ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்தந்தாதி -தனியன் -காப்புச் செய்யுள்கள் -1-5-

காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்|
ஸ வாஸுதேவோ ரங்கேச: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்||
விமானம் ப்ரணவாகாரம் வேதச்ருங்கம் மஹாத்புதம்|
ஸ்ரீரங்கசாயி பகவாந் ப்ரணவாத்த ப்ரகாசக: ||

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரெங்க மிவா பரம்
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடம் ஈஷ்யதே

———

‘திரு’ என்னும் பலபொருளொருசொல் – வடமொழியில் ‘ஸ்ரீ’ என்பது போல,
தமிழிலே தேவர்கள் அடியார்கள் ஞானநூல்கள் மந்திரங்கள் புண்ணிய ஸ்தலங்கள் புண்ணிய தீர்த்தங்கள் முதலிய
மேன்மையையுடைய பலபொருள்கட்கு விசேஷணபதமாகி மகிமைப்பொருளைக்காட்டி, அவற்றிற்குமுன்னே நிற்கும்;
இங்கு அரங்கத்திற்கு அடைமொழி; அந்தாதிக்கு அடைமொழியாகவுமாம்.

(ஸ்ரீவைகுண்டம் திருப்பாற்கடல் சூரியமண்டலம் யோகிகளுடைய உள்ளக்கமலம் என்னும் இவையனைத்தினும் இனிய தென்று திருமால்)
திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்கு மிட மானதுபற்றி, ‘ரங்கம்’ என்று அவ் விமானத்திற்குப் பெயர்;
திருமால் இங்கு ரதியை (ஆசைப் பெருக்கத்தை) அடைகின்றன னென்க. ரங்கம் என்னும் வடமொழி,
அகரம் மொழிமுதலாகி முன்வரப்பெற்று ‘அரங்கம்’ என நின்றது; (நன்னூல் – பதவியல் – 21.)

இங்கு ‘அரங்கம்’ என்பது – விமானத்தின்பெயர் திருப்பதிக்கு ஆனதோர் ஆகுபெயர் (தானியாகுபெயர்).
இனி, திருமகளார் திருநிருத்தஞ்செய்யுமிடமாயிருத்தலாலும், ஸ்ரீவைஷ்ணவர்களுடைய திருவுக்கு (மேன்மைக்கு) க்கூத்துப்
பயிலிடமாயிருத்தலாலும், ஆற்றிடைக்குறை (நதியினிடையேஉயர்ந்த திடர்) யாதலாலும், திருவரங்கமென்னும் பெயர் வந்த தெனினுமாம்.

இங்கு ‘அரங்கம்’ என்பது – அத்திருப்பதியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானைக் குறித்தது; இலக்கணை.
இனி, “திருவாளன் திருப்பதிமேல் திருவரங்கத் தமிழ்மாலை விட்டுசித்தன் விரித்தன” என்று பெரியாழ்வார் திருமொழியிற்
கூறியபடி திருவரங்கத்தின் விஷயமான தமிழ்த்தொடை யாதல்பற்றி ‘திருவரங்கத்தந்தாதி’

இந்நூலிலுள்ள கலித்துறைகள் யாவும் யமக மென்னுஞ் சொல்லணி யையுடையன வாதலால், இந்நூல் யமகவந்தாதியாம்.
யமகமாவது – பலஅடிகளிலாயினும் ஓரடியிற்பலவிடங்களிலாயினும் வந்த எழுத்துத் தொடர்களே மீண்டும் வந்து பொருள் வேறுபடுவது;
இது, தமிழில் மடக்கு என்னப்படும். இந்நூற்செய்யுள்களிலெல்லாம் நான்கடிகளிலும் முதலெழுத்துக்கள் சில ஒன்றி நின்று
வெவ்வேறு பொருள்விளைத்தல், இடையிட்டுவந்த முதல் முற்று மடக்கு எனப்படும்.

இந்நூல் – நூற்புறமாக முதலிற்கூறப்பட்ட காப்புச்செய்யுள் ஐந்தும்,
நூலினிறுதியிற் கூறப்பட்ட தற்சிறப்புப்பாயிரச்செய்யுள் ஒன்றும் தவிர,
அந்தாதித்தொடையாலமைந்த நூறு கட்டளைக்கலித்துறைகளை யுடையது.
சொற்றொடர்நிலைச்செய்யுள் பொருட்டொடர்நிலைச்செய்யுள் என்ற வகை யில், இது, சொற்றொடர்நிலை;
“செய்யு ளந்தாதி சொற்றொடர் நிலையே” என்றார் தண்டியலங்காரத்தும்.

தலத்தின் பெயர் – ரங்கம், ஸ்ரீரங்கம், திருவரங்கம், பெரியகோயில், கோயில் என்பன.
பூலோக வைகுண்டம், போகமண்டபம்,
ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரம் என்பவை – விசேஷநாமங்களாம். இது, ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரம் எட்டில் ஒன்று.

இத்திருப்பதியின் எம்பெருமானது திருநாமம் – ஸ்ரீரங்கநாதன், பெரியபெருமாள், நம்பெருமாள், அழகியமணவாளன்.
கோலம் – பள்ளி கொண்ட திருக்கோலம். சேஷசயனம்.
சந்நிதி – தெற்கு நோக்கியது.
நாச்சியார் – ஸ்ரீரங்கநாயகி, ஸ்ரீரங்கநாச்சியார்.
விமானம் – பிரணவாகார விமானம், வேத சிருங்கம்.
நதி – உபய காவேரி. [தென்திருக்காவேரியும், வடதிருக்காவேரியும் (கொள்ளிடம்.)]
தீர்த்தம் – சந்திரபுஷ்கரிணி முதலிய நவதீர்த்தங்கள்.
தலவிருக்ஷம் – புன்னைமரம்.
பிரதியக்ஷம் – தர்மவர்மா, ரவிதர்மன், சந்திரன், காவேரி முதலான வர்களுக்குப் பிரதியக்ஷம்.

பாடல் – பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார்,
பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் என்கிற
ஆழ்வார்கள் பதின்மர், ஆண்டாள் இவர்கள் மங்களாசாஸநம்.

பஞ்சகாவியங்களுள் ஒன்றாகிய சிலப்பதிகாரத்தில் இந்தத் திவ்வியதேசமும் இதிலெழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானும்
நீல மேக நெடும் பொற் குன்றத்து பால் விரிந்து அகலாது படிந்தது போலே
ஆயிரம் விரித்து எழு தலை உடை அரும் திறல் பாயற் பள்ளி பலர் தொழுது ஏத்த
விரை திரை காவிரி வியன் பெரும் துருத்தி திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும்
—என் கண் காட்டு என்று என் உளம் கவற்ற வந்தேன்
என்று பாராட்டிக் கூறப்பட்டிருத்தலுங் காண்க.

————————–

தனியன் –
சிறப்பு பாசுரம் –
மணம் வாள் அரவிந்தைமார் நோக்க இம்மை மறுமையில் மா
மண வாளர் தம் பதம் வாய்த்திடும் கோயிலிலே வந்த அந்த
மண வாளர் பொன் திருப்பாத அம்புயங்கட்கு மாலை என
மண வாளர் சூடும் யமகம் அந்தாதியை வாசிமினே-

கோயிலில் வந்த – திருவரங்கத்தி லெழுந்தருளியுள்ள,
அந்தம் மணவாளர் – அழகிய மணவாளருடைய,
பொன் திரு பாத அம்பு யங்கட்கு – அழகிய திருவடித்தாமரைகட்கு (உரிய),
மாலை என – மாலையாக,
மணவாளர் சூடும் – அழகிய மணவாளதாசர் சாத்திய,
யமகம் அந்தாதியை – இந்த யமகவந்தாதிப் பிரபந்தத்தை வாசிமின் –
(நீங்கள் படியுங்கள்:) (இதனைப்படிப்பீராயின் உங்கட்கு), –
இம்மை – இம்மையிலே,
மணம் வாள் அர விந்தைமார் நோக்க – வாசனையையும் ஒளியையுமுடைய செந்தாமரை மலரில்
வசிக்கின்ற அஷ்டலக்ஷ்மிகளும்
ஆதிலக்ஷ்மி, கஜலக்ஷ்மி, தநலக்ஷ்மி, தானியலக்ஷ்மி, வீரலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, சந்தாநலக்ஷ்மி, சௌபாக்கிய லக்ஷ்மி
கருணையோடு பார்த்தருள, –
மறுமையில் – மறுமையிலே,
மா மணவாளர் தம் பதம் வாய்த்திடும் – திருமகள் கணவரான திருமாலினது ஸ்தானம்
[ஸ்ரீவைகுண்டம்] தவறாது கிடைக்கும்; (என்றவாறு.) –
ஏ – ஈற்றசை.

ஸ்ரீரங்கத்துக்கு அருகி லுள்ளதும் நிசுலாபுரியென்னும் மறுபெயரை யுடையதுமான உறையூரை
இராச தானியாகக் கொண்டு அதில் வீற்றிருந்து அரசாளுகிற தர்மவர்மாவின் வம்சத்தவனான நந்தசோழன்
வெகுகாலம் பிள்ளையில்லாமலிருந்து ஸ்ரீரங்கநாதனைக்குறித்துத் தவஞ்செய்து அத்தவத்தின் பயனாய்
ஒருநாள் தாமரையோடையில் ஒருதாமரைமலரில் ஒருபெண்குழந் தையிருக்கக்கண்டு களித்து
அக்குழந்தையை எடுத்துக் கொண்டு வந்து கமலவல்லி யென்று திருநாமஞ்சாத்தி வளர்த்துவருகையில்,
மங்கைப்பருவ மடைந்த அந்தப்பெண் தோழியருடன் உத்தியானவனத்தில் மலர்கொய்து விளையாடிவரும்போது,
திருமகளின் அம்சமான அப்பெண்மணியை மணம் புரிந்து ஏற்றுக்கொள்ள விரும்பிய ஸ்ரீரங்கநாதன்

அதி சுந்தர மூர்த்தியாய் விபவாவதாரமாகக் குதிரைமீது ஏறி வேட்டையாடச்செல்லுகிற வியாஜத்தால் அவளெதிரில்
எழுந்தருளிக் காட்சிகொடுக்க, மிகஅழகிய அப்பெருமானைக் கண்டு கமலவல்லி மோகங்கொள்ள,
அதனையுணர்ந்த நந்தசோழன் அந்தக்கன்னிகையை ரங்கநாதனுக்கு மிக்கசிறப்போடு மணம்புரிவித்தான்;
இங்ஙனம் அழகியவடிவங்கொண்டுமணம்பெற்றுக் கலியாணக்கோலத்தோடு விளங்கியதனால்,
ஸ்ரீரங்கநாதனுக்கு அழகியமணவாளனென்று ஒருதிருநாம மாயிற்று;
(மணம் – விவாகம்; அதனை ஆள்பவன் [பெற்றவன்] – மணவாளன்.)
முன்னிலும் பின்னழகிய பெருமாள், ஆபரணத்துக்கு அழகு கொடுக்கும் பெருமாள் என்ற திருநாமங்களும் உண்டு.
“எழிலுடையவம்மனைமீர் என் அரங்கத்து இன்னமுதர், குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழி, லெழு
கமலப்பூவழகர் எம்மானார் என்னுடைய, கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே” என்ற நாச்சியார் திருமொழியையுங் காண்க.
அழகிய மணவாள னென்ற பொருளில் ‘அந்த மணவாளன்’ என்றார்; (அந்தம் – அழகு).
அந்த என அகரச்சுட்டின் மரூஉவாக எடுத்து, அப்படிப்பட்ட [அதாவது – அதிப்பிரசித்திபெற்ற] என்றும் உரைக்கலாம்; உலகறிசுட்டு.

கோ+இல்=கோயில்; பொதுவிதிப்படி கோவில்என வகரவுடம்படு மெய் பெறாது யகரம்பெற்று வழங்குவது, இலக்கணப்போலி.
பெருமானுடைய இருப்பிடமென ஆறாம்வேற்றுமைத் தொகையாகவாவது,
தலைமையான இடமெனப் பண்புத்தொகையாகவாவது விரியும். (கோ – தலைவன், தலைமை; இல் – இடம், வீடு.)
இது தேவாலயங்கட்கெல்லாம் பொதுப்பெயராயினும், நூற்றெட்டுத் திருமால் திருப்பதிகளுள்
திருவரங்கம் தலைமைபெற்ற தாதலால், இதனைக் ‘கோயில்’ எனச் சிறப்பாகவழங்குவது, வைஷ்ணவ சம்பிரதாயம்;

ரங்கநாதன் ஆதியில் பிரமனது திருவாராதநத்திருவுருவமாய்ச் சத்தியலோகத்திலே இருந்து பின்பு
இக்ஷ்வாகுகுலதநமாய்த் திருவயோத்தியி லெழுந்தருளியிருந்து,
பின்பு விபீஷணாழ்வானால் இவ்விடத்து வந்தமை தோன்ற, ‘கோயிலில் வந்த அந்த மணவாளர்’ என்றார்.

பொன் – பொன்போலருமையாகப் பாராட்டத்தக்க எனினுமாம்.

பா தாம்புஜம் – தீர்க்கசந்தி பெற்ற வடமொழித்தொடர்; திருவடியாகிய தாமரைக்கு என உருவகப்பொருள்பட ‘
பாதாம்புயங்கட்கு’ எனக் கூறினாலும், மேல்வரும் ‘மாலையெனச்சூடும்’ என்ற முடிக்குஞ்சொல்லுக்கு ஏற்ப,
தாமரை போன்ற திருவடிக்கு என முன்பின்னாகத்தொக்க உவமைத்தொகையாகக் கருத்துக் கொள்ளுதலே சிறப்பாமென்க;
உருவகத்துக்கு ஏற்ற தொடர்ச்சிச் சொல் இல்லாமையின். திருவடிக்குத் தாமரைமலர் உவமை,
செம்மை மென்மை யழகுகட்கு. அம்புஜம் – நீரில்தோன்றுவதெனப் பொருள்படும்;
தாமரைக்குக் காரணவிடுகுறி; மலர்க்கு முதலாகுபெயர். (அம்பு – நீர்.) அம்புய ங்கட்குமாலையென – நான்காம்வேற்றுமை, தகுதிப்பொருளது;
அழகியமணவாளனது திருவடிகளின் மகிமைக்கும் மென்மைக்கும் ஏற்ற சிறப்பும் மென்மையும் வாய்ந்தது
இந்நூலென்ற கருத்து இதனாற்போதரும். பாதாம்புயங்களிற் சூடின எனக் கொள்ளுதலும் ஒன்று; உருபு மயக்கம்.

பெருமானது திருவடிகளிற் சூட்டும் பூமாலைபோன்ற பாமாலை யென்க;
(“அடிசூட்டலாகுமந்தாய மம்,” “செய்யசுடராழியானடிக்கே சூட்டினேன்சொன்மாலை,”
“கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ் – உற்ற, திருமாலை பாடுஞ் சீர்” என்றார் பெரியாரும்.)

வாள் – ஒளி; உரிச்சொல். அரவிந்தம் – தாமரை; வடசொல்: அதில் வாழ்பவள், அரவிந்தை:
அதன்மேல், மார் – பலர்பால்விகுதி. இம்மை – இப்பிறப்பு, மறுமை – இறந்தபின்வரும் நிலை.
மாமணவாளர் – ஸ்ரீயஃபதி.மா, பதம் – வடசொற்கள்.
“தேனார்கமலத்திருமாமகள்கொழுநன், தானே வைகுந்தந்தரும்” என்றபடி பிராட்டியின் புருஷகார பலத்தாலே
பெருமான் தனது உலகத்தைத் தந்தருள்வ னென்பதுதோன்ற, ‘மாமணவாளர்தம்பதம் வாய்த்திடும்’ என்றார்.
மணவாளர் என்றது – மூன்றடியிலும், உயர்வுப்பன்மை.
ஒரு பெயரின் ஒருபகுதியைக் கொண்டு அப் பெயர் முழுதையுங்குறிப்பதொரு மரபுபற்றி,
அழகியமணவாளதாசரை ‘மணவாளர்’ என்றார்; இதனை வடநூலார் ‘நாமைகதேசேநாமக்ரஹணம்’ என்பர்.
இரண்டாமடியில், தம் – சாரியை. வாய்த்திடும், இடு – தேற்றமுணர்த்தும் துணைவினை.

‘மணவாளர்’ என ஆக்கியோன் பெயரும், ‘யமகவந்தாதி’ என நூற்பெயரும்,
‘கோயிலில் வந்த அந்தமணவாளர் பொற்றிருப்பாதாம்புயங்கட்கு மாலையெனச்சூடும்’ என நுதலியபொருளும்,
‘மணவாளரவிந்தைமார்நோக்க விம்மை மறுமையில் மாமணவாளர்தம்பதம் வாய்த்திடும்’ எனப் பயனும் பெறப்பட்டன.
“ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை, நூற்பெயர்யாப்பே நுதலியபொருளே, கேட்போர் பயனோடா யெண்பொருளும்,
வாய்ப்பக்காட்டல் பாயிரத்தியல்பே” என்ற சிறப்புப்பாயிரத்திலக்கணத்தில் மற்றவை குறிப்பிக்கப்படுவன உய்த்துணர்ந்துகொள்க.

இக்கவி, பிறன்கூறியது; அபியுக்தரிலொருவர்செய்த தென்பர்:
இது, வைஷ்ணவசம்பிரதாயத்தில் ‘தனியன்’ எனப்படும்;
(நூலுள் அடங்காது தனியே பாயிரமாய் நிற்றல் பற்றியது, அப்பெயர்; ‘அன்’ விகுதி – உயர்வுப் பொருளது.)

———–

காப்பு

காப்பு – காத்தல்; அது, இங்கு, காக்கின்ற கடவுளின் விஷயமான வணக்கத்தைக் குறிக்கும்:
ஆகவே, கவி தமக்குநேரிடைத்தக்க இடையூறுகளை நீக்கித் தமது எண்ணத்தை முடிக்க வல்ல
தலைமைப் பொருளின் விஷயமாகச் செய்யுந் தோத்திர மென்பது கருத்து.

[விஷ்வக்ஸேநரும், பஞ்சாயுதமும்.]
ஓர் ஆழி வெய்யவன் சூழ் உலகு ஏழ் உவந்து ஏத்து அரங்கர்
கார் ஆழி வண்ணப் பெருமாள் அந்தாதிக்கு காப்பு உரைக்கின்
சீர் ஆழி அம் கையில் பொன் பிரம்பு ஏந்திய சேனையர் கோன்
கூர் ஆழி சங்கம் திரு கதை நாந்தகம் கோதண்டமே–1-

ஓர் ஆழி – ஒற்றைச் சக்கரங்கோத்த தேரையுடைய,
வெய்யவன் – சூரியனால்,
சூழ் – சூழ்ந்துவரப்பெற்ற,
உலகு ஏழ் – ஏழுதீவுகளாகவுள்ள பூமியி லிருக்கிற சனங்கள்,
உவந்து ஏத்து – மனமகிழ்ந்து துதிக்கப் பெற்ற,
அரங்கர் – திருவரங்கமென்னுந் திருப்பதியில் எழுந்தருளியிருக்கின்றவரும்,
கார் ஆழி வண்ணம் பெருமாள் – கரியகடல் போன்ற திருநிறமுடைய நம்பெருமாளுமாகிய எம்பெருமான் விஷயமாக (யான்பாடுகிற),
அந்தாதிக்கு – அந்தாதியென்னும் பிரபந்தம் இடையூறின்றி இனிது நிறைவேறுதற்கு,
காப்பு – பாதுகாவலாகும் பொருள்கள், –
உரைக்கின் – (இன்னவை யென்று) சொல்லுமிடத்து, –
சீர் ஆழி அம் கையில் பொன் பிரம்பு ஏந்திய சேனையர்கோன் – சிறந்த மோதிரத்தை யணிந்த அழகிய கையிற்
பொன் மயமான பிரம்பை [செங்கோலைத்] தரித்த சேனை முதலியாரும்,
கூர் ஆழி சங்கம் திருகதை நாந்தகம் கோதண்டமே – கூரிய சக்கரமும் சங்கமும் அழகிய கதையும் வாளும் வில்லுமாகிய
(திருமாலின்) பஞ்சாயுதங்களும்;

“சிறைப் பறவை புறங்காப்பச் சேனையர் கோன் பணிகேட்ப,
நறைப் படலைத் துழாய் மார்பினாயிறுபோன் மணி விளங்க,
அரியதானவர்க்கடிந்த ஐம்படையும் புடை தயங்க,….
ஆயிர வாய்ப் பாம்பணை மேலறி துயிலினினி தமர்ந்தோய்”,

“கோலார்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம் கொலை யாழி கொடுந் தண்டு கொற்ற வொள் வாள்,
காலார்ந்த கதிக் கருடனென்னும் வென்றிக் கடும் பறவை யிவை யனைத்தும் புறஞ் சூழ் காப்பச்,
சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த திருவரங்கத் தரவணையிற் பள்ளி கொள்ளு, மாலோன்” என்றபடி
எம்பெருமானது திருவுள்ளக் கருத்தின்படி அவனுக்குக் குற்றேவல் செய்யும் பரிசனங்களும் எப்பொழுதும் அவனருகில் விடாது நின்று
அவனது திருமேனிக்குப் பாதுகாவல் செய்பவருமான ஸ்ரீசேனை முதலியாரும், திவ்விய பஞ்சாயுதமூர்த்திகளுமே,
அப்பெருமானது தோத்திரமாகத் தாம் செய்யும் அந்தாதிக்கு நேரும் இடையூறுகளை நீக்கிப் பாதுகாப்ப ரென்று
கொண்டு அவர்களை இவ்வந்தாதிக்குக் காப்பு என்றார்.

ஸ்ரீவைஷ்ணவ சமயத்தவரான இந்நூலாசிரியராற் கூறப்பட்ட இக் காப்புச் செய்யுள் அந்த ஸ்ரீமகாவிஷ்ணுவினது
தொண்டர்கட்குத் தலைவரான சேனை முதலியாரையும், அத் திருமாலின் ஐம்படையையுங் குறித்ததாதலால்,
வழிபடு கடவுள் வணக்கம் ஏற்புடைக் கடவுள் வணக்கம் என்ற வகை யிரண்டில் வழி படு கடவுள் வணக்கமாம்.

அடுத்த நான்குசெய்யுள்களும் இவ்வாறே. தம் தமது மதத்துக்கு உரிய கடவுளை வணங்குதலே யன்றி
அக்கடவுளினடியார்களை வணங்குதலும் வழிபடு கடவுள் வணக்கத்தின் பாற்படுமென அறிக.

சேனையர் கோன் – பரமபதத்திலுள்ள நித்திய முக்தர்களின் திரளுக்கும் மற்ற வுலகங்களிலுள்ள திருமாலடியார்கட்கும்
தலைவராதலாற்சேனை முதலியாரென்றும் சேனைத் தலைவரென்றும் சொல்லப்படுகிற விஷ்வக்ஸேநர்.
தம்மைச் சரணமடைந்தவர் தொடங்குந் தொழில்கட்கு வரும் விக்கினங்களை [இடையூறுகளை]ப் போக்குதலாலும்,
தம்மை யடையாது அகங்கரித்தவர்கட்கு விக்கினங்களை ஆக்குதலாலும் விக்நேசுவரரென்று பெயர்
பெற்றவரான விநாயகர் இவரது அம்சத்தைச் சிறிதுபெற்றவரே யாதலால், இவரை முதற் காப்பாகக் கொள்ளுதல் சாலும்.

“ஆளி லமர ரரங்கேசர் சேவைக் கணுகுந்தொறுங், கோளில் திரளை விலக்கும் பிரம்பின் கொனை படலால்,
தோளிலடித் தழும்புண்டச் சுரர்க்கு” என்றபடி திரள் விலக்குதற் பொருட்டும்,
எம்பெருமானது ஆணையைத் தான் கொண்டு நடத்துதற்கு அறிகுறியாகவும் இவர் கையிலே பொற்செங்கோலேந்தி நிற்பர்.

இவர்கையில் ‘ஆழி’ என்றது, எம்பெருமானிடம் இவர் பெற்றுள்ள அதிகாரத்துக்கு அறிகுறியான முத்திரை மோதிரத்தை.
திருமாலின் பஞ்சாயுதங்களுள் சக்கரம் – சுதர்சநமென்றும், சங்கம் – பாஞ்சஜந்ய மென்றும், கதை – கௌமோதகி யென்றும்,
வாள் – நந்தக மென்றும், வில் – சார்ங்க மென்றும் பெயர்பெறும்.
இவை துஷ்ட நிக்கிரக சிஷ்டபரிபாலநஞ் செய்யுங் கருவியாய்ச் சிறத்தலால், இவற்றைக் காப்பாகக் கொண்டார்.

சூரியனது தேர் சம்வற்சர ரூபமான ஒற்றைச் சக்கரமுடைய தென்று புராணம் கூறும்.
வெய்யன் – உஷ்ணகிரணமுடையவன்; வெம்மை யென்னும் பண்பினடியாப் பிறந்த பெயர்.
இங்கு ‘உலகேழ்’ என்றது, ஜம்பு பிலக்ஷம் குசம் கிரௌஞ்சம் சாகம் சால்மலி புஷ்கரம் என்ற ஏழுதீவுகளை,
இங்கு ‘உலகு’ என்றது, உயிர்களின்மேல் நிற்கும்.
காராழிவண்ணம் – மேகமும் கடலும் போன்ற திருநிறமெனினுமாம்.

பெருமாள் = பெருமான், பெருமையையுடையவர்;
இதில், பெருமை யென்ற பகுதி ஈற்று ஐகாரம் மாத்திரம் கெட்டு, பெரும் என நின்றது; ‘
ஆன்’ என்ற ஆண்பால்விகுதி ‘ஆள்’ என ஈறு திரிந்தது;
‘ஆள்’ என்ற பெண்பால் விகுதியே சிறுபான்மை ஆண் பாலுக்கு வந்ததென்றலும் ஒன்று:
அன்றி, பெருமையை ஆள்பவனெனக்கொண்டால் ஆள் என்ற வினைப் பகுதி கருத்தாப் பொருள் விகுதி புணர்ந்து கெட்டதென வேண்டும்.

பெருமாளந்தாதி என்ற தொடரில் தொக்குநின்ற ஆறாம்வேற்றுமையுருபின் பொருளாகிய சம்பந்தம் – விஷயமாகவுடைமை;
விஷ்ணுபுராணம், விநாயகரகவல் என்பவற்றிற் போல.

நாந்தகம் – நந்தக மென்பதன் விகாரம். ஆழி என்ற சொல் – தேர்ச் சக்கரம் மோதிரம் சக்கராயுதம் என்ற பொருள்களில்
வட்டவடிவுடைய தென்றும், கடலென்றபொருளில் ஆழ்ந்துள்ளது என்றும் காரணப் பொருள்படும்;
இனி கடலென்றபொருளில் பிரளயகாலத்து உலகங்களை அழிப்ப தென்றும்,
சக்கராயுதமென்ற பொருளில் பகைவர்களையழிப்ப தென்றும் கொள்ளலு மொன்று.
‘ஓர்ஆழி’ என்றது – ஒற்றைச் சக்கரமுடைய தேருக்கு, பண்புத் தொகை யன்மொழி.

இச் செய்யுளில் ஆழி என்கிற ஒரு சொல் அடி தோறும் வேறு பொருளில் வந்தது, சொற்பின்வருநிலையணி.
இப்பொருளணியோடு திரிபு என்னும் சொல்லணியும் அமைந்திருத்தல் காண்க.
(திரிபாவது – ஒவ்வோரடியிலும் முதலெழுத்துமாத்திரம் வேறுபட்டிருக்க, இரண்டு முதலிய பல எழுத்துக்கள்
ஒன்றி நின்று பொருள்வேறுபடுவது.) இவ்விரண்டணியும் பேதப்படாமற் கலந்துவந்தது, கலவையணி.

———–

[பன்னிரண்டு ஆழ்வார்களின் அருளிச் செயல்.]

வையம் புகழ் பொய்கை பேய் பூதன் மாறன் மதுரகவி
யையன் மழிசை மன் கோழியர் கோன் அருள் பாண் பெருமான்
மெய்யன்பர் காற் பொடி விண்டு சித்தன் வியன் கோதை வெற்றி
நெய்யங்கை வேற் கலியன் தமிழ் வேத நிலை நிற்கவே –2-

வையம் புகழ் – உலகத்தவர்களாற் புகழப்படுகிற,
பொய்கை – பொய்கையாழ்வாரும்,
பேய் – பேயாழ்வாரும்,
பூதன் – பூதத்தாழ்வாரும்,
மாறன் – நம்மாழ்வாரும்,
மதுரகவி ஐயன் – மதுரகவியாழ்வாரும்,
மழிசை மன் – திருமழிசையாழ்வாரும்,
கோழியர்கோன் – குலசேகராழ்வாரும்,
அருள் பாண் பெருமாள் – (நம்பெருமாளின்) விசேஷ கடாக்ஷம் பெற்ற திருப்பாணாழ்வாரும்,
மெய் அன்பர் கால் பொடி – தொண்டரடிப் பொடியாழ்வாரும்,
விண்டு சித்தன் – பெரியாழ்வாரும்,
வியன் கோதை – பெருமையை யுடைய ஆண்டாளும்,
வெற்றி நெய் வேல் அம்கை கலியன் – சயம் பொருந்தியதும் நெய் பூசியதுமான வேலாயுதத்தை யேந்திய
அழகிய கையை யுடைய திருமங்கையாழ்வாரும் ஆகிய பன்னிரண்டு ஆழ்வார்களால் அருளிச்செய்யப்பட்ட,
தமிழ் வேதம் – திரவிட வேதமாகிய (நாலாயிர) திவ்வியப் பிரபந்தங்கள்,
நிலை நிற்க – (எக் காலத்தும் அழிவின்றி உலகத்தில்) நிலை பெற்றிருக்கக் கடவன; (எ – று.)

ஆசீர்வாதம் [வாழ்த்து]. நமஸ்காரம் [வணக்கம்], வஸ்துநிர்த்தேசம் [தலைமைப்பொருளுரைத்தல்] என்ற
மூவகை மங்களங்களுள், இது வாழ்த்தாம்.
ஆழ்வார்களால் வெளியிடப்பட்ட திவ்வியப்பிரபந்தங்களின் சொற்பொருட் கருத்துக்கள் அமைய
அப்பிரபந்தங்கள் போலச் செய்யப்படுவது இத்திரு வரங்கத்தந்தாதி யாதலால்,
இந்நூலின் இக்காப்புச் செய்யுளை ஏற்புடைக் கடவுள்வாழ்த்தென்றும் கொள்ளலாம்.

வையம் – இடவாகுபெயர். ‘வையம்புகழ்’ என்ற அடைமொழியை எல்லா ஆழ்வார்கட்கும் கூட்டலாம்.
இனி, வையம் புகழ் பொய்கை – “வையந் தகளியா” என்றுதொடங்கிப் பிரபந்தம்பாடி (எம்பெருமானை)த் துதித்த
பொய்கையாழ்வா ரெனினுமாம்; அவ்வுரைக்கு, வையம் என்பது – அவர் பாடிய முதல் திருவந்தாதிக்கு முதற்குறிப்பு.
“பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை, யையனருள்மாறன்சேரலர்கோன் –
துய்யபட்ட, நாதனன்பர் தாட்டூளி நற்பாணனன்கலியன், ஈதிவர்தோற்றத்தடைவாமிங்கு” என்றபடி
திருவவதாரக்கிரமத்தால் பொய்கையார் பூதத்தார் பேயார் மழிசைப்பிரான் மாறன் குலசேகரர் பெரியாழ்வார்
தொண்டரடிப்பொடி திருப்பாணர் திருமங்கையாழ்வார் என முறைப்படுத்தி,
பெரியாழ்வாரது திருமகளான ஆண்டாளையும் நம்மாழ்வாரது சிஷ்யரான மதுரகவியையும் ஈற்றில் வைத்தாயினும்,
ஆண்டாளைப் பெரியாழ்வாரை யடுத்தும் மதுரகவியை நம்மாழ்வாரை யடுத்தும் வைத்தாயினும் கூறுவதே முறையாயினும்,
இங்குச் செய்யுள் நோக்கி முறை பிறழ வைத்தார்.

பொய்கை – குளம்; பொற்றாமரைப் பொய்கையில் திருவவதரித்த ஆழ்வாரை ‘பொய்கை’ என்றது, இடவாகுபெயர்.
இனி, உவமவாகுபெயராய், ஊர்நடுவேயுள்ள குளம்போல எல்லார்க்கும் எளிதிற் பயன்கொடுப்பவ ரென்றுமாம்.

பேய் – உவமையாகுபெயர்: உலகத்தவராற் பேய் போல எண்ணப் படுபவர்; அல்லது, அவர்களைத் தாம் பேய் போல எண்ணுபவர்:
“பேயரே யெனக்கி யாவரும் யானுமோர், பேயனே யெவர்க்கும் இது பேசி யென்,
ஆயனே யரங்கா வென்றழைக்கின்றேன், பேயனாயொழிந்தே னெம்பிரானுக்கே” என்ற கொள்கைப்படி,
இவர் பகவத் பக்தியாற் பரவசப்பட்டு, நெஞ்சழிதல் கண்சுழலுதல் அழுதல் சிரித்தல் தொழுதல்
மகிழ்தல் ஆடுதல் பாடுதல் அலறுதல் முதலிய செய்கைகளையே எப்பொழுதும் கொண்டு,
காண்பவர் பேய் பிடித்தவரென்னும்படி யிருந்ததனால், பேயாழ்வாரென்று பெயர் பெற்றனர்.

பூதன் – எம்பெருமானை யறிதலாலே தமது உளனாகையை யுடையவராதலால், இவர்க்கு, பூதனென்று திருநாமம்:
‘பூஸத்தாயாம்’ என்றபடி ஸத்தையென்னும் பொருள்கொண்ட பூ என்னும் வடமொழி வினையடியினின்று பிறந்த பெயராதலால்,
பூதன் என்பதற்கு – ஸத்தை [உள்ளவனாயிருக்கை] பெறுகின்றவனென்று பொருளாயிற்று.
இனி, இத்திருநாமத்துக்கு – உலகத்தவரோடு சேராமையாற் பூதம் போன்றவரென்று பொருளுரைத்தல் சம்பிரதாயமன்று.

நம்மாழ்வார்க்கு அநேகம் திருநாமங்கள் இருப்பினும் அவற்றில் ‘மாறன்’ என்பது, முதலில் தந்தையார் இட்ட
குழந்தைப் பெயராதலால் அதில் ஈடுபட்டு அப்பெயரினாற் குறித்தார்.
பிறந்தபொழுதே தொடங்கி அழுதல் பாலுண்ணுதல் முதலியன செய்யாது உலகநடைக்கு மாறாயிருந்ததனால்
சடகோபர்க்கு ‘மாறன்’ என்று திருநாமமாயிற்று.
வலியவினைகட்கு மாறாக இருத்தலாலும், அந்நியமதஸ்தர்களை அடக்கி அவர்கட்குச் சத்துருவாயிருத்தலாலும்,
பாண்டியநாட்டில் தலைமையாகத் தோன்றியதனாலும் வந்த பெயரென்றலும் உண்டு.

மதுரகவி – இனிமையான பாடல் பாடுபவர்.

மழிசைமன் – திருமழிசையென்று வழங்குகின்ற மஹீஸார க்ஷேத்திரத்தில் திருவவதரித்த பெரியோன்;
இது, தொண்டைநாட்டி லுள்ளது.

கோழியர்கோன் – கோழியென்னும் ஒருபெயருடைய உறையூரி லுள்ளார்க்குத் தலைவர்;
உறையூர், சோழ நாட்டிராசதானி. சேரநாட்டரசரான குலசேகராழ்வார் திக்விஜயஞ்செய்த போது
சோழராசனை வென்று கீழ்ப்படுத்தி அந்நாட்டுக்குந் தலைமை பூண்டதனால், ‘கோழியர்கோன்’ எனப்பட்டனர்.
“கொல்லிகாவலன் கூடல்நாயகன் கோழிக்கோன் குலசேகரன்” என்றதனால்,
இவர் தமிழ்நாடுமூன்றுக்குந் தலைமைபூண்டமை விளங்கும்.
முற்காலத்து ஒருகோழி நில முக்கியத்தால் அயல்நாட்டு யானையோடு பொருது அதனைப் போர் தொலைத்தமை கண்டு
அந்நிலத்துச்செய்த நகரமாதலின், ‘கோழி’ என்று உறையூருக்குப் பெயராயிற்று.
இனி, குலசேகராழ்வார் அரசாட்சிசெய்த இடமான கோழிக்கூடு என்ற சேரநாட்டு இராசதானி
(நாமைகதேசேநாமக்கிரகணத்தால்) கோழியெனப்பட்ட தென்றலு மொன்று.

பாண்பெருமாள் – வீணையும் கையுமாய்ப் பெரிய பெருமாள் திருவடிக்கீழே நிரந்தர சேவை பண்ணிக்கொண்டு பாட்டுப் பாடிப் புகழ்பவர்;
பாண் – இசைப்பாட்டு: அதற்குத் தலைவர், பாண்பெருமாள். இவர் நம் பெரியபெருமாளுடைய திருமேனியழகில் ஈடுபட்டு
அதனை அடிமுதல் முடிவரை அநுபவித்து அப்பெருமாளாற் கொண்டாடி யழைக்கப்பெற்று அப்பெருமாளின்
திருவடிகளிலே ஐக்கியமடைந்ததனால், ‘பெருமாள்’ என்று சிறப்பித்துக் கூறப்படுவர்;
“சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமிழா லளித்த, பாரியலும் புகழ்ப் பாண்பெருமாள்”,
“காண்பனவுமுரைப்பனவு மற்றொன்றின்றிக்கண்ணனையேகண்டுரைத்தகடியகாதற், பாண்பெருமாள்” என்பன காண்க.

உறையூரில் அயோநிஜராய் நெற்பயிர்க் கதிரில் அவதரித்துப் பஞ்சம சாதியிற் பாணர் குலத்திற்பிறந்தானொருவன் வளர்க்க வளர்ந்து
யாழ்ப் பாடலில் தேர்ச்சிபெற்று மகாவிஷ்ணுபக்தரான இவர், ரங்கநாதனுக்குப் பாடல் திருத்தொண்டு செய்யக் கருதி,
தாம்தாழ்ந்தகுலத்தில் வளர்ந்தவராதலால் உபயகாவேரி மத்தியிலுள்ள ஸ்ரீரங்கதிவ்விய க்ஷேத்திரத்தில் அடியிடு தற்குந் துணியாமல்
தென் திருக்காவேரியின் தென்கரையில் திருமுகத்துறைக்கு எதிரிலே யாழுங்கையுமாக நின்றுகொண்டு
நம்பெருமாளைத் திசைநோக்கித் தொழுது இசைபாடி வருகையில், ஒருநாள், நம்பெருமாள் தமக்குத் தீர்த்த கைங்கரியஞ்செய்பவரான
லோகசாரங்கமகாமுனியின் கனவில் தோன்றி ‘நமக்கு நல்லன்பரான பாண்பெருமாளை இழிவாக நினையாமல்
நீர் சென்று தோள்களில் எழுந்தருளப்பண்ணிவாரும்’ என்று நியமிக்க,
அவரும் அங்ஙனமே சென்று பாணரை அரிதில் இசைவித்துத் தோளில் எடுத்துக்கொண்டு வந்து சேர்க்க,
அம்முனிவாகனர் அணியரங்கனைச்சேவித்து அவனடியிலமர்ந்தனர்;
இங்ஙனம் விசேஷகடாக்ஷம் பெற்றமைபற்றி, ‘அருட்பாண்பெருமாள்’ என்றார்.
ஐயன் – ஆர்யன்: பூசிக்கத்தக்கவன், அந்தணன்; ஆசாரியன்.

மெய்யன்பர்காற்பொடி – உள்ளும்புறமும் ஒத்துத் தொண்டு செய்யும் மெய்யடியாரான ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
திருவடித் தூளிபோல அவர்கட்குக் கீழ்ப்படிந்து அடிமைபூண்டு ஒழுகுபவராதலால், இவர்க்கு, தொண்ட ரடிப்பொடியென்று திருநாமம்.

இளமைதொடங்கி எப்பொழுதும் தமது சித்தத்தை விஷ்ணுவினிடத்திலே செலுத்தி
“மார்வமென்பதோர்கோயிலமைத்து மாதவனென்னுந் தெய்வத்தை நாட்டி” என்னும்படி அப்பெருமானை மனத்திலே
நிலைநிறுத்தித் தியானித்துவந்ததனால், விஷ்ணுசித்தர் என்று பெரியாழ்வார்க்குப்பெயர்.

கோதை – மாலை; எம்பெருமானுக்கு மாலைபோல மிகஇனியளா யிருப்பவள்;
அல்லது, எம்பெருமானுக்குச் சமர்ப்பித்தற்காகத் தனது தந்தையார் அமைத்து வைத்த பூமாலையை அவர் இல்லாத சமயத்தில்
தான் சூடிக்கொண்டு அழகு பார்த்துப் பின்பு கொடுத்தவள்;
அன்றி, எம்பெருமானுக்குப் பாமாலை சூட்டினவள்.
“ஆழ்வார்கள்தஞ் செயலை விஞ்சிநிற்குந் தன்மையளாய்ப், பிஞ்சாப்பழுத்தாளை யாண்டாளை” என்றபடி.
ஞான பக்தி யாதிகளில் ஆழ்வார்களனைவரினும் மிகவிஞ்சியிருத்தல், மிக்க விளமையிலேயே பரமபக்தியை
இயல்பாகக்கொண்டமை முதலிய சிறப்புக்களை யுடைமையால், ‘வியன்கோதை’ என்றார்.

கலியன் – மிடுக்குடையவன். சோழராசன் கட்டளைப்படி மங்கை நாட்டுக்கு அரசராகிய இவ்வாழ்வார்
குமுதவல்லி யென்னுங் கட்டழகியை மணஞ்செய்துகொள்ளும்பொருட்டு அவள்விருப்பத்தின்படி நாள்தோறும்
ஆயிரத்தெட்டு ஸ்ரீவைஷ்ணவர்களை அமுதுசெய்வித்து வருகையில், கைப்பொருள் முழுவதுஞ் செலவாய் விட்டதனால்
வழிபறித்தாகிலும் பொருள் தேடிப் பாகவதததீயாராதநத்தைத் தடையற நடத்தத் துணிந்து வழிச் செல்வோரைக் கொள்ளை யடித்து
வரும்போது ஸ்ரீமந்நாராயணன் இவரை யாட்கொள்ளக் கருதித் தான் ஒரு பிராமணவேடங் கொண்டு
பல அணி கலங்களைப் பூண்டு மணவாளக் கோலமாய் மனைவியுடனே இவரெதிரில் எழுந்தருள,
இவர் கண்டு களித்து ஆயுதபாணியாய்ப் பரிவாரத்துடன் சென்று அவர்களை வளைந்து வஸ்திர ஆபரணங்களை யெல்லாம்
அபகரிக்கையில், அம்மணமகன் காலிலணிந்துள்ள மோதிரமொன்றைக் கழற்ற முடியாமையால் அதனையும் விடாமற் பற்களாலே
கடித்துவாங்க, அம்மிடுக்கை நோக்கி எம் பெருமான், இவர்க்கு ‘கலியன்’ என்று ஒருபெயர்கூறினா னென உணர்க.

தமிழ் வேதம் – வேதங்களின் சாராம்சமான கருத்து அமையப் பாடிய தமிழ்ப் பிரபந்தங்கள்.
வியன் – உரிச்சொல்; வியல் என்பதன் விகாரமுமாம். நெய் வேல் – பகைவரது நிணம் தோய்ந்த வேலுமாம்.

———–

குரு பரம்பரை-

சீதரன் பூ மகள் சேனையர் கோன் குருகைப் பிரான்
நாதமுனி உய்யக் கொண்டார் இராமர் நல் ஆளவந்தார்
ஏதமில் வண்மை பராங்குச தாசர் எதித் தலைவர்
பாதம் அடைந்து உய்ந்த ஆழ்வான் எம்பார் பட்டர் பற்று எமக்கே –33-

சீதரன்-(பரமாசாரியனான) திருமாலும்,
பூமகள் – (அத்திரு மாலினது சிஷ்யையான) திருமகளும்,
சேனையர் கோன் – (அப் பெரிய பிராட்டியாரின் சிஷ்யரான) சேனை முதலியாரும்,
தென் குருகை பிரான் – (அச்சேனைத் தலைவரது சிஷ்யரான) அழகிய திருக் குருகூரில் அவதரித்த தலைவராகிய நம்மாழ்வாரும்,
நாதமுனி – (அச்சடகோபரது சிஷ்யரான) ஸ்ரீமந் நாதமுனிகளும்
உய்யக்கொண்டார் – (அந்நாதமுனிகளின் சிஷ்யரான) உய்யக்கொண்டாரும்,
இராமர் – (அவருடைய சிஷ்யரான) ராமமிச்ரரென்னுந் திருநாமமுடைய மணக்கால்நம்பியும்,
நல் ஆளவந்தார் – (அவரது சிஷ்யரான ஞானங் கனிந்த) நலங்கொண்ட ஆளவந்தாரும்,
ஏதம் இல் வண்மை பராங்குசதாசர் – (அவர் சிஷ்யரான) குற்றமில்லாத உதார குணமுள்ள பெரியநம்பியும்,
எதி தலைவர் – (அவர் சிஷ்யரான) யதிராஜராகிய ஸ்ரீபாஷ்யகாரரும்,
பாதம் அடைந்து உய்ந்த ஆழ்வான் – (அவருடைய) திருவடிகளைச் சரணமடைந்து நல்வாழ்வு பெற்ற கூரத்தாழ்வானும்,
எம்பார் – (அவ்வாழ்வான் போலவே ஸ்ரீபாஷ்யகாரர்க்கு அதி அந்தரங்க சிஷ்யரான) எம்பாரும்,
பட்டர் – (கூரத்தாழ்வானுடைய குமாரரும் எம்பாரது சிஷ்யருமான) பட்டரும்,
(ஆகிய இவர்கள்), எமக்கு பற்று – எமக்குத் தஞ்சமாவர்; (எ – று.)

இந்த நூல் ஆச்ரியருக்கு பட்டர் ஆசார்யர் ஆகையாலே அவர் வரை அருளி
அவர் திரு தகப்பனாரையும் சேர்த்து அருளுகிறார்
இந்நூலாசிரியர்க்குப் பட்டர் ஸ்வாசாரிய ராதலால், குருபரம்பரையில் அவரளவே கூறலாயிற்று,

சீதரன் முதல் பட்டர் ஈறாகச் சொல்லும் குரு பரம்பரைக் கிரமத்தில் எதித்தலைவர்க்குப் பின்னே எம்பார்க்கு முன்னே
கூரத்தாழ்வானை வைக்கவேண்டிய அவசியமில்லையாயினும்,
ஸ்வாசாரியரான பட்டர்க்குக் கூரத்தாழ்வான் திருத்தமப்பனாராதல்பற்றியும்,
தம்குல முதல்வரான திருவரங்கத்தமுதனார் ஸ்ரீபாஷ்யகாரருடைய திருவடிகளில் ஆசிரயித்தற்குக்
கூரத்தாழ்வான் புருஷகாரராய் நின்றமை பற்றியும், அவ்வாழ்வானை இடையிலே நிறுத்தினார்.
இது, இந்நூலாசிரியருடைய குலகுருபரம்பரை யென்க.

அன்றியும், ஸ்ரீபாஷ்யகாரரது நியமனத்தின்படி சென்று பட்டர்க்கு த்வயோபதேசஞ்செய்து ஆசாரியராகி
அவர்க்குப் பஞ்சஸம்ஸ்காரங்களையும் திருவாய்மொழிமுதலிய கிரந்தங்களையும்,
அவற்றின் வியாக்கியாநங்களையும் அருளினவர், எம்பார்:
பட்டர்க்கு ஜாதகரும நாமகரண சௌளோபநயநாதிகளையும், ஸ்ரீபாஷ்யாதி கிரந்தங்களையும் அருளினவர்,
திருத் தந்தையாரான கூரத்தாழ்வான்; ஆதலால், ஆழ்வானையும் பட்டர்க்கு ஆசாரியரென்றல் ஒருவாறு அமையும்.

ஸ்ரீதரன் – வடசொல்; திருமகளைத் (திருமார்பில்) தரிப்பவன்.
பூமகள் – (மலர்களிற் சிறந்ததான) தாமரைமலரில் வாழும் மகள்.
தென் குருகை – தெற்கிலுள்ள குருகூரெனினுமாம்; இது, தென்பாண்டி நாட்டிலுள்ளது: ஆழ்வார்திருநகரியென வழங்கும்.

நாதமுனி – தலைவராகிய முனிவர்: யோகீசுவரர். முநி – மநநசீலன்;
ஸ்ரீரங்கநாதனுடைய ‘நாதன்’ என்ற திருநாமத்தை வகித்து நம்மாழ்வாரால் தமக்கு உபதேசிக்கப்பட்ட
அர்த்தங்களை அடைவே எப்பொழுதும் மநநம் பண்ணிக் கொண்டு எழுந்தருளியிருக்கிற அந்தணராதலால்,
நாதமுனி யென்று பெயர் வழங்கலாயிற்று என்பதையும் உணர்க.

உய்யக்கொண்டார் –
மணக்கால்நம்பி முதலிய பலரையும் உய்யுமாறு ஆட் கொண்டவர்:
அன்றி, நாதமுனிகளால் உய்வு பெற ஆட்கொள்ளப்பட்டவ ரெனினுமாம்.

மணக்காலென்கிற ஊரில் திருவவதரித்தவராதலால் மணக்கால்நம்பி யென்று திருநாமம்பெற்ற ஆசாரியரது இயற்பெயர்,
ராமர் என்பது: கடவுளின் பெயரை அடியார்கட்கு இடுதல், மரபு.

நாதமுனிகளின் பேரனாரான யமுனைத்துறைவர் இளமையிலே ராஜபுரோகிதனும் மகாவித்துவானுமான
ஆக்கியாழ்வானோடு வாதஞ்செய்யத் தொடங்கியபோது இராசபத்தினியானவள் ‘இவர் தோற்கமாட்டார்’ என்று அரசனுக்கு உறுதிகூற,
அரசன் அதனை மறுத்து, ‘நமது ஆக்கியாழ்வான் தோற்றால் இவர்க்குப் பாதி இராச்சியம் தருவேன்’ என்று பிரதிஜ்ஞைசெய்ய,
உடனே நடந்த பலவகை வாதங்களிலும் யமுனைத்துறைவரே வெற்றியடைய,
அதுகண்டு தனதுபிரதிஜ்ஞை நிறைவேறினமைபற்றி மகிழ்ச்சிகொண்ட இராசமகிஷி
‘என்னையாளவந்தவரோ!’ என்றுகொண்டாடியதனால், இவர்க்கு ‘ஆளவந்தார்’ என்று திருநாமமாயிற்று.

பெரியநம்பியின் மறுபெயரான பராங்குசதாசரென்பது பராங்குசரென்னும் ஒருதிருநாமத்தையுடைய நம்மாழ்வாரது
அடியவரென்று பொருள்படும்.
இவர் ஸ்ரீபாஷ்யகாரர்க்குப் பஞ்சஸம்ஸ்காரங்களையும் மந்த்ரரத்நத்தையும் அருளி
அவரை நம் தரிசநப்பிரவர்த்தகராம்படி செய்திட்ட சிறப்புத் தோன்ற,
இவர்க்கு ‘ஏதமில் வண்மை’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.
இங்கு வண்மை, கைம்மாறு கருதாது மந்திரோபதேசஞ் செய்தல்;
அதற்கு ஏதமின்மை, நூல்முறைக்கும் சிஷ்டாசாரத்துக்கும் சிறிதும் வழுப்படாமை.

எதித்தலைவர் – சந்யாசிசிரேஷ்டர். யதி என்ற வடசொல், எதியென விகாரப்பட்டது;
யந்திரம் – எந்திரம், யமன் – எமன், யஜ்ஞம் – எச்சம், யது – எது, யஜுர் – எசுர் என்பன போல.

ஆழ்வான் – எம்பெருமானுடைய குணகணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்.
கூரமென்கிற தலத்தில் அவதரித்தவராய், ‘கூரத்தாழ்வான்’ என்று வழங்குகிற பெயர் இங்கு
நாமைகதேசே நாமக்ரஹணத்தால் ‘ஆழ்வான்’ எனப்பட்டதென்றும் கொள்க.

ஸ்ரீபாஷ்யகாரர் கோவிந்தபட்டருடைய வைராக்கியத்தைக் கண்டு அவர்க்குச் சந்யாசாச்சிரமந் தந்தருளித்
தமது திருநாமங்களிலொன்றான எம்பெருமானா ரென்ற பெயரை அவர்க்குச் சாத்த,
அவர் அப்பெரும் பெயரைத் தாம் வகிக்க விரும்பாதவராய் ‘தேவரீர்க்குப் பாதச் சாயையாயிருக்கிற அடியேனுக்குத்
தேவரீர் திருநாமச்சாயையே அமையும்’ என்று விண்ணப்பஞ்செய்ய,
பாஷ்யகாரரும் அப்பெயரையே சிதைத்து எம்பார் என்று பெயரிட்டருளினார்.

பண்டிதர்க்கு வழங்குகின்ற ‘பட்டர்’ என்ற பெயர் கூரத்தாழ்வானுடைய குமாரர்க்குச் சிறப்பாக வழங்கும்.
எம்பெருமானாரால் நாம கரணஞ்செய்தருளப்பெற்றவர், இவர்.

பற்று – பற்றுக்கோடு, ரக்ஷகம்.

எமக்கு என்ற தன்மைப் பன்மை,
ஸ்ரீவைஷ்ணவரனைவரையும் உளப்படுத்தியது; கவிகட்குஉரிய இயற்கைப் பன்மையுமாம்.

————

(எழுபத்து நான்கு சிங்காசநாதிபதிகள்.)

திருமாலை யாண்டான் திருக்கோட்டியூர் நம்பி திருவரங்கப்
பெருமாள் அரையர் திருமலை நம்பி பெரிய நம்பி
அருமால் கழல் சேர் எதிராசர் தாளில் சிங்கா தனராய்
வரும் ஆரியர்கள் எழுத்து நால்வர் என் வான் துணையே –4-

திருமாலை யாண்டன் -, திருக்கோட்டி நம்பி -, திருவரங்கப் பெருமாளரையர் -,
திருமலைநம்பி -, பெரியநம்பி -, (என்பவர்களுடைய),
அருமால் கழல் – அருமையான சிறந்த திருவடிகளை,
சேர் – அடைந்த,
எதிராசர் – எம்பெருமானாருடைய,
தாளின் – திருவடி சம்பந்தத்தால்,
சிங்காதனர் ஆய் வரும் – ஸிம்ஹாஸநாதிபதிகளாய் விளங்குகின்ற,
ஆரியர்கள் எழுபத்து நால்வர் – ஆசாரியர்கள் எழுபத்து நான்கு பேரும்,
என் வான் துணை – எனக்குச் சிறந்த துணையாவர்;

முதலிரண்டடியிற் குறித்த ஐவரும், ஸ்ரீபாஷ்யகாரர்க்குப் பஞ்சாசாரிய ரெனப்படுவர்.
அவர்களில், திருமாலையாண்டான், இவர்க்குத் திவ்வியப் பிரபந்த வியாக்கியாநம் அருளிச்செய்து
‘சடகோபன் பொன்னடி’ என்கிற திருநாமத்தைச் சாத்தியருளினார்;
திருக்கோட்டியூர்நம்பி, இவர்க்குத் திருமந்திரார்த்தத்தையும் சரம ச்லோகார்த்தத்தையும் அருளிச்செய்து
‘எம்பெருமானார்’ என்கிற திருநாமத்தைச் சாத்தியருளினார்;
திருவரங்கப்பெருமாளரையர், இவர்க்குப் பெரிய திருமொழி மூலமும் திருவாய்மொழி மூலமும்
கண்ணி நுண்சிறுத்தாம்பு வியாக்கியாநமும் த்வயார்த்தமும் அருளிச்செய்து ‘லக்ஷ்மணமுனி’ என்கிற திருநாமஞ் சாத்தியருளினார்;
பெரியதிருமலைநம்பி, இவர்க்கு ஸ்ரீராமாயண வியாக்கியாநம் அருளிச் செய்து ‘கோயிலண்ணன்’ என்கிற திருநாமஞ் சாத்தியருளினார்;
பெரியநம்பி, இவர்க்கு ‘ராமாநுஜன்’ என்கிற திருநாமமும் திருமந்திரமும் த்வய சரமச்லோகங்களும் உள்படப்
பஞ்ச ஸம்ஸ்காரம் செய்தருளி, முதலாயிரம் இயற்பா என்ற ஈராயிர மூலத்தை அருளிச்செய்தார்.

எழுபத்து நால்வர் – பட்டர், சீராமப்பிள்ளை, கந்தாடையாண்டான், அநந்தாழ்வான், எம்பார், கிடாம்பியாச்சான் முதலியோர்.
இவர்கள் பெயர் வரிசையை, குருபரம்பராப்பிரபாவம் முதலிய நூல்களிற் காணலாம்.
இவர்கள், ஸ்ரீபாஷ்யகாரரிடமிருந்து உபய வேதாந்தார்த்தங்களையும் உபதேசம் பெற்று அவராலேயே
ஆசாரிய புருஷர்களாக நியமிக்கப்பட்டவர்கள்.
சிங்காதனராய் வரும் ஆரியர்கள் – ஆசாரிய பீடத்தில் வீற்றிருந்து அதற்கு உரிய அதிகாரத்தை நிர்வகிப்பவர்கள்.
‘எதிராசர்தாளிற் சிங்காதனராய் வருமாரியர்கள்’ என்ற சொற்போக்கினால்,
பாஷ்யகாரராகிய ஒரு சக்ரவர்த்தி பின் கீழடங்கி ஆட்சி செய்யும் சிற்றரசராவர் இவரென்பது தோன்றும்.

——–

நம்மாழ்வார்

மால் தன் பராங்கதி தந்து அடியேனை மருள் பிறவி
மாறு அன்பர் ஆன குழாத்துள் வைப்பான் தொல்லை வல் வினைக்கு ஓர்
மாறன் பாராமுகம் செய்யாமல் என் கண் மலர்க் கண் வைத்த
மாறன் பராங்குசன் வாழ்க என் நெஞ்சினும் வாக்கினுமே-5-

மால்தன் – திருமாலினுடைய,
பராங்கதி – பரமபதத்தை,
தந்து – அளித்து,
அடியேனை – தொண்டனான என்னை,
மருள் பிறவி மாறு அன்பர் ஆன குழாத்துள் வைப்பான் – மயக்கமுள்ள பிறப்பு நீங்கப்பெறுகிற
அடியார்களான முக்தர்களுடைய கூட்டத்தில் (ஒருவனாகச்) சேர்த்தருள விருப்பவனும்,
தொல்லை வல்வினைக்கு ஓர் மாறன் – அநாதியாய் வருகிற வலிய கருமங்கட்கு ஒரு சத்துருவா யுள்ளவனும்,
பராமுகம் செய்யாமல் என் கண் மலர் கண் வைத்த மாறன் பராங்குசன் – உபேக்ஷை செய்யாமல் என் மீது
தாமரை மலர் போன்ற (தனது) திருக்கண் பார்வையை வைத்தருளியவனும் மாறனென்றும் பராங்குசனென்றும்
பெயர்களையுடையவனுமான ஸ்ரீசடகோபன்,
என் நெஞ்சினும் வாக்கினும் வாழ்க – எனது மனத்திலும் மொழியிலும் வாழக்கடவன்; (எ – று.)

இப்பிரபந்தம் இனிது முடிதற்பொருட்டு ஆழ்வார் எனது மனத்திலும் வாக்கிலும் இருந்து நல்ல கருத்துக்களையும்
வளமான சொற்களையும் தோற்றுவிப்பாராக வென வேண்டியவாறாம்.
ஆழ்வாரை மனத்திற்கொண்டு தியானித்துச் சொல்லிற்கொண்டு துதிப்பே னென்ற கருத்தும் அமையும்.

மால்தன் பராங்கதி – விஷ்ணுலோகமாகிய ஸ்ரீவைகுண்டம்.
மருள் – விபரீத ஞானம். மருட் பிறவி – அவித்தையினாலாகிற பிறப்பு எனினுமாம்;
“பொருளல்லவற்றைப் பொருளென் றுணரும், மருளானா மாணாப் பிறப்பு” என்றார் திருக்குறளிலும்.
கருமத்தை முற்றும் ஒழித்து மீளாவுலகமாகிய முக்தி பெற்றவர் மீண்டும் பிறத்தல் இல்லையாதலால், ‘பிறவி மாறுஅன்பர்’ எனப்பட்டனர்.
வல்வினைக்கு மாறன் – அழித்தற்கு அரியகருமங்களை எளிதில் அழிப்பவன்.
பராமுகம் = பராங்முகம், முகங்கொடாமை.
என்கண், கண் – ஏழனுருபு.
மலர்க்கண் வைத்தல் – அருள் நோக்கம்.
மிகக் களித்துக் கொழுத்துச் செருக்கித் திரிந்து எதிர்த்து வாதப் போர்க்கு வரும் பிற மதத்தவராகிய மத யானைகளைத்
தமது பிரபந்தங்களிற் கூறிய தத்வார்த்தங்களினால் அடக்கிக் கீழ்ப்படுத்தித் தம் வசத்தில் வைத்து நடத்துந் திறமுடையராய்
அவற்றிற்கு மாவெட்டி யென்னுங் கருவிபோ லிருத்தலால்,
நம்ஆழ்வார்க்குப் பராங்குசனென்று திருநாமமாயிற் றென்க:
பர அங்குசன் என்று பிரிக்க: பரர் – அயலார்; அங்குசம் – மாவெட்டி, தோட்டி, தந்து வைப்பானென முடியும்.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading