Archive for the ‘திருக் குறும் தாண்டகம்’ Category

தாண்டகம் -இலக்கணக்குறிப்புகள் —

July 7, 2022

அறுசீரடி அல்லது எண்சீரடி பயின்ற செய்யுளினால்  கடவுளரை பாடுவதற்குரியது தாண்டகம் எனும் சிற்றிலக்கிய வகை (பிரபந்தம்).

அறுசீரடியினாலாகிய தாண்டகத்தினைக் குறுந்தாண்டகம் என்றும்

எண்சீரடியால் அமைந்ததினை நெடுந்தாண்டகம் என்றும் பன்னிருபாட்டியல் பகருகிறது.

  • பாடலின் ஒவ்வொரு அடியும் இடையிலே தாண்டுவதை இந்தப் பாடல்களில் காணலாம். பாடலின் அகத்தே தாண்டுவது தாண்டகம்.
  • தாண்டகம் என்பது ஒருவகைச் செய்யுள் யாப்பு ஆகும். தாண்டக யாப்பினால் இயற்றப்பட்டவை தாண்டகம் என்னும்
    இலக்கிய வகையாகப் பெயர் பெறுகின்றன. இதனை முறையே யாப்பருங்கல விருத்தியாலும் (95-ம் நூற்பா உரை)
    வீரசோழியத்தாலும் (129) அறிய முடிகின்றது. இவ்வகையான நூல்களையும் பக்தி இலக்கியம்தான் நமக்கு முதலில் அறிமுகம் செய்கின்றது. திருநாவுக்கரசரின் ஆறாம் திருமுறை முழுவதும் இத்தாண்டக யாப்பே. 981 பாடல்கள் கொண்ட அவரது 99 பதிகங்கள் திருத் தாண்டகம் என்றே வழங்குகின்றன.
  • திவ்வியப் பிரபந்தத்தில் திருமங்கையாழ்வார் பாடிய
    திருத் தாண்டகங்கள் பாவின் குறுமை, நெடுமை ஆகிய அளவு கருதி முறையே திருக்குறுந்தாண்டகம்,திருநெடுந்தாண்டகம் எனப்பெயர் பெறுகின்றன.
  • வடமொழித் தாண்டகத்தையே தமிழுக்குரிய தாண்டகமாக்கி வீரசோழியமும் யாப்பருங்கல விருத்தியும் குறிப்பிடுகின்றன. இங்கு ஒரு வேறுபாடு எண்ணத்தகும். வீரசோழியம் தண்டகம் என்றே குறிக்க யாப்பருங்கல விருத்தி மட்டும் தாண்டகம் எனக் கூறுகிறது. வடமொழி யாப்புப்படி விருத்தம் என்னும் பொதுப்பெயர்,
    அளவொத்த  நான்கடியையும் அனைத்துச் செய்யுளையும் குறிக்கும். அடிகளிற் பயிலும் எழுத்துகளின் எண்ணிக்கை அடிப்படையில்
    விருத்தங்களைச் சந்தம் எனவும், தண்டகம் எனவும் பிரிப்பர்.
    ஓரெழுத்து முதல் இருபத்தாறு எழுத்தளவும் உடைய அடிகளால் ஆகிய செய்யுள் சந்த விருத்தமாம்.
    இருபத்தேழு  எழுத்துகளுக்கு மேல்வரின் அது தண்டக விருத்தமாகும்.
    இதனையே தாண்டக விருத்தம் எனப் பெயரிட்டு விளக்குகிறது
    யாப்பருங்கல விருத்தி. ஆழ்வாரின் திருநெடுந்தாண்டகத்தில் சிற்சில அடிகள் 27 எழுத்துகளும் அவற்றின்மிக்கு 28, 29 எழுத்துகளும் பெற்று வருகின்றன.
    முப்பது பாசுரத்திற்கும் மொத்தம் உள்ள நூற்றிருபது அடிகளில் இவ்வாறு தாண்டக  அடிகளாக வருவன 24 அடிகள் மட்டுமே.
    எனினும் ஒரு பாசுரம் கூட முழுவதும் தாண்டக அடிகளைக்  கொண்டிருக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
    உதாரணத்திற்கு முதல் பாசுரத்தில் முதலாம் அடியில் 26 எழுத்துகள், 2-ம் அடியில் 27 எழுத்துகள், 3-ம் அடியில் 28
    எழுத்துகள், 4-ம் அடியில் 27 எழுத்துகள் அமைந்துள்ளன. இவ்வாறு எழுத்துகளைக் கணக்கிட்டால்,
    திருநெடுந்தாண்டகத்தில் தாண்டக அடிகளாக அதாவது 27 முதலாக அவற்றின் மிக்க எழுத்துகளைப் பெற்று வருவன 24
    அடிகள் மட்டுமே. (எழுத்துகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் போது, குற்றியலுகரமும், ஒற்றும் நீங்கலாகக்
    கணக்கிடப்படும்)
    யாப்பருங்கல விருத்தி கூறும் தாண்டக யாப்பு, தமிழில் உள்ள திருத்தாண்டகங்களுக்குப் பொருந்தி வரவில்லை
    இனித்தாண்டகம் தமிழ் யாப்பே என்பார் கூற்றினை நோக்குவோம். அதற்கு முன்னர் ஆழ்வார் பாடிய
    திருத்தாண்டகங்களின் யாப்பமைதி பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். ஆழ்வார் காலத்திற்குப் பின்னர் வளர்ச்சியுற்ற
    யாப்பிலக்கணத்தின்படி நோக்கினால், ஆழ்வாரின் திருநெடுந்தாண்டகம் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள்
    முப்பது கொண்டதாகும். இவ்வகை விருத்தத்தில் 1,2,5,6 ஆகிய நான்கு சீர்களும் காய்ச்சீர்களாகவும் 3,4,7,8 ஆகிய நான்கு
    சீர்களும் இயற்சீர்களாகவும் வரும். இயற்சீர் நான்கினுள் 3,7 ஆகிய சீர்கள் புளிமா, அன்றித் தேமாவாக வரும். 4,8 ஆகிய சீர்கள் தேமாவாக மட்டுமே அமையும். எனவே இவ்வகை விருத்தம்
    காய்-காய்-மா-தேமா-காய்-காய்-மா-தேமா–என்னும் வாய்பாடு கொண்டதாகும்.
    இப்போது திருக்குறுந்தாண்டகத்தை நோக்குவோம். இவ்வகை விருத்தத்தில் எல்லாச் சீர்களும் இயற்சீர்களாகவே வரும்.
    சிறுபான்மை காய்ச்சீர் வருதலுமுண்டு. பெரும்பாலும் 1,4 ஆகிய சீர்கள் விளச்சீராகவும், 2,3,5,6 ஆகிய சீர்கள் மாச்சீர்களாகவும் வரும். சுருங்கக் கூறின்,
    விளம்-மா-தேமா-விளம்-மா-தேமா–என்னும் வாய்பாடு கொண்டதாகும்.
    தாண்டக யாப்பு தமிழ் மரபினதே எனக் கூறும் க.வெள்ளை வாரணன், தொல்காப்பியர் கருத்துப்படி அதனை எண்சீரான் வந்த கொச்ச ஒரு போகு என்பர்.
    ஆதலின் இயல்வகை குறித்த தாண்டகம் என்னும் இப்பெயரினை பெறாவாயின என விளக்குகிறார். மேலும், அவர்
    திருநாவுக்கரசரது திருத்தாண்டக யாப்பு, கழிநெடிலடிக்கு மேலெல்லையாகிய இருபது எழுத்தென்னும் அளவினைக்
    கடந்து இருபத்தேழு எழுத்திற்கு உட்பட்டு வருவதாகும். யாப்பருங்கல விருத்தியில் தாண்டகம் என்ற பெயராற்
    குறிக்கப்பட்ட தாண்டக யாப்பு இருபத்தேழு எழுத்து முதலாக அவற்றின் மிக்க எழுத்துகளை பெற்று வருவதாகும் என
    இரண்டனுக்குமுள்ள வேற்றுமையையும் எடுத்துக் காட்டுகிறார். இங்குத் தாண்டகம் தமிழ் யாப்பின் வழிப்பட்டதே
    என்பதற்கு அவர் கூறும் விளக்கமும் யாப்பருங்கல விருத்தியில் கூறப்படும் தாண்டகம் வேறு, திருநாவுக்கரசரின் தாண்டகம் வேறு என்பதற்கு அவர் சில காரணங்களைக் காட்டுகிறார்.
    மேற்குறித்தவாறு திருநாவுக்கரசரின் திருத்தாண்டகத்தைத் தமிழ் மரபினதாகக் காட்டும் வெள்ளைவாரணன்,
    திருமங்கையாழ்வாரின் திருத்தாண்டகங்களையும் தமிழ் யாப்பு வழிப்பட்டதாகவே ஏற்றுக் கொள்கிறார். அவர்
    கருத்துப்படி, ஆழ்வாரின் நெடுந்தாண்டகம் அப்பரின் திருத்தாண்டகத்துக்கும், ஆழ்வாரின் குறுந்தாண்டகம் அப்பரின்
    திருநேரிசைக்கும் இணையாகின்றன. திருநாவுக்கரசரின் திருநேரிசைப் பதிகங்களும், ஆழ்வாரின் குறுந்தாண்டகமும் ஒரே
    வகை யாபில் அமைந்தவை. அதாவது, விளம்-மா-தேமா, விளம்-மா-தேமா என்னும் வாய்பாடு கொண்ட அறுசீர்
    விருத்தங்கள் அவை. இங்ங்கனமாக, ஒன்று திருநேரிசை எனவும், மற்றொன்று திருக்குறுந்தாண்டகம் எனவும்
    வெவ்வேறு பெயர் பெறுகின்றன. இப்பெயர் மாற்றத்துக்கு என்ன காரணம்? அறுசீரில் இருபது பாசுரங்கள் கொண்ட
    தாண்டகமும் எண்சீரில் முப்பது பாசுரங்கள் கொண்ட தாண்டகமும் ஆழ்வார் பாடினார். எண்சீரினும் ச்றுசீர் குறியது.
    அன்றியும் அறுசீர் யாப்பிலான பாடற்பகுதி, எண்சீர் யாப்பிலான பாடற்பகுதியினும் குறைந்த எண்ணிக்கை கொண்டது.
    ஆதலின் அவை குறுந்தாண்டகம், நெடுந்தாண்டகம் என வேறுபடுத்தப்பட்டன எனலாம். இவ்வமைதி ஆழ்வாரின் இரண்டு தாண்டகங்களைப் பொறுத்தவரை ஏற்கத்தக்கதாகும்.
    ஆயின் அப்பரின் திருநேரிசைப் பதிகங்கள் குறுந்தாண்டகமாகக் கொள்ளப்படவில்லையே. இது ஏன்?என்னும் வினாவுக்கு
    விடை காண இயலவில்லை. மற்றொரு சிக்கலும் உண்டு. குறுந்தாண்டகம் என்று அழைக்கப்படும் ஆழ்வாரின்
    பாடற்பகுதி முதலில் தாண்டகம் ஆகுமா? என்பதுவே அச் சிக்கலாகும். ஆழ்வாரின் குறுந்தாண்டகப் பாடல்களும்,
    அப்பரின் திருநேரிசைப் பாடல்களும் இருபது எழுத்துக்கு மேற்படாது அடங்கிவரும் அடிகளையுடைய அறுசீர் விருத்த
    யாப்பினமாகும். அங்ஙனமாயின் க.வெள்ளைவாரணன் தாண்டகத்துக்குக் கூறிய இலக்கணப்படி அடிக்கு இருபது
    எழுத்துகளைத் தாண்டாத இவை தாண்டகமாகா. வடமொழி மரபுப்படி இருபத்தேழு எழுத்து என்னும் எல்லைக்கு இங்கு
    இடமே இல்லை. ஆகத் தமிழ்மரபு வடமொழி மரபு ஆகிய இரண்டினாலும் தாண்டகமாகாத ஆழ்வாரின் பாடற்பகுதி
    குறுந்தாண்டகம் எனப் பெயர் பெற்றது எவ்வாறு என்பது விளங்கவில்லை.
    இயற்சீர் = ஈரசைச் சீர்= அகவற்சீர் . பழம் பெயர் தான்.
    “ ஈரிசை கூடிய சீரியற் சீர் ; அவை
     ஈரிரண் டென்ப இயல்புணர்ந்  தோரே “
    இயலல்- பொருந்துதல்
  • பின்வந்த பாட்டியலாரும் இச் சிக்கலுக்கு ஓர் தீர்வினைத் தந்திடவில்லை.
    மூவிரண் டேனும் இருநான் கேனும்
    சீர்வகை நாட்டிச் செய்யுளி னாடவர் 
    கடவுளர்ப் புகழ்வன தாண்டகம் அவற்றுள்
    அறுசீர் குறியது நெடியதெண் சீராம்-எனப் பன்னிருபாட்டியல் கூறுகின்றது.
  • இந்நூற்பாவில் தாண்டகத்துக்குரிய எழுத்தெண்ணிக்கை பற்றிய குறிப்பு இல்லை.
    அன்றியும் ஆழ்வார் அறுசீர் யாப்பில் பாடியவற்றைக் குறுந்தாண்டகம் என ஏற்றுக்கொண்டே இந்நூற்பா இலக்கணம்
    கூறுகின்றது. பன்னிரு பாட்டியலார் கூறும் இவ்விலக்கணம் திருமங்கையாழ்வார் முறையே அறுசீரிலும் எண்சீரிலும்
    பாடிய இலக்கியங்களுக்கான இலக்கணம் ஆகின்றது. அஃதாவது இலக்கியம் கண்டதற்கு அமைந்த இலக்கணம் இது.
    எனினும் தாண்டக சதுரர் எனச்சிறப்பிக்கப் பெற்ற திருநாவுக்கரசரின் ‘தாண்டக இலக்கியம்’ பற்றிப் பன்னிரு பாட்டியல் குறிப்பிடவில்லை.
    ஆழ்வாரின் திருத்தாண்டகப் பாசுரங்களினும் (30+20) திருநாவுக்கரசரின் திருத்தாண்டகப் பாடல்கள் எண்ணிக்கையில் (981)
    பன்மடங்கு மிக்கன. போற்றித் திருத்தாண்டகம், காப்புத் திருத்தாண்டகம், நின்ற திருத்தாண்டகம், தனித் திருத்தாண்டகம்,
    வினா விடைத் திருத்தாண்டகம் எனப் பொருளடிப்படையில் பலவாறு பெயர் பெறுவன. இவ் வியல்புகளைப் பாட்டியல்கள்
    கருத்திற்கொண்டு இலக்கணம் கூறாததற்கான காரணம் தெரியவில்லை. திருநாவுக்கரசர், திருமங்கையாழ்வார் ஆகிய
    இருவரது தாண்டகங்களையும் ஒப்ப வைத்தும் உறழ்ந்து நோக்கியும் பாட்டியல் நூலார் இலக்கணம் கூறியிருந்தால்
    இன்று நமக்கு எழக்கூடிய சிக்கல்கள் தோன்றியிருக்க மாட்டா.
    பின்வந்த முத்து வீரியம் தாண்டக யாப்புக்குரிய இலக்கணத்தையும் பின்வருமாறு கூறுகின்றது.
    இருபத்தேழு எழுத்து ஆதி யாக
    உயர்ந்த எழுத்தடி யினவாய் எழுத்தும்
    குருவும் இலகுவும் ஒத்து வந்தன
    அளவியல் தாண்டகம் எனவும் அக்கரம்
    ஒவ்வாதும் எழுத்தலகு ஒவ்வாதும் வந்தன
    அளவழித் தாண்டகம் எனவும் பெயர்பெறும் —என்பது அந்நூற்பாவாகும்.
  • (நூற்பா-1115) வீரசோழியம், யாப்பருங்கல விருத்தி ஆகிய நூல்கள் புகுத்திய புதுமரபிற்கேற்ப
    முத்து வீரியம் இங்குத் தாண்டகத்திற்கு இலக்கணம் கூறுகின்றது. அளவியல் தாண்டகம், அளவழித் தாண்டகம் ஆகிய
    இரு வகைகளையன்றி குறுந்தாண்டகம், நெடுந்தாண்டகம் என்னும் பகுப்புமுறை இங்கு இடம் பெறாமை கவனிக்கத்தக்கது. ஆக பாட்டியல்கள் கூறும் தாண்டக இலக்கணம் இரு வகையில் அமைகின்றது.
    1. பன்னிருபாட்டியல் இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் கூறியது ஒரு வகை
    2.முத்துவீரியம், யாப்பருங்கலவிருத்தியைத் தழுவிப் புதிய மரபில் இலக்கியம் காண்பதற்கு இலக்கணம் கூறியது மற்றொரு வகை.
    மற்றொரு வகை.
    இங்ங்னம் தாண்டகம் பற்றிய கருத்துகள் தமிழ் இலக்கண ஆசிரியர்களிடம் மாறுபட்டும் குழம்பியும் காணப்படுவதால்
    அதனை நாம் இன்று தெளிவாக உணர முடிவதில்லை. ஆழ்வார் பாசுரங்களுக்கு யாப்பு வகை குறித்த திவ்யபிரபந்தப்
    பதிப்பாசிரியர்களும் தாண்டகம் பற்றித் தெளிவான விளக்கம் தரவில்லை. “பகவானுடைய திவ்ய சேஷ்டிதங்களைத்
    தாண்டக ரூபத்தில் நிரூபிக்கிறபடியால் . . . ” இத்திருநாமம் பெற்றதாகக் கூறுவர் கோமடம் எஸ்.எஸ்.ஐயங்கார். இங்கு
    அவர் தாண்டக ரூபம் என்றாரே தவிர அதன் ரூபம் (வடிவம்) பற்றியோ இலக்கணம் பற்றியோ எதுவும் கூறாதது
    கவனிக்கத்தக்கது.
  • திருமங்கையாழ்வாரின் தாண்டகங்களைப் பொறுத்தவரை மற்றொரு தடையும் உண்டு. எண்சீரும் அறுசீருமாகப் பாடிய
    பாசுரப்பகுதிகள் திவ்யபிரபந்தத்தில் உள்ளன.
    விளம்-மா-தேமா, விளம்-மா-தேமா –என்பது குறுந்தாண்டக யாப்பு
    காய்-காய்-மா-தேமா, காய்-காய்-மா-தேமா–என்பது நெடுந்தாண்டக யாப்பு.
    இதே வாய்பாடில் இதே ஆழ்வார் எழுதிய பாடல்கள் அனைத்தும் தாண்டகம் எனப்பெயர் பெறாமை கவனிக்கத்தக்கது.
    தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய திருமாலை முழுவதும் குறுந்தாண்டகம் போல அறுசீர் ஆசிரிய விருத்த  யாப்பிலானதே.
  • மேலும் திருமாலை, குறுந்தாண்டகம் ஆகிய இவ்விரு நூல்களிலும் முறையே 17, 13 ஆம் பாசுரங்களின்
    ஈற்றடிகள் மிகுதியும் ஒத்திருத்தலும் இங்குச் சுட்டத்தக்கது.
    விரும்பிநின் றேத்த மாட்டேன் விதியிலேன் மதியொன் றில்லை
    இரும்புபோல் வலிய நெஞ்சம் இறையிறை உருகும் வண்ணம்
    சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட
    கரும்பினைக் கண்டு கொண்டென் கண்ணிணை களிக்கு மாறே (திருமாலை-17)
    இரும்பனன் றுண்ட நீரும் போதரும் கொள்க என்றன்
    அரும்பிணி பாவ மெல்லாம் அகன்றன என்னை விட்டு
    சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட
    கரும்பினைக் கண்டு கொண்டென் கண்ணிணை களிக்கு மாறே (திருக்குறுந்தாண்டகம்-13)
    3,4 ஆம் அடிகள் முற்றிலும் ஒத்திருந்தாலும் திருமாலை ஏன் தாண்டகம் என்ற பெயர் பெறவில்லை?
    சைவத்திலும் இந்நிலையுண்டு. அப்பர் தாண்டகத்துக்குக் கையாண்ட அதே எண்சீர் யாப்பில் திருஞானசம்பந்தர் 11 பதிகங்களும், சுந்தரர் 27 பதிகங்களும், மாணிக்கவாசகர் 6 பதிகங்களும் பாடியுள்ளனர். ஒன்பதாம் திருமுறையில் 11 பாடல்களும், பதினொராந்திருமுறையில் 36 பாடல்களும் அதே யாப்பில் அமைந்துள்ளன. எனினும் அவை தாண்டகம்
    எனக் குறிக்கப் பெறாமையை அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
    இந்நிலையில் யாப்பருங்கல விருத்தியுரை காரர் தரும் ஒரு குறிப்பு, சிறிது வெளிச்சம் காட்டுகிறது. தாண்டகம் என்பது
    தொல்காப்பியரால் கொச்சக ஒருபோகு எனவும், காக்கைபாடினியார் போன்ற ஒருசார் ஆசிரியரால் பாவினமாகவும்
    கொள்ளப்பட்டது என்பது அவர் தரும் குறிப்பாகும். அதன்படி தாண்டகத்துக்குப் பயன்பட்ட அறுசீர் யாப்பு, ஒருசார்
    ஆசிரியரால்ஆசிரியப்பாவின் இனமான விருத்தமாகக் கொள்ளப்பட்டது என்பது உறுதி ஆகின்றது. அவ்வகை விருத்தங்கள்
    வடமொழித் தாண்டகத்தின் தனித்தன்மைகளுள் ஏதேனும் ஒன்றைப் பெற்றுத் தமிழில் தாண்டகம் எனப்பெயர்
    பெற்றிருக்கலாம் எனக் கருத இடமுள்ளது. அளவொத்த நான்கு அடிகளைக் கொண்ட வடமொழித் தாண்டக யாப்பு, ஓர்
    அடிக்கு 27 முதல் 999 வரை நீண்டு சென்று முடியும் என்பர். அவ்வகை நீட்சி காரணமாக எச்சங்களைத் தொடர்ந்து
    செல்லும் போக்குத் தண்டக விருத்தங்களில் அமைந்தது. குறிப்பிடத்தக்க இத்தனித் தன்மையைத் தமிழ்த் தாண்டகப் பாக்களிலும் காண முடிகின்றது.
    தேசிகரின் கருட தண்டகத்தையும், காளிதாசனின் சியாமளா தண்டகத்தையும்
    எழுத்தெண்ணிக்கை பார்த்ததில்,
    கருட தண்டகத்தில் ஒவ்வொரு பாடலும் 108 எழுத்துகள் இருக்கின்றன. அடிமுடி தெரியாதலால், ஒரு அடிக்கு சராசரி 27 எழுத்துக்கள் என்று கொள்ளலாம்.
    சியாமளா தண்டகத்தில் என்னிடம் உள்ள பதிப்பில் பாடல்கள் தொடர்ச்சியாக உரைநடைபோல் தட்டச்சு
    செய்யப்பட்டிருப்பதால் எழுத்தெண்ணிக்கையை அறுதியிட்டுக் கூற முடியவில்லை. ஒரு மாதிரியாக, பகுத்துப் பார்த்ததில்
    ஒரு சீரான எழுத்தெண்ணிக்கை வரவில்லை என்றுதான் தோன்றுகிறது. வேறு பதிப்புகளில் பாடல் ஒவ்வொன்றும்
    சரியாகப் பகுத்துக் கொடுக்கப் பட்டிருந்தால் அன்பர்கள் எழுத்தெண்ணிக்கையைச் சரி பார்க்கவும்.
    எச்சங்களாகத் தொடர்ந்து செல்லும் போக்கு நெடுந்தாண்டகத்தில் எவ்வாறு அமைந்துள்ளது என்று பார்ப்போம்.
    மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்
    . . விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்
    பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப் பில்லாப்
    . . பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணா தெண்ணும் 
    பொன்னுருவாய் மணியுருவில் பூத மைந்தாய்
    . . புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி
    தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை
    . . தளிர்புரையும் திருவடியென் தலைமே லவே
     (ஈற்றுச்சீர் தேமாவாக இருக்க லாவே என்றிருக்கலாம். ஆயின் மூலத்தில் இப்படித்தான் உள்ளது)
    என்னும் திருநெடுந்தாண்டகத்தில் முதற்பாகத்தைக் கவனித்தால் பாசுர அடிகளின் இடையிலோ முடிவிலோ முற்றின்றி,
    வினையெச்சமாய்த் தொடர்ந்து இறுதியிலேயே முற்றுப் பெறுதலைக் காணலாம். பெரும்பாலான பாசுரங்கள் இவ்வகைப்
    போக்கிலேயே3 அமைந்து உள்ளமை கவனிக்கத்தக்கது.
  • திருநெடுந்தாண்டகத்தில் முதல் பத்துப் பாசுரங்கள் தாமான  தன்மையிலும்,
  • அடுத்த பத்துப் பாசுரங்கள் தாய் கூற்றிலும்,
  • இறுதிப்பத்துப் பாசுரங்கள் மகள் கூற்றிலும் அமைந்தன  என்பர்.
  • இங்ங்னம் கூற்றுநிலை மாறுபட்டபோதும் மேற்குறித்த அமைப்பு மாறுபடவில்லை.
    இப்போது தாய் கூற்றாக அமைந்த ஒரு பாடலை ஆராய்வோம்.
    கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்னும்
    . . காமருபூங் கச்சியூ ரகத்தாய் என்னும்
    வில்லிறுத்து மெல்லியள்தோள் தோய்ந்தாய் என்னும்
    . . வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே என்னும்
    மல்லடர்த்து மல்லரையன் றட்டாய் என்னும்
    . . மாகீண்ட கைத்தலத்தென் மைந்தா என்னும்
    சொல்லெடுத்துத் தன்கிளியைச் சொல்லே என்று
    . . துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின் றாளே
    என்னும் பாசுரத்தில் மகள் கூற்று தனித் தனியாக முற்றுப் பெறுவதுபோல் தோன்றினும் தாய் அதனை மீண்டும் எடுத்துச் சொல்லும் போக்கில்,
    கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்னும்
    . . காமருபூங் கச்சியூ ரகத்தாய் என்னும்
    இடையறாத் தொடர்ச்சியுடன் கூற்று அமைதல் காணலாம்.
  • இப்போது மகள் கூற்றாக அமைந்த ஒரு பாடலின் பகுதியைக் காண்போம்.
    மைவண்ண நறுங்குஞ்சிக் குழல்பின் தாழ
    . . மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட
     
    எய்வண்ண வெஞ்சிலையே துணையா யிங்கே
    . . இருவராய் வந்தாரென் முன்னே நின்றார்
    என்னும் பாசுரப்பகுதி மகள் கூற்றாக அமைவது. இதன்கண், இருவராய் வந்தார்என் முன்னே நின்றார் என்பதில் வந்தார் என்னும் முற்று வந்து என எச்சப் பொருளே தந்து தொடர்தலும் நோக்குதற்குரியது.
    வந்தார் என்பது வந்தவர் என்னும் பொருள்படும். மேற்படி  சொன்னவண்ணம் வந்தவராகிய அவர் என்றும் கொள்ளலாம்]
திருக்குறுந்தாண்டகத்தில் இத் தன்மை மிகுந்து காணப்படுகிறது.
நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டுமுன் அண்ட மாளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கியென் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகி லேனே–என்பது முதற்பாசுரம்.
இப்பாசுர முடிவில் விதியினை என்பதற்குப் பின்னர் முற்றாக வருகின்ற (கண்டு . . விடுகிலேனே)
பகுதிகளை விலக்கி, அடுத்துவரும் மூன்று பாசுரங்களிலும் இம்முறையே மேற்கொண்டால் ஆழ்வார் இறைவனைத் தொடர்ச்சியாக அடுக்கிப் போற்றுதல் பின்வருமாறு அமையும்.
“நிதியினை, பவளத்தூணை, நினைய வல்லார் கதியினை, அண்டமாளும் மதியினை, மாலை, விதியினை, காற்றினை,
புனலை, தீயை, இலங்கை செற்ற ஏற்றினை, எழில்மணித்திரளை, இன்ப ஆற்றினை, அமுதம் தன்னை, அவுணர்
கூற்றினை, வானோர்க்கு அமுதம் கொண்ட அப்பனை, எம்பிரானை, மாலிருஞ்சோலை மேய மைந்தனை, கேழலாய்
உலகங்கொண்ட பூக்கெழு வண்ணனை, வேட்கை மீதூர விழுங்கினேன்”
என்பது முதல் நான்கு பாசுரங்களின் பொருட்சுருக்கம் ஆகும்.
இடையில் 5-ஆம் பாசுரம் ஒன்று தவிர 6,7,8 ஆகிய  பாசுரங்களிலும் இவ்வகையான தொடர் அடுக்கினைக் காணலாம்.
9 முதல் 11 முடியவுள்ள பாசுரங்கள் இறைவனை முன்னிலைப்படுத்திப் பேசும் முறையில் உள்ளன.
12 முதல் 20 முடியவுள்ள எஞ்சிய பாசுரங்களில் ஆழ்வார் தமது
பலவாறான இறையனுபவங்களைச் சொல்லி இப்பிடபந்தத்தைத் தலைக்கட்டுகிறார்.
இவ்வாறு கூற்றுநிலை மாறுபடினும்  எச்சங்களை வருவித்து அடுக்கிக்கூறும் தொடர்ச்சிப் போக்கு நூல் முழுதும் ஒத்திருக்கின்றது.
எனவே இத்தகையதொரு தனித்தன்மை ஒன்றினால் அறுசீர் விருத்தங்களால் ஆன பிற நூல்களினின்றும் வேறுபடுத்தி
இவை தாண்டகம் என அழைக்கப் பெற்றன போலும். அன்றியும் இசையும் ஒரு காரணமாய் இருந்திருக்கக் கூடும்.
ஆழ்வாரின் தாண்டகங்கள், பெரிய திருமொழியின் இறுதியில் இடம் பெறுகின்றன.
திவ்யபிரபந்தத்தில் இயற்பா நீங்லாக  உள்ள ஏனைய மூன்று ஆயிரங்களும் இசைப்பாக்கள் என்பது இங்கு மனக்கொள்ளத்தக்கது.
திருநெடுந்தாண்டகப் பாசுரம்  ஒன்றில் “நைவளம் ஒன்றாயா நம்மை நோக்கா” என்னும் தொடர் காணப்படுகின்றது. இதில் வரும் நைவளம் என்னும்
பண்ணைக் குறித்துப் பின்வருமாறு விளக்கம் தருவார் பெரியவாச்சான்பிள்ளை.
“கேட்டாரோடும் சொன்னாரோடும்  வாசியற நைவிக்கும் படியான அழகையுடைத்தான பண்ணை நுணுங்கி” என்பது அவர் தரும் விளக்கம். இதனால்,
உள்ளத்தை உருக்கும் அந்தப்பண்ணின் இயல்பினை அறியலாம்.
நைவளம் என்னும் பண் நாட்டக்குறிஞ்சி என்று சொல்கிறார். கண்ணன்
குழலூதும் போது இந்தப் பண்ணை மிக உகந்து குழலூதுவான் என்றும், அதுகேட்ட சேதன, அசேதனப் பொருட்கள் யாவும்
இப்பண்ணில் மயங்கி நிற்கும் என்பார். இப்படிப்பட்ட பண்ணில் பாடி, பரகால நாயகியை (ஆழ்வாரை) ஆட்கொள்ளக்
கண்ணன் வந்தபோதும் பாராமுகமாக ஆழ்வார் இருந்துவிட்டார் என்று இந்தப் பாடலில் பொருள் வருகின்றது. அதாவது
சேதன, அசேதனப் பொருட்களையும் மயக்கவல்ல பண்ணிற்கும் மயங்காமல் என் மனம் கல்லாகிப் போனதே என்ற வருத்தம் தோன்றப் பாடிய பாசுரம்]
ஆழ்வாரின் தாண்டகத்தில் இடம்பெறும் இசை பற்றிய இக்குறிப்பு மட்டுமன்றிக் குரு பரம்பரை கூறும் மற்றொரு செய்தியும் இங்குச் சுட்டத் தகும். திருமங்கையாழ்வார் தாமே தமது திருநெடுந்தாண்டகப் பாசுரங்களைத் திருவரங்கன்
சன்னிதியில் மனமுருகிப் பாடினார் எனக் குருபரம்பரை கூறுகின்றது.
எனவே இவற்றைப் பாடுதற்கென்று அந்நாளிற் பின்பற்றப்பெற்ற ஒருவகை இசைமரபு பற்றியும் இவை, தாண்டகம் எனப்
பெயர் பெற்றிருக்கலாம். அம்மரபினை இன்று நாம் அறியமுடியவில்லை. மேலும் ஒன்று; தாண்டகம் இசைப்பாட்டே
என்றும் அதில் சிறப்பாகக் கையாளப்படும் இலக்கியக்கொள்கை இறைவனிடம் விண்ணப்பம் செய்து கொள்வதற்கு
இசைப்பாட்டைப் பயன்படுத்துவதாகும் என்று கூறுவர். இதுவரைக் கூறிய வற்றால், தாண்டகம் என்பதே தனிவகையான
யாப்பு என்பது புலப்படும். ஆனால், இதுவரை அச்சான திவ்யபிரபந்தப் பதிப்புகளில் திருக்குறுந்தாண்டகம்
அறுசீர்விருத்தமென்னும் திருநெடுந்தாண்டகம் எண்சீர் விருத்தமென்னும் குறிக்கப் பட்டுள்ளன. கால ஓட்டத்தில்
தாண்டகம் பற்றிய கருத்து தமிழ் இலக்கிய உலகில் மறைந்தது போலும்.
எனவே கடந்த நூற்றாண்டு தொட்டு, திவ்யபிரபந்தப் பதிப்பாசிரியர்கள் தாண்டகத்தை ஆசிரிய விருத்தமாகக்
கொண்டுள்ளனர். அவர்தம் கொள்கை இற்றைநாள் திறனிகளுக்குத் தாண்டகத்தைத் தனி யாப்பாக அறிய உதவவில்லை.
தாண்டகம் என்பது ஒருவகை யாப்பே ஆகும். தாண்டக யாப்பினைப் பற்றிய கருத்துகள் தமிழ் இலக்கண ஆசிரியர்களிடம்
மாறுபட்டும் தெளிவின்றியும் காணப்படுவதால் இன்றைய நிலையில் அதனை நாம் முழுமையாக அறிய முடியவில்லை.
‘பாசுரங்களில் எச்சங்களாகத் தொடர்ந்து செல்லும் போக்கு’ அவற்றைப் பாடுதற்குப் பின்பற்றிய ‘ஒருவகை இசை மரபு’
ஆகிய தனித்தன்மைகளால் தாண்டக யாப்பு முன்னாளில் வேறுபடுத்தி அறியப்பட்டிருக்கலாம்.
 அவை பற்றிய விளக்கமான குறிப்புகள் இன்று நமக்குக் கிடைக்கவில்லை. தாண்டக யாப்பினைத் தனியே கருத்திற் கொள்ளாமல்
திருக்குறுந்தாண்டகம் அறுசீர் விருத்தமென்றும், திருநெடுந்தாண்டகம் எண்சீர் விருத்தமென்றும் திவ்யப்ரபந்தப்
பதிப்பாசிரியர் சிலர் யாப்புவகை காட்டியது பொருத்தமாகத் தோன்றவில்லை.
திருமங்கையாழ்வார், திருநாவுக்கரசர் ஆகியோரது தாண்டகங்களுக்குப் பிறகு தமிழில் தாண்டக இலக்கியங்கள்
தோன்றவில்லை. எனவே, தமிழில் பிற்றைநிலை வளர்ச்சி பெறாத ஓர் இலக்கிய வகையாகத் திகழ்வது தாண்டகம் எனலாம்.

திருநாவுக்கரசர் பாடிய திருத்தாண்டகங்களுக்குள் கிடைக்கப்பெற்றனவற்றுள் முதலாகப் பாடப்பெற்ற பதிகம் 

மறுமாற்றத் திருத்தாண்டகம்‘ (6.98).

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
.. நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
.. இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
.. சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
.. கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.–6.98.1

வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்
.. வெய்ய வினைப்பகையும் பைய நையும்
எம்பரிவுந் தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்
.. எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்
அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி
.. அனலாடி ஆன்அஞ்சும் ஆட்டு கந்த
செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்
.. செவ்வான வண்ணரென் சிந்தை யாரே.-6.95.2

சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
.. தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
.. மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
.. ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
.. அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே.–6.95.10

அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும் மடி
.. அழகெழுத லாகா அருட்சே வடி
சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்த வடி
.. சோமனையுங் காலனையுங் காய்ந்த வடி
பெரும்பித்தர் கூடிப் பிதற்றும் மடி
.. பிழைத்தார் பிழைப்பறிய வல்ல வடி
திருந்துநீர்த் தென்கெடில நாடன் னடி
.. திருவீரட் டானத்தெஞ் செல்வன் னடி.–6.6.4-

—-
தருமை ஆதீனம் வெளியிட்ட ஆறாம் திருமுறை உரைநூலின் முன்னுரைகளில் காண்பது:

“…..நாவரசர் அருளிய தேவாரம் நம்மை இறைவன் திருவருளிலே அழுந்தச் செய்யும் மந்திரங்கள்.

தேவாரத் திருமுறைகள் பண்ணாங்கம்சுத்தாங்கம் என இரண்டு பிரிவுகள் உடையன.

அவற்றுள் பண்ணாங்கம் தாள அமைப்புடன் கூடிய பதிகங்களாகும்திருநாவுக்கரசர் தேவாரத்தில் திருவிருத்தம்திருத்தாண்டகம் ஆகியன சுத்தாங்கமாகப் பாடுவதற்கு உரியன. …. …

திருவிருத்தம் நான்காம் திருமுறையில் அமைந்துள்ளது.

திருத்தாண்டகம் ஆறாம் திருமுறையாக விளங்குகிறது.

பன்னிரு திருமுறைகளில் தாண்டகம் என்ற யாப்பு வகையில் திருமுறை அருளியவர் திருநாவுக்கரசு சுவாமிகளே ஆவார்.

அதனால் இவர் தாண்டக வேந்தர்தாண்டகச் சதுரர் எனப் போற்றப்படுகிறார்.

இறைவன் புகழை விளங்க விரித்துரைக்கும் முறையில் தாண்டக யாப்பு வகை இவருக்குப் பெரிதும் துணை செய்துள்ளது. …..”

பெரிய புராணத்தில்:
நாமார்க்குங் குடியல்லோ‘ மென்றெடுத்து நான்மறையின்
கோமானை நதியினுடன் குளிர்மதிவாழ் சடையானைத்
தோமாலைச் செந்தமிழின் செழுந்திருத்தாண் டகம்பாடி
யாமாறு நீரழைக்கு மடைவிலமென் றருள்செய்தார்.

தேமாலைச் செந்தமிழின் செழுந் திருத்தாண்டகம் – திருத்தாண்டகப் பதிகத்தைப் பற்றிக் கூறநேர்ந்த இடம் இதுவே முதலாதலின் அதன் தன்மையை இவ்வாறு விரித்தனர்.

தேம் – சொல்லினிமையும் ஓசையினிமையும்,

மாலை – ஒரு பாட்டினுள்ளே பல பெயரும் தொடர்ந்துவந்து ஓரிடத்து முடிபுறும் தன்மையும்,

செந்தமிழ் – நிரம்பிய தமிழினிமையும்,

இன் – பொருளினிமையும்,

செழுமை – பயனினிமையும்,

திரு – இறைவனது தன்மை பற்றிய நிலையும்,

தாண்டகம் – யாப்பும் பண் வகையும் உணர்த்தின.

இங்குக் கூறிய அடைமொழிகள் தாண்டகங்கட்குப் பொதுவாகவும்இப்பதிகத்துக்குச் சிறப்பாகவும் உரியன.

தேவாரத்தினைத் தாண்டகச் செய்யுளால் திருநாவுக்கரசர் ஒருவரே யருளியிருத்தலால் அவர்க்குத் தாண்டக வேந்தர் என்று பெயராயிற்று.


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -12–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

July 6, 2022

ஆவியயை யரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால்,

தூய்மையில் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம்,

பாவியேன் பிழைத்தவாறு என் என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று

காவி போல் வண்ணர் வந்தென் கண்ணுளே தோன்றினாரே.–12-

 

பதவுரை

ஆவியை

உலகங்கட்லெல்லாம் ஓருயிராயிருப்பவனும்
அரங்கம் மாலை

திருவரங்கத்தி லுள்ளவனுமான எம்பேருமானைக் குறித்து,
அழுக்கு உடம்பு எச்சில் வாயால்

இவ் வழுக்குடம்பின் எச்சில் வாயினால்
தூய்மை இல் தொண்ட நான்

அபரிசுத்தனும் கண்ட விடங்களில் தொண்டு பட்டவனுமான நான்
தொல்லை நாமம்

அநாதியான திருநாமங்களை
சொல்லினேன்

சொன்னேன்;
பாவியேன் பிழைத்த ஆறு என்று அஞ்சினேற்கு

பாவியான நான் பிழை செய்த விதம் என்னே!“ என்று அநுதாபமுற்ற வெனக்கு
அஞ்சல் என்று

அபயமளித்து
காவி போல்

கருங் குவளை நிறத்தரான
வண்ணர் வந்து என் கண் உள்ளே தோன்றினார்

என் கண்களினுள்ளே ஸேவை ஸாதித்தார்.

பரம புருஷனான எம்பெருமானை மிகவும் அபரிசுத்தனான நான் எனது எச்சில் வாயால் ஸங்கீர்த்தனம் பண்ணி ‘

ஐயோ! இப்படி அபசாரப்பட்டோமே!‘ என்று அஞ்சின என்னுடைய அச்சம் தீர

அப்பெருமான் வந்து என் கண்ணுள்ளே தோன்றி அபயமளித்தானென்கிறார்.

ஆவியை – “ஓருயிரேயோ உலகங்கட்கெல்லாம்” என்கிறபடியே அனைத்துலகுக்கும் பிராணனாயிருப்பவன் எம்பெருமான்.

இப்படிப்பட்டவனை யன்றோ என்னுடைய எச்சில் வாயில் கொண்டு கெடுத்தேனென்கை.

(அரங்கமாலை) கண்ணுக்குத் தோன்றாதபடி நிற்கிற உயிர் போலன்றியே எல்லாருங் காணலாம்படி

திருவரங்கம் பெரிய கோயிலிலே காட்சி தந்து

ஆச்ரிதர் பக்கலில் வியாமோஹமே வடிவெடுத்தவன் போலிருக்கிற எம்பெருமானையன்றோ நான் தூஷித்தேனென்கை.

தூஷிக்கையாவது எச்சில் வாயிற் கொள்ளுகை. அதனைச் சொல்லுகிறார். அழுக்குடம்பேச்சில் வாயால் என்று.

கண்டவர்களின் காலிலும் விழுந்து உடம்பு அழுக்காயிற்று;

கண்டவர்களையும் தோத்திரம் பண்ணி வாய் எச்சிலாயிற்று.

‘ஐயோ! தப்பாக இவை செய்தோம்‘ என்கிற அநுதாபமு மில்லாமையாலே தூய்மையற்ற தொண்டனாயினேன்.

இப்படிப்பட்ட நான். இவ்வழுக் குடம்பிலமைந்த எச்சில் வாயினால் (சொல்லினேன் தொல்லைநாமம்)

‘தொல்லை நாமம்‘ என்றது – அநாதிகாலமாக நித்யஸூரிகள் முதலானார்க்கு ஜீவனமாயிருக்கின்ற திருநாமம் என்றபடி.

பல பெரியோர்களுக்கு உதவும் படியான வஸ்துவை அநியாயமாக நான் வாய் வைத்துக் கெடுத்து விட்டேனே!,

இனி அவர்கள் எங்ஙனே ஜீவிக்கப் போகிறார்கள்! என்று நைச்யாநுஸந்தானமாகப் பேசுகிறபடி.

தொல்லை நாமங்களை அழுக்குடம்பெச்சில் வாயால் நான் சொன்னது மாத்திரமன்றியே

”நானுஞ் சொன்னேன் நமருமுரைமின்“ என்று நமர்களையும் சொல்லுவித்தன்றோ கெடுத்தேன்;

ஆ ஆ! என்ன அபசாரப்பட்டோம்!, என்ன அபசாரப்பட்டோம்!!, இனி நமக்கு உய்யும் வழியுண்டோ?” என்று

நான் அஞ்சினவளவிலே

‘ஆழ்வீர்! அஞ்சவேண்டா‘ என்று வடிவழகைக் காட்டி மருந்தை யிட்டுப் பொருந்தவிட்டான் எம்பெருமான் என்றாராயிற்று.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -20–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 23, 2021

வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும்
தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை
மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்தும்
ஊன மதி இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே-20-

பதவுரை

வானவர் தங்கள் கோனும்–தேவேந்திரனும்
மலர்மிசை அயனும்–பூவிற் பிறந்த பிரமனும்
நாளும்–நாள் தோறும்
தே மலர் தூவி–தேன்மிக்க புஷ்பங்களைப் பணிமாறி
ஏத்தும்–துதிக்கும் படியாக வுள்ள
சே அடி–செவ்விய திருவடிகளை யுடையனாய்
செம் கண்–செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையனான
மாலை–ஸர்வேச்வரனைக் குறித்து,
மானம் வேல்–பெருமை தங்கிய வேற் படையை யுடையரான
கலியன்–திருமங்கையாழ்வார்
சொன்ன–அருளிச்செய்த
வண் தமிழ் – செந்தமிழினாலாகிய
மாலை நாலைந்தும்–இப்பாசுரமிருபதையும்
ஊனம் அது இன்றி–குறையொன்று மில்லாமல்
வல்லார் தாம்–கற்று வல்லவர்கள்
ஒளி விசும்பு–பரமபதத்தை
ஆள்வர்–ஆளப்பெறுவர்

தேவர்கட்கு இறைவனான இந்திரனும் திருநாபிக் கமலத்தில் தோன்றிய நான் முகக் கடவுளும்
இடைவிடாது நன் மலர்களைப் பணிமாறி ஸ்துதிக்கப் பெற்றிருக்கின்ற
செங்கண்மால் விஷயமாகக் கொற்ற வேற் பரகாலன் கலியன் சொன்ன இவ்விருபது பாசுரங்களையும்
ப்ரயோஜநாந்தரங்களை விரும்புதலாகிற ஊனமின்றியே அநந்யப்ரயோஜநராய்க்
கற்று வல்லவர்கள் தெளிவிசும்பான திருநாட்டை ஆளப் பெறுவர்களென்று
பயனுரைத்துத் தலைக் கட்டினாராயிற்று.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -19–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை திரி தந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே –19-

பதவுரை

பிண்டி ஆர் மண்டை ஏந்தி–உளுத்த பொடிகள் உதிருகிற தலை யோட்டைக் கையிலேந்திக் கொண்டு
பிறர் மனை–அயலாருடைய வீடுகளிலே
திரி தந்து–திரிந்து (பிச்சை யெடுத்து)
உண்ணும்–ஜீவித்த
முண்டியான்–மொட்டையாண்டியான ருத்ரனுடைய
சாபம்–ப்ரஹ்ம ஹத்தி சாபத்தை
தீர்த்த–போக்கின
ஒருவன்–அத்விதீயனான் எம்பெருமானுடைய
ஊர்–திருப்பதிகளாய்
உலகம் ஏந்தும்–உலகத்தவர்களால் கொண்டாடப்பட்டன வாயு முள்ள
கண்டியூர்–திருக்கண்டியூரென்ன
அரங்கம்–திருவரங்கமென்ன
மெய்யம்–திருமெய்யமென்ன
கச்சி–திருக்கச்சியென்ன
பேர்–திருப்பேர்நகரென்ன
மல்லை–திருக் கடன்மல்லை யென்ன
என்று–ஆகிய இத் திருப்பதிகளைப் பேசிக் கொண்டு
மண்டினார்–அவகாஹிக்குமவர்கள்
உய்யல் அல்லால்–உஜ்ஜீவிக்கலாமத்தனை யொழிய
மற்றையார்க்கு–அல்லாதவர்களுக்கு
உய்யல் ஆமே–உஜ்ஜீவிக்க வழியுண்டோ? (இல்லை)

எம்பெருமானுகந்தருளின திவ்ய தேசங்களிலெங்கும்
“பதியே பரவித் தொழுந்தொண்டர்“ என்னும்படியாக அவகாஹித்திருக்கும் அவர்கள்
உஜ்ஜீவிக்க வழியுண்டே யல்லது அல்லாதவர்களுக்கு ஒருநாளும் உஜ்ஜீவிக்க வழியில்லை யென்கிறார்.
வேதமானது எம்பெருமானை உள்ளபடி யறிந்தார்க்கல்லது உய்ய விரகில்லை யென்றது.
அதனை மறுத்து, திவ்ய தேசங்களிலீடுபடுவார்க்கன்றி மற்றையோர்க்கு உய்ய வழி யில்லை யென்கிறாரிவ்வாழ்வார்.

“உண்ணும் முண்டியான்“ ‘உண்ணும் உண்டியான்“ என்பன பாட பேதங்கள்
உண்டி-உணவு; பிச்சை யெடுத்து உண்ணப் பட்ட உணவை யுடையவன் என்றபடி.

“இளைப்பினையியக்கம் நீக்கி“ என்ற கீழ்ப்பாட்டிற்படியே
வீணாக க்லேசப்படாதே
“காம்பறத் தலை சிரைத்து உன் கடைத்தலை யிலிருந்து வாழுஞ் சோம்பரை யுகத்திபோலுஞ் சூழ் புனலரங்கத்தானே!“
என்கிறபடியே திவ்ய தேசாநுபவமே போது போக்காக இருப்பவர்கட்கே
எம்பெருமானுடைய அநுக்ரஹம் அளவற்றிருக்கு மென்றதாயிற்று.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -18–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

எம்பெருமானை ஸ்வ ப்ரயுத்நத்தால் காண விரும்பும் அவர்களின் விருப்பம்
ஒரு நாளும் கை கூடா தென்கிறார்.

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18-

பதவுரை

இளைப்பினை இயக்கம் நீக்கி–க்லேசங்களினுடைய ஸஞ்சாரத்தைத் தவிர்த்து (ஓர் ஆஸனத்தில்)
இருந்து–அசைவின்றி யிருந்து
முன் இமையை கூட்டி–மேல் இமையைக் (கீழிமையோடே) சேர்த்து
அளப்பு இல் ஐம்புலன் அடக்கி–அளவிறந்த பஞ்சேந்திரியங்களைப் பட்டி மேய வொட்டாதபடி தடை செய்து
அவர் கண்–எம்பெருமான் விஷயத்திலே
துளக்கம் இல் சிந்தை நெய்து அன்பு வைத்து–இடை வீடில்லாத ஸ்ம்ருதி ஸந்ததி ரூபமான பக்தியைப் பண்ணி
ஆங்கு–அந்த நிலைமையிலே
சுடர் விட்டு தோன்றலும்–ஜ்வலித்துக் கொண்டு தோன்றுமளவிலே
விளக்கினை–விளக்காகிய எம்பெருமானை
விதியில்–சாஸ்திர விதிப்படியே
காண்பார்–காண வேணுமென்றிருக்கிற உபாஸகர்கள்
மெய்ம்மையே–உள்ளபடியே
காண்கிற் பாரே–காண வல்லவராவரோ? (காணகி்ல்லார் என்றபடி)

இளைப்பினை இயக்கம் நீக்கி =
இளைப்பாவது க்லேசம்; க்லேசமாவது ஐவகைப்படும்.-
க்லேசமிதா ராகத்வேஷாபிநிவேசா‘ க்லேசா“ என்று பாதஞ்சல தர்சனத்தில் சொல்லப்பட்டது;
அவித்யை யாவது அஜ்ஞாநம்.
அஸ்மிதையாவது அஹங்காரம்.
ராகமாவது இச்சா விசேஷம்;
த்வேஷமாவது பகை;
அபிநிவேசமாவது மரண பயம். (என்று குஸுமாஞ்சலியில் விவரணம் செய்யப்பட்டுள்ளது.)

ஆக இப்படிப்பட்ட க்லேசங்களின் ஸஞ்சாரத்தைத் தவிர்த்து (இருந்து) காற்றாடி போலே
எப்போதும் பறந்து கொண்டே யிருக்குமியல்வினர்க்கு ஓரிடத்தே யிருப்பது அருமை யாகும்;
அப்படிப்பட்ட அருந்தொழிலாகிய இருப்பைச் செய்து

(முன்னிமையைக்கூட்டி)
ஒரு திக்கையும் நோக்காமல் தன் மூக்கின் நுனியையே நோக்கிக் கொண்டிருக்க வேணுமென்று
சொல்லி யிருக்கிறபடி செய்து என்றவாறு. மேலிமையைக் கீழிமையோடு சேர்த்தலே இந்த நிலைமையாகும்.

(அளப்பில் ஐம்புலனடக்கி)
அளவில்லாத விஷயாந்தரங்களிலே பட்டி மேயக் கூடிய பஞ்சேந்திரியங்களை உள் விஷயத்தோடே நிற்கும் படிசெய்து.

(அன்பு அவர் கண்ணே வைத்துத் துளக்கமில் சிந்தை செய்து)
தைல தாரை போலே அவிச்சிந்ந ஸ்ம்ருதி ஸந்தான ரூபமான பக்தியை பகவத் விஷயமாகப் பண்ணி என்றவாறு.

(ஆங்கே சுடர் விட்டுத் தோன்றலும் இத்யாதி)
ஆக விப்படிப் பட்ட முறையிலே ஜாஜ்வல்ய மாநமாய்க் கொண்டு தோன்றுகிற ஞானத்தாலே
வேத விளக்காகிய எம்பெருமானை சாஸ்திரங்களில் விதித்தபடியே உபாஸனை பண்ணி
ஸாக்ஷாத்கரிக்க வேணுமென்று பெரு முயற்சி செய்பவர்கள் அவனை மெய்யாகக் காண முடியுமோ?

அப்பெருமான் தானே தனது நிர்ஹேதுக க்ருபையினால் தன்னைக் காட்டிக் கொடுத்தருளினால் காணலாமத்தனை யொழிய
ஊன் வாட வுண்ணாதுயிர் காவலிட்டு உடலிற் பிரியாப் புலனைந்தும் நொந்து தாம் வாட வாடத்
தவஞ் செய்கையாகிற ஸ்வ ப்ரயத்நங்களாலே அவனை ஸாக்ஷத்கரிக்கை எளிதோ? என்றாராயிற்று.

“பெண்ணுலாஞ் சடையினானும் பிரமனுமுன்னைக் காண்பான், எண்ணிலா வூழியூழி தவஞ் செய்தார் வெள்கிநிற்ப,
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கன்றருளை யீந்த“ என்கிறபடியே
பல்லூழி யூழிகாலமாகத் தவம் புரிந்து வருந்தி நின்றவர்களெல்லாம் வெட்கப்பட்டு நிற்கும்படியாக
ஸ்ரீ கஜேந்திராழ்வான் போல்வார் திறத்திலே பரம க்ருமை செய்தருள்பவனான எம்பெருமானுடைய
ஸ்வபாவத்திற்கு இணங்க இப் பாட்டுக்கு இங்ஙனே உரையிடுதல் மிகப் பொருந்தும்.

பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் இங்ஙனே விரிவாக உரையிட்டருளின பின்,
“அதவா,
இப்படி யோக சாஸ்த்ரத்தில் சொல்லுகிறபடியே உபாஸித்துக் காண்பார்க்குக் காணலாமென்றுமாம்“ என்கிற
மற்றொரு நிர்வாஹமும் அருளிச் செய்யப்பட்டுள்ள காண்க.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -17–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

எம்பெருமானுடைய பெருமையைப் பேசுகின்ற பக்தர்களும் நல் வீடு பெறுகிறார்கள்;
அப்பெருமானை ஏசுகின்ற சிசுபாலாதிகளும் நல் வீடு பெறுகிறார்களென்று சாஸ்திரங்களினால் தெரிகின்றது;
இவ்விரு வகுப்பிலும் எனக்கு அந்வயமில்லை;
எம்பெருமானுடைய பெருமையை அறிவிலியான நான் என்ன பேசப் போகிறேன்; என்னால் பேச முடியுமோ?
முடியாததால் * பேருளான் பெருமை பேசிப் பிறவி நீத்தாருடைய கோஷ்டியிலே அந்வியக்கப் பெற்றிலேன் நான்.

இனி, சிசுபாலாதிகளைப்போலே ஏசி உய்ந்து போகலாமோ வென்னில்,
ஏசிப் பெறும் மோக்ஷம் எனக்கு வேண்டா; மோக்ஷம் போகாமல் நரகம் போனாலும் போகிறேன்,
எம்பெருமானை ஏசாதிருந்தேனாகில் போதும்;
சிசுபாலாதிகளின் செயலும் எனக்கு வேண்டா; அவர்கள் பெற்ற பேறும் எனக்கு வேண்டா;

ஆக இரண்டு வகையாலும் மோக்ஷம் பெறுவதற்கு ப்ராப்தியில்லை யாயிற்று;
ஆயினும், மோக்ஷம் பெற வேணுமென்கிற ஆசையோ அபாரமாகவுள்ளது;
அவனுடைய வடிவழகு என்னைத் துவக்குகின்றது, என் செய்வே னென்கிறார்.

பேசினார் பிறவி நீத்தார் பேருளான் பெருமை பேசி
ஏசினர் உய்ந்து போனார் என்பது இவ் உலகின் வண்ணம்
பேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தேற்கு
ஆசையோ பெரிது கொள்க அலைகடல் வண்ணர் பாலே–17-

பதவுரை

பேர் உளான்–திருப்பேர் நகரில் எழுந்தருளி
பெருமை–பெருமையை
பேசினார்–பேசினவர்கள்
உய்ந்து போனார்–உஜ்ஜீவித்தார்கள்.
என்பது–என்று சொல்வது
இ உலகின் வண்ணம்–சாஸ்த்ர மர்யாதையாகும்;
பேதையேன்–அறிவு கேடனான நானோவென்
பேசியேன்–(அவன் பெருமையைப் பேச வல்லவனொ!)
ஏச மாட்டேன்–(சிசுபாலாதிகளைப் போலே) ஏசவும் மாட்டேன்;
பிறவி நீத்தார்–ஸம்ஸாரத்தைக் கடந்து முக்தரானார்கள்;
பேசி ஏசினார்–அப் பெருமையைப் பேசிப் பரிஹஸித்த சிசுபாலாதிகளும்
பிறவி நீத்தற்கு–இந்த ஸம்ஸாரத்தை விட்டு நீங்குதற்கு
அலை கடல் வண்ணர் பால்–அலை யெறிகின்ற கடல் போன்ற நிறத்தனான எம்பெருமான் விஷயத்திலே
ஆசையோ பெரிது–ஆதரமோ அதிகமாயிருக்கின்றது;
கொள்க–இதனை உணர்க.

(பேருளான் பெருமை பேசினார் பிறவி நீத்தார்)
‘அப்பக்குடத்தான் ஸந்நிதி என்று ப்ரஸித்த பெற்ற திருப்புர் நகர் ஒன்றைச் சொன்னது
மற்றெல்லாத் திருப்பதிகட்கும் உப லக்ஷணம்.
திருப்பேர் முதலான திவ்ய தேசங்களில் நித்ய ஸந்நிதி பண்ணி யிருக்குமவனான எம்பெருமானுடைய
பெருமையைப் பேசுமவர்கள் உஜ்ஜீவித்தமைக்கு உதாரணம் காட்ட வேணுமோ?

(ஏசினார் உய்ந்து போனார்)
‘ஏசினாரும்‘ என்று உம்மை தொக்கிற்றாகக் கொள்க.
“கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்,
பற்றி யுரலிடை யாப்பு முண்டான் பாவிகாள் உங்களுக்கேச்சுக் கொலோ“ என்று ஆண்டாள் வயிறெரிந்து
பேசும்படியாக தூஷித்தவர்களில் தலைவனான சிசுபாலன் முதலானவர்கள் ‘ஏசினார்‘ என்பதாற் கொள்ளப்படுவர்;

வைகிறவனுக்கும் பேர் சொல்லி வைய வேண்டி யிருப்பதால் ஏதேனுமொரு படியாலே
நம்முடைய திரு நாமத்தைச் சொன்னானென்று கொண்டு எம்பெருமான் ஏசுகிறவர்களுக்கும் நற் கதி நல்குவதுண்டு.
சிசுபாலனுக்கு மோக்ஷங்கிடைத்தென்பதைப் பராசர மஹர்ஷி பகர்ந்து வைத்தார், என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம்.
‘கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும், சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன்,
திருவடி தாட்பாலடைந்த“ என்றார் நம்மாழ்வாரும்.

என்பது இவ்வுலகின் வண்ணம் =
லோகமென்கிற சொல்லால் சாஸ்த்ரத்தைவ் சொல்லுகிற வழக்கமுண்டு.
“எல்லீரும் வீடுபெற்றால் உலகில்லை யென்றே“ என்ற திருவாய்மொழி வியாக்கியானங்களிலும்,
ஆளவந்தார், ஸ்தோத்ர வியாக்யானங்களிலுங் காணலாம்.
ஆகவே இங்கு உலகின் வண்ண மென்று சாஸ்த்ர மர்யாதையைச் சொன்னபடி.
(சாஸ்த்ரமறிந்த) உலகத்தவர்கள் சொல்லுவார்கள் என்று பொருள் கொண்டாலுங் கொள்ளலாம்.

பேசினேன் –
எம்பெருமானுடைய பெருமையை நான் பேசினேனென்பதாகப் பொருள்படுவதன்று;
‘ஆ! நாம் வெகு நன்றாகப் படித்து விட்டோம் என்றால், படிக்கவில்லை யென்று பொருளாவது போல
இங்கும் எதிர் மறையாகக் கொள்ளத்தக்கது.
எம்பெருமான் பெருமையைப் பேச வல்ல அதிகாரி நானோ என்று இழித்துச் சொல்லுகையில் திருவுள்ளம்.

இங்கே வியாக்யான ஸ்ரீஸூக்தி காண்மின்;-
‘உண்ணப் புக்கு மயிர்ப் பட்டு அழகிதாக உண்டெனென்னுமா போலே“ என்பதாம்.
ஏச மாட்டேன் – ஏசி்ப் பெறக்கூடிய மோக்ஷம் வேண்டா என்றபடி.

மோக்ஷம் பெறுவதற்கு இரண்டு வழிகளே சாஸ்த்ரங்களிற் காண்கின்றன;
எம்பெருமானது பெருமைகளைப் பேசியாவது மோக்ஷம் பெற வேணும்,
சிசுபாலதிகளைப் போலே ஏசியாவது மோக்ஷம் பெற வேணும்;
எனக்கோ பேசத் தெரியாது; ஏசவோ இஷ்டமில்லை; அந்தோ! இழந்தேபோமித்தனையோ.
மோக்ஷம் பெற வேணுமென்கிற ஆசையோ அளவு கடந்திருக்கின்றது! நான் செய்வதேன்? என்றதாயிற்று.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -16–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

கீழ்ப்பாட்டிலே திருமஞ்சனம் பண்ணினார்;
இப்பாட்டிலே திருமாலை சூட்டுகிறார்.
முன்னடிகளிலே எம்பெருமானுடைய நான்கு அவதாரங்களைக் குறிக்கிறார்;
“மாயமான் மாயச் செற்று“ என்றதனால் ஸ்ரீராமாவதாரம்;
“மருதிறநடந்து“ என்றதனால் ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம்.
“வையம்தாய்“ என்றதனால் ஸ்ரீ திரிவிக்ரமாவதாரம்.
“அம்மா பரவைபொங்கத் தடவரை திரித்து வானோர்க்கீயும்“ என்றதனால் ஸ்ரீ கூர்மாவதாரம்.

மாயமான் மாயச் செற்று மருது இற நடந்து வையம்
தாய மா பரவை பொங்கத் தடவரை திரித்து வானோர்க்கு
ஈயுமால் எம்பிரானார்க்கு என்னுடைச் சொற்கள் என்னும்
தூய மா மாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேனே -16-

பதவுரை

மாயம்–மாயச் செய்கையை யுடைய
மான்–மாரீசனாகிற மான்
மாய–முடியும்படி
செற்று–கொன்றவனாயும்
மருது–(இரட்டை) மருத மரங்கள்
இற–முறிந்து விழும்படி
நடந்து–நடை கற்றவனாயும்
வையம் தாய்–(த்ரிவிக்ரமனாகி) உலகங்களை யளந்து கொண்டவனாயும்
அப்படி–அப்படிப்பட்ட
மா–பெரிதான
பரவை–கடலானது
பொங்க–பொங்கும் படியாக
தட வரை–பெரிதான மந்தர பர்வதத்தை
திரித்து–சுழலச் செய்து
(அமுதமெடுத்து)
வானோர்க்கு–தேவர்களுக்கு
ஈயும்–கொடுத்தவனாயுமுள்ள
மால்–ஆச்ரித வ்யாமோஹ சாலியான
எம் பிரானாருக்கு–எம்பெருமானுக்கு
சொற்கள் என்னும்–வாய்மொழிகளாகிற
தூய–பரிசுத்தமான
மா மாலை கொண்டு–சிறந்த மாலையைக் கொண்டு
தொண்டனேன்–அடியேன்
சூட்டுவேன்–சூட்டுவேன்

முன்பே விச்வாமித்ரருடைய யாகத்தில் மாரீசனை உயிர் மாய்த்திருக்க வேணும்;
அப்போது விட்டிட்டதனாலன்றோ இப்போது இவ்வநர்த்தம் விளைக்க வந்தானென்று
உயிர் மாயத் தொலைத்தானாயிற்று.

பொய்ம் மாய மருதான அசுரரை -பெரியாழ்வார்

வையம் தாய் = ‘தாய்‘ என்றது தாவி யென்றபடி.
“பாயோரடி வைத்ததன் கீழ்ப் பரவை நிலமெல்லாந் தாய்“ என்ற திருவாய்மொழியுங் காண்க.

“அம்மா“ என்பது அமா எனத் தொகுத்தலாயிற்று.

ஆக இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு எனது தமிழ்ப் பாசுரங்களாகிய தூய மா மாலையைக் கொண்டு
சூட்டுவேனென்றாயிற்று.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -15–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

எம்பெருமானை நீராட்டுதல் பூச்சூட்டுதல் முதலிய வழிபாடுகளால் நேராக
உகப்பித்து உய்ந்தாள் யசோதைப் பிராட்டி;
அவள் செய்த படிகளை அநுகரித்துப் பேசி உய்ந்தார் பெரியாழ்வார்;
இவ் வாழ்வார் தாமும் அங்ஙனே சில வழிபாடுகள் செய்யப் பெறவேணுமென்று பாரித்து
மாநஸிகமாகவே நீராட்டுதலும் பூச்சூட்டுதலுஞ் செய்து மகிழ்கிறார் இப் பாட்டிலும் மேற் பாட்டிலும்.

முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே –15-

பதவுரை

முன்-முன் பொருகால்
பொலா–பொல்லாதவனான
இராவணன் தன்–இராவணனுடைய
முது மதிள் இலங்கை–வலிய மதிள்களை யுடைத்தான இலங்கா புரியை
வேவித்து–சுடுவித்து
அனுமன்–சிறிய திருவடி
அன்பினால் வந்து–மகிழ்ச்சியுடனே வந்து
ஆங்கு–கிஷ்கிந்தையாலே
அடி இணை பணிய–உபய பாதங்களையும் தொழும்படியாக
நின்றாற்கு–நின்ற பெருமானுக்கு
அடியனேன்–அடியேன்
என்பு எலாம்–எலும்பெல்லாம்
உருகி–உருகி
உக்கிட்டு–இற்றுப் போய்
என்னுடை–என்னுடைய
நெஞ்சம் என்னும்–நெஞ்சென்று சொல்லப் படுகிற
அன்பினால்–ஆர்வத்தினால்
ஞானம் நீர் கொண்டு ஆட்டுவன்–ஞானமாகிற தீர்த்தத்தைக் கொண்டு திருமஞ்சனம் செய்வேன்.

எம்பெருமான் பரம ஸந்தோஷமாக எழுந்தருளியிருந்த ஒரு ஸமய விசேஷத்தை யெடுத்துரைத்து
அந்த நிலைமையிலேயே நீராட்டங் கொண்டருளச் செய்கிற னென்கிறார்.
பிராட்டியிருக்கும் இடத்தைத் தேடித் தெரிந்து வருமாறு ஸ்ரீராமபிரானால் நியமித்து விடுக்கப்பட்ட
வாநர முதலிகளிலே தலைவரான சிறிய திருவடி இலங்கையிலே வந்து கண்டு

அப்பிராட்டி கையிலே “இத்தகையாலடையாளமீதவன் கை மோதிரமே“ என்று
ஸ்ரீராம நாமாங்கிதமான மோதிரத்தைக் கொடுத்து, சூடாமணியையும் பெற்று,

‘எதிரிகளி்ன் வலிமை எப்படிப்பட்டது? என்று பெருமாள் கேட்டால் அது தெரியாதென்று சொல்ல
வொண்ணாதாகையால் அதையும் தெரிந்து கொண்டு செல்வோமென்று கருதி அதற்காகச்
சில சேஷ்டிதங்களைச் செய்து தன் வாலில் நெருப்பாலே இலங்கையைச் சுடுவித்து

“கண்டேன் சீதையை“ என்று மீண்டு வந்து விண்ணப்பஞ்செய்த ஸமயத்திலே
ஆனந்தக் கடலிலே ஆழ்ந்துகிடந்த பெருமாளுக்கு, அந்நிலையை நினைத்து ஈடுபட்டவனாகி,
அப்படிப்பட்ட எம்பெருமான் விஷயமான ப்ரேமமே எனது நெஞ்சாக வடிவெடுத்திருப்பதனால்
என்னுடைய நெஞ்ச மென்னு மன்பினால் ஞானமாகிற திருமஞ்சனத்தால் நீராட்டுவேன் என்கிறார்.

தீர்த்தத்திற்குப் பரிமள த்ரவ்யம் ஸம்ஸ்காரமாவது போல் இங்கு ஞான நீருக்கு அன்பு ஸம்ஸ்காரமாகக் கொள்ளப்பட்டது.
இதனால் மாநஸிகமான திருமஞ்சனத்தைனச் சொன்னவாறு.

“முன் = அதுவுமொரு காலமே! என்று வயிறு பிடிக்கிறார்“
என்ற வியாக்யமான ஸ்ரீஸூக்தி உணரத்தக்கது.

பொலா – பொல்லா என்றபடி தொகுத்தல்
* சுரி குழற் கனிவாய்த் திருவினைப் பிரிந்த கொடுமையிற் கடுவிசை யாக்கனாகையாலே பொல்லாதவன்
என்ற பொதுவிலே கொடுமையிற் கடுவிசை யரக்கனாகையாலே பொல்லாதவன் என்று பொதுவிலே
சொல்லாமத்தனை யொழியப் பிரித்துப் பாசுரமிடப் போகாதென்க.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -14–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

கீழ்ப் பாட்டில் “கரும்பினைக் கண்டுகொண்டு என் கண்ணினை களிக்கு மாறே“ என்று
ஆனந்த பரவசராய்ப் பேசினவர்,
ஐயோ! பழுதே பல பகலும் போயினவே யென்று கழிவிரக்கங்கொண்டு,
கீழ் நாள்களெல்லாம் வாளாவிருந்தொழிந்து பாவியானேனெயென்று முடி மேல் மோதிக் கொள்ளுகிறார்.

காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி நாளும்
பாவியேனாக எண்ணி அதனுள்ளே பழுத்து ஒழிந்தேன்
தூவி சேர் அன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை
பாவியேன் பாவியாது பாவியேன் ஆயினேனே –

பதவுரை

காவியை–கரு நெய்தல் மலரை
வென்ற–தோற்பித்த
கண்ணார்–கண்களை யுடையரான மாதர்களினது
கலவியே–கலவியையே
கருதி–நினைத்துக் கொண்டு
நாளும்–அநாதி காலமாக
பாவியேன் ஆக எண்ணி–மஹா பாபியாகும்படி மநோ ரதித்து
அதனுள்ளே–அந்தப் பாவப் படு குழியிலேயே
பழுத்தொழிந்தேன்–பரி பக்குவனாய் விட்டேன;
தூவி சேர்–(அழகிய) சிறகையுடைய
அன்னம் மன்னும்–அன்னப் பறவைகள் பொருந்தி வாழ்கிற
சூழ் புனல்–சுற்றிலும் ஜல ஸம்ருத்தியை யுடைத்தான
குடந்தை யானை–திருக்குடந்தைக்குத் தலைவனான எம்பெருமானை
பாவியேன்–பாவியான நான்
பாவியாது–சிந்தியாமல்
பாவியேன் ஆயினேன்–(மேலும்) மஹா பாபியானேன்.

“கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி, நீண்ட வப்பெரியவாய கண்கள்
என்னைப் பேதைமை செய்தனவே!“ என்று ஈடுபட வேண்டிய திருக் கண்களை விட்டொழிந்து,
பிளிச்சைக் கண்ணிகளையெல்லாம் காவியை வென்ற கண்ணாராக ப்ரமித்து
அவர்களோடு கூடி வாழ்வதே பரம புருஷார்த்தமென்று கருதி, ஸுக்ருத லேசமும் பண்ணாத
மஹா பாபி யாவதற்கே வழி தேடி,

(தசரத சக்ரவர்த்தி வெண் கொற்றக் குடை நிழலிலே பழுத்தாற் போலவும்,
நம்மாழ்வார் “உனது பாலேபோற் சீரில் பழுத்தொழி்ந்தேன்“ என்று பகவத் குணங்களிலேயே பழுத்தாற் போலவும்)
அந்தப் பாவங்களிலேயே பழுத்தொழிந்தேன்

நான் பரம போக்யமான திருக் குடந்தைமா நகரிலே திருக் கண் வளர்ந்தருள்கின்ற ஆராவமுதாழ்வாரைச்
சிறிதாகிலும் நெஞ்சில் நினைத்திருந்தேனாகில் பாவங்கள் தொலையப் பெற்றிருப்பேன்.
அது செய்யாமை யன்றோ படுபாவியானேனென்றாராயிற்று.

தூவிசேரன்ன மன்னுங் குடந்தை =
ஞானம் அனுட்டானம் ஆகிய இரண்டு சிறகுகளமைந்த ‘ஹம்ஸர்‘ என்னும்படியான
மஹான்கள் வாழுமிடமென்று ஸ்வாதேசார்த்தங் கூறுவர்.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -13–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

‘இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என் தன்
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டுச்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே–13-

பதவுரை

இரும்பு

இரும்பானது
அனன்று

பழுக்கக் காய்ச்சப் பெற்று
உண்ட

உட் கொண்ட
நீரும்

ஜலமும்
போதரும்

வெளியிலே வந்து விடும்;
கொள்க

(இதை) உறுதியாக நினையுங்கோள்;
என் தன்

என்னுடையவையாய்
அரு

போக்கமுடியாதவையாய்
பிணி பாவம் எல்லாம்

நோய்களுக்கு அடியான பாவங்களெல்லாம்
என்னை விட்டு அகன்றன

என்னை விட்டு நீங்கிப் போயின
கரும்பு அமர்

வண்டுகள் பொருந்திய
சோலை சூழ்ந்த

சோலைகளாலே சூழப்பட்ட
மா அரங்கம்

மாட்சிமை தங்கிய ஸ்ரீரங்கத்தை
கோயில் கொண்ட

இருப்பிடமாகக் கொண்டு வாழ்கிற
கரும்பினை

பரம போக்யனான எம்பெருமானை
என் கண் இணை

எனது இரண்டு கண்களும்
கண்டு கொண்டு

பார்த்த வண்ணமாய்
களிக்கும் ஆறு ஏ

மகிழ்ச்சி யடையும் விதம் என்னே! (என்று வியக்கிறார்)

தம்மை விட்டு ஒருகாலும் பிரிக்கக்கூடாமலிருந்த அரும்பிணி பாவமெல்லாம் அகன்று போன ஆச்சரியத்தினால்

இரும்பனன்றுண்ட நீரும் போதரும் என்கிறார்.

இரும்பானது பழுக்கக் காயந்து நீரைக்குடித்தால் குடித்த நீரடங்கலும் இரும்பிலே சுவறிப் போமத்தனை யொழிய

அந்த இரும்பில் நின்றும் வெளிப்படுத்தியெடுக்க முடியாதென்பது லோகாது பவஸித்தமே யாகிலும்,

அந்த நீரும் அந்த இரும்பில் நின்று வெளிப்பட்டுவிடுமென்று நிச்சயிக்கலாம்;

ஏனென்றால்,

அனன்ற இரும்பு போன்ற என்னிடத்திலே தனித்துப் பிரித்துக் களைந்தொழிக்க வொண்ணாதபடி மங்கிக் கிடந்த

அரும்பிணி பாவங்கள் வெளிப்பட்டனவன்றோ; ஆதலால் இதுபோல் அதுவும் நேரலாம் என்கிறாராயிற்று.

அரும்பிணி பாவமெல்லாம் அகலவே, திருவரங்கம் பெரிய கோயிலிலே நித்ய ஸந்நிதி பண்ணி யிருக்கின்ற

பரம போக்யனான பெருமானைக் கண்ணாரக் கண்டு களிக்கப் பெற்றே னென்கிறார் பின்னடிகளில்.

தகாத விஷயங்களைக் கண்டு களித்த என் கண்கள் இன்று ஸ்வரூபாநுரூபமான விஷயத்தைக் கண்டு களிக்கப் பெற்றமை என்ன பாக்கியம்! என்று அதிசயப்படுகிறார்.

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –