திவ்ய தேசங்களில் வர்த்திக்கும் திர்யக்குகள் தான் திரு நாமங்களைச் சொல்ல வற்றாய் இறே இருப்பது –
ஆகையால் –
சகு நா நூதித ப்ர்ஹ்ம கோஷம் -என்றும்
பூ மருவி புள்ளினங்கள் புள்ளரையன் புகழ் குளறும் புனல் அரங்கமே -பெரிய ஆழ்வார் திரு மொழி 4-9-5–என்றும்
அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி சிறுகாலைப் பாடும் -பெரிய ஆழ்வார் திரு மொழி-4-2-8-என்றும்
எல்லியம் போது இரு சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி -பெரிய ஆழ்வார் திரு மொழி -4-8-8-என்றும்
அல்லியம் பொழில் வாயிருந்து வாழ் குயில்கள் அரியரி என்று அவை அழைப்ப -என்றும்
செவ்வாய்க் கிளி நான் மறை பாடும் -என்றும் –
காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான் ஆலினிலைப் பெருமான்
அவன் வார்த்தை வுரைக்கின்றவே-நாச்சியார் திரு மொழி –9-8-என்றும்
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்
நாட்டில் தலைப் பழி எய்தி உங்கள் நன்மை இழந்து தலையிடாதே
சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்–12-9-என்றும் சொல்லுகையாலே
————–
சிறு விரல்கள் தடவி பரிமாற செம்கண் கோட செய்ய வாய் கொப்பளிக்க
குறு வெயர்ப்புருவம் கூடலிப்ப கோவிந்தன் குழல் கொடூதின போது
பறைவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப
கறைவையின் கணங்கள் கால் பரப்பி இட்டுக் கவிழ்ந்து இறங்கி செவி ஆட்டகில்லாவே -3 6-8 – –
திரண்டு எழு தழை முகில் வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தால் ஊதுகின்ற குழலோசை வழியே
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடை வாய் வழி சோர
இரண்டு பாடும் துலுங்கா புடை பெயரா வெழுது சித்திரங்கள் போலே நின்றனவே -3-6 9- –
கரும் கண் தோகை மயில் பீலி அணிந்து கட்டி நன்கு உடுத்த பீதகவாடை
அரும் கல வுருவின் ஆயர்பெருமான் அவன் ஒருவன் குழலூதின போது
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும்
இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி யவை செய்யும் குணமே -3 6-10 –
குறுகாத மன்னரை கூடு கலக்கி வெம் கானிடை
சிறு கால் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை
அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி
சிறுகாலை பாடும் தென் திரு மால் இரும் சோலையே – 4-2 8-
பெருவரங்கள் அவை பற்றி பிழக்கு உடை இராவணனை
உருவரங்க பொருது அழித்து இவ்வுலகினை கண் பெறுத்தானூர்
குருவு அரும்ப கொங்கு அலற குயில் கூவும் குளிர் பொழில் சூழ்
திருவரங்கம் என்பதுவே என் திரு மால் சேர்விடமே – 4-8 5- –
கீழ் உலகில் அசுரர்களை கிழங்கு இருந்து கிளராமே
ஆழி விடுத்தவருடைய கருவழித்த வழிப்பனூர்
தாழை மடலூடு உரிஞ்சித் தவள வண்ண பொடி அணிந்து
யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே – 4-8 6-
வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய்
எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம்போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம் என்பதுவே – 4-8 8-
———————–
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்––திருப்பாவை-6-
கீசுகீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்த்து
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய்-7-
புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந்தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்–13-
—————
மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி வண்ணன் மணி முடி மைந்தன்
தன்னை உகந்தது காரணமாக என் சங்கு இழக்கும் வழக்குண்டே
புன்னை குருக்கத்தி நாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவளவாயன் வரக் கூவாய்––நாச்சியார் திரு மொழி–5-1-
வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் எனக்கு உருக் காட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ள விழ் செண்பகப் பூ மலர்க் கோதிக் களித்து இசை பாடும் குயிலே
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்–5-2-
மாதலி தேர் முன்பு கோல் கொள்ள மாயன் இராவணன் மேல் சரமாரி
தாய் தலை யற்று யற்று வீழத் தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன்
போதலர் காவில் புதுமணம் நாறப் பொறி வண்டின் காமரம் கேட்டு உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே என் கரு மாணிக்கம் வரக் கூவாய் —5-3-
என்புருகி இனவேல் நெடும் கண்கள் இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்
அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயுமறிதி குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடி யுடைப் புண்ணியனை வரக் கூவாய்–5-4-
மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா
இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை
உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய்–5-5-
எத்திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய
முத்தன்ன வெண் முறுவல் செய்ய வாயும் முலையும் அழகு அழிந்தேன் நான்
கொத்தலர் காவில் மணித் தடம் கண் படை கொள்ளும் இளங்குயிலே
என் தத்துவனை வரக் கூகிற்றி யாகிற்றிலை யல்லால் கைம்மாறு இலேனே –5-6-
பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து ஆவியை ஆகுலம் செய்யும்
அங்குயிலே உனக்கு என்ன மறைந்து உறவு ஆழியும் சங்கும் ஒண் தண்டும்
தங்கிய கையவனை வரக் கூவில் நீ சாலத் தருமம் பெறுதி–5-7-
சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்தமுடையன்
நாங்கள் எம்மில் இருந்தொட்டிய கச் சங்கம் நானும் அவனும் அறிதும்
தேன்கனி மாம் பொழில் செந்தளிர் கோதும் சிறு குயிலே திருமாலை
ஆங்கு விரைந்து ஒல்லைக் கூகிற்று யாகில் அவனை நான் செய்வன காணே–5-8-
பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பதோர் பாசத்தகப் பட்டிருந்தேன்
பொங்கொளி வண்டிரைக்கும் பொழில் வாழ் குயிலே குறிக் கொண்டிது நீ கேள்
சங்கோடு சக்கரத்தான் வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருத்தில் இரண்டைத் தொன்றேல் திண்ணம் வேண்டும்–5-9-
அன்று உலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய
தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன்
என்றும் இக்காவில் இருந்து இருந்து என்னைத் ததைத்தாதே நீயும் குயிலே
இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்–—-5-10-
விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி
கண்ணுற வென் கடல் வண்ணனைக் கூவு கரும் குயிலே என்ற மாற்றம்
பண்ணு நான் மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை சொன்ன
நண்ணுற வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே–——————5-11-
விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள்
தெண்ணீர் பாய் வேங்கடத்து என் திரு மாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்வேனை
பெண்ணீர்மை ஈடழிக்குமிது தமக்கோர் பெருமையே –8-1-
மா முத்த நிதி சொரியும் மா முகில்காள் வேங்கடத்துச்
சாமத்தின் நிறம் கொண்ட தாளாளன் வார்த்தை என்னே
காமத் தீயுள் புகுந்து கதுவப் பட்டிடைக் கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே—8-2-
ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் விட்டு என்னை ஈடு அழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே—-8-3-
மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத்
தன்னாகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு
என்னகத் திளம் கொங்கை விரும்பித் தாம் நாடோறும்
பொன்னகம் புல்குதற்கு என்புரிவுடைமை செப்புமினே –8-4-
வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மா முகில்காள் வேங்கடத்துத்
தேன் கொண்ட மலர் சிதறத் திரண்டு ஏறப் பொழிவீர் காள்
ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்
தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்றுமினே–8-5-
சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள் மாவலியை
நிலம் கொண்டான் வேங்கடத்தே நிரந்து ஏறிப் பொழிவீர் காள்
உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை
நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே–8-6-
சங்க மா கடல் கடைந்தான் தண் முகில்காள் வேங்கடத்துச்
செங்கண் மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள்
தங்கு மேல் என்னாவி தங்கும் என்றும் உரையீரே–8-7-
கார் காலத்து எழுகின்ற கார் முகில் காள் வேங்கடத்துப்
போர் காலத்து எழுந்து அருளிப் பொருதவனார் பேர் சொல்லி
நீர் காலத் தெருக்கில் அம்பழ விலை போல் வீழ்வேனை
வார் காலத்தொரு நாள் தம் வாசகம் தந்து அருளாரே –8-8-
மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே–8-9-
நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்து உரை செய்
மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்துரைப்பார் அவர் அடியார் ஆகுவரே–8-10-
சிந்துரச் செம்பொடிப் போல் திரு மால் இருஞ்சோலை எங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால்
மந்திரம் நாட்டி யன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையில் நின்றுய்தும் கொலோ–9-1-
போர்க் களிறு பொரும் மாலிரும் சோலை யம்பூம் புறவில்
தார்க் கொடி முல்லைகளும் தவள நகை காட்டுகின்ற
கார்க்கொள் படாக்கள் நின்று கழறிச் சிரிக்கத் தரியேன்
ஆர்க்கிடுகோ தோழீ அவன் தார் செய்த பூசலையே–9-2
கருவிளை யொண் மலர்காள் காயா மலர்காள் திருமால்
உரு வொளி காட்டுகின்றீர் யெனக்குய் வழக்கொன்று உரையீர்
திரு விளையாடு திண் தோள் திருமால் இரும் சோலை நம்பி
வரி வளையில் புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே –9-3-
பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கரு விளைகாள்
வம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறும் மலர்காள்
ஐம் பெரும் பாதகர்காள் அணி மால் இரும் சோலை நின்ற
எம்பெருமான் உடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே —9-4-
துங்க மலர்ப் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை நின்ற
செங்கட் கருமுகிலின் திருவுருப் போல் மலர் மேல்
தொங்கிய வண்டினங்காள் தொகு பூஞ்சுனைகாள் சுனையில்
தங்கு செந்தாமரைகாள் எனக்கோர் சரண் சாற்றுமினே–9-5-
காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே –9-8-
பாடும் குயில்காள் ஈதென்ன பாடல் நல்வேங்கட
நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்
ஆடும் கருளக் கொடி யுடையார் வந்து அருள் செய்து
கூடுவர் ஆயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே –10-5-
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்
நாட்டில் தலைப் பழி எய்தி உங்கள் நன்மை இழந்து தலையிடாதே
சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்–12-9-
———————–
ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன்
ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லாமல்
கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே ––பெருமாள் திருமொழி–4-1-
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
வானாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட சுனையில்
மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே— 4-2-
ஒண் பவள வேலை வுலவு தண் பாற் கடலுள்
கண் துயிலும் மாயோன் கழல் இணைகள் காண்பதற்கு
பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேம்கடத்து
செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே –4-4-
கம்ப மத யானை கழுத்தகத்தின் மேல் இருந்து
இன்ப மரும் செல்வமும் இவ் அரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேம்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவம் உடையன் ஆவேனே –4-5-
மின் அனைய நுண்ணி இடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர் தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன்
தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற் குவடாம் அரும் தவததேன் ஆவேனே –4-6-
வான் ஆளும் மா மதி போல் வெண் குடை கீழ் மன்னவர் தம்
கோனாகி வீற்று இருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட மலை மேல்
கானாறாய் பாயும் கருத்துடையன் ஆவேனே– 4-7-
பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்
முறையாய பெரு வேள்வி குறை முடிப்பான் மறை யானான்
வெறியார் தண்சோலை திருவேங்கட மலை மேல்
நெறியாய் கிடக்கும் நிலை வுடையேன் ஆவேனே– 4-8-
செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேன –4-9-
உம்பர் உலகாண்டு ஒரு குடை கீழ் உருப்பசி தன்
அம் பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம் பவள வாயான் திரு வேம்கடம் என்னும்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –4-10–
மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவ கோட்டு அம்மா ! என்
பால் நோக்காய் ஆகிலும் உன் பற்று அல்லால் பற்றி இலேன்
தான் நோக்காது எத் துயரம் செய்திடினும் தார் வேந்தன்
கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே— 5-3-
————————-
நாகம் ஏந்து மேரு வெற்பை நாகம் ஏந்து மண்ணினை
நாகம் ஏந்து மாகம் மாகம் ஏந்து வார் புனல்
மாகம் ஏந்து மங்குல் தீ ஓர் வாயு ஐந்து அமைந்து காத்து
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை நின் கணேயியன்றதே -திருச்சந்த விருத்தம்–6-
குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய்
அரக்கர் அரங்க வெஞ்சரம் துரந்த வாதி நீ
இரக்க மண் கொடுத்து அவற்கு இரக்கம் ஒன்றும் இன்றியே
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்ப நாபன் அல்லையே –32-
———————
வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே–திருமாலை–14-
குரங்குகள் மலையை நூக்கக் குளித்து தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடிக்கல் உற்ற சலமிலா வணிலம் போலேன்
மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே ––27-
ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம் தன்னுள்
கார்த்திரள் அனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்
மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே–32-
——————————————————
பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவணைப் பள்ளிகொள் பரமா வென்று
இணங்கி வானவர் மணி முடி பணி தர இருந்த நல் இமயத்து
மணம் கொள் மாதவி நெடும் கொடி விசும்புற நிமிர்ந்தவை முகில் பற்ற
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டிசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-6-
ஊரான் குடந்தை யுத்தமன் ஒரு கால் இரு கால் சிலை வளைய
தேரா வரக்கர் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வரு புனல் சூழ்
பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டறைகின்ற
தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-4-
அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய் அவுணன்
பொங்காவாகம் வள்ளு கிரால் போழ்ந்த புனிதன் இடம்
பைம் கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ்
செங்கணாளி யிட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றமே–1-7-1-
செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே-1-7-10-
உறவு சுற்றம் என்று ஓன்று இலா ஒருவன் உகந்தவர் தம்மை
மண் மிசைப் பிறவியே கெடுப்பான் அது கண்டு என்நெஞ்சம் என்பாய்
குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து
அறவனாயாக்ற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-2-
இண்டை யாயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும் வானிடைக்
கொண்டு போயிடவும் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்
வண்டு வாழ் வட வேங்கடமலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை
அண்டம் ஆண்டு இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-3-
துவரி யாடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் நந்தி யுண்டு பின்னரும்
தமரும் தாங்களுமே தடிக்க என்னெஞ்சம் என்பாய்
கவரி மாக் கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட கண்ணார் விசும்பிடை
அமர நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-6-
தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை
நெருக்குவாரலக்கண் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்
மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டதனோடும் வானிடை
அருக்கன் மேவி நிற்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-7-
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை
வண்டு பாடும் பைம் புறவில் மங்கையர் கோன் கலியன்
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈரைந்தும் வல்லார்
அண்டமாள்வதாணை அன்றேலாள் வர மருலகே—2-2-10-
தாங்கரும் போர் மாலி படப்பறவை யூர்ந்து தாரலத்தோர் குறை முடித்த தன்மையானை
ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர்கட்கு ஆரமுதமானான் தன்னை
கோங்கரும் புசுர புன்னை குரவர் சோலைக் குழா வரி வண்டு இசைபாடும் பாடல் கேட்டு
தீங்கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-4-
நெய் வாயழ்லம்பு துரந்து முந்நீர் துணியப் பணி கொண்டு அணி யார்ந்து இலங்கு
மையார் மணி வண்ணன் எண்ணி நுந்தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர்
அவ்வாய் இள மங்கையர் பேசவும் தான் அருமா மறை யந்தணர் சிந்தை புக
செவ்வாய்க் கிளி நான் மறை பாடு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-6-
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து பிரமனை தன் உந்தியிலே தோற்றுவித்து
கறை தங்கு வேல் தடம் கண் திருவை மார்பில் கலந்தவன் தாள் அணைகிற்பீர் கழி நீர் கூடி
துறை தங்கு கமலத்துயின்று கைதைத் தோடாரும் பொதி சோற்றுச் சுண்ணம் நண்ணிச்
சிறை வண்டு களி பாடும் வயல் சூழ் காசிச் சீராம விண்ணகரம் சேர்மின் நீரே——3-4-9-
தூவிரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே
பூவிரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே
தீ விரிய மறை வளர்க்கும் புகழாளர் திருவாலி
ஏவரி வெஞ்சிலை யானுக்கு என் நிலைமை உரையாயே–3-6-1-
பிணியவிழும் நறு நீல மலர்கிழியப் பெடையொடும்
அணி மலர் மேல் மது நுகரும் அறுகால சிறு வண்டே
மணி கெழு நீர் மருங்கலரும் வயலாலி மணவாளன்
பணி யறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே–3-6-2-
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நெடுமால் தன்
தாராய நறும் துளவம் பெருந்தகையேற்கு அருளானே
சீராரும் வளர் பொழில் சூழ் திருவாலி வயல் சூழும்
கூர்வாய சிறு குருகே குறிப்பறிந்து கூறாயே–3-6-3-
தானாக நினையானேல் தன் நினைந்து நைவேற்கு ஓர்
மீனாய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ
தேன் வாய வரி வண்டே திருவாலி நகராளும்
ஆனாயற்கு என்னுறு நோய் அறியச் சென்று உரையாயே–3-6-4-
முற்றிலும் பைங்கிளியும் பந்தும் ஊசலும் பேசுகின்ற
சிற்றில் மென் பூவையும் விட்டகன்ற செழும் கோதை தன்னைப்
பெற்றிலேன் முற்றிழையை பிறப்பிலி பின்னே நடந்து
மற்றெல்லாம் கை தொழப் போய் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-8-
துளையார் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா
இளையார் விளையாட்டோடு காதல் வெள்ளம் விளைவித்த அம்மானிடம் வேல் நெடுங்கண்
முளை வாள் எயிற்று மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல்
வளைவாய கிள்ளை மறைபாடு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-8-
அண்டமும் இவ் வலை கடலும் அவனிகளும் எல்லாம்
அமுது செய்த திரு வயிற்றன் அரன் கொண்டு திரியும்
முண்ட மது நிறைத்து அவன் கண் சாபமது நீக்கும்
முதல்வனவன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
எண் திசையும் பெரும் செந்நெல் இளம் தெங்கு கதலி
இலைக் கொடி ஒண் குலைக் கமுகோடு இசலி வளம் சொரிய
வண்டு பல இசை பாட மயில் ஆலு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-3-
கன்றதனால் விளவெறிந்து கனி யுதிர்த்த காளை
காமரு சீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான்
குன்றதனால் மழை தடுத்துக் குடமாடு கூத்தன்
குலவும் இடம் கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள்
துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர்
தொக்கு ஈண்டித் தொழுதி யொடு மிகப் பயிலும் சோலை
அன்று அலர் வாய் மது வுண்டு அங்கு அளி முரலும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-8-
போதலர்ந்த பொழில் சோலைப் புறம் எங்கும் பொரு திரைகள்
தாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென் கரை மேல்
மாதவன் தான் உறையுமிடம் வயல் நாங்கை வரி வண்டு
தேதென என்று இசை பாடும் திருத் தேவனார் தொகையே–4-1-1-
அண்டரானவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறது எல்லாம்
உண்டு கோனிரை மேய்த்தவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில்
கொண்டலார் முழவில் குளிர் வார் பொழில் குல மயில் நடமாட
வண்டு தான் இசை பாடிடு நாங்கூர் வண் புருடோத்தமமே–4-2-3-
பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து பாரதம் கை எறிந்து ஒரு கால்
தேரினை யூர்ந்து தேரினைத் துரந்த செங்கண் மால் சென்றுறை கோயில்
ஏர் நிறை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணிச்
சீர்மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி யதுவே —4-10-5-
ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த மாவலி வேள்வியில் புக்குத்
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில்
அள்ளியம் பொழில் வாய் இருந்து வாழ் குயில்கள் அரி அரி என்று அவை அழைப்ப
வெள்ளியார் வணங்க விரைந்து அருள் செய்வான் திருவெள்ளியங்குடி யதுவே–4-10-7-
அறிவது அரியான் அனைத்து உலகும் உடையான் என்னை யாளுடையான்
குறிய மாண் உருவாகிய கூத்தன் மன்னி யமரும் இடம்
நறிய மலர் மேல் சுரும்பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாடப்
பொறி கொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-1-
மின்னின் அன்ன நுண் மருங்குல் வேயேய் தடந்தோள் மெல்லியற்காய்
மன்னு சினத்த மழம் விடைகள் ஏழு அன்று அடர்த்த மாலதிடம்
மன்னு முதுநீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
புன்னை பொன்னேய் தாது உதிர்க்கும் புள்ளம் பூதங்குடி தானே —5-1-6-
செறும் திண் திமில் ஏறு உடைய பின்னை
பெறும் தண் கோலம் பெற்றாரூர் போல்
நறும் தண் தீன் தேனுண்ட வண்டு
குறிஞ்சி பாடும் கூடலூரே—-5-2-2-
முன் இவ் யெழ் உலகு உணர்வு இன்றி இருள் மிகு யும்பர்கள் தொழுது ஏத்த
அன்னமாகி அன்று அருமறை பயந்தவனே எனக்கு அருள் புரியே
மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடை சுரும்பு இனங்கள்
தென்ன வென்று வண்டு இன்னிசை முரல் திரு வெள்ளறை நின்றானே –5-3-8-
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் முழுதினையும்
பாங்கினில் கொண்ட பரம நின் பணிந்து எழுவன் எனக்கு அருள் புரியே
ஓங்கு பிண்டியின் செம்மலர் ஏறி வண்டுழி தர மா வேறித்
தீங்குயில் மிழற்றும் படைப்பைத் திரு வெள்ளறை நின்றானே—5-3-9-
உய்யும் வகை யுண்டு சொன செய்யில் உலகு ஏழும் ஒழியாமை முன நாள்
மெய்யின் அளவே யமுது செய்ய வல ஐயன் வான் மேவு நகர் தான்
மைய வரி வண்டு மதுவுண்டு கிளையோடு மலர் கிண்டி யதன் மேல்
நைவளம் நவிற்று பொழில் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே —5-10-2-
முனையார் சீயமாகி யவுணன் முரண் மார்வம்
புனை வாள் உகிரால் போழ்பட வீர்ந்த புனிதனூர்
சினையார் தேமாம் செந்தளிர் கோதிக் குயில் கூவும்
நனையார் சோலை சூழ்ந்து அழகாய நறையூரே –6-5-2-
உண்ணாது வெங்கூற்றம் ஓவாத பாவங்கள் சேரா மேலை
விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடியினானைப்
பண்ணாரா வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை யம்மான் தன்னைக்
கண்ணாரக் கண்டு உருகி கையார தொழுவாரைக் கருதும் காலே -7-4-8-
என் ஐம் புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்து அருளிப்
பொன்னங்கலைகள் மெலிவெய்தப் போன புனிதரூர் போலும்
மன்னு முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
அன்னம் பெடையோடு உடனாடும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே –7-5-9-
காலையும் மாலை யொத்துண்டு கங்குல் நாழிகை யூழியின் நீண்டுலாவும்
போல்வதோர் தன்மை புகுந்து நிற்கும் பொங்கழலே யொக்கும் வாடை சொல்லில்
மாலவன் மா மணி வண்ணன் மாயம் மற்றுளவை வந்திடா முன்
கோல மயில் பயிலும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின் —9-5-3-
நின்ற வினையும் துயரும் கெட மா மலரேந்திச்
சென்று பணிமின் எழுமின் தொழுமின் தொண்டீர்காள்
என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாடக்
குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே —9-6-9-
கரையாய் காக்கைப் பிள்ளாய்
கருமா முகில் போல் நிறத்தன்
உரையார் தொல் புகழ் உத்தமனை வரக்
கரையாய் காக்கைப் பிள்ளாய் –10-10-2-
கூவாய் பூங்குயிலே
குளிர்மாரி தடுத்துகந்த
மாவாய் கீண்ட மணி வண்ணனை வரக்
கூவாய் பூங்குயிலே —10-10-3-
கொட்டாய் பல்லிக் குட்டி
குடமாடி உலகளந்த
மட்டார் பூங்குழல் மாதவனை வரக்
கொட்டாய் பல்லிக் குட்டி—10-10-4-
சொல்லாய் பைங்கிளியே
சுடராழி வலனுயர்த்த
மல்லார் தோள் வட வேங்கடவனை வரச்
சொல்லாய் பைங்கிளியே –10-10-5-
கோழி கூவென்னுமால்
தோழி நான் என் செய்கேன்
ஆழி வண்ணர் வரும் பொழுதாயிற்றுக்
கோழி கூவென்னுமால் –10-10-6-
தேனோடு வண்டாலும் திருமால் இருஞ்சோலை
தானிடமாக்கிக் கொண்டான் தட மலர்க் கண்ணிக்காய்
ஆன் விடை ஏழ் அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாத
மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே –11-7-9-
——
காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி நாளும்
பாவியேனாக எண்ணி அதனுள்ளே பழுத்து ஒழிந்தேன்
தூவி சேர் அன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை
பாவியேன் பாவியாது பாவியேன் ஆயினேனே –திருக் குறும் தாண்டகம் –14-
————
முளைக் கதிரைக் குறும் குடியுள் முகிலை
மூவா மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆராமுதை யரங்கமேய யந்தணனை
யந்தணர் தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தைத் திருத் தண் காவில்
வெக்காவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று
மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே –திரு நெடும் தாண்டகம்–14-
தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத்
தேனதனை வாய் மடுத்து உன் பெடையும் நீயும்
பூ மருவி யினிதமர்ந்து பொறியிலார்ந்த
அறுகால சிறுவண்டே தொழுதேன் உன்னை
ஆ மருவி நிரை மேய்த்த யமரர் கோமான்
அணியழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று
நீ மருவி அஞ்சாதே நின்றோர் மாது
நின்னயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே -26-
செங்கால மட நாராய் இன்றே சென்று
திருக் கண்ணபுரம் புக்கு என் செங்கண் மாலுக்கு
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தி யாகில்
இது வொப்பது எமக்கு இன்பம் இல்லை நாளும்
பைம் கானம் ஈதெல்லாம் உனதே யாகப்
பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவன் தந்தால்
இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும்
இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே–27-
———————————————————
ஊரும் வரியரவ மொண் குறவர் மால் யானை
பேர வெறிந்த பெரு மணியை காருடைய
மின்னென்று புற்றடையும் வேங்கடமே மேலசுரர்
எம்மென்னு மால திடம் ——முதல் திருவந்தாதி–38-
பெருவில் பகழிக் குறவர் கைச் செந்தீ
வெருவிப் புனந்துறந்த வேழம் இரு விசும்பில்
மீன் வீழக் கண்டஞ்சும் வேங்கடமே மேலசுரர்
கோன் வீழக் கண்டுகந்தான் குன்று —–40—
இடரார் படுவார் எழு நெஞ்சே வேழம்
தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த படமுடைய
பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும்
கொய்ந்நாகப் பூம் போது கொண்டு —–78-
————————
தொடரெடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி
படரெடுத்த பைங்கமலம் கொண்டு -அன்று இடர் அடுக்க
ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன்
பாழி தான் எய்திற்றுப பண்டு—–இரண்டாம் திருவந்தாதி–13-
போதறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது உள்ளம் -போது
மணி வேங்கடவன் மலரடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேராய்ந்து-72-
ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் -ஏய்ந்த
பிறை கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்
இறைக்கு ஆட்பட துணிந்த யான் –73-
பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை-75-
———————-
வந்துதித்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்காம் மணி விளக்காம் -எந்தை
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திருவல்லிக் கேணியான் சென்று -மூன்றாம் திருவந்தாதி —-16–
விரும்பி விண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்புதுளையில் சென்றூத -அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங்கழற்கே
மனந்துழாய் மாலாய் வரும் —23-
புரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை ——–45-
தெளிந்த சிலா தலத்தின் மேலிருந்த மந்தி
அளிந்த கடுவனையே நோக்கி -விளங்கிய
வெண் மதியம் தா வென்னும் வேங்கடமே மேலோருநாள்
மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு ——-58-
குன்று ஒன்றினாய குற மகளிர் கோல்வளைக்கை
சென்று விளையாடும் திங்கழை போய் -வென்று
விளங்குமதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளங்குமரர் கோமான் இடம் —–72-
—————–
வைப்பன் மணி விளக்காம் மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை -எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்தாடுது மேல் நன்று -நான்முகன் திருவந்தாதி –46-
நன் மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் -பன் மணி நீர்
ஓடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடுமுடை வேங்கடம் -47-
—————-
மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர் நுமது
வாயோ அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ ஆடும் தொண்டையோ அறையோ விதறிவரிதே—–திரு விருத்தம் -10-
அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர்
இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே –30-
மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி யொக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருந்துத்தவ மா மருள் பெற்றதே –32-
வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது நெய் தொடு வுண்
டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்
மாசின் மலரடிக் கீழ் எம்மை சேர்விக்கும் வண்டுகளே -54 –
வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–55-
—————————————————————–
அஞ்சிறைய மடநாராய்! அளியத்தாய்! நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் ஆ ஆ என்று எனக்கு அருளி
வெஞ் சிறைப் புள் உயர்த்தாற்கு என் விடு தூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செயுமோ––திருவாய் மொழி –1-4-1-
என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக் குயில்காள்! நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ்க் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே?–1-4-2-
விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்!
மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ என்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே–1-4-3-
என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத
என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனி யவர் கண் தங்காது என் றொரு வாய் சொல்
நன்னீல மகன்றில்காள்! நல்குதிரோ நல்கீரோ?–1-4-4-
நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே!
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகங் கொண்டருளாயே–1-4-5-
அருளாத நீர் அருளி அவர் ஆவி துவரா முன்
அருள் ஆழிப் புட் கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று
அருள் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
யருள் ஆழி வரி வண்டே! யாமும் என் பிழைத்தோமே–1-4-6-
என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்கின்ற
என் பிழையே நினைந் தருளி அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக் கென்று ஒரு வாய் சொல்
என் பிழைக்கும் இளங்கிளியே! யான் வளர்த்த நீ யலையே?–1-4-7-
நீ யலையே சிறு பூவாய்! நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்தொழிந்தாய்
சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனி உன்து
வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே–1-4-8-
வாயும் திரை உகளும் கானல் மடநாராய்!
ஆயும் அமர் உலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட் பட்டாயே?–2-1-1-
கோட் பட்ட சிந்தையையாய்க் கூர் வாய அன்றிலே!
சேட் பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆட் பட்ட எம்மே போல் நீயும் அரவணையான்
தாட் பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே?–2-1-2-
கிறி என நினைமின் கீழ்மை செய்யாதே
உறி அமர் வெண்ணெய் உண்டவன் கோயில்
மறி யொடு பிணை சேர் மாலிருஞ் சோலை
நெறி பட அதுவே நினைவது நலமே–2-10-6-
வழக்கு என நினைமின் வல் வினை மூழ்காது
அழக்கொடி அட்டான் அமர் பெருங் கோயில்
மழக் களிற்று இனம் சேர் மாலிருஞ் சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே–2-10-9-
மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய்த்
தொழுங்காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே!
மழுங்காத ஞானமே படையாக மலர் உலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதே?–3-1-9-
வைகல் பூங்கழி வாய் வந்து மேயும் குருகினங்காள்!
செய் கொள் செந் நெல் உயர் திரு வண் வண்டூ ருறையும்
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே–6-1-1-
காதல் மென் பெடையோடு உடன் மேயுங் கருநாராய்!
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
நாதன் ஞாலமெல்லாம் உண்ட நம் பெருமானைக் கண்டு
பாதம் கை தொழுது பணியீர் அடியேன் திறமே–6-1-2-
திறங்களாகி எங்கும் செய்களூடுழல் புள்ளினங்காள்!
சிறந்த செல்வ மல்கு திரு வண் வண்டூ ருறையும்
கறங்கு சக்கரக் கைக் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே–6-1-3-
இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள்?
விடலில் வேத ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
கடலின் மேனிப் பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே–6-1-4-
உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மட வன்னங்காள்!
திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திரு வண் வண்டூர்
புணர்த்த பூந் தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே–6-1-5-
போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூங் குயில்காள்!
சேற்றில் வாளை துள்ளும் திரு வண் வண்டூ ருறையும்
ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம் கொண் டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே–6-1-6-
ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கொன்றுரை; ஒண்கிளியே!
செரு ஒண் பூம் பொழில் சூழ் செக்கர் வேலைத் திருவண்வண்டூர்
கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே–6-1-7-
திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய்; ஒண் சிறு பூவாய!
செருத்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திருவண் வண்டூர்
பெருந் தண் தாமரைக் கண் பெரு நீண் முடி நாற்றடந்தோள்
கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே–6-1-8-
அடிகள் கை தொழுது, அலர் மேல் அசையும் அன்னங்காள்!
விடிவை சங்கொலிக்கும் திருவண் வண்டூ ருறையும்
கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு
கொடிய வல் வினையேன் திறம் கூறுமின்; வேறு கொண்டே–6-1-9-
வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வட பாலைத் திருவண் வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே–6-1-10-
நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம்; காண்மின்களே–6-3-10-
பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் என்
பாவை போய் இனித் தண் பழனத் திருக் கோளூர்க்கே
கோவைவாய் துடிப்ப மழைக் கண்ணொடு என் செய்யுங்கொலோ?–6-7-3-
பொன் னுல காளீரோ? புவனி முழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினை யாட்டியேன் நான் இரந்தேன்
முன் னுலகங்க ளெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன்
என் னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே–6-8-1-
மையமர் வாள் நெடுங்கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?
கையமர் சக்கரத்து என் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளி காள்! விரைந்தோடி வந்தே–6-8-2-
ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதிரோ?
கூடிய வண்டினங்காள்! குரு நாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மா நெடுந் தேர்ப் படை நீறு எழச் செற்ற பிரான்
சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே–6-8-3-
தூ மது வாய்கள் கொண்டு வந்து, என் முல்லைகள் மேல் தும்பிகாள்!
பூ மது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய் செய்தகன்ற
மா மது வார் தண் துழாய் முடி வானவர் கோனைக் கண்டு
தாம் இதுவோ தக்கவாறு என்ன வேண்டும் கண்டீர் நுங்கட்கே–6-8-4-
நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின் யான் வளர்த்த கிளிகாள்!
வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த
செங்கட் கருமுகிலைச் செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை
எங்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!-6-8-5-
என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன்
தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கன்றி நல்கான்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம் சொல்லிச்
சென்மின்கள் தீ வினையேன் வளர்த்த சிறு பூவைகளே!–6-8-6-
பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன்
யாவையும் யாவருமாய் நின்ற மாயன் என்னாழிப் பிரான்
மாவை வல் வாய பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லிப்
பாவைகள்! தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே–6-8-7-
பாசற வெய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன்?
ஆசறு தூவி வெள்ளைக் குருகே! அருள் செய்தொரு நாள்
மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு
ஏசறும் நும்மை அல்லால் மறு நோக்கிலள் பேர்த்து மற்றே–6-8-8-
பேர்த்து மற்றோர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன்
நீர்த் திரை மேல் உலவி இரை தேரும் புதா இனங்காள்!
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே–6-8-9-
வந்திருந்து உம்முடைய மணிச் சேவலும் நீருமெல்லாம்
அந்தரம் ஒன்றுமின்றி அலர் மேல் அசையும் அன்னங்காள்!
என் திரு மார்வற்கு என்னை இன்னவா றிவள் காண்மின் என்று
மந்திரத் தொன் றுணர்த்தி உரையீர் மறு மாற்றங்களே–6-8-10-
அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்
சென்று அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன் விளை
ஒன்றி வலஞ்செய ஒன்றுமோ? தீ வினை உள்ளத்தின் சார் வல்லவே–7-10-8-
திருவருள் மூழ்கி வைகலும் செழு நீர் கண்ண பிரான்
திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள
திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப் புலியூர்
திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல்லியல் செவ்விதழே–8-9-6-
இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு இங்கு எத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேன்மின் குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ண பிரானை நீர் வரக் கூவ கிலீர்
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ–9-5-1-
இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள்
எத்தனை நீரும் உன் சேவலும் கரைந்து ஏங்குதீர்
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும்
அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே–9-5-2-
அவன் கையதே என் ஆர் உயிர் அன்றில் பேடைகாள்
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே–9-5-3-
கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்
மேற் கிளை கொள்ளேன் மின் நீரும் சேவலும் கோழி காள்
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே–9-5-4-
அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேன்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட
நம் திரு மார்வன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்–9-5-5-
நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான்–9-5-6-
கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7-
உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –9-5-8-
பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன் குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்–9-5-9-
எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே–9-5-10-
எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-
நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –-9-7-2-
தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3-
திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்
திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன்
திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே–9-7-4-
தெளி விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்
தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–9-7-5-
தூதுரைத்தல் செப்புமின்கள் தூ மொழி வாய் வண்டினங்காள்
போதிரைத்து மது நுகரும் பொழில் மூழிக் களத்து உறையும்
மாதரைத் தம் மார்பகத்தே வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையுமே–9-7-6-
சுடர் வளையும் கலையும் கொண்டு அரு வினையேன் தோள் துறந்த
படர் புகழான் திரு மூழிக் களத்து உறையும் பங்கயக் கண்
சுடர் பவள வாயனைக் கண்டு ஒரு நாள் ஒரு தூய் மாற்றம்
படர் பொழில் வாய்க் குறுகினங்காள் எனக்கு ஓன்று பணியீரே–9-7-7-
எனக்கு ஓன்று பணியீர்காள் இரும் பொழில் வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும் வண்டினங்காள் தும்பிகாள்
கனக் கொள் திண் மதிள் புடை சூழ் திரு மூழிக் களத்து உறையும்
புனக் கொள் காயா மேனிப் பூந்துழாய் முடியார்க்கே–9-7-8-
பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக் கொண்டதனால் தகவன்று என்று உரையீரே–9-7-9-
தகவன்று என்று உரையீர்கள் தடம் புனல் வாய் இரை தேர்ந்து
மிக வின்பம் பட மேவும் மெல் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அகமேனி ஒழியாமே திரு மூழிக் களத்தார்க்கே–9-7-10-
வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ
தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1-
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே ––10-9-1-
நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2-
————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –