந்தப்பொடியென்றும் உரைப்பாரும் உளர்.
தேன் – மலரினுள்ளே யுள்ளது. மகாமேருவைச் சார்ந்துள்ள மலைகளைக் கேஸர பர்வத மென வழங்குதலுங் காண்க.

ஆதிசேஷனை நாளமென்றது, உள் துளையுள்ள நீண்ட வடிவுபற்றி;
(“தண்ணந்தாமரைத்தாளெனத் தடக்கை யாற் பிலத்தில், நண்ணுஞ் சேடனையெடுத்து” என்றார் நைடதத்திலும்.)
கீழே யிருந்து உலகத்தைத்தாங்குகின்ற ஆதிசேஷன், உலகமாகிய தாமரை மலர்க்குக் காம்பாவன்.
இத்தாமரைமலர்க்கு மேலிடமெனத்தக்க சத்திய லோகத்தில் வாழ்தலாலும்,
எப்பொழுதும் வேதகீதஞ்செய்துகொண்டிருத்த லாலும், பிரமனை வண்டெனலாயிற்று;
“வண்டா யய னான்மறை பாட மலர்ந்த தொரு தாமரைப்போது,
பண்டாலிலையின்மிசைக்கிடந்து பாரு நீரும்பசித்தான்போ, லுண்டா னுந்திக்கடல் பூத்தது” என்றார் கம்பரும்.

திருமாலின் திருநாபியை, இவ்வகைப்பெருந்தாமரைமலரைப்பூத்ததொரு பெருநீர்நிலையாகக் கொள்க.
வண்டுக்கு ரீங்காரம்போல, பிரமனுக்கு வேதங்களை முகங்களாற் பாடுதல். மலரின்மேலிடத்தில் ஏகே்தசத்தில்
வண்டு மொய்த்தல்போல, அரங்கேசருந்திச்செழுமலரின்மேலே ஏகதேசத்திற் பிரமன் அடங்கிக்கிடக்கின்றா னென,
திருமாலினது திருநாபிக்கமலத்தின் பெருமையைத் தெரிவித்தார்.

முந்நீர் – படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று நீர்மைகளை யுடையது;
அல்லது, ஆற்றுநீர் ஊற்றுநீர் மழைநீர் என்னும் மூன்றுவகை நீரை யுடையது; பண்புத்தொகை யன்மொழி.
கன்னிகை – பொகுட்டு; கர்ணிகா என்ற வடசொல்லின் சிதைவு. கிரி. நாளம், ப்ரஹ்மா – வடசொற்கள்.
ஆதிசேஷன் பிறப்பிறப்பில்லாத நித்ய னாதலால், “முதுமாசுணம்” என்றார்; தொன்று தொட்டுள்ள மகாநாக மென்க.

————-

இரு கூலமும் பொரு மா நீர் அரங்கத்தில் எந்தை அம் தண்
முருகு ஊர் கமல முனி ஆய் வகுக்கும் முறையினால்
புரு கூதனுக்குத் திருத் தம்பி ஆகி புரக்கும் உமை
ஒரு கூறு கொண்ட அரன் ஆய அழிக்கும் உகாந்தத்திலே –13-

(இ – ள்.) இரு கூலமும் – இரண்டு பக்கத்துக் கரைகளையும்,
பொரு -மோதி யுடைக்கின்ற,
மா நீர் – மிகுதியான (காவேரி) நீர்ப்பெருக்கினாற் சூழப்பட்ட,
அரங்கத்தில் – திருவரங்கத்திலே எழுந்தருளியிருக்கின்ற,
எந்தை – எம்பெருமான் (நம்பெருமாள்), –
அம் – அழகிய,
தண் – குளிர்ச்சியான,
முருகு ஊர் – வாசனை வீசுகின்ற,
கமலம் – தாமரை மலரில் தோன்றிய,
முனி ஆய் – பிரமனாகி,
முறைமையினால் வகுக்கும் – கிரமப்படி (உலகங்களையும் அவற்றிலுள்ள சராசரங்களையும்) படைத்தருள்வன்;
புருகூதனுக்கு திரு தம்பி ஆகி – தேவேந்திரனுக்குச் சிறந்த தம்பியாய்த் தோன்றி (உபேந்திர மூர்த்தியாகி),
புரக்கும் – காத்தருள்வன்;
உமை ஒரு கூறு கொண்ட அரன் ஆய் – பார்வதியை ஒருபாகத்திலே (தனது உடம்பின் இடப்பக்கத்திலே) வைத்துக்கொண்ட சிவனாகி,
உக அந்தத்தில் – யுகமுடிவுகாலத்தில் (கற்பாந்தகாலத்தில்),
அழிக்கும் – அழித்தருள்வன்; (எ – று.)

“ஆக்குமா றயனா முதலாக்கியவுலகங், காக்குமாறு செங்கண்ணிறை கருணையங்கடலாம்,
வீக்குமா றரனா மவைவீந்தநாண் மீளப், பூக்கு மாமுத லெவ னவன்பொன்னடி போற்றி” என்ற
வில்லிபுத்தூரார்பாரதம், இங்கு நோக்கத்தக்கது.

பிரமனுக்கும் சிவனுக்கும் அந்தராத்மாவாய் நின்று ஸ்ரீமந் நாராயணன் தானே படைப்புஅழிப்புக்களைச் செய்வ னென்க.
இந்த ஒற்றுமைநயம்பற்றியே, ஆழ்வாரும் “சிவனா யயனானாய்” என்றும்,
“முனியே நான்முகனே முக்கண்ணப்பா” என்றும்,
“தாமோதரனுருவாகிய சிவற்குந் திசைமுகற்கும்” என்றும்,
“அரனயனென வுலகழித்தமைத்துளனே” என்றும் அருளிச்செய்தார்.

இவர்கள் எம்பெருமானுக்குச் சரீரஸ்தாநமாக, அவன் தான் ஆத்மாவாக நின்று தொழில்செய்யு மென்க.
(“இருந்துபடைக்கும் ஆஸநத்தோபாதி ப்ரஹ்மா” என்றது, நம்பிள்ளையீடு.)

திரிலோகாதிபதியான இந்திரன் ஆதியில் அசுரர்கள்நலிதலால் வருந்தித் தேவர்களுடனே திருமாலைச் சரணமடைந்து
“நீ எப்பொழுதும் என்னுலகத்தில் எழுந்தருளியிருந்து என்பகைதவிர்த்து எம்மைப் பாதுகாத்தருளவேண்டும்” என்று வேண்ட,
அதற்கு இணங்கிய ஸ்ரீமகாவிஷ்ணு, காசியபமுனிவனது மனைவியாகிய அதிதி தேவியின் வயிற்றில்
அவ்விந்திரனுக்குத் தம்பியாய் ஓர் அவதார மெடுத்துத் தோன்றி உபேந்திரனெனப் பெயர்கொண்டு
தேவலோகத்தில் அவ்விந்திரனருகிலேநின்று அவனது துயரத்தைத் தீர்த்து அனைத்துயிரையும்
பாதுகாத் தருளலாயினனென்ற வரலாறு, இங்கு அறியத்தக்கது.

“ஆக்குந்தொழிற்கு விரிஞ்சியைவைத் தழிக்குந்தொழிற்குச் சிவனைவைத்துக்,
காக்குத்தொழில் தான் கைக்கொ ளருட்கடவுள்” என்றபடி
தானானநிலையில்நின்று காத்தலையும், பிரமருத்ரர்களுக்கு அந்தர்யாமியாய் நின்று படைத்தல் அழித்தல்களையுஞ் செய்தலால்,
“உலகம்யாவையுந்தா முளவாக்கலும், நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா,
அலகிலாவிளையாட்டுடையாரவர், தலைவ ரன்னவர்க்கே சரணாங்களே” என்னும்படி முத்தொழிலும் எம்பெருமானுக்கு உரியதாம்.

உபேந்திராவதாரத்தைச் சொன்னது, துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபால நங்களாற் காத்தல்தொழில்நிகழ்த்துதற்பொருட்டு
அப்பெருமான்கொண் டருளும் மூர்த்திகளுக்கெல்லாம் உபலக்ஷணம்.

“இப்படிபிறந்தபிரமாண்டத்தில், பிரகிருதிஸ்வரூபனும், மக தகங்கார தந்மாத்ரா மகாபூத சரீரகனும்,
ஜகதீச்வரனுமான விஷ்ணுதேவன் சதுர்முகசொரூபனாய்த் தானே அவதரித்தான்”,
“அந்த அண்டத்தில், விசுவேசுவரனான நாராயணன் பிரமரூபியாகி ராஜோகுணப்ரதாநனாய்த்
தேவ அசுர கந்தர்வ மநுஷ்ய பசு பக்ஷி தாவரங்களைச் சிருஷ்டித்துக்கொண்டு,
அப்ரமேயபராக்ரமனும் ஷட்குணைச்வர்யஸம் பந்நனுமான தானே ஸாத்விககுணப்ரதாநனாய் லீலார்த்தமாக
யுகங்கள் தோறும் நாநாவிதமான திவ்யாவதாரங்கள் செய்து கல்பாந்தபர்யந்தமும் ஜகத்தைப் பரிபாலநம்
பண்ணிக்கொண்டும், பிரளயகாலத்தில் தாமஸகுண ப்ரதாநனான ருத்ரரூபியாகியிருந்து அதிகபயங்கரனாய்ச்
சராசரங்களான அகிலபூதங்களையும் விழுங்கி, மூன்றுலோகங்களையும் ஏகார்ணவமாகப் பண்ணி,
ஸஹஸ்ரபணாமண்டலமண்டிதனான ஆதிசேஷனாகிய படுக்கையிலே சயனித்துக்கொண்டு,
அப்பால் பிரளயாந்தத்தில் திரும்பவும் எழுந்திருந்து பிரமரூபியாய் முன்போலவே பிரபஞ்சத்தைச் சிருஷ்டித்தருள்வன்

ஷட்குணைச்வர்யஸம்பந்நனான ஜநார்த்தநனொருவனே அந்தந்தச்சொரூபங் களில்நின்று
சிருஷ்டி ஸ்திதி சங்காரங்களைச் செய்வதனால், பிரமா விஷ்ணு ருத்ரன் என்கிற திருநாமங்களையடைகின்றான்”,
“சகலபூதங்களுக்கும் ஆத்மா வாய் எல்லாவற்றையும் தனக்குச்சரீரமாக வுடையவனாகையாலே,
கை கால் முதலான சரீரத்தின் செய்கை சரீரியான ஆத்மாவுக்கு உபகாரகமாவதுபோல்
பிரமாதிகள்செய்யுஞ் சிருஷ்டிமுதலானவையெல்லாம் அவனுக்கு உதவியாக விருக்கும்,”

“தான்ஸர்வசக்தனாயிருக்கப் பிரமாதிகளை இடையில்வைப்பது ஏனெனின், –
அவர்களுக்கு இப்படி வரங்கொடுத்திருக்கின்றா னாகையால்” என்ற ஸ்ரீவிஷ்ணுபுராணவாக்கியங்கள், இச்செய்யுட்கு மேற்கோளாகலாம்.

கூலம், கமலம், முநி, புருஹூதன், உமா, ஹரன், யுகாந்தம் – வடசொற்கள்.
கமலம் – இங்கே, திருநாபித்தாமரை. முநி – மநநசீலன்: லோக ஸ்ருஷ்டியைக்குறித்து எப்பொழுதும் சிந்தனைகொண்டவன்.
“முறைமையினாற் புருகூதனுக்குத் திருத்தம்பியாகி” என்று இயைத்து,
தான் தேவாதிதேவனேயாயிருக்கவும் ஓர்அவதாரவிசேஷத்திலே ஏறிட்டுக்கொண்ட உறவுமுறைமையினால்
இந்திரனுக்குத்தம்பியாகி யென்றுஉரைப்பினும் அமையும்.
புருஹூத னென்பதற்கு – (யாகங்களில்) மிகுதியாக அழைக்கப்படுதலை யுடையவ னென்பது காரணப்பொருள்;
புரு – மிகுதி, ஹூதம் – அழைக்கப்படுதல். “இருகூலமும்” என்ற உம்மை – இனைத்தென்று அறி பொருளில் வந்த முற்றும்மை.
எந்தை வகுக்கும், புரக்கும், அழிக்கும் – செய்யுமென் முற்றுக்கள் ஆண்பாலுக்கு வந்தன.
முருகு ஊர்தல் – நறுமணம் மிக்குப் பரவுதல்; தேன் நிறைந்து பெருகுதலுமாம்.
யுக + அந்தம் = யுகாந்தம்: தீர்க்கசந்தி. இங்கே, யுகமென்றது – இலக்கணையாய், பிரமனது தினமாகிய கற்பத்தையும்,
அவனது ஆயுளாகிய மகாகற்பத்தையுங் குறிக்கும்:
அவ்விரண்டின்இறுதியிலேதான் பிரளயம்உண்டு என்றும், ஒவ்வொரு யுகத்தின்முடிவிலேயாவது
ஒவ்வொருசதுர்யுகத்தின் முடிவிலேயாவது பிரளயமில்லையென்றும் உணர்க:
ஆகவே, யுகாந்தமென்பதிலுள்ள யுகமென்பது, கல்ப மகாகல்பங்களின் ஈற்றி லுள்ள சதுர்யுகத்திற் கடைசி யுகத்தை யென்றலுமாம்.
ஹரன் – (பிரளயகாலத்தில் எல்லாவற்றையும்) அழிப்பவன்; சங்காரக்கடவுள்.
“முறைமையினால்” என்றதில், “ஆல்” என்ற மூன்றனுருபு – அடைமொழிப்பொருளது.

————

வாரித்தலமும் குல பூதரங்களும் வானும் உள்ளே
பாரித்து வைத்த இவ் அண்டங்கள் யாவும் படைக்க முன் நாள்
வேரிப் பசும் தண் துழாய் அரங்கேசர் விபூதியிலே
மூரிப் புனலில் குமிழ்கள் போலே முளைத்தனவே –14-

(இ – ள்.) வாரி தலமும் – கடல்சூழ்ந்த உலகங்களையும்,
குல பூதரங்களும் – குலபருவதங்களையும்,
வானும் – ஆகாயத்தையும்,
உள்ளே பாரித்து வைத்த – (தமது) அகத்திலே பரப்பிவைத்துள்ள,
இ அண்டங்கள் யாவும் – இந்த அண்டங்க ளெல்லாம், –
முன் நாள் – ஆதிகாலத்திலே,
படைக்க – (எம்பெருமான்) சிருஷ்டிக்கும் போது, –
வேரி பசுந் தண்துழாய் அரங்க ஈசர் விபூதியிலே – தேனை யுடைய பசுநிறமான குளிர்ந்த திருத்துழாய் மாலையைத் தரித்த அத்திருவரங்கநாதரது லீலாவிபூதியில்,
மூரி புனலில் குமிழிகள் போல முளைத்தன – பெரு வெள்ளத்திற் (குமிழ்த்த) நீர்க் குமிழிகள் போலத் தோன்றின; (எ – று.)

“அண்டங்கள்தாம், அநேகங்களாய், பதினாலுலோகங்களோடே கூடி, ஒன்றுக்கொன்று பதிற்றுமடங்கான
ஏழாவரணங்களாலுஞ் சூழப்பட்டு, ஈச்வரனுக்கு க்ரீடா கந்துக ஸ்தாநீயங்களாய், ஜலபுத்புதம்போலே
ஏககாலத்திலே ஸ்ருஷ்டங்களாயிருக்கும்” என்றது, தத்வத்ரயம்.

“நிற்குநெடுநீத்த நீரின்முளைத்தெழுந்த, மொக்குளேபோல முரணிற்றவண்டங்க, ளொக்க வுயர்ந்துனுளே
தோன்றி யொளிக்கின்ற, பக்கமறிதற்கெளிதோ பரம்பரனே” என்பது, கம்பராமாயணம்.
“வான்புனலி, னுருவமுறு குமிழி போற் பிரமாண்டமா யுதிக்கும்” என்றார், கூர்மபுராணத்திலும்.
“இப்படி பஞ்சபூதங்களினாலே பிறந்த அண்டம், நீர்க்குமிழிபோலே ஒரு கணப்பொழுதிலே அபிவிருத்தியாயிற்றே யல்லாமல்,
கிரமக்கிரமமாக அபிவிருத்தியாகவில்லை” என்ற ஸ்ரீவிஷ்ணுபுராணவசனமுங் காண்க.

அண்டங்கள் பல வென்பதும், அவைகளெல்லாம் ஒரேவகையா யிருக்கு மென்பதும்,
அவையாவும் ஒரேகாலத்தில் முழுமொத்தமாய் உற்பத்தியாயின வென்பதும் இதனால் விளங்கும்.
விபூதி – செல்வம்: வடசொல். அது – லீலாவிபூதியெனவும், த்ரிபாத்விபூதி யெனவும் இருவகைய தெனப்படும்.
அவற்றில், லீலாவிபூதி – விளையாட்டுக்கு உரிய செல்வம்;
எம்பெருமானுக்குத் திருவிளையாடலெனப்படுகிற படைப்புக் காப்பு அழிப்புக்கு உரிய பொருள்: பிரபஞ்சம்.
த்ரிபாத்விபூதி – எம்பெருமானது செல்வங்களுள் முக்காற்பங்காகவுள்ளது; முத்தியுலகம்.
மற்றைக்காற்பங்காகவுள்ளது, லீலாவிபூதி. லீலாவிபூதியினும் மும்மடங்குகொண்டது த்ரிபாத்விபூதி யென்க.
இச்செய்யுளிற் குறித்த விபூதி – லீலாவிபூதி யென்னலாம்.

“வாரித்தலம்” என்றது, உவர்நீர் கருப்பஞ்சாறு கள் நெய் தயிர் பால் நன்னீர் என்கின்ற ஏழு சமுத்திரங்களால்
முறையே சூழப்பட்டிருக்கின்ற ஜம்பூ பிலக்ஷம் சால்மலம் குசம் கிரௌஞ்சம் சாகம் புஷ்கரம் என்ற ஏழு தீவுகளையும்.
குலபூதரங்கள் எட்டு, 12 – ஆஞ் செய்யுளி னுரையிற் கூறப்பட்டன.
இங்கே, “குலம்” என்றது, சிறப்பை யுணர்த்தும். பூதரம் என்ற வடசொல் – பூமியைத் தரிப்ப தென்று பொருள்படும்;
பூமிக்கு மேலும் கீழும் நின்று அதனை நிலைநிறுத்துதலாலும், நதிகளின் உற்பத்திக்கு இடமாகி நின்று
அதுகொண்டு நிலவுலகத்துஉயிர்களைப் பாதுகாத்தலாலும், மலைகள் பூதரமென்று பெயர்பெறும்.
அண்டத்தையும் அண்டகாரணங்களையும் எம்பெருமான் தானே உண்டாக்குவன்;
அண்டத்திற்கு உட்பட்ட பொருள்களைப் பிரமன் முதலியோர்க்கு அந்தர்யாமியாய் நின்று உண்டாக்குவன்:
இவற்றில், முந்தியது – ஸமஷ்டிஸ்ருஷ்டி யெனவும், பிந்தியது – வ்யஷ்டிஸ்ருஷ்டி யெனவும் படும்;
இச்செய்யுளிற் கூறியது, ஸமஷ்டிஸ்ருஷ்டி. முந்தினசெய்யுளிற் கூறியது, வ்யஷ்டிஸ்ருஷ்டி.
ஆகவே, கீழ்ச்செய்யுளில் “எந்தை யந்தண்முருகூர்கமலமுனியாய்வகுக்கும்” என்றதனோடு,
இச்செய்யுளில் “அண்டங்கள்யாவும் படைக்க முன்னாள்…… முளைத்தன” என்றது மாறுகொளக்கூறலாகாமை உணர்க.

வாரி – நீர்: வடசொல்; கடலுக்கு இலக்க ணை. யா – அஃறிணைப்பன் மைவினாப்பெயர்; இதில் ‘வை’ விகுதி புணர்ந்துகெட்டது.
இங்கு, வினா -எஞ்சாமைப்பொருளது. உம்மை – முற்று. துழாய் – துளஸீ என்ற வடசொல்லின் சிதைவு.
அதனாலாகிய மாலைக்குக் கருவியாகுபெயர். மூரி – பெருமை. வேரி – வாசனையும், பசுமை – வாடாமையுமாம்.
குமிழ்ப்பது குமிழி யெனக் காரணப்பெயர்; இ – கருத்தாப்பொருள்விகுதி:
இனி, முகுள மென்ற வடசொல் குமிழி யெனச் சிதைந்த தென்னவுமாம்; மொக்கு ளென்பது, அதன் பொருள்: அது, நீர்க்குமிழிக்கும் பெயராம்.

———–

நெடும் கடல் நிற்பதும் ஞாயிறு காய்வதும் நித்தலும் கால்
ஒடுங்கி நடப்பதும் தண் கார் பொழிவதும் ஊழி தன்னில்
கடும் கனல் பற்றிச் சுடாதே இருப்பதும் தும்பை புனைந்து
அடும் கனல் ஆழி அரங்கேசர் தம் திரு ஆணையினே –15-

(இ – ள்.) நிற்றலும் – நாள்தோறும்,
நெடுங் கடல் நிற்பதும் – பெரிய கடல் (மேன்மேற்பொங்கியெழாமல்) ஒருநிலையில்அடங்கிநிற்பதும்,
நாயிறு காய்வதும் – சூரியன் (தவறாமல்வந்து) வெயில்காய்வதும்,
கால் ஒடுங்கி நடப்பதும் – காற்று (உலகம்பொறுக்கும்படி) அடங்கிவீசுவதும்,
தண் கார் பொழிவதும் – குளிர்ச்சியான மேகங்கள் (காலத்தில் வந்து) மழைபொழிவதும்,
ஊழிதனில் சுடும் கனல் பற்றி சுடாதே இருப்பதும் – கற்பாந்தகாலத்தில் (உலகத்தைச்) சுட்டெரிக்கின்ற படபாமுகாக்கினி
(அதற்குமுன்பு உலகத்திற்) பற்றிக் கொண்டு (அதனைச் சுட்டெரித்தழியாமல் கடலினிடையே அடங்கி) இருப்பதும்,
(ஆகிய இவையெல்லாம்),
தும்பை புனைந்து – தும்பைப்பூமாலையைச் சூட்டிக்கொண்டு,
அடும் – (அசுரர் முதலிய கொடியவர்களை) அழிக்கின்ற,
கனல் ஆழி – அக்கினிபோலச் சுவாலைகளைவீசுகின்ற சக்ராயுதத்தையேந்திய,
அரங்கேசர்தம் – திருவரங்கநாதரது,
திரு ஆணையினே – சிறந்த கட்டளையினாலேயாம்; (எ – று.)

சமுத்திரராஜன் முதலியோர் தம்தமக்கு எம்பெருமான் கட்டளையிட்ட தொழிலைத் தாம் சரிவரச்செய்யாவிட்டால்
அப்பெருமான் சீறித் தம்மைத் தண்டிப்பனோ வென்று மிகவும் அஞ்சித் தம்தம்தொழிலில்
ஜாக்கிரதை யுள்ளவரா யொழுகுகின்றன ரென்பது, கருத்து. இது, மற்றைத்தேவர்கட்கும் உபலக்ஷணம்.
ஆதலால், எம்பெருமானது ஸர்வேச்வரத்வம் கூறியவாறாம்; ஸர்வநியாமக னிவனென்க.
இதனால், எம்பெருமானது வரம்பிலாற்றல் கூறப்பட்டது.

“கூரெயிற்றாடலங்கூற்றங்கொல்வதுங், கார்மழை பொழிவதுங் கதிரெறிப்பதும்,
மாருதமுளர்வதும் வாரிநிற்பதும், ஆரழல் சுடலு மென்னாணை யாகுமால்” என்ற ஸ்ரீபாகவதமும்,

“சகலதேவ தைதமக்கியான்றலைவன் சத்தியமே, நிகரில் சாகரங் கரைகடவாததும் நிவருங்,
ககனமேகங்கள் சொரிவதுங் கடல்வடவைத்தீ, வெகுவிலாதது மென்னுடைவினோதவாக்கினையே” என்ற மகாபாகவதமுங் காண்க.

இவ்விஷயம், தைத்திரீயோபநிஷத்திலும் வருகின்றது.
“ஊழிதனிற்சுடுங்கனல் பற்றிச்சுடாதேயிருப்பதும்” என்றதை உபலக்ஷணமாகக் கொண்டு,
மற்றையவற்றிற்கும், கற்பாந்தகாலத்தில் தம்தம்ஆற்றலை மிகுதியாகக்காட்டி அதுகொண்டு
உலகத்தையழிக்குந் தன்மையனவான கடலும் நாயிறும் காலும் காரும் அதற்குமுன்பு அவ்வாறு அழியாமல் அடங்கிநிற்பது மெனக் கொள்க.

இனி, அவை கற்பாந்தகாலத்தில் மிகுதியாகப் பொங்கிப் பரந்தும் அதியுக்கிரமான வெயிலை யெறித்தும்
மிகுதியாகவீசியும் மிகுதியான மழையைப் பொழிந்தும் எங்கும்பற்றியும் உலகங்களையழிப்பதும்
அவர்கட் டளையினாலேயே யென்பது, அருத்தாபத்தியாற் போதரும்.

“தும்பை புனைந்தடுங்கனலாழியரங்கேசர்தந் திருவாணையினே” என்ற சொற்சேர்த்தி யால்,
அவை அங்ஙனம் அஞ்சி அடங்கி நிற்பது அப்பெருமானது திருச்சக்கரத்தையும் ஆஜ்ஞாசக்கரத்தையும் நோக்கி யென்பதுந் தோன்றும்.

“அருளார் திருச்சக்கரத்தா லகல்விசும்புந் நிலனும், இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர்” என்ற திருவிருத்தத்தையும்,
“செய்யேல் தீவினை யென் றருள்செய்யு மென்கையார் சக்கரக் கண்ணபிரான்” என்ற திருவாய்மொழியையுங் காண்க.

அண்டத்தின் அகத்திலுள்ள ஏழு கடல்களே யன்றி அண்டத்தின்புறத்திலுள்ள பெரும்புறக்கடலும் அடங்க, “நெடுங்கடல்” என்றார்.
நிற்றல் – நித்யம் என்ற வடசொல்லின் சிதைவு; உம்மை – தொறுப்பொருளது.
இனி, நிற்றல் என்பதை நில்என்றபகுதியின் தொழிற்பெயராகவும் உம்மையை எண்ணுப்பொருளதாகவுங் கொண்டு,
சூரியன் காய்வதும் (ஒருபடிப்பட ஆகாயத்தே) நிற்பது மென்று உரைத்தலுமாம்.

தும்பை யென்ற செடியின்பெயர், அதன் மலர்களினாலாகிய மாலைக்கு இருமடியாகுபெயராம்;
இம்மலர்மாலை, போருக்குரிய அடையாளப்பூமாலையாம்; “அதிரப்பொருவது தும்பையாம்” என்றார் பிறரும்.
இதனைப் போர் செய்யும்வீரர் தாம்தரிப்பதேயன்றித் தமது ஆயுதங்கட்குஞ்சூட்டுவது மரபாதலால், “தும்பைபுனைந்தடுங் கனலாழி” எனப்பட்டது.
ஆணை – ஆஜ்ஞா என்ற வடசொல்லின் சிதைவு; இன் – ஐந்துனுருபு, ஏதுப்பொருளது: ஈற்று ஏகாரம் – பிரிநிலை.
நிற்பது, காய்வது, நடப்பது, பொழிவது, இருப்பது என்ற தொழிற்பெயர்களில்,
இடைநிலை – எதிர்காலமுணர்த்தாமல் தன்மையுணர்த்திநின்றது. “ஆகும்” என வினைமுற்று வருவித்துமுடிக்க.
“கனல்ஆழி” என்பதற்கு – கோபாக்கினியையுடைய சக்கர மென்று உரைப்பாரு முளர்.

————–

ஓலைப் புனல் பொன்னி நல் நீர் அரங்கர் உகம் திரியும்
காலத்தினில் கொள்ளை அண்டம் எல்லாம் உண்டு காமர் பசும்
கோலக் குழவி வுருவாய் அகண்டமும் கோத்த வெள்ளத்து
ஆலத்து இலையின் புடைக்கே துயில்வார் அகம் மகிழ்ந்தே –16-

(இ – ள்.) ஓலம் – ஆரவாரத்தைச் செய்கின்ற,
புனல் – நீர்ப்பெருக்கையுடைய,
பொன்னி – காவேரியினது,
நல் நீர் – திவ்விய தீர்த்தத்தாற் சூழப்பட்ட,
அரங்கர் – திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவரான நம்பெருமாள்,
உகம் திரியும் காலத்தினில் – கற்பம் மாறுங் காலத்தில்,
கொள்ளை அண்டம் எல்லாம் உண்டு – மிகுதியான அண்டகோளங்களையெல்லாம் புசித்து (திருவயிற்றில்வைத்துஅடக்கியருளி),
காமர் கோலம் பசுங்குழவி உரு ஆய் – (கண்டவர்) விரும்பத்தக்க அழகையுடைய இளங்குழந்தைவடிவமாய்,
அகண்டமும் கோத்த வெள்ளத்து – எல்லாவிடங்களிலும் இடைவிடாதுபரவிய அந்தப் பிரளயவெள்ளத்தில்,
ஆலத்து இலையின் புடைக்கே – ஆலிலையினிடத்திலே,
அகம் மகிழ்ந்து – திருவுள்ளமுவந்து,
துயில்வார் யோகநித்திரை செய்தருள்வர்; (எ – று.)

பிரமன்முதலிய சகலதேவர்களு முட்பட யாவும் அழிந்து போகின்ற கல்பாந்தகாலத்திலே, ஸ்ரீமகாவிஷ்ணு,
அண்டங்களையெல்லாம் தன்வயிற் றில் வைத்துக்கொண்டு, சிறுகுழந்தைவடிவமாய், பிரளயப்பெருங்கடலிலே
ஆதிசேஷனது அம்சமானதோ ராலிலையின்மீது பள்ளிகொண்டு அறிதுயில் செய்தருள்கின்றன னென்பது, நூற்கொள்கை.
இது – எம்பெருமானது செயற்கரியனசெய்யும் விசித்திரசக்தியையும், பரத்துவத்தையும், பேரரு ளுடைமையையுங் காட்டும்.

புனல் – நீர்; ஆறு எனக் கொண்டு, பொன்னி புனல் – காவேரிநதியி னது, நல் நீர் -நல்ல நீரினாற் சூழப்பட்ட என்றலுமாம்.
இனி, பொன்னி – காவேரியாற் சூழப்பட்ட, நல் நீர் – சிறந்ததன்மையையுடைய,
அரங்கர் – திரு வரங்கத்தி லுள்ளவர் என்றலும் அமையும்;
அரங்கத்திற்கு நல்ல நீர்மையாவது – ஒருமாத்திரைப்பொழுது தன்னிடத்தில்வசித்தவரையும் பரிசுத்தராக்கி
வீடுபேற்றிற்கு உரியராகும்படி செய்யும் மகிமை. உகம் – இங்கே, கற்பம்; (13) “உகாந்தம்” என்றதிற் போல.
உகம் திரியும் காலத்தினில் – ஒருகல்பம்முடிந்து மற்றொருகல்பம்வரவேண்டிய சமயத்தி லென்க; கல்பாந்தத்தி லென்றதாம்.
உண்டு = உட்கொண்டு. காமர் – காமமருவு என்பதன் விகாரம். காமர், கோலம் என்பன – ஒரு பொருட்பன்மொழி யென்றலு மொன்று.
பசுமை – இங்கு இளமைமேலது; நீலநிறத்தைக் குறிப்பதாகவுங் கொள்ளலாம். குழவி – இளமையையுடைய தெனக் காரணப்பொருள்படும்;
குழ – இளமை குறிக்கும் உரிச்சொல்: பகுதி; இ – பெயர்பகுதி. அகண்டம் – வடசொல். ஆலத்து, அத்து – சாரியை.
புடைக்கே = புடையிலே: உருபு மயக்கம். அகம் – அகத்துறுப்பு, அந்த:கரணம்.
அகண்டமுங் கோத்த வெள்ளம் – எல்லாப்பொருள்களையுந் தன்வசத்தில் அடக்கிக்கொண்ட பிரளயநீர்ப்பெருக்கு.
தான் என்று மழிவில்லாதநித்தியனென்பது தோன்றப் பள்ளிகொண்டிருப்பனென்பார், “அகமகிழ்ந்து துயில்வர்” என்றார்.

———-

தாற்றுக் கமுக வனம் சூழ் அரங்கர் சயன முகக்
காற்றுப் புலரும்படி முதல் வீசும் கறைக்களத்தன்
நீற்றுச் சிவந்து எழும் கார் ஆழித் தீச்சுடும் நீள் கழலின்
ஆற்றுப் பெரும் பெருக்கு அண்டம் எல்லாம் கொள்ளும் அந்தத்திலே –17-

(இ – ள்.) அந்தத்திலே – கல்பாந்தகாலத்திலே, –
தாறு கமுக வனம் சூழ் அரங்கர் – குலைகளையுடைய பாக்குமரங்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவரான எம்பெருமானுடைய,
சயனம் – படுக்கையாகிய ஆதிசேஷனது,
முகம் – (ஆயிரம்) முகங்களினின்றும் எழுகின்ற,
காற்று – காற்றானது,
முதல் – முதலில்,
புலரும்படி வீசும் – (எல்லாப்பொருள்களும்) உலர்ந்துபோகும்படி நெடிதாய் வீசும்;
(பிறகு அந்த முகக்காற்றிலிருந்து),
கறை – களத்தன் – நஞ்சுண்டு கறுத்த கண்டத் தையுடையவனான ருத்திரமூர்த்தி,
நீற்று சிவந்து எழும் – (எல்லாப்பொருள் களையும்) எரித்துநீறாக்கிக்கொண்டு கோபித்துத் தோன்றுவன்;
கார் ஆழி தீ சுடும் – (திருவரங்கநாதர் பள்ளிகொள்ளுகின்ற) கரிய கடலிலே யுள்ள பட பாமுகாக்கினி (உலகத்தை) எரிக்கும்;
நீள் கழலின் ஆறு பெரும் பெருக்கு – (அத்திருமாலினது) நீண்ட திருவடி பட்டதனா லாகிய துளைவழியாற் பெருகிய பெரும்புறக்கடல்வெள்ளம்,
அண்டம் எல்லாம் கொள்ளும் – அண்ட கோளம் முழுவதையும் தன்னிடத்தில்அகப்படும்படி கவர்ந்து கொள்ளும்.

கீழேழுலகங்களுள்ளும்கீழதான பாதாளலோகத்தின்கீழே முப்பத்தினா யிரம்யோஜனையுள்ளஇடத்தில்,
ஸ்ரீமகாவிஷ்ணுவினது ஸம்ஹாரத்திருமேனி யாய் விளங்குகின்றவரும் அத்திருமாலுக்குப்
படுக்கை குடை சிங்காசனம் மரவடி முதலிய பல வடிவமாகிப் பலவகைகைங்கரியஞ்செய்கின்ற வருமான ஆதிசேஷன்
எழுந்தருளியிருந்து உலகங்களைத் தாங்கிக்கொண் டிருக்கின்றனர்;

பிரளயகாலத்திலே, முதலில், அந்தஆதிசேஷனுடைய ஆயி ரம்முகங்களினின்றும் மிகப்பெரிய மூச்சுக்காற்று எழுந்து
நெடுநேரம் நெடுந்தூரம் வீசி, உலகங்களையும் உலகத்துப் பிராணிவர்க்கங்களையும் உலரச் செய்யும்;
பின்பு, அந்தச் சுவாசத்திலிருந்து விஷாக்கனிச்சுவாலைகளோடு கூடின அழித்தற்றொழிற்கடவுளான காலாக்கினி
ருத்திரமூர்த்தி உண்டாகிக் கோபாவேசத்தோடு அதியுக்கிரமாய்க் கீழுலகங்களையெல்லாம் தகித்துக்கொண்டு பூமிக்கும்வந்து
அதையும் கொளுத்தி மேலுலகங்களையும் எரித்திடுவர்;

மற்றும், கடலிடையேயுள்ளதான படபாமுகாக்கினியும் அச்சமயத்தில் வெளிக்கிளம்பி உலகங்களை ஒருபுறம் எரிக்கும்;
பிறகு, அண்டகடாகத்திற்கு வெளியேயுள்ளதான பெரும்புறக்கடல்வெள்ளம் பிரவேசித்து உலகங்களையெல்லாம்
ஜலமயமாக்கி அழிக்கின்றது என்பது, நூற்கொள்கை.
மேல் (86 – ஆஞ் செய்யுள்)
“ஓலாழிசூழ்புவியுச்சியிலேந்து முகக்கடையிற் காலான நற்குணமூர்த்தியைக் காலு மக்காலமெல்லாம்,
மேலாவிளங்கும் புவிமீதீ லென்றன் விழுத்துணையாம், மாலா மரங்கமணவாளர் கண்டுயில் மாசுணமே” என்பதுங்காண்க.
“சேடனானனத் துக்கிரவுதாசனன்றான் சினமுறு முருத்திரனுடனே, மூடிமூவுலகமெரித்திட,”
“சேடன், சீர்தரு முகத்தின்தீயாற் சேர்பொருள்யாவுந் தீய, ஓர்தருமண்டந்தானு முலந்து நீறாகுமன்றே,”
“விடந்திகழ்தீயி னண்டம் வேமியல் விளம்பின் வெய்ய, கொடுந்தழல்பட்டு நீறாங் கோமயபிண்டம்போலாம்,
அடைந்திடும்பருவநூறாங்கதிர் நெடுங்காற்றக்காற்றா, லுடைந்துமுன்னீறாகண்டமுற்றிடு மணுக்களாயே” என்றது, பாகவதம்.
பிறவும் கண்டுகொள்க.

“அரங்கர்” என்பதை, “சயனம்,” “ஆழி,” “கழல்” என்ற மூன்றனோடுங் கூட்டுக.
எம்பெருமான் கடல்கள்தோறுங் கண்வளர்ந்தருள்வ னென்று ஒரு பிரமாணஸித்தி யுண்டாகையாலே,
“உவர்க்குங் கருங்கடல் நீருள்ளான்” என்றபடி
“அரங்கர் காராழி” எனப்பட்டது. “அண்டத்தைக்கவிந்து ஒன்றிலும்ஒன்று பத்துமடங்கு மிகுதியான ஜலம்
அக்கினி வாயு ஆகாசம் அகங்காரம் மகத்தத்துவம் பிரகிருதிதத்துவம் ஆகிய ஏழு ஆவரணங்க ளிருக்கின்றன;
தேங்காயானது எப்படி நார்மட்டைகளினாற் கவியப்பட்டிருக் கின்றதோ,
அப்படி பிரமாண்டம் ஸப்தாவரணங்களினாற் கவியப்பட்டிருக் கின்றது” என்றது, ஸ்ரீவிஷ்ணுபுராணம்.
இப்படி அண்டகடாகத்தைச் சூழ்ந்திருக்கின்ற முதல் ஆவரணமும், அண்டத்தின் அளவினும் பத்துமடங்குமிக்கதுமான
ஜலமே பெரும்புறக்கட லெனப்படுவது. மகாபலி்சக்கரவர்த்தியின் செருக்கை யடக்குதற்பொருட்டு வாமநாவதாரங்கொண்டு சென்று
அம்மாவலிபக்கல் மூவடிவேண்டிய திருமால் திரிவிக்கிரமனாக ஆகாயத்தை யளாவி வளர்ந்து ஓரடியாற் பூமிமுழுவதையும் அளந்து
மற்றோரடியால் மேலுலகத்தை யளத்தற்காக அவ்வடியை நீட்டி மேலேசெலுத்த, அத்திருவடி பட்டதனால்
அண்டகடாகத்தின் மேலிடம் சிறிது உடைபட, அத்தொளை வழியாகப் பெரும்புறக்கடலின்நீர்
அண்டகோளத்தினுள்ளே விழுந்திடலாயிற்று என்பதை,
மேல் 37 – ஆஞ் செய்யுளில் “அரங்கேசர்பொற்றாள்பட்டுடைந்த வண்ட மேலக்கடாகத் தொளைவழியாகவிழும் புனல்” என்பதனாலும் உணர்க.

இவ்வாறு திருமாலினது மேலேநீண்ட திருவடி பட்டதனாலாகிய வழியினாற் பெருகும் பெரும்புறக்கடல்வெள்ளத்தை
“நீள்கழலின் ஆற்றுப்பெரும்பெருக்கு” என்றார்.
இங்கு, ‘ஆறு’ – வழி; நதியன்று. பிரளய காலத்திற் பெரும்புறக்கடற்பெருக்கினால் அண்டம் அழிவதை,
“இந்தப்பிர பஞ்சத்தை மூடிக்கொண்டிருக்கிற அண்டரூபமான பிருதிவியானது, அதைச் சூழ்ந்த அப்பில் லயமாகின்றது” என்று
ஸ்ரீவிஷ்ணுபுராணத்திற் பிராகிருத பிரளயங் கூறுமிடத்துக் கூறியதனா லுணர்க.
பெரும்புறக்கடலின் நீரை “நீள்கழலின் ஆற்றுப்பெரும்பெருக்கு” என்று வேறுவகையாற்கூறியது, பிறிதினவிற்சியணி.
இனி, திருமால் உலகமளந்தகாலத்தில் மேலே சத்திய லோகத்துச் சென்ற அப்பிரானது திருவடியை அங்கேயுள்ள
பிரமன் தன் கைக்கமண்டலதீர்த்தத்தாற் கழுவி விளக்க அந்தஸ்ரீபாததீர்த்தமாகப் பெருகிய பெருக்கே கங்காநதியாதலும்,
சகரசக்கரவர்த்தியின் குமாரர்கள் அறுபதினாயிரவரும் பாதாளலோகத்திற்குச் செல்லும்பொருட்டு நகங்களாலும் ஆயுதங்களாலும்
தோண்டிய பெரும்பள்ளமே பிறகு பகீரதன் மிகமுயன்று கொண்டுவந்த கங்காநதியின் தீர்த்தத்தால் நிரம்பிக் கடலாகிச்
சாகரமென்று பெயர்பெற்றதும், மகா பிரளயகாலத்திற் கடல் பொங்கியெழுந்து உலகத்தை யழித்தலு மாகிய
தன்மைகளைக் கருதி “நீள்கழலின் ஆற்றுப் பெரும் பெருக்கு அண்டமெல்லாங் கொள்ளும்” என்றதாகவுங் கொள்ளலாம்:
நீண்ட திருவடியினின்று தோன்றிய கங்காநதியின் பெரிய வெள்ளமென்க; இவ்வுரையில், ஆறு – நதி.

க்ரமுகவநம், ஸயநம், முகம், களம், அண்டம், அந்தம் – வடசொற்கள். வனம் – இங்கு, ஊரைச்சூழ்ந்த சோலை.
சயனமானது முகக்காற்றைப் புலரும்படி முதல்வீசும் என்றும் உரைக்கலாம்.
பாற்கடல்கடைகையில் அதனினின்று எழுந்த அதிபயங்கரமான பெருவிஷத்தைக் கண்டமாத்திரத்தில்
அதன் கொடுமையைப் பொறுக்கமாட்டாமல் அஞ்சியோடிய தேவர்களின் வேண்டுகோளின்படி அவ்விஷத்தைச் சிவபிரான்
அமுதுசெய்து கண்டத்தில் நிறுத்தியதனால் அக்கழுத்துக் கறுத்தமைபற்றி, சிவபிரானுக்கு விஷகண்டனென்றும்
நீலகண்டனென்றும் காளகண்டனென்றும் பெயர்களாயின; அக்கருத்தமைய ‘கறைக்களத்தன்’ என்றார்:
கறை – கறுப்பு, விஷம். நீற்றுதல் – எரித்துச் சாம்பலாக்குதல்.
இங்கு ‘நீற்று’ என்ற வினைப் பகுதிதானே நீற்றியென வினையெச்சப் பொருள்பட்டது;
இதில் விகுதி முதலியன புணர்ந்துகெட்டன வென்க: “வரிப்புனை பந்து” என்றவிடத்து ‘வரி’ என்றதிற் போல:
“வினைபுனைநல்லிலினைகூஉக் கேட்பவும்” என்றவிடத்து ‘இனை’ என்பதும் அது.
செம்மை யென்னும் பண்பின் அடி, “சிவ” என்று விகாரப்படும்;
அது உரிச்சொல்லாய்க் கோபத்தையும் உணர்த்துதலை “கறுப்புஞ்சிவப்பும் வெகுளிப்பொருள” என்ற தொல்காப்பியத்தால் அறிக.
இங்கு “எல்லாம்” என்றது, எஞ்சாமைப்பொருள் குறித்தது. “நீற்றிச் சிவந்தெழும்” என்று பாடம்ஓதாதது,
எதுகைநயம் நோக்கி யென்க. இனி, கார் ஆழி சிவந்துஎழும் தீ கறைக்களத்தன் நீறு சுடும் என்று மொழிமாற்றி,
கரியகடலிற் சிவந்தெழுகின்ற வடவைத்தீயானது (எல்லாப் பொருள்களையும்) சிவபிரானணியும் வெண்ணீறுபோலாம்படி யெரிக்கு மென்று உரைப்பாரு முளர்.

லோகஸம்ஹாரங்கூறுவார், அத்தொழில் எம்பெருமானுடைய அங்க உபாங்கங்களினா லாகுமென்று அவ்விறைவனது மகிமையை வெளியிட்டார்.

————

சின்னூல் பல பல வாயால் இழைத்து சிலம்பி பின்னும்
அந்நூல் அருந்தி விடுவது போலே அரங்கர் அண்டம்
பல் நூறு கோடி படைத்து அவை யாவும் பழம் படியே
மன் ஊழி தன்னில் விழுங்குவர் போத மனம் மகிழ்ந்தே –18-

(இ – ள்.) சிலம்பி – சிலந்திப்பூச்சியானது,
பல பல சில் நூல் – பலபல சிறிய (மெல்லிய) நூல்களை,
வாயால் இழைத்து – வாயினால் நூற்று,
பின்னும் – பின்பு,
அ நூல் அருந்திவிடுவது போல – அந்தநூலை (த் தானே) உட்கொண்டிடுவது போல, –
அரங்கர் -திருவரங்கநாதர்,
பல் நூறு கோடி அண்டம் – பல நூற்றுக்கோடிக்கணக்கான அண்டங்களை,
படைத்து – சிருஷ்டித்து,
மன்னூழிதன்னில் – மகாபிறளய காலத்தில்
அவை யாவும் -அந்த அண்டங்க ளெல்லாவற்றையும்,
போத மனம் மகிழ்ந்து – மிகவும் திருவுள்ளமுவந்து,
பழம் படியே – முன்போலவே (தம்வயிற்றில்தங்கும்படி),
விழுங்குவர் – உட்கொண்டருள்வர்; (எ – று.)

ஸ்வரூபவிகாரமில்லாம லிருந்துகொண்டே சிலவற்றையுண்டாக்குதலும் அங்ஙனமுண்டாக்கினவற்றை யுட்கொள்ளுதலும்
அல்பசக்தியை யுடைய சிலந்திப்பூச்சிக்குஇயல்பாகும்போது, ஸ்வரூபத்திற்குவிகாரமில்லாம லிருந்து கொண்டே
அண்டங்களைப்படைத்தலும் விழுங்குதலுமாகியஇயல்பு ஸர்வசக்திகனான எம்பெருமானுக்குக் கூடுத லரிதோ வென்னுங் கருத்து.

“யதோர்ணநாபிஸ் ஸ்ருஜதே க்ருஹ்ணதே ச, ”
“ஊர்ணநாபிர் யதா ஸ்ருஷ்ட்வா, ஸ்வயம் தத் க்ரஸதே புந:-
ததா ஸ்ருஷ்ட்வேதமகிலம், ஸ்வயம் தத் க்ரஸதே ஹரி:.

அமைய இவ்வுவமைகூறின ரென்னலாம்;
“ஒருசிலந்திக்கு உண்டான ஸ்வபாவம் ஸர்வசக்திக்குக் கூடாதொழியாதிறே” என்ற தத்வத்ரயத்தையுங் காண்க.
உவமையணி. பரம்பொருளான எம்பெருமானுக்கு அற்பஜந்துவான சிலந்திப்பூச்சியை உவமைகூறியது
இழிவுவமைக்குற்றத்தின்பாற்படாதோ வெனின், படாது; தன்வாயால்வெளிப்படுத்தியதைத் தானே யுட்கொள்ளு தற்குச்
சிலந்தியுவமை சிறத்தலாற் குணம் மிக்கதெனக் கொள்ளப்பட்டது.
“மிகுதலுங் குறைதலுந் தாழ்தலு முயர்தலும், பால்மாறுபடுதலும் பாகுபா டுடைய” என்ற தண்டியலங்காரசூத்திரத்தினாலும்,
அதன் உரையினாலும், உயர்ந்தபொருளை இழிந்தபொருளோடு உவமித்தல்
புன்புலவர்புணர்க்குங் கால் வெறுக்கப்படுவதோர் சிறப்பின்மை தெரிந்து ஆன்றோராற் குற்றமென்று தள்ளப்படுதலும்,
அதுவே நன்புலவர்புணர்க்குங்கால் விரும்பப்படுவதோர் சிறப்புடைமை தெரிந்து ஆன்றோராற் குணமென்றுகொள்ளப்படுதலுங் காண்க.

இவ்வாறே ‘வேம்பின்பு’ வேம்பன்றியுண்ணா தடியேன், நான்பின்னுமுன்சேவடியன்றிநயவேன்,”
“மெல்லியலாக்கைக்கிரிமி குரு வின்மிளிர்தந் தாங்கே, செல்லியசெல்கைத் துலகை யென்காணு மென்னாலுந் தன்னைச்,
சொல்லிய சூழல் திருமாலவன் கவி யாதுகற்றேன், பல்லியின் சொல்லுஞ் சொல்லாக் கொள்வதோ வுண்டு பண்டுபண்டே,”
“நாயனையார் கேண்மை கெழீஇக்கொளல் வேண்டும்,”
“குடப்பாற் சில்லுறை போலப், படைக்கு நேரெல்லாந் தானாயினனே” என நல்லிசைப் புலவர்செய்யுள்களில் வருவன கண்டுகொள்க.
“மிகுதல் குறைதல் தாழ்தல் உயர்தல் பால்மாறுபடுதல் முதலியன குற்றமேனும் குணம்மிக்குழிக் கொள்க” என்பர்.
இவ்வுவமை, ஸ்ரீபாகவதத்திலும், ஸ்ரீரங்கராஜஸ்தவத்திலும் கூறப்பட்டுள்ளது.

இங்கே, சின்மை – சிறுமையின்மேலது; நுண்மையின்மேலதுமாம்.
அருந்திவிடுவது என்பதில், விடு என்பது – துணிவுணர்த்தும்.
அண்டம் – உலகவுருண்டை. கோடி – நூறுலக்ஷம். மிகப்பல வென்றற்கு, “பன்னூறுகோடி” என்றார்.அண்டம் பன்னூறுகோடி –
“அம்பெரும்புவிக்குத்தானோராயிர கோடியண்ட, மொப்பிலவென்னவுண்டால்,”
“அங்கண்மாஞாலத்தண்ட மாயிர கோடிதன்னில்” என்றது கந்தபுராணம்.
மன் – பெருமை: உரிச்சொல். பழம்படியே போத எனஇயைத்து, முன்போலவே தம்வயிற்றினுட்படும்படி விழுங்குவ ரென்றலுமாம்;
போத – புகுத என்றதன் மரூஉ. வெளியிலிருத்தலோடு திருவயிற்றினுள்ளேயிருத்தலோடு வாசியில்லை யென்னுங் கருத்தால்
“முன்போலவேயிருக்க” என்றாருமாம்.
பிரளயாபத்து நேர்கிற காலத்தில் எல்லாவற்றையும் தமதுதிருவயிற்றினுள்ளே வைத்துக்கொண்டு அவை கெடாதபடி
தாய்போலப் பாதுகாக்கும் எம்பெருமானது இயற்கைப்பேரருளும், வரம்பிலாற்றலும் இங்கு வெளியாம்.
“வெற்றிப்போர்க் கடலரையன் விழுங்காமல் தான் விழுங்கி யுய்யக்கொண்ட, கொற்றப்போராழியான்,”
“பேயிருக்கு நெடுவெள்ளம் பெருவிசும்பின்மீதோடிப் பெருகுகாலம், தாயிருக்கும்வண்ணமே யும்மைத்
தன்வயிற்றிருத்தி யுய்யக்கொண்டான்” என்றார் திருமங்கையாழ்வாரும்.
“தன்னுள்” என்ற பாடத்திற்கு, மன் ஊழி – பெரிய கற்பாந்தகாலத்தில், தன் உள் போத – தனது வயிற்றி னுள்ளே புகும்படி,
விழுங்குவ ரென்னலாம்; அப்பொழுது, “அரங்கர்” என்றதற்கு ஏற்ப “தம்முள்” என்னாது “தன்னுள்” என்றது, பன்மையொருமை மயக்கத்தின்பாற்படும்.

சிருஷ்டி சங்காரங்கள், இதனாற் கூறப்பட்டன.
னகரத்திற்கும், நகரத்திற்கும், வரிவடிவில் வேறுபாடிருப்பினும் ஒலி வடிவில் மிக்கவேறுபாடில்லாமையால்,
அவை, விரவி, எதுகையில் அமைக் கப்பட்டன.

———-

பந்திக் கமலத் தடம் சூழ் அரங்கர் படைப்பு அழிப்பு
சிந்தித் திடுவதும் இல்லை கண்டீர் அத்திசை முகனோடு
உந்திக் கமலம் விரிந்தால் உகக் கடையில்
முந்திக் குவியில் உடனே குவியும் இம் மூதண்டமே –19-

(இ – ள்.) பந்தி – வரிசையான,
கமலம் – தாமரைமலர்களையுடைய,
தடம் – தடாகங்கள்,
சூழ் – சூழ்ந்த,
அரங்கர் – திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவரான எம்பெருமான்,
படைப்பு அழிப்பு சிந்தித்திடுவதும் இல்லை – சிருஷ்டி சங்காரங்களை நெஞ்சினால்நினைப்பதும் இல்லை;
(மற்று என்னெனில்), –
அ திசைமுகனோடு – அப்பிரமனுடனே,
உந்தி கமலம் விரிந்தால் – (எம்பெருமானது) திருநாபித்தாமரைமலர் (முன்னே) மலர்ந்தால்,
இ முது அண்டம் – பழமையான இந்த அண்டங்கள்,
விரியும் – (உடனே) தோன்றும்;
உகம் கடையில் – கற்பாந்தகாலத்தில்,
முந்தி குவியில் – முன்னே (அத்தாமரைமலர் பிரமனுடன்) மூடினால்,
உடனே -, குவியும் – (இந்த அண்டங்களும்) ஒடுங்கிவிடும்; (எ – று.)

“இருபது மந்தரத்தோளு மிலங்கைக்கிறைவன் சென்னி, யொருபது மந்தரத்தே யறுத்தோ னப்பனுந்தி முன்னாள்,
தரு பதுமந்தர வந்தன நான் முகன்றான் முதலா, வருபது மந்தரமொத்தபல்சீவனும் வையமுமே,”

“ஒரு நாலுமுகத்தவனோ டுலகீன்றா யென்ப ரதுன், திருநாபி மலர்ந்ததல்லால் திருவுளத்திலுணராயால்,”

“வெண்டிரைக்கனைகடல் நெடுவேலிமூதுலக, முண்டுபைத்தலைநாகபோகத்தினிலுறங்குந்,
தண்டுழாய்முகி லுந்தியந்தடத் தினிற் றுளைத்தாட், புண்டரீகமொன்றலர்ந்தது புவியெலாம்பூப்ப,”

“நீல மால்வரைநெற்றியிற்பொடித்தசெங்கதிரே, போலவான்சுடர்பொழிதருமு ளரியம்பொகுட்டின்,
மேலதாகவந்தெழுந்தது வெயில்விரிபசும்பொற், கோல மேவியகுலமறைமழலைவாய்க்குழவி” என்பன இங்கு நோக்கத்தக்கன.

“திசைமுகனோடு”, “உந்திக்கமலம்,” “முந்தி” என்பவற்றை “விரிந் தால்”, “குவியில்” என்னும் இரண்டனோடும்,
“உடனே”, “இம்மூதண்டம்” என்பவற்றை “விரியும்”, “குவியும்” என்னும் இரண்டனோடுங் கூட்டுக.
திசைமுகனோடு அண்டம் விரியும், திசைமுகனோடு அண்டம் குவியும் என்று கூட்டி யுரைக்கவுமாம்.
திசைமுகன் = நான்கு திசையையும் நோக்கிய நான்கு முகங்களை யுடையவன். “அத்திசைமுகன்” என்று சுட்டியது, பிரசித்திபற்றி; உலகறிசுட்டு.
உந்தி – கொப்பூழ். கமலம் – தற்சமவடசொல். “உகக்கடையிற் குவியில்” என்பதற்கு ஏற்ப, கற்பத்தின் தொடக்கத்தில் விரிந்தால் என்க.
முதுமை + அண்டம் = மூதண்டம்: பண்புப்பெயர், ஈறுபோய் ஆதிநீண்டது.
கற்பந்தோறும் அண்டம் ஒரு தன்மையதாயிருத்தல் தோன்ற, “மூதண்டம்” எனப்பட்டது.
அண்டம் பிரவாகம்போல நித்தியமாயிருத்தல் பற்றியும், “மூதண்டம்” எனத்தகும்.
பந்தி – பங்க்தி என்ற வடசொல்லின் விகாரம். கமலத்தடம் – திருக்காவேரியின் மடுக்களாகவுமாம்.
உம்மை – இழிவுசிறப்பு. “கண்டீர்” என்ற முன்னிலைப்பன்மையிறந்தகாலமுற்று, இயல்பு பற்றிய காலவழுவமைதியாய்க்
காண்பீரென்றபொருளில் வரும்; தெளிவு பற்றிய காலவழுவமைதியுமாம்.
இச்சொல் இடைச்சொல்தன்மைப்பட்டு முன்னிலையசையாயும் தேற்றப்பொருள்தருவதாயும் நிற்கும்.
உலகத்தாரை நோக்கி “இந்த உண்மையையும் வியப்பையும் எம்பெருமானது மகிமையையும் அறிவீராக” என்றவாறுமாம்.

——-

அடந்தை நடந்தை வனம் சூழ் அரங்கத்து அரவணை மேல்
கிடந்தனர் துங்கக் கிரிமிசை நின்றனர் கேழல் ஒன்றாய்
இடந்தனர் மீள விழுங்கினர் கான்றன ஈரடியால்
கடந்தனர் கை வழி மண் ஆனது இந்த மண் காரணர்க்கே –20-

(இ – ள்.) அடந்தை நடந்தை வனம் சூழ் – அடந்தை நடந்தை யென்ற சோலைகள் சூழ்ந்த,
அரங்கத்து – திருவரங்கத்தில்,
அரவு அணைமேல் – ஆதிசேஷனாகிய சயனத்தில்,
கிடந்தனர் – பள்ளிகொண்டருளினர்;
துங்கம் கிரிமிசை – உயர்ந்த திருவேங்கடமலையின்மேல்,
நின்றனர் – நின்றருளினர்;
கேழல் ஒன்று ஆய் – ஒப்பற்றதொரு வராகாவதாரமாகி,
இடந்தனர் – கோட்டாற் குத்தியெடுத்தருளினர்;
மீள – பின்பு,
விழுங்கினர் – (கற்பாந்தகாலத்தில்) விழுங்கியருளினர்;
கான்றனர் – (கற்பத்தொடக்கத்தில்) உமிழ்ந்து வெளிப்படுத்தியருளினர்;
ஈர் அடியால் கடந்தனர் – (ஸ்ரீராமாவதாரத்தில்) இரண்டுதிருவடிகளால் நடந்து கடந்தருளினர்;
(ஆகவே), காரணர்க்கு – (எல்லாவற்றிற்குங்) காரணராகிய எம்பெருமானுக்கு,
இந்த மண் – இந்தப்பூமி,
கை வழி மண் ஆனது – (மட்கலம்வனையுங்குயவன்) கைகளால்வழிக்கும் மண் போல ஸ்வாதீனமாயுள்ளது; (எ – று.)

எம்பெருமான் இந்நிலவுலகத்தில் திருவரங்கத்திலே பள்ளிகொண்ட திருக்கோலமாயும்,
திருமலையில் நின்ற திருக்கோலமாயும் எழுந்தருளியிருக்கின்றனர்;
மற்றும், கேழலாய்ப் பூமியை இடந்தும், இறுதியில் விழுங்கியும், பிறகு உமிழ்ந்தும், ஈரடியாற் கடந்தும் அருளினர்:
ஆதலால், ஜகத்காரணரான அப்பெருமானுக்கு, இந்தப் பூமி, குயவன்கைகளால் வழிக்கும்மண்போல,
ஸ்வாதீனமாயும், நினைத்தபடியெல்லாம் முடிவதாயும், எளியதாயும் இருக்கின்ற தென்பதாம்.

இங்கே, “தொன்னிலக் கிழமை சுட்டின் நன்மதி, வேட்கோச்சிறா அர் தேர்க்கால் வைத்த,
பசுமட் குரூஉத்திரள் போல வவன், கொண்ட குடுமித் தித்தண்பணைநாடே” என்ற புறநானூறு, ஒப்பு நோக்கத்தக்கது.

“கிடந் திருந்து நின் றளந்து கேழலாய்க் கீழ்புக்கு, இடந்திடும் தன்னுள்கர க்கும் உமிழும்,
தடம்பெருந்தோளாரத்தழுவும்பாரென்னுமடந்தையை, மால் செய்கின்ற மா லார்காண்பாரே” என்ற திருவாய்மொழியையும்,
அதன் ஆறாயிரப்படிவியாக்கியானத்தில் “எம்பெருமான்தனக்கு இந்தஜகத்தானது இஷ்டஸர்வசேஷ்டாவிஷயமா யிருக்கையாலே
அவனுக்கே சேஷ மென்கிறார்” என்றதையும்,

“கோட்டுமண்கொண்டிடந் துகுடங்கையின் மண்கொண்டளந்து, மீட்டுமதுண் டுமிழ்ந்து விளையாடு விமலன்,”
“படைத்தபாரிடந்தளந் ததுண் டுமிழ்ந்து”,
“பாரிடந்து பாரையுண்டு பாருமிழ்ந்து பாரளந்து பாரையாண்ட, பேராளன்”,
“இதுநீ, படைத் திடந் துண் டுமிழ்ந்த பார்” முதலிய மற்றையாழ்வாரருளிச்செயல்களையுங் காண்க.

எளிமைகுறித்தற்குக் கைகளினின்றுவழித்தெறியும்மண்ணை உவமைகூறும் உலகவழக்கும் இங்குக் கொள்ளத்தக்கதாம்.

அடைமொழிகொடாமற் சொல்லப்படுஞ் சொல் அவ்வகுப்பிற் சிறந்த பொருளின் மேல்நிற்றல் இயல்பாதலால்,
“கிரி” என்பதற்கு – சிறந்தமலையாகிய திருவேங்கட மென்று பொருள்கொள்ளப்பட்டது;
“கோயில்” என்றது சிறப்பினால் திருவரங்கத்தைக் குறித்தல் போல, “திருமலை” என்பது சிறப்பினால் திருவேங்கடத்தைக் குறித்தலை யுணர்க.
அன்றியும், “கோயில் திருமலை பெருமாள்கோயில்” என்ற சேர்க்கைபற்றியும்
“அரங்கத்தரவணைமேற் கிடந்தனர்” என்றதை அடுத்துநின்ற “துங்கக்கிரி” என்பதற்கு – திருவேங்கடமென்று பொருள்கொள்ளத் தகும்.
இனி, திருவேங்கடம் திருமாலிருஞ்சோலை என்ற இரண்டுமலைகளையுங் கொள்ளலுமாம்;
“இடவமலைக்கும் புயங்கமலைக்கும் ……. இறைவ” என்பர் திருவரங்கத்தந்தாதியில்.
“மீள” என்றதை “கான்றனர்” என்பதனோடு கூட்டலுமாம். ஈரடி – உபயபாதம். கான்றனர். கால் – பகுதி.
அடந்தை, நடந்தை என்பன – ஸ்ரீரங்கத்தில் தொண்டரடிப்பொடியாழ்வார் வைத்து வளர்த்துப் புஷ்பகைங்கரியஞ் செய்து
வந்த இடமாகிய பூஞ்சோலைக ளென்பர்.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading