தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய்
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே
ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே –
பதவுரை
அன்று–அக் காலத்தில் (த்ரிவிக்ரமாவதாரத்தில்)
உலகம் எல்லாம் தாவி–எல்லா உலகங்களையும் கடந்து
தலை விளாக் கொண்ட எந்தாய்–(திருவடியினால்) வியாபரித்த எமது ஸ்வாமியே!
செங்கண்மாலே–சிவந்த திருக் கண்களை யுடைய திருமாலே!
ஆவியே –(எனது உயிர் தரித்திருப்பதற்குக் காரணமான) பஞ்ச ப்ராண வாயுவானவனே!
அமுதே–அம்ருதம் போன்றவனே!
என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய்–(என்னை நல் வழியிற் செல்வித்த எனது அருமையான ஆத்மாவைப் போன்ற எனது தலைவனே!
பாவியேன்–பாவியாகி யான்
சிக்கென–உறுதியாக (எப்போதும் விடாமல்)
உன்னை அல்லால் சேவியேன்–உன்னைத் தவிர (மற்றையோரை) வணங்க மாட்டேன்;
(உன்னையல்லாது வேறொருவரை)
பாவியேன்–நினைக்கவும் மாட்டேன்
பாவியேனே–நான் பாவியனேயாவேன்.
விளக்க உரை
கீழ்ப்பாட்டில் தமது கள்ளத்தன்மையைப் பேசி,
“இப்படிப்பட்ட நாம் எம்பெருமானைக் கிட்டுதல் தகாது” என்று ஆழ்வார் அகல நினைக்க
ஆழ்வீர்! நாம் உலகத்தாருடைய தாழ்வுகளைக் கண்ணெடுத்துப் பாராது
அவர்களுடைய ஸ்வல்ப குணத்தையே பாராட்டி
அவர்களை அடிமை கொள்பவரல்லோமோ? என்று
தன்னுடைய வாத்ஸல்யம் விளங்குமாறு எல்லாரையும் தான் அடிமை கொண்ட த்ரிவிக்ரமாவதார சரித்திரத்தை
இவர்க்கு நினைப்பூட்டிச் சமாதாநம் உண்டாகுமாறு செய்ய;
அதனால் ஆழ்வார் தாம் முன்பு அவனைவிட்டு விலகிச் செல்லும்படி நினைந்த தமது குற்றத்தைப் பாராட்டி,
“பாவியேன் பாவியேனே” என்று தம்மை வெறுத்துக் கூறி,
எம்பெருமானைத் தவிர வேறொரு கடவுளை
நினைத்தலும்
தொழுதலும் செய்யாத தமது தன்மையை வெளியிடுகின்றனர்.
——————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.
Leave a Reply