ஸ்ரீ ஸ்தவம் – ஸ்வாமி ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்லோகங்கள்.
அனைத்து உலகுக்கும் தாயாரான ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஸ்ரீ ரங்கநாயகி தாயாரின்
பெருமைகளை சொல்லும் 11 ஸ்லோகங்கள்.
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம உக்தி மதீ மஹே |
யதுக்தய ஸ்த்ரயீ கண்டே யாந்தி மங்கள சூத்ர தாம் ||–தனியன் (ஸ்ரீ பராசர பட்டர் அருளியது)
“ஸ்ரீ நாராயண பரத்வமாகிய மங்கல நாண் பூண்டவள் வேத மாதா எனத் தம் ஸ்தோத்ரங்களால்
காட்டியருளிய ஸ்வாமி ஸ்ரீ கூரத்தாழ்வானுக்கு நம் வணக்கங்கள்.”
——–
ஸ்ரீ ஸ்தவம் – ஸ்லோகம் 1 ️
“ஸ்வஸ்தி ஸ்ரீர் திசதாத் அசேஷ ஜகதாம் ஸர்கோபஸர்க்க ஸ்திதி தீ:
ஸ்வர்க்கம் துர்கதிம் அபவர்க்கிக பதம் ஸர்வஞ்ச குர்வன் ஹரி:” |
“யஸ்யா வீக்ஷ்ய முகம் தத் இங்கித பராதீனோ விதத்தே சகிலம்
கிரீடேயம் கலு நான்ய தாசஸ்ய ரஸதா ஸ்யாதை கரஸ் யாத்தயா” ||
பகவான் ஹரி நாராயணன் உலகில் படைத்தல், அழித்தல் மற்றும் காத்தல் என்று எல்லாம் செய்யும்போது,
பிராட்டியின் அழகான முக குறிப்பு இணக்கத்திலேயே பகவான் இவைகளை செய்கிறான்.
இத்தகைய சக்தியுடைய, எல்லா காலங்களிலும், இடங்களிலும் அகல கில்லேன் இறையும் என்ற ‘ஸ்ரிய பதி’ பகவானுடன்
எப்போதும் சேர்ந்தே இருக்கிற விஷ்ணு பத்னியாகிய பிராட்டியே! மிகுந்த பக்தியும்,ஞானமும் அளித்து என்னை ரக்ஷிப்பாயாக!
———–
ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 2
ஹே ஸ்ரீர் தேவி சமஸ்த லோக ஜநநீம் த்வாம் ஸ்தோதுமீஹா மஹே
யுக்தாம் பாவய பாரதீம் ப்ரகுணய ப்ரேம ப்ரதாநாம் தீயம் |
பக்திம் பந்தய நந்தயாஸ்ரிதம் இமம் தாஸம் ஜனம் தாவகம்
லக்ஷ்யம் லக்ஷ்மி கடாக்ஷ வீசிவிஸ்ருதே: தே ஸ்யாம சாமீ வயம் ||
“ஹே ஸ்ரீரங்கநாயகி தாயாரே! அனைத்து உலகுக்கும் தாயானவளே! உனது பெருமைகளை புகழ்ந்து பாடுவதற்கு
வாக்கு, அன்பு கலந்த ஞானம் அருள வேணும். என்னுடைய பக்தியானது பரம பக்தியாக வளர அருள வேணும்.
உன் திருவடி தாமரையில் சரணடைந்து உனக்கு கைங்கர்யம் செய்பவனாக ஏற்றுக்கொண்டால்
நான் மிகுந்த ஆனந்தம் கொள்வேன்! உன்னுடைய கருணை மிக்க பார்வையை எங்கள் மேல் கடாக்ஷித்து அருள வேணும்”
என்று கூரத்தாழ்வான் பிரார்த்திக்கிறார்.
————-
ஸ்ரீ ஸ்தவம் – ஸ்லோகம் – 3
ஸ்தோத்ரம் நாம கிமா மநந்தி கவயோ யத் யந்யதீயான் குணாந்
அந்யத்ர த்வஸதோ சதிரோப்ய பணிதி: ஸா தர்ஹி வந்த்யா த்வயி |
ஸம்யக் ஸத்ய குணாபி வர்ணாநம் அதோ ப்ரூயு: கதம் தாத்ருசீ
வாக் வாசஸ்பதி நாபி சக்ய ரசநா த்வத் ஸத் குணார்ணோநிதௌ ||
“இருக்கிறதை இருக்கு என்று பாடுவது ஒரு வகை ஸ்தோத்ரம்..இல்லாததை இருக்கு எனபது ஏற்றி சொல்வது அடுத்த வகை.
தேவி! உன் இடத்தில் எல்லாம் உள்ளன. பல நிதி முத்துக்கள் கடலில் உள்ளது போல உயர்ந்த கல்யாண குணங்கள்
இருக்கும் போது எனது சின்ன வாக்கால் எப்படி பாட முடியும்? ஹயக்ரீவர் ஆக இருந்தாலும் முடியாது. ” என்கிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்.
பராசர பட்டர் ஆயிரம் நாக்கு கேட்டு பின்பு பாட சக்தி இல்லை என்றார்.
முடியாது என்று சொல்ல ஆயிரம் நாக்கு வேணும் என்பது போல. பெரிய பிராட்டியாரின் கல்யாண குணங்களை
பாடிக்கொண்டே இருக்கலாம், இதற்கு எல்லையே இல்லை.
————–
ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 4 –
யே வாசாம் மநஸாம் ச துர் க்ரஹதயா க்யாதா குணாஸ் தாவகா :
தாநேவ ப்ரதி ஸாம்பு ஜிஹ்வ முதிதா ஹை மாமிகா பாரதீ |
ஹாஸ்யம் தத்துந மன்மஹே ந ஹி சகோர் யேகா கிலம் சந்ரித்காம்
நாலம் பாதுமிதி ப்ரக்ருஹ்ய ரசநாம் ஆஸீத ஸத்யாம் த்ருஷி ||
“ஹே மஹாலக்ஷ்மி! உன்னுடைய கல்யாண குணங்களை என்னுடைய நாக்காலோ அல்லது மனதாலோ பாடி முடிக்க முடியாது!
பாடிக்கொண்டே இருக்கலாம், பாடுவதில் வாக்கு ஓடுகிறது. தண்ணீர் உடன் கூடிய ரசத்துடன் கூடிய நாக்கு துடிக்கிறது.
‘சகோரி’ என்னும் பறவை சந்திர கலை உருகுமா என்று கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கும்.
சந்திரனின் குளிர் கதிர்களை உணவு என்று எண்ணி குடிக்கும்,
தன்னால் முடியாது என்று தெரிந்தும் தன்னை முழுவதுமாக இதில் ஈடுபடுத்திக் கொள்கிறது.
இதேபோல், நானும் என் முயற்சியை விடாது, உன்னுடைய கல்யாண குணங்கள் அனைத்தையும் பாடி
போற்றிக்கொண்டே இருப்பேன்” என்று இந்த ஸ்லோகத்தில் பாடுகிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்.
———–
ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 5 –
க்ஷோதீயா நபி துஷ்ட புத்திரபி நிஸ் ஸ்நேஹோப்ய நீஹோபி தே
கீர்த்திம் தேவி லிஹன்நஹம் ந ச பிபேம் யஜ்ஞோ ந ஜிஹ்ரேமி ச |
துஷ்யேத் ஸாதுந தாவதா ந ஹிஸுனா லீடாபி பாகீரதீ
துஷ்யேச்ச்வாபி ந லஜ்ஜதே ந ச பிபேத் யார்திஸ்து ஶாம்யேச்சுந: ||
“ஹே மஹாலக்ஷ்மி! உன்னை போற்றிப் பாடுவதற்கு எனக்கு அறிவு இல்லை, அனுஷ்டானமும் இல்லை.
இந்த வரம்புகள் இருந்த போதிலும், என் வாக்கினால் உன்னை பாடிப் போற்றுவதால்
உன்னுடைய புனிதத்துவம் குறைந்து விடுவதில்லை யன்றோ.
நாய் தாகத்தால் கங்கையில் தண்ணீர் குடித்தால் கங்கைக்கும் தோஷம் இல்லை ..அதற்கும் தாகம் தீரும்..
அது போலவே நான் உன்னை பாட முற்படுவது. ராவணனையும் திருத்த முயன்ற தேவியே!
அடியேன் உன்னை பாட முற்பட்டால் அதை ஏற்க மாட்டாயா? லங்கையிலிருந்த ராக்ஷசிகள் சரணம் என்று சொல்லாமலே
அவர்களை ரக்ஷித்த பெருமையுடையவள் நீ அன்றோ! ” என்று இந்த ஸ்லோகத்தில் ஸ்ரீ கூரத்தாழ்வான் பாடுகிறார்.
————-
ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 6 –
முதல் ஐந்து ஸ்லோகத்தில் ஸ்ரீ கூரேஸர், தாம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை புகழ்ந்து பாடுவதற்கு
தகுதி யற்ற தன்மையை சொல்லுகிறார்.
ஆறாவது ஸ்லோகத்திலிருந்துதான் ‘ஸ்தோத்ர ஆரம்பம்’.
ஐஸ்வர்யம் மஹதேவவா அல்பமதவா த்ருஶ்யேத பும்ஸாம் ஹி யத்
தல்லக்ஷ்ம்யா: ஸமுதீக்ஷணாத் தவ யதஸ் ஸார்வத்ரிகம் வர்ததே |
தேநைதேந ந விஸ்மயே மஹி ஜகந்நாதோபி நாராயண:
தந்யம் மந்யத ஈக்ஷணாத் தவ யதஸ் ஸ்வாத்மாந மாத்மேஶ்வர: ||
ஹே ரங்கநாயகி! செல்வம் இரண்டு வகையானது என்று கூறப்படுகிறது. ஒன்று, பூமியில் அனுபவிப்பது.
மற்றொன்று ஸ்ரீ வைகுந்தத்தில் முக்தியடைந்தவர்கள் மற்றும் நித்திய சூரிகள் ஆகியோர் அனுபவிப்பது.
இந்த இரு வகையான செல்வங்களும் அவர்கள் மீது விழுந்த உம்முடைய கடாக்ஷத்தின் விளைவாக அன்றோ கிடைக்கப் பெற்றன!
‘பெரியதோ, சிறியதோ, லக்ஷ்மி கடாக்ஷத்தால் கிடைக்கப் பெற்றது’ என்கிற கூற்று கேட்டு எனக்கு ஆச்சர்யம் இல்லை.
ஆத்மேச்வரனாக, அதாவது தனக்கு ஈச்வரன் அற்றவனான, அந்த ஜகந் நாதன் உம்முடைய கடாக்ஷம் கிட்டி
தன்யனாக எண்ணுகிறான்” என இந்த ஸ்லோகத்தில் பாடுகிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்.
வாமன அவதாரத்தில் எம்பெருமான், பக்த ப்ரகலாதனின் பேரன் மகாபலியிடம் மூன்றடி மண் தானமாக கேட்கும்போது
தன்னுடைய மார்பை வஸ்திரத்தால் மூடிக்கொண்டு தானம் வாங்கினானாம்.
‘சிறிது நேரமும் விட்டுப் பிரியேன்’ என்று பெரிய பிராட்டியார் நித்தியவாசம் செய்கின்ற திருமார்பினையுடையவன் அன்றோ!
பிராட்டி கடாக்ஷம் பட்டால் மகாபலியிடம் சொத்தை வாங்க முடியாது.
‘திருவுக்கும் திரு வாகிய செல்வா’ என்று ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் பாடுகிறார். (பெரிய திருமொழி ஏழாம் பத்து)
அதாவது ‘ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கும் லக்ஷ்மீகரனான செல்வனே!’ என்று.
எம்பெருமான் ஸ்ரீக்கும் ஸ்ரீயாயிருப்பனென்றால் என்ன கருத்தென்னில்;
ஸ்ரீ என்றாலும் திரு என்றாலும் ‘அதிசயத்தை விளைவிப்பவள்’ என்று பொருள் கொள்ளத்தக்கது;
எல்லார்க்கும் அதிசயத்தை விளைப்பவளான அவள் தனக்கும் அதிசயத்தை விளைப்பவன் எம்பெருமான் என்றவாறு.
பிராட்டிக்கு எம்பெருமானுடைய ஸம்பந்தத்தினால் அதிசயம்; எம்பெருமானுக்குப் பிராட்டியின் ஸம்பந்தத்தினால் அதிசயம்.
—————–
ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 7-
ஐஸ்வர்யம் யத ஶேஷ பும்ஸி யதிதம் ஸௌந்தர்ய லாவண்ய யோ:
ரூபம் யச்ச ஹி மங்களம் கிமபி யல் லோகே ஸதித் யுச்யதே |
தத் ஸர்வம் த்வததீந மேவ யதத: ஸ்ரீரித்ய பேதேந வா
யத்வா ஸ்ரீமதி தீத்ருஶேந வசஸா தேவி ப்ரதாமஷ்நுதே ||
“ஸ்ரீ ரங்கநாச்சியாரே! இவ்வுலகில் செல்வம், அழகு, நற்குணம் போன்ற ஐஸ்வர்யங்கள் உன்னுடைய ஸம்பந்தத்தில்,
உனக்கு அடங்கியதாக உள்ளது. அவை அனைத்தும் “ஸ்ரீ” என்ற உன்னை விட வேறானது இல்லை –
என்பதன் மூலமாகவோ அல்லது ‘ஸ்ரீயை உடையது’ என்ற சொல் மூலமாகவோ அல்லவா பெருமை அடைகிறது!?”
என்று பாடுகிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்.
இங்கு ஸ்ரீ கூரேசர் இரண்டு வகையான ‘ஸ்ரீ’ சப்தத்தை குறிப்பிடுகிறார்.
“திருப்பதி”, “திருமங்கை”, “திரு விளக்கு” – இவை ஒருவகை.
“ஸ்ரீமத் பாகவதம்”, “ஸ்ரீமத் ராமாயணம்” – இவை இரண்டாவது வகை.
திருப்பதி மலையில் ஏறாமலே ஸ்ரீ அலர்மேல் மங்கை தாயார்,
திரு மேனி ஒளியை வீசி சேர்த்து ‘திரு’ மலை என்று சொல்ல வைத்தாள்
————
ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 8 –
தேவி தவந் மஹிமாதிர்ந ஹரிணா நாபி த்வயா ஜ்ஞாயதே
யத் யப்யேவ மதாபி நைவ யுவயோ: ஸர்வஜ்ஞதா ஹீயதே |
யந் நாஸ்த்யேவ ததஜ்ஞதாம் அநு குணாம் ஸர்வஜ்ஞதாயா விது:
வ்யோமாம் போஜ மிதந்தயா கில விதந் ப்ராந்தோய மித் யுச்யதே ||
“ஹே ஸ்ரீரங்க நாச்சியாரே! உம்முடைய மேன்மையின் எல்லையானது ஸ்ரீ ரங்கநாதனாலும் அறியப்படுவதில்லை.
உன்னாலும் உன்னுடைய மேன்மை என்பது எத்தன்மையது என்று அறியப்படுவதில்லை.
இப்படி இருந்தாலும் நீங்கள் இருவரும் அனைத்தையும் அறியும் தன்மையில் எந்தவிதமான குறையும் இல்லாமல் உள்ளீர்கள்.
இதன் காரணம் – எந்த ஒரு பொருளானது இல்லவே இல்லை என்பதை உணர்ந்து, அதனை அறிந்து
கொள்ள முயலாமல் இருப்பதையே அனைத்தும் அறிந்த தன்மையாக சான்றோர்கள் அறிகிறார்கள்.
‘ஆகாயத் தாமரை’, ‘முயல்கொம்பு’ ஆகியவற்றை உள்ளதாக அறிபவன் ‘பைத்தியக்காரன்’ என்றே
உலகத்தினரால் கூறப்படுகிறான்” என்று பாடுகிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்!
———————-
ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 9 –
லோகே வநஸ்பதி ப்ருஹஸ்பதி தாரதம்யம்
யஸ்யா: ப்ரஸாத பரிணாமம் உதாஹரந்தி
ஸா பாரதீ பகவதீ து யதீய தாஸி
தாம் தேவ தேவ மஹிஷீம் ஸ்ரியம் ஆஸ்ரயாம:
“இந்த உலகில் ஒருவன் ‘மரம்’ போன்ற ஜடப்பொருளாகப் பிறப்பதும் தேவகுருவான ‘ப்ருஹஸ்பதி’
போன்ற அறிவாளியாகப் பிறப்பதும் ஆகிய ஏற்றதாழ்வுகளை ஸரஸ்வதியினுடைய கடாக்ஷத்தின் பலனாகவே கூறுகின்றனர்.
பூஜிக்கத்தகுந்த அந்த ஸரஸ்வதி எந்த ஸ்ரீரங்க நாச்சியாரின் அடியாராக இருக்கிறாளோ,
அனைத்து தேவர்களின் அதிபதியான ஸ்ரீரங்கநாதனின் அந்த ஸ்ரீரங்கநாச்சியாரை நாம் சரண் அடைவோமாக”
என்று பாடுகிறார் ஸ்வாமி கூரத்தாழ்வான்
————-
ஸ்ரீஸ்தவம் ஸ்லோகம் 10 –
யஸ்யா: கடாக்ஷ ம்ருது வீக்ஷண தீக்ஷணேந
ஸத்ய: ஸமுல்ல சித பல்லவம் உல்ல லாஸ
விஸ்வம் விபர்யய ஸமுத்த விபர்யயம் ப்ராக்
தாம் தேவ தேவ மஹிஷீம் ஸ்ரியம் ஆஸ்ரயாம:
“பிரளய காலத்தில் ஸ்ரீரங்க நாச்சியாரின் கடாக்ஷம் கிட்டாத காரணத்தினால் இந்த உலகம் துவண்டு கிடந்தது.
அப்போது இவளது கடைக்கண் பார்வை என்னும் ஸங்கல்பம் காரணமாக, அந்த ஸங்கல்பம் உண்டான
க்ஷண நேரத்திலேயே பூமியானது தழைத்து விளங்கியது.
மாதவன் வங்க கடல் கடைய அமுதினில் பிறந்தவள்.
தேவர்களின் தலைவனான ஸ்ரீரங்கநாதனின் பட்ட மஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியாரை நாம் சரண் அடைகிறோம்”
————-
ஸ்ரீஸ்தவம் ஸ்லோகம் 11 –
யஸ்யா: கடாக்ஷ வீக்ஷா க்ஷண லக்ஷம் லக்ஷிதா: மஹேசா: ஸ்யு:
ஸ்ரீரங்கராஜ மஹிஷீ ஸா மாம் அபி வீக்ஷதாம் லக்ஷ்மீ:
“எந்த ஒரு பிராட்டியின் கடைக் கண் பார்வைக்கு ஒரு நொடிப்பொழுது இலக்கானாலும் மிகுந்த
கைங்கர்யச் செல்வம் பெற்றவர்கள் ஆவார்களோ அப்படிப்பட்ட,
ஸ்ரீரங்கராஜனின் பட்ட மஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியார் என்னையும் தனது கடைக் கண் கொண்டு பார்க்கவேண்டும்”
என்று மற்ற செல்வங்களை வேண்டாது கைங்கர்ய செல்வத்தையே ஸ்வாமி ஸ்ரீ கூரத்தாழ்வான் வேண்டுகிறார்.
———————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..