Archive for the ‘Srirengam’ Category

ஸ்ரீ திருவரங்கம் திருக்கோயிலின் பெருமைமிகு வரலாறு–ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ. கிருஷ்ணாமாசார்யர்

February 3, 2023

ஸ்ரீ திருவரங்கம் திருக்கோயிலின் பெருமைமிகு வரலாறு

இக்ஷ்வாகு காலம்தொடங்கி இருபத்து ஒன்றாம் 21m நூற்றாண்டின் முற் பகுதி வரை

ஆசிரியர்: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ. கிருஷ்ணாமாசார்யர்

ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 திவ்யதேசங்களில் முதன்மையானது திருவரங்கம். மதுரகவி ஆழ்வாரைத் தவிர மற்றைய ஆழ்வார்களாலும் சூடிக்கொடுத்த நாச்சியார் என்று அழைக்கப்படும் கோதை நாச்சியாராலும் பாடப்பெற்ற (ஸ்ரீவைஷ்ணவர்கள் ‘மங்களாசாஸனம் செய்தருளிய’ என்று குறிப்பிடுவர்). ஒரே திவ்யதேசம் திருவரங்கமாகும். திருமலையப்பனுக்கு பல பெருமைகள் அமைந்துள்ள போதிலும் அவனை அனைத்து ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்யவில்லை. தொண்டரடிப் பொடியாழ்வார் என்று அழைக்கப்படும் விப்ர நாராயணர் திருவேங்கடமுடையானை தமது பாசுரங்களால் கொண்டாடவில்லை. பதின்மர் பாடிய பெருமாள் என்ற கொண்டாட்டத்திற்கு உரியவர் திருவரங்கநாதனே ஆவார்.

திருவரங்கத்தை பெரிய கோயில் என்றே குறிப்பிடுவர் பெரியோர்கள். இங்கே பள்ளி கொண்டு அருள்பவன் “பெரிய பெருமாள்” என்று அழைக்கப்படுகிறார். அவர் பத்தினியும் “பெரிய பிராட்டியார்” என்று அழைக்கப்படுகிறார். மதியம் ஸமர்ப்பிக்கப்படும் தளிகைக்கு “பெரிய அவசரம்” என்று கூறுகின்றனர் இங்கு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கு “பெரிய திருநாள்” என்ற பெயர் வழங்குகிறது. இராமானுசருக்கு பிறகு திருக்கோயில், நிர்வாகம் முறையை சீரமைத்த ஸ்ரீமணவாள மாமுனிகளை “பெரிய ஜீயர்” என்று கொண்டாடுகிறோம்.

ஏழு திருச்சுற்றுகளையும், அடைய வளஞ்சான் திருமதிலையும் உடைய ஒரே கோயில் திருவரங்கமே ஆகும். அடையவளந்தான் திருசுற்றின் நீளம் 10,710 அடிகள் ஆகும். அனைத்து மதிள்களின் மொத்த நீளம் 32592 அடிகள் அல்லது 6 மைல்களுக்கும் மேல் ஆகும். திருவரங்கம் பெரிய கோயில் மொத்தம் 156 சதுர ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. திருவரங்கநாதன் திருவடிகளில் காவிரி ஆறு திருவரங்கத்தின் இரு மருங்கிலும் பாய்ந்து சென்று திருவடியை வருடிச் செல்கின்றது. தென்கிழக்கு ஆசியாவிலேயே 216 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் 13 நிலைகள் கொண்டது இந்த திருத்தலத்தில் தான் அமைந்துள்ளது.

இந்த திருத்தலத்தின் வரலாறும் மிகப் பெரியதாகும். இந்த திருக்கோயிலில் சுமார் 650 கல்வெட்டுகளை மட்டுமே தொகுத்து தொல்லியல் துறை தனித்தொகுப்பாக வெளியிட்டு உள்ளது. South Indian Inscriptions Volume XXIV-24 என்ற தலைப்பில் வெளிவந்து உள்ளன. இந்த தொல்லியல் துறை புத்தகத்தில் இடம்பெறாத சில கல்வெட்டுகள் இந்த திருக்கோவிலில் அமைந்துள்ளன. அவை 20-ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் ஆகும்.

திருவரங்கத்தின் வரலாற்றினை கல்வெட்டுகள் மூலம் நன்கு அறிந்து கொள்ள முடிகிறது. இந்தக் திருக்கோயிலில் பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள், கொய்சாளர்கள், சங்கம, சாளுவ, துளுவ மற்றும் ஆரவீடு வம்சங்களைச் சார்ந்த விஜயநகர மன்னர்கள், தஞ்சை, மதுரை நாயக்க மன்னர்கள் ஆகியோருடைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஒருசில கல்வெட்டுகளைப் பற்றிய விரிவான ஆய்வுக் கட்டுரைகள் Epigraphia-Indica வில் காணப்படுகின்றன. இந்தத் தொடர் கட்டுரைகளின் நோக்கம் கல்வெட்டுகள் வழியும், 19, 20ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த உரிமை வழக்குகளின் அடிப்படையிலும் திருவரங்கம் பெரியகோயில் வரலாற்றைத் தர உள்ளேன்.

கோயிலொழுகு, மாஹாத்மியங்கள், இதிகாச புராணச் செய்திகள், குருபரம்பரை நூல்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் அடிப்படையில் திருவரங்கம் பெரிய கோயிலின் வரலாற்றினை நாம் அறிந்து கொள்ள கூடுமாகிலும், பல்வேறு நிகழ்ச்சிகள் மிகைப்பட கூறப்படுகின்றன. மேலும், அந்தச் செய்திகளை ஒரு கால வரிசைப்படி அறிந்து கொள்ள முடிவதில்லை. பல்வேறு ஆண்டுகள் ஆய்வு செய்து கோயிலொழுகு நூலை அடியேன் பதிப்பித்தேன். அதில் கொடுக்கப்பட்டிருக்கும் செய்திகள் எந்தெந்த இடங்களில் கல்வெட்டுகளுடன் முரண்படாமல் அமைந்திருக்கின்றன என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளேன். 18 தொகுப்புகள் கொண்டதும், 7200 பக்கங்கள் நிறைந்துள்ளதுமான கோயிலொழுகு திருவரங்க கோயிலுக்கு ஓர் அரணாக அமைந்துள்ளது. திருவாய்மொழியும், ஸ்ரீராமாயணமும் ஆகிய இரு நூல்கள் இருக்கும் வரை ஸ்ரீவைஷ்ணவத்தை யாரும் அழிக்க முடியாது, ‘என் அப்பன் அறிவிலி’ என்று 2-ம் குலோத்துங்கனின் (ஆட்சி ஆண்டு 1133-1150) மகனான 2-ஆம் ராஜராஜன் (ஆட்சி ஆண்டு 1146-1163) கூறினானாம். இவனுக்கு வீழ்ந்த அரிசமயத்தை மீண்டெடுத்தவன் என்ற விருது பெயர் அமைந்து உள்ளது. அதுபோல 7200 பக்கங்கள் கொண்ட கோயிலொழுகு இருக்கும் வரை வரலாற்றிற்கு புறம்பாகவோ, குருபரம்பரை செய்திகளை திரித்தோ, திருவரங்கம் பெரியகோயிலின் வரலாற்றை அவரவர் மனம் போனபடி திரித்துக் கூறமுடியாது. திருவரங்கம் பெரிய கோயில் வரலாறு என்பது ஒரு தனி மனிதனின் விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டது. இந்த நாட்டை ஆண்ட மன்னர்களும், நம் முன்னோர்களும் 18-ஆம் நூற்றாண்டு வரை  திருக்கோயில் வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளனர். 18, 19ஆம் நூற்றாண்டுகளில் திருப்பணிகளைப் பற்றிய செய்திகள் மிக குறைந்த அளவில் அமைந்துள்ளன. இந்த இரண்டு நூற்றாண்டுகளில் திருக்கோயிலில் பணிபுரிந்த பல்வேறு தரப்பினருக்கிடையே எழுந்த உரிமைப் போராட்டங்களே அதிக அளவில் அமைந்துள்ளன.

பல்லவர்கள் காலத்து கல்வெட்டுகள் திருவரங்கத்திற்கு அண்மையில் அமைந்துள்ள திருவெள்ளறை, உச்சிப் பிள்ளையார் கோயில் உய்யக்கொண்டான் திருமலை, ஆகிய இடங்களில் அமைந்துள்ள போதிலும், யாது காரணங்களாலோ திருவரங்கத்தில் காணப்படவில்லை. திருவரங்கத்தில் காணப்படும் கல்வெட்டுகளில் காலத்தால் முற்பட்டது, முதலாம் பராந்தக சோழனின் 17-ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டாகும். (பராந்தகனின் ஆட்சி ஆண்டு 907-953) சோழர்களுக்குப் பிறகு பிற்காலப் பாண்டியர்கள், ஹொய்சாளர்கள் கால கல்வெட்டுகள், அவர்கள் அளித்த நிவந்தங்கள், கட்டிய மண்டபங்கள், கோபுரங்கள் ஏற்படுத்தி வைத்த நந்தவனங்கள், சந்திகள் (ஒவ்வோர் வேளையும் பெரிய பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கப்படும் திரு ஆராதனங்கள், சிறப்புத் தளிகைகள் போன்றவற்றை தெரிவிப்பன).

கி.பி. 1310 வரையில் திருவரங்கம் பெரிய கோயில் மிகச் செழிப்பான நிலையில் இருந்து வந்தது. 14-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடைப்பெற்ற திருவரங்கத்தின் மீதான மூன்று படையெடுப்புகள் திருவரங்க மாநகரை நிலைகுலையச் செய்துவிட்டது. கி.பி. 1310-ல் மாலிக்காபூர் திருவரங்கத்தின் மீது படையெடுத்தான். அதற்குக் காரணம் 2-ஆம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் (ஆட்சி ஆண்டு 1277-1294) தனது ஆட்சிக் காலத்தில் ப்ரணாவாகார விமானத்திற்கு பொன்வேய்ந்தான். பொன் வேய்ந்த பெருமாள் மற்றும் சேரகுல வல்லி ஆகியோருடைய பொன்னாலான விக்ரஹங்களை சந்தன மண்டபத்தில் பிரதிஷ்டை செய்திருந்தான். (காயத்ரி மண்டபத்திற்கு முன் ஸந்நிதி கருடன் அமைந்திருக்கும் இடமே சந்தன மண்டபம். இதிஹாஸ கால சந்தனுக்கும் இந்த மண்டபத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

திருவரங்கத்தில் ‘பாட்டி காலத்து கதைகள்’ (Grandma Stories) அதிக அளவில் வழங்கி வருகின்றன. உடையவர் அவருடைய ஸந்நிதியில் அமர்ந்த திருக்கோலத்தில், பஞ்ச பூதங்களாலான திருமேனியுடன் ஸேவை சாதித்து அருள்கிறார். அந்தத் திருமேனியை பச்சை கற்பூரம், குங்குமப்பூ கொண்டு பாதுகாக்க முடியாது. எம்பெருமான் திருவுள்ளப்படி கீழ்க்கண்ட திவ்ய தேசங்களில் ஜீவாத்மா பிரிந்த பிறகு பஞ்ச பூதத்தாலான இந்தத் திருமேனிகள் கோயில் வளாகத்தில் பள்ளி படுத்தப்பட்டுள்ளன(புதைக்கப்பட்டுள்ளன).

1-ஆழ்வார் திருநகரில் (திருக்குருகூர்)நம்மாழ்வாருடைய திருமேனி.

2-ஸ்ரீமந் நாதமுனிகளின் சிஷ்யரான திருக் கண்ண மங்கை ஆண்டான் ஸ்ரீபகவத்சலப் பெருமாள் திருக்கோவினுள்.

3-திருவரங்கத்தில் அகளங்கன் திருச்சுற்றில் அமைந்திருந்த வசந்த மண்டபத்தில் இராமானுசர் பள்ளிப்படுத்தப்பட்டார்.

இந்த மூன்று இடங்களிலும் திருமேனிகள் பள்ளிப்படுத்தப்பட்டவேயொழிய உயிரோடு உட்கார்த்தி வைக்கப் படவில்லை.

இதுபோன்று பல கற்பனைக் கதைகள் திருவரங்கத்தில் செலாவணியில் உள்ளன.

இரண்டாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் பொன்னாலான கொடிமரம் மற்றும் கொடியேற்ற மண்டபத்தில் அமைந்துள்ள மரத்தாலான தேருக்கு பொன் வேய்ந்தான். இவற்றைத் தவிர பெருமாளுக்கும், தாயாருக்கும் துலாபாரம் (கஜதுலாபாரம்) சமர்ப்பித்து ஏராளமான தங்க நகைகளை அளித்து இருந்தான்.

வ்யாக்ரபுரி என்றழைக்கப்படும் சிதம்பரத்தை கொள்ளையடித்த மாலிக்காஃபூரிடம் சில ஒற்றர்கள் திருவரங்கத்தில் ஏராளமான செல்வம் குவிந்து கிடப்பதாக கூறினர். நாகப்பட்டினம் வழியாக மேற்கு கடற்கரைக்கு செல்லவிருந்த மாலிக்காஃபூர் தன் திட்டத்தை மாற்றிக்கொண்டு யாரும் எதிர்பாராத வேளையில் கோயிலைத் தாக்கினான். அளவிட முடியாத அளவிற்கு செல்வத்தை சூறையாடினான். அப்போது வெள்ளை யம்மாள் என்ற தாஸி மாலிக்காஃபூரின் படைத்தலைவனை தன் அழகால் மயக்கி தற்போதைய வெள்ளைக் கோபுரத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்று அந்த படைத்தலைவனை கீழே தள்ளிக் கொன்றாள். அவளும் கீழே விழுந்து உயிர் விட்டாள். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வெள்ளை வண்ணத்தில் கோபுரம் மாற்றம் பெற்று “வெள்ளைக் கோபுரமாயிற்று”.

கி.பி. 1953ஆம் ஆண்டு தாஸிகள் ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. வெள்ளை யம்மாள் நினைவாக நினை வாக தாளிகள் வீட்டில் இறப்பு நேரிட்டால் திருக்கோயில் மடைப்பள்ளியில் இருந்து இறந்த தாஸியின் உடலை எரியூட்டுவதற்காக “நெருப்பு தனல்” அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கம் 1953ஆம் ஆண்டு வரை நடைபெற்று வந்தது.

இந்த திருக்கோயிலில் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளும் போதும், வஸந்தோற்சவ காலங்களிலும் தாஸிகள் கோலாட்டம் அடித்துக் கொண்டு நம்பெருமான் முன்பு செல்வர் என்பதை தெற்கு கலியுகராமன் கோபுரத்தில் விதானப் பகுதியில் காணப்படும் நாயக்கர் காலத்து சுவர் ஓவியங்கள் (Mதணூச்டூ கச்டிணtடிணஞ்ண்) வழி அறியப்படுகிறது.

இந்த வெள்ளைக் கோபுரத்தின் மேலே ஏறி விஜயநகர சாளுவ நரசிம்மன் காலத்தில் (ஆட்சி ஆண்டு 1486-1493) இரண்டு ஜீயர்களும் அழகிய மணவாள தாஸர் என்ற திருமால் அடியாளும் திருவானைக்காவை தலைநகராகக் கொண்டு திருச்சிராப்பள்ளி சீமையை ஆண்டு வந்த கோனேரி ராயன் என்பானுடைய கொடுங்கோல் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தற்கொலை செய்து கொண்டனர். இது பற்றி பின்னர் விவரிக்கப்படும்.

மாலிக்காஃபூரின் படைவீரர்கள் திருக்கோயிலில் இருந்த பல விக்ரஹங்களை உடைத்து எறிந்தனர். படைத் தலைவன் கொல்லப்பட்டதால் இந்த அட்டூழியம் கட்டுக்குள் வந்தது. அழகிய மணவாளரை கரம்பனூரில் இருந்து வந்த ஒரு பெண்மனி யாருக்கும் தெரியாமல் வடக்கு நோக்கி எடுத்துச் சென்றாள். மாலிக்காஃபூரின் படைவீரர்கள் அளவற்ற செல்வத்தை பல யானைகள் மீது எடுத்துச் சென்றனர் என்று இபின் பட்டுடுடா என்பவரின் நாட்குறிப்பில் இருந்து அறியப்படுகிறது. வடக்கே எடுத்துச் செல்லப்பட்ட நம்பெருமாள் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அரையர்களால் மீட்கப்பட்டார். மாலிக்காஃபூரின் படைவீரர்கள் தெற்கு நோக்கி சென்ற பிறகு அழகிய மணவாளன் கர்ப்பக்ருஹத்தில் காணப்படாமையால் புதிதாக நம்பெருமாள் போன்ற விக்ரஹம் உருவாக்கப்பட்டது. அவருக்கு திருவாராதனங்கள் நடைபெற்று வந்தன. கோயிலொழுகு தெரிவிக்கும் குறிப்புகளின்படி டெல்லி பாதுஷா-வின் அந்தப்புரத்தில் அழகிய மணவாளன் இருந்ததாகவும், சுரதானி என்ற பெயர் கொண்ட அவன் மகள் அழகிய மணவாளனனைத் தனது அந்தப்புரத்தில் கொஞ்சிக் குலாவிக் கொண்டு இருந்ததாக குறிப்பிடுகிறது. அழகிய மணவாளனைத் தேடிச்சென்ற அரையர்கள் டெல்லி பாதுஷா விரும்பி பார்க்கும் ஜக்கினி நாட்டிய நாடகத்தை அபிநயித்தார்கள். இதனால் பெருமகிழ்ச்சி கொண்ட டெல்லி பாதுஷா அந்தப்புரத்தில் இருக்கும் அழகிய மணவாளனை எடுத்துச்செல்லும்படி அனுமதியளித்தான். அவர்களும் சுரதானிக்கு தெரியாமல் அழகிய மணவாளனை எடுத்துக்கொண்டு திருவரங்கம் நோக்கி விரைந்து சென்றனர். தன் காதலனை பிரிந்ததால் சுரதானி நெஞ்சுருகி கலங்கி நின்றாள். தன் மகளின் துயரத்தினைக் காணப்பொறுக்க மாட்டாத டெல்லி பாதுஷா சில படை வீரர்களுடன் சுரதானியை திருவரங்கத்திற்கு அனுப்பி வைத்தான். ஆனால் அதற்குள் அரையர்கள் அழகிய மணவாளனை கருவறையில் கொண்டு சேர்த்தனர். திருவரங்கத்தை சென்றடைந்த சுரதானி இந்த செய்தியை அறிந்தவுடன் கிருஷ்ணாவதாரத்து சிந்தயந்தி போல, அவள் ஆவி பிரிந்தது. அர்ச்சுன மண்டபத்தில் கிழக்குப் பகுதியில் துளுக்க நாச்சியார்” என்ற பெயரில் சுரதானி இன்றும் சித்திர வடிவில் காட்சியளித்துக் கொண்டு இருக்கிறாள்.

புராதனமான யுகம் கண்ட பெருமாளான அழகிய மணவாளன் மீண்டும் திருவரங்கத்திற்கு எழுந்தருளியதால் அவருக்குப் பதிலாக திருவாராதனம் கண்டருளிய புதிய அழகிய மணவாளன் திருவரங்க மாளிகையார் என்ற பெயரில் யாக பேரராக இன்றும் அழகிய மணவாளனுக்கு இடது திருக்கரப் பக்கத்தில் இன்றும் எழுந்தருளி உள்ளார். யாக சாலையில் ஹோமங்கள் நடைபெறும் போது யாக பேரரான திருவரங்க மாளிகையார் எழுந்தருள்வதை இன்றும் காணலாம். அர்ச்சுன மண்டபத்திற்கு அழகிய மணவாளன் எழுந்தருளும் போதெல்லாம் துலுக்க நாச்சியாருக்கு படியேற்ற ஸேவை அரையர் கொண்டாட்டத்துடன் நடைபெறும். இது துளுக்க நாச்சியாருக்காக நடைபெறும் ஓர் மங்கள நிகழ்ச்சியாகும்.

மாலிக்காஃபூர் படையெடுப்புக்குப் பிறகு கரம்பனூர் பின் சென்ற வல்லி அழகிய மணவாளனை எடுத்துச் சென்றது, டெல்லி பாதுஷாவின் மகளான சுரதானி அந்தப்புரத்தில் அழகிய மணவாளனுடன் விளையாடியது. அரையர்கள் எடுத்துச் சென்றது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வரலாற்றுச் சான்றுகள் காணக் கிடைக்கவில்லை. அது போன்று திருவரங்க மாளிகையார் யாக பேரராக அழகிய மணவாளனை ஒத்த திருமேனி கொண்டிருப்பதற்கும் வரலாற்று சான்றுகளோ, கல்வெட்டுகளோ காணப்படவில்லை. அந்தந்த காலங்களில் இன்று நாட்குறிப்பு எழுதுவது போல் பண்டைய காலங்களில் செயற்பட்டு வந்த ஸ்ரீவைஷ்ணவ வாரியம் மற்றும் ஸ்ரீபண்டார வாரியத்து கணக்கர்கள் எழுதி வைத்த குறிப்புகளே கோயிலொழுகு ஆகும். திருவரங்க பெரிய கோயில் பற்றிய செய்திகளை ஆராய்ந்து தொகுக்கும் போது அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரித்திர சான்றுகளோ அல்லது கல்வெட்டுக்களையோ ஆதாரமாக கொடுக்கவியலாது. திருக்கோயில் பழக்க வழக்கங்களும், அந்த நிகழ்ச்சிகளை தொகுத்துக் கூறும் சுவடிகளும் பல பயனுள்ள செய்திகளை தருகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதன் பின்னணியில் வெள்ளையம்மாள் வரலாறு திருவரங்க மாளிகையாரின் பிரதிஷ்டை, துளுக்க நாச்சியாரின் திருவுருவப்படம் இடம் பெற்றிருப்பது ஆகியவற்றை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கி.பி. 1310 ஆம் ஆண்டு படையெடுப்புக்குப் பிறகு கி.பி. 1323ஆம் ஆண்டு முகமது பின் துக்ளக் என்று அறியப்படும் உலூக்கானுடைய படையெடுப்பு நடைபெற்றது. கோயிலொழுகு தரும் செய்திகளின் அடிப்படையில் அந்த நிகழ்ச்சிகள் தொகுத்து அளிக்கப்படுகின்றன. அழகிய மணவாளன் பங்குனி ஆதி ப்ருஹ்மோற்சவத்தில் 8ஆம் திருநாளன்று கொள்ளிடக் கரையில் அமைந்திருந்த பன்றியாழ்வார் (வராகமூர்த்தி) ஸந்நிதியில் எழுந்தருளி இருந்தார். உலூக்கான் படைகளோடு திருவரங்கத்தை நோக்கி வருவதை ஒரு ஈரங்கொல்லி (சலவைத் தொழிலாளி) பிள்ளைலோகாச்சாரியரிடம் தெரிவித்தான்.

பிள்ளைலோகாச்சாரியர் வடக்கு திருவீதிப்பிள்ளை என்னும் ஆசார்யரின் முதற் புதல்வர் ஆவார். இவர் விசிஷ்டாத்வைத கோட்பாடுகளை விவரிக்கும் 18-ரகஸ்யங்களை (மறைப்பொருள் நூல்கள்) இயற்றியவர். அவர் வாழ்நாள் முழுவதும் ப்ரும்மச்சாரியாகவே வாழ்ந்து வந்தார். அவர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார். பெரும் படையுடன் வரும் உலூக்கானால் திருவரங்கத்திற்கு பெரிய ஆபத்து நிகழப் போகிறது என்பதை அறிந்து அழகிய மணவாளனை திருவரங்கத்தில் இருந்து எங்கேயாவது எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பிள்ளைலோகாச்சாரியர் சில அந்தரங்க கைங்கர்யபரர்களோடும், திருவாராதனத்திற்குரிய பொருட்களோடும் உபய நாச்சிமார்களையும் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு செய்வததறியாது தெற்கு நோக்கிப் புறப்பட்டார்.

திருவரங்கத்திற்குள் நுழைந்த உலூக்கானும் அவனது படையினரும் அந்த மாநகரின் பங்குனி விழாவிற்கு ஒட்டி கூடியிருந்த பன்னீராயிரம் திருமால் அடியார்களின் தலையைச் சீவினர். எங்கும் ரத்தவெள்ளம் பாய்ந்தோடியது. கருவறை வாசல் கற்களால் மூடப்பட்டது. ஸ்ரீரங்க நாச்சியார் ஸந்நிதியில் எழுந்தருளியிருந்த மூலவர் விக்ரஹம் வில்வ மரத்தடியின் கீழ் புதைக்கப்பட்டார். உற்சவ ஸ்ரீரங்கநாச்சியாரைப் பற்றி கோயிலொழுகில் எந்தவித குறிப்பும் காணப்படவில்லை. பிள்ளைலோகாச்சாரியர் அழகிய மணவாளன் உடன் ஸ்ரீரங்கநாச்சியாரையும் எழுந்தருள பண்ணிக்கொண்டு சென்றிருக்கலாம் என யூகித்துக் கொள்ளலாம்

வடகலை குருபரம்பரையின்படி நிகமாந்தமகா தேசிகன் ச்ருதப்ராகாசிகையை (பிரும்ம சூத்திரங்களுக்கு இராமானுசர் இட்ட விரிவுரைக்குப் பெயர் ஸ்ரீபாஷ்யம் என அழைக்கப்படுகிறது. இந்த ஸ்ரீபாஷ்யத்திற்கு ச்ருதப்ராகாசிகா பட்டர் அருளிச்செய்த விளக்க உரையே ச்ருதப்ராகாசிகை ஆகும்). பிணங்களின் ஊடே படுத்திருந்து சுவடிகளை காப்பாற்றினார் என்று கூறுகிறது. வேத வ்யாஸ பட்டர் வம்சத்தில் பிறந்த இளவயதினர் இரண்டு பேரையும் அவர் காப்பாற்றி அழைத்துச் சென்றார் என்றும் அறியப்படுகிறது.

ஆனால் உலூக்கான் படையெடுப்பை பற்றி விவரிக்கும் கோயிலொழுகில் நிகமாந்த தேசிகனைப் பற்றியோ, அவர் ச்ருதப்ராகாசிகையை காப்பாற்றியது பற்றியோ எந்தக் குறிப்பும் காணப்படவில்லை. உலூக்கானுடைய படைவீரர்கள், மருத்துவமணையாய் இயங்கி வந்த தன்வந்த்ரி ஸந்நிதியை தீக்கிரையாக்கினர். இதன் நோக்கமாவது மருத்துவர்கள் யாரும் காயம் அடைந்த திருமாலடியார்களுக்கு உரிய மருத்துவ பணியை மேற்கொள்ளக் கூடாது என்பதாகும். தன்வந்த்ரி ஸந்நிதி தீக்கிரையாக்கப்பட்ட செய்தியும், தன்வந்த்ரி ஸந்நிதி புனர் நிர்மாணம் செய்யப்பட்டதையும், அங்கே ஆதூரசாலை (மருத்துவமணை) செயல்பட துவங்கியதையும், 16ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட இறந்த காலம் எடுத்த உத்தம நம்பி காலத்து கல்வெட்டு எண் (வீரராமநாதன் காலத்திய கல்வெட்டு எண் – 226 (அ.கீ. Nணி: 80 ணிஞூ -1936-1937) தெரிவிக்கின்றது.

தெற்கு நோக்கி அழகிய மணவாளனுடன் சென்ற பிள்ளைலோகாச்சாரியர் பல இன்னல்களை எதிர்கொள்ள நேரிட்டது. அடர்ந்த காடுகள் வழியே அழகிய மணவாளனை எழுந்தருள பண்ணிக்கொண்டு சென்ற போது கள்ளர்கள் ஆபரணங்கள் பலவற்றை கொள்ளையடித்தனர். சில நாட்கள் சென்ற பிறகு அழகிய மணவாளன், பிள்ளைலோகாச்சாரியர், அவருடன் சென்ற 52 கைங்கர்யபரர்கள் ஆகியோர் மதுரை செல்லும் வழியில் ஆனைமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஓர் குகையினை சென்று அடைந்தனர். சில மாதங்கள் அழகிய மணவாளன் உபய நாச்சிமார்களோடு அந்தக் குகையிலேயே எழுந்தருளியிருந்தார். வயது முதிர்வின் காரணமாக தன் அந்திமக்காலம் நெருங்கி விட்டதை உணர்ந்தார் பிள்ளைலோகாச்சாரியர். தென் தமிழகம் முழுவதும் முகமதியருடைய கொடுங்கோல் ஆட்சி நிலவியிருந்த காலம் அது. தனக்குப் பிறகு ஆசார்ய பீடத்தை அலங்கரிக்க மதுரை மன்னனின் மந்திரியாய் இருந்து வந்த திருமலையாழ்வார் என்பாரை வற்புறுத்தி ஆசார்ய பீடத்தை அலங்கரிக்க ஆவண செய்வதற்கு உரிய நபராக தன் சீடர்களில் ஒருவரான கூரக்குலோத்தம தாஸரை நியமித்தார் பிள்ளைலோகாச்சாரியர்.

இவ்வாறு கூரகுலோத்தம தாஸரை நியமித்தருளிய பிறகு தன் சிஷ்யர்களில் ஒருவனான மரமேறும் இனத்தைச் சார்ந்தவரான விளாஞ்சோலை பிள்ளை என்பாரை தாம் பணித்த உன்னதமான, ஒப்புயர்வற்ற நூலான “ஸ்ரீவசனபூஷணத்தின்” சுருக்கமான பொருளை அனைவரும் அறிந்து கொள்ளும்படி ஓர் நூலாக எழுதி உலகத்தோரை நல்வழிப்படுத்த வேண்டுமென்று வேண்டிக் கொண்டார் பிள்ளைலோகாச்சாரியர். சில நாட்களிலே அவர் பரமபதித்து விட்டார். அவருடைய பூத உடல் அழகிய மணவாளன் தங்கியிருந்த குகைக்கு அருகில் திருப்பள்ளிபடுத்தப்பட்டது (புதைக்கப்பட்டது). அந்த திருவரசை இன்றும் நாம் சென்று சேவிக்கலாம்.

முகமதிய படைவீரர்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டதாலும், பிள்ளைலோகாச்சாரியர் பரமபதித்து விட்டதாலும் அச்சம் கொண்ட கைங்கர்யபரர்கள் அழகிய மணவாளனையும், உபயநாச்சிமார்களையும் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு திருமாலிருஞ்சோலை (அழகர் மலை) திருக்கோயிலின் வெளிப்புற மதில்சுவர் ஓரத்தில் யார் கண்ணிலும் படாதபடி வைத்துக் காப்பாற்றி வந்தனர். அவருடைய திருவாராதனத்திற்காக ஒரு கிணறு வெட்டப்பட்டது. இந்தக் கிணற்றை இன்றும் நாம் பார்க்கலாம். திருமாலிருஞ்சோலை முகப்பில் இருந்து நுபுர கங்கைக்கு செல்லும் மலைப்பாதையில் சாலையின் இடது பக்கம் சப்த கன்னியர் கோயில் அமைந்துள்ளது. அதன் எதிர்ப்புறத்தில் மதில்சுவர் ஓரம் அழகிய மணவாளனுக்காக உண்டாக்கப்பட்ட கிணற்றை நாம் காணலாம். சில மாந்த்ரிகர்கள் சப்த கன்னியருக்கு பரிகாரபூஜை செய்த பொருட்களை இந்தக் கிணற்றில் சேர்ப்பதின் பயனாக துர்நாற்றம் வீசுகிறது.

சில மாதங்கள் அங்கே எழுந்தருளியிருந்த அழகிய மணவாளன் பாலக்காடு வழியாக கோழிக்கோட்டை சென்று அடைந்தார். மற்றைய பகுதியில் முகமதியருடைய கொடுங்கோல் ஆட்சியில் சிக்கித் தவித்து வந்த காலத்தில் கோழிக்கோடு சமஸ்தானத்தை ஆண்டு வந்த மன்னர்கள் நல்லாட்சி புரிந்து வந்த காலத்தில் பல்வேறு இடங்களில் இருந்த “அர்ச்சா திருமேனிகள்” கோழிக் கோட்டை சென்றடைந்தன. பிள்ளைலோகாச்சாரியரின் ஆணைப்படி “கூரக்குலோத்தும தாஸர்” மந்திரி பதவியில் இருந்து வந்த திருமலையாழ்வாரை சந்திக்க இயலவில்லை. செய்வதறியாது திகைத்து நின்ற கூரக்குலோத்தும தாஸர் ஓர் உபாயத்தைக் கையாண்டார். திருமலையாழ்வார் தமிழ்மொழிபால் மிகுந்த பற்றுக் கொண்டவர் என்பதை அறிந்து கொண்டார். தினந்தோறும் திருமலையாழ்வார் தனது திருமாளிகையின் உப்பரிகையில் (மாடியில்) உட்கார்ந்து கொண்டு திருமண் காப்பு சாற்றிக் கொள்வார். இன்று தமிழர் நாகரிகத்தின் மிக உயர்ந்த அடிச்சுவடிகளை தொல்பொருள் ஆய்வுக் குழுவினர் கீழடி, மணலூர், கொந்தகை ஆகிய இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட பொருள்களின் அடிப்படையில் கண்டறிந்துள்ளனர். அத்தகைய இடங்களில் ஒன்றான கொந்தகையில் அவதரித்த திருமலையாழ்வார் தமிழ்மொழி மீது மிகுந்த பற்றுக்கொண்டு விளங்கியதில் எந்த வியப்பும் இல்லை.

ஒருநாள் கூரகுலோத்தம தாஸர் யானை மேலேறி கையில் தாளத்துடன் நம்மாழ்வாரின் திருவிருத்தப் பாசுரங்களை பொருளோடு எடுத்துரைத்துக்கொண்டு வந்தார். இதனைச் செவியுற்ற திருமலையாழ்வார் கூரகுலோத்தமதாஸரை தன்னுடைய திருமாளிகைக்கு அழைத்துச் சென்றார். அவரைத் தண்டனிட்டு தனக்கு திருவிருத்தத்தின் ஆழ்பொருளை தினந்தோறும் உபன்யஸிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். தமது மந்திரி பதவியையும் துறந்தார்.

ஸ்ரீவைஷ்ணவர்கள் திருவிருத்தத் ஆழ்பொருளை கற்றுக் கொள்வதில்லை. திருவிருத்தத்தை உபன்யஸிக்கிறவனும், அதன் பொருளை கேட்பவனும் இறந்து விடுவர் என்ற மூடநம்பிக்கை நிலவி வருகிறது. இதைச் “சாவுப்பாட்டு” என்றே பெயர் இட்டுள்ளனர். அதாவது இறப்பு நிகழ்ந்த வீட்டில் “ஸ்ரீசூர்ணபரிபாலனம்” என்று பெயரளவில் ஒரு சடங்கு நடைபெறும். ஏனெனில், பிராமண ஸ்ரீவைஷ்ணவர்கள் இல்லத்திலும், இடுகாட்டிலும் ஸ்ரீசூர்ணபரிபாலன முறைப்படி சடங்குகள் நடைபெறுவதில்லை. இந்த முறை மாற வேண்டும். ஆழ்வார்களின் கீதத் தமிழ் வேத வேதாந்தங்கள் உபநிஷத்துக்களைக் காட்டிலும் உயர்ந்தது என்று உதட்டளவில் சொல்லிக்கொண்டிருக்கிறோம். திருவிருத்தத்தின் நூறு பாட்டுக்களை 1102 பாடல்கள் கொண்ட திருவாய்மொழியாய் விரிந்தது என்று கூறிவிடுகிறோம். அத்தகைய பெருமை வாய்ந்த திருவிருத்தத்தின் ஆழ்பொருளை தமிழ் அக இலக்கிய கோட்பாடுகளின் அடிப்படையில் அறிந்து கொள்ள வேண்டாமா?

திருவிருத்தத்திற்கு உரிய சிறப்பை ஸ்ரீவைஷ்ணவர்கள் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். பூமி, தட்டையாய் உள்ளதென்று இன்றும் வாதிடுவர் உளர். தொல்காப்பியத்தை படிக்காதே, திருக்குறளைப் படிக்காதே? கம்ப ராமாயணத்தைப் படிக்காதே என்று உபதேஸிக்கும். மகா வித்வான்களும் நம்மிடையே உளர். இத்தகைய சம்ஸ்க்ருத வெறியர்கள் தம்மை உபய வேதாந்திகள் எனக் கூறிக்கொள்ளத் தகுதியற்றவர்கள். “பேச்சுப் பார்க்கில் கள்ளப் பொய் நூல்களும் க்ராஹ்யங்கள்; பிறவி பார்க்கில் அஞ்சாம் ஓத்தும் அறுமூன்றும் கழிப்பனாம்”. (ஆசார்ய ஹ்ருதய நூற்பா – 76) இதன் பொருளாவது சம்ஸ்க்ருத மொழியில் இயற்றப்பட்ட நூல்களே உயர்ந்தன என்ற எண்ணம் கொண்டவர்கள், பௌத்தர்களும், ஜைனர்களும் இயற்றிய பொய் நூல்களான அவற்றை சமஸ்க்ருதத்தில் இயற்றப்பட்டது என்பதற்காகவே ஏற்றுக்கொள்ள வேண்டும். உயர் குலத்தோர் செய்த நூல்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்றையோர் செய்த நூல்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று வாதிடுபவர்கள் பராசர முனிவருக்கும், மச்சகந்தி என்ற மீனவப் பெண்ணுக்கும் பிறந்தவர் வேதவியாசர். அவர் செய்த ஐந்தாம் வேதம் எனப்படும் மஹாபாரதத்தை வேதவ்யாசரின் பிறப்பை ஆராயுங்கால் ஏற்றுக் கொள்ளக்கூடாது. அதுபோலவே இடைச்சாதியில் பிறந்த கிருஷ்ணனால் சொல்லப்பட்ட பகவத்கீதையையும் ஜாதிக் கண்ணோட்டத்தில் பார்த்தால் ஏற்றுக்கொள்ளக்கூடாது. மகாபாரதத்தையோ, கீதையையோ நாம் சான்றாதார (ப்ரமாணங்களாய்) நூல்களாய் ஏற்றுக்கொண்டு உள்ளோம். வேளாளர் குலத்துதித்த நம்மாழ்வாரின் தமிழ் பிரபந்தங்களாகிய, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி ஆகிய தமிழ் நூல்களை நாம் சான்றாதாரங்களாய்க் கொள்ள வேண்டும் என்பது இந்த நூற்பாவின் தேறிய பொருளாகும்.

திருமலையாழ்வார் தம்மை திருவாய்மொழிப்பிள்ளை என்று கூறிக்கொள்வதில் பெருமை கொண்டார். நம்பிள்ளை அருளிச்செய்த திருவாய்மொழிக்கான உரை காஞ்சிபுரத்தில் பாதுகாக்கப்பட்டு, பின்னர் திருநாராயணபுரத்தை சென்றடைந்தது. திருவாய்மொழிப்பிள்ளை தமது இருப்பிடத்தை இராமநாதபுரம் தூத்துக்குடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிக்கில் கிடாரம் என்ற ஊருக்கு மாற்றிக் கொண்டார். தனது ஆசார்யனான கூரக்குலோத்தும தாஸரையும், சிக்கில் கிடாரத்தில் ஓர் திருமாளிகை அமைத்து அவரை குடியமர்த்தி அனைத்து ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு பொருள் கேட்டறிந்தார். சிக்கில் கிடாரத்தில் அவர் பரமபதித்த பிறகு திருவாய்மொழிப்பிள்ளை தனது ஆசார்யனான கூரக்குலோத்தும தாஸரை திருப்பள்ளிப்படுத்தி, ‘திருவரசு’ என்ற நினைவு மண்டபமும் கட்டி வைத்தார். சிக்கில் கிடாரம் செல்பவர்கள் கூரக்குலோத்துமதாஸர் திருவரசை கண்டு ஸேவிக்கலாம். மேலும் திருவாய்மொழிப்பிள்ளை வாஸம் செய்த திருமாளிகையின் மிகப் பெரியதான அடித்தளத்தைக் காணலாம். இந்த சிக்கில் கிடாரத்தில் தான் ஸ்ரீமணவாள மாமுனிகளின் திருத்தகப்பனாரான திருநாவீருடைய தாதர்அண்ணர் வாஸம் செய்து வந்தார்.

திருவாய்மொழிப்பிள்ளையின் தமிழ்ப் பற்றுக்கு மற்றுமோர் உதாரணமாக ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம். திருவாய்மொழிப் பிள்ளையின் அந்திம தசையில் (மரணிக்கும் தருவாயில்) தமது சிஷ்யரான அழகிய மணவாளனிடம் (இவரே கி.பி. 1425ஆம் ஆண்டு துறவறம் மேற்கொண்டபின் “மணவாள மாமுனிகள்” என்று அழைக்கப்படுகிறார்). ஓர் சூளுரையைப் பெற்றார். “ஸ்ரீபாஷ்யத்தை ஒருகால் அதிகரித்து பல்கால் கண்வையாமல்” ஆழ்வார்கள் அருளிச்செயலையே பொழுது போக்காகக் கொண்டிரும் என்றாராம். ஸ்ரீமணவாளமாமுனிகள் சம்ஸ்க்ருத நூல்கள் பலவற்றை இயற்ற வல்லமை படைத்தவரேனும் தம் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் மாறன் கலையாகிய திருவாய்மொழியையே உணவாகக் கொண்டிருந்தார்.

சில ஆண்டுகள் கோழிக்கோட்டில் அழகிய மணவாளன் எழுந்தருளியிருந்த காலத்தில் திருக்குருகூர் எனப்படும் ஆழ்வார் திருநகரியில் நிகழ்ந்த முகமதியர்களின் படையெடுப்பின் காரணமாக நம்மாழ்வாரின் அர்ச்சா விக்ரஹகத்தை கைங்கர்யபரர்கள் கோழிக்கோட்டுக்கு எடுத்துச் சென்றனர். பாலக்காட்டில் இருந்து மல்லாப்புரம் வரை படைகளோடு வந்த முகமதிய படைவீரர்கள் கோழிக்கோட்டை தாக்கக்கூடும் என்ற அச்சத்தினால் அழகிய மணவாளனையும், நம்மாழ்வாரையும் கோழிக்கோட்டுக்கு அண்மையில் உள்ள உப்பங்கழியைத் தாண்டி (ஆச்ஞிடு ஙிச்tஞுணூண்) கர்நாடக மாநிலத்திற்குள் எடுத்துச் செல்ல முயன்றனர் கைங்கர்யபரர்கள்.

அவ்வாறு படைகள் செல்லும்போது நம்மாழ்வாருடைய அர்ச்சா விக்ரஹம் உப்பங்குழி தவறி விழுந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டது. விக்ரஹத்தை கண்டுபிடிக்க முடியாமல் தவித்து நின்றபோது கருடபட்சி ஆழ்வார் இருக்கும் இடத்திற்கு மேலே வட்டமிட்டுக் காட்டியது. அந்த இடத்தில் நம்மாழ்வாரை நீரின் அடியில் இருந்து கைங்கர்யபரர்கள் கண்டெடுத்தார்கள். அதன்பிறகு கர்நாடகப் பகுதியில் அமைந்துள்ள அடர்ந்த மரங்கள் நிறைந்த முந்திரிக்காடு என்னும் பள்ளத்தாக்கில் மிக ஆழமான பள்ளம் தோண்டி அந்த நிலவறைக்குள் அழகிய மணவாளனையும், நம்மாழ்வாரையும் எழுந்தருளப் பண்ணி அங்கேயே திருவாராதனம் கண்டருளினர். அந்தப் பள்ளத்தின் மேலே மரப்பலகைகளை வைத்து, செடி, கொடிகளை அதன்மேல் இட்டு, சில ஆண்டுகள் அழகிய மணவாளனையும், நம்மாழ்வாரையும் காப்பாற்றி வந்தனர்.

நம்மாழ்வாருடன் முந்திரிக் காட்டிற்கு வந்த தோழப்பர் என்பார் ஒருநாள் நிலவறைக்கு சென்று திருவாராதனம் ஸமர்ப்பித்த பிறகு மேலிருந்து கீழே விடப்பட்ட கயிற்றினை பிடித்துக் கொண்டு மேலே வரும்போது கயிறு அறுந்து கீழே விழுந்த தோழப்பர் பரமபதித்தார் (இறந்தார்). இந்த செயலின் அடிப்படையில் தோழப்பர் வம்சத்தவர்களுக்கு ஆழ்வார் திருநகரியில் “தீர்த்த மரியாதை” அளிக்கப்படுகிறது.

சில ஆண்டுகள் கழித்து அழகிய மணவாளனையும், நம்மாழ்வாரையும் திருக்கணாம்பி என்ற மலைப்பிரதேசத்திற்கு எடுத்துச் சென்றன. அங்கே இருந்த வரதராஜ பெருமாள் திருக்கோயிலினுள் எழுந்தருளப் பண்ணினர். சுமார் 10 ஆண்டுகள் திருக்கணாம்பியில் அழகிய மணவாளனும், நம்மாழ்வாரும் எழுந்தருளி இருந்தனர். இந்தத் திருக்கணாம்பி எனும் ஊர் தற்போதைய மைசூர் சத்தியமங்கலம் மலைப்பாதையில் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. நம்மாழ்வார் எழுந்தருளிய இடத்தை வட்டமணை இட்டு, இன்றும் அடையாளம் காண்பிக்கிறார்கள்.

இவ்வாறு நம்மாழ்வார் திருக்கணாம்பியில் எழுந்தருளி இருந்த காலத்தில் திருவாய்மொழிப்பிள்ளை மறைந்து வாழ்ந்து வந்த பாண்டிய மன்னனின் படை வீரர்களோடு திருக்குருகூர் எனப்படும் ஆழ்வார் திருநகரியில் காடு மண்டி இருந்ததாலும், தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளத்தாலும் மணல்மூடிக் கிடந்திருந்த ஆழ்வார் மற்றும் பொலிந்து நின்ற பிரான் ஸந்நிதிகளை புனர் நிர்மாணம் செய்தார். நம்மாழ்வார் திருக்கணாம்பியில் எழுந்தருளி இருப்பதாக ஒற்றர்கள் மூலம் திருவாய்மொழிப்பிள்ளை அறிந்து திருக்கணாம்பிக்குச் சென்று நம்மாழ்வாரை மீண்டும் திருக்குருகூரில் பிரதிஷ்டை செய்தார். ராமானுஜ சதுர்வேதி மங்கலத்தை நிர்மாணித்து அங்கே இராமானுசரை ப்ரதிஷ்டை செய்தார். வேதம் வல்ல திருமாலடியார்களை அந்த சதுர்வேதி மங்கலத்தில் குடியமர்த்தினார். எம்பெருமானார் ஸந்நிதியில் கைங்கர்யங்களை மேற்பார்வை செய்வதற்காக ஜீயர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இந்த எம்பெருமானார் ஜீயர்மடத்தின் 7வது பட்டத்தை அலங்கரித்த ஜீயர் ஸ்வாமியிடம் கி.பி. 1425ஆம் ஆண்டு ஸ்ரீமணவாள மாமுனிகளின் சந்நியாஸ ஆச்ரமத்தை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஹோபில மடத்தை அலங்கரித்த முதல் ஜீயரிடம் ஸ்ரீமணவாள மாமுனிகள் துறவறத்தை ஏற்றுக் கொண்டார் என்று கால ஆராய்ச்சியின் அடிச்சுவடு கூட தெரியாதவர்கள் கூறி வருகிறார்கள். அஹோபில மடம் விஜயநகர துளுவ வம்சத்து, கிருஷ்ணதேவராயர் காலத்தில் தான் தோன்றியது. கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக் காலம் 1509-1529 ஆகும். மணவாள மாமுனிகள் சந்நியாஸ ஆச்ரமம் ஏற்றுக்கொண்டது 1425. ஆகவே அஹோபில மடத்தின் முதல் ஜீயர் ஸ்ரீமணவாள மாமுனிகளுக்கு சந்நியாஸ ஆச்ரமம் அளித்தார் என்பது உண்மைக்குப் புறம்பான செய்தியாகும்.

திருக்கணாம்பியில் எழுந்தருளியிருந்த “அழகிய மணவாளன்” எம்பெருமானார் பல ஆண்டுகள் எழுந்தருளியிருந்ததும் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஐம்பத்திருவர் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருந்ததுமான திருநாராயணபுரம் எனப்படும் மேலக்கோட்டைக்கு எழுந்தருளினார் தற்போதைய தேசிகன் ஸந்நிதியில் முன் மண்டபத்தில் அழகிய மணவாளன் எழுந்தருளப் பண்ணப்பட்டார். முகமதியர்களை எதிர்த்து போராடி வந்த ஹொய்சாள அரச மரபில் வந்த 3ஆம் வீர வல்லாளன் (ஆட்சி ஆண்டு கி.பி. 1291-1342) முகமதியர்களால் கொல்லப்பட்டான். முகமதியர்கள் மேலக்கோட்டை மீது படையெடுக்கலாம் என்ற அச்சம் கொண்ட திருவரங்கத்து கைங்கர்யபரர்கள் (திருவரங்கத்தில் இருந்து புறப்பட்ட 52 கைங்கர்யபரர்களில் பலர் பல இடங்களில் இறந்து விட்டனர். திருநாராயணபுரத்தில் கைங்கர்யத்தில் ஈடுபட்டவர்கள் ஒரு சிலரே). அழகிய மணவாளனை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு திருமலையடிவாரத்தில் அடர்ந்த காடுகளின் மத்தியில் பாதுகாத்து வந்தனர். இதன் பிறகு அழகிய மணவாளன் எவ்வாறு திருவரங்கத்தை சென்றடைந்தார் என்பதை அறிந்து கொள்ள வேண்டுமானால் விஜயநகர பேரரசின் தோற்றமும் அதன் வளர்ச்சியையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

கி.பி. 1323ஆம் ஆண்டு நடந்த உலூக்கான் படையெடுப்பின் விளைவாக தமிழகம் முழுவதும் காஞ்சிபுரத்தைத் தவிர முகமதியர்களின் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. உலூக்கான் தனது அந்தரங்கத் தளபதியான ஷரீப் ஜலாலுதீன்அஸன்ஷாயிடம் தமிழகத்தை ஆட்சி செய்யும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு டில்லிக்கு விரைந்து சென்றான். 48 ஆண்டுகள் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர் மதுரை சுல்தான்கள். அவர்களை எதிர்த்துப் போரிட்ட ஹொய்சாள மன்னனான வீர வல்லாளன் போரில் கொல்லப்பட்டான். அவனது இறந்த உடலில் வைக்கோலைத் திணித்து மதுரையில் உள்ள தனது கோட்டை வாசலில் தொங்க விட்டான். சுல்தான்களை எதிர்ப்பவர்கள் இந்த கதியைத் தான் அடைவார்கள் என்று முரசு கொட்டி தெரிவித்தான். மதுரை செல்பவர்கள் கோரிப்பாளையம் என்ற பேருந்து நிறுத்தத்தை காண்பார்கள். அங்கே தான் சுல்தான்களின் அரண்மனை இருந்தது. வீரவல்லாளனின் உடல் தொங்க விடப்பட்டிருந்ததால் அந்த இடம் கோரிப்பாளையம் என அழைக்கப்படலாயிற்று. (கோரி என்ற ஹிந்தி சொல்லுக்கு காணச் சகிக்க இயலாத என்பது பொருள்).

தமிழகம் முழுவதும் மதுரை சுல்தான்களுடைய கொடுங்கோல் ஆட்சி நடைபெற்று வந்தது. கி.பி. 1336ஆம் ஆண்டு துங்கபத்திரை நதிக்கரையில் சங்கம குலத்தைச் சார்ந்த ஹரிஹரர் அவருடைய தம்பி புக்கர் ஆகிய இருவரும் சிருங்கேரி சாரதா பீடத்தைச் சார்ந்த வித்யாரண்யர் என்பாருடைய ஆசியுடன் விஜயநகரப் பேரரசை தோற்றுவித்தனர். அவர்களிடம் இருந்தது ஒரு சிறு படையே. இந்த படைபலத்தைக் கொண்டு மதுரை சுல்தான்களை எதிர்த்துப் போராடமுடியாது என்ற எண்ணத்துடன் தமது படைபலத்தை பெருக்கலாயினர். விஜயநகர பேரரசின் தோற்றத்திற்குப் பிறகு சில ஆண்டுகளில் ஹரிஹரர் இறந்து விட்டார். அவருக்குப் பிறகு அவரது தம்பியான முதலாம் புக்கர் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். முதலாம் புக்கரின் மூத்த குமாரன் வீரக்கம்பண்ண உடையார் ஆவர்.

புக்கரின் ஆணைப்படி கி.பி. 1358ஆம் ஆண்டு  36 ஆயிரம் படை வீரர்களோடு தெற்கு நோக்கிப் புறப்பட்டான் வீரக்கம்பண்ண உடையார். இதனிடையே திருப்பதிக் காடுகளில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த அழகிய மணவாளனை செஞ்சி மன்னனான கோபணாரியன் திருமலையில் ஸ்ரீவெங்கடேச பெருமாள் ஸந்நிதியில் முகப்பு ராஜகோபுரத்திற்கு உட்புறம் உள்ள மண்டபத்தில் கொண்டு சேர்த்தான். திருமலையிலிருந்து திருவரங்கம் நோக்கி புறப்பட்ட போது செஞ்சிக்கு அண்மையில் உள்ள சிங்கபுரத்திற்கு (தற்போதைய பெயர் சிங்கவரம்) அழகிய மணவாளன் எழுந்தருளினார்.  அங்கே அழகிய மணவாளனுக்கு அத்யயன உத்சவம் (அழகிய மணவாளனுக்கு ஆழ்வார்களுடைய ஈரச் சொற்களை கேட்பதே இன்பம். நீண்ட நாட்கள் அழகிய மணவாளன் திவ்யப்பிரபந்த பாசுரங்களை செவிமடுத்தாததால் திருமேனியில் வாட்டம் காணப்பட்டது. அதைப் போக்குவதற்காக ஆழ்வார்களுடைய பாசுரங்களை கேட்பிக்கும் (அத்யயன உத்வசத்தை கொண்டாடினர்).

மலையில் ஒரு கோயிலை எழுப்பி அழகிய மணவாளனை சில காலம் ஆராதித்து வந்தான் கோபணாரியன். திருமலையில் அழகிய மணவாளன் எழுந்தருளியிருந்த மண்டபமே தற்போது “ரெங்க மண்டபம்” என்று அழைக்கப்பட்டு வருகிறது. தெற்கு நோக்கி படையெடுத்த வந்த வீரக்கம்பண்ண உடையார் சில ஆண்டுகள் கழித்தே காஞ்சிபுரத்தை ஆண்டு வந்த சம்புவராயர்களை வெற்றி கொள்ள முடிந்தது. சம்புவராயர்கள் நாட்டு மக்களுக்கு நன்மைகள் பல செய்து வந்தனர். அவர்கள் ஆட்சிப் பரப்பில் அமைந்திருந்த கோயில்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. ஆயினும் தமிழகத்தின் தென்பகுதியில் மக்களுக்குச் சொல்ல ஒண்ணாத துயரங்களை விளைவித்து வந்த மதுரை சுல்தான்களை எதிர்த்து சம்புவராயர்கள் போர் தொடுக்கவில்லை. தென் தமிழகம் முழுவதும் விஜயநகரப் பேரரசின் கீழ் கொண்டு வர விரும்பி புக்கர், சம்புவராயர்களை போரில் வென்றிடுமாறு ஆணைபிறப்பித்தான். சம்புவராயர்களை போரில் வென்ற வீரக்கம்பண்ண உடையார் தற்போது “சமயபுரம்” என்றழைக்கப்படும் கண்ணனூரில் மதுரை சுல்தான்களோடு போரிட்டார். மதுரை அரண்மனை தகர்த்தெறியப்பட்டது. கன்னியாகுமரி வரை சென்று வெற்றிக்கொடி நாட்டினார் வீரக்கம்பண்ணர். இவ்வாறு தென் தமிழகம் முகமதியர்களின் பிடியில் இருந்து மீட்கப்பட்டது.

செஞ்சியில் எழுந்தருளியிருந்த அழகிய மணவாளன் மற்றும் உபயநாச்சிமார்கள் செஞ்சி மன்னனான கோபணாரியரின் தலைமையில் ஒரு சிறு படையோடு திருவரங்கம் நோக்கிப் புறப்பட்டார். அப்போது, சுல்தான்களுடனான போர் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டு இருந்ததால் சில நாட்கள் கொள்ளிடம் வடகரைக்கு வடக்கே ஒரு கிராமத்தில் எழுந்தருளியிருந்தார். அந்த கிராமமே தற்போது அழகிய மணவாளன் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பழுதுபட்ட நிலையில் சில நாட்கள் அழகிய மணவாளன் தங்கியிருந்த திருக்கோயில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு சம்ப்ரோஷணமும் (கும்பாபிஷேகம்) செய்யப்பட்டது. இந்த ஊரில் ஓடும் ராஜன் வாய்க்கால் கரையில் பல நூற்றாண்டுகளாக திருமாலடியார்கள் 1323ஆம் ஆண்டு படையெடுப்பின் போது உயிர்நீத்த திருமாலடியார்களுக்கு எள்ளும், நீரும் இறைத்து பொதுமக்கள் “தர்ப்பணம்” செய்கிறார்கள். தர்ப்பணம் எனும் நீத்தார்கடனை செய்து வருகின்றனர் ஊர் பொதுமக்கள்.

கண்ணனூர் போரில் வீரக்கம்பண்ணர் வெற்றிக்கொண்ட பின் 48 ஆண்டுகள் கழிந்து அழகிய மணவாளன் உபயநாச்சிமார்களோடும், ஸ்ரீரங்க நாச்சியாரோடும் திருவரங்கம் திருக்கோவிலை சென்று அடைந்தார். அந்த நாள் கி.பி. 1371ஆம் ஆண்டு பரீதாபி வருடம் வைகாசி மாதம் 17ஆம் நாள் ஆகும். (வைகாசி 17 என்பது ஜூன் மாதம் 2 அல்லது 3ஆம் தேதியைக் குறிக்கும்.) படையெடுப்புகளின் விளைவாக பொன்வேய்ந்த ப்ரணாவாகார விமானம் (கர்ப்பக்ருஹ விமானம்) இடிந்து விழுந்ததனால் ஆதிசேஷனுடைய பணாமங்களின் கீழ் அரங்கநகரப்பன் துயில் கொண்டிருந்தான். பல மண்டபங்கள், ஆரியபட்டாள் வாசல் போன்றவை தீக்கிரையாக்கப்பட்டதால் இடிந்து விழுந்த நிலையில் காணப்பட்டன.

அழகிய மணவாளனை தற்போது பவித்ரோற்சவம் கண்டருளும் சேரனை வென்றான் மணடபத்தில் கோபணாரியன், சாளுவ மங்கு போன்ற படைத்தலைவர்கள் எழுந்தருளப் பண்ணினர். திருவரங்க மாநகரில் பலர் கொல்லப்பட்டதாலும் மற்றும் ஆசார்ய புருஷர்களும், முதியோர்களும் அச்சம்கொண்டு திருவரங்க மாநகரைத் துறந்து, வெளி தேசங்களுக்குச் சென்று வாழ்ந்து வந்தனர். பராசர பட்டர் வம்சத்வர்களும், முதலியாண்டான் வம்சத்தவர்களும் வடதிசை நோக்கி அடைக்கலம் தேடிச்சென்றனர். பெரிய நம்பி வம்சத்தவர்கள் தெற்கு நோக்கி அடைக்கலம் தேடிச் சென்றனர்.

தற்போது திருவரங்க நகரை வந்தடைந்த அழகிய மணவாளன் உடன் 1323ஆம் வருடம் அழகிய மணவாளன் உடன் சென்றவர்களில் மூவரே மிஞ்சியிருந்தனர். அவர்களாவர் திருமணத்தூண் நம்பி, திருத்தாழ்வரை தாஸன் மற்றும் ஆயனார். தற்போது எழுந்தருளியிருப்பவர் முன்பு கர்ப்பக்ருஹத்தில் ஸேவை சாதித்த யுகம்கண்ட பெருமாள் தானா? என்ற ஐயம் கூடியிருந்த மக்களிடைய நிலவி இருந்தது. அதை நிரூபிக்க ஊரில் முதியவர்கள் யாரும் இல்லாததால் முடியவில்லை. அப்போது வயது முதிர்ந்த கண் பார்வையற்ற ஈரங்கொல்லி (சலவைத் தொழிலாளி) ஒருவன் படையெடுப்புக்கு முன்னர் அழகிய மணவாளன் உடுத்துக் களைந்த பரியட்டங்களை (ஆடைகளை) தினந்தோறும் சலவை செய்து சமர்ப்பித்திடுவான். இந்த ஈரங்கொல்லி, அழகிய மணவாளன் உடுத்துக்களைந்த ஆடைகளை தவிர வேறு யாருடைய ஆடைகளையும் சலவை செய்ய மாட்டான். அழகிய மணவாளனும் ஈரங்கொல்லி கொண்டு வருகின்ற வஸ்திரங்களை மறுபடியும் நீரில் நனைக்காமல் அப்படியே சாற்றிக் கொள்வார். (இந்த ஈரங்கொல்லிகளைப் பற்றிய மேலும் பல மகிழ்வூட்டக்கூடிய நிகழ்ச்சிகள் பின்வரும் நிகழ்ச்சித் தொகுப்பில் குறிப்பிடப்படவுள்ளது).

அந்த ஈரங்கொல்லி “என் கண்பார்வை போய்விட்டதால்” என்னால் இவர்தான் அழகிய மணவாளனா அல்லது வேறு ஒரு பெருமாளா என்று கண்டுபிடிக்க ஒரு யுக்தி உள்ளது என்றார்.

வஸ்திரங்களை துவைப்பதற்கு முன்பு நீரிலே நனைத்து அந்த ஈர ஆடையில் வெளிப்படும் நீரைப் பருகுவேன் இப்போது இந்த பெருமாளுக்கு திருமஞ்சனம் ஸமர்ப்பித்து அந்த ஈர ஆடையைப் பிழிந்து வெளிப்படும் நீரை பருகும்போது என் நாவின் சுவை கொண்டு இவர் தான் முன்பு எழுந்தருளி இருந்த அழகிய மணவாளன் என்று என்னால் கூற முடியும். அவ்வாறு அழகிய மணவாளனுக்கு திருமஞ்சனம் ஸமர்ப்பிக்கப்பட்டு அந்த ஈரங்கொல்லிக்கு ஈர ஆடை தீர்த்தம் ஸாதிக்கப்பட்டது  (கொடுக்கப்பட்டது). அதைப் பருகியவுடன் அந்த ஈரங்ககொல்லி “இவரே நம்பெருமாள், இவரே நம்பெருமாள்” என்று கூவினான். அன்றிலிருந்து அழகிய மணவாளனுக்கு “நம்பெருமாள்” என்ற பெயர் அமையப்பெற்றது. ஈரங்கொல்லி நம்பெருமாள் என்று மகிழ்ச்சி பொங்க கூறிய இந்த பெயர் நிலைத்து விட்டது. அவரை அழகிய மணவாளன் என்று தற்போது யாரும் கூறுவதில்லை.

ஒரு சிலர் பிள்ளைலோகாச்சாரியருடைய “இவையெல்லாம் நமக்கு நம்பெருமாள் பக்கலிலே காணலாம். முமுக்ஷுப்படி த்வய பிரகரணப் நாராயண ஸப்தார்த்தம் 141ஆம் நூற்பா”. ஈரங்கொல்லி நம்பெருமாள் என்று கூறியது அழகிய மணவாளன் 48 ஆண்டுகள் பல்வேறு இடங்களுக்குச் சென்று திரும்பிய பிறகு சூட்டிய பெயராகும். பிள்ளைலோகாச்சாரியர் 141வது நூற்பாவில் நம்பெருமாள் என்று குறிப்பிடுவதாகக் கொள்ள வேண்டும். நம்பெருமாள் திருவரங்கத்திற்கு மீண்டும் வந்து ப்ரதிஷ்டை கண்டருளிய நிகழ்ச்சியை மீண்டு வந்து ப்ரதிஷ்டை கண்டருளிய நிகழ்ச்சியை ராஜ மகேந்திரன் திருச்சுற்றின் மேற்குப் பகுதியில் காணலாம். இந்தக் கல்வெட்டை தொல்லியல் துறை படியெடுத்து. ”South Indian Temple Inscription Volume 24″ – À R number 288 (A.R. No. 55 of 1892).

ஸ்வஸ்திஸ்ரீ: பந்துப்ரியே சகாப்தே (1293)

ஆநீயாநீல ச்ருங்கத் யுதி ரசித ஜகத்

ரஞ்ஜநாதஞ்ஜநாத்ரே:

செஞ்ச்யாம் ஆராத்ய கஞ்சித் ஸமயமத

நிஹத்யோத்தநுஷ்காந் துலுஷ்காந் >

லக்ஷ்மீக்ஷ்மாப்யாம் உபாப்யாம்

ஸஹநிஜநகரே ஸ்தாபயந் ரங்கநாதம்

ஸம்யக்வர்யாம் ஸபர்யாத் புநரக்ருத

¯÷\õதர்ப்பணோ கோபணார்ய: >>

(புகழ் நிறைந்த கோபணார்யர் கறுத்த கொடுமுடிகளின் ஒளியாலே உலகை ஈர்க்கும் திருமலையிலிருந்து ரங்க நாதனை எழுந்தருளப்பண்ணி வந்து தன் தலைநகரமான செஞ்சியில் சிறிதுகாலம் ஆராதித்து ஆயுதமேந்திய துலுக்கர்களை அழித்து ஸ்ரீதேவி பூதேவிகளாகிய உபயநாச்சிமார்களோடு கூட திருவரங்கப் பெருநகரில் ப்ரதிஷ்டை செய்து, சிறந்த திருவாராதனங்களை மறுபடி தொடங்கி வைத்தார்.)

இந்தக் கல்வெட்டை பிள்ளைலோகம் ஜீயர் தம்முடைய “யதீந்த்ர ப்ரணவ ப்ரபாவம்” என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். நம்பிள்ளை பெரியவாச்சான் பிள்ளை, அழகிய மணவாள ஜீயர், பிள்ளைலோகம்ஜீயர் போன்ற பெருமக்கள் தங்கள் நூல்களில் தொல்காப்பியம், சங்க இலக்கியம், வரலாற்று குறிப்புகள், கல்வெட்டுகள் ஆகியவற்றை குறிப்பிடுகின்றனர். ஆனால், நம்மிடையே வாழும் சில கிணற்று தவளைகள் “திருக்குறளைப் படிக்காதே, கல்வெட்டுகள் சான்றுகள் அல்ல” என்றெல்லாம் பிதற்றி வருகின்றனர். நம்பிள்ளை 17 இடங்களில் திருக்குறளை மேற்கோள் காட்டியுள்ளார். ஒரு திருக்குறளுக்கு உரையும் எழுதியுள்ளார். பெரியவாச்சான் பிள்ளையும், பிள்ளைலோகம் ஜீயரும் பல இடங்களில் தொல்காப்பியம், இறையனார் களவியல் உரை, நம்பி அகப்பொருள் ஆகியவற்றிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஜைனன் ஒருவன் எழுதிய சம்ஸ்க்ருத நூலான அமரகோசத்தை பயிலும் இந்த வித்வான்கள் ஸ்ரீவைஷ்ணவர்களை தொல்காப்பியத்தைப் படிக்காதே, திருக்குறளைப் படிக்காதே, சங்க இலக்கியங்களைப் பயிலாதே என்றெல்லாம் பிதற்றலாமா? தங்களை மோட்சத்திற்கும் படிகட்ட வந்திருப்பவர்களாக கூறிக்கொள்ளும் இவர்கள் ஆழ்வார் பாசுரங்களில் பொதிந்துள்ள அக இலக்கிய கோட்பாடுகளை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும். உபய வேதாந்திகளாய் இருக்க வேண்டிய ஸ்ரீவைஷ்ணவர்கள் சம்ஸ்க்ருத மொழியே உயர்வு தமிழில் ஆழ்வார் பாசுரங்களைத் தவிர மற்றைய தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களை கற்க முன் வராதது. ஏன்? இவர்கள் திருந்தினாலே ஒழிய மிக உன்னதமான வைணவ நெறிகளை “பிறந்த வீட்டின் பெருமையை அண்ணனும், தங்கையும் கொண்டாடிக் கொள்வதற்கு” இணையாகும்.

இராமானுசரின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டங்கள் மிகுந்த பணச் செலவில் நாடெங்கும் கொண்டாடினோமே தவிர வைணவத்தைச் சார்ந்திராத பிற சமயத்தினர் நம் பக்கலில் இழுத்துக்கொள்ள முடிந்ததா? என்பது கேள்விக்குறியே. திருவரங்கத்தின் மீதான மூன்றாம் படையெடுப்பு கி.பி. 1328ஆம் ஆண்டு குரூஸ்கான் என்பவனால் நிகழ்த்தப்பட்டது. ஏற்கெனவே கொள்ளையடிக்கப்பட்ட திருவரங்க மாநகரில் உலூக்கானால் எடுத்துச் சொல்லப்படாத பொருட்கள் இவனால் கொள்ளையடிக்கப்பட்டன. இவனுடைய படையெடுப்பைப் பற்றிய மேலும் விவரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை.

அழகிய மணவாளன் 1371ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் நாள் திருவரங்க நகருக்கு 48 ஆண்டுகள் கழித்து திரும்ப எழுந்தருளியதை ஒரு பெருவிழாவாகக் கொண்டாட வேண்டும். ஆனால் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கோ திருவரங்க மாநகரை காப்பாற்றுவதற்காக நாங்கள் இராமானுசரால் நியமிக்கபட்டோம் என்றுக் கூறிக்கொள்ளும் ஸ்தலத்தார்கள், தீர்த்தகாரர்கள் ஆகியோரும் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இராமன் காட்டுக்குச் சென்றது 14 ஆண்டுகள் இராமனால் ஆராதிக்கப்பட்ட அழகிய மணவாளனோ 48 ஆண்டுகள் வனவாசம் செய்தார். 49 ஸ்ரீவைஷ்ணவர்களும் பிள்ளைலோகாச்சாரியரும் அழகிய மணவாளனைக் காக்கும் பணியில் தங்களுடைய இன்னுயிரைத் தியாகம் செய்தார்கள். பிள்ளைலோகாச்சாரியர் தமது 119வது வயதில் அர்ச்சாவதார எம்பெருமானை காக்கும் பணியில் தன்இன்னுயிரை நீத்தார். இன்றைக்கும் அல்லூரி வேங்கடாத்ரீ ஸ்வாமி சமர்ப்பித்த ஆபரணங்களை மாசி மாதத்தில் ஒருநாள் நம்பெருமாளுக்குச் சாற்றி மகிழ்கிறார்கள். ஆனால் இந்த நம்பெருமாள் பல ஆபத்துக்களை தாண்டி காடுமேடுகளையெல்லாம் கடந்து வந்த வரலாறு நூற்றுக்கு தொண்ணூற்றிதொன்பது சதவீதம் மக்களுக்குத் தெரியாது. ஏதோ சில தனி நபர்கள் தாங்கள் பெரிய தியாகம் செய்துவிட்டதுபோல் பறைச்சாற்றிக்கொள்கிறார்கள். ஆனால் நம்பெருமாளை காப்பாற்றும் முயற்சியில் 50 பேருக்கு மேல் தியாகம் செய்துள்ளனர். பன்னீராயிரவர் தலை கொய்யப்பட்டது. எதைச்சொன்னாலும் “இது வழக்கம் இல்லை, இது வழக்கம் இல்லை, இது வழக்கம் இல்லை” என்று தடுப்பணைபோடும் அடியார்கள்? இதை உணரவேண்டும்.

திருவரங்கம் திருமதில்கள்:

1.     பெரிய கோயிலின் ஏழு திருச்சுற்றுகட்கு அமைந்த பெயர்களையும் அவற்றை நிர்மாணித்தோர் அல்லது செப்பனிட்டோர் பற்றிய குறிப்பினை இந்தப் பாடல் கூறுகின்றது.

மாடமாளிகை சூழ் திரு வீதியும் மன்னு சேர் திருவிக்கிரமன் வீதியும்

ஆடல் மாறன் அகளங்கன் வீதியும் ஆலிநாடன் அமர்ந்துறை வீதியும்

கூடல்வாழ் குலசேகரன் வீதியும் குல விராசமகேந்திரன் வீதியும்

தேடரிய தர்மவர்மாவின் வீதியும் தென்னரங்கர் திருவாவரணமே.

வரலாற்று அடிப்படை கொண்டு நோக்கின் அவை ஒன்றுக்கொன்று முரண்பாடாக அமைந்து உள்ளது. ஆனால், புராதனமாக அமைந்திருந்த திருவீதிகளைப் பழுதுபார்த்துச் செப்பனிட்டவர்கள் பெயரால் வழங்கப்படுகிறது என்று கொள்ள வேண்டும். இந்தப் பாடல் ஏழாம் திருச்சுற்றுத் தொடங்கி, முதலாம் திருச்சுற்று வரை அமைந்துள்ள திருச்சுற்றுக்களின் பெயர்களைக் கூறுகின்றது.

ஏழாம் திருச்சுற்று – மாடமாளிகை சூழ்த் திருவீதி: இந்தத் வீதிக்கு தற்போதைய பெயர் சித்திரை வீதி. இந்த வீதியினைக் கலியுகராமன் திருவீதி என்றும் அழைப்பர். கலியுகராமன் என்று பெயர்கொண்ட மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன் (கி.பி.1297-1342) இந்த வீதியைச் செப்பனிட்டான் என்று அறியப்படுகிறது.

ஆறாம் திருச்சுற்று –  திருவிக்கிரமன் திருச்சுற்று, ஐந்தாம் திருச்சுற்று, அகளங்கன் திருச்சுற்று – முதலாம் குலோதுங்கனுடைய மகன் விக்ரமசோழன் (கி.பி.1118-1135) இவன் பெயரிலே இந்தத் திருவீதி அமைந்துள்ளது. அடுத்த ஐந்தாம் திருச்சுற்றுக்கு அகளங்கன் திருவீதி என்று பெயரிடப்பட்டுள்ளது. விக்கிரமசோழனுக்கு வழங்கிய சிறப்புப் பெயர்களில் அகளங்கன் என்பதுவும் ஒன்றாகும். இவனுக்கே உரியவையாய் வழங்கிய இரண்டு சிறப்புப் பெயர்கள் கல்வெட்டுகளிலும் விக்கிரம சோழன் உலாவிலும் காணப்படுகின்றன. அவை, ‘தியாக சமுத்திரம்,’ ‘அகளங்கன்’ என்பனவாகும். இம்மன்னன் தன் ஏழாம் ஆட்சியாண்டில் திருவிடைமருதூர் சென்றிருந்த போது, அந்நகரைச் சார்ந்த ‘வண்ணக்குடி’ என்ற ஊரைத் தியாக சமுத்திர சதுர்வேதி மங்கலம் என்று பெயர் மாற்றித் திருவிடை மருதூர் கோயிலுக்கு இறையிலி நிலமாக அளித்தான் என்று அவ்வூர்க் கல்வெட்டொன்று கூறுகிறது.  (ARE 272, 273 of 1907, 49 of 1931) (விக்கிரம சோழன் உலாவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. Ula-II, 431, 632.)

‘அகளங்கன்’ என்னும் சிறப்புப்பெயர் ஜயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணியில் காணப்படினும் அதன் பாட்டுடைத் தலைவனான முதலாம் குலோத்துங்கனை குறிப்பதன்று. (The Kalingattupparani calls Kulantaka Virudarajabhayankara, Akalanka, Abhaya and Jayadhara. Ref: The Colas – K.A.N.Sastri, p.330). அது விக்கிரம சோழனுக்கே வழங்கிய சிறப்புப் பெயர் என்பது கல்வெட்டுகளால் நன்கு தெளிவாகிறது. கல்வெட்டுகளில் குலோத்துங்கனுக்கு அப்பெயர் காணப்படவில்லை. ஒட்டக் கூத்தர் தனது ‘விக்கிரமசோழன் உலாவில்,’ 152, 182, 209, 256, 284, முடிவு வெண்பா ஆகிய கண்ணிகளில்  விக்கிரமனை அகளங்கன் என்று கூறியிருப்பது கொண்டு, அப்பெயர் இவனுக்கே சிறப்புப் பெயராக வழங்கியது என்பதை அறியலாம்.

‘எங்கோன் அகளங்கன் ஏழுலகும் காக்கின்ற செங்கோல் கொடுங்கோல் சிலர்க்கென்றாள்’ என்று அவர் குறிப்பிடுவதால் விக்கிரம சோழனே அகளங்கன் ஆவான். இவனது சிறப்புப் பெயரில் ஒரு திருச்சுற்றும், இயற்பெயரில் ஒரு திருச்சுற்றும் இவனே நிறுவினான் என்றும் கொள்வதே பொருத்தமுடையது.

திருவரங்கம் கோயிலில் விக்ரமசோழன் காலத்துக் கல்வெட்டுகள் பதினான்கு அமைந்துள்ளன.

பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த திருந்நெடுந்தாண்டகம் வியாக்யானத்தில் விக்ரமசோழனைப் பற்றிய குறிப்பொன்று அமைந்துள்ளது –  திருநெடுந்தாண்டகம் 25-ஆம் பாட்டு ‘மின்னிலங்கு’.

“விக்கிரம சோழ தேவன் எனும் அரசன்  தமிழிலக்கியங்களில் மிகவும் ஈடுபாடுடையவன். சைவ வைணவப் புலவர்கள் பலர் அவனது சபையில் இருந்தனர். அவ்வப்போது அவரவர்களுடைய சமய இலக்கியங்களைப் பற்றிக் கூறச் சொல்லிக் கேட்பதுண்டு. ஒரு சமயம் அவன், ‘தலைமகனைப் பிரிந்த வருத்தத்தோடு இருக்கிற தலைமகள் கூறும் பாசுரங்கள் சைவ வைணவ இலக்கியங்களில் எப்படி இருக்கிறது? என்று கூறுங்கள் கேட்போம்” என்றான்; உடனே சைவப் புலவர், சிவனாகிய தலைமகனைப் பிரிந்த நாயகி “எலும்பும் சாம்பலும் உடையவன் இறைவன்” என்று வெறுப்புத் தோற்ற, சிவனைப் பற்றிக் கூறும் நாயன்மார் பாடல் ஒன்றைக் கூறினார். வைணவப் புலவரோ, எம்பெருமானைப் பிரிந்த வருத்தத்தில் பரகாலநாயகி கூறுகின்ற ‘மின்னிலங்கு திருவுரு’ என்ற திருநெடுந்தாண்டகப் பாசுரத்தைக் கூறினார். இரண்டையும் கேட்ட விக்கிரமசோழ தேவன், ‘தலைமகனைப் பிரிந்து வருந்தியிருப்பவள், கூடியிருந்தபோது தன் காலில் விழுந்த தலைமகனைப் பற்றிக் கூறும்போதும், ‘மின்னிலங்கு  திருவுரு’ என்று புகழ்ந்து கூறியவளே சிறந்த தலைமகள். ‘எலும்பும் சாம்பலும் உடையவன்’ என்று கூறிய மற்றொரு தலைமகள் பிணந்தின்னி போன்றவள்” என்றானாம். (பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த வியாக்யா னத்தின் விவரணம், பதிப்பாசிரியர் எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார், 2003ஆம் ஆண்டுப் பதிப்பு, பக்.442)

இவனுடைய திருவரங்கக் கல்வெட்டுகளில் சிதம்பரத் தில் நடராஜருடைய விமானத்திற்குப் பொன்வேய்ந்ததைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் கல்வெட்டு எண். 119, (ARE No.340 of 1952-53).மூன்றாம் திருச்சுற்றில் சேரனை வென்றான் மண்டபம் என்றழைக்கப்படும் பவித்ரோத்ஸவம் நடைபெறும் மண்டபத்தில் அமைந்துள்ளது.

(1) “ஸ்வஸ்தி ஸ்ரீ: பூமாலை மிடைந்து பொந்மாலை திகழ்த்தா (பா)மாலை மலிந்த பருமணி(த்) திரள்புயத் திருநிலமடந்தையொடு ஜயமகளிருப்பத் தந்வரை மார் வந்தனக் கெநப் பெற்ற திருமகளொருதநி யிருப்ப கலைமகள் சொற்றிறம் புணர்ந்த (க)ற்பிநளாகி விருப்பொடு நாவகத் திருப்ப திசைதொறும் தி – …………………………………………………………………….”.

(4) மண்முழுதும் களிப்ப மநுநெறி வள(ர்)த்து தந் கொற்றவாசல்ப் புறத்து மணிநாவொடுங்க முரைசுகள் முழங்க விஜையமும் புகழும் மேல்மேலோங்க ஊழி ஊழி (இ)ம்மாநிலங்காக்க திருமணிப்பொற்றெட்டெழுது புத்தாண்டு வருமுறை முந்நம் மந்நவர் சுமந்து திறை நிரைத்துச் சொரிந்த செம்பொற் குவையால் தந் குலநாயகந் தாண்டவம் புரியும்.

(5) செம்பொந் அம்பலஞ்சூழ் திருமாளிகை கொபுரவாசல் கூட(சா)ளரமும் உலகு வலங்கொண்டொளி விளங்கு நெமிக் குலவரை உதையக் குன்றமொடு நின்றெனப் பசும்பொந் மெய்ந்து பலிவளர் பிடமும் விசும்பொளி தழைப்ப விளங்கு பொந் மேய்ந்து இருநிலந் தழைப்ப இமையவர் களிப்பப் ö(ப)ரிய திருநாள்ப் பெரும் பி(ய)ர் விழா –

(6) வெநும் உயர் புரட்டாதியில் உத்திரட்டாதியில் அம்பலம் நிறைந்த அற்புதக் கூத்தர் இந்பர்வாழ எழுந் தருளுதற்கு(த்) திருத்ö(÷)த(ர்)க் கொயில் செம்பொந் மெய்ந்து பருத்திரள் முத்திந் பயில் வடம் பரப்பி (நி)றைமணி மாளிகை நெடுந்தெர் வீதி தந்திருவளர் பெரால் செய்து சமைத்தருளி பைம் பொற் குழித்த பரிகல முதலால் செம்பொற் கற்பகத்தெ(ரெ)õடு பரிச்சிந்நம் அளவி(ல்லா) –

(7) (த)ந ஒளிபெற வமைத்து பத்தாமாண்டு சித்திரைத் திருநாள் அத்தம் பெற்ற ஆதித்த வாரத்து(த்) திரு(வளர் பதியில் திர) யொத3‡ப்பக்கத்து இந்நந பலவும் இநிது சமைத்தருளி தந் ஒரு குடை நிழலால் (தரணி) முழுதும் தழைப்ப செழியர் வெஞ்சுரம் புக செரலர் கடல் புக அழிதரு சிங்கணர் அஞ்சி நெஞ்சலமர கங்கர் திறையிட கந்நிடர் வெந்நிட கொங்க ரொதுங்க கொ(ங்கண) –

இரண்டாம் இராசேந்திரன் புதல்வி மதுராந்தகியே முதலாம் குலோத்துங்கனின் மனைவி. முதலாம் குலோத்துங்கனுடைய ஏழு புதல்வர்களில் விக்கிரமசோழன் நான்காமவன். (Ref: The Colas by K.A.N.Sastri, p.332).

நான்காம் திருச்சுற்று – ஆலிநாடன் திருச்சுற்று:  திருமங்கையாழ்வார் ஆடல்மா என்ற குதிரையின் மீதேறிச் சென்று பகைவர்களை வென்றார். பல திவ்யதேசங்களை மங்களா சாஸனம் செய்தருளி திருவரங்கத்திலே பல ஆண்டுகள் எழுந்தருளியிருந்து திருமதில் கைங்கர்யங்களைச் செய்து வந்தார்.  அவரால் ஏற்படுத்தப்பட்ட திருமதிலுக்கு உட்பட்ட திருச்சுற்றிற்கு ஆலிநாடன் திருவீதி என்று பெயர்.  பாட்டின் இரண்டாம் அடியில் ஆடல்மாறன் அகளங்கன்  என்னும் சொற்றொடரில் உள்ள ஆடல்மா என்ற சொல் ஆலி நாடன் அமர்ந்துறையும் என்ற சொல்லோடு கூட்டிக் கொள்ள வேண்டும். இவருடைய கைங்கர்யங்களைப் பற்றிய விரிவான செய்திகள் பின்வரும் பகுதிகளில் தெரிவிக்கப்படும்.

மூன்றாம் திருச்சுற்று – குலசேகரன் திருச்சுற்று : குலசேகராழ்வார் தமது பெருமாள் திருமொழியில் முதன் மூன்று பத்துக்களாலே (30 பாசுரங்கள்) கொண்டு திருவரங்கனை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

“அன்பொடுதென்திசைநோக்கிப்பள்ளிகொள்ளும்

அணியரங்கன்திருமுற்றத்து* அடியார்தங்கள்

இன்பமிகுபெருங்குழுவுகண்டு யானும்

இசைந்து உடனே என்றுகொலோ இருக்கும்நாளே?”– பெருமாள்திருமொழி 1-10

என்று அணியரங்கன் திருமுற்றத்தை குறிப்பிடும் குலசேகராழ்வார், மூன்றாம் திருச்சுற்றான குலசேகரன் திருச்சுற்றினை அமைத்தார் என்று கொள்வது பொருத்தம். மூன்றாம் பிரகாரத்தில் சேனை வென்றான் மண்டபம் கட்டி அந்தப் பிரகாரத்தினை நிர்மாணம் செய்தார்.

இரண்டாம் திருச்சுற்று – இராசமகேந்திரன் திருச்சுற்று:  இவன் முதலாம் இராசேந்திரனுடைய மூன்றாவது மைந்தன். இவனுடைய ஆட்சிக்காலம் கி.பி.1058-1062. மும்முடிச் சோழன் என்ற பெயர் பெற்றவன். இராசமகேந்திரன், ஆகமவல்லனை (முதலாம் சோமேƒவரன்) முடக்காற்றில் புறமுதுகிட்டு ஓடும்படி செய்த பெருவீரன் என்று, அவன் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. “பனுவலுக்கு முதலாய வேத நான்கிற் பண்டுரைத்த நெறிபுதுக்கிப் பழையர் தங்கண், மனுவினுக்கு மும்மடி நான் மடியாஞ்சோழன் மதிக்குடைக் கீழ் அறந்தளிர்ப்ப வளர்ந்தவாறும்” என்று கலிங்கத்துப் பரணியில் குறிப்பிடப்பட்ட மும்முடிச் சோழனே இராசமகேந்திரன் என்று கருத இடமிருக்கிறது.

அன்றியும் “பாடரவத் தென்னரங்கமே யாற்குப் பன்மணியால் ஆடவரப்பாயல் அமைத்தோனும்” என்னும் விக்கிரம சோழன் உலா (கண்ணி – 21) அடிகளால் இவன் திருவரங்கநாதரிடம் அன்பு பூண்டு, அப்பெருமானுக்குப் பொன்னாலும் மணியாலும் அரவணை ஒன்று அமைத்தான் என்பதும் அறியப்படுகின்றது.

முதலாம் திருச்சுற்று – தர்மவர்மா திருச்சுற்று: தர்மவர்மா என்ற சோழமன்னன் இந்தத் திருச்சுற்றினை அமைத்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த மன்னனைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் நமக்கு கிடைக்கவில்லை.

இந்தப் பாடலை இயற்றியவர் யார் என்று அறிவதற்கில்லை. கோயிலொழுகு “பூர்வர்கள் திருவரங்கம் திருப்பதியை இவ்வாறு அனுபவித்தார்கள்” என்று குறிப்பிடுகிறது. திருக்கோயில் அமைப்பில் உத்தமோத்தம லக்ஷணமாக ஏழு பிரகாரங்கள் கொண்ட கோயிலைக் கொள்கிறார்கள். எந்த திருக்கோயிலுக்கும் அமைந்திராத பெருமை ஸ்வயம்வ்யக்த (தானாகத்தோன்றின) க்ஷேத்திரங் களுள் தலைசிறந்ததான திருவரங்கம் ஸப்தபிரகாரங்களைக் கொண்டிருப்பது அதன் பெருமையைக் காட்டுகின்றது.

இதிகாச புராணச் செய்திகள்:

(2) இவ்வாறு ஏழுவீதிகளின் திருப்பெயர்களைத் தெரிவித்த பின்னர் ஒவ்வொருடைய கைங்கர்யத்தைப் பற்றி கோயிலொழுகு குறிப்பிடுகிறது.

கருடபுராணத்தில் 108 அத்தியாயமுள்ள சதாத்யாயீ, பிரமாண்ட புராணத்தில் 11 அத்தியாயமுள்ள தசாத்யாயீ ஆகிய இரு பகுதிகளிலும் ஸ்ரீரங்க மாஹாத்மியம் சொல்லப்படுகிறது. ஸ்ரீரங்கத்திற்கே உரித்தான பாரமேஸ்வர ஸம்ஹிதையில் 10ஆம் அத்தியாயம் ஸ்ரீரங்க மாஹாத்மியத்தைச் சொல்லுகிறது.  புராணங்களில் கண்டுள்ளபடி ப்ரஹ்மா நெடுங் காலம் தவம் இருந்து ஸ்ரீரங்க விமானத்தைத் திருப்பாற்கடலில் இருந்து பெற்றான். ஸ்ரீரங்கவிமானத்தையும் ஸ்ரீரங்கநாதனையும் தமது இருப்பிடமான ஸத்யலோகத்தில் ஆராதித்து வந்தான். இக்ஷ்வாகு அந்த விமானத்தையும் ஸ்ரீரங்கநாதனையும் பிரஹ்மாவிடம் இருந்து பெற்றுத் தனது தலைநகரமான அயோத்தியில் ஆராதித்து வந்தான். சக்கரவர்த்தி திருமகனான ஸ்ரீராமன் ஸ்ரீரங்கநாதனை ஆராதித்து வந்தான்.

ஸ்ரீபராசர பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவம் உத்தர சதகம் 77-78 ஆகிய இரு ச்லோகங்களில் இக்ஷ்வாகு வம்சத்து அரசர்களுக்கெல்லாம் ஸ்ரீரங்கநாதனே ஆராத்ய தேவதையாய் இருந்து வந்தபடியை அருளச் செய்துள்ளார்.

“மநுகுலமஹீ பாலவ்யாநம்ரமௌலிபரம்பரா

மணிமகரிகாரோசிர் நீராஜிதாங்க்ரிஸரோருஹ: >

ஸ்வயமத விபோ! ஸ்வேந ஸ்ரீரங்கதாமநி மைதிலீ

ரமணவபுஷா ஸ்வார்ஹாண்யாராதநாந்யஸி லம்பித: >> ”  – (77)

(எம்பெருமானே!, மநுகுலத்தவர்களான சக்ரவர்த்திகளினுடைய வணங்கின கிரீட பங்க்திகளிலுள்ள (கிரீடத்தில் அமைந்துள்ள வரிசைகளில்) மகரீஸ்வரூபமான (மீன் வடிவிலான) ரத்னங்களின் ஒளிகளினால் ஆலத்தி வழிக்கப்பட்ட திருவடித்தாமரைகளையுடைய தேவரீர் பின்னையும் ஸ்ரீராமமூர்த்தியான தம்மாலேயே ஸ்ரீரங்க விமானத்தில் தமக்கு உரிய திருவாராதனங்களை தம்மாலேயே அடைவிக்கப்பட்டீர்.)

(மநுகுல) இக்ஷ்வாகு வம்சத்து அரசர்களுக்கெல்லாம் ஸ்ரீரங்கநாதனே ஆராத்யதேவதையாக இருந்து வந்தபடியை இதனாலருளிச் செய்கிறார். ஸத்யலோகத்தில் நான்முகனால் ஆராதிக்கப்பட்டு வந்த திவ்யமங்கள விக்ரஹம் அவனால் இக்ஷ்வாகுவுக்கு அளிக்கப்பட்டு, பிறகு அநேக சக்ரவர்த்திகளால் பரம்பரையாய் ஆராதிக்கப்பட்டு வந்து, கடைசியாய் ஸ்ரீராமபிரனால் ஆராதிக்கப்பட்டு, பட்டாபிஷேகத்திற்குப் பிறகு ஸுக்ரீவ ப்ரமுகர்களான அன்பர்கட்குப் பரிசளிக்கும் அடைவிலே விபீஷணாழ்வானுக்கு இந்த திவ்யமங்கள விக்ரஹம் பரிசளிக்கப்பட்டு, லப்த்வா குலதநம் ராஜா லங்காம் ப்ராயாத் விபீஷணா: என்கிறபடியே அவரும் இத்திருக்கோலத்தைப் பெற்றுக் கொண்டு இலங்கைக்கு எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வருமளவில் காவிரிக்கரையிலே பெருமாளை எழுந்தருளப் பண்ணிவிட்டு நித்யாநுஷ்டாங்களை நிறைவேற்றிக் கொண்டு பெருமாளை மீண்டும் எழுந்தருளப் பண்ணிக்கொள்ள முயலுகையில் அவ்விடம் பெருமாளுக்கு மிகவும் ருசித்திருந்ததனால் பேர்க்கவும் பேராதபடியிருந்து விபீஷணனுக்கு நியமநம் தந்தருளி, அவனுடைய உகப்புக்காகவே “மன்னுடைய விபீடணற்கா மதிளிலங்கைத்திசை நோக்கி மலர்க்கண்வைத்த” (பெரியாழ்வார் திருமொழி 4-9-2) என்கிறபடியே தென்திசை இலங்கை நோக்கி சயநித்தார் என்பது புராண வரலாறு. பூர்வார்த்தத்தினால் ஸ்ரீராமபிரானுக்கு முற்பட்ட சக்ரவர்த்திகள் ஆராதித்தமையை ஒரு சமத்காரமாகப் பேசுகிறார். நவமணிகள் பதித்த கீரீடமணிந்த மநுகுல மஹாராஜர்கள் முடியைத் தாழ்த்தி வணங்கும்போது அந்த முடிகளில் அழுத்தின ரத்னங்களின் ஒளி வீசுவதானது பெருமாள் திருவடிவாரத்திலே ஆலத்தி வழிக்குமாப் போலேயிருப்பதாம். (மணிமகரிகா) மகரவடிவமாக ரத்னங்கள் அழுத்தப் பெற்றிருக்கும் என்க. மகரிகா என்று ஸ்த்ரீலிங்க நிர்த்தேசம் – ஆலத்தி வழிப்பதாகிய காரியம் ஸ்திரீகளுடையது என்கிற ப்ரஸித்திக்குப் பொருந்தும்.

(ஸ்வயமத விபோ இத்யாதி) அந்த அரசர்கள் வணங்கி வழிபாடு செய்தது பெரிதன்று; ஸாக்ஷாத் பெருமாளும் பிராட்டியுமே ஸ்ரீராமனாகவும் ஸீதையாகவும் அவதரித்திருந்த அந்த திவ்ய தம்பதிகள் ஆராதித்த பெருமையன்றோ வியக்கத்தக்கது என்று காட்டுகிறபடி. ஸ்ரீசக்ரவர்த்தி திருமகனார் தம்மைத்தாமே தொழுவார்போல் தொழுது அர்ச்சித்த திவ்ய மங்கள விக்ரஹம் இதுகாணீர் என்கிறார்.

ஸ்வயம், ஸ்வேந என்ற இரண்டனுள் ஒன்று போராதோவென்னில், ஸ்ரீரங்கநாதனான ஸ்ரீமந்நாராயணமூர்த்தி தாமே ஸ்ரீராமபிரானாக அவதரித்தப் படியைக் காட்டுகிறது ஸ்வேந என்பது. அவர்தாமும் ஆளிட்டு அந்தி தொழாதே தாமே ஆராதித்தபடியைச் சொல்லுகிறது ஸ்வயம் என்பது. ஸ்வார்ஹாணி என்றவிடத்தில் ஸ்வசப்தத்தினால் ஆராத்யமூர்த்தியையும், ஆராதகமூர்த்தியையும் குறிப்பிடலாம். ஆசிரியர்க்கு இரண்டும் திருவுள்ளமே. –

மந்வந்வவாயே த்ரூஹிணே ச தந்யே விபீஷணேநைவ புரஸ்க்ருதேந >

குணைர் தரித்ராணமிமம் ஜநம் த்வம் மத்யேஸரிந்நாத! ஸுகாகரோஷி >> (78)

(ஸ்ரீரங்கநாதரே!, மநுகுலமும் க்ருதார்த்தனான பிரமனும் (இருக்கச் செய்தேயும்) திருவுள்ளத்திற்கு இசைந்த விபீஷணனாலேயே திருக்காவேரியினிடையே (ஸந்நிதிபண்ணி) ஒரு குணமுமில்லாத அடியேன் போல்வாரை மகிழ்விக்கின்றீர்)

(மந்வந்வவாயே) நான்முகக்கடவுளுக்கு ஸுலபனாயிருந்த இருப்பையும், மநுவம்சத்து மஹாராஜர்களுக்கு ஸுலபனாயிருந்த இருப்பையும்விட்டு, ஒரு விபீஷணாழ்வான் மூலமாக உபயகாவேரீ மத்யத்திலே அடியோங்களுக்கு ஸேவை ஸாதித்துக் கொண்டு இன்பம் பயக்குமிது என்னே! என்று ஈடுபடுகிறார். (விபீஷணேநைவ புரஸ்க்ருதேந) புரஸ்க்ருதேந விபீஷணேந என்று அந்வயிப்பது. வானர முதலிகள் திரண்டு விரோதித்தவளவிலும் ஒரு தலை நின்று ஸ்வகோஷ்டியில் புரஸ்காரம் அடைவிக்கப் பெற்ற விபீஷணாழ்வானாலே என்றபடி. அந்த மஹாநுபாவன் ஆற்றங்கரையிலே இங்ஙனே ஒரு தண்ணீர்ப்பந்தல் வைத்துப்போனானென்று அவனுடைய பரமதார்மிகத்வத்தைக் கொண்டாடுகிறபடி. (குணைர்தரித்ராணமிமம் ஜநம்) எம்பெருமானை ஆழ்வான் ஸ்வஸத்ரு ச தரித்ரம் என்றார். இவர் தம்மை குணைர்தரித்ரம் என்கிறார். இவ்வகையாலே பரமஸாம்யாபத்தி இந்நிலந்தன்னிலே பெற்றபடி. குணலேசவிஹீநனான (நற்குணம் ஒன்றும் இல்லாத) அடியேனை என்றவாறு. –

ஸ்ரீராமபிரான் மைதிலியோடு ஸ்ரீரங்கநாதனை ஆராதனம் பண்ணின வைபவத்தை “ஸஹ பத்ந்யா விசாலாக்ஷ்யா நாராயண முபாகமத்” என்று ஸ்ரீராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீவிபீஷணாழ்வானுக்குத் தக்க பரிசு ஒன்றை தந்திட விரும்பிய சக்ரவர்த்தி திருமகன் தம்முடைய குலதனமான ஸ்ரீரங்க விமானத்தைக் அவனுக்குக் கொடுத்தருளினார். ஸ்ரீவிபீஷணாழ்வானும் ஸ்ரீரங்கவிமானத்தைத் தன்னுடைய தலையிலே எழுந்தருளப் பண்ணிக்கொண்டு இரண்டு திருக்காவிரி நடுவிலே சந்திரபுஷ்கரணி கரையிலே கொண்டுவந்து தர்மவர்மாவிடம் சேர்ப்பித்தான்.  வால்மீகி ராமாயணம் உத்திரகாண்டத்தில் விபீஷணன் ஸ்ரீராமனிடமிருந்து அவனுடைய குலதனமாகிய ஸ்ரீரங்கவிமானத்தைப் பெற்று வந்தார் என்று கூறப்படுகிறது.

“கிஞ்சாந்யத் வக்துமிச்ச்சாமி ராக்ஷஸேந்த்ர மஹாபல, ஆராதய ஜகந்நாதம் இக்ஷ்வாகுகுலதைவதம்” – என்று உத்திர ஸ்ரீராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பாத்ம புராணத்தில் யாவத் சந்த்ரச்ச ஸூர்யச்ச யாவத் திஷ்ட்டதி மேதிநீ, தாவத் ரமஸ்வராஜ்யஸ்த்த: காலே மம பதம் வ்ரஜ, இத்யுக்த் வா ப்ரததௌ தஸ்மை ஸ்வவிச்லேஷா ஸஹிஷ்ணவே, ஸ்ரீரங்கசாயிநம் ஸ்வார்ச்சயம் இஷ்வாகு குலதைவம், ரங்கம் விமாந மாதாய லங்காம் ப்ராயாத் விபீஷண: என்றும் தெளிவாக உள்ள வசநங்கள் மஹேச தீர்த்தாதிகளான ஸ்ரீராமாயண வ்யாக்யாதாக்களாலே உதாஹரிக்கப்பட்டவை. “மன்னுடைய விபீடணற்காய் மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்க்கண்வைத்த, என்னுடைய திருவரங்கற் கன்றியும்” என்றார் பெரியாழ்வாரும்.

திருவாலங்காடு, திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலச் செப்பேடுகள் சோழர்கள் மனுகுல வம்சத்தவர்கள் என்று குறிப்பிடுகின்றன. சோழர்களின் முன்னோர்களாக இக்ஷ்வாகு, சிபி, பகீரதன், வளவன் ஆகியோரை இந்தச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

இக்ஷ்வாகுவின் வம்சத்தினர் சோழர்கள் என்பதை உறுதிப்படுத்தும் வண்ணம் வசிட்டர் இக்ஷ்வாகுவை நோக்கிக் கூறும் போது  “விபீஷணனால் கொண்டு செல்லப்படும் விமானம் காவிரி தீரத்திலுள்ள சந்திரபுஷ்கரிணியை அடையும். அங்கு உம்முடைய வம்சத்தினராகிய சோழ அரசர்களால் ஆராதிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

நிஹமாந்தமஹாதேசிகன் அருளிச் செய்துள்ள ‘ஹம்ஸஸந்தே†ம்’ என்னும் நூலில் ‘ஸ்ரீரங்கம் என்னும் பெயர் பெரிய பெருமாள் இங்கு எழுந்தளிய பிறகு ஏற்பட்டது. அவர் இவ்விடத்திற்கு வருமுன் சேஷபீடம் என்ற பெயர் இவ்வூருக்கு வழங்கி வந்தது. சந்திரபுஷ்கரணிக்கு அருகில் அச்சேஷபீடம் அமைந்திருந்தது. ஸ்ரீரங்க விமானம் அங்கு வந்ததற்குப் பின் ஸ்ரீரங்கம் என்ற பெயர் ஏற்பட்டது” போன்ற செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சேஷபீடத்தைப் பற்றி அந்நூலில் “அழகிய தோழனே, அந்தச் சந்திரபுஷ்கரணிக் கரையில் சேஷபீடம் என்ற ஓர் அடித்தளம் உள்ளது. அதை அங்குள்ள மனிதர்கள் சேவித்துக் கொண்டிருப்பார்கள். நீயும் மிக்க ஸ்ரத்தையுடன் உன் உடலை நன்கு குனிய வைத்துக்கொண்டு அந்தப் பீடத்தை வணங்க வேண்டும். அந்தப் பீடத்தை வணங்கக் காரணம் உள்ளது. இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த எங்களின் பரம்பரைச் சொத்தாக உள்ள ஸ்ரீரங்கவிமானம் நெடுங்காலமாக அயோத்தியில் எழுந்தருளியுள்ளது. அந்த விமானம் பிற்காலத்தின் அந்த சேஷபீடத்தின்மேல் அமரப்போவதாக மஹரிஷிகள் கூறியுள்ளார்கள்” என்று இலங்கையில் இருக்கும் சீதையிடம் அன்னத்தைத் தூதுவிடுமிடத்தில் அன்னத்திடம் ராமன் கூறுவதாகத் தேசிகன் கூறுகிறார்.

ஸ்ரீரங்கராஜஸ்வதவம் பூர்வ சதகத்தில் (35) ஸ்ரீபராசர பட்டர் கோயிலைச் சுற்றி ஸப்த பிரகாரங்கள் இருப்பது ஸப்த சாகரங்களை ஒக்கும் என்று அருளிச் செய்துள்ளார்.

ப்ராகாரமத்யாஜிரமண்டபோக்த்யா

ஸத்வீபரத்நாகர ரத்நசைலா >

ஸர்வம்ஸஹா ரங்கவிமாநஸேவாம்

ப்ராப்தேவ தந்மந்திரமாவிரஸ்தி >>

(யாதொரு ஸ்ரீரங்க மந்திரத்தில் திருமதிள்கள், இடைகழி, திருமண்டபங்க ளென்னும் வியாஜத்தினால் ஸப்தத்வீபங்களோடும் ஸப்த ஸாகரங்களோடும் மஹாமேருவோடுங் கூடின பூமிப் பிராட்டியானவள் ஸ்ரீரங்கவிமான ஸேவையை – அடைந்தனள் போலும்; – அந்த ஸ்ரீரங்க மந்திரம் கண்ணெதிரே காட்சி தருகின்றது.)

ஸ்ரீரங்கமந்திரம் பூமிப்பிராட்டி போன்றிருக்கிறதென்கிறார். ஸ்ரீரங்க விமானத்தை ஸேவிப்பதற்காகப் பூமிப்பிராட்டி தன் பரிவாரங்களோடு இங்கு வந்து சேர்ந்திருக்கிறாள் போலும். கடல்களும் கடலிடைத்தீவுகளும் சிறந்த மலைகளும் பூமிப்பிராட்டியின் பரிவாரங்களாம். கோயிலைச்சுற்றி ஸப்தப்ராகாரங்கள் இருப்பது ஸப்த ஸாகரங்களை ஒக்கும்; ஒவ்வொரு திருமதிலுக்கும் இடையிலுள்ள ப்ரதேசம் ஸப்த த்வீபங்கள்போலும். திருமண்டபங்கள் ரத்நபர்வதங்கள் போலும். ஆக இப்பரிவாரங்களுடனே பூமிப்பிராட்டி வந்து சேர்ந்து ஸ்ரீரங்க விமானஸேவையைப் பெற்றிருப்பதுபோல் மந்திரம் தோன்றுகின்ற தென்றாராயிற்று.

ஸ்ரீரங்க விமானத்தை நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த  ரிஷிகளும், தர்மவர்மாகிய அரசனும் விமானத்தையும், ஸ்ரீரங்கநாதனையும் சேவித்தார்கள். விபீஷணன் காவிரியில் நீராடி, பிறகு சந்திர புஷ்கரிணியிலும் நீராடிப் பெருமாளுக்கு வேண்டிய பலவிதமான புஷ்பம், தளிகை, பணியாரம் வகைகளை ஸமர்ப்பித்தான். மறுநாள் ஆதிபிரஹ்மோத்ஸவம்  ஆரம்பிக்க வேண்டிய தினம், இலங்கை சேரவேண்டுமென்றுப் பிரார்த்தித்துப் புறப்பட விரைந்தான் விபீஷணன். தர்மவர்மாவும், ரிஷிகளும் ஸ்ரீரங்க விமானத்தை விட்டுப் பிரிய மனமில்லாமல் உத்ஸவத்தைக் காவிரி தீரத்திலேயே நடத்திவிட்டு, பிறகு இலங்கை சேரலாம் என்று கேட்டுக் கொண்டதற்கேற்ப, பிரஹ்மோத்ஸவம் நடத்தப்பட்டது. இந்த உத்ஸவம்தான் இன்றும் பௌர்ணமியில் பங்குனி உத்தரத்தன்று நடைபெறுகிறது. இந்த உத்ஸவத்தின் பெயரும் ‘நம்பெருமாள் ஆதி பிரஹ்மோத்ஸவம்’ என்று இன்றும் வழக்கில் உள்ளது. உத்ஸவம் முடிந்து விபீஷணன் இலங்கைக்குப் புறப்பட்டுச் செல்ல ஸ்ரீரங்கவிமானத்தை எடுக்கப் போனான். எடுக்க முடியவில்லை. தன்னுடைய முழு பலத்தையும் கொண்டு அசைக்கமுடியாமல் பெரிய பெருமாளிடம் சென்று கதறினான்.

பெரிய பெருமாளும் விபீஷணனைத் தேற்றி, தாம் முன்பே காவிரிக்கு வரம் கொடுத்திருப்பதை அருளிச்செய்து, தனக்குக் காவிரி தீரத்தில் தங்க விருப்பமென்றும், விபீஷணனுக்கு இலங்கை அரசினையும், அளவில்லாத செல் வத்தையும், நீண்ட ஆயுளையும் ஸ்ரீராமன் கொடுத்திருப்பதால், அவைகளைப் பரிபாலித்துக் கொண்டு வரும்படி நியமித்து, தான் தெற்கு முகமாய் நோக்கி இலங்கையை எப்பொழுதும் கடாக்ஷித்து விபீஷணனுக்குச் சேவைசாதிப்பதாகச் சொல்லித் தேற்றி விபீஷணனுக்கு விடை கொடுத்தார். விபீஷணனும் தண்டனிட்டு விடை பெற்றுக் கொண்டு போய்விட்டான். அதுமுதல் தர்மவர்மா திருவாராதனம் மற்றும் உத்ஸவாதிகளைச் சிறப்பாக நடத்திக் கொண்டு வந்தான். அதற்கனுகூலமாக திருமதிள் கோபுரம், திருவீதிகள், மண்டபங்களும் கட்டிவைத்து, வெகுகாலம் ஆராதித்து மோக்ஷமடைந்தார்.

இவ்வாறு பெரிய பெருமாள் “திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையால் அடிவருடப்பள்ளி கொண்டிருக்கிற” வைபவத்தை ஆழ்வார்கள் பதின்மரும் 247 பாசுரங்களாலே மங்களாஸாசனம் செய்துள்ளனர்.

1. பொய்கையாழ்வார்

(முதல் திருவாந்தாதி)

பொய்கையாழ்வார் ஒரு பாசுரத்தால் திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

2. பூதத்தாழ்வார்

பூதத்தாழ்வார் தம்முடைய இரண்டாம் திருவந்தாதி 28, 46, 70 மற்றும் 88 ஆகிய 4 பாசுரங்களில் திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

3. பேயாழ்வார்

பேயாழ்வார் தமது மூன்றாம் திருவந்தாதி 61, மற்றும் 62 ஆகிய 2 பாசுரங்களில் திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

4. திருமழிசை ஆழ்வார்

திருமழிசை ஆழ்வார் அருளிச்செய்த பிரபந்தங்கள்  இரண்டு. அவை முறையே திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி ஆகியன. இவற்றுள் திருச்சந்தவிருத்தம் முதலாயிரத்திலும், நான்முகன் திருவந்தாதி மூன்றாம் ஆயிரத்திலும் இடம்பெற்றுள்ளன. திருச்சந்த விருத்தம் 21, 49, 50, 51, 52, 53, 54, 55, 93, 119, நான்முகன் திருவந்தாதி 3, 30, 36, 60 ஆகிய 14 பாசுரங்களால்  திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

5. நம்மாழ்வார்

நம்மாழ்வார் திருவிருத்தம் 1, திருவாய்மொழி 11, ஆக 12 பாசுரங்களால் திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

6. குலசேகராழ்வார்

குலசேகராழ்வார் பெருமாள் திருமொழியில் 31 பாசுரங்களால்  திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

7. பெரியாழ்வார்

பெரியாழ்வார், பெரியாழ்வார் திருமொழியில் 35 பாசுரங்களால்  திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

8. சூடிக்கொடுத்த நாச்சியார்

சூடிக்கொடுத்த நாச்சியார் அருளிச்செய்த நாச்சியார் திருமொழியில் 10 பாசுரங்களால்  திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

9. தொண்டரடிப்பொடியாழ்வார்

தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை 45 பாசுரங்களிலும், திருப்பள்ளியெழுச்சி 10 பாசுரங்களாலும் மொத்தம் 55 பாசுரங்களால்  திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

10. திருப்பாணாழ்வார்

திருப்பாணாழ்வார் அருளிச்செய்த அமலனாதிபிரான் 10 பாசுரங்களால்  திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

11. திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த 73 பாசுரங்களால் திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.*****

——————————-

சித்திரை விருப்பன் திருநாள்-1
1) சிருங்கேரி மடத்தைச் சார்ந்தவரான மாதவவித்யாரண்யர் என்பவரின் அருளாசியுடன் கி.பி. 1336ஆம் ஆண்டு விஜயநகர சாம்ராஜ்யம் துங்கபத்ரா நதிக்கரையில் நிறுவப்பட்டது. அதன் தலைநகரமாக ஹம்பி விளங்கியது.
2) விஜயநகரசாம்ராஜ்யத்தைத் தோற்றுவித்தவர்கள் சங்கமனுடைய இரு குமாரர்களான முதலாம் ஹரிஹரரும், புக்கரும் ஆவர். புக்கரின் புதல்வர்களில் ஒருவர் வீரகம்பண்ண உடையார்.
3) இந்த வீர கம்பண்ண உடையாரே, செஞ்சி மன்னனான கோணார்யன், சாளுவ மங்கு ஆகியோருடைய உதவியுடன் அழகிய மணவாளனை (கி.பி. 1371ஆம் ஆண்டு) பரீதாபி ஆண்டு வைகாசி மாதம் 17ஆம் நாள் 48ஆண்டுகள் கழிந்து மீண்டும் ப்ரதிஷ்டை செய்தான். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டு ( அ.கீ. Nணி. 55/1892) ராஜமஹேந்திரன் திருச்சுற்றின் கிழக்குப் பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளது.
4) அழகிய மணவாளன் ‘நம்பெருமாள்’ என்ற சிறப்புத்திருநாமத்தைப் பெற்றது கி.பி.1371ஆம் ஆண்டிற்குப் பிறகுதான். அந்தத் திருநாமம் ஈரங்கொல்லி என்று அழைக்கப்படும் ஒரு வண்ணானால் அளிக்கப்பட்டது.
5) முதலாம் புக்கரின் பேரனும் 2ஆம் ஹரிஹர ராயரின் மகனும், ராம பூபதியின் பெண் வயிற்றுப் பேரனுமாகிய விருபாக்ஷன் எனப்படும் விருப்பண்ண உடையார் நம்பெருமானால் மீண்டும் ப்ரதிஷ்டை கண்டருளிய ரேவதி நக்ஷத்ரத்தில் திருத்தேர் உத்ஸவம் ஏற்படுத்தி வைத்தான்.
6) இந்த விருபாக்ஷன் எனப்படும் விருப்பண்ண உடையாரின் வளர்ப்புத்தாயான கண்ணாத்தை என்பாள் இந்த உத்ஸவம் நடைபெறுவதற்கு பொற்காசுகள் தந்தமை கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன.
7) கி.பி. 1371ஆம் ஆண்டு அழகிய மணவாளன் ஆஸ்தானம் திரும்பிய போதிலும் ப்ரணவாகார விமானமும் பெரும் பாலான மண்டபங்களும் கோபுரங்களும் பாழ்பட்ட நிலையில் காணப்பட்டன. விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்கள், குறுநில மன்னர்கள், படைத்தளபதிகள் ஆகியோருடைய உதவி கொண்டு இந்தக் கோயிலை மீண்டும் புனர்நிர்மாணம் செய்வதற்கு 12 ஆண்டுகள் ஆயின.
8) கர்ப்பக்ருஹமும் மற்றைய மண்டபங்களும் பாழ்பட்ட நிலையில் இருந்ததால் அவற்றையெல்லாம் விருப்பண்ண உடையார் துலாபாரம் ஏறி (கி.பி. 1377) தந்த பதினேழாயிரம் பொற்காசுகளைக் கொண்டு சீரமைக்கப்பெற்று கி.பி. 1383இல் 60 ஆண்டுகளுக்குப்பின் நம்பெருமாள் உத்ஸவம் கண்டருளினார்.
9) கி.பி. 1383ஆம் ஆண்டுதான் 60 ஆண்டுகளுக்குப்பிறகு பெரியதொரு விழாவான விருப்பந்திருநாள் கி.பி. 1383ஆம் ஆண்டு மே மாதம் அதாவது சித்திரை மாதத்தில் ஏற்படுத்தி வைக்கப்பட்டது.
10) தேவஸ்தான நிதிநிலைமை மிக மோசமான நிலையில் இருந்ததாலும் 60 ஆண்டுகளுக்குப் பிறகு விழா நடைபெற இருப்பதாலும் திருவரங்கத்தைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களில் உள்ள அனைவரும் தம்மால் இயன்ற தானியங்களையும், மாடு போன்ற விலங்கினங்களையும் தானமாகக் கோயிலுக்குத் தந்துதவ வேண்டுகோளின்படி பல மண்டலங்களிலிருந்த பாமர மக்கள் தங்களுடைய விளைபொருள்கள், பசுமாடுகள் ஆகியவற்றைத் தானமாகத் தர முற்பட்டனர்.
11) அதன் தொடர்ச்சியாகத்தான் நம்மால் “கோவிந்தா கூட்டம்” என்று அழைக்கப்படும் பாமர மக்கள் இன்றும் பல்வேறு  வகைப்பட்ட தான்யங்களையும் பசுமாடுகளையும் திருவரங்கநாதனுக்கு ஸமர்ப்பித்து வருகின்றனர்.
12)  கோயிலைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டவர் கிருஷ்ணராய உத்தம நம்பி. மேலும் விருப்பண்ண உடையார் 52 கிராமங்களை திருவிடையாட்டமாகத் தந்தார். அவருடன் வந்த குண்டு ஸாளுவையர் நம்பெருமாள் கொடியேற்றத்தின்போது எழுந்தருளும் மண்டபமாகிய வெண்கலத் திருத்தேர்த்தட்டினைப் பண்ணுவித்தார்.
13) தற்போது இந்த இடத்தில் மரத்தினாலான மண்டபமே உள்ளது. ஆயினும் வழக்கத்தில் கொடி யேற்றத்தின்போது நம்பெருமாள் எழுந்தருளும் இந்த மண்டபத்திற்கு வெண்கலத் தேர் என்ற பெயர் வழங்கப்படுகிறது.
14) இந்த விழாவில் கொடியேற்றத் திருநாளன்று (03.05.2010 திங்கட்கிழமை விடியற்காலை) கோயில் கணக்குப்பிள்ளை நம்பெருமாள் திருவாணைப்படி அழகிய மணவாளன் கிராமத்தை குத்தகைக்கு விட்டதாகப் பட்டயம் எழுதுதல் முக்கியமான நிகழ்ச்சியாகும்.
15) மேலும் சக்கிலியர்களில் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் ஒருவர் பெரியபெருமாளுக்கு வலது காலணியையும், மற்றொருவர் இடதுகாலணியையும் கோயில் கொட்டாரத்தில் கொண்டு வந்து சேர்ப்பர்.
16) வலது காலணியைக் கொண்டு வருபவர்க்கும் இடது காலணியைக் கொண்டு வருபவர்க்கும் எவ்விதத் தொடர்பும் இருக்காது. அவரவர்களுக்குப் பெரியபெருமாள் காட்டிக் கொடுத்த அளவில் காலணியைக் கொண்டுவந்து சேர்ப்பர்.

———-

நித்தியப்படி ஏற்பட்ட முதல் திருவாராதனமான பொங்கல் நிவேதனமானதும், நம்பெருமாள் புறப்பட்டு, யாகசாலை வாசலில் பலவிதப் புஷ்பங்களை ஏராளமாகப் பரப்பி அதன் மேல் நின்றவாறே கந்தாடை ராமானுசனுக்கும் (தற்போது இந்தப் பட்டத்தை யாரும் அலங்கரிக்கவில்லை) சாத்தாதவர்களுக்கும் ஸேவை மரியாதைகளை அனுக்ரஹிப் பார். நம்பெருமாள் யாகசாலை எழுந்தருளியதும் திருவாரா தனம். இங்கு வேதபாராயணம் பண்ணும் பாத்தியமுள்ள தென்கலையார் வந்து பாராயணம் தொடங்கும் போது திருவாராதனம் ஆரம்பிக்கப்படும். பவித்திரோத்ஸவம் நித்திய பூஜா லோபத்துக்காக ஏற்பட்டதாகையால், இன்றைய திருவாராதனத்தின் முடிவில் ஒவ்வொரு அர்கிய பாத்தியத் துக்கு ஒரு தீபமாக 360 ஆவ்ருத்தி தீபாராதனம் நடக்கும். 360 ஆவ்ருத்தி தீபாராதனம் முடிவதற்கு நாலு மணி நேரத்துக்கு மேலாகும். அதுவரையிலும் வேதபாராயணம் இடைவிடா மல் நடந்து கொண்டிருக்கும்.
முதலில் நாராயண உபநிஷத்து தொடங்கிப் பிறகு சந்தோமித்ர;,(சரிபார்க்க) அம்பஸ்ய பாரே என்ற உபநிஷத்து பாகமும் அச்சித்ர அச்வமேதங்களும் பாராயணம் செய்யப்படும். திருவாராதனம் ஆனபிறகு திருமஞ்சனமும் தளிகை நிவேதனமும் நடந்து பஞ்சகுண்ட ஹோமம் நடக்கும். ரக்ஷா பந்தனமாகி உத்ஸவருக்கெதிரே வேதபாராயணத்துடன் பவித்திரப் பிரதிஷ்டையாகும். பவித்திரத்தை ஸ்வஸ்தி வாசனத்துடன் பெரிய பெருமாளிடம் கொண்டு போய் முதலில் அவருக்கும், பிறகு எல்லா மூர்த்திகளுக்கும் திருமார்பு பவித்திரம் சாற்றப்படும். தீர்த்த விநியோகமானதும் நம்பெருமாள் யாக சாலையிலிருந்து உள்ளே எழுந்தருளுவார். பிறகு யாகசாலையில் எழுந்தருளப் பண்ணப்படும் திருவரங்க மாளிகையார் உத்ஸவம் முடியும் வரையில் அவ்விடத்திலேயே எழுந்தருளியிருப்பார்.

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ரெங்கம் கோயில் நிர்வாஹகராயும் ரக்ஷகராயும் இருந்தருளிய ஸ்ரீ உத்தம நம்பி வம்ச ப்ரபாவம் —

October 27, 2022

ஸ்ரீ ரெங்கம் கோயில் நிர்வாஹகராயும் ரக்ஷகராயும் இருந்தருளிய ஸ்ரீ உத்தம நம்பி வம்ச ப்ரபாவம்

ஸ்ரீ உத்தம நம்பி பரம்பரைக்கு கூடஸ்தர் ஸ்ரீ பெரிய திருவடி ஐயன் உத்தம நம்ப ஸ்ரீ பெரியாழ்வாருடைய திருப்பேரானார்
ஸ்ரீ பெரியாழ்வார் முதல் 90 தலைமுறையில் இருந்த உத்தம நம்பிகளின் வைபவம் காணப்படுகிறது

பெரியாழ்வார் தம்முடைய திரு மகளாரான ஆண்டாளை ஸ்ரீ ரெங்கநாதனுக்கு பாணி கிரஹணம் பண்ணிக் கொடுத்து
ஸ்ரீ ராமாண்டார் என்னும் திருக்குமாரரும் தாமுமாக அவளை திரு ஆபாரணங்கள் முதலிய வரிசைகளுடன் ஸ்ரீ கோயிலிலே கொண்டு விட
அவள் பெரிய பெருமாள் திருவடிகளில் ஐக்கியமாக –பெரிய பெருமாள் திரு உள்ளம் உகந்து அவளது ஐயரான பெரியாழ்வாரை ஐயன் என்றும்
அவரது திருக் குமாரரான ராமாண்டானை பிள்ளை ஐயன் என்றும் அருளப்பாடிட்டு அழைத்து தீர்த்தம் பறியாட்டங்களை ப்ரஸாதித்து அருளி
தம்முடைய ஆதீனங்களை நிர்வஹித்துக் கொண்டு சொத்துக்களுக்கு எல்லாம் கருட முத்ரை இடச்சொல்லி ஸ்ரீ ரெங்கத்திலேயே நித்ய வாஸம் பண்ணும்படி நியமித்து அருளினார் –

பெரியாழ்வார் பெரிய திருவடி நாயனார் குலத்திலே முகுந்த பட்டருக்கு திருக்குமாரராக
கலி பிறந்த 46 மேல் செல்லா நின்ற க்ரோதன நாம ஸம்வத்சரத்திலே -ஆனி மாஸம் -9 தேதி ஸ்வாதி திரு நக்ஷரத்திலே திரு அவதரித்தார்
கலி -105-ஸம்வத்ஸரத்தில் -அரங்கன் ஆண்டாள் திருக்கல்யாணம் -அதுக்கு எழுந்து அருளப் பண்ணி வந்த
பெரிய திருவடியும் ஆண்டாளும் அரங்கனுக்கு சேர்ந்தே இன்றும் ஸேவை ஸாதித்து அருளுகிறார்
ஆகவே தான் கருட முத்ரை இலச்சினை செய்ய அரங்கன் அருளிச் செய்தார்
இன்றும் கோயில் கருவூல அறைக்கும் திரு ஆபரண பெட்டிகளுக்கும் உத்தம நம்பியை முத்ர அதிகாரியாக்கி கருட முத்ரையே வைக்கப்படுகிறது

பெரியாழ்வார் திருக்குமாரரான ராமாண்டரான பிள்ளை ஐயன் அவர்களின் திருக்குமாரர் பெரிய திருவடி ஐயன் –
இவரைப் பெருமாள் உத்தம நம்பிள்ளை என்று அருளப்பாடிட்டு அழைத்தார்
பிள்ளை ஐயன் திருக்குமாரரான உத்தம நம்பிள்ளைக்கு -பிள்ளை ஐயன் உத்தம நம்பி என்ற பட்டப்பெயர் ஆயிற்று
அவரது திரு மாளிகை ஐயன் திருமாளிகை என்று வழங்கப்பட்டு வருகிறது –

———————————

வம்ஸ பரம்பரை

1-பெரியாழ்வார் -ஐயன் -110 வருஷங்கள்
2-ராமாண்டார் -பிள்ளை ஐயன் -70 வருஷங்கள்
3-பெரிய திருவடி ஐயன் உத்தம நம்பிள்ளை -(1)-பிள்ளை ஐயன் உத்தம நம்பி-60 வருஷங்கள்
4-திருமலை நாத ஐயன் உத்தம நம்பி -(1)-50 வருஷங்களுக்கு 4 மாதங்களும் 16 நாள்களும்
5-பெரிய திருவடி ஐயன் உத்தம நம்பி -(2)-65-வருஷங்கள்

6-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி -(1)-50 வருஷங்கள்
7-பெரிய ஐயன் உத்தம நம்பி -(1)-40 வருஷங்கள் 2 மாதங்கள் -14 நாள்கள்
8-பெரிய திருவடி ஐயன் உத்தம நம்பி -(3)-50 வருஷங்கள்
9-சின்ன ஐயன் உத்தம நம்பி -(1)-69- வருஷங்கள்
10-அநந்த ஐயன் உத்தம நம்பி -(1)-60-வருஷங்கள்

11-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி -(2)-50-வருஷங்கள்
12-ஸ்ரீ ரெங்க நாத உத்தம நம்பி -(1)-70-வருஷங்கள்
13- வரதராஜ உத்தம நம்பி -(1)-60 வருஷங்கள் -1 மாதம் -15-நாள்கள்
14-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி -(3)-60-வருஷங்கள்
15-திருமலை நாதன் ஐயன் உத்தம நம்பி -(2)-59-வருஷங்கள்

16-பெரிய ஐயன் உத்தம நம்பி -(2)-50-வருஷங்கள்
17-குழந்தை ஐயன் ஸ்ரீ ரெங்க ராஜ உத்தம நம்பி -(1)-99-வருஷங்கள்
18-அநந்த ஐயன் உத்தம நம்பி -(2)-70-வருஷங்கள்
19-ஸ்ரீ ரெங்க ராஜ உத்தம நம்பி -(1)-60-வருஷங்கள்
20-திருமலை நாதன் ஐயன் உத்தம நம்பி -(3)-56-வருஷங்கள் -3 மாதங்கள் -3 நாள்கள்

21-வரதராஜ உத்தம நம்பி -(2)-57-வருஷங்கள்
22-ஸ்ரீ ரெங்கநாத உத்தம நம்பி -(2)-67-வருஷங்கள்
23-அநந்த ஐயன் உத்தம நம்பி -(3)-62-வருஷங்கள்
24-சின்ன ஐயன் உத்தம நம்பி -(2)-59-வருஷங்கள்
25-திருமலை நாத உத்தம நம்பி -(1)-65-வருஷங்கள்

26-முத்து ஐயன் உத்தம நம்பி என்கிற ரெங்கராஜ உத்தம நம்பி -(2)56-வருஷங்கள்
27-தெய்வ சிகாமணி ஐயன் உத்தம நம்பி -(1)-70 வருஷங்கள்
28-ஸ்ரீ ரெங்கராஜ உத்தம நம்பி -(3)-66-வருஷங்கள்
29-வரதராஜ உத்தம நம்பி -(3)-59 வருஷங்கள் -ஐந்து மாதங்கள் 4 நாள்கள்
30-அநந்த ஐயன் உத்தம நம்பி -(4)-55 வருஷங்கள்

31-ஸ்ரீ ரெங்க நாத உத்தம நம்பி -(3)-65 வருஷங்கள்
32-பெரிய பெருமாள் உத்தம நம்பி -70 வருஷங்கள் -9 மாதங்கள் -25 நாள்கள்
33-பெரிய திருவடி ஐயன் உத்தம நம்பி -(4)-60 வருஷங்கள்
34-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி -(4)-61 வர்ஷன்கள் -7 மாதங்கள் -1 நாள்
35-ரகுநாத உத்தம நம்பி -(1)-55 வருஷங்கள் -3 மாதங்கள் -12 நாள்கள்

36-ஸ்ரீ நிவாஸ உத்தம நம்பி -(1)-53 வருஷங்கள் -2 மாதங்கள்
37-அனந்த ஐயன் உத்தம நம்பி -5-60 வருஷங்கள்
38-வரதராஜ உத்தம நம்பி–(4-)49 வருஷங்கள்
39- ஸ்ரீ ரெங்க உத்தம நம்பி -61- வருஷங்கள் -3 மாதங்கள் -9 நாள்கள்
40-கிருஷ்ண ஐயன் உத்தம நம்பி -(1)-61 வருஷங்கள்

41-திருவேங்கட நாத ஐயன் உத்தம நம்பி -(1)-57 வருஷங்கள் -2 மாதங்கள் -8 நாள்கள்
42-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி (5)–30 வருஷங்கள்
43-பெரிய திருவடி ஐயன் உத்தம நம்பி (5)–44 வருஷங்கள்
44-ஸ்ரீ ரெங்கராஜ உத்தம நம்பி (4)–30 வருஷங்கள் 3 மாதங்கள் 3 நாள்கள்
45-திருமலை நாதன் ஐயன் உத்தம நம்பி (4)-40 வருஷங்கள்

46-குமார வரதராஜ ஐயன் உத்தம நம்பி (5)-50 வருஷங்கள் -9 மாதங்கள் –
47-ஸ்ரீ நிவாஸ உத்தம நம்பி (2 )-49 வருஷங்கள்
48-ரெங்கநாத உத்தம நம்பி (5)–59 வருஷங்கள்
49-திருவேங்கட நாத ஐயன் உத்தம நம்பி (2)-42 வருஷங்கள் -6 மாதங்கள் -9 நாள்கள்
50-பெருமாள் ஐயன் உத்தம நம்பி -58 வருஷங்கள் -3 மாதங்கள் -13 நாள்கள்

51-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி (6) –47 வருஷங்கள் -2 மாதங்கள் -5 நாள்கள்
52-கிருஷ்ண ஐயன் உத்தம நம்பி (@) 49 வருஷங்கள்
53-திருமலை நாத ஐயன் உத்தம நம்பி (5) 56 வருஷங்கள் நான்கு மாதங்கள் 7 நாள்கள்
54-திருவேங்கட நாத ஐயன் உத்தம நம்பி (3) 57 வருஷங்கள்
55-ஸ்ரீ ரெங்கநாத உத்தம நம்பி (6)-37 வருஷங்கள் 10 மாதங்கள்

56-திருவடி ஐயன் உத்தம நம்பி -62 வருஷங்கள்
57-சொல் நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பி என்னும் நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி (7)-53 வருஷம் -237 நாள்கள்
58-சின்ன ஐயன் உத்தம நம்பி (3)-37 வருஷங்கள்
59-ஸ்ரீ ரெங்கநாத உத்தம நம்பி (7)-49 வருஷங்கள்
60-திருவேங்கட நாத ஐயன் உத்தம நம்பி (4) 61 வருஷங்கள் 2 மாதங்கள் 3 நாள்கள் –

61-ஸ்ரீ நிவாஸ உத்தம நம்பி (3) 55 வருஷங்கள்
62-ரகுநாத உத்தம நம்பி (2) 38 வருஷங்கள்
63-ஸ்ரீ ரெங்கநாத உத்தம நம்பி (8) 50 வருஷங்கள்
64-கோவிந்த ஐயன் உத்தம நம்பி -39 வருஷங்கள்
65-தெய்வ சிகாமணி ஐயன் உத்தம நம்பி (2) 66 வருஷங்கள் 3 மாதங்கள் 7 நாள்கள்

66-வரதராஜ உத்தம நம்பி (6)–59 வருஷங்கள்
67-ஸ்ரீ ரெங்க நாத உத்தம நம்பி (9) 50 வருஷங்கள்
68-அநந்த ஐயன் உத்தம நம்பி (6) 56 வருஷங்கள் 2 மாதங்கள் 10 நாள்கள்
69-கிருஷ்ண ஐயன் உத்தம நம்பி (3) 56 வருஷங்கள் 2 மாதங்கள் 17 நாள்கள்
70-பெரிய ஐயன் உத்தம நம்பி (3)60 வருஷங்கள்

71-ஸ்ரீ ரெங்கநாத உத்தம நம்பி (10)-52 வருஷங்கள்
72-திருவேங்கட நாத ஐயன் உத்தம நம்பி (5)63 வருஷங்கள்
73-பெரிய ஐயன் உத்தம நம்பி (5) 67 வருஷங்கள் 1 மாதம் 1 நாள்
74-மஹா கவி ஸ்ரீ நிவாஸ உத்தம நம்பி (4)-கருட வாஹந பண்டிதர் -கவி வைத்ய புரந்தரர் -69 வருஷங்கள்
75-ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி (1)43 வருஷங்கள்

76-வரதாச்சார்ய உத்தம நம்பி –40 வருஷங்கள்
77-ராமாநுஜர்சார்ய உத்தம நம்பி -53 வருஷங்கள் இ மாதம் 7 நாள்கள்
78-ஸ்ரீ நிவாசார்ய உத்தம நம்பி (1)-31 வருஷங்கள்
79-எல்லை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பி என்கிற கிருஷ்ண ராய உத்தம நம்பி –79 வருஷங்கள்
80-வழி அடிமை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பி என்கிற ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி(2) -68 வருஷங்கள்

81-ராஜாக்கள் பெருமாள் உத்தம நம்பி என்கிற கிருஷ்ணமாச்சார்ய உத்தம நம்பி -72 வருஷங்கள்
82-திருமலை நாத உத்தம நம்பி (2) 67 வருஷங்கள்
83-குடல் சாரவாளா நாயனார் என்கிற சின்ன க்ருஷ்ணராய உத்தம நம்பி –52 வருஷங்கள் 1 மாதம் 8 நாள்கள்
84-பெரிய திருவடி ஐயன் உத்தம நம்பி (6) 53 வருஷங்கள்
85-குழந்தை ஐயன் ஸ்ரீ ரெங்கராஜா உத்தம நம்பி (2) 40 வருஷங்கள்

86-ஸ்ரீ நிவாசார்ய உத்தம நம்பி (2) 40 வருஷங்கள்
87-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி (8) 45 வருஷங்கள் 7 மாதங்கள்
88-ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி (3)
89-ஸ்ரீ நிவாசார்ய உத்தம நம்பி (3) 18 வருஷங்கள்
90-உத்தம நம்பி ஸ்ரீ ரெங்காச்சார்யார் -ஸ்வீ காரம்

91- உத்தம நம்பி ஸ்ரீ நிவாசார்யர்
92-உத்தம நம்பி ஸ்ரீ ரெங்காச்சார்யர்
93-உத்தம நம்பி தாதாச்சாரியர்
94-உத்தம நம்பி சடகோபாச்சார்யர்

——————-

இவர்கள் செய்து அருளின கைங்கர்யங்கள்-

3-முதல் முதலாக ஸ்ரீ ரெங்க ஸ்ரீ நிர்வாஹம்
4- தேவராஜ மஹா ராஜர் மூலமாய் -முத்துக்குடை தங்க ஸிம்ஹாஸனம் போன்றவை சமர்ப்பித்தார்
11- நவரத்ன அங்கி சமர்ப்பித்தார்
13– நவரத்ன கிரீடம் சமர்ப்பித்தார்
15- தங்க வட்டில்கள் சமர்ப்பித்தார்
21- வெள்ளிக்குடம் சமர்ப்பித்தார்
27- கோபுர மண்டப பிரகார ஜீரண உத்தாரணம் பண்ணினார்
28- ஸ்தலத்துக்கு வந்த இடையூறுகளைத் தீர்த்தார்
35-த்வஜ ஆரோஹண மண்டப ஜீரண உத்தாரணம் பண்ணினார்
39- திரு ஆபரணங்கள் சமர்ப்பித்தார்
47-திரு ஆபரணங்கள் சமர்ப்பித்தார்
54- பெருமாள் உபய நாச்சிமார்களுக்கு தங்கக் கவசங்கள் கிரீடங்கள் சமர்ப்பித்தார்
ஸ்ரீ ரெங்க நாச்சியாருக்கும் கவசம் கிரீடம் சமர்ப்பித்தார்

57-இவர் காலத்தில் தேசாதிபதியான பிரபு ஸ்ரீ ரெங்க நாச்சியாரைத் திரு வீதி எழுந்து அருளப் பண்ணி உத்சவம் நடத்த வேணும் என்று சொல்ல
இவர் கூடாது என்ன
பிரபுவும் அப்படியே நடத்த வேணும் என்று பலவந்தம் பண்ண
கழுத்தை அறுத்துக் கொண்டார்
உடனே தாயார் அர்ச்சக முகேந ஆவேசமாகி தமக்கு விருப்பம் இல்லாமையை அறிவித்து தடை செய்தாள்
நாச்சியாரால் இவரது சொல் நிலை நாட்டப்பட்டது படியே இவருக்கு இது பட்டப்பெயர் ஆயிற்று

63- நாச்சியார் கோயில் சந்தன மண்டபம் முதலியவற்றை ஜீரண உத்தாரணம் பண்ணினார்
64- பெருமாள் சந்நிதி வாசலுக்கும் அதற்கு உட்பட்ட திரு அணுக்கன் திரு வாசலுக்கும் தங்கம் பூசவித்தார்
70-ஆதி சேக்ஷனுடைய சிரஸ் ஸூ க்களுக்கு தங்கக் கவசம் சமர்ப்பித்தார்

74- கருட வாஹந பண்டிதர்
இவர் ஸ்ரீ ராமானுஜர் காலத்தவர்
ஸ்ரீ நிவாஸ உத்தம நம்பி இவர் திரு நாமம்
இவர் சிறந்த கவியாய் இருந்ததால் ஸ்ரீ நிவாஸ மஹா கவி என்றும்
சிறந்த வைத்தியராயும் இருந்ததால் கவி வைத்ய புரந்தரர் என்றும் சொல்லப் படுபவர்

உடையவரை பெரிய பெருமாள் நியமனப்படி எதிர்கொண்டு அழைத்து -வரிசைகளை சமர்ப்பித்தார்
அவருக்கு அந்தரங்க கைங்கர்ய பரராயும் இருந்தார்

இவரையே பெரிய பெருமாள் பெரிய அவஸர அக்கார அடிசிலை கூரத்தாழ்வான் திருமாளிகைக்கு கொண்டு கொடுக்க நியமித்து அருள
அதில் இரண்டு திரளை ஸ்வீ கரித்து ஸ்ரீ பராசர பட்டரும் ஸ்ரீ ராமப்பிள்ளையும் அவதரித்தார்கள்

முதலியாண்டான் தத்தியானத்துடன் நாவல் பழம் சமர்ப்பிக்க -இவரைக் கொண்டே தன்வந்திரி சாந்நித்தியை ப்ரதிஷ்டிப்பித்து அருளினார்

இவரே திவ்ய ஸூரி சரிதம் பிரசாதித்து அருளினார்

75-ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி

கருட வாகன பண்டிதருக்குப் பின்பு ஸ்ரீ ரெங்க ஸ்ரீ கார்யம் நிர்வஹித்தவர்-உடையவர் திரு நாட்டுக்கு எழுந்து அருளியது இவர் காலத்திலேயே –
உடையவர் இருக்கும் பொழுதே கருட வாஹந பண்டிதர் திரு நாட்டுக்கு எழுந்து அருளி விட்டார்
ஆகவே திவ்ய ஸூரி சரிதம் உடையவர் திரு நாட்டை அலங்கரித்தது பற்றிக் குறிப்பிட வில்லை
உடையவரின் சரம கைங்கர்யங்களை செய்தவர் இவரே

79-எல்லை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பி என்ற கிருஷ்ண ராயர் உத்தம நம்பி

இவர் காலத்துக்கு முன் கி பி 1310 ல் மாலிக் கபூர் படை எடுத்து ஸ்ரீ ரெங்கத்தைப் பாழ் படுத்தினான் –
செஞ்சி ராஜா கொப்பண உடையார் திருமலையில் இருந்து எழுந்து அருளப்பண்ணி செஞ்சியிலேயே பூஜை பண்ணிக் கொண்டு இருந்தார்
கிபி 1371ல் இந்த கிருஷ்ணராய உத்தம நம்பி விஜயநகர ராஜாவைக் கொண்டு துலுக்கப் படையை ஜெயித்து விரட்டிவிட்டு
விஜய நகர இரண்டாம் அரசரான புக்க ராயர் -அவரது குமாரரான ஹரிஹராயர் இருவரையும் ஸ்ரீ ரெங்கத்துக்கு அழைத்து வந்தார்
செஞ்சி ராஜா கொப்பண உடையாரும் இவருக்கு உதவியாய் இருந்து துலுக்கர்களை வென்று பெருமாளை ஸ்ரீ ரெங்கத்துக்கு எழுந்து அருளிப் பண்ணிக் கொண்டு வந்தார்
புக்கராயர் காலத்தில் கன்யாகுமரி வரை ராஜ்ஜியம் பரவி இருந்தது
சோழ பாண்டிய மன்னர்கள் இவருக்குக் கப்பம் செலுத்தி வந்தார்கள்

இந்த கிருஷ்ண ராய உத்தம நம்பியால் மேல் உள்ள அரசர்களால் தாராதத்தமாக 17000 பொன் தானம் பெற்று கோயிலுக்கு 106 கிராமங்கள் வாங்கப் பட்டன
மேலும் சகாப்தம் 1304-கிபி 1382-மேல் -ருதி ரோத்காரி வருஷம் முதல் ஈஸ்வர வருஷம் வரையில்
ஹரிஹர ராயர் மஹா ராயர் -விருப்பண உடையார் -கொப்பண உடையார் -முத்தய்ய தென்நாயகர் -தம்மண்ண உடையார் -பிரதானி சோமப்பர் -காரியத்துக்கு கடவ அண்ணார்
முதலானார்கள் இடம் 5000பொன் வாங்கி அதன் மூலம் 13 க்ராமங்கள் வாங்கப்பட்டன –
சகாப்தம் 1207-கிபி 1375-ல் திருவானைக் காவலுக்கும் ஸ்ரீ ரெங்கத்துக்கும் எல்லைக் சண்டை உண்டாகி -விஜய நகர மன்னர் அறிந்து அவர் தம் குருவான வ்யாஸ உடையார் முதலானவர்களை மத்தியஸ்தம் பண்ண அனுப்பினார்
பெருமாளுக்கு ஸ்தான அதிபதியான உத்தம நம்பி ஈரப்பாவாடை உடுத்தி கையில் மழு ஏந்தி கண்ணைக் கட்டிக்கொண்டு எந்த வழி போகிறாரோ அந்த வழியே பெருமாளும் எழுந்து அருள வேண்டியது என்று மத்யஸ்த்தர்கள் நிச்சயித்தார்கள் –
திருவானைக்காவலாரும் அதை சம்மதிக்க அஷ்டாக்ஷர மந்த்ரத்தை ஜபித்துக் கொண்டு எல்லை ஓடியதால்
இவருக்கு எல்லை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பி என்ற பட்டப்பெயர் ஆயிற்று
தான் எல்லை ஓடி நின்ற இடத்தில் 16 கால் மண்டபமும் இரண்டொரு சிறு மண்டபங்களும் இவர் கட்டி வைத்தார்
பெருமாள் நாச்சிமார்களுடைய ஒவ்வொரு உத்சவத்தின் கடைசி நாளில் இன்றைக்கும் திருத்தாழ்வாரை தாசர் விண்ணப்பம் செய்யும் திருப்பணிப்பு மாலையில் உத்தம நம்பிக்க ஏற்பட்ட
மல்ல நிலையிட்ட தோள் அரங்கேசர் மதிளுள் பட்ட
எல்லை நிலையிட்ட வார்த்தையும் போல் அல்ல -நீதி தன்னால்
சொல்லை நிலையிட்ட உத்தம நம்பி குலம் தழைக்க
எல்லை நிலையிட்ட வார்த்தை எல்லோருக்கும் எட்டு எழுத்தே –என்ற பாசுரத்தில்
எல்லை நிலை இடுகைக்கு ஆதாரமாய் இருந்த அஷ்டாக்ஷரத்தின் சிறப்பும்
59 வது உத்தம நம்பி ஸ்ரீ ரெங்க நாச்சியார் அனுக்ரஹத்தால் தம்முடைய சொல்லை நிலையிட்ட விவரமும் தெரிகிறது

இப்போது உள்ள ஸ்ரீனிவாச நகர் பள்ளிக்கூடமே முன்பு 16 கால் மண்டபமாக இருந்த இடம் –
பங்குனி 8 நாள் எல்லைக்கரை நம்பெருமாள் எழுந்து அருளும் போது
இப்போதும் அங்கே வெறும் தரையில் உத்தம நம்பி ஐயங்கார் வ்யாஸ ராய மடத்தார் முதலானோர் பெற்றுக் கொள்கிறார்கள் –

இந்த கிருஷ்ணராய உத்தம நம்பி விஜய நகர அரசர் புக்க உடையார் உதவியுடன் துலா புருஷ மண்டபம் கட்டி வைத்தார்
ஹரிகர ராயர் விருப்பண்ண உடையார் துலா புருஷன் ஏறிக் கொடுத்த பொன்னைக் கொண்டு ரெங்க விமானத்தைப் பொன் மேய்ந்தார்
நம்பெருமாளும் அப்போது செஞ்சியில் இருந்து எழுந்து அருளினார்
விருப்பண்ண ராயர் பெயரில் சித்திரை திரு நாள் நடத்து வைத்து ரேவதியின் திருத்தேர் -செய்ததும் இந்த உத்தம நம்பியே

துலுக்கர் கலஹத்தில் யானை ஏற்று மண்டபம் ஜீரணமாக இந்த உத்தம நம்பி ஜீரண உதாரணம் பண்ணி வைத்தார்
யானை மேல் வைக்கப்படும் பூ மாங்குத்தி -என்ற புஷ்ப அங்குசம் உபஹார ஸ்ம்ருதியாக வாஹந புறப்பாடுக்குப் பின் இன்றும் உத்தம நம்பி பரம்பரையில் உள்ளாருக்கு அனுக்ரஹிக்கப் படுகிறது
இவர் ஹரிஹர ராயர் பேரால் திருப்பள்ளிக்கட்டில் என்னும் திவ்ய ஸிம்ஹாஸனம் சமர்ப்பித்தார்
இப்போதும் திருக் கார்த்திகை அன்று திருமுகப் பட்டயம் செல்லுகையில் –நாம் –ஹரிஹர ராயன் திருப் பள்ளிக் கட்டிலின் மேல் வீற்று இருந்து -என்றே பெருமாள் அருளிச் செய்கிறார்
இவர் கைங்கர்யங்களைப் பண்ணிக்கொண்டு 99 வருஷங்கள் இருந்து திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்

—————

80- வழி அடிமை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பி என்னும் ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி
இவர் எல்லை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பியின் திருக்குமாரர்
சகாப்தம் -1329-கிபி 1406 மேல் ஸர்வஜித்து வருஷம் முதல் பிரமோதூத வருஷம் வரையில்
44 வருஷங்களில் நான்கு தடவை விஜய நகரம் சென்று பெருமாளுக்கு திருவிடையாட்ட கிராமங்கள் வாங்க -18000 பொண்ணுக்கு 101 கிராமங்கள் வாங்கினார்
இவர் காலத்தில் பெரிய ஜீயர் -மணவாள மா முனிகள் சன்யாசித்து கோயிலுக்கு எழுந்து அருள
பெருமாள் நியமனப்படி பல்லவ ராயன் மடத்தில் எழுந்து அருளப் பண்ணினார்
இவர் ஜீயருடைய வெள்ளை திருமேனியை தரிசித்து தேற மாட்டாமல் பெருமாளை சேவித்துப் பரவசராய் இருக்க
அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் அணையான் திருவனந்த ஆழ்வானைத் தொட்டுக் காட்டி
இவர் கிடீர் ஜீயராக அவதரித்து அருளினார் – அவர் வண்ணம் வெளுப்பு என்று விஸ் வசித்து இரும் என்று அருளிச் செய்தார்
இவரும் பீத பீதராய் கோயில் அன்னான் உடன் ஜீயர் இடம் சென்று தெண்டம் சமர்ப்பித்துப் பிரார்த்திக்க
அப்பொழுது சாதித்த சேவை இன்றும் ஒரு கம்பத்தில் மேற்கு முகமாக சித்திர ரூபமாகவும் இரண்டு பக்கமும் உத்தம நம்பியும் கோயில் அண்ணனும் எழுந்து அருளி உள்ளார்கள்

ஜீயரின் நியமனம் படி அண்ணனுக்கு ஆச்சார்ய புருஷ வரிசையாக பெரிய நம்பிக்குப் பிறகு தீர்த்தமும் -கந்தாடை அண்ணன் என்ற அருளப்பாடும் உத்தம நம்பியால் ஏற்பட்டது
திருக்கார்த்திகை அன்று ஆழ்வாருக்கு திருமுகப்பட்டயம் கொண்டு போகும் தழை யிடுவார் கைங்கர்யம் -தம்முடையதாய் இருந்ததை உத்தம நம்பி அண்ணனுக்கு கொடுத்தார்
பூர்வம் வல்லப தேவன் கட்டி வைத்த வெளி ஆண்டாள் சந்நிதியையு ம் -தம்முடையதாய் இருந்ததை -அண்ணனுக்கு கொடுத்தார்
இன்றும் அண்ணன் வம்சத்திலேயே இருந்து வருகிறது –

சகாப்தம் 1354-கிபி 1432-பரிதாபி வருஷம் -அனுமந்த தேவர் கோயில் -திருப்பாண் ஆழ்வார் உள்ள வீர ஹனுமான் கோயில் தக்ஷிண சமுத்ராதிபதி தென்நாயகன் கைங்கர்யமாக கட்டி வைத்தார்
கிபி 1434-திருவானைக்காவலுக்கும் ஸ்ரீ ரெங்கத்துக்கும் இடையில் மதிள் கட்டி வைத்தார்
இந்த உத்தம நம்பி காலம் வரையில் வசந்த உத்சவம் திருக்கைவேரிக்கரையிலே நடந்து வந்தது
ஒரு வைகாசியில் வெள்ள ப்ரவாஹத்தால் இது நடவாமல் போக கோயிலுக்கு உள்ளே ஒரு பெரிய குளம் வெட்டி -கெடாக் குழி – அதில் மய்ய மண்டபம் சுற்று மண்டபம் பெரிய மண்டபமும் போடுவித்து
இப்பொழுதும் அந்த வம்சத்தார் கைங்கர்யமாகவே நடைபெற்று வருகிறது
இவர் 68 திரு நக்ஷத்திரங்கள் எழுந்து அருளி இருந்தார்
தம்முடைய தம்பிக்கு சக்ர ராயர் பட்டப்பெயர் வாங்கிக் கொடுத்து தனியாக அவருக்கு ஆதீனம் மரியாதை ஏற்படுத்தினார்

————-

பூ சக்ர ராயர்
சக்ர ராயருடைய பாண்டித்யத்துக்கு ஏற்க பூ மண்டலத்துக்கே ராயர் என்னும் படி பூ சக்ர ராயர் என்று முடி சூட்டி ஸ்ரீ ரெங்கத்தில் தனி ஆதீனமும் உண்டாக்கினார் அரசர்
பிள்ளை ஐயன் என்ற பேராய இருந்த உத்தம நம்பி கோசம் இவர் காலத்துக்குப் பின்னர் இரண்டாக்கப் பிரிந்து பிள்ளை ஐயன் -சக்ர ராயர் -என்று தேவ ஸ்தான கணக்குகளில் முறை வீதம் இரண்டாக இன்றைக்கும் எழுதப்படுகிறது –

சகாப்தம் 1337-கிபி 1415-மன்மத வருஷத்தில் -பெரிய திரு மண்டபத்தில் -கருட மண்டபத்தில் -கருடன் கலஹத்தில் பின்னமான படியால்
அழகிய மணவாளன் திரு மண்டபத்தில் சந்நிதி கருடனை ஏறி அருளப் பண்ணினார்
மன்மத வருஷே ஜ்யேஷ்ட்ட்டே ரவி வாரசே ரேவதீ தாரே
ஸ்ரீ சக்ர ராய விபுநா ஸ்ரீ மான் கருட ப்ரதிஷ்டிதோ பூத்யை -என்று தர்மவர்மா திரு வீதியிலே இந்த வ்ருத்தாந்தம் சிலா லிகிதம் பண்ணப்பட்டது –

பூர்வம் சோழன் ப்ரதிஷ்டையான சக்ரவர்த்தி திரு மகனையும் ஜீரண உத்தாரணம் பண்ணி வைத்து
அதிலே உள்ளாண்டாள் நாச்சியார் திவ்ய மங்கள விக்ரஹத்தையும் – ப்ரதிஷ்டிப்பித்து அருளினார்-

————

திம்மணார்யர்
இவரும் வழி யடிமை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பிக்கு திருத்தம்பி
இவர் சந்நியாச ஆஸ்ரமம் மேற்கொண்டு ஸ்ரீ ராமானுஜ பீடமான ஸ்ரீ ரெங்க நாராயண ஜீயர் பட்டத்தில் எழுந்து அருளி இருந்தார் –

————

51- ராஜாக்கள் பெருமாள் உத்தம நம்பி என்கிற கிருஷ்ணமாச்சார்ய உத்தம நம்பி
இவர் நிர்வஹித்த காலத்தில் பங்குனி ஆதி ப்ரஹ்ம உத்சவம் 3 நாள் ஜீயர் புரத்துக்குப் போக வர குதிரை வாஹனம் ஏற்பட்டு இருந்தது
மழை பெய்ததால் மேல் உத்தர வீதியில் உத்தம நம்பி திருமாளிகையிலே நம் பெருமாள் எழுந்து அருளி இருந்தார்
ஆ வ்ருஷ்டி பாத விரதே -மழை ஓயும் வரையிலே –
இனி தூர புறப்பாட்டுக்கு வாஹனம் கூடாது என்றும் பல்லக்கு தான் உசிதம் என்றும் ஏற்பாடு செய்தார்
இவரே நான்கு பக்கங்களிலும் நான்கு நூற்று கால் மண்டபங்களைக் கட்டி வைத்தார்
அக்னி மூலையிலே ஸ்ரீ பண்டாரம் -நைருதியில் கொட்டாரம் -வாயுவில் முதல் ஆழ்வார் வாஸூ தேவன் சந்நிதி -ஈஸான்யத்தில் ராமர் சந்நிதி கட்டப் பட்டன
இந்தக் கைங்கர்யத்தை பெரிதும் உகந்து -பெருமாள் சாமந்தர் -அரங்கர் சாமந்தர் -என்று அவருக்குப் பட்டப்பெயரும் அருளினார்
அத்யயன உத்சவ மேலப்படி மரியாதை உத்தம நம்பிக்கு நடக்கையில் இந்த அருளப்பாடு வழங்குகிறது

இவ்வாறு பல கைங்கர்யங்களையும் பண்ணிக் கொண்டு 72 திரு நக்ஷத்ரம் எழுந்து அருளி இருந்தார்

———–

82- திருமலை நாத உத்தம நம்பி
இவர் லஷ்மீ காவ்யம் அருளிச் செய்துள்ளார்
பெரிய திரு மண்டபத்துக்கு கிழக்கே கிளி மண்டபம் என்னும் நூற்றுக் கால் மண்டபம்
இவரது முன்னோர் 81 உத்தம நம்பி தொடங்கியதை பூர்த்தி செய்தவராவார் –
இதில் ஜ்யேஷ்டாபிஷேகமும் ஸஹஸ்ர கலச அபிஷேகமும் -பகிரங்கமாக நடைபெற்று வந்தது
இப்பொழுது பரம ஏகாந்தமாய் விமான ப்ரதக்ஷிணத்தில் நடைபெறுகிறது
ப்ரஹ்ம உத்சவம் 8 திரு நாள் எல்லைத்த திருநாளாகவே நடைபெறுகிறது
இவர் 37 திரு நக்ஷத்ரம் எழுந்து அருளி இருந்தார் –

————–

83-குடல் சார வாளா நாயனார் என்கிற சின்ன கிருஷ்ண ராய உத்தம நம்பி
இவர் கோயில் நிர்வகிக்கும் பொழுது கர்ணாடக நாயகர்கள் மதுரையில் அரசாண்டு இருந்தார்கள்
1534-ஜய வருஷத்தில் ஷாமம் வரவே கோயில் திருக்கொட்டாரத்தில் இருக்கும் நெல்லைக்கு கொடுக்க கேட்டார்கள்
உத்தம நம்பி -அரங்கன் சொத்துக்கு ஆசைப்படக் கூடாது என்று ஹிதம் சொல்லியும் நாயகர் பலவந்தம் பண்ணினார்
நீர் கூடை பிடித்தால் நான் மரக்கால் பிடித்து அளக்கிறேன் என்று சொல்லி
முதல் மரக்காலுக்கு திருவரங்கம் என்று அளந்து மறு மரக்காலுக்கு -பெரிய கோயில் -என்று சொல்லி
தம் குடலை அளந்து பிராண தியாகம் பண்ணினார்
ராஜாவும் வெளியே வந்து -குடல் சாரா வாளா நாயனார் -என்ற பட்டம் சூட்டினார்
அது முதல் வேறே காரியங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்று நிஷ்கர்ஷம் ஆயிற்று
த்ரவ்யம் அளக்கும் பொழுதும் திருவரங்கம் -பெரிய கோயில் -மூன்று என்று சொல்லியே அளக்கும் வழக்கமும் வந்தது
கூர நாராயண ஜீயர் பிரதிஷ்டை செய்த செங்கமல வல்லித்தாயார் -தான்ய லஷ்மி எழுந்து அருளி இருக்கும் திரு மதிள் கட்டினார்
இவர் 32 திருநக்ஷத்ரம் 1 மாதம் 8 நாள்களுக்குப் பின் திருநாட்டை அலங்கரித்தார் –

——————

86- ஸ்ரீ நிவாசார்ய உத்தம நம்பி
கிபி 1662-1692- வரை ஆண்ட நாயக்கர்களின் ஏழாமவரான கர்ணாடக ஷோக்கா நாத நாயகர் பெருமாள் உத்சவங்களுக்காக பல கிராமங்களை சமர்ப்பித்து தம்மை ஆசீர்வதிக்க சாசனம் இவருக்கு தெலுங்கில் எழுதிக் கொடுத்தாட்ர்

————

88- ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி
இவர் காலத்தில் ஸ்ரீ ரெங்கம் மஹாராஷ்டிரர்களுக்கு அதீனமாயிற்று -திருச்சியில் முராரிராவ் நீதி செலுத்தி வந்தார்
கிபி 1748க்கு மேல் திருச்சிராப்பள்ளி நவாப் ஷீரஸ்வதீன் தேவுல்லா மஹம் மதலிகான் பஹதூர் வசமாயிற்று

———–
89-ஸ்ரீ நிவாசார்ய உத்தம நம்பி
இவர் ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பியின் திருக்குமாரர் –
இவர் நிர்வாகத்துக்கு வரும் பொழுது அதி பால்யமாய் இருந்தார்
அப்போது அமீர் முறாம் பகதூர் நவாப் நிர்வாகத்துக்கு ஒரு அமுல்தாரனையும் நியமித்தார்

18 திரு நக்ஷத்ரத்திலேயே இவர் ஆச்சார்யர் திருவடி சேர ஸ்வீ காரம் மூலம் 90 ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி நிர்வாஹத்துக்கு வர
அப்பொழுது ஆங்கிலேயர் வசமாயிற்று

இவர் நிர்வாகத்துக்கு வந்த பின்னர் அவருடைய தாயாதியான சக்ரராய ஸ்ரீ ரெங்க ராஜருக்கும் விவாதம் உண்டாகி நியாய ஸ்தலம் போக வேண்டிற்று
அதுக்கும் மேலே 1830க்கு மேல் உத்தம நம்பி திரு மாளிகையில் தீப்பற்றி ஓரந்தங்களும் சொத்துக்களை பற்றிய ஆவணங்களும் எரிந்து போயின
இவ்வாறு பல காணி பூமி சந்நிதி மிராசுகளை இழக்க வேண்டிற்று
இவ்விதமாக குடும்பம் சோர்வுற்றது
1842 வரை சர்க்கார் நிர்வாகத்திலே கோயில் இருக்க பரம்பரை தர்மகர்த்தாவாக 90 உத்தம நம்பி நியமிக்கப் பட்டார்
1859 திரு நாடு எழுந்து அருளினார்

90 ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பிக்கு ஐந்து திருக் குமாரர்கள்
ஜ்யேஷ்டர் சிங்கு ஐயங்கார்
இவர் சந்ததி விருத்தி யாகவில்லை
இவர் தம்பி உத்தம நம்பி நரசிம்ஹாச்சார்யர் -உத்தம நம்பி ரெங்க ஸ்வாமி ஐயங்கார் சந்ததியார்களே இப்பொழுது உள்ளார்கள்

91-உத்தம நம்பி நரசிம்ஹாச்சார்யர்–1872 திருநாடு அலங்கரித்தார்
92-உத்தம நம்பி ஸ்ரீ ரெங்காச்சார்யார் -67 திரு நக்ஷத்திரங்கள்
92-உத்தம நம்பி தாத்தாச்சாரியார் -61 திரு நக்ஷத்திரங்கள்

94-உத்தம நம்பி சடகோபாச்சார்யர்
1898-கார்த்திகை பூரம் ஜனனம்
93-உத்தம நம்பி தாதாச்சார்யருக்கு சந்ததி இல்லாமையால் இவர் 1903 ஸ்வீ காரம்
தர்ம கர்த்தாவாக ஆறு தடவை 1924 முதல் 1949 வரை இருந்தார்
இவர் திருத்தமையானாரான ஸ்ரீ நரஸிம்ஹா சார்யர் இந்த வம்சப் ப்ரபாவம் அருளிச் செய்துள்ளார்

அத்யயன உத்சவம் இராப்பத்தில் மேலப்படியில் -உத்தம நம்பிள்ளை -பிள்ளை ஐயன் -சக்ர ராயர் -பெருமாள் சாமந்தர் -அரங்கர் சாமந்தர் -என்று
அருளப்பாடு சாதித்து தொங்கு பட்டு பரிவட்டம் சாதிக்கப்படுகிறது

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உத்தம நம்பி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ நம்பெருமாள் -பன்னிரு நாச்சிமார் பரவும் பெருமாள் –

October 1, 2022

1- ஸ்ரீ வக்ஷஸ்தல மஹா லஷ்மி

வெள்ளிக்கிழமை தோறும் ஏகாந்த பட்டர் திருமஞ்சனம் செய்ய கோயில் ஜீயர் பட்டருக்கு சாமரம் வீசுவார்

2-3- உபய நாச்சிமார்கள் -ஸ்ரீ தேவி பூ தேவி

ஸ்ரீ ரெங்கத்திலே மட்டும் உபய நாச்சியாரும் ஆண்டாளும் பன்னிரண்டு தாயார்களும் அமர்ந்த திருக்கோலம்
நின்று அனுபவிக்க முடியாத எழில் அழகர் அன்றோ நம்பெருமாள்-

4- கருவூல நாச்சியார்

பிரகாரத்தில் கோயில் கருவூலத்தை ஒட்டி இருக்கும் சந்நிதி கருவூலம்
ஆபரணங்கள் பாத்திரங்கள் கணக்கு வழக்குகளை ரக்ஷித்து அருளும் தாயார்
திருக்கார்த்திகை அன்று பக்கத்து வீடு உத்தம நம்பி பெரிய சந்நிதியில் இருந்து விளக்கு எடுத்துப் போய் இங்கும் ஏற்றப்படுகிறது

5-ஸ்ரீ சேர குல வல்லித்தாயார்

அர்ஜுனன் மண்டபத்தில் -பகல் பத்து உத்சவ மண்டபத்தில் துலுக்க நாச்சியாருக்கு வலப்பக்கம் இருக்கும் சந்நிதி
ஸ்ரீ ராம நவமி அன்று திருக்கல்யாண உத்சவம் நடக்கும்

6- ஸ்ரீ துலுக்க நாச்சியார்

பின் சென்ற வல்லி நாட்டிய பெண்ணுடன் இசை நாட்டிய குழுவாக 60 பேர் சுல்தான் இடம் சென்று மீட்டுப் போக
இளவரசி ஸ்ரீ ரெங்கம் சென்று நம்பெருமாளைக் காணாமல்
கோயில் மூடி இருப்பதைக் கண்டு
மயக்கம் அடைந்த இறக்க ஒளி மட்டும் கோயிலுக்கு உள்ளே சென்றதை பார்த்தார்கள்
முகமதியருக்கு உருவ வழிபாடு இல்லை என்பதால் சித்திரமாக மட்டும் வரைந்து துலுக்க நாச்சியாராக இன்றும் சேவிக்கலாம்

காலையில் லுங்கி போன்ற வஸ்திரமும் அணிவித்து வெள்ளம் கலந்த இனிப்பான ரொட்டி வெண்ணெய் அமுது செய்து அருளுகிறார்
திருமஞ்சனம் வெந்நீரிலே நம்பெருமாள் கண்டு அருள்கிறான்
இடையில் 4 அல்லாது 5 தடவை கைலி மாற்றமும் உண்டு

பகல் பத்து உத்ஸவ படி ஏற்ற சேவை இந்த துலுக்க நாச்சியார் சந்நிதி முன்பே நடக்கும் –
இந்த படி ஏற்ற சேவையைக் காண கண் கோடி வேண்டும்

7- ஸ்ரீ செங்கமல வல்லித் தாயார் -ஸ்ரீ தான்ய லஷ்மி –
தான்யம் கோயில் மாடு

8- ஸ்ரீ பெரிய பிராட்டியார்
பங்குனி உத்தர சேர்த்தி உத்சவம்

9- ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி
பெரியாழ்வார் நாச்சியாரை கூட்டிக் கொண்டு வந்து தங்கிய இடம்
காவேரிக் கரையாகவே அப்போது இருந்தது
வெளி ஆண்டாள் சந்நிதி
திருட்டு பயம் காரணமாக உத்சவர் மட்டும் உள்ளே இருக்கும் ராமர் சந்நிதிக்கு மாற்ற அதுவே உள் ஆண்டாள் சந்நிதி

10- ஸ்ரீ உறையூர் கமலவல்லி நாச்சியார்

வாசவல்லித் தாயார் -செங்கமல வல்லித்தாயார் -நந்த சோழன் திருமகள் –
பங்குனி உத்சவம் ஆறாம் நாள் சேர்த்தி உத்சவம் பிரசித்தம்
தீ வட்டிகள் தலை கீழாக வைத்து தொலைத்த ஒன்றை தேடுவதாக நடக்கும்
திரும்பும் பொழுது மாலை மாற்றல் வெளி ஆண்டாள் சந்நிதியில் நடக்கும்

11- ஸ்ரீ திருக் கவேரித் தாயார்
ஆடிப்பெருக்கு உத்சவம்
அம்மா மண்டபத்துக்கு எழுந்து அருளி சேவை

12- ஸ்ரீ பராங்குச நாயகித் தாயார்
மார்கழி ஏழாம் நாள் கங்குலும் பகலும்
கைத்தல சேவை ப்ரஸித்தம்

————

ஸ்ரீ ரெங்கத்தில் துலுக்க நாச்சியார்
இது இராமானுஜர் காலத்தில் நடந்ததல்ல
திருநராயணபுரம் செல்லப்பிள்ளை கதை இதுவல்ல
இது சுமார் 200 வருடங்கள் கழித்து நடந்த ஒரு சம்பவம்.
ரங்கநாதரின் உற்சவர் விக்ரகத்தை தில்லியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்த சுல்தானிடம் அந்த விக்ரகம் கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.
அந்த விக்ரகத்தைப் பார்த்த சுல்தானின் மகள், அதை ஒரு விளையாட்டுப் பதுமையாகக் கருதி, தன் அறையிலேயே வைத்துக் கொண்டாள்.
அதுமட்டுமல்ல, அந்த அரங்கனை அவள் உளமார நேசிக்கவும் ஆரம்பித்தாள்.
இவ்வாறு அரங்கன், ஆக்கிரமிப்பாளர்களுடன் செல்வதைப் பார்த்த ஒரு பெண்மணி, திருக் கரம்பனூரைச் சேர்ந்தவள்.
தானும் அவர்களைப் பின் தொடர்ந்தாள். அவள் மூலமாகத்தான் அரங்கன் தில்லிக்குச் சென்றுவிட்ட விவரம் இங்கிருப்போருக்குத் தெரிய வந்தது.
இவ்வாறு, அரங்கனை மீட்டுக் கொண்டுவர தன்னாலியன்ற சேவையினைப் புரிந்ததால் அந்தப் பெண்மணியை ‘பின் சென்ற வல்லி’ என்று போற்றி, வைணவம் பாராட்டுகிறது.
அதை மீட்க எண்ணி தலைமை பட்டருடன் ‘பின்சென்ற வல்லி’ என்ற நாட்டியப் பெண்ணும் அவளது இசை நாட்டிய குழுவுமாக ஒரு அறுபது பேர் டில்லி சென்று அரசரை இசையில் மகிழ்வித்து அரங்கனைத் திருப்பித் தரக் கேட்கிறார்கள்.
தன் மகளிடம் இருப்பவர் தான் அழகிய மணவாளன் என்பதை அறிந்த மன்னர் அனுமதி தருகிறார்.
அவர்களுடைய மத உணர்வுக்கு மதிப்பளித்து அந்த விக்ரகத்தைத் திருப்பிக் கொடுத்து விடுமாறு தன் மகளிடம் சொன்னான்.
ஆனால் இளவரசியிடமிருந்து பெறுவது சுலபமா யில்லை. அதனால் இசைக்குழு இளவரசியை, பாடல்கள் பாடி ஏமாற்றித் தூங்கவைத்து, அரங்கனை எடுத்துவந்து விடுகிறார்கள்.
இளவரசி கண்விழித்து, தன் அறையில் அரங்கனைக் காணாமல், தொலைந்ததறிந்து, பதறி நோய்வாய்ப் படுகிறாள்.
மன்னன் கவலையுற்று தன் படையை ஸ்ரீரங்கம் அனுப்பி அரங்கனையும் எடுத்துவரப் பணிக்கிறார்.
அரங்கனின் வடிவழகில் மனம் பறிகொடுத்தி ருந்த அந்தப் பெண்ணோ மிகுந்த மன வருத்தத்துடன் அந்த அழகனைத் தான் நேரில் காணும் பொருட்டு நேரே திருவரங்கத்திற்கே வந்துவிட்டாள்.
ஆனால், தலைமை பட்டரோடு சிலர், தாயார் சிலைக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து வில்வ மரத்தினடியில் தாயாரைப் புதைத்து விட்டு, அரங்கனோடு தலைமறைவாகி விடுகின்றனர்
ஸ்ரீரங்கம் கோவிலிலும் அரங்கன் இல்லாமல், கோவில் மூடியிருப்பதைக் கண்டு, தன் கற்பனையில் அவள் உருவாக்கி வைத்திருந்த உருவம் அங்கே காணக்கிடைக்காததால் மனம் வெதும்பி அங்கேயே மயக்கமடைந்து இறந்து அரங்கன் திருவடி சேர்ந்தாள்.
அவள் உடலிலிருந்து ஒரு ஒளி மட்டும் கோவிலுக்குள் செல்வதைச் சுற்றி இருந்தவர்கள் பார்க்கிறார்கள்.
அதன்பிறகு அவளின் தந்தை ஏராளமான செல்வத்தைக் கோவிலுக்கு எழுதிவைத்தார்.
முகமதியருக்கு உருவ வழிபாடு கிடையாதென் பதால் அரங்கன் சன்னதியிலேயே பிரகாரத்தில் கிளிமண்டபத்திற்கெதிராக அவளை ஒரு சித்திரமாக மட்டும் வரைந்து ஒரு சன்னதியில் வைத்து ‘துலுக்க நாச்சியார்’ என்ற பெயரில் வழிபாடு நடக்கின்றது.
அரங்கமாநகரின் இதயமாம் பெரியபெருமாள் பள்ளிகொண்டிருக்கும் இடத்துக்கு அருகிலுள்ள அர்ச்சுன மண்டபத்தில் அவள் ஓவியமாய் இன்றைக்கும் மிளிர்கிறாள்
மதம் கடந்த அந்தக் காதலின் அங்கீகாரமாக இன்றும் அரங்கனுக்கு காலையில் லுங்கி போன்ற வஸ்திரம் அணிவித்து, அவர்கள் உணவாக ரொட்டி வெண்ணை நைவேத்தியம் செய்கிறார்கள்.
இந்த ரொட்டி நம்முடையது போல் இல்லாமல் லேசாக வெல்லம் கலந்து இனிப்பாக இருக்கும்.
மிக மிக மெல்லியதாக சுவையானதாக இருக்கும். தொட்டுக் கொள்ள வெண்ணை.
திருமஞ்சன காலங்களில் வேட்டிக்குப் பதில் லுங்கி வஸ்திரம்.
மற்ற கோயில்களுக்கு இல்லாத இன்னொரு சிறப்பு, அரங்கனுக்கு வெந்நீரில் மட்டுமே திருமஞ்சனம். இதன் சூட்டை மணியக்காரர் கையில் வாங்கி சரியான பதம் என்று ஆமோதித்தபின் தான் செய்ய வேண்டும்.
இடையில் 4, 5 தடவை கைலி மாற்றி கைலியைக் கட்டுவார்கள்.
சில குறிப்பிட்ட திருமஞ்சனங்களின் இறுதியில் அரையர் அந்த கைலி வஸ்திரங்களைப் பிழிவார். அந்தத் தீர்த்தத்தை எல்லோருக்கும் கொடுப்பார்கள். ஈரவாடைத் தீர்த்தம் என்று பெயர்.
வெற்றிலைக்கு எப்பொழுதுமே இஸ்லாமியர்கள் போல் வெற்றிலையின் மேல்ப்பக்கம் சுண்ணாம்பு தடவுவார்கள்.
மார்கழி மாத பகல்பத்து உற்சவம் பத்து நாட்களும் துலுக்க நாச்சியாரைத் தரிசிக்க(அல்லது அவர் இவரை தரிசிக்க) அந்த சன்னதியின் முன்பான படிவழியாக ஏறித்தான் ‘அருச்சுனன் மண்டபம்’ செல்வார்.
அரையர், ‘ஏழைகளுக்கிரங்கும் பெருமாள்… ஆபரணங்களுக்கு அழகு சேர்க்கும் பெருமாள்… பன்னிரு நாச்சியார் பரவும் பெருமாள்…’ என்று இழுத்து இழுத்துப் பாட மெதுவாக ஆடி ஆடி அந்தப் படியில் ஏறும் அழகைக் காண கண்கோடி வேண்டும்.
அரங்கனது நடை ஒவ்வொரு இடத்துக்கும், நேரத்துக்கும் ஒவ்வொரு மாதிரி வித்தியாசமானது.
‘திருப்பதி வடை, காஞ்சி குடை, அரங்கர் நடை’ என்றே ஒரு சொலவடை உண்டு.
எல்லாவற்றிலும் துலுக்க நாச்சியார் படியேற்றம் விசேஷமானது.
‘படியேற்ற ஸேவை’ என்றே இதற்குப் பெயர்.
————–
உத்ஸவம்

1-உத் ஸூதே ஹர்ஷம் இதி ச தஸ்மாத் ஏவ மஹா உத்ஸவ மஹா ப்ரீதிர் யேந உத்ஸவேந பவிஷ்யதி
2- உத்க்ருஷ்ட நாள்கள் -உத்க்ருஷ்டோ அயம் யதஸ் தஸ்மாத் உத்ஸவஸ்த்விதி கீர்த்யதே
3- உலகோர் கஷ்டங்களைப் போக்கடிக்கும் -ஸவ இத்யுச்யதே து கம் வித்வத்பு சமுதாரஹ்ருதம்
உதகத ஸஸவோ யஸ்மாத் தஸ்மாத் உத்ஸவ உச்யத
4- பாகுபாடுகள் அகற்றப்படுகின்றன -தஸ்மாத் அஸ் ப்ருஸ்யஸ் பர்சம் ந தோஷாய பவேத்

————-

18 படிகள்
முமுஷு –
1-ஸம்ஸார வித்து நசிக்க வேண்டும்
2-ஸம்ஸார வித்து நசிந்தால் அஹங்கார மமகாரங்கள் விலகும்
3-அவை விலக தேஹ அபிமானம் விலகும்
4-அது நீங்கினால் ஆத்ம ஞானம் பிறக்கும்
5-ஆத்ம ஞானம் பிறக்க ஐஸ்வர்ய போகங்களில் வெறுப்பு உண்டாகும்
6-அதனால் எம்பெருமான் பக்கல் ப்ரேமம் உண்டாகும்
7-அது உண்டானால் விஷயாந்தர ருசி நீங்கும்
8-அத்தால் பாரதந்தர்ய ஞானம் உண்டாகும்
9-அதனால் அர்த்த காம ராக த்வேஷங்கள் பிறக்கும்
10-அவை நீங்கவே ஸ்ரீ வைஷ்ணவத்வம் ஸித்திக்கும்
11-அத்தாலே சாது சங்கம் கிடைக்கும்
12-அத்தாலே பாகவத ஸம்பந்தம் கிட்டும்
13-அத்தாலே பகவத் சம்பந்தம் உண்டாகும்
14-அத்தாலே ப்ரயோஜனாந்தரங்களில் வெறுப்பு உண்டாகும்
15-அத்தாலே பகவத் அநந்யார்ஹத்வம் பிறக்கும்
16-அத்தாலே எம்பெருமானையே ஒரே புகலாகக் கொள்வான்
17-அத்தாலே திரு மந்த்ரார்த்தம் கேட்க யோக்யதை பிறக்கும்
18-அத்தாலேயே திருமந்த்ரார்த்தம் கை கூடும் –

—————–

1-மாட மாளிகைகள் சூழ் திரு வீதியும்
2-மன்னு சீர் திரு விக்ரமன் வீதியும்
3-குல விராச மகேந்திரன் வீதியும்
4-ஆலி நாடன் அமர்ந்து உறை வீதியும்
5-கூடல் வாழ் குலசேகரன் வீதியும்
6-தேடரிய தர்ம வர்மாவின் வீதியும்
தென்னரங்கன் திரு ஆரணமே

யதண்டம் அண்டாந்தர கோசரம் ச யத்
தஶோத்தராண்யாவரணாநி  யாநி  ச |
குணா: ப்ரதாநம் புருஷ: பரம் பதம்
பராத்பரம் ப்ரஹ்ம ச தே விபூதய: ||–ஸ்தோத்ர ரத்னம் ஶ்லோகம் 17 –

இதில் ஆளவந்தார் பகவானாலே நிர்வஹிக்கப்படும், -அவனுடைய ஸர்வேஸ்வரத்வத்துக்கு
உட்பட்ட பலவிதமான வஸ்துக்களை அருளிச்செய்கிறார்.
1) ப்ரஹ்மாவின் ஆளுகைக்குட்பட்ட, 14 லோகங்கள் கொண்ட ப்ரஹ்மாண்டம்,
2) அந்த அண்டத்துக்குள் இருக்கும் வஸ்துக்கள்,
3) ஒவ்வொரு அண்டத்தை மூடிக் கொண்டிருக்கும், முந்தைய ஆவரணத்தைப் போலே பத்து மடங்கு அளவுள்ள, ஸப்த ஆவரணங்கள்,
4) ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்கள்
5) மூல ப்ரக்ருதி
6) இவ் வுலகில் இருக்கும் பத்தாத்மாக்கள் (கட்டுப்பட்ட ஆத்மாக்கள்),
7) ஸ்ரீவைகுண்டம்
8) (தேவதைகளை விட உயர்ந்தவர்களான) முக்தாத்மாக்களை விட உயர்ந்தவர்களான நித்ய ஸூரிகள்
9) உன்னுடைய திய்வ மங்கள விக்ரஹங்கள் ஆகிய எல்லாம் உனக்கு சரீரங்களே.

———–

முதல் திருவாய் மொழி -உயர்வற – ப்ரஹ்ம ஸ்வரூபம்
இரண்டாம் திருவாய் மொழி அவனே நாராயணன் -வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே
மூன்றாம் திருவாய் மொழி -ஸ்ரீயப்பதி -ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே -மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
என் அமுதம் சுவையன் திரு மணாளன்
மலராள் மைந்தன்
திரு மகளார் தனிக்கேள்வன்
திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே
மலராள் மணவாளன்

—————–

ஸ்ரீ மத் பாகவதம் -11-ஸ்கந்தம் -அத்தியாயங்கள் 27-28-29- அர்ச்சாவதார ஏற்றம் சொல்லும்

தப்தஜாம்பூ³னத³ப்ரக்²யம்ʼ ஶங்க²சக்ரக³தா³ம்பு³ஜை꞉ .
லஸச்சதுர்பு⁴ஜம்ʼ ஶாந்தம்ʼ பத்³மகிஞ்ஜல்கவாஸஸம் .. -27-38..

ஸ்பு²ரத்கிரீடகடககடிஸூத்ரவராங்க³த³ம் .
ஶ்ரீவத்ஸவக்ஷஸம்ʼ ப்⁴ராஜத்கௌஸ்துப⁴ம்ʼ வனமாலினம் .. 27-39..

அப்⁴யர்ச்யாத² நமஸ்க்ருʼத்ய பார்ஷதே³ப்⁴யோ ப³லிம்ʼ ஹரேத் .
மூலமந்த்ரம்ʼ ஜபேத்³ப்³ரஹ்ம ஸ்மரன் நாராயணாத்மகம் .. 27-42..

த³த்த்வாசமனமுச்சே²ஷம்ʼ விஷ்வக்ஸேனாய கல்பயேத் .
முக²வாஸம்ʼ ஸுரபி⁴மத்தாம்பூ³லாத்³யமதா²ர்ஹயேத் .. 27-43..

அர்சாதி³ஷு யதா³ யத்ர ஶ்ரத்³தா⁴ மாம்ʼ தத்ர சார்சயேத் .
ஸர்வபூ⁴தேஷ்வாத்மனி ச ஸர்வாத்மாஹமவஸ்தி²த꞉ .. 27-48..

ஏவம்ʼ க்ரியாயோக³பதை²꞉ புமான் வைதி³கதாந்த்ரிகை꞉ .
அர்சன்னுப⁴யத꞉ ஸித்³தி⁴ம்ʼ மத்தோ விந்த³த்யபீ⁴ப்ஸிதாம் .. 27-49..

மத³ர்சாம்ʼ ஸம்ப்ரதிஷ்டா²ப்ய மந்தி³ரம்ʼ காரயேத்³த்³ருʼட⁴ம் .
புஷ்போத்³யானானி ரம்யாணி பூஜாயாத்ரோத்ஸவாஶ்ரிதான் .. 27-50..

பூஜாதீ³னாம்ʼ ப்ரவாஹார்த²ம்ʼ மஹாபர்வஸ்வதா²ன்வஹம் .
க்ஷேத்ராபணபுரக்³ராமான் த³த்த்வா மத்ஸார்ஷ்டிதாமியாத் .. 27-51..

ப்ரதிஷ்ட²யா ஸார்வபௌ⁴மம்ʼ ஸத்³மனா பு⁴வனத்ரயம் .
பூஜாதி³னா ப்³ரஹ்மலோகம்ʼ த்ரிபி⁴ர்மத்ஸாம்யதாமியாத் .. 27-52..

அயம்ʼ ஹி ஸர்வகல்பானாம்ʼ ஸத்⁴ரீசீனோ மதோ மம .
மத்³பா⁴வ꞉ ஸர்வபூ⁴தேஷு மனோவாக்காயவ்ருʼத்திபி⁴꞉ ..29- 19..

ய ஏததா³னந்த³ஸமுத்³ரஸம்ப்⁴ருʼதம்ʼ
ஜ்ஞானாம்ருʼதம்ʼ பா⁴க³வதாய பா⁴ஷிதம் .
க்ருʼஷ்ணேன யோகே³ஶ்வரஸேவிதாங்க்⁴ரிணா
ஸச்ச்²ரத்³த⁴யாஸேவ்ய ஜக³த்³விமுச்யதே .. 29-48..

ப⁴வப⁴யமபஹந்தும்ʼ ஜ்ஞானவிஜ்ஞானஸாரம்ʼ
நிக³மக்ருʼது³பஜஹ்ரே ப்⁴ருʼங்க³வத்³வேத³ஸாரம் .
அம்ருʼதமுத³தி⁴தஶ்சாபாயயத்³ப்⁴ருʼத்யவர்கா³ன்
புருஷம்ருʼஷப⁴மாத்³யம்ʼ க்ருʼஷ்ணஸஞ்ஜ்ஞம்ʼ நதோ(அ)ஸ்மி ..29- 49..

ஸர்வாத்ம பூதனாய் வாஸூ தேவனே நம் ஹ்ருதய தாமரையில் அமர்ந்து நம்மை வழி நடத்தி அருள்கிறான்
என்று அறிவதே அர்ச்சையில் பகவத் ஆராதனத்தின் பரம பிரயோஜனம்

ஸ்வயம் வ்யக்த ஸ்தலங்கள்
திருவரங்கம்
திருவேங்கடம்
தோத்தாத்ரி
சாளக்கிராமம்
பத்ரிகாஸ்ரமம்
நைமிசம்
ஸ்ரீ முஷ்ணம்

ஸ்தல மஹாத்ம்யம் -நைமிசம் -பத்ரிகாஸ்ரமம்

புஷ்கரம் –தீர்த்த மஹாத்ம்யம்

—————

திருக்கோயில்களின் பிரகாராதிகள் எல்லாமே தத்துவங்களை விளக்குவதற்காகவே யோகீந்த்ரர்கள் சொல்வார்கள் –
மூல ஸ்தானம் -சிரப் பத்ம ஸ்தானம்
அடுத்த அந்தராளம் – முகம்
அடுத்த ஸ்தானம் சுக நாஸி -இது கண்ட ஸ்தானம்
அடுத்த அர்த்த மண்டபம் -மார்பும் தோள்களும் கூடிய ஸ்தானம்
இவை சூழ்ந்த பிரகாரம் -துடைகளும் முழம் தாள்களும்
கோபுரம் -பாதம்

பஞ்ச-ஆவரண – பிரகார ஆலயங்கள் –
தாமஸ பூத பஞ்சீகரணத்தால் ஆக்கப்பட்ட ஸ்தூல சரீரம் அன்னமய கோசம்-முதலாவது பிரகாரம் -ஆவரணம் –
பிராணன் பிராண வ்ருத்திகள் -கர்ம இந்திரியங்கள் -இவை கூடியது ப்ராண மய கோசம் -இது இரண்டாவது ஆவரணம்
அந்தக்கரண வ்ருத்திகளாகிற -மனம் புத்தி சித்தம் அஹங்காரம் -ஞான இந்திரியங்கள் இவை சேர்ந்தது மநோ மாயம் -இது மூன்றாவது ஆவரணம்
அந்தக்கரண ப்ரதிபிம்ப ஜீவனும் அதன் வ்ருத்திகளும் ஞான இந்திரியங்களும் கூடியது -விஞ்ஞான மய கோசம் -இது நான்காவது ஆவரணம்
பிராண வாயுவும் ஸூஷுப்தியும் கூடி நிற்பது ஆனந்த மய கோசம் -இது ஐந்தாவது ஆவரணம்

த்வஜ ஸ்தம்பம் -தேகத்தில் வீணா தண்டம் போல் மூலாதாரம் முதல் ப்ரஹ்மரந்தரம் வரை மேல் நோக்கிச் செல்லும் ப்ரஹ்ம நாடி
இந்திரியங்களை அடக்கி -பிரபஞ்ச விஸ்ம்ருதியும் ஆத்ம சாஷாத்காரமும் -அதற்கு மேல் ப்ரஹ்ம ஆனந்தமும் தோன்றும்

மடப்பள்ளி ஜடர அக்னி ஸ்தானம்

பஞ்ச பேரங்கள்
த்ருவ பேரம்
உத்ஸவ பேரம்
ஸ்நபன பேரம்
கௌதுக பேரம்
பலி பேரம்

இவை கமல ஆலய ஆகாரத்தை உணர்த்துவது போல்
தாமரைத் தடாகம் புஷ்பம் -இலை -கொடி -கிழங்கு போல்
மூல ஸ்தானம் தடாகம்
உத்ஸவ பேரம் புஷ்பம்
த்ருவ பேரம் -கிழங்கு
மற்றவை -இலை -கொடி

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ரெங்கம் பற்றி அறிய வேண்டியவை —

August 30, 2022

ஸ்ரீரங்கம் கோவில் தாயார் சந்நதிக்கு வெளியே இருக்கும் ஐந்து குழி மூன்று வாசல் பற்றிய விளக்கம்

பலர் இந்த இடத்தில் தாயார் தன் ஐந்து விரல்களை வைத்து பெருமாள் தாயார் சன்னதி நோக்கி எழுந்தருள்வதை ஆவலுடன் பார்கிறாள் என கூறுவது வழக்கம். ஆனால் இந்த இடத்தின் தாத்பர்யம் வேறு:

1. ஸ்ரீரங்கம் தாயார் படி தாண்டாப் பத்தினி. எனவே வெளியே வந்துபார்த்திருக்கச் சாத்தியமில்லை.

2. பெருமாள் இவ்வழியில் தாயார் சன்னதிக்கு வருவது வழக்கம் இல்லை. ஒருநாள் மட்டுமே இந்த வழியாக எழுந்தருள்வார். மற்ற நேரங்களில் ஆழ்வான் திருசுற்று (5வது பிரகாரம்) வழியாகத்தான் எழுந்தருள்வார்.

இந்த ஐந்து குழி அர்த்தபஞ்சக ஞானத்தைக் குறிப்பதாகும். மூன்று வாசல் தத்வத்ரயத்தைக் குறிப்பதாகும்.

இந்த ஐந்து குழிகளில் ஐந்து விரல்களை வைத்துத் தெற்குப் பக்கம் பார்த்தால் பரமபதவாசல் தெரியும்.

ஒரு ஜீவாத்மா, பரமாத்மாவை இந்தத் தத்துவங்களைக் கொண்டு அடைந்தால் அந்த ஜீவாத்மாவுக்குப் பரமபதம் நிச்சயம் என்பதுதான் இதன் பொருள்.

————

தாயார் சந்நிதியில் சேவை செய்து வைக்கும்போது மூன்று தாயார்கள் – ரெங்கநாயகி , ஸ்ரீதேவி , பூதேவி எனக் கூறுவார். ஆனால் மூலவர் இருவரும் ஒருவரே.

ஸ்ரீரங்கம் உலுஹ்கான் படையெடுப்பினால் கிபி 1323 இல் முழுவதுமாக சூறையாடப்பட்டு பெருமாளும் கோவிலைவிட்டு வெளியேறி கிபி 1371 மீண்டும் திரும்பினார். இந்த படையெடுப்பின்போது மூலவர் சந்நிதி கல்திரை இடப்பட்டது. இதனால் பின்னால் இருக்கும் தயார் மறைக்கப்பட்டுவிட்டார்

கோவிலை விட்டு துலுக்கர்கள் வெளியேறியபின் ( 20 – 30 ஆண்டுகள்) உள்ளூர் மக்கள் மூலவர் தயார் காணவில்லை என நினைத்து புதிதாக ஒரு மூலவரை ப்ரதிஷிட்டை செய்தனர். அவரே இப்போது முதலில் இருக்கும் மூலவர்.

பிற்காலத்தில் அரையர் ஒருவர் தாலம் இசைத்து பாசுரம் சேவித்தபோது ஜால்ராவின் ஓசை வித்தியாசமாக வருவதை உணர்ந்து மூலவருக்குப் பின்னால் ஏதோ ஒரு அரை உள்ளது எனக் கூறினார். இதன் பின்னர் அதைத் திறந்து பார்த்தபொழுது பழைய மூலவர் இருப்பது தெரிந்தது. அன்று முதல் இரண்டு மூலவர்கள் உள்ளனர்.

————

காவேரி விராஜாசேயம் வைகுண்டம் ரெங்கமந்திரம் 

ஷ வாசுதேவோ ரங்கேஷயஹ ப்ரத்யக்க்ஷம் பரமம்பதம்

விமானம் ப்ரணவாகாரம் வேதஷ்க்ஷிரங்கம் மஹாத்புவம்

ஸ்ரீரெங்கசாயீ பகவான் ப்ரணவார்த்த ப்ரகாஷகஹா

ப்ரணவாகார விமானம் ஓம் என்னும் வடிவத்தில் இருக்கும்.ஓம் எனும் சப்தத்தில் 3 (அ ,உ,ம) எழுத்துக்கள் உள்ளன. உட்சாஹ சக்தி (அ) , ப்ரபூ சக்தி (உ), மந்திர சக்தி (ம) ஆகிய 3 சக்திக்களுடன் பெரியபெருமாள் பிரகாசிக்கிறார்.

இந்த விமானத்தில் கிழக்கு மேற்காய் 4 கலசங்களும், தெற்கு வடக்காய் 4 மற்றும் 1 கலசம் முன்னதாக மொத்தமாக 9 கலசங்கள் இருக்கும். இந்த 9 கலசங்களும் நவக்கிரகங்கள் ஆராதிப்பதாகக் கூறுவர்.

தர்மவர்மா திருச்சுற்று (முதல் பிராகாரம்/ திருவுண்ணாழி பிரதக்க்ஷணம்) இதில்தான் காயத்ரி மண்டபம் உள்ளது. ஏன் இந்த மண்டபத்திற்கு இந்தப் பெயர்?

காயத்ரி மந்திரத்தில் 10 சப்தங்கள் – இந்த 10 சப்தங்கள்தான் விமானத்தின் 10 திக்குகள்

காயத்ரி மந்திரத்தில் 24 எழுத்துக்கள் – இந்த மண்டபத்தில் 24 தூண்கள்

இந்த மண்டபத்தின் 24 தூண்கள் – 24 தேவதைகள் ஆவாகனம் (கேசவாதி த்வாதச நாமங்கள் 12 தூண்களுக்கு,வாசுதேவ – சங்கர்ஷண – பிரத்யும்ன – அநிருத்த ஆகிய நால்வரின் 3 நிலைகள் = 12)

காயத்ரி மந்திரத்திற்குப் பின்னால் வரும் ஸ்லோகத்தின் 9 சப்தங்கள் 9 கலசங்கள்

உள்ளே உள்ள 2 திருமணத்தூண்கள் ஹரி எனும் 2 எழுத்துக்கள் ப்ரணவாகார விமானத்தைத் தாங்குகின்றது.

காயத்ரி மண்டபத்தின் நடுவில் இருப்பது அமுது பாறை. பெருமாள் மூலஸ்தானிலிருந்து புறப்பாடு கண்டருளும்போது இங்கிருந்துதான் கிளம்புவார். இந்தத் திருச்சுற்றின் வாசலின் பெயர் அணுக்கன் திருவாசல்.

அமுதுபாறையின் இருபுறமும் கண்ணாடிகள் உள்ளன. பெருமாளுக்கு அலங்காரம் சாற்றி அர்ச்சக்கரகள் இந்த கண்ணாடிகளில் பெருமாள் திருமேனி அழகைக் கூட்டுவர். அமுது பாறை பொதுவாக பெருமாள் அமுது செய்யும்போது பிரசாதம் வைக்கும் இடம்.

அடுத்தமுறை மூலவர் சேவித்தபின்னர் தீர்த்தம் கொடுக்கும் இடத்தில் 2 நிமிடங்கள் நின்று தீர்த்தம் கொடுப்புவருக்கு பின்னால் சற்று பார்க்கவும். அப்போது 3 விஷயங்கள் தெரியும்:

1) பெருமாள் திருவடி வெளிப்புற தங்க கவசம்

2) மேலே ப்ரணவாகார விமானம்

3) கீழே சிறிய அகழி (3 அடி ஆழம்)

பெருமாளுக்குப் பின்னால் இருக்கும் இந்த பிரகாரம் யாருக்கும் அனுமதியில்லை. இந்தத் திருச்சுற்றின் 2 மூலைகளில் வராகரும், மற்ற மூலைகளில் வேணுகோபாலனும், நரசிம்மனும் சேவைசாதிப்பர். பெருமாளுக்கு வலதுபுறம் விஷ்வக்க்ஷேனரும் இடதுபுறம் துர்கையும் விமானத்தின் சுவற்றில் கீழே சுவற்றில் சேவைசாதிப்பர்.

விமானத்தின் கீழே இருக்கும் சிறிய அகழியின் சிறப்பு:

ராமானுஜர் பெரிய ஆசாரியன் மற்றும் இல்லை. அவர் தலைசிறந்த நிர்வாகி மற்றும் பெருமாளின் திருமேனியின் மீது பறிவுகொண்ட மகான். கீழ்வரும் கைங்கரியம் அவர் ஆரம்பித்து வைத்ததாகச் சொல்லப்படுகிறது: (செவிவழி செய்தி)

கோடைக் காலத்தில் பெருமாளை வெப்பத்திலிருந்து பாதுகாக்க செய்யப்பட்டதுதான் இந்த அகழி. கோடைக் காலத்தில் தினமும் இந்த அகழியில் தண்ணீர் நிரப்பினால் அது விமானம் மற்றும் பெருமாளை சுற்றியுள்ள சுவற்றின் வெப்பத்தை இழுத்து பெருமாளை குளிர்விக்கும் (இயற்கை குளிர்சாதனம்). ஆனால் தினமும் இங்கு அவ்வளவு தண்ணீர் எப்படி கொண்டுவருவது?

இரண்டாம் திருச்சுற்றில் விமானத்தின் பின்னால் ஒரு சிறிய கிணறு உள்ளது. அந்த கிணற்றிலினருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு ஒரு குழாய் (உள்ளே செல்ல மற்றும் வெளியே வர ஒரே குழாய்) மூலம் விமானத்தின் கீழேயிருக்கும் அகழி தினமும் மதியம் நிரப்பப்பட்டு இரவு அரவணைக்கு பிறகு வெளியேற்றப்படும்.

இந்த கைங்கரியத்தின் பெயர் #கோடைஜலம்

இந்தக் கிணற்றில் கீழே ஒருவரும், நடுவில் ஒருவரும், மேலே ஒருவரும் மண் பானைகளில் தண்ணீர் எடுத்து (கயிறு இல்லாமல் கையில்) ஒரு அண்டாவில் தினமும் 1008 பானைகள் அளவு நிரப்புவர். அதை சிறுவர்கள் எடுத்து மேலேயுள்ள தொட்டியில் ஊற்றுவர். அந்தத் தண்ணீர் முதல் திருச்சுற்றின் அகழியில் நிரம்பும். இந்த கைங்கர்யம் பூச்சாற்று உற்ஸவம் தொடக்கத்தன்று (சித்ராபௌர்ணமிக்கு பத்து நாட்கள் முன்னால்) தொடங்கி 48 நாட்கள் நடக்கும்.

இந்த கைங்கரியம் சிறுவர்களுக்கு அரங்கனிடம் ஈடுபாட்டுக்கு ஆரம்பக்கட்டம். அடியேனுக்கும் இந்த கைங்கரியத்தை செய்ய ரெங்கன் அருளினார்.

—————-

அரங்கன் திருபாதரக்க்ஷையும் (செருப்பு) மற்றும் சக்ளியன் கோட்டைவாசலும்

கலியுகத்தில் அரங்கன் பாமரர்கள் கனவில் தோன்றி அருள்பாலிக்கும் அற்புத சம்பவம்!!!

இந்த காலணிகள் சமுதாயத்தில் அடித்தட்டு மக்களாகிய காலணி செய்து வாழும் மக்களின் சமர்ப்பணம்.

அடுத்தமுறை அரங்கநாதன் கோயிலுக்கு செல்லும்போது 4ஆம் திருச்சுற்றில் (ஆரியப்படாள் வாசலுக்கு முன்னர் இடதுபறத்தில்) இருக்கக்கூடிய திருக்கொட்டாரத்திர்கு செல்லவும்.

என்ன பக்தி இருந்தால் இந்த பாகவதருக்கு பெருமாள் கடாக்க்ஷம் அருளியிருப்பர்🙏

பக்தருக்க்கு அரங்கநாதன் சொப்பனத்தில் இட்ட கட்டளை:

1. பாதரக்க்ஷை அளவு-2. அதன் வர்ணம்3. செலுத்தும் நாள் 4. கோவிலுக்கு வரவேண்டிய வாசல்

மேற்கு சித்திரை வீதிக்கும் மேற்கு உத்திரை வீதிக்கும் இடையில் இருக்கும் கோபுரத்தின் பெயர் சக்லியன் கோட்டை வாசல். பெருமாள் திருபாதரக்க்ஷை இந்த வழியாகத்தான் எடுத்து வரும்படி ஆணையிட்டான்.

எப்ரல் 2017ல ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் சுமார் 78 ஆண்டுகளுக்கு பிறகு அரங்கன் கனவில் வந்து சொல்லி இதை செய்து கொண்டுவந்தாதாக சொல்லுகிறார்கள்.

இதில் மற்றொரு அதிசயம் உண்டு. சில சமயங்களில் பெருமாள் தனது இரு பாதங்கள் அளவை இருவேறு பக்தர்களுக்கு அளித்து இருவரும் ஓரே நாளில் வந்து சமர்ப்பிக்கவும் செய்வார்.

நாம் ஒவ்வொருவரும் அரங்கனின் அருள் மற்றும் கருணை மழையை அறிந்து உணர தூய பக்தி மட்டுமே போதும் என்றும் அதற்குக் சாதி பேதம் இல்லை என உணர்த்தும் சம்பவம் இது 

——————-

பரமன் திருமண்டபம் மற்றும் சந்தனு மண்டபம்-யார் இந்த பரமன்?-எந்த ராஜ்ஜியத்தின் அரசன் – சேரனா? சோழனா? பாண்டியனா? ஹொய்சாலனா? விஜயநகர அரசனா?

பரமன் இந்த மண்டபத்தை தயார் செய்த தச்சனின் பெயர்.-

பரமன் திருமண்டபம் மிகுந்த மர வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டிருக்கும் மண்டபம். எட்டு தூண்களுடன் மூன்று அடுக்குகளுடன் தேரின் மேல் பகுதி போல் காணப்படும் மண்டபம் விஜயநகர ஆட்சியில் கட்டப்பட்டது.

வாலநாதராயர் எனும் விஜயநகர அரசின் பிரதானி தச்சன் பரமனை கொண்டு கட்டியது. அவரது வேலைப்பாடுகள் எல்லாரும் அறிய , அந்த அரசர் தனது பெயரை விடுத்து, ஒரு தச்சனின் பெயரை சூட்டினார்.

சந்தனு மண்டபத்தின் தெற்கு பக்கத்தில் மூன்று அறைகள் உள்ளன.தென் மேற்கு மூலையில் இருப்பது கண்ணாடி அறை.பெருமாள் தை பங்குனி மற்றும் சித்திரை மாத உத்சவத்தின் போது பத்து நாட்கள் தினமும் இங்கு தான் எழுந்தருள்வார்.இந்த கண்ணாடி அறை விஜயரங்க சொக்கநாதர் (இராஜ மகேந்திரன் திருசுற்றில் கண்ணாடி கூண்டில் இருக்கும் நான்கு சிலைகளுள் ஒருவர்) ஆட்சியில் சமர்ப்பிக்க பட்டது.

நடுவில் இருக்கும் அறையில் சன்னதி கருடன் எழுந்தருளியுள்ளார். கருட விக்கிரகம் வாலநாதராயரால் முகலாய படையெடுப்பிற்கு பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மூன்றாவது அறை (தென் கிழக்கு மூலையில் இருப்பது) காலி அறை. இந்த அறையில் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் பிரதிஷ்டை செய்த பொன் மேய்ந்த பெருமாள் (தங்கச் சிலை) விக்கிரகம் முகலாய படையெடுப்பின் போது பறிகொடுத்தோம்.

சந்தனு மண்டபம் அணுக்கன் திருவாசலுக்கு வெளியே இருக்கும் பெரிய திருமண்டபம். ஆகும சாஸ்திரத்தின்படி மகாமண்டபம்.–

அழகியமணவாளன் திருமண்டபம் என்ற பெயரும் இந்த மண்டபத்தைத்தான் குறிக்கும்.

பெரிய திருமண்டபத்தில்தான் பெருமாள் தினமும் பசுவும் யானையும் த்வாரபாலகர்கள் முன்னே நிற்க விஸ்வரூபத்துடன் காலை நமக்கு சேவைசாதிக்க தொடங்குகிறார்

இந்த மண்டபத்தின் மற்ற தகவல்கள்

•தென்மேற்க்கே மரத்தினாலான பரமன் மண்டபம்

•கிழக்கு – மேற்காக இருபுறமும் 10க்கும் மேற்பட்ட படிகளுடன் உயர்த்து நிற்கும் மண்டபம் ( நம்பெருமாள் கிழக்குக்கு / கீழ்ப்படி படியேற்ற சேவை காணொலியில் பரமன் மண்டபம் மற்றும் சந்தனு மண்டபத்தை காணலாம்)

•தென்புறத்தில் மூன்று அறைகள் – கண்ணாடி அறை, சன்னதி கருடன், மற்றும் காலி அறை

•இந்த மண்டபம் ஐந்து வரிசைகளில் ஆறு தூண்களுடன் விஜயநகர கட்டிடக்கலையில் அமைந்திருக்கும் மண்டபம்

நம்பெருமாள் பரமன் திருமண்டபத்தில் வருடத்திற்கு இரு முறை எழுந்தருள்வார்:-1) தீபாவளி-2) யுகாதி

இவ்விரு நாட்களிலும் பெருமாளுக்கு நேர் எதிராக கிளி மண்டபத்தில் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் எழுந்தருள்வர். அமாவாசை, ஏகாதசி, கார்த்திகை ஆகிய நாட்களில் இந்த பெரிய திருமண்டபத்தில் பெருமாள் எழுந்தருள்வார்.

இதே திருமண்டபத்தில் தான் நம்பெருமாள் மணவாள மாமுனிகளை ஈடு காலக்ஷேபம் செய்ய பணித்து ஓர் ஆண்டு காலம் தினமும் கேட்டருளினார். இதனால் தான் இந்த படம்  இப்போதும் வைக்கப்பட்டுள்ளது. இந்த வைபவம் 16.09.1432 முதல் 09.07.1433 வரை நடைபெற்றது.

——————-

பெரிய பெருமாளுக்கு முன் இருக்கும் உற்சவர் அழகிய மணவாளன். அடுத்த முறை ரங்கநாதரை சேவிக்கும் போது சற்று கூர்ந்து அவரின் திருவடியை சேவித்தால், அங்கே மற்றொரு உற்சவர் சேவை சாதிப்பார். இவர் உற்சவ காலங்களில் யாக சாலையில் எழுந்தருளி இருப்பார்.

பொதுவாக எல்லா திவ்ய தேசங்களிலும் யாகபேரர் (யாக சாலை பெருமாள்) சிறிய மூர்த்தியாக இருப்பார். இங்கோ இவர் அழகிய மணவாளனின் நிகரான உயரத்தில் இருப்பார்.

யார் இந்த உற்சவர்? எப்போது திருவரங்கத்திற்க்கு எழுந்தருளப்பட்டார்?-இவரின் திருநாமம் திருவரங்கமாளிகையார்

இந்த சரித்திரத்தை அறிய நாம் 640 ஆண்டுகள் பின்னே செல்ல வேண்டும். 1323ஆம் ஆண்டு பங்குனி உற்சவம் எட்டாம் திருநாள் முகலாய அரசன் உலுக் கான் திருவரங்கத்தின் மேல் படையெடுத்து 12000 ஸ்ரீவைஷ்ணவர்களை வதம் செய்தான். முகலாய படையெடுப்பிலிருந்து அழகிய மணவாளனை பாதுகாக்க பிள்ளை லோகாச்சாரியர் உற்சவரை தெற்கே எழுந்தருள செய்து திருவரங்கத்தை விட்டு வெளியேறினார்.

அதற்கு முன்பு மூலஸ்தானத்தில் பெரிய பெருமாளுக்கு கல் திரை சமர்ப்பித்து தாயார் வில்வ மரத்தின் கீழ் புதைத்து விட்டு சென்றார். இதே சமயத்தில் தான்  தேசிகன் அந்த 12000 ஸ்ரீவைஷ்ணவர்களின் சடலங்களுன் இருந்து ஷருத்தபிரகாசிகை (பிரம்ம சூத்திரத்திற்க்கு விளக்கம் அருளிய சுவடி) மற்றும் பட்டரின் குழந்தைகளை காப்பாற்றி மைசூர் அருகே இருக்கும் சத்யகலத்திற்க்கு சென்று விட்டார்.

அழகிய மணவாளன் ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பி மதுரை வழியாக கேரளா சென்று பின்னர் மைசூர் வந்து திருமலைக்கு சென்றார். கடைசியாக செஞ்சிக்கோட்டைக்கு வந்து பின்னர் மீண்டும் திருவரங்கத்திற்க்கு வந்து சேர்ந்தார்.

1323ஆம் ஆண்டு பங்குனி மாதம் திருவரங்கத்தை விட்டு வெளியேறிய பெருமாள் 48 ஆண்டுகள் கழித்து மீண்டும் 1371ஆம் ஆண்டு வைகாசி மாதம் 17ஆம் தேதி வந்தடைந்தார். (இதற்கு சான்று இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கல்வெட்டு)

கல்கல்வெட்டில் கூறப்படும் சக ஆண்டு 1293. சக ஆண்டிற்க்கும் நம் நாட்காட்டிக்கும் 78 ஆண்டுகள் வித்தியாசம். எனவே 1293+78 = 1371.

கொடவர் (பெருமாளை பல ஆண்டுகளாக பாதுகாத்தவர்) அழகிய மணவாளனுடன் வந்தார். பெருமாளை மீண்டும் திருவரங்கம் எழுந்தருள செய்த முயற்சியில் கோபன்ன உடையார் பங்கு சிறந்தது.

இந்த 48 ஆண்டுகளுக்குள் அழகிய மணவாளன் உற்சவ மூர்த்தி என்ன ஆனார் என்று தெரியாததால் ஒரு புதிய உற்சவரை பிரதிஷ்டை செய்து விட்டனர்.(எந்த ஆண்டு என்று குறிப்பு இல்லை).

48 ஆண்டுகள் கடந்து விட்டதாலும் அழகிய மணவாளனை, சேவித்த குடிமக்கள் இறந்து போய்விட்டதாலும், அதற்குப் பிறகு வந்தவர்கள் திருமேனியைச் சேவித்து அறியாதவர்களானதாலும், அழகிய மணவாளனைக் கோயிலில் எழுந்தருள மறுத்து விட்டனர். பழைய அழகிய மணவாள பெருமாளை சேவித்தவர் யாரும் எஞ்சி இல்லாததால் இரண்டு உற்சவர்களுள் எவர் முன்னால் இருந்த அழகிய மணவாளன் என்று சர்ச்சை எழுந்தது.

அப்போது மிக வயதான ஒருவர் தான் பழைய அழகிய மணவாளனை சேவித்தது உண்டு என்றும் ஆனால் அவருக்கு கண் பார்வை போய் விட்டது என்றும் கூறினார்.

அழகிய மணவாளனும் புதிதாக எழுந்தருளப்பட்ட உற்சவரும் காண்பதற்கும் உயரத்திலும் அங்க முத்திரைகளிலும் ஒரே போல் இருப்பர் என்பது வியப்பான ஒன்று.இந்த முதியவர் தன்னை ஒரு ஈரங்கொல்லி (வணத்தான்) கண் பார்வை இல்லாமையால், திருமேனி சேவிக்கவில்லை என்றாலும், அழகிய மணவாளன் சாற்றியிருந்த ஈரவாடை தீர்த்தம் (திருமஞ்சனம் போது சாற்றப்படும் வஸ்த்திரம்) சாப்பிட்டுக் கைங்கர்யம் பண்ணி பழகி இருப்பதைச் சொல்லி, அதன்மூலம் அழகிய மணவாளனைக் கண்டறிய முடியும் என்றார். அதன்படியே, அழகிய மணவாளன் திருமேனிக்கும், திருவரங்கமாளிகையார் திருமேனிக்கும், திருமஞ்சனம் செய்து, ஈரவாடை தீர்த்தம் சாதிக்குமாறு சொன்னார்.

அதனால் இரண்டு உற்சவ மூர்த்திகளுக்கும் திருமஞ்சனம் செய்து தமக்கு தீர்த்தம் தருமாறு வேண்டினார். ஊர் பெரியோர்களும் அவ்வாறே செய்தனர்.

அனுமன் சீதையை கண்ட பின்னர் “கண்டேன் சீதையை!!” என ராமரிடம் கூறியது போல் அழகிய மணவாளப் பெருமாள் ஈரவாடை தீர்த்தம் பெற்றதும் “கண்டேன் பெருமாளை” என்றும் “இவரே நம்பெருமாள்” என்றும் கூறினார்.

அன்று முதல் அழகிய மணவாளன் என்ற திருநாமத்தை விட நம்பெருமாள் என்ற திருநாமமே பிரசித்தம் ஆனது. புதிதாக வந்த உற்சவருக்கு “திருவரங்க மாளிகையார் ” என்று திருநாமம் ஏற்பட்டது. பின்னர் அந்த ஸ்ரீவைஷ்ணவ வன்னாத்தனுக்கு மரியாதை சமர்ப்பிக்கப்பட்டது.

————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திவ்ய தேச ப்ரஹ்மோத்சவ விவரணம் —ஸ்ரீ திவ்ய தேச கருட சேவைகள்

May 4, 2022

ஸ்ரீ ரெங்கம் விருப்பன் திருநாள் – 21.04.22 முதல் 01.05.22 முடிய

திருமுளை 19.04.22
நகரசோதனை – 20.04.22

21.04.22 – முதல் திருநாள் – காலை: துவஜாரோஹணம்
மாலை நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பாடு .

22.04.22 – இரண்டாம் திருநாள் – காலை: பல்லக்கு
மாலை : கற்பகவிருட்சம்.

23.04.22 – மூன்றாம் திருநாள் – காலை: சிம்ம வாகனம்
மாலை : யாளி வாகனம்

24.04.22 – நான்காம் திருநாள் -காலை : இரட்டை பிரபை
மாலை : கருட சேவை.

25.04.22 – ஐந்தாம் திருநாள் – காலை : சேஷ வாகனம்
மாலை : ஹனுமந்த வாகனம்.

26.04.22 – ஆறாம் திருநாள் – காலை : தங்க ஹம்ஸ வாகனம்
மாலை : யானை.

27.04.22 – ஏழாம் திருநாள் – மாலை நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன்
திருச்சிவிகையில் புறப்பாடு. (பூந்தேர்)

28.04.22 – எட்டாம் திருநாள் – காலை : வண்டலூர் சப்பரம்.
வெள்ளி குதிரை வாகனம்.
மாலை : தங்க குதிரை வாகனத்தில் வையாளி…

29.04.22 – ஒன்பதாம் திருநாள் – காலை : திருத்தேர். .

30.04.22 – பத்தாம் திருநாள் – மாலை : சப்தாவரணம்.

01.05.22- பதினோராம் திருநாள் இரவு : ஆளும் பல்லக்கு

———–

நாலாம் நாள் மாலை கருட உத்சவம்
மாசி கருடன் வெள்ளி கருடன்
மற்ற தங்க கருடன்
தங்க ஹம்ச வாஹனம் சித்திரை -விருப்பம் திரு நாள் -ஆறாம் நாள்
வெள்ளிக்குதிரை சித்திரை
ஒரே நாள் இரண்டு குதிரை வாஹனம் எட்டாம் நாள் -தங்க குதிரை வாஹனம்
வையாளி தங்க குதிரையில்
திரு ஆபரணங்கள் சாத்தி வெள்ளிக்குதிரை வாஹனம்
காலையில் வெள்ளிக் குதிரை வாஹனம் மாலையில் தங்க குதிரை வாஹனம்

பங்குனி ப்ரஹ்மோத்சவம் விபீஷணன் மட்டும் எழுந்து அருளி மிருத ஸங்க்ரஹம்
மற்றவற்றில் திருவடியும் சேர்ந்து எழுந்து அருளிச் செய்வார்
ஐப்பசி திருவோணத்தில் திருப்பாற்கடலில் தோன்றியவர்
முன்பும் ஐப்பசி ஸ்ரவண ப்ரஹ்மோத்சவமும் பிள்ளை லோகாச்சார்யார் காலம் வரை நடந்து வந்ததாம்

ஐப்பசி திருவோணம் -திருப்பாற்கடலில் ஆவிர்பாவம்
முன்பு ப்ரஹ்மோஸ்த்வம் நடந்ததாம்
ரோஹிணி -பிரதிஷடை -பங்குனி ரோஹிணி தொடங்கி உத்தரம் முடியும்
தீர்த்தவாரிக்கு அடுத்த நாள் திருத்தேர்
சித்திரை ரேவதி தீர்த்தவாரி-திருத்தேர் -மீண்டும் பிரதிஷ்டை 1371 வைகாசி ரேவதி
தண்டோரா போட்டு துலா பாரம் -செய்து பொருள் சேர்த்து 12 வருஷம் சரிப்படுத்தி
60 வருஷம் கழித்தே நடந்ததாம் –
வெங்கல திருத்தேர் தட்டு -குண்டு சார்வன் காட்டியது -அங்கு எழுந்து அருளி கொடி ஏற்றம் நடக்கும்
தை புனர்வசு -பூபதி ராஜா நக்ஷத்ரம் -1413 தொடங்கி நடக்கிறது –
மா முனிகள் வந்த இதே வருஷம் -மா முனிகள் அனுமதி உடன் தொடங்கிற்றாம்
கதிர் அலங்காரம் தாயார் சந்நிதியில் -நடக்கும் –

————

கோயில் என்று அழைக்கப்படும் திருவரங்கத்தில்– இன்று ஸ்ரீராமநவமி….

ஸ்ரீரங்கம் அரங்கனாதருக்கு ஏழு நாச்சிமார்கள்…
1) ஸ்ரீதேவி.,
2) பூதேவி.,
3) துலுக்க நாச்சியார்.,
4) சேரகுலவல்லி நாச்சியார்.,
5) கமலவல்லி நாச்சியார்.,
6) கோதை நாச்சியார்.,
7) ரெங்க நாச்சியார் ஆகியோர்….

இன்று சித்திரை வளர்பிறை, நவமி….
ஸ்ரீராமபிரான் அவதார திருநாள்.
இன்று தான்
ஸ்ரீரங்கம் பெரிய கோவிலில் ஸ்ரீராம நவமி கொண்டாடப் படுகிறது.
(மற்ற திவ்ய தேசங்களிலும் கோவில்களிலும் பங்குனி மாதத்திலேயே கொண்டாடப் படுகிறது)

இன்றைய சேர்த்தி ஸேவையில் அரங்கனும் சேரகுலவல்லித் தாயாரும்……!!!*

அரங்கனோடு அற்புதமாகச் சேர்ந்தவர்கள்…

பெரிய பிராட்டியார் ஸ்ரீரங்கநாயகித் தாயார்
உறையூர் கமலவல்லித் தாயார்
சேரகுலவல்லி நாச்சியார்
பூமிப்பிராட்டி ஆண்டாள்
துலுக்கநாச்சியார்
மற்றும் திருப்பாணாழ்வார் ஆகியோர்.
குலசேகராழ்வாரின் திருமகள்
சேரகுலவல்லி நாச்சியார்

ஸ்ரீராமபிரான் ஒருவரையே சதா சிந்தனையில் நிறுத்தி அரசாட்சி செய்தவர் குலசேகர ஆழ்வார் .
இவர் இராமபிரானின் ஜன்ம நட்சத்திரமான புனர்வசு அன்று அவதரித்தவர். இவரது இராமபக்தி அளவற்றது.
இராமாயணம் கேட்கும் போதெல்லாம் நெகிழ்ந்து விடுவார்.சில கட்டங்களில் மெய்ம்மறந்து,கொதித்தெழுந்து
தன் சேனைகளுடன், இராவண சேனையுடன் யுத்தம் செய்யப் புறப்பட்டிருக்கின்றார்.
இத்தனைக்கும் இவருக்கு திடவ்ரதன் என்று பெயர்.. மாமன்னன்..!
சோழ, பாண்டிய அரசுகள் மீது படையெடுத்து அவர்களை ஓட ஓட விரட்டியிருக்கின்றார்.

இராம என்னும் நாமம் இவரை மெய்மறக்கச் செய்தது. அனைத்தையும் மறந்து, அவர் ஒருவரை மட்டுமே
சிந்தையில் நிறுத்துபவர்கள் நெகிழத்தான் செய்வார்கள்.
இவர்கள் அந்தந்த அனுபவங்களோடு சிந்தையில் கலந்தவர்கள்.
இவரது அளவற்ற ஈடுபாட்டினால் இவரது பாசுரங்கள் பெருமாள் திருமொழி என்றே அழைக்கப்படுகின்றது.

இராமன் மீது இவ்வளவு அன்பு கொண்டவர்க்கு இராமன் ஆராதித்த அரங்கன் மீது எவ்வளவு ஆசையிருக்கும்!
மற்ற ஆழ்வார்க்கு இல்லாத பெருமாள்’ என்னும் பேரினைப் பெற்றவர் இந்த குலசேகரப் பெருமாள்!
இவர் பாடிய முதல் பாசுரமே அரங்கன் மீது தான்!

இருளரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தியணிபணம் ஆயிரங்களார்ந்த
அரவரசப் பெருஞ்சோதி அனந்தனென்னும்
அணிவிளங்கும் உயர்வெள்ளை
அணையை மேவி
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி
திரைக்கையால் அடிவருடப் பள்ளிகொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு
என்கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே?

(மிகவும் தெளிந்து விளங்கும் நீரினையுடையகாவிரியானது, தனது அலைகள் என்ற கைகளால்
இதமாகத் திருவடிகளைப் பிடித்து விடும்படி தழுவி ஓடும் இடமான திருவரங்கம் என்னும் பெரிய நகரத்தில்,
இருளானது சிதறி ஓடும்படி, ஓளி வீசும்,
மாணிக்கக் கற்கள் பொருத்தியுள்ள நெற்றி யினையும், மிகவும் நேர்த்தியான ஆயிரம் படங்கள் கொண்டு
நாகங்களுக்கு அரசன் என்னும் மிகுதியான கம்பீரத்தையுடைய ஆதிசேஷனாகிய அழகுள்ள வெண்மை
நிற படுக்கையில் கண்வளர்கின்ற நீல ரத்னக்கல் போன்ற பெரியபெருமாளை,
என்னுடைய கண்கள் குளிர்ந்து வணங்கி நான் மகிழ்வுறும் நாளானதுஎந்நாளோ? என்றவாறு
அரங்கனைநினைத்து ஏங்குகிறார். அரங்கனை அடைவதற்கு இந்த ஏக்கம் மிக முக்யம்.

இந்த தாபம்/பாரிப்பு இருந்தால் போதும்…
பெருமாள் அழைத்துக் கொள்வார்.

ஆழ்வாரின் திருமகள் சேரகுல வல்லி நம்பெருமாளையே ஸ்ரீராமபிரானாக வரித்து
ஆழ்ந்த பக்தியில் லயித்திருந்தார்.

(ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திலும்,
நம்பெருமாளை ஸ்ரீராமராகவும்
பள்ளி கொண்டிருக்கும் பெரிய பெருமாளை
ஸ்ரீகிருஷ்ணராகவும் வழிபடும் வழக்கம் உள்ளது)

அரங்கனை அனுதினமும் தரிசித்த குலசேகராழ்வார் கண்கள் மட்டும் பேறு அடையவில்லை.
யாரை எண்ணி எண்ணி, அவரும் அவரது மகளான சேரகுலவல்லியும் ஏங்கினார்களோ
அவரையே மாப்பிள்ளையாக அடையும் பேறு பெற்றார்.
அரங்கன் மனமுவந்து ஏற்ற பக்தை இந்த சேரகுலவல்லி!

நம்பெருமாள்-சேரகுலவல்லித் தாயார் சேர்த்தி:

ஸ்ரீராமநவமியன்று இவரை மணந்தார் அரங்கன்.
இன்று கோயில் ஸ்ரீராமநவமியன்று இருவருக்கும் ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சுன மண்டபத்தில் சேர்த்தி! 🙏

அரையர்கள் பெருமாள் திருமொழி சேவிக்க, அடியார்கள் சூழ்ந்திருக்க, இருவருக்கும் திருமஞ்சனம் நடைபெற்று
ஏக ஆசனத்தில் பக்தர்களுக்கு அனுக்ரஹிப்பார்கள்!
சேரகுலவல்லி நாச்சியார் சந்நிதி அர்ச்சுன மண்டபத்தின் வலது(மேற்குப்) புறத்தில் உள்ளது.

நம்பெருமாள் வருடத்தில் மூன்று சேர்த்தி கண்டருள்கிறார்

1-பங்குனி ஆயில்ய நட்சித்திரத்தில் உறையூர் கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி
2-பங்குனி உத்திரத்தில் பெரியபிராட்டியாருடன் சேர்த்தி
3-சித்திரை ஸ்ரீராமநவமியில் சேரகுலவல்லி நாச்சியாருடன் சேர்த்

————

ஸ்ரீ ரெங்கநாதப்பெருமாள் திருக்கோயில் திருநீர்மலை

முதல் நாள் -மாலை அங்குரார்ப்பணம் –
ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் போல் சித்திரை திருவோணம் தீர்த்தவாரி

இரண்டாம் நாள் –
காலை துவஜ ஆரோஹணம்
காலை -தோளுக்கு இனியான்
இரவு -தோளுக்கு இனியான்

மூன்றாம் நாள்
காலை -ஸிம்ஹ வாஹநம்
மாலை -ஹம்ஸ வாஹநம்

நான்காம் நாள்
காலை -பல்லக்கு
மாலை -ஹனுமந்த வாஹநம்

ஐந்தாம் நாள்
காலை -பல்லக்கு
மாலை -சேஷ வாஹநம்

ஆறாம் நாள்
காலை -பல்லக்கு -நாச்சியார் திருக்கோலம்
மாலை -கருட சேவை

ஏழாம் நாள்
காலை -சூர்ண உத்ஸவம்
மாலை -யானை வாஹநம்

எட்டாம் நாள்
காலை -திருத்தேர்

ஒன்பதாம் நாள் –
காலை -பல்லக்கு
மாலை -திருமஞ்சனம்
மாலை -குதிரை வாஹநம்

பத்தாம் நாள்
காலை -பல்லக்கு -தீர்த்த வாரி
மாலை -த்வஜ அவரோஹணம்

பதினோராம் நாள்
மாலை -தோளுக்கு இனியான் -துவாதச ஆராதனம்

பன்னிரண்டாம் நாள்
மாலை -விடையாற்றி உத்ஸவம்

———-

சித்திரை திருவோணம்
ஸ்ரீ மாதவப்பெருமாள் திருக்கோயில் -மயிலாப்பூர்
த்வஜ ஆரோஹணம்

————-

ஸ்ரீ பார்த்தசாரதி ப்ரஹ்மோத்சவம்

முதலில் இரவில் -செல்வர் உத்சவம் -புஷ்ப பல்லாக்கு
அடுத்த நாள் -மாலை -அங்குரார்ப்பணம் –சேனை முதன்மையார்

முதல் நாள்
காலை –தர்மாதி பீடம்
மாலை –புன்னை மர வாஹனம்

இரண்டாம் நாள்
காலை –சேஷ வாஹனம் –பரமபத நாதன் திருக்கோலம்
மாலை -ஸிம்ஹ வாஹனம்

மூன்றாம் நாள்
காலை -கருட சேவை
பகல் -ஏகாந்த சேவை
மாலை -ஹம்ஸ வாஹனம்

நான்காம் நாள்
காலை –ஸூர்ய ப்ரபை
மாலை –சந்த்ர ப்ரபை

ஐந்தாம் நாள்
காலை -பல்லக்கு -நாச்சியார் திருக்கோலம்
மாலை -ஹனுமந்த வாஹனம்

ஆறாம் நாள்
காலை -ஸூர்ணாபிஷேகம்
காலை -ஆனந்த விமானம்
மாலை -யானை வாஹனம்

ஏழாம் நாள்
காலை –திருத்தேர்
இரவு –தோட்டத் திருமஞ்சனம்

எட்டாம் நாள்
காலை -வெண்ணெய் தாழிக் கண்ணன்
மாலை -குதிரை வாஹனம்

ஒன்பதாம் நாள் -சித்திரை திருவோணம்
காலை -ஆளும் பல்லாக்கு
மதியம் -தீர்த்தவாரி
மாலை -கண்ணாடி பல்லாக்கு

பத்தாம் நாள்
மதியம் -துவாதச ஆராதனம்
இரவு -சப்தாவரணம் -சிறிய தேர்

பிரதி தினம் மாலை -பத்தி உலாத்தல்

விடையாற்று உத்சவம் -பத்து நாள்கள்

————–

ஸ்ரீ கனக வல்லி ஸமேத ஸ்ரீ வீர ராகவ பர ப்ரஹ்மணே நம

வீஷாவநே விஜய கோடி விமான மத்யே வேதாந்தம் ருக்யமபி நித்யம் அசேஷ த்ருஸ்யம்
ஹ்ருத் தாப நாஸந ஸரஸ் தடே பாரிஜாதம் ஸ்ரீ வீர ராக்வம் அஹம் சரணம் ப்ரபத்யே
ஸ்ரீ பூமிலாலித பதம் ஸ்ரித சேஷ தல்பம் கல்பாந்த யோக்ய புவந யோக நித்ரம்
ஸ்ரீ சாலி ஹோத்ர சிரஸா த்ருத ஹஸ்தம் ஸ்ரீ வீர ராகவா விபும் ஸ்ரயதாம் மநோ மே

முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைக்க
புனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர் கோன்
தனியன் சேயன் தான் ஒருவனாகிலும் தன்னடியார்க்கு இனியன்
எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே –

சுபக்ருத் வருஷம் சித்திரை -23-வெள்ளிக்கிழமை ஆரம்பம்
வைகாசி மாதம் -1-ஞாயிற்றுக்கிழமை
முதல் நாள்-
6-5-2022– மே -வெள்ளி – –
காலை 4-45- மேஷ லக்கினம் த்வஜ ஆரோஹணம்
தங்கச்சப்பரம் காலை 5 மணிக்குப் புறப்பாடு
பக்தி உலா காலை 9-30-
திருமஞ்சனம் காலை -11 -00
இரவு
பக்தி உலா -மாலை 5 மணி
புறப்பாடு -ஸிம்ஹ வாஹனம் -7 மணி

இரண்டாம் நாள் காலை -ஹம்ஸ வாஹனம் -5-00 மணி
பக்தி உலா காலை 8-00 மணி
திருமஞ்சனம் -காலை 9-30 மணி
இரவு
பக்தி உலா -மாலை 5 -00 மணி
புறப்பாடு -7-00 மணி -ஸூர்ய பிரபை

மூன்றாம் நாள்
காலை 4-00 மணி கோபுர தர்சனம்
கருட சேவை புறப்பாடு -காலை 5-30-மணி
திருமஞ்சனம் 12-00 மணி

பக்தி உலா -5-00-மணி
புறப்பாடு -7-30- மணி ஹநுமந்த வாஹனம்

நான்காம் நாள்
காலை -புறப்பாடு -5-00 மணி சேஷ வாஹனம்
பரமபத நாதன் திருக்கோலம்
பக்தி உலா -8-00 மணி
திருமஞ்சனம் -காலை -10-00 மணி

இரவு –
பக்தி உலா மாலை -5-00 மணி
புறப்பாடு –7-00 மணி -சந்த்ர பிரபை –

ஐந்தாம் நாள்
புறப்பாடு -காலை 4-00 மணி நாச்சியார் திருக்கோலம்
திருமஞ்சனம் -காலை 10-30 மணி
ஸ்ரீ ராம நவமி ஆஸ்தானம்

இரவு
பக்தி உலா -மாலை 5-00 மணி
புறப்பாடு -7-00 மணி -யாளி வாஹனம்

ஆறாம் நாள்
வேணுகோபாலன் திருக்கோலம்
சூர்ணாபிஷேகம் காலை 5-00 மணி
புறப்பாடு -காலை -6-00 மணி வெள்ளி சப்பரம்
திருமஞ்சனம் -காலை -11 மணி

இரவு
பக்தி உலா -மாலை 5-00 மணி
புறப்பாடு -யானை வாஹனம் -7-00 மணி

ஏழாம் நாள்
காலை திருத்தேர்
மீனா லக்கினம் -காலை 4-00 மணிக்கு தேருக்கு எழுந்து அருளுதல்
7-30 மணி திருத்தேர் புறப்பாடு

மாலை 5-00 திருத்தேரில் இருந்து எழுந்து அருளுதல்
திருமஞ்சனம் -மாலை 6-30-மணி
கோயிலுக்கு பெருமாள் எழுந்து அருளுதல் இரவு 9-30 மணி

எட்டாம் நாள்
காலை 9-30 மணி திருமஞ்சனம்
திருப்பாதம் சாடி
திருமஞ்சனம் மாலை -3-00 மணி
பக்தி உலா மாலை 4-30 மணி
புறப்பாடு -இரவு 7-30 மணி குதிரை வாஹனம்

ஒன்பதாம் நாள்
காலை -4-00 ஆள் மேல் பல்லக்கு
தீர்த்தவாரி -காலை -10-30 மணி
திருமஞ்சனம் -காலை 9-30 மணி
பக்தி உலா 5-30-
புறப்பாடு 7-00 மணி விஜயகோடி விமானம்
திருவாய் மொழி சாற்றுமுறை

பத்தாம் நாள்
காலை 9-30 திருமஞ்சனம்
துவாதச ஆராதனம் -காலை -10-30
பக்தி உலா -இரவு 7-00 மணி
புறப்பாடு கண்ணாடி பல்லக்கு-9-0 மணி
த்வஜ அவரோஹணம் -இரவு 11-30மணி

————–

ஸ்ரீ வைகுண்டம் –
ஸ்ரீ திருக்கோஷ்டியூர் –
உத்தமர் கோயில்
ஆராவமுதாழ்வான்
திருப்புல்லாணி கல்யாண ஜெகந்நாதப்பெருமாள்
இதே சமயத்தில் ப்ரஹ்மோத்சவம்

—————–

ஸ்ரீ திவ்ய தேச கருட சேவைகள்

வையம் கண்ட வைகாசி திருநாள்-

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக புகழ் பெற்றிருக்கும் நகரம் காஞ்சி, ‘நகரேஷு காஞ்சி’ என்பர்.
‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகாபுரி த்வராவதி சைவ சப்த ஏகா மோக்ஷ தாயகா’ என்ற
வாக்கியத்தின்படி அயோத்யா, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி மற்றும் துவாரகா என்ற
ஏழு க்ஷேத்திரங்களும் முக்தி தரும் ஸ்தலங்களாகும்.
பெண்கள் இடையில் அணியும் ஒரு அணிகலனுக்கு காஞ்சி என்று பெயர்.
இந்த நகரம், அந்த அணிகலன் வடிவில் இருந்ததால் காஞ்சி என்ற பெயர் ஏற்பட்டது.
காஞ்சி ஒரு புண்ணிய பூமி.
தொண்டை மண்டலத்தில் உள்ள 22 திவ்ய தேசங்களில் 14 திவ்ய தேசங்களை காஞ்சியிலே காணலாம்.

பெரிய காஞ்சியில் 9 திவ்ய தேசங்களும்
(திருப்பாடகம், திருநிலாத்திங்கள் துண்டம், திரு ஊரகம், திரு நீரகம், திருக்காரகம்,
திருக்கார்வானம், திருக்கள்வனூர், திருப்பவளவண்ணம்-திருப்பச்சைவண்ணன், திருப்பரமேச்சுர விண்ணகரம்)
சின்னக் காஞ்சியில் 5 திவ்ய தேசங்களும்
(திருக்கச்சி, திருஅட்டபுயகரம், திருத்தண்கா, திருவேளுக்கை, திருவெஃகா ) உள்ளன.

அனைவருக்கும் கேட்கும் வரமெல்லாம் கொடுப்பதால் எம்பெருமானுக்கு வரதர் என்னும் திருநாமம் ஏற்பட்டது.

தேவலோகத்தில் உள்ள ஐராவதம் என்ற யானையே மலை வடிவம் கொண்டு எம்பெருமானைத் தாங்கி நின்றதால்,
இதற்கு அத்திகிரி என்ற பெயர் ஏற்பட்டது.

ஐராவதம் என்பது வெள்ளை நிற யானை என்பதால் ஸ்வேதகிரி என்றழைக்கப்பட்டு வேதகிரி என மருவியது.

மலை மீது காட்சி தருவதால், மூலவருக்கு மலையாளன் என்ற திருநாமுமம் உண்டு.

இவர் பல யுகம் கண்ட எம்பெருமான்.
கிருத யுகத்தில் பிரம்மனும்,
திரேதாயுகத்தில் கஜேந்திரனும்,
துவாபர யுகத்தில் பிருஹஸ்பதியும்,
கலியுகத்தில் அனந்தனும் வழிபட்டு பல நற்பலன்களை அடைந்தனர்.
பிரம்மனே இங்கு நேரில் வந்து எம்பெருமானை வழிபடுவதாகஐதீஹம்.
அதே போல் திருவனந்தாழ்வான் எனப்படும் ஆதிசேஷனுமும் இங்கு வந்து வழிபடுவதாக சொல்லப் படுகிறது.

வாரணகிரி, அத்திகிரி என்ற ஒரு சிறிய மலைகளால் ஆனது இந்த திருத்தலம்.
வாரணகிரி என்ற முதல் தளத்தில் நரசிம்ம அவதார அமர்ந்த திருக்கோலத்தில் அழகிய சிங்கர்
ஹரித்ரா தேவித் தாயாருடன் எழுந்தருளி உள்ளார்.
இரண்டாவது தளமான அத்திகிரியில் தேவப்பெருமாள் எழுந்து அருளி உள்ளார்.

இங்குள்ள அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் இரண்டு நீராழி மண்டபங்கள் உள்ளன.
அதில் தெற்கில் உள்ள மண்டபத்தில் அத்திவரதர் என்றழைக்கப்படும் அத்தி மரத்தால் ஆன
எம்பெருமானை 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளியே எடுத்து பூஜை செய்து அடியார்கள் தரிசனத்திற்குப்
பிறகு மீண்டும் திருக்குளத்தில் உள்ள நீராழி மண்டபத்திலேயே எழுந்தருள செய்கிறார்கள்.

இந்த குளக்கரையில் உள்ள சுதர்சன ஆழ்வார் என்று அழைக்கப்படும் சக்கரத்தாழ்வார் சன்னதி மிகவும் விஷேசமானது.
மிக பெரியவடிவில், பதினாறு திருக்கரங்களுடன், காட்சி அளிக்கும் இந்த சக்கரத்தாழ்வாரை சுற்றி உள்ள
அலங்கார வளைவில் 12 சக்கரத்தாழ்வார் உருவங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தாயார் புறப்பாடு,
ஒவ்வொரு ஏகாதசியும் எம்பெருமான் புறப்பாடு.
இரண்டும் சேர்ந்து வந்தால், இருவருக்கும் சேர்ந்து புறப்பாடு என்று அடியவர்களுக்கு ஆனந்தம்.

இங்கு நடைபெறும் வைகாசி விசாக கருட சேவை (3ம் நாள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இதனை வையம் கண்ட வைகாசி திருநாள் என்று கொண்டாடுவர்.
இந்த கருட சேவையை குறிப்பிட்டு சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் கீர்த்தனை பாடி உள்ளார்.

உடையவர் திருமாளிகை என்று இராமானுஜர் இளமை காலத்தில் வாழ்ந்த இல்லம் இன்றும் இங்கு உள்ளது.
இந்த கோவிலின் பிரகாரத்தில் தான் ஸ்ரீஆளவந்தார் என்ற ஆச்சாரியார், இராமானுஜரை முதன் முதலில் கண்டு
ஆம், முதல்வன் இவன் என்று அருளியது.
ஸ்வாமி இராமானுஜரை திருவரங்கத்திற்கு தந்தருளியதும் இந்த தேவப்பெருமாள் தான்.

ஸ்தல வரலாறு

ஒரு முறை பிரம்மா எம்பெருமானிடம் தான் ஓர் அஸ்வமேதயாகம் நடத்த வேண்டும் என்று கேட்க,
அதற்கு எம்பெருமான், பிரம்மாவை சத்தியவ்ரத க்ஷேத்திரமான இந்த திருக்கச்சிக்கு வந்து யாகம் செய்ய சொன்னார்.
ப்ரம்மா சரஸ்வதி தேவி இல்லாமல் இந்த யாகத்தை காயத்திரி தேவியுடன் தொடங்கினார்.
இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி தேவி, இந்த யாகத்தைத் தடுக்க பல தடைகளை உருவாக்கினார்.
ஒவ்வொரு முறையும் எம்பெருமான் அந்த தடைகளை உடைத்து,
பிரம்மாவின் யாகத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற காரணமாக இருந்தார்.

சரஸ்வதி, இருள்மயமாக, யாக குண்டத்தை மாற்றியபோது,
திருத்தண்கா தீப பிரகாசராக (விளக்கொளிபெருமாள்) எம்பெருமான் வந்தார்.
சரஸ்வதி அரக்கர்களை அனுப்பி வைத்தார்.
அப்பொழுது எம்பெருமான் அஷ்டபுஜகரத்தானாக ஆதிகேசவ பெருமாளாக வந்து அரக்கர்களை விரட்டி அடித்தார்.

தொடர்ந்து, சரஸ்வதி யானைகளை கூட்டம் கூட்டமாக அனுப்பி வைத்து இந்த யாகத்தை தடை செய்ய முயற்சித்த போது,
எம்பெருமான் வேளுக்கை யோகநரசிம்மராக வந்து யானைகளை விரட்டினார்.

சரஸ்வதி வேகவதி என்ற நதியில் வெள்ளமாக வந்தபோது,
சொன்ன வண்ணம் செய்த பெருமாளாக வந்து நதியின் குறுக்கே படுத்துக்கொண்டார்.

இப்படி, இங்குள்ள திவ்யதேச எம்பெருமான்கள் ஒரே காரணத்திற்காக ஒரே காலத்தில் எழுந்தருளி உள்ளனர்.

இப்படி எல்லா தடைகளையும் தாண்டியபின்,
பிரம்மாவின் யாககுண்டத்தில் இருந்து புண்ணியகோடி விமானத்துடன் தோன்றியவர் தான் இந்த திருக்கச்சி தேவப்பெருமாள்.
யாககுண்டத்தில் இருந்து அக்னி ஜுவாலைகளுக்கு மத்தியில் இருந்து வந்ததால் தான் இன்றும்
எம்பெருமானின் திருமுகத்தில் அக்னி வடுக்கள் இருப்பதை நாம் காணலாம்.
பிரம்மா அத்தி மரத்தால் வடித்த ஒரு எம்பெருமானை இங்கே அத்தி வரதர் என்ற திருநாமத்துடன் பிரதிஷ்டை செய்தார்.

ஸ்ருங்கிபேரர் என்ற முனிவரின் இரண்டு சிஷ்யர்கள், குருவிற்கு எடுத்துவைத்த தீர்த்தத்தில் பல்லி ஒன்று விழுந்து
இருந்ததை கவனிக்காததால், முனிவர் கோபம் கொண்டு அவர்கள் இருவரையும் பல்லியாக மாற சபித்தார்.
அவர்கள் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்க, முனிவர் இந்திரன் திருக்கச்சிக்கு வரும்வரை காத்து இருந்தால்,
அவர்கள் மீண்டும் பழைய நிலை அடைவார்கள் என்று கூற அவர்களும், பல்லிகளாக திருக்கச்சியில் காத்து இருந்து,
பின் கஜேந்திரன் என்ற யானையாக இந்திரன் இங்கு நுழைந்த போது,
இருவரும் சாபம் தீர்ந்து பழைய நிலை அடைந்தார்கள் என்பது வரலாறு.
அந்த பல்லிகளே இன்று தங்க, வெள்ளி பல்லிகளாக பிரகாரத்தில் உள்ளன.
இவற்றை தரிசித்தால் எல்லா நோய்களும் அகலும் என்று நம்பிக்கை.

வைகாசி விசாக கருட சேவையைப் பற்றி ஒரு நிகழ்ச்சி.
சோளிங்கரில் வசித்த தொட்டாச்சார்யார் என்ற பக்தர் தவறாமல் ஒவ்வொரு ஆண்டும் இந்த தரிசனத்தை காண்பார்.
ஒரு வருடம் உடல் நலம் குன்றியபோது அவரால் காஞ்சி வந்து இந்த திவ்ய சேவையை காண இயலவில்லை.
அதனால் அவர் சோளிங்கரில் உள்ள குளக்கரை அருகே வந்து நின்று எம்பெருமானிடம் உருகி
தன்னுடைய நிலையை சொல்லி வருந்தினார். எம்பெருமான் அவருக்கு உடனே அங்கேயே கருட சேவை காட்சியைக் கொடுத்தார்.
அதனால் இன்றும், காஞ்சியில் இந்த கருட சேவை போது, எம்பெருமானை ஒரு வினாடி குடைகளால் மூடி
அந்த அடியவருக்கு காட்சி கொடுத்ததை நடத்தி காண்பிப்பார்கள்.

பூதத்தாழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதியில் (96), அத்தியூரான் புள்ளை ஊர்வான் என்று பாடி இருப்பது,
இந்த திவ்யதேச எம்பெருமானான பேரருளாளன், கருட சேவையை முன்னிட்டு என்பதால் இன்றும் வரதனின் கருடசேவை பிரசித்தம்.

பேயாழ்வார் அருளிய மூன்றாம் திருவந்தாதியில் (26), நிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும் என்று திருக்கச்சிக்கு நிரந்தசீர் என்று
சிறப்பு அடைமொழி கொடுத்து உள்ளார்.
இதற்கு உரையாசிரியர், நிறைய திவ்யதேசங்களை உடைய காஞ்சி என்று விளக்கம் கொடுத்து உள்ளார்.

இங்கு வாழ்ந்த திருக்கச்சி நம்பிகள் இந்த எம்பெருமானுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்தார்.
அதாவது பெருமாளுக்கு விசிறி வைத்து காற்று வீசுவார். திருக்கச்சி நம்பிக்கு காஞ்சி பூர்ணர் என்ற சிறப்பு பெயர் உண்டு.
எம்பெருமான், திருக்கச்சி நம்பிகள் தன்னுடன் நேரடியாக உரையாடும் அளவுக்கு அவருக்கு அருள் புரிந்து இருந்தான்.

ராமானுஜர், தம் முதல் குருவான யாதவப்பிரகாசருடன் வடநாட்டு யாத்திரை சென்ற போது, அவருக்கு எதிரான சதி,
அவரின் சித்தி பிள்ளை கோவிந்தபட்டர், (பின்னாளில் எம்பார் என்ற ஆச்சார்யர்) மூலம் தெரிய வந்ததால்
யாருக்கும் தெரியாமல் விந்திய மலையிலேயே தங்கிவிட்டார்.
பிறகு ஒரே இரவில், தேவப்பெருமாளும், பெரிய பிராட்டியும், வேடன், வேடுவச்சி வேடம் புனைந்து
ராமானுஜரை காஞ்சிக்கு அருகில் உள்ள சாலைக்கிணறு என்ற இடத்தில கொண்டு விட்டார்கள்.

தமக்கு உதவி புரிந்தது தேவப்பெருமாளும் தாயாரும் என்று உணர்ந்து கொண்ட ராமானுஜர்,
திருக்கச்சி நம்பிகளை ஆச்சாரியனாக ஏற்றுக்கொண்டு, சாலைக் கிணற்றிலிருந்து தேவப்பெருமாளுக்கு
திருமஞ்சனத்திற்குத் தீர்த்தம் கொண்டு வரும் கைங்கர்யத்தை மேற்கொண்டார்.
சுவாமி ராமானுஜருக்கு ஆரம்ப காலத்தில், நம் சம்பிரதாயத்தில் எழுந்த சந்தேகங்களுக்கு தேவப்பெருமாளுடன் பேசி,
தேவப்பெருமாள் அருளிய ஆறு வார்த்தைகளை ராமானுஜருக்கு சொல்லியவர் திருக்கச்சி நம்பி ஆவார்.

இராமானுஜருக்கு அருளிய அந்த ஆறு வார்த்தைகள்.

1-அஹமேவ பரம்தத்வம் ஸ்ரீமந் நாராயணனே எல்லாவற்றிக்கும் தத்துவமாய் விளங்கும் பரம்பொருள்
2-தர்சனம் பேத ஏவச ஜீவாத்மா, பரமாத்மா இரண்டும் வெவ்வேறானவை.
3-உபாயேஷு ப்ரபத்தி ஸ்யாத் மோட்சம் அடைய சரணாகதியே சிறந்தவழி
4-அந்திமஸ்ம்ருதி வர்ஜனம் இறுதி காலத்தில் எம்பெருமானை நினைக்க முடியாவிட்டால் தவறில்லை
5-தேஹாவஸானே முக்திஶ்யாத் அவனை உபாயமாகக் கொண்டவர்களுக்கு, பிறவி முடிந்ததும் மோக்ஷம் தருகிறார்.
6-பூர்ணச்யார்ய ஸமாச்ரய பெரிய நம்பியை ஆச்சார்யராக ஏற்றுக் கொள்ளத்தக்கது

ஸ்ரீ இராமானுஜருக்காக கிருமி கண்ட சோழ மன்னனிடம் தன்னுடைய கண்களை இழந்த
கூரத்தாழ்வான், ராமானுஜரின் ஆணைப்படி வரதராஜ ஸ்தவம் என்ற ஸ்தோத்ரத்தை இந்த எம்பெருமானுக்குகாக எழுதி,
அவர் முன்னே சொல்ல, உடனே இந்த எம்பெருமான் அவருக்கு மீண்டும் கண் பார்வையை அருளினார்.

வேதாந்த தேசிகரிடம் ஒரு ஏழை பிரம்மச்சாரி பையன் தன் திருமணத்திற்காக நிதி உதவி கேட்க,
அவர் பெருந்தேவி தாயார் சந்நிதியில், ஸ்ரீ ஸ்துதி என்ற இருபத்திஐந்து ஸ்லோகங்களை பாட,
தாயாரின் மனதை தொட்ட ஸ்லோகங்கள், அங்கே ஒரு பொன்மழையை கொட்ட செய்து அந்த பையனின் துயரைத் தீர்த்தது.
இது கனகதாரா ஸ்தோத்திரத்தின் மூலம் ஆதி சங்கரர் ஓர் ஏழைப் பெண்ணிற்காக தங்கமழை பெய்வித்ததைப் போலவே
இந்த திவ்யதேசத்தில் நடந்த சரித்திர நிகழ்ச்சி. இதனால் இந்த தாயாருக்கு தங்கத்தாயார் என்ற திருநாமமும் உண்டு.

———–

24 கருட சேவை
மூன்று திவ்ய தேசப் பெருமாள் கோயில் உட்பட 24 கோயில்களைச் சேர்ந்த கோயில்களைச் சேர்ந்த உற்சவ மூர்த்திகள்
வெண்ணாற்றங்கரையிலிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி
ஆகிய வீதிகளில் எழுந்தருளுகின்றனர். கருட சேவைக்கு அடுத்த நாள் நவநீத சேவை கொண்டாடப்படுகிறது.

————

12 கருட சேவை தரிசனம்

கும்பகோணத்தில் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது 12 கருட சேவை தரிசனம்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3-வது திதியான
அட்சய திருதியை தினத்தில் கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ கோயில்களிலிருந்து 12 கருட வாகனங்களில்
உற்சவப் பெருமாள் சுவாமிகள் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் பொதுமக்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

12 பெருமாள் சுவாமிகளையும் ஒரு சேர ஒரே இடத்தில் கருட வாகனத்தில் தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானதாகும்.
ஆண்டுக்கு ஒருமுறை ஒரே இடத்தில் இந்த தரிசனம் காண கண் ஆயிரம் வேண்டும் என்பார்கள்.

விதியை மாற்றும் சக்தி திதிக்கு உண்டு. அந்த திதிகளில் சிறப்பானது அட்சய திருதியை என்று கருதப்படுகிறது.
இந்த திதியில் எந்தச் செயலை செய்தாலும் வெற்றி கிட்டும்.
எட்டு வகை லட்சுமிகளையும் இல்லத்திற்கு வரவழைக்கும் நாள் என்பது புராணம் கூறும் ஐதீகம்.
குசேலன், குபேரன் ஆனதும் இந்த தினத்தில் தான்.
எனவே இந்த தினத்தில் தங்கம், வீடு, மனை, துணிகள் என எது வாங்கினாலும் இல்லத்தில் தங்கும் என்பது
பொதுமக்களிடையே சமீப காலமாக அதிகரித்து வரும் நம்பிக்கையாகும்.

அதன்படி அட்சய திருதியை நாளான மே-9 ம் தேதி கும்பகோணம் பெரிய கடைத் தெருவில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில்
சாரங்க பாணி,
சக்கரபாணி,
ராமசுவாமி,
ராஜகோபாலசுவாமி,
ஆதிவராகபெருமாள்,
பட்டாபிராமர்,
சந்தான கோபாலகிருஷ்ணன்,
நவநீதகிருஷ்ணன்,
வேணு கோபாலசுவாமி,
வரதராஜபெருமாள்,
பட்டாச்சாரியார் தெரு கிருஷ்ணன்,
சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய
12 கோயில்களிலிருந்து பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்திலும்,
இந்த சுவாமிகளுக்கு நேரெதிரே ஆஞ்சநேயர் சுவாமியும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.

————-

ஒரே இடத்தில் 11 திவ்ய தேச பெருமாள்

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூரில் மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில்
ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 கருட சேவை நடைபெறும்.

ஒரே இடத்தில் 11 திவ்ய தேச பெருமாள்

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூரில் மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயம் இருக்கிறது.
இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 கருட சேவை நடைபெறும்.
108 வைணவத் தலங்களில் நாங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் 11 ஆலயங்கள் இருக்கின்றன.
மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில், 11 ஆலயங்களின் சுவாமிகளும் தங்க கருட வாகனத்தில் எழுந்தருள்வார்கள்.

108 வைணவத் தலங்களில் திருநாங்கூரில் மட்டும் 6 திவ்ய தேசங்கள் உள்ளன.
தவிர இந்த ஊரைச் சுற்றி சுமார் 4 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மேலும் 5 திவ்ய தேசங்கள் இருக்கின்றன.
நாங்கூர் மணிமாடக் கோவில் நாராயணப் பெருமாள்,
அரிமேய வின்னகரம் குடமாடு கூத்தர்,
செம்பொன்னரங்கர்,
பள்ளிகொண்ட பெருமாள்,
வண்புருடோத்தம பெருமாள்,
வைகுந்தநாதன்,
திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள்,
திருமேனிக்கூடம் வரதராஜப் பெருமாள்,
கீழச்சாலை மாதவப்பெருமாள்,
பார்த்தன் பள்ளி பார்த்தசாரதிப் பெருமாள்,
திருகாவாளம்பாடி கோபாலன் ஆகிய தலங்களே, அந்த 11 திவ்ய தேசங்கள் ஆகும்.

ஸ்ரீமன் நாராயணன், தன் திருப்பெயரையே அஷ்டாட்சர மந்திரமாக்கி, அதை உபதேசம் செய்தார்.
அதாவது தானே ஆசானாகி, தன் நாமத்தையே மந்திரமாக்கி, தன்னையே சீடனாக்கி,
தனக்கே உபதேசம் செய்து கொண்ட அற்புதம் அந்த நிகழ்வு.
அதன் மூலம் உலகின் அனைத்து ஜீவராசிகளிலும் நானே நிறைந்திருக்கிறேன் என்பதை நாராயணர் உரைக்கிறார்.

பிரம்மனின் ஐந்தாவது தலையை கொய்ததால், சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது.
அது நீங்க சிவபெருமானை கோகர்ணம் என்ற தலத்தில் திருமாலை நோக்கி தவம் இருந்தார்.
அவர் முன்பாக தோன்றிய திருமால், சிவபெருமானை பலாச வனத்தில் உள்ள நாங்கூர் திருத்தலம் சென்று,
11 ருத்ர தோற்றங்கள் கொண்டு அஸ்வமேத யாகம் செய்யும் படி கூறினார்.

சிவபெருமானும் 11 ருத்ர தோற்றம் கொண்டு, யாகம் செய்தார்.
அதன் நிறைவு சமயத்தில் நாராயணர், பிரணவ விமானத்தில் தோன்றி சிவபெருமானின் தோஷத்தைப் போக்கினார்.
அதுவும் 11 ருத்ர தோற்றத்திற்கும், 11 பெருமாள்களாக தோன்றி திருமால் காட்சி தந்தார்.
அப்படி பெருமாள் கொண்ட 11 கோலங்களே, திருநாங்கூரில் அமைந்துள்ள 11 திவ்ய தேசங்களாக இருக்கின்றன என்பது தல வரலாறு.

திருநாங்கூர் மணிமாடக் கோவிலில், தை அமாவாசைக்கு மறுநாள், 11 திவ்ய தேச பெருமாள்களும்,
மதியம் 1 மணி முதல் மாலை 6 மணிக்குள், ஒவ்வொருவராக தங்க கருட வாகனத்தில் வந்து சேருவார்கள்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் திருமஞ்சனம் செய்யப்பட்டு அலங்காரம் நடைபெறும்.
பின்னர் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக வீதி உலா புறப்படுவர்.
பின்னர் ஒவ்வொரு பெருமாளுக்கும், மங்களாசாசனம் செய்யப்பட்டு, கற்பூர ஆரத்தி காட்டப்படும்.

மறுநாள் அதிகாலை 5 மணிக்கெல்லாம், அந்தந்த பெருமாள்கள் மீண்டும், தங்களது கருட வாகனத்தில்
தங்களின் திவ்ய தேசத்திற்குப் புறப்பட்டுச் செல்வார்கள்.

இந்த வைபவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு, மறுபிறவி கிடையாது என்று சொல்லப்படுகிறது.
அதே நேரம் இந்த வைபவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு 11 திவ்ய தேச பெருமாள்களை வழிபட்ட பேறும் கிடைத்து விடுகிறது.

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய- ஸ்ரீ ரங்க நாயகர் ஊஞ்சல் –

February 24, 2022

சீரங்கநாயகரூசல்.

சீரங்கநாயகரைப்பற்றிப் பாடிய ஊசல் என விரியும்.
ஊசலாவது – ஆசிரியவிருத்தத்தாலாதல், கலித்தாழிசையாலாதல்,
‘ஆடிரூசல்,’ ‘ஆடா மோவூசல்,’ ‘ஆடுகவூசல்’ என ஒன்றால் முடிவுறக் கூறுவது;
இது, தொண் ணூற்றாறுவகைப்பிரபந்தங்களுள் ஒன்று.

——-

தனியன் –

அண்டப் பந்தரில் பற்று கால்களாக அறிவு விட்டம் கரணம் சங்கிலிகள் ஆக
கொண்ட பிறப்பே பலகை வினை அசைப்போர் கொடு நரகம் ஸ்வர்க்கம் பூ வெளிகள் தம்மில்
தண்டல் இல் ஏற்றம் இறக்கம் தங்கல் ஆக தடுமாறி இடர் உழக்கம் ஊசல் மாற
தொண்டர்க்கு ஆம் மணவாளர் பேரர் கூடித் தொகுத்திட்டார் திருவரங்கத்து ஊசல் தானே —

(இ – ள்.) அண்டம் பந்தரில் – உலகமாகிய பந்தலிலே,
பற்று – பாசமே, கால்கள் ஆக – (விட்டத்தைத்தாங்குவதற்குஉரிய) தூண்களாகவும், –
அறிவு – அறிவே, விட்டம் (ஆக) – (சங்கிலியைமாட்டுதற்குஉரிய) உத்தரமாகவும், –
கரணம் – இந்திரியங்களே, சங்கிலிகள் ஆக – சங்கிலிகளாகவும், –
கொண்ட பிறப்பே – எடுத்த பிறவியே, பலகை (ஆக) – ஊஞ்சற்பலகையாகவும், –
வினை – இருவினைகளே, அசைப்போர் (ஆக) – (அவ்வூஞ்சலை) ஆட்டுபவராகவும், –
கொடு நரகம் – கொடிய நரகமும், சுவர்க்கம் – சுவர்க்கமும், பூ – பூமியும், (ஆகிய)
வெளிகள் தம்மில் – வெளியிடங்களில் (செல்லுதலே), இறக்கம் -இறங்குதலும்,
தண்டல் இல் ஏற்றம் – தடையின்றி ஏறுதலும், தங்கல் – நிலைபெறுதலும், ஆக – ஆகவும், –
(இவ்வாறு), தடுமாறி – அலைந்து, இடர் உழக்கும் – துன்பமனுபவிக்கின்ற,
ஊசல் – ஊசலாட்டம்,
மாற – நீங்கும்படி, –
தொண்டர்க்கு ஆ – அடியார்கள் அநுசந்திக்குமாறு, –
மணவாளர் – அழகியமணவாளதாசரும்,
பேரர் – (அவரது) திருப்பேரனாராகிய கோனேரியப்பனையங்காரும்,
கூடி – சேர்ந்து,
திருவரங்கத்து ஊசல் – ஸ்ரீ ரங்கத்தைக் குறித்ததான ஊசலென்னும் பிரபந்தத்தை,
தொகுத்திட்டார் – பாடியருளினார்; (எ – று.)

இது சீரங்கநாயகரூசல் சீரங்கநாயகியாரூசல் என்ற இரண்டு பிரபந் தங்கட்குந் தனியனாகும்:
அதுபற்றியே, ‘திருவரங்கத்தூசல்’ எனப் பொதுப்படக் கூறினர்.
பிள்ளைப்பெருமாளையங்கார் பாடியது – சீரங்கநாயகரூசல் என்றும்,
அவரது திருப்பேரனாராகிய கோனேரியப்பனையங்கார் பாடியது – சீரங்கநாயகியாரூசல் என்றும் அறிக.
உயிர் ஊசலாடுவதுபோல அலைகிற பிறவித் தடுமாற்றத்தினின்று நீங்கித் தொண்டர்கள் உய்யுமாறு
இந்த இரண்டு பிரபந்தங்களும் செய்யப்பட்டன வென்க.
ஊசல்நீங்க ஊசல்பாடினார் என்ற நயம் கருதத்தக்கது; இது – தொடர்பின்மையணி யெனப்படும்.
வடநூலார் இதனை அஸங்கத்யலங்கார மென்பர்: ஒன்றைச்செய்யத் தொடங்கி அதற்குமாறான செயலைச் செய்தல்,
இதன் இலக்கணம். பிறவித்தடுமாற்றத்தை ஊசலாக உருவகஞ்செய்ததற்கு ஏற்ப, அண்டத்தைப் பந்தலாகவும்,
பற்றைக் கால்களாகவும், அறிவை விட்டமாகவும், கரணங்களைச் சங்கிலிகளாகவும், பிறப்பைப் பலகையாகவும்,
வினைகளை ஆட்டுபவராகவும், நரக சுவர்க்க பூமிகளிற் செல்லுதலை இறக்கம் ஏற்றம் தங்குதலாகவும்
உருவகஞ் செய்தன ரென்க; முற்றுருவகவணி.
நரக சுவர்க்க பூ வெளிகள் என்றதற்கு ஏற்பக் கூறாது ஏற்ற மிறக்கம் தங்கல் என மாற்றிக் கூறியது – எதிர்நிரனிறைப்பொருள்கோள்.
தான், ஏ – ஈற்றசைகள்.

———-

காப்பு –

புதுவை நகர்ப் பட்டர் பிரான் சரண்கள் போற்றி பொய்கை பூதன் பேயார் பாதம் போற்றி
சது மறைச் சொல் சடகோபன் சரணம் போற்றி தமிழ்ப் பாணன் தொண்டர் அடிப் பொடி தாள் போற்றி
முது புகழ் சேர் மழிசையர் கோன் பதங்கள் போற்றி முடிக் குல சேகரன் கலியன் கழல்கள் போற்றி
மதுர கவி எதிராசன் கூரத் தாழ்வான் வாழ்வான பட்டர் திருவடிகள் போற்றி —

(இ – ள்.) புதுவை நகர் – ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவவதரித்தருளிய,
பட்டர்பிரான் – பெரியாழ்வாருடைய,
சரண்கள் – திருவடிகள்,
போற்றி – வாழ்வனவாக;
பொய்கை – பொய்கையாழ்வாரும்,
பூதன் – பூதத்தாழ்வாரும்,
பேயார் – பேயாழ்வாரும், (ஆகிய முதலாழ்வார்களுடைய),
பாதம் – திருவடிகள், போற்றி -;
சது மறை சொல் – வடமொழி நான்குவேதங்களின் பொருளையும் தமிழ்ச்சொல்லாற் பாடியருளிய,
சடகோபன் – நம்மாழ்வாரது,
சரணம் – திருவடிகள், போற்றி -;
தமிழ் பாணன் – செந்தமிழ்ப்பாடலில்வல்ல திருப்பாணாழ்வாரும்,
தொண்டர் அடி பொடி – தொண்டரடிப் பொடியாழ்வாரும் ஆகிய இவர்களது,
தாள் – திருவடிகள், போற்றி -;
முது புகழ் சேர் – பழமையாகிய கீர்த்தி பொருந்திய,
மழிசையர்கோன் – திருமழி சைப்பிரானுடைய,
பதங்கள் – திருவடிகள், போற்றி -;
முடி குலசேகரன் – கீரிடமணிந்த (அரசரான) குலசேகராழ்வாரும்,
கலியன் – திருமங்கையாழ்வாரும், (ஆகிய இவர்களது),
கழல்கள் – திருவடிகள், போற்றி -;
மதுரகவி -மதுரகவியாழ்வாரும்,
எதிராசன் – உடையவரும்,
கூரத்தாழ்வான் – கூரத்தாழ்வானும்,
வாழ்வு ஆன பட்டர் – நல்வாழ்வுபெற்ற பட்டரும், (ஆகிய இவர்களது), திருவடிகள் -, போற்றி -; (எ – று.)

————

திரு வாழ திரு ஆழி சங்கம் வாழ திரு அனந்தன் கருடன் சேனையர் கோன் வாழ
அருள் மாறன் முதலாம் ஆழ்வார்கள் வாழ அளவில் குணத்து எதிராசன் அடியார் வாழ
இரு நாலு திரு எழுத்தின் ஏற்றம் வாழ ஏழ் உலகும் நான் மறையும் இனிது வாழ
பெரு வாழ்வு தந்தருள் நம் பெருமாள் எங்கள் பெரிய பெருமாள் அரங்கர் ஆடீர் ஊசல் –1-

(இ – ள்.) திரு – இலக்குமி, வாழ – வாழவும், –
திரு ஆழி சங்கம் – சங்க சக்கரங்கள், வாழ -,-
திரு அனந்தன் – திருவனந்தாழ்வானும்,
கருடன் – பெரியதிருவடியும்,
சேனையர்கோன் – சேனைமுதலியாரும், வாழ -,-
அருள் மாறன் முதல் ஆம் ஆழ்வார்கள் – (எம்பெருமானது) திருவருளைப் பெற்ற நம்மாழ்வார் முதலாகிய ஆழ்வார்கள் பன்னிருவரும், வாழ -,-
அளவு இல் குணத்து எதிராசன் – எல்லையில்லாத நற்குணங்களையுடைய எம்பெருமானாரும்,
அடியார் – (அவரது) அடியார்களும், வாழ -,-
இரு நாலு திருவெழுத்தின் ஏற்றம் – திருவஷ்டாக்ஷரமகாமந்திரத்தின் சிறப்பு, வாழ -,-
ஏழ் உலகும் – மேலேழ் கீழேழ் என்ற பதினான்கு லோகங்களும்,
நால்மறையும் – நான்குவேதங்களும்,
இனிது வாழ – இனிமையாக வாழவும், –
பெரு வாழ்வு தந்தருள் – பெரியவாழ்ச்சியைக் கொடுத்தருள்கின்ற,
நம்பெருமாள் – நம்பெருமாளே!
எங்கள் பெரிய பெருமாள் – எமது பெரியபெருமாளே!
அரங்கர் – திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் – ஊசலாடு வீராக; (எ – று.)

‘வாழ’ என்னும் எச்சங்கள் யாவும் ‘பெருவாழ்வுதந்தருள்’ என்பத னோடு இயையும். வாழ ஊசலாடிர் என இயைப்பினுமாம்.

————————————————–

உயரவிட்ட கற்பகப் பூம் பந்தர் நீழல் ஒண் பவளக் கால் நிறுவி ஊடு போட்ட
வயிரவிட்டத்து ஆடகச் சங்கிலிகள் நாற்றி மரகதத்தால் பலகை தைத்த ஊசல் மீதே
தயிரிலிட்ட மத்து உழக்கும் வெண்ணெய்க்கு ஆடி தட மறுகில் குடமாடி தழல் வாய் நாகம்
அயரவிட்டு அன்றாடிய நீர் ஆடீர் ஊசல் அணி அரங்க நம்பெருமாள் ஆடீர் ஊசல் –2-

———-

மீன் பூத்த விசும்பது போல் தரளம் கோத்து விரித்த நீலப்பட்டு விதானம் தோன்ற
வான் பூத்த கலை மதி போல் கவிகை ஓங்க மதிக்கதிர் போல் கவரி இரு மருங்கும் வீச
கான் பூத்த தனிச் செல்வன் சிலையுள் மின்னல் கரு முகில் போல் கணமணி வாசிகையின் நாப்பண்
தேன் பூத்த தாமரையாள் மார்பில் ஆட தென் அரங்க மணவாளர் ஆடீர் ஊசல் –3-

(இ – ள்.) மீன் பூத்த விசும்பு அது போல் – நட்சத்திரங்கள் விளங்குகிற ஆகாசம்போல,
தரளம் கோத்து விரித்த நீலப்பட்டு விதானம்தோன்றமுத்துக்கள் கோக்கப்பெற்றுப் பரப்பிய நீலப்பட்டினாலியன்ற மேற்கட்டு விளங்கவும், –
வான் பூத்த கலை மதி போல் – ஆகாயத்தில்தோன்றி விளங்குகின்ற பதினாறுகலைகளும் நிரம்பிய பூரணசந்திரன்போல,
கவிகை ஒங்கவெண்கொற்றக்குடை உயர்ந்துவிளங்கவும், –
மதி கதிர் போல் – சந்திரனுடைய கிரணங்கள்போல, கவரி இரு மருங்கும் வீச-வெண்சாமரங்கள் இரண்டுபக்கத்திலும் வீசப்பெறவும்,-
கான் பூத்த தனி செல்வன் சிலையுள்கற்பகக்காட்டில் விளங்குகின்ற ஒப்பற்ற செல்வத்தையுடையவனான இந்திரனது தநுசின் மத்தியில் தோன்றுகின்ற,
கரு முகில் மின்னல் போல்காளமேகத்து மின்னற்கொடிபோல, கணம் மணி வாசிகையின் நாப்பண்கூட்டமாகிய நவரத்தினங்களினாலியன்ற மாலையி னிடையிலே,
தேன் பூத்த நாமரையாள் – தேன்நிறைந்த செந்தாமரைமலரில்வாழ்கின்ற பெரியபிராட்டியார்,
மார்பில் ஆட – (தேவரீரது) மார்பில் அசையாநிற்கவும், –
தென் அரங்க மணவாளர் – தெற்கின்கணுள்ள திருவரங்கம்பெரியகோயிலி லெழுந்தருளிய அழகியமணவாளரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

கான்பூத்ததனிச்செல்வன்சிலை –
இந்திரதநுசு. பல நிறங்களையுடைய இந்திரதநுசு – பலவகையிரத்தினங்களினாலியன்ற வாசிகைக்கும்,
கருமுகிலில் தோன்றும் மின்னல் – அத்திருமாலினதுமார்பில்தோன்றுகின்ற பெரிய பிராட்டியார்க்கும் உவமை.

————-

பூசுரரும் புரவலரும் வான நாட்டுப் புத்தேளிர் குழுவும் அவர் பூவை மாரும்
வாசவனும் மலரவனும் மழு வலானும் வணங்குவான் அவசரம் பார்த்து இணங்கு கின்றார்
தூசுடைய கொடித் தடந்தேர் மானம் தோன்று அச்சுடர் இரண்டும் பகல் விளக்காத் தோன்ற தோன்றும்
தேசுடைய திருவரங்கர் ஆடீர் ஊசல் சீ ரங்க நாயகியோடு ஆடீர் ஊசல் –4-

(இ – ள்.) பூசுரரும் – பூமியில் தேவர்போல விளங்குகின்ற பிராமணரும்,
புரவலரும் – காத்தல்தொழிலில்வல்ல அரசர்களும்,
வானம் நாட்டுபுத்தேளிர் குழுவும் – வானுலகத்தவரான தேவர்களின் கூட்டமும்,
அவர் பூவைமாரும் – அத்தேவர்களது மனைவியரும்,
வாசவனும் – (அத்தேவசாதியார்க்குத்தலைவனான) தேவேந்திரனும்,
மலர் அயனும் – (திருமாலின்நாபித்) தாமரைமலரில் தோன்றி பிரமதேவனும்,
மழு வலானும் – மழுவென்னும் ஆயுதத்தை யேந்திய சிவபிரானும், (ஆகிய இவர்கள்யாவரும்),
வணங்குவான் – (தேவரீரைத்) தொழுதற்காக,
அவசரம் பார்த்து – சமயத்தை எதிர்நோக்கிக் கொண்டு,
இணங்குகின்றார் – கூடுகின்றார்கள்; (அவர்கள்சேவிக்கும்படி), –
தூசு உடைய கொடி தட தேர் – சீலையினாலியன்ற துவசங்கள் கட்டிய பெரியதேரின்மீதும்,
மானம் – விமானத்தின்மீதும்,
தோன்று – காணப்படுகின்ற,
அ சுடர் இரண்டும் – (சூரியன் சந்திரன் என்ற) அந்த இருசுடர்களும்,
பகல் விளக்கு ஆ தோன்ற – பகற்காலத்தில் ஏற்றிய விளக்குப்போல (த் தேவரீரது ஒளிக்குமுன்னே) ஒளிமழுங்கும்படி,
தோன்றும் – விளங்கிக்காணப்படுகின்ற,
தேசு உடைய – பேரொளியையுடைய,
திருவரங்கர் – ஸ்ரீரங்கநாதரே!
ஊசல்ஆடிர் -; சீரங்கநாயகியோடு ஊசல் ஆடிர் -; (எ – று.)

தேரின் மீது வருகின்ற சூரியனும், விமானத்தின் மீது வருகின்ற சந்திரனும், கோடிசூரியபிரகாசரான பெருமானது
பேரொளிக்குமுன்னே பகல்விளக்குப்போலத் தோன்றுவ ரென்க. அ – உலகறிசுட்டு. மானம் – விமான மென்பதன் முதற்குறை.

———–

மலை மகளும் அரனும் ஒரு வடம் தொட்டு ஆட்ட வாசவனும் சசியும் ஒரு வடம் தொட்டு ஆட்ட
கலை மகளும் அயனும் ஒரு வடம் தொட்டு ஆட்ட கந்தனும் வள்ளியும் கலந்து ஓர் வடம் தொட்டு ஆட்ட
அலை மகரப் பாற் கடலுள் அவதரித்த அலர் மகளும் நில மகளும் ஆயர் காதல்
தலை மகளும் இரு மருங்கில் ஆட எங்கள் தண் அரங்க மணவாளர் ஆடீர் ஊசல் –5-

(இ – ள்.) மலைமகளும் – பார்வதியும்,
அரனும் – (அவளதுகணவனான) சிவபிரானும்,
ஒரு வடம் தொட்டு ஆட்ட – ஒருசங்கிலியைப் பிடித்து ஆட்ட, –
சசியும் – இந்திராணியும்,
வாசவனும் – (அவளதுகணவனான) இந்திரனும்,
ஒரு வடம் தொட்டு ஆட்ட -, –
கலைமகளும் – சரசுவதியும்,
அயனும் – (அவளது கணவனான) பிரமனும்,
ஒரு வடம் தொட்டு ஆட்ட -, –
வள்ளியும் – வள்ளியம்மையும்,
கந்தனும் – (அவளதுகணவனான) சுப்பிரமணியமூர்த்தியும்,
கலந்து – ஒன்றுகூடி,
ஓர் வடம் தொட்டு ஆட்ட -, –
அலைமகரம் பாற்கடலுள் அவதரித்த அலர்மகளும் – அலைகளையும் சுறாமீன்களையுமுடைய திருப்பாற்கடலில் (கடைந்தபோது)
தோன்றியவளாகிய தாமரை மலரில் வாழ்கின்ற திருமகளும்,
நிலமகளும் – பூமிப்பிராட்டியும்,
ஆயர் காதல் தலைமகளும் – இடையராற் பெற்றுவளர்க்கப்பட்ட அன்பிற்குஉரிய தேவியாகிய நீளாதேவியும்,
இரு மருங்கில் ஆட – (தேவரீரது) இருபக்கத்திலும் உடனிருந்து ஆடும்படி,
எங்கள் தண் அரங்கம் மணவாளர் – எமது குளிர்ந்த ஸ்ரீரங்கத்தி லெழுந்தருளியுள்ள அழகியமணவாளரே!
ஊசல் ஆடிர் -;

—————————————————————————–

திருவழுதி வளநாடன் பொருனைச் சேர்ப்பன் சீ பராங்குச முனிவன் வகுளச் செல்வன்
தரு வளரும் குருகையர் கோன் காரி மாறன் சடகோபன் தமிழ் வேதம் ததியர் பாட
கருணை பொழி முக மதியம் குறு வேர்வு ஆட கரிய குழல் கத்தூரி நாமத்து ஆட
அருகிருக்கும் தேவியர்கள் அது கொண்டாட அணி அரங்கத்து எம்பெருமான் ஆடீர் ஊசல் –6-

(இ – ள்.) திரு வழுதி வளம் நாடன் – வளப்பமுள்ள பாண்டியநாட்டில் திருவவதரித்தவரும்,
பொருநை சேர்ப்பன் – தாமிரபர்ணிநதியின் கரையில் வாழ்பவரும்,
சீபராங்குசமுனிவன் – (அந்யமதஸ்தராகிய யானைகட்கு அங்குசம்போன்றிருத்தலால்) ஸ்ரீபராங்குசனென்று திருநாமம்பெற்ற யோகியும்,
வகுளம் செல்வன் – மகிழமலர்மாலையையணிந்த சிறப்புடையோரும்,
தரு வளரும் குருகையர் கோன் – மரச்சோலைகள் ஓங்கிவளர்தற்கு இடமான திருக்குருகூரி லுள்ளார்க்குத் தலைவரும்,
காரி மாறன் – காரியென்பவர்க்குத் திருக்குமாரராய் மாறனென்று ஒருதிருநாமம்பெற்றவரும்,
சடகோபன் – சடகோபனென்னுந் திருநாமமுடையவருமான நம்மாழ்வார் அருளிச்செய்த,
தமிழ்வேதம் – வடமொழி வேதத்தின்சாரமாகித் தமிழ் மொழியினாலியன்ற திருவாய்மொழி முதலிய திவ்யபிரபந்தங்களை,
ததியர்(ததீயர்) பாட – பாகவதர்கள் பாடாநிற்கவும், –
கருணை பொழி முகம் மதியம் – திருவருளைச் சொரிகின்ற பூர்ணசந்திரன்போன்ற திருமுகத்திலே,
குறுவேர்வு ஆட – சிறிய வேர்வைநீர் தோன்றி அசையவும்,
கரிய குழல் கத்தூரி நாமத்து ஆட – கருங்குழற்கற்றையும் கத்தூரித்திருநாமமும் ஒருசேர அசையவும், –
அருகு இருக்கும் தேவியர்கள் அது கொண்டாட – இருமருங்கிலுமுள்ள தேவிமார்கள் அந்தவைபவத்தைக் கண்டு கொண்டாடவும், –
அணி அரங்கத்து எம்பெருமான் – அழகிய திருவரங்கநாதனே!
ஊசல் ஆடிர் -;

நம்மாழ்வார் அருளிச்செய்த திவ்யப்ரபந்தங்கள் திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி, திருவாய்மொழி என நான்காம்.

——————————————————————-

வையம் ஒரு பொன் தகட்டுத் தகளியாக வார் கடலே நெய்யாக அதனுள் தேக்கி
வெய்ய கதிர் விளக்காக செஞ்சொல் மாலை மெல்லடிக்கே சூட்டினான் மேன்மையாட
துய்ய மதி மண்டலத்தின் மறுவே ஒப்பச் சோதி விடு கத்தூரி துலங்கு நாமச்
செய்ய திரு முகத்து அரங்கர் ஆடீர் ஊசல் சீ ரங்க நாயகியோடு ஆடீர் ஊசல் –7-

(இ – ள்.) வையம் – நிலவுலகத்தையே,
ஒரு பொன் தகடு தகளி ஆக – ஒப்பற்ற பொன்தகட்டினாற் செய்த அகலாகக்கொண்டு,
வார் கடலே – நீண்ட சமுத்திரத்தையே,
நெய் ஆக -,
அதனுள் தேக்கி – அவ்வகலில் நிறைத்து,
வெய்ய கதிர் – உஷ்ணகிரணனான சூரியனையே,
விளக்கு ஆக – விளக்காகக்கொண்டு (இவ்வாறானபொருளைத் தெரிவிக்கின்ற பாடலைத் தொடங்கி),
செஞ் சொல் மாலை – செவ்விய தமிழ்ச்சொற்களினாலாகிய பாமாலையை,
மெல் அடிக்கே சூட்டினான் – மேன்மையான (தேவரீரது) திருவடிகளில் அணிந்தவராகிய பொய்கையாழ்வார் அருளிச்செய்த,
மேன்மை – (தேவரீரது) மேன்மையைத் தெரிவிக்கின்ற திவ்யப்ரபந்தத்தை,
பாட – (ததீயர்)எடுத்துப்பாடாநிற்க, –
துய்ய மதி மண்டலத்தின் மறுவே ஒப்ப – பரிசுத்தமாகிய சந்திரமண்டலத்திலுள்ள களங்கத்தைப் போல,
சோதி விடு கத்தூரி நாமம் துலங்கு – ஒளிவிடுகின்ற கஸ்தூரிதிலகம் விளங்கப்பெற்ற,
செய்ய திருமுகத்து – அழகிய திருமுகத்தையுடைய,
அரங்கர் – திருவரங்கநாதரே!
ஊசல் ஆடிர் -;
சீரங்கநாயகியோடு ஊசல் ஆடிர் -; (எ – று.)

முதலாழ்வார்மூவரும் திருக்கோவலூரில் ஓர்இடைகழியில் மழைக்காலத்து ஒருநாளிரவில் தங்கியிருக்கையில்,
எம்பெருமான் இருட்டில் அவர்களோடு தானும் ஒருவனாய் நின்று நெருக்க, அப்பொழுது பொய்கையாழ்வார்
“வையந் தகளியா வார்கடலே நெய்யாக, வெய்யகதிரோன் விளக்காகச் செய்ய,
சுடராழியானடிக்கே சூட்டினேன் சொன்மாலை, யிடராழிநீங்குகவே யென்று” என்று முதல்திருவந்தாதிப் பிரபந்தத்தைத் தொடங்கி
வெய்யகதிரினால் விளக்கேற்றின ரென்க.
கீழ்ச்செய்யுளில், ‘சடகோபன்தமிழ்வேதம் ததியர்பாட’ என்று கூறியதற்கு ஏற்ப, இச்செய்யுளிலும் ‘ததீயர்’ என்று
வருவித்துப் பொருளுரைக்கப்பட்டது; மேலும் இங்ஙனமே கூறப்படும்.
இப்பொருளில், மேன்மை – மேன்மையான பிரபந்தத்திற்கு, இலக்கணை;
இனி, பொய்கையாழ்வார் தேவரீரது மேன்மைகளைப் பாட என்றும்,
பொய்கையாழ்வாரது மேன்மையைத் ததீயர்பாட என்றும் கூறுவாரு முளர்; மேலும் இங்ஙனமே காண்க.

————

அன்பு என்னும் நன் பொருள் ஓர் தகளியாக ஆர்வமே நெய்யாக அதனுள் தேக்கி
இன்புருகு சிந்தை இடுதிரியா ஞானத்து இலகு விளக்கு ஏற்றினான் இசையைப் பாட
பொன் புரையும் புகழ் உறையூர் வள்ளி யாரும் புதுவை நகர் ஆண்டாளும் புடை சேர்ந்து ஆட
முன்பிலும் பின்பு அழகிய நம்பெருமாள் தொல்லை மூ வுலகுக்கும் பெருமாள் ஆடீர் ஊசல் –8-

(இ – ள்.) அன்பு என்னும் நல் பொருள் – அன்புஎன்கிற நல்ல பொருளையே,
ஓர் தகளி ஆக – ஒரு அகலாகக் கொண்டு,
ஆர்வமே – பக்தியையே,
நெய் ஆக -,
அதனுள் தேக்கி – அவ்வகலுள் நிறைத்து,
இன்பு உருகு சிந்தை – ஆனந்தத்தினாலே உருகுகின்ற மனத்தையே,
இடு திரி ஆ – அதிலிட்ட திரியாகக்கொண்டு,
ஞானத்து இலகுவிளக்கு ஏற்றினான் – தத்துவஞானத்தினால் விளங்குகின்ற விளக்கை ஏற்றினவராகிய பூதத்தாழ்வாருடைய,
இசையை – புகழ்பெற்ற திவ்யப்ரபந்தத்தை,
பாட – (ததீயர்) பாடாநிற்கவும், –
பொன் புரையும் புகழ் உறையூர் வல்லியாரும் – பெரியபிராட்டியாரைப் போன்ற கீர்த்தியையுடைய திருவுறையூர்நாச்சியாரும்,
புதுவைநகர் ஆண்டாளும் – ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவவதரித்த ஆண்டாளும்,
புடை சேர்ந்து ஆட – தேவரீரது இருபக்கத்திலும் சேர்ந்து ஆடவும், –
முன்பிலும் பின்பு அழகிய நம்பெருமாள் – முற்பக்கத்திலும் பிற்பக்கம் அழகியவரான நம்பெருமாளே!
தொல்லை மூவுலகுக்கும் பெருமாள் – பழமையான மூன்று லோகங்களுக்கும் நாயகரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

“அன்பே தகளியா வார்வமேநெய்யாக, இன்புருகுசிந்தையிடுதிரியா –
நன்புருகி, ஞானச்சுடர்விளக்கேற்றினேன் நாரணற்கு, ஞானத்தமிழ் புரிந்த நான்” என்பது,
பூதத்தாழ்வார் அப்போது அருளிச்செய்த இரண்டாந்திருவந்தாதியின் முதற்பாசுரம்.

——————————————————-

திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் என்ற திகழ் அருக்கன் அணி நிறமும் திகிரி சங்கும்
இருள் கொண்ட கருங்கங்குல் இடையே கோவல் இடை கழியில் கண்ட பிரான் ஏற்றம் பாட
மருக்கொண்ட கொன்றையான் மலரின் மேலான் வானவர் கோன் முதலானோர் மகுட கோடி
நெருக்குண்ட தாள் அரங்கர் ஆடீர் ஊசல் நீளைக்கு மணவாளர் ஆடீர் ஊசல் –9-

(இ – ள்.) இருள் கொண்டகருங் கங்குலிடையே – அந்தகாரம் மிகுந்த கரிய நடுராத்திரியில்,
கோவல் இடைகழியில் – திருக்கோவலூரிலுள்ள ஓர் இடைகழியிலே,
“திரு கண்டேன் – இலக்குமியைக் கண்டேன்,
பொன்மேனி கண்டேன் – அழகிய திருமேனியைக் கண்டேன்,
திகழ் அருக்கன் அணி நிறமும் – விளங்குகின்ற சூரியன்போன்ற அழகிய திரு நிறத்தையும்,
திகிரி சங்கும் – (திவ்வியாயுதங்களாகிய) சக்கரத்தையும் சங்கத்தையும்,
(கண்டேன்-“) என்ற – என்று பாடினவரும்,
கண்ட – (திரு முதலானவர்களை நேரில்) தரிசித்தவருமாகிய,
பிரான் – தலைவரான பேயாழ்வாருடைய,
ஏற்றம் – சிறப்புள்ள பிரபந்தத்தை,
பாட – (ததீயர்) பாடாநிற்க, –
மரு கொண்ட கொன்றையான் – வாசனையையுடைய கொன்றைமலர்மாலையைத் தரித்த சிவபிரானும்,
மலரின்மேலான் – தாமரைமலரில் வீற்றிருப்பவனாகிய பிரமனும்,
வானவர் கோன் – தேவராசனாகிய இந்திரனும்,
முதலானோர் – முதலிய அடியவர்களது,
மகுடம் கோடி – கிரீடங்களின் வரிசைகள்;
நெருக்குண்ட – (அந்தத் தேவர்கள் கீழ்வீழ்ந்து தேவரீரைச் சேவிக்கும்போது) நெருங்கப்பெற்ற,
தாள் – திருவடிகளையுடைய,
அரங்கர் – திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் -;
நீளைக்கு மணவாளர் – நீளாதேவிக்கு மணவாளரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

“திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் றிக”, மருக்கனணிநிற முங்கண்டேன் –
செருக்கிளரும், பொன்னாழிகண்டேன் புரிசங்கங்கைக் கண்டேன், என்னாழிவண்ணன்பாலின்று” என்பது,
பேயாழ்வார் அருளிச் செய்த மூன்றாந்திருவந்தாதியின் முதற்பாசுரம்.

———————————————————————-

நான்முகனை நாரணனே படைத்தான் அந்த நான்முகனும் நக்க பிரானைப் படைத்தான்
யான்முகமாய் அந்தாதி அறிவித்தேன் என்று யார்க்கும் வெளியிட்ட பிரான் இயல்பைப் பாட
பால் முகம் ஆர்வளை நேமி படைகள் காட்ட பாசடைகள் திரு மேனிப் படிவம் காட்ட
தேன் முக மா முளரி அவயவங்கள் காட்ட செழும் தடம் போல் அரங்கேசர் ஆடீர் ஊசல் –10-

(இ – ள்.) ‘நாரணனே – நாராயணனே,
நான்முகனை – நான்கு முகங்களையுடைய பிரமதேவனை,
படைத்தான் – சிருஷ்டித்தான்;
அந்த நான்முகனும் – அந்தப் பிரமனும்,
நக்கபிரானை படைத்தான் – சிவபிரானைச் சிருஷ்டித்தான், (என்கிற இந்த அர்த்தவிசேஷத்தை),
யான் – (எம்பெருமானதுநல்லருளாலே தத்துவஞானம் உதிக்கப்பெற்ற) நான்,
முகம் ஆய் – (பிரசாரஞ்செய்வதில்) முக்கியனாய்க்கொண்டு,
அந்தாதி – அந்தாதி யென்னும்பிரபந்தத்தினால்,
அறிவித்தேன் – (அஜ்ஞான உலகத்தோர்க்குத்) தெரிவிக்கலானேன்,’
என்று – என்றுதொடங்கி,
யார்க்கும் வெளியிட்ட – யாவர்க்கும் (தத்துவத்தை) வெளியிட்டருளிய,
பிரான் – திருமழிசைப் பிரானது,
இயல்பை – சிறந்த தன்மையுள்ள பிரபந்தங்களை,
பாட – (ததீயர்) பாடாநிற்க, –
பால் முகம் ஆர் வளை – பால்போன்ற வெண்ணிறத்தைக் கொண்டுள்ள சங்குபூச்சிகளும்,
நேமி – சக்கரவாகப் பறவைகளும்,
படைகள் – (தேவரீரது) திவ்வியாயுதங்களை,
காட்ட – காட்டாநிற்கவும்,
பசு அடைகள் – பசிய தாமரையிலைகள்,
திருமேனி படிவம் காட்ட – (தேவரீரது) திருமேனிநிறத்தைக் காட்டாநிற்கவும்,
தேன் முகம் மா முளரி – தேனைக் கொண்ட சிறந்த தாமரைமலர்கள்,
அவயவங்கள் காட்ட – (தேவரீரது திருக்கை திருவடி முதலிய) திருவவயவங்களைக் காட்டாநிற்கவும்,
செழுந் தடம் போல் – செழித்த தடாகத்தை யொத்திருக்கிற,
அரங்கேசர் – ஸ்ரீரங்கராஜரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

“நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனுந், தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான் –
யான்முகமாய், அந்தாதிமேலிட்டறிவித்தே னாழ்பொருளைச், சிந்தாமற்கொண்மினீர் தேர்ந்து” என்பது,
திருமழிசைப்பிரான் அருளிச்செய்த நான்முகன்றிருவந்தாதியின் முதற்பாசுரம்.
இதுவன்றி, இவ்வாழ்வார் திருச்சந்தவிருத்தம் என்னும் பிரபந்தமும் அருளிச்செய்திருக்கின்றனர்.
“மாயக்கூத்தா வாமனா வினையேன்கண்ணா கண்கைகால்,
தூயசெய்ய மலர்களாச் சோதிச்செவ்வாய் முகிழதாச்,
சாயச் சாமத்திருமேனி தண்பாசடையாத் தாமரைநீள்,
வாசத்தடம்போல் வருவானே யொருநாள் காணவாராயே” என்ற பாசுரம் பின்னிரண்டடிகளில் கருதத்தக்கது.

————

மருள் இரிய மறம் இரிய அனைத்து உயிர்க்கும் மயல் இரிய வினை இரிய மறையின் பாடல்
இருள் இரிய என்று எடுத்துத் தொண்டர் தங்கள் இடர் இரிய உரைத்த பிரான் இட்டம் பாட
அருள் இரிய அறம் இரிய உலகை ஆண்ட ஆடகத்தோன் அகம் பரன் என்று அபிமானித்த
பொருள் இரிய சொல் இரிய மார்வம் கீண்ட பொன்னி சூழ் திரு வரங்கர் ஆடீர் ஊசல் –11–

(இ – ள்.) அனைத்து உயிர்க்கும் – எல்லாச்சீவராசிகளுக்கும்,
மருள் இரிய – அஜ்ஞாநம் நீங்கவும்,
மறம் இரிய – கொடுமை நீங்கவும்,
மயல் இரிய – (அஜ்ஞாநத்தினால் விளைகின்ற) மதிமயக்கம் நீங்கவும்,
வினை இரிய – இருவினைகளும் நீங்கவும்,
மறையின் பாடல் – வேதத்தின் பொருளமைந்த பாடல்களை,
இருள் இரிய என்று எடுத்து, – “இருளிரிய” என்றுதொடங்கி,
தொண்டர்தங்கள் இடர் இரிய – (அதனைப்பாடுகின்ற) அடியார்களது பிறவித்துன்பமெல்லாம் நீங்கும்படி,
உரைத்த – (பிரபந்தத்தைத்) திருவாய்மலர்ந்தருளிய,
பிரான் – குலசேகரப்பெருமாளுடைய,
இட்டம் – விருப்பான பெருமாள் திருமொழியென்னும்பிரபந்தத்தை,
பாட – (ததீயர்)பாடா நிற்க, –
அருள் இரிய – கருணையில்லாமற்போக,
அறம் இரிய – தருமம் விலகும்படி,
உலகை ஆண்ட – மூவுலகங்களையும் (தானொருவனாகவே) தனியரசாட்சிசெய்த,
ஆடகத்தோன் – இரணியன்,
அகம் பரன் என்று அபிமானித்த பொருள் இரிய – ‘நான்தான் பரதேவதை’ என்று செருக்கியிருந்த தன்மை ஒழியுமாறும்,
சொல் இரிய – (அப்பொருளுக்கு இடமாகிய) சொற்களும் ஒழியுமாறும்,
மார்வம்கீண்ட – (அவ்வசுரனது) மார்பத்தை (நரசிங்கரூபியாய்த்தோன்றிப்) பிளந்தழித்த,
பொன்னிசூழ் திருவரங்கர் – காவேரிநதியினாற் சூழப்பெற்ற திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் -; (எ – று,)

“இருளிரியச் சுடர்மணிகளிமைக்குநெற்றி யினத்துத்தியணிபணமாயி ரங்களார்ந்த,
அரவரசப் பெருஞ்சோதி யனந்தனென்னு மணிவிளங்குமுயர் வெள்ளையணையைமேவித்,
திருவரங்கப் பெருநகருள், தெண்ணீர்ப்பொன்னி திரைக்கையாலடிவருடப் பள்ளிகொள்ளுங்,
கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண் டென்கண்ணிணைக ளென்றுகொலோ களிக்குநாளே” என்பது,
குலசேகராழ்வார் அருளிச்செய்த பெருமாள்திருமொழியின் முதற்பாசுரம்.
ஹாடகம் – பொன். நரசிங்கமூர்த்தியாய் இரணியாசுரனது மார்பைக் கீண்டமாத்திரத்தில்
அகம்பர னென்ற சொல்லும் பொருளும் ஒழிந்தன வென்க.

——-

அரன் என்றும் அயன் என்றும் புத்தன் என்றும் அலற்றுவார் முன் திரு நாரணனே ஆதி
பரன் என்று மறை உரைத்து கிழி அறுத்த பட்டர் பிரான் பாடிய பல்லாண்டு பாட
கரன் என்ற மாரீசன் கவந்தன் என்ற கண்டகரார் உயிர் மடியக் கண்டு இலங்கா
புரம் வென்ற சிலை அரங்கர் ஆடீர் ஊசல் புகழ் உறையூர் வல்லியோடு ஆடீர் ஊசல்-12–

(இ – ள்.) (பரதேவதை), அரன் என்றும் – சிவபெருமானே யென்றும்,
அயன் என்றும் – பிரமதேவனே யென்றும்,
புத்தன் என்றும் – புத்தனே யென்றும்,
அலற்றுவார் முன் – (இவ்வாறு தமக்குத்தோன்றியவாறெல்லாம் வாயினாற்) பிதற்றுகின்ற அந்யமதஸ்தர்கட்கு எதிரில்,
திருநாரணனே ஆதிபரன் என்று – ‘ஸ்ரீமந்நாராயணனே முதலாகிய பரதேதைவ’ என்று,
மறை உரைத்து – (அதற்கு ஆதாரமாகிய) வேதபிரமாணங்களை எடுத்துக்கூறி,
கிழி அறுத்த – (வல்லபதேவபாண்டியன் வித்யாசுல்கமாகக்கட்டிவைத்த) பொற்கிழியை அறுத்துக்கொண்ட,
பட்டர்பிரான் – (அவ்வாறு அந்யமதஸ்தரரீன வித்துவான்களையெல்லாம் வென்றிட்டதனால்) பட்டர்பிரானென்று பட்டப்பெயர்பெற்ற பெரியாழ்வார்,
பாடிய – திருவாய்மலர்ந்தருளிய, பல்லாண்டு. ‘திருப்பல்லாண்டு’ என்னுந் திவ்யப்ரபந்தத்தை,
பாட – (ததீயர்) பாடாநிற்க, –
கரன் என்ற (கண்டகன்) – கரனென்று சொல்லப்பட்ட கொடியவனும்,
மாரீசன் கவந்தன் என்ற கண்டகர் – மாரீசன் கவந்த னென்ற கொடியவரும்,
ஆர் உயிர் மடிய கண்டு – அருமையான உயிர் மடியும்படி கொன்று,
இலங்காபுரம் வென்ற – இலங்காபட்டணத்தைச் சயித்த,
சிலை – (கோதண்டமென்னும்) வில்லையேந்திய,
அரங்கர் – திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் -;
புகழ் உறையூர் வல்லியோடு – புகழ்பெற்ற உறையூர்நாச்சியாரோடு, ஊசல் ஆடிர் -; (எ – று.)

பல்லாண்டு – முதற்குறிப்பால், ‘பல்லாண்டு’ என்றுதொடங்கிய பிரபந்தத்தைக் காட்டும்.
இவர்பாடிய பிரபந்தங்கள் – திருப்பல்லாண்டும், பெரியாழ்வார் திருமொழியும்.

—————————————————————————

மருமாலைப் பசுந்துளவத் தொடைகளோடு வைகறையில் வந்து திருத் துயில் உணர்த்தித்
திரு மாலை திருவடிக்கே சூட்டி நிற்கும் தரு மண்டங்குடிப் பெருமான் சீர்மை பாட
பெருமாலை அடைந்து உலகம் மதி மயங்க பேணாதார் படக் கதிரோன் காணாது ஏக
ஒரு மாலை பகலில் அழைத்து ஒளித்த நேமி ஒளி உள்ளார் அரங்கேசர் ஆடீர் ஊசல் –13-

(இ – ள்.) மரு மாலை – (திருமகளோடு) மருவியுள்ள திருமாலை,
பசுந்துளவம் தொடைகளோடு – பசுமையாகிய திருத்துழாய்மாலையுடனே,
வைகறையில் – விடியற்காலத்தில்,
வந்து – (சந்நிதிக்கு) வந்து,
திருதுயில் உணர்த்தி – (திருப்பள்ளியெழுச்சிபாடித்) துயிலுணரச்செய்து,
திரு மாலை – திருமாலையென்னுந் திவ்வியபிரபந்தத்தை,
திருவடிக்கே சூட்டி நிற்கும் – திருவடிகளிற் சமர்ப்பித்துநிற்கின்ற,
திருமண்டங்குடி பெருமான் – திருமண்டங்குடியில் திருவவதரித்த தொண்டரடிப்பொடியாழ்வாராது,
சீர்மை – சிறப்புள்ள பிரபந்தங்களை,
பாட – (ததீயர்) பாடாநிற்க, –
உலகம் – உலகத்திலுள்ளார்,
பெரு மாலை அடைந்து – பெரிய மயக்கத்தை யடைந்து,
மதி மயங்க – அறிவு கலங்கவும்,
பேணாதார் பட – பகைவர்கள் அழியவும்,
கதிரோன் காணாது ஏக – சூரியன் தோன்றாது மறையவும்,
ஒரு மாலை – ஓரிரவை,
பகலில் – பகற்பொழுதிலே,
அழைத்து – வருவித்து,
ஒளித்த – (சூரியனை) மறைத்த,
ஒளி நேமி உள்ளார் – கோடிசூரியபிரகாசமான திருவாழியாழ்வானை யுடையவராகிய,
அரங்கேசர் – திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

இனி, மருமாலைப்பசுந்துளவத்தொடைகளோடு – நறுமணமுள்ள மாலைகளாகிய திருத்துழாய்மாலைகளோடு
என்று பொருளுரைப்பாருமுளர்,
தொண்டரடிப்பொடியாழ்வார், ஸ்ரீரங்கநாதனுக்குத் திருத்துளவத்தொண்டு செய்து வந்ததோடு, திருப்பள்ளியெழுச்சி, திருமாலை
என்னுந் திவ்வியப்ரபந்தங்களையும்பாடின ரென்க.
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவவதாரஸ்தலமாகிய திருமண்டங்குடியென்னுந் தலம்,
சோழநாட்டில் கபிஸ்தலத்திற்கு வடகிழக்கேயுள்ளது.
‘நிரவதிகதேஜோரூபமான திருவாழியாலே ஆதித்யனை மறைத்தாலும் லோகத்துக்கு மிகவும் வெளிச்சிறப்பு உண்டா மித்தனையன்றோ?
ஆதித்யன் அஸ்தமித்தானென்னும்படி கண்களுக்கு இருண்டுதோற்றுவான் என்’ என்னில், –
இந்தஆதித்யனுடைய தேஜசு கண்ணாலே முகக்கலாம்படி அளவுபட்டிருக்கையாலே தமஸ்ஸு போம்படியாயிருக்கும்;
அங்ஙனன்றிக்கே, திருவாழியாழ்வானுடைய தேஜசு நேர்கொடுநேர் கண்கொண்டு பார்க்கவொண்ணாதபடி
மிக்கிருக்கையாலே பளபளத்துக் கண்ணையிருளப் பண்ணிற்று’ என்ப வாதலால்,
‘ஒருமாலை பகலிலழைத்தொளித்த நேமியொளியுள்ளார்’ என்றார்.

————-

கார் அங்கத் திரு உருவம் செய்ய பாத கமலம் முதல் முடி அளவும் கண்டு போற்ற
சாரங்க முனியை ஊர்ந்து அமலன் ஆதி தனை உரைத்த பாண் பெருமாள் தகைமை பாட
ஆரம் கொள் பாற் கடல் விட்டு அயன் ஊர் ஏறி அயோத்தி நகர் இழிந்து பொன்னி ஆற்றில் சேர்ந்த
சீ ரங்க மணவாளர் ஆடீர் ஊசல் சீ ரங்க நாயகியோடு ஆடீர் ஊசல் –14-

(இ – ள்.) கார் அங்கம் திருஉருவம் – காளமேகம்போன்ற திருவுருவத்தை,
செய்ய பாத கமலம் முதல் – செந்நிறமாகிய திருவடித்தாமரையென்ற உறுப்புமுதல்,
முடிஅளவும் – திருமுடிவரையிலும்,
கண்டுபோற்ற – சேவித்துத்துதிக்கும்படி,
சாரங்கமுனியை ஊர்ந்து – லோகசாரங்கமகாமுனிவர்மேல் ஏறிவந்து,
அமலனாதிதனை உரைத்த – ‘அமலனாதிபிரான்’ என்று தொடங்கும் பிரபந்தத்தைப்பாடியருளிய,
பாண்பெருமாள் – திருப்பாணாழ்வாரது,
தகைமை – பெருமையுள்ள (‘அமலனாதிபிரான்’ என்னும்) பிரபந்தத்தை,
பாட – (ததீயர் எடுத்துப்) பாடாநிற்க, –
ஆரம் கொள் பாற்கடல் விட்டு – முத்துக்களையுடைய திருப்பாற்கடலை விட்டுநீங்கி,
அயன் ஊர் ஏறி – பிரமதேவனது நாடாகிய சத்தியலோகத்திற் சென்றிருந்து,
அயோத்திநகர் இழிந்து – திருவயோத்தியில் இறங்கிச் சிலகாலம் வாழ்ந்து, (பின்பு),
பொன்னி ஆற்றில் சேர்ந்த – உபயகாவேரியின் மத்தியிற் சேர்ந்த,
சீரங்கமணவாளர் – ஸ்ரீரங்கக்ஷேத்திரத்தி லெழுந்தருளிய அழகியமணவாளரே!
ஊசல் ஆடிர் -; சீரங்கநாயகியோடு ஊசல் ஆடிர் -; (எ – று.)

லோகசாரங்கமகாமுனிவர் திருவரங்கநாதனுக்குத் திருமஞ்சனம் சமர்ப்பித்துவரும்நாளில் ஒருகால் திருமஞ்சனங்கொணருமாறு
தென்திருக்காவேரிக்குச் செல்லுகையில், வீணையுங் கையுமாய் மெய்ம்மறந்து ஸ்ரீரங்கநாதனைப் பாடிக்கொண்டிருந்த
திருப்பாணாழ்வார் திருவடிகளில் அபசாரப்பட்டு, அந்தஅபசாரம் தீருமாறு ஸ்ரீரங்கநாதனது நியமனத்தால்
அவ்வாழ்வாரைத்தமதுதோளின்மேலெழுந்தருளப்பண்ணிக்கொண்டு ஸ்ரீரங்கநாதனது திருமுன்பேவிட,
அவ்வாழ்வார் “அமலனாதிபிரானடியார்க்கென்னையாட்படுத்த,
விமலன்விண்ணவர்கோன்விரையார்பொழில் வேங்கடவன்,
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீண்மதிளரங்கத்தம்மான்,
திருக்கமலபாதம் வந்து என் கண்ணினுள்ளன வொக்கின்றவே” என்று தொடங்கிப் பாதாதிகேசாந்தமாக அப்பிரானை அநுபவித்தனரென்க.
பிரமதேவன் திருப்பாற்கடலினின்று ஆவாகநம்பண்ணிப்பிரதிஷ்டைசெய்த விஷ்ணுமூர்த்தியைத் திருவாராதனஞ்செய்து கொண்டிருக்க,
பின்பு, சூரியவமிசத்துத்தோன்றிய இக்ஷ்வாகுமன்னன் அப்பிரமனிடத்தினின்று அப்பெருமானைப்பெற்றுத்
திருவயோத்தியில் திருவாராதனஞ்செய்துவர, பிறகு குலமுறையாகத் தனக்குக்கிடைத்த அப்பெருமானை இராமபிரான்
தனக்கு அந்தரங்கனான ஸ்ரீவிபீஷணாழ்வானுக்குத் தந்தருள, அவன் அப்பிரானை எழுந்தருள்வித்துக் கொண்டு
தனது இலங்கைநோக்கிச் செல்லுகையில், அப்பெருமான் இடைவழியில் உபயகாவேரி மத்தியிலே புடைபெயராது
விமானத்துடனே நிலைநின்றருளினான்; அவ்விடமே ஸ்ரீரங்க மெனப்படுவது.

———————————————————————————

விழி பறித்து வெள்ளியை மா வலியை மண்ணும் விண்ணுலகும் பறித்த குறள் வேடத்து உம்மை
வழி பறித்து மந்திரம் கொண்டு அன்பர் தங்கள் வல்வினையைப் பறித்த பிரான் வண்மை பாட
சுழி பறித்த கங்கை முடி அடியில் தோயத் தொழுது இரக்கும் முக்கணன் நான் முகனைச் செய்த
பழி பறித்துப் பலி ஒழித்தார் ஆடீர் ஊசல் பள்ளி கொண்ட திரு அரங்கர் ஆடீர் ஊசல் –15–

(இ – ள்.) வெள்ளியை – சுக்கிராசாரியனது,
விழி – ஒற்றைக்கண்ணை,
பறித்து – (தருப்பைப்புல்நுனியாற்) குத்திக்கிளறி,
மாவலியை – மகாபலிசக்கரவர்த்தியினிடத்தினின்றும்,
மண்ணும் – பூலோகத்தையும்,
விண் உலகும் – தேவலோகத்தையும்,
பறித்த – தன்னுடையனவாக்கிக்கொண்ட,
குறள் வேடத்து – வாமநவடிவத்தையுடைய,
உம்மை, தேவரீரை,
வழிபறித்து – (மணவாளக்கோலத்தோடு திருமணங்கொல்லையிற்சென்றபோது) இடைவழியே மடக்கி (த் தேவரீரது) பொருள்களைக் கவர்ந்து,
மந்திரம் கொண்டு – (தேவரீரிடத்தில்) திருமந்திரோபதேசம் பெற்றுக்கொண்டு, (அந்தத்திருமந்திரத்தினால்),
அன்பர்தங்கள் வல் வினையை பறித்த – அடியார்களது கொடிய இருவினைப்பற்றையும் ஒழித்தருளிய,
பிரான் – திருமங்கையாழ்வாரது,
வண்மை சிறந்தபாடல்களை,
பாட – (ததீயர்) பாடாநிற்க, –
சுழி பறித்த கங்கை முடிசுழிகளினாற் கல்லுந் தன்மையுள்ள (சுழிகளையுடைய) கங்காநதியைத் தரித்த சிரசானது,
அடியில் தோய – திருவடியிற் பொருந்தும்படி,
தொழுது இரக்கும் – (தேவரீரை) வணங்கிப்பிரார்த்திக்கின்ற,
முக்கணன் – மூன்றுகண்களையுடைய சிவபிரான்,
நான்முகனை செய்த – நான்குமுகங்களையுடைய பிரமனது சிரசைக் கொய்ததனா லுண்டாகிய,
பழி – பிரமகத்திதோஷத்தை,
பறித்து – நீக்கி,
பலி ஒழித்தார் – (அச்சிவபிரான் தனது பிரமகத்திதீருமாறு செய்த) பிக்ஷாடநத்தைத் தீர்த்த நம்பெருமாளே!
ஊசல் ஆடிர் -;
பள்ளி கொண்ட திருவரங்கர் – (திருவநந்தாழ்வான்மீது) பள்ளிகொண்டருளிய திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

திருமங்கையாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய திவ்யப்ரபந்தங்கள் – பெரியதிருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம்,
திருவெழுகூற்றிருக்கை, சிறியதிருமடல், பெரியதிருமடல் என்னும் ஆறுபிரபந்தங்கள்;
இவை – நம்மாழ்வார் நான்குவேதங்களின் சாரமாக அருளிச்செய்த நான்கு திவ்யப்ரபந்தங்கட்கு ஆறுஅங்கம்போலு மென்பர்.
விழிபறித்து மண்ணும் விண்ணும் பறித்த தேவரீரிடத்துத் திருமங்கையாழ்வார்
வழிபறித்து உலகோர் இருவினையைப் பறித்தார் என்னும் நயமும்,
மாவலியினிடத்து இரந்த தேவரீர் சிவபிரானது இரத்தலைப் போக்கினீர் என்னும் நயமும் கருதத்தக்கன.
பறித்த என்ற சொல் ஒருபொருளிற் பலமுறை பயின்றுவந்தது – சொற்பொருட்பின்வருநிலையணியாம்.

———

போதனார் நெட்டு எழுத்தும் நமனார் இட்ட குற்று எழுத்தும் புனல் எழுத்தாய்ப் போக மாறன்
வேதம் ஆயிரம் தமிழும் எழுதி அந்நாள் மேன்மை பெறு மதுரகவி வியப்பைப் பாட
ஓதம் ஆர் மீன் வடிவாய் ஆமை ஏனத்து உருவாகி அரி குறள் மூ இராமராகி
கோது இலாக் கண்ணனாய் கற்கி ஆகும் கோயில் வாழ் அரங்கேசர் ஆடிர் ஊசல் –16-

(இ – ள்.) போதனார் நெட்டெழுத்தும் – தாமரைமலரில் வாழ்கின்ற பிரமன் விதித்துஎழுதிய நெட்டெழுத்தும்,
நமனார் இட்ட குற்றெழுத்தும் – யமன் எழுதிய குற்றெழுத்தும்,
புனல் எழுத்து ஆய் போக – நீரில் எழுதிய எழுத்துப்போல மறைந்து விடும்படி, –
மாறன் வேதம்ஆயிரம் தமிழும் எழுதி – நம்மாழ்வார் அருளிச்செய்த தமிழ்வேதமாகிய திருவாய்மொழி ஆயிரம்பாசுரங்களையும் பட்டோலைகொண்டு எழுதி,
(அதனால்), அ நாள் மேன்மை பெறு – அக்காலத்திற்பெருமைபெற்ற,
மதுரகவி – மதுரகவிகளது,
வியப்பை – கொண்டாடத்தக்க பாடல்களை,
பாட – (ததீயர்) பாடா நிற்க, –
ஓதம் ஆர் மீன்வடிவு ஆய் – கடலில் திரிகின்ற மத்ஸ்யத்தின் வடிவாகியும்,
ஆமை ஏனத்து உரு ஆகி – கூர்மம் வராகம் இவற்றின் உருவமாகியும்,
அரி குறள் மூ இராமர் ஆகி – நரஸிம்ஹமும் வாமநமும் பரசுராமரும் தசரதராமரும் பலராமரும் ஆகியும்,
கோது இலா கண்ணன் ஆய் – குற்றமில்லாத கிருஷ்ணனாகியும்,
கற்கி ஆகும் – கல்கியாகத் திருவவதரிக்கவும் போகின்ற,
கோயில் வாழ் அரங்கேசர் – திருவரங்கம் பெரியகோயிலில் வாழ்கின்ற ஸ்ரீரங்கராஜரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

ஓருயிர் பிறப்பதுமுதல் இறக்குமளவும் அநுபவிக்கவேண்டியவை முழுவதையும் விதித்துப் பிரமன் எழுதியது
விரியுமாதலால், அதனை ‘நெட்டெழுத்து’ என்றும்;
யமன் தண்டனை விதித்தற்பொருட்டாக அவனது கணக்கனாகிய சித்திரகுப்தனென்பவன் ஓருயிர்செய்கின்ற
பாவத்தைமாத்திரங் குறித்துக்கொள்வது பிரமனது எழுத்துப்போல அத்துணை விரியாதாகலின், அதனை ‘குற்றெழுத்து’ என்றுங் கூறினார்.
நம்மாழ்வார் வேதத்தின் சாரமாக அருளிச்செய்த திருவாய்மொழி ஆயிரம்பாசுரங்களையும்
அவரது சீடரான மதுரகவியாழ்வார் பட்டோலைகொண்டன ரென்க.
மதுரகவியாழ்வார் அருளிச்செய்த பிரபந்தம், கண்ணிநுண்சிறுத்தாம்பு எனப்படும்.
இது பகவானது அமிசமான நம்மாழ்வாரைப் பற்றிப் பாடியது ஆதலாலும், நம்மாழ்வார் எம்பெருமானுக்குப் புத்ரஸ்தாநீயராதலாலும்,
இப்பாசுரத்தைப் பாடுவதனால், ஸ்ரீரங்கநாதர் திருவுள்ளமுவப்பரென்க.
“தேவுடைய மீனமாயாமையா யேனமா யரியாய்க் குறளாய்,
மூவுருவிலிராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில், …… அரங்கமே” என்ற பெரியாழ்வார் பாசுரத்தை
அடியொற்றியன, இச்செய்யுளின் பின்னிரண்டடிகள்.

————–

ஆர் அமுதின் இன்பமிகு சடகோபன் சொல் ஆயிரமும் தெரிந்து எடுத்தே அடியார்க்கு ஓதி
நாரதனும் மனம் உருக இசைகள் பாடும் நாதமுனி திருநாம நலங்கள் பாட
பாரதனில் பாரதப் போர் முடிய மூட்டி பகை வேந்தர் குலம் தொலைய பார்த்தன் தெய்வத்
தேரதனில் வரும் அரங்கர் ஆடீர் ஊசல் சீ ரங்க நாயகியோடு ஆடீர் ஊசல் –17–

(இ – ள்.) ஆர் அமுதின் – அருமையாகிய தேவாமிருதத்தைக்காட்டிலும்,
இன்பம்மிகு – இன்சுவைமிக்க,
சடகோபன் சொல் ஆயிரமும் நம்மாழ்வார்திரு வாய்மலர்ந்தருளிய ஆயிரம்பாடல்களையும்,
தெரிந்து எடுத்து – கண்டுஎடுத்து,
அடியார்க்கு ஓதி – பக்தர்களுக்கு (அவற்றை) உபதேசித்து,
நாரதனும் மனம்உருக இசைகள் பாடும் – (இசைபாடுதலில்வல்ல) நாரதமுனிவனும் மனங்கரையும்படி தேவகானத்தாற்பாடுகின்ற,
நாதமுனி – ஸ்ரீமந்நாதமுனிகள் அருளிச்செய்துள்ள,
திருநாமம் நலங்கள் – (எம்பெருமானது) திருநாம வைபவத்தைப்புலப்படுத்துகின்ற பாடல்களை,
பாட – (ததீயர்) பாடாநிற்க, –
பார் அதனில் – பூமியிலே,
பாரதம் போர் முடிய மூட்டி – பாரதயுத்தத்தை (ப் பூமிபாரம்) தொலையும்படி மூள்வித்து,
பகை வேந்தர் குலம் தொலைய – பகையரசர்களாகிய துரியோதனாதியரது வம்சம் அழியும்படி, (ஸ்ரீகிருஷ்ணாவதாரத்திலே),
பார்த்தன் தெய்வம் தேர்அதனில் வரும் – அருச்சுனனது (அக்கினியாற் கொடுக்கப்பட்டுத்) தெய்வத்தன்மை யமைந்த தேரின்மீது ஏறிச் சாரத்தியஞ்செய்த,
அரங்கர் – திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் – சீரங்கநாயகியோடு ஊசல்ஆடிர் -; (எ – று.)

மதுரகவிகள் அருளிச்செய்த கண்ணிநுண்சிறுத்தாம்பு என்னுந் திவ்ய ப்ரபந்தத்தை நாதமுனிகள் பன்னீராயிரம் உரு
தேவகானத்தாற் பாடி நம்மாழ்வாரது திருவருளைப் பெற்று அவர்முகமாகத் திருவாய்மொழி முதலானவற்றை யடைந்து
உலகோர்க்கு உபகரித்தன ரென்க. நாதமுனி திருநாம நலங்கள் என்பதற்கு – நாதமுனிகளது திருநாமச்சிறப்பை யென்று பொருள்கூறினுமாம்.

————

வம்பமரும் சிகை முந்நூல் தரித்த ஞானி வாதியரை வெல் ஆளவந்தார்க்கு அன்பாம்
எம்பெருமானார்க்கு எட்டும் இரண்டும் பேசி இதம் உரைத்த பெரிய நம்பி இரக்கம் பாட
தும்புரு நாரதர் கீதம் பாட தொண்டர் குழாம் இயல்பாட சுருதி பாட
நம்பெருமாள் திருவரங்கர் ஆடீர் ஊசல் நான்முகனார் தாதையார் ஆடீர் ஊசல் –18-

(இ – ள்.) சிகை – குடுமியையும்,
முந்நூல் – யஜ்ஞோபவீதத்தையும்,
தரித்த -, வம்பு அமரும் – புதுமை பொருந்திய,
ஞானி – தத்துவஞான முடையவராகிய,
வாதியரைவெல் – (தம்மோடு) வாதஞ்செய்யவருபவர்களை யெல்லாம் வென்ற,
ஆளவந்தார்க்கு – ஸ்ரீஆளவந்தாரிடத்தில்,
அன்புஆம்-பக்தியுடையவராகிய,
எம்பெருமானார்க்கு-உடையவர்க்கு,
எட்டும்- திருவஷ்டாக்ஷரமகாமந்திரத்தையும்,
இரண்டும் – திருத்வயத்தையும்,
பேசி – உபதேசித்து,
இதம் – நன்மைபயக்கத்தக்க சரமச்லோகத்தையும்,
உரைத்த – உபதேசித்த,
பெரியநம்பி – பெரியநம்பியென்னும் ஆசாரியர் அருளிச்செய்த,
இரக்கம் – (பகவானது) கிருபாவிசேஷத்தைத் தெரிவிக்கும் பாடல்களை,
பாட – (ததீயர்) பாடாநிற்கவும், –
தும்புரு நாரதர் – தும்புரு நாரதர் என்கின்ற இருவரும்,
நாத கீதம் பாட – இன்னோசையுள்ள கீதங்களைப் பாடவும், –
தொண்டர் குழாம் – அடியார்களின் கூட்டங்கள்,
இயல் பாட – இயலுக்கென்று அமைந்த திவ்யப்ரபந்தங்களை யெடுத்துப்பாடவும், –
(பின்னும் சில அடியார்களின் கூட்டங்கள்), சுருதிபாட – வேதபாராயணஞ்செய்யவும், –
நம்பெருமாள் – நம்பெருமாளே! திருவரங்கர் – ஸ்ரீரங்கநாதரே! ஊசல் ஆடிர் -;
நான்முகனார் தாதையார் நான்குமுகங்களையுடைய பிரமனுக்குத் தந்தையாரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

விஸிஷ்டாத்வைதஸந்யாஸிகள்மற்றைச்சன்னியாசிகள் போலவல்லாமல் சிகாயஜ்ஞோபவீதங்களைப் பெற்றிருப்ப ராதலால்,
அவ்வகையிற்சேர்ந்த ஸ்ரீஆளவந்தாரை “சிகை முந்நூல் தரித்த ஞானி’ என்றார்.
வம்பமரும் ஞானிக்கு அடை, அவர் வாதியரை வென்றமையை, ஆக்கியாழ்வானை
வென்று ஆளவந்தாரென்று பெயர். பெற்றவிடத்துங் காண்க.
ஆளவந்தார் திருநாடலங்கரித்தபோது அவர்கொண்டிருந்த மூன்றுகுறைகளையும் எம்பெருமானார் நீக்கியவ ராதலால்,
“ஆளவந்தார்க்கன்பாமெம்பெருமானார்’ என்றார்.

பெரியநம்பி ஸ்ரீராமாநுசனுக்குத் திருவிலச்சினைசாதித்துத் திருமந்திரம் யவற்றை உபதேசித்தன ராதலால்,
“எம்பெருமானார்க்கு எட்டு மிரண்டும் பேசி யிதமுரைத்த பெரியநம்பி’ எனப்பட்டார்.
இங்குக் கூறியவற்றின் விவரங்களையெல்லாம் குருபரம்பாராப்ரபாவத்திற் பரக்கக்காணலாம்.
எட்டு இரண்டு என்பன – எண்ணலளவையாகுபெயர்கள்.
இதமுரைத்த என்பதற்கு – ஆத்மஹிதமான அர்த்தவிசேஷங்களை உபதேசித்த என்று பொருள்கூற இடமுண்டு.
இயல்என்பது – இயற்பா; அன்றி, எம்பெருமானுக்கு முன்பு சேவிக்கப்படுகின்ற தமிழ்வேதபாராயணமுமாம்.
பெரியநம்பிஇரக்கம் – பெரியநம்பிகளது கிருபாவிசேஷத்தை, பாட – (ததீயர்) பாடாநிற்க என்று உரைத்தல் சாலும்

————

ஐங்கோலும் ஒரு கோலும் நீர்க் கோலம் போல் அழிய முனிந்து அறு சமயம் அகற்றி எங்கள்
செங்கோலே உலகு அனைத்தும் செல்ல முக்கோல் திருக்கையில் கொள் எதிராசன் செயத்தைப் பாட
சங்கு ஓலம் இடும் பொன்னித் துறையின் நின்றே தவழ்ந்து ஏறி மறுகு தொறும் தரளம் ஈனும்
நம் கோயில் நம் பெருமாள் ஆடீர் ஊசல் நக்கன் மூதாதையர் ஆடீர் ஊசல் –19–

(இ – ள்.) ஐங்கோலும் – (மன்மதனது) பஞ்சபாணங்களும்,
ஒருகோலும் – (அத்வைதஸந்யாஸிகட்குஉரிய) ஏகதண்டமும்,
நீர் கோலம் போல் அழிய – நீரிலிட்ட கோலம்போல அழியும்படி,
முனிந்து – கண்டித்து,
அறு சமயம் அகற்றி – (புறச்சமயங்களாகிய) ஷண்மதங்களையும் நிரஹித்து, –
எங்கள் செங்கோலே – வைஷ்ணவர்களாகிய எங்களது செவ்விய ஆட்சியே (வைஷ்ணவமதமே),
உலகு அனைத்தும் செல்ல – உலகமுழுதுஞ் சென்றுபரவும்படி,
முக்கோல் திரு கையில் கொள் – திரிதண்டத்தைத் தமது திருக்கையிற் கொண்டுள்ள,
எதிராசன் – ராமாநுஜமுனிவரது,
செயத்தை – வெற்றியை,
பாட – (ததீயர்) எடுத்துப்பாடாநிற்க, –
சங்கு – சங்குப்பூச்சிகள்,
ஓலமிடும் பொன்னி துறையினின்று – ஒலிக்கின்ற காவேரியின் துறையிலிருந்து,
தவழ்ந்து ஏறி – ஊர்ந்துஏறிவந்து,
மறுகு தொறும் – தெருக்களிலெல்லாம்
தரளம் ஈனும் – முத்துக்களைப் பெறுதற்கு இடமான,
நம் கோயில் – நமது திருவரங்கம்பெரியகோயிலி லெழுந்தருளியுள்ள, நம்பெருமாள் -! ஊசல் ஆடிர் -;
நக்கன் மூதாதையார் – சிவபெருமானுக்குப் பாட்டனாரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

உடையவர் மன்மதபாணங்கட்கு இலக்காகாது விரக்தராய், அத்வைத நிரஸநம் செய்து வேதபாஹ்யமதங்களின்
கொண்டாட்டத்தையும் ஒழித்து, உலகமெங்கும் வைஷ்ணவமதத்தைப் பரவச்செய்து தமது ஜயஸ்தம்பத்தை
ஸ்ரீரங்கத்தில் நாட்டியமை முதலிரண்டடிகளில் விளக்கப்பட்டது.
எதிராசன் செயத்தை என்பதற்கு – உடையவர் அருளிச் செய்த (எம்பெருமான்விஷயமான) வெற்றிப்பாடல்களைத்
ததீயர்பாடாநிற்க என்று உரைப்பாரு முளர். நக்கன் = நக்நன்; திகம்பரன்.

———–

அவத்தப் புன் சமயச் சொல் பொய்யை மெய் என்று அணி மிடறு புழுத்தான் தன் அவையின் மேவி
சிவத்துக்கு மேல் பதக்கு உண்டு என்று தீட்டும் திருக் கூர வேதியர் கோன் செவ்விட பாட
பவத்துக்கம் பிணி நீங்க நரகம் தூர பரம பதம் குடி மலிய பள்ளி கொள்ளும்
நவத்துப்புச் செங்கனி வாய்க் கரிய மேனி நம்பெருமாள் அரங்கேசர் ஆடீர் ஊசல் –20-

(இ – ள்.) அவத்தம் புல் சமயம் சொல் பொய்யை – பயனற்றதும் இழிந்ததுமாகிய சைவசமயத்தைச்சார்ந்த பொய்ச்சொற்களையெல்லாம்,
மெய் என்று – மெய்ப்பொருளென்று நம்பி, (அதனால் ஸ்ரீஉடையவர் திருவடிகளில் அபசாரப்பட்டு, அத்தீவினையின்பயனாக),
அணிமிடறு புழுத்தான் தன் – அழகிய கழுத்துப்புழுத்தவனாகிய க்ரிமிகண்டசோழனது,
அவையில் – சபையிலே,
மேவி – தாம் எழுந்தருளி,
“சிவத்துக்கு மேல் பதக்கு உண்டு’ என்று -, தீட்டும் – எழுதின,
திரு கூர வேதியர் கோன் – திருக்கூரமென்னும் ஊரிற் பிறந்த பிராமணசிரேஷ்டரான கூரத்தாழ்வானது,
செவ்வி – சிறப்புக்களை,
பாட – (ததீயர் எடுத்துப்) பாடாநிற்க, –
பவம் துக்கம் பிணி நீங்க – இப்பிறவியில்நேரக்கூடிய துன்பமும் நோயும் நீங்கவும்,
நரகம் தூர-நரகக்குழிகள் தூர்ந்துபோகவும்,
பரமபதம் குடி மலிய – பரமபதத்தில் குடிகள் நிறையவும்,
பள்ளிகொள்ளும் – சயனத்திருக்கோலமாகச் சேவைசாதிக்கின்ற,
நவம் துப்பு செங் கனி வாய் – புதிய பவழத்தையும் செந்நிறமுள்ள கொவ்வைக்கனிபோன்ற வாயையும்,
கரிய மேனி – கார்நிறமுள்ள திருமேனி நிறத்தையுமுடைய, நம்பெருமாள் -! அரங்கேசர் -! ஊசல் ஆடிர் -; (எ – று.)

ஒருசோழன் கள்ளப்பொய்ந்நூலாகிய சைவாகமத்தை மெய்யென்றுநம்பி, சிவனுக்கு மேற்பட்ட பரம்பொருள்இல்லை
என்னும் பொருளுள்ள “சிவாத்பரதரம் நாஸ்தி’ என்னும் வாக்கியத்தை எழுதி வித்வான்களிடம் நிர்ப்பந்தித்துக்
கையெழுத்துவாங்கிவருகையில், தன்சபைக்குவருவித்த கூரத்தாழ்வானையும் அதனிற்கையெழுத்திடும்படி நிர்ப்பந்திக்க,
சிவமென்பதற்கு – குறுணியென்னும் பொருளும் உள்ள தாதலால்,
அச்சிவத்துக்குமேல் பதக்கு என்பது உண்டு என்னும் பொருளுள்ள “த்ரோணம் அஸ்தி தத: பரம்’ என்னும் வாக்கியத்தை எழுதிக்
கூரத்தாழ்வான் கையெழுத்திட்டன ரென்க.
சோழன் செய்கின்ற உபத்திரவம் தாங்கமாட்டாது ஸ்ரீஉடையவர் அவன் மிடறு புழுத்துச் சாகும்படி அபிசாரம் செய்ததனால்,
அவன் மிடறுபுழுத்து க்ரிமிகண்டனாயின னென்பது, இங்கு அறியத்தக்கது.
“திருக்கூரவேதியர் கோன்செவ்விபாட’ என்பதற்கு – கூரத்தாழ்வான் அருளிச்செய்த அழகிய தோத்திரப்
பாடல்களைத் ததீயர் பாடாநிற்க என்று பொருள்கூறவும் இடமுண்டு.

————–

சந்து ஆடும் பொழில் பூதூர் முக்கோற் செல்வன் தன் மருகனாகி இரு தாளுமான
கந்தாடைக் குலதீபன் முதலியாண்டான் கடல் ஞாலம் திருத்தி யருள் கருணை பாட
கொந்தாரும் துளவாட சிறை வண்டாட குழலாட விழி ஆட குழைக்காது ஆட
நந்து ஆட கதை ஆட திகிரி ஆட நல் மாடத் திருவரங்கர் ஆடீர் ஊசல் -21-

(இ – ள்.) சந்து ஆடும் பொழில் – அழகுநிறைந்த சோலைகளையுடைய,
பூதூர் – ஸ்ரீபெரும்பூதூரில் திருவவதரித்த,
முக்கோல் செல்வன்தன் – திரிதண்டத்தை யேந்திய உடையவரது,
மருகன் ஆகி – மருமகனாய்,
இரு தாளும் ஆன – (அவரது) இரண்டு திருவடிநிலைகளுமாகிய,
கந்தாடை குலம் தீபன் முதலியாண்டான் – கந்தாடைக்குலத்திற்கு விளக்குப்போன்ற முதலியாண்டான்,
கடல் ஞாலம் திருத்திஅருள் – கடலினாற் சூழப்பெற்ற நிலவுலகத்தி லுள்ளாரை (வைஷ்ணவராகுமாறு) சீர்திருத்தியருளிய,
கருணை – கிருபாவிசேஷத்தை,
பாட – (ததீயர் எடுத்துப்) பாடாநிற்க, –
கொந்து ஆரும் துளவு ஆட – கொத்துக்கொத்தாக நிரம்பிய திருத்துழாய்மாலை அசையவும்,
சிறை வண்டு ஆட – (அந்தத்திருத்துழாய்மாலையில் மொய்க்கின்ற) சிறகுகளையுடைய வண்டுகள் அசையவும்,
குழல் ஆட – (அத்திருத்துழாய்மாலையைச்சூடிய) திருக்குழற்கற்றை அசையவும்,
விழி ஆட – திருக்கண்கள் அசையவும்,
குழை காது ஆட – குண்டலமணிந்த திருச்செவிகள் அசையவும்,
நந்து ஆட – (இடப்பால் மேல்திருக்கையிலேந்திய பாஞ்சசந்யமென்னுஞ்) சங்கு அசையவும்,
கதை ஆட – (இடப்பாற்கீழ்க்கரத்திலேந்திய கௌமோததீயென்னுங்) கதாயுதம் அசையவும்,
திகிரிஆட – (வலப்பால் மேல்கரத்தில் தரித்துள்ள சுதரிசனமென்னுஞ்) சக்கராயுதம் அசையவும்,
நல் மாடம் திருவரங்கர் – அழகிய மாளிகைகள் நிறைந்த ஸ்ரீரங்கத்திலெழுந்தருளியிருப்பவரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

எம்பெருமானாரது திருவடிநிலைகளை முதலியாண்டானென்று வழங்குவது, சம்பிரதாயம். மருகன் – உடன்பிறந்தாள் குமாரன்.

————-

திருக் கலியன் அணுக்கர் திருப்பணி செய் அன்பர் சீ ரங்க நான் மறையோர் உள்ளூர்ச் செல்வர்
தருக்கும் இசைப் பிரான்மார் பார் அளந்தார் பாதம் தாங்குவோர் திருக் கரகம் தரித்து நிற்போர்
இருக்கு முதல் விண்ணப்பம் செய்வோர் வீரர்க்கு இறையவர்கள் சீ புண்டரீகர் மற்றும்
பெருக்கம் உள்ள பரிசாரங்கள் தொழுது ஆட்செய்ய பிரமமாம் திருவரங்கர் ஆடீர் ஊசல் –22-

(இ – ள்.) திருக்கலியனணுக்கர் – திருக்கலியனணுக்கரும்,
திருப்பணி செய் அன்பர் – திருப்பணிசெய்யன்பரும்,
சீரங்கநான்மறையோர் – சீரங்கநான்மறையோரும்,
உள்ளூர்ச் செல்வர் – உள்ளூர்ச்செல்வரும்,
தருக்கும் இசைப்பிரான்மார் – (இசைபாடுவதிற்) சிறந்தோரான இசைப்பிரான் மாரும்,
பார் அளந்தார் பாதம் தாங்குவோர் – (திரிவிக்கிரமனாகி) உலகங்களையளந்த நம்பெருமாளது ஸ்ரீபாதந்தாங்குவோரும்,
திருக்கரகம் தரித்து நிற்போர் – திருக்கரகந் தரித்து நிற்பவரும்,
இருக்கு முதல் விண்ணப்பம் செய்வோர் – இருக்கு முதலிய வேதவிண்ணப்பஞ் செய்பவர்களும்,
வீரர்க்கு இறையவர்கள் – வீரர்க்கிறையவர்களும்,
சீபுண்டரீகர் – ஸ்ரீபுண்டரீகரும், (ஆகிய பத்துக்கொத்துப் பரிஜநங்களும்),
மற்றும் பெருக்கம் உள்ள பரிகரங்கள் – மற்றும் மிகத்தொகுதியான அனைத்துக் கொத்துப் பரிஜநங்களும்,
தொழுது – வணங்கி, ஆள் செய்ய – (தம்தமது) கைங்கர்யங்களைச் செய்துகொண்டிருக்க,
பிரமம் ஆம் திருவரங்கர் – பரப்பிரமமாகிய திரு வரங்கநாதரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

திருக்கலியனணுக்கர் என்ற கொத்து – குறட்டுமணியகாரர் முதலிய பிரதாந கைங்கரியபரர்கள் அடங்கிய தொகுதி யென்று தோன்றுகின்றது.
திருப்பணிசெய் அன்பர் என்ற கொத்து – இப்போது ஆயனார்கொத்துஎன் னும் பெயரோடு நீர்தெளித்தல் முதலிய கைங்கரியங்களைச்செய்யுங் கொத்து என்பர். சீரங்கநான்மறையோர் – அத்யாபகர். உள்ளூர்ச்செல்வர் – ஸ்தலத்தார்- இசைப்பிரான்மார் -அரையர். பாதந்தாங்குவோர் – ஸ்ரீபாதந்தாங்கிகள்.
திருக்கரகம் தரித்துநிற்போர் – பரிசாரகர்என்னலாம்.
இருக்குமுதல் விண்ணப்பஞ்செய்வோர் – பட்டர். வீரர்க்குஇறையவர் – வாளும் கையுமாய் எம் பெருமானுக்குத் திருமேனிக்காவல் புரிபவர்.
ஸ்ரீபுண்டரீகர் – பந்தம்பிடித்தல் முதலிய கைங்கரியங்களைச் செய்யுந் தாசநம்பிகள் என்பர்.
இவர்கள் பத்துக்கொத்தாக ஸ்ரீஉடையவர்காலத்தில் தொகுக்கப்பெற்றார்கள்: அம்முறை காலக்கிரமத்திலே சிற்சில மாறுபாடுகளை யடைந்தது.
மற்றும் பெருக்க முள்ள பரிகரங்கள் என்பது – வேத்ரபாணியுத்யோகம் ஸம்ப்ரதியுத்யோகம் அமுதுபடியளந்து
கொண்டுவரும் உத்யோகம் முதலிய கைங்கரியங்களைச் செய்யும் அடியார்களின் வகைகளைக் குறிக்கும்.

————–

உடுத்திரளோ வானவர்கள் சொரிந்த பூவோ உதித்து எழுந்த கலை மதியோ உம்பர் மாதர்
எடுத்திடு கர்ப்பூர ஆரத்தி தானோ யாம் தெளியோம் இன்று நீள் திருக்கண் சாத்திப்
படுத்த திருப் பாற் கடலுள் நின்று போந்து பாமாலை பூமாலை பாடிச் சூடிக்
கொடுத்த திருக் கோதையுடன் ஆடீர் ஊசல் கோயில் மணவாளரே ஆடீர் ஊசல் –23–

(இ – ள்.) (வானத்தில் இப்போது திரள்திரளாகத் தோன்றுபவை), – உடு திரளோ – நட்சத்திரங்களின் கூட்டங்களோ? (அன்றி),
வானவர்கள் சொரிந்த பூவோ – (தேவரீரைச்சேவிக்கின்ற) தேவர்கள் (மிக்கஅன்போடு) சொரிந்த மலர்களோ? –
(இப்போதுஒளிப்பிழம்பாகத்தோன்றுவது), – உதித்து எழுந்த கலை மதியோ – உதயமாகிவிளங்குகின்ற பதினாறுகலைகளும் நிரம்பிய சந்திரனோ? (அன்றி),
உம்பர் மாதர் எடுத்திடு கர்ப்பூரம் ஆரத்தி தானோ – தேவமாதர்கள் (மங்களார்த்தமாக) எடுத்துச்சுழற்றிய கர்ப்பூர வாரத்தித்தட்டேயோ?
யாம் தெளியோம் – யாம் இன்னதென்று உணர்ந்திலோம்; (இப்படிப்பட்ட பெருவிபவத்துடன்),
இன்று – இப்போது, –
நீள் திருக்கண் சாத்தி படுத்த – நீண்ட திருக்கண்கள் மூடி யோகநித்திரை செய்வதற்கு இடமான,
திருப்பாற்கடலுள் நின்று – திருப்பாற்கடலிலிருந்து,
போந்து – எழுந்தருளிவந்து, (சேவைசாதிக்கின்ற நம்பெருமாளே!)
பாமாலை பூமாலை பாடி சூடி கொடுத்த – பாமாலைகளையும் பூமாலைகளையும் (முறையே) பாடியும் சூடியும் சமர்ப்பித்த,
திருக்கோதையுடன் – ஸ்ரீஆண் டாளோடு, ஊசல்ஆடிர்-;
கோயில் மணவாளரே – ஸ்ரீரங்கத்தி லெழுந்தருளிய அழகியமணவாளரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

இரவில் வானத்தில் தோன்றும் நக்ஷத்திரக்கூட்டங்களை உடுத்திரளோ? வானவர்கள் பக்தியோடு திருவரங்க
நாதனுக்காகச் சொரிந்த பூத்திரளோ? என்று ஐயவணிதோன்றக் கூறினர்.
“உடுத்திரளோ வானவர்கள்சொரிந்த பூவோ’ என்ற தொடர்,
“இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்த வந்நாள்,
மறைமுறையால் வானாடர் கூடி – முறைமுறையின்,
தாதிலகிப் பூத் தெளித்தா லொவ்வாதே தாழ்விசும்பின்,
மீதிலகித் தான்கிடக்கும் மீன்”என்ற பாசுரத்தை ஒருவாறு ஒத்துவந்தது.
இவ்வாறே, வானத்தில் தோன்றிய முழுமதியைத் தேவமாதர்கள் ஸ்ரீரங்கநாதனுக்கு மங்களார்த்தமாக எடுத்துச்
சுழற்றிய கர்ப்பூரவாரத்தித்தட்டேயோ முழுமதியோ எனக் கூறினர்.
இந்தஐயவணியால், அந்தஎம்பெருமான் தேவர்களும் தேவமாதர்களும் வழிபடுமாறு உள்ளா னென்பது, தொனிக்கும்.

————————————————————————–

வென்றி வேல் கரு நெடும் கண் அசோதை முன்னம் வேர்வாட விளையாடும் வெண்ணெய் ஆட்டும்
குன்று போல் நால் தடம் தோள் வீசி ஆடும் குரவைதனைப் பிணைந்து ஆடும் கோள் அறு ஆட்டும்
மன்றினூடு உவந்து ஆடும் மரக்கால் ஆட்டும் வலி அரவில் பாய்ந்து ஆடும் வடு இல் ஆட்டும்
அன்று காணா இழந்த அடியோம் காண அணி அரங்க ராசரே ஆடீர் ஊசல் –24–

(இ – ள்.) அணி அரங்கராசரே -! (நீர்), வென்றி வேல் கரு நெடுங் கண் – வெற்றி பெற்ற வேலாயுதம்போன்று கருமையாகி நீண்ட கண்களையுடைய,
அசோதை – யசோதையினது,
முன்னம் – எதிரில்,
வேர்வு ஆட – வேர்வை யுண்டாகும்படி,
விளையாடும் – விளையாடின,
வெண்ணெய் ஆட்டும் – வெண்ணெய்க்கு ஆடின கூத்தாட்டையும், –
குன்றுபோல் – மலைகள்போல,
நால்தட தோள் – (தேவரீரது) நான்குபெரியதோள்களையும்,
வீசி ஆடும் – வீசிக் கொண்டு கூத்தாடுவதற்கு உரியதான,
பிணைந்து – (பலமங்கையரோடு) சேர்ந்து,
குரவைதனை ஆடும் – குரவைக்கூத்தை ஆடுகின்ற,
கோள்அறுஆட்டும் – குற்றமற்ற ஆட்டத்தையும், –
மன்றின் ஊடு உவந்து ஆடும் – (பலர்கூடும்) பொது விடத்தில் மனமகிழ்ந்து ஆடுகின்ற,
மரக்கால் ஆட்டும் – மரக்கால்கூத்தையும், –
வலி அரவில் பாய்ந்து ஆடும் – வலிமையையுடைய (காளியனென்னும்) பாம்பின்மீது தாவியாடின,
வடு இல் ஆட்டும் – குற்றமற்ற நர்த்தனத்தையும்,
அன்று – அவ்வவ்வாடல்கள் நடந்த காலங்களில்,
காணா (து) – தரிசிக்கப் பெறாமல்,
இழந்த -, அடியோம் – அடியோங்கள்,
காண – (இன்று) தரிசிக்கும்படி, ஊசல் ஆடிர்-; (எ – று.)

முன்பு தேவரீர் பலஆடல்களை ஆடியுள்ளீர்; அவ்வாறு ஆடிய ஆடல்களை அவ்வக்காலத்தில் தரிசிக்கப்பெறாத
அடியோங்களது குறை தீருமாறு இன்று ஊசலாடவேண்டு மென்பதாம்.
“மரக்காலாட்டு’ என்பது, பதினோ ராடலுள் ஒன்று.
“கோளராட்டு’ என்ற பாடத்துக்கு – (மாதரிடத்துப்) பற்றுள்ளவர் ஆடுகின்ற குரவைக்கூத்தை என்றும்,
“வடிவு இல் ஆட்டு’ என்ற பாடத்திற்கு – குறைதலில்லாமல் தொடர்ச்சியாக ஆடுகின்ற கூத்தை என்றும் பொருள்கூறுவர்.
“[மடுவிலாட்டும்’ என்று பாடம் ஓதுவாரும் உளர்.

————

ஆரணங்கள் ஒரு நான்கும் அன்பர் நெஞ்சும் அணி சிலம்பும் அடிவிடாது ஊசல் ஆட
வாரணங்கு முலை மடவார் கண்ணும் வண்டும் வண் துளவும் புயம் விடாது ஊசல் ஆட
காரணங்களாய் அண்டர் அண்டம் எல்லாம் கமல நாபியில் படைத்துக் காத்து அழிக்கும்
சீரணங்கு மணவாளர் ஆடீர் ஊசல் சீ ரங்க நாயகனார் ஆடீர் ஊசல் –25–

(இ – ள்.) காரணங்கள் ஆய் – மூவகைக்காரணங்களுமாகி,
அணடர் – அண்டங்களிலிருப்பவர்களும்,
அண்டம் – உலகவுருண்டைகளும்,
எல்லாம் – ஆகிய எல்லாவற்றையும்,
கமலம் நாபியில் படைத்து – திருவுந்தித்தாமரையிற் சிருஷ்டித்து,
காத்து – பாதுகாத்து,
அழிக்கும் – (பிரளயகாலத்தில்) ஸம்ஹாரஞ்செய்கின்ற,
சீர் அணங்கு மணவாளர் – சிறப்புப்பொருந்திய தெய்வமகளாகிய இலக்குமிக்குக் கணவரே! –
ஆரணங்கள் ஒரு நான்கும் – நான்குவேதங்களும்,
அன்பர் நெஞ்சும் – அடியார்களது மனமும்,
அணி சிலம்பும் – அழகிய சிலம்புகளும்,
அடி விடாது – (தேவரீரது) திருவடிகளை விடாமலிருந்து,
ஊசல் ஆட – ஊசலாடவும், –
வார் அணங்கு முலை மடவார் கண்ணும் – (தமது சம்பந்தத்தாற்) கச்சு நிறம்பெறும்படியான
(தம்மீது அணியப்பெறுதலாலே கச்சுக்கு அழகையுண்டாக்குகிற) தனங்களையுடைய இளமகளிரது கண்களும்,
வண்டும் – வண்டுகளும்,
வள் துளவும் – வளப்பமான திருத்துழாய்மாலையும்,
புயம் விடாது – திருத்தோள்களை விடாமலிருந்து,
ஊசல் ஆட – ஊசலாடவும், ஊசல் ஆடிர் -! சீரங்கநாயகனார் – ஸ்ரீரங்க நாதரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

வேதங்கள்நான்கும் அடிவிடாதிருத்தலாவது – நான்குவேதங்களும் எம்பெருமானது ஸ்வரூபத்தையே நாடிச்சொல்லுதலாம்.
திருவடியைச் சொன்னது – திருமேனிக்கும் உபலக்ஷணம்.
ஸேஷபூதர் (அடியவர்) இழியுந்துறை ஸேஷியின் (தலைவனது) திருவடியே யாதலால், அன்பர்நெஞ்சு அந்தப்பரமனது
திருவடியை விடாது பற்றுவதாயிற்று. அணிசிலம்பு – அப்பெருமானது திருவடியி லணியப்பெற்ற அழகிய பாததண்டைகள்.
இளமகளிர் எம்பெருமானதுதோளழகில் ஈடுபட்டு அவற்றையே கண்டுகொண்டு நிற்றலால், மடவார் கண் ஊசலாடும்புய மென்றார்.
வண்டு – திருத்துழாய் மலர்மாலையில் மொய்த்தற்காக வந்த வண்டு என்றாவது,
தலைமகளிரால் தூதுவிடப்பட்ட வண்டு என்றாவது கொள்க.
சீரணங்குமணவாளர் என்பதற்கு – தமதுகுணங்களால் (யாவரையும்) விரும்பும்படி செய்கின்ற அழகிய மணவாளரே! என்றும் பொருளுரைக்கலாம்.

காரணங்கள் மூன்றுவகைப்படும்; அவையாவன – முதற்காரணம் துணைக்காரணம் நிமித்தகாரணம் என்பன.
முதற்காரணமாவது – பானையுண் டாவதற்கு மண்போல உபாதானமாயிருப்பது;
துணைக்காரணமாவது – அப்பானையுண்டாவதற்குத் தண்டசக்கரங்கள்போல ஸஹகாரியாயிருப்பது;
நிமித்தகாரணமாவது – அப்பானையுண்டாவதற்குக் குயவன் போல நிமித்த மாயிருப்பது:
இவ்வாறே ஸ்தூலமான சித் அசித் என்ற இவற்றுடன் கூடிய இவ்வுலகம் உண்டாவதற்குப் பரப்பிரமம் மூன்று காரணமாயும் இருக்குமென்றும்,
அவற்றுள் ஸூக்ஷ்மமான சித் அசித் என்ற இவற்றுடன் கூடிய பிரமம் முதற்காரணமா மென்றும்,
ஜ்ஞாநம் சக்தி முதலிய குணங்களுடன் கூடிய பிரமம் துணைக்காரணமா மென்றும்,
“பஹுஸ்யாம் (பகுவாக ஆகக்கடவேன்)” என்ற ஸங்கல்பத்துடன் கூடிய பிரமம் நிமித்தகாரணமா மென்றும் வேதாந்தங்களினால் உணரலாம்.

———————————————————–

அடித்தலத்தில் பரிபுரமும் சிலம்பும் ஆட அணி மார்பில் கௌத்துவமும் திருவும் ஆட
தொடித் தலத்தில் மணி வடமும் துளவும் ஆட துணைக்கரத்தில் சக்கரமும் சங்கும் ஆட
முடித்தலத்தில் கரும் குழலும் சுரும்பும் ஆடமுகமதியில் குறு வேர்வும் குழையும் ஆட
கடித்தலத்தில் அரை நாணும் கலையும் ஆட காவிரி சூழ் அரங்கேசர் ஆடிய ஊசல் –26-

(இ – ள்.) காவிரி சூள் அரங்கேசர் திருக்காவேரிநதியாற் சூழப்பெற்ற திருவரங்கத்திற்குத் தலைவரே! –
அடி தலத்தில் – திருவடிகளில்,
பரிபுரமும் – கிண்கிணிகளும்,
சிலம்பும் – பாததண்டைகளும்,
ஆட – அசைந்தாடவும், –
அணி மார்பில் – அழகிய திருமார்பில்,
கௌத்துவமும் – கௌஸ்துபரத்தினமும்,
திருவும் – இலக்குமியும்,
ஆட – அசைந்தாடவும், –
தொடி தலத்தில் – திருத் தோள்களில்,
மணி வடமும் – இரத்தினவாரமும்,
துளவும் – திருத்துழாய் மாலையும்,
ஆட – அசைந்தாடவும், –
துணை கரத்தில் – இரண்டு திருக்கைகளிலும்,
சக்கரமும் சங்கும் – திருவாழியுந் திருச்சங்கமும்,
ஆட – அசைந்தாடவும், –
முடி தலத்தில் – திருமுடியில்,
கரு குழலும் – கரிய மயிர்முடியும்,
சுரும்பும் – (அதில்அணிந்துள்ள மலர்மாலைகளில் மொய்க்கின்ற) வண்டுகளும்,
ஆட – அசைந்தாடவும், –
முகம் மதியில் – பூர்ணசந்திரன்போன்ற திருமுகமண்டலத்தில்,
குறு வேர்வும் – சிறுத்து அரும்புகின்ற வேர்வை நீரும்,
குழையும் – காதணிகளும்,
ஆட – அசைந்தாடவும், –
கடி தலத்தில் – திருவரையில்,
அரைநாணும் -, கலையும் – திருப்பரியட்டமும்,
ஆட – அசைந்தாடவும், சல் ஆடில் -; (எ -று.)

——————————————————-

பரந்து அலைக்கும் பாற் கடலுள் பசும் சூல் கொண்டல் படிந்ததென கிடந்த படி படி மேல் காட்டி
வரம் தழைக்க இரண்டு ஆற்றின் நடுவே தோன்றி மண் உலகை வாழ வைத்த வளத்தைப் பாட
புரந்தரற்கும் பெருமாளே ஆடீர் ஊசல் போதனுக்கும் பெருமாளே ஆடீர் ஊசல்
அரன் தனக்கும் பெருமாளே ஆடீர் ஊசல் அணி அரங்கப் பெருமாளே ஆடீர் ஊசல் –27-

(இ – ள்.) பரந்து அலைக்கும் பாற்கடலுள் – பரவி அலைவீசுகின்ற திருப்பாற்கடலிலே,
பசு சூல் கொண்டல் படிந்தது என – கரிய நீர்கொண்ட மேகம் படிந்தாற்போல,
கிடந்த – சயனத்திருக்கோலமாக எழுந்தருளியுள்ள,
படி – தன்மையை,
படிமேல் காட்டி – நிலவுலகத்திற் பிரதியக்ஷமாக்கி,
வரம் தழைக்க இரண்டு ஆற்றின் நடுவே தோன்றி – (அன்பர்களது) வேண்டுகோளை மிகுதியாகத்
தந்தருளுமாறு உபயகாவேரிமத்தியில் (ஸ்ரீரங்க க்ஷேத்திரத்தில் அர்ச்சாரூபியாக) ஆவிர்ப்பவித்து,
மண் உலகை வாழவைத்த – நிலவுலகத்தை வாழச்செய்த,
வளத்தை – பெருமையை,
பாட – (அடியோங்கள்) பாடாநிற்க, –
புரந்தரற்கும் பெருமாளே – தேவேந்திரனுக்குந் தலைவரே! ஊசல் ஆடிர் -;
போதனுக்கும் பெருமாளே – பிரமதேவனுக்குந் தலைவரே! ஊசல் ஆடிர் -;
அரன்தனக்கும் பெருமாளே – சிவபெருமானுக்குந் தலைவரே! ஊசல் ஆடிர் -;
அணி அரங்கம் பெருமாளே – ஸ்ரீரங்கநாதரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

—————————————————————–

உடுமாய கதிர் உதிர சண்ட வாயு உலகு அலைப்ப வடவை சுட உத்தி ஏழும்
கெடுமாறு திரி தருகால் உயிர்கள் எல்லாம் கெடாது வயிற்ருள் இருந்தும் கீர்த்தி பாட
நெடுமாயப் பிறவி எல்லாம் பிறந்து இறந்து நிலத்தோடும் விசும்போடும் நிரயத்தோடும்
தடுமாறித் திரிவேனை அருள் செய்து ஆண்ட தண் அரங்க நாயகனார் ஆடீர் ஊசல் –28-

(இ – ள்.) உடு மாய – நக்ஷத்திரங்கள் அழிந்தொழியவும்,
கதிர் உதிர – சூரியசந்திரர்கள் உதிரவும்,
சண்ட வாயு – பிரசண்டமாருதம்,
உலகு அலைப்ப – வீசிஉலகங்களை யழிக்கவும்,
வடவை சுட – வடவாமுகாக்கினி எரித்தழிக்கவும்,
உததி ஏழும் – கடல்களேழும்,
கெடும் ஆறு – (இவ்வண்ட மெல்லாம்) அழியும்படி,
திரிதரு கால் – பொங்கிப்பரவுங் காலத்தில்,
உயிர்கள் எல்லாம் – (அவற்றிலுள்ள) ஜீவராசிகளெல்லாவற்றையும்,
கெடாது – அழியாமல்,
வயிற்றுள் இருத்தும் – திருவயிற்றில்வைத்துப் பாதுகாக்கின்ற,
சீர்த்தி – (தேவரீரது) பெருங்கீர்த்தியை,
பாட – (அடியோங்கள்) எடுத்துப்பாடாநிற்க, –
நெடு மாயம் பிறவி எல்லாம் – பெரிய மாயையையுடைய எல்லாப் பிறவிகளிலும், பிறந்து -, இறந்து -,
நிலத்தோடும் – நிலவுலகத்திலும்,
விசும்போடும் – வானுலகத்திலும்,
நிரயத்தோடும் – நரகத்திலும்,
தடுமாறி திரிவேனை – தடுமாறித்திரிகின்ற என்னை,
அருள் செய்து ஆண்ட – கருணைசெய்து ஆட்கொண்ட,
தண் அரங்க நாயகனார் – குளிர்ந்த ஸ்ரீரங்கத்தி லெழுந்தருளியுள்ள ஸ்ரீரங்கநாதரே! ஊசல் ஆடில் -; (எ – று.)

அநாதியான புண்யபாபங்களினாலும் பிறந்து இறக்கும்போது இடையிடையே நேர்கிற புண்ய பாபங்களினாலும்
சுவர்க்க மத்திய பாதாளங்களிற் பலபிறவி பிறந்து இறந்து அலைச்சற்பட்ட தமதுநிலையைப் பின்னிரண்டு அடிகளினால் விளக்கினார்.

———————————————————–

முருகன் உறை குறிஞ்சித் தேன் முல்லை பாய முல்லை நிலத் தயிர் பால் நெய் மருதத்து ஓட
மருத நிலக் கொழும் பாகு நெய்தல் தேங்க வரு புனல் காவிரி சூழ்ந்த வளத்தைப் பாட
கரு மணியே மரகதமே முத்தே பொன்னே கண் மணியே ஆர் உயிரே கனியே தேனே
அருள் புரிவாய் என்றவர் தம் அகத்துள் வைகும் அணி அரங்க மாளிகையார் ஆடீர் ஊசல் –29-

(இ – ள்.) “கரு மணியே – நீலமணிபோன்றவனே!
மரகதமே – பச்சை யிரத்தினம்போன்றவனே!
முத்தே – முத்துப்போன்றவனே!
பொன்னே – பொன்போல் அருமையானவனே!
கண்மணியே – கண்ணிற்குள்ளிருக்குங் கருவிழிபோன்றவனே!
ஆர் உயிரே – அருமையான உயிர்போன்றவனே!
கனியே – இனிய கனிபோன்றவனே!
தேனே – தேன்போல் மதுரமானவனே!
அருள் புரிவாய் – (எம்மீது) கருணைபுரிவாயாக,
‘ என்றவர் தம் – என்று பிரார்த்தித்தவரது,
அகத்துள் – மனத்தில்,
வைகும் – (அவர்நினைந்த வடிவோடு) தங்கியிருக்கின்ற,
அணி அரங்கமாளிகையார் – அழகிய திருவரங்கந்திருப்பதியி லெழுந்தருளியுள்ள எம்பெருமானே! –
முருகன் உறை குறிஞ்சி தேன் – முருகக்கடவுள் வாழ்கின்ற குறிஞ்சிநிலக்கருப்பொருளாகிய தேன்,
முல்லை பாய – முல்லைநிலத்திற் பாயவும், –
முல்லைநிலம் – முல்லை நிலத்துக்கருப்பொருளாகிய,
தயிர் பால் நெய் – தயிரும் பாலும் நெய்யும்,
மருதத்து ஓட – மருதநிலத்திற் பெருகியோடவும், –
மருதம் நிலம் கொழும்பாகு – மருதநிலத்தில் விளைகின்ற கரும்பின்சாற்றைக் காய்ச்சியதனாலாகிய வளமுள்ள வெல்லப்பாகு,
நெய்தல் தேங்க – நெய்தல்நிலத்தில் தேங்கிநிற்கவும்,
வரு – பெருகுகின்ற,
புனல் – நீரையுடைய,
காவிரி – காவேரிநதியினாலே,
சூழ்ந்த – சூழப்பெற்றுள்ள,
வளத்தை – வளப்பத்தை,
பாட – (அடியோங்கள்) பாடாநிற்க, ஊசல் ஆடிர் -; (எ – று.)

இதனால், காவிரிபாயப்பெற்ற இந்நாட்டில் நான்குநிலங்களும் அமைந்திருத்தல் கூறினார்.
தொல்காப்பியத்தில், “முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச், சொல்லியமுறையாற் சொல்லவும்படுமே” என்றவிடத்து,
சொல்லாதமுறையாற் சொல்லவும்படு மென்று பொருள்படுதல் பற்றி, குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என முறைப்பட வைத்தார்;
கலித்தொகையிலும், ஐங்குறுநூற்றிலும் பிறவற்றிலும் வேறுபடக்கோத்தவாறுங் காண்க.
நெடுந்தூரத்தும் விளங்குதலின் மலையாகிய குறிஞ்சிநிலத்தை முன்னும், மலையைக் காடும், காட்டை நாடும்,
நாட்டைக் கடலும் அடுத்துண்மையால், அவற்றை அதனதன்பின்னும் வைத்தன ரென்க.
நீரும் நிழலு மில்லாத பாலைநிலம் மனிதசஞ்சாரத்திற்கு இடமாகாது ஆதலின், நீக்கப்பட்டது.
பாலைக்கு நிலமில்லை யென்றும், மற்றைநிலங்கள் தம்நிலைதிரியின் அதுவே பாலையா மென்றும் சில ஆசிரியர் கொள்கை.
“சேயோன்மேய மைவரையுலகமும்” என்பதனால், முல்லைக்கு முருகன் தெய்வமாதல் பெறப்படும்.

—————————————————————-

புண்டரிகத் தவன் தவம் செய்து இறைஞ்சும் கோயில் புரி சடையோன் புராணம் செய்து ஏத்தும் கோயில்
பண்டு இரவி குலத்து அரசர் பணிந்த கோயில் பரிந்து இலங்கைக் கோன் கொணர்ந்து பதித்த கோயில்
மண்டபமும் கோபுரமும் மதிலும் செம்பொன் மாளிகையும் தண்டலையும் மலிந்த கோயில்
அண்டர் தொழும் திருவரங்கம் பெரிய கோயில் அமர்ந்து உறையும் பெருமானார் ஆடீர் ஊசல் –30-

(இ – ள்.) புண்டரிகத்தவன் – (திருமாலின்) நாபீகமலத்தில் தோன்றி யவனான பிரமதேவன்,
தவம் செய்து -,
இறைஞ்சும் – பிரதிஷ்டைபண்ணித் திருவாராதனஞ்செய்து வணங்கின,
கோயில் – கோயிலும், –
புரி சடையோன் – முறுக்கிவிட்ட சடைமுடியையுடைய சிவபிரான்,
புராணம் செய்து -,
ஏத்தும் – துதித்த,
கோயில் – கோயிலும், –
பண்டு – முன்னே,
இரவி குலத்து அரசர் – சூரியகுலத்து ராஜாக்கள்,
பணிந்த – வணங்கிய,
கோயில் – கோயிலும், –
இலங்கை கோன் – இலங்கைக்கு அரசனாகிய விபீஷணாழ்வான்,
பரிந்து – விரும்பி,
கொணர்ந்து பதித்த – கொண்டுவந்து தாபித்த,
கோயில் – கோயிலும், –
மண்டபமும் – மண்டபங்களும்,
கோபுரமும் – கோபுரங்களும்,
மதிலும் – மதில்களும்,
செம் பொன் மாளிகையும் – சிவந்த பொன்னினாற் செய்யப்பட்ட மாளிகைகளும்,
தண்டலையும் – சோலைகளும்,
மலிந்த – நிறைந்துள்ள,
கோயில் – கோயிலுமான,
அண்டர் தொழும் – தேவர்கள் யாவரும் வணங்குகின்ற,
திருவரங்கம் பெரியகோயில் – திருவரங்கம் பெரியகோயிலில்,
அமர்ந்து உறையும் – பொருந்தி நித்தியவாசஞ் செய்கின்ற, பெருமானார் – நம்பெருமாளே! ஊசல் ஆடில் -; (எ – று.)

இங்கு “கோயில்’ என்று கூறியது, அத்திருப்பதியி லெழுந்தருளிய ஸ்ரீரங்கநாதனையும், உபலக்ஷணவகையாற் குறிக்கும்.
பிரணவாகாரமான ஸ்ரீரங்கவிமானத்திலே ஆதிசேஷசயநத்தில் திருமகளும் நிலமகளும் திருவடிவருடப் பள்ளிகொள்ளுந்
திருமால் ஆதியிற் சத்தியலோகத்தில் பிரமனது திருவாராதனத்திருவுருவமாக இருந்ததனால்,
“புண்டரிகத்தவன்தவஞ் செய்து இறைஞ்சுங்கோயில்’ என்றார்.
சிவபிரான் ஸ்ரீரங்கமாஹாத்ம்யத்தை நாரதமுனிவர்க்கு எடுத்துக்கூறியதாகப் புராணம் இருப்பதால்,
‘புரிசடையோன் புராணஞ்செய்து ஏத்துங் கோயில்’ எனப்பட்டது.
சூரியகுலத்து மநுகுமாரனான இக்ஷ்வாகுமகாராஜன் பிரமனைக்குறித்துப் பலகாலம் அரும்பெருந்தவம்புரிந்து
அத்தேவனருளால் அவ்வெம்பெருமானைத் தான் பெற்றுத் திருவயோத்திக்கு எழுந்தருளப்பண்ணிக்கொண்டுவந்து
பிரதிஷ்டைசெய்து திருவாராதநஞ்செய்து வந்தனன்; அந்தஸ்ரீரங்கநாதனே இக்ஷ்வாகுமுதல் இராமபிரான்வரையிலுள்ள
இரவிகுலமன்னவரெல்லார்க்குங் குலதெய்வமாகி விளங்கினா னாதலால் “பண்டிரவிகுலத்தரசர் பணிந்த கோயில்’ என்றும்,
இராமபிரான் வனவாசஞ்சென்று விபீஷணனுக்கு அபயமளித்துக் கடல்கடந்து இலங்கை சேர்ந்து
இராவணாதி ராக்ஷஸ சங்காரஞ் செய்து திருவயோத்திக்கு மீண்டு பட்டாபிஷேகஞ்செய்துகொண்டபின்பு
சுக்கிரீவன் முதலிய அனைவர்க்கும் விடைகொடுத்து அவரவரை ஊர்க்கு அனுப்பும்பொழுது,
தனது திருவாராதனமூர்த்தியான நம்பெருமாளைத் தனக்கு மிகவும்அந்தரங்கனாகிய விபீஷணாழ்வானிடங் கொடுத்து
ஆராதித்துவரும்படி நியமித்துஅனுப்ப, அங்ஙனமே அவ்வரக்கர்பெருமான் அவ்வமரர்பெருமானை அவ்விமானத்துடனே
எழுந்தருளப்பண்ணிக்கொண்டு இலங்கைநேக்கிச் செல்லும்பொழுது இடைவழியில் உபயகாவேரிமத்தியிலே
பெருமான் புடைபெயராது விமானத்துடனே நிலைநின்றருளினனாதலால், “பரிந்திலங்கைக்கோன் கொணர்ந்து பதித்த கோயில்’ என்றுங் கூறினார்.

———————————————————————-

அருவரங்கள் தரு பராங்குசனே ஆதி ஆழ்வார்கள் தம்பிரான் ஆடீர் ஊசல்
இருவர் அங்க ஒளிக்கு அகலா இருள் அகற்றும் எதிராசன் தம்பிரான் ஆடீர் ஊசல்
தருவரங்கர் நீள் பொழில் கூரத்து வேதா சாரியனார் தம்பிரான் ஆடீர் ஊசல்
திருவரங்கத்து அணி அரங்கன் திரு முற்றத்துத் தெய்வங்கள் தம்பிரான் ஆடீர் ஊசல் –31-

(இ – ள்.) அரு வரங்கள் தரு – (தன்னையடைந்த அடியார்க்கு) அரிய வரங்களைக் கொடுக்கின்ற,
பராங்குசனே ஆதி – நம்மாழ்வார் முதலாகிய,
ஆழ்வார்கள் – ஆழ்வார்கட்கு,
தம்பிரான் – தலைவரே!
ஊசல் ஆடிர் -;
இருவர் அங்கம் ஒளிக்கு அகலா – (சூரிய சந்திரர் என்னும்) இருவருடைய மேனியிலிருந்துவீசுகிற (வெயில் நிலவு என்கின்ற) ஒளிக்கும் போகாத,
இருள் – அஜ்ஞாந அந்தகாரத்தை,
அகற்றும்- நீக்குகின்ற,
எதிராசன் – எம்பெருமானார்க்கு,
தம்பிரான் – தலைவரே! ஊசல் ஆடிர்-;
தரு வரங்கள் நீள் பொழில் – சிறந்தமரங்கள் மிகுதியாக நீண்டுவளரப்பெற்ற சோலைகள்சூழ்ந்த,
கூரத்து – திருக்கூரமென்னுந் தலத்தில் அவதரித்த,
வேத ஆசாரியனார் – வேதத்தில் தேர்ந்த ஆசிரியராகிய கூரத்தாழ்வானுக்கு,
தம்பிரான் – தலைவரே! ஊசல் ஆடிர் -;
திருவரங்கத்து – திருவரங்கம் பெரிய கோயிலிலேயுள்ள,
அணி அரங்கன் திருமுற்றத்து தெய்வங்கள் – திருவரங்கன்திருமுற்ற மென்னும் இடத்தில் வந்து வணங்குகின்ற
தெய்வங்கட்கெல்லாம், தம்பிரான் – தலைவரே! ஊசல் ஆடிர் -; (எ – று.)

—————————————————————–

உணராத முதலை இளங்குதலைச் சொல்லை உளமுருகித் தந்தை தாய் உவக்கு மா போல்
தணவாமல் கற்பிப்பார் தம் சொற் கேட்டுத் தந்தை உரைத்தத்தை ஆதரிக்குமா போல்
பணவாள் அரா முடி மேல் படி ஏழ் போற்றும் பட்டர் திருத் தாட்கு அடிமைப் பட்ட காதல்
மணவாள தாசன் தன் புன் சொல் கொண்ட மதில் அரங்க மணவாளர் ஆடீர் ஊசல் –32–

(இ – ள்.) உணராத – நன்றாகப்பேசத்தெரியாத,
மதலை – சிறுகுழந்தையின்,
இள குதலை சொல்லை – நிரம்பாத மழலைச்சொல்லை,
தந்தை தாய் – (அக்குழந்தையைப்பெற்ற) தாய்தந்தையர்,
உளம்உருகி – மனங்கரைந்து,
உவக்கும் ஆ போல் – சந்தோஷிப்பதுபோலவும், –
தணவாமல் – இடைவிடாமல்,
கற்பிப்பார் – கற்பிப்பவர்,
தம் சொல் கேட்டு – தாம் சொன்ன சொற்களைக் கேட்டுக்கொண்டு,
தத்தை உரைத்தத்தை – கிளி பேசினதை,
ஆதரிக்கும் ஆ போல் – விரும்பிமகிழும் விதம்போலவும், –
பணம் வாள் அரா முடிமேல் – படமும் ஒளியு முடைய ஆதிசேஷனது முடிமேலுள்ள,
படி ஏழ் – ஏழுதீவுகளிலுள்ளாரும்,
போற்றும் – வணங்கித்துதிக்கின்ற,
பட்டர் திருத்தாட்கு – ஸ்ரீபராசரபட்டரது திருவடிகட்கு,
அடிமைப்பட்ட – அடிமையாகிய,
காதல் – பக்தியையுடைய,
மணவாளதாசன்தன் – அழகிய மணவாளதாசனென்னும் அடியேனது,
புல் சொல் – இழிவான சொல்லாகிய பிரபந்தங்களையும்,
கொண்ட – ஏற்றுக்கொண்டருளிய,
மதில் அரங்கம் மணவாளர் – ஸப்தப்ராகாரங்கள் சூழ்ந்த திருவரங்கத்தி லெழுந்தருளிய அழகியமணவாளரே! ஊசல் ஆடிர் – ; (எ – று.)

தாம்பாடிய பிரபந்தங்களை ஸ்ரீரங்கநாதன் அங்கீகரித்தருளியதற்கு, சிறுகுழந்தையின் குதலைச்சொற்களைப் பெற்ற
தாய்தந்தையர்கேட்டு மகிழ்தலையும், கிளியின்சொற்களைக் கற்பிப்பவர் கேட்டு உவத்தலையும் உவமை கூறினர்.
மணவாளதாசன் – தன்மைப்படர்க்கை.

——————————————————————–

தற்சிறப்புப் பாசுரம்

போதாரு நான் முகனே முதலா யுள்ள புத்தேளிர் தொழு நாதன் புவனிக்கு எல்லாம்
ஆதாரமாம் தெய்வ மான நாதன் அனைத்து உயிர்க்கு நாதன் அணி யரங்க நாதன்
சீதார விந்த மலர்த் திரு வினாதான் திரு ஊசல் திரு நாமம் ஒரு நால் எட்டும்
வேதா சாரிய பட்டர்க்கு அடிமையான வெண் மணிப் பிள்ளைப் பெருமாள் விளம்பினானே —

(இ – ள்.) போது ஆரும் நான்முகனே முதல் ஆய் உள்ள – தாமரை மலரில் வாழ்கின்ற நான்குமுகங்களையுடைய பிரமதேவன் முதலான,
புத்தேளிர் – தேவர்கள்யாவரும்,
தொழும் – வணங்குகின்ற,
நாதன் – தலைவனும்,
புவனிக்கு எல்லாம் – எல்லாவுலகங்கட்கும்,
ஆதாரம் ஆம் தெய்வம் ஆன – ஆதாரமாகவுள்ளதெய்வமாக இருக்கின்ற,
நாதன் – தலைவனும்,
அனைத்து உயிர்க்கும் – ஜீவவர்க்கங்களெல்லாவற்றிற்கும்,
நாதன் – தலைவனும்,
சீத அரவிந்தம் மலர் திருவின் நாதன் – குளிர்ந்த தாமரைமலரில் வாழ்கின்ற இலக்குமிக்குத் தலைவனுமான,
அணி அரங்கம் நாதன் – அழகிய திருவரங்க நாதனைப்பற்றி,
திருவூசல் திருநாமம் ஒரு நால் எட்டும் – திருவூசல் என்று பெயர்பெற்ற முப்பத்திரண்டுபாடல்களையும்,
வேதஆசாரியபட்டர்க்கு அடிமைஆன வெள்மணிபிள்ளைப்பெருமாள் – வேதத்தில்தேர்ந்த ஆசாரியரான பட்டர்க்குச் சிஷ்யராகிய
வெண்மைநிறமுள்ள மணிபோலச் சத்துவகுணம் மிகுந்த பிள்ளைப்பெருமாளையங்கார்,
விளம்பினான் – பாடினார்; (எ – று.)

நூலாசிரியர் தம்மைப் பிறன்போலக் கூறிய தற்சிறப்புப்பாயிரம், இது. கூரத்தாழ்வானது திருக்குமாரர்க்கு
வேதாசார்யபட்டரென்று ஒரு திருநாம முண்டெனக் கொள்ளினுமாம்.

சீரங்கநாயகரூசல் முற்றும்.

அஷ்டபிரபந்தம் முற்றிற்று.

—————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கக் கலம்பகம் –81-101-

February 19, 2022

பாண்
81- விடாது பூடந்தைமார் விரும்ப ஆயர் மாதர் தோள்
வியந்து முன் நயந்தவர்க்கு விற்கும் எங்கள் கொங்கை தான்
அடாதது அன்று பாண இன்னம் அங்கன் அன்றி இங்கனம்
அரங்கர் அன்பு கூர இன்பமாக வல்ல அல்லவே
எடாது இருக்கின் வாய் திறக்கும் எங்கள் ஐயன் உச்சி தோய்
எண்ணெய் பட்ட மெயில் இட்ட முத்தும் உத்தரீயமும்
படா முகம் திறந்து அசைந்து மழலை வாயின் மணம் அறாப்
பசு நரம்பு புடை பரந்து பால் சுரந்த முலையுமே –81-

(இ – ள்.) பாண – பாணனே! –
பூமடந்தைமார் – திருமகளும் நிலமகளும்,
விடாது – சிறிதும் விட்டுப்பிரியாமல்,
விரும்ப – விரும்பிக் கூடியிருக்கவும், (அவர்களைவிட்டு),
ஆயர் மாதர் தோள் – இடைப்பெண்ணான நப்பின்னையினது தோள்களை,
முன் – முன்னே (கிருஷ்ணாவதாரத்தில்),
வியந்து – அதிசயித்து,
நயந்தவர்க்கு – விரும்பிக் கூடிய தலைவர்க்கு,
விற்கும் எங்கள் கொங்கை – விலைக்கு விற்கின்ற எங்களது தனம்,
அடாததுஅன்று – தகாத தன்று;
இன்னம் – இன்னமும்,
அங்ஙன் அன்றி – அவ்வாறல்லாமல்,
இங்ஙனம் – இவ்வாறு,
எடாது இருக்கின் – எடுத்துப் பால் கொடாதிருந்தால்,
வாய் திறக்கும் – வாய்திறந்தழுகின்ற,
எங்கள் ஐயன் – எங்கள் குழந்தையினது,
உச்சி நோய் – உச்சியிற் பொருந்திய,
எண்ணெய் பட்ட – எண்ணெய் படப்பெற்ற,
மெய்யில் – எங்கள்உடம்பில்,
இட்ட – இடப்பட்ட,
முத்தும் – முத்துமாலையும்,
உத்தரீயமும் – மேலாடையும்,
படாம் முகம் திறந்து. (அக்குழந்தையால்) மேலாடை சிறிது வாங்கப்பட்டு,
அசைந்து -,
மழலை வாயின் மணம் அறா – மழலைச்சொற்களையுடைய (அக்குழந்தை) வாயினது வாசனை நீங்கப் பெறாமல்,
பசு நரம்பு புடை பரந்து – பச்சைநரம்புகள் புறத்தே பரவப்பெற்று,
பால் சுரந்த – பாலைச் சுரக்கின்ற,
முலையும் – தனங்களும், அரங்கர் -,
அன்பு கூர – அன்பு மிகும்படி,
இன்பமாக வல்ல அல்லவே – இன்பமாகத்தக்கனவேயாகும்; (எ – று.)

பரத்தையரைப் புணர்தற்பொருட்டுத் தலைமகளைப் பிரிந்து சென்ற தலைமகனால் தலைமகளது கருத்தை அறிந்து
அவளைச் சமாதானப்படுத்தி அவளிடம் தான் வரும்படி பேசிவருமாறு அனுப்பப்பட்ட பாணனுக்குத் தலைவி வெகுண்டு கூறியது இது;
“பாணனொடுவெருளுதல்” என்னுந் துறை. ஸ்ரீ பூமி தேவிகள் மனைவியராய் அமைந்திருக்க,
ஓரிடைப்பெண்ணை மணந்த தலைமகன் தான் முன்னர்க் கூடிய எங்களை இப்போது இழிவாக நினைப்பது
அத்தலைமகனுக்குச் சிறிதுந் தக்கதன்றென்று வெகுண்டு கூறின ளென்க.

பூமடந்தை யென்பதற்கு – இரட்டுறமொழிதலால், தாமரைப்பூவிலுள்ள ஸ்ரீதேவியென்றும், பூ வடசொல்லாய்ப் பூதேவியென்றுங் கொள்க;
“போதின்மங்கை பூதலக்கிழத்தி தேவி,”
“ஆயனாகி யாயர்மங்கை வேயதோள்விரும்பினாய்” என்று திருமழிசைப்பிரான்பாசுரம்.
“வாயு மனைவியர் பூ மங்கையர்க ளெம்பிராற்கு” என்றார் நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியிலும்.
பாணன் – பாடுபவன். அங்ஙனன்றி யிங்ஙன மென்பதற்கு – அவ்விடத்திலே யல்லாமல் இவ்விடத்தில் வந்தென்றுமாம்.
அல்லவேயென்பது, தேற்றப்பொரு ளுணர்த்தி நின்றது. குழந்தையை ஐயனென்றது, உவகை பற்றிய மரபுவழுவமைதி.
உச்சி – நடுத்தலை. படாம் – படமென்னும் வட சொல்லின் விகாரம்; கச்சுமாம்.
இனி, படாமுகந்திறந்தென்பதற்கு – சாயாத முகந்திறந்தென்று உரைத்து, பால்சுரந்த வென்பதனோடு – கூட்டவுமாம்.
“எங்கைகொங்கை” என்னும் பாடத்துக்கு, தோழி கூறிய தென்க.

இதற்குச் செய்யுளிலக்கணம், 39 – ஆங் கவியிற் கூறியது.

————-

தலைமகள் இளமைக்குச் செவிலி இரங்கல்
82-முலை கொண்ட பால் மணம் வாய் மாறிற்றிலை-அம் மொய் குழலோ
அலை கொண்டது இன்னம் என்கை அணையே அலை ஆழி வற்றச்
சிலை கொண்ட செங்கை அரங்கேசர் தாள் கொண்ட தேசம் எல்லாம்
விலை கொண்ட வாள் விழியாள் சென்றவாறு எங்கன் வெஞ்சுரமே –82-

(இ – ள்.) (இச்சிறுமகளுக்கு) இன்னம் -,
முலை கொண்ட பால் மணம் – தாய்முலையிற் கொண்ட பாலினது வாசனை,
வாய் மாறிற்று இல்லை – வாயினின்றும் நீங்கிற்றில்லை;
அம் மொய் குழலோ – அழகிய நெருங்கிய கூந்தலோ,
அலை கொண்டது – அலைந்துகொண்டே யிருக்கின்றது (மயிர் முடி கூடிற்றில்லை) ;
என் கை அணையே – என் கையே படுக்குமிடமாயிருக்கின்றது; (இங்ஙனமிருக்கவும்), –
அலை ஆழி வற்ற – அலைகளையுடைய கடல்வற்றிப்போம் படி,
சிலை கொண்ட – (ஆக்நேயாஸ்திரத்தை விடுத்தற்குக்) கோதண்டத்தை யெடுத்த,
செங் கை – சிவந்த திருக்கையையுடைய,
அரங்கேசர் – ரங்கநாதரது,
தாள் – திருவடியால்,
கொண்ட – அளந்துகொள்ளப்பட்ட,
தேசம் எல்லாம் – உலகமுழுவதையும்,
விலை கொண்ட – தனக்கு விலையாகக் கொண்ட,
வாள் விழியாள் – வாள்போன்ற (கூரிய) கண்களையுடைய இவள்,
வெம்சுரம் – கொடிய பாலைநிலவழியில்,
சென்ற ஆறு – (தலைவன் இருக்குமிடத்தை நோக்கிப்) போன வகை,
எங்ஙன் – எவ்வாறோ? (எ – று.)

களவுப்புணர்ச்சிக்கண் தலைவி தலைமகனைப்புணர்ந்து பின்னர் அவனுடன் போக்கிற் சென்றனளாக, அதனையறிந்த செவிலி
“பேதைப்பருவத்தளான இவட்குத் தலைவனுடன் போக்கிற்கு இசையும் முதுக்குறைவு வந்தவாறு என்னோ!” என்று இரங்கிக்கூறியது, இது.
இதனை நற்றாய்வார்த்தையாகக் கொள்வாரு முளர்.
தலைவி யௌவநபருவத்தை யடைந்திருந்தும் இவள்தாய்மார்க்கு அன்புமிகுதியால் இவளது மிக்க இளமையே தோற்றுவதென்க.
தலைமகனை வசப்படுத்துவது முலையழகாலேயாதல் மயிர்முடியழகாலேயாதல் சொற்சாதுரியத்தாலேயாதல் கூடுவதாயிருக்க,
முலையும் அரும்பாதே குழலும்முடிகூடாதே சொல்லுங்குதலையாயுள்ள இந்தப்பேதைக்கு இப்படி
தலைவனிடம் அன்புண்டானவாறு என்கொல்? என்று அதிசயப்பட்டனளென்க.
“முலையோ முழுமுற்றும்போந்தில மொய்பூங்குழல் குறிய,
கலையோவரையில்லை நாவோகுழறும் கடன்மண்ணெல்லாம்,
விலையோ வெனமிளிருங்கணிவள் பரமே பெருமான்,
மலையோ திருவேங்கடமென்று கற்கின்றவாசகமே” என்ற நம்மாழ்வார் பாசுரம் இங்கு நோக்கத்தக்கது.

“வாயிற் பல்லுமெழுந்தில மயிரும் முடிகூடிற்றில,
சாய்விலாத குறுந்தலைச் சிலபிள்ளைகளோ டிணங்கித்,
தீயிணக்கிணங் காடிவந்திவ டன்னன்ன செம்மைசொல்லி,
மாயன் மாமணிவண்ணன்மே லிவண் மாலுறு கின்றாளே” என்றார் பெரியாழ்வாரும்.
“அடியளந்தான் றாஅய தெல்லாம்” என்றாற்போல, ‘அரங்கேசர் தாள்கொண்ட தேசமெல்லாம்’ என்றாள்

இது, நிரையசை முதற் கட்டளைக் கலித்துறை.

———–

தலைமகன் தலைமகளது இயல் கூறல்
83- வெஞ்சமும் கருதும் கஞ்சனும் எருதும் வேழமும் பரியும் வீழ முன் பொருதார்
தஞ்சம் என்றவருக்கு அஞ்சல் என்று அருளும் தாயில் அன்பு உடையார் கோயிலின் புடை ஆர்
மஞ்சும் வண்டினமும் துஞ்சு தண்டலை வாய் வல்லி ஓன்று அதிலே எல்லியும் திகழும்
கஞ்சம் உண்டு அதிலே நஞ்சம் உண்டு அதிலே கள்ளம் உண்டு அது என் உள்ளம் உண்டதுவே –83-

(இ – ள்.) வெம் சமம் கருதும் – கொடிய போரை விரும்புகின்ற,
கஞ்சனும் – கம்ஸனும்,
எருதும் – (அவனாற் கொல்லும்படி யேவப்பட்ட) எருதினுருவங் கொண்டுவந்த அரிஷ்டாசுரனும்,
வேழமும் – (குவலயாபீடமென்னும்) பட்டத்துயானையும்,
பரியும் – குதிரைவடிவாய்வந்த (கேசியென்னும்) அசுரனும்,
வீழ – இறந்துவிழும்படி,
முன் – முன்னே (கிருஷ்ணாவதாரத்திற்குழந்தைப்பருவத்தில்),
பொருதார் – போர்செய்தவரும்,
தஞ்சம் என்றவருக்கு – அடைக்கல மென்று கூறி வந்து சரணமடைந்தவர்களுக்கு,
அஞ்சல் என்று அருளும் – அஞ்சற்கவென்று சொல்லி (அபயப்பிரதானஞ் செய்து) காக்கின்ற,
தாயில் அன்புடையார் – (உயிர்களிடத்துத்) தாயினும் அன்பினையுடையவருமாகிய நம்பெருமாளது,
கோயிலின் புடை – பெரிய கோயிலின் புறத்தில்,
ஆர் – பொருந்திய,
மஞ்சு வண்டு இனமும் துஞ்சு தண்டலைவாய் – மேகக்கூட்டங்களும் வண்டுக்கூட்டங்களுந் தங்குகின்ற சோலையினிடத்தில்,
வல்லி ஒன்று (உண்டு) – கொம்பொன்று (மகள் ஒருத்தி) உண்டு;
அதிலே – அதனிடத்திலே,
எல்லியும் திகழும் கஞ்சம் – இராக்காலத்துங் குவியாமல் மலர்ந்து விளங்குகின்ற தாமரைமலர் (முகம்), உண்டு -;
அதிலே, – நஞ்சம் – விஷம் (கண்கள்), உண்டு -;
அதிலே -, கள்ளம் – கள்ளத்தனம், உண்டு -;
அது -, என் உள்ளம் – என்மனத்தை, உண்டது – கவர்ந்தது; (எ – று.)

இது, தெய்வப்புணர்ச்சி புணர்ந்த தலைமகன், தன்னை எதிர்ப்பட்டு நோக்கி ‘நீ இவ்வாறு மெலிவுறுதற்குக் காரணமென்னோ?’
என்று வினாவின பாங்கனுக்கு, ‘நேற்றுத் திருவரங்கங்கோயிற் சோலையிற் சென்றேன்; அவ்விடத்து ஒரு கொடிபோல்வாளது
விழிநோக்கால் இவ்வாறாயினேன்’ எனத் தனக்கு உற்றது உரைத்தது.

“வல்லியொன்று” என்பது முதல் “கள்ளமுண்டு” என்றதுவரையில் உபமேயப் பொருள்களை உபமானப்
பொருள்களாகவே மறைத்துக் கூறியது, உருவகவுயர்வுநவிற்சியணி; வடநூலார் ரூபகாதிஸயோக்தி யென்பர்.
ப்ராஸமென்னுஞ் சொல்லணியும் இச்செய்யுளி லுள்ளது.

இது, முதல் மூன்று ஐந்து ஏழாஞ்சீர்கள் கூவிளச்சீர்களும், மற்றை நான்கும் புளிமாச்சீர்களுமாகிய எண்சீராசிரியவிருத்தம்.

————

தலைவி இரங்கல்
84-உண்டு உமிழ் வாசமுடன் தண்டலை மாருதம் வந்து உலவி சாளரமும் குலவிய வாள் நிலவும்
விண்டு அலர் பூ அணையும் மென்பனி நீர் புழுகும் வேனிலிலும் முதிரா வேனிலும் ஆகியவால்
அண்டர் தொழும் பெருமாள் அம்புயமின் பெருமாள் அருமறையின் பெருமாள் அழகிய நம் பெருமாள்
புண்டரிகம் கமழும் தண் துறை ஓதிமமே புன்னைகள் சிந்து அலரே இன்னமும் வந்திலரே –84-

(இ – ள்.) புண்டரிகம் கமழும் – தாமரைமலர்மணம் நாறுகின்ற,
தண்துறை – குளிர்ந்த தடாகத்தினிடத்தே யுள்ள,
ஓதிமமே அன்னமே! –
புன்னைகள் சிந்து அலரே – புன்னைமரங்கள் சொரிகின்ற பூவே! –
உண்டு உமிழ் வாசமுடன் – உட்கொண்டு வெளிவீசுகின்ற வாசனையோடு,
தண்டலை மாருதம் – பூஞ்சோலையின்கண் உள்ள இளங்காற்று,
வந்து உலவிய – வந்துவீசுகின்ற,
சாளரமும் – பலகணிகளும்,
குலவிய வாள் நிலவும் – விளங்குகின்ற நிலாவினொளியும்,
விண்டு அலர் பூ அணையும் – விரிந்துமலர்கின்ற புஷ்பசயனமும்,
மெல் பனிநீர் புழுகும் – குளிர்ந்த பனிநீருங் கஸ்தூரிப்புழுகும்,
வேனிலிலும் – இருவகைவேனிற்காலத்துள்ளும்,
முதிரா வேனிலும் – (இவற்றையுடைய) இளவேனிற்காலமும்,
ஆகிய – ஆயின;
இன்னமும் – அங்ஙனமாகவும்,
அண்டர் தொழும் பெருமாள் – தேவர்கள்வணங்குகின்ற சுவாமியும்,
அம்புயம்மின் பெருமாள் – தாமரைமலரிலுள்ள மின்னற்கொடிபோன்ற திருமகளுக்குத் தலைவரும்,
அரு மறை இன் பெருமாள் – அறிதற்கரிய வேதங்களாற் புகழப்படுகின்ற இனிய பெருமையையுடையவருமாகிய,
அழகிய நம்பெருமாள் – நமது அழகிய மணவாளப்பெருமாள்,
வந்திலரே – வந்தாரில்லையே; (எ – று.) – ஆல் – ஈற்றசை.

இதற்குத் துறை முன்னர்க் கூறப்பட்டது.

பனிநீர் – ஓர்வகை வாசனைநீர். முதிராவேனிலு மாகிய என்றது – இளவேனிற்பருவங் கழிந்து முதுவேனிற்பருவமும் வந்த தென்றபடி.

இது, முதல் மூன்று ஐந்து ஏழாஞ் சீர்கள் விளச்சீர்களும், மற்றை நான்குங் கூவிளங்காய்ச்சீர்களு மாகிய எண்சீராசிரியவிருத்தம்.

————

தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு வருந்தி உரைத்தல்
85-இன் இசை வேயினர் மன்னிய கோயிலை எய்தார் போல்
பொன் நினைவால் அவர் போன இடத்தினில் போகாதோ மின்னிய
முகில் துளி என்று என் மேல் எலாம்
வன்னியின் பொறிகளை வழங்கும் வாடையே –85-

(இ – ள்.) மின்னிய முகில் துளி என்று – மின்னுகின்ற மேகங்களின் மழைநீர்த்துளியென்று பெயர்வைத்து,
என் மேல் எலாம் – என்னுடம்பு முழுவதும்,
வன்னியின் பொறிகளை – நெருப்புப்பொறிகளை,
வழங்கும் – வீசுகின்ற,
வாடை – வாடைக்காற்றானது, –
இன் இசை வேயினர் – இனிய இசையினையுடைய வேய்ங்குழலையுடைய நம்பெருமாள்,
மன்னிய – எழுந்தருளியிருக்கின்ற,
கோயிலை – திருவரங்கத்தை,
எய்தார்போல் – அடையாதவர் போல,
பொன் நினைவால் – பொருள்தேடும் நினைவினால்,
அவர் – அத்தலைவர், போன -, இடத்தினில் -, போகாதோ – போகின்றதில்லையோ? (எ – று.)

தலைவனைப் பிரிந்து அப்பிரிவுத்துயரை யாற்றாத தலைவி தென்றல் வரவுக்கு ஒருசார் வருந்தி இரங்கிக்கூறிய வார்த்தைஇது.
எல்லாவுயிர்கட்கும் இயற்கையிற்குளிர்ச்சியைச் செய்யுந்தன்மையதும் மழைநீர்த்துளியைவீசுவதுமான தென்றற்காற்று
தலைவனைக்கூடியிருக்கும் நிலையில் மேல்வீசும்போது அமிருதம்போல இனிமையாயிருந்து
அதுதானே தணந்திருக்குஞ் சமயத்தில் வீசும்போது விஷம்போல மிக்கவருத்தத்தைச் செய்கின்றது.
அதுவேயுமன்றி, தாபசாந்தியான மழைநீர்த்துளியும் தாபத்தைத் தணியாமல் வெவ்விய தழலாகத் தோற்றி
விரகவேதனையை மிகுவிப்பதாகி மிக்கவெப்பஞ்செய்ய, அதனால், மிகவருந்திய தலைமகள் அவற்றைக்குறித்து வெறுத்துக் கூறினளென்க.

கோயிலை அடைந்தவர்க்கு மீண்டும் விரைவில் வாராதிருத்தல் இயல்பன்றாதலால் எய்தார்போ லென்றும்,
வாடை போகுமாயின் அவரும் என்னைப்போலவே பிரிவாற்றாமையால் வருந்தி விரைந்து வந்திருப்பரென்னுங்கருத்தாற் போகாதோ வென்றும்,
மழைத்துளிகள் தணந்திருக்கின்ற தனக்கு அனற்பொறிபோல வெப்பத்தையுண்டாக்குதலால்
முகிற்றுளியென்று வன்னியின் பொறிகளை வழங்கு மென்றுந் தலைவி கூறினாள்.
முகிற்றுளியென்று வன்னியின் பொறிகளை வழங்குமென்ற தொடரில் – உண்மையில் வன்னியின் பொறிகளா யிருக்க
அவற்றிற்கு முகிற்றுளியென்று வாடை பேர்வைத்து மறைத்திருக்கின்ற தெனக் கூறியது, கைதவாபநுதியென்னு மலங்காரம்.
எய்தார்போ லென்பதற்கு – மீண்டும் வாராதவர்போன் றென்றுமாம். எல்லாமென்பது, ஈண்டு “மேனியெல்லாம் பசலையாயிற்று”
என்பதிற்போல ஒருபொருளின் பலவிட முணர்த்திற்று.

இது, நான்கடியாய், முதலிரண்டடியும் – முதல்நான்குசீருங் கூவிளச்சீர்களும், ஈற்றுச்சீர் தேமாங்காய்ச்சீருமாய் வந்த நெடிலடிகளாய்,
பின்னிரண்டடியும் – மூன்றாஞ்சீரொன்று மாச்சீரும் மற்றைமூன்றுசீர்களும் விளச்சீர்களுமாய்வந்த அளவடிகளாய்,
முன்னிரண்டடியும் ஓரோசையாய், ஏனையடிகள் வேறோசையாய் வந்த வேற்றொலிவெண்டுறை.

———–

கால மயக்கு
வாடையாய் இரு பனியும் ஆய் வேனிலாய் வந்தது கார் என்றே
பேடை மா மயில் சாயலாய் அன்பர் மேல் பிழை கருதிடல் செம்பொன்
ஆடை நாயகன் திருமகள் நாயகன் அரங்க நாயகன் ஏறும்
ஓடை மா இது மதம் இது பிளிறிய ஒலி இது மழை அன்றே –86-

(இ – ள்.) பேடை மா மயில் சாயலாய் – அழகிய மயிற்பேடுபோன்ற சாயலையுடையவளே! –
‘வாடை ஆய் – கூதிர்காலம் கழிந்து,
இரு பனியும் ஆய் – (முன்பனி பின்பனியென்னும்) இரண்டு பனிக்காலங்களும் கழிந்து,
வேனில் ஆய் – (இளவேனில் முதுவேனில் என்னும் இரண்டு) வேனிற்காலங்களும் கழிந்து,
கார் வந்தது – மழைக்காலமும் வந்தது,’
என்றே – என்று எண்ணியே,
அன்பர்மேல் – அன்பினையுடைய தலைவர்மீது,
பிழை கருதிடல் – குற்றம்நினைக்காதே; இது -,
செம் பொன் ஆடை நாயகன் – செம்பொன்மயமான பீதாம்பரத்தையுடைய தலைவனும்,
திருமகள் நாயகன் – ஸ்ரீய: பதியுமாகிய, அரங்க நாயகன் -,
ஏறும் – ஏறிநடத்துகின்ற,
ஓடை மா – முகபடாத்தையுடைய யானை; இது -,
மதம் – (அவ்யானையின்) மத நீர்ப்பெருக்கு; இது -,
பிளிறிய ஒலி – (அவ்யானை) வீரிடுகின்ற ஓசை; (ஆகையால்),
மழை அன்று – (இது) கார்காலமன்று; (எ – று.)

கார்காலத்து மீண்டுவருவதாகக் காலங்குறித்துத் தலைவியைப்பிரிந்து சென்ற தலைமகன் அக்கார்காலம் வந்தவளவிலும்
தான் வாராதொழியவே, அக்காலவரவை நோக்கி வருந்துகின்ற தலைவியைத் தோழி,
“இது, அவன் சொல்லிப்போன கார்காலம் வந்ததன்று; வானத்திற் கறுத்துச்செல்வது மேகமன்று,
திருமால் ஊர்ந்துசெல்லும் மதக்களிறாகும்; வானத்தினின்று நீர்சொரிவது அக்களிற்றின் மதநீராம்;
பேரிடிபோலத் தோன்றும் ஒலி அம் மதக்களிற்றின் பிளிறலாம்” என்று காலத்தை மாறுபடக்கூறி ஆற்றுவித்தனனென்க.
“காரெனக் கலங்கு மேரெழிற் கண்ணிக்கு, இன்றுணைத்தோழியன்றென்று மறுத்தது” என்பது காண்க.
இது, “பருவமன்றென்றுகூறல்” என்றும் வழங்கும். இத்துறை – திருக்கோவையாரில் “காலமறைததுரைத்தல்” என்றும்,
தஞ்சைவாணக்கோவையில் “இகுளைவம்பென்றல்” என்றும்,
தணிகைப்புராணத்துக் களவுப்படலத்தில் “ஆயிடைத்தோழியழிந்தியற்பழித் தல்” என்றும் கூறப்பட்டுள்ளது.

“பொய்ம்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த, நன்மை பயக்கு மெனின்” என்பவாதலால், இது, பொய்ம்மைக்குற்றத்தின்பாற்படாது;
அங்கு ‘குற்றந்தீர்ந்த நன்மைதருதலாவது – பெருந்தீங்கையாயினும் மரணத்தை யாயினும் அடையநின்றதோர்
உயிர்தான் கூறுஞ் சொற்களின் பொய்ம்மையால் அத்துன்பத்தினின்று நீங்கி இன்பமடைதல்’ என்றபடி
இங்குப் பிரிவாற்றாமையால் தலைமகளுக்கு உண்டாகும் அபாயத்தைப் புனைந்துரையால் ஒழித்தவாறு காண்க.

இருபனி யென்பதி லுள்ள இரண்டை வேனிலோடுங் கூட்டுக. முகப டாத்தையுடைய மாவெனவே, யானையாயிற்று.
ஓடை கூறியது, மேகத்திலுள்ள மின்னலைக் கருதி.

இது, முதற்சீர் தேமாச்சீரும், ஈற்றுச்சீர் காய்ச்சீரும், மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தம்.

—————

தழை
மழை போல் மரகதம் போல் எம்பிரான் வளர் கோயில் அன்னீர்
பிழை போம் இவர்க்கு இதை யார் உரைப்பார் இவர் பின் வந்து எய்த
தழை யோய் உறைத்த வருத்தம் பொறாமை கொல் சங்கரன் பால்
உழை யோய் ஒதுங்க முயல் போய் மதி புக்கு ஒளித்ததுவே –87-

(இ – ள்.) மழைபோல் – கார்மேகம்போலும்,
மரகதம்போல் – நீல மணிபோலும்,
எம்பிரான் – நம்பெருமாள்,
வளர் – திருக்கண்வளர்ந்தருளு கின்ற,
கோயில் – திருவரங்கத்தை,
அன்னீர் – ஒத்திருப்பவர்களே! –
பிழை போம் இவர்க்கு – தவறுசெய்துபோன இத்தலைவருக்கு,
இதை – இவ்வரலாற்றை,
யார் உரைப்பார் – யாவர் சொல்லுபவர்? (எவருமில்லை); (அவ்வ வரலாறு என்னையெனின்), – இவர் -,
பின் வந்து எய்த – தொடர்ந்துவந்து பிரயோகித்த,
தழை – தழையானது,
போய் உறைத்த – சென்று பட்ட,
வருத்தம் – வருத்தத்தை,
பொறாமைகொல் – பொறுக்கமாட்டாமையினாலன்றோ,
சங்கரன்பால் – சிவனிடத்தில்,
உழை – மானானது,
போய் ஒதுங்க – சென்று ஒளிக்க, –
முயல் – முயலானது, போய் -,
மதி புக்கு – சந்திரனிடத்திற் சேர்ந்து, ஒளித்தது – மறைந்திட்டது; (எ – று.)

இயற்கைப்புணர்ச்சியும் பாங்கற்கூட்டம் அல்லது இடந்தலைப்பாடும் நிகழ்ந்தபின்பு தோழிக்குத் தன்கருத்தைப் புலப்படுத்தி
அவன்மூலமாகத் தலைமகளைச்சேர்தலாகிய தோழியிற்கூட்டத்திற் கருத்துவைத்த தலைமகன் அத்தோழியைத் தனியே
கண்டு தன்கருத்தை வெளிப்படையாக விரையக் கூறியிரவாமல் குறிப்பாகக் கூறக்கருதித் தலைமகளும் தோழியும்
ஒருங்குநிற்குஞ் செவ்விநோக்கித் தழையுங்கண்ணியுமாகிய கையுறைகளை யேந்திச் சென்று அவர்களைநோக்கி
வேட்டைக்குவந்தவன்போலச் சிலமொழிகளைப் புகல, தலைவியின் மனநிலையை யறிதற்பொருட்டு அத்தலைமகனது
நிலையைத் தோழி தலைமகளோடு நகைத்துக் கூறியது, இது.
தழை – மலர்களை யிடையிட்டுத் தளிர்களாற் செய்வதோ ருடைவிசேடம்;
இங்ஙனந்தொடுத்த தழையை ஆடையாக உடுத்துக்கொள்ளுதல், குறிஞ்சிநிலத்துமகளிரியல்பு.

அங்குவந்த தலைமகன் “இங்கு யானெய்த மான் வந்த துண்டோ?” என்று வினவினனாக,
தோழி “கையில் தழையைவைத்துக்கொண்டு இவர் வேட்டையாடுபவர்போல வினவுகின்றாரே!
இவர் இவ்வாறு வம்புக்காக வினவுவது பிழையென்று இவரிடத்து யார்சொல்வது?
இவர் இத்தழையைக்கொண்டு எய்ததனால்தான் கானகத்திலுள்ள மான் அவ்வருத்தம் பொறாது சங்கரனிடம்போய்ச் சேர்ந்தது;
அவ்வாறே முயலொன்று சந்திரனிடத்துப் போய்ச்சேர்ந்தது” எனப் பரிகசித்துக்கூறுகின்றனளென்க.
இதனை, தலைமகள் தோழியர்க்கு உரைத்ததாகக் கொள்வாருமுளர்.

“பித்தினர் போலப் பல தொடுத்தார் பிறங்கெக்கலைக்கும்,
வித்தினர்போல விடையும் விடுத்தனர் மெய்ம்மையுளம்,
பொத்தினர்போல வுரைக்கொத்தவில்லினரல்லர் பொற்பூங்,
கொத்தினர் யாவர்கொல் சேயருமல்லாக் குறிப்பினரே”,

“மின்னே தழைகொண்டு வேழமெய்தா ரந்த வேழம்வந்து,
பின்னே பிணைபிரியுங்கலையானது பேசி லின்னங்,
கொன்னேபுகழுங் குறுமுயலாகவுங் கூடுங்கொல்லோ,
வென்னே யுலகிலிவனையொப்பாரில்லை யேவினுக்கே” என்ற பாடல்கள் இங்குக் கருதத்தக்கன.

அன்னீர் – அன்னாரென்பதன் விளி. பிழைபோம்இவர்க்கு என்பதற்கு, குற்றமற்ற இவர்க்கு என்றும்,
தவறானவழியிலே வந்துவிட்ட இவர்க்கு என்றும் பொருள் கொள்க. சந்திரனிடத்துள்ள களங்கத்தை முயலென்பது, கவிமரபு.

இது, நிரையசைமுதலதான கட்டளைக்கலித்துறை.

————-

கார்காலம் -தலைவி இரங்கல் –
88-ஒளிக்கும் இரு சுடர்க் கவளம் விழுங்கும் பேழ்வாய் உரும் முழக்கத்து இந்திரவில் ஓடை நெற்றி
துளிக்கும் மழை மதக் கொண் மூக்களிற்றை மின்னல் தோட்டி மாருதப் பாகர் துரக்கும் காலம்
அளிக் குலங்கள் இசைபாட கத்த மஜ்ஞை ஆடு பொழில் திரு அரங்கர் அணையாக் காலம்
விளிக்கும் அலைக் கரும் கடலும் ஒறுக்கும் காலம் வினையேற்கு விழி துயிலை மேவாக் காலம் –88-

(இ – ள்.) ஒளிக்கும் – விளங்குகின்ற,
இரு சுடர் – சூரிய சந்திரர்களாகிய,
கவளம் – கபளங்களை,
விழுங்கும் – விழுங்குகின்ற,
பேழ் வாய் – பிளவுபட்டவாயையும்,
உரும் முழக்கத்து – இடியாகிய முழக்கத்தையும்,
இந்திரவில் ஓடை நெற்றி – இந்திர தனுசாகிய முகபடாத்தையணிந்த நெற்றியையும்,
துளிக்கும் மழை மதம் – பெய்கின்ற மழைநீராகிய மதநீரையுமுடைய,
கொண்மூ களிற்றை – மேகமாகிய யானையை,
மின்னல் தோட்டி – மின்னலாகிய அங்குசத்தால்,
மாருதம் பாகர் – காற்றாகிய பாகர்கள்,
துரக்கும் – செலுத்துகின்ற, காலம் -;
அளி குலமும் – வண்டுகளின் கூட்டமும்,
களிக்கும் மயில் குலமும் – களிக்கின்ற மயில்களின் கூட்டங்களும்,
பாடி ஆடு – முறையே பாடியாடுகின்ற,
பொழில் – சோலையையுடைய,
திருவரங்கர் – ஸ்ரீரங்கநாதர்,
அணையா – வந்து சேராத, காலம் -; (அதனால்),
விளிக்கும் அலை கருங்கடலும் – ஆரவாரஞ் செய்கின்ற அலைகளையுடைய கரியகடலும்,
ஒறுக்கும் – நோய்செய்கின்ற, காலம் -;
வினையேற்கு – தீவினையையுடைய எனக்கு,
விழிகள் – கண்கள்,
துயில்மேவா – தூக்கம்பொருந்தாத, காலம் -; (எ – று.)

பருவங்குறித்துச்சென்ற தலைமகன் கார்காலம் வந்தவளவிலும் மீண்டுவாரானாக, தலைவி
அக்கார்காலத்தைக்கண்டு இரங்கிக் கூறியது, இது. இத்தன்மைய கார்காலத்தில் எனது அரங்கநாயகர் அணைவராகில்,
கடலும் ஒறுக்கவேண்டுவதில்லை; கண்ணும் உறங்காமை வேண்டுவதில்லை யென்றவாறு.

முன்னிரண்டடிகளில் உருவகவணி காண்க. மூன்றாமடி – நர்த்தனஞ் செய்பவர் ஆடப் பாடகர் பாடத் தாம்
அவ்வின்பத்தைக் கண்டுகளிக்கின்றாரேயன்றி, எனது துன்பத்தைக் காண்கின்றில ரென்ற குறிப்பு.
கவளம் – வடசொற்றிரிபு, உணவுத்திரளை. தோட்டி – மாவெட்டி. பாகர் – யானை யோட்டுபவர்.
மேகம் தான் சூரியசந்திரர்களை மறைத்தலால், ‘ஒளிக்குமிரு சுடர்க்கவளம் விழுங்கும் பேழ்வாய்’ என்ற
அடைமொழி கொடுத்துக் கூறப்பட்டது. காற்று மேகங்களைச் செலுத்துதலால், பாகராக உருவகப்படுத்தப்பட்டது.
கடலொலிக்கு வருந்தலுங் கண்ணுறங்காமையுங் கணவனைப்பிரிந்தார்க்கு இயல்பென்க.

இதற்குக் கவியிலக்கணம் 15 – ஆங் கவியிற் கூறியதே.

————-

இள வேனில் காலம் -தலைவி இரங்கல் –
மேவலர் வாழ் தென்னிலங்கை மலங்க ஒரு கால் இரு கால் வில் குளித்து எய்
ஏவலர் வாழ் திரு அரங்கத்து எமை இருத்திப் போனவர் நாட்டு இல்லை போலும்
கோவலர் வாய்க் குழல் ஓசைக்கு ஆ நிரைகள் செவி ஏற்கும் குறும்புன் மாலை
பூ அலரின் மணம் பரப்பி இள வேனில் வர வந்த பொதியத் தென்றல் –89-

(இ – ள்.) இளவேனில்வர – இளவேனிற்காலம் வர, (அப்பொழுது),
கோவலர் வாய் குழல் ஓசைக்கு – இடையர்கள் வாயினாலூதுகின்ற வேய்ங்குழலினது ஒலிக்கு,
ஆ நிரைகள் – பசுக்கூட்டங்கள்,
செவி ஏற்கும் – காது கொடுக்கின்ற (கேட்கின்ற),
குறும் புன் மாலை – சிறிய புல்லிய மாலைப் பொழுதில்,
பூ அலரின் மணம் பரப்பி – மலர்ந்த மலர்களின் வாசனையை வீசிக்கொண்டு, வந்த -,
பொதியம் தென்றல் – மலையமலையினின்றும் வருகின்ற தென்றற்காற்று, –
மேவலர் வாழ் – பகைவர்கள் (அரக்கர்கள்) வாழ்கின்ற,
தென்இலங்கை – தெற்கிலுள்ள இலங்காபட்டணம்,
மலங்க – கலங்கும்படி,
ஒரு கால் – ஒருதரம்,
வில் இரு கால் – கோதண்டத்தின் இரண்டுகோடிகளையும்,
குனித்து – வளைத்து,
எய் – எய்த,
ஏ வலர் – அம்பில் வல்ல நம்பெருமாள்,
வாழ் – வாழ்கின்ற,
திருவரங்கத்து – ஸ்ரீரங்கத்தில்,
எமை – என்னை,
இருத்தி – தனியேவிட்டு,
போனவர் – பிரிந்துசென்றவர் (போன),
நாடு – நாட்டில், இல்லைபோலும் -; (எ – று.)

தலைமகனைப் பிரிந்த தலைமகள் இளவேனிற்காலம் வரக்கண்டு இரங்கிக்கூறியது, இது.

இந்த இளந்தென்றற் காற்று அங்கு இருக்குமாயின், எனது தலைவர் உடனேவந்திருப்பரென்றபடி.
மேவலர் – விரும்பாதவர். ஒருகால் – காலினாலென்றுமாம். கோவலர் – கோபாலரென்பதன் சிதைவு;
பசுக்களைக் காப்பவரென்று பொருள்; இனி, பசுக்களைக்காத்தலில் வல்லவரென்றுமாம்.

இதற்கு யாப்பிலக்கணம் 4 – ஆங் கவியிற் கூறியது கொள்க.

————-

தோழி இரங்கல்
தென்றலைக் குங்குமச் சேற்றைப் பொறாள் சிறியாள் பெரிய
துன்று அலைக்கும் துடிக்கும் என் செய்வாள் துயரால் அழைத்த
வன்தலைக் குஞ்சரம் காத்தாய் இலங்கை மலங்க வளைத்து
அன்று அலைக்கும் சரத்தாய் அரங்கா அண்டர் ஆதி பனே –90

(இ – ள்.) துயரால் – (முதலை கவர்ந்த) வருத்தத்தால்,
அழைத்த – (ஆதிமூலமே யென்று) கூப்பிட்ட,
வல் தலை குஞ்சரம் – வலிய தலையையுடைய கஜேந்திராழ்வானை,
காத்தாய் – பாதுகாத்தவனே!
இலங்கை -, மலங்க – கலங்கும்படி,
வளைத்து – (வில்லை) வளைத்து,
அன்று – அந்நாளில் (ஸ்ரீராமாவதாரத்தில்),
அலைக்கும் – அலையச்செய்த,
சரத்தாய் – அம்புகளையுடையவனே!
அரங்கா – அரங்கனே!
அண்டர்ஆதிபனே – தேவர்தலைவனே! –
சிறியாள் – சிறிய என்மகள்,
தென்றலை – தென்காற்றையும்,
குங்குமம் சேற்றை – குங்குமப்பூவோடு கலந்த சந்தனக்குழம்பையும்,
பொறாள் – பொறுக்கமாட்டாள்;
பெரிய துன்று அலைக்கும் – நீண்டு உயர்ந்த நெருங்கிய அலைகளுக்கும்,
துடிக்கும் – வருந்துவாள்;
என் செய்வாள் – என்ன பரிகாரஞ் செய்யமாட்டுவாள்; (எ – று.)

தலைமகளை ஒருவழித்தணந்த தலைமகன் மீண்டுவந்து சிறைப்புறமாக நிற்றலை யறிந்த தோழி,
தலைமகள் தென்றல் முதலியவற்றிற்கு ஆற்றாது ஒருபடியாலும் தேறுதலின்றி மிகவருந்துதலைத் தலைமகன் கேட்பக் கூறுவது,
இது. தலைமக ளாற்றாமைகண்டு வருந்துந்தோழி தன்னாற்றாமையாலே தலைமகளை யுட்கொண்டு விளித்து
முன்னிலைப்படுத்தியதென்றுங் கொள்ளலாம். இதனைச் செவிலியிரங்கலாகக் கொள்வாரு முளர்.

இலங்கை – ஆகுபெயர். ஆதிபன் – அதிபனென்பதன் விகாரம். அண்ட ராதிப னென்பதற்கு –
நித்தியசூரிகளுக்குத் தலைவ னென்றும்; இடையர்களுக்குத் தலைவனென்றுங் கொள்ளலாம்.
வண் தரா அதிப னெனப் பிரித்து, வளப்பம் பொருந்திய நிலமகளுக்குத் தலைவ னென்றுமாம்.

இது, நேரசை முதலதாகிய கட்டளைக்கலித்துறை.

————

தலைவி கூற்று
அண்டர் போற்றும் திரு அரங்கேசனார் அணி அரங்கத் திரு முற்றம் எய்தினால்
பண்டு போனவனை ஆழி வாங்குவேன் பாலியாது பரா முகம் பண்ணினால்
தண்டும் வாளும் சிலையும் இருக்கவே சங்கும் ஆழியும் தாரும் என் பேன் அவை
தொண்டருக்கு ஒற்றி வைத்தோம் என்று ஓதினால் துளவ மாலையைத் தொட்டுப் பறிப்பனே –91-

(இ – ள்.) அண்டர் போற்றும் – தேவர்களெல்லாம் வணங்கித் துதிக்கின்ற,
திருவரங்கேசனார் – ஸ்ரீரங்கநாதரது,
அணி அரங்கம் திரு முற்றம் – அழகிய அரங்கமாகிய திருமுன்றிலை,
எய்தினால் – (யான்) அடைந்தால், –
பண்டு போன – முன்னே கவர்ந்துகொண்டுபோன,
வளை ஆழி – சங்குவளையையும், மோதிரத்தையும்,
வாங்குவேன் – (மீளவும்) பெற்றுக்கொள்வேன்; (அவர்),
பாலியாது – (அவற்றைக்) கொடுத்தருளாமல்,
பராமுகம் பண்ணினால் – அலட்சியஞ் செய்தால், (அவ்வளையாழிகளுக்கு ஈடாக),
தண்டும் வாளும் சிலையும் இருக்கவே – (உமதுபஞ்சாயுதங்களுக்குள்) கதையும் வாளும் வில்லு மிருக்கவே,
சங்கும் ஆழியும் – சங்கையுஞ் சக்கரத்தையும்,
தாரும் என்பேன் – கொடுமென்று சொல்வேன்;
அவை – அவற்றை,
தொண்டருக்கு – அடியார்களுக்கு,
ஒற்றி வைத்தோம் – ஈடாக வைத்துவிட்டோம் (திருவிலச்சினையிட்டு வைத்துவிட்டோம்),
என்று ஓதினால் – என்று சொன்னால்,
துளவ மாலையை – திருத்துழாய்மாலையை,
தொட்டு பறிப்பென் – திருமேனி தீண்டிப் பிடுங்கிக்கொள்வேன்; (எ – று.)

தலைவனைப் பிரிந்து தலைவி அப்பிரிவாற்றாமையால் மெலிந்தனளாக, அவ்வுடன்மெலிவைக்கண்டு தோழியர்
முதலியோர் காரணம் இன்னதென உணராது வெவ்வேறாகச் சங்கித்து அவ்வவற்றிற்கு ஏற்ப வெவ்வேறான
செய்கைகளைச் செய்யத்தொடங்க, தலைவி அத்தொழில்களை விலக்கி
“மற்றிருந் தீர்கட் கறியலாகா மாதவ னென்பதோ ரன்புதன்னை,
யுற்றிருந்தேனுக் குரைப்பதெல்லா மூமையரோடு செவிடர் வார்த்தை,
பெற்றிருந்தாளையொ ழியவேபோய்ப்பேர்த்தொருதாயில்வளர்ந்த நம்பி,
மற்பொருதாமற்களமடைந்த மதுரைப்புறத்தென்னை யுய்த்திடுமின்” என்றாற்போலச் சொல்லி அறத்தொடு நின்று,
பிறகு தான் அங்குச்சென்றாற் செய்யுந்தொழிலை இதனால் தெரிவிக்கின்றன ளென்க.

தலைவனைத் தணந்த தலைவிக்கு அப்பிரிவாற்றாமையால் உடம்பு மெலிதலால் வளையும் மோதிரமுங் கழன்று
விழுந்து விடுதலாலும், மீண்டுந் தலைவனைப்புணர்ந்தால் அவை கழலவொண்ணாதபடி உடம்பு தணிந்து பூரித்து விடுதலாலும்,
“பண்டு போன வளையாழி வாங்குவேன்” என்றாள். பராமுகம் பண்ணுதல் – முகந்திரும்பிப்பார்த்தலுஞ் செய்யாது அசட்டை பண்ணுதல்.

இது, கட்டளைக்கலிப்பா; இலக்கணம் முன்னர்க் கூறப்பட்டது.

————-

தொட்டு உண்ட தயிர் வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி உரலோடு சூழ்ந்து கட்டக்
கட்டுண்டு கழல விரகு அறியாமல், இருந்து அழுத கள்வன் யாரோ
கட்டுண்டான் அரங்கன் எனக் கட்டுரைப் பாரானாலும் கங்கை சூடி
மட்டு உண்ட கொன்றை யான் மலர் மேலோன் அறிவரிய வடிவன் அன்றே –92-

(இ – ள்.) தொட்டு உண்ட – எடுத்துப்புசித்த,
தயிர் வெண்ணெய்க்கு – தயிர்க்கும் வெண்ணெய்க்குமாக,
அன்று – அந்நாளில் (கிருஷ்ணாவதாரத்தில்),
ஆய்ச்சி – இடைச்சி (யசோதை),
உரலோடு சூழ்ந்து கட்ட – உரலோடு பிடித்துச் சுற்றிக் (கடைகயிற்றாற்) கட்டிவிட,
கட்டுண்டு – கட்டப்பட்டு,
கழல – விலகிப்போக,
விரகு – உபாயத்தை,
அறியாமல் – தெரியாமல்,
இருந்து அழுத – (அங்கேயே) அழுதுகொண்டிருந்த,
கள்வன் – கள்ளத்தனமுடையவன், யாரே – யார்? (நம்பெருமாளன்றோ); அரங்கன் -,
கட்டுண்டான் என – கட்டுப்பட்டானென்று,
கட்டுரைப்பார் ஆனாலும் – உறுதிப்பட (இழித்து)ச் சொல்லுவாரானாலும், (அவன்),
கங்கை சூடி – கங்காநதியைச் சடையில் தரித்து,
மட்டுஉண்ட கொன்றையான் – வாசனையைக் கொண்ட (தேன் நிறைந்த) கொன்றைப் பூமாலையை யுடைய உருத்திரனும்,
மலர் மேலான் – தாமரைப் பூவில் தங்குகின்ற பிரமனும்,
அறிவு அரிய – அறிதற்கரிய, வடிவன் அன்றே – வடிவத்தை யுடையவனன்றோ? (எ – று.)

இப்பாட்டில், தங்களில் தோழமையாயிருப்பா ரிருவர்மகளிரது பேச்சாலே, ஒருத்தி பரத்வத்தை அநுசந்திக்க,
ஒருத்தி சௌலப்பியத்தை அநுசந்தித்து இவனது தாழ்வுகளைச் சொல்ல, ‘அப்படி தாழ்வுகள்செய்தானாயினும்
எல்லார்க்கும் மேலானவனன்றே இப்படிசெய்கிறான்’ என்று இருவர் பேச்சாலுமாக,
எம்பெருமானுடைய பரத்வத்தையும் சௌலப்பியத்தையும் பேசுகிறார்;
“வண்ணக் கருங்குழ லாய்ச்சியான் மொத்துண்டு,
கண்ணிக் குறுங்கயிற்றாற் கட்டுண்டான் காணேடீ,
கண்ணிக் குறுங்கயிற்றாற் கட்டுண்டானாகிலும்,
மெண்ணற் கரிய னிமையோர்க்குஞ் சாழலே” என்றார் திருமங்கையாழ்வாரும்.
இவ்வாறு இரண்டுபிராட்டிமார்தசை ஏககாலத்திற் கூடுவது எம்பெருமான் திருவருளினாலாகு மென்று பெரியோர் கூறுவர்.

இதற்கு யாப்பிலக்கணம் 4 – ஆங் கவியிற் கூறியதே.

——————

வடியாத பவக் கடலும் வடிந்து மூல மாயை கடந்து அப்பால் போய் வைகுந்தம் சேர்ந்து
அடியார்கள் குழாம் கூடி உனதடிக்கீழ் அடிமை செயும் அக்காலம் எக்காலம் தான்
கொடியாடு மணி மாட அயோத்தி மூதூர் குடி துறந்து திருவரங்கம் கோயில் கொண்ட
நெடியோனே அடியேன் நான் முயற்சி இன்றி நின்னருளே பார்த்திருப்பேன் நீசனேனே –93-

(இ – ள்.) கொடி ஆடும் – துவசங்கள் அசைகின்ற,
மணி மாடம் – இரத்தினங்களிழைத்த மாளிகைகளையுடைய,
அயோத்தி முதுஊர் – திருவயோத்தியென்கிற பழையநகரத்தில்,
குடி – தங்குதலை,
துறந்து – விட்டு,
திருவரங்கம் – ஸ்ரீரங்கத்தை,
கோயில்கொண்ட – இருப்பிடமாகக்கொண்டு எழுந்தருளியிருக்கின்ற,
நெடியோனே – பெரியோனே! –
வடியாத பவம் கடலும் – வற்றிப்போகாத பிறவிப்பெருங்கடலும்,
வடிந்து – வற்றப்பெற்று,
மூல மாயை கடந்து – மூலப்பிரகிருதியைத் தாண்டி,
அப்பால் போய் – அதற்கப்புறஞ் சென்று,
வைகுந்தம் சேர்ந்து – ஸ்ரீவைகுண்ட மடைந்து,
அடியார்கள் குழாம் கூடி – தொண்டர்களது கூட்டத்தோடு சேர்ந்து,
உனது அடிக்கீழ் – உன்னுடைய திருவடியின்கீழ்,
அடிமை செயும் – கைங்கரியஞ் செய்திருக்கின்ற,
அக்காலம் -, எக்காலந்தான் – எப்பொழுதோ?
அடியேன் – (உனது) அடியவனும்,
நீசனேன் – கடைப்பட்டவனுமாகிய, நான் -,
முயற்சி இன்றி – பிரயத்தனஞ் சிறிது மில்லாமல்,
நின் அருளே – உனது திருவருளையே,
பார்த்திருப்பன் – எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்; (எ – று.)

எம்பெருமானது திருவருணோக்கம் பதிதலால் இருவினைகள் நீங்கி அவைகாரணமாகத்தோன்றும் பிறவியற,
பின்பு இந்தப்பிரகிருதிமண்டலத்தைக் கடந்துபோய் ஸ்ரீவைகுண்டமாநகரில் அடியார்கள் குழாங்களுடன் சேர்ந்து
எம்பெருமானுக்குத்திருத்தொண்டுபுரியவேண்டுங்காலம்எப்போது கிட்டுமோ? என்று அக்காலத்தைப்பார்த்திருக் கின்றனரென்க.
“அடியார் குழாங்களையுடன் கூடுவதென்றுகொலோ,” “என்றுகொல் சேர்வதந்தோ
அரன் நான்முக னேத்துஞ் செய்யநின்திருப்பாதத்தை” என்றார் நம்மாழ்வாரும்.
சூரியகுலத்துத்தோன்றிய இக்ஷ்வாகுசக்கரவர்த்தி பிரமதேவனைக் குறித்துப் பலநாள் பெருந்தவஞ்செய்ய,
அப்பிரமன் அத்தவத்திற்கு மகிழ்ந்து தான்பலகாலமாய் ஆராதித்துவந்த எம்பெருமானை விமானத்துடன் பிரசாதித்தருள,
திருவயோத்தி சேர்ந்து அவ்விக்ஷ்வாகுவினாலும் பின்னுள்ள அக்குலத்தரசர்களாலுந் திருவாராதநஞ் செய்யப்பட்டுவந்த
நம்பெருமாள், ஸ்ரீராமபிரானால் இராவணவதம்முடிந்து திருவபிடேகம்செய்துகொண்டகாலத்தில்
விபீஷணாழ்வானுக்குக் கொடுத்தருளப்பட்டுத் திருவரங்கஞ் சேர்ந்ததனால்,
“அயோத்திமூதூர் குடிதுறந்து திருவரங்கங் கோயில்கொண்ட நெடியோன்” என்றார்.

இதற்குச் செய்யுளிலக்கணம் 15 – ஆங் கவியிற் கூறியதே.

————-

நீசச் சமர்க்கும் சூனிய வாதர்க்கும் நீதி அற்ற
பூசற் பவுத்தர்க்கும் சைவர்க்கும் யார்க்கும் புகலுகின்றேன்
நாசப் படா உயிர் எல்லாம் முதல் தந்த நாதன் கண்டீர்
ஆசு அற்ற சீர் அரங்கத்து ஆதி மூலத்து அரும் பொருளே –94-

(இ – ள்.) நீசம் சமணர்க்கும் சூனியவாதர்க்கும் – கீழ்மையையுடைய சமணர்களுக்கும் நாஸ்திகவாதிகளுக்கும்,
நீதி அற்ற பூசல் பவுத்தர்க்கும் சைவர்க்கும் – நியாயமல்லாத வாதஞ்செய்கிற பௌத்தர்களுக்கும் சைவர்களுக்கும்,
யார்க்கும் – மற்றைப் புறச்சமயத்தவர் யாவர்க்கும்,
புகலுகின்றேன் – சொல்லுகின்றேன்; –
நாசம் படா உயிர் எல்லாம் – அழிவில்லாத சீவன்களையெல்லாம்,
முதல் தந்த – ஆதியிற் படைத்த,
நாதன் – தலைவன்,
ஆசு அற்ற – குற்றமில்லாத,
சீர் அரங்கத்து – ஸ்ரீரங்கத்தி லெழுந்தருளி யிருக்கின்ற,
ஆதி மூலத்து – ஆதி மூலமாகிய,
அரும் பொருளே – அறிதற்கரிய பரவஸ்துவே;
கண்டீர் – அறியுங்கள்; (எ – று.)

சமணர் – ஜைநர்; இவர்கள் – காரியகாரணரூபத்தால் இந்த உலகம் நித்யாநித்யமாயும் பிந்நாபிந்நமாயும்
ஸத்யாஸத்யமாயுமிருக்கு மென்றும், ஆத்மாக்கள் இருவினைப்பயனால் வரும் தேகத்தின் பரிமாணங்களையுடையனவா மென்றும்,
மலதாரணம் அஹிம்ஸைமுதலிய செயல்களாலும் ஆத்ம ஜ்ஞாநத்தினாலும், இந்த ப்ரக்ருதியை விட்டு நீங்கி
மேலுலகத்தை யடைகையே மோஷமென்றும் இவ்வாறாகத் தமக்குத் தோற்றியபடியே வேதவிருத்தங்களான
விஷயங்களைத் தமது வாயில் வந்தபடியே பரக்கச்சொல்வார்கள்.
சமணர் – க்ஷபணர்; இவர்கள் – பௌத்தர்களை ஒருபுடை யொத்தலும் ஒவ்வாமையு முடையவர்.
சூனியவாதர் – சூனியமே தத்வமென்றிருக்கிற மாத்யமிகர்; இவர்கள் – ப்ரமாணமும் ப்ரமேயமும்
(ப்ரமாணத்தினால் அறியப்படும் பொருளும்) ப்ரமாதாவும் (ப்ரமாணத்தையறிபவனும்) ஆகிய இவையுண்டென்றறிவது
மதிமயக்கத்தின் செயலே யென்றும், ஸத்துமன்றாய் அஸத்துமன்றாய் ஸதஸத்துமன்றாய் ஸதஸத்விலக்ஷணமுமன்றாய்
இந்நான்கு எல்லையையும் கடந்திருப்பதொன்றே தத்வமென்றும், சூந்யத்திலே சூந்யமென்று அறிகையே மோக்ஷமென்றும் பிதற்றுவார்கள்.

மறுபிறப்பும் இருவினைப்பயனுங் கடவுளும் இல்லையென்று வாதஞ்செய்வர்.
இவர்களும் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர்களெனினும் இவர்களுடைய மதத்தின் கொடுமையைப்பற்றி
இவர்களைத் தனியே பிரித்துக்கூறின ரென்க.
இவ்வாறே “தர்க்கச்சமணரும் சாக்கியப்பேய்களும் தாழ்சடையோன், சொற்கற்ற சோம்பரும் சூனியவாதரும்” என்று
திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்திருத்தலுங் காண்க.
பௌத்தர் – வைபாஷிகள் ஸௌத்ராந்திகள் யோகாசாரன் மாத்யமிகன் என நால்வகைப்படுவர்:
இந்நால்வருள் மாத்யமிகனைச் சூனியவாதியென்று முற்கூறியதனால், “பூசற்பவுத்தர்” என்றது. மற்றை மூவரையுங் காட்டும்.
இவர்களுள், வைபாஷிகன் – பரமாணுத்திரளின் வடிவாய்க்கட்புலனாவதே உலகமென்றும், அவ்வுலகத்தைப்பற்றித்
தோன்றும் உணர்வு க்ஷணிகமென்றும், உணர்வுக்குப் புலனாகும் பொருள்களெல்லாம்
ஒரு நொடிப்பொழுதிற்குள்ளே தோற்றக்கேடுகளைப் பெறுமென்றும், எல்லாம் க்ஷணிகமென்று உண்டாகின்ற
விஜ்ஞாநத்தின் தொடர்ச்சியே ஆத்மாவென்றும், இதில் நிலையானதென்ற எண்ணமே ஸம்ஸாரம் நிலையிலதென்ற
எண்ணமே மோஷ மென்றுங் கூறுபவன்;
ஸௌத்ராந்திகன் – பொருள்கள் யாவும் உணர்விலே தங்களுடைய வடிவைப் படைத்துத் தாங்கள் உடனே நசித்துவிட
அவ்வுணர்வினாலுண்டான ஆகாரத்தினாலேயே அவ்வப்பொருள்கள் அநுமாநிக்கப்படுகின்றன வென்றும்,
ஆகவே பொருள்களின் பன்மையே பலவகை ஞானங்கள் தோன்றுவதற்குக் காரணமென்றும்,
அநுமாநத்தினால் உலகம் சித்திக்குமென்றும், அவ்வுலகத்தைக் குறித்த ஞானமும் க்ஷணிகம்,
அந்த க்ஷணிகவிஜ்ஞாநமே ஆத்மா, இதில் ஸ்திரமென்ற புத்தியே ஸம்ஸாரம், அஸ்திரமென்ற
புத்தியே மோக்ஷமென்றுங் கூறுபவன், யோகாசாரன் – ஞானமென்ற ஒன்றேயுள்ளது என்றும்,
அந்த ஞானமே பலவடிவங்களைப் பெற்றுப் பலபண்டங்கள் போலத் தோன்றுகின்றதென்றும்,
அந்த ஞானம் க்ஷணிகமென்று அறிகையே மோக்ஷமென்றுஞ் சொல்லுபவன்.
சைவர் – தன்னை ஈஸ்வரனென்று மயங்கி உலகமெல்லாம் வணங்கவேண்டுமென்று விரும்பி அதற்குத்தகப்
பகவானுடைய கட்டளையைப்பெற்று மோகசாஸ்திரங்களைப் பிரசாரஞ்செய்த ருத்ரனுடைய ஆகமத்தையே முக்கியமாகக் கொண்ட பாசுபதர்.

“ஒன்றுந்தேவு முலகு முயிரும் மற்றும் யாதுமில்லா,
வன்று நான்முக ன்றன்னொடு தேவருலகோ டுயிர் படைத்தான்”
“இலிங்கத்திட்ட புராணத்தீருஞ் சமணருஞ் சாக்கியரும்,
மலிந்துவாதுசெய்வீர்களும் மற்றுநுந் தெய்வமுமாகி நின்றான்,
மலிந்துசெந்நெற்கவரிவீசுந் திருக்குருகூரதனுள், பொலிந்துநின்றபிரான் கண்டீ ரொன்றும் பொய்யில்லை போற்றுமினே” என்றார் நம்மாழ்வாரும்.

நீசத்துவம் – வேதத்துக்குப் புறம்பாயிருத்தலும், காணப்படும் பொருள்களெல்லாங் கணிகமென்பதும் முதலாயின.
பௌத்தர் – புத்தனைத் தெய்வமாகக் கொண்டவர்; சைவர் – சிவனைத் தெய்வமாகக்கொண்டவர்; தத்திதாந்த வடமொழிகள்.
“மன்னுயிர்” என்றாற்போல, “நாசப்படாவுயிர்” என்றார். ஆதிமூலம் – முதற்பொருள்களுக்கெல்லாம் முதற்பொருள்.

இது, நேரசைமுதலாக வந்த கட்டளைக்கலித்துறை.

———-

அரும்புண்ட ரீகத்து அடி இணைக்கே நெஞ்சு
இரும்பு உண்ட நீர் ஆவது என்றோ விரும்பி
அறம் திருந்தும் கோயில் அரங்கா உனை நான்
மறந்திருந்தும் மேல் பிறவாமல் –95-

(இ – ள்.) விரும்பி அறம் திருந்தும் கோயில் அரங்கா – எல்லாத்தருமங்களுந் திருத்தமாகச்செய்யப்படுகின்ற
திருவரங்கம் பெரியகோயிலில் திருவுள்ளமுகந்து எழுந்தருளியிருப்பவனே! –
உனை – உன்னை,
நான் -, மறந்திருந்தும் – மறந்திருந்தாலும்,
மேல் பிறவாமல் – இனிப் பிறவியெடாதபடி,
அரும் புண்டரீகத்து அடி இணைக்கு – பெறுதற்கரிய தாமரைமலர் போன்ற (உன்னுடைய) உபய திருவடிகளுக்கு,
என் நெஞ்சம் – எனதுமனம்,
இரும்பு உண்ட நீராவது – (பழுக்கக்காய்ச்சிய) இரும்பு உட்கொண்ட நீர் போல மீண்டுவாராமல் லயமடைவது,
என்றோ – எந்நாளோ? (எ – று.)

இனிப் பிறவியுண்டாகாதவாறு, பழுக்கக்காய்ந்த இரும்பில் நீர் சென்று லயிப்பதுபோல என்நெஞ்சம் உனது
திருவடித் தாமரைகளில் லயிப்பது எந்நாளோ? என்று எம்பெருமானது திருவடிகளில்
தமது மனம் பதியுங்காலத்தை வேண்டுகின்றனரென்க. பழுக்கக்காய்ச்சிய இரும்பில் நீரைவார்த்தால் அந்நீர்
அவ்விரும்பிற்சென்று வயப்பட்டு மீண்டும் வெளிப்படாது; இது மீளாமைக்கு உவமை கூறப்படுதலை,
“இரும்புண்டநீர் மீன்கினு மென்னுழையிற், கரும்புண்டசொன்மீள்கிலன்காணுதியால்” என்ற கம்பராமாயணச் செய்யுளிலுங் காண்க.
“நெடுவேங்கடத்தா, னீர விரும்புண்டரீகப்பொற் பாதங்க ளென்னுயிரைத்,
தீர விரும்புண்ட நீராக்குமா றுள்ளஞ் சேர்ந்தனவே” என்பர் திருவேங்கடத்தந்தாதியிலும்.
“தீர விரும்புண்ட நீரது போல வென்னாருயிரை யாரப்பருக வெனக் காராவமு தானாயே,”
“இரும்பனன்றுண்டநீர்போ லெம்பெருமானுக்கு என்ற, னரும்பெறலன்பு புக்கிட்டடிமைபூண்டுய்ந்துபோனேன்” என்பன பெரியோர் பாசுரங்கள்.

நாளென்னும்வாய்பாட்டால் முடிந்த இருவிகற்பநேரிசைவெண்பா.

—————

பிறவி எனும் கடல் அழுந்தி பிணி பசியோடு இந்திரியச்
சுறவம் நுங்க கொடு வினையின் சுழல் அகப்பட்டு உழல்வேனோ
அறம் உடையாய் என் அப்பா அரங்கா என் ஆர் உயிருக்கு
உறவு உடையாய் அடியேனை உயக் கொல்வதுய் ஒரு நாளோ –96-

(இ – ள்.) அறம் உடையாய் – எல்லாத் தருமங்களையு முடையவனே!
என் அப்பா – எனது சுவாமியே! அரங்கா -!
என் ஆருயிருக்கு – எனது அரிய ஆத்துமாவுக்கு,
உறவு உடையாய் – உறவினனானவனே! –
பிறவி எனும் கடல் – பிறப்பென்கிற பெரிய கடலில்,
அழுந்தி – மூழ்கி,
பிணி பசியோடு இந்திரியம் – நோயும் பசியும் பஞ்சேந்திரியங்களுமாகிய,
சுறவம் – சுறாமீன்கள்,
நுங்க – விழுங்கும்படி,
கொடு வினையின் சுழல் – கொடிய இருவினைகளாகிய நீர்ச்சுழியில்,
அகப்பட்டு – உட்பட்டுச் சிக்கிக்கொண்டு,
உழல்வேனோ – சுழலக்கடவேனோ? அடியேனை -,
உய கொள்வது – உஜ்ஜீவிக்கும்படி ஆட்கொள்வதாகிய,
ஒரு நாளே – ஒருதினமும் (உளதாகுமோ) ? (எ – று.)

கரைகாணவொண்ணாதிருத்தலால் பிறவியைக் கடலாகவும், கடலில் வீழ்ந்தவரைச் சுறாமீன்கள் கொத்தித் தின்பது
போலப் பிணி பசி முதலியவை பிறவியிலுழல்கின்ற ஆத்மாவை வருத்துதலால் அப்பிணி பசி
முதலிய வற்றைச் சுறாமீன்களாகவும், சுழலிலகப்பட்டவர் அச்சுழலினின்று தப்புதலரிதாவதுபோல
இருவினையி லகப்பட்டவன் அதனினின்று மீளுத லரிதாதலால் இருவினைகளைச் சுழலாகவும் உருவகஞ்செய்தனர்; உருவகவணி.
இதனால், திருமாலாகிய தோணியொன்றே, பிறவிக்கடலினின்று மீண்டு கரையேறுதற்கு ஏற்ற உபாயமா மென்றவாறு.

“ஸம்ஸாரார்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம் – விஷ்ணு போதம்விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்,”
“துன்பக்கடல் புக்கு வைகுந்தனென்பதோர் தோணி பெறா துழல்கின்றான்” என்பன காண்க.
“சென்மந் தரங்கங் கருமஞ் சுழிபிணி சேலினங்கு, சென் மந்த ரங்கதிர் பொன்கோள்கண் மாரி திண்கூற்றசனி,
சென்மந்த ரங்கவற்றுள் விழுவோர் கரைசேர்க்கும் வங்கஞ், சென்மந் தரங் கவின் றோளா ரரங்கர் திருப்பதமே” என்பர்
திருவரங்கத்தந்தாதியிலும்.
“ஒன்று சொல்லி யொருத்தனில் நிற்கிலாத லோரைவர்வன்கயவரை,
யென்று யான் வெல்கிற்ப னுன் றிருவருளில்லையேல்” என்றார் நம்மாழ்வார்.

இது, எல்லாச்சீரும் காய்ச்சீர்களாகிய கொச்சகக்கலிப்பா.

—————–

ஒரு பொருள் அல்லேன் இரு வினை உடையேன் உனது தொண்டு எனும் துறை குளித்து உன்
பெருகு தணணளியின் பாசம் தொட்டு இழிந்து பெரியது ஓர் முத்தி யான் பெற்றேன்
திருவும் மா மணியும் சங்கமும் ஏந்தி செய்ய தாமரை பல பூத்து
கரு நிறம் உடைத்தாய் நதி பொரு தரங்கம் கலந்தது ஓர் கருணை வாரிதியே –97-

(இ – ள்.) திருவும் – ஸ்ரீமகாலக்ஷ்மியையும் (நிதிகளையும்),
மா மணியும் – அழகிய கௌஸ்துபரத்தினத்தையும் (பெரிய ரத்தினங்களையும்),
சங்கமும் – பாஞ்சசன்னியத்தையும் (சங்குகளையும்),
ஏந்தி – தரித்து,
செய்ய தாமரை பல பூத்து – சிவந்த பல தாமரைமலர்போன்ற திருவவயவங்கள் விளங்கப்பெற்று (பலசெந்தாமரைமலர் பூக்கப்பெற்று),
கருநிறம் உடைத்தாய் – கறுத்தநிறத்தையுடையதாய்,
தரங்கம் பொரு நதி கலந்தது – அலைமோதுகின்ற காவேரியாற்றினிடஞ் சேர்ந்ததாகிய (அலைமோதுகின்ற நதிகள் சேரப்பெற்றதாகிய),
ஓர் – ஒப்பற்ற,
கருணை வாரிதியே – அருட்கடலே! –
ஒரு பொருள் அல்லேன் – ஒருபொருளாக மதிக்கப்படாதவனும் (செல்வஞ் சிறிதுமில்லாதவனும்),
இருவினை உடையேன் – (நல்வினை தீவினையென்னும்) இரண்டுவினைகளையு முடையவனும் (மிக்க முயற்சியையுடையேனும்) ஆகிய, யான் -,
உனது -, தொண்டு எனும் – கைங்கரியமாகிய,
துறை – வழியில் (இறங்குமிடத்தில்),
குளித்து – பிரவேசித்து (மூழ்கி),
உன் – உனது,
பெருகு தண் அளியின் – மிக்க குளிர்ந்த திருவருளாகிய,
பாசம் – கயிற்றை,
தொட்டு – பிடித்துக்கொண்டு,
இழிந்து – இறங்கி,
பெரியது ஓர் முத்தி – பெரியதொரு பரமபதத்தை (பெரியதோர் முத்து – சிறந்ததொரு முத்தை), பெற்றேன் -; (எ – று.)

ஒன்றுக்கும் பற்றாதவனாய் இருவினைகளையுமுடைய யான் உனக்கு அடிமை பூண்டு உனது தண்ணளியையே பற்றாசாகக்
கொண்டு முத்தியைப் பெற்றே னென்பதாம். இதில், நிதிகளையும் இரத்தினங்களையும் சங்கத்தையுமுடையதாய்ப்
பலதாமரைமலர்கள் மலரப்பெற்றுநதிகள் வந்துசேர்தற்கு இடமாகிய கடலிலே, வறியவனாகிய யான்பெருமுயற்சியோடு
பெருங்கயிற்றைப் பற்றிக்கொண்டு முத்துக்குளிக்குந் துறையில் இறங்கிக் குளித்து முத்துக்களைப் பெற்றே னென்ற
ஒருபொருளும் தொனிக்கின்றது. சருங்கச்சொல்லலணி; இதற்கு உருவகவணி அங்கமாய் நின்றது.

இருவினையுடையேனென்பதற்கு – பிறத்தலு மிறத்தலுமாகிய இரண்டு தொழில்களையு முடையே னென்றுமாம்.
முத்தி – முத்தென ஈறுதிரிந்தது; பக்தி – பத்து, ஸந்தி – சந்து என்றாற்போல, வாரிதி – நீர்தங்குமிடம்.
நீர் நிரம்பிய கடல்போலக் கிருபை நிறைந்தவ ரென்றற்குக் கருணைவாரிதியே யென்றார்.
பெற்றேன் என இறந்தகாலத்தாற் கூறியது, துணிவுபற்றிய காலவழுவமைதி.

இதற்குச் செய்யுளிலக்கணம், 38 – ஆங் கவியிற் கூறப்பட்டது.

——————

வாரி அரங்கம் வரு திருப் பாவைக்கும் மண் மகட்கும்
சீரியர் அம் கண் வளர் திருக் கோலமும் தென் திருக் காவேரி அரங்க
விமானமும் கோயிலும் மேவித் தொழார்
பூரியர் அங்கு அவர் கண் இரண்டாவன புண் இரண்டே –98-

(இ – ள்.) வாரிஅரங்கம்வரு – திருப்பாற்கடலினிடத்தினின்றுந் தோன்றிய,
திருப்பாவைக்கும் – திருமகளுக்கும்,
(வாரி அரங்கம் வரு) – கடலாற் சூழப்பட்ட –
மண்மகட்கும் – நிலமகளுக்கும்,
சீரியர் – சிறந்த கணவராகிய நம்பெருமாள்,
அம் கண் வளர் – அழகாகத் திருக்கண்வளர்ந்தருளுகின்ற,
திரு கோலமும் – திருக்கோலத்தையும்,
தென் திரு காவேரி – அழகிய திருக்காவேரியின் மத்தியிலுள்ள,
அரங்க விமானமும் – ஸ்ரீரங்கவிமானத்தையும்,
கோயிலும் – பெரியகோயிலையும்,
மேவி தொழார் – விரும்பி வணங்காதவர்கள், –
பூரியர் – கீழ்மக்களாவர்;
அங்கு அவர் கண் இரண்டு ஆவன – அத்தன்மையையுடைய அவர்களது இரண்டு கண்களும்,
புண் இரண்டே – இரண்டு புண்களேயாகும் (கண்களல்லவாம்); (எ – று.)

உரைமெழுக்கிற் பொன்போல ஆத்துமாக்கள் மூலப்ரக்ருதியிலே ஒட்டிக்கொண்டு இறகொடிந்த பட்சிபோலே
கரணகளேபரங்களின்றி நலிவுபடுவதைக் கண்டு எம்பெருமான் ஒருகருணை கொண்டு இவர்கட்குக்
கண் கை கால் முதலிய உறுப்புக்களைத் தந்து தன்னையறிந்து கரைமரஞ்சேரும் படி சாஸ்திரங்களையும் அளித்தனனாதலால்,
அவ்வாறுதந்த பயனைப் பெறாதவர்களது கண்கள் கண்களல்ல, புண்ணாகு மென்பதாம்;
“பூணாரமார்பனைப் புள்ளூரும் பொன்மலையைக்,
காணாதார்கண்ணென்றுங்கண்ணல்லகண்டாமே” என்றார் திருமங்கையாழ்வாரும். கண்ணைக்கூறியது,
மற்றைய உறுப்புக்கட்கும் உபலக்ஷணம்.
இச்செய்யுளில், திரிபு என்னுஞ் சொல்லணி காண்க. கண்படைத்தபயன் பெறாததனால்,
“கண்ணிரண்டாவன புண்ணிரண்டே” என்றார்.
இதனை “கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு, புண்ணுடையர் கல்லா தவர்” என்பதனோடு ஒப்பிடுக.

வாரி – நீர்; கடலுக்கு இலக்கணை. ‘வாரியரங்கம்வரு’ என்பது, இரட்டுறமொழிதலாய்ப் பொருளுரைத்து
மண்மகளோடுஞ் சேர்க்கப்பட்டது.

இது, நேரசை யாதியான கட்டளைக்கலித்துறை.

————-

புண் ஆர் உடல் பிறவி போதும் எனக்கும் உனக்கும்
எண்ணாது இருந்தது இனிப் போதும் கண்ணா
குழற்காளாய் தென் அரங்கக் கோயிலாய் நின் பொற்
கழற்கு ஆளாய் நின்றேனைக் கா –99-

(இ – ள்.) கண்ணா – கிருஷ்ணனே!
குழல் காளாய் – வேய்ங்குழலையுடைய காளைபோன்றவனே!
தென் அரங்கம் கோயிலாய் – தென்திருவரங்கங்கோயிலையுடையவனே! – இனி -,
எனக்கும் -, புண் ஆர் உடல் பிறவி – மாமிசம் நிறைந்த உடம்பையெடுத்துப் பிறக்கும் ஜன்மம்,
போதும் -; உனக்கும் -, எண்ணாது இருந்தது – (என்னை) நினையாமலேயிருந்தது, போதும் -;
(இனியாயினும்), நின் பொன் கழற்கு – உனது அழகிய திருவடிகளுக்கு,
ஆள் ஆய் நின்றேனை – அடிமையாய்நின்ற என்னை,
கா – ரக்ஷித்தருள்; (எ – று.)

எல்லையில்லாத காலமாக உன்னைநினையாமலே பிறந்துபிறந்து இளைத்துப்போனேன்; இது என்மீது பெருங்குற்றமே;
நான் நினைக்குமாறு நிர்ஹேதுகமான திருவருளினாற் செய்யவேண்டியவன் நீயே யாதலால், இத்தனை காலமாக
அடியேனைப்பற்றித் திருவுள்ளத்துக்கொள்ளாமல் வீணேபொழுதுபோக்கியது உனதுகுற்றமே;
இவ்விஷயத்தைக்குறித்து இப்போது தர்க்கித்துக்கொண்டிருத்தலிற் பயனில்லை; உனது திருவருளினால் உன் திருவடித்
தொண்டனாய் நிற்கும் அடியேனை இனியாவது கைந்நழுவவிடாமற் பாதுகாக்கவேண்டு மென்பதாம்;
“அக்கரை யென்னு மனத்தக்கடலுளழுந்தி யுன்பேரருளால்,
இக்கரையேறியிளைத்திருந்தேனை யஞ்சே லென்று கைகவியாய்” என்றார் பெரியாரும்.
காளாய் – காளையென்பதன் விளி. காளை – இளவெருது; உவமாகுபெயர்; உவமை – நடைக்கும், காம்பீரியத்துக்கும், வலிமைக்கும்.

இது, நாளென்னும் வாய்பாட்டான் முடிந்த இருவிகற்பநேரிசை வெண்பா.

——————–

காவிரி வாய்ப் பாம்பு அணை மேல் கரு முகில் போல் கண் வளும் கருணை வள்ளல்
பூ விரியும் துழாய் அரங்கர் பொன் அடியே தஞ்சம் எனப் பொருந்தி வாழ்வார்
யாவரினும் இழி குலத்தோர் ஆனாலும் அவர் கண்டீர் இமையா நாட்டத்
தேவரினும் முனிவரினும் சிவன் அயன் என்று இருவரினும் சீரியோரே –100-

(இ – ள்.) காவிரிவாய் – உபயகாவேரிமத்தியில்,
பாம்பு அணைமேல் – சேஷ சயனத்தில்,
கரு முகில்போல் – காளமேகம்போல,
கண்வளரும் – திருக்கண் வளர்ந்தருளுகின்ற,
கருணை வள்ளல் – திருவருளையுடைய வரையாது கொடுப்பவராகிய,
பூ விரியும் துழாய் அரங்கர் – பொலிவுமிக்க திருத்துழாய்மாலை யையுடைய ரங்கநாதரது,
பொன் அடியே – அழகிய திருவடிகளையே,
தஞ்சம் என – அடைக்கலமாகக் கொண்டு,
பொருந்தி – சரணமடைந்து,
வாழ்வார் – வாழ்பவர்கள், –
யாவரினும் இழி குலத்தோர் ஆனாலும் – எல்லோரினும் தாழ்ந்த குலத்தில் தோன்றியவராயினும்,
அவர் கண்டீர் – அவரன்றோ,
இமையாநாட்டம் தேவரினும் – இமையாத கண்களையுடைய தேவர்களினும்,
முனிவரினும் – முனிவர்களினும்,
சிவன் அயன் என்ற இருவரினும் – சிவனும் பிரமனுமென்கிற இரண்டுபேரினும்,
சீரியோரே – சிறப்பினையுடையோராவர்.

எம்பெருமானது திருவடிகளே தஞ்சமென்ற உறுதியையுடைய சாத்துவிகர்கள் அகங்காரமமகாரங்கள் மண்டி
நிற்கப் பெற்றதேவர் முதலியோரினும் உயர்ந்தவராவரென்றவாறு.

இதற்குச் செய்யுளிலக்கணம், 15 – ஆங் கவியிற் கூறியதே.

————————–

மழை முகில் எனவே பணா முகம் திகழ் விரி யரவணை ஏறி வாழ் அரங்கர் தம்
எழில் பெறும் இரு தாளிலே கலம்பகம் எனும் ஒரு தமிழ் மாலை தான் அணிந்தனன்
குழல் இசை அளி மேவு கூரம் வந்தருள் குரு பரன் இரு பாத போதடைந்தவன்
அழகிய மணவாள தாசன் என்பவன் அடியவர் அடி சூடி வாழும் அன்பனே –101-

(இ – ள்.) பணா முகம் திகழ் – படங்களோடுகூடிய (ஆயிர) முகங்கள் விளங்குகின்ற,
வரி அரவு அணை – புள்ளிகளையுடைய திருவனந்தாழ்வானாகிய சயனத்தில்,
மழை முகில் என – கார்காலத்து மேகம் போல,
ஏறி வாழ் – பள்ளிகொண்டருளுகின்ற,
அரங்கர்தம் – ரங்கநாதரது,
எழில் பெறும் – அழகு பெற்ற,
இரு தாளிலே – உபயதிருவடிகளிலே,
கலம்பகம் எனும் – கலம்பகமென்கிற,
ஒரு தமிழ்மாலை – தமிழாலாகிய தொரு மாலையை (பிரபந்தத்தை),
அணிந்தனன் – சூடினான்; (யாரென்னின்), –
குழல் இசை அளி மேவு – வேய்ங்குழலினிசைபோலும் பாட்டிசையையுடைய வண்டுகள் விரும்பிமொய்க்கின்ற,
கூரம் – கூரமென்னும்பதியில்,
வந்தருள் – திருவவதரித்த,
குரு பரன் – சிறந்த ஆசாரியராகிய ஆழ்வானது,
இரு பாத போது – உபயதிருவடித்தாமரைகளை,
அடைந்தவன் – அடைந்தவனும்,
அடியவர் அடி சூடி வாழும் – அடியார்களது திருவடிகளை(த் தலைமேல் வைக்கும் மாலையாகக் கொண்டு) சூடிவாழ்கின்ற,
அன்பன் – பக்தனுமாகிய,
அழகிய மணவாள தாசன் என்பவன் – அழகிய மணவாளதாச னென்கிற திவ்வியகவி பிள்ளைப்பெருமாளையங்கார்; (எ – று.)

இது, தன்னைப் பிறன்போலும் பதிகங் கூறியது; வடநூலாரும், சடகோபர் சம்பந்தர் முதலாயினாரும்,
திவாகரரும், பதினெண்கீழ்க்கணக்குச்செய்தாரும் முன்னாகப் பின்னாகத் தாமே பதிகங் கூறுமாறு காண்க.

“குருபரனிருபாதபோதடைந்தவன்” என்பதற்கு – கூரத்தாழ்வானது உபயபாதங்களாகிய பராசரபட்டர் வேதவியாசபட்டர்
என்னும் இரண்டு திருக்குமாரர்களை ஆசிரியராக அடைந்தவ னென்றவாறு; குருபரன் – பரமகுரு, தனதுகுருக்களுக்குக் குரு.

———

திருவரங்கக்கலம்பகம் முற்றிற்று.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே —சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கக் கலம்பகம் –61-80-

February 19, 2022

கையுறை -முத்தம் –
61- விலையானது இலை என்று நீ தந்த முத்தம் வேய் தந்த முத்து ஆகில் வெற்பா வியப்பு ஆல்
இலை ஆர் புனல் பள்ளி நாராயணன் பால் எந்தாய் அரங்கா இரங்காய் எனப் போய்
தலையால் இரக்கும் பணிப்பாய் சுமக்கும் தன் தாதை அவர் தாமரைத் தாள் விளக்கும்
அலை ஆறு சூடும் புராணங்கள் பாடும் ஆடும் பொடிப் பூசி ஆனந்த மாயே –61-

(இ – ள்.) வெற்பா – மலைநாடனே! –
விலையானது இலை என்று – இதற்கு விலையில்லையென்றுசொல்லி,
நீ தந்த முத்தம் – நீ கொடுத்த முத்தானது,
வேய் தந்த முத்து ஆகில் – மூங்கில்பெற்ற முத்தானால், (அது),
வியப்பு – அதிசயிக்கும்படி,
ஆல்இலை – வடபத்திரத்தில்,
ஆர் புனல் – நிறைந்த பிரளயநீரில்,
பள்ளி – பள்ளிகொண்டருளுதலையுடைய,
நாராயணன்பால் – ஸ்ரீமந்நாராயணனிடத்தில்,
போய் -, ‘எந்தாய் – எனது தலைவனே! அரங்கா -!
இரங்காய் – இரங்கியருளவேண்டும்,’ என – என்று பிரார்த்தித்து,
தலையால் – பிரம கபாலத்தைக்கொண்டு,
இரக்கும் – பிச்சையெடுக்கும்;
பணிபாய் சுமக்கும் – (அந்நாராயணனது) பாயாகிய பாம்பைச் சுமந்துகொண்டிருக்கும்;
தன் தாதை – தன்னுடைய தகப்பனாகிய பிரமன்,
அவர் தாமரை தாள் விளக்கும் – அந்தநாராயணனது திருவடித்தாமரைகளைத் திருமஞ்சனஞ்செய்ததனாலுண்டான ஸ்ரீபாததீர்த்தமாகிய,
அலை ஆறு – அலைகின்ற நதியை (கங்கையை),
சூடும் – தலைமேல் தரிக்கும்;
புராணங்கள் – புராணங்களை,
பாடும் -; ஆனந்தமாய் – (இங்ஙனம் இரந்து சுமந்து சூடிப்பாடுதலாலுண்டான) பேரானந்தத்தால்,
பொடி பூசி – விபூதியை அணிந்து கொண்டு,
ஆடும் – நர்த்தனஞ்செய்யும்; (எ – று.)

இது, முத்தைக் கையுறையாகக் கொண்டுசென்ற தலைமகனைத் தோழி தன்சாதுரியத்தால் அதன் சிறப்பின்மை கூறி மறுத்தது.

இத்தன்மையொன்றும் இல்லாமையால், அம்முத்தமன்று என்றவாறு. இதன் கருத்து –
வேய்தந்தமுத்த மென்றது உருத்திரனையாதலால், அவன் விஷ்ணுவினிடத்தே செய்ததனை விநோதமாக விவரித்தா ரென்பர்.

வேதங்கள் பிரளயகாலத்தில் தமக்கு ஆபத்து ஒன்றும் இல்லாதிருக்க வேண்டுமென்று பிரார்த்தித்தபடி,
சிவபிரானது கருணையினால் அவை மூங்கிலாக வந்து பிறக்க, அவற்றில் தான் முத்தாகத் தோன்றினனாதலால்,
சிவபிரானை இங்கு “வேய்தந்தமுத்து” என்றார்.
(மூங்கில் முத்துப்பிறக்குமிடங்கள் இருபதில் ஒன்று;
“தந்தி வராகமருப் பிப்பி பூகந் தழைகதலி, நந்துசலஞ்சல மீன்றலை கொக்கு நளின மின்னார்,
கந்தரஞ் சாலி கழை கன்ன லாவின்பல் கட்செவி கா ரந்து வுடும்பு, கரா முத்தமீனு மிருபதுமே” என்றதுகாண்க.)

ஸர்வேஸ்வரன் எல்லாவுலகங்களையுந் தன்ஒருவயிற்றி லடக்கிக்கொண்டு சிறியவடிவத்தோடு சிறியதோராலிலையிற்
பள்ளிகொண்டருளுதலால் “வியப்பாலிலையார் புனற்பள்ளிநாராயணன்” என்றும்,
உருத்திரன் நாகாபரணனாதலால் “பணிப்பாய் சுமக்கும்” என்றும்,
அவன் விஷ்ணுவிஷயமாகப் பல புராணங்களைப்பாடியிருத்தலால் “புராணங்கள்பாடும்” என்றுங் கூறினார்.
முன்னும் “சாத்திய மாலையுந் தாள்விளக்கும், வானந்தருங் கங்கைநன்னீருஞ் சென்னியில் வைக்கப்பெற்ற,
வானந்தந்தா னல்லவோ முக்கணான் மன்றுளாடுவதே” என்றார்.

இது, நான்கும் எட்டும் மாச்சீர்களும், மற்றவை காய்ச்சீர்களுமாகிய எண்சீராசிரியவிருத்தம்.

—————

தவம்
62- ஆனந்தமாய் அரங்கற்கே உயிர்கள் அடிமை என்னும்
ஞானம் தனால் ஐம்பொறி வாயில் சாத்தி நல் தாளைப் பற்றி
ஈனம் தரும் பற்றும் அற்று என்றும் யான் எனது என்னும் அபி
மானம் தவிர்ந்து இருப்பார்க்கு இது போல் இல்லை மாதவமே –62-

(இ – ள்.) அரங்கற்கே – திருவரங்கநாதனுக்கே,
உயிர்கள் – எல்லா ஆத்துமாக்களும்,
அடிமை என்னும் – அடிமையென்று அறிகின்ற,
ஞானந்தனால் – தத்துவஞானமாகிய கதவினாலே,
ஐம் பொறி வாசல் – (மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும்) பஞ்சேந்திரியங்களாகிய வாயில்களை,
சாத்தி – அடைத்து (ஐம்புலன்வழியே செல்லவொட்டாமல் மனத்தை அடக்கிவைத்து),
நல் தாளை – (அவனது) நல்ல திருவடிகளை,
பற்றி – சரணமாக அடைந்து,
ஈனம் தரும் – இழிவைத்தருகின்ற,
பற்றும் – ஆசைகளும்,
அற்று – நீங்கப்பெற்று,
யான் எனது என்னும் அபிமானம் – அகங்கார மமகாரங்கள்,
தவிர்ந்து -நீங்கப்பெற்று,
என்றும் – எந்நாளும்,
ஆனந்தம் ஆய் – பேராநந்தமடைந்து,
இருப்பார்க்கு – இருப்பவர்களுக்கு,
இதுபோல் – இங்ஙனமிருத்தல்போன்ற,
மா தவம் – பெரிய தவம்,
இல்லை – வேறுஇல்லை; (எ – று.)

தவத்தை விலக்கிப் பகவத் தியானத்தை வற்புறுத்துதல், தவம் என்னும் உறுப்பின் இலக்கணம்.

“ஆத்மா எம்பெருமானுக்கே யடிமை” என்ற ஸ்வஸ்வரூபத்தை யுணர்ந்து, ஐம்புலன்களிற் செல்லாமல் எம்பெருமானிடத்து
மனம்வைத்து அகப்பற்றுப் புறப்பற்றுக்களை யொழிதலே மிகச்சிறந்த தவ மென்பதாம்.
“நெறி வாசல்தானேயாய் நின்றானை யைந்து,
பொறிவாசல் போர்க்கதவஞ் சார்த்தி – யறிவான்” என்றார் பூதத்தாரும்.
பொறிவாசல் சாத்தியென்றதற்கேற்ப, ஞானமாகிய கதவு எனப்பட்டது.
“யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க், குயர்ந்த வுலகம் புகும்” என்ற திருக்குறள் இங்குக் கருதத்தக்கது.
பிறவிப்பிணிக்கு மருந்தாகலின், நற்றா ளென்றார். அபிமானம் – செருக்கு.

இது, நேர் முதலாகிய கட்டளைக்கலித்துறை.

————–

தவம் –
63-மாதவங்கள் என்று ஒத்து அவங்களின் மருவு சீவன் என்றொருவன் நீ பெரும்
பூதம் அல்லை இந்த்ரியம் அல்லை ஐம் புலனும் அல்லை நல புந்தி அல்லை காண்
சீதரன் பரந்தாமன் வாமனன் திரு அரங்கனுக்கு அடிமை நீ உனக்கு
ஏதும் இல்லை என்று அறி அறிந்த பின் ஈதின் மாதவம் இல்லை எங்குமே –63-

(இ – ள்.) மா தவங்கள் என்று – பெரிய தவங்க ளென்று,
ஓது – சொல்லப்படுகின்ற,
அவங்களில் – வீண்தொழில்களில்,
மருவு – பொருந்துகின்ற,
சீவன் என்ற – ஆத்துமாவென்கின்ற,
ஒருவ – ஒருத்தனே! – நீ -,
பெரும் பூதம் அல்லை – பெரிய பஞ்சபூதங்களு மல்லாய்;
இந்திரியம் அல்லை – பஞ்சேந்திரியங்களு மல்லாய்;
ஐம்புலனும் அல்லை – பஞ்சதந்மாத்திரைகளு மல்லாய்;
நல் புந்தி அல்லை காண் – நல்ல அறிவு மல்லாய்காண்; (பின்னை என்னையென்றால்), – நீ -,
சீதரன் – திருமகளைத் (திருமார்பில்) தரிப்பவனும்,
பரம் தாமன் – பரமபதத்தை யுடையவனும்,
வாமனன் – (மாவலியின் செருக்கை அடக்குவதற்கு) வாமநாவதாரஞ் செய்தவனுமாகிய, திருவரங்கனுக்கு -,
அடிமை – அடியவன்;
உனக்கு -, ஏதும் – யாதொரு சுவதந்திரமும், இல்லை -, என்று அறி -;
அறிந்த பின் – (அங்ஙனம்) அறிந்தால், ஈதின் – இதுபோன்ற,
மா தவம் -, எங்கும் இல்லை -; (எ – று,)

இதனால், தம்மனத்துக்குத் தாமே உபதேசிக்கும் முகத்தால், ஜீவாத்ம ஸ்வரூபம் இத்தன்மையதென்று விளக்குகின்றன ரென்க.
எளிதிற் பயன் கொடாது துன்பந் தருவனவாதலால், ‘தவங்களென்றோம தவங்கள்’ என்றார்.
என்றொருவ – தொகுத்தல்.ஐந்தைப் பூத இந்திரியங்களோடுங் கூட்டுக. அறிந்தபின் – பின்னீற் றெதிர்கால வினையெச்சம்.

இது, முதல் மூன்று ஐந்து ஏழாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றை நான்கும் விளச்சீர்களுமாகிய எண்சீராசிரியவிருத்தம்.

———-

தலைவி இரங்கல்
64-எம் காந்தாள்-அங்கை நல்லீர் என் செய்கேன் இரண்டு ஏந்திழையீர்
தம் காந்தன் என்று அறிந்தாலும் நில்லாது தரைக்கும் நெய்க்கும்
அங்காந்த செம்பவளத்து எம்பிரான் அரங்கன் புயங்கள்
செங்காத்த மால் வரையோ இரும்போ என் தன சிந்தனையே -64–

(இ – ள்.) எம் – எமது (தோழியராகிய),
காந்தள் அம் கை நல்லீர் – காந்தள்மலர்போலும் அழகியகைகளையுடைய நல்லமகளிர்களே! –
இரண்டு ஏந்திழையார்தம் காந்தன் என்று – தரித்த ஆபரணங்களையுடைய (திருமகள் நிலமகளென்னும்) இரண்டு பிராட்டிமார்களிடத்து ஆசைகொண்ட கணவனென்று, அறிந்தாலும் -,
(என் மனம்), நில்லாது – (விரும்பிப் பின் செல்லாமல்) தரித்து நிற்காது;
என் செய்கேன் – (யான்) என்ன செய்வேன்?
தரைக்கும் – உலகங்களை உண்ணுதற்கும்,
நெய்க்கும் – நெய்யைப் பருகுதற்கும்,
அங்காந்த – திறந்த,
செம் பவளத்து – சிவந்த பவழம்போன்ற திருவாயையுடைய,
எம் பிரான் – எமது பெருமானாகிய,
அரங்கன் – ரங்கநாதனது,
புயங்கள் – திருத்தோள்கள்,
செங் காந்தம் மால் வரையோ – அழகிய காந்தத்தாலாகிய பெரிய மலைகளோ?
என்தன் சிந்தனை – எனது மனம், இரும்போ -? (எ – று.)

இது, தலைமகனைக் களவொழுக்கத்தாற் கூடிப் பிரிந்த தலைமகள், அப்பிரிவுத்துயரை யாற்றி யடக்கும் வல்லமையிலளாகி,
தனது நிலைமையை அன்புடைத்தோழியர்க்கு வெளிப்படையாக உரைத்தது.
தன் விருப்பத்தை நிறைவேற்றுதற்பொருட்டுத் தோழியரைக் கொண்டாடி யழைப்பவளாய்,
‘எங்காந்தளங்கைநல்லீர்’ என்று புனைந்துரைத்து விளித்தாள்.
‘செம்பவளத்தெம்பிரான்’ என்றது அவரது திவ்விய சௌந்தரியத்திலே தான்கொண்ட ஈடுபாட்டினால்.

தரைக்கு அங்காந்தது – பிரளயகாலத்தில் உலகங்களை வயிற்றில் வைத்துக் காக்கும்பொருட்டு,
நெய்க்கு அங்காந்தது – கிருஷ்ணாவதாரத்தில், இருவர் மனைவியருளரென்று அறிந்தும் அப்பிரானது தோள்கள்
இரும்பைக் காந்தம் இழுக்கின்றவாறுபோலத் தன்மனத்தைத் திரும்ப வொண்ணாமற் கவர்ந்ததனால்,
இவ்வாறு கூறினாள்; ஐயத் தற்குறிப்பேற்றவுவமை.

இக் கட்டளைக்கலித்துறை, நேரசை முதலாக வந்தது.

————–

களி
65-சிந்தையில் குடி கொண்டிருந்தது திருக்கு அறுத்து அடிமைக் கொளும்
திரு வரங்கர் பொருப்பு உயர்ந்த திருப்புயம் புகழ் களியரோம்
புந்தி மிக்கது வந்து புக்கது போத மாதர்கள் எழுவர் தம் பூசையேமாக
பூசை என்றது புதுமை அன்று இது புத்தர்காள்
அந்தரத்து இமையோர் அருந்தும் மருந்தும் வெள்ளையது அன்றியே
அரிய சாதி கொளாத மானிடர் அகலிடத்தினில் இல்லையே
மந்திரத்தில் நிலாத தேவதை வானகத்தினில் இல்லையே வடிவு
இல்லாதவை அண்ட கோளம் வளைந்த வைப்பு அதில் இல்லையே –65

இ – ள்.) புத்தர்காள் – புத்தர்களே! – (நாங்கள்),
சிந்தையில் – (அன்பால் நினைவாரது) உள்ளத்தில்,
குடிகொண்டு இருந்து – (சென்று நீங்காது) தங்கியிருந்து,
திருக்கு அறுத்து – (அவர்களது) குற்றங்களைப் போக்கி,
அடிமை கொளும் – ஆட்கொள்ளுகின்ற,
திரு அரங்கர் – ஸ்ரீரங்கநாதரது,
பொருப்பு – மலைபோல,
உயர்ந்த -, திரு புயம் – திருத்தோள்களை,
புகழ் – துதிக்கின்ற,
களியரேம் – கட்குடியராவோம்;
புந்தி மிக்கது – மனம் மிகமகிழ்தற்குக் காரணமாகிய களிப்பு,
போத – மிகுதியாய்,
வந்து புக்கது – வந்து நேர்ந்தது;
மாதர்கள் எழுவர்தம் – ஸப்தமாதாக்களுடைய,
பூசையே – பூஜை தானே,
மக பூசை என்றது இது – யாகத்திற் செய்யப்படும் பூஜையென்ற இத்தன்மை,
புதுமை அன்று – புதியதொன்றன்று;
அந்தரத்து – சுவர்க்கலோகத்திலுள்ள,
இமையோர் – தேவர்கள்,
அருந்தும் – பருகுகின்ற,
மருந்தும் – அமிருதமும்,
வெள்ளை – வெள்ளைதான்;
அது அன்றியே – அதுவுமல்லாமல்,
அரிய – அருமையான,
சாதி – சாதிகளை,
கொளாத – உடைத்தாகாத,
மானிடர் – மனிதர்கள்,
அகல் இடத்தினில் – பரந்த பூமியில், (எங்கும்), இல்லையே -;
மந்திரத்தின் இலாத – மந்திரத்துக்கு வசப்படாத,
தேவதை – தெய்வம்,
வானகத்தினில் – தேவலோகத்திலும், இல்லையே -;
வடிவு இலாதவை – உருவமில்லாத பொருள்கள்,
அண்டகோளம் வளைந்த – அண்டகோளத்துக்கு உட்பட்ட,
வைப்பதில் – இடத்தில், இல்லையே -. (எ – று.)

கட்குடியர் அக்கள்ளைச் சிறப்பித்துக்கூறுவதாகச் செய்யுள்செய்வது, களி யென்னும் உறுப்புக்கு இலக்கணமாம்.

புத்தசமயத்தார் கட்குடியைவிலக்குதலை முக்கிய தருமமாகக் கொண்டவராதலால், அவர்களை விளித்துக் கூறுகின்றார்.
இனி, முதலடிக்கு – திருவரங்கநாதனது மலைபோன்ற திருத்தோள்களைப் பாடித் துதித்துப் பக்தி மிகுதியாற்
கூத்தாடுகின்ற களிப்புடையராவோ மென்றுமாம். கட்குடியர் துர்க்கபூசைசெய்தல் இயல்பாதலின்,
அதனைப் பெருமைப்படுத்திக்கூறினர்.

கட்குடித்தலையுங் குடியென்பராதலின் ‘சிந்தையிற் குடிகொண்டிருந்து’ என்றும், களியரென்பதற்குக் கட்குடியரென்றும்
பொருளாதலால் ‘களியரேம்’ என்றும்,
அமிருதமுங் கள்ளும் வெண்ணிற வொற்றுமை யுடைமையால் ‘இமையோ ரருந்து மருந்தும் வெள்ளை’ என்றும்,
சாதி மந்திரம் வடிவு என்பன கள்ளுக்கும் பெயராதலால் அதை உட்கொள்ளாத மனிதர்கள் பூமியிலில்லை யென்றும்,
அதுகொள்ளாத தேவர்கள் வானுலகத்திலில்லை யென்றும், அதுபெறாத பொருள்கள் அண்டமுழுவதிலுமில்லை யென்றுங்
களியென்னுமுறுப்பிற்குப்பொருந்தச் சிலேடையாக் கூறினரெனக்காண்க.
பொருப்புயர்ந்த – மலையினும் உயர்ந்த வென்றுமாம்.
மாதர்களெழுவர் – அபிராமி, மாயேசுவரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி.
மக பூசை – மஹாபூஜையென்பதன் திரிபாகக் கொண்டு, சிறந்த பூசை யென்றுமாம். மானிடரென்பது – மாநுஷ சப்த பவம்.

இது, முதல் மூன்று ஐந்தாஞ் சீர்கள் மாச்சீர்களும், மற்றை நான்கும் விளச்சீர்களுமாய் வந்தது அரையடியாகவும்,
அஃது இரட்டிகொண்டது ஓரடியாகவும் வந்த பதினான்குசீராசிரியவிருத்தம்.

————-

66-இல்லறம் எனத் துறவறம் எனச் சொல் அறம் பிற துணை அன்று என
பவக் கடலுள் துவக்கு அறுப்பான் காவிரி இடைப் பூவிரி பொழில்
சில மந்திகள் சினை தாவ பல தெங்கின் பழக் குலை உதிர
அடர் கமுகின் மிடறு ஓடி தர தேமாங்கனி சிதறு புவிழ முடப் பலவின் குடக்கனி உக
அரம்பைக் கனி வரம்பில் புக வயல் மருங்கின் மலர்ப் பொய்கையுள் துயில் வலம் புரி துண்ணனவு உற
தா அள் தாமரைத் தவிசு உறை தரு சூ உதடு ஓதி மம் பே எட்டுடன் எழ
மயிர்சேவல் மனம் களிப்ப குயில் பேடைக் குலம் ஒளிப்ப மழை முகில் என முழவு அதிர் தரு
திரு அரங்கப் பெரு நகருள் அரவணை மிசை அறி துயில் அமர்ந்து அருள் புரி
திரு நாரணனைச் சேர்ந்தனம் சரணா விந்தம் தஞ்சம் என்று இரந்தே–66-

(இ – ள்.) இல்லறம் என – இல்லறமென்றும்,
துறவறம் என – துறவறமென்றும்,
சொல் அறம் – (இருவகையாகச்) சொல்லப்படுகின்ற அறமும்,
பிற – மற்றைப் பொருளின்பங்களும்,
துணை அன்று என – துணையல்ல வென்று எண்ணி,
பவம் கடலுள் – பிறவிக்கடலினுள்ளே,
துவக்கு – கட்டுப்பட்டிருத்தலை,
அறுப்பான் – நீக்கும்பொருட்டு, –
காவிரியிடை – உபயகாவேரி மத்தியில்,
பூவிரி பொழில் – மலர்களலர்கின்ற சோலைகளில்,
சில மந்திகள் – சில பெண்குரங்குகள்,
சினை – மரக்கிளைகளில்,
தாவ – தாவிப்பாய, – (அதனால்),
பல தெங்கின் – பல தென்னமரங்களில்,
பழம் குலை – முதிர்ந்த காய்களின் குலைகள்,
உதிர – உதிரவும், –
அடர் கமுகின் – நெருங்கின பாக்குமரங்களினது,
மிடறு – கண்டம்,
ஒடிதர – ஒடியவும், –
தே மா கனி – தேன் மாம்பழங்கள்
சிதறுபுவிழ – சிதறிவி ழவும், –
முடம்பலவின் – வளைந்த பலாமரத்தினது,
குடம் கனி – குடம்போன்ற பழங்கள்,
உக – சிந்தவும், –
அரம்பை கனி – வாழைப்பழங்கள்,
வரம்பில் புக – வயல்வரப்புக்களில் விழவும், –
வயல் மருங்கின் – கழனிகளி னருகிலுள்ள,
மலர் பொய்கையுள் – பூக்கள் நிறைந்த தடாகத்தில்,
துயில் – தூங்குகின்ற,
வலம்புரி – வலம்புரிச் சங்கங்கள்,
துண்ணனவு உற – திடுக்கிட்டலறவும், –
தாள் தாமரை தவிசு – நாளத்தையுடைய தாமரை மலராகிய இருப்பிடத்தில்,
உறைதரு – தங்குகின்ற,
சூட்டு ஓதிமம் – உச்சியையுடைய அன்னப்பறவைகள்,
பேட்டுடன் – (தம் தமது) பேடைகளுடன்,
எழ – எழுந்திருப்பவும், –
மயில் சேவல் – பெண் மயில்களும் ஆண்மயில்களும்,
மனம் களிப்ப – மனமகிழ்ந்து கூத்தாடவும், –
குயில் பேடை குலம் – ஆண்குயில்கள் பெண்குயில்களின் கூட்டம்,
ஒளிப்ப – மனம்வருந்தி மறையவும், –
மழை முகில் என – மழைபெய்கின்ற மேகம்போல,
முழவு – வாத்தியங்கள்,
அதிர்தரு – ஒலிக்கின்ற, –
திரு அரங்கம் பெரு நகருள் – திருவரங்கமென்கிற பெரிய திருநகரத்தில்,
அரவணை மிசை – சேஷசயனத்தின்மேல்,
அறி துயில் அமர்ந்து அருள்புரி – யோகநித்திரை செய்தருளுகின்ற,
திருநாரணனை – ஸ்ரீமந்நாராயணனை,
சரண அரவிந்தம் – (அவனது) திருவடித்தாமரைகளே,
தஞ்சம் என்று – அடைக்கல மென்று, சொல்லி,
இரந்து – பிரார்த்தித்து,
சேர்ந்தனம் – அடைந்தோம், (யான்); (எ – று.)

காவிரியிடைத் திருவரங்கப்பெருநகருள் அரவணைமிசை அறிதுயிலமர்ந்தருள்புரி திருநாரணனைப் பவக்கடலுள்
துவக் கறுப்பான் சேர்ந்தன மென்க. இல்லறமாவது – இல்வாழ்க்கைநிலைக்குச் சொல்லுகின்ற நெறிக்கண் நின்று,
அதற்குத் துணையாகிய கற்புடைமனைவியோடுஞ் செய்யப்படுவதாகிய அறம். துறவறமாவது –
மேற்கூறிய இல்லறத்தின் வழுவாதொழுகி அறிவுடையராய்ப் பிறப்பினையஞ்சி வீடுபேற்றின் பொருட்டுத் துறந்தார்க்கு உரித்தாகிய அறம்.
அறம் பொருளின்பமென உடனெண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்து இல்லறந் துறவற மென்னும்
இருவகை நிலையாற் கூறப்பட்டதனால், ஏனைப் பொருளும் இன்பமும் ‘பிற’ என்னப் பட்டன.
பவம் – வடசொல். இங்குக் கூறிய வருணனை,
“காய்மாண்ட தெங்கின்பழம்வீழக் கமுகினெற்றிப், பூமாண்டதீந்தேன்றொடைகீறி வருக்கைபோழ்ந்து,
தேமாங்கனிசிதறி வாழைப்பழங்கள்சிந்து, மேமாங்கத நாடு” என்னுஞ் சிந்தாமணிச்செய்யுள் போன்றது.

மந்தி, பேடு, பேடை – பெண்பெயர்கள். “குரங்கு முசுவு மூகமு மந்தி,” (“புள்ளு முரிய வப்பெயர்க் கென்ப,”)
“பேடையும் பெடையு நாடினொன்றும்” என்பன காண்க. கமுகு – க்ரமுகமென்னும் வடசொல்லின் சிதைவு.
சிதறுபு – செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம். சேவல் – ஆண்பெயர்.
“சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவணு, மாயிருந் தூவி மயிலலங் கடையே” என்றார் தொல்காப்பியனா ராதலின்,
சேவலென்னும் பெயர் மயிலுக்கு வருதல், புதியனபுகுதல். மழைக்காலத்தில் மயிலினம் மகிழ்தலும், குயிலினம் வருந்துதலும் இயல்பு.
மயிலுங் குயிலும் முழவொலியை மழையொலியென மயங்கினவென்க; மயக்கவணி. “தஞ்சமென் றறிந்து” என்றும் பாடம்.

இது, இருசீரடி பத்தொன்பது கொண்டு தனிச்சொற்பெற்று அகவற் சுரிதகத்தான் முடிந்த குறளடி வஞ்சிப்பா:
அருள்புரி யென்பது, தனிச்சொல்; ஈற்றிரண்டடியும், நேரிசையாசிரியச்சுரிதகம்.

————–

67- இரவியை இரவின் மதியினை மதியுள் இறையினை இறையும் எண்ணரிய
கரவனை கரவு இல் முனிவனை முனிவர் கருத்தனை கருத்தனைத் துடைத்து ஆள்
பரமனை பரம பதத்தனை பதத்துள் பாரனை பார நத்து ஊதும்
அரவணை அரவின் அரங்கனை அரங்கத்து அடிகளை அடிகள் சேவியுமே –67–

(இ – ள்.) இரவியை – சூரியனானவனை,
இரவின் மதியினை இராத்திரியில் விளங்குகின்ற சந்திரனானவனை,
மதியுள் இறையினை – அறிவிலுறைகின்ற தலைவனை,
இறையும் எண்ணரிய கரவனை – சிறிதும் நினைத்தற்குமரிய மாயையையுடையவனை,
கரவுஇல் முனிவனை – கபடமில்லாத முனிவனா யிருப்பவனை,
முனிவர் கருத்தனை – முனிவர்களது உள்ளத்தி லுறைபவனை,
கருத்தனை துடைத்து ஆள் பரமனை – (தன்னையடைந்தவர்களது) பிறப்பைப் போக்கியருளுகின்ற உயர்ந்தவனை,
பரமபதத்தனை – பரமபதத்தையுடையவனை,
பதத்துள் பாரனை – திருவடியினின்றும் பூமியை யுண்டாக்கினவனை,
பாரம் நத்து ஊதும் அரவனை – பெரியபாஞ்சசன்னியத்தை ஊதுகின்ற ஓசையை யுடையவனை,
அரவின் அரங்கனை – பாம்பை இடமாக வுடையவனை,
அரங்கத்து அடிகளை – திருவரங்கத்தி லெழுந்தருளியிருக்கின்ற ஸ்வாமியை,
அடிகள் சேவியும் – திருவடிதொழுங்கள்; (எ – று.)

இச்செய்யுளில் ஒருசொல்லைப்பற்றி முன்வந்த ஒருசொல்லை விட்டிட்டு இவ்வாறு ஒருதொடர்புபடுத்திக்கூறியது –
ஒருவகை ஏகாவளியலங்காரம். முனிவன் என்றது – உலகங்களின் படைப்பளிப்பழிப்புக்களை மநநம் பண்ணுபவன்;
“முனியே நான் முகனே” என்றார் ஆழ்வாரும்.
இனி, கரவின் முனிவனை யென்பதற்கு – முதலையினிடத்துக் கோபத்தையுடையவனை யென்றும்,
முனிவர் கருத்தனை யென்பதற்கு – முனிவர்கள் தலைவனை யென்றும் உரைக்கலாம்.
எம்பெருமானது திருவடியினின்று பூமி உதித்த தென்று வேத மோதுதலால், “பதத்துட் பாரனை” என்றார்;
திரிவிக்கிரமாவதார கதையை யுட்கொண்டு, ஒருதிருவடியுளடக்கிய பூமியையுடையவ னென்றுமாம்.
“பாரதத்தூதவரவனை” என்னும் பாடத்துக்கு – பரதகுலத்தில் தோன்றிய பாண்டவர்க்குத் தூதனாய்த் துரியோதனனிடத்து
வந்தவனை யென்று உரைக்க. “பாரனைத்தோது மரவனை” என்றும் பாடம்.
அரவம் – ரவம். அடிகள் சேவியும் – பெரியோர்களே! சேவியு மெனவுமாம்.
இப்பொருளில், அடிகளென்பது – அடியென்னும் பகுதியிற் பிறந்து உயர்வுப்பொருளுணர்த்தி நின்ற படர்க்கைச்சொல்.

இதற்கு யாப்பிலக்கணம், 36-ஆங் கவியிற் கூறியது கொள்க.

—————

தலைவி இரங்கல்
68-சேவிக்க வாழ்விக்கும் எம் கோன் அரங்கன் திருக் கோயில் சூழ்
காவில் கலந்து ஆசை தந்து ஏகினார் நெஞ்சு கல் நெஞ்சமோ
வாவிப் புறத்து அன்னமே இன்னம் ஏதோ வரக் கண்டிலேன்
பாவிக்கு அநேகம் தனிக்காலம் இந்தப் பனிக்காலமே –68-

(இ – ள்.) வாவிப்புறத்து அன்னமே – தடாகங்களினிடத்தே சஞ்சரிக்கின்ற அன்னப்பறவையே! –
சேவிக்க – (தன்னைக்கண்டு) வணங்க, (அவர்களை),
வாழ்விக்கும் – (இம்மை மறுமை வீடுகளிற் சிறந்து) வாழச்செய்கின்ற,
எம் கோன் – எமதுதலைவனாகிய, அரங்கன் – ரங்கநாதனது,
திரு கோயில் – அழகிய கோயிலை, சூழ் – சூழ்ந்த,
காவில் – சோலையில், கலந்து – கூடியிருந்து,
ஆசை தந்து – ஆசைகாட்டி,
ஏகினார் – சென்றவரது,
நெஞ்சு – மனம், கல் நெஞ்சமோ – கல்லினாலாகிய நெஞ்சோ?
இன்னம் – இன்னமும் (பனிக்காலம் வந்த பின்னும்), ஏதோ – என்ன காரணத்தாலோ,
வர கண்டிலேன் – மீண்டுவரக் கண்டேனில்லை;
பாவிக்கு – தீவினையேனாகிய எனக்கு,
இந்த பனி காலம் -, அனேகம் தனி காலம் – தனியேயிருக்கின்ற நெடுங்கால மாகவாயிற்று; (எ – று.)

இது, தலைமகன் புணர்ந்து தணந்துவர நீட்டித்த நிலைமைக்கண் தலைமகள் நெய்தனிலத்து அன்னத்தோடு கூறி இரங்கியது.

கணவனைப் பிரிதற்கேற்ற தீவினையுடைமையால், தலைவி தன்னை “பாவியேன்” என்று பழித்துக் கூறுகின்றாள்.
கணவனைப் பிரிந்த நிலையில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் பலயுகங்கள் போலு மாதலால்,
‘அனேகந் தனிக்கால மிந்தப்பனிக்காலம்’ என்றாள்;
“பலபல வூழிகளாயிடு மன்றியோர் நாழிகையைப் பலபல கூறிட்ட கூறாயிடும்…..,…. அம்மவாழி யிப்பாயிருளே” என்றார் நம்மாழ்வாரும்.

இது, முதல் நான்குசீருங் காய்ச்சீர்களும், ஈற்றுச்சீரொன்று மாங்கனிச்சீருமாகிய கலிநிலைத்துறை.

————–

குறம்
69-காலம் உணர்ந்த குறத்தி நான் கருதியது ஓன்று அது சொல்லுகேன்
பாலகன் உச்சியில் எண்ணெய் வார் பழகியது ஓர் கலை கொண்டு வா
கோல மலர்க் குழல் மங்கை நின் கொங்கை முகக் குறி நன்று காண்
ஞாலம் உவந்திட நாளையே நண்ணுவை நம் பெருமாளையே –69-

(இ – ள்.) நான் -, காலம் – முக்காலத்து விருத்தாந்தங்களையும்,
உணர்ந்த – அறிந்து சொல்லவல்ல,
குறத்தி – குறவர்மகள்;
ஒன்று கருதினை – (நீ மனத்தில்) யாதொன்று நினைத்தாயோ,
அது – அதனை, சொல்லுவேன் -:
பாலகன் – (என்) சிறுகுழந்தையது,
உச்சியில் – தலையில்,
எண்ணெய் வார் – எண்ணெய் வாரு;
பழகியது ஓர் கலை – பழையதொரு சீலையை,
கொண்டுவா – கொண்டுவந்து கொடு;
கோலம் மலர் கையின் – அழகிய மலர்போலுங் கைகளையுடைய,
மங்கை – பெண்ணே! நின் – உன்னுடைய,
கொங்கை முகம் குறி – முலைக்கண்களின் குறியானது, நன்று – நன்றாயிருக்கிறது; (ஆகையால்),
ஞாலம் உவந்திட – உலகமுழுவதும் மகிழும்படி,
நாளையே – நாளைக்கே,
நம்பெருமாளை -, நண்ணுவை – சேர்வாய்; (எ – று.)

தலைமகனைக் கண்டு காமுற்று மயங்கிநிற்கும் நிலைமைக்கண் தன்னிடம் வந்த குறிகண்டறிந்து கூறவல்ல
குறத்தியாகிய கட்டுவிச்சியைத் தலைவி குறி வினவக் குறத்தி குறிதேர்ந்து நல்வரவு கூறுவதாகச் செய்யுள்செய்வது,
குறம் என்னும் உறுப்பின் இலக்கணமாம்.
தலைமகனைக் களவொழுக்கத்தாற் புணர்ந்து பிரிந்து ஆற்றாது மெலிந்து வருந்திய தலைமகளைக் கண்ட செவிலித்தாய்,
இவள்நோய்க்குக் காரணம் இன்னதென்று அறியாமல் நிமித்தங்கண்டுகூறவல்லகட்டுவிச்சியை அழைத்து வினாவ,
அவள் குறியிலக்கணப்படி சிறுமுறத்திலே சிலநெற்குறிகண்டு அதனால் உண்மையுணர்ந்து கூறுகின்றாள்.
காலமுணர்ந்த குறத்தி நான் – முக்கால வரலாறுகளையும் முன்னறிந்துகூறவல்ல குறத்தி யானென்று தனது சிறப்பை வெளியிட்டனள்.

“எந்தவிதங்களு மறி குறமகணா னிங்கெதிர்வந் தினியென திதமொழிகே,
ளந்தமுறந்தனி னவமணி கொடுவா வன்பிலணிந்திட வழகியகலைதா,
கந்தமிகுந்த தனந்தனிற் குறியே கண்டன னின்றலர் கமழ்குழன்மடவாய்,
வந்தெவருந்தொழ வடமலைதனில்வாழ் வண்டுளவன் தின மருவுவ னுனையே” என்ற திருவேங்கடக் கலம்பகச் செய்யுள் இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

காலம் – ஆகுபெயர். பாலகன் – கப்பிரத்தியயம், இரங்கற்பாடுணர்த்திற்று.
இனி, மூன்றாமடிக்கு, நினது கைகளிலும் கொங்கைகளிலும் முகத்திலு முள்ள குறி நன்றென்றும்,
கைக்குறியினும் கொங்கைமுகத்தின்குறி நன்றென்றும் பொருள்கொள்ளலாம். “மலர்க்குழல்” என்றும் பாடம்.
ஞாலமுவத்தல் – ஒத்த தலைமகனுக்குந் தலைமகளுக்குங் கூட்டம் நேர்தலால். தான் குறிசொல்வதற்கு வெகுமதியாகத்
தன்பாலகனுச்சியில் எண்ணெய் வார்க்குமாறும் பழைய வஸ்திரமொன்றைத் தனக்குக் கொடுக்குமாறும் குறத்தி கேட்கின்றன ளென்க.

இது, எல்லாச்சீரும் விளச்சீராகிய அறுசீராசிரிய விருத்தம்.

———

மேக விடு தூது
70–பெருமாலை யார்க்கு உரைப்பேன் உமக்கே விண்டு பேசின் அல்லால்
கரு மாலையாய் எழும் கார்க் குலங்காள் தொண்டர் காற்பொடி தன்
திருமாலை கொண்ட திருமால் அரங்கம் தெய்வத் துழாய்
மரு மாலை வாங்கி வம்மின் அந்தி மாலை வரும் முன்னமே –70-

(இ – ள்.) கரு மாலையாய் எழும் கார் குலங்காள் – கரிய தொரு வரிசையாய் ஆகாயத்தே எழுகின்ற மேகங்களது கூட்டங்களே! –
பெருமாலை – (எனது) பெரிய மயக்கத்தை, உமக்கே – உங்களுக்கே,
விண்டு பேசின் அல்லால் – விவரித்துச்சொன்னாலல்லாமல், யார்க்கு – வேறே யாவர்க்கு,
உரைப்பேன் – எடுத்துச்சொல்லுவேன்? (நீங்கள் போய்),
தொண்டர் கால் பொடிதன் – தொண்டரடிப்பொடியாழ்வார ரருளிச்செய்த,
திருமாலை – திருமாலை யென்னுந் திவ்வியப்பிரபந்தமாகிய மாலையை, கொண்ட – கொண்டருளிய,
திரு மால் அரங்கர்தம் – திருமாலாகிய ரங்கநாதரது,
தெய்வம் துழாய் மரு மாலை – திவ்வியமான நறுமணம்பொருந்திய திருத்துழாய்மாலையை,
அந்திமாலை வருமுன்னம் -அந்திப்பொழுது வருதற்குமுன்னே,
வாங்கி வம்மின் – வாங்கிக்கொண்டு வாருங்கள்; (எ – று.)

தலைவனைப் பிரிந்து தனித்து வருந்துந் தலைவி, இங்ஙனஞ் சொல்லித் தலைவனிடத்து மேகங்களைத் தூதுசெல்லுமாறு வேண்டுகின்றாள்.

புண்ணிற்புளிப்பெய்தாற்போல இந்நிலையில் அந்திமாலை வருமாயின் யான் இறந்துபடுவேன்: அது வருவதற்குமுன்னமே
எனது தலைவன் அணிந்த மாலையை எனக்குக்கொணர்ந்துகொடுத்தால்மாத்திரமே யான் அதுகொண்டு சிறிது ஆறியிருப்பே னென்றாள்;
தொண்டரடிப்பொடி யாழ்வார் “இந்திரலோகமாளு மச்சுவை பெறினும் வேண்டேன்” என்று
“பரமபதம் கிடைப்பதானாலும் அதிலும் எனக்கு நசையில்லை; பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்க ணச்சுதா!
அமரரேறே ஆயர்தம் கொழுந்தே! என்னும் இச்சுவையே யான் வேண்டுவது” என்று அறுதியிட்டுத் திருவரங்கநாதனையன்றி
வேறு எத்தேவரையும் கடைக் கணியாது அப்பிரான் திறத்தில் திருமாலை யென்னுந் திவ்வியப்பிர பந்தத்தை
யருளிச்செய்தன ராதல்பற்றி, ‘தொண்டர்காற்பொடிதன் றிருமாலைகொண்ட திருமாலரங்கர்’ என்றார்.
தொண்டர் காற் பொடி – பக்தாங்க்ரிரேணு. திருமாலை கொண்ட திருமால் என்னு மிடத்தில், சொன்னயம் பாராட்டற்பாலது.
“பாவோநாந்யத்ரகச்சதி (எனது சிந்தை ஸ்ரீராமனைத்தவிர வேறொருதெய்வத்தினிடத்திற் செல்லாது” என்ற சிறிய திருவடியும்,
“அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே” என்ற தொண்டரடிப்பொடியாழ்வாரும்,
“என்னமுதினைக்கண்ட கண்கள் மற்றொன்றினைக்காணாவே” என்ற திருப்பாணாழ்வாரும் தம்மில் ஒப்பரென்ற காரணம்பற்றி,
ஸ்ரீரங்கந்திருக்கோயிலில் இம்மூவர்க்கும் ஒருங்கே சந்நிதி யமைக்கப்பட்டுள்ள தென்பர்.
தொண்டர்காற்பொடிதன் திருமாலை – செய்யுட்கிழமைப் பொருளில் வந்த ஆறாம்வேற்றுமைத்தொகை.
வம்மின் – வா என்னும் முதனிலையடியாப் பிறந்த ஏவற்பன்மைமுற்று. அந்தி – ஸந்த்யா என்னும் வடமொழியின் சிதைவு.

இது, நிரையசை முதலாகிய கட்டளைக்கலித்துறை.

——————

71-முன்னம் பிறந்த பிறப்போ முடிவு இல்லை
இன்னம் பிறப்பிக்க எண்ணாதே தென் அரங்கம்
மேவிக் கிடந்தானே வீற்று இருக்கும் நின் பதத்து என்
ஆவிக்கு இடம் தான் அருள் –71-

(இ – ள்.) தென் அரங்கம் மேவி கிடந்தானே – அழகிய திருவரங்கத்தில் திருவுள்ள முவந்து திருப்பள்ளிகொண்டருளுபவனே! –
(யான்), முன் (ஆகையால்), பிறப்போ – முன்னே பிறந்த பிறவிகளுக்கோ வென்றால்,
முடிவு நாளை இவர்களை வென்று ஒரளவில்லை; (ஆகையால்), இன்னம் – இனிமேலும்,
பிறப்பிக்க – பிறவியெடுக்கும்படி, எண்ணாதே – திருவுள்ளத்திற் கொள்ளாமல்,
வீற்றிருக்கும் – ஒப்பில்லாத சிறப்போ டிருக்கின்ற, நின் பதத்து – உனது பரமபதத்தில்,
என் ஆவிக்கு – எனது உயிர்க்கு, இடம் – இடத்தை, அருள் – தந்தருள்வாய்; (எ – று.)

பலபிறப்பெடுத்து உழன்று வருந்திய என்னை இனிமேற் பிறப்பற்று முத்திபெறுமாறு அருள்செய்யவேண்டு மென்று வேண்டுகின்றவாறு.

“வீற்றிருக்க” என்றும் பாடம். பதத்து – திருவடிநிழலி லென்றுமாம்: திருவடியே வீடாயிருக்கு மாதலால், “நின்பதத்து” என்றது ஏற்கும்.

இது, மலரென்னும் வாய்பாடுபட முடிந்த நேரிசைவெண்பா.

———–

தலைவி இரங்கல் –மடக்கு –
72- அரும்புன்னாகத் தடங்காவே அவா என் ஆகத்து அடங்காவே
அம்போருகக் கண் பொரும் தேனே அழு நீர் உகக்கண் பொருந்தேனே
பரம்பும் கடல் ஊர் நாவாயே பாவிக்கு அடல் ஊர் நாவாயே
பார் மீது உயர மறி அலையே படும் என் துயரம் அறியலையே
கருங்கண் கயலே மாசுறவே கரைவேற்கு அயலே மாசு உறவே
கண்டல் போது உகு வாலுகமே கங்குல் போது குவால் உகமே
குரும்பை தழைக்கும் கரும் பனையே குயில் வந்து அழைக்கும் கரும் பனையே
குருகீர் நந்து அமர் அம் கரையே கொணரீர் நம் தம் அரங்கரையே –72 –

(இ – ள்.) அரும் புன்னாகம் தடம் காவே – அரிய பெரிய புன்னைமரச் சோலையே!
அவா – ஆசை, என் ஆகத்து அடங்காவே – எனது மனத்தில் அடங்குகிறதில்லை;
அம்போருகம் கண் பொரும் தேனே – தாமரைமலரினிடத்துப் பொருந்திய வண்டே!
அழு நீர் உக – அழுகின்ற கண்ணீ ரறாதொழுக, கண் பொருந்தேனே – கண்ணுறங்குகிறேனில்லை;
பரம்பும் கடம் ஊர் நாவாயே – பரவிய கடலி லோடுகின்ற மரக்கலமே!
பாவிக்கு – பாவியேனுக்கு, ஊர் நா வாயே – (அலர்தூற்றுகின்ற) ஊராரது நாவும் வாயும்,
அடல் – பகைமையாகும்; பார்மீது உயர மறி அலையே – கரையின்மேல் உயர்ந்து மடங்கி விழுகின்ற அலையே!
படும் என் துயரம் அறியலையே – யான்படுகின்ற துன்பத்தைக் கண்டறிகின்றாயல்லையே;
கருங் கண் கயலே – கண்களையுடைய கயல்மீனே! மா சுறவே – பெரிய சுறாமீனே!
கரைவேற்கு – இங்ஙனம் வருந்துகின்ற எனக்கு, மாசு உறவே – குற்றமுள்ள உறவினரும்,
அயலே – அயலாரேயாவர்; வண்டல் போது உகு வாலுகமே – தாழைமலர்கள்சிந்துகின்ற வெண்மணற்குன்றே!
கங்குல் போது குவால் உகமே – இராப்பொழுது திரண்ட அநேகம்யுகங்களேயாகும்;
குரும்பை தழைக்கும் கரும் பனையே – குரும்பைகள் தழைக்கின்ற கரிய பனைமரமே!
குயில் – குயிலானது, வந்து -, கரும்பனை – கருப்புவில்லையுடைய மன்மதனை,
அழைக்கும் – அழையா நின்றது; குருகீர் – நாரைகளே!
நந்து அமர் அம் கரையே – சங்குகள்பொருந்திய அழகிய கரையே!
நந்தம் அரங்கரை – நமது அரங்கநாதரை, கொணரீர் -கொண்டுவாருங்கள்; (எ – று.)

இது, பிரிந்துறைகின்ற நெய்தனிலத்துத்தலைமகள் ஆங்குள்ளபொருள் களை நோக்கித் தான்படும் வருத்தங் கூறி இரங்கியது.

ஈண்டுக் கேளாமரபின கேட்பனபோலக் கூறப்பட்டன; மரபுவழு வமைதி. அம்போருஹம் – நீரில்முளைப்பது. கண் – ஏழனுருபு. ஊர், உறவு –
ஆகுபெயர்கள். உறவினரெல்லாம் தான்படும் வருத்தத்திற்கு இரங்காது ஊரவர்போலத் தூற்றுதலால்,
‘கரைவேற்கயலே மாசுறவே’ என்றாள்.
விரகிகளுக்கு இரவு நீட்டித்ததுபோலத் தோன்றி வருத்துதலால், ‘கங்குற்போது குவாலுகமே’ எனப்பட்டது.
குரும்பை – இளங்காய். குயிலொலி காமோத்தீபகமா யிருத்தலால், ‘குயில்வந்தழைக்குங் கரும்பனை’ யென்றாள்.

இதற்குச் செய்யு ளிலக்கணம், 33 – ஆங் கவியிற் கூறியது.

————-

73-கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே -ஆற்றிடைக் கிடப்பது ஓர் ஐந்தலை அரவே-
அரவம் சுமப்பது ஓர் அஞ்சன மலையே -அம்மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே-
அரவிந்த மலர் தொறும் அதிசயம் உளவே –
கடல் விளிம்பு உடுத்த கண் அகல் ஞாலம் உடன் முழுது அளந்தது ஒரு தாமரையே –
வகிர் இளம் பிறையான் வார் சடை தேங்கப் பகிரதி கான்றது ஓர் பங்கே ருகமே
யாவையும் யாரையும் படைக்க நான் முகக் கோவை ஈன்றது ஓர் கோகனகமே
திரு மகட்கு இனிய திருமனை ஆகி பரு மணி இமைப்பது ஓர் பதும மலரே
சடைத்தலை தாழ்த்துச் சங்கரன் இரப்ப முடித்தலை தவிர்த்தது ஓர் முளரி மா மலரே
ஆங்கு மண்டோதரி அணிந்த மங்கல நாண் வாங்க வில் வாங்கிய வனசம் ஒன்றே
விரிந்த புகழ் இலங்கை வேந்தற்கு தென் திசை புரிந்து அருள் மலர்ந்தது ஓர் புண்டரீகமே
மண் தினிஞாலமும் வானமும் உட்பட அண்டம் உண்டு உமிழ்ந்தது ஓர் அம்போ ருகமே
கடை சிவந்து அகன்று கரு மணி விளங்கி இடை சில அரி பரந்து இனி ஆய நெடிய ஆய
இன்பம் தழீ இய இரு பெரும் கமலம் துன்பம் தழீ இய தொண்டனேனையும்
உவப்புடன் ஒரு கால் நோக்கி பவக் கடல் கடக்கும் பரிசு பண்ணினவே –73-

(இ – ள்.) கரை பொருது ஒழுகும் – இருகரைகளையும் மோதிப் பெருகுகின்ற,
காவிரி யாறு – காவேரிநதி (ஒன்றுஉண்டு);
யாற்றிடை கிடப்பது – அவ்வாற்றினிடையே பொருந்தியிருப்பதாகிய,
ஓர் ஐந் தலை அரவு – ஐந்து தலைகளையுடையதொரு நாகம் (உண்டு);
அரவம் சுமப்பது – அத் திருவனந்தாழ்வான் தாங்குவதாகிய,
ஓர் அஞ்சன மலை – மைம்மலையொன்று (நம் பெருமாள்), (உண்டு) ;
அம்மலை பூத்தது – அந்தநீலமலையினிடத்தே மலர்ந்ததாகிய,
ஓர் அரவிந்த வனம் – ஒரு தாமரைமலர்க்காடு (திருவவயங்கள்), (உண்டு);
அரவிந்தமலர்தொறும் – அத்தாமரைமலர்கள்தோறும்,
அதிசயம் உள – ஒவ்வொரு வியப்பு உண்டு; (அஃதென்னவெனில்), –
ஒரு தாமரை – ஒரு தாமரைமலர் (இடத்திருவடி)
கடல் விளிம்பு உடுத்த – கடலாற் சுற்றிலுஞ் சூழப்பட்ட,
கண் அகல் ஞாலம் முழுது – இடமகன்ற பூமிமுழுவதையும்,
உடன் – ஒருசேர, அளந்தது -;
ஓர் பங்கேருகம் – ஒருதாமரைமலர் (வலத்திருவடி),
வகிர் இளம் பிறையான் – துண்டமாகிய இளம்பிறைச் சந்திரனை முடியிலுடைய உருத்திரனது,
வார் சடை – நீண்ட சடையில்,
தேங்க – நிறைந்து தங்கும்படி,
பகிரதி -கங்கைநதியை,
கான்றது – வெளியுமிழ்ந்தது;
ஓர் கோகனகம் – ஒருதாமரைமலர் (திருநாபி),
யாவையும் – எல்லா அஃறிணைப் பொருள்களையும்,
யாரையும் – எல்லா உயர்திணைப்பொருள்களையும்,
படைக்க – படைக்கும்படி,
நான்முகம் கோவை – பிரமதேவனை,
ஈன்றது – உண்டாக்கிற்று;
ஓர் பதுமமலர் – ஒரு தாமரைப்பூ (திருமார்பு),
திருமகட்கு – பெரியபிராட்டிக்கு,
இனிய – வசித்தற்கினியதான,
திரு மனைஆகி – அழகிய இடமாய்,
பரு மணி இமைப்பது – பருத்த கௌஸ்துபரத்தினம் விளங்கப்பெற்றது;
ஓர் முளரி மா மலர் – ஒரு அழகிய தாமரைமலர் (வலத்திருக்கை),
சங்கரன் – சிவபிரான்,
சடை தலை தாழ்த்து – சடையினையுடைய தலையினால் வணங்கி,
இரப்ப -யாசிக்க,
முடை தலை தவிர்த்தது – (அவன்கையிலொட்டிய) முடைநாற்றத்தையுடைய பிரமகபாலத்தை ஒழித்தது;
வனசமும் ஒன்று – ஒரு தாமரைமலர் (இடத் திருக்கை),
ஆங்கு – அவ்விடத்தில் (இலங்கையில்),
மண்டோதரி – மந்தோதரியென்பவள்,
அணிந்த – (கழுத்தில்) தரித்திருந்த,
மங்கல நாண் – மாங்கல்யசூத்திரத்தை,
வாங்க – இழக்கும் படி,
வில் வாங்கியது – கோதண்டத்தை வளைத்தது;
ஓர் புண்டரீகம் – ஒரு தாமரைமலர் (திருமுகமண்டலம்),
விரிந்த புகழ் – பரவிய கீர்த்தியையுடைய,
இலங்கை வேந்தற்கு – இலங்கைக்கரசனாகிய விபீஷணாழ்வானுக்காக,
தென்திசை புரிந்து – தெற்குத்திக்கை நோக்கி,
அருள் மலர்ந்தது – எப்பொழுதும் அருளோடு மலர்ந்திருந்தது;
ஓர் அம்போருகம் – ஒரு தாமரைமலர் (திருப்பவளம்),
மண் திணி ஞாலமும் – மண்ணுலகமாகிய பூமியும், வானமும் தேவலோகமும்,
உட்பட – அடங்கும்படி,
அண்டம் – அண்ட முழுவதையும்,
உண்டு – (பிரளயகாலத்தில்) உட்கொண்டு, (மீண்டும்),
உமிழ்ந்தது – (பிரளயம்நீங்கியவுடன்) வெளியேஉமிழ்ந்தது;
கடை சிவந்து – நுனி சிவந்தனவாகி,
அகன்று – விசாலமாய்,
கரு மணி விளங்கி – இடையே கரிய கண்மணி விளங்கப்பெற்று,
இடை சில அரி பரந்து – இடையிலே சில ரேகைகள் பரவப்பெற்று,
இனியஆய் – இனியனவாகியும்,
நெடியஆய் – நீண்டனவாகியும்,
இன்பம் தழீஇய – இன்பம்நிறைந்த,
இரு பெருங் கமலம் – இரண்டு பெரிய தாமரைமலர்கள் (திருக்கண்கள்),
துன்பம் தழீஇய – துன்பம் நிறைந்த,
தொண்டனேனையும் – அடியவனாகிய என்னையும்,
உவப்புடன் – மகிழ்ச்சியுடனே,
ஒருகால் நோக்கி – ஒருதரங் கடாக்ஷித்து,
பவம் கடல் – கடக்கும் பரிசு – (கடத்தற்கரிய) பிறவியாகியகடலைக் கடக்கும்படி, பண்ணின -; (எ – று.)

ஸ்ரீகாவேரிநதியினிடையி லுள்ள தீவாகிய ஸ்ரீரங்கமென்னுந் திவ்விய க்ஷேத்திரத்தில் எம்பெருமான் ஆதிசேஷ
பர்யங்கத்தின்மேற்பள்ளிகொண்டு அடியேனைக்கடாட்சித்து உய்யுமாறு செய்தன னென்பதாம்.
“அமலங்களாக விழிக்குமைம்புலனு மவன்மூர்த்தி” என்றவாறு எம்பெருமானது திருவருள் நோக்கமே உய்தற்கு ஏதுவாத லறிக.
(“ஜாயமாநம்ஹிபுருஷம் யம்பஸ்யேந் மதுஸூதந:-ஸாத்விகஸ்ஸதுவிஜ்ஞேயஸ்ஸவைமோக்ஷார்த்தஸாதக:” என்றதும் இங்குக் கருதத்தக்கது.)

“மாமுதலடிப்போ தொன்று கவிழ்த்தலர்த்தி, மண்முழுது மகப்படுத்து, ஒண்சுடரடிப்போதொன்று விண்செலீஇ,
நான் முகப்புத்தேள் நாடுவியந்துவப்ப, வானவர் முறை முறை வழிபட நெறீஇத்,
தாமரைக்காடு மலர்க்கண்ணொடு கனிவாயுடைய,…. முடிதோளாயிரந் தழைத்த,
நெடியோய்க்கல்ல தடியதோ வுலகே” என்ற பாசுரம் இங்கு ஒருசார் ஒப்புநோக்கத்தக்கது.

“சரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப், பெரியவாய கண்க ளென்னைப் பேதைமைசெய்தனவே” என்றார் திருப்பாணாழ்வாரும்.

இதனுள் பத்துத்தாமரையும் ஒன்பது அதிசயமுங் காண்க.

முதலைந்தடிகளில் ஒருசொல்லைப் பற்றி ஒன்றை விடுதலாகிய ஏகாவளியலங்காரம் காண்க.
அரவிந்தம், தாமரை, பங்கேருகம், கோகநகம், பதுமமலர், முளரி, வனசம், புண்டரீகம், அம்போருகம், கமலம்
என்ற தாமரையின் பரியாயமொழிகளாகப் பத்துப்பதங்கள் வந்திருப்பது – பொருட்பின்வருநிலையணி.

பகிரதி – பாகீரதியென்பதன் விகாரம். பகீரதனென்னுஞ் சூரியகுலத் தரசனால் தேவலோகத்தினின்றும்
பூமிக்குக் கொணரப்பட்ட தென்பது பொருள். பங்கேருஹம்.- சேற்றில் முளைப்பது; பங்கம் – சேறு.
கோகனகம் – கோகநத மென்பதன் விகாரம்; சக்கரவாகப்பறவைகள் கூடிக் குலாவுவதற்கு இடமாயிருப்பதென்றும்,
கோக மென்னும் நதியில் மிகுதியாய்த் தோன்றுவதென்றும் பொருள்.
ஆங்கு – அப்பொழுது (ஸ்ரீராமாவதாரத்தில்) என்றுமாம். மண்டோதரி – மந்தோதரி; இராவணன்மனைவி: சிறியவயிறு டையாளென்பது பொருள்.
இவள், பஞ்சகன்னிகைகளில் ஒருத்தி; (மற்றையோர் – அஹல்யா, திரௌபதி, சீதை, தாரை.)
மங்கலநாண்வாங்குதல் – அமங்கலியாதல். வநஜம் – நீரில் முளைப்பது.

இது, ஈற்றயலடி முச்சீரடியும், மற்றை யடிகளெல்லாம் நாற்சீரடிகளுமாக வந்த நேரிசையாசிரியப்பா.

————

தலைவனைப் பிரிந்த தலைவி கார் காலம் கண்டு வண்டுகளை நோக்கி இரங்கிக் கூறுதல்
74-பண் கொண்ட வேய் ஊது செவ்வாய் அரங்கேசர் பைம்பொன்னி நாட்டு
எண் கொண்ட பேராசை தந்தார் மறைந்தார் கொல்-இசை வண்டுகாள்
விண் கொண்ட மலை மீது விண் மாரி பொழிகின்ற விசை போலே என்
கண் கொண்ட மலை மீது கண் மாரி பொழிகின்ற கார் காலமே –74-

(இ – ள்.) இசை வண்டுகாள் – இசைபாடுகின்ற வண்டுகளே! –
பண் கொண்ட – இசைகளைக் கொண்ட,
வேய் – வேய்ங்குழலை ஊது – (கிருஷ்ணாவதாரத்தில்) ஊதிய,
செம் வாய் – சிவந்த வாயினையுடைய,
அரங்கேசர் – ரங்க நாதரது,
பைம் பொன்னி நாடு – குளிர்ந்த காவிரிசூழ்ந்த நாட்டில்
எண் கொண்ட பேராசை – எண்ணமுழுவதுங் கொண்ட மிக்க ஆசையை,
தந்தார் – தந்து சென்றவர், –
விண் கொண்ட – ஆகாயத்தை அளாவிய,
மலைமீது – மலையின்மேல்,
விண் மாரி பொழிகின்ற – வானம் மழையைப் பெய்கின்ற,
விசை போல – வேகம்போல,
என் – எனது,
கண் கொண்ட – கண்பொருந்திய,
மலைமீது – மலைகளின் (முலைகளின்) மேலே,
கண் மாரி பொழிகின்ற – கண்ணீர்மழையைச் சொரிகின்ற,
கார் காலம் – மழைக்காலத்தை,
மறந்தார் கொல் – மறந்தாரோ? (எ – று.) – மறவாராயின், முன்னமே வந்திருப்ப ரென்றபடி.

இது, புணர்ந்து பருவங்குறித்துப் பிரிந்து சென்ற தலைமகன், தான் குறித்த கார்காலம் வந்தவிடத்தும் வாராமலிருக்க,
அதனால் வருத்தங் கொண்ட தலைவி, வண்டுகளை முன்னிலைப்படுத்தி இரங்கிக் கூறியது.
இசைவண்டுகாள் என்பதற்கு – புகழையுடைய வண்டுகளே யென்று பொருள்கொண்டு, நீங்கள் இதுவரையில்
என்போல்வார்பலர்க்குத் தூது சென்று நன்மைசெய்து புகழ்படைத்ததுபோல இப்பொழுதும் எனது நிலைமையை
எனது தலைவர்க்கு உரைத்து எனக்கு இன்பமுண்டாக்கி இன்னமும் புகழ்படைப்பீரா மென்று கூறுதலு மொன்று.

தன்பாற்சிறிதும் இரக்கமின்றிப் பிரிந்துசென்ற தலைவரது பெயரைவெ ளிப்படையாகச் சொல்லவும் விருப்பங்கொள்ளாமல்
“ஆசைதந்தார்” எனச் சுட்டிக்கூறினள். கார்காலத்தில் வானம் மலைமீது மழையைப்பொழிவது போலவே,
எனது தலைவன் தான் குறித்துச்சென்ற பருவம் வந்தும் வாராதது கண்டு எனது கண்களும் இக்காலத்து
முலைமலைமேல் மழைபொழி கின்றனவென்பது, பின்னிரண்டடிகளிற் போந்த பொருள்.
“முலைமலை மேனின்றும் ஆறுகளாய், மழைக்கண்ணநீர் திருமால் கொடியா னென்று வார்கின்றதே” என்றார், நம்மாழ்வாரும்.

இதற்கு யாப்பிலக்கணம், 68 – ஆங் கவியிற் கூறியதே.

——————

கைக்கிளை
75-காரகமோ நம் வட திருவேங்கடக் காரர் வரையோ
நீரகமோ நெடு வானகமோ துயில் நீடு பணிப்
பேர் அகமோ தென் திரு அரங்கப் பெரும் கோயில் என்னும்
ஊரகமோ இடம் தண் காவில் நின்ற ஒருவருக்கே –75-

(இ – ள்.) தண் காலில் நின்ற – குளிர்ச்சிபொருந்திய சோலையில் நின்ற,
ஒருவருக்கு – (யான்கண்ட தலைமகளுக்கு),
இடம் – வசித்தற்கிடமாவது, –
காரகமோ – மேகமண்டலமோ? நம் – நமது,
வட திருவேங்கடம் – வடக்கின்கண் உள்ள திருவேங்கடமென்னும்,
கார் வரையோ – பெரிய மலையோ?
நீரகமோ – நீரினிடமோ?
நெடு வானகமோ – பெரிய தேவலோகமோ?
துயில் நீடு பணி பேர் அகமோ – தூக்கம்மிக்க பாம்புகளின் பெரியஇடமாகிய நாகலோகமோ?
தென் திருவரங்கம் பெருங் கோயில் என்னும் ஊரகமோ – அழகிய திருவரங்கம் பெரியகோயிலென்கிற ஊரினிடமோ? (எ – று.)

இது, தலைமகளைக் கண்ணுற்ற தலைமகன், இங்ஙனந் தோன்றாநின்ற இவள் தெய்வமோ? அன்றி மக்களுள்ளாளோ?
வென்று ஐயுற்றது. “போதோ விசும்போ புனலோ பணிகளதுபதியோ, யாதோ வறிகுவ தேது மரிதி யமன் விடுத்த,
தூதோ வனங்கன் றுணையோ விணையிலி தொல்லைத் தில்லை, மாதோ மடமயிலோவெனநின்றவர்வாழ்பதியே” என்றார் கோவையாரிலும்.
“ஊரும் பேருங் கெடுதியும் பிறவும், நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறித், தோழியைக் குறையுறும் பகுதியும்” என்றபடி
தலைவியும் தோழியும் ஒருங்கிருந்த சமயம் நோக்கித் தலைவன் அங்குச்சென்று தன்கருத்தைக்குறிப்பிப்பதற்கு
ஒருவியாஜமாக ஊர்வினாவியது இது. “பதியொடு பிறவினாய் மொழி பல மொழிந்து, மதியுடம்படுக்க மன்னன் வலிந்தது” என்பதுங் காண்க.

மின்னற்கொடி போன்றமையாற் காரகமோ வென்றும், வரையரமக ளிர் போன்றமையால் வடதிருவேங்கடக்கார்வரையோ வென்றும்,
நீரர மகளிர் போன்றமையால் நீரகமோவென்றும், வானரமகளிர் போன்றமையால் வானகமோ வென்றும்,
நாககன்னியர் போன்றமையால் துயில்நீடு பணிப்பேரகமோ வென்றும், மானுடமாதர்போன்றமையால்
தென்றிருவரங்கப் பெருங்கோயிலென்னு மூரகமோ வென்றும் விகற்பித்துக் கூறினான்.
காரகம், நீரகம், பேரகம், ஊரகம் என்பன தொண்டைநாட்டுத் திருப்பதிகள் இருபத்திரண்டிற் சேர்ந்துள்ள திருப்பதிகட்குத்
திருநாமங்களாதலால், தண்காவினின்ற ஒருவர்க்கு அத்திருப்பதிகளுள் ஏதேனுமொன்றுதானோ இடம்? என்ற
மற்றொரு பொருளும் இங்குக் கொள்ளத்தக்கது. இப்பொருளில் ஊரக (ஆதிசேஷன்) சம்பந்தமுள்ளது ஊரகம் ஆதலால்,
திருவரங்கந் திருப்பதிக்கும் ஊரகத்திற்கும் அபேதமாக “திருவரங்கப்பெருங்கோயிலென்னு மூரகமோ” என்றா ரென்க.

இனி, தலைமகள் கூற்றாய், காரகம் முதலிய திருப்பதிகளாகவுமாம்.

இது, நேரசை யாதியதாகிய கட்டளைக்கலித்துறை.

————–

76- ஒரு நயம் பேசுவன்
திரு அரங்கேசர் தாள்
மருவுமின் நாசம் ஆம்
கருமவன் பாசமே –

(இ – ள்.) (உலகத்தீரே)! ஒருநயம் பேசுவன் – ஒரு நல்வார்த்தை சொல்வேன்: (கேளுங்கள்; அது எதுவென்றால்), –
திருவரங்கேசர் தாள் மருவுமின் – ஸ்ரீரங்கநாதரது திருவடிகளைச் சேருங்கள் (என்பதே);
(அதனாலு ண்டாகும் பயனென்னை யெனின்), –
கருமம் வல் பாசம் நாசமாம் – வினைகளாகிய வலிய பந்தங்கள் அழிந்து போய்விடும் (மோக்ஷமுண்டாகும்); (எ – று.)

ஸ்ரீரங்கநாதனது திருவடிகளைப் பற்றுங்கோள்; உமது இருவினையும் நீங்கி நீவிர் நற்கதிபெறுவீரென்று
உலகத்தோர்க்கு உபதேசித்தவாறு. இங்கு இருவினைபோதற்கு எம்பெருமானது திருவடியைப்பற்றுகை சாதனமாமெனின், ஆகாது;
பிரபந்நாதிகாரிக்கு இஃது அதிகாரி விசேஷணமாம். எம்பெருமானது நிர்ஹேதுக கடாக்ஷமல்லது மற்றொன்றை உபாயமாகக்கொள்வது –
அரசன்பக்கல் ராஜ்யத்தைப் பெறுதற்கு எலிமிச்சம்பழமீதலை உபாயமாகக்கொள்ளுதல்போலு மென்க. விரிக்கிற் பெருகும்.
நல்வினையும் பிறப்பிற்கு ஏதுவாதலால், “கருமவன்பாசம்” எனப் பொதுப்படக்கூறினர். வினையைப் பாசமாக உருவகப்படுத்தியது,
தம் இஷ்டப்படி எவ்வழியும் செல்லவொட்டாது பிணிப்புண்ணப்பண்ணுதலால்.

இது, – இருசீரும் விளச்சீராகிய குறளடிநான்குகொண்ட வஞ்சித்துறை.

————-

தலைவி இரங்கல்
77- பாசம் ஆம் அடியார் பால் நேசம் ஆம் அடிகளும்
பைம்பொன் ஆர் ஆடையும் செம்பொன் மா மேனியும்
ஆசை ஆம் மலர் உளாள் வாசம் ஆர் அகலமும்
அஞ்சல் என்று அருள் செயும் கஞ்சமும் கருணையன்
தேசு உலா வதனமும் மாசு இலா முறுவலும்
சீரிதாய் எழுது கத்தூரி நாமமும் எனக்கு
ஈசனார் திரு அரங்கேசனார் திகிரியும்
இலகு வெண் சங்குமே உலகம் எங்கும் எங்குமே –77-

(இ – ள்.) உலகம் எங்கு எங்கும் – எல்லாவுலகங்களிலும் எல்லாவிடமும், –
எனக்கு ஈசனார் – எனக்குத் தலைவராகிய, திரு அரங்கேசனார் – ஸ்ரீரங்கநாதரது,
பாசம் ஆம் அடியர்பால் – (தம்பக்கல்) அன்புள்ள அடியார்களிடத்தில்,
நேசம் ஆம் – கருணையுள்ள,
அடிகளும் – திருவடிகளும்,
பைம்பொன் ஆர் ஆடையும் – பசும்பொன் மயமான பீதாம்பரமும்,
செம் பொன் மா மேனியும் – செவ்விதாய் அழகிய பெரிய (கரிய) திருமேனியும்,
ஆசை ஆம் மலர் உளாள் – (மிக்க) காதலை யுடைய தாமரைப்பூவி லுறைகின்ற திருமகளுக்கு,
வாசம் ஆர் – தங்குமிடமாகப் பொருந்திய,
அகலமும் – திருமார்பும்,
அஞ்சல் என்று அருள் செயும் – (தன்னையடைந்தாரை) அஞ்சற்க வென்றுசொல்லிப் பாதுகாக்கின்ற,
கஞ்சமும் – தாமரைமலர்போன்ற அபய ஹஸ்தமும்,
கருணையின் தேசு உலா – அருளினது ஒளி விளங்குகின்ற,
வதனமும் – திருமுகமண்டலமும்,
மாசு இலா முறுவலும் – மறுவில்லாத புன் சிரிப்பும்,
சீரிது ஆய் எழுது கத்தூரி நாமமும் – சிறப்பினையுடைத்தாம்படி கஸ்தூரியால் எழுதப்பட்ட திருநாமமும் (திலகமும்),
திகிரியும் – சக்கரமும்,
இலகு வெள் சங்குமே – விளங்குகின்ற வெண்மையாகிய சங்கமுமேயாகும்; (எ – று.)

தலைவனைக்கூடிப்பிரிந்த தலைமகள் எப்போதும் தலைவனைக்குறித்தே சிந்தித்துக்கொண்டிருத்தல்பற்றிச் சிந்தனையின்
மிகுதியால் அத்தலைவனது உருவம் எங்குந்தோன்ற, உண்மையில் தலைமகனே யென்று எண்ணி முயங்கப் புக,
அஃது மெய்ப்புலனாகாது நிற்கவே, ஆற்றாளாகிய தலைவி இரங்கிக் கூறியது, இது.

திருவடிகள் தம்மையடைந்தார்க்கு முத்தியளித்தல் பற்றி, “பாசமாமடியர்பானேசமாமடிகளும்” என்றார்.
திருவடிகள் முதலியன மனத்தைக் கவர்தல்பற்றிப் பாராட்டிக்கூறப்பட்டன.
“நாயன்தே! ஆஸநபத்மத்திலே அழுத்தியிட்ட திருவடித்தாமரைகளும் அஞ்சலென்றகையும் கவித்தமுடியும்
முறுவல்பூரித்த சிவந்ததிருமுகமண்ட லமும் திருநுதலில் கஸ்தூரித் திருநாமமும் பரமபதத்திலே கண்டிலேனாகில்
ஒரு மூலையடியிலே முறித்துக்கொண்டு குதித்து மீண்டுவருவேன்” என்பது, இந்நூலாசிரியரின் ஆசார்யரான ஸ்ரீபட்டர்வார்த்தை.
அடிகள் முதலியன பலவிடங்களிலிருப்பதாகக் கூறியது – சிறப்பணியின்பாற்படும்.

“மார்பகலம்” என்னும் பாடத்துக்கு, அகலமாகிய மார்பென்க.

இது, எல்லாச்சீரும் விளச்சீராகிய எண்சீராசிரியவிருத்தம்.

————–

தலைவன் இடம் அணித்து என்றல்
78–எங்கணும் நிறைந்து உறையும் எம்பிரான்
கொங்கு அணுகி வண்டு முரல் கோயில் சூழ்
உங்கள் வரை எங்கள் வரை ஒன்றியே
மங்கை உன்ன கொங்கைகளை மானுமே –78–

(இ – ள்.) எங்கணும் – எல்லாவிடத்திலும்,
நிறைந்து உறையும் – அந்தரியாமியாய்த் தங்கி வசிக்கின்ற,
எம்பிரான் – நம்பெருமாளது,
வண்டு – வண்டுகள்,
கொங்கு அணுகி – தேனுக்காக நெருங்கி,
முரல் – ஆரவாரிக்கின்ற,
கோயில் – திருவரங்கத்தை,
சூழ் – சூழ்ந்த,
உங்கள் வரை – உங்களது – மலையும்,
எங்கள் வரை – எங்களது மலையும்,
ஒன்றி – நெருங்கி,
மங்கை – பெண்ணே!
உன் கொங்கைகளை – உனது தனங்களை,
மானும் – ஒத்திருக்கும்; (எ – று.)

இது, பிரியக் கருதிய தலைமகன், தலைமகள் அதற்கு உடம்படுவது காரணமாக, அவளைத் தன் ஊரினணிமை கூறி வற்புறுத்தியது.

எம்பிரானது கோயிலென இயையும். மங்கை – அண்மைவிளி. வரை ஒன்றிக் கொங்கைகளை மானு மென்றது,
கொங்கைகள் ஒன்றுக்கொன்று மிகநெருங்கியிருக்குமாறு போல, உனது இடமும் எமது இடமும், மிகவும் அணித்தென்றபடி.
இதனால் கொங்கைகளது மிக்க வன்மையும், பருமையுந் தொனிக்கின்றது. மகளிர்க்குத் தனங்கள்நெருங்கியிருத்தல், உத்தம விலக்கணம்.
எம்பெருமான் எல்லாப்பொருள்களிலும் அந்தர்யாமியாக வாழ்வனென்று சொல்லுமிடத்து அவ்வப்பொருள்களிலுள்ள
குற்ற நற்றங்களும் அவ்வெம்பெருமானைப்பற்றாவோ? என்னின், பற்றாது;
ஓருடம்பினிடத்தே வாழும் ஆத்மாவுக்கு அவ்வுடம்பைப் பற்றிவரும் இளமை முதுமை முதலியன பற்றாதவாறுபோல வென்க.

இது, முதலிரண்டுங் கூவிளங்காய்ச்சீர்களும், ஈற்றது கூவிளச்சீருமாகிய சிந்தடி நான்கு கொண்ட வஞ்சிவிருத்தம்.

————-

நாரையை நோக்கித் தலைவி இரங்கிக் கூறல்
79-மான் ஆர் கேசன் மேலார் மால் ஆய் வாழ் கோயில்
தேன் ஆர் காவில் பூ ஆராயும் தேனே போல்
நானா போகத்து இன்பம் கண்டார் நான் வாடப்
போனார் வாராது ஏதோ ஓதாய் போதாவே –79-

(இ – ள்.) போதாவே – பெருநாரையே! –
மான் ஆர் கேசன் – கங்கைமகள் பொருந்திய சடைமுடியினையுடைய உருத்திரன் முதலிய,
மேலார் – தேவர்கள், மால் ஆய் – பேரன்புகொண்டு,
வாழ் – வந்து தங்குகின்ற,
கோயில் – திருவரங்கத்தில்,
தேன் ஆர் காவில் – தேன் நிறைந்த சோலையில்,
பூ ஆராயும் – மலர்கள் தோறும் ஆராய்ந்து இனிதாய்த் தேனுண்கின்ற,
தேனே போல் – வண்டுகளைப்போல, –
நானா போகத்து இன்பம் – பலவகைப்பட்ட போகசுகங்களை,
கண்டார் – அனுபவித்தவரும்,
நான் வாட போனார் – நான் வாட்டமடையும்படி பிரிந்துபோனவருமாகிய தலைவர்,
வாராது – மீண்டும் வாராமை,
ஏதோ – யாது காரணத்தாலோ? ஓதாய் – சொல்லு; (எ – று,)

தலைமகளைப் புணர்ந்து பிரிந்து சென்ற தலைமகன் வெகுகாலமாகியும் மீண்டுவராமை கண்டு, தலைவி,
நாரையை நோக்கி யிரங்கிக் கூறியது, இது.
“பூவாராயுந் தேனேபோல் நானாபோகத் தின்பங்கண்டார்…. போனார் வாராதேதோ” என்றதனால்,
அத்தலைவர் உத்தமஜா திஸ்திரீகளாகிய பத்மினிகளிருக்குமிடமெல்லாஞ் சென்று அன்னாருடைய இன்பத்திற் பழகியவராதலின்
இப்போது எந்த மங்கையின் இன்பத்தில் மூழ்கியிருக்கின்றாரோ? என்றும், பலமகளிரது இன்பந்துய்த்தவ ராதலின்
என்னொருத்தியின்பத்திற் கருத்தைச் செலுத்தாது என்னை வருந்தும்படி விட்டுப் பிரிந்துசென்றாரென்றும் இரங்கிக் கூறியவாறு.

கேசம் – மயிர்: அதனையுடையவன் கேசன். மேலா ரென்பதற்கு – மேலுலகத்தவ ரென்றும்,
மேன்மையையுடையவ ரென்றுங் கொள்க. போதா பெருநாரை.

இது, முதல் நான்குந் தேமாச்சீர்களும், ஈற்றது தேமாங்காய்ச்சீருமாகிய கலிநிலைத்துறை.

————-

மதங்கு -மடக்கு –
80-போத எனக்கு எளிது ஆனார் போதவனுக்கு அரிது ஆனார்
நாதர் அரங்கர் திருத் தாள் நாடி அரங்கில் நடக்கின்
ஓதும் மதங்கி நடித்தால் உள்ளம் அது அங்கி அரக்கு ஆம்
வேதம் அறைந்திட வல்லீர் விரைய மறைந்து விடீரே –80-

(இ – ள்.) வேதம் அறைந்திட வல்லீர் – வேதமோத வல்லவர்காள்!-
போத எனக்கு எளிது ஆனார் – அடியனாகிய எனக்கு மிகவும்எளிமையான வரும்,
போதவனுக்கு அரிதுஆனார் – தாமரைமலரில் தோன்றிய பிரமனுக்கு அருமையானவருமாகிய,
நாதர் அரங்கர் – ரங்கநாதரது,
திரு தாள் – திருவடிகளை,
நாடி – சேவிக்க விரும்பி,
அரங்கில் – அங்குள்ள சபையில்,
நடக்கின் (நீங்கள்) செல்லுமிடத்து, (அங்கு),
ஓதும் மதங்கி -சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற மதங்கியானவள்,
நடித்தால் – நடனஞ்செய்தால்,
உள்ளமது – (அதனைக்காண்பவரது) மனமானது,
அங்கி அரக்கு ஆம் – நெருப்பிலிட்ட அரக்குப்போலக் கரைந்து உருகிப்போம்; (ஆகையால்),
விரைய மறைந்து விடீர் – விரைவாக மறைந்துசெல்லுங்கள்; (எ – று.)

மதங்குஎன்றும், மதங்கமென்றும், மதங்கியாரென்றும் வழங்குவர். இரண்டு கைகளிலும் வாளையெடுத்துச் சுழற்றிக்கொண்டு
தானும் சுழன்று ஆடுவாளோ ரிளமாதின் அழகுமிகுதியை ஒருவன் பாராட்டிக்கூறுவதாகச் செய்யுள்செய்வது, இதன் இலக்கணம்.
அங்ஙனம் ஆடுபவள், மதங்கி யெனப்படுவள். மதங்கி – ஆடல் பாடல் வல்ல பதினாறுவயதுப்பெண்.

“போதவெனக்கெளிதானார் போதவனுக்கரிதானார்” –
“பத்துடையடியவர்க் கெளியவன் பிறர்களுக் கரிய வித்தகன்” என்றார் ஆழ்வாரும்.
அரங்கு – நடன மண்டபம். அங்கியரக்கு – நெகிழ்ந்து கரைந்து உருகுதலில் உவமம். அங்கி = அக்நி; வடசொற்சிதைவு.
“வினையைமறந்துவிடீர்” என்னும் பாடத்துக்கு – நீங்கள் செய்யும் வைதிக கருமங்களை மறந்துவிடுங்க ளென்க.

இது, எல்லாச்சீரும் மாச்சீர்களாகிய அறுசீரடியாசிரியவிருத்தம்.

——————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கக் கலம்பகம் –41-60-

February 19, 2022

இறுதி மடக்கு
41-திருவரங்கம் திருக் கோயில் சேர்ந்து உமது திருக்கு ஒயில்
தருவர் என்றும் வைகும் தம் தயங்கு ஒளி சேர் வைகுந்தம்
ஒரு மருங்கில் நந்து உடையார் ஒழிந்தோர் சனனம் துடையார்
மருவ மறந்திருப்பீரே வணங்க மறந்து இருப்பீரே –41-

(இ – ள்.) வணங்க – (எம்பெருமானை) வணங்குதற்கு,
மறந்திருப்பீரே – மறந்திருப்பவர்களே! – (நீங்கள்), –
திரு அரங்கம் திரு கோயில் – திருவரங்கம் பெரியகோயிலை,
சேர்ந்து – அடைந்து,
உமது – உங்களது,
திருக்கு – மாறுபாடு,
ஓயில் – ஒழிந்தால், –
ஒரு மருங்கில் நந்து உடையார் – ஒரு (இடது) பக்கத்திற் சங்கத்தையுடைய அவ்வரங்கநாதர்,
என்றும் – எந்நாளும்,
வைகும் – (தாம்) வீற்றிருக்கின்ற,
தம் – தமது,
தயங்கு ஒளி சேர் – விளங்குகின்ற ஒளி பொருந்திய,
வைகுந்தம் – பரமபதத்தை,
தருவர் – கொடுத்தருளுவர்;
ஒழிந்தொர் – அவரொழிந்த மற்றைத்தேவர்கள்,
சனனம் துடையார் – பிறப்பைப் போக்கமாட்டார்கள்; (ஆகையால்),
மருவ – (அந்த எம்பெருமானையே) சென்று – சேரும்படி,
மறம் – (உங்கள்) மாறுபாட்டை, திருப்பீர் – மாற்றுங்கள்; (எ – று.)

திருவரங்கம் பெரியகோயிலை யடைந்து உங்கள் மாறுபாட்டை யொழிப்பீராயின் எம்பெருமான்
உங்கள் பிறவிப்பிணியை யறுத்து முத்தியளிப்பனென்பதாம்.

திருக்கு – அகங்கார மமகாரங்கள். ஒழிந்தொர் – ஒழிந்தோ ரென்பதன் குறுக்கல்.
ஒழிந்தோர் சனனந் துடையார் – திருமாலை யொழிந்த மற்றைத் தேவர்கள் தம்மைச் சரணமடைந்தவரது
பிறப்பை யறுக்கும் ஆற்றலில்லாதவ ரென்க;
இனி, இதற்கு – அவ்வெம்பெருமான் திருவரங்கத்தை யடைந்தவரல்லாதவரது பிறவியைத் துடையா ரென்றுமாம்.

இது, அடிதோறுந் தனித்தனியே வந்த இறுதி முற்று மடக்கு.

இது, விளங்காய்ச்சீரும் மாங்காய்ச்சீரும் விரவிவந்த கொச்சகக்கலிப்பா.

—————

சித்து
42-திருப் பொற் பாவைக்குக் கஞ்சம் பொன் ஆக்கிய சித்தரேம் சுத்தக் காயா மலர் என
உருப் பொற்பு ஆன திரு அரங்கேசனார் ஊரகத்து நின்றார் சென்று இறைஞ்சினோம்
இருப்புப் பாடகம் காட்டினர் யாம் அவர்க்கு இரும்பை ஆடகம் ஆக்கினெம் ஈயத்தை
நருக்கி வெள்ளிய து ஆக உருக்குவோம் நமது வித்தைக்கு அமுதே அருமையே –42-

(இ – ள்.) திரு – அழகிய, பொன்பாவைக்கு – பொற்பதுமை செய்தற்கு (அழகிய திருமகளுக்கு),
கஞ்சம் பொன் ஆக்கிய – வெண்கலத்தைப் பொன்னாகச் செய்து கொடுத்த (பொற்றாமரைமலரைச் செய்துகொடுத்த),
சித்தரேம் – சித்தர்கள் (யாங்கள்);
சுத்த காயா மலர் என – தூயதாகிய காயாம்பூப்போல,
உரும் பொற்பு ஆன – வடிவழகு பொலிவுபெற்ற,
திருஅரங்கேசனார் -,
ஊரகத்து நின்றார் – ஊரினிடத்தில் நின்றார் (திருவூரகமென்னுந் திருப்பதியில் நின்றதிருக்கோலமா யெழுந்தருளியிருந்தார்);
சென்று இறைஞ்சினோம் – (அங்குச்) சென்று (அவரை) வணங்கினோம்; (அப்பொழுது அவர்),
இருப்பு பாடகம் காட்டினர் – இரும்பினாலாகியதொரு பாடகமென்னுங் காலணியைக் காண்பித்தார்
(பாடகமென்னுந்திருப்பதியைத் தாம்வீற்றிருக்குமிடமாகத் தெரிவித்தார்);
யாம் -, அவர்க்கு -, இரும்பை ஆடகம் ஆக்கினெம் – இரும்பைப் பொன்னாகச்செய்து தந்தோம்
[பெரிய (காளியனென்னும்பாம்பின்) படத்தை நடிக்குமிடமாகச் செய்தோம்];
ஈயத்தை நருக்கி -, வெள்ளியது ஆக – வெள்ளியாக (வெண்மையையுடையதாக), உருக்குவேம் -;
(இதுவெல்லாம் அருமையன்று) ; நமது வித்தைக்கு -,
அமுதே – உணவு (முத்தியுலகம்),
அருமையே – கிடைத்தற்கரிய தாமே? (அரியதன்று என்பதாம்); (எ – று.)

இரசவாதிகள் தமது திறமையை ஒருதலைவனுக்கு எடுத்துக்கூறுவதாகச் செய்யுள்செய்தல்,
சித்து என்னும் உறுப்பின் இலக்கணமாம்; இரசவாதமாவது – ஒருலோஹத்தை மற்றொருலோஹமாக மாற்றுதல்.

சித்தரென்பவர் – இரும்புமுதலிய தாழ்வான லோஹங்களைப் பொன் முதலிய உயர்ந்த லோஹங்களாகச் செய்யும் வல்லமையுள்ளவர்.
எம்பெரு மானைச்சரணமடைந்தோர் தாம் அப்பிரானையடைதற்குமுன்பிருந்த தாழ்வான நிலையினின்று மாறி
உயர்ச்சிபெறுவரென்பது, இங்குக் கருதத்தக்கது. இச்செய்யுள் – சிலேடையாக மற்றோர்பொருள் தருகின்ற நயம் பாராட்டத் தக்கது.
அடுத்த செய்யுளிலும் இங்ஙனமே காண்க.

கஞ்சம் – வெண்கலத்தைக் குறிக்கும்போது காம்ஸ்யமென்னும் வட மொழியின் சிதைவு.
சித்தர் – சித்திபெற்றவர். ஊரகம் – உலகளந்தபெருமாள் கோவில்.
பாடகம் – பாண்டவதூதர் சந்நிதி. பாடகம் – காலணியைக் குறிக்கும்போது பாதகடகமென்னும் வடசொல்லின் மரூஉ.
ஆடகம் – பொன்னைக் குறிக்கும்போது ஹாடகமென்னும் வடமொழியின் விகாரம்; நால்வகைப் பொன்களில் ஒன்று.
உள்ளுறை பொருளில் ஆடு அகமென வினைத் தொகை. வித்தை – வித்யை.

இது, முப்பத்தேழாங் கவி போன்ற கட்டளைக்கலிப்பா.

—————

(42)
(இதுவும் அது.)

43-அரும்பித் தளை அவிழ் நாள் மாலை மார்பன் அரங்கன் எங்கள்
பெரும் பித்து அளையும் பிறப்பு அறுத்து ஆண்ட பிரான் சித்தரேம்
தரும்பித்தளையும் தாராவும் பொன் ஆக்கித் தருவெம் அப்பா
திரும்பித்து அளையினும் நெய் பால் அமுதினும் சிந்தனையே –43-

(இ – ள்.) அரும்பி – (முன்னர்) அரும்பாகி,
தளை அவிழ் – (பின்பு) முறுக்குவிரிந்து மலர்ந்த,
நாள் மாலை – அன்றலர்ந்த பூமாலையையணிந்த,
மார்பன் – திருமார்பையுடையவனும்,
எங்கள் – எங்களது,
பெரும் பித்து அளையும் பிறப்பு – பெருமயக்கம் பொருந்திய பிறவியை,
அறுத்து – போக்கி,
ஆண்ட – அடிமைகொண்ட,
பிரான் – தலைவனுமாகிய அரங்கநாதனது,
சித்தரேம் – சித்தர்கள் (யாங்கள்);
தரும் – தரப்பட்ட,
பித்தளையும் – பித்தளையையும்,
[தரும் பித்தளையும் – (திருமாலுக்குப்) பித்துத்தருகின்ற திருமகளையும்,]
தராவும் – தராவையும் (பூமிதேவியையும்),
பொன் ஆக்கி தருவெம் – பொன்னாகச்செய்துகொடுப்போம்;
அப்பா -! (அங்ஙனமாகவும் எங்களுக்கு),
சிந்தனை – மனம்,
அளையினும் – வெண்ணையிலும்,
நெய் – நெய்யிலும்,
பால் அமுதினும் – பால்தயிர்களிலும், திரும்பித்து -; (எ – று.)

இச்செய்யுளில், சிலேடை யென்னும் பொருளணியோடு, திரிபு என்னுஞ் சொல்லணியும் அமைந்திருத்தல் காண்க.
தரா – ஒருவகை லோஹம். பொன்னென்பது – வெண்பொன் கரும்பொன் முதலாக எல்லா வுலோகங்களுக்கும் பொதுப்பெயராகவும் வருதலால்,
பித்தளையையுந் தராவையும் பொன்னாக்குவே மென்றார்.
தரும்பித்தள் – பித்துத்தருமவள்; “பித்தர் பனிமலர் மேற்பாவைக்கு” என்றார் திருமங்கையாழ்வாரும்.
திருமகனைப் பொன்னாக்குதல் – பொன்னென்னும் பெயருடையவ ளாக்கல்;
நிலமகளைப் பொன்னாக்குதல் – பொன்னை யுடையவளாக (வசுமதியாக)ச் செய்தல்.
தரா – ஆகாரவீற்றுவடமொழி ஈறுதிரியாது நின்றது. அப்பா – இங்கே சித்தர்கள் வழங்குவதோர் சொல்விழுக்காடு;
“தெரிசித்து நேசமுடன் பூசித்துந் திரிகின்ற சித்த ரப்பா” என்றார் இரட்டையரும்.
திரும்பிற் றென்பது, எதுகைநோக்கி மரூஉவாய் நின்றது. இச்செய்யுளில் எங்கட்கு வெண்ணெய் முதலிய சிறு பொருள்களைக்
கொடுப்பீராயின் மிகப்பெரிய தொழில்களைச் செய்து தருவோ மென்று தோன்றுதல் காண்க.

இது, நிரையசை முதலதான கட்டளைக்கலித்துறை.

————

44-சிந்திக்கத் தித்திக்கும் செவ்வாய் துவர்த் துப்பு ஆம்
புந்திக்குளே இன்புளி மேவும் நம் தம்
கரு அரங்கம் தைத்து அழலும் காவிரியின் ஊடே
திருவரங்கத்தே வளரும் தேன் –44-

(இ – ள்.) காவிரியின் ஊடு – திருக்காவேரியின் நடுவில்,
திருவரங்கத்து -, வளரும் – திருக்கண்வளர்ந்தருளுகின்ற,
தேன் – (இன்பஞ்செய்தலால்) தேன்போன்ற கடவுள், –
சிந்திக்க – மனத்தினால் நினைத்துத் தியாநஞ் செய்யும் பொழுது,
தித்திக்கும் – இனித்திருக்கும்;
செவ் வாய் துவர் துப்புஆம் – மிகச் சிவந்த பவழம் போன்ற வாயோடு கூடியிருக்கும்;
புந்திக்குளே – அறிவினுள்ளே,
இன்பு உளி – நினைக்க நினைக்க இன்பந்தந்து,
மேவும் – பொருந்தும்;
நந்தம் – நமது,
கரு அரங்கம் – கர்ப்பமாகிய சிறு வீட்டை,
கைத்து அழலும் – கோபித்து ஒழிக்கும்; (எ – று.)

திருவரங்கத்தே வளரும் தேன் – ஸ்ரீரங்கத்தில் ஆதிசேஷசயனத்தில் யோகநித்திரை செய்தருளுகின்ற திருவரங்கநாத னென்க.
உலகத்திலுள்ள தேன் இன்சுவை யொன்றையே உடையது;
திருவரங்கத்தே வளருந் தேன் தித்திப்பு முதலிய அறுவகைச் சுவையையு முடைய தென வியந்தவாறு,
எம்பெருமான் பேரின்ப மயமானவ னாதலின், அவனைத் தேன் என உருவகஞ் செய்தனர்.

உளி – உள்ளி, இதனுள் தித்திப்பு, துவர்ப்பு, உப்பு, புளிப்பு, கைப்பு, கார்ப்பு என்னும் அறுசுவையுஞ் சொல்லால்
அடுக்கி வந்தது காண்க; இது, அரதனமாலையணி; இதனை வடநூலார் ரத்நாவளி யென்பர்.
பின்னிரண்டடி – திரிபு என்னுஞ் சொல்லணியாம்.
இது, நாளென்னும் வாய்பாட்டான் முடிந்த இருவிகற்ப நேரிசை வெண்பா.

இது, நாளென்னும் வாய்பாட்டான் முடிந்த இருவிகற்ப நேரிசை வெண்பா.

—————–

45- தேன் நந்து சோலை அரங்கேசர் சேவடி மேல் விசயன்
தான் அந்த நாளையில் சாத்திய மாலையும் தான் விலக்கும்
வானம் தரு கங்கை நல் நீரும் சென்னியில் வைக்கப் பெற்ற
ஆனந்தம் தான் அல்லலோ முக்கணான் மன்றுள் ஆடுவதே –45–

(இ – ள்.) தேன் நந்து சோலை – தேன் மிக்குப்பெருகுகின்ற பூஞ்சோலைகளையுடைய,
அரங்கேசர் – ரங்கநாதரது,
சேவடிமேல் – சிவந்த திருவடிகளின்மேல்,
விசயன் – அருச்சுனன்,
அந்த நாளையில் – பதினான்காநாட்பாரதப்போரில்,
சாத்திய – அருச்சனைசெய்த,
மாலையும் – பூமாலையையும்,
தாள் விளக்கும் – (உலகமளந்தகாலத்துப் பிரமன் தனது கைக் கமண்டல தீர்த்தத்தால்) ஸ்ரீபாதத்தை விளக்கிச்சேர்த்த,
வானம் தரும் கங்கை நல்நீரும் – ஆகாசகங்கையின் புண்ணிய தீர்த்தத்தையும்,
சென்னியில் வைக்கப்பெற்ற – (தனது) முடியில் தரிக்கப்பெற்ற,
ஆனந்தம் தான் அல்லவோ – பெருமகிழ்ச்சியன்றோ?
முக்கணான் – திரிநேத்திரனாகிய பரமசிவன்,
மன்றுள் – சபையில்,
ஆடுவது – நடநஞ்செய்வது; (எ – று.)

சிவபெருமான் ஆனந்ததாண்டவஞ் செய்வதற்குக் கவி இவ்வாறு ஒரு காரணங் கற்பித்துக் கூறினார்; ஏதுத் தற்குறிப்பேற்றவணி;
இதனால், சிவபெருமான் பரமபாகவதர்களுள் ஒருவனென்பதும்,
பகவத் பிரசாதம் அவனடியார்க்கு மகிழ்ச்சியை விளைக்குமென்பதும் போதரும்.

இங்கு எம்பெருமானது திருவடியின் சம்பந்தமான பத்திரபுஷ்பங்களும் தீர்த்தமும் சிவனைப் பரிசுத்தனாக்கிக்
களிப்புடன் தாண்டவமாடச் செய்தன வென்க.

விசயன் – மிக்கஜயமுடையவன். பாரதயுத்தத்திற் பதினான்கா நாளில் அருச்சுனன் ஒரு அஸ்திரத்தைப் பெறவேண்டிச்
சிவனை அருச்சிக்க விரும்ப, கண்ணன் அவனிளைப்பை ஆற்றுகைக்காக ‘மலர்களை நமது காலிலே இடு’ என்று அருளிச்செய்ய,
அவனும் கண்ணனது திருவடிகளிலே இட்டு அருச்சிக்க, அன்றிரவிற் பரமசிவன் அம்மாலையைத் தலையில் தரித்துக்கொண்டு
வந்து தோன்றி அஸ்திரத்தைக் கொடுத்துப்போயின னென்க.
பிரமன் திரிவிக்கிரமாவதார காலத்தில் தனது உலகத்துச் சென்ற ஸ்ரீ பாதத்தில் தீர்த்தஞ் சேர்த்த நீர்
சிலநாள் தேவலோகத்துத் தங்கியிருந்து பின்னர்ப் பகீரதன் கொணர்ந்தபொழுது உருத்திரமூர்த்தியாற்சிரசில் வகிக்கப்பட்டதனால்,
“தாள்விளக்கும் வானந்தருங் கங்கை நன்னீர்” எனப்பட்டது.

“தீர்த்த னுலகளந்த சேவடிமேற் பூந்தாமஞ்,
சேர்த்தி யவையே சிவன்முடிமேற் றான்கண்டு,
பார்த்தன் றெளிந்தொழிந்த பைந்துழாயான்பெருமை,
பேர்த்து மொருவராற் பேசக் கிடந்ததே,”

“குறைகொண்டு நான்முகன் குண்டிகைநீர் பெய்து,
மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்திக் –
கறை கொண்ட, கண்டத்தான் சென்னிமே லேறக் கழுவினா,
னண்டத்தான் சேவடியை யாங்கு” என்றார் பெரியார்களும்.

இது நிரையசை முதலதான கட்டளைக்கலித்துறை.

————–

தலைமகனது உரு வெளிப்பாடு கண்ட தளை மகன் இரங்குதல்
46-ஆடும் பட நா கணை மேல் அணையும் அமலன் கமலத்தவனும் சிவனும்
நாடும் திருமால் துயில் கோயிலின் வாய் நறைவார் பொழிலூடு உறைவார் அளகக்
காடும் குழையைச் சாடும் குவளைக் கண்ணும் குதலைப் பண்ணும் கரியின்
கோடும் தரளத் தோடும் புருவக் கோதண்டமுமே மூதண்டமுமே –46-

(இ – ள்.) ஆடும் – எடுத்தாடுகின்ற,
படம் – படங்களையுடைய,
நாகணை மேல் – சேஷசயனத்தின்மேல்,
அணையும் – பள்ளிகொண்டருளுகின்ற,
அமலன் – குற்றமற்றவனாகிய, –
கமலத்தவனும் – பிரமனும், சிவனும் -,
நாடும் – (எந்நாளும்) ஆராய்ந்து வணங்குகின்ற,
திருமால் – எம்பெருமான்,
துயில் – திருக்கண்வளர்கின்ற,
கோயிலின்வாய் – திருவரங்கம் பெரியகோயிலில்,
நறைவார் பொழிலூடு – தேனொழுகுகின்ற சோலையினிடத்தில்,
உறைவார் – தங்குகின்ற மாதரது,
அளகம் காடும் – கூந்தற்கற்றையும்,
குழையை சாடும் – காதை மோதுகின்ற,
குவளை கண்ணும் – கருங்குவளைமலர்போன்ற கண்களும்,
குதலை பண்ணும் – இசைப்பாட்டுப்போலினிய மழலைச்சொல்லும்,
கரியின் கோடும் – யானைத்தந்தம்போன்ற தனங்களும்,
தரளம் தோடும் – முத்தினாலாகிய தோடென்னுங் காதணியும்,
புருவம் கோதண்டமுமே – வில்லுப்போன்ற (வளைந்த) புருவங்களுமாகிய இவையே,
மூதண்டமும் – பழமையான அண்டகோளமுழுவதும் (காணப்படுகின்றன); (எ – று.)

இது, தான் முன்னர்ப் பொழிலிடத்துக் கண்டு காதலித்த தலைமகளது மேனியின் எழிலை உருவெளித்தோற்றத்திலே
கண்ட தலைமகன் இரங்கிக் கூறியது. ஒரு பொருளினிடத்து ஆசையினால் இடைவிடாது கருத்தைச் செலுத்த,
அந்தப் பாவனையின் ஊற்றத்தால் அப்பொருள் கண்ணுக்கு எதிரில் தோன்றியதுபோலக் காணப்படுதல் இயல்பு.
தலைவனது கண்பார்வை செல்லுமிடமெங்கும் தன்னால் விரும்பப்பட்ட தலைமகளது அவயவங்களே தோன்றுகின்றன வென்க.

நாகணை – நாகவணை யென்பதன் தொகுத்தல் விகாரம். அமலனாகிய திருமா லென்க.
அளகம் – கடைகுழன்ற கூந்தல்; மிகுதிபற்றி, காடென்றார். குழை – காதிற்கு ஆகுபெயர்.
குழையைச் சாடும் குவளைக்கண் – காதளவும் நீண்ட கண் என்றபடி,
குதலை – நிரம்பா மென்சொல். தரளத்தோடு மென்பதற்கு – முத்துப்போன்ற பற்களுடனே யென்றுமாம்.

இது, ஐந்தாங்கவி போன்ற எண்சீராசிரியவிருத்தம்.

————-

கைக்கிளை
47-அண்டம் முழுது உண்டவர் உமிழ்ந்தவர் இடந்தவர் அளந்தவர் வளர்ந்து அருளுமா
சண்ட பண ஐந்தலை அனந்த சயனம் திகழ் தரும் திரு அரங்கர் வரை மேல்
கண்டது ஒரு கொம்பு அதில் இரண்டு மகரங்கள் ஒரு கஞ்சம் இரு வெஞ்சிலை மணம்
கொண்டது ஒரு கொண்டல் இரு கெண்டை ஒரு தொண்டை இரு கும்பம் ஒரு செம்பணிலமே–47-

(இ – ள்.) அண்டம் முழுது – எல்லா வண்டங்களையும்,
உண்டவர் – (பிரளயகாலத்தில்) திருவயிற்றிற் கொண்டவரும்,
உமிழ்ந்தவர் – (பிரளயம் நீங்கியபின்பு மீண்டும்) வெளிப்படுத்தியவரும்,
இடந்தவர் – (வராகாவதாரத்திற்) கோட்டாற் குத்தியெடுத்தவரும்,
அளந்தவர் – (திரிவிக்கிரமாவதாரத்தில்) அளந்தருளியவருமாகிய,
மா – பெரிய,
சண்டம் – கொடிய,
பணம் – படங்களையுடைய,
ஐந் தலை – ஐந்துமுடிகளையுடைய,
அனந்த சயனம் – திருவனந்தாழ்வானாகிய திருப்பள்ளி மெத்தையில்,
வளர்ந்தருளும் – திருக்கண் வளர்ந்தருளுகின்ற,
திகழ்தரும் – விளங்குகின்ற,
திருவரங்கர் – ஸ்ரீரங்கநாதரது,
வரைமேல் – மலையின்மேல்,
கண்டது – காணப்பட்டதாகிய,
ஒரு கொம்பு – இளவஞ்சிக்கொம்பொன்று (உண்டு); அதில் -,
இரண்டு மகரங்கள் – இரண்டுமுதலைகளும்,
ஒரு கஞ்சம் – ஒருதாமரைமலரும்,
இருவெம்சிலை – இரண்டு வளைந்த விற்களும்,
மணம் கொண்டது – வாசனைகொண்டதாகிய,
ஒரு கொண்டல் – ஒரு நீர்கொண்ட மேகமும்,
இரு கெண்டை – இரண்டு கெண்டைமீன்களும்,
ஒரு தொண்டை – ஒரு கொவ்வைக்கனியும்,
இரு கும்பம் – இரண்டு குடங்களும்,
ஒரு செம் பணிலம் – அழகியதொரு சங்கமும், (உண்டு); (எ – று.)

இது, தலைவன் தலைவியைக்கண்டு அவளது எழிலை வியந்துரைத்தது.

அளந்தவராகிய அரங்கரென்க. மலையினிடத்தே காணப்பட்டாளொரு ஒல்கியொசிகின்ற தலைவியது
மேனியிடத்தே இரண்டு மகரகுண்டலங்களும், ஒப்பற்ற முகமும், இரண்டுபுருவங்களும்,
பூவின்மணங்கொண்டதொரு கூந்தலும், இரண்டுகண்களும், ஒப்பற்ற அதரமும், இரண்டு தனங்களும்,
ஒப்பற்ற கழுத்தும் உள்ளனவென்பதை மறைத்து உவமைப்பொருளாக ஆரோபித்துக் கூறினமையின், இது உருவகவுயர்வுநவிற்சியணி.

ஒருகொம்பு – தலைமகளின் உருவத்துக்கும், இரண்டு மகரங்கள் – இரண்டு குண்டங்களுக்கும், கஞ்சம் – முகத்துக்கும்,
இருவெஞ்சிலை – இரண்டு புருவங்களுக்கும்,
மணங்கொண்டதொரு கொண்டல் – இயற்கை நறுமணம் செயற்கை நறுமணங்களையுடைய கூந்தலுக்கும்,
இருகெண்டை – இரண்டு கண்களுக்கும், தொண்டை – அதரத்திற்கும், இருகும்பம் – இரண்டு தனங்களுக்கும்,
செம்பணிலம் – சிவந்தகழுத்துக்கும் உவமையாதல் காண்க.
இதில் திருவரங்கராகிய மரகதக்குன்றின்பக்கல் இத்தகைய அவயவச்சிறப்புக்களையுடைய திருமகளாகிய
ஒருபூங்கொம்பு காணப்பட்ட தென்னும் பொருளும் உள்ளுறையாய்த் தோன்றுமாறு அறிக.
புணர்ச்சி குறிஞ்சி நிலத்துக்கண்ணதாகலின், “அரங்கர்வரைமேற் கண்ட தொரு கொம்பு” என்றார்.

இது, ஆறாங்கவி போன்ற எழுசீராசிரியச்சந்தவிருத்தம்.

——————-

தலைவி இரங்கல்
48-செம்பொன் அரங்கத் தரங்க நீர்ச் சீதள சந்திர வாவி சூழ்
கம்புளுடன் பயில் நாரைகாள் காதலை என் சொலி ஆறுவேன்
வெம்பனி வந்தது வந்த பின் வேனிலும் வந்தது வேனில் போய்
பைம்புயல் வந்தது சென்ற நம் பாதகர் வந்திலர் காணுமே –48–

(இ – ள்.) செம் பொன் – சிவந்த பொன்மயமாகிய,
அரங்கம் – திருவரங்கத்திலுள்ள,
தரங்கம் நீர் – அலைகளோடு கூடிய நீரையுடைய,
சீதள சந்திர வாவி – குளிர்ந்த சந்திரபுஷ்கரிணியில்,
சூழ் – திரண்டுள்ள,
கம்புகளுடன் – நீர்ப்பறவைகளுடன்,
பயில் – பழகுகின்ற,
நாரைகாள் – நாரைகளே!
காதலை – (என்) காமநோயை,
என் சொலி – என்னவென்று சொல்லி,
ஆறுவேன் – தணிவேன்?
வெம் பனி – கொடிய பனிக்காலம்,
வந்தது – வந்தபின் – (அது) கழிந்தபின்பு,
வேனிலும் – வெயிற்காலமும்,வந்தது –
வேனில் போய் – வெயிற்காலங் கழிந்தபின்,
பைம் புயல் – பசிய கார்காலம், வந்தது-; (அங்ஙனம் வந்தபின்பும்),
சென்ற – விட்டுப்பிரிந்துபோன,
நம் – நமது,
பாதகர் -,
வந்திலர் – வந்தாரில்லை; (எ – று.)

இது, பனிக்காலத்தில் வருவதாகக் காலங்குறித்துச்சென்ற தலைமகன் கார்காலத்தளவும் வாராமையாற்
பிரிவாற்றாத நெய்தனிலத்துத் தலைமகள் வருந்தி அந்நிலத்துப் பறவைகளை நோக்கி இரங்கிக் கூறியது.
இப்படிப் பட்ட கார்காலத்தில் யான் எங்ஙனம் தலைவனைப் பிரிந்து உயிர் வாழ்வது? எனத் தலைவி இரங்கியவாறு.

கரையிற் சந்திரன் நின்று தவஞ்செய்து தன்குறைதீர்ந்ததனால், சந்திர புஷ்கரிணி யெனப் பெயர்.
வாவி – வாபீ என்னும் வடமொழியின் சிதைவு. பனி, வேனில், புயல் என்பன – அவ்வக்காலத்துக்கு ஆகுபெயர்.
மார்கழியுந் தையுமாகிய முன்பனிக்காலமும் மாசியும் பங்குனியுமாகிய பின்பனிக்காலமும் அடங்க ‘பனி’ என்றும்,
சித்திரையும் வைகாசியுமாகிய இளவேனிற் காலமும் ஆனியும் ஆடியுமாகிய முதுவேனிற்காலமும்
அடங்க “வேனில்” என்றும் பொதுவாகக்கூறினார். பாதகர் – தீவினையுடையவர்;
இரக்கஞ்சிறிது மின்றிப் பிரிந்துபோனதேயுமன்றிக் குறியிட்டகாலத்தே மீண்டும்வாராமை பற்றி, பாதகரென்றார்;
இனி, வருத்தமுறுத்துபவரென்றும் பொருள்கொள்ளலாம். காணும் – முன்னிலைப்பன்மையசைச்சொல்.

இது, எல்லாச்சீருங் கூவிளச்சீர்களாகிய அறுசீராசிரியவிருத்தம்.

————-

சம்பிரதம் –
49-காணாத புதுமை பல காட்டுவன் கட் செவிகள் எட்டையும் எடுத்து ஆட்டுவன்
கடல் பருகுவன் பெரிய ககன வரையைச் சிறிய சுடுகினில் அடைத்து வைப்பன்
வீண் ஆரவாரம் மூதண்டம் உறவிளைவிப்பன் இரவு பகல் மாறாடுவன்
விண்ணையும் மறைப்பன் எழு மண்ணையும் எடுப்பன் இவை விளையாடும் வித்தை அன்றால்
நீள் ராகணைப் பள்ளியில் திரு அரங்கத்து நெடிது ஊழி துயிலும் பிரான்
நெற்றிக் கண் ஆனவனை நான் முகனை வாசவனை நிமிரும் இரு சுடரை முதலாச்
சேண் நாடார் யாவரையும் அடிமை கொண்டு அவரவர் சிரத்தில் பொறித்து விட்ட
திருச் சக்கரப் பொறி இலாத ஒரு கடவுளைத் தேடி இனி முன் விடுவனே –49-

(இ – ள்.) காணாத – (இதுவரையிலுங்) கண்டிராத,
புதுமை பல – பல அற்புதச்செய்கைகளை,
காட்டுவன் – காண்பிப்பேன்;
கட்செவிகள் எட்டையும் – அஷ்டநாகங்களையும்,
எடுத்து ஆட்டுவன் – படமெடுத்து ஆடச்செய் வேன்;
கடல் – ஏழுகடல்களையும்,
பருகுவன் – குடிப்பேன்;
பெரிய -, கனக வரையை – பொன்மயமான மேருமலையை, சிறிய -,
கடுகினில் – கடுகினுள்ளே,
அடைத்து வைப்பன் – அடங்கும்படி சேர்த்துவைப்பேன்;
வீண் ஆரவாரம் – வீணான பேரொலியை,
முது அண்டம் உற – பழைய அண்டங்களிலெல்லாம் பொருந்தும்படி,
விளைவிப்பன் – உண்டாக்குவேன்;
இரவு பகல் மாறாடுவன் – இரவைப் பகலாகவும் பகலை இரவாகவும் மாறச்செய்வேன்;
விண்ணையும் – ஆகாயமுழுவதையும்,
மறைப்பன் – மறைப்பேன்;
எழு மண்ணையும் – ஏழு உலகங்களையும்,
எடுப்பன் – எடுப்பேன்;
இவை – இவைகளெல்லாம்,
விளையாடும் வித்தை அன்று – விளையாட்டாகச்செய்யுஞ் சிறந்ததொரு ஜாலவித்தையல்ல; இனி -, திருவரங்கத்து -,
நீள் நாகணை பள்ளியில் – நீண்ட ஆதிசேஷனாகிய திருப்பள்ளிமெத்தையின்மேல்,
நெடிது ஊழி – நெடியபலஊழிகாலமாய்,
துயிலும் – திருக்கண்வளர்கின்ற,
பிரான் – எம்பெருமான்,
நெறிக்கண்ஆனவனை – நெற்றியில் நெருப்புக்கண்ணையுடைய சிவனையும்,
நான்முகனை – பிரமனையும்,
வாசவனை – இந்திரனையும்,
நிமிரும் – விளங்குகின்ற,
இரு சுடரை – சந்திர சூரியர்களையும்,
முதலா – முதலான,
சேணாடர் யாவரையும் – தேவர்களனைவரையும்,
அடிமை கொண்டு – (தமக்கு) அடிமையாகக் கொண்டு,
அவர் அவர் சிரத்தில் – அவ்வத்தேவர்களது தலைகளில்,
பொறித்துவிட்ட – அடையாளஞ்செய்துவைத்த,
திரு சக்கரம் பொறி – அழகிய சக்கரமுத்திரை,
இலாத – உடைத்தாகாத,
ஒரு கடவுளை – ஒருதெய்வத்தை,
தேடி – தேடிக்கொண்டுவந்து,
முன் விடுவன் – முன்னேவிடுவேவன். (எ – று.)

இந்திரஜாலம் முதலிய மாயவித்தை வல்லவர் தமது சிறப்பைத் தாமே எடுத்துக் கூறுவதாகச் செய்யுள் செய்வது,
சம்பிரதம் என்னும் உறுப்பாம்.

என்றது, எம்பெருமானது சக்கரப்பொறியில்லாத ஒரு தேவதாந்தரம் எவ்வுலகிலு மில்லையாதலால்,
அப்படிப்பட்ட தேவரைத் தேடிக்கொணர்தல் அருமை யென்பது தோன்ற, இனித் தேடிமுன்விடுவேனென
அருமை அறிவித்ததெனக் கொள்க. இனி, அங்ஙனம் திருமாலினது சக்கரப் பொறி யில்லாத தெய்வத்தை
முன்னே துறந்துவிடுவே னென்னும் பொருளும் இங்குத் தோன்றும்.

கட்செவி – கண்களையே காதுகளாகவும் உடையது; “சக்ஷுஸ்ர வா:” என்னும் வடசொல்லின் மொழிபெயர்ப்பு.
அஷ்டமகா நாகங்க ளாவன – வாசுகி, அநந்தன், தக்ஷகன், சங்கபாலன், குளிகன், பதுமன், மகாபதுமன், கார்க்கோடகன்;
இவை, முறையே கிழக்குமுதலிய எட்டுத் திக்குக்களிலும் நின்று ஆதிசேஷனுக்குத் துணையாய்ப் பூமியைத் தாங்குவன.
எடுத்து – தூக்கியென்றுமாம். ஆரவாரம் – ஆரவாராவமென்ற வடமொழியின் சிதைவு. ஊழி – யுகம்.
சேணாடர் – உயர்ந்த சுவர்க்கலோகத்தி லுள்ளவர். திருச்சக்கரப்பொறி – ஸ்ரீசக்கராங்கம். சம்பிரதம் – ஜாலவித்தை.

இது, பெரும்பாலும் முதலைந்துசீர்களுங் காய்ச்சீர்களும், மற்றை யிரண்டும் மாச்சீர்களுமாய் வந்தது அரையடியாகவும்,
அஃதுஇரட்டிகொண்டது ஓரடியாகவும் நின்ற பதினான்குசீராசிரியவிருத்தம்.

——–

இடம் அணித்து என்றல்
50-முன்னம் ஏழ் புரவி ஆர் இரவி காய் வெயிலினால்
முத்து அரும்பிய கலா முழு மதித் திரு முகத்து
அன்னமே இன்னம் ஓர் காவதம் போது மேல்
அகலும் இப்பாபாலை அப்பால் அரைக் காவதம்
என்னை ஆளுடையவன் துயில் அரா அமளியும்
இலகு பொற் கோயிலும் இந்துவின் பொய்கையும்
புன்னை வாய் நீழலும் புரிசையும் மது கரம்
பூ விரிந்து உறையும் அக்காவிரித் துறையுமே –50-

(இ – ள்.) முன்னம் – எதிரில்,
ஏழ் புரவி ஆர் இரவி – ஏழுகுதிரைகள் பூண்ட (தேரினையுடைய) சூரியன்,
காய் – எறிக்கின்ற,
வெயிலினால் -, முத்து அரும்பிய – முத்துப்போலும் வேர்வை பொடித்த,
கலா முழு மதி – கலைகள் நிறைந்த பூர்ணசந்திரன்போன்ற,
திரு முகத்து – அழகிய முகத்தையுடைய,
அன்னமே – (நடையால்) அன்னம்போன்றவளே! –
இன்னம் ஓர்காவதம் – இன்னமொரு காததூரவழி,
போதும் ஏல் – போவோமாயின்,
இ பாலை அகலும் – இந்தப்பாலைநிலம் நீங்கும்;
அப்பால் – அதுநீங்கினபின்பு,
என்னை ஆளுடையவன் – என்னை அடிமையாகக் கொண்ட எம்பெருமான்,
துயில் – அறிதுயிலமர்கின்ற,
அரா அமளியும் – சர்ப்பசயனமும்,
இலகு பொன் கோயிலும் – விளங்குகின்ற பொன்மயமான திருக்கோயிலும்,
இந்துவின் பொய்கையும் – சந்திரபுஷ்கரிணியும்,
புன்னை வாய் நீழலும் – புன்னைமரத்தினது வாய்ப்பாகிய நிழலும்,
புரிசையும் – மதில்களும்,
மதுகரம் – வண்டுகள்,
பூ விரித்து உறையும் – மலர்களை விரித்துப் படிந்து தேனுண்ணுகின்ற,
அ காவிரி துறையும் – அந்தக் காவேரிதீரமும்,
அரைகாவதம் – அரைக்காததூரமே; (எ – று.)

எனவே, அவ்வளவும் நீ தளராமல் வரவேண்டு மென்றபடி. இது, தலைமகளை உடன்கொண்டுபோகின்ற தலைமகன்,
அவள் இடைவழியிற் பாலைநிலத்திற் செல்லும்போது வெயிலால் மிகவும் வருந்தி இளைப்புற்றது நோக்கி,
அவளுக்கு வழிநடையிளைப்புத் தோன்றாதிருத்தற்பொருட்டு அவளைத் தான்போகுமிடத்தின் அணிமை கூறி ஆற்றியது.
“கொடுங்கடஞ்சூழ் ந்த குழைமுகமாதர்க்குத், தடங்கிடங்கு சூழ் தன்னகர் காட்டியது” என்ற கொளுவையுங் காண்க.

தலைமகனும் தலைமகளும் தாம் விட்டுப்பிரியாது ஒருவர்க்கொருவர் தனிநிழலாயிருக்கையாலே இவர்களுக்குக்
கொடிய இந்தப்பாலைநிலத்தின் கொடுமையா லுண்டாகும் இளைப்பு இல்லையே யாகிலும் பொழுது போக்குக்காகத்
தலைவன் தலைவியை நோக்கி இங்ஙனங் கூறின தென்றலு முண்டு. நீர்வளமுள்ள மருதநிலத்து வாழும்
அன்னப்பறவை போன்ற இத்தலைவிக்கு இந்தக் கொடியபாலை வருத்தத்தை விளைக்குமென்பது தோன்ற,
“இரவிகாய் வெயிலினான் முத்தரும்பிய கலாமுழுமதித் திருமுக த்தன்னம்” என்றான்;
அப்பால் அரைக்காவதம் சென்றவாறே அங்கு அன்னத்துக்கு உவப்பாகிய சந்திரபுஷ்கரிணி காவிரியாற்றுத்துறை
முதலியன உளவாகக் கூறியதுங் காண்க. இவ்வாறு கூறியதனால், பாலைநிலத்தால் வந்த வெம்மையையும் போக்கி
நமக்கு ரக்ஷகமு மான தேசங்காண் அது;
இந்தப் பாலைநிலமேயன்றி இன்னமும் சிலபாலைவனமும் கடக்கலா மென்பது தொனிக்குமாறு காண்க.

காவிரித்துறையும் புரிசையும் கோயிலும் புன்னைநீழலும் இந்துவின் பொய்கையும் அராவமளியுந் தோன்றுமென்று முறைப்படுத்தி யுரைக்க;
பாடக்ரமத்தினும் அர்த்தக்ரமம் வலியுடைத்தென்பது நியாயமாதலால். புன்னைமரம் சந்திரபுஷ்கரிணியின் கரையிலுள்ளது;
இந்தவிருக்ஷத்தைப்பற்றி ஸ்ரீபட்டரும் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் மிகவும் பாராட்டி அருளிச்செய்திருத்தல் காண்க.
சூரியனது தேர்க்குதிரைகள் ஏழென்னுந்தொகையின வென்பாரும், ஏழெனப் பெயர்பெற்ற குதிரையொன்றே யென்பாரும்,
எழு குதிரைகளுண்டு அவற்றுள் ஏழெனப்பெயர்பெற்ற தொன் றென்பாரும் உளர். முன்னங்காய் வெயில் – எதிர்வெயில்.

இது, எல்லாச்சீரும் விளச்சீர்களாகிய எண்சீராசிரியவிருத்தம்.

————-

தோழி தலைவனது இரவுக் குறி விலக்கல்
51-துறை மதியாமல் இக்கான்யாறு நீந்தி சுரம் கடத்தல்
நிறை மதி யாளர்க்கு ஒழுக்கம் அன்றால் நெடுமால் அரங்கத்து
இறை மதியா வரும் ஆரா அமிர்து அன்ன இந்த நுதல்
குறை மதியாள் பொருட்டால் கங்குல் வாரல் எம் கொற்றவனே –51-

(இ – ள்.) எம் கொற்றவனே – எமது தலைவனே! –
துறை மதியாமல் – செல்லும் வழியை நன்றாக ஆராயாமல்,
இ கான் யாறு நீந்தி – இக்காட்டாற்றை நீந்திக் கடந்து,
சுரம் கடத்தல் – கொடிய காடுகளைத் தாண்டிவருதல்,
நிறை மதியாளர்க்கு – நிறைந்த அறிவினை யாளுந்தன்மையுடையார்க்கு,
ஒழுக்கம் அன்று – நல்லொழுக்கமன்று;
ஆல் – ஆகையால், –
அரங்கத்து இறை – அரங்கநாதராகிய,
நெடு மால் – நீண்ட திருமால்,
மதியா – (திருப்பாற்கடலைத் தேவர்களோடுங்) கடையாமலே,
வரும் – தோன்றின,
ஆரா அமிர்து அன்ன – தெவிட்டாத அமிருதத்தை யொத்த,
இந்து நுதல் குறை மதியாள்பொருட்டால் – பிறைச்சந்திரன்போன்ற நெற்றியையுடைய இவள் நிமித்தமாக,
கங்குல் – இராத்திரியில்,
வாரல் – வருதலை (இனி) ஒழிவாயாக. (எ – று.)

இயற்கைப்புணர்ச்சிபெற்ற தலைமகன் பின்பு தலைமகளது தோழியினுதவியைக்கொண்டு தலைமகளைப் பகலிலும் இரவிலும்
களவுநெறியில் ஏகாந்தத்திலே சந்தித்தல் இயல்பு; அது, பகற்குறி இரவுக்குறி எனப்படும்.
தலைமகனது வேண்டுகோளின்படி ஒருநாள் இரவிற் குறிப்பிட்டதொரு சோலையினிடத்தே அத்தலைமகனையும் தலைமகளையும்
சந்திக்கச்செய்த தோழி, பின்பும் அக்களவொழுக்கத்தையே வேண்டிய தலைமகனுக்கு, அவன் வரும் நெறியின் அருமையையும்,
அதுகருதித் தாங்கள் அஞ்சுதலையுங் குறித்து “நீ எந்தஇடத்திலும் எந்தப்பொழுதிலும் அஞ்சாது வரக்கூடிய
தேகபலம் மனோபலம் தந்திரம் முதலியவற்றை யுடையாயாயினும், நினது வரவு எங்கட்குத் துன்பமாகத் தோன்று மாதலால்,
இனி இவ்விருளிடை இங்ஙனம் வரற்பாலையல்லை” என்று விலக்குதல், இச்செய்யுளிற் குறித்த அகப்பொருள்துறை.
இது, “ஆறுபார்த்துற்ற அச்சக்கிளவி” எனப்படும். (ஆறு – வழி, கிளவி. பேச்சு.)
தலைவன் வரும் வழி மிகவும்இன்னாது, நீருடையது, கல்லுடையது, முள்ளுடையது, ஏற்றிழிவுடையது,
கள்ளர் புலி கரடி யானை பாம்பு முதலிய கொடிய பிராணிகளை யுடையது என்று கவலுங் கவற்சியாற் சொல்லுவதென்க.
இதில், மெய்ப்பாடு – அச்சம். இதன்பயன் – வெளிப்படையாக வந்து மணஞ்செய்துகொள்ளுதலை வற்புறுத்துதல்.
ஐவகை நிலங்களுள் மலையும் மலைசார்ந்தஇடமும் குறிஞ்சியாமென்பதும், “புணர்தல் நறுங்குறிஞ்சி” என்றபடி
புணர்ச்சி குறிஞ்சித்திணைக்குரிய பொருளென்பதும், “குறிஞ்சி, கூதிர் யாம மென்மனார் புலவர்” என்றபடி
பெரும் பொழுதினுட் சரத்காலமும் சிறுபொழுதினுள் நள்ளிரவும் குறிஞ்சிக்கு உரிய காலமென்பதும் அறியத்தக்கன.
“உள்ளமஞ்சாய் வலியாய் வலியார்க்குமு பாயம்வல்லாய்,
கள்ள மஞ்சாயுதங் கைவருமாயினுங் கங்குலினில்,
வள்ள மஞ்சார்பொழில் வேங்கடக்குன்றினில் வீழருவிப்,
பள்ளமஞ்சாரல் வழிவரில் வாடு மிப்பாவையுமே” என்ற திருவேங்கடத்தந்தாதியையும் காண்க.

துறை மதித்தல் – இது செல்லுந் துறை, இது செல்ல வொண்ணாத் துறையென ஆராய்தல்.
திருப்பாற்கடல் கடைந்த காலத்து அதினின்று தோன்றிய தேவாமிருதத்தினும் மேலானவ ளென்பார், “மதியாவருமாரா வமிர்து” என்றனர்.
வாரல் – வா என்னும் பகுதியிற் பிறந்த எதிர்மறைவிய ங்கோள். திரிபணி.

இது, நிரையசை முதலதான கட்டளைக்கலித்துறை.

————

மறம்
52- கொற்றவன் தன் திரு முகத்தைக் கொணர்ந்த தூதா
குறை உடலுக்கோ மறவர் கொம்பைக் கேட்டாய்
அற்றவர் சேர் திரு அரங்கப் பெருமாள் தோழன்
அவதரித்த திருக் குலம் என்று அறியாய் போலும்
மற்றது தான் திரு முகமே ஆனால் அந்த
வாய் செவி கண் மூக்கு எங்கே மன்னர் மன்னன்
பெற்ற இள அரசு ஆனால் ஆலின் கொம்பைப்
பிறந்த குலத்தினுக்கு ஏற்கப் பேசுவாயே –52-

(இ – ள்.) கொற்றவன்தன் – வெற்றியையுடைய வேந்தனது,
திருமுகத்தை -, கொணர்ந்த – கொண்டுவந்த,
தூதா – தூதனே! –
குறை உடலுக்கோ – (முகமில்லாத) முண்டத்துக்கோ,
மறவர் கொம்பை – வேடர்களாகிய எங்களது பூங்கொம்பை,
கேட்டாய் – (மணஞ்செய்து தரும்படி) கேட்டாய்; (எங்கள் குலம்),
அற்றவர் சேர் – இருவகைப்பற்றுமற்று முற்றத்துறந்த முனிவர்களெல்லாம் அடைக்கலமடைகின்ற,
திருவரங்கப்பெருமாள் – திருவரங்கத்திலெழுந்தருளியிருக்கின்ற நம்பெருமாளது,
தோழன் – நண்பனாகிய குகப்பெருமாள்,
அவதரித்த – திருவவதாரஞ் செய்த,
திரு குலம் என்று – மேன்மையான குலமென்று,
அறியாய்போலும் – (நீ) அறிந்திலைபோலும்;
அது – நீ கொணர்ந்தது, திருமுகமே ஆனால் -,
அந்த – அதன் உறுப்பாகிய, வாய் செவி கண் மூக்கு எங்கே -?
மன்னர் மன்னன் பெற்ற – அரசர்க் கரசனாகிய சக்கரவர்த்தி பெற்ற,
இள அரசு ஆனால் – இளைய அரசானால், பிறந்த குலத்துக்கு ஏற்க.-
அதுதான் பிறந்தகுலத்திற்குப் பொருந்த, ஆலின் கொம்பை – ஆலமரத்தின் கொம்பை,
பேசுவாய் – மணம்பேசுவாயாக; (எ – று.)

தமதுமகளை மணம்பேசும்படி அரசரால் அனுப்பப்பட்ட தூதனைநோக்கி மறவர்கள் மணம் மறுத்து அவ்வரசரை இகழ்ந்து
பேசினதாகச் செய்யுள் செய்வது, மறம்என்னும் உறுப்புக்கு இலக்கணமாம்.
இதனை மகட்பாற்காஞ்சி யென்னும் துறையின் இனமாகக் கூறுவர்.
மகட்பாற்காஞ்சியென்பது – புறப்பொருள்திணை பன்னிரண்டனுள் காஞ்சித்திணைக்கு உரிய பலதுறைகளில் ஒன்று.
அதாவது – நின்மகளை எனக்குத்தருக வென்று சொல்லும் அரசனோடு மாறுபடுவது;
“ஏந்திழையாட்டருகென்னும், வேந்தனோடு வேறு நின்றன்று –
அளியகழல்வேந்தரம்மாவரிவை, யெளியளென்றெள்ளியுரைப் பிற் –
குளியாவோ, பண்போற்கிளவியிப்பல்வளையாள் வாண்முகத்த, கண்போற் பகழி கடிது” என்ற புறப்பொருள்வெண்பாவைக் காண்க.

“மணித்தாரரசன்றன்னோலையைத் தூதுவன் வாய்வழியே,
திணித்தாசழியச்சிதைமின் றலையை யெந்தீவினையைத்,
துணித்தான் குருகைப்பிரான் றமிழாற் சுருதிப் பொருளைப்,
பணித்தான் பணியன்றெனிற் கொள்ளுங்கொள்ளு மெம்பா வையையே” என்னுஞ் சடகோபரந்தாதிச் செய்யுள் கருதத்தக்கது.

திருவரங்கநாதனுக்கே உரிமை பூண்பவளான தமது மகளை மணம்பேசும் படி ஓர்அரசனால் ஓலைகொடுத்து அனுப்பப்பட்ட
தூதன் அவ்வரசன் கட்டளைப்படி தம்பக்கல்வந்து ஓலைகொடுத்துச் சிலவார்த்தை கூறி மணம் பேசுவானாக,
அம்மகட்கு உரியார் மிகக்கோபங்கொண்டு அந்தமணப்பேச்சை மறுத்து அவ்வரசனைக் குறித்துப் பரிகசித்துக் கூறினரென்க.
திருவரங்கநாதனுக்கே அடிமைபூண்ட எமதுஉயிர் பிறிதொரு கடவுளர்க்கேனும் மானிடர்க்கேனும் உரிமைபூணாது என்று,
அங்ஙனம் பிறர்க்கு ஆட்படுத்த முயல்வாரைநோக்கி ஐயங்கார் கடிந்து கூறும் வார்த்தை, இதற்கு உள்ளுறைபொருள்.

ஓலையைத் திருமுகமென்பது, குழூஉக்குறி. மறவர் கொம்பென்றது, தம்மைப் பிறர்போற்கூறிய படர்க்கை; இடவழுவமைதி.
கொம்பு – பூங்கொம்பு போன்ற பெண்ணுக்கு உவமயாகுபெயர்.
அற்றவர்சே ரென்பதற்கு – வேறுபுகலிடமில்லாதவர்களாய் யாவருமடைகின்ற வென்றும் பொருள்கொள்ளலாம்.
குகன் தோழனானது, ஸ்ரீராமாவதாரத்தில். போலும் – ஒப்பில்போலி. மற்று – வினைமாற்று.
அரசென்னும் பண்புப்பெயர், அரசனுக்கு ஆகுபெயர். திருமுகமென்பதில் அழகியமுகமென்றும்,
கொம்பென்பதில் மரத்தின்கொம்பென்றும், அரசென்பதில் அரசமரமென்றும் பொருள்கொள்ளக்கிடத்தலால், இங்ஙனங் கூறினார்.

இது, பதினைந்தாங் கவிபோன்ற எண்சீராசிரியவிருத்தம்.

——————

இதுவும் அது –
53- பேச வந்த தூத செல் அரித்து ஓலை செல்லுமோ
பெரு வரங்கன் அருள் அரங்கர் பின்னை கேள்வர் தாளிலே
பாசம் வைத்த மறவர் பெண்ணை நேசம் வைத்து முன்னமே
பட்ட மன்னர் பட்டது எங்கள் பதி புகுந்து பாரடா
வாசலுக்கு இடும் படல் கவித்து வந்த கவிகைமா
மகுட கோடி தினை அளக்க வைத்த காலும் நாழியும்
வீச சாமரம் குடில் தொடுத்த கற்றை சுற்றிலும்
வேலி இட்டது அவர்கள் இட்ட வில்லும் வாளும் வேலுமே –53-

(இ – ள்.) பேச – (எங்கள்பெண்ணை மணம்) பேசுவதற்கு, வந்த – தூத – தூதனே! –
செல் அரித்த – செல்லினால் அரிக்கப்பட்ட, ஓலை -, செல்லுமோ -?
பெரு வரங்கள் – பெரிய வரங்களை, அருள் – (தம் அடியார்கட்கு) அருளுகின்ற,
அரங்கர் – திருவரங்கநாதரும்,
பின்னை கேள்வர் – நப்பின்னையின் கணவரு மாகிய நம்பெருமாளது,
தாளிலே – திருவடிகளிலே, பாசம் வைத்த – அன்பு வைத்த,
மறவர் பெண்ணை – வேடர்களாகிய எங்களது மகளை, நேசம் வைத்து – விரும்பி,
முன்னமே – முன்னாட்களிலே,
பட்டம் மன்னர் – பட்டந்தரித்த அரசர்கள்,
பட்டது – பட்ட பாடுகளை,
எங்கள் பதி புகுந்து – எங்களூரினுள் வந்து, பார்அடா -;
வாசலுக்கு இடும் படல் – (எங்கள் வீட்டு) வாசலில் வைத்து மூடும் படல்,
கவித்து வந்த – (அவர்கள்) பிடித்துவந்த, கவிகை – குடைகளாம்;
தினை – தினையரிசிகளை, அளக்க – அளக்கும்படியாக, வைத்த -,
காலும் – மரக்கால்களும்,
நாழியும் – படியும் முதலிய அளவுகருவிகள்,
மா மகுடம் கோடி – (அவர்கள்தரித்துவந்த) பெரிய கிரீடங்களின் கூட்டமாம்;
குடில் தொடுத்த – (எங்கள்) குடிசைக்குமேல் மூடுகின்ற, கற்றை -,
வீசு சாமரம் – (அவர்களுக்கு) வீசி வந்த சாமரங்களாம்;
சுற்றிலும் – (எங்கள்வீட்டின்) நாற்புறத்திலும், வேலி இட்டது – வேலியாகப் போகட்டது,
அவர்கள் இட்ட – அவர்கள் (தோல்வியடைந்து) போகட்டுப்போன, வில்லும் வாளும் வேலுமே – (ஆகும்); (எ – று.)

இவ்வாறு கூறியது, உன்னை யேவிய அரசனுக்கும் இக்கதியே நேருமென்று குறித்தற்கு.
“எல்லாம் வெகுண்டார்முன் தோன்றாக்கெடும்” ஆதலால், மிக்க கோபாவேசத்தால் இங்ஙனம் கொடுமைகூறின ரென்க.

செல் – கறையான். மறவர் தாம் எழுத்தறியாதவ ராதலால், எழுத்தெழுதிய ஓலையை “செல்லரித்தவோலை” என்றார்.
செல்லுதல் – பயன்படவழங்குதல். “நேசம்வைத்து” என்பது, ஒருசொல்நீர்மைத்தாய் “பெண்ணை” என்பதற்குப் பயனிலையாய் நின்றது.
வாசல் – வாயிலென்பதன் மரூஉ. படல் – கட்டி கவிகை – கவிந்திருப்பது. கற்றை – விழல்தொகுதி போல்வன.

இது, ஏழாஞ்சீரும் ஈற்றுச்சீரும் விளச்சீர்களும், மற்றையவெல்லாம் மாச்சீர்களுமாகிய பதினான்குசீராசிரியவிருத்தம்.

—————

54–வேலை உலகில் பிறக்கும் வேலை ஒழித்தோம் இல்லை
மாலை அரங்கேசனை நாம் மாலையிலும் காலையிலும்
உன்னி நைந்தோம் இல்லை உடல் எடுத்த அன்று முதல்
என் நினைந்தோம் நெஞ்சே இருந்து –54–

(இ – ள்.) நெஞ்சே – ! – நாம் -, வேலை உலகில் – கடல்சூழ்ந்த இந்த நிலவுலகத்தில்,
பிறக்கும் வேலை – பிறக்குந் தொழிலை, ஒழிந்தோம் இல்லை. நீங்கிற்றிலோம்;
மாலை அரங்கேசனை – ரங்கநாதனாகிய திருமாலை,
மாலையினும் காலையினும் – காலையும் மாலையும்,
உன்னி -தியானித்து,
நைந்தோம் இல்லை – மனம்நெகிழ்கிற்றிலோம்;
உடல் எடுத்த அன்றுமுதல் – இவ்வுடம்பெடுத்த அந்நாள்முதல்,
இருந்து என் நினைந்தோம் – வேறு என்ன பெரிய காரியத்தை எண்ணியிருந்தோம்? (எ – று.)

நமது பிறப்புத்தொழிலை நீக்குதற்குக் கடவராகிய திருவரங்கநாதரது மகிமையை உணர்ந்து அவரையே
காலை மாலைகளில் தியானிப்பது நமதுகட மையாயிருக்க, அதுசெய்யாது இதுவரை பழுதே பலபகலும்
போயினவென்று அஞ்சி அதுகுறித்து அநுதாபங்கொண்டு கழிவிரக்கத்தாற்கூறியது இது.

வேலையுலகிற் பிறக்கும் வேலை யொழியாமைக்குக் காரணத்தை, காலை மாலைகளில், ஸ்ரீரங்கநாதனைத் தியானியாமல்
வீண்பொழுது போக்கினமை யெனப் பின்மூன்றடிகளில் விளக்கினார்; தொடர்நிலைச்செய்யுட்குறியணியின் பாற்படும்.
மடக்கு என்னுஞ் சொல்லணியும் இதிற் காணத்தக்கது. இனி, நா எனப் பிரித்து – நாவினால், உன்னி – துதித்து என்றுமாம்.

பிறப்பென்னும்வாய்பாட்டான் முடிந்த இருவிகற்பநேரிசைவெண்பா

———–

இயலிடம் கூறுதல்
55-இரும்புவனம் விரும்புவனம் அணி அரங்கர் பணி அரங்கர் இமய நண்ப
வரும் கொடியின் மருங்கு ஓடியின் மனம் குழைக்கும் கனங்குழைக்கும் அனங்கன் சாபக்
கரும்பு உருவம் பொரும் புருவம் முத்தம் நகை ஒத்தன கை காந்தள் பூந்தேன்
மருங்கு உழலும் கருங்குழலும் முருகு வளை இருகு வளை மழைக்கண் தாமே –55-

(இ – ள்.) இரும் புவனம் – பெரிய உலகங்கள் முழுவதையும்,
விரும்பு (உணவாக) விரும்பி அமுதுசெய்த,
வனம் அணி – வனமாலையை அணிந்த,
அரங்கர் – அரங்கநாதரும்,
பணி அரங்கர் – ஆதிசேஷனைப் பள்ளிகொள்ளுமிடமாக வுடையவரு மாகிய நம்பெருமாளது,
இமயம் – இமயமலைபோன்ற மலையினிடத்துள்ள, நண்ப – தோழனே! –
கனங் குழைக்கு – (யான் கண்ட) கனமாகிய காதணியையுடைய பெண்ணுக்கு,
வரும் கொடியின் – வளர்கின்ற பூங்கொடிபோன்ற,
மருங்கு – இடையானது,
ஒடியின் – (தான்) ஒல்கினால்,
மனம் – (ஆடவர்களது) நெஞ்சத்தை,
குழைக்கும் – தளரச்செய்யும்;
புருவம் – புருவங்கள்,
அனங்கன் – மன்மதனது,
சாபம் – வில்லாகிய,
கரும்பு – கரும்பினது,
உருவம் – வடிவத்தோடு,
பொரும் – போர்செய்யும்(ஒத்திருக்கு மென்றபடி);
நகை – பற்கள்,
முத்தம் ஒத்தன – முத்துக்களைப் போன்றனவாகும்;
கை – கைகள்,
காந்தள் – காந்தள்மலர்போலும்;
கருங்குழல் – கரிய கூந்தல்,
பூ தேன்மருங்கு உழலும் – மலர்களில் மொய்க்கின்ற வண்டுகள் பக்கங்களிற் சுழலப்பெறும்;
மழை கண் – குளிர்ச்சியை யுடைய கண்கள்,
முருகு வளை இரு குவளை – வாசனை மிக்குப்பொருந்திய இரண்டு நீலோற்பலமலரை ஒப்பன; (எ – று.)

கலந்துபிரிந்த தலைமகன் பின்பு தனதுதோழனைத் துணையாகக் கொண்டு மீண்டும் அத்தலைமகளைச் சந்தித்தல் முறைமை;
அது, “பாங்கற்கூட்டம்” எனப்படும். அதற்கு உரிய துறைகள் பலவற்றில் “இயலிடங்கூறல்” என்னுந் துறை, இச்செய்யுளிற் கூறியது.
அஃதாவது – முதலிற் கலந்து பிரிந்த தலைமகன், பின்பு தன்னையடுத்துத் தன்மெலிவைக் கண்டு
‘நீ இவ்வாறாதற்குக் காரணம் என்னோ?’ என்று வினாவிய பாங்கனுக்கு,
“யான் ஒருத்தி வலையில் அகப்பட்டேன்’ என்று உற்றதுகூற, அதுகேட்ட பாங்கன் “நினது ஒழுக்கம் தக்கதன்று” என்று
சிலகூறியபின்பும் தலைமகன் தெளிவுபெறாது வருந்தவே, பாங்கன் இரக்கங்கொண்டு
“நின்னாற்காணப்பட்ட வடிவம் எத்தன்மைத்து?” என்று வினாவ, அதுகேட்ட தலைமகன் மகிழ்ச்சிகொண்டு
“என்னாற்காணப்பட்ட வடிவுக்கு இய லிவை” என்று கூறுதல்.

இனி, இரும்புவனம்விரும்புவனமணியரங்க ரென்பதற்கு – பெரிய உலகத்தவர் யாவராலும் விரும்பப்படுகின்ற
வனப்பையுடைய நீலமணிபோலும் நிறத்தினையுடைய அரங்கரென்றும்,
பணியரங்க ரென்பதற்கு – காளியனென்னும் பாம்பைக் கூத்தாடுமிடமாகக் கொண்டவ ரென்றுமாம்.
இமயம் – பனிமலை. கனங்குழைக்கும், கருங்குழலும், உம்மை – இசைநிறை.

இது, நான்காங் கவி போன்ற அறுசீராசிரியவிருத்தம்.

————

இதுவும் அது –
56-மழை பிறை சிலை வேல் வள்ளை எள் இலவின் மலர் முல்லை மதி வளை கழை யாழ்
வாரிசம் கெளிறு தத்தை வாய் கலசம் மணி வட பத்திரம் எறும்பு ஊர்
அழகு நீர்த் தரங்கம் துடி சுழி அரவம் அரம்பை ஞெண்டு இளவரால் ஆமை
அணிதராசு இணை கந்துகம் துகிர் தரளம் அம்புயம் அரங்க நாடு அனையார்
குழல் நுதல் புருவம் விலோசனம் காது நாசி வாய் நகை முகம் கண்டம்
குலவு தோள் முன்கை அங்கை மெல் விரல்கள் கூர் உகிர் கொங்கை கண் வயிறு
விழை தரும் உரோமம் வரை இடை உந்தி விரும்பும் அல்குல் தொடை முழந்தாள்
மிளிர் கணைக் கால்கள் புறவடி பிரடு மென்குதிவிரல் நகம் தாளே–56–

(இ – ள்.) அரங்க நாடு அனையார் – திருவரங்கமாகிய திருநாட்டை யொக்கின்ற (யான் கண்ட) மாதரது,
குழல் – கூந்தலும்,
நுதல் – நெற்றியும்,
புருவம் – புருவங்களும்,
விலோசனம் – கண்களும்,
காது – காதுகளும்,
நாசி – மூக்கும்,
வாய் – வாயும்,
நகை – பற்களும்,
முகம் – முகமும்,
கண்டம் – கழுத்தும்,
குலவு தோள் – விளங்குகின்ற தோள்களும்,
முன் கை – முன்னங்கைகளும்,
அங்கை – அகங்கைகளும்,
மெல் விரல்கள் – மெல்லிய விரல்களும்,
கூர் உகிர் – கூரிய நகங்களும்,
கொங்கை – தனங்களும்,
கண் – முலைக்கண்களும்,
வயிறு – வயிறும்,
விழைதரும் – விரும்பப்படுகின்ற,
உரோமம் – மயிரொழுக்கும்,
வரை – வயிற்றின் மடிப்புக்களும்,
இடை – இடுப்பும்,
உந்தி – நாபியும்,
விரும்பும் – விரும்பப்படுகின்ற,
அல்குல் – அல்குலும்,
தொடை – தொடைகளும்,
முழந்தாள் – முழங்கால்களும்,
மிளிர் – ஒளி செய்கின்ற,
கணைக்கால்கள் – கணைக்கால்களும்,
புறம் அடி – புறங்கால்களும்,
பரடு – காற்பரடுகளும்,
மெல் குதி – மெல்லிய குதிகால்களும்,
விரல் – விரல்களும்,
நகம் – நகங்களும்,
தாள் – பாதங்களும், (ஆகிய இவ்வவயவங்கள் முறையே), –
மழை – மேகமும்,
பிறை – பிறைச்சந்திரனும்,
சிலை – விற்களும்,
வேல் – வேல்களும்,
வள்ளை – வள்ளையிலைகளும்,
எள் (மலர்) – எள்ளுப்பூக்களும்,
இலவின் மலர் – இலவம்பூக்களும்,
முல்லை (மலர்) – முல்லைப் பூக்களும்,
மதி – பூர்ணசந்திரனும்,
வளை – சங்கமும்,
கழை – மூங்கில்களும்,
யாழ் – வீணையும்,
வாரிசம் – தாமரைமலர்களும்,
கெளிறு – கெளிறென்னும் மீன்களும்,
தத்தை வாய் – கிளியின் வாய்களும்,
கலசம் – குடங்களும்,
மணி – நீலமணியும்,
வட பத்திரம் – ஆலிலையும்,
எறும்பு ஊர் அழகு – எறும்பு ஊருகின்ற ஒழுங்கும்,
நீர் தரங்கம் – நீரின் அலைகளும்,
துடி – உடுக்கையும்,
சுழி – நீர்ச்சுழியும்,
அரவம் – பாம்பின் படமும்,
அரம்பை – வாழைமரங்களும்,
ஞெண்டு – நண்டுகளும்,
இள வரால் – இளைய வரால் மீன்களும்,
ஆமை – ஆமைகளும்,
அணி தராசு இணை – அழகிய இரண்டு தராசுதட்டுகளும்,
கந்துகம் – பந்துகளும்,
துகிர் – பவழங்களும்,
தரளம் – முத்துக்களும்,
அம்புயம் – தாமரைமலர்களும், (ஆகிய இவற்றை ஒக்கும்). (எ – று.)

எனவே, கருங்குழல் காளமேகத்தையும், நெற்றி பாதி மதியையும், புருவம் வில்லையும், கண் வேலையும்,
காது வள்ளையிலையையும், மூக்கு எள்ளுப்பூவையும், அதரம் இலவம்பூவையும், தந்தம் முல்லை மலரையும்,
முகம் பூர்ணசந்திரனையும், கண்டம் சங்கையும், தோள் இளமூங்கிலையும், முன்னங்கை வீணையையும்,
உள்ளங்கை தாமரை மலரையும், கைவிரல் கெளிற்று மீனையும், கைந்நகம் கிளிமூக்கையும், கொங்கை கும்பத்தையும்,
கொங்கைக்கண் நீலமணியையும், வயிறு ஆலிலையையும், அதனிடத்து உள்ள மயிரொழுக்கு எறும்பொழுக்கையும்,
வயிற்றுமடிப்பு அலையையும், இடை உடுக்கையையும், கொப்பூழ் நீர்ச்சுழியையும், அல்குல் பாம்பின் படத்தையும்,
தொடை வாழையையும், முழங்கால் நண்டையும், கணைக்கால் வரால்மீனையும், புறங்கால் ஆமையையும்,
காற்பரடு தராசுதட்டையும், குதிகால் பந்தையும், கால்விரல் – பவழத்தையும், கால்நகம் முத்தையும்,
பாதங்கள் தாமரைமலரையும் போலுமெனப் பெயர்ப்பயனிலையும் எழுவாயுமாக வந்த முறைநிரனிறைப்பொருள்கோள்.

இதனுள் கேசாதிபாதபரியந்தம் முப்பத்திரண்டு அவயவங்களும் அவற்றின் உபமானங்களோடு காண்க.
மழை – காளமேகம். பிறை – குறைந்தமதி. வள்ளை – அதன் இலைக்கு ஆகுபெயர். மலரை முன்னும் பின்னுங் கூட்டுக.
மதி – நிறைந்த சந்திரன், வாரிஜம், அம்புஜம் – நீரில் தோன்றுவது. கெளிறு,வரால் – மீனின்வகைகள்.
அரவம் – ஆகுபெயர். ஞெண்டு – போலி.
அரங்க நாடனையா ரென்றது – நிரதிசய இன்பத்தைத் தருபவ ரென்றற்கு. முன்கை – இலக்கணப்போலி.

இது, இரண்டு நான்கு ஏழாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றைநான்கும் விளச்சீர்களுமாய் வந்தது அரையடியாகவும்,
அஃது இரட்டிகொண்டது ஓரடியாகவும் வந்த பதினான்குசீராசிரியவிருத்தம்.

————

கைக்கிளை
57-தாள் இரண்டும் பார் ஒன்றும் தார்வாடும் வேர்வு ஆடும்
வாள் இரண்டும் காது இரண்டில் வந்து இமைக்கும் கோள் இரண்டும்
ஐவகைப் பூதம் அமைத்தருள் அரங்கர் மை வளர் சோலை மலையில்
தெய்வம் அல்லள் இத்திரு உருவினளே –57-

(இ – ள்.) தாள் இரண்டும் – இரண்டு கால்களும்,
பார் ஒன்றும் – பூமியிற் பொருந்தும்;
தார் – பூமாலை, வாடும் -;
வேர்வு ஆடும் – வியர்வை அரும்பும்;
வாள் இரண்டும் – வாள்போலும் இரண்டுகண்களும்,
காது இரண்டில் வந்து – இரண்டு காதுகளிலுஞ் சென்று மீண்டுவந்து, இமைக்கும் -; (ஆகையால்),
கோள் இரண்டும் – இராகு கேதுக்களென்னுங் கிரகங்களையும்,
ஐவகை பூதம் (உம்) – நிலம் நீர் தீ காற்று விசும்பென்னும் பஞ்சபூதங்களையும்,
அமைத்து அருள் – படைத்துக் காக்கின்ற,
அரங்கர் – அரங்கநாதரது,
மை வளர் – மேகங்கள் தவழ்கின்ற,
சோலைமலையில் – சோலைகளையுடைய மலையினிடத்தே யுள்ளவளாகிய,
இ திருஉருவினள் – அழகிய வடிவத்தையுடைய இம்மகள்,
தெய்வம் அல்லள் – தெய்வமகளல்லள் (மானுடமகளே); (எ – று.)

இது, பொழில்விளையாட்டு விருப்பால் ஆயம் நீங்க அதன்கண் தமியளாய்நின்ற தலைமகளை வேட்டைவிருப்பால்
இளையார் நீங்கத் தமியனாய் வந்த தலைமகன் தனியிடத்திற் கண்டவுடனே இம்மகள் தெய்வமகளோ மானுடமாதரோ வென்று
ஐயுற்று நின்று பிறகு இவ்வகைக்குறிகண்டு தெய்வமல்லள், மக்களுள்ளாளெனத் தெளிந்தது.
எனவே, தெய்வமல்லளாதற்குக் காரணம் – இனையன குறியே, வேற்றுமையில்லையென்பது கருத்து;
“பாயும் விடையரன் தில்லையன்னாள் படைக்கண் ணிமைக்குந்,
தோயு நிலத்தடி தூமலர் வாடுந் துயரமெய்தி,
யாயுமனனே யணங்கல்லளம்மா முலைசுமந்து,
தேயு மருங்குற் பெரும்பணைத்தோ ளிச் சிறுநுதலே” என்றார் திருக்கோவையாரிலும்,
இது, தெளித லென்னுந் துறையாம்.
இது, தலைவன்தலைவியர்களுள் ஒருவருள்ளக்கருத்தை ஒருவர் அறியாத ஒருதலைக்காம மாதலால், கைக்கிளையாயிற்று.

வாள் – உவமவாகுபெயர், காதளவும் நீண்ட கண்களாதலால், “வாளிரண்டுங் காதிரண்டில் வந்திமைக்கும்” என்றார்.
கால் நிலந்தோய்தலும், மாலை வாடுதலும், வேர்வை யுண்டாதலும், கண்ணிமைத்தலும் தேவர்களுக்கு இல்லையென அறிக;
“கண்ணிமைத்தலா லடிகள் காசினியிற் றோய்தலால்,
வண்ண மலர்மாலை வாடுதலா – லெண்ணி,
நறுந்தாமரைவிரும்பு நன்னுதலேயன்னா,
ளறிந்தா ணளன்றன்னை யாங்கு” என்றார் புகழேந்தியும்,
கோள் – க்ரஹமென்னும் வடசொல்லின் மொழிபெயர்ப்பு. இராகு கேதுக்களைக் கூறியது, மற்றைக்கிரகங்களுக்கும் உபலக்ஷணம்.
முற்றும்மையைப் பூதமென்பதனோடுங் கூட்டுக. திருவென்பது – கண்டாரால் விரும்பப்படுந் தன்மை நோக்கம்;
என்றது – அழகு. இனி, திருவுருவினள் – திருமகள்போலும் வடிவத்தவ ளென்றுமாம்.

இது, முதல் மூன்று அடிகளும் வெண்பாவடிகளாய், மற்றைய இரண்டும் ஆசிரியவடிகளாய், அவற்றுள்ளும்
ஈற்றயலடி முச்சீரதாய் வந்து துணிதலை நுதலிய ஒருதலைக்காம முணர்த்தியதனால், கைக்கிளைமருட்பா.

————-

ஊசல்
58-உரு மாறிப் பல பிறப்பும் செத்தும் ஊசலாடுவது அடியேன் ஒளியும் வண்ணம்
கரு மாயத்து என் நெஞ்சைப் பலகை ஆக்கி கருணை எனும் பாசத்தைக் கயிறாப் பூட்டி
மரு மாலைத் துழவு அசைய ஆடீர் ஊசல் மணி மகரக் குழி அசைய ஆடீர் ஊசல்
திருமாது புவி மாதோடு ஆடீர் ஊசல் திரு அரங்க ராசரே ஆடீர் ஊசல் –58-

(இ – ள்.) உரு மாறி – உருவம் மாறிமாறி,
பல பிறப்பும் – பலவகைப் பட்ட பிறவிகளிலும்,
பிறந்தும் -, செத்தும் -,
ஊசல் ஆடுவது – ஊஞ்சல் போல அலைவதனை, அடியேன் -,
ஒழியும் வண்ணம் – நீங்கும்படி,
கரு மா யத்து – மிக்க வஞ்சனையையுடைய,
என் நெஞ்சை – எனது மனத்தை,
பலகை ஆக்கி – ஊசற்பலகையாக்கொண்டு,
கருணை எனும் – (நினது) அருளென்கிற,
பாசத்தை -, கயிறு ஆ பூட்டி – ஊஞ்சற் கயிறாக மாட்டி,
மரு மாலை துளவு அசைய – வாசனையையுடைய திருத்துழாய்மாலை அசையும்படி,
ஊசல் ஆடிர் – ஊசலாடுவீராக;
மணி மகரம் குழை – இரத்தினத்தாலாகிய மகரகுண்டலங்கள், அசைய -, ஊசல் ஆடிர் -;
திருமாது புவிமாதோடு – பெரியபிராட்டியாரோடும் பூமிப்பிராட்டியாரோடும், ஊசல் ஆடிர் -;
திருவரங்கராசரே -! ஊசல் ஆடிர் -; (எ – று.)

யான் பிறப்பு நீங்கிப் பரமபதமடையும்படி தேவரீர் அருள்கூர்ந்து எனது மனத்தில் எஞ்ஞான்றும் இடைவிடாது
தங்கியிருக்கவேண்டு மென்பதாம். அன்பால் நினைவாரது உள்ளக்கமலம் எம்பெருமானுக்குத் தங்குமிடமாதலால்
“நெஞ்சைப்பலகையாக்கி” என்றும், கடவுளது திருவருள் அவ்வுள்ளத்தைக் கட்டித் தம்வயப்படுத்துதலால்
“கருணையெனும் பாசத்தைக் கயிறாப்பூட்டி” என்றுங் கூறினார்.
“பொருளலா விடயத்தைப் பொருளென்றெண்ணிப் போவதுமீள்வதுமா யெப்பொழுது மாடு,
மருளுலா மனவூசல் சுத்தஞ் செய்து மாறாது வளர்பத்தி வடத்தைப்பூட்டி,
யிருளைநேர் குழனி லப்பெண் ணலர்மேன் மங்கை யிருவரொடு மேயதன்மேலேறிவீறு,
மருளினான் மெள்ளவசைந்தாடி ரூச லாதிவடமலைமாய ராடி ரூசல்” என்றார் திருவேங்கடக் கலம்பகத்தும்.
இச்செய்யுளில் எம்பெருமான் ஊசலாடத் தாம் ஊசலாடுவது நீங்குமெனக் கூறிய நயம் கருதத்தக்கது.
ஊசலாடுதல்தொழில் எம்பெருமானைச்சேர அத்தொழில் சேதனனாகிய தம்மை விட்டுநீங்குதலைக் கூறியது –
முறையிற்படர்ச்சியணியின் பாற்படும்; இது, வடமொழியில் பர்யாயாலங்காரம் எனப்படும். இதற்கு உருவகவணி அங்கமாக நின்றது.

இஃது, ஊசல்; அஃதாவது – ஆசிரிய விருத்தத்தானாதல், கலித்தாழிசையானாதல் “ஆடிரூசல், ஆடாமோவூசல்” என முடிவுகூறக் கூறுவது.

இது, பதினைந்தாங் கவிபோன்ற ஆசிரியவிருத்தம்

————

59- ஊசல் வடம் போல் ஊர் சகாடம் போல் ஒழியாமே
நாச உடம்போடு ஆவி சுழன்றே நலிவேனோ
வாசவனும் போது ஆசனனும் கூர் மழு வோனும்
நேசமுடன் சூழ் கோயில் அரங்கா நெடியோனே –59-

(இ – ள்.) வாசவனும் – இந்திரனும்,
போது ஆசனனும் – தாமரை மலரைத் தங்குமிடமாகவுடைய பிரமனும்,
கூர் மழுவோனும் – கூர்மையாகிய மழுவாயுதத்தையுடைய உருத்திரனும்,
நேசமுடன் – பக்தியுடனே,
சூழ் – சூழ்ந்துவழிபடுகின்ற,
கோயில் அரங்கம் – திருவரங்கம் பெரிய கோயிலிலெழுந்தருளியிருக்கின்ற,
நெடியோனே -, (அடியேன்),
ஊசல் வடம் போல் – ஊஞ்சற்கயிறுபோலவும்,
ஊர் சகடம்போல் – செல்லுகின்ற வண்டியின் உருளைபோலவும்,
ஒழியாமே – ஓய்வில்லாதபடி,
நாசம் உடம்போடு – அழியுந்தன்மையையுடைய உடம்புடனே,
ஆவி சுழன்றே – உயிர்அலையப் பெற்றே,
நலிவேனோ – வருந்தக்கடவேனோ? (எ – று.)

ஓடி யோடி வருவதும் போவதுமா யிருத்தலால் ஊசல் வடத்தையும், மாறி மாறி உருண்டுகொண்டே யிருத்தலால்
ஊர்சகடத்தையும் உவமைகூறினார். சகடம் – உருளைக்கு ஆகுபெயர். நெடியோன் – பெரிய பெருமாள்.

இது, பதினெட்டாங் கவிபோன்ற கலிநிலைத்துறை.

————-

கையுறை -தழை
60-நேசத்து அழைக்கும் மத யானை முன்பு நின்றோன் அரங்கம்
பேசத் தழைக்கும் என் அன்பு அனையாய் பெரும் கற்பகத்தின்
வாசத் தழைக்கும் நறுந்தழை காண் இது மந்தத் தென்றல்
வீசத் தழைக்கும் தழை போல் கெடாது விலை இல்லையே –60-

(இ – ள்.) நேசத்து – அன்பினாலே,
அழைக்கும் – (ஆதிமூலமே யென்று) அழைத்த,
மதயானை முன்பு – மதத்தையுடைய கஜேந்திராழ்வான்முன்னே,
நின்றோன் – வந்துநின்று காத்தருளின எம்பெருமானது,
அரங்கம் – ஸ்ரீரங்கத்தை,
பேசு – சொல்லுந்தோறும்சொல்லுந்தோறும்,
தழைக்கும் – மகிழ்கின்ற,
என் – எனது,
அன்பு – அன்பை,
அனையாய் – ஒத்திருப்பவளே! –
இது – இத்தழை,
பெருங் கற்பகத்தின் – பெரிய கல்பக விருக்ஷத்தினது,
வாசம் தழைக்கும் – வாசனையையுடைய தழையினும்,
நறுந் தழை காண் – நறுநாற்றம் மிக்க தழையேகாண்; (இது),
மந்தம் தென்றல் – இளந் தென்றற்காற்று,
வீச – வீசுதலால்,
தழைக்கும் – தழைக்கின்ற,
தழைபோல் – (மற்றை மரங்களின்) தழையைப்போல,
கெடாது – (பின்பு) வாடிப்போகாது; (அதுவேயுமன்றி),
விலை இல்லை – (இத்தழைக்கு) விலையும் இவ்வளவென்று ஓர் அறுதி இல்லை;
(ஆதலால், இதனை நீ ஏற்றுக்கொள்வாயாக); (எ – று.)

இத்துறை, தலைமகளைக் குறை நயப்பித்துச் சேட்படைகூறத் துணியாநின்ற தோழியிடைத் தலைமகன்
தழைகொண்டு சென்று (இத்தழையை வாங்கிக்கொண்டு என்குறைமுடித்தருளுவீராம்’ என்று
வேண்டிக் கையுறையாகக் கொடுக்க, அதனை அரிதின் ஏற்றுக்கொண்ட தோழி, தலைமகளிடஞ் சென்று,
அவள்குறிப்பறிந்து, “இத்தழை நமக்கு எளியதொன்றன்று;இதனை ஏற்றுக்கொள்வாயாக” எனத் தலைமகளைத் தழையேற்பித்தது.

இது, நேரசை முதலாக நின்ற கட்டளைக்கலித்துறை.

——————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கக் கலம்பகம் –21-40-

February 19, 2022

தலைவனைப் பிரிந்த தலைவி கடலை நோக்கி இரங்கிக் கூறுதல்

21- வாயின் இரங்கினை ஆரம் எறிந்தனை வால் வளை சிந்தினை தண்
பாயலை உந்தினை மாலை அடைந்தனை பாரில் உறங்கி லையால்
கோயில் அரங்கனை மாகனகம் திகழ் கோகனகம் பொலியும்
ஆயிழை நண்பனை நீயும் விரும்பினை ஆகும் நெடும் கடலே –21-

(இ – ள்.) நெடுங் கடலே – பெரிய சமுத்திரமே! – (நீ என் போலவே),
வாயின் இரங்கினை – வாயினால் இரங்குகின்றாய்;
ஆரம் எறிந்தனை – ஹாரத்தை எறிகின்றாய்;
வால் வளை சிந்தினை – வெள்ளிய வளைகளைச் சிந்துகின்றாய்;
தண் பாயலை உந்தினை -; மாலை அடைந்தனை -;
பாரில் – பூமியில்,
உறங்கிலை – உறங்குகின்றாயில்லை;
ஆல் – ஆகையால், நீயும் -,
மா – பெருமை பொருந்திய,
கனகம் – பொன் மயமாகி,
திகழ் – விளங்குகின்ற,
கோகனகம் – செந்தாமரை மலரில்,
பொலியும் – வீற்றிருக்கின்ற,
ஆயிழை – ஆராய்ந்தெடுத்தணிந்த ஆபரணங்களை யுடைய திருமகளது,
நண்பனை – கணவனாகிய,
கோயில் அரங்கனை -,
விரும்பினை ஆகும் – விரும்பினாயாக வேண்டும்; (எ – று.)

“போக்கெல்லாம்பாலை புணர்தல்நறுங்குறிஞ்சி, ஆக்கஞ்சேரூடலணி மருதம் –
நோக்குங்கால், இல்லிருக்கைமுல்லை இரங்கல்நறுநெய்தல், சொல்லிருக்குமைம்பாற்றொகை” என்றபடி
இரங்கல் நெய்தல்நிலத்துக்குஉரிய தாதலாலும், அந்நெய்தல் நிலந்தான் கடலும் கடல் சார்ந்த இடமுமாதலாலும்,
அந்நிலத்திலே தலைமகனைப்பிரிந்து வருந்துகின்ற தலைமகள் தலைமகனைப்பிரிந்த தன்னிடத்துக் காணப்பட்ட
வாயினிரங்குதல் வால்வளைசிந்துதல் முதலிய செயல்கள் கடலினிடத்தும் காணப்பட்டதனால்,
அருகிலுள்ள கடலை முன்னிலைப்படுத்தி இரங்கிக்கூறுகின்றன ளென்க.

இத்துறை, “தன்னுட்கையாறெய்திடுகிளவி” எனப்படும்;
அதாவது – தமக்குநேர்ந்த துன்பத்தைத் தம்ஆற்றாமையாற் பிறிதொன்றன்மே லிட்டுச் சொல்லுஞ் சொல்.
இங்ஙனஞ்சொல்லுதலின் பயன் – களவுப்புணர்ச்சியொழுக்கத்திலே நின்று சிறைப்புறத்தானாகிய தலைமகன்
கேட்பின் விரைவில் வெளிப்படையாக வந்து இத்தலைமகளை மணம்புரிந்துகொள்வன்;
தோழிகேட்பின் தலைவனுக்குச்சொல்லி விரைவில் மணம்புரிந்துகொள்ளச் செய்வள்;
யாரும் கேளாராயின் தலைவி தானேசொல்லி ஆற்றினளாம்.

கடலுக்கு – வாயினிரங்குதல் – பேரொலிசெய்தலும், ஆரமெறிதல் – இரத்தினாகரமாதலால் முத்துக்களை வீசுதலும்,
வால்வளை சிந்துதல் – வெள்ளிய சங்குகளைச் சிந்துதலும்,
தண்பாயலையுந்துதல் – குளிந்து பாய்கின்ற அலைகளைத் தள்ளுதலும்,
மாலையடைதல் – பெருமைபெறுத லுங் கருநிறமுடைமையும் ஒழுங்காயிருத்தலும்,
உறக்கமின்மை – அல்லும் பகலும் அந்வரதமும் ஓயாது அலைத்துக் கொண்டிருத்தலும் என்றும்;
தலை மகளுக்கு – வாயி னிரங்குதல் – வாயினா லிரங்கிப் புலம்புவதும்,
ஆரமெறி தல் – முத்துமுதலியவற்றாலாகிய மாலைகளைக் கழற்றி யெறிவதும்,
வால்வளை சிந்துதல் – கையிலணிந்த வெள்ளிய சங்குவளையல்களை உடம்புமெலிதலாற் சிந்திவிடுதலும்,
தண்பாயலை யுந்துதல் – மெத்தென்ற பாயைத் தள்ளி விடுதலும், மாலையடைதல் – வேட்கைமிகுதியால் மயக்கமடைதலும்,
உறக்கமின்மை – வேதனைமிகுதியால் இரவுமுழுவதும் நித்திரைபெறாமையும் என்றும் பொருள்கொள்க.
சிலேடையை அங்கமாகக்கொண்டுவந்த தற்குறிப்பேற்றவணி.

“காமுற்றகையறவோடெல்லே யிராப்பகல், நீமுற்றக்கண்டுயிலாய் நெஞ்சுருகியேங்குதியால்,
தீமுற்றத்தென்னிலங்கை யூட்டினான் றாள்நயந்த, யாமுற்றதுற்றாயோவாழிகனைகடலே” என்றார் நம்மாழ்வாரும்.

இது, பிரிவுக்காலத்திற் கடலைநோக்கிப் பெண்பால் இரங்கியது; இங்ஙனமே ஆண்பால் இரங்குதலை,
(“போவாய் வருவாய் புரண்டுவிழுந்திரங்கி, நாவாய்குழற நடுங்குறுவாய் –
தீவாய், அரவகற்றுமென்போலவார்கலியே நீயும், இரவகற்றிவந்தாய்கொலின்று” என்ற புகழேந்திப் புலவர்வாக்கிற் காண்க.)

கோகனகம் – கோகநத மென்பதன் திரிபு; இதற்கு – சக்கரவாகப் பறவைகள் தன்னிடத்து ஒலிக்கப்பெறுவ தென்றும்,
கோகமென்னும் நதி யினிடத்தே முதலில் தோன்றிய தென்றும் பொருள்.
ஆயிழை – வினைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை.
இழை – நவரத்தினங்களும் இழைத்துச் செய்யப்படுவது. நீயுமென்ற எச்சவும்மையால், என்போல வென்பது பெறப்பட்டது.
விரும்பினையாகு மென்றது – விரும்பினை போலு மென்றபடி.

இது, முதலைந்துங் கூவிளச்சீர்களும், ஈற்றுச்சீர் கூவிளங்காய்ச்சீரு மாகிய அறுசீராசிரியவிருத்தம்.

————

பிரிவாற்றாது வருந்திய தலைமகள் இரங்கல்

22-கடல் வழி விட நிசிசரர் பொடி பட இரு கண் சீறி
வடகயிலையின் எழு விடை தழுவியதும் மறந்தாரோ
அடல் அரவு அமளியில் அறி துயில் அமரும் அரங்கேசர்
இடர் கெட வருகிலார் முருகு அலர் துளவும் இரங்காரே –22-

(இ – ள்.) அடல் அர அமளியில் – வலிமைபொருந்திய சேஷசயனத் தில்,
அறி துயில் அமரும் – யோகநித்திரைகொண்டருளுகின்ற,
அரங்கேசர் -,
இடர் கெட (எனது) விரகவேதனை தீரும்படி,
வருகிலர் – வந்தணைந் தாரில்லை; (அங்ஙனம் அடையாமையேயன்றி),
முருகு அலர் துளவும் – வாசனைவீசுகின்ற திருத்துழாய்மாலையையும்,
இரங்கார் – இரங்கித்தந்தாரு மில்லை; (ஆகையால், முன்பு ஸ்ரீராமாவதாரத்திற் சீதைக்காக,)
கடல் -, வழி விட – (அஞ்சி) வழியை விடவும்,
நிசிசரர் – (இராவணன் முதலிய) அரக்கர்கள்,
பொடிபட – பொடியாகவும்,
இரு கண் சீறி – (தனது) இரண்டு கண்களுஞ் (சிவக்கும்படி) சீற்றங்கொண்டு, –
(ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில் நப்பின்னைக்காக),
வட கயிலையின் – வடக்கின்கணுள்ள கைலாசமலை போன்ற,
எழு விடை – ஏழுவிருஷபங்களையும்,
தழுவியது – தழுவி நெரித்ததை,
மறந்தாரோ – மறந்துவிட்டாரோ? (எ – று.)

இயற்கைப்புணர்ச்சி முதலிய வகைகளால் தலைவியைக் களவிற்கூடி நின்ற தலைவன் அங்குப்பழியெழுந்ததென்று
தோழியால் விலக்கப்பட்டபின்னர் அப்பழியடங்கச் சிலநாள் ஒருவழிப்பிரிந்துறைத லுண்டு;
அது, ஒருவழித்தணத்த லெனப்படும். அன்றி, களவுப்புணர்ச்சி பெற்ற தலைமகன் தோழியால் வரைவுமுடுக்கப்பட்டுத்
தலைமகளை வரைந்துகொள்ளுதற்கு வேண்டியபொருள் தேடுதற்பொருட்டும் பிரிவன்; அது, வரைபொருட் பிரித லெனப்படும்.
அங்ஙனம் தலைமகன் பிரிந்த சமயங்களில், அப்பிரிவை யாற்றாத தலைவி, நெஞ்சொடுகூறலாகத் தன்னிலேதான் இரங்குதலும்,
மனமொத்த தன்உயிர்த்தோழியோடு இரங்குதலுஞ் செய்வள். இங்ஙனம் இச்செய்யுட்குத் துறைப்போக்கு உணர்க.
தலைவனைப்பிரிந்து தவிக்கின்ற நிலையிலே தலைவனது தாரும் பெறாது வருந்தி இரங்கி இங்ஙனங் கூறின ளென்க.
இதன் மெய்ப்பாடு – அழுகை; பயன் – ஆற்றாமை நீங்குதல். பிரிந்த நிலையிலே தலைவனது மாலை கிடைக்கப் பெற்றால்
அது கொண்டேனும் ஒருவாறு ஆறியிருக்குங் கருத்தினளாதலின், அதனைக் கொடுத்தனுப்பாமை பற்றியுங் குறைகூறினள்.
தலைவனோடு சம்பந்தம்பெற்ற பொருள் யாதாயினும் இதற்குப் பரிகாரமாமென்பது, இதனாற்போந்த பொருள்.
அவனது பிரசாதமான திருத்துழாய் தான்கொண்ட நோய் தணித்தற்கு ஏற்ற பசுமருந்தாகிய சஞ்சீவி மூலிகை என்றவாறு.

எனது தலைவர் என்னை மறவாராயின், சநகர்மகளுக்கும் ஆயர்மக ளுக்கும் இரங்கியதுபோலவே
என்பக்கலிலும் இரங்கியருளுவ ரென்க. முன்பு சீதாபிராட்டியினிடத்து ஆராதஅன்பினால் அவள்பிரிவை ஆற்றமாட்டாது
அவளைக்கூடுதற்பொருட்டுத் தன்னிலுந் தாழ்ந்தவனாகிய ஒருவனைத் தலையால் வணங்கிக் கடலையடைத்தலாகிய
செயற்கருஞ் செயலைச் செய்தவரும், நப்பின்னைப்பிராட்டியை மணஞ்செய்துகொள்ளும் விருப்பினால்
ஓர்இடையனது அடங்காத ஏழுஎருதுகளை வலியடக்கித் தழுவினவருமாகிய தலைவர் என்திறத்து இவ்வாறு
உபேட்சித்திருப்பது அவரதுநடுவு நிலைக்குப் பெரியதோரிழுக்கா மென்பது, குறிப்பு.

“கடல்வழிவிட” என்றது – கடலில் மலைகளைக்கொண்டு சேதுபந்தஞ்செய்த அருமையையும்,
அதற்குக் கடல் இடங்கொடுக்கும்படி அதனைச்சினந்த பெருமையையுங் குறித்தற்கு. இருகண்சீறி – இருகாற்சீற்றங்கொண்டு எனவுமாம்.
“அடலரவமளியி லறிதுயிலமரு மரங்கேசர்” என்றது –
“பாம்பணையார்க்குந் தம்பாம்புபோல், நாவுமி ரண்டுளவாய்த்து நாணிலியேனுக்கே” என்றதன் கருத்தை உட்கொண்டது.
முருகலர்தல் – தேனொழுகுதலுமாம். துளவு – அதனாலாகிய மாலைக்குக் கருவியாகுபெயர்.
கயிலை, விடை – வடமொழிச்சிதைவுகள். கயிலை – வெண்மை பெருமை வலிமைகளால் விடைக்கு உவமை. ஓகாரம் – இரக்கம்.

இது, முதல்நான்குங் கருவிளச்சீர்களும், ஈற்றது தேமாங்காய்ச்சீரு மாகிய கலிநிலைவண்ணத்துறை.
“தனதன தனதன தனதன தனதன தந்தான” என்பது, இதன் வாய்பாடு.

————–

23-இரங்கத் தனித் தனியே எய்துகின்ற துன்பத்
தரங்கத்தை ஏதால் தடுப்பீர் -அரங்கர்க்குக்
கஞ்சம் திருப்பாதம் கார் மேனி என்று அவர் பால்
நெஞ்சம் திருப்பாத நீர் –23-

(இ – ள்.) அரங்கர்க்கு -, திரு பாதம் – திருவடிகள்,
கஞ்சம் – தாமரை மலர்போலும்;
மேனி – திருமேனி,
கார் – காளமேகம்போலும், என்று -,
அவர்பால் – அவ்வெம்பெருமான்பக்கல்,
நெஞ்சம் – மனத்தை,
திருப்பாத – (தீநெறிக்கட் செல்லவொண்ணாது) திருப்பிச் செலுத்தாத,
நீர் – நீங்கள், (இந்த ஸம்ஸாரஸாகரத்தில்),
இரங்க – தளர்ந்து வருந்தும்படி,
தனி தனியே எய்துகின்ற – ஒன்றன்மேலொன்றாக ஓயாமல் ஓடிவந்தடைகின்ற,
துன்பம் தரங்கத்தை – துன்பங்களாகிய அலைகளை,
ஏதால் – வேறு எதனை (ப்புணையாக)க் கொண்டு,
தடுப்பீர் – தடைசெய்து (கடந்து) உய்வீர்; (எ – று.)

உங்கட்கு உய்ய வேறொரு விரகில்லையே யென்று இரங்கியவாறு, கண்டவர் மனத்தைக் கவரும் பேரழகும்
நம்பிச் சரணமடைந்தார்க்குப் பெரும்பயனளித்தலு முடைய எம்பெருமானைக் கதியென்று பற்றாதார்க்கு இடையறாது
வந்து வருந்துகின்ற கடல்போன்ற சமுசாரசிலேசங்கள் ஒழிய மாட்டா என்பதாம்.
எம்பெருமான் திருவடிகளே பிறவிப்பெருங்கடலுக்குப் புணையாகுமென்பது கருத்து.

காரண காரியத் தொடர்ச்சியாய் ஒழிவின்றி வருதலால், துன்பத்தரங்க மென்றார். கஞ்சம் – நீரில் முளைப்பது.
கஞ்சம், கார் என்பன – பெயர்ப்பயனிலைகள், பால் – ஏழனுருபு.
திருப்பாதவென்பது, திருப்புதலின் அருமை குறித்து நின்றது. உலகியல்பை நினையாது இறைவனடியையே
நினைப்பார்க்குப் பிறவியறுதலும், இவ்வாறன்றி மாறநினைப்பார்க்கு அஃது அறாமையுமாகிய இரண்டும் இதனால் நியமிக்கப்பட்டன.
“பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா, ரிறைவ னடிசேரா தார்” என்றார் திருவள்ளுவரும்.

இது, இரண்டாங்கவிபோன்ற இருவிகற்பநேரிசைவெண்பா.

————-

தான் தூது விட்ட நெஞ்சு திரும்பி வாராமைக்குத் தலைமகள் இரங்குதல்

24-நீர் இருக்க –மட மங்கைமீர் -கிளிகள் தாம் இருக்க -மதுகரம் எலாம் நிறைந்து இருக்க –
மட அன்னம் முன்னம் நிரையாய் இருக்க -உரையாமல் யான் ஆர் இருக்கினும்
என்நெஞ்சம் அல்லது ஒரு வஞ்சம் அற்ற துணை இல்லை என்று ஆதரத்தினொடு
தூது விட்ட பிழை ஆரிடத்து உரை செய்து ஆற்றுவேன்
சீர் இருக்கும் மறை முடிவு தேடரிய திரு அரங்கரை வணங்கியே திருத் துழாய்
தாரில் விரும்பியே கொடு திரும்பியே வருதல் இன்றியே
வார் இருக்கும் முலை மலர் மடந்தை உறை மார்பிலே பெரிய தோளிலே மயங்கி
இன்புற முயங்கி என்னையும் மறந்து தன்னையும் மறந்ததே –24–

(இ – ள்.) மட மங்கைமீர் – பேதைமைக்குணத்தையுடைய தோழிகளே! –
முன்னம் – எதிரில்,
நீர் இருக்க – நீங்களெல்லாரும் இருக்கவும்,
கிளிகள் இருக்க – கிளிகளெல்லாம் இருக்கவும்,
மதுகரம் எலாம் நிறைந்து இருக்க – வண்டுகளெல்லாம் நிறைந்திருக்கவும்,
மட அன்னம் – அழகிய அன்னங்களெல்லாம்,
நிரை ஆய் இருக்க – திரளாக இருக்கவும்,
உரையாமல் – (இவர்களொருவரையும் நம்பித் தூதாகச்) சொல்லியனுப்பாமல், யான் -,
ஆர் இருக்கிலும் – வேறே யார் இருந்தாலும்,
என் நெஞ்சம் அல்லது -எனது மனத்தையன்றிக்கே,
ஒரு வஞ்சம் அற்ற துணை – வஞ்சனையில்லாத தொரு (வேறு) துணை,
இல்லை என்று – இல்லையென்றெண்ணி,
ஆதரத்தினொடு – அன்போடு,
தூது விட்ட (அம்மனத்தைத் திருவரங்கநாதர்பக்கல்) தூதாக அனுப்பியதனா லுண்டான,
பிழை – தவற்றை,
யாரிடத்து -, உரை செய்து – சொல்லி,
ஆறுவேன் – மனந்தணிவேன்; (அம்மனம் என்செய்த தென்னில்), –
சீர் இருக்கும் – சிறப்புப்பொருந்திய,
மறை முடிவு – வேதாந்தங்களும்,
தேடுஅரிய – தேடிக்கண்டறிய வொண்ணாத,
திருவரங்கரை -, வணங்கி – (கண்டு) வணங்கி, (என் குறையைச் சொல்லி),
விரும்பி – (அவர்) திருவுள்ளமுவந்து,
திருத்துழாய் தரில் – திருத்துழாய்மாலையைத் தந்தருளினால்,
கொடு – (அதனை) வாங்கிக்கொண்டு,
திரும்பி வருதல் இன்றியே – திரும்பிவருத லில்லாமலே,
வார் இருக்கும் – கச்சுப்பொருந்திய,
முலை – தனங்களையுடைய,
மலர் மடந்தை – தாமரைமலரில்வாழும் பெரியபிராட்டியார்,
உறை – வீற்றிருக்கின்ற,
மார்பிலே – திருமார்பிலும்,
பெரிய தோளிலே – பெரிய திருத்தோள்களிலும்,
மயங்கி – (வேட்கை மிகுதியால்) மயக்கங் கொண்டு,
இன்புற – இன்பமுண்டாக,
முயங்கி – தழுவிக் கொண்டு,
என்னையும் மறந்து -, தன்னையும் மறந்தது – (தூதாகப்போன) தன்னையும் மறந்துவிட்டது; (எ -று.)

இது, நெஞ்சத்தைத் தூதுவிடுத்த தலைமகள், அது மீண்டுவாராததாகத் தோழிமாரை நோக்கி இரங்கிக் கூறியது.

சுக துக்கங்களில் எனக்குத் துணையாயிருந்து உதவுகின்ற பாங்கியர்க ளாகிய உங்களைத் தூதனுப்பலாமென்று
பார்த்தாலோ நீங்கள் என்னோ டொத்த பருவமுடைய இளமகளிராதலால்,
அத்தலைவரழகில் ஈடுபட்டு ஆழ்ந்திடுவீரேயன்றி என்காதலை அவரிடம் சொல்லி மறுமொழிகொண்டு மீண்டுவருவீரல்லீர்.
கிளியைத் தூதனுப்பலாமென்றாலோ அதனை மன்மதனது குதிரையாகக் கூறுவராதலின், அதுவும் எனக்கு இணங்கிவாராது;
மேலும், அது சொல்லியதேசொல்லும் இயல்புடைய தன்றோ? வண்டோ வெனின் மன்மதனது வில்லின் நாணாதலால்,
அதுவும் என்திறத்து அன் புடையதாகாது. அன்னப்பறவை சிரமம்பொறாததும் மந்தகதியுடையதும்
இனியவிடத்து வீற்றிருந்து கிடைத்தஇரையை யுண்டு பிரிவுத்துயரறியாது தானுந் தன்துணையும் கூடி
வாழ்ந்து களித்திருப்பதும் தன்நலம்பேணுவதும் நட்புப்பிரிக்குங் குணமுடையதுமாதலால்,
அது அந்தப்போகத்தை விட்டு எனக்காக அவ்வளவுதூரம் வருந்திச் சென்று விரைவில் என்நிலைமையைத்
தலைவர்க்குச் சொல்லி நேரில்மீண்டுவந்து அவர்சொல்லை எனக்குச் சொல்லமாட்டாது.
ஆதலின், அப்பொருள்களுள் எதனிடத்தும் நம்பிக்கை கொள்ளாமல் “நெஞ்சையொளித்தொரு வஞ்சக மில்லை” என்றபடி
எனதுநெஞ்சினிடத்து நம்பிக்கைகொண்டு அதனைத் தலைவர்பால் தூதனுப்பி அது மீண்டுவராமையால்,
இதனை யாரிடத்துக் கூறியாறுவே னென்று இரங்கின ளென்க.

“குருத்தத்தை மாரன்குரகதமாமென்றே, வருத்தத்தை யங்குரைக்கமாட்டேன் –
கருத்துற்ற, மாதண்டலைவாய் மதுகரத்துக்கும் மவன்றன், கோதண்டநாணென்று கூறேன்நான் –
பொற்கால், வெறிப்பதும வீட்டன்னம் வெண்பாலுநீரும், பிறிப்பதுபோல் நட்புப்பிறிக்குங் -:
குறிப்பறிந்து, காதலா லுள்ளக்கவலை யதுகேட்க, வோதலாகாதென்று உரை யாடே – னாதலா, லுள்ளே
புழுங்குவ தன்றி யொருவருக்கும் விள்ளேன்” என்னுந் திருநறையூர் நம்பி மேகவிடுதூதும் ஒப்பு நோக்கத்தக்கது.

மடமை – அறிந்தும் அறியாதுபோலிருக்குந் தன்மை; இது – நாணம், அச்சம், பயிர்ப்பு முதலிய பெண்குணங்கள்
பலவற்றிற்கும் உபலக்ஷணம். இனி, இளமையும், அழகுமாம். “எலாம்” என்பதைப் பிறவிடத்துங் கூட்டுக.
மறைமுடிவு – உபநிஷத்துக்கள். விரும்பியே கொடு – மகிழ்ந்து பெற்றுக் கொண்டென்றுமாம்.
கொடு – கொண்டு என்பதன் விகாரம். தன்னையும் மறந்தது – பரவசமாயிற் றென்றபடி.
எனக்கு நேரும் இன்பதுன்பங்களை என்னோடு ஒக்கஉண்டு என்னுள்ளே உறைந்து என்னினும் வேறாகாததான
என்நெஞ்சமே எனக்குத் துணையாகப்பெறாத யான் வேறு யாரை வெறுப்பே னென்பது குறிப்பு.

இது, முதல் மூன்று ஐந்தாஞ்சீர்கள் மாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறாஞ்சீர்கள் கூவிளங்காய்ச்சீர்களும்,
ஏழாஞ்சீர் விளச்சீருமாய் வந்தது அரையடியாகவும், அஃதுஇரட்டிகொண்டது ஓரடியாகவும் வந்த பதினான்கு சீராசிரியவிருத்தம்.

——————–

வண்டு விடு தூது
25- மறக்குமோ காவில் மது அருந்தி அப்பால்
பறக்குமோ சந்நிதி முன்பு ஆமோ சிறக்கத்
தரு வரங்கள் கேட்குமோ தாழ்க்குமோ நெஞ்சே
திருவரங்கர் பால் போனதேன் –25-

(இ – ள்.) நெஞ்சே -! திருவரங்கர்பால் – ஸ்ரீரங்கநாதரிடத்து,
போன – தூதுசென்ற,
தேன் – வண்டு, –
காவில் – (இடையிலுள்ள) சோலைகளில் (தங்கி),
மது அருந்தி – (அங்குள்ள) தேனைப் பருகி,
மறக்குமோ – (என்னை) மறந்து விடுமோ? (அன்றிக்கே),
அப்பால் பறக்குமோ – (அச்சோலைகளுக்கு) அப்புறத்தே பறந்து செல்லுமோ?
சன்னிதி முன்பு ஆமோ – (அங்ஙனஞ்சென்று) கோயிலின்முன்னே சேருமோ? (சேர்ந்து),
சிறக்க – (எனக்குச்) சிறப்புண்டாக,
தரு – (அவர்) அருளுகின்ற,
வரங்கள் – வரங்களை, கேட்குமோ -? (அன்றிக்கே),
தாழ்க்குமோ – தாமதித்து நிற்குமோ? (அறியேன்!) (எ – று.)

இது, தலைமகன்பக்கல் வண்டைத் தூதுவிடுத்த தலைமகள், அது திரும்பி வாராமையால் அதன் நிலைமையை
ஐயுற்றுத் தன்நெஞ்சோடு கூறியது.
“வாயான் மலர்கோதி வாவிதொறு மேயுமோ, மேயாம லப்பால் விரையுமோ –
மாயன், திருமோகூர் வாயின்று சேருமோ நாளை, வருமோ கூர்வா யன்னம் வாழ்ந்து” என்பதோடு ஒப்பிடுக.
மதுவருந்துதல் உடனே மறந்து விடுதற்கு ஏதுவாதலால், அதனை முற்கூறினார்.
ஓகாரங்கள் – ஐயப்பொருளன. வரம் – வேண்டுவன கோடல். தேன் – வண்டின் சாதிபேதங்களில் ஒன்று;
இது, நல்லமணத்தே செல்லும்.

இது, முன்பு கூறியதுபோன்ற நேரிசைவெண்பா.

—————

அம்மானை
26-தேன் அமரும் சோலைத் திருவரங்கர் எப்பொருளும்
ஆனவர் தான் ஆண் பெண் அலி அலர் காண் அம்மானை
ஆனவர் தாம் ஆண் பெண் அலி அலரோ ஆமாகில்
சானகியைக் கொள்வாரோ தாரமாய் அம்மானை
தாரமாய்க் கொண்டதும் ஓர் சாபத்தால் அம்மானை –26-

(இ – ள்.) தேன் அமரும் சோலை – வண்டுகள் விரும்பி நெருங்குகின்ற சோலைகளையுடைய,
திருவரங்கர் -, எ பொருளும் ஆனவர்தாம் – எல்லாப்பொருள்களுமானவரே; (ஆயினும்),
ஆண் பெண் அலிஅலர் காண் – ஆணும் பெண்ணும் அலியும் அல்லாதவரே; அம்மானை -;
ஆனவர்தாம் – (அங்ஙனம்) எல்லாப்பொருள்களுமாகிய அவர்,
ஆண் பெண் அலி அலரே ஆம் – ஆகில் – ஆணும் பெண்ணும் அலியு மல்லாதவரே யாவ ரானால்,
சானகியை – சீதையை,
தாரம் ஆ கொள்வரோ – மனைவியாகக் கொள்வாரோ? அம்மானை -;
தாரம் ஆ கொண்டதும் – (அங்ஙனம்) மனைவியாகக் கொண்டதும்,
ஓர் சாபத்தால் – ஒரு சாபத்தினால்; அம்மானை -; (எ – று.)

மூன்றுமங்கையர் அம்மானையாடும்போது பிரபந்தத்தலைவனது தன்மையை வார்த்தையாடுவது,
அம்மானையென்னும் உறுப்பின் இலக்கணம்.

தேன் – இங்கே வண்டின் பொதுப்பெயர். இனி, தேனமர்தல் – மதுப் பெருகுதலுமாம். தாம், காண் – தேற்றம்.
முதலடி – “ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்” என்றபடி எம்பெருமான் ஸர்வவ்யாபி யென்பதை விளக்கும்.
ஆண் பெண்ணலியலரென்றதுக்குக் கருத்து –
எம்பெருமானோடு ஒவ்வாமைக்குப் பெண் அலிகளோடு ஆண்களோடு வாசியில்லை யென்பது; புருஷோத்தம னென்றபடி:
உலகத்திற்காணப்படுகின்ற ஆணும் பெண்ணுமலியு மல்லாத ஒருபொருள் சூனியமன்றோவென்னில்:
ஆண்பெண்ணலியல தென்னாமல் “அலர்” என அன்மையைத் துணிந்தபொருளின்மேலேற்றிச் சிறப்புப்பற்றி
வந்த உயர்திணைப்பன்மையீற்றாற் கூறியதுதானே உலகத்திற்காணப்படுகின்ற ஆணின்தன்மையரு மல்லர்,
பெண்ணின் தன்மையருமல்லர், அலியின் தன்மையரு மல்லர்; ஸ்த்ரீ புந்நபும்ஸகாதிஸர்வவஸ்து
விலக்ஷணர் புருஷோத்தமரென்று நன்கு காட்டாநின்ற தென்க.
“ஆணல்லன் பெண்ணல்ல னல்லாவலியு மல்லன்” என்ற ஆழ்வார்பாசுரசம்பந்தமாகப் பட்டர் திருவாய் மலர்ந்தருளிய
உபந்யாசம் இங்குக்கருதத்தக்கது.
“சாபமே சபித்தல் வில்லாம்” என்பது நிகண்டாதலின், சாபமென்பதற்கு – சபிப்பென்றும் வில் லென்றும் பொருள்கொண்டு,
பிருகுமுனிவரதுசாபத்தாலென்றும், சிவபிரானது வில்லை முறித்ததனா லென்றுங் கருத்துக்கொள்க.

இச்செய்யுளில் “ஆண்பெண்ணலியலர்” முதலாக எடுத்துக்கூறிய சொற்றொடர்களின் சாதுரியத்தையும்
ஆழ்ந்தபொருள் நுணுக்கத்தையும் சிலேடைப்பொருளின் நயத்தையுங் கருதாது
ஆசிரியர்மீது அழுக்காற்றினாற் குற்றங்கூறுவது சிறிது பொருத்தமில்லாதொழியு மென்க.

இது, நான்கு அடிகளால் தனித்து வந்து ஈற்றடி எண்சீராய் மிக்கு ஏனையடிகள் அளவடிகளாய் நின்ற கலித்தாழிசை.

————-

பிரிவாற்றாத தலைவியின் நிலை கண்டு நல் தாய் இரங்கல்

27- மானை எய்தவர் இன்னம் என் மட மானை எய்திலர் நேமியால்
மாலை தந்தவர் பைந்துழாய் மது மாலை தந்திலர்-இந்திரன்
சோனை மாரி விலக்கி விட்டவர் சொரி கண் மாரி விலக்கிலார்
சுரர் தமக்கு அமுதம் கொடுத்தவர் சோதி வாய் அமுதம் கொடார்
தானை ஐவர் கொடிக்கு அளித்தவர் தானை கொண்டது அளிக்கிலார்
சங்கற்கு இரவைத் தடுத்தவர் தையலுக்கு இரவைத் தடார்
ஆனை முன் வரும் அன்புளார் முலை ஆனை முன் வரும் அன்பிலார்
அணி அரங்கர் நடத்தும் நீதி அநீதியாக இருந்ததே –27-

(இ – ள்.) (முன்பு சீதைக்காக), மானை – (மாயையால் வந்த மாரீசனா கிய) மானை,
எய்தவர் – (அம்பினால்) எய்தவர்,
இன்னம் – இன்னமும்,
என்மட மானை – எனது இளைய மான்போன்ற பார்வையையுடைய மகளை,
எய்திலர் – அடைந்தாரில்லை; (முன்பு பாரதயுத்தத்தில்),
நேமியால் – சக்கரத்தால், (சூரியனை மறைத்து),
மாலை தந்தவர் – அந்திப்பொழுதைச் செய்தவர், (என் மகளுக்கு),
பைந் துழாய் மது மாலை – தேனினையுடைய பசியதிருத்துழாய்மாலையை,
தந்திலர் – தந்தாரில்லை; (முன்பு கோவர்த்தனத்தைக் குடையாகப் பிடித்து),
இந்திரன் சோனை மாரி – இந்திரனால் விடாது பெய்விக்கப்பட்ட பெருமழையை,
விலக்கிவிட்டவர் – தடுத்தருளியவர்,
சொரி கண் மாரி – (என்மகள்) கண்களினின்றும் பெய்கின்ற கண்ணீர் மழையை,
விலக்கிலார் – தடுத்தாரில்லை; (முன்பு பாற்கடல்கடைந்து),
சுரர்களுக்கு – தேவர்களுக்கு,
அமுதம் – அமிருதத்தை, கொடுத்தவர் -, (என்மகளுக்கு),
சோதிவாய் அமுதம் – ஒளிபொருந்திய (தமது) திருவாய்மலரிடத்துளதாகிய அதராமிருதத்தை,
கொடார் – கொடுத்தாரில்லை;
ஐவர் கொடிக்கு – (துரியோதனன் தம்பியால் துகிலுரியப்பட்ட) பாண்டவர் மனைவியாகிய திரௌபதிக்கு,
தானை அளித்தவர் – துகிலை (மேன்மேல் மாளாது வளரும்படி) அருளியவர், (என்மகளுக்கு),
தானை கொண்டது – தாங்கொண்ட துகிலை,
அளிக்கிலார் – கொடுத்தருளினாரில்லை;
சங்கரற்கு – உருத்திரனுக்கு,
இரவை – பிச்சை யெடுத்தலை,
தடுத்தவர் – போக்கியருளியவர்,
தையலுக்கு – (என்) மகளுக்கு,
இரவை – (நெடிதூழிகாலமாய்த் தோன்றிவளர்கின்ற) இராப்பொழுதை,
தடார் – (அங்ஙனம் வளரவொட்டாது) தடுத்தாரில்லை;
ஆனை முன் வரும் – கஜேந்திராழ்வானுக்கு எதிரில் வந்து பாதுகாத்தருளிய,
அன்பு உளார் – அன்புடையவர்,
முலை யானை முன் வரும் – (என்மகளது) தனங்களாகிய யானைகளுக்குமுன்னே வந்து தோன்றுகின்ற,
அன்பு இலார் – அன்பில்லாதவராயிருந்தார்; (ஆகையால்),
அணி அரங்கர் – அழகிய ரங்கநாதர்,
நடத்தும் நீதி – நடத்துகின்ற முறைமையெல்லாம்,
அநீதி ஆக – முறைமையல்லாததாக, இருந்தது -; (எ – று.)

இது, தலைமகனோடு புணர்ந்து பிரிந்த தலைமகள் பிரிவாற்றாமையாற் படுகிற பலவகைத் துன்பங்களையுங் கண்டு
ஆற்றாளான நற்றாய் தன்ஆற்றாமை மிகுதியால் இரங்கிக் கூறியது.
விரகவேதனையால் துகில்நெகிழ்ந்துபோகின்றமை பற்றி, தானைகொண்ட தென்றார்.
ததயல் – அழகு; அஃதுடையாளுக்கு ஆகுபெயர். கொங்கை களுக்கு யானையின்கோடுகளையும் மஸ்தகங்களையும்
உவமையாகக்கூறுவது மரபாதலால், முலையானை யென்றார்.
இனி, “தானைகொண்ட தளிக்கிலார்” என்பதில் தானையென்பதனைத் தான் ஐ எனப்பிரித்துத் தான்
விரகவேத னையையுண்டாக்கிக் கவர்ந்துகொண்ட அழகை மீட்டும் வந்து புணர்ந்து அளிக்கில ரென்றும்,
‘ஆனைமுன்வரு மன்புளார்’ என்னுமிடத்தில் மன்புள்ளார் எனப் பிரித்துக் கஜேந்திராழ்வான் முன்னே
விரைந்து வருகின்ற பெரிய கருடனை யுடையவ ரென்றும், ‘முலையானைமுன்’ என்பதை முலையால் நைமுன் எனப்
பிரித்துத் தனங்களால் வருந்துமுன்னே யென்றும் பொருள் கொள்ளலாம்.

இச்செய்யுளில் எய்தவர் எய்திலார் முதலாகக் கூறப்பட்டவை எதிர் மறையும் உடன்பாடுமாய்ச் சிலசொற்றொடர்கள்
சொல்லாலும் சிலசொற்றொடர்கள் சொல்லாலும் பொருளாலும் மறுதலைப்படத் தொடுக்கப்பட்டதனால்,
முரண்தொடை; “சொல்லினும் பொருளினும் முரணுதல் முரணே” என்றது காண்க.
அழகரந்தாதி – 83, திருவேங்கடத்தந்தாதி – 83 – ஆஞ் செய்யுள்களும் நோக்கத்தக்கன.

“மாத்துளவத், தாரானை வேட்கையெல்லாந் தந்தானை மும்மதமும், வாரானை யன்றழைக்க வந்தானைக் – காரான,
மெய்யானை யன்பருக்கு மெய்த்தானைக் கண்கைகால், செய்யானை வேலையணைசெய்தானை –
வையமெலாம், பெற்றானைக் காணப் பெறாதானைக் கன்மழைக்குக், கற்றானைக் காத்ததொரு கல்லானை – யற்றார்க்கு,
வாய்ந்தானைச் செம்பவள வாயானை மாமுடியப், பாய்ந்தானை யாடரவப் பாயானை” என்னும்
திருநறையூர்நம்பி மேகவிடுதூதும் ஒருசார் ஒப்புநோக்கத்தக்கது.
அடிதோறும் வந்தசொற்களே மீண்டும் வந்ததனால், மடக்கு.

இது, முதல் மூன்று ஐந்தாஞ் சீர்கள் மாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறு ஏழாஞ் சீர்கள் கூவிளச்சீர்களுமாய்
வந்தது அரையடியாகவும், அஃது இரட்டிகொண்டது ஓரடியாகவும் வந்த பதினான்குசீராசிரியவிருத்தம்.

———————-

இருளினும் வெளியினும் மருளினும் தெருளினும்
இன்பமே அடையினும் துன்பமே மிடையினும்
ஒருவர் முன் புகழினும் இருவர் பின்பு இகழினும்
ஊன் இறந்து அழியினும் யான் மறந்து ஒழிவனோ
சுருதி நின்று ஒலிடும் கரதலம் நாலொடும்
துவளும் நூல் மார்பமும் பவள வாய் மூரலும்
திரு அரங்கேசர் சுருள் கரும் கேசமும்
செய்ய நீள் முடியும் அத்துய்ய சேவடியுமே –28-

(இ – ள்.) இருளினும் – இருட்பொழுதிலும்,
வெளியினும் – பகற்பொ “திலும்,
மருளினும் – (மாயைவசத்தால்) மயங்குங்காலத்தும்,
தெருளினும் – (அங்ஙனம் மயங்காது) தெளிந்திருக்குங்காலத்தும்,
இன்பமே அடையினும் – இன்பந்தானே வந்து சேர்ந்தாலும்,
துன்பமே மிடையினும் – துன்பந்தானே மிக்கு நெருங்கி வந்தாலும்,
ஒருவர் முன் புகழினும் – ஒருத்தர் முன்னே வந்துநின்று புகழ்ந்தாலும்,
இருவர் பின்பு இகழினும் – பலர் பின்னே நின்று இகழ்ந்தாலும்,
ஊன் இறந்து அழியினும் – உடம்பு அழிந்து ஒழிந்தாலும், – யான் -, –
திருவரங்கேசர்தம் – ஸ்ரீரங்கநாதரது,
சுருதிநின்று ஓலிடும் – நான்கு வேதங்களும் புகழ்ந்துநின்று முறையிடுகின்ற,
கரதலம் நாலொடும் – நான்கு திருக்கைகளையும்,
துவளும் நூல் மார்பமும் – முப்புரி நூலசைந்து விளங்குகின்ற திருமார்பையும்,
பவளம் வாய் மூரலும் – பவழம் போலச் சிவந்த திருவாய்மலரினது புன்சிரிப்பையும்,
சுருள் கருங்கேசமும் – சுருண்ட கரிய மயிர் முடியையும்,
செய்ய நீள் முடியும் – செவ்விதாகிய (அழகிய) நீண்ட திருமுடியையும்,
துய்ய சேவடியும் – தூய்மையான சிவந்த திருவடிகளையும்,
மறந்து ஒழிவனோ – மறந்து போவேனோ? (மறவேன்).

ஸர்வதேஸ ஸர்வகால ஸர்வ அவஸ்தைகளிலும் எம்பெருமானது திருவுருவத்தை மறவே னென்பதாம்.
“என்வாய்முதலப்பனை யென்றுமறப்பனோ”, “மறப்பனோ வினியா னென்மணியையே” என்று நம்மாழ்வார் பாசுரம்.
“ஒருவர்முன்புகழினும் இருவர்பின்பு இகழினும்” என்றதனால், ஒருவர் ஒருத்தனை முன்னேநின்று புகழ்ந்தால்,
பலர் அவனை இகழ்வரென்ற உலகவியற்கையை வெளியிட்டார்.
இருவரென்பது, ஒன்றின்மேற்பட்டவ ரென்னும் பொருள்பட நின்றது. பின்பு இகழ்தல் – புறங்கூறுதல்.
சேவடியை இறுதியில் வைத்துக்கூறியது, எம்பெருமானது எந்தத் திருவவயவத்தை மறப்பினும்
பிறவிப்பெருங்கடலுக்குப் புணையாகிய திருவடிகளை மறவேனென்னுந் துணிவு குறித்தற்கு.
இத்திருவடிக்குத் தூய்மையாவது – தன்னையடைந்தவரைப் பிறவிக்கடலுள் அழுந்தாதபடி குறிக்கொண்டு
பாதுகாத்துப் பரிசுத்தமாகிய முத்தியென்னும் அக்கரையிற் கொண்டுசேர்க்குந்திறம்.

இது, எல்லாச்சீரும் விளச்சீராகிய எண்சீராசிரியவிருத்தம்.

———-

29-சேவடியால் மூவடி மண் தென் அரங்கத்து அம்மான் நீ
மாவலி பால் வாங்கிய நாள் மண் உலகோ -மூ வுலகும்
வீசும் காலோ வலிய வெவ்வினையேன் நெஞ்சமோ
பேசுங்கால் ஏதோ பெரிது –29-

(இ – ள்.) தென்அரங்கத்து அம்மான் – அழகிய ரங்கநாதனே! – நீ -,
சேவடியால் – சிவந்த திருவடிகளால்,
மூ அடி மண் – மூன்றடி நிலத்தை,
மாவலிபால் – மகாபலிசக்கரவர்த்திபக்கல்,
வாங்கிய நாள் – வேண்டியிரந்து உலகனைத்தும் ஈரடியா லொடுக்கி யளந்த பொழுது, –
மண் உலகோ – நிலவுலகமோ, (அந்நிலவுலகத்தைத் தன்னுள் அடிக்கியளந்த),
மூவுலகும் வீசும் காலோ – மூன்றுலோகத்திலும் பரவிய திருவடியோ,
வலிய வெம் வினையேன் நெஞ்சமோ – (அத்திருவடிகளைத் தன்னுளடக்கிய) வன்மையாகிய கொடியவினைகளையுடைய எனது மனமோ,
பேசும்கால் – சொல்லுமிடத்து, ஏதோ – எதுவோ, பெரிது – பெரியது? (எ – று.)

எம்பெருமானது திருவடிகள் உலகங்களையெல்லாம் தனது ஈரடிக்குள் அடக்கியமையால் மிகப்பெரியன:
அவற்றை எனதுநெஞ்சு தன்னுள் அடக்கிக்கொண்டிருத்தலால், என்நெஞ்சே அத்திருவடிகளினும் பெரிய தென்பதாம்;
யான் பக்திவசப்படுதலாலாகும் மெய்ப்பாடுகளிற் குறைவுற்ற கொடுவினையேனாயினும் எம்பெருமானது திருவடிகளை
எப்பொழுதும் மனத்திற்கொண்டு தியானிக்கின்றே னென்பது, கருத்து.
இங்கு, ஆதேயமாகிய (நெஞ்சமென்னும் ஆதாரத்தி லிருப்பதாகிய) திருவடிகளினும் அதற்கு ஆதாரமாகிய
நெஞ்சத்திற்குப் பெருமை கூறியதனால், இது – மிகுதியணியின்பாற்படும்;
இதனை வடநூலார் அதிகாலங்கார மென்பர்.

“புவியுமிரு விசும்பும் நின்னகத்த நீ என்,
செவியின்வழி புகுந்து என்னுள்ளாய் – அவிவின்றி,
யான்பெரியன் நீபெரியை யென்பதனை யார்அறிவார்,
ஊன்பெருகுநேமியாய்! உள்ளு” என்ற அருளிச்செயல், இங்கு நோக்கத்தக்கது.

இது, பிறப்பென்னும் வாய்பாட்டான் முடிந்த இருவிகற்ப நேரிசை வெண்பா.

————–

நாரை விடு தூது
30-பெறு வரம் கேசவன் அல்லாது அருள் செயும் பேர் இலை வேறு
ஒருவர் அங்கே சற்றும் ஓதார் என் காதலை ஓடி எங்கும்
கரு அரங்கே சலிக்கத் திரிவோர்க்குக் கருணை செய்யும்
திரு அரங்கேசற்கு நீ சொலல் வேண்டும் செழுங்குருகே –30-

(இ – ள்.) செழுங் குருகே – செழுமையான நாரையே! –
பெரு வரம் – பெரியவரங்களை,
அருள்செயும் பேர் – கொடுத்தருளுகின்றவர்,
கேசவன்அல்லாது – கேசவனேயல்லாமல்,
(வேறு) இலை – வேறொருவரும் இல்லை;
அங்கே – அவ்வெம்பெருமானிடத்தே,
ஓடி – விரைந்துசென்று,
என்காதலை – எனது விருப்பத்தை,
வேறு ஒருவர் -, சற்றும் ஓதார் – சிறிதுஞ் சொல்லார்; (ஆகையால்), –
எங்கும் – எவ்விடத்தும் (எல்லாப் பிறப்புக்களிலும்).
கரு அரங்கே – கருப்பத்தினிடத்தே,
சலிக்க – துன்பமுண்டாக,
திரிவோர்க்கு – மாறி மாறிப் பிறந்திறந்து அலைபவர்களுக்கு,
கருணை செய்யும் – அருள் செய்கின்ற, திருவரங்கேசற்கு -, நீ -,
(விரைந்து சென்று என்காதலை), சொல்ல வேண்டும் -; (எ – று.)

இது, தலைவனைப் பிரிந்த தலைவி அப்பிரிவாற்றாது வருந்தும்போது அங்ஙனம் இரங்குமிடம் நெய்தல்நில மாதலால்,
அந்நிலத்தில் குருகென்னும் பறவைகள் கழிக்கரையில் இரைதேடுவதற்கு வர, அவற்றை நோக்கி
“எனது நிலைமைகளை எனதுதலைவனான திருவரங்கநாதன்பக்கல் சென்று சொல்வார் ஒருவரும் இலர்;
நீ சென்று சொல்லவேண்டும்ழுஎன்று வேண்டிய துறை.

வேண்டியதை யளிப்பவனும் ஸ்ரீரங்கநாதனே; அவ்வெம்பெருமானிடத்து என் அன்பை அறிவிக்கத்தக்கவனும் நீயே யென்பதாம்.
மூன்றாமடி – எம்பெருமான் நிர்ஹேதுகமாக உயிர்களின் மீது பாராட்டும் கருணையின் ஏற்றத்தை விளக்கும்.
முதலெழுத்துத்தவிர இரண்டுமுதலிய சிலஎழுத்துக்கள் ஒன்றிநிற்கப் பொருள்வேறுபட்டு வந்ததனால்,
திரிபு என்னுஞ் சொல்லணியாம். வேறு – மத்திமதீபம். கரு – கர்ப்பமென்பதன் விகாரம். அரங்கு – சிறுவீடு.

இது, நிரையசைமுதலாக வந்த கட்டளைக்கலித்துறை

————-

31-குருகு உறங்கு கானலே கரு நிறம் கொள் பானலே
கொடி இருண்ட ஞாழலே நெடிய கண்டல் நீழலே
பொரு தரங்க வேலையே நிருதர் அங்க மாலையே
போது அயின்ற கம்புளே ஏதை என்று இயம்புகேன்
திரு அரங்கர் இணை இலா ஒரு புயங்க அணையிலே
திகழ் வலக்கை கீழதா முகில் மலர்க்கண் வளர்வதோர்
கருணை நம்பு வதனமும் அருணவிம்ப அதரமும்
காவி கொண்ட மேனியும் ஆவி கொண்டு போனவே –31–

இ – ள்.) குருகு உறங்கு கானலே – நாரைகள் தங்குவதற்கிடமாகிய கடற்கரைச்சோலையே!
கரு நிறம் கொள் பானலே – கரியநிறத்தைக் கொண்ட கருங்குவளையே!
கொடி இருண்ட ஞாழலே – (தன்னைக் கொள்கொம்பாகப் பற்றிச் சுற்றியிருக்கின்ற) கொடிகளால் இருண்டிருக்கின்ற குங்கும மரமே!
நெடிய கண்டல் நீழலே – நீண்ட தாழையின் நிழலே!
பொரு தரங்கம் வேலையே – மோதுகின்ற அலைகளையுடைய கடலே!
நிருதர் அங்கம் மாலையே – அரக்கரது உருவம்போன்ற கருநிறத்தையுடைய அந்திப்பொழுதே!
போது அயின்ற கம்புளே – மலர்களை (உணவாகக்கொண்டு) உண்கின்ற நீர்வாழ்பறவையே! –
எதை இன்று இயம்புகேன் – இப்பொழுது (யான்) என்னவென்று (எடுத்துச்) சொல்லப்போகிறேன்!
திருஅரங்கர் – ஸ்ரீரங்கநாதர்,
இணைஇலா – ஒப்பில்லாத,
ஒரு புயங்கம்அணையிலே – ஒரு சேஷ சயனத்திலே,
திகழ் வலக்கை – விளங்குகின்ற வலத் திருக்கையை,
கீழதா – (தலையின்) கீழிடத்ததாகக்கொண்டு,
முகிழ் மலர்கண் வளர்வது – அரும்பி மலர்ந்த தாமரைபோன்ற திருக்கண்கள் அறிதுயில் செய்யப்பெற்ற,
ஓர் – ஒப்பில்லாத,
கருணை நம்பு வதனமும் – அருளால் விரும்பப்படுகின்ற திருமுகமண்டலமும்,
அருண விம்ப அதரமும் – சிவந்த கொவ்வைப்பழம் போன்ற திருவதரமும்,
காவி கொண்ட மேனியும் – கருங்குவளை மலர் போன்ற திருமேனியும்,
ஆவி – (எனது) உயிரை,
கொண்டு போன – கொள்ளைகொண்டு போயின; (எ – று.)

இரங்குதல் நெய்தற்றிணைக்குரியதாதலால், இக்கவி, அங்ஙனம்நெய்தலில் தலைவனைப் பிரிந்து தனியேயிருந்து
வருந்துகிற தலைமகள் ஆண்டுள்ள பொருள்களை நோக்கி இரங்கிக் கூறியது இது.

‘குருகுறங்குகானல், பொருதரங்கவேலை” என்பதனால் நிலமுதற்பொருளும்,
“நிருதரங்கமாலை” என்றதனால் காலமுதற்பொருளும்,
“பானலேஞாழலே’ என்பன முதலியவற்றால் கருப்பொருளும்,
‘ஏதையின்று இயம்புகேன் ….. ஆவிகொண்டுபோனவே’ என்பதனால் உரிப்பொருளும் கூறப்பட்டமை காண்க.

குருகு – மற்றை நீர்வாழ்பறவைகளுக்கும் உபலக்ஷணம் கம் – நீர்; கம்புள் – சம்பங்கோழி.
இயற்கையாய் உயிர்கண்மே லுளதாகின்ற நிர்ஹேதுக கிருபை திருமுகத்தே நன்றாக விளங்குவதென்பார்,
“கருணை நம்பு வதனம்” என்றார்.
விம்பம் – பிம்பம். அதரம் – கீழுதடு. கொண்ட – உவமவுருபு;
“யாழ்கொண்ட விமிழிசை” என்பதிற் போல. “ஞாயிறு திங்க ளறிவே நாணே, கடலே கானல் விலங்கே மரனே,
புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே, யவையல பிறவு நுவலிய நெறியாற், சொல்லுந போலவுங் கேட்குந போலவுஞ்,
சொல்லியாங் கமையு மென்மனார் புலவர்” என்னுஞ் சூத்திரத்தால் அஃறிணைப்பொருள்கள் கேட்பன போலச் சொல்லப்பட்டன.

இது, முதல் மூன்று ஐந்து ஏழாஞ்சீர்கள் விளங்காய்ச்சீர்களும், இரண்டு நான்கு ஆறு எட்டாஞ்சீர்கள்
விளச்சீர்களுமாகிய எண்சீராசிரியவிருத்தம்; பன்னிருசீரெனினும் அமையும

———–

எம்பெருமானது அளவிடற்கு அரிய பெருமை –

32-போனகம் பதினாலு புவனம் திருப்பள்ளி பொறி அரவணைப் பாற் கடல்
-பூ மடந்தையும் நிலா மடந்தையும் தேவியர் -புராதன மறைக்கும் எட்டா
வானகம் பேரின்ப முடன் வீற்று இருக்கும் இடம் வாகனம் வயின தேயன் –
மலர் வந்த நான்முகன் திரு மைந்தன் அவன் மைந்தன் மதி சூடி வாக வன் முதல்
தேன் நறும் தொடை மௌலி முப்பத்து முக்கோடி தேவர் உனது ஏவல் செய்வோர்
திங்களும் பரிதியும் சங்கமும் திகிரியும் திரிவனவும் நிற்பனவும் ஆம்
ஏனைமன் உயிர் முழுதும் விளையாட நீ வகுத்திட்ட பல மாயை அதனால்
எழில் அரங்கம் துயிலும் எம்பிரான் நின் பெருமை யாவரே வாழ்த்து வாரே –32-

(இ – ள்.) எழில் அரங்கம் – திருவரங்கத்தே,
துயிலும் – பள்ளிகொள்கின்ற,
எம் பிரான் – எமது தலைவனே! – (உனக்கு),
போனகம் – உணவு,
பதினாலு புவனம் – பதினான்கு உலகங்கள்;
திரு பள்ளி – அழகிய சயனம்,
பொறி அர அணை பால் கடல் – புள்ளிகளையுடைய ஆதிசேஷனாகிய சயனத்தையுடைய திருப்பாற்கடல்;
தேவியர் – மனைவியர்,
பூமடந்தையும் நிலமடந்தையும் -; பேரின்பமுடன் -,
வீற்றிருக்கும் – எழுந்தருளியிருக்கின்ற,
இடம் -, புராதனம் மறைக்கும் – பழமையாகிய (அநாதியாகிய) வேதங்களுக்கும்,
எட்டா – அறியவொண்ணாத,
வானகம் – பரமபதம்;
வாகனம் -, வயினதேயன் – கருடன்;
திரு மைந்தன் – அழகிய குமாரன்,
மலர்வந்த நான்முகன் – நாபீகமலத்தில் தோன்றிய பிரமதேவன்;
அவன் மைந்தன் – அப்பிரமதேவனது மகன் (பேரன்),
மதி சூடி – பிறையை முடியிற்சூடிய உருத்திரன்;
உனது – ஏவல்செய்வோர் – உனது குற்றேவல்களைச் செய்பவர்கள்,
வாசவன் முதல் – இந்திரன் முதலிய,
தேன் நகும் தொடை மௌலி – தேனோடு மலர்கின்ற பூமாலையைச் சூடிய முடியையுடைய,
முப்பத்து முக்கோடி தேவர் – முப்பத்துமூன்றுகோடி தேவர்கள்;
சங்கமும் திகிரியும் – சங்கசக்கரங்கள்,
திங்களும் பரிதியும் – சந்திர சூரியர்கள்;நீ -,
விளையாட – விளையாட்டாக,
வகுத்திட்ட – ஏற்படுத்திய, பல மாயை – பலவாகிய மாயைப்பொருள்கள்,
திரிவனவும் – சஞ்சரிப்பனவும்,
நிற்பனவும் – (சஞ்சரியாமல்) நிலையாக நிற்பவைகளும்,
ஆம் – ஆகிய,
ஏனை மன் உயிர் முழுதும் – மற்றை நிலைபொருந்திய உயிர்களெல்லாம்;
அதனால் – ஆகையால், –
நின் பெருமை – உனது பெருமையை,
யாவரே – எவர்தாம்,
வாழ்த்துவார் – வாழ்த்த வல்லவர்? (எவர்க்கும் வாழ்த்தலரி தென்றபடி); (எ – று.)

“காந்தஸ்தே புருஷோத்தம: பணிபதிஸ் ஸய்யாஸநம் வாஹநம், வேதாத்மா விஹகேஸ்வரோ
யவநிகா மாயா ஜகந்மோஹிநீ – ப்ரஹ்மேஸாதி ஸுரவ்ரஜஸ்ஸ தயிதஸ்த்வத்தாஸதாஸீஜந:
ஸ்ரீரித்யேவச நாம தே பகவதி! ப்ரூம: கதம் த்வாம் வயம்” என்னும் ஆளவந்தார் ஸ்ரீஸூக்தியின் கருத்தைக்கொண்டு,
ரங்கநாதன் விஷயமாக இப்பாடல் இருக்கின்றதென அறிக.

இதில், ஒருவாறு எம்பெருமானது ஸ்வரூபரூபகுண விபூதிகள் சொல்லப்பட்டிருத்தல் காண்க.
“போதின்மங்கை பூதலக்கிழத்தி தேவியன்றியும், போதுதங்கு நான்முகன் மகன்
அவன்மகன்சொலில், மாதுதங்கு கூறன்” என்பது, திருமழிசையாழ்வார்பாசுரம்.
வயினதேயன் – விநதையின் மகன். திரிவன, நிற்பன என்பவை – முறையே சரமென்றும், அசரமென்றும்; ஜங்கமமென்றும், ஸ்தாவரமென்றும்; இயங்குதிணைப்பொருளென்றும், நிலைத்திணைப்பொருளென்றுங் கூறப்படும்.
“பொங்கர வென்பது மெல்லணை யூர்தி வெம்புள்ளரசு,
பங்கய மின்னொடு பார்மகள் தேவி படைப்பவன் சேய்,
கிங்கரர் விண்ணவர் சாதகநாடிறை கேழலொன்றா,
யங்கணெடும்புவி யெல்லா மிடந்த வரங்கருக்கே” என்றார் திருவரங்கத்துமாலையிலும்.
முப்பத்து முக்கோடிதேவர் – ஆதித்தியர் பன்னிருவரும், உருத்திரர் பதினொருவரும், வசுக்கள் எண்மரும்,
மருத்துவர் இருவருமாகிய முப்பத்து மூவரையுந் தலைவராகவுடைய தேவர்கள்;
“எண்மர் பதினொருவ ரீரறுவ ரோரிருவர், வண்ண மலரேந்தி வைகலு – மெண்ணி,
நறுமாலையாற்பரவி யோவாதெப்போதுந், திருமாலைக் கைதொழுவர் சென்று” என்றார் பொய்கையாழ்வாரும்.

எம்பெருமான் எல்லாவற்றிலும் நிரம்பி யாதொரு குறைவுமின்றி யிருப்பவனாதலால், அவன் உலகங்களைப் படைத்தல்
யாதுபயனைக்கருதியோ? என்று ஐயப்பாடுதோன்ற வினாவினார்க்கு,
ஸௌர்யவீர்யபராக்கிரமங்களால் நிரம்பி இந்நானில முழுவதையும் தனிச்செங்கோல் செலுத்தும் மண்டலாதிபதி
கேவலம் வினோதத்தின் பொருட்டுப் பந்து முதலியவற்றைச் செய்துகொள்ளுதல்போலவே எம்பெருமானும்
கேவலம் விளையாட்டின்பொருட்டே உலகங்களைப் படைப்ப னென்று
வேதாந்தங்களில் அறுதியிடப்பட்டிருத்தல் காண்க எனச் சமாதானங் கூறியவாறு.

இது, பெரும்பாலும் முதல் ஐந்தாஞ் சீர்கள் விளச்சீர்களும், இரண்டு மூன்று நான்காஞ் சீர்கள் காய்ச்சீர்களும்,
ஆறு ஏழாஞ் சீர்கள் மாச்சீர்களுமாய் வந்தது அரையடியாகவும், அஃது இரட்டி கொண்டது ஓரடியாகவும் உள்ள
பதினான்குசீராசிரியவிருத்தம்.

————–

தலைவனது உறுப்பு எழுத அரிது எனத் தலைவி -பிரிவாற்றாது வருந்தி இரங்குதல்-

33- வாழும் மௌலித் துழாய் மணமும்-மகரக் குழை தோய் விழி அருளும்
-மலர்ந்த பவளத் திரு நகையும் -மார்பில் அணிந்த மணிச் சுடரும்
தாலும் முளரித் திரு நாபித் தடத்துள் அடங்கும் அனைத்து உயிரும்
-சரண கமலத்து உமை கேள்வன் சடையில் புனலும் காணேனால் –
ஆழம் உடைய கரும் கடலின் அகடு கிழியச் சுழித்து ஓடி
அழைக்கும் குட காவிரி நாப்பண் ஐவாய் அரவில் துயில் அமுதை
ஏழு பிறப்பில் அடியவரை எழுதாய் பெரிய பெருமானை
எழுத அரிய பெருமான் என்று எண்ணாது எழுதி இருந்தேனே –33-

(இ – ள்.) வாழும் – (திவ்வியமங்களஸ்வரூபமாக) வாழ்கின்ற,
மவுலி – திருமுடியிற் சூடிய,
துழாய் – திருத்துழாயில்,
மணமும் – நறுநாற்றத்தையும்,
மகரம் குழை தோய் – (காதிலணிந்த) மகரகுண்டலங்களை அளாவுகின்ற,
விழி – திருக்கண்களில்,
அருளும் – திருவருளையும்,
மலர்ந்த பவளம் திரு நகையும் – பவழம்போலச் சிவந்த திருவாய்மலரில் அழகிய புன்சிரிப்பையும்,
மார்பில் அணிந்த மணி சுடரும் – திருமார்பிற் சாத்திய கௌஸ்துப மணியில் ஒளியையும்,
தாழும் முளரி திரு நாபி தடத்துள் – ஆழ்ந்த அழகிய நாபீகமலத்தினிடத்தில்,
அடங்கும் – அடங்கியிருக்கின்ற,
அனைத்து உயிரும் – எல்லாவுயிர்களையும்,
சரண கமலத்து – திருவடித்தாமரைமலர்களில்,
உமை கேள்வன் சடையில் புனலும் – பார்வதியின் கணவனாகிய பரமசிவனது (கபர்த்தமென்னுஞ்) சடையில் தங்குகின்ற கங்கைநீரையும்,
காணேன் – காண்கிறேனில்லை;
ஆல் – ஆகையால்,
ஆழம்உடைய -, கருங்கடலின் – கரிய கடலினது,
அகடு – நடுவிடம்,
கிழி