வட மதுரை -ஆல மரம் போல் மன்னி
தென் மதுரை -அழகிய -அழகர் சோமேஸ்வரர் எங்கும் அழகு
அவதாரம் லீலை -மிதுனம் -பராத்பரன்
யமுனை திருவடி சிலர்சதுக்கு உயர்ந்து பெற்றயுடன் தாழ்ந்து வற்றி
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் -அஹங்காரம் இல்லாமல் சரணாகதி
அவன் பால் குடித்ததை நினைக்கவே நாம் தாய் பாலைக் குடிக்க வேண்டாமே
பூதனை -அஞ்ஞானம் அஹங்காரம் மமகாராம் இரண்டு முலைகள்
சகடாசூரன் -இரட்டை அழித்து அருளுபவன்
காளிங்கன் -நளிர் பால் உண்டு-பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் –உள்ளும் புறமும்-அந்தர் பஹிஸ் ஸ ஸர்வ வ்யாபி
கட்டுண்ணப் பண்ணி -தானே பக்தியும் அளித்து
ப்ரமனுக்குப் பாடம் -தானே அனைத்துமாக இசைவித்து தன் தாள் இணைக் கொள்ளுபவன்
வெண்ணெய் திருடி -பக்குவப்பட்ட உள்ளம் -கொண்டல் வண்ணன் கோவலனாய் உள்ளம் கவர்ந்தவர் வெண்ணெய் உண்டான் -பாப மூட்டங்களைத் திருடி
கோவர்த்தன லீலை -குணங்கள் -குன்றாகக் காட்டி தாப த்ரயங்கள் போக்கி
வஸ்திர அபகரணம் -தீய குணங்கள் -விளக்கி -அவனே உபாயம் மஹா விச்வாஸம்
ராஸலீலை -முனிவர் நித்யம் தியானிக்க -நித்யம் பாராயணம் -முக்தன் அனுபவத்துக்கு முன்னோட்டம்
கம்ச வதம் -தன்னடையே விட்டுப் போம் -பிரபன்னன் கரைந்தான் ஆகில் நாஸ்திகன் ஆவானே -நிர்ப்பரோ நிர்ப்பயோஸ்மி
ஸாந்தீபனி -ஆச்சார்யர் சிஷ்யர் முறை மாறக் கூடாதே –
மஹா பாரதம் -மனஸ் குரு க்ஷேத்ரம் -7 அஷவ்னி நல்ல -11 அஷவ்னி தீய
அர்ஜுனன் ஜீவாத்மா -அஸ்தானே –
எழு நூற்று -எழுந்து நோற்க -பார்த்த சாரதி -நம்மைக் கடாக்ஷிக்கவே சாரதி -700 ஸ்லோகங்கள்
சர்வம் கிருஷ்ண அர்ப்பணம்
ருக்மிணி கல்யாணம் -ஐந்து சகோதரர்கள் புலன்கள் -தூதுவர் ஆச்சார்யர் முகமாகவே -பேறு
ஒரு முமுஷுவைப் பெற ஏழு எருதுகளின் 14 கொம்புகளில் பாய்ந்து கைக் கொள்ளுவான் -ஆத்மா விவாஹம்
————–
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது பதினாறு வகை தெய்வீகப் பொருட்கள் வெளிவந்தன.
அவற்றுள் வலம்புரிச் சங்கும் திருமகளும் வர மஹாவிஷ்ணு இடக்கையில் சங்கையும் வலக்கையில் தேவியையும் ஏற்றுக் கொண்டார்.
இதே போல் கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் வில்வித்தை கற்றுக் கொடுத்த சாந்திபனி முனிவருக்கு குருதட்சணையாக என்ன வேண்டும் என்று கேட்ட போது குருவின் மனைவி, கண்ணீர் விட்டபடி *பஞ்சஜனன்* என்ற கடல் அரக்கன் அவர்களது ஒரே மகனைக் கடத்திக் கொண்டு போய்க் கடற் பாதாள அறையில் வைத்திருப்பதாகவும் குருதட்சணையாக அவனை மீட்டுத் தரும்படியும் வேண்டினாள்.
கிருஷ்ணரும் பலராமரும் கடல் ராஜாவை அழைத்து வழி கேட்டுச் சென்று அரக்கனை எதிர்த்துப் போரிட்டுச் சாம்பலாக்கி விட்டு, குரு மகனை மீட்டுத் தந்தனர். பஞ்சஜனனின் சாம்பலே ஒன்று திரண்டு சங்காகியதால் -சங்கிற்குப் *பாஞ்சஜன்யம்* என்ற பெயர் ஏற்பட்டது.
இதை வெற்றியின் சின்னமாகக் கிருஷ்ண பரமாத்மா கையில் எடுத்துக் கொண்டு ஊதத் தொடங்கினார், அவரது வாழ்க்கையில் இடம்பெற்ற பஞ்சபாண்டவர்களில் ஐவருமே ஒவ்வொரு விதமான சங்கை வைத்திருந்ததாக பாகவதம் கூறுகிறது.
*தருமருடைய சங்கு – அனந்த விஜயம்*
*அர்ஜுனனுடையது – தேவதத்தம்*
*பீமனுடையது – மகாசங்கம்*
*நகுலனுடையது – சுகோஷம்*
*சகாதேவனுடையது -மணி புஷ்பகம்*
கடலில் பிறக்கும் சங்குகளில்
*மணி சங்கு*
*துவரி சங்கு*
*பாருத சங்கு*
*வைபவ சங்கு*
*பார் சங்கு*
*துயிலா சங்கு*
*வெண் சங்கு*
*பூமா சங்கு*
என்ற எட்டு வகை சங்குகள் உள்ளன. இவற்றில் வலம்புரி சங்குதான் மிகவும் சக்தி வாய்ந்ததாக ஆகமமும், சாஸ்திரங்களும் சொல்வதைக் காணலாம். மேலே உள்ள இந்த சங்குகள் ஒவ்வொரு தெய்வத்தின் கரங்களில் இருப்பதாக விகனச ஆகமவிதியில் கூறப்பட்டுள்ளது.
*திருப்பதி பெருமாளுக்கு – மணி சங்கும்*
*ரெங்கநாதருக்கு – துவரி சங்கும்*
*அனந்த பத்மநாப சுவாமிக்கு – பாருத சங்கும்*
*பார்த்தசாரதி பெருமாளுக்கு – வைபவ சங்கும்*
*சுதர்ஸன ஆழ்வாருக்கு – பார் சங்கும்*
*சவுரிராஜப் பெருமாளுக்கு – துயிலா சங்கும்*
*கலிய பெருமாளுக்கு – வெண் சங்கும்*
*ஸ்ரீ நாராயண மூர்த்திக்கு – பூமா சங்கும்* உள்ளன.
வலம்புரிச் சங்கு என்கிற கடல் வாழ் நத்தையின் கூட்டை வழிபட்டால் நம்மைத் தேடி மகாலட்சுமி வருவாள் என்று வேதவாக்கியம் சொல்கிறது. நம் வீட்டில் வலம்புரிச் சங்கு பூஜை, முறையாக நடைபெற்றால் பிரம்மஹத்தி தோஷமும் அகன்று விடுகிறது. இதை
*சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோபரி*
*அங்க லக்ஷ்ணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாதிகம் தஹேத்*
என்ற வரிகளால் அறிந்து கொள்ளலாம். வாஸ்துக் குறை வீட்டில் காணப்பட்டால் மஞ்சள் நீரும் துளசியும் சங்கில் இட்டுக் காலையில் தெளித்து விட்டால் குறைகள் நீங்குவதாக ஐதீகம் இருக்கிறது.
முற்காலங்களில் மக்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்ததற்குக் காரணம், வீடு கட்டும்போது ஐந்து வெள்ளிக் கிழமைகள் லக்ஷ்மி வஸ்ய பூஜை செய்த வலம்புரிச் சங்கை வீட்டு நிலை வாசற் படியில் வைத்து – நடு ஹாலில் சங்கு ஸ்தாபன பூஜை செய்து திருமகள் மற்றும் வாஸ்து பகவானை வழிபட்டார்கள். எந்தக் குறைவும் இல்லாமல் அவர்களால் வாழ முடிந்தது.
————-
கண்ணன் கதைகள் (1)
பக்தர்கள் விரும்பும் வடிவத்தில் பகவானைப் பார்க்க முடியும்
முன்னொரு சமயம் வில்வமங்கலம் ஸ்வாமிகளிடம் வாரியர் என்ற பக்தன் வேலை செய்து வந்தான். அவனுக்கு முறைப்படி பூஜை செய்யவோ, தியானம் செய்யவோ தெரியாது. அவன் ஒரு நாள் ஸ்வாமிகளிடம், “நான் குருவாயூரப்பனை எவ்வாறு தியானம் செய்ய வேண்டும்? அருள் கூர்ந்து எனக்கு சொல்லுங்கள்” என்று வேண்டினான். அவரோ அலட்சியமாக, “ஒரு பெரிய கொம்புள்ள எருமை போல் நினைத்து பூஜிக்க வேண்டும்” என்று சொன்னார். அவனும் அதை உண்மையென நம்பி அவ்வாறே பூஜித்து வந்தான்.
ஒரு நாள் ஸ்வாமிகளுடன் அவன் கோயிலுக்கு சென்றிருந்தான். அப்போது “ஸ்ரீவேலி” பூஜைக்காக உற்சவ விக்ரஹத்தை நம்பூதிரி எடுத்துக் கொண்டு வெளியில் வர முயற்சித்தார். வாசற்படியைத் தாண்ட முடியவில்லை. தாண்டும்போது ஏதோ இடிக்கும் சத்தம் மட்டும் கேட்கிறது. எது இடிக்கிறது என்று தெரியவில்லை, தாண்டவும் முடியவில்லை. ஸேவிக்க வந்த அனைவரும் கவலையுற்றனர். அங்கு இருந்த ஸ்வாமிகளிடம் அது பற்றிக் கேட்டனர். அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அப்பொழுது, வேலையாளான பக்தன் நம்பூதிரியிடம், “நிதானமாக எடுத்து வாருங்கள், கொம்பு இடிக்கிறது, சற்று சாய்த்து எடுத்து வாருங்கள்” என்று சொன்னான். அதன்படி செய்ததும் விக்ரஹத்தை எடுத்து வர முடிந்தது. வில்வமங்கலம் ஸ்வாமிகள், “என்ன பிதற்றுகிறாய்”? என்று அவனைக் கடிந்து கொண்டார். அவனோ, “ஸ்வாமி, எருமையின் கொம்பு இடித்ததால் சொன்னேன்” என்று பணிவுடன் கூறினான். உடனே வில்வமங்கலத்திற்குத் தான் முன்பு சொன்னது நினைவுக்கு வந்தது. கண்களை மூடித் தியானித்தபோது அவரது மனக்கண்ணில், சங்கு, சக்கரம், கதை, பத்மத்துடன் ஒரு தெய்வீக எருமை தெரிந்தது !!!!
உடனே, அவர் அந்த பக்தனிடம், என்னை மன்னிக்க வேண்டும் என்று வேண்டினார். அவனும், நான் எவ்வாறு பூஜிக்க வேண்டும் என்று எனக்குச் சொல்லித் தாருங்கள் என்று கூற, அவர் சந்தோஷத்துடன், “ஸ்ரீ குருவாயூரப்பனை சூர்யனை விடப் பிரகாசமான கிரீடம், மேல் நோக்கியுள்ள திலகத்தால் அழகிய கருணை பொங்கும் கண்கள், புன்சிரிப்புடன் கூடிய செவ்வாய், மீனைப் போன்ற நாசி, கன்னங்களில் ஒளி வீசும் மகர குண்டலங்கள், மார்பை அலங்கரிக்கும் கௌஸ்துப மணி, வனமாலை, முத்துமாலை, ஸ்ரீவத்ஸம், நான்கு கரங்களில் தோள்வளைகள், கங்கணம், சிறந்த ரத்னங்களால் இழைத்த மோதிரம், மேலும், கரங்களில் சங்கம், சக்ரம், கதை, தாமரை, இடுப்பில் பொன் அரைஞாண், பீதாம்பரம், தாமரை மலரை ஒத்த திருவடி கொண்ட அழகிய திருமேனியுடன் தியானம் செய்து பூஜை செய்ய வேண்டும்” என்று கூறினார். அந்த பக்தனும் அவ்வாறே தியானம் செய்து பூஜைகளை அனுஷ்டித்து நற்கதி அடைந்தான். இதிலிருந்து, “ பக்தர்கள் விரும்பும் வடிவத்தில் பகவானைப் பார்க்க முடியும் என்பதையும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மனிதனின் தர்க்கத்திற்கும், கற்பனைக்கும் அப்பாற்பட்டவர்” என்பதையும் நாம் அறியலாம்.
————–
கண்ணன் கதைகள் (2)
மஞ்சுளாவின் மலர்மாலை
கிழக்கே இருந்து குருவாயூருக்குள் நுழையும் போது முதலில் தென்படுவது அடிப்பகுதியில் பிரம்மாண்டமான கருடனுடன் கூடிய ஒரு பெரிய ஆலமரம். இது “மஞ்சுளால்”, அதாவது மஞ்சுளாவின் ஆலமரம் என்று அழைக்கப்படுகிறது.
வாரியார் வகுப்பைச் சேர்ந்த மஞ்சுளா, மனப்பூர்வமான பக்தியுள்ள பெண். ஒவ்வொரு இரவும், அவள் மலர் மாலைகளைக் கட்டி, குருவாயூர் கோயிலில் கொண்டு கொடுப்பாள். மேல்சாந்தி அம்மாலையை அப்பனுக்கு ஸமர்ப்பிப்பார். ஒரு நாள் அவள் தாமதமாக வந்ததால், கிழக்கு நடையில் உள்ள ஆலமரத்தின் அருகே வரும்போதே கோவில் மூடப்பட்டு விட்டது. கண்களில் நீர் வழிய, மிகுந்த மன வேதனையுடன் அம்மரத்தின் அருகே அவள் நிற்பதைக் கோவிலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த பூந்தானம் நம்பூதிரி கண்டார். அவர், அவளுக்கு ஆறுதல் கூறி, “ இறைவன் எல்லா இடத்திலும் உள்ளார். அதனால் நீ மாலையை ஆலமரத்தின் அடியில் உள்ள கல்லில் வைத்து விடு, அவர் அதை ஏற்றுக் கொள்வார்” என்று கூறினார். அவளும் நம்பிக்கையுடன் அந்த மாலையை மரத்தின் அடியில் வைத்துவிட்டு மனநிம்மதியுடன் வீடு சென்றாள்.
அடுத்த நாள் ஒரு அதிசயத்துடன் விடிந்தது. நிர்மால்ய தரிசனத்திற்குப் பிறகு, மேல்சாந்தி விக்ரகத்தின் மீதிருந்த முந்தைய நாள் மாலைகளை அகற்றினார். மிகவும் முயற்சித்தும் ஒரு மாலை மட்டும் அகற்ற முடியாமல் சிக்கிக்கொண்டு இருந்தது. நிர்மால்ய தரிசனத்திற்கு வந்திருந்த அனைவரும் வியந்தனர். அப்போது அங்கிருந்த பூந்தானம் நம்பூதிரிக்கு முதல் நாள் இரவு நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. “அது மஞ்சுளாவின் மாலையென்றால் அதுவும் வரட்டும்” என்று உரக்கக் கூவினார். உடனே அப்பனிடம் சிக்கிக் கொண்டிருந்த மாலை நழுவி, கீழே விழுந்தது. அனைவரும் ‘ஹரே கிருஷ்ணா’ என்று கோஷமிட்டுக் கொண்டே மஞ்சுளாவின் மாலையிலிருந்த பூக்களை எடுத்துக் கொண்டனர். ஆலமரத்தை நோக்கி அதனை வழிபட விரைந்தனர். அது முதல் அந்த மரம் “மஞ்சுளால்/மஞ்சுளா ஆல்” என்று அழைக்கப்படுகிறது.
உற்சவத்தின் முதல் நாள் நடத்தப்படும் ‘ஆனையோட்டம்’ (யானைப் பந்தயம்), கிழக்கு நடையில் உள்ள இந்த ‘மஞ்சுளால்’ என்ற மரத்தில் இருந்துதான் தொடங்குகிறது.
—————
கண்ணன் கதைகள் (3)
கொம்பு முளைத்த தேங்காய்
ஒரு கிராமவாசி பல தென்னங்கன்றுகளை நட்டான். தனது தென்னை மரங்களில் இருந்து காய்க்கும் முதல் தேங்காய்களை குருவாயூரப்பனுக்குக் காணிக்கை அளிப்பதாய் வேண்டிக்கொண்டான். மரங்கள் காய்க்கத் தொடங்கிய போது, அவன் மரங்களில் இருந்து முதல் தேங்காய்களைச் சேகரித்து, கோணியில் கட்டிக் கொண்டு குருவாயூர் கோவிலுக்குப் பயணித்தான்.
போகும் வழியில் ஒரு கொள்ளைக்காரன் வழிமறித்து “கோணிப் பையில் உள்ளதைக் கொடுத்துவிடு” என்று மிரட்டினான். கிராமவாசியோ, “இதில் தேங்காய்கள் உள்ளன. அவை குருவாயூரப்பனுக்குச் சொந்தமானவை” என்று கூறி தர மறுத்தான். கொள்ளைக்காரன் அலட்சியமாக, “ குருவாயூரப்பனின் தேங்காய் என்று ஏதாவது இருக்கிறதா? அதற்குக் கொம்புகள் இருக்கிறதா என்ன ? என்று கூறிக் கொண்டே கிராமவாசியின் கைகளில் இருந்து கோணியைப் பற்றி இழுத்தான். தேங்காய்கள் வெளியே சிதறின. அதிசயப்படும்படியாக ஒவ்வொரு தேங்காய்க்கும் கொம்பு முளைத்திருந்தது! திருடன் மனம் திருந்தி, குருவாயூரப்பனிடம் மன்னிப்பு கேட்டு, அந்த கிராமவாசியைப் போக விட்டான். கிராமவாசியும் தான் வேண்டிக்கொண்டபடியே தேங்காய்களைக் கோயிலில் காணிக்கையாகக் கொடுத்தான். இன்று கூட பக்தர்கள், கொம்புகள் உள்ள அந்தத் தேங்காய்களை, குருவாயூர்க் கோயிலின் முன் மண்டபத்தில் கட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
————–
கண்ணன் கதைகள் (4)
கண்ணனும் முருகனும் நண்பர்கள்
கேரளத்தில் இரண்டு நண்பர்கள் ஒன்றாக வசித்து வந்தனர். ஒருவனுக்கு குருவாயூரப்பன் இஷ்ட தெய்வம். மற்றொருவனுக்கு முருகன் இஷ்ட தெய்வம். இருவரும் சேர்ந்து அவர்களது வீட்டில் ஒரு கதளி வாழை மரத்தை நட்டனர். முதல் நண்பன், வாழை மரம் கிழக்குப் பக்கம் குலை தள்ளினால் குருவாயூரப்பனுக்கு ஸமர்ப்பிப்பதாக வேண்டிக் கொண்டான். முருக பக்தனோ மேற்குப் பக்கம் குலை தள்ளினால் முருகனுக்கு ஸமர்ப்பிப்பதாக வேண்டிக்கொண்டான். இருவரும் வாழை மரத்தை நன்கு பாதுகாத்து வந்தனர். வாழை குலை தள்ளும் பருவமும் வந்தது. அது ஆகாயத்தை நோக்கிக் குலை தள்ளியது.
இதனால் நண்பர்களிடையே சண்டை உண்டானது. காய் முற்றிப் பழுத்த பிறகும் கூட, குலை எந்தப் பக்கமும் சாயாமல் நின்றது. இருவரும் செய்வதறியாது கலங்கினர். ஒரு நாள் இரவு, முருகன் தனது பக்தனது கனவில் தோன்றி, “ பக்தனே! நீ பழத்தை குருவாயூரப்பனுக்கே ஸமர்ப்பித்துவிடு. அதுவே எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். நாங்கள் இருவரும் நண்பர்கள்தான். நீயும் உன் நண்பனுடன் பிரியமாகப் பழகு” என்று கூறி மறைந்தார். உடனே விழித்த அவன், சொப்பனத்தைத் தன் நண்பனிடம் சொன்னான். இருவரும் கதளிப்பழத்தை குருவாயூரப்பனுக்கு ஸமர்ப்பித்தனர்.
இன்றும் குருவாயூரில், துலாபாரத்தின் போது எடைக்கு எடை கதளிப்பழத்தை வேண்டுதலாக ஸமர்ப்பிக்கும் வழக்கம் இருக்கிறது.
————-
கண்ணன் கதைகள் (5)
குசேலரின் கதை
குசேலோபாக்யானம்
மார்கழி மாத முதல் புதன்கிழமை “குசேலர் தினம்” என்று கொண்டாடப்படுகிறது.
ஸாந்தீபனி முனிவரிடம் கண்ணனும், சுதாமா (குசேலர்) என்ற பிராமணரும் ஒன்றாக குருகுலம் பயின்றார்கள். கிருஹஸ்தனான அவர் கண்ணனிடத்தில் மிகுந்த பக்தி பூண்டிருந்ததால், செல்வங்களில் பற்றற்றவராய்ப் புலன்களை அடக்கி, தன்னுடைய நாட்களைக் கழித்தார். அவருடைய மனைவியும் அவரைப் போன்ற குணங்கள் உள்ளவளாய் இருந்தாள். வறுமையில் குழந்தைகளைப் பேண முடியாததால், ஒரு நாள் அவள் தன் கணவரிடம், லக்ஷ்மீபதியான கிருஷ்ணர் உங்கள் நண்பரல்லவா? வாழ்வதற்குப் பொருளைப் பெற ஏன் அவரை அணுகக்கூடாது? என்று கேட்டாள். பசியின் துன்பத்தாலேயே அவள் அவ்வாறு கூறினாள். செல்வம் கர்வத்தை உண்டாக்கி வாழ்க்கையைக் குலைக்கும் என்று அவர் உணர்ந்திருந்தாலும், கண்ணனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலால், தனது வஸ்திரத்தின் நுனியில் மூன்று பிடி அவலை முடிந்துகொண்டு, காணிக்கையாய் எடுத்துச் சென்றார்.
கிருஷ்ணர் இருக்கும் துவாரகா நகரத்தை அடைந்தார். கிருஷ்ணனுடைய மாளிகைக்குள் நுழைந்ததும் வைகுண்டத்தில் இருப்பது போன்ற ஆனந்தத்தை அடைந்தார். பகவான் கிருஷ்ணர், அவரை வரவேற்று உபசரித்ததும் விளக்கமுடியாத ஆனந்தமடைந்தார். கிருஷ்ணர், அவருடைய கைகளைப் பற்றிக் கொண்டு குருகுலத்தில் நடந்த பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தார். குருபத்தினிக்கு விறகு கொண்டு வர காட்டுக்குச் சென்றபோது மழையில் நனைந்ததைப் பற்றிப் பேசினார்..
கொண்டு வந்த அவலைக் கொடுக்க வெட்கப்பட்டுத் தயங்கிய குசேலரிடமிருந்து கட்டாயப்படுத்தி அவலை வாங்கி ஒரு பிடியை உண்டார். இரண்டாவது பிடியை எடுத்ததும், “போதும், போதும்” என்று மகாலக்ஷ்மியான ருக்மிணி கிருஷ்ணருடைய கையைப் பிடித்துத் தடுத்தாள். (இதற்குமேல் உண்டால் கொடுப்பதற்குப் பொருள் ஒன்றும் இல்லை என்று அர்த்தம்). பக்தர்களுக்கு அடியவனான கிருஷ்ணர், குசேலரை மிகவும் உபசரித்தார். குசேலர், மிகவும் மகிழ்ச்சியுடன் அன்று இரவு கிருஷ்ணருடன் தங்கினார். மறுநாள் பொருள் எதுவும் பெறாமல் தன்னுடைய ஊருக்குத் திரும்பினார்.
” பொருள் வேண்டும் என்று கேட்டிருந்தால் கிருஷ்ணன் கொடுத்திருப்பார். மனைவியிடம் எவ்வாறு சொல்வது?” என்று வழிநெடுக யோசித்துக் கொண்டே சென்றார். அவரது மனம் முழுக்க பகவான் கிருஷ்ணருடைய புன்னகையும், பேச்சுக்களும் நிறைந்திருந்தது.
அப்போது அவர் பிரகாசம் மிக்க ரத்தினங்களால் விளங்கும் ஒரு மாளிகையை அடைந்தார். க்ஷணநேரம் வழி தவறி வந்து விட்டோமோ என்று திகைத்து, பின்னர் வீட்டினுள் நுழைந்தார். உள்ளே தோழிகள் சூழ, ரத்தினங்களாலும், தங்கத்தினாலும் ஆன ஆபரணங்கள் அணிந்திருக்கும் தன் மனைவியைக் கண்டார். கிருஷ்ணனுடைய கருணை மிக அற்புதமானது, ஆச்சர்யமானது என்று அறிந்தார்.
ரத்னமயமான மாளிகையில் வசித்துக் கொண்டு இருந்தாலும் அவர் கண்ணனிடமே மனதைச் செலுத்தி மிகுந்த பக்தி உடையவராய் இருந்தார். இறுதியில் மோக்ஷத்தையும் அடைந்தார்.
பகவான் கிருஷ்ணரை சந்திக்க குசேலர் அவலை எடுத்துச் சென்றது ஒரு மார்கழி மாத முதல் புதன்கிழமை. அதனால், மார்கழி மாத முதல் புதன்கிழமை “குசேலர் தினம்” என்று கொண்டாடப்படுகிறது. குருவாயூர் கோவிலில் பக்தர்கள் அன்றைய தினம் குருவாயூரப்பனான உன்னிக்கண்ணனுக்கு அவல் ஸமர்ப்பித்து வழிபடுவர். மார்கழி மாத முதல் புதன்கிழமையன்று கண்ணனுக்கு அவல் நிவேதனம் செய்து வழிபட்டால் வீட்டில் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை. வீடுகளில் அன்றைய தினம் “குசேலோபாக்யானம்” (குசேலரின் கதை) பாராயணம் செய்வார்கள். கையகலத்திற்கு ஒரு சிறிய சிவப்பு வஸ்திரம் (கண்ணனின் கௌபீனம் என்று ஐதீகம்) மடித்து வைத்து , அவல், வெல்லம் வைத்து வழிபடுவார்கள். பிறகு அந்த அவலை சிறு சிறு கிழியாகக் (சிறிய மூட்டையைப் போல்) கட்டி அனைவருக்கும் விநியோகம் செய்வார்கள்.
இந்த கதையைப் படித்து, அவலும் வெல்லமும் நைவேத்யம் செய்து கண்ணனை வழிபடலாம். பக்தர்களுடைய விருப்பத்தை குருவாயூரப்பன் நிச்சயம் நிறைவேற்றுவான். அது சரி, அதென்ன சிவப்பு வஸ்திரம்? அதுவும் கண்ணனின் கௌபீனமா? அடுத்த கதைக்குப் பொறுத்திருங்கள்.
————
கண்ணன் கதைகள் (6)
சிவப்புக் கௌபீனம்
முந்தைய பதிவான “கண்ணன் கதைகள் (5)” -ல் சிவப்புக் கௌபீனம் பற்றிப் படித்திருப்பீர்கள். அதென்ன சிவப்புக் கௌபீனம்? குருவாயூரப்பனின் லீலைகளில் அதுவும் ஒன்றாகும்.
முன்னொரு சமயம் ஒரு வயதான மூதாட்டி இருந்தாள். அவள் குருவாயூர்க் கண்ணனின் தீவிர பக்தை. அவள், ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் குருவாயூரப்பனின் ஸன்னிதிக்குச் சென்று தரிசனம் செய்து, மனமுருக வழிபடுவது வழக்கம். ஒரு நாள் “சீவேலி” தரிசனம் முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது பெருங்காற்றுடன் கனமழை பெய்தது. அந்த நாட்களில் சாலை விளக்குகள் கிடையாது. இருட்டில் வழி தவறிவிட்டது. மிகுந்த கவலையோடு, குருவாயூரப்பனின் நாமங்களைச் சொல்லிக்கொண்டே சென்று கொண்டிருந்தாள். அப்போது, ஒரு சிறிய பையன் அவள் முன் தோன்றி, “ பாட்டி, கவலைப் படாதீர்கள். உங்களை நான் வீட்டில் கொண்டு விடுகிறேன்” என்று சொன்னான். மழையில் இருவரும் தெப்பமாக நனைந்து விட்டனர். பேசிக் கொண்டே பாட்டியின் வீட்டை அடைந்தார்கள்.
வீட்டை அடைந்ததும் அந்த சிறுவனுக்கு நன்றி சொல்லி, “உன் பெயர் என்ன?” என்று கேட்டாள். அதற்கு அவன் ‘கோபாலன்’ என்று சொன்னான். மூதாட்டி, “ நீ செய்திருக்கும் உதவிக்கு உனக்கு ஏதாவது நான் தர வேண்டும், என்ன வேண்டும்? கேள்” என்று சொன்னாள். அவனும், “ மழையில் என் துணி நனைந்துவிட்டது. எனக்கு உம்முடைய புடவையிலிருந்து ஒரு கௌபீனம் தாருங்கள் போதும்” என்று கூறினான். அவள் சுற்றிப் பார்த்த பொழுது ஒரு சிவப்புப் புடவை இருந்தது. அதிலிருந்து ஒரு சிறு பகுதியைக் கிழித்து அவனிடம் கொடுத்தாள். அவனும் பெற்றுக் கொண்டு சென்றான்.
அடுத்த நாள் காலை, நிர்மால்ய தரிசனத்திற்காக ஸன்னிதியின் கதவைத் திறந்தபோது, மூர்த்திக்கு சிவப்பு வர்ணக் கௌபீனம் கட்டியிருப்பதைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர். முதல் நாள் நன்கு அலங்காரம் செய்யப்பட்ட கண்ணன் இப்போது எப்படி கௌபீனத்தோடு காட்சி அளிக்கிறான்? என்று ஆச்சர்யமடைந்தனர்.. கண்ணனின் திவ்ய மேனி அனைவரையும் மயக்கும் வண்ணம் இருந்தது.
வழக்கம்போல் தரிசனத்திற்காக வந்திருந்த மூதாட்டியும் மகிழ்ந்து அனைவரிடமும் முந்தைய நாள் நடந்தவற்றைச் சொன்னாள். தன்னுடைய சிறிது கிழிந்த புடவையையும் காண்பித்தாள். அதன் கிழிந்த பகுதி, குருவாயூரப்பனின் கௌபீனமாக இருப்பதைக் கண்ட அனைவரும் வியந்தனர். மூதாட்டி, இந்த தெய்வீக நாடகத்தையும், குருவாயூரப்பன் தனக்கு அனுக்ரஹம் செய்ததையும் எண்ணியெண்ணி ஆனந்தித்தாள். அன்று முதல் ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு இரவில் சிவப்புக் கௌபீனம் சாற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது.
————–
கண்ணன் கதைகள் (7)
அம்பரீஷ சரித்திரம்
ராமபிரானின் முன்னோர்களில் ஒருவரான இக்ஷ்வாகு மிகவும் புகழ் வாய்ந்தவர். அதனால் அந்த வம்சமே ‘இக்ஷ்வாகு வம்சம்’ என்று பெயர் பெற்றது. இக்ஷ்வாகுவின் தந்தை வைவஸ்வத மனு. வைவஸ்வத மனுவுக்கு பத்து புத்திரர்கள். அவர்களில் ஒரு பிள்ளை நபகன். அவனுடைய பிள்ளை நாபாகன். அவனுக்கு அம்பரீஷன் என்ற மகன் பிறந்தான்.
அம்பரீஷன் சிறந்த பக்திமான். அவன் ஏழு கடல்களால் சூழப்பட்ட பூமிக்குத் தலைவனாக இருந்தான். இருப்பினும், விஷ்ணுவிடத்திலும், அவரது பக்தர்களிடத்திலும் அன்பு கொண்டு வாழ்ந்து வந்தான்.விரதங்களை மிகுந்த சிரத்தையுடனும் பக்தியுடனும் அனுஷ்டித்து வந்தான். விஷ்ணுவிடத்தில் கொண்ட பக்தியால், அனைத்து கர்மங்களையும் ஒன்றுவிடாமல் செய்து வந்தான். அவன் கேட்காமலேயே, அவனையும் அவன் நாட்டையும் காப்பதற்கு, ஆயிரக்கணக்கான முனைகளையுடைய சக்ராயுதத்தை விஷ்ணு அளித்தார்.
மகாவிஷ்ணுவிற்கு உகந்த நாளான ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை என்பதை நன்கு அறிந்த அவன், ஏகாதசி விரதத்தை விவரம் தெரிந்த நாள் முதல் கடைப்பிடித்து வந்தான். ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று இரவு முதல் உண்ணாமல் இருந்து, மறுநாள் ஏகாதசி முழுவதும் உபவாசமிருந்து விஷ்ணுவைப் பூஜித்து, அதற்கு அடுத்த நாள் துவாதசியன்று அதிதிகளுக்கு உணவளித்து, பின் பாரணை செய்வது (உணவு உண்பது) என்ற நியதி மாறாமல் பின்பற்றி வந்தான்.
ஒரு முறை அம்பரீஷன், யமுனைக் கரையில் உள்ள மதுவனத்தில், நற்குணங்கள் கொண்ட தன் மனைவியுடன், தியானம் செய்ய வந்தான். அறுபது கோடிப் பசுக்களை வேதமறிந்தவர்களுக்குத் தானம் செய்தான். ஒரு வருட காலம் துவாதசி விரதத்தை அனுஷ்டித்துத் தங்களைப் பூஜித்து வந்தான். விரதம் முடிந்து பாரணை செய்ய வேண்டிய நாளில் துர்வாசர் அம்பரீஷனின் மதுவனத்திற்கு வந்தார். அம்பரீஷன் அவரிடம் போஜனம் செய்ய வேண்டினான். விரைவில் கோபம் கொள்ளும் அவரும் சம்மதித்து, மெதுவே யமுனை நதிக்கு நீராடச் சென்றார். வெகு நேரமாகியும் நீராடச் சென்ற முனிவர் வரவில்லை. துவாதசி திதி முடிவடையும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அதற்குள் பாரணையை முடிக்கவேண்டும் இல்லையேல் ஏகாதசி விரதம் தவறிவிடும். அதிதி போஜனமும் ஆகவில்லை. செய்வதறியாமல் திகைத்த அவன் கற்றறிந்தவர்களிடம் ஆலோசனை கேட்டான். அவர்களும், “துர்வாசர் வராமல் பாரணை செய்வது தவறு. துவாதசி திதி முடிய சிறிது நேரமே உள்ளது. அந்த நேரத்திற்குள் சிறிது துளசி தீர்த்தம் உட்கொண்டால் பாரணை செய்த மாதிரியாகிவிடும். முனிவர் வந்தபின் அவருக்கு போஜனம் செய்வித்துப் பிறகு உண்ணலாம்” என்று கூறினர். அம்பரீஷன், வேறு வழியின்றி துளசி தீர்த்தம் பருகி விரதத்தை முடித்துக் கொண்டான். முனிவருக்காகக் காத்திருந்தான்.
அரசனான அம்பரீஷன், பாரணை செய்யவேண்டிய திதி முடியப்போகிறதே என்ற கவலையில் தீர்த்தத்தைக் குடித்துப் பாரணையை முடித்தான். ஞான திருஷ்டியால் அதை அறிந்த முனிவர், கோபத்துடன் கடுஞ்சொற்களால் அம்பரீஷனைத் தூஷித்து, ” என்னை நீ அவமதித்து விட்டாய்” என்று கூறி, தன்னுடைய ஜடையைப் பிய்த்து எறிந்து, அதிலிருந்து ‘க்ருத்யை’ என்ற துர்தேவதையை உண்டாக்கி, “அம்பரீஷனை அழித்துவிட்டு வா” என்று ஏவினார். கையில் கத்தியுடன், உலகங்களை எரிக்கும் அந்த துர்தேவதையை நேரில் கண்ட அம்பரீஷன் சிறிதும் நகராமல் இருந்தான். சுதர்சன சக்கரமானது, அவனுக்கு நேர்ந்த தீங்கைப் பார்த்து அந்த க்ருத்யையை அழித்து, துர்வாசரைப் பின்தொடர்ந்து சென்றது. பயத்தினால் முனிவர் எல்லா உலகங்களுக்கும் ஓடினார். எல்லா இடத்திற்கும் சக்ராயுதம் பின்தொடர்ந்ததைக் கண்டு பிரமனை சரணடைந்தார். காலச்சக்கரத்தை யாரால் எதிர்க்க முடியும் என்று பிரம்மதேவர் முனிவரை அனுப்பிவிட்டார். பிறகு, பரமசிவனிடம் சென்றார். அவரும் தங்களை சரணடைய உபதேசம் செய்தார். கடைசியாக முனிவர் வைகுண்டத்தை அடைந்து, எங்கும் நிறைந்த மகாவிஷ்ணுவை சரணடைந்தார். விஷ்ணுவோ,”முனிவரே! நான் பக்தர்களுக்கு அடியவன். அறிவும், தவமும் அகங்காரமில்லாமல் இருக்க வேண்டும். நீங்கள் அம்பரீஷனையே சரணடையுங்கள்” என்று சொல்லிவிட்டார். முனிவரும் அம்பரீஷனின் கால்களைப் பற்றினார். அவன் விலகி, சக்ராயுதத்தைத் துதிக்க, அது திரும்பிச் சென்றது. இதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டது. அம்பரீஷனும். ஒரு வருடம் துர்வாசரை எதிர்பார்த்து, உண்ணாமல் விரதமிருந்து, அவர் வந்ததும் அவருக்கு உணவளித்து, வழியனுப்பி, பிறகு பாரணை செய்தான். துர்வாசரும், அம்பரீஷனின் பக்தியையும், தீங்கு செய்தவர்களுக்கும் நன்மை செய்யும் குணத்தையும் மெச்சி அவனை ஆசீர்வதித்தார்.
அம்பரீஷன், முன்பு இருந்ததைவிட அதிகமாய் மகாவிஷ்ணுவிடம் பக்தி கொண்டு முக்தி அடைந்தான்.
————–
கண்ணன் கதைகள் (8)
உதவி சமையற்காரன்
ஒரு சமயம், ஒரு பக்தர் 100 படி அரிசி சமைத்து கோயிலில் அன்னதானம் செய்ய விரும்பினார். குருவாயூர்க் கோயிலில், வெளியாட்கள் சமைக்கவோ, சமைத்துக் கொண்டு வந்து கொடுக்கவோ முடியாது. கோயிலின் மடப்பள்ளியில் கீழ்சாந்திகள் (உதவி புரிபவர்) தான் சமைப்பார்கள்.
கோவிலில் மொத்தம் இரண்டு கீழ்சாந்திகளே இருந்தனர். அதிலும் ஒரு கீழ்சாந்தி விடுப்பில் சென்றிருந்தார். மல்லிசேரி நம்பூதிரி என்ற மற்றொரு கீழ்சாந்திதான் ஒருவனாக எவ்வாறு அவ்வளவு சமைப்பது என்று மிகுந்த கவலை கொண்டார். எப்படி அவ்வளவு ஏற்பாடுகளைச் செய்வது என்ற கவலையுடன் தூக்கமில்லாமல் இரவைக் கழித்தார். இரவு முழுவதும் நாராயண நாமத்தை உச்சரிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை.
அடுத்த நாள், அதிகாலையிலேயே கோவிலுக்குச் சென்றுவிட்டார். வேலைகளைச் செய்யத் தொடங்கினார். விடுமுறையில் சென்றிருந்த கீழ்சாந்தி அவர்க்கு முன்பாகவே வந்து விருந்து தயார் செய்ய ஆரம்பித்திருந்தார். சமையல் முடியும் தருவாயில் இருந்ததைப் என்று பார்க்க நிம்மதியாக இருந்தது. சமையல் முடிந்த பிறகு அந்த கீழ்சாந்தி நாராயண சரஸில் குளித்து விட்டு வருகிறேன் என்று சொல்லிச் சென்றார். வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. விருந்தும் நல்லபடியாகவே முடிந்தது.
அடுத்த நாளும் அவர் வரவில்லை. அவரை அழைத்து வரச் சொல்லி ஒருவரை அனுப்பினார். என்ன ஆச்சர்யம்! விடுமுறையில் சென்ற கீழ்சாந்தி சென்றது முதல் படுத்த படுக்கையாக இருப்பதாகத் தகவல் வந்தது. நம்பமுடியாததாய் இருந்தாலும் அவருக்கு உதவியாளராக வந்தது அந்தக் கண்ணனே என்பது மல்லிசேரிக்குப் புரிந்தது. குருவாயூரப்பனின் திருவிளையாடலை எண்ணி மிகவும் வியந்து மகிழ்ந்தார். நம்பியவரைக் காக்க இறைவன் எந்த உருவிலும் வருவார்!!
————
கண்ணன் கதைகள் – 10
சதுரங்க விளையாட்டு
கேரளத்திலுள்ள அம்பலப்புழா, ‘தென்னகத்து துவாரகை’ என்று பக்தர்களால் போற்றப்படுகிறது அம்பலப்புழா கிருஷ்ணர் கோயிலை தேவ நாராயணன் தம்புரான் என்ற மன்னன் கட்டியதாக வரலாறு. மூலவர் இங்கு குழந்தை கிருஷ்ணராகக் காட்சி தருகிறார். திப்பு சுல்தானின் படையெடுப்பின்போது குருவாயூர் உற்சவ மூர்த்தியை இங்கு வைத்திருந்ததாகச் சொல்கிறார்கள். இந்தக் கோயிலின் நைவேத்தியமான “அம்பலப்புழா பால் பாயஸம்” மிகவும் பிரசித்தி பெற்றது. குருவாயூரில் காலையில் பால் பாயசம் சாப்பிடும் கண்ணன், மதியம் அம்பலப்புழாவிற்குப் பால் பாயசம் சாப்பிட வருவதாக ஐதீகம். அம்பலப்புழா பால் பாயஸத்தைப் பற்றிய சுவையான கதை ஒன்று உண்டு.
கண்ணனின் சதுரங்க விளையாட்டும் அம்பலப்புழா பால் பாயஸமும்:
முன்னொரு சமயம் அம்பலப்புழையை ஆண்டு கொண்டிருந்த அரசன் முன் கிருஷ்ணர் ஒரு முனிவர் வடிவில் தோன்றினார். “இந்த நாட்டில் யாரேனும் என்னை சதுரங்கம் ஆடி ஜயிக்க முடியுமா? என்று சவால் விட்டார். அரசனுக்கு சதுரங்கத்தில் மிகுந்த ஆர்வம் இருந்ததால் மகிழ்ச்சியுடன் அரசனே சவாலை ஏற்றான்.
எந்த ஒரு சவாலிலும் பரிசு என்ன என்பதை முன்னமேயே முடிவு செய்ய வேண்டும் அல்லவா? அதனால் அரசன் முனிவரிடம், “சவாலில் நான்தான் ஜயிப்பேன், ஒரு வேளை நீர் ஜயித்தால் பரிசாக என்ன வேண்டும் என்பதை நீரே முடிவு செய்யும்” என்று சொன்னான். முனிவர், “என்னைப் போன்ற முனிவர்களுக்கு வேறென்ன தேவையாக இருக்க முடியும்? எனக்கு அரிசிதான் தேவை. ஆனால் நான் சொல்லும் முறையில் அரிசியைத் தர வேண்டும். முதல் கட்டத்தில் 1 அரிசி, இரண்டாவது கட்டத்தில் 2 அரிசி,, மூன்றாவது கட்டத்தில் 4 அரிசி, நான்காவது கட்டத்தில் 16 அரிசி என்ற ரீதியில் அரிசியைத் தர வேண்டும்” என்று சொன்னார்.
அரசனும், இவ்வளவு பெரிய ராஜ்ஜியத்தில் வெறும் அரிசியைக் கேட்கிறீர்களே, வேறு ஏதாவது கேளுங்கள் என்று சொல்ல முனிவர் வேறு எதுவும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். அரசனுக்கு அந்தக் கோரிக்கையில் வருத்தம் இருப்பினும், அரிசிதானே என்று சந்தோஷமாக ஆடத் துவங்கினான். சதுரங்க விளையாட்டு துவங்கியது, கண்ணனுடைய விளையாட்டும் தான்!! அரசன் ஆட்டமிழந்தான். சொன்னபடி முனிவருக்குப் பரிசு தரும் நேரம் வந்தது. கட்டத்தில் முனிவர் சொன்னபடி அரிசியை வைக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அரசனுக்குத் தன் தவறு புரிந்துவிட்டது. முனிவரின் உண்மையான கோரிக்கையை உணர்ந்தான். 20-வது கட்டம் வரும்போது அரிசி அளவு 10 லட்சமாக (மில்லியன்) உயர்ந்தது. 40-வது கட்டத்தில் ஒரு மில்லியன் மில்லியனாக ஆயிற்று. இவ்வாறு ஒரு பெருக்குத் தொடர்ச்சியின் (geometric progression) வளர்ச்சியாக வளர்ந்துகொண்டே போனது. களஞ்சியத்தில் இருந்த அரிசி, நெல் அனைத்தும் தீர்ந்து, பக்கத்து ராஜ்ஜியங்களில் இருந்த நெற்குவியலையும், அரிசியையும் கொட்டியாயிற்று. இப்போது, அரசன் முனிவரின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என உணர்ந்தான். 64 கட்டங்கள் கொண்ட சதுரங்கத்தில் நிரப்ப ((2 ^ 64) – 1) அதாவது 18.446.744.073.709.551.615 டிரில்லியன் டன் கணக்கில் அரிசி தேவைப்பட்டது. அரசன் கலங்கினான். என்ன செய்வது என்று புரியவில்லை.
அரசனின் சங்கடத்தைக் கண்ட முனிவர், கிருஷ்ணர் வடிவில் அரசன் முன் தோன்றினார். அரிசியை உடனடியாகக் கொடுக்க வேண்டாம், கடன் தீரும்வரை அம்பலப்புழை கிருஷ்ணன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அரிசியில் செய்யப்பட்ட பால் பாயஸம் செய்து கொடு என்று கூறினார். அரசனும் கர்வத்தை ஒழித்து, தனது சொத்துக்கள் அனைத்தையும் கோவிலுக்கே கொடுத்தான். இன்றளவும் கோயிலில் அரிசியால் செய்யப்பட்ட பால் பாயஸம் கிருஷ்ணனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு, வரும் பக்தர்களுக்குப் பிரஸாதமாகக் கொடுக்கப் படுகிறது.
———–
கண்ணன் கதைகள் – 11
நிவேதனம்
யசோதை கண்ணனை வெளியே எங்கும் போகக் கூடாது என்று சொல்லிவிட்டுத் தயிர் கடையச் சென்றுவிட்டாள். சிறிது நேரம் சாதுவாக இருந்த கண்ணன்., நண்பர்கள் விளையாடுவதைக் கண்டவுடன் மெதுவே வீட்டை விட்டு வெளியேறினான். அவனைக் கண்ட நண்பர்கள் மிக மகிழ்ந்து, “கண்ணா, வா வழக்கம்போல் வெண்ணை தின்னச் செல்லலாம்” என்று கூப்பிட்டார்கள்.
கோபிகைகள் அனைவரும் கூடிப்பேசி, கண்ணன் வெண்ணை திருட வருவான் என்பதால் உரியில் வெண்ணைப் பானையை வைத்துவிட்டு, தொட்டால் சத்தம் வரும்படியாக மணியைக் கட்டியிருந்தார்கள். பிறகு நிம்மதியாக வேலை செய்யச் சென்றுவிட்டார்கள். கண்ணனும் நண்பர்களும் மெதுவே ஒரு வீட்டில் நுழைந்தனர். உரியில் வெண்ணை இருப்பதைப் பார்த்த கண்ணன், அதில் மணி கட்டியிருப்பதையும் பார்த்து விட்டான். அக்கம்பக்கம் பார்த்துவிட்டு அந்த மணியிடம்,“மணியே! நாங்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை அடிக்காதே” என்று சொல்ல மணியும் சம்மதித்தது.
கண்ணன், உரியிலிருந்து ஒவ்வொரு பானையாக இறக்கி நண்பர்களிடம் கொடுத்துவிட்டு, கடைசியாக இருந்த பானையில் கை விட்டு வெண்ணையை எடுத்து வாயருகே கொண்டு சென்றான். அதுவரை சப்திக்காமல் இருந்த மணி, இப்போது கணகணவென்று ஒலிக்கத் துவங்கியது. கண்ணன் வேகமாகக் கீழே குதித்துவிட்டு மணியிடம், “ஏ மணியே! ஒலிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு இப்போது நான் உண்ணும்போது ஏன் ஒலிக்கிறாய்?” என்று கேட்டான். மணியோ,“கண்ணா, மணிவண்ணா, பலப்பல யுகங்களாக, உனக்கு நிவேதனம் செய்யும்போது நான் ஒலி எழுப்புவது வழக்கம்தானே, இன்று நீ உண்ணும்போது எப்படி ஒலிக்காமல் இருப்பேன்?” என்றது. சத்தம் கேட்டு கோபிகை வரவே அனைவரும் ஓடிச் சென்றார்கள். மெதுவே அடுத்த வீட்டில் நுழைந்தார்கள். அங்கும் உரியில் மணி கட்டியிருந்தது. இப்போது கண்ணன் ஒரு கையால் மணியின் நாக்கை ஒலிக்காதவாறு பிடித்துக் கொண்டு மறு கையால் வெண்ணை உண்டுவிட்டு ஓடினான். இடையர்கள் அனைவரும் ஓடுவதைக் கண்ட கோபிகைகள், தங்களுடைய யோசனையால் பயந்து கண்ணன் ஓடுவதாக நினைத்தனர். பிறகு உள்ளே சென்று பார்த்தபோது வெண்ணையைக் காணாமல், கண்ணனின் லீலையை நினைத்து வியந்து மகிழ்ந்தனர்.
————
கண்ணன் கதைகள் – 12
கயிறா? கதலியா?
ஒரு ஏழைப் பெண்மணி தென்னை மட்டையிலிருந்து கயிறு பிரித்து வியாபாரம் செய்து வந்தாள். அவளுக்கு நெடுநாட்களாகக் குழந்தைப் பேறு இல்லை. மிகவும் வருந்திய அவள் குருவாயூரப்பனிடம் தனக்குக் குழந்தை உண்டானால் கயிற்றுப் பிரியால் துலாபாரம் செய்வதாய் வேண்டிக் கொண்டாள்.
சிறிது நாட்களிலேயே அவள் கருவடைந்தாள். வியாபாரமும் செழிக்கத் தொடங்கியது. குழந்தைக்கு ஆறு மாதமானதும் பிரார்த்தனையை நிறைவேற்ற குருவாயூர் சென்றாள். இப்போது வசதியாய் இருப்பதால் கயிற்றுத் துலாபாரம் செய்தால் கேவலம், கதலித் துலாபாரம் செய்யலாம் என்று முடிவு செய்தாள். குழந்தையைத் துலாபாரத் தட்டில் கிடத்தி, மற்றொரு தட்டில் கதலிப் பழத்தை வைத்தார்கள். குழந்தையின் எடையை விட பத்து மடங்கு கதலியை வைத்தும், தட்டு சமநிலையை அடையவில்லை. கோவில் சிப்பந்தி அவளிடம், “ஏதோ தப்பு நடந்திருக்கிறது, என்ன பிரார்த்தித்தாய்?” என்று கேட்டனர். அவளும், “ஏழையாய் இருக்கும் சமயம் கயிறு வேண்டிக் கொண்டேன், இப்போது அவன் அருளால் வசதி பெருகிவிட்டது, அதனால் கயிற்றுத் துலாபாரம் செய்தால் கேவலம், கதலித் துலாபாரம் செய்யலாம் என்று செய்தேன்” என்று கூறினாள். கோவில் சிப்பந்திகள்,“ உன்னிடம் எவ்வளவு கோடி இருந்தாலும், பிரார்த்தித்த வேண்டுதலையே அப்பன் ஏற்பான்” என்று கூறினார்கள். பழங்களை இறக்கிவிட்டு கயிற்றை ஏற்றினார்கள், என்ன ஆச்சர்யம்! தராசு கீழே இறங்கியது. அப்பன் பொருட்களில் உயர்வு, தாழ்வைப் பார்ப்பதில்லை, அன்புடன் சமர்ப்பிக்கும் எதையும் ஏற்பான் என்பதற்கு இந்த லீலை உதாரணம்.
————-
கண்ணன் கதைகள் – 13
மோதிரம்
பூந்தானம் நம்பூதிரி என்பவர் சிறந்த பக்தர். அவர் தினமும் தனது ஊரிலிருந்து காட்டு வழியே தொலைதூரம் நடந்து குருவாயூருக்குச் சென்று அப்பனைத் தரிசனம் செய்வார். அவ்வாறு செல்கையில் ஒரு நாள் வழியில் சில கொள்ளைக்காரர்கள் அவரைத் தடுத்துத் தாக்கினர். அவரிடம் என்ன பொருள் இருக்கிறது என்று ஆராயத் தொடங்கினார்கள். அவர் மனமோ, தன் விரல்களில் உள்ள மோதிரத்தை அவர்கள் பார்த்துவிடக் கூடாது என்று பயந்தது. ஆபத்தினை உணர்ந்த அவர், கண்களை மூடி “குருவாயூரப்பா குருவாயூரப்பா,” என்று உரத்துக் கூறினார். சிறிது நேரத்தில் புதியதான மலரின் மணம் காற்றில் வீசியது. கண் திறந்து பார்த்தபொழுது மாங்காட்டச்சன் என்ற திவான் குதிரைமேல் வேகமாக வாளைச் சுழற்றிக் கொண்டு வந்தார். அவரைக் கண்டதும் கொள்ளையர்கள் வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். மனம் நெகிழ்ந்த பூந்தானம் உமக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் என்று வினவ, அவரும் உன்னுடைய கையில் இருக்கும் மோதிரத்தை எனக்குக் கொடு என்று கூறினார். மோதிரம் களவு போய்விடக் கூடாது என்று பயந்த பூந்தானம் இப்போது தயங்கி, திகைத்து, செய்வதறியாது அந்த மோதிரத்தை திவானுக்குப் பரிசாக அளித்தார். திவான் அவரைத் தன் குதிரையில் ஏற்றிக் கொண்டு குருவாயூர் எல்லையில் விட்டுவிட்டுச் சென்றார்.
அதே நேரம் கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அப்பன், “அர்ச்சகரே! என் கையில் ஒரு மோதிரம் இருக்கும், அதைப் பூந்தானத்திடம் கொடுத்துவிடுங்கள், கொள்ளையர்களிடம் இருந்து அவரைக் காப்பாற்ற மாங்காட்டச்சன் உருவில் சென்று அவரிடம் இருந்து விளையாட்டாக மோதிரத்தைப் பெற்றேன்” என்று கூறினார்.
பூந்தானம் குருவாயூர்க் கோயிலை நெருங்கும்போது, அர்ச்சகர் ஓடி வந்து பூந்தானத்தின் காலில் விழுந்தார். தன் கனவில் அப்பன் சொன்னதைக் கூறி மோதிரத்தை அவரிடம் கொடுத்தார். மோதிரத்தைப் பார்த்த பூந்தானத்திற்குப் புல்லரித்தது. முந்தைய இரவு மாங்காட்டச்சனிடம் கொடுத்த அதே மோதிரம்தான் அது!! தன்னைக் காப்பாற்ற குருவாயூரப்பனே மாங்காட்டச்சனாக வந்ததை எண்ணி ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்.
அது சரி, பக்தியைத் தவிர வேறொன்றும் அறியாத, பொருட்களில் பற்றற்ற பூந்தானத்திற்கு மோதிரம் களவு போகக் கூடாது என்று
ஏன் தோன்றியது? தன்னைக் காப்பாற்றியவருக்கு அதைப் பரிசளிக்க ஏன் தயங்கினார்? நாளை வரை பொறுத்திருங்கள்.
————-
கண்ணன் கதைகள் – 14
இரு கண்கள்
பூந்தானம் நம்பூதிரி சிறந்த பக்தர். படிப்பறிவு இல்லாதவர். பக்தியுடன் இறைவன் பெயரில் தா மனதிற்குத் தோன்றியபடி மலையாளத்தில் சிறு சிறு கவிதைகள் எழுதுவார். ஒரு சமயம் அவர் கண்ணனைப் பற்றிய பாடல்களை எழுதி, மேல்பத்தூர் நாராயண பட்டத்திரியிடம் கொடுத்து, தயவு செய்து இதில் தவறு ஏதும் இருந்தால் திருத்தித் தாருங்கள் என்று சொன்னார். நாராயண பட்டத்திரி தான் சிறந்த அறிவாளியென்ற கர்வத்தில், “இதில் நிறைய இலக்கணப் பிழை இருக்கிறது, படிப்பறிவு இல்லாதவன் எழுதுவது போல் இருக்கிறது” என்று ஏளனமாகக் கூறினார். பூந்தானம் மிகுந்த வருத்தத்துடன் சென்று விட்டார். அவர் மனம் கலங்கியது. அவர் வருத்தத்தை குருவாயூரப்பனால் சகிக்க முடியவில்லை. நாராயண நம்பூதிரியின் ரோகத்தின் உபத்திரவத்தை அதிகப்படுத்தினார். ரோகத்தின் அவஸ்தையில் அவர் அலறினார்.
அடுத்த நாள் நாராயண பட்டத்திரியின் வீட்டிற்கு ஒரு அழகிய இளைஞன் வந்தான். நீங்கள் இயற்றிய நாராயணீயத்தைக் கேட்பதற்காக வந்திருக்கிறேன், படியுங்கள் என்று சொன்னான். பட்டதிரியும் மகிழ்ச்சியுடன் படிக்க ஆரம்பித்தார். அவர் படிக்கப் படிக்க, பல இடங்களில் பிழை இருக்கிறது என்று அந்த இளைஞன் சொல்லிக் கொண்டே வந்தான். பட்டத்திரி, “இத்தனை தவறுகளைச் சொல்லும் நீ யார்?” என்று கேட்டார். உடனே அந்த இளைஞன் மறைந்தான். புல்லாங்குழலை ஊதிக்கொண்டு அங்கே குருவாயூரப்பன் காட்சி அளித்தார். மேலும், “நாராயண நம்பூதிரியின் பக்தியை விட பூந்தானத்தின் பக்தியின் மேல் எனக்கு விருப்பம் அதிகம், அவரது பாடல்களில் இலக்கணம் இல்லாவிட்டாலும் பக்தி இருக்கிறது, பூந்தானத்திடம் மன்னிப்பு கேள், உன்னுடைய ரோகத்தின் உபத்திரவம் குறையும்” என்று கூறி மறைந்தார்.
உடனே நாராயண பட்டத்திரி, தன்னுடைய வித்யா கர்வத்தை எண்ணி வெட்கி, பூந்தானத்திடம் மன்னிப்பு கேட்டார். மேலும், அவரால் தனக்கு அப்பனின் தரிசனம் கிடைத்ததில் மகிழ்ந்து அவருக்குத் தன் மோதிரத்தையும் பரிசாக அளித்தார். “நமது இந்த நட்பின் அடையாளமாக இந்த மோதிரம் எப்போதும் உங்கள் விரலிலேயே இருக்கவேண்டும்,அந்தக் குருவாயூரப்பனே நேரில் வந்து கேட்டாலொழிய வேறொருவருக்கும் தரக் கூடாது” என்று அன்புக் கட்டளையிட்டார். அதனால்தான் அந்த மோதிரத்தைக் கொள்ளையர்கள் பார்த்துவிடக் கூடாது என்றும், மாங்காட்டச்சனிடம் அதைத் தரவும் தயங்கினார் பூந்தானம். இப்போது புரிகிறதா? முந்தைய கண்ணன் கதையில் அவர் ஏன் தயங்கினார் என்று? கண்ணனுக்கு பூந்தானம் நம்பூதிரியும், நாராயண பட்டத்திரியும் இரு கண்களைப் போன்றவர்கள் என்பது இதிலிருந்து விளங்குகிறது. பின்னாளில் “ஞானப்பான” என்ற சிறந்த காவியத்தையும் பூந்தானம் இயற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நீண்ட காலம் கழித்து பிறந்த குழந்தையை இழக்க நேரிட்டபொழுது குருவாயூரப்பனை வேண்டி எழுதியதே ஞானப்பான என்னும் நூல். இந்த நூல் எளிய மலையாள நடையில், சமசுகிருதம் கலக்காமல், உயர்ந்த தத்துவக் கருத்துகளை உள்ளடக்கியவாறு எழுதப்பட்டது.
———–
கண்ணன் கதைகள் – 15
மானவேடன்
வில்வமங்கலம் ஸ்வாமிகள் கண்ணனை நேரிலேயே பிரத்யக்ஷமாகக் கண்டவர். அவர் காலத்தில் மானவேடன் என்று ஒரு ராஜா இருந்தார். அவர் கவிஞர். சிறந்த பக்தரும் ஆவார். ஒரு முறை ராஜா குருவாயூருக்கு தரிசனம் செய்யச் சென்றார். அங்கே வில்வமங்கலம் ஸ்வாமிகளைக் கண்டார். அவரிடம் சென்று வணங்கி, ஸ்வாமிகளே! குருவாயூரப்பனை நேரில் காண எனக்கு வழிகாட்டுங்கள்” என்று வேண்டினார். ஸ்வாமிகள், “மிகுந்த பிரயத்தனத்துடன் முனிவர்கள் அடையும் அந்த மகாபாக்கியத்தை இவ்வளவு சுலபமாகக் கேட்கிறாயே! அது மிகவும் கடினம்” என்று சொன்னார். ராஜா மிகவும் வருந்தி, அழுது,”தாங்கள் எப்படியாவது பகவானைக் காண, அவனை அடைய வழி சொல்ல வேண்டும்” என்று கேட்டார்.
ஸ்வாமிகளும் அவனிடம் கருணை கொண்டு, கண்ணனிடம் கேட்டுவிட்டுச் சொல்கிறேன் என்று சொன்னார். பிறகு, கண்ணனிடம் கேட்டுவிட்டதாகவும், கண்ணனை அதிகாலையில் மகிழ மரத்தடியில் விளையாடும்போது பார்க்கலாம் என்றும் கூறினார். அதன்படி, மானவேடன் கண்ணனைக் கண்டான். அப்பொழுது கண்ணன், தலையில் மயில்தோகையுடனும், வனமாலை, கங்கணங்கள், கிண்கிணிகளால் ஆன அரைஞாண், பீதாம்பரம், தாமரை போன்ற திருவடிகள், மேகத்திற்கு ஒப்பான நிறமுடைய திருமேனியுடன், மயக்கும் அழகுடன் விளையாடுவதைக் கண்டான். உடல் புல்லரிக்க, தன்னை மறந்து ஓடி அப்பனைத் தழுவச் சென்றான். உடனே குருவாயூரப்பன், ” வில்வமங்கலம் உன்னிடம் பார்க்கத்தான் சொன்னார், தூக்கச் சொல்லவில்லை” என்று கூறி மறைந்தார். கண்ணனைத் தொட முடியவில்லையே என்று அரசனுக்கு ஏக்கமாக இருந்தது. அப்போது அரசன், தன் கையில் ஒரு மயில்தோகை இருக்கக் கண்டான். அதைக் கண்டு மகிழ்ந்து ஸ்வாமிகளிடம் சென்று நடந்ததைக் கூறினான். ஸ்வாமிகள் கூறியதன்பேரில் அந்தத் தோகையை ஒரு ரத்தினக் கிரீடத்தில் பதித்து, பூஜித்து வந்தான். மேலும், மகிழ மரத்தால் செய்யப்பட்ட கண்ணன் விக்ரகத்தைச் செய்து, அதைக் கோவிலின் தென்கிழக்குப் பகுதியில் வைத்து, அதன்முன் அமர்ந்து, பாகவதத்தின் தசம, ஏகாதசி ஸ்காந்தத்தைத் தழுவி, “கிருஷ்ணகீதி” என்ற நாட்டிய நாடகத்தை இயற்றி, அதை பகவானுக்கு அர்ப்பணித்தான்.
துலா மாதம் கடைசி தினத்தன்று அர்ப்பணித்ததால், கோவிலில் இன்றும் அந்த நாளை ‘கிருஷ்ணகீதி தினம்’ என்று கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் கிருஷ்ணகீதியை நாட்டிய நாடகமாக நடித்து ஆடுவார்கள், கிருஷ்ணராக நடிப்பவர் அந்த மயில்தோகை பதித்த கிரீடத்தைத் தரித்திருப்பார். ஸ்ரீ அப்பனை வழிபட்டால் யோகமும் க்ஷேமமும் தேடி வரும் என்பதைக் கண்கூடாக இன்றும் காணலாம்.
———-
கண்ணன் கதைகள் – 16
பார்வையிலே சேவகனாய்
கௌரி என்ற நம்பூதிரிப் பெண் கண்ணனின் பக்தை. அவள் சிறு குழந்தையாக இருந்தபோது அவளது மாமா அவளுக்கு ஒரு கண்ணன் விக்ரகத்தைக் கொடுத்தார். அவள் எப்போதும் அந்தக் கண்ணனுடனே விளையாடுவாள்.
அவள் வளர்ந்ததும் குரூரில் உள்ள ஒரு பிராம்மணனுக்குத் திருமணம் செய்து கொடுத்தனர். குரூர் இல்லத்தில் வாழ்க்கைப்பட்டதால் அவளை குரூரம்மாள் என்று அழைத்தனர். திருமணத்திற்குப் பிறகு அவள் கிருஷ்ண பக்தி இன்னும் அதிகரித்தது. திடீரென்று ஒரு நாள் அவள் கணவன் இறந்துவிட்டான். அப்போது அவளுக்கு வயது பதினாறு. குழந்தைகள் இல்லை.அதன் பிறகு அவள், முழுவதும் தன்னை கிருஷ்ண பக்தியிலேயே ஈடுபடுத்திக் கொண்டாள். பக்தி பலவிதம். அவளது பக்தி யசோதையைப் போன்ற தாய்மை உணர்வுடன் கூடியதாக இருந்தது. கண்ணனுக்கு நைவேத்யம் செய்துவிட்டு அவன் வராவிட்டால் அழுவாள். அவள் அனைத்தையும் கண்ணனாகவே பாவித்தாள்.
காலம் கடந்தது. அவளது உறவினர்கள் ஒவ்வொருவராக இறந்தனர். அவள் தனித்து இருந்தாள். எப்போதும் கண்ணனின் நாம ஜபம் செய்து கொண்டிருப்பாள். ஒரு நாள் அவள், ” கண்ணா நீதான் எனக்குத் துணையாக எப்போதும் இருக்க வேண்டும், யசோதையை விட்டுச் சென்றதுபோல் என்னைக் கைவிட்டுவிடாதே” என்று மனமுருகப் பிரார்த்தித்தாள்.
ஒரு நாள், 7,8 வயதுள்ள ஒரு பாலகன் அவள் வீட்டு வாசலில் வந்து, “பாட்டி, .நான் ஒரு அநாதை. எனக்கு ஏதாவது வேலை தாருங்கள்” என்றான். அவள், “நீ மிகவும் சிறியவனாக இருக்கிறாய், உன்னால் வேலை செய்ய முடியாதே?” என்றாள். அவனோ,”நான் எல்லா வேலையும் செய்வேன். தங்குவதற்கு இடமும், உணவும் அளித்தால் போதும்” என்று கூறினான். இயல்பாகவே கருணை உள்ளம் கொண்ட அவள், மிக மகிழ்ந்து அவனைத் தன் மகனாகவே நினைத்து ஏற்றுக் கொண்டாள். அவனை’ ” உன்னி” என்று அன்புடன் அழைத்தாள்.
வில்வமங்கலம் ஸ்வாமிகள் என்பவர் பூஜை செய்யும்போது கண்ணனை நேரிலேயே பார்ப்பார் என்று கேள்விப்பட்டாள். அவரைத் தன் வீட்டிற்கு வந்து பூஜைகள் செய்து உணவருந்திப் போகுமாறு அழைத்தாள். அவரும் சம்மதித்தார்.
குரூரம்மாவின் அடுத்த வீட்டில் ‘செம்மங்காட்டம்மா’ என்று ஒரு பணக்காரப் பெண்மணி இருந்தாள். குரூரம்மாவிடம் ஊரிலுள்ள அனைவரும் மிகுந்த மரியாதையுடன் இருப்பதால் அந்தப் பெண்மணிக்கு எப்போதும் பொறாமை. குரூரம்மாவின் வீட்டிற்கு ஸ்வாமிகள் செல்லக் கூடாது என்று, அதே நாளில் தன் வீட்டிற்கு அவரை அழைத்தாள். குரூரம்மாவிற்கு இது பற்றித் தெரியாது.
பூஜையன்று காலை குரூரம்மா குளிக்க ஆற்றுக்குச் சென்றாள். குளித்துவிட்டு ஈரத் துணியைப் பிழியும்போது, அருகில் நீராடிக் கொண்டிருந்த செம்மங்காட்டம்மாவின் மீது சில நீர்த் துளிகள் தெறித்தது. உடனே அவள் குரூரம்மாவை திட்டிவிட்டு, மீண்டும் நீரில் முங்கி எழுந்து ,”ஸ்வாமிகள் என் வீட்டிற்கு வருகிறார், இப்போது நான் செல்ல வேண்டும்” என்று கூறினாள். அதைக் கேட்ட குரூரம்மாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. மனம் நொந்தபடியே வீடு திரும்பி, ‘உன்னி’ யிடம் நடந்ததைக் கூறினாள். அவனும்,”கவலைப்படாதே பாட்டி, ஸ்வாமிகள் நிச்சயம் நம் வீட்டிற்கு வருவார்” என்று அவளைத் தேற்றினான். அவனை நம்பிய அவள், “அப்படியெனில், அதற்கான ஏற்பாடுகள் ஒன்றையும் நான் செய்யவில்லையே” என்றாள். அவனும்,” நீ ஓய்வெடு பாட்டி, நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன்” என்று கூறி பூஜைக்கு வேண்டியவற்றையும், மற்ற எல்லா வேலைகளையும் விரைவாகச் செய்து முடித்தான்.
செம்மங்காட்டம்மாவின் வீட்டில் ஸ்வாமிகள் வருவதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. ஸ்வாமிகள் வந்துவிட்டதன் அறிகுறியாக அவருடைய சிஷ்யன் சங்கை முழங்கியபோது சங்கிலிருந்து நாதம் எழவில்லை. அதை ஒரு துர்நிமித்தமாகக் கருதிய ஸ்வாமிகளுக்கு, உடனே குரூரம்மாவின் வீட்டிற்கு வருவதாக வாக்களித்தது நினைவிற்கு வந்தது. அதனால் குரூரம்மாவின் வீட்டிற்கு சென்று. மீண்டும் சங்கை முழங்கியபோது அதிலிருந்து நாதம் எழுந்தது. இறைவனுடைய ஆணையாக அதை ஏற்று அங்கே சென்றார். ‘உன்னி’ வரவேற்றான். கண்ணனை நேரிலே பார்த்திருந்தும்கூட, மாயையால் அவனை அவர் அறியவில்லை.
எப்போதும், ஸ்வாமிகளின் பூஜைக்கு வேண்டியவற்றை அவரது சிஷ்யர்கள்தான் செய்வது வழக்கம். வேறு எவருக்கும் எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியாது. இங்கோ, பூஜைக்கு வேண்டிய அனைத்தும் முறையாக செய்யப்பட்டு, தயாராக இருந்தது. சிஷ்யர்களுக்கு ஒரே ஆச்சர்யம்!
பூஜை ஆரம்பித்தது. ஸ்வாமிகள் கண்ணை மூடிக் கண்ணனைத் தியானித்தார். கண்களை மூடியதும் ‘உன்னி’ அவர் முன்னே சென்று நின்றான். சிஷ்யர்கள் திகைத்தனர். ஒருவரும் பேசாமல் மௌனமாய் இருந்ததால், சிஷ்யர்களால் ‘உன்னி’யைக் கூப்பிட முடியவில்லை. ஸ்வாமிகள், பூக்களால் அர்ச்சனை செய்ய ஆரம்பித்தார். கண்களைத் திறந்தபோது,. எல்லா பூக்களும் ‘உன்னி’யின் காலருகே இருந்ததைப் பார்த்தார். அவனை நகர்ந்து அறையின் மூலைக்குச் சென்று நிற்கச் சொல்லிவிட்டு மீண்டும் கண்களை மூடித் தியானித்து அர்ச்சனை செய்தார். இப்போதும் பூக்கள் ‘உன்னி’யின் பாதங்களில் விழுந்தன. ஸ்வாமிகளுக்கு, குரூரம்மாவிற்காக பகவானே ‘உன்னியாக’ வந்திருப்பது புரிந்தது. இப்போது அவர் கண் முன் மாயக் கண்ணன் நின்றான்.
அவர் மெய்சிலிர்த்து நமஸ்கரிக்க எழுந்தார். கண்ணன் தடுத்து நிறுத்தினான். “நமக்குள் இது ரகசியமாக இருக்கட்டும், நான் குரூரம்மாவுடன் அவளது ‘உன்னியாகவே’ இருக்க விரும்புகிறேன்” என்று கண்ணன் அவர் காதருகில் கூறுவது கேட்டது.
பூஜையும் நல்லவிதமாக நடந்து முடிந்தது. ஸ்வாமிகளும் சிஷ்யர்களும் குரூரம்மாவிடம் விடைபெற்றுச் சென்றனர். குரூரம்மாவும் மிகுந்த மகிழ்ச்சியடைந்.தாள்.
குரூரம்மாவின் காலத்தில் நாமும் பிறந்திருந்தோமா என்று தெரியவில்லை. ஆனால் இந்தக் கதையைத் தட்டச்சு செய்யும்போது, பாரதியாரின்
“நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய்., பார்வையிலே சேவகனாய், எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதியென்று சொன்னான்” என்ற வரிகள் நினைவிற்கு வருகின்றது.
“கண்ணா, மணிவண்ணா, உனை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்”!
————-
கண்ணன் கதைகள் – 17
குரூரம்மாவின் கிருஷ்ண பக்தி
வில்வமங்கலம் ஸ்வாமிகள் பூஜை செய்யும்போது கண்ணனை நேரிலே காண்பார் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு சமயம், ஒரு பிராம்மணனுக்கு வயிற்று வலி வந்தது. எல்லா மருத்துவர்களிடம் காண்பித்தும் வயிற்று வலி தீரவேயில்லை. நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது. வில்வமங்கலம் ஸ்வாமிகளைப் பற்றிக் கேள்விப்பட்ட அவன், தனது வலி தீர வழி சொல்லும்படி அவரைக் கேட்டான். ஸ்வாமிகள் கண்ணனைக் கேட்கிறேன் என்று சொல்லிவிட்டு அடுத்த நாள் பூஜையின் போது கண்ணனிடம் அது பற்றிக் கேட்டார். பகவானும் அது கர்ம வினையினால் என்று சொன்னார். வினை தீர வழி என்ன என்று அவன் கேட்க, ஸ்வாமிகளும், முற்பிறப்பில் செய்த தீமையால் வரும் இந்த வினை தீர வழியில்லை என்று சொன்னார்.அவனும் தான் வினைப்பயனை நொந்துகொண்டு, வயிற்றைப் பிடித்துக் கொண்டு சென்றான்.
செல்லும்போது வயிற்று வலி அதிகமாகிவிடவே, அங்கு இருந்த வீட்டின் திண்ணையில் உட்கார்ந்தான். அது குரூரம்மாவின் வீடு. அவன் வயிற்றியப் பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்ட அவள், பசி என்று நினைத்து உணவளித்தால். அவன் மிகவும் வருந்தி, தனக்கு வயிற்று வலி இருப்பதால் ஒரு பருக்கை கூட சாப்பிட முடியாது என்று கூறினான்.
அதைக் கேட்ட அவள், சிறிதும் தயங்காமல்,”மகனே, ராமா, ராமா என்று ஜபிக்க ஆரம்பி, நம்பிக்கையோடு சொல், சரியாகிவிடும்” என்று சொன்னாள். அவனும் நம்பிக்கையோடு சொல்ல ஆரம்பித்தான். அவள் எப்போதும் ராமா, கிருஷ்ணா என்று நாம ஜபம் செய்வதால் அவளைவிட சிறந்த குரு வேறு யார் இருக்கமுடியும்? சிறிது நேரத்திலேயே வலி சற்றே குறைந்தது போல் இருந்தது. இப்போது அவள், அவனிடம், “சரி, நீ அருகிலுள்ள குலத்திற்குச் சென்று, கிருஷ்ண நாமத்தைச் சொல்லிக் கொண்டே முங்கிக் குளித்துவிட்டு வா, சாப்பிடலாம்” என்று சொன்னாள். அவனும் அவ்வாறே “கிருஷ்ணா, கிருஷ்ணா” என்று சொல்லிக்கொண்டு முங்கி எழுந்தான். என்ன ஆச்சர்யம்!!!! அவனது வயிற்று வலி முற்றிலும் நீங்கிவிட்டது. அவன் குரூரம்மாவின் வீட்டிற்கு சென்று மிக்க மகிழ்ச்சியுடன் உணவை உந்துவிட்டு நன்றி கூறிவிட்டுப் புறப்பட்டான். அதன் பிறகு அவன் பக்தியுடன் எப்போதும் ராமநாமத்தையும் கிருஷ்ணநாமத்தையும் ஜபித்து வந்தான்.
ஒரு முறை, ஒரு கதாகாலட்சேபத்தின்போது வில்வமங்கலம் ஸ்வாமிகளைக் கண்ட அவன், இந்த சம்பவத்தைக் கூறி, குரூரம்மாவால், தனது வயிற்று வலி தீர்ந்தது என்று சொன்னான்.
அடுத்த நாள் பூஜையின் போது, ஸ்வாமிகள் கண்ணனிடம், “கண்ணா, நீ இப்படிச் செய்யலாமா? நீ ‘கர்மாவினை’என்று சொன்னாயே தவிர, நாமஜபத்தால் வலி சரியாகும் என்று சொல்லவேயில்லையே?” என்று கேட்டார்.
கண்ணன் சிரித்துக் கொண்டே, “ஆமாம் கர்மவினை என்று சொன்னேன், நாமஜபம் செய்தால் .தீரும் என்று சொல்லவில்லை. வில்வமங்கலத்திற்கு நாமஜபம் அனைத்துப் பாபங்களையும் போக்கும் என்று தெரியாதா என்ன? இந்த விஷயத்தில் குரூரம்மாவிற்கு இருக்கும் நம்பிக்கையில், துளி கூட உனக்கு இல்லையே!” என்று கூறினார். பகவானான கண்ணனே இவ்வாறு சொல்வதைக் கேட்ட வில்வமங்கலம், குரூரம்மாவின் பக்திக்குத் தலை வணங்கினார்.
————–
கண்ணன் கதைகள் – 18
தயிர் சாதமும் வடுமாங்காயும்
முன்னொரு சமயம், குருவாயூர் கோவிலில் பூஜை செய்து வந்த நம்பூதிரி, அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. கோவிலில் பூஜைகள் தடை இல்லாமல் நடக்க வேண்டும் என்பதால், சிறு பாலகனான தனது மகனிடம் கோவிலைக் கவனித்துக் கொள்ளும்படியும், பூஜைகளைத் தடையின்றி செய்ய வேண்டும் என்றும், குறித்த நேரத்தில் நைவேத்யம் செய்யுமாறும் கூறிச் சென்றார்.
அவனும் அரிசியை சமைத்து அப்பனுக்கு நைவேத்யம் செய்து, அப்பனிடம், ” கண்ணா, சாப்பிடு” என்று கூறினான். கண்ணன் அசையவில்லை. உடனே அவன், வெறும் சாதத்தை எவ்வாறு கண்ணன் சாப்பிடுவான், என நினைத்து, அருகில் உள்ள வீட்டில் இருந்து கொஞ்சம் தயிரும், வடுமாங்காயும் வாங்கி வந்தான். தயிரை சாதத்தில் கலக்கி, உப்புமாங்காயை வைத்தான். அப்பொழுதும் கண்ணன் சாப்பிடவில்லை. சாப்பிடு கண்ணா என்று கெஞ்சினான். சாதம் அப்படியே இருந்தது.
என்னுடைய அப்பா வந்தால், உனக்கு சாப்பிட ஒன்றும் தரவில்லையென்று திட்டுவார், சாப்பிடு என்று சொல்லிக் கெஞ்சி அழுதான். குழந்தையின் அழுகையைப் பொறுக்க முடியாத கண்ணன், காட்சி தந்தான். அன்னத்தை உண்டான். குழந்தையும் ஸந்தோஷமாக, காலித் தட்டுடன் வெளியே வந்தான். பொதுவாக, நைவேத்யத்தை கோவிலுள்ள பிஷாரடிக்குக் கொடுப்பது வழக்கம். காலித் தட்டுடன் வெளியே வந்த அவனைக் கண்ட அவருக்கு மிகுந்த கோபம் வந்தது. “சாதம் எங்கே?” என்று கேட்டார். குழந்தையும், “கண்ணன் சாப்பிட்டுவிட்டான்” என்று சொன்னான். நம்பூதிரி வந்ததும், பிஷாரடி,”நைவேத்தியத்தை உங்கள் மகன் சாப்பிட்டுவிட்டு, கண்ணன் சாப்பிட்டதாகச் சொல்கிறான்” என்று சொன்னார். நம்பூதிரி, “நைவேத்தியத்தை என்ன செய்தாய்?” என்று கேட்டார். மறுபடியும் குழந்தை, “கண்ணன் நேரிலேயே வந்து சாப்பிட்டுவிட்டான்” என்று சொன்னான். அப்போது அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்கள், தங்கள் வீட்டிலிருந்து தயிரும், மாங்காயும் அவன் வாங்கிச் சென்றதைச் சொன்னார்கள். நம்பூதிரி மிகுந்த கோபத்துடன், “தினமும் பூஜை செய்யும் எனக்குக் காட்சி தராமல், கண்ணன் உனக்குக் காட்சி தந்து உணவை உண்டாரா? உன்னால் வெறும் சாதத்தைத் தின்ன முடியாது என்று தயிரும் மாங்காயும் வைத்து சாப்பிட்டுவிட்டு, கண்ணன் சாப்பிட்டுவிட்டான் என்று பொய் சொல்கிறாயா? ” என்று அடித்தார். குழந்தை இடத்தைவிட்டு நகரவில்லை. குழந்தையை அடிப்பதைக் கண்ணனால் பொறுக்க முடியவில்லை. நம்பூதிரி மீண்டும் அடிக்கக் கையை ஓங்கியபோது, “நான்தான் உண்டேன், குழந்தை குற்றமற்றவன்” என்று சன்னிதியிலிருந்து அசரீரி ஒலித்தது. கூடியிருந்த அனைவரும் அதிசயித்தனர்.
நம்பூதிரி, கண்களில் நீர் வழிய, ” என் மகனுக்குக் காட்சி தந்து, அவன் தந்த உணவையும் உண்டாயே!! என்னே உன் கருணை!! என் மகன் பாக்யசாலி!!” என்று கூறித் தன் மகனை வாரி அணைத்துக் கொண்டார்.
————
கண்ணன் கதைகள் – 19
ஏகாதசி தோன்றிய கதை
பாத்ம புராணத்தில் ஏகாதசி தோன்றிய கதை சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் முரன் என்ற ஒரு அரக்கன், தேவர்களாலும், மும்மூர்த்திகளாலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் பெற்றிருந்தான். அசுரன் அபரிமிதமான பலம் வாய்ந்தவனாக இருந்தான். அதனால் தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் மிகுந்த தொல்லைகளைக் கொடுத்தான். அவர்கள் திருமாலை சரணடைந்தனர். அவரும், அவர்களைக் காக்கத் திருவுள்ளம் கொண்டு, முரனுடன் சண்டையிட்டார். கடும்போர் நடந்தது. ஒவ்வொரு நாளும் சூரிய அஸ்தமனம் வரையில் சண்டை நடக்கும். பிறகு போரை நிறுத்திவிட்டு அடுத்த நாள் போர் தொடரும். இவ்வாறு ஆயிரம் வருடங்கள் சண்டை நடந்தது. திருமால், இதற்கு ஒரு வழி செய்யவேண்டும் என்று தீர்மானித்தார்.
ஒரு நாள் சூரிய அஸ்தமனத்திற்குப் பின், திருமால், பத்ரியில் உள்ள ஒரு குகையில் ஓய்வெடுக்கச் சென்றார். மும்மூர்த்திகளுள் அவரும் ஒருவராதலால் .முரனைக் கொல்ல முடியாது. அதே சமயம், முரன், பெண்ணால் மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் பெறவில்லை.அதனால், தனது திருமேனியிலிருந்து ஒரு பெண்ணை உருவாக்கினார். பிறகு, தூங்குவது போல் படுத்திருந்தார். முரன், போர் விதிக்குப் புறம்பாக, திருமாலைத் தாக்கும் எண்ணத்துடன் குகைக்கு வந்தான். திருமாலைத் தாக்கக் கையை ஓங்கினான். அப்போது திருமாலால் உருவாக்கப்பட்ட அந்தப் பெண்ணின் “ஹூம்” என்ற மூச்சுக் காற்றில் எரிந்து சாம்பலானான். திருமால் அவளைப் புகழ்ந்தார். மேலும், “என்னுடைய 11 இந்திரியங்களில் இருந்து உருவானதால் உனக்கு ‘ஏகாதசி’ என்று பெயரிடுகிறேன். நீ தோன்றிய இந்த நாளில், யார் உபவாசம் இருந்து என்னை வழிபடுகிறார்களோ, யார் உன்னைத் துதிக்கிறார்களோ, உன்னுடைய வரலாற்றை யார் கேட்கிறார்களோ, பேசுகிறார்களோ அவர்களுடைய பாபங்களெல்லாம் தொலையும்”என்று வரமளித்தார்.
மார்கழி மாதம் தேய்பிறையில் தோன்றியதால் இதற்கு ‘உற்பத்தி ஏகாதசி’ என்று பெயர். இதுவே பாத்ம புராணப்படி ‘ஏகாதசி’ தோன்றிய கதை.
மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி ‘வைகுண்ட ஏகாதசி’ எனப்படும். மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த ஏகாதசியில் திருமாலை வழிபடுகிறவர்களுக்கு, இம்மையில் அனைத்து செல்வங்களும், மறுமை இல்லாத வைகுந்தப் பேறும் கிடைக்கும்.
ஏகாதசியின் தத்துவம்: ஏகாதசி என்பதற்கு பதினொன்று என்று அர்த்தம். கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஒருமைப்படுத்தி, தியானம் செய்வதே ஏகாதசியின் தத்துவமாகும். இவ்வாறு உடலும் உள்ளமும் ஒன்றி, உபவாசம் இருந்து திருமாலை வழிபடுவதை ‘ஏகாதசி விரதம்’ என்று கூறுவர்.
————
கண்ணன் கதைகள் – 20
பிரதக்ஷிணம்
ஒரு முறை ஒரு ஏழை சிறுவன், பசியின் கொடுமை தாங்காமல் ஒரு பழக்கடையில் இருந்து வாழைப்பழம் ஒன்றைத் திருடினான். குருவாயூரப்பனிடம் பக்தி கொண்ட அவன், கோவிலுக்குச் சென்று, தான் திருடிய பழத்தில் பாதியை உண்டியலில் போட்டுவிட்டு, மற்றொரு பாதியைத் தின்றான்.
அப்போது, கடைக்காரர் அவனைக் கையும் களவுமாகப் பிடித்தார். அவனும் பசியினால் திருடியதாக ஒப்புக் கொண்டான். கடைக்காரருக்கு அந்த சிறுவனைத் தண்டிக்க மனமில்லாவிட்டாலும், அவனுக்குப் பாடம் கற்பிக்க நினைத்தார். அவர் அவனிடம், ” நீ இவ்வாறு தவறு செய்ததால், கோவிலை 108 தடவை பிரதக்ஷிணமாகச் சுற்றி வா” என்று கட்டளையிட்டார்.
அந்த சிறுவனும் பிரதக்ஷிணம் செய்ய ஆரம்பித்தான். அப்போது கடைக்காரர் ஸ்ரீ குருவாயூரப்பனும் அந்தப் பையனைத் தொடர்ந்து பிரதக்ஷிணம் செய்து கொண்டிருப்பதைக் கண்டார். ஒன்றும் புரியாமல் வீடு திரும்பினார். அன்றிரவு கடைக்காரரின் கனவில் தோன்றிய அப்பன், ” பழத்தில் பாதியை சிறுவன் எனக்கு ஸமர்ப்பித்தான். பாதியைத்தான் அவன் உண்டான். அதனால் எனக்கும் தண்டனையில் பங்கு உண்டு. நானும் கோவிலைச் சுற்றினேன்” என்று கூறினார். இதிலிருந்து ஸ்ரீ அப்பன், அப்பாவி மக்களின் எளிமையையும், அன்பையும் நேசிக்கிறான் என்று அறியலாம்
————-
கண்ணன் கதைகள் – 21
பாததூளி
ஒரு முறை துவாரகையில் கண்ணனுக்குத் தலைவலி என்று ருக்மிணியும், ஸத்யபாமாவும் செய்வதறியாது வருத்தமுற்றிருந்தனர். அப்போது நாரதர் அங்கே வந்தார். அனைவரும் வாட்டமடைந்து இருப்பதைக் கண்ட அவர், என்ன விஷயம் கண்ணா? என்று கேட்டார். கண்ணனும், ” எனக்குத் தலை ரொம்ப வலிக்கிறது” என்று சொன்னான். நாரதர், “இதற்கு ஏதாவது மருந்து இருந்தால் சொல் கண்ணா, எப்பாடு பட்டாவது கொண்டு வருகிறேன்” என்று சொன்னார்.
கண்ணனும், “நாரதரே! எங்கும் செல்ல வேண்டாம், இந்தத் தலைவலி என்னுடைய பக்தர்களின் காலடி மண்ணைத் தடவினால் சரியாகிவிடும். இங்கு யாரேனும் தம்முடைய காலடி மண் இருந்தால் கொடுங்கள், அதை என் நெற்றியில் தடவினால் என் வலி தீரும் என்று சொன்னான். ருக்மிணியும் ஸத்யபாமாவும்,”எங்கள் காலடி மண்ணை உம்முடைய நெற்றியில் தடவுவதா? நாங்கள் உம்முடைய பத்தினிகள் அல்லவா? மகாபாவம் வந்து சேருமே” என்று பதறினார்கள். நாரதர், மற்றும் அங்கு உள்ள அனைவரும், “அந்தப் பாவத்தை நாங்கள் சுமக்க முடியாது” என்று கூறி மறுத்துவிட்டனர். நேரம் ஆக ஆக, கண்ணனுக்குத் தலை வலி அதிகரித்தது.
கண்ணன், ” வலி பொறுக்க முடியவில்லை நாரதா!! நீ உடனே பிருந்தாவனம் சென்று கோபிகைகளிடம் அவர்களது பாததூளியைக் கேட்டு வாங்கி வா, சீக்கிரம்” என்று சொன்னார். நாரதர், ருக்மிணி, ஸத்யபாமா ஆகியோர் மனதில் நம்மை விட பக்தர்கள் யார் இருப்பார்கள் என்ற எண்ணம் தோன்றியது. இருப்பினும், நாரதர் உடனே பிருந்தாவனம் சென்று இடைப்பெண்களிடம் கண்ணனுடைய தலைவலியைப் பற்றியும், அதற்கான தீர்வையும் கூறினார். அதைக் கேட்ட உடனேயே, ஒரு கோபிகை தனது மேலாக்கை அவிழ்த்துத் தரையில் போட்டாள். எல்லா கோபிகைகளும் மண்ணில் குதித்து, தங்களது காலில் ஒட்டியிருந்த மண்ணை அந்த மேலாக்கில் ஏறி நின்று உதிர்த்தனர். இவ்வாறு ஒரு சிறு மண் மூட்டையை செய்து நாரதரிடம் கொடுத்தனர். கண்களில் நீர் வழிய , “நாரதரே! சீக்கிரம் சென்று கண்ணனுடைய நெற்றியில் இதைத் தடவுங்கள்” என்று சொன்னார்கள். நாரதர் அவர்களிடம், இது பெரிய பாவமென்று உங்களுக்குத் தெரியாதா என்று கேட்க, கோபிகைகள், “கண்ணனுடைய தலைவலி தீர்ந்தால் போதும், நாங்கள் எந்தப் பாவத்தைப் பற்றியும் கவலைப்படவில்லை” என்று கூறினார்கள்.
நாரதரும் துவாரகை சென்று கண்ணனிடம் அந்த மூட்டையைக் கொடுத்தார். கண்ணன், மூட்டையிலிருந்த கோபிகைகளின் பாததூளியை எடுத்துத் தன் நெற்றியில் தடவ , தலைவலியும் சரியாகிவிட்டது. நாரதர், ருக்மிணி, ஸத்யபாமாவிற்கும் உண்மையான பக்தியைப் பற்றிப் புரிந்தது. கண்ணன் ஒரு விஷமச் சிரிப்புடன், “தலையில் இருந்து ஒரு சுமையை இறக்கி வைத்தாற்போல் உள்ளது, தலைவலி சரியாகிவிட்டது” என்று சொன்னான். கண்ணனின் தலைச்சுமை மட்டுமா? மற்றவர்களின் தலைக்கனமும் அல்லவோ இறங்கியது?!!!
இவ்வாறு, உண்மையான, தன்னலமற்ற பக்தியின் பெருமையை மற்றவர்க்கு உணர்த்த விரும்பிய கண்ணனின் தலைவலி நாடகமும் இனிதே முடிந்தது.
—————–
கண்ணன் கதைகள் – 22
திருமாங்கல்யம்
ஒரு சமயம் ஒரு அந்தணருக்கு வயிற்று வலி வந்தது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போன வலி, எந்த வைத்தியத்துக்கும் கட்டுப்படவில்லை. மனம் கலங்கிய அவரது மனைவி, குருவாயூரப்பனிடம்,
“கண்ணா, என் கணவருக்கு வயிற்று வலி நீங்கவும், எங்கள் துன்பம் தீரவும் அனுக்ரஹிக்க வேண்டும். அவ்வாறு நீங்கினால், நான் என்னுடைய திருமாங்கல்யத்தை உனது திருவடியில் ஸமர்ப்பித்து, மஞ்சள் சரடைக் கட்டிக் கொள்கிறேன். எனக்கு மாங்கல்யப் பிச்சை தா கண்ணா” என்று மனமுருகி வேண்டிக் கொண்டாள். சில நாட்களிலேயே வயிற்று வலி மட்டுப்பட்டு, சரியாகி அவளது கணவர் பூரண குணமடைந்தார்.
வேண்டிக்கொண்டபடி குருவாயூர் சென்று, ஸன்னிதியில் நமஸ்கரித்து, தனது திருமாங்கல்யத்தை அப்பனது திருவடிகளில் ஸமர்ப்பித்துவிட்டு, மஞ்சள் சரடைக் கட்டிக் கொண்டாள். பின் பிரதக்ஷிணம் செய்ய ஆரம்பித்தார்கள். சுற்றி வரும்போது அந்தப் பெண்மணியின் கழுத்தில் திருமாங்கல்யம் முன்புபோலவே இருந்தது. மறுபடியும் அப்பனது திருவடிகளில் ஸமர்ப்பித்துவிட்டு, மீண்டும் பிரதக்ஷிணம் செய்ய ஆரம்பித்தார்கள். மீண்டும் அவள் கழுத்தில் திருமாங்கல்யம் மின்னியது. இவ்வாறு பத்து தடவை ஸமர்ப்பித்தும் மாங்கல்யம் அவளது கழுத்திலேயே இருக்கக் கண்டார்கள். ஏதோ அபசாரம் செய்துவிட்டோம் என்று அவர்கள் மிகவும் கலங்கினார்கள்.
அதே நேரம் ஸன்னிதியில் மேல்சாந்தி தியானித்துக் கொண்டிருக்கும்போது, அப்பன் அவரது தியானத்தில் வந்து, “அந்தப் பெண்ணின் திருமாங்கல்யத்தை வாங்க எனக்கு இஷ்டமில்லை, மறுபடி அவள் வரும்போது அதை ஸமர்ப்பிக்க வேண்டாம் என்று சொல்லிவிடு” என்று உத்தரவானது. மேல்சாந்தியும் அவ்வாறே சொன்னார். அப்பனின் கருணையைக் கண்டு அதிசயித்து, மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்கள் ஊருக்குத் திரும்பினார்கள். இதிலிருந்து, வேண்டுதலாக இருந்தாலும், சுமங்கலிகளின் இன்றியமையாத ஆபரணமாகிய திருமாங்கல்யத்தை, குருவாயூரப்பன் ஏற்றுக் கொள்ள விரும்ப மாட்டார் என்று தெரிகிறது. – (சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதரின் நாராயணீய உபன்யாஸத்தில் கேட்டது)
—————–
கண்ணன் கதைகள் – 23
கட்டுசாதம்
ஒரு ஊரில் ஒரு இளைஞன், சோம்பேறியாய்த் திரிந்து கொண்டிருந்தான். அவனுக்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. ஏதாவது சொன்னால் தர்க்கம் செய்வான். படித்திருந்தும், வேலைக்குப் போகாமல் சுற்றிக் கொண்டிருந்தான். ஒரு சமயம் அந்த ஊர்க்கோவிலில் ஒரு திருவிழா நடந்தது. இடைவிடாத ‘கிருஷ்ண நாம ஜபம்’ என்று ஒரு நாள் ஏற்பாடாகி இருந்தது. “கிருஷ்ண நாம ஜபத்தில்” தம்மை ஈடுபடுத்திக் கொள்ள, மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.
இந்த இளைஞனோ, ” இந்த கிருஷ்ண நாமத்தில் அப்படி என்னதான் இருக்கிறதோ?” என்று நினைத்தான். அருகிலிருந்த பெரியவர் ஒருவரிடம் இது பற்றிக் கேட்டான். அவரும், “அது மிகவும் உன்னதமான நாமம்” என்று கூறினார். அந்த இளைஞன், ” இதனால் ஒன்றும் ஆகப் போவதில்லை, உங்கள் கிருஷ்ணனால் என் பசிக்குச் சோறு தர முடியுமா?” என்று கேட்டான். பெரியவரும், ” கிருஷ்ண நாமம் சோறு மட்டுமல்ல, வேண்டிய அனைத்தையும் கொடுக்கும், மனதை ஒரு நிலைப்படுத்தி அந்த நாமத்தை ஜபித்துப் பார்” என்று கூறினார்.
அவனுக்கு அதில் துளியும் நம்பிக்கையில்லை. இருப்பினும், அருகிலுள்ள ஒரு காட்டுப் பகுதிக்குச் சென்று, ஒரு மரத்தடியில் தனியே அமர்ந்து, “கிருஷ்ண, கிருஷ்ண” என்று ஜபிக்க ஆரம்பித்தான். அப்போது ஏதோ சத்தம் வரவே, சிங்கம், புலி என்று பயந்து மரத்தின் மீது ஏறிக் கொண்டு மீண்டும் “கிருஷ்ண, கிருஷ்ண” என்று சொல்லத் தொடங்கினான்.
ஒரு வழிப்போக்கன் அந்த வழியே வந்து, மரத்தடியில் அமர்ந்து, தான் கொண்டு வந்த கட்டு சாதத்தைத் தின்று விட்டு, இளைப்பாறிவிட்டுச் சென்றான். கீழே இறங்கி வந்தவனுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அந்த வழிப்போக்கன் இன்னொரு கட்டு சாதத்தை மறந்து விட்டுச் சென்றிருந்தான். கிருஷ்ண நாம மகிமையால் தான் பசிக்குச் சோறு கிடைத்தது என்று மகிழ்ந்து, அதை உண்ணப் போனான். அவனது தர்க்கஅறிவு அப்போது எட்டிப் பார்த்தது. உண்மையிலேயே கிருஷ்ண நாமத்திற்கு மகிமை உண்டென்றால், இந்த சாதத்தை சாப்பிடும்படி நிர்ப்பந்தம் ஏற்படட்டும், அது வரை சாப்பிடக் கூடாது, பசித்தாலும் பரவாயில்லை என்று எண்ணினான். அப்போது மீண்டும் ஏதோ சத்தம் வரவே, சாதத்தைக் கீழே வைத்துவிட்டு அவசர அவசரமாக மரத்தின் மீது ஏறி மீண்டும், ‘கிருஷ்ண, கிருஷ்ண’ என்று ஜபிக்கத் தொடங்கினான்.
இப்போது அங்கே ஒரு கொள்ளைக்கூட்டம் வந்தது. மரத்தடியில் அவர்கள் அமர்ந்தனர். அவர்கள் கொள்ளையடித்த பொருட்களைக் கீழே இறக்கி வைத்தனர். பின்னர், யாராவது இருக்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தனர். பின்னர் மரத்தின்மேல் பார்த்தனர். அங்கே இந்த இளைஞன் அமர்ந்திருந்தான். அவனைக் கீழே இறக்கி மரத்தில் கட்டி வைத்தனர்.
பசியுடன் இருந்த ஒரு கொள்ளையன், அங்கு இருந்த கட்டுசாதத்தைப் பார்த்து, எடுத்து அதைத் தின்னப் போனான். மறவர்கள் தடுத்து, “தின்னாதே! நம்மை வேவு பார்க்க வந்த இவன்தான் இதை வைத்திருப்பான். இதில் ஏதாவது விஷம் கலந்திருப்பான். அதை முதலில் அவன் சாப்பிடட்டும்” என்று கூறி வலுக்கட்டாயமாக அதை அவனுக்குக் கொடுத்தனர். அவனும் சாப்பிட்டான். அதற்குள் தூரத்தில் குளம்புச் சத்தம் கேட்டது. கொள்ளையர்கள், அவனை அப்படியே விட்டுவிட்டு, அவர்கள் கொள்ளையடித்த பொருட்களுடன் விரைந்து சென்றனர். அவசரத்தில் சிறிது தங்கக் காசுகள் கீழே சிதறின.
நம்பிக்கையில்லாமல் “கிருஷ்ண நாமம்” சொன்னதற்கே இவ்வளவு பலனா!! என்று ஆச்சர்யமடைந்த அந்த சோம்பேறி இளைஞன், இனிமேல் உழைக்க வேண்டும், தர்க்கம் செய்யக் கூடாது என்ற முடிவுக்கு வந்தான். ஊருக்குத் திரும்பிச் சென்று, உண்மையான செல்வம் கிருஷ்ண நாமம் தான் என்பதை உணர்ந்து, கோவில் உண்டியலில் அந்தத் தங்கக் காசுகளைப் போட்டான். இனிமேல் பக்தியுடன் இருப்பேன், உழைத்து சாப்பிடுவேன் என்று கிருஷ்ணன் முன் பிரதிக்ஞை செய்தான். வாழ்க்கையில் நன்கு முன்னேறி, நல்ல நிலைமையையும் அடைந்தான்.
————
கண்ணன் கதைகள் – 24
திட நம்பிக்கை
ஒரு கிராமத்தில் திருவிழா. அங்கிருந்த கிருஷ்ணன் கோவிலில், ‘கண்ணன் பெருமை’ என்ற தலைப்பில் உபன்யாசம் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அப்போது திருடன் ஒருவன் ஊருக்குள் வந்தான். அனைவரும் உபன்யாசம் கேட்கச் சென்றுவிட்டதால், திருட ரொம்ப சௌகர்யமாகப் போய்விட்டது. ஒவ்வொரு வீடாகத் தேடியும் விலையுயர்ந்த பொருட்கள் ஏதும் சிக்கவில்லை. சரி, உபன்யாசத்தில் நிறைய கும்பல் இருக்கும், அதனால் அங்கு சென்றால் பணம் திருடலாம் என்று நினைத்து, கதை நடக்கும் இடத்திற்குச் சென்றான்.
உபன்யாசகர், கண்ணனுடைய பெருமையைக் கதையாகச் சொல்லிக்கொண்டிருந்தார். பொன்னில் கோர்த்த ஐம்படைத்தாலி, அழகிய ரத்தினங்களாலும், வைரங்களாலும் ஆன ஆபரணங்கள், ஹாரம், வளை, தங்க அரைஞாண், மாணிக்கமும், முத்தும் கோர்த்து செய்யப்பட்ட வெள்ளிக் கொலுசு ஆகியவற்றை அணிந்து கண்ணன் வரும் அழகை வர்ணித்துக் கொண்டிருந்தார்.
திருடனுக்கு ஏக சந்தோஷம். அவனுக்குக் கண்ணனைப் பற்றியெல்லாம் தெரியாது. சரியான பணக்காரப் பையன் போலிருக்கிறது என்று நினைத்து, கதை முடிந்ததும் அவரிடம் அவனைப் பற்றிக் கேட்க வேண்டும் என்று பொறுமையாகக் காத்திருந்தான்.
கதை முடிந்தது, கும்பல் கலைந்தது, உபன்யாசகரிடம் சென்று, “அந்தப் பையன் யார், எங்கிருக்கிறான், சொல்லாவிட்டால் கொன்றுவிடுவேன்” என்று மிரட்டினான். கண்ணனைப் பற்றிக் கூறியதை உண்மையென்று நினைத்துக் கேட்கிறான் என்பது அவருக்குப் புரிந்துவிட்டது. சட்டென்று, தூரத்தில் தெரிந்த பூஞ்சோலையைக் காட்டி, அங்கேதான் அவன் விளையாட வருவான் என்று சொன்னார்.
திருடனும் அவர் சொன்னது உண்மையென்று நம்பி, அந்தப் பூஞ்சோலைக்குச் சென்று கண்ணனிடம் திருடுவதற்காகக் காத்திருந்தான். அவன் நினைவு முழுவதும் கண்ணனைப் பற்றியே இருந்தது. சிறிது நேரத்தில் கண்ணன் வந்தான். உபன்யாசகர் சொன்னபடி எல்லா நகைகளும் போட்டுக் கொண்டிருந்தான். சின்னப் பையனாக இருந்ததால், மிரட்டாமல்,”குழந்தையே! உன் நகையெல்லாம் எனக்குத் தருகிறாயா?” எனக் கேட்டான். குழந்தையும் அனைத்தையும் கழற்றிக் கொடுத்தது!!!! எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு உபன்யாசகரை தேடிச் சென்று நன்றி சொன்னான். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. “நீங்கள் சொன்னமாதிரியே அந்தப் பணக்காரப் பையன் ரொம்ப அழகு, கேட்டவுடன் எல்லா நகையையும் கழற்றிக் கொடுத்துவிட்டான்” என்று சொன்னான்.
அவரால் நம்ப முடியவில்லை. “உண்மையாகச் சொல்கிறாயா?” என்று கேட்டார். “வாருங்கள், காட்டுகிறேன்” என்று கூறி, அவரை அழைத்துக் கொண்டு அந்தப் பூஞ்சோலைக்குச் சென்றான். அவரிடம், “அங்கே பாருங்கள்! அவன் விளையாடிக் கொண்டிருக்கிறான்” என்று காட்டினான். அவருக்கு ஒன்றும் தெரியவில்லை, ஆனால் சிரிப்பு மட்டும் கேட்டது.
இத்தனை நாள் கண்ணனின் திவ்ய ரூபத்தைக் கதையாகச் சொல்லும் எனக்கு அவன் தெரியவில்லையே! இந்தத் திருடனுக்குக் காட்சி அளித்திருக்கிறானே! என்று கண்ணீர் விட்டார். வருந்தும் அவரைக் கண்டு கண்ணன் கருணை கொண்டான். “அந்தத் திருடனின் கையைப் பிடித்துக்கொள்” என்று ஒரு குரல் ஒலித்தது. அவ்விதமே பிடித்துக் கொண்டு நோக்கினார். கண்ணன் அவர் கண்களுக்குத் தெரிந்தான். உபன்யாசகர், “உன் கதையைச் சொல்லும் எனக்குக் காட்சி தராமல், திருடனுடைய கையைப் பிடித்ததும் காட்சி அளிக்கிறாயே! கண்ணா, இது நியாயமா?” என்று கண்ணனிடம் கேட்டார்.
அப்போது மாயக்கண்ணன்,” நீ இவ்வளவு காலம் என் கதையைக் கூறினாலும், நான் வருவேன் என்று நம்பவில்லை, ஆனால், இந்தத் திருடன் நான் வருவேன் என்று திடமாக நம்பினான். அதனால் அவன்முன் வந்தேன். இறை சிந்தனையில் பற்றுடன், இதயத்தின் ஆழத்திலிருந்து மிகுந்த நம்பிக்கையுடன் பிரார்த்தித்தால், என்னைத் தரிசிப்பது உறுதி” என்று கூறிவிட்டு மறைந்தான். திருடனும், திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு கிருஷ்ண பக்தன் ஆனான்.
————–
கண்ணன் கதைகள் – 25
போதணா
துவாரகைக்கு அருகில் டாகோர் என்ற கிராமம் உள்ளது. சில காலம் முன்பு அங்கு ‘போதணா’ என்ற அந்தணர் வாழ்ந்து வந்தார். எப்போதும் துவாரகையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணனையே எண்ணித் துதித்து, அவரைக் காண மாட்டோமா என்று ஏங்கிக்கொண்டிருப்பார். அதனால் அவரை அனைவரும் “துவாரகா ராமதாசர்” என்று கூப்பிட்டனர். தினந்தோறும் உஞ்சவிருத்தி எடுத்து வந்து மனைவியிடம் கொடுப்பார். அவள் அதை சமைத்து, இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு பிறகு சாப்பிடுவார்கள்.
ஒவ்வாறு ஏகாதசிக்கும் விரதமிருந்து, இறைவனைப் பாடி மறுநாள் துவாதசியன்று தன்னால் முடிந்த அளவு உணவளித்து, பின் உணவு உண்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அதேபோல, ஆடி மாதம் ஏகாதசியன்று, டாகோரிலிருந்து பாதயாத்திரையாக துவாரகை சென்று, துவாரகாநாதனைத் தொழுது, மறுநாள் துவாதசியன்று தரிசித்துத் திரும்புவார். இவ்வாறு காலம் சென்றது. அவருக்கும் வயதாகிவிட்டது. தள்ளாமையால், முன்பு போல துவாரகைக்குச் செல்ல கஷ்டமாக இருந்தாலும், விடாமல் விரதத்தைப் பின்பற்றினார். ஒரு ஆடி மாதம் ஏகாதசியன்று துவாரகை புறப்பட்டார். அவரால் நடைப் பயணத்தைத் தொடர முடியவில்லை. ஒரு மரத்தடியில் அமர்ந்து,”கண்ணா! எனக்கு வயதாகிவிட்டது, முன்பு போல் என்னால் உன்னைத் தரிசிக்க வர முடியுமா தெரியவில்லை. என்னால் முடியாவிட்டாலும், நீ எனக்கு எப்படியாவது தரிசனம் தர வேண்டும்” என்று வேண்டிக் கொண்டு, அழுதுகொண்டே அசதியில் உறங்கிவிட்டார். அவர் கனவில் கண்ணன் தோன்றி, கவலைப்படாதே! உன் முன் ஒரு தேர் வரும், அதில் நான் இருப்பேன், என்னை நீ உன் ஊருக்குஅழைத்துச் செல்லலாம்” என்று கூறி மறைந்தார். கண் விழித்தபோது, எதிரே தேரும், அதில் துவாரகாநாதனும் இருப்பதைக் கண்டு மகிழ்ந்து, தேரில் ஏறி டாகோர் சென்றார். விக்ரஹத்தைப் பூஜை அறையில் வைத்து, தான் இல்லத்தையே கோவிலாக்கி, நாம சங்கீர்த்தனம் செய்யத் தொடங்கினார்.
அதே சமயம், துவாரகையில் கண்ணனின் மூலவிக்ரஹத்தைக் காணாமல் அர்ச்சகர்கள் திகைத்தனர். டாகோரில் ராமதாசரின் வீட்டில் கண்ணன் விக்ரஹம் இருக்கும் தகவலறிந்து, அவர்கள் டாங்கேர் சென்றனர். ராமதாசரின் வீட்டிற்குச் சென்று கண்ணனை எடுத்துக் கொண்டு செல்லத் தொடங்கினர். ராமதாசர், “கண்ணா! உன்னைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது” என்று அழுது அரற்றினார். அப்போது கண்ணன் அவரிடம், “என் எடைக்கு எடை பொன் தருவதாகச் சொல்” அவர்கள் கொடுத்து விடுவார்கள்” என்று சொன்னார். அவரும் அவ்வாறே சொன்னார். உஞ்சவிருத்தி செய்து பிழைக்கும் அவர் எங்கே பொன் தரப் போகிறார்? என்று நினைத்த அர்ச்சகர்கள், அதற்கு சம்மதம் தெரிவித்தார்கள்.
ஒரு தராசில் துவாரகாநாதனின் விக்ரகத்தை வைத்தனர். ராமதாசர் வீட்டிற்குள் சென்று, அவரிடம் இருந்த ஒரே ஒரு பொன்னாலான, தனது மனைவியின் மூக்குத்தியை எடுத்து வந்து, இன்னொரு தட்டில் வைத்தார். தனது மனைவியுடன் தராசை பிரதக்ஷிணம் செய்து நமஸ்கரித்தார். பின்னர், கண்களை மூடிக் கண்ணனைத் தியானித்தார். என்ன ஆச்சர்யம்!!! தராசின் இருதட்டுகளும் சரிசமமாக நின்றது. அர்ச்சகர்களும், மற்றவர்களும் ராமதாசரின் பக்தியைக் கண்டு அதிசயித்து, ராமதாசரை வணங்கி, துவாரகாநாதனை அவரிடமே கொடுத்துவிட்டுத் திரும்பிச் சென்றனர். மெய்சிலிர்த்த ராமதாசரும், தினமும் நாமசங்கீர்த்தனத்தால் கண்ணனைப் பாடி, தொழுது வணங்கினார். இன்றும் அவர் பாடிய அந்தப் பாடல்கள் துவாரகையில் பாடப்படுகின்றது. தன்னலமில்லாத பக்தியுடன் இறைவனை வழிபட்ட பக்தனின் கோரிக்கையை ஏற்று, பகவானே வந்ததற்கு இதை விட வேறு வரலாறு வேண்டுமோ?
டாகோர் கோவிலில் உள்ள கண்ணனை ‘ராஞ்சோட்ஜி’ என்று அழைக்கின்றனர். கண்ணன் போதணருடன் டாகோருக்கு மாட்டு வண்டியில் வந்தான் என்றும் சிலர் கூறுகின்றனர். அங்குள்ள ஒரு வேப்பமரத்தில், ஒரு கிளையில் உள்ள இலைகள் இனிப்பாகவும், மற்ற கிளைகளில் உள்ள இலைகள் கசப்பாகவும் இருக்குமாம். கண்ணன் வரும் வழியில் அந்த மரத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் நின்றான் என்றும், அதனால் அந்தக் கிளைகளில் உள்ள இலைகள் இனிக்கிறது என்றும் கூறுகின்றனர். அவன் அருள் இருந்தால்தான் அவனைத் தரிசிக்க முடியும். தரிசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
———
கண்ணன் கதைகள் – 26
கிருஷ்ணாவதாரத்தின் காரணம் / கிருஷ்ணாவதார நோக்கம்
முன்பு தேவாசுர யுத்தம் நடந்தபோது பல அசுரர்கள் மோக்ஷமடைந்தனர். சிலர் கர்மவசத்தால் கம்ஸன் முதலிய அசுரர்களாகப் பிறந்தார்கள். அவர்களின் பாரத்தால் பூமாதேவி துன்பமடைந்து, தேவர்களுடன் பிரமனை அண்டினாள்.
“பிரம்மதேவனே! அசுரர்களின் பாரத்தால் நான் கடலில் மூழ்கிவிடும் நிலையில் உள்ளேன்”என்று அழுத பூமாதேவியையும், தேவர்களையும் பார்த்த பிரமன், அவர்களிடம் பரிதாபப்பட்டு, “தேவர்களே! பூமாதேவியே! உங்கள் கவலையை அறிந்தேன். உங்கள் அனைவரையும் காக்கும் சக்தி விஷ்ணுவுக்கே உள்ளது, நாம் அனைவரும் பாற்கடல் செல்வோம்” என்று கூறினார். பிறகு அனைவரும் பரமசிவனுடன் சேர்ந்து, குளிர்ந்த காற்றுடன் இருக்கும் பாற்கடலின் கரையை அடைந்தனர். அனைவரும் மகாவிஷ்ணுவைத் தியானித்தனர்.
தியானத்தின்போது பிரமன் மகாவிஷ்ணுவினுடைய சொற்களை உள்ளத்தில் கேட்டார். “ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் ஸ்ரீமன் நாராயணன் கூறிய சொற்களைக் கூறுகிறேன், கேளுங்கள்” என்று ஆனந்தமளிக்கும் அந்த சொற்களைக் கூறத் தொடங்கினார். “பூமாதேவிக்கும், தேவர்களுக்கும் அசுரர்களால் ஏற்படும் துன்பத்தை அறிவேன். அதைப் போக்க யாதவ குலத்தில், வசுதேவருக்கும்,தேவகிக்கும் மகனாக அவதரிக்கிறேன். தேவர்களும், தேவப்பெண்டிரும் என்னைப் பூஜிக்க பூமியில் பிறப்பார்கள்” என்று விஷ்ணு கூறியதை பிரமன் கூறினார். அதைக் கேட்டு அனைவரும் மகிழ்ந்து திரும்பிச் சென்றனர்.
திருமால், யாதவ குலத்தில், வசுதேவருக்கும்,தேவகிக்கும் மகனாக அவதரிப்பதாக வாக்களித்துவிட்டார். யார் அவர்கள்? சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு, அரசன் யதுவின் வம்சத்தில், அரசனாக இருந்தவர் சூரசேனன். இவரது புத்திரன் வசுதேவர். யது வம்சத்தில் போஜகுலத்தில் தோன்றிய உக்ரசேனன், யமுனைக்கரையில் இருந்த, யாதவர்களின் தலைமையிடமான மதுராவை ஆண்டான். அவனுக்கு கம்ஸன் என்ற ஒரு மகன் இருந்தான். அவன், தனது சொந்தத் தந்தையான உக்ரசேனனையே சிறையிலிட்டு, அப்பாவி ஜனங்களைக் கொடுமை செய்து, கொடுங்கோலாட்சி நடத்தி வந்தான். உக்ரசேனனின் தம்பியான தேவகனுக்கு, தேவகி என்ற மிக அழகு வாய்ந்த ஒரு பெண் இருந்தாள். கம்ஸனுக்கு, தன் தங்கை தேவகியின் மீது மிகுந்த பாசம்.
சூரசேனனின் மகன் வசுதேவனுக்கு, தேவகன் மகள் தேவகியைத் திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. திருமணமும் நடந்து முடிந்தது. யாதவ குலத்தில் அனைவரும் மிக்க மகிழ்ச்சியில் இருந்தார்கள். கம்ஸன், தங்கையின் மீதுள்ள பாசத்தால், தம்பதியர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், அவளைப் புகுந்த வீட்டில் கொண்டு விடுவதற்காக, அவர்கள் அமர்ந்திருந்த ரதத்தைத் தானே ஓட்டிச் சென்றான். அப்போது, “மூடனே! இவளுடைய எட்டாவது பிள்ளை உன்னைக் கொல்வான்” என்ற அசரீரி வாக்கு கேட்டது. பயந்த கம்ஸன், தேவகியைக் கொல்ல வாளை எடுத்தான். தேவகியின் கூந்தலைப் பற்றி இழுத்தான். வசுதேவர் சமாதானப்படுத்தி, குழந்தைகள் பிறந்தவுடன், தன் குழந்தைகளை அவனிடம் தந்து விடுவதாகச் சொன்னார். அதனால் அவளைக் கொல்லாமல் விட்டான். ஆனால், அவர்கள் இருவரையும் சிறை வைத்தான்.
காலம் ஓடியது. தேவகி முதல் குழந்தையைப் பெற்றாள். முதல் குழந்தையை வசுதேவர் கொடுத்தும், கம்ஸன் கருணையால் கொல்லவில்லை. துஷ்டர்களிடமும் சில சமயம் கருணை இருக்கிறது!
வசுதேவர் சென்றதும், நாரதர் கம்ஸனைக் காண வந்தார். நாரதர் கம்ஸனிடம், “அரசனே! நீங்கள் அசுரர்கள். யாதவர்களோ தேவர்கள். இது நீ அறியாததா? மாயாவியான விஷ்ணு உன்னைக் கொல்ல அவதாரம் செய்யப் போகிறான்” என்று சொன்னார். அதைக் கேட்ட கம்ஸன் குழப்பமடைந்தான். யாதவர்களை நகரத்தை விட்டு விரட்டினான். வசுதேவருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கொன்றான்.
இவ்விதமிருக்க, மகாவிஷ்ணுவின் சித்தப்படி, ஆதிசேஷன் தேவகியின் ஏழாவது கர்ப்பத்தை அடைந்தான். திருமாலின் சக்தியான மாயையானவள், திருமாலின் கட்டளைப்படி அந்த கர்ப்பத்தை, வசுதேவரின் முதல் மனைவியான ரோகிணியிடம் கொண்டு சேர்த்தாள். மாயையிடம் விஷ்ணு, ” நீ செய்த இந்த உதவியால், உலகில் உள்ளோர், உன்னை என் தங்கையாகவும், துர்க்கா என்றும் பெயரிட்டு அழைப்பார்கள்” என்று வரமளித்தார். தேவகி தனது ஏழாவது கர்ப்பம் கலைந்துவிட்டது என்று கம்ஸனிடம் கூறினாள். தேவகிக்குப் பிறக்கப் போகும் எட்டாவது குழந்தைக்காக கம்ஸன் காத்திருந்தான்.
கோகுலத்தில், ரோகிணி அழகு மிக்க ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அக்குழந்தைக்கு, ‘பலராமன்’ என்று பெயரிட்டனர். இவ்வாறு பலராமன் அவதரித்து, கோகுலத்தில் வளர்ந்து வந்தார்.
பூமாதேவிக்கும், தேவர்களுக்கும் கொடுத்த வாக்கின்படி, திருமால் தேவகியின் வயிற்றில் எட்டாவது கருவாக வந்து அடைந்தார். திருமாலின் கட்டளைப்படி, மாயையும் யசோதையின் வயிற்றில் கருவாக வந்து அடைந்தாள்
——–
கண்ணன் கதைகள் – 27
ஸ்ரீ கிருஷ்ண அவதாரம்
நந்தகோபரும், யசோதையும் மிகுந்த சந்தோஷமடைந்தனர். தேவகியும் வசுதேவரும் ஒரு புறம் மகிழ்ச்சியுடனும், மறுபுறம் கம்ஸன் குழந்தை பிறந்தால் கொன்றுவிடுவானே என்று கலக்கமும் அடைந்தனர். ஆவணி மாதம், கிருஷ்ணபட்சம், அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தில், விருச்சிக லக்கினத்தில், நடு இரவில், மூவுலகங்களின் துன்பங்களையும் போக்க எண்ணம்கொண்டு, ஆனந்த வடிவான திவ்யமேனியுடன், வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது மகனாக கிருஷ்ணன் சிறையில்அவதரித்தான். அப்போது,வானம் மழைக்கால மேகங்களால் மூடியிருந்தது. கண்ணனின் நீலநிற மேனியில் இருந்து தோன்றிய ஒளியால் அவ்வாறு மூடியிருந்ததுபோல் தோன்றியது. கருமேகங்கள் மழைநீரைக் கொட்டித் தீர்த்தன. மழைநீரால் அனைத்து திசைகளும் குளிர்ந்திருந்தது. வேண்டிய வரம் கிடைத்ததால் தேவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள்.
குழந்தை ரூபத்தில் இருந்த கண்ணன், தனது திருமேனியில், கிரீடம், கடகம், தோள்வளை, ஹாரம் ஆகியவற்றோடும், சங்கு, சக்கரம், தாமரை, கதை தரித்த கைகளுடனும் காட்சி அளித்தான். அவனது நீலமேனி இந்த எல்லாச் சின்னங்களையும் தரித்து பிரசவ அறையில் விளங்கியது. கம்ஸனுடைய அந்த அறை சோபையற்று இருந்தாலும், அவனது மார்பில் நிரந்தரமாக வசிக்கும் மகாலக்ஷ்மியின் பார்வையால் அந்த அறை லக்ஷ்மிகரமாக விளங்கியது.
ஞானிகளின் மனதிற்கும் எட்டாத அந்த திவ்யஸ்வரூபத்தை வசுதேவர் கண்களால் தரிசித்தார். மயிர்க்கூச்சலுடன், ஆனந்தக் கண்ணீர் வடித்துத் துதித்தார்.“தேவனே! துன்பங்களை அறுப்பவனே! மாயையினால் லீலைகளைச் செய்கிறவனே! தங்கள் கடைக்கண் பார்வையால் என் துக்கங்களைப் போக்கி அனுக்ரஹிக்கவேண்டும்” என்று துதித்தார். தாயான தேவகியின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அவளும் துதித்தாள். கருணை வடிவான குழந்தைக் கண்ணன், அவர்கள் இருவருக்கும், அவர்களது முந்தைய இரண்டு ஜன்மங்களைப் பற்றிச் சொன்னார். “நீங்கள் இருவரும், முன்பு திரேதாயுகத்தில்,
பன்னீராயிரம் ஆண்டுகள் தவம் செய்ததால், பிரஸ்னிகர்ப்பன் என்ற பெயருடன் உங்களுக்கு மகனாகப் பிறந்தேன். அதன்பிறகு அடுத்த பிறவியில் நீங்கள் காசியபராகவும் அதிதியாகவும் பிறந்தீர்கள். நான் உங்களிடத்தில் வாமனனாக அவதாரம் செய்தேன். தற்போது மீண்டும் உங்களுக்கு மகனாகப் பிறந்திருக்கிறேன்” என்று கூறினார். இவ்வாறு, மூன்று பிறவிகளிலும் பகவானையே மகனாக அடைந்த அவர்கள் மிகுந்த பேறு பெற்றவர்கள் ஆனார்கள். பின்னர், சங்கு சக்ரங்களைத் தரித்து விளங்கிய அக்குழந்தை, தாயின் வேண்டுகோளுக்கிணங்க மனித உரு எடுத்தார்.
பிறகு, வசுதேவரிடம், ” என்னை கோகுலத்தில் நந்தகோபன் வீட்டில் விட்டுவிட்டு, அவரது பெண் குழந்தையை எடுத்து வா” என்று ஆணையிட்டார். ஞானிகள் மனதில் இருப்பவரும், தாமரை மலரில் இருக்கும் அன்னக்குஞ்சு போல் அழகானவருமான அந்தக் கண்ணனை வசுதேவர் கையில் எடுத்துக்கொண்டார். திருமாலின் ஏவுதலால், கோகுலத்தில் யோகநித்ரையானவள், நந்தகோபர் வீட்டில் யசோதையிடத்தில் அவதரித்தாள்.
நகரமக்கள் அனைவரும் மாயையினால் தூங்கினர். அறிவற்ற கதவுகள் கூட திருமாலின் கட்டளையால் தாமே திறந்து கொண்டன! ஆச்சர்யம்!
பாக்யசாலியான வசுதேவர், கண்ணனை ஒரு துணியில் சுற்றி, கூடையில் சுமத்து, கோகுலம் எடுத்துச் சென்றார். ஆதிசேஷன் தன் படங்களால் மழையைத் தடுத்துக் குடை பிடித்தான். அவன் தலைகளில் இருந்த ரத்னமணிகளின் ஒளியால், இருட்டில் வழிகாட்டிக் கொண்டு வந்தான். யமுனை உயர்ந்த அலைகளுடன் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. வசுதேவர் அருகே சென்றதும், மாயவித்தையைப் போல் வடிந்து கணுக்கால் அளவாக ஓடியது. ஆச்சர்யம்!
கோகுலத்தில் எல்லாரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். கதவுகள் திறந்திருந்தன. குழந்தை அழும் சத்தம் கேட்ட வீட்டிற்குள் வசுதேவர் சென்று, யசோதையின் அருகே கண்ணனைப் படுக்க வைத்துவிட்டு, அங்கிருந்த பெண் குழந்தையான யோகமாயாவை எடுத்துக் கொண்டு வேகமாகத் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தார்.
சிறையில், குழந்தையின் அழுகுரல் கேட்டு காவற்காரர்கள் எழுந்தனர். அரசனிடம் சென்று தகவல் கூறினர். அவிழ்ந்த தலையுடன் கம்ஸன் விரைந்தோடி வந்தான். தேவகியின் கைகளில் பெண் குழந்தை இருப்பதைக் கண்டு சந்தோஷப்படுவதற்குப் பதில் கலக்கமடைந்தான். இது நாராயணனின் மாயை என்று நினத்த கம்ஸன், அந்தக் குழந்தையை, தேவகியின் கரத்திலிருந்து வலுவாகப் பிடுங்கி இழுத்து, கற்பாறையில் அடித்தான்.
யமனுடைய பாசக்கயிற்றில் இருந்து விடுபடும் நாராயண பக்தர்கள் போல, அக்குழந்தை கம்ஸனுடைய கையிலிருந்து விடுபட்டு, வேறு உருவத்துடனும், ஆயுதம் ஏந்திய எட்டுக் கரங்களுடனும் வானில் பரந்து விளங்கினாள்.
“கொடிய கம்ஸனே! உன்னைக் கொல்லப் பிறந்தவன் வேறு எங்கோ இருக்கிறான், அதை நீயே தேடி அறிந்து கொள்” என்று சொன்னாள். பின்னர், தேவர்கள் துதிக்க பூவுலகில் உள்ள அனைத்து ஆலயங்களையும் அடைந்தாள்.
மாயை கூறியவற்றை கம்ஸன் அசுரர்களுக்குச் சொன்னான். அதை கேட்ட பிரலம்பன், பகன், பூதனை முதலிய அசுரர்கள், பிறந்த அனைத்து ஆண் குழந்தைகளையும் கொன்று குவித்தார்கள். கருணையில்லாதவர்களுக்கு செய்யக் கூடாதது என்று எதுவும் இல்லை.
நந்தகோபன் வீட்டில் யசோதையின் பக்கத்தில் கால்களை அசைத்துக் கொண்டு கண்ணனும் அழுதான். கண் விழித்த யசோதையும், கோபியர்களும் செய்தியை நந்தகோபனிடம் கூறினார்கள். கோகுலம் முழுவதும் ஆனந்தக் கடலில் மூழ்கியது. காயாம்பூ போன்ற குழந்தையின் மேனியைக் கண்டு யசோதை மகிழ்ந்தாள். சந்தோஷத்துடன் பாலூட்டினாள். தொட்டுப் பார்த்து ஆனந்தமடைந்தாள். இத்தகைய பேற்றைப் புண்ணியசாலிகளும் அடையவில்லை!! நந்தகோபனும் மிக்க மகிழ்ச்சி அடைந்து, அனைவருக்கும் தானங்கள் செய்தார். எல்லா இடையர்களும் மங்கள காரியங்கள் செய்தனர். கண்ணனைக் கண்டு, கோகுலத்தில் அனைவரும், அளவற்ற மகிழ்ச்சியில் ஆடிப் பாடி கண்ணன் பிறந்ததைக் கொண்டாடினார்கள்.
——————-
கண்ணன் கதைகள் – 28
பூதனை மோக்ஷம் / பூதனா மோக்ஷம்
நந்தகோபன், கப்பம் கட்டுவதற்காக மதுரா நகரம் சென்றார். அசுரர்களின் முயற்சியை அறிந்த வசுதேவர், அதுபற்றி நந்தகோபனிடம் கூறினார். மேலும்,“உனக்குப் பிள்ளை பிறந்ததைக் கேட்டு எனக்குப் பிறந்ததைப் போல மகிழ்ச்சி அடைகிறேன். சில கெட்ட சகுனங்கள் காணப்படுகிறது, ஆகையால் நீ விரைந்து கோகுலத்திற்குச் செல்” என்று கூறினார். நந்தகோபனும் கண்ணனுக்கு ஆபத்து வருமோ என்று கவலை கொண்டு விரைந்து சென்றார்.
அதே சமயம், கம்ஸனால் ஏவப்பட்ட பூதனை என்கிற கோர ரூபமுள்ள ராக்ஷஸி, தன்னை மிக அழகிய பெண்ணாக மாற்றிக் கொண்டு, கோகுலத்திற்கு வந்தாள். தன் நடவடிக்கைகளால் அனைவரின் மனதையும் கவர்ந்தாள். எல்லாக் குழந்தைகளுடைய உள்ளத்தையும் கவரும் அவளைக் கண்டு கோபியர்கள் “இவள் யார்?” என்று யோசித்தனர். ஒய்யாரமாக நடந்து வந்து கண்ணனைக் கையில் எடுத்தாள். பின்னர், வீட்டின் உள்ளே அமர்ந்து, கண்ணனை மார்போடணைத்து விஷப் பாலூட்டினாள். பயமின்றி அவள் மடிமீது ஏறிய கண்ணன், விஷம் நிறைந்த அவளுடைய முலையில் வாய் வைத்து, பெரிய மாம்பழத்தை உறிஞ்சுவதுபோல் உறிஞ்சத் தொடங்கினான்.
ஏற்கனவே, அவள் பல குழந்தைகளைக் கொன்றதால், கண்ணன் அவள் மீது கோபமுற்றிருந்தான். பால் சாப்பிடுவது போல அவளுடைய உயிரையும் சேர்த்துக் குடித்தான். அவள், இடிபோலக் கூச்சலிட்டுக் கொண்டு, ராக்ஷஸ உருவத்துடன், இரண்டு கைகளையும் நீட்டிக் கொண்டு, கண்கள் பிதுங்கி, உயிரற்றுக் கீழே விழுந்தாள். அக்குரலைக் கேட்ட அனைவரும் நடுங்கினர். பகவானான கண்ணன், அவளுடைய மார்பில் பயமே இல்லாமல் விளையாடிக்கொண்டிருந்தான்.
உயிரற்ற அவள் மார்பின்மீது விளையாடிக் கொண்டிருந்த கண்ணனை, கோபிகைகள் வாரி எடுத்துத் தூக்கினார்கள். அவன்தான் திருமால் என்று அறியாமல், மங்கலங்களைக் கொடுக்கும் திருமாலின் நாமங்களைக் கூறிக்கொண்டே, ரட்சை செய்து அவனுக்கு அணிவித்தார்கள்.
வசுதேவர் கூறியதைக் கேட்ட நந்தகோபர் விரைந்து கோகுலத்திற்குத் திரும்பினார். வழியில் மரங்களை எல்லாம் வேரோடு சாய்த்து, வீழ்ந்து கிடந்த ஒரு பெரிய உருவத்தைக் கண்டு பயந்து, குழந்தையைக் காக்க வேண்டும் என்று திருமாலை வேண்டினார். கோபியர்கள் மூலம் விஷயம் அறிந்த இடையர்கள், பயத்தாலும், ஆச்சரியத்தாலும் பேச்சற்று இருந்தனர். பிறகு, கீழே கிடந்த அந்த பயங்கரமான ராட்சத உருவத்தைக் கோடாரியால் துண்டு துண்டாக வெட்டி, வெகுதூரத்திற்கப்பால் கொண்டு சென்று எரித்தார்கள். அப்போது, குழந்தையான கண்ணன் பால் அருந்தியதாலும், மடியில் அமர்ந்ததாலும், தூய்மை அடைந்த அந்த ராக்ஷஸியின் உடலிலிருந்து, சந்தனம், குங்கிலியம் போன்ற உயர்ந்த வாசனையுடைய புகை உண்டானது. என்ன ஆச்சர்யம்!!
இந்த தெய்வக் குழந்தையைத் தொடுகிறவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் மோக்ஷம் உடனேயே கிடைக்கும், காத்திருக்க வேண்டியதில்லை என்பதை இடையர்களுக்குச் சொல்வதுபோல், பூதனையை மணமுள்ளவளாகக் கண்ணன் செய்தான்.
வசுதேவனுக்கு இது எப்படி முன்னமேயே தெரிந்தது என்று நந்தகோபன் வியந்தார். “இது என்ன அதிசயம்!! இந்த அரக்கியால் குழந்தை கொல்லப்படவில்லையே!! ஆச்சர்யம்” என்று கோபர்கள் பேசிக் கொண்டார்கள். கண்ணனின் அழகிய திருமுகத்தைப் பார்த்து ஆனந்தத்தில் மூழ்கினார்கள்.
கண்ணனின் பிறப்பால், கோகுலத்தில் வாழ்ந்தவர்கள் செல்வங்கள் நிரம்பப் பெற்று, மங்கள காரியங்கள் செய்தனர். கோகுலம் முழுவதும் ஆனந்தத்தில் மூழ்கியது. கோபியர்கள் வீட்டில் வேலை செய்யும்போது கூட கண்ணனின் அழகைப் பற்றியும், புன்சிரிப்பைப் பற்றியும் பேசி மகிழ்ந்தனர். வேலை முடிந்ததும் கண்ணனைக் காண தினமும் நந்தகோபர் வீட்டிற்குச் சென்றனர். இடைப்பெண்கள் ஒவ்வொருவரும், “குழந்தை என்னைப் பார்க்கிறது, என்னைப் பார்த்து சிரிக்கிறது, என்னிடம் வா” என்று கூறி மகிழ்ந்து குழந்தையிடம் அன்பைப் பொழிந்தார்கள். கண்ணனைத் தொட வேண்டும் என்ற ஆசையால், மாற்றி மாற்றித் தூக்கிக்கொண்டு மகிழ்ந்தார்கள்.
நந்தகோபன், பரவசத்துடன் கண்ணனைக் கைகளில் எடுத்து, உச்சிமுகர்ந்து மகிழ்ந்தான். யசோதை, கண்ணனை மடியில் கிடத்தி, பாலூட்டி, அவன் முகத்தைப் பார்த்துச் சிரித்து ஆனந்தத்தை அடைந்தாள்.
கண்ணனால், பூதனையின் உயிர் மாத்திரம் உறிஞ்சப்படவில்லை; அவளுடைய பாபங்களும் சேர்த்து உறிஞ்சப்பட்டன. அதனால். அவள் மோக்ஷம் அடைந்தாள். இந்த பூதனா மோக்ஷத்தை, படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், சொல்பவர்களுக்கும் மீண்டும் ஒரு தாயின் பாலைக் குடிக்கும் நிலைமை உண்டாகாது என்று அறிந்தோர் சொல்வார்கள். அதாவது, இவ்வுலகில் மீண்டும் பிறக்கமாட்டார்கள் என்று அர்த்தம்.
ஸ்வாமி தேசிகன், ‘யாதவாப்யுதயம்’ என்னும் காவியத்தில்,
“ஸ்தன்யேந க்ருஷ்ண: ஸஹ பூதநாயா:
ப்ராணாந் பபௌ லுப்த புநர்ப4வாயா:
யத் அத்3பு4தம் பா4வயதாம் ஜநாநாம்
ஸ்தநந்த4யத்வம் ந புநர் ப3பூ4வ”
என்று கூறுகிறார்.
பூதனையின் பாலைக் கண்ணன் உறிஞ்சினான். பாலை மட்டுமல்ல, அவள் உயிரையும் உறிஞ்சினான். உயிரை மட்டுமல்ல, அவள் பாபங்களையும் சேர்த்து உறிஞ்சினான். அவள் மீண்டும் பிறவாதபடி செய்தான். அவளுக்கு மோக்ஷத்தை அளித்தான். கண்ணனின் இந்த லீலையைப் படிப்பவர்களும், கேட்பவர்களும், பிறப்பு, இறப்பு அற்ற பேரின்ப நிலையை அடைவார்கள் என்று கூறுகிறார்.
————–
கண்ணன் கதைகள் – 29
சகடாசுர வதம்
குழந்தை கண்ணன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான். அவன் பிறந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. குப்புறக் கவிழ்ந்து கொள்ள ஆரம்பித்தான். யசோதை, அதைக் கொண்டாட ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தாள்.
இதற்கிடையே கம்ஸன் அனுப்பிய சகடாசுரன் என்ற மற்றொரு ராக்ஷஸன், வண்டியின் உருவெடுத்து, கோகுலத்தில் யசோதையின் வீட்டிற்கு அருகே. குழந்தையைக் கொல்வதற்காகக் காத்திருந்தான்.
விழாவிற்கு, யசோதையும் நந்தகோபரும், கோகுலத்தில் உள்ள அனைவரையும் அழைத்திருந்தார்கள். யசோதை, குழந்தையை நன்கு குளிப்பாட்டி, அலங்கரித்து விட்டாள். குழந்தைக்குத் தூக்கம் கண்ணைச் சொருகியது. அதனால், அருகில் இருந்த அந்தப் பெரிய வண்டியின் அடியில் தொட்டில் கட்டி, அதில் குழந்தையைப் படுக்க வைத்து, சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் கண் விழித்த குழந்தை கண்ணன் ஆழ ஆரம்பித்தான். வேலையின் மிகுதியாலும், கூடியிருந்தவர்களின் பேச்சு சத்தத்தாலும் யசோதைக்கு, குழந்தையின் அழுகைக் குரல் கேட்கவில்லை. குழந்தை கால்களை வேகமாக உதைத்துக் கொண்டு அழுதது. அப்போது, அருகே மரங்கள் முறியும் சப்தமும், குழந்தையைப் பார்த்துக் கொள்ள நியமித்திருந்த இடைச்சிறுவர்களின் கூக்குரலும் கேட்டது. அந்தப் பெருஞ்சத்தத்தைக் கேட்டு, இடைப்பெண்கள் உடல் குலுங்க ஓடி வந்தனர். அங்கே, வண்டி முறிந்து கிடக்க, அதன் நடுவே குழந்தையைக் கண்டனர்.
பெரியோர்களும், இடையர்களும், நந்தகோபனும், குழந்தைக்கு என்ன நேர்ந்ததோ என்று பயந்து ஓடி வந்தனர். யசோதை குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து சமாதானம் அடைந்தனர். “இந்த வண்டி எப்படி முறிந்தது? ஒன்றும் புரியவில்லையே”! என்று அதிசயித்தனர். அப்போது, கண்ணனைப் பார்த்துக் கொள்ள நியமித்திருந்த இடைச்சிறுவர்கள், “இக்குழந்தை பால் சாப்பிட அழுதுகொண்டு காலை உதைத்துக் கொண்டது, அதன் கால் பட்டு இந்த வண்டி உடைந்தது, நாங்கள் பார்த்தோம்” என்று கூறினார்கள். “குழந்தையின் கால் பட்டு வண்டி முறியுமா? இருக்காது” என்று இடையர்கள் அதை நம்ப மறுத்தனர். பூதனையின் முடிவை நேரில் கண்டிருந்த சிலர் அப்படியும் இருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர். இவ்வாறு, வண்டியின் உருவில் வந்த சகடாசுரன், கண்ணனால் வதம் செய்யப்பட்டதால், ஸத்வவடிவான பரந்தாமனுடன் ஐக்யமடைந்துவிட்டான். அவனுடைய உடலின் சிறு பாகம்கூட அங்கு காணப்படவில்லை!!!
தாமரைப் பாதங்களில் காயம் பட்டதா? பிஞ்சுக் கைகளில் அடி பட்டதா? என்று இடைப்பெண்கள் கண்ணனைத் தூக்கித் தடவிப் பார்த்தனர். அந்தக் குழந்தைதான் ‘ஹரி’ என்று அறியாமல், ” உலகத்தைக் காக்கும் ஹரியால் என் குழந்தை காக்கப்பட்டது” என்று கூறிய நந்தகோபர், மயிர்க்கூச்சலுடன் குழந்தையைத் தூக்கித் தழுவிக் கொண்டார். பிறகு வேதமறிந்தவர்கள் குழந்தையை ஆசீர்வதித்தார்கள். கண்ணனும் தனது லீலைகளால் கோகுலத்தை மகிழ்வித்தான்.
—————-
கண்ணன் கதைகள் – 30
த்ருணாவர்த்த வதம்
ஒரு நாள் யசோதை குழந்தையான கண்ணனை, மடியில் வைத்திருந்தாள். குழந்தையின் எடை அதிகமாக இருந்ததால், அவளால் அதிக நேரம் மடியில் வைத்திருக்க முடியவில்லை. உடனே கண்ணனைப் படுக்கையில் கிடத்திவிட்டு, வீட்டு வேலைகள் செய்து கொண்டிருந்தாள்.
அப்போது, கம்ஸனால் அனுப்பப்பட்ட, த்ருணாவர்த்தன் என்ற மற்றொரு அசுரன் காற்று ரூபத்தில், புழுதி பறக்க, பெரும் சத்தத்துடன் வந்தான். குழந்தையையும் எடுத்துச் சென்றான். கோகுலம் முழுவதும் புழுதியால் இருண்டது. எதையும், பார்க்க முடியாத அந்த இருளில், யசோதை குழந்தையைக் காணாமல் கதறி அழுதாள். அவள் அழுத சத்தம் எங்கும் பரவியது. யசோதையின் அழுகையைக் கேட்ட இடையர்கள், நந்தகோபனின் வீட்டிற்கு வந்தனர். குழந்தையைக் காணாமல் அனைவரும் அழுதனர்.
அதே சமயம், த்ருணாவர்த்தன் கண்ணனைத் தோளில் சுமந்து கொண்டு வானில் உயரப் பறந்தான். அப்போது கண்ணன், தன்னுடைய எடையை மிகவும் அதிகமாக்கிக் கொண்டான். அவனுடைய பாரம் தாங்க முடியாமல், த்ருணாவர்த்தன் வேகம் குறைந்தவனானான். அவனுக்குக் கண்ணன் மலையைப் போல் கனத்தான். புழுதியும், சத்தமும் ஓய்ந்தது. இப்போது அசுரன் குழந்தையை விட்டுவிட நினைத்தான். ஆனால் கண்ணன் அவனை விடவில்லை. அவனுடைய கழுத்தை இறுகப் பிடித்தான். அசுரன், உயிரிழந்து பூமியில் விழுந்தான். அவனுடைய உடல் ஒரு பாறை மீது விழுந்தது. அழுதுகொண்டு வந்த அனைவரும், அசுரனுடைய உடல் மேல், சிரித்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் கண்டனர்.
அசுரன் கல்லின்மீது விழுந்து உயிரிழந்து கிடந்தான். குழந்தையான கண்ணனோ, தன்னுடைய தாமரைக் கைகளினால் அவனை அடித்து விளையாடிக் கொண்டிருந்தான். இவ்வாறு, சூறாவளிக் காற்றாய் வந்த அசுரனையும் அழித்தான். மலைமேல் இருக்கும் ஒரு நீலமணியைப் போல் இருந்த குழந்தையைத் தூக்கி எடுத்து வந்தார்கள்.
நந்தகோபனும், மற்றவர்களும் சந்தோஷமடைந்தனர். அனைவரும் குழந்தையை அணைத்து முத்தமிட்டனர். தன்னைத் தூக்க வேண்டும் என்ற கோபியர்களின் எண்ணத்தை அறிந்து, கண்ணன் தானாகவே தாவிச் சென்று அவர்களுடைய கைகளில் விளையாடினான். யசோதையும், நந்தனும், மற்றவர்களும், “ஸ்ரீ ஹரியே! எங்கள் குழந்தையைக் காப்பாற்று” என்று வேண்டிக் கொண்டார்கள். மேலும், “நாம் பூர்வ ஜன்மத்தில் நிறைய புண்ணியங்கள் செய்திருக்கிறோம், அதனால்தான் அந்த பகவான் நம் குழந்தையை ஆபத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறார்” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். குழந்தையை அசுரன் எடுத்துச் சென்றும், எந்த ஆபத்துமில்லாமல் தங்களுக்குக் கிடைத்ததை எண்ணி, குழந்தையை உச்சி மோர்ந்து புளகாங்கிதமடைந்தனர்
கண்ணன் கதைகள் – 31 நாமகரணம் செய்தல் (பெயர் சூட்டுதல்)
வசுதேவர் குழந்தைக்குப் பெயர் சூட்ட விரும்பினார். வசுதேவர் வேண்டிக் கொண்டதன் பேரில் கர்க்க முனிவர், நாமகரணம் செய்ய, நந்தனது வீட்டிற்கு வந்தார். சந்தோஷமடைந்த நந்தகோபன், அவரை வரவேற்றுப் பூஜித்தார். யசோதையும், நந்தனும் கர்க்கரை நமஸ்கரித்தார்கள். புன்முறுவலுடன் விழாவிற்கு வேண்டியவற்றைச் செய்யச் சொன்னார். கர்க்கர் நந்தகோபனைப் பார்த்து,”நான் யதுகுலத்தின் குரு. இந்த விழாவை மிகவும் ரகசியமாகச் செய்ய வேண்டும்” என்று கூறினார். ஏனெனில், ஆடம்பரமாகச் செய்தால், கம்ஸனுக்குத் தெரிந்துவிடும் என்பதால் அப்படிச் சொன்னார். நந்தகோபனும் அதற்கு சம்மதித்தார்.
பிறகு கர்க்கர், ரோஹிணியின் குழந்தையை எடுத்து வரச் சொன்னார். அந்தக் குழந்தை, நல்லொழுக்கம் மிகுந்த குழந்தையாக இருந்ததால், ‘ராமன்’ என்றும், பலசாலியாக இருந்ததால் ‘பல’ என்பதையும் சேர்த்து, “பலராமன்” என்று பெயரிட்டார். வசுதேவன், நந்தன் ஆகியோரின் இரு குடும்பங்களையும் இணைத்ததால், ‘ஸங்கர்ஷணன்’ என்றும் பெயரிட்டார்.
பிறகு, யசோதையின் குழந்தையை எடுத்து வரச் சொன்னார். கணக்கிலடங்கா ஆயிரக்கணக்கான பெயர்கள் கொண்ட இவருக்கு எந்த பெயர் சூட்டுவது? என்று கவலையடைந்தார். பிறகு ரகசியமாகப் பெயர் வைத்தார். மங்கலமாகவும், ஆனந்தமாகவும் இருப்பதைச் சொல்வதும், கருமையானதும், உலகத்தின் பாபத்தைப் போக்கும் தன்மை உடையதுமான “கிருஷ்ணன்” என்ற பெயர் வைத்தார். வசுதேவனின் குழந்தை என்பதால், “வாசுதேவன்” முதலிய பெயர்களையும் சூட்டினார். இந்தக் குழந்தைதான் ‘ஸ்ரீஹரி’ என்று சொல்லாமல், ஸ்ரீஹரியின் பெருமையை எடுத்துச் சொன்னார். மேலும் நந்தகோபனிடத்தில், “உன் மகனிடத்தில் பக்தி கொண்டவன் துன்பப்படுவதில்லை. உன் மகனுக்குத் துன்பம் தருபவன் நாசமடைவான்” என்று கிருஷ்ணனின் பெருமையை எடுத்துச் சொன்னார். மேலும், “இவன் அசுரர்களைக் கொல்வான். பந்துக்கள் நல்ல ஸ்தானத்தை அடையும்படி செய்வான். உன் மகனுடைய புகழைக் கேட்டு மகிழ்வீர்கள்” என்று கூறினார். பிறகு கர்க்கர், வெளிப்படையாக இக்குழந்தை ‘ஸ்ரீஹரி’ என்று சொல்லாமல், “இக்குழந்தையின் மூலம் அனைவரும் அனைத்துக் கஷ்டங்களையும் கடக்கப் போகிறீர்கள்” என்று கூறினார்.
பெயர் சூட்டும் விழா இனிதே நிறைவேறியது. அனைவரையும் ஆசீர்வதித்த பின்னர், கர்க்கர் தனது இருப்பிடம் சென்றார். நந்தகோபனும், மற்றவர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன், குழந்தை கிருஷ்ணனை சீராட்டினர்.
————–
கண்ணன் கதைகள் – 32
பால லீலை
இப்பொழுது பலராமனும், கிருஷ்ணனும் நந்தனின் வீட்டில் தவழ்ந்து விளையாட ஆரம்பித்தார்கள். தாமரை போன்ற பாதங்களில் உள்ள சலங்கைகளின் சத்தத்தைக் கேட்க ஆசை கொண்டு வேகமாகவும், அழகாகவும் தவழ்ந்தார்கள். இருவரும் சிரித்தபோது தெரிந்த பற்கள் மிக அழகாக இருந்தது. கைகளில் இருந்து நழுவி மணிக்கட்டில் விழுந்த கங்கணங்கள் அழுந்தியதால் உண்டான வடுக்களுடன் இருவரும் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார்கள்.
கிருஷ்ணன், தாமரை போன்ற பாதங்களுடனும், முன் நெற்றியில் கலைந்து விழுந்த கேசங்களுடனும் மிக அழகாக விளங்கினான். அனைவரும் ஆசை கொண்டு அவனைப் பின்தொடர்ந்தனர். அதைப் பார்த்து, இனிமையான சப்தத்துடன் சிரித்துக்கொண்டு ஓடினான். பிறகு நின்று, திரும்பிப் பார்த்து அனைவருக்கும் ஆனந்தத்தை அளித்தான். இருவரும் வேகமாக ஓடி சேற்றில் விழுந்து, சேற்றை உடம்பில் பூசிக் கொண்டார்கள். ஆகாயத்திலிருந்து முனிவர்கள் துதித்தனர். ஓடி வந்த தாய்மார்கள், கருணையோடு வாரி அணைத்து முத்தமிட்டார்கள். யசோதை, பெருகிய அன்புடனும், பால் நிரம்பிய கொங்கைகளுடனும், கண்ணனை எடுத்துப் பாலூட்டினாள். பாலூட்டும்போது புன்சிரிப்புடன் கூடிய அவனது பற்களைப் பார்த்து ஆனந்தமடைந்தாள். இவ்வாறு தெய்வக் குழந்தைக்குப் பாலூட்டி, மிகவும் பேறு பெற்றவளானாள். இப்போது தளிர்நடைப் பருவம் வந்தது. கண்ணன் தன் பிஞ்சுக் கால்களால், தளிர்நடை நடந்து, மற்ற இடைச்சிறுவர்களுடன் அருகே உள்ள வீடுகளில் விளையாடினான். வீடுகளில் உள்ள கிளி, பூனை, கன்றுகளை அவிழ்த்துவிட்டு அவற்றின் பின்னே ஓடினான். இடைச்சிறுவர்கள் சிரித்துக் கொண்டு அவனைத் தொடர்ந்தனர்.
பலராமனுடன் கண்ணன் சென்ற இடங்களில் எல்லாம், கோபிகைகள் அவர்களைக் கண்டு களித்தனர். வீட்டு வேலைகளையும், குழந்தைகளையும் மறந்து கண்ணனையே நினைத்து, பரவசமாக ஆனார்கள். கண்ணன், கோபிகைகள் கொடுக்கும் புதிய வெண்ணைக்கு ஆசைப்பட்டு இனிமையாய்ப் பாடினான். அழகாய் ஆடினான். அவர்கள் கருணையோடு கொடுத்த வெண்ணையை உண்டான். சில இடங்களில் புதிதாய்க் காய்ச்சிய பாலைக் குடித்தான்.
ஒரு நாள், மரத்தின் கிளைகள் மேலே பிரகாசிக்கும் நிலவினைப் பார்த்து, பழம் என்று நினைத்து, பெற்றோரிடம் கேட்டான். அவர்கள் வேடிக்கையாக “நீயே கூப்பிடு, அது வரும்” என்றார்கள். கண்ணனும் கூப்பிட, நிலவு நேராக அவனது கைகளில் வந்தது. அப்போது அவன் மேனி முழுவதும் நட்சத்திரக் கூட்டங்களுடன் அண்டங்களின் வடிவாகத் தோன்றினான். திகைப்புடன் நந்தகோபர் நோக்கும்போது, அவரை பேரின்பக்கடலில் மூழ்கச் செய்து, மறுபடியும் மாயையால், தான் அவரின் மகன் என்ற நினைவை ஏற்படுத்தினான்.
வாமனாவதாரத்தில் மகாபலியிடம் யாசித்துவிட்டேன். மறுபடி யாசிக்கமாட்டேன் என்று முடிவு செய்தவனைப் போல, யாசிக்காமல் அழகாய்த் திருடத் தொடங்கினான். ஒவ்வொரு நாளும் கோபிகைகள் யசோதையிடம் வந்து புகார் கூறத் தொடங்கினார்கள். ஒரு பெண், “இன்று காலை கண்ணன் என் வீட்டிற்கு வந்து, கன்றினை அவிழ்த்துவிட்டதால், அது மாட்டின் எல்லா பாலையும் குடித்துவிட்டது” என்று சொன்னாள். வேறொருத்தி, “அவன் வெண்ணை திருட ஆயிரம் வழி வைத்திருக்கிறான், உயரே உரியில் வைத்தாலும், ஒருவர் மீது ஒருவர் ஏறிக் கொண்டு வெண்ணையைத் திருடுகிறான்” என்று சொன்னாள். மற்றொருத்தி, “பாதி வெண்ணையை அவன் உண்டுவிட்டு மீதியை குரங்குகளுக்குக் கொடுக்கிறான்” என்றாள். ஒரு பெண், உயரே இருக்கும் பானையில் கல்லெறிந்து உடைத்துவிட்டு, அடியில் வாயைத் திறந்து தயிரைக் குடிக்கிறான்” என்று புகாரிட்டாள். அவர்கள் கூறும் புகாரைக் கேட்ட யசோதை, கோபமாகக் கண்ணனைப் பார்க்கும்போது, அவன் கண்களில் நீருடன் நிற்பான். அதைக் கண்டு மனம் பொறுக்காமல், அவனை எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொள்வாள். இவ்வாறு கோகுலத்தில், தயிர், நெய், வெண்ணையை அவன் திருடினாலும், இடைப்பெண்கள் அவனிடம் கோபம், வருத்தம் கொள்ளவில்லை. வெண்ணையுடன், அவர்கள் மனதையும் திருடி, அவர்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தான்.
————-
கண்ணன் கதைகள் – 33
யசோதை – கண்ணன் வாயில் பிரபஞ்சம் கண்டது
ஒரு சமயம், யசோதையிடம் பாலருந்திவிட்டுப் படுத்துக் கொண்டிருந்தபோது கொட்டாவி விட்டபோது , யசோதை கண்ணன் வாயில் அனைத்து உலகங்களையும் கண்டாள். மாயையால் அதை அவள் மறந்தாள். கண்ணன், இடைச்சிறுவர்களுடன் விளையாடும்போது, அவர்களுக்குப் பழம் தருவதாகச் சொல்லி, தராமல் ஏமாற்றினான். அதனால், கோபம் கொண்ட அவர்கள், யசோதையிடம் அவன் மண் தின்றதாகக் கூறினர்.
பிரளய காலத்தில் பூமி மற்றும் அனைத்தையும் உண்ணும் மாயக் கண்ணனுக்கு, மண் தின்றதால் வியாதி வரும் என்று யசோதை பயந்து கோபம் கொண்டாள். “ மண் தின்றாயா?” என்று யசோதை கேட்டாள். கண்ணன் சிரித்துக்கொண்டே இல்லையென்று சத்தியம் செய்தான். “உன் நண்பர்கள் சொல்வது பொய் என்றால், உன் வாயைத் திறந்து காட்டு” என்று சொன்னாள். உடனே, மலர்ந்த தாமரை மலரைப் போன்ற தன் திருவாயைத் திறந்து காட்டினான். அவனது சிறிய வாயில் மண் இருக்கிறதா என்று பார்க்க விரும்பிய யசோதைக்கு, இந்த பூமி மட்டுமல்லாமல் அனைத்து உலகங்களையும் வாயில் காண்பித்தான்.
கண்ணனது வாயில், காடுகளையும், கடல்களையும், மேகத்தையும், பாதாளத்தையும் கண்டாள். மனிதர்கள், அசுரர்கள், தேவர்கள் மட்டுமல்லாமல், அனைத்து ஜீவன்களையும் கண்டாள். பாற்கடலில் பள்ளி கொண்டவராகக் கண்டாள். வைகுண்டத்தில் இருப்பவராகக் கண்டாள். தன் முன்னே தன் குழந்தையாகவும் நிற்பதைக் கண்டாள். உலகங்கள் அனைத்தையும் கண்டாள். கோகுலத்தில் கண்ணனாகவும், அவன் முன் அனைத்து உலகங்களையும் வரிசையாகக் கண்டாள். ‘இவன் பரமாத்மா’ என்று ஒரு நொடிப்பொழுது நினைத்தாள். மீண்டும் மாயை அகன்று, அன்பினால் அவன் தன் மகன் என்ற நினைவினை அடைந்தாள். கனவினைப் போல நடந்த அனைத்தையும் மறந்தாள். ‘பசிக்கிறது, எனக்குப் பால் கொடு’ என்று கேட்டு அவள் மடிமீது ஏறி அமர்ந்த கண்ணனுக்கு ஸ்தன்யபானம் செய்தாள்
————
கண்ணன் கதைகள் – 34
யசோதை – கண்ணனை உரலில் கட்டி வைத்தல்
யசோதை ஒரு முறை தயிர் கடைந்து கொண்டிருந்தாள். கண்ணன் தூங்கிக் கொண்டிருந்தான். கண்ணனுடைய விஷமங்களை நினைத்து மிகவும் பெருமிதத்துடன், பாட்டிசைத்துக் கொண்டு தயிர் கடைந்தாள். சிறிது நேரத்தில் விழித்துக் கொண்ட கண்ணனுக்கு, பால் குடிக்க ஆசை ஏற்பட்டது. உடனே யசோதையின் மடிமீது ஏறி, தயிர் கடைவதைத் தடுத்து, பால் குடித்தான். தாமரைமொட்டுக்கள் போன்ற மார்பில், தாமரை முகத்துடன் அவன் பால் குடித்துக் கொண்டிருந்தபொழுது, அடுப்பில் பால் பொங்கியதால் யசோதை அவனைக் கீழே இறக்கிவிட்டு உள்ளே சென்றாள்.
பாதி பால் குடித்துக் கொண்டிருக்கும்போது தடை ஏற்பட்டதால், கோபம் கொண்ட கண்ணன், மத்தை எடுத்து தயிர்ப் பானையை உடைத்தான். பானை உடைந்த சத்தம் கேட்டு வேகமாக வந்த யசோதை, கீழே சிதறிக் கிடந்த தயிரைக் கண்டாள். கண்ணனைத் தேடினாள். அவனைக் காணவில்லை. தயிரில் தோய்ந்த கண்ணனின் காலடித் தடத்தைப் பின்பற்றி மெதுவே சென்றாள். அங்கே, அவன் உரலில் அமர்ந்துகொண்டு பூனைக்கு வெண்ணை கொடுத்துக்கொண்டிருந்தான்.
பயந்தவன் போல் முகத்தை வைத்துக் கொண்டிருந்த அவனைக் கோபத்துடன் கையில் பிடித்து, ” உன் விஷமம் எல்லை கடந்து போய்விட்டது, கட்டிப் போட்டால்தான் சரியாகும்” என்று கூறி, அவனை உரலில் கட்டிப்போட கயிற்றை எடுத்தாள். பல கயிறுகளை ஒன்றாக இணைத்தும், கட்டுவதற்கு இரண்டு அங்குலம் கயிறு குறைவாக இருந்தது. வீட்டிலுள்ள எல்லா கயிறுகளையும் இணைத்தும் அவளால் கட்ட முடியவில்லை. கயிறு சற்று குறைந்தே இருந்தது. அவள் முகம் வியர்த்தது. இடைப் பெண்கள் அவளைப் பரிகாசமாய்ப் பார்த்தார்கள். அதைக் கண்ட கண்ணன், அவள்மேல் கருணை கொண்டு, அவள் கயிற்றால் உரலில் கட்ட உடன்பட்டான். யசோதை, “துஷ்டனே! இந்த உரலிலேயே கட்டுப்பட்டு இரு” என்று சொல்லி வீட்டிற்குள் சென்றாள். அவள் சென்றவுடன், மறுபடி முன்பே உரலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெண்ணையைத் தின்னத் தொடங்கினான். தேவர்கள் கிருஷ்ணனை “தாமோதரன்” (கயிற்றால் இடுப்பில் கட்டப்பட்டவன்) என்ற பெயரால் துதித்தனர்.
———–
கண்ணன் கதைகள் – 35
நளகூபர, மணிக்ரீவ சாப விமோசனம்
‘தாமோதரன்’ என்று தேவர்களால் துதிக்கப்பட்ட கண்ணன், உரலில் கட்டப்பட்டபடியே, உரலுடன் மெல்லத் தவழ்ந்து சென்றான். அருகில் இரண்டு மரங்களைக் கண்டான்.
முன்னொரு சமயம், குபேரனுடைய மகன்களான நளகூபரன், மணிக்ரீவன் இருவரும் சிவனைத் தொழுது, மிகுந்த ஐஸ்வர்ய செருக்குடன், உலக ஆசைகளில் ஈடுபட்டிருந்தனர். மது அருந்திவிட்டு, கங்கையில் அனேகப் பெண்களுடன் வஸ்திரம் இல்லாமல் ஜலக்ரீடை செய்து கொண்டிருந்தனர். இதை நாரதர் பார்த்தார். நாரதரைக் கண்டவுடன் அந்தப் பெண்கள் தம்முடைய ஆடைகளை எடுத்துக் கொண்டனர். அப்பொழுது கூட, நளகூபரன், மணிக்ரீவன் இருவரும் மயங்கி விளையாடிக் கொண்டிருந்தனர்.
நாராயணனிடத்தில் அவர்களுக்கு பக்தி உண்டாக வேண்டுமென்பதற்காக, நாரதர் அவர்களை சபித்தார். “நீங்கள் இருவரும் நெடுங்காலம் மராமரங்களாக இருந்து, பின்னர் ஸ்ரீஹரியைத் தரிசனம் செய்தவுடன் பழைய நிலையை அடைவீர்களாக” என்று சபித்தார். அவ்விருவரும், கண்ணனான ஸ்ரீஹரியைத் தரிசிக்க ஆவலுடன் மரங்களாகக் காத்துக் கொண்டிருந்தனர்.
கண்ணன் மெதுவாக அந்த மருதமரங்களின் அருகே சென்று, மரங்களின் குறுக்கே உரலை இழுத்துக் கொண்டு போனான். உடனே அவ்விரு மரங்களும் முறிந்து விழுந்தன. மரங்கள் விழுந்ததும், அதிலிருந்து இரண்டு யக்ஷர்கள் தோன்றினார்கள். கிருஷ்ணனைத் துதித்து நமஸ்கரித்தனர். சாப விமோசனம் பெற்று, பக்தியையே வரமாகப் பெற்றுச் சென்றனர்.
மரம் முறிந்த சத்தத்தைக் கேட்ட இடையர்கள் ஓடி வந்தனர். நந்தகோபர், கண்ணனைக் கயிற்றிலிருந்து விடுவித்தார். “தெய்வ அருளால் மரங்களுக்கு நடுவே அகப்பட்ட குழந்தை தப்பியது” என்று கூறிக்கொண்டே இடையர்களும், நந்தகோபனும் கண்ணனை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
——–
கண்ணன் கதைகள் – 36
கோகுலத்திலிருந்து பிருந்தாவனம் செல்லுதல்
ஒரு நாள் கிருஷ்ணனும் பலராமனும், இடைச்சிறுவர்களுடன் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது வாசலில் ஒரு வயதான பெண்மணி,”பழம்! நாவல் பழம்” என்று கூவிக் கொண்டு சென்றாள். கிருஷ்ணனுக்கு உடனே அதைச் சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது, ஆனால் அவனிடம் கொடுப்பதற்குப் பணம் இல்லை. அருகில் தானியங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட அவன், தன் பிஞ்சுக் கை நிறைய தானியங்களை அள்ளிக் கொண்டு, வாசலுக்கு ஓடினான். வழியெல்லாம் தானியம் இறைந்தது. வாசலில் நாவல் பழம் விற்றுக் கொண்டிருந்த பெண்மணியை அழைத்து, “இந்த தானியத்தைப் பெற்றுக் கொண்டு எனக்கு பழங்களை தருவாயா?” என்று கெஞ்சலாகக் கேட்டான். கண்ணனின் அழகும், துறுதுறுப்பும் அந்தப் பெண்ணின் மனதைக் கொள்ளை கொண்டன. அவனது கால் கொலுசின் சத்தம் அவள் காதில் இசையைப் போன்று ஒலித்தது. அவள் உடனே, “குழந்தையே! நீ வேண்டிய பழங்களை எடுத்துக் கொள்” என்று கூறினாள். பிறகு, கண்ணன் கொடுத்த, மீதி இருந்த கொஞ்சம் தானியங்களை பெற்றுக் கொண்டு, கண்ணனின் கை நிறைய பழங்களை அன்புடன் கொடுத்து மகிழ்ந்தாள். குடிசைக்கு சென்றதும் தன் கூடையைப் பார்த்த அவள் திகைத்துப் போனாள். கண்ணன் செய்த மாயத்தால், தானியங்கள் மிக உயர்ந்த ரத்தினங்களாகவும், தங்கமாகவும் மாறியிருந்தது. அன்புடன் கொடுத்தால், கண்ணன் அதைப் போல் பல மடங்கு அளிப்பான் என்பதை உலகுக்கு உணர்த்தவே இந்த அதிசயத்தை நிகழ்த்தினான்.
கண்ணனின் பெருமையை உணராத இடையர்கள், மரங்கள் முறிந்ததை கெட்ட சகுனமாக எண்ணினார்கள். வேறு இடத்திற்குச் செல்லத் தீர்மானித்தார்கள். உபநந்தன் என்ற வயது முதிர்ந்த இடையர், “மேற்கே பிருந்தாவனம் என்ற அழகிய காடு உள்ளது, பசுக்களுக்கும், ஆயர்குல மக்களுக்கும் வசிக்கத் தகுதியான இடமாக அது இருக்கும்” என்று கூறினார்.
நந்தனும், மற்ற இடையர்களும் கோகுலத்தை பசுக்கொட்டிலாகச் செய்தனர். தங்களது உடைமைகளை வண்டிகளில் ஏற்றினார்கள். வயதானவர்களும், பெண்களும், குழந்தைகளும் வண்டிகளில் ஏறினார்கள். யசோதையும் கண்ணனைத் தூக்கிக்கொண்டு வண்டியில் ஏறினாள். மற்ற கோபர்கள் பின்தொடர்ந்தனர். வழி நெடுக இசைக் கருவிகளை இசைத்துக் கொண்டு சென்றனர். வண்டிகளின் சத்தத்திலும், பசுக்களின் குளம்புச்சத்தத்திலும், கண்ணனின் அழகான பேச்சுக்களிலும் மனமகிழ்ந்த கோபியர்கள், அந்த நீண்ட வழியைக் கடந்ததைக்கூட அறியவில்லை. பிருந்தாவனத்தை அடைந்தார்கள். அங்கு, பச்சை மணிகளை வாரி இரைத்தது போன்ற புல்வெளிகளையும், பூத்துக் குலுங்கிய குந்த மரங்களால் நிறைந்திருந்த அழகான வனத்தையும் கண்டார்கள்.
பிருந்தாவனத்தில், அன்னங்களின் சப்தத்துடன், தாமரைப்பூ போன்ற முகத்துடனும் சுத்தமான நீருடனும், களிந்தனின் பெண்ணான யமுனை, வளைந்து வளைந்து சென்றாள். அழகாக அகவும் மயில்கள் நிறைந்திருந்தன. வானுயர்ந்த சிகரங்களுடன் கூடிய கோவர்த்தனம் என்னும் மலை இருந்தது. கண்ணனும், மற்றவர்களும் மிக்க ஆனந்தமடைந்தார்கள். புது வீடுகள் கட்டிக்கொண்டு இடையர்கள் அங்கு குடியேறினர்.
கண்ணனும் பலராமனும் சற்றே வளர்ந்ததும், கன்றுகளை மேய்க்கத் தொடங்கினார்கள். கண்ணன் இடைச்சிறுவர்களோடு பிருந்தாவனத்தின் அழகைக் கண்டு களித்தான். கண்ணன் இடைச்சிறுவர்களுடன் எங்கெங்கு செல்கிறானோ, அங்கெல்லாம் வளைந்து வளைந்து, ஆசை கொண்டவள்போல் வரும் யமுனையைப் பார்த்தான். வானை முட்டும் உயர்ந்த உச்சிகளோடு, பல்வேறு நிறங்களுடன் ஒளிவீசிக்கொண்டிருக்கும் கோவர்த்தனம் என்னும் மலையைக் கண்டான். அந்தக் காடு, பசுமையான புல்வெளிகளுடன், பசுக்களுக்கு மிகவும் ஏற்றதாய் இருந்தது. கண்ணன், பலராமனோடும் ஆயர் சிறுவர்களோடும், கன்றுகளை மேய்த்துக் கொண்டு, மகிழ்ச்சியாய் இருந்தான்
கண்ணன் கதைகள் – 37
பகாசுர, வத்ஸாசுர வதம்
வண்டுகள் ரீங்காரம் செய்யும் பிருந்தாவனத்தின் வனங்களில், கொம்பு, புல்லாங்குழல், பிரம்பு முதலியவற்றை எடுத்துக்கொண்டு, பலராமனோடும், ஆயர் சிறுவர்களோடும் கன்றுகளையும், பசுக்களையும் மேய்த்துக் கொண்டு, கண்ணன் திரிந்து மகிழ்ந்தான். அவனுடைய பிஞ்சுப் பாடங்கள் பட்டதால், அங்கு உள்ள மரங்கள், கொடிகள், நீர், பூமி, மலை, வயல்கள் முதலிய யாவையும் பெருமை உடையதாய் செழித்து விளங்கின.
பச்சைப் புல்வெளியிலும், கோவர்த்தன மலையிலும் குழலூதிக்கொண்டு கன்றுகளை மேய்த்துக் கொண்டிருந்த கண்ணன், ஒரு நாள், கன்றின் வடிவில் இருந்த வத்ஸாசுரனைப் பார்த்தான். அசுரன் வேகமாக வாலை அசைத்துக் கொண்டு, முகத்தைத் திருப்பிக்கொண்டு, கண்ணனை நெருங்க சரியான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருந்தான். அப்போது கண்ணன், அவன் கால்களைப் பிடித்து வேகமாகச் சுற்றி, அவனை ஒரு மரத்தின் மீது எறிந்து கொன்றான். அவன் இறந்து கீழே விழுந்தான். அவன் விழுந்த வேகத்தில் பல மரங்கள் சாய்ந்து விழுந்தன. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இடைச்சிறுவர்கள், கண்ணனின் தலையில் விழுந்த பூக்களைப் பார்த்து, “மிகவும் மணம் நிரம்பிய இந்தப் பூக்கள் எங்கிருந்து விழுகின்றன?” என்று கேட்டனர். கண்ணனும், “அசுரனை மரத்தில் எறிந்தபோது அம்மரத்திலிருந்த பூக்கள் உயரே கிளம்பி, மெதுவே கீழே விழுகிறது” என்று விளக்கம் அளித்தான்.
ஒரு நாள், வெயில் மிகவும் அதிகமாக இருந்தது. அதிக வெயிலால் தாபமடைந்த ஆயர் சிறுவர்களுடன், பலராமனும் கண்ணனும் யமுனை நதிக்குத் தண்ணீர் குடிக்கச் சென்றார்கள். தண்ணீரைக் குடித்துவிட்டு வரும்போது அங்கே, இறக்கைகளை அசைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெரிய கொக்கைக் கண்டார்கள். அந்தக் கொக்கு பெரிய மலையைப் போன்றதாய் இருந்தது. சிறுவர்கள் மிகவும் பயந்தார்கள். கொக்கு கண்ணனை விழுங்கியது. கண்ணன் அதற்கு நெருப்பைப் போன்றதாய் ஆனான். அவனுடைய உஷ்ணத்தைத் தாங்க முடியாமல் வெளியே உமிழ்ந்தது. மீண்டும் அந்தக் கொக்கு வேகமாக வந்து கண்ணனைக் கொத்தியது. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கண்ணன், அதன் அலகினைப் பற்றி, இரு கூறாகக் கிழித்துக் கொன்றான். தேவர்கள் பூமழை பொழிந்தனர். சிறுவர்களும் பிருந்தாவனத்திலிருந்து வீடு திரும்பினார்கள்.
கண்ணனின் குழலோசையைக் கேட்ட கோபியர்கள் சந்தோஷத்துடன் அருகே ஓடி வந்தனர். இடைச்சிறுவர்கள் நடந்தவற்றைக் கூறினார்கள். அதை நம்பாமல், தந்தை நந்தகோபனும், தாய் யசோதையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கண்ணனை அணைத்துக் கொண்டார்கள்
————–கண்ணன் கதைகள் – 38
அகாசுர வதம்ஒரு முறை கண்ணன், ஆயர் சிறுவர்களுடன் வனபோஜனம் செய்ய விருப்பம் கொண்டான். சிறுவர்களைக் கூப்பிட்டு தனது விருப்பத்தைக் கூறினான். சிறுவர்கள் அனைவரும் காய், கறி, குழம்பு முதலியவைகளுடன் கூடிய அன்னத்தை எடுத்துக்கொண்டு கன்றுகளுடனும் கோபர்களுடனும், குதூகலத்துடன் காட்டுக்குச் சென்றார்கள். உல்லாசமாக விளையாடிக்கொண்டும், ஆடிப்பாடிக் கொண்டும் இருந்தார்கள்.அப்போது, அகன் என்ற அசுரன், மலைப்பாம்பின் உருவெடுத்து வழிமறித்தான்.
அப்பாம்பு பெரிய மலை போலவும், திறந்திருந்த அதன் வாய் பெரிய குகை போலவும் தோற்றமளித்தது. ஆயர்சிறுவர்கள் அதை நிஜமான குகையென்று நினைத்து அதன் வாயில் புகுந்தனர். தவறுதலாகப் புகுந்த அவர்கள் மிக்க தாபத்தை அடைந்து மயங்கினார்கள். ஆதரவற்ற நண்பர்களைக் காப்பதற்காக கண்ணன் அப்பாம்பின் வாயில் நுழைந்தான். அதன் வாயில் இருந்துகொண்டு உருவத்தை மிகப் பெரியதாகச் செய்துகொண்டான். அந்தப் பாம்பு மூச்சு விட முடியாமல் புரண்டது. அதனுடைய கழுத்து கிழிந்து, உயிரை விட்டது. உடனே தன்னுடைய ஒரு பார்வையால், கோபகுமாரர்களையும், மாடு கன்றுகளையும் மயக்கம் தெளிய வைத்து, வெளியில் வந்தான். அகாசுரன் இறந்ததும், அவனுடைய உடலிலிருந்து புறப்பட்ட ஒளி, வானில் காத்திருந்து, கண்ணன் வெளியே வந்ததும் அவனுடன் கலந்து மறைந்தது. தேவர்கள் கண்ணனுடைய புகழ் பாடி ஆடினார்கள்.
உச்சிப் பொழுது ஆகிவிட்டதால் அனைவருக்கும் பசித்தது. கொம்பையும், புல்லாங்குழலையும் இடுப்பில் சொருகிக்கொண்டு, கையில் அன்னத்துடன், வேடிக்கையாகப் பேசி, சிறுவர்களைச் சிரிக்கச் செய்து கொண்டு, இடைச்சிறுவர்களுடன் வனபோஜனம் செய்தான். மகிழ்ச்சியுடன் சிறுவர்கள் அனைவரும் உணவு உண்டார்கள். அதைக் கண்ட பிரமனும், தேவர்களும்,”நாம் யாகத்தில் தரும் ஹவிர்பாகத்தை சாப்பிடுவதைவிட, இங்கு இடைச்சிறுவர்களோடு உண்பதில் அதிக ஆனந்தம் அடைகிறார்” என்று ஆச்சர்யத்துடன் கூறித் துதித்தனர்.
கண்ணன் கதைகள் – 39
பிரம்மனின் கர்வ பங்கம்
திருமால், முன்பு செய்த அவதாரங்களில் காணப்படாத சில அதிசயங்கள், க்ருஷ்ணாவதாரத்தில், அகாசுர வதத்தில் காணப்பட்டது என்று தேவர்கள் கூறியதைக் கேட்ட பிரம்மா, கண்ணனைப் பரீட்சிக்க விரும்பி, தன் சக்தியால் மாடு கன்றுகளை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று மறைத்து வைத்தார். கோபகுமாரர்கள் கன்றுகளைக் காணாமல் துயரம் அடைந்தனர். இடைச்சிறுவர்களின் துயரத்தைக் கண்ட கண்ணன், பாதி உண்டுகொண்டிருக்கும்போது கையில் சாதத்துடன் கன்றுகளைத் தேடச் சென்றான். அப்போது பிரம்மா, உணவு உண்டு கொண்டிருக்கும் இடையர்களையும் மறைத்து வைத்தார்.
பிரம்மனின் இந்த செயலை, கண்ணன் தியானத்தால் அறிந்தான். பிரம்மனுக்குப் பாடம் கற்பிக்க எண்ணம் கொண்டான். உடனே, கன்றுகளாகவும், இடைச்சிறுவர்களாகவும் தானே உருவெடுத்து, மேலும், உறி, உறியில் உள்ள பாத்திரம், புல்லாங்குழல், முதலியவைகளாகவும் வேடம் பூண்டு காட்டில் வெகு நேரம் விளையாடிவிட்டு மாலையில் வீடு சென்றான். கன்றுகளாகவும், கோபகுமாரர்களாகவும் உருவம் கொண்ட கண்ணனை, தாய்மார்கள் சந்தோஷத்துடன் வரவேற்றார்கள். அவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. தங்கள் பிள்ளைகள் என்றே நினைத்தார்கள். பரமாத்மாவையே குழந்தையாக அடைந்த தாய்மார்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேது?
இவ்வாறு ஒரு வருடம் கழிந்த பின்னரே, கன்றுகளும், சிறுவர்களும் கண்ணன் தான் என்பதை பலராமன் உணர்ந்தார். வருடத்தின் முடிவில், பிரம்மதேவன் கன்றுகளையும், சிறுவர்களையும் கண்டு, அவை தன்னால் மறைத்து வைக்கப்பட்டவையா அல்லது புதியனவா என்று திகைத்தார். அப்போது கண்ணன் புதிதாக உள்ள எல்லாவற்றையும் கிரீடம், தோள்வளைகளுடன், நான்கு கரங்கள் கொண்டவைகளாக பிரம்மனுக்குக் காண்பித்தான். பிரம்மா, ஒவ்வொருவரையும் லக்ஷ்மிதேவியுடன் ஆதிசேஷன்மேல் பள்ளி கொண்டிருப்பவர்களாகவும், அழகிய வடிவமுடனும், ஸனகாதியரும், முனிவர்களும் சேவித்துக்கொண்டிருக்கக் கண்டார். கணக்கற்ற வடிவங்களைக் கண்டார். எங்கும் தான் சேவகனாய் இருப்பதாகவும் கண்டார். மிகுந்த குழப்பத்தை அடைந்தார். அப்போது கண்ணன், கையில் பாதி அன்னக்கவளத்துடன் காட்சி அளித்தான்.
பிரம்மன் கர்வம் நீங்கி, கிருஷ்ணனைத் துதித்துப் பாடி, நமஸ்கரித்து, பிரதக்ஷிணம் செய்து, சத்யலோகம் சென்றார். புதிய உருவம் கொண்ட சிறுவர்களும், கன்றுகளும் மறைந்தார்கள். இடைச்சிறுவர்களும், யமுனைக் கரையில் உணவு உண்டு கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒரு வருடம் சென்றதைக் கூட உணரவில்லை. கண்ணன் கன்றுகளுடன் யமுனைக் கரைக்கு வந்தான். சிறுவர்கள், கண்ணன் கன்றுகளை மேய்த்துவிட்டு மெதுவே வருகிறான் என்று நினைத்து, “கண்ணா! சீக்கிரம் வா! உணவு உண்ணலாம்” என்று கூறினார்கள். கண்ணனும் சிரித்துக் கொண்டேஉணவு உண்டுவிட்டு, மகிழ்ச்சியாக மற்ற சிறுவர்களுடன் வீடு திரும்பினான்.
———கண்ணன் கதைகள் – 39
பிரம்மனின் கர்வ பங்கம்திருமால், முன்பு செய்த அவதாரங்களில் காணப்படாத சில அதிசயங்கள், க்ருஷ்ணாவதாரத்தில், அகாசுர வதத்தில் காணப்பட்டது என்று தேவர்கள் கூறியதைக் கேட்ட பிரம்மா, கண்ணனைப் பரீட்சிக்க விரும்பி, தன் சக்தியால் மாடு கன்றுகளை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று மறைத்து வைத்தார். கோபகுமாரர்கள் கன்றுகளைக் காணாமல் துயரம் அடைந்தனர். இடைச்சிறுவர்களின் துயரத்தைக் கண்ட கண்ணன், பாதி உண்டுகொண்டிருக்கும்போது கையில் சாதத்துடன் கன்றுகளைத் தேடச் சென்றான். அப்போது பிரம்மா, உணவு உண்டு கொண்டிருக்கும் இடையர்களையும் மறைத்து வைத்தார்.பிரம்மனின் இந்த செயலை, கண்ணன் தியானத்தால் அறிந்தான். பிரம்மனுக்குப் பாடம் கற்பிக்க எண்ணம் கொண்டான். உடனே, கன்றுகளாகவும், இடைச்சிறுவர்களாகவும் தானே உருவெடுத்து, மேலும், உறி, உறியில் உள்ள பாத்திரம், புல்லாங்குழல், முதலியவைகளாகவும் வேடம் பூண்டு காட்டில் வெகு நேரம் விளையாடிவிட்டு மாலையில் வீடு சென்றான். கன்றுகளாகவும், கோபகுமாரர்களாகவும் உருவம் கொண்ட கண்ணனை, தாய்மார்கள் சந்தோஷத்துடன் வரவேற்றார்கள். அவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. தங்கள் பிள்ளைகள் என்றே நினைத்தார்கள். பரமாத்மாவையே குழந்தையாக அடைந்த தாய்மார்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேது?
இவ்வாறு ஒரு வருடம் கழிந்த பின்னரே, கன்றுகளும், சிறுவர்களும் கண்ணன் தான் என்பதை பலராமன் உணர்ந்தார். வருடத்தின் முடிவில், பிரம்மதேவன் கன்றுகளையும், சிறுவர்களையும் கண்டு, அவை தன்னால் மறைத்து வைக்கப்பட்டவையா அல்லது புதியனவா என்று திகைத்தார். அப்போது கண்ணன் புதிதாக உள்ள எல்லாவற்றையும் கிரீடம், தோள்வளைகளுடன், நான்கு கரங்கள் கொண்டவைகளாக பிரம்மனுக்குக் காண்பித்தான். பிரம்மா, ஒவ்வொருவரையும் லக்ஷ்மிதேவியுடன் ஆதிசேஷன்மேல் பள்ளி கொண்டிருப்பவர்களாகவும், அழகிய வடிவமுடனும், ஸனகாதியரும், முனிவர்களும் சேவித்துக்கொண்டிருக்கக் கண்டார். கணக்கற்ற வடிவங்களைக் கண்டார். எங்கும் தான் சேவகனாய் இருப்பதாகவும் கண்டார். மிகுந்த குழப்பத்தை அடைந்தார். அப்போது கண்ணன், கையில் பாதி அன்னக்கவளத்துடன் காட்சி அளித்தான்.
பிரம்மன் கர்வம் நீங்கி, கிருஷ்ணனைத் துதித்துப் பாடி, நமஸ்கரித்து, பிரதக்ஷிணம் செய்து, சத்யலோகம் சென்றார். புதிய உருவம் கொண்ட சிறுவர்களும், கன்றுகளும் மறைந்தார்கள். இடைச்சிறுவர்களும், யமுனைக் கரையில் உணவு உண்டு கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒரு வருடம் சென்றதைக் கூட உணரவில்லை. கண்ணன் கன்றுகளுடன் யமுனைக் கரைக்கு வந்தான். சிறுவர்கள், கண்ணன் கன்றுகளை மேய்த்துவிட்டு மெதுவே வருகிறான் என்று நினைத்து, “கண்ணா! சீக்கிரம் வா! உணவு உண்ணலாம்” என்று கூறினார்கள். கண்ணனும் சிரித்துக் கொண்டேஉணவு உண்டுவிட்டு, மகிழ்ச்சியாக மற்ற சிறுவர்களுடன் வீடு திரும்பினான்.
————–
கண்ணன் கதைகள் – 40
தேனுகாசுர வதம்
குழந்தைப் பருவத்தைத் தாண்டி, பிள்ளைப் பருவத்தை அடைந்த கண்ணன், கன்றுகளை மேய்ப்பதை விட்டு, பசுக்களை மேய்த்து ரக்ஷிக்கத் தொடங்கினான். பூமியைக் காக்க அவதாரம் செய்த கண்ணன், ‘கோ’ எனப்படும் பசுக்களையும் காக்கத் தொடங்கினான்.
ஒரு முறை பலராமனுடன் காட்டின் அழகிய காட்சிகளில் மகிழ்ந்து செல்லும்போது, ஸ்ரீதாமன் என்ற நண்பன், “கண்ணா! இங்கு ‘தாளவனம்’ என்ற ஒரு பனங்காடு இருக்கிறது. ஆனால், தேனுகன் என்ற அசுரன் அதைக் காவல் காத்து வருகிறான், பறவைகளும் மிருகங்களும் கூட அங்கு செல்ல பயப்படும். அங்குள்ள பனம் பழங்கள் மிகுந்த சுவை உடையதாய் இருக்கும், அதை சுவைக்க வேண்டும் என்பது எங்களுடைய நீண்ட நாள் ஆசை” என்று சொன்னான். நண்பர்களின் ஆசையைப் பூர்த்தி செய்ய விரும்பிய கண்ணனும் பலராமனும், இடைச்சிறுவர்களுடன் தேனுகன் என்ற அசுரனின் காட்டிற்குச் சென்றார்கள். கண்ணன் கூறியதால், பலராமன், அங்கு உயர்ந்திருந்த பனைமரங்களை வலுவாக அசைத்தார். பழுத்ததும், பழுக்காததுமான பழங்கள் கீழே விழுந்தன. சத்தத்தைக் கேட்ட தேனுகன் என்ற அசுரன், கழுதை வடிவம் எடுத்துக் கொண்டு, விரைந்து வந்து பலராமனின் நெஞ்சில் உதைத்தான். பலராமன் அசுரனின் பின்னங்கால்களைப் பற்றி, சுழற்றி எறிந்து அவனைக் கொன்றார். தேனுகனென்ற அசுரனும் உயிரிழந்து கீழே விழுந்தான்.
உடனே, அந்த அசுரனுடைய பணியாட்கள் தாக்க வந்தனர். கண்ணன், அவர்களை அனாயாசமாக, நாகப்பழங்களைப் போல பனைமரங்களில் எறிந்து,
அனைவரையும் கொன்றான். “தாங்கள் அவதரித்த பலன் கிடைத்துவிட்டது” என்று கூறி தேவர்கள் பூமாரி பொழிந்து துதித்தனர். ‘ஆம் பழம் கிடைத்துவிட்டது’ என்று சிரித்துக்கொண்டே, பெரிதாகவும், நிறைய சாறுடன் இனிமையாக உள்ள அந்தப் பழங்களை சிறுவர்களுடன் சேர்ந்து உண்டு மகிழ்ந்து, நிறைய பழங்களை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார்கள்.
தேனுகன் இறந்ததால், மக்கள் பயமின்றி ‘தாளவனம்’ சென்று பனம்பழங்களை சேகரித்து உண்டு மகிழ்ந்தார்கள். பசுக்களும், மிருகங்களும் பயமின்றி அந்த வனத்திலுள்ள புல்லை மேய்ந்து மகிழ்ந்தன.
—————-
கண்ணன் கதைகள் – 41
காளியமர்த்தனம்,
காளிங்கநர்த்தனம்
முன்னொரு சமயம் ஸௌபரி என்ற முனிவர், திருமாலைத் தரிசிக்க ஆவல் கொண்டு, பன்னிரண்டு வருடம் காளிந்தி நதியின் உள்ளே நீரில் தவம் செய்தார். அப்போது நீரில் இருந்த மீன்கூட்டங்களிடம் அன்பு கொண்டார். ஒரு நாள் எதிரே கருடன் வருவதைக் கண்டார். கருடன் பசியால் மீன்களைத் தின்பதைக் கண்டார். துயரமடைந்த அவர் ‘இங்கு உள்ள ஏதாவது ஒரு ஜீவனைத் தின்றால் உடனே உயிரிழப்பாய்’ என்று கருடனைச் சபித்தார்.
காளியன் என்ற பாம்பு, கருடனுக்கு வைக்கப்பட்ட பாகங்களைத் தின்று வந்தது. கோபமடைந்த கருடன், தன் இறக்கைகளால் காளியனை அடித்து விரட்டினான். காளியனும் கருடன் வரமுடியாத அந்த காளிந்தி மடுவிற்குச் சென்றது. அந்த மடுவில் காளியன் புகுந்ததும், அதன் விஷமான மூச்சுக் காற்றால் மடுவின் கரையிலுள்ள மரங்கள் கருகின. மடுவிற்கு மேல் வானில் பறக்கும் பறவைகளும் இறந்து விழுந்தன.
ஒரு முறை, இடையர்களும், கண்ணனும், பலராமனை விட்டுத் தனியே யமுனை நதியின் கரையிலுள்ள காட்டிற்குச் சென்றார்கள். கடுமையான வெய்யிலினால் துன்பமடைந்த இடையர்களும், பசுக்களும் அந்த மடுவின் விஷ நீரைப் பருகினார்கள்.உடனே உயிரிழந்து கீழே விழுந்தார்கள். கண்ணன் கருணையுடன் அவர்கள் அருகே வந்து, அமிர்தமாகிற தன்னுடைய கடைக்கண் பார்வையால் அவர்களைப் பிழைக்கச் செய்தான். உயிர் பிழைத்த அவர்கள், இந்த ஆனந்தம் எங்கிருந்து உண்டாகிறது? என்று கூறிக் கொண்டு எதிரில் கண்ணனைக் கண்டார்கள். கண்ணனே காரணம் என்று உணர்ந்து அவனைக் கட்டித் தழுவினர். நொடிப்பொழுதில் பிழைத்த பசுக்களும், ஆனந்தமுடன் மெதுவாகக் குரல் கொடுத்துக் கொண்டே கண்ணனைச் சுற்றி வந்தன. ‘எங்கள் தேகத்தில் மயிர்க்கூச்சலுடன், சொல்லமுடியாத ஆனந்தம் உண்டாகிறது. இந்த விஷவேகம் ஆச்சர்யமாக உள்ளது’ என்று கூறி இடையர்கள் வணங்கினார்கள்.
கண்ணன், அந்தப் பாம்பின் கொடிய செயலைத் தடுக்க முடிவு செய்து, மடுவின் கரையில் விஷக்காற்றால் வாடி நின்ற கடம்பமரத்தின்மீது ஏறினான். சிவந்த மென்மையான பாதங்களால் மரத்தின் மீது ஏறி, அலைகள் நிறைந்த அந்த மடுவில் உயரத்திலிருந்து குதித்தான். கண்ணன் குதித்ததும், அவனுடைய பாரத்தால் அலைகள் உயரே கிளம்பி, மிகுந்த ஓசையுடன், கரைகளை மூழ்கடித்தது. அந்த ஓசையைக் கேட்ட காளியன் கோபத்துடன் நீரிலிருந்து வெளியே வந்தான். ஆயிரக்கணக்கான அவன் படங்களிலிருந்து கொடிய விஷம் பெருக்கெடுத்து ஓட, பெரிய மலை போலத் தோற்றமளித்தான். பயங்கரமான விஷ மூச்சை விட்டுக்கொண்டு, கண்ணனை அசையாமல் இருக்கும்படி சுற்றிக் கொண்டான். கரையில் நின்ற இடையர்களும், பசுக்களும், சிறுவர்களும் கண்ணனைக் காணாமல் துயரமடைந்தனர். கோபர்களும், பல கெட்ட சகுனங்களைக் கண்டு யமுனைக்கரைக்கு விரைந்து வந்தனர். கண்ணனுடைய நிலையைக் கண்ட அனைவரும் பிராணனை விட நினைத்தார்கள்.
அப்போது கண்ணன், அப்பாம்பின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, புன்சிரிப்புடன் ஆற்றிலிருந்து வெளியே வந்தான். மென்மையான சிறிய தன்னுடைய கால்களால் அப்பாம்பின் படங்களின் மேல் ஏறி நடனம் செய்தான். அவனுடைய கால்களில் அணிந்திருந்த கொலுசுகளும், கைவளைகளும் அந்த நடனத்திற்கு ஏற்றவாறு சப்தித்தன. காளியனுடைய படமெடுத்த தலைகளின் மீது ஏறி நடனம் செய்தான். காளியனுடைய தலை தொங்கியது. தொங்கிய தலைகளை விட்டுவிட்டு, மீண்டும் படமெடுத்த தலையின் மீது ஏறி, தனது தாமரைப் பாதங்களால் தாளமிட்டுக் கொண்டு நர்த்தனமாடினான். அந்த நடனத்தைக் கண்ட கோபர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆகாயத்தில், தேவ மங்கையர் துந்துபி வாசிக்க, தேவர்கள் பூமாரி பொழிந்தனர். முனிவர்கள் ஆனந்தத்துடன் துதித்தனர். இவ்வாறு கண்ணன் ஆடியதும், காளியனுடைய படமெடுத்த தலைகள் யாவும் தொங்கிவிட்டது. காளியன் உடலில் ரத்தம் வடிந்தது. அவன் சோர்ந்து விழுந்தான். அப்போது, மடுவின் உள்ளே இருந்த காளியனின் மனைவியர் கண்ணனை சரணடைந்து, “எங்கள் கணவரை விட்டுவிடுங்கள்” என்று கூறி, பலவிதமான ஸ்தோத்திரங்களால் கண்ணனைத் துதித்தனர். காளியனும் தலைவணங்கித் துதித்தான். கண்ணன் அவர்கள் மீது இரக்கம் கொண்டான். அவர்களிடம்,” உங்களை நான் கொல்ல மாட்டேன்.இந்த மடுவில் குழந்தைகளும், பசுக்களும் நீர் அருந்த வருவதால், நீங்கள் இந்த மடுவை விட்டு சமுத்திரத்தில் இருக்கும் ரமணகம் என்னும் இடத்திற்கு செல்லுங்கள். அங்கு கருடன் உங்களைத் தொந்திரவு செய்ய மாட்டான்” என்று கூறினான். இவ்வாறு சொன்னதும், காளியன் மற்ற பாம்புகளுடன் ரமணகத்திற்குப் புறப்பட்டான். காளியனின் மனைவியர் கண்ணனுக்கு விலையுயர்ந்த ரத்தினங்களையும், ஜொலிக்கும் ஆபரணங்களையும், பட்டுத் துணிகளையும் கொடுத்தனர். அவற்றை அணிந்துகொண்டு ஆனந்தத்துடன் காளிந்தி மடுவின் கரையில் நிற்கும் சுற்றத்தாரிடம் வந்தான். தன்னுடைய அழகான கடைக்கண் கடாக்ஷத்தால், அங்குள்ளோரது தாபங்களைப் போக்கி மகிழ்வித்தான். கண்ணனைக் கண்ட ஆயர்கள், அவனைத் தோளில் சுமந்துகொண்டனர். பசுக்களும், ஆனந்தமுடன் மெதுவாகக் குரல் கொடுத்துக் கொண்டே கண்ணனைச் சுற்றி வந்தன. இடைச்சிறுவர்கள் அவனைச் சுற்றிலும் நின்றுகொண்டு ஆடிப் பாடி ஆனந்தித்தனர்.
————–
கண்ணன் கதைகள் – 42
கோபிகைகளின் ஆடைகளை அபகரித்தல் / கோபிகா வஸ்த்ராபஹரணம்
குருவாயூரப்பன் கதைகள்
கண்ணனின் அழகிய வடிவைக் கண்ட கோபிகைகள் மிகுந்த மோகத்தை அடைந்த கோபிகைகளின் மனம் சஞ்சலமுற்றது. அவர்கள் கண்ணனுக்கு சேவை செய்ய விரும்பி, யமுனா நதிக்கரையில் கூடி, மணலால் பார்வதிதேவியைப்போன்ற பிம்பம் செய்து பூஜித்தனர். கோபிகைகள், கண்ணனின் திருநாமத்தையும், கதைகளையும் கூறிக்கொண்டே யமுனாநதிக்கு வந்தார்கள். பிறகு, நந்தகோபனின் மகன் கோபாலனே கணவனாய் வரவேண்டும் என்று பூஜித்து வேண்டினார்கள். இவ்வாறு ஒரு மாதம் விரதமிருந்தார்கள்.
கண்ணன் அவர்களிடம் கருணை கொண்டு, அவர்களை ஆசீர்வதிக்க யமுனைக் கரைக்குச் சென்றான். விரதம் முடிந்ததும், கோபிகைகள், தங்கள் ஆடைகளைக் களைந்து, கரையின்மேல் வைத்துவிட்டு, யமுனையில் விளையாடத் தொடங்கினார்கள். யமுனைக் கரைக்குச் சென்ற கண்ணன் அந்த கோபிகைகளின் ஆடைகளை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள மரத்தின் மீது ஏறினான்.
குளித்துவிட்டு வந்த கோபிகைகள், எதிரே கண்ணனைக் கண்டு, வெட்கத்துடன் தலைகுனிந்து நின்றார்கள். “பெண்களே! இங்கு வந்து உங்கள் ஆடைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று புன்சிரிப்புடன் கண்ணன் கூறினான். கோபிகைகள் வெட்கத்தினால் வெளியேவர முடியாமல் திகைத்தனர்.
‘செந்தாமரைக் கண்ணனே! தங்களுக்கு சேவை செய்ய வந்த எங்களை ஏன் கஷ்டப்படுத்துகிறீர்? எங்கள் ஆடைகளைக் கொடுக்கவேண்டும்’ என்று கோபிகைகள் வேண்டினார்கள். கண்ணனோ புன்சிரிப்பையே கோபிகைகளுக்குப் பதிலாகத் தந்தான்.
அவர்கள் கரையேறி, இரு கைகளையும் கூப்பி வணங்கினார்கள். தன்னை சரணடைந்ததால், கண்ணன் அவர்களுக்கு ஆடைகளை அளித்து, “நீங்கள் ஆடையில்லாமல் குளித்த பாபம் நீங்கவே இவ்வாறு செய்தேன்” என்று உபதேசமும் செய்தான். மேலும், “உங்கள் எண்ணத்தை அறிந்து கொண்டேன். நதியின் மணல் குன்றுகளில், நிலா வெளிச்சத்துடன் கூடிய இரவில் நீங்கள் வேண்டியது கிடைக்கும்” என்று கூறினான். தேனினும் இனிய அந்த சொற்களைக் கேட்ட கோபியர்கள், கண்ணனுடைய தாமரை முகத்தைத் திரும்பிப் பார்த்தபடியே மெதுவே வீடு சென்றார்கள். இவ்வாறு கருணையுடன் அனுக்ரஹம் செய்து கோபிகைகளுக்கு ஆனந்தத்தை அளித்தான்.
———–
கண்ணன் கதைகள் – 43
அந்தணப் பெண்களை அனுக்ரஹித்தல்
குருவாயூரப்பன் கதைகள்
ஒரு முறை, கண்ணன் பிருந்தாவனத்திலிருந்து வெகு தூரத்திலுள்ள காட்டிற்கு இடைச்சிறுவர்களுடன் பசுக்களை மேய்க்கச்சென்றான். மனித நடமாட்டமற்ற அக்காட்டில் சிறுவர்களும் பசுக்களும், பசியாலும் தாகத்தாலும் வாடினர். அதைக்கண்ட கண்ணன், அருகே யாகம் செய்து கொண்டிருக்கும் அந்தணர்களிடம் உணவு கேட்கச் சொல்லி அச்சிறுவர்களை அனுப்பினான். அவர்கள் அந்தணர்களிடம் சென்று யாசித்தார்கள். வேதமறிந்த அந்த அந்தணர்கள், காது கேட்காதவர்கள் போல் பேசாமல் இருந்தார்கள். உணவு கிடைக்காததால் சிறுவர்கள் வருந்தி, திரும்பி வந்தார்கள். கண்ணன், “அந்தணர்களின் மனைவியரிடம் சென்று நான் வந்திருப்பதாகக் கூறி உணவு கேளுங்கள், இரக்கம் மிகுந்த அவர்கள் அன்னம் கொடுப்பார்கள்” என்று சிறுவர்களிடம் கூறினான். அவ்வாறே குழந்தைகளும் அந்தப் பெண்களிடம் உணவு கேட்டனர். நெடுநாட்களாகத் கண்ணனைக் காண விரும்பிய அப்பெண்கள், கண்ணனுடைய பெயரைக் கேட்டவுடன், அவனை நேரில் காண ஆவல் கொண்டு, நான்கு விதமான அன்னங்களை எடுத்துக்கொண்டு வந்தார்கள். அவர்கள் கணவர்கள் தடுத்தும்கூட வேகமாய் கண்ணன் இருக்குமிடம் வந்தார்கள்.
தலையில் மயில் பீலியுடன், ஒளிவீசும் குண்டலங்களுடன், மஞ்சள் பட்டணிந்து, நீல மேனியுடன், வனமாலையணிந்து, கருணை நிரம்பிய பார்வையுடன், நண்பனின் தோளில் கையை வைத்துக் கொண்டு, பலராமனுடன் நிற்கும் கண்ணனை அப்பெண்கள் கண்டார்கள். அவர்களில் ஒரு பெண்ணுக்கு, அவளுடைய கணவன் தடுத்ததால் வரமுடியவில்லை. அவள் அங்கேயே கண்ணனை தியானம் செய்து அவனுடன் கலந்து மோக்ஷம் அடைந்தாள். அப்பெண்கள், உலகங்களின் தலைவனான கண்ணனையே விழிகளை இமைக்காமல் நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் மனம் முழுவதும் கண்ணனே நிறைந்திருந்தான். அவர்கள் கொண்டு வந்திருந்த உணவினை கண்ணனிடம் கொடுத்தனர்.
கண்ணன், அந்தணப்பெண்கள் அளித்த உணவை ஏற்று அவர்களை அனுக்ரஹம் செய்தான். கண்ணனுக்கு சேவை செய்ய விரும்பிய அவர்களை, அவர்களுடைய கணவர்கள் செய்யும் யாகத்திற்கு உதவும்படி உத்தரவிட்டு, அவர்கள் கணவர்களையும் அவர்களிடம் அன்புடன் இருக்கப் பணித்தான். அவர்களும் தங்கள் தவறுகளை உணர்ந்து, தத்தம் மனைவியரின் பக்தியையும் உணர்ந்து, கண்ணனைத் துதித்தனர். பிறகு, கண்ணன் அந்தணப் பெண்கள் அளித்த உணவை, தன் நண்பர்களுடன் உண்டு மகிழ்ந்தான்.
—————-
கண்ணன் கதைகள் – 44
கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தல்
குருவாயூரப்பன் கதைகள்
ஒரு முறை, இடையர்கள் இந்திரனைப் பூஜிப்பதற்காக ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார்கள். இந்திரனுக்கு தான் மூவுலகங்களுக்கும் தேவன் என்ற மமதை அதிகரித்தது. அதனால் மும்மூர்த்திகளையும் வணங்காமல் அகம்பாவம் கொண்டிருந்தான். அவனுக்குப் பாடம் கற்பிக்க விரும்பிய கண்ணன், நந்தகோபரிடம், “தந்தையே! இந்த ஏற்பாடுகள் எதற்கு?” என்று அறியாதது போல் கேட்டான். நந்தனும், “மகனே! இந்திரன், மழை பொழியச் செய்து நம் பூமியைச் செழிப்பாக வைக்கிறார். அதனால் அவருக்கு ஒவ்வொரு வருடமும் பூஜை செய்ய வேண்டும். அனைவரின் பிழைப்பும் மழை மூலம் ஏற்படுகிறது. பசுக்களும் நீரையும் புல்லையும் நம்பி இருக்கின்றன” என்று கூறினார். தந்தையின் சொல்லைக் கேட்டு, “இந்திரனால் மழை கிடைக்கிறது என்பது உண்மையல்ல. நாம் முன் ஜன்மத்தில் செய்த தர்மத்தால் மழை பெய்கிறது. காட்டில் உள்ள மரங்கள் இந்திரனுக்கு என்ன பூஜை செய்கின்றன?” என்று கண்ணன் கேட்டான். மேலும்,”இந்தப் பசுக்கள் நம் இடையர்களின் சொத்து. அவைகளுக்குப் புல்லையும், நீரையும் கொடுப்பது கோவர்த்தன மலை. அதனால், கோவர்த்தன மலைக்கும், தேவர்களைவிடச் சிறந்த முனிவர்களுக்கும் பூஜை செய்ய வேண்டும்” என்று கூறினான். அதைக் கேட்ட இடையர்கள், முனிவர்களையும், கோவர்த்தன மலையையும் பூஜித்தனர். பிறகு மலையை வலம் வந்து நமஸ்கரித்தனர். அனைத்து பூஜைகளையும் திருமாலான கண்ணனே மலை வடிவில் பெற்றுக் கொண்டான். கண்ணனுடைய திருவிளையாடல் ஆரம்பமானது. சிரித்துக் கொண்டே இடையர்களிடம், “நான் சொன்னதுபோல் இம்மலை பூஜையை ஏற்றுக்கொண்டது. அதனால் இந்திரன் கோபித்துக் கொண்டாலும், இம்மலையே நம் எல்லோரையும் காக்கும்” என்று சொன்னான். அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வீடு சென்றனர்.
தனக்குச் சேர வேண்டிய பூஜையில் இடையூறு ஏற்பட்டதைக் கேட்ட இந்திரன் கோபம் கொண்டான். மிகுந்த அகங்காரத்தால் “இடையர்களின் சொத்துக்களை அழித்து நாசம் செய்கிறேன்” என்று இந்திரன் ஆர்ப்பரித்தான். ‘ஐராவதம்’ என்ற தன் யானையின்மீது ஏறிக்கொண்டு, வஜ்ராயுதத்தை எடுத்துக்கொண்டு, பிரளயகாலத்து மேகங்களை உருவாக்கி, இடையர்களின் இருப்பிடத்தை அழிக்கப் புறப்பட்டான்.
கண்ணனது திருமேனிக்கு ஒப்பான கார்மேகங்கள் வானத்தில் சூழ்ந்தன. இடிமுழக்கம் அனைவரையும் நடுங்கச் செய்தது. அம்மேகங்களைப் பார்த்து அனைவரும் நடுங்கினார்கள். ஆனால், கண்ணன் சந்தோஷித்தான். பெரிய ஆலங்கட்டிகளுடன் கூடிய மழை பெய்தது. பிருந்தாவனம் நீரில் மூழ்கத் தொடங்கியது. இடையர்கள் பயந்து, “கண்ணா, இந்திரனின் கோபத்திலிருந்து எங்களைக் காக்க வேண்டும்” என்று கூக்குரலிட்டனர். இந்திரனால் நமக்கு ஒரு கெடுதலும் நேராது. முனிவர்களும், கோவர்த்தன மலையும் நிச்சயம் நம்மைக் காப்பார்கள் என்று இடையர்களுக்கு சமாதானம் கூறினான் கண்ணன். இந்த கோவர்த்தனமலை இந்திரனின் கொடுமையிலிருந்து அனைவரையும் காத்து, அழிவை நிச்சயம் தடுக்கும் என்று சொல்லிக்கொண்டே, புன்சிரிப்புடன் தனது இளம் கரங்களால் அம்மலையை வேரோடு பிடுங்கி இழுத்தான். தாமரைக் கரங்களால் மலையைக் குடைபோல உயரே தூக்கி, அதன் கீழ் இடையர்களின் உடைமைகளையும், பசுக்களையும், மக்களையும் இருக்கச் செய்தான். ஒரு கையால் மலையை தூக்கிக் கொண்டும், மறு கையால்அருகே வந்த பசுக்களைச் சொறிந்து கொண்டும், நண்பர்களுடனும், கோபியருடனும் விளையாட்டாய்ப் பேசிக்கொண்டு இருந்தான். இடையர்கள், “இவ்வளவு பெரிய மலையைக் கண்ணன் சிறு கரங்களால் தூக்கிக் கொண்டிருக்கிறார். ஆச்சர்யம்! இது மலையின் பெருமையாய் இருக்குமோ?” என்று அறியாது கூறினார்கள். இந்திரன், “இச்சிறுவனுக்கு என்ன தைரியம்? சிறிது நேரத்தில் மலையைத் தூக்க முடியாமல், கீழே போட்டுவிடுவான்” என்று நினைத்து ஏழு நாட்கள் கடுமையாக மழை பொழியச் செய்தான். ஆனால் கண்ணன் சிறிதும் நகரவில்லை. நீர் முழுவதையும் சொறிந்த மேகங்களைக் காற்று வெகுதூரம் தள்ளிச் சென்றது. இந்திரனும் பயந்து ஓடினான். மழை நின்றுவிட்டது. கண்ணன் அனைவரிடமும், “இப்போது நீங்கள் எல்லாரும் வெளியே வரலாம், இந்திரனால் இனிமேல் ஆபத்து வராது” என்று கூற, இடையர்களும், தங்களது உடைமைகளையும், பசுக்களையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்கள். கண்ணன், மலையை மீண்டும் அதன் இடத்திலேயே வைத்தான். சந்தோஷமடைந்த கோபர்கள் அவனைக் கட்டித் தழுவினர். பெரியவர்கள் அவனை ஆசீர்வதித்தனர்!!
—————–
கண்ணன் கதைகள் – 45
கோவிந்த பட்டாபிஷேகம்
குருவாயூரப்பன் கதைகள்
தோல்வி அடைந்த இந்திரன், கர்வத்தை விட்டு, கண்ணனைப் புகழ்ந்து துதித்து, ‘காமதேனு’ என்ற தேவலோகத்துப் பசுவைப் பரிசாக அளித்தான். கண்ணனுடைய தாமரைப் பாதங்களில் தலை வைத்து வணங்கினான். காமதேனு என்ற அந்தப் பசு, “உலகிற்கெல்லாம் நாயகனே! தாங்கள் பசுக்களைக் காக்கும் குலத்தில் பிறந்தது எங்கள் பாக்கியம்! ‘கோ’க்களைக் காக்கும் உமக்கு என் பாலைச் சொரிந்து, கோவிந்தன் எனப் பெயரிடுகிறேன் ” என்று கூறி தனது பாலால் அபிஷேகம் செய்தது. இந்திரனும் ‘ஐராவதம்’ என்ற தனது யானை கொண்டு வந்த கங்கை ஜலத்தால் அபிஷேகம் செய்தான். இவ்வாறு கண்ணனுக்கு ‘கோவிந்தன்’ என்று பட்டாபிஷேகம் செய்ததும், ஆயர்பாடியில், வைகுண்டத்திலும் ஸ்வர்க்கத்திலும் கிடைக்காத ஐஸ்வர்யம் நிறைந்தது.
மலையைத் தூக்கியது போன்ற கண்ணனுடைய மகிமைகளைப் பார்த்த கோபர்கள், அவனை உலகிற்கெல்லாம் நாயகன் என்று உணர்ந்தனர். நந்தகோபனிடம் தங்கள் ஜாதகத்தின் பலனைக் கேட்டார்கள். அவர்களிடம் நந்தகோபர், முன்பு கர்க்க முனிவர் கூறியவற்றைச் சொன்னார். அவர்கள் அவன் மேல் அதிக அன்பும் பாசமும் கொண்டன
—————————-
கண்ணன் கதைகள் – 46
வருணன் நந்தனைக் கடத்திச் செல்லுதல்
குருவாயூரப்பன் கதைகள்
ஒரு நாள் நந்தகோபர் ஏகாதசி விரதமிருந்து, துவாதசி விடியற்காலை என்று நினைத்து இரவில் யமுனையில் நீராடினார். வருணனின் வேலையாளான ஒரு அசுரன் அவரை இழுத்துச் சென்றான். நந்தனைக் காணாமல் அனைவரும் கதறி அழுதனர். கண்ணனிடம் சரணடைந்தனர். கண்ணன் தனது யோக சக்தியால் வருணனின் லோகத்தில் நந்தகோபர் இருப்பதை அறிந்து, உடனே வருணலோகம் சென்றான்.
கண்ணனைக் கண்ட வருணன் பக்தியுடன் தொழுது, பூஜை செய்தான். பிறகு, “ஹரியே! இன்று நான் பாக்கியம் செய்தவனானேன். பிறவிப் பிணி அகற்றுபவரே! எனது வேலையாள் செய்த இந்தத் தவறை மன்னித்து அருளுங்கள். உம்முடைய தந்தையாரை அழைத்துச் செல்லுங்கள்” என்று கூறினான். அதே நொடியில் நந்தகோபரை அழைத்துக் கொண்டு கண்ணன் வீட்டிற்குச் சென்றான். நந்தகோபரும் தன் சுற்றத்தாரிடம் அதைப் பற்றிக் கூறினார்.
ஆயர்கள் கண்ணனை ‘ஸ்ரீஹரி’ என்று நிச்சயித்து, அவரது
இருப்பிடமான வைகுண்டத்தைக் காண விரும்பினார்கள். எங்கும் நிறைந்திருக்கும் திருமாலான கண்ணன், யாராலும் அடைய முடியாத வைகுண்டலோகத்தை உள்ளங்கை நெல்லிக்கனி போல அவர்களுக்குக் காண்பித்தான். வைகுண்டத்தைக் கண்ட கோபர்கள், ஆனந்த நிலையை அடைந்து, கைவல்யம் (மோக்ஷம்) என்ற சமுத்திரத்தில் மூழ்கினார்கள். அவர்களை மீண்டும் உலக உணர்வுக்கு அழைத்து வந்தான். மீண்டும் அவர்கள் பிருந்தாவனத்தில் இருந்தார்கள். இடையனாக வேடம் கொண்ட இந்த கிருஷ்ணாவதாரத்தில் பிரத்யக்ஷமாக வைகுண்டத்தைக் காண்பித்து அதிசயத்தக்க லீலைகளைப் புரிந்து வந்தான்.
—————
கண்ணன் கதைகள் – 47
கோபியர்களின் மதிமயக்கம்
குருவாயூரப்பன் கதைகள்
கோபிகைகள் கண்ணனையே கணவனாக அடைய வேண்டும் என்று காத்யாயனீ பூஜை செய்தார்கள். அந்தப் பூஜையின் முடிவில், முன்பே கோபியரிடம் கூறியபடி, நிலவொளியில், யமுனைக்கரையில் கண்ணன் குழலூதிக் கொண்டு நின்றான். அவன் புல்லாங்குழலில் இருந்து கிளம்பிய ஏழு ஸ்வரங்களால் உண்டான நாதம், உலகம் முழுவதையும் மயங்கச் செய்தது. அதைக் கேட்ட கோபியர்களும் சொல்லமுடியாத மதிமயக்கம் கொண்டனர்.வீட்டு வேலையில் ஈடுபட்டுக் கொண்டும், குழந்தைகளை கவனித்துக் கொண்டும், கணவனுக்குப் பணிவிடை செய்து கொண்டும் இருந்த கோபியர்கள், கண்ணனின் குழலோசையைக் கேட்டதும், மனம் மயங்கி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடி வந்தார்கள்.
சில கோபியர்கள் பாதி நகைகளைப் போட்டுக் கொண்டும், பாதி அலங்கரித்துக் கொண்டும் ஓடி வந்தார்கள். ஒரு பெண் தன் கழுத்தில் ஒட்டியாணத்தையும், இடுப்பில் ஹாரத்தையும் மாற்றி அணிந்துகொண்டு வந்தாள். மற்றொரு பெண், அதிக அன்பினால், ரவிக்கை அணிய மறந்து, மற்றவர்களுக்குத் தெரியாமல் ஓடி வந்தாள். அவள் ஓடி வந்தது, கண்ணனுக்கு அன்பாகிற பாரத்தை அபிஷேகம் செய்ய இரு குடங்களை எடுத்து வந்தது போலத் தோன்றியது. கணவர்களாலும் வீட்டிலுள்ளவர்களாலும் தடுக்கப்பட்ட சில பெண்கள், கண்ணனை மனதால் தியானம் செய்தார்கள். அவர்கள் உடலைவிட்டு ஆனந்த வடிவமான பரப்ரம்மத்தை அடைந்து மிகவும் புண்ணியம் செய்தவர்கள் ஆனார்கள்.அந்தப் பெண்கள் எவரும் கண்ணனைப் பரமாத்மா என நினைத்து வரவில்லை. காதலனாகவே நினைத்து வந்தனர். ஆயினும் நொடியில் துறவிகள் அடையக்கூடிய முக்தியை அடைந்தனர். கருணையான பார்வையாலும், புன்சிரிப்பினாலும் அழகாய் குழலூதிக் கொண்டு நிற்கும் கண்ணனை, கோபியர்கள் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அவன் அருகே வந்த அந்த கோபியர்கள் மயங்கி நின்றார்கள்.
அவர்களின் எண்ணத்தை அறிந்திருந்தும், வானத்தில் கூடியிருக்கும் முனிவர்களும், உலக மக்களும் கேட்பதற்காக, குடும்பப் பெண்களின் தர்மத்தைப் பற்றி அப்பெண்களுக்கு கண்ணன் எடுத்துக் கூறினான். முன்பு கூறியதற்கு நேர்மாறான அவனுடைய வார்த்தைகளைக் கேட்ட கோபியர் மிகுந்த சோகம் அடைந்தனர். கண்ணா! எங்களைப் புறக்கணிக்காதீர்கள் என்று புலம்பினார்கள்.அவர்கள் புலம்பிக்கொண்டு அழுவதைப் பார்த்த கண்ணன், கருணை கொண்டு, யமுனைக் கரையின் மணல் குன்றுகளில் அவர்களுடன் விளையாடினான்.நிலவொளி வீசும் யமுனைக்கரையில், மணல் குன்றுகளில், கோபிகைகள் மேலாடையினால் ஆசனம் அமைத்து, கண்ணனை அமரச் செய்தார்கள். கண்ணன், அவர்களுடைய கைகளைப் பிடித்தும், முத்தமிட்டும், கட்டி அணைத்தும், இனிமையாகப் பேசியும், அந்த கோபிகைகளின் மனதை மயக்கி அவர்களை மகிழ்வித்தான். அழ்காகப் புன்னகைத்துக்கொண்டே அந்தப் பெண்களின் ஆடைகளை மறுபடி கவர்ந்தான். கண்ணனின் முகம் சிறு வியர்வைத் துளிகளால் நிறைந்து மூவுலகிலும் அழகு வாய்ந்ததாக இருந்தது. கோபியர்கள் கண்ணனைத் தழுவிக் கொண்டு அளவற்ற ஆனந்தம் அடைந்தார்கள். அளவற்ற ஆனந்தம் அடைந்ததால், மிகுந்த கர்வம் கொண்டார்கள்.உலகிலேயே அழகனான கண்ணன், என்னிடத்தில் மட்டும் அன்பு கொண்டிருக்கிறான் என்று ஒவ்வொரு கோபியரும் நினைத்தார்கள். அதனால் மிகுந்த கர்வம் கொண்டவர்களாக ஆனார்கள். அதையறிந்த கோவிந்தன், அந்த நொடியிலேயே மறைந்து போனான். ராதையென்ற கோபிகை மட்டும் கர்வமில்லாமல், அன்பு மிகுந்து இருந்தாள். .கண்ணன் அவளை அழைத்துக்கொண்டு வெகுதூரம் சென்று, அவளுடன் விளையாடினான்.
கண்ணன் மறைந்ததால், கோபியர் மிகுந்த துயரம் அடைந்தனர். அனைவரும் ஒன்றுகூடி கானகம் முழுவதும் தேடினார்கள். அவன் கிடைக்காததால் மிகுந்த வருத்தம் அடைந்தனர். மாமரமே, சம்பகமரமே, மல்லிகைக் கொடியே, எங்கள் கண்ணனைக் கண்டீர்களா? என்று மரங்களையும், கொடிகளையும் கேட்டு, கவலையுடன் புலம்பினார்கள்.கோபிகை ஒருத்தி, கற்பனையில் கண்ணனைக் கண்டு, மற்ற கோபியரிடம், கண்ணனை என் எதிரில் பார்த்தேன் என்று கூறினாள். அதைக் கேட்ட மற்றவர்களுடைய துன்பம் அதிகரித்தது. அவர்கள் எல்லாரும் கண்ணனையே நினைத்து, அவனுடைய செய்கைகளைப் பற்றியே பேசி வந்தார்கள்.
அப்போது ராதை கர்வம் கொண்டதால் அவளையும் விட்டு மாயமாய் மறைந்தான் கண்ணன். அனைவரும், ராதையுடன் கூட, இருட்டும்வரை கானகத்தில் தேடினார்கள். மனம் கலங்கி மீண்டும் யமுனைக் கரைக்கு வந்து புலம்பினார்கள். அவர்களது துன்பத்தைக் கண்டு கருணை கொண்டு, கோபியரின் முன், மன்மதனையும் மயங்கச் செய்யும் அழகுடன், மூவுலகங்களையும் மயக்கும் புன்சிரிப்புடன்மீண்டும் கண்ணன் தோன்றினான். அவனை நேரில் கண்ட கோபியர்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள். தங்கள் மகிழ்ச்சியை விதவிதமாக வெளிப்படுத்தினார்கள். சிலர் அசைவற்று நின்றார்கள். ஒரு கோபிகை, மயிர்க்கூச்சலுடன், கண்ணனது கையை எடுத்து, தனது மார்பில் வைத்துக்கொண்டு நின்றாள். மற்றொருத்தி அவன் கையை எடுத்து, தன் மூச்சே நின்றுவிடும்படி தனது கழுத்தில் இறுகச் சுற்றிக் கொண்டாள்.
———
கண்ணன் கதைகள் – 48
ராஸக்ரீடை
குருவாயூரப்பன் கதைகள்
கோபியர்கள் மிகுந்த ஆனந்தமாக யமுனைக்கரையில் கண்ணனுடன் விளையாடினார்கள். தலையில் மயில் பீலியுடனும், காதுகளில் மீன் குண்டலங்களும், கழுத்தில் முத்து மாலைகளும், வனமாலையும் அசைய, பீதாம்பரமும், ஒட்டியாணமும், ரத்தினங்கள் இழைக்கப்பட்ட கொலுசுகளும் அணிந்து, வாசனைப் பொடிகள் முதலியவற்றால் மணம் வீசும் சரீரத்துடன், அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணன் அனைவரின் மனம் மயங்கும்படியான அழகுடன் விளங்கினான். அப்போதே, மார்புக்கச்சைகளை இறுக்கிக் கட்டிக்கொண்டு, தங்களை அணிகலன்களால் அலங்கரித்துக் கொண்டு கோபியர்கள் அவனைச் சுற்றி வட்டமாய் நின்றார்கள். கிருஷ்ணனும் அப்பெண்களுக்கிடையில், (இரு கோபிகைகளுக்கிடையில் ஒரு கிருஷ்ணன், இரு கிருஷ்ணனுக்கு இடையில் ஒரு கோபிகை) நின்று கொண்டு, நர்த்தனம் செய்துகொண்டு, தனது யை ஆரம்பித்தான்.
நாரதர் கிருஷ்ணனுடைய ராஸக்ரீடையின் அழகைக் கூறக் கேட்ட தேவர்கள், தேவ மங்கையருடன் வேகமாய் வந்து ஆகாயத்தில் சூழ்ந்து நின்றனர். கண்ணனின் புல்லாங்குழலிலிருந்து இனிய ஓசை உண்டானது. அழகிய ஸ்வரங்களுடன், சிறப்பான ராகங்களுடன், மனோகரமான ஆலாபனங்களுடன் இனிமையான இசை உண்டானது. இசைக்கு ஏற்றவாறு அவனுடைய கால்கள் தாளமிட்டன. கைவளைகள் ஒலியெழுப்பின. இடுப்பிலுள்ள ஆடைகள் அசைய, தாமரை போன்ற கைகளைத் தோளில் வைத்துக் கொண்டிருக்கும் இந்த ராஸக்ரீடையின் காட்சி மிக்க மனோகரமாய் இருந்தது. இனிமையான இசையை மேல் ஸ்தாயியில் பாடிக்கொண்டு, பின்னணிக் கொத்து என்ற நடனம் ஆரம்பித்தது. நடனத்தின் அசைவின்போது, அனைவரும் அணிந்திருந்த ஆபரணங்கள் இடம் மாறி நகர்ந்து மிக அழகாய் இருந்தது. தேவர்கள் பூமாரி பொழிந்து, மனம் மயங்கினர். தேவமங்கையரும் மனம் மயங்கினர். வியர்த்துக் களைத்த அழகான கோபிகை ஒருத்தி, சோர்வுடன் நடனம் செய்ய முடியாமல், கிருஷ்ணனுடைய தோளைப் பிடித்துக் கொண்டு தொங்கினாள். முன் நெற்றிக்குழல்கள் கலைந்த ஒரு கோபிகை மயிர்க்கூச்சலுடன், சந்தன மணம் வீசும் அவனுடைய கைகளை முத்தமிட்டாள். அதிர்ஷ்டசாலியான ஒரு கோபிகை, குண்டலங்கள் ஆடும் தன்னுடைய கன்னத்தை, அவனுடைய கன்னங்களுடன் இணைத்து, அவன் வாயிலிருந்து தாம்பூலத்தைப் பெற்று, அதை உறிந்து சுவைத்தாள். அப்பெண்கள், நர்த்தனத்தின் போது, பல வித சுகமான நிலைகளை அடைந்தார்கள். பாட்டு நின்றது. வாத்தியங்களும் ஓய்ந்தன. பிரும்மானந்த ரஸத்தில் மூழ்கிய கோபிகைகள் மட்டும் ஆடிக்கொண்டிருந்தனர். அவர்கள், மேலாடை கலைந்ததையோ, ரவிக்கை அவிழ்வதையோ, கச்சத்தின் முடிச்சு அவிழ்வதையோ அறியவில்லை. வானில் நட்சத்திரக் கூட்டமும் நின்று விட்டன. கிருஷ்ணன், அகில உலகங்களையும் பிரும்மானந்த ரஸத்தில் மூழ்கச் செய்து, தனது ராஸலீலையை முடித்தான். நடனமாடியதால் உண்டான வியர்வைத் துளிகளுடன் கோபிகைகள் மனம் மயங்கி நின்றிருந்தனர். அங்கு, எத்தனை கோபிகைகள் இருந்தார்களோ அத்தனை கிருஷ்ணனாக வந்து அவர்களைக் களிக்கச் செய்தான்.
மிகவும் அழகான சரீரமுள்ளவர்களும், சோர்வை அடைந்தவர்களுமான அப்பெண்களோடு விளையாடினான். அக்காட்டில், மந்தமாருதம் வீசும் போது வந்த பூக்களின் வாசனையால் அப்பெண்கள் மயங்கி நின்றார்கள். யோகிகள் மட்டுமே அடையக்கூடிய பரமானந்த வெள்ளத்தில் அப்பெண்கள் மூழ்கினார்கள். இந்த கோபிகைகள் மிகுந்த பேறு பெற்றவர்கள், இவர்களால் நாம் ராஸக்ரீடையைக் காணும் பாக்கியம் பெற்றவர்கள் ஆனோம் என்று ப்ரம்மா, பரமசிவன், தேவர்கள் யாவரும் அதிசயித்தார்கள்.
—————
கண்ணன் கதைகள் – 49
சங்கசூட, அரிஷ்டாசுர, கேசீ, வ்யோமாசுர வதம்
குருவாயூரப்பன் கதைகள்
கோபியர்களுடன் ராஸக்ரீடை முடிந்தது. ஒரு நாள், கோபர்கள் அனைவரும் அம்பிகா வனத்தில் உள்ள சிவனைத் தொழுவதற்காகச் சென்றார்கள். சரஸ்வதி நதியில் நீராடிவிட்டு, அம்பிகையையும், சிவனையும் விரதமிருந்து தொழுதார்கள். தொழுது முடித்ததும் நதிக்கரையிலேயே கோபர்கள் கண்ணயர்ந்தார்கள். அப்போது ஒரு பெரிய மலைப்பாம்பு நந்தகோபனை விழுங்கியது. கொள்ளிக்கட்டைகளால் அடித்தும் அந்தப் பாம்பு பிடியை விடவில்லை. கோபர்கள் கதறினார்கள். அந்த சத்தத்தைக் கேட்டு அங்கே வந்த கிருஷ்ணன், அப்பாம்பின் அருகே சென்று அதைக் காலால் உதைத்தான். உடனே அப்பாம்பு, வித்யாதர உருவம் எடுத்தது. அந்த வித்யாதரன்,” சுதர்சன சக்கரத்தைக் கையில் ஏந்தியவரே! என் பெயர் சுதர்சனன். நான் வித்யாதரனாய் இருந்தபொழுது, முனிவர்களைப் பழித்தேன். அவர்கள் என்னை மலைப்பாம்பாக ஆகும்படி சபித்தனர். தங்கள் பாதம் பட்டு சுய உருவத்தை அடைந்தேன்” என்று கூறி, நமஸ்கரித்து வானுலகம் அடைந்தான். கோபர்களும் மகிழ்ந்து வீடு சென்றனர்.
ஒரு சமயம், கிருஷ்ணன் பலராமனோடும், கோபியர்களோடும் பிருந்தாவனத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். கண்ணனுடைய குழலோசையில் கோபியர்கள் லயித்திருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற குபேரனுடைய வேலையாளான சங்கசூடன் என்பவன் கோபிகைகளின் அழகில் மயங்கி அவர்களைக் கவர்ந்து சென்றான். கிருஷ்ணனும், பலராமனும் அவனைப் பின்தொடர்ந்தார்கள். அதைக் கண்ட அவன், கோபிகைகளை விட்டுவிட்டுத் தப்பி ஓடினான். பலராமன் பயத்திலிருந்த கோபிகைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள, கிருஷ்ணன் சங்கசூடனைத் தொடர்ந்து சென்று, அவனுடைய தலையில் அடித்து அவனை வதம் செய்து, அவனுடைய தலையில் அணிந்திருந்த ரத்தின சூடாமணியை எடுத்து பலராமனிடம் கொடுத்தார்.
கிருஷ்ணன், பகலில் நண்பர்களுடன் காட்டில் விளையாடி, மனதைக் கவரும் திருமேனியுடன் குழலூதிக் கொண்டிருந்தான். அப்போது, கம்ஸனின் வேலையாளான அரிஷ்டன் என்ற அசுரன், காளைமாடு உருவம் எடுத்துக்கொண்டு, பயங்கரமாய் சத்தமிட்டுக்கொண்டு அங்கே வந்தான். அனைவரையும் நடுங்கச் செய்துகொண்டு, பெரிய உருவத்துடன் பசுக்கூட்டங்களை விரட்டினான். பிறகு, நீண்ட கொம்புகளால் மரங்களை முட்டித் தள்ளினான். சிறுவர்கள் பயந்து அலறினார்கள். பிறகு கிருஷ்ணனின் எதிரே வந்தான். உடனே கிருஷ்ணன் அந்த அரிஷ்டாசுரனின் கொம்பைப் பற்றிப் பிடித்து, ஒரு கொம்பைப் பிடுங்கி, சுழற்றி வீசி எறிந்து கொன்றார். தேவர்கள் மகிழ்ந்தனர். இடைச்சிறுவர்கள் கிருஷ்ணனைத் துதித்துப் போற்றினர். இடையர்கள் சிரித்துக்கொண்டு, “காளைகளே! வ்ருஷபாசுரனைக் கொன்ற கிருஷ்ணன் இங்கே இருக்கிறான், நீங்கள் வெகுதூரம் ஓடி ஒளிந்து கொள்ளுங்கள்” என்று கூறினர். பிறகு, இடையர்கள் வீடு திரும்பினார்கள்.
கேசீ என்பவன் கம்ஸனுடைய உறவினன். எந்த முயற்சியிலும் அவன் தோல்வியடைந்ததில்லை. அந்த அசுரன் குதிரை வடிவில் பிருந்தாவனத்தை வந்தடைந்தான். அந்த அசுரன் குதிரை வடிவம் எடுத்து வந்தாலும், அவனது குரல் அனைவரையும் நடுங்கச் செய்வதாய் இருந்தது. ஆயர்பாடியில் உள்ள அனைவரையும் துன்புறுத்தினான். பிறகு கிருஷ்ணனிடம் வந்தான். கிருஷ்ணனுடைய மார்பில் குதிரை எட்டி உதைத்தது. அந்த அசுரனுடைய கால்களின் உதையிலிருந்து விலகி, கிருஷ்ணன் அவனை வெகுதூரத்தில் வீசி எறிந்தார். அதனால் அவன் மயக்கம் அடைந்தாலும், மயக்கம் தெளிந்தவுடன் மீண்டும் அதிகக் கோபத்துடன் கண்ணனிடம் ஓடி வந்தான். அந்தக் குதிரையைக் கொல்லத் தீர்மானம் செய்த கிருஷ்ணன், தன்னுடைய கைகளை அவன் முகத்தில் வைத்து அழுத்தினார். அதனால், அந்த குதிரை வடிவெடுத்த அசுரன் மூச்சுத் திணறி உயிரிழந்தான். கேசீ என்ற குதிரையைக் கொன்றதால், தேவர்கள் மகிழ்ந்து கிருஷ்ணனைக் ‘கேசவன்’ என்று பெயரிட்டுப் போற்றித் துதித்தனர். அங்கு வந்த நாரதர், அசுரனான கேசீ வதம் செய்யப்பட்டதும் கிருஷ்ணனைத் துதித்து நமஸ்கரித்தார். பின்னர், கம்ஸனின் முயற்சிகளை கண்ணனிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
ஒரு நாள் இடையர்களுடன் கண்ணன் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, தேவர்களைத் துன்புறுத்துபவனும், அளவற்ற மந்திர சக்திகள் கொண்டவனும், மயனுடைய பிள்ளையுமான வ்யோமன் என்ற அசுரன், அங்கு வந்தான். திருடர்களும், காப்பாற்றுகிறவர்களும் என்ற விளையாட்டில் வ்யோமாசுரன் திருடனாய்க் கலந்து விளையாடினான். இடைச்சிறுவர்களையும், பசுக்களையும், திருடி குகையில் அடைத்து வைத்து, குகையின் வாயிலைப் பெரிய கல்லால் அடைத்து மூடினான். இதையறிந்த கிருஷ்ணர் அவனைப் பிடித்தார். வ்யோமாசுரன் மலையைப் போன்று தனது உருவத்தைப் பெரிதாக்கிக் கொண்டான். ஆனால் கிருஷ்ணன் அவனைத் தரையில் தள்ளி நொறுக்கிக் கொன்றார். கிருஷ்ணர், இவ்வாறு அதிசயக்கத்தக்க, நிகரற்ற பல விளையாட்டுக்களால் ஆயர்பாடி மக்களை ஆனந்தக் கடலில் ஆழ்த்தினார்.
———
கண்ணன் கதைகள் – 50
அக்ரூரர் தூது, மதுரா நகரப் பயணம்
குருவாயூரப்பன் கதைகள்
கம்ஸன் அனுப்பிய அத்தனை அசுரர்களையும் கண்ணன் கொன்றுவிட்டான். கம்ஸன் மிகவும் பயந்தான். நாரதர் மூலம் கண்ணன் கோகுலத்தில் வசிப்பதை அறிந்த கம்ஸன், கண்ணனையும், பலராமனையும் கொல்லத் திட்டம் தீட்டினான். தனுர் யக்ஞம் என்ற வில் பூஜையில் கலந்து கொள்ள கிருஷ்ணனை அழைத்து வருமாறு பண்பில் சிறந்த அக்ரூரரை அனுப்பினான்.
அக்ரூரர் கிருஷ்ணனிடத்தில் பரம பக்தி கொண்டவர். கம்ஸனிடம் இருந்த பயத்தால் கிருஷ்ணனைத் தரிசிக்காமல் இருந்து வந்தார். கம்ஸனே கிருஷ்ணனை அழைத்து வரக் கட்டளையிட்டதும் மிகவும் மகிழ்ந்தார். ரதத்தில் ஏறி, கோகுலம் நோக்கிப் புறப்பட்டார். கிருஷ்ணனையே நினைத்து, அந்த நினைவுகளை அனுபவித்து, அவரை சந்திப்பதில் எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்று வேண்டிக்கொண்டே சென்றார். “பரமனை நான் தரிசிப்பேனா? தொட்டுத் தழுவுவேனா? அவர் என்னுடன் பேசுவாரா? அவரை எங்கு காண்பேன்?” என்று எண்ணியவாறே கிருஷ்ணனை நினைத்துக் கொண்டே வழியைக் கடந்தார். கண்ணனின் பாதம் பட்டதால் புனிதமானதும், சிவனும், பிரமனும், தேவர்களும் வணங்கத் தகுந்ததுமான பிருந்தாவனத்திற்குள் நுழைந்தார். எல்லையில்லா ஆனந்தத்தில் மூழ்கி, உணர்ச்சி மிகுந்த நிலைமைகளை அடைந்தார். கண்ணன் விளையாடிய இடங்களைப் பார்த்து வணங்கினார். கண்ணனின் பாதம் பட்ட புழுதியில் புரண்டார். அவர், கோபிகைகளின் வீடுகளைப் பார்த்துக் கொண்டும், அவர்கள் பாடும் தங்கள் புகழைக் கேட்டுக் கொண்டும், ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி, மாலையில் நந்தகோபரின் வீட்டு வாசலை அடைந்தார். பசுவிடமிருந்து பால் கறப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணனையும் பலராமனையும் கண்டார். தான் உள்ளே அனுபவித்த ப்ரும்மானந்தத்தை வெளியில் பார்ப்பதுபோல் உணர்ந்தார்.
பீதாம்பரம், நீலாம்பரம் இவற்றை அணிந்து மிக அழகுடன் விளங்கும் கிருஷ்ணனையும், பலராமனையும் கண்டார். சில ஆபரணங்களை மட்டுமே அணிந்து, புன்சிரிப்பு தவழும் முகத்துடன் இருக்கும் இருவரையும் கண்டார். அவர்களைக் கண்டவுடன், வெகு தூரத்திலேயே ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கி, தரையில் விழுந்து வணங்கினார். கிருஷ்ணன் அவரை எழுப்பித் தழுவிக் கொண்டான் . நலன்களைப் பற்றி விசாரித்து, கையைப் பிடித்துக் கொண்டு பலராமனுடன் வீட்டிற்குள் அழைத்துச் சென்றான். யதுகுலத்தில் பிறந்த அக்ரூரரை, நந்தகோபரும், கிருஷ்ணனும், பலராமனும் நன்கு உபசரித்தார்கள். கம்ஸனுடைய அழைப்பைப் பற்றி அக்ரூரர் தெரிவித்தார். அதைக் கேட்ட கிருஷ்ணன், கோபர்களிடம் அதை அறிவித்தார். இரவு முழுவதும் அக்ரூரருடன் பல கதைகளைப் பேசிக்கொண்டு கழித்தார். கிருஷ்ணனைக் காணாததால், இன்று கிருஷ்ணன் சந்திரை, சந்திரபாகை, ராதை அல்லது மித்திரவிந்தையின் வீட்டில் தங்கியிருக்கிறான் என்று கோபிகைகள் மற்ற கோபிகைகளை சந்தேகித்தார்கள்.
அக்ரூரருடன் கிருஷ்ணன் மதுரா நகரம் செல்லப் போவதை அறிந்த கோபியர்கள் மிகவும் துயரமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்று கூடி, கவலையுடன் புலம்பினார்கள். அவனைத் தவிர வேறு கதியற்ற நம்மை எப்படி விட்டுப் போகிறான்? இதுதான் தெய்வம் நமக்கு விதித்ததோ? என்று வருந்தி, அழுது புலம்பினார்கள். கிருஷ்ணன், கோபியர்களின் துயரைத் தீர்க்க, அங்கு ஒரு தோழனை அனுப்பினார். கிருஷ்ணன் அந்த இரவின் முடிவில் நந்தனுடனும், நண்பர்களுடனும் கலந்து பேசி, மதுரா நகரம் செல்லத் தீர்மானித்து பலராமனை கூட்டிக் கொண்டு அக்ரூரருடன் மதுரா புறப்படும் ஏற்பாடுகள் தொடங்கின. “நான் விரைவிலேயே தங்களிடம் திரும்பி வருவேன். என்னோடு உல்லாசமாய் இருக்கும் தருணமும் விரைவிலேயே ஏற்படும். ஆனந்தமயமான அம்ருத வெள்ளத்தில் மூழ்கடிப்பேன்” என்று கோபியர்களை சமாதானம் செய்தார். அவர்களும் மிகுந்த வருத்தத்துடன், வெகுதூரம் போகும்வரையில் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடைக்கண்ணால் அவர்களைப் பார்த்துக்கொண்டே பலராமனுடனும், அக்ரூரனுடனும் தேரில் ஏறிப் புறப்பட்டார். கோபர்களின் எண்ணற்ற தேர்களும் பின்தொடர்ந்தன. கானகத்திலுள்ள மிருகங்கள் வருந்தின. மரங்கள் வாடின.
அனைவரும் யமுனைக் கரையை அடைந்தார்கள்.
அக்ரூரர், நித்ய அனுஷ்டானம் செய்வதற்காக யமுனையில் மூழ்கினார். பரப்ரம்மமான கிருஷ்ணனை நீரினுள்ளேயும், வெளியே எழுந்ததும் தேரிலும் இருக்கக் கண்டார். இரண்டு இடங்களிலும் கண்ணனது தரிசனம் ஏற்படுகிறதே, என்ன ஆச்சர்யம்! என்று மெய்சிலிர்த்தார். மீண்டும் நீரில் மூழ்கினார். அங்கு அவரைப் பாம்பணையின்மேல் பள்ளி கொண்டிருப்பவராகவும், கரங்களில் சங்கு, சக்ரம், கதை, தாமரை ஏந்தியிருப்பவராகவும் கண்டார். தேவர்களும், சித்தர்களும் சூழ்ந்திருக்கக் கண்டார். அளவற்ற ப்ரும்மானந்த வெள்ளத்தில் திளைத்தார். பிரமனாகவும், சிவனாகவும், விஷ்ணுவாகவும் கண்டு ஸ்தோத்திரம் செய்தார். வைகுண்ட ஸ்வரூப காட்சியும் மறைந்தது. அனுபவித்த ஆனந்தத்தினால் மயிர்க்கூச்சலடைந்து தேரின் அருகே வந்தார்.
அவரிடம் கிருஷ்ணன், “ இந்த யமுனையின் ஜலம் மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறதா? உனக்கு ரோமாஞ்சம் உண்டாகியிருக்கிறதே” என்று அறியாதவர்போல் கேட்க, அக்ரூரரோ வைகுண்ட ஸ்வரூபத்தைக் கண்டதால் ஏற்பட்ட ஆனந்தத்தில் பேசமுடியாமல், பதில் கூறாமல் இருந்தார்
———–
கண்ணன் கதைகள் – 51
மதுரா நகரப்ரவேசம்
குருவாயூரப்பன் கதைகள்
கிருஷ்ணன் நண்பகலில் மதுராநகரம் அடைந்தார். அருகிலுள்ள தோட்டத்தில் உணவுண்டு, நண்பர்களுடன் நகரைச் சுற்றிப் பார்க்க முடிவு செய்தார். அந்த நகரிலுள்ளவர்கள் .கண்ணனைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததால் அவரை நேரில் காண ஆவல் கொண்டனர். கிருஷ்ணன் இப்போது ராஜவீதியை அடைந்தார். அவரைக் காண வந்த பெண்கள், எப்பொழுதும் கண்ணனையே மனதால் நினைத்துக் கொண்டிருந்ததால் அவரை நேரில் காண ஓடி வந்து கொண்டிருந்தார்கள். அப்பெண்கள் கள்ளமில்லாத தூய்மை உள்ளம் படைத்தவர்களாய் இருந்தார்கள். தனது கடைக்கண் பார்வையால், கிருஷ்ணன் அப்பெண்களை ஆனந்திக்கச் செய்தார். மக்களும் மகிழ்ச்சியுடன் கிருஷ்ணனைக் காணக் கூடினார்கள். அப்போது எதிரே வந்த கம்ஸனுடைய வண்ணானிடம் உடைகள் வேண்டும் எனக் கிருஷ்ணன் கேட்க, அவன், “ராஜாவின் உடைகளை உனக்கு எவன் கொடுப்பான்? தள்ளிப்போ” என்று கேலியாகக் கூறினான். உடனே கிருஷ்ணன் அவன் தலையைக் கிள்ளி எறிந்தார். அவனும் நற்கதியை அடைந்தான்.
அப்போது, ஒரு துணி நெய்பவன் கண்ணனுக்குப் பொருத்தமான ராஜஉடைகளைக் கொண்டு வந்து கொடுத்தான். அவற்றை அணிந்தார். மாலை கட்டும் ‘சுதாமா’ என்பவன், கண்ணனுக்கு மலர் மாலைகளை அணிவித்துப் போற்றித் துதித்தான். அவனுக்கு அவன் விரும்பிய பக்தியையும், அளவற்ற செல்வத்தையும் வரமாகஅளித்தார். இவ்வாறு செல்லும்போது, வழியில், அழகான கண்களை உடையவளும், முதுகில் கூன் உடையவளுமான ‘திரிவிக்ரா’ என்ற ஒரு பெண்ணைக் கண்டார். அவள் கிருஷ்ணருக்கு சிறந்த சந்தனத்தையும், வாசனைத் திரவியங்களையும் பூசினாள். மனமகிழ்ந்த கண்ணன், அவளிடம் அன்பு கொண்டு, தனது கால் விரலால் அவள் காலை அழுத்திக் கொண்டு, அவளைக் கையினால் மெதுவாகப் பிடித்து அவள் கூனை நிமிர்த்தினார். அவள் உலகிலேயே அழகானவளாக ஆனாள். பரிசுத்தமான, பாபமற்ற அந்நகர மக்கள், கண்ணன் வரும் வழி நெடுக நின்றுகொண்டு, பூமாலை, தாம்பூலம் முதலிய தமது சக்திக்குத் தகுந்த ஏதாவது ஒரு பொருளை கண்ணனுக்குக் கொடுத்தார்கள். கண்ணன் கோட்டைவாயிலில் நுழைந்தார். மக்களின் ஆரவாரத்தினால் கிருஷ்ணனுடைய வருகையை அறிந்த தேவகி, மிகுந்த குதூகலம் அடைந்தாள். அவளது ஸ்தனங்களிலிருந்து பால் சுரந்தது.
கிருஷ்ணன் மதுரா நகருக்குள் பிரவேசித்தபோது காவலர்களும், மக்களும் அவருடைய அழகைக் கண்டு மயங்கி வழி விட்டார்கள். தனுர்யாகம் நடந்து கொண்டிருக்கும் இடத்தை அடைந்தார். அங்கே அந்த வில்லானது, மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு ஒரு அறைக்குள் வைக்கப்பட்டிருந்தது. அந்த வில் வைத்திருந்த அறைக்குள் பிரவேசித்த கண்ணன், நொடிப்பொழுதில் அந்த வில்லை எடுத்து நாணேற்றி முறித்தார்.
வில் முறிந்த பெரிய ஒலியைக் கேட்டு தேவர்கள் மெய்சிலிர்த்தனர். அந்த ஓசையானது கம்ஸ வதத்திற்கு முன் வாசிக்கப்படும் மங்கள வாத்தியம் போல் இருந்தது. அந்த ஓசையைக் கேட்ட கம்ஸனுக்கும் நடுக்கம் ஏற்பட்டது. முறிந்த வில்லினால் அடிபட்ட காவலர்களின் கூக்குரல் கம்ஸனுடைய பயத்தை அதிகரித்தது. சிஷ்டர்களைப் பரிபாலனம் செய்யவும், துஷ்டர்களை நிக்ரஹம் செய்யவும் அவதரித்த கிருஷ்ணன், நகரத்தின் அழகைப் பார்த்துக் கொண்டே மாலையில், பூந்தோட்டத்தில் உள்ள தனது கூடாரத்தை அடைந்தார். அன்று இரவு, தனது நெருங்கிய நண்பரான ஸ்ரீதாமாவிடம், ராதையின் பிரிவால் ஏற்பட்ட துயரத்தைக் கூறிக் கொண்டு, பல கதைகளைப் பேசிக் கொண்டு அங்கு தங்கினார். அவதார நோக்கம் நிறைவேறும் அந்த நாளும் வந்தது.
———-
கண்ணன் கதைகள் – 52
கம்ஸ மோக்ஷம் / கம்ஸ வதம்
குருவாயூரப்பன் கதைகள்
கண்ணனின் அவதார நோக்கம் நிறைவேறும் அந்த நாளும் வந்தது. மறுநாள் அதிகாலையில், கம்ஸனின் ஆணைப்படி, மல்யுத்தத்திற்கான போட்டிகள் முரசொலி செய்து அறிவிக்கப்பட்டது. அதனைக் காண, பல அரசர்கள் வந்தனர். நந்தகோபரும் உப்பரிகைக்குச் சென்றார். கம்ஸனும் உப்பரிகைக்குச் சென்றான். கிருஷ்ணனும் பலராமனும் அழகிய ஆடை அலங்காரங்களுடன் மல்யுத்த களத்தை அடைந்தார்கள். அங்கு ‘குவாலயாபீடம்’ என்ற யானை அவர்களை வழிமறித்து நின்றது. வழிவிட்டுச் செல் என்று அந்த யானையைப் பணித்தார் கிருஷ்ணன். அப்போது யானைப் பாகனான ‘அம்பஷ்டன்’, கிருஷ்ணனைத் தாக்க யானையை ஏவினான். அந்த யானை, விரைந்து கிருஷ்ணனைப் பிடித்தது. அதனிடமிருந்து லாவகமாகத் தன்னை விடுவித்துக்கொண்ட கிருஷ்ணன், அதன் மத்தகத்தில் அடித்தார். பின்னர் அதன் காலடியில் மறைந்து, பிறகு சிரித்துக்கொண்டு வெளியே வந்தார். யானைக்கு அருகில் இருந்தாலும், அதன் பிடியில் அகப்படாமல் நழுவி, வெகுதூரம் ஓடி, விளையாட்டாய் விழுவது போல் கீழே விழுந்தார். அந்த யானையும் கிருஷ்ணனைத் தாக்க எதிரே வந்தது. உடனே கிருஷ்ணன், அதன் தந்தங்களை வேருடன் பிடுங்கி எறிந்தார். யானையைக் கீழே தள்ளி, அந்த தந்தங்களால் யானையைக் குத்திக் கொன்றார். தந்தத்தின் அடிப்பகுதியிலுள்ள உயர்ந்த முத்துக்களை எடுத்து, ஸ்ரீதாமனிடம் கொடுத்து, “இவற்றை அழகிய முத்து மாலையாகச் செய்து ராதையிடம் கொடு” என்று கூறினார். பிறகு, யானையின் இரு தந்தங்களையும், கிருஷ்ணனும் பலராமனும் தங்களுடைய தோளில் சுமந்துகொண்டு, மல்யுத்த களத்திற்குச் சென்றார்கள். அவர்களைக் கண்ட மக்கள், அவர்களுடைய தேககாந்தியால் அபகரிக்கப்பட்டு, ஆச்சர்யம்! என்றும், நந்தகோபன் மஹாபாக்கியசாலி என்றும், சிலர் யசோதை பாக்கியசாலி என்றும், வேறு சிலர், இல்லை இந்த நகரத்து மக்களாகிய நாம்தான் பாக்கியம் செய்தவர்கள், என்றும் உவகையுடன் கூவினார்கள். அந்நகர மக்கள் கண்ணனைப் பரப்ரம்மமாக அறியவில்லை. ஆயினும், முதன்முதலாய் அவரைப் பார்த்த அவர்கள், உடனேயே பாபம் நீங்கியவர்களாய் ஆனார்கள். கிருஷ்ணனுடைய செய்கைகளைப் பற்றிப் போற்றிப் பாடினார்கள்.
கம்ஸனுடைய ஆணையின்படி, மல்யுத்தத்தில் சிறந்த சாணூரன் என்ற மல்லன் கிருஷ்ணனையும், முஷ்டி யுத்தத்தில் சிறந்த முஷ்டிகன் என்பவன் பலராமனையும் சவாலுக்கு அழைத்தார்கள். பலவிதமான தாக்குதல்களுடன் யுத்தம் தொடங்கியது. “இது என்ன போட்டி? ஒரு புறம் அழகான சிறுவர்கள். மல்லர்களோ கடினமானவர்கள். இந்த யுத்தத்தை நாம் பார்க்க வேண்டாம், போய்விடுவோம்” என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். அப்போது கிருஷ்ணன், சாணூரனைத் தூக்கிச் சுற்றி உயிரிழக்கச் செய்தார். உயிரிழந்த அவனை பூமியிலே ஓங்கி அடித்தார். பலராமனும் முஷ்டிகனை அடித்துக் கொன்றார். மீதமிருந்த மல்லர்கள் அங்கிருந்து ஓடினர். திகைத்த கம்ஸன், முரசுகளையும், வாத்தியங்களையும் முழங்க விடாமல் தடுத்தான். உக்ரசேனன், நந்தகோபன், வசுதேவன் ஆகியோரைக் கொல்லும்படியும், கண்ணனையும் பலராமனையும் வெகுதூரத்திற்கப்பால் விரட்டும்படியும் காவலர்களுக்கு உத்தரவிட்டான். இதைக் கேட்டுக் கோபமடைந்த கண்ணன், உப்பரிகையில் வீற்றிருந்த கம்ஸனை நோக்கி சிங்கம்போலப் பாய்ந்து சென்றார். கம்ஸன் வாளெடுத்துச் சுழற்றினான். அவனை அசையவிடாமல் வலுவாகப் பிடித்து, அவனுடைய கேசங்களைப் பிடித்து இழுத்து, சிம்மாசனத்திலிருந்து தலைக்குப்புற கீழே சாய்த்துத் தள்ளினார். பூமியில் தள்ளி, அவன் மார்பு மேல் அமர்ந்து, அவனுடைய அங்கங்களை அடித்து நொறுக்கினார். கம்ஸனுடைய கிரீடம் சிதறுண்டு தரையில் உருண்டது. மயங்கி விழுந்த கம்ஸன் மாண்டு போனான். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். கம்ஸன் எப்போதும் கிருஷ்ணனையே மனதில் நினைத்திருந்தபடியால் மோக்ஷத்தை அடைந்தான்.
பிறகு கிருஷ்ணன், பெற்றோரான வசுதேவரையும், தேவகியையும் சிறையிலிருந்து மீட்டு, அவர்களை நமஸ்கரித்தார். கம்ஸனின் தந்தையான உக்ரசேனனை அந்த நாட்டிற்கு அரசனாக ஆக்கினார். யாதவ குலத்தினர் மிகவும் மகிழ்ந்தார்கள். தேவர்களின் குருவான பிருகஸ்பதியிடமிருந்து வித்தைகளைக் கற்ற உத்தவரை நண்பராக ஏற்றுக் கொண்டார். மிக்க மகிழ்ச்சியுடன் மதுரா நகரில் வசித்து வந்தார்.
—————-
கண்ணன் கதைகள் – 53
கோபிகைகளுக்கு உத்தவர் சேதி சொல்லுதல்
குருவாயூரப்பன் கதைகள்
பிறகு கிருஷ்ணர் பலராமனுடன், ஸாந்தீபனி முனிவரிடம் அறுபத்து நான்கு நாட்களிலேயே பல வித்தைகளையும், கல்விகளையும் கற்றார். குருதக்ஷிணையாக, இறந்த அவரது மகனை யமலோகத்திலிருந்து மீட்டு, அவரிடம் கொடுத்தார். பின்னர் மதுரா நகரத்தை அடைந்தார்.
பிருந்தாவனத்தில் கோபிகைகள், கிருஷ்ணரை நினைத்து மிகவும் துயரம் அடைந்தார்கள். அதனை அறிந்த கிருஷ்ணர், அவர்கள் மீது கருணை கொண்டு, தனது நண்பரும், சிறந்த பக்தருமான உத்தவரை அவர்களிடம் சேதி சொல்ல அனுப்பினார். எவ்வுலகிலும் காண முடியாத கோபிகைகளின் அன்பையும், பக்தியையும் உத்தவருக்குக் காண்பிக்க நினைத்து, அவரை அங்கு அனுப்பினார். உடனே உத்தவர் புறப்பட்டு, கோகுலத்திற்கு மாலையில் சென்றார். கிருஷ்ணனைப் பற்றிய செய்திகளைக் கூறி நந்தகோபரையும், யசோதையையும் சந்தோஷமடையச் செய்தார். நந்தனுடைய வீட்டின் அருகில் தேர் நிற்பதைப் பார்த்த கோகுலத்துப் பெண்கள், உத்தவர் வந்திருப்பதை அறிந்து, எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு நந்தனின் வீட்டை அடைந்தனர். கண்ணனுடைய பல்வேறு செயல்களையும் விளையாட்டுக்களையும் மீண்டும் நினைத்துப் பேச முடியாமல் ஆனார்கள். தடுமாற்றத்துடன் தயங்கிக் கொண்டு உத்தவரிடம் பேச முயன்றார்கள். “உத்தவரே! இரக்கமற்ற அந்தக் கண்ணன், தன் பெற்றோரைப் பார்ப்பதற்காக உங்களை அனுப்பினானா? நகரத்துப் பெண்களால் கவரப்பட்ட அவன் எங்கிருக்கிறான்? நாதனே! காக்க வேண்டும். உமது முத்தங்களையும், தழுவல்களையும், பேச்சுக்களையும், அழகிய விளையாட்டுக்களையும் யாரால் மறக்க முடியும்?” என்று அரற்றினார்கள். இவ்வாறு பலவிதமாய்ப் புலம்பிய கோபிகைகளிடம், உத்தவர் தத்துவங்கள் பொதிந்த கண்ணனின் சேதியைக் கூறி, சமாதானம் செய்தார். அதனைக் கேட்ட கோபியர்கள் மகிழ்ந்தனர். உத்தவர், அவர்களோடு கிருஷ்ணனின் செய்கைகளையும், விளையாட்டுக்களையும் பற்றிப் பேசிக்கொண்டு சில தினங்களை அங்கே கழித்தார். கோகுலத்தில், எப்பொழுதும், எல்லாரும் கிருஷ்ணனைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். வீட்டு வேலைகள் செய்யும்போது கூட, அவருடைய லீலைகளையே பாடிக் கொண்டிருந்தார்கள். தூக்கத்திலும் கிருஷ்ணனைப் பற்றியே பேசினார்கள். அவர்களது செய்கைகள் யாவும் கிருஷ்ணனை அனுசரித்தே இருந்தன. அனைத்து செயல்களும் கிருஷ்ணமயமாக இருந்தது. இதைக் கண்ட உத்தவர் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தார்.
உத்தவர் ராதையிடம், “ராதையே! உன் கிருஷ்ணன் பூக்களைக் கண்டால், இது என் ராதைக்கு மிகவும் பிரியமானது என்பார். நான் பேசினால் ராதையும் இவ்வாறுதான் பேசுவாள் என்றும், நான் பேசாவிட்டால், கோபம் கொண்ட ராதையைப் போல் என் பேசாமல் இருக்கிறாய்? என்றும் என்னைக் கேட்பார்” என்று கூறி, தாமரைக்கண்களுடைய ராதையை ஆனந்தமடையச் செய்தார். “ நான் சீக்கிரமே திரும்பி வருவேன். மிகுந்த கார்யங்களினால் வரமுடியவில்லை. பிரிவைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். என்னைப் பற்றிய நினைவுகள் எப்போதும் உங்களுக்கு இருப்பதால் வெகு விரைவில் உங்களுக்கு பிரும்மானந்த சுகம் கிட்டப் போகிறது. அப்போது உங்களுக்கு பிரிவும், சேர்க்கையும் சமமான ஆனந்தத்தை அளிக்கும்” என்று கிருஷ்ணன் கூறியதை, உத்தவர் கோபிகைகளிடம் கூறி சமாதானப் படுத்தினார். இவ்விதமான அன்பையும், பக்தியையும் எந்த உலகிலும் கண்டதில்லை, கேட்டதில்லை. தவம் செய்வதாலோ, வேதங்களைக் கற்பதாலோ என்ன பயன்? கோபிகைகளை நமஸ்கரித்துத் தொழுதாலே போதும் என்று எவ்வுலகிலும் காண முடியாத கோபிகைகளின் அன்பையும், பக்தியையும் மெய்மறந்து, ஆனந்தத்துடன் கூறிக்கொண்டு உத்தவர் கோகுலத்திலிருந்து மதுரா திரும்பினார்
மதுராவில், ஸைரந்திரி கிருஷ்ணரைப் பற்றியே நினைத்துக்கொண்டு, ஒவ்வொரு நாளும் அவருடைய வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். தன் இல்லத்தையும், தன்னையும் நன்கு அலங்கரித்துக் கொண்டு காத்திருந்தாள். கிருஷ்ணன் உத்தவருடன் அவளது இல்லத்திற்குச் சென்றார். அவளது நீண்டநாள் எண்ணம் நிறைவேறியது. அதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த அவள், கிருஷ்ணனைப் பலவிதமாகப் பூஜித்தாள். கிருஷ்ணன் அவளிடம் வேண்டிய வரம் கேள் என்று கூற, அவளும், பல இரவுகள் கண்ணனோடு கழிக்கும் விஷய சுகத்தையே வரமாக வேண்டினாள். பிறகு, சில இரவுகள் அவளுடன் தங்கி அவளுக்கு ஆனந்தத்தை அளித்து அவளுக்கு உபஶ்லோகன் என்ற புத்திரனையும் அளித்தார். அந்த உபஶ்லோகன், நாரத முனிவரிடம் இருந்து பாஞ்சராத்ர ஆகமத்தை உபதேசம் பெற்று அதில் பிரசித்தனாக விளங்கினான். பின்னர், கிருஷ்ணர் பலராமருடனும், உத்தவரோடும் அக்ரூரரின் வீட்டை அடைந்தார். அவருடைய வரவால் மிகவும் மகிழ்ந்த அக்ரூரர், அவர்கள் அனைவரையும் நன்கு வரவேற்று உபசரித்து, பூஜித்துத் துதித்தார். அவரை நகரத்திற்கு அனுப்பி, குந்தியின் புத்திரர்களான பாண்டவர்கள் காட்டிலிருந்து நகருக்குத் திரும்பி வந்ததைப் பற்றியும், திருதராஷ்ட்ரனின் கெட்ட செயல்களைப் பற்றியும் அறிந்தார்கள்.
ஜராஸந்தன் என்பவன், தன் நண்பனும், மாப்பிள்ளையுமான கம்ஸனின் வத
ம் பற்றிக் கேள்விப்பட்டு, மிகுந்த கோபம் கொண்டு, மதுராநகரத்தை அழித்தான். சிறிய படையையுடைய கிருஷ்ணர், தேவலோகத்திலிருந்து பலராமனுக்குக் கிடைத்த தேர் முதலியவற்றால், அவனது இருபத்திமூன்று அக்ஷௌஹிணிப் படைகளை முறியடித்தார். பலராமன் ஜராஸந்தனைக் கட்டி வைத்தார். அவனோடு யுத்தம் செய்ய ஆசைகொண்ட கிருஷ்ணன் அவனை விடுவித்தார். ஏனெனில், அனைத்து அரசர்களையும் வென்று, அவர்களது சேனைகளையும் அடைந்த ஜராஸந்தனைப் போன்ற வீரன் அப்போது யாரும் இல்லை. தோல்வியடைந்த ஜராஸந்தன், மற்ற அரசர்களின் உதவியுடன் பதினாறு முறை கண்ணனோடு யுத்தம் செய்தான். அவனது முன்னூற்று தொண்ணூற்று ஒன்று அக்ஷௌஹிணிப் படைகளையும் கிருஷ்ணர் அடித்துக் கொன்றார். அவனுடன் பதினெட்டாவது முறை யுத்தம் ஆரம்பிக்கும்முன், மூன்று கோடி யவனர்களுடன் ஒரு யவனன் படையெடுத்து வருவதை அறிந்த கண்ணன், உடனே, விஸ்வகர்மாவைக் கடலின் நடுவில் ஒரு நகரை உருவாக்கச் சொல்லி, அதில் மக்கள் அனைவரையும் குடியேறச் செய்தார். பிறகு, தாமரை மாலையணிந்து, நகரத்திலிருந்து வெளியே வந்தார். யவனர்களின் தலைவன் பின்தொடர்ந்து வந்தான். உடனே கிருஷ்ணர் ஒரு மலைக்குகையில் மறைந்தார். தொடர்ந்து வந்த யவனன், கிருஷ்ணன் என்று நினைத்து, குகையில் தூங்கிக் கொண்டிருந்த முசுகுந்தன் என்ற அரசனைக் காலால் உதைத்தான். விழித்த முசுகுந்தன், அந்த யவனனை, தன் பார்வையால் சாம்பலாக்கினான். அப்போது கிருஷ்ணன், குகையில், பக்தனான முசுகுந்தனுக்கு காட்சி கொடுத்தார். “எனக்கு அரச வாழ்வில் விருப்பம் இல்லை. தங்கள் அனுக்ரஹம் ஒன்றே வேண்டுகிறேன்” என்று முசுகுந்தன் துதித்ததைக் கேட்ட கிருஷ்ணன் மகிழ்ந்து, எல்லா துக்கங்களையும் போக்கும் பக்தியையும், அதன்பின் முக்தியையும் அவனுக்கு வரமாக அளித்தார். வேட்டையாடி உயிரினங்களைக் கொன்ற தோஷம் நீங்க அவனைத் தவம் செய்யச் சொன்னார்.
பிறகு கிருஷ்ணர் மதுராநகரம் சென்றார். யவனன் அழைத்து வந்த சேனைகளை அழித்தார். வழியில், ஜராஸந்தன் தடுத்தான். அவனுக்குக் கடைசியான வெற்றியைக் கொடுத்து, ஓடி ஒளிந்து கொள்வதுபோல் பாவனை செய்து, கடலின் நடுவே உள்ள துவாரகா நகரை அடைந்தார்.
————
கண்ணன் கதைகள் – 54
ருக்மிணி கல்யாணம்
குருவாயூரப்பன் கதைகள்
கிருஷ்ணர் துவாரகையை அடைந்தார். விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டதும், தேவர்கள் அளித்த ஐஸ்வர்யங்களை உடையதும், கடலின் நடுவே உள்ளதுமான அந்தப் புதிய துவாரகா நகரமானது, அவருடைய தேக காந்தியால் மிகவும் அழகாகவும், சிறப்பாகவும் விளங்கியது. பிரமனின் ஆக்ஞைப்படி, ரேவத நாட்டு அரசன், தன் பெண்ணான ரேவதியை, பலராமனுக்கு மணம் செய்து கொடுத்தான். கிருஷ்ணர், யாதவர்களோடு சேர்ந்து அந்தத் திருமணத்தில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
விதர்ப்ப நாட்டு அரசனின் பெண்ணான ருக்மிணி, கிருஷ்ணரின் மீது அன்பு கொண்டாள். அவளுடைய அண்ணன் ருக்மி. சேதி நாட்டு அரசன் சிசுபாலன் அவனுடைய நெருங்கிய நண்பன். தீய எண்ணம் கொண்ட சிசுபாலனுக்கு, ருக்மிணியை மணம் செய்து கொடுக்க ருக்மி முடிவு செய்தான்.
ருக்மிணி கிருஷ்ணரிடம் வெகுநாட்களாகக் காதல் கொண்டிருந்தாள். தன் விருப்பம் நிறைவேறாமல் போய்விடுமோ என்று அஞ்சினாள். தனக்கு ஏற்பட்ட துன்பத்தை கிருஷ்ணரிடம் தெரிவிக்குமாறு ஒரு அந்தணரை அவரிடம் தூது அனுப்பினாள். அந்த அந்தணர், விரைவாக துவாரகா நகரை அடைந்தார். கிருஷ்ணர் அந்த அந்தணரை வரவேற்று உபசரித்தார். அந்தணரும் மிகுந்த சந்தோஷமடைந்தார். அவர், “கிருஷ்ணா! குண்டின தேசத்து இளவரசியான ருக்மிணி தங்களிடத்தில் காதல் கொண்டுள்ளாள். நான் அவளுடைய தூதுவனாக, அவள் அனுப்பிய சேதியோடு இங்கு வந்திருக்கிறேன்” என்று கூறினார். பிறகு,“உலகிற்கெல்லாம் நாயகனே! உம்முடைய குணங்களால் கவரப்பட்டு உம்மையே கணவனாக வரித்துவிட்டேன். தற்போது, சிசுபாலன் என்னை அடைந்து விடுவானோ என்று அஞ்சுகிறேன். கருணைக்கடலே! என்னைக் காக்க வேண்டும்” என்று ருக்மிணி கூறிய சேதியை அந்தணர் கிருஷ்ணரிடம் தெரிவித்தார். “வேறு கதியில்லாத என்னைக் கைவிட்டீரானால் நான் உடனே என் ஜீவனை விட்டுவிடுவேன்” என்று ருக்மிணி கூறியதை அந்தணர் சொன்னதும், கிருஷ்ணருடைய மனத்திலும் மிக்க சஞ்சலம் உண்டானது. கிருஷ்ணர் அந்த அந்தணரிடம், “அவளுடைய வேதனையைக் காட்டிலும் என் மனதில் அதிகமான மன்மத வேதனை ஏற்பட்டுள்ளது. நான் சீக்கிரமாக வந்து, அரசர்களின் முன்னிலையில், கருவிழிகளையுடைய என் பிரியையான ருக்மிணியைக் கரம் பிடிக்கிறேன்” என்று கூறினார்.
பின்னர் கிருஷ்ணர் ரதத்தில் ஏறிக்கொண்டு, அந்தணருடன் சீக்கிரமாகக் குண்டின தேசத்தை அடைந்தார். பலராமன் சேனைகளுடன் பின் தொடர்ந்து வந்தார். அரசனான பீஷ்மகன் அவர்களை வரவேற்று உபசரித்தான். கிருஷ்ணர் வந்த செய்தியைக் கூறிய அந்தணருக்கு, ருக்மிணி மிகுந்த அன்புடன் நமஸ்காரம் செய்தாள். உலகிலேயே அழகான கிருஷ்ணருடைய திருமேனியைக் கண்டும், ருக்மி எடுத்த முடிவைக் கேட்டும், குண்டின தேசத்து மக்கள் துயரமடைந்தார்கள். இரவும் கழிந்தது.
மறுநாள் காலை, ருக்மிணி மங்களகரமான ஆடை ஆபரணங்களுடன், காவலர்கள் சூழ, பார்வதிதேவியை வணங்கக் கோவிலுக்குக் கிளம்பினாள். அவள் மனத்தை கிருஷ்ணரிடத்திலேயே அர்ப்பணித்திருந்தாள். உயர்குலப் பெண்களுடன் பார்வதி தேவியின் ஆலயத்திற்குள் சென்று, நன்கு வழிபாடு செய்து, அவள் பாதங்களில் நமஸ்கரித்தாள். கிருஷ்ணனையே கணவனாக அளிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வேண்டினாள். ருக்மிணியைக் காண வேண்டும் என்ற ஆவலில் பல நாட்டு அரசர்கள் கோவில் வாசலில் கூடியிருந்தார்கள். கிருஷ்ணரும் ருக்மிணியைக் கிரஹிக்க எண்ணம்கொண்டு காத்திருந்தார். அப்போது ருக்மிணி, மிகுந்த அழகுடன் எல்லா திசைகளையும் ஆனந்தமுறச் செய்துகொண்டு, ஆலயத்திலிருந்து வெளியே வந்தாள். அவள் அழகானது உலகையே மயங்கச் செய்வதாய் இருந்தது. அவளது தேககாந்தியால் எல்லா அரசர்களும் மயங்கினர். அவளது கடைக்கண் பார்வையால் கிருஷ்ணரும் மோஹித்தார். சந்திரன் போன்ற முகத்தை உடைய ருக்மிணியை நெருங்கினார். “நிலவைப் போன்ற முகமுடையவளே! எங்கே போகிறாய்?” என்று கேட்டு, நொடிப்பொழுதில் அவள் அருகே சென்று, அவளது நுனிக்கை விரல்களைப் பிடித்து, அவளைக் கைகளினால் அன்புடன் பற்றி, அவளை கிரஹித்தார். மனோவேகத்தில் செல்லும் தன்னுடைய ரதத்தில் ஏற்றிக்கொண்டார். ருக்மிணியின் மனோரதமும் நிறைவேறியது.
உடனே, அனைத்து திசைகளில் இருந்தும் எதிரிகளின் கூச்சல் அதிகமானது. இந்த இடைச்சிறுவன் எங்கிருந்து வந்தான்? என்று கூடியிருந்த அரசர்கள் கோபமடைந்து போர்புரியத் தொடங்கினார்கள். யாதவர்கள் அவர்களை ஜயித்தார்கள். நாய்க்கூட்டங்களைப் பார்த்த சிங்கம் போல், அந்த அரசர்களைக் கண்ட கிருஷ்ணர் சிறிதும் அசையவில்லை. ருக்மி எதிர்த்துப் போர்புரிய வந்தான். அவனைக் கட்டி இழுத்து, அவன் தலையை மொட்டை அடித்து, மீசையைக் கத்தரித்து அவன் கர்வத்தை அடக்கினார். பலராமனின் வேண்டிக் கொண்டதன்பேரில் அவனை விடுவித்துக் கொல்லாமல் விட்டார்.
பிறகு, மஹாலக்ஷ்மியான ருக்மிணியுடன் துவாரகைக்குச் சென்றார். அனைவரும் அவர்களை வரவேற்றார்கள். துவாரகையில் முறைப்படி கிருஷ்ணருக்கும் ருக்மிணிக்கும் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. துவாரகை நகரம் முழுவதும் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டு, மங்கள வாத்தியங்களின் ஒலிகளால் ஸ்வர்க்கம் போன்று விளங்கியது. நகரத்து மக்கள் அனைவரும் கிருஷ்ணரையும், ருக்மிணியையும் காண ஓடோடி வந்தார்கள். உத்தமமான அவர்களுடைய சேர்க்கையைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். கிருஷ்ணருடைய சேர்க்கையால் ருக்மிணி மிகுந்த நாணத்தை அடைந்தாள். புதிய காதல் அனுபவத்தால் மிகுந்த சந்தோஷமடைந்தாள். அவள் முகம் மந்தஹாஸப் புன்னகையுடன் விளங்கியது. கிருஷ்ணர் தனிமையில் ருக்மிணிக்குப் பலவகையில் ஆனந்தமளித்தார். இரவும் பகலும் விளையாட்டுப் பேச்சுக்களால் மகிழச் செய்தார். முன்பை விடப் பலவிதமாய் அரவணைத்து, அவளை சந்தோஷமடையச் செய்தார் . மக்களும் சுபிட்சமாக, பேரானந்தத்துடன் வாழ்ந்து வந்தார்கள்.
கண்ணன் கதைகள் – 55
குருவாயூரப்பனும் கொன்னப்பூவும்
குருவாயூரப்பன் கதைகள்
சிறு வயதில், எனது பக்கத்து வீட்டில் இருந்தவர்கள், விஷு கொண்டாடியது நினைவுக்கு வருகிறது. முதல் நாள் இரவே, பூஜைக்கு உரிய வெற்றிலை, பாக்கு, வெள்ளரி, காசு, கண்ணாடி, உருளி, நாராயணீயம். கொன்னப்பூ, அரிசி முதலியவற்றை எடுத்து வைப்பார்கள். என்னையும் “கைநீட்டம்” பெற வரச்சொல்லுவார்கள். நான் காலையில் “கைநீட்டம்” பெற சந்தோஷமாகப்போவேன். குருவாயூரப்பன் மீது எனக்கு ‘மாளாக்காதல்’ உண்டாக எனது பாட்டியும், அவரது தோழியான ஒரு மாமியும் சொன்ன கதைகளே முக்கிய காரணம். ‘லாலு’ என்று நான் அன்புடன் அழைக்கும் அந்த மாமி, சிறு வயதில் எனக்குச் சொன்ன கதை இப்போது ஞாபகம் வருகிறது. கதைக்குச் செல்வோமா?
கேரளத்தில் ஒரு சிறு பாலகன் இருந்தான். அவன் தினமும் குருவாயூரப்பனை தரிசனம் செய்யக் கோவிலுக்குப் போவான். அவனுக்கு ஸ்ரீ குருவாயூரப்பனை நேரிலே பார்க்க மிகவும் ஆசை. ஒரு நாள், கண்ணனை எப்படியும் பார்த்தே தீருவது என்று முடிவு செய்து, கண்ணனிடம் பிரார்த்தித்தான். கண்ணனோ வரவில்லை. கண்ணா வா என்றான் . நான் உன்னை நேரிலே பார்க்க வேண்டும் என்றான். நீ வராவிட்டால் நான் இங்கேயே இருப்பேன் என்று கூறி கோவிலிலேயே உட்கார்ந்து விட்டான். நடையும் அடைத்தாயிற்று.
கண்ணன் வரவில்லை. அழுதான். அரற்றினான். குழந்தையல்லவா? அவன் அழுவது கண்ணனுக்கு பொறுக்கவில்லை. வந்தான். எப்படி? மயில் பீலி, பட்டு, பீதாம்பரம் உடுத்திக்கொண்டு, குழலூதிக்கொண்டுவந்தான். குழந்தையுடன் விளையாடினான். சிறுவனுக்கு ஒரே சந்தோஷம். கண்ணனோ தன்னுடைய அரைஞாணை அவனுக்கு அளித்தான்.
சிறுவன் சந்தோஷமாக வீட்டுக்குச்சென்று அம்மாவிடம் நான் கண்ணனுடன் விளையாடினேன் என்றான். அம்மாவோ நம்பவில்லை. இங்கே பார் “கண்ணன் தன்னுடைய கிண்கிணியை எனக்கு கொடுத்தான் பார்” என்றான்.
கோவிலிலும் அரைஞாணைக் காணாததால் அனைவரும் சிறுவன் அதைத் திருடியதாக நினைத்தார்கள். அம்மா திட்டினாள். அதைப்பிடுங்கி வீசினாள். அது பக்கத்தில் இருந்த கொன்றை மரத்தின்மேல் சிக்கிக்கொண்டது. உடனே, அந்த மரம் முழுவதும் தங்க நிறத்தில் கிண்கிணியைப்போன்ற பூக்கள் பூத்துக்குலுங்கின. அப்பொழுது, “உன் மகனுடன் நான் விளையாடியது நிஜம்” என்று அசரீரி வாக்கு கேட்டது. அது முதல் “கொன்னப்பூ” பூஜைக்கு மிகவும் உகந்ததாகப் போற்றப்பட்டது. இப்பொழுது மேலே உள்ள படத்தில் குருவாயூரப்பனின் அரைஞாணும் கொன்னப்பூவின் மொக்குகளும் ஒரே மாதிரி இருப்பது போல் தெரிகிறதா?
—————-
கண்ணன் கதைகள் – 56
குருவாயூரப்பனும் குந்துமணியும்
குருவாயூரப்பன் கதைகள்
குண்டுமணி சிவப்பு, கறுப்பு நிறங்களில் சிறிய உருண்டை வடிவில் இருக்கும். கேரளாவில் அநேகமாக அனைவரது இல்லங்களிலும் இந்த மரம் இருக்கும். மஞ்சாடி என்ற மரத்தில் இருந்து வரும் விதை என்பதால் இதை கேரளாவில் “மஞ்சாடிக்குரு” என்று சொல்வார்கள். நாங்கள் கோவையில் இருந்தபொழுது, சின்ன வயதில், பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு தினம் சென்று அங்கு இருக்கும் குண்டுமணிகளைப் பொறுக்கி வீட்டிற்கு எடுத்து வருவோம். பிறகு அதை நன்கு கழுவி “பல்லாங்குழி” விளையாட உபயோகப்படுத்துவோம். சென்ற வருடம் கூட கேரளாவில் ஒரு நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தபொழுது நிறைய குண்டுமணிகளைப் பொறுக்கி வந்தோம். ”
குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய உருளியில் குண்டுமணியை நிரப்பி வைத்திருப்பார்கள். இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும், குழந்தை வரம் வேண்டியும் மனதார பிரார்த்தனை செய்யவேண்டும். பிறகு மீண்டும் அதிலேயே போட்டு விட வேண்டும்.
நாங்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையன்றும் வேண்டிக்கொண்டு வீட்டிலேயே ஒரு சின்னப் பெட்டியில், 7 மிளகு, கொஞ்சம் கடுகு, 7 குந்துமணி, ஒண்ணேகால் ரூபாய் எடுத்து வைத்து, குருவாயூர் செல்லும்போது அதை அங்கு சமர்ப்பிப்பது வழக்கம்.
அது சரி. குருவாயூர் கோயிலில் இதற்கு அப்படி என்ன விசேஷம்? இதன் பின்னால் ஒரு சுவையான கதை உண்டு.
முன்னொரு காலத்தில் ஒரு வயதான பெண்மணி இருந்தாள். அவளுக்கு ஸ்ரீகுருவாயூரப்பன் மிகவும் இஷ்டமான தெய்வம். அவளுடைய ஊர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் இருந்தது. அவளை அழைத்துச் செல்வார் யாருமில்லை. பணவசதி கிடையாது. ஆனால் குழந்தைக் கண்ணனைக் காண வேண்டும் என்றும், அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவளுக்குக் கொள்ளை ஆசை.
அவள் வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இருந்தது. அதிலிருந்து நிறைய குண்டுமணிகள் கீழே விழும். அவற்றைச் சேகரித்து, நன்கு அலம்பி, துடைத்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தாள்.
ஒரு நாள் கண்ணனைக் காண வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் பயணம் புறப்பட்டாள். வசதி படைத்தவள் அல்லவே ! அதனால் நடந்தே செல்லத் தீர்மானித்தாள். தொலை தூரம். வயது வேறு ஆகிவிட்டது. நடுநடுவே இளைப்பாறிக் கொள்வாள். ஸ்ரமமாக இருப்பினும் “கண்ணனைக் காணவும் அவனுக்கு குண்டுமணிகளைக் கொடுக்கவும் வேண்டுமே” என்று தொடர்ந்து பயணம் செய்தாள்.
ஒரு மண்டலம் பயணம் செய்து குருவாயூரை அடைந்தாள். கோவிலையும்அடைந்தாள். அவள் சென்ற நாள் அந்த மாதத்தின் முதல் நாள். அவள் கோவிலைஅடைந்த சமயம், கோவிலில் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஏதோ விசேஷம் என்று அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அன்றும் அந்த ஊர் அரசன், அவன் பக்தியை வெளிப்படுத்த, கோயிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிப்பது வழக்கம். அதனால்தான் அந்த பரபரப்பு. சேவகர்கள், அரசன் வருவதால் வழியை விலக்கிக் கொண்டிருந்தனர்.
இந்த வயதான பெண்மணி, தன்னுடைய பையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். சேவகர்களின் அஜாக்கிரதையால் அவள் கீழே தள்ளப்பட்டாள். பை கீழே விழுந்து அதிலிருந்த குண்டுமணிகள் சிதறி விழுந்தன. கிழவியின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. ஒரு சொட்டுக் கண்ணீர் தரையில் விழுந்தது.
அதே சமயம், கோயிலுக்கு சமர்ப்பிக்கக் கொண்டு வந்த யானை மதம் பிடித்து ஓட ஆரம்பித்தது. அனைவரும் ” என்ன ஆயிற்று?” என்று பதறினர். கோவில்பொருட்களை யானை நாசம் செய்ய ஆரம்பித்தது. யானையை அடக்க முடியவில்லை. கலங்கிய மன்னனும் மற்றவர்களும் குருவாயூரப்பனிடமே ப்ரஸ்னம் கேட்டனர்.
அப்பொழுது கர்ப்பக்ருஹத்திலிருந்து ” நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்திவிட்டீர்கள். என் பக்தை அன்பாகக் கொண்டு வந்த குண்டுமணிகள் எனக்குவேண்டும்” என்று அசரீரி கேட்டது. கீழே சிதறிக் கிடந்த குண்டுமணிகளை, அனைவரும் பொறுக்கி எடுத்தனர். அதை அந்த வயோதிகப் பெண்மணியிடம் கொடுத்து அவளிடம் மன்னிப்பும் கேட்டனர். அவளை ஸகல மரியாதைகளுடன் சன்னிதிக்கு அழைத்துச் சென்றனர். அவள் ஆசையுடன் அதை அப்பனிடம் சமர்ப்பித்ததும், யானையின் மதம் அடங்கியது. அவள் பக்தியின் நினைவாக இன்றும் குருவாயூர் கோயிலில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளது .
பகவான் வஸ்துக்களின் உயர்வு தாழ்வைப் பார்ப்பதில்லை. உள்ளத்தில் தூய்மையான அன்புடன் தரப்படும் பக்தியின் மேன்மையைத்தான் பார்க்கிறான்.
————–
கண்ணன் கதைகள் – 57
கைசிக ஏகாதசி / நம்பாடுவான்
கரண்ட மாடு பொய்கையுள் கடும்பனைப் பெரும் பழம் புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய்
திரண்டு தோளி ரணியன் சினங்கொளாக மொன்றையும்
இரண்டு கூறு செய்துகந்த சிங்க மென்ப துன்னையே
-திருமழிசையாழ்வார்!
திருக்குறுங்குடியின் அருகே உள்ள மகேந்திரகிரி மலையடிவாரத்தில் வசித்து வந்த ஹரிஜன வகுப்பை சேர்ந்தவர் நம்பாடுவான் என்னும் பாணன். வடிவழகிய நம்பியின் மேல் மிகவும் பக்தி கொண்டவர். அக்காலத்தில் அவருக்கு கோயிலுக்கு செல்ல அனுமதியில்லாமல் இருந்தது. கோயிலின் வாசலிலிருந்து பகவானை பார்க்க முடியாது. ஆயினும், வருத்தப்படாமல் தினமும் அதிகாலையில் நீராடிவிட்டு, கைசிகம் என்ற பண்ணில் (பைரவி ராகம்) திருக்குறுங்குடி நம்பியின் புகழை இசைத்து, திருப்பள்ளியெழுப்பும் சேவையை செய்து வந்தார். அவ்விதம் ஒரு நாள், கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசியன்று கோவிலுக்கு சென்றபொழுது, ஒரு பிரம்ம ராக்ஷஸன் அவரைத் தடுத்து, “ நீ எனக்கு உணவாக வேண்டும்” என்றது. நம்பாடுவானோ, “விரதம் முடித்துவிட்டு பெருமாளை வழிபட்டபின் உனக்கு உணவாகிறேன்” என்று சொல்ல, பிரம்ம ராக்ஷஸன் அதை நம்பவில்லை. அதற்கு நம்பாடுவான்,”பெருமாளின் உண்மையான பக்தன் பொய் சொல்லமாட்டான்” என்று கூறி பதினெட்டு விதமான சத்தியங்களைச் செய்கிறான். 16 சத்தியங்களைச் செய்தும் ராக்ஷஸன் நம்பாடுவானை விடவில்லை. 17-வதாக நம்பாடுவான்,” எவன் ஸர்வவ்யாபியான வாசுதேவனை ஆராதனை பண்ணாமல் இதர தேவதைகளை உபாஸிக்கிறானோ அவனது பாவத்தை அடைவேன்” என்று சொன்னதும் தனது பிடியை விட்டது. பிறகு நம்பாடுவான், 18–வதாக ,”எல்லா உயிரினங்களையும், ஜனங்களையும் காப்பவனும், இயக்குபவனும் , தேவர்கள், முனிவர்கள் முதலியோரால் ஆராதிக்கப்படுபவனுமான அந்த ஸ்ரீமன் நாராயணனையும் மற்ற தெய்வங்களையும் சமமாக பாவிப்பதால் வரும் பாவத்தை நான் அடையாக கடவேன்” என்று சொன்னான். இந்த வார்த்தையைக் கேட்டதும், பிரம்ம ராக்ஷஸ்,” சரி சரி சீக்கிரம் உனது விரதத்தை முடித்துவிட்டு வா” என்று அவனை அனுப்பியது.
நம்பாடுவான் கோவிலுக்கு ஓடிச் சென்று, ” பெருமானே! இனி உம்மைப் பாடவே முடியாதோ? நான் உம்மைப் பார்க்கவே முடியாதோ ?” என்று எண்ணிக் கொண்டு, கைசிகப் பண்ணை உருக்கமாகப் பாடினார். அப்போது பெருமாள், த்வஜஸ்தம்பத்தை விலகி இருக்கச் சொல்லி நம்பாடுவானுக்கு தரிசனம் தந்தார். திருக்குறுங்குடியில் மற்ற ஸ்தலங்களைப் போலல்லாமல் த்வஜஸ்தம்பம் சற்று விலகி இருப்பதை இப்போதும் காணலாம்.
பிறகு, தான் சத்தியம் செய்தபடி பிரம்ம ராக்ஷஸை நோக்கிச் சென்றபோது, திருக்குறுங்குடி எம்பெருமான் , ஒரு கிழப்பிராம்மணன் வேடத்தில் நம்பாடுவானுக்கு எதிரே தோன்றி, “இங்கே ஒரு பிரம்ம ராக்ஷஸ் இருக்கிறது. அதன் பசிக்கு இரையாகாமல் வேறு வழி செல்” என்று கூறினார். ஆனால், நம்பாடுவான் அதை மறுத்து, அந்த ராக்ஷஸனுக்கு உணவாவதற்காகவே செல்கிறேன் என்று கூறினான். இதைக்கேட்ட பிராம்மணன்,”ஆபத்துக் காலத்திலும், பெண்களுக்குத் திருமணம் செய்ய வேண்டிய சந்தர்ப்பத்திலும், பெண்களுடன் ஏகாந்தமாய் இருக்கும்போதும் பொய் சொல்வதும், சத்தியம் செய்வதும், பாபமாகாது” என்று கூற, நம்பாடுவான்,”நான் செய்து கொடுத்த சத்தியத்தை ஒரு போதும் மீறமாட்டேன்” என்று கூறி, வாக்களித்தபடி பிரம்ம ராக்ஷஸனிடம் சென்று என்னை உண்டு உன் பசியைப் போக்கிக் கொள் என்று கூறினான். நம்பாடுவானைப் பார்த்த பிரம்ம ராக்ஷஸ், “இப்போது எனக்குப் பசியே இல்லை. நான் என் மனதை மாற்றிக்கொண்டுவிட்டேன். நீ விரதத்தால் பெற்ற பலனை எனக்குக் கொடு என்று கேட்க, நம்பாடுவான் மறுத்தான். இன்றைய தினம் உனக்குக் கிடைத்த விரதப் பலனில் பாதியையாவது எனக்குக் கொடுத்தால் நான் சாபவிமோசனம் பெற்று சுய உருவைப் பெறுவேன்” என்றது. நம்பாடுவான், “உனக்கு ஏன் இந்த பிரம்ம ராட்சச உருவம் வந்தது? என்று கேட்க, பிரம்ம ராக்ஷஸன் தனது கதையைக் கூறினான். “நான் முற்பிறவியில் யோகசர்மா என்ற அந்தணன். யாகத்தை இழிவாகக் கருதிய நான், ஒரு யக்ஞத்தைத் தவறாகச் செய்து கொடுத்தேன். யாகத்தின் நடுவில் இறந்தேன். அதனால் , இவ்வாறு அலைகிறேன்” என்றது. மேலும், உனது தரிசனத்தால் எனக்கு முன் ஜன்ம ஞாபகம் உண்டானது என்றும் கூறியது.
நம்பாடுவான், கைசிகப் பண்ணினால் பகவானைப் பாடிய தன் புண்ணிய பலனில் பாதியை கைசிக துவாதசியன்று பிரம்மராட்சஸனுக்கு தத்தம் செய்துகொடுக்க, அந்த பிரம்ம ராட்சதனின் சாபம் நீங்கியது. நம்பாடுவானும் பலகாலம் பெருமாளை போற்றிப் பாடி மோக்ஷத்தை அடைந்தான்.
இந்த வரலாற்றை வராகமூர்த்தியே தன் மடியிலிருந்த பிராட்டிக்கு உரைத்ததாக புராணம் கூறுகிறது. இன்றும், இந்தப் புராணம் திருக்குறுங்குடியில் நாடக ரூபமாக கைசிக ஏகாதசியன்று இரவு நடக்கின்றது. இதில் நம்பாடுவான், பிரம்ம ராட்சசன், நம்பிக் கிழவன் ஆகிய மூன்று பாத்திரங்களில் நடிப்பவர்கள் 10 நாட்கள் விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.
ஒவ்வொரு கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ ஏகாதசி அன்று எல்லா வைஷ்ணவ கோயில்களிலும் கைசிக புராணம் இன்றும் வாசிக்கப்படுகிறது.
இந்த வரலாற்றை கைசிக ஏகாதசி தினம் அன்று படித்தாலும் கேட்டாலும் முன்னோர் சாபமும், துன்பங்களும் அகலும். பெருமாள் அருளும் புண்ணியமும் கிடைக்கும். நாமும் இந்த வரலாற்றைப் படித்து, திருக்குறுங்குடி நம்பியின் அனுக்ரஹத்தைப் பெறுவோமாக!
நம்பாடுவான் பிரம்மராக்ஷஸுக்கு சத்தியம் செய்து கொடுத்தபோது 18 வகை பாவங்களைக் குறிப்பிடுகிறான். அவற்றை வராக புராணத்திலே காணலாம். அவையாவன:
2. பிறன் மனைவியிடம் இணைதல்.
3. தன்னுடன் உணவருந்துபவர்களிடம் ஏற்றத் தாழ்வுகளைக் காட்டி, தனக்கு சிறந்ததையும், உடன் உண்பவருக்கு அற்பமானதையும் அளித்தல்.
4. பிறருக்கு தானம் செய்த பொருளை திரும்பப்பெறுதல்.
5. அழகுள்ள பெண்ணை இளமையில் மணந்து, அனுபவித்து, வயதான காலத்தில் குற்றம் கூறி அவளைக் கைவிடுதல்.
6. அமாவாசையன்று மனைவியிடம் சுகம் அனுபவித்தல்.
7. உணவு கொடுத்து பசியாற்றியவனை நிந்தித்தல்.
8. ஒருவனுக்கு தன் பெண்ணை திருமணம் செய்து தருவதாக வாக்களித்து விட்டு, அவ்வாறு செய்யாமல் ஏமாற்றுதல்.
9. சஷ்டி, அஷ்டமி, அமாவாசை, சதுர்த்தி நாட்களில் ஸ்நானம் செய்யாமல் உண்ணுதல்.
10. தானம் தருவதாக வாக்களித்து, பின் தானம் செய்யாதிருத்தல்.
11. நண்பன் மனைவிமீது இச்சை கொள்ளுதல்.
12. குரு பத்தினி, மன்னன் மனைவி மீது காமம் கொள்ளுதல்.
13. இரண்டு மனைவியரை மணந்து, ஒருத்தியிடம் ஆசையும் இன்னொருத்தியை அலட்சியமாகத் தள்ளி வைத்தல்.
14. கற்புக்கரசியான தன் பத்தினியை யௌவனத்திலேயே புறக்கணித்தல்.
15. தாகத்துடன் வரும் பசுவைத் தண்ணீர் குடிக்க விடாமல் தடுத்தல்.
16. பிரம்மஹத்தி செய்தவன், பஞ்ச மகாபாவங்கள் செய்பவன் பெறும் பாபம்.
17. வாசுதேவனைவிட்டு இதர தெய்வங்களை ,தேவதைகளை உபாசனை செய்தல்.
18. ஸ்ரீமன் நாராயணனோடு மற்ற தெய்வங்களையும் மற்ற தேவதைகளையும் சமமாக நினைத்தல்.
மேற்கண்ட பாவங்களைச் செய்தவனுக்கு கிட்டும் பாவமும், தண்டனையும் , செய்த சத்தியத்தை மீறினால் என்னை வந்துசேரட்டும் என்கிறான் நம்பாடுவான்.
————
கண்ணன் கதைகள் – 58
சீசா
வயதான நம்பூதிரிப் பெண் ஒருத்தி தனியே வசித்து வந்தாள். அவள் பலகாலமாகத் தாங்க முடியாத தலைவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்தாள். பல சிகிச்சைகள் செய்தும் அவள் தலைவலி குணமாகவில்லை. அவள் எப்போதும் குருவாயூரப்பனையே தியானித்துத் தலைவலி சரியாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருப்பாள்.
ஒரு நாள் இரவு நேரம். அவளுக்குத் தலைவலி மிகவும் அதிகமாக இருந்தது. துணைக்கு வேறு யாரும் இல்லை. காற்றாட திண்ணையில் அமர்ந்திருந்தாள். அப்போது ஏழு அல்லது எட்டு வயதுள்ள சிறுவன் ஒருவன் அங்கு வந்தான். சிறுவன் அவளிடம் வந்து, “நீ எப்போதும் குருவாயூரப்பா, குருவாயூரப்பா என்று சொல்லிக் கொண்டிருக்கிறாயே, அப்படி இருந்தும் உனக்கு இந்தத் தலைவலி ஏன் போகவில்லை தெரியுமா? நீ உன்னுடைய முன் ஜென்மத்தில் உன் குடும்பத்தில் இருந்த பெரியவர்களை மிகவும் மனம் நோகச் செய்தாய். அதன் பலனை இப்போது அனுபவிக்கிறாய்” என்று கூறினான். மேலும், அந்த சிறுவன், நான் ஒரு சீசாவில் தைலம் தருகிறேன், அதைத் தடவிக் கொள் என்று கூறி ஒரு சீசாவைக் கொடுத்தான்.
தைலத்தின் பெயரைப் பார்க்கலாம் என்று பார்த்தபோது, அதன் மேலிருந்த காகிதத்தில் முகவரி, குருவாயூர் கிழக்கே நடை என்று இருந்தது. அந்தத் தைலத்தை எடுத்து மூன்று முறை தலையில் தடவுவதற்குள் அவள் தலைவலி குணமாகியிருந்தது. தைலத்திற்குப் பணம் கொடுக்கலாம் என்று அந்த சிறுவனைத் தேடினாள். சிறுவனைக் காணவில்லை. அவனை அவள் அந்த ஊரில் இதுவரை பார்த்ததே இல்லை. சாக்ஷாத் குருவாயூரப்பனே சிறுவன் வடிவில் வந்து தன் தலைவலியைப் போக்கியதை உணர்ந்து மெய்சிலிர்த்தாள். இதுபோன்ற பல அற்புதங்கள் இன்றும் நடக்கிறது. கண்ணனை நம்பினோர் கைவிடப்பட்டுவதில்லை
———–
கண்ணன் கதைகள் – 59
மீனவன்
குருவாயூரில் இருந்த ஒரு வியாபாரியின் மகன் கல்லூரியில் படித்து வந்தான். வாலிபனாக இருப்பினும் தீவிர பக்தனாக இருந்தான். நாள்தோறும் பகவானின் நாமஜபம் செய்து வந்தான். ஓய்வு நேரத்தில் பாகவதம் படிப்பான். ஒரு நாள் எட்டமனூரில் இருந்த தன் சகோதரிக்குத் துணையாக எட்டமனூரில் இருந்து குருவாயூர் சென்றான். படகுப் பயணம். பொதுவாக படகுப் பயணம் பச்சைப்பசேலென்ற மனதைக் கொள்ளைக் கொள்ளும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு செல்வதால் மிகவும் உல்லாசமாக இருக்கும். அன்று வானம் இருண்டிருந்தது. ஒரே புயல் காற்று வேறு. அவர்கள் சென்ற படகில் திடீரென்று கோளாறு ஏற்பட்டது. படகு தண்ணீரில் மூழ்கிவிடும் அபாயம் அதிகரித்தது. இந்தப்பையனும் அவன் சகோதரியும் விடாது நாமஜபம் செய்தார்கள்.
அந்தப் படகு நீரில் சிறிது சிறிதாக மூழ்கிக் கொண்டிருந்தது. படகிலிருந்த அனைவரும் பீதியடைந்து கூச்சலிட்டார்கள். இவர்கள் இருவரும் நாமஜபம் செய்வதை நிறுத்தவே இல்லை. அப்போது யாரோ அவர்களை இழுத்துத் தண்ணீரில் வீசி எறிவதைப் போல் உணர்ந்தார்கள். அவர்கள் சுயநினைவு தப்பியது. சுயநினைவுக்கு வந்தபோது கரையில் பாதுகாப்பான இடத்தில் இருப்பதை அறிந்தார்கள். அவர்களைச் சுற்றியிருந்த மக்கள், அந்தப் படகு மூழ்கியதைப் பற்றியும், அதிலிருந்த அனைவரும் இறந்துவிட்டதாகவும், இவர்கள் இருவரை மட்டும் ஒரு மீனவன் காப்பாற்றியதாகவும் சொன்னார்கள்.
அன்றிரவு பகவான் அவர்கள் கனவில் தோன்றி, “மீனவனாக வந்து உங்களைக் காப்பாற்றியது நான்தான்” என்று திருவாய் மலர்ந்தருளினார். பகவான் ஸ்ரீஹரியை எப்போதும் நினைவில் கொண்டு ஜபிப்பவர்கள் எப்பேற்பட்ட ஆபத்திலிருந்தும் காப்பாற்றப்படுவார்கள் என்று அவன் பாகவதத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. அவன் பகவானுக்கு நன்றி செலுத்தி மேலும் சிறந்த பக்தனாக விளங்கினான்.
————-
கண்ணன் கதைகள் – 60
எது மதுரம்?
ஓர் ஊரில் ஒரு வயதான நம்பூதிரிப் பெண் இருந்தாள். அவள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று குருவாயூர் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அப்போது அவள் பகவானுக்கு திரிமதுரம் சமர்ப்பிப்பது வழக்கம். ஒரு சமயம் அவள் கால்கள் வீங்கி வலியும் வேதனையும் இருந்ததால் அவளால் செல்ல முடியாமல் இருந்தது. மேலும் மாதக் கடைசியானதால் அவளிடம் அதற்கான பணமும் இருக்கவில்லை. அதனால் பஸ்ஸிலும் செல்ல முடியாது, திரிமதுரம் சமர்ப்பிக்கவும் முடியாது. அடுத்த நாள் முதல் தேதி. தன்னால் செல்ல முடியாததை நினைத்து அவள் மிகவும் வருந்தினாள்.
தனது விதியை நொந்து தனது சினேகிதியிடம் சொல்லிவிட்டு படுக்கச் சென்றாள். படுக்கும்போது பகவானின் நாமங்களைச் சொல்லிக் கொண்டே தூங்கிவிட்டாள். அப்போது அவளுக்கு ஓர் கனவு வந்தது. சொப்பனத்தில் குருவாயூரப்பன் அவள் முன்பு தோன்றி, “உன்னுடைய பையில் செலவுக்குப் பணம் இருக்கிறது. நீ வழக்கம்போல் குருவாயூருக்கு வரலாம். திரிமதுரம் எனக்குப் பிடிக்கும். ஆனால், என் பக்தர்கள் எனது நாமத்தை ஜபிப்பதைக் கேட்பது அவர்கள் அளிக்கும் நெய்வேத்தியத்தைவிட மதுரமானது” என்று கூறி மறைந்தார். கனவு கலைந்து பகவானின் அருளை நினைத்து மிகவும் மகிழ்ந்தாள். காலையில் அவளது கால் வீக்கமும் வடிந்திருந்தது. சந்தோஷத்தோடு, எந்தவித சிரமமும் இல்லாமல் குருவாயூர் சென்று தரிசனம் செய்தாள்.
பகவானிடம், அவன் நாமங்களைத் தொடர்ந்து சொல்வதையே வரமாகக் கேட்டாள். பகவானுடைய திருவருளை நினைத்து, தனது அன்புக்குரலுக்கு ஓடோடி வந்ததையும் நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.
———–
கண்ணன் கதைகள் – 61
திருமண அனுக்ரஹம்
முன்னோரு சமயம் தெய்வ பக்தி நிரம்பிய ஓர் வைதீகர் இருந்தார். அவர் பெரிய சம்சாரி. மிகவும் ஏழ்மையில் இருந்த அவர், தன் பெண்ணிற்குத் திருமணம் செய்ய வேண்டுமே என்று மிகவும் கவலைப்பட்டார். ஜோதிடர்கள் அந்தப் பெண்ணிற்கு திருமணம் சற்று தாமதமாக நடக்கும் என்று கூறியதால் மிகுந்த கவலையுடன் இருந்தார்.
அவர் கவலையை அறிந்த அவர் நண்பர், அவரைத் தேற்றி, “நான் சொல்வது படி செய்யுங்கள், விரைவிலேயே திருமணம் நடக்கும். ஸ்ரீ குருவாயூரப்பனின் படத்தை வைத்து, தினமும் பூஜை செய்து, ஸ்ரீ நாராயணீயத்தைப் பாராயணம் செய்து வாருங்கள், உங்கள் பெண்ணுக்குத் திருமணம் நடக்கும். ஸ்ரீ நாராயணீயத்தைப் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கட்டாயம் அளிக்கும். தைரியமாக இருங்கள்” என்றார். அதன்படி வைதீகரும் தினந்தோறும் செய்து வந்தார். ஒரு வாரம் ஆயிற்று. ஒருநாள் பூஜை, பாராயணம் செய்துவிட்டு வந்தபோது அவரது நீண்ட நாள் நண்பர் தனது மனைவியுடன் அவர் வீட்டிற்கு வந்தார். க்ஷேமங்கள் பற்றி விசாரித்த அவர், உனக்கு ஒரு பெண் இருந்தாளே, அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? என்று கேட்க, வைதீகரும் இன்னமும் ஆகவில்லை என்றார். உடனே நண்பர், தனக்குத் தெரிந்த ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பையன் இருப்பதாகவும், அவர்கள் வீட்டிற்குச் சென்று பேசி வரலாம் என்றும் கூறினார். உடனே வைதீகரும் மகிழ்ச்சியுடன் அவர்கள் வீட்டிற்குச் சென்று அவர்களைப் பார்த்துப் பேசி பெண் பார்க்க வர வேண்டும் என்று சொன்னார்கள். ஒரு நல்ல நாளில் அவர்கள் பெண் பார்க்க வந்து அன்றே நிச்சயதார்த்தமும் செய்து சென்றார்கள். வெளியூரில் இருந்த மகனுக்கு இந்த நல்ல விஷயத்தைப் பற்றிக் கடிதம் எழுதினார்.
வைதீகருக்கு இதில் மிகவும் மகிழ்ச்சி என்றாலும், கல்யாணத்திற்குச் சில நாட்களே இருந்த நிலையில், அதற்குத் தேவையான பணம் இல்லாததால் மிகுந்த கவலையுடன் குருவாயூரப்பன் படத்தின்முன் சென்று மனதார வேண்டினார். அப்போது வாசலில் தபால்காரர் வந்து ஒரு தபால் கொடுத்தார். அவர் மகனிடமிருந்து கடிதம் வந்திருந்தது. நீண்ட நாட்களாக அவனிடமிருந்து கடிதம் வராமல் இப்போது வந்ததில் ஆனந்தமடைந்து அதைப் படித்தார். அதில், “அப்பாவுக்கு அனேக நமஸ்காரம். உங்கள் கடிதம் கண்டேன். இத்துடன் தங்கையின் கல்யாணத்திற்காக நான் சேர்த்து வைத்திருந்த பணம் இருக்கிறது, அதை வைத்து வேண்டிய செலவுகளைச் செய்து கொள்ளுங்கள், நானும் புறப்பட்டு வந்து விடுகிறேன், கவலை வேண்டாம்” என்று எழுதியிருந்தான். பிறகு, குறிப்பிட்ட தேதியில் அவர் பெண்ணின் திருமணமும் நல்லவிதமாக நிறைவேறியது. வைதீகர், குருவாயூரப்பனின் திருவருளை நினைத்து ஆனந்தத்துடன் மெய்சிலிர்த்து குருவாயூரப்பனுக்கு நன்றி கூறி மிக மகிழ்ந்தார்.
————–
ஸர்ப்ப தோஷ நிவர்த்தி
குருவாயூர் க்ருஷ்ணரின் மகிமை.
குருவும் வாயுவும் சேர்ந்து ப்ரதிஷ்டை செய்த குருவாயூரப்பனின் லீலைகளை அளவிட முடியாது. பாம்பின் தலையிலேயே தன் பாதத்தை வைத்து நடனமாடிய க்ருஷ்ணரை மனதார வணங்கினால் ஸர்ப்ப தோஷம், தொழு நோய், தோல் நோய், எல்லாம் பயந்து ஓடும் என்பதற்கு இந்த புராணக் கதையே எடுத்துக்காட்டு.
உத்தரையின் கர்ப்பத்திலிருந்த குழந்தையை ஸ்ரீ கிருஷ்ண பகவான் காப்பாற்றினார். அந்தக் குழந்தையே “விஷ்ணுரதன்” எனப்படும் பரீக்ஷித்.
பஞ்ச பாண்டவர்கள் இமயத்திற்குச் சென்றபின் அவர்கள் பேரனான பரீக்ஷித் அரசாட்சி ஏற்று, நீதி தவறாமல் ஆண்டு வந்தான். ஒரு சமயம் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது சமீகர் என்ற முனிவரைக் கண்டு தாகத்திற்குத் தண்ணீர் கேட்டான். தவத்திலிருந்த முனிவரிடம் சலனம் இல்லாததால், தனது வில்லின் நுனியால் அருகில் இருந்த ஓர் உயிரற்ற பாம்பை அவர் கழுத்தின் மீது போட்டுவிட்டுச் சென்றான். சற்று நேரம் கழித்து அங்கு வந்த முனிவரின் மகன் சிருங்கி, தன் தந்தைக்கு நேர்ந்த அவமானத்தைக் கண்டு, அன்றிலிருந்து ஏழாவது நாள், பரீக்ஷித் கொடிய விஷம் கொண்ட ‘தக்ஷகன்’ என்ற பாம்பால் கடிபட்டு இறப்பான் என சபித்தான். இதனை அறிந்த பரீக்ஷித், தான் செய்த தவற்றை உணர்ந்து, அரியணையைத் துறந்து, தனது மகன் ஜனமேஜயனுக்கு அரசை அளித்து, தன் கடைசி ஏழு நாட்களில் சுக முனிவரிடம் பாகவதக் கதையை கேட்டறிந்தான்.
சாபத்தின்படி, தக்ஷகன் என்னும் கொடிய விஷமுள்ள பாம்பு பரீக்ஷித்தை ஏழாம் நாளில் கடிக்க பரீக்ஷித் இறந்துவிடுகிறான். இதனால் கோபமடைந்த பரீக்ஷித்தின் மகன் ஜனமேஜயன், தன் தந்தையைக் கொன்ற பாம்புகளின் வம்சத்தையே அழிக்க முடிவு செய்து, பாம்பு வேள்விக்கு உத்தரவிட்டான். சரியான மந்திரங்களை உச்சரித்து, பாம்புகளின் பெயர்களைச் சொல்லி வேள்வி செய்ய, பாம்புகள் ஆயிரக்கணக்கில் அந்த அக்னியில் விழுந்து அழிந்தன. அறம் அறிந்த ‘ஆஸ்தீகர்’ என்பவர், ஜனமேஜயனிடம் சென்று, அவருடைய தவறை எடுத்துச் சொல்லி, பாம்புகள் அழிவதைத் தடுத்தார். ஜனமேஜயனும் மனம் திருந்தினார். ஆனால், பல பாம்புகளை கொன்றதால் ஜனமேஜயனுக்கு ஸர்ப்பதோஷம் உண்டானது. அவருக்கு தொழுநோய் உண்டானது.
பல சிகிச்சைகள் செய்தும் பலனில்லாமல், மரணத்தை ஏற்க முடிவு செய்தபோது, ஆத்ரேயர் என்ற முனிவர், அரசனிடம்,”உனக்கு ஏற்பட்டிருக்கும் ஸர்ப்பதோஷத்தையும், தொழுநோயையும் போக்க ஒரு வழியிருக்கிறது. பாம்பின் தலையிலேயே தன் பாதத்தை வைத்திருக்கும் ஸ்ரீ க்ருஷ்ணரை மனதார வணங்கினால் உன்னுடைய ஸர்ப்பதோஷமும், தொழுநோயும் நீங்கும். வைகுண்டத்தில் தன்னை தானே வழிபட்ட க்ருஷ்ணரின் விக்கிரகமானது குருவாயூரில் உள்ளது. நீ உடனே குருவாயூர் சென்று அங்கு உள்ள க்ருஷ்ண விக்கிரகத்தைத் தரிசித்து வணங்கு” என்று சொன்னார். ஜனமேஜயனும், குருவாயூர் சென்று, அங்குள்ள க்ருஷ்ண விக்கிரகத்தைத் தியானம் செய்து, அன்புடன் பூஜை முதலியவற்றை செய்து பத்து மாதங்கள் வழிபட்டார். தொழுநோய் படிப்படியாக நீங்கியது. ஸ்ரீ குருவாயூர் க்ருஷ்ணரும் ஜனமேஜயனுக்கு பூரண குணத்தை அருளினார். மகிழ்ச்சியடைந்த ஜனமேஜயன் குருவாயூர் கோவிலைப் புதுப்பித்துக் கொடுத்தார் என்பது புராணம்.
ஸர்ப்ப தோஷத்தை நீக்கும் சக்தி படைத்தவர் குருவாயூரப்பன். குருவாயூர்
க்ருஷ்ணரை மனதார வணங்கினால் ஸர்ப்ப தோஷம், தொழு நோய், தோல் நோய் அனைத்தும் நீங்கும் என்பது சத்தியம்
———–
கண்ணன் கதைகள் – 63
வாகைச்சார்த்து / வாகச்சார்த்து
சில ஆண்டுகளுக்கு முன் குருவாயூர் சென்ற பொழுது அதிகாலை நிர்மால்ய தரிசனம் செய்ய சன்னதிக்குச் சென்றோம். கூட்டம் அதிகமாக இருந்ததால், நாங்கள் சென்ற சமயம் நிர்மால்யம் முடிந்துவிட்டது, ஆனால் வாகைச்சார்த்து சேவிக்கும் பாக்கியம் பெற்றோம்.
வாகைச்சார்த்து என்றால் என்ன? குருவாயூரில் தரிசனம் தரும் குழந்தைக் கண்ணனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தமும், தைலமும், தோல் நோய்களையும், அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் என்பது நம்பிக்கை. பகவானின் திருமேனியில் வாகை மரத்துப் பட்டையின் பொடியைக் கொண்டு எண்ணெய் போகத் தேய்க்கிறார்கள். இதைத்தான் ‘வாகைச்சார்த்து’ என்று கூறுகிறார்கள். இந்த வாகைச்சார்த்து வழிபாடு வழக்கம் எப்படி வந்தது?
இது பற்றி ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு காலத்தில், ஒரு கிராமத்தில், காஷு என்ற சிறுவன் இருந்தான். பத்து, பனிரெண்டு வயதிருக்கும். தாய் தந்தை யாரும் இல்லை. மிகுந்த வறுமை. அந்த கிராமத்தில் சிறு சிறு வேலைகள் செய்து அதனால் கிடைக்கும் பணத்தை வைத்து தனக்கு வேண்டிய உணவை வாங்கி உண்பான். ஒரு சமயம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் உணவில்லாமல் இருக்க நேரிட்டது. பசியின் கொடுமையைத் தாங்க முடியாத அந்த சிறுவன், அருகிலுள்ள நதிக்குச் சென்று அதில் மூழ்கி இறந்துவிட நினைத்தான். அப்போது நாரதர் அவன் முன் தோன்றி ஒரு பாத்திரத்தைக் கொடுத்து, அவன் விரும்பும் போதெல்லாம் அந்த பாத்திரத்திலிருந்து அவனுக்கு வேண்டிய உணவு கிடைக்கும் என்று கூறினார். அந்தப் பாத்திரத்தில் இருந்து அவனுக்கு வேண்டிய உணவை அவன் பலகாலம் பெற்று வந்தான்.
இந்நிலையில் ஒருநாள் காஷுவுக்கு வீடு, செல்வம் வேண்டும் என்ற பேராசை ஏற்பட்டது. மீண்டும் தண்ணீரில் மூழ்குவது போல நடித்தால், நாரதர் வருவார் என்ற எண்ணத்தில், நதியில் மூழ்கினான். நாரத முனிவரும் வரவில்லை, பாத்திரமும் மறைந்துவிட்டது. மீண்டும் பசியின் கொடுமையில் வாடினான். தனது பேராசை பெரு நஷ்டமாகிவிட்டதை உணர்ந்த காஷு, மிகவும் வருந்தினான். அப்போது நாரதர் மீண்டும் அவன் முன் தோன்றி, அவனிடம், ‘உன்னுடைய முன்ஜென்மத்தில் உனக்கு சாம்பு என்று ஒரு மகன் இருந்தான், அந்த மகனின் பக்தியால்தான் இப்போது என்னைப் பார்க்க முடிகிறது, நீயும் பக்தி செய்து முக்தியடை’ என்று கூற, அதன் பிறகு காஷு, எப்போதும் பகவானின் திருநாமங்களை உச்சரித்துக் கொண்டு தனது வாழ்நாளைக் கழிக்க ஆரம்பித்தான்.
அவனது நிலையைக் கண்ட மஹாலக்ஷ்மி, அந்தச் சிறுவனுக்கு உதவி செய்யுமாறு பகவானிடம் வேண்டினாள். அதற்கு பகவான் அவன் பாவங்கள் இன்னும் தீரவில்லை, முன்ஜென்மத்தில் அவன் ஒரு பூசாரியாய் இருந்தான். வேசிகளுடன் சுற்றிக்கொண்டு, கோவிலையும் கவனிக்கவில்லை. அப்போது அவன் மகன் சாம்பு, கோவிலில் பூஜைகளை பக்தியுடன் செய்து என்னை வந்தடைந்தான். முன்பைப் போலவே இப்போதும் காஷு தனது ஆசை நிறைவேறியதும் என்னை மறந்துவிடுவான். ஆகையால் அவனை சிறிது காலம் சோதித்துப் பிறகு ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறினார். காஷுவும் பகவானின் திருநாமங்களை உச்சரித்துக் கொண்டே இருந்தான். மீண்டும் மஹாலக்ஷ்மி பகவானிடம் வேண்ட, பகவானும் அதற்கு இணங்கினார்.
இதற்கிடையே, காஷு சுயநினைவை இழந்துவிட, பகவான் அவன் முன்னே தோன்றினார். அவன் தலையைத் தடவிக் கொடுத்தார். தன்னை அவரது திருவடிகளில் சேர்த்துக்கொள்ளுமாறு காஷு வேண்டினான். தன்னைப் போலத் துன்பமடைபவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் தானும் உதவ அருள் புரியுமாறும் வேண்டினான்.
பகவானும் அதை ஏற்றுக் கொண்டு, “கலியுகத்தில் நீ ஒரு வாகை மரமாகப் பிறப்பாய். அப்போது குருவாயூர் கோவிலில் குருவாயூரப்பனாக இருக்கும் எனக்கு, தினமும் காலையில் எனக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, பின் என்னை வாகைத் தூளினால் தேய்ப்பார்கள். அந்த வகையில் நீ எனக்கு சேவை செய்வாய். என் மூலமாக எனது பக்தர்களின் தோல் நோய்களும் தீரும்” என்று கூறி காஷுவை ஆசீர்வதித்து விட்டு மறைந்தார்.
குருவாயூரப்பனுக்கு “வாகை சார்த்து’ வழக்கம் இவ்வாறுதான் ஏற்ப்பட்டது. அதன்படியே இன்றும், நிர்மால்யம் முடிந்தவுடன், தைலாபிஷேகம் செய்து, பின்னர் வாகை மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பொடியை குருவாயூரப்பனின் திருமேனியில் போட்டு எண்ணெய் போகத் தேய்க்கிறார்கள். இதைத் தான் வாகைச் சார்த்து என்கிறார்கள். பிறகு பகவானுக்கு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்கின்றனர். இந்த அபிஷேக தீர்த்தமும் தைலமும் பல நோய்களைக் குணப்படுத்தும் சக்தி பெற்றவை என்பது நம்பிக்கை.
குருவாயூரப்பனை வழிபட்டு, வாழ்வில் நோய்களும், தோஷங்களும் நீங்கப் பெறுவோம்! ஓம் நமோ நாராயணாய! நாராயண! நாராயண!
—————
கண்ணன் கதைகள் – 64
உறியமதம்
முன்னொரு சமயம் சிறந்த பக்தரான நம்பூதிரி ஒருவர் வாதநோயால் பீடிக்கப்பட்டார். அவருக்கு நோய் மிகவும் தீவிரமாகி, கை கால்களை நீட்ட முடியாமல், உடல் குறுகிவிட்டது. அவரால் நடக்க முடியாததால், அவரை உறியில் வைத்துத் தூக்கிச் செல்வார்கள். அதனாலேயே அவரை ‘உறியமதம்’ என்று அவ்வூர் மக்கள் அழைக்க ஆரம்பித்தார்கள். மருத்துவங்கள் பலனளிக்கவில்லை. பெருந்தொகையைக் காணிக்கையாகச் செலுத்துவதாகவும், தான் பூரண குணமடைய வேண்டும் என்றும் குருவாயூரப்பனுக்கு வேண்டிக்கொண்டார். குருவாயூர் செல்ல பயணப்பட்டார். உறியில் வைத்து அவரை அழைத்துச் சென்றனர்.
அதே சமயம், வறுமையால் வாடிய ஒருவன், குருவாயூர் சென்று வேண்டினால், வறுமை தீர்ந்து சௌகரியமாய் வாழலாம் என்ற நம்பிக்கையில் குருவாயூர் வந்தான்.
உறியமதம் ஸ்வாமி, தீர்த்தத்தில் நீராடி, நித்ய அனுஷ்டானத்தை முடிக்க ருத்ர தீர்த்தம் சென்றார். தன்னுடைய பணப்பையைப் குளத்துப் படிக்கட்டில் வைத்தார். உறியைக் குளத்தில் இறக்கி வைக்கச் சொன்னார். ஏற்கனவே அங்கிருந்த, பணமில்லாமல் வாடிக் கொண்டிருந்த பக்தன், அந்தப் பணப்பையை எடுக்கக் கையை வைத்தான். அதைக் கண்ட உறியமதம், யாருமே எதிர்பார்க்கா வண்ணம், உறியிலிருந்து குதித்து, அவனைப் பிடிக்க ஓடினார். ஆனால் அவன் ஓடிவிட்டான். தான் குணமடைந்ததையே உணராத
உறியமதம், காணிக்கை அளிக்க முடியவில்லையே என்று மனம் வருந்தினார். அப்போது “கவலைப்படாதே! உங்கள் இருவரின் ப்ரார்த்தனையும் நிறைவேறிவிட்டது” என்று அசரீரி கேட்டது. மகிழ்ந்த அவர் பெருமானை சேவித்து ஊர் திரும்பினார்.-அவரது நோயும் பூரணமாக நீங்கியது.
இவ்வாறு கலியுகத்தில் அப்பனின் லீலைகள் அனைவரையும் வியக்க வைக்கும் அற்புதமாகும்.
————
கண்ணன் கதைகள் – 65
வைர அட்டிகை
கோவையில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குத் திடீரென்று மிகுந்த கைவலி ஏற்பட்டது. பல டாக்டர்களிடம் காண்பித்தும் பலனில்லை. அவர் அவஸ்தைப்படுவதைக் கண்ட அவர் மனைவியும் மிகுந்த கவலையுற்றாள்.
ஒரு நாள், அவர்கள் இருவரும் சேங்காலிபுரம் ஸ்ரீ அனந்தராம தீட்சிதர் நிகழ்த்திய ‘நாராயணீய உபன்யாசம்’ கேட்கச் சென்றிருந்தார்கள். ஸ்ரீ குருவாயூரப்பனின் பெருமைகளைக் கேட்ட அவர்கள், வீடு திரும்பியதும் அவர் மனைவி அவரிடம், கை வலி நீங்கினால் தன்னுடைய கழுத்தில் இருக்கும் வைர அட்டிகையை காணிக்கையாகச் செலுத்துவதாக வேண்டிக் கொள்ளச் சொல்ல, அவரும் அவ்வாறே வேண்டிக் கொண்டார். சிறிது காலத்திலேயே, அவர் கைவலி படிப்படியாகக் குறைந்தது. வேண்டிக்கொண்டபடி குருவாயூர் சென்று அட்டிகையைக் காணிக்கை செலுத்த முடிவு செய்தார்கள்.
அந்த அட்டிகை அவரது தாத்தா கொடுத்தது. இதற்கிடையில், செல்வந்தர் வைர வியாபாரிகள் சிலரிடம் அதை மதிப்பீடு செய்யச் சொன்னார். அவர்களும் மதிப்பீடு செய்து விலையைச் சொன்னார்கள். குருவாயூர் சென்றார்கள். அங்கு சென்றதும், அவருக்கு தாத்தா அளித்ததைக் காணிக்கையாக்குவதற்கு மனம் வரவில்லை. அதனால் அதற்குப் பதிலாக அதன் மதிப்பைவிட அதிகமான பணத்தை உண்டியலில் சமர்ப்பித்தார்கள். பிறகு ஊர் திரும்பினார்கள்.
ஆனால், மீண்டும் அவருக்குக் கைவலி தொடங்கியது. குடும்ப ஜோசியர் தெய்வ குற்றத்தால் அவ்வாறு வலிப்பதாகச் சொன்னார். வேறு வழியில்லாமல் மீண்டும் குருவாயூர் சென்று அட்டிகையை உண்டியலில் சமர்ப்பித்துவிட்டு வந்தனர். கைவலியும் வேதனையும் நிரந்தரமாக நீங்கியது.
பகவான் கீதையில் கூறியபடி, பக்தியுடன் கொடுத்தால் தண்ணீரையும் ஏற்றுக் கொள்வார், பக்தியில்லாமல் கொடுத்தால் எவ்வளவு மதிப்பானதாக இருந்தாலும் ஏற்க மாட்டார் என்பதற்கு இந்த உண்மைச் சம்பவமே சான்று.
———
குருதக்ஷிணை
மேப்பத்தூர் நாராயண பட்டத்திரி ஸ்ரீமன் நாராயணீயத்தை இயற்றியவர்.
கேரளாவில் மேப்பத்தூர் என்ற ஊரில், ப்ராம்மண குடும்பத்தில் பிறந்த அவர், வேதம், தர்க்கம், மீமாம்சை என்று அனைத்தையும் கற்றார். அவருக்கு ஒரு அண்ணனும் ஒரு தம்பியும் இருந்தனர். அக்காலத்தில் நம்பூதிரி குடும்பத்தில் மூத்தவர் நம்பூதிரியை மட்டுமே திருமணம் செய்ய வேண்டும். மற்றவர் எந்த சமூகத்திலும் திருமணம் செய்யலாம் என்ற ஒரு கோட்பாடு இருந்தது.
நாராயண
பட்டத்திரிக்கு பிஷாரடி குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் சம்பந்தம் ஏற்பட்டது. பிறகு அந்தப் பெண்மணியைத் திருமணம் செய்து மணவாழ்க்கையே இன்பம் என்று அனுபவித்து வந்தார்.
அந்தப் பெண்ணின் குடும்பத்தில் அச்சுத பிஷாரடி (அச்சுத பிஷாரடியின் தமக்கை மகள்
பட்டத்திரியின் மனைவி) என்ற ஒரு பண்டிதர் இருந்தார். சிறந்த பக்திமான். ஒரு நாள் அவர் தியானத்தில் இருந்தார். அப்போது வீட்டின் உள்ளிருந்து அவரைக் கடந்து சென்ற பட்டத்திரியைப் பார்த்து, உயர்ந்த குடும்பத்தில் பிறந்து, அழிந்துபோகும் உணர்ச்சிகளுக்குப் பலியாகி, உன் வாழ்க்கையை ஏன் வீணாக்கிக் கொள்கிறாய் என்று கேட்டார். இந்த வார்த்தை பட்டத்திரியின் வாழ்க்கையை மாற்றியது. பிஷாரடியிடமே சிஷ்யனாக சேர்ந்து, சம்ஸ்க்ருதமும் கற்று பண்டிதரானார். வாலிபத்தில் தவறு செய்த அவர் சிறந்த பக்தரானார். பல நூல்கள் இயற்றினார்.
அந்த சமயம், அவரது குருவான அச்சுத பிஷாரடிக்கு முடக்குவாதம் ஏற்பட்டது. அது கண்டு வருந்திய
பட்டத்திரி, தன் குருவுக்குத் தர வேண்டிய குருதக்ஷிணைக்குப் பதிலாக, அவருடைய நோயை ஆவாஹனம் செய்து ஏற்றுக் கொண்டார். குருவின் நோய் நீங்கியது. பட்டத்திரிக்கு முடக்குவாதம் ஏற்பட்டது. அதனால் மிகவும் அவதிப்பட்டார். பல சிகிச்சைகள் செய்தும் பலனில்லை. அதைக் கண்ட துஞ்சத்து எழுத்தச்சன் என்பவர், நோய் நீங்க குருவாயூருக்குச் சென்று (மீன் தொட்டுக் கூட்டுக) அதாவது, “நாவிலே மச்சம் தொட்டு உண்” என்று பணித்தார். அறிவற்றவர்களாய் இருந்தால், மீனை உண்ணச் சொல்கிறார் என்று நினைத்திருப்பார்கள். ஆனால், பட்டத்ரிக்கு மச்சாவதாரம் தொடங்கி பகவானை வர்ணிக்கச் சொல்கிறார் என்று புரிந்தது.
பட்டத்திரியும் உடனேயே, குருவாயூர் சென்று அங்குள்ள புண்யதீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, சன்னிதியிலேயே அமர்ந்து, அவன் பெருமையைக் காவ்யமாக எழுத ஆரம்பித்தார். அந்தக் காவ்யமே “ஸ்ரீ நாராயணீயம்”.
ஸ்ரீமன் நாராயணீயத்தில் மொத்தம் 1034 ஸ்லோகங்கள் உள்ளன. 100 தசகங்கள் கொண்டது . ஒவ்வொரு தசகத்திலும் 10 ஸ்லோகங்கள் உள்ளன. சில தசகங்களில் 10 ஸ்லோகங்களுக்கு மேல் உள்ளன. ஸ்ரீமன் நாராயணீயத்தில் ஒவ்வொரு தசகமும் தமது நோயை குணமாக்கும்படி வேண்டுவது போல் அமைந்துள்ளது. படிப்பவர்களுக்கும் தங்கள் நோயை குணமாக்கும்கும்படி வேண்டுவதுபோல் அமைந்திருப்பது விசேஷம்.
பட்டத்திரியின் வாழ்வில் நிகழ்ந்த வேறொரு சம்பவத்தை அடுத்த பதிவில் பார்ப்போம்.
நாராயண! நாராயண !
————
கண்ணன் கதைகள் – 67
மன நிம்மதி
சென்ற பதிவில் நாராயண பட்டத்ரி பற்றியும் அவர் எப்படி நாராயணீயம் எழுதினார் என்பது பற்றியும் பார்த்தோம்.
நாராயண பட்டத்ரியின் வாழ்வில் நிகழ்ந்த மற்றொரு சம்பவம் இது.
நாராயணீயத்தை இயற்றிய நாராயண பட்டத்ரிக்கு பாகவதத்தின் சாரமாக
நாராயணீயத்தைத் தான் இயற்றிவிட்டதாக சிறு கர்வம் ஏற்பட்டது.
மன நிம்மதியை இழந்தார். பகவான் அவரது கனவில் தோன்றி முக்திபுரியில் (மலையாளத்தில் முக்கோலக்கல்) இருக்கும் பவானியின் கோவிலுக்குச் செல் என்று கூற, முக்திபுரியில் உள்ள முக்கோல தேவியின் கோவிலுக்குச் சென்றார். அப்போது அவர் முக்கோலக தேவியை வழிபட்டு, தேவியின்மீது ஸ்லோகத்தை எழுதத் தொடங்கினார். எழுபது ஸ்லோகங்கள் எழுதி முடித்துவிட்ட நிலையிலும் அவரால் தேவியின் திருப்பாதங்களைப் பற்றி மட்டுமே சொல்ல முடிந்திருந்தது. அதற்குமேல் எழுத வரவில்லை. அப்போது, தாம் இயற்றியதெல்லாம் பகவானின் திருவருளால்தான் என்பதை அவர் உணர்ந்தார். மிகுந்த மன நிம்மதியும் அடைந்தார்.
பின்னர், தேவியைத் துதித்து, தம் இறுதிக் காலம் வரை அங்கேயே கழித்தார். ‘ஸ்ரீபாத ஸப்ததி’ என்ற தேவியின் புகழ் பாடும் அந்த ஸ்லோகம் தான் அவர் கடைசியாக எழுதியது. ஒரு நாள் தேவியைத் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பியதும் நிம்மதியாக பகவானின் திருவடியை அடைந்தார்.
நாமும் அப்பனின் பாதாரவிந்தங்களை வணங்கி அவள் அருளைப் பெற்று மகிழ்வோமாக!
————
கண்ணன் கதைகள் – 68
தெய்வ குற்றம்
குருவாயூரப்பனின் மகிமைகளை இக்கலியிலும் கண்கூடாகக் கண்டவர் பலர் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன் பக்தர் ஒருவருக்கு நிகழ்ந்த சம்பவம் இது.
பக்தர் ஒருவரின் மகனுக்குத் திடீரென்று புத்தி ஸ்வாதீனமில்லாமல் போய்விட்டது. ஒருவருடனும் பேசாமல், கேட்ட கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல் பித்துப் பிடித்தவன்போல் ஆகிவிட்டான். பல சிகிச்சைகள் செய்தும் சரியாகவில்லை. மிகுந்த கவலையடைந்த பக்தர், பகவானே கதி என்று, தனது மகனை அழைத்துக் கொண்டு குருவாயூர் சென்று, பல நாட்கள் சன்னதியிலேயே தங்கி, கைங்கர்யங்களும் செய்து வந்தார். தன் மகனை நினைத்து மிகுந்த கவலையுடன் இருந்தார்.
ஒரு நாள், குருவாயூரப்பன் அவரது கனவில் தோன்றி, ‘உன் மகன் முன் ஜென்மத்தில் ஒரு குரங்கைக் கொன்று, ராமருக்கு அபசாரம் செய்ததால், தெய்வ குற்றம் உண்டானதால், இவ்வாறு உள்ளான். நீ அவனை திருப்பரையாறு அழைத்துச் சென்று, ராமரை சேவித்தால் அவன் குணமடைவான்’ என்று கூறினார். உடனே, அவர் திருப்பரையாறு சென்றார். அங்கேயே தங்கி, தினமும் ராமரை சேவித்து வந்தார்.
இவ்வாறிருக்கையில், ஒரு நாள், அவர் ராமர் சன்னதியில் இருக்கும் போது, ஸ்ரீ ஹனுமார், கையில் சந்தனம், குங்குமம், துளசியுடன் அவர் மகனின் கண்ணுக்கு மட்டும் தெரியும்படியாகத் தோன்றி, ‘இதை வாங்கிக் கொள்’ என்று கூறினார். அந்த பக்தரின் கண்களுக்குத் தெரியவில்லை. அவர் மகன் அவரிடம், ‘அப்பா, ஒரு குரங்கு சந்தனம், குங்குமம் கொடுக்கிறது, வாங்கிக் கொள்ளட்டுமா?’ என்று கேட்டான். என்றுமில்லாமல் மகன் நன்றாகப் பேசுகிறானே என்று மகிழ்ந்த அவர், வாங்கிக் கொள் என்று கூறினார். பக்தரின் கண்களுக்குத் தெரியவில்லையே தவிர, மகனின் கையில் இப்போது பிரசாதங்கள் இருப்பது தெரிந்தது. பகவானின் அனுக்ரஹத்தையும், மகிமையையும் அறிந்த பக்தர் மனம் மகிழ்ந்து அப்பனுக்கு நன்றி கூறினார். அதுமுதல் அவர் மகன் நன்றாகப் பேச ஆரம்பித்து, சித்தமும் தெளிந்தது.
திருப்பரையாறு கோவிலில் அதிர்வெடி வழிபாடு ப்ரசித்தம். பிரச்சனைகள் தீர, அதிர்வெடி வழிபாடு செய்து மக்கள் தமது பிரச்சனைகள் தீரப் பெறுகிறார்கள். கேரளக் கோவில்களில் வெடி வழிபாடு நடைமுறை உண்டு.
————-
கண்ணன் கதைகள் – 69
ஞானப்பான
கேரளாவிலுள்ள மலப்புரத்தில் கீழாத்தூர் என்னும் ஊரில் வாழ்ந்தவர் பூந்தானம் நம்பூதிரி. பூந்தானம் என்பது அவர்கள் இல்லத்தின் பெயர். இல்லப்பெயரே அவரது பெயராக நிலைத்துவிட்டது. சிறந்த பக்திமான். குருவாயூரப்பனிடம் மிகுந்த பக்தி கொண்டவர். மலையாளத்தில் பல ஸ்லோகங்கள் கண்ணன் மீது எழுதியுள்ளார்.
சரி, அதென்ன ஞானப்பான? மேலே படியுங்கள்.
பூந்தானத்திற்குத் தன் மடியில் கொஞ்சி விளையாட ஒரு பிள்ளை இல்லையே என்று குறை. குருவாயூரப்பனிடம் பிரார்த்திக்க, நீண்ட காலம் கழித்து அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்குப் பரம சந்தோஷம். நாமகரணம் செய்தார். குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆனபோது அன்னப்ராசனம் செய்ய முஹூர்த்தம் குறித்து, உறவினர்களை எல்லாம் அழைத்திருந்தார். அன்னப்ராசன தினத்தன்று, வீட்டில் உள்ள எல்லாரும் சீக்கிரமே எழுந்துவிட்டனர். அவர் மனைவி, குழந்தையை நீராட்டி, புதுத் துணிகள் உடுத்தி விட்டு, அலங்கரித்து, தாய்ப்பால் கொடுத்துவிட்டு, குழந்தையை ஒரு துணியில் சுற்றித் தூங்க வைத்தாள். குழந்தை உறங்க ஆரம்பித்ததும் உறவினர்களை வரவேற்கச் சென்றாள்.
கேரளத்தில், மிகவும் மடியாக இருக்கும் பெண்கள் கையில் தாழங்குடையையையும், மேலே வெள்ளைத் துணியையும் போர்த்தியிருப்பார்கள். வந்திருந்த பெண்களில் ஒருவர், தான் போர்த்தியிருந்த துணியை, குழந்தை இருப்பதை அறியாமல் அதன்மேல் போட்டாள். பின்னால் வந்த அனைவரும் மேலே மேலே துணிகளைப் போட்டார்கள். அன்னப்ராசனம் நடக்கவேண்டிய நேரம் நெருங்கவே, குழந்தையை எடுத்து வர உள்ளே சென்று பார்த்த போது, குழந்தை மூச்சு முட்டி இறந்துவிட்டிருந்தது. நீண்ட காலம் கழித்து பிறந்த குழந்தை இறந்ததைக் கண்ட
பூந்தானத்தின் மனைவி நிலைகுலைந்து போனாள். அழுது அரற்றினாள். கிருஷ்ணா ஏன் இப்படி? என்று கதறினார் பூந்தானம்.
அவரது சோகத்தைக் கண்ட குருவாயூரப்பன், “பூந்தானம் கவலைப் படாதே! இனி நானே உன் பிள்ளை, என்று கூறி அவர் மடியில் அமர்ந்து, உன் மடியில் படுத்துக் கொள்ளட்டுமா?” என்று கேட்டான். கண்ணனைத் தன் மடியில் கண்ட பூந்தானம், பரவசமடைந்து, “கண்ணனே என் மடியில் குழந்தையாகத் தவழும்போது, எனக்கென்று பிள்ளையும் வேண்டுமோ?” என்று பக்தியில் தன்னை மறந்தார். ‘ஞானப்பான’ என்ற தத்துவ முத்துக்கள் அவர் வாயிலிருந்து கவிதையாக வந்து விழுந்தது. சோகமே ஸ்லோகமானது. ‘ஞானப்பான’ எளிய மலையாள நடையில் உயர்ந்த தத்துவக் கருத்துகளைக் கொண்ட ஓர் காவியம். ஞானத்தைத் தரும் பானை அதாவது ஞானக் களஞ்சியம் என்றே சொல்லலாம்.
‘ஞானப்பானை’ சாஸ்வதமற்ற வாழ்க்கையைப் பற்றிய ஓர் கவிதை.
மனிதப்பிறவியின் அர்த்தத்தை மிக அழகாய்ச் சொல்லும் இந்தக் கவிதையிலிருந்து சில துளிகள்:
“எத்ர ஜென்மம் மலத்தில் கழிஞ்ஞதும்
எத்ர ஜென்மம் ஜலத்தில் கழிஞ்ஞதும்
எத்ர ஜென்மங்ஙள் மண்ணில் கழிஞ்ஞதும்
எத்ர ஜென்மங்ஙள் மரங்ஙளாய் நின்னதும்
எத்ர ஜென்மங்ஙள் மரிச்சு நடன்னதும்
எத்ர ஜென்மங்ஙள் ம்ருகங்ஙள் பஷுக்களாய்”
மானிடப் பிறவி அரியது. முன்பு புழுவாய், பூச்சியாய், மிருகங்களாய், மரங்களாய், பல ஜன்மங்களை எடுத்து பின்னர் இப்போது கிடைத்திருக்கிறது இந்த மனிதப் பிறவி. குறுகிய காலம் மட்டுமே இருக்கும் இந்த வாழ்க்கையில் நாம் பகவானது திருநாமத்தை உச்சரிக்காமல் இருக்கின்றோமே? என்று ஆச்சர்யப்படுகிறார் பூந்தானம்.
“இன்னலேயோளம் எந்தென்னறிஞ்ஞிலா
இனி நாளேயும் எந்தென்னறிஞ்ஞிலா
இன்னீக்கண்ட தடிக்கு வினாசவும்
இன்ன நேரம் என்னேதுமறிஞ்ஞிலா”
நேற்று வரை என்ன நிகழ்ந்தது என்று அறியவில்லை, இனி நாளை என்ன நடக்கும் என்றும் தெரியவில்லை, இன்றிருக்கும் இந்த சரீரத்திற்கு அழிவு எந்த நேரத்தில் என்றும் அறிவதில்லை.
“நம்மெயொக்கேயும் பந்திச்ச ஸாதனம்
கர்மம் என்னறியேண்டது முன்பினால்
முன்னில் இக்கண்ட விஸ்வம் அசேஷவும்
ஒன்னாயுள்ளொரு ஜ்யோதிஸ்வரூபமாய்”
நம் அனைவரையும் இந்த உலகத்தில் கட்டி இருப்பது கர்மமே என்பதை அறிய வேண்டும். ப்ரளயத்தில் நாம் காணும் இந்த உலகமெல்லாம் ஒன்றேயான ஒரே ஜோதிஸ்வரூபத்தில் ஒடுங்குகின்றது.
க்ருஷ்ண க்ருஷ்ண முகுந்தா ஜனார்த்தனா
க்ருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே
அச்யுதானந்த கோவிந்த மாதவா
சச்சிதானந்த நாராயணா ஹரே!!!
—————
கண்ணன் கதைகள் – 70
வாழைக்கு மோக்ஷம்
குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவர், பூந்தானம் எனும் பக்தர். மலையாள மொழியில் குருவாயூரப்பனின் பெருமையைச் சொல்லும் ஞானப்பான என்னும் பாடல்களை எழுதியவர் பூந்தானம். சிறந்த கவிஞர். பாகவத பாராயணம், ப்ரவசனம் செய்து கொண்டே இருப்பார்.
சென்ற பதிவில் பூந்தானத்தின் சோகம் எப்படி ஸ்லோகமானது, ஞானப்பான எப்படி உருவானது என்பது பற்றிப் பார்த்தோம். அவர் வாழ்வில் நடந்த அதிசயமான மற்றொரு சம்பவம் பற்றி இப்போது பார்க்கலாம்.
ஒருநாள் பூந்தானம் உறங்கும்போது, அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில், வானரதம் வருகிறது. விஷ்ணுதூதர்கள் இருவர் வந்து அவரை வைகுண்டத்திற்கு அழைக்கிறார்கள். அவர் அவர்களை வரவேற்று ரதத்தில் ஏறுகிறார். ரதம் பல உலகங்களைக் கடந்து, வைகுண்டத்தை அடைகிறது. அங்கு பக்தி யோகத்தால் பகவானை அடைந்த பலரைப் பார்க்கிறார். வைகுண்டத்தின் வாயிலை அடைந்ததும், இருவர் அவரை வரவேற்று வணங்குகின்றனர். வைகுண்டத்தில் இருக்கும் நீங்கள் பூஜிக்கப்பட வேண்டியவர்கள், என்னை வணங்குகிறீர்களே, நானல்லவோ உங்களை வணங்க வேண்டும் என்று அவர்களிடம் கேட்கிறார். அப்போது அவ்விருவரும், நாங்கள் முந்தைய ஜென்மத்தில் உங்கள் வீட்டில் இரண்டு வாழை மரங்களாக இருந்தோம். தினமும் உங்கள் பாகவத பாராயணம் கேட்டு, அப்புண்ணியத்தின் பலனாக, இந்த உன்னதமான நிலையை அடைந்துள்ளோம், அதனால் நீங்களே எங்கள் குரு, அதனால் வணங்கினோம் என்று கூறினார்கள்.
இதைக் கேட்டதும், பூந்தானத்தின் கனவு கலைந்தது. தூக்கத்திலிருந்து விழித்தார். வீட்டின் வெளியே சென்று பார்க்கும்போது அங்கே இருந்த இரண்டு வாழைமரங்கள் கீழே விழுந்திருந்தன. பகவன் நாமத்தை கேட்பதால் உண்டாகும் பலனைக் கண்கூடாகக் கண்ட பூந்தானம், முன்னிலும் தீவிரமாக, பகவானை வணங்கி அவன் நாமத்தைப் பாடிப் பரப்பினார்.
————-
கண்ணன் கதைகள் – 71
வானரதம்
கிருஷ்ண பக்தரான பூந்தானம் செய்யும் பாகவத உபன்யாசங்களை மக்கள் மிகவும் நேசித்தார்கள். கேரளாவில் உள்ள கொட்டியூர் என்னும் ஊரில் உள்ள சிவன் கோவில் வருடத்தில் சில நாட்களுக்கு மட்டுமே திறந்திருக்கும். பூந்தானம் கொட்டியூர் சென்று அங்குள்ள குளத்தில் நீராடி, சிவபெருமானை வழிபட்டு மிகுந்த சந்தோஷத்துடன் அங்கேயே சில நாட்கள் தங்கினார்.
தினசரி கோவிலில் சிவன் முன்னால் பாகவத ப்ரவசனம் செய்தார்.
நூற்றுக்கணக்கான மக்கள் அவருடைய இனிமையான பிரவசனத்தைக் கேட்டார்கள்.
ஸ்ரீமத் பாகவதத்தில் கிருஷ்ணர் விளையாட்டாக ருக்மிணியிடம், சிசுபாலன், ஜராசந்தன், சால்வன் போன்றோர் இருக்கும்போது என்னை ஏன் திருமணம் செய்தாய் என்று பரிஹாஸமாகப் பேச, ருக்மிணி மயங்கி விழ, பின்னர் கிருஷ்ணர் சமாதானம் செய்வதைக் கூறும் ஸர்க்கம்.
பூந்தானம் இந்தப் பகுதியை வாசித்து முடித்து, அடுத்த நாள் தொடர்வதற்கு வசதியாய் அந்த அத்தியாயத்தின் முடிவில் அடையாளம் வைத்தார். ஆச்சர்யப்படும் வகையில் அடுத்த நாள் அவர் வைத்த அடையாளம் அந்த ஸர்க்கத்தின் தொடக்கத்தில் இருந்தது. அதனால் மறுபடியும் அந்த ஸர்க்கத்தையே வாசித்தார். மீண்டும் சில நாட்களுக்கு இவ்வாறு தொடர்ந்து நடந்தது. கோவிலை மூட வேண்டிய நாள் வந்தது. பூந்தானம் பிரவசனத்தை முடித்து, வீட்டிற்குத் திரும்பும் வழியில் பாகவத புத்தகத்தைக் கோவிலிலேயே மறந்து வைத்துவிட்டு வந்ததை உணர்ந்தார். அதை எடுக்க மீண்டும் கோவிலுக்குச் சென்றார். ஆனால் நடை சாத்திவிட்டார்கள். யாருமே அருகில் இல்லை.
அவர் ப்ரவசனம் செய்த பாகவத அத்தியாயத்தின் அதே பகுதியை யாரோ கோவிலின் உள்ளிருந்து சொல்வதைக் கேட்க முடிந்தது. சாவி த்வாரத்தின் வழியே உள்ளே பார்த்தார். அங்கே அவர் கண்ட காட்சி!!! பரமசிவனே அதைப் படித்துக் கொண்டிருந்தார். பார்வதிதேவியும், பூதகணங்களும் அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பூந்தானம் அசையாமல் அதைக் கேட்டார். கடைசியில் சிவன் பார்வதியிடம், நான் படித்த இந்த பாகவத ஸர்க்கம் உனக்குப் பிடித்ததா? என்று கேட்க, பார்வதி, “ நன்றாக இருந்தது, ஆனால் பூந்தானம் சொன்னதைப்போல் இல்லை” என்று கூறினாள். சிவனும், உண்மைதான் நானும் பூந்தானம் சொல்வதையே கேட்க ஆசைப்படுகிறேன். அதனால்தான், தினமும் அவர் வைத்த அடையாளத்தை இந்த ஸர்க்கத்தின் தொடக்கத்தில் வைத்தேன் என்று கூறினார்.
வெளியே நின்றுகொண்டிருந்த பூந்தானம் இதைக் கேட்டவுடன் மெய்சிலிர்த்து, க்ருஷ்ணா, க்ருஷ்ணா என்று உரக்கக் கூறினார். அவர் மீண்டும் பார்த்தபோது, சிவபெருமானும் பார்வதியும் மறைந்து விட்டனர். பாகவதத்தை ஏனைய தெய்வங்களும் நேசிக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவமே சான்று.
இவ்வாறு பாகவத பாராயணத்திலும், கிருஷ்ண நாமத்திலும் பூந்தானத்தின் காலம் ஓடியது. பூந்தானத்திற்கு வயதாகியது. ஒரு நாள் கிருஷ்ணன் பூந்தானத்தை ‘என்னிடம் வா’ என்று அழைத்தார். மிகுந்த சந்தோஷமடைந்த பூந்தானம், வீட்டில் உள்ளவர்களிடம், நாளை விஷ்ணுதூதர்கள் நம் இல்லத்திற்கு வருகிறார்கள். வீட்டை நன்கு அலங்கரியுங்கள்; யாரெல்லாம் கிருஷ்ணனைக் காண வருகிறீர்கள் என்று கேட்டார். எப்போதும் கிருஷ்ணனை நினைத்து அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று அவரது வீட்டாரும், அவ்வூர் மக்களும் நினைத்தார்கள். அடுத்த நாள் வானரதம் வருவதைக் கண்ட அவர், மனைவியிடம் சீக்கிரம் வா, நாம் செல்லலாம் என்று கூறினார். அவர் மனைவிக்கு சமையற்கட்டில் வேலை இருந்ததால் உள்ளே சென்றுவிட்டாள். அப்போது, அவர் வீட்டில் வேலைசெய்த ஒரு பெண், நான் வருகிறேன், என்னை அழைத்துச் செல்லுங்கள் என்று வேண்டினாள். பூந்தானமும் மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொண்டார். வேலை முடிந்து அவர் மனைவி வந்து பார்த்தபோது வேலைசெய்த அந்தப் பெண்மணி இறந்திருந்தாள். பூந்தானத்தைக் காணவில்லை; பூந்தானம் கிருஷ்ணனோடு ஐக்கியமாகிவிட்டார்.
————-
கண்ணன் கதைகள் – 72
பக்த கமலாகர்
பண்டரீபுரத்தில் கமலாகர் என்ற பக்தர் வாழ்ந்து வந்தார். நற்பண்புகளுடன் சிறந்த அறிவாளியாக இருந்தார். சிறந்த பக்திமான். அவரது மனைவி சுமதியும் மிகுந்த குணவதி. கணவனைப் போலவே நற்பண்புகளும், பக்தியும் உள்ளவள். அவர்களுக்கு பத்மாகர் என்ற ஐந்து வயது மகன் இருந்தான்.
அவர்கள் இருவரும் தினந்தோறும் சந்த்ரபாகா நதியில் குளித்து, பகவானை
ப்ரார்த்தித்து, தங்கள் சக்திக்குத் தகுந்தபடி பக்தர்களுக்கு உணவு வழங்கி, பிறகு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
ஒரு நாள், அவ்வாறு குளித்துவிட்டு வரும் வழியில், நாமதேவர் என்ற மகானையும், அவருடன் சில சாதுக்களையும் கண்டனர். தங்கள் இல்லத்தில் உணவருந்துமாறு அவர்களை அழைத்தனர். ஆனால், நாமதேவர் கமலாகரிடம், ‘இவ்வளவு பேருக்கு உணவிடுவது உனக்கு சிரமமாக இருக்கும், எங்கள் ஆசீர்வாதம் உனக்கு என்றும் உண்டு, கவலைப்படாதே’ என்று கூறினார். கமலாகரோ, ‘விட்டலனும், தாயார் ருக்மிணியும் இருக்கும்போது எங்களுக்கு என்ன கவலை? தயவு செய்து வீட்டிற்கு வந்து உணவருந்துங்கள்’ என்று கூறினார். ‘சரி, நீங்கள் செல்லுங்கள், நாங்கள் நீராடிவிட்டு வருகிறோம்’ என்று நாமதேவர் சொல்லி நீராடச் சென்றார்.
கமலாகர், மனைவியிடம் உணவு தயாரிக்கச் சொன்னார். சுமதி, அக்கம்பக்கத்தாரிடம் பொருட்களைக் கடனாக வாங்கி சமையல் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தாள். அப்போது விறகு தீர்ந்துவிட்டது. அதனால், கொல்லைப்புறத்தில் உள்ள சுள்ளிகளை எடுத்து வரும்படி தனது ஐந்து வயது மகனை அனுப்பினாள்.
சிறுவன் பத்மாகர் சுள்ளிகளை எடுக்கும்போது, அதனடியில் இருந்த பாம்பு அவனைத் தீண்டியது. சில நிமிடங்களில் அந்தக் குழந்தை இறந்தது. சுமதி அழுதாள். ஆனால், சாதுக்களுக்கு அன்னமிடுவது பாதிக்க
க்கூடாது என்று நினைத்து, அழுகையை அடக்கி, மனம் இறுகியவளாய், குழந்தையை வீட்டின் ஒரு மூலையில் கொண்டு வந்து கிடத்திவிட்டு, மீண்டும் குளித்து சமைக்க ஆரம்பித்தாள்.
சாதுக்கள் வந்ததும், கமலாகர் அவர்களை உபசாரம் செய்ய, உணவு பரிமாறினார்கள். நாமதேவர், ஏதோ ஒரு வித இறுக்கமான அமைதியை உணர்ந்தார். பின்னர் அவர், உன் குழந்தையைக் கூப்பிடு, அவனுடன் சேர்ந்து உண்கிறோம் என்றார். சுமதி, ‘ஸ்வாமி, அவன் உறங்கிக் கொண்டிருக்கிறான், இப்போதுதான் சாப்பிட்டான்’ என்றாள். குழந்தையை எழுப்பி அழைத்து வா என்றார். அவள், எவ்வளவு எழுப்பியும் எழுந்திருக்கவில்லை என்றாள். நாமதேவரோ, குழந்தை வராமல் நாங்கள் உண்ணமாட்டோம் என்று சொல்ல, சுமதி செய்வதறியாது வேறு வழியில்லாமல் உண்மையைச் சொன்னாள்.
நாமதேவர், விட்டலா, இது என்ன சோதனை? அந்தக் குழந்தை எழுந்து வராமல், நாங்கள் உன் பிரசாதத்தை உண்ணமாட்டோம். உன் பக்தனை இவ்வாறு சோதிப்பாயா? என்று பாண்டுரங்கனிடம் பிரார்த்திக்க, குழந்தை தூக்கத்திலிருந்து விழிப்பதுபோல் விழித்து எழுந்து ஓடி வந்தது. சுமதியின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. குழந்தையை ஆரத் தழுவினாள். நாமதேவரை வணங்கினாள். குழந்தையுடன் சேர்ந்து சாதுக்கள் அனைவரும் உணவு உண்டார்கள். சாதுக்களும், நாமதேவரும் அவர்களை ஆசீர்வதித்து, குழந்தைக்கு ‘க்ருஷ்ண மந்த்ரம்’ உபதேசம் செய்து சென்றனர்.
ஒரு நாள் விட்டலன், வயதான ப்ராம்மண வேடம் பூண்டு, சுமதியிடம், எனக்குப் பசிக்கிறது, ஏதாவது கொடு என்றான். அவளும் பொருட்களை இரவல் வாங்கி சமைத்து, அவருக்கு உணவளித்தாள்.
வெளியே சென்றிருந்த கமலாகர் வீடு திரும்பியதும், கிழவனாக வந்த விட்டலனுக்குக் கால் அமுக்கிவிட, அவர்கள் மகன் விசிறினான். சுமதி உணவு உண்ண அழைத்தும்கூட, கமலாகர் செல்லவில்லை. பசியைப் பொருட்படுத்தாமல் கிழவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தார். ‘யோக நித்திரையில்’ இருந்து வெகு நேரம் கழித்துக் கண்விழித்த கிழவர், நீ போய் சாப்பிடு என்றதும் அனைவரும் உண்டனர். அப்போது கிழவர் விட்டலனாக தரிசனம் கொடுத்து, ‘உன் பணிவிடையில் மகிழ்ந்தேன்’ என்று திருவாய் மலர்ந்தருளினார். ‘எப்போதும் உங்கள் மனதில் நீக்கமற நிலைத்திருப்பேன்’ என்றும் வரமருளினார்.
கமலாகர், தன் மனைவி, மகனுடன் பகவானை எப்போதும் துதித்தபடி சந்தோஷமாக நாட்களைக் கழித்தார்.
72 ம் பகுதியுடன் கண்ணன் கதைகள் நிறைவடைந்தது.
———————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.