அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்கள் ஏலும்
நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும் அரங்க மா நகர் உளானே
பதவுரை
அரங்கமா நகருளானே!-;
ஓர் அங்கம் ஆறும்–(வேதத்தின்) விலக்ஷணமான ஆறு அங்கங்களையும்
ஓர் வேதம் நான்கும்–நான்கு வேதங்களையும்
அமர ஓதி–நெஞ்சில் பதியும்படி அதிகரித்து
தமர்களில் தலைவர் ஆய–பாகவதர்களுக்குள்ளே முதன்மையான
சாதி அந்தணர்களேனும்–ப்ராஹ்மண ஜாதீயர்களாயினும் (அவர்கள்
நுமர்களை–தேவரீருடைய ஜந்மத்தைப்
பழிப்பர் ஆகில்–(அவர்களுடைய ஜந்மத்தைப் பார்த்து) தூஷிப்பாராகில்
நொடிப்பது ஓர் அளவில்–ஒரு நிமிஷகாலத்துக்குள்ளே
அவர்கள் தாம்–அந்த ஜாதி ப்ராஹ்மணர்கள் தாம்
ஆங்கே–அப்போதே
புலையர் –சண்டாளராவர்கள்
(போலும்-வாக்யாலங்காரம்.)
விளக்க உரை
ருக்கு, யஜூஸ், ஸாமம், அதர்வணம் என்று வேதங்கள் நான்கு;
சீக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜியோதிஷம், கல்பம் என்று வேதாங்கங்கள் ஆறு;
இவற்றை யெல்லாம் கண்டபாடம் பண்ணி அவற்றின் பொருள்களையும் அறிந்து,
அவ்வறிவுக்குப் பலனாக பகவத் கைங்கர்யத்தில் முதன்மையாக ஊன்றியிருக்கும்
சிறந்த அந்தணர்களா யிருந்தபோதிலும் அவர்கள்,
கீழ்க்கூறிய யோக்யதைகளெல்லாமில்லாமல் கேவலம் பகவத்தைங்கர்ய மொன்று மாத்திரமுடைய
ஒரு ஸ்ரீவைஷ்ணவரை (அதாவது சண்டாளஜாதியிலே பிறந்தவரை)
அந்தப் பிறவியைப் பற்றி இகழ்வாக நினைத்து தூஷிப்பார்களானால்
தூஷிக்குமவர்கள் தாங்களே ப்ராஹ்மண்யம் கெட்டுக் கர்மசண்டாளராயப் போவர்கள்.
இப்படிப் போவது ஜந்மாந்தரத்திலோ வென்னில்; அன்று தூஷித்த அந்த க்ஷணத்திலேயே சண்டாளராயொழிவர்.
——————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.
Leave a Reply