திருவல்லிக்கேணி அம்மாள் வார்த்தை 1
வார்த்தை 1 – அடுப்பிடுகல் என்றேனோ எம்பாரை போலே?
எம்பார் என்பவர் எம்பெருமானாருடைய சிறிய தாயார் குமாரர்.
எம்பெருமானாருக்கடுத்தபடியான ஸ்ரீ வைஷ்ணவ ஓராண் வழி ஆசாரியர்.
திருவாய் மொழிக்கு அழகாகப் பொருள் சொல்ல வல்லவர். திருவாய் மொழியில்
எம்பெருமானின் பரத்வத்தை நிலை நாட்டும் பதிகங்களில் “ஒன்றும் தேவும்”
என்ற பதிகம் (4-10) ஒப்பற்றது. இந்தப் பதிகத்தின் வ்யாக்யாந ப்ரவேசத்தில்
(முன்னுரையில்) “எம்பார் அருளிச்செய்வர்” என்று ஒருவாக்யம் காணலாம்.
“ஸகலவேத சாஸ்த்ரங்களையும் அதிகரித்துவைத்து, பரதத்வம் இன்னது என்று
அறுதியிடமாட்டாதே’ சேம்புக்குக்கூரா சிற்றரிவாளுண்டோ? நமக்கு
உபாஸ்யரல்லாதாருண்டோ? ”என்று கண்டவிடமெங்கும் புக்குத் தலை சாய்த்துத்
தடுமாறித் திரியா நிற்க, எம்பெருமானார் தரிசனத்ஸ்தரில் எத்தனையேனும்
கல்வியில்லாத ஸ்த்ரீப்ராயரும் தேவதாந்தரங்களை அடுப்பிடுகல் லோபாதியாக
நினைத்திருக்கிறது. இவ்வொன்றுந் தேவும் இப் பக்ஷத்திலே உண்டாகையிறே”
என்று இவ்வாக்யம். வேதம் முதலான சாஸ்த்ரங்கள் நாராயணனை ஒப்பில்லாத
உயர்ந்த தெய்வமாகக் கூறினாலும் இதர தெய்வங்களையும் உயர்த்திப்
பேசுகையாலே எது பரதத்வம் என்று சாஸ்தரங் கொண்டு நிச்சயிப்பது கடினம்.
நாம் தாழ்ந்தவர்களாதலால் எல்லா தேவதைகளும் நமக்கு வணங்கத்தக்கவரே என்றே தோன்றும்.
அதனால் நிச்சய புத்தியில்லாமல் தடுமாறி நிற்பர்.
சாஸ்த்ரஜ்ஞாநம் மட்டுமேயுள்ள பலரும் எம்பெருமானார் தரிசனத்தைச்
சேர்ந்தவருக்குத் திருவாய்மொழியில் இப்பதிகம் நிச்சயபுத்தி அளிப்பதால்
சாஸ்தரங்கற்காத பேதைகளுக்கும் நாராயணனே பரம்பொருள்:
அவனையொழிந்த மற்ற தெய்வங்கள் அடுப்பிடுகல் போன்று
வணங்கத்தகவரல்லர் என்ற ஆழ்ந்த நம்பிக்கை உண்டு என்பது கருத்து.
அடுப்பிடுகல் அடுப்புக்கிட்ட கல்.
எம்பார் அருளிச்செய்த முக்தகச்லோகம் இத்தொடர்பில் அறியத்தக்கது.
“த்ருணீக்ருத விரிஞ்சாதி நிரங்குசவிபூதய:
ராமாநுஜபதாம்போஜ ஸாமாஸ்ரயணசாலிந:”
எம்பெருமானார் திருவடித் தாமரைகளையாச்ரியத்தவர்கள் ப்ரம்மாதி தேவதைகளையும் அவர்களுடைய
ஐச்வர்யங்களையும் புல்லென மதித்திருப்பர் – என்றபடி.
தேவதாந்தர விஷயத்தல் இப்படிப்பட்ட நிச்சயபுத்திவேணுமென்பதை வலியுறுத்துகிறது இவ்வார்த்தை.
——————
திருவல்லிக்கேணி அம்மாள் வார்த்தை 2
“அவரோ நீர்?” எனக்கேட்டேனோ மணற்பாக்கத்தாரைப் போலே?
‘ஸ்ரீவசநபூஷணம்’ என்பது பிள்ளைலோகாசாரியர் அருளிய 18 ரஹஸ்ய நூல்களில் மிகமுக்கியமானது.
“ஆர்வசநபூடணந்தின் ஆழ்பொருளெல்லாம் ஆர்அறிவார்?” என்று உபதேசரத்தினமாலை (55)
இந்நூலின் அருமைப்பாட்டைக் காட்டும். இந்த திவ்யசாஸ்த்ரத்துக்கு மணவாள மாமுனிகளிட்டருளிய
வியாக்கியானத்தின் ப்ரவேசத்தில் இந்த நூலவதரித்த க்ரமத்தையருளிச் செய்கிறார்.
“முன்பே பேரருளாளப் பெருமாள் (கச்சி தேவராஜன்) தம்முடைய நிர்ஹேதுக் க்ருபையாலே
மணற்பாக்கத்திலே இருப்பாரொரு நம்பியாரை விசேஷகடாக்ஷம் பண்ணியருளி,
தஞ்சமாயிருப்பன சில அர்த்த விசேஷங்களை தாமேயவர்க்கு ஸ்வப்நமுகேந அருளிச்செய்து.
“ நீர் போய் இரண்டாற்றுக்கும் ( தென் திருக்கவேரி மற்றும் வட திருக்காவேரி ஆகிய இரு ஆறுகள்)நடுவேவர்த்தியும்
(ஸ்ரீரங்கத்திலே இரும்) இன்னமும் உமக்கிவ்வர்த்தங்களெல்லாம் விசதமாக( இன்னும் விரிவாக) நாமங்கே சொல்லுகிறோம் ”என்று
திருவுள்ளமாயருள அவரிங்கே (ஸ்ரீரங்கத்தில்) வந்து பெரிய பெருமாளை ஸேவித்துக் கொண்டு,
தமக்கு முன்பு அங்கருளிச் செய்தவர்த்தங்களையும் அசலறியாதபடி ( வேறொருவருக்கும் தெரியாதபடி)
அநுஸந்தித்துக் கொண்டு ஏகாந்தமானதொரு கோயிலிலே வர்த்தியாநிற்கச் செய்தே,
தம்முடைய ஸ்ரீ பாதத்துக்கு அந்தரங்கரான முதலிகளும் (சிஷ்யர்களுடன்) தாமுமாக
பிள்ளை உலகாசிரியர் ஒருநாள் அந்தக் கோயிலிலே யாத்ருச்சிகமாக வெழுத்தருளி அ
வ்விடம் ஏகாந்தமாயிருக்கை (தனித்து இருக்கை ) யாலே ரஹஸ்யார்த்தங்களை முதலிகளுக்கருளிச்
செய்து கொண்டெழுந்தருளியிருக்க அவை காதிற்பட்ட மணற்பாக்கத்து நம்பி அவை தமக்கு
பேரருளாளப் பெருமாள் அருளிச்செய்தவர்த்த விசேஷங்களாய் இருக்கையாலே போரவித்தராய் (ஆச்சர்யப்பட்டு)
உள்ளினின்றும் புறப்பட்டு வந்து பிள்ளை ஸ்ரீ பாதத்திலே விழுந்து
“அவரோ நீர்? (அந்த தேவப் பெருமாள் தானோ தேவரீர்?) என்ன“ ஆவதேது “(ஆம் என்ன விஷயம்?”) என்று பிள்ளை கேட்டருள.
பேரருளாளப் பெருமாள் தமக்கிவ்வர்த்தங்களை ப்ரஸாதித் தருளியபடியையும்.
இத்தேசத்திலே போரவிட்டருளினபடியையும் இன்னமும் உமக்கங்கே விசத்தமாகச் ( விரிவாக)
சொல்லுகிறோமென்றருளிச் செய்த படியையும் விண்ணப்பஞ் செய்ய. கேட்டு மிகவும் ஹ்ருஷ்டராய் (மகிழ்ச்சியுடன்)
அவரையும் அபிமானித்தருள, அவரும் அங்குத்தைக்கு (உலகாசிரியருக்கு) அந்தரங்கராய் வர்த்திக்கிற நாளிலே
பெருமாள் அவர்க்கு ஸ்வப்நத்திலே “இவ்வர்த்தங்கள் மறந்து போகாதபடி இவற்றையொரு
ப்ரபந்தஸ்தமாக்கச் (புத்தகமாக) சொன்னோம் என்றுநீர்பிள்ளைக்குச் சொல்லும்” என்று திருவுள்ளமாக
அவர் “இப்படி பெருமாள் திருவுள்ள மாயருளினார்” என்ற விண்ணப்பஞ்செய்ய
“ஆனால் அப்படியே செய்வோம்” என்று திருவள்ளம்பற்றி அநந்தரம் இப்பிரபந்தம் (ஸ்ரீ வசநபூஷணம்) இட்டருளினாரென்று ப்ரஸித்தமிறே!
மணற்பாக்கத்து நம்பியைக் காஞ்சீபுரத்திலே தேவப்பெருமாள்நிர்ஹேதுகமாக விஷயீகரித்து
ஸ்ரீவசநபூஷண ரஹஸ்யார்த்தங்களை ஸாரமாக அருளிச்செய்து “இவற்றை’ மேலும் விவரமாக
ஸ்ரீரங்கத்தில் சொல்கிறோம் அங்கேபோயிரும் என்று நியமிக்க நம்பியுமப்படியே
ஸ்ரீரங்கத்தில் பெரியபெருமாளை ஸேவித்துக்கொண்டு பிறர்காதில் படாமல் –
இவ்வர்த்தங்களை தமக்குத்தமே சொல்லிக்கொண்டிருக்க: தற்செயலாகப் பிள்ளைலோகாசார்யர்
அவ்விடத்திற்கு வருகை தந்து தம் சிஷ்யர்களுக்கு ரஹஸ்யார்த்தங்களை அருளிச்செய்ய மறைந்திருந்த
நம்பி அதைக் கேட்டு அவை தாம் காஞ்சியில் கேட்டவையாக இருக்கையாலே
“அவரோ நீர்” (கச்சி தேவப்பெருமாள் தானோ நீர்?) என்ன பிள்ளையும் ஆம் என்று சொல்லி
நம்பிக்கு மேலும் சில ரஹஸ்யங்கள உபதேசித்தார்.
அன்றிரவு பெரியபெருமாள் மணற்பாக்கத்து நம்பியின் கனவில் தோன்றி
“இந்த ரஹஸ்யங்களை எல்லாம் திரட்டி ஒரு நூலாக வெளியிடும்படி நாம் கேட்டதாகப் பிள்ளையிடம் சொல்லும் என்றார்.
நம்பியும் இதைப் பிள்ளையிடம் விண்ணப்பிக்க அதனடியாக அவதரித்ததே ஸ்ரீவசனபூஷணம் என்று
வரலாறு.இதனால் கச்சிப் பேரருளாளனே பிள்ளை லோகாசார்யராக அவதரித்தார் என்பது நிரூபணம் ஆகிறது.
இப்படிப் பெருமாள் மணற்பாக்கத்து நம்பிக்குப் போலே அடியேனுக்கு நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணி
யருளித் தம்மை ஆசார்யராக காட்டப் பெற்றேனோ? என்பது திருவல்லிக்கேணி அம்மையார் கேட்டபடி.
———–
திருவல்லிக்கேணி அம்மாள் வார்த்தை 3
ஆரோக்யம் வேண்டினேனோ பின்பழகியார் போலே?
பின்பழகிய பெருமாள் ஜீயர்என்பவர் நம்பிள்ளையின் அந்தரங்க சிஷ்யர்
“பின்பழகராம்பெருமாள் சீயர் பெருந்திவத்தில்,
அன்பதுவு மற்று ஆசையினால் நம்பிள்ளைக்கு.
ஆன அடிமைகள் செய் அந்நிலையை னெஞ்சே!
ஊனமற எப்பொழுதும் ஓர் (உபதேசரத்தினமாலை 66) என்கிறபடியே
இவர் நம்பிள்ளைக்கு குற்றேவல் புரிவதில் ஊக்கமிக்குள்ள வராயிருந்தார்.
ஒரு சமயம் ஜீயருக்கு உடல்நலம் குன்றி ஆசார்யஸேவை பண்ணமுடியாமலிருக்க,
அவர் பிள்ளையின் சிஷ்யர்கள் சிலரிடம்” நீங்கள் பெரிய பெருமாளிடம் எனக்காக
“ஆழியெழ” “ஏழை ஏதலன்” முதலான பாசுரங்களை விண்ணப்பஞ்செய்து,
உடல்நலம் பழையபடியாக வேண்டுமென வேண்டுங்கோள் ”என்று ப்ரார்த்திக்க,
அவர்களுமப்படியே பெருமாளை வேண்ட ஜீயர் பழையபடி உடல்நலமடைந்தார்.
சிஷ்யர்கள் நம்பிள்ளையிடம் சென்று ஜீயர் இப்படி எங்களை வேண்டிக்கொள்ளச் சொன்னார்.
பெருமாளிடம் ஆயுளையும் ஆரோக்யத்தையும் வேண்டுவது ஒரு ஸ்ரீவைஷ்ணவர் செய்யலாமா?” என்று கேட்க,
பிள்ளை அவர்களை, “ஜீயரின் கருத்துயாதாயிருக்குமென்று உங்கள் நினைவு?” என்று கேட்க,
இவர்களும் இங்கத்திய வாழ்க்கையில் பற்று ஜீயருக்கு விடவில்லை என்ற பொருள்பட பலவிதமாகப் பேசினர்.

ஜீயருடைய திருவுள்ளைத்தை பிள்ளை அறிந்தவராகையால் அவரை அழைத்து
“நீரிப்படி பெரிய பெருமாளை நிர்ப்பந்திக்கலாமா? இது ஸ்வரூபவிருத்தமன்றோ?’ ‘என்று கேட்டார்.
ஜீயர் பிள்ளையிடம் தம் உள்ளக்கருத்தை வெளியிட்டபடி:
’ தேவரீர் நீராடி எழுந்தருளி திருப்பரியட்டம் சாத்திக் கொள்ளும் போது மார்பிலும் முதுகிலும்
குறுவேர்வை முத்துக்களாக அரும்ப. அடியேன் ஆலவட்டத்தைச்(விசிறி வீச வேண்டும்) சுற்றிச் சுழன்று பரிமாற வேண்டும்.
இந்த கைங்கர்யத்தை இழக்க விரும்பாததால் பெருமாளை அப்படி வேண்டும்படி சொன்னேன்.
திருவல்லிக்கேணி அம்மாள் வார்த்தை 4
வார்த்தை 4. உசாத்துணையாய்ச் சென்றேனா ஆழ்வானைப் போலே?
வேதங்கள் நமக்கு மேலான ப்ராமணங்கள். இவைகளில் பகவதாராதனமான கர்மாக்களைச் சொல்லுவது ஒரு பாகம்.
பரம் பொருளான ப்ரஹ்மத்தின் இயல்புகளைச் சொல்வது மற்றொரு பாகம்,
இவற்றின் பொருள்களை நிச்சயித்து ஸூத்ரங்களாக ரிஷிகள் கர்மமீமாம்ஸா, ப்ரஹ்மமீமாம்ஸா என்று
இரண்டு நூல்களைச் செய்தனர்.
இவற்றுள் பின்னதான ப்ரஹ்மமீமாம்ஸா வ்யாஸபகவானால் 4 அத்யாயங்களாக இயற்றப்பட்டது.
இதை ப்ரம்மஸூத்ரம் என்றும் சாரீரகம் என்று அழைப்பர். இந்த நூலுக்கு வ்யாஸரின் நேர்சிஷ்யரான
போதாயந முனிவரால் வ்ருத்தி என்றழைக்கப்படும் விளக்கம் வடமொழியில் எழுதப்பட்டது.
ப்ரஹ்மஸூத்ரத்திற்க்கு அத்வைதமதத்தின்படி ஆதிசங்கராசார்ய ஸ்வாமி ஒரு பாஷ்யமிட்டார்.
இவர் மதத்தை மாயாவாதம் என்பர்.
ஸ்ரீவைஷ்ணவ மதத்துக்குச் சேர ஒரு பாஷ்யமிட வேண்டுமென்று பரமாசாரியரான ஆளவந்தார் விரும்பினார்.
அவர் தம் வாழ்நாளில் போதாயந வ்ருத்தியை ஸேவிக்க (படிக்க) முடியாமல் போயிற்று.
அந்த நூல் காச்மீரத்தில் சாரதாபீட நூலகத்தில் ஒரே ஒரு பிரதி இருந்தது.
ஆளவந்தார் விருப்பத்தை ஸ்ரீராமாநுஜர் நிறைவேற்றி வைப்பதாக ப்ரதிஜ்ஞை பண்ணி
வ்ருத்தி க்ரந்தத்தை ஸேவித்து விட்டு ப்ரஹ்மஸூத்ர பாஷ்யம் பண்ணுவதாக காச்மீரத்துக்கு எழுந்தருளினார்.

அப்போது தனக்குத் துணையாக அறிவுக்கூர்மையான கூரத்தாழ்வானை துணைக்கு அழைத்துச் சென்றார்.
காச்மீர நூலகத்தில் வருத்திக்ரந்தத்தை ஸ்ரீராமாநுஜரும் ஆழ்வானுமாக ஸேவித்தனர்.
ஆனால் ஒன்றிரண்டு நாட்களில் அங்குள்ள அத்வைத வித்வான்களின் சூழ்ச்சியினால்
ஸ்வாமியிடமிருந்து அந்த நூல் அபகரிக்கப்பட்டது. பூராவும் ஸேவிக்கவில்லையே என்ற குறை ஸ்வாமியை வாட்டியது.
ஆனால் ஸ்ரீராமானுஜர் தூங்கும் போதும் வேறுகாரியமா யிருக்கையிலும் ஆழ்வான் அந்த நூலை வாசித்திருந்தபடியால்
ஒரு முறை பூராவும் ஸேவித்து முடித்திருந்தார். அந்தக்ரந்ததை படித்ததை அப்படியே தரிக்கும் சக்தி ஆழ்வானுக்கு
மிக்கிருந்தபடியால் ஸ்வாமியிடம் தேவரீர் வருந்த வேண்டாம்: அப்படியே விண்ணப்பம் பண்ணுகிறேன்” என்று
ஸ்வாமியின் கவலையைப் போக்கினார்.
பிறகு பாஷ்யத்தைப் பண்ணும் போது ஸ்வாமி பங்கதிகளைச் சொல்ல ஆழ்வான் ஏடுபடுத்தினார்.
இதனால் வ்ருத்திக்கு இசையாத கருத்துக்கள் பாஷ்யத்தில் புக இடமில்லாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.
ஸ்ரீ ராமானுஜர் ஸாதித்த சாரீரகமீமாம்ஸா பாஷ்யம் ஸ்ரீ பாஷ்யம் என்று குலாவப்படுகிறது.
இதை எழுதிமுடிக்க உசாத்துணையாய் (உறுதுணையாக) இருந்தவர் கூரத்தாழ்வான்.
இப்படிப்பட்ட ஒரு பெரும் பணிக்கு ஆழ்வான் போல வேறொருவர் உசாத்துணையாக இருக்க முடியாது என்பது இவ்வார்த்தையின் கருத்து.
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply