ஸ்ரீ பிரம்ம சூத்திரம்-முதல் நான்கு ஸூ த்திரங்கள்
ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்
முகவுரை
தத்துவம்
எந்த தத்தவமும் கீழ்கண்ட நான்கு விஷயங்களைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும்.
- Metaphysics (Ontology)
- Study of Knowledge (Etymology)
- Ethics
- Aesthetics
Meta physics (Ontology) – ஸத்தா விசாரம்
பொருளினுடைய இருப்பைப் பற்றிய விசாரம். மூன்று வகையான ஸத் இருக்கிறது. அவைகள் பாரமார்த்திக ஸத், வியாவகாரிக ஸத், பிராதிபாஸிக ஸத் ஆகியவைகளாகும். கயிற்றில் தெரியும் பாம்பு பிராதிபாஸிக ஸத்தாகும்.
Study of Knowledged (Etymology) – ஞான விசாரம்; பிரமாண விசாரம்
நமக்கு அறிவு எப்படி ஏற்படுகிறது என்பதைப் பற்றிய விசாரம்.
Ethics – Study of Morality – நீதிநெறி, ஒழுக்கவியல், நன்னெறி விசாரம், நல்லது-கெட்டது விசாரம்
தர்ஷணம்:
- நம்மைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும், இறைவனைப்பற்றியும் நிச்சயிக்கப்பட்ட முடிவுகள்.
- எதன் வழியாக இந்த நிச்சயத்தை அடைவோமோ அதையும் இவ்வாறாக அழைக்கப்படுகிறது.
மதம் வரையறை (Definition)
இது நம்பிக்கையின் அடிப்படையில் உருவாகியிருப்பது. இறைவனைப் பற்றியும், இறை நம்பிக்கையை அடிப்படையில் சில மகான்களின் உபதேசத்தை மையமாகவும் கொண்டிருக்கும். இறைவனைப்பற்றிய நூல்களின் அடிப்படையில் பின்பற்றுகின்ற கருத்துக்கள். இதில் நம்பிக்கைதான் அச்சாணியாக இருக்கிறது. கடவுளைப் பற்றியும், தர்ம-அதர்மத்தைப் பற்றியும் பேசுவது. இதில் தத்துவத்தில் கூறப்படுகின்ற கருத்துக்களும் அடங்கியிருக்கிறது.
விசாரம்
* மதத்தை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம்.
* இதற்கெதிராக இருக்கின்ற கருத்துக்களை விசாரம் செய்தல்
* இது அடிப்படைத்தேவைக்கு உருவாக்கப்பட்டதா அல்லது வசதிக்காக உருவாக்கப்பட்டதா?
* மத நம்பிக்கை ஆன்மீக வளர்ச்சிக்கு, மனவளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறதா அல்லது தடையாக இருக்கிறதா என்ற ஆராய்ச்சியின் முடிவில் இரண்டும் சமவிகிதத்தில் இருப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
* மத நம்பிக்கையினால் நல்லதை அடைவோமா அல்லது கெட்டதை அடைவோமா என்றும் உறுதியாக சொல்ல முடியாது.
* மதம் மனிதனுக்கு அடிப்படைத் தேவையா அல்லது வசதிக்காக இருக்கிறதா என்று பார்க்கும் போது, அவசியமானது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் மனப்பக்குவத்துடன் பின்பற்றிக் கொண்டிருக்க வேண்டும்.
* சாத்விக நம்பிக்கையுடையவர்கள் நன்மையை அடைவார்கள். ராஜஸ, தாமஸ நம்பிக்கை உடையவர்கள் தீமையை அடைவார்கள். எனவே மனப்பக்குவத்தின் அடிப்படையில்தான் நன்மை, தீமை கிடைக்கின்றது.
மனிதர்களில் மூன்று வகையாக இருக்கிறார்கள். அவைகள்,
- தத்துவவாதிகள் – மத நம்பிக்கையுடையவர்கள், சுயமாக சிந்திப்பவர்கள்.
- தத்துவவாதிகள் – மத நம்பிக்கை மட்டும் உடையவர்கள்
- நன்னெறிவாதிகள் – மதநம்பிக்கையற்றவர்கள், தர்மப்படி வாழ்பவர்கள், நல்லொழுக்கமாக வாழ்பவர்கள்.
இவை மூன்றையும் சமமாக வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வதே சிறந்ததாகும்.
தத்துவம் என்று சொல்லும்போது அது ஆறு விஷயங்களைப் பற்றி பேசியிருக்க வேண்டும். அவைகள்,
- ஜீவனுடைய தன்மை:
2. ஜகத் விசாரம்
3. ஈஸ்வரன்
4. பந்த ஸ்வரூபம்
5. மோட்ச ஸ்வரூபம்
6. சாதனங்கள்.-ஆகியவைகளாகும்.
————————–
ஜீவனுடைய தன்மை:
நாம் யார்? உடலழிந்துவிட்டால் ஜீவன் இருக்கின்றதா என்றெல்லாம் நம்மைப் பற்றி விளக்கமாக பேசியிருக்க வேண்டும். உடல் மட்டும்தான் ஜீவனாக இருக்கிறதா வேறெதாவது அதற்கப்பால் இருக்கின்றதா என்றும் விளக்கமாக பேசியிருக்க வேண்டும்.
ஜகத் விசாரம்
உலகத்தினுடைய தன்மையைப் பற்றி விளக்கமாக பேசியிருக்க வேண்டும். உலகத்திலுள்ள பொருட்களின் இருப்பைப் பற்றி பேசியிருக்க வேண்டும். சிலர் இந்த உலகம் சத்தியமானது என்று கூறுகின்றனர். ஏனென்றால் இந்த உலகத்தை நாம் கண்ணால் பார்த்து அனுபவிக்கின்றோம். அத்வைதம் இந்த உலகம் பொய்யாக காட்சியளிக்கின்றது என்று உபதேசிக்கிறது. புத்தமதம் உலகம் சத்தியமென்றும், சூன்யமானதென்றும் கூறுகிறது.
3. ஈஸ்வரன்
ஈஸ்வரன் என்கின்ற தத்துவத்தைப்பற்றி பேசியிருக்க வேண்டும். ஜீவ, ஜகத்திற்கு காரணமாக ஈஸ்வரன் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதை விளக்கியிருக்க வேண்டும். ஈஸ்வரனின் லட்சணங்களைக் கூறியிருக்க வேண்டும்.
- பந்த ஸ்வரூவம்
ஜீவன் மனநிறைவின்மையோடு இருப்பதைப் பார்க்கிறோம். சம்சாரத்திலிருப்பதைப் பார்க்கிறோம். எனவே பந்தத்தைப் பற்றி பேசியிருக்க வேண்டும். பந்தத்தினால் சம்சாரத்தில் இருக்கின்றான். ஏன் இவ்வாறு பந்தப்படுகிறான் என்பதையும் பேசியிருக்க வேண்டும்.
- மோட்ச ஸ்வரூவம்
எது மோட்ச நிலை என்பதைப் பற்றி பேசியிருக்க வேண்டும். சிலர் மரணமே மோட்சமென்றும், வேறுசிலர் உயர்ந்த லோகத்திற்கு செல்வதே மோட்சம் என்று கூறுகிறார்கள்.
- சாதனங்கள்
ஜீவன் கடைபபிடிக்க வேண்டிய சாதனங்களைக் கூறியிருக்க வேண்டும். இவைகளை பயன்படுத்தி பந்தத்திலிருந்து விடுதலையடைந்து மோட்சத்தை அடைய முடிய வேண்டும்.
வேதாந்திகளின் தர்ஷணம் உத்தரமீமாம்ஸம் (அ) அத்வைதமாகும். இதன் மூலம் வேதாந்தம் (அ) உபநிஷத் ஆகும். அத்வைத தத்துவத்தை கற்க மூன்று நூல்களை படித்திருக்க வேண்டும் என்று சம்பிரதாயத்தில் கூறப்படுகிறது. அந்த மூன்று நூல்களாவது, உபநிஷத், பகவத் கீதை, பிரம்ம சூத்திரம் ஆகியவைகளாகும். இவை மூன்றையும் படித்து முடித்துவிட்டால் சாஸ்திரத்தை முழுவதுமாக படித்துவிட்டோம் என்றாகின்றது.
அத்வைத தத்துவத்தை புரிந்துக் கொள்வதற்கு மூன்று நூல்களின் வழியே பயணத்தை மேற்கொள்ள வேண்டும். மூன்று நூல்கள் காட்டுகின்ற பாதையில் செல்ல வேண்டும்.
1வது பிரஸ்தானம்: உபநிஷத்- ஸ்ருதி பிரஸ்தானம், சப்தபிரமாணம், வேதாந்தம்
2வது பிரஸ்தானம்: பகவத்கீதை – ஸ்மிருதி பிரஸ்தானம் வேதத்தில் சொல்லப்பட்ட கருத்தை விளக்கியிருப்பது. உபநிஷத் மட்டும் போதாதா? ஏன் ஸ்ம்ருதி பிரஸ்தானமான பகவத்கீதை படிக்க வேண்டும் என்ற கேள்வி மனதில் இயற்கையாகவே வரும். உபநிஷத்தில் முக்கியமான தத்துவத்தைப் பற்றிதான் விளக்கமாக உபதேசிக்கப்பட்டிருக்கும். பகவத்கீதையில் இதையும் சேர்த்து அடிப்படை வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களும் கூறப்பட்டிருக்கும்.
3வது பிரஸ்தானம்: பிரம்ம சூத்திரம் – இது நியாய பிரஸ்தானம். இதை வியாசபகவான் எழுதி இருக்கிறார். நியாயம் என்பது தர்க்கபிரதான பிரஸ்தானம். தன்னுடைய கருத்தை நிலைநாட்டுவதற்காக தர்க்கமுறையை பயன்படுத்தியிருக்கிறார்.
முதலில் பிரம்ம சூத்திரம் என்ற சொல்லுக்குப் பொருள் பார்க்கப்படுகிறது. சூத்திரம் என்று சொல்லுக்கு நூல், புத்தகம், ரகசியம், உபாயம் மற்றும் தீர்ப்பு என்ற அர்த்தங்களும் உண்டு. இந்த இடத்தில் நூல் என்ற அர்த்தம் எடுத்துக் கொண்டால், எப்படி நூலானது மலர்களைச் சேர்த்து மாலைகளை உருவாக்க உதவுகிறதோ, அதுபோல பிரம்மத்தைப் பற்றிய விஷயங்களை மாலைப் போல் தொகுத்துக் கொடுத்திருக்கின்றார்.
- பிரஹ்ம பிரதிபாதகம் சூத்திரம் – பிரம்மத்தை விளக்குகின்ற புத்தகம்.
- பிரஹ்ம விஷயஹ சிந்தா சூத்ரியதே அனேன – பிரம்மத்தைப் பற்றிய கருத்துக்கள் கோர்வையாக தொகுக்கப்பட்ட நூலாகும்.
பிரம்ம சூத்திரத்தில் மூன்றுவகையான காரியங்கள் செய்துள்ளார். அவைகள்,
- ஸ்ருதி வாக்ய ஸமன்வயம் – ஸமன்வயம் என்ற சொல்லுக்கு ஒத்துப்போகுதல் என்ற அர்த்தம் உண்டு. உபநிஷத் வாக்கியங்கள் அனைத்தும் அத்வைத தத்துவத்தோடு ஒத்துப் போகின்றது என்பதை நிலைநாட்டியிருக்கின்றார். மேலும் சந்தேகத்தைக் கொடுக்கின்ற வாக்கியங்களையும், முரண்பாடுவது போல உள்ள வாக்கியங்களையும் எடுத்துக் கொண்டு அவைகளும் அத்வைத தத்துவத்தோடு ஒத்துப்போகின்றது என்பதை நிலைநாட்டுகின்றார். உதாரணமாக பிருஹதாரண்ய உபநிஷத்தில் உள்ள வாக்கியமான ‘ஸத்யஸ்ய ஸத்யம்” என்ற வாக்கியம் சத்தியமான இந்த உலகத்திற்கு சமமாக பிரம்மம் இருக்கிறது என்று தப்பாக புரிந்து கொள்ளும் வாக்கியங்களுக்கு சரியான அர்த்தத்தை கொடுத்திருக்கிறார்.
- மற்ற மதங்களை நிராகரணம் செய்திருக்கிறார்.
- அத்வைத தத்துவத்தில் குறை சொல்பவர்களின் கருத்தை நீக்கி விடுகின்றார்.
அதிகாரி:
- வியாச பகவான் மீது முழு சிரத்தை வைத்திருப்பவர்கள், அடைந்த ஞானத்தில் நிலைப்படுத்துவதற்காக பயன்படுத்த வேண்டும். இதுவொரு மனன கிரந்தமாகும். ஐந்தாவது சூத்திரத்தில் ஆரம்பித்து இறுதி சூத்திரம் வரை மனனத்திற்கு பயன்படும். முதல் நான்கு சூத்திரங்களும் அத்வைத தத்துவத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
- உபநிஷத்தை முழுவதும் படித்திருப்பவர்கள்தான் அதிகாரி. மனனம் செய்ய விரும்புவோர்களும் இதை படிக்கலாம்.
இனி விதவிதமான பூர்வபட்ச தர்ஷணங்கள் சிலவற்றை முகவுரையாக பார்க்கப்படுகிறது. இவைகள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அவைகள் 1. நாஸ்திக தர்ஷணம், 2. ஆஸ்திக தர்ஷணம் ஆகும்.
நாஸ்திக தர்ஷணம்
- சார்வாக்க மதம் – சாரு – அழகான, வாக் – பேச்சு. இவர்களுக்கு பிரத்யக்ஷம்தான் பிரமாணம் வேறெதுவும் பிரமாணமல்ல. மற்றவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பது இவர்கள் கொள்கை. இந்த உலகம் நீர், நிலம், காற்று, நெருப்பு ஆகிய நான்கு பூதங்களால்தான் உருவாக்கப்பட்டது. ஆகாசம் என்றவொரு பூதமே கிடையாது. வெற்றிலை, சுண்ணாம்பு, பாக்கு இவைகளை ஒன்று சேர்த்து சாப்பிடும் போது அந்தக் கலவை சிவப்பு வர்ணத்துடன் இருக்கிறது. இது எப்படியோ வந்திருக்கிறது. அதுபோல இந்த உடலுக்கு உணர்வு எப்படியோ வந்திருக்கிறது.
இவர்கள் ஆத்மாவை ஏற்றுக் கொள்வதில்லை. வேத சாஸ்திரத்தையும், தர்ம சாஸ்திரத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை. வாழ்க்கையை மகிழ்ச்சியோடு அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும். மறுபிறவியில் நம்பிக்கையில்லாதவர்கள். கண்ணால் பார்த்து அனுபவிப்பதைத்தான் ஏற்றுக்கொள்வார்கள். மூன்றுவிதமான சரீரங்கள் இருப்பதையும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். உணர்வு என்பது தற்காலிகமான விஷயம் என்பது இவர்கள் கொள்கை. உணர்வை மட்டும்தான் நம்புவார்கள்.
- ஜைனமதம்
இந்த மதத்தை தோற்றுவித்தவர் ரிஷபதேவர் ஆவார். மகாவீரர்தான் இரண்டாவது ஆச்சாரியாவார். இவர்களும் வேதத்தை ஏற்றுக் கொள்வதில்லை. குருதான் கடவுள் என்ற கொள்கையுடையவர்கள். ஈஸ்வரனின் லட்சணத்தையெல்லாம் குருவுக்கு கூறுவார்கள். ஸ்வேதாம்பரர், திகம்பரர் என்ற இரண்டு வகையினர் உள்ளார்கள். முதல்வகையினர் வெண்மை உடை அணிந்திருப்பார்கள். இரண்டாவது வகையினர் காட்டில் வசித்து கடுமையான தவம் செய்பவர்கள்.
இவர்களுடைய தத்துவத்திற்கு ஹயாத் என்று பெயர். இந்த உலகில் எந்த முடிவெடுத்தாலும் அவைகள் முழுவதுமாக இருப்பதில்லை. எல்லா முடிவுகளும் ஏதொவொரு கோணத்தில்தான் சரியாக இருக்கும். முடிவுகள் கால, தேசத்தால் வரையறைக்கபட்டவைகள். புத்தகம் இருக்கிறது என்ற வாக்கியத்தில் உள்ள இருக்கிறது என்பது தற்போது இருக்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். வேறொரு காலத்தில் அது இல்லாமல் போகலாம் என்பது அவர்களுடைய கொள்கையாகும். எல்லா உயிரினங்களையும் ஜீவன் என்று அழைக்கிறார்கள். இந்த ஜீவனை முக்தன், பத்தன் என்று மேலும் இரண்டாக பிரிக்கிறார்கள். அஜீவன் என்பது ஜடமானது என்பார்கள். அகிம்சையை முக்கியமாக பின்பற்றுபவர்கள். சிரத்தை, ஒழுக்கம் இவைகளை பின்பற்றுகிறார்கள். இவர்கள் 10 பண்புகளை பின்பற்றுகிறார்கள். அகிம்சையை பிரதானமாக பின்பற்றுகிறார்கள்.
2.1. க்ஷமா – பொறுமையாக இருத்தல்
2.2. வினய – பணிவு
2.3. ஆர்ஜவம் – நேர்மை (சொல், செயல், மனம்)
2.4. சத்யம் – உண்மை பேசுதல்
2.5. சௌசம் – தூய்மை
2.6. ஷம – மனக்கட்டுப்பாடு
2.7. தப: – தவம், உபவாசம்
2.8. த்யாக – விட்டுக் கொடுத்தல், தியாகம் செய்தல்
2.9. வைராக்கியம் – போகப்பொருட்களுக்கு அடிமையாகமால் இருத்தல்
2.10. ஷீலம் – ஒழுக்கமாக இருத்தல்
- புத்தமதம்
புத்தருடைய உபதேசத்தின் அடிப்படையில் பல பிரிவுகள் தோன்றியது. முதலில் 18 பிரிவுகள் இருந்தது. இறுதியில் இரண்டு பிரிவுகள் மட்டும் இருக்கிறது. அவைகள் மஹாயானம், ஹீனயானம் ஆகும். ஹீனயான பிரிவினர் உலகத்தை சத்யம் என்று ஏற்றுக் கொள்கிறார்கள். மஹாயான பிரிவினர் ஷணிகவாதியினர் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் சூன்யம்தான் ஜகத் என்றும், மனதில் தோன்றுகின்ற எண்ணங்கள் தோன்றி அழிவது போல இந்த உலகமும் தோன்றி, தோன்றி அழிந்து கொண்டிருக்கின்றது என்ற கொள்கை உடையவர்கள்.
நான்கு உண்மைகளை புத்தரின் உபதேசத்திலிருந்து பின்பற்றுகிறார்கள்.
3.1. துக்கம் – இந்த உலகம் துக்கமயமானது. நாம் எப்போதும் துயரத்தில்தான் இருக்கிறோம்
3.2. துக்க சமுதாயம் – இந்த துக்கத்திற்கு காரணம் இருக்கிறது.
3.3. துக்க நிரோதஹ – துக்கத்தை நீக்கிக் கொள்ள முடியும்.
3.4. துக்க நிரோத மார்க்கம் – துக்கத்தை நீக்கிக் கொள்ளும் வழி.
துக்கத்திற்கு காரணம் அறியாமைதான் என்று சிலர் சொல்கிறார்கள். வேறு சிலர் வாசனைகள்தான் என்று கூறுகிறார்கள். உலகத்தோடு சம்பந்தம் வைப்பதாலும், ஆசைகளினாலும் துன்பத்தை அனுபவிக்கின்றோம். துயரத்திலிருந்து விடுதலை அடைவதுதான் மோட்சம் என்று கூறுகிறார்கள். 8 வகையான பண்புகளைக் கூறுகிறார்கள். அவைகள்,
- சம்யக் திருஷ்டி – சரியான கொள்கை, சரியான நோக்கு
- சம்யக் சங்கல்பம் – சரியான உறுதி, சரியான முடிவுகள்
- சம்யக் வாக் – சரியான பேச்சு
- சம்யக் கர்ம – சரியான நடத்தை
- சம்யக் ஜீவஹ – சரியான, சாமான்ய தர்மத்தை பின்பற்றி வாழ்தல்
- சம்யக் வ்யாயாபஹ – சரியான முயற்சி
- சம்யக் ஸ்ம்ருதி – நல்ல விஷயங்களை மட்டும் நினைத்துக் கொண்டிருத்தல், கவனமாக இருத்தல்
- சம்யக் சமாதி – சரியான மனவொருமுகப்பாடு.
ஆஸ்திக தர்ஷணம்
ஆறுவகையான தர்ஷணங்கள் இருக்கிறது. அவைகள்,
- சாங்கிய மதம் – உருவாக்கியவர் கபில முனிவர்
- யோக மதம் – உருவாக்கியவர் பதஞ்சலி முனிவர்
3. நியாய மதம் – உருவாக்கியவர் கௌதம முனிவர்
4. வைஷேஷிக மதம் – உருவாக்கியவர் கனாத முனிவர்
5. பூர்வ மீமாம்ஸம் – வேதத்தின் முதல்பாகத்தை மட்டும் பின்பற்றுபவர்கள்
6. உத்தர மீமாம்ஸம் – வேதத்தின் இறுதிபாகமான உபநிஷத்தை மட்டும் பின்பற்றுபவர்கள்
முதல் நான்கு வகையினர் வேதத்தை ஏற்றுக் கொண்டாலும் தர்க்கத்திற்குத்தான் அதிக முக்கியத்வம் கொடுக்கின்றனர்.
- சாங்கிய மதம்
பிரகிருதி, புருஷன் என்று இரண்டு தத்துவங்கள் இருக்கின்றது. இரண்டுமே ஒன்றுக்கொன்று நிகராக இருக்கிறது. இவைகள் அறிவு ஸ்வரூமாக இருக்கின்றது. ஸ்ருஷ்டியைப் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. ஜகத்தும் உண்மை, புருஷனும் உண்மை என்று சொல்கிறார்கள்.
- யோக மதம்
இதில் மனவொழுக்கத்தைப் பற்றி மிக நன்றாக விளக்கப்பட்டிருக்கிறது. சித்திகள் மோட்சத்திற்கு தடையாக இருக்கும் என்று கூறியிருக்கிறது. ஈஸ்வரனை ஏற்றுக் கொள்கிறார்கள்.
- நியாய மதம்
4. வைஷேஷ மதம்
இந்த இரண்டு மதங்களும் ஒன்றாகி தர்க்க சாஸ்திரம் என்று அழைக்கப்படுகிறது. அனுமான பிராப்தி பற்றி நன்கு பேசியுள்ளார்கள்.
- பூர்வ மீமாம்ஸா பிரிவு
ஜெய்மினி மகரிஷி பூர்வ மீமாம்ஸத்திற்கு சூத்திரங்கள் எழுதியிருக்கிறார்.
அதா2தோ தர்ம ஜிக்ஞாஸா – கர்ம காண்டத்தில் கூறப்பட்டுள்ள யாகங்களை, தர்ம-அதர்மத்தை சரியாக விசாரம் செய்துள்ளார்.
குமாரபட்டர், பிரபாகர் என்பவர்கள் தனித்தனியாக இரண்டு மதங்களை தோற்றுவித்தனர். கர்ம காண்டத்தில் கூறப்பட்டுள்ள கர்மங்களை செய்து சொர்க்கத்தையோ, பிரம்மலோகத்தையோ அடையலாம். இதுவே மோட்சமாகும் என்று கூறியுள்ளனர். இந்த மதங்கள் எதுவும் நடைமுறையில் இல்லை. யாரும் பின்பற்றிக் கொண்டிருக்கவில்லை.
- உத்தர மீமாம்ஸா பிரிவு
உபநிஷத் உபதேசங்களைக் கொண்டது. வியாகபகவான் உபநிஷத் வாக்கியங்களை எடுத்துக் கொண்டு சூத்திரங்களின் மூலம் விசாரம் செய்துள்ளார். இதற்கு பிரம்ம சூத்திரம் என்று பெயர். இதை ஶாரீர சூத்திரம் என்றும், வேதாந்த சூத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. வியாசபகவான் பாதராயனர் என்றும் அழைக்கப்படுவதால் அவர் எழுதிய பிரம்ம சூத்திரத்திற்கு பாதராயண சூத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.இதற்குள்ளேயே அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் என்று மூன்று மதங்கள் தோன்றி இருக்கிறது. சங்கரர் எழுதிய பாஷயத்திற்கு சங்கர பாஷ்யம் என்றும், ராமானுஜர் எழுதிய பாஷ்யத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்றும் அழைக்கப்படுகிறது. மாத்வர் என்பவரும் இதற்கு பாஷ்யம் எழுதியிருக்கிறார். த்வைதம், விசிஷ்டாத்வைதம் இவைகளை அத்வைத தத்துவத்தை அடைவதற்கு படிகளாக எடுத்துக் கொள்ளலாம்.பிரம்ம சூத்திரத்தை படிப்பதற்கு முன்னே 10 சாந்தி பாடங்களை சொல்லிவிட்டுத்தான் ஆரம்பிக்க வேண்டும் என்று சம்பிரதாயத்தில் கூறப்பட்டிருக்கிறது.
- ஷன் நோ மித்ர: ஷன் வருண: – தைத்திரிய உபநிஷத்
2. ஸஹ நாவவது – தைத்திரிய உபநிஷத்
3. யஹ சந்தஸாம் ரிஷபோ – தைத்திரிய உபநிஷத்
4. அஹம் வ்ருக்ஷஸ்ய ரேரிவா – தைத்திரிய உபநிஷத்
5. பூர்ணமத பூர்ணமிதம் – ஈஸாவாஸ்ய உபநிஷத்
6. ஆப்யாந்து மமாங்கனி – கேனோ உபநிஷத்
7. வாங்மே மனஸி பிரதிஷ்டா – அய்தரேய உபநிஷத்
8. பத்ரங் கர்ணேபி – அதர்வன உபநிஷத்
9. பத்ரம் நோ அபிவாதய – ரிக்வேதம்
10. யோ பிரஹாமானாம் – யஜுர், ஸ்வேதாஸ்வர உபநிஷத்
மேலே கொடுத்துள்ள சாந்தி பாடங்களில் முதல் 8 சாந்தி பாடங்களின் விளக்கத்தை அந்தந்த உபநிஷத்தில் பார்த்துக் கொள்ளலாம். கடைசி இரண்டிற்கு மட்டும் இங்கே விளக்கம் காணலாம்.
சாந்தி பாடம் – 9
பத்ரம் நோ அபிவாதய மனஹ
இறைவா எங்களுடைய மனதை மோட்சத்திற்கு மெதுவாக அழைத்துச் செல்வீராக. இன்னொரு பொருள்: ஏ மனமே! எனக்காக மோட்சத்தில் நாட்டம் கொள்வாயாக என்பதாகும்.
சாந்தி பாடம் – 10
யோ ப்ரஹ்மானாம் விததாதி பூர்வம்
யோ வை வேதாந்த ப்ரஹினோதி தஸ்மை
தம்ஹ தேவம் ஆத்மபுத்தி ப்ரகாஸம்
முமுக்ஷுர்வை சரணமஹம் ப்ரபத்யே.
யஹ – எந்த இறைவன்
ப்ரஹ்மானாம் – ஹிரண்யகர்ப்பன்
பூர்வம் – முதன்முதலாக
வித3தா4தி – தோற்றி வைத்த
யோ வை – அந்த ஈஸ்வரன்
வேதாந்த – வேதாந்தத்தை
தஸ்மை – ஹிரண்யகர்ப்பனுக்கு
ப்ரஹினோதி – உபதேசிக்கின்றாரோ
ஆத்மபுத்தி ப்ரகாஸம் – ஆத்மஞானத்தை எனக்கு அருள்கின்ற, பிரகாசிக்கும்படி செய்கின்ற
தம் தேவம் – அந்த இறைவனை
முமுக்ஷு: வை – முமுக்ஷுவாக இருக்கின்ற
அஹம் சரணம் ப்ரபத்யே – நான் சரணடைகின்றேன்
இந்த பத்து சாந்திபாடத்தை படித்துவிட்டு இறுதியில் குரு சம்பிரதாய ஸ்துதி சம்பிரதாயத்தில் படிக்கப்படுகின்றது.
நமோ ப்ரம்மாதி3ப்4யஹ – முதன்முதலில் பிரம்மவித்யாவை உபதேசித்த பிரம்மாவுக்கு நமஸ்காரம்.
ப்ரஹ்மவித்யா கர்த்ருப்4;யஹ – இந்த பிரம்மவித்யாவை குரு-சிஷ்ய சம்பிதாயமாக வளர்த்து காத்த அனைவருக்கம் நமஸ்காரம்.
வம்ஸரிஷிப்4;யஹ – வம்சாவளியாக வருகின்ற அனைத்து ரிஷிகளுக்கும் நமஸ்காரம்.
மஹதப்4;யஹ – ஞானநிஷ்டையடைந்த மகான்களுக்கு நமஸ்காரம்
நம: குருப்4;யஹ – அனைத்து குருமார்களுக்கும் நமஸ்காரம்.
ப்ரக்ஞான கண – பூரணமான அறிவு ஸ்வரூபமான
ப்ரத்யக் கர்த்தஹ – என்னுடைய ஸ்வரூபமாக இருக்கின்ற
ப்ரஹ்ம ஏவ – பிரம்மனாகவே
அஹம் அஸ்தி – நான் இருக்கிறேன்.
ஸர்வ உபப்லவ ரஹித: – எந்தவிதமான துயரங்களும் இல்லாதவன்.
பிரம்ம சூத்திரம் தர்க்க பிரதானமான நூலாக இருப்பதால் இந்த நியாய பிரஸ்தானத்தை சுருக்கமாக பார்ப்போம். அனுமான பிரமாணத்தைத்தான் நியாய பிரஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. அனுமானம் இரண்டு வகையாக இருக்கின்றது. ஒன்று லௌகீக அனுமானம், மற்றொன்று வைதீக அனுமானமாகும்.
அந்த மலையில் நெருப்பு இருக்கிறது காரணம் அங்கிருந்து புகை வந்து கொண்டிருக்கிறது. நாம் சமையலறையில் நெருப்புடன் கூடிய புகையைப் பார்த்த அனுபவத்தினால் இவ்வாறு கூறுகிறோம்.
பக்ஷம் – மலை
சாத்தியம் – நெருப்பு
ஹேது – புகை
வியாப்தி – ஹேதுவுக்கும், சாத்தியத்திற்கும் உள்ள மாறாத சம்பந்தம். அதாவது புகைக்கும், நெருப்புக்கும் சம்பந்தம் இருக்கின்றது.
லௌகீக அனுமானம் : நம் அனுபவத்திலிருந்து யூகிப்பது
வைதீக அனுமானம் : வேதத்திலிருந்து எடுக்கப்பட்ட ஹேதுவை எடுத்துக் கொண்டு சொல்வது
பக்ஷம் மகத்
சாத்தியம் மாயை (வெறும் தோற்றம்)
ஹேது இது வேதத்தினால் நிஷேதம் செய்யப்பட்டிருக்கின்றது. கயிற்றில் தோன்றும் பாம்பைப் போல இது நிஷேதம் செய்யப்பட்டிருக்கின்றது.
வேதத்தில் சிரத்தையற்றவர்கள் இந்த அனுமானத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
வியாசபகவான் இரண்டு அனுமானங்களையும் பிரம்ம சூத்திரத்தில் பயன்படுத்தியுள்ளார். இந்த நூலை படிக்க வருபவர்களுக்கு வேதாந்தத்தின் மீதும், வியாசர் மீதும் சிரத்தை உடையவர்களாக இருப்பார்கள். வைதீக அனுமானத்தை பயன்படுத்தி உபநிஷத் உபதேசங்களான ஜகத் மித்யா, பிரம்ம சத்தியம் ஆகியவற்றை நிலைநாட்டியிருக்கின்றார். லௌகீக அனுமானத்தை பயன்படுத்தி அத்வைதத்தை நிராகரிப்பவர்களின் காரணத்தை நீக்குவதற்கு பயன்படுத்தியிருக்கிறார்.
சூத்திரங்கள் பெரும்பாலும் ஹேதுவாக அமைந்திருக்கும். இந்த நூல் நான்கு அத்தியாயங்களை உடையது. ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பகுதிளும் அதிகரணங்களாக பிhpக்கப்பட்டிருக்கும். இந்த அதிகரணத்தில் சூத்திரங்கள் இருக்கும். முதல் அத்தியாயத்தில் நான்கு பாதங்கள் இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் அதிகரணங்கள் இருக்கும். அந்த அதிகரணத்தை விளக்குவதற்கு ஒன்று அல்லது அதற்கு மேலாக பல சூத்திரங்கள் இருக்கலாம். மொத்தம் 555 சூத்திரங்கள் இருக்கிறது. இவைகள் நான்கு அத்தியாயங்களாக பிரித்து, 16 பகுதிகள், 192 அதிகரணங்கள் இருக்கின்றது.
முதல் நான்கு அத்தியாயங்களைப் படித்தாலே முழு பிரம்ம சூத்திரத்தை படித்ததைப் போலாகும் என்று சம்பிரதாயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே நாம் முதல் நான்கு சூத்திரங்களை மட்டும்தான் பார்க்கப் போகிறோம்.
1. ஸமன்வய அத்தியாயம் – ஒத்துப் போகுதல்
உபநிஷத் வாக்கியங்கள் எல்லாம் பிரம்மன் அத்வைதம் என்ற விஷயத்தில் ஒத்துப் போகின்றன என்பதை உபதேசிக்கும்.
- அவிரோத அத்தியாயம் – விரோதமில்லை; முரண்பாடில்லை
* உபநிஷத்துக்குள் பரஸ்பர வேற்றுமையுடன் இல்லை.
* அத்வைத தத்துவத்திற்கு ஸ்ம்ருதியும் விரோதமில்லை.
* யுக்தி விரோதமும் கிடையாது.
* வேற்று மதங்களின் அத்வைதத்திற்கு எதிரான கருத்துக்களை நிராகரித்து விடுவது
* வேற்று மதங்களின் கருத்துக்களும் தவறானது என்று நிலைநாட்டப்படுகிறது.
- சாதனா அத்தியாயம் – மோட்சத்தை அடைவதற்கான சாதனங்கள் பேசப்படுகிறது.
மோட்சம், சொர்க்கம், பிரம்மலோகம் இவைகளை அடைவதற்கான சாதனங்களை கூறியிருக்கிறார். அந்தரங்க, பகிரங்க சாதனம் என்று இரண்டாக பிரித்து விளக்கி இருக்கிறார். ஸர்வாபேக்ஷ நியாயம் என்ற நியாயத்தை பயன்படுத்தி விளக்கம் கொடுத்திருக்கிறார்.
- பல அத்தியாயம் – பலனைப் பற்றி விளக்கப்படுகிறது.
பிரம்ம வித்யாவினால் அடைகின்ற பலனை விளக்கியிருக்கிறார்.
* ஜீவன் முக்தனாக எப்படி மனநிறைவுடன் இருக்கிறான்.
* விதேக முக்தியைப் பற்றி விளக்கப்படுகிறது.
* கிரம முக்தியைப் பற்றியும் விளக்கப்படுகிறது.
* கர்மத்தினால் அடைகின்ற பலன்களைப் பற்றியும் பேசியிருக்கிறார்.
சூத்திர அமைப்பின் இலக்கணம்.
ஓரு வாக்கியம் சூத்திரமாக இருபபதற்கு 6 நிபந்தனைகள் இருக்க வேண்டும். அவைகள்,
- அல்பாக்ஷரம் – குறைந்த எழுத்துக்கனோடு இருக்க வேண்டும். மிக மிக சுருக்கமாக இருக்க வேண்டும்.
- அஸந்திக்தம் – சந்தேகமில்லாமல் பொருட்கொள்ளும்படி இருக்க வேண்டும். தெளிவாக அர்த்தம் புhpயும்படி இருக்க வேண்டும்.
- ஸாரவத் – பிரயோஜனம் இருக்க வேண்டும். மையக் கருத்து இருக்க வேண்டும்.
- விஸ்வதோமுகம் – பல கோணங்களில் பொருட்கொள்ளும்படி இருக்க வேண்டும்.
- அஸ்தோபம் – அர்த்தமில்லா சொற்கள் இருக்கக்கூடாது. ஸ்துதி இருக்கக்கூடாது.
- அனவத்யம் – தெளிவாக இருக்க வேண்டும். பொருள் குற்றம் இருக்கக்கூடாது. உண்மைக்கு புறம்பாக இருக்கக்கூடாது.
அதிகரண லட்சணம்
ஒவ்வொரு அதிகரணத்திலும் 5 தலைப்புக்கள் இருக்கும். அவைகள்,
1. விஷய: – எதைப்பற்றி சொல்லப்படுகின்றது.
2. ஸம்ஸய: – சந்தேகம்
3. பூர்வபக்ஷம் – சொல்கின்ற கருத்திற்கு எதிராக கேள்வியிருக்க வேண்டும்.
4. உத்தரம் – பூர்வபக்ஷிக்கு சரியான பதிலிருக்க வேண்டும்
5. சங்கதி – சம்பந்தம் – அடுத்தடுத்து வருகின்ற இரண்டு அதிகரணத்திற்கிடையே சம்பந்தம் இருக்க வேண்டும்.
இவைகள் சரியாக இருக்கின்றதா என்பதை சோதிக்க 5வது அதிகரணத்தை எடுத்து இந்த நிபந்தனைகள் பொருந்தி வருகின்றதா என்று பார்க்கலாம்.
விஷய: ஸதேவ ஸோம்ய இதம் அக்ர: ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம் (சா.உ). ஸத் தான் முதலில் இருந்தது.
ஸம்ஸய: இது சேதனமான பிரம்மத்தைக் குறிக்கிறதா அல்லது அசேதனமான மாயையைக் குறிக்கிறதா என்பது சந்தேகம்.
பூர்வபக்ஷம் சாங்கியர்கள் கொள்கை – இது அசேதனமான, ஜடமான பிரகிருதியைத்தான் குறிக்கிறது என்பதாகும்.
உத்தரம் ஸத் என்பது பிரகிருதியும் அல்ல, பிரதானமும் அல்ல பிரம்மன்தான்.
சங்கதி இந்த அதிகரணத்திற்கும் இதற்கு முன்னேயுள்ள அதிகரணத்திற்கும் இடையே உள்ள சம்பந்தம். நான்காவது சூத்தரத்தில் பிரம்மன்தான் முக்கியமாக கூறப்பட்டிருக்கிறது. இந்த அதிகரணத்தில் அதை மறுப்பதால் அந்த மறுப்பை நீக்குவதற்காக இந்த அதிகரணம் எழுதப்பட்டிருக்கிறது.
பாஷ்யம் – உரைநடை விளக்கம்
உபநிஷத், பிரம்மசூத்திரம் போன்ற நூல்களுக்கு எழுதப்பட்ட உரைநடை விளக்கங்களுக்கு பாஷ்யம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. எதற்கு விளக்கம் எழுதப்படுகிறதோ அதற்கு மூலம் என்று பெயராகும். பாஷ்யத்திற்கு விளக்கம் எழுதினால் அதற்கு டீகா என்று பெயர். டீகாவிற்கு விளக்கம் எழுதினால் அதற்கு டிப்பனி என்று பெயர்.
பாஷ்யத்தின் லட்சணம்:
சூத்திரத்தினுடைய அர்த்தமானது சூத்திரத்தில் உள்ள சொற்கள் எந்த வரிசையில் உள்ளதோ அதே வரிசையில் இருக்க வேண்டும். விளக்கத்தில் உள்ள கடினமான சொற்களுக்கு விளக்கம் கொடுத்திருக்க வேண்டும்.
வியாக்யானத்தின் லட்சணம்:
ஒரு ஸ்லோகத்தை எடுத்து விளக்கும் முறைக்கு வியாக்யானம் என்று பெயர். இதில் ஆறு விஷயங்கள் இருக்க வேண்டும்.
- பதஸ்சேதம் – சேர்ந்துள்ள இரண்டு சொற்களை சரியாக பிரிக்க வேண்டும்.
- பதார்த்த உக்தி – ஒவ்வொரு சொல்லுக்கான அர்த்தத்தை சொல்ல வேண்டும்.
- விக்ரஹ – எந்த அர்த்தத்தோ சேர்ந்துள்ளதோ அதே அர்த்தத்தோடு பிரித்த சொற்களுக்கு பொருள் கொடுக்க வேண்டும்.
- வாக்ய யோஜனா – எந்தச்சொல்லை எதனோடு சேர்த்து பொருள் சொல்ல வேண்டும்.
- ஆக்ஷேப: – கொடுக்கப்பட்ட பொருளுக்கு எதிர்க்கருத்து வருகிறதா என்று பார்க்க வேண்டும்.
- சமாதானம் – ஆட்சேபத்திற்கு பதில் கொடுக்க வேண்டும்.
சது சூத்ரி அமைப்பு
நான்கு சூத்திரங்களுடைய அமைப்பு. ஒவ்வொரு சூத்திரமும் ஒரேயொரு அதிகரணத்தை உடையதாக இருக்கும். முதல் சூத்திரம் பிரம்மத்தைப் பற்றிய விசாரம் செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்பதாகும்.
முதல் சூத்திரம்
இது அனுபந்த சதுஷ்டயத்தை பூர்த்தி செய்கிறது. இதற்கு விஷயாமாக இருப்பது பிரம்ம விசாரம். இதற்கு அதிகாரிகள் இருக்கிறார்கள். இதனால் பலனும் அடையப்படுகிறது. இவைகளை நிலைநாட்டி பிரம்ம விசாரம் செய்துதான் ஆக வேண்டும் என்று உறுதியாக கூறுகிறார்.
2வது சூத்திரம் – பிரம்மத்தின் லட்சணம் கூறப்படுகிறது.
3வது சூத்திரம் – பிரம்மத்தை போதிக்கின்ற பிரமாணம் கூறப்படுகிறது
4வது சூத்திரம் – பிரம்ம விசாரம் – பிரம்மன்தான உபநிஷத்தின் மையக்கருத்து.
சது சூத்ரி ஒன்பது வர்ணகமாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒன்பது முக்கிய கருத்துக்கள் இந்த நான்கு சூத்திரத்திற்குள் இருக்கிறது. வர்ணகம் (தலைப்பு) என்பது ஆழமான அர்த்தத்தை விளக்குகின்றது.
- அத்3யாஸ பாஷ்யம்
- அக3தார்த்த2 வர்ணகம் – முதல் சூத்திரம்
- அதி3காரி வர்ணகம் – முதல் சூத்திரம்
- ப்3ரஹ்மன: ஆபாத3 ப்ரஸித்3த4 வர்ணகம் – பிரம்மன் தெரிந்தும், தெரியாமலும் இருக்கின்றது. – முதல் சூத்திரம்
- ப்3ரஹ்ம லக்ஷண வர்ணகம் – 2வது சூத்திரம்
- ப்3ரஹ்மன: ஸர்வக3த வர்ணகம் – பிரம்மன் அனைத்தையும் அறிந்தவர்; – 3வது சூத்திரம்
- ப்3ரஹ்மன: வேத3 ஏக பிரமாண தத்துவ வர்ணகம் – இந்த பிரம்மத்தை வேதம் என்ற ஒரு பிரமாணத்தின் மூலம்தான் அறிந்துக் கொள்ள முடியும். ; – 3வது சூத்திரம்
- ப்3ரஹ்மன: சாஸ்திர தாத்பர்ய தத்துவ வர்ணகம் – உபநிஷத்தின் உபதேசம் ஆத்மஞானத்தை கொடுப்பதுதான் முக்கிய நோக்கம். பிரம்மம் என்ற ஒன்றை விளக்குவதுதான் முக்கிய நோக்கமாக இருக்கிறது. ; – 4வது சூத்திரம்
- ப்3ரஹ்மன: ஞான கம்பியத்வ வர்ணகம் – பிரம்மத்தை ஞானத்தினால் மட்டும்தான் அடைய முடியும். ; – 4வது சூத்திரம்
1.அத்யாஸ பாஷ்ய வர்ணகம்
முகவுரை
- அத்யாஸம்(Illusion) என்ற சொல்லுக்கு காட்சிபிழை என்று பொருட்கொள்ளலாம். கயிற்றில் பாம்பைப் பார்ப்பதுதான் அத்யாஸமாகும்.
- அத்யாஸம் எப்போது ஏற்படும்?
அத்யாஸம் அரைகுறைவான வெளிச்சத்திலோ, மங்கலான வெளிச்சத்திலோதான் ஏற்படும். இதில் இரண்டு அம்சங்கள் உண்டு. ஒன்று சாமான்ய அம்சம், மற்றொன்று விசேஷ அம்சமாகும். இந்த உதாரண வாக்கியத்தில் உள்ள கயிற்றைப் பார்க்கும் போது “இது” என்ற அறிவு சாமான்ய அம்சமாகும். ஏதோவொன்று இருக்கிறது என்பது சாமான்ய அம்சமாகும். இது என்ற அம்சத்தில் கயிறு இருக்கிறது என்பது விசேஷ அம்சமாகும். அத்யாஸத்தினால் சாமான்ய அம்சத்தின் மீது சரியான விசேஷ அம்சத்திற்கு பதிலாக, தவறான விசேஷ அம்சமான பாம்பைப் பார்த்து விடுகிறோம். சாமான்ய அம்சத்தில் தவறான விசேஷ அம்சத்தை பார்ப்பதைத்தான் அத்யாஸம் என்று அழைக்கப்படுகிறது. சாமான்ய அம்சத்தில் தவறே ஏற்படாது. எனவே சாமான்ய அம்சம் சத்யம், விசேஷ அம்சம் மித்யா. இதிலிருந்து அறிந்து கொள்வது, அத்யாஸம் நடக்க வேண்டுமென்றால் சாமான்ய அம்சத்தை பற்றிய சரியான அறிவும், அதேசமயம் விசேஷ அம்சத்தில் அக்ஞானமும் இருக்க வேண்டும். கயிறே இல்லாத இடத்தில் பாம்பைப் பார்ப்பதற்கு மாயத்தோற்றம் என்பதாகும். அத்யாஸம் நடந்த இடத்தில் சரியான விசேஷ அறிவு வந்துவிட்டால் விசேஷ அக்ஞானம் சென்றுவிடும். அதனால் பாம்பு மறைந்து கயிறு காட்சியளிக்கும்.அதேபோல நான் என்ற சொல்லில் சாமான்யமாக நமக்கு தெரிவது பிரம்மன்தான். நான் இருக்கின்றேன், நான் உணர்வுடன் இருக்கின்றேன் என்று சொல்லம்போது நாம் நம்மை அறியாமல் எப்போதும் இருந்துக் கொண்டிருக்கின்ற பிரம்மத்தை நம்மையறியாமல் குறிக்கின்றோம். ஆனால் நம்முடைய விசேஷ ஞானத்தில்தான் தவறு நடந்திருக்கிறது, அத்யாஸம் ஏற்பட்டுள்ளது. நான் அறிவற்றவன், நான் நோயுற்றிருக்கிறேன் என்ற விசேஷ ஞானம் இருக்கின்றது. இது கயிற்றில் பாம்பைப் பார்ப்பது போல உள்ள தவறான விசேஷ ஞானம். நம்மை பற்றி என்னவெல்லாம் சொல்கின்றோமோ அவைகளெல்லாம் அத்யாஸம். நம் உண்மை ஸ்வரூபத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டதாகும். இவைகளெல்லாம் ஸ்தூல, சூட்சும, காரண சரீரத்தின் தர்மங்கள், அம்சங்கள் ஆகும். பாம்பை எப்படி தவறென்று நீக்குகின்றோமோ அதேபோல மூன்று சரீரங்களையும் நீக்கி உண்மையான விசேஷ ஞானமான பிரம்மன் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.நான் சம்சாரி என்ற வாக்கியத்தில் நான் என்பது சாpயான சாமான்ய அம்சம், சம்சாரி என்பது தவறான விசேஷ ஞானம். சாpயான விசேஷ அம்சமான பிரம்மமாக தன்னை உணர்ந்து கொள்ள வேண்டும். கயிறு என்ற சரியான விசேஷஞானம் வருவதும், தவறான விசேஷஞானம் செல்வதும் ஒரே நேரத்தில் நடக்கும். அதேபோல பிரம்மன் என்ற சரியான விசேஷஞானம் வந்தவுடன் சம்சாரி என்ற தவறான விசேஷஞானம் அதே நேரத்தில் சென்றுவிடும். மூன்று சரீரங்களில் உள்ள அபிமானம் சென்றுவிடும்.
விசாரம்:
பகவான் சங்கரர் அத்யாஸத்தை ஏன் முகவுரையாக கொடுத்துள்ளார் என்பது விசாரம் செய்யப்படுகிறது.
கேள்வி பிரம்ம சூத்திரம் அவசியமில்லை. அதனால் எழுத வேண்டிய அவசியமில்லை.
பதில் முதல் சூத்திரத்தின் விளக்கம்தான் இதற்கு பதிலாகும்.
கேள்வி விசாரம் செய்வதினால் எந்தப் பலனும் அடையப் போவதில்லை. மேலும் நிர்குண பிரம்மத்தைப் பற்றிய அறிவைக் கொடுத்து சம்சாரத்தை நீக்குகிறேன் என்று சொன்னால் அந்த நிர்குண பிரம்மமே கிடையாது என்று நான் சொல்கிறேன். எனவே அதை விளக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த விசாரம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
பதில் இந்த நிர்குண பிரம்ம அறிவை அடைந்து மோட்சத்தை அடைய விரும்புகின்ற தகுதியுடைய அதிகாரிகள் இருக்கின்றார்கள். இதை முதல் சூத்திரத்திலேயே வியாச பகவான் நிலைநாட்டியிருக்கிறார்.
அத்யாஸ பாஷ்யமானது அத்யாஸத்தை நிலைநாட்டுவதால் பலனையும், அறிவையும் அடைவோம். அத்யாஸத்திற்கும் மோட்ச பலன் அடைவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்பதும் விளக்கப்படுகிறது. அத்யாஸம் என்பது காரணத்தை நிலை நாட்டுகிறது. இது சாத்தியமான மோட்சத்தைக் கொடுக்கிறது.
பொதுவாக ஞானத்தினுடைய தன்மையானது இருப்பதைப் காட்டிக் கொடுப்பதாகும். ஞானம் எதையம் உற்பத்தி செய்யாது, எதையுமே அழித்தும் விடாது. உதாரணமாக அறையில் உள்ள பாம்பை பார்க்கும் போது பாம்பு இருக்கிறது என்ற ஞானம் வந்துவிட்டது. அந்த ஞானமே பாம்பை விரட்டாது. ஏதாவது செய்துதான் அதை விரட்ட முடியும். மங்கலான வெளிச்சத்தில் கயிற்றில் தோன்றும் பாம்பானது கயிறு என்ற ஞானம் வந்தவுடன் மறைந்து விடுகிறது. இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது பொய்யாக காட்சியளிக்கும் மித்யா வஸ்து ஞானம் வந்தவுடன் சென்றுவிடும் என்பதாகும். இங்கே ஞானம் கயிற்றில் விசேஷ அறியாமையினால் தோன்றிய பாம்பை நீக்குகிறது. அதேபோல பந்தம் என்பதை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த பந்தம் உண்மையாக இருந்துவிட்டால் அதை ஞானத்தால் நீக்க முடியாது. ஆனால் மித்யாவாக, பொய்யாக இருந்தால் ஞானத்தினாலே நீக்கிவிடலாம். இது தெரியாமல் இருப்பதால் நாம் சம்சாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே பந்தம் என்பது மித்யா என்று நிலைநாட்ட வேண்டிய அவசியமாகிறது. பந்தம் என்பது அத்யாஸம் என்று நிலைநாட்டினால் அதை ஞானத்தினால் நீக்கமுடியும்.
சம்சாரம் என்பது என்ன என்பதைப் பார்ப்போம். உடலுக்கு வரும் கஷ்டங்கள் உடலுக்குத்தான் துன்பத்தைத் தருகிறது. இது சம்சாரமல்ல. மனதில் அனுபவிக்கின்ற நிறைவின்மை, மனம் அனுபவிக்கின்ற வேதனைகள், பயம், க்ரோதம், பொறாமை போன்றவைகள்தான் சம்சாரம். இந்த சம்சாரம் யாவும் மித்யாவாகும். இது மித்யாவாக இருப்பதால் அதை ஞானத்தினாலேயே நீக்கமுடியும்.
கேள்வி பந்தம் இல்லையென்று சொல்கிறீர்கள். இல்லாததை நீக்குவதற்கு ஞானம் தேவையில்லை. அதனால் பொய்யான பந்தத்தினால் எந்தவித கஷ்டமும் ஏற்படாது. எனவே எதற்கு பொய்யான பந்தத்தை போக்குவதற்கு முயற்சி எடுக்கிறீர்கள். பொய்யான கோபம் நம்மை பாதிக்காது. அதேபோல பொய்யான பந்தமும் நம்மை பாதிக்காத போது அதை நீக்குவதற்கு ஏன் முயற்சி செய்ய வேண்டும்.
பதில் உண்மையான பாம்பைப் பார்த்தால் எந்தளவு பயம் ஏற்படுகிறதோ, அதேயளவு பயம் பொய்யான பாம்பைக் கயிற்றில் பார்க்கும் போது ஏற்படுகிறது. கயிற்றின் இருப்பு பாம்புக்குப் போயிருக்கிறது. எனவே கயிறுதான் உண்மையில் பயத்தைக் கொடுக்கிறது. கயிற்றின் உண்மைத்தன்மையை புரிந்துக்கொண்டால் பாம்பின் இருப்புக் கயிற்றுக்கு சென்றுவிடுவதால் பயம் சென்றுவிடுகிறது. அதேமாதிரி மித்யாவாக இருக்கின்ற ஜகத் நிமித்தமாக நமக்கு பயம் ஏற்படுகிறது. சம்சார தாபம் ஏற்படுகிறது. இந்த உலகத்தின் மித்யத்தன்மையை உணர்ந்துக் கொள்ளாததனால் நாம் சம்சாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த உலகம் பொய் என்ற அறிவை அடைந்வுடன் மனதில் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற சம்சாரம் சென்றுவிடுகிறது. எனவே இந்த உலகம் மித்யா என்பதை நிலைநாட்டு வேண்டுமென்றால் அத்யாஸத்தை நிலைநாட்ட வேண்டும். ஞானத்தினால் ஒன்று செல்கின்றதென்றால் அது பொய்யாகத்தான் இருக்க வேண்டும்.
கேள்வி நிர்குண பிரம்மன் என்பதே கிடையாது. ஈஸ்வரன் ஜகத்துக்கு காரணம். காரண-காரிய தத்துவத்தில் காரணத்தின் குணம் காரியத்தில் இருக்கிறது. எனவே ஈஸ்வரன் ஜகத்துக்கு காரணமாக இருப்பதால் சகுண பிரம்மன்தான் இருக்கமுடியும்.
பதில் இந்த உலகம் அத்யாஸத்தினால் தோன்றிக் கொண்டிருக்கின்றது. பிரம்மன் நிர்குணமாக இருந்துக் கொண்டிருக்கிறது. உலகத்தின் தன்மைகளை பிரம்மத்தின் மீது ஏற்றி வைத்திருக்கின்றோம். பிரம்மன் நிர்குணமாக இருந்துக் கொண்டு உலகம் சகுணமாக இருப்பதற்குக் காரணமாக இருக்கின்றது. இந்த பிரம்மத்தின் மீது உலகம் ஏற்றி வைத்திருப்பதனால் பிரம்மன் சகுணத்திற்கு அதிஷ்டானமாக இருக்கிறது. எனவே நிர்குணத்தை நிலைநாட்ட வேண்டுமென்றாலும் அத்யாஸத்தை நிலைநாட்ட வேண்டியிருக்கிறது. எந்தவொரு அத்யாஸத்திலும் விசேஷ அக்ஞானம் இருக்க வேண்டும், சாமான்ய ஞானமும் இருக்க வேண்டும்.
கேள்வி தெரிகின்ற பிரம்மத்தைப் பற்றி எதற்கு விசாரம் செய்ய வேண்டும்?
பதில் பிரம்மத்தைப் பற்றிய விசேஷ அக்ஞானம் இருப்பதனால்தான் விசாரம் செய்யப்படுகிறது. பிரம்மத்தை நிலைநாட்ட வேண்டுமென்றாலும் அத்யாஸத்தை நிலைநாட்ட வேண்டும். அதாவது விசேஷ அக்ஞானத்தை நிலைநாட்ட வேண்டும். எனவே விசாரத்தை ஆரம்பிக்கலாம் என்று கூறப்படுகிறது.
அத்யாஸ பாஷ்யத்தில் ஆறு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது. அவைகள்,
- அத்யாஸத்தைப் பற்றிய சந்தேகம்
- சந்தேகத்திற்கான பதில்
- அத்யாஸ லட்சணம்
- அத்யாஸ நடப்பதற்கான வாய்ப்பு
- அத்யாஸம் நடந்திருக்கின்றது என்று அறிய உதவும் பிரமாணம்
- முடிவுரை
ஆகியவைகளாகும்.
- 1.அத்யாஸத்தைப் பற்றிய சந்தேகம்
ஆத்மாவிற்கும் அனாத்மாவிற்கும் இடையே உள்ள அத்யாஸத்தைப் பற்றிய விளக்கம் கூறப்படுகிறது. ஆத்மாவென்ற கயிற்றில் அனாத்மா என்ற பாம்பை ஏற்றி வைத்திருப்பதைப் பற்றி விளக்கப்படுகிறது.
ஆத்மாவுக்கும் அனாத்மாவுக்குமிடையே அத்யாஸம் நடந்திருக்கிறது. நான் என்ற ஆத்மாவின் மீது அனாத்மாவான மூன்று சரீரங்கள் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. நான் என்ற சொல் உடலான அனாத்மாவை குறிக்கிறது. என்னுடையது என்பது உலக அனாத்மாவைக் குறிக்கிறது. உடலையும் சில சமயங்களில் என்னுடையது என்றும் குறிக்கிறோம். உதாரணமாக என்னுடைய உடல் சுகவீனமாக இருக்கிறது என்று சொல்லும் போது என்னுடையது என்பது உடலைக் குறிக்கிறது. ஆத்மாவின் மீது ஜடமான உடலானது ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. ஞானத்தினால் உடல் நானல்ல என்று உணர்ந்தவுடன் சம்சாரம் நீங்கிவிடுகிறது. உடல் தர்மங்கள் ஆத்மாவின் தர்மங்கள் அல்ல என்ற உறுதியான அறிவு அடையப்படுகிறது.
ஆத்ம-அனாத்மா அத்யாஸம் சம்பவிக்கவே முடியாது. ஆத்மா எந்த அளவுக்கு சத்யமோ அந்த அளவுக்கு இந்த உடலும் சத்யமானது. உடல் ஆத்மாவோடு ஒட்டியிருப்பதால் ஏதாவது கர்மம் செய்துதான் அதனை நீக்கிவிட வேண்டும். இவையிரண்டும் சம ஸத்தாவுடன் இருக்கிறது. அறிவை அடைந்து நீக்கிவிட முடியாது. அத்யாஸம் இரண்டு அனாத்மாக்களிடையேதான் நடக்கும். பார்ப்பவனுக்கும், பார்க்கப்படுகின்ற பொருளுக்கும் இடையே அத்யாஸம் நடக்கவே நடக்காது. இதை கீழ்கண்ட 5 காரணங்களால் நிரூபிக்கப்படுகிறது.
- விரோதாத்– ஆத்மா-அனாத்மாவிடையே இயல்பாகவே விரோதம் இருக்கிறது. இவையிரண்டும் சேர்ந்திருக்கவே முடியாது. இருள், ஒளி இவையிரண்டுக்கும் இடையே அத்யாஸம் நடைபெற முடியாது. இருள் மீது ஒளியோ அல்லது ஒளி மீது இருளோ அத்யாஸம் நடக்காது. அதுபோல ஆத்மாவிடத்தில் அனாத்மா அத்யாஸம் செய்ய முடியாது. இரண்டும் சத்யமாக இருப்பதால் சேர்ந்தேயிருக்கிறது. இந்த விரோதம் மூன்று வகையாக இருக்கிறது.
1.1. இயல்பாக விரோதமாக இருத்தல். (உ-ம்) எலி-பூனை, நான்,நீ.அது என்று சுட்டிக் காட்டுகின்ற பொருட்கள் சுபாவமாகவே விரோதமாக இருக்கிறது.
1.2. ஆத்மா சாட்சி; அறிபவன், அனாத்மா அறியப்படுவது என்ற வேற்றுமை இருத்தல். ஆத்மாவால் பிரகாசப்படுத்துகின்ற அனாத்மா எப்படி என்னுள்ளே செல்லும். நான் என்ற சொல்லுக்குள் போக முடியும்?
1.3. விவகாரத்தின் அடிப்படையிலும் விரோதம் இருக்கிறது. நான் கர்த்தா, நான் போக்தா என்ற விவகாரம் இருக்கிறது. நான் என்கின்ற பிரம்மன் வேறுபட்டிருக்கிறது. எனவே கர்த்தாவும், பிரம்மமும் வெவ்வேறாகத்தான் இருக்கிறது. கர்த்தாவான நான் ஏதாவது கர்மத்தை செய்துதான் பிரம்மனாக உயர முடியும்.
இந்த காரணங்களால் அத்யாஸம் என்பது நடக்கவே முடியாது.
- பிரத்யக்ஷ விஷயத்தில்தான் அத்யாஸம் நடைபெறும். பார்க்கப்படும் பொருட்களுக்குள்தான் அத்யாஸம் நடைபெறும். ஆத்மா அபிரத்யக்ஷமாக இருப்பதனால் அத்யாஸம் நடைபெறவே முடியாது.
- ஆத்மா ஸ்வயம் பிரகாசமாக இருப்பதனால் அத்யாஸம் நடைபெறாது. ஆத்மாவை எதுவும் மறைக்க முடியாது.
- ஸாத்3ருஷ்யம் அபா4வாத்
சாதிருஷ்யம் இல்லாததால் அத்யாஸம் நடைபெறாது. சாதிருஷ்யம் என்பது ஒன்றைப் போல் வேறொன்று இருப்பதாகும். கயிற்றில் பாம்பைப் பார்க்கக் காரணம் இரண்டும் ஒரேமாதிரியாக இருக்கின்றது. எனவே அங்கே அத்யாஸம் நடந்திருக்கிறது. ஆத்மாவும், அனாத்மாவும் ஒரேமாதிரியாக இல்லாததால் அத்யாஸம் நடக்காது.
அவயவ சாத்ருஷ்யம் – உடலுறுப்புக்கள் ஒரேமாதிரியாக இருத்தல். நாட்டெருமை, காட்டெருமை உடலமைப்பில் ஒரேமாதிரியாக இருப்பதால் இரண்டும் ஒரேமாதிரியாக இருக்கிறது என்று சொல்லலாம்.
குண சாத்ருஷ்யம் – குணத்தின் அடிப்படையில் ஒற்றுமை இருந்தாலும் ஒரேமாதிரியாக இருக்கிறது என்று சொல்லலாம். சிங்கத்தைப் போலிருக்கிறான் அவன் என்ற வாக்கியத்தில் குணத்தின் ஒற்றுமையைக் குறிக்கிறது. ஆனால் ஆத்மா-அனாத்மாவிடத்தில் சாத்ருஷ்யமும் இல்லாததால் அத்யாஸமே நடைபெறாது. அனாத்மா அவயவங்களை உடையது, ஆத்மா அவயவங்களற்றது என்பதாலும், குணங்களுடன் கூடிய அனாத்மாவுக்கும், ஆத்மா நிர்குணமாக இருப்பதாலும் இவைகளிடத்தில் அத்யாஸம் நடைபெறாது.
- பூர்வ ப்4ரமா ஜன்ய ஸம்ஸ்காரஹ:
அத்யாஸம் நடைபெறுவதற்கு ஏற்கனவே அடைந்த ஞானத்தினால் மனதில் பதிந்திருக்கும். இந்த மனப்பதிவுகள் அத்யாஸத்திற்கு அவசியம். இந்த வகையான மனப்பதிவு ஆத்மா-அனாத்மா விஷயத்தில் கிடையாது. கயிற்றில் தோன்றிய பாம்பானது நம்மால் ஏற்கனவே பார்க்கப்பட்ட மனப்பதிவினால் காட்சியளிக்கிறது. பாம்பைப் பார்க்காதவனால் கயிற்றைப் பாம்பாக பார்க்க முடியாது. அதேமாதிரி உண்மையான அனாத்மாவை பார்த்திருந்தால்தான் ஆத்மா மீது அத்யாஸம் செய்ய முடியும். அனாத்மா மித்யாவென்று சொல்கின்ற உங்களால் எப்படி அத்யாஸம் நடந்திருக்கிறது என்று சொல்ல முடியும்?
மேற்கூறிய 5 காரணங்களால் அனாத்மாவான 3 சரீரங்களை ஆத்மா மீது ஏற்றி வைக்க முடியாது. இவையிரண்டுக்குமிடைய அத்யாஸம் நடைபெறவே முடியாது. உடலும், ஆத்மாவும் சத்யமாக இருப்பதால் ஏதாவது கர்மத்தை செய்துதான் உடலைவிட்டு வேறொரு உயர்ந்த நிலைக்கு சென்று மோட்சத்தை அடைய முடியும். அதாவது பிரம்மலோகத்தையோ, வைகுண்டத்தையோ, சிவலோகத்தையோ அடைந்து அங்கிருந்துதான் மோட்சத்தை அடைய முடியும். இவையிரண்டும் கர்ம சம்பந்தத்தினால் ஒன்று சேர்ந்திருக்கிறது. எனவே கர்மகாண்டம் மூலமாகவே மோட்சத்தை அடையலாம். ஞானகாண்டமே தேவையில்லை, அதை விசாரம் செய்யவும் தேவையில்லை.
- சந்தேகத்திற்கான பதில்
இந்த அத்யாஸம் யுக்திக்கு பொருந்தி வரவில்லையே என்றால், நீ சொல்வது சரிதான். உதாரணமாக இந்த உலகத்தை எந்த தர்க்க தோஷம் இல்லாமல் விளக்க முடியாது. ஏனென்றால் அது அனிர்வசனீயம். இதை விளக்க முடிந்தால் அது சத்யமாகிவிடும். இதுவே அத்வைதத்திற்கு உதவிகரமாக இருக்கிறது. இந்த அத்யாஸம் தர்க்கத்திற்கப்பாற்பட்டு இருப்பதனால் அது அப்படி இருப்பதுதான் அதன் இயல்பான தன்மையாகும்.இந்த அத்யாஸம் அனுபவத்திற்கு வரவில்லையென்று கூறமுடியாது. இது அனுபவத்தில் இருக்கிறது. அக்ஞானியின் அனுபவத்தில் கர்த்தா, போக்தாவாகவும், ஞானி அகர்த்தா, அபோக்தாவாகவும் இருக்கிறார்கள். ஞானம் அடைந்தவனுக்குத்தான் இது அனுபவத்திற்கு வரும். ஆழ்ந்த உறக்கத்தில் நாம் அனுபவத்தை அடைகிறோம். இந்த நிலையில் சரீர அபிமானம் இல்லாததால் துயரமில்லாமல் சுகத்துடன் இருக்கிறோம். எனவே அபாவாத் என்று சொல்லவே முடியாது. உதாரணமாக ஒரு பொருளை அது என்றும், இது என்றும் சொல்கிறோம். ஆனால் நாம் நான் என்ற சொல்லால் ஸ்தூல உடலையும், சூட்சும உடலையும் மாற்றி, மாற்றி சொல்கிறோம். உண்மையில் நான் என்ற சொல் ஒன்றை மட்டும்தான் குறிக்க வேண்டும். இந்த உடல் விஷயத்தில் நமக்கு குழப்பம் இருக்கிறது. எனவே அத்யாஸம் அனுபவத்திற்கு வரவில்லையென்று சொல்வது தவறு. இதிலிருந்து அத்யாஸம் விளங்கிக் கொண்டிருக்கிறது என்பது புரிகிறது.
அத்யாஸம் நடைபெற காரணமில்லையே என்ற காரணத்தினால் இதை மறுக்கிறாய். அதற்கு நீ கூறிய 5 காரணங்களுக்கு பதிலளிக்கப்படுகிறது.
- விரோதத்துடன் இருக்கின்ற இரண்டு பொருட்களுக்கிடையே அத்யாஸம் நடைபெறுவதுதான் இயல்பாகும். கயிறும், பாம்பும் ஒன்றுக்கொன்று விரோதமாக இருப்பதனால்தான் அத்யாஸம் நடக்கிறது.
- அத்யாஸம் நடைபெறுவதற்கு பிரத்யக்ஷம் தேவையில்லை. நமக்கு ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டிய அவசியமுமில்லை. அது விளங்கிக் கொண்டிருந்தால் போதும் என்று பதிலளிக்கப்படுகிறது.
- தெரியாத விஷயத்தில் தவறு நடைபெற முடியாது ஆனால் ஆத்மா எபிபொழுதும் விளங்கிக் கொண்டிருக்கிறது. எனவே ஆத்ம விஷயத்தில் அத்யாஸம் நடைபெற முடியாது என்று சொல்ல முடியாது. ஆத்மா தெரிந்தும், தெரியாமலும் இருக்கிறது. ஆத்ம விஷயத்தில் சாமான்ய அறிவு இருக்கிறது. ஆனால் எப்படி இருக்கிறேன்; எந்த தன்மையுடன் இருக்கிறது என்கின்ற விசேஷ ஞானம் இல்லாத காரணத்தால் ஆத்மாவின் மீது சரீரங்கள் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.
- ஸாதிருஷ்யம் அபாவாத் என்ற காரணத்தால் அத்யாஸம் நடைபெற முடியாது என்று சொல்கிறாய். கயிற்றை பாம்பாக நினைப்பதற்கு இரண்டும் பார்ப்பதற்கு ஒரேமாதிரியான தன்மையுடையதாக இருக்க வேண்டும். ஆனால் ஆத்மாவும், அனாத்மாவும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் போது எப்படி தவறாக புரிந்து கொள்ள முடியும். பொதுவாக பார்க்கும் போது இது சரிதான். ஆனால் இந்த விஷயத்தில் சில விதிவிலக்குகள் உண்டு. உதாரணமாக ஆகாசத்தில் நீல வர்ணத்தை ஏற்றி வைத்துப் பார்க்கிறோம். உருவமில்லா பொருளில் எப்படி வர்ணத்தை ஏற்றி வைக்க முடியும்! இங்கு ஸாத்ருஷயம் இல்லை. அதேபோல ஆத்ம-அனாத்மா விஷயத்தில் இருக்கிறது. வறண்ட நிலத்தில் கானல் நீரை பார்ப்பது இன்னொரு உதாரணம். சாதிருஷ்யம் இல்லாத போதிலும் இங்கே அத்யாஸம் நடந்திருக்கிறது.
- பூர்வ ப்4ரமா ஜன்ய ஸம்ஸ்காரஹ: பொய்யான அனாத்மாவை உண்மையாக முன்பே பார்த்திருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை. அதனால் ஆத்ம விஷயத்தில் அத்யாஸம் நடைபெற வாய்ப்பே இல்லை. ஏற்கனவே உண்மையான பாம்பைப் பார்த்ததினால் கயிற்றில் பாம்பை பார்க்க முடிந்தது. ஏற்கனவே பார்த்த பொய்யான ஒன்றின் ஸம்ஸ்காரம் நம் மனதில் இருக்கிறது. உதாரணமாக இருட்டில் பார்த்த வழிகாட்டி தூணை பேய் என்று பயந்த சூழ்நிலையில் கற்பனையில் உருவாக்கி வைத்திருக்கும் பேய் வழிகாட்டிதூணில் ஏற்றி வைக்க முடிகிறது. இந்த அத்யாஸம் அனாதியானது. அக்ஞானம் அனாதியாக இருப்பதனால் இதிலிருந்து தோன்றிய அத்யாஸமும் அனாதியாக இருக்கிறது.
பூ.ப இந்த உடலினுடைய தன்மையாவது ஏற்றி வைக்கப்பட்டிருக்கலாமல்லவா?
பதில் உடலையும், அதனுடைய தர்மங்களையும் சேர்த்துத்தான் ஏற்றி வைக்க முடியும்.
3.அத்யாஸ லட்சணம்
நான்கு லட்சணங்கள் கொடுக்கப்படுகிறது. அவைகள்,
- ஸ்மிருதி ரூபஹ – ஞாபகத்தைப் போல. கயிற்றில் தோன்றும் பாம்பு ஞாபகத்தில் உள்ளதை போன்றது.
- பரத்ர – வேறிடத்தில் (கயிற்றில்)
- பூர்வ த்3ருஷ்டா – ஏற்கனவே பார்த்தது. (பாம்பு)
- அவபா4ஸக – தோற்றம்; காட்சி
லட்சணம்-1 (ஸ்மிருதி ரூபஹ)
* சம்ஸ்கார ஜன்யம் : ஏற்கனவே பார்த்தவொன்று மனதில் பதிவாகியிருந்தால் தான் நினைவுக்கு கொண்டு வரமுடியும்.
* பிரமாண அஜன்யம் : நாம் ஒன்றை நினைவுக்கு கொண்டுவர எந்த பிரமாணத்தையும் பயன்படுத்தியிருக்க மாட்டோம். கயிற்றில் தோன்றிய பாம்பு நம் நினைவகத்திலிருந்துதான் வந்திருக்க வேண்டும்.
* தோஷ ஜன்யவாத் : பாம்பைப் பார்க்கும்போது பிரமாணத்தை தவறாக பயன்படுத்தி இருப்போம். இது நம் சம்ஸகாரத்திலிருந்து வந்திருப்பது, அதிஷ்டானத்தைப் பற்றிய சாமான்ய ஞானத்தினால் வருவது, அது வெளியே இருப்பது போல தோன்றுவது.
லட்சணம்–2 (பரத்ர)
அதஸ்மின் தத் புத்தி:
அதஸ்மின் – அதில்லாத இடத்தில்
தத் புத்தி – அது இருப்பதாக பார்ப்பது, நினைப்பது
நான் ஒன்றைப் பார்த்தேன் என்று சொல்லும் போது எதைப் பார்த்தேன், எங்குப் பார்த்தேன் என்ற கேள்வி எழுகின்றது. எதைப் பார்த்தாய் என்ற கேள்விக்கு பாம்பின் உருவத்தைப் பார்த்தேன் என்றும், எங்குப் பார்த்தாய் என்று கேட்டால் கயிற்றில் பார்த்தேன் என்று பதில் சொல்வோம். எனவே அதஸ்மின் – கயிற்றில், தத் புத்தி – பாம்பைப் பார்த்தல்.
லட்சணம்-3 (பூர்வ த்3ருஷ்டா)
ஸத்யாநிருத மிதுனீ கரணம்
ஸத்ய அநிருத – உண்மை, பொய்
மிதனீ கரணம் – ஒன்றோடொன்று கலத்தல்
உண்மையும், பொய்யும் கலந்து விட்டோமேயானால் அதுவே அத்யாஸம். உண்மையான கயிற்றையும், பொய்யான பாம்பையும் கலந்து பார்க்கின்றோம்.
லட்சணம்-4 (அவபா4ஸக)
மித்யா ப்ரத்யய ரூபஹ – பொய்யான அறிவு வடிவம்
ப்ரத்யயம் – மனதில் தோன்கின்ற எண்ணம், அறிவு
பாம்பு என்ற அறிவிருக்கிறது, ஆனால் உண்மையில் பாம்பில்லை. இல்லாதவொன்று இருப்பது போன்ற எண்ணம் மனதில் தோன்றுவது.
விதவிதமான அத்யாஸங்கள் (பகவான் சங்கரர் பாஷ்யத்தில் இது குறிப்பிடவில்லை)
- அனாதி அத்யாஸம் (அ) காரண அத்யாஸம்
பிரம்மம் எப்போது தோன்றியது என்ற கேள்விக்கு தெரியாது என்று சொல்லிவிட்டு அது அனாதி என்று பதில் சொல்லி விடுவோம். அதேபோல மாயையும் அனாதி என்று சொல்லி விடலாம். இந்த மாயையை பிரம்மத்தில் ஏற்றிவைத்து அதன் தன்மையை பிரம்மத்திற்கு கொடுத்துவிட்டோம். இந்த அத்யாஸமும் அனாதி என்றாகி விடுகிறது. இதையே அனாதி அத்யாஸம் என்று அழைக்கப்படுகிறது.
- ஸாதி அத்யாஸம் (அ) காரிய அத்யாஸம்
இந்த அத்யாஸத்திற்கு தோற்றமுண்டு. இந்த நேரத்தில்தான் அத்யாஸம் ஏற்பட்டது என்றும், இந்தக் காலத்தில்தான் அத்யாஸம் நடைபெற்றது என்றும் கூறிவிடலாம். இந்த ஸ்தூல சரீரமும் இந்த வகையான அத்யாஸத்தில் சேர்த்துவிடலாம்.
- தாதா3த்மிய அத்யாஸம் (அ) த3ர்மி அத்யாஸம்
சத்யமாக இருக்கின்ற ஒன்றின் மீது வேறொன்றை பார்ப்பது. கயிறு என்றவொன்றில் பாம்பு என்ற வேறொன்றை பார்ப்பது இதற்கு உதாரணமாகும்.
- ஸம்ஸர்க3அத்யாஸம் (அ) த3ர்ம அத்யாஸம்
ஸபடிகத்தின் பக்கத்திலுள்ள சிவப்பு மலர், தனது சிவப்பு நிறத்தை பொய்யாக ஸ்படிகத்திற்கு கொடுத்துவிடுவதால் அதுவும் சிவப்பாக தோன்றுகிறது. இங்கே மலரின் ஒரு தன்மையை மட்டும் ஸ்படிகத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.
- அர்த்த அத்யாஸம்
கயிறு-பாம்பு அத்யாஸத்தில், வெளியே தெரிகின்ற பாம்பு அர்த்த அத்யாஸமாகும்.
- ஞான அத்யாஸம்
பாம்பைப் பற்றிய எண்ணத்திற்கு ஞானாத்யாஸம் என்று பெயர்.
- ஸோபாதீக அத்யாஸம்
இந்த அத்யாஸம் நடைபெறுவதற்கு பார்க்கின்ற பொருளுக்கு பக்கத்தில் வேறொரு பொருள் இருக்க வேண்டும். (உ-ம்) ஸ்படிகத்திற்கு பக்கத்தில் மலர் இருந்தால்தான் இந்த அத்யாஸம் ஏற்படும்
- நிரூபாதி3க3அத்யாஸம்
கயிற்றை பாம்பாக பார்ப்பதற்கு வேறொரு பொருளோ, வேறெந்த நிபந்தனைகள் இல்லாமல் ஏற்படுவதை இவ்வாறு அழைக்கப்படுகிறது.
சில அத்யாஸத்தில் ஞானம் வந்தவுடன் அனுபவம் சென்றுவிடும். உதாரணம்: கயிறு-பாம்பு. சில அத்யாஸத்தில் ஞானம் வந்தவுடன் அனுபவம் இருக்கும். ஆனால் உண்மையென்ற புத்தி சென்றுவிடும். உதாரணம் கானல் நீர். அதேபோல பிரம்மஞானம் வந்தாலும் உலகம் மறைந்து விடாது. ஆனால் அது பொய்யானது என்ற புத்தியுடன் இருப்போம்.
க்2யாதி வாதம்
நாம் செய்கின்ற தவறு எப்படிபட்டது என்பதை விளக்குகின்ற முறையே க்யாதிவாதமாகும். கயிற்றை பாம்பாக பார்ப்பதுதான் க்யாதி என்ற கூறலாம். இந்த தவறின் தன்மை என்ன என்பதில் பல கருத்துக்கள் வந்துவிட்டது. ஐந்துவிதமான க்யாதி வாதங்கள் உண்டு. இவைகளில் முதல் நான்கு தவறான கருத்துக்களை உடையது. இறுதியான ஒன்றுதான் சரியானது. சரியான முறையில் தவறை விளக்கினால்தான் சரியான நீக்கும் முறையை கண்டுபிடிக்க முடியும்.
- க்ஷணிக விக்ஞானவாதியின் வாதம்:
இதை ஆத்மக்யாதி என்றும் அழைக்கப்படுகிறது. வெளியே காட்சியளிக்கின்ற பொருட்கள் யாவும் நம்முடைய எண்ணங்கள்தான். மனதில் உள்ள எண்ணங்கள்தான் சத்யமானது. க்ஷணத்திற்கு க்ஷணம் தோன்றி மறைகின்ற எண்ணங்கள்தான் சத்யமானது. கயிறு-பாம்பு தவற்றில் இரண்டுமே தவறு என்று கூறுகிறான். வெளியே பார்ப்பதாக சொல்வது தப்பு. எல்லாமே மனதில் எண்ணங்களாக இருக்கிறது.
- சூன்யவாதம்.
அஸத்க்யாதி என்பது மற்றொரு பெயர். இல்லாத கயிற்றில் இல்லாத பாம்பைப் பார்க்கிறாய். எல்லாம் சூன்யமாக இருப்பதால் இந்த தவறு நடக்கவில்லை. இல்லாததற்கு எப்படி கயிறு, பாம்பு என்ற அடைமொழி கூறமுடியும்.
- அக்யாதி
ஏற்கனவே பார்த்த பாம்பைத்தான் இப்பொழுது கயிற்றில் பார்க்கிறாய். எங்கே பார்த்தாயோ அந்த தேச, காலம் இப்போது மாறியிருப்பதால் தவறு நடந்திருக்கிறது. பாம்பு சத்யம் என்பதும் தவறானது.
- அன்யதா வாதம்
உண்மையான பாம்புதான் பார்க்கப்படுகிறது. ஸமிருதி அல்லது பிரத்யக்ஷம் எது என்பதில்தான் தவறு நடந்திருக்கிறது. ஏதோ விளக்க முடியாத பிரத்யக்ஷத்தினால் பாம்பு தோன்றியிருக்கிறது.
- அனிர்வசனீய வாதம் – சரியான க்யாதிவாதம்
அந்த இடத்தில் ஸத்திற்கும், அஸத்திற்கும் வேறானவொன்று காட்சியளிக்கிறது. இருக்கிறது என்றோ இல்லையென்றோ சொல்லா முடியாததாக இருப்பதனால் இதை அனிர்வசனீயம் என்று கூறப்படுகிறது. மித்யா ஸ்ருஷ்டிதான் கயிற்றில் தோன்றும் பாம்பு. இது நம்மால் உருவாக்கப்பட்டதாகும். நாம் உருவாக்கிய பாம்பை நம்மால்தான் நீக்கமுடியும். வேறு யாராலும் விரட்டியடிக்க முடியாது. மனதில் உருவாகி இருப்பதை நாம்தான் அழிக்க வேண்டும், வேறுயாரும் அதை செய்ய முடியாது.
4.ஸம்பாவனா: அத்யாஸ வாய்ப்பு
- அக்ஞானம் – முழுமையாக ஒன்றும் தெரியாத நிலை
- விபரீத ஞானம் – அறியாமை நீக்கி தவறான அறிவை அடைந்திருத்தல்
- சம்யக் ஞானம் – அறியாமை நீக்கி சரியான அறிவை அடைந்திருத்தல்
- ஸம்பாவனா – இருப்பதற்கு வாய்ப்பு
- சரியான அறிவை அடைதல்
இதுவே ஒன்றைப் பற்றிய சரியான அறிவை அடையும் வழிமுறை. இதை ஆத்மஞானத்தை அடையும் விஷயத்தில் பொருத்திப் பார்ப்போம்.
- ஆத்மாவைப் பற்றிய அறியாமை
- உடல்தான் ஆத்மா என்ற தவறான எண்ணத்தை அடைதல்
- ஆத்ம விசாரம் செய்யும்போது உடலுக்கப்பால் நான் என்கின்ற ஆத்மா இருக்கலாம் என்ற சந்தேகம் வருவது
- ஆத்மாவாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
- இறுதியில் நானே ஆத்மா என்ற சரியான அறிவை அடைதல்.
மேற்கூறிய விசாரத்தைப் பார்க்கும்போது ஆத்ம-அனாத்மாவுக்கிடையே அத்யாஸம் நடைபெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கையை பகவான் சங்கரர் கொடுக்கிறார்.
5.அத்யாஸ பிரமாணம்
5.1. ஆத்ம-அனாத்மா விஷயத்தில் ஏற்பட்ட அத்யாஸத்திற்கு ஸ்ருதிதான் பிரமாணம். ஆத்மாவின் ஸ்வரூபம் அஸங்கமாகும. அனாத்மா விஷயங்கள் நீக்கப்படுவதாக இருப்பதால், அது மித்யாவாகும். இந்த ஜகத்தும், சரீரங்களும் நீக்கப்படுவதாக இருப்பதால், இவைகளும் மித்யாவாகும். சாட்சி பிரத்யக்ஷம் நம்முடைய மனதிலுள்ள உணர்வுகளை சாட்சியே விளக்குகிறது. அத்யாஸம் அனுபவத்திலே ஏற்படுகிறது. வெளி விஷயத்தை என்னுடையது என்று நினைக்கும்போது அதற்கு வருகின்ற நலம், கேடு அனைத்தும் தனக்கு வந்ததாகவும், உடலை அபிமானிக்கும்போது அதற்கு வருகின்ற கஷ்டங்கள் தனக்கு வந்ததாகவும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். இவைகள் நம் அனுபவத்திலேயே புரிந்து கொள்கிறோம். ஆழ்ந்த உறக்கத்தில் எதன் மீதும் அபிமானம் இல்லாததால் விவகாரம் எதுவும் நடக்கவில்லை. எனவே அத்யாஸத்திற்கு அபிமானம்தான் காரணமாகும்.
5.2. அத்யாஸ பிரகாரம்
அத்யாஸம் படிப்படியாக எப்படி நடக்கிறது. நம்முடைய தேக விவகாரம் நடக்க வேண்டும் என்றால் உடல் மீது அபிமானம் இருக்க வேண்டும். நான் அறிய விரும்புவன் என்ற அத்யாஸம் இல்லாமல் எந்த விவகாரமும் நடக்காது என்று பகவான் சங்கரர் கூறுகிறார். இது மிருகங்களுக்கும் பொருந்தும். நம் சொந்த-பந்தங்களிடத்தில் அபிமானம் இருப்பதால் அவர்களுக்கு வருகின்ற இன்ப-துன்பங்கள் நம்மையும் பாதிக்கின்றது.
6.அத்யாஸ உபஸம்ஹாரம் (முடிவுரை)
இந்த அத்யாஸம் நம்முடைய சம்சாரத்திற்கு காரணமாக இருக்கின்றது. அதனால்தான் அத்யாஸத்தை முகவுரையாக கொடுத்து விளக்கப்பட்டிருக்கிறது. அத்யாஸத்தை நீக்கி ஆத்மா ஒன்றுதான் என்ற அறிவின் மூலமாக சம்சாரத்திலிருந்து விடுதலை பெற வேண்டும். ஞானம் அக்ஞானத்தை நீக்கிவிடுகிறது. இந்த அக்ஞானத்தினால் எவைகளெல்லாம் இருக்கிறதோ அவைகளெல்லாம் நீங்கிவிடுகிறது. கயிறு என்ற அறிவு வந்தவுடன் பாம்பு என்ற அபிமானம் சென்றுவிடுவதால் பாம்பின் உருவமும் மறைந்துவிடுகிறது. அத்யாஸமும் சென்றுவிடுகிறது.
பிரம்ம சூத்திரம்-பகுதி-2
ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்
ஜிக்ஞாஸா அதிகரணம்-01
சூத்திரம்-1
अथातो ब्रह्मजिज्ञासा ।।
அதா2தோ ப்3ரஹ்மஜிக்3ஞாஸா ।।
இந்த சூத்திரம் பிரம்மசூத்திரம் என்கின்ற நூலுக்குள் நுழைகின்ற வாயிலாக இருக்கிறது. இதற்கு அனுபந்த3 சதுஷ்டயம் என்ற வேறொரு பெயரும் உண்டு. அனுபந்த சதுஷ்டயம் என்பது நான்கு அம்சங்களை கொண்டதாக இருக்க வேண்டும். அவைகள் விஷயம், அதிகாரி, பலன், சம்பந்தம் ஆகியவைகளாகும். புத்தகத்தை எழுதுவதற்கு முன்பு இந்த புத்தகத்தில் என்ன விஷயம் இருக்கிறது என்பதை கூற வேண்டும். யாருக்காக இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது என்பதையும், படிப்பதனால் என்ன பலனை அடையலாம் என்பதையும் கூறியிருக்க வேண்டும்.
வியாச பகவான் தான் எந்த விஷயத்தைப் பற்றி எழுதப்போகிறேன் என்பதைக் கூறிவிட்டு, யார் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்பதையும், புத்தகத்தை படிப்பதனால் அடையும் பலனையும் கூறியிருக்கிறார். எனவே முதல் சூத்திரம் அனுபந்த சதுஷ்டயமாக அமைந்திருக்கிறது.
அதிகரணத்தின் அங்கங்களாவது விஷயம், சந்தேகம், பூர்வபக்ஷம், சித்தாந்தம் ஆகியவைகளாகும். இந்த முதல் சூத்திரமே ஒரு அதிகரணமாக இருப்பதால், இதற்கு அனுபந்த சதுஷ்டயம் இருக்கிறது.
- விஷயம் – முழு வேதாந்த சாஸ்;திரமாகும்.
2. சந்தேகம் – வேதாந்தத்தை விசாரம் செய்ய வேண்டுமா? வேண்டாமா?
3. பூர்வபக்ஷம் – அனுபந்த சதுஷ்டயமே இல்லாததால் விசாரம் தேவையில்லை
4. சித்தாந்தம் – வேதாந்த விசாரம் செய்தாக வேண்டும்.
கேள்வி பிரம்ம சூத்திரத்தில் என்ன கருத்து சொல்லப் போகிறீர்கள்?
பதில் உபநிஷத் வாக்கியங்களை எடுத்து பிரம்ம நிச்சயம் செய்யப் போகிறேன்.
கேள்வி அதைத்தான் கர்ம காண்டத்திலே சகுண பிரம்மனை நிச்சயம் செய்து விட்டதால் திரும்பவும் உபநிஷத் வாக்கியங்களை எடுத்துக் கொண்டு நிச்சயம் செய்யத் தேவையில்லை.
பதில் இதில் நிர்குண பிரம்மத்தைத்தான் நிச்சயம் செய்யப் போகிறேன்.
கேள்வி நிர்குண பிரம்மன் என்றவொன்றே இல்லாதபோது அதை நிச்சயம் செய்யப் போகிறேன் என்று சொல்வது தேவையில்லாதது. மேலும் யாருக்காக இந்த விசாரம் செய்யப் போகிறீர்கள்?
பதில் சாதன-சதுஷ்டய சம்பத்தியை அடைந்தவர்கள்தான் இதற்கு அதிகாரி.
கேள்வி வைராக்கியம் என்பது அடையவே முடியாது. எனவே அதிகாரிகள் யாருமே இருக்க மாட்டார்கள். இந்த தகுதிகளை உடையவர்கள் யாரும் இல்லை. அப்படியே ஒருசிலர் இருக்கிறார்கள் என்று எடுத்துக் கொண்டால் அதனால் அடையும் பலன்தான் என்ன?
பதில் இந்த மூன்று கருத்துக்களையும்தான் முதல் சூத்திரத்தில் நிச்சயம் செய்யப்படுகிறது. இந்த உபநிஷத்துக்கம் நுழைவாயிலாக இருக்கிறது. இந்த சூத்திரத்தில் மூன்று வர்ணகங்கள் இருக்கிறது. அவைகள்,
2வது வர்ணகம் – அக3தார்த்த2 வர்ணகம்
அக3தார்த்த2ம் – பேசி முடிக்காத விஷயம். அதாவது நிர்குண பிரம்மன் கர்ம காண்டத்தில் பேசப்படவில்லை.
3வது வர்ணகம் – அதிகாரி வர்ணகம்
வேதாந்த சாஸ்திரத்தை படிக்க தகுதியுடையவர்கள் யார் என்று கூறப்படுகிறது.
4வது வர்ணகம் – ப்3ரஹ்மன: ஆபாத3 ப்ரஸித்தி வர்ணகம்
சூத்திரத்தின் அர்த்தம்:
அதா2தோ ப்3ரஹ்மஜிக்3ஞாஸா ।।
வேதாந்தத்தின் அனுபந்த சதுஷ்டயம்:
1. விஷயம் – ஜீவ-பிரம்ம ஐக்கியம்
2. அதிகாரி – சாதன சதுஷ்டய சம்பத்தி என்ற தகுதியை அடைந்தவர்கள்
3. பலன் – மோட்சம்; ஜீவன் முக்தி; விதேக முக்தி
4. சம்பந்தம் – அதிகாரிக்கும் அவன் அடையப்போகும் பலனுக்கான சம்பந்தம்.
முதல் மூன்று கருத்துக்களையும் நிலை நாட்டுவதுதான் இந்த சூத்திரத்தின் நோக்கமாகும்.
அத2 – பிறகு (thereafter)
அத: – ஆகவே (therefore)
ப்3ரஹ்ம – நிர்குண பிரம்மத்தைப
ஜிக்3ஞாஸா – அறிவதில் ஆர்வம
ப்3ரஹ்மஜிக்3ஞாஸா – நிர்குண பிரம்மத்தைப் பற்றிய அறிவதில் ஆர்வம்.
எந்தவொன்றையும் அடைய வேண்டும் என்ற ஆசை வந்ததும் அதை அடைய உதவுகின்ற சாதனத்தை பயன்படுத்த வேண்டும். அதேபோல பிரம்மத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்கான சாதனமான உபநிஷத்தை பயன்படுத்த வேண்டும்.
இந்த சூத்திரத்தோடு கர்த்தவ்ய என்ற சொல்லை சேர்த்துப் பொருட்படுத்த வேண்டும். இந்த சொல்லை சேர்த்து பார்க்கும்போது, பிறகு ஆகவே பிரம்ம ஞானத்தை அடைவதற்கு வேதாந்த விசாரம் செய்யப்பட வேண்டும் என்ற இறுதியான அர்த்தம் கிடைக்கும்.
பிறகு சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைந்த பிறகு
ஆகவே கர்மத்தினால் மோட்சத்தை அடைய முடியாது. கர்ம காண்டத்தினால் மனநிறைவை அடைய முடியாது. பிரம்மஞானமே மோட்சத்திற்கு காரணமாக இருப்பதனால்
ப்ரஹம ஜிக்ஞாஸா – பிரம்மத்தை விசாரம் செய்யவேண்டும்.
விசாரம்:
ஒவ்வொரு சூத்திரத்தை எழுதும்போதும் ஏதாவது ஒரு உபநிஷத் முக்கிய வாக்கியத்தை எடுத்து அதை நிச்சயம் செய்கிறார் வியாசபகவான்.
பூ.ப வேதாந்த சாஸ்திரத்தை விசாரம் செய்யக்கூடாது? எல்லா விஷயத்தையும் கர்மகாண்டத்தில் பேசியாகி விட்டது. மேலும் உபநிஷத்தை படித்து அறிவை அடைந்தாலும் அதனால் ஒரு பயனுமில்லை. இதைப் படிக்கவும் அதிகாரிகள் இல்லை. ஆகவே விசாரம் செய்யத் தேவையில்லை.
பதில் விஷயம் உண்டு. அதிகாரியும் உண்டு. பலனும் உண்டு. இதைத்தான் இந்த சூத்திரத்தில் விளக்கியுள்ளார்.
“அத2” சப்த விசாரம்:
இந்த சொல்லுக்கு 7 அர்த்தங்கள் இருக்கிறது. அவற்றுள் இந்த இடத்திற்கு பொருத்தமான அர்த்தத்தை நாம் எடுத்துக் கொள்கிறோம். ஏன் மற்ற அர்த்தங்களை எடுத்துக் கொள்ளவில்லை என்பதும் விளக்கப்படுகிறது.
- மங்கலம் – தெய்வீகமானது
2. அனந்தரம் – பிறகு
3. ஆரம்பஹ – தொடக்கம்; ஆரம்பம்; துவக்கம்
4. ப்ரஶ்னஹ – கேள்வி
5. கார்க்ஸயம் – முழுமையான
6. அர்த்தாந்தரம் – பூர்வ ப்ரக்ருத அபேக்ஷா – புதிய தலைப்பு; அடுத்தது
7. க்ரமஹ – வாpசைக்கிரமம்
பூ.பக்ஷி மங்கலத்தை இந்த இடத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் எதை தொடங்கினாலும் மங்கலத்துடன் ஆரம்பிக்க வேண்டும். இந்த பிரம்ம சூத்திரத்திற்கு இறைவணக்கம் எதுவும் இல்லாததால் இதை இறைவணக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.
பதில் அத2 என்ற சப்தமே மங்கலத்தைக் குறிக்கிறது. ‘பிறகு” என்ற அர்த்தத்தைத்தான் எடுத்துக் கொள்கிறோம். சாஸ்திரத்தில் ஓம், அத2 என்கின்ற சொற்களின் உச்சரிப்பே மங்கலமானது. அத2 சொல்லானது சப்தமாகவும், அர்த்தத்தைக் கொடுப்பதாகவும் இருக்கிறது. அத2 என்ற சொல்லின் சப்தமே மங்கலத்தை குறிப்பதால், அதை விட்டுவிட்டு ‘பிறகு” என்ற அர்த்தத்தைத்தான் எடுத்துக் கொள்கிறோம். ஆரம்பஹ என்ற அர்த்தத்தை எடுத்துக் கொண்டால் பிரம்ம ஞானத்தை அறிய விருப்பம் ஆரம்பமாகிறது என்றாகிவிடும். ப்ரஶ்னஹ என்ற அர்த்தத்தமும், கார்க்ஸயம் என்ற அர்த்தத்தமும் பொருந்தி வராது.
6.அர்த்தாந்தரம் – புதிய தலைப்பு; அடுத்தது
பூ.பக்ஷி கர்மகாண்ட விசாரம் முடிந்துவிட்டது எனவே அடுத்ததாக ஞானகாண்ட விசாரம் செய்யப்படுகிறது என்பது சரியாக பொருந்தி வருகிறது. இதுவே சரியான அர்த்தமாக இருக்கிறது.
பதில் பிறகு என்ற அர்த்தத்திற்குள்ளே அடுத்தது என்ற அர்த்தம் வந்துவிடுவதால் இந்த அர்த்தம் எடுத்துக் கொள்ள தேவையில்லை. மேலும் அடுத்தது என்று சொல்லும் போது இதற்கு முன்பு பேசிய தலைப்புக்கும், பேசப்போகின்ற தலைப்புக்கும் சம்பந்தம் இருக்க வேண்டிய அவசியமில்லை. பிறகு என்று சொல்லும்போது முன்பு பேசிய தலைப்புக்கும், பேசப்போகின்ற தலைப்புக்கும் சம்பந்தம் இருப்பதால் இந்த அர்த்தம்தான் பொருத்தமாக இருக்கும். இந்த அர்த்தம் பிரம்ம ஞான விசாரத்திற்கு அவசியம என்ற உறுதி கூறுகிறது.
2.அனந்தரம் – பிறகு
பூ.பக்ஷி பிறகு என்பது சாதன சதுஷ்டய சம்பத்திக்கு பிறகு என்று எடுத்துக் கொள்ளமுடியாது. கர்ம காண்ட விசாரத்திற்கு பிறகு ஞானகாண்ட விசாரம் செய்யப்படுகிறது என்பதுதான் சரியாக இருக்கும்.
பதில் கர்ம காண்டத்திற்கு செல்வதற்கு முன்பே வைராக்கியம் இருந்துவிட்டால் கர்மகாண்ட விசாரம் தேவையில்லை. நேரிடையாக ஞானகாண்ட விசாரத்திற்கு வந்துவிடலாம். சுகர், நசிகேதன் போன்றவர்கள் கர்ம அனுஷ்டானம் செய்யாமலே பிரம்மஞானத்தை அடைந்தவர்கள். பகவான் கிருஷணர் பகவத்கீதையில் யோகபிரஷ்டன் என்பவனைக் குறிப்பிட்டிருக்கிறார். இவன் முற்பிறவியிலே விவேக, வைராக்கியத்தை அடைந்திருப்பான். இவன் இந்த பிறவியில் நேரிடையாக பிரம்ம விசாரத்திற்கு வருவான் என்று குறிபபிட்டிருக்கிறார்.
7.க்ரமஹ – வரிசைக்கிரமம்
பூ.பக்ஷி அத2 என்ற சொல்லுக்கு வரிசைப்படி என்ற முறையில் முதலில் தர்மத்தைக் கடைப்பிடித்து மனத்தூய்மையடைந்து அடுத்ததாக பிரம்ம விசாரம் என்ற வரிசையை எடுத்துக் கொள்ளலாம்.
பதில் வரிசைப்படி இல்லாமலும் நேரிடையாக பிரம்ம விசாரத்திற்கு வரலாம். ஒருவன் பல கர்மங்களை செய்ய வேண்டுமென்றால் இந்த கிரமத்தைப் பற்றி பேசலாம். உதாரணமாக ஒருவன் குளித்துவிட்டு, உணவருந்திவிட்டு, அலுவலகம் செல்கின்றான். இந்த இடத்தில் கிரமத்தை கடைப்பிடிக்கலாம். இந்த பிரம்ம விசாரம் வைராக்கியம் அடைந்திருப்பவன் செய்கின்றான். வைராக்கியம் இல்லாதவன் கர்மகாண்டத்திற்கு சென்று அதையடைந்து பிறகு பிரம்ம விசாரத்திற்கு வருவான். கர்ம காண்டத்தில் கிரமமாக சில யாகங்களை செய்ய வேண்டும் என்ற நியதியிருக்கிறது.
பூ.பக்ஷி ஞான-கர்ம சமுச்சயவாதி இரண்டு காண்டத்தையும் சேர்த்து செய்து கொண்டிருப்பான். இரண்டு காண்டங்களும் மோட்சம் என்கின்ற ஒரே பலனைத்தான் லட்சியமாக கொண்டிருக்கிறது. கர்மகாண்டம் மோட்சம் என்கின்ற பலனை மறைமுகமாக பேசுகிறது. ஞானகாண்டம் நேரிடையாக மோட்சத்தைப் பற்றி பேசுகிறது. பறவை பறப்பதற்கு இரண்டு இறக்கைகள் தேவைப்படுவது போல மோட்சத்தை அடைவதற்கு இரண்டு காண்டங்களும் தேவைப்படுகிறது.
பதில் ஒன்றுக்கொன்று விரோதமாக இருக்கின்ற இரண்டு பொருட்களை கலக்கமுடியாது. கர்ம காண்டத்தில் இருக்கும்போது சரீரமே நான் என்ற எண்ணத்தில் செயல் செய்து கொண்டிருப்பான். ஞானகாண்ட சாதகன் சரீர அபிமானத்தை நீக்க முயற்சி செய்து கொண்டிருப்பான். எனவே இரண்டும் ஒன்றக்கொன்று எதிராக இருப்பதால் சமுச்சயம் சம்பவிக்காது. இவையிரண்டையும் சேர்ந்து அனுஷ்டிக்க முடியாது. மேலும் இரண்டுக்கும் இடையே மூன்று வேற்றுமைகள் இருக்கிறது.
- விஷய பே4தஹ – இரண்டு காண்டங்களின் மையக்கருத்து வெவ்வேறாக இருக்கிறது. கர் காண்டம் புண்ணியங்களைத்தான் முக்கிய விஷயமாகக் கொண்டிருக்கிறது. இதில் கூறப்பட்டிருக்கின்ற கர்மங்களை முறைப்படி செய்தால் புண்ணியத்தை அடையலாம். இந்த புண்ணியத்தால் சுகத்தை அனுபவிக்கலாம். சுகத்தை துறந்தால் மனத்தூய்மை அடையலாம். ஆனால் ஞானகாண்ட விஷயமானது ஏற்கனவே இருக்கின்ற ஒன்றைத்தான் பேசுகிறது.
- ப2ல பே4தஹ – இரண்டு காண்டங்களின் பலன்கள் வெவ்வேறாக இருக்கின்றது. கர்ம காண்டத்தினால் அடையப்படுகின்ற பலன்கள் நிலையற்றது. ஞானகாண்டத்தினால் அடைகின்ற பலன் நிலையானது.
- ப்ரவிருத்தி பே4தஹ – கர்மகாண்டம் பலனைக் கொடுக்கும் விதமும், ஞானகாண்டம் பலனைக் கொடுக்கும் விதமும் வெவ்வேறானது. கர்மத்தை செய்வதனால்தான் பலனை அடையமுடியும். யாகம் செய்யும் முறை தெரிந்தால் மட்டும் போதாது. அதை முறைப்படி செய்தால்தான் பலனை அடைவோம். ஆனால் ஞானகாண்டத்தில் ஞானத்தை அடைவதும், பலனை அடைவதும் ஒரே நேரத்தில் நடக்கின்றது.
“அத2” சப்த முடிவுரை:
சாதன சதுஷ்டய சம்பத்திக்குப் பிறகு பிரம்ம விசாரம் செய்யப்படுகிறது. பரீக்ஷய லோகான் கர்மசிதான் நிர்வேதம் ஆயாத் என்று தொடங்கும் முண்டக உபநிஷத் உபதேசம் உரைப்பது, இந்த உலகத்தில் அடைகின்ற அனுபவங்களை நன்கு ஆராய்ச்சி செய்து பார்த்து அடைவது வைராக்கியம், விவேகமாகும். பிறகு பிரம்மத்தை அறிவதற்கு தகுதி வாய்ந்த குருவிடம் செல்ல வேண்டும் என்பதாகும். ஆத்மனஸ்ய காமாய… என்று தொடங்கும் பிருஹதாரண்க உபநிஷத் உபதேசமானது, இந்த உலகத்திலுள்ள பொருட்களின் மீது ஆசை கொள்வது அந்தப் பொருட்களின் நிமித்தமாக அல்லவென்றும், நம் மனதில் அடைகின்ற ஆனந்தமும், ஆசைதான் காரணம்.
மேற்கூறிய உபநிஷத் உபதேகங்களைப் பார்க்கும்போது சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைந்தவன் பிரம்ம விசாரத்திற்கு வருவான் என்று இருப்பதால் “அத2” என்ற சொல்லுக்கு பிறகு என்ற அர்த்தமே சரியாக இருக்கின்றது. ஆகவே உபநிஷத் சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைந்தவன் ஆத்ம விசாரத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறியிருப்பதால் பிறகு என்ற அர்த்தம்தான் சரியாக இருக்கும்.
அத: – ஆகவே. இந்தப் பொருளுக்கு பல காரணங்கள் உண்டு. அவைகளை பார்க்கலாம்.
- கர்மனா மோக்ஷ அபா4வாத் – கர்மத்தினால் மோட்சத்தை அடையமுடியாது.
- ஞானாதேவ மோக்ஷ ஸம்ப4வாத் – பிரம்ம ஞானத்தினால் மட்டும் மோட்சத்தை அடைய முடிவதனால் விசாரம் செய்யப்படவேண்டும்.
- ஸாதன சதுஷ்டய ஸம்ப4வாத் – சாதன சாதுஷ்டய சம்பத்தி என்ற தகுதியை அடைந்து விட்டதால் விசாரம் செய்ய வேண்டும்.
- ஸம்ஸாரஸ்ய அத்யாஸ பூர்வத்வாத் – சம்சாரம் அத்யாஸமாக இருப்பதனால், விசாரம் செய்யப்பட வேண்டும்.
ப்3ரஹ்மஜிக்3ஞாஸா – இந்த சொல்லுக்குப் பிறகு கர்த்தவ்ய என்ற வினைச் சொல்லை சேர்த்து பொருட்படுத்த வேண்டும். அப்போது பிரம்ம ஞானத்திற்காக விசாரம் செய்யப்பட வேண்டும் என்ற அர்த்தம் கிடைக்கும். ப்3ரஹ்மஜிக்ஞாஸா என்ற சொல்லை பிரித்து சொல்ல வேண்டுமென்றால் ப்ரஹ்மன:+ஜிக்+ஞாஸா – பிரம்மத்தைப் பற்றிய விசாரம் என்ற அர்த்தத்தைக் கொடுக்கின்றது. ஜிக்ஞாஸா என்பது ஞாதும் இச்சா – அறிவதற்க விருப்பம்; அறிய ஆவல் என்ற அர்த்தம் கொடுக்கின்றது.
ஞானம் என்ற சொல் எதை அடைய ஞானம் தேவை என்ற கேள்வியை எழுப்புகிறது. இதற்கு பிரம்மத்தை அடைய வேண்டும் என்பதே பதிலாகும். எனவே பிரம்ம என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கிறார்.
ஸா – விருப்பம்- எதைப்பற்றிய ஆசை இருக்கிறது? எதையறிய விருப்பம் கொள்கிறாய் என்ற கேள்வியெழும்போது அதற்கான விஷயத்தை சொல்ல வேண்டும். இந்த விருப்பத்தினுடைய விஷயம் ஞானமாகும்.
பிரம்மஜிக்ஞாஸா என்ற சொல்லின் பொருள் பிரம்ம ஞானத்தில் விருப்பம் என்பதாகும். நாம் இதனுடன் கர்த்தவ்ய என்ற வினைச்சொல்லை பிரம்மஜிக்ஞாஸா என்ற சொல்லோடு சேர்த்துப் பார்த்தால் பொருள் சரியாக இருக்காது. அதாவது பிரம்ம ஞானத்தில் விருப்பம் செய்யப்பட வேண்டும் என்ற வாக்கியம் தவறாக இருக்கிறது. விருப்பம் என்பது செயல் செய்து அடைவதில்லை. அதனால் இச்சா என்ற அர்த்தத்தை விட்டுவிட்டு அது சம்பந்தமான வேறொரு சொல்லை பயன்படுத்தி வாக்கியத்தை பூர்த்தி செய்கிறோம். ஒரு பொருள் மீது ஆசை வந்தால் அதை அடைவதற்கான சாதனத்தை பயன்படுத்துகிறோம். அதேபோல் பிரம்மஞானத்தில் ஆசை வந்திருப்பதால் அந்த ஆசையை பூர்த்தி செய்வதற்கு வேதாந்த விசாரம் என்ற சாதனத்தை பயன்படுத்த வேண்டும். எனவே இச்சா என்ற சொல்லை விட்டுவிட்டு, இச்சையை பூர்த்தி செய்கின்ற விசாரம் என்ற சொல்லை எடுத்துக் கொள்கிறோம். இப்போது அந்த பிரம்ம ஞானத்தை அடைய விசாரம் செய்யப்படவேண்டும் என்ற சரியான வாக்கியமாக இருக்கிறது.
பிரம்மன் என்ற சொல்லுக்கான அர்த்தம் அடுத்த சூத்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. பொதுவாக ஆறாவது வேற்றுமை உருபு உடைய என்பது ஒன்றினுடைய சம்பந்தத்தைக் குறிக்கும். இங்கே இது சரியாக பொருந்தி வராததால் இரண்டாவது வேற்றுமை உருபான ஐ எடுத்துக் கொண்டு பிரம்மனைப் பற்றிய விசாரம் என்பது சரியாக இருக்கும்.
பூ.பக்ஷி பிரம்ம சம்பந்தமான விசாரம் என்று பொருட்படுத்த வேண்டும்.
பதில் பிரம்மனைப் பற்றிய விசாரம் என்பதுதான் சரியான அர்த்தம். ஏனென்றால் இதுவே பிரம்மத்திற்கு சம்பந்தபட்ட விஷயங்களும் விசாரம் செய்ய வேண்டும் என்பதே சேர்ந்திருப்பதால் நீ சொல்வது சரியல்ல. பிரம்மத்தை தனியாக சொல்வதற்கு முக்கியத்துவம் இருக்கிறது. உதாரணமாக ராஜா செல்கிறார் என்றால் அவர் பரிவாரங்களுடன் செல்கிறார் என்றுதான் புhpந்து கொள்வோம்.
ஞானம் என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. அவைகள்,
1. விசாரம் செய்வதனால் அடையும் இறுதி பலன் ஞானமாகும்.
2. ஞானத்தை அடைவதற்கான வழிமுறை, சாதனம்.
பிரம்ம ஞானத்தை அடைவதற்கு எத்தனை காலம் பயிற்சி செய்ய வேண்டும் என்ற வினவினால் இதற்கு காலவரம்பெல்லாம் கிடையாது. முழுமையான ஞானத்தை அடையும்வரை விசாரம் செய்து கொண்டிருக்க வேண்டும்.
4வது வர்ணகம்:
ப்3ரஹ்மன: ஆபாத3 ப்ரஸித்3தி4 – பிரம்மன் தெரிந்தும், தெரியாமலும் இருக்கின்றது.
பூ.பக்ஷி நிர்குண பிரம்மன் ஏற்கனவே தெரிந்ததா அல்லது தெரியாததா?
பதில் நிர்குண பிரம்மன் தெரிந்தும் தெரியாமலும் இருக்கிறது. அதாவது சாமான்யமாக தெரிகிறது. விசேஷமாக தெரியவில்லை. எனவே இதை விசாரம் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. இதை நிலை நாட்டுவதற்கு பகவான் சங்கரர் விசாரம் செய்கின்றார். இதை நிலைநாட்டிவிட்டால் முதல் சூத்திரம் நிலைநாட்டப்பட்டதாகிவிடும்.
பூ.பக்ஷி எந்த பிரமாணத்தின் மூலமாக பிரம்மம் சாமான்யமாக தெரிகிறது?
பதில்1 இது வேதப் பிரமாணம் மூலமாக அறியப்பட்டிருக்கிறது. அழியாதவொரு வஸ்து இருக்கிறது என்ற வேத வாக்கியம் இருக்கிறது. இதைக் கேட்பதன் மூலமாக பிரம்மன் இருக்கிறது என்ற சாமான்ய ஞானம் வந்துவிட்டது. ‘ப்ரஹ்மனேஹ ஆப்னோதி பரம்”, ‘ஸத்யம், அனந்தம், நித்யம் பிரம்மன்”, ‘பிரம்மன் நிரதிசயமானது ( எல்லையற்றது )” என்று படிக்கும் போது பொதுவாக இருக்கிறது என்று தெரிந்து கொள்கிறோம். இது கர்மகாண்டத்திலே விசாரிக்கப்படாததால் இப்போது விசாரம் செய்யப்படுகிறது.
பதில்2 இந்த பிரம்ம விஷயத்தில் முரண்பட்ட கருத்துக்கள் இருப்பதனாலே இது சாமான்யமாக அறியப்படுகிறது, விசேஷமாக அறியப்படவில்லை என்று தெரிகிறது. சார்வாக்கர்கள் தேகம்தான் ஆத்மா என்கின்றார்கள். கர்மகாண்டம் யாகத்தின் மூலமாக சொர்க்கத்தை அடையலாம் என்று நம்புகிறார்கள். அதாவது ஸ்தூல உடல் ஆத்மாவல்ல சூட்சும உடல்தான் ஆத்மா என்று நம்புகிறார்கள். ஷணிகவாதிகள் க்ஷணத்துக்கு க்ஷணம் தோன்றி தோன்றி; மறைந்து கொண்டிருப்பதால் இதுதான் ஆத்மா என்று கூறுகிறார்கள். ஒரே ஆத்மாதான் இறந்து பிறக்கிறது. சூன்யவாதிகள் சூன்யம்தான் பிரம்மம் என்ற கொள்கையுடையவர்கள். இந்த சூன்யத்தை பார்ப்பதற்கு ஒன்று இருக்க வேண்டும் என்ற வாதத்தினால் இந்தக் கொள்கை நீக்கப்படுகிறது. நியாய மதக்காரர்கள் ஆத்மா கர்த்தாவாகவும், போக்தாவாகவும் இருக்கிறது என்று கூறுகிறார்கள். சாங்கிய மதக்காரர்கள் ஆத்மா போக்தாவாக மட்டும் இருக்கிறது என்கிறார்கள். யோக மதக்காரர்கள் ஈஸ்வரனே ஆத்மா என்கின்றார்கள். அத்வைதிகள் இந்த ஆத்மாதான் நிர்குண பிரம்மம் என்ற கொள்மையுடையவர்கள்.
பிரம்மத்தை விசேஷமாக புரிந்து கொள்ளாதவரை இந்த குழப்பங்கள் இருந்து கொண்டிருக்கும். பிரம்மமே ஆத்மாவாக இருப்பதனால் நாம் ஆத்மாவே பிரம்மம் என்ற அறிவை அடைந்திட வேண்டும். சாமான்ய ஞானம் இருந்தால்தான் விசேஷஞானத்தை அடைந்திட முடியும். எனவே இந்த விபரீதஞானத்தை நீக்கி விசேஷ ஞானத்தை அடைந்திட வேண்டும். அஹம் என்ற விஷயத்தில் சாமான்யமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. விசேஷஞானம் அடைவதற்கு விசாரம் தேவைப்படுகிறது.
—இத்துடன் முதல் சூத்திரம் முடிவடைந்தது.—
2வது சூத்திரம் – 2வது அதிகரணம் – ஜன்மாத்3யதி4கரணம்
जन्माद्यस्य यतः ||2 ||
ஜன்மாத்3யஸ்ய யத: ||2 ||
இந்த சூத்திரம் பிரம்மத்தின் லட்சணத்தைக் கூறுகிறது.
பொருள்:
யத: – எதனிடமிருந்து யாரிடமிருந்து
அஸ்ய – இதனுடைய; இந்த உலகத்தினுடைய
ஜன்மாதி3 – பிறப்பு முதலியன
இந்த மூன்று சொற்களுடன் மேலும் மூன்று சொற்களை சேர்த்தால்தான் சரியான அர்த்தம் கிடைக்கும். அவைகள்,
ப4வதி – உண்டானதோ; தோன்றியுள்ளதோ
தத் – அது
ப்3ரஹ்ம – பிரம்மம்
பிரம்மம் ஸ்ருஷ்டி கர்த்தா என்பதுதான் இநத சூத்திரத்தின் கருத்து.
விசாரம்
ஒரு வஸ்து இருக்கிறது என்பதை அதனுடைய லட்சணத்தின் மூலமாகவும், பிரமாணத்தின் மூலமாகவும் நிலைநாட்ட முடியும். இங்கே பிரம்மத்தை லட்சணத்தின் மூலமாக நிலைநாட்டப்படுகின்றது. ஒரு பொருளுக்கு லட்சணம் கொடுக்கும்போது அதனுடைய ஸ்வரூபம், அதனுடைய தன்மையையும் அடைய முடியும். வஸ்துவின் நிர்ணயம் பிரமாணத்தின் மூலமாக உறுதியாகின்றது. 3வது சூத்திரத்தில் பிரமாணத்தின் மூலமாக பிரம்மத்தின் ஸ்வரூபம் மட்டுமல்லாமல் அதனுடைய முடிவையும் நிர்ணயம் செய்துவிடுகின்றார். 4வது சூத்திரத்தில் விசாரத்தின் மூலமாக பிரம்மத்தின் இருப்பை நிர்ணயம் செய்யபப்டுகின்றது.
ஒவ்வொரு சூத்திரமும் ஏதொவொரு உபநிஷத் வாக்கியத்தை நிச்சயம் செய்ய எழுதியுள்ளார். இந்த சூத்திரத்திற்கான உபநிஷத் வாக்கியம், தைத்திரிய உபநிஷத் 3வது வல்லி-அனுவாகம்-1ல் உள்ள “யதோ வா இமானி பூதானி ஜாயந்தே”. என்பதாகும். பிரம்மத்தின் லட்சணத்தைக் கூறி இந்த லட்சணத்துடன் கூடியதாக எது இருக்கிறதோ அதை விசாரம் செய்யப்படுகிறது. மேலும் அனைத்து ஸ்ருஷ்டி வாக்கியங்களும் இந்த சூத்திரத்திற்கான உபநிஷத் வாக்கியங்களாகும்.
ஒவ்வொரு அதிகரணத்திற்கும் ஐந்து அங்கங்களை கூற வேண்டும். இந்த 2வது அதிகரணத்தின் அங்கங்களாவது:
- விஷயம் – பிரம்ம லட்சணமாகும்.
- சந்தேகம் – பிரம்மத்திற்கு லட்சணம் இருக்கிறதா, இல்லையா
- பூர்வ பக்ஷம் – பிரம்மன் நிர்குண, நிர்விசேஷமாக இருப்பதால் அதற்கு லட்சணம் சொல்ல முடியாது என்று பூர்வ பக்ஷி கூறுவதால் இதை விசாரம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
- சித்தாந்தம் – ஏற்றி வைக்கப்பட்ட சில குணங்களின் மூலமாக பிரம்மத்திற்கு லட்சணம் கொடுக்க முடியும்.
- சங்கதி – சென்ற சூத்திரத்திற்கும் இந்த சூத்திரத்திற்கும் இடையே சம்பந்தம் இருக்க வேண்டும். இதற்கு ஆட்சேப சங்கதியாகும். முதல் சூத்திரத்தில் பிரம்ம விசாரம் செய்யப்பட வேண்டும் என்று கூறியிருப்பதால், அதற்கான லட்சணத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான் சம்பந்தம்.
சாஸ்தர உபதேசமானது மூன்று படிகளாக இருக்கிறது. அவைகள்,
- உத்தேசம் – நாம் எதைப்பற்றி விளக்கப்போகின்றோமோ அதை சுருக்கமாக முதலில் சொல்லிவிட வேண்டும்.
- லட்சணம் – பிரம்மத்திற்கு லட்சணம் கொடுத்துவிட்டு அதை நிச்சயம் செய்ய வேண்டும். இதைத்தான் இரண்டாவது சூத்தரத்தில் செய்துள்ளார். மூன்றாவது சூத்திரத்தில் பிரம்மத்தை அறிய உதவும் பிரமாணத்தை கூறியுள்ளார். இதன் மூலம் பிரம்மன் என்ற ஒன்றிருக்கிறது என்று நிச்சயம் செய்துள்ளார்.
- பரீக்ஷா – விசாரங்கள் செய்திருக்க வேண்டும். நான்காவது சூத்திரத்திலிருந்து இறுதி சூத்திரம் வரை இதைத்தான் வியாச பகவான் செய்திருக்கிறார்.
ஏதாவது ஒன்றிற்கு லட்சணம் கொடுக்கவேண்டுமென்றால் எப்படிபட்ட லட்சணத்துடன் இருக்க வேண்டும் என்றும், எந்த வரையறைக்குள் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இனி விளக்கப்படுகிறது.
- சஜாதீய விஜாதீய வியாவர்த்தக லட்சணம்:
வியாவர்த்தக லட்சணம் மட்டும் எடுத்துக் கொண்டால் போதும். இந்த லட்சணமானது ஒன்றை மற்றவைகளிலிருந்து பிரித்துக் காட்டுவதாகும்.
சஜாதீய – ஐந்து மனிதர்களில் நான்கு பேரை விலக்கி ஒருவரை மட்டும் காட்டுவது
விஜாதீய – மனிதர்களுக்கு வேறாக உள்ளதை நீக்கி, ஒருவரை மட்டும் அடையாளம் காட்ட வேண்டும்.
அதேமாதிரி பிரம்மத்தைப்பற்றிய லட்சணம் மற்றவைகளிலிருந்து பிரித்துக்காட்ட வேண்டும்.
- தூ4ஷண த்ரய ரஹித தர்மஹ
எந்த லட்சணமும் மூன்று குறைகளற்றதாக இருக்கவேண்டும்.
2.1. அதிவியாப்தி – லட்சியத்திற்கப்பால் சென்று விடக்கூடாது. உதாரணமாக காளை மாட்டின் சரியான லட்சணம் கழுத்தில் தசை தொங்கிக்கொண்டிருக்கும் என்பதாகும். நான்கு கால்களையுடையது என்பது தவறான லட்சணம். ஏனென்றால் இது மற்ற விலங்குகளுக்கும் பொருத்தமாக இருக்கிறது.
2.2. அவியாப்தி – கொடுக்கின்ற லட்சணம் லட்சியத்தை குறைவாகத்தான் வியாபிக்கிறது. இந்தியாவிற்கு லட்சணம் கொடுக்கும் போது தமிழ் பேசுபவர்கள் வசிக்கும் நாடு என்பது தவறானதாகும். இது இந்தியாவின் ஒரு பகுதியைத்தான் குறிக்கிறது.
2.3. அஸம்பவஹ – தலைகீழாக லட்சணையை கொடுப்பது. காளை மாட்டைக் குறிக்க பால் கொடுக்கும் மாடு என்பது முற்றிலும் தவறானதாகும்.
எதனால் லட்சியமானது அடையப்படுகிறதோ அதுவே சரியான லட்சணமாகும். சரியான லட்சணம் இரண்டு வகையாக இருக்கிறது. அவைகள்,
1. ஸ்வரூப லட்சணம்
2. தடஸ்த லட்சணம்
ஆகியவைகளாகும்.
ஸ்வரூப லட்சணம்
எந்தவொரு பொருளை லட்சணையால் காட்ட விரும்புகின்றோமோ அந்தப் பொருளின் ஸ்வரூபத்தைக் கூறி காட்டிக் கொடுத்தல் என்பதே ஸ்வரூப லட்சணமாகும். ஆகாசத்தை புரிய வைப்பதற்கு அதன் ஸ்வரூபமான இடைவெளியைக்(Gap) கூறி அதைக் காட்டிக் கொடுத்தல் இதற்கு உதாரணமாகும். நிலவை காட்டுவதற்கு இரவில் அதிக வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றவொன்று என்று சொல்லும் போது நிலவின் ஸ்வரூபத்தை சொல்லிக் காட்டுகிறோம். பிரம்மத்தின் ஸ்வரூப லட்சணம் சத்யம், அனந்தம், ஞானம் என்கின்ற ஸ்வரூபத்தை காட்டுவதாகும்.
தடஸ்த லட்சணம்
நதியின் கரையோரம் நின்று கொண்டு அதனழகை ரசிப்பது போல ஒரு பொருளைக் காட்டுவதற்கு அதனுடைய ஸ்வரூபத்திலிருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும். ஒருவருடைய வீட்டை அடையாளம் காட்டும்போது அந்த வீட்டின் மீது காகம் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறோம். எனவே அதோ காகம் அமர்ந்திருக்கின்ற வீடுதான் அவர் வீடு என்று கூறுகிறோம். இந்த லட்சணம் அந்த வீட்டின் ஸ்வரூபமல்ல ஆனால் அந்த நேரத்தில் அடையாளம் காட்டுவதற்கு பயனுள்ளதாக இருந்தது. அதன்பிறகு காகம் பறந்து சென்றுவிட்டாலும் அந்த வீட்டை அடையாளம் கண்டு கொள்வோம்.
பிரம்மத்திற்கு ஸ்வரூப லட்சணத்தை சொல்லியுள்ளது போல தடஸ்த லட்சணமும் பயன்படுத்தியிருக்கிறார். ஸ்வரூப லட்சணம் சூட்சுமமாக இருப்பதால் புரிந்துக் கொள்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும். தடஸ்த லட்சணத்தை பயன்படுத்தி ஒன்றை சுலபமாப புரிந்து கொள்ளலாம். ஜகத்தின் துணைக்கொண்டு பிரம்மத்தை புரிய வைக்கிறார். பிரம்மத்தை அடைந்ததும் ஜகத்தும் பொய்யாகிவிடும்.
பிரம்மத்திற்கு இரண்டு லட்சணங்கள் இருப்பது போல தர்மத்திற்கும் இரண்டு லட்சணங்கள் இருக்கிறது. நல்ல செயல்களைச் செய்து புண்ணியத்தையும், தீய செயல்களைச் செய்து பாவத்தையும் அடையப்படுகிறது. இவையிரண்டையும் கண்ணால் பார்க்க முடியவில்லை என்றாலும் அவைகளுடைய லட்சணத்தை வைத்து புரிந்து கொள்கிறோம். அதேபோல பிரம்மத்தினுடைய லட்சணங்களை கொடுத்து புரிய வைத்தால் பிரம்மம் இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது. பிரம்மம் இருக்கிறது என்பதை நிலைநாட்டுவதால் அதை விசாரம் செய்ய வேண்டும்.
இனி ஒவ்வொரு சொல்லாக எடுத்துக் கொண்டு அவைகள் விசாரம் செய்யப்படுகிறது.
ஜன்மாதி3 என்ற சொல்லின் விசாரம்
ஜன்மாதி3 – ஜகத்தினுடைய பிறப்பு, இருப்பு, லயம் முதலியவைகள்.
ஜன்ம – பிறப்பு, தோற்றம்
ஆதி3 – முதலியன (ஸ்திதி, லயம்) இருத்தல், ஒடுங்குதல்
பூ.பக்ஷி ஸ்ருஷ்டி அனாதியாக இருக்கும்போது முதல் ஸ்ருஷ்டியை பேசவே முடியாது. அப்படியிருக்கும் போது ஏன் ஜன்மாதி என்று சொல்லியிருக்கிறார். லயத்தையோ அல்லது இருத்தலையோ முதலில் சொல்லியிருக்கலாமே?
பதில்1 ஸ்ருதி வாக்கியத்தின் அடிப்படையில்தான் விசாரம் செய்யப்படுகிறது. ஸ்ருதியில் வாக்கியத்தில் ஜன்மம் முதலில் சொல்லியிருப்பதால் அதையே முதலில் விசாரம் செய்யப்படுகிறது.
பதில்2 நம் அனுபவத்தில் எந்தவொரு பொருளும் பிறப்பைத்தான் முதலில் கொண்டிருக்கிறது. இதற்குப் பிறகுதான் இருத்தல், லயம் என்ற வரிசை கிரமமாக அதன் நிலைமாறுகிறது.
பூ.பக்ஷி யாஸ்கர் என்ற முனிவர் ஆறுவிதமான விகாரங்களைக் கூறியிருக்கிறார். அவைகள் 1. பிறத்தல், 2.இருத்தல், 3.வளர்ச்சி, 4.மாற்றம், 5.தேய்தல், 6.இறத்தல் ஆகியவைகளாகும். இவரும் பிறப்பைத்தான் முதலில் சொல்லியிருககிறார். எனவே ஆதி என்ற சொல்லுக்கு பொருளாக மற்ற ஐந்து விகாரங்களை ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது?
பதில்1 யாஸ்கர் ஸ்தூல பூதத்தினுடைய விகாரங்களைத்தான் கூறியிருக்கிறார். ஆனால் இங்கே சூட்சும பூதங்களுக்கும் முன்னாடி உள்ள நிலையைத்தான் பேசுகிறோம். உதாரணமாக ஆகாசத்திற்கு இந்த விகாரங்களை எடுத்துக் கொள்ளக்கூடாது.
பதில்2 ஸ்ருதி இந்த ஆறு விகாரங்களைப் பற்றி பேசவில்லை. பிறப்பு, ஸ்திதி, லயம் என்கின்ற மூன்றைப் பற்றித்தான் பேசியிருக்கிறது. ஆகவே ஜன்மாதி என்ற சொல்லுக்கு பிறப்பு, இருத்தல், ஒடுங்குதல் என்பதுதான் சரியான பொருளாகும்.
“அஸ்ய” என்ற சொல்லின் விசாரம்
அஸ்ய – இதனுடைய; இந்த உலகத்தினுடைய
இந்த உலகத்தை பகவான் சங்கரர் நான்கு விதமாக வர்ணிக்கிறார். இந்த வர்ணனையே சில தத்துவங்களை உணர்த்துகின்றது. இந்த வர்ணனை ஜகத்திற்கு லட்சணமாகவும் இருக்கிறது.
- நாம-ரூபாப்4யாம் வ்யாக்ருதஸ்ய
வ்யாக்ருதஸ்ய – வெளித்தோற்றத்திற்கு வந்துள்ளது
நாம ரூபாப்யாம் – நாம் ரூபங்களாக
இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது
1.1. இந்த உலகம் நாம-ரூபங்களை உடையதாக அறிவுள்ள ஒருவரால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது.
1.2. இந்த உலகம் நாம-ரூபமாக இருப்பதனால் மித்யா ஸ்வரூபமாக இருக்கிறது.
- அனேக3 கர்த்ருபோ4க்த்ரு ஸம்யுக்தஸ்ய
இந்த உலகம் பலவிதமான கர்த்தாக்களும், போக்தாக்களும் கூடியுள்ளவர்களாக இருக்கிறது. ஹிரண்யகர்ப்பனிடத்தில் ஆரம்பித்து அனைத்து தேவதைகளும் இந்த உலகத்தை படைத்தவர்கள் அல்ல. அவர்களும் தோற்றுவிக்கப்பட்டவர்கள்தான் என்று தெரிகிறது. ஏனென்றால் அவர்களும் கர்த்தாவாக, போக்தாவாக இருக்கிறார்கள்.
- ப்ரதிநியதி தேஸகால நிமித்த க்ரியாபல ஆஸ்ரஸ்ய
ஆஸ்ரஸ்ய – இப்படிபட்ட தன்மையுடையது
ப்ரதிநியதி – விதிமுறை
தேசம், காலம், நிமித்தம், க்ரியா, பலன் என்கின்ற ஐந்தும் இந்த இடத்தில், இந்த காலத்தில் இதன் காரணமாக, இந்த செயலுக்கு இந்தப்பலன் என்ற நியதியுடன் கூடிய தன்மையுடையது இந்த உலகம். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. நாம் அனுபவிக்கின்ற சுக-துக்கங்களுக்கு நாம்தான் காரணம் என்பதாகும். மேலும் அவரவர்கள் செய்த கர்மத்திற்கேற்ற பலனைக் கொடுக்கக்கூடிய ஸர்வக்ஞன் என்ற ஒருவர் இருக்க வேண்டும் என்று அறிந்து கொள்ள முடிகிறது. அந்த ஸர்வக்ஞன் ஈஸ்வரனே ஆவார்.
- மனஸா அபி4 அசிந்த்ய ரசனா ரூபஸ்ய
மனதினாலும் கூட, கூர்மையான புத்தியாலும் கூட எட்டாதபடி இந்த உலகத்தின் அமைப்பு இருக்கிறது. யாராலும் புரிந்து கொள்ள முடியாததாக இந்த உலகம் இருக்கிறது. ஈஸ்வரன் அனைத்து சக்தியுடையவராக இருப்பதால் அல்ப சக்தியடைய ஜீவர்களை இந்த உலகத்தில் படைத்திருக்கிறார்.
இத்துடன் இரண்டாவது சூத்திரத்தின் இரண்டாவது சொல்லின் விசாரம் முடிவடைகிறது.
“யத” என்ற சொல்லின் விசாரம்
யத:- யாரிடமிருந்து
இது காரணத்தை விளக்குகின்ற சொல்லாகும். அதாவது இந்த உலகத்தின் தோற்றத்திற்கு காரணம் பிரம்மன். பிரம்மனே உலகத்தின் தோற்றத்திற்கு உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் இருக்கிறார். இங்கு உபாதான காரணம்தான் பிரதானமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயத்திற்கு காரணமாக இருப்பது உபாதான காரணம். களிமண் பானைக்கு உபாதான காரணம். ஸ்ருஷ்டிக்கு மட்டும் காரணமாக இருப்பது நிமித்த காரணம். குயவன் பானைக்கு நிமித்தக் காரணம். ஜன்மாதி என்ற சொல் பிரம்மன் உபாதான காரணமாக இருக்கிறார் என்பது உணர்த்துகிறது.
ஜன்மாதி என்ற சொல் பிரம்ம லட்சணையைத்தான் குறிக்கிறது. பிரம்மன் காரணம் என்றால் ஜகத் காரியாமாகும். காரியத்திற்கு மூன்று லட்சணங்கள் உண்டு. அவைகள்,
1. காரணம் சத்யம், காரியம் மித்யா
2. காரணம் சேதனம், காரியம் ஜடம்
3. காரணம் வரையறுக்கப்படாதது, காரியம் வரையறுக்கப்பட்டது.
ஆகியவைகளாகும். இந்த மூன்று லட்சணங்களும் ஜகத்திற்கு பொருந்தி வருகின்றது.
கேள்வி மாயையினுடைய மாற்றமே சூட்சம பிரபஞ்சம். பிறகு ஸ்தூல பிரபஞ்சமாக மாறுகிறது. மாயை உபாதான காரணமா அல்லது பிரம்மன் உபாதான காரணமா? மாயையின் மூன்று குணங்களும் உலகத்தில் இருப்பதால் மாயைதான் உபாதான காரணமாக கூறமுடியும். ஏன் பிரம்மனை உபாதானமாக கூறப்படுகிறது?
பதில் உபநிஷத் பிரம்மத்தை உபாதான காரணமாக சொல்லியிருப்பதால், வியாச பகவான் இங்கே பிரம்மத்தை உபாதானமாக கூறியிருக்கிறார். மாயை பரிணாமி உபாதானம், பிரம்மன் விவர்த்த உபாதானமாகும். மாற்றத்தை அடைந்து உபாதானமாக மாறுவது பரிணாமி உபாதானமாகும். ஸ்வரூப தியாகமில்லாமல் உபாதானமாக இருப்பது விவர்த்த உபாதானமாகும்.
மேற்சொன்ன கருத்துக்களினால் நாம் தெரிந்து கொள்வது பிரம்மத்தைத்தான் வியாச பகவான் உபாதான காரணமாகத்தான் சொல்லியிருக்கிறார். சாஸ்திரத்தின் மூலம் அடைகின்ற அறிவு சாஸ்திரம், யுக்தி, அனுபவம் ஆகிய மூன்றுக்கும் விரோதமாக இருக்கக்கூடாது.
—இத்துடன் 2வது சூத்திரம் முடிவடைந்தது.—
3வது சூத்திரம் – 3வது அதிகரணம்
शास्त्रयोनित्वात् || 3 ||
ஶாஸ்த்ரயோனித்வாத் || 3 ||
இந்த சூத்திரம் இரண்டு வகையாக பொருட்படுத்தப்படுகிறது. எனவே முதல் அர்த்தத்திற்கு 6வது வர்ணகம் என்றும் இரண்டாவது அர்த்தத்திற்கு 7வது வர்ணகம் என்றும் இரண்டு வர்ணமாக பிரித்து விளக்கப்படுகிறது.
6வது அதிகரணம் – ப்3ரஹ்மன: ஸர்வக்3ஞத்வ
இந்த வர்ணகத்தில் பிரம்மன் அனைத்தையும் அறிபவர் என்று நிலைநாட்டப்படுகிறது. மேலும் பிரம்மன் நிமித்தக் காரணம் என்பதையும் எடுத்துக் காட்டப்படுகிறது.
ஶாஸ்த்ர – வேதம்
யோனி – காரணம்
பொருள்:
வேதத்திற்கு காரணமாக இருப்பது பிரம்மன். பிரம்மத்தினிடமிருந்து வேதம் தோன்றியது. எனவே இவர் அனைத்தையும் அறிபவர் என்று அறிய முடிந்தது. யார் எதை படைத்துள்ளாரோ அவருக்கு அதைப்பற்றியெல்லாம் அறிந்திருப்பார். பானையை உருவாக்கிய குயவனுக்கு அதைப்பற்றிய அறிவை உடையவராக இருப்பார். அதேபோல எல்லாவற்றையும் படைத்தவர் எல்லாவற்றைப் பற்றிய அறிவு இருக்கும் என்று அறிந்து கொள்ள முடிகிறது.
பூ.பக்ஷி ஈஸ்வரன் எல்லாம் அறிந்தவர் அல்ல. எல்லாவற்றையும் படைத்தவர் அல்ல. வேதம் என்பது அனாதி. இது அனாதியாக இருப்பதாலே, ஈஸ்வரன் வேதத்தை உருவாக்கியவர் அல்ல. அதனால் அவர் எல்லாவற்றை’யும் அறிந்தவர் என்ற சொல்லமுடியாது.
பதில் ஜகத்தும் அனாதிதான் என்ற சொல்கிறோம். ஸ்ருஷ்டியும் அனாதிதான். ஜகத்தையும், வேதத்தையும் பிரிக்க முடியாது. ஸ்ருஷ்டி என்பது வெளிப்படுத்துவது என்று பொருட் கொள்ள வேண்டும். அதேபோல அனாதியான வேதத்தை வெளிப்படுத்துவது ஸ்ருஷ்டி.
பிருஹதாரண்ய உபநிஷத் 2.4.10 – “அஸ்ய மஹதோ பூ4த3ஸ்ய…” என்ற வாக்கியத்தின் அடிப்படையில் இந்த சூத்திரத்தை எழுதியிருக்கிறார். இந்த வாக்கியத்தின் பொருள் பிரம்மத்தினுடைய மூச்சுக்காற்றிலிருந்து வெளிவந்ததுதான் வேதம் என்பதாகும். புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கு அந்த புத்தகம் கொடுக்கின்ற அறிவைவிட அதிகம் அறிவை உடையவராக இருப்பார் என்பது நியதி. உதாரணமாக சமஸ்கிருத இலக்கணத்தை எழுதிய பாணினிக்கு அதைத்தவிர மேலும் அதிகமான அறிவை உடையவராக இருப்பார். அதேபோல வேதத்தை வழங்கிய ஈஸ்வரனுக்கு வேதம் கொடுக்கின்ற அறிவைவிட அதிகமான அறிவை உடையவராக இருப்பார் என்று யூகித்துக் கொள்ளலாம்.
- நன்மையை உபதேசிப்பதனால் அதை சாஸ்திரம் என்று அழைக்கப்படுகிறது. சாஸ்திரம் என்பது வெளிச்சத்தைப் போன்றது. இது நம் வாழ்க்கையை சாpயான முறையில் நடத்தி செல்ல உதவியாக இருக்கிறது.
- வேதம் எல்லாவிதமான அறிவையும் கொடுக்கக்கூடிய சாஸ்திரம் என்றும் கூறப்படுகிறது. பத்துவிதமான சாஸ்திர ஞானம் இருந்தால்தான் வேதத்தை புhpந்து கொள்ள முடியும். அவைகள்,
2.1. புராணம்
2.2. நியாய
2.3. மீமாம்ஸ
2.4. தர்ம சாஸ்திரம்
2.5. சிக்ஷா
2.6. கல்ப
2.7. வியாக்ரணம்
2.8. நிருத்தம்
2.9. சந்தஹ
2.10. ஜோதிடம்
முடிவுரை
விஷயம் பிரம்மம்
சந்தேகம் பிரம்மம் சாஸ்திரத்திற்கு கர்த்தாவா, இல்லையா?
பூ.பக்ஷம் வேதத்திற்கு ஈஸ்வரன் காரணமல்ல. ஏனென்றால் அது அனாதியாக இருக்கிறது.
பதில் ஜகத்தும் அனாதியாக இருந்தாலும் ஈஸ்வரன் கர்த்தாவாக இருப்பது போல வேதம் அனாதியாக இருந்தாலும் அவரே கர்த்தாவாக இருக்கிறார்.
சங்கதி பிரம்மன் அனைத்திற்கும் காரணமில்லை என்ற ஆட்சேபம் செய்வதால் அதற்கு வியாச பகவான் பதில் கூறியிருக்கிறார்.
—-ooo00ooo—-
7வது அதிகரணம் – ஶாஸ்த்ரயோனித்வாத் (3வது சூத்திரம்)
ஶாஸ்த்ர – வேதம்
யோனி – பிரமாணம்
பொருள்: பிரம்மன் சாஸ்திரம் என்ற பிரமாணத்தின் மூலமாக அறியப்படுகிறது.
இந்த வர்ணகத்திற்கு ஸ்ருதி வாக்கியமானது பிரஹதாரண்ய உபநிஷத் 3.9.26 ஓளபநிஷத் புருஷம் ப்ருச்சாமி என்பதாகும். இதற்கு அர்த்தம் நான் அந்த உபநிஷத்தின் மூலமாக அடையக்கூடிய பிரம்மத்தினுடைய விளக்கத்தை கேட்கிறேன்.
பூ.பக்ஷி ஏற்கனவே இருக்கின்ற பொருளை சாஸ்திரத்தின் மூலமாகத்தான் அறிய வேண்டிய அவசியமில்லை. வேறொரு பிரமாணமாக மூலமாகவும் அடையலாம். இமயமலை எங்கே இருக்கிறது என்பதை புத்தகத்தின் மூலமாகவோ, நேரில் சென்றோ பார்க்கலாம். பிரம்மன் சித்த வஸ்துவாக இருக்கும்போது வேதத்தின் பிரமாணத்தை தவிர வேறொரு பிரமாணத்தின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.
பதில் சாதரணமாக சித்த வஸ்துவாக இருந்தால் நீ சொல்வது சரிதான். ஆனால் சில விதிவிலக்குகள் உண்டு. உதாரணமாக சொர்க்கலோகம் இருக்கிறது என்பதற்கு சாஸ்திரம் மட்டும்தான் பிரமாணம். அதுபோல பிரம்மன் சித்த வஸ்துவாக இருந்தாலும் வேதாந்தம் என்கின்ற பிரமாணத்தின் மூலமாக மட்டும்தான் அறிந்து கொள்ள முடியும். பிரம்மம் அறியாமையால் மறைக்கப்பட்டிருக்கிறது. அதை அறிவினால் நீக்க வேண்டும். இந்த அறிவை கொடுக்கும் பிரமாணம் வேதாந்தம் மட்டும்தான்.
முடிவுரை
விஷயம் பிரம்மம்
சந்தேகம் பிரம்மத்தை அனுமானம் முதலிய மற்ற பிரமாணத்தால் அறிந்து கொள்ள முடியுமா?
பூ.பக்ஷம் வேறு பிரமாணத்தாலும் புரிந்து கொள்ள முடியும்.
சங்கதி வேதாந்தம் என்கின்ற பிரமாணத்தின் மூலமாக மட்டும்தான் அறிந்து கொள்ள முடியும்.
ஆட்சேபம் பிரம்மனை யூகத்தாலும் தெரிந்து கொள்ளலாம்.
பதில் யூகத்தால் தெரிந்து கொள்ள முடியாது. வேதாந்தம் மூலம்தான் தெரிந்து கொள்ள முடியும்.
—இத்துடன் 3வது சூத்திரம் முடிவடைந்தது.—
4வது சூத்திரம் – 4வது அதிகரணம் – ஸமன்வய அதிகரணம்
तत्तु समन्वयात् || 4 ||
தத்து ஸமன்வயாத் || 4 ||
இந்த சூத்திரம் 7வது வர்ணகம், 8வது வர்ணகம் என்று இரண்டு வர்ணகமாக பிரிக்கப்பட்டிருக்கிறது.
7வது வர்ணகம்
முகவுரை
உபநிஷத்தில் பல விஷயங்கள் பேசப்பட்டிருந்தாலும் அது உபதேசிக்க விரும்பும் மையக்கருத்து பிரம்மன்தான். சிலர் வேதத்தின் முக்கிய கருத்து கர்மத்தை செய்து அடைகின்ற புண்ணியம்தான் என்று கூறுகிறார்கள். இந்த சூத்திரம் வேதத்தின் முக்கியமான அறிவைக் கொடுக்க விரும்பும் விஷயம் பிரம்மன்தான் என்பதை நிலைநாட்டுகிறார்.
பொருள்
தத் – பிரம்மன்; உபநிஷத்தின் மையக்கருத்து
ஸமன்வயாத் – சமன்வயப்படுவதனால்; உடன்பாடிருப்பதால்
ஸமன்வயம் உடன்பாடு; மையக்கருத்து மாறாமல் ஒத்திருத்தல்; எல்லா உபநிஷத்தும் தொடர்ந்து பிரம்மத்தை உபதேசிக்கம் விஷயத்தில் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும்.
“து என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. அவைகள்,
1. து – ஏவ – மட்டும்
2. து – பூர்வ பக்ஷ நிராகரணம் (எல்லா சந்தேகங்களும் நீக்கப்படுவதனால்)
விஷயம் வேதாந்த சாஸ்திரம் (உபநிஷத்)
சந்தேகம் பிரம்மத்தை தாத்பர்யமாக கொண்டிருக்கிறதா அல்லது ஸ்ருஷ்டி, கர்மம், தர்மம் போன்ற வேறெதையாவது தாத்பர்யமாக கொண்டிருக்கிறதா?
பூ.பக்ஷம் உபநிஷத் எதாவதொரு கர்மத்தை செய்யத்தான் உபதேசிக்கிறது.
பதில் பிரம்மத்தைத்தான் மையக்கருத்தாக உபதேசிக்கிறது.
ஹேது ஸமன்வயாத் – மீமாம்ஸ மூலமாக நிச்சயம்
ஆட்சேபம் பிரம்மன் மட்டும் சாஸ்திரத்தின் விஷயம் அல்ல. பல விஷயங்களும் பேசப்பட்டிருக்கிறது.
பதில் பிரம்மன் மட்டும்தான் முக்கிய விஷயமாக பேசியிருக்கிறது.
பிரம்மத்தைப் பற்றி பேசகின்ற எல்லா ஸ்ருதி வாக்கியங்களும் இந்த சூத்திரத்திற்கு அடிப்படையாக இருக்கிறது.
விசாரம்:
வேதாந்த சாஸ்திரத்தின் முக்கியமான ஒரே விஷயமாக பிரம்மன் இருக்கிறது. எல்லா உபநிஷத்துக்களும் முரண்பாடில்லாமல் இதைத்தான் உபதேசிக்கிறது. கர்மகாண்டம் தர்மத்தை முரண்பாடில்லாமல் தொடர்ந்து உபதேசிக்கிறது.
ஹேது – ஸமன்வயாத் – ஸம்+அனு+வ்யாத்
ஸம் – நன்கு; தெளிவாக; சந்தேகமில்லாமல்
அனு – தொடர்ச்சி (உ-ம்) அனுகச்சதி – தொடர்ந்து செல்கின்றான்
வ்யாத் – சொல்கிறது.
சாத்தியம் – பிரம்மன்தான் சாஸ்திர தாத்பர்யம்
பூ.பக்ஷி சமன்வயம் இருக்கிறதா?
பதில் மீமாம்ஸகர்கள் ஆறுவிதமான அடையாளங்கள் மூலமாக பிரம்மத்தை நிச்சயம் செய்கிறார்கள்.
வேதாந்தம் பிரம்மத்தைத்தான் பேசுகிறதா என்பதை ஆறுவிதமான அடையாளங்கள் மூலமாக உறுதி செய்யலாம். அவைகள்,
- உபக்ரம – உபஸம்ஹாரம் : தொடக்கத்திலும், முடிவிலும் உபநிஷத் உபதேசிக்க விரும்புகின்ற மையக்கருத்து சொல்லப்பட்டிருக்கும்.
- அப்யாஸம் – முக்கிய கருத்தை மீண்டும், மீண்டும் சொல்லப்பட்டிருக்கும்.
- அபூர்வதா – புதியதாக அந்த கருத்து சொல்லப்பட்டிருக்கும்.
- பலன் – சொல்லப்படுகின்ற கருத்தினால் அடைகின்ற பலனை கூறியிருக்கும்.
- அர்த்தவாதம் – மையக்கருத்தை புகழ்ந்து சொல்லப்பட்டிருக்கும். இந்த ஞானம் அடையவில்லையென்றால் அடைகின்ற தீமையையும் சொல்லப்பட்டிருக்கும்.
- உபபத்தி – தர்க்கரீயாக நிரூபிக்கப்பட்டிருக்கும்.
சாந்தோக்ய உபநிஷத் – 6வது அத்தியாயம்
- தொடக்கம்-ஸதேவ ஸோம்ய இதமேவ ஆஸீத் – பிரம்மத்தை பற்றி கூறுதல். முடிவுரை – ஐதாத்மியம் இதம் ஸர்வம் – இவைகள் அனைத்தும் பிரம்மன்தான் என்று சொல்லி முடிக்கிறது.
- அப்யாஸம் – பிரம்மத்தைப் பற்றித்தான் திரும்ப, திரும்ப சொல்லப்பட்டிருக்கிறது. தத்வமஸி என்ற சொல் 9முறை கூறப்பட்டிருக்கிறது
- அபூர்வதா – பிரம்மத்தை உபநிஷத் தவிர வேறெதிலும் பேசப்பட்டிருக்கவில்லை. வேறெந்த பிரமாணத்தாலும் அறிந்து கொள்ள முடியாது.
- பலன் – பல விஷயங்களைப் பற்றி பேசியிருந்தாலும் பிரம்மத்தை அறிவதனால் அடைகின்ற பலன் கூறப்பட்டிருக்கிறது. பிரம்மத்தை அறிவதனால் அடைகின்ற பலனாக மோட்சம் கூறப்பட்டிருக்கிறது.
- அர்த்தவாதம் – பிரம்ம ஞானத்தை புகழ்ந்து கூறுதல். இந்த ஞானம் இல்லாத நிலையை இகழ்ந்து பேசுதல். “யேன அஸ்ரும் ஸ்ருதம்” (எந்த ஞானத்தால் கேட்கபடாததையெல்லாம் அறியப்படுகின்றதோ ) என்ற வாக்கியம் அனைத்தும் அறிந்தவனாகின்றான் என்று பலனைக் கூறுகின்றது.
- உபபத்தி – இந்த அறிவானது தர்க்கத்திற்கு விரோதமாக இல்லையென்று புரியவைத்தல். (உ-ம்) ஏகேன ம்ருதிபிண்டேன – ஒரு களிமண் குவியலை அறிந்தவன் அதிலிருந்து உருவான அனைத்து பானைகளையும் அறிந்தவனாகின்றான். ஈஸ்வரன் உபாதான காரணமாக இருப்பதால், உலகத்தில் ஈஸ்வரனை பார்க்க முடியும்.
மேற்கூறிய அடையாளங்களைக் கொண்டு சாந்தோக்ய உபநிஷத்தின் மையக்கருத்து பிரம்மம்தான் என்று தெரிந்துக் கொள்ள முடிகிறது. எனவே பிரம்மன் விஷயத்தில் ஸமன்வயம் இருப்பதனால் அதுதான் தாத்பர்யம் என்றும் புரிந்து கொள்ள முடிகிறது.
இத்துடன் 4வது சூத்திரத்தின் சாமான்ய அர்த்த விளக்கம் முடிவடைகிறது.
“து” என்ற சொல்லின் இரண்டாவது அர்த்தமான பூர்வ பக்ஷி நிராகரணம் என்பதை எடுத்துக் கொண்டு விசாரம் செய்யப்படுகிறது. பிரம்மம்தான மையக்கருத்து என்பதை எதிர்ப்பவர்களை நிராகரணம் செய்துவிட்டால் பிரம்மம் மட்டும்தான் உபநிஷத்தின் தாத்பர்யம் என்பது நிலைநாட்டப்பட்டுவிடும்.
பூர்வ பக்ஷி நிராகரணம்
ஆஸ்திக தர்ஷணத்தை ஏற்றுக் கொண்டவர்கள் வேதத்தை பிரமாணமாக ஏற்றுக் கொண்டவர்கள் ஆனால் இவர்கள்தான் இங்கே பூர்வ பக்ஷிகளாக இருக்கிறார்கள்.
* சாங்கிய மதம், யோக மதம் இரண்டையும் ஒன்றாக சேர்த்து எடுத்துக் கொள்ளப்படுகிறது
* நியாய, வைஸேசிக மதம்
* பூர்வ மீமாம்ஸகர்கள்
* உத்தர மீமாம்ஸா – விருத்திகார மதம்
இவர்களையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு வியாச பகவான் நிராகரித்து விடுகின்றார். முதல் அத்தியாயத்தில் சாங்கிய, யோக மதத்தை நீக்கப்பட்டுள்ளது.
பூர்வ மீமாம்ஸா – வேதத்தின் கர்மகாண்ட அர்த்தத்தை நிர்ணயம் செய்வதற்காக ஜெய்மினி மகரிஷி சூத்திரங்களை எழுதியுள்ளார். இந்த சூத்திரங்களுக்கு சபரஸ்வாமி என்பவர் விளக்கம் எழுதியுள்ளார். இதற்கு ஸபரபாஷ்யம் என்று பெயர். இந்த இரண்டு நூல்களும் வேதாந்தத்திற்கு எதிரானதல்ல. இவர்கள் எடுத்துக் கொண்ட மையக்கருத்து வேறாகும். ஆனால் பிற்காலத்தில் இந்த நூல்களின் அடிப்படையில் குமாரிலபட்டர் என்பவர் பாட்ட மதத்தை தோற்றுவித்தார். இவர் மோட்சம் என்பது என்ன என்பதைப் பற்றியும், கர்மத்தினால் மோட்சத்தை அடையலாம் என்றெல்லாம் எழுதியிருக்கிறார். உபநிஷத்துக்கு முரணான கருத்துக்களை கூறியிருக்கிறார். மேலும் பிரபாகரர் என்பவரால் பிராபகார மதம் உருவாகியது. இது பாட்ட மதத்திலுள்ள சில கருத்துக்கள் தவறு என்று நீக்கி புதியதாக இந்த மதமானது தோற்றுவிக்கப்பட்டது. இந்த இரண்டு மதக்கொள்கைகளை பகவான் சங்கரர் நீக்கியுள்ளார்.
விருத்திகார மதமானது உபநிஷத்தின் உபதேசத்தை தவறாகப் பொருட்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இராமானுஜரின் விசிஷ்டாத்வைதமும், மாத்வாச்சாரியாரின் த்வைதமும் நீக்கப்படுகிறது. இரண்டுவிதமான விருத்திகாரர்கள் இருக்கிறார்கள்.
- ஸமுச்சயவாதி – ஞானமும், கர்மமும் சேர்ந்துதான் மோட்சத்தைக் கொடுக்கும்.
- உபாஸனவாதி – தியானத்தின் மூலமாகத்தான் மோட்சம் கிடைக்கும்.
8வது வர்ணகம் (பூர்வ மீமாம்ஸ நிராகரணம்)
பாட்ட மதம், பிராபகர மதம் இவையிரண்டு மதங்களின் கருத்துக்களை; பார்க்கப்படுகிறது. இரண்டு மதங்களின் ஒத்தக் கருத்துக்களை முதலில் பார்க்கப்போகிறோம்.
- வேத வாக்கியங்கள் அனைத்தையும் இரண்டாக பிரிக்கிறார்கள். அவைகள்,
1.1. சித்த போத வாக்யாணி – ஏற்கனவே இருக்கின்றதைப் பற்றி அறிவைக் கொடுக்கின்ற வாக்கியங்கள்
1.2. காரிய போதக வாக்யாணி – இதை செய், இதைச் செய்யாதே என்று போதிக்கின்ற வாக்கியங்கள். கர்மத்தைப் பற்றி பேசுகின்ற வாக்கியங்கள். செயலில் ஈடுபடுத்துகின்ற வாக்கியங்கள். விதி வாக்கியம் என்பது செய் என்கின்றது. நிஷேத வாக்கியம் என்பது செய்யாதே என்கின்றது.
இந்த இரண்டு வகையான வாக்கியங்களை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.
- பிரமாண லட்சணம் – பிரமாணத்திற்கு இவர்கள் கொடுக்கின்ற லட்சணம். பிரமாணத்தில் இரண்டு முக்கிய பிhpவுகள் உண்டு. அவைகள் 1. அனதி3க3த, 2.அபா4திதம் ஆகும். இவைகள் இருந்தால்தான் அறிவைக் கொடுக்கும் கருவி என்று சொல்லமுடியும்.
2.1. அனதி3க3த – வேறொன்றின் மூலமாக அறியப்படாததாக இருக்க வேண்டும். (உ-ம்) ஒரு பொருளின் வர்ணத்தை கண் என்கின்ற பிரமாணத்தின மூலமாக மட்டும்தான் அறிய முடியும். இதை வேறொரு பிரமாணத்தின் மூலமாக அறிய முடியாது.
2.2. அபா4திதம் – வேறெந்த பிரமாணத்தாலும் நீக்க முடியாததாக இருக்க வேண்டும். உதாரணமாக கானல்நீரை கண்ணால் பார்த்தாலும், அனுபவ பிரமாணத்தால் நீக்கப்படும்.
பூர்வ மீமாம்ஸகர்கள் மூன்றாவது நிபந்தனையை சேர்த்துக் கொள்கிறார்கள். அது பிரமாணம் பயனைத் தருவதாக இருக்க வேண்டும் என்பதாகும். அப்போதுதான் அதை பிரமாண வாக்கியம் என்று ஏற்றுக் கொள்ளமுடியும் என்ற கருத்தை உடையவர்களாக இருக்கிறார்கள். இந்த மூன்று நிபந்தனைகளற்ற வாக்கியங்களை அர்த்தவாதம் என்று கூறுகிறார்கள். அவைகள் முக்கியமான பிரமாண வாக்கியங்களுக்கு உதவி செய்யக்கூடியதாக எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். உதாரணமாக வாயுதேவன் ஸ்துதி செய்கின்ற வாக்கியமான ‘வாயுதேவர் வேகமாக ஓடுபவர்” என்ற வாக்கியம் ஒரு பயனையும் தராது. ஆனால் தியானம் செய்யும்போது வாயுபகவானை இவ்வாறு தியானிக்க வேண்டும். இவ்வாறு இந்த வாக்கியத்தை பொருட்படுத்த வேண்டும்.
ஜெய்மினியின் ஒரு சூத்திரத்தை எடுத்து விசாரம் செய்வோம்.
சூத்திரம்–1 – ஆம்னாயஸ்ய க்ரியார்த்தத்வாத் ஆனந்தக்யம் அததர்த்தானாம்
ஆம்னாயஸ்ய வேதமானது (கர்ம காண்டத்தை குறிப்பது)
க்ரியார்த்தத்வாத் செயலையே தாத்பர்யமாக கொண்டிருக்கின்ற காரணத்தினால்
அதத் அர்த்தானாம் கர்மத்தைப் பற்றி பேசாத வாக்கியங்கள்
ஆனந்தக்யம் பிரயோஜனமற்றது
பூர்வ மீமாம்ஸகர்கள் ஆம்னாயஸ்ய என்ற சொல்லுக்கு முழு வேதத்தையும் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களது வாதம்: ஏற்கனவே இருக்கின்ற ஒன்றை; தெரிந்துக் கொண்டிருக்கின்ற ஒன்றைப் பற்றி பேசுவது பயனற்றது. செயலைப் போதிக்கின்ற வாக்கியம்தான் பயனுள்ளது. ஏற்கனவே இருக்கின்றதை பேசுவது பிரமாணமல்ல. உபநிஷத்துக்கள் அறிவைக் கொடுக்கின்ற பிரமாணமல்ல. ஏனென்றால் இருக்கின்ற பிரம்மத்தைப் பற்றி உபநிஷத் வாக்கியங்கள் பேசுகின்றது. மேலும் ஏற்கனவே இருக்கின்றதை பேசுவதை வேறு பிரமாணத்தாலும் அறியப்பட முடியும்.
முழு வேதத்தை அத்யயனம் செய்யப்பட வேண்டும் என்ற வாக்கியம் வேதத்திலே இருக்கிறது. இதிலிருந்து தெரிவது கர்மத்தைப் போதிக்கின்ற வாக்கியங்களையும், கர்மத்தைப் போதிக்காத வாக்கியங்களையும் படிக்க வேண்டும் என்று சொல்கிறது. கர்மத்தைப் போதிக்காத வாக்கியங்கள், கர்மத்தைப் போதிக்கின்ற வாக்கியங்களுக்கு உதவி செய்வதாக எடுத்துக் கொள்ள வேண்டும். கர்மத்தைப் போதிக்காத வாக்கியங்களை அர்த்தவாத வாக்கியங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். உபநிஷத் பிரம்மத்தை போதிக்கின்ற வாக்கியங்களை தேவதைகளை புகழ்கின்ற செய்வதாக எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக விற்பனையாளர் இந்தப் பொருளை வாங்குங்கள் என்று சொல்வது கர்மபோதக வாக்கியம். அந்தப் பொருளின் சிறப்பைப் பற்றி சொல்கின்ற வாக்கியங்கள் அந்தக் கர்மவாக்கியத்திற்கு உதவி செய்வதாக இருக்கிறது.
இதுவரை கூறியது பூர்வ மீமாம்ஸகர்களின் கருத்துக்களாகும்.
சூத்திரம்-2 – வித்னாத்து ஏகவாக்யத்வாத் ஸ்துதியர்தேன விதினாமஸ்யும்.
கர்மத்தைப் போதிக்காத வாக்கியங்கள், கர்மத்தைப் போதிக்கின்ற வாக்கியங்களை சென்று சேர்வதனால் அவைகளை ஸ்துதி செய்கின்ற அர்த்தத்தை கொடுப்பதன் மூலம் விதி வாக்கியத்துடன் இணைந்துக் கொள்கின்றது. இதன் மூலம் அனைத்து வேத வாக்கியங்களும் பயனுள்ளதாகின்றது, பிரமாணத்தை அடைந்து விடுகிறது.
பூர்வ மீமாம்ஸகர்களின் கருத்துக்கள்:
* உபநிஷத் கூறுகின்ற நிர்குண பிரம்மன் என்றவொன்று கிடையாது
* ஆத்ம அக்ஞானம் என்பதே கிடையாது.
* ஆத்மாவைப் பற்றி பேசுகின்ற வாக்கியங்களனைத்தும் யாகம் செய்கின்ற எஜமானனாக எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது பூஜையில் பூஜிக்கின்ற தேவதைகளை புகழ்கின்ற வாக்கியங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* உபநிஷத் வாக்கியங்களையெல்லாம் கர்மத்தைப் போதிக்கின்ற வாக்கியங்களுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதுவரை பாட்ட மதக்காரர்களின் கருத்துக்களாகும்
* பிராபகார மதத்தினர் இரண்டு காண்டங்களை ஏற்றுக் கொள்கிறார்கள். ஞான காண்டம் உபாஸனையை போதிப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும். கர்ம போதக வாக்கியங்களுடன் ஞான போதக வாக்கியங்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. உபநிஷத் வாக்கியங்களை தியானத்தை உபதேசிக்கின்ற வாக்கியங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். அஹம் பிரம்மாஸ்மி என்பது ஒருவகையான தியானமாகும். அதனால் அடைகின்ற பலன் பிரம்மலோகத்தையோ, சொர்க்கலோத்தையோ அடைவதாகும்.
சங்கராச்சாரியார் பதில்
பூ.பக்ஷி ஏற்கனவே இருக்கின்ற ஒன்றைப் பற்றி சொல்கின்ற வாக்கியங்கள் பயனற்றது.
பதில்1 சாதாரணமாக இது சரிதான். ஆனால் விசேஷமான இடத்தில் இத்தகைய வாக்கியங்களும் பயனைக் கொடுக்கின்றது. ஏதோவொன்று அக்ஞானத்தினால் தோன்றியுள்ள இடத்தில் இத்தகைய வாக்கியம் பயனைத் தரும். இது பாம்பு அல்ல என்ற சித்த வாக்கியம் இதற்கு உதாரணம். அறியாமையினால் கயிற்றில் பார்க்கின்ற ஒருவனிடத்தில் பாம்பு இல்லை என்ற வாக்கியமே பயனைக் கொடுத்துவிடுகிறது. மேலும் நீதான் பத்தாவது மனிதன் என்ற வாக்கியமும் அந்த சூழ்நிiலையில் பயனைத் தரும். எனவே ஸித்த போதக வாக்கியமும் பயனைத் தரும் என்பது அவர்கள் கருத்தை நீக்கி விடுகிறது.
பதில்2 உபநிஷத்திலுள்ள வாக்கியங்கள் ஞானத்திற்கு நேரிடையான பலனைக் கொடுக்கிறது. எடுத்துக் காட்டிற்கு சில வாக்கியங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
* யாரொருவன் பிரம்மத்தை அறிகின்றானோ அவனுக்கு சோகமும், மோகமும் கிடையாது.
* ஞானத்தினாலே மரணமற்ற பலனை அடைகிறான்.
* ஆத்மாவை அறிபவன் சோகத்தை கடந்துவிடுகிறான்
* தன்னை ஆத்மாவாக அறிந்து கொண்டவன், யாருக்காக, எதற்காக தன் சரீரத்தை வருத்திக் கொள்வான்.
பூ.பக்ஷி சப்த பிரமாணம் பிரத்யக்ஷ விஷயம் அல்லது அனுவாதத்தைத் சொல்லும். இதன் மூலம் புதியதாக அறிவை கொடுக்காது.
பதில் பல இடங்களில் உண்மைதான். இதிலும் விதிவிலக்கு இருக்கிறது. கர்மகாண்டத்தில் சொர்க்கலோகத்தை பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இது சப்த பிரமாணத்தினால் மட்டும்தான் அறியப்படும். வேறுபிரமாணத்தால் அறிய முடியாது. அதேபோல பிரம்மத்தை உபநிஷத் சப்த பிரமாணத்தினால் மட்டும்தான் அடைய முடியும் என்பது தெளிவாகிறது.
பூ.பக்ஷி ஆத்ம ஞானமே அனர்த்தம். ஆத்ம அக்ஞானமே சம்பவிக்காது. நான் யார் என்பது எல்லோருக்கும் தெரிந்திருப்பதால் ஆத்ம விஷயத்தில் விசாரம் தேவையில்லை.
பதில் ஆத்மா சம்சாரியாக எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் பிரம்ம ஸ்வரூபம் என்பது எல்லோருக்கும் தெரியவில்லை. ஆகவே விசாரம் தேவைப்படுகிறது.
பூ.பக்ஷி பிரமாணம் மூன்று நிபந்தனைகளை உடையதாக இருக்க வேண்டும்.
பதில் பிரமாணத்திற்கு பிரயோஜனம் என்ற நிபந்தனை கிடையாது. நாம் வாழ்க்கையில் எத்தனையோ பயனற்றதை பார்க்கிறோம். எனவே மூன்றாவது நிபந்தனை தேவையில்லை. இருந்தாலும் வேதாந்த வாக்கியங்களும் பிரயோஜனத்துடன் கூடியதுதான்.
பூ.பக்ஷி எந்த வாக்கியம் கர்மத்தை போதிக்கவில்லையோ அந்த வாக்கியத்தை கர்மத்தை போதிக்கின்ற வாக்கியத்தோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக விற்பனையாளர் இந்தப் பொருளை வாங்குங்கள் என்று சொல்வது கர்மபோதக வாக்கியம். அந்தப் பொருளின் சிறப்பைப் பற்றி சொல்கின்ற வாக்கியங்கள் அந்தக் கர்மவாக்கியத்திற்கு உதவி செய்வதாக இருக்கிறது. எனவே உபநிஷத் வாக்கியங்களை கர்ம வாக்கியங்களோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பதில் உபநிஷத்துக்கள் இயற்கையாகவே பிரமாணம் என்ற தகுதியுடன் இருக்கிறது. பிரமாணத்தினுடைய லட்சணங்கள் உபநிஷத்திற்கு பொருந்துகிறது. அது ஸ்வ பிரமாணமாகவே இருக்கிறது. உபநிஷத்துக்கள் பிரயோஜனத்தை கொடுக்கக்கூடியது. உதாரணமாக குந்திதேவ கர்ணனிடம் நான்தான் உன் தாய் என்று சொல்கின்ற வாக்கியம் ஸித்தபோதக வாக்கியம்தான், இருந்தாலும் அது கர்ணனுக்கு பலனைக் கொடுத்திருக்கிறது. அதேபோல அஹம் பிரம்மாஸ்மி என்ற வாக்கியமும் பிரயோஜனத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது.
உபநிஷத் கர்மத்தை நிந்தனை செய்திருப்பதால், கர்மத்தை உபதேசிப்பது முழு வேதத்தின் தாத்பர்யம் அல்ல என்று தெரிகிறது. மேலும் நிந்தனை செய்யப்பட்டதுடன் எப்படி சேர்க்க முடியும். ஆத்ம ஞானத்திற்கும், கர்மத்திற்கும் இருளும்-ஒளியும் போல் விரோதம் இருப்பதால் இரண்டையும் சேர்க்கமுடியாது. இவையிரண்டும் இருளும், ஒளியும் போல எதிரெதிர் தன்மையுடையதாக இருக்கின்றது. கர்மம் நடக்கின்ற இடத்தில் கர்த்தா, போக்தாவாகத்தான் இருக்க முடியும். ஆனால் பிரம்மஞான விஷயத்தில் அகர்த்தா, அபோக்தாவாக இருப்பதால் இரண்டையும் சேர்க்க முடியாது.
கர்மத்தோடு உபநிஷத் வாக்கியங்களை சேர்த்தால் அதில் தோஷம் வந்துவிடும். அந்த தோஷத்திற்கு ‘ஸ்ருதஹான அஸ்ருதகல்பனா” என்று பெயர்.
ஸ்ருதஹானம் – கேட்டதை விட்டுவிட்டு
அஸ்ருதகல்பனா – கேட்காததை எடுத்துக் கொள்ளுதல்.
உபநிஷத் பிரம்மன் ஆத்மஸ்வரூபமாக இருக்கிறது என்றும் அதை அறிவதனால் பலனுண்டு என்ற உபதேசத்தை விட்டுவிட்டு கர்ம வாக்கியத்தோடு சேர்த்துவிட்டால் இந்த தோஷம் வந்துவிடும். இந்த தோஷம் நல்லதைக் கொடுக்காது. இந்த தோஷத்தை சரியான இடத்தில் பயன்படுத்த வேண்டும். சான்றோர்கள் வாக்கியங்களில்தான் இதை பயன்படுத்த வேண்டும். இதற்கு எதிரானது வாச்யார்த்தம், லட்சியார்த்தம். இதை இவர்கள் விஷயத்தில் பயன்படுத்தக்கூடாது.
பூ.பக்ஷி கர்மகாண்டம் பிரயோஜனமற்றதா! இது சொர்க்கம் முதலிய பலன்களைக் கொடுப்பதற்கு பிரமாணமாக இருக்கிறது.
பதில் அக்ஞானிகளுக்கு பிரயோஜனமாக இருக்கலாம். ஆனால் முமுக்ஷுக்களுக்கும், ஞானிகளுக்கும் பிரயோஜனமில்லை.
பூ.பக்ஷி ஞானிகளுக்கும் பிரயோஜனமில்லையா?
பதில் ஞானிகளுக்கு ஞானகாண்டமும் பிரயோஜனமில்லை.
பூ.பக்ஷி ஒன்றை சேர்ப்பதன் மூலமாக அல்லது விடுவதன் மூலமாகத்தான் பலனை அடைகிறோம். மனிதனின் வாழ்க்கையே ஹேயம்(விட்டுவிடுதல்), உபாதேயம்(எடுத்துக் கொள்ளுதல்) வழியேதான் சென்று கொண்டிருக்கிறது. கர்மகாண்டம் இதை நடைமுறைப்படுத்தத்தான் வழிமுறைகளை காட்டிக் கொடுக்கிறது. இதன் மூலம் கர்மகாண்டம் ஹேயம்-உபாதேயமாக இருந்துக் கொண்டு நமக்கு உதவி செய்கிறது. ஆனால் பிரம்மன் இவையிரண்டையும் செய்வதில்லை. இதனால் பிரம்மத்தினால் ஒருபலனும் கிடையாது. எனவே பிரம்மனிடத்தில் உதாசீனனாகத்தான் இருக்க முடியும். பிரம்மத்தை தெரிந்து கொள்ள வேண்டும், அடைவதற்கு தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஏன் கஷ்டப்படுத்துகிறாய்?
பதில் உன்னால் கூறப்பட்ட தோஷம் பிரம்மத்திற்கு அலங்காரம்தான். பிரம்மன் ஹேய-உபாதேஹ ரஹிதம் என்று நீ கொடுத்த லட்சணம், பிரம்மத்திற்கு அலங்காரமாகத்தான் இருக்கிறது. கர்மத்திற்