கட்டளைக் கலித்துறை

கட்டளைக் கலித்துறை என்பது கலித்துறையின் வகைகளுள் ஒன்று.
கட்டளைக் கலி என்பதற்கு எழுத்தெண்ணிப் பாடப்படும் கலி யாப்பு என்று பொருள்.
துறை என்பது பா இனத்தின் ஒரு வகைக்குரிய பெயர்.
காரைக்கால் அம்மையார் தான் இவ்வகையை முதலில் பயன்படுத்தினார் என்பர்.

எழுத்தெண்ணிப் பாடுகிற பொழுது ஒற்றெழுத்துகள் (புள்ளி வைத்த எழுத்துகள்) அனைத்தையும் விட்டுவிட்டு,
உயிர் அல்லது உயிர்மெய் எழுத்துகளை மட்டும் எண்ணி எழுதுவது வழக்கம்.
ஒரு (செய்யுள்) அடி நேரசையில் தொடங்கினால் ஒற்று நீக்கி 16 எழுத்துகள் இருக்குமாறும்,
நிரையசை கொண்டு தொடங்கினால் ஒற்று நீக்கி 17 எழுத்துகள் இருக்குமாறும் பாடுவர்.
இதன்படி நான்கடிகள் உடைய ஒரு கலித்துறைச் செய்யுள்
நேரசையில் தொடங்கினால் ஒரு செய்யுளில் மொத்தம் 64 எழுத்துகளும்,
நிரையசையில் தொடங்கினால் அச்செய்யுளில் மொத்தம் 68 எழுத்துகளும் இருக்கும்.

ஒவ்வொரு அடியிலும் ஐந்து சீர்கள் இருக்கும். அவை செப்பலோசை கொண்டதாக இருக்கும்.
செப்பலோசை என்பது வெண்டளை கொண்ட சீர்ப்பிணைப்புகள்.
ஐந்து சீர்களில் இறுதியில் உள்ள சீர் ‘விளங்காய்’ வாய்பாடு கொண்டிருக்கும்.
ஏனைய நான்கில் ‘விளங்காய்’ வாய்பாட்டுச் சீர் வராது.
மா, விளம், காய் வாய்பாட்டில் முடியும் சீர்கள் மட்டுமே வரும்.
பாடல் பொதுவாக ‘ஏ’ என்னும் எழுத்தில் முடிவது வழக்கம்.

காரைக்கால் அம்மையாரின் கட்டளைக் கலித்துறைப் பாடல்
காரைக்கால் அம்மையார் தம் இரட்டைமணிமாலையில் 10 பாடல்களும்,
சேரநாட்டு அரசரும் கழற்றறிவார் என்று அழைக்கப்படுபவருமான சேரமான் பெருமாள் நாயனாரின்
பொன் வண்ணத்தந்தாதியில் உள்ள 100 பாடல்களும் கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்துள்ளன.

பொன்வண்ணத்தந்தாதியின் முதல் பாடல் இது.

பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்தியங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட
வெண்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே.

பாரதிதாசன் பாடல்களில் கட்டளைக் கலித்துறை
திருக்குறளின் பெருமையை விளக்கிப் பாரதிதாசன் 5 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைப் பாடியுள்ளார்.
அவற்றுள் ஒன்று இது.
தெள்ளு தமிழ்நடை சின்னஞ் சிறிய இரண்டடிகள்
அள்ளு தொறுஞ்சுவை உள்ளுந் தொறும்உணர் வாகும்வண்ணம்
கொள்ளும் அறம்பொருள் இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு
வள்ளுவ னைப்பெற்ற தால்பெற்ற தேயிந்த வையகமே.

மேற்கண்ட கட்டளைக் கலித்துறை பாடல் நேரசையில் அமையப் பெற்றதோடு
புள்ளி எழுத்துகளை விட்டு நோக்க ஓரடியில் அமைந்த ஐந்து சீர்களில் 16 எழுத்துகள் அமைந்துள்ளதோடு
ஈற்றுச்சீர் ஏகாரத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கண நூல்களில் வீர சோழியம் என்ற நூலும் யாப்பருங்கலக் காரிகையும்
நவநீதப் பாட்டியலும் வரையறுத்த பாட்டியலும் அவற்றோடு அளவை விளக்கமும்
கட்டளைக் கலித்துறையில் அமைந்த நூல்கள் என்பது நினைவு கூரத் தக்கது.

கலிப்பாவின் இனம்

வெவ்வேறு ஓசை அமைப்புகளையுடைய உறுப்புகளின் தொடர்ச்சியால் துள்ளித் துள்ளி வரும்
ஓசை ஒழுங்குடையது கலிப்பா என அறிவீர்கள்.
துள்ளல் ஓசையும் உறுப்புகளின் இணைவும் இல்லாவிடினும் கலிப்பாவின் இனங்களும் சிறப்பான ஓசையினிமை உடையனவே.
அதனால் தான் கலி விருத்தத்தையும் கலித் துறையையும் காப்பியக் கவிஞர்களாகிய
கம்பர், திருத்தக்கதேவர், சேக்கிழார் போன்றோர் மிகுதியாகவும் அழகாகவும் பயன்படுத்தினர்.

இனிக் கலிப்பாவின் இனங்களாகிய
கலித்தாழிசை,
கலித்துறை,
கலிவிருத்தம்
ஆகியவற்றின் இலக்கணங்களைக் காண்போம்.

கலித்தாழிசை

(1) கலித்தாழிசை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடிகளால் அமையும்.

(2) ஈற்றடி சற்று நீண்டு ஏனைய அடிகள் தம்முள் அளவு ஒத்து வரும்; ஒவ்வாதும் வரும்.
(அளவு ஒத்து வருதல் = பாடல் முழுவதிலும் அடிகளில் சீர் எண்ணிக்கை ஒத்து வருதல்)

(3) ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருவது சிறப்பான கலித்தாழிசை; தனியே வருவதும் உண்டு.
(ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருவது பற்றி வெள்ெளாத் தாழிசை,ஆசிரியத் தாழிசை,
ஒத்தாழிசைக் கலிப்பா ஆகியவற்றின் இலக்கணங்களில் முன்பே படித்திருக்கிறீர்கள்.)

எடுத்துக்காட்டு:

கொய்தினை காத்தும் குளவி அடுக்கத்தெம்
பொய்தல் சிறுகுடி வாரல்நீ ஐய நலம்வேண்டின்

ஆய்தினை காத்தும் அருவி அடுக்கத்தெம்
மாசில் சிறுகுடி வாரல்நீ ஐய நலம்வேண்டின்

மென்தினை காத்தும் மிகுபூங் கமழ்சோலைக்
குன்றச் சிறுகுடி வாரல்நீ ஐய நலம்வேண்டின்
– (யாப்பருங்கலக் காரிகை உரைமேற்கோள்)

(காத்தும் = காக்கின்றோம்; குளவி அடுக்கம் = மல்லிகை பூத்த மலைச்சாரல்; வாரல் = வாராதே)

மேற்காட்டிய இரண்டடித் தாழிசை முதலடியை (நாற்சீரடி) விட ஈற்றடி (ஐஞ்சீரடி) நீண்டு
ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வந்திருப்பது காண்க.
மூன்று தாழிசைகளிலும் சொற்களும் தொடர்களும் பொருளும் திரும்பத் திரும்ப அடுக்கி வந்துள்ளன.

அடுக்காது தனியே வரும் கலித்தாழிசைக்கு எடுத்துக்காட்டுக் காண்போம்.

எடுத்துக்காட்டு :

வாள்வரி வேங்கை வழங்கும் சிறுநெறிஎம்
கேள்வரும் போழ்தில் எழால்வாழி வெண்திங்காள்
கேள்வரும் போழ்தில் எழாலாய்க் குறாலியரோ
நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்திங்காள – (யாப்பருங்கலக் காரிகை உரைமேற்கோள்)

(வாள் = ஒளி; சிறுநெறி = சிறு காட்டுவழி; எம்கேள் = எம் தலைவன்; எழால் = தோன்றாதே;
எழாலாய்க்கு = தோன்றாத உனக்கு ; உறாலியர் = உறாது நீங்குக ; நாகம் = பாம்பு ;எயிறு = பல்)

தலைவன் வரும்போது தோன்றாதிருந்தால் நிலவைப்பாம்பு விழுங்காதிருக்கும் என்கிறாள் தலைவி.

நான்கடிகளாய் அமைந்த இக்கலித்தாழிசையில் ஈற்றடி நீண்டு (ஐஞ்சீரடி),
ஏனைய அடிகள் அளவொத்து (நாற்சீரடி) வந்திருப்பது காண்க.

ஈற்றடி நீண்டு ஏனைய அடிகள் அளவு ஒவ்வாது வரும்
கலித்தாழிசைக்கு எடுத்துக்காட்டுக் காண்போம்.

எடுத்துக்காட்டு:

பூண்ட பறையறையப் பூதம் மருள
நீண்ட சடையான் ஆடுமே
நீண்ட சடையான் ஆடும் என்ப
மாண்ட சாயல் மலைமகள் காணவே காணவே- (யாப்பருங்கலக் காரிகை உரைமேற்கோள்)

(நீண்ட சடையான் = சிவன்; மாண்ட சாயல் = மாண்புடைய அழகு; மலைமகள் = உமை)

நான்கடிகளால் அமைந்த இக்கலித்தாழிசையில் ஈற்றடி நீண்டுள்ளது (ஐஞ்சீரடி). ஏனைய அடிகள் தம்முள் ஒவ்வாது
வருகின்றன. நாற்சீர், முச்சீர், நாற்சீர் என அவ்வடிகள் வருகின்றன.

· பரணி இலக்கியக் கலித்தாழிசை

காரிகையில் சொல்லப்படாத ஒரு கலித்தாழிசை வகையும் உண்டு.
பரணி என்னும் சிற்றிலக்கியம் இவ்வகை கலித்தாழிசையால் அமைவது.
காரிகைக்குப் பின்வந்த இலக்கணங்களில் இதன் இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது.
காரிகை சொல்லும் இலக்கணத்திலிருந்து இது வேறுபடுவது.
கலிங்கத்துப் பரணி போன்ற கவிச்சுவை மிக்க இலக்கியங்களில் முழுமையாக அமைந்திருப்பதனால்
இத்தாழிசையின் இலக்கணத்தை அறிந்து கொள்வது இன்றியமையாதது.

(1) இரண்டடிகளால் மட்டுமே வரும்.

(2) குறளடி முதல் கழிநெடிலடி வரை எவ்வடியாலும் வரும்;
ஆனால் இரண்டடியும் அளவொத்து வர வேண்டும்.

(3) இரண்டடிகளிலும் ஒரே மாதிரியான சந்த ஒழுங்கு அமைந்திருக்கும். (சந்த ஒழுங்கு = முதலடியில் எந்தச் சீர்
என்ன சீராக (மா, விளம், காய்) உள்ளதோ அவ்வாறே அடுத்த அடியிலும் வருவது)

எடுத்துக்காட்டு:

செக்கச் சிவந்த கழுநீரும் செகத்தில் இளைஞர்
ஆருயிரும்
ஒக்கச் செருகும் குழல்மடவீர் ஒண்பொற் கபாடம்
திறமினோ
– (கலிங்கத்துப் பரணி, கடைதிறப்பு)

மேற்குறித்த தாழிசை அளவொத்த இரு கழிநெடிலடிகளால் அமைந்தது. மா மா காய் மா மா காய் எனச் சீர் (சந்த) ஒழுங்கு
இரண்டடிகளிலும் ஒரே மாதிரியாக அமைந்திருப்பது காண்க.

4.1.2 கலித்துறை

(1) நெடிலடி நான்காய் வரும்.
(2) நான்கடிகளும் எதுகை அமைப்பில் ஒன்றியிருக்கும்.
(3) கலித்துறை பல்வேறு விதமான ஓசை அமைப்புகளுடையது.

ஆழ்வார் பாடல்கள், சிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களில் இக்கலித்துறை மிகுதியும் இடம் பெற்றுள்ளது.

எடுத்துக்காட்டு:

நன்றுடை யானைத் தீயதில் லானை நரைவெள்ளே
றொன்றுடை யானை உமையொரு பாகம் உடையானை
சென்றடை யாத திருவுடை யானைச் சிராப்பள்ளிக்
குன்றுடை யானைக் கூறஎன் உள்ளம் குளிரும்மே- (சம்பந்தர் தேவாரம், 1058)

(நரை வெள்ளேறு = காளை வாகனம்)

ஆவி அந்துகில் புனைவதொன் றன்றிவே றறியாள்
தூவி அன்னமென் புனலிடைத் தோய்கிலா மெய்யாள்
தேவு தெண்கடல் அமிழ்துகொண் டனங்கவேள் செய்த
ஓவி யம்புகை யுண்டதே ஒக்கின்ற உருவாள – (கம்பராமாயணம், சுந்தரகாண்டம், 340)

(தேவு தெண்கடல் = பாற்கடல்; அனங்கவேள் = மன்மதன்)

இரண்டு எடுத்துக் காட்டுகளிலும் நான்கடிகளும் ஒரே எதுகை அமைப்புப் பெற்றிருப்பது காண்க.இரண்டும் வெவ்வேறு
ஓசை அமைப்புடையனவாக இருப்பதனையும் காண்க.

· கட்டளைக் கலித்துறை

கலித்துறையின் ஒரு வகை கட்டளைக்கலித்துறை.
கட்டளை= எழுத்தின் அளவு.
இக்கலித்துறையில் நான்கடிகளிலும் எழுத்தெண்ணிக்கை ஒரே மாதிரியாக வருவதால் இப்பெயர் பெற்றது.
கட்டளைக் கலித்துறையின் இலக்கணம் யாப்பருங்கலக் காரிகையில் சொல்லப்படவில்லை.
ஆனால் காரிகை நூற்பாக்கள் அனைத்தும் கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்தவை.

பின் ஏன் இதன் இலக்கணத்தை அமிதசாகரர் சொல்லாது விட்டார்?
நூற்பாக்களையும் படிக்கின்ற மாணவனுக்கு அதன் இலக்கணம் சொல்லாமலேயே பதியும் என அவர் எண்ணியிருக்கலாம்.
காரிகைக்குப் பின் வந்த இலக்கணங்களில் கட்டளைக்கலித் துறையின் இலக்கணம் சொல்லப்படுகிறது.
கோவை எனும் சிற்றிலக்கியம் முழுமையும் கட்டளைக்கலித்துறையால் அமைந்தது.
காப்பியங்கள், பக்தி இலக்கியம், பட்டினத்தார் பாடல் போன்றவற்றில் பெருவழக்காக உள்ள யாப்பு இது.
கட்டளைக் கலித்துறையால் அமையும் நூற்பாவுக்கே காரிகை எனும் பெயர் உண்டு.

இதன் இலக்கணத்தைக் காண்போம்.

(1) நெடிலடி நான்காய் வரும்.

(2) ஒவ்வோரடியிலும் முதல் நான்கு சீர்கள் பெரும்பாலும்
ஈரசைச் சீர்களாக வரும்; சிறுபான்மை தேமாங்காய்,
புளிமாங்காய்ச் சீர்களும் வரலாம். ஐந்தாம் சீர் விளங்காய்ச்
சீராக வரும்.

(3) ஒவ்வோரடியிலும் முதல் நான்கு சீர்களும் வெண்டளை
அமைந்து வரும். அதாவது அடி முழுதும் வெண்டளை
அமைந்து வரும்.ஆனால் அடியின் இறுதிச் சீருக்கும்
அடுத்த அடியின் முதற் சீருக்கும் இடையே வெண்டளை
வரவேண்டியதில்லை.

(4) ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடியும்.

(5) நேரசையில் தொடங்கும் அடி ஒற்று நீங்கப் பதினாறு
எழுத்துகளையும் நிரையசையில் தொடங்கும் அடி ஒற்று
நீங்கப் பதினேழு எழுத்துகளையும் பெற்றிருக்கும். ( ஒற்று
– மெய்யெழுத்து)

(எழுத்தெண்ணி எழுத வேண்டியதில்லை.வெண்டளையும் ஈற்றில்
விளங்காய்ச் சீரும் அமைந்தால் இந்த எழுத்து எண்ணிக்கை
தானே அமையும்.)

சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில்
தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையும் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்தலை மேல்அயன் கையெழுத்தே
– (கந்தரலங்காரம்)

(சேல் = மீன்; கடம்பு = கடப்பம்பூ ; மால் = மயக்கம் ; வேலை
= கடல்; வெற்பு = மலை; அயன் = பிரமன்)

இப்பாடல் நேரசையில் தொடங்கும் அடிகளைக் கொண்டது.
ஒவ்வோரடியிலும் ஒற்று நீங்கப் பதினாறு எழுத்துகள்
வந்திருப்பதைக் காண்க. முதல் நான்கு சீர்களில் வெண்டளை
அமைப்பு. ஐந்தாம் சீர் விளங்காய்ச் சீர். ஏகார முடிவு ஆகிய
இலக்கணங்களும் பொருந்தியிருப்பது காண்க.

எடுத்துக்காட்டு:

குறளிரு சீரடி சிந்துமுச் சீரடி நாலொருசீர். . ..
– (யாப்பருங்கலக் காரிகை – 12)

எனத் தொடங்கும் காரிகை நூற்பா நிரையசையில்
தொடங்கிப் பதினேழு எழுத்துகள் பெற்று வந்திருப்பது காண்க.

4.1.3 கலி விருத்தம்

(1) அளவடி (நாற்சீரடி) நான்காய் வருவது கலிவிருத்தம்.
(2) நான்கடிகளும் எதுகை அமைப்பில் ஒன்றியிருக்கும்.
(3) ஆசிரிய விருத்தம் போலவே நான்கடியிலும் சந்த ஒழுங்கு
ஒன்றியிருக்கும்.பல்வேறு வகையான கலிவிருத்தச்சந்தங்கள்
உண்டு.

ஆசிரிய விருத்தம் போலவே கலிவிருத்தம் காப்பியங்களில்
மிகுதியாக இடம் பெறுவது.

எடுத்துக்காட்டு:

பேணநோற் றதுமனைப் பிறவி பெண்மைபோல்
நாணநோற் றுயர்ந்தது நங்கை தோன்றலான்
மாணநோற் றீண்டிவள் இருந்த வாறெலாம்
காணநோற் றிலனவன் கமலக் கண்களால்
– (கம்பராமாயணம், சுந்தரகாண்டம் – 402)

(மனைப் பிறவி = குடிப்பிறப்பு; பெண்மை = பெண் பிறப்பு;
நோற்றது = தவம் செய்தது; நங்கை = சீதை;அவன் = இராமன்)

மேற்காட்டிய கலிவிருத்தத்தில் விளம் விளம் மா விளம்
எனும் சந்த ஒழுங்கில் நான்கடிகளும் அமைந்திருப்பது காண்க.
சில கலிவிருத்தங்களில் சந்த ஒழுங்கு சற்றுப் பிறழ்ந்து வருதலும்
உண்டு.

இனி,இவ்வினங்களின் இலக்கணம் கூறும் நூற்பாவைக் காணலாம்.

அடிவரை இன்றி அளவொத்தும் அந்தடி நீண்டிசைப்பின்
கடிதலில் லாக்கலித் தாழிசை யாகும் ; கலித்துறையே
நெடிலடி நான்காய் நிகழ்வது ; நேரடி ஈரிரண்டாய்
விடினது வாகும் விருத்தம் திருத்தகு மெல்லியலே
(யாப்பருங்கலக் காரிகை, 33)

நூற்பாவின் பொருள் :

அடிவரையறை இன்றி இரண்டடியும் பலவடியும் வந்து
ஈற்றடி நீண்டு ஏனைய அடிகள் தம்முள் ஒத்து வருவதும்
ஒவ்வாது வருவதும் கலித்தாழிசை. நெடிலடி நான்காய் வருவது
கலித்துறை. அளவடி நான்காய் வருவது கலிவிருத்தம்.

இனிக் கலிப்பாவின் இனங்கள் கலிப்பாவுடன் எவ்வகையில்
மேலோட்ட ஒற்றுமைகள் கொண்டுள்ளன எனக் காணலாம்.

(1) நான்கு பாக்களுள்ளும் ஒருபொருள் மேல் மூன்றடுக்கி
வரும் தனிச்சிறப்புடைய தாழிசை உறுப்பு கலிப்பாவுக்குரியது.
கலித்தாழிசை அவ்வாறு ஒருபொருள் மேல் மூன்றடுக்கி
வரும் தன்மையைக் கொண்டுள்ளது. (பிற பாக்களின்
இனங்களிலும் தாழிசை ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி
வரும்.)

(2) கலிப்பாவின் தாழிசைக்கு அடிச்சிறுமை இரண்டடி ; கலி
இனமாகிய தாழிசைக்கும் அடிச்சிறுமை இரண்டடியே யாகும்.

(3) சுரிதகம் இல்லாத தரவுகொச்சகக் கலிப்பாவுக்கும்
கலிவிருத்தத்திற்கும் இடையே ஒற்றுமை உண்டு.இரண்டுமே
அளவடி நான்காய் வருவன;நான்கடியும் எதுகைஅமைப்பில்
ஒன்றியிருப்பன. (ஆனால் தரவு கொச்சகக் கலிப்பா
காய்ச்சீர்கள் மிகுந்து கலித்தளை அமைந்து துள்ளலோசை
பெற்று வரும் ; கலிவிருத்தம் பெரும்பாலும் இயற்சீர்களால்
ஆகியது ; துள்ளலோசை பெறாதது.மேலும் கொச்சகத்தில்
இல்லாத சந்த ஒழுங்கு தாழிசையில் உண்டு.)

(4) கொச்சகக் கலிப்பாவில் ஐஞ்சீரடி அருகிவரும். ஆகவே
ஐஞ்சீரடிகளால் அமையும் கலித்துறை ஒருவகையில்
கொச்சகத்தோடு ஒற்றுமையுடையது.

4.4 கலிப்பாவின் இனம்
கலிப்பா,
கலித்தாழிசை
கலித்துறை
கலிவிருத்தம்
என்று மூன்று இனங்களைக் கொண்டது.

4.4.1 கலித்தாழிசை

(1) இரண்டு அடிகளோ, இரண்டிற்கு மேற்பட்ட பல
அடிகளோ வரும்.
(2) ஈற்றடி மிகுந்து, ஏனைய அடிகள் தம்முள் அளவொத்து
வரும்.
(3) ஒரு பொருள் மேல் மூன்று அடுக்கி வரும். தனியே
வருவதும் உண்டு.
(எ.கா)
வாள்வரி வேங்கை வழங்கும் சிறுநெறியெங்
கேள்வரும் போழ்தி லெழால்வாழி வெண்திங்காள்
கேள்வரும் போழ்தி லெழாலாய்க் குறாலியரோ.
நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்திங்காள்

இதில் நான்கடிகள் உள்ளன. இறுதியடி மிகுந்து, 5 சீர்கள் உள்ளன.
ஏனைய அடிகள் மூன்றும் அளவொத்து 4 சீர்கள் கொண்டமைந்துள்ளன.

4.4.2 கலித்துறை
நெடிலடி (ஐஞ்சீர்அடி). நான்காய் அமைவது கலித்துறை
ஆகும்.
ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ?
வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ?
தோழமை என்றவர் சொல்லிய சொல்ஒரு சொல்லன்றோ?
ஏழைமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ?
(கம்ப. குகப்படலம். 2405)

இது நான்கடியாய், ஒவ்வொர் அடியும் 5 சீர்கள் பெற்று
அமைந்துள்ளது. ஆகவே இது கலித்துறையாகும்.

கலித்துறையுள் கட்டளைக் கலித்துறை என்ற இன வகையும் உண்டு. இதன் இலக்கணம்:
(1) நெடிலடி நான்காய் வரும்.
(2) முதல் நான்கு சீர்களிடையில் வெண்டளை அமையும்.
(3) ஐந்தாம் சீர் விளங்காய்ச் சீராகவே முடியும்.
(4) அடியின் முதல்சீர் நேரசையில் தொடங்கினால் ஒற்று
நீங்க 16 எழுத்தும், நிரையசையில் தொடங்கினால் ஒற்று
நீங்க 17 எழுத்தும் வரும்.
(5) ஈற்றடியின் இறுதிச் சீர் ஏகாரத்தில் முடியும்.
(எ.கா)

அகிலேந்து கூந்தல் ஒருகையில் ஏந்தி யசைந்தொருகை
துகிலேந்தி யேந்துந் துணைச்சிலம் பார்ப்பத் துளிகலந்த
முகிலேந்து பூம்பொழில் சூழ்தஞ்சை வாணன்முந்
நீர்த்துறைவாய்
நகிலேந்து பூங்கொடி போல்செல்லு மால்நெஞ்சம்
நம்முயிரே
(தஞ்சை.கோ. 27)
இது நெடிலடி நான்காய் அமைந்துள்ளது ; இந்தச் செய்யுளில்
அடிதோறும் ஈற்றுச்சீர் விளங்காயாக அமைந்து, ஏனைய
சீர்களுக்கிடையே வெண்டளை வந்துள்ளது ; நிரையசையில்
தொடங்குவதால் அடிதோறும் ஒற்று நீங்கி 17 எழுத்துகள்
உள்ளன. ஈற்றடியின் ஈற்றுச் சீர் ‘ஏ’ காரத்தில் முடிகின்றது.
ஆகவே இது கட்டளைக் கலித்துறையாகும்.

4.4.3 கலிவிருத்தம்
அளவடி நான்காய் வரும்.

(எ.கா)
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே
இது அடிதோறும் 4 சீர் பெற்று, 4 அடியாய் அமைந்துள்ளது.
ஆகவே இது கலிவிருத்தம் ஆகும்.

கலிப்பா பெரும்பாலும் அளவடிகளால் அமைவது.
அதில் இடம்பெறும் அராக உறுப்பு நெடிலடி, கழிநெடிலடிகளைக் கொண்டிருக்கும்.
கலிப்பாவின் தாழிசை உறுப்பு ஒருபொருள் மேல் மூன்றடுக்கி வரும்.
இவை முன்பு நீங்கள் அறிந்தவை.
இங்கு நீங்கள் கண்ட இனங்கள் அளவடிகளாலும், நெடிலடிகளாலும் அமைந்துள்ளன.
கலித்தாழிசை ஒருபொருள் மேல் மூன்றடுக்கி வருவதாகவும் உள்ளது.

ஆக,
இந்த ஒப்புமைகள் காரணமாகவே இவை கலிப்பாவின் இனங்களாக
வகை செய்யப் பட்டுள்ளன என்பதை உணரலாம்.

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading