அவதாரிகை :-
ஸ்ரீ நைமிசாரண்யத் தெம்பெருமான் திருவடிகளிலே பெரிய பிராட்டியார் முன்னிலையாகச் சரணம் புகுகிறார் இத்திருமொழியில்.
பகவானிடத்தில் சரணாகதி செய்யுமிடத்து அவனுடைய மேன்மைகளையும் தன்னுடைய தாழ்வுகளையும் வெளியிட்டுக்கொண்டே செய்ய வேணுமென்று விதியிருப்பதாலும், ஆர்த்தியின் கனத்தாலே தம்முடைய தோஷங்களெல்லாம் நினைவுக்கு வந்தே தீருமாகையாலும், இவ்வாழ்வார் தாமும் தம்முடைய குற்றங்குறைகளை யெல்லாம் விரிவாகப் பேசிக்கொண்டு சரணாகதி பண்ணுகிறார்.
சாஸ்த்ரங்களிற் செய்யவேண்டிய கருமங்களென்று விதிக்கப்பட்ட நற்கருமங்களைச் செய்யாதொழிகையும், செய்யலாகாதென்று மறுக்கப்பட்ட தீவினைகளைச் செய்கையும் என்று இருவகையாம் குற்றங்கள். அவ்விருவகைக் குற்றங்களும் தம்மிடத்தில் நிறைந்து கிடப்பனவாகச் சொல்லிக்கொள்ளுகிறார் இதில்,
ஸ்ரீ விபீஷணாழ்வான் கடற்கரையிலே இராமபிரானிடம் வந்து சரணாகதி செய்யும் போது ““రావడో నామ దువకృత్తః= ராவணோநாம துர்வ்ருத்த: “ [இராவணனென்று ஒரு துஷ்டன் உண்டு] என்று அடியே தொடங்கித் தன்னுடைய தாழ்வைச் சொல்லிக்கொண்டு அடைக்கலம் புகுந்ததை இங்கே நினைப்பது.
ஆழ்வார்களும் ஆசாரியர்களும் தங்களுடைய ஸ்ரீஸுக்திகளில் தங்களுடைய தோஷங்களை அடிக்கடி வெளியிட்டுக் கொள்ளுகிறார்களே, மாஞானிகன்று கொண்டாடப்படுகின்ற அவர்களுக்கும் தோஷங்கள் இருக்குமோ? என்று சிலர் கேட்பதுண்டு.
இதற்குப் பலவகையான ஸமாதாநங்கள் சொல்வதுமுண்டு. ஒன்றான எம்பெருமான்தானும் இவ்விருள் தருமா ஞாலத்திலே வந்து திருவவதரித்தால் சோகம் மோஹம் முதலானவை அகில ஹேயப்ரத்யநீக கல்யாண குணஸாகரனான அப்பெருமானுக்கும் தோன்றுவதாக சாஸ்த்ரங்களிற் சொல்லுகிறபடியால் அதுபோல, மாஞானிகளான ஆழ்வாராசாரியர்களுக்கும் இந்தப் பிரகிருதி வாஸனையின் கொடுமையினால் சில தோஷங்கள் ஸம்பவிப்பதுண்டு ; ஸ்வல்பமான தோஷங்களை நைச்யாநுஸந்தாநரீதியிலே பெருக்கடித்துப் பேசுகிறார்கள் – என்று சிலர் நிர்வஹிப்பர்கள்.
‘பகவத் ஸந்நிதியில் நம்முடைய தோஷங்களைச் சொல்லிக்கொள்ள வேண்டியது ஆவச்யகம் ‘ என்கிற சாஸ்த்ர மரியாதையைக் காட்டுவதற்காகவே பூருவர்கள் தோஷாநுஸந்தாநம் செய்து கொண்டனர் – என்று நிர்வஹிப்பர் சிலர்.
உண்மையில் மஹான்களான பூருவர்களுக்கு தோஷம் இருந்தனவா? இல்லையா? என்கிற விசாரம் நாம் பண்ண வேண்டியதே அநாவச்யகம் ; தோஷமே வடிவெடுத்த நமக்கு ஸ்வரூபாநுரூபமாக அநுஸந்திப்பதற்குப் பாங்கான பாசுரங்களை அருளிச் செய்து வைத்தார்களத்தனை – என்று கொள்வதே சிறக்கும்.
நைமிசாரணியமென்பது வடநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று. ஸ்ரீ புஷ்கர மென்கிற க்ஷேத்ரத்தில் எம்பெருமான் தீர்த்தரூபியாகவே ஸேவை ஸாதிப்பது போல ஸ்ரீ நைமிச க்ஷேத்ரத்தில் அரண்ய ரூபியாகவே ஸேவை ஸாதிக்கிறான் என்று பெரியோர் சொல்லுவர்கள்.
ஒரு காலத்தில் முனிவர்கள் பிரமனை நோக்கித் தவஞ் செய்தற்குச் சிறந்த இடம் நிலவுலகத்தில் யாது?. என்று தங்களுக்கு விளக்கிக் காட்டுமாறு வேண்ட, அப்போது அம்முனிவர்க்கு அப்பிரமதேவன் தான் ஒரு தர்ப்பத்தை ஆழியாகச் செய்து மண்ணுலகத்திலுருட்டி அது சென்று நின்ற இடத்தையே சிறந்ததென்று காட்டினனாதலால், அதற்கு இடமான இத்தலம் நைமிசமெனப் பெயர்பெற்றது. நைமிசம் – நேமி விழுந்த இடம். அரணியம் – காடு.
பிராட்டியை முன்னிட்டு சரணாகதி செய்வது ஸ்வரூபமாகையாலே இவரும் தேனுடைக்கமலத் திருவினுக்கரசே!…. திருவடி யடைந்தேன் ” என்று லக்ஷ்மீ ஸம்பந்தத்தை முன்னிட்டு ப்ரபத்தி பண்ணுகிறார் என்றுணர்க-
வாணில முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலைப் பயனே
பேணினேன் அதனைப் பிழை யெனக் கருதிப் பேதையேன் பிறவி நோய் அறுப்பான்
ஏணிலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தை
நாணினேன் வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்—1-6-1-
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
எம்பெருமானே ! சாஸ்த்ரங்களில் விதிக் கப்பட்டுள்ள கருமங்களைக் குறையற அனுட்டித்து ஜிதேந்திரியர்களாய் என்னை அடிபணிய வேண்டும் என்று நீ சொல்லிவைத்திருக்கிறாய்; என்னுடைய நிலைமையோ அதற்கு நேர்மாறாக இராநின்றது.
மாதர்களுடைய முறுவலழகையும் நெற்றியழகையும் தோளழகையும் முலையழகையும் வாய்வெருவிக்கொண்டு அந்த விஷயாநுபவமே நமக்குப் பரமபுருஷார்த்தமென்று கொண்டு நெடுநாள் வரையில் சபலனாய்த் திரிந்தேன். அப்படி திரிந்து கொண்டிருக்கவே இந்த ஸம்ஸார நோயைத் தீர்த்துக் கொள்வதற்கு வழி தேடாமலே யிருந்துவிட்டேன்;
* ‘மாதரார் வனமுலைப்பயனே பேணிக் கொண்டிருக்கு மிருப்பு பிசகு’ என்று நெஞ்சில் பட்டாலன்றோ பிறவி நோயறுத்துக்கொள்ள எண்ணமுண்டாகும். இப்படியே நெடுநாள் கழிந்தவாறே “ஐயோ! நாமிருக்க வேண்டிய நிலைமை என்ன? இப்போது நாமிருக்கிற நிலைமை என்ன?” என்று சிறிது ஸ்வரூப ஸ்திதியை ஆராயத் தொடங்கினேன்;
தொடங்கவே, நிர்ஹேதுக கடாக்ஷ விசேஷத்தால் விஷய போகங்களில் அருவருப்பு உண்டாயிற்று; அவற்றைக் காறியுமிழ்ந்து இன்று உன் திருவடிகளிலே வந்து சேரப்பெற்றேன் என்று நைமிசாரணியத்துளெந்தையை நோக்கி விண்ணப்பஞ் செய்தாராயிற்று.
வாள் நிலா முறுவல் = வாள் என்று ஒளிக்குப் பெயர் ; ஒளி நிலாவுகின்ற முறுவல் என்க. ஒளி வீசுகின்ற நிலாப்போன்ற முறுவல் என்றுரைப்பாருமுண்டு. சிறுநுதல் = நெற்றி சிறிதாயிருந்தால் அவலக்ஷணமாயிராதோவென்று சிலர் நினைப்பதுண்டு ;
அங்ஙனல்ல ; மாதர்களின் அவயவலக்ஷணம் வருணிக்கு மிடத்து [கலித்தொகை 108,] ”நகிலந்தோள் கண்ணென மூவழிப் பெருகி” [முலை தோள் கண் இம்மூன்று அவயவங்களும் பெரிதாயிருக்கை அழகு] என்றும், “நுதலடி நுசுப்பென மூவழிச் சிறுகி” [நெற்றி பாதம் இடை என்ற மூன்று அவயவங்களிலும் சிறுத்திருக்கை அழகு] என்றும் சொல்லியிருப்பதால் அழகு குன்றாத சிறுமை நெற்றிக்கு ஸுலக்ஷணமே யென்க.
”நெற்றி சிறுத் திருக்கையில்லையாகில் பும்ஸ்த்வகந்தியாயிருக்குமிறே” என்ற பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீஸூக்தியும் நோக்குக.
பெருந்தோள் = அநுபவிப்பவர்களினுடைய ஆசையினும் விஞ்சிக் கரை புரண்ட தோள் என்க. விஷய போகங்களைக் காறியுமிழ்ந்து பகவத் விஷயத்திலே வந்து சேர்ந்த ஆழ்வார் ஹேயமான அவ்விஷயங்களைப் பற்றி வாணிலா முறுவலென்றும் சிறுநுதலென்றும் பெருந்தோளென்றும் வனமுலையென்றும் வருணித்துப் பேசுவது ஏதுக்காக? என்று கேட்கக்கூடும்;
இதற்கு நம் ஆசார்யர்கள் அருளிச் செய்வதாவது:- உலகத்தில் வாக்குப் படைத்தவர்கள் பலவகைப்படுவர்; சிலர் உள்ளதை உள்ளபடியே பேசுவர்கள்; சிலர் சிறந்த விஷயத்தைப்பற்றிப் பேசத் தொடங்கினாலும் தங்களுடைய வாக்கின் திறமை போராமையினால் குறைப்படப் பேசுவர்கள்; சிலர் நாவீறுடைமையினால் அற்ப விஷயங்களையும் கனக்கப் பேசுவர்கள் ; இப்படி பேச்சில் பலவகைகளுண்டு.
பேசுகிறவர்களின் வாக்கின் போக்கை அநுஸரித்து விஷயங்கள் சிறுத்துப்போவதும் பெருத்துப்போவதுமுண்டு. திருமங்கையாழ்வாருடைய நாவீறு லோகவிலக்ஷணமாகையால் அற்ப விஷயங்களைப் பற்றிப் பேசும்போதும் பெருக்காறு பெருகுமாபோலே யிருக்குமேயன்றி அவ்விஷயங்களின் சிறுமைக்குத் தக்கபடி சிறுத்திராது இவருடைய சொற்போக்கு.
ஆகவே, விஷயங்கள் அற்பமென்பதில் தடையில்லை ; இவருடைய வாக்கு கம்பீரமாகையால் அற்ப விஷயத்தை யும் கனக்கப் பேசுகின்றது. என்று நம் ஆசிரியர்கள் அருளிச் செய்வர்கள்.
மேல் ஆறாம்பத்தில் “துறப்பேனல்லேன்” என்னுந் திருமொழியில் “சாந்தேந்துமென் முலையார் தடந்தோள் புணரின்ப வெள்ளத் தாழ்ந்தேன்” என்ற நான்காம் பாட்டின் வியாக்கியானத்தில் இக்கருத்துப்படப் பெரியவாச்சான்பிள்ளை அருளிச் செய்துள்ளமை காண்க.
பயனே என்ற விடத்திலுள்ள ஏகாரத்தைப் பிரித்து முலையோடு கூட்டி ”வனமுலையே பயன் பேணினேன்” என்றுரைக்கப்பட்டது. “அதனைப் பிழையெனக் கருதிப் பிறவி நோயறுப்பானேணிலேன்” என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் கூறலாம்.
” நான் கோவிலுக்குப் போய்ப் பெருமாளை ஸேவிக்க வில்லை” என்றால், நான் கோவிலுக்கும் போகவில்லை, பெருமாளையும் ஸேவிக்க வில்லை’ என்றும் பொருள்படும் ; ‘நான் கோவிலுக்குப் போயிருந்தும் பெருமாளை ஸேவியாமல் வந்து விட்டேன்’ என்றும் பொருள்படும்.
அதுபோல இங்கும் நான் விஷய போகங்களைப் பிழையெனக் கருதவுமில்லை; பிறவி நோயறுக்க எண்ணமும் கொள்ளவில்லை; இப்படியே நெடுநாளிருந்துவிட்டேன்’ என்கிற ஒரு பொருளும், “விஷயபோகங்களைப் பிழையெனக் கருதிய பின்பும் நடுவில் சிலநாள் பிறவி நோயறுக்க வழிதேடாமலே யிருந்துவிட்டேன்” என்கிற ஒரு பொருளும், ஆக இருவகையான பொருள்கள் இங்கே கொள்ள இடமுண்டு .
ஒருவன் செய்கிற காரியம் உண்மையில் கெட்டதாயிருந்தாலும் சாஸ்த்ரங்களில் நம்பிக்கைக் குறையினால் புண்யபாபவிபாகமே பொய், எல்லாம் நன்று தான்’ என்கிற பிடிவாதத்தினால் கெட்ட காரியத்தையும் நல்ல காரியமென்றே நினைத்துக்கொண்டு செய்வதுண்டு; போகப்போக சாஸ்த்ரங்களில் நம்பிக்கை பிறந்து நாம் செய்வது கெட்ட காரியந்தான்’ என்று நெஞ்சிற்பட்டாலும் அக்காரியத்தை விரைவில்விட முடிகிறதில்லை; பகவத்கடாக்ஷம் பரிபக்குவமாக ஆகிறபோது தான் அவ்விழிதொழிலைவிட்டொழித்துப் பிறவிநோயறுக்க எண்ணமுண்டாகும்.
இதைத்தான் இங்கு ஆழ்வார் அருளிச் செய்கிறார் – ; நான் நெடுநாள் வரையில் சாஸ்த்ரங்களில் நம்பிக்கை யென்பதேயில்லாமல், விஷயாநுபவத்திற்கு மேற்பட்ட புருஷார்த்தமே உலகில் கிடையாது என்று அத்யவஸாயங்கொண்டு அதில் ஆழ்ந்து கிடந்தேன்; அதற்குப் பிறகு சாஸ்த்ர விச்வாஸமுண்டாகி ‘விஷய போகம் பிசகு’ என்கிற புத்தி மாத்திரம் பிறந்தது; ஆனால் அதை விட்டொழித்து நல்வழி போகப்பெற்றிலேன் ;
அந்த இரண்டு அவஸ்தைகளையும் நீங்கி இன்று விஷய போகங்களைக் காறியுமிழ்ந்து பிறவி நோயறுக்கும் வழியிலே வந்து நின்றேன் என்றாராயிற்று .
—————
சிலம்படி யுருவில் கரு நெடும் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து
புலம்படிந்து உண்ணும் போகமே பெருக்கிப் போக்கினேன் பொழுதினை வாளா
அலம் புரி தடக்கை யாயனே மாயா வானவர்க்கு அரசனே வானோர்
நலம் புரிந்து இறைஞ்சுன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்–1-6-2-
பதவுரை
சிலம்பு அடி உருவின் |
–
|
சிலம்புகளை அணிந்த கால்கள் அழகாயிருக்கப் பெற்றவர்களும் |
கருநெடு கண்ணார் திறத்தன் ஆய் |
–
|
கறுத்து நீண்ட கண்களையுடையவர்களுமான மாதர்களிடத்திலேயே ஆஸக்தனாய் |
அறத்தையே மறந்து |
–
|
தருமங்களை மறந்து |
புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி |
–
|
இந்திரியங்கள் பொருந்தி அநுபவிக்கிற விஷய போகங்களையே மேன் மேலும் அதிகப்படுத்திக்கொண்டு |
பொழுதினை வாளா போக்கினேன் |
–
|
வாழ்நாளை வீணாகக் கழித்தேன்; |
அலம் புரி தடகை |
–
|
போதும் போதுமென்று சொல்லும்படியாக தாநஞ்செய்கிற பெரிய திருக்கையையுடைய |
ஆயனே |
–
|
கோபால க்ருஷ்ணனே! |
மாயா |
–
|
ஆச்சரியமான செய்கைகளையுடையவனே! |
வானவர்க்கு அரசனே |
–
|
தேவாதிதேவனே! |
நைமிசாரணியத்துள் எந்தாய்!-
|
வானோர் |
–
|
நித்யஸூரிகள் |
நலம் புரிந்து இறைஞ்சு |
–
|
அன்பு புண்டு ஆக்ரயிக்கப்பெற்ற |
உன் திரு அடி அடைந்தேன் |
–
|
உன் திருவடிகளிலே இன்று வந்து கிட்டப்பெற்றேன். |
எம்பெருமான் பக்கல் வந்துசேர்ந்தவுடனே, கீழ்க்கழிந்த காலத்துக்கு அநுதாபம் பிறப்பது வழக்கம். இப்படி பகவத் விஷயத்திலீடுபட்டு ஆநந்தமயமாகப் போது போக்க வேண்டியிருக்க, அந்தோ! விஷயாந்தரங்களில் ஈடுபட்டுத் தருமத்தை அடியோடு மறந்து எவ்விதத்திலாவது இந்திரியங்களுக்கு திருப்தியை உண்டாக்குவதே வேண்டியது என்று கொண்டு அருமந்த காலத்தை அநியாயமாகப் போக்கினேனே! என்று கழிவிரக்கங் காட்டுகின்றார் முன்னடிகளில்.
தாம் முன்பு மாதர்களிடத்து ஈடுபட்டிருந்த காலத்து அவர்களது சிலம் பணிந்த காலழகிலும், கரிய பெரிய கண்ணழகிலும் தோற்று அவற்றையே வாய் வெருவிக் கொண்டிருந்தமை தோன்றச் சிலம்படி யுருவிற் கருநெடுங்கண்ணார் திறத்தனாய் என்கிறார்.
அடி உருவின் = உரு என்று அழகுக்குப் பெயர்; செம் பஞ்சுச்சாறு முதலியவற்றைப் பூசிக் காலை அழகு பெறுத்துவர்கள் மாதர்கள் ; அந்தச் செயற்கை யழகைச் சொல்லுகிறதென்க. மாதர்கள் ஒருகால் என்னைக் கண்ணாலே நோக்கிவிட்டால் பின்னை அவர்கள் காலிலேயே விழுந்து கிடப்பேன் என்பதுதோன்ற இங்கு அடியையும் கண்ணையும் எடுத்துக் கூறுகின்றார்.
அறத்தையே மறந்து என்றவிடத்துப் பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்வது பாரீர்;-”ஸ்த்ரீகளுக்கு வழிபறித்திடுமது மறக்கவொண்ணாதே; தன்னுடைய உஜ்ஜீவநத்துக்கு உபாயமானத்தையேயாய்த்து வருந்தி மறப்பது .” என்று.
(இதன் கருத்தாவது-) விஷயபோகத்தில் ஈடுபட்டவன் பல வகைப் பாவங்களையுஞ் செய்து பொருளையீட்டிக் கொணர்ந்து மாதர்களை உகப்பிக்கவேண்டியது அவசியமாதலால் பாவத்தை மறக்கமுடியாது, புண்ணிய மொன்றையே மறக்கலாம் ; நானும் அந்தப் புண்ணியத்தை மாத்திரமே மறந்தேன் என்பது தோன்ற “அறத்தையே ” என்று ஏகாரம் பிரயோகிக்கப்பட்ட தென்றவாறு.
பாவங்களைச் செய்து செய்து பணங்களைத் திரட்டி இந்திரியங்கள் உண்டுகளிக்கும்படியான துர்விஷயங்களை அனுபவித்து இப்படியே பலபகலும் பழுதே போக்கினேன்.
இன்று சதிர்த்தேனென்கிறார் பின்னடிகளில். அலம்புரி தடக்கை என்ப தற்கு இரண்டு வகையாகப் பொருள் கூறுவர். அலம் என்று வடமொழியில் ஒரு அவ்யயமுண்டு ; போதும் என்று பொருள் ; யாசகர்கள் போதும் போதும்’ என்று சொல்லும்படியாக ஸர்வஸ்வதானம் பண்ணுகிற திருக்கை என்னலாம்;
ஹலம் என்ற வடசொல் கலப்பையென்று பொருள்படும்; அஃது அலமெனத் திரியும். கலப்பையைத் தரித்த திருக்கையையுடையவன் என்றும் உரைக்கலாம். இதனால் பலராமாவதாரத்தைப் பேசினபடி. பலராமனுக்குக் கலப்பையும் உலக் கையும் முக்கிய ஆயுதங்கள். அதனால் அவ்விராமனுக்கு ஹலாயுதன், ஹலீ, முஸ்லீ என்ற திருநாமங்கள் வழங்கும்.
ஒரு காலத்தில் பலராமர், பக்கத்தில் ஓடுகின்ற யமுனாநதியை நோக்கி ‘ஓ யமுனா ! நீ இங்கே வா; நான் நீராட வேண்டும்’ என்றருளிச் செய்ய, அவ்யமுனை அவர் மதுபான மயக்கத்தினால் இப்படிச் சொல்லுகின்றாரென்று அவரது வார்த்தையை அவமதித்து அங்கே வரவில்லையாக, அதுகண்டு
அவர் வெகுண்டு தமது கலப்பையைக் கையிலெடுத்து அதன் நுனியாலே அந்நதியை இழுக்க, அந்நதி தான் போகும் வழியை விட்டு அவரெழுந்தருளியிருக்கும் வனத்தில் வந்து பெருகியதன்றியும்,
தன்னுடைய சரீரத்தோடு அவர்க்கெதிரில் வந்து பயத்தினாலே மிகவும் நடுநடுங்கி விசேஷமாக வேண்டிக்கொள்ள, பின்பு அந்நதியை க்ஷமித்து அதில் நீராடினரென்றும்,
ஒருகால் ஹஸ்திநாபட்டணத்தில் துரியோதனன் தன் மகளான லக்ஷணைக்கு ஸ்வயம்வரங் கோடிக்க, அக்கன்னிகையை ஸ்ரீக்ருஷ்ணனது மஹிஷிகளுளொருத்தியாகிய ஜாம்பவதியின் குமாரனான ஸாம்பனென்பவன் பலாத்காரத்தால் தூக்கிக்கொண்டு போக, துரியோதனாதியர் எதிர்த்து யுத்தஞ்செய்து அவனைப் பிடித்துக் காவலிலிட்டுவைக்க,
அச்செய்திகேட்ட பலராமர், தான் அவனை விடுவித்து வருவதாய்ச் சொல்லிப் புறப்பட்டு அஸ்தினாபுரத்திற் கெழுந்தருளி ‘நம்முடைய ஸாம்பனை விடவேண்டும்’ என்றருளிச் செய்ய,
அக்கௌரவர் யாவரும் ‘துஷ்ட காரியஞ்செய்த அவனை நாங்கள் விடமாட்டோம்’ என்று ஒரே கட்டுப்பாடுடையவர்களாய் இகழ்ந்து பேச, பலராமர் அளவுகடந்த கோபங் கொண்டு எழுந்திருந்து ‘குருகுலத்தார் வாஸஞ்செய்துகொண்டிருக்கின்ற இந் நகரத்தைக் கங்கையிற் கவிழ்த்து விட்டு பூமியிற் கௌரவப்பூண்டில்லாமற் செய்துவிடுகிறேன் பாருங்கள்’ என்று சொல்லி, தமது கலப்பையை மதிலின் மேலுள்ள நாஞ்சிலென்னும் உறுப்பில் மாட்டியிழுக்க,
அதனால் அப்பட்டண முழுவதும் அசைந்து சாயவே, அது கண்ட கௌரவரெல்லாரும் மனங்கலங்கி ஸாம்பனை லக்ஷணையோடும் பல சிறப்புக்களோடும் கொண்டுவந்து ஸமர்ப்பித்து வணங்கி வேண்ட,
இராமபிரான் அவ்வளவோடு கலப்பையை வாங்கியருளினன் என்றும் உள்ள பல கதைகளினால் ஸ்ரீராமனது கலப்பையின் ஆற்றல் அறியத்தக்கது.
பலராமாவதாரமும் ஸ்ரீதசரதராமாவதாரம் போல் ஸ்ரீமஹா விஷ்ணுவின் முக்கிய ப்ராதுர்ப்பாவமாதல் அறியத்தக்கது.
நான்காமடியில், ”நலம்புரிந்திறைஞ்சும் திருவடி” என்றும், “இறைஞ்சுன் திருவடி” என்றும் பாடபேதமுண்டு. ”இறைஞ்சு உன் திருவடி” எனப் பிரிக்க.
—————–
சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து கரி குழல் மடந்தையர் திறத்து
காதலே மிகுத்துக் கண்டவா திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்
வேதனைக் கொடுங்கி நடுங்கினேன் வேலை வெண் திரை யலமரக் கடைந்த
நாதனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-3-
பதவுரை
வேலை வெண்திரை அலமர |
–
|
கடலிலேயுள்ள வெளுத்த அலைகள் கலங்கும்படி |
கடைந்த |
–
|
(தேவர்களுக்காகக்) கடைந்தருளின |
நாதனே! நைமிசாரணியத்துள் எந்தாய்!-.
|
சூதினை பெருக்கி |
–
|
அதிகமாகச் சூதாடியும் |
களவினை துணிந்து |
–
|
களவு செய்வதில் துணிந்தும் |
சுரி குழல் மடந்தையர் திறத்து காதலேமிகுத்து |
–
|
சுருண்ட கூந்தலையுடைய ஸ்த்ரீகள் விஷயத்திலே மிக்க ஆசைகொண்டு |
கண்ட ஆ திரிந்த |
–
|
கண்டபடியெல்லாம் தட்டித்தரிந்த |
தொண்டனேன் |
–
|
அடியேன் |
நமன் தமர்செய்யும் வேதனைக்கு |
–
|
யமபடர்கள் செய்யப்போகிற ஹிம்ஸைகளை நினைத்து |
ஒடுங்கி நடுங்கினேன் |
–
|
உடல் குன்றி நடுங்கினவனாய் |
வந்து உன் திருஅடி அடைந்தேன் |
–
|
இன்று வந்து உன் திருவடிகளைச் சேர்ந்துவிட்டேன். |
போக்கினேன் பொழுதினை வாளா ” என்று வீண்போது போக்கினதாகக் கீழ்ப்பாட்டிலருளிச் செய்தார் ;
எவனும் ஏதாவ தொரு காரியத்தைச் செய்து கொண்டே போது போக்குவனே யொழிய வெறும னிருந்து போது போக்கான் ; கைகால் முதலிய உறுப்புகள் எப்போதும் ஏதாவ தொரு வேலையைச் செய்துகொண்டே யிருக்கும்; ஆகையாலே வீணாகப் பொழுது கழியமாட்டாதே என்று சிலர் கேட்க;
வீணான காரியங்களைச் செய்து பொழுதைப் போக்கினேனாகையால் வீண் போது போக்கினதாகச் சொன்னே னத்தனை; வெறுமனிருந்து போதைப் போக்கியிருந்தால் பாதகமில்லையே; செய்யத்தகாத காரியங்களைச் செய்தே காலத்தைக் கழித்தேனென்கிறார் முன்னடிகளில்.
முதலிலே சூதாட்டம் ஆடத் தொடங்கினேன்; பகல் முழுதும் சூதாடுவேன்; அதில் என்னோடு ஆடித் தோற்றவன் குறைவின்றிப் பொருள்கள் கொடுக்கக்கண்டேன்; ‘இவன் பெரிய பணக்காரனாகையாலன்றோ இப்படி சூதாடி ஏராளமான பொருளை இழக்கிறான், இன்றிரவு இவன் வீட்டிற் புகுந்து பெருங் கொள்ளையடிக்க வேண்டியது’ என்று நிச்சயித்து அப்படியே அன்றிரவு அவன் வீட்டிற் புகுந்து கொள்ளையடித்தேன்;
இப்படியே பலபலநாள் செய்து சூதனாய்க் கள்வனாகி அளவற்ற பொருளைத் திரட்டியபின்னர் அப்பொருளைச் செலவிடவேண்டிச் சுரிகுழல் மடந்தையர் திறத்துக் காதலே மிகுத்தவனானேன்; பல வருஷங்களில் சூதாடிக் களவாடித் திரட்டின பொருள்களடங்கலும் சுரி குழல் மடந்தையர் திறத்தில் வந்தவாறே ஒரு நொடிப் பொழுதில் செலவழிந்து விடுமே;
மறுநாள் வெறுங்கையனாய் அங்குச் சென்றால் முகம் நோக்குவாரில்லையே; அதற்காக மீண்டும் பொருளீட்டத் தொடங்கி இன்னவழியில் தான் பொருள் சேர்ப்பது’ என்று ஒரு வ்யவஸ்தை யில்லாமல் மனம் போனபடி யெல்லாம் செய்து தீர்த்தேன்;
அப்போது பரலோக சிந்தனை யென்பது எள்ள ளவுமின்றிக் கண்டபடி திரிந்தேனாகிலும், இப்போது அந்த சிந்தனை தோன்றி”. ஐயோ! யமபடர்கள் கையிலே சிக்கி வருந்த வேணுமே!” என்று இன்று நடு நடுங்கி, உன் திருவடிகளை அண்டைகொண்டால் யமபடர்களின் தலையிலே காலைவைத்துக் கூத்தாடலாம் என்று பெரியோர் சொல்லக் கேட்டு வந்து உன் திருவடிகளைப் பணிந்தேன் காண் என்கிறார்.
இவ்விடத்தில் சூது என்றதற்கும் களவு என்றதற்கும் வேறொருவகையாகவும் பொருள் கூறுவர்;
விவேகியாயிருப்பானொருவன்” எம்பெருமானுக்கு சேஷபூதனான ஆத்மா உண்டு; ஸர்வசேஷியான ஈச்வரனுண்டு; புண்யபாப வகுப்பு உண்டு; பரலோகமுண்டு; சாஸ்த்ரங்களெல்லாம் ஸத்யம்” என்று சொன்னால் மாயச் சொற்களாலே அவனை மயக்கி நாஸ்திகனாக்கித் தன் வகுப்பில் அவனையும் சேர்த்துக் கொள்ளுகை சூது;
எம்பெருமானுக்கு சேஷமாய் கௌஸ்துப ஸ்தாநீயனான ஆத்மாவைத் தன்ன தென்றிருக்கை களவு;
இவ்விரண்டாலும், எம்பெருமானுடைய அலம்புரிந்த நெடுந்தடக்கைக்கும் எட்டாமல் நெடுந்தூரம் அகன்றுவிட்டேன் என்கிறார் போலும்.
” சூதனாய்க் கள்வனாகித் தூர்த்தரோடிசைந்தகாலம், மாதரார் கயற்கணென்னும் வலையுட்பட்டழுந்துவேனை’ என்ற திருமாலைப் பாசுரத்தை இங்கே நினைப்பது.
“கண்டவாதிரிந்த தொண்டனேன் “ என்றவிடத்து, தொண்டனேன் என்றது – அந்த ஸ்த்ரீகளுக்கே தொண்டு பட்டுக்கிடந்தேன் என்றபடியாகலாம்;
அன்றி, எம்பெருமானான உனக்குத் தொண்டனாகிய நான் கண்டபடி திரிந்து கிடந்தேன் என்றபடியுமாகலாம்.
————
வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரம் என்று இவற்றை
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழு வென மொழிவதற்கு அஞ்சி
நம்பனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் —1-6-4-
பதவுரை
வம்பு உலாம் கூந்தல் மனைவியை துறந்து |
–
|
பரிமளம் வீசாநின்ற கூந்தலையுடையளான தாலி கட்டின பெண் சாதியை உபேக்ஷித்துவிட்டு |
பிறர் பொருள் தாரம் என்று இவற்றை நம்பினார் |
–
|
பிறருடைய பொருள், பிறருடைய மனைவி என்னும்படிய பரத்ரவ்யங்களை விரும்பினவர்கள் |
இறந்தால் |
–
|
இறந்துபோனால் |
நமன் தமர் |
–
|
யமபடர்கள் |
பற்றி |
–
|
பிடித்துக்கொண்டு |
எற்றி |
–
|
துன்பப்படுத்தி |
வைத்து |
–
|
(தங்களுக்கும் கை சலித்தவாறே) ஓரிடத்தில் போட்டுவைத்து, |
பாவீ |
–
|
“பெரும்பாவங்களைச் செய்து இவ்விடம் வந்து சேர்ந்தவனே! |
செம்பினால் இயன்ற எரி எழுகின்ற பாவையை தழுவு என |
–
|
செம்பினால் செய்யப்பட்டதாய் நெருப்புப் பற்றியெரிகின்றதான இந்த ஸ்த்ரீப்ரதிமையைத்தழுவிக்கொள்” என்று |
மொழிவதற்கு அஞ்சி |
–
|
சொல்லப்போகிறார்களே! யென்று பயப்பட்டு |
நம்பனே |
–
|
ஆச்ரிதர்களுக்கு நம்பத்தகுந்தவனே! |
நைமிசாரணியத்துள் எந்தாய்!
|
அக்நி ஸாக்ஷிகமாகத் தாம் விவாஹம் செய்து கொண்ட பெண்டிர்களை அலக்ஷியஞ் செய்து விட்டிட்டுப் பிறருடைய மனைவியையும் பொருளையும் கைப்பற்றி இவ்வுலகில் மனம் போனபடி திரிந்தவர்கள் அந்தப் பாவங்களின் பலனை அனுபவிப்பதற்கு யம லோகஞ் சென்றவாறே அங்கு யமபடர்கள் வந்து பிடித்துக்கொண்டு சக்தி யுள்ளவளவும் புடைத்துத் தங்களுக்கும் இளைப்பு உண்டானவாறே ‘ இங்கே கிடவுங்கள்’ என்று ஒரு மூலையில் தள்ளிவைத்து, செம்பினால் செய்யப்பட்டு நெருப்பிலே பழுக்கப் பழுக்கக் காய்ச்சப்பட்டு எரி வீசுகின்ற பதுமையைக் கொணர்ந்து முன்னே நிறுத்தி, பாவீ! முன்னே பிறர் மனைவியை அணைந்தாயே; இப்போது இந்தப் பதுமையை அணைந்து கொள்” என்று சொல்லி அணைவித்துத் துன்பப்படுத்து வர்கள் – என்கிற விஷயத்தைக் கேள்விப்பட்டது முதல் அஞ்சி நடுங்குகின்றேன் ; உன்னைச் சரணமடைந்தால் எல்லா அச்சமும் நீங்கிவிடும் என்று இப்போது உன்னைச் சரணமடைந்திட்டேன் என்றாராயிற்று.
இவ்வித தண்டனைகளுக்கு உரிய பாவங்களை ஆழ்வார் நெஞ்சாலும் நினைத் திலரேயாகிலும் அப்படிப்பட்ட பாவங்களைக் கூசாமல் செய்து திரிகின்ற நம் போலியர் வாயில் இப்பாசுரங்கள் நுழைந்து புறப்படுவதற்காகவே ஆழ்வார் இங்ஙனமருளிச் செய்து வைத்தார் என்று உணர்க.
தன் மனைவியைச் சொல்லும்போது ‘வம்புலாங் கூந்தல் மனைவி’ என்று சிறப்பித்துக் கூறியும், பிறர் மனைவியைச் சொல்லும்போது அங்ஙனம் சிறப்பித்துக் கூறுதலின்றியே பிறர் பொருள் தாரம் என்று சாதாரணமாகக் கூறியும் உள்ளதற்குப் பெரியவாச்சான் பிள்ளை ரஸோக்தியாக அருளிச்செய்கிறார் காண்மின் :–
”விஷயாந்தரங்களிலே ஸ்ப்ருஹையைப் பண்ணுமே; அவற்றில் வந்தால் வம்புலாங் கூந்தலாகவும் வேண்டாவாய்த்து; பிறரதாமித்தனையேயாய்த்து ஆதரிக்கைக்கு வேண்டுவது.” என்று.
தான் தாலிகட்டிக் கைக்கொண்ட மனைவி திரிலோக ஸுந்தரியாயிருந்தாலும் தன்னுடையவள்’ என்கிற காரணம் பற்றியே அவளைக் கைவிட்டிடுவான் என்பதும்,
பிறர் மனைவி பிளிச்சைக் கண்ணி யாயிருந்தாலும் பிறருடையவள் என்கிற காரணம்பற்றியே அவளை உகந்திடுவான் என்பதும் சொல் நயத்தில் தோற்றுகின்றமை காண்க.
நம்பினாரிறந்தால் என்றவிடத்து நம்புதலாவது ஆசைப்படுதல். “நம்பும் மேவும் நசையாகுமே.”
நமன் தமர்பற்றி” இத்யாதிக்குப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸுக்திகள் மிக்க ரஸமாயிருப்பதால் அவற்றை இங்கே உதாஹரிப்போம்;-” அவர்கள் தாங்கள் – யமபடர்கள் ஒருகைக்கு ஆயிரம் பேராக வந்து பற்றுவர்களாய்த்து ; பின்னை இவனுடம்புதன்னோடே எற்றுவர்கள் ; அநந்தரம் தங்கள் கை சலித்தவாறே பொகட்டிட்டு வைப்பர்கள் . இவர் இத்தனைபோது ஸ்த்ரீகளையொழிய இருக்கவல்லரோ!; அவளையழைப்பியும்.’ என்பர்கள். இவனும் நம்மை நலிவதெல்லாம் நலிந்தார்களாகிலும் இனி அவளை அழைக்கிறார்களிறே’ என்று குறுவிழிக்கொண்டு கிடக்கும், எரி யெழா நிற்பதாய் செம்பாலே செய்யப்பட்ட பாவையைப் பாவீ! தழுவு என்பர்களாய்த்து. கெடுவாய்! அவர்களொழிச்சினவன்றாகிலும் அநுதாபம் பிறந்து உகந்தருளின தொரு திருவாசலிலே ஒதுங்கினாயாகில் இன்று எங்களுக்குக் கைசலியாதொழியலாமே என்பர்களாய்த்து. அவர்கள் பண்ணும் நலிவைப் பொறுக்கலாம்; க்ரூரமான பேச்சாய்த்துப் பொறுக்கப் போகாதது.”
————
இடும்பையால் அடப்புண்டு இடுமினோ துற்றென்று இரந்தவர்க்கு இல்லையே என்று
நெடும் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை
கடும் சொலார் கடியார் காலனார் தமரால் படுவதோர் கொடு மிறைக்கு அஞ்சி
நடுங்கி நான் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—1-6-5-
பதவுரை
இடும்பையால் அடர்ப்புண்டு |
–
|
ஏழ்மைத்தனத்தினால் கஷ்டப்பட்டு |
ஓ! துற்று இடுமின் என்று |
–
|
“ஐயோ! ஒரு கவளம் இடுங்கோள்” என்று கதறி |
இரந்தவர்க்கு |
–
|
பிச்சை கேட்டவர்களுக்கு |
இல்லையே என்று |
–
|
இல்லவேயில்லை யென்று சொல்லி |
நெடு சொலால் மறுத்த |
–
|
நீண்ட சொல்லாலே திரஸ்கரித்த |
நீசனேன் நான் |
–
|
நீசனாகிய நான் |
அந்தோ |
–
|
ஐயோ! |
வினை பயன்தன்னை நினைக்கிலேன் |
–
|
பாபங்களுக்கு நேரக்கூடிய பலன்களை நெஞ்சாலும் நினைக்க மாட்டாதவனாயிருக்கின்றேன்; |
கடு சொலார் கடியார் காலனார் தமரால் படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி நடுங்கி |
–
|
க்ரூரமான சொற்களையுடையராய் க்ரூரமான செய்கை களையுமுடையரான யமபடர்களாலே உண்டாகக் கூடியகடினமாக ஹிம்ஸைகளை நினைத்து அஞ்சி நடுங்கி |
நைமிசாரணியத்துள் எந்தாய்!. வந்து உன் திருவடி அடைந்தேன்-
|
இடும்பையாலடர்ப்புண்டு.- விஷய போகங்களைச்செய்து திரிபவர் களும் ஏழைகளைக் கண்டால் ஐயோ ! என்று இரங்குவதுண்டு ; அந்த இரக்கமும் எனக்கு இல்லாமல் போயிற்றே ! என்று அநுதாபப்படுகிறார்.
இடும்பையாவது ஏழையாயிருக்கை. ஏழைமையினால் வருத்தப்பட்டுக் கொண்டு வந்து. ஐயா! ஒரு கவளம் சோறு இடுங்கள்’ என்று பல்லைக்காட்டி இரந்தவர்களுக்கு ஒருபிடி சோறு இடமாட்டாமல் கிடையாது, போ’ என்று சொல்லித் திரஸ்கரித்த பாவியன்றோ நான்;
இப்படிப்பட்ட பாவத்திற்கு நேரக் கூடிய பலனை அந்தோ! நெஞ்சாலும் நினைக்ககில்லேன். மேலுலகத்தில் யமபடர்களால் கொடிய ஹிம்ஸைகள் நேரப்போகின்றன என்று பொதுப்படையாகத் தெரிந்திருப்பதனால் அந்த ஹிம்ஸைகளை நினைத்து அஞ்சிநடுங்கி இன்று உன்னை வந்து பணிந்தேன்.
துற்று = ஒரு கவளம். ”நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை” என்பதற்கு, “பாவங்களுக்குப் பலனுண்டு என்பதை அப்போது எண்ணாமல் பாவத்தைச் செய்துவிட்டேன் ; இப்போது தவிக்கின்றேன்” என்பதாகவும் கருத்துரைக்கலாம்.
யமபடர்கள் செய்கிற ஹிம்ஸைகளைக் காட்டிலும் அவர்கள் சொல்லுகிற சொற்கள் மிகக்கடினமானவை என்பது தோன்றக் கடுஞ்சொலார் என்று முற் கூறினர். காலனார் – யமதர்மராஜன். கொடுமிறை= கொடிய வருத்தங்கள்
————–
கோடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து திரிந்து நாயினத்தொடும் திளைத்திட்டு
ஓடியும் உழன்றும் உயிர் களே கொன்றேன் உணர்விலேன் ஆதலால் நமனார்
பாடியைப் பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே பாற் கடல் கிடந்தாய்
நாடி நான் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்–1-6-6-
பதவுரை
பரமனே |
–
|
புருஷோத்தமனே! |
பாற்கடல் கிடந்தாய் |
–
|
திருப்பாற்கடலில் திருக்கண் வளர்ந்தருளுமவனே! |
நைமிசாரணியத்து ளெந்தாய்!.
|
கோடிய மனத்தால் |
–
|
கோணலான நெஞ்சோடே |
சினம் தொழில் புரிந்து |
–
|
பிறர்க்கு விரோதமான காரியங்களைச் செய்து |
நாய் இனத்தொடும் திரிந்து திளைத்திட்டு |
–
|
நாய் முதலிய துஷ்ட ஜந்துக்களோடு கூடித்திரிந்து வேட்டையாடிக்களித்து |
ஓடியும் உழன்றும் |
–
|
இங்குமங்கும் ஓடித்திரிந்தும் |
உயிர்களே கொன்றேன் |
–
|
பிராணி ஹிம்ஸையையே செய்துகொண்டிருந்தவனாய் |
உணர்வு இலேன் நான் |
–
|
விவேக சூந்யனாயிருந்த நான் |
நாடி உன் திருவடி வந்து அடைந்தேன் ஆதலால்-;
|
நமனார் பாடியை பெரிதும் பரிசு அழித்திட்டேன் |
–
|
யமபட்டணமான நரகத்தின் நிலைமையை மிகவும் அழித்து விட்டேன். |
ஜீவஹிம்ஸைகள் பண்ணித் திரிந்ததற்கும் எல்லையில்லையென்கிறார். கோடியமனமாவது வழியைவிட்டு விலகின மனம்; ருஜு வான வழியில் போகாமல் கோணலாகச் செல்லுகின்ற மனம் என்றபடி. புத்தி கெட்டுச் சினத்தொழில்களைச் செய்தேனென்கிறார்.
சினமாவது கோவம். கோவத்தினால் செய்யும் தொழிலாவது ஜீவஹிம்ஸை முதலியன . ”நாயினத்தொடும்” என்றவிடத்து, நாய் என்பதற்கு நாய் என்றே பொருள் கொண்டு, நாய் முதலிய கொடிய மிருகங்களைத் துணை கொண்டு வேட்டையாடி ஜீவஹிம்ஸைகளைப் பண்ணித்திரிந்தேன் என்பதாகக் கொள்வதுமுண்டு ;
அன்றி, நாய் என்று – நாய் போன்ற நீசர்களைச் சொல்லிற்றாய், நீச ஸஹவாஸம் பண்ணித் திரிந்தேன் என்பதாகக் கொள்வதுமுண்டு.
ஓடியுமுழன்றும் = பதின்காதவழி ஓடினால் ஒரு பிராணியைக் கொல்லலாம் என்று ஒருவன் சொன்னால் மயங்காமல் ஓடினேனென்கிறார் போலும்.
“உயிர்களே கொன்றேன்” என்றவிடத்து ஏகாரத்தினால் – துணிதுப்புகளைப் பிடுங்கிக்கொண்டு உதைத்துத் துரத்தி விடுதல் செய்கையின்றியே உயிர்க்கொலையளவுஞ் செய்தேன் என்று காட்டுகிறார்.
”ஸர்வேச்வரனுண்டு, பரலோகமுண்டு” என்கிற துளி ஞானமில்லாமையினால் இவ்வளவுஞ் செய்தேனென்பார் உணர்விலேன் என்கிறார்.
“ஆதலால் நமனார்பாடியைப் பெரிதும் பரிசழித்திட்டேன்” என்றவிடத் திற்கு இரண்டுவகையான யோஜநைகள் உண்டு.
உயிர்களே கொன்றேனாய் உணர்விலேனான நான் வந்து உன் திருவடியடைந்தேனாதலால் நமனார் பாடியைப் பெரிதும் பரிசழித்திட்டேன்” என்று அந்வயித்து, இனி யமபுரத்தில் யமனுடைய ஆணை செல்லாதபடி அத்தை வென்றுவிட்டேன் என்பதாக ஒரு யோஜநை.
“உணர்விலேனாதலால் நமனார் பாடியைப் பெரிதும் பரிசழித்திட்டேன்” என்று உள்ளபடியே அந்வயித்து, இப்படிப்பட்ட கொடிய பாவங்களை நான் செய்திருக்கிறபடியால்’ இப்போதிருக்கிற யமனால் இக்கலியனைத் தண்டிக்க முடியாது;
இந்த யமபுரம் உபயோகமற்றது; இனி வேறு யமனும் வேறு யமபுரமும் ஏற்படுத்த வேணும்’ என்று சொல்லும்படி மஹாபாபியானேன் என்பதாகக் கொள்வது மற்றொரு யோஜநை.
——————–
Leave a Reply