12. நாரணனும் ஒவ்வான்
மாலா யடியவர்பான் மாநிலத்தில் வந்துதித்த
நால்வேத மெய்ப்பொருளா நாரணனும் – சால
அருள்செய்த வேதாந்த வாரியரோ டொவ்வான்
இருளனைத்து மீங்ககற்றி யே. (12)
(பொழி.) அடியவர்களிடத்தில் அன்பு கொண்டவனாய், பெரிய இந்த மண்ணுலகத்தில் வந்து தோன்றிய, நான்கு வேதங்களுக்குரிய உண்மையான பொருளாக விளங்குகின்ற நாராயணனும் அறியாமையாகிய இருட்டை இவ்வுலகத்தில் போக்கி, மிகுதியான திருவருளைச் செய்த வேதாந்த ஆசாரியரோடு ஒத்திருக்க மாட்டான்.
(12) அடியவர் – பரன் திருவடிக் கடவாதே வழிபடுவார். “ பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும், கொண்டு, நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடிகுடி வழி வந்து ஆட்செய்யும், தொண்டர்.” (திருவாய்மொழி 9-2-1), “குடிக்கிடந்தாக்கஞ் செய்து நின்தீர்த்த அடிமைக் குற்றேவல் செய்து உன்பொன் அடிக்கடவாதே வழிவருகின்ற அடியர்” (௸ 9-2-2), தொடர்ந்து குற்றேவல்செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டர்.” ( ௸ 9-2-3), “நம்முடையடியர் “ ( ௸ 9-27), “ தேட்டருந்திறல் தேனினைத் தென்னரங்கனைத் திருமாது வாழ், வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்திமால்கொள் சிந்தை யராய், ஆட்டமேவியலந்தழைத்து அயர்வெய்தும் மெய்யடியார்கள் “ -(பெருமாள் திருமொழி 2-1), “ தோடுலா மலர்மங்கை தோளிணை தோய்ந்ததும் சுடர்வாளியால், நீடுமாமரம் செற்றதும் நிரைமேய்த்ததும் இவையே நினைந்து, ஆடிப்பாடி அரங்கவோ ! என்றழைக்கும் தொண்டர்” (௸ 2-2), “ஏறடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும்முன் இராமனாய், மாறடர்த்ததும் மண்ணளந்ததும் சொல்லிப்பாடி வண் பொன்னிப்பேராறுபோல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோயில் திருமுற்றம் சேறுசெய் தொண்டர்.” (௸ 2-3), “தோய்த்ததண் தயிர் வெண்ணெய் பாலுடன் உண்டலும் உடன்றாய்ச்சி கண்டு, ஆர்த்த தோளுடை எம்பிரான் என்னரங்கனுக்கு அடியார்களாய், நாத்தழும்பெழ நாரணா வென்றழைத்து மெய்தழும்பத் தொழுது, ஏத்தி இன்புறும் தொண்டர்’ (௸ 2-4), ‘ஆதியந்த மனந்த மற்புதமான வானவர் தம்பிரான் பாதமா மலர்கூடும் பத்தியிலாத பாவிகள் உய்ந்திட தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கனெம் மானுக்கே, காதல் செய்தொண்டர்” ( ௸ 2-6), “மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டுகிண்டு நறுந்துழாய், மாலையுற்ற வரைப் பெருந் திரு மார்வனை மலர்க்கண்ணனை, மாலையுற்றெழுந் தாடிப் பாடித் திரிந்து அரங்கனெம்மானுக்கே, மாலையுற்றிடும் தொண்டர்” ( ௸ 2-8), “ மொய்த்துக்கண் பனிசோர மொய்கள் சிலிர்ப்ப ஏங்கி யிளைத்து நின்று, எய்த்துக் கும்பிடு நட்டமிட்டெழுந்து ஆடிப்பாடி யிறைஞ்சி என், அத்தனச்சனரங்கனுக்கு அடியார்கள்” ( ௸ 29), அல்லிமாமலர் மங்கைநாதன் அரங்கன் மெய்யடியார்கள்” (௸ 2-10), ‘அடியார்” என்கிற இத்தாலே த்ரீதீயாக்ஷரத்திலே சொன்ன ஜீவவர்க்கமும், ஜீவர்களுக்கு ஈசுவரனைக் காட்டில் வேறுபாடும், அந்யோந்யம் பிரிவும் காட்டப்படுகிறது. “அடியார்? என்ருல் ஸர்வ ஸாதாரணமாக சதுர்த்தியில் சொன்ன தாதர்த்யவான்களையெல்லாம் காட்டிற்றேயாகிலும், இங்கு அடியார்” என்கிறது “யோஹ்யேநம் புருஷம் வேத தேவோ அபிநதம் விது:” என்னும்படி அபரிச்சேத்ய மாஹாத்ம்யரான சேஷத்வஜ்ஞாந ரஸிகரை. ”(ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகன் அருளிச் செய்த முநிவாஹந போகம்), “அருடரு மடியர்பான் மெய்யை வைத்துத், தெருடர நின்ற தெய்வநாயக“- (தேசிக மாலை. மும்மணிக்கோவை, 1), ‘திருமா லடியவர்க்கு மெய் யனார்”.- (௸. ௸, 2), நின்றனக்குநிகர் நின்னடி யடைவார்.” -( ௸. ௸.10); நால்வேத மெய்ப்பொருளா நாரணன்* ஸர்வே வேதா யத்பதமாமநந்தி “ (எல்லா வேதங்களும் எந்தப் பதத்தைப் பேசுகின்றனவோ), “ வேதைச்ச ஸர்வைரஹமேவ வேத்ய” (எல்லா வேதங்களாலும் நானே அறியப்படுபவன்), நாராயண பரா வேதா” (வேதங்களெல்லாம் நாராயணனைப் பேசுபவை), ‘உளன், சுடர்மிகு சுருதியுள்” (திருவாய்மொழி 1-1-7), “மறையாய நால்வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே.” (திருவாய்மொழி 3-1-10), ஒதுவாரோத் தெல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும் சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை” ( ௸ 3-1-6), வீடாக்கும் பெற்றியறியாது மெய் வருத்திக், கூடாக்கி நின்றுண்டு கொண்டுழல்வீர்! – வீடாக்கும் மெய்ப்பொருள் தான் வேதமுதற் பொருள்தான் விண்ணவர்க்கு நற்பொருள்தான் நாரா யணன்.” (இயற்பா நான்முகன் திருவந்தாதி. 13), “இனியறிந்தேன் ஈசர்க்கும் நான்முகற்குந் தெய்வம், இனியறிந்தேன் எம்பெருமான் ! உன்னை – இனியறிந்தேன், காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ நற்கிரிசை, நாரணன்நீ நன்கறிந்தேன் நான்.” ( ௸. ௸. 96); சால – மிகவும் ; இருளனைத்தும் ஈங்கு அகற்றியே- “ பேரிருள் சீப்பன “ -(சடகோபரந்தாதி, 2), ‘ஆதித்யராமதிவாகர அச்யுத பாநுக்களுக்குப் போகாத உள்ளிருள் நீங்கி, சோஷியாத பிறவிக்கடல் வற்றி, விகஸியாதபோதிற் கமலம் மலர்ந்தது வகுளபூஷண பாஸ்க ரோதயத்திலே” (ஆசார்யஹ்ருதயம்), ராமகிருஷ்ணாதி அவதாரங்கள் உலகத்தை நல்வழிப் படுத்துதலிற் பயன்பட்ட விதம் போதாதென்று அதன்பின் எம்பெருமான் பிரபஞ்சத்தவரைப் பிறவிப் பெருங் கடலினின்று கரையேற்றிக் கைப்பற்றுதற்கு ஆழ்வாராசார்யர்களை அவதரிப்பிப்பான் என்பது ஐதிகியம் ; நாரணனும் சால, அருள் செய்த வேதாந்த வாரியரோ டொவ்வான்- “அன்பர்க்கே யவதரிக்கு மாயனிற்க வருமறைக டமிழ்செய்தான் றாளே கொண்டு, துன்பற்ற மதுரகவி தோன்றக் காட்டுந் தொல்வழியே நல்வழிகடுணிவார் கட்கே” (தேசிக மாலை. அதிகார சங்கிரகம், 2 ஸ்ரீமதுரகவிகள் ஆழ்வார் திருவடிவாரத்திற்கு வரும்போது கண்ணன் இப்பூமியிலேதான் எழுந்தருளி யிருந்தான்; இதையறிந்தும் மதுரகவிகள் அவனைப் புறக்கணித்து, ஆழ்வாரையே சிறந்த கதியாகப் பற்றினதால் ஆயன் நிற்க, என்னப்பட்டது.) “நின்னிற் சிறந்த நின்றாளிணை யவை”-(பரிபாடல் 4-62. வீடளிக்குங்கால் நின்னினுஞ் சிறந்த நின்தாளிணையை யுடையை) “ஐந்தறிவார், இருளொன் றிலா வகை யெம்மனந் தேற வியம்பினரே,” (தேசிகமாலை அதிகாரச் சுருக்கு 11), ’மறைநூல் தந்த ஆதியர் அருளால் தேற இயம்பினர்’ (௸. ௸ 12), “துணை ஆம்பரனை வரிக்கும் வகை அன்பர் அறிவித்தனர்” ( ௸. ௸ 18). ஒவ்வான் “ என்பதை நன்கு ஆராய்ந்து தெளிக.
13. வைம்மின்
அகற்றி வினையனைத்து மந்தமிறஞ் சீராற்
சகத்திற் சதிராக வெம்மை – உகப்புடனே
உய்விக்கும் வேதாந்த தேசிகரா முத்தமரை
வைம்மின் மனந்தன்னில் வைகல்.
(பொழி) வேதாந்த தேசிகர்தான், மக்களது தீவினைகளை நீக்கி அவர்களைப் பக்தர்களாக வாழச் செய்பவர். அவரே, தமது சிறப்பான ஞானத்தினால் பக்தர்களை, சாமர்த்தியம் உள்ளவராக வாழவைத்து மகிழ்பவர். அதுவே, மக்கள் உய்யும் வழி. இப்படி உய்வகை காட்டும் உத்தமராகிய சுவாமி தேசிகனை, என்றும் மறவாது மனத்துள் வைத்துக் கொள்வது மக்களது கடமையாகும்.
(13) வினை – பாபம். ‘ வினைகா ளுமக்கினி வேறோ ரிடந் தேட வேண்டும்” -(பிள்ளையந்தாதி, 7), “மங்கிய வல்வினை நோய்காள்” -(பெரியாழ்வார் திருமொழி 5-2-4) “இருவினை பற்றறவோடும்” -(இராமாநுசநூற்றந்தாதி 43); சகத்தில் – உலகத்தில்; சதிர் – பெருமை, சிறப்பாக; சதிராக – நேர்த்தியாக ; வ்யாவ்ருத்தமாக, “எந்தை எதிராசனின்னருளுக் கென்று மிலக்காகிச் சதிராக வாழ்ந்திடுவர் தாம்’-(உபதேச ரத்தினமாலை. 73); உய்விக்கும் உஜ்ஜீவிப்பிக்கும் அகற்றி உய்விக்கும்- “மயக்கும் இருவினை வல்லியில்பூண்டு மதிமயங்கித், துயக்கும் பிறவியில் தோன்றிய என்னை துயரகற்றி, உயக்கொண்டு நல்கும் இராமாநுச!”-(இராமாநுசநூற்றந்தாதி. 101); உத்தமர் – அனைவரினும் மேம்பட்டவர், ‘ எங்கள் தூப்புல், மெய்த்தவன் உத்தமன்” -(பிள்ளையந்தாதி, 6.) “ உத்தமன் – இத்தை, இவர்களுக்கு ஒரு உபகாரம் பண்ணினானாகவன்றிக்கே தன் பேறாக நினைத்திருக்கிறபடி ; பிறரை ஹிம்ஸித்துத் தன் வயிற்றை வளர்க்க வேணுமென்று இருக்கு மவன் – அதமன் ; ’பிறரும் ஜீவிக்கவேணும், நாமும் ஜீவிக்க வேணும்’ என்று இருக்குமவன் – மத்யமன் தன்னையழிய மாறியாகினும் பிறர் ஜீவிக்கவேணுமென்று இருக்குமவன் – உத்தமன். ‘ பக்தாநாம் “ (** நதேரூபம் நசாகாரோ நாயுதாநி நசாஸ்பதம், ததாபிபுருஷாகாரோ பக்தாநாம்த்வம் ப்ரகாசசே.” தேவரீருடைய திவ்யாத்மஸ்வ ரூபமானது தேவரீருக்கு அன்று. தேவரீருடைய திவ்ய மங்கள விக்ரஹமும் தேவரீருக்கு அன்று. தேவரீருடைய திருவாழி முதலான ஆயுதங்களும் தேவரீருக்கு அன்று. ஆச்ரித விரோதி நிரஸநத்துக்காகவே. தேவரீருக்கு ஸ்தானமான பரமபதமும் தேவரீருக்கன்று. ஆனபோதிலும் அப்ராக்ருத திவ்யமங்கள விக்ரஹத்தை யுடையவராய்க் கொண்டு தேவரீர் ஆச்ரிதர்களுக்காகவே ப்ரகாசிக்கிறீர்.-(ஜிதந்தா ஸ்தோத்ரம், 5) ”அப்யஹம் ஜிவிதம் ஜஹ்யாம்” (“ அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் தீவாம் வாஸிதேஸலக்ஷ்மணாம், நதுப்ரதிஜ்ஞாம் ஸம்ச்ருதிய ப்ராஹ்மணேப்யோ விசேஷத” -(ஸ்ரீமத்ராமாயணம். ஆரண்யகாண்டம். 10-17. பிராட்டியைப் பார்தீதுச் சக்ரவர்த்தித் திருமகன் வார்த்தை.- ஸீதையே! நான் எல்லாவற்றாலும் ரக்ஷிக்கத்தக்க ப்ராணனையாகிலும் எனக்கு சரீரபூதஞன இலக்குவனை யாகிலும், என் ஆத்மாவில் பாதியான உன்னையாகிலும் விடுவேன். பிரதிஜ்ஞையை ஒருவன் பொருட்டுச் செய்து பின்பு அதை நழுவவிடமாட்டேன். ப்ரஹ்மஜ்ஞாநிகள் விஷயத்திற் செய்யப் பட்ட ப்ரதிஜ்ஞையையோ விசேஷமாகக் கை விடவேமாட்டேன்) என்றிருக்கை,” (திருப்பாவை, 3, மூவாயிரப்படி); வைம்மின் -வையுங்கள்; வைகல் – தினந்தோறும் * வைகலும் வெண்ணெய், கைகலந்து உண்டான், பொய்கலவாது என் மெய் கலந்தானே” (திருவாய்மொழி 1-8-5). “மாக வைகுந்தத்து மகிழ்வெய்துவர் வைகலுமே” (௸ 5-10-11). “வைகல் திருவண்வண்டூர் வைகும் இராமனுக்கு” (திருவாய் மொழி நூற்றந்தாதி. 51). “வைகலும் வைகல்வரக் கண்டு மஃதுணரார், வைகலும் வைகலை வைகுமென்-றின்புறுவர், வைகலும் வைகற்றம் வாழ்நாண் மேல்வைகுதல், வைகலை வைத்துணரா தார்.”-(நாலடியார். அறன்வலியுறுத்தல், 9).
14. ஈது ஒப்பது இல்லை.
வைகல் கவிவாதி சிங்க மறையவரைக்
கைகலந்து நாமங் கருதினால் – செய்கருமம்
ஈதொப்ப தில்லையிங் கிப்படியே யங்கமெனச்
சாதுசனங் காட்டுஞ் சதிர். (14)
(பொழி) கவியால் வாதிட்டு வழக்கிடுபவர்களுக்குச் சிங்கமாகத் தோன்றுகின்ற வேதாந்த தேசிகரை, நாள்தோறும், கைகூப்பி வணங்கி அவரது திருநாமத்தை (வாயால் சொல்லி) மனத்தில் கருதிக் கொண்டிருந்தால் (அதுவே) செய்யக்கூடிய நல்ல காரியமாகும். இந்த நற்செயலை ஒத்து விளங்கக் கூடியது வேறு எதுவும் இல்லை. இம் மண்ணுலகில் இதுவே ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு (பாகவதர் களுக்கு) அழகு என்று காட்டக்கூடிய சாதுரியமாகும்.
(14) மறையவர் – வேதமுணர்ந்த பிராமணர், வேதாந்தி; கலந்து – சேர்ந்து. “திருக்கலந்து சேரும் மார்ப!” , தேவதேவ தேவனே! இருக்கலந்த வேதநீ ஆகிநின்ற நின்மலா , கருக் கலந்த காளமேக மேனியாய்! நின்பெயர், உருக்கலந்தொழி விலாது உரைக்குமாறு உரைசெயே.” (திருச்சந்தவிருத்தம் 103); நாமங் கருதினால் – “துஞ்சும்போது அழைமின் துயர் வரில்நினைமின் துயரிலீர்சொல்லிலும் நன்றாம், நஞ்சுதான். கண்டீர் நம்முடைவினைக்கு நாராயணா வென்னும்நாமம்.” -(பெரிய திருமொழி 1-1-10); சாதுசனம்-சாதுக்கள்; சதிர்க்ருதக்ருத்யம், பெருமை “கேசவன்தமர் கீழ்மேலெம ரேழேழு பிறப்பும், மாசதிரிதுபெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா!” -(திருவாய்மொழி 7-1-1). “தமர்கள் கூட்ட நல்வினையை நாசஞ்செய்யுஞ் சதிர்மூர்த்தி தமர்கள்தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே”- (திருவாய்மொழி 8-10-9); கை கலந்து – “இப்படி “த்வதங்க்ரி முத்திச்ய” என்கிற ச்லோகத்திலே முமுக்ஷுவான அதிகாரியினுடைய அநந்ய தேவதாகத்வமும், அநந்ய ப்ரயோஜநத்வமும், இவன் ஸர்வஸ்வாமி திருவடிகளை உத்தேசித்துப் பண்ணுகிற அஞ்ஜலிக்குக் காலநியமமும், இத்தால் உபலக்ஷிதமான தேசநியமமும், வர்ணாச்ரமாதிகார நியமமும் ப்ரகாரநியமமும், ஆவ்ருத்திநியமமும் என்றவிவை இல்லாத படியையும், இதினுடைய ஆசுகாரித்வமும், அசேஷ தோஷநிவர்த்தகத்வமும், அசேஷ கல்யாண காரணத்வமும், அநுபந்திரக்ஷகத்வமும், அக்ஷய பலப்ரதாநத்வமும், பலரூபஸ ஜாதீய பரிணதிமத்த்வமும் என்கிற ப்ரபாவங்களையும், இது அநந்யப்ரயோஜ நனானப்ரபத்தி நிஷ்டனுக்கும் ப்ரயோஜநாந்தர பரனுக்கும் நிற்கிற நிலைகளையும் அநுஸந்தித்தால், கைகளைக் கட்டின அஞ்சலி ஒருவருக்கும் கைவிட வொண்ணாதபடி நிற்கும்.*-(அஞ்சலிவைபவம்). ‘கண்ணன் கழறொழக் கூப்பிய கையின் பெருமைதனை, யெண்ணங் கடக்க வெமுனைத் துறைவ ரியம்புதலாற், றிண்ண மிதுவென்று தேறித் தெளிந்தபின் சின்மதியோர், பண்ணும் பணிதிகள் பாற்றிப் பழந்தொழில் பற்றினமே.” (தேசிகமாலை. அமிருதாசுவாதினி. 24. கைகளைக் கூப்புவது அஞ்சலி, ஈதோர் அடையாளம். இது கண்டு பகவானுக்கு உண்டாகும் மகிழ்ச்சி உரைக்கும் தரமன்று. எம்பெருமானிடம் பரந்யாஸம் செய்தவன் தன்னைக் காத்துக்கொள்ள வேறொரு காரியமும் செய்யாதவாறு நிற்கும் நிலையையும் காட்டுவது இவ்வடையாளம்) “ஐச்வர்யமக்ஷரகதிம் பரமம் பதம்வா கஸ்மைதஞ்சலிபரம் வஹதேவிதீர்ய, அஸ்மை நகிஞ்சிது சிதம் க்ருதமித்யதாம்ப த்வம் லஜ்ஜஸே கதய கோயமுதாரபாவ:” –(ஸ்ரீகுணரத்நகோசம். 58. ‘ஹே அம்மா! கைகூப்புதல் என்கிற அஞ்சலியைச் செய்தவனுக்கு ஜாத்யாதி வைஷம்யமன்றியில் இஹலோக ஐச்வர்யம், கைவல்யம், பரமபதம் இவைகளெல்லா வற்றையும் நீர் கொடுத்தாலும் “இவ்வளவு சுமைசுமந்தவனுக்கு இதுதானா நாம் கொடுக்கிறது. சரியானகூலி நாம் கொடுக்க வில்லையே?” என்று வெட்கப்படுகிறீர். இவ்வளவு ஒளதார்யம் எங்கிருந்து உம்மால் அப்யஸிக்கப்பட்டதோ நீர்தான் சொல்ல வேணும்.”) “ஹஸ்தீச துக்க விஷதிக்த பலாநுபந்தி ந்யாப்ரஹ்மகீட மபராஹத ஸம்ப்ரயோகே, துஷ்கர்மஸஞ்சய வசாத்துரதி க்ருமேந: ப்ரத்யஸ்த்ர மஞ்சலிரஸெள தவநிக்ரஹாஸ்த்ரே.” -(ஸ்ரீவரதராஜபஞ்சாசத், 30. “அத்தீச துக்கமாமால மார்ந்த பலமுற்ற தாகி யமர, எத்தாலுந் தாக்க வியலாததாகி யிறையாதி கீடம் வரையே, வித்தார மாமெம் வினையால் விலக்க வொண்ணாத தாகி யிலகு, மத்தாவு னிக்ர கத்தம் மெதிர்க்கு மம்பெங்க ளிவ்வஞ் சலியே”- ஏ! ஹஸ்தீச! துக்கம் என்கிற விஷத்தால் பூசப்பட்ட (ஸம்ஸார) பலத்துடன் (பலம் — பாணத்தின்முனை) சம்பந்தப் பட்டிருக்கிறதும், பிரமன் முதல் புழுவரையிலும் ஒருவராலும் எவ் விதமும் தடுக்க முடியாததாய் தன் கார்யத்தை முடித்துக் கொள்வதில் ஸாமர்த்யமுடையதும், விஸ்தாரமாக பாவங்களைச் செய்திருக்கும் அடியோங்களால் விலக்க முடியாததுமான உன் நிக்ர ஹாஸ்த்ரத்திற்கு ப்ரத்யஸ்த்ரம் அடியோங்களுடைய இந்த அஞ்சலியே.-தவிர வேறே யொன்றுமில்லை.”)
15. மயங்குவதே
சதிருடையோம் யாமென்றுந் தம்மையெண்ணி யிங்கே
எதிரெமக்கி யாரென்று மெண்ணி – மதியில்லா
மானிடர்க ளந்தோ மயங்குவதே வாதிசிங்கந்
தானிருக்க விங்கே சதிர்த்து.
(பொழி) அறிவில்லாத மக்களே! வாதிடுபவர்களுக்கெல்லாம் சிங்கமாகத் தோன்றும் வேதாந்த தேசிகர் இங்கு அவதாரம் செய்திருக்க, நீங்கள், ‘நாம் அழகு உடையோம்’ என்று உங்களை எண்ணிக்கொண்டும், ‘எமக்கு எதிராக எண்ணிக் கொண்டும்’ உங்கள் உடல் வலிமையில் மயங்குகின்றீர்களே! என்னே அறியாமை! (நீங்கள் பரிதாபத்துக்கு உரியவர்களே!)
(15) சதிர் – சாதுரியம், “ சார்வது சதிரே” (திருவாய் மொழி 2-10-1 ’திருமலையைக் கிட்டுமிதுவே இவ்வாத்மாவுக்குச் சதிர் ; அல்லாதவையெல்லாம் இளிம்பு. “கண்ணுக் கிலக்கான விஷயங்களை விட்டு வேறே சிலவற்றைப் பெறுகைக்கு யத்நியா நின்றிகோளி” என்று நினைத்திருக்குமதுவே இளிம்பு “ இதுவே சதிர் “ – ஈடு), “சதிரிளமடவார்” (திருவாய்மொழி 2-10-2. “சதிரை யுடையராயிருப்பர்கள் – பிறரை யகப்படுத்திக் கொள்ளுகைக்கீடான விரகையுடையராயிருப்பர்கள், செத்துக் காட்டவுங்கூட வல்லராயிருக்கை. சதிரையும் பருவத்தினிளமை யையுங் காட்டியாயிற்று அகப்படுத்துவது. கீழே “கிளரொளி யிளமை” என்றதே, அப்பருவங்கண்டவிடத்தே இழுத்துக் கொள்ளும் முதலைகளாயிற்று விஷயங்கள்,” ஈடு); மதி — புத்திதத்துவம், அறிவு. மதிநுட்பம் – இயற்கையாகிய, நுண்ணறிவு “மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம், யாவுள முன்னிற்பவை,” (திருக்குறள், அமைச்சு. 6. “இயற்கையாகிய நுண்ணறிவைச் செயற்கையாகிய நூலறிவோடு உடைய அமைச்சர்க்கு மிக்க நுட்பத்தையுடைய சூழ்ச்சிகளாய் முன்னிற்பன யாவையுள. மதி நுட்பமென்றது பின்மொழி நிலையல். அது தெய்வந்தர வேண்டுதலின் முற்கூறப்பட்டது.) மதியாவது மூவகைப்படும், அதமம் மத்யமம் உத்தமம் என்று. அவற்றில் அதமமதியாவது தேவதாந்தரங்களுக்கு சேஷமென்றிருக்கை, மத்யமமதியாவது எல்லாம் அவன் மூர்தீதியாகையால் எல்லாத் தெய்வங்களுக்கும் நாம் சேஷமென்றிருக்கை. உத்தமமதியாவது எம்பெருமானுக்கே சேஷமென்றிருக்கை, “துய்யமதி – பெற்ற மழிசைப்பிரான்” (உபதேசரத்தினமாலை.12. ‘என் மதிக்கு விண்ணெலாமுண்டோ விலை” (நான்முகன் திருவந்தாதி 51) என்று தாமும் ஆதரித்துப்பேசும்படியாயிறே யிருப்பது. மதிக்குத் தூய்மையாவது – தேவதாந்தரங்கள்பக்கல் பரத்வபுத்தியாகிற மாலிந்ய மற்றிருக்கை”); மானிடர் – மனிதப்பிறவியடைந்தோர்; அந்தோ – “யாவரணுகப் பெறுவார்? இனியந்தோ!” (திருமொழி 9-8-9), (“அந்தோ! அணுகப்பெறுநாள் என்று எப்போதும் சிந்தை கலங்கித் திருமால் என்று அழைப்பேன்.” (திருவாய்மொழி 9-8-10); மயங்குவதே – அறிவுகலங்குதலே; சதிர்த்து – “அன்பனாயடியேன் சதிர்த்தேனின்றே” – (கண்ணி நுண்சிறுத்தாம்பு, 5. “அபூர்ணமானபகவத் விஷயத்திலே அடியனுமவனாகாதே பூர்ணரான வாழ்வாருக்கு அடியேனாய் சதுரனானேனென்கிறார். ஸ்திரீகளை விச்வஸித்து இளிம்பனான நான் ஆழ்வாரைப்பற்றி இன்று சதுரனானேனென்றுமாம் – நஞ்ஜியர் வியாக்கியாநம்.” “சதிர்த்தேன் — ஈச்வரசேஷமான வாத்ம வஸ்துவை என்னதென்றிருக்கைக்கும் இதரவிஷயப்ரவணனாகைக்கும் மேற்பட சதிர்க்கேடில்லை யிறே. அவற்றைவிட்டு பகவச்சேஷத்வத்தளவிலும் நில்லாதே ஆழ்வாரளவும் வருமவனாம்படியான சதிரையுடையவனானேன். ஆசார்யர்களை நம்பியென்கைக்கும், அவர்களழைத்தால் அடியேன் என்கைக்கும் ஹேது ச்ரீ மதுர கவிகள் வாஸநையாய்த்து. – நம்பிள்ளை ஈடு. “ “சதிர்த்தேன் – சதிரையுடையனானேன். ஈச்வரசேஷமான வாத்ம வஸ்துவை என்னதென்றிருக்கைக்கும் இதரவிஷய ப்ராவண்யத்துக்கும் மேற்பட சதிர்க்கேடில்லையிறே. அவற்றைவிட்டு பகவத் விஷயத்தளவிலே நில்லாதே ஆழ்வாரளவும் வரும்படியான சதிரையுடைய னானேன், – பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யாநம்,” “ சதிர்த்தேன் – சதிரனானேன், “மோக்ஷயிஷ்யாமி” என்றவன் முழங்கைத் தண்ணீர் பார்த்திராதே” (பகவற்கீதை 18.66) ஆழ்வாருடைய ப்ரபாவத்தை யிட்டு வென்றேன். (நம்பிக் கன்பனாய் சதிர்த்தேன்) – “மாற்பால் மனம் சுழிப்பமங்கையர் தோள்கைவிட்டு” (மூன்றந்திருவந்தாதி. 14) என்கிறபடியே ஆழ்வாருக்கன்பனாய் அந்ய விஷயங்களை வென்றேன், (நம்பிக்கன்பனாயடியேன்) – ஆத்மாத்மீயங்களிரண்டும் ஆழ்வாரதாய்த்து, அவர்தாம் “யானேநீ என்னுடைமையும் நீயே” (திருவாய் மொழி 2-9-9) என்று தத்விஷயத்திலே ஸமர்ப்பித்தாப்போலே, (மடவாரையும் நம்பினநான் சதிர்த்தேன்) அவர்கள் சதிரிளமடவாராகையாலே இளிம்புபட்டநான், ஆழ்வாரை யண்டைகொண்டு சதிரனாய்விட்டேன்.” – அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் வ்யாக்யாநம்.)
16. மதித்தார்
சதிர்த்தா ரவர்காண்மின் றாரணியின் மீதில்
எதிர்த்தாரு மிப்பவ நீங்க – மதித்தார்
கவிவாதி சிங்கத்தைக் காதலுடன் கண்டு
புவியிடத்துப் புண்ணிய ரானார். (16)
(பொழி) இந்த மண்ணுலகத்தில் தம்மை எதிர்த்து வாதிடுபவரும், இந்தப் பிறவி நீங்குவதற்காக உபாயம் செய்தவர் அந்த வேதாந்த தேசிகர்தான். இதனை நன்கு தெரிந்து கொள்ளுங்கள். கவிகளால் வாதிடக்கூடிய எதிரிகளுக்குச் சிங்கமாகத் தோன்றும் அந்த தேசிகரை, அன்புடன் நோக்கி, அவரை மனதால் போற்றி மதித்தவர், இந்த உலகத்தில் புண்ணியம் செய்த நல்லவராக விளங்குவார்கள்.
(16) தாரணி – பூமி. “தசரதன் மதலையாய் வருதுந் தாரணி”. — (இராமாவதாரம், பாலகாண்டம், திருவவதாரப் படலம். 22); பவம் – ஸம்ஸாரம். ‘நிறுத்தார் பவத்தி னெடுநா ளுழன்றமை கண்டு — (தேசிகமாலை, பரமபதசோபாநம். 4. “ஆராய்ந்துபார்த்து நிறைந்த ஸம்ஸாரத்தில் வெகுகாலம் வருந்தியது கண்டு “), “ஊனேறு பவக்குழியை வெறுத்து, ” — -(தேசிகமாலை, பரமபதசோபாநம், சிறப்புத்தனியன், “சரீரத்தையே வ்ருத்திசெய்கிற ஸம்ஸாரமாகிய படுகுழியை வெறுத்துத்தள்ளி,”. காதல் – பக்தி, ஆசை; புவி – பூமி, “நிறையிரும்புவியை முன்போனிலைபெற நிறுவிற்றன்றே.” — (கூர்மபு, அந்தகா 6) ; புண்ணியர் – ஸ்ரீ தேசிகனை இடைவிடாது அநுபவிக்கும் பாக்கியசாலிகள், தருமவான்கள், “புண்ணியம் புரிந்தோர்”— (இராமா. பால. நகரப். 5), “புண்ணிய!”– (பால. பரசுராமப், 40.)
17. அமரரோ! மற்றவரோ!
ஆனா ரிவரார்தா மந்தமில் பேரின்ப
வானாட் டமரரோ மற்றவரோ – தேனாரும்
பங்கயத்தா ணாதன்போற் பாடும் புகழுடைய
எங்கவிஞர் சிங்கத்தின் பா.
(பொழி.) தேன் நிறைந்த தாமரை மலர் போன்ற திருவடிகளை உடைய நாதமுனிகளைப் போன்று, தமிழ் மறையைப் பாடக்கூடிய புகழைப் பெற்றிருக்கின்ற எமது கவிஞராகிய சிங்கத்திடத்தில் ஒன்றியவராக இருக்கும் இவர் யார்? முடிவு இல்லாத பேரின்பம் நிறைந்த வானுலகத்தில் உள்ள தேவரோ? மண்ணுலகத்தில் உள்ள மக்களோ?
(17) அந்தமில் பேரின்பவானாட்டு அமரர் – “ வந்தவர் எதிர்கொள்ள மாமணி மண்டபத்து, அந்தமில்பேரின்பத்து அடியர்” — (திருவாய்மொழி 10-9-11); அந்தமில் பேரின்பம் – முடிவில்லாத நிரதிசயவின்பம்; அமரர்– த்ரிபாத்விபூதி யோகத்தைப்பற்றச் சொல்லுகிறது. பரம ஸாம்யாபந்நராயிருக்கையாலே ஒலக்கமிருந்தாலாயிற்று, அவர்களுக்கும் அவனுக்கும் வாசியறியலாவது; பிராட்டிமாராலேயாதல், ஸ்ரீ கெளஸ்துபாதிகளாலே யாதல் சேஷியென்று அறியுமத்தனை — (திருவாய்மொழி 1-1-1) ஈடு.” தேன்ஆரும் – தேன்நிரம்பிய ; புகழ் – கீர்த்தி, “புகழும் நல் ஒருவன்” — (திருவாய்மொழி 3-4-1), “ நாள் தோறும் பாடிலும் நின்புகழே பாடுவன்”– (முதல் திருவந்தாதி,88), “ புகழொன்று மால் “-(திருவாய்மொழி நூற்றந்தாதி. 24); நாதன் – எப்பொருட்குமிறைவன். “சங்குசக்கரம் அங்கையில்கொண்டான், எங்கும் தானுய, நங்கள்நாதனே,” – – (திருவாய்மொழி 1-8-9, “நங்கள் நாதனே — நம்மையெழுதிக் கொள்ளுகையே ப்ரயோஜநமாக. – ஈடு). “நாதன் ஞாலங்கொள், பாதன் என்னம்மான், ஒதம்போல்கிளர், வேதநீரனே.”- – (திருவாய்மொழி 1-8-10); கவிஞர் சிங்கம் – “கச்சிநகர் வந்துதித்த பொய்கைப்பிரான் கவிஞர்போரேறு” –(முதல் திருவந்தாதி, தனியன் “கவிஞர் போரேறு என்கையாவது கவிச்ரேஷ்டர் என்றபடி, முதலாழ்வார்கள் மூவரில் முதலானவராகையாலே ‘ஆதிகவி’ என்னும்படியான அதிசயத்தையுடைய ராயிருப்பர். படைத்தான் கவியாலும், பரகாலகவியாலும் “செஞ்சொற்கவிகாள்” என்றும், ‘செந்தமிழ் பாடுவார்’ என்றும் கொண்டாடப்படுமவராய் நாட்டிற்கவிகளுக்கும் விலக்ஷணகவியாயிருப்பர். இது பொய்கையார் வாக்கிற் கண்டு கொள்க’ என்றிறே தமிழ் கூறுவது. அந்த வேற்றமெல்லாவற்றையும் பற்ற ’கவிஞர் போரேறு’ என்கிறது.”); பா – பாட்டு, தூய்மை ; கவிஞர் சிங்கத்தின்பா – “ நொண்டிச்சிந்து “ சிங்கம் வருகிறதைப் பார் கவிவாதி சிங்கம் வருகிறதைப்பார். (சிங்). வேதாந்தாசார்ய ரென்று வேதியர்கள் விருதூத, வேதவொலி முழங்க, வாதியர்கள் பயந்தோட, (சிங்). ஸர்வார்த்தஸித்தி என்னும் கவசமணிந்து கொண்டு, சததூஷணி என்னும் கர்ஜனைகள் செய்துகொண்டு, (சிங்). பரமதபங்கமென்னும் பற்களின் ஒளிவீச, பரவாதியர்கள் பல முகமாய்ப் பயந்தோட (சிங்). ந்யாயஸித்தாஞ்ஜனம் ந்யாய பரிசுத்தி என்னும், ஜ்ஞானக்கண்கள் ஒளிவீச மெளனமாய் வாதியர்கள் நிற்க, (சிங்), ஐந்துரக்ஷை என்னும் அங்கை உகிரைக் கண்டு, அஞ்சியே வாதியர்கள் பஞ்சுபோல் பறந்தோட (சிங்). திருவடிதொழுதேத்தும் நரஸிம்மதாஸன் தன்னை, அருள்மழை பொழிந்திட அன்புடனே நோக்கம்கொண்டு, (சிங்)”– (தமிழர் தொழுவேதாந்த வாசிரியன், திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்க வெளியீடு 16), “பா வளருந்தமிழ்”– (தேசிக மாலை, பரமபதஸோபானம், 18)
18. இன்பம் பெறலாம்.
இன்பம் பெறலா மிமையோர்த நற்பதமும்
அம்புவியோ டாளலா மாங்கே – செம்பவள
வாயான் மலர்ப்பதத்தான் வண்மையுடை வேதாந்த
தேசிகனைச் சிந்திப்பார்க் கின்று. (18)
(18) இன்பம் பெறலாம் – “ நாவினால் நவிற்றின்ப மெய்தினேன்” -(கண்ணிநுண் சிறுத்தாம்பு. 2). “ அடியை யடைந்து உள்ளம்தேறி, ஈறிலின்பத்திருவெள்ளம் யான் மூழ்கினன்” – (திருவாய்மொழி 2-6-8) “ இன்பம் வளர” – (திருவாய்மொழி 2-7-9); இமையோர் – இமையவர் – கண்ணிமையாதவர், எப்பொழுதும் எம்பெருமானையே ஸேவித்துக் கொண்டிருப்பவர், அகநோக்காகிய ஞானக்கண் குவியாதவர், பரமபதத்தில் எம்பெருமானை ஸேவிப்பதற்குப் பிரதிபந்தக மொன்றுமில்லாமையாலே அங்கு அவனைக்கண்டு ஆநந்திப்பதையே பொழுதுபோக்காகவுடைய விண்ணுலகத்து அடியார்கள். இமை – ஒளி, “மாசுஅற இமைக்கும் உறவினர்”- (திருமுருகாற்றுப்படை 128, எக்காலத்தும் நீராடுதலின் அழுக்கற விளங்கும் வடிவினையுடையவர் – நச்சினார்க்கினியருரை), தேவருடைய மேனிகள் எப்போதும் மழுங்காமல் மிக்க ஒளியைப் – பிரகாசத்தை உடைத்தாய் இருக்கும். “இருளிரியச்சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி” – (பெருமாள் திருமொழி 1-1), “விடுசுடர் இமைக்கும் பூணான்”- (சீவகசிந்தாமணி 213) “கதிர்பரந்து இமைக்கும் மேனியன்” (சீவகசிந்தாமணி 950), “மணிபரந்து இமைக்கும் மேனியன்” – (சீவகசிந்தாமணி 2266), “இமை” என்னும் உரிச்சொல் “ஒளி – பிரகாசம்” என்னும் பொருளைச் சுட்டுகின்றது. ** “இமையோர்தலைவா!” – (திருவிருத்தம். 1. “ஸ்வ ஸ்வாமி பாவஸம் பந்தம் ஒத்திருக்கச்செய்தே, அநாதி கர்மவசத்தாலே நாங்கள் இழந்துகிடக்க, நித்யஸூரிகள் நித்யாநுபவம் பண்ணும்படி ஸர்வஸமனான ஸர்வஸ்வாமியானவனே” – (உபகார ஸங்க்ரஹம்) ; அம்புவி – அங்கண்மா ஞாலம்; இன்பம் – “நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும் நிறைவேங்கடப்பொற் குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும், உன்தனக்கு. எத்தனையின்பந்தரும் உன்னிணைமலர்த்தாள், என்தனக்கும் அது இராமாநுச! இவை ஈந்தருளே”.- (இராமாநுச நூற்றந்தாதி. 76). “இடுமே இனிய சுவர்க்கத்தில்? இன்னும் நரகிலிட்டுச் சுடுமே? அவற்றைத் தொடர்தருதொல்லை சுழல் பிறப்பில், நடுமே? இனி நம் இராமாநுசன் நம்மை நம் வசத்தே விடுமே? சரணமென்றால் மனமே? நையல்மேவுதற்கே.”, – (இராமாநுச நூற்றந்தாதி 98); “இன்பம்……ஆளலாம்” – “ நீதியனு போகநெறி நின்றுநெடு நாளதினி றந்து சகதண்ட முழுதுக், காதிபர்க ளாயரசு செய்துளநி னைத்ததுகி டைத்தருள்பொறுத்துமுடிவிற் சோதிவடி வாயழிவில் முத்திபெறு வாரெனவு ரைத்தசுரு தித்தொகைகளே.”- (இராமாவதாரம், காப்பு முதலியன. 19); செம்பவளவாயான் — சிவந்த பவழம்போன்ற வாயை யுடையவன். “செம்பவளத்திரள்வாய்” – (பெருமாள் திருமொழி. 10-8); செம்பவள ……….வேதாந்த தேசிகன் – “வடிவழ கார்ந்தவண் டூப்புல்வள்ளல்”- (பிள்ளையந்தாதி. 20); சிந்திப்பார்க்கு – “சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினலும் தேவபிரானையே, தந்தைதாயென்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்”- (திருவாய்மொழி 6-5-11) சிந்தை மற்றென்றின் திறத்ததல்லாத்தன்மை தேவபிரானறியும், சிந்தையினால் செய்வதானறியாதன மாயங்கள் ஒன்றுமில்லை, சிந்தையினல் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர் குழுவணங்கும், சிந்தைமகிழ் திருவாறன்விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.” – (திருவாய்மொழி 7-10-10), ‘நல்லோர், சீரினில் இன்று பணிந்தது என் ஆவியும் சிந்தையுமே.”- (இராமாநுச நூற்றந்தாதி, 68), “சிந்தையினேடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள், அந்த முற்றாழ்ந்தது கண்டு அவை யென்தனக் கன்றருளால், தந்த அரங்கனும் தன்சரண் தந்திலன் தானது தந்து எந்தை இராமாநுசன் வந்தெடுத்தனன் இன்று என்னையே.” –(இராமாநுச நூற்றந்தாதி. 69) – “பெயரினையே, புந்தியால் சிந்தியாது ஒதியுருவெண்ணும், அந்தியாலாம் பயனங்கென்” — (முதல் திருவந்தாதி. 33), “மூப்புஉன்னைச் சிந்திப்பார்க்கில்லை திருமாலே.” – (முதல்திருவந்தாதி, 75); இன்று – திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் திகழும், அருக்கனணி நிறமும் கண்டேன் – செருக்கிளரும், பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன், என்னாழி வண்ணன்பால் இன்று” -(மூன்றாந்திருவந்தாதி. 1) “இன்றே கழல் கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன்” (௸, 2), “அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர், சிறியார் சிவப்பட்டார் செப்பில் – வெறியாய மாயவனை மாலவனை மாதவனையேத்தாதார், ஈனவரே யாதலால் இன்று” – (நான்முகன் திருவந்தாதி. 6), “இன்றாக நாளையேயாக இனிச்சிறிதும், நின்றாக நின்னருள் என்பாலதே – நன்றாக, நான் உன்னையன்றியிலேன் கண்டாய் நாரணனே! நீ யென்னை யன்றியிலை.” – (நான்முகன் திருவந்தாதி. 7), “ஒன்றே செய்யவும்வேண்டும் அதுவும் நன்றே செய்யவும் வேண்டும் அதுவும் இன்றே செய்யவும் வேண்டும். “
19. துயரம் அடையார்
இன்று நிகமாந்த தேசிகனை யெண்ணுவார்
ஒன்று மடையா ருறுதுயரம் – குன்றெடுத்த
மாயன் மலரடிக்கீழ் வாழ்ச்சி பெறுவரே
மாயும் வினையனைத்து மற்று. (19)
(பொழி) இன்றைய நல்ல நாளில், வேதாந்த தேசிகனை மனத்தில் நினைத்துக் கொண்டிருப்பவர்கள், (மேலும்) கோவர்த்தனகிரியைக் குடையாக ஏந்திய ஆச்சரியமான செயலினனாகிய கண்ணபிரானது திருவடிக்கீழ் வாழும் வாழ்க்கையை அடைவார்கள். அதனால் அவர்கள் பாபங்கள் எல்லாம் அகன்றுவிடும். (“மற்று” அசைநிலை.)
(19) நிகமம் — வேதம். “நிகமமெனிலொன்றுமற்றுநாடொறு” — (திருப்பு. 145. நியமமாகவுணர்தற்கருவி என்க.) “நிகமாந்த தேசிகன் – வேதாந்த தேசிகன் துயரம் – துன்பம் “இம்மூன்று-மருந்துயரங் காட்டு நெறி. – (திரிகடுகம். 5), துக்கம். — “துயரமேதரு துன்பவின்ப வினைகளாய்”.-(திருவாய் மொழி. 3-6-8); எண்ணுவார் ஒன்று மடையாருறுதுயரம் – “விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினை தொழுமின்தூய மனத்தராய் இறையும் நில்லா துயரங்களே.” -(திருவாய்மொழி 3-6-7); குன்றெடுத்த மாயன் – “குன்ற மேந்திக் குளிர்மழை காத்தவன், அன்று ஞாலம் அளந்த பிரான் பரன், சென்று சேர் திருவேங்கடமாமலை, ஒன்றுமே தொழ நம் வினை ஒயுமே.” — (திருவாய்மொழி 3-3-8); மாயன் – அதிசயச் செய்கையன். “மாயன் என்னெஞ்சினுள்ளான் மற்றும் யவர்க்கும் அஃதே, காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே.” -(திருவாய்மொழி 1-9-6) மலரடிக்கீழ்வாழ்ச்சி – “ நின் தாளிணைக்கீழ், வாழ்ச்சி”- (திருவாய்மொழி 3-2-4); வாழ்ச்சி – வாழ்க்கை, செல்வம், வாழ்தல், வாழ்நாள்; பெறுவர் – அடைவர்; மாயும் – மறையும்; மற்று – அசைநிலை, பிறிது, வினைமாற்று. இம்மூன்று பொருளையுந் தரும் இடைச்சொல்.
- சித்தந் தெளியும்.
மற்றொன்றுஞ் சேரா மனக்கவலை மானிடர்க்குச்
சித்தந் தெளியுஞ் சிறப்புடனே – குற்றமில்சீர்
தூப்புனகர் வந்துதித்த தூய மனத்தரையே
சேர்ப்பரேல் சிந்தைதனித் தே. (20)
(பொழி) புகழோடு குற்றம் இல்லாத சிறப்புடைய தூப்புல் என்ற நகரத்தில் வந்து அவதாரம் செய்த தூய்மையான மனத்தை உடைய தேசிகரையே, தனித்த சிந்தையில் இடைவிடாது நினைப்பவரானால், அத்தகைய மக்களுக்கு, மனத்தை வாட்டும் துன்பம் எதுவும் வாராது.(அதற்கு மேல்) அவரது மனமும் தெளிவு பெறும்.
(20) மற்றென்றுஞ் சேரா – “மற்றொருபேறுமதியாது”. – (இராமாநுச நூற்றந்தாதி 57); “மற்றென்றும் வேண்டா மனமே!”– (திருமாலைத்தனியன்); மனக்கவலை – மனத்தின் கணிகழுந் துன்பங்கள். “தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லான், மனக்கவலை மாற்றலரிது.” — (திருக்குறள் கடவுள் வாழ்த்து. 7. “தாள் சேராதார் பிறவிக் கேதுவாகிய காம வெகுளி மயக்கங்களை மாற்ற மாட்டாமையின், பிறந்து அவற்றான் வருந் துன்பங்களுள் அழுந்துவரென்பதாம்.”); சித்தம் – மனம்; தெளியும் – தெளிவுபடும்; தூப்புனகர் வந்துதித்த தூயமனத்தர் – “தூப்புற் புனிதர்”– (பிள்ளையந்தாதி. 7); தூயமனத்தர் – “புறந்தூய்மை நீரானமையு மகந்தூய்மை வாய்மையாற் காணப் படும்.”-(திருக்குறள். வாய்மை. 8. “ஒருவனுக்கு உடம்பு தூய்தாந் தன்மை நீரானே யுண்டாம் ; அதுபோல மனந்தூய்தாந்தன்மை வாய்மையானுண்டாம். காணப் படுவதுள்ளதாகலின், உண்டாமென்றுரைக்கப் பட்டது. உடம்பு துாய்தாதல் வாலாமை நீங்குதல். மனந்தூய்தாதல் மெய்யுணர்தல். புறந்தூய்மைக்கு நீரல்லது காரணமில்லாதாற்போல, அகந்தூய்மைக்கு வாய்மையல்லது காரணமில்லை யென்றவாறாயிற்று. இதனானே துறந்தார்க்கு இரண்டு தூய்மையும் வேண்டுமென்பதூஉம் பெற்றாம்.”) தூப்புற்கோமான் இல்லறத்துறவியிறே. மாந்தர்க்குப் பொதுவுணர்வு மனங் காரணமாகவுண்டாம். மனந்தூய னாதலாவது விசேடவுணர்வு புலப்படுமாறு இயற்கையாய அறியாமை யினீங்குதல். மனந்தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்றாகும். நிலைபெற்ற வுயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும். ஒருவற்கு மனநன்மையானே மறுமையின்பமுண்டாம். ஒருவன் தன் மனத்தொடு பொருந்த வாய்மையைச் சொல்வானாயின் அவன் தவமுந் தானமும் ஒருங்கு செய்வாரினுஞ் சிறப்புடையன். தத்தமக்கு இயலுந் திறத்தான் அறமாகிய நல்வினையை ஒழியாதே அஃதெய்துமிடத்தா னெல்லாஞ் செய்க. இயலுந் திறமாவது இல்லறம் பொருளளவிற்கேற்பவும், துறவறம் யாக்கைநிலைக் கேற்பவுஞ் செய்தல். ஓவாமை இடைவிடாமை. எய்துமிடமாவன மனம் வாக்குக் காயமென்பன. அவற்ருற் செய்யும் அறங்களாவன முறையே நற்சிந்தையும் நற்சொல்லும் நற்செயலுமெனவிவை. இதனால் அறஞ் செய்யுமாறு அறியலாம். அவ்வாற்றான் அறஞ்செய்வான் தன் மனத்தின்கட் குற்றமுடையனல்லனாகுக ; அனைத்தளவே அறமாவது; அஃதொழிந்த சொல்லும் வேடமும் அறமெனப்படா, ஆரவார நீர்மைய. குற்றம் தீயன சிந்தித்தல். பிறரறிதல்வேண்டிச் செய்கின்றன வாகலின், ஆகுல நீரவென்றார். மனத்து மாசுடையனாய வழி அதன் வழியவாகிய மொழி மெய்களாற் செய்வன பயனிலவென்பதும் கூருமலே விளங்கும் ; சேர்ப்பரேல் – இடைவிடாது நினைப்பரேல்.
- நெஞ்சு உருகும்
தேறு மனக்கலக்கஞ் சிக்கென வாந்தேசும்
மாறு மறமனைத்தும் வண்புகழோர் – கூறும்
குணத்தன் குளிர்சோலைத் தூப்புனகர்க் கோமான்
குணத்திற் குருகுமென் னெஞ்சு. (21)
(பொழி) நிறைந்த புகழுடையோர் போற்றிக் கூறிக்கொண்டிருக்கும் குணத்தினை உடையவரும், குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த தூப்புல் நகர்க்குத் தலைவருமாகிய தேசிகரது குணத்திற்கு எனது மனம் உருகும். (அதனால்) மனத்திலிருந்த மயக்கம் (நீங்கியது) தெளிந்தது. புகழும் உறுதியாக்கப் பட்டது. பாவம் எல்லாம் என்னைவிட்டு மாறிப் போய்விட்டது.
(21) தேசு – அழகு, ஒளி, கீர்த்தி, ஞாநம், பெருமை, விசிட்டம் ; குணத்தன் – “உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகந் தொறும் திருவாய்மொழியின் மணந்தரு மின்னிசை மன்னுமிடந் தொறும் மாமலராள், புணர்ந்த பொன் மார்வன் பொருந்தும் பதி தொறும்புக்கு நிற்கும், குணந்திகழ் கொண்டல்.”– (இராமாநுச நூற்றந்தாதி. 60); குணத்திற்கு உருகும் என் நெஞ்சு – “நையும் மனம் உன் குணங்களை யுன்னி — (இராமாநுச நூற்றந்தாதி. 102)
- அன்பர் காண்பர்.
நெஞ்சு நெகிழ்ந்து நினையாமன் மற்றொன்றை
அஞ்சும் படியாக வுள்ளடக்கி – வெஞ்சுடரோன்
சோதியெனத் தோன்றுந் தொல்புகழ்சேர் தூப்புனக
ராதியையே காண்பரன் பர். (22)
(பொழி.) ஆசாரியரிடம் அன்புகொண்ட அடியார்கள், மனம் கட்டுக்குலைந்து, வேறு எதனையும் எண்ணாமல், பிழைக்கும்படியாக மன எழுச்சியை அடக்கிவைத்து, வெம்மையான ஒளி உடைய சூரியனது ஒளி என்று சொல்லும் வண்ணம் அவதரித்த பழமைப் புகழ் நிறைந்த தூப்புல் நகரின் முதல்வராகிய தேசிகரையே அகக் கண்களால் காண்பார்கள்.
(22) நெஞ்சு –மனம். “அஞ்சன்மினும்மை நானவனிதோயுமு, னெஞ்ச வீட்டிடுவனிவ், விறைவன்றன்னையு, நெஞ்சுறத் தந்தைபானிறுத்தி நானுமவ், வஞ்சகப் பிறப்பினை மாற்றுவேனென்றாள்.” – (மகாபாரதம். ஆதிபருவம். குருகுலச் சருக்கம். 70), “எம்பிரானைத் தொழாய் மடநெஞ்சமே” (திருவாய்மொழி 1-10-3) “நெஞ்சமே ! நல்லைநல்லை.” – (௸. 1-10-4), “ நெடியானே! என்று கிடக்கும் என் நெஞ்சமே” – (௸ 3-8-1) “நெஞ்சமே நீள்நகராக இருந்த என், தஞ்சனே!” – (௸. 3-8-2), “நல்லை நெஞ்சே! நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்” – (பெரிய திருமொழி 1-7-9); நெகிழ்ந்து – இளகி, உருகி. “சேவடிநோக்கி – விரும்பியுண்ணெகிழ”-(கூர்மபு. அரியய. 16); நினையாமல் – தியானிக்காமல்; நெஞ்சு நெகிழ்ந்து – “கருமமும் கருமபலனுமாகிய காரணன் தன்னை திருமணிவண்ணனைச் செங்கண்மாலினைத் தேவபிரானை ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்தெழுந்தாடி, பெருமையும் நானும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.” – (திருவாய்மொழி3-5-10); அஞ்சும்படியாக – “அஞ்சுவதஞ்சாமை பேதைமை யஞ்சுவ, தஞ்ச லறிவார் தொழில்.” – (திருக்குறள். அறிவுடைமை. 8, “அஞ்சப்படுவதனை அஞ்சாமை பேதைமையாம்; அவ்வஞ்சப் படுவதனை அஞ்சுதல் அறிவார் தொழிலாம். பாவமும் பழியும் கேடும் முதலாக அஞ்சப்படுவன பலவாயினும் சாதி பற்றி அஞ்சுவதென்றார். அஞ்சாமை எண்ணாது செய்து நிற்றல், அஞ்சுதல் எண்ணித் தவிர்தல்.”), “அஞ்சுவ தோறு மறனே யொருவனை, வஞ்சிப்ப தோரு மவா – (திருக்குறள் அவா வறுத்தல் 6, “மெய்யுணர்தலீறாகிய காரணங்களெல்லா மெய்தி அவற்றான் வீடெய்தற்பாலனாய ஒருவனை மறவிவழியாற் புகுந்து பின்னும் பிறப்பின்கண்ணே வீழ்த்துக் கெடுக்கவல்லது அவா. ஆகலான், அவ்வவாவை அஞ்சிக்காப்பதே துறவறமாவது. அநாதியாய்ப் போந்த அவா, ஒரோவழி வாய்மை வேண்டலை யொழிந்து பராக்காற்காவானாயின் அஃதிடமாக அவனறியாமற் புகுந்து பழைய வியற்கையாய் நின்று பிறப்பினை யுண்டாக்குதலான், அதனை வஞ்சிப்பதென்றார். காத்தலாவது வாய்மை வேண்டலை இடைவிடாது பயின்று அது செய்யாமற் பரிகரித்தல்.”) “அஞ்சும்” – (திருக்குறள். பகைமாட்சி 3. ஒருவன் அஞ்ச வேண்டாதவற்றிற்கு அஞ்சா நிற்கும்.”); உள்ளடக்கி – * ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி, னெழுமையு மேமாப் புடைத்து,”-(திருக்குறள், அடக்கமுடைமை, 6, “ஆமை போல ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஐம்பொறிகளையுமடக்க வல்லனாயின் அவ்வன்மை அவனுக்கு எழுபிறப்பின்கண்ணும் அரணாதலை யுடைத்து. ஆமை ஐந்துறுப்பினையும் இடர்புகுதாமல் அடக்குமாறுபோல இவனும் ஐம்பொறிகளையும் பாவம் புகுதாம லடக்கவேண்டுமென்பார், ஆமைபோலென்றார்.”), “ உரனென் னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான், வரனென்னும் வைப்பிற் கோர் வித்து.” -(திருக்குறள். நீத்தார் பெருமை, 4. “திண்மையென்னுந் தோட்டியால் பொறிகளாகிய யானை யைந்தனையும் தத்தம் புலன்கண்மேற் செல்லாமற் காப்பான் எல்லா நிலத்தினும் மிக்கதென்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்தாம்.”), “வாரிசுருக்கி மதக்களிறைந்தினையும், சேரிதிரியாமல் செந்நிறீஇ – கூரிய மெய்ஞ்ஞானத்தால் உணர்வார்காண் பரேமேலொருநாள், கைந்நாகம் காத்தான் கழல்.”- (முதல் திருவந்தாதி. 47. பொய்கையார்மாலை. திருவல்லிக் கேணித் தமிழ்ச்சங்க வெளியீடு. 24-பக்கம் 97-ல் இதன் விளக்கம் காண்க) “அடல்வேண்டு மைந்தன்புலத்தை விடல் வேண்டும், வேண்டிய வெல்லா மொருங்கு.” – (திருக்குறள் துறவு. 3. “வீடெய்துவார்க்குச் செவி முதலிய ஐம்பொறிகட் குரியவாய ஓசை முதலிய ஐம்புலன்களையும் கெடுத்தல் வேண்டும். கெடுக்குங்கால் அவற்றை நுகர்தற்பொருட்டுத் தாம் படைத்த பொருள் முழுதையும் ஒருங்கே விடுதல்.வேண்டும். புலமென்றது அவற்றை நுகர்தலை, அது மனத்தைத் துன்பத்தானும் பாவத்தானுமன்றி வாராத பொருள்கண் மேலல்லது வீட்டு நெறியாகிய யோக ஞானங்களிற் செலுத்தாமையின், அதனை யடல்வேண்டு மென்றும், அஃது அப்பொருள்கண்மேற் செல்லின் அந்நுகர்ச்சி விறகுபெற்ற தழல்போல் முறுகுவதல்லது அடப்படாமையின், வேண்டிய வெல்லாமொருங்குவிடல் வேண்டுமென்றுங் கூறினார்.”); அன்பர் அன்புடைய மஹான்கள், “அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையா, ரென்பு முரியர் பிறர்க்கு.” – (திருக்குறள். அன்புடைமை.2. ‘அன்பிலாதார் பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப் பொருளானுந் தமக்குரியர்; அன்புடையார் அவற்றானேயன்றித் தம்முடம்பானும் பிறர்க்குரியர். என்பு முரியராதல் ‘தன்னகம் புக்க குறுநடைப் புறவின் றபுதி யஞ்சிச்சீரை புக்கோன்? முதலாயினர்கட் காண்க.”), “அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெல்லாம், அன்பன்தென்குருகூர் நம்பிக்கு அன்பனாய்” (கண்ணிநுண்சிறுத்தாம்பு 11)
23. போற்றுமின்
அன்பரா யாதரிக்கு மாரியர்காள் போற்றுமின்
இன்பமிகு வேதியர்க ளேத்தவே – அம்புவியில்
வந்துதித்த வள்ள லெதிராசன் வண்புகழே
சிந்திக்குந் தூப்புனகர்ச் சிங்கம். (23)
(பொழி.) தூப்புல் நகரில் தோன்றிய கவிவாதி சிங்கமாகிய சுவாமி தேசிகன், அழகிய பூமியில் வந்து அவதாரம் செய்த வள்ளலாகிய இராமாநுசரது வண்மைப் புகழையே சிந்தித்துக் கொண்டிருப்பார். மேலோர்களே! நீங்கள், அத்தகைய தேசிகரையே, விரும்புகின்ற அன்பர்களாக இருந்து, இன்பம் நிறைந்த வேதம் ஓதுபவர்களாகிய உங்களைப் போற்றும்படியாக, தேசிகரைப் பின்பற்றுங்கள்.
(23) அன்பராயாதரிக்கும் – “ஐயன்கழற்கு அணியும் பரன்தாளன்றியாதரியா மெய்யன்” -(இராமாநுச நூற்றந்தாதி 13); ஆரியர்காள் – சிறந்த அனுஷ்டானமுள்ளவர்களே!; “ஓராண் வழியா யுபதேசித் தார்முன்னோர், ஏரா ரெதிராச ரின்னருளால் – பாருலகில், ஆசையுடையோர்க்கெல்லா மாரியர்காள் கூறுமென்று, பேசி வரம்பறுத்தார் பின்.” -(உபதேசரத்தின மாலை. 37. ஆரியர்காள் – ஆச்சார்யர்களே ! ‘கார்யங்கருண மார்யேண’ என்கிறபடியே நீங்களும் கேவல க்ருபையாலே உபதேசித்துப் போருங்கோள்.), “அரிய, அருளிச் செயல் பொருளை ஆரியர்கட்கிப்போ, தருளிச் செயலாய்த் தறிந்து” -(உபதேசரத்தின மாலை. 46), “ஆரியர்காள், என்றனக்கு நாளும் இனிதாக நின்றது” -(௸ 59) ; போற்றுமின் – போற்றுங்கள், துதியுங்கள், வணங்குங்கள், பேணுங்கள், மங்களா சாஸனஞ் செய்யுங்கள் ; ஏத்தவே – துதிக்கவே; இன்பமிகு வேதியர்கள் ஏத்தவே அம்புவியில் வந்துதித்த வள்ளல் – “தாழ்வொன்றில்லா மறைதாழ்ந்து தலமுழுதும் கலியே, ஆள்கின்ற நாள் வந்து அளித்தவன்…….வாழ்கின்ற வள்ளல்.” -(இராமாநுச நூற்றந்தாதி.16), ‘இராமாநுசன் புகழோதும் நல்லோர், மறையினைக்காத்து இந்த மண்ணகத்தே மன்னவைப்பவரே.’ – (௸ 9), “அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொற், கடல் கொண்ட வொண்பொருள் கண்டளிப்ப பின்னும் காசினியோர், இடரின்கண் வீழ்ந்திடத் தானுமவ் வொண் பொருள் கொண்டு அவர்பின், படருங்குணன் எம் இராமா நுசன்.”-(௸ 36), “சுருதிகள் நான்கும் எல்லை, யில்லா அற நெறியாவும் தெரிந்தவன் எண்ணருஞ்சீர், நல்லார் பரவும் இராமா நுசன்.”- (௸ 44), “புன்மையிலோர், பகரும் பெருமை இராமாநுச!-(௸ 48), “ஆனது செம்மையறநெறி பொய்ம்மையறு சமயம், போனது பொன்றி இறந்தது வெங்கலி. இராமாநுசன் இத்தலத்துதித்தே.” – (௸ 49), “நாரணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது தென்குருகை வள்ளல், வாட்டமிலா வண்தமிழ்மறை வாழ்ந்தது.” – (௸ 54), “தொகையிறந்த, பண்தரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும் கொண்டலைமேவித் தொழும் குடியாம் எங்கள் கோக்குலமே.” – (௸ 55), “நல்தவர் போற்றும் இராமாநுசனை.” – (௸ 57), பேதையர் வேதப்பொருளி தென்று உன்னி பிரமம் நன்றென்று, ஒதி மற்றெல்லாவுயிரும் அஃதென்று உயிர்கள் மெய்விட்டு, ஆதிப்பரனோடொன்றாமென்று சொல்லுமவ் வல்லலெல்லாம், வாதில் வென்றான், எம் இராமாநுசன் மெய்ம்மதிக்கடலே.” – (௸ 58), “எங்களிராமாநுசமுனி வேழம் மெய்ம்மை, கொண்ட நல்வேதக் கொழுந்தண்டமேந்திக் குவலயத்தே மண்டி வந்தேன்றது.” – (௸ 64), “மறையவர் தம் தாழ்வற்றது….. இராமாநுசன் தந்த ஞானத்திலே” – (௸ 65), “நல்லார் பரவும் இராமாநுசன்.” – (௸ 80), “ஒதிய வேதத்தின் உட்பொருளாய் அதனுச்சி மிக்க, சோதியை நாதனென அறியாது உழல்கின்ற தொண்டர், பேதைமை தீர்த்த இராமாநுசனை.” – (௸ 85), “எம் இராமாநுசன், மண்ணின் தலத்து உதித்து மறைநாலும் வளர்த்தனனே.” – (௸95), “நல்வேதியர்கள் தொழும் திருப்பாதனி ராமாநுசனை.” – (௸ 105); வள்ளல் எதிராசன் – “வள்ளல் இராமானுசனென்னும் மாமுனியே.” – (இராமாநுச நூற்றந்தாதி. 16), “கொள்ளக் குறைவற்றி லங்கி கொழுந்து விட்டோங்கியவுன், வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய்.” – (௸ 27), “செறுகலியால், வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்தெடுத்தளித்த, அருந் தவன் எங்களிராமாநுசனை” – (௸ 32), “வண்மை இராமானுச!” – (௸ 71), “நிறைபுகழோருடனே, வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே” – (௸ 72), ‘’வண்மையினாலும்….ஞானமுரைத்த இராமானுசனை” – (௸73), ‘’வண்மை இராமானுசற்கு” – (௸ 77), ‘’உன்னுடைய, கார்கொண்ட வண்மை இராமானுச ! – (௸ 83), “உணர்வின்மிக்கோர், தெரியும் வண்கீர்த்தி இராமானுசன்” – (௸87), “பின்னருளால் பெரும் பூதூர் வந்த வள்ளல்” -(தேசிகமாலை. அதிகார சங்கிரகம், 3); எதிராசன் வண்புகழே – “பழியைக் கடத்தும் இராமாநுசன் புகழ்பாடி” – (இராமாநுச நூற்றந்தாதி. 7), “இராமாநுசன் புகழோதும் நல்லோர்” (௸9), “வஞ்சர்க்கரிய இராமாநுசன் புகழன்றி” – (௸ 28), “இராமாநுசன் புகழ் மெய்யுணர்ந்தோர்” – (௸ 29), ‘’இராமாநுசன் தன்நயப்புகழே” – (௸ 34), “எம் இராமாநுசன் தொல்புகழ், சுடர்மிக்கெழுந்து” (௸61). எதிராசன் வண்புகழே சிந்திக்கும் தூப்புனகர்ச்சிங்கம் – “மாறன் றுணையடிக்கீழ் வாழ்வை யுகக்கு மிராமா னுசமுனி வண்மைபோற்றுஞ் சீர்மைய னெங்கடூப் புற்பிள்ளை.” – (பிள்ளையந்தாதி. 1. நம்மாழ்வாருடைய திருவடிகளையே உபாயமாகவும் பலனாகவும் நாடி நின்று பெருமை பெற்றவர் ஸ்ரீபாஷ்யகாரர். ஸ்ரீபாஷ்யம் முதலிய தம் ஸூக்திகளின் வாயிலாக உலகுக்கு க்ஷேமத்தைச் செய்தருளிய இந்த ஸ்ரீபாஷ்யகாரருடைய ஒளதார்ய குணத்தை வாயாரப் புகழ்ந்து பேசுமவர் ஸ்ரீதேசிகன்), ‘’உத்தர வேதியுள் வந்துதித்த, செய்ய வண் மேவிய சீரரு ளாளரைச் சிந்தைசெய்யு, மெய்யவ னெந்தை யிராமானுசனருண் மேவிவாழு, மையனிலங்குதூப் புற்பிள்ளை.” -(பிள்ளையந்தாதி. 4. பிரமனுடைய அசுவமேதயாக வேதியில் வந்து திருவவதரித்த பெருந்தேவி நாயகஞன பேரருளாளனையே எப்பொழுதும் தொழும் பெருமையை உடையவரான ஸ்ரீபாஷ்யகாரருடைய கிருபையையே தமக்கு ஆதாரமாகக் கொண்டு வாழும் ஸ்ரீதேசிகன்), “மாநிலத் தோதிய மாமறை மன்னிய நற்கலைகலைளானவை செப்பு மரும்பொரு ளத்தனை யேயருளுந், தூநெறி காட்டு மிராமா னுசமுனித் தோத்திரஞ்செய், யூனமி றுாப்புலம்மான்.” – (பிள்ளையந்தாதி. 3. ஸகல ஜீவராசிகளுக்கும் ஹிதமான அம்சங்களையே போதிக்கும் வேதங்கள், அவற்றைத் தழுவி நிற்கும் சாஸ்திரங்கள் ஆகிய இவற்றின் உண்மைப் பொருளை உலகுக்கு வெளியிட்டு ப்ரபத்தி மார்க்கத்தையும் காட்டிக் கொடுத்த ஆசார்யசிரேஷ்டரான ஸ்ரீபாஷ்யகாரரின் புகழை வாய் வெருவிப் பேசி மகிழ்ந்து நிற்பவரான ஸ்ரீதேசிகன்), “இராமா னுசமுனி யின்னுரை சேருந்தூப்புற், புனிதர்.-(பிள்ளையந்தாதி. 7. ஸ்ரீபாஷ்யகாரருடைய திவ்ய ஸூக்திகள் தம்முள்ளத்தில் குடி கொள்ளப் பெற்ற ஸ்ரீதேசிகன்), “குணக்குல மோங்கு மிராமா னுசன் குணங் கூறுந்தூப்பு லணுக்கன்.” – (பிள்ளையந்தாதி, 3. அளவற்ற நற்குணங்கள் நிரம்பப் பெற்ற ஸ்ரீபாஷ்யகாரருடைய பெருமையையே பேசுமவரும் தூப்புலில் தோன்றிய பாகவத சீரேஷ்டருமான ஸ்ரீதேசிகன்), “ஆரண நூல்வழிச் செவ்வை யழித்திடு மைதுகர்க்கோர், வாரண மாயவர் வாதக் கதலிகண் மாய்த்தபிரா, னேரணி கீர்த்தி யிராமா னுசமுனி யின்னுரைசேர், சீரணி சிந்தையி னோஞ்சிந்தி யோமினித் தீவினையே.” – (தேசிகமாலை. அதிகாரசங்கிரகம், 4. வேதாந்த சாஸ்திரத்தின் வழியின் நேர்மையைக் கெடுப்பவர்களான ஹைதுகர்களுக்கு நிகரற்ற யானையாய் வந்து அவர்களுடைய வாதமாகிய வாழைகளை ஒழித்த உபகாரகரும், உலகுக்கே பொருந்திய அலங்காரமாய் உள்ள புகழையுடைய வருமான ஸ்ரீபாஷ்யகாரருடைய இனிய ஸூக்திகளில் பொருந்திய சிறப்புப் பெற்ற மனத்தை யுடையோமாஞேம். இனிமேல் கொடிய கர்மங்களை மனத்தாலும் நினைக்கமாட்டோம்.), “அடற்புள் ளரசினு மந்தணர் மாட்டினு மின்னமுதக், கடற்பள்ளி தன்னினுங் காவிரி யுள்ள முகந்தபிரா, னிடைப்பிள்ளை யாகி யுரைத்த துரைக்கு மெதிவரனார், மடைப் பள்ளி வந்த மணமெங்கள் வார்த்தையுண் மன்னியதே.” -(தேசிகமாலை. பரமபத சோபானம். 1. வேத வேதாந்தங்களிற் காட்டிலும் இனிய அமுதமாகிய பிராட்டி அவதரித்த திருப்பாற்கடலாகிய படுக்கையிடத்திற் காட்டிலும், காவிரிக் கரையில் உள்ள திருவரங்கம் முதலிய திவ்விய தேசங்களில் மணம் மிக மகிழ்ந்து எழுந்தருளியுள்ள எம்பெருமான் இடைச்சிறுவனாய் அவதரித்து வெளியிட்ட பகவத்கீதையின் தாத்பர்யத்தையே தம் பாஷ்யங்களில் விளக்கியவரான யதிகளுள் சிறந்த ஸ்ரீபாஷ்யகாரருடைய திருமடைப்பள்ளி வழியாக வீசிய வாசனை யாம் வெளியிடும் கிரந்தங்களுள் மன்னியுள்ளது. ஸர்வேசுவரனான எம்பெருமான் கோப குமாரனாகிக் கண்ணனாய்த் திருவவதரித்து உரைத்தது ஸ்ரீபகவற்கீதை, அதற்கு வியாக்கியானம் இட்டருளினார் ஸ்ரீபாஷ்ய காரர். கீதோபநிஷதாசார்யனான கண்ணன் அருளிச் செய்ததையே அருளிச்செய்யும் இராமாநுசன். அதாவது, இடைப்பிள்ளையாகி யுரைத்ததையே இராமாநுசனாகி யுரைக்கும். எதிராசனுடைய திருவாக்கு கண்ணனுடைய கீதைக்கு ஒப்பு எனலுமொன்று. கண்ணபிரான் பலராமனுக்குத் தம்பியாக அவதரித்ததனால் அவனை “ராமாநுஜன்” என்பர். ஸ்ரீபாஷ்யகாரரை இளைய பெருமாளுடைய அபராவதாரமென்று சொல்லுவது போலவே கண்ணபிரானுடைய அபராவதாரமென்றும் நிர்வஹிப்பர். இதனைப் ‘’பெரும் பூதூர் வந்த வள்ளல்”-(வேதாந்த தீபிகை. 25-ஆம் ஸம்புடம். பக்கங்கள். 519-521. கண்ணனும் ஸ்ரீபாஷ்யகாரரும் என்ற பகுதி) என்ற எமது கட்டுரையில் பரக்கக் காண்கலாம். “உரைத்ததுரைக்கும்” என்ற சொல்லாற்றலால் இவரது ஒருமையே மொழியு நீர்மை நன்கு புலனாகும். ‘’இப்படி ரஹஸ்யத்ரயத்தைப் பற்றின கீழு மேலுமுள்ள பாசுரங்களெல்லாம் வேதாந்தோதயந ஸம்ப்ரதாயமான மடப்பள்ளி வார்த்தையை ஆசார்யன் பக்கலிலே தாங்கேட்டருளின படியே கிடாம்பி அப்புள்ளார் அடியேனைக் கிளியைப் பழக்குவிக்குமாபோல பழக்குவிக்க அவர் திருவுள்ளத்திலிரக்கமடியாகப் பெருமாள் தெளிய ப்ரகாசிப்பித்து மறவாமற்காத்துப் பிழையறப் பேசுவித்த பாசுரங்கள்.”-(ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரம், ஆசார்யக்ருத்யாதிகாரம்.) ஸ்ரீபாஷ்யகாரருடைய திருமடைப்பள்ளியில் அந்தரங்க கைங்கர்யம் செய்து வந்து அவரிடமே ஸகலார்த்தங்களையும் கற்றறிந்த கடாம்பியாச் சான் வழியாக நம் ஸம்ப்ரதாயம் தழைத்தோங்குவதுபற்றி “மடைப்பள்ளி வந்த மணம்” என்னப்பட்டது. உண்ணக்கடவ உயர்ந்த பண்டங்களைச் சேமித்துத் திருமடைப்பள்ளி யில் வைத்து அனைவருக்கும் வழங்குமாறு போல கற்றறிந்து அநுபவிக்க வேண்டிய வேதாந்தத்தின் ரஹஸ்யார்த்தங்களை யெல்லாம் ஸ்ரீபாஷ்யகாரர் கடாம்பியாச்சானுக்கு உபதேசித்து, அவர் முகமாய் உலகுக்கு வழங்கச் செய்தபடியால் அவருக்கு மடைப்பள்ளி யாச்சானெனத் திருநாமம் வந்தது என்றும் கூறுவர் பேரறிஞர்.), “அலர்ந்த வம்பு யத்தி ருந்து தேனருந்தி யின்னக லல்கு லார சைந்த டைந்த நடைகொ ளாத தனமெனோ, நலந்த விர்ந்த தாலதென்கொ னாவின் வீறி ழந்ததா னாவ ணங்கு நாதர் தந்த நாவின் வீறி ழந்ததென், சலந்த விர்ந்து வாது செய்து சாடி மூண்ட மிண்டரைச் சரிவி லேனெ னக்க னைத்து ரைத்த வேதி ராசர்தம், வலந்த ருங்கை நாய னார்வ ளைக்கிசைந்த கீர்த்தியால் வாரி பால தாம தென்று மாசில் வாழி வாழியே.”- (தேசிகமாலை. அமிருதாசுவாதினி. 33. ஸ்ரீபாஷ்யகாரருடைய திருவடிகளில் ஈடுபட்ட இருவர் அவரது புகழைப்பற்றி ஸம்பாஷித்ததாக அமைந்துள்ளது இப்பாசுரம், ஒருவர் :- அன்னம் மலர்ந்த தாமரைப்பூவில் வீற்றிருந்து அதில் உள்ள தேனைப் பருகி அழகிய அகன்ற அல்குலையுடைய ஸ்திரீகளின் அசைந்து நடக்கும் நடையைக்கொள்ளாமல் வருந்தி வாடிக்கிடப்பதன் காரணம் என்ன? மற்றவர் – தன் பெருமையை அது இழந்துவிட்டதால் தான் வருந்திக்கிடக்கின்றது. ஒருவர் :- அது எவ்வாறு பெருமை இழந்தது? மற்றவர் :- தன் நாவிற்குள்ள பாலையும் நீரையும் பிரிக்கும் சக்தியை இழந்து, விட்டதால் இவ்வாறு வருந்துகின்றது. ஒருவர் :- வாக்குக்குத் தேவதையாகிய நாமகள் கணவனான பிரமனால் அளிக்கப்பெற்ற நாவின் அந்தச் சக்தியை ஏன் இழந்தது? மற்றவர் :- கூறு கின்றேன் கேளும். அடிக்கடி வாதத்திற்கு வந்த முரடர்களான வாதிகளை குற்றமில்லாது வாதம் செய்து ஜயித்து, இன்னும் யாவர் வாதம்புரிய வந்தாலும் தளரமாட்டேன் என்று கர்ஜித்துக் கூறிய ஸ்ரீபாஷ்யகாரருடையதும் அடைந்தவர்களுக்குப் பலத்தைத் தரும் கையையுடைய எம்பெருமானுடைய சங்கம் போன்றதுமான கீர்த்தி உலகமெங்கும் பரவியதால் ஜலம் முழுதும் பாலாகிவிட்டதாம். ஜலம் முழுதுமே பாலாகிவிட்டதால் பாலிலிருந்து நீரைப் பிரிக்கும் சக்திக்கு உபயோகமே ஏற்படாமல் பயனற்றுப் போய்விட்டதை எண்ணி இந்த அன்னம் வருந்தி நிற்கின்றது. எக்காலத்திலும் குறைவுபடாத அந்தப் புகழ் வாழக்கடவது), ‘வாழி யருளாளர் வாழியணி யத்திகிரி, வாழி யெதிராசன் வாசகத்தோர்-வாழி, சரணா கதியெனுஞ் சார்வுடன் மற் றென்றை, யரணாகக் கொள்ளாதா ரன்பு.” – (தேசிகமாலை. மெய்விரத நன்னிலத்து மேன்மை. 1), ‘ ஆகாரத் திருவகையா நன்றுந் தீது மருமறைகொண் டெதிராச ரிவைமொ ழிந்தா, ராகாத வழிவிலக்கி யாக்குங் கண்ண னனைத்துலகும் வாழவிது சாற்றி வைத்தான்.” -(தேசிகமாலை. ஆகார நியமம். 1); தூப்புனகர்ச்சிங்கம் – “ஏராரு மெதிராச ரருளினாலே யெதிர்ந்தவர்கள் சிங்கமென விங்கு வந்தோன், சீராரும் வேங்கடவன் றுாப்புற் பிள்ளை.”-(தேசிகமாலை. ஆகார நியமம். சிறப்புத்தனியன்).
24. காப்பின் கடை.
சிங்க முகத்தானைத் திங்கள் பலகாட்டும்
அங்க முடையவனை யாதரிக்கும் – எங்கள்பிரான்
தூப்புல்வரு மாரியனைத் தோத்திரியா மானிடர்க்குக்
காப்பனைத்து மாகுங் கடை. (24)
(பொழி.) நரசிங்க மூர்த்தியும், பல சந்திரர்களது ஒளியைக் காட்டும் திருமேனியை உடையவனும் ஆகிய (கோடி சூரிய ப்ரகாசத் திருமேனி) திருமாலை விரும்புகின்ற எங்கள் பெருமானாகிய தூப்புல் நகரில் அவதரித்த உயர்ந்தோனாகிய தேசிகரைத் துதிக்காத மக்களுக்குப் பிறவற்றால் வரும் பாதுகாவல் அனைத்தும் பயனற்றனவாகும்.
(24) சிங்கமுகத்தான் “அழகியான்தானே அரியுருவன்” (நான்முகன் திருவந்தாதி. 22) ; தோத்திரியா – துதிக்காத
25. வருத்தம் அறக்காக்கும்
கடைந்தான் கடலைக் கடல்வண்ணன் முன்னம்
இடந்தான்பின் னேனமாப் பூமி – அடைந்தார்
வருத்தமறக் காக்குமே வையத் தருளால்
திருத்தமுடைத் தூப்புல்வாழ் தேவு. (25)
(பொழி.) கடல்போன்ற நீலநிறத்தினனாய் திருமால், முன்காலத்தில், பாற்கடலைக் கடைந்தான். பிறகு, வராக அவதாரம் எடுத்து, பூமியினைக் கீழிருந்து குத்தி எடுத்துப் பெயர்த்தான். (ஆனால்) ஒழுங்கு நிறைந்த தூப்புல் நகரில் வாழும் தெய்வமாகிய தேசிகர், தமது அருளால், இந்த உலகத்தில் தம்மை அடைக்கலமாக அடைந்த அடியவர்களைத் துன்பம் இல்லாமல் பாதுகாப்பார்.
(25) கடைந்தான் கடலை – ”அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன்” – (திருவாய்மொழி 1-3-11); இடந் தான் பின்னேனமாப்பூமி “இடந்தது பூமி” – (முதல் திருவந்தாதி. 39) “ஈனச் சொல்லாயினுமாக எறிதிரைவையம் முற்றும் ஏனத்துருவாய் இடந்த பிரான் இருங்கற்பகம் சேர், வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்றெல்லா யவர்க்கும் ஞானப் பிரானையல்லாலில்லை நான் கண்ட நல்லதுவே.” 😦திருவிருத்தம். 99), “கோலமலர்ப்பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ, நீலவரை இரண்டு பிறைகவ்வி நிமிர்ந்ததொப்ப, கோலவராக மொன்றாய் நிலம் கோட்டிடைக்கொண்ட எந்தாய் ! நீலக்கடல் கடைந்தாய் ! உன்னைப் பெற்று இனிப்போக்குவனோ” -(திருவாய்மொழி 10-10-7); வருத்தம் – துன்பம் ; வையத்து – பூமியில்; திருத்தம் — ஒழுங்கு. “திருத்தம் பெரியவர்” -(தேசிகமாலை, அமிருதாசுவாதினி 20. திருந்திய ஜ்ஞாநம் அநுஷ்டாநம் இவற்றால் பெரிய மஹரிஷிகள்) ; தேவு – தெய்வம், தேவாந்தன்மை. “தேவிற் சிறந்த திருவள்ளுவர்”- (திருவள்ளுவமாலை 39.); தூப்புல் வாழ் – தூப்புல் மாநகரில் நித்ய வாஸஞ் செய்யும்.
26. எங்கள் குரு.
தேவர் முனிவர்களுஞ் சித்தர்களும் பத்தர்களும்
பூவின் மழைபொழிந்து போற்றியே – தாவி
யுலகளந்த மாலை யுணர்ந்துகக்குந்
தூப்புற் குலகுருவே யெங்கள் குரு. (26)
(பொழி.) விண்ணுலகத் தேவர்களும், மண்ணுலகத் துறவிகளும், ஞானிகளும், பக்தர்களும் மலர் மழை சிதறிப் போற்றிப் புகழுமாறு கடந்து உலகைத் தன் காலால் அளந்த திருமாலை, உள்ளத்தால் உணர்ந்து மகிழும் தூப்புல்வந்த வைணவ குலத்துக் குருவே, எங்களுக்கும் குருவாக விளங்குவார்.
(26) தேவர் – சுரர், விண்ணுலகத்து உள்ளவர், விளங்குபவர், “நஞ்சடவெழுதலு நடுங்கி நாண்மதிச், செஞ்சடைக் கடவுளை யடையுந் தேவர் போல்.” – (இராமாவதாரம், பால காண்டம், வேள்விப்படலம் 50.), “சிவன்றேவர்க்கிறைவன் போல” – (அபிதா, சிவரக. அபுத்திபூருவ. 4); முனிவர் – மநநசீலர், கடவுளை எப்பொழுதும் தியானஞ் செய்பவர், திரிகால ஞானமுடையவர்; பத்தர் – பக்தர், பாகவதர் ; தேவர் முனிவர்களும் சித்தர்களும் பத்தர்களும் – “அந்தரத்தமரர்கள் கூட்டங்கள் இவையோ? அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ”-(திருப்பள்ளியெழுச்சி. 7), “மாதவர் வானவர் சாரணர் இயக்கர் சித்தரும் மயங்கினர்”- (திருப்பள்ளியெழுச்சி. 9); பூவின் மழை பொழிந்து போற்றியே – புஷ்ப வருஷத்தைச் சொரிந்து துதித்து, “விற்கொண்ட மழைய னான் மேற் பூமழை பொழிந்து வாழ்த்தி விண்ணவர் போயினாரே.” – (இராமாவதாரம். பாலகாண்டம். தாடகைவதைப் படலம். 76), “புனித மாதவ ராசியின் பூமழை பொழிந்தார்.” – (இராமாவதாரம். பாலகாண்டம். வேள்விப்படலம் 56); தாவி – கடந்து; உலகளந்தமால் – திரிவிக்கிரமன். இந்த இருபத்தாறாவது பாசுரம் திருவத்திகிரிப் பேரருளாளப் பெருமாள் திருமஞ்சனங் கண்டருளுங் காலத்து அநுஸந்திக்கப்பெறும் கட்டியத்தில் இன்றும் ஸேவிக்கப் பெறுவதாயின் இந்நூற்றந்தாதியின் தொன்மையும் பெருமையும் ஆன்றோர்களாற் போற்றி வரப் பெற்றுள்ள பெற்றியும் கூறாமலே விளங்கும்.
27. கோப்பு உடையோம்
குருவுங் குலத்தரசுங் குற்றமிலாச் சுற்றந்
தருமமுந் தாய்தகப்ப னாரும் – வருபுனல்சூழ்
தூப்புல்வருந் தூய்மறையோன் றொல்லருளே யென்றிந்தக்
கோப்புடையோம் யாமென்றே கூறு. (27)
(பொழி.) (மனமே) ஓடிவருகின்ற ஆற்றுநீர் சூழ்ந்த தூப்புல் நகரில் அவதரித்த, தூய்மையான வேதம் கற்ற தேசிகரே தமது இயல்பான பழமையைக் கொண்ட திருவருளாலே, ஞான ஒளி காட்டும் குருவாகவும், எங்கள் வைணவக் குலத்துக்குத் தலைவராகவும், குற்றம் இல்லாத உறவினராகவும், நல்வழிப்படுத்தும் அறத்தினராகவும், பெற்றெடுத்த தாய் தகப்பனாராகவும் அமைந்துள்ளார் என்று சொல்லும் இந்த உபாயத்தை நாங்கள் உடையோம் என்று உலகினர் அறியக் கூறுவாய்.
(27) குரு – “குருப்யஸ்தத்குருப்யச்ச நமோவாக மதீமஹே, வ்ருணிமஹேச தத்ராத்யெள தம்பதி ஜகதாம்பதீ.”- (ஸ்ரீகுரு பரம்பராஸாரம், ஆசார்யர்களின் பொருட்டும், அவர்களின் ஆசார்யர்களின் பொருட்டும், நம: என்கிற வார்த்தையை அடிக்கடி சொல்லுகிறோம். அந்த ஆசார்யபரம்பரையில் எல்லாவற்றிற்கும் காரணமாகிய லோகங்களுக்கு சேஷிகளான பிராட்டியும் எம்பெருமானுமாகிய தம்பதிகளை ஆச்ரயிக்கிறோம்.) “தமிமம் ஸர்வ ஸம்பந்நம் ஆசார்யம் பிதரம் குரும்”- (பா. ஸ. 41-21. ஸஹாதேவன் வார்த்தை. அப்படிப்பட்ட இந்த அக்ரபூஜையை அடைவதற்குத் தகுந்த ஸர்வாகாரங்களினாலும் பூர்ணரான ப்ரும்ம வித்யையை உபதேசம் செய்தவராயும் தகப்பனாராயும் வேதாத்ய யனம் செய்வித்தவராயும் இருக்கிற), “மமாப்யகில லோகாநாம் குருர் நாராயணோ குரு:”-(வி.பு.5-1-14. எல்லா லோகங்களுக்கும் ஆசார்யனாகிய நாராயணன் எனக்கும் ஆசார்யன்), “த்வமேவ பந்துச்ச குருஸ்த்வமேவ ” (நீரே பந்துவும் நீரே ஆசார்யனும்) “இவர்கள் தேஹேந்திரியாதி வ்யதிரிக்தனாய் நித்யனாயிருப்பானொரு ஆத்மாவுண்டு. இச்சேதநா சேதநங்களிரண்டுமொழிய விவற்றுக்கந்தர்யாமியாய் சேஷியா யிருப்பானொரு பரமாத்மாவுண்டு. இப்பரமாத்மாவையொழிய விவ்வாத்மாவுக்குத் தானும் பிறரும் ரக்ஷகராக மாட்டாரென்ற தத்வத்தையும், அநாதிகால மந்தாதியாக ஸம்ஸரித்துப் போந்தவடியேனுக்கு இனியொரு கர்ப்பவாஸாதிக்லேசம் வாராதபடி திருவடிகளைத் தந்து ரக்ஷித்தருளவேணுமென்று ஆசார்யன் ப்ரஸாதித்த குருபரம்பரா பூர்வக த்வயத்தாலே ஸ்ரீமானான நாராயணன் திருவடிகளை சரணமாகப் பற்றி ஆத்மாத்மீயங்களையும் அவற்றைப் பற்றவருஞ் சுமைகளையும் அங்கே ஸமர்ப்பிப்ப தென்று ஹிதத்தையும், ஸதாசார்யன் காட்டிக்கொடுக்கக் கைக்கொண்ட வெம்பெருமானினி நம்மை யொருபடிக்குங் கைவிடானென்கிற தேற்றத்தோடே யிங்கிருந்த காலம் அபவர்க்க பூர்வாங்கமான நிரபராதாநுகூல வ்ருத்தியோடே நடப்பதென்று உத்தரக்ருத்யத்தையும் ஸங்கிரஹருசிகளுக்குச் சுருங்கவருளிச் செய்வார்கள்.”- (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம். ஆசார்ய க்ருத்யாதிகாரம்), “தன் குருவின் றாளிணைகள் தன்னிலன் பொன்றில்லாதார்”- (உபதேசரத்தினமாலை. 60), “மருளாமிருளோட மத்தகத்துத் தன்றாளருளாலே வைத்தவராய், தனக்கு வகுத்த விஷயமான ஆசார்யனுடைய அங்கிரி யுகளந் தன்னிலே யாய்த்து ப்ரபத்திபண்ண ப்ராப்தம்.” “அவன் றாளிணையே யுன்னுவதே சாலவுறும் என்றிறே இருப்பது.” “ஞான மநுட்டான மிவை நன்றகவேயுடைய,னான குருவை யடைந்தக்கால்”-(உபதேசரத்தினமாலை. 61. அஜ்ஞாந நிவர்த்தகனாய் ஆசாரப்ரவர்த்தகனாயிருக்கிற ஆசாரியனை உபாயோபேய பாவேந தமேவ சரணம் வ்ரஜேத்” என்கிறபடியே தனக்கு ப்ராப்யனாகவும் ப்ராபகனாகவும் அத்யவஸித்து ஆச்ரயித்தக்கால். அடைந்தக்கால் – கெடுமரக்கலம் கரைசேர்ந்தாற் போலே அஞ்சினான் புகலிடமான ஆசார்யாபிமாநத்தை அவன் ப்ரஸாதத்தாலே ப்ராபிக்கப் பெற்றால், தங்களுக்காகச் சரண வரணம் பண்ணி ரக்ஷிக்குமவனைத் தாங்கள் சரணமாக அடைந்தக்கால் ; குருவை யடைந்தக்கால் – குருரேவ பரம்ப்ரஹ்மம் என்றும், “பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து” என்றும் சொல்லுகிறபடியே குருதரனான குருவை ஆச்ரயித்தக் கால். இப்படி அலப்யலாபமானது லபிக்கப்பெற்றால், அந்த ஆச்ரயண ராஜகுல மாஹாத்ம்யத்தாலே ஸ்ரீய:பதியானவன், ஸ்வப்ராப்தியைப் பண்ணிக் கொடுக்கும்.) ; தாய் – அண்ணன் றேவி, ஊட்டுந்தாய், குருவின்றேவி, செவிலித்தாய், தன்றேவியை யீன்றாள், நற்றாய், பாராட்டுந்தாய்; தாயின் சகோதரிக்கும் பெயர் கூறுவர்; புனல் – நீர்; தொல் – பழமை ; தூய்மறை – “தொல் வகை காட்டுந் துணிந்ததூ மறையே”- (தேசிகமாலை. மும்மணிக்கோவை. 4), “தூமறையி னுள்ளம்.”- (௸. ௸. 5.); கோப்பு – பலதிறப்பட்ட பாங்கு.
27. கோப்பு உடையோம்
குருவுங் குலத்தரசுங் குற்றமிலாச் சுற்றந்
தருமமுந் தாய்தகப்ப னாரும் – வருபுனல்சூழ்
தூப்புல்வருந் தூய்மறையோன் றொல்லருளே யென்றிந்தக்
கோப்புடையோம் யாமென்றே கூறு. (27)
(பொழி.) (மனமே) ஓடிவருகின்ற ஆற்றுநீர் சூழ்ந்த தூப்புல் நகரில் அவதரித்த, தூய்மையான வேதம் கற்ற தேசிகரே தமது இயல்பான பழமையைக் கொண்ட திருவருளாலே, ஞான ஒளி காட்டும் குருவாகவும், எங்கள் வைணவக் குலத்துக்குத் தலைவராகவும், குற்றம் இல்லாத உறவினராகவும், நல்வழிப்படுத்தும் அறத்தினராகவும், பெற்றெடுத்த தாய் தகப்பனாராகவும் அமைந்துள்ளார் என்று சொல்லும் இந்த உபாயத்தை நாங்கள் உடையோம் என்று உலகினர் அறியக் கூறுவாய்.
(27) குரு – “குருப்யஸ்தத்குருப்யச்ச நமோவாக மதீமஹே, வ்ருணிமஹேச தத்ராத்யெள தம்பதி ஜகதாம்பதீ.”- (ஸ்ரீகுரு பரம்பராஸாரம், ஆசார்யர்களின் பொருட்டும், அவர்களின் ஆசார்யர்களின் பொருட்டும், நம: என்கிற வார்த்தையை அடிக்கடி சொல்லுகிறோம். அந்த ஆசார்யபரம்பரையில் எல்லாவற்றிற்கும் காரணமாகிய லோகங்களுக்கு சேஷிகளான பிராட்டியும் எம்பெருமானுமாகிய தம்பதிகளை ஆச்ரயிக்கிறோம்.) “தமிமம் ஸர்வ ஸம்பந்நம் ஆசார்யம் பிதரம் குரும்”- (பா. ஸ. 41-21. ஸஹாதேவன் வார்த்தை. அப்படிப்பட்ட இந்த அக்ரபூஜையை அடைவதற்குத் தகுந்த ஸர்வாகாரங்களினாலும் பூர்ணரான ப்ரும்ம வித்யையை உபதேசம் செய்தவராயும் தகப்பனாராயும் வேதாத்ய யனம் செய்வித்தவராயும் இருக்கிற), “மமாப்யகில லோகாநாம் குருர் நாராயணோ குரு:”-(வி.பு.5-1-14. எல்லா லோகங்களுக்கும் ஆசார்யனாகிய நாராயணன் எனக்கும் ஆசார்யன்), “த்வமேவ பந்துச்ச குருஸ்த்வமேவ ” (நீரே பந்துவும் நீரே ஆசார்யனும்) “இவர்கள் தேஹேந்திரியாதி வ்யதிரிக்தனாய் நித்யனாயிருப்பானொரு ஆத்மாவுண்டு. இச்சேதநா சேதநங்களிரண்டுமொழிய விவற்றுக்கந்தர்யாமியாய் சேஷியா யிருப்பானொரு பரமாத்மாவுண்டு. இப்பரமாத்மாவையொழிய விவ்வாத்மாவுக்குத் தானும் பிறரும் ரக்ஷகராக மாட்டாரென்ற தத்வத்தையும், அநாதிகால மந்தாதியாக ஸம்ஸரித்துப் போந்தவடியேனுக்கு இனியொரு கர்ப்பவாஸாதிக்லேசம் வாராதபடி திருவடிகளைத் தந்து ரக்ஷித்தருளவேணுமென்று ஆசார்யன் ப்ரஸாதித்த குருபரம்பரா பூர்வக த்வயத்தாலே ஸ்ரீமானான நாராயணன் திருவடிகளை சரணமாகப் பற்றி ஆத்மாத்மீயங்களையும் அவற்றைப் பற்றவருஞ் சுமைகளையும் அங்கே ஸமர்ப்பிப்ப தென்று ஹிதத்தையும், ஸதாசார்யன் காட்டிக்கொடுக்கக் கைக்கொண்ட வெம்பெருமானினி நம்மை யொருபடிக்குங் கைவிடானென்கிற தேற்றத்தோடே யிங்கிருந்த காலம் அபவர்க்க பூர்வாங்கமான நிரபராதாநுகூல வ்ருத்தியோடே நடப்பதென்று உத்தரக்ருத்யத்தையும் ஸங்கிரஹருசிகளுக்குச் சுருங்கவருளிச் செய்வார்கள்.”- (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம். ஆசார்ய க்ருத்யாதிகாரம்), “தன் குருவின் றாளிணைகள் தன்னிலன் பொன்றில்லாதார்”- (உபதேசரத்தினமாலை. 60), “மருளாமிருளோட மத்தகத்துத் தன்றாளருளாலே வைத்தவராய், தனக்கு வகுத்த விஷயமான ஆசார்யனுடைய அங்கிரி யுகளந் தன்னிலே யாய்த்து ப்ரபத்திபண்ண ப்ராப்தம்.” “அவன் றாளிணையே யுன்னுவதே சாலவுறும் என்றிறே இருப்பது.” “ஞான மநுட்டான மிவை நன்றகவேயுடைய,னான குருவை யடைந்தக்கால்”-(உபதேசரத்தினமாலை. 61. அஜ்ஞாந நிவர்த்தகனாய் ஆசாரப்ரவர்த்தகனாயிருக்கிற ஆசாரியனை உபாயோபேய பாவேந தமேவ சரணம் வ்ரஜேத்” என்கிறபடியே தனக்கு ப்ராப்யனாகவும் ப்ராபகனாகவும் அத்யவஸித்து ஆச்ரயித்தக்கால். அடைந்தக்கால் – கெடுமரக்கலம் கரைசேர்ந்தாற் போலே அஞ்சினான் புகலிடமான ஆசார்யாபிமாநத்தை அவன் ப்ரஸாதத்தாலே ப்ராபிக்கப் பெற்றால், தங்களுக்காகச் சரண வரணம் பண்ணி ரக்ஷிக்குமவனைத் தாங்கள் சரணமாக அடைந்தக்கால் ; குருவை யடைந்தக்கால் – குருரேவ பரம்ப்ரஹ்மம் என்றும், “பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து” என்றும் சொல்லுகிறபடியே குருதரனான குருவை ஆச்ரயித்தக் கால். இப்படி அலப்யலாபமானது லபிக்கப்பெற்றால், அந்த ஆச்ரயண ராஜகுல மாஹாத்ம்யத்தாலே ஸ்ரீய:பதியானவன், ஸ்வப்ராப்தியைப் பண்ணிக் கொடுக்கும்.) ; தாய் – அண்ணன் றேவி, ஊட்டுந்தாய், குருவின்றேவி, செவிலித்தாய், தன்றேவியை யீன்றாள், நற்றாய், பாராட்டுந்தாய்; தாயின் சகோதரிக்கும் பெயர் கூறுவர்; புனல் – நீர்; தொல் – பழமை ; தூய்மறை – “தொல் வகை காட்டுந் துணிந்ததூ மறையே”- (தேசிகமாலை. மும்மணிக்கோவை. 4), “தூமறையி னுள்ளம்.”- (௸. ௸. 5.); கோப்பு – பலதிறப்பட்ட பாங்கு.
28. மூப்பு வருமுன்னமே பற்று.
கூறி முடியாக் குணத்தனைநன் னெஞ்சமே
நாறு துழாயானை நண்ணுமோர் – வீறுடைய
தூப்புலனந் தாரியனார் தொல்புகழ்சேர் மைந்தனைநீ
மூப்புவரு முன்னமே பற்று. _(28)
(பொழி.) நல்ல மனமே! நீ, நமக்கு முதுமைக் காலம் வருவதற்கு முன்னதாகவே, மணம் வீசும் திருத்துழாய் மாலையணிந்த நாராயணனை அடைந்த, வேறு ஒன்றுக்கும் இல்லாத சிறப்பினை உடைய, ஒரு தூப்புல் நகரில் வாழ்ந்த அனந்தசூரி என்ற திருநாமத்தினருடைய பழைய புகழ் சேர்ந்த திருக்குமாரனும், சொல்லி முடியாத அளவற்ற உயர்ந்த குணங்களை உடையவனுமாகிய சுவாமி தேசிகனைப் பற்றிக் கொள்.
(28) கூறிமுடியாக்குணத்தன் — எண்பெருக்கந்நலத்தினன், “ திசையனைத்தும், ஏறும்குணன்” (இராமாநுச நூற்றந்தாதி. 46) “ஏரார்குணத்தெம்மிராமாநுசன்.” -௸. 74); நாறுதுழாயான் – “நாற்றத்துழாய்முடி நாராயணன்”- (திருப்பாவை. 10.) “எரிநகை யிடையிடு பிழைத்த நறுந்தார்ப், புரிமலர்த் துழாஅய் மேவன் மார்பினோய்” – (பரிபாடல் 13, 59-60. “நிறத்தால் எரியை யொத்த வெட்சிமலரை யிடையிட்டுக் கட்டின புரிமலர் நறுந்தார்த்துழாயை மேவலையுடைய மார்பினோய்.”), “நக்கலர் துழாஅய் நாறினர்க் கண்ணியை.” -(பரிபாடல். 4, 53. * பிணிவிட்டலர்ந்த துழாயது நாறிணராற் றொடுத்த கண்ணியையுடையை.”), “நாறிணர்த் துழாயோ னல்கி னல்லதை, ஏறுத லெளிதோ வீறுபெறு துறக்கம், அரிதிற் பெறுதுறக்க மாலிருங் குன்றம், எளிதிற் பெறலுரிமை யேத்துகஞ் சிலம்ப” – (பரிபாடல். 15. 15-18. துழாய் மாலையை யுடைய திருமால் அருள் புரிந்தாலல்லாமல் துறக்கம் அடைதல் எளியதாகுமோ ? அரிதிற் பெறுந்துறக்கத்தை எளிதிற்பெறச் செய்வதனால் திருமாலிருஞ்சோலை மலையை ஏத்தக்கடவேம்); நண்ணும் – நெருங்கும், அடையும், பொருந்தும், எதிர்ப்படும், சேரும் ; விறு – உயர்ச்சி, சிறப்பு பெருமை, பொலிவு, வெற்றி, வேறொன்றற்கில்லாவழகு, “அகிற், சேற ணிந்த முலைத்திரு மங்கைதன் வீற ணிந்தவன்.” – (இராமாவதாரம். பால காண்டம். ஆற்றுப்படலம், 2); தூப்புல் அநந்தாரியனார் தொல்புகழ் சேர்மைந்தன் – “வேங்கடேச கண்டாம்சரான இவர் கலி 4370-க்கு மேல் சுக்ல ௵ புரட்டாசிமீ ஞாயிற்றுக் கிழமை திருவோண நக்ஷத்திரம் சுக்ல ஏகாதசியில் ஸ்ரீ காஞ்சியில் அநந்தசூரிகளுக்குத் தோதாரம்மன் திருவயிற்றில் பன்னிரண்டு வருஷம் இருந்து அவதரித்தவர். இவரைப் புதன்கிழமையில் அவதரித்தவர் என்று சிலர் கூறுவர்.” – (அபிதாநசிந்தாமணி); “பிதா யஸ்யாநந்தஸூரி: புண்டரீகாக்ஷயஜ்வந: பெளத்ரோ யஸ்தநய ஸ்தோதாரம்பாயாஸ்தஸ்ய மங்கலம்.”- (ஸ்ரீநயினாராசார்யர் அருளிச்செய்த வேதாந்த தேசிகமங்களம். 3. அநந்தஸூரி என்கிற ஸ்வாமிக்கும் தோதாரம்மை யென்கிற தத்திவ்ய மஹிஷிக்கும் திருக்குமாரராயும் புண்டரீகாக்ஷ ஸோமயாஜிகளுக்குத் திருப்பேரனாராயும் திருவவதரித்தருளின ஸ்ரீமந் நிகமாந்த மஹாதேசிகன் வாழ்க, யதிராஜ மாஹாநஸிகரான கிடாம்பியாச்சானுடைய ப்ரபெளத்ரியாய், ராமாநுஜாசார்யர் என்பவருடைய பெளத்ரியாய், ஸ்ரீரங்கராஜப் பிள்ளான் என்கிற பத்மநாபாசார்யருடைய புத்ரியாய், வாதிஹம்ஸாம்புவாஹாசார்யர் என்கிற கிடாம்பியப் புள்ளாருடைய ஸஹோதரியுமான மங்கை தோதாரம்மை); மைந்தனை – திருமகனை ; மூப்பு – முதுமை முன்னம் – முன்பே ; பற்று – பிடி அநந்தாரியர் – அநந்த சூரிகள், “புண்டரீகாக்ஷயஜ்வாவின் குமரர். தோதாரம்மன் புருஷர். திருவேங்கடமுடையான் கட்டளைப்படி திருவேங்கடஞ் சென்றிருக்கையில் சுவப்பனத்தில் திருவேங்கடமுடையான் பிராமணப் பிள்ளைபோல் வந்து திருமணி தர அதனை வாங்கி மனைவியிடந் தந்து அதனால் வேதாந்த தேசிகரைப் பெற்றவர். — (அபிதான சிந்தாமணி)
29. முத்தி அருளும்.
பற்றியடியிணையைப் பாவித்து நல்வடிவைச்
சுற்றிக் குணங்களையே சொல்லிப் – பத்தியுடன்
நிற்றியே னீமனமே நீள்வயல்சூழ் தூப்புலிறை
முத்தி யருளு முயன்று. (29)
(பொழி.) மனமே! நீ, பெரிய வயல்கள் சூழ்ந்துள்ள தூப்புல் நகர்த் தெய்வமாகிய தேசிகரது திருவடிகளைப் பிடித்துக் கொண்டும், அவரது திரு உருவை மனத்தால் தியானித்துக் கொண்டும், அவரது திருக்குணங்களையே, ஓயாது சொல்லிக் கொண்டும், பக்தியோடு வருந்தி, நிலையாக நிற்பாயேயானால், அந்த ஆசாரியப் பெருமான் நமக்குப் பரமபதத்தை அருளுவார்.
(29) பாவித்து– தியாநித்து, அநுஸந்தித்து; நல்வடிவு – திவ்யதிருமேனி, ‘ வடிவழ கார்ந்த வண் துப்புல்வள்ளல்’ – (பிள்ளையந்தாதி. 20), திருமேனிவருணனை – வெண்பா – ’வேண்டுவீ ரன்புபெறு வீரேப வக்கடலைத், தாண்டுவீர் ஞானத் தனிவிளக்கைத்-தூண்டுவீர், தானிவர்ண னையுரைக்குஞ் சாந்த வேதாந்தகுரு, மேனிவர்ணனையுரைக்க வே. தரு – இராகம் – முகாரி தாளம் சாப்பு – கண்ணிகள். (1) கதிர்வீசு மிரவிபோற் காந்தி சேருந்திவ்ய கள விக்கிரக வேதாந்ததேசிகரே, புதுமலர்ச்சியாகிய செந்தாமரை மலரைப் போன்ற பொன்னடியுள்ள – தேசிகரே. (2) களங்கமில்லாமல் மனோகரங்களாகிய திருக்கணைக்கால்களு மிலங்குந் – தேசிகரே, விளங்கி நிற்கிற நல்ல முழந்தாளுடைய திருவேங்கடநாதார்ய – தேசிகரே. (3) திருவரையுமதிற் சார்த்தின திருப்பரிவட்டச் சேர்த்தியாலும் விளங்குந் – தேசிகரே, திருநாபிக்கமலமுந் திருவுத்தரியச் சேர்வும் சிறந்து விளங்குமெங்கள் – தேசிகரே. (4) மருவுமுந்நூலுந் திருமணிவடத்துடன் கூடும் மார்பினணிதுலங்குந் – தேசிகரே, திருவாழி திருச்சங்குந்திகழ் புஜங்களுடனே செழிப்பான நிகமாந்த – தேசிகரே. (5) பவித்ரங்களையணிந்த பங்கஜகர தீர்க்க பாணியுகம் பொருந்துந் -தேசிகரே, குவித்தே திருமந்திரமுங் கெண்டதுவய முச்சரிக் குந்திருப்பவளவாய்த் – தேசிகரே, (6) கிருபைக்குள்ளாய்க் கடாக்ஷிக்கிற திருக்கண்களென்றே கீர்த்திக்கவே வளருந் – தேசிகரே, உருகித் தற்காலங்கண்டு சார்த்தின பனிரண்டு ஊர்த்துவ புண்ட்ரங்களேற்குந் – தேசிகரே. (7) மண்டலந்தனிற் புகழ்கொண்ட கண்டாவதாரர் மவுலிமூடத் துலங்குந் – தேசிகரே, தொண்டர்கள் மனத்தன்பு கொண்டிடுஞ் சர்வதந்திர சுவந்தராரியரெங்கள் – தேசிகரே. கட்டளைக்கலித் துறை. வடத்தேறு கண்டுயில் கொண்டான் மடுவின் மணியரவின் படத்தேறு தாண்மிதித்தாடியங் கோவியர் பாரமுலைக் குடத்தேறு மார்பர்தங் கண்டாவதாரரைக் கூப்புகையர், கடத்தேறுவார்கள் கவிவாதிசிங்கவரைக் கண்டவரே.” – (ஸ்ரீமத் வேதாந்த தேசிகவைபவப்பிரகாசிகைக் கீர்த்தனை); நிற்றியேல் – நிலைநிற்பாயாகில் முயன்று – வருந்தி; முத்தி – “இது சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என நான்கு. இவற்றுள் முதற்கூறிய மூன்றும் பதமுத்தி, மற்றது உண்மை முத்தி. இவற்றுள் சாலோகம் அவ்வுலகமடைந்து நித்தியசுகம் அநுபவித்தல். சாமீபம் இறைவனுக்கு அருகிலிருந்து சேவித் திருத்தல். சாரூபம் அவனது உருவத்தையடைந்து ஆநந்த மடைதல். சாயுச்சியம் அவ்விறைவனுடன் கலந்துங் கலவாமலும் பரமானந்தமனுபவித்தல். இவற்றை முறையே சரியை, கிரியை, யோகம், ஞானத்தில் முதிர்ச்சிபெற்றவர் அடைவர்” -(அபிதான சிந்தாமணி), மோக்ஷம். “முத்திக்கு அருள்சூட” – (தேசிக மாலை. அமிருதரஞ்சனி 3. மோக்ஷத்திற்குக் காரணமான பகவானுடைய கிருபையைப் பெறுவதற்கு) “பத்தருக்கு நிஷித்தகாம்ய கர்த்ருத்வம் ஸம்ஸாரஹேது. தத்வஞ்ஞாநமூல நிவ்ருத்தி தர்மகர்த்ருத்வம் மோக்ஷஹேது. பத்தன் முன்பு பண்ணின பந்தங்களுக்கெல்லாம் தன்னதிகாராநுகுணமாக ப்ரபத்யாதி ப்ராயச்சித்தம் பண்ணி, மேலபராதம் பண்ணாதே ப்ராப்தகர்மத்தையும் ஒருவழியாலே கழித்து முக்தனாம்.” – (தத்வ பதவி), “முத்திதரும், மூல மறையின் முடிசேர் முகில்வண்ணன்” – (தேசிகமாலை, அமிருதரஞ்சனி. 7), “முத்தி வழி தந்தார்” – (தேசிகமாலை. அமிருதரஞ்சனி. 9), “முத்திதரு மெதிராசர் பொன்னடி.” – (தேசிகமாலை, பிரபந்தசாரம். 16).
30. பயம் போகும்.
முயன்று முகுந்தன் மலரடிமே லன்பால்
பயந்துறந்தார் பார்த்திருக்க முன்னம் – உயர்ந்த
துணிவான் மணிமாடத் தூப்புல்வந்த சோதி
பணிவோம்யாம் போமே பயம். (30)
(பொழி.) நாங்கள் உயரமும், ஒளியும், சிறப்பும், அழகும் கொண்ட மாளிகைகள் நிறைந்த தூப்புல் நகரில் அவதரித்த ஒளியாகிய வேதாந்த தேசிகரை வணங்குவோம். (அதனால்) நாராயணனது தாமரை மலர்போன்ற திருவடிகளில், அன்பால் முயற்சி செய்து, தமது அச்சத்தைத் துறந்த ஞானிகள் பார்த்துக் கொண்டிருக்க வணங்குவதற்கு முன்னமே, எங்களது அச்சம் போய்விடும்.
30) முகுந்தன் – விட்டுணு. “முகுந்தன் வாசகங் கேட்பதன் முன்னமே” – (பாரத படையெழுச்சி. 2) துணிவு – ஆண்மை, தெளிவு, நிச்சயம், மறங்கலங்காமை; சோதி – தேஜஸ்வி. “திருமழிசை வந்த சோதி”. – (தேசிகமாலை, அதிகார சங்கிரகம். 1.) பணிவோம் – வணங்குவோம். பயம் – அச்சம்; போம் – போகும்.
31. சிந்தித்தலின் நன்மைகள்.
பயமாயினமாயும் பாவங்கள் வீயுஞ்
சயமனத்துந் தாமேகை கூடும் – துயரொன்றும்
வாராது வண்மையால் வாதிசிங்க மிங்குதித்த
சீரொன்று சிந்திப்ப ரேல் (31).
(பொழி.) தமது வள்ளல் தன்மையால் இம்மண்ணுலகத்தில் வந்து அவதரித்த கவிவாதி சிங்கமாகிய வேதாந்த தேசிகரது சிறந்த உபதேச மொழிகளில் ஏதேனும் ஒன்றை மனத்தில் வைத்துச் சிந்திப்பார்களேயானால், அவரது அச்சம் அனைத்தும் அகலும். அவர் அறியாது செய்த பாபங்கள் எல்லாம் அழிந்துவிடும். அவருக்குக் கிடைக்க வேண்டிய வெற்றிகள் அனைத்தும், எந்தவித முயற்சியும் இன்றி, தாமாகவே வந்து சேரும். துன்பம் எதுவும் வராது.
31) மாயும் – அழியும்; பாவம் – அக்கிரமம், விலக்கப்பட்ட தீவினை வடிவமாய்த் துக்க சாதனமாயிருப்பது; வீயும் – கெடும்; துயர் – கிலேசம், துன்பம்.
32. உள்ளத்து உறையும்.
சிந்தித்து வாதிசிங்கத் தேசிகர் தம்வடிவை
வந்தித்தவர்மலர்ப் பாதத்தை -புந்தியில்வைத்
துள்ளுவர ருள்ளத் துறையுமே யும்பர்கோன்
தெள்ளியார் சிந்திக்குந் தேசு. (32)
(பொழி.) தேவர்கள் தலைவனாகிய இந்திரனும், ஞானிகளும், மனத்தில் வைத்து தியானிக்கும் திருமால், கவிவாதி சிங்கமாகிய தேசிகரது திருவடிவைத் தியானித்து அவரது மலர் போன்ற திருவடிகளை வணங்கி மனத்தில் வைத்து நினைத்துக் கொண்டிருப்பவர்களது நெஞ்சில் நிலையாக வந்து தங்கிக் கொள்வார்.
(32) வந்தித்து – வணங்கி, வழிபாடு செய்து; புந்தி – மனம், புத்தி, அறிவு; தெள்ளியார் – அறிவுடையார், “திருவேறு தெள்ளியராதலும் வேறு” (திருக்குறள், ஊழ். 4. ஆதலாற் செல்வமுடையவராதலும் வேறு, அறிவுடையராதலும் வேறு.) “உள்ளுவார் உள்ளத் துறையுமேயும்பர்கோன், தெள்ளியார் உள்ளுவாருள்ளத்து உளன் கண்டாய்” – (மூன்றாம் திருவந்தாதி 40), “உள்ளுதலுள்ளி யுரைத்த லுரைத்ததனைத் தெள்ளுத லன்றே செயற்பால” – (திருவள்ளுவமாலை 17. ஆதலால், நாம் இந்நூலைக் குறித்துச் செயக்கடவன நாம் இதன் பொருளைச் சிந்தித்துக் கொள்ளுதலும், சிந்தித்துப் பிறருக்கு அதனைச் சொல்லுதலும், பிறராலே சொல்லப்பட்ட அதனைத் தெளிதலும் அன்றே. உள்ளுதல் எனவே கேட்டலும், தெளிதலெனவே அவ்வாறொழுகலும் அடங்கின.) “தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார், வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்” – (தையொருதிங்கட்பாமாலை. 4-1.) தேசு – ஞானம், பெருமை.
33. கண் காணக் கருதும்
தேசுடைய வாழியுஞ் சங்கமுங் கையேந்தி
வாச மலர்த்துழாய் வாழ்மார்பன் – காசினியிற்
காணநின் றாலுங் கவிவாதி சிங்கனையே
காணக் கருதுமென் கண். (33)
(பொழி) ஒளியை உடைய சக்கராயுதத்தையும், வலம்புரிச் சங்கத்தையும் கையில் ஏந்தியுள்ள மணமான மலர்த்துழாய் தங்கிய திருமார்பினனாகிய நாராயணன், இந்த மண்ணுலகத்தில் யாவரும் பார்க்குமாறு நின்றாலும், எனது கண், கவிவாதி சிங்கமாகிய வேதாந்த தேசிகரையே கண்டு மகிழ்வதற்கு ஆசைப்படும்.
(33) வாசம் –வாசனை; காசினி – பூமி. “காசினிமேல் வாதியரை வென்ற ரங்கர் கதியாக வாழ்ந்தருளு மெதிரா சா” – (தேசிகமாலை, பிரபந்தசாரம் 14) “கையில் கனியென்னக் கண்ணனைக் காட்டித்தரிலும் உன்தன், மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்” (இராமாநுச நூற்றந்தாதி 104); கருதும் – ஆசைப்படும். “கண்கருதிடுங்காண” – (இராமாநுச நூற்றந்தாதி 102)
- காட்சியும் கேள்வியும்
கண்ணவரை யேகாணும் காதவர்சீ ரேகேட்கும்
எண்ணமவர் தொல்புக ழேயெண்ணும் – திண்ணம்
கவிவாதி சிங்கக் கடவுளையே நண்ணி
அவியாத காதலடைந்து. (34)
(பொழி.) கவிவாதி சிங்கம் என்று போற்றப்படுகிற தெய்வமாகிய தேசிகரையே சேர்ந்து தணியாத பக்தியுடன் கலந்து, எனது கண் அந்த ஆசாரியரது திருவுருவத்தையே கண்டுகொண்டிருக்கும். எனது செவி அவரது சிறப்பையே கேட்டுக்கொண்டிருக்கும். மனம் பழமையான புகழையே நினைத்துக் கொண்டிருக்கும். இது எனது உறுதியாகும்.
(34) கண்ணவரையே ………… எண்ணும் — “வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி ……. தொல்லைமால்தன்னை, வழாவண் கைகூப்பி மதித்து.” (நான்முகன் திருவந்தாதி. 11); காதல் – பக்தி.
- வாழ்க்கை
அடைந்து மடநெஞ்சே யன்பா லவனைக்
கிடந்து மலரடியின் கீழே – தொடர்ந்தென்றும்
தூயமலர்ச் சோலைசூழ் தூப்புனகர் வந்துதித்த
மாயவனை யேவணங்கி வாழ். (35)
(பொழி.) இளமைத் தன்மை வாய்ந்த மனமே! தூய்மையான மலர்களைக் கொண்ட சோலைகள் சுற்றியுள்ள தூப்புல் நகரில் வந்து அவதரித்த வேதாந்த தேசிகரையே எல்லாக் காலமும் தொடர்ந்து சென்று, அன்பால் ஆசாரியரைச் சேர்ந்தும், அவரது மலர் போன்ற திருவடிகளின்கீழ் அசையாமல் கிடந்தும், அவரையே வணங்கி வழிபாடு செய்தும் வாழ்வாய். அதுதான் சிறந்த வாழ்க்கையாகும்.
(35) அன்பாலவனை – “அன்பு ஆழியானை அணுகென்னும் நா அவன்தன், பண்பாழித்தோள் பரவியேத் தென்னும் – முன்பூழி, காணானைக் காணென்னும் கண் செவிகேளென்னும், பூணாரம் பூண்டான் புகழ்.” (முதல் திருவந்தாதி 72); அடைந்து மடநெஞ்சே யன்பாலவனை – “என்றும் விடலாழி நெஞ்சமே! வேண்டினேன் கண்டாய், அடலாழி கொண்டான் மாட்டு அன்பு.” – (முதல் திருவந்தாதி .71); மாயவன் – “மாயவனுந்தம்முனும்” – (திணைமாலை நூற்றைம்பது 58)
- காழ்ச்சி
வாழ்ச்சி யிதுநெஞ்சே வாதிசிங்கத் தேசிகர்தம்
காழ்ச்சியுணக் குண்டா மேற்கன்மந் – தாழ்ச்சியொன்றும்
சாரா வகைதீருஞ் சன்மதி துயர்தொலையும்
சீரார் சிரீதரனைச் சேர்ந்து. (36)
(பொழி.) மனமே! உனக்கு, வாதி சிங்கமாகிய தேசிகரிடத்து வைராக்கியம் (உறுதி) ஏற்படுமானால், நாம் செய்த தீய கர்மாக்கள் அனைத்தும் தவறு எதுவும் சேராவகையில் நீங்கிவிடும். பிறவியாகிய துன்பமும் அழிந்துவிடும். இது சிறப்புமிக்க திருமகள்வாழ் மார்பினனாகிய நாராயணனை அடைந்த வாழ்க்கையாகும்.
(36) வாழ்ச்சி – வாழ்நாள் ; இதுநெஞ்சே – “வாழ்த்த வாயு நினைக்க மடநெஞ்சும்.” – (தேவார. திருநாவுக். தனித் திருத். 7); காழ்ச்சி – வன்மை; தாழ்ச்சி – தவறு, தாழ்வு நீட்டிப்பு; சிரீதரன் – லக்ஷ்மியைத் திருமார்பில் தரிப்பவன். “617. ஸ்ரீதர: – மணிக்கு ஒளிபோலவும், மலருக்கு மணம் போலவும், மதிக்கு நிலவு போலவும், அமுதத்துக்குச் சுவை போலவும் இயற்கையாகவுள்ள ஸம்பந்தத்தினால் எப்பொழுதும் லக்ஷ்மியைச் சேர்ந்திருப்பவர். “யோக்யனாயிருப்பவன் கீர்த்தியை எப்படி விடமுடியாதோ அப்படித்தான் இந்தப் பிராட்டியை விட முடியாது” (நஹிஹாதுமியம் சக்யா கீர்த்தி ராத்மவதோயதா) என்பது ஸ்ரீமத் ராமாயணம்.” – (ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாம பாஷ்யம்.)
(37) வாழ்த்து
சேரும் புகழோன் றிருவத்தி யூர்வரதன்
காரொத்த வண்ணம் கழலிணையைத் – தார்மன்னுஞ்
சென்னியில் வைத்தென்றுஞ் சிறக்கு மணிதூப்புல் :
மன்னனையென் னெஞ்சமே வாழ்த்து. (37)
(பொழி.) எனது மனமே! திருஅத்தி ஊர் என்று சொல்லப்படுகிற காஞ்சிபுரத்தை அடைந்த பெரும் புகழுடையவனும் கேட்டார்க்குக் கேட்ட வரங்களைத் தருபவனும், மேகத்தை ஒத்த நீல நிறத்தை உடையவனுமாகிய நாராயணனது திருவடிகளை எல்லாக் காலத்திலும், தமது, மாலை நிறைந்த தூப்புல் நகர் அரசனான தேசிகனை தேசிகனை வாயார வாழ்த்துவாய்.
(37) திருவத்தியூர் வரதன் – “உலகேத்தும் ஆழியான் அத்தியூரான்” – (இரண்டாந்திருவந்தாதி 95), “அத்தியூரான் புள்ளையூர் வான்” – (இரண்டாந்திருவந்தாதி. 96), “அத்திகிரி, யிடமுடைய வருளாளர்.” – (தேசிகமாலை, அடைக்கலப் பத்து. 2); “சீர்அத்திகிரித்திருமால்” – (தேசிகமாலை. அருத்த பஞ்சகம். 3); “திருமால் திருவத்தி நகரானே” – (௸ ௸. 6) வரதன் கழலிணையை…. மன்னன்– “உத்தரவேதியுள் வந்துதித்த செய்யவண் மேவிய சீரருளாளரைச் சிந்தை செய்யும் மெய்யவன் எந்தை தூப்புற்பிள்ளை” – (பிள்ளையந்தாதி. 4).
(38) நல்வினை
வாழ்த்திக் கவிவாதி சிங்கன் மலரடியைத்
தாழ்த்தித் தலையையதன் கீழே – சூழ்த்தென்றும்
தொல்புகழே சிந்திப்பார் சூழ்வினையை மாற்றுவரே
நல்வினையா.நானிலத்தி லீது. (38)
(பொழி.) கவிவாதி சிங்கம் என்று பலராலும் போற்றப்படுகின்ற தேசிகரது தாமரை மலர் போன்ற திருவடியை வாயார வாழ்த்தியும் அந்தத் திருவடியின் கீழே தலையைத் தாழ்த்தியும், எல்லாக் காலத்தும் அவரை வலம் செய்தும் பழைமையான புகழையே சிந்தித்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் பக்தர்கள், தீவினையை இல்லாதபடி மாற்றிவிடுவார்கள். இதுவே, இந்த உலகத்தில் ஆசாரிய அடியார்கள் பெறும் நல்வினையாகும்.
(38) நானிலம் – நால்வகை நிலம்; அவை: குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தலென்பன. இப்பகுப்புப்பற்றிப் பூமிக்கு நானிலம் எனப்பெயர் கூறுவர் ; ஈது – இது.
(39) உபாயம்
ஈதே யுயிர்க்கிதமு மெத்தவமும் மெப்பொருளும்
ஈதேபே ரின்ப மிகுவீடும் — தீதறுசீர்த்
தூப்புனகர் வந்துதித்த தொல்புகழ்சே ராரியன்பேர்
கோப்புடனே கூறுவதா முற்று. (39)
(பொழி.) குற்றம் இல்லாத சிறப்பினை உடைய தூப்புல் நகரில் வந்து தோன்றிய பழம் புகழ் நிறைந்த ஆசாரியன் திருப்பெயரை உபாயமாகக் கொண்டு, அந்த ஆசாரியனோடு பொருந்தி நின்று கூறுவது. இதுவே, உயிர்க்கு நன்மையும் எவ்வகையான தவமும், எல்லா விதமான பொருளுமாகும். பேரின்பம் மிக்க பரமபதமும் இதுவேயாகும்.
(39) இதம் – ஹிதம், மோக்ஷத்திற்கு ஸாதநமாக அநுட்டிக்கப் பெறும் உபாயம் ; பேரின்பமிகுவீடு – அந்தமில் பேரின்பமளிக்கும் மோக்ஷம்.
(40) நண்ணுவார்.
உற்றுநின் சேவடியை யுய்வதோர் காரணத்தால்
பற்றொன்று மின்றிப் பவக்கடலின் – தொத்தறுப்பார்
வேதமுடித் தேசிகனே வேத விழுப்பொருளாம்
மாதவனை நண்ணுவரே மன். (40)
(பொழி.) வேதங்களை உன் திருமுடியில் ஏற்றிக்கொண்ட ஆசாரியப் பெருமானே! பிழைக்க வேண்டும் என்ற ஒரு காரணத்தினால் , உனது செம்மையான திருவடிகளைச் சேர்ந்து ஒருவிதமான உலகப் பற்றும் இல்லாமல் பிறவியாகிய கடலின் தொடர்பினை நீக்கியவர், வேதங்களின் விழுப்பொருளாக விளங்கும் மாதவனாகிய நாராயணனை அடைவார்கள். இஃது உறுதி.
(40) உற்று – அடைந்து, பொருந்தி; சேவடி – சிவந்த திருப்பாதம்; உய்வது – உஜ்ஜீவிப்பது; பற்று – ஆசை, கதி, உரிமை, உபாயம்; பவக்கடல் – ஸம்ஸாரஸாகரம், பிறவிப் பெருங்கடல்; தொத்து – ஸம்பந்தம், தொடர்ச்சி, சார்பு; விழுப்பொருள் – சிறந்தநுண்பொருள்; வேதவிழுப் பொருளாம் மாதவன் – “வேதாந்தவிழுப்பொருளில் மேலிருந்தவிளக்கை.” – (பெரியாழ்வார் திருமொழி 4-3-11); மாதவன் – திருமால், 73. ஸ்ரீதேவியின்கணவர். திருமகள் தம்மைவிட்டு என்றும் அகலாமல் இருக்கப்பெற்றவர். ஞானம், சக்தி, பலம் ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் ஆறு குணங்களும் சேர்ந்து உருவெடுத்திருப்பவளும், பகவானுடைய எல்லாச்சக்திகளுக்கும் தலைமையாக உலகங்களை நடத்தும் பராசக்தியும், பகவானுடைய மற்றச்சக்திகளை நடத்திக்கொண்டு சராசரங்கள் அடங்கிய உலகமனைத்தையும் வ்யாபித்திருப்பதனால் அனந்தையென்று சொல்லப் படுகிறவளும், தயாமூர்த்தியுமாகிய திருமகளுக்கும் ஸ்வாமி யென்பது. 169. “மா” எனப்படும் பரமாத்ம ஞானத்தைக் கொடுப்பவர் ; மெளனம், த்யானம், யோகம் இம்மூன்றும் பொருந்தினவர். 741, லக்ஷ்மிக்குக்கணவர். உலகங்களுக்கு லக்ஷ்மி தாயும் தாம் தந்தையுமாக உறவாயிருப்பவர் என்பது; மதுவென்னும் யாதவகுலத்தில் அவதரித்தவர் ; மெளனம், தியானம் யோகம் இம்மூன்றும் உடையவர். “பாரதனே! மெளனத்தினாலும் தியானத்தினாலும் யோகத்தினாலும் நான் மாதவனாகிறேன்” என்று ஸ்ரீமஹாபாரதம், உத்தியோகபர்வத்தில் சொல்லப்படுகிறது.”- (ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம்); நண்ணுவரே – கிட்டுவர், பொருந்துவர்; மன் – அசைநிலை, திடம், மிகுதி
- வம்பு கற்றார்.
மன்னு மறையனைத்து மாகுருவின் பாற்கேட்டாங்
குன்னியதனுட்பொருள்க ளத்தனையுந் -துன்னுபுகழ்
பெற்றலுந் தூப்புற் பெருமானை நண்ணாதார்
கற்றாரே காசினியில் வம்பு. (41)
(பொழி.) நிலையான வேதங்கள் எல்லாவற்றையும் தமது சிறந்த குருவினிடத்தில் காதாரக் கேட்டு, அதன் உள்ளடங்கிய பொருள்கள் முழுவதையும் மனத்தில் நினைத்து, நெருங்கிய புகழைப் பெற்றிருந்தாலும், தூப்புல் நகரில் அவதாரம் செய்த ஆசாரியப் பெருமகனாகிய வேதாந்த தேசிகரை, ஒன்றிக் கலவாதவர், இந்த உலகத்தில் பயனற்றவற்றைக் கற்றவரேயாவர்.
(41) மன்னு – திடமான, நிலைபெற்ற, பொருந்தின; மாகுரு – மாதேசிகன்; உன்னி –நினைத்து; துன்னு – பொருந்திய, மிகுதியான; நண்ணாதார் – அடையாநவர், ஒன்றிக்கலவாதவர்; வம்பு –வஞ்சனை, வீம்பு; “வய்யம் சுமப்பதே வம்பு.”
- அடிமை அருள்வான்.
வம்பார் குழன்மாதர் வான்கலவி யாசைதன்னால்
அம்பாய பட்டலைந்து நின்றேனைத் – தன்பாத
தாமரைமேற் காதலையே தந்தடிமை கொண்டருள்வான்
தூயமனன் றுாப்புலவ னின்று. (42)
(பொழி.) வாசனை நிறைந்த கூந்தலை உடைய பெண்களது சிறந்த கலவியாகிய ஆசையினால், மன்மதனது மலராகிய அம்பு பாயப்பட்டு, வீணாகத் துன்பத்தில் அலைந்து திரிந்து கொண்டு நின்ற என்னை, இன்றைய தினம், தூய்மையான மனத்தை உடையவனும், தூப்புல் நகரில் தோன்றியவனுமாகிய சுவாமி தேசிகன் தனது திருவடிகளாகிய தாமரை மலரின்மேல் பக்தி கொள்ளச் செய்து, என்னைத் தனது அடிமையாக ஏற்றுக்கொண்டு அருளினான்.
(42) வம்பு –வாசனை; வம்பார்குழன்மாதர் – “வம்புலாம் கூந்தல் மனைவி” – (பெரிய திருமொழி 1-6-4); வான் – வலிமையான; கலவி –கலத்தல்; காதல் – ஆசை.
- எண்ணேன்
இன்றுமுதல் யாவரையு மெண்ணே னிறையென்று
சென்றுசே ணாடர் மிகப்போற்றக் – குன்றெடுத்த
வேங்கடமால் வித்தகத்தால் வேதாந்த தேசிகனாய்
ஈங்குதித்த வேற்ற மறிந்து. (43)
(பொழி.) உயர்ந்த வான் நாட்டவரான தேவர்களும் போற்றிப் புகழுமாறு, ஆயர்பாடிக்குச் சென்று, கோவர்த்தன கிரியைக் குடையாக எடுத்த, திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கும் திருமால், தமது ஞானத்தால் வேதாந்த தேசிகனாக இந்த உலகத்தில் அவதரித்த உயர்வை அறிந்து கொண்ட நான் வேறு யாரையும் இன்றுமுதல் பரமாத்மாவாக எண்ணமாட்டேன்.
(43) இன்றுமுதல் – “இன்று முதலாக என் நெஞ்சே.” – (முதல் திருவந்தாதி, 40) இறை – பரமாத்மா; சேண் – உயர்ச்சி, தூரம்; வித்தகம் –ஆச்சர்யமான குணசேஷ்டிதம்; உதித்த – அவதரித்த; ஏற்றம் – தகுதியாயிருக்குந்தன்மை.
- என்றும் காப்பார்.
அறிந்தறிந்து நற்கலைக ளாய்ந்தப் பொருளிற்
செறிந்தபெருஞ் சிந்தையராய்ச் செவ்வே – சிறந்தபுகழ்த்
தூப்புனகர் வந்துதித்த தூய்மனத்தன் பாதமே
காப்பென்பார் காப்பரென் றும். (44)
(பொழி.) நல்ல ஆன்மிக ஞானம் நிறைந்த கலைகளை, நன்றாகத் தெரிந்துகொண்டு, அதன் உட்பொருளை ஆராய்ந்து, அந்தப் பொருளில் பொருந்திய பெருமை நிறைந்த மனத்தவராக நின்று, நேர்மையாக, சிறந்த புகழுடைய தூப்புல் நகரில் வந்து தோன்றிய தூய்மையான மனத்தை உடைய தேசிகரது திருவடியே, தமக்குப் பாதுகாப்பு என்று சொல்லும் அன்பர்கள், அந்த ஆசாரியரால் எல்லாக் காலத்தும் பாதுகாக்கப் படுவார்கள்.
(44) செறிந்த – பொருந்திய, நிறைந்த; சிந்தை – மனம், நினைவு; செவ்வே – நேர்மையாக; காப்பு – பாதுகாவல், ரக்ஷை.
- இன்பக் கதி.
என்று மினியெமக்கோ ரின்பக் கதியிதுவே
குன்ற மெடுத்தபிரான் குற்றமில்சீர் – நன்றாக
வேத்துங் கவிவாதி சிங்கரையே யெப்பொழுதும்
நாத்தழும்ப நாமுரைப்போ நன்று. (45)
(பொழி.) கோவர்த்தனகிரியைக் குடையாகத் தூக்கிய குற்றம் இல்லாத சிறப்பை நன்றாகப் போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கும் கவிவாதி சிங்கராகிய வேதாந்த தேசிகரையே எப்பொழுதும் நாம் சிறப்பாக, நா, தழும்பு ஏறும் அளவுக்குப் பேசுவோம். இந்த நற்செயலே, இனி, எக்காலத்தும் எங்களுக்குப் பேரின்பம் அளிக்கும் பரமபத வாழ்வாகும்.
(45) கதி – உபாயம், பலன், வழி, ப்ரகாரம் ; பிரான் – ஸ்வாமி, உபகாரி நாத்தழும்ப – “நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால், ஏத்த” –(பெரியதிருமொழி. 1-7-8)
- இப்போது பெற்றது
நன்றிதுவாந் தீததுவா மென்றொன்று நன்கறியா
தின்றறுதி யாகவே யென்னெஞ்சம் – வென்றிமிகும்
வேதமுடித் தேசிகனை வேறாக வேத்தியபின்
தீதில்மதி பெற்றதிப்போ தீது. (46)
(பொழி.) எனது மனம், நல்லது இதுதான் என்றும், தீமையானது அதுதான் என்றும், இன்றைய தினம் உறுதியாகவே நன்றாகத் தெளியாது. ஆனால், வெற்றி மிகுந்த, வேதமுடித் தேசிகனாகிய ஆசாரியரை உயர்ந்தவராகக் கொண்டு போற்றிப் புகழ்ந்த பிறகு, தீமையில்லாத தெளிந்த அறிவைப் பெற்றுக் கொண்டுவிட்டது. இந்த்த் தெளிவு இப்பொழுது நான் பெற்றுக் கொண்டதாகும்.
(46) உறுதி – உறைப்பு ; வென்றிமிகும் வேதமுடித் தேசிகன் – “வென்றிப் புகழ்த்திரு வேங்கடநாத னெனுங் குரு” -(பிள்ளையந்தாதி. 5); தீதில்மதி – “துய்யமதி” – (உபதேசரத்தின மாலை. 12); மதி – ஞானம், புத்தி. “உன்னைப் பிறரறியார் என்மதிக்கு, விண்னெல்லாமுண்டோவிலை” – (நான்முகன் திருவந்தாதி. 51)
- நிலத்தேவர்
ஈதேயாம் வேண்டும் பயனிதுவே சாதனமும்
ஈதேமற் றெல்லா மெமக்கென்று – சாதுவராய்த்
தண்புனல்சூழ் தூப்புற்கோன் றாளிணையே நண்ணுவார்
மண்மிசைவாழ் வானவரே மற்று. (47)
(பொழி.) நாம் விரும்பும் பலன் இதுவே. விரும்பும் உபாயமும் இதுவே. மற்றைய எல்லாமும் எங்களுக்கு இதுவேயாகும் என்று எண்ணிக்கொண்டு சாந்தமான குணமுடையவராய், குளிர்ந்த நீர் சூழ்ந்த தூப்புல் நகரில் தோன்றிய தலைவனாகிய தேசிகரது திருவடிகளைச் சேர்ந்தவர் இந்த மண்ணுலகத்தில் வாழும் தேவரேயாவர்.
(47) சாதனம் – உபாயம்; சாதுவராய் – “சாதுவராய்ப் போதுமின்கள்” – (நான்முகன் திருவந்தாதி. 68); மண் மிசைவாழ்வானவர் – பூசுரர்; மற்று – அசைநிலை.
- வினை தோற்றாது.
மற்றொன்றும் யான்வேண்டேன் மானிடர்காண் மாநிலத்துக்
குற்றமில்சீர்த் தூப்புனகர்க் கோமான்றன் – எத்திசையும்
கொண்டாடி யேத்துங் குணங்களுக்கே யெஞ்ஞான்றுந்
தொண்டானேன் றோற்றா வினை . (48)
(பொழி.) மக்களே! இந்தப் பெரிய நில உலகத்தில் மற்று எதையும் நான் விரும்ப மாட்டேன். குற்றம் இல்லாத சிறப்புடைய தூப்புல் நகரில் அவதரித்த தலைவனாகிய சுவாமி தேசிகனது, எல்லாத் திக்குகளிலும் கொண்டாடிப் போற்றுகின்ற குணங்களுக்கே, எல்லாக் காலத்திலும் தொண்டனாக ஆனேன். அதனால் எனக்குத் தீவினைகள் (பாவம்) எதுவும் தோன்றாது.
(48) மற்றொன்றும் யான்வேண்டேன் – “மற்றொன்றும் வேண்டாமனமே ” – (திருமாலைத்தனியன்) ; தொண்டு – அடிமை; “குணங்களுக்கே யெஞ்ஞான்றுந் தொண்டானேன் – “உயர்வறவுயர் நலமுடையவன் துயரறுசுடரடிதொழு தெழப்பாராயென்கிறார்” ; “அஹமஸ்யாவரோப்ராதா குணர் தாஸ்யமுபாகத” என்னுமாபோலே : இளையபெருமாளை ‘நீர் இவர்க்கு என்னாவீர்?’ என்ன, ‘பெருமாளும் ஒருபடி நினைத்திருப்பர், நானும் ஒருபடி நினைத்திருப்பேன்” என்றார் ; “அவர் நினைத்திருக்கும்படியென் ? நீர் நினைத்திருக்கும்படியென் ?” என்ன, ‘அவர் தம்பின்பிறந்தவனென்றிருப்பார்; நான் அவர் குணங்களுக்குத் தோற்று அடியேனாயிருப்பன்’ என்றாரிறே அப்படியே இவரும் “உயர்வற வுயர்நல முடையவன் துயரறு சுடரடி தொழுதெழப்பாராய் நெஞ்சே!” என்கிறார். இவர் தாம் முற்படக்குணங்களிலே யிழிவானென்? என்னில் தாம் அகப் பட்டதுறை அதுவாகையாலே இவரைக் குணத்தையிட்டாயிற்று வணங்குவித்தது.” – (திருவாய்மொழி 1-1-1, ஈடு.)
- சேர்த்தார் பெறும் பயன்.
வினையனைத்துந் தீருமே வேமே துயரம்
மனைமனைவி யாசையுமா ளும்மே – தனையுணர்ந்து
செங்கமல நாபனையும் சேரலா மேவாதி
சிங்கரைத்தன் சிந்தைதனிற் சேர்த்து. (49)
(பொழி.) வாதம் செய்யும் எதிரிகளுக்குச் சிங்கமாகத் தோன்றும் வேதாந்த தேசிகரைத் தனது மனத்தில் வைத்து, தியானித்தால், கர்மங்கள் எல்லாம் ஒழியும், துன்பங்கள் யாவும் வெந்துவிடும்; வீட்டில் உள்ள மனைவிமேல் கொண்டுள்ள ஆசையும் இல்லாமல் போகும்; தன்னை நன்றாக உணர்ந்து, செந்தாமரைமலர் போன்ற திருஉந்தியை (தொப்பூழ்) உடைய நாராயணனையும் அடையலாம்.
(49) வினை – கருமம்; தீரும் – ஒழியும் நீங்கும்; துயரம் – துன்பம்; வேமே – எரிந்து போம்; மனை – வீடு, இரண்டாயிரத்து நானூறு குழிகொண்ட நிலமென்றும், பதினாறரைக்காற் குழிகொண்ட நிலமென்றுங் கூறுவர். மனைவி – நாயகி; மனை மனைவியாசை – மண்ணாசை, பெண்ணாசை; மாளும் – இறந்துபடும்; தனையுணர்ந்து — சேதநன் நித்யனாய் அணுவாய் ஜ்ஞாநாநந்தவிலக்ஷணனாய் ஜ்ஞாநகுணகனாய் ஏகரூபனாய் பகவத் சேஷபூதனாயிருக்கும் இயல்பை நன்கு தெளிந்து; செங்கமல நாபன் – பத்மநாபன், பற்பநாபன், விஷ்ணு. பத்மநாப:– 48. பிரம்மதேவருக்கும் பிறப்பிடமான காலரூபமான கமலத்தை நாபியில் உடையவர்; பகவானுடைய நாபியில் புஷ்கரமுண்டாகிறது; “புஷ்கரம், புண்டரீகம், பத்மம், சக்ரம் என்னப்படுவது காலம்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. 198. நாபியில் பத்மத்தையுடையவர்; மேற்சொல்லிய பொன்மயமான கமலத்தை நாபியில் உடையவர். “யோகநித்ரை செய்துகொண்டிருந்த அந்தப் பகவானுடைய நாபியில் பூமிரூபமான சிறந்ததும் அற்புதமுமான அஷ்டதளபத்மம் ஒருகால் ஸங்கல்பமாத்திரத்தினால் உண்டாயிற்று. மேருமலையானது அதன் பொன்மயமான காயென்று சொல்லப்படுகின்றது” என்று கூறப்பட்டுள்ளது. 347. பதுமம்போன்ற நாபியை உடையவர் – (ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யம்); சிந்தை – மனம்.
- வைப்பார்
சேர்ப்பரேற் றந்நெஞ்சிற் சிக்கெனவே சீராருந்
தூப்புனகர் வந்துதித்த தூயவனைக் – காப்பரவர்
காசினியி லுள்ளாரைக் கன்ம மறுத்திட்டு
மாசில்மன மெய்தவும்வைப் பார். (50)
(பொழி.) தமது மனத்தில், சிறப்பு நிறைந்த தூப்புல் நகரில் அவதாரம் செய்த தூய்மையான மனம் பெற்ற தேசிகரை நன்றாகச் சேர்த்து வைத்தால், அவரை, அந்த ஆசாரியர் பாதுகாப்பார். மேலும், இந்த மண்ணுலகத்தில் உள்ள மக்களது கருமங்களை ஒழித்து, அவர்களைக் குற்றம் இல்லாத மனத்தை அடையவும் வைப்பார்.
(50) காப்பர் – ரக்ஷிப்பர்; மாசில் மனம் – குற்றமற்ற மனம், “மாசில் மனந்தெளி முனிவர்” – (தேசிக மாலை. அமிருதாசு வாதினி 27).
- அற்புதம்
வைப்பார் மனந்தன்னின் மாநிலத்து மாதவத்தோர்
எப்பொழுது மெங்கள் பெருமானை –அற்புதமாந்
தேசுடைய வேதாந்த தேசிகனைச் சீர்மிகுந்த
மாசின் மதியுடையோர் வாழ்வு. (51)
(பொழி.) சிறந்த தவத்தை உடைய ஞானிகள், இந்த உலகத்தில், தமது மனத்தில் எக்காலத்திலும், எங்கள் இறைவன் ஆகிய நாராயணனை வைத்துக்கொள்வார்கள். (ஆனால்) ஒளி மிகுந்த வேதாந்த தேசிகனே, சிறப்பு நிறைந்த குற்றம் இல்லாத அறிவு பெற்றவர்களுக்கு நல்வாழ்வாக அமைவான். இஃது ஓர் ஆச்சரியமாம்.
(51) மாதவத்தோர் – சரணாகதி நிஷ்டர்; தேசு – அழகு, ஒளி, கீர்த்தி, ஞாநம் பெருமை; மாசின்மதி – “துய்யமதி” (உபதேசரத்தின மாலை 12); மதி – நுண்ணறிவு.
- இதுவே வாழ்வு.
வாழ்விதுவே யுந்தமக்கு வம்மி னுலகத்தீர்
தாழ்வெங்கும் வாரா தளர்ச்சிநில்லா – சூழ்வினைகள்
சேரச்சி தைந்திடுமே திண்ணமிது வாழ்த்துமினோ
ஆரணத் தேசிகரை யாய்ந்து. (52)
(பொழி.) உலகத்தில் வாழும் மக்களே! இங்கே வாருங்கள். வேதம் கற்ற ஆசாரியரை (இவரே நமக்கு நன்மை செய்வார் என்று) ஆராய்ந்து தெளிந்து வாழ்த்துங்கள். அதனால் உங்களுக்குத் தவறு எதுவும் வராது. உடலிலோ உள்ளத்திலோ சோர்வு என்பது நிற்காது. உம்மைச் சூழ்ந்துள்ள தீவினைகள் அனைத்தும் ஒருசேர அழிந்துவிடும். இந்த நன்மைகள் கிட்டுவது உறுதி. ஆகவே, இதுவே உங்களுக்கு நல்வாழ்வாகும். (முறைமை)
(52) வாழ்வு – சீவிதம்; வம்மின் – வாரீர்; ஆரணம் – வேதம்.
- ஓதமுடியா
ஆய்ந்துரைக்க லாமணிக ளாழ்கடலு ளித்தனையென்
றாய்ந்துரைக்க லாமமரர் கோன்புகழும் – ஏய்ந்தசீர்
வேதமுடித் தேசிகனார் வீறுடைய வண்குணங்கள்
ஓதமுடியா வெவர்க்கு மோர்ந்து. (53)
(பொழி.) ஆழமான கடலுள் மூழ்கி, அங்கள்ள இரத்தினங்கள், இத்தனை உள்ளன என்று எண்ணிப் பார்த்துச் சொல்லிவிடலாம். (ஆனால்)எத்தகைய ஆற்றல் படைத்தவர்க்கும், நிறைந்த சிறப்பினரான வேதமுடித் தேசிகனாரது பெருமை உடைய, வள்ளன்மை பொருந்திய குணங்கள், ஆராய்ந்து பார்த்துக் கூற இயலாதவைகளாகும்.
(53) மணி – இரத்தினம்; ஏய்ந்தசீர் – “ஏற்கும் பெரும் புகழ்வான வரீசன்” என்னுமாபோலே அங்குத்தைக்கு அநுரூபமாய்ப் பொருந்தியிருக்கிற அனந்த கல்யாண குணங்களையுடைய; ஒர்ந்து – ஆராய்ந்தறிந்து
- பாட்டினைப் பாடுவார்
ஒரா ரறத்தை யுணரார் பெரும்பொருளைப்
பாரார் பயனான வின்பத்தைச் – சீராரும்
வீட்டையும் வேண்டாரே வேதாந்த தேசிகர்தம்
பாட்டினைப் பாடு மவர். (54)
(பொழி.) வேதாந்த தேசிகருடைய உபதேசப் பாசுரங்களைப் பாடும் அன்பர்கள், அறத்தை ஆராய மாட்டார்கள். பெருமைக்குரிய பொருளையும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். பயன்தரும் இன்பத்தையும் வேண்டும் என்று பார்க்க மாட்டார்கள். சிறப்புப் பொருந்திய மோட்சத்தையும் விரும்பமாட்டார்கள். (ஆக, அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் தேசிகரது பாசுரங்களிலேயே அனுபவிப்பார்கள், அதனைப் பாடுவார்கள்.)
(54) அறத்தை……வீட்டை – இந்திரன் முதலிய இறையவர் பதங்களும் அந்தமி லின்பத்தழிவில் வீடும் நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரா னெடுக்கப் பட்ட பொருள் நான்கு: அவை அறம், பொருள், இன்பம், வீடென்பன. அவற்றுள் வீடென்பது சிந்தையு மொழியுஞ்செல்லா நிலைமைத்தாகலின், துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவதல்லது இலக்கணவகையாற் கூறப்படாமையின், நூல்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமே யாம்”; பாட்டினை – பெருமையை; பாடுமவர் – அநுபவிப்பவர்.
- மேவுவார்
அவரவர் தந்த மறிவளவின் மாலைத்
தவநெறிக ளால்வணங்கிச் சார்வார் – எவரேலும்
தூயமறை யோர்வணங்குந் தூப்புனகர்க் கோமானை
மேயறிவான் மேவுவரே யிங்கு. (55)
(பொழி.) திருமாலை,அவரவர்கள் தத்தமது அறிவின் அளவைக் கொண்டு தவம் செய்யும் வழிகளில் வழிபாடு செய்து சேர்வார்கள். ஆனால், இம்மண்ணுலகத்தில் யாராகவிருந்தாலும், தூய்மையான வேதங்களைக் கற்ற பெரியோர்கள் வணங்கக்கூடிய தூப்புல் கோமானாகிய சுவாமி தேசிகனையே வந்து சேர்வார்கள்(பொருந்துவார்கள்).
(55) தவம் – பிரபத்தி, “தஸ்மாந்ந்யாஸ மேஷாம்தபஸா மதிரிக் தமாஹு:” – (தைத்ரீயம் 2); தவநெறி – யோகமார்க்கம், – பக்தி மார்க்கம். “சார்வேதவநெறி’’ – (திருவாய்மொழி 10-6-9) ‘’தவமாவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கல் முதலியன”; மேயம் – ஞேயம், அறியத்தக்கது; மேவுவர் – பொருந்துவர்.
56. இங்கு இருந்தால் ஏன்?
- இங்கிருந்தா லேதமென்னெந்தமக்கு வாதிசிங்கர்
செங்கமல பாதமுஞ் சீர்வடிவும்-அங்கமலக்
கைகளும் வாயுங் கருணைமிகு கண்ணிணையும்
கைகனி போற்காணக் கூடில். (56)
(பொழி.) வாதம் செய்பவர்க்குச் சிங்கமாகத் தோன்றக்கூடிய தேசிகரது செம்மையான தாமரை மலர் திருவடிகளும், சிறப்பான திருவுருவும், அழகிய தாமரை மலர் போன்ற திருக்கைகளும் பொருந்திய அருள் மிகுந்த கண்களும், உள்ளங்கை நெல்லிக்கனி போல் எமக்குக் காணுமாறு கிடைத்துவிட்டால், நாம் இந்த மண்ணுலகத்தில் இருந்தால் வரும் குற்றம் என்ன? (ஒன்றும் இல்லை)
(56) ஏதம் – குற்றம், துன்பம்; செங்கமல……..கண்ணிணையும் – “கேட்டுரைக்கில் தாமரை நின் கண்பாதம் கையொவ்வா, சுட்டுரைத்த நன்பொன் உன் திருமேனி யொளியொவ்வாது” -(திருவாய் மொழி 3-1-2); கைகனிபோற் காண – “கையில் கனி யென்னவே”-(இராமாநுச நூற்றந்தாதி. 103)
- பதம் எய்தலாம்
கூடி லவர்குணத்தைக் கூறவே யெந்தமக்குத்
தேடி லவர்பதத்தைச் சென்னிதனிற் – சூடத்
துலங்கொளிசேர் தூப்புல்வருந் தூயோ னருளால்
வலங்கொள்பத மெய்தலாம் வான். (57)
(பொழி.) எங்களுக்கு, அந்த ஆசாரிய,து பெருங்குணங்களை எடுத்துப் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தால், அவரது திருவடிகளை, முடியில் அணிந்துகொள்ள, தேடிக்கொண்டால், விளங்குகின்ற ஒளி சேர்ந்த தூப்புல் நகரில் அவதரித்த தூய்மை உடையவனான தேசிகனது திருவருளால், நாங்கள், வெற்றிகொண்ட பரமபதம் எய்தலாம்.
(57) கூடில் – பெற்றால், சேர்ந்தால்; துலங்கு – பிரகாசித்து; வான் – பரமபதம்.
- தோன்றினவோ
வானிற் றிகழு மதியோ கதிரவனோ
ஊனமிலா வோமத் தொளியழலோ – மாநிலத்தில்
சோதியவை மூன்றுமொன்றாய்த் தோன்றினவோ தூப்புனகர்
வாதிசிங்கத் தேசிகராய் வந்து. (58)
(பொழி.) ஆகாயத்தில் விளங்குகின்ற சந்திரனோ, அல்லது சூரியனோ, அல்லது குற்றம் இல்லாத யாகத்தில் உள்ள ஒளிமிக்க நெருப்போ, அல்லது ஒளியோடு கூடிய மூன்றும் ஒன்றாகச் சேர்ந்தோ, இந்த மண்ணுலகத்தில் வந்து, தூப்புல் நகர் வாதிசிங்கர் எனப் போற்றப்படுகின்ற வேதாந்த தேசிகராய் உதித்தனவோ?
(58) வான் – ஆகாசம்; மதி – சந்திரன்; கதிரவன் – சூரியன்; அழல் – ஒமாக்னி; சோதியவை மூன்று – முச்சுடர் மூன்று சுடர். அவை அக்கிநி ஆதித்தன், சந்திரன் என்பர்.
- தாங்கியவை
வந்து கருணையால் வானவர்கோன் வன்படைகள்
ஐந்து மனைத்துலகு முய்யவே – செந்தார்க்
கவிவாதி சிங்கராய்க் காசினியைத் தேசிற்
றவிவின்றித் தாங்கின தாம். (59)
(பொழி.) இந்த மண்ணுலக மக்கள் உய்வு பெறுவதற்காகவே, அமர்ர்க்கு அதிபதியாகிய நாராயணனது வலிமை நிறைந்த ஆயுதங்கள் ஐந்தும், திருவருளால், செம்மையான மாலை அணிந்த, கவிவாதி சிங்கராகிய தேசிகராக வந்து, இந்த உலகத்தை நிரந்தரமான ஒளியோடு (இடையீடு இல்லாமல்) தாங்கிக் கொண்டு விட்டன.
(59) வானவர்கோன் – அமரர்கட்கதிபதி; வன்படைகள் ஐந்து – பஞ்சாயுதங்கள்: சங்கு சக்கரம், தண்டு, வாள், வில் என்பன, “அடையார் கமலத்து அலர்மகள் கேள்வன் கையாழி யென்னும், படையோடு நாந்தகமும் படர் தண்டும் ஒண் சார்ங்க வில்லும், புடையார்புரி சங்கமும் இந்தப் பூதலங்காப்பதற்கென்று, இடையே இராமாநுச முனியாயின இந்நிலத்தே,” – (இராமாநுச நூற்றந்தாதி 33.)
- சிங்கராயினான்.
தாங்கி யுலகனைத்துந் தானருவாய் நின்றபிரான்
ஓங்குபுகழ் வேங்கடக்கோ னுந்தமக்குத் – தீங்கேதும்
வாராத வண்ணமிவ் வாதிசிங்க ராயினான்
பாருலகீர் பாங்குடனே வந்து. (60)
(பொழி.) பரந்த உலகத்து மக்களே! தான் அருவாக நிற்கின்ற தலைவனும் புகழ் ஓங்கிய திருவேங்கடமலையைத் தங்கும் இடமாகக் கொண்டவனுமாகிய நாராயணன் உங்களுக்குத் தீமை எதுவும் வராதபடி, உலகம் முழுவதையும் தான் தாங்கிக் கொண்டு, பக்கவமாக வந்து இந்தக் கவிவாதி சிங்கராகக் காட்சி அளித்தான்.
(60) தானருவாய் நின்ற பிரான் – “உளனெனில் உளன் அவனுருவம் இவ்வுருவுகள், உளனலனெனில் அவனருவம் இவ் வருவுகள், உளனென இலனென இவை குணமுடைமையில், உளனிரு தகைமையொடு ஒழிவிலன் பரந்தே.” – (திருவாய் மொழி 1-19); வேங்கடக்கோன் வாதி சிங்கராயினான் – “அன்றிவ்வுலகினை யாக்கி யரும்பொரு ணுால் விரித்து, நின்று தன் னீள்புகழ் வேங்கடமாமலை மேவியும்பின், வென்றிப் புகழ்த் திரு வேங்கடநாத னெனுங் குருவாய், நின்று திகழ்ந்துமண் மேனின்ற நோய்க டவிர்த்தனனே” – (பிள்ளையந்தாதி 5) ; வண்ணம் — விதம்; பாங்கு – அழகு, உரிமை, உறவு, நற்குணம், யோக்கியம்.
- காண்பன்
வந்தென்றன் வன்னெஞ்சின் மன்னி யிருந்தானை
எந்தையெதி ராச ரிணையடியைக் – கொந்தலரும்
சோலைசூழ் தூப்புனகர் வந்துதித்த தூயவனைக்
காலமெலாங் காண்பன் களித்து. (61)
(பொழி.) எனது வலிமையான மனத்தில் வந்து நிலை பெற்றிருந்தவனும், எனது ஆசாரியத் தலைவராகிய இராமாநுசரது திருவடியாக விளங்குபவனும், கொத்தாக மலர்ந்த மலர்களைக் கொண்ட சோலைகள் சுற்றியுள்ள தூப்புல் நகரில் வந்து தோன்றிய தூயவனுமாகிய சுவாமி தேசிகனை என் ஆயுள் காலம் முழுவதும் இன்பம் பெருகக் காண்பேன்.
(61) வன்னெஞ்சம் – கடினமான நெஞ்சு, வலியநெஞ்சு: எதிராசர் – ஸ்ரீபாஷ்யகாரர். “ மாறன் றுணையடிக்கீழ், வாழ்வை யுகக்கு மிராமா நுசமுனி வண்மை போற்றுஞ், சீர்மைய னெங் கடூப் புற்பிள்ளை.” – (பிள்ளையந்தாதி 1); கொந்து-கொத்து; கொந்தலரும் சோலை — “கொந்தலர் பொழில் குருகூர்” -(திருவாய்மொழி 10-9-11); தூயவன் – பரிசுத்தன்; காண்பன் – பார்ப்பேன்.
- என்று கொல் களிப்பது
களிக்கும தென்றுகொலோ கண்களாற் கண்டு
துளிக்கு நறுந்துழாய்க் கண்ணி – ஒளிக்கொளும்
அண்டர்கோ னென்ன வடியார்க் கருள்புரியும்
கொண்டலார் தூப்புற்கோ வை. (62)
(பொழி.) துளிர்விட்டு வளர்ந்துள்ள நல்ல மணம் வீசுகின்ற திருத்துழாய் மாலை அணிந்த, ஒளி நிறைந்த, தேவர்கள் தலைவனாகிய நாராயணன் போன்று, தமது அடியவர்களுக்குத் திருவருள் புரியும் மேகம் நிறைந்த தூப்புல் நகரத்துத் தேசிகரை, கண்களால் பார்த்துக் களிப்படைகின்ற அந்த நாள் என்றைக்கு அமையுமோ?
(62) கண்களால் – கண்கள் படைத்த பயனாகக் கண்டு; கண்ணி – மாலை, “கண்ணி பறித்து” – (பரிபாடல் 7-45), “கண்ணியோச்சித் தடுமாறுவார்” – (பரிபாடல் 9-45), “கல்லகாரப் பூவாற் கண்ணி தொடுத்தாளை” – (பரிபாடல் 11-103), “அடிமே லடிமே லொதுங்கித் தொடிமுன்கைக், காரிகை யாகத் தன் கண்ணி திருத்தினாள்.” – (பரிபாடல் 12.90-91), “கண்ணி எனதுயிர்” – (திருவாய்மொழி 4-3-5), “கண்ணியர் தாரர் கமழ் நறுங் கோதையர்” – (பரிபாடல் 16. 50.); ஒளி – ப்ரகாசம், ஜ்ஞானம்; அண்டர் – நித்திய சூரிகள், இடையர்; “அண்டர் கோன் – இடையர்க்கு நியாம்யனாய் நின்ற எளிமை குணமாம்படி அண்டாதிபதியான ப்ரஹ்மா முதலாக மற்றும் அண்டாந்தர்வர்த்திகளான தேவாதிகளை யெல்லாம் ஸ்வாதீநராக்கி வைத்திருக்கிற ஸ்வாமித்வ ஸ்வாதந்த்ரியாதிகளை யுடையவன். “கண்ணிக் குறுங் கயிற்றால் கட்டுண்டானாகிலும் எண்ணற்கு அரியன் இமையோர்க்கு” – (பெரிய திருமொழி 11-5-5) என்கிறராகவுமாம்.” -(முநிவாஹந போகம்) ;‘அடியார்க்கு – ’அடியார்’ என்கிற இத்தாலே த்ருதீயாக்ஷரத்திலே சொன்ன ஜீவவர்க்கமும், ஜீவர்களுக்கு ஈச்வரனைக் காட்டில் வேறுபாடும், அந்யோந்யம் பிரிவும் காட்டப்படுகிறது. ’அடியார்’ என்றால் ஸர்வ ஸாதாரணமாக சதுர்த்தியில் சொன்ன தாதர்த்யவான்களை யெல்லாம் காட்டிற்றேயாகிலும், இங்கு ’அடியார்’ என்கிறது “யோ ஹ்யேநம் புருஷம் வேத தேவோ அபி நதம் விது:” என்னும்படி அபரிச்சேத்ய மாஹாத்மியரான சேஷத்வ ஜ்ஞாநரஸிகரை.” – (முநிவாஹந போகம்); அருள் புரியும் கொண்டலார் – “கொண்ட லாரருண் மாரிபொ ழிந்திடக் கொண்ட தோருயர் கூர்மதி யன்பினாற், பண்டை நான்மறை மெளலிப டிந்தயான் பாரின் மெய்விர தக்கவி பாடினேன்” .-(தேசிகமாலை. மெய் விரத நன்னிலத்து மேன்மை); கொண்டல் – மேகம், “ஜங்கமஸ்த்தாவரங்களெல்லாம் உஜ்ஜீவிக்கும்படி ஜலஸ்தல விபாகமற காருண்யரஸத்தை வர்ஷிப்பதொரு காளமேகத்தின் ஸ்வபாவத்தை உடையவர்.”; அருள்புரியும் – “நின்குண மெதிர்கொண்டோ றரங்கொண்டோ ரல்லதை மன்குண முடையோர் மாதவர் வணங் கியோ ரல்லதை செறுதீ நெஞ்சத்துச் சின நீடி னோரும் சேரா வறத்துச் சீரிலோரும், அழிதவப் படிவத் தயரி யோரும், மறு பிறப்பில்லெனு மடவோருஞ் சேரார், நின்னிழ லன்னோ ரல்ல தின்னோர், சேர்வா ராதலின் யாஅ மிரப்பவை, பொருளும் பொன்னும் போகமுமல்ல நின்பால், அருளு மன்பு மறனு மூன்றும் உருளிணர்க் கடம்பி னொலிதா ரோ யே.”- (பரிபாடல் 5. 71-81. “நினது குணத்தை ஏற்றுக் கொண்டோராகிய அறங் கொண்டோரல்லது வீடு பெறுங்குணமுடையோராகிய மாதவரால் வணங்கப்பட்டோரல்லது உயிர்களைச் செறுகின்ற தீய நெஞ்சத்துச் சினத்தையுடையோரும் அறத்தின்கட் சேராத புகழில்லோரும் கூடா வொழுக்கத்தால் அழிந்த தவ விரதத்தையுடையோரும் இப்பிறப்பின் நுகர்ச்சியேயுள்ளது மறு பிறப்பு இல்லை யென்னும் மடவோருமாகிய இவர் நின் தாள் நிழலை அடையார்; அத்தன்மை யோரல்லது இத்தன்மையோர் நின் தாள்நிழலை அடைவர்; ஆதலான், நின்னையாம் இரப்பவை நுகரப்படும் பொருள்களும் அவற்றை உளவாக்கும் பொன்னும் அவ்விரண்டானும் நுகரும் நுகர்ச்சியுமல்ல; எமக்கு வீடு பயக்கும் நின்னருளும் அதனை உண்டாக்க நின்னிடத்து யாம் செய்யும் அன்பும் அவ்விரண் டானும் வரும் அறனுமாகிய இம்மூன்றுமே.”); கோ – ஸ்வாமி.
- காணார்
கோவைக் கனியொத்த வாயுங் குளிர்விழியும்
தாவந் தவிர்க்கு முறுவலும் – பாவந்தீர்
வேதமுடித் தேசிகன்றன் மெய்யொளியு மேவாதார்
சாதுவரைக் காணார் தளர்ந்து. (63)
(பொழி.) பாவத்தை நீக்கக்கூடிய வேதமுடித் தேசிகனாகிய ஆசாரியரது திருமேனியின் ஒளியும், கோவைப் பழத்தை ஒத்து சிவந்த திருவாயும், அருள் நிறைந்த திருக்கண்களும், பக்தர்களது ஆன்ம தாகத்தைப் போக்கக்கூடிய புன்முறுவலும், பொருந்தப் பெறாதவர், தளர்ச்சியால், ஸ்ரீவைஷ்ணவர்களைக் காணப் பெறாதவர்களாவர்.
(63) கோவைக் கனியொத்தவாய் – கோவைப் பழம் போல சிவந்த அதரம். ‘ “கோவை வாயாள் பொருட்டு” – (திருவாய்மொழி 4-3-1); விழி — கண் ; தாவம் – வெப்பம்; தவிர்க்கும் – தீர்க்கும், போக்கடிக்கும்; முறுவல் – சிரிப்பு மெல்ல நகுதல்; தீர் – நீங்கிய; மெய் – உண்மையான, சத்தியமான ; ஒளி – ஒழுங்கு ; சாதுவர் – சாதுக்கள்; தளர்ந்து – சோர்ந்து.
- பேச்சு
தளர்த்திமற் றொன்றத் தரித்துநீ நெஞ்சே
கிளர்த்தியுடன் கேடில்சீ ரானை – அளத்தற்
கரியானை யம்மானை யன்புடனே தூப்புற்
பெரியானை யெப்பொழுதும் பேசு. (64)
(பொழி.) மனமே! நீ, உன்னை, நெகிழ்த்திக்கொண்டு, உன்னில் பொருந்தும் வண்ணம் தாங்கிக் கொண்டு, எழுச்சியோடு, அழிவு இல்லாத சிறப்பினை உடையவனும், அளந்து காண்பதற்கு அரியவனும், நமது தலைவனும், தூப்புல் நகரில் தோன்றிய மேம்பாடு உடையவனுமாகிய சுவாமி தேசிகனை, பக்தியுடன் எல்லாக் காலத்திலும் பேசிக் கொண்டே இரு.
(64) தரித்து – தாங்கி; கிளர்த்தி – எழுச்சி ; கேடில் – அழிவில்லாத, “கேடில் விழுச்செல்வங் கல்வி” – (திருக்குறள், கல்வி. 10. அழிவில்லாத சீரிய செல்வமாவது கல்வி.); அம்மான் — ஸ்வாமி, “அம்மான் ஆழிப்பிரான்” – (திருவாய் மொழி. 5-1-7. “ஸர்வேச்வரன். கையும் திருவாழியுமான அழகை நித்ய ஸூரிகளுக்குக் காட்சி கொடுத்துக்கொண்டிருக்கும் அவன்” – ஈடு); பெரியான் – மேம்பாடுடையவன்; பேசு – சொல்லு.
- தோற்றார்.
பேசுமினே கூச்சமின்றிப் பேரின்பம் வேண்டினீர்
தேசுடைய செந்தா மரையடியைப் – பாசமொன்றும்
நில்லாது தூப்பு னிமலனையே நாடோறும்
சொல்லாதார் சூழ்வினை தோற்றார். (65)
(பொழி.) பேரின்பத்தை விரும்புகின்றவர்களே! நீங்கள் எல்லாம், கூச்சம் எதுவும் இல்லாமல் (ஆசாரியர் புகழைப்) பேசுங்கள். (அதனால்) உலகப் பற்று எதுவும் நில்லாமல் நீங்கிவிடும். ஒளி பொருந்திய செந்தாமரை மலர் போன்ற திருவடியை உடையவனும், தூப்புல் நகர் தூயவனுமாகிய தேசிகனை, தினந்தோறும் சொல்லாதவர்கள், தங்களது சூழ்வினைக்குத் தோற்றவர்களேயாவார்.
(65) கூச்சம் – பயம்; பேரின்பம் – மோக்ஷம் ; வேண்டினீர் – விரும்புவோர்; பாசம் – அவிச்சை; நிமலன் – குற்றமற்றவன், சுத்தன், “விரையார்பொழில் வேங்கடவன் – பரிமளம் வடிவு கொண்டாற்போல இருக்கிற திருச்சோலைகளையுடைய திரு மலையிலே “கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு” -(திருவாய்மொழி 1-8-3) என்கிறபடியே எல்லாருக்கும் ஆச்ரயிக்கவும் அநுபவிக்குமாம்படி “இருள் தருமா ஞாலத்துள்” – (திருவாய்மொழி 10-6-1) குன்றத்திட்ட விளக்காய் நிற்கிறவன்” ; நாடோறும் – பிரதிதினமும்.
- வீட்டின் சிறப்பு
தோற்றா தவர்க்கேதுந் தொல்வினை யெஞ்ஞான்றும்
மேற்றான் வருவது மொன்றுண்டோ – ஆற்றாத
ஆர்வத்தால் வேதமுடி யாரியனைப் பற்றுகையே
சீருற்ற வீட்டிற் சிறப்பு. (66)
(பொழி.) ஞானம் தோன்றாத அறிவிலிகளுக்கு எதுவும் பழைய தொந்தரவாகவே அமையும். எப்பொழுதும், அதிகமாக வருவதாகிய நல்வினை ஒன்று உண்டோ? இல்லை. (ஆனால்) தணியாத அன்பால் வேதமுடி ஆரியனாகிய சுவாமி தேசிகனைச் சரணாகப் பற்றிக் கொள்ளுதலே, சிறப்புமிக்க பரமபதத்தின் பெருமையாகும்.
(66) தொல் – அநாதியான ; தொல்வினை – பழவினை; மேல் – அதிகமாக; வருவது – வளர்வது; ஆற்றாத – தணிதலில்லாத ; ஆர்வம் – அன்பு; பற்றுகை – அன்பு செய்தல், பிடித்துக்கொள்ளுதல், பொருந்துதல், மனத்துக்கொள்ளுதல்; வீடு – மோக்கம். “சென்றாங்கின்பதுன்பங்கள் செற்றுக் களைந்து பசையற்றால், அன்றே அப்போதே வீடு அதுவே வீடு வீடாமே” – (திருவாய்மொழி. 8-8-6) ; சிறப்பு – மேன்மை, “எனக்கே கண்ணனையான் கொள்சிறப்பே” – (திருவாய்மொழி 2-9-4 சிறப்பே – பலகால்வேண்டா, ஒருகால் அமையும்; அது தன்னிலும், திருவாசலைத் திருக்காப்புக்கொண்டு ஒருவர் அறியாதபடி சிறப்பாகச் செய்யவும் அமையும். சிறப்பாகிறது – ஏற்றம். அதாவது – புருஷார்த்தம். ஸ்வரூபாநுரூபமான புருஷார்த்தத்தைக் கொண்டருளவேணு மென்றபடி. சிறப்பாவது – முக்தியும், ஸம்பத்தும், நன்றியும். இவற்றில், நான் உன் பக்கல் கொள்ளும் மோக்ஷம் உனக்கேயாக எனைக்கொள்ளுமதுவே. உன்பக்கல் நான் கொள்ளும் ஸம்பத்தென்னவுமாம். நன்றியென்னவுமாம்.” – ஈடு. “சிறப்பில் வீடு சுவர்க்க நரகம்” – (திருவாய்மொழி 2-9-5. “சிறப்பில் வீடு – நித்ய ஸம்ஸாரியாய்ப் போந்தவன் நித்ய ஸூரிகளுடைய அநுபவத்தைப் பெற்று அநுபவிக்கக் கடவதாகச் சொல்லுகிற மோக்ஷம்.” – ஈடு.)
- சென்னியில் சேர்க்கும் செவ்வு
சிறப்பு முயிர்க்கிதுவே சேமமு மீதே
அறப்பொருளு மாம்வீடு மீதே – மறப்பின்றி
மன்னியசீர் தூப்புல்வரு மாமறையோன் பாதத்தைச்
சென்னிதனிற் சேர்ப்பதுவே செவ்வி. (67)
(பொழி.) உலகத்து மனித உயிர்களுக்குச் சிறப்பாக அமைவது இதுவே ஆகும். பாதுகாப்பாக இருப்பதும் இதுவே. அறமும் பொருளும் ஆகும் இதுவே மோட்சமும் ஆகும். நிலைபெற்ற சிறப்பினை உடைய தூப்புல் நகரில் அவதரித்த சிறந்த வேதங்களைக் கற்ற சுவாமி தேசிகனது திருவடிகளை மறதி இல்லாமல் தலையில் தாங்குவதே செம்மையானதாகும். (நேர்மை)
(67) சேமம் – ரக்ஷகம், க்ஷேமம், இன்பம்; மறப்பின்றி – மறவாதே. “மறப்பொன்றின்றி யென்று மகிழ்வனே” – (திருவாய்மொழி 2-9-5 மறப்பொன்றின்றி – இத்தலையிலுள்ளதெல்லாம் மறக்கலாம், அத்தலையிலுள்ள தெல்லாம் நழுவவொண்ணாது. என்றும் மகிழ்வேனே – மகிழ்ச்சியென்றும், அநுபவமென்றும் – பர்யாயம். அநுபவிப்பேனென்கிறார். ஆக, இத்தாலே – ஸ்வரூபமும் வெளியிடுகிறார். பெருமானென்கையாலே — தம் முடைய சேஷத்வமும், மறப்பொன்றின்றி – என்கையாலே – ஜ்ஞாத்ருத்வமும், என்றுமென்கையாலே – நித்யத்வமும், மகிழ்வு என்கையாலே – போக்த்ருத்வமும்,” – ஈடு) ; மாமறையோன் பாதத்தைச், சென்னிதனிற் சேர்ப்பதுவே செவ்வி – “தூப்புற்பிள்ளை பாதமென் சென்னியதே.” – (பிள்ளை யந்தாதி. 1); சென்னி – முடி, தலை; செவ்வி – அழகு, நேர்மை.
- அந்தம் இல் வீட்டு இன்பம்
செவ்வியராய்ச் செங்கண்மால் சேவடியைச் சேவிப்பார்
அவ்வப் பயனை யடைந்திடுவார் – அவ்வாறு
சிந்தைதனிற் றுாப்புல்வந்த தேசிகனை நண்ணுவரேல்
அந்தமில்வீட் டின்பமவர்க் காம். (68)
(பொழி.) நேர்மை உடையவர்களாக, சிவந்த கண்களை உடைய திருமாலுடைய செம்மையான திருவடிகளை வணங்குபவர், அந்தந்த நற்பயனைப் பெற்றிடுவார். அந்த வகையில் தூப்புல் நகரில் அவதரித்த தேசிக ஆணாரியரை மனத்தில் வைத்து தியானிப்பார்களானால், அவர்களுக்கு, அதுவே, முடிவு இல்லாத பரமபதத்து இன்பம் ஆகும்.
(68) செங்கண்மால் – சிவந்தகண்களையுடைய திருமால், “குன்றெடுத்தாயர் மாதர்குரவை கொண்டொரு விளாவிற், கன்றெடுத்தெறிந்து வெய்ய காளியற் கிருதாணல்கி, யன்றெடுத்திறுத்த வில்லேயனைய வில்விழவு காண்பான், சென்றெடுத்திறுத்து நின்ற செங்கண்மாலெங்கள் கோவே.” – (மகாபாரதம். உத்தியோக பருவம் – களப்பலியூட்டு சருக்கம். 1) “எங்கணான் மறைக்குந் தேவ ரறிவிற்கும் பிறர்க்கு மெட்டாச், செங்கண்மால்.” – (இராமாவதாரம், பாலகாண்டம், வேள்விப் படலம், 16), “செயிர்தீர் செங்கட் செல்வ.” (பரிபாடல். 4-10). “செங்கட் காரி” – (பரிபாடல். 3-81) ; சேவிப்பார் – வணங்குவார்; அந்தமில் வீட்டின்பம் – “அந்தமில் பேரின்பத்து” – (திருவாய்மொழி 10-9-11); சிந்தைதனில் நண்ணுவரேல் – மனத்தால் நினைப்பரேல்; இன்பம் – “இன்பந் தலைப்பெய்து எங்குந்தழைத்த” – (திருவாய்மொழி 9-5-11)
- அவம்
அவர்க்காந் தெளிவிசும்பி லந்தமில்பேரின்பம்
எவர்க்கேனுமித்துணிவுண் டாகில் – எவர்க்கும்
கவிவாதி சிங்கரல்லாற் காப்பார்மற் றில்லை
அவமாமற் றோர்பேசுஞ் சொல். (69)
(பொழி.) தேசிகரைச் சிந்தித்தல், அந்த அடியார்களுக்கு, தெளிந்த ஆகாயத்தில் உள்ள முடிவு இல்லாத பெரிய இன்பம் நல்கும் பரமபதம் ஆகும். இந்த உறுதி, யாவர்க்காயினும் தோன்றுமானால், கவிவாதி சிங்கராகிய தேசிகரைச் சென்று சேரவேண்டும். அவர் அல்லாமல், காப்பவர் வேறு யாரும் இல்லை. மற்றவர்கள் காப்பார் என்று சொல்லுவது எவர்க்காயிருந்தாலும் அஃது அவத்தமே. (வீணான தாகும்)
(69) தெளிவிசும்பு – பரமபதம், “தெளிவிசும்பு கடிதோடித் தீவளைத்து மின்னிலகும், ஒளிமுகில்காள்! திருமூழிக்களத்துறையும் ஒண்சுடர்க்கு, தெளிவிசும்பு திருநாடாத்தீவினையேன் மனத் துறையும், துளிவார்கட்குழலார்க்கு என்தூதுரைத்தல் செப்புமினே.” – (திருவாய்மொழி 9-7-5. தெளிவிசும்பித்யாதி – பரம பதத்திற் பண்ணும் வ்யாமோஹத்தை என்னெஞ்சிலே பண்ணி வர்த்தியா நின்றான்” – ஈடு), “தகவிலைதகவிலையே நீ கண்ணா ! தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்காரா? சுகவெள்ளம் விசும்பிறந்து அறிவை மூழ்க்கச் சூழ்ந்து அதுகனவென நீங்கி யாங்கே.”- (திருவாய்மொழி 10-3-2. “விசும்பு இத்யாதி – ஸர்வபதார்த்தங்களையும் தன்னுள்ளே வைத்துக் கொண்டிருக்குமதிறே ஆகாசமாகிறது. அது தன்னைக்குளப்படியாக்கி, மயர்வற மதிநலம் அருளப்பெற்ற அறிவையும் விளாக்கொலை கொள்ளா நின்றதாய்த்து, அன்றிக்கே, விசும்பென்று – பரமபதமாய், – *தாமரைக் கண்ணாணுலகு” என்னக் கடவதிறே. ஸுகாதிசயத்துக்கு – “விசும்பிறந்து” என்றதுக்கர்த்தாந்தரம் – அன்றிக்கே இத்யாதி. மோக்ஷஸுகத்தைப் பற்றவும் ஸம்ச்லேஷஸுகம் விஞ்சி யிருக்குமோ வென்ன – தாமரை இத்யாதி. அதாவது – அத்யந்த விஷயாஸக்தனாயிருப்பா னொருவனை மீட்கைக்காக “காம புருஷார்த்தம் அல்பாஸ்திரத்வாதி தோஷதுஷ்டம், மோக்ஷ ஸுகமேகாண் அநஸ்த்திரபலம்” என்ன, விஷயாஸக்தன் சொல்லுகிறான் – “தாம் வீழ்வார் மென்றோட்டுயிலி னினிதுகொல், தாமரைக்கண்ணாணுலகு” என்று; : தாமரைக்கண்ணா ணுலகுண்டு மோக்ஷஸுகம்; அது, தாங்களே விழுந்து ஆசைப்படும் ஸ்த்ரீகளுடைய ம்ருதுவான தோளிலே யுறங்குகிறதிற் காட்டில் இனிது கொல்? அன்றே யென்றபடி “தாமரைக் கண்ணாணுலகு – இனிது கொல்” என்றந்வயம்.” – சீயர் அரும்பதவுரை. “தாம் வீழ்வார்” என்பது திருக்குறள் காமத்துப்பால் புணர்ச்சி மகிழ்தல் என்ற அதிகாரத்துள்ள மூன்றாவது குறட்பா. அதற்குப் பரிமேலழகர் உரை வருமாறு :- “நிரதிசயவின்பத்திற்குரிய நீ இச்சிற்றின்பத்திற்கின்னையாதல் தகாதென்ற பாங்கற்குச் சொல்லியது. ஐம்புலன்களையு நுகர்வார்க்குத் தாம் விரும்புமகளிர் மெல்லிய தோளின்கட்டுயிலுந் துயில்போல வருந்தாமலெய்த லாமோ அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்துஞ் செங்கண் மாலுலகம். ஐம்புலன்களையு நுகர்வார் என்னும் பெயர் அவாய் நிலையான் வந்தது. இப்பெற்றித்தாயதுயிலைவிட்டுத் தவயோகங்களான் வருந்தவேண்டுதலின், எம்மனோர்க்காகாதென்னுங் கருத்தால் இனிது கொலென்றான். இந்திரனுலகென்றுரைப்பாருமுளர். தாமரைக்கண்ணானென்பது அவனுக்குப் பெயரன்மையின், அஃதுரையன்மை யறிக.” ஆக – த்ரிபாதி விபூதியையும் விஞ்சி, உபயவிபூதியையும் தன்னுள்ளே யாம்படியிருக்கிற அறிவையும் மேலிடும்படியாய்த் திருக்கிறது.” – ஈடு.); கவிவாதிசிங்க ரல்லாற் காப்பார் மற்றில்லை – “கண்ணனல்லால் இல்லை கண்டீர், அவனன்றி மற்றில்லை”. -(திருவாய்மொழி 9-1-10), “ஆதுமில்லை மற்றவனில் என்றதுவே துணிந்து”.-(திருவாய் மொழி 9-1-11); அவம் – வீண், அவத்தம்.
- காட்டில் நிலவு
சொல்லார் சுருதிமுடித் தேசிகன் றொல்புகழை
எல்லா விடத்திலு மெப்பொழுதும் – நல்லார்கள்
கோட்டிதனிற் கூட்டீரேற் கோதின்மனத் தீரும்மைக்
காட்டினில வாக்குவதே கா. (70)
(பொழி.) நல்லவர்கள், வேதத்தை முடியில் தாங்கிய தேசிகரது பழைய புகழை எல்லா இடத்திலும் எல்லாக் காலத்திலும் சொல்ல மாட்டார்கள். (தகுதியான இடத்தில் தக்க சமயத்தில் சொல்வார்கள்). குற்றம் இல்லாத மனத்தை உடையவர்களே! உங்களை, அத்தகைய நல்லவர்களது கூட்டத்தில் சேர்ப்பிக்கவில்லை என்றால், அது காட்டில் நிலவாக உங்களை ஆக்கியது ஆகும். அந்தக் குற்றம் உங்களை விட்டு நீங்காது.
(70) சுருதி – வேதம். “புரியுறு நரம்பு மியலும் புணர்ந்து, சுருதியும் பூவுஞ் சுடருங் கூடி எரியுரு ககிலோ டாரமுங் கமழும், செருவேற் றானைச் செல்வநின்னடி யுறை, உரிதினி னுறைபதிச் சேர்ந்தாங்குப் பிரியா திருக்கவெஞ் சுற்றமோ டுடனே,” (பரிபாடல். 18-51-56, “ செருவேற்றானைச்செல்வ! நின் பூசைக் கட்புரிதலுற்ற நரம்பினது ஒலியும் புலவர் பாடிய இயற்பாட்டுக்களும் பொருந்தி வேதவொலியும் உபசாரமாகிய பூவும் தீபமுங் கூடி எரியின்கண் உருகுமகிலும் சந்தனமும் தூபமாய்க் கமழா நிற்கும் நின் அடியின்கண் உறைதலை எமக்கு உரித்தாக உறையும் பதியைச் சேர்ந்தாற்போல எம் சுற்றத்தோடு கூடியாம் பிரியாதிருப்போமாக.”) “சுருதிநினை விவையறியுந் துணிவுடையார் தூமொழிகள், பரிதிமதி யாசிரியர்.” – (தேசிகமாலை. அடைக்கலப்பத்து. 9), “சொல்லுமவிடு சுருதியாம்” – (ஞானஸாரம்), “ப்ரத்யக்ஷாதிப்ரமாணங்களிற் காட்டிலும்’’வேதாச்சாஸ்திரம் பரம்நாஸ்தி’” இத்யாதிகளிற்படியே “மற்றுள்ள சாஸ்திரங்களிற் காட்டிலும் பாரலெளகிக புருஷார்த்தததுபாயங்களை யதாவஸ்த்திதமாகக் காட்டுகிற வேதம் ப்ரதாநம். அதில் பராவரதத்வஹித புருஷார்த்தங்களில் அந்யதாஸித்த ப்ரமாணாந்தரங்களால் வரும் கலக்கங்களை யெல்லாம் தீர்க்கவல்ல வேதாந்தம் ப்ரதாநம்.”- (ப்ரதாநசதகம்); நல்லார் – அறிஞர், உத்தமர். “நல்லாரைக்காண் பதுவுநன்றே – (வாக்குண்டாம் 8) ; கோட்டி – சபை. “கோட்டியுட் கொம்பர் குவிமுலை நோக்குவோன், ஒட்டை மனவனுரமிலி யென்மரும்.” – (பரிபாடல் 12-50-51. அவைக்கண்ணே நின்று கொம்பரொப்பாளுடைய குவிமுலையை நோக்குகின்றவன் இளநெஞ்சன், திண்மையிலனென்பாரும்.) கூட்டு – “கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே” – (திருவாய்மொழி 4-99); கோது – குற்றம்; நிலவு – நிலா, ஒளி, சந்திரப் பிரபை.
- பரிவுடனே பாவித்தல்.
காரீரும் மாருயிரைக் கைகுழிந்து போகாமே
பாரி ருலகியலைப் பாங்குடனே – வாரீர்
சுருதிமுடித் தேசிகனைத் தூய்மனத்த ராகிப்
பரிவுடனே பாவித் திரும். (71)
(பொழி.) மக்களே! உங்களது பெறுதற்கு அருமையான உயிர் உங்களை விட்டு, உரிமை நீங்கிப் போகாதபடி, அதனைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள். உலகத்தின் நடைமுறைச் செயலைப் பக்குவத்தோடு கவனியுங்கள். இங்கே வாருங்கள். சுருதிமுடித் தேசிகனாகிய ஆசாரியப் பெருமானை, தூய்மையான மனத்தவராக நின்று அன்போடு தியானித்துக் கொண்டிருங்கள்.
(71) காரீர் – காப்பாற்றுங்கள்; ஆருயிர் – அருமையாகிய உயிர்; பாரீர் – பாருங்கள்; பாங்கு – பிரீதி, உரிமை ; பரிவு – அன்பு, “பாகனைய சொல்லியொடு தம்பி பரிவிற் பின்போக” – (இராமாவதாரம், அகத்தியப் படலம். 56.); பாவித்து – தியாநித்து.
- சேமம்
இரும்பொழில்சூழ் தூப்புல் வருமெம் பெருமானை
அரும்பெறலா வானைமாற் றார்க்கு – விரும்புவார்க்
காரா வமுதை யனைத்துலகும் போற்றிசெயும்
சீரானைச் செப்புதல்சே மம். (72)
(பொழி.) பெரிய சோலைகள் சூழ்ந்துள்ள தூப்புல் நகரில் அவதரித்த எமது சுவாமியும், பகைவர்க்குப் பெறுவதற்கு அருமை உடையவனும், தன்னை ஆசைப்படுபவர்க்கு, தெவிட்டாத அமுதமாக இருப்பவனும், எல்லா உலகமும் புகழ்ந்து துதித்தலைச் செய்யும் சிறப்பினை உடையவனுமாகிய தேசிக ஆசாரியப் பெருமானைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பது நல்வாழ்வாகும்.
(72) பெறல் – பெறுதல்; மாற்றார் – மாற்றலர், பகைவர்; விரும்புவார் – ஆசையுடையோர்; ஆராஅமுதை – தெவிட்டாத, பரமபோக்யமான அமிருதத்தை. “ஆராவமுதே” – (திருவாய்மொழி. 5-8-1. “ஆராவமுதே – அநுபவியா நின்றாலும் க்ரமப்ராப்தி பற்றாத விஷயத்தைப் பிரிந்தார் எங்ஙனே ஆறியிருக்கும்படி, முற்பட தர்சநமாய், அநந்தரத்திலே அணுகி, பின்னை ஸ்பர்சமாய், இப்படியேயிறே அநுபவப்ரகாரங்கள்; அத்தனை க்ரமம் பார்த்திருக்க வொண்ணாதபடியாயிருக்கை. ஆராவமுதே – கடலில் உப்புச்சாறு குடிப்பார்க்கு தேவயோநியிலே பிறக்கவேணும், ப்ரஹ்மசர்யமனுஷ்டிக்க வேண்டிய இத்தனை பட்டால் ஸக்ருதி ஸேவ்யமாயிருக்கும்; இது அங்ஙனன்றிக்கே ஸர்வாதி காரமுமாய், ஸதாஸேவ்யமுமாய், ப்ரஹ்மசர்யாதி வைகல்யமுண்டானவையும் தானே பரிக்ஹரிக்கக் கடவதாயிருக்கும். உத்தர பூமியிலே லோகஸாரங்க மஹாமுநிகள் வர்த்தியாநிற்க, இங்குத்தையானொருவன் அங்கேறச் செல்ல, “பிள்ளாய், தக்ஷிணபூமியில் விசேஷமென்?” என்று கேட்க, “திருவாய்மொழி என்றொரு ப்ரபந்தமவதரித்து, சிஷ்டர்கள் பரிக்ரஹித்துப் போரக் கொண்டாடிக் கொடுபோகா நின்றார்கள்”என்ன, “அதிலே உனக்குப் போவதொரு சந்தை சொல்லிக் காணாய்” என்ன, “ஆராவமுதே” என்கிற வித்தனையும் எனக்குப்போம்” என்ன, “நாராயணாதி நாமங்கள் கிடக்க, இங்ஙனேயுமொரு நிர்த்தேச முண்டாவதே” என்று அத்ருப்தராய், “இச் சொல்லு நடையாடுகிற தேசத்தேறப் போவோம்” என்று அப்போதே புறப்பட்டுப் போந்தார். ஆராவமுதே –“ஸஹபத்ந்யா”- ஆழங்காலிலே யிழிபவர் ஒரு கொம்பைக் கொடியைப் பிடித்து இழியுமாபோலே. “பத்ந்யா – ஸஹ” – கிண்ணகத்திலிழிவார் தேசிகரைக் கைப்பிடித்துக் கொண்டிழியுமாபோலே, பெருமாள் பெரிய பெருமாளை யநுபவிக்கும்போது, பிராட்டியைக் கூடக் கொண்டாயிற்றிழிவது. “விசாலாக்ஷ்யா” – இவர்க்குப் பெரிய பெருமாள் பக்கலுண்டான ப்ரேமாதிசயத்தைக் கண்டு, தன்னை யணைக்கும் போதையிற்காட்டிலும் உடம்பெல்லாம் கண்ணானபடி.” “நாராயணமுபாகமத்” – இவர் நியதியிருக்கிறபடி, இக்கண்ணுக் கிலக்காய் ஆழங்காற் படாதே அவ்வருகு பட்டார். இத்தால் சொல்லிற்றாயிற்று. தான்தன்னை யநுபவிக்கும்போதும் கூட்டுத் தேடவேண்டும்படி யாயிற்று ஆராமை யிருக்கும்படி யென்கிறது. “ஆராவமுதே” – இத்திருவாய்மொழியில் இவர்க்குண்டான ஆற்றாமைக் கெல்லாம் பீஜம் இப்பதமாயிற்று,” – ஈடு); போற்றி – துதிக்கும், வணங்கும், “எதிர்கால வினைமுற்றாய் நீ காத்தல் செய்யென்னும் பொருளிலும், தொழிற் பெயர் முற்றாய் நின்று செயப்பாட்டு வினையாய்ப் போற்றப்படுவது என்னும் பொருளிலும் வியங்கோட் பொருளிலும் வருமொரு மொழி. விரும்பி என்னும் வினையெச்சப் பொருளிலும் வரும்.”; சீரான் – நற்குணநிதி; செப்புதல் – அநுஸந்தித்தல் சேமம் – க்ஷேமம், ரக்ஷகம், இன்பம்.
- பெரும் பாரம்
சேமங்கொ டூப்புற் றிருவேங் கடமுடையான்
தாமன்பி னாற்சமைத்த நற்கலைகள் – ஆமென்
றறிந்தா ரறிவா ரறியாதா ரிங்குப்
பிறந்தார் பெரும்பார மாய். (73)
(பொழி.) பாதுகாப்புக் கொண்ட தூப்புல் நகரில் தோன்றிய திருவேங்கடமுடையாராகிய தேசிகர், தமது அன்புள்ளத்தோடு செய்த நல்ல ஞானக் கலைகள் நமக்கு ஞானம் பெறுவதற்கு ஆகும் என்று அறிந்தவர்கள் அறிஞர்கள் ஆவர். இந்த உண்மையை அறியாதவர்கள் மண்ணுலகுக்குப் பெரிய பாரமாகப் பிறந்தவர்களாவர்.
73) கலை சாஸ்திரம் ; சமைத்த இயற்றியருளிய பாரம் – சுமை
- நமக்குச் சார்வு
பெரும்பாரம் பூமிக்குப் போக வுதித்திங்
கரும்பாவ மெந்தமக்குத் தீர்த்த – சுரும்பாரும்
நீள்சோலைத் தூப்பு னிமலனார் தம்முடைய
தாளே நமக்கென்றுஞ் சார்வு. (74)
(பொழி.) இந்த உலகத்துக்குப் பெரிய சுமையாக உள்ள தீவினையைப் போக்குவதற்காக, இம்மண்ணுலகத்தில் தோன்றி, எங்களுக்குத் தீர்ப்பதற்கு அரிய பாவங்களைப் போக்கிய, வண்டுகள் ஒலிக்கும் பெரிய சோலை சூழ்ந்த தூப்புல்நகரத்துக் குற்றமற்ற தேசிகரது திருவடிகளே, எல்லாக் காலத்தும் நமக்குப் பற்றுக்கோடு ஆகும்.
74) உதித்து – தோன்றி, அவதரித்து; தீர்த்த – நீக்கிய; சுரும்பு – வண்டு நிமலனார் – பரிசுத்தர், அழுக்கற்றவர் ; தாளே – திருவடிகளே ; சார்வு – துணை, “கெட்டார்க்குச் சார்வாய்” – (திருக்குறள். வான்சிறப்பு. 5.), பிராப்யம், உபாயம்.
- சாதிகள் ஒன்றிலும் கூடார்
சார்வு நமக்கென்று சாதுசனந் தாமேத்துஞ்
சோர்விறோ தாரம்மை மைந்தனாஞ் – சீர்மிகுந்த
வாதிசிங்கத் தேசிகனை வாழ்த்தாத மானிடரே
சாதிகளி லொன்றிலுங்கூ டார். (75)
(பொழி.) பரம வைணவர்கள் நமக்குப் பற்றுக்கோடு என்று புகழக்கூடிய, தளர்ச்சியில்லாத, தோதாரம்மை என்ற திருப்பெயர் கொண்ட அம்மையாருக்கு, திருமைந்தனாகிய சிறப்பு மிகுந்த வாதிசிங்கத் தேசிகனாகிய ஆசாரியப் பெருமானை வாயார வாழ்த்தாத மனிதர்களே சாதிகள் எதிலும் சேராதவர் ஆவர்.
(75) சாதுசனம் — சாதுக்கள்; பரம வைணவர்கள் ; தோதாரம்மை – தோத்தாரம்மன், கிடாம்பி இராமாநுசப் பிள்ளான்குமரி, அப்புள்ளார் சகோதரி, தூப்புல்வேதாந்த தேசிகரின் திருத்தாயார் மானிடர் – மனிதர் சாதிகள் – “குலந் தாங்கு சாதிகள் நாலிலும்”- (திருவாய்மொழி. 3-7-9. 48 குலம் இத்யாதி-க்ரமவிவாஹத்தாலும் அநூலோம ப்ரதிலோம விவாஹத்தாலுமுள்ள குலங்களை தரிப்பதான ப்ராஹ்மணாதியான நாலு ஜன்மத்திலும்” – ஈடு. “க்ரமவிவாஹமாவது – ப்ரஹ்மக்ஷத்ர வைச்யசூத்ரர்கள் ஸ்வஸ்வ ஜாதியிலே பண்ணும் விவாஹம். அநூலோம விவாஹமாவது – ப்ராஹ்மணன் உத்தரவர்ணத்ரயத்திலும், க்ஷத்ரியன் உத்தர வர்ணத்வயத்திலும், வைசியன் சூத்ர வர்ணத்திலும் பண்ணும் விவாஹம். ப்ரதிலோம விவாஹமாவது – சூத்ரன் பூர்வவர்ணத்ரயத்திலும், வைசியன் பூர்வவர்ணத்வயத்திலும், க்ஷத்ரியன் பூர்வவர்ணத்திலும் பண்ணும் விவாஹம். இது ருஷ்யசிருங்கன் பக்கலிலும் யயாதி பக்கலிலும் காணலாம். தாங்கு – தரித்திருக்கிற சாதிகள் – ப்ராஹ்மணாதிவர்ணங்கள். – (சீயர் அரும்பதவுரை.)
- பாங்கொரு வாழ்வார்
கூடார் வினைகளுடன் கொண்டிரார் துன்பத்தைத்
தேடார் சிரீதரனை யன்றியே – நாடாரே
சீர்மல்கு வேதாந்த தேசிகனைப் போற்றியே
பாருலகிற் பாங்கொடுவாழ் வார். (76)
(பொழி.) சிறப்பு நிறைந்த வேதாந்த தேசிகனைத் துதித்துக்கொண்டு இந்த நில உலகத்தில் பக்குவமாக வாழும் பக்தர்கள், தீய கர்மங்களுடன் சேரமாட்டார்கள். துன்பத்தைக் கொள்ளமாட்டார்கள். இலக்குமிவாழ் மார்பினனாகிய நாராயணனை அன்றி வேறு யாரையும் தெய்வமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவைகளைத் தவிர வேறு எந்த உலகியல் பொருள்களையும் தமக்கு வேண்டும் என்று தேடமாட்டார்கள்.
(76) தேடார் – விசாரியார், நாடார்; சிரீதரன் – ஸ்ரீதரன். “சீரார் சிரீதரனாய்ச்சிவன் றிக்கு மிடப்புயமு, மேரா ரிடங்கொண் டிலங்குவெண் டாமரை மேனியனாய்ப் பாராய பட்டய மீரிரண் டாலும் பயமறுக்கு மாரா வமுதத்தி மாமலை மேனின்ற வச்சுதனே.” –(தேசிகமாலை. பன்னிருநாமம். 9); நாடார் – தேடார்; பாருலகு – பூலோகம்; பாங்கு யோக்கியம்.
- போக்குவார்
வாழ்வாரவரெங்கும் வையகத் தார்போற்றத்
தாழ்வொன்று மின்றித் தளர்ச்சியாச் – சூழ்வினைகள்
வேருடனே போக்குவரே வேதாந்த தேசிகன்பேர்
சீருடனே சிந்திப்பரேல். (77)
(பொழி.) வேதாந்த தேசிகனது திருப்பெயரை, அதன் சிறப்போடு தியானிப்பார்களானால்,அவர், எல்லா இடத்திலும், உலக மக்கள் போற்றிப் புகழும் வண்ணம் வாழ்வார்கள். மேலும், அவர், குறைவு எதுவும் இல்லாமல், நெகிழ்ச்சியோடு, தம்மைச் சூழ்ந்துள்ள தீவினைகள் அனைத்தையும் அடியோடு அழிப்பார்கள்.
(77) வையகம் – பூமி, “வையகமெல்லாங்கழனியாய்” – (விசாக. யாப்.35); வேருடனே – அடியோடே ; ” நீர்நும தென்றிவை, வேர்முதல்மாய்த்து” -(திருவாய்மொழி. 1-2-3); போக்குவர் . அழிப்பர்; சிந்திப்பரேல் – எண்ணினால், “மற்றோன்றில்லை சுருங்கச் சொன்னோம் மாநிலத்தெவ்வுயிர்க்கும் சிற்ற வேண்டா சிந்திப்பேயமையும்” -(திருவாய்மொழி.9-1-7. மற்றொன்றில்லை – இத்தோடொக்க வேறு எண்ணலாவதில்லையென்னுதல், இப்போது இதீதைச் சொல்லி வேறொருபோது வேறொன்றைச் சொல்லுகின்றா னென்றிருக்க வேண்டா வென்னுதல். சுருங்கச் சொன்னோம் – இது தன்னைப் பரப்பறச் சொன்னோம். ப்ரதிபத்திக்கு அவிஷயமாம்படி சொல்லுகை யன்றிக்கே, ஸுக்ரஹமாகச் சொன்னோம். மாநிலத்து – இதுக்கு அதிகாரிகள் ஸம்ஸாரத்திலே. இவ்வர்த்தத்துக்கு அண்ணியார் பரம பதத்திலுள்ளாராகிலும் உபதேசத்துக்கதிகாரிகள் ஸம்ஸாரத்தி லுள்ளா ரென்க: எவ்வுயிர்க்கும் – இது அதிக்ருதாதிகாரமன்று ஸர்வாதி காரம். சிற்றவேண்டா – ஆயாஸிக்க வேண்டா. சிற்றுதல் – சிதறுதலாய், பரக்கவேண்டா வென்கை. ஒருவ்யாபாரம் வேண்டாவென்றபடி, சிந்திப்பேயமையும் உக்திநிரபேக்ஷமான சிந்தா மாத்திரமே யமையும்.” – ஈடு)
- அடங்குமோ
சிந்தித் தடங்குமோ செங்கமலப் பூவுதித்த
அந்தமில்சீர் மங்கை தனக்கன்பன் – கந்தமிகு
தண்டுழாய்த் தார்மார்பன் போலத் தமர்க்கென்றும்
கொண்டல்கவி வாதிசிங்கக் கோ. (78)
(பொழி.) செந்தாமரை மலரில் தோன்றிய, முடிவில்லாத சிறப்பினை உடைய, இலக்குமிக்கு அன்பனும், வாசனை நிறைந்த குளிர்ந்த திருத்துழாய் மாலை அணிந்த திருமார்பினனுமாகிய நாராயணனைப்போல், மேகம் போன்று அருள் மழை பொழியும், கவிவாதி சிங்கமாகிய தேசிகரது அளவு கடந்த பெருமை, தம்முடைய பக்தர்களுக்கு எப்பொழுதும் அவர்களது சிந்தனையுள் அடங்குமா? அடங்காது.
(78) செங்கமலப் பூவுதித்த அந்தமில்சீர் மங்கை, தனக்கன்பன் -தாமரையாள் கேள்வன், “உனக்கேற்கும் கோலமலர்ப் பாவைக்கன்பாகிய என்னன்பேயோ” -(திருவாய்மொழி. 10-10-6. “உனக்கேற்கும் – இவனோ பாதி வாசாவிமர்த் திக்கைக்கும் பெறாத ஸெளகுமார்யத்தையுடையவள். இப்படிப் பட்ட உனக்கு ஸத்ருசமான அழகையுடையளாய், புஷ்பத்தில் பரிமளத்தை வடித்து வகுத்தாற்போலே யிருக்கிற பிராட்டிக்கு ஸ்நிக்தனானவனே! உனக்கேற்கும் கோலமென்று – அவ்வழகையிங்கே யதிதேசிக்கிறர். ந்யாயாதிதேசம் பண்ணுகிருர், கோல மலர்ப்பாவைக்கு அன்பா ! என்னன்பேயோ! – அவள் பக்கலன்பனென்று தோற்றியிரா நின்றது; தம்முடைய பக்கல் அன்பென்றும் அது உடையனென்றும், தெரிக்கப் போகிறதில்லை; ஜ்ஞாதாவை ஜ்ஞாநமென்னு மாபோலே. தத்குண ஸாரத்வாத்து தத்வ்யபதேச:” – ஈடு. “அதிதேசிக்கிருர் — ஏறிடுகிறர். அதிதேசிப்பது ஸர்வதாஸாம்யமுண்டான விடத்திலே யன்றோ, காளமேக நிபச்யாமமான நிறம் முதலானவற்றை ஹிரண்ய வர்ணையான இவளிடத்திலே யதிதேசிக்கக் கூடுமோவென்ன – ந்யாயாதி தேசம் இத்யாதி. அதாவது – ஸ்வரூபாதி தேசம் பண்ணுகிறதன்று. அவனைப் போல இவளும் அழகுடையவளென்கிற தென்றபடி, ஸ்வரூபாதிதேசமென்றும், ந்யாயாதிதேசமென்றும் இரண்டு. ஸ்வரூபாதி தேசமாவது-ஸர்வதா ஸாம்யம் கொள்ளுகை. ந்யாயாதி தேசமாவது – அதுபோல இதுவும் ச்லாக்யமா யிருக்கு மென்கை.” – சீயர் அரும்பதவுரை) தமர் – அடியார் ; கொண்டல் – மேகம் ; கோ – ஸ்வாமி.
- அளிப்பான்
கோவாகி வானவர்க்கு குற்றமிலாத் தொல்லருளால்
ஓவாது வேங்கடத்தி லோங்கிநின் – றாவாவென்
றெம்மை யளிப்பா னிரும்பொழில்சூழ் தூப்புல்வரு
செம்மையுடை வாதிசிங்கத் தேவு. (79)
(பொழி.) பெரிய சோலை சூழ்ந்த தூப்புல் நகரில் தோன்றிய நேர்மை உடைய கவிவாதி சிங்கமாகிய தேசிகத் தெய்வம், தேவர்களுக்குத் தலைவனாக விளங்கி, குற்றம் இல்லாத பழம்பெரும் திருவருளால், இடையீடு இல்லாது திருவேங்கடத்தில் உயர்ந்து நின்று, “ஆ!ஆ!” என்று எங்கள்மேல் இரக்கம் கொண்டு எங்களைப் பாதுகாப்பான்.
(79) ஒவாது – ஒழியாது; ஓங்கி – உயர்ந்து, எழுந்து; செம்மை – ருஜூத்தன்மை.
- திருமணி காக்கும்
தேவ ரசுரர்களுந் தேசுடைய வானவரும்
பூவுலகிற் புண்ணியரும் போற்றிசெய – மூவுலகுக்
கீசனெழில் வேங்கடக்கோ னேரார் திருமணியிக்
காசினியைக் காக்குமே வந்து. (80)
(பொழி.) மூன்று உலகுக்கும் இறைவனாக இருப்பவனும், அழகிய திருவேங்கடமலையில் வீற்றிருப்பவனுமாகிய எம்பெருமானது அழகு நிறைந்த செல்வமணி, தேவர்களும், அசுரர்களும், ஒளி உடைய நித்திய சூரிகளும், மண்ணுலகத்தில் வாழும் புண்ணியம் செய்த நல்லோர்களும் புகழும் வண்ணம் இங்கு வந்து இந்த உலகத்தைப் பாதுகாக்கிறது.
80) மூவுலகுக்கீசன் – “நிகரில்புகழாய் ! உலகம் மூன்றுடையாய் ! என்னை யாள்வானே.” – (திருவாய்மொழி. 6-10-10); வேங்கடக்கோனேரார் திருமணி – “திருமலைமால் திருமணியாய்ச் சிறக்கவந்தோன்”
ஈசன் பிறந்தான்
கார்க்குமென்று மெம்மைக் கருக்குழியில் வீழாமே
தீர்க்கும் வினையனைத்துஞ் சேராமே – ஏற்கும்
பெரும்புகழோ னீசன் பிறந்தான் சிறந்த
சுரும்பமருஞ் சோலைசூழ்தூப் புல். (81)
(பொழி.) நிறைந்த பெரும் புகழுடையவனான இறைவன், சிறப்புடைய வண்டுகள் அமர்ந்துள்ள சோலை சுற்றியுள்ள தூப்புல் நகரில் தேசிகராகத் தோன்றினான். அப்படித் தோன்றி எங்களைக் கருக்குழியில் மறுபடியும் வீழாதபடி, எல்லாக் காலத்தும் பாதுகாப்பான். மேலும், தீவினைகள் ஏதும் எங்களைச் சேராதபடி, அதனை ஒழிப்பான்.
(81) கருக்குழியில்விழாமே — “கருவிருத்தக்குழிநீத்தபின் காமக்கடுங்குழி வீழ்ந்து, ஒரு விருத்தம் புக்குழலுறுவீர்! உயிரின்பொருள்கட்கு. ஒரு விருத்தம் புகுதாமல் குருகையர் கோனுரைத்த திருவிருத்தத்து ஓரடிகற்றீர் திருநாட்டகத்தே” – (திருவிருத்தம் தனியன்)
82. துன்பம் தொலையும்
தூப்புனகர் நாதன் றுலங்கொளிசேர் சேவடியே
காப்பென்னக் கன்மங் கழியுமே – மூப்பில்லா
இன்பம் பெருகுமே யிப்புவியி லெவ்வுயிர்க்கும்
துன்ப மதுதொலையு மே. (82)
(பொழி.) தூப்புல் நகரில் அவதரித்த தலைவனாகிய சுவாமி தேசிகனது, விளங்குகின்ற ஒளி சேர்ந்த செம்மையான திருவடியே, எமக்குப் பாதுகாப்பு என்று சொல்ல, அதனால், இந்த உலகத்தில் எல்லா உயிர்களுக்கும், கருமங்கள் நீங்கும்; முதுமைத் தொல்லை இல்லாத இன்பம் வளரும்; துன்பமாகிய அதுவும் அழிந்துவிடும்.
(82) தூப்புனகர்………. காப்பு – தூப்புல்வேதாந்ததேசிகன் திருவடிகளே சரணம்; துலங்கு – பிரகாசிக்கின்ற பெருகும் – விருத்தியாகும் ; துன்பம் வருத்தம். ‘”துன்பத்திற்கிடங் கொடேல்”- (ஆத்திசூடி); தொலையுமே நீங்குமே “துதித்திடுவோர்தங்கள் பாவந்தொலையுந்தானே.”
83. சிலையால் சிதைக்கவற்றோ
தொலையாத தொல்வினைகள் சூழ்பவ வாழி
சிலையாற் சிதைக்கவற்றோ விங்கு – துலையில்லாக்
கோதில்புக ழாரியர்கள் கூறுங் குணமிக்க
வாதிசிங்கர் மன்னருளா லன்று. (83)
(பொழி.) ஒப்பு இல்லாத குற்றம் இல்லாத புகழை உடைய மேலோர்கள் கூறக்கூடிய குணம் மிக்க வாதிசிங்கராகிய தேசிகரது நிலையான திருவருளால் அல்லாமல் ஒழியாத பழைய தீவினைகள் சூழ்ந்த பிறவிக்கடலை, வில்லால் அழிக்க முடியுமா? முடியாது.
(83) தொலையாத – ஒழியாத, நீங்காத; பவவாழி – ஸம்ஸார ஸாகரம், பிறவிப்பெருங்கடல் ; சிலை வில், கல்; சிதைக்க – அழிக்க; துலை – ஒப்பு, உபமானம்; “அலையற்ற வாரமு தக்கட லக்கடலுண்டமுகில், விலையற்ற நன்மணி வெற்பு வெயினில வோங்குபக, றுலையுற் றனவென்பர் தூமறை சூடுந் துழாய்முடியாற், கிலையொத் தனவவன் பாதம் பணிந்தவர்க் கெண்ணுதற்கே.” -(தேசிகமாலை, அமிருதரஞ்சனி, 6.)
84. அருமை
மன்னருளால் வாதிசிங்க ரிங்குரைத்த நற்கலைகள்
உன்னி யுணர்ந்திட வல்லவர்கள் – துன்னுஞ்
சுருதிமுடி யுட்பொருளைச் சோரா தறிவர்
அருமையா மற்றோ ரறிவு. (84)
(பொழி.) வாதிசிங்கர் எனப் புகழப்படுகிற வேதாந்த தேசிகர், இவ்வுலகில் இயற்றி அருளிய நல்ல வைணவச் சாத்திர நூல்களை, அவரது நிலையான திருவருளால், நினைத்து உணர்ந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள், நெருங்கிய வேதங்களின் முடிவாக விளக்கும் விழுப் பொருளை, மறப்பின்றி அறிந்து கொள்வார்கள். மற்றையோரது அறிவு, அந்த உட்புருளை அறிவது அருமையாகும்.
(84) கலைகள் – கிரந்தங்கள்; உன்னி – நினைத்து; வல்லவர் – ஸமர்த்தர். “வல்லான் வகுத்ததே வாய்க்கால்”; துன்னும் – சேரும் ; சுருதிமுடியுட்பொருள் – “மிக்கவேதியர் வேதத்தி னுட்பொருள்.” — (கண்ணிநுண்சிறுத்தாம்பு, 9); சோராது – மறப்பின்றி; அருமை – இன்மை. “மனக்கவலை மாற்றல் அரிது.” -(திருக்குறள். கடவுள் வாழ்த்து. 7, “ஈண்டு அருமை இன்மை மேனின்றது” – பரிமேலழகருரை.)
85. ஓதி உணராதவர்
அறிவரோ வாழ்வா ரருமறையின் சீரை
நெறிதா னினைந்திடவல் லாரோ – சிறியராய்
வேதமுடித் தேசிகன்றன் வீறுடைய நற்கலைகள்
ஓதி யுணராத வர். (85)
(பொழி.) வேதங்களைத் தம் திருமுடியில் தரித்த தேசிகன் செய்த பெரும் சிறப்பு உடைய நல்ல வைணவச் சாத்திர நூல்களை அனுசந்தானம் செய்து, அதன் கருத்துக்களை உணர்ந்து தெளியாதவர்கள், சிறுமைக் குணத்தினராக நின்று, ஆழ்வார்களது அருளிச் செயலாகிய தமிழ் வேதத்தின் சிறப்பை அறிவார்களோ? மேலும் அந்தத் தமிழ்மறை கூறும் தீதில் நன்னெறியை எண்ணுவதற்கு வல்லவரோ? இல்லை.
(85) ஆழ்வார் – மாலுகந்தவாசிரியர், எம்பெருமானுடைய திவ்யமங்கள குணகணங்களாகிய அமுதவெள்ளத்திலே ஈடுபட்டு நன்றாக ஆழ்ந்திடுபவராகிய பரமபாகவதர், திருமாலின் அபிநவ தசாவதாரம் எனக்கொண்டாடப் பெறுபவர். “ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல்வாழி”- (உபதேசரத்தினமாலை. 3); நெறி – மார்க்கம்; வீறு – உயர்ச்சி, சிறப்பு, பெருமை, பொலிவு வெற்றி, வேறொன்றற்கில்லா வழகு.
மாற்றம் அறியா மனிசர்
உணரார் மறைப்பொருளை யுத்தமரைச் சேரார்
பணவா ளரவணைப் பள்ளி – புணர்வானைப்
போற்றியெ ழாரந்தோ புல்லியராய் வாதிசிங்கர்
மாற்றமறி யாமனிசர் மாய்ந்து. (86)
(பொழி.) வாதிசிங்கராகிய தேசிகரது உபதேச மொழிகளைத் தெரிந்து கொள்ளாத மனிதர்கள், மறந்து, கீழ் மக்களாய் நின்று, வேதத்தின் உட்பொருளை இன்னது என்று உணர்ந்து கொள்ளமாட்டார்கள். உயர்ந்தவர்களாகிய உத்தமர்களை அடைய மாட்டார்கள். படத்தை உடைய ஒளி பொருந்திய ஆதிசேடனைப் படுக்கையாகக் கொண்டு, அதனைச் சேர்ந்து உள்ள பரந்தாமனாகிய நாராயணனைப் போற்றிப் புகழ்ந்து பேசமாட்டார்கள். அதனால் அவர்கள் அந்தோ என்று இரக்கப்படுவதற்கு உரியவர்களாகின்றார்கள்.
(86) பணம் – பாம்பின்படம்; வாள் – ஒளி ; பள்ளி – படுக்கை ; புணர்வோன் – சேர்வோன் ; போற்றியெழார் – “துயரறுசுடரடிதொழுதெழு ” – (திருவாய்மொழி 1-1-1); புல்லியர் – கீழ்மக்கள்; மாற்றம் – சொல். “ மாற்றங்களாய்ந்து கொண்டு” -(திருவாய்மொழி 6-8-11, “சுரமேறுவாரைப் போலே, பக்திபரவ சராயிருப்பார்க்கு அடைவுபடப்பாசுரமிட்டுச் சொல்லப்போகாதிறே; இவ்வளவிலும் சொற்கள் நேர்பட்டபடி: நல்ல சொற்களைத் தெரிந்துகொண்டு”-ஈடு.)
87. பாதகங்கள் ஓடும்
மாய்ந்துமாய்ந் திவ்வுலகின் மன்னிய பல்பிறப்பிற்
றோய்ந்துழல்வீர் சொல்லுகேன் வம்மினோ – ஆய்ந்தொருகால்
வேதமுடித் தேசிகனார் மெய்யுரையை நண்ணினால்
பாதகங்க ளோடும் பறந்து. (87)
(பொழி.) மறைந்து மறைந்து இந்த உலகின் நிலைபெற்ற பலவிதமான பிறப்பில் படிந்து துன்புறும் மக்களே! இங்கு வாருங்கள். உமக்கு ஒரு நல்ல செய்தி சொல்கின்றேன். வேதமுடித் தேசிகனார் அருளிச் செய்த உண்மை வார்த்தைகளை ஒருமுறை ஆராய்ந்து பார்த்து, அதனை எண்ணினால், உங்களது துரோகங்கள் எல்லாம், இருந்த இடம் தெரியாமல் பறந்து போய்விடும்.
(87) மாய்ந்து மாய்ந்து – “வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குகளின் மாய்ந்து மாய்ந்து, ஆழ்ந்தா ரென்றல்லால் அன்றுமுதலின்றறுதியா, வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பதில்லை நிற்குறில், ஆழ்ந்தார்கடற்பள்ளி அண்ணலடியவராமினோ” – (திருவாய்மொழி 4-1-6) வம்மின் – வாருங்கள் மெய்யுரை – பொய்யில்பாடல்; நண்ணினால் – அநுஸந்தித்தால்; பாதகம் – துரோகம்.
88. கோதில் குணம்
பறக்குமே பாவம் பவக்கடலும் வற்றும்
இறக்குமே இவ்வுலகிற் றுன்பம் – மறப்பின்றி
வாதிசிங்கர் வார்த்தைகளை வைப்பரேற்
றந்நெஞ்சிற் கோதில்குணங் கொண்டிருக்கலாம். (88)
(பொழி.) வாதிசிங்கராகிய தேசிகரது உபதேச நன்மொழிகளைத் தமது மனத்தில் வைத்துக் கொள்வரானால், அவரது பாவம் விரைந்தோடும். பிறவிக் கடலும் வற்றிவிடும். இந்த உலகத்தில் துன்பம் எதுவும் இல்லாமல் அழிந்துவிடும். மேலும், அவர்கள், குற்றம் இல்லாத குணத்தைப் பெற்றுக் கொண்டிருக்கலாம்.
(88) பறக்கும் விரைந்தோடும் ; வற்றும் – வடியும்; இறக்கும் – போம்; வார்த்தை – வசனம்.
89. வீற்றிருக்கலாம்
கொண்டிருக்கலாமே குறைகடல்சூழ் வையகத்தை
விண்டலத்தில் வீற்றிருக்க லாமேதான் – தொண்டுபட்டுத்
தொல்புகழ்சேர் தூப்புல்வந்த தூய்மறையோன் செய்தகலை
அல்லும் பகலு மறிந்து. (89)
(பொழி.) பழைய புகழ் சேர்ந்த தூப்புல் வந்த, தூய வேதங்களைக் கற்ற தேசிகர் அருளிச் செய்த நற்கலைகளை அடிமை உணர்வுடன் இரவும் பகலுமாக அறிந்து தெளிந்தவர்கள் ஒலிக்கும் கடல் சூழ்ந்த இந்த உலகத்தை ஆச்ணு கொண்டிருக்கலாம், பரமபதத்தில் வீற்றிருக்கலாம்.
(89) தொண்டு – அடிமை ; அல் – இராத்திரி, “அல்லும் பகலுமனவரதமும் நினைத்தாற், கல்லுஞ் சொல்லாதோ கவி.”
90. புறம் தொழார்
அறிந்து மறையோ ராரணத்தின் பொருளைச்
சிறந்த மனத்திற் சேமித்துப் – புறந்தொழார்
வண்பொழில்சூழ் தூப்புனகர் வந்துதித்த வாதிசிங்கர்
எண்பெரிய சீர்மொழிகண் டார். (90)
(பொழி.) வளமையான சோலைகள் சூழ்ந்த தூப்புல் நகரில் வந்து தோன்றிய வாதிசிங்கர் எனப் போற்றப்படுகின்ற வேதாந்த தேசிகரது மிகப் பெரிய சிறப்பினை உடைய அருள்மொழிகளைக் கண்டவர்கள், வேதியர்களின் வேதங்கள் கூறும் உட்பொருளை அறிந்து, அதனைச் சிறந்த மனத்தில் தங்கவைத்துத் தேசிகருக்குப் புறமாக இருக்கிற வேறு யாரையும் வணங்கமாட்டார்கள்.
(90) மறையோராரணம் – “அந்தணரருமறை”- (பரி பாடல் 1-13, 210-57, 3-14, 4-65.); சேமித்து – சேர்த்து; புறம் – அயல், வெளி, வேறு, பிறமதம் ; எண்பெரியசீர் – * எண்பெருக்கந்நலம் 9 – (திருவாய்மொழி 1-2-10)
சிந்தித்தவர்
கண்டார் கரையைக் கடந்தார் பவக்கடலை
அண்டாத வார்வ மடைந்திட்டார் – வண்டாரும்
கொந்தலர்பூந் தூப்புல்வருங் குற்றமில்சீர் வாதிசிங்கர்
செந்தமிழ்நூல் சிந்தித்தவர். (91)
(பொழி.) வண்டுகள் நிறைந்த, கொத்தாக மலர்ந்த மலர்களைக் கொண்ட, சோலை சூழ்ந்த தூப்புல் நகரில் தோன்றிய, குற்றம் இல்லாத வாதிசிங்கராகிய தேசிகர் அருளிச் செய்த செந்தமிழ் நூலாகிய தேசிகமாலையை நன்கு மனத்தில் வைத்துக் கொண்டவர்கள், துன்பக் கடலின் எல்லையைத் தாண்டியவராவார். பிறவிக் கடலைக் கடந்தவராவர். நிறைவான பக்தியை அடைந்தவராவர்.
(91) ஆர்வம் – அன்பு ; செந்தமிழ்நூல் – தேசிகமாலை,
92. களித்தோம்
சிந்தித் தவர்மொழியைச் சிந்தாதே நாடோறும்
வந்தித் தவர்மலர்ப் பாதத்தை – அந்தமில்சீர்
தூப்புனகர் வந்துதித்த தூய்மறையோர் தொல்லருளால்
கோப்புடனே யாங்களித்தோ மின்று. (92)
(பொழி.) முடிவு இல்லாத சிறப்பினை உடைய தூப்புல் நகரில் வந்து அவதரித்த தூய்மையான வேதங்களைக் கற்ற தேசிகரது பழம்பெரும் திருவருளால் நாம் இன்று, அவர் கூறியுள்ள உபதேச மொழிகளை மனதில் சிந்தித்தும், அவரது தாமரை மலர் போன்ற திருவடிகளை தினம் தோறும் மனம் சிதறாமல் (ஒருமை மனத்துடன்) வணங்கியும் (வழிபாடு செய்தும்) அடியார் கூட்டத்தோடு இன்பம் அடைந்தோம்.
(92) வந்தித்து — வணங்கி, வழிபாடுசெய்து; களித்தோம் – இன்பமடைந்தோம்.
93. நாளும் நல்குவது
இன்றறிந்தோ மெந்தமக்கோ ரின்பமிலை யீதன்றி
இன்றறிந்தோ மெய்த்தவமு மீதென்றே – குன்றாத
தொல்புகழ்சேர் தூப்புல்வாழ் தூயன் மலர்ப்பதத்தை
நல்குவதே நாளும் பிற. (93)
(பொழி.) (ஆசாரிய அடியார்களின் திருக்கூட்டத்தில் கலந்துகொண்டு வாழ்வதாகிய) இஃது அல்லாமல், எமக்கு இன்பம் தருவது வேறு எதுவும் இல்லை என்று இன்று அறிந்துகொண்டோம். இதுவே உண்மையான தவமும் ஆகும் என்றும் இன்று அறிந்துகொண்டோம். (இந்தப் பேரின்பமே) குறையாத பழம்புகழ் நிறைந்த தூப்புல் நகரில் வாழும் தூயவனான சுவாமி தேசிகனின் தாமரை மலர் போன்ற திருவடிகளையும், (ஆன்மீக வாழ்வுக்கு ஏற்ற) பிறவற்றையும் நாள்தோறும் கொடுக்கும்.
(93) குன்றா – குறையாத; நல்குவது – ஈவது, உண்டு பண்ணுவது.
(94) சொல்பவர் பெரிது
பிறவித் துயரறும் பேரின்பஞ் சேரும்
குறையொன்று மில்லாக் குணத்து – மறையவர்கள்
போற்றுமிந்த வாதிசிங்கப் புண்ணியரை யல்லாது
தோத்திரித்துச் சொல்லா தவர்க்கு. (94)
(பொழி.) குறை எதுவும் இல்லாத குணத்தையுடைய, வேதியர்கள் புகழக்கூடிய இந்த வாதிசிங்க நல்லவராகிய வேதாந்த தேசிகரை அல்லாமல், வேறு யாரையும் துதிபாடிப் புகழாதவர்க்கு பிறவியினால் ஏற்படும் துன்பம் நீங்கும். பேரின்பம் வளரும்.
(94) பிறவித்துயர் – “பிறவித்துயரற ஞானத்துள் நின்று துறவிச்சுடர் விளக்கம் தலைப்பெய்வார், அறவனை ஆழிப்படை அந்தணனை, மறவியை யன்றி மனத்து வைப்பாரே.” – (திருவாய்மொழி 1-7-1); குறையொன்றுமில்லா – “குறை வொன்றுமில்லாத கோவிந்தா” – (திருப்பாவை, 28); தோத்திரித்து – துதித்து.
95. செம்மை செய்
சொல்வதுமுன் னாமந் தொழுவதுமுன் பாதமலர்
நல்குவது முன்னுடைய நற்குணமே – தொல்லருளுக்
கெம்மையிலக் காக்கி யீனமா மெம்பரிசு
செம்மைசெய் தேசிகனே யின்று. (95)
(பொழி.) சுவாமி தேசிகனே! நாங்கள் பேசிக் கொண்டிருப்பதும் உம்முடைய திருப்பெயர்தான்; வணங்குவதும் உம்முடைய திருவடி மலர்தான். விரும்புவதும் உம்முடைய நல்குணங்களையே. (அதனால்) எம்மை உமது பழம்பெரும் திருவருளுக்குக் குறிக்கோளாக்கி, குறைபாடான எமது தன்மையை, இன்று நல்ல கொடைப் பொருள் (காணிக்கை) ஆகுமாறு செய்தருளுக.
(95) தொல் – அநாதி; இலக்கு — லக்ஷ்யம் ; ஈனம் – தாழ்வு; பரிசு – வெகுமதி, விதம்
மனம் பெற்ற விதம்
இன்றென்றன் பாக்கியமோ வேரார் வரதகுரு
நன்றன தொல்லருளோ நாரணன்றன் – குன்றாத
நன்னினைவோ நானின்று வாதிசிங்கர் நல்லடியை
மன்னுமணம் பெற்றவி தம். (96)
(பொழி.) நான், இன்றைக்கு வாதிசிங்கராகிய தேசிகரது நல்ல திருவடியைச் சேரும் மனத்தைப் பெற்றுக் கொண்ட விதம், இன்று எனக்குக் கிடைத்த செல்வமோ? அழகு நிறைந்த வரதாரிய குருவினது நல்ல பழம் பெரும் திருவருளோ? நாராயணனது குறையாத நல்ல தியானமோ? (என்ன என்று சொல்வது?)
(96) பாக்கியம் — செல்வம், புண்ணியம், “பாக்கியம் புரிந்திலாப்பரதன்”-(இராமாவதாரம், அயோத்தியா காண்டம், மந்தரைசூழ்ச்சிப் படலம், 59), “பாக்கியம்மெனக் குளதென நினைவுறும் பான்மை” – (இராமாவ தாரம், பாலகாண்டம், வேள்விப்படலம் 57. பொருளல்லாத என்னை நீ ஒரு பொருளாக மதித்துவந்து உன்னால் வேள்வி காக்கப்படுதற்கு ஏதுவானதொரு நல்வினைதனக்கு யிருந்ததென்று யான் எண்ணுகின்ற அத்தன்மை); ஏரார்வரதகுரு – “சீரா கியவர தாரியன் பாதந் துணைநமக்கே.” – (பிள்ளையந் தாதி, தனியன்) “நயினராசாரியர் தேசிகர்குமரர், இவர்க்கு வரதாசார்யர் என்றும் பெயர். இவரும் தந்தையைப் போல் பலரிடத்தில் வாதஞ்செய்து திவ்யதேச யாத்திரை செய்து வருகையில் கேரளதேசம் சென்று மடைப்பள்ளி பரிசனங்களுக்குத் தலைச்சுமையாய் கூடி க்ஷூத்ரர் ஏவியகல்லை அவர்களுக்கே திருப்பி அவர்கள் வேண்ட அதைப்போக்கிச் சாகல்லியமல்லன் விட்ட பூதத்தைப் பல்லக்குச் சுமப்பித்துத் தாஸராசாவென்கிற பிராமணனை ஸ்ரீவைஷ்ணவனாக்கித் தம்மிடம் வாதத்திற்கு வந்த மாயசந்நியாசியை அண்ணனைக்கொண்டு வெல்வித்துத் தம்மை யாச்ரயித்த முதலிகளுக்குப் பாஷ்ய காலக்ஷேபாதிகளைச் செய்து 69 வருஷமிருந்து திருநாட்டிற்கெழுந்தருளினர்.”-(அபிதான சிந்தாமணி) விதம் – வகை. “வரதகுரு நன்றான தொல்லருளோ” என்பதால் இவ்வந்தாதி வாசிரியர் நயினாராசாரி யாரிடம் ஆச்ரயித்தவர் என்று கொள்ள இடந்தருகின்றது.
97. அருள்வீர்
தம்மை வணங்கினர்க் கெஞ்ஞான்றுந் தம்முடைய
தன்மை யளிக்குமிரா மாநுசர்போல் – உம்மை
வணங்கு மடியேற்கு வாதிசிங்க ரேநீர்
இணங்கும் வகையருள்வீ ரின்று. (97)
(பொழி.) தம்மை வழிபாடு செய்த அன்பர்களுக்கு, எப்பொழுதும் தமது அருளைக் கொடுக்கக் கூடிய எம்பெருமானாரைப்போல, வாதிசிங்கராகிய தேசிகரே! உம்மை வழிபாடு செய்கின்ற அடியவனாகிய எனக்கும் இன்றைக்கு, நீங்கள், நான் வந்து உங்களோடு சேர்ந்து கொள்ளும் முறையை அருள் செய்யுங்கள்.
(97) இராமாநுசர் — எம்பெருமானர்; தம்முடைய தன்மையளிக்கும் – “தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதம்.”
98. நீ தேவு
என்று மெனக்குநீ யீன்றெடுத்த தாய்தந்தை
நன்றளிக்கு நற்குருவு நற்கதியுங் – குன்றெடுத்த
மாயனைப்போன் மற்று மறைமகுட தேசிகனே
தூயமனத் தோர்க்குநீ தேவு. (98)
(பொழி.) வேதங்களை உனது திருமுடியில் கொண்ட தேசிகனே! எனக்கு நீ எப்பொழுதும் எம்மைப் பெற்றெடுத்த தாய், தந்தையாக விளங்குகின்றாய். மேலும், நல்ல ஞானத்தைக் கொடுக்கக் கூடிய நல்ல ஆசாரியராகவும், நல்ல அடைக்கலப் பொருளாகவும் அமைந்துள்ளாய். அப்படிப்பட்ட நீ, தூய்மையான உள்ளத்தை உடைய பக்தர்களுக்கு கோவர்த்தனகிரியைக் குடையாகத் தூக்கிய ஆச்சரியமான செயலைச் செய்யும் கண்ணபிரானைப் போலத் தெய்வமாகக் காட்சி அளிக்கின்றாய்.
(98) என்றுமெனக்கு……..கதியும் – “சேலேய் கண்ணி யரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும் மேலாத் தாய்தந்தையு மவரே யினியாவாரே” – (திருவாய்மொழி 5-1-8); தேவு – “தேவும் எப்பொருளும் படைக்க, பூவில் நான்முகனைப் படைத்த, தேவன் எம்பெருமானுக்கல்லால், பூவும் பூசனையும் தகுமே?” (திருவாய்மொழி 2-2-4 தேவும் எப்பொருளும் படைக்க – தேவஜாதியையும் ஸகல பதார்த்தங்களை யும் உண்டாக்குகைக்காக, ஒரு பூவிலே நாலுபூப் பூத்தாற்போலே சதுர்முகனை யுண்டாக்கினவன். இத்தால் ஜ்ஞாநத்திற் காட்டில் வைராக்யத்துக்கு உண்டான ப்ராதான்யம் சொல்லுகிறது. ஈடு), தெய்வம், தேவாந்தன்மை
99. அருளாய்
தேவ ரொடுமுனிவர் தேசுடைய யோகியரு
மேவி யடிபரவு மெய்த்தவனே – காவிமலர்க்
கண்ணார் மயக்கிற் கலங்கா வகையருளாய்
கண்ணாளா தூப்புற் கனி. (99)
(பொழி.) விண்ணில் உள்ள தேவர்களோடு, துறவிகள், ஒளி உடைய யோகம் செய்பவர்களும், மனம் பொருந்தி, உனது திருவடிகளைத் துதிக்கின்ற உண்மையான தவச்செல்வனாக விளங்குபவனே! உலகத்து உயிர்களுக்குக் கண்களாக இருந்து, ஒளி கொடுப்பவனே! தூப்புல் நகரில் உதித்து, அடியார்களுக்குத் தித்திப்பைக் கொடுக்கும் பழமாக இருப்பவனே! நீலோற்பல மலர் போன்ற நீல நிறக் கண்களை உடைய பெண்களது காம மயக்கத்தில் நான் கலங்கி விழாத வண்ணம் என்னைக் காத்தருள்வாய்.
(99) தேவர் — சுரர்; முனிவர் – மநநசீலர் ; யோகி – யோகமுடையவர்; மேவி – பொருந்தி; அடி – பாதம்; பரவு — துதிக்கும்; மெய்த்தவன் – உண்மையான தவமுடையவன்; காவி – நீலோற்பலம்; கலங்கா – கலங்காத
100. வீறுடைத்து
கனிவாய்க் கவிவாதி சிங்கரிப் பார்க்கோர்
நுனியார் திகிரிபோ னுாக்கப் – பனிபோலக்
கூறாயிற் றன்றே குமதிகடங் கோதுகுலம்
வீறுடைத்தே வேத முடி. (100)
(பொழி.) பழம் போன்ற சிவந்த மென்மையான வாயை உடைய கவிவாதி சிங்கராகிய வேதாந்த தேசிகர், இந்த உலகத்தை, ஒரு கூர்மை மிக்க சக்கரத்தைப் போன்று தள்ள, அதனால், பிறழ்ந்த அறிவுடைய அறிவிலிகளின் மகிழ்ச்சி, பிளவுபட்டது! ஆகவே, வேதத்தின் முடி பெரும் சிறப்புப் பெற்றது. (வேறு ஒன்றுக்கும் இல்லாத சிறப்பு வேதத்திற்குக் கிடைத்தது)
(100) நுனியார் — கூர்மைமிக்க, “பொழிலேழுமேன மொன்ருய், நுனியார்கோட்டில் வைத்தாய்!” – (திருவாய்மொழி 2-3-5) “பொழில் இத்யாதி – தனிமையிலே வந்து உதவும் படியைச் சொல்லுகிறது அத்விதீய மஹாவராஹ வேஷத்தைப் பரிக்ரஹித்து, ப்ரளயங்கொண்ட புவநங்களேழையுமெடுத்து.” நுனியார்கோட்டில்வைத்தாய் – நுனியென்று – கூர்மை. ஆர்கை – மிகுதி. கூர்மை மிக்க கோட்டிலே வைத்தாயென்றபடி இத்தால் ரக்ஷ்யவர்க்கத்தினளவல்லாத ரக்ஷகனுடைய பாரிப்பைச் சொல்லுகிறது.” – ஈடு); திகிரி – சக்கரம்; நூக்க – தள்ள; கோது குலம் – கெளதுாகலம், மிக்க சந்தோஷம், “கோதுகுலமுடைய பாவாய்” – (திருப்பாவை. 8).
———————————–
கவிதார்கிகஸிம்ஹாய கல்யாணகு³ணஶாலினே ।
ஶ்ரீமதே வேங்கடேஶாய வேதா³ந்தகு³ரவே நம: ॥
வாதி³த்³விபஶிரோப⁴ங்க³பஞ்சானனபராக்ரம: ।
ஶ்ரீமான் வேங்கடனாதா²ர்ய: சிரம் விஜயதாம் பு⁴வி ॥
ஶ்ரீமதே நிக³மாந்தமஹாதே³ஶிகஞாய நம: ।
——————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நயினாராசாரியாரின் சிஷ்யரான ஸ்ரீ கந்தாடை மன்னப்பங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்