விசேஷ உணவுகளை யுண்டு மதம் பிடித்துக் கொழுத்திருந்த குவலயாபீடமென்னும்
கம்ஸனது யானையை ஒழித்தருளினாற்போலே
தம்முடைய ப்ராப்தி ப்ரதிபந்தகங்களையும் போக்கினபடியை அருளிச் செய்து
பெரிய பெருமாளுடைய ப்ரீதியே தமக்கு ப்ரயோஜன மென்று முடிக்கிறார் .
வள வெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்கமாலைத்
துளவத் தொண்டைய தொல் சீர்த் தொண்டர் அடிப் பொடி சொல்
இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே
பதவுரை
வளம் எழும் தவளம் மாடம் –அழகு விஞ்சியிருப்பதும் வெண்ணிறமுடையதுமான மாடங்களையுடைய
மா மதுரைநகரம் தன்னுள் –பெருமை தங்கிய வடமதுரையில்
கவளம் மால் யானை கொன்ற–கவளங் கொண்டிருப்பதும் பெருத்ததுமான (குவலயாபீடமென்னும் கம்ஸனுடைய) யானையைக் கொலைசெய்தருளின
கண்ணனை-ஸ்ரீ க்ருஷ்ணனாகிய
அரங்கம் மாலை –கோயிலிலே (கண்வளரும்) எம்பெருமானைக் குறித்து
துளபம் தொண்டு ஆய–திருத்துழாய்க் கைங்கர்ய நிஷ்டரும்
தொல் சீர்–இயற்கையான சேஷத்வத்திலே நிலை நின்றவருமான
தொண்டரடிப் பொடி–தொண்டரடிப்பொடியாழ்வார் (அருளிச் செய்த)
சொல்–திருமாலையாகிய இத்திருமொழி
இளைய புன் கவிதை ஏலும்–மிகவும் குற்றங்குறைகளை யுடைய கவித்வமாயிருந்த போதிலும்
எம்பிராற்கு–பெரிய பெருமாளுக்கு
இனிதே ஆறே–பரம போக்யமாயிருந்தபடி யென்! என்று ஈடுபடுகிறார்.)
விளக்க உரை
கவளம் என்று யானையுணவுக்குப் பெர்.
“களவமால்யானை” என்றும் பாடமுண்டு.
அப்போது கலப: என்னும் வடசொல் களவமெனத்திரிந்ததாம்
ஒரு பருவத்தில் பெருத்த யானை யென்றபடி.
இளைய புன் என்பவை -சப்தத்தில்
இளமையையும் கவித்வத்தில் குற்றத்தையும் கூறும்.
எம்பெருமானைக் குறித்து அடியேன் சொன்ன சொற்கள் குற்றம் குறைகள் நிரம்பிய வையாயினும்,
எனது நெஞ்சில் உருக்கத்தையும் ஊற்றத்தையும் அறிந்திருக்கும் பெரிய பெருமாளுக்கு
இது ஆராவமுதமாயிருக்கு மென்கிறார்.
“இப் பிரபந்தம் கற்றார்க்குப் பலஞ்சொல்லா தொழிந்தது-
இவ்வுகப்புத்தானே அவர்களுக்குப் பலமாகையாலே” என்ற வ்யாக்யாந ஸூக்தி இங்கு அநுஸந்திக்கத்தக்கது.
அடிவரவு:-
காவல் பச்சை வேதம்
மொய்த்த பெண்டிர் மறம் புலை வெறுப்பு மற்றும் நாட்டினான் ஒரு நமனும் எறி வண்டு மெய்
சூது விரும்பி இனிது குட பாய் பணி பேசு கங்கை வெள்ளம் குளித்து போது
குரங்கு உம்பரால் ஊர் மனம் தவமார்த்து
மெய்யுள்ளம் தாவி மழை தெளி மேம்பொருள்
அடிமை திரு வான் பழுதில் அமரப் பெண் வளவெழும் கதிர்.
——————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.