Archive for the ‘பெருமாள் திருமொழி’ Category

ஸ்ரீ பெருமாள் திருமொழி -10–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

August 8, 2021

ஸ்ரீராம சரித்திரத்தை ஸ்ரீ வால்மீகிபகவான் பேசியநுபவித்தாற்போலத்
தாமும் பேசி அநுபவிக்கிறார் – இத்திருமொழியில்.
இத்திருமொழி ஸ்ரீராமாயண ஸங்க்ரஹ மெனப்படும்.

———-

அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை
செம் கண் நெடும் கரு முகிலை ராமன் தன்னை
தில்லை நகர் திரு சித்திர கூடம் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை
என்று கொலோ? கண் குளிர காணும் நாளே— 10-1-

பதவுரை

அம் கண்–அழகிய இடத்தை யுடையதும்
நெடு மதிள்–உயர்ந்த மதிள்களினால்
புடை சூழ்–நாற்புறமும் சூழப்பட்டதும்
அயோத்தி என்னும்–அயோத்யா என்று ப்ரஸித்தமுமான
அணி நகரத்து–அழகிய நகரத்திலே
உலகு அனைத்தும்–ஸகல லோகங்களையும்
விளக்கும் சோதி–விளங்கச் செய்கிற தனது ஒளியின் அம்சத்தாலே
வெம் கதிரோன் குலத்துக்கு–ஸூர்ய வம்சத்துக்கு (விளக்க முண்டாம்படி)
ஓர் விளக்கு ஆய் தோன்றி–ஒப்பற்தொரு விளக்கு போல (அதில்) வந்து அவதரித்து
விண் முழுதும்–தேவர்களெல்லாரையும்
உயக் கொண்ட–துன்பந்தீர்ந்து வாழச்செய்த
வீரன் தன்னை–மஹாவீரனும்
செம் கண்–சிவந்த திருக்கண்களையுடைய
நெடு கரு முகிலை–பெரிய காளமேகம் போன்ற வடிவ முடையவனும்
இராமன் தன்னை–ஸ்ரீராமனென்னும் திருநாமமுடையவனும்
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்–தில்லை நகரத்திலுள்ள திருச்சித்திர கூடத்தில் (எழுந்தருளியிருக்கிற)
எங்கள் தனி முதல்வனை–எமக்கு ஒப்பற்ற காரணமாகிறவனும்
எம் பெருமான் தன்னை–எமக்குத் தலைவனுமான பரமனை
கண் குளிர காணும் நாள்–கண்கள் குளிரும்படி ஸேவிக்கும் நாள்
என்று கொல் ஓ–எந்நாளோ!

———-

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி
வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே– 10-2–

பதவுரை

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி–செருக்கிவந்து எதிரிட்ட தாடகையினுடைய மார்பைப் பிளந்து
வரு குருதி பொழிதர–ரத்தம் வெளிவந்து சொரியம் படி
வல் கணை ஒன்று ஏவி–வலிய ஒப்பற்றதோர் அம்பைச் செலுத்தி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து–எல்லா மந்திரங்களையும் தம்மிடத்திலே கொண்ட
வேதங்களின் வழியே விச்வாமித்ர மஹாமுநி செய்த யாகத்தைப் பாதுகாத்து
வல் அரக்கர்–(அந்த யாகத்துக்கு இடையூறு செய்த ஸுபாஹூ முதலிய) வலிய ராக்ஷஸர்களுடைய
உயிர் கண்ட–உயிரைக் கொள்ளை கொண்ட
மைந்தன்–மிடுக்கை யுடையவன் (யாரென்னில்)
செம் தளிர்வாய் மலர்–சிவந்த தளிர்களின் நடுவே மலர்ந்த புஷ்பங்களை யுடையதும்
நகை சேர்–(காண்பவர்) மகிழும்படியான அழகு பொருந்தினதும்
செழு–செழுமையை யுடையதுமான
தண்–குளிர்ந்த
சோலை–சோலைகளை யுடைய
தில்லை நகர் திருச்சித்ர கூடம் தன்னுள்;
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த–ப்ரர்மணர் மூவராயிரம் பேர் (திரண்டு துதிக்க)
அணி மணி ஆசனத்து இருந்த–அழகிய ரத்நஸிம்ஹாஸநத்திலே வீற்றிருந்த
அம்மான் தானே–ஸர்வேச்வரனே யாவன்;
காண்மின்–அறியுங்கள்.

விச்வாமித்ர முனிவன் தனது வேள்வியைக் காக்கும்பொருட்டு தசரத சக்கரவர்த்தியினிடம் அநுமதி பெற்று
இராமபிரானை இளையபெருமாளுடன் அழைத்துக்கொண்டு போனபொழுது அம்முனிவனாச்ரமத்திற்குச்
செல்லும் வழியிடையே மிக்க செருக்குடன் வந்து எதிர்த்த தாடகையை ஸ்ரீராமன் முனிவனது கட்டளைப்படி
பெண்ணென்று பாராமற் போர்செய்து கொன்றது மன்றி, பின்பு முனிவன் செய்த யாகத்தில் தீங்குவிளைக்க
வந்த ஸுபாஹூ முதலிய பல அரக்கர்களையுங் கொன்று மாரீசனை வாயவ்யாஸ்தரத்தினாற் கடலிலே தள்ளிவிட்டு
யாகத்தை நிறைவேற்றுவித்தனன் என வரலாறு அறிக.

(அந்தணர்கள் ஒரு மூவாயிரவர்.) நாங்கை நாலாயிரம் தில்லை மூவாயிரம் என்ற ப்ரஸித்தி காண்க.
மூவாயிர நான்மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்காய சோதித்,
தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லை திருச்சித்ரக்கூடஞ்சென்று சேர்மின்களே என்றார் திருமங்கையாழ்வாரும்.

———-

செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி
சின விடையோன் சிலை இருத்து மழு வாள் ஏந்தி
செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு
வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை வுயர்ந்த பாங்கர்த்
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எவ்வரு வெஞ்சிலை தடக் கை ராமன் தன்னை
இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே—-10-3-

பதவுரை

செவ்வரி நல் கரு நெடு கண்–(உத்தம லக்ஷ்ணமான) சிவந்த ரேகைகள் படர்ந்த அழகிய கருமையான நீண்ட கண்களை யுடைய
சீதைக்கு ஆக–வநிதையை மணம் புரிதற் பொருட்டு
சினம் விடையோன்–கோபத்தை யுடைய ரிஷபத்தை வாஹநமாக வுடையனான சிவபிரானுடைய
சிலை இறுத்து–வில்லை முறித்து (பின்பு மிதிலா புரியினின்று மீளும் வழியில்)
மழுவாள் ஏந்தி–கோடாலியாகிய ஆயுதத்தை ஏந்தியவனான பரசுராமனுடைய
வெவ் வரி நல் சிலை–பயங்கரமான கட்டமைந்த சிறந்த வில்லை
வாங்கி– கையிற்கொண்டு (வளைத்து)
வென்றி கொண்டு–(அவனை) வென்று
வேல் வேந்தர் பகை தடித்த–(தான் அவதரித்த ஜாதியிற்பிறந்த) வேற்படையை யுடைய க்ஷத்ரியர்களுக்குப் பகையைத் தீர்த்த
வீரன் தன்னை–மஹா வீரனான
தெவ்வர்–பகைவர்கள்
அஞ்சு–(கண்டமாத்திரத்திலே, கடக்க வொண்ணா தென்று) அஞ்சும் படியான
நெடு புரிசை–உயர்ந்த மதிளையும்
உயர்ந்த பாங்கர்–ஓங்கிய (அட்டாலை யென்னும்) மதிற்பக்கத் திடத்தையுமுடைய
தில்லை நகர் திருச்சித்ர கூடம் தன்னுள்
(எழுந்தருளியிருக்கிற)
எவ்வரு வெம் சிலை தடகை இராமன் தன்னை–(வேறொருவரால்) அடக்கியாளுதற்கு அரியதும் (பகைவர்க்குப்)
பயங்கரமுமான வில்லை ஏந்திய பெரிய கையையுடைய இராமபிரானை
இறைஞ்சுவார்–வணங்குகிற அடியார்களுடைய
இணை அடியே–இரண்டு திருவடிகளையே
இறைஞ்சினேன்–வணங்கினேன்.

நான்காமடிமில் எவ்வரி என்றே நாடெங்கும் ஓதுவர்.
அப்பாடத்துக்கு ஏவரி என்பது எவ்வரியென்று விகாரப் பட்டதெனக் கொண்டு
ஏ-அம்பு தொடுப்பதற்கு உரிய வரி – நீண்ட என்று கஷ்டப்பட்டு பொருள் கொள்ளலாமாயினும்,
வேறொருத்தரால் அடக்கியாள வொண்ணாதே காணவே ப்ரதிபக்ஷம் முடியும்படியான ஸ்ரீசார்ங்கம்.
என்ற வியாக்கியானத்திற்கு அப்பாடம் சேராது.
எவ்வரு என்றோதுவதே சிறக்கும்.
ஏவரு என்பது எதுகை நோக்கி எவ்வரு எனக்குறுக்கலும் விரித்தலுமாகிய விகாரங்களை யடைந்தது
ஏவு-ஏவுதல்,அடக்கியாளுதல்; (முதனிலைத் தொழிற்பெயர்) அரு-ஒண்ணாத; எனவே, அடக்கியாள முடியாத என்றதாயிற்று.
(இறைஞ்சுவா ரிணையடியே இறைஞ்சினேனே) இராமனுக்கு அடியவனான பரதனுக்கு அடிமை பூண்டொழுகின
சத்ருக்நன் போலப் பாகவத தாஸனாக வேண்டுமென அவாவுகின்றார்.

————–

தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால்
தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை
பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு
பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து
சித்ர கூடத்து இருந்தான் தன்னை இன்று
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எத்தனையும் கண் குளிர காண பெற்ற
இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே— 10-4–

பதவுரை

தொத்து அலர் பூ சுரி குழல்–கொத்துக் கொத்தாக மலர்ந்த புஷ்பங்களைச் சூடிய நுனி சுருண்ட கூந்தலை யுடைய
கைகேசி–கைகேயியினது
சொல்லால்–சொல்லின்படி
தொல் நகரம் துறந்து–தொன்று தொட்டுப் பரம்பரையாய் வருகிற ராஜ்யத்தைக் கை விட்டு
துறை கங்கை தன்னை–கங்கையின் துறையை
பத்தி உடை குகன் கடத்த–மஹா பக்தனான குஹப் பெருமான் புணை செலுத்தி யுதவ; (கடந்து)
வனம் போய் புக்கு–காட்டிற்போய்ச் சேர்ந்து
பரதனுக்கு–(அங்கு வந்த) பரதாழ்வானுக்கு
பாதுகமும் அரசும் ஈந்து–(தனது) மரவடியையும் ராஜ்யத்தையுங் கொடுத்து
சித்திர கூடத்து இருந்தான் தன்னை–சித்ரகூட பர்வதத்தி லெழுந்தருளி யிருந்த ஸ்ரீராமபிராணை
இன்று–இப்பொழுது (பிற்காலத்தில்)
தில்லைநகர் திருச்சித்ரகூடம் தன்னுள்
கண் குளிர காண பெற்ற–கண் குளிரும்படி ஸேவிக்கப் பெற்ற
இரு நிலத்தார்க்கு–பெரிய (சிறந்த) பூலோகத்திலுள்ளவர்களுக்கு
இமையவர்–நித்யஸூரிகளும்
எத்தனையும் நேர் ஒவ்வார்–சிறிதும் ஸமமாக மாட்டார்கள்.
(தாம் ஏ–ஈற்றசைகள், தோற்றமுமாம்)

ஸ்ரீராமாவதாரத்திலே சித்ரகூட பர்வதத்தில் எழுந்தருளியிருந்த இருப்பைப் பிற்பட்டார் கேட்டு
அநுபவிக்கப் பெறுவதே யன்றித் தாம் கண்டு அநுபவிக்க பெறாமல் கண் விடாய்த்து நிற்கிற
குறைதீர எக்காலத்திலு முள்ளார் அநுபிவக்கைக்காக அங்ஙனமே தில்லைத் திருச்சித்திரக்கூடத்தில்
வீற்றிருக்கின்றனன் என்பது பின்னடிகளின் உட்கோள்.

————

வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று
வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி
கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி
கரனோடு தூடணன் தன் உயிர் ரை வாங்கி
சிலை வணக்கி மான் மறிய வெய்தான் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
தலை வணக்கி கை கூப்பி ஏத்த வல்லார்
திரிதலால் தவமுடைத்து தரணி தானே —10-5–

பதவுரை

வலி வணக்கு–(எதிரிகளுடைய) வலிமையைத் தோற்பிக்கின்ற
வரை நெடு தோள்–மலை போன்ற பெரிய தோள்களை யுடைய
விராதை–விராதனென்னும் இராக்ஷஸனை
கொன்று–கொன்று
வண் தமிழ் மா முனி கொடுத்த–சிறந்த தமிழ்ப பாஷைக்கு உரியவரான அகஸ்திய முனிவர் கொடுத்த
வரி வில் வாங்கி–கட்டமைந்த வில்லை பெற்று
கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நீக்கி–மானின் பார்வையைத் தோற்பிக்கும் யடியான பார்வை யழகை
யுடையவளாய் வந்த சூர்ப்பணகை யென்னும் ராக்ஷஸியின் மூக்கை அறுத்து
கானோடு தூடணன் தன் உயிரை வாங்கி–கரன் தூஷணன் என்னும் அரக்கர்களின் உயிரை (அவர்களுடம்பினின்று) கவர்ந்து
மான்–மாரீசனாகிய மாயா ம்ருகமானது
மறிய–அழியும்படி
சிலை வணக்கி எய்தான் தன்னை–தனது வில்லை வளைத்து அம்புகளை எய்தவனான இராமபிரானை
தில்லைநகர் திருச்சித்ரகூடம் தன்னுள்
தலை வணங்கி கை கூப்பி ஏத்த வல்லார்–தலை வணங்கி அஞ்ஜலி பண்ணித் துதிக்கவல்ல அடியார்கள்
திரிதலால்–(தன்மீது) ஸஞ்சரிக்கப் பெறுதலால்
தரணி–பூமியானது
தவம் உடைத்து–பாக்கியமுடையது
(தான், ஏ -ஈற்றசைகள், தேற்றமுமாம்)

இராமபிரான் பரசுராமனிடமிருந்து விஷ்ணு தநுஸ்ஸைப் பெற்று அவனை வென்ற போது அங்கு வந்து
தன்னைக் கொண்டாடிய தேவர்களுள் வருணனிடத்திலே அவ்வில்லை கொடுத்து
அதனை நன்றாகப் பாதுகாத்து வைத்திருந்து உரிய ஸமயத்தில் தன்னிடம் கொணர்ந்து கொடுக்குமாறு சொல்ல
அங்ஙனமே அதனை வாங்கிச்சென்று நன்கு பாதுகாத்து வைத்திருந்த வருணன் பின்பு
ஸ்ரீராமன் வநவாஸம்புக்குத் தண்டகாரணியத்தில் அகஸ்தியாச்ரமத்திற்கு எழுந்தருளின பொழுது
அதனை அம்பறாத்தூணியுடனும் வாளுடனும் அம்முனிவர் தர
பெருமாள் பெற்றுக் கொண்டனன் என்பது இங்கு அறியத்தக்கது.

சூர்ப்பணகையை அங்க பங்கஞ் செய்தது இளைய பெருமாளின் செய்கையாயினும்
அதனைப் பெருமாள் மேல் ஏற்றிச் சொன்னது, இராமனது கருத்துக்கு ஏற்ப அவன் கட்டளையிட்டபடி
இவன் செய்தனனாதலின் ப்ரயோஜ்ய கர்த்தாவின் வினையாதல்பற்றி யென்க.
அன்றியும் என்றபடி இராமபிரானுக்கு லக்ஷ்மணன் வலத்திருக்கை யெனப்படுதலால்
அங்ஙனம் கையாகிற லக்ஷ்மணனுடைய செயலை இராமன்மேல் ஒற்றுமை நயம்பற்றி ஏற்றிச் சொல்லுதல் தகுதியே.

சூர்ப்பணகை ராமலக்ஷ்மணர்களிடம் வரும்போது அழகிய வடிவமெடுத்து வந்தனளாதலால்
கலை வணக்கு நோக்கரக்கி என்றார். மானின் விழி பெற்ற மயில் வந்ததெனவந்தாள் என்றார் கம்பரும்.
இங்கே மூக்கு என்றது- மற்றும் அறுபட்ட அவயவங்களுக்கும் உபலக்ஷணம்.

————-

தன மருவு வைதேகி பிரியல் உற்று
தளர்வெய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
வன மருவு கவி அரசன் காதல் கொண்டு
வாலியை கொன்று இலங்கை நகர் அரக்கர் கோமான்
சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
இனிது அமர்ந்த வம்மானை ராமன் தன்னை
ஏத்துவார் இணை அடியே யேத்தினேனே –10-6–

பதவுரை

தனம் மருவு–(தான் விரும்புஞ்) செல்வமாகப் பொருந்திய
வைதேகி பிரியல் உற்று–பிராட்டி பிரியப் பெற்று
தளர்வு எய்தி–(அதனால்) வருத்தமடைந்து
சடாயுவை–ஜடாயுவென்னும் கழுகரசை
வைகுந்தத்து ஏற்றி–பரமபதத்திற் செலுத்தி
வனம் மருவு–(வாலிக்கு அஞ்சிக்) காட்டில் மறைந்து வசிக்கிற
கவி அரசன்–வாநர ராஜனான சுக்ரீவனுடன்
காதல் கொண்டு–ஸ்நேஹஞ் செய்து கொண்டு
வாலியை கொன்று==(அவனது விருப்பத்தின்படி அவன் தமையனான) வாலியை வதைத்து
இலங்கை நகர்–இலங்காபுரியை
அரக்கர் கோமான் சினம் அடங்க–(அதற்குத் தலைவனாகிய) ராக்ஷஸராஜானான ராவணனுடைய செருக்கு ஒழியும்படி
மாருதியால் சுடுவித்தானை–அனுமானைக் கொண்டு எரிப்பித்தவனும்
தில்லைநகர் திருச்சித்ரகூடம் தன்னுள்
இனிது அமர்ந்த–இனிமையாய் எழுந்தருளியிருக்கிற
அம்மானை–ஸர்வேச்வரனுமான
இராமன் தன்னை–இராமபிரானை
ஏத்துவார்–துதிக்கின்ற அடியார்களுடைய
இணை அடியே–உபய பாதத்தையே
எத்தினேன்–துதிக்குந் தன்மையேன் (யான்.)

“தனமருவு வைதேகி” என்றவிடத்து தனம் என்பதை வடசொல்லின் விகாரமாகக் கொண்டு
வேறுவகையாகவும் பொருள் கூறலாமாயினும் விஷொஸ்ரீ என்றபடி பெருமாளுக்கு மென்ற வடசொல் விகாரம்.

——————

குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து
குலை கட்டி மறு கரையை அதனால் ஏறி
எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன்
இன் உயிர் கொண்டவன் தமிபிக்கு அரசும் ஈந்து
திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்
அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே— 10-8-

பதவுரை

குரை கடலை–கோஷிக்கின்ற கடலை
அடல் அம்பால்–தீக்ஷ்ணமான அம்பைக் கொண்டு
மறுக எய்து–கலங்கும்படி எய்யத் தொடங்கி
குலை கட்டி–(அதில்) அணை கட்டி
அதனால்–அந்த அணை வழியாக
மறு கரையை ஏறி–(கடல் கடந்து) அக்கரை சேர்ந்து
எரி நெடு வேல் அரக்கரொடும்– (சத்துருக்களை) எரிக்கின்ற நீண்ட வேற்படையை யுடைய இராக்கதர்களும்
இலங்கை வேந்தன்–இலங்கைக்கு அரசனான இராவணனும் ஆகிய அனைவர்களுடைய
இன் உயிர் கொண்டு–இனிய உயிரைக் கவர்ந்து (கொன்று)
அவன் தம்பிக்கு–அவ்விராவணனது தம்பியான விபீஷணனுக்கு
அரசும் இந்து–ராஜ்யத்தைக் கொடுத்து
திருமகளோடு–லக்ஷ்மியின் அவதாரமான பிராட்டியுடனே
இனிது அமர்ந்த–இனிமையாகச் சேர்ந்த
செல்வன் தன்னை–எல்லா வகைச் செல்வங்களுமுடையவனும்
தில்லை நகர் திருச் சித்ரகூடம் தன்னுள்
அரசு அமர்ந்தான்–தனது மேன்மை தோன்ற எழுந்தருளி யிருப்பவனுமான
அடி சூடும்–இராமபிரானது திருவடிகளைத் தலைமேற் கொள்ளுதலாகிற
அரசை அல்லால்–அரசாட்சியைப் பெற விரும்புவேனே யன்றி
மற்று அரசு–அதற்கு மாறாக ஸ்வாதந்திரியம் பாராட்டுகிற அரசாட்சியை
அரசு ஆக எண்ணேன்–ஒரு பொருளாக மதிக்க மாட்டேன்.

இப்படி ஸாது பரித்ராணமும் துஷ்ட சிக்ஷணமும் செய்தருளி உலகத்தை உய்வித்தருளிய இராமபிரானது
திருவடிகளைச் சிரோபூஷணமாகக் கொள்வதே தமக்குப் பெருத்த ஸாம்ராஜ்யமென்பதை
இப்பாட்டால் வெளியிட்டார்.

————

அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி
அரசு எய்தி அகத்தியன் வாய் தான் முன் கொன்றான்
தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலை செல்வி
உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம் பவள திறல் வாய் தன் சரிதை கேட்டான்
தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
எம்பெருமான் தான் சரிதை செவியால் கண்ணால்
பருகுவோம் இன் அமுதம் மதியோம் அன்றே— 10-8–

பதவுரை

அம் நெடு பொன் மணி மாடம்–அழகிய உயர்ந்த பொன்னையும் இரத்தினங்களையுங் கொண்டு
அமைக்கப்பட்ட உபரிகை வீடுகளையுடைய
அயோத்தி–அயோத்யா நகரத்துக்கு
எய்தி–மீண்டு வந்து
அரசு எய்தி–அரசாட்சியை அடைந்து
தான் முன் கொன்றான் தன்–தன்னால் முன்பு கொல்லப்பட்டவனான இராவணனுடைய
பெரு தொல் கதை–பெரிய பூர்வ வ்ருத்தாந்தங்களை யெல்லாம்
அகத்தியன் வாய் கேட்டு–அகஸ்திய மகாமுனிவன் வாயாற் சொல்லக் கேட்டு
மிதிலை செல்வி–மிதிலா நகரத்தில் தோன்றிய பிராட்டி
உலகு உய்ய–உலக முழுவதும் வாழும்படி
திரு வயிறு வாய்த்த–பெற்ற
மக்கள்–தன் பிள்ளைகளான குசலவர்களுடைய
செம் பவளம் திரள் வாய்–சிவந்த பவழத்துண்டு போன்ற வாயினால்
தன் சரிதை–தனது சரித்திரமான ஸ்ரீராமாயணத்தை
கேட்டான்–கேட்டருளினவனான
தில்லைநகர் திருச்சித்ரக்கூடம் தன்னுள்
(எழுந்தருளியிருக்கிற)
எம் பெருமான் தன்–எமது தலைவனுடைய
சரிதை–சரித்திரத்தை
செவியால் கண்ணால், பருகுவோம்–காதினாற்கேட்டு (அப்பெருமானைக்) கண்ணால் ஸேவிக்கப் பெறுவோம்யாம்
(அதுவேயன்றி)
இன் அமுதம்–இனிய தேவாம்ருதத்தையும்
மதியோம்–ஒரு பொருளாக நன்கு மதிக்க மாட்டோம்
அன்றே–அல்லவா! (ஈற்றசை, தோற்றமுமாம்)

ஆராவமுதமாகவுள்ள எம்பெருமானுடைய ஸேவையின் மிக்க இனிமைக்கும்,
அங்ஙனமேயுள்ள அப்பிரானுடைய சரித்திரத்தின் மிக்க இனிமைக்கும் தேவாம்ருதத்தின் இனிமை
சிறிதும் ஈடாகாதென்னுங் கருத்தால், இன்னமுதமதியோம் என்கிறார். இன்னமுதமதியோ மொன்றே என்றும் பாடமுண்டாம்:
அமுதம் – அமுதத்தை, ஒன்று – ஒரு பொருளாக மதியோம் என்றவாறு.

குசலவர் இராமாயண ப்ரவசநஞ்செய்து அதனால் உலகத்தை நன்னெறியில் உய்த்தலும்,
இராமபிரான் காலத்திற்குப்பின் அப்பெருமான் போலவே நீதிமுறை தவறாது உலகத்தை
இனிது ஆளுதலும் தோன்ற உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள் என்றார்.

————

செறி தவ சம்புகன் தன்னை சென்று கொன்று
செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த
நிறை மணி பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னை
தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்ட
திறல் விளங்கும் இலகுமனை பிரிந்தான் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
உறைவானை மறவாத வுள்ளம் தன்னை
வுடையோம் மற்று உறு துயர் அடையோம் அன்றே —10-9–

பதவுரை

செறி தவம்–மிக்க தபஸ்ஸை யுடையனான
சம்புகன் தன்னை–(சூத்ரசாதியனான) சம்புகனை
சென்று, கொன்று–(அவனிருக்கு மிடந்தேடிச்) சென்று தலையறுத்து
செழுமறை யோன் உயிர் மீட்டு–சிறந்த ப்ராஹ்மண குமாரனுடைய உயிரை மீட்டுக் கொடுத்து
தவத்தோன் ஈந்த–அகஸ்திய மா முனிவன் கொடுத்த
நிறைமணி பூண் அணியும் கொண்டு–பெருவிலையுள்ள ரத்நஹாரமான ஆபரணத்தையும் சாத்தியருளி
இலவணன் தன்னை–லவணாஸுரனை
தம்பியால்–சத்ருக்நனைக் கொண்டு
வான் ஏற்றி–வீர ஸ்வர்க்கத்திற் குடியேற்று வித்து
முனிவன் வேண்ட–துர்வாஸமுனிவனது சாபத்தால்
திறல் விளங்கும் இலக்குமனை பிரிந்தான் தன்னை–பலபராக்கிரமம் விளங்கப் பெற்ற லக்ஷ்மணனை துறந்தவனும்
தில்லைநகர் திருச்சித்ரகூடம் தன்னுள்
உறைவானை–நித்யவாஸம் பண்ணுகிறவனுமான இராமபிரானை
மறவாத உள்ளம் தன்னை உடையோம்–மறவாமல் எப்பொழுதும் தியானிக்கிற மனத்தையுடைய நாம்
மற்று உறு துயரம் அடையோம்–இனி (எம்பெருமானை அநுபவிக்கப் பெற்றிலோ மென்று வருந்துன்பத்தை அடையமாட்டோம்)
(அன்று, எ – ஈற்றசை)

தன்னை அக்காலத்திற் காணப்பெறாத குறைதீரப் பிற்காலத்தார் காணும்படி தில்லைத் திருச்சித்திரக்கூடத்தில்
அப்படிப்பட்ட திவ்விய மங்கள விக்ரஹத்தோடு நித்யவாஸம் செய்தருளாநின்ற எம்பெருமானை
இறையும் மறவாது எப்பொழுதும் தியானிப்போமாகில் அக்காலத்தில் எம்பெருமானை அநுபவிக்கப் பெற்றிலோமே!
என்று வரும் துன்பத்தை அடையமாட்டோம் என்றவாறு.

————

அன்று சரா சரங்களை வைகுந்தத்து ஏற்றி
அடல் அரவ பகை ஏறி அசுரர் தம்மை
வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற
விண் முழுதும் எதிர் வர தான் தாமமேவி
சென்று இனிது வீற்று இருந்த அம்மான் தன்னை
தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும்
இறைஞ்சுமினோ எப் பொழுதும் தொண்டீர்! நீரே —10-10–

பதவுரை

அன்று–(தன்னடிச்சோதிக்கு எழுந்தருள்கிற) அந்நாளில்
சர அசரங்களை–(அயோத்யாபுரியிலுள்ள) ஜங்கமும் தாவரமுமான எல்லா வுயிர்களையும்
வைகுந்தத்து ஏற்றி–பரமபதத்துக்குப் போகச் செய்து
அடல் அரவம் பகை ஏறி–வலிமையை யுடைய பாம்புகளுக்குப் பகையான கருடன் மேல் ஏறிக் கொண்டு
அசுரர் தம்மை வென்று–அசுரர்களை ஜயித்து
இலங்கும் அணி நெடு தோள் நான்கும் தோன்ற–(அந்த ஜயலக்ஷ்மி) விளங்கப் பெற்ற அழகிய
நீண்ட (தனது) திருக்கைகள் நான்கும் விளங்க
விண் முழுதும்–பரமபதத்திலுள்ளாரெல்லாரும்
எதிர் வர–எதிர் கொண்டு உபசரிக்கும்படி
தன் தாமம் மேவி சென்று–தமது ஸ்தாநமான அப் பரம பதத்திலே போய்ப் புக்கு
இனிது வீற்றிருந்த-(தன் மேன்மை யெல்லாம் தோன்றும்படி) இனிமையாகத் (திவ்ய ஸிம்ஹாஸநத்தில்) எழுந்தருளியிருந்த
அம்மான் தன்னை தில்லை நகர் திரு சித்ரகூடம் தன்னுள் என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி–ஸர்வேச்வரனை
(அந்த இருப்பில் ஒன்றுங் குறையாமல் அவ்வாறே) தில்லைச் சித்ரக்கூடத்தில் எந்நாளும் (நமக்காக)
நித்யவாஸம் பண்ணுகிற அப்பெருமான் இவ்விராமபிரானே யென்றறிந்து துதித்து
தொண்டீர் நீர்–அவனுக்கு அடியவர்களான நீங்கள்
நாளும் எப்பொழுதும்–தினந்தோறும் எப்பொழுதும்
இறைஞ்சு மின்–வணங்கி உஜ்ஜீவியுங்கள்
(ஏ – இசைநிறை.)

இளையபெருமாளை விட்டு பிரிந்ததனால் தரிக்கமாட்டாமல் மிகவும் க்லேஸமடைந்த இராமபிரான்
ராஜ்யத்தை விட்டு எழுந்தருளத் தொடங்கியபோது அயோத்யா நகரத்து உயிர்களெல்லாம் பெருமாளைச் சரணமடைந்து
தேவரீர் எங்குச் சென்றாலும் அடியோங்களையும் கூடவே அழைத்துக் கொண்டு செல்லவேண்டும் என்று பிரார்த்திக்க
ஸ்ரீராமன் அவர்களுடைய பக்திப்ரகர்ஷத்தைக் கண்டு அப்படியே ஆகட்டும் என்று அருளிச்செய்து,
அனைவரையும் தம்மைப் பின் தொடர்ந்து வருமாறு பணித்தருளிப் பிரயாணப்பட்டனர்.
அப்பொழுது அந்நகரத்திருந்த மனிதர்களேயன்றி விலங்கு பறவை முதலிய அஃறிணை உயிர்களும்
அகமகிழ்ந்து பெருமாள் பின்சென்றன. இங்ஙனம் பலரும் புடைசூழ ஸ்ரீபகவான் ஸரயூநதியில் இறங்கித் தன்னடிச் சோதிக்கு
எழுந்தருளும்போது தம்மிடத்து இடையறாத அன்புகொண்டு பின்பற்றிச் சரயுவில் மூழ்கி உடம்பைத் துறந்த
எல்லாவுயிர்கட்கும் ப்ரஹ்மலோகத்துக்கு மேற்பட்டதாய் பரமபதம் போலவே
அபுநராவ்ருத்தியாகிற மேம்பாடுள்ள ஸாந்தாநிகமென்னும் உலகத்தை அளித்தனர்.

ஸ்ரீராமபிரான் பரமபதத்துக்கு சென்றபோழ்து சங்க சக்கரங்களிரண்டையும் தரிக்கிற மேற்பாற் கரமிரண்டுந்தோன்றப்
பெற்றமை விளங்க அசுரர் தம்மைவென்றிலங்கு மணிநெடுந்தோள் நான்குந்தோன்ற என்றார்.
இந்த அடைமொழியை வீற்றிருந்த என்பதனோடாவது சித்ரகூடந்தன்னுள் நின்றான் என்பதனோடாவது இயைத்தலும் ஏற்கும்.

அடலரவப் பகையேறி என்றது,
தன்தாமமேவி என்றதனோடும் அசுரர் தம்மை வென்று என்றதனோடும் இயைக்கத்தக்கது.

————

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–

பதவுரை

தில்லைநகர் திரு சித்ரகூடம் தன்னுள்
திறல் விளங்கும்–பல பராக்கிரமம் விளங்கப் பெற்ற
மாருதியோடு–அனுமானுடனே
அமர்ந்தான் தன்னை–நித்யவாஸம் பண்ணுகிற எம் பெருமானைக் குறித்து
எல்லை இல்சீர் தயரதன் தன் மகன் ஆய் தோன்றிற்று அது முதல் ஆ தன் உலகம் புக்கது ஈறு ஆ–அழிவில்லாத
புகழையுடைய தசரதசக்ரவர்த்தியின் குமாரனாய் பிறந்தது முதல் பரமபதம் புக்கது இறுதியாக
(ஸ்ரீராமாயணத்தை முழுதையும் ஸங்க்ரஹமாக அமைத்து)
கொல் இயலும் படை தானை கொற்றம் ஒள்வாள் கோழியர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த–(பகைவர்களைக்) கொல்லுதல்
பொருந்திய ஆயுதங்களுடைய சேனையையும் வெற்றியையும் ஒளியையுமுடைய வாளாயுதத்தையுடைய வரும்
உறையூரிலுள்ளார்க்குத் தலைவரும் வெண் கொற்றக்குடையை யுடையவருமான குலசேகராழ்வார் அருளிச்செய்த
நல் இயல்–சிறந்த இயற்றமிழிலக் கணத்துக்கு இசைந்த
இன் தமிழ் மாலை பத்தும்–இனிய தமிழ்ப் பிரபந்த ரூபமான இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லார்–கற்று வல்லவர்கள்
நலம் திகழ–பரமபதத்தில் விளங்குகிற
நாரணன்–ஸ்ரீமந் நாராயணனுடைய
அடிகீழ் நண்ணுவார்–திருவடிகளிற் சேரப் பெறுவார்கள்.

தில்லைத் திருச்சித்ரக்கூடத் தெம்பெருமான் விஷயமாக ஸ்ரீகுலசேகராழ்வார் அருளிச்செய்த பரமபோக்யமான
இத்திருமொழியை ஒதவல்லவர்கள் எம்பெருமானருளாற் பரமபதமடைவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டினராயிற்று.
பால்யத்தில் ப்ரஹ்மா அளித்த வரத்தினால் சிரஞ்சீவினவரும், (அதிமாநுஷஸ்தவம்.)என்றபடி –
ஸ்ரீராமகதை உலகத்திலுள்ளவளவும் தாம் ஜீவித்திருக்குமாறு ஸ்ரீராமனிடம் வரம்வேண்டிப் பெற்றவருமான திருவடி,
இராமபிரான் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளிய பொழுது அவனைவிட்டு பிரியமாட்டாது மனமிரங்க
அந்த உத்தம பக்த சிகாமணியை தானும் விடமாட்டாமல் ஸ்ரீராமன் அவருடனே சித்ரகூடத்தில் வந்து வீற்றிருக்கின்றனனாம்.

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ பெருமாள் திருமொழி -9–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

August 7, 2021

வன் தாள் இணை வணங்கி வள நகரம்
தொழுது ஏத்த மன்னனாவான்
நின்றாயை அரி அணை மேல் இருந்தாயை
நெடும் கானம் படர போகு
வென்றாள் எம்மி ராமாவோ!
உன்னை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்
நன் மகனே! உன்னை நானே—- 9-1–

பதவுரை

எம் இராமாவோ–ஓ எமது இராமனே!
வளம் நகரம்–அழகிய அயோத்தி மாநகரத்துப் பிரஜைகள் அனைவரும்
வல் தாளின் இணை வணங்கி தொழுது ஏத்த–(சரணமடைந்தவர்களை எப்பொழுதும் விடாமற் பாதுகாக்கும்)
வலிமையையுடைய (உனது) இரண்டு திருவடிகளிலும் (விழுந்து) நமஸ்கரித்து (எழுந்து) கைகூப்பி நின்று துதிக்க
மன்னன் ஆவான் நின்றாயை–அரசனாகப் பட்டாபிஷேகஞ் செய்து கொள்ளுதற்கு ஸித்தனாய் நின்றவனும்
அரி அணை மேல் இருந்தாயை–சிங்காசனத்தின் மீது வீற்றிருக்க ஸித்தனாயிருந்தவனுமான உன்னை
நெடுங்கானம் படர போகு என்றாள்–பெரிய காட்டிற்கு செல்லுதற்கு (இந்நகர் விட்டு நீங்கிப்) போ என்று (கைகேயி) கூறினாள்
நல் மகனே–நல்ல குமாரனே!
நான்–நான்
உனை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு–உன்னைப் பெற்று வளர்த்த தாயான கைகேயியின் வார்த்தையைக் கேட்டு
நன்றாக உன்னை நானிலத்தை ஆள்வித்தேன்–நன்றாக! உன்னை நிலவுலகத்தை ஆளும்படி செய்தேன்.

நன்றாக உன்னை நானிலத்தை ஆள்வித்தேன் என்றது –
கல்லைக் கடிக்க நன்றாய் சமைத்தாய் என்பது போன்ற விபரீத லக்ஷணை.
இப்படி நான் உன் பக்கல் பெருந்தீங்கு செய்தவிடத்திலும் நீ சிறிதும் குணங்குறைந்தாயில்லை;
உன் குணம் மேன்மேல் மிக்கு விளங்கப்பெற்றாய் நானே குணக்கேடுடையனாய் நின்றேன் என்பான் நன்மகனே என்று விளித்தான்.
புத்ரலக்ஷணங்களைப் பூர்த்தியாகவுடையவன் என்றபடி தன் சொல் தவறாது நடக்குமவனான மகனென்க.
ஈற்றடி இரக்கத்தை நன்கு விளக்கும்.
போகு – என்றாள் = போகென்றாள் என்று புணரத்தக்கது,
சிறுபான்மை உயிர்வரக் குற்றியலுகரம் கெடாது பொது விதியால் வகரவுடம்படு மெய் ஏற்று,
போகுவென்றாள் என்று நின்றது. இவ்விடத்து இது செய்யுளோசை நோக்கியது.
இராமாவோ – ஒகாரம் மிக்கது, புலம்பல் விளியாகலின் புலம்பின் ஓவும் ஆகும் என்றார்.
நன்னூலாரும் உன்னை நானிலத்தை ஆள்வித்தேன். இரண்டு செயப்படு பொருள் வந்த வினை என்பர் வடநூலார்.

———–

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–

பதவுரை

எம் இராமாவோ!
வெவ் வாயேன் வெவ் உரை கேட்டு–கொடிய வாயை யுடையேனை என்னுடைய கடுஞ்சொற்களைக் கேட்டு
இரு நிலத்தை வேண்டாதே–பெரிய நிலவுலகத்து அரசாட்சியை விரும்பாமலே விட்டிட்டு
விரைந்து–சீக்கிரமாக
வென்றி மை வாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து மா ஒழிந்து–வெற்றியை விளைப்பதான
மைம் மலை போன்ற வடிவத்தையுடைய யானையும் தேரும் குதிரையுமாகிய வாஹநங்களை யொழிய விட்டு
வனமே மேவி–காட்டையே சேர்ந்து
நெய் வாய வேல் நெடு கண் நேரிழையும்–நெய்ப்பூசிய நுனியையுடைய வேலாயுதம் போன்ற
நீண்ட கண்களையும் தகுதியான ஆபணரங்களை யுமுடையளான பிராட்டியும்
இளங்கோவும்–இளைய பெருமாளும்
பின்பு போக–உடன் தொடர்ந்து வர
எவ்வாறு நடந்தனை–எங்ஙனம் நடந்து சென்றாயோ!
எம் பெருமான்–எமது ஐயனே!
என் செய்கேன்–நான் என் செய்வேன்!

எவ்வாறு நடந்தனை = கால்நடை நடக்க உரியனல்லாத நீ எங்ஙனம் நடந்து சென்றாயோ என்று பரிதபிக்கிறபடி
கைகேயி வார்த்தைகளுக்குக் குறுக்குச் சொல்ல முடியாமல் இவ்வாறு உன்னைப் பிரியவிட்டு
அகதிகனான எனக்கு இனி மரணமே கதியென்பான்
என் செய்கேன் என்றான் எம்பெருமான் அண்மை விளியாதலின் இயல்பு.

—————

கொல் அணை வேல் வரி நெடும் கண் கௌசலை தன்
குலமதலாய்! குனி வில்லேந்தும்
மல்லணைந்த வரை தோளா! வல் வினையேன்
மனம் உருக்கும் வகையே கற்றாய்
மெல்லணை மேல் முன் துயின்றாய்
இன்று இனி போய் வியன் கான மரத்தின் நீழல்
கல்லணை மேல் கண் துயில கற்றனையோ?
காகுத்தா! கரிய கோவே! —–9-3–

பதவுரை

கொல் அணை–கொலைத் தொழில் பொருந்தின
வேல்–வேலாயுதம் போன்ற
வரி நெடுங்கண்–செவ்வரி பரந்த நீண்ட கண்களையுடைய
கௌசலை தன்–கௌஸல்யையினது
குலம்–குலத்தில் தோன்றிய
மதலாய்–குமாரனே!
குனி வில் ஏந்தும்–வளைந்த வில்லைத் தரித்த
மல் அணைந்த வரை தோளா–வலிமை பொருந்திய மலைகள் போன்ற தோள்களை யுடையவனே!
வல் வினையேன்–மஹா பாபியான என்னுடைய
மனம் உருக்கும் வகையே கற்றாய்–மனதை உருகச் செய்வதற்கே வல்லவனே!
காகுத்தா–ககுத்ஸ்தனென்னும் அரசனது குலத்தில் தோன்றியவனே!
கரிய கோவே–கருநிறமுடைய ஐயனே!
மெல் அணை மேல் முன் துயின்றாய்–மென்மையான பஞ்சனை மெத்தையின் மேல் முன்பெல்லாம் படுத்து உறங்கிப் பழகினவனான நீ
இனி இன்று போய்–இனிமேற் புதிதாக இன்றைக்குச் சென்று
வியன் கானம் மரத்தின் நீழல்–பெரிய காட்டிலுள்ள மரத்தின் நிழலிலே
கல் அணை மேல் கண் துயில கற்றனையோ–கருங்கற் பாறைகளையே படுக்கையாகக் கொண்டு அதன் மேற்படுத்துத் துயிலப் பழகின்றாயோ

இன்றளவும் ராஜார்ஹமான ஸுகுமாரஸுயங்களிலே ஸுகமே கிடந்து கண் வளர்ந்த உனக்கு
இனி கொடுங்கதிரோன் துன்னு வெயில் வறுத்த வெம்பரல்மேல் படுக்க நேர்ந்ததே!
இஃதென்ன கொடுமை! என்று வயிறெரிகிறபடி.

வல்வினையேன் என்றது குடையுஞ்செருப்புங் கொடாதே தாமோதரனை நான், உடையுங்கடியனவூன்று
வெம்பரற்களுடைக்கடிய வெங்கானிடைக் காலடிநோவக் கன்றின்பின் கொடியே னென்பிள்ளையைப் போக்கினேன்
எல்லே பாவமே என்றாற்போல் பெருமானுடைய திருமேனி ஸௌகுமார்யத்தை நோக்காமல்
வெவ்வியகாட்டில் அவனைப் போகவிட்ட கொடுமையையுடைய தன்னைத்தானே வெறுத்துக் கூறியது.

மனமுருக்கும் என்றவிடத்து மனம் முருக்கும் என்றும் பதம் பிரிக்கலாம்.
முருக்குதல் – அழித்தல். முருங்கு என்பதன் பிறவினை.
வியன் – உரிச்சொல். வியல் என்பதன் விகாரமுமாம். நீழல் – நிழல் என்பன் நீட்டல்

—————

வா போகு வா இன்னம் வந்து
ஒருகால் கண்டு போ மலராள் கூந்தல்
வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா
விடையோன் தன் வில்லை செற்றாய்!
மா போகு நெடும் கானம் வல் வினையேன்
மனம் உருக்கும் மகனே! இன்று
நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய்ப்
போகாதே நிற்க்குமாறே! —9-4–

பதவுரை

வா–(சற்று இங்கே) வா
போகு–இனிச் செல்வாய்
வா–மறுபடியும் இங்கு வா
இன்னம் வந்து ஒருகால் கண்டு போ–(போம்போது) பின்னையும் ஒரு தரம் வந்து என்னைப் பார்த்து விட்டுப் போ
மலர் ஆள் கூந்தல்–பூக்களை எப்பொழுதும் தரிக்கிற மயிர் முடியை யுடையவளும்
வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டு ஆ–மூங்கில் போன்ற அழகிய தோள்களை யுடையளுமான பிராட்டியை மணஞ்செய்து கொள்ளுதற்காக
விடையோன் தன் வில்லை செற்றாய்–சிவனுடைய வில்லை முறித்தவனே!
வல் வினையேன் மனம் உருக்கும் மகனே–மஹா பாபியான எனது மனதை உருகச் செய்கிற மைந்தனே!
இன்று–இப்பொழுது
நீ–நீ
மா போகு நெடுங்கானம் போக–யானைகள் ஸஞ்சரிக்கிற பெரிய காட்டுக்குப் போக
என் நெஞ்சம்–எனது மனமானது
இரு பிளவு ஆய் போகாதே நிற்கும் ஆறே–இரண்டு பிளப்பாகப் பிளந்து போகாமலே வலியதாய் நிற்கும் தன்மை என்னோ?

தசரதன் ஸ்ரீராமனை க்ஷணகாலம் காணாவிட்டால் உடனே காண்கைக்காக ஸுமந்த்ரனையிட்டு வரும்படி அழைப்பிப்பன்;
பின்பு அவ்விராமனது பின்னழகையும் நடையழகையும் காண்கைக்காக போ என்பன்;
பின்னையும் கண்மறையப் போனவாறே ஆற்றாமையால் வா என்பன்;
மீண்டும் வந்தவாறே இன்னம் போம்போது ஒருகால் கண்டுபோ என்பன்.
இப்படி மகனிடத்து அன்பினாலும் அவனது பிரிவை ஆற்றமாட்டாமை யாலாகிய மனச்சுழற்சியாலும்
பலமுறை வா என்றும் போ என்றும் மாறிமாறிச் சொல்லி வந்தனனென்க.
(மாபோகு) மா என்ற விலங்கின் பொதுப்பெயர், சிறப்பாய் இங்கு யானையைக் குறித்தது.
வா போகு வா வின்னம் வந்தொருகால் கண்டுபோ என்பது தசரதன் அறிவுகெட்டுப் புலம்புகிற
சமயத்தில் வார்த்தையாதலால் அநந்விதமாய் நிற்கின்ற தென்ப.

———-

பொருந்தார் கை வேல் நுதி போல்
பரல் பாய மெல் அடிகள் குருதி சோர
விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப
வெம்பசி நோய் கூர இன்று
பெரும் பாவியேன் மகனே! போகின்றாய்
கேகயர் கோன் மகளாய் பெற்ற
அரும் பாவி சொல் கேட்ட அரு வினையேன்
என் செய்கேன்? அந்தோ! யானே— 9-5–

பதவுரை

பொருந்தார் கை வேல் நுதி போல்–பகைவர்கள் கையிலேந்தும் கூர்மையான வேலாயுதத்தின் நுனி போன்ற
பரல்–பருக்கைக் கற்கள்
பாய–(காலில் தைத்து அழுத்தவும்)
மெல் அடிக்கள் குருதி சோர–மென்மையான (உனது) பாதங்களினின்று ரத்தம் பெருகவும்
வெயில் உறைப்ப–(மேலே) வெயிலுறைக்கவும்
வெம் பசி நோய் கூர–(வேண்டிய போது உணவு கிடையாமலே) வெவ்விய பசியாகிய நோய் மிகவும்
பெரும் பாவி யேன் மகனே–மஹா பாபியான எனது மைந்தனே!
இன்று–இப்பொழுது
விரும்பாத கான் விரும்பி போகின்றாய்–(எவரும்) விரும்பாத காட்டை
(நான் போகச் சொன்னேனென்பதனாலே) விரும்பி (அவ்விடத்துக்குச் செல்கிறாய்)
கேகயர்கோன் மகள் ஆய்பெற்ற அரும்பாவி–கேகயராஜன் பெற்ற மகளான கொடிய பாவியாகிய கைகேயியினுடைய
சொல் கேட்ட அரு வினையேன் யான்–வார்த்தையைக் கேட்ட கொடியேனாகிய நான்
அந்தோ! என் செய்கேன்–ஐயோ! என்ன செய்வேன்!

எப்படிப்பட்ட கல்நெஞ்சினரும் செய்யமாட்டாத ஒருமஹா பாபத்தைச் செய்பவளான ஒரு பாப
மூர்த்தியைக் கேகயராஜன் பெண்ணாய்ப் பெற்றான்.
அவள் வார்த்தையிலே அகப்பட்டுக் கொண்டு நான் பரிஹாரமில்லாததொரு செயலைச் செய்துவிட்டேன்.
இனி இதற்கு நான் செய்யக்கூடிய பரிஹாரம் ஒன்றுமில்லையே என்று பச்சாத்தாபத்தோடு கூறுகிறபடி.
மஹாபாபியான எனக்கு மகனாய் பிறந்தமையாலன்றோ ஸுகுமாரனான நீ இங்ஙனம்
மஹா வநத்துக்குச் செல்ல நேர்ந்தது என்பான். பெரும்பாவியேன் மகனே? என்றான்.
வெம்பசி நோய் கூர = கூர – மிகுதி யுணர்த்தும் கூர் என்ற உரிச்சொற் பகுதியினடியாய் பிறந்த செயவெனெச்சம்.
கேகயர் – கேகய தேசத்திலுள்ளவர்கள்.

————

அம்மா என்று அழைக்கும் ஆர்வ சொல்
கேளாதே அணி சேர் மார்வம்
என் மார்வத் திடை அழுந்த தழுவாதே
முழுசாதே மோவாது உச்சி
கைம்மாவின் நடை அன்ன மென்னடையும்
கமலம் போல் முகமும் காணாது
எம்மானை என் மகனை இழந்திட்ட
இழி தகையேன் இருகின்றேனே– 9-6–

பதவுரை

அம்மா என்று உகந்து அழைக்கும்–ஐயா! என்று மகிழ்ச்சி கொண்டு (என்னை) அழைக்கின்ற
ஆர்வம் சொல் கேளாதே–ப்ரீதி விளங்குஞ்சொல்லை (நான்) கேட்கப் பெறாமலும்
அணி சேர் மார்வம்–ஆபரணங்கள் பொருந்திய (என் மகனது) மார்பு
என் மார்வத்திடை அழுந்த–என் மார்பிலே அழுந்தும்படி
தழுவாதே–(நான் அவனை) இறுக அணைத்துக் கொள்ளாமலும்
முழுசாதே–(அந்த ஆலிங்கந போகக் கடலில்) முழுகாமலும்
உச்சி மோவாது–உச்சியை மோந்திடாமலும்
கைம்மாவின் நடை அன்ன மெல் நடையும்–யானையினது நடை போன்ற (கம்பீரமான அம்மகனது) மென்மையான நடையின் அழகையும்
கமலம் போல் முகமும் காணாது–தாமரை மலர்போன்ற (அவனது) முகப் பொலிவையும் காணமாலும்
எம்மானை என் மகனை இழந்திட்ட–எமது ஐயனான என் மகனைக் (காடேறப் போக்கி) இழந்து விட்ட
இழி தகையேன்–இழிவான செயலைச் செய்தவனான நான்
இருக்கின்றேனே–(இன்னமும் அழிந்திடாமல்) உயிர் வாழ்ந்திருக்கின்றேனே.

ப்ரீதிப்ரகர்ஷம் தோன்ற ஐயா! என்று அழைக்கும் மகனது இன்சொல்லைக் கேட்கப் பெறாமலும்
இயற்கையழகோடு செயற்கையழகு செய்யும் ஆபரணங்கள் அசைந்து விளங்குகின்ற
அவனது மார்பைத் தழுவிக் கொள்ளப் பெறாமலும், ஆநந்தஸாகரத்தில் அழுந்தப் பெறாமலும்
உச்சிமோரப் பெறாமலும் நடையழகு காணப்பெறாமலும் முகாரவிந்தத்தை அநுபவிக்கப் பெறாமலும்
என் கண்மணியைக் காட்டுக்குத் துரத்தின படுபாவியாகிய நான் அப்போதே சாவாமல் இன்னும்
பிழைத்திருக்கவும் வேணுமா என்று பரிதபிக்கிறபடி.

அம்மாவென்று = தந்தையை அம்மாவென்று அழைத்தல், உவப்புப் பற்றிய பால் வழுவமைதி:
“உவப்பினு முயர்வினுஞ் சிறப்பினுஞ் செறலினும், இழிப்பினும் பால்தினை இழுக்கினுமியல்பே.” என்பது நன்னூல்.

————–

பூ மருவி நறும் குஞ்சி சடையா புனைந்து
பூம் துகில் சேர் அல்குல்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது
அங்கங்கள் அழகு மாறி
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று
செல தக்க வனம் தான் சேர்த்தல்
தூ மறையீர்! இது தகவோ? சுமந்திரனே!
வசிட்டனே! சொல்லீர் நீரே –9-7-

பதவுரை

தூ மறையீர்–நித்ய நிர்த் தோஷமான வேதத்ததை ஓதி யிருக்கிற பிராமணர்களே!
சுமந்திரனே–(ராஜ தர்மத்தை நன் கறிந்து நடத்திப் போந்த ஸுமந்த்ரரே!)
வசிட்டனே–ராஜ தர்மங்களை உபதேசித்துப் போருகிற) வஸிஷ்ட மஹர்ஷியே
(உங்களை ஒரு விஷயம் கேட்கிறேன்)
பூ மருவும் நறு குஞ்சி–புஷ்பம் மாறாதே யிருப்பதாய் மணம் கமழா நின்ற திருக் குழலை
புன் சடை ஆ புனைந்து–விகாரமான ஜடையாகத் திரித்து
பூ துகில் சேர் அல்குல்–நல்ல பட்டுப் பீதாம்பரங்கள் சாத்த வேண்டிய திருவரையிலே
காமர் எழில் விழல் உடுத்து–காண்கைக்கு ஆசைப்படத்தக்க அழகிய விச்வாமித்ரத்தைக் கயிறாக முறுக்கிச் சாத்தி
கலன் அணி யாது–திருவாபரணங்கள் அணியாமல்
அங்கங்கள் அழகு மாறி–இயற்கை யழகுக்கு மேல் திருவாபரணங்களால் உண்டாகக்கூடிய செயற்கை யழகின்றியிலே
ஏமரு தோள் என் புதல்வன் தான்–ஸுரக்ஷிதமான தோள்களை யுடையனான எனது குமாரனானவன்
யான் இன்று செல தக்க வனம் சேர்தல்–நான் இப்போது போகவேண்டிய காட்டுக்குத் தான் போவது
தகவோ–தகுதி தானோ!
நீரே சொல்லீர்–(தர்மஜ்ஞரான) நீங்களே (ஆராய்ந்து) சொல்லுங்கள்

நல்ல புஷ்பங்களைச் சூடிப் பரிமளம் விஞ்சக்கடவதான திருக்குழலைச் சடையாகத் திரித்தும்,
நான் அறுபதினாயிரமாண்டு அரசாண்டு ஸம்பாதித்து வைத்திருக்கம் பட்டுப் பீதாம்பரங்களில் நல்லவற்றைச்
சாத்தக் கடவதான திருவரையில் விச்வாமித்ரத்தைக் கயிறாக முறுக்கிச் சாத்தியும்,
இயற்கையான அழகுக்கு மேலே செயற்கையழகுக்காக ஆபரணங்களைச் சாத்த வேண்டிய அவயங்களில்
அவற்றைச் சாத்திக் கொள்ளாமலும் அந்தோ! என் மைந்தன் காட்டுக்குச் சென்றனனே! ஐயோ!
இக்காடு இந்தவயதில் அவனுக்குச் செல்லகூடியதா? அறுபதினாயிரமாண்டு போகங்களை புஜீத்துப்
பல் விழுந்து தலைநரைத்து உடலிளைத்து உடை குலைப்பட்ட நான் இன்று போகக்கூடியதான காட்டிற்கு
எனது மைந்தன் செல்கிறானே இது என்ன அநியாயம். தர்மங்களை அறிந்தும் அநுஷ்டித்தும் உபதேசித்தும்
போருகிற மஹாநுபாவர்களே இது நியாயந்தானா நீங்கள் சற்று ஆராய்ந்து சொல்லுங்கள் என்கிறான்.

———-

பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும்
தம்பியையும் பூவை போலும்
மின் பற்றா நுண் மருங்குல் மெல்லியல் என்
மருகியையும் வனத்தில் போக்கி
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
என்னையும் நீள் வானில் போக்க
என் பெற்றாய்? கைகேசி! இரு நிலத்தில்
இனிதாக இருக்கின்றாயே– 9-8-

பதவுரை

கைகேசீ–கைகேயியே
பொன் பெற்றார் எழில் வேதம் புதல்வனையும்–கல்விச் செல்வத்தைப் பெற்றவர்களான உபாத்தியாயரின்
கீழே யிருந்து அழகிய வேதங்களை ஓதியிருக்கிற மூத்த மகனான இராமனையும்
தம்பியையும்–(அவனது) தம்பியான லக்ஷ்மணனையும்
பூவை போலும்–(பேச்சின் இனிமையிற் கொஞ்சுகிற) கிளி போன்றவளும்
மின் பற்றா நுண் மருங்குல் மெல் இயல்என் மருகியையும்–மின்னலும் ஈடாகமாட்டாத நுண்ணிய இடையையும்
மென்மையான தன்மைனையு முடையவளுமான என் மருமகளாகிய ஸீதையையும்
வனத்தில் போக்கி –காட்டுக்குப் போகச்செய்து
நின் பற்று ஆம் நின் மகன் மேல் பழி விளைத்திட்டு–உனது அன்புக்கு இடமான உன் மகனான பரதன்
மேற் பழியுண்டாம்படி செய்து (இவ்வளவு செய்துவிட்டு நீ)
என்னையும் நீள் வானில் போக்க–(புத்ர விரஹத்தால்) என்னையும் தூரத்திலுள்ள மேலுலகத்திற்குச் செலுத்துதலினால்
என் பெற்றாய்–நீ என்ன பயனடைந்தாய்!
இரு நிலத்தில்–பெரிய இவ்வுலகத்தில்
இனிது ஆக–சுகமாக
இருக்கின்றாயே–வாழ்கின்றாயே

“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு, மாடல்ல மற்றையவை” என்றபடி
கல்வி அழிவில்லாத சிறப்புடைய செல்வமாதலால் அக்கல்வியைப் பூர்ணமாகப் பெற்ற வஸிஷ்டர் முதலிய
உபாத்தியாயார்களைப் பொன் பெற்றார் என்றார்.
பரதன் அந்நாட்டில்லாமல் மாதாமஹனைக் காணும் பொருட்டு மாமனுடைய கேகய தேசத்துக்குச் சென்றிருக்கையில்
இங்குக் கைகேயி செய்த முயற்சி பரதனுக்குத் தெரியாததும் தெரிந்தவளவில் மிக்க வருத்தத்தை தருவதுமாயினும்
கைகேயி தன் மகனுக்காகச் செய்த முயற்சியில் அவள் மகனும் சம்பந்தபட்டவனென்று உலகத்தார் ஸந்தேஹித்து
நினைப்பதற்கு இடங்கொடுத்தலால் நின்பற்றா நின்மகன் மேல் பழி விளைத்திட்டு எனப்பட்டது.
உன் மகனுக்கு அநுகூலமாக நீ செய்த காரியம் அந்த உன் காதல்மகனுக்கே சாச்வதமான பெரும்பழியை
விளைத்துத் தீமையாய் முடிந்ததே என்று எடுத்துக்காட்டியபடி. தசரதன் இங்ஙனம் தனக்கும் தன் அருமை மகனான
இராமனுக்கும் பெருந்தீங்கு செய்த கைகேயியின் வயிற்றிற் பிறந்தவனென்ற காரணத்தாலே பரதனிடத்துக் கொண்ட
உபேக்ஷையினால் அவனை நின்மகன் என்றான்.

மருகி-மகன் மனைவி (இதன் ஆண்பால்-மருகன்) என் பெற்றாய் = இவ்வளவு கொடுமைகளை ஒருங்கே செய்தற்கு
நீ என்ன திறமைபெற்றாய் எனினுமாம்.
இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே. ஸம்ஸாரஸுகமாகிறது, புத்ரர்களோடு பார்த்தாவோடும் கூடி யிருக்கையாய்த்து
உனக்குப் புத்ரரான பெருமாளைக் காட்டிலோபோக்கி என்னையும் ஸ்வர்க்கத்திலே போக்குகையாலே
ஸம்ஸாரஸுகம் அழகிதாக அனுபவிக்கக் கடவையிறே என்ற வியாக்கியானஸூக்தி காண்க.
ஸ்ரீராம விரஹத்தால் உலகமெல்லாம் வருந்திக் கிடக்கையில் நீ ஒருத்தி மாத்திரம் மனமகிழ்நதிருக்கின்றனையே,
இது என்ன அழகு! என்க.

————-

முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி
அவன் தவத்தை முற்றும் செற்றாய்
உன்னையும் உன் அருமையையும் உன் நோயின்
வருத்தமும் ஒன்றாக கொள்ளாது
என்னையும் என் மெய் உரையும் மெய்யாக
கொண்டு வனம் புக்க எந்தாய்!
நின்னையே மகனாய் பெற பெறுவேன்
ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே —9-9-

பதவுரை

முன் ஒருநாள்–முன்பு ஒரு நாளிலே
மழு ஆளி சிலை வாங்கி–பரசுராமனிடத்திலிருந்து அவன் கை வில்லை வாங்கி
அவன் தவத்தை முற்றும் பெற்றாய்–அவனியற்றிய தபஸ்ஸின் பயனை முழுதும் (அம்புக்கு இலக்காக்கி) அழித்திட்டவனே!
உன்னையும் உன் அருமையையும்–உன்னுடைய மேன்மையையும் (நான் பெருந்தவஞ் செய்து) உன்னை அருமை மகனாகப் பெற்ற தன்மையையும்
உன் மோயின் வருத்தமும்–உனது பெற்ற தாயான கௌசல்யை (உன்னை பிரியில் தரியேன் என்று) உன் பின் தொடர்ந்த வருத்தத்தையும்
ஒன்று ஆக கொள்ளாது–ஒரு பொருளாகக் கொள்ளாமல்
என்னையும்–என்னையும்
என் மெய் உரையும்–எனது ஸத்ய வாக்கையும்
மெய் ஆக கொண்டு–பொருளாகக் கருதி
வனம் புக்க எந்தாய்–காடேறச் சென்ற எமது ஐயனே!
நெடுந்தோள் வேந்தே–பெரிய தோள்களை யுடைய அரசனே!
ஏழ் பிறப்பும்–இனி அனேக ஜன்மங்கள் பிறந்து பிறந்த ஜன்மந்தோறும்
நின்னையே மகன் ஆக பெற பெறுவேன்–நீ எனக்குப் பிள்ளையாய்ப் பிறக்கும்படி பேறு பெறக் கடவேன்.

மழு ஆளி – மழுவை (ஆயுதமாக) ஆள்பவன்; இ-கருத்தாப்பொருள் விகுதி.
அன்றியே, மழு வாளி – மழுவாகிய ஆயுதத்தை யுடையவன் இ-பெயர் விகுதி.
மழு வாள் – இரு பெயரொட்டுப் பண்புத்தொகை. மழு – கோடாலி

என் ஐயனே! உன் மீது நான் வைத்திருக்கும் அன்பின் தன்மையை மெய்யாக அறியாமல் என்னை
வெறுந்தந்தை யென்றே நினைத்து அப்பிதாவின் வாக்கியத்தைப் பரிபாலனம் பண்ணவேண்டுமென்றும்,
நெடுநாளாக ஸத்யமே சொல்லிவருகிற தந்தையை நாம் தோன்றி அஸத்யவாதியாக ஆக்க வொண்ணாதென்று
என் ஸத்யத்தை ஸத்யமாக்க வேணுமென்றும் நெஞ்சிலே கொண்டு வனத்திற்புகுந்த
என் அருமைமகனே! என்பது மூன்றாமடியின் கருத்து.
தந்தை, மகனை எந்தாய் என்றது, அன்புபற்றிய வழுவமைதி. செற்றாய் – செறு-பகுதி

————

தேனகுமா மலர் கொந்தாள் கௌசலையும்
சுமித்ரையும் சிந்தை நோவ
கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட
கொடியவள் தன் சொல் கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த
வள நகரைதுறந்து நானும்
வானகமே மிக விரும்பி போகின்றேன்
மனு குலத்தார் தங்கள் கோவே! —9-10–

பதவுரை

மனுகுலத்தார் தங்கள் கோவே–மநுகுலத்திற் பிறந்த அரசர்களிற் சிறந்தவனே!
தேன் நகு மா மலர் கூந்தல்–தேனைப் புறப்பட விடுகிற சிறந்த மலர்களைச் சூடிய கூந்தலையுடைய
கௌசலையும்–கௌஸல்யையும்
சுமித்திரையும்–ஸுமித்ரையும்
சிந்தை நோவ–மனம் வருந்த
கூன் உருவின் கொடும் தொழுத்தை சொல் கேட்ட கொடியவள் தன்சொல் கொண்டு–வக்ரமான வடிவம் போலவே
மனமுங் கோணலாகப் பெற்ற வேலைக்காரியான கூனியினது வார்த்தையைக் கேட்ட
கொடியவளான கைகேயியின் சொல்லை ஏற்றுக்கொண்டு
கானகமே மிக விரும்பி இன்று நீ துறந்த–காட்டையே மிகவும் விரும்பி இப்பொழுது நீ கைவிட்ட
வளம் நகரை–(உன் பட்டாபிஷேகத்தின் பொருட்டு) அலங்கரிக்கப் பட்டிருக்கிற இந்நகரத்தை
நானும் துறந்து–நானும் விட்டிட்டு
வானகமே மிக விரும்பி போகின்றேன்–மேலுலகத்தையே மிகவும் விரும்பி (அவ்விடத்திற்குச்) செல்கின்றேன்.

மூன்று தாய்மார்களில் இரண்டுபேர் வருந்தவும் ஒருத்தி மகிழவும் நீ அயோத்தியை துறந்து கானகஞ் சென்றாயாதலின்,
நானும் இவ்வயோத்தியை துறந்து மேலுலகை நோக்கிச் செல்லுகின்றே னென்கிறான்.
கூனுருவின் = இன் – ஐந்தனுருபு ஒப்புப்பொருள். கொடுமை- தீமையே யன்றி வளைவுமாதலை
கொடுங்கோல் கொடுமரம் என்ற இடங்களிலுங் காண்க.
தொழுத்தை தொழும்பன என்பதன் பெண்பால். மநு-ஸூர்யனது குமாரன்; வைவஸ்வதமநு.

———-

ஏரார்ந்த கரு நெடுமால் ராமனாய்
வனம் புக்க வதனுக்கு ஆற்றா
தாரர்ந்த தடவரை தோள் தயரதன் தான்
புலம்பிய அப் புலம்பல் தன்னை
கூரார்ந்த வேல் வலவன் கோழியூர் கோன்
குடை குலசேகரன் சொல் செய்த
சீரார்ந்த தமிழ் மாலை இவை வல்லார்
தீ நெறி கண் செல்லார் தாமே–9-11-

பதவுரை

ஏர் ஆர்ந்த–அழகு நிறைந்த
கரு–கரு நிறமுடைய
நெடுமால்–மஹா விஷ்ணு
இராமன் ஆய்–ஸ்ரீ ராமனாகத் திருவவதரித்து
வனம் புக்க–காட்டுக்குச் சென்றதான
அதனுக்கு–அச் செயலை
ஆற்றா–பொறுக்க மாட்டாமல்
தார் ஆர்ந்த தட வரை தோள் தயரதன் புலம்பிய–வெற்றி மாலை பொருந்திய பெரிய மாலை போன்ற
தோள்களை யுடைய தசரத சக்ரவர்த்தி கதறின
அப் புலம்பல் தன்னை–அக் கதறல்களை,
கூர் ஆர்ந்த–கூர்மை மிக்க
வேல் வலவன்–வேற்படையின் தொழிலில் வல்லவரும
கோழியர் கோன்–உறையூரிலுள்ளார்க்குத் தலைவரும்
குடை–கொற்றக்குடையை உடையவருமான
குலசேகரன்–குலசேகராழ்வார்
சொல் செய்த–அருளிச் செய்த
சீர் ஆர்ந்த–சிறப்பு மிக்க
தமிழ் மாலை இவை– தமிழ்ப் பிரபந்தரூபமான இப் பத்துப் பாசுரங்களையும்
வல்லார்–கற்க வல்லவர்கள்
தீ நெறிக்கண்–கொடிய வழி யொன்றிலும்
செல்லார்–சென்று சேர மாட்டார்கள்.
(தான், தாம்–அசைகள்)

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ பெருமாள் திருமொழி -8–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

August 7, 2021

ஸ்ரீ ராமாவதாரத்தில் கௌஸல்யை பெற்ற பேற்றைக் கருதி,
அவள் அவ்விராம பிரானைத் தொட்டில் இட்டுத் தாலாட்டுக் கூறின முகத்தால்
இத்திருமொழி அருளிச் செய்கிறார்.
இவ்வநுபவம் இவர்க்குத் திருக் கண்ணபுரத் தெம்பெருமான் விஷயத்திலே செல்லுகிறது.

—————————-

மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனே!
தென் இலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் கரு மணியே!
என்னுடைய இன் அமுதே! ராகவனே! தாலேலோ— 8-1–

பதவுரை

மன்னு புகழ்–நிலை நின்ற புகழை யுடைய
கௌசலை தன்–கௌஸல்யையினுடைய்
மணி வயிறு–அழகிய வயிற்றிலே
வாய்த்தவனே–பிள்ளையாகத் திருவவதரித்தவனே!
தென் இலங்கை கோன்–தென்னிலங்கைக்கு இறைவனான ராவணனுடைய
முடிகள்–பத்துத் தலைகளையும்
சிந்துவித்தாய்–சிதறப் பண்ணினவனே!
செம் பொன் சேர்–செவ்விய பொன்னாலே செய்யப்பட்டதாய்
கன்னி–அழிவில்லாததாய்
நல்–விலக்ஷணமாய்
மா–பெரிதான
மதில்–திருமதிளாலே
புடை சூழ்–நாற் புறமும் சூழப்பட்ட
கணபுரத்து–திருக் கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற
என் கருமணியே–நீல ரத்நம் போன்ற எம்பெருமானே!
என்னுடைய இன் அமுதே–எனக்கு போக்யமான அம்ருதமாயிருப்பவனே!
இராகவனே!–ஸ்ரீராமனே!
தாலேலோ–(உனக்குத்) தாலாட்டு

இதில், முதலடியால் அவதாரமும், இரண்டாமடியால் அவதார ப்ரயோஜநமும் சொல்லப்பட்டன வென்க.
கணபுரம் – கண்ணபுரம் என்பதன் தொகுத்தல்,
திருக்கண்ணபுரம் என்னும் இத்திவ்யதேசம் சோழநாட்டுத் திருப்பதிகள் நாற்பதில் ஒன்று.
இத்தலத்தில் சௌரிராஜப்பெருமாள் மிகவும் வரப்ரஸாதி என்பது ப்ரஸித்தம்.
நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வர் ஆகிய ஐவர்களால்
மங்களாசாஸநஞ் செய்யப் பெற்ற சிறந்த திவ்யதேசம் இது.

தாலேலோ – வளர்பிள்ளைத் தொட்டிலிலே வளர்த்திக் கண்வளரப் பண்ணுகைக்காகச் சீராட்டித் தாலாட்டுதல்;
தால் – நாக்கு; தமிழில் தொண்ணாற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்றாகிய பிள்ளைத் தமிழில்
இத் தாலாட்டை எட்டாம் மாதத்திற் கூறுவது கவிமரபு.

—————

புண்டரீக மலர் அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே!
திண் திற லாள் தாடகை தன் உரம் உருவ சிலை வளைத்தாய்!
கண்டவர் தம் மனம் வழங்கும் கண புரத்து என் கருமணியே !
எண் திசையும் ஆள் உடையாய்! ராகவனே! தாலேலோ –8-2–

பதவுரை

புண்டரிகம் மலர் அதன் மேல்–(திருநாபியில் அலர்ந்த) தாமரைப் பூவின் மேல் (பிரமனைத் தோற்றுவித்து அவன் முகமாக)
புவனி எல்லாம் படைத்தவனே–உலகங்கள் எல்லாவற்றையும் ஸ்ருஷ்டித்தவனே!
திண் திறலாள் தாடகை தன்–த்ருடமான பலத்தை யுடையளான தாடகையினுடைய
உரம் உருவ–மார்வைத் துளைக்கும் படியாக
சிலை வளைத்தாய்–வில்லை வளைத்து அம்புகளை எய்தவனே!
கண்டவர்–ஸேவித்தவர்கள்
தம் மனம் வழங்கும்–தங்கள் மனத்தைத் தாங்களே இசைந்து கொடுப்பதற்குத் தகுந்த
கணபுரத்து என் கருமணியே;
எண் திசையும்–எட்டுத் திக்கிலுள்ளவர்களையும்
ஆள் உடையாய்–அடிமை கொண்டருளுபவனே!
இராகவனே! தாலேலோ–ஸ்ரீராமனே! (உனக்குத்) தாலாட்டு

———–

கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல முதலாய் !
தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா ! தாசரதீ !
கங்கையிலும் தீர்த்த மலி கண புரத்து என் கரு மணியே
எங்கள் குலத்தின் இன் அமுதே !ராகவனே !தாலேலோ !—8-3–

பதவுரை

கொங்குமலி கரு குழலாள்–பரிமளம் மிகுந்த கறுத்த கூந்தலை யுடையளான
கௌசலை தன்–கௌஸல்யையினுடைய
குலம் மதலாய்– சிறந்த பிள்ளையானவனே!
தங்கு பெருபுகழ் சனகன்–பொருந்திய மஹா கீர்த்தியை யுடைய ஜநக மஹாராஜனுக்கு
திரு மருகா–மாப்பிள்ளை யானவனே!
தாசரதீ–சக்ரவர்த்தி திருமகனே!
கங்கையிலும்–கங்கா நதியிற் காட்டிலும்
மலி தீர்த்தம்–சிறப்பு மிக்க தீர்த்தங்களை யுடைய
கண புரத்து–திருக் கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருக்கிற
என் கரு மணியே
எங்கள் குலம்–எங்கள் ராஜ வம்சத்துக் கெல்லாம்
இன் அமுதே–போக்யமான அமுதம் போன்றவனே!
இராகவனே! தாலேலோ

எங்கள் குலத்து இன்னமுதே – ஸ்ரீராமன் ராஜவம்ஸத்திற் பிறந்தாற்போல
இக்குல சேகராழ்வாரும் ராஜவம்ஸத்திற் பிறந்தவராதலால் இங்ஙனமருளிச் செய்தாரென்க.

————–

தாமரை மேல் அயன் அவனை படைத்தவனே! தயரதன் தன்
மா முதலாய்! மைதிலி தன் மணவாளா வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கண புரத்து என் கருமணியே!
ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ– 8-4–

பதவுரை

தாமரை மேல்–(திருநாபிக்) கமலத்திலே
அயன் அவனை படைத்தவனே–பிரமனை உண்டாக்கினவனே!
தயரதன் தன் மாமதலாய்–தசரதனுடைய மூத்த குமாரனே!
மைதிலி தன் மணவாளா–பிராட்டிக்கு வல்லபனே!
வண்டு இனங்கள்–வண்டுகளின் கூட்டங்கள்
காமரங்கள் இசை பாடும்–காமரமென்னும் இசையைப் பாடப் பெற்ற
கண புரத்து–திருக் கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருக்கிற
என் கருமணியே
ஏ மருவும் சிலை வலவா–அம்புகள் பொருந்திய (ஸ்ரீசார்ங்கமென்னும்) வில்லை ஆள வல்லவனே
இராகவனே! தாலேலோ

“தாமரைமேல் அயனவனைப் படைத்தவனே!” என்று சொல்லி
“தயரதன்றன் மாமதலாய்!” என்று சொன்னவிது –
ஸகல விபூதிக்கும் பிதாவாகிய நீ இவ்விபூதியில் ஒரு பிபீலிகாப்ராயனான தசரதனைப் பிதாவாகக் கொண்டு
‘அவனுடைய பிள்ளை’ என்னும்படியாக பிறந்த அதிசயம் என்கொல் என வியந்தவாறாம்.

“ஏமருவுஞ்சிலை” = ஏ – எய்கையிலே, மருவும் – மூட்டாநின்ற, சிலை – வில் என்றும் பொருளாகலாம்.
ஆரேனும் பிடிக்கிலும் எய்கையிலே மூட்டும் வில் என்பது கருத்து.
வெகு சாதுரியமாய் அடக்கி ஆளத்தக்க வில் – என்றவாறு
இக்கருத்துத் தோன்றவே பெரியாழ்வாரும் சார்ங்கமென்னும் வில் ஆண்டான் றன்னை என்றருளிச் செய்தாரென்க.

———–

பாராளும் படர் செல்வம் பாரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பில் இளையவனோடு அரும் கானம் அடைந்தவனே
சீராளும் வரை மார்பா ! திரு கண்ண புரத்தரசே !
தாராளும் நீண் முடி என் தாசரதீ ! தாலேலோ—– 8-5-

பதவுரை

பார் ஆளும் படர் செல்வம்–பூமி முழுவதையும் ஆட்சி புரிகையாகிற பெரிய ராஜ்ய ஸம்பத்தை
பரதன் நம்பிக்கே–ஸ்ரீ பரதாழ்வானுக்கே
அருளி–நியமித்து விட்டு
ஆரா அன்பு இளையவனோடு–பரிபூர்ணமான பக்திப் பெருங்காதலை யுடைய இளைய பெருமாளுடன் கூட
அரு கானம் அடைந்தவனே–(புகுவதற்கு) அருமையான காட்டைக் குறித்து எழுந்தருளினவனே!
சீர் ஆளும் வரை மார்பா–வீர லெக்ஷ்மிக்கு இருப்பிடமாய் மலை போன்ற திரு மார்பை யுடையவனே!
திருக்கண்ணபுரத்து அரசே-
தார் ஆளும் நீள் முடி–மாலையோடு கூடின சிறந்த திரு முடியை யுடையவனே!
என் தாசரதீ! தாலேலோ

வநவாஸஞ் செல்லும்போது இராமபிரான் இளைய பெருமாளை நோக்கி இளையோய் நான் போகிறேன்.
நீ இங்கே யிருப்பாயாக என்ற போது, அவர் தமது கைங்கரிய ருசியையும் பிரியில் தரியாமையையும்
பரக்கப் பேசித் தம்மையுங்கூட்டிக் கொண்டு போகும்படி செய்தனராதலால் ஆராவன்பிளையவனோடு என்றார்.

(அருங்கானம்) கல் நிரைந்து தீந்து கழையுடைந்து கால்சுழன்று பின்னுந் திரைவயிற்றுப் பேயே
திரிந்துலவாக், கொன்னவிலும் வெங்கானம் (பெரிய திருமடல்) என்றார் கலியனும்.

————

சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே!
அற்றவர்கட்க்கு அரு மருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே!
கற்றவர்கள் தாம் வாழும் கண புரத்து என் கரு மணியே!
சிற்றவை தன் சொல் கொண்ட சீ ராமா! தாலேலோ –8-6–

பதவுரை

சுற்றம் எல்லாம் பின் தொடர–எல்லா உறவினரும் பின்னே தொடர்ந்து வர
தொல் கானம் அடைந்தவனே–புராதநமான தண்டகாரண்யத்துக் கெழுந்தருளினவனே!
அற்றவர்கட்கு–உனக்கே அற்றுத் தீர்ந்த பரம பக்தர்களுக்கு
அரு மருந்தே–ஸம்ஸார ரோகத்தைத் (தணிக்க) அருமையான மருந்து போன்றவனே!
அயோத்தி நகர்க்கு அதிபதியே–அயோத்யா நகரத்திற்கு அரசனே!
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்து–ஞானிகள் வாழ்தற்கு இடமான திருக்கண்ணபுரத்திலே எழுந்தருளியிருக்கிற
என் கருமணியே–நீலமணி போலழகிய எம்பெருமானே!
சிற்றவை தன்–சிறிய தாயாராகிய கைகேயியினுடைய
சொல் கொண்ட சீராமா–சொல்லை ஏற்றுக்கொண்ட ஸ்ரீராமமே!
தாலேலோ –

இராமன் காட்டுக் கெழுந்தருளுகையில் பிரஜைகள் மாத்திரமே பின் தொடர்ந்ததாக ஸ்ரீராமாயணத்திற் கூறாநிற்க;
இங்கு சுற்றமெல்லாம் பின் தொடரத் தொல்கான மடைந்தவனே என்றருளிச்செய்தது சேர்வதெங்ஙனே? என்று
எம்பெருமானார் திருவோலக்கத்தில் ப்ரஸ்தாவம் நிகழ,
அதற்கு எம்பெருமானார் அருளிச் செய்தது –
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி என்று சொன்ன எல்லாவடிமையும் செய்யு மிளையபெருமாள் கூடப் போகையாலே
எல்லா பந்துக்களும் கூடப்பேனார்களாய்த்திறே என்றாம்.
இது ரஸோக்தியாக அருளிச் செய்தபடி.

அற்றவர்கள் என்று சரபங்காச்ரமத்தில் வந்து கதறின தண்டகாரண்ய வாஸிகளான முனிவரைச் சொல்லுகிறது.
அங்ஙனம் வந்து வேண்டிக் கொண்ட முனிவர்களை நோக்கி “அப்படியே நான் உங்கள் விரோதி வர்க்கங்களை
வேரறத் தொலைத்து விடுகிறேன், அஞ்சேல்மின்” என்று உறுதிமொழி கூறிய இராமபிரான்
அந்தப் பிரதிஜ்ஞையை நிறைவேற்றுதற் பொருட்டு தண்டகாரணியத்திற்குப் புறப்படுங்கால் பிராட்டி பெருமாளை நோக்கி
“ஆரியரே! தாபஸ வ்ருத்தியை அவலம்பித்து வந்து சேர்ந்தவிடத்தில் க்ஷத்ரிய வ்ருத்தியைப் பாராட்டக் கருதுவது உமக்குத் தகுதியல்ல;
உமது விஷயத்தில் ஒரு குற்றமுஞ் செய்யாத பிராணிகளை நீர் கொல்ல முயல்வது அநியாயமாகும்” என்று பலவாறாக உணர்த்த;
அது கேட்ட இராமபிரான் – “ஸீதே! நான் பிராணனை விட்டாலும் விடுவேன்; லக்ஷ்மணனையும் உன்னையும் விட்டாலும் விடுவேன்;
யாருக்காவது பிரதிஜ்ஞை செய்துகொடுத்து அதிலும் பிரமஞானிகளுக்குப் பிரதிஜ்ஞை செய்து கொடுத்து
அதை மாத்திரம் நிறைவேற்றாது விடவேமாட்டேன்; ரிஷிகள் தாம் என்னிடம் வந்து முறையிடாமற் போனலுங்கூட
அவர்களை ஸம்ரக்ஷிப்பது எனது கடமை; பிரதிஜ்ஞையும் பண்ணிக் கொடுத்துவிட்ட பின்னர் இனி நான் தவறக்கூடுமோ!” என்று
சரக்கற வார்த்தை சொல்லி அம்முனிவர்களைக் காத்தருளினவாறு கூறும் “அருமருந்தே!” என்னும் விளி.

————-

ஆலின் இலை பாலகனாய் அன்று உலகம் உண்டவனே!
வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே!
காலின் மணி கரை அலைக்கும் கண புரத்து என் கரு மணியே!
ஆலி நகர்க்கு அதிபதியே! அயோத்தி மனே! தாலேலோ— 8-7–

பதவுரை

அன்று–முன்பு மஹாப்ரளயம் வந்த போது
ஆலின் இலை–ஓர் ஆலந்தளிரிலே
பாலகன் ஆய்–குழந்தை வடிவாய்க் கொண்டு
உலகம் உண்டவனே–லோகங்களை யெல்லாம் திருவயிற்றில் வைத்து நோக்கினவனே!
வாலியை கொன்று–வாலியைக் கொலை செய்து
இளைய வானரத்துக்கு–அவனது தம்பியான ஸுகரீவனுக்கு
அரசு அளித்தவனே–ராஜ்யத்தைக் கொடுத்தவனே!
காலில் மணி–கால்வாய்களிலுள்ள ரத்நங்களை
கரை அலைக்கும்–கரையிலே கொண்டு கொழிக்கப் பெற்ற
கண புரத்து–திருக் கண்ணபுரத்தில் எழுந்தளி யிருக்கிற
என் கருமணியே
ஆலி நகர்க்கு–திருவாலி திருநகரிக்கு
அதிபதியே–தலைவனே!
அயோத்திமனே–அயோத்தி நகர்க்கு அரசனே!
தாலேலோ

காலின்மணி கரையலைக்கும் = உள்ளுக்கிடக்கிற ரத்நங்களைக் காற்றாலே கரையிற்கொழிக்கு மென்னுதல்,
அன்றி,
கால் என்று கால்வாய்களைச் சொல்லிற்றாய், கால்வாய்களிலுள்ள மணிகளைக் கொண்டு வந்து கரையிலே ஏறிடுமென்னுதல்,

ஆலிநகர்க் கதிபதியே என்றவிடத்தில்
ஒரு வாலியைக் கொன்று ஒரு வாலி தன்னைத் துணையாகக் கொள்ளப் பெற்றதே என்று
சாடூக்தி அருளிச் செய்வர் பெரியவாச்சான் பிள்ளை.

———–

மலை அதனால் அணை கட்டி மதிள் இலங்கை அழித்தவனே!
அலை கடலை கடைந்து அமரர்க்கு அருளி செய்தவனே!
கலை வலவர் தாம் வாழும் கண புரத்து என் கரு மணியே!
சிலை வலவா! சேவகனே! சீ ராமா! தாலேலோ– 8-8-

பதவுரை

மலை அதனால் அணை கட்டி–மலைகளைக் கொண்டு ஸேது பந்தனம் பண்ணி
மதிள் இலங்கை அழித்தவனே–அரணை யுடைத்தான லங்காபுரியைப் பாழ்படுத்தினவனே
அலை கடலை கடைந்து–அலை யெறிகின்ற திருப்பாற்கடலைக் கடைந்து
அமரர்க்கு–தேவர்களுக்கு
அமுது–அம்ருதத்தை
அருளிச் செய்தவனே–கொடுத்தருளினவனே!
கலை வலவர் தாம் வாழும் கணபுரத்து–ஸகல சாஸ்த்ரங்களையும் அறிந்தவர்கள் வாழ்கிற திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற
என் கருமணியே
சிலைவலவா–(ஸ்ரீ சார்ங்கமென்னும்) வில்லைச் செலுத்த வல்லவனே!
சேவகனே–வீரனே!
சீராமா! தாலேலோ

சேவகனே = சேவகம் என்று பராக்கிரமத்துக்குப் பெயராதலால், மஹாவீரனே என்றபடி
சிலைவலவா! சேவகனே! என்ற சேர்த்தியால்,
சார்ங்கமும் மிகை என்னும் படியான வீரப்பாடுடையவன் என்பது போதரும்

————-

தளை அவிழும் நறும் குஞ்சி தயரதன் தன் குல முதலாய்!
வளைய வொரு சிலை யதனால் மதிள் இலங்கை அழித்தவனே!
களை கழுநீர் மருங்கலரும் கண புரத்து என் கரு மணியே!
இளையவர்கட்க்கு அருள் உடையாய்! ராகவனே! தாலேலோ– 8-9-

பதவுரை

தளை அவிழும் நறு குஞ்சி-கட்டு அவிழும்படியான நறுநாற்றமுடைய மயிர்முடியை யுடையனான
தயரதன் தன்–தசரத சக்ரவாத்தியினுடைய
குலம் மதலாய்–சிறந்த திருக்குமாரனே!
ஒரு சிலை வளைய–ஒப்பற்ற வில்லானது வளைய
அதனால்–அந்த வில்லாலே
மதிள் இலங்கை அழித்தவனே
களை கழுநீர்–களையாகப் பறிக்கப்பட்ட செங்கழுநீர்கள்
மருங்கு அலரும் கணபுரத்து–சுற்றிலும் மலரப் பெற்ற திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளியிருக்கிற
என் கருமணியே
இளையவர்கட்கு–இளையவர்கள் விஷயத்திலே
அருள் உடையாய்–கருணை பொருந்தியவனே!
இராகவனே! தாலேலோ

இளையவர்கட்கு அருளுடையாய்! வாலியை வதைத்து இளையவனான ஸுக்ரீவனுக்கு அருள் புரிந்தான்;
இராவணனை வளைத்து இளையவனான விபீஷணனுக்கு அருள் புரிந்தான் என்றிறே
பெருமாளுக்கு ப்ரஸித்தி துர்ப்பலர்களாய் இளைத்திருப்பவர்கள் திறத்தில் அருள் செய்பவன் என்றுமாம்.

————–

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கண புரத்து என் கரு மணியே!
ஏவரி வெஞ்சிலை வலவா! ராகவனே! தாலேலோ— 8-10-

பதவுரை

தேவரையும்–தேவர்களையும்
அசுரரையும்–அஸுரர்களையும்
திசைகளையும்–திக்குக்களையும் (அதாவது எல்லா ப்ரதேசங்களையும்)
படைத்தவனே–ஸ்ருஷ்டித்தவனே
யாவரும் வந்து அடி வணங்க–ஸகல சேதநரும் வந்து திருவடிகளில் ஸேவிக்கும்படியாக
அரங்கம் நகர்–ஸ்ரீரங்கத்திலே
துயின்றவனே–பள்ளி கொண்டிருப்பவனே!
காவிரி நல் நதி–காவேரி யென்கிற சிறந்த நதி யானது
பாயும்–ப்ரவஹிக்கப் பெற்ற
கண புரத்து–திருக் கண்ணபுரத்தில் எழுந்தருளி யிருக்கிற
என் கரு மணியே
ஏ வரி வெம் சிலை வலவா–அம்புகள் தொடுக்கப்பெற்று அழகியதாய் (ச் சத்துருக்களுக்கு)க் கொடிதா யிருந்துள்ள வில்லை ஆள வல்லவனே
இராகவனே! தாலேலோ

————-

கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் காகுத்தன்
தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே— 8-11-

பதவுரை

என் காகுத்தன் தன் அடி மேல்–என் ஸ்வாமியான இராமபிரான் விஷயமாக
தாலேலோ என்று உரைத்த–(கௌஸல்யை) தாலாட்டிச் சொன்ன பாசுரங்களை (உட்கொண்டு)
கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன்–கொலைத் தொழில் புரிகின்ற வேலாயுதத்தைச் செலுத்த
வல்லவரும் குடையை யுடையவருமான குலசேகராழ்வார்
கன்னி நல் மா மதிள் புடை சூழ் கண புரத்து–சாச்வதமான சிறந்த அழகிய மதிள்கள் நாற்புறமும் சூழப் பெற்ற திருக்கண்ணபுரத்திலே
சொன்ன–அருளிச் செய்த
பன்னிய நூல் தமிழ் மாலை பத்தும்–பரம்பியதாய் ஸலக்ஷணமாய்த் தமிழ்ப் பாமாலை ஆகிய இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லார்–அதிகரிக்க வல்லவர்கள்
பாங்கு ஆய பத்தர்கள்==அமைந்த பக்திமான்களாகப் பெறுவர்

பாங்காய பக்தர்கள் = கௌஸல்யை திருத் தாயாராயிருந்து அநுபவித்தாற் போலவும்,
இவ் வாழ்வார் பக்தராயிருந்து அநுபவித்தாற் போலவும் பகவதநுபவத்தைப் பெறுவார்களென்க.

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ பெருமாள் திருமொழி -7–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

August 7, 2021

ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ
அம்புயத் தடம் கண்ணினன் தாலோ
வேலை நீர் நிறத் தன்னவன் தாலோ
வேழ போதக மன்னவன் தாலோ
ஏலவார் குழல் என் மகன் தாலோ
என்று என்று உன்னை என் வாய் இடை நிறைய
தால் ஒலித்திடும் திரு வினை இல்லாத
தாயிற் கடை யாயின தாயே –7-1-

பதவுரை

ஆலை நீள் கரும்பு அன்னவன்–ஆலையிலிட்டு ஆடத் தகுந்த நீண்ட கரும்பு போன்ற கண்ணனே!
தாலோ –(உனக்குத்) தாலாட்டு
அம்புயம் தட கண்ணினன்–தாமரை போன்று விசாலமான திருக் கண்களை உடையவனே!
தாலோ – தாலேலோ;-
வேலை நீர் நிறத்து அன்னவன்–கடலின் நிறம் போன்ற நிறத்தை யுடையவனே!.
தாலோ -தாலேலோ
வேழம் போதகம் அன்னவள்–யானைக் குட்டி போன்றவனே!
தாலோ–தாலேலோ;
ஏலம் வார் குழல்–பரிமளம் மிக்கு நீண்ட திருக் குழலை யுடைய!
என் மகன்–என் மகனே!
தாலோ -தாலேலோ;
என்று என்று–இப்படி பலகாலுஞ்சொல்லி
என் வாயிடை நிறைய–என் வாய் திருப்தி யடையும்படி
உன்னை தால் ஒலித்திடும் திருவினை இல்லா தாயரில்–உன்னை தாலாட்டுகையாகிற ஸம்பத்து இல்லாத தாய்மார்களில்
கடை ஆயின தாய்–கடையான தாயாயிரா நின்றேன் நான் (என்கிறாள் தேவகி.)

பன்னிரெண்டு மாதம் உன்னை வயிற்றிற் சுமந்து பெற்ற நான் உடனே திருவாய்ப்படிக்குப் போக்கிவிட்டேனாதலால்,
உன்னைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல் முதலிய ஆநந்தா நுபவங்களை யசோதை பெற்றாளேயன்றி
நான் பெறாதொழிந்தேன், பாவியே னிழந்தேன் பிள்ளையைப் பெற்று ஆநந்தாநுபவம் பண்ணப் பெறாத
துரத்ருஷ்டாலிநிகாளான தாய்மாரில் அந்தோ! நான் கடைகெட்ட தாயாகிவிட்டேனே! என்று
தேவகி தன் வயிற்றெரிச்சலைக் கண்ணப்பிரானை நோக்கிக் கூறுகின்றன ளென்க.

“ஆலை நீள் கரும்பன்னவன் “ என்று தொடங்கி
“ ஏலவார் குழலென்மகன்” என்றளவு முள்ள ஐந்து விளிகளும் அண்மை விளி.
குழந்தையைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டும் போது தாய்மார் முதலியோர் பாராட்டிச்சொல்லும் பாசுரம் இவை.
ஆலையிலிட்டு ஆடத்தகுந்த கரும்பு என்றது – நன்றாக முற்றி ரஸம் நிரம்பிய கரும்பு என்றவாறு;
அதுபோன்றவனே! என்றது – “ஸர்வ ரஸ ஸர்வ கந்த “ என்று உபநிஷத்தில் ஓதியுள்ளபடி –
இன்சுவையே உருவெடுத்து வந்தாற்போலுள்ளவனே! என்றபடி :
தாலோ – தால் – நாக்கு குழந்தைகளை உறங்கப் பண்ணுவதற்காகப் பெண்கள் நாவை அசைத்துச் சொல்லும் சொலவு.

—————-

வடி கொள் அஞ்சனம் எழுது செம் மலர் கண் மருவி
மேல் இனிது ஒன்றினை நோக்கி
முடக்கி சேவடி மலர் சிறு கரும் தாள்
பொலியும் நீர் முகில் குழவியே போலே
அடக்கி ஆர செஞ்சிறு விரல் அனைத்தும்
அம் கை யோடு அணைந்து ஆனையில் கிடந்த
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ!
கேசவா ! கெடுவேன் கெடுவேனே– 7-2-

பதவுரை

வடி கொள்–கூர்மையை யுடைத்தாய்
அஞ்சனம் எழுது–மையிடப் பெற்றதாய்
செம் மலர்–செந்தாமரை மலரை ஒத்ததான
கண்–கண்களாலே
மேல் ஒன்றினை–மேற்கட்டியிலே தொங்க விட்டிருக்கும் கிளி முதலியவற்றில் ஒரு வஸ்துவை
இனிது–இனிதாக
மருவி நோக்கி–பொருந்தப் பார்த்துக் கொண்டும்
கரு தாள்–கறுத்த புறந்தாளை யுடையதும்
மலர்–செந்தாமரை மலரை யொத்து
சிறு–சிறுத்த
சே அடி–சிவந்த அகவாயை உடையதுமான திருவடிகளை
முடக்கி–முடக்கிக் கொண்டும்
நீர் பொலியும்–(கழுத்தளவும் பருகின) நீர் விளங்கப் பெற்ற
முகில் குழவி போல–மேகக் குட்டிப் போல,
செம்சிறு விரல் அனைத்தும்–அழகிய சிறுத்த திரு விரல்களெல்லாவற்றையும்
அம் கையோடு–உள்ளங்கையிலே
அடக்கி ஆர–அடங்கும் படி
அணைந்து–முடக்கிப் பிடித்துக் கொண்டும்
ஆனையின் கிடந்த கிடக்கை–ஆனை கிடக்குமா போலே பள்ளி கொண்டருளுமழகை.
கண்டிட பெற்றிலேன்–கண்டு அநுபவிக்கப் பெறாத பாவியானேன்;
அந்தோ–ஐயோ!
கேசவா–கண்ண பிரானே!
கெடுவேன் கெடுவேன்–ஒன்று மநுபவிக்கப்பெறாத பெரும் பாவியானேன்.

தாயாயிருந்து தாலாட்டும் பாக்கியத்தை மாத்திரமேயோ நானிழந்ததது?
நீ தொட்டிலிற் சாய்ந்திருக்குமழகை ஊர்ப்பெண்களெல்லாரும் திரண்டு வந்து கண்டு களித்துப் போவர்களே;
அவர்களில் ஒருத்தியா யிருந்தாகிலும் நான் அவ்வழகைக் காணப்பெற்றேனோ? அக்கேடுமில்லையே! என்கிறாள்.

குழந்தைகள் தொட்டிலில் கிடக்கும்போது இருக்கக்கூடிய இயல்வைச் சொல்வன மூவடிகளும்.
குழந்தைகள் தொட்டிலில் அண்ணாந்து பார்த்துக்கொண்டு கிடக்குமாதலால் வேறு நினைவின்றி
மேலே உற்று நோக்குத்தற்காகத் தொட்டிலின் மீது கிளிச்சட்டம் தொங்கவிட்டு வைப்பர்கள்;
அதில் மிக அழகான ஒரு வஸ்துவை உற்றுநோக்கிக் கொண்டு களித்திருத்தல் குழந்தைகளின் இயல்பு;
அதனைக் கூறுவது முதலடி.
தொட்டிலில் கிடக்கும் விதம் சொல்லுகிறது மேல்.
மேல்புறம் கறுத்து உட்புறம் சிவந்துள்ள திருவடிகளை முடக்கிக் கொண்டும்,
கைவிரல்களை முடக்கிக் கொண்டும், ‘மேகக்குட்டி கிடக்கிறதோ! ஆனைக்குட்டி கிடக்கிறதோ!’ என்று
விகற்பிக்கலாம்படியாக நீ தொட்டிலில் சாய்ந்திருக்கும் போதை யழகை அநுபவிக்கப் பெறாது இழந்தேனே.

———

முந்தை நன் முறை அன்புடை மகளிர்
முறை முறை தம் தம் குறங்கிடை இருத்தி
எந்தையே ! என் தன் குல பெரும் சுடரே !
எழு முகில் கணத்து எழில் கவரேறே!
உந்தை யாவன் என்று உரைப்ப நின் செங்கேழ்
விரலினும் கடை கண்ணினும் காட்ட
நந்தன் பெற்றனன் நல்வினை இல்லா
நாங்கள் கோன் வாசுதேவன் பெற்றிலனே– 7-3-

பதவுரை

அன்பு உடை–ப்ரீதியை யுடையவர்களான
முந்தை நல் முறை மகளிர்–பரம்பரையாக வருகிற நல்ல உறவு முறையை யுடைய பெண்கள்
தம் தம் குறங்கிடை–தங்கள் தங்கள் துடைகளிலே
முறை முறை–க்ரமம் க்ரமமாக
இருத்தி–வைத்துக் கொண்டு
எந்தையே–“என் அப்பனே!
என் தன் குலம் பெருசுடரே–எங்கள் குலத்துக்குப் பெருத்ததொரு விளக்கானவனே!
எழு முகில் கணத்து–(கடலில் நீரை முகந்து கொண்டு) மேலேழுகின்ற மேக ஸமூஹத்தினுடைய
எழில் கவர்–அழகைக் கவர்ந்து கொண்ட
ஏறே–“ காளை போன்றவனே!”
(என்றிப்படி பலவாறாகத் துதித்து)
உந்தையாவன் என்று உரைப்ப–உன் தகப்பனார் யார்? (காட்டு,) என்றவளவிலே
நின்–உன்னுடைய
செம் கேழ் விரலினும்–சிவந்து சிறந்த விரலினாலும்
கடை கண்ணினும்–கடைக் கண்ணாலும்
காட்ட–(இன்னார் என் தகப்பனார் என்று) காட்ட
(அந்தப் பாக்கியத்தை)
நந்தன் பெற்றனன்–நந்தகோபர் பெற்றார்;
நல் வினை இல்லா நங்கள் கோன்–பாக்யஹீநையான என்னுடைய பர்த்தாவான
வசுதேவன்–வஸுதேவர்
பெற்றிலன்–(நந்தகோபர் பெற்ற பாக்கியத்தைப்) பெறவில்லை.

ஒரு வீட்டில் ஒரு குழந்தை பிறந்ததென்றால் உறவினரெல்லாரும் வரிசை வரிசையாக வந்து
குழந்தையை எடுத்துத் தம் தம் துடை மீது இட்டுக்கொண்டு,
‘என் நாயனே! என் குலவிளக்கே! என் கண்மணியே! என்றிப்படி பலவாறாகப் புகழ்ந்து கூறி
என் செல்வமே! உன் தகப்பனார் யார்? காட்டு பார்ப்போம்! என்று கேட்குமளவில்
குழந்தை தன் விரலாலும் தன் கடைக்கண்ணாலும் தன் தந்தையைக் காட்டுவது வழக்கம்;

அவ்வாறு ஸ்ரீ க்ருஷ்ணவை கேட்கும்போது பெற்ற தகப்பனாகிய வஸுதேவனைக் காட்ட வேண்டியது
ப்ராப்தாமாயிருக்கவும் பிறந்தது முதலாக நந்தகோபர் மாளிகையிலேயே வளர்ந்தது பற்றி
அந்த நந்நகோபரையன்றி வேறொருவரைத் தந்தையென்றறியாமையால்
அவரையே தனக்கு தந்தையாக காட்டினானாக வடுக்கும் என்றெண்ணிய தேவகி
அந்தோ! பரம பாக்யஸாலிநியான யசோதையைக் கைபிடித்த பாக்யத்தாலே! “இவன் என் தகப்பன்” என்று
விரலாலும் கண்ணாலும் காட்டும்படியான அத்ருஷ்டத்தை நந்தகோபாலன் பெற்றான்
பெரும் பாவியான என்னைக் கைபிடித்த கொடுமையாலே வஸுதேவன் இழந்தான். என்று சொல்லி வயிறெரிகிறாள்.

———-

களி நிலா எழில் மதி புரைமுகமும்
கண்ணனே ! திண் கை மார்வும் திண் தோளும்
தளி மலர் கரும் குழல் பிறை யதுவும்
தடம் கொள் தாமரை கண்களும் பொலிந்த
இளமை இன்பத்தை இன்று என் தன் கண்ணால்
பருவேற்க்கு இவள் தாய் என நினைந்த
அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த
பாவியேன் எனது ஆவி நில்லாதே– 7-4-

பதவுரை

கண்ணனே களி நிலா–ஸ்ரீ கிருஷ்ணனே! ஆநந்தத்தை விளைவிக்கும் நிலாவை யுடைய
எழில் மதி புரை முகமும் திண் கை–பூர்ண சந்திரனை ஒத்த திருமுகமும் திண்ணிதான திருக் கைகளும்
மார்வும்–திரு மார்பும்
திண் தோளும்–வலிமை பொருந்திய திருத் தோள்களும்
தளிர் மலர் கரு குழல்–தளிரையும் மலரையும் முடைத்தாய்க் கறுத்த திருக் குழற்கற்றையும்
பிறை அதுவும் தடங்கொள்–அஷ்டமீ சந்திரன் போன்ற திருநெற்றியும் விசாலமான
தாமரை கண்களும்–தாமரை போன்ற திருக் கண்களும் (ஆகிய இவை)
பொலிந்த இளமை இன்பத்தை–அழகு பெற்று விளங்கும்படியான யௌவநாவஸ்தையின் போக்யதையை
இன்று–இப்போது
என் தன் கண்ணால்–என்னுடைய கண்ணாலே
பருகுவேற்கு–நான் அநுபவியா நின்றாலும்
இவள் தாய் என நினைந்த–(இவள் என்னுடைய) தாய் என்று நினைப்பதற்குத் தகுதியான
பிள்ளைமை–சைசவப் பருவத்திலுண்டான
அளவு இல் இன்பத்தை–அளவில்லாத ஆநந்தத்தை
இழந்த–அநுபவிக்கப் பெறாமல் இழந்த
பாவியேன் எனது–பாவியான என்னுடைய
ஆவி நில்லாது–உயிரானது தரித்து நிற்க வழி யில்லையே!.

கண்ணபிரானே! செறிந்த நிலாவையுடைய பூர்ண சந்திரன் போன்ற திருமுகமும்
திண்ணிதான திருக்கையும் திருமார்வும் திருத்தோளும் திருக்குழலும் திருநெற்றியும் திருக்கண்களுமாகிய
இவ்வயவங்களின் போபைகளால் விளாங்கா நின்றுள்ள உனது யௌவந பருவத்திலழகை
இப்போது நான் கண்ணாரக் கண்டநுபவியா நின்றேனாகிலும்,
தாயாரொருத்தியையே யன்றி வேறொருத்தரையு மறியாத இளம் பருவத்தை அநுபவிக்க பெறாமற் போனேனே!
என்கிற அநுதாபமே என் நெஞ்சைக் கொள்ளை கொண்டிருப்பதனால் புண்படுத்தா நின்ற தென்கிறாள்.

————

மருவு நின் திரு நெற்றியில் சுட்டி அசை தர
மணி வாய் இடை முத்தம்
தருதலும் உன் தன் தாதையை போலும்
வடிவு கண்டு கொண்டு உள்ளம் உள் குளிர
விரலை செஞ்சிறு வாய் இடை சேர்த்து
வெகுளியாய் நின்று உரைக்கும் அவ் வுரையும்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம்
தெய்வ நங்கை யசோதை பெற்றாளே –7-5-

பதவுரை

நின் திரு நெற்றியில் மருவும் சுட்டி அசை தர–உன்னுடைய திரு நெற்றியிலே பொருந்தியிருக்கிற சுட்டியானது அசையும்படி
மணிவாயிடை முத்தம் தருதலும் உன்தன் தாதையை போலும்–அழகிய வாயிலுண்டான
முத்தத்தை கொடுப்ப தென்ன உன்னுடைய தகப்பானரைப் போன்ற
வடிவு–(உன்) வடிவழகை
கண்டு கொண்டு–(நான்) பார்த்து
உள்ளம் டீள் குளிர–(கடலில் நீரை முகந்து கொண்டு) மேலேழுகின்ற மேக ஸமூஹத்தினுடைய
செம் சிறு வாயிடை–சிவந்த சிறிய திருவாயிலே
விரலை சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அ உரையும்–விரல்களை வைத்துக் கொண்டு (நீ) சீற்றத்தோடே
சொல்லுகிற மழலைச் சொற்க ளென்ன (ஆகிய இவற்றிலே)
ஒன்றும் திரு இலேன் பெற்றிலேன் –ஒன்றையும் பாக்யமற்றவளான நான் அநுபவிக்கப்பெறவில்லை.
தெய்வ நங்கை எசோதை–‘தெய்வமாது’ என்று சொல்ல லாம்படியான யசோதைப் பிராட்டி
எல்லாம் பெற்றாளே–அந்த பால்யசேஷ்டிதங்கள் எல்லாவற்றையும் அநுபவிக்கப் பெற்றாளே!.

திருநெற்றிலே கூடப்பிறந்தாற்போல அமைந்து விளங்கும் சுட்டியானது அசையும்படி நீ முத்தங்கொடுப்பதையும் இழந்தேன்;
நம் குழந்தையின் முகம் தகப்பனாரின் முகம் போலவே இருக்கிறது! “ என்று சொல்லிக் கொண்டு
உனது முகத்தைச் சந்தோஷமாக பார்த்து நிற்கும் போது நீ விரல்களை வாயினுள்ளே வைத்துக்கொண்டு
பால்யோசிதமாக சீற்றம் தோற்றச்சொல்லும் மழலைச் சொற்களையும் நான் கேட்கப்பெறாமல் இழந்தேன்.
இழப்பதற்கு நானொருத்தி ஏற்பட்டாற்போலே அநுபவிப்பதற்கு யசோதைப் பிராட்டி யென்பாளொருத்தி ஏற்பட்டாள்,
உன் லீலா ரஸங்களெல்லாவற்றையும் அவளே பெற்றனள் என்கிறாள்.

“ முத்தம் தருதலும், உரைக்கு மவ்வுரையும் ஒன்றும் பெற்றிலேன் “ என்று அந்வயம்
வெகுளியாய் நின்று -சீறுபாறென்று பேசுதல் குழந்தைகளின் இயல்வாம்.
யசோதை ஒருவித நோன்பும் நோற்காதே யாத்ருச்சிகமாகவே கண்ணபிரானுடைய அதிமாநுஷ ஸீலவ்ருத்த
வேஷங்களைனைத்தயுங்காணப் பெற்றமை பற்றித் தெய்வ நங்கை எனப்பட்டாள்.

———–

தண் தாமரை கண்ணனே! கண்ணா !
தவழ்ந்து எழுந்து தளர்ந்த்ததோர் நடையால்
மண்ணில் செம் பொடி ஆடி வந்து என் தன்
மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ !
வண்ண செஞ்சிறு கை விரல் அனைத்தும்
வாரி வாய் கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ண பெற்றிலேன் ஓ! கொடு வினையேன்
என்னை என் செய்ய பெற்றது எம்மோயே –7-6-

பதவுரை

தண் அம் தாமரை கண்ணனனே–குளிர்ந்த அழகிய தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனே
கண்ணா தவழ்ந்து எழுந்து–கண்ணபிரானே (நீ) தவழ்ந்து கொண்டுஎழுந்திருந்து
தளர்ந்தது ஓர் நடையால்–தட்டுத்தடுமாறி நடப்பதாகிற ஒரு நடையினால்
செம்மண் பொடியில்–சிவந்த புழதி மண்ணிலே
ஆடி வந்து–விளையாடி (அக்கோலத்தோடே) வந்து
என் தன் மார்வில்–என்னுடைய மார்விலே
மன்னிட பெற்றிலேன் அந்தோ–நீ அணையும் படியான பாக்கியத்தை பெற்றிலேன்; இஃது என்ன தெளர்ப்பாக்கியம்!
வண்ணம் செம்–அழகு பெற்றுச் சிவந்து
சிறு–சிறிதான
கை விரல் அனைத்தும்–கைவிரல்களெல்லா வற்றாலும்
வாரி வாய்க் கொண்ட அடிசிலின் மிச்சல் உண்ணப் பெற்றிலேன்–வாரிக் கொண்டு அமுது செய்த ப்ரஸாதத்தினுடைய
சேஷத்தை (நான்) உண்ணப் பெறவில்லை;
கொடுவினையேன்–(இவற்றை யெல்லாம் நான் இழக்கும் படியாக) மஹா பாபத்தைப் பண்ணினேன்;
ஓ எம்மோய் என்னை என் செய்ய பெற்றது–ஐயோ! என் தாயானவள் என்னை எதுக்காக பெற்றாளோ!

குளிர்ந்து அழகிய தாமரைப்பூப்போலே அலர்ந்த திருக்கண்களையுடைய கண்ணபிரானே!
நீ செம்மண்ணிலே புழுதியளைந்து விளையாடும்போது தவழ்ந்து செல்வதனாலும் தட்டுத்தடுமாறித்
தரையில் காலூன்றியு மூன்றாதும் நடப்பதனாலும் புழுதி மண்ணை அளைந்த அக்கோலத்தோடே வந்து
என் மார்விலே கட்டிக் கொண்டு கிடக்கப்பெற்றிலேனே!;
எல்லாத் திருவிரல்களாலும் ப்ரஸாதத்தை வாரி அமுது செய்யும் பொது வாயது கையதாக மிகுந்த
ப்ராஸதத்ரையு முண்ணப் பெற்றினலேனே!;
ஆட்டின் கழுத்தில் முலை (அதர்) போலே என்னை என் தாய் வீணாகவே யன்றோ பெற்றாளென்கிறாள்.

“ செம்மண் பொடியில் தவழ்ந்து ஆடி, எழுந்து தளர்ந்ததோர் நடையால் வந்து என்றன் மார்வில்
மன்னிடப் பெற்றிலேன்” என்று அந்வயித்துப்பொருள் கொள்ளுதல் சாலச்சிறக்கும்

இப் பாட்டின் முன்னடிகட்கு “ மக்கண் மெய்தீண்டலுடற்கின்பம் “ என்னுங் குறளையும்
பின்னடிகட்கு “அமிழ்தினு மாற்ற வினிதே தம் மக்கள் சிறுகை யளாவிய கூழ்” என்னுங் குறளையும் நினைக்க.

———————-

குழகனே !என் தன் கோமள பிள்ளாய்
கோவிந்தா ! என் குடங்கையில் மன்னி
ஒழுகு பேர் எழில் இளம் சிறு தளிர் போல்
ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா
மழலை மென் நகை இடை இடை அருளா
வாயிலே முலை இருக்க வென் முகத்தே
எழில் கொள் நின் திரு கண் இணை நோக்கம்
தன்னையும் இழந்தேன் இழந்தேனே– 7-7-

பதவுரை

குழகனே–எல்லாரோடும் கலக்கும் ஸ்வபாவமுடையவனே!
என் தன் கோமளம் பிள்ளாய்–என் வயிற்றிற் பிறந்த அழகிய குமாரனே!
கோவிந்தா–கோவிந்தனே!
என் குடங்கை யில் மன்னி ஓழுகு பேர்–என்னுடைய குடங்கையிலே பொருந்தியிருந்து வெள்ளமிடாநின்ற மிக்க
எழில் இள சிறு தளிர் போல்–அழகை யுடைத்தாயும் மிகவும் இளைசான தளிர் போன்றதுமான
ஒரு கையால் ஒரு முலை முகம்–ஒரு திருக் கையாலே (என்னுடைய) ஒரு முலைக் காம்பை
நெருடா–நெருடிக் கொண்டு
முலை வாயிலே இருக்க–மற்றொரு முலையானது (உன்) வாயில் இருக்க
இடை இடை–நடு நடுவே
என் முகத்தை மழலை மெல் நகை அருளா–என் முகத்தை நோக்கி புன் சிரிப்பைச் செய்து கொண்டு
எழில் கொள் நின் திரு கண் இணை நோக்கம் தன்னையும்–அழகிய உன் இரண்டு கண்களாலும் பார்க்கிற பார்வையையும்
இழந்தேன் இழந்தேன்–ஐயோ! இழந்தேனே!

ஒரு முலையை வாய்மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு
இருமுலையும் முறை முறையா யேங்கி யிருந்துணாயே“ (பெரியாழ்வார் திருமொழி ) என்று
யசோதை கண்ணனை வேண்டிக்கொண்டு அவ்வாறே பெற்றனள் என்பதை அறிந்த தேவகி,
அப்பாக்கியம் தனக்கு நேராமற் போனது பற்றி வருந்துகின்றாள்.
நீ என் குடங்கையில் சாய்ந்துகொண்டு ஒருகையாலே (எனது) ஒரு முலைக் காம்பை நெருடிக் கொண்டும்
மற்றொரு முலையைத் திருப் பவளத்தில் வைத்துக் கொண்டும் நடுநடுவே என்னை இனிதாக நோக்கும்
நோக்கத்தை அநியாயமாய் இழந்தொழிந்தேனே! என்கிறாள்.

குழகன் – எல்லாரோடும் கலந்து பரிமாறுவதையே இயல்வாக வுடையவன்
கோமளம்-ஸுகுமாரம்.
குடங்கை என்பதற்கு “ உள்ளங்கை” என்று சிலர் பொருள் கூறுவர்;
அப்பொருள் உண்டாயினும் இவ்விடத்திற்கு அது பொருளல்ல;
பெண் பிள்ளைகள் குழந்தைகட்கு முலை கொடுக்கும் போது தமது முழங்கையிலே குழந்தையை வைத்துக் கொண்டு
முலை கொடுப்பது வழக்கமாதலால் இங்குக் குடங்கை என்பதற்கு “ முழங்கை” என்று பொருள் கொள்ளுவதற்கு தகுதி
“ எட்டுணைப்போது என் குடங்காலிருக்க கில்லாள்” இத்யாதி இடங்களில் குடங்கால் என்பதற்கு ‘முழங்கால்’ என்று
பொருள் கொள்ள வேண்டுமாற்றிக் “குடங்கையில் மண் கொண்டளந்து” இத்யாதி ஸ்தலங்களில் ‘உள்ளங்கை’ என்ற
பொருட்குப் பாதகமில்லை யென்க.
நெருடா, அருளா – ‘ செய்யா’ என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்; நெருடி, அருளி என்றபடி.

——–

முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்
முகிழ் இளம் சிறு தாமரை கையும்
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு
நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ் வாயும்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும்
அணி கொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட வசோதை
தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே– 7-8-

பதவுரை

வெண்ணெய் முழுதும் அளைந்து–வெண்ணெய் குடத்திலுள்ளவளவும கையை விட்டு (அளைந்து)
தொட்டு உண்ணும்–எடுத்து உண்கிற
இள முகிழ் தாமரை சிறுகையும்–இளந்தளிரையும் தாமரையையும் போன்ற சிறிய திருக் கைகளும்
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு–அழகிய தாம்பாலே அடிக்க (அதற்கு)
எள்கு நிலையும்–அஞ்சி நிற்கும் நிலையும்
வெண் தயிர் தோய்ந்த செம் வாயும்–வெளுத்த தயிர் பூசிய சிவந்த வாயும்,
அழுகையும்–அழுவதும்,
அஞ்சி நோக்கும் அ நோக்கும்–பயந்து பார்க்கிற அப்பார்வையும்
அணி கொள் செம் சிறு வாய் நெளிப்பதுவும்–அழகிய சிவந்த சிறிய வாய் துடிப்பதும்
தொழுகையும்–அஞ்ஜலி பண்ணுகையும் (ஆகிற
இவை–இவற்றையெல்லாம்
கண்ட–நேரில் கண்ணாற்கண்டு அநுபவித்த
அசோதை–யசோதை யானவள்
தொல்லை இன்பத்து–பரமானந்தத்தினுடைய
இறுதி–எல்லையை
கண்டாள்-காணப் பெற்றாள்

“தாரார்தடந்தோள்க ளுள்ளளவுங் கைநீட்டி, ஆராத வெண்ணெய் விழுங்கி” திலே புகவிட்டு அளைவனாதலால்
“ஆழவமுக்கி முகக்கினு மாழ்கடல்நீர், நாழிமுகவாது நானாழி” என்கிற ஸாமாந்யமான செய்தியையும் அறியாதே
அவிவேகந் தோற்றச் செய்த காரியங்களைக் காணப் பெற்றிலேன், என்கிறாள் முதலடியில்.
“அடிப்பதற்கு” – அடிப்ப, அதற்கு எனப் பிரித்துரைத்தலுமாம்;

கண்ணன் தயிரைக் களவாடி உண்ணும்போது யசோதை கண்டு தடியும் தாம்பு மெடுத்தவாறே
“தாயெடுத்த சிறு கோலுக் குளைந்தோடித், தயிருண்டவாய் துடைத்த மைந்தன்” என்றபடி
அந்தத் தயிரை மறைப்பதாகத் துடைத்துக் கொள்ள ஆரம்பித்து வாய் நிறையச் சுற்றிலும் பூசிக் கொள்வன்;
பிறகு யசோதையால் அடிபட்டு அழுவன், அஞ்சினாற்போல் நோக்குவன், வாய் துடிக்கும்படி விக்கி விக்கி அழுவன்,
கடைசியாக அஞ்ஜலி பண்ணுவன்; ஆக இக்கோலங்களையெல்லாம் கண்டு ஆநந்தத்தின் எல்லையிலே நிற்கும்படியான
பாக்கியம் சோதைக்குக் கிடைத்ததேயன்றிச் சுமந்துபெற்ற எனக்குக் கிடைக்காமற் போயிற்றே! என்று வருந்துகின்றாள்.
(தொல்லையின்பத்திறுதி கண்டாளே.) தொல்லை யின்பம் என்று எம்பெருமானாகிய கண்ணனையே சொல்லிற்றாய்,
அபரிச்சிந்நனான அவனை யசோதை பரிச்சிந்நனாக்கி விட்டாள! என்றும் உரைப்பதுமொன்று.
அழுகையும் தொழுகையும் பரிச்சிந்நர்களுடைய க்ருத்யமிறே. (பரிச்சிந்நர்- ஓரளவு பட்டவர்.

—————

குன்றினால் குடை கவித்ததும் கோல
குரவை கோத்ததும் குடமாட்டும்
கன்றினால் விள வெறிந்ததும் காலால்
காளியன் தலை மிதித்ததும் முதலா
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும்
அங்கு என் உள்ளம் குளிர
ஒன்றும் கண்டிட பெற்றிலேன் அடியேன்
காணுமாறு இனி வுண்டேனில் அருளே— 7-9–

பதவுரை

குன்றினால் குடை கவித்ததும்–கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கி நின்றதும்
கோலம் குரவை கோத்ததும்–அழகாக ராஸ க்ரீடை செய்ததும்
குடம் ஆட்டும்–குடக் கூத்தாடினதும்
கன்றினால் விள எறிந்ததும்–கன்றாய் வந்த ஒரு அசுரனைக் கொண்டு (அஸுராவேசமுடைய) விளங்காய்களை உதிர்த்ததும்
காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா–திருவடிகளாலே காளிய நாகத்தின் தலையை மர்த்தித்ததும் (ஆகிய இவை) முதலாகவுள்ள
வென்றி சேர்–வெற்றி பொருந்திய
நல் பிள்ளை விளையாட்டம் அனைத்திலும்–விலக்ஷணமான பால்ய சேஷ்டிதங்க ளெல்லா வற்றினுள்ளும்
ஒன்றும்–ஒரு சேஷ்டிதத்தையும்
என் உள்ளம் உள் குளிர–என் நெஞ்சு குளிரும்படி
அடியேன்–நான்
அங்கு கண்டிட பெற்றிலேன்–அச்சேஷ்டிதங்களை நீ செய்தவிடத்தில் கண்ணாரக் கண்டு களிக்க பெற்றிலேன்;-
இனி–இப்போது
காணும் ஆறு–(அவற்றை நான்) காணத் தக்க உபாயம்
உண்டு எனில்–இருக்குமாகில்
அருள்00கிருபை செய்தருள வேணும்.

உனது சேஷ்டைகளை யசோதைக்குக் காட்டினையே யன்றிப் பாவியேன் கண்ணுக்கு நீ ஒன்றையுங் காட்டவில்லை;
கீழ் நடந்தவற்றை யெல்லாம் எனக்காக மறுபடியும் ஒரு தடவை செய்து காட்டக் கூடுமோ என் அப்பனே! என்கிறாள்.

——–

வஞ்ச மேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி
வரண்டு நார் நரம்பு எழக் கரிந்துக்க
நஞ்சமார் தரு சுழி முலை அந்தோ !
சுவைத்து நீ அருள் செய்து வளர்ந்தாய்
கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் !
கடைப் பட்டேன் வெறிதே முலை சுமந்து
தஞ்சம் மேல் ஒன்றி இலேன் உய்ந்து இருந்தேன்
தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே— 7-10-

பதவுரை

வஞ்சம் மேவிய நெஞ்சு உடை பேய்ச்சி–வஞ்சனை பொருந்திய நெஞ்சை யுடையளான பூதனை யானவள்
வரண்டு–உடம்பு சோஷித்து
எழ–(உள்ளுள்ள ரத்தமாம்ஸங்கள) வெளியிற் கொழிக்கும் படியாகவும்
நார் நரம்பு கரிந்து உக்க–நார் போன்ற நரம்புகள் கருகி உதிரும் படியாகவும (அவளுடைய)
நஞ்சம் ஆர் தரு சுழி முலை–விஷந்தீற்றிய கள்ள முலையை
நீ சுவைத்து–நீ ஆஸ்வாதநம் பண்ணியும்
அருள் செய்து–(என் மேல்) கிருபையினாலே
வளர்ந்தாய்–உயிருடன் வளரப் பெற்றாய்
அந்தோ–ஆச்சரியம்!
கஞ்சன் நாள் கவர்–கம்ஸனுடைய ஆயுஸ்ஸை அபஹரித்த
கரு முகில் எந்தாய்–காளமேகம் போன்ற நாயனே!
முலை வெறிதே சுமந்து–(நான்) முலையை வியர்த்தமாகச் சுமந்து
கடைப்பட்டேன்–கெட்டவரிலும் கடைகெட்டவளானேன்;
தஞ்சம் ஒன்று இலேன்–(உன்னையொழிய வேற) புகலற்றிராநின்றேன்;
உய்ந்திருந்தேன்–(என்றைக்காகிலு முன்னைக் கண்ணால் காண்போமென்று)பிராணனைப் பிடித்துக் கொண்டு ஜீவிக்கிறேன்;
தக்கது–உனக்குத் தகுதியான
நல்ல தாயை–நல்ல தாயாரை
பெற்றாய்–ஸம்பாதித்துக் கொண்டாய்.

(கடைப்பட்டேன் வெறிதே முலை சுமந்து)
முலை நெறித்த போது பாலுண்பதற்கு உன்னைப் பிள்ளையாகப் பெற்று வைத்தும் நீ வேறு முலையைத்
தேடி ஓடினமையால் என்முலை பயனற்றொழிகையாலே இம்முலை எனக்குப் புரைகுழல் போலே
வீணாண சுமையாயிற்றென்கிறாள்.

(தஞ்சமேல் இத்யாதி) நான் முன்னமே உயிர்துறந்திருக்க வேண்டுமாயினும் எப்போதாயினும்
உன்னைக் காணப்பெறவேணுமென்னுமாசையால் பிராணனை வலியப் பிடித்து
வைத்துக் கொண்டிருக்கிறேனென்று கருத்து.

(தக்கதே இத்யாதி) உனக்கு முலைப்பால் வேண்டும் போது என்னையும் விட்டு யசோதையையும் விட்டுப்
பூதனையைப் பற்றினாயே! இதுனோ தகுதி? என்றவாறு

—————

மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை
வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து
எல்லையில் பிள்ளை செய்வன காணாத்
தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மாலடி முடி மேல்
கோலமாம் குலசேகரன் சொன்ன
நல் இசை தமிழ் மாலை வல்லார்கள்
நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே– 7-11-

பதவுரை

மல்லை மா நகர்க்கு–செல்வம் நிரம்பிய பெரிய நகரமாகிய வட மதுரைக்கு
இறையவன் தன்னை–தலைவனாயிருந்த கம்ஸனை
வான் செலுத்தி–வீர ஸ்வர்க்கத்திற்கு அனுப்பி
ஈங்கு வந்து அணை–(தேவகீ ஸமீபமாகிய) இங்கே வந்து சேர்ந்த
பிள்ளை–கண்ண பிரானுடைய
மாயத்து எல்லை இல் செய்வன–அற்புதத்தில் எல்லை யில்லாத சேஷடிதங்களை
காணா–(நடந்த போது) காணப் பெறாத
தெய்வத் தேவகி–தெய்வத் தன்மை பொருந்திய தேவகி யானவள்
புலம்பிய புலம்பல்–புலம்பிக் கொண்டு சொன்ன பாசுரங்களை
கொல்லி காவலன்–கொல்லி நகர்க்கு அரசராய்
மால் அடி முடி மேல் கோலம் ஆம்–ஸர்வேச்வரனுடைய திருவடிகளைத் தம் திருமுடிக்கு அலங்காரமாக வுடையரான
குலசேகரன்–குலசேகராழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
நல் இசை தமிழ் மாலை–நல்ல இசையையுடைய தமிழினாலாகிய சொல் மாலையை
வல்லார்கள்–ஓத வல்லவர்கள்
ஒல்லை–விரைவாக
நாரணன் உலகு–ஸ்ரீவைகுண்டத்தை
நண்ணுவார்–சேரப் பெறுவர்

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ பெருமாள் திருமொழி -6–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

August 7, 2021

ஏர் மலர் பூம் குழல் ஆயர் மாதர்
எனை பலர் உள்ள இவ் ஊரில் உன் தன்
மார்வு தழு வதற்கு ஆசை இன்மை அறிந்து அறிந்தே
உன் தன் பொய்யை கேட்டு
கூர் மழை போல் பனி கூதல் எய்தி
கூசி நடுங்கி யமுனை ஆற்றில்
வார் மணல் குன்றில் புலர நின்றேன்
வாசுதேவா ! வுன் தன வரவு பார்த்தே— 6-1-

பதவுரை

வாசுதேவா–கண்ணபிரானே!
ஏர் மலர் பூ குழல் ஆயர் மாதர்–அழகிய புஷ்பங்களை அணிந்த பரிமளம் மிக்க கூந்தலை யுடைய இடைப் பெண்கள்
எனை பலர் உள்ள–எத்தனையோ பேர்களிருக்கப் பெற்ற
இ ஊரில்–இந்தத் திருவாய்ப்பாடியில்
உன் தன் மார்வு தழுவுதற்கு–உன்னுடைய மார்வோடு அணைவதற்கு
ஆசை இன்மை அறிந்து அறிந்தே–ஆசை யில்லாமையை நன்றாக அறிந்து வைத்தும்
உன் தன்–உன்னுடைய
பொய்யை கேட்டு–பொய்யான வார்த்தைகளைக் கேட்டு
(அவற்றை மெய்யென மயங்கி)
கூர் மழை போல் பனிக்கு ஊதல் எய்தி== மிக்க மழை போல் பெய்கிற பனியாலுண்டான குளிரிலே அகப்பட்டு
கூசி–(யார் பார்த்து விடுகிறார்களோ வென்று) கூச்சமடைந்து
நடுங்கி–நடுங்கிக் கொண்டு
யமுனை ஆற்றில்–யமுநா நதியில்
வார் மணல் குன்றில்–பெரியதொரு மணற் குன்றிலே
உன் வரவு பார்த்து–உன் வரவை எதிர்பார்த்துக் கொண்டு
புலர நின்றேன்–போது விடியுமளவும் (அங்கேயே) காத்து நின்றேன்.

கண்ணபிரான் ஒரு பெண் பிள்ளையை நோக்கி ‘நீ யமுனை யாற்றின் மணற்குன்றிலே போய் நில்லு,
நான் அங்கே வருகிறேன்’ என்று சொல்லி விட, அப்படியே அவள் அங்கே போய் விடியுமளவும் நின்று
அவன் வரக் காணாமல் வருத்தத்தொடு மீண்டு வந்து, மற்றொரு நாள் அவனைக் கண்ட போது
ப்ரணய ரோஷந் தோற்றச் சொல்லுகிற பாசுரமாயிருக்கிறது இப்பாட்டு.

அநியாயமாய் உன் பொய்யைக் கேட்டு மோசம் போனே னென்கிறான்
( வாசு தேவா !) கனவிலும் பொய் சொல்லியறியாத வஸுதேவர் வயிற்றிற் பிறந்த நீயும்
தந்தையை ஒத்திருப்பாயென்று நம்பிக் கேட்டேன் காண்! என்ற குறிப்பு –
புலர்தல் – பொழுது விடிதல்.

——–

கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி
கீழை அகத்து தயிர் கடைய
கண்டு ஒல்லை நானும் கடைவன் என்று
கள்ள விழியை விழித்து புக்கு
வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ
வாண் முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப
தண் தயிர் கடைந்திட்ட வண்ணம்
தாமோதரா! மெய் அறிவன் நானே 6-2-

பதவுரை

தமோதரா–கண்ணபிரானே!
கீழை அகத்து–(என் வீட்டுக்குக்) கீழண்டை வீட்டில்
கெண்டை ஒண் கண்–கயல் போன்று அழகிய கண்களை யுடையளான
மடவாள் ஒருத்தி–ஒரு பெண்ணானவள்
தயிர் கடைய கண்டு–(தனியே) தயிர் கடையா நிற்பதைக் கண்டு
நானும்–நானும் (உன்னோடு கூட)
ஒல்லை கடைவன் என்று–சீக்கிரமாக (இத்தயிரைக்) கடைகிறேன்’ என்று (வாயாற் சொல்லி)
கள்ளம் விழியை விழித்து–திருட்டுப் பார்வை பார்த்து
புக்கு–(அவளருகே) சென்று சேர்ந்து
வண்டு அமர் பூ குழல்–வண்டுகள் படிந்த புஷ்பங்களை அணிந்த மயிர் முடியானது
தாழ்ந்து உலாவ–அவிழ்ந்து அசையும் படியாகவும்
வாள் முகம்–ஒளி பொருந்திய முகமானது
வேர்ப்ப–வேர்க்கும் படியாகவும்
செம் வாய் துடிப்ப–சிவந்த அதரமானது துடிக்கும் படியாகவும்
தண் தயிர்–குளிர்ந்த தயிரை
நீ கடைந்திட்ட வண்ணம்–நீ கடைந்த படியை
நான் மெய் அறிவன்–நான் மெய்யே அறிவேன்.

வேறொரு ஆய்ச்சியின் வார்த்தை இது.
என் அகத்திற்குக் கீழண்டை அகத்திலிருப்பாளொரு பெண் பிள்ளையானவள் தனியே யிருந்து
தயிர் கடையா நிற்கையில் அது கண்ட நீ அவளருகில் ஓடிச் சென்று புகுந்து
”அம்மா! நீ தனியாகத் தயிர் கடைந்தால் ஒரு காலும் வெண்ணெய் புறப்படமாட்டாது
நானும் ஒருதலைப் பற்றிக் கடைந்தால் தான் விரைவில் வெண்ணெய் காணும் ” என்று வாயாற் சொல்லி,
உள்ளே வேற்று நினைவு இருக்கும் படி தோன்றத் திருட்டு விழி விழித்து,
மயிர் முடி அவிழ்ந்து அலையும் படியாகவும், தாமரையிலே முத்துப் படிந்தாற் போலே ஒளி பொருந்திய முகம் வேர்க்கும் படியாகவும்,
அதரம் துடிக்கும் படியாகவும் அவளோடே கூடி நீ தயிர்கடைந்த வரலாறு எனக்குத் தெரியுமப்பா! என்கிறாள்.
‘இன்னமும் அங்கேயே தயிர் கடையப் போ; இங்கே உனக்கென்ன பணி!’ என்ற ஊடல் உள்ளுறை.

—————

கரு மலர் கூந்தல் ஒருத்தி தன்னை
கடை கணித்து ஆங்கே ஒருத்தி தன் பால்
மருவி மனம் வைத்து மற்று ஒருத்திக்கு உரைத்து
ஒரு பேதைக்கு பொய் குறித்து
புரி குழல் மங்கை ஒருத்தி தன்னை
புணர்த்தி அவளுக்கும் மெய்யன் அல்லை
மருது இறுத்தாய் ! உன் வளர்த்தி யோடே
வளர்கின்றதால் உன் தன் மாயை தானே –6-3–

பதவுரை

மலர் கரு கூந்தல்–புஷ்பங்களை அணிந்துள்ள கறுத்த மயிர் முடியை யுடையவளான
ஒருத்தி தன்னை–ஒரு பெண் பிள்ளையை
கடைக் கணித்து–கடைக் கண்ணால் பார்த்து விட்டு
ஆங்கே –அப்படியிருக்கச் செய்தே.
ஒருத்தி தன் பால் மனம் மருவி வைத்து–வேறொரு பெண் பிள்ளை யிடத்தில் மனதைப் பொருந்தச் செய்து,
(அவளையும் விட்டு)
மற்று ஒருத்திக்கு–வேறொரு பெண்ணிடத்தில்
உரைத்து–உனக்கு நான் அடியேன் என்று சொல்லி வைத்து
ஒரு பேதைக்கு–வேறொரு பெண்ணுக்கு
பொய் குறித்து–(ஸம்ச்லேஷத்துக்காகப்) பொய்யாகவே (ஒரு ஏகாந்தஸ்தலத்தைக்) குறிப்பிட்டு வைத்து,
ஆக இத்தனை பேரையும் ஏமாத்தி விட்டு)
புரி குழல் மங்கை ஒருத்தி தன்னை–கடை குழன்று சுருண்ட கூந்தலை யுடையவளான ஒரு இளம் பெண்ணோடு
புணர்தி–கலவி செய்யா நின்றாய்;
அவளுக்கும்–அந்தப் பெண்ணுக்கும்
மெய்யன் அல்லை–பொய்யனாயிரா நின்றாய்;
மருது இறுத்தாய்–இரட்டை மருதமரங்களை முறித்துத் தள்ளினவனே!
உன் வளர்த்தியோடே–நீ வளர்வதோடு கூடவே
உன் தன் மாயை–உன்னுடைய கள்ளங் கவடுகளும்
வளர்கின்றது–வளர்ந்து வாரா நின்றன;
ஆல்–அந்தோ!.

இங்கே “மருதிறுத்தாய்! ” என விளித்ததனால், நீ பருவம் நிரம்புவதற்கு முன்னமே
தீண்டினாரைக் கொன்றவனாதலால் உன்னைத் தீண்ட நான் அஞ்சா நின்றேன் காண்
என்று குறிப்பிட்டவாறு

———————

தாய் முலை பாலில் அமுது இருக்க
தவழ்ந்து தளர் நடை இட்டு சென்று
பேய் முலை வாய் வைத்து நஞ்சை வுண்டு
பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய்
ஆய மிகு காதலோடு யான் இருப்ப
யான் விட வந்த என் தூதி யோடே
நீ மிகு போகத்தை நன்கு உகந்தாய்
அதுவும் உன் கோரம்புக்கு ஏற்கும் அன்றே– 6-4-

தாய் முலையில்–தாயாகிய யசோதைப் பிராட்டியினுடைய முலைகளில்
பால் அமுது இருக்க–போக்யமான பால் இருக்கச் செய்தேயும் (அதனை விரும்பாமல்)
தவழ்ந்து–தவழ்ந்து கொண்டு
தளர் நடை இட்டு சென்று–தட்டுத் தடுமாறி நடந்து சென்று
பேய் முலை வாய் வைத்து–பூதனையினுடைய முலையிலே வாயை வைத்து
நஞ்சை உண்டு–(அம்முலை மீது தடவிக் கிடந்த) விஷத்தை உறிஞ்சி அமுது செய்து
பித்தன் என்று–(இப்படி செய்தது காரணமாக) ‘பைத்தியக்காரன்’ என்று
பிறர் ஏச நின்றாய்–அயலாரெல்லாரும் பரிஹஸிக்கும்படி நின்ற பிரானே!
யான்–நான்
ஆய் மிகு காதலொடு இருப்ப நீ–மிகவும் அதிகமான ஆசையோடு எதிர்பார்த்திருக்கையில் , நீ
யான் விட வந்த என் தூதியோடே–என்னால் தூதனுப்பப்பட்டு (உன்னிடம்) வந்த என் வேலைக்காரியோடே
மிகு போகத்தை–நல்ல போக ரஸங்களை
நன்கு உகந்தாய்–நன்றாக அனுபவித்தாய்
அதுவும்–அந்தச் செய்கையும்
உன் கோரம்புக்கு–உனது தீம்புக்கு
ஏற்கும் அன்றே–தகுந்திருக்குமாய்த்து

————

மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு
வீங்கு இருள் வாய் என் தன் வீதி யூடே
பொன் ஒத்த வாடைக்குக் கூடல் இட்டு
போகின்ற போது நான் கண்டு நின்றேன்
கண் உற்றவளை நீ கண்ணால் இட்டு
கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன்
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் ?
இன்னம் அங்கே நட நம்பி ! நீயே— 6-5-

பதவுரை

மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு–மின்னல் போன்று ஸூக்ஷ்மமான இடையையுடைய ஒரு பெண்ணை அணைத்துக் கொண்டு
வீங்கு இருள்வாய்–நிபிடமான (மிக்க) இருள் வேளையிலே
பொன் ஒத்த ஆடை–பீதாம்பரத்தாலே
குக்கூடல் இட்டு–முட்டாக்கிட்டுக் கொண்டு
என்தன் வீதி ஊடே–என் வீதி வழியே
போகின்ற போது–(அவளும் நீயுமாகப்) போகும் போது
நான் கண்டு நின்றேன்–நான் பார்த்துக் கொண்டிருந்தேன்:
(அன்றியும்:) நீ
கண்ணுற்றவளை–கண்ணில் தென்பட்ட (வேறொருத்தியை)
கண்ணால் இட்டு–(உனக்கே அற்றுத் தீரும்படி ) கடாக்ஷித்து
கை விளிக்கின்றதும்–(இன்னவிடத்தே வாவென்று) கையாலே அழைத்து ஸம்ஜ்ஞை பண்ணினதையும்
கண்டே நின்றேன்–பார்த்துக் கொண்டு தானிருந்தேன்;
அவளை விட்டு–அந்தப் பெண் மணியை விட்டு
இங்கு–என்னிடத்திற்கு
என்னுக்கு வந்தாய்–ஏதுக்காக வந்தாய்!
நம்பி–ஸ்வாமிந்!
இன்னம் அங்கே நட–இனி மேலும் நீ அவர்களிடத்திற்கே நடப்பாயாக.

வேறொருத்தியின் பாசுரம் இது. நள்ளிருளில் ஒருவர்க்குந் தெரியாமல் போக வேணுமென்று போகிறவன்
இருளன்ன மா மேனியைத் திறந்து கொண்டே போகலாம்;
அல்லது கறுத்ததோர் ஆடையைப் போர்த்துக் கொண்டு போகலாம்.
நீயோ இருளை அகற்றிப் பளபளவென்று ப்ராகாசிக்கும் படியான பீதாம்பரத்தை முட்டாக்கிட்டுக் கொண்டு போனாய்;
போவது தானும் வேறு வழியாயோ! நான் கண்டு வயிறெரிய வேணுமென்றே என் தெருவழியே போனாய்,
என்ற கருத்துக்களை விரித்துக் கொள்க ( குக்கூடல் – முட்டாக்கு )

———–

மற்பொரு தோள் உடை வாசுதேவா !
வல்வினையேன் துயில் கொண்டவாறே
இற்றை இரவிடை ஏமத்து என்னை
இன் அணை மேல் இட்டு அகன்று நீ போய்
அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும்
அரிவையரோடும் அணைந்து வந்தாய்
எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய்?
எம்பெருமான்! நீ எழுந்து அருளே– 6-6–

பதவுரை

மல் பொரு தோள் உடை வாசுதேவா–மல்லரோடு போர் செய்த தோள்களை யுடைய, கண்ணபிரானே!
வல் வினையேன்–மஹாபாவியான நான்
துயில் கொண்டவாறே–தூங்குவதற்கு ஆரம்பித்தவுடனே
இற்றை இரவு இடை ஏமத்து–அன்றிரவு நடுச் சாமத்திலே
இன் அணைமேல்–இனிய படுக்கையிலே
என்னை இட்டு–என்னைப் படுக்க விட்டு
நீ அகன்று போய்–நீ விலகிப் போய்
அற்றை இரவும் (அகன்று போன)–அன்றிரவும்
ஓர் பிற்றை நாளும்–அதற்கு மறுநாளும்
அரிவையரோடும்–(எல்லாப் ) பெண்களோடும்
அணைந்து வந்தாய்–கலவி செய்து வந்தாய்;
நீ–இப்படிப்பட்ட நீ,
என் மருங்கில் எற்றுக்கு வந்தாய்–என்னருகில் ஏதுக்காக வந்தாய்!
எம்பெருமான்–என் நாயகனே!
நீ எழுந்தருள்–நீ (அவர்களிடமே) போகக் கடவை.

வேறொரு பெண்மணியின் பேச்சு இது. மல்லர்களோடு யுத்தஞ் செய்யக் கற்றாயே யன்றி
என்னோடு ச்ருங்கார ரஸாநுபவம் பண்ணக் கற்றிலை காண்! என்ற உபாலம்பம் தோன்ற
” மற்றொரு தோளுடை வாசுதேவா!” என விளிக்கின்றனள்.
வல்வினையேன் – நீ என்னை ஒருத்தியையே விரும்பி மற்றையோரைக் கண்ணெடுத்துப் பாராமலிருப்பதற் குறுப்பான
பாக்கியமற்ற நான், என்பது கருத்து.

இரண்டாமடியில், ” இற்றை யிரவிடை ” என்றே பாடம் நிகழினும்
” அற்றை யிரவிடை ” என்ற பாடமே வியாக்கியானத்திற்கும் பொருட் சேர்த்திக்கும் தகும் என்பர் பெரியோர்.

————

பைய அரவின் அணை பள்ளியினாய் !
பண்டேயோம் அல்லோம் நாம் நீ வுகக்கும்
மை அரி ஒண் கண்ணினாரும் அல்லோம்
வைகி எம் சேரி வர ஒழி நீ
செய்ய உடையும் திரு முகமும்
செங்கனி வாயும் குழலும் கண்டு
பொய் ஒரு நாள் பட்டதே அமையும்
புள்ளுவம் பேசாதே போகு நம்பி !—- 6-7–

பதவுரை

பை அரவு இன் அணை பள்ளியினாய்–பாடங்களையுடைய இனிய சேஷ சயனத்திலே பள்ளி கொள்பவனே!
நம்பி–பூர்ணனானவனே!
நாம்–நாங்கள்
பண்டையோம் அல்லோம்–உன் மாயைப் பேச்சு வலையில் அகப்படுகைக்கு பழைய படி ஏமாந்தவர்களல்ல
நீ உகக்கும்–நீ விரும்பத் தக்கவர்களாய்
மை–மையணிந்து
அரி ஒண்–மான் போலழகிய
கண்ணினாரும் அல்லோம்–கண் படைத்தவர்களான பெண்களுமல்லோம்;
வைகி–கால விளம்பஞ் செய்து
எம் சேரி–எமது அகத்துக்கு
வரவு ஒழி நீ–வருவதை இனி நீ விட்டிடு;
செய்ய உடையும்–அழகிய பீதாம்பரத்தையும்
திரு முகமும்–திரு முக மண்டலத்தையும்
செம் கனி வாயும்–சிவந்த கோவைக்கனி போன்ற அதரத்தையும்
குழலும்–கூந்தல் முடியையும்
கண்டு–பார்த்து (அவற்றில் ஈடுபட்டு)
பொய்–உன் பொய் வார்த்தைகளில்
ஒரு நாள் பட்டதே அமையும்–ஒரு நாள் பட்டபாடு போதுமே;
புள்ளுவம்–க்ருத்ரிமமான வார்த்தைகளை
பேசாதே–(மறுபடியும்) சொல்லாமல்
போகு–(உன் தேவிமார்களிடத்தே) போய்ச் சேர்.

வைகி என்றதன் கருத்து யாதெனில், ‘உங்களிருப்பிடத்திற்கு மற்றும் எத்தனையோ பேர் வருகிறாப்போலே
நானுமொருவன் வந்தாலென்ன? என்னையேன் போகச் சொல்லுகிறாய்? என்று கண்ணபிரான் கேட்க:
எல்லாரும் வரும் போதில் உன்னை நான் வர வேண்டாவென்று சொல்லவில்லை;
பிறர்க்கு அதிசங்கை உண்டாம்படி அகாலத்திலே வருவதைத் தான் மறுக்கிறேன்” என்கிறாள் என்க.

பிறகு கண்ணபிரான் ” நங்காய்! இதற்கு முன் சொல்லாத வார்த்தைகளை இன்று புதிதாகச் சொல்லுகிறாயே!
என்னை வேற்று மனிசனாக நினைத்து விட்டாயே!” என்ன,
உன் கள்ளச் செயல்களையும் க்ருத்ரிமபாஷணங்களையும் முன்பு நம்பிப் பட்டது போதும்;
இனி வேண்டா என்கிறாள்.
புள்ளுவம் – வஞ்சகம்.

————-

என்னை வருக என குறித்திட்டு
இன மலர் முல்லையின் பந்தர் நீழல்
மன்னி அவளை புணர புக்கு
மற்று என்னை கண்டு உழறா நெகிழ்ந்தாய்
பொன் நிற ஆடையை கையில் தாங்கி
பொய் அச்சம் காட்டி நீ போதியேலும்
இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல்
என் சினம் தீர்வன் நானே– 6-8-

பதவுரை

என்னை–என்னை
வருக என–(இன்னவிடத்திற்கு) வாவென்று
குறித்திட்டு–ஸந்கேதம் பண்ணி வைத்து விட்டு
இனம் மலர் முல்லையின் பந்தர் நீழல்–நிறைந்த மலர்களை யுடைய முல்லைப் பந்தலின் நிழலிலே
மன்னியவளை–(வெகு காலமாய்ப்) பதுங்கி நின்ற ஒருத்தியை
புணர புக்கு–ஸம்ச்லேஷிக்கப் போய்
மற்று என்னை கண்டு-பிறகு என்னைப் பார்த்து
உழறா–கலங்கி
நெகிழ்ந்தாய்–அப்பாலே நழுவினாய்;
பொன் நிறம் ஆடையை–பீதாம்பரத்தை
கையில் தாங்கி–கையிலே தாங்கிக் கொண்டு
பொய்–பொய்யாக
அச்சம் காட்டி–நீ எனக்கு அஞ்சினமாக நான் பாவிக்கும்படி செய்து கொண்டு
நீ போதி ஏலும்–நீ (என் கைக்கு அகப்படாமல்) ஓடிப் போன போதிலும்
இன்னம்–இனி
ஈங்கு–இங்கே
என் கை அகத்து–என்னிடத்திற்கு
ஒரு நாள் வருதிஏல்–ஒரு நாளாகிலும் வருவாயாகில்
( அப்போது)
நான் என் சினம் தீர்வன்–நான் என் கோபத்தை தீர்த்துக் கொள்வேன்.

[என் சினம் தீர்வன் நானே] என்கிற விடத்தைக் கோயிலில் திருவத்யயநோத்ஸவதத்தில்
”உய்ந்த பிள்ளை” என்பாரொரு அரையர் அபிநயிக்கும்போது, கையாலே அடிப்பதும் காலாலே துவைப்பதுமாய் அபிநயித்தார்.
அதாவது, – மறுபடியும் நீ என் கையில் அகப்படும்போது உன்னை நான் கையாலடித்தும் காலால் துகைத்தும்
என் கோபத்தைத் தணித்துக் கொள்வேன் என்பதாகக் கருத்தை விரித்தார்.
அப்போது கோஷ்டியில் எழுந்தருளியிருந்த எம்பார் இங்ஙனே அரையர்காட்டிய அபிநயத்தைக் கடாக்ஷித்து
அரையர்க்கு ராஸிக்யம் போராதென்று திருவுள்ளம் பற்றி,
” கெடுவாய்! அப்படி அவள் செய்தாளாகில் என்றிருக்கிற கண்ணனுக்கு அது வருத்தமோ!
வேப்பிலையுருண்டையோ? இது அவனுக்கு அபிமத ஸித்தமாகுமே அன்றோ ஆகையால் அதுவன்று கருத்து;
முகங்கொடுக்காமல் முகத்தை மாறவைத்து என் கோபத்தைத் தணித்துக் கொள்வேன் என்னுங் கருத்துத் தோன்ற,
கையிட்டு முகத்தை மறைத்துத் திரியவைத் தருளிக் காட்ட வேணுமென்று தாம் அவ்வாறாக அபிநயித்துக் காட்டினார் என்று ப்ரஸித்தம்.

————

மங்கல நல் வனமாலை மார்வில் இலங்க
மயில் தழை பீலி சூடி
பொங்கிள வாடை அரையில் சாத்தி
பூம் கொத்து காதில் புணர பெய்து
கொங்கு நறும் குழலார்களோடு
குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய்
எங்களுக்கே ஒரு நாள் வந்தூத
உன் குழலின் இன் இசை போதராதே– 6-9-

பதவுரை

மங்கலம்–மங்களகரமாய்
நல்–விலகூஷணமான
வனமாலை–வனமாலையானது
மார்பில்–மார்விலே
இலங்க–பிரகாசிக்க
மயில் தழைப்பீலி–மயிலிறகுகளே
சூடி–சூடிக் கொண்டும்
பொங்கு இள ஆடை–பளபளவென்ற மெல்லிய ஆடையை
அரையில் சாத்தி–அரையிலே சாத்திக் கொண்டும்
பூ கொத்து–பூங்கொத்துக்களை
காதில்–காதிலே
புணரப் பெய்து–மிகவும் பொருந்த அணிந்து கொண்டும்
கொங்கு நறு குழலார்களோடு–தேன் மணம் கமழ்கின்ற கூந்தலை யுடைய பெண்களோடு
குழைந்து–ஸம்ச்லெஷித்து (அத்தாலுண்டான ஸந்தோஷத்துக்குப் போக்கு வீடாக)
குழல்–புல்லாங் குழலை
இனிது ஊதி வந்தாய்–போக்யமாக ஊதிக் கொண்டு வந்தாய்;
ஒரு நாள்–ஒரு நாளாகிலும்
எங்களுக்கே–எங்களுக்காக
வந்து ஊத–வந்து ஊதும்படி
உன் குழலின் இசை–உனது குழலின் இசையானது
போதராது–வர மாட்டாது காண்.

————-

அல்லி மலர் திரு மங்கை கேள்வன் தன்னை
நயந்து இள ஆய்ச்சிமார்கள்
எல்லி பொழுதினில் ஏமத்தூடி
எள்கி வுரைத்த வுரையதனை
கொல்லி நகர்க்கு இறை கூடல் கோமான்
குலசேகரன் இன் இசையில் மேவி
சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும்
சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பம் தானே–6-10-

பதவுரை

இள ஆய்ச்சிமார்கள்–இளமை தங்கிய இடைப் பெண்கள்
அல்லி மலர் திருமங்கை கேள்வன் தன்னை நயந்து–தாமரைப் பூவில் பிறந்த பிராட்டிக்குக் கொழுநனான கண்ண பிரானை ஆசைப்பட்டு,
எல்லி ஏமப் பொழுதினில்–ராத்ரியின் நடுச் சாமத்திலே
ஊடி–ப்ரணய கலஹம் பண்ணி
எள்கி–ஈடுபட்டு
உரைத்த–சொன்ன
உரை அதனை–பாசுரங்களை (உட்கொண்டு)
கொல்லி நகர்க்கு இறை–கொல்லி என்னும் நகருக்குத் தலைவரும்
கூடல் கோமான்–மதுரைக்கு அரசருமான
குல சேகரன்–குலசேராழ்வார்
இன் இசையில் மேவி–இனிய பண்ணிலே பொருந்த
சொல்லிய–அருளிச் செய்த
இன் தமிழ்–பரம போக்யமான தமிழிலாகிய
மாலை–மாலாரூபமான
பத்தும்–இப் பத்துப் பாட்டையும்
சொல்ல வல்லார்க்கு-ஒத வல்லவர்களுக்கு
துன்பம் இல்லை–ஸம்ஸார துக்கம் அணுகாது.

அடிவரவு
ஏர் கெண்டை கரு தாய் மின் மற்பொரு பையரவின் என்னை மங்கல அல்லி ஆலை.

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ பெருமாள் திருமொழி -5–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

August 7, 2021

ஸ்ரீமந் நாராயணனை யன்றித் தமக்கு வேறு சரணமில்லாமையை
அநேக த்ருஷ்டாந்த பூர்வகமாகத் திருவித்துவக் கோட்டம்மான் முன்னிலையில்
விண்ணப்பஞ் செய்கிறார்.

——–

தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவ கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -5-1-

பதவுரை

விரை குழுவும்–பரிமளம் விஞ்சிய
மலர்–புஷ்பங்களை யுடைய
பொழில் சூழ்–சோலைகளாலே சூழப்பட்ட
வித்துவக்கோடு– திருவித்துவக் கோட்டில் எழுந்தருளியிருக்கிற
அம்மானே–ஸ்வாமியே!
தரு துயரம்–(நீயே எனக்குத்) தந்த இத் துன்பத்தை
தடாய் ஏல்–நீயே களைந்திடா விட்டாலும்
உன் சரண் அல்லால் சரண் இல்லை–உனது திருவடிகளை யன்றி (எனக்கு) வேறு புகலில்லை;
ஈன்ற தாய்–பெற்ற தாயானவள்
அரி சினத்தால்–மிக்க கோபங்கொண்டு அதனால்
அகற்றிடினும்–(தனது குழந்தையை) வெறுத்துத் தள்ளினாலும்
மற்று–பின்பும்
அவள் தன் அருள் ஏ நினைந்து அழும்–அத்தாயினுடைய கருணையையே கருதி அழுகின்ற
குழவி யதுவே–இளங்குழந்தையையே
போன்று இருந்தேன்–ஒத்திரா நின்றேன்.

வித்துவக்கோடு என்பதற்கு – வித்வான்கள் கூடிய இடம் என்று காரணப் பொருள் கூறுவர்.
பிள்ளைப் பெருமாளையங்கார் நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில்
“ திருவிற்றுவக்கோடு சேர்ந்தார் பிறவி கருவிற்றுவக் கோடுங்காண் “ என்றிருப்பதனால்,
வித்துவக் கோடு அல்ல; விற்றுவக்கோடு என்பர் சிலர்.
அவ்விடத்திலும் “ திருவித்துவக்கோடு “ என்றே பாடமென்பர் பெரியோர்:
இவ்வளவால் எதுகையின்பம் குன்றாது இத்திருமொழியின் ஈற்றுப் பாசுரத்திலும் இங்ஙனமே பாடமாம்.
இத்திவ்யதேசம் மலைநாட்டில் “ திருமிற்றக் கோடு “ என வழங்கப் படுகின்றது.

———

கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல
விண் தோய் மதிள் புடை சூழ் வித்துவ கோட்டம்மா! நீ
கொண்டு ஆளாய் ஆகிலும் உன் குரை கழலே கூறுவனே— 5-2-

பதவுரை

விண் தோய் மதில்–ஆகாயத்தை அளாவிய மதில்கள்
புடை சூழ்–எப்புறத்தும் சூழப் பெற்ற
வித்துவக்கோடு அம்மா–திருவித்துவக் கோட்டில் எழுந்தருவியிருக்கிற ஸ்வாமிந்!
காதலன் தான்–கணவனானவன்
கண்டார் இதழ்வனவே செய்திடினும்–பார்ப்பவர்களனைவரும் இகழத் தக்க செயல்களையே செய்தாலும்
கொண்டானை அல்லால் அறியா–(தன்னை) மணஞ் செய்து கொண்டவனான அக் கணவனையே யன்றி
வேறொரு புருஷனை நினைப்பதுஞ் செய்யாத
குலம் மகள் போல்–உயர்நத குலத்துப் பிறந்த கற்புடைய மகள் போல்
நீ கொண்டு ஆளாய் ஆகிலும்–என்னை அடிமை கொண்டவனான நீ குறையும் தலைக் கட்டாமல் உபேக்ஷித்தாயாகிலும்
உன் குரை கழலே–ஒலிக்கின்ற வீரக்கழலை யுடைய உனது திருவடிகளையே
கூறுவன்–சரணமாகக் குறிக் கொள்வேன்

————–

மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவ கோட்டு அம்மா ! என்
பால் நோக்காய் ஆகிலும் உன் பற்று அல்லால் பற்றி இலேன்
தான் நோக்காது எத் துயரம் செய்திடினும் தார் வேந்தன்
கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே— 5-3-

பதவுரை

மீன் நோக்கும்–மீன்களெல்லாம் (தாம் வஸிப்பதற்கு மிகவும் தகுதியான இடமென்று)
ஆசையோடு பார்க்கிற (நீர் வளம் மிக்க)
நீள் வழல் சூழ்–விசாலமான கழனிகள் சூழ்ந்த
வித்துவக்கோடு–திருவித்துவக் கோட்டில் எழுந்தருளியுள்ள
அம்மா–பெருமானே!
என் பால்–அடியேன் மீது
நோக்காய் ஆகிலும்–நீ அருள் நோக்கம் செய்யாதிருந்தாலும்
உன் பற்று அல்லால் பற்று இலேன்–உன்னைச் சரணமாகப் பற்றுதலை விட்டு வேறொருவரைச் சரணம் புக மாட்டேன்;
தார் வேந்தன்–(குடிகளைக் காப்பதற்கென்று) மாலை யணிந்துள்ள அரசன்
தான் நோக்காது–(அதற்கு ஏற்றபடி) தான் கவனித்துப் பாதுகாவாமல்
எத் துயரம் செய்திடினும்–எப்படிப்பட்ட துன்பங்களைச் செய்தாலும்
கோல் நோக்கி வாழும்–அவனுடைய செங்கோலையே எதிர் பார்த்து வாழ்கிற
குடி போன்று இருந்தேன்–ஒத்திருக்கின்றேன்

————

வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பல்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளா துயர் தரினும் வித்துவ கோட்டு அம்மா ! நீ
ஆளா வுனதருளே பார்ப்பன் அடியேனே— 5-4-

பதவுரை

வித்துவக்கோடு அம்மா!;
வாளால் அறுத்து –(வைத்தியன்) கத்தியைக் கொண்டு அறுத்தலும்,
(ஊசியைக் காய்ச்சிச்)
சுடினும்–சூடு போடுதலுஞ் செய்தாலும்
மருத்துவன் பால் மாளாத காதல்–அவ்வைத்தியனிடத்து நீங்காத அன்புடைய
நோயாளன் போல்–நோயாளியைப் போல
மாயத்தால்–(உன்) மாயையினால்
நீ மீளா துயர் தரினும்–நீ நீங்காத துன்பத்தை (எனக்கு) விளைத்தாலும்
அடியேன்–உனது அடியவனான நான்
ஆள் ஆக–அவ்வடிமை ஸித்திப்பதற்காக
உனது அருளே பார்ப்பன்–உன்னுடைய கருணையையே நோக்கி யிரா நின்றேன்

நீயே எனக்கு ஸர்வ வித ரக்ஷகன் என்று நான் துணிந்த பின்பு, நீ எனக்கு எவ்வளவு துன்பங்களை
இவ் விபூதியிலே தந்தருளினாலும் அவற்றையெல்லாம் நான் நன்மையாகவே கருதி
மிக்க நன்றி யறிவு பாராட்டி மேன்மேலும் அன்பு செய்து வருவேனே யன்றி உன்னைச் சிறிதும்
குறை கூற மாட்டேன் என்பதை உபமாநத்தால் விளக்கினார்.

————-

வெம் கண் திண் களிறு அடர்த்தாய் ! வித்துவ கோட்டு அம்மானே !
எங்கு போய் வுய்கேன் ? உன் இணை அடியே அடையல் அல்லால்
எங்கும் போய் கரை காணாது எறி கடல் வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மா பறவை போன்றேனே— 5-5-

பதவுரை

வெம் கண்–பயங்கரமான கண்களை யுடைய
திண் களிறு–வலிய (குவலயாபீடமென்னும்) யானையை
அடர்த்தாய்–கொன்றவனே!
வித்துவக்கோடு அம்மானே!;
உன் இணை அடியே அடையல் அல்லால்–உனது உபய பாதங்களையே (நான்) சரணமடைவ தல்லாமல்
எங்கு போய் உய்கேன்–வேறு யாரிடத்திற் போய் உஜ்ஜிவிப்பேன்?
எறி–அலை யெறிகிற
கடல் வாய்–கடலினிடையிலே
எங்கும் போய் கரை காணாது–நான்கு திக்கிலும் போய்ப் பார்த்து எங்கும் கரையைக் காணாமல்
மீண்டு–திரும்பி வந்து
ஏயும்–(தான் முன்பு) பொருந்திய
வங்கத்தின்–மரக் கலத்தினுடைய
கூம்பு ஏறும்–பாய் மரத்தின் மீது சேர்கிற
மா பறவை போன்றேன்–பெரியதொரு பக்ஷியை ஒத்திரா நின்றேன்

———

செந் தழலே வந்து அழலை செய்திடினும் செங்கமலம்
அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கு அல்லால் அலராவால்
வெந்துயர் வீட்டா விடினும் வித்து கோட்டு அம்மா ! உன்
அந்தமில் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே—5-6–

பதவுரை

வித்துவக்கோடு அம்மா!;

செம் தழலே வந்து–செந்நிறமுடைய நெருப்பு (தானாக) அருகில் வந்து
அழலை செய்திடினும்–வெப்பத்தைச் செய்தாலும்
செம் கமலம் அந்தரம் சேர் வெம்–செந்தாமரைகள் வானத்தில் தோன்றுகிற வெவ்விய
கதிரோற்கு அல்லால்–கிரணங்களை யுடைய ஸூர்யனுக்கு மலருமே யல்லது.
அலரா–(நெருப்புக்கு) மலர மாட்டா;
வெம் துயர்–அநுபவித்தே தீர வேண்டியவையான கொடிய (என்) பாவங்களை
வீட்டா விடினும்–தீர்த்தருளா தொழிந்தாலும்
உன் அந்தம் இல் சீர்க்கு அல்லால்–உனது எல்லையில்லாத உத்தம குணங்களுக்கே யல்லாமல்
அகம் குழைய மாட்டேன்–(வேறொன்றுக்கு நான்) நெஞ்சுருக மாட்டேன்.

————

எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைம் கூழ்கள்
மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் மற்றவை போல்
மெய் துயர் வீட்டா விடினும் வித்துவ கோட்டு அம்மா! என்
சித்தம் மிக வுன் பாலே வைப்பன் அடியேனே —5-7-

பதவுரை

வித்துவக்கோடு அம்மா!;
வான்–மேகமானது
எத்தனையும் வறந்த காலத்தும்–எவ்வளவு காலம் மழை பெய்யாமல் உபேக்ஷித்தாலும்
பைங் கூழ்கள்–பசுமை தங்கிய பயிர்கள்
மைத்து எழுந்த மாமுகிலே பார்த்து இருக்கும்–கருநிறங் கொண்டு கிளம்புகின்ற பெரிய மேகங்களையே எதிர்பார்த்திருக்கும்;
அவை போல்–அப் பயிர்கள் போல.
மெய் துயர் வீட்டா விடினும்–தவறாது அனுபவிக்கப்படுகிற என் துன்பங்களை நீ போக்காமல் உபேக்ஷித்தாலும்
அடியேன்–உனக்கு தாஸனாகிய நான்
என் சித்தம் உன் பாலே மிக வைப்பன்–என் மநஸ்ஸை உன்னிடத்திலேயே மிகவும் செலுத்துவேன்.

———–

தொக்கி இலங்கி ஆறெல்லாம் பரந்தோடி தொடு கடலே
புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத மற்றவை போல்
மிக்கு இலங்கு முகில் நிறத்தாய் ! வித்துவ கோட்டு அம்மா ! உன்
புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே ! —5-8-

பதவுரை

மிக்கு இலங்கு–மிகுதியாய் விளங்குகிற
முகில்–காளமேகம் போன்ற
நிறத்தாய்–கரிய திருநிற முடையவனே!
வித்துவக்கோடு அம்மா!
புண்ணியனே–புண்ய ஸ்வரூபியா யுள்ளவனே!
தொக்கு இலங்குயாறு எல்லாம்–(ஜல ப்ரவாஹம்) திரண்டு விளங்குகிற நதிகளெல்லாம்
பரந்து ஓடி–(கண்டவிடமெங்கும்) பரவியோடி (முடிவில்)
தொடு கடலே புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத–ஆழ்ந்த கடலிலே சென்று சேர்ந்தல்லது மற்றோரிடத்தே புகுந்து நிற்க மாட்டா;
அவை போல்–அவ்வாறுகள் போல,
புக்கு இலங்கு–(என் நெஞ்சினுள்ளே) புகுந்து விளங்குகிற
சீர் அல்லால்–(உனது) கல்யாண குணங்கள் தவிர (மற்றோரிடத்தில்)
புக்கிலன்–ஆழ்ந்திடேன்.

————–

நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்
தன்னையே தான்  வேண்டும் செல்வம் போல் மாயத்தால்
மின்னையே சேர் திகிரி வித்துவ கோட்டு அம்மா !
நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே–5-9-

பதவுரை

மின்னையே சேர் திகிரி==மிக்க ஒளியையே கொண்டுள்ள சக்கராயுதத்தை யுடைய
வித்துவக்கோடு அம்மா!-;
நின்னையே வேண்டி–உன்னையே விரும்பி
நீள் செல்வம் வேண்டா தான் தன்னையே–மிக்க ஸம்பத்தை விரும்பாதவனையே
தான் வேண்டும்–தானாகவே வந்து சேர விரும்புகிற
செல்வம் போல்–அந்த ஐச்வரியம் போல,
மாயத்தால்–(உன்) மாயையினால்
(நீ என்னை உபேக்ஷித்தாயாகிலும்)
அடியேன்–உனது அடியவனான நான்
நின்னையே வேண்டி நிற்பன்–உன்னையே அடைய விரும்பி நிற்பேன்.

யாவனொருவன் எம்பெருமானிடத்திலே அன்பைச் செலுத்தி அதனால் ஐச்வர்யத்தை உபேக்ஷிக்கிறானோ,
அவன் உபேக்ஷிக்க உபேக்ஷிக்க அவனது நல்வினைப் பயனால் அச்செல்வம் அவனை விடாது விரும்பி
வலியத் தொடர்ந்து சேர்தல் இயல்பு.
(அபேக்ஷிப்பவனுக்குக் கிடையாதொழிதலும், அபேக்ஷியாதவனுக்கு வலிவிலே கிடைத்தலும்
பகவத் ஸங்கல்ப மஹிமை யென்பது இங்கு அறியத்தக்கது).
அது போலவே, நீ உன் உடைமையாகிய என்னை உபேக்ஷிக்க உபேக்ஷிக்க நான் உன்னையே விடாது நிற்பேன் என்றவாறு.
அடியார்களுக்கு நேரும் துன்பங்களைப் போக்கி எங்களைக் காப்பதற்காகவே கையுந் திருவாழியுமாக
இங்கே வந்துள்ளாய் நீ என்பது மூன்றாமடியின் உட்கருத்து.

இப்பாட்டு விஷயத்தில் வேதாந்த தேசிகனுடைய கருத்து –
செல்வத்தை வெறுத்து எம்பெருமானையே வேண்டி நிற்பவனுக்கு அச்செல்வம் தானே வந்து சேர்தல் பொருந்தாதாதலால்,
இப்பாட்டில் அங்ஙனம் கூறியுள்ளதை, முன்பு நெடுங்காலம் ஐச்வர்யத்துக்காக உபாஸகை பண்ணி
அது பெறாமல் அதனை வெறுத்து எம்பெருமான் பக்கல் அன்பு பூண்ட
ஒரு அதிகாரி விஷயமாகக் கொள்ளுதல் நலம் என்பதாம்.
செல்வம் என்பதற்கு ”மோக்ஷலக்ஷ்மி ” என்றுரைப்பாரும் உளர்.

——————–

வித்துவ கோட்டு அம்மா ! நீ வேண்டாயேயா யிடினும்
மற்றாரும் பற்றிலேன் என்று அவனை தாள் நயந்த
கொற்ற வேல்  தானை குலசேகரன் சொன்ன
நல் தமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே– 5-10-

பதவுரை

‘வித்துவக்கோடு அம்மா!
நீ வேண்டாயே ஆயிடினும்–நீ (என்னை) உபேக்ஷித்தாயாகிலும்
மற்று ஆரும் பற்றிலேன் என்று–வேறு எவரையும் நான் சரணடைய மாட்டேன்’
என்று–என்று (அத்யவஸாயத்தை வெளியிட்டு)
அவனை தாள் நயந்து–அவ்வெம்பெருமானது திருவடிகளிலேயே ஆசை கொண்டு
கொற்றம் வேல் தானை குலசேகரன் சொன்ன–வெற்றியைத் தரும் வேலாயுதத்தையும்
சேனையையுமுடையவரான குலசேகரர் அருளிச் செய்த
நல் தமிழ் பத்தும்–நல்ல தமிழ்ப்பாடல்கள் பத்தையும்
வல்லார்–ஓத வல்லவர்கள்
நரகம் நண்ணார்–(கொடிய பாவங்கள் செய்திருந்தாலும்) நரகத்திற் சேர மாட்டார்கள்.

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ பெருமாள் திருமொழி -4–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

August 7, 2021

ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன்
ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லாமல்
கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே –4-1-

பதவுரை

ஆன் ஏறு ஏழ் வென்றான்–நப்பின்னைப் பிராட்டிக்காக ஏழு எருதுகளை ஜயித்தவனான எம்பெருமானுக்கு
அடிமை திறம் அல்லால்–கைங்கரியம் செய்வதையே நான் வேண்டுவதல்லாமல்
ஊன் ஏறு செல்வத்து உடல் பிறவி–நாளுக்கு நாள் மாம்சம் வளர்ந்து தடிப்பதாகிற செல்வத்தை யுடைய இம் மனிதவுடம்பெடுத்துப் பிறத்தலை
யான் வேண்டேன்–(விவேகம் பெற்ற) நான் (இனி) விரும்ப மாட்டேன்;
(அன்றியும்,)
கூன் ஏறு சங்கம்–வளைந்திருக்கிற ஸ்ரீபாஞ்சஜந்யத்தை
இடத்தான் தன்–இடத் திருக் கையிலே யுடையனான எம்பெருமானுடைய
வேங்கடத்து–திருவேங்கட மலையில்
கோனேரி வாழும்–திருக் கோனேரி என்கிற ஸ்வாமி புஷ்கரிணியில் வாழ்கிற
குருகு ஆய் பிறப்பேன்–நாரை யாகவாவது பிறக்கக் கடவேன்.

திருவேங்கடமலையில் வாழ்ச்சி கிடைக்கப் பெற்றால், விவேகமற்றதொரு திர்யக் ஜாதியாகப் பிறப்பதும்,
அடியேனுக்குப் பரமோத்தேச்யமாகும்.
அத் திருமலை வாழ்ச்சிக்கு விரோதியான இம்மானிட வுடற் பிறவி எனக்கு ஒரு நாளும் வேண்டா, என்கிறார்.

அடிமைத் திறமாவது – திருவடி திருவனந்தாழ்வான் இளைய பெருமாள் முதலானவர்கள் போலப்
பல படியாலும் ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலா வடிமைசெய்யும் வகை.

கோன் ஏரி – ஸ்வாமி புஷ்கரிணி.
இப் பெயர் ஸர்வ லோக நிர்வாஹகனான எம்பெருமானுக்கு மிகவும் பிரியமான தடாகமெனப் பொருள்படும்.
அன்றி,
எல்லாத் தீர்த்தங்களிலும் தலைமை பெற்ற தீர்த்தமென்றும் பொருளாகலாம்.
இந்த ஸ்வாமி புஷ்கரிணியின் சிறப்பு. வராஹ புராணம் முதலியவற்றின் பாக்கக் காணத் தக்கது.
திருமலையில் ஸந்நிதிக்கு அருகிலுள்ள பிரதானமாக திவ்ய தீர்த்தம் இது.

உடல் பிறவி யான் வேண்டேன் ” என்று பிறவியை இகழ்ந்தவர் தாமே,
” குருகாய்ப் பிறப்பேனே “ என்று பிறவியை விரும்பினமையால்,
அங்கே பிறப்பது பிறப்பன்று, அது விரஜாநதியைச் சேர்ந்து வைகுண்டத்தில் வாழ்வதொக்குமென்று கருதினர் என்பது விளங்கும்.

ஊன்,ஆண், கோன் என்பவற்றில், ன் – சாரியை,
குருகு என்ற சொல் – அன்னம் க்ரௌஞ்சம் என்ற நீர் வாழ் பறவைகளைக் குறிப்பதாகவும்.
பறவைப் பொதுப் பெயராகவும் வழங்கும்.

————-

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
வானாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட சுனையில்
மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே— 4-2-

பதவுரை

ஆனாத செல்வத்து–அழியாத (யௌவநமாகிய) ஸம்பத்தை யுடைய
அரம்பையர்கள்–அப்ஸரஸ் ஸ்த்ரீகள்
தன் சூழ–தன்னைச் சூழ்ந்து நிற்க
வான் ஆளும் செல்வமும–மேலுலகத்தை அரசாளுகின்ற ஐச்வர்யத்தையும்
மண் அரசும்–இப் பூலோகத்தை அரசாளும் ஆட்சியையும்
யான் வேண்டேன்–(வருத்தமின்றிக் கிடைப்பதாயினும்) யான் விரும்ப மாட்டேன்
தேன் ஆர் பூ சோலை–தேன் மிக்க மலர்களுள்ள சோலைகளை யுடைய
திருவேங்கடம்–திருவேங்கட மலையிலிருக்கின்ற
சுனையில்–சுனைகளிலே
மீன் ஆய் பிறக்கும்–ஒரு மீனாகப் பிறக்கத் தக்க
விதி–வாக்கியத்தை
உடையேன் ஆவேன்–உடையவனாகக் கடவேன்.

இந்திரன் முதலிய தேவாதி தேவர்களின் பதவிகளும்
இவ் வுலகத்து அரசாட்சியுமாகிய இரண்டு ஒருங்கு கிடைத்தாலும் வேண்டா என்று விலக்குகின்றார்.

அரம்பையர்கள் – ரம்பை முதலியோர்.
இரண்டாமடியிலுள்ள சொற்போக்கினால், இவை எனக்கு ஏக காலத்திலே கிடைத்தாலும் வேண்டா வென்பதும்,
இவற்றை யான் வேண்டாமைக்குக் காரணம் இவை கிடையாமையன்று,
இவற்றில் எனக்கு விருப்பமில்லாமையே என்பதும் தோன்றும்.

முக்தியின் ம்ஹாநந்தத்தை நோக்குங்கால், இவ்விரண்டும் சிற்றின்பமேயாதலும்,
சாச்வதமான அந்தஸ்தாநத்தை நோக்குங்கள் இவை அழிவுள்ளனவேயாதலும்,
ஆத்மாவைக் கரும பந்தங்களினின்று விடுவிக்கின்ற அவ் வீட்டு நிலை போலவன்றி
இவை பந்தங்களை உறுதிப்படுத்துதலில் பொன் விலங்கும் இருப்பு விலங்கும் போலத் தம்முள் ஒப்பனவே யாதலும் கருதத்தக்கன.

தேன் ஆர் – வண்டுகள் ஆரவாரிக்கின்ற என்றுமாம்.
சுனை – மலையில் நீரூற்றுள்ள குணம்.

கீழ் ” குருகாய்ப் பிறப்பேனே ” என்றவர்,
அதற்கு இறகுகள் இருப்பதால் அது அத் திருமலையை விட்டுப் பறந்து வேற்றிடத்திற்குச் சென்றிடக் கூடுமெனக் கருதி,
அங்ஙனமன்றி அத்திருமலையிலேயே பிறப்பு வாழ்ச்சி இறப்புகளை யுடைய மீனாய்ப் பிறப்பேனாகவென்று இப் பாட்டில் வேண்டுகின்றார்.
குருகாய்ப் பிறத்தலோடு அதற்கு இரையாகின்ற மீனாய்ப் பிறத்தலோடு இவர்க்கு வாசியில்லை,
திருமலையில் ஏதேனும் ஒரு ஜன்மத்தையே அபேக்ஷிப்பவராதலால்,
” எம் பெருமான் பொன்மலைமேல் ஏதேனு மாவேனே ” என்பர் பின்னும்.

————

பின் இட்ட சடையானும் பிரமனும் இந்த்ரனும்
துன்னிட்டு புகல் அரிய வைகுண்ட நீள் வாசல்
மின் வட்ட சுடர் ஆழி வேம்கட கோன் தான் உமிழும்
பொன் வட்டில் பிடித்து உடனே புக பெறுவேன் என ஆவேனே– 4-3-

பதவுரை

பின்னிட்ட சடையானும்–திரித்து விட்ட சடையை யுடையவனான சிவனும்
பிரமனும்–சதுர்முகனும்
இந்திரனும்–தேவேந்திரனும்
துன்னிட்டு–நெருக்கி
புகல் அரிய–உள்ளே புகுவதற்கு ஸாத்யமில்லாமலிருக்கின்ற
வைகுந்தம் நீள் வாசல்–பூலோக வைகுண்டமாகிய திருமலையிலுள்ள திருக்கோயிலின் நீண்ட திருவாசலிலே
மின் வட்டம் சுடர் ஆழி–மின்னலை வளைத்தாற்போல சோதி மயமாய் விளங்குகின்ற வட்ட வடிவமான சக்ராயுதத்தை யுடைய
வேங்கடம் கோன் தான்–திருவேங்கடமுடையான்
உமிழும்–வாய்நீருமிழ்கின்ற
பொன் வட்டில்–தங்க வட்டிலை
பிடித்து–கையிலேந்திக் கொண்டு
உடனே புக பெறுவேன் ஆவேனே–அந்தரங்க பரிஜநங்களுடனே நானும் உள்ளே புகும் பாக்கியத்தைப் பெறக் கடவேன்.

எம்பெருமானுக்கு அந்தரங்க கைங்கரியம் செய்யப் பெறுவதுண்டானால்
மனுஷ்ய ஜன்மமே யாகிலும் அமையும் என வேண்டுகின்றார்.
பிரமன் சிவன் இந்திரன் முதலிய தலைமைத் தேவர்கள் திருவேங்கடமுடையானைச் சேவித்தலில் விருப்பத்தால்
அங்கு வந்து அக்கருத்தினாலேயே மிகுதியாகக் கூடியுள்ள அடியார்களின் பெருங்கூட்டத்தின் நடுவில் சிக்கி
நெருக்குண்டு உள்ளே புக முடியாமல் தடுமாறப் பெற்ற அத்திருமலையின்
கோயில் வாயிலில் யான் அப்பெருமானுக்கு அந்தரங்க கிங்கரனாய்
அவன் வாய்நீருமிழும் பொற்காளாஞ்சியை ஏந்திக் கொண்டு செல்லுமளவில், இவர் அந்தரங்க கைங்கரியபரர் என்று
அனைவரும் விலகி, வழிவிட, அர்ச்சக பரிசாரங்களுடனே யானும் தடையின்றி எளிதில் இனிது உள்ளே புக்கு
கர்ப்ப க்ருஹத்திற் சேர்ந்து அருகில் நின்று கைங்கரியம் பண்ணப் பெறுவேனாக வென்று பிரார்த்திக்கின்றார்.

பின்னிட்ட – பின்னிய; இடு – துணைவினை.
பின் இட்ட என்று பிரித்து, பின்னே தொங்கவிட்ட சடையையுடையவன் என்றலுமாம்.
இங்ஙனம் ‘ பின்னிட்ட’ என்றதைச் சடைக்கு விசேஷணமாக்காமல் சடையானுக்கு விசேஷணமாக்கி.
தந்தையான நான்முகன் முன்னே போகப் பின்னே செல்கின்றவன் புத்திரனான ருத்ரன் என்று உரைத்தலு முண்டு.

கீழ், ” மீனாய்ப் பிறக்கும் விதி யுடையேனாவேன் என்றவர்,
மீனானது நீர் நிலையைப் பற்றியே உயிர் தரிக்க வேண்டி வருமே யென்று
ஒரு கைங்கரியபரனாகப் பிறக்க வேணுமென்று அபேக்ஷித்தார்.
வட்டில் – இங்கே, படிக்கம்.
உடனே – சீக்கிரமாக எனினுமாம்.
‘வாசல் புகப் பெறுவேன்’ என்று அந்வயம்.

————

ஒண் பவள வேலை வுலவு தண் பாற் கடலுள்
கண் துயிலும் மாயோன் கழல் இணைகள் காண்பதற்கு
பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேம்கடத்து
செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே –4-4-

பதவுரை

ஒண் பவளம் வேலை உலவு–ஒளியுள்ள பவழக் கொடிகளைக் கரையிலே கொணர்ந்து கொழித்து (அலைகள்) உலாவுகிற
தண் பாற்கடலுள்–குளிர்ந்த திருப்பாற்கடலிலே
கண் துயிலும்–யோக நித்திரை செய்தருள்கின்ற
மாயோன்–ஆச்சரிய சக்தி யுக்தனான எம் பெருமானுடைய
கழல் இணைகள்–இரண்டு திருவடிகளை
காண்பதற்கு–ஸேவிக்கும் படியாக
பண் பகரும் வண்டு இனங்கள்–இசையையே பேசுகிற வண்டுகளின் கூட்டங்கள்
பண் பாடும் வேங்கடத்து–பண்ணிசை பாடப் பெற்ற திருமலையிலே
செண்பகம் ஆய் நிற்கும் திரு உடையேன் ஆவேன்–சண்பக மரமாய் நிற்கும் பாக்கிய முடையேனாகக் கடவேன்.

ஜங்கமமானதொரு பிறப்பு வேண்டுமென்பதில்லை;
திருவேங்கடமலையில் இருப்பு சேரும்படியாக அங்கு நிற்பதொரு ஸ்தாவரமாகவாயினும்
நான் ஆக வேண்டுமென்று அபேக்ஷிக்கின்றார்.

“வானவர் வானவர்கோனெடுஞ் சிந்து பூமகிழும் திருவேங்கடம்” என்றபடி
பரமபதத்திலுள்ளார் புஷ்பவர்ஷம் வர்ஷிக்கின்ற இடமாதல் பற்றிப் புஷ்பமண்டப மெனப்படுகின்ற திருமலையிலே
எம்பெருமானுக்குப் புஷ்பகைங்கரியஞ் செய்வது விசேஷமாதலால்
அக்கைங்கரியத்துக்கு உபயோகப்படுவதொரு மரமாதலை வேண்டினரென்க.

பலவகைப் புஷ்பங்களுள் சண்பக மலர் எம்பெருமானது திருவுள்ளத்துக்கு மிகவும் உகப்பாதலைப் பெரியாழ்வார்
பூச்சூட்டல் திருமொழியில் ” தேனிலினிய பிரானே! செண்பகப்பூச் சூட்டவாராய் ” என்று இதனை முதலிற் கூறியதனாலும் உணர்க.

கீழ்ப் பாட்டில் விரும்பின கைங்கரியம் கிடைத்தால் வட்டிலைக் களவு செய்ய ஆசை தோன்றிச் சிறையிருக்க நேரிடும்
என நினைத்து சண்பகமரமாய்ப் பிறக்க வேணுமென்று அபேஷித்தபடி.

——————-

கம்ப மத யானை கழுத்தகத்தின் மேல் இருந்து
இன்ப மரும் செல்வமும் இவ் அரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேம்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவம் உடையன் ஆவேனே –4-5-

பதவுரை

கம்பம்–தன்னைக் கண்டவர்கட்கு அச்சத்தால் நடுக்கத்தை விளைக்கின்ற
மதம் யானை–மதங்கொண்ட யானையினது
கழுத்து அகத்தின் மேல் இருந்து–கழுத்தின் மீது வீற்றிருந்து
இன்பு அமரும்–நாநாவித ஸுகங்களைப் பொருந்தி அனுபவிக்கும்படியான
செல்வமும்–ஐசுவர்யத்தையும்
இவ் அரசம்–அதற்குக் காரணமான இந்த அரசாட்சியையும்
யான் வேண்டேன்–நான் விரும்ப மாட்டேன்:
எம்பெருமான்–எமது தலைவனும்
ஈசன்–(எல்லாவுலகுக்கும்) தலைவனுமான பெருமானுடைய
எழில் வேங்கடம் மலை மேல்–அழகிய திருமலையிலே
தம்பகம் ஆய் நிற்கும்–புதராய் நிற்கும்படியான
எழில் வேங்கடம்
தவம் பாக்கியத்தை
உடையேன் ஆவேன் -உடையவனாகக் கடவேன்.

செண்பக மரமாய்ப் பிறந்தால் திருமலைக்கு வருகிற மஹா ப்ரபுக்கள் யாராவது இதனை விரும்பித்
தம் வீட்டிற்கொண்டு போய் நாட்டக் கருதிப் பெயர்த்துக் கொண்டு போகக்கூடும். அப்படி உண்டோவெனில்,
” கற்பகக்காவுகருதிய காதலிக்கு இப்பொழுது ஈவனென்று இந்திரன் காவினில், நிற்பன செய்து
நிலாத்திகழ் முற்றத்துள், உய்த்தவன் ” என்றபடி –
ஸத்யபாமைப் பிராட்டியின் விருப்பத்திற்கிணங்கிய கண்ணபிரான், ஸ்வர்க்க லோகத்தில் இந்திரனது நந்தவனத்திலிருந்த
கற்பகத் தருவை ஸத்ய பாமையின மாளிகைத் திரு முற்றத்திலே கொணர்ந்து நட்டானே.
அவ்வாறு யாரேனுமொருவர் சண்பக மரத்தையும் பெயர்த்துக் கொண்டு போனால்
திருமலையில் வாழ்ச்சி இழந்ததாமே எனக் கருதி,
அங்ஙனம் மஹாப்ரபுக்களின் விருப்பத்திற்குக் காரணமாகக் கூடாததொரு தம்பகமாய் நிற்க விரும்புகிறார் இப்பாட்டில்.

கம்பம் – வடசொல்; கம்பமத யானை (கண்டாரனை வரும்) நடுங்கும்படி மதங்கொண்ட யானை.
அன்றி, மதங்கொண்டதாதலால் வெளியே விட வொண்ணாதபடி கம்பத்திலேயே கட்டப்பட்டு நிற்கின்ற யானை யென்றும்,
அசையுமியல்பையுடைய மதயானை என்றும் பொருளாம்.

தம்பகமாய் – புல் கோரை செடி கொடி முதலியவற்றின் புதர் – ஸ்தம்பம் எனப்படும்.
அது விகாரம் பெற்று ஸ்தம்பகம் என நிற்கும். அவ் வடசொல் தம்பகம் என விகாரப்பட்டது.
இனி தம்பகமாவது இலை காய் கனி நிழல் ஒன்றுக்கு முதவாததொரு பென்பாரு முளர்.

———————

மின் அனைய நுண்ணி இடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர் தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன்
தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற் குவடாம் அரும் தவததேன் ஆவேனே –4-6-

பதவுரை

மின் அனைய நுண் இடையார்–மின்னல் போல் ஸூக்ஷ்மமான இடையே உடையவர்களாகிய
உருப்பசியும் மேனகையும் அன்னவர் தம்–ஊர்வசியும் மேனகையும் போலழகியவர்களான ஸ்த்ரீகளின்
பாடலொடும் ஆடல் அவை–பாட்டும் ஆட்டமுமாகிய அவற்றை
ஆதரியேன்–யான் விரும்ப வில்லை
வண்டு இனங்கள்–வண்டுகளின் கூட்டம்
தென்ன என பண் பாடும்–” தென தென ” என்று ஆளத்தி வைத்து இசை பாடப் பெற்ற
வேங்கடத்துள்–திருமலையிலே
அன்னனைய பொன் குவடு ஆம்–அப்படிப்பட்ட பொன் மயமான சிகரமாவதற்கு உரிய
அரு தவத்தன் ஆவேன்–அருமையான தவத்தை யுடையவனாகக் கடவேன்.

“தம்பகமாய் நிற்குந் தவமுடையேனாவேன்” என்றவர் சிறிது யோசித்த வளவில்,
அரசாங்கத்தார், மலையிலுள்ள செடி செட்டுகளை அடிக்கடி சோதிப்பவராதலால் திடீரென்று அவர்கள்
தம்பகத்தைக் களைத்தெறிந்திடக் கூடுமெனவும், அது தானே விரைவில் தீந் தொழியக்கூடுமெனவும் நினைத்து,
அங்ஙனன்றி என்றும் ஒரு படியா யிருக்கும்படி அத்திருமலையில்
ஒரு பாகமாகக் கடவேனென்று அபேக்ஷிக்கின்றார்.
முன்னிரண்டடிகளால் தேவலோக போகத்தில் தமக்கு எள்ளளவும் நசை யில்லாமையை வெளியிட்டார்.

————–

வான் ஆளும் மா மதி போல் வெண் குடை கீழ் மன்னவர் தம்
கோனாகி வீற்று இருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட மலை மேல்
கானாறாய் பாயும் கருத்துடையன் ஆவேனே– 4-7-

பதவுரை

பிறை ஏறு சடையானும்–இளஞ் சந்திரன் ஏறியிரா நின்ற ஜடையை யுடைய சிவனும்
பிரமனும்–ப்ரஹ்மாவும்
இந்திரனும்–தேவேந்திரனும்
முறை ஆய–தம் தமது யோக்யதைக்குத் தக்கபடி செய்கின்ற
பெரு வேள்வி–பெரிய பாகங்களின் பயனாக
குறை முடிப்பான்–(அவர்களது) குறையைத் தீர்த்து அவர்கள் கோரிக்கையைத் தலைகட்டுவிப்பனும்
மறை ஆனான்–வேதங்களிற் பரம்பொருளாகக் கூறப்படுபவனுமான எம்பெருமானுடைய
வெறி ஆர் தண் சோலை–பரிமளம் மிக்க குளிர்ந்த சோலைகளை யுடைய
திருவேங்கடம் மலை மேல்
நெறி ஆய் கிடக்கும்–(போகிற) வழியாய்க் கிடக்கின்ற
நிலை–நிலையை
உடையேன் ஆவேன்–உடையவனாகக் கடவேன்.

கீழ்ப்பாட்டில் ” கானாறாய்ப்பாயுங் கருத்துடையேனாவேனே ” என்று பாரித்தவர் சற்று ஆராய்ந்ததில்
அது தன்னிலும் ஓர் குறையுணர்ந்தார்; ஆறு எப்போதும் ப்ரலஹிக்கக் கூடியதல்ல. சில காலங்களில் வற்றிப்போம்;
அப்போது திருமலை வாழ்ச்சி இழந்ததாம் என நினைத்தார். அங்ஙனமன்றி எப்போதும் ஒரு தன்மையாகத்
திருவேங்கட முடையானை ஸேவிக்க வருகின்ற பாகவதர்களின் ஸ்ரீபாததூளி படும்படி வழியாய்க் கிடக்கும் நிலைமை
தமக்கு வாய்க்க வேண்டுமென்று பிரார்த்திக்கின்றார் இதில்.

குறை முடிப்பான்-இது இரட்டுற மொழிதலாய்,
குறையைத் தீர்ப்பவன், வேண்டுகோளைப் பூர்த்தி செய்பவன் எனப் பொருள் தரும்.
அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட ப்ராப்தியும் செய்பவன் என்கை

—————

செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேன –4-9-

பதவுரை

செடி ஆய–செடி போல் அடர்ந்துள்ள
வல் வினைகள்-கொடிய கருமங்களை
தீர்க்கும்–(ஆச்ரிதர்க்குப்) போக்கி யருள்கிற
திருமாலே–ஸ்ரீய:பதியான பெருமானே!
நெடியானே–பெரியோனே!
வேங்கடவா–திருவேங்கட முடையானே!
நின் கோயிலின் வாசல்–உனது ஸந்நிதியின் உள் வாசலிலே
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்படி ஆய் கிடந்து–பாகவதர்களும் மற்றைத் தேவர்களும்
அப்ஸரஸ் ஸ்த்ரீகளும் இடைவிடாது ஸஞ்சரிக்கப் பெற்ற படியாய்ப் பொருந்தி
உன் பவளம் வாய் காண்பேன்–உனது பவழம் போன்ற திருவதரத்தைக் காண்பேனாகக் கடவேன்.

கீழ்ப்பாட்டில் “ நெறியாய்க் கிடக்கும் நிலையுடையேனாவேனே “ என்று
திருமலைக்கு வழியாகத் தானாக வேணுமென்று அபேக்ஷித்தவர் சிறிது ஆராய்ந்ததில் அது தன்னிலும் ஓர் குறை கண்டார்;

வழி யென்பது அவரவர்களுடைய ஸௌகரியத்துக்குத் தக்கபடி மாறுபடும் கீழ்த் திருப்பதியிலிருந்து
திருமலைக்குப் போகும் வழி மிக வருத்தமா யிருக்கிற தென்று யாத்திரிகள் சந்த்ரகிரி வழியாகப் போகக்கூடும்;
ஓரிடத்திற்கு ஒன்று தான் வழியென்று சொல்ல முடியாதாகையாலும்,
வழியானது விலகி நிற்பதாகையாலும்,

வழியாக வேணுமென்று விரும்புவதிற் காட்டிலும் எம்பெருமானது திருவருள் நோக்கம் பதியுமாறு
அவன் கண் முகப்பிலே மெய்யடியாரோடு பிறரோடு வாசியற எல்லாரும் இடைவிடாது ஸஞ்சரிக்கும்படியான
ஓர் அசேதநப் பொருளாகி, அதிலே உன் பவளவாய் காணும்படியானதொரு சைதந்யத்தையும் பெறக் கடவே னென்று
தமது விசேஷமான விருப்பத்தை விண்ணப்பஞ் செய்கிறார் இதில்.

இப்பாசுரத்தை அடியொற்றியே விஷ்ணுவாலயங்களிற் கோயிலினுள் வாசற்படி “ குலசேகரப்படி “ என்று
இவர் பெயரையிட்டு வழங்கப்படும் என்பது ஸம்ப்ரதாயம்.

————–

உம்பர் உலகாண்டு ஒரு குடை கீழ் உருப்பசி தன்
அம் பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம் பவள வாயான் திரு வேம்கடம் என்னும்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –4-10–

பதவுரை

உம்பரு உலகு–மேலுலகங்களை யெல்லாம்
ஒரு குடை கீழ்–ஒரு கொற்றக் குடையின் நிழலிலே
ஆண்டு–அரசாண்டு
உருப்பசி தன்–ஊர்வசியினுடைய
அம்–அழகிய
பொன் கலை அல் குல்–பீதாம்பர மணிந்த அல்குலை
பெற்றாலும்–அடையப் பெறினும்
ஆதரியேன்–(அதனை) விரும்ப மாட்டேன்;
செம் பவளம் வாயான்–சிவந்த பவழம் போன்ற வாயை யுடையனான
எம்பெருமான்–எனது அப்பனுடைய
திருவேங்கடம் என்னும் பொன் மலை மேல்–திருவேங்கட மென்ற பெயரையுடைய அழகிய திருமலையின் மேல்
ஏதேனும் ஆவேன்–ஏதேனுமொரு பதார்த்தமாகப் பிறக்கக் கடவேன்

கீழ்ப்பாட்டில் படியாகக் கிடக்க வேணுமென்று பிரார்த்தித்தது எம்பெருமானுடைய பவளவாய் காண்பதற்காக;
அப் புருஷார்த்தம் கிடையாதொழியினு மொழியும்; ஏனெனில்;
திருமலையில் ஸந்நிதிக்குள் கருங்கல் படியிருப்பது திருவேங்கட முடையானுடைய செல்வத்திற்குத் தகாது என்று
மஹா ப்ரபுக்கள் வந்து அப்படியை ஸ்வர்ண கவசத்தால் ஆவரிக்கக் கூடும்.
அப்போது நாம் அப்பன் திருமுகமண்டல ஸேவையை இழந்தோமாவோம்;
ஆகையால் படியாய்க் கிடப்பதும் பாங்கல்ல என்று அறுதியிட்டார்.

பின்னை எந்தப் பிறவியைப் பிரார்த்திக்கலாமென்று யோசித்தார்.
கீழ் நிகழ்ந்த மாதிரி ஒவ்வொரு பிறப்பிலும் ஒவ்வொரு அநுபபத்தி தோன்றிக் கொண்டேயிருந்தது.
கடைசியாக ஒரு பிறவியையும் தாமாக வேண்டிக் கொள்ள விரும்பாதவராய்
“ எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனு மாவேனே” என்கிறார்.

—————-

மன்னிய தண் சாரல் வட வேம்கடத்தான் தன்
பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி
கொன் நவிலும் கூர் வேல் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே 4-11-

பதவுரை

கொல் நவிலும்–(பகைவர்களைக்) கொல்லுதலைப் பயின்ற
கூர் வேல்–கூர்மையான வேலாயுதத்தை யுடைய
குல சேகரன்-குல சேகராழ்வார்
மன்னிய தண் சாரல் வடவேங்கடத்தான் தன்– நிலை பெற்ற குளிர்ச்சி யுள்ள சாரல்களை யுடைய
வட வேங்கட மலையில் எழுந்தருளி யிருக்கிற பெருமானது
பொன் இயலும் சே அடிகள்–பொன்போற் சிறந்த சிவந்த திருவடிகளை
காண்பான்–ஸேவிப்பதற்கு
புரிந்து–ஆசைப்பட்டு
இறைஞ்சி–வணங்கி
சொன்ன–அருளிச் செய்த
பன்னிய நூல் தமிழ்–ஆராய்ந்த நூல்களிற் கூறிய இலக்கணத்துக்கு இசைந்த தமிழ்ப் பதிகத்தை
வல்லார்–கற்று வல்லவர்
பாங்கு ஆய பத்தர்கள்–அப்பெருமான் திருவுள்ளத்துக்கு இனிய பக்தர்களாவர்

அடிவரவு – ஊன் ஆனாத பின் ஒண் கம்பம் மின் வான் பிறை செடி உம்பர் மன்னிய தரு.

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ பெருமாள் திருமொழி -3–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

August 6, 2021

ஸம்ஸாரிகர் படியில் மிக்க வெறுப்பு உண்டாகி,
அவர்களைக் காண்பதும் அவர்களோடு ஸஹவாஸஞ் செய்வதும் அஸஹ்யமான நிலைமை
தமக்குப் பிறந்தபடியை அருளிச் செய்கிறார்.

————

மெய்யில் வாழ்க்கையை மெய் என கொள்ளும் இவ்
வையம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
ஐயனே அரங்கா என்று அழைக்கின்றேன்
மையல் கொண்டு ஒழிந்தேன் என் தன் மாலுக்கே 3-1-

பதவுரை

மெய்யில் வாழ்க்கையை–ப்ரக்ருதி ப்ராக்ருதங்களோடு பொருந்தி வாழ்வதையே
மெய்யில் வாழ்க்கை = மெய் இல் என்று பிரித்து, பொய்யாகிய வாழ்வை எனறலுமாம்.
மெய் என கொள்ளும்–பாரமார்த்திகமாகக் கருதுகின்ற
இவ் வையம் தன்னோடும் –இவ்வுலகத்தாரோடு
யான் கூடுவது இல்லை–(இனி) நான் சேர்வதில்லை
ஐயனே–‘ஸ்வாமீ’
அரங்கா–‘ஸ்ரீரங்கநாதனே!’
என்று அழைக்கின்றேன்–என்று (பகவந் நாமங்களைச் சொல்லி) அழையா நின்றேன்;
என் தன் மாலுக்கே–என்னிடத்தில் வாத்ஸல்யமுடைய எம்பெருமான் பக்கலிலேயே
மையல் கொண்டொழிந்தேன்–வ்யாமோஹடைந்திட்டேன்.
மெய்யில் வாழ்க்கை = மெய் இல் என்று பிரித்து, பொய்யாகிய வாழ்வை எனறலுமாம்.

—————

நூலினேர் இடையார் திறத்தே நிற்கும்
ஞாலம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
ஆலியா அழையா அரங்கா! என்று
மால் எழுந்து ஒழிந்தேன் என் தன் மாலுக்கே 3-2..

பதவுரை

நூலின் நேர்–நூல் போன்று (ஸூக்ஷ்மமான) இடையை யுடைய பெண்டிர் விஷயத்திலேயே பொருந்தி யிருக்கிற
ஞாலம் தன்னொடும்–(இந்த) ப்ராக்ருத மனிதரோடு
யான் கூடுவது இல்லை;-
ஆலியா–(காதலுக்குப் போக்கு வீடாகக்) கூத்தாடி
அரங்கா என்று–‘ஸ்ரீரங்கநாதனே!’ என்று கூப்பிட்டு
அழையா–கூப்பிட்டு
என் தன் மாலுக்கே–என் மேல் வ்யாமோஹமுடையனான எம்பெருமான் திறத்தினாலேயே
மால் எழுந்தொழிந்தேன் – மோஹமுற்றேன்.

ஆலியா, அழையா=‘செய்யா’ என்னும் வாய்பாட்டு இறந்த கால வினையெச்சம்,
ஆலித்து அழைத்து என்றபடி

———

மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும்
பாரினாரோடும் கூடுவதில்லை யான்
ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல்
நாரணன் நர காந்தகன் பித்தனே 3-3-

பதவுரை

மாரனார்–மன்மதனுடைய
வரி வெம் சிலைக்கு–அழகிய கொடிய வில்லுக்கு
ஆள் செய்யும்–ஆட் பட்டு (விஷய ப்ரவணராய்த்) திரிகிற
பாரினாரொடும்–(இப்) பூமியிலுள்ள ப்ராக்ருதர்களோடு
யான் கூடுவது இல்லை-:
ஆரம் மார்வன்–முக்தாஹாரத்தைத் திரு மார்பிலே அணிந்துள்ளவனாய்
அனந்தன்–அளவிட முடியாத ஸ்வரூப ஸ்வ பாவங்களை யுடையவனாய்
நல் நாரணன்–ஸர்வ ஸ்வாமியாய்
நரக அந்தகன்–அடியவர்களை நரகத்தில் சேராதபடி காத்தருள்பவனான
நரகாந்தகன்-நரகாஸூரனைக் கொன்றவன் என்றுமாம்.
அரங்கன்–ஸ்ரீரங்கநாதன் விஷயத்திலே
பித்தன்–மோஹமுடையனாயிரா நின்றேன்.

———-

உண்டியே வுடையே உகந்து ஓடும் இம்
மண்டலத்தோடோம் கூடுவதில்லை யான்
அண்ட வாணன் அரங்கன் வன் பேய் முலை
உண்ட வாயன் தன் உன்மத்தன் காண்மினே–3-4-

பதவுரை

உண்டியே–ஆஹாரத்தையும்
உடையே–வஸ்திரத்தையுமே
உகந்து ஓடும்–விரும்பி (க் கண்ட விட மெங்கும்) ஓடித் திரிகிற
இ மண்டலத்தொடும்–இந்தப் பூமண்டலத்திலுள்ள பிராகிருதர்களோடு
யான் கூடுவது இல்லை
அண்டம் வாணன்–பரம பதத்திலே வாழ்பவனும்
வல் பேய் முலை உண்ட வாயன்–கல் நெஞ்சை யுடைய பூதனையின் முலையை அமுது செய்த வாயை யுடையனுமான
அரங்கன் தன்–ஸ்ரீரங்கநாதன் விஷயத்தில்
உன்மத்தன்–பைத்தியம் பிடித்தவனா யிரா நின்றேன்

‘ஸ்ரீராமாயணம் எங்கு உபந்யஸிக்கிறார்கள்? ஸ்ரீ பாகவதம் எங்கு உபந்யஸிக்கிறார்கள்?
பகவத்ஸேவை எங்கே கிடைக்கும்? பாகவதஸேவை எங்கே கிடைக்கும்? ’ என்று
காதும் கண்ணும் தினவெடுத்து ஓடிக் களிக்க வேண்டியது ஸ்வரூபமாயிருக்க,
அஃதொழிந்து ‘சோறு கொடுப்பது எங்கே? கூறை கிடைப்பது எங்கே?’ என்று வாய் வெருவிக் கொண்டு
பறந்தோடுகின்ற இப் பாவிகளோடு எனக்குப் பொருந்தாது.
விரோதிகளைப் போக்கித் தன்னை அருள்கின்ற எம்பெருமான் குணங்களையே நினைந்து
நைந்து உள்ளுரைந்து உருகுமவன் நான் என்கிறார்.

————–

தீதில் நல் நெறி நிற்க அல்லாது செய்
நீதி யாரொடும் கூடுவதில்லை யான்
ஆதி ஆயன் அரங்கன் அம் தாமரை
பேதை மா மணவாளன் தன் பித்தனே– 3-5-

பதவுரை

தீது இல் நல் நெறி நிற்க–குற்றமற்ற நல் வழி இருக்கச் செய்தே
(அவ்வழியில் போகாமல்)
அல்லாது செய் நீதியாரொடும்–நல் வழிக்கு எதிர்த்தட்டான வற்றைச் செய்வதை விரதமாகக் கொண்டுள்ள பிராகிருதர்களோடு
யான் கூடுவது இல்லை
ஆதி–(உலகங்கட்கு) முதல்வனாய்
ஆயன்–ஸ்ரீகிருஷ்ணனாய் அவதரித்து ஸர்வ ஸூலபனாய்
அம் தாமரை பேதை மா மணவாளன்–அழகிய தாமரைப் பூவில் அவதரித்த பிராட்டியின் வல்லபவனான
அரங்கன் தன்–ஸ்ரீரங்கநாதன் திறத்தில்
பித்தன்–மோஹங் கொண்டிரா நின்றேன்.

தேவதாந்தரங்களைப் பற்றுகை, தீயநெறி;
எம்பெருமானை ஸ்வயம் ப்ரயோஜநமாகப் பற்றுகை; நல்ல நெறி;
ஐச்வரியம் முதலிய க்ஷுத்ர புருஷார்த்தங்களை விரும்பி அவற்றுக்காக எம்பெருமானைப் பற்றுகை,
தீமையோடு கலசிய நல்ல நெறி-என்று கண்டுகொள்க.

அநந்ய ப்ரயோஜநமாக எம்பெருமானைப் பற்றுகையாகிற பரமசுத்த மார்க்கத்தை விட்டிட்டு,
ஸ்வரூப விருத்தமாக ஒழுகுகின்றவர்களோடு எனக்குப் பொருந்த மாட்டா தென்றாராயிற்று.

—————–

எம் பரத்தர் அல்லாரோடும் கூடலன்
உம்பர் வாழ்வை ஒன்றாக கருதிலன்
தம் பிரான் அமரர்க்கு அரங்க நகர்
எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே–3-6-

பதவுரை

எம் பரத்தர் அல்லா ரொடும்–என்னைப் போலே அநந்ய ப்ரயோஜநரா யிராதவர்களோடு;
கூடலன்–(நான்) கூட மாட்டேன்;
உம்பர் வாழ்வை–தேவதைகளின் ஸ்வர்க்கம் முதலிய போகங்களையும்
ஒன்று ஆக–ஒரு புருஷார்த்தமாக
கருதலன்–எண்ண மாட்டேன்;
அமரர்க்கு–நித்ய ஸூரிகளுக்கு
தம்பிரான்–ஸ்வாமியாய்
அரங்கம் நகர்–கோயிலிலே எழுந்தருளி யிருக்கிற
எம் பிரானுக்கு–பெரிய பெருமாள் விஷயத்தில்
த்ழுமையும்–எப்போதும்
பித்தன்–பித்தனாகா நின்றேன்.

ஸம்ஸாரத்தில் வெறுப்பும் கைங்கரியத்தில் விருப்பும் இல்லையாகில் ப்ரஹ்மாதிகளின் ஸம்பத்தேயாகிலும்
அதை நான் க்ருணமாகவே நினைப்பேன்;
நித்ய ஸூரிகளெல்லாம் அநுபவிக்குமாபோலே ஸம்ஸாரிகளும் இழவாமல் அநுபவிக்கும்படி
கோயிலிலே வந்து ஸூலபராகக் கண் வளர்ந்தருளுமவருடைய இந்த நீர்மையை நினைத்து
‘இது எத்திறம்!’ என்று மோஹிப்பதே எனக்குத் தொழிலாயிருக்கு மென்கிறார்.

—————–

எத் திறத்திலும் யாரொடும் கூடும் அச்
சித்தம் தன்னை தவிர்த்தனன் செங்கண் மால்
அத்தனே! அரங்கா! என்று அழைகின்றேன்
பித்தனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே—3-7-

பதவுரை

செம் கண் மால்–புண்டரீகாக்ஷனான எம்பெருமான்
எத் திறத்திலும்–எந்த விஷயத்திலும்
யாரொடும்–கண்ட பேர்களோடே
கூடும் அச் சித்தம் தன்னை–சேர்ந்து கெட்டுப் போவதற்கு உறுப்பான நெஞ்சை
தவிர்த்தனன்–நீக்கி யருளினான்; (ஆதலால்)
அத்தனே–ஸ்வாமியே!
அரங்கா–ஸ்ரீரங்கநாதனே!
என்று அழைக்கின்றேன்–என்று கூவா நின்றேன்;
எம்பிரானுக்கே பித்தனாய் ஒழிந்தேன்-.

ஆழ்வீர்! அயலாரோடு பொருந்தாமைக் கடியான நன்மை உமக்கு வந்தபடி என்?’ என்று சிலர் கேட்க;
இது நானே ஸம்பாதித்துக் கொண்டதல்ல; ஸர்வேச்வரனது அருளடியாகக் கிடைத்ததென்கிறார்.
‘ஒரு அவைஷ்ணவனோடு பேசினால் ஸகல புருஷார்த்தங்களும் கொள்ளை கொள்ளையாகக் கிடைக்கும்’ என்று
ஒரு ஆப்தன் சொன்ன போதிலும் அப்போதும் அவர்களை த்ருணமாகக் கருதி,
ஸ்ரீரங்கநாதா! ஸ்ரீரங்கநாதா!’ என்றே எப்போதும் வாய் வெருவிக் கொண்டிருக்குமாறு எம்பெருமான்
எனக்கு அருள் புரிந்த பாக்கியம் மற்றையோர்க்குக் கிடைக்குமா என்கிறார்.

எம்பெருமான் என்னை ஒருதடவை குளிரக் கடாக்ஷித்த மாத்திரத்திலே
இந்த பாக்கியம் வாய்த்தது என்பார் “செங்கண்மால்.” என்கிறார்.

——–

பேயரே எனக்கு யாவரும் யானுமோர்
பேயனே எவர்க்கும் இது பேசி என்?
ஆயனே அரங்கா என்று அழைகின்றேன்
பேயனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே —3-8-

பதவுரை

யாவரும்–இவ் வுலகத்தாரடங்கலும்
எனக்கு–என் வரைக்கும்
பேயரே–பைத்தியக்காரர்கள் தான்;
யானும்–(அவர்களிற் காட்டில் விலக்ஷணனான) நானும்
எவர்க்கும்–எவர்களுக்கும்
ஓர் பேயனே–ஒரு பைத்தியக்காரன் தான்;
இது–இவ் விஷயத்தை
பேசி-(விரிவாகச்) சொல்வதனால்
என்–என்ன ப்ரயோஜநமுண்டு?
ஆயனே–‘ஸ்ரீகிருஷ்ணனே!
அரங்கா–ஸ்ரீரங்கநாதனே!’
என்று அழைக்கின்றேன்–என்று (பகவந் நாமங்களைச் சொல்லி) கூவா நின்றேன்;
எம்பிரானுக்கே பேயனாய் ஒழிந்தேன்-.

கோமணம் கட்டாத ஊரில் கோமணம் கட்டுவானொருவன் பைத்தியக்காரன் போல் பரிஹஸிக்கத் தக்கவனாவன்)
என்ற பழமொழியின்படி-லோகவிஜாதீயரான நீர் பைத்தியக்காரன்; என்று எல்லாராலும் இகழக் கூடியவராயிருக்கின்றீரே!
என்று ஆழ்வாரை நோக்கிச் சிலர் கூற,
அவர்களுக்கு விடைகூறுகின்ற பாசுரமிது.

—————-

அங்கை ஆழி அரங்கன் அடியிணை
தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாம்
கொங்கர் கோன் குலசேகரன் சொன்ன சொல்
இங்கு வல்லவர்க்கு ஏதம் ஓன்று இல்லையே–3-9-

பதவுரை

அம் கை ஆழி–அழகிய திருக்கையிலே திருவாழி யாழ்வானை ஏந்தி யுள்ள
அரங்கன்-ஸ்ரீரங்கநாதனுடைய
அடி இணை–திருவடிகளில்
தங்கு சிந்தை–பொருந்திய மனமுடையவராய்
தனி பெரு பித்தன் ஆம்–லோக விலக்ஷணரான பெரிய பித்தராய்
கொங்கர் கோன்–சேர தேசத்தவர்களுக்குத் தலைவரான
குல சேகரன்–குலசேகராழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
சொல்–இப் பாசுரங்களை
இங்கு–இவ் விபூதியிலே
வல்லவர்க்கு–ஓத வல்லவர்களுக்கு
ஏதம் ஒன்று இல்லை–(பகவதநுபவத்திற்கு) ஒருவிதமான இடையூறும் உண்டாக மாட்டாது.

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ பெருமாள் திருமொழி -2–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

August 6, 2021

தேட்டரும் திறல் தேனினை தென் அரங்கனை திரு மாது வாழ்
வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்ட மேவி அலர்ந்து அழைத்து அயர்வு எய்தும் மெய் அடியார்கள் தம்
ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே–2-1-

பதவுரை

தேட்டரும்–(தன் முயற்சியால்) தேடிப் பெறுதற்கு அருமை யானவனும்
திறல்–(தன்னை முற்ற அநுபவிப்பதற்கு உறுப்பான) வலிவைக் கொடுப்பவனும்
தேனினை–தேன் போல் பரம போக்யனும்
தென் அரங்கனை–தென் திருவரங்கத்தில் வாழ்பவனும்
திரு மாது வாழ் வாட்டம் இல் வன மாலை மார்பனை–பெரிய பிராட்டியார் நித்ய வாஸம் செய்தற்கிடமாய்
வாடாமல் செவ்வி பெற்றிருக்கிற வன மாலையை அணிந்துள்ள திரு மார்வை யுடையனுமான ஸ்ரீரங்கநாதனை
மால் கொள் சிந்தையர் ஆய்–(அவன் திறத்தில்) மோஹங்கொண்ட மனதை யுடையராய்
ஆட்டம் மேவி–(அந்த மோஹத்தாலே நின்ற விடத்தில் நிற்க மாட்டாமல்) ஆடுவதிலே ஒருப்பட்டு
அலர்ந்து அழைத்து–(பகவந்நாமங்களை) வாய் விட்டுக் கதறி கூப்பிட்டு
அயர்வு எய்தும்–இளைப்படைகின்ற
மெய் அடியார்கள் தம்–உண்மையான அன்புடைய பாகவதர்களின்
ஈட்டம்–கோஷ்டியை
கண்டிட கூடும் ஏல்–ஸேவிக்கப் பெறுவோமாகில்
அது காணும் கண் பயன் ஆவது -கண் படைத்ததற்குப் பயன் அதுவே யன்றோ!

பூணா மார்பனைப் புள்ளுரும் பொன் மலையைக் காணாதரா; கண்ணென்றுங் கண்ணல்ல கண்டோமே” என்று
‘எம்பெருமாளைக் காண்பதே கண்படைத்ததற்கு ப்ரயோஜநம்’ என்கிற ஸித்தாந்தம் ஸாமாந்யமானதென்றும்
‘பாகவதர்களுடைய கோஷ்டியை ஸேவித்தாலன்றிக் கண்களுக்கு ஸாபல்யம் கிடையா’ தென்பதே விசேஷ ஸித்தாந்தமென்றும்
ஸாரமாகக் கண்டறிந்தவர்களுள் இவ்வாழ்வார் தலைவர் என்னுமிடம் இப்பாட்டில் விளங்கும்.

அடியவர்கட்குப் பரம யோக்யனான ஸ்ரீ ய:பதியை வாயாரத் துதித்து அவனிடத்திலே மிக்க மோஹங்கொண்டு
அதனால் உடம்பு நின்ற விடத்தில் நில்லாது கூத்தாடி,
‘ஸ்ரீ ய:பதியே! -ஸ்ரீ மந்நாராயணனே!’ என்றிப்படி பல திரு நாமங்களைக் கூறி யழைத்து,
அவ் வளவில் எம்பெருமான் கண்ணெதிரே வந்து ளேவை தந்தருளக் காணாமையாலே வருந்தி ஏங்குகின்ற
பாரமார்த்திக பாகவதர்களின் கோஷ்டியை ஸேவிக்கப் பெறுவதே கண்களுக்கு ப்ரயோஜநமாமென்கிறார்.

மேவி = மேவுதல்-விரும்புதல்:
“நம்பும் மேவும் நசையாகுமே.”
“கண்டிடக் கூடு மேல்” என்றது-இத்தகைய மெய்யடியார்களை இந் நிலவுலகத்தில்
காணப் பெறுவதின் அருமையை விளக்கும்.

———–

தோடுலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும் சுடர் வாளியால்
நீடு மா மரம் செற்றதும் நிரை மேய்த்ததும் இவையே நினைந்து
ஆடி பாடி அரங்காவோ! என்று அழைக்கும் தொண்டர் அடி பொடி
ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே ?–2-2-

பதவுரை

தோடு உலாம் மலர் மங்கை–இதழ்கள் மிக்கிருந்துள்ள தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டியினது
தோள் இணை தோய்ந்ததும்–திருத் தோள்களோடு அணைய வமுக்கிக் கட்டிக் கொண்டதும்
சுடர் வாளியால்–புகரை யுடைய அம்பினால்
நீடு மா மரம் செற்றதும்–நீண்ட ஸப்த ஸால வருக்ஷங்களைத் துளை செய்து தள்ளியதும்
நிரை மேய்த்ததும்–இப்படிப் பட்ட பகவச் சரிதங்களையே அநுஸந்தித்து
ஆடி–சரீர விகாரம் பெற்று
பாடி–(காதலுக்குப் போக்கு வீடாக வாய் விட்டுப்) பாடி
ஓ! அரங்க!! என்று–‘ஓ அரங்கனே!’ என்று (அவன் திரு நாமங்களைச் சொல்லி
அழைக்கும்–கூப்பிடுகிற
தொண்டர்–கைங்கரியத்தையே நிரூபகமாக வுடைய பாகவதர்களின்
அடி பொடி–திருவடித் தூள்களிலே
நாம் ஆட பெறில்–நாம் அவகாஹிக்கப் பெற்றால் (பிறகு)
கங்கை நீர்–கங்கா ஜலத்திலே
குடைந்து ஆடும் வேட்கை–அவகாஹித்து நீராட வேணுமென்கிற ஆசையானது
என் ஆவது–ஏதுக்கு?

“ பெண்டிரால் சுகங்களுய்ப்பான் பெரியதோரிடும்பை பூண்டு, உண்டிராக் கிடக்கும் போது முடலுக்கே கரைந்து நைந்து” என்றபடி
அல்லும் பகலும் ஸம்ஸாரிக சிந்தனைகளே நிகழும் லௌகிகர்படி யில்லாமல்
எம்பெருமானுடைய திவ்ய சரிதங்களையே மாறி மாறி அநுஸந்தித்து, அவ் வநுஸந்தாநத்தாற் பிறந்த உகப்பு உள்ளடங்காமல்
பகந்நாமங்களை வாய்விட்டுக் கதறுகின்ற ஸ்ரீவைஷ்ணவர்களின் ஸ்ரீபாத தூளிகளில் அவகாஹிக்கப் பெற்றால்,
பிறகு ‘கங்கையில் நீராட வேணும்’ என்கிற விருப்பமும் வியர்த்தமேயாம் என்கிறார்.

————

ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -2-3-

பதவுரை

ஏறு அடர்த்ததும்–(நப்பின்னைக்காக) ஏழு ரிஷபங்களை வலியடக்கியதும்
ஏனம் ஆய் நிலம் கிண்டதும்–வராஹ ரூபியாய் பூமியைக் கோட்டாற் குத்தி யெடுத்ததும்
முன் இராமன் ஆய்–முன்பு சக்ரவர்த்தி திருமகனாய்ப் பிறந்து
மாறு அடர்த்ததும்–சத்ரு ராக்ஷஸர்களைக் கிழங்கெடுத்ததும்
மண் அளந்ததும்–(த்ரிவிக்ரமனாய்) உலகளந்ததும்
(ஆகிய இந்த சரிதங்களை)
சொல்லி பாடி–வாயாற் சொல்லி வாய் விட்டுப் பாடி
வண் பேர் பொன்னி ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு–ஔதார்யத்தையும் பெருமையை யுடைய
காவிரி யாறு போல் பெருகுகின்ற ஆநந்த பாஷ்பங்களாலே
அரங்கன் கோயில் திரு முற்றம்–நம் பெருமாள் ஸந்நதி உள் திரு முற்றத்தை
சேறு செய் தொண்டர்–சேறாக்குகிற பாகவதர்களின்
சே அடி செழு சேறு–திருவடிகளால் துகை யுண்ட அழகிய சேற்றை
என் சென்னிக்கு அணிவன்–என்னுடைய நெற்றிக்கு திலகமாகக் கொள்வேன்

எம்பெருமானுடைய பல அவதார சரித்திரங்களையே அநவரதம் வாயாரப் பாடிக் கொண்டு அன்பு மிகுதியால்
கண்களின்று பெரிய நதி போலப் பரவசமாகப் பெருகுகின்ற ஆநந்த புஷ்பங்களாலே ஸ்ரீரங்கநாதன்
ஸந்நிதித் திரு முற்றத்தைச் சேறாக்குகின்ற ஸ்ரீவைஷ்ணவர்களின் திருவடிகளால் தொகை யுண்ட சேற்றை
எனது தலைக்கு அலங்காரமாகக் கொள்வேன் என்கிறார்.
கண்ண நீர் எவ்வளவு அடக்கினாலும நில்லாமல் பெரு வெள்ளமிடுதற்குப் பொருத்தமான த்ருஷ்டாந்தம் காவிரியேயாம்.
கண்ண நீர் -ஆறாம் வேற்றுமை யுருபு
கண்களினுடைய நீர் என்றபடி.

—————

தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் உடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய்
நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது
ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே–2-4-

பதவுரை

தோய்த்த தண் தயிர்–தோய்த்த தண் தயிர்
வெண்ணெய்–வெண்ணையையும்
பால்–பாலையும்
உடன் உண்டலும்–ஒரே காலத்திலே அமுது செய்தவளவில்
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டி யானவள்
கண்டு உடன்று–(அந்த களவு தன்னைப்) பார்த்து கோபித்து
ஆர்த்த–(பிறகு அவளாலே) பிடித்துக் கட்டப்பட்ட
தோள் உடை–தோள்களை யுடைய
எம்பிரான்–எமக்குத் தலைவனான
என் அரங்கனுக்கு–என் ரங்கநாதனுக்கு
அடியார்கள் ஆய்–ஆட்பட்டவர்களாய்
நா தழும்ப எழ–நாக்குத் தடிக்கும்படி
நாரணா என்று அழைத்து–நாராயணா! என்று கூப்பிட்டு
மெய் தழும்ப தொழுது–சரீரம் காய்ப்பேறும்படி ஸேவித்து
ஏத்தி–தோத்திரம் பண்ணி
இன்புறும்–ஆனந்தமடைகின்ற
தொண்டர்–ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
சே அடி–திருவடிகளை
என் நெஞ்சம்–என் மனமானது
ஏத்தி வாழ்த்தும்–துதித்து (அவர்களுக்கே) பல்லாண்டு பாடும்

“எத்திறம்! உரலினோடிணைந்திருந்தேங்கிய எளிவே!” என்று நம்மாழ்வார் ஆறு மாதம் மோஹித்துக் கிடக்கும்படி
மயக்க வல்ல கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ட அபதாநத்தை அநுஸந்தித்து,
“கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெ யுண்ட வாயன்-அணியரங்கன்” என்றபடி
ஸ்ரீரங்கநாதனை அக் கண்ண பிரானாகப் பாவித்துப் பணி செய்யும்
ஸ்ரீவைஷ்ணவர்களுக்குப் பல்லாண்டு பாடுவதையே தொழிலாகக் கொண்டிருப்பேன் நான் என்கிறார்.

————–

பொய் சிலை குரல் ஏறு எருத்தம் இறுத்து போர் அரவீர்த்த கோன்
செய் சிலை சுடர் சூழ் ஒளி திண்ண மா மதிள் தென் அரங்கனாம்
மெய் சிலை கரு மேகம் ஓன்று தம் நெஞ்சில் நின்று திகழ போய்
மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என் மனம் மெய் சிலிர்க்குமே -2-5-

பதவுரை

பொய்–க்ருத்ரிமமாய்
சிலை குரல்–கோபத்தை வெளியிடுகின்ற கோஷத்தை யுடைத்தான
ஏறு–(ஏழு) ரிஷபங்களின்
எருத்தம் இறுத்து–முசுப்புகளை முறித்தவனாய்
போர் அரவு ஈர்த்த கோன்–போர் செய்யவந்த காளிய நாகத்தை நிரஸித்த ஸ்வாமியாய்,
சிலை செய்–கல்லினால் செய்யப்பட்டு
சுடர் ஒளி–மிக்க தேஜஸ்ஸை யுடைத்தாய்
திண்ணம்–த்ருடமாயிருக்குந் தன்மையையும் உடைத்தாய்
மா–பெரிதான
மதிள் சூழ்–மதிகளாலே சூழப்பட்ட
தென் அரங்கன் ஆம்–தென்னரங்கத்தில் எழுந்தருளி யிருப்பவனான ரங்கநாதனாகிய
மெய் சிலை கரு மேகம் ஒன்று–சரீரத்தில் வில்லோடு கூடிய ஒரு காள மேகமானது
தன் நெஞ்சுள் நின்று திகழப் போய்–தங்கள் மனதில் நிலைத்து விளங்கப் பெற்ற
மெய் சிலிர்ப்பவர் தம்மையே–மயிர்க் கூச் செறியும் சரீரமுடைய ஸ்ரீவைஷ்ணவர்களையே
என் மனம் நினைந்து–என் நெஞ்சானது அநுஸந்தித்து
மெய் சிலிர்க்கும்–மயிர்க் கூச்செறியப் பெற்றது.

அடியார்களை ஆட் கொள்வதற்காக அருமையான செயல்களைச் செய்தருளின எம் பெருமானாகிற
காள மேகத்தை ஹ்ருதயத்திலே வஹிக்கப் பெற்று எப்போதும் மயிர்க் கூச்செறியும் திருமேனியை
யுடையரா யிருக்கின்ற ஸ்ரீவைஷ்ணவர்களை அநுஸந்தித்து,
அவர்கள் பாடும் பாட்டை என்னெஞ்சு படாநின்ற தென்கிறார்.

“திகழப்போய்” என்ற விடத்து, போய்-வார்த்தைப்பாடு.

“மனம் மெய் சிலிர்க்கும்” என்றது-மனம் விகாரப்படா நின்ற தென்றபடி.

—————

ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட
தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –2-6-

பதவுரை

ஆதி–ஜகத் காரண பூதனாய்
அந்தம்–ப்ரளய காலத்திலும் வாழ்பவனாய்
அநந்தம்–ஸர்வ வ்யாபியாய்
அற்புதம் ஆன–ஆச்சரிய பூதனாய்
வானவர் தம்பிரான்–அமரர்க்கதிபதியான ரங்கநாதனுடைய
மா மலர் பாதம்–சிறந்த மலர் போன்ற திருவடிகளை
சூடும் பத்தி இலாத–சிரஸா வஹிப்பதற் குறுப்பான அன்பு இல்லாத
பாவிகள் உய்ந்திட–பாபிகளும் உஜ்ஜீவிக்கும்படி
எங்கும் திரிந்து–ஸர்வ தேசங்களிலும் ஸஞ்சாரஞ் செய்து
தீது இல்–குற்றமற்ற
நல் நெறி–நல் வழிகளை
காட்டி–(தமது அநுஷ்டாநமுகத்தாலே) வெளிப்படுத்திக் கொண்டு
எம்மான்–நமக்குத் தலைவனான
அரங்கனுக்கே–ஸ்ரீரங்கநாதனுக்கே
காதல் செய்–பக்தி பூண்டிருக்கின்ற
தொண்டர்க்கு–பாகவதர்கள் விஷயத்தில்
என் நெஞ்சம்–எனது மனமானது
எப் பிறப்பிலும்–எந்த ஜன்மத்திலும்
காதல் செய்யும்–அன்பு பூண்டிருக்கும்.

ஸகல ஜகத்காரண பூதனாய் ஸர்வ வ்யாபகனான எம்பெருமானிடத்து அன்பு இல்லாதவர்களான பாவிகளும்
அவ் வன்பைப் பெற்று உஜ்ஜீவிக்குமாறு தேச தேசாந்தரங்களெங்கும் ஸஞ்சரித்து
ஸ்வரூபாநுரூபமான அர்த்த விசேஷங்களை ஆங்காங்கு உபந்யாஸ முகேந உபதேசித்து வரும்
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே நான் பிறவி தோறும் அன்பு பாராட்டுவேன் என்கிறார்.

“எப் பிறப்பிலும்” என்ற சொற்போக்கால்,
அப்படிப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்கள் பக்கல் பக்தி பண்ணுவதற்காக இன்னும் பல ஜந்மங்களைத்
தாம் பெற விரும்பியிருக்குமாறு விளங்கும்.

—————-

கார் இனம் புரை மேனி நல் கதிர் முத்த வெண்ணகை செய்ய வாய்
ஆர மார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினை
சேரும் நெஞ்சினராகி சேர்ந்து கசிந்து இழிந்த கண்ண நீர்களால்
வார நிற்ப்பவர் தாள் இணைக்கு ஒருவாரம் ஆகும் என் நெஞ்சமே –2-7-

பதவுரை

கார் இனம் புரை–மேகங்களின் திரளை ஒத்த
மேனி–திருமேனியையும்
நல் கதிர்–அழகிய லாவண்யத்தையும்
முத்தம் வெண் நகை செய்ய வாய்– முத்துக்கள் போல் வெளுத்த புன் சிரிப்பை யுடைய சிவந்த திருப் பவளத்தையும்
ஆரம் மார்வன்–முக்தாஹாரமணிந்த மார்வையுமுடையனான
அரங்கன் என்னும்–ஸ்ரீரங்கநாதனாகிற
அரும் பெரும் சுடர் ஒன்றினை–அருமை பெருமை யுள்ள விலக்ஷணமான தொரு தேஜஸ்ஸை
சேரும் நெஞ்சினர் ஆகி–கிட்டி அநுபவிக்க வேணுமென்கிற சிந்தையை யுடையவராய்
சேர்ந்து–(அங்ஙனமே) சேர்ந்து
கசிந்து இழிந்த–(பக்தி பாரவச்யத்தாலே) சுரந்து பெருகின
கண் நீர்கள்–ஆநந்த பாஷ்பங்கள்
வார நிற்பவர்–வெள்ளமிட்டொழுகும்படி நிற்குமவர்களுடைய
தாள் இணைக்கு–இரண்டு திருவடிகள் விஷயத்தில்
என் நெஞ்சம்–என் மனமானது
ஒரு வாரம் ஆகும்–ஒப்பற்ற அன்பையுடையதாகும்.

பல காள மேகங்கள் திரண்டாற்போன்று விளங்குகின்ற திருமேனியையும்,
அத் திருமேனியில் ஓடுகின்ற விலக்ஷணமான லாவண்யத்தையும்,
முத்து வரிசை போன்ற புன் முறுவலையுமுடைய திருவதரத்தையும்,
முத்துமாலை யணிந்த திருமார்பையுமுடையனான ஸ்ரீரங்கநாதனென்கிற ஒரு பரஞ்சோதியை அடி பணிந்து
கண்ணுங் கண்ணீருமாய் நிற்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே என் நெஞ்சமானது
அநந்யப்ரயோஜநமாய் ஆட்பட்ட தென்கிறார்.

—————

மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை
மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே– 2-8-

பதவுரை

மாலை உற்ற கடல்–(தன் திருமேனி ஸ்பர்சத்தாலே) அலை யெறிகிற திருப்பாற்கடலில்
கிடந்தவன்–பள்ளிகொள்பவனும்
வண்டு கிண்டு நறு துழாய் மாலை உற்ற–(தேனுக்காக) வண்டுகள் குடையா நின்றுள்ள திருத்துழாய் மாலையை அணிந்த
வரை பெரு திருமார்பினை–மலைபோற் பெருமை தங்கிய திருமார்பை யுடையவனும்
மலர் கண்ணனை–செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களை யுடையவனுமான ஸ்ரீரங்கநாதன் விஷயத்தில்
மாலை உற்று–வ்யாமோஹத்தை அடைந்து
எழுந்து ஆடி–(இருந்தவிடத்திலிராமல்) எழுந்து கூத்தாடி
பாடி–(வாயாரப்) பாடி
திரிந்து–(திவ்ய தேசங்கள் தோறும்) ஸஞ்சரித்து
அரங்கன் எம்மானுக்கே–எமக்கு ஸ்வாமியான ஸ்ரீரங்கநாதன் விஷயத்திலே
மாலை உற்றிடும்–பித்தேறித் திரிகின்ற
தொண்டர்–ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
வாழ்வுக்கு–ஸ்ரீவைஷ்ணவ லஷ்மிக்கு
என் நெஞ்சம் மாலை உற்றது– என் மனம் மயங்கிக் கிடக்கின்றது.

திருப்பாற்கடலில் பள்ளி கொள்பவனும் நறுந்தேன் மிக்க செவ்வித் துழாய் மாலையை யணிந்த
பெருந் திருமார்பை யுடையவனும் புண்டரீகாக்ஷனுமாகிய ஸ்ரீரங்கநாதன் விஷயத்திலே மையல் கொண்டு
இருந்த விடத்திலிருக்க வொட்டாமையாலே எழுந்து ஆடுவது பாடுவதாய் விகாரப் படுகின்ற ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
அந்த ஸ்ரீவைஷ்ணவ லஷ்மிக்கே என் நெஞ்சு பித்தேறா நின்ற தென்கிறார்.
அப்படிப்பட்ட நிலைமை நமக்கு வாய்க்குமோ? என்று ஆசை கொள்ளா நின்றதென்றபடி.

இரண்டாமடியில் மாத்திரம் மாலை என்பது நாதா என்ற வடசொல் விகாரம்.
மற்ற மூன்றடிகளிலுள்ள மாலை-மோஹம் என்னும் பொருளதான் மால் என்னுஞ் சொல்
இரண்டாம் வேற்றுமை யுருபேற்றது.

——————

மொய்த்து கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று
எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடி பாடி இறைஞ்சி என்
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே
பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே–2-9-

பதவுரை

கண் பனி–ஆநந்த பாஷ்பமானது
மொய்த்து சோர–இடைவிடாமல் சொரியவும்
மெய்கள் சிலிர்ப்ப–உடல் மயிர்க் கூச்செறியவும் உடல்
ஏங்கி இளைத்து நின்று–நெஞ்சு தளர்ந்து களைத்துப் போய்
எய்த்து–நிலை தளர்ந்து
கும்பிடு நட்டம் இட்டு–மஹா கோலாஹலத்தோடு கூடிய நர்த்தனத்தைப் பண்ணி
எழுந்து ஆடி பாடி இறைஞ்சி–நின்ற விடத்து நில்லாமல் (பல வித) ஆட்டங்களாடிப் பாட்டுகள் பாடி வணங்கி,
என் அத்தன்–எனக்குத் தந்தையாய்
அச்சன்–ஸ்வாமியான
அரங்கனுக்கு–ஸ்ரீரங்கநாதனுக்கு
அடியார்கள் ஆகி–அடியவர்களாய்
அவனுக்கே–அந்த ரங்கநாதன் விஷயத்திலேயே
பித்தர் ஆமவர்–பித்தேறித் திரிகிறவர்கள்
பித்தர் அல்லர்கள்–பைத்தியக்காரர்களல்லர்;
மற்றயார் முற்றும்–(பத்தி கார்யமான இந்த வ்யா மோஹமில்லாத) மற்ற பேர்களெல்லாம்
பித்தரே–பைத்தியக்காரர்கள் தான்.

———–

அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்
எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே 2-10-

பதவுரை

அல்லி மாமலர் மங்கை நாதன்–அக விதழ்களை யுடைய சிறந்த (தாமரை) மலரில் பிறந்த பிராட்டிக்குக் கணவனான
அரங்கன்–ஸ்ரீரங்கநாதனுடைய
மெய் அடியார்கள் தம்–உண்மையான பக்தர்களுடைய
என்றும் மேவு மனத்தன் ஆம்–எப்போதும் பொருந்திய திரு வுள்ளத்தை யுடையவரும்
கொல்லி காவலன்–கொல்லி நகர்க்கு அரசரும்
கூடல் நாயகன்–மதுரைக்கு அரசரும்
கோழி கோன்–உறையூருக்கு அரசருமான
குல சேகரன்–குலசேகராழ்வருடைய
சொல்லின்–ஸ்ரீஸூக்திளாலே அமைந்த
இன் தமிழ் மாலை வல்லவர்–இனிய தமிழ்ப் பாசுரங்களை ஒத வல்லவர்கள்
தொண்டர் தொண்டர்கள் ஆவர்–தாஸாநுதாஸராகப் பெறுவர்

எல்லையி லடிமைத் திறமாவது-
“அடியாரடியார் தம் மடியாரடியார் தமக்கடியார் தம் அடியாரடியோங்களே” என்கிற சேஷத்வ காஷ்டை.

அடிவரவு: தேட்டு தோடேறு தோய்த்த பொய் ஆதி காரினம் மாலை மொய்த்து அல்லி மெய்.

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ பெருமாள் திருமொழி -1–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

August 6, 2021

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை  கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–1-1-

பதவுரை

திரு அரங்கம்–ஸ்ரீரங்கமென்கிற
பெரு நகருள்–பெரிய நகரத்திலே
இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும்–இருளானது சிதறி யொழியும் படி ஒளி விடுகின்ற மணிகள் விளங்கா நிற்கப் பெற்ற
நெற்றி–நெற்றியையும்
இனம் துத்தி–சிறந்த புள்ளியையும்
அணி–அழகாக உடைய–
ஆயிரம் பணங்கள் ஆர்ந்த–ஆயிரம் படங்களை உடையவனாய்
அரவு அரசன்–நாகங்களுக்குத் தலைவனாய்
பெரு சோதி–மிக்க தேஜஸ்ஸை யுடையனான
அனந்தன் என்னும்–திருவனந்தாழ்வானாகிற
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை–அழகு மிக்கு உயர்த்தியை யுடைய வெண்ணிறமான திருப் படுக்கையிலே
மேவி–பொருந்தி
தெள் நீர் பொன்னி–தெளிந்த தீர்த்தத்தையுடைய காவிரி யானது
திரை கையால் அடி வருட–அலைகளாகிற கைகளாலே திருவடிகளைப் பிடிக்க
பள்ளி கொள்ளும்–திருக் கண் வளர்ந்தருளா நின்ற
கரு மணியை–நீல மணி போன்றவராய்
கோமளத்தை–ளெஸகுமார்யமே வடிவெடுத்தவரான பெரிய பெருமாளை
என் கண் இணைகள்–என் கண்களானவை
கண்டு கொண்டு–ஸேவிக்கப் பெற்று
களிக்கும் நாள்–ஆநந்தடையும் நாள்
என்று கொல்–எந்நாளோ!

திருவரங்கம் பெரிய கோயிலில் உபய காவேரீ மத்யத்தில் திருவனந்தாழ்வான் மீது
திருக் கண் வளர்ந்திருளா நின்ற அழகிய மணவாளனை அடியேன் கண்ணாரக் கண்டு
களிக்கும் பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ! என்கிறார்.

ஆயிரம் பைந்தலைய அனந்தனாகையால்
ஒவ்வொரு தலையிலும் ஒவ்வொரு மாணிக்க மணி உண்டாகையால் மணிகள் எனப்பட்டது.
ஒரு மணியின் சுடரே இருளனைத்தையும் ஒழிக்கவற்றாயிருக்க,
ஆயிரம் மணிகளின் சுடரால் இருளிரியச் சொல்ல வேண்டாவே.

இமைத்தல்-விழித்தல் அதாவது இங்கு, விளங்குதல்.
துத்தி-படத்தின் மேலுள்ள பொறி.
மேவி என்ற வினையெச்சம் பள்ளி கொள்ளும் வினையைக் கொண்டு முடியும்.
பொன்னி-பொன்களைக் கொழிக்கையாலே காவிரிக்குப் பொன்னி யென்று பெயராயிற்று.
“பொன்னி திரைக் கையாலடி வருட” என்றது-காவிரியின் அலைகள் இனிதாக மோதிக் குளிர்ச்சி பெற்றுள்ள
கரையிலே பரமஸூகமாகக் கண் வளர்ந்தருள்கின்றமையைக் கூறியவாறு.

கோமளம்-வடசொல்,
கண்ணால் துகைக்க வொண்ணாத ஸௌகுமார்ய முடையவனை”என்பது வியாக்கியானம்.

————–

வாயோர் ஈர் ரைஞ்சூறு துதங்கள் ஆர்ந்த
வளை வுடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர் சென்னி விதானமே போல்
மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்
காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலைக்
கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத் தூணே பற்றி நின்று என்
வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே ?–1-2-

பதவுரை

கடி அரங்கத்து-நறு மணம் மிக்க கோயிலிலே
ஓர் ஈர் ஐ நூறு வாய்–ஓராயிரம் வாய்களிலே
துதங்கள் ஆர்ந்த–ஸ்தோத்ர வாக்கியங்கள் நிறைந்திருக்கப் பெற்றவனாய்
வளை உடம்பின்–வெளுத்த உடம்பை யுடையவனாய்
அழல்–(எதிரிக்ள வந்து கிட்ட வொண்ணாதபடி) அழலை உமிழா நிற்பவனான
நாகம்–ஆதி சேக்ஷன்
உமிழ்ந்த–(தன் வாயினின்று) வெளிக் கக்கிய
செம் தீ–செந் நிறமான ஆகநி ஜ்வாலையானது
சென்னி–தலையின் மேலே
வீயாத மலர்–அழிவில்லாத புஷ்பங்களாற் சமைத்த தொரு மேற் கட்டி போல
எங்கும் மேல் மேலும் பரந்து மிக–மேற்புறமெங்கும் விஸ்தரித்து விளங்க
அதன் கீழ்–(ஆதிசேக்ஷன் உமிழ்ந்த அக்நி ஜ்வாலையாகிற) அந்தப் புஷ்ப விதாநத்தின் கீழே)
அரவு அணையில்–சேஷ சயநத்திலே
பள்ளி கொள்ளும்–கண் வளர்ந்தருளா நிற்பவனும்
காயா பூ மலர் பிறங்கல் அன்ன– காயாவின் அழகிய பூக்களாலே தொடுக்கப்பட்ட நீலமாலை போன்றவனாய்
மாலை–பெருமை பொருந்தியவனாய்
மாயோனை–ஆச்சர்யனான ஸ்ரீரங்கநாதனை (அடியேன்)
மனம் தூண் பற்றி நின்று– திருமணத் தூண்களிரண்டையும் அவலம்பாகப் பற்றிக்கொண்டு நின்று
என் வாய் ஆர வாழ்த்தும் நாள் என்று கொல்–என் வாய்த்தினவு தீர ஸ்துதி செய்யுங்காலம் என்றைக்கு வாய்க்குமோ?.

ஆயிரம் வாய்களாலும் ஆயிர நாமங்களைச சொல்லி எம்பெருமானைத் துதிப்பவனும்,
‘சுத்த ஸத்வகுணமுடையவன்’ என்பது நன்கு விளங்குமாறு பால்போல
வெளுத்த உடலையுடையவனுமான ஆதிசேஷன்,
எம்பெருமானிடத்திலுள்ள பரிவின் மிகுதியாலே அஸ்நாதத்திலும் பயத்தை மங்கிப்பவனாதலால்
கொடிய அரக்கரசுரர்கள் விபவாவதாரங்களிற் போல அர்ச்சையிலும் வந்து நலிவர்களோ என்னும்
அதி சங்கையினால் அவர்கள் அணுக முடியாதபடி எப்போதும் அழலை வாயில் நின்று கக்கிக் கொண்டிருப்பதனால்
செந்நிறமான அந்த அக்நி ஜ்வாலையானது அவனுடைய தலைகளின் மேற் கிளம்பி விசேஷமாகப் பரவி

‘சண்பகம் முதலிய செம் மலர்களாலே ஒரு மேற் கட்டி அமைக்கப்பட்டுள்ளதோ’ என்று
உத்பரேக்ஷிக்கத் தக்கதாய் விளங்க, அத்தகைய மேற்கட்டியின் கீழே
அரவணையின் மீது பள்ளி கொண்டருளா நின்ற பெரியபெருமாளை ஸேவித்த மாத்திரத்திலேயே

“காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்” என்றபடி சைதில்யம பிறந்து தரித்து நிற்க முடியாத அவஸ்தை விளையுங்கால்
அவ் வழகிய மணவாளனுடைய திருக் கண்ணோக்கத்திலே நிலாவுகின்ற இரண்டு திருமணத் தூண்களை
அவலம்பமாகப் பற்றிக் கொண்டு தரித்து நின்று, வெகு நாளாக இழந்த இழவு தீர ஸ்தோத்ரம் பண்ணும்படியான
பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ? என்கிறார்.

(மணத் தூணே பற்றிநின்று) அழகிய மணவாளன் ஸந்நிதியில் அண்மை யிலிருக்கும்
இரண்டு தூண்களுக்குத் “திரு மணத் தூண்” என்பது ஸம்ப்ராதாயத் திரு நாமம்.
. “மணத்தூணருகில் நின்று கொண்டு” என்னாமல்
“பற்றி நின்று” என்றதன் உட்கருத்தை ஸ்ரீரங்க ராஜஸ்த்தில் படடர் வெளியிட்டருளினார்.

அழகிய மணவாளனுடைய திருக்கண்ணோக்கமாகிற அமுதவாற்றின் பெரு வெள்ளமானது
அநுபவிக்க இழிந்தவர்களை ஒருமித்து நிலை நின்று அநுபவிக்க வொணணாதபடி தூக்கித் தள்ளி அசைக்குமளவில்,
அவர்கள் அவலம்பமாகப் பற்றிக் கொண்டு நிற்பதற்காக நாட்டப் பட்டுள்ளவை போன்ற
திருமணத் தூண்களைப் பற்றுவோம் என்பது இந்த ச்லோகத்தின் கருத்து.

அழகிய மணவாளனது திரு மேனியின் பரிமளம் இரண்டு தூணாகப் பரிணமித்து
உருவெடுத்து நிற்பதால் “திருமணத்தூண்” என்று திருநாமமாயிற்று என்பர்.

————-

எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும்
எடுத்தேத்தி ஈர் இரண்டு முகமும் கொண்டு
எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும்
தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன்
அம்மான் தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற
அணி அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்
அம்மான் தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு
அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே–1-3-

பதவுரை

எம் மாண்பின் அயன்–ஸர்வ விதத்தாலுமுண்டான மாட்சிமையை யுடைய நான்முகன்
நான்கு நாவினாலும் (தனது)–நாலு நாக்கினாலும்
எடுத்து–சொற்களை யெடுத்து
ஏத்தி–துதித்து
ஈர் இரண்டு முகமும் கொண்டு–நான்கு முகங்களாலும்
இனிது ஏத்தி–இனிமையாக (வேதங்களாலே) ஸ்தோத்திரம் பண்ணி
எழில் கண்கள் எட்டினோடும்–அழகிய எட்டு கண்களினாலே
எம் மாடும்–எல்லாப் பக்கங்களிலும்
தொழுது இறைஞ்ச நின்ற–நன்றாக ஸேவிக்கும்படி அமைந்த
செம் பொன்–செவ்விய பொன் போல் (விரும்பத்தக்க வடிவுடைய) ஸ்வாமியான தன்னுடைய
கமலம் மலர் கொப்பூழ்–தாமரைப் பூவை யுடைய திருநாபி யானது
தோன்ற–விளங்கும்படி
அணி அரங்கத்து அரவு அணையில்
பள்ளி கொள்ளும்;
அம்மான் தன்–பெரிய பெருமாளுடைய
அடிஇணை கீழ்-திருவடிகளின் கீழே
அலர்கள் இட்டு- புஷ்பங்களை ஸமர்ப்பித்து
அங்கு அடியவரோடு–அங்குள்ள கைங்கர்ய பரர்களோடு கூட
அணுகும் நாள் என்று கொல்-நெருங்கி வாழ்வது என்றைக்கோ?

பிரமன் வாயார வாழ்த்திக் கண்ணாரக் கண்டு களிக்கும் படியாவும்,
ஸகல லோகங்களினுடையவும் ஆவிர்ப்பாவத்துக்குக் காரணமாகிய திருநாபிக் கமலம் நன்கு விளங்கும்படியாகவும்
திருவனந்தாழ்வான் மீது சாய்ந்தருளா நின்ற பெரிய பெருமாளை ஆராதிக்கின்ற அடியார்களோடு கூட
அடியேனும் ஆராதிக்கும்படி அந்த திவ்ய ஸந்நிதானத்திற்குப் போய்ச் சேரும் பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ? என்கிறார்.

எம் மாண்பின்-துதிப்பதற்கு உறுப்பான வாக்தேவியை எப்போதும் தன் வசமாகக் கைக் கொண்டிருக்கும்
அதிசயத்தை யுடையவன் என்பது உட் கருத்து.

————

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை
வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை
அமரர்கள் தம் தலைவனை அம் தமிழ் இன்ப
பாவினை அவ் வடமொழியை பற்றற்றார்கள்
பயில் அரங்கத்து அரவு அணை பள்ளி கொள்ளும்
கோவினை நாவுற வழுத்தி என் தன் கைகள்
கொய்ம் மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே—-1-4-

பதவுரை

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை–குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியினுடைய வாயைக் கிழித்து மகிழ்ந்த பெருமானாய்
வேலை வண்ணணை–கடல் போன்ற வடிவை யுடையவனாய்
என் கண்ணணை–என்னுடையவன்’ என்று அபிமானிக்கக் கூடிய (ஸூலபனான) க்ருஷ்ணனாய்’
அன்று–(இந்திரன் கல் மழை பெய்வித்த) அக் காலத்திலே
வன் குன்றம் ஏந்தி–வலிய (கோவர்த்தன) மலையை (க்குடையாக)த் தூக்கி
ஆவினை உய்யக் கொண்ட–பசுக்களைக் காப்பாற்றி யருளின
ஆயர் ஏற்றை–இடையர் தலைவனாய்
அமரர்கள் தம் தலைவனை–நித்யஸூரிகளுக்கு ஸ்வாமியாய்,
அம் தமிழ் இன்ப பாவினை–அழகிய தமிழ்ப் பாஷையாலாகிய ஆநந்த மயமான அருளிச் செயல் போல் யோக்கியனாய்
அ வடமொழியை–அழகிய ஸம்ஸ்க்ருத பாஷையாலாகிய ராமாயணாதிகள் போல் யோக்யனாய்
பற்று அற்றார்கள் பயில் அரங்கத்து–ஸம்ஸார பந்தம் அற்றவர்களான விரக்தர்கள் நித்திய வாஸம் செய்கிற கோயிலிலே
அரவு அணையில் பள்ளி கொள்ளும்,
கோவினை–ஸ்வாமியான ஸ்ரீரங்கநாதனை
நா உற–நாக்குத் தடிக்கும்படி
வழுத்தி–துதித்து
என் தன் கைகள்–என்னுடைய கைகளானவை
கொய் மலர் தூய்–(காலத்தில்) பறிக்கப்பட்ட புஷ்பங்களை பணிமாறி
கூப்பும் நாள் என்று கொல்–அஞ்ஜலி பண்ணும் நாள் எதுவோ!

குதிரை வடிவங்கொண்டு தன்னைக் கவளங்கொள்ள வந்த கேசியென்னு மசுரனைக் கொன்று
தன்னை நித்யாநுபாவ்யனாக உபகரித்தருளினவனும்,
கடலைக் கண்டாற் போலே வடிவைக் கண்ட போதே தாப த்ரயமும் தீரும்படியிருப்பவனும்,
அரியன செய்து ஆச்ரிதரைக் காப்பாற்றினவனும்
பரம யோக்யனுமான ஸ்ரீரங்கநாதனை
நாத்தழும் பெழத் துதித்து நன்மலர்களைக் கொணர்ந்து ஸமர்ப்பித்து
‘அடியேனை ஆட்கொள்ள வேணும்’ என்கிற ப்ரார்த்தனை தோற்றக் கைகூப்பி நிற்கும்படியான பாக்கியம்
என்றைக்கு வாய்க்குமோ என்கிறார்.

எம்பெருமானுடைய ஒப்புயர்வற்ற போக்யதைக்கு அவனுடைய திவ்ய குணங்களை ப்ரதிபாதிக்கின்ற
திருவாய்மொழி முதலிய திவ்ய ப்ரபந்தங்களும் ஸ்ரீராமாயணம் முதலிய இதிஹாஸ புராணங்களுந் தவிர
வேறொன்றும் ஒப்புச்சொல்லத் தகாமையால் “அந்தமிழினின் பப்பாவினை அவ்வடமொழியை” என்றார்.

(பற்றற்றார்கள் பயிலரங்கம்)
“சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டரொன்றினர்,
அற்ற பற்றர் சுற்றிவாழு மந்தணீரரங்கமே” என்றார் திருமழிசைப்பிரானும்.

———

இணை இல்லா இன் இசை யாழ் கெழுமி இன்பத்
தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த
துணை இல்லா தொன் மறை நூல் தோத்திரத்தால்
தொன் மலர் கண் அயன் வணங்கி யோவாது ஏத்த
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ
மதிள் அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்
மணி வண்ணன் அம்மானை கண்டு கொண்டு என்
மலர் சென்னி என்று கொலோ வணங்கும் நாளே ?—1-5-

பதவுரை

இன்பம்–(வீணா கானத்தாலே) இன்பந்தருகின்ற
தும்புருவும்–தும்புரு மஹரிஷியும்
நாரதனும்–நாரத முனிவனும்
இணை இல்லா இன் இசை–ஒப்பற்றதும் போக்யமுமான இசையை
யாழ்–வீணையிலே
கெழுமி–நிறைத்து
(வீணா கானத்தைப் பண்ணிக் கொண்டு)
இறைஞ்சி ஏத்த–திருவடிகளிலே விழுந்து) வணங்கித் துதிக்கவும்
தொல் மலர்க் கண் அயன்–நித்யமான நாபீ கமலத்தி லுதித்த நான்முகனானவன்
வணங்கி–நமஸ்கரித்து
துணை இல்லா–ஒப்பு இல்லாததும்
தொல்–அநாதியுமான
மறை நூல் தோத்திரத்தால்–வேதசாஸ்த்ரங்களாகிற ஸ்தோத்ரங்களால்
ஓவாது ஏத்த–இடைவிடாமல் துதிக்கவும்
மணி மாடம் மாளிகைகள்–மணி மயமான மாட மாளிகைகளையும்
மல்கு செல்வம்–பூர்ணமான ஸம்பத்தையும்
மதிள்–ஸப்த ப்ராகாரங்களையுமுடைய
அரங்கத்து–கோயிலிலே
அரவு அணையில் பள்ளிகொள்ளும்;
மணி வண்ணன் அம்மானை–நீல மணி போன்ற திருநிறத்தை யுடையனான எம்பெருமானை
கண்டு கொண்டு–ஸேவித்து
என் மலர் சென்னி–என்னுடைய பூமாலை யணிந்த தலையானது
வணங்கும் நாள் என்று கொல்–(அவன் திருவடிகளில்) நமஸ்கரிப்பது என்றைக்கோ!

தும்புரு நாரதர் முதலிய முனிவர்கள் பகவத் குணங்களை இனிய இசையுடன் வீணையிலே யிட்டுப் பாடிக் கொண்டும்,
நான்முகன் முகங்களாலும் நான்கு வேதங்களை ஓதிக் கொண்டும் வணங்கப்
பள்ளி கொண்டருளா நின்ற பெரிய பெருமாளை நான் ஸேவிக்கப் பெறுவதும்,
அரசாட்சிக்கு ஏற்பப் பூ முடி சூடிக் கிடக்கின்ற என் தலை அவனுடைய திருவடியை முடிசூடப் பெறுதலும்
என்றைக்கு வாய்க்குமோ? என்கிறார்.

இன் இசை யாழ் கெழுமி-இனிய இசையையுடைத்தான வீணையை அப்யஸித்து என்றுமாம்

———

அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை
அமரர்கள் தம் குழுவும் அரம்பையரும் மற்றும்
தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும் முந்தி
திசை திசையில் மலர் தூவி சென்று சேரும்
களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறி
கண் வளரும் கடல் வண்ணர் கமல கண்ணும்
ஒளி மதி சேர் திரு முகமும் கண்டு கொண்டு என்
உள்ளம் மிக என்று கொலோ வுருகும் நாளே—1-6-

பதவுரை

அளி மலர் மேல் அயன்–(மதுபானத்துக்காக) வண்டுகள் படிந்திருக்கிற தாமரைப் பூவில் தோன்றிய பிரமனும் சிவனும்
அரன்–சிவனும்
இந்திரனோடு ஏனை அமரர்கள் தம் குழுவும்–இந்திரனோடு கூட மற்றைத் தேவர்களின் திரளும்
அரம்பையரும்–ரம்பை முதலிய தேவ மாதரும்
மற்றும்–மற்றுமுள்ள
தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும்–தெளிந்த ஞானத்தை யுடைய (ஸநகாதி) மஹர்ஷிகளின் ஸமூஹமும்
உந்தி–ஒருவர்க்கொருவர் நெருக்கித் தள்ளி
திசை திசையில்–பார்த்த பார்த்தவிடமெங்கும்
மலர் தூவி–புஷ்பங்களை இறைத்துக் கொண்டு
சென்று சேரும்–வந்து சேர்தற்கு இடமான
களிமலர் சேர் பொழில் அரங்கத்து–தேன் மிக்க மலர்களை யுடைய சோலைகளை யுடைத்தான கோயிலிலே
உரகம் ஏறி–திருவனந்தாழ்வான் மீது பள்ளி கொண்டு
கண் வளரும்–திருக்கண் வளர்ந்தருளா நின்ற
கடல் வண்ணர்–கடல் போன்ற வடிவை யுடையரான பெரிய பெருமாளை யுடைய
கமலம் கண்ணும்–செந்தாமரை போன்ற திருக் கண்களையும்
ஒளி மதி சேர் திரு முகமும்–ஒளியை யுடைய சந்திரன் போன்ற திருமுக மண்டலத்தையும்
கண்டு கொண்டு–ஸேவிக்கப் பெற்று
என் உள்ளம்–என்னுடைய மனமானது
மிக உருகும் நாள் என்று கொல்–மிகவும் உருகுங்காலம் என்றைக்கோ?

தேவர்களும் தேவ மாதர்களும் முனிவர்களும் ஆராதந உப கரணங்களைக் கோண்டு வந்து,
திரள் மிகுதியாலே ஒருவரை யொருவர் நெருக்கி தள்ளிப் புகும்படியான கோயிலிலே கண் வளர்ந்தருளாகின்ற
பெரிய பெருமாளையுடைய செந்தாமரைக் கண்ணையும் முக சந்த்ர மண்டலத்தையும் ஸேவிக்கப்பெற்று,
‘பாவியேனுக்கும் இப் பேறு வாய்த்த அதிசயம் என் கொல்! என்று
நெஞ்சுருகும் படியான நாளும் வரப் போகிறதோ! என்கிறார்.

———

மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி
ஐம்புலன்கள் அடக்கி இடர் பார துன்பம்
துறந்து இரு முப் பொழுது ஏத்தி எல்லை இல்லா
தொன் நெறி கண் நிலை நின்ற தொண்டரான
அறம் திகழும்  மனத்தவர் தம் கதியை பொன்னி
அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்
நீர் மல்க என்று கொலோ நிற்கும் நாளே ?—-1-7-

பதவுரை

மறம் நிகழும் மனம் ஒழித்து–கொடுமையால் விளங்கா நின்றுள்ள மனத்தை ஒழித்து
வஞ்சம் மாற்றி–வஞ்சனைகளைப் போக்கி
வல் புலன்கள் அடக்கி–கொடிய இந்திரியங்களை அடக்கி
இடர் பாரம் துன்பம் துறந்து–(மேன் மேலும்) துக்கத்தை விளைப்பனவாய்ப்
பெருஞ்சுமையா யிராநின்ற பழ வினைகளை வேரறுத்து
இரு முப்பொழுது ஏத்தி–பஞ்ச காலங்களிலும் துதித்து
எல்லை இல்லா தொல் நெறிக் கண் நிலை நின்ற–அளவிறந்த பழைய மர்யாதையிலே நிலை நின்ற
தொண்டர் ஆன–தாஸ பூதர்களான
அறம் திகழும் மனத்தவர் தம்–தர்ம சிந்தையே விளங்கும் மனமுடையரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு
கதியை–பரம ப்ராப்யனாய்
பொன்னி அணி அரங்கத்து–காவிரியால் அழகு பெற்ற கோயிலிலே
அரவு அணையில் பள்ளி கொள்ளும்:
நிறம் திகழும்–அழகு விளங்கா நின்றுள்ள
மாயோனை–ஆச்சரியனான எம்பெருமானை
என் கண்கள்–எனது கண்களானவை
கண்டு–ஸேவிக்கப் பெற்று
நீர் மல்க நிற்கும் நாள் என்று கொல்–ஆநந்தக் கண்ணீர் ததும்பும்படி நிற்பது என்றைக்கோ?

முன்னடிகளிரண்டும் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணங்கூறுவன.
“திகழும் மனம் மறம் ஒழித்து” என்று அந்வயித்து,
விளாங்கா நின்ற மனத்தில் நின்றும் கொடுமையை நீக்கி என்றுரைத்தலுமாம்.
மறம்-கொலை, கோபம், கொடுமை.
இடர்ப் பாரத் துன்பம் துறந்து-“பாரமாய பழவினை பற்றறுத்து” என்கை.
மஹத்தான துக்கத்தை விளைவிக்கக் கூடியதும்,
மனிதனைக் கீழே அமுக்குவதில் தலைச் சுமை போன்றதுமான பழையவினையை வேரோடு களைந்து என்றபடி.

(இருமுப் பொழுதேத்தி.) இரண்டும் மூன்றும் ஐந்து; பஞ்ச காலபராயணர்களாய் என்றபடி.
இதனைச் சிறிது விவரிப்போம்; –
ஒரு தினத்தின் பகற்பொழுதை ப்ராத:காலம், ஸங்கவகாலம், மத்யாஹ்நகாலம், அபராஹ்காலம், ஸாயங்காலம் என்று ஐந்தாகப் பகுத்து,
ஸூர்யோதயம் முதல் அவ்வாறு நாழிகை இவற்றிற்கு முறையே உரியவை என்று வரையறுத்து,
அபிகமநம், உபாதாநம், இஜ்யா, ஸ்வாத்யாயம், யோகம் என்ற ஐந்து ஒழுக்கங்களையும் முறையே
அந்த (ப்ராத:காலம் முதலிய) ஐந்து சிறுபொழுதிலும் அநுஷ்டிக்கும்படி பாஞ்சராத்ரம் முதலிய ஆகமங்கள் கூறும்.

இரவில் ஆசரிக்க வேண்டுவதும் யோகாநுஷ்டாநமே இவற்றின் விவரம் வருமாறு:-

முதலாறு நாழிகையாகிய ப்ராத:காலத்திலே, ஸ்நாநம் ஸந்த்யாவந்தனம் ஜபம முதலிய காலைக் கடன்களைச் செய்து முடித்துத்
தாம் ஆராதிக்கவேண்டிய எம் பெருமானுடைய ஸந்நிதியிற்சென்று ப்ரதக்ஷிண நமஸ்கார ஸ்தோத்ரம்
முதலியவற்றால் எம் பெருமானை உகப்பிக்க வேண்டும்; இஃது அபிகமநகால நியமம்.

அதற்கு அடுத்த ஸங்கவகாலத்திலே, பகவதாராதநத்துக்கு வேண்டிய சுத்த தீர்த்தம் சந்தனம் புஷ்பம் தூப தீப த்ரவ்யங்கள்
முதலியவற்றையும், எம்பெருமானுக்கு அமுது செய்விப்பதற்கு வேண்டிய பால் தயிர் நெய் தேன் முதலிய வற்றையும்
எம்பெருமானுக்கு அமுது செய்விப்பதற்கு வேண்டிய அரிசி பருப்பு கறியமுது சர்க்கரை நெய் தயிர் பழம் முதலிய
போஜநோபகரணங்களையும் ஸம்பாதித்துத் தொகுத்து ஸித்தஞ் செய்யவேண்டும். இஃது உபாதாநகால நியமம்.

மூன்றாவதான மத்யாஹ்ந காலத்திலே, மாத்யாஹ்நிகஸநாநமும் மாத்யாஹ்நிகச் சடங்கும் செய்து
விதிமுறை வழுவாது பகவானுக்குத் திருவாராதநம் பண்ணிப் பக்குவமான உணவுகளை அமுது செய்வித்து
அங்ஙனம் நிவேதித்த உணவுகளை அதிதிகளோடு புஜிக்க வேண்டும். இஃது இஜ்யாகால நியமம்.

அதற்கு அடுத்ததான அபராஹ்ந காலத்திலே, மோக்ஷமார்க்கத்துக்கு உரிய வேத வேதாந்த வேதாந்தங்களையும்
இதிஹாஸ புராணங்களையும் மற்றும் உரிய நுர்ல்களையும் தாம் கற்றலும் கற்பித்தலும் வேண்டும். இது ஸ்வாத்யாயகாலநியமம்.

ஈற்றதான ஸாயங்காலத்திலே, மாலைக் கடனாகிய ஸந்த்யா வந்தனத்தைச் செய்யத் தொடங்கி
ஸூர்யாஸ்தமனமான பின்பு ஜபத்தைப் பூர்த்திசெய்து இரவு போஜநாநந்தரம் ஏகாந்தமாக இருந்து
ஐம்பொறிகளை யடக்கி ப்ராணாமஞ்செய்து மனத்தைப் பரமாத்மாவினிடத்தே நிலை நிறுத்தி
பகவத்குணாநு ஸந்தானத்தோடு பள்ளி கொள்ள வேண்டும். இது யோகாகாலநியமம்.

இவ்வாறு அநுஷ்டிக்கும் பாகவதர் பஞ்சகாலபராயணர் எனப்படுவர்.

————

கோலார்ந்த நெடும் சார்ங்கம் கூன் நல் சங்கம்
கொலை ஆழி கொடும் தண்டு கொற்ற ஒள் வாள்
காலார்ந்த கதி கருடன் என்னும் வென்றி
கடும் பறவை இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப
சேலார்ந்த நெடும் கழனி சோலை சூழ்ந்த
திரு வரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாலோனை கண்டு இன்ப கலவி எய்தி
வல் வினையேன் என்று கொலோ வாழும் நாளே ?–1-8-

பதவுரை

கோல் ஆர்ந்த–அம்புகளோடு கூடிய
நெடு சார்ங்கம்–பெரியதான ஸ்ரீ சார்ங்க மென்னும் வில்லும்
கூன் நல் சங்கம்–வளைந்து விலக்ஷணமான ஸ்ரீ பாஞ்சஜந்யமென்னும சங்கமும்
கொலை ஆழி–(எதிரிகளைக்) கொலை செய்ய வல்ல ஸூதர்சநமும்
கொடும் தண்டு–(பகைவர்களுக்குக்) கொடுந்தொழில் புரிகின்ற கௌமோதகி யென்னும் கதையும்
கொற்றம் ஒள் வாள்–வெற்றி பெற்று ஒளி மிக்க நந்தகமென்னும் வாளும்
கால் ஆர்ந்த கடும் கதி–வாயு வேகம் போன்ற மிகவும் விரைந்த நடையை யுடைய
கருடன் என்னும்–பெரிய திருவடி யென்னும் பேரை யுடைய
வென்றி பறவை இவை அனைத்தும்–ஐய சீலமான பக்ஷிராஜனும் (ஆகிய) இவை யெல்லாம்
புறம் சூழ் காப்ப–நாற் புறமும் சூழ்ந்து கொண்டு ரக்ஷையிட
சேல் ஆர்ந்த நெடு கழனி–(நீர் வளத்தால்) மீன்கள் நிரம்பிய விசாலமான
கழனிகளாலும்
சோலை சூழ்ந்த–சோலைகளாலும் சூழப்பட்ட
திரு அரங்கத்து அரவு அணையில்
பள்ளி கொள்ளும்;
மாலோனை–ஸர்வாதிகனான எம்பெருமானை
வல் வினையேன்–மஹா பாபியான அடியேன்
கண்டு–ஸேவிக்கப் பெற்று
இன்பம் கல்வி எய்தி–ஆநந்த மயமான ஸம்ச்லேஷத்தையும் பெற்று
வாழும் நாள் என்று கொல்–வாழ்வது என்றைக்கோ?

பஞ்சாயுதங்களும், திருவடி விஷ்வகஸேநன் முதலிய நித்யஸூரி வர்க்கங்களும்
‘அழகிய மணவாளனுக்கு எந்த ஸமயத்தில் என்ன தீங்கு நேரிடுமோ? என்று அதி சங்கை பண்ணி
எப்போதும் நாற்புறமும் சூழ்ந்து காவலாயிருக்கத் திருவனந்தாழ்வான் மீது திருக்கண் வளர்ந்தருளா நின்ற பெரிய பெருமாளை,
ஸாம்ஸாரிக ஸூகாபாஸங்களிலேயே ருசி கண்டிருக்குமபடி மஹா பாபத்தைப் பண்ணி
நித்ய கைங்கரியத்தை இழந்து கிடக்கிற அடியேன் என்றைக்கு ஸேவித்து வாழப் போகிறேன் என்கிறார்.
இப் பாசுரத்தை அடியொற்றியே ஆழ்வான் ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தில் அருளிச் செய்தமையும் காண்க

—————

தூராத மனக் காதல் தொண்டர் தங்கள்
குழாம் குழுமி திரு புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர்
மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும்
சீர் ஆர்ந்த முழ வோசை பரவை காட்டும்
திரு வரங்கத்து  அரவணையில் பள்ளி கொள்ளும்
போராழி அம்மானை கண்டு துள்ளி
பூதலத்தில் என்று கொலோ புரளும் நாளே?—-1-9-

பதவுரை

தூராத காதல் மனம்–ஒரு நாளும் த்ருப்தி பெறாத ஆசை கொண்ட மனத்தை யுடையவரான
தொண்டர் தங்கள் குழாம்–ஸ்ரீ வைஷ்ணவர்களின் கோஷ்டியிலே
குழுமி–கூடி
திரு புகழ்கள் பலவும் பாடி–(எம்பெருமானது) கீர்த்திகளெல்லாவற்றையும் (வாயாரப்) பாடி
ஆராத மனம் களிப்போடு–(அவ்வளவிலும்) த்ருப்தி பெறாத மநஸ்ஸிலுள்ள ஆனந்தத்தோடே
அழுத கண் நீர்–அழுத கண்களிலுண்டான நீர்த் துளிகள்
மழை சோர–மழை போல் பெருகி வர
நினைந்து உருகி ஏந்தி–(எம்பெருமானை) நினைத்து (அத்தாலே) மனமுருகி ஸ்தோத்திரம் பண்ணி,
நாளும்–எப்போதும்
சீர் ஆர்ந்த முழவு ஓசை–நல்ல வாத்யங்களின் கோஷமானது
பரவை காட்டும்–கடலோசை போல் முழங்கப் பெற்ற
திரு அரங்கத்து ஸ்ரீரங்கத்திலே அரவு அணையில் பள்ளி கொள்ளும்
போர் ஆழி–(பகைவரோடு) யுத்தஞ்செய்வதையே தொழிலாக வுடைய
திருவாழி யாழ்வானை யுடையவரான
அம்மானை–எம்பெருமானை
கண்டு–ஸேவிக்கப் பெற்று
துள்ளி–ஆநந்தத்துக்குப் போக்கு வீடாகத்) தலை கால் தெரியாமல் கூத்தாடி
பூதலத்திலே–பூமியிலே
புரளும் நாள் என்று கொல்–(உடம்பு தெரியாமல்) புரள்வது என்றைக்கோ!.

“இன் கனி தனி யருந்தான்” (நல்ல பொருள்களைத் தனியே அநுபவிக்கலாகாது) என்றாற்போல,
பகவத் குணங்களைத் தனியே அநுபவிக்கக் கூடாதாகையால்,
அக் குணங்களை வாய் விட்டுக் கதறினாலன்றி த்ருப்தி பெற முடியாதபடி கரை புரண்ட காதலை யுடைய
பாகவதர்களின் கோஷ்டியிலே கலந்து அவர்களுடன் எம்பெருமானது கீர்த்திகளை வாயாரப் பாடி
அதனால் ஆநந்தக் கண்ணீர் பெருகப் பெற்று ‘நமக்குமன்றோ இவ்வநுபவம் கிடைத்தது!’ என்கிற
உள்ளடங்காத பேரின்பப் பெருமையாலே
“மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை” என்கிற திருவாய் மொழியிற்படி
தலை கால் தெரியாமல் துள்ளிக் கூத்தாடி, இப்போது ஸிம்ஹாஸநத்திலே மார்பு நெறித்திருக்கு மிருப்புத் தவிர்ந்து
ஆநந்த மிகுதியாலே நிலத்தில் வீழ்ந்து புரளும்படியான பாக்கியம் வாய்ப்பது என்றைக்கோ? என்கிறார்.

தூராத மனக் காதல் சப்தாதி விஷயங்களை எவ்வளவு அநுபவித்தாலும் எத்தனை நாள் அநுபவித்தாலும்
சிறிதும் த்ருப்தி அடையாத இந்திரியங்களை யுடையவர்களின் கோஷ்டியில் நின்றும் விலகி,
எம்பெருமானை எவ்வளவு அநுபவித்தாலும் பர்யாப்தி பெறாத மெய்யடியார்கள் திரளிலே புக விரும்புகிறபடி.

பரவை காட்டும் என்றது-
கடலின் அலைகளின் கோஷத்துக்கு ஓய்வு இல்லாதாப் போலே
கோயிலில் வாத்யங்களின் முழக்கத்துக்கு ஓய்வு இல்லாமையால் கடலை ஒத்திருக்கின்ற என்றவாறு.
பரவை-கடல் பரவியது: ஐ-கருத்தாய்ப் பொருள் விகுதி.

————-

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா
சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும்
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும்
இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10-

பதவுரை

வன்–(நைமித்திக ப்ரளயத்தில்) அழியாதிருக்கக் கடவதும
பெரு–பெருமை தங்கியதுமான
வானகம்–ஸ்வர்க்கம் முதலிய மேலுலகங்கள்
உய்ய–உஜ்ஜீவிக்கவும்
அமரர்–தேவர்கள்
உய்ய–உஜ்ஜீவிக்கவும்
மண் உய்ய–பூலோகம் உஜ்ஜீவிக்கவும்
மண் உலகில் மனிசர் உய்ய–பூலோகத்திலுள்ள மனிதர்களெல்லாம் உஜ்ஜீவிக்கவும்
மிகு துன்பம் துயர் அகல–மிக்க துக்கத்தை விளைப்பதான பாவங்கள் நீங்கவும்
அயர்வு ஒன்று இல்லா சுகம் வளர–துக்கம் கலசாத சுகம் வளரவும்
அகம் மகிழும்–(எப்போதும்) மனதில் ஆனந்தத்தை யுடையரான
தொண்டர்–ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழ–உஜ்ஜீவிக்கவும்
அன்போடு–திருவுள்ளத்தில் உகப்போடு
தென் திசை நோக்கி–தெற்குத் திக்குக்கு அபிமுகமாக
பள்ளி கொள்ளும்–பள்ளி கொண்டிரா நின்ற
அணி அரங்கன்–ஸ்ரீரங்கநாதனுடைய
திரு முற்றத்து–ஸந்நிதியுள் திரு முற்றத்திலே
அடியார் தங்கள்–ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
இன்பம் மிகு பெரு குழுவு கண்டு–ஆநந்தம் நிரம்பிய பெரிய கோஷ்டியை சேவித்து
யானும்–அடியேனும்
இசைந்து–(அவர்களுள் ஒருவனாக) மனம் பொருந்தி
உடனே–அவர்களோடு கூட
இருக்கும் நாள் என்று கொல்–வாழ்ந்திருக்குங்காலம் எப்போது (வாய்க்குமோ?).

தேவர்களும் மநுஷயர்களும் விலக்ஷண ஸ்ரீவைஷ்ணவர்களும் வாழவும்
பாவங்கள் நீங்கிப் புண்ணியங்கள் செழிக்கவுமாகக்
குட திசை முடியை வைத்துக் குண திசை பாதம் நீட்டி வட திசை பின்பு காட்டித் தென் திசை இலங்கை
பாகவதர்களை யுடைய கோஷ்டியிலே சேர்ந்து
அடியேனும் அவர்களைப் போலே திளைத்து வாழ்வது என்றோ! என்கிறார்.

————–

திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு
திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை
கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்
குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள்
கூடலர் கோன் கொடை குலசேகரன் சொல் செய்த
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே—1-11-

பதவுரை

திடர் விளங்கு கரை–மணற்குன்றுகள் விளங்கா நின்ற கரையை யுடைத்தான
பொன்னி நடுவு பாடு–காவிரியின் நடுவிடத்து
திரு அரங்கத்து அரவு அணையில் பள்ளி கொள்ளும்:
கடல் விளங்கு–கடல் போல் விளங்குகின்ற
கரு மேனி–கரிய திருமேனியை யுடைய
அம்மான் தன்னை–பெரிய பெருமாளை
கண் ஆர கண்டு உகக்கும் காதல் தன்னால்–கண்கள் த்ருப்தி யடையும்படி
ஸேவித்து ஆநந்திக்க வேணும்’ என்று உண்டான ஆசையினால்
குடை விளங்கு–(அரசாட்சிக்கு ஏற்ப) வெண் கொற்றக் குடையுடன் விளங்கா நிற்பவரும்
விறல் தானை–பராக்கிரமம் மிக்க ஸேஸனைகளை யுடையவரும்
கொற்றம் ஒள் வாள்–வெற்றியும் ஒளியும் பொருந்திய வாளை யுடையவரும்
கூடலர் கோன்–மதுரையிலுள்ளவர்களுக்குத் தலைவரும்
கொடை–ஔதார்யத்தையே இயற்கையாக வுடையவருமான
குலசேகரன்–குலசேகரப் பெருமாள்
சொற்செய்த–அருளிச் செய்த
நடை விளங்கு–தமிழ் நடையானது நன்கு விளங்கா நின்ற
தமிழ் மாலை பத்தும்–தமிழ்ப் பிரபந்தரூபமான இப் பத்துப் பாசரங்களையும்;
வல்லார்–ஓத வல்லார்கள்
நலம் திகழ் நாரணன்–கல்யாண குண சாலியான ஸ்ரீமந் நாராயணனுடைய
அடி கீழ் நண்ணுவார்–திருவடிகளில் சேரப் பெறுவர்.

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்