Archive for the ‘Puraanankal’ Category

ஸ்ரீ திருவேங்கடேச மஹாத்ம்யம் –ஸ்ரீ மதி விஸாலாட்சி ரமணன் அம்மாள் தொகுத்து அருளியது —

February 24, 2023

ஸ்ரீ வேங்கடேச புராணம்

த்ரை லோக்யம் கிம் சிரேஷ்ட ஸ்தலம் வால்மீகி நாரதர் இடம் வாமன புராணம்
சங்கர ஸ்கந்த -இதே கேள்வி உத்தம ஸ்ரீ வைஷ்ணவ ஸ்தலம் -பிரகலாதன் அம்பரீஷன் -வழியில்
அம்பரீஷ வனம் இங்கும் உண்டே
விஷ்ணுவே திருமலை வடிவம்ன் -தபஸ்
அகஸ்தியர் உபாசிட்டவசுக்கு உபதேசம் -சார்ங்கம் ஏந்திய வாசுதேவனுக்கு உகந்த
வராஹ புராணம்
ரிஷிகள் வியாசர் -அதி ப்ரேசியமான ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரம்
பூமி தேவி வராஹ –
ஸ்ரீ வேண்டடேசன் வாசுதேவா ஆலயம்
பாத்திமா புராணம்
நாராயணன் ஆவிபிரபாவம் செய்த திருமலை
கருட புராணம்
அருந்ததிக்கு வசிஷ்டர் -நித்ய விபூதி விடவும் ஸூர்ய மண்டலம் விடவும் ஸ்வேதா தீபம் விட இங்கு உகந்து
ப்ருஹ்மாண்ட மாண்ட ப்ருகுவுக்கு நாரதர்புண்ய க்ஷேத்ரம் -ஸ்ரீ வைகுண்ட விரக்த்தாய
ரிக் வேதம் -அராயி காணே விகடே கிரீம் கச்ச யவிஷ்யோத்தர புராணம் 14-21) 6160. சொல்லப்பட்ட இயரிய திருமலையே …ஸ்ரீம் பீடன் -வேதமே சொல்லுமே

ரிக் வேதத்தில் உள்ள,
“அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே
சிரிம்பிடஸ்ய ஸத்வபி: தே பிஷ்ட்வா சாதயாமஸி”என்ற மந்திரம்,
“மனிதா! நீ செல்வமில்லாதவனாகவோ, எதிர்காலம் பற்றிய பார்வை இல்லாதவனாகவோ, உலகியல் வாழ்க்கையில் தவிப்பவனாகவோ,
சுற்றி உள்ளவர்களால் ஒதுக்கப்படுபவனாகவோ இருக்கிறாயா? வருந்தாதே!
அலர்மேல் மங்கைத் தாயாரைத் திருமார்பில் கொண்ட திருவேங்கடமுடையானின் மலையைச் சென்று அடைவாயாக!
பக்தர்களோடு இணைந்து கோவிந்தா! கோவிந்தா! என கோஷம் இட்டபடி அந்தப் பெருமாளிடம் சென்றால்,
அவர் உன்னைக் காப்பார்! திருப்பதி வந்தால் திருப்பம் வரும்!” என்று சொல்கிறது.

ரிக்வேதம் போற்றும் திருவேங்கடம்

“அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே, சிரிம்பிடஸ்ய ஸத்த்வபி: தேபிஷ்ட்வா சாதயாமஸி” என்ற ரிக் வேத மந்திரம் திருமலையைப் புகழ்கிறது. ஏழைகள், எதிர்காலம் பற்றிய அறிவில்லாதவர்கள், துன்பப்படுபவர்கள், சுற்றதாரின் ஆதரவுஅற்றவர்கள் ஆகிய அனைவரும் பக்தர்களோடு இணைந்து ஸ்ரீநிவாசன் திகழும் திருமலைக்குச் சென்று, அப்பெருமாளின் திரு வடிகளில் அடைக்கலம் புகுந்தால் அவன் காத்தருள்வான் என்பது இம்மந்திரத்தின் பொருள்.

சிலப்பதிகாரத்தில் திருமலை

சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தில் காடு காண் படலத்தில் திருமலையைப் புகழ்ந்து இளங்கோவடிகள் பாடியுள்ளார். வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்குயர் மலயத்து உச்சி மீமிசை என்று அப்பாடல் தொடங்குகிறது.

திருமலை ஸ்ரீநிவாசன், முதலில் அங்கே அவதாரம் செய்தபோது விபவ அவதாரமாகத் தோன்றி, பத்மாவதியை மணம் புரிந்து, அதன் பின் அர்ச்சாவதார நிலைக்கு மாறிக் கோயில் கொண்டவர். விபவம், அர்ச்சை ஆகிய இருநிலைகளும் இணைந்திருப்பது ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கே உண்டான தனிச்சிறப்பு.

திருமலை கோயிலில் ஒரு மண்வெட்டி திருமலையப்பனுக்கான புஷ்பங்கள் அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராமாநுஜரின் சீடரான அனந்தாழ்வான் அமைத்த நந்தவனத்தில் இருந்துதான் இன்றளவும் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு சமயம் திருமலையப்பனே சிறுவன் வடிவில் அனந்தாழ்வானுடன் லீலை புரியச் சென்றான். அப்போது அந்தச் சிறுவனைத் தன் மண்வெட்டியால் அனந்தாழ்வான் அடித்தார். சிறுவனின் தாடையில் இருந்து ரத்தம் பெருகி வந்தது. அத்துடன் அச்சிறுவன் ஓட, அவனை அனந்தாழ்வான் துரத்தி வந்தார்.

மலையப்பனின் கருவறைக்குச் சென்று அச்சிறுவன் மறைந்து போனான். வந்தவன் மலையப்பனே என உணர்ந்தார் அனந்தாழ்வான். மலையப்பனின் தாடையிலிருந்து ரத்தம் வந்தபடியால், அவ்விடத்தில் பச்சைக் கற்பூரம் வைக்கப்பட்டது. அதனால் தான் இன்றளவும் மலையப்ப சுவாமியின் தாடையில் பச்சைக் கற்பூரம் இருப்பதைக் காணமுடிகிறது. பெருமாளை அடிப்பதற்கு அனந்தாழ்வான் பயன்படுத்திய மண்வெட்டி இன்றளவும் சந்நதி நுழைவாயிலில் பராமரிக்கப் பட்டு வருகின்றது.

திருமலையில் உள்ள ராமாநுஜர் சந்நதியில் ராமாநுஜர் பெருமாளுக்குக் குருவாக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு எதிரே சீடனாகப் பெருமாள் நிற்பதாக ஐதீகம். அதனால் தான் அமர்ந்திருக்கும் ராமாநுஜருக்கு எதிரே நின்றிருக்கும் பெருமாளின் திருவடிச் சுவடுகள் மட்டும் இருப்பதைக் காணலாம். பெருமாளுக்குச் சங்கு சக்கரங்கள் தந்தபடியாலும், வேதார்த்த சங்கிரகத்தை உபதேசம் செய்தபடியாலும், பெருமாள் தனக்குக் குருவாக ராமாநுஜரை அங்கீகரித்தார்.

திருமலையில் கோயில் கொண்டிருக்கும் நரசிம்மர் நிவாசனால் பூஜிக்கப்பட்டவர். ஸ்ரீநிவாச கல்யாணம் நடைபெறுவதற்கு முன் இந்த நரசிம்மரைப் பூஜித்து, அவருக்குப் பிரசாதங்களை நிவேதனம் செய்துவிட்டுத்தான் பத்மாவதியை மணந்துகொள்ளச் சென்றார் ஸ்ரீநிவாசன்.

விமான வேங்கடேசன்

பொன்மயமான ஆனந்த நிலைய விமானத்தின் வடக்குப் பகுதியில் விமான வேங்கடேச னாகப் பெருமாள் காட்சிஅளிக்கிறார். முன்பு ஒரு பொய்கைக் கரையில் கஜேந்திரன் என்ற யானை துயருற்றபோது அதைக் காத்த பெருமாள், சுவாமி புஷ்கரிணிக் கரையிலும் அப்படி அடியார்களின் குரல் ஏதும் கேட்டால், உடனே ஓடோடிச் சென்று காக்க வேண்டும் என்ற எண்ணத்திலே விமான வேங்கடேசனாக, விமானத்தின் மேல் தயார் நிலையில் காத்திருக்கிறார்.

தெய்வீக மலை

‘கட்டெதுர வைகுண்டமு’ என்ற கீர்த்தனையில், திருமலையில் உள்ள ஒவ்வொன்றுமே தெய்வீகமானது என்று அன்னமாச்சாரியார் பாடியுள்ளார். வைகுண்ட லோகமே திருமலை, வேதங்களே அதன் பாறைகள், பிரம்மா உள்ளிட்ட தேவர்களின் லோகங்கள் இம்மலையின் நான்கு மூலைகள், தேவர்களே இம்மலையில் வாழும் உயிரினங்கள் என்றெல்லாம் கொண்டாடியிருக்கிறார் அன்னமாச்சாரியார்.

வேங்கடம் என்றால் என்ன?

வடமொழியில் வேம் என்றால் பாபம், கடம் என்றால் போக்குவது. வேங்கடம் என்றால் பாபத்தைப் போக்குவது என்று வடமொழியில் பொருள்படும். தமிழில் வேம் என்றால் போக்குவது, கடம் என்றால் பாபம். எனவே தமிழிலும் வேங்கடம் என்றால் பாபத்தைப் போக்குவது என்றே பொருள்படும். நம் அனைத்துப் பாபங்களையும் தீர்க்கவல்ல மலை திருவேங்கட மலை.

ஒலியும் ஒளியும்

ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச என்பது கீதையில் கண்ணன் கூறிய சரம ஸ்லோகம் ஆகும். அதாவது, இறைவனை அடைவதற்கான மார்க்கங்களாகப் பிற தர்மங்களை எண்ணாமல், இறைவனே அவனை அடைவதற்கான வழியாவான் என்பதை உணர்ந்து, அவன் திருவடிகளை அடைக்கலமாக நாம் பற்றினால், அவன் நம்மை அனைத்துப் பாபங்களில் இருந்தும் போக்கி, நமக்கு முக்தி அளிப்பான் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

ஒலி வடிவில் உள்ள இந்த சுலோகத்தின் ஒளி வடிவமாகத் திருமலையப்பன் திகழ்கிறார். அவரது வலக்கரத்தைத் திருவடிகளை நோக்கிக் காட்டி, தன்னிடம் அடைக்கலம் புகுமாறு அறிவுறுத்து கிறார். இடக்கரத்தைத் தொடை அருகே வைத்துக் கொண்டு, அவ்வாறு நாம் அடைக்கலம் புகுந்தால், பிறவிப் பெருங்கடலை நம் தொடை அளவுவறச் செய்வதாக உறுதி அளிக்கிறார்.

சுக்ரீவன் கூற்று சீதையைத் தேடுவதற்காக வானர வீரர்களை ஏவிய சுக்ரீவன், “வடசொற்கும் தென்சொற்கும் வரம்பிற்றாய் நான்மறையும் மற்றை நாலும் இடைசொற் பொருட்கெல்லாம் எல்லையதாய் நல்லறத்துக் கீறாய வேறு புடைசுற்றுந் துணையின்றிப் புகழ்பதிந்த மெய்யேபோல் பூத்துநின்ற வடைகற்றுந் தண்சாரல் ஓங்கிய வேங்கடத்தில் சென்றடைதீர் மாதோ தோடுறு மால்வரை அதனைக் குறுகுதிரேலும் நெடிய கொடுமை நீங்கி வீடுறுதிர் ஆதலினான் விலங்குதிர் அப்புறத்து நீர்” என்று அவர்களைப் பார்த்துச் சொல்வதாகக் கம்பன் பாடுகிறான்.

அதாவது, “திருமலையில் மட்டும் சீதையைத் தேடாதீர்கள். ஏனெனில், அங்கே சில காலம் இருந்தாலே நீங்கள் பாபம் நீங்கி முக்தி அடைந்து விடுவீர்கள். நீங்கள் எல்லோரும் முக்திக்குச் சென்று விட்டால் அதன் பின் யார் சீதையைத் தேடுவது எனவே திருமலையைத் தவிர்த்த பிற இடங்களில் மட்டும் சீதையைத் தேடுங்கள்!” என்று அறிவுறுத்துகிறான் சுக்ரீவன்.

கோவர்த்தன மலையே திருமலை

கண்ணன் ஏழு நாட்கள் கோவர்த்தன மலையைத் தாங்கிப் பிடித்து ஆயர்களையும் ஆநிரைகளையும் காத்தான் என்பதை நாம் அறிவோம். அந்த மலை கண்ணனுக்குக் கைம்மாறு செய்ய விழைந்ததாம். அதனால் அந்த கோவர்த்தன மலையே திருமலையில் ஏழு மலைகளாக மாறியது என்றும், தன்னை ஏழு நாட்கள் சுமந்த கண்ணனை ஏழு மலைகளாக மாறிக் காலந்தோறும் அது தாங்கி நிற்கிறது என்றும் சொல்வார்கள்.

கலியுக வைகுண்டம்

வைகுண்ட லோகத்தில் உள்ள திருமாலை நேரில் சென்று தரிசிக்கும் பேறு பெறாதவர்களுக்கு இந்தக் கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக, கலியுக வரதனாகத் திருமலையப்பன் தரிசனம் தருவதால், திருமலையைக் கலியுக வைகுண்டம் என்று சொல்வார்கள்.

யசோதையே வகுளமாலிகை

கண்ணனின் வளர்ப்புத் தாயான யசோதையால், கண்ணன் செய்து கொண்ட பதினாறாயிரத்து நூற்றெட்டுத் திருமணங்களில் ஒன்றைக் கூடக் காண இயலவில்லை. அதை எண்ணி அவள் வருந்திய நிலையில், அந்த யசோதையையே வகுளமாலிகையாகத் திருமலையில் பிறக்க வைத்தார் திருமால். வகுளமாலிகை ஸ்ரீநிவாசனுக்கும் பத்மாவதிக்கும் திருமணத்தை ஏற்பாடு செய்து, தானே முன்நின்று நடத்தி வைத்துக் கண்ணாரக் கண்டு களித்தாள்.

வேதவதியே பத்மாவதி

திருமாலை மணக்க விரும்பிக் கடுந்தவம்புரிந்து வந்தாள் வேதவதி என்ற பெண். ராமாயணக் காலத்தில் ராவணன் சீதையை அபகரிக்க வந்தபோது, சீதையை அக்னி லோகத்துக்குப் பாதுகாப்பாக அனுப்பிவிட்டு, போலிச்சீதையாக இந்த வேதவதி வந்து ராவணனுடன் சென்றதாகப் பாத்ம புராணம் போன்ற நூல்கள் சொல்கின்றன. அந்த வேதவதிக்கு அருள்புரிய நினைத்தார் திருமால். அதனால் தான் அந்த வேதவதியைப் பத்மாவதியாகத் திருமலையில் அவதரிக்க வைத்து, தானே ஸ்ரீநிவாசனாக வந்து அவளை மணந்து கொண்டார்.

வேங்கடேச சுப்பிரபாதம்

மணவாள மாமுனிகளின் சீடரான பிரதிவாதி பயங்கரம் அண்ணா என்பவர் திருவேங்கடமுடையானுக்காக வேங்கடேச சுப்பிரபாதம் இயற்றினார். ராமனுக்குச் சுப்பிரபாதம் பாடும் விதமாக விசுவாமித்திரர் கூறிய,கௌசல்யா ஸுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர சார்தூல கர்தவ்யம் தைவம் ஆஹ்நிகம்என்ற ஸ்லோகத்தையே முதல் ஸ்லோகமாகக் கொண்டு, மேலே வேங்கடேசனின் சுப்பிரபாதம் இயற்றப்பட்டது.

திருமலையப்பன் நெற்றியில் இருப்பது என்ன?

திருமலையப்பன் நெற்றியில் அணிந்திருக்கும் திருமண் காப்புக்கு ஸ்ரீபாத ரேணு என்று பெயர். இறைவனின் பாதத்தூளியை நாம் நெற்றியில் திலகமாக அணிகிறோம். பக்தர்கள் மேல் பேரன்பு கொண்ட திருவேங்கடமுடையான், தன் பக்தர்களின் பாதத்தூளியைத் தன் நெற்றியில் திருமண் காப்பாக அணிகிறானாம்.

அதனால் தான் ஸ்ரீபாத ரேணு – அடியார்களின் பாதத் தூளி எனத் திருமலையப்பனின் திருமண் காப்பை அழைக்கிறார்கள்.

திருப்பதி மலையின் அடிவாரத்திற்கு அலிபிரி என்று பெயர்

——————————————————————————

ஸ்ரீநிவாச புராணம் என்று தனியாக எதுவும் இல்லை. பதினெட்டுப் புராணங்களில் வேங்கடேசரின் லீலைகள் பன்னிரண்டு புராணங்களில் காணப்படுகின்றன. அவற்றை எல்லாம் தொகுத்து திருவேங்கட மஹாத்மியம் என்ற பெயரில் ஒன்று சேர்த்துள்ளார்கள். திருமலையில் கிடைத்த கல்வெட்டு ஒன்று கி பி 1491 ஜூன் மாதம் 27ம் தேதி பாஸிந்தி வேங்கடதுறைவார் தாம் தொகுத்த திரு வேங்கட மஹாத்ம்யத்தை விண்ணப்பம் செய்ததாகக் காணப்படுகிறது. 1884 ல் இது தெலுங்கு புத்தகமாக தேவஸ்தானத்தரால் வெளியிடப்பட்டது 1896ல் இரண்டாவது பதிப்பும் 1928 ல் மூன்றாவது பதிப்பும் வெளி வந்தன.

க்ருதேது நரசிம்ஹோபூ4த்
த்ரேதாயாம் ரகு4 நந்தன:
த்3வாபரே வாஸு தே3வஸ்ச
கலௌ வேங்கட நாயக:–(ஆதித்ய புராணம்)

கிருத யுகத்தில் நரசிம்ஹராக இருந்தவரே, திரேதா யுகத்தில் ரகுநந்தனராக அவதரித்தார்.

அவரே துவாபரயுகத்தில் வாசுதேவர் ஆனார்.அவரே கலியுகத்தில் வேங்கடநாயகர் ஆனார்.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய ஓம் நமோ நாராயணாய

சூத முனிவர்

நைமிசாரண்யம் சிறந்த தபோவனம்; –நிமிஷம் வீணாகாமல் நடக்கும் அங்கு,

பகவத் தியானமும், பகவத் சர்ச்சைகளும், அகத்தை வென்ற முனிவர்கள் இடையே!

சூத முனிவரைக் கேட்டனர் பிற முனிவர்கள்,
“பூதலத்தில் ஆதி நாராயணனுக்கு உகந்த இடம், பகவான் நிகழ்த்திய லீலா விநோதங்கள் என்னும்
மகாத்மியத்தைக் கேட்க வேண்டும் செவிகள் குளிர!”

அன்புடன் அளித்த வேண்டுகோளை ஏற்றார்
என்றும் இறைவன் புகழ் பேச விரும்பும் சூதர்.

“கணக்கில் அடங்காது நாரயணனின் லீலைகள், வணக்கத்துக்குரிய சேஷாசலத்தில் நடந்தவை.

வராக கல்பத்தில் நிகழ்த்திய அற்புதங்களை ஒரு புராணமாக உரைக்கின்றேன் எனத் தொடங்கினார்.

ஸ்வேத வராஹம்

ஓராயிரம் சதுர் யுகங்கள் பிரமனின் ஒரு பகல்; ஓராயிரம் சதுர் யுகங்கள் பிரமனின் ஒரு இரவு.

பிரமனின் ஒருநாள் பொழுது நீளும் நமக்கு இரண்டாயிரம் சதுர் யுகங்களாக பூவுலகில்!

ஒரு நாள் முடிந்ததும் எரிப்பான் சூரியன்; ஒரு துளி மழை விழாது பூமியின் பரப்பில்!

முன்னமேயே இதை அறிந்த முனிவர்கள் சென்று அடைக்கலம் புகுவர் ஞான வுலகில்

மரம், செடி, கொடி, ஜீவராசிகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிடும் அதீதஉஷ்ணத்தில். தொடர்ந்து வீசும் காற்று பல ஆண்டுகளுக்கு.

அடர்ந்த மேகத்திறள் உருவாகும் வானில். கொட்டும் கனமழை பூமியின் மேற்பரப்பு அதிர; கெட்டிப்பட்டு பூமி பதிந்துவிடும் பாதாளத்தில்!

பொங்கி எழுகின்ற ஜலப் பிரவாகத்தால் தாங்கும் நீர் மகர லோகம் வரையிலும்! வடியாது நீர் பிரமனின் இரவு முடியும் வரை

படைப்பைத் தொடங்க வேண்டும் மீண்டும்!

வெள்ளைப் பன்றி உருவெடுப்பார் விஷ்ணு; வெள்ளத்தில் தேடிச் செல்வார் பூவுலகினை. பாய் போலச் சுருட்டி ஒளித்து வைத்திருப்பான்
பாதாளத்தில் பூமியை அரக்கன் ஹிரண்யாக்ஷன்.

தரணியை வெளிக் கொணரும் முன்பு வராஹம் ஹிரண்யாக்ஷனை வெற்றி கொள்ள வேண்டும்!

தொடங்கும் துவந்த யுத்தம் இருவரிடையே! தொடரும் துவந்த யுத்தம் வெகு நீண்டகாலம்!

கூரிய நகங்களாலும், கோரைப் பற்களாலும் கிழித்து அரக்கனை அழித்து விடும் வராஹம்.

ஜலத்தில் கலந்து விடும் பெருகும் குருதி நதி ஜலப்ரவாஹம் ஆகிவிடும் செந்நீராக அப்போது!

கிரீடாசலம்

ஞான லோகத்தில், தியானத்தில் இருந்த, மோன முனிவர்கள் அறிந்தனர் இதனை.

தரணியைத் தன் முகத்தில் தாங்கி வந்தார் வராஹ பெருமான் நீரிலிருந்து வெளியே. ஸ்தாபித்தார் பூலோகத்தை முன்போலவே;
ஸ்தாபித்தார் சாகரங்களை முன்போலவே.

சிருஷ்டியைத் தொடங்கினான் பிரம்மதேவன் சிருஷ்டித்தான் சூரிய, சந்திரர்களை முதலில்.

பிற ஜீவராசிகளையும் படைத்தான் பின்னர் பிரம்மதேவன் சரியான வரிசைக் கிரமத்தில்.

பூலோகத்தை மீட்ட வராஹ பெருமான் பூவுலகிலேயே தங்கிவிட விழைந்தார்.

கருடனைப் பணித்தார், “வைகுந்தம் செல்க! பிரியமான கிரீடாச்சலத்தைக் கொணர்க!”

வைகுந்தம் விரைந்தான் உடனே கருடன்; வைக்கும் இடத்தையும் தேர்வு செய்தார்!

கோமதி நதிக்குத் தெற்கேயும், மற்றும் கீழ்க்கடலுக்கு மேற்கேயும் அமைந்தது. நாராயண கிரியே ஆகும் கிரீடாசலம்!
நவரத்தினங்கள் நிரம்பிய சிகரங்கள்!

காய் கனி, மூலிகைகளால் நிறைந்தது; கந்தம் கமழும் மலர்களால் நிறைந்தது;

ஒலிக்கும் பறவைகளின் பாடல் கொண்டது ஒலிக்கும் சுனைகள் நீரோடைகள் கொண்டது.

தேர்வு செய்த இடத்தில் மலையை வைக்கப் பார்மீது ஆதிசேஷன் படுத்ததுபோல இருந்தது.

இருந்தது ஸ்வாமி புஷ்கரிணி என்னும் தடாகம், கிரிகளின் இடையே மற்றும் தருக்களின் நடுவே.

நவரத்தினங்கள் இழைத்த தூண்கள் தாங்கிட நடுநாயகமாக அமைந்து இருந்தது விமானம்.

அழகிய மண்டபங்களோடு கூடிய விமானம் அமைந்தது ஸ்வாமி புஷ்கரிணிக் கரையில்.

எழுந்தருளினார் வராஹ பெருமான் – தாம் விழைந்தபடி பூவுலகில், விமானத்தின் கீழ்.

ஸ்துதி

வராஹ பெருமான் பூமியில் தங்கிவிட்டதால் வந்து பூமியில் துதித்தனர் வானவர், முனிவர், இந்திரன், பிரமன், துவாதச ஆதித்யர்கள்,
ருத்திரர், தேவர், வசுக்கள், திக்பாலகர்கள், கந்தருவர், சப்த ரிஷிகள், மருத் கணங்கள்!
வந்தவர் விண்ணப்பித்தனர் பெருமானிடம்,

“தரணியைப் பாதாளத்தில் ஒளித்து வைத்த ஹிரண்யாக்ஷனை சம்ஹரித்தீர்கள் போரில். ப்ரபாவமும், தோற்றமும் மாறவேயில்லை!
பக்தருக்கு அருள வேண்டும் இன்முகத்துடன்.’ மாற்றிக் கொண்டார் பெருமான் சிரித்தபடியே,
தோற்றத்தையும், தன் முக விலாசத்தையும்!

அழகிய வலிய புஜங்கள் ஒரு நான்குடனும்; அழகிய இருதேவியர் தன் இருமருங்கிலும்,.

கருணை பொழியும் கமலக் கண்களுடனும்; கருத்தைக் கவரும் ஒளிரும் வடிவத்துடனும்; கிரீடாச்சலத்தில் விளங்கும் வராஹ பெருமான்
நிறைவேற்றுகிறார் பக்தரின் கோரிக்கைகளை.

வெள்ளைப் பன்றி வடிவெடுத்ததால் – ஸ்வேத வராஹ கல்பம் என்ற பெயர் வழங்கலாயிற்று.

நாரதர்

கலியுகத்தில் நிகழ்த்தினர் மாபெரும் யாகம் காசியபர் முதலிய முனிபுங்கவர்கள் சேர்ந்து. வேதகோஷம் ஓங்கி ஒலித்தது யாகசாலையில்
தேவரிஷி நாரதர் வந்தார் அந்த யாகசாலைக்கு. “அவிர் பாகம் அளிக்கப் போவது யாருக்கு?” என ஆர்வத்துடன் கேட்டார் முனிவர்களை நாரதர்.

“இன்னமும் முடிவு செய்யவில்லை அதனை இருக்கிறதே காலஅவகாசம் அதற்கு” என்றனர்.

“சத்துவ குணமே முக்குணங்களில் உத்தமம்; சத்துவ குணம் கொண்டவரைக் கண்டறிந்து, பூர்த்தி செய்யுங்கள் உங்கள் யாகத்தை ” என்று
பற்ற வைத்தார் நாரதர் கலஹம் நடப்பதற்கு.

“இறைவன் குணத்தை ஆராயும் அளவிற்குத் திறமை உள்ளவர் யார் உள்ளார் உலகினில்?”

தேர்வு செய்தனர் பிருகுவை பிற முனிவர்கள்;
தேர்வு செய்யவேண்டும் அவர் சத்துவ குணனை. சத்திய லோகம் சென்றார் பிருகு முனிவர்;
பத்மாசனத்தில் அமர்ந்திருந்தார் பிரம்மன். சாவித்திரி, காயத்திரி தேவியருடன் இருந்தனர்
சரஸ்வதி தேவியும், திக்பாலகர்களும் குழுமி!

நின்று கொண்டே இருந்தார் பிருகு – அவரைக் கண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை பிரம்மன்!

‘எத்தனை நேரம் தான் நிற்பது?” என்று எண்ணிச் சத்தம் இன்றி அமர்ந்துவிட்டார் பிருகு முனிவர்.

அனுமதி பெறாமலேயே அமர்ந்த முனிவரை அலட்சியம் செய்தார் பிரம்ம தேவன் சபையில்!

முனிவரை அலட்சியம் செய்த பிரம்மனுக்குக் கனிவான சத்துவகுணம் இல்லவே இல்லை

ஈசனும், உமையும்

பிரம்மனின் போக்குப் பிடிக்காத பிருகு பிரம்மலோகத்தை விட்டுச் சென்றார். அடுத்துச் சென்றார் கயிலை மலைக்கு;
அங்கும் ஆனார் சிவபூஜையில் கரடியாக!

தனிமையில் இனிமை கண்டிருந்தவரின் தனிமையைக் குலைத்தார் பிருகுமுனிவர்.

கவனம் வேறிடத்தில் இருந்ததால் ஈசன் கவனிக்கவில்லை முனி பிருகுவின் வரவை.

பெண்ணுக்கு உண்டு அதிக உள்ளுணர்வு; கண்டு விட்டாள் உமை முனிவர் வரவை.

விலகிச் செல்லுமாறு ஈசனுக்குணர்த்த விலகிச் செல்லாமல் நின்று கொண்டிருந்த, முனிவர் மேல் கொண்டான் சீற்றம் சிவன்;
முனிவரும்கொண்டார் சீற்றம் சிவனிடம்.

தேடி வந்தவரைக் காக்க வைத்தது ஒன்று; தேடி வந்தவரை வரவேற்காதது இரண்டு; நாடி வந்த காரணத்தை வினவாதது மூன்று;
நாடி வந்தவரிடம் சினம் கொள்வது நான்கு!

தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருந்த சிவபெருமான் மேல் சீற்றம் பொங்கியது.

கோபத்தின் மிகுதியால் பிருகு முனிவர் சாபத்தை அளித்தார் சிவ பெருமானுக்கு,

“உலகில் இனிக் கிடையாது உனக்கு உருவ வழிபாடு என்ற ஒன்று!” என்றார்

நின்றுவிட்டது சிவனுக்கு உருவ வழிபாடு! இன்றும் எங்கும் நடப்பது லிங்க வழிபாடே.

சத்துவ குணம் இல்லாதவன் சிவன் என பிருகு உத்தம குணனைத் தேடினார் வைகுந்தத்தில்.

நாரணன்

கைலாசம் விடுத்த பின்பு பிருகு முனிவர் வைகுந்த நாதனைச் சோதிக்க விரைந்தார்.

ஆனந்தமாகச சயனித்திருந்தார் நாரணன் ஆதிசேஷன் மீது; லக்ஷ்மி பாதங்களை வருட.

தேவியின் பணிவிடையில் மெய்மறந்திருந்த நாதன் உணரவில்லை பிருகுவின் வருகையை.

‘வேஷம் போடுகிறான் மாயவன் – இவன் வேஷத்தைக் கலைக்கிறேன் இப்போதே!’

இரண்டு இடங்களில் அலட்சியம் செய்தனர் இங்கும் அதுவே தொடருகின்றதே!’ என்று நாரணன் மார்பில் ஓங்கி உதைத்தார் பிருகு,
“நாடகம் போதும் கண்டும் காணாதது போல!”

உதைத்த காலைப் பற்றினார் நாரயணன், உதைத்த போதும் சினம் கொள்ளவில்லை.

“கால் வலித்திருக்குமே முனிவரே! ” எனக் கால் வலி போக அழுத்திவிட்டார் பாதத்தை.

“தூக்க மயக்கத்தில் இருந்து விட்டேன் நான்! துயர் அடைந்தீரோ என்னை உதைத்தால்?”

முனிவருகு ஏற்பட்ட திகைப்பு அளவற்றது!
‘கனிவுக்கும் ஓர் எல்லையே இல்லையோ? உதைத்த காலைச் சபித்திருக்க வேண்டும்
உதைத்த காலை உபசரிக்கிறாரே!’ என்று

“கண்டு கொண்டேன் நான் சத்துவ குணனை கண்டு கொண்டேன் நான் உத்தம குணனை!” பாதங்களில் விழுந்து வணங்கினார் முனிவர்.
பாதகத்தை மன்னிக்க வேண்டினார் முனிவர்.

யாகசாலை திரும்பினர் வெற்றியுடன் – மூன்று லோகத்திலும் சத்துவ குணனை கண்டறிந்ததால்.

லக்ஷ்மியின் கோபம்

ஏகாந்தமாக இருந்த வேளையில் உள்ளே வேகமாக வந்ததோடு நிற்கவில்லை பிருகு!

உதைத்தார் தன் இருப்பிடமான மார்பினை. உதைத்த காலுக்கு நாரணனின் உபசாரம் வேறு. வெகுண்டு எழுந்தாள் அமர்ந்த நிலையில் இருந்து.
வெலவெலத்துப் போனார் நாரணன் அதுகண்டு

பதறிய விஷ்ணு சாந்தப்படுத்தினார் லக்ஷ்மியை. உதறித் தள்ளினாள் கோபம் குறையாத லக்ஷ்மி.

‘அசுத்தம் செய்தான் என் இருப்பிடத்தை பிருகு! அதற்கு அவனைக் கொண்டாடினீர்கள்!” என்றாள்

“அவமதிக்கும் எண்ணம் இல்லை பிருகுவுக்கு! அதீத பக்தி தந்த உரிமையில் உதைத்தான்” என,

“பக்தன் அவன் என்றால் பக்தையே நானும். பக்தன் ஒரு பக்தையை அவமதிக்கலாமா?

வாசஸ்தலம் களங்கப் பட்டது பிருகுவால் வசிக்க முடியாது மீண்டும் அங்கு என்னால்.” எத்தனை சொல்லியும் கேட்கவில்லை அவள்.
“என்னிருப்பிடத்தை உதைத்தான்! ” என்றாள்

வைகுந்தம் விடுத்தாள் லக்ஷ்மிதேவி உடனே. வையகம் அடைந்தாள் தவக் கோலம் பூண்டிட. கரவீரபுரம் சென்று அடைந்தாள் – அங்கு
பரந்தாமனின் பாதங்களை தியானித்தாள்

எப்படி இருக்குமோ லக்ஷ்மி இல்லாத இடம் அப்படியே இருந்தது வைகுந்தம் இப்போது. சோபை மறைந்தது; சோகம் நிறைந்தது;
சூனியமாக இருந்தது காணும் இடங்கள்!

வைகுண்டம் விடுத்தான் நாரணனும்; வையகம் அடைந்தான் நாரணனும் ;

சேஷாச்சலம் இருந்தது கரவீரபுரத்தின் அருகே; சேஷாச்சலத்தைத் தேர்வு செய்தார் நாரணன்.

எறும்புப் புற்று

நாற்புறங்களிலும் மலைச் சிகரங்கள்; ஊற்றெடுத்து ஓடும் இனிய சுனைகள்; சலசலத்து ஓடும் அழகிய சிற்றோடைகள்;
கலகலப்பால் மகிழ்வூட்டும் பறவையினங்கள்;

பள்ளத்தாக்குகள் மலைகளின் இடையிடையில்; உள்ளம் கொள்ளை கொள்ளும் இயற்கையெழில்;

தெளிந்த நீர்த் தடாகத்தைக் கண்டார் நாரணன்; விளங்கிய ஆலயத்தையும் கண்டார் நாரணன்;

அழகிய மண்டபங்கள், விமானம் கொண்ட, ஆதி வராஹ மூர்த்தியின் அழகிய ஆலயம்.

தடாகத்தில் நீராடி வராஹப் பெருமானிடம் தங்குவதற்கு அனுமதி வேண்டினார் நாரணன்;

“எங்கு விருப்பமோ அங்கு தங்கலாம்!”எனத் தங்கு தடையின்றி அனுமதித்தார் வராஹர்.

“தங்குவேன் இங்கேயே கலியுகம் முழுவதும். தடாகத்தில் நீராடித் தங்களைத் தொழுத பிறகே

இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் என்னையும் இங்கே தொழ வரவேண்டும் இனிமேல்” என்றார்.

நாரணன் சேஷாசலம் சென்றதை அறிந்து நாரணனைத் தேடி ஓடினான் பிரம்மதேவன்.

பிரிவுத்துயர் தாங்காமல் வருந்தி நாரணன் திரிவதைக் கண்டு வருந்தினான் பிரமன்.

வெட்ட வெளியில், கட்டாந்தரையில், படுத்து உறங்கினார் வைகுந்தவாசன்.

அமைக்க விரும்பினான் இருப்பிடம் ஒன்றை; அமைத்தான் நிழல் தரும் புளிய மரத்தினை.

அமைத்தான் அதன் கீழ் எறும்புப் புற்றினை; அமைத்தான் இறங்கிச் செல்லப் படிக்கட்டு.

அமைத்தான் வேலைப்பாடுகள் நிறைந்த அழகிய மண்டபத்தினை புற்றினுள் பிரமன்.

இடைப் பெண்

நாரணனுக்குப் பிடித்திருந்தது புதிய மண்டபம்; நிரந்தரமாகத் தங்க விரும்பினான் அங்கேயே.

‘வைகுந்தம் விடுத்து விண்ணிலிருந்து நாரணன் வையகம் வந்ததை அறிவிக்க வேண்டும் உடனே’. கைலாசநாதனிடம் விரைந்து சென்றான் பிரம்மன்.
“சேஷாச்சலத்தில் உள்ளான் நாரணன்” என்றான்;

நாரணனுக்கு உதவிட ஆவல் கொண்டனர், பிரம்மனும், பிரானும் விரைந்தனர் வையகம்.

சிறு பிணக்கினால் நாரணனிடமிருந்து பிரிந்து சென்ற லக்ஷ்மியிடம் சென்றனர்.

கரவீரபுரம் வந்த பரமேச்வரன், பிரம்மனை வரவேற்றாள் லக்ஷ்மிதேவி மனமுவந்து.

“தாங்கள் பிரிந்து வந்து விட்டதால் நாரணன் தானும் வந்து விட்டார் இப்போது வையகம்.

அனாதை போல அலைந்து திரிகின்றார் வனாந்தரங்களிலும், மலைச்சரிவுகளிலும்!

வராஹ பெருமான் கோவில் தடாகத்தருகே இருப்பிடம் ஒன்றை அமைத்துவிட்டேன்.

ஆகாரத்துக்குச் செய்ய வேண்டும் ஒரு ஏற்பாடு. அரனும், நானும் வைத்துள்ளோம் ஒரு திட்டம்.

மாறிவிடுவோம் நாங்கள் இருவரும் உடனே மடி சுரக்கும் ஜாதிப் பசுவாகவும், கன்றாகவும்!

தடை சொல்லாமல் தாங்களும் உதவ வேண்டும்; இடைப் பெண்ணாக மாறிவிட வேண்டும் நீங்கள்.

சேஷாசலத்தின் அருகே சந்திரகிரியை ஆளும் சோழ ராஜனிடம் விற்று விடுங்கள் எங்களை!”

சந்திரகிரியை நோக்கிப் புறப்பட்டாள் லக்ஷ்மி தேவி, விந்தையான பசு, கன்றுடன் இடைப்பெண்ணாக மாறி.

பசுவின் மாயம்

கரவீர புரத்திலிருந்து புறப்பட்ட இம்மூவரும் விரைவாகச் சென்றடைந்தனர் சந்திரகிரியை.

கன்றையும், பசுவையும் விற்க வந்ததாக நின்ற காவலரிடம் கூறினாள் இடைச்சி.

கொழுகொழு பசுவும், மொழுமொழு கன்றும், அழகால் கவர்ந்தன காவலரின் உள்ளங்களை! அறிவித்தனர் அதை அரசனிடம் சென்று;
தருவித்தான் அவன் அவர்களைத் அருகே.

பளபளப்போடும், சுழிகளோடும் கூடிய பசுவும், கன்றும் கவர்ந்தன அரசனை.

அரசிக்கும் பிடித்துவிட்டது அவற்றை, பராமரித்தாள் தன் கவனத்தில் வைத்து.

இடையன் செல்வான் தினமும் மலைக்கு, விடியற் காலையில் பசுக்களை மேய்க்க.

அரண்மனை திரும்புவான் அன்றாடமும். ஆவினத்துடன், ஆதவன் மறையும் முன்.

மலைக்குச் சென்றபின் பசுவும், கன்றும், மலைச் சரிவில் ஒதுங்கிவிடும் தனியாக.

இடையனின் தலை மறைந்த உடனே எடுக்கும் ஓட்டம் சேஷாச்சலத்துக்கு.

புற்றின் மேல் நின்று பசு பால் பொழிய புற்றினுள்ளே பசியாறுவான் நாரணன்.

திரும்பக் கலந்துவிடும் பிற மாடுகளுடன்! அறியவில்லை இடையன் இம் மாயத்தை!

பசுவைக் கறந்தாள் ராணியே சுயமாக; பசு பால் தரவில்லை ராணிக்குச் சரியாக.

அதிக உணவு அளித்தாள் பசுவுக்கு எனினும் அதிகப் பால் கரக்கவில்லை அந்த மாயப் பசு!

பரந்தாமன்

அரசி சந்தேகித்தாள் அப்பாவி இடையனை,
‘கறந்து குடிக்கின்றனோ வருகின்ற வழியில்?’“மடி பெரிதாக இருக்கிறது பசுவுக்கு – ஆனால்
அடி தட்டுகிறது கறக்கும் பால் விந்தையாக!

கூறு உண்மையை என்ன நடக்கிறது?” அதட்ட ,“அறியேன் நான் ஒரு பாவமும் ” என அழுதான்.

“ஜாக்கிரதை நாளைக்குக் தரவேண்டும் பால்!” எச்சரித்தாள் இடையனைச் சந்திரகிரி அரசி.

இத்தனை ஆண்டுகள் பெறாத அவப் பெயரை பெற்றுத் தந்துவிட்டன இந்தப் பசுவும் கன்றும்.

நம்பவில்லை அந்தப் பசுவை இடையன் சற்றும், ‘ஓம்புகிறதோ பழைய எஜமானுக்குப் பால் தந்து?’ கண் இமைக்காமல் கண்காணித்தான் மறுநாள்;
நண்பகலில் பிரிந்து ஓடின அப் பசுவும், கன்றும். ஓடின சேஷாசலத்தின் மலைச் சரிவுகளில்,
ஓடினான் துரத்திய இடையன் கோடரியுடன்!

புற்றை அடைந்ததும் நின்று விட்டன அங்கு. புற்றின் உள்ளே சுரந்தது மொத்தப் பாலையும்!

கோபம் கொண்டான் இடையன் – ‘அரசியின் நோகும் சொற்களை நான் கேட்டது இதனால்’.

பாய்ந்தான் பசு மீது கோடரியை ஓங்கியபடி; பாய்ந்து வெளிவந்தார் புற்றிலிருந்த நாரணன்.

விழுந்தது வெட்டு நாரணன் நெற்றியில் பிளந்த நெற்றியிலிருந்து பீறிட்டது ரத்தம்!

நனைந்தன பசுவும், கன்றும் ரத்தத்தில்! நினைவிழந்தான் இடையன் அச்சத்தில்!

சோழராஜன்

ரத்தக் கறையுடன் ஓடிவந்தன பசுவும், கன்றும்! சித்தம் குழம்பியது அரண்மனைக் காவலருக்கு!

‘துஷ்ட மிருகங்கள் சேதம் விளைவித்தனவா? கஷ்ட காலம் காணவில்லை இடையனையும்!

யார் யாருக்கு என்னென்ன நிகழ்ந்தனவோ? யாருக்குத் தெரியும்?’ அரசனிடம் ஓடினர்.

வாசலுக்கு விரைந்தான் அரசன் – ஆனால் வழக்கத்துக்கு மாறாகக் குழம்பியது மனம்.

வாலைச் சுழற்றிய பசு ஓடியது தெருவில். வரச் சொல்லுகிறது எனத் தெரிந்து விட்டது.

“செல்லுங்கள் பசுவைத் தொடர்ந்து நீங்கள்! சொல்லுங்கள் அங்கு கண்டதை இங்கு வந்து!”

ஆயுதங்களுடன் விரைந்தனர் காவலர்கள்; அடைந்தனர் புற்று இருக்கும் இடத்தினை.

இடையன் மூர்ச்சித்து விழுந்து கிடந்தான்; கிடந்தது அவன் அருகே ரத்தக் கோடாரி!

கசிந்தது ரத்தம் புற்றின் துவாரத்தில்! வசித்த நாகம் வெட்டுண்டு விட்டதோ?

விரைந்து சென்று கூறினார் அரசனிடம் விரைந்து வந்தான் அரசன் பல்லக்கில்

‘நிகழ்ந்துள்ளது அசாதாரண சம்பவம் ஒன்று ! நிகழ்ந்து விட்டதோ தெய்வக் குற்றம் இன்று?’

தெய்வத்தை எண்ணி தியனித்தான் மன்னன்; “தெளிவாக்குவாய் நிகழ்ந்தவற்றை நீ எனக்கு!

பிழை செய்யப் பட்டிருந்தால் மனமுவந்து பிராயச் சித்தம் செய்கின்றேன் பாவத்துக்கு!”

நாரணன் சாபம்

கோபத்தோடு எழுந்தார் நாரணன் புற்றிலிருந்து கோடரி பிளந்த நெற்றியில் வழிந்தது ரத்தம்!

தரையில் விழுந்து நமஸ்கரித்தான் அரசன், “உரையுங்கள் தேவதேவா! நிகழ்ந்தது என்ன?”

கண்ணீர் விட்டுக் கதறினான் சோழராஜன், செந்நீர் வழிய நின்றிருந்த நாரணனிடம்.

“வைகுந்தம் விடுத்து வையகம் வந்த பின்னர் வாழ்ந்து வருகின்றேன் நான் இந்தப் புற்றில்!

தெய்வப் பசு வந்து சுரக்கும் பாலை எனக்காக; செய்வது ஏதென்று அறியவில்லை இடையன்.

கோடரியால் தாக்க வந்தான் பசுவினை – எனக்குக்கோடரி வெட்டு அடாத செயலைத் தடுத்ததற்கு!”

“ஏய்க்கிறது பசு என்று எண்ணினான் அவன், துய்க்கிறது இறைவன் என்று அறியவில்லை!

சாந்த மூர்த்தியான தாங்கள் கோபம் விடுத்துச் சாந்தம் அடைய வேண்டும் லோக ரக்ஷகா!”

“புற்றில் பால் சுரந்த உடனேயே அவனது சிற்றறிவுக்கு எட்டி இருக்கவேண்டும் இது!

புற்றில் உள்ளது ஏதோ விசேஷம் என்பது. குற்றமே இடையன் கோடரியை வீசினது!”

அத்தனின் உக்கிரம் குறையவில்லை – மன்னன் எத்தனை கெஞ்சினாலும் மாறவில்லை கோபம்!

“குடிமக்கள் செய்யும் பாவம் சேரும் சென்று, குடிமக்களை ஆளும் அரசனையே என்றும்!

யோசியாமல் இடையன் செய்த தவற்றுக்குப் பைசாசமாக மாறித் திரிவாய் நீ வனங்களில்!”

சாபம் இட்டார் அப்பாவிச் சோழமன்னனுக்குச் சாந்த மூர்த்தியாகிய சத்துவ குண நாரணன்.

சாப விமோசனம்

“பிரஜைகளின் தவறுகள் சேரும் அரசனையே! குறைப் படவில்லை கிடைத்த சாபத்துக்கு நான்.

கூறுவீர் சாப விமோசனம் என்ன என்பதை; கூறுவீர் சாபவிமோசனம் பெறும் வழியை!”

“திரிவாய் பிசாசாக மாறி மிகுந்த ஆயுளில்; பெறுவாய் பெருமை நீ அடுத்த பிறவியில்.

பிறப்பாய் சுதர்மன் மகன் ஆகாச ராஜனாக, பிறப்பாள் என் மனைவி உந்தன் மகளாக.

நற்கதி அடைவீர் நீயும், உன் வம்சத்தினரும்; கற்பகாலம் விளங்கும் புகழுடன் உன் பெயர்.”

“சாபமா இது? அரிய வரம் அல்லவோ இது? கோபத்தின் பரிசாகக் கிடைத்தவை இவை!

வைகுந்தவாசனை அடைவேன் மருமகனாக! வைபவ லக்ஷ்மியை அடைவேன் என் மகளாக!

மன்னித்து விடுங்கள் இடையனின் குற்றதை; புன்செயல் புரிந்தான் மதியற்ற மடையன்.”

மயங்கிய இடையன் விழித்துக் கொண்டான் தயங்கித் தயங்கி எழுவதற்கு முயன்றான்.

கண்கள் தெரியவில்லை; பார்வை போய்விட்டது! கண்ணீர் வழிய அழுதான் “ஆண்டவனே!” என்று.

“தண்டனை அனுபவிப்பான் சிறிது காலம் கண் மூடித்தனமான செயல் செய்ததற்கு.

நித்தியவாசனாக அமர்வேன் நான் இங்கு; எத்தினம் இவன் என்னிடம் வருவானோ,

கிடைக்கும் கண் பார்வை மீண்டும் அன்று. கிடைக்கும் வைகுந்தம் பாவத்தை வென்று!

விண்ணுலகு விட்டு பூமிக்கு வந்தபின் கண்டீர்கள் என்னை இந்தக் கோலத்தில்.

இதே கோலத்தில் தங்குவேன் இங்கே!” அதே நொடியில் அந்தர் தியானமானார்.

பைசாச உருவம் தாங்கினான் சோழ ராஜன்; வைகுந்தவாசன் மேல் செய்தான் தியானம்.

வகுள மாலிகை

விடை பெற்றுச் சென்று விட்டாள் லக்ஷ்மி! இடையன் பிளந்தான் நெற்றியைத் தாக்கி!

பிருஹஸ்பதி வந்தார் நாரணனைக் காண; வருந்தினார் நாரணன் படும் துயர் கண்டு.

“கசிகின்றதே நிற்காமல் இன்னமும் உதிரம்! கசியும் காண்போர்கள் கண்களிலும் உதிரம்!

சேஷாச்சலத்தில் இல்லாத மூலிகைகளா? ஈசா! தாங்கள் அறியாத வைத்தியமா?” என

மூலிகையைத் தேடிச் சென்ற நாரணனை – வகுள மாலிகை என்னும் மாது சிரோன்மணி கண்டார்.

ஆதி வராஹரிடம் அதீத பக்தி கொண்டிருந்த அகவை மிகுந்த ஒரு கண்ணியப் பெண்மணி.

பிளந்த நெற்றியிலிருந்து வழிந்த ரத்தம் பிளந்தது அவள் நெஞ்சத்தைத் துயரால்.

கொய்து கொண்டிருந்த மலர்களை விடுத்துத் தொய்ந்து நடந்திருந்த நாரணனிடம் வந்தாள்.

“யாரப்பா நீ? அலைகிறாய் ரத்தக் காயத்துடன் ! யாரும் இல்லையா உன்னைக் கவனிப்பதற்கு?”

கிழித்துத் துடைத்தாள் சேலைத் தலைப்பால்; பிழிந்து கட்டினாள் மூலிகையின் சாற்றால்.

கள்வர்கள் வழிமறித்துத் தாக்கினார்களா கூறு? காயம் வந்த மாயம் என்ன சொல்லு!” என்றாள்.

“அம்மா! யாரும் இல்லாத அநாதை நான் அழைப்பர் என்னை ஸ்ரீனிவாசன் என்று.

பசுவைத் தாக்க முயன்றான் ஒரு பாதகன்; பசுவைக் காத்தேன்; விழுந்தது ஒரு வெட்டு!”

இதயத்தைத் தொட்டது “அம்மா!” என்னும் சொல்! இவளும் யாருமில்லாத ஓர் அநாதை அல்லவா?

ஆனந்தக் கண்ணீருடன் நாரணனை அவள் நோக்க, அகக்கண்கள் திறந்து கொண்டன அதே நொடியில்!

‘தன் எதிரே நிற்பது ஸ்ரீனிவாசன் அல்லவே! தன் எதிரே நிற்பது ஸ்ரீ கிருஷ்ணன் அல்லவா?’

கண் இமைக்கும் நேரத்தில் கண்ட ஒரு காட்சி கண் முன் கொண்டு வந்தது பூர்வ ஜென்மத்தை!

யசோதை

கலியுகம் பிறக்கும் நேரம் நெருங்கி விட்டது. காலில் அம்பு தைத்திருந்தது கிருஷ்ணனுக்கு!

செயல் புரிந்தது ராமாவதாரத்தில் – ஆனால் செயல் பலன் தந்தது கிருஷ்ணாவதாரத்தில்!

வாலியோடு சுக்ரீவன் புரிந்த துவந்த யுத்தத்தில், வாலியைக் கொன்றான் மறைந்திருந்த ஸ்ரீ ராமன்.

கோபம் கொண்ட வாலி ராமச்சந்திரனுக்குச் சாபம் அளித்தான் தன் உயிர் பிரியும் முன்பு.

“மறைந்திருந்து வீழ்த்தினாய் ராமா நீ என்னை! மறைந்திருந்து வீழ்த்துவான் ஒருவன் உன்னை!”

தனிமையில் வனத்தில் அமர்ந்திருந்த கண்ணனின் இனிய பாதங்களை ஒரு பறவை என எண்ணினான்.

அம்பு எய்தான் வேடன் சாபத்தை நிறைவேற்ற. அன்பு கொண்டவர்கள் துடித்தனர் இதைக் கண்டு .

“வைகுந்தம் திரும்புகின்றேன் நான் – நீங்களும் மெய்யுருவம் அடையலாம் முன் போலவே!

சேஷாச்சலத்தில் உறைவேன் நான் கலியுகத்தில். சென்று காத்திருங்கள் என் வருகைக்கு!” என்றான்

விடுத்தனர் கோபியர் தங்கள் மாய உருவங்களை. எடுத்தனர் முன் போல் தம் பழைய உருவங்களை.

“எப்போதும் உன் அன்னையாகும் பாக்கியத்தைத் தப்பாமல் எனக்குத் தரவேண்டும் என் கண்ணா!”

யசோதை வேண்டினாள் கண்களில் அருவியுடன், யசோதைக்கு அருளினான் அவள் கேட்ட வரத்தை.

வகுள மாலிகையாகக் காத்திருப்பாய் அம்மா! வெகு விரைவில் வருவேன் சேஷாச்சலத்துக்கு.”

இருவரும் ஒருவரே!

கண நேரத்தில் உணர்ந்தாள் தான் யாரென! “கண்ணா! ” என அணைத்ததாள் அன்புடன்!

“அநாதைகள் அல்ல இனி நாம் என் மகனே! அநாதி காலமாக உள்ளது நமது உறவு!” என

அழைத்துச் சென்றாள் இனிக்கும் ஓடைக்கு; பழுத்த கனிகளைப் பறித்து உண்ணத் தந்தாள்.

“இனிமேல் இருந்துவிடு நீ என்னுடனேயே! தனியாக முன்போல் தவிக்க வேண்டாம்!”

“வந்து பார் நான் தாங்கும் இடத்தை!” என்று சிந்தை மகிழ்ந்து அழைத்தார் ஸ்ரீநிவாசன்

புற்றுக்கு அழைத்துச் சென்றார் அவளை; புற்றினுள் காட்டினர் தம் இருப்பிடத்தை!

வராஹ பெருமானை வணங்கச் சென்றாள், வகுள மாலிகை தினமும் செய்வது போல.

“வழக்கதை விடத் தாமதமாக வந்துள்ளாய்! வழக்கத்தை விட நீ ஆனந்தமாக உள்ளாய்!”

வம்புக்கு இழுத்தார் அந்த வகுள மாலிகையை, அன்புடன் அவள் தொழும் வராஹ பெருமான்!

ஸ்ரீனிவாசன் கதையைக் கூறினாள் அவள்.
“ஸ்ரீனிவாசன் வேறு,  நான் வேறு அல்ல!

அங்கே அவனுக்கு நீ செய்யும் தொண்டு இங்கே எனக்கு இனி வந்து சேர்ந்து விடும்.

கவனிப்பாய் நீ ஸ்ரீனிவாசனின் தேவைகளை. கலியுக முடிவில் சேர்வாய் என் பாதங்களை!”

ஆகாச ராஜன்

திரிந்தான் பைசாச உருவில் சோழராஜன்; பிறந்தான் பூவுலக வாழ்வை நீத்த பிறகு, நாராயண புரத்தை ஆண்டு கொண்டிருந்த
நல்ல மன்னன் சுதர்மனின் முதல் மகனாக. ஆகாச ராஜன் என்ற பெயரை வைத்தனர். அன்புடன் அவனைப் பேணி வளர்த்தனர்.

பிறகு பிறந்தது இன்னொரு ஆண் மகவு; பெயர் விளங்கியது தொண்டைமான் என. ஒற்றுமையாக வளர்ந்தனர் இருவரும்;
போற்றினர் அனைவரும் இருவரையும்.

சுதர்மன் விரும்பினான் வனவாசம் செல்ல; சுபமாக மணிமுடி தரித்தான் ஆகாசராஜன்.

இளவரசுப் பட்டம் கிட்டியது இளையவனுக்கு;  இருவரும் ஏற்றனர் தந்தையின் விருப்பத்தை.

உயர்குலப் பெண்களை மணந்து கொண்டனர்; பெயர் விளங்கும்படி நிர்வகித்தனர் நாட்டினை.

உருண்டோடின வருடங்கள் ஒவ்வொன்றாக, பெருகின வளமும், நலமும் அந்த நாட்டில்.

ஆனந்தம் கொண்டிருந்தனர் அனைவருமே ஆகாச ராஜன் என்னும் மன்னனைத் தவிர!

குழந்தை ஒன்று இல்லை கொஞ்சுவதற்கு! குழந்தை ஒன்றில்லை முத்தாடுவதற்கு!

“இப்பிறவியில் செய்யவில்லை ஒரு பாதகம்; முற்பிறவியில் செய்ததை யாம் அறிகிலோம்.

குலகுரு சுகர் அறிவார் மூன்று காலத்தையும். குலகுரு கூறுவார் நல்வழி ஒன்றை நமக்கு!”

அரசி ஆலோனை கூறினாள் அரசனுக்கு; அரசன் அழைத்து வரச் சொன்னான் சுகரை.

பல்லக்குச் சென்றது சுகரை அழைத்துவர, சொல்லுக்கு வல்லவர் சுகர் அங்கு வந்தார்.

மரப் பேழை

பல்லக்கில் வந்த குலகுரு சுகரை ஆகாசராஜன் உள்ளன்போடு வரவேற்றான் அரசியுடன் சென்று.

‘அழைத்த காரணம் என்ன அரசே?” என வினவ, “விழைகின்றோம் மழலைச் செல்வத்தை யாம்!

பலன் தரவில்லை புரிந்த தான தருமங்கள்; பலன் தரும் வழியைக் கூறவேண்டும் தங்கள்!”

“புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் – உனக்கு உத்திரவாதமாகப் பிறக்கும் குழந்தை!” என

“பொய்க்காது பெரியோரின் ஆசி மொழிகள்; செய்வோம் யாகத்தைத் தங்கள் ஆசியுடன்!”

குறித்தனர் நல்ல நாள் ஒன்றை யாகத்துக்கு; குவித்தனர் யாகப் பொருட்களைக் கொணர்ந்து.

குழுமினர் வேத விற்பன்னர்கள் யாகம் புரிந்திட அழைப்புகள் சென்றன அருமை நண்பர்களுக்கு!

உழுதான் ஆகாச ராஜன் அந்த யாக பூமியை, தொழுத பின்பு இறையையும், குருவையும்.

வேத கோஷம் செய்தனர் வேத விற்பன்னர்கள். கீத நாதம் ஒலித்தனர் இசை விற்பன்னர்கள்.

நிலத்தை உழுத ஆகாச ராஜனின் கலப்பை நின்று விட்டது ஓரிடத்துக்கு வந்தவுடன்.

அழுத்தி உழுதவுடன் எழுந்தது ஒரு சப்தம்; ஆழத்தில் கலப்பையைத் தடுத்தது எதுவோ!

தோண்டினர் காவலர் நிலத்தை விரைந்து; கண்டனர் அழகிய ஒரு மரப் பேழையை!

பேழை வந்தது அரசனிடம் பத்திரமாக! பேழை வீசியது ஓர் அரிய நறுமணத்தை.

பத்மாவதி

தென்றல் தழுவிச் சென்றது குளிர்ச்சியாக! தெளித்தது வானம் நன்னீர்த் துளிகளை!

பூமியை உழுத ஜனகனுக்குச் சீதையைப் போல, பூமியை உழுத மன்னனுக்கு கிடைத்தது என்ன?

பேழையைச் சமர்பித்தான் மன்னன் குருவிடம்; பேழையைத் திறந்தார் ஆர்வத்துடன் குலகுரு.

ஆயிரக் கணக்கான தாமரை இதழ்களில் ஆனந்தமாக சயனித்திருந்தாள் குழந்தை!

பெருகியது கண்ணீர் பெருகிய உவகையால்! பரிவுடன் வணங்கினான் குருவின் பாதங்களை!

ஆகாசத்தில் இருந்து ஒலித்தது ஓர் அசரீரி.“ஆகாச ராஜன்! பூர்வ ஜன்ம புண்ணியம் இது.

பூர்த்தியடைந்தது உன் நித்திய கோரிக்கை. புத்திரி கிடைத்தாள் உன் மனக் குறை தீர!”

மார்புறத் தழுவினான் மலர்க் குழந்தையை! ஆர்வத்துடன் அடைந்தான் அரண்மனையை.

பெயர் இட்டான் குழந்தைக்கு பத்மாவதி என. பெயர்க் காரணம் தாமரையிதழ்களில் சயனம்.

நடத்தினான் தான தருமங்கள் நாடெங்கும்; நடத்தினான் பூஜைகள் ஆலயங்கள் எங்கும்.

தன் வீட்டிலேயே தேவி வந்து பிறந்ததுபோல தன்னிறைவு அடைந்தனர் ஒவ்வொருவரும்.

நாரதர்

நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்;
நற்குணங்கள் அனைத்தின் ஓர் இருப்பிடம்.

நந்த வனத்தில் தோழியாரோடு ஆனந்தமாகப்
பந்து விளையாடுகையில் வந்தார் ஒரு கிழவர்.

வயது முதிர்ந்த கிழவராக வந்த நாரதர்
“பயத்தை விட்டுவிட்டு வா இங்கே!” என,

தயங்கினாள் பத்மாவதி அவரை அறியாது!
“தயக்கம் வேண்டாம் நான் அந்நியனல்ல!

கைரேகை கண்டு சொல்லுவேன் பலன்
தையல் உந்தன் எதிர் காலத்தைப் பற்றி!”

நீட்டினாள் தன் இடக் கரத்தை பத்மாவதி
நீட்டிய கரத்தைப் பிடித்து நோக்கினார் அவர்.

“தெய்வாம்சம் பொருந்திய கை கூறுகிறது!
வைகுந்த வாசனை நீ மணக்கப் போகிறாய்!”

“அத்தனை பாக்கியமா எனக்கு?” வியந்தாள்!
அவள் கண்டாள் நாரத முனிவரை எதிரில்.

“அறிவிக்கவே வந்தேன் உனக்கு நான் இன்று !
அறிவாய் உன் கணவன் வைகுந்தவாசன் என்று!”

ஆட்டத்தில் செல்லவில்லை அவள் மனம்;
நாட்டம் கொண்டு விட்டது பரந்தாமனிடம்!

நிறைத்தாள் உள்ளம் முழுவதும் நாரணனை.
உரைத்தாள் உள்ளன்போடு “நாராயணா!” என்று!

“பருவ வயதில் உனக்கு இத்தனை பக்தியா?” என
அருமைத் தோழிகள் கேலி செய்தனர் அவளை!

கேட்டாள் நாராயணன் செய்த லீலைகளை.
கண்டாள் நாராயணனின் திவ்விய ரூபத்தை.

உரைத்தாள் நாராயணின் திவ்ய நாமங்களை.
பணிந்தாள் நாராயணின் திவ்ய விக்ரஹத்தை.

வைகுந்தவாசனை மணக்கும் சுபவேளைக்குத்
தையல் காத்திருந்தாள் மிக்க ஆர்வத்துடன்.

11a. சந்திப்பு

உலவின துஷ்ட மிருகங்கள் தம் இஷ்டம் போல!
நிலவியது ஆபத்து வனத்தில் வசிப்பவர்களுக்கு!

சுனை அருகே வசிப்பவர்களுக்கு பிராண அபாயம்,
சுனையில் நீர் பருகும் சாது பிராணிகளுக்கும் கூட.

“வேட்டைக்குப் போகின்றேன் அம்மா – விலங்குகளின்
கொட்டத்தை அடக்குவதற்கு!” என்றான் ஸ்ரீனிவாசன்.

காட்டை விட்டு வெளியே வந்து திரிபவைகளைக்
காட்டுக்குள் விரட்டினான் அவற்றை அச்சுறுத்தி.

துவம்சம் செய்து கொண்டிருந்தது ஒரு மத யானை!
துரத்தியவுடன் ஓடியது காட்டை விட்டு வெளியே.

வெளியறியது அது சேஷாச்சலத்தை விட்டு விட்டு!
வெறி கொண்ட யானையை விடலாகாது அன்றோ?

நாரயணபுரத்தை நோக்கி ஓடியது மத யானை.
நாராயணனும் துரத்திச் சென்றான் யானையை.

நுழைந்தது ஆகாசராஜனின் உத்தியான வனத்தில்!
‘இழைக்குமோ ஆபத்து அங்கிருந்த பெண்களுக்கு?’

அம்பினால் அடித்தான் அந்த மத யானையை.
தும்பிக்கையைத் தூக்கிப் பிளிறிவிட்டு ஓடியது.

யானை சென்றபின் அழைத்தனர் பத்மாவதியை,
“யானை வந்துள்ளது, திரும்புவோம் அரண்மனை!”

யானையை விரட்டிய நாரணன் வந்தான் அங்கே.
யானை சென்று விட்டது; இருந்தனர் அப் பெண்கள்.

மற்ற பெண்களிடையே இருந்தாள் பத்மாவதி
மணிகளிடையே ஜொலிக்கும் வைரம் போல.

முககாந்தி ஈர்த்தது இரும்பைக் காந்தம் போல.
முன்னேறினான் பெண்கள் கூட்டத்தை நோக்கி.

11b. “வாசுதேவன் நானே!”

அந்நிய ஆடவனைக் கண்டதும் தோழியர்
சொன்னார்கள், “திரும்பிச் செல்வோம்!” என.

“தெரிந்து கொண்டு வாருங்கள் அவன் யார் என!”
“யார் நீங்கள்? இங்கு என்ன வேலை? கூறுவீர்!”

நடந்தான் ஸ்ரீநிவாசன் பத்மாவதியை நோக்கி
தடுக்க முடியவில்லை தோழிப் பெண்களால்!

“ஆடவருக்கு நுழைய அனுமதி இல்லையா?
அறியாமல் வந்து நுழைந்து விட்டேன் இங்கு!

கண்டேன் வனத்தில் மத யானை ஒன்றை!
கண்டதும் யானை ஓடலானது வேகமாக!

காட்டுக்குள் செல்லவில்லை அந்த யானை;
நாட்டுக்குள் நுழைந்தது; நந்தவனம் வந்தது !

கன்னியரைத் துன்புறுத்துமோ என்று அஞ்சி
கணை ஒன்றை எய்து விரட்டினேன் அதை.

பூரணச் சந்திரன் போன்ற முகம் கொண்ட
ஆரணங்குடன் பேச விரும்பி வந்தேன்.”

“யானை திரிந்தால் தெரிந்திருக்கும் எமக்கும்!
யார் நீர்? எதற்கு வந்துள்ளீர்? உண்மை கூறும்.”

“வசிப்பது சேஷாச்சலம்; சிந்து புத்திரர் குலம்;
வசுதேவர் தந்தையார்; தேவகி தாயார் ஆவார்.

பஞ்ச பாண்டவர்களுக்கு ஆப்த நண்பன் நான்;
கொஞ்சப் பெயர்களா நான் சொல்லுவதற்கு?”

“பித்தம் தலைக்கு ஏறி விட்டது உமக்கு!
வைத்தியரைப் போய்ப் பாரும் உடனே!

உத்தியான வனத்தில் பெண்களிடம் வந்து
எத்தன் வேடமா போடுகின்றீர்கள் நீங்கள்?

பைத்தியக்காரன்! யசோதை கிருஷ்ணனாம்!
வைத்தியம் செய்து கொள்ளும் விரைவாக.

ஜோலியைப் பார்த்துக் கொண்டு செல்வீர்!”
கேலி பேசினார் பத்மாவதியின் தோழியர்.

11c. சினம் பெருகியது

“அரசகுமாரி தங்களைப் பற்றிய விவரங்கள்
அனைத்தும் அறிய வேண்டும் நான் இப்போது.”

“தாராளமாகத் தெரிந்து கொள்ளுங்கள் ஐயா!
நாராயணபுர மன்னன் ஆகாசராஜனின் மகள்.

பத்மாவதி என்பெயர், தாரணி தேவி என் தாய்;
அத்திரி கோத்திரம், நாங்கள் சந்திர வம்சம்.

உத்தியான வனம் உண்டானது எனக்காக.
இத்தனை விவரங்கள் போதுமா உமக்கு?”

“என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்!
என்னை மணந்து கொள்ள உனக்கு விருப்பமா?”

கோபம் வந்து விட்டது இளவரசி பத்மாவதிக்கு!
கோபம் கொண்டனர் பத்மாவதியின் தோழியரும்.

“அத்து மீறிப் பேசவேண்டாம் பித்துப் பிடித்த ஐயா!
பத்திரம் இவள் அரசகுமாரி, நினைவிருக்கட்டும்!”

“கன்னி பெண்ணை நான் மணக்க விரும்புவதில்
என்ன தவறு எனத் தெரியவில்லையே!” என்றான்.

பல்லைக் கடித்தாள், கண்களை உருட்டினாள்,
தொல்லை தரும் மனிதனுடன் என்ன பேச்சு?

வைகுந்தவாசனை வரித்த என்னை ஒரு
வழிப் போக்கன் மணக்க விரும்புவதா?

சினம் தலைக்கு ஏறியது பத்மாவதிக்கு
மனம் அவனைத் தண்டிக்க விரும்பியது.

“அனுமதி இல்லாத இந்த இடத்துக்கு வந்து
அத்து மீறி நுழைந்தது உம் முதல் தவறு!

தனித்து இருக்கும் இளம் பெண்களிடம்
தவறாகப் பேசுவது இரண்டாவது தவறு.

கன்னிப் பெண் இவள் என்று அறிந்திருந்தும்
கண்ணியம் இன்றிப் பேசுவது மூன்றாவது.

சுய உணர்வு இல்லை போலும் உமக்கு!
மயக்கத்தில் பேசுகின்றீர் போலும் நீர்!

தயவு செய்து சென்று விடுங்கள் உடனே!
பயம் இல்லையா அரசனின் கோபத்துக்கு?”

விடாக் கண்டன் கொடாக் கண்டன் கதையானது!
இடத்தைக் காலி செய்ய மறுத்தான் ஸ்ரீநிவாசன்!

1d. மோதலும், காதலும்!

“எந்த விதத்தில் குறைந்துவிட்டேன் பெண்ணே?
என்னை மணக்கப் புண்ணியம் பண்ண வேண்டும்!”

“அம்பு எய்து மதயானையை விரட்டிய பின்பும்
வம்பு செய்து எம்மைத் துன்புறுத்துவது ஏனோ?”

“போகாவிட்டால் என்ன செய்ய முடியும் உன்னால்?”
“போகாவிட்டால் உங்கள் உயிரை வாங்கிவிடுவேன்!”

“உயிருக்கு அதிபதியான என் உயிரையா?”என்றான்.
“பயித்தியத்தை அடித்து விரட்டிவிடுங்கள்!” என்றாள்.

சொல்லடிகள் பட்டு நின்றிருந்த ஸ்ரீனிவாசனுக்குக்
கல்லடிகள் கொடுக்கலாயினர் தோழிப் பெண்கள்.

காயம் பட்டது சில கற்கள் தாக்கி – எனினும்
நியாயம் கேட்க நிற்கவில்லை ஸ்ரீநிவாசன்!

மோதல் ஏற்படும் இருவர் சந்தித்தவுடனே!
காதல் ஆகிவிடும் பின்னர் சிந்தித்தவுடனே!

அடித்து விரட்டச் சொன்ன பத்மாவதியை
அடித்து விட்டன மன்மதனின் பாணங்கள்.

நாரணன் வெளியேறிய பின்னர் உலகம் தன்
பூரணத்துவம் இழந்தது போல் தோன்றியது.

உலகமே இருண்டது போலத் தோன்றியது
கலகமே நிறைந்த மனதின் நினைவுகளால்!

பாலும் கசந்தது; பஞ்சணை வருத்தியது;
கோலம் மாறியது; பசலை நோய் படர்ந்தது.

“மந்திரம் போட்டுவிட்டானோ அந்தத்
தந்திரம் அறிந்த வம்புக்கார வாலிபன்?

உற்சாகமாகச் சண்டையிட்டாள் அவனுடன்!
உற்சாகம் இழந்து ஆளே மாறிப் போய்விட்டாள்.

ரதத்தில் ஏற்றி அமர்த்தினர் பத்மாவதியை;
ரதம் விரைந்தது மன்னனின் மாளிகைக்கு.

11e. காதல் நோய்

அந்தப்புரம் சென்று வணங்கினர் அரசியை
அரண்மனை திரும்பிய உடன் தோழிகள்

வாடிய முகங்கள்; வாயடைத்த பெண்கள்;
தேடினாலும் காணவில்லை பத்மாவதியை!

“அன்னியன் ஒருவன் நுழைந்து விட்டான்
அரண்மனை உத்தியான வனத்தில் இன்று!

மதயானையைத் துரத்தி வந்தானாம் அங்கு.
மதயானை ஓடிவிட்டது அவன் பாணத்துக்கு!

வம்பு செய்து பேசினான் பத்மாவதியிடம்;
கம்பு கொண்டு புடையாமல் கல் எறிந்தோம்.

நழுவினான் கழுவும் மீனில் நழுவும் மீனாக!
இழந்துவிட்டாள் இவள் தன் உற்சாகத்தை!

மகளைத் தேடி ஓடினள் அரசி அந்தப்புரத்தில்.
மகளோ வெட்டவெளியை வெறித்திருந்தாள்!

‘கெடுதலே நினையாத நான் இன்று மட்டும்
கொடூரமாக ஏன் நடந்து கொண்டு விட்டேன் ?

அடி பலமாகப் பட்டிருக்குமோ என்னவோ?
துடிப்பான இளைஞன்! பயித்தியம் அல்ல!’

அன்னை வந்ததையும் கவனிக்கவில்லை;
சொன்ன சொற்களையும் கவனிக்கவில்லை!

திருஷ்டி கழித்தாள் அரசி பத்மாவதிக்கு!
திரு நீறு பூசினாள் அரசி பத்மாவதிக்கு!

உணவு இறங்கவில்லை பத்மாவதிக்கு!
உறக்கமும் பிடிக்கவில்லை பத்மாவதிக்கு.

குலகுரு சுகர் வந்தார், அறிவுரைகள் தந்தார்;
“மலர்வனம் அருகேயே அகத்தியர் ஆசிரமம்!

பரமசிவன் அபிஷேக நீரைக் கொண்டுவந்து
அரசகுமாரி மேல் தெளித்தால் குணமாகும்!”

பதினோரு வேத விற்பன்னர்கள் சென்றனர்,
பரமசிவனுக்கு அபிஷேக ஆராதனை செய்ய!

12. பத்மாவதி யார்?

விடியலில் எழும் ஸ்ரீனிவாசன் அன்று
வெகுநேரம் வரையிலும் எழவில்லை.

வேட்டையாடின களைப்பு என்று எண்ணி
விட்டு விட்டாள் அவனை வகுளமாலிகை.

விழித்துக் கொண்டு விருதாகப் படுத்திருந்தான்;
எழுப்பினாலும் எழவில்லை மஞ்சத்திலிருந்து.

என்ன நடந்தது என்று பலவாறாகக் கேட்டும்,
என்ன நடந்தது என்று சொல்லவே இல்லை.

“எவள் மீதாவது மோஹம் கொண்டாயா?” என,
“எப்படிக் கண்டு பிடித்தீர்கள் அம்மா?” என்றான்!

“நீராடி உணவருந்திய பின் கூறு என்னிடம்,
நீ கண்ட பெண்ணைப் பற்றிய விவரங்களை!”

“காட்டில் வேட்டையாடும் போது நான் கண்டேன்
காட்டு யானை ஒன்று மதம்கொண்டு திரிவதை!

மனிதர்களுக்குத் தீங்கு செய்யுமோ என்றஞ்சி
கனத்த காட்டுக்குள் விரட்டி விட முயன்றேன்.

மலைச் சரிவில் இறங்கி ஓடியது மதயானை.
மலர் வனம் ஒன்றில் புகுந்தது அம்மதயானை.

நாராயண புரத்தை ஆட்சி செய்யும் மன்னன்
ஆகாசராஜனின் விசேஷ மலர்வனமாம் அது.

மன்னன் மகள் இருந்தாள் தன் தோழியருடன்;
மனதைப் பறிகொடுத்துவிட்டேன் கண்டவுடன்!

விருப்பத்தைத் தெரிவித்தேன் நான் அவளிடம்;
விரட்டி விட்டாள் என்னைக் கல்லால் அடித்து .

எங்கெங்கு நோக்கிலும் தெரிவது அவள் முகமே!
எங்கள் திருமணம் நடக்குமா அம்மா?” என்றான்.

“மணம் செய்ய விரும்புகிறாய் பத்மாவதியை.
குணம் கொண்டவளா உனக்கு ஏற்றவாறு?”

“அறியமாட்டாய் நீ அவள் யார் என்பதை!
அறிவேன் நான்! கூறுவேன் உனக்கும்!”

13a. வேதவதி

திரேதா யுகத்தில் இலங்கேஸ்வரன்
திரிலோக சஞ்சாரம் செய்து வந்தான்.

இமாலயச் சாரலில் கண்டு மோஹித்தான்
அமானுஷ்ய அழகுடைய ஒரு சுந்தரியை.

வேதவதி என்ற அந்தக் கன்னிகைக்கு
வேதவாக்கு ஆகும் தந்தையின் சொல்.

மகாவிஷ்ணுவை வரித்தாள் தன் மணாளனாக;
ஹிமாச்சலத்தில் செய்து வந்தாள் கடும் தவம்.

நெருங்கினான் வேதவதியை இலங்கேஸ்வரன்.
விரும்பினான் அவள் அழகை அனுபவிப்பதற்கு!

“பரந்தாமனை வரித்துவிட்டேன் மணாளனாக!
பர புருஷர்களுக்கு இடமில்லை மனதில்” என்றாள்.

“பரந்தாமனுக்கு இளைத்தவனோ இந்த ராவணன்?
பரம சுகமாக வாழலாம் என்னை மணந்துகொண்டு!”

வேதவதி ஏற்கவில்லை இந்தக் கோரிக்கையை.
வேண்டாம் என்றால் விடுபவனா இராவணன்?

தலைக்கு ஏறிவிட்ட மோக வேகத்தில் – அவள்
தலை மயிரைப் பற்றிக் கொண்டு சூளுரைத்தான்.

“அடையாமல் ஓய மாட்டேன் நான் விரும்பியதை!”
அடிபட்ட பெண் நாகமாக மாறிவிட்டாள் வேதவதி.

“கேசத்தைத் தீண்டி அதை மாசு படுத்திவிட்டாய்!
கேசவனுக்கு உகந்தது அல்ல அது இனிமேலும்!”

திட மனத்தோடு தவம் புரிந்துவந்த வேதவதியின்
இடக்கையே மாறி விட்டது ஒரு கூரிய கத்தியாக!

கேசத்தையே துண்டித்து விட்டாள் இடக் கையால்!
மோசமான எண்ணத்தை அது மாற்றிவிடவில்லை.

திடுக்கிட்டான் ராவணன்; மனம் தளரவில்லை;
தடுத்ததால் மேன்மேலும் வளர்ந்தது காம ஜுரம்.

13b. வேதவதியின் சாபம்

அண்டம் குலுங்க நகைத்தான் ராவணன்;
கொண்டது விடா முதலையும், மூர்க்கனும்!

“மந்திர, தந்திரப் பிரயோகங்கள் என்னிடத்திலா ?
தந்திரங்களில் பெயர் போனவன் இந்த ராவணன் !”

மீண்டும் நெருங்கினான் வேதவதியை ராவணன்;
மீண்டும் தியானித்தாள் வேதவதி பரந்தாமனை;

வேதவதி ஒரு புனிதவதி அதனால் அங்கு
வேகமாக வளர்ந்தது அக்கினி ஒரு தடுப்பாக.

திகு திகு என்று எரியத் தொடங்கியது அது
திகில் அடைந்த அபலையைக் காப்பதற்கு.

வரவழைத்தான் ராவணன் வஜ்ஜிராயுதத்தை.
எரியும் தீயை அணைக்க முயன்றான் அவன்.

‘கற்பைக் காத்துக் கொள்ள இருக்கும் ஒரே வழி
கயவன் தொடுமுன் உயிரை விடுவதே ஆகும்!’

“காமத்தால் கண்ணிழந்து விட்ட அரக்கனே!
காமம் நிறைவேற அனுமதிக்க மாட்டேன்!

விடுவேன் என்னுயிரை எரியும் தீயில் குதித்து;
விடாது என்றும் இந்தப் பாவம் உன் குலத்தை!

பழி தீர்க்கும் உன்னை என்றாவது ஒருநாள்!
அழிவாய் நீயும், உன் குலமும் பெண்ணால்!”

சாபம் இட்டாள்; குதித்தாள் அந்த நெருப்பில்
சாபம் வீண் போகவில்லை பலித்தது பிறகு.

சீதையிடம் கொண்ட விபரீத மோஹமே
சீரழித்துவிட்டது அவன் வம்சத்தினையே1

13c. இரண்டு சீதைகள்

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை எனத்
தன்னாட்டை விடுத்துக் கனகம் ஏகினான்

தம்பியுடனும், சீதையுடனும் ஸ்ரீ ராமன்.
தங்கினர் பஞ்சவடியில் அமைதியுடன்.

தையல் சீதையைத் தாக்கினாள் – ராமனிடம்
மையல் கொண்டுவிட்ட அரக்கி சூர்ப்பனகை.

காது, மூக்கு அறுபட்டு அலறி ஓடிச் சென்று
ஓதினாள் சீதையின் அழகை ராவணனிடம்.

காமம் கொண்டான் கண்டிராத சீதைமீது!
ஏமாற்றினான் ஒரு மாய மானை அனுப்பி!

அப்புறப்படுத்தினான் ராம, லக்ஷ்மணர்களை.
அபகரித்தான் சீதையைப் பர்ணசாலையுடன்.

“அபாயம் நேரக் கூடாது சீதைக்கு!” என்று
உபாயம் ஒன்று. செய்தான் அக்கினிதேவன்

வேதவதியுடன் வந்தான் விரைந்து வெளியில்!
வேகமான ராவணனை மறித்தான் வழியில்!

“உண்மை சீதை இருக்கிறாள் என்னிடம்;
உன்னிடம் இருப்பவள் ஒரு மாயச் சீதை.

எடுத்துச் செல் இந்த உண்மை சீதையை!
விடுத்துச் செல் அந்த மாயச் சீதையை!”

நம்பினான் அக்கினியின் சொற்களை ராவணன்;
அம்பென விரைந்தான் வேதவதியுடன் இலங்கை.

சீதையை விட்டு விட்டான் அக்கினிதேவனிடம்;
சீதையை விட்டான் ஸ்வாஹாவிடம் அக்கினி.

ராவணன் அழிந்தபின் அக்கினிப் பரீட்சை
ராமன் செய்யச் சொன்னன் வேதவதியிடம்.

வலம் வந்தாள் அக்கினியை மூன்று முறை;
வணங்கினாள் ராமனை; இறங்கினாள் தீயில்!

வெளிப்பட்டார் அக்கணமே அக்கினி தேவன்!
வெளிப்பட்டனர் அவருடன் இரண்டு சீதைகள்!

13d. ஏக பத்தினி விரதம்

“இருவரையும் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றான்.
ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை என்பேன்.

“இவர் தங்கள் தேவி சீதா பிராட்டியார்;
இவர் வேதவதி என்னும் பிராட்டியார் .

வேதவதியே ராவணனின் சிறையிலிருந்தவர்;
தேவன் விஷ்ணுவை மணாளனாக வரித்தவர்.

இமயத்தில் நிஷ்டையில் இருக்கும் வேளை,
இராவணன் கண்டு மோஹித்தான் இவளை.

பலவந்தம் செய்ய நெருங்கினான் இவளை;
பயந்து தீயினில் குதித்துவிட்டாள் இவள்.

பத்திரமாக ஒப்படைத்தேன் என் மனைவியிடம்
தந்திரமாக மீட்டோம் சீதா தேவியைப் பின்னர்.

இருவருமே தங்களுக்கு உரியவர்கள் தாம்!
இருவரையும் ஏற்க வேண்டும் தங்கள்!” என;

சீதையும் கூறினாள் ராமனிடம் சென்று
“வேதவதி துன்புற்று என்னைக் காத்தாள்.

தாமதம் இன்றி ஏற்றுக் கொள்வீர் அவளை!”
ராமன் ஏற்கவில்லை இந்த வேண்டுகோளை.

“ஏக பத்தினி விரதம் பூண்டுள்ளதை அறிவாய்
ஏற்றுக் கொள்ள முடியாது இவளை இப்போது!

கலியுகத்தில் வசிப்பேன் சேஷாச்சலத்தில்,
கலியுகத்தில் மணப்பேன் நான் வேதவதியை.

ஆகாசராஜன் மகள் பத்மாவதி ஆவாள் – இவள்.
அரும் தவம் பலித்து என்னையும் மணப்பாள்!”

14a. சிவ ஆராதனை

“வேதவதியே இப்போது பத்மாவதி – அதனால்
வேண்டுமென்றே விலகிச் சென்றாள் லக்ஷ்மி.”

மன்னனைச் சந்திக்கச் சென்றாள் வகுளமாலிகை;
அன்னையுடன் சற்று வழி நடந்தான் சீனிவாசன்.

மாலை மங்கியது நகரை நெருங்குகையில்;
கோலாகல ஆராதனைகளின் ஒலி கேட்டது

அருகிலே இருந்த அகத்தியரின் ஆசிரமத்தில்;
விரும்பிக் கலந்து கொண்டாள் பூஜைகளில்!

விரைந்து சென்று நகரை அடைந்தாலும்
இரவில் மன்னனைக் காண முடியாதே!

வேதபாராயணம் தொடர்ந்து நடந்தது;
வேத வல்லுனர் செய்தனர் அபிஷேகம்.

விமரிசையாக நடந்தன பூஜைகள்.
வந்த காரியத்தில் வெற்றி நிச்சயம்!

“ஆராதனைக்குக் காரணம் என்ன?” என
“நாரயணபுரி இளவரசிக்காக நடக்கிறது.

உற்சாகம் இழந்து விட்டாளாம் திடீரென்று!
உறங்குவதும், உண்பதும் இல்லையாம்!”

‘காதல் வயப்பட்டுள்ளாள் பத்மாவதி தேவி!
காதலுக்கு வைத்தியம் கல்யாணம் அன்றோ?’

பூஜை முடிந்தது பொழுது புலருகையில்!
பூஜைப் பிரசாதமும், தீர்த்தமும் சென்றன.

வகுள மாலிகையும் சென்றாள் அவற்றுடன்
வெகு விரைவாக மன்னனைக் கண்டு பேசிட!

14b. குறத்தி வந்தாள்!

அன்னையுடன் வழி நடந்த ஸ்ரீனிவாசனுக்குப்
பின்னர் இருப்புக் கொள்ளவில்லை தனியே.

‘சென்ற காரியம் வெற்றி அடையுமா? அன்னை
வென்று திரும்புவாளா? அல்லது தோற்பாளா?’

தோற்று விடும் எண்ணமே தோற்றுவித்தது
தேற்ற இயலாத மனக்கவலையை நெஞ்சில்.

தன் பங்குக்கும் செய்ய வேண்டும் ஏதாவது,
தன் விருப்பம் தடையின்றி நிறைவேறிட.

மாறினான் நகரின் எல்லையை அடைந்ததும்,
குறி சொல்லும் அழகிய குறத்தியாக அவன்!

“சொல்வேன் உள்ளபடி மூன்று காலத்தையும்!
வெல்வேன் உங்கள் எல்லா தோஷங்களையும்!”

குறத்தியை அழைத்து வரச் சொன்னாள் அரசி.
குறத்தியை அழைத்து வந்தனர் தோழியர்கள்.

“குறி சொல்வதில் நீ திறமைசாலியாமே!
குறி சொல்கிறாயா அரசகுமாரிக்கு?” என,

“நான் சொல்வது ஒன்றும் இல்லை தாயே!
நாவில் அமர்பவன் செந்தில் ஆண்டவன்!

அழையுங்கள் உங்கள் அரசகுமாரியை!”
“குழந்தையின் கைபார்த்துக் குறி சொல்!”

நாணத்துடன் வந்து அமர்ந்தாள் பத்மாவதி;
காணத் தந்தாள் தன் இடக்கரத்தை நீட்டி.

வெள்ளிப் பூண் போட்ட குழலால் தடவிய
கள்ளக் குறத்தியும் குறி சொல்லலானாள்!

14c. குறத்தி சொன்ன குறி

“குல தெய்வம் யார் கூறுங்கள் அரசி” எனவும்,
“குல தெய்வம் சேஷாத்ரி வாசனே!” என்றாள்.

“சேஷாத்ரி வாசன் உள்ளான் உங்கள் முன்பு!
பேசுவது அவனே என் நாவிலிருந்து இப்போது!

மலர் வனத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு
மகள் சந்தித்தது அந்த சேஷாத்ரி வாசனையே!

மணக்கக் கேட்டான் இவளிடம் சம்மதம்;
பிணங்கிக் கொண்டு அடித்தாள் கல்லால்!

புறப்பட்டுப் போகுமுன் அவன் இவளுடைய
புறக் கண்களுக்கும் காட்சி அளித்துள்ளான்!

ஆகிவிட்டாள் அவன் நினைவால் இங்ஙனம்.
ஆகிவிடுவாள் சஹஜமாக, அவனை மணந்தால்.

விட்டு விட்டால் இவளை இப்படியே – இவள்
விட்டு விடுவாள் தன் உயிரையே ஏக்கத்தில்!”

யாரும் பேசவில்லை இதைக் கேட்ட பின்னர்.
யாரும் நம்பவில்லை குறத்தியின் குறியை!

“பகவானை மணப்பது நடக்கும் காரியமா?
பகவானிடம் மணம் பேசுவதும் சாத்தியமா?”

“மனதைப் பறி கொடுத்தவனே அனுப்புவான்;
மணம் பேசி முடிக்கத் தகுந்த நபரை!” என்றாள்.

பொற்காசுகளை அளித்தாள் அரசி குறத்திக்கு,
“நற்காரியம் நடப்பதே போதும் எனக்கு!” என்று

விடை பெற்றுச் சென்றவள் குறத்தி – ஆனால்
வீட்டைச் சென்று அடைந்தவன் ஸ்ரீனிவாசன்.

15a. அன்னையர் சந்திப்பு

விடியலுக்குக் காத்திருந்தாள் தரணி தேவி.
விடிந்தவுடன் விடியும் சில பிரச்சனைகள்.

வந்தனர் அந்தணர் சிவன் ஆலயத்திலிருந்து;
தந்தனர் அபிஷேகத் தீர்த்தப் பிரசாதங்கள்.

அழகிய கோலமிட்ட மணையில் அமர்த்தி,
அழகி பத்மாவதிக்குச் செய்தனர் அபிஷேகம்.

முழங்கின எங்கும் மங்கல வாத்தியங்கள்;
வழங்கினர் பரிசுகள் அங்கு வந்தவர்களுக்கு.

“சேஷாச்சலத்தில் இருந்து வந்துள்ள மாது
பேச விரும்புகிறார் அரசி தரணி தேவியிடம்”

வந்தவர், திருமணம் பேச வந்தவர் தான் என்று
அந்த மாதை அழைத்து வந்தனர் அரசியிடம்.

“சேஷாச்சலம் என் ஊர், வகுளமாலிகை என் பேர்;
பேச வேண்டும் அரசகுமாரியைப் பற்றி ” என்றார்.

“காத்திருக்கிறேன் உங்களிடம் பேசுவதற்கு – எதிர்
பார்த்திருந்தேன் உங்கள் இனிய வருகைக்கு!

குறத்தி வந்தாள் அரண்மனைக்கு நேற்று மாலை;
குறி சொன்னாள் சேஷாத்ரி வாசனைக் குறித்து.

உத்தியானவனத்தில் என் பெண்ணைக் கண்டானாம்;
பத்மாவதியிடம் மையல் கொண்டானாம்!” என்றாள்.

“குறத்தி சொல்லியது முற்றிலும் உண்மையே,
குமாரத்தியுடன் மணம் பேசவே வந்துள்ளேன்.

அனுப்பியவன் மகன் சேஷாச்சலம் ஸ்ரீனிவாசன்;
அனுமதி வேண்டும் இத் திருமணம் நடப்பதற்கு!”

பிள்ளையைப் பற்றிய விவரங்களைக் கேட்டு
கொள்ளை மகிழ்ச்சி கொண்டாள் தரணி தேவி.

அரண்மனையில் தங்க வைத்தாள் அந்த மாதை.
அரசனிடம் விரைந்தாள் செய்தி சொல்வதற்கு.

15b. திருமணப் பேச்சு

“உத்தமமானதே இந்த சம்பந்தம் என் ராணி!
பத்மாவதி யாரென்பதை மறந்து விடாதே நீ!

மஹாலக்ஷ்மியின் அம்சமே நம் பத்மாவதி;
மஹாவிஷ்ணுவை மனத்தால் வரித்தவள்.

சம்மதம் பெறுவோம் நமது குலகுருவிடம்;
சம்மதம் தருவோம் பின் அந்த மாதரசியிடம்.”

தொண்டைமானை அழைத்தான் ஆகாசராஜன்,
விண்டான் நடந்துள்ள நிகழ்ச்சிகளை எல்லாம்.

“கேட்போம் குலகுருவிடம் அவரது அபிப்ராயம்;
கேட்போம் நலம் விரும்பும் பிரதானிகளிடமும்.”

குலகுருவுக்குக் குதூகலம் கொப்பளித்தது!
“குமாரத்தியை மணம் செய் ஸ்ரீநிவாசனுக்கு!

வம்சம் அடைந்துவிடும் நற்கதியினை;
அம்சம் ஸ்ரீநிவாசன் மஹாவிஷ்ணுவின்.

வைகுந்தவாசனை அடைவதற்கு மருமகனாக,
வெகுபுண்ணியம் செய்தாய் முற்பிறவியில்!

நிலத்தில் கிடைத்தவள் நிலமகளே அல்லவா?
நிலமகள் மணாளன் அலைகடல் துயில்பவன்!”

பிரதானிகள் ஏற்றனர் இதனை மனமார.
பிரபுக்களும் ஏற்றனர் இதனை மனமார.

ஆடிப் பாடத் தொடங்கினாள் பத்மாவதி!
ஆனந்த வெள்ளத்தில் வகுள மாலிகை.

நிலவியது மகிழ்ச்சி அந்த அரண்மனையில்;
நிலவியது அமைதி பெற்றோரின் மனத்தில்.

பொன்னும், மணியும் அள்ளித் தந்தாள் அரசி.
“பின்னர் வரும் திருமணவோலை!” என்றாள்.

ஆசிகள் தந்தாள் பத்மாவதியை முத்தமிட்டு;
ஆவலுடன் காத்திருப்பான் ஸ்ரீநிவாசன் என;

அவசரமாகத் திரும்பினாள் வகுள மாலிகை;
அரசனும், அரசியும் வந்து வழியனுப்பினர்.

16. சுகரின் செய்தி

நாட்குறிப்புக்களைக் கொண்டு ஆராய்ந்து
நாளைத் தேர்வு செய்தனர் திருமணத்துக்கு.

மஞ்சள் தடவிய ஓலையில் எழுதினார்
மணப் பத்திரிக்கையை குலகுரு சுகர்.

வைத்தனர் திருமண ஓலையை பவ்யமாக
சந்தனப் பேழையில் அரசனும், அரசியும்.

மங்கல வாத்தியம் முழங்க ஓலையுடன்
அங்கிருந்து சென்றார் பல்லக்கில் சுகர்.

வகுள மாலிகையைக் கண்டவுடன் அவளை
வரவேற்றான் ஸ்ரீனிவாசன் ஆர்வத்தோடு வந்து.

“விருப்பம் நிறைவேறியது உன் மனம் போல.
திருமணத்துக்குக் கிடைத்து விட்டது சம்மதம்.

விவரித்தாள் முதல் நாள் நடந்த நிகழ்வுகளை.
அவளருகே அமர்ந்து ரசித்தான் ஸ்ரீனிவாசன்.

அகத்தியர் ஆசிரமத்தில் ஆலயம் சென்றது;
அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்டது;

அரசி தரணி தேவியை சந்தித்துப் பேசியது;
அரசனிடம்  பேசி அவன் அனுமதி பெற்றது;

பிரபுக்கள் மனம் மகிழ்ந்து சம்மதம் தந்தது ;
பிரதானிகள் மனம் மகிழ்ந்து சம்மதித்தது;

குறத்தி ஒருத்தி வந்து சொன்ன செய்திகள்;
குடி மக்களிடம் காணப்பட்ட மன மகிழ்ச்சி;

நகரத்தின் எல்லைவரை வந்து தன்னை
நட்புடன் வழியனுப்பிய அரசன், அரசியர்;

வகுள மாலிகையைப் பேசச் சொல்லி விட்டு
வெகு சுவாரசியமாகக் கேட்டான் ஸ்ரீனிவாசன்.

17a. பணம் தேவை!

பல்லக்குத் தூக்கிகளின் அரவம் கேட்டது;
பல்லக்கில் வருவது யாராக இருக்கும் ?

நெருங்கி அருகில் வந்து நின்றது பல்லக்கு;
இறங்கினார் சுகமுனிவர் பல்லக்கிலிருந்து.

மேனி சிலிர்க்கத் தொழுது வணங்கிய பின்,
ஸ்ரீனிவாசனிடம் சமர்ப்பித்தார் பேழையை.

“பத்மாவதியின் மணம் பற்றிப் பேச வேண்டும்.”
உத்தம முனிவரை வரவேற்றான் ஸ்ரீனிவாசன்.

பாத பூஜை செய்தான் முனிவருக்கு – பின்னர்
ஆதரவுடன் அழைத்துச் சென்றான் புற்றுக்கு.

மண நாள் பூரண சம்மதமே மணமகனுக்கு!
மன மகிழ்வோடு திரும்பினார் சுகர் மறுநாள்.

“பெரிய இடத்தில் நிச்சயித்துள்ளோம் பெண்ணை.
சரியான அந்தஸ்துடன் செல்ல வேண்டும் அங்கு!”

ஆதிசேஷனையும், பிரம்மனையும் நினைத்ததும்
ஆதிசேஷனும், பிரம்மனும் வந்து தோன்றினார்கள்.

“சித்திரை சுத்தத் திரயோதசியில் என் திருமணம்;
உத்தம மணப்பெண் இளவரசி பத்மாவதி தேவி.

முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள்
தப்பாமல் வரவேண்டும் என் திருமணம் காண.

துரிதமாகச் செயல் படவேண்டும் நீங்கள்,
விரைந்து மணநாள் நெருங்கி வருவதால்!”

“கூட்டம் சேர்ப்பது எங்கள் வேலை – ஆனால்
வாட்டம் அடைகிறோம் பணம் இல்லாததால்!

லக்ஷ்மி இல்லாத இடத்தைச் செல்வம் – அ
லட்சியம் செய்வது நாம் அறிந்தது தானே!”

17b. குபேரன்

“பெறுவோம் குபேரனிடமிருந்து கடனாக;
திருப்புவோம் அதை வட்டியும், முதலுமாக!”

அழைக்கப்பட்டான் குபேரன் சேஷாச்சலத்துக்கு;
அடைந்தான் குபேரன் உடனேயே சேஷாச்சலம்.

திருமணச் செலவுக்குக் கடன் கேட்டான் பிரமன்;
திருப்பித் தருவதாக வாக்களித்தான் பிரம்ம தேவன்.

ஒரு கோடியே பதினான்கு லக்ஷம் பொற்காசுகள்!
ஒரு வருடத்திய வட்டி ஒரு லக்ஷம் பொற்காசுகள்!

“தந்து விடுவோம் வட்டியை பிரதி வருடமும்!
தந்து விடுவோம் கடனைக் கலியுக முடிவில்!”

எழுதினான் பிரமன் கடன் பத்திரத்தை – கை
எழுத்திட்டான் ஸ்ரீனிவாசன் கடன் பத்திரத்தில்.

கையெழுத்திட்டான் பிரமன் ஒரு சாட்சியாக;
கையெழுத்திட்டன இரு மரங்கள் சாட்சிகளாக.

தொடங்கின ஏற்பாடுகள் கடன் கிடைத்தவுடனே.
மடங்கல்கள் சென்றன தேவர், முனிவர்களுக்கு.

தங்கும் ஏற்பாடுகள் செய்தனர் அதிதிகளுக்கு.
தருக்கள் குலுங்கின காய், கனிகள் நிறைந்து.

சிவன், உமை அடைந்தனர் சேஷாச்சலத்தை.
சிவ கணங்கள் தொடர்ந்தன நந்தி தேவனை.

அளித்தான் குபேரன் பட்டுப் பீதாம்பரங்களை;
அளித்தான் குபேரன் நவரத்ன ஆபரணங்களை.

ஸ்ரீனிவாச கல்யாணம் காண வந்து குழுமினர்;
இனிமையான சூழ்நிலை நிலவியது அங்கே.

17c. முதல் உரிமை

மணமகனைப் புனித நீராட்டுவதற்கு
முன் வந்தனர் முதல் உரிமை கோரி!

வகுள மாலிகை முதல் உரிமை கோர,
வெகு நயமாகக் கூறினார் ஸ்ரீனிவாசன்;

“லக்ஷ்மிக்கு முதலுரிமை மறவாதீர்!”
“லக்ஷ்மி வருவாளா திருமணத்துக்கு?”

“கரவீரபுரத்திலிருக்கும் லக்ஷ்மியை
வரவழைக்க ஒரு வழி கூறுகிறேன்.

உடல் நலமில்லை எனக்கு என்றால்,
உடன் ஓடி வருவாள் லக்ஷ்மிதேவி!”

கதிரவனை அனுப்பினர் கரவீரபுரத்துக்கு;
கதிரவன் செய்தி சொன்னான் லக்ஷ்மிக்கு.

“வைகுந்தம் விட்டு நீங்கள் வந்ததால்,
வையகம் வந்துள்ளார் ஸ்ரீனிவாசரும்.

உடல் நிலை பாதிக்கப் பட்டுள்ளது தேவி!
தடை சொல்லாமல் வரவேண்டும் தாயே!”

கரவீரபுரத்திலிருந்து லக்ஷ்மி புறப்பட்டதும்,
பிரமனும், சிவபிரானும் கைலாகு கொடுக்க;

நலிவுற்றவன் போல நடித்தான் ஸ்ரீனிவாசன்
பொலிவிழந்து உடல் நலம் குன்றியவனாக!

“ராமாவதாரத்தில் தந்த வரம் நினைவுள்ளதா?”
“ஆமாம் ஸ்வாமி! நினைவுள்ளது நன்கு எனக்கு!

வேதவதியை ஏற்றுக் கொள்ளச் சொன்னேன்;
வேளை வந்ததும் ஏற்றுக் கொள்வேன் என்றீர்!”

“வேளை வந்து விட்டது தேவி இப்போது!
வேதவதியே ஆவாள் இளவரசி பத்மாவதி!

சித்திரை சுத்தத் திரயோதசியில் திருமணம்;
உத்தேசித்தேன் உன்னை இங்கு வரவழைக்க.”

ஆனந்தம் அடைந்தாள் லக்ஷ்மி இது கேட்டு.
அனைவரும் சென்றனர் ஸ்ரீநிவாசன் புற்றுக்கு.

18a. புறப்பாடு

நாராயண புரத்துக்குச் செல்லும் துடிப்பு
நாட்காலையிலேயே துவங்கி விட்டது.

அலங்கரித்துக் கொண்டனர் அழகாக – பிறர்
அலங்கரித்துக் கொள்ள உதவிகள் செய்தனர்.

சரசர என்றன புத்தம் புதிய பட்டாடைகள்;
கலகல என்றது மகிழ்ச்சியின் வெளிப்பாடு.

புனித நீரால் ஸ்ரீநிவாசனுக்கு அபிஷேகத்தை
இனிதே தொடங்கி வைத்தாள் லக்ஷ்மி தேவி.

பட்டுப் பீதாம்பரம் அணிந்தான் ஸ்ரீநிவாசன்;
இட்டாள் லக்ஷ்மி அவன் நெற்றியில் திலகம்.

வைத்தாள் திருஷ்டிப் பொட்டை அன்னை – அணி
வித்தாள் ரத்தின ஆபரணங்களைப் பார்வதி தேவி.

அழகுக்கு அழகு கூட்டினர் தேவர்கள் ஒன்றுகூடி,
அணிவித்தனர் பல வண்ண மலர் மாலைகளை.

கொட்டிக் கிடந்தன உணவுப் பொருட்கள்;
அட்டில் பணியோ அக்னி தேவனுடையது!

பாத்திரங்கள் இல்லை சமையல் செய்வதற்கு!
தீர்த்தங்கள் மாறின சமையல் பாத்திரங்களாக!

முனிவர்கள் தேர்ந்தெடுத்தனர் சமதளத்தை;
இனிய கோலங்கள் வரைந்தனர் பெண்கள்.

சங்கல்பம் செய்தான் மணையில் அமர்ந்து;
சமீ விருக்ஷமே தன் குலதெய்வம் என்றான்.

சுவாமி புஷ்கரிணியில் ஸ்தாபித்தான் அந்தச்
சமீ விருக்ஷத்தின் ஒரு கிளையை உடைத்து.

பகலுணவைத் தயார் செய்துவிட்டான் அக்னி.
பரிமாறினான் நரசிம்மருக்கு நிவேதனம் செய்து.

பரிமளச் சந்தனம், தாம்பூலம், புஷ்பம் இதைப்
பரிவுடன் அளித்தனர் வந்திருந்த அதிதிகளுக்கு.

நாராயணபுரம் புறப்பட்டனர் உணவு உண்டபின்;
ஏராளமான வாஹனங்கள் காத்திருந்தன அங்கே.

ஆரோஹணித்தனர் ஸ்ரீனிவாசன் கருடன் மீதும் ,
பிரமன் அன்னத்தின் மீதும், சிவன் நந்தியின் மீதும் .

கரிகள், பரிகள், ரதங்களில் அமர்ந்து கொண்டு
உரிமையுடன் சென்றனர் நாராயணபுரத்துக்கு.

18b. சுகரின் உபசரிப்பு

சுகமாக அடைந்தனர் பத்ம தீர்த்தத்தை;
சுகமுனிவரின் ஆசிரமம் இருந்தது அங்கு.

பூரண கும்பத்துடன் காத்திருந்தார் முனிவர்,
பூரண மகிழ்ச்சியுடன் ஒரு சிறு இடைவேளை.

பாத பூஜை செய்தார்; வலம் வந்தார் சுகர்
பரம பக்தியுடன் மணமகன் ஸ்ரீனிவாசனை.

“மணக் கோலத்தில் உம்மைக் காண்பதற்கு
மாதவம் செய்திருப்பேன் முற் பிறவியில்.

இளைப்பாறி விட்டுச் செல்ல வேண்டும்;
களைப்பு மாறும் வரை இங்கு தங்கி விட்டு.

உபசரித்துப் பெற வேண்டும் ஆனந்தம்!
உபசார வார்த்தையல்ல உண்மையே!”

“இத்தனை பேர்களை உபசரிப்பதா எனச்
சிந்தனை செய்கின்றேன் நான் முனிவரே!”

“ஈரேழு உலகங்களும் ஒன்றாகி ஒளிந்து
இருப்பது உமக்குள் அல்லவா நாராயணா?

ஒரு கவளம் தாங்கள் உண்ட மாத்திரத்தில்
ஒரு புவனம் முழுவதும் திருப்தி அடையுமே!”

பர்ணசாலைக்குச் சென்றான் முனிவருடன்,
பாலும், பழமும் உண்டான் ஸ்ரீனிவாசன்.

திருப்தி அடைந்தார் சுகர் அவன் உண்பது கண்டு.
திருப்தி அடைந்தனர் அதிதிகள் உண்டது போல .

பிரயாணம் தொடங்கியது கலகலப்பாக,
நாராயணபுரத்தை நோக்கி மறுபடியும்.

19a. மணவிழா

எல்லையில்லா ஆனந்தம் அடைந்தனர் – நகர
எல்லையை மணமகன் குழுவினர் அடைந்ததும்.

எல்லையில்லா ஆனந்தம் அடைந்தனர் – அதைச்
சொல்லக் கேட்ட ஆகாச ராஜனும், தரணி தேவியும்.

‘எதிர் கொண்டழைக்க வேண்டும் நாமே சென்று
இதர பிரதானிகள் அமைச்சர்களுடன் இன்று!”

பட்டத்து யானை நின்றது தயாராக – ரத்தினப்
பட்டத்தை அணிந்திருந்தது பெரிய நெற்றியில்.

தந்த நுனிகளில் துலங்கின தங்கக் குமிழிகள்.
தந்தனர் யானையிடம் ரோஜாமலர் மாலையை.

ஆகாசராஜன், தரணி தேவி அமர்ந்தனர் – யானை
அம்பாரியில் மணப் பெண் பத்மாவதியுடன்.

இசைக் குழுவினர் நடந்தனர் யானை முன்னால்;
இளம் பெண்கள் தொடர்ந்தனர் யானை பின்னால்.

மலர்கள், சந்தனம், பன்னீர் இவை சொரிந்து
மலர்ந்த முகத்தோடு மணமகனை வரவேற்க;

ஒலித்தது மணமகன் குழுவின் ஆரவாரம்!
தலை நிமிரவில்லை மணமகள் நாணத்தால்!

பூரண கும்பத்துடன் வரவேற்றான் மன்னன்
நாரணன் கோஷ்டியைத் திருமணத்துக்கு.

ஒலித்தது வெற்றி கோஷம் “ஜெயா விஜயீ பவ!”
தெளித்தனர் நறுமண மலர்களை நாட்டு மக்கள்.

வலம் வந்தது பகவானைப் பட்டத்து யானை;
தலையால் வணங்கித் தந்தது ரோஜா மாலை.

வெகு நாணத்துடன் முன் வந்தாள் பத்மாவதி;
வகுள மாலிகையும் முன் வந்தாள் குழுவிலிருந்து.

“பத்மாவதியை ஏற்றுக் கொள்ளுங்கள்!” என்றதும்
“உத்தமியை நீ  ஏற்பாய்!” என்றாள் வகுளமாலிகை.

19b. மாலை மாற்று

கருடனிலிருந்து இறங்கினான் ஸ்ரீனிவாசன்
கறுத்த மேனியில் ரத்தின மாலைகள் புரள.

அணிவித்தாள் மலர்மாலையைப் பத்மாவதி.
அணிவித்தான் மலர்மாலையை ஸ்ரீனிவாசன்.

பத்மாவதியின் கரம் பற்றி ரதம் ஏறியதும்
கூத்தாடினார் ஆனந்தத்தில் அனைவரும்.

வைகுந்தமாக மாறி இருந்தது நாராயணபுரம்.
வெகு நேர்த்தியான வளைவுகள், பந்தல்கள் !

வண்ணக் கோலங்களுடன், பூரண கும்பங்கள்;
பெண்கள் எடுத்தனர் ஆரத்தி வழி நெடுகிலும்!

நின்றான் மலர்த் தட்டுடன் ஆகாச ராஜன்;
நின்றாள் தீர்த்தக் குடத்துடன் தரணி தேவி.

வசுதானா என்னும் பட்டத்து இளவரசன்
வாசனை வீசும் சந்தனத்துடன் நின்றான்.

ஆகாச ராஜன் செய்தான் பாத பூஜை – பின்
அழைத்துச் சென்றான் தன் அரண்மனைக்கு.

கூடாரம் அமைத்திருந்தனர் தங்குவதற்கு,
கூட வந்தவர்களுக்குத் தனித் தனியாக!

நகரம் ஜொலித்தது ஜகஜ் ஜோதியாக!
பகலா? இரவா? பேதம் தெரியவில்லை.

ஆகாரம் வந்தது தங்கியிருந்த இடத்துக்கு;
ஆகாச ராஜன் உயர்வாக உபசரித்தான்.

மற்றவர் உண்டனர் அரண்மனை முற்றத்தில்;
குற்றம் சொல்ல முடியாத இனிய உபசரிப்பு!

இரவில் நடந்தது அப்சரசுகளின் நாட்டியம்;
இதுவரை கண்டதில்லை மனிதர் எவருமே!

உறங்கவில்லை எவருமே அன்று இரவு;
உற்சாகமாகக் காத்திருந்தனர் விடியலுக்கு.

20a. திருமணம்

நீராடிப் புத்தாடை அணிந்தனர் விடியற்காலை;
நடக்க விருந்த திருமணத்தால் மிக உற்சாகம்.

கண்ணைப் பறிக்கும் ஜரிகைப் பீதாம்பரத்தைப்
பெண்ணைப் பெற்ற மன்னன் அனுப்பினான்.

ஆபரணங்களை அணிவித்தனர் லக்ஷ்மி, உமை!
ஆணழகன் ஸ்ரீனிவாசன் ஆனார் மணமகனாக!

வாசனைத் திரவிய நீரில் குளிக்க வைத்தபின்
வாரி ஜடை போட்டனர் பத்மாவதி தேவிக்கு.

வைத்திருந்த புஷ்பங்களின் பாரத்தினால்
வைத்திருந்தாள் தன் தலையைத் தாழ்த்தி!

தான் தன் மணநாளன்று அணிந்தவற்றை
தன் மகளுக்கு அணிவித்தாள் தரணி தேவி.

நெருங்கி விட்டது சுப முஹூர்த்த வேளை;
நெருங்கினர் மணமண்டபத்தை அனைவரும்.

இந்திரன் வெண்கொற்றக் குடை தாங்க,
அந்த நிழலில் நடந்தான் ஸ்ரீனிவாசன்.

அளித்தான் தொண்டைமான் மலர்மாலை;
அணிவித்தாள் ஸ்ரீநிவாசனுக்குப் பத்மாவதி.

ஊஞ்சல் பாடினர் வாணியும், லக்ஷ்மியும்;
ஊஞ்சல் ஆடினர் ஒய்யாரமாக மணமக்கள்.

திருஷ்டி கழித்தபின் சென்றனர் மண்டபம்,
திருஷ்டி படும் மணமக்களைக் கண்டால்!

வைதீகக் காரியங்கள் செய்தார் வசிஷ்டர்;
வேத கோஷம் முழங்க மாங்கல்ய தாரணம்!

அன்னையர் இருவரும் தழுவி மகிழ்ந்தனர்;
ஆனந்த வெள்ளத்தில் மன்னன் ஆகாச ராஜன்!

வரிசைகள் வந்து சேர்ந்தன கூடாரத்துக்கு;
பரிசுகள் வழங்கினர் வந்த விருந்தினர்களுக்கு.

20b. பிரியாவிடை

நடந்தது திருமணம் நான்கு நாட்களுக்கு;
முடிந்ததும் திரும்பவேண்டும் தத்தம் இல்லம்.

விடை பெற்றனர் மணமக்கள் எல்லோரிடமும்;
மடை திறந்து பாய்ந்தது அரசியின் கண்ணீர்.

வகுள மாலிகை தேற்றினாள் தரணி தேவியை,
“வெகு தூரம் செல்லப் போவதில்லையே!” என்று.

“எப்படியும் கணவன் வீடு செல்ல வேண்டியவள்!
எப்போது வேண்டுமானாலும் காண முடியுமே!”

கணவன் வீட்டில் நடந்துகொள்ள வேண்டிய
கண்ணியத்தை எடுத்துரைத்தாள் அன்னை.

ஆகாச ராஜன் தன் மனம் திறந்து பேசினான்
பூலோக நாதன் மருமகன் ஸ்ரீனிவாசனிடம்.

“செல்லமாக வளர்ந்து விட்டாள் பத்மாவதி!
சொல்ல முடியாது பொறுப்பு உள்ளதாக.

தெரியாமல் அவள் தவறு செய்துவிட்டால்
பெரிய மனதுடன் அவளை மன்னிக்க வேண்டும் .

அம்மையாரிடம் நான் சொன்னதும் இதுவே;
தம்பதிகள் இனிதே வாழவேண்டும்!” என்றான்

வரிசைகள் வந்து இறங்கின வரிசையாக.
“வரம் தருவேன் கேளுங்கள்” என்றான்.

“ஒன்று தான் வரம் வேண்டும் எமக்கு;
என்றுமே உம்மை மறவாது இருப்பது!”

“மறக்கவே மாட்டீர்கள் என்னை எவருமே!
சிறப்பாகக் குடி இருப்பேன் உம் சிந்தையில்!”

சேஷாசலம் சென்றனர் மணமகன் குழுவினர்;
ஆகாச ராஜனும், தரணியும் உடன் சென்றனர்.

21a. பிரியா விடை

ஆகாசராஜன், தரணி தேவி திரும்பிப்
போகாமல் உடன் சென்றனர் வெகுதூரம்.

ஸ்ரீநிவாசன் சொன்னான் பத்மாவதியிடம்,
“இனிமையாகப் பேசித் திருப்பி அனுப்பி விடு!”

தேற்றினாள் பத்மாவதி தாய் தந்தையரை,
“ஏற்க வேண்டும் தவிர்க்க இயலாத பிரிவை!”

சேஷாச்சலம் செல்லவில்லை ஸ்ரீனிவாசன்;
சென்றனர் அகத்தியரின் ஆசிரமத்துக்கு.

சுவர்ணமுகி நதித் தீரத்தை அடைந்தனர்;
பர்ணசாலை அமைத்தனர் மணமக்களுக்கு.

இந்திராதி தேவர்கள் திரும்பிச் சென்றனர்;
தந்தார் பிரமன் பொன்னும் மணியும் பரிசாக!

கரவீர புரம் திரும்பினாள் லக்ஷ்மி தேவி;
தர விரும்பினாள் தடையில்லாத ஆனந்தம்.

ஆடிப் பாடிக்காலம் கழித்தனர் மணமக்கள்;
ஓடை நீரில்  விளையாடினர் மணமக்கள்.

மலருடன் சென்று ஆராதித்தாள் வராஹரை
மறவாமல் அனுதினம் தாய் வகுளமாலிகை.

மலர் சூட்டி அலங்கரித்தனர் பத்மாவதியை
மாலை வேளைகளில் முனிவர் மனைவிகள்.

குதிரை வீரன் விரைந்து வந்தான் ஒருநாள்;
அதிர வைக்கும் செய்தி ஒன்று சொன்னான்.

“அரசன் உடல்நிலை மோசம் அடைந்துள்ளது
அரசியார் அனுப்பினார் செய்தி தெரிவிக்க.”

ரதம் தயாரானது பயணத்துக்கு – இருவரும்
விரைந்தனர் உடன் நாராயண புரத்துக்கு.

22. விண்ணுலக வாழ்வு

சயனித்து இருந்தான் ஆகாசராஜன் மஞ்சத்தில்;
சோகமே வடிவாக தரணி தேவி அருகினில்!

இளவரசனும், இளவல் தொண்டைமானும்
இருந்தனர் கால் மாட்டில் அமர்ந்தபடி.

மகளைக் கண்டதும் மகிழ்ச்சி அடைந்தான்;
மருமகனைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்தான்.

ஒப்படைத்தான் இளவரசனை ஸ்ரீநிவாசனிடம்;
ஒப்புக் கொள்ளச் செய்தான் அரசன் தன் அரசி

தரணியின் உடன்கட்டை ஏறும் முடிவினை.
தரணி வாழ்வினைத் துறந்தான் அந்த மன்னன்.

சுகர் செய்வித்தார் இறுதிச் சடங்குகள்
சிதை மூட்டினான் இளவரசன் வசுதானன்.

சர்வாலங்கார பூஷிதையாக தரணி தேவி
சுற்றி வந்தாள் எரியும் சிதையை மும்முறை.

தீயினில் புகுந்து விட்டாள் ஒரு நொடியில்!
தீ எரிந்தது கொழுந்து விட்டு வானளவாக!

வந்து இறங்கியது விண்ணிலிருந்து விமானம்;
வந்தனர் வெளியே திவ்ய சரீரத்துடன் இருவரும்.

ஆகாசராஜனும், தரணி தேவியும் அமர்ந்ததும்
வேகமாக விண்ணில் பறந்து மறைந்தது அது!

23a. சிங்காதனம்

வசுதானனுக்கு முடிசூட்டினான் ஸ்ரீநிவாசன்;
வசுதானனுக்கு உதவிடத் தொண்டைமான்!

திரும்பினர் அகத்தியரின் ஆசிரமத்துக்கு;
திரும்பியது இயல்பு நிலை மனதில் மெல்ல.

தொண்டைமான் எதிர்த்தான் புதிய அரசனை!
“பண்டைக் காலத்தின்  இளவரசன் நானே!” என்று.

“தந்தைக்குப் பின் தனயன் ஆளவேண்டும்!” என்ற
தன் கட்சியை எடுத்து உரைத்தான் வசுதானன்.

பூசல் தொடங்கியது மிகச் சிறிய அளவில்;
பூசல் பெருகி விட்டது வெகு விரைவில்.

பிரதானிகளின் துணையோடு தொண்டைமான்
அரசன் வசுதானனைஅழிக்க விரும்பினான்.

உதவி கோரினான் தொண்டைமான் ஸ்ரீநிவாசனிடம்;
மதி இழந்தவனிடம் பேசி  என்ன பயன் விளையும்?

அளித்தான் அவனுக்குத் தன் சங்குச் சக்கரங்களை!
களித்தான் தொண்டைமான் தான் வென்றது போல.

செய்தி அறிந்ததும் பதறி ஓடி வந்தான் அங்கு
செய்வது அறியாத வசுதானன் ஸ்ரீநிவாசனிடம்.

“என்னைக் கொல்ல எண்ணும் சித்தப்பாவுக்கு
எந்தை போன்ற உங்கள் உதவி தேவையா?

பாசமே இல்லையா பத்மாவதி அக்கா! நான்
மோசம் போவதில் உனக்குச் சம்மதமா?”

தேற்றினான் ஸ்ரீநிவாசன் மைத்துனனை,
“தோற்றுப் போவான்; கவலைப் படாதே!

ஆயுதங்கள் உள்ளன அவனிடம் ஆனால்
ஆதரித்துப் போரிடுவேன் உன் பக்கம் நான்.

சமரசம் பேசு முதலில். சண்டையைத் தவிர்!”
சமரசத்துக்கு ஒப்பவில்லை தொண்டைமான்!

23b. சண்டை

அமைதியை விரும்பியது ஸ்ரீனிவாசன் மட்டுமே!
ஆகாயக் கோட்டை காட்டினான் தொண்டைமான்!

நாரணனின் சங்கும், சக்கரமும் கிடைத்ததும்
நாராயாணபுர சிங்காதனம் கிடைத்தது போல!

சமரசத்துக்குத் தயாராக இல்லை அவன்;
சமருக்குத் தயார் ஆனான் படை திரட்டி.

சிற்றப்பன் போருக்குத் தயார் ஆனதால்,
சிறப்பாகத் தயார் ஆனான் வசுதானனும்.

செய்தி அனுப்பினான் ஸ்ரீநிவாசனுக்கு;
செய்தி வந்ததும் சென்றான் களத்துக்கு.

“உயிர் சேதம் சம்மதமா?” என்றாள் பத்மாவதி
“உயிர் சேதம் தவிர்க்கவே செல்கிறேன் நான்!”

நிலமை தலைகீழாக இருந்தது அங்கு!
நிகழவில்லை சமரசம் நினைத்தபடி!

சொன்னபடித் தலைமை தாங்கினான்
மன்னன் வசுதானன் படைக்கு ஸ்ரீநிவாசன்

யுத்தத்தில் உயிர் சேதத்தைத் தவிர்க்க
யுக்தி ஒன்று செய்தான் யுத்தகளத்தில்.

தொண்டைமான் முன் ஸ்ரீநிவாசன் செல்லத்
தொண்டைமான் எய்தான் மார்பில் ஓர் அம்பு

மயங்கிச் சாய்ந்து விட்டான் ரதத்திலேயே!
தயங்கிச் சண்டையை நிறுத்தினான் எதிரி!

ஆசிரமத்தை எட்டியது போர்ச் செய்தி
“பேசி நிறுத்துவேன் போரை!” என்று கூறி

முனிவருடன் கிளம்பினாள் பத்மாவதி
தனி ஒருவளாகப் போரை நிறுத்துவதற்கு.

23c. சமரசம்

“அடிபட்டு மயங்கி விட்டான் ஸ்ரீநிவாசன்!”
துடித்து விட்டாள் பத்மாவதி செய்தி கேட்டு.

கதறி அழுதபடி ஓடி வந்தாள் அவனிடம்,
பதறிய அவன் கேட்டான், “ஏன் வந்தாய்?”

“சமரசம் பேச வந்தார் தேவியார் – தாங்கள்
சமரில் அடிபட்டது கேட்டு துடித்து விட்டார்.”

அகத்தியர் இடைமறித்துக் கூறினார் – ஆனால்
“அதற்கு இடமே இல்லை!” என்றான் அவன்.

“இருவரையும் வரவழையுங்கள் என்னிடம்;
இருவருக்கும் செய்கிறேன் நான் சமரசம்”

அகத்தியர் அழைத்து வந்தார் இருவரையும்;
அகத்தீ கண்களில் வெளிவந்தது பத்மாவதிக்கு!

“அழிவதென முடிவு செய்து விட்டீர்களா?
பழி பாவத்துக்கும் அஞ்சுவது இல்லையா?”

“இளவரசுப் பட்டம் காட்டினார் என் அண்ணா!
இது உனக்கு நினைவு இல்லையா பெண்ணே ?”

“அரசனாக்கினார் என்னை ஸ்ரீநிவாசனே!
தர வேண்டாமா நாம் அதற்கு மதிப்பு ?”

“சமரஸத்துக்கு ஏற்பாடு செய்வார் இவர்;
சம்மதமா இருவருக்கும் கூறுங்கள்!” என

“தந்தைக்குப் பின் அவர் இடத்தில் நாங்கள்
எந்தையாகக் கருதுவது இவரைத் தானே!”

“நாட்டை இரு சம பாகங்கள் ஆக்குவோம்
நாட்டை ஆள வேண்டும் இருவரும் நட்புடன்!’

இருவரும் ஏற்றனர் இந்த முடிவினை;
இரண்டாக்கப் பட்டது அந்த ராஜ்ஜியம்.

தொண்டை நாடு தொண்டைமானுக்கு!
சோழ நாடு கிடைத்தது வசுதானனுக்கு!

நிலைமையைச் சீர் செய்து திரும்பினர்
நிம்மதியாக அகத்தியருடன் அவர்கள்.

24a. ஆலயம்

தொண்டைமான் காண வந்தான் ஸ்ரீநிவாசனை;
கொண்டு வந்தான் ஏராளமான பரிசுகளை.

” ஒன்றும் குறை இல்லை இந்த ஆசிரமத்தில்;
என்ன செய்வேன் பரிசுகளை வைத்துக் கொண்டு?”

“எண்ணியிருந்தேன் அண்ணன் மருமகன் என்று!
உண்மை ஸ்வரூபத்தை உணர்ந்தேன் இன்று!”

“அன்னிய இடத்தில் எத்தனை காலம்?
பொன்னும் மணியும் தர வேண்டாம்

தங்குமிடம் ஒன்று அமைத்துத் தரலாமே;
எங்களுக்கு அது தனியிடம் என்று ஆகுமே!”

“எங்கே எப்படி அமைக்க வேண்டும்;
தாங்கள் கோடி காட்டினாலே போதும்!”

மாலையில் சென்றனர் மீண்டும் புற்றுக்கு.
“ஆலயம் நிர்மாணிப்பாய் இந்த இடத்தில்!

புற்று உள்ள இடத்தில் வேண்டும் கர்ப்பக்கிரகம்
சுற்றிலும் எழுப்ப வேண்டும் மதில் சுவர்களை.

வைகுந்த வாசல் வேண்டும் இடையில்;
இரண்டாம் பிராகாரத்தில் வேண்டியவை

மடைப் பள்ளியும், கல்யாண மண்டபமும்,
மணக்கும் திரவியசாலையும், பள்ளி அறையும்.

இருக்க வேண்டும் மூன்றாவது பிராகாரத்தில்
உக்கிராண அறைகள், ஆஸ்தான மண்டபங்கள்.

வேண்டும் அழகிய ஏழு வாயில்கள்;
வேண்டும் அழகிய இரு கோபுரங்கள்;

வேண்டும் ஒரு கோபுரம் நுழை வாயிலில்;
வேண்டும் ஒரு கோபுரம் பிராகார வாயிலில்;

வேண்டும் பலி பீடமும், துவஜ ஸ்தம்பமும்!”
தொண்டைமான் நினைவில் கொண்டான்.

24b. ரங்கதாஸன்

தோட்டத்தில் இருந்தது ஒரு கிணறு,
“தோண்டியவன் நீயே முற்பிறப்பில்!”

வைகாநஸன் ஒரு முனிவர் சோழநாட்டில்;
வைத்தார் தணியாத ஆசையை மனத்தில்.

வைகுந்தனைக் கிருஷ்ணணாகக் காணக்
கைக்கொண்டார் கடுமையான தவநெறி.

தவம் செய்தார் கனி, கிழங்குகள் உண்டு!
தவம் செய்தார் தழை, சருகுகள் உண்டு!

தவம் செய்தார் உணவே உண்ணாமல்;
தவம் செய்தார் காற்றை சுவாசித்து!

கண் எதிரே தோன்றினான் வைகுந்தன்
“கண்ணனாகக் காட்சி தர வேண்டும்” என,

“ஸ்ரீநிவாசனை ஆராதித்து வந்தால்
இனிதே நிறைவேறும் உம் விருப்பம்!”

கால் நடையாகச் சென்றார் சேஷாசலம்;
கண்டார் வழியில் பக்தன் ரங்கதாஸனை.

உடன் நடந்தான் முனிவருடன் அவன்;
“கேட்டான் எதற்கு சேஷாசலத்துக்கு?”

“கிருஷ்ணாவதாரத்தில் செய்தான் லீலைகள்;
கிருஷ்ணனைக் காணக் கடும் தவம் செய்தேன்.

சேஷாசலம் ஸ்ரீநிவாசனை ஆராதித்தால்
பேஷாக நிறைவேறுமாம் என் கோரிக்கை”

முனிவருடன்  நடப்பது நல்லதாகி விட்டது!
இனிக்கும் கண்ணனைத் தரிசிக்கலாமே!

“அனாதை என்னைப் பணியாளாக எற்பீர்.
அநேக சேவைகள் செய்து உதவுவேன்!”

சேஷாசலத்தைச் அடைத்தனர் இருவரும்
வாசஸ்தலம் ஸ்வாமி பூஷ்கரிணீ அருகே.

தினமும் ஆராதித்தனர் பகவானை – ரங்கன்
முனிவருக்குப் பணிவிடைகள் செய்தான்.

வனத்துக்குச் சென்று மலர் கொய்தவன்
நந்தவனம் ஒன்று அமைக்க விரும்பினான்.

முனிவரிடம் விண்ணப்பித்தான் ரங்கன்;
கனிவுடன் பாராட்டி முனிவரும் உதவினார்.

உருவானது அழகிய நந்தவனம் அங்கே!
இருவாக்ஷி, சம்பங்கி, ஜாதி, முல்லை

மல்லிகை, அலரி, மந்தாரை என்று
மலர்கள் பூத்துக் குலுங்கின விரைவில்.

நறுமணம் நிறைத்தது நாற்றிசைகளை;
நிறங்கள் மயக்கின காண்பவர் கண்களை!

விடியலில் நீராடி மலர் கொய்து வருவான்;
செடிகளுக்கு நீரூற்ற வெட்டுவித்தான் கிணறு.

மலர் பறிக்கச் சென்ற ரங்கதாசன் ஒருநாள்,
மனத்தை மயக்கும் காட்சியைக் கண்டான்!

திவ்விய தேஜசுடன் சென்றான் கந்தர்வன்,
திவ்விய அழகு வாய்ந்த தன் மனைவியுடன்.

ஆகாய மார்க்கமாகச் சென்றவர் கண்டனர்
ஆதி வராஹமூர்த்தி ஆலயத்தை அங்கே.

ஸ்வாமி பூஷ்கரிணீயில் புனித நீராடி
ஸ்வாமி தரிசனம் செய்ய விரும்பினர்.

கந்தர்வனும், மனைவியும் நீராடுவது கண்டு
வந்த வேலையை மறந்து போனான் ரங்கன்.

சௌந்தரியத்தில் மனம் பறி போனதால்
செல்லவில்லை மலர் கொய்து ஆசிரமம்.

கரையேறி, ஆலயத்தில் தொழுது, கண்ணுக்கு
மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தான்!

24d. தவறும் தண்டனையும்

வானில் பறந்து மறைந்தனர் கந்தருவர்;
வந்தது சுய நினைவு ரங்கதாஸனுக்கு.

‘மலர் கொய்ய வந்தவன் அதைச் செய்யாமல்
மனதை அலைய விட்டு விட்டேனே அந்தோ!

கெடுத்தேனே பூஜையை அநாவசியமாக;
காக்க வைத்தேனே முனிவரை இதுவரை!

உல்லாசமாக வேடிக்கை பார்த்து நின்று
உபாஸனையில் தடங்கல் செய்தேனே!’

பதறியது உடல் செய்த தவற்றை எண்ணி;
பறித்துக் கொண்டு ஓடினான் மலர்களை!

உக்கிர மூர்த்தியாக மாறி இருந்தார் முனிவர்;
சிக்கெனக் காலைப் பற்றிக் கொண்டான் ரங்கன்.

“பாதகம் செய்துவிட்டேன் மன்னியுங்கள்!”
“தாமதம் ஏன் எனச் சொல்லு நீ முதலில்!”

“மாயைக்கு அடிமை ஆகிவிட்டேன் நான்!
மனதைத் தறிகெட்டு அலைய விட்டேன்!”

ஸ்ரீநிவாசன் தோன்றினார் அவர்கள் முன்பு;
சேவித்தான் ரங்கதாசன் விழுந்து விழுந்து.

“தவறு செய்தவன் தண்டனை அடைவான்;
தவறு தான் என் பூஜையைத் தாமதம் செய்தது!

சுதன்மனின் இளைய மகனாகப் பிறந்து பல
சோதனைகளை அனுபவி அடுத்த பிறவியில்!”

“பாதங்களை அடைய விரும்பியவனுக்குச்
சோதனைகளை அனுபவிக்கும் சாபமா?”என

“செய்த தவம் வீண் போகாது ஒரு நாளும்;
செய்தாய் தாமதம் பகவத் பூஜையில் – அது

செய்யும் சற்றுத் தாமதம் விரத பூர்த்தியில்;
எய்துவாய் எண்ணிய பேற்றைத் தாமதமாக!

மன்னன் மகனாகப் பிறந்து ஆள்வாய்
தொண்டை நாட்டை உன் குடைக் கீழ்.

அழைத்து வருவேன் நானே உன்னை இங்கு;
ஆலயம் எழுப்பச் செய்வேன் இதே இடத்தில்!”

25a. ஆனந்த நிலயம்

“ரங்க தாஸனாக இருந்தவனும் நீயே!
இங்கு கிணறு வெட்டுவித்தவனும் நீயே!

சாபம் காரணமாக நின்றுவிட்ட பணியைத்
தாபம் தீரத் தொடருவாய் இந்தப் பிறவியில்!”

தொண்டைமான் தொடங்கினான் ஆலயப் பணியை;
கொண்டு வந்து குவித்தான் கற்களைப் பாறைகளை!

வண்டி வண்டியாக வந்தன மரங்கள்,
சுண்ணம்பு, பிற தேவையான பொருட்கள்.

பாறைகளைச் செதுக்கினார் சிற்பிகள் தொடர்ந்து;
யாரும் ஊர் திரும்பவில்லை பணி முடியும் வரை!

சிற்பிகள் உழைத்தனர் உற்சாகத்துடன்
புற்று இருந்த இடத்தில் கர்ப்ப கிரகம்!

வைகுந்த வாசல் அமைந்தது அதன் வாயிலில்
எழுந்தது முதல் பிராகாரத்தைச் சுற்றி மதில்!

பள்ளியறை, மடைப்பள்ளி, திரவிய சாலை;
கல்யாண மண்டபம், உக்கிராண அறைகள்.

பலிபீடம், துவஜஸ்தம்பம், கோரியாவாறு;
ஆஸ்தான மண்டபங்கள், கோரியாவாறு;

உயர்ந்த கோபுரம் விளங்கியது வாயிலில்;
உச்சி வரையில் உயர்ந்த வேலைப்பாடுகள்.

கண் கவர் தூண்கள்; பாறைகளால் தளம்;
கண் கவர் விமானம் கர்ப்பகிரகத்தின் மேல்.

சந்தித்துக் கூறினான் ஸ்ரீநிவாசனிடம் சென்று,
“சந்தோஷத்துடன் ஏற்று அருள வேண்டும்!”

25b. சிலாரூபம்

நெருங்கியது சுபதினம் ஆலயம் புகுவதற்கு;
ததும்பியது குதூகலம் அகத்தியர் ஆசிரமத்தில்.

வந்து குவிந்தனர் இந்திராதி தேவர்கள் அங்கே;
சொந்தமாக ஏற்பாடுகளைக் கவனித்தார் பிரமன்.

வந்து சேர்ந்தனர் வசுதானனும், தொண்டைமானும்;
வந்து சேர்ந்தனர் அனைவரும் ஆனந்த நிலயம்.

ரதத்தில் வந்தனர் ஸ்ரீநிவாசனும் பத்மாவதியும்;
ரதத்தை ஓட்டினார் சுயமாக பிரம்மதேவன்.

கண்ணைப் பறித்தன வண்ணக் கோலங்கள்
மண்ணைத் தெளித்திருந்தனர் பன்னீரால்.

தோரணங்கள் தொங்கின பார்த்த இடம் எல்லாம்!
பூரணத் திருப்தி ஸ்ரீநிவாசன் உள்ளத்தில் நிலவ;

ஆனந்தம் பொங்கியது பத்மாவதி மனதில்!
ஆனந்த நிலயம் ஆனது விமானத்தின் பெயர்.

ஹோமகுண்டத்தை வளர்த்தான் பிரமன்;
வேத காரியங்களை முடித்தான் பிரமன்.

விமானத்தின் கீழ் நின்றான் ஸ்ரீநிவாசன்-
விரும்பி அமர்த்தினான் தேவியை மார்பில்!

வலது கரம் காட்டியது ஒரு திருவடியை;
இடது கரம் மடங்கியது முழங்கால் அருகில்!

“ஆகும் பாதம் வைகுந்தமாக பக்தருக்கு.
ஆகும் சம்சாரம் முழங்கால் அளவு நீராக!”

பிரமன் பணிந்து வணங்கி வேண்டினான்,
“பிரபு தங்க வேண்டும் இங்கு கலியுகத்தில்!”

“பூலோக வைகுந்தம் ஆகவேண்டும் இது – நான்
சிலா ரூபத்தில் இருப்பேன் ஆனந்த நிலயத்தில்!”

தூண்டா விளக்குகளை ஏற்றினான் பிரமன்!
ஆண்டாண்டு காலமாகப் பிரகாசிக்கின்றன.

சுபதினம் ஆனது முதல் பிரம்மோத்சவமாக;
சிலா உருவெடுத்து நிற்கின்றான் ஸ்ரீநிவாசன்!

25c. பிரம்மோத்ஸவம்

பிரமன் தெரிவித்தான் தொண்டைமானுக்கு
பிரம்மோத்ஸவத்துக்கான பல விவரங்களை.

பொன்னும், மணியும் வாரித் தந்தான் – அவன்
முன் வந்தான் உற்சாகமாக உற்சவம் நடத்த.

செய்தி பரவியது நான்கு திசைகளிலும்;
எய்தினர் உவகை செய்தியைக் கேட்டவர்.

குவிந்தனர் ஜனங்கள்; உருவாகின வீதிகள்;
குழுமினர் தேவர்கள்; உருவாகின கூடாரங்கள்!

காணக் கிடைக்காத காட்சிகள் கிடைத்தன.
காணிக்கை அளித்தனர் தம் சக்திக்கு ஏற்ப.

திருவிழா நடந்தது வெகு கோலாகலமாக.
திரும்பினர் தம் இருப்பிடம் குதூகலமாக.

தொண்டைமானுக்குப் பிரிய மனம் இல்லை.
“தொண்டை நாட்டை மறந்து விடாதே நீ!

தொண்டு புரியவேண்டும் உன் மக்களுக்கு.
மீண்டும் வருவாய் மோக்ஷம் அடைவதற்கு.

தொண்டை நாட்டை ஆட்சிசெய் அதுவரையில்!”
தொண்டைநாடு திரும்பினான் தொண்டைமான்.

26a. கிருஷ்ண சர்மா

கூர்மன் விரும்பினான் கங்கையில் நீராட.
ஆர்வம் மட்டும் இருந்தால் போதுமா?

நிறைவேறவில்லை ஒருநாளும் கோரிக்கை;
நீத்து விட்டான் உலக வாழ்வையே ஒருநாள்.

கிருஷ்ண சர்மா கூர்மனின் மகன் ஆவான்;
விரும்பினான் தந்தையின் கனவை நனவாக்க.

‘இறந்தார் தந்தை ஆசை நிறைவேறாமல்!
கரைக்க வேண்டும் அஸ்தியை கங்கையில்.’

குடும்பத்தோடு புறப்பட்டான் காசி நகருக்கு.
தடங்கல் மேல் தடங்கல்கள் வந்து சேர்ந்தன.

அடைந்திருந்தான் அப்போது தொண்டை நாட்டை.
அதிசயித்தான் தொண்டைமான் புகழைக் கேட்டு.

தோன்றியது ஒரு எண்ணம் அவன் மனத்தில்.
மூன்று மாதக் குழந்தையை, மனைவியை,

மன்னன் பாதுகாப்பில் விட்டுச் சென்றால்
முன்னேற முடியும் தனியாளாக, வேகமாக.

தொண்டைமானைச் சந்தித்தான் கிருஷ்ண சர்மா.
ஒண்ட ஓரிடம் தந்து பாதுகாக்க வேண்டினான்.

“காசி செல்ல ஆசைப்பட்டார் என் தந்தையார்.
தாசில் பண்ண ஆசை இருந்தால் மட்டும் போதுமா?

கைக் குழந்தையை, மனைவியைப் பாதுகாத்து
கை கொடுத்து உதவிட யாருமில்லை அரசே!

இளம் குழந்தையை, இளைய மனைவியைத்
தளிர் போலப் பாதுகாப்பீரா நான் வரும் வரை?”

தொண்டைமான் அளித்தான் சம்மதம் – உடனே
தொண்டைமானிடம் விடுத்தான் குடும்பத்தை.

மனப் பளு அகன்றவனாக விரைந்தான்
மகனின் கடமையைச் செய்யக் காசிநகர்.

26b. பட்டினிச் சாவு!

தொண்டைமான் சுயமாக கவனித்தான்
தன்னிடம் ஒப்படைக்கப் பட்டவர்களை.

ஏற்பாடு செய்தான் தனி வீடு ஒன்றை;
ஏற்படுத்தினான் சகல வசதிகளையும்.

பொருட்களைக் கொண்டு குவித்தான் – பிறர்
நெருங்க வண்ணம் பூட்டினான் கதவுகளை.

அடிக்கடி விசாரித்தான் முதலில் சில நாட்கள்;
அடியோடு மறந்து விட்டான் அதன் பின்னர்.

அரசனே கவனித்து வந்ததால் வேறு எவரும்
அக்கறை எடுக்கவில்லை மறந்தே விட்டனர்!

குந்தித் தின்றால் குன்றும் மாளும் அன்றோ?
முந்தி சேமித்த உணவுப் பொருட்கள் தீர்ந்தன!

பூட்டி இருந்ததால் செல்ல முடியவில்லை வெளியே!
மாட்டிக் கொண்டனர் பொறியில் இரு எலிகள் போல.

பட்டினி கிடந்தனர் தாயும் சேயும் பல நாட்கள்!
விட்டனர் தம் இன்னுயிரை ஒருவர் பின் ஒருவராக.

காசியிலிருந்து திரும்பினான் கிருஷ்ண சர்மா;
காசித் தீர்த்தம் அளித்தான் தொண்டைமானுக்கு.

“யாத்திரை இனிதே முடிந்தது உங்கள் தயவால்!
பத்திரமாக உள்ளனரா என் மனைவியும், மகனும் ?

திடுக்கிட்டான் தொண்டைமான் இது கேட்டு
நடுக்கம் எடுத்தது அவர்களை நினைத்ததும்!

“சிரம பரிஹாரம் செய்யுங்கள் – அவர்களைச்
சிறிது நேரத்தில் வரவழைக்கிறேன் இங்கு.”

மகனிடம் தந்தான் அந்த வீட்டுச் சாவியை.
ரகசியமாகப் பார்த்து விட்டு வரச் சொன்னான்.

26c. சரணாகதி

ஆடிப் போய்விட்டான் தொண்டைமான் மகன்
ஆவி பிரிந்த உடல்களை அங்கு கண்டவுடன்.

ஓடினான் தந்தையிடம் மிகுந்த துயருடன்,
“தேடி வந்தது நம்மை பிரம்மஹத்தி தோஷம்.

இறந்து விட்டனர் இருவரும் பட்டினியால்
மறந்தே போய் விட்டோம் நாம் அவர்களை.

களங்கம் ஏற்பட்டுவிட்டதே நல்ல பெயருக்கு!
விளங்குமா இதைச் சொன்னால் யாருக்காவது?”

மீண்டும் வந்தான் கிருஷ்ண சர்மா – “நான் காண
வேண்டும் என் மனைவியை, மகனை!”என்றான்.

“ஆலயம் சென்றுள்ளனர் இந்த அந்தப்புர மகளிர்.
அவர்களுடன் சென்றுள்ளனர் இவர்கள் இருவரும்!

இரண்டு நாட்களில் திரும்ப வந்துவிடுவார்கள்.
இருங்கள் நீங்கள் அரண்மனையில் அதுவரை.”

கிருஷ்ண சர்மா நிம்மதியாகச் சென்றுவிட்டான்;
கிருஷ்ண சர்மாவுக்கு உண்மை தெரிந்துவிட்டால்?

‘ஸ்ரீனிவாசனே என்னைக் காக்க முடியும் இப்போது!’
ஸ்ரீனிவாசனை விரைந்து சென்று சரணடைந்தான்.

பாதங்களைப் பற்றிக் கொண்டு கண்ணீர் விட்டான்.
” பாதி இரவில் வந்து கண்ணீர் விடுவது ஏன்?” என

“வாக்குத் தந்தால் விடுவேன் பாதங்களை அன்றிச்
சாக்குச் சொன்னால் விடுவேன் என் உயிரையே!”

“உனக்கு வந்த இடர் என்னுடையது அல்லவா?
என்னிடம் கூறுவாய் நடந்தது என்னவென்று!”

ஆதியோடு அந்தமாக உரைத்தான் அனைத்தையும்;
“பாதிப்பு அடைந்தவனுக்கு என்ன பதில் சொல்வேன்?”

26d. விஸ்வரூபம்

” இந்த முறை உதவுகிறேன் தொண்டைமான்
இன்னொரு முறை நடக்கக் கூடாது இது போல!

உடல்களைக் கொண்டு வா என் சன்னதிக்கு!” என
உடல்களைக் கொண்டு கிடத்தினான் சன்னதியில்.

“உயிர்ப்பித்துத் தருவாய் மீண்டும் ஸ்ரீனிவாசா!
உயிர்ப் பிச்சை தருவாய் குற்றவாளி எனக்கும்!”

பாத்திரத்தில் இருந்து பகவான் எடுத்துத் தெளித்த
தீர்த்தத்தினால் உயிர் பெற்றனர் தாயும், சேயும்.

எழுந்தனர் தூக்கத்தில் இருந்து எழுவது போல;
விழுந்தனர் வியப்புக் கடலில் அதைக் கண்டவர்.

“பட்டினியால் மெலிந்து நலிந்த மகன் இப்போது
பட்டொளி வீசி ஜொலிப்பது எப்படி?” என்றாள்.

“சரணடைந்தேன் ஸ்ரீனிவாசநிடம் நான் – அவன்
அரவணைத்து உயிர்ப்பித்தான் தன் கருணையால்!”

அவளும் தொழுதாள் பகவான் பாதங்களை;
“அருளுங்கள் என்றும் குறையாத பக்தியை!”

“நித்திய வாசம் செய்வேன் நாடி வருபவருக்கு!
சத்தியமாக உதவுவேன் தேடி வருபவர்களுக்கு!”

பகவான் மார்பில் தோன்றி மறைந்தன – ஈரேழு
லோகங்கள் பதினான்கும், கடல்கள் ஏழும்!

அழைத்து வந்தனர் கிருஷ்ண சர்மாவை அங்கு,
அடைந்தான் ஆச்சரியம் அவர்களைக் கண்டு.

‘இத்தனை வனப்புள்ளவளா என் மனைவி?
இத்தனை தேஜஸ் உடையவனா என் மகன்?’

“மறுபிறவி எடுத்து வந்துள்ள்ளோம் நாங்கள்!
மறவோம் என்றும் ஸ்ரீனிவாசன் கருணையை!”

விளங்கவில்லை ஒன்றும் கிருஷ்ண சர்மாவுக்கு;
விளக்கினான் அனைத்தையும் தொண்டைமான்.

ஊர் திரும்பும் அந்தணனுக்கு அளித்தான் அவன்
சீர் போலப் பொன்னும், மணியும், பல பரிசுகளும்.

27a. மண் பூக்கள்

முதிர்ந்து விட்டது வயது தொண்டைமானுக்கு;
முன்போல் சுமக்க முடியவில்லை ராஜ்யபாரம்.

நாடியது மனம் ஸ்ரீநிவாசனுடன் இருப்பதையே;
தேடின கண்கள் ஸ்ரீனிவாசனின் திருவுருவத்தையே!

முடி சூட்டினான் மகனுக்கு அடுத்த மன்னனாக;
விடை பெற்றான் அன்பு மனைவியிடமிருந்து.

ஆனந்த நிலையத்தில் மிகுந்த ஆர்வத்துடன்
ஆராதனை, பூஜைகள் செய்தான் ஸ்ரீநிவாசனுக்கு.

மாறுபாடு தெரிந்தது ஸ்ரீனிவாசனிடம் – அவன்
வேறுபட்டு நின்றான் கற்சிலையாக இப்போது.

அளவளாவுவான் முன்பு அழைத்த போதெல்லாம்;
அழைத்த போதிலும் வருவதே இல்லை இப்போது.

“பிழை என்ன செய்துவிட்டேன் ஸ்ரீனிவாசா? கூறும்
அழைத்தாலும் நீங்கள் வாராததின் காரணம் எனக்கு!

பக்தியில் குறை ஏற்பட்டு விட்டதா கூறுவீர்!
பழிகளில் இருந்து காத்தீரே முன்பெல்லாம்!”

கல்லாகவே நின்றான் ஸ்ரீனிவாசன் அப்போதும்;
சொல்லொன்றும் கூறவே இல்லை இப்போதும்.

அர்ச்சனை செய்தான் அன்றலர்ந்த மலர்களால்;
அடையவில்லை அவை இறைவன் பாதங்களை!

மண்ணால் செய்யப்பட மணமற்ற மலர்களே
அண்ணலின் இரு பாதங்களை அலங்கரித்தன!

“மணம் வீசும் புது மலர்களை நிராகரித்து விட்டு
மணமில்லாத மண்மலர்களை நீங்கள் ஏற்பது ஏன் ”

பாதங்களைப் பற்றிக் கொண்டு படுத்து விட்டான்!
“பாராமுகம் ஏன்?” என அழுதான், எழவே இல்லை.

மனம் இளகிவிட்டது ஸ்ரீநிவாசனுக்கு – வாய் திறந்து
“இனிப் போதும் நீ அழுதது எழுந்திரு!” என்றான்.

27b. பீமாவரம் பீமன்

“மௌனம் கழிய இத்தனை நேரமா உமக்கு?”என,
“சௌகரியமாக நீ வாழலாம் உன் அரண்மனையில்!

வருத்திக் கொள்கிறாய் அனாவசியமாக உன்னையும்;
வருத்துகின்றாய் அனாவசியமாக என்னையும்!” என்றான்

“வெறுப்பு ஏற்பட்டுவிட்டது உலக வாழ்வில் எனக்கு;
நறுமண மலர்களால் நான் அர்ச்சிக்கின்றேன் – ஆனால்

மணம் வீசும் என் மலர்களை நீங்கள் ஏற்பதில்லை;
மணமற்ற மண் மலர்களை நீங்கள் ஏற்கின்றீர்கள்!

குறை ஏற்பட்டு விட்டதா என்னுடைய பக்தியில் ?
குறை ஏற்பட்டதா என்னுடைய ஆராதனையில் ?

ஆனந்த நிலையத்தை அமைத்திட உழைத்தேன்;
அடுத்த சேவையைச் சிந்தித்துக் கொண்டுள்ளேன்!

பக்தி நிலவுகிறது என் மூச்சுக் காற்றில் கலந்து;
பக்தியை வெளிப்படுத்த முடியுமா இதை விட?”

கலகலவென நகைத்தான் ஸ்ரீனிவாசன் இப்போது;
“கலப்படம் இல்லாதது உன் பக்தி என்று அறிவேன்!

இருக்கின்றது உன்னுடைய மனதில் ஓர் இறுமாப்பு;
‘இவை அனைத்தும் செய்தவன் நானே!’ என்ற கருத்து.

ஆணவம் அகன்றால் மட்டுமே ஐக்கியம் சித்திக்கும்.
காண விரும்பினால் உடனே செல்வாய் பீமாவரம்!

மயங்காமல் கண்டால் மனதுக்குத் தெரியும்
குயவனும், மனைவியும் கொண்டுள்ள பக்தி!”

தொண்டைமான் சென்றான் பீமாவரத்துக்கு;
கண்டு கொண்டான் குயவன் பீமன் வீட்டை.

ஏழ்மை நிலையைக் கண்டு அதிர்ந்து போனான்.
‘தாழ்மையையே விரும்புகின்றான் ஸ்ரீனிவாசன்.

எளிமையையே விரும்புகின்றான் ஸ்ரீனிவாசன்
வலிமையைக் காட்டுபவர்களை அல்லவே அல்ல!’

27d. விமானம்

பீமன் மனைவி கழுவினாள் அன்புடன்
பகவான் திருப் பாதங்களை நீரினால்.

பரப்பி இருந்தது குடிசையில் மண்.
பரப்பினர் அதன் மேல் ஒரு பாயை.

அமர்ந்தான் ஸ்ரீனிவாசன் அதன் மேல்,
அழகிய மணை மேல் அமர்வது போல்.

இரவு உணவு வெறும் கூழும், உப்பும்.
இருப்பதை மிக விரும்பிக் குடித்தார்.

‘எளியவருக்குஎளியவன் இறைவன்!’
என்பது எத்தனை பெரிய உண்மை!

விமானம் இறங்கியது விண்ணிலிருந்து;
விண்ணில் பறந்தான் கருடன் உடனே.

பத்மாவதி வந்தாள் கருடன் மீதேறி.
பகவானுடன் இணையாக நின்றாள்.

ஆசி பெற்ற பீமனும், மனைவியும்
அதிசய விமானம் ஏறிச் சென்றனர்!

“நான், எனது என்பதை ஒழித்தேன்!
நாயேனுக்கும் அருள்வீர் பரமபதம்!”

இறங்கியது ஒரு தங்கவிமானம் தரையில்;
பறந்தது தொண்டைமானுடன் விரைவில்.

27d. விமானம்

பீமன் மனைவி கழுவினாள் அன்புடன்
பகவான் திருப் பாதங்களை நீரினால்.

பரப்பி இருந்தது குடிசையில் மண்.
பரப்பினர் அதன் மேல் ஒரு பாயை.

அமர்ந்தான் ஸ்ரீனிவாசன் அதன் மேல்,
அழகிய மணை மேல் அமர்வது போல்.

இரவு உணவு வெறும் கூழும், உப்பும்.
இருப்பதை மிக விரும்பிக் குடித்தார்.

‘எளியவருக்குஎளியவன் இறைவன்!’
என்பது எத்தனை பெரிய உண்மை!

விமானம் இறங்கியது விண்ணிலிருந்து;
விண்ணில் பறந்தான் கருடன் உடனே.

பத்மாவதி வந்தாள் கருடன் மீதேறி.
பகவானுடன் இணையாக நின்றாள்.

ஆசி பெற்ற பீமனும், மனைவியும்
அதிசய விமானம் ஏறிச் சென்றனர்!

“நான், எனது என்பதை ஒழித்தேன்!
நாயேனுக்கும் அருள்வீர் பரமபதம்!”

இறங்கியது ஒரு தங்கவிமானம் தரையில்;
பறந்தது தொண்டைமானுடன் விரைவில்.

28a. வட்டி கட்ட வழி?

ஆனந்தமாக இருந்தான் ஸ்ரீனிவாசன்,
ஆனந்த நிலயத்தில் பத்மாவதியுடன்.

பக்தர்கள் தேடி வந்தனர் பகவானை;
சக்திக்கு ஏற்பக் காணிக்கை அளித்தனர்.

மகிழ்வுடன் பகவான் இருந்த போதிலும்,
நெகிழ்வுடன் நினைப்பதுண்டு லக்ஷ்மியை!

‘உற்சாகம் குன்றி பகவான் இருப்பதற்கு
உபசரணையில் உள்ள குறைபாடுகளோ?’

பத்மாவதி ஆலோசிப்பதுண்டு அடிக்கடி;
பகவானிடம் கேட்டுவிட்டாள் நேரடியாக.

“சுகமாக இருப்பதை விட்டு அடிக்கடி நீங்கள்
சோகமாகி விடுவதன் காரணம் கூறுங்கள்!”

“லக்ஷ்மி என்னைப் பிரிந்ததனால் வாழ்க்கை
லக்ஷ்யம் இழந்ததைப் போல ஆகிவிட்டது.

திருமணச் செலவுக்கு வாங்கினேன் கடன்;
திருப்பித் தர வேண்டும் கலியுக முடிவில்.

வட்டி கட்ட வேண்டும் வருடா வருடம்
கட்ட வில்லை வட்டி ஒரு வருடம் கூட.

லக்ஷ்மி மீண்டும் என்னிடம் வந்தால் தான்
லக்ஷணமாகும் நம் வாழ்க்கை!” என்றான்.

“லக்ஷ்மி வருவதில் தடை என்ன சுவாமி?”
“லக்ஷ்மி உனக்குப் போட்டி அல்லவா?”என,

“இந்த வாழ்க்கையே லக்ஷ்மி தந்தது!
அந்த லக்ஷ்மியை நான் வெறுப்பேனா?

அழைத்து வருவோம் நாம் சென்று!” என்றாள்.
“அழைத்து வருவேன் நான் சென்று!” என்றான்.

வகுள மாலிகை துணையானாள் அவளுக்கு.
பகவான் மட்டும் சென்றார் கரவீரபுரத்துக்கு.

28b. பத்ம ஸரோவர்

பகவான் கரவீரபுரம் வருகின்றான் என்றதும்,
பாதாள லோகம் சென்று விட்டாள் லக்ஷ்மி!

கபில முனிவரைக் கண்டாள் லக்ஷ்மி தேவி;
கபில முனிவர் வரவேற்றார் அங்கே தங்கிவிட!

எந்த இடமானால் என்ன பகவானைத் தியானிக்க?
அந்த இடத்திலே தங்கிவிட்டாள் லக்ஷ்மி தேவி.

கரவீரபுரம் அடைந்த ஸ்ரீனிவாசன் கண்டது எது?
வெறிச்சோடிக் கிடந்த தேவியின் இருப்பிடத்தை.

கடுமையான தவம் மேற்கொண்டு விட்டாளா?
காடுகளில் தேடி அலைந்தான் லக்ஷ்மி தேவியை.

திருவுருவத்தின் அருகே அமர்ந்தான் ஸ்ரீனிவாசன்;
தியானம் செய்தான் தன் லக்ஷ்மி தேவியின் மீது.

பத்து ஆண்டுகள் உருண்டு ஓடிவிட்டன – ஆனால்
பார்க்க முடியவில்லை பகவானால் லக்ஷ்மியை!

அசரீரி ஒன்று பேசியது ஆகாயத்தில் இருந்து,
“வசப்படமாட்டாள் லக்ஷ்மி உன் தியானத்துக்கு!

ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரினை
அமைப்பாய் பத்ம ஸரோவர் என்ற பொய்கையில்.

கிழக்கில் இருந்து சூரியன் ஒளி வீசும் பொழுது,
அழகிய தாமரையில் உன் தேவி தோன்றுவாள்!”

அடைந்தான் சுவர்ணமுகி தீரத்தை ஸ்ரீனிவாசன்.
அனுப்பினான் வாயு தேவனை இந்திர லோகம்.

பறித்து வந்தான் இந்திரனின் அனுமதியோடு
அரிய தாமரை மலர் ஒன்றை வாயுதேவன்.

ஆயிரம் இதழ்த் தாமரையை ஸ்தாபித்தான்;
ஆயிரம் இதழ்த் தாமரை மீது தியானித்தான்.

29a. அப்சரஸ்

நாட்கள் உருண்டு ஓடின – பகவானின் தவம்
நாளுக்கு நாள் தீவிரம் அடைந்தது மேலும்!

பத்ம தீர்த்தத்தின் கரையில் ஒருவன் அமர்ந்து
உக்கிர தவம் செய்வது ஒரு செய்தியானது!

பூலோகத்தில் தவம் நடந்தால் ஆபத்து நிகழும்
தேவலோகத்தை ஆளும் இந்திரனின் பதவிக்கு.

தவத்தைக் குலைத்துக் கலைப்பதற்கு இந்திரன்
தேவ மகளிரை அனுப்பினான் பூலோகத்திற்கு.

பூலோகப் பெண்களைப் போல மாறிவிட்டனர்.
பூஜைக்கு உதவி செய்திட விரும்பி வந்தனர்.

தடை சொல்லவில்லை பகவான் அவர்களிடம்;
நடை பெறவில்லை அவர்கள் விரும்பியதும்!

நெருங்க வில்லை பகவான் அந்த சுந்தரிகளை!
நெருங்கவும் விடவில்லை அந்த சுந்தரிகளை!

அடுத்த திட்டத்தினை அமல்படுத்தினர்அப்சரஸ்.
அடுத்து அடுத்துப் பாடினர் இனிய பாடல்களை!

அர்ப்பணித்தான் அந்தப் பாடல்களை லக்ஷ்மிக்கு;
கற்பனை பலிக்கவில்லை பெண்கள் எண்ணியபடி.

மாலைகளை அணிவிக்க வந்தனர் பகவானுக்கு;
மாலைகளை அணிவித்தான் அவன் தாமரைக்கு!

“நாட்டியம் செய்யலாமே நீங்கள்!” என்று சொல்லப்
போட்டி போட்டுக் கொண்டு இனிய நடனம் ஆடினர்.

மேனி எழிலை வெளிப்படுத்தினர் ஆடும் போது;
பேணினான் பிரம்மச்சரியத்தை பகவான் நன்கு!

கற்பனையில் உருவான அழகிய பெண்ணை
கண்முன் கொண்டு வந்து நிறுத்தினான் பகவான்

‘படைக்கும் சக்தி படைத்த இவன் மனிதன் அல்ல!’
மடை திறந்தது போல எல்லாம் நினவு வந்தது!

இந்திரன் தந்தான் வாயுவிடம் தாமரை மலரை;
இந்தத் தாமரை மலரே அவன் தந்த மலர் என்று!

விழுந்து வணங்கினர் பகவான் பாதங்களில்;
அழுதும், தொழுதும், கேட்டனர் மன்னிப்பு.

“செய்ய வந்தீர்கள் உங்களுக்கு இட்ட ஆணையை;
எய்தவன் இருக்க அம்பை நான் நோக மாட்டேன்!”

தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடியவர்கள்
அப்போதே சென்றனர் இந்திரனின் சபைக்கு.

29b. பத்மாவதியின் கனவு

“அழிவுக்கு ஆளாகாமல் வந்துள்ளோம்!
பழிச் செயலைச் செய்திருந்த போதும்!”

கூறினர் பூலோகத்தில் நடந்தவற்றை;
மாறினான் இந்திரன் அதைக் கேட்டதும்.

ஓடினான் பத்மஸரோவருக்கு உடனே;
தேடினான் தவம் செய்யும் பகவானை.

விடவில்லை பற்றிய பாதங்களை அவன்;
எழவில்லை மன்னித்தேன் என்னும் வரை!

“தவறு ஒன்றும் நிகழவில்லை இந்திரா!
தவத்தில் திருப்தி செய்தோம் லக்ஷ்மியை.

மனம் உருகி வருந்திடும் ஒருவருக்கு
மன்னிப்பு உண்டு நிச்சயம்!” என்றான்.

இந்திரன் திரும்பினான் தன் இந்திரலோகம்.
சொந்த சிருஷ்டியான தேவதையிடம் அவன்

“வன தேவதையாக இருந்து காப்பாற்றுவாய்
தினமும் தேடி வரும் பக்தர்களை!” என்றான்.

தவம் தொடர்ந்தது மீண்டும் நெடுங்காலம்;
தவத்துக்கு இரங்கி வரவே இல்லை லக்ஷ்மி.

இருபத்து இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டன;
வருத்தத்தில் மூழ்கியிருந்தாள் பத்மாவதி.

‘லக்ஷ்மியுடனேயே தங்கி விட்டாரா அவர்?
லக்ஷ்மியைத் தேடித் திரிகின்றாரா அவர்?

கண்டு பிடிக்கவே முடியாதபடி எங்கோ
கண் காணாது ஒளிந்து இருக்கின்றாளா?’

இரவு முழுவதும் உறங்கவில்லை அவள்;
துறவுக் கோலத்தில் கனவினில் கண்டாள்

விடியற்காலை நேரத்தில் ஸ்ரீனிவாசனை!
இடி விழுந்தது போலாகிவிட்டது உள்ளம்!

வகுள மாலிகையிடம் கூறினாள் கனவை;
வெகுவாகத் துயருற்றாள் அதை எண்ணி!

30a. தீப லக்ஷ்மி

மன நிம்மதி இழந்து விட்டாள் லக்ஷ்மி;
மனம் கலங்கியது நடப்பதைக் கண்டு.

‘கபிலரின் ஆசிரமத்தில் தங்கிவிட்டால்
கரவீர புரத்திலிருந்து திரும்பி விடுவான்!’

எண்ணிய எண்ணம் தவறானது – கணவன்
பண்ணுகின்றான் தவம் பத்ம ஸரோவரில்.

கூறினாள் மனக் கவலையைக் கபிலரிடம்;
கோரினார் கபிலர் பிரிந்து வந்த காரணத்தை.

“வாசஸ்தலத்தைக் களங்கம் செய்த பிறகு
வசிக்க முடியுமா மீண்டும் என்னால் அங்கு?”

“மகன் போன்றவன் அல்லவா பிருகு ருஷி ?
மகனிடம் கோபம் கொள்ளலாமா ஒரு தாய்?

கணவனைப் பிரிந்து தனியே வரலாமா?
கணவனைத் தவத்தில் தவிக்க விடலாமா?

பாராமுகம் செய்வது தகுமா தேவி – இங்கு
யாராவது மகிழ்ச்சியாக உள்ளார்களா?

தவிக்கின்றீர்கள் நீங்கள் தனிமையில்;
தவிக்கின்றான் பகவான் தவம் செய்து;

தவிக்கின்றாள் பத்மாவதி கவைலையில்;
தவிப்பினால் விளைந்த நன்மை என்ன?

மலரில் சென்று எழுந்தருள்வீர் தாயே!
பல காலம் செய்த தவம் பலிக்கட்டும்!”

தீபச் சுடர் உருவில் தோன்றி பகவானின்
தாபம் தீர்த்தாள் தாமரையில் லக்ஷ்மி.

தேவி தோன்றியவுடன் பிரகாசித்தது
கோடி சூரிய ஒளியுடன் தாமரை மலர்.

நிஷ்டை கலைந்து எழுந்தான் பகவான்;
இஷ்டத்துடன் நோக்கினான் லக்ஷ்மியை.

30b. பிணக்குத் தீர்ந்தது!

தாமரையில் மகாலக்ஷ்மி தோன்றியதும்
தாமதமின்றி விரைந்து வந்தனர் தேவர்.

பிரிந்தவர் சேரும் வைபவத்தைக் காணப்
பெரிய பாக்கியம் செய்திருக்க வேண்டுமே!

தேவர்கள் துதித்தனர் தேவியைப் பலவாறு;
தேவி இறங்கவில்லை தாமரையை விட்டு.

பிருகுவிடம் பேசினார் ஈசன் தனிமையில்,
“பிரிவுக்குக் காரண கர்த்தா நீரே அல்லவா?

தேவியிடம் சென்று மன்னிப்புக் கேட்பீர்!” என,
தேவியிடம் சென்று பிருகு கேட்டார் மன்னிப்பு.

சாந்தம் அடைந்து இறங்கினாள் லக்ஷ்மி தேவி.
சந்தனம் பூசினாள் பகவான் வக்ஷஸ்தலத்தில்.

வணங்கினாள் அவனை மண்டியிட்டு – அவளைப்
பிணக்குத் தீர்ந்து மார்பில் அமர்த்தினான் அவன்.

கந்தருவர் இசையுடன் கலந்து மலர் சொரிந்திட,
துந்துபி முழங்கியது எண் திசைகளிலும் பரவி.

அப்சரஸ் விண்ணில் ஆடினர் ஆனந்த நடனம்.
அருளினார் பகவான் உலகுக்குச் சிறந்த வரம்.

“கார்த்திகை மாத சுத்த பஞ்சமியில் – பத்ம
தீர்த்தத்தில் நீராடுபவருக்கு சகல சம்பத்து.”

அனைவரும் அடைந்தனர் சேஷாசலம் ;
அனைவரையும் வரவேற்றாள் பத்மாவதி/

ஆரத்தி எடுத்தாள்; திருஷ்டி கழித்தாள் அவள்;
ஆனந்தத்தில் தத்தளித்தாள் வகுள மாலிகை!

31a. ஆனந்தம் ஆனந்தம்!

ஆனந்த மயமாக மாறிவிட்டது அங்கே
ஆனந்த நிலயத்தில் மூவரின் வாழ்க்கை.

சக்களத்திகள் போல இருக்கவில்லை – இரு
சஹோதரிகள் போல அன்பு செலுத்தினர்.

பரம சந்தோஷம் பக்த கோடிகளுக்கு;
வரம் அளிக்க இருந்தனர் மூவர் என்று!

தனிமையில் கூறினான் லக்ஷ்மியிடம்,
ஸ்ரீனிவாசன் குபேரனின் கடனைப் பற்றி.

“வட்டி கட்ட ஒப்புக் கொண்டேன் நான்
வட்டி கட்ட வில்லை ஒரு முறை கூட.

பழிக்கு ஆளாகி விடுவேனே – நான்
இழிச் சொற்களைக் கேட்க நேருமோ?

உதவ முடியும் உன்னால் எனக்கு!
அதுவும் மிக எளிதான் முறையில்!

உன்னைத் தேடி வரும் பக்தருக்கு வழங்கு
பொன்னையும், பொருளையும் வாரி வாரி.

என்னைத் தேடி வருபவர்கள் அளிப்பர் – அந்தப்
பொன்னையும், பொருளையும் காணிக்கையாக!”

புறப்பட்டாள் லக்ஷ்மி தேவி கேட்ட உடனே,
“நிறைவேற வேண்டும் நம் நோக்கம் சுவாமி!

தனியே இருக்க வேண்டும் நான் – நம்முடைய
பணிகள் சரிவர நடை பெறுவதற்கு!” என்றாள்.

பாதாள லோகம் சென்றாள் லக்ஷ்மி
பகவானுக்கு உதவத் தயார் ஆனாள்.

“நினைத்த காரியம் இனிதாக நடைபெறப்
புனிதப் படுத்திக் கொள்ள வேண்டும் நான்.”

பகவன் பாடு மீண்டும் திண்டாட்டம்
பாதாள லோகத்தில் லக்ஷ்மி தவத்தில்

பூலோகத்தில் வந்து நிலை பெற்றால் தான்
ஆலோசிக்க முடியும் குபேரன் வட்டியை!

31b. மீண்டும் தவம்

சென்றான் ஸ்ரீனிவாசன் பாதாள லோகம்;
நின்றான் தியானம் செய்த லக்ஷ்மி முன்பு.

கண்டாள் லக்ஷ்மி அகக்கண்களில் அவனை;
காணவில்லை அவள் புறக்கண்கள் அவனை.

“தரிசனம் தந்தீர்கள் எனக்கு – ஆனால்
அரிதாகி மீண்டும் மறைந்து விட்டீர்கள்.”

கலைந்து விட்டது உன் தவம் லக்ஷ்மி!
வேலைகள் அநேகம் காத்திருக்கின்றன.

தடைபட்டுள்ளன அவை உன் தவத்தால்;
உடைபடும் தடை நீ பூலோகம் சென்றால்!

சுகரின் ஆசிரமத்தில் காத்திருக்கின்றது,
சுகமான ராஜ போகம் உனக்கு!” என்றான்.

ஆதிசேஷனை தியானித்தாள் லக்ஷ்மி;
ஆதிசேஷன் வந்து வணங்கி நின்றான்.

“சேர வேண்டும் சுகரின் ஆசிரமத்தை!”
தேர் நின்றது வெள்ளைப் பரிகள் பூட்டி!

ஏறி அமர்ந்தாள் அழகிய ரதத்தினில்,
அரிய ஆபரணங்கள் அணிந்த லக்ஷ்மி.

ரதத்துடன் தேவியைத் தலையில் தாங்கி,
வேகத்துடன் வெளிப்பட்டான் ஆதிசேஷன்.

சாயாசுகர் கண்டார் மஹாலக்ஷ்மியை,
“சரணம் சரணம் லோக மாதா!” என்றார்.

31c. சாயா சுகர்

சுகர் விரும்பினார் சாயுஜ்ய முக்தியை;
சுகர் எழும்பினார் தம் யோகசக்தியால்.

தடுத்தான் சூரியன் சுகரின் பிரயாணத்தை;
விடுத்தான் சுகரிடம் கேள்விக் கணைகளை.

“முன்னோர்கள் பூவுலகில் வாழ்ந்திருக்க,
முன்பாக சாயுஜ்யம் அடைய முடியுமா?

அருகதை இல்லை உமக்கு சாஸ்திரப்படி,
அறிந்திருப்பீர் இதனை நீரும் முன்பாகவே!

கிருஹஸ்தாஸ்ரமத்தை ஏற்க வேண்டும்;
பிறக்க வேண்டும் புத்திரர்கள், சந்ததியினர்;

பிரம்மஞானி ஆவது அதற்கும் பின்பு;
அரிய சாயுஜ்யம் அதற்கும் பின்பு என்று.”

“மனிதனுக்குத் தேவை நான்கு ஆசிரமங்கள்;
முனிவனுக்குத் தேவை இல்லை ஆசிரமங்கள்;

நீர்க்குமிழி போன்றது வாழ்க்கை என்று
நீத்து விடுகிறோம் அதை முற்றிலுமாக.

அடைய முடியுமா ஞான மார்க்கத்தை என
விடை அறிய விரும்பினேன் தந்தையிடம்.

அனுப்பினார் என்னை ஜனக ராஜனிடம்,
வனப்புடன் விளக்கினார் ஜனகர் எனக்கு.

பக்குவம் அடையாதவனுக்குத் தேவை இவை;
பக்குவம் அடைந்தவனுக்கு அல்ல என்பாதை.”

“விதிகளைக் கூறுபவர்களே தாம் கூறிய
விதிகளை உடைக்கவில்லை முனிவரே!

விஷ்ணு, பிரமதேவன், வசிஷ்டர், சக்தி,
பராசரர், வியாசர், நீர் ஒரு வம்சத்தினர்.

தேவை ஒரு சந்ததி சேவை செய்திட;
தோற்றுவித்தால் உமக்கு சாயுஜ்யம்!”

31d. சூரியனும், சுகரும்.

சக்தியினால் தோற்றுவித்தார் மானசீக புத்திரனை,
யுக்தியுடன் நிறுத்தினார் அவனை சூரியனின் முன்பு.

சாயாசுகர் வணங்கிய பின் கேட்டார் சுகரிடம்,
“மாயையால் என்னைத் தோற்றுவித்தது ஏன்?”

“கங்கைக் கரையில் வசிக்கும் என் தந்தைக்குத்
தங்கு தடையின்றி சேவை செய்து வருவாய்!”

வியாசருக்குப் பணிவிடை செய்வதற்குச்
சாயாசுகர் வசித்தார் சுவர்ண முகி தீரத்தில்.

கவர்ந்தது சுகரின் அறிவாற்றல் சூரியனை;
கதிரவன் கேட்டான் புதிர் போலச் சுகரிடம்,

தத்துவம் என்ன உள்ளது என் உருவில்?”
“சித்தத்துக்கு எட்டிய வரை கூறுகின்றேன்,

உண்டாயிற்று பிரணவம் நாரணனிடம்;
உண்டாயிற்று ஆகாசம் பிரணவத்திடம்;

உண்டாயிற்று வாயு ஆகாசத்திடம்;
உண்டாயிற்று அக்னி இவைகளிடம்.

வாயுவும், ஆகாசமும் கலந்த போது
வியாபித்தது அக்னி தோன்றிப் பரவி.

பிரளயம் தோன்றியது ஜல வடிவத்தில்!
பிரளய ஜலம் தோற்றுவித்தது பலப்பல

தங்க நிறம் கொண்ட ஒளிக் கிரணங்களை;
தங்க நிற ஒளிக்கிரணங்கள் ஆயின சூரியனாக!

அண்ட சராசரம் தோன்றியது அதிலிருந்து!
கொண்டிருந்தது வாழ வைக்கும் சக்தியை.

அசையும் அசையாப் பொருட்கள் வாழ
அவசியம் ஆனது அந்த சூரியனின் சக்தி.

சூரிய சக்தியால் மனிதன் பிறக்கிறான்;
சூரிய சக்தியால் மனிதன் வாழ்கிறான்.

அவன் சக்தி அடைகின்றது மீண்டும்
அதே சூரியனை ஒளிக்கிரணம் வழியே!”

அனுமதித்தான் சூரியன் சுகர் செல்வதற்கு;
வியந்தான் சுகரின் அறிவாற்றல் கண்டு!

சுக க்ஷேத்ரம்

போற்றினார் லக்ஷ்மியை சாயா சுகர்; போற்றினர் லக்ஷ்மியை மும்மூர்த்திகள்;

போற்றினர் லக்ஷ்மியைத் தேவ கந்தர்வர்கள்; போற்றினர் லக்ஷ்மியை முனி புங்கவர்கள்.

பிரமன் வேண்டினான் லக்ஷ்மி தேவியிடம், “தர வேண்டும் பத்ம தீர்த்தத்தில் நீராடினால் அஷ்ட ஐஸ்வரியங்களையும் அள்ளி அள்ளி!
கஷ்டங்கள் எல்லாம் தொலைய வேண்டும்!

ஆலயம் அமைக்கும் எண்ணம் கொண்டேன்; அனுமதி வேண்டும் அதை இங்கு அமைக்க”.

“சுக க்ஷேத்திரத்தை விடுத்தது என்னுடன் சேஷாச்சலம் நீயும் வரவேண்டும் தேவி” பகவான் கூறினான் லக்ஷ்மி தேவியிடம்,

பகவானுக்கு பதில் அளித்தாள் லக்ஷ்மி.

“சுக க்ஷேத்திரத்தில் இருக்க விருப்பம்; இக பரம் தர வேண்டும் என் பக்தருக்கு!”

விசுவகர்மா அமைத்தான் ஆலயத்தை! விசுவாசி சாயா சுகர் ஆராதனைகளை!

“செல்வதை வாரி வாரி வழங்குவாய் நீ! செல்வர் என்னை வந்து தொழுத பின்பே.”

“கார்த்திகை மாதம் சுக்கில பஞ்சமியன்று காத்திருப்பேன் தங்கள் மாலை, சேலைக்கு!

மறக்காமல் தர வேண்டும் ஆண்டுதோறும்!” இறைவனிடம் வேண்டினாள் லக்ஷ்மி தேவி.

சுக க்ஷேத்திரத்தில் குடி கொண்டாள் லக்ஷ்மி; சேஷாச்சலத்தில் குடி கொண்டான் பகவான்.

மலர்ந்த தாமரை மேல் தோன்றியவளை அலர்மேல் மங்கை என அழைக்கின்றனர்.

——————

ஸ்ரீ  வேங்கடேச புராணம் முற்றுப் பெற்றது.

சுபம், சுகம், சாந்தி நிலவட்டும் எங்கும்!

————-

தீர்த்த மஹிமை

தீர்த்தமாட விரும்பினான் ஓரந்தணன்;
யாத்திரை நீளும் நெடுங் காலம் என்று

உற்றார் உறவினரிடம் விடை பெற்றுப்
பிற்பாடு யாத்திரை செல்வது வழக்கம்.

கனவிலே தோன்றினார் மஹாவிஷ்ணு!
“கருதுகின்றாய் அகல தீர்த்த யாத்திரை!

புஷ்கர சைலம் என்பது சேஷாச்சலம்;
புனித தீர்த்தங்கள் பதினேழு உள்ளன.

புவனமெங்கும் உள்ள தீர்த்தங்கள் – அப்
புண்ணிய தீர்த்தங்களிலும் உள்ளன!

சகல பாவங்களிலிருந்து விடுதலையும்,
சகல சம்பத்துக்களும் கிடைப்பது உறுதி.

நாடெங்கும் அலைந்து திரிய வேண்டாம்.
நாடுவாய் நீ சேஷாச்சலத்தை!” என்றார்.

பழம் நழுவிப் பாலில் விழுந்தது – மேலும்
பலன் இரண்டுக்கும் ஒரு போலானது.

பதினேழு தீர்த்தங்களிலும் சென்று நீராடிப்
பரம பாவனம் அடைந்தார் அந்த அந்தணர்.

02. சேஷாச்சலம்

நாரதர் சென்றார் திருப்பாற் கடலுக்கு;
நாரணனைத் தேவியருடன் தரிசித்தார்.

ஒளிர்ந்தது கௌஸ்துபம் மார்பினில்;
மிளிர்ந்தன நாரணனின் பஞ்சாயுதங்கள்.

“பூலோகத்தில் நான் திருவிளையாடல்
புரிவதற்கு ஏற்ற இடத்தைக் கூறு!” என்று

நாரணன் கேட்டான் நாரத முனிவரிடம்,
நாரதர் விண்ணப்பித்தார் நாரணனிடம்.

‘கங்க தீரத்துக்குத் தெற்கே உள்ளது
தண்டகாரண்யம் என்னும் ஓர் இடம்.

விண்ணோரும் மண்ணோரும் வந்து
தெண்டனிடத் தகுந்த இடம் ஆகும்”.

தேவருஷி சென்றதும் நாரணன் – ஆதி
சேஷனுக்கு ஆணை இட்டார் இங்கனம்.

“மலை உருக் கொள்வாய் நீ அனந்தா!
சில காலம் தங்குவேன் பூவுலகினில் !”

“மலையாக மாறுகிறேன் ஆணைப்படி.
மலை மீது எழுந்தருளும் தேவியருடன்!

இருப்பிடம் ஆகவேண்டும் என் தலை;
திருவடிகள் பதித்து நின்றிட வேண்டும்.

புண்ணிய தீர்த்தங்கள் பலவற்றையும்
என்னிடம் நீங்கள் உருவாக்க வேண்டும்!”

அருள் செய்தான் நாரணன் அவ்வாறே;
திருப் பாற்கடல் விடுத்தான் அனந்தன்.

மலையானான் தண்டகாரண்யத்தில்;
தலை ஆனது திரு வேங்கடாச்சலமாக.

உடல் ஆகிவிட்டது அகோபிலமாக;
முடிவில் வால் ஆனது ஸ்ரீ சைலமாக.

அனந்தன் பூமியில் மலை ஆனபோது;
அருந்தவம் தொடங்கியது அவன் மீது.

வேங்கடேசனாகக் காட்சி தந்தருளினார்
வேங்கடமலையில் குடிகொண்ட நாரணன்

03. நாராயணாத்ரி

நாராயண முனிவர் ஒரு நல்ல தபஸ்வி.
நாராயணனைத் தேடியலைந்தார் எங்கும்.

காட்சி தரவில்லை நாராயணன் அவருக்கு
மாட்சிமை பொருந்திய தவம் செய்வித்திட.

பிரம்மனைக் குறித்துத் தவம் செய்தார்.
பிரம்மன் கேட்டான்,” என்ன வரம் தேவை?”

“நாரணனைத் தரிசிக்கத் தவம் செய்தேன்.
காரணம் என்னவோ காண முடியவில்லை!

காணும் வழியினைக் கூறுங்கள் சுவாமி!
காணும் பாக்கியத்தை அருளுங்கள் சுவாமி!”

“கோனேரிக் கரையிலே சேஷாச்சலத்திலே
கோவில் கொண்டுள்ளார் ஸ்ரீமன் நாராயணன்.

தவம் செய்வீர் நீர் சேஷாச்சலம் சென்று!
தவமும் பலிக்கும்; தரிசனமும் கிடைக்கும்”

சேஷாச்சலம் அடைந்தார் முனிபுங்கவர்;
செய்தார் கடும் தவம் பன்னெடுங் காலம்!

தேவியுடன் காட்சி தந்தான் நாரயணன்;
“தேவை எதுவோ கூறுங்கள்!” என்றான்.

“தரிசனம் வேண்டித் திரிந்தேன் – எங்கும்
தரிசனம் கிடைக்காமல் தவித்தேன் நான்.

பிரம்மன் கூறினார் இங்கு தவம் புரியுமாறு,
அரிய தரிசனம் பெற்றேன் உமது அருளால்!

முனிவர்களுக்கே கடினமான இத் தவத்தை
மனிதர்கள் செய்வது எங்கனம் சாத்தியம் ?

புனிதத் தலத்திலேயே தங்கி வசிப்பீர்!
மனிதர்களுக்கும் ஆசிகள் வழங்குவீர்!

என் பெயரால் விளங்க வேண்டும் – நீர்
எனக்கு தரிசனம் தந்த இந்த இடம்” என,

“நிறைவேற்றுவேன் உம் கோரிக்கையை.
நித்தியவாசம் செய்வேன் இந்தத் தலத்தில்.

தீரும் வரும் அடியவர் குறைகள் எல்லாம்!
பேரும் விளங்கும் நாராயணாத்திரி என்று!”

04. ரிஷபாத்ரி

வேட்டைக்குச் செல்ல விழைந்தான் ஸ்ரீனிவாசன்;
காட்டுக்குச் செல்லத் தயாராயினர் படைவீரர்கள்.

சேனைத் தலைவன் தலைமையில் வந்தனர்,
சேஷாத்திரி வாசனைத் தொடர்ந்து வீரர்கள்.

வேட்டை ஆடினர் வெகுநேரம் மிருகங்களை;
வேட்கை மிகுந்தது நீர் பருகித் தாகம் தீர்ந்திட.

அழகிய சோலை ஒன்று தென்பட்டது அங்கு;
தழுவியது வீசிய குளிர்ந்த தென்றல் காற்று.

ரிஷபன் என்னும் அசுரனின் சோலை அது;
ரிஷபன் தடுத்தான் அதில் நுழைந்த வீரர்களை.

அரச குமாரன் என்று எண்ணினான் பகவானை;
பரந்தாமனையும் அச்சுறுத்தினான் அசுரன் ரிஷபன்!

“சம்பரா! இவனுக்குப் பதில் கூறு!” என்று சொல்ல
சம்பரன் தயாரானான் ரிஷபனுடன் போர் புரிய.

சிவ பக்தி மிகுந்தவன் அசுரன் ரிஷபன் – எனவே
தேக சக்தியும் மிகுந்தவன் அசுரன் ரிஷபன் !

நொடியில் அடித்து வீழ்த்தினான் சம்பரனை;
அடுத்து ஓடி வந்தான் ஸ்ரீனிவாசனை நோக்கி!

சரங்களைப் பொழிந்தான் சேனை நாயகன்;
சரங்கள் தடுத்தன அசுரனைச் சுவராக மாறி!

கரங்களாலே உடைத்தான் சுவற்றை அசுரன்,
பரபரவென்று முன்னேறினான் அசுரன் ரிஷபன்

அஸ்திரங்களை ஏவினான் அசுரன் ரிஷபன்;
அஸ்திரங்களை ஏவினான் சேனை நாயகன்!

06. அஞ்சனாத்ரி

திரேதா யுகத்தில் கடும் தவம் செய்தான்,
பரமசிவனைக் குறித்துக் கேசரி என்பவன்.

“வேண்டும் வரம் யாது?” என்று கேட்க
வேண்டினான் கேசரி இந்த வரத்தினை.

“எவராலும் வெல்ல முடியாத பலத்துடன்,
என்றும் வாழ்ந்திருக்கும் மகன் வேண்டும்!”

“புதல்வி தான் பிறப்பாள் உமக்கு – அந்தப்
புதல்விக்குப் பிறப்பான் நீர் கோரும் மகன்!”

அஞ்சனை அவதரித்தாள் அந்தக் கேசரிக்கு;
அருமை பெருமையாக அவளை வளர்த்தான்.

வானரத் தலைவன் விரும்பிக் கேட்டதால்,
வானரனுக்கு அவளை மணம் செய்வித்தான்.

குறை இருந்தது புத்திரன் இல்லையென்று!
குறத்தி போல் வந்தாள் தருமதேவதை அங்கே.

“வேங்கடம் சென்று தவம் செய்தால் – மனம்
வேண்டியபடிப் பிறப்பான் நல்ல மகன்!” என

அனுமதி பெற்றாள் தன் கணவனிடமிருந்து,
அடைந்தாள் வேங்கட மலையைச் சென்று.

ஆகாய கங்கையில் நீராடினாள் – பின்பு
அமர்ந்தாள் அஞ்சனைஅரும் தவம் புரிந்திட.

காற்றை மட்டுமே உட்கொண்டாள் – அவள்
மற்றவற்றைத் துறந்தாள் முற்றிலுமாக!

அஞ்சனை தவத்துக்கு இரங்கினான் வாயு;
கொஞ்சமேனும் தானும் உதவ நினைத்தான்.

கனிந்த பழத்தைக் கரத்தில் கொண்டு போட,
இனிய பிரசாதமாக அதைத் தினமும் புசிப்பாள்.

07. அஞ்சனாத்ரி

வந்தனர் அங்கே சிவனும், உமையும்.
கண்டனர் மந்திகள் கூடிக் களிப்பதை!

இன்புற விரும்பினர் தாமும் அவ்விதமே ;
இருவரும் மாறினர் இரண்டு மந்திகளாக!

பரம சிவனிடம் வெளிப்பட்ட தேஜசைப்
பிரசாதமாகத் தந்துவிட்டான் வாயு அன்று!

கனி என்று எண்ணிப் புசித்துவிட்டாள்!
கனி அல்ல அது; சிவனுடைய தேஜஸ்!

அசரீரி கேட்டது அஞ்சனைக்கு அப்போது;
“அசாதரணமான மகன் பிறப்பான் உனக்கு!

மகேஸ்வரனின் ஒரு அருட் பிரசாதமாக;
மகா பலவானாக; ஒரு மகா பண்டிதனாக;

மகா பக்தனாக, ஒரு சிரஞ்சீவியாக!” என்று.
மன நிம்மதி கொண்டாள் தேவி அஞ்சனை.

வானர உருவில் வந்து பிறந்தான் ஒரு மகன்,
வானில் பாய்ந்து சென்று விளையாடினான்!

கனி எனக் கருதினான் செங்கதிரவனை!
இனித்துச் சுவைக்கப் பறிக்கச் சென்றான்.

தடுத்தான் பிரம்மாஸ்திரத்தால் பிரமன்;
தரையில் விழுந்தான் மயங்கிய குழந்தை!

அஞ்சனையின் கண்ணீருக்கு அளவில்லை.
அஞ்சி ஓடி வந்தனர் தேவர்கள் அவர்களிடம்.

“பாலகனுக்கு இல்லை என்றுமே ஆபத்து!
பாலகனுக்கு இல்லை என்றுமே மரணம்!”

தேவ கானமும், சாஸ்திர ஞானமும் தந்து,
தேஹ வலிமை, தொண்டு மனப்பான்மை,

வாக்கில் சாதுர்யம், மனதில் பூரண பக்தி,
திக்கெட்டும் பரவிய புகழ், அஷ்டசித்திகள்;

அனைத்தும் தந்தனர் அஞ்சனை மகனுக்கு;
“இனி ஒருவர் இணையாகார் இவனுக்கு!

புனிதத் தலம் விளங்கிடும் இப் புவனத்தில்
இனி அஞ்சனாத்ரி என்று உன் பெயரால்!”

08. மாதவன்

நந்தனத்தில் வாழ்ந்து வந்தான்,
அந்தணன் புரந்தரன் என்பவன்.

நன்கு தேர்ந்தவன் கல்வி, கேள்வியில்;
நல்ல மகன் இருந்தான் மாதவன் என்று.

தந்தையைப் போல உத்தமன் அவன்,
சந்திரரேகை அன்பு கொண்ட மனைவி.

தீர்த்த யாத்திரை சென்றனர் இருவரும்;
தீர்த்தமாடித் தரிசித்தனர் இறைவனை.

தங்கி இருந்தாள் மனைவி தடாக்கரையில்,
தான் மட்டும் சென்றான் கனிகள் கொணர!

புல்லறுக்க வந்த புலைச்சியைக் கண்டு,
மெல்ல அவளைத் தன் வசப்படுத்தினான்!

உடன் வந்த மனைவியை மறந்து விட்டுத்
தொடர்ந்து போனான் புலைச்சி குடிசைக்கு.

அந்தணன் தான் என்பதை மறந்து விட்டான் ;
சொந்த குல ஆசாரத்தைத் துறந்து விட்டான்;

வழிப்பறிக் கொள்ளைகள் செய்தான் – பின்பு
வழிப்பறியே வாழ்வாதாரம் ஆகி விட்டது!

காலம் செல்லக் கட்டுத் தளர்ந்தது மேனி;
காமக் களியாட்டம் கிழவனாக்கி விட்டது.

வழிப்பறி செய்ய உடல் வலிமை இல்லை;
வழியில் வந்த அவள் வழியோடு போனாள்!

09. வேங்கடம்

தனியனாக ஆகி விட்டான் மாதவன்;
தன் நிலைமைக்கு மிக வருந்தினான்.

மனைவியிடம் செல்லவும் வழியில்லை
தனியே தவிக்க விட்டு விட்டு வந்ததால்!

நோய் வாய்ப்பட்டு அவளிடம் செல்வது
நேர்மை அல்ல என்பதை உணர்ந்தான்.

ஊர் ஊராகச் சுற்றி அலைந்து திரிந்தான்!
தீர்மானம் என்று எதுவும் இல்லை மனதில்!

சேஷாச்சலத்தை அடைந்தான் – ஆதி
சேஷனே அங்கு மலையாகக் கிடந்தான்.

பாவங்கள் தீரப் பிரார்த்தனை செய்தான்;
பாவனமாகிடப் பிரார்த்தனை செய்தான்;

காலடி வைத்தவுடன் அவனை எரித்தான்,
கால் முதல் தலை வரை அக்னி தேவன் .

பாவங்கள் எரிந்து சாம்பல் ஆனதும்,
பார்ப்பவர் வியக்கும் தேஜஸ் வந்தது.

வணங்கினர் அவனைக் கண்ட பேர்கள்,
வணங்கினர் அவனை முனிபுங்கவர்கள்.

கருணை எரித்தது பாவக் குவியலை;
கருணை அளித்தது புனிதமான உடலை!

வேங்கடம் என்றால் பாவத்தை எரிப்பது;
வேங்கடம் எரிக்கும் பக்தனின் பாவத்தை!

மாதவனின் பாவத்தை எரித்தது முதல்
மறு பெயர் பெற்றது வேங்கடகிரி என.

10. நாக கன்னிகை

சோழ ராஜன் சென்றான் வேட்டைக்கு,
சேஷாச்சலத்தை அடைந்தான் திரிந்து.

பிரிந்து விட்டான் படை வீரரிடமிருந்து;
மறந்து விட்டான் வெளிச்செல்லும் வழி!

தட்டு தடுமாறி வெளிவர முயன்றவன்
பட்டு ரோஜாப் பெண்ணைக் கண்டான்!

மலரே மலர்களைக் கொய்யுமா என்ன?
மலர் மங்கை மலர்கள் கொய்திருந்தாள்!

மையல் வசப் பட்டான் சோழ மன்னன்
தையலின் லாவண்யத்தைக் கண்டதும்.

“கொடிய விலங்குகள் திரியும் வனத்தில்
கொடி இடையாள் நீ என்ன செய்கிறாய்?

நீ யார்? எந்த ஊர்? என்ன பேர்? ” என
நீளமாக அடுக்கினான் கேள்விகளை.

“நாகர் குலத்தைச் சேர்ந்தவள் நான்
நாகர்களின் வேந்தன் என் தந்தை! ”

“மணம் செய்து கொள்கிறாயா என்னை?
மனம் பறி போய்விட்டது கண்டவுடன்!”

“நற்குணங்கள் பொருந்திய மன்னனைக்
கற்பு மணம் புரிய வேண்டுமாம் நான்!

தந்தையிடம் நீர் பேசினால் நடக்கும்
தடைகள் இல்லாமல் நம் திருமணம்! ”

“நாக லோகம் செல்ல நேரம் இல்லை!
காம வேதனை தாங்க முடியவில்லை!

கந்தர்வ விவாஹம் செய்து கொள்வோம்;
தந்தையிடம் சொல் திரும்பச் சென்றபின்.”

காமவசப் பட்டிருந்தாள் நாககன்னிகை;
தாமதம் இன்றிக் கந்தர்வ விவாஹம்!

ஆனந்த வெள்ளத்தில் நீந்தினர் பல நாள்;
அவரவர் வீட்டுக்குச் சென்றனர் ஒரு நாள்.

11. யுவராஜன்

பாதாள லோகம் சென்ற நாக கன்னிகை
பூலோகத்தில் நடந்ததைச் சொன்னாள்.

மணந்தாள் அவள் சோழ மன்னனை என
மகிழ்ந்தான் தந்தை மன்னன் தனுசன்.

கந்தர்வ விவாஹத்தின் பலன் கர்ப்பம்!
சுந்தரனான ஆண் மகவு ஒன்று பிறந்தது.

பிறந்த நேரமும், அவன் தோற்றமும்,
சிறந்த அரசனுக்கு மட்டுமே உரியவை.

கண்ணும் கருத்துமாக வளர்த்தனர் அவனை;
கண்மணி வளர்ந்தான் கண்களைக் கவரும்படி.

“என் தந்தை யார்?” எனக் கேட்டான் தாயை.
“உன் தந்தை சோழ மன்னர்!” என்றாள் தாய்.

தந்தையைக் காண விரும்பினான் அவன்;
தடை சொல்லாமல் அனுப்பினர் அவனை.

சோழ மன்னனை வந்து வணங்க – மன்னன்
” தோழமையோடு கேட்டான் நீ யார்?” என.

“வந்தீர்கள் நீங்கள் சேஷாச்சலம் வேட்டையாட;
தந்தீர்கள் கந்தர்வ மணம் அன்னை நாககன்னிக்கு!”

அகன்ற ஆகாயத்தில் எழுந்தது ஓர் அசரீரி ;
“புகன்றது உண்மையே! இவன் உன் மகன்!

ஸ்ரீனிவாசனுக்குத் தொண்டுகள் புரிவான்;
மேதினியில் அழியாத புகழ் அடைவான்!”

அணைத்துக் கொண்டான் அருமை மகனை;
வினவினான் அன்னை, பாட்டனைப் பற்றி .

முதுமை எய்தி விட்டான் சோழ மன்னன்;
புதிய மன்னன் ஆனான் நாககன்னி மகன்.

நாடினான் நாட்டு மக்களின் நன்மைகளை,
நாற்றிசையும் அவன் புகழ் பரவி விரவியது

12. அபூர்வக் கனவு

இடையர்கள் கண்டனர் மன்னனை;
இயம்பினர் வியத்தகு நிகழ்ச்சிகளை.

“வேங்கட மலையினில் வாழ்பவர்கள் நாங்கள்;
தங்களுக்குப் பால் குடங்கள் எடுத்து வருவோம்.

வழியில் உள்ள புற்றின் அருகே வந்ததும்
வழிந்தோடுகிறது பால் குடங்கள் உடைந்து!

தினமும் நிகழ்கிறது இது போலவே மன்னா!
இனம் புரியவில்லை இதன் காரணம் எமக்கு!”

விந்தையாக இருந்தது சோழ மன்னனுக்கு;
“இந்த நிகழ்வைக் கண்டு பிடிப்பேன் நான்!”

கனவு கண்டான் மன்னன் அன்றிரவு;
கருமை நிற அழகன் ஒருவன் வந்தான்.

கையில் வில்,  மார்பில் பெண் உருவம்;
“கையுடன் அழைத்து வரச் சொன்னார்

சேஷகிரி ஸ்ரீனிவாசன் தங்களை!” என்றான்.
பேசாமல் அவன் பின் சென்றான் மன்னன்.

சேஷகிரியை அடைந்தனர் இருவரும் – வி
சேஷமான நவரத்தினம் மின்னும் மண்டபம்!

சங்குடன் சக்கரம், மகர குண்டலங்கள்;
பொங்கும் அழகுடைய தேவியர் மூவர்;

கோடி சூரியப் பிரகாசத்துடன் நாரயணன்;
தேடி வந்து கண்ட காட்சியில் உருகினான்!

அள்ள அள்ளக் குறையாத ஆனந்தம்;
மெல்ல மெல்ல மறைந்தது அக்காட்சி.

கனவு என்றே நம்ப முடியவில்லை அவனால்;
நனவு போலவே இருந்தது விழித்த பின்னரும்.

சபா மண்டபத்தில் உரைத்தான் தன் கனவை,
“அபாரமான கனவின் பொருள் என்ன?” என,

ஆழமாகச் சிந்தித்தனர் விசுவாச மந்திரிகள்;
சோழ மன்னனிடம் கூறினர் சிந்தனைகளை.

13. வேடுவன்

“இடையர்கள் குடம் உடைவதற்கும், கனவுக்கும்,
தொடர்பு உள்ளது இதில் ஐயம் இல்லை மன்னா!

புற்றிலே உள்ளாரா ஸ்ரீநிவாசன் என்று அறியப்
புற்றுக்குச் செய்வோம் பால்குடம் அபிஷேகம்.

இறைவன் வெளிப்பட்டால் பொருள் விளங்கும்
சிறந்த ஆலயம் கட்டுவிக்க விழைகின்றான் என.”

வேடன் வந்தான் வேந்தனிடம் சேதி சொல்ல.
வேடனின் சேதியைக் கேட்கும் ஆவல் மீறியது!

“புங்கம் விதையை உண்கின்றோம் மாவாக்கி;
எங்கிருந்தோ வருகிறது வெள்ளைஆண் பன்றி.

தின்றுவிட்டுப் போய் விடுகிறது புங்கம் மாவை!
இன்று காவல் வைத்துச் சென்றேன் என் மகனை.

உண்டான் அவன் புங்கம் மாவை வெண்ணையுடன்!
கண்டதும் என் கோபம் எல்லை மீறியது – அவனிடம்

‘பன்றி தின்கிறது என்று உன்னைக் காவல் வைத்தால்
பன்றிக்குப் பதிலாக நீயே தின்கின்றாயா?’ என்றேன்.

கொடுவாளை ஓங்கியபடிப் பாய்ந்த போது – என்னை
நடுங்க வைத்தது இடி போன்று முழங்கிய கர்ஜனை.

‘உண்டார் பரந்தாமன் உங்கள் புங்கம் மாவை,
வெண்ணை கலந்து உங்கள் மகன் உருவினில்!

நேராகச் சென்று கூறு இதை உன் மன்னனிடம்;
வேறு கனவு கண்டிருப்பான் உன் மன்னனும் கூட.’

விளங்கவில்லை என் அறிவுக்கு எதுவுமே மன்னா!
விளம்ப வந்தேன் விவரங்களை உமக்கு!” என்றான்.

“வேடன் கூறுவதற்கும், கண்ட கனவுக்கும், இடையர்
குடம் உடைவதற்கும் தொடர்பு உள்ளது உறுதியாக!”

ஆராய விரும்பினான் திருமலைக்குச் சென்று;
பிரதானி, மந்திரிகளுடன் சென்றான் புற்றுக்கு.

வேடன் ஓடி வந்தான்; சொன்னான் மன்னனிடம்,
“கூட வந்தால் காட்டுவேன் வெள்ளைப் பன்றியை!”

4. ஆலயங்கள்

வேடுவனைப் பின் தொடர்ந்தனர் அனைவரும்;
ஓடத் தொடங்கியது பன்றி இருந்த புதரை விட்டு.

வளைந்து, நெளிந்து, புகுந்தோடி வெள்ளைப் பன்றி
நுழைந்து, மறைந்தது ஒரு புற்றுக்குள் திடீரென்று!

“மன்னா! நாங்கள் சொன்ன புற்றும் இதுவே தான்!” என்று
சொன்னார்கள் இடையர்கள் சோழ மன்னனிடம் அப்போது.

“ஹிரண்யாக்ஷன் பூமியை ஒளித்து வைத்த போது,
தரணியைக் காக்க வந்த வெள்ளைப் பன்றி இதுவே!

புற்றின் அடியில் இருக்க வேண்டும் பகவான் – நாம்
புற்றைத் தோண்டினால் தெரியும் உண்மை!” என்ற

வேடனைக் கடிந்து கொண்டான் சோழ வேந்தன்;
“வேறு வழியில் வெளிப்படுத்துவோம் இறைவனை!”

பால் குடங்கள் வந்து குவிந்தன அங்கே உடனே!
பால் அபிஷேகம் செய்தான் சோழமன்னன் புற்றுக்கு.

கரைந்தது புற்று; கண்டனர் அதன் உள்ளே
இருந்தது ஆதி வராஹரின் அழகிய உருவம்!

பரவசம் அடைந்துக் கை தொழுது நின்றிருந்த
அரசனிடம் கூறினார் ஆதி வராஹப் பெருமான்.

“சுவாமி புஷ்கரிணியின் அருகே பகவான்
ஸ்ரீனிவாசன் உள்ளான் புளிய மரத்தின் கீழ்!

பூலோகம் வந்துள்ளான் பக்தருக்கு அருள;
புற்று மூடி விட்டது முழந்தாள் வரையில்!

ஆலயம் எழுப்பி ஆராதிப்பாய் ஸ்ரீனிவாசனை.
ஆலயம் எழுப்பு எனக்கும் மேற்குக் கரையில்.”

சென்றனர் அனைவரும் சுவாமி புஷ்கரிணி;
கண்டனர் ஸ்ரீனிவாசனைப் புளிய மரத்தடியில்.

புற்றுக் கரைந்து போனது பால் அபிஷேகத்தால்.
பூரணம் ஆனது பகவானின் திவ்விய தரிசனம்!

“திருமலையில் என்றும் இருந்திட வேண்டும்!”
திரும்பத் திரும்ப வேண்டினான் சோழ மன்னன்.

“திருக் கோவில்கள் அமைத்துத் திருப்பணி செய் !
தினமும் மூன்று காலமும் ஆராதனைகள் செய்!”

கண் கவர் ஆலயங்களை விரைந்து எழுப்பினான்.
விண்ணோரும், மண்ணோரும் வந்து தொழுதனர்

15. ஆதிசேஷன்

சேஷன்:

‘சயனிக்கின்றான் என் மேல் பகவான்;
தயங்காமல் தாங்குகிறேன் உலகினை.

பாக்கியசாலி என் போல் யார் உளர்?
பகவானிடம் நெருங்கிப் பழகுவதற்கு!’

கர்வம் தலை தூக்கியது மனத்தில்,
சர்வம் தனக்குத் தாழ்ந்தவை என்று.

வந்தான் வாயுதேவன் தரிசனத்துக்கு;
“இந்த நேரத்தில் இல்லை தரிசனம்.

ஏகாந்தத்தில் உள்ளார் இறைவன்;
போகவிட மாட்டேன் காண்பதற்கு!”

காற்று:

“என்னைத் தடுக்க முடியுமா உன்னால்?
எங்கும் நிறைந்திருக்கும் காற்று நான்!”

சேஷன்:

“விரிகிறேன் பாயாக இறைவனுக்கு;
விரிகிறேன் குடையாக இறைவனுக்கு!

ஈடு எவர் பக்தி செய்வதில் எனக்கு?
ஈடு எவர் சேவை செய்வதில் எனக்கு?”

காற்று:

“ஆதாரம் அனைத்துக்கும் காற்று!
அதிகம் என் ஞானம், பக்தி, சக்தி.

பணியாள் நீ; சுதந்திரன் நான்;
உணர்ந்து கொள் வேறுபாட்டை!”

சேஷன் வெகுண்டான் இது கேட்டு!
“சோதிப்போம் யார் பலசாலி என்று!”

உரைத்தனர் இருவரும் தமது கட்சியை;
உன்னினார் இறைவன் மமதையை நீக்க.

6. கர்வ பங்கம்

 

“தொண்டாற்றும் எனக்குச் சக்தி இல்லையாம்!
கொண்டாடுகின்றனர் அனைவருமே என்னை!”

“உனக்கு என்று சக்தி இல்லை அனந்தா – ஆனால்
தனக்கு என்று சக்தி உள்ளவன் வாயு தேவன்.

அனைத்து உயிர்களுக்கும் ஜீவாதாரம் வாயு;
அனைத்து இடங்களிலும் வியாபித்துள்ளான்.

சக்தி அதிகம் உடையவன் வாயு தேவனே!
சந்தேகம் வேண்டாம் உண்மையும் இதுவே!”

“சோதித்துப் பார்க்கலாம் இந்த உண்மையை;
பாதிக்காது நம்மை பலப் பரீட்சை!” என்றான்.

“மேருவை நான் கட்டிக் கொள்கிறேன் – வாயு
வேருடன் பெயர்க்கட்டும் முடிந்தால் அதனை.”

அழுத்திக் கட்டிக் கொண்டான மேரு மலையை,
ஆதிசேஷன் தன் பலத்தை ஒன்றாகத் திரட்டி.

வாயு தேவன் முயன்றான் நகர்த்துவதற்கு;
வாயு தேவனின் முயற்சி வெற்றி பெற்றது.

வேருடன் பெயர்க்கப் பட்டது மேரு மலை!
வேறு இடத்தில் பறந்து சென்று விழுந்தது!

விழுந்த இடம் சுவர்ணமுகி தீர்த்தம் – அங்கு
விழுந்த சேஷன் மலையாகக் கிடக்கின்றான்!

சேஷகிரி ஆகிவிட்டது அந்த மலை – அதன் பின்
சேஷனின் கர்வம் சென்ற இடம் தெரியவில்லை.

நீராடினான் கோனேரித் தீர்த்தத்தில் ஆதிசேஷன்,
நாக தீர்த்தத்தை அடைந்தான் பிறகு சென்று.

தவம் செய்தான் தீவிரமாக நாராயணன் மீது;
தவம் பலித்து நாராயணன் தரிசனம் தந்தான்.

“மன்னித்து எழுந்தருள வேண்டும் என் மீது;
மக்களுக்கு என்றும் அருள் புரிய வேண்டும்;”

கோனேரியில் எழுந்தருளினான் ஸ்ரீநிவாசன்;
கோரிக்கையை நிறைவேற்றுகிறான் இன்றும்!

17. சரஸ்வதியின் தவம்

“புண்ணிய தீர்த்தங்கள் அனைத்திலும்
புனிதமானவள் ஆக வேண்டும் நான்”

நதி வடிவாகி தியானித்தாள் சரஸ்வதி;
விதி விளையாடியது அவள் தவத்தில்.

புலஸ்தியர் வந்தார் சரஸ்வதி தேவியிடம்;
புலஸ்தியர் தன்னுடைய மகன் என்பதால்

உபசரிக்கவில்லை சரஸ்வதி சரியாக,
அபசாரமாகக் கருதிவிட்டார் முனிவர்.

“எல்லாத் தீர்த்தங்களிலும் சிறந்ததாகும்
பொல்லாத கனவு இல்லாது போகட்டும்.

அறிந்தவர்கள் அனைவரும் கூறுவர்,
திரிபதகைத்  தீர்த்தமே சிறந்தது என!”

தடையானான் மகனே தவத்துக்கு;
உடைந்து போனாள் சரஸ்வதி தேவி.

“பரந்தாமனுக்கு எதிரியாக அசுரனாகப்
பிறவி எடுப்பாய் நீ!” என்று சபித்தாள்.

“சாப விமோசனம் எப்போது?” என்று
சாந்தம் அடைந்த புலஸ்தியர் கேட்டார்.

“ராமனாக அவதரிப்பார் நாரணன் – நீ
ராவணன் தம்பி விபீஷணன் ஆவாய்!

இறைவனின் நட்புக் கிடைக்கும் – அதனால்
சிரஞ்சீவியாக இருப்பாய் உலகில் என்றும்!”

கருடாரூடராக வந்தார் நாராயணன்;
“சிறந்த தீர்த்தமாக அனுகிரஹியுங்கள்!”

“புலஸ்தியர் சாபத்தால் கிடைக்காது அது!
புஷ்கரிணியாக வேங்கடத்தில் இருந்து வா!

லக்ஷ்மியும் நானும் வாசம் செய்வோம் – ஒரு
லக்ஷியத்துடன் உன் தீர்த்தக் கரையினில்!

நீராடுவர் பக்தர்கள் தனுர் மாதத்தில்,
சூரியோதயத்தில், சுக்கில துவாதசியில்.

பாவங்கள் தீர்க்கும் புஷ்கரிணியாகிப்
பாரினில் நீ விரும்பும் புகழ் பெறுவாய்!”

வேங்கடத்தில் ஸ்வாமி புஷ்கரிணியாகி
வேண்டிய மகிமைகள் பெற்றாள் சரஸ்வதி.

18. தேக காந்தி

வாயுதேவன் விரும்பினான் மனதார
வாசுதேவன் போன்ற தேக காந்தியை.

ஆயிரம் தேவ வருடங்கள் செய்தான்
அரும் தவம் அறிதுயில் பிரான் மீது.

காட்சி தந்தார் பகவான் – பின்னர்
கனிவுடன் கூறினார் ஓர் உபாயம்.

“வேங்கட மலையில் குமார தாரிகையில்
முங்கி எழுந்து ஆராதிப்பாய் என்னை!”

வாயுதேவன் அடைந்தான் வேங்கடம்;
வாசுதேவனை ஆராதனை செய்தான்;

வேங்கட மலையில் குமார தாரிகையில்
முங்கிப் புனித நீராடித் தூயவனான பின்.

தவத்துக்கு மெச்சிக் காட்சி தந்தார்;
தயவுடன் அருளினார் தேக காந்தியை.

வியப்பு அடைத்தனர் கண்ட பேர்கள்
வாயுவின் ஒளிரும் தேக காந்தியால்!

பிரமன், மகேசன் முதலியோரும்
பிரமிக்கத் தக்க காந்தி பெற்றனர்,

வாயுதேவன் செய்தது போலவே
வாசுதேவனை ஆராதனை செய்து.

19. அகஸ்தியர்

அரியதொரு தவம் செய்தார் அகத்திய முனிவர்
கரிய நிறக் கண்ணனைப் பொதிகையில் காண.

பிரத்தியக்ஷம் ஆனார் பிரம்ம தேவன் அங்கே.
“பரந்தாமனைக் காணச் செல்வீர் சேஷகிரி!”

வேங்கடத்தை அடைந்து தவம் செய்கையில்
ஓங்கி ஒலித்தது விண்ணில் ஓர் அசரீரி.

“திருமலையில் உள்ளன நீராடுவதற்கு
திவ்விய தீர்த்தங்கள் ஆயிரத்து எட்டு!

மூல மந்திரத்தை உச்சரித்து நீராடி விட்டு
மலையின் மகிமை கூறி வலம் வருவாய்!

தவம் செய்தால் தவறாமல் கிடைக்கும்
பவம் ஒழிக்கும் பரந்தாமனின் தரிசனம்!”

ஆயிரத்தெட்டு தீர்த்தங்களிலும் நீராடி,
வாயால் மூல மந்திரத்தை உச்சரித்து;

வலம் வந்தார் அகத்தியர் திருமலையை;
தவம் செய்தார் பரந்தாமனைக் குறித்து.

சுவாமி புஷ்கரிணி அருகே பெற்றார்,
சுவாமி தரிசனம் லக்ஷ்மி சமேதராக!

20. சங்கன்

சூரிய வம்சத்தின் ஓரரசன் சங்கன்,
கோரினான் இறைவன் தரிசனத்தை.

கேட்டான் வசிஷ்ட முனிவரிடம் சென்று,
“நாட்டம் கொண்டேன் இறை தரிசனத்தில்!

தேட்டம் இல்லை தவம் செய்யும் இடம்;
வாட்டம் அடையாது தரிசிக்க உதவுவீர்.”

“சுவர்ணமுகி தீரத்தில் அமைந்துள்ளது
சேஷாச்சலம் என்னும் வேங்கடமலை.

முனிவர்கள் செய்தனர் அங்கே தவம்
புனிதன் நாராயணனின் தரிசனம் பெற.

பரம சிவன் உள்ளான் அடிவாரத்தில்;
பரந்தாமன் உள்ளான் மலையுச்சியில்.

விண்ணோர், மண்ணோர் தொழுவர்
கண்ணனை ஸ்ரீனிவாசனாக அங்கே.

பர்ணசாலை அமைத்துத் துதித்தான்,
சுவர்ண முகி தீரத்தில் வாயு தேவன்.

வந்தார் வயோதிகர் ஒருவர் அங்கு.
வாயுவின் தவத்தை மெச்சினார் .

வந்தவர் இறைவனோ என ஐயுற்றுத்
தங்க வைத்தான் சதுர்மாச விரதத்தில்.

திருவுருவைக் காட்டினார் வாயுவுக்கு,
விரதத்தைப் பூர்த்தி செய்ய உதவினர்.

கற்பத்தின் முடிவில் குழுமுவர் முனிவர்
சக்கர தீர்த்தத்தில்!” என்றார் சுக முனிவர்.

“மலையை வலம் வந்து ஞானயோகம் செய்.
அலைமகளுடன் தரிசிக்கலாம் நாரணனை!”

சங்கன் செய்தான் அவர் கூறியவாறு;
சங்கன் முன் தோன்றினான் நாரணன்.

“சந்திரன் சூரியன் உள்ள வரையில்
சன்னதி கொள்வீர் திருமலையில்!”

“சகலரும் வணங்கி அர்ச்சிக்கும்படி
சமைப்பாய் என் உருவத்தை இங்கு!”

ஆராதித்தான் திருவுருவை அமைத்து;
மாறாத பரமபதம் அடைந்தான் பிறகு.

21. பசு நெய் விளக்கு

அந்தணன் ஒருவன் விஷ்ணு சர்மன்,
சொந்த குல ஆசாரத்தை மறந்தான்.

இன்பம் தூய்த்தான் பல பெண்களுடன் கூடி;
இன்பம் தூய்த்தான் குரு பத்தினியைக் கூடி!

பாவம் பற்றியது முதுமையுடன் கூடி;
நோய் வாய்ப்பட்டான் மனது மிக வாடி.

வெறுத்தனர் அவனை உற்றார், உறவினர்;
துரத்தினர் வீட்டை விட்டு, ஊரை விட்டு!

ஓடிச் சென்றான் காட்டுப் பிரதேசத்துக்கு;
வாடி விழுந்து விட்டான் நாடிகள் தளர்ந்து.

கடித்துத் தின்றன நாய்களும், நரிகளும்;
துடி துடித்து இறந்தான் விஷ்ணு சர்மன்.

“குரு பத்தினியைக் கூடியவன் இவன்;
குருத் துரோகம் செய்தவன் இவன்!”

கூசியது இதைக் கேட்ட யமதர்மன் உடல்;
ஏசியபடி அனுப்பி விட்டான் நரகத்துக்கு.

வேத நாமன் விஷ்ணு சர்மனின் மகன்;
‘ வேத குலத்தில் பிறந்தார் என் தந்தை.

பேதம் பாராமல் செய்தார் பாவங்கள்;
வேதனையோடு துறந்தார் உடலை.

நற்கதி கிடைக்காது; நரகமே கதி !’
நன்கு அறிந்திருந்தான் வேத நாமன்.

“பாவம் தீர்த்து நற்கதி தர வேண்டும்;’
தேவனைப் பிரார்த்தித்து ஏற்றினான்

பசு நெய் விளக்குகளை ஸ்ரீநிவாசனுக்கு;
நசித்தது விஷ்ணு சர்மன் செய்த பாவம்!

முற்றிலும் பாவங்கள் நீஙகிய பின்னர்,
நற்கதி அடைந்து சென்றான் வைகுந்தம்.

22. அவிர் பாகம்

வையகத்தில் நடந்தான் லக்ஷ்மியுடன்,
வைகுந்தவாசன் இயற்கையை ரசித்தபடி.

சேஷாச்சலத்தின் மலைச் சரிவுகளில் யாகம்
செய்து கொண்டிருந்தனர் முனி புங்கவர்கள்.

திருமலையில் செய்யும் யாகமும், தவமும்,
ஒரு குறைவும் இன்றி நிறைவேறும் அல்லவா?

அரசன் என எண்ணிய முனிவர் இறைவனை,
வரவேற்று அளித்தனர் பாலும், பழங்களும்.

பீதாம்பரம், இரத்தின ஹாரம் அணிந்தவன்
சாதாரண மனிதனாக இருக்க முடியாதே!

“எந்த நாட்டு அரசர்? தங்கள் பெயர் என்ன?
இங்கு வந்த காரணம் கூறுங்கள்!” என்றனர்.

“அரசனும் அல்ல, நான் அந்தணனும் அல்ல;
ஆசாரம், ஜாதி, குலம், கோத்திரம் இல்லை!

தந்தையும் இல்லை, தாயும் இல்லை எனக்கு!
எந்த தேசமும் என் தேசமே! எப்போதுமே!

எங்கும் இருப்பவன், எல்லாம் என் ரூபம்;
எத்தனை பெயர்கள், அத்தனை குணங்கள்!”

‘மனநிலை சரியாக இல்லையோ இவருக்கு?’
முனிவர்கள் தொடர்ந்தனர் தம் ஹோமத்தை.

மந்திரங்கள் ஓதி ஹோமம் செய்கையில்,
வந்தன இரு கரங்கள் அவிர் பாகம் பெற்றிட.

அக்கினியின் நடுவில் கரங்களை நீட்டி – அச்
சக்கரவர்த்தி பெற்றார் முனிவரின் ஹவிசை!

சங்குச் சக்கரதாரியாகக் காட்சி அளித்தார்;
அங்கு வந்திருந்தவர் ஸ்ரீனிவாசன் அல்லவா?

23. குமார தாரிகை

அழகிய இளைஞனாக மாறிய ஸ்ரீனிவாசன்
ஆடித் திரிந்தார் மலைச் சரிவில் ஒருநாள்.

வந்து கொண்டிருந்தார் அந்தணர் ஒருவர்,
வயது முதிர்ந்தவர் தன்னந் தனியாளாக!

கூனி விட்ட முதுகு; வலுவிழந்த கால்கள்,
பனி மறைக்கும் கண்கள், பசியுடன் தாகம்!

துணைக்கு வந்த மகனைத் தேடிக் கொண்டு,
‘ துணைக்கு வந்தவன் எங்கே போய்விட்டான்?

தண்ணீர் எடுக்கச் சென்றவன் வரவில்லையா?’
கண்ணீருடன் தேடிக் கொண்டிருந்தார் அவனை!

முள்ளிலும், கல்லிலும் அவர் நடப்பது கண்டு,
உள்ளம் வெண்ணையானது ஸ்ரீனிவாசனுக்கு!

“இறைவா! ஏன் நான் உயிரோடு உள்ளேன்?
இருக்கிறேன் ஒரு பாரமாக மற்றவர்களுக்கு!

வாட்டி வதைக்கின்றது முதுமையில் வறுமை.
வாழ்வதால் ஒரு பயன் இல்லையே இனி நான்”

மெள்ளத் தடவினான் முதுகை ஸ்ரீனிவாசன்,
“துள்ளும் இளமையோடு இருக்க விருப்பமா?”

“கேலி செய்கிறாயா தம்பி கிழவன் என்னை? என்
வேலைகளைச் செய்ய முடிந்தாலே போதுமே!

சேவை செய்வேன் இறைவனுக்கு முடிந்தவரை,
தேவை இல்லை துள்ளும் இளமை !” என்றார்.

“சுனைக்கு அழைத்துப் போகிறேன் முதலில்;
நனைத்தால் குறையும் உடலின் உஷ்ணம்.”

நீரில் முங்கி எழுந்தவர் மாறி விட்டிருந்தார்!
நிமிர்ந்து விட்ட முதுகு; இறுகிய தசைகள்!

நூறு வயது குறைந்து விட்டது – பதி
னாறு வயது வாலிபனாக மாற்றியது!

காணோம் கரையில் இருந்த இளைஞனை;
நாரணன் காட்சி தந்தான் புன் முறுவலுடன்.

“நித்திய கர்மங்களைச் செய்வீர் முன்போல்.”
பக்தியுடன் விழுந்தார் கால்களில் அந்தணர்.

முதியவரை இளையவராக ஆக்கிய சுனைக்குப்
புதிய பெயர் கிடைத்தது குமார தாரிகை என்று!

24. சங்கனன்

சங்கனன் ஆண்டு வந்தான் காம்போஜ நாட்டில்
சங்காச்யம் என்னும் நகரைக் கீர்த்தியுடன்.

கர்வம் மிகுந்து விட்டது பராக்கிரமத்தால்;
தர்மம் குறைந்து நலிந்து மெலிந்து விட்டது.

புண்ணியம் குறையலானது சங்கனனுக்கு
கண்ணியம் குறையலானது சங்கனனுக்கு.

விலகி விட்டனனர் பாதுகாத்த வீரர்கள்;
விலை போயினர் மறைந்திருந்த எதிரிக்கு.

வழக்கம் போலப் பழகவில்லை பிரதானிகள்;
குழப்பம் மேலிட்டது; குறைந்தது அவன் மதிப்பு.

அவதிப் பட்டனர் அவன் நாட்டு மக்கள்;
அவன் மேல் விழுந்தது அந்தப் பழியும்!

ஆட்சியைக் கைப் பற்ற முயன்றனர்;
மாட்சிமை இல்லை அவர்களை அடக்க.

உயிருக்கு ஆபத்து என்ற நிலை உருவாக
எவருக்கும் தெரியாமல் தப்பி ஓடினான்!

பட்டத்து ராணியுடனும் இன்னமும் தன்
கட்டளைக்குப் பணியும் அமைச்சருடன்.

சேது கரையைச் சென்று அடைந்தனர்.
வேதனை தீரும் ராமேஸ்வரம் சென்றால்.

கடல் நீராடினான் சேதுவில் சங்கனன்
உடன் சென்று தரிசித்தான் இராமநாதரை.

அடைந்தான் சுவர்ணமுகி தீர்த்தத்தை!
விழைந்தான் வேங்கடத்தில் தவம் புரிய!

வட பகுதியைத் தேர்ந்தெடுத்தான் சங்கனன்;
“விட நேர்ந்த்தது நற்பணிகளைச் செருக்கால்.

அரியணையும் துறந்து அஞ்சி வாழ்கிறேன்!
சரியாகுமா மீண்டும் முன்போல இந்த நிலை?

நாட்டை அடைந்து ஆட்சி செய்வேனோ?
காட்டிலேயே காலத்தைக் கழிப்பேனோ?”

25. சங்கனன்

அன்றிரவு தூங்கும் போது குரல் கேட்டது,
நின்று தேடியும் காணவில்லை எவரையும்!

விண்ணில் இருந்து ஒலித்தது அந்தக் குரல்,
எண்ணங்களை அறிந்தது போலப் பேசியது!

“வடக்கே உள்ளது வேங்கடம் எனும் திருமலை;
தடாகம் உள்ளது சுவாமி பூஷ்கரிணி என்பது.

தடாகக் கரையில் உள்ளது எறும்புப் புற்று;
தடாகத்தில் நீராடி விடாமல் துதித்து வா!”

வேங்கட மலையில் தடாகத்தை அடைந்தனர்;
தங்குவதற்குக் குடில் அமைத்தனர் புற்றருகே.

மூன்று வேளை நீராடினான் பூஷ்கரிணியில்-மனம்
ஊன்றித் தொழுதான் பகவானை நாள் முழுவதும்.

சுவாமி மனம் கனிவதற்கு ஆறு மாதமானது!
சுவாமி பூஷ்கரிணியில் தோன்றியது ஓர் ஒளி!

ரத்தின மயமான விமானத்தில் இருந்தனர்
யத்தனம் பலித்திட நாரணனும் தேவியரும்.

குழுமினர் தேவர்கள், துதித்தனர் முனிவர்;
ஆடினர் தேவ மகளிர்; பாடினர் கந்தருவர்.

புல்லரித்தது சங்கனனின் உடல் மகிழ்வால்,
சொல்லைக் கேட்டதும் துள்ளியது மனம்!

“உன் நாடு திரும்பும் நேரம் வந்தது!
உன் ஆட்சி திரும்பும் நேரம் வந்தது!”

சங்காச்யத்தில் சங்கடமான குழப்பம்;
சங்கனன் ஆட்சியே மேல் என்றானது!

தங்களுக்கே அரசபதவி வேண்டும் என்று
தானைத் தலைவர்கள் போட்டி இட்டனர்.

வேங்கட நாதன் அருள் பெற்ற மன்னன்
சங்கனன் திரும்பி வருவதை அறிந்தனர்.

குடிமக்கள் போர்க் கொடி தூக்கினர்;
பிடிவாதமாக அதிகாரிகளைச் சாடினர்!

சிற்றரசர்கள் ஆதரித்தனர் அரசனையே;
முற்றிலும் தோற்று விட்டனர் அதிகாரிகள்.

நாட்டை விட்டு ஓடிவிட்டனர் காட்டுக்கு;
நாட்டை மீட்டு ஆட்சி செய்தான் சங்கனன்.

வேங்கட நாதனின் பேரருளே அவனுக்குச்
சங்கடம் தீர்த்தது; ராஜ்ஜியம் அளித்தது.

26. ஆத்மா ராமன் (1)

விந்தியப் பிரதேசத்தில் வாழ்ந்த
அந்தணரின் மகன் ஆத்மா ராமன்.

தெய்வ பக்தி மிகுந்தவன் – எனவே
தெய்வ அருள் பெற்று இருந்தான.

வேத, வேதாந்தங்களைக் கற்றவன்;
பேதமின்றி மதித்தனர் அனைவரும்.

மறைந்து போனார் அவன் தந்தை – ஆனான்!
பெரும் செல்வத்துக்கு புது அதிபதியாக!

பணம் வந்ததும் முழுதும் மாறி விட்டான்;
குணத்தை முற்றிலும் இழந்து விட்டான்.

குல ஆசாரங்களைத் துறந்து விட்டான்;
குல தெய்வத்தையும் மறந்து விட்டான்.

தலைக்கு ஏறியது செல்வச் செருக்கு;
விலைக்கு வாங்கினான் இன்பத்தை.

“குந்தி தின்றால் குன்றும் மாளும்” அல்லவா?
குறைந்தும், மறைந்தும் போனது செல்வம்!

பணம் போனவுடன் போயிற்று கௌரவம்!
குணம் என்றோ போய்விட்டது அல்லவா?

ஒதுக்கி வைத்தனர் வறுமை வந்தவுடன்;
மதிக்கவில்லை குலத்தைச் சேர்ந்தவர்கள்.

“குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பு!”
பலவித பரிஹாசங்களைக் கேட்டு நொந்தான்.

நட்பு என்று சொல்ல யாரும் இல்லை!
நாணம் வந்தது உறவினரைக் காண.

ஊரை விட்டே வெளியேறி விட்டான்;
ஊர் ஊராக அலைந்து திரிந்தான் அவன்.

கால்போன திசையில் நடந்து சென்றவன்
கலியுக வரதனின் திருமலை அடைந்தான்.

27. ஆத்மா ராமன் (2)

பாவங்கள் தீரும் தாபங்கள் மாறும் என,
பகவானை ஆராதித்தான் திருமலையில்.

கபில தீர்த்தத்தில் நீராடினான் முதலில்,
கபிலேஸ்வரரைத் தரிசித்தான் கண்குளிர.

தீர்த்தங்கள் அனைத்திலும் நீராடினான்;
தீர்ந்தன அவன் பாவச்சுமைகள் அவற்றில்.

சுவாமி புஷ்கரிணியை நோக்கிச் சென்றான்.
சுவாமி தரிசனம் செய்தது போல மகிழ்ந்தான்.

கோடி சூரியப் பிரகாசத்துடன் ஒரு குஹையில்
தேடினாலும் கிடைக்காத சனத்குமாரர் இருந்தார்.

வலம் வந்து நமஸ்கரித்தான் அவரை – தன்
வளம் குன்றிவிட்ட பின்புலத்தைக் கூறினான்.

“முற்பிறவியில் நான் செய்த பாவம் என்ன?
முக்காலமும் அறிந்த நீர் சொல்லுங்கள்!” என,

“தான தர்மங்களை இகழ்ந்து பேசினாய்;
தானம் பெறுபவர், தருபவர் இருவரையும்.

நல்ல செயல்களைத் தடுத்தாய் – போனாய்
பொல்லாத வழிகளில் நன்னெறி தவறி!

தந்தையின் புண்ணியம் காத்தது உன்னை!
தந்தை சென்ற பின்னர் பற்றின பாவங்கள்.”

“வியாதியஸ்தனுக்கு வைத்தியன் போலவும்,
வறியவனுக்குக் கிடைத்த புதையல் போலவும்,

காயும் பயிருக்குப் பெய்யும் மழை போலவும்,
தீயோன் எனக்குக் கிடைத்துள்ளீர்கள் நீங்கள்.

இன்னல்கள் தீர வழி கூறுங்கள் சுவாமி!
இனியும் என்னால் தாள முடியாது சுவாமி!”

28. ஆத்மா ராமன் (3)

“ஒரு வழி இருக்கிறது இன்னல் தீர்ந்திட,
திருமகள் கருணையைப் பெறுவது அது!

திருமால் மார்பில் உறைபவள் அவள்,
திருவென்னும் செல்வத்துக்கு அதிபதி!

பூரணச் சந்திரன் போன்ற முகத்தினள்;
கருணையே வடிவாகிக் காக்க வந்தவள்,

வியூக லக்ஷ்மியாக இருந்து தருவாள்,
விஜயம், புகழ், செல்வம் இவை நமக்கு.

முற்பிறப்பில் செய்த பாவங்கள் தீர்ந்திட
பொற் பதங்களைச் சிக்கெனப் பற்றுவாய்!

தாமரை மலரில் அமர்ந்து கொண்டு அவள்
தங்குகிறாள் வேங்கட நாதனின் மார்பில்.”

லக்ஷ்மியின் திருமந்திரத்தை உபதேசித்தார்.
லக்ஷியத்துடன் அவனை ஜபிக்கச் சொன்னார்.

பய பக்தியுடன் பெற்றான் உபதேசம்-அதை
சுய புத்தி மாறாமல் நடந்தான் உச்சரித்து.

சுவாமி புஷ்கரிணியை அடைவதற்குள்
சுலபமாகி விட்டது அந்த மந்திர ஜபம்.

அனைத்துத் தீர்த்தங்களிலும் மேலான
அந்தத் தீர்த்தத்திலும் நீராடினான் அவன்.

அரிய காட்சி தெரிந்தது அருகே வனத்தில்.
அழகிய விமானத்துடன் ஆலயம் ஒன்று.

மண்டபத்தில் குழுமி இருந்தனர் தேவர்;
கண்டான் ஆலயத்தில் அற்புத தரிசனம்.

சங்கு, சக்கரம், கிரீட, குண்டலங்களுடன்
வேங்கடேசன் இருந்தார் தேவியர்களோடு.

கண் கொள்ளாக் காட்சியில் மெய் சிலிர்த்து
தெண்டனிட்டவன் இருந்தான் தடாகம் அருகே!

குறைவற்ற செல்வம் தேடி வந்தது அவனை!
நிறைவான வாழ்க்கை வாழ்ந்தான் நெடுநாள்.

29. சக்கர ராஜன்

துஷ்டர்கள் சாது ஜனங்களுக்கு நானாவிதக்
கஷ்டங்கள் தந்தனர் முன்பொரு சமயம்.

அசுரர்கள் தபஸ்விக்களின் கர்மங்களைப்
பிசுபிசுக்கச் செய்து துன்புறுத்தி வந்தனர்.

முனிவர்கள் குழுமினர் சேஷாச்சலத்தில்;
கனிவுடன் காட்சி தந்தார் ஸ்ரீனிவாசன்.

துயரப் பட்டியலைக கேட்ட ஸ்ரீனிவாசன்,
அயரவில்லை அதனைக் கேட்டுச் சற்றும்!

“நிர்பயமாகத் தொடருங்கள் பணிகளை;
அபயம் அளிப்பான் இனிச் சக்கர ராஜன்!”

அனல் விழிகளுடன் அவன் வீசிய சக்கரம்
அழகிய ராஜகுமாரனாக உருவெடுத்தது.

“எட்டுத் திசைகளிலும் சென்று வேரறுப்பாய்
துஷ்டர்களைக் கூண்டோடு!” உத்தரவிட்டார்.

பெற்றான் சக்கர வேந்தன் என்ற பெயரை;
பெற்றான் அழகிய ரதத்தை மானசீகமாக.

பெற்றான் வலிய கரங்கள் ஓராயிரம்!
பெற்றான் அரிய ஆயுதங்கள் ஓராயிரம்!

கிழக்குப் பக்கம் சென்றான் அவன் முதலில்;
அழித்தான் துஷ்டரைக் கேசிமலைக் காட்டில்.

தென் கிழக்குப் பக்கம் சென்றான் அடுத்து;
தேடி துவம்சம் செய்தான் துஷ்டர்களை!

தெற்கு நோக்கிச் சென்றான் சக்ரராஜன்;
துடிப்புடன் எதிர்த்து வந்தனர் அவனை

உக்கிராங்கன், அங்கன், புளிந்தன், காலகன்
முக்தாயிகன் என்ற ஐந்து அரக்கர்கள்.

சதுரங்க சேனையுடன் வந்தவர் கண்டனர்
எதிரில் வருபவன் தன்னந்தனியன் என்பதை!

நகைத்தனர் சக்கர ராஜனைக் கண்டு!
பகைவர் வந்து சூழ்ந்தனர் ஒன்று சேர்ந்து!

30. அயி சிரசன்

ஐந்து அசுரர்கள் சூழ்ந்தனர் படையுடன்
அஞ்சா நெஞ்சன் சக்கர வேந்தனை!

ஆயிரம் கரங்களால் எய்தான் பாணங்களை;
ஆயிரம் பாணங்களை விலக்கினான் போரில்.

சக்கரம் போலவே சுற்றிச் சுழன்றான்;
சக்கராஜன் போரிட்டான் அசுரருடன்!

போரினைத் தொடர்ந்தனர் வெகுநேரம்;
சூரியனை மறைத்தது பரவிய புழுதி.

கரங்களால் பொழிந்த சர மழையால்
சிரங்களை அறுத்தான் சக்கர ராஜன்!

அயசிரசன் ஆவான் ஐவரின் தலைவன்;
ஐயுற்றான் ஐவரின் அழிவைக் கேட்டு.

“அழிப்பேன் சக்கரனை!” சபதம் இட்டவன்
அழிவது கண்டான் தன் எஞ்சிய படையும்!

வளைத்துக் கொள்ள ஆணையிட்டான்;
அழிக்கும் அஸ்திரத்தையும் விடுத்தான்.

ஆக்னேய அஸ்திரம் விடுத்தான் சக்கர ராஜன்
அக்னிக்கு முன்னால் நிற்க முடியுமா எதுவும்?

அக்னி அஸ்திரம் அழித்தது பாணத்தை;
அக்னி அஸ்திரம் அழித்து அயசிரசனை!

“யமனிடம் அனுப்புவேன் அவனை!” என்று
போர்க்களம் சூளுரைத்து வந்த அயசிரசன்,

யமனிடம் சென்று விட்டான் தான் அவனே
போர்க்களம் வந்து நாழிகைப் பொழுதில்!

தெற்கு திசையில் அழித்தான் துஷ்டர்களை;
தென் மேற்கிலும் அழித்தான் துஷ்டர்களை;

மேற்கு திசை நோக்கிச் சென்றான்,
மேற்கொண்டு அசுரரை அழிப்பதற்கு!

31. வனகர்த்தன்

மேற்கில் வசித்தான் அசுரன் வனகர்த்தன்,
மேற்கொண்டான் தவம் சிவனைக் குறித்து.

“பிறக்க வேண்டும் புஜபலம் மிகுந்த ஒரு மகன்;
சிறக்க வேண்டும் மூவுலகங்களையும் வென்று!”

காலம் கடந்தது; காட்சி தரவில்லை சிவபிரான்,
ஞாலம் வெல்லும் மகனை விரும்பிய அசுரனுக்கு.

தலையை அறுத்து அக்கினியில் இடும் போது,
பலியைத் தடுத்துத் தரிசனம் தந்தான் சிவன்.

“மனிதரும் தேவரும் வெல்ல முடியாத – வீர
மகன் பிறக்க அருள் புரிவீர்!” என்றான் இவன்.

பெருமிதம் கொண்டான் மகன் பிறந்ததும்;
செருக்கு மிகுந்துவிடத் துன்புறுத்தலானான்.

சாதுகளைத் தாக்கினான் ஈவு இரக்கமின்றி.
பேதமின்றிச் சேதப்படுத்தினான் முனிவரை.

சக்கர ராஜனை எதிர்க்க அனுப்பினான் – ஒரு
சதுரங்க சேனையைத் திரட்டி வனகர்த்தன்.

நெருப்பில் வீழ்ந்த விட்டில்கள் ஆயினர்.
நெருங்க முடியவில்லை சக்கர ராஜனை.

படை அழிந்து விட்டது என்று கேட்டதும்
மடை திறந்து கோபம் பெருக்கெடுத்தது.

ஜ்வால பாதனை அனுப்பினான் போருக்கு.
ஜெயிக்க முடியாத மகனே ஜ்வால பாதன்!

அரசகுமாரன் என்று எண்ணினான் பகைவனை.
அறியவில்லை அவன் சுதர்சனத்தின் உருவென!

அஸ்திரங்கள் பாய்ந்தன இரு திசைகளிலும்;
அஸ்திரங்கள் மாய்ந்தன தாக்கிக் கொண்டபின்.

சக்கர ராஜனின் அஸ்திரம் விரைந்து சென்றது;
மிக்க பலத்துடன் ஜ்வால பாதனை நெருங்கியது.

மாயையால் மறைந்துவிட முயன்ற அசுரனை
மாய்த்தது பாய்ந்து தாக்கிய சக்கரனின் பாணம்!

திரட்டி வந்தான் போரில் சிதறி ஓடிய வீரர்களை.
மரித்தான் தொடர்ந்து நடந்த போரில் வனகர்த்தன்.

32. பேரண்டவன்

வடதிசையில் வாழ்ந்தான் அரக்கன் பேரண்டவன்;
வெடவெடக்கும் அண்ட சராசரம் பேர் கேட்டவுடன்!

பிரம்மாண்டமான சேனை வெள்ளத்துடன் வந்ததும்,
பெருமானை தியானித்தான் சக்கர ராஜன் ஒரு கணம்.

அசுர சேனைக்கு இணையான அரிய சேனை ஒன்று
அதே கணத்தில் தோன்றியது ஆயுதங்களுடன் அங்கு.

கொடிய யுத்தம் தொடங்கி நடந்தது உடனே – போரில்
மடிந்தனர் எண்ணற்ற வீரர்கள் இரு சேனைகளிலும்.

வெற்றியும், தோல்வியும் இன்றி நீண்ட போரில்
வெறி கொண்ட அசுரர்களின் கை ஓங்கலானது.

சக்கர ராஜனின் படை வீரர்கள் பின் வங்கலாயினர்;
மிக்க சினம் கொண்டு அவன் செய்தான் ஹூங்காரம்.

சினத்தில் தோன்றினான் தேவ புருஷன் பாவகன்!
“சின்னா பின்னம் செய்வாய் அசுரர்களை!” என

பாவகன் தலைமையில் பொருதனர் மீண்டும்;
பாய்ந்து முன்னேறிய சக்கர ராஜனின் வீரர்கள்.

பாவகன் மீது பாய்ந்தனர் அசுரர்கள் இப்போது!
பாவகன் எய்தான் மயக்கும் மோகன அஸ்திரம்!

மறந்தனர் தம்மையே; துறந்தனர் போரையே;
எறிந்தனர் ஆயுதங்களை; மறிந்தனர் நிலத்தில்!

பேரண்டவன் எய்தான் ஹாஹாகாரம் செய்தபடி
மோகன அஸ்திரத்தை வெல்லும் ஞான அஸ்திரம்.

தூக்கத்தில் இருந்து எழுபவர்போல மீண்டும்
எழுந்து தாக்கினர் ஆயுதங்களால் அசுரர்கள்.

எய்தான் பாவகன் தன் கிரௌஞ்ச வாளியை!
எய்தான் பேரண்டவன் பைசாச அஸ்திரத்தை!

இரண்டும் தாக்கின அசுரர்கள் படையினையே!
பேரண்டவன் எய்தான் பிரமன் தந்த சூலாயுதம்!

வாயு அஸ்திரத்தை எடுத்து விடுத்தான் பாவகன்;
வாயு அஸ்திரம் வாயுவென விரைந்து சென்றது.

வாரிச் சுருட்டிப் பாய்போல எறிந்தது அசுரனை!
நேரில் பார்த்தவர் வீழ்ந்தனர் வியப்புக் கடலில்!

மண்டை உடைந்து மடிந்தான் அசுரன் பேரண்டவன்;
சண்டை முடிந்து திரும்பி விட்டான் சக்கர ராஜன்.

இனிதாக ஆணைகளை நிறைவேற்றிய பின்னர்
இணைந்தான் ஸ்ரீனிவாசனின் சக்கரத்தில் மீண்டும்.

வேறு புராணங்களில் காணப்பட்ட சில கதைகளின் தொகுதி முற்றியது.

பொங்குக மங்களம்!!! தங்குக எங்கும்!!!

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ விஷ்ணு புராணம் — ஆறாம் அம்சம்- ஸ்ரீ சீதாராம ஸ்வாமிகள் தொகுத்தவை-

February 24, 2023

06_01 கலியுக தர்மம்
ஸ்ருஷ்டி, அரச வம்சங்கள், மன்வந்த்ரங்கள் இவைகளை இதுவரை பராசரரிடமிருந்து கேட்டு மகிழ்ந்த மைத்ரேயர் கல்பத்தின் முடிவில் (ப்ரஹ்மாவின் பகல்) நிகழும் மஹா ப்ரளயத்தைப் பற்றிக் கூறுமாறு கேட்கிறார்.
“க்ருத, த்ரேதா, த்வாபர, கலி என்று யுகங்கள் நான்கு.  மனிதர்களின் ஒரு மாதம் பித்ருக்களுக்கு ஒரு நாள்.  மனிதர்களின் ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு நாள். இப்படி நமது இரண்டாயிரம் சதுர்யுகங்கள் ப்ரஹ்மாவுக்கு ஒரு நாள் (கல்பம்).  ஒவ்வொரு கல்பத்தின் முதல் க்ருதயுகத்தையும், முடிவான கலியுகத்தையும் விட்டு மற்ற சதுர்யுகங்கள் யாவும் அளவு, தர்மாதர்மங்களில் சமமாகவே இருக்கும்” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே மைத்ரேயர் கலியின் லக்ஷணங்களைக் கூறுமாறு கேட்கிறார்.

“கலியுகத்தில் ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்ய, சூத்ர முதலான வர்ணங்களும், அவற்றிற்குரிய ஆசாரங்களும் கெடும்.  நான்கு வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள க்ரியைகள் நடக்காது.  தர்ம விரோதமாகக் கல்யாணங்கள் நடக்கும்.  குரு-சிஷ்ய, கணவன்-மனைவி உறவுகளில் தர்மங்கள் அழியும்.  அக்னி கார்யங்களும், தேவ பூஜைகளும் கெடும்.  பலம் உள்ளவன் அரசனாவான்.  கன்னிகையை மணக்க வர்ணம், ஜாதி, கல்வி, ஒழுக்கம் எதுவும் தேவையின்றி பணமிருப்பவனே வரனாவான்.  ப்ராஹ்மணன் எந்த தகுதியுமின்றி தீக்ஷிதனாவான்.  சாஸ்த்ரங்களில் விதிக்கப்படாத க்ரியைகள் ப்ராயச்சித்தமாக ஏற்கப்படும்.  ப்ரியமான வார்த்தைகளே சாஸ்த்ரங்களாகும்.  அவைதீகமான காளி முதலான தேவதைகளையே அனைவரும் வணங்குவர்.

ப்ரஹ்மசர்ய, க்ருஹஸ்த, வானப்ரஸ்த, ஸன்யாஸ ஆச்ரமங்கள் கெடும்.  வைராக்யமில்லாமலேயே எவரும் எந்த ஆச்ரமத்தையும் கொள்வர்.
சாஸ்த்ரத்தை அனுஸரிக்காமல் தங்கள் இஷ்டப்படி உபவாஸம், தீர்த்த யாத்ரை, தானங்களைச் செய்வர்.  கொஞ்சம் பணம் இருப்பவனும் செருக்கடைவான்.  கூந்தல் அழகை மட்டும் கொண்டே பெண்கள் தங்களை அழகிகளாகக் கர்வம் கொள்வர்.  தங்கம், மணி, ரத்னங்கள், துணி முதலானவை குறைந்து அழிந்து போகும்.  இவைகளின்றி பெண்கள் கூந்தலாலேயே தங்களை அலங்கரித்துக் கொள்வர்.  பெண்கள் பணமில்லாத கணவனை விட்டு, பணம் வைத்திருப்பவனைக் கணவனாகக் கொள்வர்.  நல்ல குடும்பம், ஞானம் இவைகளை விட்டு நிறைய பணம் கொடுப்பவனையே ஆண்டவனாகக் கொள்வர்.  புத்தியை ஆத்ம ஞானம் அடைவதில் செலுத்தாது, எவரும் பணம் சம்பாதிப்பதற்கே செலுத்தி, கிடைத்த பணத்திலும் யாகாதி கர்மங்களைச் செய்யாது வீடு கட்டுவதற்கே செலவழிப்பர்.  அந்த வீடுகளும் அவர்களுக்கும், அதிதிகளுக்கும் பயன்படாத வகையிலேயே இருக்கும்.

அழகான ஆடவர்களையே விரும்பி பெண்கள் வேசிகளாவர்.  அதர்ம வழியில் சம்பாதித்திருந்தாலும், அவனிடமே மக்கள் விரும்பிச் செல்வர்.  நெருங்கிய நண்பன் கெஞ்சிக் கேட்டாலும் சுயநலத்தால் உதவ மாட்டார்கள்.  தாழ்ந்தவர்கள் ப்ராஹ்மணர்களை மதிக்க மாட்டார்கள்.  ஜாதியைக் கொள்ளாது பால் தருவதாலேயே பசுவும் கொண்டாடப்படும்.  மழை பொய்த்துப் போகும்.  இதனால் எவரும் உணவின்றி முனிவர்களைப் போல் வேர், கிழங்கு, கனிகளையே உண்டு பின் அதுவும் கிடைக்காமல் பசியால் தற்கொலை செய்து கொள்வர்.  சந்தோஷமும், சௌக்யமும் ஜனங்களிடையே கெடும்.  எங்கும் பஞ்சமும், துன்பமுமே மிகும்.  ஆசாரங்கள் கெடும், குளிக்காமலேயே சாப்பிடுவர்.  தேவ, பித்ரு, அதிதி பூஜைகள் அழியும்.

பெண்கள் நிறைய உண்டும், மெலிந்தும், பேராசையோடும் இருப்பார்கள்.  நிறைய குழந்தைகள் பிறந்தும் ஏழ்மையில் வாடுவார்கள்.  இரண்டு கைகளாலும் தலையை சொரிந்து கொள்வர்.  மாமனார், மாமியார் வார்த்தைகளைக் கேளார்.  சுயநலமும், கோபமும், தாழ்வு மனப்பான்மையும் மிகுந்து தீய சொற்களையே பயன்படுத்துவர்.  நல்ல குடும்பத்துப் பெண்களும் தீயவர்களிடம் ஆசை கொண்டு தங்கள் கணவனுக்கே பல கெடுதிகளைச் செய்வர்.
ப்ரஹ்மசாரிகள் வ்ரதங்கள், அனுஷ்டானங்களின்றியே அத்யயனம் செய்வர்.  க்ருஹஸ்தர்கள் ஹோம, தானாதிகளைச் செய்யார்.  வானப்ரஸ்தர்கள் காட்டில் கிடைக்கும் கிழங்கு, பழ வகைகளை உண்ணாது அருகிலுக்கும் க்ராமங்களுக்குச் சென்று அங்கு கிடைப்பவைகளை உண்பர்.  ஸன்யாஸிகள் பெற்றோர், உடன்பிறந்தோரை விட்டு வந்தும், புதிதாக நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு அவர்கள் வசமாகி விடுவர்.

அந்யாயமாக வரி என்ற பெயரில் அரசர்கள் பணம் பறித்தும், மக்களை நன்கு போஷிக்க மாட்டார்கள்.  வ்யாபாரிகளின் பணத்தைப் பறித்துக் கொள்வர்.  ஸேனை உள்ளவனே அரசனாவான்.  அரச குலத்தோனும் பலமின்றி ஸேவித்து ஊழியம் செய்வான்.  மேல் வர்ணத்தோர் அவர்களுக்கு அடுத்த தாழ்ந்த வர்ணத்தாரின் தொழிலை மேற்கொள்வர்.  நான்காம் வர்ணத்தவர் மேல் வர்ணத்தாரின் தொழில் செய்து ஜீவிப்பர்.
அரசர்களின் உபத்ரவம் தாங்காது மக்கள் வேறு நீச ராஜ்யங்களுக்கு சென்று வசிப்பர்.  வேத மார்க்கம் மறைந்து பாஷண்டிகள் மலிவர்.  அதர்மம் அதிகரிக்கும்.  முறை தவறிய அரசுகளால் மக்களும் முறை தவறுவர்.  வீணான தவங்களைச் செய்து இளமையிலேயே மரணமடைவர்.  ஆயுசு குறையும்.  பெண்கள் ஐந்து, ஆறு வயதிலேயே குழந்தை பெறுவர்.  ஆண்கள் எட்டு, ஒன்பது வயதிலேயே ப்ரஜா வ்ருத்தி செய்யும் சக்தியைப் பெறுவர்.  பன்னிரண்டாவது வயதில் தலை நரைத்து, இருபது வயதுக்கு மேல் வாழமாட்டார்கள்.

அறிவு குறைந்து, வைதீக வேஷம் அதிகரிக்கும். தீய எண்ணத்தால் விரைவிலேயே மக்கள் அழிவர்.  தர்ம கார்யங்கள் பாதியிலேயே தடைபடும்.  இவைகளாலேயே புத்திசாலிகள் கலி வளர்வதை அறிந்து கொள்வர்.  பாஷண்டிகளால் மதி மயங்கிய மக்கள் விஷ்ணுவை ஆராதிக்க மாட்டார்கள்.
தெய்வம், வேதம், ப்ராஹ்மணர்களால் யாருக்கு என்ன பயன்?  நீரால் செய்யப்படும் புண்யாஹவாசனங்கள் எதற்கு? என்ற கேள்விகள் மிகும்.  மழையும், விளைச்சலும் குறையும்.  கோணி போன்ற ஆடைகளை அணிவர்.  மரங்கள் யாவும் வன்னி மரங்களைப் போல் மலிவடையும்.  யாவரும் சூத்ர ஜாதியைப் போலிருப்பர்.  தான்யங்கள் சிறுத்து விடும்.  பால் நெய் போல இருக்கும்.  சந்தனம் கோரைக் கிழங்கு போலாகும்.  கிடைப்பது அரிதாகும்.  ஆண்கள் மாமனார், மாமியார்களையே மதிப்பர்.  மைத்துனர்களுக்கும், அழகிய மனைவியை உடையவர்களுக்கும் மதிப்பு ஏற்படும்.  யார் தாய்? யார் தகப்பன்? என்று தத்வங்களைக் கூறுவர்.  மனதாலும், வாக்காலும், உடலாலும் தினந்தோறும் மக்கள் பாவங்களையே செய்வர்.  சத்யமும், தூய்மையும், தகாத செயல்களில் வெட்கமும் அழியும்.  தர்மம் எங்கோ ஒளிந்து கொண்டு வசிக்கும்.
இந்தக் கொடுமைகளால், க்ருத யுகத்தில் தவத்தால் அடையும் பயன், கலியுகத்தில் நாம ஸங்கீர்த்தனம் முதலிய சிறு முயற்சிகளிலேயே கிடைக்கும்.

06_02 குறைந்த முயற்சியால் மிகுந்த பலனை எளியோனும் இந்த கலியில் அடையலாம் என்பது குறித்து தன் மகனான வ்யாஸரின் கருத்தை பராசரர் இங்கு விவரிக்கிறார்.
ஒரு ஸமயம் மஹர்ஷிகளிடையே “எந்த காலம் சிறிய தர்மத்திற்கும் பெரும் பலனைக் கொடுக்கும்? அந்த தர்மத்தையும் எளிதில் அனுஷ்டிக்கத் தகுந்தவர் யார்?” என்ற வினா எழுந்தது.  இதற்கு விடையறிய அவர்களனைவரும் வ்யாஸரிடம் சென்றனர்.  அப்போது என் மகனான வ்யாஸர் கங்கையில் மூழ்கியிருந்தார்.  அவர்களும் காத்துக் கொண்டிருந்தனர்.  ஒரு முறை வெளியே வந்த அவர் “சூத்ரன் நல்லவன், கலி நல்லது” என்று கூறி விட்டு மீண்டும் மூழ்கிவிட்டார்.  மீண்டும் வெளியே வந்த அவர் “ஆமாம், சூத்ரனே மிகுந்த புண்யசாலி” என்று கூறினார்.  சிறிது நேரத்தில் மீண்டும் நீரிலிருந்த எழுந்த அவர் “பெண்களே புண்யவதிகள், அவர்களை விட புண்யம் செய்தவர் யாருமில்லை” என்று கூறிவிட்டு மூழ்கினார்.
பின் ஸநானம், அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு வந்த அவரிடம் இந்த மஹர்ஷிகள் “நீங்கள் கங்கையிலிந்து அவ்வப்போது வெளியே வந்து கூறின வார்த்தைகளின் பொருளை அறிய விரும்புகிறோம்.  ரஹஸ்யமில்லையென்றால் அருள வேண்டும்” என்று விண்ணப்பித்துக் கொண்டனர்.  வ்யாஸர் சிரித்துக் கொண்டே “க்ருத யுகம் புண்ய பலனை பத்து வருஷங்களிலும், த்ரேதாயுகம் ஒரு வருஷத்திலும், த்வாபரயுகம் ஒரு மாதத்திலும் தரும்.  ஆனால் கலியோ ஒரே நாளில் தரும்.  அதேபோல் க்ருதயுகத்தில் கடினமான நெடுந்தவத்தாலும், த்ரேதா யுகத்தில் பெரும் யாகங்களாலும், த்வாபரத்தில் பூஜைகள், அர்ச்சனைகளாலும் அடையும் பயனை கலியில் கேசவனின் நாமஸங்கீர்த்தனத்தாலேயே அடைந்து விடலாம், சிறு முயற்சிகளான இந்த காரணங்கள் பற்றியே கலி நல்லது என்று சொன்னேன்.
அவ்வாறே ப்ராஹ்மணனுக்கும் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன.  வேதாத்யயனத்தை முறையோடு செய்து, பின் தர்ம வழியில் பொருளீட்டி, அதை வேதத்தில் விதித்துள்ள கர்மங்களில் டம்பமின்றி செலவிட வேண்டும்.  வீண் பேச்சு, செயல்களில் ஈடுபடாது, ஸதா இறை த்யானத்திலேயே இருக்க வேண்டும்.  உணவையும், நீரையும் கூட இஷ்டப்படி எடுத்துக் கொள்ள சுதந்திரம் இல்லை.  சாத்வீகமான உணவை இறைவனுக்குப் படைத்த பின்பே உண்ண வேண்டும்.  புலனடக்கத்தோடு இருக்க வேண்டும்.  இவர்கள் எப்போதும் இப்படி சாஸ்த்ரங்களுக்குக் கட்டுப்பட்டே இருக்க வேண்டும். இந்த கடும் விதிகளாலேயே அவர்களுக்கு புண்ய லோகங்கள் கிடைக்கின்றன.  இல்லையென்றால் ப்ராஹ்மணன் பாபிஷ்டனாகி, தீண்டத்தகாதவனாகி விடுகின்றான்.
வேளாளர்களுக்கு இப்படி எந்த விதக் கட்டுப்பாடுகளும் இல்லை.  வேதாத்யயனம் இல்லை.  மந்த்ரங்களின்றியே எளிய ஹோமங்களைச் செய்யலாம்.  மேல் வர்ணத்தாருக்குப் பணி செய்தே நல்ல உலகங்களை அடைகின்றனர்.  இதனாலேயே சூத்ரர்களை நல்லவர்கள் என்று கூறினேன்.
பெண்களும் இவ்வாறே.  ஆண்கள் சம்பாதிக்க வேண்டும், அதைக் காக்க வேண்டும்.  பின் ஸத்பாத்ரங்களைத் தேடி அதை செலவிட வேண்டும். இதனாலேயே புருஷர்களுக்கு மேலான லோகங்கள் கிடைக்கின்றன.  ஆனால் அவர்களுக்கு உண்மையாகப் பணிவிடை செய்வதாலேயே பெண்கள் புண்ய லோகங்களைப் பெற்று விடுகின்றனர்.  இதனாலேயே பெண்கள் புண்யவான்கள் என்று கூறினேன்” என்றார் வ்யாஸர்.  இவ்வாறாக தங்கள் ஐயம் தீர்ந்த மஹர்ஷிகளும் வ்யாஸரைப் பூஜித்துப் புகழ்ந்து கொண்டே தங்கள் இடத்திற்குச் சென்றனர்.
இவ்வாறாக கலி ஸ்வரூபத்தை மைத்ரேயருக்கு விளக்கினார் பராசரர்
06_04 இந்த வெள்ளம் ஸப்தரிஷி மண்டலத்தையும் மூழ்கடித்து அப்போது எங்கும் ஒரே ஜல மயமாக இருக்கும்.  அப்போது மஹாவிஷ்ணுவின் முகத்திலிருந்து பெருங்காற்று உண்டாகி இந்த மழை மேகங்களைக் கலைத்து விடும்.  பின் இந்த காற்று நூறு வருஷங்களுக்கு வீசிக் கொண்டிருக்கும்.  பின் இதுவும் விஷ்ணுவிடம் லயித்து விடும்.  அப்போது ப்ரளயக் கடலில் ஆதிசேஷன் மேல் சயனித்துக் கொண்டிருக்கும் ப்ரஹ்மரூபமான மஹாவிஷ்ணுவை ஜன லோகத்திலிருக்கும் ஸனகர் முதலான ஸித்தர்களும், முக்திபெற்று ப்ரஹ்ம லோகத்திலிருப்பவர்களும் வணங்கித் துதிப்பார்கள்.  வாஸுதேவன் என்ற பெயருடன் ப்ரஹ்ம ரூபியான மஹாவிஷ்ணு அப்போது ஆயிரம் சதுர்யுகங்கள் யோகநித்ரையில் இருப்பார்.  இவர் தூங்குவதன் நிமித்தமாக இந்த ப்ரளயம் நிகழ்வதாலேயே இதற்கு நைமித்திக ப்ரளயம் (அவாந்தர) என்று பெயர்.  இந்த இரவு கழிந்து அவர் கண் விழித்து மீண்டும் ஆரம்பத்தில் கூறிய ப்ரகாரம் ஸ்ருஷ்டியைத் தொடங்குகிறார்.
இனி ப்ராக்ருத ப்ரளய வர்ணனை.  நைமித்திக ப்ரளயத்தின் முடிவில் எல்லா லோகங்களும் அழிந்து விட, அதன் பின் மஹாவிஷ்ணு தத்வங்களும் அழியும்படி நினைக்கிறார்.  அப்போது ப்ராக்ருத ப்ரளயம் தொடங்குகிறது.  முதலில் தண்ணீர் நிலத்தின் (ப்ருத்வி) குணமான கந்தத்தைப் (வாஸனை)பறித்து விடும்.  அப்போது தன் குணம் அழியவே நிலம் நீரோடு நீராகி விடும்.  பின் நீரின் குணமான ரஸத்தை (ருசி) நெருப்பு எடுத்துக் கொண்டு விடும்.  அப்போது நீர் முழுதும் வற்றி நெருப்பில் ஒன்றி விடும்.  பின் நெருப்பு தன் குணமான ரூபத்தை வாயுவிடம் இழந்து, அதோடு ஒன்றி விடும்.  பின் அதுவும் தன் குணமான ஸ்பர்சத்தை ஆகாயத்திடம் இழந்து ஆகாயத்தோடு ஒன்றி விடும்.  கடைசியில் இந்த ஆகாயத்தின் குணமான சப்தத்தையும் தாமஸ அஹங்காரம் எடுத்துக் கொண்டு தன்னோடு லயப்படுத்திக் கொள்கிறது.  (இவ்வாறே பஞ்சேந்த்ரியங்கள் ஸாத்விக அஹங்காரத்தில் லயமடைகின்றன)
இந்த அஹங்காரங்கள் பின் மஹத் தத்வத்தில் ஒடுங்குகின்றன.  பின் அதுவும் ப்ரக்ருதியில் ஒடுங்குகிறது.  ஸத்வ, ரஜ, தமோ குணங்கள் சமமாக இருக்கையில் இது ப்ரக்ருதி எனப்படுகிறது.  இது வ்யக்த, அவ்யக்தங்கள் என இரு வகையில் இருக்கும்.  இதில் வ்யக்தம் இறுதியில் அவ்யக்தத்தில் லயப்படும்.  இப்படியே வ்யக்தமான ஜீவனும் முடிவில் அவ்யக்தமான பரமாத்ம ஸ்வரூபத்தில் ஒடுங்கி விடுகிறான்.  இப்படி ஜீவனும், ப்ரக்ருதியும் லயப்பட்ட பரமாத்ம ஸ்வரூபத்தையே வேதங்களும், வேதாங்கங்களும் மஹாவிஷ்ணு என்று அழைக்கின்றன.
வேதம் ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி என இரு வழிகளை போதிக்கிறது.  இவையிரண்டுமே பரமாத்மாவான விஷ்ணுவையே ஆராதிக்கின்றன.  ப்ரவ்ருத்தி மார்க்கத்தில் ருக், யஜுஸ், ஸாம வேதங்கள் இந்த விஷ்ணுவையே யாகங்களில் யக்ஞேச்வரனாக ஆராதிக்கின்றன.  நிவ்ருத்தி மார்க்கமான யோகவழியில் நிலைபெற்ற யோகிகளும் ஞானமாகவும், ஞான மூர்த்தியாகவும், மோக்ஷத்திற்கு அதிகாரியாகவும் இவனையே துதிக்கின்றனர்.  குறில், நெடில் முதலான சொற்களில் அடங்கும் அசேதனப் பொருட்களும், சொல்லில் பொருளாகாத சேதனங்களும் இவனுடைய அவயவங்களே.
இந்த ப்ரமாத்மாவிற்கு இரண்டு பரார்த்தங்கள் ஒரு பகல்.  இப்படி வ்யக்தங்கள் அவ்யக்தத்தில் ஒடுங்கவும், அந்த அவ்யக்தங்கள் ஜீவனில் ஒடுங்கவும், பின் அதுவும் பரமாத்மாவில் ஐக்யப்படவும் ஆகும் காலமான இந்த த்விபரார்த்தங்கள் பரமாத்மாவுக்கு ஒரு இரவாகும்.  கார்யங்களை ஒட்டியே இந்த இரவு, பகல் கணக்குகளேயன்றி புருஷோத்தமனுக்கு இவையெதுவுமில்லை.
06_05 ஆத்யந்திக ப்ரளயம்
மோக்ஷமே ஆத்யந்திக ப்ரளயம்.  ஞானமும், வைராக்யமும் வந்தால்தான் இந்த மோக்ஷத்தை அடைய முடியும்.  நாம் அனுபவிக்கும் விஷயங்களில் இருக்கும் கஷ்டங்களையெல்லாம் அறிந்து கொண்டால் தான் அந்த விஷயங்களையெல்லாம் அதனால் வெறுத்து அவற்றிலிருந்து விடுபட வழி தேடத் தோன்றும்.  ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம் என்ற தாபத்ரயங்களை இதற்கு நாம் அறிந்து கொள்ள வேண்டும்.ஆத்யாத்மிக தாபம் சரீர சம்பந்தமாகவும், மன சம்பந்தமாகவும் வரலாம்.  உடலுக்கு வரும் வ்யாதிகள் சரீர சம்பந்தமான தாபங்கள்.  காம, க்ரோதாதி வ்யாதிகள் மன சம்பந்தமானவை.  இவ்வாறே மற்ற விலங்குகள், பறவைகளால் உண்டாகும் துக்கங்கள் ஆதிபௌதிகம்.  இயற்கையான சீதோஷ்ணங்களால் உண்டாகும் துக்கங்கள் ஆதிதைவிகமாகும்.  இந்த தாபங்கள் கர்ப்ப ஸம்பந்தத்தாலும், நம் வினைகளாலும், அஞ்ஞானம், நரகம் இவைகளாலும் உண்டாகி ஆயிரக்கணக்கில் சூழ்ந்து இருக்கின்றன.கர்ப்பவாஸ துக்கங்கள்
கர்ப்பத்தில் இந்த உயிர் மிகவும் ம்ருதுவான சரீரத்தோடு இருக்கிறது.  மலங்களில் நடுவே தாயின் வயிற்றில் வசிக்கிறது.  உல்பம் என்ற தோல் இதன் உடலை மூடியிருக்கிறது.  முதுகு, கழுத்து எலும்புகள் வளைந்து, கை, கால்களை நீட்ட முடியாமல், மூச்சு விடவும் கஷ்டப்பட்டுக் கொண்டு, இந்த உயிர் அப்போது முடங்கிக் கொண்டிருக்கிறது.  தாயின் உணவில் இருக்கும் காரம், புளிப்புகளால் இது கடுமையாக தாக்கப்படுகிறது.  தன் அறிவைக் கொண்டு தான் செய்த வினைகளாலேயே இப்போது கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பதை அறிந்து மிகுந்த வேதனையோடு இருக்கும்.

பின் ப்ரஹ்மத்தின் காற்றால் மேலும் சரீர எலும்புகள் நொறுங்கும்படி ஒடுக்கப்பட்டு, ப்ரஸவ வாயுக்களால் தலை கீழாக திருப்பப்பட்டு மல, மூத்ர சேற்றுப்பூச்சோடு மிகவும் ச்ரமப்பட்டு தாயின் கர்ப்பத்திலிருந்து வெளியே வந்து விழுகிறது.  துர்நாற்றமுடைய யோனி த்வாரத்திலிருந்து விழும்போது முட்களால் குத்தப்படுவது, வாளால் அறுக்கப்படுவது போன்ற துன்பங்களை அனுபவித்து ஒரு புழு வெளியே வந்து விழுவதைப் போலவே இந்த ஜீவனும் வந்து விழுகிறது.  வெளியே விழுந்ததும் வெளிக்காற்றான சடம் என்ற காற்று பட்டதும் மூர்ச்சையடைந்து கர்ப்பவாஸத்தில் உண்டான விவேகத்தை முழுதும் மறந்து விடுகிறது.

பிறந்தபிறகும் உடல் அறித்தால் சொறிந்து கொள்ள முடியாது.  உடலைத் தன்னிஷ்டப்படி திருப்ப முடியாது. குளிப்பது, குடிப்பது, உண்பது என எதுவும் ஏனையோர் இஷ்டப்படியே.  எண்ணத்தை வெளிப்படுத்தவும் முடியாது.  மல, மூத்ரங்கள் நிறைந்த படுக்கை.  எறும்பு, கொசுக்கள் கடித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

இதன் பின் யௌவனம் வந்த பின்பும் அஞ்ஞானத்தால் அறிவிழந்து சிற்றின்பங்களிலேயே நாட்டம் செலுத்துகிறது இந்த ஜீவன்.  நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எங்கே செல்வேன்? நான் பிறந்த காரணம் என்ன? ஏன் இப்படிக் கட்டுண்டிருக்கிறேன்? காரண, கார்யங்கள் என்ன? எதைச் செய்யலாம்? எதைச் செய்யக் கூடாது? எதைப் பேசலாம்? பேசக்கூடாது? தர்மாதர்மங்கள் எவை? எதில் குணம் உள்ளது? எதில் தோஷம் உள்ளது? இவையெதிலுமே ஆர்வம் செலுத்தாது விலங்குகளைப் போல புணர்வதையும், உண்பதையுமே முக்யமாகக் கொண்டு காலம் கழிக்கிறது இந்த ஜீவன்.  தமோகுணத்தால் வந்த அஞ்ஞானத்தால் கெட்ட கார்யங்களைச் செய்கிறான்.  வைதீக கார்யங்கள் அழிகின்றன.  இதனால் மேலும் புண்ய, பாவங்களைச் சேர்த்துக் கொள்கிறான்.

முதுமை எய்தியதும் உடல் சிதைந்து விடுகிறது.  பற்களும், அவயவங்களும் ஆடி விடுகிறது.  பற்கள் விழுந்தும் விடுகிறது. கண்பார்வை மங்கி, தலை நரைத்து, உடல் சுருங்கி விடுகிறது.  கருவிழிகள் கண்குழிகளில் ஒடுங்கி விடும்.  முதுகெலும்பு வளைந்து, மற்ற எலும்புகள் வெளிப்படையாகத் தெரிய, ஜீர்ண சக்தி குறைந்து, நடக்கவும், படுக்கவும் முடியாமல் துன்படைகிறது இதே ஜீவன்.  எதற்கும் அடுத்தவர் உதவியை நாடி, இந்த்ரியங்கள் செயலிழந்து வார்த்தையும் வெளிவராது அனைவரிடமும் அவமானப்படுகிறான்.  தான் இளமையில் அனுபவித்தவைகளை முன் ஜன்மத்தில் நடந்தவைகளைப் போல நினைக்கிறான்.

மரணத் தருவாயிலும் சிந்தையை மனை, மக்கள், சுற்றம், செல்வம் இவைகளில் செலுத்தி, கவலை கொள்கிறான்.  வ்யாதிகள் ரம்பங்களைப் போலவும், யம பாசங்கள் போலவும் வாட்டி, வதைக்க, கண்கள் சுழல, உடல் உதற, நாக்கு உலரத் திண்டாடுகிறான்.  உதான வாயு மேலெழும்பித் தொண்டையை அடைக்க, நெஞ்சில் கர், கர் எனக் கோழைச் சப்தம் உண்டாகி, யமபடர்கள் பிடித்திழுக்க, பழகிய உடலை விட்டு பெரும் கஷ்டத்தோடு இந்த ஜீவன் மிகுந்த தாபத்தோடும், பசி, தாகத்தோடும் வெளிக்கிளம்புகிறான்.

வெளிக்கிளம்பியதும் தன் தீவினைப்பயன்களை அனுபவிக்க யாதனா சரீரத்தைப் பெறுகிறான்.  யமகிங்கரர்கள் ஜீவனைப் பாசத்தால் கட்டி, தடியால் அடித்து, துன்பங்கள் நிறைந்த பாதையில் நடத்தி யமனிடம் இட்டுச் செல்கிறார்கள்.  பின் காய்ந்த மணலிலும்,  நெருப்பிலும் வாட்டுதல், கத்தி, வாள், கோடரிகளால் பிளப்பது, சூலத்தில் இடுவது, கொடிய விலங்குகளிடம் உணவாக விடுவது எனப் பல வகையில் துன்புறுத்துவர்.  ஸ்வர்க்கத்திற்கு சென்றாலும் புண்ய பலன் தீர்ந்து என்று மீண்டும் பிறந்து துன்பத்தை அனுபவிக்க நேருமோ என்ற நினைப்பிலேயே கிடைக்கும் ஸுக விஷயங்களையும் அனுபவிக்க முடியாமல் தவிக்கிறான்.  பின் மீண்டும் பிறப்பு.  எப்போது இறப்போம் என்பதும் தெரியாது.  இப்படி மீண்டும், மீண்டும் இந்த சக்ரத்தில் ஜீவனுக்கு, எப்படி பருத்திக் கொட்டையை பஞ்சுகள் சூழ்ந்திருக்குமோ அப்படி எங்கும் துன்பமே.  ஸுகம் தரும் என்று நினைக்கும் பல விஷயங்களையும் ஆராய்ந்து பார்த்தால் துன்பமே அதிகம்.

கொடிய ஸூர்யனைப் போன்ற இந்த துக்கங்களிலிருந்து ஜீவன்களுக்கு விடுதலை மோக்ஷமே.  அந்த மரமே ஸம்ஸார துக்கமென்கிற இந்த வெயிலில் வாடிய ஜீவன்களுக்கு நிழல் தந்து ஸுகம் அளிக்கும்.  வேறெங்கும் அது கிடைக்கப் போவதில்லை.  பிறப்பு, இறப்புகளால் உண்டாகும் மூவகைத் துன்பங்களுக்கும் இறைநினைப்பே மிகச்சிறந்த ஒரே மருந்தாகும்.  இறைவனை நினைத்து அனுபவிப்பதில் உண்டாகும் ஆனந்தம் மற்றெதையும் மறக்கச் செய்து விடும்.  துன்பம் சிறிதும் கலவாத அத்தகைய உயர்வுடையது பகவத்ப்ராப்தி.

அதனால் அறிஞர்கள் இந்த ஸுகத்தைப் பெற முயற்சிக்க வேண்டும்.  நம் கார்யங்களால் ஸித்திக்கும் ஆகமஜம், விவேகத்தால் ஸித்திக்கும் விவேகஜம் என்ற இருவகை ஞானமும், அதற்குரிய செயல்களுமே இதை அடையும் வழி.  சாஸ்த்ரங்களைப் படிப்பதாலும், நடைமுறைப்படுத்துவதாலும் கிடைக்கும் ஞானம் விளக்கு போன்றது. இது அஞ்ஞானத்தால் உண்டான இருளைக் களைந்து ஆத்மாவிற்கும், சரீரத்துக்கும் உள்ள வேற்றுமை, ஜீவாத்மா, பரமாத்மாவிற்குள்ள வேற்றுமை, இவைகளின் உண்மை ஸ்வரூபம் முதலியவைகளை விளங்கச் செய்கிறது.  நம் நற்கார்யங்களால் கிடைக்கும் இந்த ஞானம் ஆகமஜம்.  விவேகஜந்ய ஞானம் இதைவிட உயர்ந்தது.  அது ஸூர்யனுக்கு ஒப்பானது.  விளக்கை விட ஸூர்யன் எப்படிப் பொருட்களைத் தெளிவாக நமக்குக் காட்டுமோ அதுபோல இந்த விவேகஜம் அஞ்ஞானத்தை அடியோடு அழித்து விடும்.  இந்த காரணத்தாலேயே மனு ஸ்ம்ருதி வேதார்த்தங்களான உபநிஷத்துகள் போதிக்கும் விவேகஜன்ய ஞானத்தை பரப்ரம்ஹம் என்றே கோஷிக்கிறது.

அதர்வ வேதத்தைச் சேர்ந்த முண்டகோபநிஷத்  விவேகஜன்ய ஞானத்தை பரவித்யை என்றும், ஆகமஜன்ய ஞானத்தை அபர வித்யை என்றும் கூறுகிறது.  பரப்ரஹ்மமான இந்த விவேகஜமே இறைவனாகும்,  ஜீவன்முக்தர்களும் அதுவே.  பகவான் என்ற பதத்திற்குப் பொருள் படைத்து, காத்து, பின் தன்னுள் லயப்படுத்துதலே.  ஸம்ஸ்க்ருத பதமான “பக” என்பது ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்ற ஆறு குணங்களைக் குறிக்கும்.  இந்த குணங்களை உடையவனே பகவான் எனக் குறிக்கப்படுகிறான்.  இந்த சொல்லே முக்தர்களைக் குறிக்கும் போது ப்ரஹ்மத்தை அறிந்தவர் என்ற பொருளில் உபயோகிக்கப்படுகிறது.  வாஸு என்ற நாமம் எங்கும் நிறைந்திருப்பதையும், அவனிடத்திலேயே எல்லாம் வஸிக்கின்றன என்பதையும் குறிக்கும்.

இந்த விஷயத்தை முன்பே ஒரு ஸமயம் கேசித்வஜன் என்பவர் காண்டிக்ய ஜனகருக்கு உபதேஸித்திருக்கிறார்.  இந்த வாஸுதேவன் ப்ரக்ருதியும், அதன் கார்யமான துக்கமும், அஞ்ஞானமும் அற்றவன்.  அவன் அசேதனனுமில்லை, சேதனனுமில்லை.  அனைத்திற்கும் ஆத்மா அவன்.  அனைத்து நற்குணங்களும் நிறைந்தவன்.  தன் சக்தியின் சிறு அம்சத்தாலேயே உலகனைத்தையும் தாங்கக் கூடியவன்.  ஸாது ஸம்ரக்ஷணத்திற்காக தன்னிச்சைப்படியே பல அவதாரங்களை எடுக்கக் கூடியவன்.  உலகிற்கு எல்லா நன்மைகளையும் தருபவன்.  முன்பு கூறிய ஷட்குணங்களின் இடமாய் இருப்பவன்.  கர்மங்களும், அதன் தோஷங்களும் அற்றவன்.  பரப்ரஹ்மமாயிருக்கையில் அவ்யக்தனாக நமக்கு விளங்காதவனாகவும், ராம, க்ருஷ்ணாதி வ்யூஹ நிலைகளில் வ்யக்தமாக நமக்கு விளங்கும்படி இருப்பவனும் இவனே.  ஸர்வக்ஞன், ஸர்வ சக்தன், ஸர்வேச்வரன்.  இவனையே சாஸ்த்ரஞ்ய ஞானம் பொதுவாகக் கூறுகிறது.  விவேகஜம் தெளிவாகக் கூறுகிறது.

06_06  அளவற்ற கல்யாண குணங்கள், செல்வம், திவ்ய மங்கள விக்ரஹங்களையுடைய அந்த இறைவனை நம் ஊணக்கண்களால் அறிய முடியாது.  அதற்கு ஸ்வாத்யாயம், யோகம் என்ற இரு கண்கள் தேவை.  வேதாந்த சாஸ்த்ரம், த்வாதசாக்ஷரீ, ப்ரணவம் முதலிய தத்வங்களை அறிந்து தனதாக்கிக் கொள்வதே ஸ்வாத்யாயம்.  இந்த வாக்ய விசாரங்களால் தத்வங்களை நன்கு அறிந்த பிறகு அந்த ப்ரஹ்மத்தை உபாஸிக்க வேண்டும்.  இந்த உபாஸனையே யோகம்.  இந்த ஞானங்கள் ப்ரஹ்மத்தையே விஷயமாகக் கொண்டிருப்பதாலும், ப்ரஹ்மத்தையே அடைவிப்பதாலும் இவைகளே ப்ரஹ்மம் என்றும் சொல்லப்பெறுகின்றன.  யோகம் செய்ய ஆரம்பித்த பின்பும் அவ்வப்போது சாஸ்த்ரார்த்த சிந்தனையான ஸ்வாத்யாயமும் வேண்டும்.  இவ்விரண்டினுள்ளும் ஸ்வாத்யாயம் ஸாதாரணக் கண்.  யோகம் சிறந்த கண்.  இந்த சிறந்த யோகத்தைத் தனக்கு விரிவாய் விளக்குமாறு மைத்ரேயர் பராசரரை வேண்டிக் கொள்ள அவர் இது ஸம்பந்தமாக கேசித்வஜருக்கும் சாண்டிக்ய ஜனகருக்கும் நடந்த ஸம்வாதத்தைக் கூறுகிறார்.

ஜனக வம்சத்தில் தர்மத்வஜர் என்ற ஜனகர் ஒருவர் இருந்தார்.  அவருக்கு மிதத்வஜர், க்ருதத்வஜர் என்ற இரு பிள்ளைகள் இருந்தனர்.  இவர்களில் க்ருதத்வஜர் எப்போதும் வேதாந்த விசாரம் செய்து கொண்டு, மகிழ்ந்திருப்பார்.  மிதத்வஜர் கர்ம மார்க்கத்தில் அரசாண்டு கொண்டிருந்தார்.  க்ருதத்வஜருக்கு கேசித்வஜர் என்ற மகனும், மிதத்வஜருக்கு காண்டிக்யரும் பிறந்தனர்.  இருவரும் அவரவர் தந்தை வழியில் சிறந்தவர்களாக இருந்தனர்.  ஒரு ஸமயம் இவர்களிடையே பகை மூண்டு, அதில் கேசித்வஜர் வென்று, காண்டிக்யரை ராஜ்யத்திலிருந்து விரட்டி விட்டார்.  காண்டிக்ய ஜனகர் தன் மந்த்ரி, புரோஹிதருடன் காட்டிற்கு சென்று வஸிக்கலானார்.

ப்ரஹ்மத்தை உபாஸித்துக் கொண்டே ராஜ்ய பரிபாலனம் செய்து வந்த கேசித்வஜர் தன் தீவினைகள் தீர பல யாகங்களையும் செய்து வந்தார்.  அப்படி ஒரு ஸமயம் யாகம் செய்து கொண்டிருக்கையில், அதற்கு பால் தரும் அவருடைய பசுவை காட்டில் புலி ஒன்று கொன்று விட்டது.  இந்த யாகம் இப்படித் தடைபட்டதற்குக் கவலைப்பட்ட கேசித்வஜர் அதற்கான ப்ராயச்சித்தத்தை ருத்விக்குகளிடம் கேட்டார்.  அவர்கள் தங்களுக்கு அதுபற்றி தெரியவில்லை என்றும், கசேரு என்பவர் அறிவார் என்றனர்.  கசேரு தனக்கும் தெரியாது என்று கூறி பார்க்கவர் என்பவரிடம் கேட்குமாறு கூறினார்.  பார்க்கவர் சுனகர் என்பவரிடம் கேட்குமாறு கூறினார்.  அவர் அரசரிடம் தங்கள் யாருக்கும் தெரியாது என்றும், அரசரால் தோற்கடிக்கப்பட்டு, ஓடிய காண்டிக்ய ஜனகரே இந்த விஷயம் தெரிந்தவர் என்றும், விருப்பமிருந்தால் அவரிடமே சென்று கேட்டுக் கொள்ளும் என்று கூறிவிட்டார்.

“தர்மகார்யம் செய்து கொண்டிருக்கும்போது ஒருவன் மரணமடைந்தால் அவன் தர்ம பலனைப் பெற்று விடுகிறான் என்றே சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.  எனவே தவறாகப் புரிந்து கொண்டு, ப்ராயச்சித்தம் கேட்க வரும் நம்மைக் காண்டிக்யர் கொன்று விட்டாலும், நமக்கு ஒரு குறையுமில்லை.  யாகப்பலன் கிடைத்து விடும்.  இல்லாது ப்ராயச்சித்தத்தைக் கூறினாலோ யாகம் நிறைவேறி விடும், ஆகவே எது நடந்தாலும் பிழையில்லை” என ஒரு நிமிஷம் இதை யோசித்த கேசித்வஜர், பின் தன் சத்ருவான அவரிடத்திலேயே ப்ராயச்சித்தம் அறிந்து கொள்ள முடிவு செய்து அவரிடம் சென்றார்.

மான்தோலைப் போர்த்திக் கொண்டு தன்னை நோக்கி காட்டில் வந்து கொண்டிருக்கும் கேசித்வஜனைக் கண்டதும்,  காண்டிக்யரின் கண்கள் சிவந்தன.  வில்லில் நாணேற்றி, பாணத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்.  கேசித்வஜனை நோக்கி “அடே மூடா! உன் வேஷத்தில் நான் ஏமாறுவேன், அப்போது என்னைக் கொன்று விடலாம் என்று நீ நினைக்கிறாய். நீ க்ருஷ்ணாஜினம் தரித்துக் கொண்டு வந்தாலும் நான் ஏமாற மாட்டேன்.  உன்னைக் கொல்லவே செய்வேன்.  நானும், நீயும் சேர்ந்து எத்தனை மான்களைக் கொன்றுள்ளோம், அவைகள் க்ருஷ்ணாஜினம் போர்த்திக் கொண்டிருக்கவில்லையா?  என் ராஜ்யத்தைப் பறித்துக் கொண்ட நீ எனக்கு ஆததாயீ ஆவாய்.  உன்னைக் கொல்வதில் ஒரு தவறுமில்லை, என் கையில் நீ இறப்பது நிச்சயம்” என்று கூறினார்.

கேசித்வஜர் சிரித்துக் கொண்டே “காண்டிக்யரே! நாம் உம்மிடம் ஒரு ஸந்தேஹத்தைத் தீர்த்துக் கொள்ளவே வந்துள்ளேன்.  கொல்ல வரவில்லை.  இதையறிந்த பின் நீங்கள் கோபத்தையோ அல்லது பாணத்தையோ விடுங்கள்” என்றார். உடனே தன் மந்த்ரிகளுடன் இதை ஆலோசித்தார் காண்டிக்யர்.  மந்த்ரிகள் பகைவன் சிக்கியிருக்கும்போதே அவனைக் கொன்று விட்டால் ராஜ்யம் மீண்டும் வசமாகிவிடுமாதலால், அவனைக் கொன்று விடுவதே நல்லது என்று கூறினர்.  ஆனால் காண்டிக்யர் “இவனைக் கொன்று நான் இந்த ராஜ்யத்தை அடைந்தால் இவனுக்கு பரலோகம் வசமாகும்.  நான் இவனைக் கொல்லாது விட்டால் எனக்குப் பரலோகமும், இவனுக்கு பூலோகமும் கிடைக்கும்.  பூலோகஜயம் குறுகிய காலத்திற்கே ஸுகத்தையளிக்கும்.  பரலோகஸுகமோ நீண்ட காலத்திற்காகும்.  ஆகவே நான் பரலோகத்தையே பெறுவேன்.  இவனைக் கொல்ல மாட்டேன்” என்று கூறினார்.

அப்படியே கேசித்வஜருக்கு நேர்ந்ததற்கான ப்ராயச்சித்தத்தை விரிவாகக் கூறி, அவர் யாகம் முடிப்பதற்கான உதவியைச் செய்தார்.  ஆனால் யாகம் நன்கு முடிந்த பின்பும் கேசித்வஜருக்கு மனம் சந்தோஷமாயில்லை.  குழப்பமாகவே, நிம்மதியின்றியே இருந்தது.  யோசித்துப் பார்த்தார்.  “ப்ராஹ்மண பூஜைகள் நன்கு நடந்தன.  பொது மக்களுக்கும் வேண்டியவைகள் செய்யப்பட்டன.  யாசகர்களும் சந்தோஷமாகவே சென்றனர்.  எல்லாருக்குமே தகுந்த முறையில் உபசாரம் செய்தோம்.  இருந்தாலும் ஏதோ ஒன்றை விட்டு விட்டதாகவே தோன்றுகிறதே” என்று சிந்திக்கலானார்.  இறுதியில் ப்ராயச்சித்த உபதேசம் செய்த காண்டிக்ய ஜனகருக்கு குருதக்ஷிணை என்று ஒன்றும் தரவேயில்லை என்பது நினைவிற்கு வந்தது.  மீண்டும் காட்டிற்கு ஓடினார்.

தன்னைப் பார்த்ததும் மீண்டும் கோபமடைந்த காண்டிக்யரிடம் தான் வந்த காரணத்தைக் கூறினார் கேசித்வஜர்.  காண்டிக்யர் உடன் மந்த்ரிகளிடம் கலந்தாலோசித்தார்.  அவர்கள் மீண்டும் ராஜ்யத்தையே கேட்டுப் பெறுமாறு கூறினர்.  “மந்த்ரிகளுக்கு செல்வம் சேர்ப்பதைத் தவிர வேறென்ன வேலை” என்று அவர்களிடம் கூறிச் சிரித்தார்.  பின் அவர்களிடம் நிலையான மோக்ஷத்தை விளக்கி விட்டு, கேசித்வஜரிடம் ஸம்ஸார துக்கத்தைப் போக்கும் அத்யாத்ம வித்யையான யோக மார்க்கத்தைத் தனக்கு உபதேசிக்குமாறு கேட்டுப் பெற்றார்.

06_07 குருதக்ஷிணையாக, கேட்பதையெல்லாம் தருவதாகக் கூறிய தன்னிடம் யோகமார்க்கத்தை மட்டுமே உபதேசிக்குமாறு கேட்ட காண்டிக்ய ஜனகரைக் கண்டு பெரு வியப்புடன் “அரசர்கள் ராஜ்யத்தையல்லவா விரும்புவர்? அதுவும் சண்டை, எதிரிகள் இன்றி எளிதில் கிடைக்கும் ராஜ்யத்தை யாராவது மறுப்பார்களா?  நீர் ஏன் ராஜ்யத்தைக் கேட்கவில்லை?  அதுவும் ராஜ்யபரிபாலனம் நமது தர்மமாயிற்றே? ஸ்வதர்மத்தை விடுவது குற்றமல்லவா?” என்று கேட்கிறார் கேசித்வஜர்.  தான் ஏன் அந்தப் பெரும் ராஜ்யத்தை விரும்பவில்லையென்பதை என்று பின்வருமாறு பதிலுரைக்கிறார் காண்டிக்யர்.

“இந்த அரசை அறிவுள்ளவர்கள் விரும்ப மாட்டார்கள்.  நீர் கூறியது சரியே.  க்ஷத்ரியர்களுக்கு ராஜ்ய பரிபாலனமும், தர்மயுத்தங்களும் ஸ்வதர்மமே.  சக்தியிருந்து என் தர்மத்தை நான் விட்டிருந்தால் அது குற்றமே.  ஆனால் அதற்கு எனக்கு சக்தியும் இல்லை, ஆசையும் இல்லை.  ஆகையால்தான் நீங்களும் அதை பறித்துக் கொண்டீர்கள்.  எனவே இதில் என் குற்றம் எதுவுமில்லை. எனக்கும், என் மந்த்ரிகளுக்கும் இந்த ராஜ்யத்தில் தர்மத்தைக் காரணமாகக் கொண்டு ஆசை வரவில்லை.  எனக்கு வந்த ஆசை முன் ஜென்ம கர்மபலன்களை அனுபவிப்பதற்காக வந்தது.  மந்த்ரிகளுக்குள்ள ஆசை ராகத்வேஷங்களால் வந்தது.  எவருக்குமே தர்ம பரிபாலனம் செய்வதற்காக இந்த ராஜ்யத்தில் ஆசை வரவில்லை.

மேலும் நான் இப்போது ராஜ்யபரிபாலனம் செய்ய வேண்டுமானால் உம்மிடம் இந்த ராஜ்யத்தை யாசிக்க வேண்டும்.  க்ஷத்ரியர்கள் யாசிக்கக் கூடாது என்கிறது சாஸ்த்ரம்.  எனவேதான் நான் இதை விரும்பவில்லை.  மேலும் பகுத்தறிவு இல்லாதவர்களே பெரும்பாலும் இந்த ராஜ்யங்களை விரும்புவர்.  நான், எனது என்று மதிமயங்கி இருப்பார்கள்.  என் போன்ற விவேகிகள் இதை மதிக்க மாட்டார்கள்” என்று கேசித்வஜ ஜனகருக்கு, காண்டிக்ய ஜனகர் கூறினார்.  இதைக் கேட்டு மகிழ்ந்த கேசித்வஜரும் காண்டிக்யருக்கு யோக மார்க்கத்தை பின்வருமாறு உபதேசிக்கிறார்.

ஸம்ஸாரத்தில் உள்ள துன்பங்களுக்குக் காரணங்களைக் கூறி, அவைகளை விலக்குவதற்கான வழிகளையும் கூறுகிறார்.  “யோகம் செய்பவர்கள் முதலில் பரமாத்மா, ஜீவாத்மாவின் ஸ்வரூபங்களை பகுத்தறிய வேண்டும்.  வர்ணாச்ரம தர்மங்களையும் ஒரு அங்கமாகவே செய்து வர வேண்டும்.  காண்டிக்யரே! நானும் அவ்வாறே இந்த ப்ரஜா பரிபாலனம், யாகம் முதலியவைகளைச் செய்து வருகிறேன்.  இதனால் பாவங்கள் அழிந்து, உபாஸனம் நன்கு வளர்கிறது.  ஸுகங்களை அனுபவிப்பதால் புண்யபலனையும் அழித்து வருகிறேன்.  பாவ, புண்யங்கள் இரண்டுமே உபாஸனம் செய்பவனுக்கு விரோதிகளாதலால் இரண்டையுமே அவன் போக்கிக் கொள்ள வேண்டும்.  இப்படிக் கடினமான வழிகளால் தான் நானும் ரஜ, தமோ குணங்களை ஒழித்து, ஸத்வ குணத்தால் அறிவை வளர்த்துக் கொள்கிறேன்.

உங்கள் மனமோ இயற்கையாகவே விவேகத்துடன் விளங்குகிறது.  இப்போது அவித்யையின் ஸ்வரூபத்தைக் கூறுகிறேன், கேளும்.  பலன்களில் பற்று கொண்டு செய்யப்படும் கர்மாக்கள் அவித்யை என்று அறியப்படுகிறது.  இந்த காம்ய கர்மாவாகிய மரத்தை வளர்ப்பதால் ஸம்ஸாரம் என்ற பலன் உண்டாகிறது.  இதற்கு இரண்டு காரணங்கள்.  ஒன்று ஆத்மாவை விட்டு சரீரத்தையே ஆத்மாவாக நினைப்பது.  மற்றொன்று ஆத்ம வளர்ச்சிக்கு உதவாமல், இந்த சரீரத்தை மட்டுமே வளர்க்கும் உணவு, நீர், மனை, மக்கள் முதலானவைகளைத் தனதாக நினைத்துக் கொள்வது. இவ்விரண்டுமே ப்ரமைகள்.

இந்த சரீரம் பஞ்ச பூதங்களாலானது.  ஆத்மாவோ பஞ்சபூதங்களிலிருந்து வேறுபட்டு நிற்பது.  ஆனால், மூடர்கள் அனாத்மாவான இந்த சரீரத்தையே நான் என்றும், சரீர ஸுக, துக்கங்களுக்கு உண்டான உணவு, நீர், மனைவி, மக்கள் இவைகளை என்னுடையவை என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.  இப்படி இந்த ஜீவாத்மா முன் ஜென்ம கர்ம வினைகளால் எல்லா விஷயங்களிலும் இருளில் மூழ்கிக் கிடக்கிறான்.  உண்மையை அறிந்து கொள்ளாமல் இந்த ப்ரமைகளால் சரீர ஸுகத்திற்கான கார்யங்களையே செய்து வருகிறான்.  அவித்யையான இந்த கர்மாக்களால் மறுபடி ஸம்ஸாரமே உண்டாகிறது.

மண்ணாலான வீட்டுச் சுவர்களை மீண்டும் மண்ணைக் கொண்டே பூசி, மெழுகி உறுதி செய்து கொள்வது போலவே, பஞ்ச பூதங்களாலான இந்த உடலையும் உணவு, நீர் இவைகளைக் கொண்டே காத்து வளர்த்துக் கொள்கிறோம்.  பஞ்ச பூத மயமான இவைகளால் உடல் வளர்ந்து உறுதி பெறுமேயல்லாது, ஆத்மாவிற்கு ஒரு ப்ரயோஜனமுமில்லை.  ஆத்ம வளர்ச்சிக்கு உபாஸனமே வழியாகும்.  மேலும், ஆயிரக்கணக்கில் பிறவிகளை உடைய ஸம்ஸார வழியில் வந்த இந்த ஜீவன் அஞ்ஞானம் மற்றும் கர்ம வாஸனைகள் என்ற புழுதியால் துக்கங்களையே பெறுகிறான்.

உடலின் புழுதியையும், ச்ரமங்களையும் வெந்நீர்க் குளியல் எப்படிப் போக்கி ஸுகத்தைத் தருமோ, அப்படியே, வருந்தும் இந்த ஆத்மாவின் அஞ்ஞான, மோஹங்களால் உண்டாகும் துக்கங்களையும் தத்வ ஞானம் போக்கும்.  மோஹம் தொலைந்தால் ஜீவன் தன்னிலையில் இருப்பான்.  பின் ஒப்புயர்வற்ற மோக்ஷ ஸுகத்தையும் அடைகிறான்.  ஜீவன் குற்றமற்ற ஆனந்த ஸ்வரூபமே. மோக்ஷமும், ஞானமும் ஜீவன்களுக்கு இயல்பாகவே உள்ளவை,  கர்ம பலன்களைப் போல் அவை புதிதாக உண்டானவைகளல்ல.

ஆனந்த மயனான இந்த ஆத்மாவுக்கு ஸம்ஸாரத்தில் உண்டாகும் துக்கமும், அஞ்ஞானமும் இயல்பான குணங்காளாகாது.  அவை ப்ரக்ருதியின் ஸம்பந்தத்தால் வந்தவையே.  தண்ணீர் இயற்கையில் குளிர்ச்சியாகவும், பொங்காமலும், சப்தமில்லாமலும் இருக்கிறது.  ஆனால் அது தங்கியிருக்கும் பாத்ரத்திற்கு அக்னி ஸம்பந்தம் ஏற்பட்டால், அது சூடாகிறது, சப்தத்தை உண்டாக்குகிறது, பொங்கவும் செய்கிறது.  தண்ணீருக்கும் அக்னிக்கும் நேரில் ஸம்பந்தமும் கிடையாது,  அது அந்த பாத்ரத்தில் தங்கியிருப்பதால் தான் இந்த மாறுபாடுகளை அடைகிறது.  ஆனந்த ஸ்வரூபமான ஆத்மாவும் இந்த ஜலம் போன்றதே.  ப்ரக்ருதி பாத்ரம் போன்றது.  இந்த ப்ரக்ருதியுடனே தாப த்ரயங்கள் (ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம்)  நெருப்பு போல ஸம்பந்தப்படுகின்றன.  இதனாலேயே  ஆத்மாவும் அஞ்ஞானம், துக்கம், பசி, தாகம் முதலான மாறுதல்களை அடைகிறது.  ஆனாலும் ஆத்மா நித்யமானது.

இப்படி அவித்யைக்குக் காரணமான இருவகை ப்ரமைகளும், அதனால் வரும் துன்பங்களும் அழிவதற்கு உபாஸனம் ஒன்றே வழி.  அந்த யோகத்தைப் பற்றிக் கூறுகிறேன், கேளுங்கள்.  யோகத்தில் உள்ளவன் இந்த ஸம்ஸாரத்தை அடைவதில்லை.  இந்த மோக்ஷத்தை அடைவதற்கு முக்ய காரணம் மனம்.  இந்த மனம் வேறு விஷயங்களைப் பற்றியிருக்கும் போது அது ஸம்ஸாரத்திற்குக் காரணமாகிறது.  அவைகளில் பற்றாமலிருந்தால் அதுவே மோக்ஷத்திற்குக் காரணமாகிறது.  ப்ரக்ருதி, ஜீவன், ஈச்வரன் இம்மூன்று விஷயங்களைப் பகுத்தறிந்தவன் இதில் வென்று மனதை ப்ரஹ்மத்திடம் செலுத்த வேண்டும்.  அப்படிச் செய்தால் அந்த ப்ரஹ்மம் அவன் அழுக்குகளைப் போக்கி, தன்வயப்படுத்திக் கொள்கிறது.  காந்தமும், அக்னியும் தன் அருகில் இருப்பவைகளை எப்படி தன்னிடம் இழுத்துக் கொள்கிறதோ, சுத்தப்படுத்துகிறதோ அதைப் போலவே ப்ரஹ்மமும் தன்னை த்யானிப்பவனைச் செய்கிறது.

இப்படி பற்பல விஷயங்களிலேயே சுழன்று கொண்டிருக்கும் மனதை இதுவரை நினைத்துப் பார்க்காத இந்த விஷயத்தில் திருப்ப பெரு முயற்சி செய்ய வேண்டியிருக்கும்.  இறை த்யானத்தின் நடுவில் வேறு நினைவொன்றும் புகாதவாறு அவனை ஸ்மரிக்க வேண்டும்.  இந்த ஸ்ம்ருதியே ஒரு நிலையில் ஆனந்தமாகும்.  இறைவனிடம் நம்மை சேர்ப்பிக்கும்.

இந்த யோகம் யம, நியம, ஆஸன, ப்ராணாயாம, ப்ரத்யாஹார, தாரண, த்யான, ஸமாதி என்று எட்டு அங்கங்களுடன் கூடியது.  இதில் முதல் நிலையிலுள்ளவன் யுஞ்ஜானன் என்று அறியப்படுகிறான்.  ஸமாதி கைகூடியவன் விநிஷ்பன்னஸமாதி என்றும் யோகி என்றும் அழைக்கப்படுகிறான்.  த்யானம் வரை அடைந்தவன் யோகயுக் எனப்படுகிறான்.  இதில் யுஞ்ஜானன் பயிற்சியின் போது இடையூறுகள் வந்து மனம் வேறு வழிகளில் சிதறுமாயின் மேலும் பல பிறவிகள் யோகம் செய்து அதன் பிறகே மோக்ஷத்தை அடைகிறான்.  யோகி அவன் பாவங்கள் அனைத்தையும் த்யானத்தின் போதே போக்கிக் கொண்டு விடுவதால் அந்தப் பிறவியிலேயே மோக்ஷத்தை அடைந்து விடுகிறான்.

இந்தப் பயிற்சியிலுள்ளவன் தன் தகுதியை உறுதி செய்து கொள்ள ப்ரஹ்மசர்யம், அஹிம்ஸை, ஸத்யம், திருடாமை, தானம் வாங்காமை என்ற யமத்தின் அங்கங்களையும், ஸ்வாத்யாயம் (வேதமோதுதல்), தூய்மை, ஸந்தோஷம், தவம் முதலான நியமத்தின் அங்கங்களையும் பலனைச் சிறிதும் கருதாமல் ப்ரஹ்மத்தில் மனதை வைத்துச் செய்து வர வேண்டும்.  இதன் பின் அவன் யோகாஸனங்களில் ஒன்றில் இருந்துகொண்டு பயிற்சியைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.  இதையடுத்த ப்ராணாயாமம் என்பது ப்ராண வாயுவை பயிற்சியின் மூலம் வசப்படுத்துதல்.  அதை ஒரு இறையுருவை த்யானித்து, மந்த்ர ஜபங்களோடு செய்தால் ஸபீஜம் என்றும், இல்லையேல் அபீஜம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ப்ராணாயாமம் பூரகம், கும்பகம், ரேசகம் என்ற மூன்று அங்கங்களுடையது.  காற்றை மூக்கு, வாய்களால் வெளியே மட்டும் விடுவது ரேசகம், உள்ளே இழுப்பதை மட்டும் செய்வது பூரகம், காற்றை வெளியேயும் விடாமல், உள்ளேயும் இழுக்காமல் ஹ்ருதயத்திலேயே நிறுத்துதல் கும்பகம். இதையடுத்த ப்ரத்யாஹாரம்
என்பது இந்த்ரியங்களை வெளியே நாட்டம் காட்ட விடாது, இறை வழிபாட்டில் திருப்பி விடுவது.  இப்படி ப்ராணனையும், இந்த்ரியங்களையும் வசப்படுத்தி விட்டால் அதன் பின் இறையுருவை மனதில் நிலை கொள்ளச் செய்ய வேண்டும்.  அது தாரணையாகும்.

இந்த தாரணை மூர்த்தம், அமூர்த்தம் என்று இரு வகையாகும்.  சரீரத்தோடு கூடின ப்ரஹ்ம ஸ்வரூபத்தை மனதில் கொள்ளும் மூர்த்தம் அபரம் என்றும், மூர்த்தியற்ற ஸ்வரூபத்தை எங்கும் காணும் அமூர்த்தம் பரம் என்றும் அழைக்கப்படுகிறது.  இந்த தாரணை ப்ரஹ்ம பாவனை, கர்ம பாவனை, உபய பாவனை என்று மூன்று பாவனைகளோடு விளங்குகிறது.  எப்போதும் ப்ரஹ்மத்தையே நினைத்துக் கொண்டிருத்தல் ப்ரஹ்ம பாவனை.  நாம் செய்யும் கர்மாக்களையே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பது கர்ம பாவனை.  ப்ரஹ்மத்தையே ஸதா சிந்தித்துக் கொண்டு கர்மாக்களைச் செய்து கொண்டிருப்பது உபய பாவனை.

சரீரத்தைக் கொண்டே தேவ, மனுஷ்ய வேறுபாடுகள் வருகின்றன.  ஜீவனுக்கு இது உண்மையில் கிடையாது.  இதை அறியாத வரையில் மூர்த்த ப்ரஹ்மமும் இருக்கும்.  அமூர்த்த ப்ரஹ்மத்தில் சரீரம் கிடையாது.  எனவே ஜாதி, அழிவு முதலிய பேதங்களும் அங்கில்லை.  அது ஞானத்தை முக்யமாகக் கொண்டு ஸ்வயம் ப்ரகாசமாய் இருப்பது.  இந்த பரப்ரஹ்மத்தை யோகத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவனால் சிந்திக்க முடியாது.  அவனுக்கு முதலில் மூர்த்த ப்ரஹ்மமே சிந்திக்க இயல்பானது.  அப்போது தேவ, கந்தர்வ, தானவ, யக்ஷ முதலான தேவ ஜாதிகளும், மனுஷ்யர்கள், பசுக்கள், மலைகள், கடல்கள், நதிகள், மரங்கள், கொடிகள் என அனைத்து ரூபங்களும், அதன் காரணங்களும், ஒன்று, இரண்டு என பல பாதங்கள் உள்ளவையும், பாதங்கள் அற்றவையும் மஹாவிஷ்ணுவின் ஸ்வரூபமே.

இந்த மூர்த்தம் முன் கண்ட பாவனைகளோடு இருப்பதால் இது சுபத்தைத் தரப்போவதில் சிறந்ததில்லை.  இந்த ப்ரபஞ்சம் விஷ்ணு சக்தியால் வ்யாபிக்கப்பட்டிருக்கிறது.  இதுவே முக்த ஸ்வரூபத்தில் பரசக்தியாகவும், பக்தஜீவர்களின் ஸ்வரூபத்தில் க்ஷேத்ரக்ஞ சக்தியாகவும்,  வேத விஹிதமான கர்மசக்தியான அவித்யையாகவும் மூன்று விதத்தில் பிரிந்திருக்கிறது.  கர்மசக்தியான அவித்யையால் க்ஷேத்ரக்ஞர்கள் மறைக்கப்பட்டு அவரவர் சரீரத்திற்கேற்றார்ப்போல் அறிவு, சுக, துக்கம் முதலியவற்றில் ஏற்றத் தாழ்வுகளை அடைகின்றனர்.

உயிரில்லாத பாறை, மரக்கட்டைகளில் இருக்கும் ஜீவன் அறிவையும், ஆனந்தத்தையும் மிகவும் குறைவாகவே பெறுகிறது.  தாவரங்கள் இவைகளை விட கொஞ்சம் அதிகமாக பெறுகின்றன.  இப்படி பாம்பு முதலான ஊர்வனவைகள், பின் பறப்பனவைகள், ம்ருகங்கள், மனிதர்கள், தேவர்கள், தேவராஜன், ப்ரஜாபதி, ஹிரண்யகர்பன் என வரிசைப்படி ஜாதிகள் ஒன்றை விட ஒன்றாக ஞானம், ஆனந்தம் இவைகளை அதிகமாகக் கொண்டுள்ளன.  நல்ல விலை கொடுத்து வாங்கும் உடை எப்படி சிறந்திருக்கிறதோ அப்படியே இந்த ஞானம், ஆனந்தத்தின் அளவுகள், செய்யும் நல்ல கர்மாக்களின் அளவைக் கொண்டே அமைகின்றன.  இதனால் அந்தந்த சரீரங்களும், அதைச் சார்ந்து இருக்கும் ஆத்மாவும் அமைகின்றன.

மஹாவிஷ்ணுவின் அமூர்த்தமான ரூபமே ஸத் என்று பண்டிதர்களால் அழைக்கப்படுகிறது.  அதை யோகத்தில் தேர்ச்சி பெற்றவனே சிந்திக்க முடிகிறது.  அந்த அமூர்த்த ப்ரஹ்மம் கீழ் கண்ட மூவகை சக்திகளுக்கு இருப்பிடமாகவும், விவரிக்கப்பட்ட ப்ரபஞ்சத்தை விட வேறாகவும் இருக்கிறது.  அதிலிருந்து கொண்டே மஹாவிஷ்ணு பலவகை ரூபங்களில் அவதரிக்கிறான்.  உபேந்த்ரனாக அவதரித்து தேவ கர்மாக்களையும், மீன் முதலானவைகளாக அவதரித்து விலங்குகளின் செயல்களையும், ராம, க்ருஷ்ண அவதாரங்களில் மனுஷ்ய செயல்களையும், நரஸிம்ஹமாக அவதரித்து இடைப்பட்ட செயல்களையும் இந்த அமூர்த்த ப்ரஹ்மமே செய்தது.

இந்த அவதாரங்களும், அவைகளும் செயல்களும் நம்மால் அளவிட முடியாதவை.  அவை எந்தப் பலனையும் கருதி செய்யப்பட்டவை அல்ல.  எந்த கர்மத்தின் பலனாகவும் நடந்தவை அல்ல.  அவை லோக உபஹாரமாக நடந்தவையே.  இந்த ரூபத்தையே யோகி பயிற்சி செய்ய வேண்டும்.  எப்படி நெருப்பு கிளம்பினால் சுற்றியிருக்கும் எரித்து விடுமோ, அப்படியே இந்த ஸ்வரூபமும் யோகியின் மனதில் நிலைபெற்றால் அவனது பாவங்கள் அனைத்தையும் ஸம்ஹரித்து விடும்.  இதுவே தாரணை.  சுபத்தைக் கொடுப்பதாலும், தாரணைக்கு ஆதரவாக (ஆச்ரயம்) இருப்பதாலும் இந்த அமூர்த்த ஸ்வரூபமே ஸுபாச்ரயம்.  பக்தர்களின் ஸ்வரூபம் தாரணைக்கு ஆச்ரயமாக இருந்தாலும் அவை கீழ்க்கண்ட மூவகை பாவனைகளோடு இருப்பதால் அவை சுபமாயிருப்பதில்லை.  விஷ்ணுவின் இந்த அமூர்த்த ஸ்வரூபமே இந்த இரு குணங்களோடும் இருப்பதால் அதுவே சுபம்.

எங்கெங்கோ அலைந்து, எதையெதையோ பற்றிக்கொண்டிருக்கும் மனதிற்கு பற்றுக் கோடாக இருப்பதும், ஸம்ஸார சக்ரத்திலிருந்து யோகிகளுக்கும் மோக்ஷத்தைக் கொடுப்பதும் இந்த மங்கள ஸ்வரூபமே.  தேவர் முதலான வேறெந்த ஸ்வரூபங்களுமே கர்ம வசத்தில் இருப்பதால் சுபஞ்செய்ய சக்தியற்றவர்களே.  வேறெதிலும் ஆசையில்லாது விஷ்ணுவின் மங்கள ஸ்வரூபம் ஒன்றையே மனத்தில் நிலை கொள்ளச் செய்வதே தாரணை.

எங்கும் ஒளி நிறைந்த சந்த்ர வதனமும், தாமரையையொத்த பெரிய கண்களும், அழகிய தாடைகளும், பரந்து விரிந்த நெற்றியும், ஒத்த அளவில் தொங்கும் ஒளி மிகுந்த குண்டலங்கள் கொண்ட காதுகளும்,  சங்கு போன்ற கழுத்தும், லக்ஷ்மியைக் கொண்டிருக்கும் சிறந்த மார்பும், மூன்று மடிப்போடும், ஆழ்ந்து சுழிந்துள்ள தொப்புளும் கொண்டு விளங்கும் திருவயிறும், நீண்டு திரண்ட நான்கு கைகளும், ஸமமான துடைகளும், கணுக்கால்களும், மலர்களையொத்தத் திருவடிகளும், அரையில் சிவப்பாடையும், க்ரீடம், ஹாரங்களைப் பெற்று பொலிவோடு விளங்கும் மஹாவிஷ்ணுவான பரப்ப்ரஹ்மத்தைத் த்யானிக்க வேண்டும்.

விஷ்ணுவுக்கு நான்கு கைகள், எட்டு கைகள் என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.  எட்டு கைகள் என்று கொண்டால் அவைகளில் சார்ங்கம், சங்கம், கதை, கட்கம், சக்ரம், அக்ஷமாலைகளையும், மற்ற இரு கைகளில் தாமரையும், பாணமுமோ அல்லது வர, அபய முத்ரைகளையோ கொள்ள வேண்டும்.  நான்கு கரங்கள் எனக் கொண்டால் அவைகளில் சங்கம், சக்ரம், கதை, தாமரை இவைகளைக் கொண்டு த்யானிக்க வேண்டும்.  இப்படி அஸ்த்ரம், ஆபரணம், ப்ரத்யங்கம், ப்ரதான அங்கம் முதலியவைகளோடு கூடின ஸ்வரூபத்தை நினைத்து நிற்பது முதல் வகை தாரணை.  அஸ்த்ரங்களை விட்டு மற்ற மூன்று அங்கங்களையும் கொள்வது, பின் ஆபரணங்களையும் விடுவது, பின் கடைசியில் ப்ரதான அங்கம் ஒன்றை மட்டுமே பற்றி இருப்பது என தாரணை நான்கு வகையாகிறது.  நிற்கும் போதும், நடக்கும் போதும், எந்த செயலையும் செய்து கொண்டிருக்கும் போதும் இந்த உருவம் மனதை விட்டு அகலாதிருப்பின் யோகி தன் தாரணை ஸ்திரப்பட்டு விட்டதாகக் கொள்ளலாம்.

இதற்கடுத்த த்யானம், அஸ்த்ரம் முதலான நான்கு அங்கங்களோடு கூடின விஷ்ணுவின் ஸ்வரூபத்தை வேறெந்த நினைவுகளும் இன்றி ஸதா நினைப்பது.  இந்த த்யானம் ஸ்வரூபத்தைப் பற்றி இருப்பதால் ஸாலம்பன யோகம் என்றும், ஸபீஜ யோகம் என்றும் கூறப்படுகிறது.  இதுவே எந்த ஸ்வரூபமும், நாமமுமின்றி அமூர்த்தமான ஆத்ம ரூபமாக த்யானித்து லயிக்கும் போது ஸமாதி என்று அறியப்படுகிறது.  பரவித்யை என்றும், விவேகஜன்ய ஞானம் என்று அழைக்கப்படுகிறது.

ப்ரஹ்மத்தை அடைவிப்பது இந்த ஞானமே.  மூவகை பாவனைகளை அழித்து இந்த ஞானமே அடைய வேண்டியதான ப்ரஹ்மத்தை ஸமாதி என்ற உபாஸனத்தால் ஆத்மாவிற்குத் தருகிறது.  மோக்ஷத்தையும் தருகிறது.  இந்த உபாஸன ஞானம் இப்படி ஆதிகாலமாக மாயையால் மறைக்கப்பட்டிருந்த ஜீவாத்மாவுக்கு கருவியாக இருந்து மோக்ஷத்தைக் கொடுத்து தன் கடமையை நிறைவேற்றி, அனுக்ரஹிக்கிறது.  இப்படி மோக்ஷமடைந்த ஜீவாத்மா அந்த பரப்ரஹ்மத்தோடு லயித்து பேதமற்று விடுகிறது.

இயற்கையில் ஆனந்த மயமான இந்த ஆத்மா கர்மாக்களால் பேதங்களைக் கொள்கிறது.  பின் ஸமாதி தர்சனத்தில் கர்மங்கள் முற்றும் அழிகையில் அதன் கார்யமான பேதங்களும் முற்றிலும் அழிந்து விடுகிறது.  அப்போது எந்த பேதங்களையும் உண்டு பண்ணுபவனும் இல்லை, அவைகளை அறிபவனும் இல்லை.  இத்தகைய மோக்ஷத்தைக் கொடுப்பது இந்த ஸமாதி” என்று காண்டிக்யருக்கு கேசித்வஜர் அஷ்டாங்க யோகத்தை சுருக்கியும், விவரித்தும் கூறி “வேறு என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார்.

காண்டிக்யர் “கேசித்வஜரே! நான் ப்ரார்த்தித்தபடி எனக்கு அஷ்டாங்க யோகத்தை முழுதாக உபதேசித்தீர்கள்.  தங்கள் உபதேசத்தால் என் மனதிலிருந்த அஞ்ஞானம் முதலான அழுக்குகள் முற்றும் அழிந்தன.  என் மமகாரமும், அஹங்காரமும் தவறே.  ஆத்ம ஸ்வரூபம் அழிவற்றது, அது சொல்லிற்கு எட்டாதது.  இனி ஆண், பெண், ஆடு, மாடு என்ற பேத வ்யவஹாரங்கள் எனக்கில்லை.  வேண்டிய நன்மைகள் யாவும் எனக்குச் செய்து விட்டீர்கள்.  இனி நீங்கள் செல்லலாம்” என உபசரித்து அனுப்பினார்.  கேசித்வஜரும் மீண்டும் ராஜ்யத்திற்குத் திரும்பினார்.

காண்டிக்யர் இதன் பின் மீண்டும் ராஜ்யத்தையும் பெற்றார்.  தன் குமாரனை ராஜ்யத்தில் அபிஷேகம் செய்து வைத்து விட்டு அவர் வனம் சென்று அஷ்டாங்க யோகத்தால் மோக்ஷத்தை அடைந்தார்.  கேசித்வஜரும் கர்ம பலன்களான விஷயங்களை அனுபவித்து, பலன் கருதாது கர்மங்களையும் செய்து புண்ய, பாவங்களைத் தீர்த்துக் கொண்டு மோக்ஷத்தை அடைந்தார்.

06_08 “நிலையான ப்ரஹ்மத்திடம் ஜீவன் இப்படி லயித்து விடுவது தான் முக்தி எனும் மூன்றாவதான ஆத்யந்திக ப்ரளயமாகும்.  மைத்ரேயரே! இப்படி அனைத்தையும் உமக்கு இதுவரை விளக்கி விட்டேன்.  இந்த விஷ்ணு புராணம் எல்லா பாவங்களையும் போக்கக் கூடியது.  சாஸ்த்ரங்களில் சிறந்தது.  புருஷார்த்தங்களை நன்கு விளக்குவது.  நீங்கள் விரும்பிக் கேட்டதால் நான் உள்ளதை ஒன்று விடாமல் உபதேசித்து விட்டேன்.  இன்னும் ஏதாவது கேட்க வேண்டுமானால் கேளுங்கள்” என்று பராசரர் கூறி முடித்தார்.

மைத்ரேயர் “ஆசார்யரே! நான் கேட்டதனைத்தையும் நன்கு உபதேசித்து விட்டீர்கள்.  நானும் பக்தியுடன் கேட்டேன்.  இனி வேண்டுவது ஒன்றுமில்லை.  என் ஸந்தேஹங்கள் யாவும் இப்போது நீங்கி விட்டன.  மனதும் சுத்தமானது.  உற்பத்தி, ஸ்திதி, லயங்களையும், இதன் காரண பூதர்களான ப்ரஹ்ம, விஷ்ணு ருத்ர சக்திகளையும், பாவனைகளையும் தங்கள் அனுக்ரஹத்தால் நன்கு அறிந்து கொண்டேன்.  நாம் காணும் இந்த ப்ரபஞ்சம் முழுதும் அந்த விஷ்ணுவின் சரீரமே, அதைத் தவிர வேறில்லை என்பதே அறியவேண்டுவது.  அதை அறிந்து கொண்டேன்.  வேறு விஷயங்களால் ஒரு பயனும் இல்லை.

குருவே! தங்கள் அனுக்ரஹத்தாலேயே நான் என் ஸந்தேஹங்களும், விபரீத ஞானமும் அழியப் பெற்றேன்.  பலன் பெற்றவனானேன்.  வர்ணாச்ரம தர்மங்கள், ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி கர்மாக்களையும் அறிந்தேன்.  இனி அறிய வேண்டுவது ஒன்றுமில்லை.  என்னாலேயே தங்களுக்கு இவ்வளவு ச்ரமமும் நேர்ந்தது.  இந்த அபராதத்தைப் பொறுத்தருள வேண்டும்.  என்னைத் தங்கள் புத்ரனாகவே கருதி இவ்வளவு தத்வங்களையும் ச்ரமம் பாராமல் உபதேசித்து அருளினீர்கள்” என்று கூறி நமஸ்கரித்தார்.

இதைக் கேட்டு மகிழ்ந்த பராசரர் விஷ்ணு புராணத்தின் பெருமைகளை அவருக்கு மேலும் எடுத்துரைக்கிறார்.  “மைத்ரேயரே!  இப்படி சொல்லி முடித்த இந்த விஷ்ணு புராணம் வேதங்களுக்கு ஸமமானது.  இதைக் கேட்ட மாத்ரத்தில் எல்லா பாவங்களும் அழியும்.  இதில் ஸர்க்கம் முதலாக, தேவாஸுரர்கள், முனிவர்கள், மஹான்கள் வரலாறும், வர்ணாச்ரம தர்மங்களும், புண்ய ப்ரதேசங்களும், நதிகள், கடல்கள், மலைகள், சாஸ்த்ரங்கள் என அனைத்தையும் உங்களுக்கு விரிவாகக் கூறியுள்ளேன்.  இவைகள்  நினைத்த பொழுதிலேயே நம் பாவங்களைப் போக்கி விடும்.  மேலும், ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார கர்த்தாவான விஷ்ணு இந்த புராணத்தில் பல இடங்களில் சொல்லப்படுகிறான்.  எப்படி பயந்திருக்கும் மானைச் சூழ்ந்திருக்கும் ஓநாய்கள் எல்லாம் அங்கு தற்செயலாய் வந்த ஸிம்ஹத்தைக் கண்டதும் ஓடிவிடுமோ, அப்படியே நம்மைத் துன்புறுத்த வந்திருக்கும் பாதகங்கள் அனைத்தும் தற்செயலாய் அவன் பெயரைச் சொன்னாலே ஓடிவிடும்.

அவன் திருநாமத்தை ஒருவன் பக்தியோடு பாடினாலே அவன் பாவங்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றன.  நெருப்பு எப்படி தங்கத்தின் அழுக்குகளைப் போக்கி சுத்தீகரிக்கிறதோ அப்படியே அவன் நாம ஸங்கீர்த்தனமும் நம் அழுக்குகளைப் போக்கி நம்மை பரிசுத்தப்படுத்துகிறது.  அவன் பெயரைச் சொல்லக்கூட வேண்டாம்.  ஒரு நொடி நினைப்பே மிகவும் கொடூரமான இந்த கலி தோஷத்தை அழித்து விடும்.  மேரு மலையின் முன் ஒரு அணு எப்படியோ அப்படியே மஹாவிஷ்ணுவுக்கு முன் இந்த ப்ரஹ்மாண்ட ப்ரபஞ்சமும்.

ப்ரஹ்மாதி தேவ ஜாதிகளும், ஸித்தர்களும், அஸுரர்களும், அப்ஸரஸ்ஸுகளும், நக்ஷத்ரங்களும், க்ரஹங்களும், ஸப்தரிஷிகளும், லோகங்களும், லோக பாலர்களும், ப்ராஹ்மணர் முதலான மனுஷ்யர்களும், பசுக்களும், ம்ருகங்களும், பாம்புகளும், பக்ஷிகளும், மரங்களும், காடுகளும், கடல்களும், நதிகளும், இந்த்ரியங்களுக்கான விஷயங்களும், இன்னும் பலவும் நிறைந்திருக்கும் இந்த ப்ரபஞ்சம் அவனுக்கு முன் அணுவேதான்.  இந்த ப்ரஹ்மாண்டத்திற்கு ஆத்மாவும் அவனே.  எல்லாமும், எல்லாம் அறிந்தவனாகவும் இருப்பவனும் அந்த விஷ்ணுவே.  இப்படி எல்லா பாவங்களையும் போக்கும் அவனை இந்த புராணம் பல இடங்களில் கூறுகிறது.

அச்வமேத யாகத்தின் முடிவில் செய்யும் அவப்ருத ஸ்நானமும், ப்ரயாகை முதலான க்ஷேத்ரங்களில் இருக்கும் உபவாஸமும், ஒரு வருஷ அக்னிஹோத்ரமும் கொடுக்கும் பலனை இந்த புராணம் கேட்பதாலேயே கொடுக்கிறது.  ஆனி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியில் உபவாஸமிருந்து, த்வாதசியில் யமுனையில் நீராடி, மதுராவில் பிறந்தவனை நமஸ்கரிப்பதால் ஒருவனுக்குக் கிடைக்கும் அச்வமேத புண்ய பலன், இந்த புராணத்தின் ஒரு அத்யாயத்தை அவன் திருவடிகளை நினைத்து மனதோடு கேட்டாலே கிடைத்து விடும்.  இந்த த்வாதசியில் நம் குலத்தில் பிறந்த யாராவது யமுனையில் நீராடி நமக்குப் பிண்டம் தரமாட்டார்களா? நாமும் மோக்ஷத்தை அடைய மாட்டோமா? என்று ஏங்கும் பித்ருக்களும் இந்த புராணத்தின் ஒரு அத்யாயத்தை ஒருவன் கேட்டாலே அடைந்து விடுகின்றனர்.

இந்தப் புராணம் ஸம்ஸார பயத்தைப் போக்கக் கூடியது.  கேட்கவேண்டிய விஷயங்களில் சிறந்தது.  புண்யங்களுக்குள் புண்யமானது.  கெட்ட கனவுகளின் பலன்களைப் போக்கக் கூடியது.  எல்லா தோஷங்களையும் நீக்கக் கூடியது.  பிள்ளைப் பேற்றைத் தரக்கூடியது.  இப்படிப் பட்ட இதை முதலில் நாராயண ரிஷி ப்ரஹ்மாவுக்கும், அவர் ருபு என்பவருக்கும் உபதேசித்தார்.  அவரிடமிருந்து ப்ரியவ்ரதருக்கும், பாகுரிக்கும், ஸ்தம்பமித்ரருக்கும், ததீசருக்கும், ஸாரஸ்வதருக்கும், ப்ருகுவிற்கும், புருகுத்ஸருக்கும், நர்மதைக்கும் வழி வழியாக வந்தது.  பின் நர்மதை இதை த்ருதராஷ்ட்ரன், ஆபூரணன் என்ற நாகர்களுக்கு உபதேசிக்க, அவர்கள் அதை நாகராஜனான வாஸுகிக்கும், அவர் வத்ஸருக்கும், அவர் அச்வத்தாமருக்கும், அவர் கம்பளருக்கும், அவர் ஏலாபுத்ரருக்கும் உபதேசிக்க இது பாதாள லோகத்தில் பரவி இருந்தது.

ஒரு ஸமயம் பாதாள லோகம் சென்றிருந்த வேதசிரஸ் என்ற முனிவர் இதை அங்கிருந்து பெற்று வந்து பூலோகத்தில் ப்ரமதிக்குக் கொடுத்தார்.  அவர் அதை ஜாதுகர்ணருக்குத் தந்தார், அவர் அதைப் புண்யம் செய்த பலருக்கும் சொல்லி வைத்தார்.  இப்படி பரம்பரையில் வந்த இந்த புராணம் இப்போது புலஸ்த்யரின் வரத்தினால் என் நினைவுக்கு வர நானும் இதை உனக்கு உபதேசித்தேன்.  நீயும் இதைக் கலியுகத்தின் முடிவில் சினீகர் என்பவருக்கு உபதேசிக்கப் போகிறீர்கள்.

இப்படி கலிதோஷத்தைப் போக்க வல்லதும், பரம ரஹஸ்யமுமான இந்த புராணத்தைப் பக்தியோடு கேட்பவன் ஸர்வ பாபங்களிலிருந்தும் விடுபடுகிறான்.  புண்ய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்த பலனையும், ஸர்வ தேவதைகளையும் துதித்த பயனையும் பெறுகிறான்.  இதில் பத்து அத்யாயங்களைக் கேட்பவன் காராம்பசுவை தானம் செய்த பலனைப் பெறுகிறான்.  இதில் முதல், இடை, முடிவு என எங்கும் விஷ்ணுவே சொல்லப்பட்டிருப்பதால் இதைக் கேட்பதாலும், படிப்பதாலும், சொல்வதாலும் கிடைக்கும் பலன் வேறெதிலும் மூவுலகிலும் கிடையாது.  இதில் மோக்ஷத்தைத் தரும் அவனே பலனாகக் கிடைக்கிறான்.  அவன் ப்ரபாவங்களை நினைத்துப் பார்த்தால், அவனைச் சொல்வதால் பாவம் தொலையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அந்த மஹாவிஷ்ணுவை நினைப்பவன் நரகம் செல்வதில்லை, அவனுக்கு ஸ்வர்க்கமும் ஒரு தடையே. ப்ரஹ்ம லோக ப்ராப்தியும் அவனுக்கு ஸ்வல்பமே.  அவன் மனதிலிருந்து கொண்டு மஹாவிஷ்ணு அவனுக்கு மோக்ஷத்தையே அளிக்கிறான் என்றால் அவனைப் பாடுவதால் பாவங்கள் தொலைகின்றன என்பதில் ஒரு வியப்புமில்லை.  இவனையே யாகாதி கர்மங்களும் ஸ்துதிக்கின்றன. ஞானிகளும் இவனையே த்யானிக்கின்றனர்.  இவனைத் தவிர நாம் கேட்க வேண்டும் பொருள் வேறொன்றுமில்லை.  இவனே பித்ரு ரூபத்தில் ஸ்வதா எனப்படும் கவ்யத்தையும், தேவ ரூபத்தில் ஸ்வாஹா எனப்படும் ஹவ்யத்தையும் ஏற்கிறான்.  இவன் ப்ரமாணங்களால் அளவிட முடியாதவன்.

அந்த மஹாவிஷ்ணு பிறப்பு, இறப்பற்றவன், எந்த மாறுபாடுகளும், வளர்ச்சியும், தேய்வும் அவனுக்கில்லை.  அவனுக்கு நமஸ்காரம்.  புருஷனும் அவனே, அவன் நியமனத்தாலேயே புருஷன் விஷயங்களை அனுபவித்தும், ஞான ஸ்வரூபியாகவும், பேதமின்றியும், சுத்தனாகவும், சரீர ஸம்பந்தத்தால் அசுத்தனாகவும், கர்மங்களால் மஹதாதி தத்வங்களுக்குக் காரணனாகவும், அழிவற்றவனாகவும் இருக்கிறான்.  அந்த புருஷ ஸ்வரூபனுக்கு நமஸ்காரம்.

அவ்யக்தமான ப்ரக்ருதி ஸத்வாதி குணங்களால் உண்டாகும் கார்யங்களுக்கு லயஸ்தானமாக இருக்கிறது.  அது ஆத்மாக்களின் கர்மங்களுக்கு ஏற்ப பலன்களைத் தரவல்லது.  அதுவே கர்மாக்களுக்குக் காரணமுமாகும்.  நித்யமும் அதுவே.  இப்படி அவ்யக்த ஸ்வரூபமாயிருக்கும் விஷ்ணுவுக்கு நமஸ்காரம்.  பஞ்ச பூதங்களின் வடிவாகவும், கர்மேந்த்ரியங்களாகவும், ஞானேந்த்ரியங்களாகவும், இவைகளுக்கு விஷயங்களாகவும் இருந்து ஆத்மாவுக்கு உதவி செய்கிறதும், ஸூக்ஷ்ம ஸ்வரூபமாகவும் இருக்கும் வ்யக்தனான விஷ்ணுவுக்கு நமஸ்காரம்.

வ்யக்தம், அவ்யக்தம் என இருவகைப்பட்ட ப்ரக்ருதியும், பரமான ஜீவ சரீரங்களும், ஆத்ம ஸ்வரூபமும், பிறப்பு, இறப்பில்லாதவனும், நித்யனுமான விஷ்ணுவுக்கு உடலாய் இருக்கின்றன.  ஞானம் முதலான ஐச்வர்யங்களை உடைய அவன் எல்லா ஆத்மாக்களுக்கும் பிறப்பு, இறப்பில்லாத மோக்ஷ ஸுகத்தை ஆசிர்வதிப்பானாக.

எட்டாம் அத்யாயம் முற்றும்.  ஆறாம் அம்சம் முற்றும்.  விஷ்ணு புராணம் முற்றும்.

ஸர்வே ஜனா: ஸுகினோ பவந்து!

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் — ஐந்தாம் அம்சம்-ஸ்ரீ சீதாராம ஸ்வாமிகள் தொகுத்தவை-

February 24, 2023

05_01. எங்கும் வ்யாபித்திருக்கும் விஷ்ணு யாதவ குலத்தில், எவர்க்கும் எளியவனாய் அவதரித்துச் செய்த லீலைகளை விரிவாகக் கூறவேண்டும் என்று மைத்ரேயர் வினவ, அது பற்றிக் கூறுகிறார் பராசரர். தேவகனுக்கு தேவலோகத்துப் பெண் போன்ற அழகுடன் தேவகி என்ற ஒரு பெண் இருந்தாள். அவளை வஸுதேவன் திருமணம் செய்து கொண்டான். அவர்கள் அமர்ந்திருந்த தேரைத் தானே ஓட்டிச் சென்றான் கம்ஸன். “ஏய் மூடா! கம்ஸா! உடன் பிறந்த பாசத்தால் தேவகியை அவள் கணவனுடன் கூட்டிச் செல்கிறாய். இவள் வயிற்றில் பிறக்கும் எட்டாவது பிள்ளையே உன்னைக் கொல்லப் போகிறான்” என்று திடீரென வழியில் ஒரு அசரீரி கேட்டது. இதைக் கேட்டதும் கோபம் கொண்ட கம்ஸன் கடிவாளத்தை விட்டு, கத்தியைக் கையில் எடுத்தான். தேவகியைக் கொல்லத் திரும்பினான்.

இதைக் கண்ட வஸுதேவன் செய்வதறியாது அப்போதைக்கு சாதுர்யமாக “பெருமை வாய்ந்தவனே! இவளை ஏன் கொல்ல வேண்டும். இவளது எட்டாவது பிள்ளைதானே உனக்கு எமன். நான் இவளுக்குப் பிறக்கும் எல்லா குழந்தைகளையுமே உன்னிடமே கொண்டு வந்து கொடுத்து விடுகிறேன். அதை நீ உன் இஷ்டப்படி எதாவது செய்து கொள்” என்றான். இதைச் சரியென நினைத்து கம்ஸனும் அவர்களை அப்போதைக்கு விட்டான். அவர்கள் குழந்தைகளுக்காகக் காத்திருந்தான். இந்த ஸமயத்திலேயே பூபாரம் தாங்காத பூமாதேவி மேருமலையில் தேவர்களுடன் கூடியிருந்த ப்ரஹ்மாவிடம் சென்று “ஸ்வர்ணத்துக்குத் தந்தை அக்னியாவான். பசுக்களுக்கு ஸூர்யனே தந்தை.

அப்படியே எனக்கும் மற்ற லோகங்களுக்கும் நாராயணனே தந்தை. அவனுக்குத் தந்தை இல்லை. அந்த நாராயணனே என்னைக் காக்க வேண்டும். ப்ரஹ்மா, காலம், தேவ குலம், யக்ஷ, ராக்ஷஸ, அஸுர, க்ரஹ, நக்ஷத்ர, அக்னி, ஜலம், காற்று, நான், சப்தம் என அனைத்துமே விஷ்ணு மயம். விஷ்ணுவிற்கு சரீரம். இப்படி விஷ்ணுவின் சரீரமான இவைகளே ஒன்றையொன்று எதிர்த்துக் கொள்வது ஏன் என்ற சந்தேஹம் வேண்டாம். கடலிலும் பெரிய அலைகள் சிறிய அலைகளை அழிக்கவே செய்கின்றன. இப்படியே பலமுள்ளவர்கள் பலம் குன்றியவர்களை அழிக்கின்றனர். இப்பொதும் காலநேமி முதலான அப்படிப்பட்ட அஸுரர்கள் பூலோகத்தில் ப்ரஜைகளை அழித்து வருகிறார்கள்.

இவன் ஏற்கனவே விஷ்ணுவால் அழிக்கப்பட்டிருந்தும், இப்போது மீண்டும் உக்ரஸேனன் மகன் கம்ஸனாகப் பிறந்துள்ளான். அரிஷ்டன், கேசினி, ப்ரலம்பன், நரகன், தேனுகன், பாணாஸுரன் என இன்னும் பல துராத்மாக்கள் ராஜ குலங்களில் எண்ண முடியாதபடி பிறந்துள்ளனர். பல அக்ஷௌஹிணிக் கணக்கில் இருக்கும் இந்த அஸுரக் கூட்டங்களை என்னால் சுமக்க முடியவில்லை. இதுவே என் வேண்டுகோள். நான் பாதாளம் சென்று விடாதபடி என்னைக் காக்க வேண்டும்” என்று வேண்டிக் கொண்டாள். இதைக் கேட்ட தேவர்களும், ப்ரஹ்மனும் பாற்கடல் நோக்கிச் சென்றனர். “நீ வேதங்களுக்கும் எட்டாதவன், அணுவிற்கும் சிறியவன், பெரியதற்கும் பெரிதானவன்.

ப்ரஹ்மத்தைப் பற்றிய அறிவால் உண்டாகும் ஞானமாகிய பரவித்யையும் நீயே. சப்தத்தைப் பற்றிய அறிவால் உண்டாகும் ஞானமாகிய அபரவித்யையும் நீயே. உருவமும், அருவமுமானதும் நீயே. வேதங்களும், வேதாங்கங்களும், சாஸ்த்ரங்களும் நீயே. அனைத்துமறிந்தவனும் நீயே. உயர்ந்த வஸ்துவும் நீயே. வாக்கும் நீயே. நீயே ப்ரஹ்மன், அதற்கும் மேலானவனும் நீயே. மொழியும், அதன் உச்சரிப்பும், மாத்திரையும், அர்த்தமும், ஒலியும், கர்மாவும், வான சாஸ்த்ரமும், பரம்பரைகளும், பழக்கங்களும், இலக்கணமும், வேதாந்த சாரமும், தர்க்க சாஸ்த்ரமும், நீதியும் நீயே. அறியமுடியாதவன் நீ. ஆத்மா, வாழ்க்கை, உடல், குணங்கள், விஷயங்கள் இவைகளின் கோட்பாடுகளும் நீயே.

உன்னிடமிருந்தே எல்லாமும் தோன்றி, உன்னிடமே லயிக்கிறது. புலப்படாதவன் நீ, வர்ணிக்கமுடியாதவன் நீ, அறிவதற்கு முடியாதவன் நீ, முடிவில்லாதவன், உருவில்லாதவன், நிறமில்லாதவன், பெயரில்லாதவன், தூய்மையானவன், நிலையானவன் நீ. அனுபவிக்க மட்டுமே முடிந்தவன் நீ, அகக்கண்களுக்கே புலப்படுபவன் நீ. ஒன்றானதும், பலவானதும் நீ. வேகமானவன் நீ. அன்பிற்கு அகப்படுபவன் நீ. அனைத்துமாகவும், அனைத்தையும் அறிந்தவனாயினும் இருக்கும் உன்னை யாரும் அறியார். அறியாமையைப் போக்குபவன் நீ. உன்னை அறிந்தவர்கள் அனைத்தும் அறிந்தவர்களே. முதலாகவும், மத்யமாகவும், இறுதியாகவும் இருப்பவன் நீ. உலகைக் காப்பவன் நீ.

உன்னிடத்திலேயே அனைத்தும் நிலை கொண்டிருந்தது, நிலை கொண்டிருக்கிறது, இனியும் நிலை கொண்டிருக்கும். அணுவிற்கும் அணு நீ. ஆத்மாவும் நீ, வரலாறுகளுக்கெல்லாம் முந்தியவன் நீ, பூமிக்கு ஒளியும், வளமும் நீ. அனைத்துயிரின் கண் நீ, பல உருவங்களைக் கொண்டவன் நீ. எளிதில் மூவுலகும் செல்பவன் நீ. அக்னியைப் போல் ஒன்றாயிருந்தாலும் பல குணங்களானவன் நீ. உண்மையில் மாறுபாடில்லாவிடினும் எப்படி வேண்டுமானாலும் உருவகமாபவன் நீ. எங்கும் நிறைந்தவனும், இருக்கும் எல்லா உருவங்களையும் தரிப்பவன் நீ. ஞானிகளின் அறிவிற்கே புலப்படும் உயர்ந்த வஸ்து நீ. உன்னையன்றி எதுவும் இல்லை. இருந்ததும் இல்லை, இருக்கப்போவதுமில்லை.

கூறுகளாக்க முடியாததும், கூறுகளாக்க முடிந்ததும் நீயே, பொதுவானவன் நீ, தனியானவனும் நீயே. அளவிற்கரிய ஞானமும், பலமுமுடையவன் நீ, எல்லா ஞானத்தாலும், சக்தியாலும் அடையத்தக்கவனும் நீயே. வளர்ச்சியும், குறைவும் இல்லாதவன் நீ, சுயமானவனும், ஆரம்பமற்றவனும் நீ. அனைத்தையும் வெற்றி கொள்பவனும் நீ. களைப்பும், மந்தத்தன்மையும், பயமும், கோபமும், விருப்பும் உன்னைப் பாதிப்பதில்லை. செய்த தர்மத்தின் காரணமாக சுகத்தைப் பெற இருக்கும் ஆத்மா சரீரத்துடன் ஸ்வர்கத்திலும், அதர்மத்தின் காரணமாக துக்கத்தைப் பெற இருக்கும் ஆத்மா சரீரத்துடன் நரகத்திலும், இரண்டின் பயனையும் அனுபவிக்க இருக்கும் ஆத்மா பூமியிலும் பிறக்கிறது. ஆனால் உன் அவதாரங்கள் ஒன்றும் இப்படி எதனின் தொடர்ச்சியாகவும் இன்றி உலகில் பக்தியைச் செய்வதற்காகவே இருக்கிறது”

இப்படிப் பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவனைப் பலவாறுத் துதிக்கிறார் தேவர்களுடன் கூடிச் சென்றிருக்கும் ப்ரஹ்மா. இந்த துதிகளைக் கேட்டு மகிழ்ந்த பரமன் தன் விச்வரூபத்தைக் காட்டி, “நான்முகனே, உன் விருப்பம் நிறைவேறினதாகுக. உன் வரவிற்கானக் காரணத்தைக் கூறு” என்கிறான். ப்ரஹ்மா “ஆயிரம் உருவும், கைகளும் உடையவனே, பல முகங்களும், திருவடிகளும் கொண்டவனே, ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களைச் செய்யும் எல்லையற்றவனே, புத்தியும், இயற்கையும், நினைவுமாயிருப்பவனே, எங்களிடம் கருணை கூறுங்கள். அஸுரர்களால் எல்லையற்ற துன்பங்களுக்கு ஆளாகியிருக்கும் பூதேவி இங்கு வந்துள்ளாள். நீயே அவள் குறை போக்கிக் காத்தருள வேண்டும்.

நானும், இந்த்ரனும், அச்வினிகளும், வருணனும், யமனும், ருத்ரனும், வஸுக்களும், ஸூர்யர்களும், காற்றும், நெருப்பும் இன்னும் அனைத்து வானவர்களும் உன் ஆணையைச் செய்ய சித்தமாயிருக்கிறோம். குறைகளற்றவனே, தேவர் தலைவனே, கட்டளையிடு” என்கிறார். இதைக் கேட்டதும் பரமன் வெள்ளையாக ஒன்றும், கருப்பாக ஒன்றுமாய் இரு மயிர்களைக் களைந்து “இவைகள் பூமியில் அவதரித்து, பூதேவின் சுமைகளையும், கவலையும் போக்கும். தேவர்களும் தங்கள் அம்சங்களோடு பூமியில் அவதரித்து, அஸுரர்களோடு யுத்தத்தில் ஈடுபடட்டும். என் பார்வையாலேயே அவர்கள் அழிவது திண்ணம். ஸந்தேஹப்படவேண்டாம். கருமையான இந்த தேஜஸ் வஸுதேவனின் பத்னி தேவகியின் கர்ப்பத்தில் எட்டாவதாகப் பிறந்து விரைவில் கம்ஸனைக் கொல்லும்” என்று கூறி மறைந்தான்.

தேவர்களும் நமஸ்கரித்து விட்டு மேருமலைக்குத் திரும்பினர். நாரதர் உடனே இந்த தேவ ரஹஸ்யத்தைக் கம்ஸனிடம் வந்து கூறிவிட்டார். அவன் உடனே வஸுதேவனையும், தேவகியையும் சிறை வைத்தான். அங்கு பிறந்த ஆறு குழந்தைகளையும் வஸுதேவர் கம்ஸனிடம் கொண்டு வந்து கொடுக்க, அவன் அவ்வப்பொழுதே அவர்கள் ஒவ்வொருவரையும் கல்லில் மோதி கொன்று விட்டான். இவர்கள் முன்பே ஹிரண்யகசிபுவிற்குக் குழந்தைகளாய்ப் பிறந்திருந்து விஷ்ணு பூஜைகளைச் செய்து வந்ததால் “அடுத்த பிறவியில் தந்தையாலேயே உங்களுக்கு மரணம்” என்று சபிக்கப் பட்டவர்கள். அவ்வாறே இப்போது நடந்தது.

யோகநித்ரைக்கு இது விஷயமாக மஹாவிஷ்ணு இட்ட உத்தரவு “மாயா! பாதாளத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஹிரண்யகசிபுவின் ஆறு குழந்தைகளையும் தேவகியின் கர்ப்பத்தில் சேர்த்து விடு. அவர்களைக் கம்ஸன் பிறந்ததும் கொன்று விடுவான். ஏழாவது கர்ப்பமாக தேவகிக்கு ஆதிஸேஷன் இருப்பான். ஏற்கனவே நந்தகோபத்தில் வஸுதேவனின் இன்னொரு மனைவி ரோஹிணி ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறாள். ஆனால் அந்த கர்ப்பம் வாயு ரூபத்திலேயே இருக்கிறது. எனவே தேவகியின் ஏழாவது கர்ப்பம் ஏழு மாதம் வளர்ந்தவுடன் அதை நீ எடுத்துச் சென்று ரோஹிணியின் வாயு ரூபமாயிருக்கும் கர்ப்பத்தைக் கலைத்து விட்டு இதை அங்கு வைத்து விடு. இழுத்துச் சென்று வைக்கப்பட்டதால் ஸங்கர்ஷணன் என்ற பெயரில் ரோஹிணிக்கு மகனாக மிகுந்த பலத்துடன் அவன் அங்கு பிறப்பான். இங்கு பயத்தில் தேவகியின் ஏழாவது கர்ப்பம் கலைந்து விட்டது என்று உலகம் நினைக்கும்.

இதன் பின் எட்டாவது கர்ப்பமாக தேவகிக்கு நானே மழை காலத்தில் ஆவணி மாதம் க்ருஷ்ண பக்ஷ அஷ்டமியில் பிறப்பேன். நீ யசோதையின் கர்ப்பத்தில் நவமியில் பிறப்பாய். வஸுதேவன் நம்மிருவரையும் என் ஏவலால், பலம் கொண்டு இடம் மாற்றுவான். கம்ஸன் உன்னைக் கொல்ல முற்படும்போது அவன் கையிலிருந்து விடுபட்டு நீ ஆகாசத்தில் நிற்பாய். மாயையான உன்னை ஆயிரம் கண் கொண்ட தேவராஜனும் தன் தங்கையாக ஏற்றுக் கொள்வான். சும்ப, நிசும்பன் முதலாக அஸுரக்கூட்டங்களை ஆயிரக்கணக்கில் நீ கொல்லப்போகிறாய். பல யோகபீடங்களை அமைத்துக் கொண்டு பூமண்டலத்தை நீ அலங்கரிக்கப் போகிறாய்.

செல்வமும், சந்ததிகளும், புகழும், பொறுமையும், ஸ்வர்க்கமும், பூமியும்,தைர்யமும், நாணமும், சக்தியும், காலைப்பொழுதும் என அனைத்து ஸ்த்ரீ வர்க்கங்களும் நீயே. ஆர்யா, துர்கா, வேதகர்பா, அம்பிகா, பத்ரா, பத்ரகாளீ, க்ஷேமதா, பாக்யதா என உன் திரு நாமங்களைத் தினமும் காலை, மாலைகளில் துதிப்பவர்களுக்கு என் அனுக்ரஹமும், அவர்கள் விருப்பங்களும் ஈடேறும். கள், மாம்ஸம், பக்ஷணங்கள், சாப்பாடு முதலியவைகளால் அனைவராலும் உபசரிக்கப்பட்டு நீயும் உன்னை பூஜிப்பவர்களுக்கு அனைத்தும் அளிப்பாய். உன் வரங்கள் அனைத்தும் என் அருளால் நிச்சயம் நடக்கும். ஆகையால் என் சொல்வதைச் செய்வாயாக”. இந்த உத்தரவின் படியே யோகமாயாவும் நடந்தாள்.

05_02. பிறப்பறியாத இறைவனும் தேவகியின் வயிற்றில் எட்டாவது கர்ப்பமாக மூவுலகிற்கும் க்ஷேமம் செய்யும் பொருட்டு உண்டானான். ஜகத்தாத்ரியும் அதே தினத்தில் யசோதையின் கர்ப்பத்தில் ப்ரவேசித்தாள். க்ரஹங்கள் பொலிவுடன் இருக்க, ருதுக்கள் ஸந்தோஷிக்க, தேவகியும் புதுப் பொலிவு பெற்றாள். அவளை எவராலும் பார்க்க முடியவில்லை. பார்த்தவர் சித்தம் கலங்கின. தேவர்களும் “ப்ரக்ருதி மஹத் தத்வத்தைத் தரித்திருப்பது போல், ப்ரணவம் வேதங்களைத் தரித்திருப்பது போல், ஸ்ருஷ்டி ஸ்ருஷ்டிக்க இருக்கும் பொருள்களைத் தரிப்பது போல், வேதங்கள் யக்ஞங்களைத் தரிப்பது போல், பூஜை பலனைத் தரித்திருப்பது போல், அரணிக்கட்டை அக்னியைத் தரித்திருப்பது போல், அதிதி தேவர்களைத் தரித்திருப்பது போல்,

பின்மாலைப் பொழுது பகலைத் தரித்திருப்பது போல், பெரியோருக்குச் செய்யும் பணிவிடை ஞானத்தைத் தரித்திருப்பது போல், வெட்கம் வணக்கத்தைத் தரித்திருப்பது போல், ஆசை பொருள்களைத் தரித்திருப்பது போல், த்ருப்தி ஸந்தோஷத்தைத் தரித்திருப்பது போல், நினைவு அறிவைத் தரித்திருப்பது போல், ஆகாசம் க்ரஹங்களையும், நக்ஷத்ரங்களையும் தரித்திருப்பது போல் இந்த தேவகியும் பரமாத்மாவைத் தரித்திருக்கிறாள். எனவே அவைகளும், இந்த தேவகியும் ஒன்றே.

ஸமுத்ரங்கள், ஆறுகள், கண்டங்கள், சிறிதும் பெரிதுமான நகரங்கள், க்ராமங்கள், குக்ராமங்கள், அக்னிகள், நீர் நிலைகள், காற்றுகள், நக்ஷத்ரங்கள், நக்ஷத்ரக் கூட்டங்கள், க்ரஹங்கள், ஆகாயம், பல்வேறுபட்ட ரதங்களுடன் கூடிய தேவக்கூட்டங்கள், மூலக்கூறுகளின் மூலங்கள், பல குணங்களுடைய நிலப் பகுதிகள், ஸ்வர்க்கம், சாதுக்கள், ஞானிகள், துறவிகள், ப்ரஹ்மாவின் தேவ பூத பிசாச நாக புருஷ ம்ருக என அனைத்தையும் அடக்கிய ப்ரஹ்மாண்டமும், ப்ரஹ்மாவும், இன்னும் அனைத்து உயிர்களும் யாரிடம் லயித்து அடங்கியிருக்கிறதோ, எவனின் உண்மை ஸ்வரூபத்தையும், குணங்களையும், பெயர்களையும், பரிமாணங்களையும் எவராலும் அறிய முடியாதோ அந்த விஷ்ணுவே உலகங்களைக் காக்க இங்கு கர்ப்பத்தில் இருக்கிறார். தேவியே, உலகுக்கு நல்லதைச் செய்வாயாக, உலகைக் காக்கும் உத்தமனான இவனை நீயும் ஆசையோடு தரிப்பாயாக” என தேவகியைத் துதித்து நின்றனர்.

05_04. மாயையின் பேச்சுக்களைக் கேட்டுக் கலங்கிய கம்ஸன் உடனே மந்த்ராலோசனைக்கு ஏற்பாடு செய்தான். ப்ரலம்பன், கேசி, தேனுகன், பூதனை, அரிஷ்டன் இன்னும் பல கொடியவர்களைக் கூட்டி “மஹா அஸுரர்களே! பல முறை முயற்சித்த போதும் இந்த தேவர்களால் என்னைக் கொல்லவா முடிந்தது. இவர்கள் ஒரு பொருட்டே அல்ல. என்னால் அவர்கள் அனைவரும் பொசுங்கினவர்களே. அல்ப வீர்யம் கொண்ட இந்த்ரன், தனித்துத் தவம் செய்யும் பரமேச்வரன், ஏமாந்த ஸமயம் பார்த்து அஸுரர்களைக் கொல்லும் இந்த விஷ்ணு. இவர்களே இப்படிப் பட்டவர்கள் என்றால் மிச்ச தேவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

முன்பொரு ஸமயம் யுத்தத்தின் போது என் அம்புகளை மார்பில் தாங்காமல், முதுகில் ஏற்றுக் கொண்டு ஓடினவன் தானே இந்த தேவர் தலைவன் இந்த்ரன். அதையும் நீங்கள் அறிவீர்கள். என் நாட்டில் மழை பொழியாமல் அவன் தடுத்த போது, நான் என் பாணங்களாலேயே மேகங்களைப் பிளந்து மழையை வேண்டுமளவு பொழியச் செய்யவில்லையா. என் மாமனார் ஜராஸந்தனைத் தவிர வேறெவரும் என்னிடம் பணிந்து கிடப்பவர்களே. இப்படியிருக்க மீண்டும் தேவர்கள் என்னைக் கொல்ல முயற்சிப்பதைக் கண்டு எனக்கு சிரிப்பும், அவர்களிடம் அவமதிப்புமே உண்டாகிறது. ஆனாலும் கெட்ட புத்தியுடைய, ஒழுக்கமற்ற தேவர்களிடம் நாம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அதற்கு இதுவே தக்க வழி. நான் சொல்வதைக் கேளுங்கள்.

பூலோகத்தில் தானம் செய்பவர்களிடமிருந்தும், யாகம் செய்பவர்களிடமிருந்துமே தேவர்கள் ஹவிஸ் முதலியவைகளைப் பெற்று வாழ்கின்றனர். எனவே இந்த யாகங்களையும், தானங்களையும், இவைகளைச் செய்பவர்களையும் நாம் அழிக்க வேண்டும். அப்போது தான் தேவர்களும் வாழ்வறியாது அழிவார்கள். மேலும் தேவகியின் வயிற்றில் பிறந்த அந்தப் பெண் என்னைக் கொல்லப் போகிறவன் ஏற்கனவே பிறந்து விட்டான் என்று கூறியதையும் நினைவில் கொள்ள வேண்டும். குழந்தைகளைக் கொன்று விட வேண்டும். விசித்ரமான பலமும், தோற்றமும் பொருந்திய குழந்தைகளைத் தேடித் தேடிக் கருணையின்றி கொல்ல வேண்டும். இவைகளை உடனே செய்யுங்கள்” என்று உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு தேவகி, வஸுதேவரிடம் சென்றான்.

அவர்களை விடுவித்து “வீணாக உங்கள் குழந்தைகளைக் கொன்று விட்டேன். அவர்கள் விதி அப்படி. உங்களின் தீவினைப் பயனாகவும் இது நடந்திருக்கலாம். வருந்தாதீர்கள். இவ்வளவு செய்தும் என்னைக் கொல்லப் போகிறவன் எங்கேயோ, எப்படியோ பிறந்து விட்டான். உங்கள் விதி முடியும் வரை இனி உங்களுக்குத் துயரில்லை. ஸந்தோஷமாயிருங்கள்” என்று ஆறுதல் கூறிவிட்டு, ஸந்தேகங்களுடனும், குழப்பங்களுடனும் தன் மாளிகை திரும்பினான்.

05_06. ஒரு ஸமயம் வண்டியின் கீழே குழந்தை கிடத்தப்பட்டிருந்தது. அந்த வண்டியின் வடிவில் குழந்தையைக் கொல்வதற்காக முராஸுரன் என்பவன் புகுந்தான். இதையறிந்த குழந்தை பாலுக்கு உதைத்துக் கொண்டு அழுவது போல் பாவனை செய்து, பாரத்தோடிருந்த வண்டியைத் தலைகீழாக உதைத்துத் தள்ளி உடைத்தது. அதிலிருந்த பானை முதலியன விழுந்து உடைந்து, பொருள்கள் சிதறின. இதைக் கண்ட கோபர்கள் மேலும் வியப்படைந்தனர். வண்டியை யார் இப்படித் தள்ளியது என்று கேட்ட கோபர்களிடம், அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் குழந்தை க்ருஷ்ணன் தான் இப்படிச் செய்தது. தன் கால்களால் வண்டியை உதைத்துத் தள்ளியது, வேறு யாரும் தள்ளிவிட வில்லை என்று கூறவும் கூடியிருந்தவர்கள் மேலும் ஆச்சர்யமடைந்தனர். நந்தகோபன் ஓடிவந்து குழந்தையை எடுத்துக் கொள்ள யசோதை உடைந்து போன பானை ஓடுகளை தயிர், பூ, அக்ஷதைகளால் அர்ச்சித்தாள்.

இப்படி இருந்து கொண்டிருக்கையில் குழந்தை பலராம, க்ருஷ்ணர்களுக்கு ஜாதகர்மா, நாமகரணங்களைச் செய்து வைக்கும்படி வஸுதேவர் தன் புரோஹிதரான கர்கரை கோகுலத்துக்கு ரஹஸ்யமாக அனுப்பி வைத்தார். கோபர்களுக்கும் தெரியாதபடி மிகவும் ரஹஸ்யமாக, எளிமையாக நடந்த அந்த விழாவில் மூத்தவனுக்கு ராமன் என்றும், இளையவனுக்குக் க்ருஷ்ணன் என்றும் பெயர் சூட்டினார் கர்கர். குழந்தைகளின் விளையாட்டு தொடர்ந்தது. சாம்பலையும், புழுதியையும் உடலெங்கும் அப்பிக் கொண்டு அங்குமிங்கும் தவழத் தொடங்கினர். மாட்டுக் கொட்டிலிலும், கன்றின் கொட்டிலிலும், அவற்றின் வாலைப் பிடித்து இழுத்துக் கொண்டும், ஒரு நிமிஷங்கூட ஓரிடத்தில் இருக்காமல் விளையாடிக் கொண்டிருந்த அவர்களை ரோஹிணியாலோ, யசோதையாலோ கட்டுப்படுத்தவே முடியவில்லை.

பார்த்தாள் யசோதை. ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டாள். சொல்வதைக் கேட்காமல் அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்த க்ருஷ்ணனை ஒரு குச்சியால் மிரட்டி, அவன் இடுப்பில் அந்தக் கயிற்றைக் கட்டி மறு நுனியை ஒரு மர உரலோடு சேர்த்துக் கட்டினாள். “குறும்பா! இப்ப முடிஞ்சா எங்கயாவது போ, பாக்கலாம்” என்று குழந்தையிடம் விரட்டி விட்டு நிம்மதியாக வீட்டு வேலைகளைச் செய்யச் சென்று விட்டாள். ம்.. வண்டி கிளம்பியாச்சு! ஆமாம், குழந்தை உரலையும் சேர்த்து உருட்டிக் கொண்டு செல்லத் தொடங்கியது. வீட்டுத் தோட்டத்தில் அருகருகில் வளர்ந்திருந்த இரு மருத மரங்களின் நடுவில் குழந்தை சென்று விட்டது. ஆனால் உரல் இரு மரங்களின் நடுவில் மாட்டிக் கொண்டது.

முடிந்த வரை உரலைச் சேர்த்து இழுத்து, இரு பெரும் மரங்களையும் மிகுந்த சப்தத்துடன் அடியோடு முறிந்து விழச்செய்து, கண்களை ஆச்சர்யமாக விரித்து அதை வேடிக்கை பார்த்து விட்டு, வித்யாசமான அந்த சத்தத்தையும் கேட்டு விட்டு, குழந்தை உரலோடு மீண்டும் செல்லத் தொடங்கி விட்டது. சப்தம் கேட்டு ஓடி வந்த கோபர்கள் காற்றே இல்லாமல் விழுந்து கிடக்கும் மரங்களையும், இடுப்பில் கட்டப்பட்டிருக்கும் கயிறோடும், அதன் தழும்போடும், தன் சிறு பற்களைக் காட்டி சிரித்துக் கொண்டிருந்த குழந்தையையும் கண்டனர். இந்த நிகழ்வுக்குப் பிறகு க்ருஷ்ணன் தாம(கயிறு, கயிறு கட்டப்பட்ட)உதரன் (வயிறு)= தாமோதரன் என்று எங்கும் கொண்டாடப்பட்டான்.

தொடர்ச்சியாக நடந்த இந்த துர்ஸகுனங்களை பூதனை மரணம், ஸகடம் உடைந்தது, மரங்கள் முறிந்தது என்று பார்த்துக் கவலையும், பயமுமடைந்த கோபர்கள் தலைவர்களுடன் ஒன்று கூடி “இனி இந்த இடமும், நம் சேரியும் மேலும் அழிவதற்குள் நாம் அருகிலிருக்கும் இன்னொரு வனப்பகுதியான ப்ருந்தாவனம் சென்று விடுவோம். அதுவே நமக்கு நல்லது. கெடுதல்கள் இன்றி நாம் இனி அங்கு வாழ்வோம்” என்று முடிவெடுத்து குடும்பங்களைப் பொருள்களோடுத் தயார் படுத்தி வண்டிகளில் புறப்பட்டனர். பசுக்கூட்டங்களையும், கன்றுகளையும், காளைகளையும் முன்னே ஓட்டிக் கொண்டு சென்றனர். எங்கும் தயிரும், பாலும் சிதறிக் கிடந்தது கோகுலம்.

இது நாள் வரை ராம, க்ருஷ்ணர்களின் லீலைகளால் பொலிந்திருந்த கோகுலம் சிறிது காலத்திற்குள் காக்கை, கழுகு இவைகளின் கூடாரமாகி விட்டது. காடாய்க் கிடந்த ப்ருந்தாவனமோ அந்த கோடைக்காலத்திலும் புல்லும், நீரும் பெற்று புதுப் பொலிவுடன் விளங்கியது. ஆயர்குடி அர்த்த சந்த்ர (அரைவட்ட) வடிவில் தங்கள் குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொண்டு, வண்டிகள் நிறுத்த வசதிகளையும் செய்து கொண்டனர். குழந்தைகளிருவரும் கன்றுகளை மேய்க்கும் வயதடைந்தனர். மயில் தோகைகளாலும், வெவ்வேறு காட்டுப் பூக்களாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டு, இலைகளால் குழல்களைச் செய்தும், புல்லாங்குழலாலும் ஓசைகளை எழுப்பிக் கொண்டு, தாங்களும் மகிழந்து, பிறரையும் மகிழச்செய்து கொண்டு, பக்கவாட்டுகளில் தவழும் சுருள் கேசங்களுடன் அக்னி குமாரர்களான சாக, விசாகர்களைப் போல ப்ருந்தாவனமெங்கும் ஸஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.

தங்களை ஒத்த ஆயிரம் குழந்தைகளோடு ஒவ்வொருவர் தோள் மீது மற்றொருவர் ஏறியும், லோகபாலர்களான இருவரும் கோபாலர்களாக கன்றுகளை காத்துக் கொண்டும் விளையாடியும், சிரித்துக் கொண்டும் இப்படியே ஏழு வயதை எட்டினர். கோடை காலம் கழிந்து மழைக் காலம் தொடங்கியது. மழை நன்கு பொழிந்து எங்கு பார்த்தாலும் பசுமை விளங்கியது. பட்டுப் பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன. புதிதாய்ப் பணம் கிடைத்த துஷ்டனின் மனம் போல் கட்டுக்கடங்காது மழை நீர் திரண்டு வழிகளைப் புதிது, புதிதாகக் கண்டு பிடித்து ஓடியது. தூயவர்களின் வேதங்களுக்கும், நீதிகளுக்கும் ஒத்துப் போகும் பேச்சுக்களை, இவற்றை நம்பாத மூர்க்கர்கள் தங்கள் சத்தமான முரட்டுப் பேச்சுக்களால் மறைத்துப் பேசுவது போல், மேகங்கள் தங்கள் கறுமையால் நிர்மலனான சந்த்ரனை விளங்காதபடி மறைத்தன.

வில்லினுடைய குணமே அதன் நாண் கயிறு தான். ஆனால் நாண் இல்லாத இந்த்ர தனுஸ் மழைக் காலத்தில் உயர்ந்த இடத்திலே நிலையாக பளீரென்று இருக்கிறது. இது இந்நாளில் பகுத்தறிவில்லாத அரசனின் ஆதரவு பெற்று குணஹீனர்கள் உயர்ந்த பதவிகளில் நிலைத்திருப்பதை நினைவூட்டுகிறது. இப்படிப் பல வர்ணனைகளுடன் கூடிய மழைக் காலத்தில் அந்த ப்ருந்தாவனத்தில் ராம, க்ருஷ்ணர்கள் மற்ற இடைச்சிறுவர்களோடு கூடி உடலில் மூலிகைகளைக் கொண்டு பல வண்ணங்களைப் பூசிக்கொண்டு மகிழ்ச்சியாகத் திரிந்தனர். வனங்களில் திரிந்தனர். மயில் போலவும், தேனீக்களைப் போலவும், அடுத்தவர் போலவும் மாறிப் பேசி விளையாடுவார்கள். குழுவாகப் பாடுவார்கள். ஆடுவார்கள். மர நிழலில் தூங்குவார்கள். தூக்கம் வரும்போது இலைகளைக் குவித்து அதைப் படுக்கையாகக் கொண்டு அதில் உறங்குவர். மேகம் இடி இடிக்கும் போது கும்பலாகக் கூடி, பயப்படுவது போல் ஆ! ஆ! என்று கத்துவார்கள். இப்படி இவர்கள் இருவரும் பகலிலும், இரவிலும் பசுக்களோடும், மற்ற சிறுவர்களோடும் விளையாடி ப்ருந்தாவனத்தில் நந்த கோபன் க்ருஹத்தில் வளர்ந்து வந்தனர்.

05_07. இப்படி அண்ணாவுடன் சுற்றித்திரிந்து கொண்டிருந்த க்ருஷ்ணன் ஒரு நாள் தனியாக, நண்பர்களுடன் கூடி யமுனைக் கரையில் காட்டுப் பூக்களைச் சூடி விளையாடிக் கொண்டிருந்தான். அப்படியே யமுனையின் ஒரு மடுவிற்குச் சென்றான். அந்த மடுவில் தான் காளியன் என்ற ஒரு மஹா ஸர்ப்பம் வஸித்துக் கொண்டிருந்தது. அதன் விஷத்தால் அந்தப் பகுதியில் நீர் எப்போதும் கொதிப்போடிருந்து வந்தது. கரையிலிருந்த மரங்களும், வானில் பறக்கும் சிறு பறவைகளும் கூட அதன் கொடிய விஷத்தால் சாம்பலாகிக் கொண்டிருந்தது. இப்படி எமனின் வாயாக இருந்து வந்தது அந்த மடு.

“இந்த மடுவில் தான் காளியன் இருக்கிறான். இந்த துஷ்டனை இங்கிருந்து விரட்டி விட்டால் அவன் ஸமுத்ரத்திற்குச் சென்று விடுவான். யாருக்கும் பயன்படாமலிருக்கும் இந்த இடமும், மடுவும், யமுனையும் பசுக்களுக்கும், இடையர்களுக்கும் இன்னும் எல்லோருக்கும் பயன்படும் இடமாக மாறும். ஆக இவனை இங்கிருந்து நிக்ரஹம் செய்து விட வேண்டும்” என்று கூறிக்கொண்டு க்ருஷ்ணன் அருகில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த கடம்ப மரத்தின் மேலேறி, உடைகளை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு காளியன் இருக்கும் அந்த மடுவில் வேகமாகக் குதித்தான். அப்போது அங்கிருந்து தெளித்த விஷ நீரில் நனைந்த மரங்கள் பற்றி கொழுந்து விட்டு எரிந்தன. கண்ணனும் தன் தோள்களைத் தட்டி சத்தம் போட்டான்.

சத்தம் கேட்டு ஸர்ப்பராஜனும், மேலும் பல ஸர்ப்பங்களும், ஹாரங்களுடனும், குண்டலங்களுடனும் நாக பத்னிகளும் நூற்றுக் கணக்கில் அங்கு வந்து கூடினர். சிவந்திருந்த காளியன் முகத்திலிருந்து விஷத்தீ வெளி வந்தது. ஸர்ப்பங்கள் க்ருஷ்ணனை இறுக்கிக் கட்டிக் கொண்டு, விஷத்தைக் கக்கிக் கொண்டு கடித்தன. இதைக் கண்ட மற்ற இடைச் சிறுவர்கள் கோகுலத்திற்கு ஓடி “க்ருஷ்ணன் முட்டாள் தனமாகக் காளியன் மடுவில் விழுந்து விட்டான், காளியன் அவனைக் கடித்து விழுங்குகிறான். வாருங்கள், வந்து பாருங்கள்” என்று கூக்குரலிட்டனர். இடி விழுந்தது போன்ற இந்த வார்த்தைகளைக் கேட்டு கோபியர்கள், யசோதையை முன்னிட்டுக் கொண்டு கால்கள் தடுமாறி, பயத்துடனும், அழுது கொண்டும் மடுவை நோக்கி ஓடினர்.

நந்தனும், மற்ற கோபர்களும், ஜயிக்கமுடியாத ராமனும் க்ருஷ்ணனுக்கு உதவ யமுனைக் கரைக்கு ஓடினர். மடுவில் காளியனால் தப்ப வழியில்லாமல் கட்டப்பட்டு, பொலிவற்று, செயலற்றிருக்கும் க்ருஷ்ணனைக் கண்டனர். நந்தகோபனும், யசோதையும் உணர்வற்று, நினைவற்றவராயினர். கோபியர்கள் “நாமும் யசோதையோடு இந்த மடுவிலேயே குதித்து விடுவோம். ஸூர்யனில்லாத பகலும், சந்த்ரனில்லாத இரவும், எருதுகள் இல்லாத பசுக்களும் போன்றது க்ருஷ்ணன் இல்லாத கோகுலம். நாம் அங்கு செல்ல வேண்டாம். பிறந்த வீடாக இருந்தாலும், க்ருஷ்ணன் இல்லாத கோகுலம் நீரில்லாத ஆறு போல் அழகழிந்து போனதே. நமக்கு அங்கு மகிழ்ச்சி இருக்காது. காளியன் பிடியில் இருந்தும் க்ருஷ்ணன் நம்மைக் கண்டதும் சிரிக்கிறான் பாருங்கள்” என்றெல்லாம் கூறி அழுது கொண்டிருந்தனர்.

இப்படி கோபியர் அழவும், நந்த கோபனும், யசோதையும் மூர்ச்சிக்கவும் கண்ட ரோஹிணியின் மகன் யாருக்கும் புரியாதபடி க்ருஷ்ணனைத் துதிக்கிறான். “தேவதேவ, என்ன இது. நீ மனிதர்களின் ஸ்வபாவத்தையே காட்டுகிறாயே. இந்தக் காளியன் கடிக்க, மூர்ச்சையடைகிறாயே. இன்னும் நீ உன்னை உணரவில்லையா. நீ அனந்தன் அல்லவா. ஸர்வேச்வரனல்லவா. வண்டிச் சக்ரத்தின் மையம் போல, நீயல்லவோ இந்த உலகிற்கு ஆதாரம். நீதானே முச்செயல் புரிபவனும். வேத ஸ்வரூபியே! உன்னையல்லவா தேவர்களும், யோகிகளும் பூஜிக்கின்றனர்.

பூதேவியின் ப்ரார்த்தனைப்படி அவள் பாரத்தைக் குறைக்கத் தானே நீ அவதரித்திருக்கிறாய். அப்படித்தானே உன் அம்சமான நானும் உனக்கு அண்ணனாகப் பிறந்திருக்கிறேன். நீ இப்படி மனுஷ்யனாக லீலைகள் செய்வதால், மற்ற தேவர்களும் அப்படியே இடையர்களாகப் பிறந்து உன்னுடனே வாழ்கின்றனர். நீயும் இடையனில்லை. அவர்களும் இடையர்கள் அல்ல. அவர்கள் தேவர்கள். நீ அவர்களுக்கெல்லாம் தேவன். கோபிகைகளையும் உன்னுடன் விளையாடுவதற்காக, நீயன்றோ முன்பாக அவதரிக்கச் செய்து, நீ பின்னால் பிறந்துள்ளாய். இப்போது நமக்கு இவர்களன்றோ பந்துக்களும் நண்பர்களும். உன் நிலைக் கண்டு கலங்கும் இவர்களை இப்போது புறக்கணிக்காமல் காக்க வேண்டுமல்லவா. உன் பிள்ளை ஸ்வபாவம் போதும். விளையாட்டை நிறுத்து. இந்த கொடிய காளியனை இப்போதே அடக்கி விடு”

இதைக் கேட்ட க்ருஷ்ணன் அண்ணாவைப் பார்த்து புன்முறுவல் பூத்தான். ஸர்ப்பங்களின் பிடிகளிலிருந்து வேகமாகத் தன்னை விடுவித்துக் கொண்டு மேலே வந்தான். காளியனின் வணங்காத தலையைத் தன்னிரு கைகளால் பிடித்து வளைத்து, அதன் மீதேறினான். பல தலைகள் கொண்ட காளியனின் தலைகளில் வெற்றி நடனமாடி அவனை வணங்கச் செய்தான். தலைகளைத் தூக்கும்போதெல்லாம் அவைகளை மீண்டும் வணங்கச் செய்து, கொடுமையான காயங்களை ஏற்படுத்தினான். இப்படி அங்குமிங்கும் நடனமாடிய க்ருஷ்ணனால் வாய்களில் ரத்தத்தைக் கக்கிக் கொண்டு மூர்ச்சையானான் காளியன். அவனின் இந்த நிலை கண்ட அவன் பத்னிகள் க்ருஷ்ணனையே துதித்தனர்.

“தேவ தேவா! உன்னைப் புரிந்து கொண்டோம். நீயல்லவோ அனைத்திற்கும் தலைவன். உயர்ந்தவன். அறிவுக்கெட்டாதவன். பரப்ரஹ்மத்தின் அம்சம். தேவர்களே உன்னைப் புகழ முடியாதல்லவா. அப்படியிருக்கும் போது பெண்களான நாங்கள் உன்னைத் துதிப்பது எப்படி. இந்த பஞ்ச பூத மயமான ப்ரஹ்மாண்டம் உனது ஓர் சிறு அம்சத்திலும், சிறு அம்சமல்லவா. அணுவிற்கும் அணுவான, பெரியதெற்கெல்லாம் பெரிதான உன் ஸ்வரூபத்தையும் யோகிகளும் அறியார்கள். ப்ரஹ்மாவும் உன்னைப் படைக்க இயலாது. சிவனாலும் உன்னை அழிக்க இயலாது. உன்னிருப்பிற்கும் எவரும் காரணமாக இயலாது. உன்னை வணங்குகிறோம். உனக்குக் கோபம் கிடையாது. உலக நன்மைக்காகவே இந்தக் காளியனை நீ அடக்குகிறாய்.

எங்களிடம் தயை கூர். பெண்களிடம் சாதுக்கள் இரக்கப் படுவார்களே. முட்டாள்களும் விலங்குகளிடம் இரக்கம் கொள்வார்களே. எனவே இளைத்துள்ள இந்த அல்ப ப்ராணியிடம் இரக்கம் காட்டு. உன் திருவடிகளால் துகைக்கப்பட்ட இந்த காளியன் சிறிது நேரத்தில் இறந்து விடுவான். உன் பெருமை எங்கே, இவன் எங்கே. உயர்ந்தவர்களிடம் பகையையும், ஸமமானவர்களிடம் நட்பையும் கொள்ள வேண்டும் என்பதல்லவா நீதி. இவன் உனக்குத் தாழ்ந்தவனல்லவா. இவனிடம் நீ த்வேஷம் கொள்ளாதே. இறக்கும் தருவாயில், துன்புற்றுக் கொண்டிருக்கும் இவனை அருள் கூர்ந்து விட்டு விடு. எங்களுக்கு பர்த்ரு பிக்ஷை இடு” என்றெல்லாம் வேண்டித் துதித்தார்கள்.

இப்படி நாக கன்னிகைகள் துதித்த பின், இறக்கும் தறுவாயிலிருந்த காளியனும், “என்னை மன்னித்து விடு. அணிமா முதலிய எட்டு குணங்களும், சக்தியும் உனக்கு இயல்பானதல்லவா. உன்னிடமிருந்தே தேவர்கள் முதற்கொண்டு அனைத்தும் உண்டாகிறது. நீ அனைத்திற்கும் அப்பாற்பட்டவனல்லவா. ப்ரஹ்ம, ருத்ர, இந்த்ர, மருத்துக்கள், அச்வினிகள், வஸுக்கள், ஆதித்யர்கள் என அனைவரும் கூடின இந்த உலகம் உன்னுடைய சிறு துளிதானே. ப்ரஹ்மா முதற்கொண்டு அனைவரும் உன்னை தேவலோகத்துப் பூக்களால் பூஜிக்கின்றனர். ரிஷிகளும் உன்னை இந்த்ரிய நிக்ரஹம் என்ற பூக்களால் பூஜித்துத் த்யானிக்கின்றனர். நான் எப்படி உன்னைத் துதிப்பேன்.

நீ மிகவும் பெரியவனல்லவா. நான் மிகவும் சிறியவனல்லவா. அதனாலன்றோ உன்னைத் துதிக்காமல் இருந்து விட்டேன். எனினும் உன் தயையால் என்னை நீ அனுக்ரஹிக்க வேண்டும்.
மிகக் கொடிதான எங்கள் ஸர்ப்ப ஜாதிக்குக் கடிப்பதென்பது ஸ்வபாவமல்லவா. அதனாலன்றோ உன்னை நான் கடித்து விட்டேன். என்னிடம் இதிலென்ன தவறு இருக்கிறது. உலகையும், ஜாதிகளையும் படைத்து, அவைகளின் ஸ்வபாவங்களையும் நீயன்றோ ஸ்ருஷ்டித்தவன். அப்படி நீ என்னை படைத்தபடிதானே நான் நடந்து கொண்டேன். இது ஒரு பெருந்தவறா. இதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா. இயல்புக்கு மாறாக நடந்து கொண்டால் தானே நான் தீயவனாவேன். நல்லவர்களைக் காப்பதற்காகத்தானே உன் அவதாரமும்.

அப்படி நல்லவனாக ஒரு குற்றமும் செய்யாமல் நீ ஸ்ருஷ்டித்தபடி நானிருக்கும் போது நீ என்னைத் தண்டிப்பது எப்படி ந்யாயமாகும். எனினும் இதையும் என் கொடுந்தன்மை அழிவதற்காக நீ கொடுத்த வரமாகவே நான் நினைக்கிறேன். உன்னிடமிருந்து இந்த வரத்தைப் பெற்றிருப்பதால் இந்த வரம் மேலும் சிறப்படைகிறது. நான் இனி ஒருவருக்கும் தீங்கு செய்யேன். என் விஷமும், வீர்யமும் நன்கு அழிந்தன. என்னை நன்கு ஒடுக்கியிருக்கிறாய். ப்ராணனை மட்டும் எனக்கு விட்டு விடு. நான் இனி உன் உத்தரவுப் படி நடந்து கொள்கிறேன்” என்று பலவாறுத் துதித்து வேண்டிக் கொண்டான்.

பரமனும் “காளிய! உன் மனைவி, மக்கள், பந்துக்களோடு உடனடியாக நீ ஸமுத்ரம் சென்று விட வேண்டும். யமுனை மடுவில் இனி நீ இருக்கக் கூடாது. என் பாதம் பதிந்த அடையாளங்களைக் கண்டு உங்கள் சத்ருவான கருடனும் உன்னை ஹிம்ஸிக்கமாட்டான். பயம் வேண்டாம்” என்று அபயமளித்து அனுப்பி வைத்தான். தானும் மடுவிலிருந்து வெளியேறினான். மீண்டும் பிழைத்து வந்ததாகவே க்ருஷ்ணனை எண்ணிய கோபர்கள் அவனைப் பெரிதும் கொண்டாடி அவனைக் கட்டியணைத்து, கண்ணீரால் நனைத்தனர். அண்ணன் வந்திருந்தால் இந்த க்ருஷ்ணனை அவர் மடுவில் குதிக்கவே அனுமதித்திருக்க மாட்டார். இவ்வளவும் நடந்திருக்கவும் நடந்திருக்காது. யமுனையும் சுத்தமானது. எவரும் புகழ்பாட க்ருஷ்ணனும் கோப, கோபியருடன் மகிழ்ச்சி பொங்க ப்ருந்தாவனத்திற்குத் திரும்பினான்.

05_08. பலராமனும், க்ருஷ்ணனும், மற்ற இடைச்சிறுவர்களும் மீண்டும் முன்பு போலவே காடுகளில் மாடுகளை மேய்த்துக் கொண்டு சுற்றித் திரிந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு பனங்காட்டை அடைந்தனர். இடைச் சிறுவர்கள் “இந்த பனங்காட்டில் தேனுகன் என்ற ஒரு அஸுரன் கழுதை வடிவில் இருந்து கொண்டு இதைக் காத்துக் கொண்டு, ம்ருகங்களை ஹிம்ஸித்து உணவாக்கிக் கொண்டு இருக்கிறான். இவனிடம் பயந்து கொண்டு யாரும் இதனுள் செல்வதில்லையாதலால் இங்கு பனம் பழங்கள் அதிகமாகப் பழுத்துக் குலுங்கிக் கொண்டு, இந்தப் பகுதி முழுதும் மணம் வீசிக் கொண்டிருக்கின்றன. இதை நீங்கள் பறித்துத் தந்தால், நாங்கள் விரும்பி சாப்பிடுவோம்” என்று க்ருஷ்ணனிடமும், பலராமனிடமும் கூறினர்.

க்ருஷ்ணனும், பலராமனும் உடனே இதற்குச் சம்மதித்துப் பழங்களை உதிர்க்கத் தொடங்கினர். அப்போது அவர்களை நோக்கி கொல்வதற்காக ஓடி வந்த தேனுகாஸுரன் சங்கர்சணன் மார்பில் தன் பின்னங்கால்களால் எட்டி உதைத்தான். அந்தக் கால்களைப் பிடித்து பலராமன் நன்றாக உயிர் போகும்படி சுழற்றி அவனை பனைமரங்களின் மீது எறிந்தான். மரங்களை சாய்த்துக் கொண்டு, பழங்களையும் மழைத்துளிகள் போல கீழே விழச்செய்து கொண்டு தேனுகன் உயிரை விட்டான். அவனைப் பின் தொடர்ந்து வந்த கழுதை உருவிலிருந்த மற்ற அஸுரர்களையும் க்ருஷ்ணனும், பலராமனும் கொன்று எறிந்தனர். எங்கு பார்த்தாலும் பழுத்த பனம் பழங்களும், இறந்து கிடக்கும் அஸுரர்களும் நிறைந்திருந்தது அந்த வனம். இதன் பின் சிறுவர்களும் மகிழ்வுடன் பழங்களை சுவைத்தனர். பசுக்களும் அங்கிருந்த காடு போல் இருந்த புது புற்களை நன்கு உண்டன.

05_09. இதற்குப் பின்னொரு ஸமயம், பாண்டீரம் என்ற ஆலமரத்தினருகில் இந்தச் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். பால் கறக்கும் போது மாட்டின் கால்களைக் கட்டும் கயிற்றைத் தோளில் போட்டுக் கொண்டு, காட்டு இலைகளால் தொடுக்கப்பட்ட மாலைகளை (வனமாலை) அணிந்து கொண்டு சின்னஞ்சிறு எருதுகள் போல ராம, க்ருஷ்ணர்கள் அப்போது விளங்கினர். சிங்கம் போல கத்திக் கொண்டும், ஏறுவதற்குத் தகுந்த மரங்களைத் தேடிக் கொண்டும், தூரத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் கன்றுகளின் பெயரைக் கூவி அழைத்துக் கொண்டும், கருப்புப் பட்டாடையில் ராமனும், பொன்னிறப் பட்டாடையில் க்ருஷ்ணனும் மேகங்களைப் போல் திரிந்து கொண்டிருந்தனர். இப்படி உலகைக் காக்கும் இவர்கள் மனிதர்களிடையே பிறந்து அந்தத் தன்மைகளையே காட்டிக் கொண்டு, மனித வர்க்கத்தைப் பெருமைப் படுத்திக் கொண்டு இருந்தனர்.

கைகளை இரு சிறுவர்கள் பிணைத்திருக்க அதில் ஏறி விளையாடுவது, மர விழுதுகளைக் கட்டி அதில் ஊஞ்சலாடுவது, கல், மரக்கட்டைகளை சுற்றி எறிவது என பல விளையாடல்களை அவர்கள் செய்து கொண்டிருந்தனர். ஹரிணாக்ரீடனம் என்ற ஒரு விளையாட்டை அவர்கள் ஒரு ஸமயம் ஆரம்பித்தனர். அதாவது இருவர், இருவராக மான் போலத் துள்ளிக் குதித்து ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வேண்டும். முதலில் வருபவரைத் தோற்றவர் முதுகில் தூக்கிக் கொண்டு குறிப்பிட்ட தூரம் வரை ஓடவேண்டும். இதுதான் ஹரிணாக்ரீடனம். க்ருஷ்ணனும், ஸ்ரீதாமன் என்பவனும் ஜோடி சேர்ந்தனர். பலராமனுடன் ப்ரலம்பன் என்ற அஸுரன் இடைச்சிறுவன் உருவில் யாருக்கும் ஸந்தேஹம் வராதபடி ஜோடி சேர்ந்தான்.

க்ருஷ்ணனைத் தன்னால் கொல்ல முடியாதென்பதை உணர்ந்த அவன் பலராமனைக் குறி வைத்தான். இதில் க்ருஷ்ணனும், அவன் கட்சியைச் சேர்ந்தவர்களும் வென்றனர். தோற்றவர்கள் வென்றவர்களை சுமந்து கொண்டு பாண்டீரம் வரை ஓடிச் சென்று திரும்பினர். ஆனால் பலராமனைத் தூக்கிச் சென்ற ப்ரலம்பன் வானில் பறக்க ஆரம்பித்து விட்டான். கருத்த மழைக்காலத்து மேகம் போல் இருந்த அந்த அஸுரன் மேல் வெளுத்த சந்த்ரன் போலமர்ந்திருந்த பலராமன் இதைக் கண்டதும் தன்னை அதிக எடை கொண்டவனாகச் செய்து கொண்டு ப்ரலம்பனை அழுத்தினான். ஆனால் அஸுரன் அதைத் தாங்குமளவு மலை போல உருவெடுத்துக் கொண்டு தொடர்ந்து பறந்தான். பலராமன் உடனே க்ருஷ்ணனிடம் திரும்பி, “க்ருஷ்ணா! மலைபோலிருக்கும் இவனை யாரென்று அறியாமல் இருந்து விட்டோம். இப்போது நான் என்ன செய்வது” என்று கேட்டான்.

இப்போது க்ருஷ்ணர் அண்ணாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு, “அண்ணா! நீர் ஸர்வ ஸ்வரூபி, ஸூக்ஷ்மங்களுக்கெல்லாம் ஸூக்ஷமமானவர். அனைத்திற்கும் முன்பாகத் தோன்றி ப்ரளயத்திலும் எஞ்சியிருப்பவர். பரப்ரஹ்ம ஸ்வரூபமான நீர் எதற்கு இப்படி மனுஷனைப் போல் நடிக்கிறீர். உங்களை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள், உலகிற்கெல்லாம் மூலக் காரணமல்லவா தாங்கள். பூபாரம் தீர்க்கவே நாம் அவதரித்தொமென்பதை மறந்து விட்டீர்களா. உமக்கு ஆகாயமே தலை. மேகங்கள் கேசங்கள். பூமியே பாதம். அக்னி முகம். சந்த்ரன் உங்கள் மனம். வாயு மூச்சு. நான்கு திசைகளும் நான்கு தோள்கள். பலம் பொருந்திய தேவரே, ஆயிரம் தலை, கை, கால்களைக் கொண்டவரே, உங்களிடமிருந்தே ப்ரஹ்மாக்கள் தோன்றுகிறார்கள்.

அனைத்திற்கும் முந்தியவர் தாங்கள். சாதுக்கள் பலவாறு புகழும் உங்கள் ஸ்வரூபத்தை நானறிவேன். தேவர்கள் உங்களைப் புகழ்கிறார்களல்லவா. உங்களிடமிருந்தே உலகம் தோன்றி, லயிக்கிறது. ஸமுத்ரத்தின் நீர் ஆவியாகி, காற்றால் அலைக்கழிக்கப்பட்டு, இமயத்திலே பனியாய்ப் படர்ந்து, ஸூர்யக் கதிர்களால் மீண்டும் நீராகவே ஆவது போல இந்த உலகும் ஒவ்வொரு கல்பத்தின் இறுதியிலும் மீண்டும் தோற்றுவிப்பதற்காகவே உங்களால் அழிக்கப்படுகிறதல்லவா. அளவற்ற உங்கள் பலத்தால் அந்த கொடியவனை மனுஷ்ய பாவத்தோடே கொல்லுங்கள், சரி எனப்படுவதைச் செய்யுங்கள்” என்று பதில் கூறினார்.

இப்படி இந்த தயாளனால் தன் பெருமைகளை நினைவு படுத்திக் கொண்ட பலராமன் சிரித்துக் கொண்டு ப்ரலம்பனைத் தன் கை, முட்டிகளால் ரத்தம் வரும்படி த்வம்சம் செய்ய, விழிகள் வெளியே வந்து விழ, மூளை மண்டையோட்டைப் பிளந்து கொண்டு பிதுங்க, வாயில் ரத்தம் கக்கிக் கொண்டு பூமியில் விழுந்து இறந்தான் ப்ரலம்பன். ப்ரலம்பன் பிணமாய் விழுந்ததைக் கண்ட கோபர்கள் அதிசயித்து, எல்லோரும் ஒன்று கூடி, பலராமனைப் புகழ்ந்து கொண்டாடிக் கொண்டு க்ருஷ்ணனுடன் கோகுலம் திரும்பினர்.

05_10. மழைக்காலம் முடிந்து பனிக்காலம் (இலையுதிர் காலம், சரத் ருது) வந்தது. நீர் நிலைகளில் தாமரைகள் பூத்துக் குலுங்கின. ஸூர்ய வெப்பத்தால் அந்த நீர் நிலைகளில் இருந்த நீர் சூடானது. மனை, மக்கள், சுற்றங்களிலுள்ள பற்றால் க்ருஹஸ்தன் மிகுந்த தாபமடைவது (கஷ்டம், ஆனால் ஆசை, பாசமிருப்பதால் விடவும் முடியாது) போல், தாங்கள் இது நாள் வரை பழகிய குட்டைகளை விட முடியாது தவித்தன அங்கிருந்த மீன்கள். அவைகளும் அந்த சூட்டிலேயே அந்த நீரில் இருந்தன. சாரமில்லாத இந்த வாழ்வைப் புரிந்து கொள்ளாது கண்டபடி இதில் திளைத்துத் திரிந்து, பின் இளைத்து, யோகம் செய்து, இது ஸாரமற்றது என்பதை உணர்ந்து மௌனமடைந்த யோகிகளைப் போல, மழைக்காலத்தில் தோகை விரித்து ஆடிக் கொண்டிருந்த மயில்கள் இப்போது மௌனமாயிருந்தன.

எப்படி ஞானிகள் மனைவி, மக்கள், சுற்றங்களையும், அஹங்கார, மமகாரங்களையும், த்வேஷங்களையும் விட்டு பரிசுத்தமான உடலுடன் விலகுகிறார்களோ, அதேபோல் நீர் கொண்டு கருத்திருந்த மழைக்காலத்து மேகங்களும் நீரைப் பொழிந்து விட்டு, வெளுத்த நிறம் கொண்டு ஆகாயத்தை விட்டு மறைந்தன இந்த சரத் காலத்தில். பொருள்களில் பற்றுள்ளவர் மனம் போல, ஸூர்யக் கதிர்களால் குளங்களின் நீரும் வறண்டு விடுகிறது. ஞானத்தால் நல்லவர் மனம் சமத்வத்தில் நிறைந்தது போல் இந்த நீரும் வெள்ளை அல்லி மலர்களால் நிறைந்துள்ளது. பூர்ணமடைந்திருந்த சந்த்ரன், நற்குலத்தில் பிறந்து முக்தியடையத் தக்க கடைசி சரீரத்தைப் பெற்று விளங்கும் யோகிகளைப் போலிருந்தான்.

விவேகிகள் எப்படி தங்கள் மனைவி, மக்களிடமிருக்கும் பற்றிலிருந்து கொஞ்ச, கொஞ்சமாக விலகுகிறார்களோ, நதிகளும் அவ்வாறே கரைகளை விட்டு நகர்ந்து கொண்டிருந்தன. தேர்ச்சி அடையாதவர்கள் முதலில் யோகாப்யாஸம் செய்யும் போது அவர்கள் குறைகள் அவர்களை விட்டு விலகுகின்றன. பிறகு ஒரு ஸமயம் யோகத்தை விடும் போது மீண்டும் கணக்கற்ற மனக்கவலைகளும், குறைகளும் அவர்களிடமே வந்து சேர்ந்து விடுகின்றன. அதேபோல் இங்கும் மழைக்காலத்தில் நீர் நிலைகளை விட்டுச் சென்ற அன்னப்பறவைகள் இப்போது சரத்காலம் வந்தவுடன் மீண்டும் இங்கேயே வந்து சேர்கின்றன. ஸமுத்ரம் யோகத்தை அடைந்த ஸன்யாஸியின் மனம் போல் சலனமின்றி இருந்தது. விஷ்ணுமயம் ஜகத் என்பதை உணர்ந்தவனின் மனம் போல எங்கும் நீர் அழுக்கற்று விளங்கியது.

யோகிகளின் கவலைகள் யோகத்தால் அழிவது போல், ஆகாயத்தில் இருந்த மேகங்களும் இந்த சரத் காலத்தில் ஒழிந்தன. அஹங்காரத்தால் உண்டாகும் துக்கங்களை எப்படி பகுத்தறிவு போக்குகிறதோ, அதேபோல் இங்கு ஸூர்யனின் தாபத்தை சந்த்ரன் போக்குகிறான். யோகத்தின் மூலம் இந்த்ரியங்களை அவைகளின் செயல்களிலிருந்து ஒடுக்குவது போல் (ப்ரத்யாஹாரம்), சரத்காலமும் ஆகாயத்திலிருந்து மேகங்களையும், பூமியிலிருந்து சேற்றையும், தண்ணீரிலிருந்து கலக்கத்தையும் இழுக்கிறது. வாய்க்கால்கள் மூலம் நீர் நிலைகளிலிருந்து நீரை இழுத்து, தேவைப்படும் வயல் முதலான இடங்களிலே தேக்கி வைத்து, மீண்டும் அங்கிருந்து அவற்றை வெளியேற்றுவது, யோகிகள் பூரகம், கும்பகம், ரேசகம் என்ற ப்ராணாயாமத்தின் செயல்களைச் செய்வது போலுள்ளது. (மூச்சுப் பயிற்சி மூச்சை உள்ளே இழுப்பது, உள் நிறுத்துவது, வெளியே விடுவது என்ற மூன்று நிலைகளைக் கொண்டது)

இப்படி பல சிறப்புகளைக் கொண்ட அந்த சரத் காலத்தில் கோபர்கள் இந்த்ர விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். இந்த உத்ஸவம் பற்றியும், இதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற முறைகளைப் பற்றியும் முதியோர்களிடம் க்ருஷ்ணன் ஆர்வத்தோடு கேட்டான். “குழந்தாய்! சதக்ரது என்ற இந்த்ரனே மேகங்களுக்கும், ஜலத்திற்கும் அதிபதி. அவனாலேயே ஏவப்பட்டு மேகங்கள் மழை பொழிகின்றன. மழையாலுண்டாகும் பயிர்களையே நாமும், மற்ற ப்ராணிகளும் உபயோகித்து ஸந்தோஷமாய் இருந்து வருகின்றன. தேவ பூஜைகள் நடக்கின்றன. புல்லைத்தின்று பசுக்களும் மிகுதியான பாலையும், நல்ல கன்றுகளையும் தருகின்றன. மழையாலேயே பூமி செழிக்கிறது. மழை பெய்யும் இடத்திலிருக்கும் மக்களுக்கு பசி, நோய் முதலியன இல்லை.

ஸூர்யன் தன் கிரணங்களைக் கொண்டு பூமியிலிருந்து நீரை எடுத்து மேகங்களில் விடுகிறான். இந்த்ரன் லோக க்ஷேமத்திற்காக அதை மீண்டும் மழையாகப் பொழிவிக்கிறான். இதனாலேயே மழைக்காலம் முடிந்ததும் அரசன் முதலனைவரும் யாகங்கள் மூலம் இந்த்ரனை பூஜிக்கின்றனர். நாமும் அப்படியே இந்த சரத் ருதுவிலும் இந்த உத்ஸவத்தை நடத்த முயன்று வருகிறோம்” என்று க்ருஷ்ணனுக்கு நந்தகோபன் பதிலளித்தான். இதைக் கேட்ட க்ருஷ்ணன் இந்த்ரனை வெறுப்பேற்றும் வகையில் “அப்பா! நாம் பயிரிடுபவர்களும் அல்ல, வாணிபம் செய்பவர்களும் அல்ல. காடுகளில் மாடு மேய்த்துத் திரிபவர்கள். எனவே பசுக்களல்லவா நமக்கு தெய்வம்.

தர்க்கம்(ஆன்வீக்ஷிகீ), மூன்று வேதங்கள்(த்ரயீ), வார்த்தா, அர்த்த சாஸ்த்ரம் என்ற நான்கு ப்ரதான சாஸ்த்ரங்களில் வார்த்தா சாஸ்த்ரம் பயிர் செய்வது, வணிகம் செய்வது, பசுக்களை மேய்ப்பது இவைகளைப் பற்றிக் கூறுவது. நமக்குத் தொழில் மாடு மேய்ப்பது. அதனாலேயே நாம் ஜீவிக்கிறோம். அதையே நாம் கொண்டாட வேண்டும். நமக்குப் பலன் கொடுப்பதை விட்டு மற்றொன்றை பூஜிப்பது இம்மை, மறுமை இரண்டிலும் பயன் தராது. பயிரிடும் நிலத்தின் எல்லைகளைத் தாண்டி உள்ளது காடுகள். அங்கேயே நாம் வஸிக்கிறோம். இந்தக் காடுகளின் எல்லைகளாக இருப்பவை மலைகள். ஆகவே மலைகளே நமக்கு மிகவும் முக்யம். வாசல், கதவுகளைக் கொண்ட வீடுகளில் வஸிக்கும் உழவர்கள், வணிகர்கள் போன்று நாம் இல்லை.

நாம் வண்டிகளில் சுற்றிக் கொண்டு, கண்ட இடங்களில் அவர்களை விட ஸுகமாக வாழ்கிறோம். நம் ஸுக வாழ்விற்கு இந்த மலைகளே முக்யம். மலைகள் விரும்பும் உருவெடுத்து எங்கும் ஸஞ்சரிப்பதாக அறிகிறோம். தனக்குத் தீங்கு செய்பவர்களை சிங்கம் முதலான பயங்கர ம்ருகங்களின் உருக்கொண்டு அவர்களைக் கொன்று விடுமாம். ஆகையால் இந்தப் பசுக்களும், மலைகளுமே நமக்குத் தெய்வங்கள். எனவே இவைகளைக் குறித்து யாகங்களைச் செய்யுங்கள். இந்த்ரனால் நமக்கு ஒரு பயனும் இல்லை. ப்ராஹ்மணர்களுக்கு மந்த்ர யக்ஞம், உழவர்களுக்கு ஸீர(கலப்பை) யக்ஞம், நமக்கு கிரியக்ஞம், கோயக்ஞம். இதோ இந்த சிறந்த கோவர்த்தன கிரியை நன்கு உபஸரித்து, பூஜை செய்யுங்கள்.

நம் சேரியிலுள்ள தயிர், பால், நெய் முதலியவைகளைக் கொண்டு அந்தணர்களுக்கும், இன்னும் விரும்பி வரும் அனைவருக்கும் அன்னமிட்டு உபஸரியுங்கள். இப்படி மலையைப் பூஜித்து, இவர்களுக்கு அன்னமிட்ட பின், இந்த சரத்கால புஷ்பங்களால் மாடுகளை நன்கு அலங்கரித்து, இந்த மலையை வலம் வரச் செய்யுங்கள். இதுவே என்னுடைய கருத்து. நீங்கள் மகிழ்வாக இவைகளைச் செய்தால் எனக்கும், பசுக்களுக்கும், இந்த மலைக்கும் மிகவும் பிடிக்கும்” என்று நந்தகோபரிடம் கூறினான். இப்படி க்ருஷ்ணன் சொன்னதைக் கேட்ட நந்தகோபனும், மற்ற கோபர்களும் மிகவும் மகிழ்ந்து அவன் கருத்தே சரியென கொண்டாடினார்கள். அதன்படியே கிரியக்ஞத்தையும் செய்து, கோயக்ஞத்தையும் சிறப்பாக செய்து மகிழ்ந்தனர்.

பசுக்கள் மிகுந்த ஸந்தோஷத்துடன் மலையை வலம் வந்தன. க்ருஷ்ணன் எவரும் அறியாதபடி தானே மற்றொரு உருவமும் கொண்டு மலையுச்சியில் இருந்து கொண்டு, தன்னையே கோவர்த்தன தெய்வம் என்று கோபர்களிடம் கூறிக் கொண்டு, அவர்கள் படைத்த உணவு பதார்த்தங்களை மகிழ்வாக உண்டான். கீழேயிருந்த உண்மையான க்ருஷ்ணனும் மற்றவர்களோடு இவைகளில் கலந்து கொண்டு மலையுச்சிக்கும் வந்து தன்னையே வணங்கிக் கொண்டான். இப்படி இந்த இருவர்களையும் தங்களின் புண்யம் செய்த கண்களால் கண்ட கோபர்கள் இவர்களின் ஒற்றுமையைக் கண்டு வியந்தனர். இதன் பின் மலைமீதிருந்த உருவம் மறைந்தது. அதனிடமிருந்து பல வரங்களைப் பெற்றுக் கொண்டு கோபர்களும் மகிழ்ச்சியோடு வீடு வந்து சேர்ந்தனர்.

05_11. பல காலமாக நடந்து கொண்டிருந்த இந்த்ர பூஜை நிறுத்தப்பட்டதை அறிந்த இந்த்ரன் கோபம் கொண்டு ஸம்வர்த்தகம் எனும் உலகையே அழிக்கக்கூடிய மேகக் கூட்டங்களைக் கூட்டி அந்த தேவதைகளிடம், “மேகங்களே, நான் சொல்வதைக் கேட்டு உடனே என் கட்டளையை நிறைவேற்றுங்கள். நந்த கோபன் க்ருஷ்ணனைப் பெற்றிருப்பதால் திமிர் கொண்டு, மற்ற கோபர்களோடு கூடி எனக்குச் செய்து வந்திருந்த யாகத்தை நிறுத்தி விட்டான். இந்த கோபர்களின் ஸுக வாழ்வுக்குக் காரணமாயிருக்கும் பசுக்களை ஒன்றும் விசாரிக்காமல் ஒன்று விடாமல் அழித்து விடுங்கள். நானும் யானையில் வருகிறேன். தண்ணீரையும், காற்றையும் ஒன்று சேர்த்து உதவுகிறேன். புறப்படுங்கள் உடனே. அப்போது தான் இவர்கள் திமிர் அடங்கும்” என்று உத்தரவிட்டுத் தானும் புறப்பட்டான்.

அதேபோல் எங்கும் அனைத்தும் அழியும்படி பலத்த மழை பெருங்காற்றோடு கூடி பொழிந்தது. கடும் இடியோடு, கண்ணைப் பறிக்கும் மின்னல்களோடு, இருள் சூழ்ந்து பொழிந்த இந்த மழையால் எங்கும் ஒரே வெள்ளக்காடானது. இதில் சிக்கி பசுக்கள் மூர்ச்சையடைந்தன. சில கன்றுகளைக் காத்துக் கொண்டு குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தன. கன்றுகளை வெள்ளத்தில் இழந்த வேறு சில பசுக்கள் கதறிக் கொண்டிருந்தன. கன்றுகள் வாட்டத்தால் சோர்ந்து தீனமாய்க் கத்திக் கொண்டிருந்தன. இப்படிப் பசுக்களும், கோபர்களும், கோபிகைகளும் துன்பப்படுவதைக் கண்ட க்ருஷ்ணன் “இந்த்ரன் தனக்கு நடந்து கொண்டிருந்த பூஜை நின்று விட்ட கோபத்தால் பகை கொண்டு இப்படிச் செய்கிறான். இதோ இந்த கோவர்த்தன மலையையே நான் பெயர்த்தெடுத்துக் இவர்களுக்குக் குடையாய்ப் பிடிப்பேன்” என்று நினைத்து அவ்வாறே அம்மலையைத் தன் ஒரு கையாலேயே பெயர்த்தெடுத்து இவையனைத்திற்கும் குடையாய்ப் பிடித்தான்.

இந்த்ரனை நினைத்து முகத்தில் புன்சிரிப்புடன் க்ருஷ்ணன் கோபர்களிடம், “கோபர்களே! காற்று, மழைக்கு அஞ்சாமல் இதற்கு அடியில் எங்கு ஸுகமோ அங்கு வந்து தங்குங்கள். இந்த மலை மேலே விழுந்து விடுமோ என்றும் அஞ்ச வேண்டாம். இதை நான் ஒரு சிறு பந்தைத் தாங்குவது போல்தான் தாங்கியிருக்கிறேன்” என்று கூறி அழைத்தான். அவர்களும் தங்கள் பசு, மனைவி, மக்கள், சட்டி, பானை, வண்டிகள் என அனைத்துப் பொருள்களோடும் இதனடியில் பள்ளத்தில் வந்து மகிழ்வோடு தங்கிக் கொண்டனர். தங்கள் வேலைகளையும் பால் கறப்பது, கடைவது எனத் தொடர்ந்தனர். ஏழு நாட்கள் விடாமல் இந்த மழை பொழிந்தது. இந்த ஏழு நாட்களும் க்ருஷ்ணனும் தன் விரல்களாலேயே ஆடாமல், அசையாமல் கோவர்த்தன கிரியைக் குடை போல் பிடித்து கொண்டிருந்தான்.

மேனியில் எங்கும் சிறிதும் வாட்டமில்லை. விரல்களும், நகங்களும் நோகவில்லை. சந்தோஷத்தாலும், வியப்பாலும் விரிந்த கண்களோடு கோபர்களும், கோபிகைகளும் க்ருஷ்ணனின் பெருமையைப் பாட ஆரம்பித்து விட்டனர். நந்தகோகுலம் அழிவதற்காக ஏழு நாட்கள் இரவு பகலாகப் பெய்த மழை வெற்றியைத் தராததால் தோல்வியடைந்த இந்த்ரன் மேகங்களைத் திருப்பி அழைத்துக் கொண்டான். மழை நின்றது. இந்த்ரனின் மிரட்டல் பயனற்றுப் போனது. மேகங்கள் வெளிர் வாங்கின. கோபர்கள் குடையிலிருந்து வெளிவந்து மீண்டும் தங்கள் இருப்பிடங்களைச் சேர்ந்தனர். க்ருஷ்ணனும் கோவர்த்தனத்தை மீண்டும் அதனிடத்திலேயே வைத்தான்.

05_13. தேவேந்த்ரன் புறப்பட்டபின், கோவர்த்தனகிரியை க்ருஷ்ணன் எளிதாகத் தூக்கிக் கொண்டிருந்ததைக் கண்டு வியந்திருந்த கோபர்கள் “க்ருஷ்ணா, பெரும் ஆபத்திலிருந்து எங்களையும், பசுக்களையும் மலையைக் குடையாய்ப் பிடித்துக் காத்தாய். உன் செயல் ஆச்சர்யகரமான குழந்தைத் தனமாயிருக்கிறது. இடையர் பிறப்பிற்குச் சம்பந்தம் இல்லாத, தெய்வீகச் செயல்களையே புரிந்து வருகிறாய். இது எப்படி என்று எங்களுக்குப் புரியவில்லை. நீயே உண்மையைச் சொல்லி விடு. முன்பு பெரும் யமுனையின் மடுவில் காளியனை ஒடுக்கினாய். ப்ரலம்பனைக் கொன்றாய். இப்போது மலையைத் தூக்கி எங்களைக் காத்திருக்கிறாய். இந்த அரிய செயல்களைக் கண்டு நாங்கள் ஸந்தேஹத்தால் மிகவும் குழம்பியுள்ளோம்.

ஹரியின் பாதங்களில் ஆணையாய் உண்மையைச் சொல்கிறோம். எல்லையற்ற வல்லமை படைத்தவனே! உன்னுடைய பெரும் பலத்தை கண்ட எங்களால் உன்னை மனிதனாக நம்ப முடியவில்லை. இந்த சேரியில் குழந்தைகள், பெண்கள், எவருக்கும் உன் மீது அன்பு உண்டு. தேவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்தாலும் செய்தற்கரிய செயல்களை நீ செய்துள்ளாய். ஆயர் குடியில் பிறந்ததையும், பிறப்பிற்கு ஒவ்வாத வீர்யத்தையும் நினைக்கும் போதெல்லாம் மிகுந்த ஸந்தேஹம் உண்டாகிறது. நீ யாரோ தேவ, ராக்ஷஸ, யக்ஷ, கந்தர்வனாகவோ தான் இருக்க முடியும். யாராயிருந்தாலும் எங்கள் உறவினன் நீ. அது ஒன்றே போதும். உன்னை நாங்கள் வணங்குகிறோம்” என்று கூறினர்.

சிறிது நேரம் இந்த வார்த்தைகளால் புண்படுத்தப்பட்டவன் போல் அமைதி காத்த க்ருஷ்ணன் “கோபர்களே, நீங்கள் என்னை உறவினன் என்று சொல்லிக் கொள்வதில் வெட்கப்படுகிறீர்கள் போலிருக்கிறது. இல்லையென்றால் உங்கள் சம்பந்தத்தை விரும்பி உங்கள் குலத்தில் பிறந்திருக்கும் என்னை ஏன் தேவன், தானவன் என்றெல்லாம் கூறவேண்டும். நான் கொண்டாடத் தக்கவனாகவே இருந்து, என் சம்பந்தத்தால் உங்களுக்கும் வெட்கமும் உண்டாகாமலிருந்தால் இந்த ஆராய்ச்சிகளைச் செய்ய வேண்டாம். நான் தேவனோ, கந்தர்வனோ, யக்ஷனோ, தானவனோ அல்ல. உங்கள் உறவினனே. வேறு வகையில் என்னை நினைக்காதீர்கள்” என்று கோபமாகக் கூறுவது போல் கூறினான். இப்படி இவன் கோபமாய்க் கூறியதைக் கண்ட கோபர்கள் மேலே எதுவும் பேசாமல் மௌனமாகி, க்ருஷ்ணனை உறவினனாகப் பெற்றதற்கு மகிழ்ந்து அவனோடு காட்டிற்குள் சென்றனர்.

இதன் பின் ஒருநாள் ஆகாயம் தெளிவாயிருக்க, சரத் காலத்து சந்த்ரன் உலா வந்து கொண்டிருக்க, அல்லிப் பூக்கள் நீர் நிலைகளெங்கும் மணம் பரப்பிக் கொண்டிருக்க, வண்டுகள் பாட என்று இப்படி எல்லாம் அழகாக இருந்த நிலையில் க்ருஷ்ணன் கோபிகைகளுடன் விளையாடக் கருதினான். வீட்டை விட்டு வனத்திற்கு வந்து, கோபிகைகளையும் வீட்டிலிருந்து அங்கு வரவழைக்கக் கருதி புல்லாங்குழலில் ஏற்ற, இறக்கங்கங்களுடன் அவர்கள் விரும்பும் இனிய கானம் செய்தான். இதன் இனிய ஓசையைக் கேட்டதும் கோபிகைகளும் காவல்களைக் கடந்து தங்கள் வீட்டை விட்டு க்ருஷ்ணனிடம் வந்து அவனைச் சூழ்ந்து கொண்டனர்.

ஒருத்தி அந்தக் குழலோசைக்கேற்ப தானும் மெல்லப் பாட, இன்னொருத்தி அவனையே மனதில் நினைத்திருக்க, மற்றொருத்தி “க்ருஷ்ணா! க்ருஷ்ணா” என்று அவன் பெயரைக் கூறிக் கொண்டு வெட்கப்பட்டுக் கொண்டிருக்க, இன்னொருத்தி க்ருஷ்ணன் பக்கம் சென்று நிற்க என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் அவன் குழலோசையை அனுபவித்திருந்தனர். இன்னொரு பெண் மாமனார், மாமியாருக்குப் பயந்து தன் வீட்டிற்குள்ளேயே அவன் நினைவாகவே இருந்தாள். அவனையே நினைத்திருந்தலால் அவள் செய்த புண்யங்களின் பலனும் கழிந்து, வீட்டை விட்டு வெளியேறி அவனிடம் சென்று சேர முடியாத துக்கத்தில் இருந்ததால் அவள் பாபப் பலன்களும் கழியப் பெற்று அந்த இரவிலேயே அவள் பகவத் த்யானத்தால் முக்தியும் அடைந்தாள்.

இப்படி எல்லோரோடும் க்ருஷ்ணன் அந்த இரவில் ராசலீலை செய்து கொண்டிருக்கையில் அவர்கள் கண்களிலிருந்து மறைந்தான். க்ருஷ்ணன் திடீரென மறைந்ததால் துயருற்று வ்ருந்தாவனத்தில் அங்குமிங்கும் அலைந்த கோபியர் அவன் லீலைகளைத் தாங்களே ஒவ்வொருவராக செய்து காட்டி மகிழத் தொடங்கினர். ஒருத்தி “தோழி, நானே க்ருஷ்ணன். அவனைப் போலவே அழகாய் நடக்கிறேன் பாருங்கள்” என்றாள். இன்னொருத்தி “நான் தான் க்ருஷ்ணன். அவனைப் போலவே பாடுகிறேன். அதைக் கேளுங்கள்” என்றாள். இன்னொருத்திக் காளியனாக ஒருத்தியைப் பாவித்து, “துஷ்டா! காளியா! நில்! ஓடாதே!” என்றவாறு தோள் கொட்டி அவளைப் பிடித்து இழுத்துக் காண்பித்தாள். நான்காமவள் இதேபோல் கோவர்த்தனகிரியைத் தூக்குவது போலவும், ஐந்தாமவள் தேனுகாவதத்தையும் இப்படி இவர்கள் க்ருஷ்ணனின் பற்பல லீலைகளைப் பாவித்துக் காண்பித்துக் கொண்டு திளைத்திருந்தார்கள்.

இப்படி இவர்கள் வ்ருந்தாவனத்தில் சுற்றி வருந்தி வருகையில் ஓரிடத்தில் த்வஜ, வஜ்ர ரேகைகள் பொருந்திய இரு காலடிச் சுவடுகளைக் கண்டாள் ஒருத்தி. மிகமகிழ்ந்த அவள் “இதோ க்ருஷ்ணனின் காலடிகள், இங்கே பாருங்கள்” என்று மற்றவர்களுக்கும் காண்பித்தாள். சிறிது தொலைவில் இன்னொருவரின் காலடிகளும் அதன் கூட இருந்தன. உடனே அவள் “இதோ பாருங்கள், க்ருஷ்ணனுடன் புண்யம் செய்த ஒருத்தியும் சென்றிருக்கிறாள். நமக்குக் கிடைக்காத பாக்யம் அவளுக்குக் கிடைத்திருக்கிறது. சிறிய இந்த காலடிகள் நெருங்கி இருப்பதால் மெதுவாய் நடக்கும் இயல்புடையவள் அவள்” என்றும் கூறுகிறாள்.

இன்னும் சிறிது தூரத்தில் க்ருஷ்ணனின் முன் பாதப்பகுதிகள் மட்டும் இருப்பதையும், அருகில் பூச்செடிகள் இருப்பதையும் கண்ட அவள் “உடன் சென்றிருப்பவள் தனக்குப் பூக்கள் வேண்டும் என்று கேட்டிருக்கிறாள். இவன் அவள் ஆசையை நிறைவேற்ற உயரத்தில் இருக்கும் அந்தப் பூக்களை முன்னங்கால்கள் மட்டும் பூமியில் படுமாறு எழும்பிப் பறித்துக் கொடுத்துள்ளான், அதனால் தான் கால்களின் பின் பகுதிகள் இங்கில்லை, பாருங்கள் நம் ஆசைகளை நிறைவேற்றாமல் அவள் ஆசையை மட்டும் நிறைவேற்றி இருக்கிறான், அவள் பாக்யமே பாக்யம்” என்று பெருமூச்சு விடுகிறாள். இன்னும் ஒரு இடத்தில் பூக்கள் கீழே சிதறி, காலால் மிதிபட்டிருப்பதைக் கண்டு “அவன் அவளுக்கு இங்கேதான் உட்கார வைத்து அலங்காரம் செய்திருக்கிறான் போலிருக்கிறது, முன் பிறவியில் இவள் விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்திருப்பாள், அதன் பலனே இது” என்று பொருமுகிறாள்.

சிறிது தூரத்தில் கண்ணன் காலடிகள் மட்டுமே காணப்படுகின்றன. உடனே ஆராய்ச்சி செய்யும் இந்தப் பெண் “கொஞ்ச நேரத்திற்கு முன் கண்ணனே பூக்களைப் பறித்து அவள் விரும்பியபடியெல்லாம் அவளுக்கு அலங்காரம் செய்து விட்டான் அல்லவா. அதனால் யாருக்கும் கிடைக்காத இந்த பாக்யம் நமக்கே கிடைத்தது என்று அவளுக்குக் கர்வம் வந்து விட்டது. கர்வம் கொண்டதால் அவளை விட்டு விட்டு தான் மட்டும் சென்றுள்ளான். அதனால் தான் அவள் காலடிகளைக் காணவில்லை” என்கிறாள்.

இன்னும் சிறிது தூரம் சென்றதும் “இங்கே பாருங்கள், க்ருஷ்ணனின் காலடிகளைத் தொடர்ந்து இன்னொரு காலடிகளும் அழுந்தித் தெரிகின்றன. ஒருத்தியை அவன் விட்டு விட்டுத் தனித்துச் செல்வதை அறிந்த இன்னொருத்தி ஓடிச் சென்று கண்ணனைப் பிடித்திருக்கிறாள் போலும். அதனால்தான் இவள் காலடிகள் அழுந்தித் தெரிகின்றன. இதோ இங்கே, இங்கே அவள் காலடிகள் ஒழுங்கீனமாக இங்குமங்கும் காணப்படுகின்றன. தன்னை நெருங்கி விட்ட அவளைத் தன் கைகளால் பிடித்திழுத்துக் கூட்டிச் சென்றிருக்கிறான் கண்ணன். இவளும் தன்னிலையிழந்து அவனோடு லயித்துச் சென்றிருக்கிறாள். அதனால் தான் இப்படி தாறுமாறாக இருக்கின்றன இங்கே அவள் கால்கள்” என்கிறாள்.

இன்னும் கொஞ்ச தூரத்தில் பெண்ணின் காலடிகள் தலைகீழாகத் தெரிவதைக் கண்ட அவள் “இவள் கண்ணன் கையைப் பிடித்ததோடு சரி போலும், வேறெந்த பாக்யத்தையும் அடையாமல் அந்த மோசக்காரனால் இவள் திருப்பியனுப்பப்பட்டிருக்கிறாள். அது தான் இது” என்கிறாள். “இங்கேயே இரு, நாம் விளையாடி மகிழ நல்ல ஒரு இடத்தைக் கண்டு பிடித்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி அவளை இங்கேயே விட்டு, வேகமாக ஓடிச் சென்றிருக்கிறான் இந்த அடர்ந்த கானகத்துள், இதற்குள் நிலவு கூடப் புகமுடியாது, இனி அவன் காலடிகளை நம்மால் தொடர முடியாது” என்று முடிக்கிறாள் அவள். இப்படி அவனைத் தேடிச் சென்ற அவர்கள் இப்போது வேறு வழியின்றி மீண்டும் வந்த வழியே திரும்பி, யமுனைக் கரையை அடைந்து அங்கேயே அவனைப் போற்றிப் புகழ்ந்து பாடி, விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்தில் கண்ணன் இவர்களின் பக்திக்கு மகிழ்ந்து மீண்டும் தோன்றி அவர்களை நோக்கி பரவசத்துடன் வரத்தொடங்கினான். அவன் வருவதைக் கண்ட ஒருத்தி வேறொன்றும் தோன்றாது “க்ருஷ்ணா! க்ருஷ்ணா” என்றே கூறிக் கொண்டிருந்தாள். இன்னொருத்தி அவனை ஊடலுடன் புருவங்களை நெரித்துத் தன் வண்டுக் கண்களால் அவன் முகமாகிய தாமரையை நுகர்ந்து கொண்டிருந்தாள். இன்னொருத்தி கண்களால் அவனை மனதில் இருத்தி, மீண்டும் வெளியே சென்று விடாதவாறு கண்களை மூடிக் கொண்டு, அவனையே த்யானித்துக் கொண்டிருந்தாள். இவர்களைக் கண்ணனும் சிரித்துப் பேசியும், தானும் புருவங்களை நெரித்தும், கைகளால் தழுவியும் தக்கபடி சமாதானம் செய்தான். இதனால் அவர்களும் மனக்கவலை தீர்ந்து மகிழ்வுற்றனர்.

இதன் பின் ராஸ லீலை (நர்த்தனமாடும் பெண்களை வட்டமாக நிற்க வைத்து விளையாடும் ஒரு விளையாட்டு) செய்ய விரும்பினான். ஆனால் ஒருவரும் அதற்கு இசையாதவாறு அவனிடமே, அவனை ஸ்பர்ஸித்துக் கொண்டே நின்றிருந்தனர். க்ருஷ்ணன் தானே ஒவ்வொருத்தியின் கையையும் பிடித்து இன்னொருத்தியின் கையோடு சேர்த்துப் பிடிக்க வைத்தான். அவன் கை பட்டதில் தங்களை மறந்த அவர்கள் க்ருஷ்ணன் தன் கையையே பிடித்துக் கொண்டிருப்பதாக எண்ணினர். மற்றவள் கையைப் பிடித்துக் கொண்டிருப்பதாக அறியவில்லை. க்ருஷ்ணனும் தன் மாயையால் ஒவ்வொருவர் பக்கத்திலும் இருப்பது போலவே தோற்றமளித்தான். க்ருஷ்ணன் சரத் காலத்து சந்த்ரனையும், அழகு பூத்துக் குலுங்கும் நீர் நிலைகளையும் பாட, கோபியர்களோ சலிப்பின்றி அவன் பெயரையே பாடிக் கொண்டிருக்க, அவர்கள் வளையொலிகளோடு சேர்ந்து ராஸக்ரீடை வளர்ந்தது.

இடையில் களைப்படைந்த இந்த பெண்கள் கண்ணன் தோள்களில் கைகளைப் போட்டுக் கொண்டும், அவன் தாடையோடு தங்கள் தாடையை சேர்த்து வைத்துக் கொண்டும், அவனைக் கட்டி அணைத்துக் கொண்டும் இப்படி ஒவ்வொரு முறையில் தங்கள் ச்ரமத்தைத் தீர்த்துக் கொண்டனர். அவன் பாடுவதை இரு முறை திரும்பப் பாடிக் கொண்டும், அவனோடு சேர்ந்தோடியும், அவனை எதிர்த்துச் சேர்ந்தும் பலவிதங்களில் அவனோடு ஒவ்வொரு நொடியையும் அனுபவித்தனர். அவனைப் பிரியும் ஒரு நொடியும் அவர்களுக்கு ஒரு கோடி வருஷமாகத் தோன்றியது. இவ்வாறு அவர்களோடு கண்ணனும் ஆடிக் களித்தான்.

தங்கள் கணவன், தகப்பன், ஸஹோதரன் இப்படி அனைவரையும் விடுத்து அன்பிற்குரிய அவனோடே திரிந்து கொண்டிருந்தனர். எல்லா உயிர்க்கும் அந்தர்யாமியாய், ஆத்மாவாய் இருப்பதனால் இவனோடு சேர்ந்து இப்படி விளையாடிக் கொண்டிருப்பது எந்த வகையிலும் தோஷமில்லை. அவர்கள் தங்கள் ஆத்மாவோடு விளையாடி ஆத்மானுபவம் அடைந்தார்களே அன்றி வேறு புருஷனாக க்ருஷ்ணனையும், தங்கள் புருஷனை விட்டு இவனோடு விளையாடிக் கொண்டிருந்ததாக இந்த கோப ஸ்த்ரீகளையும் நினைப்பதில் ஒரு பொருளும் இல்லை. அவனுக்கு உலகமே உடல், இந்த கோபஸ்த்ரீகளும் அதில் அடக்கம். இந்த கோபஸ்த்ரீகள் உட்பட எல்லா உயிர்க்கும் அவனே ஆத்மா. ஆக இருவரிடத்தும் ஒரு தோஷமுமில்லை, குறையுமில்லை, அதர்மமுமில்லை.

05_14. க்ருஷ்ணன் ஒரு நாள் மாலைப் பொழுதில் ராஸக்ரீடைக்குச் செல்ல எத்தனிக்கையில் அரிஷ்டன் என்ற ஒரு அஸுரன் கொடிய கரிய எருதின் உருவில் ஸூர்யன் போன்ற ஒளிப் பிழம்பான கண்களுடன், குளம்புகளால் பூமியைப் பிளந்து கொண்டு, நாக்கால் உதடுகளை நக்கிக் கொண்டு, வாலைத் தூக்கிக் கொண்டு அனைவரையும் பயமுறுத்திக் கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தான். கெட்டியான கழுத்தும், உயர்ந்த திமிளும் கொண்டு, பின் புறம் சாணம், மூத்திரம் இவைகளால் பூசப்பட்டு, பசுக்களையும் பயந்தோடச் செய்து கொண்டு வந்து கொண்டிருந்தான். காட்டில் முனிவர்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்த இவன் முகத்தில் மரங்களை முட்டித் தள்ளியதாலுண்டான வடுக்கள் இருந்தன.

இப்படி ஒரு எருது ஓடிவருவதைக் கண்டு, அதனருகில் கூட போகமுடியாமல் கோகுலத்தில் எவரும் க்ருஷ்ணா! க்ருஷ்ணா! என்று கதறிக் கொண்டு ஓடினர். க்ருஷ்ணனும் இவர்களைக் காப்பதற்காக ஸிம்ஹநாதம் செய்து கொண்டே அதன் எதிரில் வந்தான். க்ருஷ்ணன் வயிற்றில் குத்திக் கிழிப்பதற்காக அந்த எருதும் தன் கூரிய கொம்புகளை நீட்டி கொண்டு ஓடிவந்தது. பயப்படாமல் தான் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு எருது அருகில் நெருங்கியதும் அதன் கொம்புகளைப் பிடித்து அதை அசைய விடாமல் செய்து, முழங்காலால் அதன் வயிற்றில் ஒரு உதை விட்டான் க்ருஷ்ணன். அதை பழைய துணியைப் பிழிவது போல் அடித்துப் பிழிந்து, அதன் ஒரு கொம்பையே பிடுங்கி, அதனாலேயே வாயில் ரத்தம் கக்கி இறக்கும் வரை அதை அடித்துக் கொன்றான் க்ருஷ்ணன். கோபர்கள் அவன் இறந்ததைக் கண்டு கண்ணனை மகிழ்ந்து கொண்டாடினர்.

05_15. க்ருஷ்ணனைக் கொல்வதற்காகச் சென்ற அஸுரர்கள் ப்ரலம்பன், தேனுகன், அரிஷ்டன் என்று அனைவருமே அழிந்தனர். கண்ணனோ வ்ருந்தாவனத்தில் கோவர்த்தனத்தைத் தூக்கித் தாங்குகிறான். காளியனை ஒடுக்குகிறான். மரங்களுக்கு சாப விமோசனம் கொடுத்தான். பூதனை, சகடாஸுரனை வீழ்த்தி விட்டான். இப்படி இவன் திருவிளையாடல்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கையில், பூலோகம் வந்த நாரதர் நேரே கம்ஸனிடம் சென்று க்ருஷ்ணன் பிறந்தது, வஸுதேவர் குழந்தைகளை ஒரே இரவில் இடம் மாற்றியது என இது வரை அவனுக்குத் தெளிவாயிராத அனைத்து ரஹஸ்யங்களையும் அவனிடம் கூறி விட்டார். இந்த விஷயங்களைக் கேட்டதும் கம்ஸன் வஸுதேவரிடமும், யாதவர்களிடமும் கடும் கோபம் கொண்டான்.

இளம் வயதிலேயே இவ்வளவு பேரை வதைக்கும் இந்த பலராம, க்ருஷ்ணர்கள் இன்னும் யுவர்கள் ஆனால் என்ன செய்வார்களோ என்ற பயத்தில், இப்போதே அவர்களைக் கொன்று விட வேண்டும் எனத் தீர்மானித்தான். “வ்ருந்தாவனத்திலேயே இருக்கும் கேசி என்பவனைக் கொண்டு மீண்டும் இவர்களைக் கொல்ல முயற்சி செய்வோம். அவன் அவர்களை நிச்சயம் கொன்று விடுவான். அவனிடம் தப்பி விட்டால், இங்கே ஒரு தனுர் யாகத்திற்கு ஏற்பாடு செய்து, அதற்கு ச்வபல்கனின் புதல்வரும், யதுக்களில் மதிப்பிற்குரியவருமான அக்ரூரர் மூலம் ராம, க்ருஷ்ணர்களை அழைப்போம். அதற்கு வரும் வஸுதேவனின் மகன்களான, அந்த இடைச்சிறுவர்களை நம் யானை குவலயாபீடம் கொன்று விடும், அதனிடமும் அவர்கள் தப்பி வந்தால், நம்முடைய ப்ரதான மல்யுத்தர்களான சாணூரன், முஷ்டிகன் இவ்விருவர்களைக் கொண்டு அவர்களைப் போட்டியில் கொன்று விடலாம்” என்று முடிவு செய்தான்.

உடனே அக்ரூரரையும் அழைத்து “அக்ரூரரே! நீர் எனக்கு நெருங்கிய நண்பர் அல்லவா. எனக்காக ஒரு உதவி செய்யுங்கள். என் கட்டளையை நிறைவேற்றுங்கள். தேரில் ஏறி, நந்தகோகுலம் சென்று பலராமன், க்ருஷ்ணன் இருவரையும் இங்கு அழைத்து வாருங்கள். விஷ்ணுவின் அம்சங்களான அவர்கள் என்னைக் கொல்வதற்காகவே அவதரித்துள்ளார்களாம். என் வீரர்களையும் அனுதினமும் கொன்று வருகிறார்கள். வரும் சதுர்தசியில் இங்கு ஒரு தனுர் யாகத்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன். அதற்கு நீங்கள் அவர்களை அழைத்து வரவேண்டும். அதற்கு வரும் அந்த வஸுதேவன் புத்ரர்களை என் யானை குவலயாபீடமே கொன்று விடும். மீறினால் இதே தனுர்யாகத்தில் ஒரு பகுதியாக பொது மக்கள் முன்னிலையில் ஒரு மல்யுத்தம் நடக்கும். அதில் என் வீரர்களான சாணூரன், முஷ்டிகன் இருவரும் அவர்களைத் திறமையாக நிச்சயம் கொல்வார்கள்.

அவ்விருவரும் ஒழிந்த பின் என்னைக் கொல்ல நினைப்பவர்களான வஸுதேவன், அந்த இடையன் நந்தகோபன், என் முட்டாள் தந்தை உக்ரஸேனன் இவர்களை நானே கொன்று விட்டு இவர்களின் தனத்தையும், பசுக்களையும் மற்ற அனைத்தையும் எடுத்துக் கொள்வேன். உம்மைத் தவிர மற்ற யாதவர்களனைவரும் எனக்குப் பகைவர்களே. கொஞ்சம், கொஞ்சமாக அவர்களையும் வேரில்லாமல் செய்து விட்டு, உம்முடன் சேர்ந்து நானே இந்த ராஜ்யத்தை எந்தத் தடையுமின்றி ஆளுவேன். எனவே நீங்கள் இப்போதே நந்தன் கோகுலத்திற்கு விரைவாகச் செல்லுங்கள். நான் உங்களிடம் சொன்ன எல்லா செய்திகளையும் அங்கே கூறி காரியத்தைக் கெடுத்து விடாதீர்கள். நடக்க இருக்கும் தனுர் யாக மஹோத்ஸவத்தை மட்டும் எடுத்துக் கூறி, அதற்காக அவர்கள் எல்லோரையும் தேவையான தயிர், பால் இவைகளை ஏற்பாடு செய்து கொண்டு வருமாறு கூறி விட்டு, ராம, க்ருஷ்ணர்களை மட்டும் உங்களுடன் கூட்டிக் கொண்டு வந்து விடுங்கள்” என்று அன்பாக உத்தரவிட்டான் கம்ஸன். இதைக் கேட்டதும் அக்ரூரரும் மகிழ்ச்சியோடு “அப்படியே ஆகட்டும்” என்று கூறிவிட்டுத் தன் அழகிய தேரிலேறி உடனே க்ருஷ்ணனைத் தர்ஸிப்பதற்காக மதுரையை விட்டுச் சென்றார்.

05_17. அக்ரூரர் தேர் விரைவாகச் செல்கிறது. பரமாத்மாவின் அம்சமாய் அவதரித்த ஒருவனைத் தர்ஸிக்கத் தனக்குக் கிடைத்த உயர்ந்த வாய்ப்பை, தான் பெற்ற பெறும் பேற்றை எண்ணித் தன்னைத் தானே வியந்து கொள்கிறார் அவர். “மஹா பாவியான கம்ஸனின் பணியாளாக இருந்து கொண்டு, அவன் பாவச் சோற்றையே நிதமுண்டு காலத்தைக் கழித்துக் கொண்டிருந்த என் பிறவி, மலர்ந்த தாமரையை ஒத்த திருமுகத்தை தர்ஸிக்க இருப்பதால் சாபல்யமடைந்தது. இதுநாள் வரை கம்ஸனின் கோர முகத்திலேயே விழித்து வந்த எனக்கு, இப்போது கண்ணனின் திருமுகத்தில் விழிக்கும்படி நேர்ந்திருப்பதற்கு நான் என்ன தவம் செய்திருக்கிறேனோ. பாவத்தைப் பெருகச் செய்யும் பாவியின் முகத்தையே கண்டு வந்திருக்கும் நான் இப்போது பாவமனைத்தையும் போக்கக்கூடியவனின் திருமுகத்தைக் காணப் போகிறேன்.

எவன் உருவை மனதில் நினைத்தாலே பாபங்கள் அனைத்தும் தொலையுமோ அவனை நான் நேரிலேயே பார்க்கப் போகிறேன். இந்த முகத்திலிருந்தல்லவா வேத, வேதாந்தங்கள் வெளிவருகின்றன. ஒளிரும் பொருள்களுக்கெல்லாம் இந்தத் திருமுகமல்லவா ஆதாரம். சந்த்ர, ஸூர்யர் இரு கண்களாக இருப்பதும் இந்த முகத்திலல்லவா. எவனால் இந்த உலகம் படைக்கப்பட்டு நிலைகொள்ளச் செய்யப்பட்டிருக்கிறதோ, எவனை சாதுக்கள் கொண்டாடுகிறார்களோ, எவன் யாக, பூஜைகளில் கொண்டாடப்படுகிறானோ அவனையல்லவா நான் தர்ஸிக்கப் போகிறேன். நூறு யாகங்களால் எவனை ஆராதித்து ஒருவன் தேவேந்த்ரனாகிறானோ, அந்த ஆதி அந்தமில்லா பரம்பொருளையல்லவா நான் தர்ஸிக்கப் போகிறேன். எவன் குணங்களை ப்ரஹ்ம, ருத்ர, இந்த்ர, அச்வினி, வஸுக்கள், மருத்துக்கள் எவரும் அறியாரோ அந்த ஹரி இன்று என்னைத் தொடும் பாக்யம் பெறுவேன்.

உலகிற்கு ஆத்மாவாகவும், அனைத்தும் அறிந்தவனாகவும், அனைத்துமாக இருப்பவனும், மறைந்தும், நிறைந்தும் இருப்பவனும், அளவிட முடியாதவனும், அழிவற்றவனுமாக இருப்பவன் இன்று என்னோடு பேசப் போகிறான். பிறப்பறியாதவனும், மீனாக, ஆமையாக, பன்றியாக, குதிரையாக, சிங்கமாகப் பிறந்து உலகைக் காத்தவனும் இன்று என்னோடு பேசப் போகிறான். பூபாலன், விருப்பப்படி தோற்றங்களை எடுக்கக்கூடியவன் இன்று எதையோ மனதில் நினைத்து அவதரித்துள்ளான். இந்த உலகையே தன் தலையில் தரித்துக் காக்கும், அவன் அண்ணன் பலராமனோ என்னை அக்ரூர என்று அழைக்கப் போகிறான்.

அறிந்தவனும், அறிய முடியாதவனுமான அவனைத் தங்கள் உள்ளத்தில் வைத்தே, யோகிகள் அறியாமையும், மாயைகளும் நிறைந்த இந்த ப்ரபஞ்சத்தைக் கடக்கிறார்கள். யாகம் செய்பவர்கள் யக்ஞபுருஷனென்றும், பக்தி முறையோடு பூஜிப்பவர்கள் வாஸுதேவனென்றும், தத்துவமறிந்தவர்கள் விஷ்ணு என்றும் எவனைத் துதிக்கிறார்களோ அவனை நான் வணங்குகிறேன். இவ்வுலகில் காரணமும், காரியமுமாயிருக்கும் அவன் என்னோடு அனுகூலமாயிருக்க வேண்டும். எவன் பிறப்பில்லாத அந்த ஹரியை நம்பிக்கையோடு, மனதால் த்யானிக்கிறார்களோ, அவன் எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமாயிருக்கிறான்” என்றெல்லாம் இப்படிப் பலவாறு க்ருஷ்ணனைப் பற்றி மகிழ்வோடு சிந்தித்துக் கொண்டு சென்ற அக்ரூரர் ஸூர்யாஸ்தமனத்திற்கு சற்று முன்பாக, பசுக்களிடம் கோபர்கள் பால் கறந்து கொண்டிருக்கும் வேளையில் கோகுலத்தை அடைந்தார்.

காடுகளிலிருந்து ஓட்டிக் கொண்டு வந்த மாடுகளைக் கொட்டில்களில் கட்டி விட்டு பால் கறப்பதற்காக அங்கு நின்றுக் கொண்டிருந்த கண்ணனை, பசுக்களுக்கு மத்தியில், அலர்ந்த அல்லியின் நிறத்து உடலோடு, தாமரைக் கண்களோடு, மார்பில் ஸ்ரீவத்ஸமென்னும் குறியோடு, நீண்ட கைகளோடு, அகன்ற மார்போடு, உயர்ந்த மூக்குடன் இப்படி எவரையும் கவரும் தோற்றத்துடன் புன்சிரிப்போடு பொலிந்து, சிவந்த நகங்களுள்ள கால்களால் பூமியில் அங்குமிங்கும் நடந்து கொண்டு, மஞ்சள் பட்டாடையும், வனமாலைகளும், கையில் அப்போதுதான் பறித்த கொடியோடு, தலையில் வெண்தாமரை மாலையணிந்திருக்கும் நிலையில் முதன் முதலாகக் கண்டார் அக்ரூரர்.

க்ருஷ்ணனை அடுத்து, அன்னப் பறவை, மல்லிகை, சந்த்ரன் இவைகளின் நிறத்தில் உடலோடு, நீலப்பட்டாடையுடுத்தி, பெருத்த பலம் பொருந்திய கைகளோடு, மேகங்கள் சூழ்ந்த கைலாஸ மலையைப் போல், ப்ரகாசமாய் நின்றிருந்த பலராமனையும் கண்டார். கண்டதும் உடல் மயிர் சிலிர்க்க, உடல் பூரித்து நின்ற அக்ரூரர் முகம் தாமரை மலர் போல் மலர்ந்து விரிந்தது. மனதிலேயே ரமித்து வந்த இந்த இரு வாஸுதேவர்களை நேரில் கண்டதும் பக்தி பொங்கியது. கண்கள் பெற்ற பேற்றை நினைக்கிறார். “இவன் என்னைத் தீண்டினால் என் உடலும் பேறு பெற்றதாகும். எல்லாப் பாபங்களையும், தீமைகளையும் போக்குவதல்லவா அந்தக் கை, அதன் ஸ்பர்சம்.

இந்தக் கரம் தானே சக்ராயுதத்தை ஏவி, அஸுரர்களை அழித்து, உலகிற்கு நன்மை தருகிறது. வேண்டுவதை எல்லாம் அளிப்பதும் இந்தக் கரம் தானே. இந்தக் கரத்தில் நீர் வார்த்துத் தானே தேவர்களுக்கும் மேலான போகங்களைப் பெற்று மன்வந்த்ரம் முடிய அனுபவித்தான் மஹாபலி. அந்தக் கைகளால் என்னை அணைப்பானா” என்றெல்லாம் நினைத்த அக்ரூரர் “ஆஹா! அந்தப் பாபி கம்ஸனுடன் எனக்குள்ள தொடர்பால் இவன் என்னை வெறுப்பானோ. இல்லை ஏற்று என் பாபங்களைப் போக்குவானா. நல்லோர் வெறுத்து விட்டால் இந்தப் பிறவி வீணல்லவா. ஆனால் எப்போதும், எல்லோர் உள்ளத்திலும் நிறைந்திருக்கும், களங்கமற்ற தூயவனான, உண்மைப் பரம்பொருளான இந்த க்ருஷ்ணனுக்கு இந்த உலகில் தெரியாதது ஒன்றுமில்லை. என்னையும் அவனறிவான். எனவே சிறிதும் ஸந்தேஹமின்றி முழுதாக என்னை பக்தியோடு அர்ப்பணித்து, முதலும், நடுவும், இறுதியுமில்லாத விஷ்ணுவின் அம்சமான இந்த தேவதேவனிடம் செல்வேன்” என்று நினைத்து க்ருஷ்ணனிடம் சென்றார்

05_18. இப்படி மனதால் நினைத்தபடியே கண்ணனை நெருங்கிய அக்ரூரர் “நான் அக்ரூரன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, க்ருஷ்ணனின் கால்களில் விழுந்து வணங்கினார். ஆனால் க்ருஷ்ணன் உடனே அவரை கொடியும், தாமரைச் சின்னங்களும் பொறிக்கப் பெற்ற தன் கைகளால் வாரி அன்பாக அணைத்துக் கொண்டான். அதேபோல் பலராமனையும் வணங்கினார். அவர்கள் அக்ரூரரைத் தங்கள் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்களோடு உணவு உட்கொண்டு கௌரவமாக நடத்தப்பட்டார் அக்ரூரர். அவர்களிடம் உக்ரஸேனன், வஸுதேவன், இளவரசி தேவகி ஆகியோருக்குக் கம்ஸன் செய்த தீமைகளை எல்லாம் கூறிக் கொண்டிருந்த அக்ரூரர் தான் வந்த காரணத்தையும் கூறினார்.

இவையனைத்தையும் கேட்ட கேசவர் “இவையனைத்தையும் நான் முன்னமே அறிவேன். செய்ய வேண்டியதை விரைவில் செய்வேன். ஏதாவது மாறாக நடந்து விடுமோ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். இப்போதே கம்ஸன் அழிந்ததாக நினையுங்கள். நாளை நானும், பலராமனும் உங்களோடு கூடி மதுரை செல்வோம். கோபர்களில் மூத்தவர்களும் காணிக்கைகளோடு வரட்டும். இன்றிலிருந்து மூன்று இரவுகளுக்குள் கம்ஸனை அவன் கூட்டத்தாரோடு அழிப்பேன். நீங்கள் கவலைகளை விட்டொழித்து நிம்மதியாக இங்கு எங்களுடனேயே உறங்குங்கள்” என்று கூறினார். இதன் பின் அக்ரூரர் கம்ஸனின் உத்தரவுகளை கோபர்களிடன் தெரிவித்து விட்டு ராம, க்ருஷ்ணர்களோடு நந்தகோபரின் மாளிகையிலேயே சுகமாகப் படுத்து உறங்கினார்.

பொழுது விடிந்தது. அக்ரூரர் காலைக்கடன்களை முடித்துக் கொண்டார். ராம, க்ருஷ்ணர்களும் மகிழ்வோடு மதுரைக்குப் புறப்பட்டனர். இதையறிந்ததும் கோபியர்கள் கண்ணீர் விடலாயினர். க்ருஷ்ணன் பிரிவை நினைத்ததும் அவர்கள் கைகளிலிருந்து வளையல்கள் கழன்று விழுந்தன. “மதுரை சென்று விட்டால் அவன் எப்படி திரும்பி வருவான். ஒரு போதும் வர மாட்டான். அழகிய நாகரிக மங்கைகளின் அபிநயங்களோடு கூடிய தேன் மொழி வார்த்தைகளைப் பருகுவான். பட்டிக்காட்டுப் பெண்களான கோபியர்களிடம் இனி அவன் மனம் எப்படித் திரும்பும். நம்மை நினைக்கவும் மாட்டான். நம் அனைவருக்கும் ஸாரமான இவனை நம்மிடமிருந்து பிரித்து நகரத்துப் பெண்களின் நளினமான பேச்சு, வெளிப்படையான சிரிப்பு, அழகான தோற்றம், அர்த்தமுள்ள பார்வை இவைகளிடம் சேர்ப்பதால் அபலைகளான நம்மை இரக்கமில்லாத விதி அடித்து விட்டது.

மதுரை நகரத்துப் பெண்களின் பேச்சுக்கள் பாவங்கள் நிறைந்து, புன்சிரிப்போடு இருக்கும். அவர்கள் நடையும் அழகழகாயிருக்கும். பார்வைகள் கருத்தைக் கவர்ந்து விடும். க்ராமத்திலேயே பிறந்து வளர்ந்த கண்ணன் இவைகளைக் கண்டவுடன் மயங்கி, நம்மிடம் திரும்பப் போவதில்லை. இதோ, இதோ நம் கண் முன்னாலேயே கண்ணன் தேரிலேரி மதுரை செல்கிறானே. இந்த அக்ரூரர் என்பவர் நம்மை ஏமாற்றி விட்டார். இவருக்கு யார்தான் அக்ரூரர் (க்ரூரம் இல்லாதவர்) என்ற பெயரை வைத்தார்களோ. இவரை விட கொடியவர் யாரும் இருக்க மாட்டார்கள். நாமனைவரும் கண்ணனிடம் வைத்திருக்கும் அன்பை க்ரூரரான இந்த அக்ரூரர் அறியவில்லையா. கண்களுக்கு பரமானந்தத்தைத் தரும் இவனை நம்மிடமிருந்து பிரித்துச் செல்கிறாரே.

இந்தக் கண்ணனாவது நம்மீது தயை கொண்டு பிரியாமல் இருக்கக் கூடாதா. அவனும் சிறிதும் கருணையின்றி அண்ணனுடன் தேரிலேறிச் செல்கிறானே. யாராவது இவனைத் தடுக்கக் கூடாதா. நம் பெரியவர்களிடம் இவன் பிரிவை நம்மால் தாள முடியாது என்று சொல்லலாமா. அவன் பிரிவில் வாடும் நமக்கு அவர்களால் என்ன உதவி செய்ய முடியும். நந்தகோபன் தலைமையில் அவர்களும் தான் உடன் புறப்படுகிறார்கள். ஒருவரும் கோவிந்தனை இங்கேயே நிறுத்துவதற்கு முயலவில்லையே. இன்றைய இரவு கழிந்து, விடியும் பொழுது மதுரைப் பெண்களுக்கு மகிழ்வைத் தரப் போகிறது. தங்கள் கண்களாகிற வண்டுகளால் அச்யுதனின் முகமாகிற தாமரையைப் பருகிக் களிக்கப் போகிறார்கள் அவர்கள்.

மெய் மறந்து, கட்டுண்டு, கண்ணனோடு ஒரு தடையுமின்றி வழி நெடுக செல்லப் போகும் அவர்கள் பாக்யமுள்ளவர்கள். கண்ணனை நெருங்கி நின்று வணங்குவார்கள். நகரத்துப் பெண்களின் கண்கள் இமைக்காமல் க்ருஷ்ணனைக் கண்டு ஆனந்திக்கப் போகின்றன. ப்ரஹ்மன் ஒரு பெரும் நிதியை நம் கண்களில் காட்டி விட்டு அதை அனுபவிக்க விடாமல் பறித்து விட்டான். கண்ணனின் அன்பு எங்களை விட்டுப் பிரிவதைப் போல் வளையல்களும் எங்கள் கைகளை விட்டுக் கழலுகின்றனவே. இந்த க்ரூர அக்ரூரர் குதிரைகளை மெதுவாக ஓட்டக் கூடாதா. பெண்களை வருந்தவைக்கவே இந்த தயையில்லாத சதி நடக்கிறது. அந்தோ, தேர்ச் சக்ரங்களின் புழுதி மட்டும் தெரிகிறதே. வெகு தூரம் சென்று விட்டானே, புழுதியும் இப்போது காணவில்லையே” என்றெல்லாம் கோபியர் பொருமிக் கொண்டும், கதறிக் கொண்டும் இருக்க கேசவனும், ராமனும் சேரியின் எல்லையைத் தாண்டி சென்றார்கள்.

விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டப்பட்ட அந்தத் தேர் மதியம் யமுனைக் கரையை அடைந்தது. ரதத்தை நிறுத்தி விட்டுக் கீழிறங்கிய அக்ரூரர் “குழந்தைகளே! தேரிலேயே உட்கார்ந்து கொண்டிருங்கள். கீழே இறங்கினால் ஜலத்தில் விழுந்து விடுவீர்கள், நான் ஸ்னான, மாத்யாஹ்னிகங்களை முடித்துக் கொண்டு வந்து விடுகிறேன்” என்று ராம, க்ருஷ்ணர்களிடம் கூறிவிட்டு, “இந்தக் குழந்தைகள் எப்படி அந்த முரடன் கம்ஸனைக் கொல்வார்கள். வீணாக அழைத்து வந்து விட்டேனே” என்று மனதினுள் வருந்திக் கொண்டே, யமுனையில் இறங்கி, ஆசமனம் செய்து, பரப்ரஹ்மத்தைத் மனதால் த்யானித்து குளிப்பதற்காக நீரில் மூழ்கினார்.

அங்கே நீரினுள் ஆயிரம் தலைகளோடு ஆதிசேஷன் உருவில் பலராமனைக் காண்கிறார். மல்லிகை மலர் மாலைகளோடும், சிவந்து விரிந்த கண்களோடும், வாஸுகி, ரம்பை, மற்றும் மேலும் பல பலம் பொருந்திய ஸர்ப்பங்கள் சுற்றி நிற்க, கந்தர்வர்கள் புகழ்ந்து துதித்துக் கொண்டிருக்க, வனமாலை மார்பை அலங்கரிக்க, அடர்ந்த நிறத்தில் ஆடைகளோடு, திருமுடியில் தாமரை மலர்கள் தாங்கி, அழகான குண்டலங்களோடு மனதை மயக்குமாறு அங்கே நீரினுள் பலராமனைக் காண்கிறார். அதன் மடியிலேயே ஒய்யாரமாக, கருமுகில் நிறத்தில், சற்று சிவந்த விரிந்த கண்கள், சக்ரம் முதலான பஞ்சாயுதங்களுடன் நாற்கரங்கள், பொன்னிறப் பட்டாடை, பல நிறப் பூக்கள் கொண்ட பூமாலைகள், இந்த்ரதனுஸ்ஸும், மின்னல்களும் பெற்றுப் பொலியும் மேகம் போன்று கண்ணன்.

மார்பில் ஸ்ரீவத்ஸம், ஒளிவீசும் அணிகலன்களோடு கரங்கள், மின்னிக் கொண்டிருக்கும் க்ரீடம், கொண்டையில் வெள்ளைத் தாமரை. சுற்றிலும் ஸனந்தாதி முனிவர்கள் மூக்கின் நுனியில் பார்வையைக் கொண்டு துதித்துத் த்யானித்துக் கொண்டு நிற்க இப்படி அவர்களைப் பார்த்ததும் ஆச்சர்யமடைந்தார் அக்ரூரர். ரதத்திலிருந்த இவர்கள் எப்படி இவ்வளவு சீக்ரமாக இங்கு வர முடியும் என்று வியந்த அவர் ஏதோ கேட்க வாயெடுத்தார். வார்த்தைகளொன்றும் வெளியேறாமல் மாயம் செய்து விட்டான் கண்ணன். நீரிலிருந்து வேகமாக வெளியேறி ரதம் நின்றிருக்குமிடத்திற்குச் சென்றார். அங்கு ராம, க்ருஷ்ணர்கள் மனித உருவிலேயே அமைதியாக ரதத்தில் அமர்ந்திருக்கக் கண்டார்.

குழப்பத்தில் மீண்டும் குளிக்கச் சென்று நீரில் மூழ்கினார். அங்கு மீண்டும் அவர்களையே கந்தர்வர்களும், முனிவர்களும், சாதுக்களும், ஸர்ப்பங்களும் துதித்திருக்கக் கண்டார். அவர்களின் இயற்கைக் குணங்களின் உண்மையைப் புரிந்து கொண்டார். அவர்களை துதித்துப் பாடினார். “ஒன்றானவன், பலவானவன், எங்கும் நிறைந்தவன், பரமாத்மா, சொல்ல முடியாத புகழுடையோன், எப்போதும் இருப்பவன், அறிவிற்கெட்டாதவன், உண்மைப் பொருள், உன் குணங்கள் யாருக்கும் தெரியாது, முதற்பொருள், நீயே ஆத்மாவாகவும், விஷயங்களாகவும், பொருள்களாகவும், அணுக்களாகவும், பரமாத்மாவாகவுமிருப்பவன். நீயே ப்ரஹ்ம, விஷ்ணு, சிவ மூர்த்தங்களாக இருக்கிறாய். உன்னையும், உன் கார்யங்களையும் யாரும் புரிந்து கொள்ள முடியாது.

உன் பெயர் கூட தெரியாது. நீயே அது. மாற்றமில்லாதவன், நீயே க்ருஷ்ணனாகவும், அச்யுதனாகவும், அனந்தனாகவும், விஷ்ணுவாகவும் இருக்கிறாய். பிறப்பில்லாதவன், நீயே உலகம். நீயே கடவுள், நீயே எல்லாமும். உலகிற்கு ஆத்மாவும், உன்னையன்றி வேறொன்றும் எதிலுமில்லை. நீயே ப்ரஹ்மா, பசுபதி, அர்யமன், தாத்ரி, விதாத்ரி, இந்த்ரன், நீர், நெருப்பு, காற்று, செல்வங்களுக்கு அதிபதி, வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அனிருத்தன்” என்று இன்னும் பலவாறுத் துதித்து அவர்களை வணங்கினார்.

05_19. யமுனையில் மூழ்கியிருந்தவாறே க்ருஷ்ணனைத் துதித்தார் அக்ரூரர். மானஸீகமாக புஷ்பங்களால் அர்ச்சித்து, தூப உபசாரங்களைச் செய்தார். மற்றதையெல்லாம் மறந்து வெகுநேரம் அவர் மனம் அந்த பரப்ரஹ்மத்தினிடமே நிலைத்திருந்தது. இப்படி த்யானத்தில் இருந்து விட்டுப் பின் ஆத்ம லாபம் பெற்றதை நினைத்துக் கொண்டே நீரிலிருந்து வெளியேறி தேரிருக்கும் இடத்தை அடைந்தார். ஒன்றுமறியாத குழந்தைகளாக அங்கே தேரில் பலராமனும், க்ருஷ்ணனும் இருக்கக் கண்டார். அவரது ஆச்சர்யமான பார்வையைப் பார்த்த கண்ணன் “அக்ரூரரே, உமது கண்கள் மலர்ந்திருக்கின்றனவே. ஏதோ அற்புதமான ஒன்றைப் பார்த்தால் தான் கண்கள் இப்படியாகும். யமுனை நீரில் என்ன அற்புதத்தைக் கண்டீர்” என்றான்.

அக்ரூரர் “கண்ணா! நீரினுள் நான் எந்த அற்புதத்தைக் கண்டேனோ அதுவேதான் இதோ என்னெதிரில் உருக்கொண்டிருக்கிறது. உலகையே உடலாகக் கொண்ட பரமாத்மாவாகவேதான் நீ காட்சி தருகிறாய். அங்கும் இங்கும் ஒரே பரம்பொருளுடன் தான் நான களித்திருக்கிறேன். ஆனாலும் இப்போது என்னை கம்ஸ பயம் வாட்டுகிறது. உன் விளையாட்டால் நேரமும் ஆகிவிட்டது. இனிமேல் கம்ஸன் நேரமாகிவிட்டதே என்று கோபிப்பான். அடுத்தவரிடம் வேலை செய்து அவர்கள் தருவதைக் கொண்டு ஜீவனம் செய்யும் எவர்க்கும் இதுதான் கதி. எனவே நாம் விரைந்து மதுரையை அடைவோம்” என்று கூறிக் கொண்டு, தேரிலேறி குதிரைகளை விரட்டினார்.

மாலைப் பொழுதில் மதுரை நகர எல்லையை வந்தடைந்ததும், அக்ரூரர் ராம, க்ருஷ்ணர்களிடம் “நீங்களிருவரும் நடந்தே கம்ஸன் மாளிகைக்கு வாருங்கள். நான் தேரில் செல்கிறேன். வாஸுதேவர் க்ருஹத்திற்குச் செல்லாதீர்கள். ஏற்கனவே அவர் உங்களால் பல துன்பங்களை கம்ஸனிடம் அனுபவித்து வருகிறார். எனவே நேராக கம்ஸன் மாளிகைக்கே வந்து விடுங்கள்” என்று கூறிவிட்டுத் தான் மட்டும் தேரில் கம்ஸனிடம் சென்றார். ராம, க்ருஷ்ணர்கள் ராஜ வீதியில் நடந்து செல்லலானார்கள். வழியெங்கிலும் ஆண்களும், பெண்களுமாக பலர் நின்று இவர்களைத் தர்ஸித்து ஆனந்திக்க, இரு இளம் யானைகள் போல இவர்கள் விளையாடிக் கொண்டே சென்று கொண்டிருந்தனர்.

வழியில் கம்ஸனுக்குத் துணிகளை எடுத்துச் செல்லும் வண்ணான் சென்று கொண்டிருந்தான். அவன் வைத்திருக்கும் உயர்ந்த வஸ்த்ரங்களைப் பார்த்ததும், தங்களுக்கு உடுத்திக் கொள்ள அவற்றில் இரண்டைத் தருமாறு அவனிடம் புன்சிரிப்புடன் கேட்டனர். கம்ஸனின் ஆதரவில் இருக்கும் அவன் இவர்கள் இருவரையும் வாயில் வந்தபடி தீய சொற்களால் அர்ச்சித்தான். இதனால் கோபம் கொண்ட கண்ணன் அவனை அங்கேயே அடித்துக் கொன்று போட்டான். பொன்னிறப் பட்டாடை ஒன்றை எடுத்து க்ருஷ்ணனும், நீல நிறத்தில் ஒன்றை பலராமனும் உடுத்திக் கொண்டு, ஒரு பூக்கடைக்காரனிடம் சென்றனர் இருவரும். அவன் அவர்களை ஆச்சர்யத்தோடு பார்த்தான்.

இவர்கள் யாராக இருக்கக் கூடும், எங்கிருந்து வந்திருப்பார்கள் என்று திகைப்போடு யோசித்தான். இவ்வளவு அழகாக பொன்னிறத்திலும், நீல நிறத்திலும் பட்டாடைகள் அணிந்து வந்திருக்கும் இவர்கள் பூலோகத்திற்கும் வந்திருக்கும் தேவர்களோ என்று நினைத்தான். குழந்தைகள் அவனிடம் கொஞ்சம் பூக்கள் கேட்டதும் அவன் மகிழ்ச்சியில் துள்ளினான். கீழே விழுந்து கைகூப்பி, சிரஸால் அவர்களை வணங்கினான். “தெய்வங்கள் பெருங்கருணையோடு என்னை உய்விக்க என் வீட்டிற்கே வந்திருக்கின்றன. எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறேன் நான். இவர்களுக்கு நன்கு மரியாதை செய்வேன்” என்று கூறிக் கொண்டே அந்த பூக்காரர் பலமுறை அவர்கள் பாதங்களில் விழுந்து வணங்கியபடி, ஸந்தோஷமான முகத்தோடு, குழந்தைகள் விரும்பியபடி, அவர்கள் த்ருப்தி அடையும்படி, உயர்ந்த, பல வண்ணங்களில், அழகழகாக, பல வாசனைகளில், புத்தம் புதிதாக பூக்களை எடுத்து, எடுத்து அவர்களிடம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

இப்படி இந்த பூக்காரரின் உபஸரிப்பில் பெரிதும் மகிழ்ந்த க்ருஷ்ணன் “நண்பா, புண்யம் செய்தவனே, என்னை அர்ச்சித்த உன்னை நான் ஒரு போதும் கைவிடேன். லக்ஷ்மி உன்னிடம் எப்போதும் நிலையாக இருப்பாள். உனக்கு சோர்வோ, பொருட்குறைவோ ஒருபோதும் நேராது. உன் ஸந்ததிகள் மேன் மேலும் பெருகும். பூலோகத்தில் பல போகங்களையும் அனுபவித்து, இறுதியில் என்னையே த்யானத்து, என் அனுக்ரஹத்தால் உயர்ந்த லோகத்தை அடைவாய். உன் மனம் எப்போதும் தர்மத்திலேயே லயித்திருக்கும். நீயும் உன் ஸந்ததிகளும் எந்தவொரு இயற்கை உபாதைகளும் அண்டாது, நீண்ட ஆயுளோடு வாழ்வீர்களாக” என்று பல ஆசிகளை அவனுக்கு அருளிச் செய்து விட்டு, பலராமனோடு அங்கிருந்து சென்றான்.

05_21. இப்படி உண்மையறிவு பெற்று தன்னைத் துதித்த வஸுதேவ, தேவகியையும் மற்றும் அங்குள்ள மற்ற யாதவர்களையும் மீண்டும் மயங்குமாறுச் செய்தான் க்ருஷ்ணன். பெற்றோர்களிடம் “அம்மா! அப்பா! நானும் பலராமனும் வெகு நாட்களாகவே உங்களைத் தர்ஸிக்க எண்ணியும், கம்ஸ பயத்தால் அது கைகூடாமல் போய் விட்டது. இப்போது தான் அந்த பாக்யம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. கொடியவர்களே இப்படி தாய், தந்தையருக்குப் பணிவிடை செய்யாமல் காலத்தைக் கழிப்பார்கள். பெற்றோர்களையும், ஆசார்யர்களையும், ப்ராஹ்மணர்களையும், தேவதைகளையும் பூஜித்துப் பணிவிடை செய்பவர்கள் வாழ்க்கையே பலன் கொடுக்கும். கம்ஸனின் பலத்திற்கும், கொடுமைகளுக்கும் அஞ்சி, அயலாரிடம் வளர்ந்து வந்ததால் உங்களுக்கு இதுவரைப் பணிவிடை செய்ய முடியாமல் போய் விட்டது. இந்த அபராதத்தைத் தாங்கள் மன்னித்தருள வேண்டும்” என்று கூறி கண்ணீர் மல்க அவர்களையும், மற்ற யாதவப் பெரியவர்களையும் தகுந்த முறையில் பூஜை செய்து, மரியாதைகளைச் செய்தனர் இருவரும்.

இதன் பின் பூமியில் விழுந்து கிடக்கும் கம்ஸனின் சடலத்தைச் சுற்றிக் கதறி அழுது கொண்டிருக்கும் அவனது மனைவிமார்கள், தாயார்கள் என அனைவருக்கும் அனுதாபத்தோடு தானே கண்களில் நீர் ததும்ப, பல வகைகளில் ஆறுதல் கூறித் தேற்றினான் கண்ணன். அதன் பின் சிறையிலிருக்கும் கம்ஸனின் தந்தை உக்ரஸேனரை விடுதலைச் செய்து ராஜ்யாபிஷேகம் செய்து வைத்தான். தன் பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும் தகுந்த முறையில் ஈம க்ரியைகளைச் செய்து முடித்து, ராஜ்யம் செய்து கொண்டிருந்த யாதவ குல ச்ரேஷ்டரான உக்ரஸேனரிடம் ஒரு நாள் “மஹாராஜா! எனக்கு ஆணையிடுங்கள். தயக்கமின்றி கூறுங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை. அவற்றையெல்லாம் நிச்சயம் செய்து முடிக்கிறேன் நான்.

யதுவின் இந்த வம்சம் சாபத்தால் ராஜ்யமிழந்ததாயினும், என்னைப் பணியாளனாகப் பெற்ற நீர் எதற்கும் அஞ்சாமல், கவலையின்றி அரசாளுங்கள். தேவர்களே உங்களுக்குப் பணி செய்வர், அப்படியிருக்க இந்த அற்ப அரசர்கள் கீழ்ப்படிவதில் அதிசயமென்ன” என்று எளியோனாய் உக்ரஸேனரிடம் பணிந்து நின்ற க்ருஷ்ணன், உடனே வாயு பகவானை மனதால் நினைத்தான். உடனே அவனும் அங்கு தோன்றி, பணிந்து நின்றான். “வாயு பகவானே! இந்த்ரனிடம் சென்று இதைச் சொல். இது நாள் வரை கர்வம் கொண்டு திரிந்தது போதும். இப்போது உக்ரஸேனர் அரசாள்கிறார். எனவே உன்னிடமுள்ள ஸபைகளில் உயர்ந்ததான ஸுதர்மாவை உடனே உக்ரஸேனருக்குக் கொடுத்து விடு. இனி அதில் அவரும், யாதவர்களுமே அமர்ந்து, அலங்கரிப்பர்” என்று வாயு பகவானிடம் கட்டளையிட்டான் க்ருஷ்ணன்.

இந்தத் தகவலை வாயு சசியின் கணவனிடம் கூறியதும் அவனும் அதற்கு அடிபணிந்து உடனே அப்படியே செய்து விட்டான். அதை வாயுவிடமிருந்து பெற்று உக்ரஸேனருக்கு அர்ப்பணித்தான் க்ருஷ்ணன். நகைகளால் அலங்கரிக்கப் பெற்றிருந்த அந்த ஸபையில் அமர்ந்து யாதவர்கள் க்ருஷ்ணனின் புஜ பலத்தையே நம்பி, பல தேவ போகங்களையும் பெற்றுத் திளைத்தனர். இதன் பின் உபனயனம் செய்விக்கப் பெற்ற இரு குழந்தைகளும், காசியில் பிறந்து, அவந்தீயில் வாழ்ந்து வந்த ஸாந்தீபனி என்பவரிடம் குருமுகமாகக் கல்வி கற்கச் சென்றனர். அங்கு முறைப்படி நாள் தவறாமல் குருவிற்குப் பணிவிடை செய்து கொண்டு, முறைப்படி வேதங்கள், சாஸ்த்ரங்கள், தனுர்வேதம், உயர்ந்த அஸ்த்ரங்களின் ப்ரயோக ரஹஸ்யங்கள், ராணுவ விஷயங்கள் என அறுபத்து நான்கு கலைகளையும் அறுபத்து நாட்களிலேயே கற்றுத் தேர்ந்தனர்.

இப்படி மனித சக்திக்கு அப்பாற்பட்ட இவர்களது திறமையைக் கண்டு, ஸூர்ய, சந்த்ரர்களே தனக்கு சிஷ்யர்களாக வந்தது போல் சாந்திபனியே ஆச்சர்யமடைந்தார். தங்கள் படிப்பை முடித்துக் கொண்ட இருவரும் குருவிடம் வந்து விருப்பமான குரு தக்ஷிணையைக் கேட்டுப் பெறுமாறு வேண்டி நின்றனர். இவர்களது அமானுஷ்யமான திறமைகளை அறிந்திருந்த சாந்திபனியும் சாதுர்யமாக, முன்பு ப்ரபாஸ தீர்த்தத்தில் (ஸமுத்ரம்) இறந்து போன தன் மகனையே குருதக்ஷிணையாக மீண்டும் உயிருடன் வேண்டினார். ராம, க்ருஷ்ணர்களும் சிறிதும் தயங்காது அதை நிறைவேற்ற ஆயுதங்களோடு கடற்கரைக்குச் சென்றனர்.

இவர்களை இப்படி ஆயுதபாணிகளாகக் கண்ட ஸமுத்ரராஜன் தானே உருக்கொண்டு வெளியே வந்து இவர்களுக்கு அர்க்யாதிகளைக் கொடுத்து உபஸரித்து “சாந்தீபனியின் புதல்வனை நான் ஒன்றும் செய்து விட வில்லை. என்னுள் பஞ்சஜனன் என்ற அஸுரன் சங்கின் உருவில் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் தான் அந்தச் சிறுவனைக் கடத்திக் கொண்டு வந்தவன். இன்னும் அவன் இங்கு தான் இருக்கிறான்” என்று கூறினான். இதைக் கேட்டதும் கண்ணன் கடலினுள் சென்று பஞ்சஜனனைக் கொன்று, அவன் எலும்பினாலான பாஞ்சஜன்யம் என்ற சங்கத்தைக் கையில் எடுத்துக் கொண்டான். அதைத் தன் வாயில் வைத்து ஊதியபோது எழுந்த பேரொலி அஸுரர்கள் பலத்தைக் குறைத்து, தேவபலத்தை அதிகரித்தது. அதர்மங்களையும் அழித்தது. இந்த சங்கத்துடன் வெளிவந்த க்ருஷ்ணன், ஸமுத்ரத்தில் சிறுவன் கிடைக்காததால், அண்ணனோடு யமப் பட்டணம் சென்று, அங்கு நரகத்தை அனுபவித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவனையும் முன்பிருந்த உடலோடு மீட்டுக் கொண்டு வந்து, தங்கள் ஆசார்யருக்குக் குருதக்ஷிணையாகக் கொடுத்து விட்டு, மீண்டும் உக்ரஸேனன் அரசாட்சியில் அனைவரும் ஸந்தோஷமாக வஸித்து வரும் மதுரை மாநகருக்கு வந்தருளினார்கள்.

05_22. கம்ஸனின் மாமனார் ஜராஸந்தன் மகத தேசத்து அரசன். அவனது பெண்களான அஸ்தி, ப்ராஸ்தி இருவரையும் கம்ஸன் மணந்திருந்தான். தன் மருமகன் கம்ஸன் கொல்லப்பட்டதை அறிந்த இவன் கண்ணன் மீது கடுங்கோபங்கொண்டு அவனையும், மற்ற யாதவர்களையும் அழிக்க முற்பட்டான். இருபத்து மூன்று அக்ஷௌஹிணீ ஸேனையுடன் அவன் வருவதையறிந்த ராம, க்ருஷ்ணர்கள் தங்கள் பலத்தையே நம்பி, ஒர் சிறு படையோடு மதுரைக்கு வெளியே யுத்தத்திற்குத் தயாராக வந்தனர். எடுக்க, எடுக்கக் குறையாத இரு அம்பறாத் தூணிகளும், சார்ங்கமும், கௌமோதகியும்(கதை), அதேபோல் கலப்பையும், உலக்கையும் க்ருஷ்ணனுக்கும், ராமனுக்கும் நினைத்த மாத்ரத்தில் வானிலிருந்து வந்து சேர்ந்தன. பழைய திவ்யாஸ்த்ரங்களான இவைகளைக் கொண்டு ஜராஸந்தனின் படைகளை அழித்து, அவனை விரட்டி விட்டு, வெற்றியோடு மதுரைக்குள் புகுந்தனர் இருவரும்.

ஆனால், ஜராஸந்தன் மட்டும் உயிரோடு தப்பி ஓடிவிட்டதால், க்ருஷ்ணன் இதைக் கொண்டாடவில்லை. ஜராஸந்தனே வென்றதாக நினைத்தான். அவ்வாறே அவனும் சில நாளில் மீண்டும் பெரும் படையைத் திரட்டிக் கொண்டு, மதுரை மீது படையெடுத்தான். இப்படிப் பதினெட்டு முறை மதுரை மீது படையெடுத்து, ஒவ்வொரு முறையும் ராம, க்ருஷ்ணர்கள் தலைமையிலான யாதவர்களிடம் தோற்றோடினான் ஜராஸந்தன். சக்ரதாரியான விஷ்ணுவின் அம்சம் தங்களிடம் இருப்பதனாலேயே போர் முறை எதுவும் அறியாத யாதவர்களும் பெரும் பலம் பொருந்திய ஜராஸந்தனை வென்று கொண்டிருக்கின்றனர். தன் ஸங்கல்பம் ஒன்றாலேயே எதையும் உண்டாக்கவும், அழிக்கவும் வல்லமை கொண்ட அவன் மனிதர்களைப் போல நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணப்படியே ஸாம, தான, பேத, தண்ட என்ற முறையில் ஒவ்வொரு இடத்திலும் நடந்து கொள்கிறான். சில இடங்களில் பகைவர்களைக் கண்டு பயந்து ஒளிந்து கொள்ளவும் செய்கிறான். இதெல்லாம் மனிதர்களைப் போல நடந்து கொள்ளும் அவனது லீலைகளே.

05_23. ஒரு நாள் யாதவ ஸபையில், ப்ரஹ்மசர்யத்தில் நிலை பெற்றிருந்த அவர்கள் புரோஹிதரான கார்க்யர் என்பவரை, அவர் மைத்துனர் ச்யாளன் என்பவன் அலி என்று எல்லோர் முன்னிலையிலும் கூறிக் கிண்டல் செய்தான். சபையோர் சிரிக்க, நடந்த இந்த அவமானத்தைப் பொறுக்காத கார்க்யர் யாதவர்களை அஞ்சச் செய்யும் பலம் பொருந்திய ஒரு பிள்ளையைப் பெற விரும்பி, விந்தியத்தின் தென் திசைக்குச் சென்று பனிரெண்டு ஆண்டுகள் இரும்புத் தூளை மட்டுமே ஆஹாரமாக உட்கொண்டு கடுந்தவம் இயற்றி, பரமேச்வரனை மகிழச் செய்து, தான் நினைத்த வரத்தையும் பெற்றுத் திரும்பினார். அப்போது பிள்ளைப் பேறு இல்லாமல் வருந்திக் கொண்டிருந்த யவன தேசாதிபதி கார்க்யர் இப்படி ஒரு வரத்தைப் பெற்றிருப்பதை அறிந்து, அவரிடம் நட்பு பூண்டு, நன்கு உபஸரித்து, தன் மனைவியிடம் தனக்கு ஒரு பிள்ளையை உண்டுபண்ணுமாறு வேண்டிக் கொண்டான்.

அவரும் அப்படியே செய்தார். பிறந்த பிள்ளை வண்டு போல கருமை நிறத்தில், வஜ்ராயுதம் போன்ற மார்புடன் இருந்தான். இவனுக்குக் காலயவனன் என்ற பெயரை வைத்து, பருவம் வந்ததும் இவனுக்குப் பட்டம் சூட்டி விட்டு, யவனராஜன் தவம் செய்ய கானகம் சென்று விட்டான். பெரும் பலத்தால் கர்வம் கொண்ட இவன் ஒரு ஸமயம் நாரதரிடம் தன்னுடன் போர் புரியத் தகுந்த பலம் கொண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டான். நாரதர் யாதவர்களோடு போர் செய். அவர்களே பலசாலிகள் என்று கூற, காலயவனன் வெகு வேகமாக அனேக கோடி ம்லேச்சர்களுடன் ரத, கஜ, துரக, பதாதிகள் என நால்வகைப் படைகளையும் தயார் செய்து கொண்டு, ஏராளமான போர்த் தளவாடங்களோடும் மதுரையை நோக்கிப் புறப்பட்டு விட்டான்.

தினம் ஒரு யானை, குதிரை, ரதம் என ஒவ்வொன்றும் களைப்படையும் போதும் வெவ்வேறு விலங்குகளை மாற்றிக் கொண்டு ரதங்களில் ஏறி விரைவாக மதுரை வந்து சேர்ந்து விட்டான் காலயவனன். காலயவனன் படையெடுப்பைக் கேள்விப்பட்ட க்ருஷ்ணன் “இவனோடு போரிட ஆரம்பித்தால் யாதவர்கள் மிகவும் பலம் குன்றி, அழிந்து விடுவார்கள். அப்போது ஜராஸந்தனும் வந்து யாதவர்களை பீடிக்கக் கூடும். எதிரிகள் வென்று விடக் கூடும். அல்லது ஜராஸந்தனும் இந்த கால யவனனுடன் சேர்ந்து யுத்தம் செய்யக் கூடும். இவர்களிருவரிடமிருந்தும் இந்த யாதவர்களைக் காக்க பகைவர்களால் நுழைய முடியாத கோட்டை ஒன்றை நிர்மாணிக்க வேண்டும். அங்குள்ள பெண்களும் போரிடுபவர்களாக இருக்க வேண்டும். அப்போது தான் இந்த வ்ருஷ்ணி குலத்தவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

எந்த இடத்தில் இந்த யாதவர்கள் குடித்திருந்தாலும், கவனக்குறைவாகவும், உறங்கிக் கொண்டிருந்தாலோ, அல்லது வெளியூர் சென்றிருந்தாலும் எந்த வித பயமும் இருக்காதோ, அங்கு இவர்களை குடியேற்ற வேண்டும். இப்படி யோசித்த கண்ணன் ஸமுத்ர ராஜனிடம் பனிரெண்டு யோஜனை அளவு இடம் தருமாறு வேண்டிப் பெற்றான். அந்த இடத்தில் த்வாரகையை நிர்மாணித்தான். வீடுகளும், மாளிகைகளும் நிறைந்திருக்க இந்த்ரனின் தலைநகரைப் போலிருந்தது அது. புது நகருக்கு மதுரா வாஸிகளைக் குடியேற்றி விட்டு, தான் மட்டும் மதுரையில் காலயவனனுக்காக நிராயுதபாணியாகக் காத்திருந்தான். க்ருஷ்ணனைக் கண்டதும் அடையாளங் கண்டு கொண்ட காலயவனன் நிராயுதபாணியான அவனைப் பிடிக்க எண்ணினான்.

கண்ணன் ஓடத் தொடங்கினான். யோகிகளின் மனதிற்கும் கிட்டாத அவனைப் பிடிக்க இவனும் பின் தொடர்ந்து ஓடினான். கண்ணன் ஓடிச் சென்று ஒரு குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டு விட்டான். அவனைப் பின் தொடர்ந்து வந்து, அங்கு அவனைத் தேடிய காலயவனன் ஒருவன் அங்கு படுத்திருப்பதைக் கண்டு, அது கண்ணனாகத் தானிருக்க வேண்டும் என்று முடிவு செய்து, காலால் அவனை ஓங்கி ஒரு உதை விடுகிறான். படுத்துறங்கிக் கொண்டிருந்தவன் உடனே கண் விழித்து காலயவனனைக் கோபத்தோடு ஒரு பார்வை பார்த்தான். அந்தப் பார்வையிலுண்டான அக்னியால் காலயவனன் அந்த இடத்திலேயே வெந்து சாம்பலானான்.

அங்கு படுத்து, அப்படி உறங்கிக் கொண்டிருந்தது முசுகுந்த சக்ரவர்த்தி. தேவர்களுக்கும், அஸுரர்களுக்கும் நடந்த ஒரு போரில் இந்த முசுகுந்த சக்ரவர்த்தி தேவர்கள் பக்கமிருந்து அவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தான். வெகுநாட்களாக நடந்து முடிந்த இந்த யுத்தத்தில் தூக்கமின்றி மிகவும் களைத்துப் போயிருந்த சக்ரவர்த்தி, ஆழ்ந்த, நீண்ட உறக்கத்தைத் தேவர்களிடம் வரமாகக் கேட்டான். அவர்களும் அவ்வாறே வரத்தைக் கொடுத்ததோடு, “உன்னை எவன் தூக்கத்திலிருந்து எழுப்புகிறானோ அவன் உன் உடலில் இருந்து எழும் கோபாக்னியிலேயே சாம்பலாகி விடுவான்” என்ற வரத்தையும் தந்தனர். இந்த வரத்தைக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த முசுகுந்த சக்ரவர்த்தியைக் கொண்டுதான் இப்போது காலயவனனை நிராயுதபாணியாக ஸம்ஹரித்துள்ளான் க்ருஷ்ணன்.

காலயவனன் இப்படி சாம்பலானதும், தன் கண் முன்னே இப்போது நின்றிருக்கும் க்ருஷ்ணனைப் பார்த்து “நீ யார்” என்கிறான் முசுகுந்தன். தன்னை சந்த்ர வம்சத்தின் யது குலத்தில் வஸுதேவனுக்குப் புத்ரன் என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறான் க்ருஷ்ணன். இதையறிந்ததும் முதியவரான கர்க்கர் தன்னிடம் முன்பு கூறியிருந்தவைகளை நினைவு படுத்திக் கொண்ட முசுகுந்தன் ஹரியின் பாதங்களில் விழுந்து “இறைவனே! விஷ்ணுவின் அம்சமே! இருபத்தெட்டாம் த்வாபர யுகத்தின் இறுதியில் ஹரி யதுக்களின் குடும்பத்தில் பிறப்பார் என்பதை முன்னமேயே நான் கர்க்கரிடமிருந்து அறிந்துள்ளேன். நீயே தான் அது. சந்தேகமேயில்லை. மனிதகுலம் உய்யவே நீ அவதரித்துள்ளாய். உன் தேஜஸ்ஸை என்னால் தாங்க முடியவில்லை.

மழைமேகங்களின் கர்ஜனையை விட உன் குரலொலி மேம்பட்டிருக்கிறது. நீ நடக்கையில் பாரத்தால் பூமியே அசைகிறது. முன்பு தேவாஸுர யுத்தத்தில் அஸுரர்கள் என் தேஜஸ்ஸைப் பொறுக்க முடியாமல் திணறினார்களோ, அது போல் இப்போது நானே உன் தேஜஸ்ஸைப் பொறுக்க முடியாமல் இருக்கிறேன். நீ ஒருவனே இந்த உலகில் தத்தளிப்போருக்கு அபயமளிக்க வல்லவன். நீயே தீவினைகள் யாவையும் போக்குபவன். என் மீதும் கருணை காட்டு. என் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கிவிடு. ஸமுத்ரங்கள், பர்வதங்கள், ஆறுகள், காடுகள், பூமி, வானம், காற்று, நீர், நெருப்பு, புத்தி, ஆத்மா, மனம், வாழ்வாதாரம், ஆத்மாவிற்கு அப்பாற்பட்டவை, எங்கும் நிறைந்தது அனைத்தும் நீயே. உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவன் நீ,

பிறப்பால் வரும் வ்யவஹாரங்கள் உனக்கில்லை. அழிவற்றவன், அளவில்லாதவன், ஏற்ற, இறக்கமற்றவன், ஆதி அந்தமில்லா ப்ரஹ்மனும் நீ. தேவ, கந்தர்வ, சித்தர், விலங்கு, மனித, பறவை, தாவரங்கள் முதல் அனைத்து ஸ்தாவர ஜங்கமங்களும் உன்னிடமிருந்தே தோன்றுகின்றன. உன்னைத் தவிர வேறெதுவும் இல்லை. தேவா! நான் இந்த உலக வ்யவஹாரங்கள் அனைத்தையும் நன்கு அனுபவித்து விட்டேன். மூவகைத் தாபங்களால் அலைக்கழிக்கப்பட்ட எனக்கு எங்குமே ஸுகமில்லை. பூமி, ராஜ்யம், படைகள், பொருள்கள், நண்பர், குழந்தைகள், மனைவி, சுற்றத்தார் இன்னும் நான் ஸந்தோஷத்தைத் தருபவை என நினைத்து அடைந்த எதுவுமே அவைகளின் இயற்கையான மாறும் குணங்களால் எனக்குக் கடைசியில் கானல் நீர் போல் விரக்தியையும், துன்பத்தையுமே உண்டு பண்ணின.

ஸ்வர்க்கத்திலிருக்கும் தேவர்களே யுத்தத்தின் போது, தாழ்ந்த மனிதப் பிறவியைச் சேர்ந்த என்னிடமல்லவா உதவி கோரினர். ஆக அதுவும் ஆபத்தானதே. பின், எங்குதான் நிலையான ஸுகம் உள்ளது. உலகிற்குக் காரணமான உன்னை ஆராதனை செய்வதே நிலைத்த ஸுகம் பெற வழி. உன் மாயையாலும், இயற்கையான அறியாமையாலுமே மனிதன் பிறப்பு, இறப்புகளால் தளர்ந்து, பின் நரகத்திலும் யமனுடைய பிடியில் கொடிய துன்பங்களை அனுபவிக்கிறான். நானும் அப்படியே தானே உன் மாயையால் சுயநலம், பொறாமை முதலியவைகளால் இவைகளில் உழன்று வருகிறேன். இறுதியில் விரும்பி எவரும் அடையத் தக்கது உன்னைத் தவிர வேறெதுவும் இல்லை. உலகில் இப்படிப் பலவாறு துன்பப்பட்ட நான் இப்போது உன்னையே சரணமடைகிறேன். இந்தத் துன்பங்களிலிருந்து என்னை விடுவித்து எனக்கு மோக்ஷத்தைக் கொடு” என்று வேண்டிக் கொண்டான்.

05_24. “எதிர்க்க முடியாத வல்லமை பொருந்திய அரசே! நீ விரும்பும் லோகங்களுக்கெல்லாம் சென்று போகங்களை அனுபவித்து விட்டு, மீண்டும் ஒரு உயர்ந்த குலத்திலே முன் ஜன்ம நினைவோடு நீ பிறப்பாய். அந்தப் பிறவியில் என் அருளால் முடிவில் மோக்ஷத்தை அடையப் போகிறாய்” என்று முசுகுந்த சக்ரவர்த்திக்கு பேரருள் புரிந்தான் க்ருஷ்ணன். இந்த நிச்சயத்தைப் பெற்றுக் கொண்ட முசுகுந்தன் அச்யுதனை நமஸ்கரித்து விட்டு குகையை விட்டு வெளியே வந்தான். யுகம் மாறிவிட்டது. மனிதர்களின் குள்ள உருவத்தைக் கண்டு கலியுகம் வந்து விட்டதை அறிந்து கொண்ட முசுகுந்த சக்ரவர்த்தி, மேலும் வைராக்யத்தை வேண்டித் தவம் புரிவதற்காக நர, நாராயணர்களின் இருப்பிடமான கந்தமாதனத்திற்குச் சென்று விட்டான்.

இப்படித் தந்திரமாக காலயவனனை ஒழித்துக் கட்டிய க்ருஷ்ணன், மதுராவை சூழ்ந்திருந்த யானைகள், குதிரைகள், ரதங்கள் நிறைந்திருந்த அவனது படைகளையும் கைப்பற்றி, அதை த்வாரகையில் இருந்த உக்ரஸேன மஹாராஜருக்கு அர்ப்பணித்தான். அதன் பின் யது வம்சம் அங்கு எந்த பகை பயமும் இன்றி வாழ்ந்திருந்தனர். இப்படியாக யுத்தம் முடிந்ததும் பலராமர் நந்தகோகுலத்தில் இருக்கும் உறவினர்களைப் பார்க்க விரும்பி, அங்கு சென்று பெரியோர்களால் தழுவப்பெற்று, சிறியோர்களைத் தழுவி, தனக்குச் சமமானவர்களோடு சிரித்துப் பேசியும் மகிழ்ந்தார். அப்போது அங்கிருந்த பெண்கள் க்ருஷ்ணனிடம் ஊடல் கொண்டும், பொறாமையோடும் அவனைப் பற்றியும் பலராமரிடம் விசாரித்தனர்.

“எங்களைப் பிரிந்து போன கண்ணன் அங்கு மதுரை நகரத்துப் பெண்களுடன் நலமாக இருக்கிறானா. எங்கும், எவரிடமும் அவன் நிலைத்த அன்பு கொள்ள மாட்டானே அவன். அந்தப் பெண்களோடு அவர்களது செயல்களைப் பாராட்டும் போது, அவர்களை மகிழ்விக்க எங்களது பட்டிக்காட்டுப் பழக்கங்களைப் பரிஹஸிக்காமல் இருக்கிறானா. எங்களைப் பற்றி நினைக்கவாவது செய்கிறானா. அவனோடுப் பாட்டெல்லாம் பாடிக் கொண்டிருந்தோம். அவன் அம்மாவைப் பார்க்கவாவது இங்கு ஒரு முறை வருவானா. ஆனால் ஏன் இதையெல்லாம் பேசிக் கொண்டிருக்க வேண்டும். வேறு எதையாவது செய்து பொழுதைப் போக்கலாம். நாம் தான் அவன் நினைவாக வருந்திக் கொண்டிருக்கிறோம்.

அவனுக்காக அம்மா, அப்பா, ஸஹோதரன், புருஷன், உறவினர் என்று அனைத்தையும் மதிக்காதிருந்தோம். ஆனால் அவன் நன்றி மறந்தவர்களின் இலக்கணமாக இருக்கிறான். அதுதான் தாமோதரன், அதுதான் கோவிந்தன். நகரத்துப் பெண்களிடம் மனதைக் கொடுத்தவன், நம்மைப் பற்றிச் சிறிதும் கவலையில்லாதவன். நம்மை அலக்ஷ்யம் செய்தவன்” இப்படிக் கொஞ்சமும் பொறுமையின்றி, கோபத்தோடும், வருத்தத்தோடும், ஏக்கத்தோடும் தங்கள் நிலையை வெளிப்படுத்துகின்றனர். நிலை கடந்து பலராமரையே கண்ணனாக நினைக்கின்றனர். பின் அதையுணர்ந்து வெட்கத்தால் சிரிக்கின்றனர். இவர்களது பல நிலைகளை இப்படி கண்ட பலராமர் இவர்களிடம் மிகவும் குழைந்து போகிறார். க்ருஷ்ணனின் ஆறுதலான, ஏற்றுக் கொள்ளத்தக்க, ஆசையான, வசீகரமான, குணமான செய்திகளை அவர்களுக்குக் கூறி அவர்களைத் தேற்றுகிறார். இப்படியாக இடையர்களோடு பேசியும், விளையாடியும் அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

05_25. உலகையே தாங்கும் ஆதிஸேஷன் தேவ கார்யங்களை சாதிப்பதற்காக, இப்படி பலராமராக அவதரித்து அவைகளைச் செய்து கொண்டு, இடையர்களோடு கானகங்களில் ஸஞ்சரித்து வந்தார். ஒரு ஸமயம் வருணன் மதுவர்க்கங்களுக்குத் தேவதையான மதிரை(வாருணி)யை அழைத்து “மதிரையே! நீ எப்போதும் அனந்தனுக்கு ப்ரியமானவள். ஆகவே நீ இப்போது அவர் ஸந்தோஷப்படும்படியான கார்யங்களைச் சென்று செய், அவர் அருஞ்செயல்கள் பலவற்றைச் செய்யப் போகிறார். அவரிடம் சென்று சேர்” என்று வேண்டிக் கொண்டான். அவளும் அதற்கிசைந்து வ்ருந்தாவனத்தின் ஒரு கடம்ப மரப் பொந்தில் ஐக்யமானாள்.
கடம்ப மரத்திலிருந்து மது வழிந்தோடிக் கொண்டிருந்ததை, அதன் வாசனையால் இழுக்கப்பட்டு அங்கு வந்த பலராமர் கண்டு மகிழ்ந்து, கோபர்களுடனும், கோபிகைகளுடனும் உடனே அதைப் பருகி, களிப்பில் பாடி, ஆடிக் மகிழ்ந்து கொண்டிருந்தார். அவரது உடல் முத்து போன்ற வியர்வைத் துளிகளால் நிறைந்திருந்தது.மது மயக்கத்தில் அருகில் ஓடிக் கொண்டிருந்த யமுனா நதியை, நீராடுவதற்காகத் தன்னருகில் வருமாறு அழைத்தார் பலராமர். மதுவில் மூழ்கியிருந்த இவரது உத்தரவை யமுனை நதி மதிக்காமல் இருந்தது. இதனால் கோபம் கொண்ட பலராமர் தன் கலப்பையால் யமுனையை அதன் போக்கிலிருந்து மாற்றி, தன்னருகில் இழுத்துச் சென்று, “துஷ்ட நதியே, கர்வம் கொண்டவளே, வரமாட்டாயா! இப்போது உன்னிஷ்டம் போல் போ, பார்க்கலாம். என் பலத்தைத் தெரிந்து கொண்டாயா. இனி என்னை அவமதித்தால் உன்னை என் கலப்பை நுனியால் நூறு வழிகளில் கொண்டு போய் விடுவேன்” என்று எச்சரித்தார். மிகவும் பயந்து போன யமுனா நதி, உருக்கொண்டு அவரிடம் மன்னிப்புக் கோரியது. அவரும் அதை விடுவித்தார். விடுதலையடைந்த யமுனை அந்த ப்ரதேஸத்தை நீரால் நிறைத்துச் சென்றது.

யமுனையில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்த பலராமருக்கு அப்போது மஹாலக்ஷ்மி தோன்றி, ஒரு காதணியாக அல்லிமலரையும், இன்னொரு காதணியாக குண்டலத்தையும், வருணனால் அனுப்பப்பட்ட வாடாத ஒரு தாமரை மாலையையும், கடலின் நிறம் கொண்ட நீல நிறப்பட்டாடைகளையும் தந்தருளினாள். யமுனையில் நீராடி, மதிப்பற்ற இவைகளை அணிந்து கொண்ட பலராமர் முன்னிலும் பொலிவு பெற்று விளங்கினார். இப்படி இரு மாதங்கள் நந்த கோகுலத்தில் கழித்த பலராமர், மீண்டும் த்வாரகைக்குத் திரும்பி, அங்கு ரைவத மஹராஜனின் பெண் ரேவதியை மணந்து கொண்டு, நிசிதன், உல்முகன் என்ற இரு பிள்ளைகளையும் பெற்றார்.

05_26. விதர்ப தேசத்தரசன் பீஷ்மகனென்பவன் குண்டினமெனும் தலைநகரப் பட்டணத்திலிருந்து கொண்டு ஆண்டு வந்தான். இவனுக்கு ருக்மி என்ற புத்ரனும், ருக்மிணி என்ற அழகான பெண்ணும் இருந்தனர். இவளை க்ருஷ்ணன் காதல் வயப்பட்டு மணம் புரிய விரும்பினான். ருக்மிக்கு ருக்மிணியை க்ருஷ்ணனுக்கு மணம் செய்து கொடுப்பதில் விருப்பமில்லை. ஜராஸந்தனின் கருத்துப்படியும், ருக்மியின் கட்டாயப்படியும் பலம் பொருந்திய பீஷ்மகன் தன் பெண்ணை சிசுபாலனுக்கு மணம் முடிக்க நிச்சயம் செய்தான். திருமணத்திற்கு ஜராஸந்தன், சிசுபாலனைச் சேர்ந்த அனைத்து அரசர்களும், இளவரசர்களும் அழைக்கப்பட்டு விதர்ப தேசத்திற்கு வந்திருந்தனர். க்ருஷ்ணனும், பலராமனும் யாதவர்களோடு திருமணத்தைக் காண குண்டினபுரிக்கு வந்திருந்தனர்.

தான் ருக்மிணியைக் கடத்திச் செல்லவும், மற்றவர்கள் அண்ணாவோடு சேர்ந்து எதிரிகளைச் சமாளிக்கவும் திட்டம் போட்டு வந்திருந்தான் க்ருஷ்ணன். அதைச் செய்தும் விட்டான். பௌண்ட்ரகன், சிறப்புமிக்க தந்தவக்ரன், விதூரதன், சிசுபாலன், ஜராஸந்தன், சல்யன், இன்னும் பல அரசர்கள் இந்த அவமானத்தால் கோபம் கொண்டு, க்ருஷ்ணனைக் கொன்று விடுவதற்காகப் புறப்பட்டனர். ஏற்பாட்டின் படி இவர்களனைவரையும் பலராமர், யாதவ சைன்யத்தோடு தோற்கடித்துத் துரத்தி விட்டார். ருக்மி மட்டும் க்ருஷ்ணனைக் கொல்லாமல் குண்டினபுரிக்குத் திரும்புவதில்லை என்ற உறுதியோடு துரத்திச் சென்றான். அந்தப் போரில் க்ருஷ்ணன் விளையாட்டாக தன் சக்ரத்தாலேயே அவனுடைய குதிரை, யானை, ரதம், காலாட்படை என அனைத்தையும் அழித்து, அவனையும் வென்று கீழே தள்ளினார்.

“ருக்மி என்னுடைய ஒரே ஸஹோதரன், கோபத்தைத் தணித்துக் கொள்ளுங்கள். தேவ! என் ஸஹோதரனை கருணை கூர்ந்து விட்டு விடுங்கள்” என்று ருக்மிணி ப்ரார்த்தித்ததற்கிணங்க ருக்மியைக் கொல்லாமல் விட்டான் க்ருஷ்ணன். செயல்களின் பாதிப்புகளுக்கு அப்பாற்பட்ட க்ருஷ்ணனின் கருணையால் இப்படி உயிர் பிழைத்த ருக்மி, அதன் பின் போஜகடம் என்ற நகரை உருவாக்கிக் கொண்டு, அங்கேயே வஸித்து வந்தான். ராக்ஷஸ விவாஹ(போர் செய்து கன்னிகையை அபஹரித்துச் சென்று திருமணம் செய்து கொள்வது) முறைப்படி இப்படியாக ருக்மிணி கல்யாணமும் த்வாரகையில் சிறப்பாக நடந்தேறியது. அவளிடம் மன்மதனின் அம்சமாக ப்ரத்யும்னன் என்ற பிள்ளையைப் பெற்றான் க்ருஷ்ணன். இந்த ப்ரத்யும்னனை சம்பரன் என்ற அஸுரன் தூக்கிச் சென்றான். ஆனால் ப்ரத்யும்னனால் கொல்லப்பட்டான்.

05_27. மைத்ரேயர்: எப்படி ப்ரத்யும்னன் சம்பரனால் தூக்கிச் செல்லப் பட்டான். பலம் பொருந்திய அவனை எப்படி ப்ரத்யும்னன் கொன்றான். பராசரர்: ருக்மிணிக்கும், க்ருஷ்ணனுக்கும் பிறக்கும் குழந்தையே தன்னைக் கொல்லப் போகிறவன் என்பதை முன்னமே அறிந்திருந்த யமனை ஒத்த அந்த ஸம்பராஸுரன், ப்ரத்யும்னன் பிறந்து ஆறே நாட்களாயிருந்த போதே, ப்ரஸவ அறைக்குள் புகுந்து, குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய், கடும் உயிரினங்கள் நிறைந்த, கொடுங்கடலில் வீசியெறிந்து விட்டான். ஒரு பெரும் மீன் அதை விழுங்கியும், குழந்தை அந்த மீனின் வயிற்றில் இறக்காமலேயே இருந்து வந்தது. ஒரு ஸமயம் மீனவர்கள் பிடியில் சிக்கிய பல மீன்களில் இந்த மீனும் ஒன்றாகக் கிடைக்க, அவர்கள் அவையத்தனையையும் கொண்டு போய் ஸம்பராஸுரனிடம் ஸமர்ப்பித்தார்கள்.

ஸம்பராஸுரன் அந்த மீன்களை சமையல் வேலைகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்த தன் மனைவி மாயாதேவியிடம் கொடுத்தான். அவள் அந்த மீனை நறுக்கிய போது, மன்மதனையொத்த இந்த அழகான குழந்தையை அதன் வயிற்றில் கண்டாள். இது யாராக இருக்கும், இது மீனின் வயிற்றுக்குள் எப்படி வந்தது என்றெல்லாம் அவள் ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்த போது, கருணையுள்ள அவளிடம் வந்த நாரதர் “உலகையே படைத்து, அழித்துக் கொண்டிருக்கும் மஹாவிஷ்ணுவின் குழந்தை இது” என்று தொடங்கி குழந்தை பிறந்தது முதல் இவள் கைக்குக் கிடைத்தது வரையிலான விஷயங்களை விளக்கமாகக் கூறி, குழந்தையையும் அவளையே கவனமாக வளர்த்து வரும்படியும் கூறிச் சென்று விட்டார்.

குழந்தையின் அழகில் மயங்கிய அவளும் நாரதர் சொல்படி பொறுப்பாகவும், கவனமாகவும் அதை வளர்த்து வந்தாள். குழந்தை வளர்ந்து இளமைப் பருவம் எய்தியபோது, இவளது அன்பு காதலாக மாறியது. குலத்தில் சிறந்த ப்ரத்யும்னனிடம் மனதையும், கண்களையும் பறிகொடுத்த வைத்த மாயாவதி, முழு மதிப்புடன் அவனுக்கு எல்லா மாயைகளையும் கற்றுக் கொடுத்தாள். பெரும் உணர்ச்சி வயப்பட்ட இவளது அன்பைக் கண்ட க்ருஷ்ணனின் புத்ரன், ஒரு நாள் தாமரைக் கண்கள் கொண்ட மாயாவதியிடம் “அம்மா! உங்கள் ஆசை, தாயான தங்களுக்குத் தகாததே” என்று கூற, அவள் “நீங்கள் என் மகனல்ல, விஷ்ணுவின் மகன். காலஸம்பரன் உங்களைக் கடலில் எறிய, அங்குக் கிடைத்த ஒரு மீனின் வயிற்றிலிருந்து உங்களை எடுத்து வளர்த்து வருகிறேன். அன்பிற்குரியவரே, உங்கள் உண்மையான தாய் இன்னும் உங்களுக்காக அழுது கொண்டுதானிருப்பாள்” என்று பதிலுரைத்தாள்.

மாயாவதியின் இந்த பதிலைக் கேட்ட, துணிவுள்ள ப்ரத்யும்னன் கோபத்துடன் ஸம்பராஸுரனைப் போருக்கழைத்தான். அந்தப் போரில் ஸம்பராஸுரன் ஏழு மாயைகளை மாதவனின் புதல்வன் மேல் ஏவ, ப்ரத்யும்னன் அவைகளை அழித்து எட்டாவதான ஒரு மாயையால் அவனையும், அவன் ஸேனைகளையும் கொன்றான். பின் அதே வேகத்தில் மாயாவதியுடன் புறப்பட்டு, அப்பாவின் அந்தப் புறத்தில் வந்து குதித்தான். அவனைக் கண்டதும் அங்கிருந்த க்ருஷ்ணனின் மனைவியர்கள் க்ருஷ்ணனென்று நினைத்து விட்டனர். ஆனால், அவனைக் கண்ட ருக்மிணி கண்களில் கண்ணீர் மல்க “உன்னைப் போல் இப்படி யௌவனமாய் ஒருவனைப் பெற உன் தாய் தவம் செய்திருக்க வேண்டும். என் மகன் ப்ரத்யும்னன் உயிரோடு இருந்திருந்தால், அவனுக்கும் உன்னை ஒத்த வயதே இருக்கும். உன்னைப் பெற்ற அந்தப் புண்யவதி யாரோ.

உன் தோற்றத்தையும், எனக்கு உன் மீது உண்டாகும் பாசத்தையும் நோக்கும் போது, நீ நிச்சயமாக ஹரியின் மகனாகத் தானிருக்க வேண்டும்” என்று கனிவோடு அவனிடம் பேசினாள். அந்த ஸமயத்தில் க்ருஷ்ணன் நாரதருடன் அங்கு வந்தான். நாரதர் ருக்மிணியிடம் “குழந்தையாயிருக்கும் போது ப்ரஸவ அறையிலிருந்து ஸம்பராஸுரனால் கொண்டு செல்லப்பட்டு, அவனைக் கொன்று விட்டு இப்போது இங்கு வந்திருக்கும் இவன் உன் மகனே. மேலும், நற்குணமுள்ள மாயாவதி என்ற இந்தப் பெண், ப்ரத்யும்னனின் மனைவியே. ஸம்பராஸுரனின் மனைவியல்ல. நான் சொல்வதைக் கேள்.

மன்மதன் எரிந்து சாம்பலாகி விட்ட போது, அவன் மனைவி தன்னைக் காத்துக் கொள்ளவும், மன்மதன் திரும்பி வரும் வரை வாழவும் விரும்பி, தன் மாயைகளால் ஸம்பராஸுரனை மயக்கி ஆட்கொண்டிருந்தாள். அவனுடைய காம இச்சைகளிலிருந்து தன் கற்பைக் காத்துக் கொள்ள, வெவ்வேறு மாயா ரூபவதிகளை உண்டாக்கி, அவர்களிடமே அவனை மூழ்க வைத்திருந்தாள். இப்படி ஸம்பராஸுரனிடமிருந்து தன்னைக் காத்துக் கொண்ட இவளே ரதி தேவி. உன் மகனான இந்த ப்ரத்யும்னனே மீண்டும் அவதரித்திருக்கும் மன்மதன். எனவே இவள் ப்ரத்யும்னனுக்கு மனைவியே. ஸந்தேஹத்திற்கு எந்த இடமுமில்லை. இவள் உன் மருமகளே” என்று கூறி அவளுக்கும், மற்றவர்களுக்கும் இருந்த ஸந்தேஹங்களையும் தீர்த்து வைத்தார். நாரதரின் இந்த சொற்களால் ருக்மிணியும், கேசவரும் ஸந்தோஷம் கொண்டனர். தொலைந்து போன ருக்மிணியின் மகன் திரும்பக் கிடைக்கப் பெற்றதையறிந்த நகர மக்களும், த்வாரகையும் ஆச்சர்யங்களிலும், ஸந்தோஷத்திலும் மூழ்கித் திளைத்தது. விழாக் கோலம் பூண்டது.

05_28. ப்ரத்யும்னன், சாருதேஷ்ணன், ஸுதேஷ்ணன், சாருதேஹன், ஸுஷேணன், சாருகுப்தன், பத்ரசாரு, சாருவிந்தன், ஸுசாரு, சாரு ஆகிய பிள்ளைகளையும், சாருமதி என்ற பெண்ணையும் ருக்மிணி க்ருஷ்ணனுக்குப் பெற்றுத் தந்தாள். ருக்மிணி முதலாக மித்ரவிந்தை, ஸத்யை, ஜாம்பவதி, ரோஹிணி, ஸுசீலை, ஸத்யபாமை, லக்ஷ்மணை என்ற எழுவரோடு க்ருஷ்ணனுக்கு மொத்தம் அஷ்ட மஹிஷிகள். இவர்களைத் தவிர அவனுக்கு வேறு பதினாறாயிரம் மனைவிகளும் உண்டு. இதில் மித்ரவிந்தை களிந்த ராஜனின் புதல்வி என்பதால் காளிந்தி என்றும் அழைக்கப் படுவாள். ஸத்யை நக்னஜித்தின் மகள். ஜாம்பவதி ஜாம்பவானின் மகள். ரோஹிணி இஷ்டப்படி ரூபமெடுத்துக் கொள்வாள். நல்ல குணமுள்ள ஸுசீலை மத்ர தேசத்து இளவரசி. ஸத்யபாமா ஸத்ராஜித்தின் மகள். லக்ஷ்மணைத் தன் அழகான சிரிப்பால் சாருஹாஸினி என்றும் அழைக்கப்பட்டாள்.

தன்னிடம் விருப்பமுள்ள, வீரனான ப்ரத்யும்னனை, ருக்மியின் மகள் ஸுயம்வரத்தில் விரும்பி மணந்து பலமும், பெருந்தன்மையுமுள்ள அனிருத்தனைப் பெற்றெடுத்தாள். கவனமாகவும், விருப்பத்துடனும் யுத்த முறைகளைப் பயின்று தேர்ச்சி பெற்றிருந்த இவன் எவராலும் தடுக்க முடியாத பராக்ரமத்துடன், எதிரிகளின் படைகளை உடைப்பவனாயிருந்தான். ருக்மியின் மகன் வழி பேத்தியை இந்த அனிருத்தனுக்கு மனைவியாகக் கொடுக்குமாறு தானே ருக்மியிடம் சென்று பெண் கேட்டான் க்ருஷ்ணன். க்ருஷ்ணனிடம் பகையிருந்தாலும், அவனே நேரில் வந்து கேட்டதால் ருக்மி தன் மகன் வழிப் பேத்தியை, மகள் வழிப் பேரனுக்கு மணம் முடிக்க சம்மதித்தான். நிச்சயிக்கப்பட்ட இந்தத் திருமணத்திற்கு பலராமனும், மற்ற யாதவர்களும் க்ருஷ்ணனோடு சேர்ந்து ருக்மியின் நகரமான போஜகடத்திற்கு வந்தனர். க்ருஷ்ணனின் பேரனுக்கும், ருக்மியின் பேத்திக்கும் திருமணம் வெகு விமர்சையாக நடந்தேறியது.

அதன்பின் அரசர்கள் பலரும் களிங்கன் என்பவனின் தலைமையில் ருக்மியிடம் வந்து “கலப்பையைக் கையாளும் இந்த பலராமனுக்கு முறையாக சூதாடத் தெரியாது. ஆனால் சூதாட்டத்தில் ஆசையுண்டு. இதையே அவன் துரத்ருஷ்டமாகப் பயன்படுத்தி நாம் அவனை வெற்றி கொள்ளலாம், அவனைச் சூதாட அழை” என்று கூற, சக்தியுள்ள ருக்மியும் அழைக்க, பலராமனும் ஒப்புக்கொண்டு வர, அரண்மனையில் தொடங்கியது சூதாட்டம். ஆயிரம் வராகன் பொன்னை ருக்மியிடம் முதலில் இழந்தான் பலராமன். மறுமுறை, மறுமுறை என்று மூன்று முறை சூதில் வல்லவனான ருக்மியிடம் ஆயிரமாயிரம் வராகன்களாகப் பொன்னை இழந்தான்.

பலராமன் தொடர்ந்து இப்படித் தோற்பதைக் கண்ட களிங்கன் சத்தமாகச் சிரித்தான். கர்வங்கொண்ட ருக்மியும் “கொஞ்சம் கூட ஆடத் தெரியாத இந்த பலராமன் வெறும் கர்வத்தாலும், ஆசையாலும் மிகவும் விளையாடத் தெரிந்தது போல் ஆடி மீண்டும், மீண்டும் என்னிடம் தோற்கிறான்” என்று பலராமனைப் பார்த்துக் கூறினான். களிங்க தேசத்தரசனின் ஏளனமாக சிரிப்பாலும், ருக்மியின் இறுமாப்பான பேச்சாலும் அவமானமும், கோபமும் கொண்ட ஹலாயுதர் பொறுமையிழந்து ஒரு கோடி வராகனை மீண்டும் பந்தயமாக வைத்தார். பந்தயத்தை ஏற்று காய்களை உருட்டிய ருக்மி இம்முறை தோற்றான். ஆட்டத்தில் வெற்றி பெற்ற பலராமர் இப்போது நானே வென்றேன் என்று சத்தம் போட்டுச் சிரித்தார்.

ஆனால் ருக்மி, பலராமரின் வெற்றியை ஒப்புக் கொள்ளாது “ராமா, பொய் சொல்லாதே. இது செல்லாது. பந்தயத்தை இருவரும் ஒப்புக் கொண்டால் தானே அது செல்லும். உங்கள் கோடி வராகன் பந்தயத்தை நீங்கள் தான் சொன்னீர். நான் அதை ஒப்புக் கொள்ளவே இல்லை. எனவே இது செல்லாது. நானே வென்றவன்” என்றான். அப்போது அசரீரி ஒன்று “பலராமனே இந்தப் பந்தயத்தில் வெற்றி பெற்றவன். ருக்மியே தவறாக, பொய் பேசுகிறான். வாயால் பந்தயத்தை ஒப்புக்கொள்ளாவிட்டாலும், செய்கையால் ஒப்புக்கொண்டிருக்கிறான். பந்தயத்தை ஒப்புக்கொள்ளாதவன் காய்களை உருட்டுவானா” என்றது.

அசரீரி வாக்கைக் கேட்டதும் பலராமர் கண்கள் சிவக்க மேலும் பெருங்கோபம் கொண்டு, விளையாடிக் கொண்டிருந்த சூதாட்டப் பலகையாலேயே ருக்மியை அடித்து, அங்கேயே கொன்று போட்டு விட்டார். இவர் தோற்றபோது பற்களைக் காட்டிச் சிரித்த களிங்கன் இப்போது பயத்தில் உறைந்து போயிருந்தான். அவனையும் பிடித்திழுத்து அந்தப் பலகையாலேயே அவன் பற்களனைத்தையும் தகர்த்தெறிந்தார். மேலும் எதிர்த்து வந்த இளவரசர்களையும் அங்கிருந்த ஒரு தங்க மயமான தூணைப் பிடுங்கியெடுத்து, அதையே ஆயுதாகக் கொண்டு அடித்துப் போட்டார். உயிர் பிழைத்த மீதம் பேர்களனைவரும் இவரது கோபத்தைக் கண்டு அழுது கொண்டும், அலறிக் கொண்டும் ஓடி விட்டனர். பெரும் சப்தமும், ஆரவாரமும் எழுந்தது அங்கு. இப்படி கல்யாணத்திற்கு வந்த இடத்தில் மணமக்களின் தாத்தா ருக்மி, தன் அண்ணனால் கொல்லப்பட்டதை அறிந்த க்ருஷ்ணன், ஒரு பக்கம் மனைவி ருக்மிணிக்கும், மறுபக்கம் பலராமனுக்கும் பயந்து இதைப் பற்றி ஒன்றும் கருத்து கூறாமல், புது மண தம்பதிகளோடும், யாதவர்களோடும் த்வாரகைக்கு வந்து சேர்ந்தான்.

05_29. மூவுலகிற்கும் அதிபதியான தேவேந்த்ரன் ஒரு ஸமயம் அவனது மூர்க்கமான ஐராவதத்தின் மீதேறி சௌரியை சந்திப்பதற்காக த்வாரகை வந்தான். ஹரியால் வரவேற்கப்பட்ட அவன் நரகாஸுரனின் கொடுமைகளைப் பற்றிக் கூறலானான். “மதுஸூதனா! தேவதேவ! நீரே எங்களுக்குத் துயர் நேர்ந்த போதெல்லாம் அவற்றிலிருந்து எங்களைக் காத்தீர். மனிதனாகப் பிறந்தும் அரிஷ்டன், தேணுகன், சாணூரன், முஷ்டிகன், கேசினி, கம்ஸன், குவலயாபீடம், குழந்தைகளைக் கொல்லும் பூதனை இப்படி உலகைத் தங்கள் தீச்செயல்களால் அடக்கியாளும் அனைவரையும் அழித்தீர். உங்கள் பராக்ரமத்தாலும், அறிவாலுமே மூவுலகும் காக்கப்பட்டு, தேவர்களும் யாகப் பங்குகளைப் பெற்று த்ருப்தியோடிருக்கின்றனர். ஆனால் இப்போது மீண்டும் உங்களால் மட்டுமே தீர்க்கக்கூடிய ஒரு விஷயத்தோடு நான் இங்கு வந்திருக்கிறேன்.

பூமாதேவியின் புத்ரன், நரகனென்பவன் எல்லா உயிர்களுக்கும் பெரும் தீங்குகளை உண்டாக்கிக் கொண்டு ப்ராக்ஜ்யோதிஷ நகரத்தை ஆண்டு வருகிறான். தேவலோகத்துக் கன்னிகைகளையும், சாதுக்களையும், அரசர்களையும் அடக்கித் தன் அரண்மனையில் சிறை வைத்திருக்கிறான். எப்போதும் நீரைப் பொழிந்து கொண்டிருக்கும் வருணனின் குடை, மந்தர மலையின் மணி பர்வதமென்னும் சிகரம், என் தாய் அதிதி அணிந்திருந்த அமுத குண்டலங்கள் இப்படி அனைத்தையும் அபஹரித்துச் சென்றுள்ள அவன், இப்போது என் ஐராவதத்திற்கு ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறான். விஷயங்களை உங்களிடம் கூறி விட்டேன். நீங்கள் தான் செய்ய வேண்டியதைத் தீர்மானித்து, இவனிடமிருந்து எங்களைக் காக்க வேண்டும். இதற்கு முன் தோன்றிய ஹிரண்யன், ஹிரண்யாக்ஷன், மதுகைடபன் ஆகியோரை விட, உங்களிடம் தோன்றிய இவன் மிகவும் துஷ்டனாக, கொடியவனாக இருக்கிறான்” என்றான்.

இந்த்ரனின் குறைகளைக் கேட்ட க்ருஷ்ணன் புன்சிரிப்போடு ஸிம்ஹாஸனத்திலிருந்து எழுந்தான். இந்த்ரனைக் கையில் பிடித்துக் கொண்டு, ஸர்ப்பங்களை உணவாய்க் கொள்ளும் கருடனை மனதால் நினைத்தான். உடனே தோன்றினான் அவனும். ஸத்யபாமாவையும் தன் பின்னால் ஏற்றிக் கொண்டு, உடனே பறந்தான் க்ருஷ்ணன் ப்ராக்ஜ்யோதிஷ நகருக்கு. இந்த்ரன் த்வாரகா வாஸிகள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஐராவதத்தின் மீதேறி தன்னகருக்குச் சென்றான். ப்ராக்ஜ்யோதிஷம் நரகாஸுரனுடைய மந்த்ரி முரன் என்பவனால் கத்திகள் செருகப்பட்டிருந்த பாசக் கயிறுகளால் சுற்றிலும் காக்கப்பட்டிருந்தது. அதைத் தன் சக்ராயுதத்தால் அறுத்து விட்டு, தன்னை எதிர்த்து வந்த முரனையும், அவன் பிள்ளைகள் ஏழாயிரம் பேரையும், ஹயக்ரீவன், பஞ்சஜனன் என்பவர்களையும் பூச்சிகளைப் போல் சக்ரத்தாலேயே கொன்று விட்டு வேகமாக நகரத்திற்குள் நுழைந்தான் க்ருஷ்ணன்.

ஆயிரக்கணக்கில் நரகாஸுரனின் படைகளை வேகமாகக் கொன்று கொண்டிருந்த க்ருஷ்ணனை எதிர்த்து வந்த நரகாஸுரன் பல விதமான பாணங்களால் அடித்தான். அஸுரர்களைப் பூண்டோடு அழிக்கும் சக்ரதாரி அவனை இரு துண்டுகளாக அறுத்தெறிந்தார். நரகாஸுரன் மாய்ந்து வீழ்ந்ததும், பூமாதேவி(இப்போது ஸத்யபாமா) அவனிடமிருந்த அதிதியின் குண்டலங்களை எடுத்துக் கொண்டு லோகநாதனிடம் வந்தாள். “ப்ரபோ! தாங்கள் வராஹ மூர்த்தியாய் அவதரித்த போது, உங்கள் ஸம்பந்தத்தால் இவனை என்னிடம் உண்டாக்கினீர். நீங்களே அவனை அனுக்ரஹித்து, இப்போது மீண்டும் நீங்களே அவனை கொல்லவும் செய்தீர். இதோ இந்த குண்டலங்களை எடுத்துக் கொண்டு, அவன் ஸந்ததியை விட்டு விடுங்கள். பரம்பொருளின் அம்சமே, என் பாரத்தைக் குறைப்பதற்காக இந்த பூலோகத்தில் அவதரித்தீர்கள்.

நீங்களே படைத்து, காத்து, அழிப்பவர். உலகிற்கு ஆதாரமும், உலகமும் தாங்களே. என்னால் உங்கள் பெருமைகளைத் துதிக்க முடியுமா. எங்கும் வ்யாபித்திருப்பதும் தாங்களே. செயல், அதைச் செய்பவன், செயலின் பயன் அனைத்தும் நீங்களே. அழியாத ஆத்மாவும் தாங்களே. உன்னை முழுதும் உணர்ந்து துதிக்க என்னால் இயலாது. கருணை கொள்ளுங்கள். நரகனின் குற்றங்களை மன்னித்தருளுங்கள். பல பாவங்கள் செய்திருந்தும் உங்கள் புத்ரனான இவன் உங்களாலேயே அழிக்கப்பட்டதால் பாபமற்றவனானான்” என்று துதித்தாள். வேண்டிக் கொண்டாள். அனைத்துயிர்களுக்கும் ஸாரமான தேவதேவனும் அப்படியே அனுக்ரஹித்து விட்டு, பின்னர் நரகாஸுரனால் அடைத்து வைக்கப்பட்டிருந்தவைகளை விடுவிப்பதற்காக அவன் அரண்மனையில் ப்ரவேஸித்தான்.

நரகாஸுரனின் அந்தப்புரத்தில் பதினாறாயிரத்து நூறு கன்னிகைகளைக் கண்டான். மேலும் நான்கு தந்தங்கள் கொண்ட ஆறாயிரம் உயர்ந்த யானைகளையும், இருபத்தோரு லக்ஷம் காம்போஜத்துக் குதிரைகளையும், இன்னும் மேன்மையான இனங்களையும் கண்டான். இவைகள் அனைத்தையும் நரகாஸுரனின் சேவகர்களைக் கொண்டே த்வாரகைக்கு அனுப்பி வைத்தான் க்ருஷ்ணன். பின் வருணனின் குடை, மணி பர்வதம் இவைகளையும் கைப்பற்றி கருடன் மீதேற்றி, தானும், ஸத்யபாமையோடு ஏறிக் கொண்டு, அதிதியின் குண்டலங்களைத் திரும்பக் கொடுப்பதற்காக தேவலோகம் நோக்கிச் சென்றான்.

05_30. வருணனின் குடை, மணி பர்வதம், ருக்மிணி, ஹ்ருஷிகேசன் இவர்களை ஏற்றிக் கொண்டு அனாயாஸமாக இந்த்ர ஸபையை நோக்கிப் பறந்தான் கருடன். வாசலையடைந்ததும் ஹரி தன் சங்கத்தை எடுத்து ஊதினான். இதைக் கேட்டதும் தேவர்கள் ஸமர்ப்பணங்களுடன் க்ருஷ்ணனை வரவேற்பதற்கு வந்தனர். அவர்களின் மரியாதைகளை ஏற்றுக் கொண்ட க்ருஷ்ணன், தேவமாதாவான அதிதியின் மாளிகைக்குச் சென்றான். வெண் மேகங்களை ஒத்திருந்த ஒரு மாளிகையில் வஸித்து வந்த அதிதியை இந்த்ரனுடன் சேர்ந்து நமஸ்கரித்து, அவள் குண்டலங்களையும் ஒப்படைத்து, நரகாஸுரன் வதம் செய்யப்பட்டதையும் கூறினான். பெரிதும் மகிழ்ந்த தேவமாதா ஜகத்கர்த்தாவான ஹரியைத் துதிக்கலானாள்.

“தாமரைக் கண்ணா! உன்னைத் துதிப்போர்க்கு ஒரு பயமும் இல்லை. சாச்வதமானவன், லோகரூபமானவன், ஆத்மா, அனைத்திற்கும் ஆதாரம், முக்குணமும், அதற்கு அப்பாற்பட்டவனும், தூய்மையானவன், வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவன், அனைவரின் இதயத்தும் நிறைந்தவன், நிறம், வளர்ச்சி முதலிய மாறுபாடுகளில்லாதவன், பிறப்பு, இறப்பு, உறக்கம், விழிப்பு இவைகளால் பாதிப்பில்லாதவன் நீ. பகலும், இரவும், மாலையும், பூமியும், வானும், காற்றும், நீரும், நெருப்பும், மனமும், புத்தியும், குணங்களும், ப்ரஹ்ம, விஷ்ணு, சிவ, தேவ, யக்ஷ, தைத்ய, ராக்ஷஸ, சித்த, கூஷ்மாண்ட, பிசாச, கந்தர்வ, நர, ஸ்தாவர, புல், புதர், ஊர்வன, தாவுவன, பெரிது, மத்யமானது, சிறிது, உயர்ந்தது, தாழ்ந்தது என அனைத்தும் நீ.

உன் மாயையில் மோஹித்தே பலரும் உண்மையறியாமல் ஆத்மா அல்லாததை ஆத்மா என்றும், நான், எனது என்றும் கூறி வருகிறார்கள். இந்த மாயையே ஸம்ஸாரத்தை வளர்க்கும் தாய். ஸ்வதர்மங்களை அனுஷ்டித்து, உன்னைத் துதித்து வருபவர்கள் இந்த மாயைகளைக் கடந்து மோக்ஷத்தை அடைகிறார்கள். ப்ரஹ்மா முதல் அனைத்து தேவ, மனுஷயர்களும் உன் மாயையாகிற இந்த இருட்டினால் சூழப்பட்டவர்களே. மோக்ஷத்தைத் தரும் உன்னைத் துதிப்பவர்களும் தங்கள் ஆசை, பாதுகாப்பு இவைகளையே உன்னிடமும் யாஸிக்கிறார்கள். சாச்வதமானதை விடுத்து தங்கள் வம்சங்களின் வளர்ச்சி, எதிரிகளின் நாசம் இவைகளையே இவர்கள் உன்னிடம் வேண்டுவது உன்னுடைய விளையாட்டே.

எதையும் அருளும் கற்பக வ்ருக்ஷத்திடம் போய், தன் அரையை மறைக்க ஒரு துணி வேண்டுவது போல இவர்கள் இப்படி வேண்டுவது தங்கள் பாபங்களால் தானே. இப்படி அக்ஞானத்தாலுண்டாகும் மாயைகளான பாபங்களிலிருந்தும் நீயே காக்க வேண்டும். நானும் அப்படியே. ஹே சங்கு, சக்ரதாரி! சார்ங்கபாணி! கதாயுதத்தைத் தரிப்பவனே! உன் ஸ்வரூபத்தை நானும் அறியேன். என் மீது கருணை கொள். காத்தருள்” என்று துதித்தாள் அதிதி. இப்படித் துதிக்கப்பெற்ற விஷ்ணு தேவமாதாவிடம் “என்னை ஆசித்து அருளுங்கள்” என்று புன்னகையுடன் வேண்டினான். அதிதியும் “அப்படியே ஆகட்டும். தேவர்கள், அஸுரர்கள் என்று எவராலும் வெல்லமுடியாத புருஷோத்தமனாயிருப்பாய்” என்று க்ருஷ்ணனை ஆசிர்வதித்தாள்.

அதன் பின் இந்த்ராணியுடன் தன்னை வணங்கிய ஸத்யபாமையை “நிலையான அழகும், யௌவனத்தோடும் இருப்பாய்” என்று ஆசிர்வதித்தாள். தாயின் அனுமதியோடு இந்த்ரன் இந்த்ராணியோடு கூடி ஜனார்த்தனருக்கும், ஸத்யபாமைக்கும் வேண்டிய உபஸரிப்புகளைச் செய்து, அவர்களை தேவலோகத்து நந்தவனங்களுக்கு அழைத்துச் சென்றான். அங்கே கேசவர் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து கிடைத்த, இந்த்ராணிக்கு மிகவும் ப்ரியமான பாரிஜாத மரத்தைக் கண்டார். அங்கிருந்த வேலைக்காரர்கள் பாரிஜாத மலர்களைக் கொண்டு வந்து சசீயினிடம் தந்தனர். மனிதப் பிறவியைச் சேர்ந்தவள் என்பதால் ஸத்யபாமைக்கு அந்தப் பூக்களைக் கொஞ்சமும் தராமல் தானே சூட்டிக் கொண்டாள் இந்த்ராணி. தங்க மயமான மரப்பட்டைகளோடும், தாம்ரத்தையொத்த இளந்தளிர்களோடும், மணம் மிக்க பழங்கள் பூத்துக் குலுங்கும் இந்த பாரிஜாத மரத்தைக் கண்ட ஸத்யபாமா ஆசையோடு கண்ணனிடம், “நாதா! ருக்மிணி, ஜாம்பவதி இவர்களை விட நான் தான் உங்களுக்கு எப்போதும் மிகவும் ப்ரியமானவள் என்று அடிக்கடி கூறுவீர்களே, நினைவிருக்கிறதா? அந்த வார்த்தைகளை முகஸ்துதிக்காக அப்போதெல்லாம் கூறினீர்களா, இல்லை உண்மையா?” என்று ஆரம்பித்தாள். க்ருஷ்ணன், “ப்ரியே! நான் ஒரு போதும் பொய் கூறுவதில்லை. அதுவும் உன்னிடம், உன்னைப் பற்றி ஏன் பொய் கூறுவேன்” என்றார்.

இதைக் கேட்டு மிகவும் சந்தோஷமடைந்த ஸத்யபாமா, “அப்படியானால், இந்த மரத்தை எடுத்துச் சென்று த்வாரகையில் என் வீட்டுத் தோட்டத்தில் நட வேண்டும். இதன் பூக்களை என் சக்களத்திகளின் மத்தியில், அவர்கள் ஏங்க, நான் என் தலையில் அழகாக சூட்டிக் கொள்ள வேண்டும். இதை நீங்கள் செய்ய வேண்டும்” என்றாள். அவ்வளவுதான், உடனேயே க்ருஷ்ணன் அந்த பாரிஜாத மரத்தைப் பிடுங்கி, கருடனின் சிறகுகளின் மத்தியில் வைத்துக் கொண்டு அங்கிருந்துப் புறப்பட்டு விட்டார். இதைக் கண்ட தோட்டத்துக் காவலர்கள், “ஏ கோவிந்தா! இது உன்னால் முடியாதது. இந்த மரம் அம்ருதம் கடைந்த போது பாற்கடலில் கிடைத்தது. தேவராஜனுக்கென்று கொடுக்கப்பட்ட இதை, அவர் தன் மனைவிக்கு மலர்களைக் கொண்டு அழகு படுத்திக் கொள்வதற்காகக் கொடுத்து விட்டார். சசிதேவிக்கு மிகவும் பிடித்த இதை நீ எடுத்துக் கொண்டு வீடு செல்ல முடியாது. மனைவியின் மனம் கோணாமல் நடந்து வரும் தேவராஜர், கையில் வஜ்ரத்தோடும், தேவர்களோடும் உன்னிடம் போர் புரிய வந்து விடுவார். கேடு விளைவிக்கும் செயலை புத்திசாலிகள் செய்ய மாட்டார்கள். இந்த மரத்தை இங்கேயே விட்டு விட்டுச் செல்” என்று அவமதித்துத் தடுத்தனர். இவர்களுக்குக் கண்ணன் பதில் கூறுவதற்குள்ளாகவே, ஸத்யபாமா “யாரிந்த இந்த்ரனும், சசியும். இது கடலைக் கடைந்த போது கிடைத்தது தானே. அம்ருதம், காமதேனு, சந்த்ரன் எனக் கடலில் கிடைத்த எல்லா பொருளும், பொதுவாயிருக்கையில், இதை மட்டும் அந்த சசிதேவி எடுத்துச் செல்வதைத் தடுத்தால், அது அவள் கணவனின் பலத்தில் கொண்ட கர்வத்தினால் தான் இருக்க வேண்டும். இப்போது அவளை விட கர்வம் கொண்டுள்ள நான் சொல்வதை உங்கள் ராணியிடம் சென்று சொல்லுங்கள். என்று பின் வருமாறு கூறினாள்.

“சசி தேவியே! என் நாதன் இப்போது உன் தோட்டத்திலிருந்து பாரிஜாத மரத்தை அபகரித்துச் செல்கிறார். நீ உன் பர்த்தாவுக்கு வேண்டியவளாயிருந்து, அவனும் உனக்கடங்கி இருப்பவனாயிருந்தால் இதைத் தடுத்து, மரத்தைக் காத்துக் கொள். உன்னையும், உன் கணவனையும், அவன் தேவர்களை ஆளும் திறனையும் அறிவேன். நான் சாதாரண மனுஷ்ய ஸ்த்ரீ என்று தானே, எனக்கு இந்தப் பாரிஜாதத்தின் பூக்களைத் தராமல் அவமதித்தாய். இப்போது அதே மனுஷ்ய ஸ்த்ரீ, தன் பர்த்தாவைக் கொண்டு இந்தப் பாரிஜாத மரத்தைக் கொண்டு செல்கிறாள். முடிந்தால் உன் கணவனை வந்து தன் பராக்ரமத்தைக் காட்டச் சொல்” என்று அலக்ஷ்யமாகக் கூறினாள். இதை அந்தக் காவலர்களும், சசியிடம் சொல்ல, அவள் இந்த்ரனை மரத்தை மீட்டு வருமாறு உற்சாகப்படுத்த, அவனும் சேனையுடன் புறப்பட்டு விட்டான் கண்ணனிடம் போரிட.. மூண்டது போர். எல்லா தேவர்களும் க்ருஷ்ணன் மீது அஸ்த்ரங்களை ப்ரயோகிக்கத் தொடங்கி விட்டனர். வருணனின் பாசங்களை கருடன் மூக்கால் துண்டிக்க, யமனின் கால தண்டத்தை கண்ணன் ஒடித்து, குபேரனின் பல்லக்கைப் பொடித்து, ஏகாதச ருத்ரர்களின் சூலங்களைத் தன் சக்ரத்தால் நாசமாக்கி, தேவர்களனைவரையும் இவ்வாறே கருடனும், க்ருஷ்ணனும் தோற்கடிக்கின்றனர். தானுட்பட அனைவரின் முயற்சியும் தோல்வியுறவே, இந்த்ரன் வேறு வழியின்றி வஜ்ராயுதத்தை ஏவி விடுகிறான். க்ருஷ்ணன் அதை விளையாட்டாகத் தன் கையில் பற்றிக் கொண்டு, சக்ரத்தை எடுத்துக் கொண்டு தேவேந்த்ரனைத் துரத்தலானான். கருடனும் ஐராவதத்தை அடித்து அயரச் செய்தான்.

அப்போது ஸத்யபாமையும், “ஏ இந்த்ரா! ஓடாதே, நில். இந்த மரத்தை எடுத்துக் கொள். கணவனின் பலத்தில் கர்வம் கொள்வது பெண்களின் இயற்கை. இதில் நானும், உன் மனைவியும் விலக்கல்ல. வீடு தேடி வந்த என்னை உன் மனைவி கௌரவப் படுத்தவில்லை. ஆனால் தன் அழகில் கர்வம் கொண்டு, என்னை மனுஷ்ய ஸ்த்ரீ என அவமதித்தாள். உன் மனைவிக்குப் பாடம் புகட்டவே நான் இவ்வாறு செய்தேன். இந்த மரத்தில் தானே உன் பெருமை இருக்கிறது. இப்போது மனுஷ்ய ஸ்த்ரீ தருகிறேன். மீண்டும் இதன் பூக்களை உன் மனைவியை சூடச் சொல். எனக்குப் பிறர் பொருளான இந்த மரத்தாலும், இதன் பூக்களாலும் ஆக வேண்டியதொன்றுமில்லை. என் பர்த்தாவின் பெருமையைக் காட்டவே, அவரைப் போருக்குத் தூண்டினேன். இதை இப்போது நீயே எடுத்துச் செல்” என்று கூறினாள். வஜ்ரத்தையிழந்து தோல்வியுற்றிருக்கும் போது, இவ்வாறு ஸத்யபாமா கூறிய கடுஞ்சொற்களைக் கேட்டு மனம் நொந்த இந்த்ரன், “கொடியவளே! இது எனக்குத் தோல்வியல்ல. அவமானமுமல்ல. உங்களின் நண்பனான என்னை அவமதித்தது போதும். ஜகத்காரணனிடமல்லவா நான் தோற்றிருக்கிறேன். மஹான்களாலும் அறிய முடியாதவனிவன். ஸூக்ஷ்மமானவன். உற்பத்தியில்லாதவன். கர்ம சம்பந்தமற்றவன். சாச்வதமானவன். இவனை யார்தான் ஜயிக்க முடியும்” என்று துதிக்கலானான்.

05_31. தேவேந்த்ரனின் ஸ்துதியைக் கேட்டு, அர்த்தத்துடன் அமர்க்களமாகச் சிரித்தான் கண்ணன். ஒவ்வொரு முறையும் சண்டை செய்வதும், பிறகு தோற்றதும் துதிப்பதும் இந்த்ரனிடம் முதல் அனுபவமல்லவே. “தேவராஜரே! நீங்களோ தேவன். நானோ சாதாரண மனிதன். என் தவறை
தேவர்களான தாங்கள் தான் மன்னிக்க வேண்டும். என்னைப் பொறுத்தருளுங்கள். இந்த மரம் எனக்கு வேண்டாம். ஸத்யபாமா கேட்டதால் தான் நான் இதைப் பறித்தேன். இதையும், என் மீது நீங்கள் ஏவிய, சத்ருக்களை அழிக்கும் உங்கள் வஜ்ரத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று ஏளனமாகக் கூறினான் கண்ணன். மிகுந்த வெட்கம் கொண்ட இந்த்ரன், “க்ருஷ்ணா! என்னை மேலும் மயக்காதே. ஏன் இப்படிச் செய்கிறாய். உன்னை நானறிவேன். ஆனால் இப்போதுள்ள உன் நிலையில் தான். உன்னுடைய ஸூக்ஷ்ம ரூபத்தையல்ல. இந்த மரத்தை நீயே த்வாரகைக்
கொண்டு செல். நீ பூலோகத்தில் இருக்கும் வரை இதுவும் அங்கு இருக்கும். நீயே உலகைப் படைத்துக் காப்பவன். துஷ்டர்களை சிக்ஷிப்பவனும் நீயே. தேவராஜனும் நீயே. நானல்ல. நீயே ஜகன்னாதன். விஷ்ணுவும் நீயே. பஞ்சாயுதன் கொண்ட பரமனும் நீயே. என் அபராதத்தைப்
பொறுத்தருள்” என்று வேண்டிப் பணிந்தான்.க்ருஷ்ணனும் அதையேற்று பாரிஜாத வ்ருக்ஷத்துடன் அனைவரும் புகழ கருடனுடன் த்வாரகை திரும்பினான். த்வாரகைக்கு மேலே வந்ததும் தன் சங்கத்தை முழக்கி, மக்களைத் தன் வரவால் மகிழச் செய்தான். பாரிஜாத மரத்தை ஸத்யபாமையின் தோட்டத்தில் நட்டான். மூன்று யோஜனை தூரம் மணம் பரப்பும் அதன் அழகில் மயங்கி எவரும் அதனருகில் சென்று ரஸிக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் அதன் சக்தியால் முற்பிறவியும் ஞாபகத்திற்கு வருகிறது. சரீரம் தேவசரீரம் போல் பொலிவு பெறுகிறது. இப்படி கொண்டாட்டத்திலிருக்கும் த்வாரகையில், க்ருஷ்ணன் தான்
ப்ராக்ஜ்யோதிஷத்திலிருந்து வெற்றி கொண்ட யானை, குதிரை என செல்வங்களைத் தன் பந்துக்களோடுப் பங்கிட்டுக் கொள்கிறான். நரகாஸுரனின் சிறையில் இருந்து விடுவித்த பதினாறாயிரம் பெண்களையும் அவர்கள் விரும்பியபடியே ஒரு சுப வேளையில் தானே விதிப்படி விவாஹம் செய்து கொண்டான் க்ருஷ்ணன். திருமண முஹூர்த்தத்தின் போதும், அதன் பின்னும் ஒவ்வொருவருடனும் அவரவர் மனம் விரும்பியபடி உருவங்களை ஏற்படுத்திக் கொண்டு, அவர்கள் மாளிகைகளில் மகிழ்வித்துக் கொண்டிருந்தான்.

ஸ்ரீ விஷ்ணு புராணம் -நான்காம் அம்சம்-ஸ்ரீ சீதாராம ஸ்வாமிகள் தொகுத்தவை–

February 24, 2023

04_01. அரசர்களின் வம்சங்களைப் பற்றிக்கூறுமாறு மைத்ரேயர் கேட்க, பராசரர் “ப்ரஹ்மத்தை முதலாகக் கொண்ட இந்த மனு வம்சத்தின் வரலாற்றை கேட்பவர்களின் வம்சம் மேன்மேலும் வளரும். ஸகல பாபங்களும் அகலும். ரிக், யஜுர், ஸாமமயனான விஷ்ணுவிடம் ஹிரண்யகர்ப்பனான ப்ரஹ்மாவும், அவர் வலக்கால் கட்டை விரலிலிருந்து தக்ஷ ப்ரஜாபதியும் தோன்றினார். தக்ஷனின் புதல்வி அதிதியின் பிள்ளை விவஸ்வான். விவஸ்வான் பிள்ளை மனு. மனுவிற்கு இக்ஷ்வாகு, ந்ருகன், த்ருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், திஷ்டன், கரூசன், ப்ருஷத்ரன் என்று ஒன்பது புத்ரர்கள்.

இவர்கள் பிறப்பதற்கு முன் மனு மித்ராவருணர்களை உத்தேஸித்து புத்ரனை வேண்டி ஒரு யாகம் செய்த போது, அவர் மனைவி ஹோதாவிடம் சென்று புத்ரியை வேண்டுமாறு கூறினாள். இந்தக் குழப்பத்தால் இளா என்ற பெண் யாகப் பயனாகப் பிறந்து, உடனே மித்ர வருணர்களின் ஆசியால் ஸுத்யும்னன் என்ற ஆண் பிள்ளையாகவும் மாறிவிட்டாள். முன்பொரு ஸமயம் பரமேச்வரனும், பார்வதியும் ஒரு காட்டில் விளையாடிக் கொண்டிருந்த பொது சில மஹரிஷிகள் அங்கு வந்து விட்டனர். வெட்கமும், கோபமும் கொண்ட பார்வதி குடிசையில் மறைந்து கொண்டாள். நிலைமையைப் புரிந்து கொண்ட ரிஷிகளும் வெளியே சென்று விட்டனர். பார்வதியை த்ருப்தி செய்வதற்காக அந்தக் காட்டில் இனி யார் நுழைந்தாலும் அவர்கள் பெண்ணாக மாறி விடுவர் என்று வரம் கொடுத்தார்.

வேட்டைக்குச் சென்றிருந்த ஸுத்யும்னன் தற்செயலாக இதே காட்டிற்குள் நுழைந்து விட மீண்டும் பெண்ணாகி விடுகிறான். இந்தக் காட்டிற்கு இளாவ்ருதம் என்று பெயர். வெட்கமும், துயரமும் கொண்ட அவன்(ள்) சந்த்ரனின் புத்ரனான புதனுடைய ஆச்ரமத்தினருகில் சுற்றிக் கொண்டிருந்தான். அவளிடம் புதன் புரூரவஸ் என்ற பிள்ளையைப் பெற்றான். இதன் பின் மஹரிஷிகளின் பெருமை வாய்ந்த ஒரு யாகத்தால் ஸுத்யும்னன் மீண்டும் ஆண்மை எய்தினான். இவனுக்கு இப்போது உத்கலன், கயன், விதானன் என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தனர். ஆண், பெண் குழப்பத்தால் ஸுத்யும்னனுக்கு அரசுரிமை வாய்க்கவில்லை.

வஸிஷ்டரின் உத்தரவால் தந்தையிடமிருந்து கிடைத்த ப்ரதிஷ்டானம் என்ற நகரத்திற்குத் தனக்குப் பின் புரூரவஸ்ஸை மன்னனாக்கினான் இளா என்ற ஸுத்யும்னன். மனுவின் மற்றொரு புத்ரனான ப்ருஷத்ரன் ஆசார்யர் வஸிஷ்டரின் பசுக்களைக் காத்துக் கொண்டு இருந்தபோது ஒரு நாள் இரவு ஒரு புலி பசுக்களை உண்பதற்காக அவற்றுள் புகுந்து விட்டது. அப்போது தவறுதலாக ஒரு பசுவை ப்ருஷத்ரன் கொன்று விட, வஸிஷ்டர் அவனை சூத்ரனாக சபித்து விடுகிறார். மற்றொருவனான கரூசன் கரூச தேசத்தை ஆண்டு வந்தான். அவனுக்கு பராக்ரமர்களான க்ஷத்ரியர்கள் பிறந்தனர். மற்றொருவனான த்ருஷ்டனுக்கு நாபாகனும், அவனுக்குப் பலந்தனனும் பிறந்தான். தாழ்ந்த செய்கைகளால் வைச்யத் தன்மை அடைந்த நாபாகனால் பலந்தனனுக்கும் க்ஷத்ரியத் தன்மை போய்விட்டது.

பலந்தனனுக்கு வத்ஸப்ரீதியும், அவனுக்கு ப்ராம்சுவும், அவனுக்கு ப்ரஜாபதியும், அவனுக்கு கனிமித்ரனும், அவனுக்கு சாக்ஷுஷனும், அவனுக்கு விம்சனும், அவனுக்கு விவிம்சகனும், அவனுக்கு கநிநேத்ரனும், அவனுக்கு அதிவிபூதியும், அவனுக்கு கரந்தமனும், அவனுக்கு அவிக்ஷித்தும், அவிக்ஷித்துக்கு மருத்தனும் பிறந்தனர். மருத்தன் செய்த யாகங்களில் கருவிகள் அனைத்தும் தங்கத்தாலானவை. இந்த்ரன் ஸோமபானத்தாலும், ப்ராஹ்மணர்கள் தக்ஷிணையாலும் இந்த யாகத்தில் த்ருப்தி அடைந்தனர். இவன் சபையில் தேவர்கள் இருந்தனர். இந்த மருத்தன் சக்ரவர்த்தியாக விளங்கினான். இவனுக்கு நரிஷ்யந்தனும், அவனுக்கு தமனும், அவனுக்கு ராஜவர்தனனும், அவனுக்கு ஸுவ்ருத்தியும், அவனுக்குக் கேவலனும், அவனுக்கு ஸுத்ருதியும், அவனுக்கு நரனும், அவனுக்கு சந்த்ரனும், அவனுக்கு கேவலனும், அவனுக்கு பந்துமானும், அவனுக்கு வேகவானும், அவனுக்கு புதனும், அவனுக்கு த்ருணபிந்துவும், அவனுக்கு ஜலபிலா என்ற பெண்ணும் பிறந்தனர்.

த்ருணபிந்துவை அலம்புஸா என்ற அப்ஸரஸ்ஸுக்கும் விசாலன் பிறந்தான். அவன் விசாலன் எனும் நகரை நிர்மாணித்தான். இவனுக்கு ஹேமசந்த்ரனும், அவனுக்கு சந்த்ரனும், அவனுக்கு தூம்ராக்ஷனும், அவனுக்கு ஸ்ருஞ்ஜயனும், அவனுக்கு ஸஹதேவனும், அவனுக்கு க்ருசாச்வனும், அவனுக்கு ஸோமதத்தனும் பிறந்தனர். இந்த ஸோமதத்தன் பத்து அச்வமேத யாகங்களைச் செய்தான். இவனுக்கு ஜனமேஜயன் பிறந்தான். இந்த அரசர்கள் அனைவரும் விசாலா நகரை ஆண்டவர்கள். இதேபோல் மனுவின் மற்றொரு புத்ரனான சர்யாதிக்கு ஸுகன்யா என்ற பெண்ணும், ஆனர்த்தன் என்ற புத்ரனும் பிறந்தனர். ஸுகன்யா ச்யவன மஹரிஷியை மணந்தாள்.

ஆனர்த்தனுக்கு ரேவதன் பிறந்தான். அவன் குதஸ்தலீ நகரிலிருந்து கொண்டு ஆனர்த்த ராஜ்யத்தை ஆண்டு வந்தான். இவனுக்கு ரைவதனும், அவனுக்கு ககுத்மி முதலான நூறு புத்ரர்கள் பிறந்தனர். ககுத்மிக்கு ரேவதி என்ற பெண் பிறந்தாள். அவளுக்கு யாரை மணம் முடிப்பது என்பதைக் கேட்கலாம் என்று ப்ரஹ்மலோகத்திற்கு அழைத்துச் சென்ற ககுத்மி அங்கு ஹாஹா, ஹூஹூ என்ற இரு கந்தர்வர்கள் பாடிக் கொண்டிருந்ததை மனம் லயித்து கேட்டுக் கொண்டிருந்தான். அதிதானம் என்ற அந்த ஸங்கீதம் சித்ரை, தக்ஷிணை, வார்த்திகைகளில் சுற்றிக் கொண்டு அனேக யுகங்கள் பாடப்பட்டு வந்தது. ககுத்மியும் அவ்வளவு காலமும், காலம் போவதறியாமல் அதை விரும்பிக் கேட்டுக் கொண்டிருந்தான்.

இது முடிந்ததும் ப்ரஹ்மாவிடம் சென்று தன் பெண்ணுக்கு யாரை மணம் முடிக்கலாம் என்று கேட்ட அரசனிடம், நீர் யார், யாரைத் தேர்ந்தெடுதுள்ளீர்கள் என்று ப்ரஹ்மா கேட்க, அரசன் சிலரைக் கூறுகிறான். தலையைக் கவிழ்த்துக் கொண்டு சிரிப்புடன் ப்ரஹ்மா கூறலானார்: “அரசே! நீங்கள் கூறும் வரன்களின் ஸந்ததிகள் கூட இப்போது பூலோகத்தில் இல்லை. பூலோகத்தில் நீங்கள் இங்கு கச்சேரியில் லயித்திருந்த காலத்தில் பல சதுர் யுகங்கள் சென்று விட்டன. இப்போது வைவஸ்வத மனுவின் இருபத்தெட்டாவது சதுர்யுகத்தில் கலியுகம் நெருங்கிய வண்ணம் இருக்கிறது. ஆகையால் வேறு ஒருவனுக்குத் தான் உன் பெண்ணை நீ தர வேண்டும். உன் சுற்றம், பொருள், வேலையாட்கள் என எதுவும் இப்போது இல்லை”.

வரன்கள் கிடைக்காததற்கு வருந்திய ககுத்மி ப்ரஹ்மாவிடமே தகுந்த வரனைச் சொல்ல வேண்டினான். “அரசே! பூமியில் விஷ்ணுவே இப்போது அம்சமாய் அவதரித்திருக்கிறார். அவருடைய ஆதி, மத்யம், அந்தம், ஸ்வரூபம், ப்ரபாவம், பலம் இவைகளை நானும் அறிந்திலன். காலமும் அவருக்கு எந்த மாறுதலையும் உண்டாக்குவதில்லை. சரீரமும், அழிவும், நாம, ரூபங்களுமற்றவரவர். அவர் அனுக்ரஹத்தாலேயே நான் ஸ்ருஷ்டியையும், ருத்ரன் ஸ்ம்ஹாரத்தையும் செய்கின்றோம். மற்ற தேவதைகளின் ஸ்வரூபமும் அவரே. அவரிடமே உலகம் நிலைத்துள்ளது. அவரும் எதிலும் நிறைந்துள்ளார். உன் குதஸ்தலி நகரம் இப்போது யாதவர்கள் அரசாளும் த்வாரகையாக உள்ளது. ஆதிசேஷனின் அம்சமாய் அவதரித்திருக்கும் பலதேவனுக்கு உன் பெண்ணை மணம் முடி” என்றார் ப்ரஹ்மா.

குதஸ்தலியை விட முழுதும் வேறுபட்டிருக்கும் த்வாரகையையும், குள்ளமாகவும், சக்தி குறைந்தவர்களாகவும் இருக்கும் மனிதர்களையும் திரும்பிப் பெண்ணுடன் வந்த ககுத்மி கண்டான். ஸமுத்ரத்தின் கரையில் இருந்தது குதஸ்தலி. த்வாரகை ஸமுத்ரத்தின் நடுவில் இருக்கிறது இப்போது. கலப்பையை ஆயுதமாகத் தரித்து, ஸ்படிக மலை போல் வெளுத்து, உயர்ந்து அகன்ற மார்புடன் இருக்கும் பலராமருக்குத் தன் பெண் ரேவதியை மணம் முடித்தான் ககுத்மி. அவரும் ஏற்றுக் கொண்டார். தன்னை விட மிகவும் உயரமாக இருந்த பெண்ணை கலப்பையால் அழுத்தித் தனக்கு உரியவளாக்கிக் கொண்டார் பலராமர். ககுத்மி பின் இமயம் சென்று தவம் புரிந்தார்.

04_02. ககுத்மி ப்ரஹ்மலோகம் சென்றிருந்த போது குதஸ்தலியை புண்யஜனர் என்ற ராக்ஷஸக் கூட்டம் அவர் தம்பிகளை நான்கு திசைகளிலும் விரட்டி விட்டு தாங்கள் ஆண்டனர். தம்பிகளில் ஒருவனான வ்ருஷ்டனிடமிருந்து வார்ஷ்டகம் என்ற ராஜ குலம் உண்டாயிற்று. மனுவின் மற்றொரு புதல்வனான நாபாகனுக்கு நாபாகனும், அவனுக்கு அம்பரீஷனும், அவனுக்கு விரூபனும், அவனுக்கு ப்ருஷதச்வனும், அவனுக்கு ரதீதரனும் பிறந்தனர். ரதீரதனின் மனைவியிடம் அங்கிரஸ் என்ற ப்ராஹ்மணர் ப்ரம்ஹ வர்ச்சஸ் உள்ள பிள்ளைகளை உண்டாக்கவே, அவர்கள் ப்ராஹ்மண்யமும், க்ஷத்ரியத்வமும் கலந்தவர்கள் ஆனார்கள்.

இதேபோல் ஒரு ஸமயம் மனு தும்மியபோது அவர் மூக்கிலிருந்து தோன்றிய இக்ஷ்வாகுவிற்கு நூறு பிள்ளைகள் பிறந்தனர். விகுக்ஷி, நிமி, தண்டன் என்ற மூவரே அதில் முக்யமாயிருந்தனர். சகுனி முதலான ஐம்பது பேர்கள் உத்தராபதத்திற்கும், நாற்பத்தெட்டு பிள்ளைகள் தக்ஷிணாபதமென்ற நாட்டிற்கும் அரசராயினர். ஒரு ஸமயம் காட்டிற்கு வேட்டைக்குச் சென்றிருந்த விகுக்ஷி பல ம்ருகங்களைக் கொன்று மிகவும் களைத்திருந்தான். தந்தை அஷ்டகை ச்ராத்தத்திற்கு மாம்ஸம் கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டிருந்ததை நினைவில் கொண்ட அவன் பசியால் சேமித்த விலங்குகளுள் முயலை மட்டும் தான் சாப்பிட்டு விட்டு, மற்ற அனைத்தையும் தந்தையிடம் ச்ராத்தத்திற்காகக் கொண்டு வந்து தந்தான்.

அவற்றை பரிக்ஷித்த வஸிஷ்டர் “அரசே! ச்ராத்தத்திற்கு என ஸம்பாதித்த இந்த மாம்ஸங்களுள் ஒன்றான முயல் மாம்ஸத்தை உன்னுடைய துராத்மாவான இந்த பிள்ளை தின்று விட்டதால் இவையனைத்துமே தோஷம் காரணமாக விலக்கத்தக்கவை, அசுத்தமாகிவிட்டன இவை” என்று கூறி விட்டார். இதனால் விகுக்ஷி சசாதன் (முயலைத் தின்றவன்) என்று அழைக்கப்பட்டான். இக்ஷ்வாகுவும் அவனைக் கைவிட்டான். இக்ஷ்வாகுவின் இறப்பிற்குப் பின் இவன் அரசாண்டான். புரஞ்ஜயன் என்ற புத்ரனையும் பெற்றான்.

முன்பொரு ஸமயம் த்ரேதா யுகத்தில் பலத்தால் அஸுரர்கள் தேவர்களை வென்றனர். விஷ்ணுவை ஆராதித்த அவர்களிடம் “சசாதனுடைய புத்ரன் புரஞ்ஜயன் உடலில் நான் புகுந்து அஸுரர்களை வெல்வேன். எனவே நீங்கள் அவனிடம் சென்று உதவி கோருங்கள்” என்றார். தேவர்களின் வேண்டுதலைக் கேட்ட புரஞ்ஜயன் “நூறு அச்வமேதங்கள் செய்த உங்கள் தலைவன் இந்த்ரன் எனக்கு வாஹமானால் ஒழிய அந்த அஸுரர்களை வெல்வது கடினம்” என்று நிபந்தனை விதித்தான். இந்த்ரன் இதற்குடன்பட்டு வ்ருஷபமானான் (எருது). எருதின் முதுகுக் கொண்டையின் (ககுத்)மீதிருந்து போர் புரிந்து வென்றதால், புரஞ்ஜயனுக்கு ககுத்ஸ்தன் என்ற பெயர் நிலைத்தது. இவனுக்கு அநேநஸ் என்பவனும், அவனுக்கு ப்ருதுவும், அவனுக்கு விஷ்டராச்வனும், அவனுக்கு யுவனாச்வனும் பிறந்தனர்.

யுவனாச்வனுக்கு சந்த்ராம்சம் பொருந்தியிருந்ததால் சாந்த்ரன் எனப்பட்டான். அவனுக்கு சாபஸ்தன் பிறந்து சாபஸ்தீ நகரை நிர்மாணித்தான். இவனுக்கு ப்ருஹதச்வனும், அவனுக்குக் குவலயாச்வனும் பிறந்தனர். அவன் உதங்க மஹரிஷியின் பகைவனான துந்து என்ற அஸுரனைத் தன் இருபத்தோராயிரம் புத்ரர்களோடு சென்று கொன்று, துந்துமாரன் என்ற பெயர் கொண்டான். அந்த சண்டையில் த்ருடாச்வன், சந்த்ராச்வன், கபிலாச்வன் என்ற மூன்று பிள்ளைகளைத் தவிர மீதம் ஆயிரமாயிரம் புத்ரர்களும் துந்துவின் மூச்சுக் காற்றால் இறந்தனர். த்ருடாச்வனுக்கு ஹர்யச்வனும், அவனுக்கு நிகும்பனும், அவனுக்கு அமிதாச்வனும், அவனுக்கு க்ருசாச்வனும், அவனுக்கு ப்ரஸேனஜித்தும், அவனுக்கு யுவனாச்வனும் பிறந்தனர்.

இந்த யுவனாச்வனுக்கு நெடுங்காலமாக புத்ரன் இல்லாமையால் வெறுத்துப் போய், காட்டிலும், ரிஷிகளின் ஆச்ரமங்களிலுமே இவன் திரிந்து கொண்டிருந்தான். இவனிடம் கருணை கொண்ட மஹரிஷிகள் தாங்களாகவே அவனுக்கு ஒரு புத்ரனை வேண்டி இஷ்டியைச்(வேள்வி) செய்தனர். நள்ளிரவில் அந்த வேள்வி முடியவே மந்த்ர தீர்த்தம் நிரம்பிய கலசத்தை யாக வேதியின் நடுவில் வைத்து விட்டு, மஹரிஷிகள் அயர்ந்து விட்டனர். அப்போது பெரும் தாஹத்துடன் அங்கு வந்த யுவனாச்வன் தூங்குபவர்களை எழுப்ப வேண்டாம் என்று, பராக்ரமம் வாய்ந்த பிள்ளையைப் பெற அவன் மனைவி அருந்த வேண்டிய அந்த மந்த்ர தீர்த்தத்தைத் தான் குடித்து விடுகிறான்.

முனிவர்கள் விஷயமறிந்து வருத்தமடைந்து கொண்டிருக்க, அவன் வயிற்றில் ஒரு கர்ப்பம் உண்டாகி, காலத்தில் வலக்கைக் கட்டை விரலாலேயே யுவனாச்வன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு ஒரு குழந்தை வெளியேயும் வந்து விடுகிறது. யுவனாச்வன் இறந்து விடுகிறான். இந்தக் குழந்தைக்கு யார் பால் கொடுப்பார்கள் என்று முனிவர்கள் வருந்தும்போது இந்த்ரன் “என்னைத் தாயாகக் கொண்டு இது பாலுண்ணும்” என்று கூறி தன் பவித்ர (மோதிர)விரலால் அம்ருதத்தை வர்ஷிக்க, அதை உண்ட குழந்தையும் விரைவில் வளர்ந்தது. இந்தக் குழந்தையே மாந்தாதா என்ற பெயரில் பின்னர் சக்ரவர்த்தியாகி ஸூர்யன் உதித்து அஸ்தமிக்கும் எல்லை வரை ஆண்டது. இவனுக்கும் சசிபிந்து என்பவனின் பெண்ணான இந்துமதிக்கும் புருகுத்ஸன், அம்பரீஷன், முசுகுந்தன் என்ற மூன்று பிள்ளைகளும், ஐம்பது பெண்களும் பிறந்தனர்.

இந்த நேரத்தில் ரிக் வேதியான ஸௌபரி மஹரிஷி, ஜலத்திற்குள் பனிரெண்டு வருஷமாகத் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வஸித்து வந்த ஸம்மதன் என்ற மீன்களின் அரசன் தன் பிள்ளை, பேரன்களோடு அங்குமிங்கும் உல்லாஸமாக அங்குமிங்கும் விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்ததில் தன் தவத்தைக் கலைத்துக் கொண்ட ஸௌபரி மஹரிஷி மீன்கள் ஸம்மதன் மேல் அங்குமிங்கும் விளையாடுவது போல தானும் பிள்ளை, பேரன்களோடு விளையாட வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். வந்தார் மாந்தாதாவிடம். அவனின் பூஜை, உபஸரிப்புகளை ஏற்றுக்கொண்டு “அரசே! நான் திருமணம் செய்ய நினைத்திருக்கிறேன். எனக்குப் பெண் தா.

எத்தனையே அரசர்கள் பெண் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனினும் ககுத்ஸ்த வம்சத்தவர்களே இரப்போரின் மன விருப்பத்தை நிறைவேற்றுபவர்கள் என்று உன்னிடம் நான் வந்துள்ளேன். உங்களிடம் வந்தவர்கள் வீணே திரும்புவதில்லை. உனக்கோ ஐம்பது பெண்கள். அவர்களில் ஒரு பெண்ணையாவது எனக்குக் கொடு. என் துக்கத்தைப் போக்கு” என்றார். உடல் தளர்ந்த கிழவரின் வேண்டுகோளுக்கும், அவர் கோபத்துக்கும் பயந்து அவன் யோஸிப்பதைக் கண்ட மஹரிஷி “பெண்ணாகப் பிறந்தால் யாருக்காவது கொடுத்துதானே ஆக வேண்டும். நான் என்ன தவறாகக் கேட்டு விட்டேன். உனக்கும், எனக்கும் லாபமே, கொடுத்து விடு” என்றார்.

அரசன் உசிதமாக “நற்குடியில் பிறந்த எவரையாவது தாங்களே எங்கள் பெண்கள் தேர்ந்தெடுப்பதே எங்கள் குல வழக்கம். நான் இதில் என்ன செய்ய. நீங்களோ கேட்டு விட்டீர்கள். எனக்கு ஒன்றும் தோன்றவில்லை, அதனால் தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான். முனிவரா விடுவார். “சரி, குடும்ப வழக்கத்தைக் கெடுக்க வேண்டாம். என்னை அந்தப் புரத்திற்குள் விடச்சொல். எந்தப் பெண் என்னைத் தானாக வரிக்கிறாளோ அவளையே நான் மணக்கிறேன். ஒருவரும் வரிக்கவில்லையெனில், இந்த கிழப்பருவத்திற்கு இது வீண் என்று விட்டு விடுகிறேன்” என்றார். இந்தக் கிழவரை எவள் வரிக்கப் போகிறாள் என்று அரசனும் காவலாளியைக் கூப்பிட்டு முனிவரை அந்தப்புரத்திற்கு அழைத்துச் செல்லச் சொல்கிறான்.

அவனும் அவ்விடத்திற்கு அழைத்துச் சென்று “இவரை வரிப்பவர் எவராயினும் மன்னர் மறுப்பின்றி அவருக்கே இவரை மணம் முடிப்பார்” என்று அறிவிக்கிறான். முனிவர் இப்போது எவரும் வியக்கும், விரும்பும் அழகையும், உருவத்தையும் கொள்கிறார். ஐம்பது இளவரசிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு அவரிடம் மனதைப் பறி கொடுக்கின்றனர். இந்த விஷயத்தை அறிந்த மன்னன், வேறு வழியின்றி தன் வார்த்தையின் படி தன் ஐம்பது பெண்களையும் அவருக்கே விவாஹம் செய்து வைக்கிறான். அனைவரும் முனிவருடன் ஆச்ரமம் சென்று விடுகின்றனர்.

இளவரசிகளான அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக குடியிருப்புகளை உண்டாக்கித்தர நினைத்த மஹரிஷி விச்வகர்மாவை உடனே அழைத்து “பறவைகள் சப்தமிடும் தாமரைக் குளங்கள், பூச்செடிகள், பழ மரங்கள், நந்தவனங்கள், பரந்த மெத்தை, மேடைகள், மாடங்கள், கூடங்கள் நிறைந்த தனித்தனி மாளிகைகளை உண்டாக்கித் தர வேண்டும்” என உத்தரவிடுகிறார். அப்படியே செய்து முடிக்கிறான் விச்வகர்மா. நந்தனன் என்ற நித்ய நிதியையும் படைக்கிறார் மஹரிஷி. அவைகளோடும், பல போகங்களோடும், அவர்களோடும் அதிதி பூஜைகளோடும், மனம் மகிழ்வோடு உள்ள வேலைக் காரர்களோடும் காலத்தைக் கழித்து வந்தனர்.

ஆண்டுகள் கழிகின்றன. பெண்கள் ஸந்தோஷமாக இருக்கிறார்களா என்ற அறிய விரும்பிய மாந்தாதா மாப்பிள்ளையான ஸௌபரி மஹரிஷியின் ஆச்ரமத்திற்கு வருகிறான். வசதிகளைக் கண்டு வியந்தபடி ஒவ்வொரு பெண்ணின் மாளிகைக்கும் சென்று உபசரிப்புகளை ஏற்றுக் கொண்டு அவர்களை நலம் விசாரிக்கிறான். அனைவருமே அப்பாவின் ஆசியில் மிகவும் உல்லாசமாகவும், த்ருப்தியுடன் இருப்பதாகவும் கூறுகின்றனர். மேலும் ஒவ்வொருவருமே மஹரிஷி எப்போதும் தங்களுடனே இருப்பதாகவும், எனவே மற்ற ஸஹோதரிகளைப் பற்றி இது குறித்து வருந்துவதாகவும் கூறுகின்றனர். இதைக் கேட்டு ஆச்சர்யமடைந்த மன்னன் மஹரிஷியிடமும் சென்று அவரைப் பூஜித்து, கொண்டாடுகிறான்.

“தேவரீருடைய மஹிமையை நன்கு அறிகிறேன். இத்தகைய செல்வங்களும், சிறப்புகளும் வேறெங்கும் நான் கண்டதில்லை, தங்களின் தவத்தின் சக்தியைப் புரிந்து கொண்டேன்” என்று அவரைப் பலவாறு புகழ்ந்து விட்டு, சிலகாலம் தானும் அங்கு இருந்து அவைகளை அனுபவித்து விட்டு, நகருக்குத் திரும்புகிறான். நூற்றைம்பது குழந்தைகளுக்குத் தகப்பனாகிறார் ஸௌபரி மஹரிஷி. கொஞ்சி மகிழ்கிறார். அவர்கள் சிரிப்பையும், விளையாட்டையும், ஸேஷ்டைகளையும், தவழ்வதையும், நடப்பதையும் கண்டு ஸந்தோஷிக்கிறார். அவர்களின் பல்வேறு பருவங்களைப் பற்றி யோசித்தும் மகிழ்கிறார். இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கையில் ஒரு ஸமயம் அவருக்கு விழிப்பு வருகிறது.

“மோஹம் வளர்ந்து விட்டது, எவ்வளவு லக்ஷம் வருஷங்கள் கழிந்தாலும் இந்த ஆசைகள் முடியாது போலிருக்கிறதே. பிள்ளைகளைப் பார்த்தால், பேரன்களைப் பார்க்க வேண்டும் என்றும், அதன் பின் கொள்ளுப் பேரன்களைப் பார்க்க வேண்டும் என்றும் நீண்டு கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு ஆசையும் பூர்த்தியானதும், புதிதாக இன்னொரு ஆசை பிறக்கிறது. மரணத்தின் போதுதான் இவைகளுக்கு முடிவு போலும். தவம் செய்து கொண்டிருந்த நான் மீனின் ஸஹவாசத்தால் இப்படி அழிந்து விட்டேனே. இனி எவரோடும் கூட்டு வைக்கக் கூடாது. அது பல தோஷங்களை உண்டாக்குகிறது. ஒரு மனைவியோடு இருப்பவனுக்கே பல கஷ்டங்கள் இருக்கும் போது, பலரை மணக்க நினைத்தேனே.

ஆஹா, எவ்வளவு தூரம் வந்து விட்டேன். யோகம், ஸித்திகளைப் பெற்றவர்களுக்கே ஸஹவாஸம் இவ்வளவு கஷ்டங்களைத் தருமென்றால், அல்பர்கள் இப்படிப்பட்டக் கூட்டுறவால் பதிதராகவே ஆகிவிடுவரே” இப்படிப் பலவாறு புலம்பி முடிவில் ஒரு முடிவுக்கு வந்தார். லோக குருவான விஷ்ணுவே இதற்கு கதி. அவனையே மீண்டும் சரணடைந்து தவத்தால் இந்த கஷ்டங்களை விட்டு விலகுவேன் என்று முடிவு செய்து போகங்களைத் துறந்து, மனைவிகளோடு வானப்ரஸ்தராகி, பல தர்மங்களை வனத்தில் அனுஷ்டித்து, பக்வம் அடைந்ததாக உணர்ந்த போது அக்னி ஹோத்ர அக்னிகளை தன் ஆத்மாவில் முடிந்து, ஸன்யாஸ ஆச்ரமத்திலிருந்து அழிவில்லாத மோக்ஷத்தையும் அடைந்தார்.

இந்த ஸௌபரி மஹரிஷியின் சரிதத்தை நினைப்பவனும், படிப்பவனும், படிக்கச் செய்பவனும், கேட்பவனும், கேட்கச் செய்பவனும், மனதில் வைப்பவனும், எழுதுபவனும், எழுதச் செய்பவனும், கற்பவன், கற்பிப்பவன் என அனைவரும் எட்டு பிறப்புக்கள் வரை தீய சிந்தையும், தீய ஒழுக்கமும் அண்டாது வாழ்வார்கள். அத்தனை புண்யமானது இந்த சரிதம்.

04_03. மாந்தாதாவின் மகன்களுள் அம்பரீஷனுக்கு யுவநாச்வனும், அவனுக்கு ஹரிதனும் பிறந்தனர். இவனைக் கொண்டே அங்கிரஸ்ஸுக்கள் ஹாரீதர்கள் என்று ஆனார்கள். ஒரு ஸமயம் ரஸாதலத்தில் இருந்த நாகர்களை காச்யபருக்கும், அவர் மனைவி முனிக்கும் பிறந்தவர்களான மௌனேயர் என்ற ஆறு கோடி கந்தர்கவர்கள் வென்று அவர்களின் உயர்ந்த ரத்னங்களையும், ஆட்சியையும் கைப்பற்றினார்கள். நாகர்கள் இது பற்றி மஹாவிஷ்ணுவிடம் முறையிட அவர்கள் ப்ரார்த்தனைக்கு மனமிறங்கிய பெருமான் தானே மாந்தாதாவின் மகனான புருகுத்ஸனிடம் ப்ரவேசித்து அந்த துஷ்ட கந்தர்வர்களை அழித்து, ஆட்சியை மீண்டும் நாகர்களுக்கேக் கொடுப்பதாகக் கூறினார்.

இதைக் கேட்ட நாகர்களும் பெரிதும் மகிழ்ந்து தங்கள் ஸஹோதரியான நர்மதையை புருகுத்ஸனுக்கு மனைவியாக்கி, அவனை நாகலோகத்திற்கு அழைத்து வந்தனர். மஹாவிஷ்ணுவின் அனுக்ரஹத்தால் புருகுத்ஸனும் மௌனேயர்களை அழித்து, ஆட்சியை மீண்டும் நாகர்களுக்கு அளித்து விட்டுத் தன் நகரம் திரும்பினான். மிகவும் ஸந்தோஷப்பட்ட நாகர்கள் நன்றிக்கடனாக “நர்மதையின் பெயரைக் கூறுபவனையும், மனதில் நினைப்பவனையும் எந்த விஷமும் ஒன்றும் செய்யாது. விஷத்தையே உண்டாலும் அவனுக்கு அதனால் எந்த பாதிப்பும் இருக்காது. இரவிலும், பகலிலும் எங்கு சென்றாலும் அவனைப் பாம்புகள் கடிக்காது” என்ற வரத்தைக் கொடுத்தனர். புருகுத்ஸனுக்கும் ஸந்ததி விளங்க வரம் அளித்தனர்.

புருகுத்ஸனுக்கும், நர்மதைக்கும் த்ரஸதஸ்யு என்பவனும், அவனுக்கு அனரண்யனும், அவனுக்கு ப்ருஷதச்வனும், அவனுக்கு ஹர்யச்வனும், அவனுக்கு ஹஸ்தனும், அவனுக்கு வஸுமனஸ்ஸும், அவனுக்கு த்ரிதன்வாவும், அவனுக்கு த்ரைய்யாருணியும், அவனுக்கு ஸத்யவ்ரதனும் பிறந்தனர். இதில் அனரன்யனை ராவணன் திக் விஜயம் செய்த போது கொன்று விட்டான். இந்த ஸத்யவ்ரதனே பிறகு த்ரிசங்கு என்று பெயருடன் சண்டாளனானான். சங்கு என்றால் முளையுடன் கூடிய குச்சி. அடித்தால் அப்படி வலிக்கும். மணக்கோலத்தில் இருந்த ப்ராஹ்மணப் பெண்ணைக் கவர்ந்து, அவள் தந்தையிடம் “சண்டாளனாகப் போவாய்” என்ற சாபம் பெற்றது, வஸிஷ்டர் ஹோமத்திற்கு உதவிக் கொண்டிருந்த பசுவைக் கொன்றது, மாம்ஸத்தை ஒரு முறை ப்ரோக்ஷிக்காமலே உண்டது இப்படி மூன்று துக்கம் தரும் பாபங்களை செய்ததால் ஸத்யவ்ரதனுக்கு அவன் தந்தை த்ரையாருணி த்ரிசங்கு என்று பெயர் வைத்தான்.

இப்படி சண்டாளனான த்ரிசங்குவின் காலத்தில் பனிரெண்டு வருஷங்கள் மழை பொய்த்து விட்டது. பெரும் பஞ்சத்தில் மாம்ஸம் சாப்பிட்டுத்தான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். மாம்ஸமும் சண்டாளனிடமிருந்து தான் கிடைத்தது. சண்டாளனிடமிருந்து ஒன்றைப் பெறுவது மிகவும் பெரிய பாபம், குற்றம். அந்த நிலை மஹரிஷி விச்வாமித்ரருக்கும் வந்தது. மஹரிஷி இந்தச் செயலுக்குட்பட்டதைக் கண்ட த்ரிசங்கு மிகவும் மனமுடைந்து மஹரிஷிக்காகத் தானே வனத்தில் வேட்டையாடி தினமும் மாம்ஸங்களை கங்கைக் கரையில் ஒரு ஆலமரத்தில் கட்டி வைத்தான். இந்த உதவியால் தன் குடும்பத்துடன் பெரிதும் மகிழ்வுடன் வாழ்ந்த விச்வாமித்ரர் அவனை ஸ்வர்கத்திற்கு அனுப்பி வைத்தார்.

த்ரிசங்குவிற்கு ஹரிச்சந்த்ரனும், அவனுக்கு ரோஹிதாச்வனும், அவனுக்கு ஹரிதனும், அவனுக்கு சஞ்சுவும், அவனுக்கு விஜயன், வஸுதேவன் என்ற இருவரும் பிறந்தனர். விஜயனுக்கு ருருகனும், அவனுக்கு வ்ருகனும், அவனுக்கு பாஹுவும் பிறந்தனர். ஹைஹயர், தாளஜங்கர் முதலான பகைவர்களிடம் போரில் தோற்ற பாஹு கர்ப்பிணியாக இருந்த தன் ஒரு மனைவியுடன் காட்டிற்குள் சென்று விட்டான். அவனின் மற்றொரு மனைவி சக்களத்தியின் கர்ப்பம் அழிவதற்காக விஷத்தைக் கொடுத்து விடுகிறாள். கர்ப்பம் ஏழு வருடங்களாக இந்த விஷத்தால் பிறக்காமல் வயிற்றிலேயே இருந்தது. வயது முதிர்ந்த பாஹுவும் ஒரு ஸமயம் ஔர்வ மஹரிஷியின் ஆச்ரமத்தினருகில் மரணமடைந்து விடுகிறான்.

கணவன் சிதையிலேயே உடன்கட்டை ஏறத் துணிந்த அவனது கர்ப்பிணி மனைவியை ஔர்வர் தடுத்து நிறுத்தி “அம்மா, பிடிவாதம் செய்யாதே. உன் வயிற்றில் பெரும் பூமண்டலாதிபதியும், பராக்ரமசாலியும், யாகங்களைச் செய்பவனும், சத்ருக்களை அழிப்பவனுமான ஒருவன் இருக்கிறான். நீ இறந்தால் அவனும் இறப்பான். எனவே உன்னுடைய இந்த ஸாஹஸத்தை நிறுத்தி விடு” என்று கூறுகிறார். அவளைத் தன் ஆச்ரமத்திற்கே அழைத்துச் செல்கிறார். அங்கு விஷத்துடனேயே பிறக்கும் ஆண் குழந்தைக்கு ஔர்வ மஹரிஷியே சடங்குகளைச் செய்து “ஸகரன்” என்ற பெயரையும் வைத்து, தகுந்த பருவத்தில் உபனயனம் செய்வித்து, ஸகல வித்தைகளையும் கற்பிக்கிறார். ப்ருகு மஹரிஷியிடமிருந்து பெற்ற ஆக்னேயம் என்ற அஸ்த்ரத்தையும் உபதேஸிக்கிறார்.

தகுந்த ஸமயத்தில் தாயிடமிருந்து தன் ராஜ்யம், தந்தை, பகைவர்கள் என அனைத்து விஷயங்களையும் அறிந்து கொண்ட ஸகரன் பெரும் கோபம் கொண்டு, சபதம் பூண்டு ஹைஹயர், தாளஜங்கர் மேலும் அவர்களைச் சேர்ந்த சகர், யவனர், காம்போஜர், பாரதர், பப்லவர் என அனைவரையும் கொன்று குவிக்கிறான். அந்த வம்சங்களைச் சேர்ந்த மிஞ்சியவர்கள் ஸகரனின் குல குருவான வஸிஷ்டரைத் தஞ்சமடைகின்றனர். அவர்களிடம் கருணை கொண்ட அவரும் ஸகரனிடம் வந்து “குழந்தாய்! இவர்களைக் கொல்லாதே, தர்மங்களிலிருந்து விலகினாலே ஒருவன் இறந்தவனாகி விடுகிறான். எனவே உன் சபதத்தைக் காக்க நானே இவர்களை வைதீக தர்மங்களிலிருந்து விலக்குகிறேன். இனி இவர்கள் வெறும் உயிரை மட்டும் கொண்ட பிணங்களே (ஜீவத் ம்ருதர்கள்). இவர்களை நீ விட்டு விடு” என்று கூறுகிறார்.

ஆசார்யரின் வார்த்தைக்குப் பெரிதும் மதிப்பு கொடுத்து அதன்படியே அவர்களின் உயிரை மட்டும் விட்டு, வேஷங்களையும், ஆசாரங்களையும் பறித்து விடுகிறான். யவனர்களின் தலையை மொட்டையடித்து, பாரதர்களின் தலைமயிரைத் தொங்கவிட்டு, பப்லவர்களுக்குக் காரணமின்றி தாடி, மீசை வைத்து, இன்னும் சிலருக்கும் இப்படி எதையாவது செய்து அவர்களை கர்மாக்களைச் செய்வதற்கும் அதிகாரமின்றி வேதாத்யனனம் முதலியவைகளை அழித்து விட்டான். இவர்களே ம்லேச்சர்கள் என்று ஆனார்கள். ப்ராஹ்மணர்களாலும் கைவிடப்பட்டார்கள். ஸகரனும் ஏழு த்வீபங்களையும் எந்த தடைகளுமின்றி நன்கு ஆண்டு வந்தான்.

04_04. ஸகரனின் மனைவிகளாக சாச்யபரின் பெண் ஸுமதியும், விதர்ப்ப ராஜனின் பெண் கேசினீயும் அமைந்தனர். புத்ர பாக்யத்திற்காக இவ்விருவரும் ஔர்வரைப் பூஜித்தனர். அவர்களிடம் கருணை கொண்ட ஔர்வர் ஒருவருக்கு வம்ச வ்ருத்தி செய்யும் ஒருவனையும், மற்றொருவருக்கு அதற்கு உதவாத அறுபதினாயிரம் பிள்ளைகளையும் அனுக்ரஹிப்பதாக அருளினார். விதர்ப்பராஜனின் மகள் கேசினீ குலம் விளங்கும் ஒரு பிள்ளையையும், ஸுமதி அறுபதினாயிரம் பிள்ளைகளையும் இசைந்து பெற்றுக் கொண்டனர். கேசினீக்கு அஸமஞ்ஜஸனும், அவனுக்கு அம்சுமானும் பிறந்தனர்.

அஸமஞ்ஜஸனும், ஸுமதிக்குப் பிறந்த அறுபதினாயிரம் புதல்வர்களும் பிறந்ததிலிருந்தே தீய வழிகளில் சென்று கொண்டிருந்தனர். இளமைத் திமிர் அடங்கியதும் சரியாகிவிடுவார்கள் என்ற ஸகர மன்னனின் எண்ணம் பலிக்கவில்லை. யாகங்களையும், பல தர்ம கார்யங்களையும் அழித்துக் கொண்டிருந்தனர் அஸமஞ்ஜஸனும், அறுபதினாயிரம் பேரும். ஸகரன் வேறு வழியின்றி அஸமஞ்ஜஸனை நாடி கடத்தி விட்டான். அறுபதினாயிரம் பேர்களின் அட்டூழியங்களைப் பொறுக்காத தேவர்கள் மஹாவிஷ்ணுவின் அம்சமாய் அப்போது அவதரித்திருந்த கபில மஹரிஷியிடம் சென்று முறையிட்டனர். இவர்களின் துன்பங்களிலிருந்து உலகைக் காத்தருள வேண்டினர். அவரும் இன்னும் சில நாட்களிலேயே அவர்கள் அழிவார்கள் என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.

இந்த ஸமயத்தில் ஸகரன் அச்வமேதம் செய்ய ஆரம்பித்தான். யாகக் குதிரையைக் காக்கும் பொறுப்பைத் தன் அறுபதினாயிரம் புத்ரர்களிடம் விடுத்து யாகத்தை ஆரம்பித்தான். அவர்கள் பாதுகாப்புடன் உலகெங்கும் சுற்றிக் கொண்டிருந்த அந்தக் குதிரையை ஒருவன் ரஹஸியமாக பாதாள லோகத்திற்கு ஓட்டிச் சென்று விடுகிறான். பயமும், பெரும் கோபமும், பரபரப்பும் அடைந்த ஸகர புத்ரர்கள் குதிரையின் குளம்படியை அனுஸரித்து பாதாள லோகத்தை நோக்கி பூமியைத் தோண்டிக் கொண்டுச் சென்றனர். பாதாள லோகத்தையும் அடைந்தனர். அங்கே தவம் செய்து கொண்டிருந்த கபில மஹரிஷியையும், அவருக்கருகில் யாகக் குதிரையையும் கண்டனர். முனிவரையே குற்றவாளியாகத் தீர்மானித்து யாகத்தைக் கெடுத்த அவரைக் கொன்று விடுவதாக பெரும் கூச்சலுடன் அவரிடம் ஓடினர். தன் பார்வையாலேயே அறுபதினாயிரம் ஸகர புத்ரர்களையும் கொளுத்திச் சாம்பலாக்கி விட்டார் கபில மஹரிஷி.

பிள்ளைகளையும், யாகக் குதிரையையும் காணாத ஸகரன் தன் பேரனான அம்சுமானை அழைத்து அவர்களைத் தேடி அழைத்து வரச் சொன்னான். தந்தைமார்கள் தோண்டிய வழியே அவர்களைத் தேடிப் பாதாளத்தை அடைந்த அம்சுமான் அங்கு ப்ரகாசமாயிருக்கும் கபில மஹரிஷியைக் காண்கிறான். அவரைப் பலவாறு போற்றிப் புகழ்ந்து, நமஸ்கரிக்கிறான். இவனின் உபஸரிப்பால் பெரிதும் உவந்த மஹரிஷி “குழந்தாய்! யாகக் குதிரையை அழைத்துச் செல். தாத்தாவிடம் சேர்த்து விடு. உன் பௌத்ரன் பகீரதன் ஸ்வர்க லோகத்திலிருக்கும் கங்கையைப் பூலோகம் கொண்டு வரப் போகிறான். பெரும் பேறு பெற்ற நீயும் என்னிடம் வரத்தைப் பெற்றுக் கொள்” என்றார்.

மஹரிஷியின் வார்த்தைகளால் மகிழ்ந்த அம்சுமான் மஹரிஷியின் கோபத்தால் இறந்து போன தன் பித்ருக்களுக்கு ஸ்வர்கத்தை வேண்டுகிறான். “நான் முன்னமே கூறிய படி உன் பேரனால் பூலோகத்திற்கு வரும் கங்கையின் தீர்த்தம் இந்த சாம்பல் குவியலில் பட்டதும் இந்த ஆத்மாக்கள் ஸ்வர்கத்தை அடையும். இந்த கங்கை பகவானின் கால் கட்டை விரலிலிருந்து தோன்றியது. அளவிட முடியாத பெருமை பெற்றது. பாவங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் ஸ்னானம் செய்யாவிட்டாலும், இறந்தவனுடைய சரீரத்தைச் சேர்ந்த சாம்பல், எலும்பு, தோல், நரம்பு, மயிர் என ஏதாவதொன்று இதில் நனைந்தாலும் அவன் பதிதனாக இருந்தாலும் அவனுக்கு ஸ்வர்கத்தைத் தரும் புனித கங்கை.

அம்சுமான் கொண்டு வந்த குதிரையைக் கொண்டு யாகத்தையும் முடித்த ஸகரன், அவன் பிள்ளைகள் பாதாளம் செல்வதற்காகத் தோண்டிய குழியில் நீர் நிரம்பி உண்டான ஸமுத்ரத்தைத் தன் பிள்ளையாக எண்ணினான் (ஸாகரம்). அம்சுமானுக்குத் திலீபனும், அவனுக்குத் தான் பகீரதனும் பிறந்தனர். அவன் பலகாலம் கடும் தவம் புரிந்து ஆகாச கங்கையையும் பூமிக்குக் கொண்டு வந்தான். அதனால் கங்கையும் பாகீரதி எனப்பட்டாள். பகீரதனுக்கு ஸுஹோத்ரனும், அவனுக்கு நாபாகனும், அவனுக்கு அம்பரீஷனும், அவனுக்கு ஸிந்துத்வீபனும், அவனுக்கு அயுதாயுவும், அவனுக்கு ருதுபர்ணனும் பிறந்தனர். இந்த ருதுபர்ணனே நள மஹராஜன் புஷ்கரனிடம் சொக்கட்டான் ஆடி தன் போகங்களை இழந்து தவித்த போது, ஆட்டத்தின் மர்மங்களை அவனுக்குச் சொல்லிக் கொடுத்து மீண்டும் புஷ்கரனிடமிருந்து ராஜ்ய போகங்களைப் பெறுவதற்கு உதவியவன்.

ருதுபர்ணனுக்கு ஸர்வகாமனும், அவனுக்கு ஸுதாஸனும், அவனுக்கு மித்ரஸஹனும் (ஸௌதாஸன்) பிறந்தனர். இந்த ஸௌதாஸன் ஒரு முறை வேட்டைக்குச் சென்றிருந்த போது மற்ற அனைத்து விலங்குகளையும் துன்புறுத்திக் கொண்டிருந்த இரு புலிகளைக் கண்டான். ஒன்றை வேட்டையில் கொன்றான். அது இறக்கும் போது பயங்கரமான ராக்ஷஸ உருவத்துடன் இறந்தது. மற்றதும் “இதற்கு உன்னை தகுந்த ஸமயத்தில் பழி வாங்குவேன்” என்று கூறி மறைந்து விட்டது. ஸமயத்தை எதிர்பார்த்திருந்த அது ஒரு ஸமயம் ஸௌதாஸன் யாகம் செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் போது, குலகுரு வஸிஷ்டரின் உருவில் வந்து யாக முடிவில் நர மாம்ஸத்தைத் தனக்குத் தரவேண்டும் என்று கூறிவிட்டுச் சென்றது.

அதுவே சமையல்காரனாக உருவம் தாங்கி நர மாம்ஸத்தைப் பக்வம் செய்து அரசனிடம் பணிவுடன் கொடுத்தது. உண்மை அறியாத ஸௌதாஸனும் அதைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து குருவிற்குச் சமர்பித்தான். உண்மையான வஸிஷ்டர் அதைக் கண்டு மாம்ஸம், அதுவும் நர மாம்ஸம் என்று உணர்ந்து பெரும் கோபத்துடன், நீயே இதை விரும்பிச் சாப்பிடுபவனாக ஆகக்கடவது என்று அரசனை சபித்து விட்டார். குழப்பமும், பதட்டமும் அடைந்த மன்னன் அவரிடமே நடந்த விஷயங்களைக் கூறி “நீங்களே ஏற்பாடு செய்யச் சொல்லி விட்டு, இப்போது என்னை சபித்து விட்டீர்களே” என்று வருந்தினான்.

த்யானத்தால் விஷயங்களை முழுதும் தெரிந்து கொண்ட வஸிஷ்டரும் ராக்ஷஸன் செய்த தவறுக்கு ஒன்றும் அறியாத இவனை சபித்து விட்டோமே என்று வருந்தினார். மீண்டும் அவனிடமே இந்த சாபம் பனிரெண்டு வருஷங்கள் உன்னிடம் இருந்து பின் விலகும் என்று அருளினார். தவறே செய்யாமல் நாம் ஏன் பனிரெண்டு வருஷங்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆராயாமல் சபித்த குருவை நாமும் சபித்தால் என்ன என்று கோபத்துடன் சபிப்பதற்காக ஜலத்தையும் எடுத்து ஜபித்தான். மனைவி மதயந்தீ கணவனின் எண்ணத்தை அறிந்து கொண்டாள். பூஜிக்கத்தக்க குலகுருவைச் சபிப்பதிலிருந்து தன் கணவனைத் தடுத்து, அவன் செய்ய நினைப்பது தகாத செயல். பாபச்செயல் என்று அறிவுரை கூறினாள்.

அவளின் உபதேஸத்தால் தான் செய்ய இருந்த தவறை உணர்ந்த ஸௌதாஸன் ஜபித்த நீரை எங்கு விட்டாலும் அங்குள்ள வளமை அழியும் என்று தன் காலிலேயே விட்டுக் கொண்டான். மந்த்ரதீர்த்தம் பட்ட அவனது கால் உடனே வெளுப்பும், கறுப்பும் கலந்த ஒரு விசித்ர வர்ணத்தில் (கல்மாஷம்) மாறிவிட்டது. இதனால் அன்றிலிருந்து அவன் கல்மாஷபாதன் என்று அழைக்கப்பட்டான். ராக்ஷஸனாக மாறிய கல்மாஷபாதன் (என்ற ஸௌதாஸன் என்ற மித்ரஸஹன்) காடுகளில் அலைந்து திரிந்து மனிதர்களைப் பிடித்துத் தின்று கொண்டிருந்தான். இப்படி ஒரு ஸமயம் காட்டில் தன் பத்னியுடன் சேர்ந்திருந்த ஒரு முனிவரைப் பிடித்துக் கொண்டான். முனிபத்னி அவனிடம் பலவாறு கெஞ்சினாள்.

அவனது பூர்வங்களையும், சிறப்புகளையும் எடுத்துக் கூறினாள். இக்ஷ்வாஹு குல திலகமான மித்ரஸஹனல்லவா நீ. உனக்குத் தெரியாத தர்மங்கள் உண்டோ. ஸ்த்ரீ தர்மத்திலிருக்கும் நான் ஸுகத்தை அனுபவிக்காமலிருக்கும் போது என் பர்த்தாவைக் கொல்வது பாபமல்லவா. எனவே அவரை விட்டுவிடு எனப் பலவாறு கெஞ்சினாள். புலிக்கு தர்மோபதேசம் செய்தால் அதற்குப் புரியவா போகிறது. முனிவரை அடித்துக் கொன்றான். சாப்பிட்டான். சொல்வதைக் கேட்காத, புரிந்து கொள்ளாத அவனிடம் கடுங்கோபம் கொண்ட முனிபத்னி நீயும் இதேபோல் காம ஸுகத்திற்கு முயலும் போது இறந்து படுவாய் என்று சபித்து விடுகிறாள். இரண்டாவது சாபம். பனிரெண்டு வருடங்கள் கழித்தும், இந்த முனிபத்னியின் சாபத்தை நினைவில் கொண்டு அவனும் பலகாலம் இல்லற சுகம் இல்லாமலேயே கவனமாக இருந்தான்.

ஸந்ததியே இல்லாமல் தன்னுடன் வம்சம் முடிவதால் வருந்திய கல்மாஷபாதனும், மனைவி மதயந்தீயும் புத்ர ப்ராப்திக்காக வஸிஷ்டரை வேண்டிக்கொண்டனர். அவருடைய அனுக்ரஹத்தால் மதயந்தீ கர்ப்பவதி ஆனாள். ஆனால் ஏழு வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. பொறுமையிழந்த அரசி கல்லினால் வயிற்றில் இடித்துக் கொண்டாள். ஆண்குழந்தை ஒன்று அப்போது பிறந்தது. அச்மகன் (அச்மா=கல்) என்று பெயர் வைத்தனர் இந்தக் குழந்தைக்கு. இவனுக்கு மூலகன் என்பவன் பிறந்தான். இவன் காலத்தில் தான் க்ஷத்ரியர்களைப் பூண்டோடு அழித்துக் கொண்டிருந்தார் பரசுராமர். இவனையும் கொல்ல வந்தபோது பல பெண்கள் ஆடையின்றி இவனை சூழ்ந்து மறைத்துக் கொண்டனர். இதனால் இவன் உயிர் தப்பினான். பெண்கள் இவனுக்குக் கவசமாய் இருந்து இவனுக்கு நாரீகவசன் என்ற பெயர் உண்டாயிற்று.

இந்த மூலகன் என்ற நாரீகவசனுக்கு தசரதனும், அவனுக்கு இலிபிலி என்பவனும், அவனுக்கு விச்வஸஹனும், அவனுக்கு கட்வாங்கனும் பிறந்தனர். கட்வாங்கன் தேவர்களுக்குத் துணையாயிருந்து அஸுரர்களை வெல்ல உதவினான். அதற்கு ப்ரதிபலனாக அவனை ஸ்வர்கத்திற்கு அழைத்துச் சென்று பல போகங்களை அவன் அனுபவிக்கச் செய்து, அதன் பின் வேண்டிய வரத்தைப் பெறுமாறு கூறுகின்றனர். புத்திசாலியான கட்வாங்கன் முதலில் தனது மீதமிருக்கும் ஆயுசைக் கூறுமாறும், அதற்குத் தக்கவாறு வரங்களைக் கேட்பதாகவும் கூறுகிறான். வேறு வழியின்றி தேவர்களும் அவனது ஆயுசைக் கணக்கிட்டு “இன்னும் ஒரு முஹூர்த்தமே உள்ளது உன் ஆயுள்” என்ற செய்தியைக் கூறுகின்றனர். (ஒரு முஹூர்த்தத்துல என்னத்த அனுபவிக்கறது, அவன் புத்திசாலிதான்) இதைக் கேட்டவுடன் விமானம் மூலம் உடனேயே பூலோகம் வந்து சேர்ந்தான் கட்வாங்கன்.

“ப்ராஹ்மணர்களுடன் இருப்பதை விட பெரிதொன்றுமில்லை. நான் ஒரு பொழுதும் ஸ்வதர்மங்க