Archive for February, 2022

ஸ்ரீ வில்லிபுத்தூரார் இயற்றிய ஸ்ரீ வில்லி பாரதம்-

February 28, 2022

ஸ்ரீ வில்லிபுத்தூரார் இயற்றிய ஸ்ரீ வில்லி பாரதம்

(ஆதி பருவம்)
1.குருகுலச் சருக்கம்
2.சம்பவச் சருக்கம்
3.வாரணாவதச் சருக்கம்
4.வேத்திரகீதச் சருக்கம்
5.திரௌபதி மாலையிட்ட சருக்கம்
6.இந்திரப்பிரத்தச் சருக்கம்
7.அருச்சனன் தீர்த்தயாத்திரைச் சருக்கம்
8.வசந்தகாலச் சருக்கம்
9.கண்டவதகனச் சருக்கம்(சபா பருவம்)
10.இராயசூயச் சருக்கம்

—-

வில்லி பாரதம் 1. பாகம்- 1

* 1 குருகுலச் சருக்கம்

1 குருகுலச் சருக்கம்
*கடவுள் வாழ்த்து

#1
ஆக்குமாறு அயனாம் முதல் ஆக்கிய உலகம்
காக்குமாறு செம் கண் நிறை கருணை அம் கடலாம்
வீக்குமாறு அரனாம் அவை வீந்த நாள் மீள
பூக்கும் மா முதல் எவன் அவன் பொன் அடி போற்றி

*வாழ்த்து

#2
ஏழ் பெரும் கடல் மா நிலம் எங்கும் நல் அறமே
சூழ்க வண் தமிழ் ஓங்குக தேங்குக சுருதி
வீழ்க பைம் புயல் விளங்குக வளம் கெழு மனு நூல்
வாழ்க அன்புடை அடியவர் மன்னு மா தவமே

*அவையடக்கம

#3
கன்ன பாகம் மெய் களிப்பது ஓர் அளப்பு இல் தொல் கதை முன்
சொன்ன பாவலன் துகள் அறு சுகன் திரு தாதை
அன்ன பாரதம்-தன்னை ஓர் அறிவிலேன் உரைப்பது
என்ன பாவம் மற்று என்னை இன்று என் சொலாது உலகே

#4
மண்ணில் ஆரணம் நிகர் என வியாதனார் வகுத்த
எண் இலா நெடும் காதையை யான் அறிந்து இயம்பல்
விண்ணில் ஆதவன் விளங்கு நீடு எல்லையை ஊமன்
கண் இலாதவன் கேட்டலும் காண்டலும் கடுக்கும்

#5
முன் சொலாகிய சொல் எலாம் முழுது உணர் முனிவன்
தன் சொலாகிய மா பெருங்காப்பியம்-தன்னை
தென்_சொலால் செய்தலின் செழும் சுவை இல்லா
புன்சொல் ஆயினும் பொறுத்து அருள்புரிவரே புலவோர்

*பாடலுற்ற காரணம்

#6
முன்னும் மா மறை முனிவரும் தேவரும் பிறரும்
பன்னும் மா மொழி பாரத பெருமையும் பாரேன்
மன்னும் மாதவன் சரிதமும் இடை இடை வழங்கும்
என்னும் ஆசையால் யானும் ஈது இயம்புதற்கு இசைந்தேன்

*திங்கள் மரபில் சிறந்தோர் கதை

#7
எங்கள் மாதவன் இதய மா மலர் வரும் உதய
திங்கள் மா மரபினில் பிறந்து இசையுடன் சிறந்தோர்
அம் கண் மா நிலத்து அரசர் பல் கோடி அ அரசர்
தங்கள் மா கதை யான் அறி அளவையின் சமைக்கேன்

*திங்களின் சிறப்பு

#8
பொருந்த வான் உறை நாள்களை நாள்-தொறும் புணர்வோன்
அருந்த வானவர்க்கு ஆர் அமுது அன்புடன் அளிப்போன்
திருந்து அ வானவர்க்கு அரியவன் செம் சடை முடி மேல்
இருந்த வானவன் பெருமையை யார்-கொலோ இசைப்பார்

#9
மண்டலம் பயில் உரகர் பேர் உயிர்ப்பினால் மயங்கி
மண்டு அலம் பொர வருந்திய பெரும் துயர் மாற
மண்தலம்-தனை நிழல் எனும் மரபினால் தனது
மண்டலம் பொழி அமிழ்தின் மெய் குளிரவே வைத்தோன்

#10
பைம் பொன் மால் வரை மத்தினில் பணி வடம் பிணித்திட்டு
உம்பர் ஆனவர் தானவருடன் கடைந்திடவே
தம்பம் ஆனதும் அன்றி அ தழல் விடம் தணிய
அம்புராசியின் ஆர் அமுதுடன் அவதரித்தோன்

#11
பத்து இரட்டியில் ஈர் இரண்டு ஒழிந்த பல் கலையோன்
மித்திரற்கு அவை கொடுத்து முன் மீளவும் கவர்வோன்
அத்திரி பெயர் அந்தணன் அம்பகம்-தனிலும்
சித்திர கனல் முகத்தினும் பிறந்து ஒளி சிறந்தோன்

*புதன் பிறப்பு

#12
அந்தி ஆரண மந்திரத்து அன்புடன் இவனை
வந்தியாதவர் மண்ணினும் வானினும் இல்லை
புந்தியால் உயர் புதன் எனும் புதல்வனை மகிழ்வால்
தந்து யாவரும் களிப்புற இருக்கும் நாள்-தன்னில்

*மநு மகன் இளை என்னும் மடவரலாதல்

#13
வளை நெடும் சிலை கரத்தினன் மநு அருள் மைந்தன்
உளை எழும் பரி தேரினன் உறுவது ஒன்று உணரான்
விளை அரும் தவ விபினம் உற்று அம்பிகை விதியால்
இளை எனும் பெயர் மடவரல் ஆயினன் என்ப

*புதனும் இளையும்

#14
மார காகளம் எழுவது ஓர் மது மலர் காவில்
தாரகாபதி புதல்வன் அ தையலை காணா
வீர காம பாணங்களின் மெலிவுற மயங்கி
தீர காமமும் செவ்வியும் மிகும்படி திளைத்தான்

*புரூரவா தோன்றுதல

#15
புதனும் அந்த மென் பூவையும் புரூரவாவினை தம்
சுதன் எனும்படி தோற்றுவித்தனர் அவன் தோன்றி
இத நலம் பெறும் அழகினும் திறலினும் இலங்கி
மதனனும் கலை முருகனும் எனும்படி வளர்ந்தான்

மேல்
*புரூரவா உருப்பசியை மணத்தல்

#16
பொருப்பினை சிறகு அரிந்தவன் புரத்து மங்கையருள்
உருப்பசி பெயர் ஒண்_தொடி உருவினின் சிறந்தாள்
தரு பொழில் பயில் காலையில் தானவர் காணா
விருப்பு உற கவர்ந்து ஏகினர் அவளுடன் விசும்பில்

#17
கொண்டு போதலும் அபயம் என்று உருப்பசி கூவ
அண்டர் யாவரும் அஞ்சினர் அவருடன் அடு போர்
வண்டு சூழ் குழல் அணங்கை இ மதிமகன் மகனும்
கண்டு தேர் நனி கடவினன் அசுரர் மெய் கலங்க

#18
நிறம் தரும் குழல் அரிவையை நிறுத்தி வாள் அவுணர்
புறம்தரும்படி புரிந்த பின் புரந்தரன் தூதால்
மறம் தரும் கழல் மன்னவன் மண் மிசை அணைந்து
சிறந்த அன்பொடு அ தெரிவையை நலம் பெற சேர்ந்தான்

*ஆயுவின் பிறப்பு

#19
மாயன் ஊருவின் வந்தருள் அந்த மான் வயிற்றில்
ஆயு என்று ஒரு செம்மலை அம் மகன் அளித்தான்
தேயுவும் பல தேவரும் மகிழ மற்று இவனே
மேய வண் புகழ் வேந்தரில் வேள்வியால் மிக்கோன்

*ஆயுவின் மகன் நகுடன்

#20
முகுடமும் பெரும் சேனையும் தரணியும் முற்றும்
சகுட நீர் என சத மகம் புரி அரும் தவத்தோன்
நகுடன் நாம வேல் நராதிபன் நாகருக்கு அரசாய்
மகுடம் ஏந்திய குரிசில் ஆயுவின் திரு மைந்தன்

*நகுடன் சாபத்தால் நாகமாதல்

#21
புரந்தரன் பதம் பெற்ற பின் புலோமசை முயக்கிற்கு
இரந்து மற்று அவள் ஏவலின் யானம் உற்று ஏறி
வரம் தரும் குறுமுனி முனி வாய்மையால் மருண்டு
நிரந்தரம் பெரும் புயங்கம் ஆனவனும் அ நிருபன்

*நகுடன் மகன் யயாதி

#22
மற்று அவன் திரு மைந்தன் வில் மைந்தினால் உயர்ந்த
கொற்றவன் திறல் கொற்றவைக்கு இரு புயம் கொடுத்தோன்
முற்ற வன் பகை முகம் கெட முகம்-தொறும் திசையில்
செற்றவன் பெரும் செற்றம் இல் குணங்களில் சிறந்தோன்

*யயாதி சுக்கிராசாரியரின் மகள் தேவயானையை
*மணந்து, இரு குமரரைத் தருதல்

#23
யயாதி என்று கொண்டு இவனையே எவரினும் சிறக்க
வியாதனும் புகழ்ந்து உரைத்தது மற்று இவன் மேல்நாள்
புயாசலங்களுக்கு இசையவே புகரவன் புதல்வி
குயாசலம் தழீஇ இருவர் வெம் குமரரை அளித்தான்

*யயாதியும் சன்மிட்டையும்

#24
அன்ன காலையில் இவள்-தனது ஆர் உயிர் துணையாய்
முன் இசைந்த பேர் இசைவினால் ஏவலின் முயல்வாள்
நல் நலம் திகழ் கவி-தனக்கு கெழு நண்பாம்
மன்னவன் தரு மடவரல் இவனுழை வந்தாள்

#25
ஆழி மன்னன் அ அணங்கினை அணங்கு என கண்டு
பாழி வன் புயம் வலம் துடித்து உடல் உற பரிந்து
வாழி தன் மனை மடவரல் அறிவுறாவண்ணம்
யாழினோர் பெரும் புணர்ச்சியின் இதயம் ஒத்து இசைந்தான்

*சன்மிட்டை பூருவைப் பெறுதல்

#26
சாரும் அன்பினின் கற்பினின் சிறந்த சன்மிட்டை
சேரும் மைந்தினும் உயர்வினும் தேசினும் சிறந்து
மேரு என்றிட மேதினி யாவையும் தரிப்பான்
பூரு என்று ஒரு புண்ணிய புதல்வனை பயந்தாள்

*தேவயானை சினம்

#27
மருவு இளம் கொடி அனைய மென் மருங்குலாள் பின்னும்
இருவர் மைந்தரை பயந்தனள் இறை மனை காணா
உரு விளங்கிய உலகுடை நிருபனுக்கு இவள் மேல்
திருவுளம்-கொல் என்று அழன்று தன் தாதை இல் சென்றாள்

*சுக்கிரன் சாபத்தால் யயாதி முதுமை அடைதல

#28
சென்று தாதையை பணிந்து இது செப்பலும் சின வேல்
வென்றி மன்னனை விருத்தன் ஆம்வகை அவன் விதித்தான்
அன்றுதொட்டு இவன் ஐம் முதல் பிணியினால் அழுங்கி
இன்று நூறு என நரை முதிர் யாக்கையோடு இருந்தான்

*பூரு தந்தைக்குத் தன் இளமையை ஈதல

#29
அந்த மன்னவன் மைந்தரை அழைத்து எனக்கு உசனார்
தந்த மூப்பை நீர் கொண்-மின் நும் இளமை தந்து என்ன
மைந்தர் யாவரும் மறுத்திட பூரு மற்று அவன்-தன்
இந்த மூப்பினை கவர்ந்து தன் இளமையும் ஈந்தான்

*யயாதி பூருவுக்கு இளமையும் அரசும் அளித்தல்

#30
விந்தை பூ_மகள் முதலிய மடந்தையர் விரும்ப
முந்தை மா மணம் யாவையும் பல பகல் முற்றி
சிந்தை ஆதரம் தணிந்த பின் சிந்தனை இன்றி
தந்தை மீளவும் இளமை தன் தனயனுக்கு அளித்தான்

#31
இடியும் மாறுகொள் நெடு மொழி யயாதி அன்று இவற்கே
முடியும் மாலையும் முத்த வெண் கவிகையும் முரசும்
படியும் யாவையும் வழங்கி எம் பனி மதி மரபிற்கு
அடியும் நீ இனி என மகிழ்ந்து அளியுடன் அளித்தான்

*பரதன் தோற்றமும் ஏற்றமும்

#32
விரதம் மிஞ்சிய வேள்வியால் கேள்வியால் மிக்கான்
சுரத மங்கையர் முலை குவடு அணை வரை தோளான்
பரதன் என்று ஒரு பார்த்திவன் பரதமும் இசையும்
சரதம் இன்புற அ குலம்-தனில் அவதரித்தான்

#33
சுர சமூகமும் சுராரிகள் சமூகமும் சூழ
விரசு பூசலின் வாசவன் நடுங்கி வெந்நிடு நாள்
அரசர் யாவரும் அறுமுக கடவுள் என்று அயிர்ப்ப
புரசை நாகம் முன் கடவினன் நாகமும் புரந்தோன்

*அத்தியின் பிறப்பும், அத்தினாபுரி அமைப்பும்

#34
மு குலத்தினும் மதி குலம் முதன்மை பெற்றது என்று
எ குலத்தினில் அரசும் வந்து இணை அடி இறைஞ்ச
மை குலத்தினில் புட்கலாவர்த்தமாம் எனவே
அ குலத்தினில் அத்தி என்பவன் அவதரித்தான்

#35
கொண்டல்வாகனும் குபேரனும் நிகர் என குறித்து
புண்டரீகன் முன் படைத்த அ புரவலன் அமைத்தது
எண் திசாமுகத்து எழுது சீர் இயக்கர் மா நகரும்
அண்டர் தானமும் உவமை கூர் அத்தினாபுரியே

#36
மீனம் ஆகிய விண்ணவன் விநதை முன் பயந்த
யானமீது எழுந்தருளி வந்து இரு பதம் வழங்க
கான நாள் மலர் கயத்திடை கயமும் வெம் கராமும்
ஆன மானவர் இருவரும் அ குலத்தவரே

*குருவும் குருகுலமும்

#37
பொரு பெரும் படை தொழில் வய புரவி தேர் மதமா
மருவ அரும் தொழில் மன்னர் நீதியின் தொழில் வளம் கூர்
சுருதியின் தொழில் முதலிய தொழில் அனைத்தினுக்கும்
குரு எனும் புகழ் குருவும் அ குலத்தில் அங்குரித்தான்

#38
வரு குலத்தவர் எவரையும் வரிசையால் இன்றும்
குருகுலத்தவர் எனும்படி பேர் இசை கொண்டான்
இரு குலத்தினும் மாசு அறு தேசினால் இவனுக்கு
ஒரு குலத்தினும் உரைப்பதற்கு உவமை வேறு உண்டோ

*சந்தனு வருகை

#39
அந்த நல் மரபினில் அமுத வெண் திரை
சிந்துவின் மிசை வரு திங்கள் ஆம் என
சந்தனு எனும் பெயர் தரணி காவலன்
வந்தனன் அவன் செயல் வகுத்து கூறுவாம்

*சந்தனு கங்கையைக் காணுதல்

#40
வேனிலான் இவன் என விளங்கு காலையில்
கானக வேட்டை போய் இளைத்த காவலன்
ஆன மென் குளிர் புனல் ஆசையால் மணி
தூ நிற கங்கையாள் சூழல் எய்தினான்

#41
மரு வரும் குழல் விழி வதனம் வார் குழை
இரு தனம் தோள் கழுத்து இதழொடு இன் நகை
புருவம் வண் புறவடி பொற்ப பாவையர்
உருவு கொண்டனள் தனது உடைமை தோன்றவே

#42
கங்கையின் வெள்ளம் மேல் கருத்து மாறி இ
மங்கை-தன் பேர் ஒளி வனப்பின் வெள்ளமே
தங்கிய சோகமும் தாபமும் கெட
பங்கய விழிகளால் பருகினான் அரோ

*சந்தனுவின் ஐயம்

#43
வையக மடந்தை-கொல் வரை மடந்தை-கொல்
செய்ய பங்கய மலர் திரு மடந்தை-கொல்
துய்ய வண் கலைவித சொல் மடந்தை-கொல்
ஐயமுற்றனன் இவள் ஆர்-கொல் என்னவே

*தெளிந்து போற்றுதல

#44
கண் இமைத்து இரு நிலம் காலும் தோய்தலால்
பெண் இவள் மானுட பிறப்பினாள் என
எண்ணம் உற்று அவள் அருகு எய்தி யாவர் செய்
புண்ணியம் நீ என புகழ்ந்து போற்றினான்

*கங்கை துயரம் நீங்குதல்

#45
போற்றிய குரிசில் மெய் புளகம் எய்தவே
ஏற்றிய விழியினள் இளகு நெஞ்சினள்
சாற்றிய மலர் அயன் சாபம் இ வழி
தோற்றியது என உறு துயரம் நீங்கினாள்

*சந்தனு அன்பு கூர்ந்து அவள் எண்ணம் வினாதல்

#46
பொங்கிய மதர் விழி புரிவும் ஆதரம்
தங்கிய முகிழ் முலை தடமும் நோக்கியே
இங்கித முறைமை நன்று என்று வேந்தனும்
அங்கு இதமுடன் அவட்கு அன்பு கூரவே

#47
கன்னியேயாம் எனில் கடி கொள் பான்மையை
என்னின் மற்று உயர்ந்தவர் இல்லை மண்ணின் மேல்
உன் நினைவு என உசாவினான் இகல்
மின் இலை வடி கொள் வேல் வேந்தர் வேந்தனே

மேல்
*கங்கையின் நிபந்தனை

#48
நாணினளாம் என நதி_மடந்தையும்
பூண் உறு முலை முகம் பொருந்த நோக்கினள்
சேண் உறு தனது மெய் தேசு போல் நகை
வாள் நிலவு எழ சில வாய்மை கூறுவாள்

#49
இரிந்து மெய் நடுங்கிட யாது யாது நான்
புரிந்தது பொறுத்தியேல் புணர்வல் உன் புயம்
பரிந்து எனை மறுத்தியேல் பரிவொடு அன்று உனை
பிரிந்து அகன்றிடுவன் இ பிறப்பு மாற்றியே

#50
மெய் தரு விதியினேன் விரதம் மற்று இவை
எய்த அரிது ஒருவரால் எய்த வல்லையேல்
கைதருக என பெரும் காதலாளனும்
உய்வு அரிது என இசைந்து உடன்படுத்தினான்

#51
எனது உயிர் அரசு வாழ்வு என்ப யாவையும்
நினது நின் ஏவலின் நிற்பன் யான் என
வனிதையை மருட்டினான் மன்றல் எண்ணியே
தனதனும் நிகர் இலா தன மகீபனே

#52
அரு மறை முறையினால் அங்கி சான்று என
திருமணம் புரிந்து உளம் திகழ வைகினான்
இரதியும் மதனனும் அல்லது இல்லை மற்று
ஒருவரும் உவமை என்று உலகு கூறவே

*மைந்தனைப் பெற்றுக் கங்கையில் எறிதல்

#53
மருவுற சில பகல் மணந்து மான்_விழி
கரு உயிர்த்தனள் என களி கொள் காலையில்
பருவம் உற்று அன்புடன் பயந்த மைந்தனை
பொரு புனல் புதைத்தனள் புவனம் காணவே

#54
கண்டு உளம் வெருவி முன் கதித்த வாசகம்
கொண்டு உரையெடுத்திலன் கொண்ட காதலான்
ஒண்_தொடியுடன் மணந்து உருகி வைகினன்
பண்டையின் எழு மடி பரிவு கூரவே

*பின்னும் ஆறு குழந்தைகளை ஆற்றில் எறிதல்

#55
பின்னரும் அறுவரை பெற்ற தாய் மனம்
முன்னரின் மு மடி முரண்டு மாய்க்கவே
மன்னவன் அவற்றினும் வாய் திறந்திலன்
நல் நகர் சனம் எலாம் நடுநடுங்கவே

*கங்கையின் செயல் குறித்து மங்கையர் அழுதல்

#56
வழு அறு குருகுல மன்னன் மைந்தர் ஓர்
எழுவரை முருக்கினள் ஈன்ற தாய் என
பழுது அறு மக பல பயந்த மங்கையர்
அழுதனர் கண் புனல் ஆறு பாயவே

*கங்கை எட்டாம் முறை கருக்கொள்ளல்

#57
கங்கை என்று உலகு எலாம் கைதொழ தகும்
மங்கை அங்கு அனந்தரம் வயிறு வாய்த்துழி
வெம் கய கட கரி வேந்தன் மா மன
பங்கயம் துறந்தது பழைய இன்பமே

*சந்தனு மைந்தனை எடுத்துக்கொண்டு
*கங்கையை வேண்டல்

#58
மதலையை பயந்தனள் மடந்தை என்றலும்
கதுமென சென்று தாய் கைப்படாவகை
இதம் உற பரிவுடன் எடுத்து மற்று அவள்
பதயுக தாமரை பணிந்து பேசுவான்

#59
நிறுத்துக மரபினை நிலைபெறும்படி
வெறுத்து எனை முனியினும் வேண்டுமால் இது
மறுத்தனன் யான் என மனம் செயாது இனி
பொறுத்து அருள்புரிக இ புதல்வன்-தன்னையே

*கங்கை சந்தனுவைக் கண்டித்தல்

#60
என்று பற்பல மொழி இவன் இயம்பவே
நன்று நன்று அவனிப நவின்ற வாசகம்
இன்று நின்று இரங்கினை எழுவர் மைந்தரை
கொன்ற அன்று என் செய்தாய் கொடியை என்னவே

*சந்தனு கங்கையின் வரலாறு வினாதல்

#61
அரசனும் உணர்ந்து நீ யார்-கொல் பாலரை
திரை செறி புனலிடை செற்றது என்-கொலாம்
உரைசெயவேண்டும் என்று உரைப்ப வஞ்சியும்
வரிசையின் உயர்ந்த தன் வரவு கூறுவாள்

*கங்கை தன் சாப வரலாறு கூறல்

#62
வால் முக மதியமும் புதிய மாலிகை
கான் முக இதழியும் கமழும் கங்கையாள்
தேன் முகம் பொழிதரு செய்ய தாமரை
நான்முகன் பேர் அவை நண்ணினாள் அரோ

#63
இரும் கலை இமையவர் எதிர் இறைஞ்சுவாள்
மருங்கு அலை மதியினை மதிக்குமாறு போல்
அரும் கலை அயல் உற அதிர்ந்து வீசினான்
பொரும் கலை எனும் இகல் புரவி வீரனே

#64
திரு தகும் அவயவம் திகழ்ந்து தோன்றவே
கருத்துடன் அவைக்கணோர் கண் புதைக்கவும்
மருத்தினை மனனுற மகிழ்ந்து காதல் கூர்
உரு தகும் உரிமையோடு ஒருவன் நோக்கினான்

#65
நோக்கிய வருணனை நுவலும் நான்மறை
ஆக்கிய முனி உருத்து அழன்று பார்_மகள்
பாக்கியம் என்ன உற்பவிக்க நீ என
தாக்கிய உரும் என சபித்த காலையே

#66
கோனிடம் நினைவொடு குறுகி நீயும் நல்
மானிட மடந்தையாய் மணந்து மீள்க என
வானிடை நதியையும் வழுவினால் அவள்
தான் இடர் உறும்வகை தந்தை ஏவினான்

*கங்கை வழியிடை வசுக்களைக் கண்டமை

#67
பாரினும் நமக்கு ஒரு பதம் உண்டு என்று அவள்
ஈரம் உற்று இழிதரும் எல்லை வானகத்து
ஓர் இடை உடன் விழும் உற்கை போல் முக
வார் ஒளி மழுங்கினர் வசுக்கள் தோன்றினார்

மேல்
$1.68

#68
என்னை இங்கு இழிந்த ஆறு எங்கள் மா நதி
அன்னை என்று அவள் அடி அவர் வணங்கலும்
தன்னை அங்கு அயன் இடு சாபம் கூறினாள்
பின்னை அங்கு அவரும் தம் பெற்றி பேசுவார்

மேல்
*வசுக்களின் சாப வரலாறு
$1.69

#69
உற்று உறை எங்களுள் ஒருவன் தன் மனை
பொன்_தொடிக்கு அழிந்து அவள் புன்மை வாய்மையால்
சற்றும் மெய் உணர்வு அற தகாது ஒன்று எண்ணினான்
மற்று எழுவரும் அவன் வயத்தர் ஆயினேம்

மேல்
$1.70

#70
தூ_நகை மொழிப்படி சோரர் ஆகியே
வானவர் வணங்கு தாள் வசிட்டன் வாழ் மனை
தேனுவை இரவினில் சென்று கைக்கொளா
மீன் நெறி கரந்து என மீள ஏகினோம்

மேல்
$1.71

#71
பசு கவர்ந்தனர் என பயிலும் மா தவ
முசு குலம் அனைய மெய் முனிவர் கூறலும்
சிசுக்களின் அறிவு இலா சிந்தை செய்தவர்
வசுக்கள் என்று அருந்ததி மகிழ்நன் எண்ணினான்

மேல்
$1.72

#72
உம் பதம் இழந்து நீர் உததி மண் உளோர்
தம் பதம் பெறுக என சாபம் கூறலும்
எம் பதம் பெறுவது என்று இனி எனா அவன்
செம் பதம் எமது பூம் சென்னி ஏந்தினேம்

மேல்
$1.73

#73
அன்புடை முனி முனிவு ஆறி மானுட
புன் பிறப்பு எழுவரும் புரிந்து மீளுதிர்
மின் புரை தெரிவை சொல் விழைந்த நீ அவண்
இன்பம் அற்று அநேக நாள் இருத்தி என்னவே

மேல்
$1.74

#74
விண் வரு செல்வமும் விழைவும் மேன்மையும்
எண்மரும் இழந்தனம் என் செய்வேம் என
மண் வரு தையலை வணங்க தையலும்
பண் வரு மொழி சில பகர்ந்து தேற்றினாள்

மேல்
*கங்கை வசுக்களைத் தேற்றினமை
$1.75

#75
வலத்து உயர் தடம் புய வருணனும் குரு
குலத்தினில் அயன் வரம் கொண்டு தோன்றுமால்
நலத்துடன் அவன் மனை நண்ணும் எல்லையில்
நிலத்திடை என்-வயின் நீரும் தோன்றுவீர்

மேல்
$1.76

#76
அஞ்சன்-மின் உம்மை நான் அவனி தோயும் முன்
எஞ்ச வீட்டிடுவன் இ இறைவன்-தன்னையும்
நெஞ்சு உற தந்தை-பால் நிறுத்தி நானும் அ
வஞ்சக பிறப்பினை மாற்றுவேன் என்றாள்

மேல்
*வசுக்கள் கங்கையை வணங்கினமை
$1.77

#77
நால் இரு வசுக்களும் நதி_மடந்தை சொல்
பால் இரு செவிப்பட படாத நல் தவம்
சால் இரு நிலத்து இழி தாயை அன்புடன்
கால் இரு கரத்தினால் கசிந்து போற்றினார்

மேல்
*வருணனும் கங்கையும் மண்ணில் தோன்றினமை
$1.78

#78
சதைய மீன் கடவுளும் சசிகுலத்து நல்
விதை என மேதினி மீது தோன்றினான்
துதை அளி செறி குழல் தோகை ஆயினாள்
இதையம் உற்று உயர் நதி என்னும் மின்னுமே

மேல்
*கங்கையின் வயிற்றில் வசுக்கள் பிறந்தமை
$1.79

#79
தவம் உற குட திசை தலைவன் தாரமாம்
அவள் வயிற்று உதித்தனர் அந்த எண்மரும்
உவகையின் பெரும நீ உணர்ந்துகொள்க என
இவள் திரு கணவனும் இன்ன கூறுவான்

மேல்
*எட்டாம் மகன் தன்மை
$1.80

#80
அற பயன் என்னுமாறு அறிவு இலா எமை
பிறப்பு உணர்த்தினை மகப்பேறு செய்து நீ
இறப்பவர் எழுவரோடு ஏகலா உயர்
சிறப்புடை இனையவன் செய்வது என் என்றான்

மேல்
$1.81

#81
மு குலத்து அரசினும் முதன்மையால் உயர்
இ குலத்து இவன் அலாது இல்லை மா மகார்
அ குல தவ முனி அருளினால் இவன்
மெய் குல தந்தையாம் விழைவும் இல் என்றாள்

மேல்
*மன்னவன் விருப்பம்
$1.82

#82
மன்னவர் தொழு கழல் மன்னன் மைந்தனோடு
இன்னமும் ஒருவனை இனிது அளித்து நாம்
பன்னக நெடு முடி பார் களிக்கவே
பொன்நகர் இருவரும் போதும் என்னவே

மேல்
*கங்கையின் அறிவுரை
$1.83

#83
போய் இருந்து என் பயன் போகம் பல் வகை
ஆய் இருந்தன எலாம் அருந்தி இன்னமும்
மா இரும் தரணியில் மன்னு சில் பகல்
நீ இருந்து அரசியல் நிறுத்தி மீளுவாய்

மேல்
*பெற்ற மகனோடு கங்கை பிரிந்து செல்லுதல்
$1.84

#84
இ புதல்வனும் இனி என்னொடு ஏகியே
மெய் படு காளையாம் பதத்து மீள நின்
கைப்படுத்துவல் என கணவனை தழீஇ
அ பெரும் புதல்வனோடு அவளும் ஏகினாள்

மேல்
*காவலன் வருந்தி வைகுதல்
$1.85

#85
அன்று தொட்டு இவனும் அகன்ற பூம்_கொடியை அழகுற எழுதி முன் வைத்தும்
ஒன்றுபட்டு உவமை பொருள்களால் கண்டும் உரைத்தவை எடுத்து எடுத்துரைத்தும்
மன்றலில் தலைநாள் விழைவொடும் மணந்த மடந்தையர் வதனமும் நோக்கான்
என்று இனி கிடைப்பது என்று உளம் வருந்தி எண்ணும் நாள் எல்லை ஆண்டு இருந்தான்

மேல்
*சந்தனு கங்கைக் கரையை அடைதல்
$1.86

#86
பின் ஒரு தினத்தில் அமைச்சரும் பிறரும் பெரும் படை தலைவரும் சூழ
முன் ஒரு தினத்தின் வனத்து மா வேட்டை முன்னினன் முயன்று போய் முற்றி
மின் ஒரு வடிவு கொண்டு என சிறந்த மெல்_இயல் மீண்டு உறை மறையும்
தன் ஒரு மதலை ஆக்கமும் கருதி சானவி தடம் கரை அடைந்தான்

மேல்
$1.87

#87
பண்டு தான் அவளை எதிர்ப்படும் கனக பைம் கொடி பந்தர் வான் நிழலும்
வண்டு அறா நறை பூம் சோலையும் தடமும் மருங்கு அலை மலய மாருதமும்
புண்டரீகமும் செம் காவியும் கமழும் புளினமும் புள் இன மென் துறையும்
கண்டு காரிகையை இம்மையில் இன்னும் காண்குமோ என மனம் கசிந்தான்

மேல்
*சந்தனு தேவவிரதனைக் கண்டு வியத்தல்
$1.88

#88
பிரிந்த நாள் எண்ணி பகீரதி பெருக்கை பேதுறும் குறிப்பொடு நோக்கி
கரிந்த பாதவம் போல் நின்ற அ பொழுதில் கால் பொர குனித்த கார்முகமும்
தெரிந்து மேன்மேலும் தொடுத்த சாயகமும் சிலம்பு என திரண்ட தோள் இணையும்
விரிந்த நூல் மார்பும் ஆகி முன் நடந்தான் விழி களித்திட ஒரு வீரன்

மேல்
$1.89

#89
வியந்திட வரும் அ குரிசிலை இவனே விடையவன் குமரன் என்று அயிர்க்கும்
வயந்தனில் உலவும் மதன்-கொலோ என்னும் வாசவன் மதலை என்று எண்ணும்
உயர்ந்தவர் இவனின் வின்மையின் இல்லை ஒருவரும் உலகின் மேல் என்னும்
பயந்த தன் வடிவின் படி என திகழும் பான்மையை நினைந்திலன் பயந்தோன்

மேல்
*மகன் கணையால் மன்னன் மயங்கி வீழ்தல்
$1.90

#90
தந்தை என்று இவனை உணர்கிலா மதியால் சராசனம் தழுவுற வளைத்து
மைந்தனும் ஒரு போர் மோகன கணையால் மறையுடன் மார்பு உற எழுதி
இந்திர தனுவோடு இந்திரன் எழிலி இடை மறைந்தனன் என புடையே
சிந்திய திவலை சிந்துவின் மறைந்தான் அரசனும் மகிதலம் சேர்ந்தான்

மேல்
*கங்கை காவலனைத் தெளிவித்தல்
$1.91

#91
காதலன் அயர்வும் திருமகன் புனலில் கரந்ததும் கண்டு உளம் உருகி
மேதகு வடிவு கொண்டு மற்று அந்த வெம் சிலை விநோதனும் தானும்
ஓத வெண் திரையின் மதியுடன் உதித்த ஒண் மலர் கொடி என ஓடி
தூதுளங்கனி வாய் மலர்ந்து இனிது அழைத்து சூடக செம் கையால் எடுத்தாள்

மேல்
*மகனை மன்னனிடம் கொடுத்துக் கங்கை மறைதல்
$1.92

#92
வாடிய தருவில் மழை பொழிவது போல் மடவரல் கருணை நீர் பொழிய
கூடிய உணர்வோடு எழுந்த காவலனை கொங்கை மார்புற தழீஇக்கொண்டு
நாடிய கருமம் வாய்த்தது என்று உவகை நலம் பெற தந்தை பைம் கழல் கால்
சூடிய மகவை கை கொடுத்து இவளும் தோன்றலோடு இவையிவை சொன்னாள்

மேல்
$1.93

#93
வேந்த கேள் இவன் உன் மதலையே தேவ விரதன் என்று இவன் பெயர் பல்லோர்
ஆய்ந்த நூல் வெள்ளம் கடந்தனன் கரை கண்டு அருந்ததிபதி திருவருளால்
பூம் துழாய் மாலை போர் மழு படையோன் பொன் அடி பொலிவுற வணங்கி
ஏந்து நீள் சிலையும் பல கணை மறையும் ஏனைய படைகளும் பயின்றான்

மேல்
$1.94

#94
மக பெறுமவரில் ஒருவரும் பெறாத மகிழ்ச்சியும் வாழ்வும் மெய் வலியும்
மிக பெறும் தவம் நீ புரிந்தனை நின்னை வேறு இனி வெல்ல வல்லவர் ஆர்
உகப்புற இவனோடு அவனி ஆளுக என்று ஓர் அடிக்கு ஓர் அடி புரிந்து
தக பெறு மயிலும் தலைவன் மேல் உள்ளம் தகைவுற தடம் புனல் புகுந்தாள்

மேல்
*சந்தனு மைந்தனோடு நகரடைதல்
$1.95

#95
மனைவியை கண்டு மீளவும் பிரிந்த வருத்தம் மெய் திருத்தகு கேள்வி
தனையனை கண்ட மகிழ்ச்சியால் அருக்கன் தன் எதிர் இருள் என தணப்ப
நினைவினில் சிறந்த தேர் மிசை புதனும் நிறை கலை மதியுமே நிகர்ப்ப
புனை மணி கழலான் அவனொடும் தனது புரம் எதிர் கைதொழ புகுந்தான்

மேல்
*சந்தனு ஒரு நாள் வேட்டைக்குச் செல்லல்
$1.96

#96
தானும் அம் மகனும் தரியலர் வணங்க தங்கு நல் நாளில் அங்கு ஒரு நாள்
தேன் உறும் தொடையல் இளவரசனை தன் திகழ் அரியாசனத்து இருத்தி
கான் உறு விலங்கின் உயிர் கவர் நசையால் காற்று என கூற்று என நடந்து
பானுவின் மகளாம் காளிந்தி நதியின் பாரம் எய்தினன் விறல் படையோன்

மேல்
*சந்தனு சத்தியவதியைக் கண்டு காதல் கொள்ளல்
$1.97

#97
பாசறை முழுதும் ஒரு பெரும் கடவுள் பரிமளம் ஒல்லென பரப்ப
யோசனை அளவும் கரை இரு மருங்கும் உயிர்க்கும் மெல் உயிர்ப்பு எதிர் ஓடி
தாசர்-தம் குலத்துக்கு அதிபதி அளித்த தையலை தரணிபர்க்கு எல்லாம்
ஈசனும் உருகி கண்டு உளம் களியா இலங்கு_இழை யார்-கொல் நீ என்றான்

மேல்
$1.98

#98
நிருபனது உரை கேட்டு அஞ்சினள் ஒதுங்கி நின்று கை நினைவு உற குவியா
இரு துறை நெறியில் வருநரை நாவாய் ஏற்றுவல் எந்தை ஏவலின் என்று
செயும் அளவில் வேட்கையால் உள்ளம் உருகி மெய் மெலிந்து ஒளி கருகி
அரிவையை அளித்தோன் பக்கம் அது அடைந்தான் அவனும் வந்து அடி மலர் பணிந்தான்

மேல்
*பாகன் பரதர் தலைவனிடம் மன்னன் கருத்து த்தல்
$1.99

#99
பாகனை அரசன் குறிப்பினால் ஏவ பாகனும் பரதவர் பதியை
ஓகையோடு இருத்தி நின்னுழை வதுவை உலகுடை நாயகன் நயந்தான்
தோகை செய் தவமோ நின் பெரும் தவமோ தொல் குலத்தவர் புரி தவமோ
ஆகும் இ வாழ்வு என்று உரைத்தனன் அவனும் ஆகுமாறு அவனுடன் உரைப்பான்

மேல்
*பரதர் தலைவன் மறுமொழி?
$1.100

#100
பூருவின் மரபில் பிறந்த கோமகன் என் புன் குல_மகள் குயம் பொருந்தல்
மேருவும் அணுவும் நிறுக்குமாறு ஒக்கும் மேல் இனி இவை புகன்று என்-கொல்
பார் உவகையினால் ஆளுதற்கு இருந்தான் பகீரதி மகன் இவள் பயந்த
சீருடை மகன் மற்று என் செய்வான் இசை-மின் செய்கைதான் திருவுளம் குறித்தே

மேல்
*சந்தனு வருத்தத்தோடு மீளல்
$1.101

#101
என்ன முன் இறைஞ்சி இவன் மொழி கொடும் சொல் இறையவன் கேட்டலும் இரண்டு
கன்னமும் அழற்கோல் வைத்தது ஒத்து இதயம் கருகி வேறு ஒன்றையும் கழறான்
முன்னம் உன்மதத்தால் முனி இடு சாபம் முடிந்தது என்று ஆகுலம் முற்றி
அன்னமும் குயிலும் பயிலும் நீள் படப்பை அத்தினாபுரியை மீண்டு அடைந்தான்

மேல்
*தேவ விரதன் நிகழ்ந்தமை அறிதல்
$1.102

#102
கங்கையாளிடத்தில் ஆதரம் மெலிந்த காலையில் களிந்த வெற்பு அளித்த
மங்கையாம் என்ன நின்ற பூம்_கொடி மேல் வைத்த பேர் ஆதரம் மலிய
பங்கயானனம்-தான் முறைமுறை குறையும் பால்மதி என அழகு அழிந்த
சங்கையால் மைந்தன் வினவலும் நிகழ்ந்த தன்மையை சாரதி புகன்றான்

மேல்
*விரதம் கூறி வீடுமன் எனும் பெயர் பெறுதல்
$1.103

#103
கேட்ட அ கணத்தில் கடல் புறத்து அரசை கேண்மையோடு அடைந்து இளவரசும்
பாட்டன் நீ எனக்கு பெற்ற தாய்-தானும் பகீரதி அல்லள் நின் மகளே
நாட்டம் இன்று உனக்கு யாது அது நிலை இந்த ஞாலமும் எம்பியர் ஞாலம்
நீட்டம் அற்று இன்றே திருமணம் நேர்வாய் நீதி கூர் நிருபனுக்கு என்றான்

மேல்
$1.104

#104
விரதம் முற்றியவாறு அனைவரும் கேண்-மின் மெய் உயிர் வீடும் அன்று அளவும்
சரதம் முற்றிய மெய் தாதுவும் மூல தழலுடன் மீது எழும் தகைத்தே
இரதம் முற்றிய சொல் மக பெறாதவருக்கு இல்லை என்று இயம்பும் நல் கதியும்
சுரதம் முற்றிய என் தந்தை-தன் பொருட்டால் பெறுவல் என்று இன்னதும் சொன்னான்

மேல்
$1.105

#105
இவன் மொழி நயந்து கேட்டுழி அவையின் இருந்த தொல் மனிதரே அன்றி
தவ முனிவரரும் தேவரும் ககனம் தங்கும் மா மங்கையர் பலரும்
உவகையோடு இவனுக்கு ஏற்ற பேர் செய்து ஒளி கெழு பூ_மழை பொழிந்தார்
அவனியில் நிருபர் வெருவரும் திறலான் அரிய சொல் பொருள் நிலை அறிந்தே

மேல்
$1.106

#106
மெய் மகிழ் கடவுள் பூ_மழையுடனே வீடுமன் எனும் பெயர் எய்தி
கை மகிழ் வரி வில் தாசபூபதியும் கன்னிகை காளியும் தானும்
மொய் மணம் கமழும் மன்றல் வேனிலின்-வாய் முனிவரும் கிளைஞரும் சூழ
செய் மகிழ் பழன குருநிலம் உடையான் திருமனை விரைவுடன் சேர்ந்தான்

மேல்
*சந்தனு மகனைப் பாராட்டி வரம் அளித்தல்
$1.107

#107
பரிமள வடிவ பாவையை அரசன் பாலள் என்று ஒருபுடை நிறுத்தி
இரு பதம் தொழுது நின்ற மா மகனை இதயமோடு இறுகுற தழுவி
தரு மணம் கமழும் சென்னி மேல் வதனம் தாழ்ந்து மோந்து உருகி முன் தந்தைக்கு
உரிய பேர் இளமை கொடுத்த கோமகனும் உனக்கு எதிர் அல்லன் என்று உரைத்தான்

மேல்
$1.108

#108
தந்தையர்க்கு உதவும் உதவியின் எனக்கு சதமடங்கு உதவினை உனக்கு
மைந்தருக்கு உதவும் உதவியின் சிறிதும் மா தவம் செய்திலேன் உதவ
சிந்தையில் துறக்கம் வேண்டும் என்று எண்ணி செல்லும் அன்று அல்லது உன் உயிர் மேல்
முந்துற காலன் வரப்பெறான் என்றே முடிவு இலா ஒரு வரம் மொழிந்தான்

மேல்
*பரதவர் தலைவன் மகளின் வரலாறு கூறல்
$1.109

#109
அம் புவி அரசன் மாமனும் அரசன் அடிபணிந்து அவயவத்து அழகால்
உம்பரும் வியக்கும் கிளியை முன் நிறுத்தி ஒடுங்கினன் வாய் புதைத்து உரைத்தான்
எம் பெருமான் நீ கேட்டருள் உனக்கே இசைந்த மெய் தவம் புரி இவளை
வம்பு அவிழ் மலர் மாது என்பதே அன்றி வலைஞர் மா மகள் என கருதேல்

மேல்
$1.110

#110
வாசவன் அளித்த விமானம் மீது ஒருவன் வசு எனும் சேதி மா மரபோன்
கேசரன் என போம் விசும்பிடை மனையாள் கிரிகையை நினைந்து உடல் கெழுமி
நேசமொடு இதயம் உருகும் அ கணத்தில் நினைவு அற விழுந்த வீரியம் மெய்
தேசவன் அளித்த நதியிடை தரள திரள் என சிந்தியது ஒருபால்

மேல்
$1.111

#111
ஒரு முனி முனிவால் அர_மகள் ஒருத்தி மீனமாய் உற்பவித்து உழல்வாள்
இரை என அதனை விழுங்கும் முன் கரு கொண்டு ஈன் முதிர் காலையில் அதனை
பரதவர் வலையின் அகப்படுத்து அரிய பாலகன் ஒருவனும் இவளும்
இருவரும் இந்த மீன் வயிற்று இருந்தார் யமுனையும் யமனும் நேர் எனவே

மேல்
$1.112

#112
மானவர் பதியாம் வசுவினுக்கு இவரை மகிழ்வு உற காட்டலும் மகனை
மீனவன் என பேர் கொடுத்தனன் கொண்டு மெல் இயல் இவளை மீண்டு அளித்தான்
யானும் இன்று அளவும் என் மகள் என்னும் இயற்கையால் இனிமையின் வளர்த்தேன்
கான மென் குயில் போல் வந்து மீளவும் தன் காவலர் குலத்திடை கலந்தாள்

மேல்
*சந்தனு சத்தியவதியை மணந்து வாழ்தல்
$1.113

#113
என்று கூறி விடுத்தனன் ஏந்தலும்
அன்று அவை-கண் அவன் மொழி கேட்டு உவந்து
இன்று நல் தினம் என்று இளம் தோகையை
மன்றல் எய்தினன் மா நிலம் வாழ்த்தவே

மேல்
$1.114

#114
காளி வந்து கலந்தனள் கங்கை வேய்
தோளியும் புயம் தோய்ந்தனள் முன்னமே
வாளி வெம் பரி மா நெடும் தேருடை
மீளி-தானும் விடையவன் ஆதலால்

மேல்
$1.115

#115
கங்கையின் கரை கண்ணுறு காரிகை
கொங்கை இன்பம் குலைந்த பின் மற்று அவள்
எங்கை என்ன யமுனையின்-பால் வரும்
மங்கை இன்பம் மகிழ்ந்தனன் மன்னனே

மேல்
$1.116

#116
வீடுமன் கழல் வேந்தர் வணங்கிட
நாடும் நல் நெறி நாளும் நடத்திட
நீடு மன்னனும் நேரிழை மேல் மலர்
தோடு மன்னு சுரும்பு என வீழவே

மேல்
*சத்தியவதி மைந்தர் இருவரைப் பெறுதல
$1.117

#117
அன்ன நாளில் அருக்கனும் திங்களும்
என்ன மைந்தர் இருவரை ஈன்றனள்
மன்னன் ஆவி வடிவு கொண்டு அன்ன மெய்
கன்னபூரம் கலந்த செம் கண்ணியே

மேல்
$1.118

#118
சித்திராங்கதன் செப்பு நலனுடை
மெய்த்த சீர்த்தி விசித்திரவீரியன்
இ திறத்தர் இருவரும் தம்முனால்
ஒத்த கல்வியர் ஆயினர் உண்மையே

மேல்
*சந்தனுவுக்குப் பின் சித்திராங்கதன் அரசனாதல்
$1.119

#119
மதி நெடும் குல மன்னனை நண்பினால்
விதி அனந்தரம் விண்ணுலகு ஏற்றினான்
நதியின் மைந்தனும் நம் புவிக்கு எம்பியே
அதிபன் என்று அரியாசனத்து ஏற்றினான்

மேல்
*சித்திராங்கதன் கந்தருவனால் கொலையுண்டு இறத்தல்
$1.120

#120
எங்கள் நாமம் இவன் கவர்ந்தான் என
கங்குல் வந்து ஒரு கந்தருவாதிபன்
தொங்கல் மா முடி சூடிய வேந்தனை
அம் கையால் மலைந்து ஆர் உயிர் கொள்ளவே

மேல்
*விசித்திரவீரியன் முடி சூடிப் புவி ஆளுதல
$1.121

#121
எம் முன் அன்றி இறந்தனன் என்று தாய்
விம்மு நெஞ்சின் மிகு துனி மாறவே
தெம் முன் வல்ல விசித்திரவீரனை
தம்முன் மீள தனி முடி சூட்டினான்

மேல்
$1.122

#122
சிற்பொருள் பரமான பொருட்கு எதிர்
உற்பவிக்கும் உபாயம் அது என்னவே
வில் படை திறல் வீடுமன் வாய்மையால்
பொற்பு உற புவி பூபதி ஆளும் நாள்

மேல்
*காசி மன்னன் மகளிர் சுயம்வரம்
$1.123

#123
காசி மன்னவன் கன்னியர் மூவரும்
தேசின் மிக்கவர் சேர்வர் என்று ஆள் விட
மாசு இல் தொல் குல மன்னவர் ஈண்டினார்
மூசி வண்டு இனம் மொய்ப்பது போலவே

மேல்
*காசி மன்னன் மகளிர் சுயம்வரம்
$1.124

#124
வரித்த மன்னர் மறம் கெட வன்பினால்
திரித்தும் எம்பியை சேர்த்துவல் யான் எனா
தரித்த வில்லொடும் தன் இளவேந்தொடும்
விரித்த வெண்குடை வீடுமன் ஏகினான்

மேல்
$1.125

#125
அரவ மா நதி அன்னையும் தன் மகன்
வரவு அறிந்து வழி இளைப்பு ஆற்றினாள்
பரவி வந்து பனி மலர் தென்றலை
விரவு நுண் துளி மீது எறி ஊதையால்

மேல்
$1.126

#126
கஞ்ச வாவி கலை மதி கண்டு என
நெஞ்சு அழிந்து நிருபர் குழாம் தொழ
வெம் சராசன வீரனும் தம்பியும்
மஞ்சம் ஏறி மணி தவிசு ஏறினார்

மேல்
*அது கண்டு, அரச குமாரர்கள் மன வாட்டமுறுதல்
$1.127

#127
குருத்தலம்-தனில் கூறிய வஞ்சினம்
ஒருத்தர் அன்று அறிவார் உலகோர் பலர்
விருத்தன் வந்தனன் மேல் இனி ஏது இவன்
கருத்து எனா மனம் காளையர் கன்றினார்

மேல்
*மாலையுடன் நெருங்கிய கன்னியர் வீடுமனது
*நிலை கண்டு ஐயுறுதல்
$1.128

#128
இருந்த மன்னர் இவர்இவர் என்று உளம்
பொருந்த மற்று அவர் பொற்புடை தேசு எலாம்
திருந்த நின்று செவிலியர் கூறவே
முருந்த வாள்_நகை மூவரும் தோன்றினார்

மேல்
$1.129

#129
கையில் மாலை இவற்கு என கன்னியர்
வெய்ய நெஞ்சொடு மின் என வந்தவர்
வைய மன்னன் வய நிலை நோக்கியே
ஐயம் உற்றனர் அன்புறு காதலார்

மேல்
*வீடுமன் மகளிரைக் கவர்ந்துகொண்டு செல்லுதல்
$1.130

#130
ஏனை வேந்தர் எதிர் இவரை பெரும்
தானை சூழ் மணி சந்தனத்து ஏற்றியே
சோனை மா மதம் சோரும் கட தட
யானை என்ன இளவலொடு ஏகினான்

மேல்
*எதிர்ந்த மன்னரை ஓட்டி, வீடுமன் தன் நகரை அடைதல்
$1.131

#131
முறையினால் அன்றி மொய்ம்பின் கவர்வது எ
குறையினால் என கோக்குலம் கூடி வந்து
இறைவனோடு எதிர் ஏற்ற வில் வீரரை
பிறைமுக கணையால் பிளந்து ஓட்டினான்

மேல்
$1.132

#132
முந்துற பெறும் மூவரொடு ஆடு அமர்
விந்தை-தன்னையும் வேந்தர் கொடுத்தலால்
சந்தனு பெயர் தார் முடி மன்னவன்
மைந்தர் தங்கள் வள நகர் மன்னினார்

மேல்
*அம்பை விரும்பியபடி அவளைச்
*சாலுவனிடத்திற்கு வீடுமன் அனுப்புதல்
$1.133

#133
சமரின் முந்திய சாலுவன் மேல் மனம்
அமர நின்றது அறிந்துழி அம்பையை
எமர்களுக்கு இஃது இயற்கை அன்று என்னவே
அமர் அழிந்த அவனுழை போக்கினான்

மேல்
*அம்பிகையையும் அம்பாலிகையையும்
*விசித்திரவீரியன் மணத்தல்
$1.134

#134
அம்பிகைக்கும் அம்பாலிகைக்கும் பதி
எம்பியே எழிலால் என்று இசைவுற
தம்பி-தன்னை தனஞ்சயன்-தன் எதிர்
வம்பினால் மிகு மா மணம் சேர்த்தினான்

மேல்
*சாலுவன் புறக்கணிக்கவே, அம்பை
*வீடுமனிடம் வந்து மணம் வேண்ட,
*அவன் மறுத்துவிடுதல்
$1.135

#135
சென்ற அம்பையை தீ மதி சாலுவன்
வென்று தெவ்வர் கவர்ந்த நின் மெய் தொடேன்
என்று இகப்ப இவனுழை மீளவும்
மன்றல் வேண்டினள் மன்றல் அம் கோதையாள்

மேல்
$1.136

#136
கங்கை_மைந்தன் கடிமணம் காதல் கூர்
மங்கை-தன்னை மறுத்த பின் மங்கையும்
செம் கண் நீர் எழ சிந்தை செம் தீ எழ
சங்கையோடு தன் தாதையை நண்ணினாள்

மேல்
*அம்பை தன் தந்தையைச் சார்ந்து உற்றது
*உரைக்க, அவன் தூதுவரை ஏவி வேண்டவும்,
*வீடுமன் மணம் மறுத்தல்
$1.137

#137
தாதை தாளினில் விழுந்து சந்தனுவின் மைந்தன் இன்னல் தந்ததும்
கோதையால் உறவு கொண்டு கைதரல் குறித்த கோமகன் மறுத்ததும்
பேதை கூற மனம் நொந்து இரங்கியவன் மிக்க நண்பினொடு பின்னையும்
தூதை ஏவி மணம் உற்று இரந்தனன் விசும்பு உலாவு நதி சுதனையே

மேல்
$1.138

#138
போன தூதுவர் வணங்கி இ மொழி புகன்றபோது மொழி பொய்யுறா
மீனகேதனனை வென்று தன் கொடிய விரதமே புரியும் வீடுமன்
மான வேல் நிருபன் மகள் குறித்த திரு மன்றல் வன்பொடு மறுத்தலால்
ஆன ஆதரவொடு ஆகுலம் பெருக அம்பை தந்தை-தனது அருளினால்

மேல்
*தந்தையின் உரைப்படி அம்பை, உதவி
*வேண்டிப் பரசுராமனைச் சார்தல்
$1.139

#139
வரிசையால் உயர் அநேக மண்டல மகீபர் சொன்ன சொல் மறுக்கினும்
பரசுராமன் அருள் மொழி மறான் அவனது இரு பதத்திடை பணிந்து நீ
செய்தால் அவன் உரைத்த சொல்லின்வழி ஒழுகி வந்து நினை உவகையால்
விரை செய் மாலை புனையாது வீடுமன் மறுத்து மீளவும் விளம்புமேல்

மேல்
$1.140

#140
பின்னை எண்ணிய பெரும் தவம் புரிதி என்று கூறிய பிதாவையும்
அன்னை-தன்னையும் வணங்கி நீடு சதுரந்தயானம் மிசை அம்புய
பொன்னை வென்று ஒளி கொள் சாயலாள் இரு புறத்து மாதர் பலர் பொலிவுடன்
தன்னை வந்து புடைசூழ ஏகி யம தங்கி மைந்தன் நகர் சாரவே

மேல்
$1.141

#141
காசிராசன் மகள் என்று வந்தனள் ஒர் கன்னி என்று கடை காவலோர்
வாச நாறு துளவோனுடன் புகல வருக என்ற பின் மடந்தை போய்
ஆசினால் வகுத்து முன்செயல் அனைத்தும் அண்ணல் அடி தொழுது பின்
பேசினாள் அவனும் யாம் முடிக்குவம் இது என்று மெய்ம்மையொடு பேசினான்

மேல்
*பரசுராமன் அவளது குறை முடிக்க உடன்பட்டு,
*அவளுடன் வீடுமனிடம் வந்து, அவளை
*மணம்புரியுமாறு த்தல்
$1.142

#142
வரதன் வீர மழுவால் அநேக குல மன்னர் வேரற மலைந்த கோன்
இரதம் மீது அவளுடன் கண பொழுதின் ஏறி ஐ_இரு தினத்தினில்
விரதம் ஆபரணம் என அணிந்த திறல் வீடுமன் பதியின் மேவலும்
சரதமாக எதிர்கொண்டு அவன் சிரம் இவன் பதத்தினிடை சாத்தினான்

மேல்
$1.143

#143
தனக்கு வின்மை நிலையிட்ட கோவை ஒரு தமனிய தவிசில் வைத்து நீ
எனக்கு நன்மை தர வந்த நல் தவம் இருந்தவா என இருந்த பின்
கனக்கும் வெண் தரள வட முலை பெரிய கரிய கண்ணி இவள் காதலால்
உனக்கு மன்றல் பெற உரியள் ஆகுக என உவகையோடு அவன் உரைக்கவே

மேல்
*வீடுமன் தன் விரதத்தைக் கூறி, மணம் மறுத்தல
$1.144

#144
இன் சொலால் அவனி கொண்ட எந்தை முதல் இன்ப மன்றல் இனிது எய்த நான்
வன் சொலால் இரத மணம் உறேன் என மனத்தினால் விரதம் மன்னினேன்
நின் சொல் யாவரும் மறார் என கருதி நீ உரைப்பினும் நிகழ்ந்த இ
புன்சொலானது இனி மா தவத்தின் மிகு புனித என் செவி பொறுக்குமோ

மேல்
$1.145

#145
களம் புகுந்தவரை மீள ஏகுதல் கொடாத கார்முக வினோத கேள்
உளம் புகுந்து இனிது இருக்கும் நல் கடவுள் உன்னை அன்றி இலை உண்மையே
வளம் புனைந்த அநுராக போகம் மிகு மாதர் மங்கையர் பொருட்டினால்
விளம்பும் இந்த மொழி ஒழிக என்-தன் உயிர் வேண்டும் என்னினும் வழங்குவேன்

மேல்
*வெகுளி பொங்கப் பரசுராமன் போருக்கு
*எழவே, வீடுமனும் எதிர் பொருது
*அவனை வெல்லுதல்
$1.146

#146
மறுத்து இவன் புகல வீரியன் புயம் ஒர் ஆயிரம் துணிசெய் மழுவினான்
வெறுத்து அனந்தரம் எழுந்திருந்து கரை அழியும் வேலை நிகர் வெகுளியன்
கறுத்த நெஞ்சினன் வெளுத்த மேனியன் உற சிவந்த இரு கண்ணினன்
பொறுத்த வில்லினன் விரைந்து தேர் மிசை புகுந்தனன் பெரிது போர் செய்வான்

மேல்
$1.147

#147
வெருவுடன் தொழுது கங்கை_மைந்தன் அடி வீழவும் சினம் மிகுத்தலால்
உருவுடன் தனி இருக்கும் நீள் விரதம் வழுவி நான் நரகம் உறுவதின்
குருவுடன் பொருது மடிதல் நன்று என நினைந்து தாலம் உயர் கொடியினன்
செரு உடன்றிடுதல் உன்னி ஏறினன் அமைந்து நின்றது ஒரு தேரின் மேல்

மேல்
$1.148

#148
அ இராமனும் மறுத்த மன்னவனும் ஐ இரண்டு தினம் இகலுடன்
வெவ் இராவும் ஒழியாது வெம் சமர் விளைத்த காலை அடல் வீடுமன்
கை விராய சிலையோடு மெய் வலி கவர்ந்து முன் தளர்வு கண்ட போர்
அ இராமன் நிகர் என்னுமாறு இவனை அஞ்சி நின்று எதிர் அடர்க்கவே

மேல்
$1.149

#149
ஓடி மீள மழு மேவு பாணி தனது ஊர் புகுந்தனன் உவந்து பல்
கோடி பேர் அரசர் துதி எடுக்க நதி குமரனும் தன் நகர் குறுகினான்
நாடி மாலையிட வந்த காசி பதி நல்கும் ஒல்கும் இடை நவ்வியும்
வாடி வாடி இனி அமையும் என்று தவ வனம் அடைந்தனள் மடங்கியே

மேல்
*’வீடுமனை வெல்லும் சூரன் ஆவேன்’ என்னும்
*உறுதியுடன் அம்பை தவம் இயற்றுதல்
$1.150

#150
வெம் பை ஆடு அரவம் மாய வென்றிடு விகங்கராசன் என வீடுமன்
தும்பை ஆடு அமரில் மாய வெல்ல வல சூரன் ஆகுவன் யான் எனா
வம்பை மோது முலை வம்பை வீசு குழல் வம்பை மன்னும் எழில் வரி கொள் கூர்
அம்பை மானும் விழி அம்பை என்பவளும் அரிய மா தவம் இயற்றினாள்

மேல்
$1.151

#151
தாள் இரண்டினில் ஒர் தாள் மடக்கி ஒரு தாளில் வைத்து அமை சமைத்த பொன்
தோள் இரண்டினையும் மீது எடுத்து நனி தொழுது இயக்கி துணை அடியிலே
வாள் இரண்டு அனைய விழி மலர்த்தி நிறை வாவி நீரினிடை வான் உளோர்
நாள் இரண்டு அதனொடு ஐ_இரண்டும் ஒரு நாள் எனும்படி நடக்கவே

மேல்
*இயக்கியின் அருளால் அம்பை சிகண்டியாதல்
$1.152

#152
முயல் இலா மதிமுகத்தினாள் ஒருவர் முயல் அரும் தவம் முயன்ற பின்
புயல் இலாத மினல் ஒத்த மெய்யில் ஒளி புரி இயக்கி-தனது அருளினால்
மயில் அனாள் தனது வடிவு அகற்றி இகல் யாகசேனனது வயினிடை
செயலில் ஆறுமுகன் நிகர் எனத்தகு சிகண்டி ஆயினள் சிறக்கவே

மேல்
*விசித்திரவீரியன் விண்ணுலகு அடைதல்
$1.153

#153
மணி முடிக்கு உரிய நிருபனும் கடி கொள் மாதர்-தங்களை மகிழ்ச்சியால்
அணி பெற தழுவி இன்ப வேலையின் அழுந்தி நாள் பல கழிந்த பின்
பிணிகளுக்கு அரசு எனும் பெரும் பிணி பிணித்து வாழ்வு இனி நணித்து என
பணி முடி புவி இரங்க வைகி ஒரு பற்று இலாத நெறி பற்றினான்

மேல்

@2 சம்பவச் சருக்கம்
*வீடுமனிடம் தாய் சத்தியவதி தேவர நீதியில்
*கொழுந்தியர்க்கு மகவு அளிக்கக் கூறல்
$2.1

#1
இறந்த மைந்தனுக்கு உரிய தென்புலத்தவர் யாவரும் களிகூர
சிறந்த நான்மறை விதியினால் உலகியல் செய்த பின் செழும் திங்கள்
மறைந்த யாமினி நிகர் என குருகுல மன் மயக்குறும் எல்லை
அறம் தவாவகை துறந்த வாள் அரசனுக்கு அன்னை மற்று இது சொன்னாள்

மேல்
$2.2

#2
மைந்த கேட்டி நின் துணைவன் வான் அடைந்த பின் மதி முதல் என தக்க
இந்த மா மரபு அரும் பனிப்பகை சிரத்து எழிலி ஒத்தது மன்னோ
முந்தை நான்மறை முதலிய நூல்களின் முறைமை நீ உணர்கிற்றி
எந்த நீர்மையின் உய்வது என்று அறிகிலேன் இடரினுக்கு இருப்பு ஆனேன்

மேல்
$2.3

#3
ஈண்டு தேவர நீதியின் கொழுந்தியர் எழில் மக பெற நின்னால்
வேண்டுமால் இது தாயர் சொல் புரிதலின் விரதமும் கெடாது என்ன
மூண்டு வான் உருமு எறிந்த பேர் அரவு என முரிந்து இரு செவி பொத்தி
மீண்டு மா நதி வயின் மிசை புரியின் என் விரதமும் தபும் என்றான்

மேல்
*முனிவரால் மகப் பேறு அடைதலே முறை’ என வீடுமன் உரைத்தல்
$2.4

#4
மழு எனும் படை இராமனால் மனுகுலம் மடிந்துழி அவர் தம்தம்
பழுது இல் மங்கையர் முனிவரர் அருளினால் பயந்தனர் மகவு என்பர்
எழுது நல் நெறி முறைமையின் விளைப்பதே இயற்கை என்று இரு கையால்
தொழுது சொன்ன பின் மனம் தெளிந்து அன்னையும் தோன்றலுக்கு உரைசெய்வாள்

மேல்
*சத்தியவதி தனக்குப் பிறந்த முதற் புதல்வன்
*வியாதனைக் குறித்துக் கூறுதல்
$2.5

#5
பருதி தந்த மா நதி மருங்கு ஒரு பகல் பராசரன் மகப்பேறு
கருதி வந்து கண்டு என்னையும் எனது மெய் கமழ் புலவையும் மாற்றி
சுருதி வாய்மையின் யோசனை பரப்பு எழு சுகந்தமும் எனக்கு ஈந்து
வருதி நீ என பனியினால் மறைத்து ஒரு வண் துறை குறை சேர்ந்தான்

மேல்
$2.6

#6
முரண் நிறைந்த மெய் கேள்வியோன் அருளினால் முஞ்சியும் புரிநூலும்
இரணியம் செழும் கொழுந்து விட்டன என இலங்கு வேணியும் தானும்
தரணி எங்கணும் வியாதன் என்று உரை கெழு தபோதன முனி அப்போது
அரணியின் புறத்து அனல் என என்-வயின் அவதரித்தனன் அம்மா

மேல்
$2.7

#7
சென்னியால் எனை வணங்கி யாதொரு பகல் சிந்தி நீ சிந்திக்கும்
முன் யான் அருகு உறுவல் என்று உரைசெய முனி_மகன் முனி மீள
கன்னி ஆக என விதித்து உடன் கரந்தனன் கையறு கனிட்டன்-தன்
பன்னியானவரிடத்தினில் அவன் வரின் பலித்திடும் நினைவு அன்றே

மேல்
*வீடுமன் ஒருப்பட, சத்தியவதி வியாதனைச் சிந்தித்து, வரச் செய்தல்
$2.8

#8
எனக்கு மைந்த கேள் நினைவு இது உன் துணைவன் என் ஏவலும் மறான் இவ்வாறு
உனக்கு நெஞ்சு உற வரும்-கொலோ அறிகிலேன் உண்மை நீ உரை என்ன
மனக்கு இசைந்தது என்று அவன் வியந்து ஏகலும் வழு அற மனம் செய்ய
கன கரும்_குழல் மகிழ்வுற முதல் பெறு காதல் மைந்தனும் வந்தான்

மேல்
*வந்த வியாதனிடம், ‘குருகுலத்திற்கு மகவு அருள்’ என, அவனும் இசைதல்
$2.9

#9
தொழுது நெற்றியில் விபூதியால் அன்னை-தன் துணை அடி துகள் நீக்கி
விழுதுடை தனி ஆல் என இருந்த தொல் வியாதனை முகம் நோக்கி
பழுது பட்டது இ குருகுலம் மீள நின் பார்வையால் கடல் ஞாலம்
முழுதும் உய்த்திடும் மகவு அருள் என பெரு முனியும் அ குறை நேர்ந்தான்

மேல்
*அம்பிகையும் அம்பாலிகையும் மகப் பெறுதல்
$2.10

#10
அழைத்த மா மகன் அப்பொழுது அவருழை அணுகுவம் என போக
தழைத்த நெஞ்சினள் அனந்தரம் இழந்த பொன் தாலி மாதரை தேற்றி
உழைத்த துன்பமும் முன் உளோர் பலர் உலகியற்கையும் உற காட்டி
இழைத்த பாவையின் இருந்தவர்க்கு அ நினைவு இசையுமாறு இசைவித்தாள்

மேல்
$2.11

#11
கனையும் நீடு இருள் அணை மிசை இருவரும் கணவனை மறவாது
நினையும் நெஞ்சினர் பயின்றுழி புல் மணம் நிறைந்து ஒளி குறைந்து ஒல்க
புனையும் மெய்யொடும் பொழுதொடும் புரி தவன் போதலும் மிக அஞ்சி
அனைய காலையில் அம்பிகை மலர்ந்திலள் அம்பகம் ஒருக்காலும்

மேல்
$2.12

#12
பராசரன் தரு முனி நினைவொடு கரு பதித்து மீளவும் சென்று
நிராசை நெஞ்சினன் அவசரத்து அவளிடை நிகழ்ந்த மெய் குறி-தன்னால்
கராசலம் பதினாயிரம் பெறு வலி காயம் ஒன்றினில் பெற்று ஓர்
இராச குஞ்சரம் பிறந்திடும் விழி புலன் இல்லை மற்று அதற்கு என்றான்

மேல்
$2.13

#13
மீளவும் தலைப்புதல்வனை நோக்கியே மிக மகிழ்வு உறா அன்னை
தூள வண் சடை தோன்றல் அம்பாலிகை சுதன் ஒருவனை நல்க
நாள பங்கய பதி என மதி என நலம் திகழ் கவிகை கீழ்
ஆள அம் புவி அவன் என நினைந்து இனி அளிக்க என்று அருள்செய்தாள்

மேல்
$2.14

#14
கிளைத்திடும் துகிர் கொடி நிகர் சடையவன் கேட்டு நுண் இடையே போல்
இளைத்திடும் கவின் மெய் உடையவள் மனை எய்தலும் இவனை கண்டு
உளைத்திடும் கருத்துடன் வெரீஇ வரு பயன் ஒன்றையும் நினையாது
விளைத்திடும் கரு விளையும் முன் மடவரல் மெய் எலாம் விளர்த்திட்டாள்

மேல்
$2.15

#15
அரும் தபோநிதி அவளிடத்தினும் கரு அருளி அ கணத்து ஏகி
இருந்தவாறு தன் அன்னையோடு இனிது உரைத்து இமையவன் என சென்றான்
பெரும் தராதலம் திறலினால் ஒரு தனி பெறும் முறையவன் பெற்ற
முருந்த வாள்_நகை மருட்சியால் விளர்த்திடும் முழுவதும் உடல் என்றே

மேல்
*குருடனாகப் பிறந்த திருதராட்டிரனையும், உடல் விளர்த்துப்
*பிறந்த பாண்டுவையும் சத்தியவதி காணுதல்
$2.16

#16
வேத புங்கவன் அகன்றுழி வலியுடை விழி இல் மைந்தனும் யாரும்
பாத பங்கயம் தொழ தகும் திறலுடை பாண்டு என்பவன் தானும்
பூதலம் பெரும் களிப்புற குருகுலம் பொற்புற பொழுது உற்று
சாதர் ஆயினர் அ இரு மகவையும் சத்தியவதி கண்டாள்

மேல்
*உவகை அற்ற சத்தியவதி மீண்டும் வியாதனை
*அழைத்து மகவு அருளவேண்டுதலும், அம்பிகையிடம்
*வியாதன் செல்ல, அவள் தனது தோழியை அனுப்புதலும்
$2.17

#17
காணலும் பெரிது உவகை அற்று இன்னமும் கருதுதும் என எண்ண
சேண் அடைந்த மா முனிவரன் வருதலும் சிந்தனை உற சொல்ல
நாண் நலம் திகழ் அம்பிகையிடத்து இவன் நண்ணலும் அவள் அஞ்சி
பூண் நலம் பெறு தோழி மற்று ஒருத்தியை பூ அணை அணைவித்தாள்

மேல்
*விதுரன் பிறத்தல்
$2.18

#18
வந்த காலையில் மனம் கலந்து அநங்க நூல் மரபின் மெய் உற தோய்ந்து
சந்தனாகரு பரிமள தன தடம் தயங்கு மார்பினில் மூழ்க
இந்திராதிபர் போகம் உற்று இசைதலும் இன்பம் முற்றிய பின்னர்
அந்தணாளன் அ இரவிடை மீள வந்து அன்னையோடு உரைசெய்வான்

மேல்
$2.19

#19
அம்பிகை கொடி தோழியை விடுத்தனள் அவள் புரி தவம்-தன்னால்
உம்பரில் பெறு வரத்தினால் தருமன் வந்து உதித்திடும் பதம் பெற்றாள்
வெம் படை தொழில் விதுரன் என்று அவன் பெயர் மேல் இனி மகவு ஆசை
எம் புணர்ப்பினான் ஒழிக என வன நெறி ஏகினன் விடை கொண்டே

மேல்
*மூன்று புதல்வர்களும் கலை பல பயில்தல்
$2.20

#20
மரு வரும் குழல் தாசி பெற்றெடுத்த இ மைந்தனும் முதல் பெற்ற
இருவரும் குருகுல பெரும் கிரி மிசை இலங்கு மு குவடு என்ன
பொரு அரும் திறல் படைகளும் களிறு தேர் புரவியும் புவி வேந்தர்
வெருவரும்படி பல கலைவிதங்களும் வீடுமனிடம் கற்றார்

மேல்
*திருதராட்டிரனுக்கு வீடுமன் முடி சூட்டுதல்
$2.21

#21
ஆன திக்கு இரு நாலும் வந்து அடி தொழ அம்பிகை மகன்-தன்னை
வான்_நதி திரு மகன் ஒரு தினத்தினில் மங்கல முடி சூட்டி
பால் நிற திறல் பாண்டுவே சேனையின் பதி முழு மதி மிக்க
கான் நிற தொடை விதுரனே அமைச்சன் இ காவலற்கு என வைத்தான்

மேல்
*காந்தாரியைத் திருதராட்டிரன் மணத்தல்
$2.22

#22
நதி அளித்தவன் ஏவலின் தூதர் போய் நயந்து உடன் காந்தார
பதி அளித்த மெய் கன்னியை தருக பூபதிக்கு என மணம் நேர்ந்தார்
மதி அளித்த தொல் குலத்தவன் விழி இலா மகன் என தமர் சொல்ல
விதி அளித்தது என்று உளம் மகிழ்ந்தனள் வடமீன் என தகும் கற்பாள்

மேல்
$2.23

#23
இமைத்த கண் இணை மலர்ந்து இனி நோக்கிலேன் யான் ஒருவரை என்று
சமைத்த பட்டம் ஒன்றினில் பொதி பெதும்பையை தந்தையும் தனையோரும்
அமைத்து அரும் குல முனிவரும் மறை முறை அரும் கடி விளைத்திட்டார்
சுமை தராபதி மதி இவள் உரோகிணி என்னவே தொழ தக்காள்

மேல்
*குந்தியின் சரிதை சூரன் மகளாகிய இவள் குந்திபோசர் இல்லத்தில் வளர்தல்
$2.24

#24
புந்தியால் அரும் கலை_மகள் பொற்பினால் பூம் திரு புனை கற்பால்
அந்தி-வாய் அருந்ததி பெரும் பொறையினால் அவனிமான் நிகர் என்ன
குந்திபோசர் இல் சூரன் என்பவன் மகள் குருகுலம் தழைத்து ஓங்க
வந்து யாவரும் பிரதை என்று அடி தொழ மதி என வளர்கின்றாள்

மேல்
*குந்தி துருவாசருக்குத் தொண்டு செய்து, மந்திரம் பெறுதல்
$2.25

#25
அந்த மாது இள மட மயில் என விளையாடும் எல்லையில் என்றும்
முந்த மா தவம் புரி துருவாச மா முனியும் அ வழி வந்தான்
வந்த மா தவன் அடிபணிந்து இவனை நீ வழிபடுக என தந்தை
இந்த மா தவன் மொழிப்படி புரிந்து குற்றேவலின் வழி நின்றாள்

மேல்
$2.26

#26
கழங்கு கந்துகம் அம்மனை ஆடலும் கனக மென் கொடி ஊசல்
வழங்கு தண் புனல் ஆடலும் துறை வரி வண்டல் ஆடலும் மாறி
முழங்கு சங்கினம் தவழ்தரு பனி நிலா முன்றிலும் செய்குன்றும்
தழங்கு செம் சுரும்பு எழு மலர் சோலையும் தனித்தனி மறந்திட்டாள்

மேல்
$2.27

#27
தொழுது தாளினை செய்ய பஞ்சு எழுதினும் தோளினை செழும் தொய்யில்
எழுதினும் பொறா இளமையள் முதுக்குறைந்து யாதுயாது உரைசெய்தான்
முழுது நெஞ்சு உறு கோபமே மிக மிகும் முனிவரன் மகிழ்வு எய்த
பழுது இல் அன்புடன் இயற்றினள் ஒன்றுபோல் பன்னிரு மதி சேர

மேல்
$2.28

#28
பிரதை-தன்னை அ தபோநிதி வருக என பெரிது உவந்து எனது ஏவல்
அரிது எனாது நீ இயற்றினை நெடும் கடல் அவனி மேல் யார் வல்லார்
தெரிவை கேள் என செவிப்படுத்து ஒரு மறை தேவரில் யார் யாரை
கருதி நீ வர அழைத்தனை அவரவர் கணத்து நின் கரம் சேர்வார்

மேல்
$2.29

#29
தம்மை ஒப்பது ஒர் மகவையும் தருகுவர் தவ பயன் என பெற்ற
இ மறை பயன் இம்மையில் உனக்கு வந்து எய்தியது என கூறி
அ முனி பெரும் கடவுளும் தபோவனம் அடைந்தனன் அவளும் தன்
செம் மனத்தொடு பயின்று அர_மகள் என செல்வ மா மனை சேர்ந்தாள்

மேல்
*மந்திர பலத்தைக் குந்தி பரீட்சித்தல்
$2.30

#30
ததையும் வண்டு இமிர் கரும் குழல் கன்னி அ தனி மறை பயன் காண்பான்
சுதை நிலா எழு மாளிகை தலத்திடை தூ நிலா எழு முன்றில்
இதைய மா மலர் களிக்க நின்று அன்பினோடு இயம்பலும் எதிர் ஓடி
உதைய பானுவும் மலர் மிசை அளி என ஒரு கணம்-தனில் வந்தான்

மேல்
*சூரியன் வரவும், குந்தியின் அச்சமும்
$2.31

#31
செம்பொன் ஆடையும் கவச குண்டலங்களும் திகழ் மணி முடி ஆரம்
பைம் பொன் அங்கதம் புனை அவயவங்களும் பவள மேனியும் ஆகி
வம்பு அறாத மெய் பதுமினி என செழு மறை நுவல் மட பாவை
அம்புயானனம் மலர்வுற கரங்களால் அணைத்தனன் அழகு எய்த

மேல்
$2.32

#32
கன்னி கன்னி என் கை தொடேல் மடந்தையர் கற்பு நீ அறிகிற்றி
என்ன மெய் குலைந்து அலமர நாணினாள் இதயமும் வேறு ஆகி
அன்ன மெல்_நடை அஞ்சினள் அரற்றலும் அருகு உறான் விட போய் நின்று
உன்னி என்னை நீ அழைத்தது என் பெற என உருத்தனன் உரைசெய்வான்

மேல்
*சூரியன் இதவுரை கூறி, குந்தியை அணைதல்
$2.33

#33
உரு கொள் சாயையும் உழையும் அங்கு அறிவுறாது ஒளித்து நான் வரவே நீ
வெருக்கொளா எனை மறுத்தனை உனக்கு முன் மெய் மறை உரைசெய்த
குருக்கள் என் படான் என் படாது அரிவை நின் குலம் என கொடி திண் தேர்
அருக்கன் மெய்யினும் மனம் மிக கொதித்தனன் ஆயிரம் மடங்காக

மேல்
$2.34

#34
உனை அளித்தவன் முனியும் என்று அஞ்சல் நீ உடன்படும் உணர்வால் நல்
வினை அளித்தது என்று அணைதியேல் இன்பமும் விழைவுறும்படி துய்த்தி
எனை அளித்த தொல் அதிதியின் உனக்கு இசை எய்துமாறு இகல் மைந்தன்
தனை அளித்தி மற்று என்னினும் இரு நிலம் தாள் தொழ தக்கோனே

மேல்
$2.35

#35
ஆயிரம் கரத்து அதிபதி புகழ்ந்து நூறாயிரம் முகமாக
போய் இரந்து இவை உரைத்த பின் மதர் விழி புரிவும் மூரலும் நல்கி
வேய் இரும் தடம் தோள் இடம் துடித்திட மெல்_இயல் மதன் வேத
பாயிரம்-கொல் என்று ஐயுற அவனொடும் பனி மலர் அணை சேர்ந்தாள்

மேல்
$2.36

#36
தினகரன் சுடர் வடிவமும் அமிர்து எழு திங்களின் வடிவாக
தன தடம் திரு மார்பு உற தழீஇய பின் தையல் தன் நினைவு எய்த
மனம் மகிழ்ந்ததும் வந்ததும் மணந்ததும் வரம் கொடுத்ததும் எல்லாம்
கனவு எனும்படி கரந்தனன் பெருந்தகை கன்னியும் கரு கொண்டாள்

மேல்
*பெற்ற மகனைக் குந்தி பெட்டியில் பொதிந்து கங்கையில் விடுதல்
$2.37

#37
அந்தி ஆர் அழல் என பரிதியின் ஒளி அடைந்த பின் அணி மாட
குந்திபோசன் மா மட மகள் எழில் நலம் கொண்ட கொள்கையள் ஆகி
இந்திராதிபர் அவர் அவர் முகம் மலர்ந்து இரந்தன தர தக்க
மைந்தனானவன் ஒருவனை பயந்தனள் மாசு இலா மணி என்ன

மேல்
$2.38

#38
சூரன் மா மகள் சூரனது அருளினால் துலங்கு கன்னிகை ஆகி
வார மா மணி கவச குண்டலத்துடன் வரும் மகன் முகம் நோக்கி
பார மா மரபினில் பிறந்தவர் மொழி பழுதினுக்கு அழுது அஞ்சி
பூர மா நதி பேடகத்திடை நனி பொதிந்து ஒழுக்கினள் மன்னோ

மேல்
*கன்னனைச் சூதபுங்கவன் கண்டு எடுத்து, வளர்த்தல்
$2.39

#39
குஞ்சரத்து இளம் கன்று என சாப வெம் கோளரி என பைம் பொன்
பஞ்சரத்திடை வரு திரு மதலையை பகீரதி எனும் அன்னை
அம் சர திரை கரங்களால் எடுத்து எடுத்து அசையவே தாலாட்டி
வெம் சர சிலை சூதநாயகன் பதி மேவுவித்தனள் அன்றே

மேல்
$2.40

#40
கோடு அகப்பட வரும் புனல் விழைவினால் குளிர் துறை மருங்கு உற்றோர்
பேடகத்திடை ஒழுகிய தினபதி பெரும் குமரனை கண்டு
சூடக கை அம்புய மலர் இராதையும் சூத புங்கவன்-தானும்
ஆடக குலம் அடைந்தது ஒத்து அரும் பெறல் ஆதரத்தொடு கொண்டார்

மேல்
*பரசுராமனிடம் கன்னன் கல்வி பெற்றுத் திகழ்தல்
$2.41

#41
அதிரதன் திரு மனையினில் விழைவுடன் அரும்பிய பனி கற்றை
மதி எனும்படி வளர்ந்து திண் திறல் புனை மழுவுடை வர ராமன்
பதயுகம் தொழூஉ வரி சிலை முதலிய பல படைகளும் கற்று
கதிரவன் தரு கன்னன் என்று உலகு எலாம் கைதொழும் கவின் பெற்றான்

மேல்
*குந்தியின் சுயம்வரம்
$2.42

#42
கன்னல் பயந்த கதிர் வெம் முலை கன்னி-தன்னை
முன்னர் பயந்தோன் முகவோலை உவகையோடு
மன்னர்க்கு எழுத மட பாவை வரிக்கும் என்று
செல் நல் படை வேல் முடி மன்னவர் சென்று சேர்ந்தார்

மேல்
*பாண்டுவுக்குக் குந்தி மாலையிடுதல்
$2.43

#43
உருவம் சிறந்து பல கோளும் உதிக்குமேனும்
மருவும் குமுதம் மதி கண்டு மலருமா போல்
பருவம் செய் பைம் பொன் கொடி அன்னவள் பாண்டு என்னும்
நிருபன்-தனக்கே மணம் கூர் பெரு நேயம் உற்றாள்

மேல்
*மத்திர ராசன் கொடுக்க, அவன் புதல்வி
*மாத்திரியையும் பாண்டு மணத்தல்
$2.44

#44
தானே உவந்து தனி தார் புனை தையல் வென்றி
ஆன் ஏறு அனையான் உயிர்க்கு ஆர் அமிர்து ஆன பின்னர்
யானே தருவன் என மத்திரராசன் நல்க
மானே அனைய விழியாளை வதுவைசெய்தான்

மேல்
*இருமனைவியருடன் பாண்டு இமயமலைப் பக்கம்
*கானில் விளையாடச் செல்லுதல்
$2.45

#45
எண் உற்ற சூரன் இகல் மத்திரராசன் என்ன
மண் உற்ற சீர்த்தி வய மன்னர் மகளிரோடும்
கண் உற்ற கானில் விளையாடல் கருதி அம் பொன்
விண் உற்ற சாரல் இமய புறம் மேவினானே

மேல்
*பாண்டு வேட்டையாடி இளைப்பாறுதல்
$2.46

#46
கானத்தில் உள்ள கலைமான் இனம் காட்சி ஆமா
ஏன திரள் வெம் புலி எண்குடன் யாளி சிங்கம்
தான பகடு முதலாய சனங்கள் எல்லாம்
மான சரத்தால் கொலைசெய்தனன் வாகை வில்லான்

மேல்
$2.47

#47
மெய்யில் தெறித்த குருதி துளி மேருவில்லி
சையத்து அலர்ந்த கமழ் குங்கும தாது மான
கையில் சிலையோடு உலவும் கழல் காளை கேதம்
பைய தணித்தான் இமநாக பவனன் என்பான்

மேல்
*மான் உருக்கொண்டு போகம் துய்த்த
*முனிவன்மேல் பாண்டு அம்பு எய்து, சாபம் பெறுதல்
$2.48

#48
பொன் அம் கழலான் எதிர் அ இடை போகம் வேட்டு
மன்னும் கலையும் பிணை மானும் மகிழ்ச்சி கூர
மின்னும் கணையால் இவன் எய்திட வீழ்ந்த போதில்
முன் நின்றது அந்த உயிர் வந்து ஒர் முனிவன் ஆகி

மேல்
$2.49

#49
நாரிக்கு ஒரு கூறு அரனார் முதல் நல்க எய்த
வேரி கணையால் மிக நொந்துழி வேடம் மாறி
பூரித்த காமநலம் எய்து பொழுது நின் கை
சோரி கணையால் அறையுண்டு உயிர் சோர்ந்து வீழ்ந்தேன்

மேல்
$2.50

#50
என் போல இன்பத்திடை நீயும் இறத்தி என்னா
அன்போடு இறந்தான் முதல் கிந்தமன் ஆன பேரோன்
தன் போல் மகிழ்நனுடனே செம் தழலின் எய்தி
பின் போயினள் மென் பிணை ஆன அ பேதை-தானும்

மேல்
*மனைவியருடன் பாண்டு தபோவனம் சென்று, தவம் செய்தல்
$2.51

#51
நினைவு அற்ற சாப நிலை பெற்ற பின் நெஞ்சின் வேறு ஓர்
இனைவு அற்று நன்மை இதுவே இனி என்று தேறி
மனை வைத்த காதல் மடவாருடன் மன்றல் வேந்தன்
முனை வைத்த வாய்மை முனி கானம் முயன்று சேர்ந்தான்

மேல்
*பாண்டுவின் தவ நிலை
$2.52

#52
காண்டற்கு அரிய மணி பைம் பொன் கலனொடு ஆடை
வேண்டற்கு அரிய விடயங்களின் வேடம் மாற்றி
தீண்டற்கு அரிய திரு மேனியன் தேவராலும்
பூண்டற்கு அரிய பெரு மா தவம் பூண்டுகொண்டான்

மேல்
$2.53

#53
உற்று புறத்து பகை ஆடி உடன்ற எல்லாம்
செற்று புவியில் தனி ஆழி செலுத்து நீரான்
பற்று அற்ற யோக படையால் உட்பகைகள் ஆறும்
முற்ற துறந்து பெரு ஞான முதல்வன் ஆனான்

மேல்
$2.54

#54
ஆர குழம்பில் அளைந்து ஆரம் அணிந்து விம்மும்
பார குசங்கள் பல தைவரும் பான்மை நீங்கி
நார கமல கர சோதி நகங்கள் மீள
ஈர குசங்கள் கிழிக்கும் தொழிற்கு ஏற்றவாலோ

மேல்
$2.55

#55
நாம கலவி நலம் கூர நயந்து நாளும்
காம கனலை வளர்க்கின்ற கருத்து மாற்றி
தாம குழலார் இருவோரொடு தானும் ஒன்றி
ஓம கனலே வளர்த்தான் உணர்வு உண்மை கண்டான்

மேல்
$2.56

#56
இவ்வாறு அரிய தவம் நாள்-தொறும் ஏறும் எல்லை
கை வாள் ஒழிந்து சமித்து ஏந்திய காவல் மன்னன்
மை வாள் நெடும் கண் வர சூரன் மகளை நோக்கி
செ வாய் மலர்வான் புவி மேல் உறை தெய்வம் அன்னான்

மேல்
*பாண்டு குந்திக்கு மகப் பேற்றின் சிறப்பை எடுத்துரைத்தல்
$2.57

#57
பூம் தார் வியாதமுனி தாள் இணை போற்றி அன்பு
கூர்ந்து ஆர்வம் முற்றி அவன்-பால் வரம் கோடல் எய்தி
காந்தாரி நூறு மகவு ஆன கருப்பம் ஒன்று
வேந்து ஆதரிக்க தரித்தாள் வடமீனொடு ஒப்பாள்

மேல்
$2.58

#58
கல்லா மழலை கனி ஊறல் கலந்து கொஞ்சும்
சொல்லால் உருக்கி அழுது ஓடி தொடர்ந்து பற்றி
மல் ஆர் புயத்தில் விளையாடும் மகிழ்ச்சி மைந்தர்
இல்லாதவர்க்கு மனைவாழ்வின் இனிமை என் ஆம்

மேல்
$2.59

#59
மெய் தானம் வண்மை விரதம் தழல் வேள்வி நாளும்
செய்தாலும் ஞாலத்தவர் நற்கதி சென்று சேரார்
மை தாழ் தடம் கண் மகவின் முகம் மன்னு பார்வை
எய்தாது ஒழியின் பெறும் இன்பம் இவணும் இல்லை

மேல்
*’புத்திரப் பேற்றை நீ உண்டாக்கி அருள்’ என்ற
*பாண்டுவின் கூற்றைக் குந்தி மறுத்து மொழிதல்
$2.60

#60
மென் பாலகரை பயவாதவர் மெய்ம்மையாக
தென்பாலவர்-தம் பசி தீ நனி தீர்க்கமாட்டார்
என்-பால் நிகழ்ந்த வினையால் இடர் எய்தி நின்றேன்
நின்-பால் அருள் உண்டு எனின் உய்வன் நெடும் கண் நல்லாய்

மேல்
$2.61

#61
இல் வாழ்பவர்க்கு மடவார் அலது யாவர் இன்ப
நல் வாழ்வு தேசு புகழ் யாவும் நடத்துகிற்பார்
தொல் வானவரின் மறையோரின் துறக்க பூமி
செல்வார் பெறும் பேறு இனி நீ அருள்செய்தி என்றான்

மேல்
$2.62

#62
பொற்பாவை கேள்வன் மொழி கேட்டலும் பொன்ற நாணி
சொற்பால அல்லா பழி கூர் உரை சொல்வது என்னே
வெற்பு ஆர் நதிகள் சிறு புன் குழி மேவின் அன்றோ
இற்பாலவர்க்கு பிறர் மேல் மனம் ஏற்பது என்றாள்

மேல்
*பின்னும் பாண்டு வற்புறுத்த, குந்தி தான் கன்னிகையாய்
*இருந்தபோது பெற்ற மந்திரத்தைப் பற்றி உரைத்தல்
$2.63

#63
பின்னும் பலகால் வருட்டி பிறர் பெற்றி காட்டி
மன்னன் புகல மட மாது மறுக்கமாட்டாள்
கன்னன் பிறந்தது ஒழிய செழும் கன்னி ஆகி
முன்னம் பெறு மா மறை மேன்மை மொழிந்திட்டாளே

மேல்
*பாண்டு உடன்பட, குந்தி தருமராசன் அருளால்
*உதிட்டிரனைப் பெறுதல்
$2.64

#64
மரு மாலை வல்லி உரை கேட்டு மகிழ்ச்சி கூரும்
பெரு மா தவத்தோன் பணித்து ஏவிய பின்னர் முன்னர்
தருமாதிபனை கருத்தால் மட தையல் உன்னி
அரு மா மறையால் அழைத்தாள் மற்று அவனும் வந்தான்

மேல்
$2.65

#65
வந்தித்த தெய்வம் எதிர் வந்துழி மன்னு கேள்வன்
சிந்தித்த சிந்தையினளாய் மலர் சேக்கை சேர்ந்து
குந்தி தெரிவை நிறை மா மதி கூட்டம் உற்ற
அந்தி தெரிவை நிகர் என்ன அழகின் மிக்காள்

மேல்
$2.66

#66
சிவம் உற முகூர்த்தம் வாரம் தினம் திதி கரணம் யோகம்
நவம் என வழங்கு கோளும் நல் நிலை நின்ற போதில்
அவனியை ஒரு கோல் ஓச்சி ஆளும் என்று அறிவின் மிக்க
தவ நெறி முனிவர் கூற பிறந்தனன் தருமன் மைந்தன்

மேல்
$2.67

#67
உதிட்டிரன் பிறந்த காலை உலகினில் உயர்ந்தோர் யாரும்
வதிட்டனை முதலா எண்ணும் முனிவரும் வான் உளோரும்
நிதி பயன் பெற்றார் போல நேயமோடு உவகை கூர்ந்தார்
மதித்தன நிமித்தம் யாவும் மங்கலம் நிகழ்ந்த அன்றே

மேல்
*மைந்தன் முகம் நோக்கிப் பாண்டு மகிழ்தல்
$2.68

#68
தண் பிறை எழுச்சி கண்ட சலநிதி எனவே மைந்தன்
பண்புடை வதனம் நோக்கி பார்த்திவன் பாண்டு என்பான்
கண் பனி துளிப்ப நெஞ்சம் கனிந்து இனிது உருக மேனி
வண் புளகு அரும்ப மேன்மேல் வரம்பு இலா மகிழ்ச்சி கூர்ந்தான்

மேல்
*உதிட்டிரன் பிறந்த செய்தி அறிந்த காந்தாரி பொறாமையுற்று,
*கல்லால் தன் வயிற்றில் மோத, அவள் கொண்ட கருச் சிதைதல்
$2.69

#69
அற்றனள் துயரம் எல்லாம் அரும் தவ பயனால் மைந்தன்
பெற்றனள் குந்தி என்னும் பேர் உரை கேட்ட அன்றே
உற்றனள் பொறாமை கல்லால் உதரம் உள் குழம்புமாறு
செற்றனள் தனது கேடும் ஆக்கமும் சிந்தியாதாள்

மேல்
$2.70

#70
மை அறு சுபலன் கன்னி வயினிடை கருப்பம் சேர
பையொடு குருதி பொங்க பார் மிசை விழுந்ததாக
செய்யவன் விழுந்த திக்கில் செக்கர் வான் என்ன சென்று
மெய்யுடை அரிய கேள்வி வேள்வி கூர் வியாதன் கண்டான்

மேல்
*வியாதன் வந்து, சிதைந்த கருவை நூறு கூறாக்கி நூறு தாழியில்
*இட்டு, எஞ்சிய தசையையும் ஒரு தாழியில் வைத்து, ‘உரு நிரம்பும்
*வரை கையால் தொடாதே’ என்று அருளிப் போதல்
$2.71

#71
சஞ்சலமான கோச தசையினை தாழி-தோறும்
எஞ்சல ஆக நூறு கூறு செய்து இழுதில் ஏற்றி
நெஞ்சு அலர் கருணையாளன் நின்ற அ குறையும் சேர்த்தி
அம் சில் வார் குழலி ஆக என்று ஆங்கு ஒரு கடத்தில் வைத்தான்

மேல்
$2.72

#72
கரு உறு தாயை நோக்கி கையறும் என்று கன்றி
வெருவுறல் கற்பின் மிக்காய் வேறு செய் தசைகள் யாவும்
உரு உற நிரம்பி தாமே உற்பவிப்பளவும் கையால்
மருவுறல் வழுவுறாது என் வரம் என வரதன் போனான்

மேல்
*காந்தாரி கருக் கலங்களைப் பரிவுடன் பாதுகாத்தல்
$2.73

#73
காம்பு என நிறத்த தோளாள் கரு வயிற்று இருப்பது ஒப்ப
தேம் பயில் நறு நெய் பெய்த கலங்களை சேமமாக
ஆம் பரிவுடனே ஆற்றி ஈற்று அளை அடைந்து வைகும்
பாம்பு என பருவம் நோக்கி இருந்தனள் பழுது இலாதாள்

மேல்
*குந்தி வீமனைப் பெறுதல்
$2.74

#74
ஈண்டு உறு நிகழ்ச்சி கேட்டே யாதவன் மகளை நோக்கி
பாண்டு மன் இரந்து பல்கால் பணித்தலும் பவனன்-தன்னை
மீண்டும் அ மறையால் உன்னி அழைத்தனள் விரைவின் ஓடி
ஆண்டு வந்து அவனும் பூத்த கொடி அனாள் ஆகம் தோய்ந்தான்

மேல்
$2.75

#75
நெஞ்சு உற மணந்து மீள நெடும் கலைவாகன் ஏக
செம் சுடர் உச்சி எய்தி சிறந்தது ஓர் முகூர்த்தம்-தன்னில்
அஞ்சனை அளித்த பொன் தோள் அனுமனே உவமை என்ன
வெம் சின வீமன்-தன்னை பயந்தனள் விரதம் மிக்காள்

மேல்
$2.76

#76
தண் பரிமளம் மென் சாயல் தந்தையும் திசைகள்-தோறும்
எண் பெறும் உயிர்கட்கு எல்லாம் இதம் உறு பொலிவின் வீச
நண்புடை அனலன்-தானும் நலம் மிகு நண்பு தோன்ற
பண்பு உற வலம் வந்து ஓங்கி பரிவுடன் விளக்கம் செய்தான்

மேல்
*வீமன் தோன்றியதற்கு முன் நாளில் துரியோதனன் தோன்றுதல்
$2.77

#77
அன்ன நாள் அனிலன் மைந்தன் பிறந்தனனாக அற்றை
முன்னை நாள் அருக்கன் வேலை முழுகிய முகூர்த்தம்-தன்னில்
இன்ன நாள் உருவம் முற்றி எழில் பெறும் என்று முன்னோன்
சொன்ன நாள் வழுவுறாமல் சுயோதனன் தோன்றினானே

மேல்
$2.78

#78
வாரியின் அதிர்ந்து விம்மும் மங்கல முழவம் மேன்மேல்
ஓரியின் குரலால் ஓதை ஒடுங்கின இடங்கள்-தோறும்
பாரிய குலத்தோர் கண்ணின் உவகை நீர் பனிக்கும் முன்னே
சோரி அந்தரத்தினின்றும் சொரிந்தது சோனை மேகம்

மேல்
*துரியோதனன் தம்பியரும், தங்கை துச்சளையும் தோன்றுதல்
$2.79

#79
கோள்களின் நிலையால் தீமை கொண்டன முகூர்த்தம்-தன்னில்
தேள்களின் கொடிய மற்றை சிறுவரும் சேர ஓரோர்
நாள்களில் பிறந்த பின்னர் நங்கையும் ஒருத்தி வந்தாள்
தோள்களின் கழையை வென்ற துச்சளை என்னும் பேராள்

மேல்
*காந்தாரியின் பெரு மகிழ்ச்சி
$2.80

#80
பின்னிய புதல்வராலும் பிறந்த மென் புதல்வியாலும்
துன்னிய மகிழ்நனாலும் துலங்கிய சுபலன் பாவை
தன் நிகர் பரிதியாலும் சத இதழாலும் செம்பொன்
கன்னிகையாலும் சோதி கலந்த செம் கமலம் போன்றாள்

மேல்
*பங்குனி உத்தரத்தில் குந்தி விசயனைப் பெறுதல்
$2.81

#81
பால் மொழி குந்தி மீண்டும் பாண்டுவின் ஏவல் பெற்று
வான் மொழி மறையால் உன்னி வானவர்க்கு அரசை நோக்க
மேல் மொழிவது மற்று என்-கொல் விடுவனோ விரைவின் வந்து அ
தேன் மொழி தெரிவை மெய்யும் சிந்தையும் களிக்க சேர்ந்தான்

மேல்
$2.82

#82
எங்கும் நல் நிமித்தம் செல்ல இரு நிலம் மகிழ்ச்சி கூர
பங்குனி நிறைந்த திங்கள் ஆதபன் பயிலும் நாளில்
வெம் குனி வரி வில் வாகை விசயனும் பிறந்தான் வென்றி
பங்குனன் என்னும் நாமம் பகுதியால் படைத்திட்டானே

மேல்
$2.83

#83
கற்பக மலர்கள் சிந்தி கடவுளர் கணங்கள் ஆட
வெற்பக முனிவர் ஈண்டி மங்கல வேதம் பாட
பொற்பு அக முழவு விம்ம புரி வளை முழங்கி ஆர்ப்ப
நற்பகல் இது என்று எல்லா உலகமும் நயந்த அன்றே

மேல்
*பாண்டுவின் கட்டளைப்படி குந்தி மந்திரத்தை மாத்திரிக்கு
*உரைத்தலும்,மாத்திரி நகுல சகாதேவர்களைப் பெறுதலும்
$2.84

#84
இறைவனும் மகிழ்ந்து பின்னும் யாதவிக்கு உரைப்ப அந்த
மறையினை முறையின் பெற்ற மத்திரராசன் கன்னி
குறைவு அற இருவர் வேண்டும் குமரர் என்று உன்னி நின்றாள்
நிறையுடை இரவி_மைந்தர் இருவரும் நினைவின் வந்தார்

மேல்
$2.85

#85
மரு வரும் குழலி ஆயும் மறையினால் வரிசை பெற்ற
இருவரும் ஒருவர் போல இன்புற மணந்த போதில்
பருவரல் யாதும் இல்லா பாலகர் இருவர் சேர
கரு விளைந்து உதித்தார் யாரும் கண் என காணும் நீரார்

மேல்
*ஐந்து மைந்தரால் பாண்டு அகம் மிக மகிழ்தல்
$2.86

#86
சசி குல நகுலன் என்றும் தம்பி சாதேவன் என்றும்
விசயனோடு எண்ணும் வீமன் மேதகு தருமன் என்றும்
அசைவு அறு சிங்க சாபம் அனையவர் ஐவராலும்
வசை அறு தவத்தின் மிக்கான் மகிழ்ச்சியால் வாழ்வு பெற்றான்

மேல்
*ஐவரும் வளர்ந்த வகை
$2.87

#87
தாதியர் மருங்கும் தந்தை தட மணி மார்பும் பெற்ற
பேதையர் கரமும் நீங்கா பெற்றியின் வளர்ந்த பின்னர்
போதகம் மடங்கல் புல்வாய் புலி முதல் விலங்கொடு ஓடி
வேதியர் முன்றில்-தோறும் விழை விளையாடல் உற்றார்

மேல்
$2.88

#88
செய் தவ முனிவர்-தம்மால் சிகையுடன் புரிநூல் சாத்தி
கைதவம் இன்றி எண் எண் கலை கடல் கரையும் கண்டு
மெய் தவம் விளங்க வேழவில்லியும் விழைந்து நோக்க
மை தவழ் சிகரி அன்ன வளர்ச்சியின் வனப்பின் மிக்கார்

மேல்
$2.89

#89
மார்பினும் அகன்ற கல்வி வனப்பினும் நிறைந்த சீர்த்தி
போர் வரு தெரியல் மாலை புயத்தினும் உயர்ந்த கொற்றம்
சீர் தரு வாய்மை மிக்க கண்ணினும் செம் கை வண்மை
பார் வளம் சுரக்கும் செல்வ பரப்பினும் பரந்த அன்றே

மேல்
*வசந்த காலத்தின் வருகையும் எழிலும்
$2.90

#90
ஆரமும் ஆர சேறும் அரும் பனிநீரும் பூவும்
ஈர வெண் மதி நிலாவும் இதம் பெறு தென்றல் காலும்
ஓர் உயிர் இரண்டு மெய்யாய் உருகுவார் உருகும் வண்ணம்
மாரனை மகுடம் சூட்ட வந்தது வசந்த காலம்

மேல்
$2.91

#91
விது நலம் பெறு கா எங்கும் மெய் சிவப்பு ஏற வண்டு
புதுமையின் முரன்று மொய்ப்ப புது மணம் பரந்து உலாவ
கதுமென தலை நடுங்க கால் தடுமாறிற்று அம்மா
மது அயர்ந்தவரில் யாவர் மண்ணின் மேல் மயக்குறாதார்

மேல்
$2.92

#92
பைம் தடம் தாளால் முன்னம் பருகிய புனலை மீள
செம் தழல் ஆக்கி அம் தண் சினை-தொறும் காட்டும் சீரால்
முந்திய அசோகு சூதம் முதலிய தருக்கள் எல்லாம்
இந்திரசாலம் வல்லோர் இயற்கையின் இயற்றுமாலோ

மேல்
$2.93

#93
பரந்து எழு சூத புட்ப பராகம் நல் இராகம் மிஞ்ச
முரண்படு சிலை வேள் விட்ட மோகன சுண்ணம் போன்ற
புரிந்த தொல் யோக மாக்கள் புந்தி நின்று உருக தொட்ட
அரும் தழல் கணைகள் போல அலர்ந்தன அசோக சாலம்

மேல்
*வசந்த இன்பத்தில் ஈடுபட்ட பாண்டு,
*சாபத்தை மறந்து, மாத்திரியுடன் கூடி, மாள்தல்
$2.94

#94
வேனிலின் விளைவினாலும் வேனிலான் விழவினாலும்
மா நலம் திகழும் மூரல் மாத்திரி வனப்பினாலும்
தான் நலம் உறுதல் எண்ணி சாபமும் மறந்து மற்று அ
பானல் அம் கண்ணாளோடும் பாண்டுவும் பரிவு கூர்ந்தான்

மேல்
$2.95

#95
அரும் தளிர் நயந்து நல்கி அலகுடன் அலகு சேர
பொருந்தும் முன் அவசம் ஆகி போகம் மென் குயிலும் பேடும்
இருந்து மெய் உருகும் காவில் இரதியும் மதனும் என்ன
வருந்திய காதலோடும் மாதவி பந்தர் சேர்ந்தார்

மேல்
$2.96

#96
பஞ்சின் மெல் அடியினாளும் கணவனும் பழம் கணோட்டம்
நெஞ்சினை நலிய மேன்மேல் நேயம் உற்று உருகி ஆங்கண்
எஞ்சிய காலம் எல்லாம் என் செய்தேம் என்றுஎன்று எண்ணி
வெம் சிலை அநங்க வேத முறைமையால் மேவினாரே

மேல்
$2.97

#97
பூ இயல் அமளி பொங்க புணர் முலை புளகம் ஏற
மேவிய கலவி இன்பம் மெய் உறு மகிழ்ச்சி முற்றி
காவி அம் கண்ணி கேள்வன் கமழ் வரை மார்பின் அன்போடு
ஓவியம் எனவே உள்ளம் உருகினள் அயர்ந்து வீழ்ந்தாள்

மேல்
$2.98

#98
அரும்பிய விழியும் தொண்டை அமுது உறு பவள வாயும்
விரும்பிய சுரத போகம் மேவரு குறிப்பும் ஆகி
பொரும் படை மதனன் அம்பால் பொன்றினன் போல மன்றல்
சுரும்பு இனம் இரங்கி ஆர்ப்ப தோன்றலும் சோர்ந்து வீழ்ந்தான்

மேல்
$2.99

#99
கொஞ்சு கிளி அன்ன மொழி குமுத இதழ் அமுதால்
எஞ்சினன் நராதிபதி ஈது என வியப்போ
அஞ்சுதரு தீ வினையின் ஆர் அமுதும் நஞ்சு ஆம்
நஞ்சும் அமுது ஆம் உரிய நல் வினையின் மாதோ

மேல்
*மாத்திரி அரற்றிய ஒலி கேட்டு, குந்தி குமாரர்களோடு வருதல்
$2.100

#100
சித்திரை வசந்தன் வரு செவ்வியுடன் மகிழா
மத்திரி எனும் கொடிய வாள் கண் விடம் அன்னாள்
முத்திரை உணர்ந்திலள் முயக்கம் உறும் இன்ப
நித்திரை-கொலாம் என நினைந்து அருகு இருந்தாள்

மேல்
$2.101

#101
செயிர்த்தவரை ஆவி கவர் தீ உமிழும் வேலான்
உயிர்த்திலன் விழித்திலன் உணர்ந்தும் இலன் என்னா
அயிர்த்தனள் அழைத்தனள் அரற்றினள் இரங்கா
வயிர்த்தனள் நிலத்தின் உயர் வானம் இனிது என்பாள்

மேல்
$2.102

#102
புந்தி இலள் மன்றல் பெறு பூவை குரல் கேளா
முந்திய கடும் பழி முடிந்தது-கொல் என்னா
குந்தியும் விரைந்து தன குமரரொடு புக்காள்
அந்தி அரவிந்தம் என அணி குலை முகத்தாள்

மேல்
*நிகழ்ந்தது உணர்ந்து, குந்தி அழுது அரற்றுதல்
$2.103

#103
உற்றதும் அரும் கொழுநன் உயிர் உறும் நலத்தால்
இற்றதும் உணர்ந்து இவள் இரங்கி அழும் எல்லை
குற்றம் அகலும்படி குணங்களை நிறுத்தும்
நல் தவர் புகுந்து உருகி நைந்து உளம் நெகிழ்ந்தார்

மேல்
*பாண்டுவுக்கு ஈமக்கடன் செய்தலும், மாத்திரி கணவனுடன்
*தீப்பாய்தலும்
$2.104

#104
அழு குரல் விலக்கிய பின் ஐம் மகவையும் கொண்டு
எழு கடல் நிலத்து அரசை ஈம விதி செய்ய
புழுகு கமழ் மை குழலி பொற்புடை முகத்தாள்
முழுகினள் அனற்புனலில் மொய்ம்பனை விடாதாள்

மேல்
$2.105

#105
தங்கை அவள் வான் உலகு தலைவனுடன் எய்தி
கங்கை வனம் மூழ்கி உயர் கற்பவனம் வைக
பங்கய நெடும் துறை படிந்து தன் மகாரால்
மங்கை இவளும் கடன் முடித்தனள் வனத்தே

மேல்
*சதசிருங்க முனிவர் குந்தியையும் புதல்வர்களையும்
*அத்தினாபுரியில் சேர்த்தல்
$2.106

#106
காசிபன் முதல் கடவுள் வேதியர் கருத்தால்
ஆசி பெறும் அ புதல்வர் ஐவரொடும் அன்றே
ஏசு இல் பிரதை கொடியை இறை நகரின் உய்த்தார்
தேசிகரின் முன் தொழுதகும் சதசிருங்கர்

மேல்
*வணங்கிய புதல்வர்களைத் திருதராட்டிரன்
*எடுத்து அணைத்து மகிழ்தல்
$2.107

#107
இறந்த துணைவற்கு உளம் இரங்கும் நில மன்னன்
சிறந்த சரணத்தில் விழு சிறுவரை எடுத்து
புறம் தழுவி அப்பொழுது புண்ணிய நலத்தால்
பிறந்த பொழுது ஒத்து மகிழ் பெற்றியினன் ஆனான்

மேல்
*வீடுமன், விதுரன், முதலியோர் துன்பமும்
*உவகையும் கொள்ளுதல்
$2.108

#108
வியன் நதி_மகன் சிலை வல் விதுரன் முதல் உள்ளோர்
பயனுடை விசும்பு பயில் பாண்டுவை நினைந்தும்
சயம் நிலைபெறும் தகைய தனயரை உகந்தும்
நயனம் இரு பைம் புனலும் நல்கினர் நயந்தார்

மேல்
*ஐவரும் நூற்றுவரும் ஓர் இடத்தில் வளர்தல்
$2.109

#109
அனுச நிருபன் புதல்வர் ஐவரும் மகீபன்
தனயர் ஒரு நூற்றுவரும் அன்பினொடு தழுவி
கனகுலம் முகந்து பெய் கரும் கயம் நெருங்கும்
வனச மலரும் குமுத மலரும் என வளர்வார்

மேல்
*வசுதேவன் முதலியோர் அத்தினாபுரிக்கு வருதல்
$2.110

#110
இன்னணம் வளரும் காலை எறி கடல் உடுத்த அல்குல்
மின் எனும் மருங்குல் கொங்கை வெற்புடை வேய் கொள் மென் தோள்
பொன் எனும் நிறத்தினோடும் பொற்பு அழி ஆகுலத்தாள்
தன் எணம் முடிப்பான் வந்த தலைவனை தந்த கோமான்

மேல்
$2.111

#111
குந்திபோசன்-தன் தெய்வ குலத்துளோர்களும் அநேக
இந்திரர் அவனி-தன்னில் எய்தினர் ஆகும் என்ன
கந்த வான் கொன்றை தோயும் கங்கையாள் குமரன் வைகும்
அந்தம் இல் சுவர்க்கம் அன்ன அத்தினாபுரி வந்து உற்றார்

மேல்
*கண்ணன் முதலியோர் குந்தியைக் கண்டு, பூமியை ஆளும்
*முறையையும் கருதுதல்
$2.112

#112
வெண் நிற மதியம் அன்ன விடலையும் கரிய மேக
வண்ணனும் வள்ளல்-தன்னை திரு வயிற்று உதித்த மாதும்
எண் இலா உவகையோடும் குந்தியை எய்தி எல்லா
புண்ணிய நலமும் எண்ணி பூமி ஆள் முறையும் கோத்தார்

மேல்
*தருமபுத்திரனை நோக்கி, கண்ணன் கூறுதல்
$2.113

#113
எம்பிரான் ஆதிமூலம் இந்திரன் முதலோர்க்கு எல்லாம்
தம்பிரான் பாண்டு ஈன்ற தருமதேவதையை நோக்கி
அம்புராசிகள் உட்பட்ட அவனிகள் அனைத்தும் நாமே
இம்பர் நோய் அகற்றி எல்லா எண்ணமும் முடித்தும் என்றான்

மேல்
*திருதராட்டிரன் முதலியோர் வந்தவரோடு அளவளாவுதல்
$2.114

#114
முகுரவானனனும் வேத்து முனிவனும் மனம் சொல் காயம்
பகிர்வு இலா விதுரன்-தானும் பாந்தள் ஏறு உயர்த்த கோவும்
நிகர் இலா துணைவர்-தாமும் நீரொடு நீர் சேர்ந்து என்ன
தகைவு இலா அன்பினோடும் தழுவினர் கெழுமினாரே

மேல்
*வீடுமன் முதலியோர் வந்தவர்களுக்கு விருந்துசெய்தல்
$2.115

#115
தன் பதி வந்தோர்-தம்மை தாதை-தன் தாதை ஆன
முன்புடை கங்கை_மைந்தன் முதலிய முதல்வர் எல்லாம்
அன்பொடு கண்டு கண்டு கண் களித்து ஆர்வம் மிஞ்சி
மன்பதை மகிழ்ச்சி கூர வரம்பு இலா விருந்து செய்தார்

மேல்
*வீடுமன் முதலியோர் வந்தவர்க்கு
*முகமன் கூறி, விடைகொடுத்து அனுப்புதல்
$2.116

#116
நூற்றுவர் ஐவர் என்னும் நுதியுடை சமர வை வேல்
கூற்றுவர் அனையோர்க்கு யாரும் கொடும் கடும் போரில் ஆற்றார்
ஆற்றுவரேனும் உங்கள் உதவி உண்டு அருளும் உண்டு
தோற்றமும் உண்டு நுங்கள் சுமை இவர் சுமையும் என்றார்

மேல்
$2.117

#117
இனிமையின் பலவும் மாற்றம் யாவர்க்கும் யாவும் சொல்லி
தினகரன் தொழுத பின்னர் தேர் பரி கரிகள்-தோறும்
மனன் உற தக்க செல்வம் வகை-தொறும் வழங்கி அன்றே
தனதனை போல்வார்-தம்மை தம் பதி அடைவித்தாரே

மேல்
$2.118

#118
எயில் நலம் புனை கோபுர மா புரத்து எழுது மாளிகை-தோறும்
வெயில் நிலா உமிழ் கனக நீள் வீதியில் விலாசம் உற்றிடும் நாளில்
பயினன் மேல் வரு கல் என செறிந்த மெய் பவனன் மைந்தனும் ஒத்தான்
வயினதேயனை காத்திரவேயரை மன்னன் மைந்தரும் ஒத்தார்

மேல்

@3 வாரணாவதச் சருக்கம்
*துரியோதனன் கன்னனைத் துணைவனாகக் கொள்ளுதல்
$3.1

#1
ஆங்கு அவர் அ முறை அயரும் ஆயிடை
தீங்கு ஒரு வடிவமாம் திறல் சுயோதனன்
பாங்கு இவன் நமக்கு என பரிதி மைந்தனை
வாங்குபு தழீஇயினன் வலிமை கூரவே

மேல்
*பாண்டவ கௌரவர்கள் ஒருநாள் கங்கையில்
*நீராடி, உணவு உண்டு உறங்குதல்
$3.2

#2
ஒரு பகல் நில_மகள் உய்ய மங்குலின்
வரு பகீரதி நதி வாச நீர் படிந்து
இரு திற புதல்வரும் இயைந்த கேண்மையால்
கரை அடைந்தனர் இளம் கடவுளோர் அனார்

மேல்
$3.3

#3
தைவரும் நவமணி சயிலம் என்னவே
ஐ வகை நிறங்களும் அமைத்து இயற்றிய
தெய்வ ஆடக மனை செல்வ போனகம்
கைவர நுகர்ந்த பின் கண்ணும் துஞ்சினார்

மேல்
*கன்ன சௌபலர், துரியோதனனுடன் சூழ்ந்து, உறங்கும்
*வீமனைக் கொடிகளால் கட்டிக் கங்கையில் இடுதல்
$3.4

#4
கண்படை கங்குலில் கன்ன சௌபலர்
எண் படை குமரனோடு எண்ணி பாவகன்
நண்பன் மெய் புதல்வனை நார் கொள் வல்லியால்
திண் பதத்தொடு புயம் சிக்க யாத்த பின்

மேல்
$3.5

#5
அரவினில் பிணித்து எழும் அரவம் பொங்கிட
உரனுடை பொருப்பை அன்று உம்பர்_நாயகன்
பரவையில் செறித்து என பயன் இல் செய்கையால்
விரவும் அ பெரு நதியூடு வீழ்த்தினார்

மேல்
*கட்டு விடுத்து வீமன் கரை ஏறுதலும், துரியோதனன்
*அவன்மேல் பாம்புகளை ஏவுதலும்
$3.6

#6
வீழ்ந்தவன் அனந்தரம் நிமிர்ந்து மெய் உற
சூழ்ந்த அ பிணிகளை துணிகள் ஆக்கியே
ஆழ்ந்திலன் ஏறி மீண்டு அவசத்தோடு அவண்
தாழ்ந்திலன் இராகவன் தம்பி போன்று உளான்

மேல்
$3.7

#7
வாள் இரவியை ஒளி மறைக்கும் வெம் சின
கோள் அரவினை அன கொடிய நெஞ்சினன்
நீள் அரவு இனங்களால் நித்திராலுவை
மீளவும் கொல்லுவான் வீரன் ஏவினான்

மேல்
*கடித்த பாம்புகளைப் பிசைந்து அழித்து,
*வீமன் துணைவரைச் சார்தல்
$3.8

#8
கடித்தன பன்னகம் நகம் கொள் கைகளால்
துடித்திட மற்குண தொகுதி போல் பிசைந்து
இடித்திடும் முகில் என எழுந்து மா நகர்
வடித்த வேல் துணைவரோடு எய்தி மன்னினான்

மேல்
*வேறொரு நாள், துரியோதனன்நீர்க் கீழ்
*அமைத்த கழுவில் விழாது, வீமன் தப்புதல்
$3.9

#9
வேறு ஒரு பகல் கழு நிரைத்து வீமனோடு
ஆறு பாய்ந்து இருவரும் ஆடும் வேலையில்
தேறலான் வஞ்சகம் தேறி வண்டினால்
ஏறினான் கடந்து அரி ஏறு போன்றுளான்

மேல்
*பின் ஒருநாள், துரியோதனன் வீமனுக்கு விஷ உணவு
*கொடுத்து மயங்கச் செய்து, கயிற்றால்
*கட்டிக் கங்கையில் அமிழ்த்துதல்
$3.10

#10
பின்னரும் ஒரு பகல் பெற்றம் பெற்றவன்
தன்னை அம் மகீபதி தனயன் ஆதரித்து
இன் அமுது அருத்துவான் போல யாவையும்
துன்னிய விடங்களால் துய்ப்பித்தான் அரோ

மேல்
$3.11

#11
விடத்திலே அழிந்து அறிவு ஒழிந்த வீமனை
வடத்திலே பிணித்தனன் கங்கை வாரியின்
இடத்திலே அமிழ்த்தினன் இதயம் ஒத்தவர்
திடத்திலே முதிர்ந்த கிங்கரர் திறங்களால்

மேல்
*பாதலம் புக்க வீமனை அரவு கடிக்க முன்னுள்ள விஷம் அகலுதல்
$3.12

#12
ஓத வான் கடலிடை ஒளித்த வெற்பு என
பாதலம்-தனில் விழு பவன சூனுவை
வேதனைப்படுத்தினர் விடம் கொள் கூர் எயிற்று
ஆதவ பண மணி அரவின் அம் சிறார்

மேல்
$3.13

#13
முற்படு கொடு விடம் முளை எயிற்று உகும்
பிற்படு விடத்தினால் பெயர்ந்து போதலின்
மல் படு புயகிரி வட பிணிப்பும் அற்று
அல் படும் இருள் புலர் அலரி ஆயினான்

மேல்
*வாசுகி அளித்த அமுது உண்டு, வீமனது உடல் எழில் பெறுதல்
$3.14

#14
வாசுகி-தனக்கு இவன் வரவு உணர்த்தலும்
ஆசுகன் மதலை என்று அறிந்து மற்று அவன்
தேசு உறு பொன் குடம் தெரிந்து பத்தினால்
ஏசு அறும் அமுது எலாம் இனிதின் ஊட்டினான்

மேல்
$3.15

#15
வெம் கனல் கொளுந்தலின் வெந்த வான் புலம்
மங்குல் பெய் மாரியால் வயங்குமாறு போல்
அங்கு எரி விடம் நுகர்ந்து அழிந்த பேர் உடல்
இங்கு அமுது அருத்தலால் எழில் புரிந்ததே

மேல்
*நாக ராசன் மாளிகையில் வீமன் எட்டு நாள் தங்கியிருத்தல்
$3.16

#16
ஆயிரம் பதின்மடங்கு அரசு உவாக்களின்
மா இரும் திறல் வலி மலிந்த மேனியான்
ஏய் இரும் தவ பயன் என்ன எண் பகல்
மேய் இருந்தனன் பணி_வேந்தன் கோயிலே

மேல்
*துரியோதனன் தனியாய் நகர்க்கு மீளுதல்
$3.17

#17
இவனை அ நதியிடை இட்ட பாவியும்
தவனனை உததியில் சாய்த்த மாலை போல்
அவனிபன் நகரியின் அரச வெள் வளை
துவனி செம் தழல் விளக்கு எடுப்ப துன்னவே

மேல்
*வீமனைக் காணாது குந்தியும் மக்களும் வருந்துதல்
$3.18

#18
கண்டிலள் உதிட்டிரன் கனிட்டன் கண் உற
உண்டிலள் தரித்திலள் ஓர் இராவினும்
கொண்டிலள் துயில் இளம் குமரர்-தம்மொடும்
விண்டிலள் உரை உளம் விம்மு குந்தியே

மேல்
$3.19

#19
வீடினன் ஆம் என துணைவர் வேறுவேறு
ஓடினர் கான் நதி ஓடை எங்கணும்
தேடினர் காண்கிலம் செய்வது என் என
நாடினர் நடுங்கினர் நடுக்கு இல் சிந்தையார்

மேல்
$3.20

#20
கூற்று அன சுயோதன குமரனே இவன்
ஆற்றலின் வெரீஇ அழுக்கற்ற சிந்தையான்
ஏற்றதை உணர்கிலம் என்று தந்தையாம்
காற்றினும் அலமரும் கருத்தர் ஆயினார்

மேல்
*குந்திக்கு வீடுமன் தேறுதல் கூறுதல்
$3.21

#21
ஊதை இல் பூதம் ஒத்து உள்ளம் வெம்பிய
தாதை இல் சிறுவரை தாதைதாதை-பால்
கோதை இல் குழலினாள் கொண்டு சேறலும்
வாதை இன்று அவற்கு என வருத்தம் மாற்றினான்

மேல்
*பலரும் தேற்றத் தேறாது, குந்தி மனம் மறுகி இருத்தல்
$3.22

#22
தரும மன்னனும் நகர் சனங்கள் யாவையும்
தெருமரல் தேற்றவும் தெய்வம் கூறவும்
பெருமித நிமித்தங்கள் பெற்றி பேசவும்
வரும்வரும் என மனம் மறுகி வைகினாள்

மேல்
*நாகங்கள் வீமனைக் கங்கைக் கரையில் கொண்டு சேர்த்தல்
$3.23

#23
இருந்து இளைப்பு அகன்ற பின் இவனை மற்றை நாள்
அரும் திறல் போகிகள் அரசன் ஏவலால்
வருந்தி உற்று எடுத்து முன் வந்த நீர் வழி
பொரும் திரை கங்கையின் கரையில் போக்கவே

மேல்
$3.24

#24
பாழி அம் புய கிரி பாண்டவன்-தனை
சூழ் இகல் பணி குலம் சுமக்க வல்லவோ
வாழி அ குலங்களின் மன்னன் அல்லனோ
ஏழ் இரு புவனமும் இனிதின் ஏந்துவான்

மேல்
$3.25

#25
விதியினால் ஒளித்தலின் உயங்கி மீளவும்
நதியினால் வருதலின் நலம் கொள் மேனியான்
பதியினால் விளங்கும் மென் பங்கயங்களும்
மதியினால் குளிர் நெடு வானும் ஆயினான்

மேல்
*உற்றார்க்கு மகிழ்ச்சியும், துரியோதனாதியர்க்கு நடுக்கமும்
*வீமன் விளைத்தல்
$3.26

#26
வேதியர் குரவர் வில் விதுரன் வீடுமன்
ஆதியர் துணைவர் அ நகர் உளார்கள் என்று
ஓதிய சனங்களுக்கு உவகை நல்கினான்
ஞாதியர் கிளைக்கு எலாம் நடுக்கம் நல்கியே

மேல்
*குந்தியைத் தேற்றி, வீமன் அத்தினாபுரியில்
*முன்பு போல வாழ்தல்
$3.27

#27
குந்தியை மகிழ் உரை கூறி கற்பினால்
அந்தி_மீன் அனையவள் அருளின் வாழ்த்தவே
செம் திருமகள் உறை செல்வ மா நகர்
வந்து இவன் முன்பு போல் வளரும் நாளிலே

மேல்
*கிருபன் குருகுல மைந்தர்க்குப் படைக்கலப்
*பயிற்சி அளித்தல்
$3.28

#28
கோதமன் மகன்_மகன் குனி வில் ஆதியாம்
மேதகு படைக்கலம் யாவும் வீறொடு அம்
மா தவன்-வயின் பயில் வரதன் வன் திறல்
கேதம் இல் சிந்தையான் கிருபன் என்று உளான்

மேல்
$3.29

#29
மற்று இவன் சந்தனு மைந்தன் ஏவலால்
கொற்றவர் அருள் குருகுல குமாரரை
வெற்றி கொள் சிலையும் வெவ் வேலும் வாளமும்
பற்றலர் வெருவரும்படி பயிற்றினான்

மேல்
*கிருபனிலும் சிறந்த ஒரு குருவை வீடுமன் தேடுதல்
$3.30

#30
பரிவுடன் இவன் படை பயிற்ற பின்னரும்
குருபதி வேறு ஒரு குருவை தேடினான்
இருள் அற மதி நிலவு எறித்ததாயினும்
பரிதியை நயக்கும் இ பரவை ஞாலமே

மேல்
*துரோணன் வரலாறு
$3.31

#31
பரத நாத வேத பரத்துவாசன் என்பான்
விரத வேள்வி-தன்னில் மேனகையால் ஆன
சுரத தாது வீழ்ந்த துரோணகும்பம்-தன்னில்
வரதன் ஒருவன் வந்தான் வசிட்ட முனியை ஒப்பான்

மேல்
$3.32

#32
ஈர் ஏழ் விஞ்சை திறனும் ஈன்றோன்-தன்பால் எய்தி
நீர் ஏழ் என்ன யாவும் நிறைந்த கேள்வி நெஞ்சன்
பார் ஏழ் எண்ணும் படைகள் பரசுராமன்-தன்பால்
ஓர் ஏழ் பகலின் உலகுக்கு ஒருவன் என்ன கற்றான்

மேல்
*வீடுமன் தூதனுப்பித் துரோணனை
*வரவழைத்து, எதிர்கொண்டு உபசரித்தல்
$3.33

#33
வெற்பின் வலிய திண் தோள் வேந்தன் ஏவும் தூதால்
அற்பின் மிக்க சிந்தை அறம் சால் மொழி அ ஆசான்
கற்பின் பன்னியோடும் கையின் மதலையோடும்
பொற்பின் அமராவதியே போலும் நகரி புக்கான்

மேல்
$3.34

#34
வந்தான் வரதன் எனலும் மந்தாகினியாள் மைந்தன்
பைம் தார் அசைய எதிர் போய் பணிந்து பூசை பண்ணி
சிந்தாசனத்தோடு ஒக்கும் சிங்காசனத்தின் ஏற்றி
எந்தாய் வர நீ அடியேன் என்ன தவத்தேன் என்றான்

மேல்
*வீடுமனுக்குத் துரோணன் வாழ்த்துக்கூறி,
*துருபதன் செய்தியை எடுத்துரைத்தல்
$3.35

#35
மூசி வண்டு மொய்க்கும் முருகு ஆர் செவ்வி மாலை
வாசி வான் தேர் வெம் போர் மன்னர்_மன்னன்-தன்னை
ஏசு இல் கடவுள் வாய்மை இருக்கால் எண் இல் கோடி
ஆசி அன்பால் ஓதி அருள்செய்து இருந்த பின்னர்

மேல்
$3.36

#36
வேத முனிவன் இருந்த வேத்து முனியை நோக்கி
பூதம்-தன்னில் நிகழ்ந்த புன்மை மொழி ஒன்று உரைப்பான்
ஏதம் மெய் பெற்று அனைய யாகசேனன் என்பான்
போதம் இல்லான் என்-பால் பூட்டும் நண்பு பூண்டான்

மேல்
$3.37

#37
யானும் அவனும் முறையால் இளையோம் ஆன எல்லை
பானு நிகர் தொல் அங்கிவேசன் பாதம் பணிந்து
வானும் மண்ணும் வியக்க மற வெம் படைகள் கற்று
தானும் வல்லன் ஆகி தன் போல் என்னை வைத்தான்

மேல்
$3.38

#38
பின்னை இரவும் பகலும் பிரியேம் ஆகி திரிய
தன்னை அடைந்த நண்பின் தகவால் மிக ஆதரியா
என் ஐ வானம் எய்தி யானே இறைவனானால்
உன்னை ஆள வைப்பேன் உலகில் பாதி என்றான்

மேல்
$3.39

#39
நன்று நன்று உன் வாய்மை நன்று ஆம் நண்புக்கு இனியாய்
என்று போந்து நானும் இயன்ற தவத்தின் இருந்தேன்
வென்று கொண்ட புவியை வேந்தன் மகவுக்கு அளித்து
சென்று வானம் புகுந்தான் சிறுவன் தலைவன் ஆனான்

மேல்
$3.40

#40
தனத்தில் ஆசை இன்றி தவமே தனம் என்று எண்ணி
வனத்தில் உண்டி கொண்டே மகிழ்வுற்று ஒருசார் வைகி
சனத்தில் அருளால் இல் வாழ் தருமம் தவறாவண்ணம்
இனத்தில் மிக்க கிருபற்கு இளையாள் இவளை வேட்டேன்

மேல்
$3.41

#41
கந்த மகவை ஈன்ற காளகண்டன் அருளால்
வந்த மகவு இ மகவும் வறுமை வளர வளர்ந்தான்
இந்த மகவும் ஐ ஆண்டு இளமை அறியாது எனலால்
தந்த மகவை நோக்கி தாயும் பெருக தளர்ந்தாள்

மேல்
$3.42

#42
மாவின் பாலே அன்றி மரபுக்கு உரிய மைந்தன்
ஆவின் பால் கண்டு அறியான் அதனால் வருந்தி அந்த
கோவின்-பால் எய்துதலும் கோமான் யார் நீ என்ன
நாவின்-பாலால் நடுங்கி நான் உன் நண்பன் என்றேன்

மேல்
$3.43

#43
மன்னன் யான் நீ முனிவன் மரபால் எனக்கும் உனக்கும்
என்ன நண்பு உண்டு என்ன ஏசி நகைசெய்து இகழ்ந்தான்
அன்ன துருபன்-தன்னை அவையில் அரசர் கேட்ப
சொன்ன வாய்மை நீயே சோர்ந்தாய் யானோ சோரேன்

மேல்
$3.44

#44
புகன்றபடி நீ ஆளும் புவியும் பாதி கொள்வேன்
இகன்ற சமரில் உன்னை இரதத்துடனே கவர்வேன்
அகன்ற மெய்ம்மை உடையாய் அறிதி என்றேன் என்று
சுகன்-தன் ஞானம் பெற்ற துரோணன் சொல்ல கேட்டான்

மேல்
*கேட்ட வீடுமன், குருகுலக் குமரரைக் காட்டி,’ நீ
*இவர்க்குப் படைக்கலப் பயிற்சி அளித்து, உன்
*வஞ்சினமும் முடி’ என்று கூறி, துரோணனுக்கு
*அரசர்க்கு உரிய வரிசைகள் அளித்தல்
$3.45

#45
கேட்ட அரசன் அழைக்க கிருபனுடன் வந்து இறைஞ்சும்
பூட்டு வரி வில் தட கை புதல்வர்புதல்வர்-தம்மை
காட்டி நீயே இவரை கடிதில் படைமை கல்வி
மூட்டி நின் வஞ்சினமும் முடித்தி என்று மொழிந்தான்

மேல்
$3.46

#46
முனி நீ ஐயா இதற்கு முன்னம் இன்று முதலா
இனி இ உலகுக்கு அரசாய் எம்மில் ஒருவன் ஆகி
குனி வில் வலியால் அமரும் கோடி என்று கொடுத்தான்
பனி வெண்குடையும் நிருபற்கு உரிய வரிசை பலவும்

மேல்
*துரோணனிடம் குமாரர்கள் படைக்கலப் பயிற்சி பெறுதல்
$3.47

#47
அன்று முதலாக வரி வெம் சிலை முதல் படைகள் ஆனவை அனைத்தும் அடைவே
தொன்று படு நூல் முறையின் மறையினொடு உதிட்டிர சுயோதனர்கள் ஆதி எவரும்
ஒன்றிய துரோணன் அருளாலும் வலியாலும் முயல் உணர்வு உடைமையாலும் முதலே
நின்ற குறையாலும் ஒருவர்க்கொருவர் கல்வியின் நிரம்பினர் வரம்பு இல் நிதியோர்

மேல்
*விசயன் வித்தையில் சிறந்து, குருவின் அன்பிற்கு உரியவனாதல்
$3.48

#48
வெம் சிலையினால் இவன் இராகவனை ஒக்கும் என விசயன் விசயத்தின் மிகவே
எஞ்சிய குமாரர்கள் பொறாமையின் மிகுத்தனர்கள் இரவி எதிர் மின்மினிகள் போல்
அம் சொல் முனி-தானும் இவன் மேல் எவரினும் பெருக அன்புடையன் ஆகி அகலான்
நெஞ்சு உற அரும் கலைகள் கற்குமவர்-தம் அளவில் நேயம் நிகழாதவர்கள் யார்

மேல்
*வில் வித்தையில் அருச்சுனனை ஒத்த ஏகலைவன் துரோணனுக்குத் தக்கிணை வழங்கிய வரலாறு
$3.49

#49
ஏகலைவன் என்று ஒரு கிராதன் முனியை தனி இறைஞ்சி இவன் ஏவலின் வழான்
ஆகலை அடைந்து மிகு பத்தியொடு நாள்-தொறும் அருச்சுனனை ஒத்து வருவான்
மேகலை நெடும் கடல் வளைந்த தரணி-கண் ஒரு வில்லி என வின்மை உடையான்
மா கலை நிறைந்து குரு தக்கிணை வலக்கையினில் வல் விரல் வழங்கியுளனால்

மேல்
*விசயனின் வில் திறம்
$3.50

#50
அங்குலிகம் ஒன்று புனல் ஆழ்தரு கிணற்றில் விழ அந்த முனி தேடு-மின் என
புங்கமொடு புங்கம் உற எய்து இவன் எடுத்தமை புகன்று அருகு நின்றவரை நீர்
இங்கு இதன் இலை தொகைகள் யாவும் உருவ பகழி ஏவு-மின் எனா முன் விசயன்
துங்க வில் வளைத்து ஒரு கணத்தினில் வடத்து இலை துளைத்தனன் இலக்கு இல் தொடையால்

மேல்
*அவனுக்குச் சிறந்த அம்பு அளித்தலும்
$3.51

#51
முத்தி முனி தாள் இணையை நீர் படி தடம் துறையில் முதலை கவர்வுற்றது எனலும்
சித்திர வில் வீரர் பலரும் தம வெறும் கையொடு சென்று அருகு நின்று விடவே
பத்தியின் விரைந்து பொதுவே இபம் அழைக்க ஒரு பறவை மிசை வந்த நெடுமால்
கை திகிரி போல் கணையின் விசயன் அதனை பழைய கார் முதலையின் துணிசெய்தான்

மேல்
$3.52

#52
ஒரு தனுவினால் இதயம் மகிழ் குருவினுக்கு இவனும் உயிர் வரி சிலை
குருவும் இவனுக்கு நிலையாலும் மறையாலும் வலி கூர் பகழி ஒன்று உதவினான்
இருவரும் நயந்து அருளும் விநயமும் மிகுந்தனர்கள் இன் உயிரும் மனமும் என மேல்
மருவி வரு நல்வினை வயத்தின் வழி வந்த பயன் மற்று ஒருவருக்கு வருமோ

மேல்
*துரோணன் குமரரின் கல்வித்திறத்தை அனைவர்க்கும் காட்டுதல்
$3.53

#53
சிலை குரு விறல் குருகுல குமரருக்கு வரு சிரம நிலை காண்-மின் எனவே
அலை தலை நிலா எழு சரி புதல்வனுக்கும் நல் அற கடவுளுக்கும் உரையா
நிலைப்படு விசால மணி அணி திகழ் அரங்கின் மிசை நிகழ் பலி கொடுத்து அரியுடன்
கலைப்புரவி ஊர் திருவையும் தொழுது புக்கனன் அகத்து உணர்வு மிக்க கலையோன்

மேல்
$3.54

#54
புரியில் அறிவோர் சனபதத்தில் அறிவோர் புவி புரக்குமவர்-தம்மில் அறிவோர்
வரி பட வயங்கு கொடி மஞ்ச விதம் எங்கணும் வனப்பு உற இருந்த பொழுதில்
தெரிவுறு விமானமனை-தோறும் உறை தேவர் பலர் சித்தர் முதலோர் பரனொடும்
கரிய நெடுமால் பிரமன் இந்திரன் முதல் பலர் கலந்த அகல் வான் நிகருமே

மேல்
$3.55

#55
ஆற்றின் வழுவா மனுமுறை தருமன் மைந்தன் முதல் ஆகிய குமாரர் அடைவே
போற்றி அடல் ஆசிரியர் இருவரையும் அன்பின் உயர் பூசை பல செய்து புரி நாண்
ஏற்றிய சராசனம் வணக்கி வடி வாளியின் இலக்கம்-அவை நாலு வகையால்
மாற்றினர் பிளந்து பெரு வண்மை சிறு நுண்மை சலம் நிச்சலம் என சொல்வகையே

மேல்
$3.56

#56
ஆயுதம் அநேக விதம் ஆனவை எனை பலவும் அழகுற இயற்றியும் மதம்
பாயும் இபம் மா இரதம் வாசி ஒருவர்க்கு ஒருவர் பல கதி வர கடவியும்
சேய் உயரும் மாட நிலை தெற்றியின் இருந்தவர் தெளிந்து உளம் மகிழ்ந்து நவை தீர்
வாயு கதி அல்லது மனித்தர் கதி அல்ல என வல்லன புரிந்தனர் அரோ

மேல்
*துரியோதனனும் வீமனும் உட்பகை கொண்டு கதைப்போர்
*புரிய, அசுவத்தாமன் விலக்குதல்
$3.57

#57
ஒத்த வலியோர் வலியும் ஒத்த திறலோர் திறலும் ஒத்த வினையோர் வினையும் வன்
சித்தம் அனல் மூள முக அம்புயம் மலர்ந்து அரசன் மகனும் அனிலன் சிறுவனும்
கைத்தலம் அமர்ந்த கதை கொண்டு எதிர் நடந்தனர் களிப்புடன் இரண்டு தறுகண்
மத்த கயம் வேரொடு மராமரம் எடுத்து அமர் மலைந்து அனைய கோல மறவோர்

மேல்
$3.58

#58
தண்டின் முனை ஒன்றினுடன் ஒன்று உரும் எறிந்து அனைய தன்மையொடு உடற்ற விலகு
மண்டல விதங்களும் வியப்புற நடந்த பின் மறத்தொடு செயிர்த்து வயிரம்
கொண்டு இருவரும் பொருதல் உன்னு பொழுதத்து அவர் குறிப்பினை இமைப்பு அளவையில்
கண்டு குருவின் சிறுவன் வன்பொடு விலக்கினன் மெய் கல்வி கரை கண்ட பெரியோன்

மேல்
*மன்னவர் மதிக்கும்வகை விசயன் வில்-திறமையைக் காட்டுதல்
$3.59

#59
மீளி மகவான் மதலை ஆயுத_புரோகிதன் விலோசனம் உணர்ந்து அவன் மலர்
தாளில் முடி வைத்து எதிர் தரித்தனன் இடங்கை வரி சாப கவசத்தினன் இபம்
யாளி அரவம் கருடன் வன்னி சலிலம் திமிரம் இரவி இவையே கடவுளாம்
வாளியின் வினோதம் உற எய்தனன் இருந்த முடி மன்னவர் மதிக்கும்வகையே

மேல்
*அப்பொழுது, கன்னன் சிங்கநாதத்துடன் எழுந்து,
*தன் வில் திறம் காட்டுதல்
$3.60

#60
மங்குல் சூழ் விமான முன்றில் மஞ்ச கோடி திகழவே
அம் கண் வான மீனம் என்ன அவை இருந்த அரசர் முன்
சிங்கம் என்னுமாறு எழுந்து சிங்கநாதமும் செய்தான்
பங்கசாத பரிமளம் கொள் பானுராச சூனுவே

மேல்
$3.61

#61
சிந்தை அன்புடன் பணிந்து தேசிகேசன் அருளினால்
வந்து வெம் சராசனம் வணக்கி வீர வாளியால்
இந்திரன் குமாரன் முன் யாதுயாது இயற்றினான்
அந்த அந்த நிலையும் ஏவும் அவனின் விஞ்சல் ஆயினான்

மேல்
*அது கண்டு யாவரும் வியக்க, விசயன் நாணுதல்
$3.62

#62
கணைகள் போய் இலக்கு அடைந்த உறுதி கண்டு கண் களித்து
இணை இல் வீரன் என்றது அன்று இருந்த ராச மண்டலம்
பிணையல் மாலை விசயன் அண்ணல் பெற்றி பற்றி நாணினான்
துணைவரோடு வரி கழல் சுயோதனன் களிக்கவே

மேல்
*கன்னன் விசயனைப் போருக்கு அழைத்தலும்,
*துரியோதனன் கன்னனைத் தழுவிப் பாராட்டுதலும்
$3.63

#63
மருவ நின்று அருக்கன் மைந்தன் வானநாடன் மகனை நாம்
இருவரும் தனு கொள் போர் இயற்ற வம்-மின் என்றலும்
குருகுலம் தழைக்க வந்த குமரன் அன்பு கூரவே
உருகி நன்று என தழீஇ உகந்து உளம் தருக்கினான்

மேல்
*விசயனும் கன்னனும் வெகுண்டு பேசுதல்
$3.64

#64
அனந்தரம் பொரற்கு நீ-கொல் அந்தரம் எனக்கு எனா
தனஞ்சயன் செயிர்த்தல் கண்டு தபனன் மைந்தன் மீளவும்
முனைந்த போரின் முடி துணித்து உன் முக சரோருகத்தினால்
சினம் தணிந்து அரங்க பூசை செய்வன் என்று சீறினான்

மேல்
*’சூதன் மகனான கன்னன் வெகுண்டு உரைத்தது
*தக்கது அன்று’ என்று கிருபன் கூற, துரியோதனன்,
*’சாதிபேதம் கருதுதல் தகாது’ எனல்
$3.65

#65
அதிருகின்ற எழிலி போல் அருச்சுனன்-தனை குறித்து
எதிருகின்ற வன்மை கண்டு யாவரும் திகைக்கவே
முதிருகின்ற மெய்யன் ஆகி முன் இருந்த கௌதமன்
உதிருகின்ற அமுத விந்து ஒக்கும் என்ன உரைசெய்வான்

மேல்
$3.66

#66
சூதன் மைந்தன் வேலை ஏழும் சூழும் மேதினிக்கு எலாம்
நாதன் மைந்தனுடன் வெகுண்டு நவிலுதற்கு நண்ணுமோ
ஏதம் உண்டு சால என்ன ராசராசன் இகலி அ
கோதமன்-தனக்கு உளம் கொதிக்குமாறு கூறுவான்

மேல்
$3.67

#67
கற்றவர்க்கும் நலம் நிறைந்த கன்னியர்க்கும் வண்மை கை
உற்றவர்க்கும் வீரர் என்று உயர்ந்தவர்க்கும் வாழ்வுடை
கொற்றவர்க்கும் உண்மையான கோது இல் ஞான சரிதராம்
நற்றவர்க்கும் ஒன்று சாதி நன்மை தீமை இல்லையால்

மேல்
$3.68

#68
அரி பிறந்தது அன்று தூணில் அரனும் வேயில் ஆயினான்
பரவை உண்ட முனியும் இ பரத்துவாசன் மைந்தனும்
ஒருவயின்-கண் முன் பிறந்தது ஒண் சரத்தின் அல்லவோ
அரிய வென்றி முருகவேளும் அடிகளும் பிறந்ததே

மேல்
*துரியோதனன் கன்னனை அங்கதேசத்துக்கு அரசனாக்கி, தன்
*ஆசனத்தில் அவனையும் ஒருங்கு இருக்கச் செய்தல்
$3.69

#69
என்று நல்ல உரை எடுத்து இயம்பி ஏனை இழிவினோடு
ஒன்றி நின்ற ஆடகத்தை ஓட வைக்குமாறு போல்
அன்று சூதன் மதலை-தன்னை அங்கராசன் ஆக்கினான்
மின் தயங்கு முடி கவித்து வேந்து எலாம் வியக்கவே

மேல்
$3.70

#70
தான் இருந்த அரிமுகம் செய் தாள் சுமந்த தவிசின் மேல்
ஊன் இருந்த படையினானை உடன் இருத்தி வண்டு சூழ்
தேன் இருந்த மாலை வாகு சிகரம் மீது தெண் திரை
கான் இருந்த மண்டலம் கருத்தினால் இருத்தினான்

மேல்
$3.71

#71
தவனன் மைந்தனும் சுயோதனனும் இசைந்து தனதனும்
சிவனும் என்ன நண்பு கொண்டு திறலுடன் சிறந்துளார்
பவனன் உம்பர் நாயகன் பயந்த வீரர் அஞ்சவே
அவனி எங்கும் நமது என கொள் பெருமிதத்தர் ஆயினார்

மேல்
*துரோணன் குருகுலக் குமரரின் திறம் கண்டு மகிழ்ந்து,
*தன் பகைவன் யாகசேனனை வென்று வருதலே
*தனக்குத் தரும் குருதக்கிணை எனல்
$3.72

#72
ஆன காலை எண்ணுகின்ற ஆயுதங்கள் யாவையும்
யானை வாசி இரதம் ஆன யானம் உள்ள யாவையும்
சேனையோடு தெவ்வரை செகுக்க வல்ல வீரமும்
மான வீரர் வல்லர் என்று மறை_வலாளன் மகிழ்வுறா

மேல்
$3.73

#73
வம்-மின் ஆதி குருகுலம் தழைக்க வந்த மைந்தர்காள்
தம்-மின் நாளையே எமக்கு அளிக்க நின்ற தக்கிணை
எம் இனான் ஒருத்தன் வேறு யாகசேனன் என்று உளான்
நும்மின் நாடி அவனை இம்பர் நோதல் செய்து கொணர்-மினே

மேல்
*குருவின் விருப்பத்தை நிறைவேற்ற, குமரர்கள் பாஞ்சால நாடு
*சென்று முற்றுகையிடுதல்
$3.74

#74
என்று தம் சிலை புரோகிதன் கனன்று இயம்பவே
அன்று அவன் பதம் பணிந்து அளித்த சொல் தலைக்கொளா
வென்றி நீடு படைகளோடும் விரவும் அங்கம் நாலொடும்
சென்று தங்கள் நாடு அகன்று தெவ்வு நாடு குறுகினார்

மேல்
$3.75

#75
ஆளி மொய்ம்பர் அம் முனை-கண் ஆனபோது அனீகினி
தூளி கண் புதைத்த சென்று செவி புதைத்த துவனி போய்
ஓளி கொண்ட செம்பொன் வெற்பின் உடல் புதைத்த எழிலி போல்
வாளி கொண்ட விருதர் மா மதில் புறம் புதைக்கவே

மேல்
*போரில் துரியோதனாதியர் பின்னிட, விசயன்
*துருபதனை அகப்படுத்தி, தனது தேரிலே கட்டி,
*குருவின் முன்னர்க் கொண்டுவருதல்
$3.76

#76
வளைத்த சேனை யானை வாசி வாயில் நின்று குமுறவே
உளைத்து எழுந்து முழையை விட்டு உடன்ற சிங்க ஏறு போல்
திளைத்த தன் பதாதியோடு மோக யாகசேனனும்
இளைத்த நெஞ்சன் அன்றி நீடு புரிசை வாயில் எய்தினான்

மேல்
$3.77

#77
சோமகர்க்கும் முடுகு சேனை சூழ வந்த குருகுல
கோமகர்க்கும் வெம் சமர் விளைந்தது ஆண்மை கூரவே
பூ_மகற்கும் மிக்க மா முனிக்கு வாய்மை பொய்த்த அம்
மா மகற்கும் விசயனுக்கும் மன்னு போர் வயங்கவே

மேல்
$3.78

#78
தூறு கொண்டு கணை பொழிந்து சோமகேசர் பொருதலால்
நூறு கொண்ட குமரர் தங்கள் நகரி மீள நோக்கினார்
மாறு கொண்டு விசயன் வீசு வண்ண வாளி வலையினால்
வீறு கொண்டு எதிர்ந்த மன் விலங்கர் ஈடுபட்டதே

மேல்
$3.79

#79
தக படும் சராசன தனஞ்சயன் கை வாள் வெரீஇ
அகப்படும் தராதிபன்-தன் அற்ற வில்லின் நாணினால்
மிக படும் தடம் கொள் தேர் மிசை பிணித்து விசையுடன்
நகப்படும் செயற்கை செய்து குருவின் முன்னர் நணுகினான்

மேல்
*யாகசேனனைத் துரோணன் எள்ளி உரையாடி,
*அவனுக்கு உயிர் வாழ்வும் பாதி அரசும் உதவுதல்
$3.80

#80
முறுவல் கொண்டு கண்ட சாப முனியும் நாண எம்மை நீ
உறுவது ஒன்றும் உணர்கலாது உரைத்த புன்சொல் அறிதியே
மறு இல் அந்தணாளன் யானும் மன்னன் நீயும் வாசவன்
சிறுவன் வென்று உனை பிணித்த சிறுமை என்ன பெருமையோ

மேல்
$3.81

#81
அன்று எனக்கு நீ இசைந்த அவனி பாதி அமையும் மற்று
இன்று உனக்கு நின்ற பாதி யான் வரைந்து தருகுவன்
குன்று என குவிந்து இலங்கு கொற்ற வாகு வீரனே
உன்-தனக்கு வேண்டும் என்ன உயிரும் வாழ்வும் உதவினான்

மேல்
*யாகசேனன் அவமானத்தோடு ஊருக்குத் திரும்புதல்
$3.82

#82
புயங்கம் பருகி உமிழ் மதியம் போல்வான் மீண்டு பூசுரன்-தன்
வயங்கும் சுருதி வாய்மையினால் மன்னும் குருக்கள் பதி நீங்கி
தயங்கும் சிலை கை வாள் விசயன் சயமும் பிறர் முன் தான் அகப்பட்டு
உயங்கும் செயலும் நினைந்துநினைந்து உள்ளம் சுட போய் ஊர் சேர்ந்தான்

மேல்
*துரோணனைக் கொல்ல ஒரு மகனையும், விசயனை
*மணக்க ஒரு மகளையும், பெறவேண்டி, யாகசேனன்
*முனிவரரை வேண்டுதல்
$3.83

#83
மறுகில் பணிலம் தவழ் பழன வள நாடு உடையான் எதிர் வணங்கி
முறுகி புரி வெம் கலைக்கோட்டு_முனியே போலும் முனிவரரை
தறுகண் குருவின் தலை துணிக்க தக ஓர் மகவும் தனஞ்சயன் தோள்
உறுகைக்கு ஒரு பூம் கன்னியையும் பெறுவான் வேண்டி உற்று இரந்தான்

மேல்
*உபயாசனும், யாசனும் துருபதனுக்காகச் செய்த வேள்வியில்
*முதலில் திட்டத்துய்மன் தோன்றுதல்
$3.84

#84
ஆறுமுகனை பயந்த நதி அலையால் குளிர்வது ஒரு கானில்
ஈறு இல் தவத்தோர் உபயாசன் யாசன் எனும் பேர் இருவோரும்
கூறும் முறையில் சடங்கு இயற்றி கோவின் வழக்க பெரு வேள்வி
நூறுமகத்தோன் நிகர் அரசை நோன்மைக்கு இசைய புரிவித்தார்

மேல்
$3.85

#85
புரிந்த மகப்பேற்று அழல் வேள்வி பொன்றா ஓம பொருள் மிச்சில்
பரிந்து விபுதர் அமுது ஏய்ப்ப பைம் பொன் கலத்தில் நிறைத்து ஆங்கு
தெரிந்த மணி பூணவன் தேவிக்கு அளிக்க தீண்டாள் ஆகிய பின்
சொரிந்து கனலின் உபயாசன் இமைப்பில் சுதனை தோற்றுவித்தான்

மேல்
$3.86

#86
வலையம் பிறழ முடி தயங்க மணி குண்டலம் பேர் அழகு எறிப்ப
சிலையும் கையும் மெய்யும் வயம் திகழ் போர் வயிர கவசமுமாய்
கொலை வெம் சிங்க குருளை பொலம் குன்றின் புறத்து குதிப்பது போல்
தலைவன் களிக்க தடம் தேர் மேல் தனயன் ஒருவன் தலைப்பட்டான்

மேல்
$3.87

#87
தேரோடு அருக்கன் அருண மணி சிமயத்து உதிப்ப செவ்வியுடன்
நீர் ஓடையில் செந்தாமரைகள் நிறம் பெற்று அலர்ந்து நின்றன போல்
வீரோதயன் வந்து உதிப்பளவில் மேன்மேல் மகிழ்ந்து மெய் சிலிர்த்து
பாரோர் கண்கள் களித்தனவால் பார்க்கும்-தோறும் பரிவுற்றே

மேல்
$3.88

#88
சங்க சங்கம் மிக முழங்க சாந்தும் புழுகும் எறிந்து ஆர்த்து
துங்க கொடியும் தோரணமும் தொடையும் பரப்பி சோமகன் நாடு
அம் கண் சயந்தன் அவதரித்த அமராவதி போல் ஆர்வம் எழ
திங்கள் குழவி உற்பவித்த திசை போன்றன எண் திசை எல்லாம்

மேல்
*பின்னர், திரௌபதி தீயில் தோன்றுதல்
$3.89

#89
பின்னும் கடவுள் உபயாசன் பெரும் தீப்புறத்து சுருவையினால்
மன்னும் கடல் ஆர் அமுது என்ன வழங்கு சுருதி அவி நலத்தால்
மின்னும் கொடியும் நிகர் மருங்குல் வேய் தோள் முல்லை வெண் முறுவல்
பொன்னும் பிறந்தாள் கோகனக பூ மீது எழுந்த பொன் போல்வாள்

மேல்
*வேள்விக் களத்தில் எழுந்த அசரீரி வாக்கு?
$3.90

#90
மண் மேல் ஒருத்தி அரக்கர் குலம் மாள பிறந்தாள் வாமன் நுதல்
கண் மேல் இன்றும் இவள் பிறந்தாள் கழல் காவலர்-தம் குலம் முடிப்பான்
எண் மேல் என்-கொல் இனி என்று ஆங்கு எவரும் கேட்ப ஒரு வார்த்தை
விண் மேல் எழுந்தது அவன் புரிந்த வேள்வி களத்தினிடை அம்மா

மேல்
*மகப் பெற்ற துருபதனின் பெரு மகிழ்ச்சி
$3.91

#91
முன் தோன்றிய தன் குல முதலால் முரண் போர் முனிக்கு முடிவும் அவன்
பின் தோன்றிய அ கன்னிகையால் விசயன் தனக்கு பெரு நலமும்
உற்று ஓர்ந்து உள்ளம் மிக தருக்கி உவந்து ஆங்கு அமைந்தான் உயர் மகத்தால்
பெற்றோன் பெற்ற பேறு மக பெற்றார் தம்மில் பெற்றார் யார்

மேல்
*திட்டத்துய்மன் துரோணரிடம் வில் வித்தை பெறுதல்
$3.92

#92
கரணம் மறு அற்று இலங்கு திறல் கலைசொல்பவன்-பால் கனல் பயந்தோன்
சரண மலர் தன் தலை கொண்டு தனுநூல் எனக்கு தருக என்றான்
மரணம் இவனால் தனக்கு என்பது உணர்ந்தும் குருவும் மறாது அளித்தான்
அரணியிடத்தில் செறிந்து அன்றோ அதனை செகுப்பது அழல் அம்மா

மேல்
*திருதராட்டிரன் முதலியோர் தருமனை நன்கு மதித்தல்
$3.93

#93
இவ்வாறு அமைந்து ஆங்கு ஐவருடன் ஈர்_ஐம்பதின்மர் நனி வளர
மை வான் மீனின் பல் கோடி மன் வந்து இறைஞ்சி புடை சூழ
தெவ் ஆறிய வெம் பெரும் சேனை திருதராட்டிரனும் தம்பியும் மற்று
ஒவ்வார் இவற்கு என்று உதிட்டிரனை ஒழுக்கத்து அழகால் உட்கொண்டார்

மேல்
$3.94

#94
பூதி நலம் திகழ் பூரு குலத்திற்கு
ஆதிபன் ஆகி அநங்கனை வென்றோன்
நீதியினாலும் நிறைந்தனன் நுண் நூல்
ஓதிய கேள்வி உதிட்டிரன் என்னா

மேல்
*வீடுமன் தருமனுக்கு இளவரசு முடி சூட்டுதல்
$3.95

#95
மைந்தருடன் செயல் வழு அற எண்ணி
குந்தி பயந்தருள் குரிசிலை இவனே
இந்த நிலக்கு இனி இளவரசு என்று ஆங்கு
அம் தண் மதிக்குடை முடியொடு அளித்தான்

மேல்
$3.96

#96
சந்தனுவின் திரு மரபு தயங்க
செம் திரு மேவரு சிறுவனும் அப்போது
இந்துவொடு ஆதபன் இருவரும் அன்பால்
வந்து தழீஇ மெய் வயங்கினன் ஒத்தான்

மேல்
*துரியோதனன் பொறாமை கொண்டு, தந்தையோடு உரையாடுதல்
$3.97

#97
துன்மதியான சுயோதனன் மாழ்கி
தன் மதியால் அருள் தந்தையை எய்தி
புன்மதி ஆம் உரை சிற்சில் புகன்றான்
மன் மதி யாதும் மதித்தல் இலாதான்

மேல்
$3.98

#98
உன் பதம் யாவும் உதிட்டிரனுக்கே
மன்பதையோடு வழங்கினை எந்தாய்
அன்பு-அது இலா அவன் அனுசர் மதத்தால்
என் பதம் அம்ம இறந்ததை இன்றே

மேல்
$3.99

#99
என்றலும் மைந்தனை இந்து குலத்தோய்
நின்றிலையால் மனு நீதியில் ஐயா
பொன்றிய எம்பி பதம் புதல்வர்க்கே
அன்றி நுமக்கு அரசு ஆளுதல் ஆமோ

மேல்
$3.100

#100
நீதி இலா நெறி எண்ணினை நீ இங்கு
ஓதிய வாய்மையின் உறு பொருள் இன்றால்
ஆதிபர் ஆயவர் ஐவரும் நீரும்
மேதினி ஆளுதல் வேத்து இயல்பு என்றான்

மேல்
$3.101

#101
இகல் மிகு கன்னனும் என் இளையோரும்
சகுனியும் உண்டு தகும் துணை நெஞ்சில்
உகவை இலாரொடு உறேன் இனி என்றே
முகம் முகுரம் புரை முதலொடு சொன்னான்

மேல்
*மைந்தன் உரையால் மனம் மாறுபட்ட திருதராட்டிரன், விதுரனுக்கும்
*வீடுமனுக்கும் தன் புதல்வர்களின் போக்கைக் கூறுதல்
$3.102

#102
பாதகன் அன்று பகர்ந்த மொழிக்கே
பேதகன் ஆன பிதா மருள் எய்தா
மேதக வாழ்வுறு வில் விதுரற்கும்
நா தகு நல் உரை நதி_மகனுக்கும்

மேல்
*நிகழ்ந்தது உணர்ந்து, குந்தி அழுது அரற்றுதல்
$3.103

#103
ஈண்டு இனி என் செய்வது எண்ணு-மின் இங்ஙன்
பாண்டவரோடு பயின்று உறையாது
தூண்டு பரி துரியோதனன் முதலோர்
பூண்டனர் வெம் பகை வாழ்வு பொறாதார்

மேல்
$3.104

#104
ஒரு திறன் இ நகர் உறைதரின் ஒன்றாது
இரு திறன் மைந்தரும் இகலுவர் மேன்மேல்
அருகு அணுகாவகை அகல இருந்தால்
மறுவுறும் நண்பு வளர்ந்திடும் என்றே

மேல்
*விதுர வீடுமர்களின் மறுமொழி
$3.105

#105
இ மொழி கூறலும் இருவரும் எண்ணி
தெம் முறை ஆயினர் சிறு பருவத்தே
எம் உரை கொள்கலர் இனி அவர் மதி ஏது
அம் மதியே மதி ஆகுவது என்றார்

மேல்
*திருதராட்டிரனும் துரியோதனனும் புரோசனன் என்னும் மந்திரியுடன்
*தனி இடத்திலிருந்து, ஐவரையும் கொல்லும் வழி நாடுதல்
$3.106

#106
விதுரனும் வார் கழல் வீடுமனும் தம்
இதயம் நிகழ்ந்தது இயம்பிய பின்னர்
பொதுமை இலாத புரோசனன் என்னும்
மதியுடை மந்திரி வருக என வந்தான்

மேல்
$3.107

#107
வந்த அமைச்சனும் மைந்தனும் மற்று அ
தந்தையும் அங்கு ஒரு தனி-வயின் எய்தி
சிந்தனை செய்தனர் தீமை மனத்தோர்
குந்தி மகார் உயிர் கோடல் புரிந்தே

மேல்
*வாரணாவத நகரத்திற்குப் பாண்டவரை அனுப்புமாறு
*தந்தையைத் துரியோதனன் வேண்டுதல்
$3.108

#108
ஆரணாதிபர் ஆரும் புகழ்வது
நாரணாதியர் நண்ணும் சிறப்பது
தோரணாதி துலங்கு பொன் கோபுர
வாரணாவத மா நகர் அங்கணே

மேல்
$3.109

#109
சென்று இருக்க திருவாய்மலர்க என
ஒன்றுபட்டு மகன் தொழுது ஓதினான்
அன்றுதொட்டு உயிர் அன்ன அமைச்சனால்
நன்று பட்டது அ நல் நகர் எங்குமே

மேல்
*அமைச்சன் புரோசனன் வாரணாவதத்தை அலங்கரித்தல்
$3.110

#110
சிற்ப நூலில் திருந்திய மாக்களால்
பொற்பு அமைந்து பொலிந்தது அ பொன் நகர்
கற்பகாடவி அல்லது கண்டவர்
அற்பம் என்ன அமராவதியையே

மேல்
*திருதராட்டிரன் பாண்டவரை வாரணாவதம் சென்று
*வாழப் பணித்து, புரோசனனையும் அவனுக்கு
*மந்திரியாக உடன் அனுப்புதல்
$3.111

#111
அறத்தின் மைந்தனுக்கு ஆங்கு ஒரு நாள் அவை
புறத்து இருந்து புகன்றனன் காவலன்
திறத்து நின் இளையோரொடும் சென்று தோள்
மறத்தினால் தனி வாழுதி என்னவே

மேல்
*கண்ணன் முதலியோர் குந்தியைக் கண்டு, பூமியை ஆளும்
*முறையையும் கருதுதல்
$3.112

#112
புகன்ற கேள்வி புரோசனன்-தன்னை இ
மகன்-தனக்கு நீ மந்திரி ஆகியே
இகன்றவர் செற்று இனியோர்க்கு இனிமை செய்து
அகன்ற ஞாலம் இவன் வழி ஆக்குவாய்

மேல்
*புரோசனன் பாண்டவர்களை வாரணாவதத்திற்கு
*அழைத்துப் போதல்
$3.113

#113
என்ன ஆங்கண் இறைஞ்சி அனந்தரம்
சொன்ன சொற்படி சூழ் படை வேண்டுவ
என்னவும் கொண்டு இளவரசோடும் அ
பொன் நகர் கொடு போயினன் என்பவே

மேல்
*வாரணாவதத்தில் சிவதரிசனம் செய்து, பாண்டவர் தம்
*மாளிகை புகுதல்
$3.114

#114
ஆர மார்புடை ஐவரும் குந்தியும்
பூர ஞான புரோசன நாமனும்
சேர வெண் பிறை செம் சடை வானவன்
வாரணாவதம் சென்று வணங்கினார்

மேல்
$3.115

#115
அங்கு அவன்-தன் அருள் பெற்று அமைச்சன் அங்கு
இங்கிதத்தொடு இயற்றிய நீள் கொடி
மங்குல் தோய் மணி மாளிகை எய்தினார்
சங்கம் விம்ம முரசம் தழங்கவே

மேல்
*பாண்டவர் அங்கு அரசாளுதல்
$3.116

#116
ஆவி அன்ன அமைச்சன் மொழிப்படி
மேவி அ திசை வேந்தர் குழாம் தொழ
கோவின் ஆணை நடத்தி குவலய
தேவி மெய் களிக்க சிறந்தார் அரோ

மேல்
*ஐவரும் அரக்கு மாளிகையைக் கவனித்து, புரோசனன்
*மீது ஐயுறவு கொள்ளுதல்
$3.117

#117
மன்னர் ஐவரும் வாரணாவதம்-தனில் மருவி
துன்னலார் தொழ தொல் நிலம் புரந்திடும் நாளில்
பின்ன நெஞ்சுடை புரோசனன் பேது உறு மதியால்
முன்னமே இனிது அமைத்திடும் மனை செயல் முன்னா

மேல்
$3.118

#118
மெழுகினால் நமக்கு ஆலயம் வகுத்ததும் விரகே
ஒழுகுகின்ற தன் ஒழுக்கமும் வஞ்சனை ஒழுக்கே
எழு கடல் படை யாவையும் இவன் வழியனவே
தொழுத கையுளும் படை உள சூழ்ச்சியும் பெரிதால்

மேல்
$3.119

#119
சங்கை உண்டு இனி உண்டியும் சாந்தமும் பூணும்
பொங்கு நுண் இழை துகிலும் அம் தாமமும் பூவும்
இங்கு இவன் பரிந்து இயற்றிய கோடலம் என்றார்
கங்கை நீர் தவழ் கழனி சூழ் பழன நாடு உடையார்

மேல்
*சிற்பி ஒருவன் வீமனிடம் வந்து, மாளிகையின்
*நிலவறை பற்றிக் கூறி, ‘தீங்கு நிகழ்ந்தபோது
*அதன்வழித் தப்புக!’ என்றல்
$3.120

#120
ஐயம் உற்று இவர் இருப்புழி மயனினும் அதிகன்
சையம் ஒத்த தோள் வலனுடை தபதியன் ஒருவன்
வையம் முற்றுடை வீமனை ஒரு தனி வணங்கி
ஐய பட்டதை அறிந்தருள் ஆம் முறை என்றான்

மேல்
$3.121

#121
நுந்தை ஏவலின் கம்மியர் நூதனமாக
இந்த மா நகர் திருமனை இயற்றிடு நாளின்
வந்த மந்திரி வஞ்சனை அறிந்து அறன் வடிவாம்
தந்தை என்னையும் ஏவினன் தன்மையின் உணர்ந்தே

மேல்
$3.122

#122
அடியனேனும் மற்றவருடன் அரக்கு மாளிகை இ
படியினால் இயற்றிய தொழில் பயன் எலாம் குறித்து
நெடிய கானகத்து அளவும் நீள் நிலவறை நெறி போய்
முடியுமாறு ஒரு மண்டபம் கோட்டினேன் முழை போல்

மேல்
$3.123

#123
வேறு ஒருத்தரும் அறிவுறா விரகினால் ஒரு தூண்
மாறுபட்டு நீ பறிக்கலாம்வகை வழி வகுத்தேன்
தேறுதற்கு இது தகும் என திருவுளத்து அடக்கி
ஊறு பட்டபோது எழுந்தருள்க என பணிந்து உரைத்தான்

மேல்
*வீமன் சிற்பிக்குப் பரிசு அளித்து, விழிப்புடன் வாழ்ந்து வருதல்
$3.124

#124
தச்சரில் பெரும் தலைவனுக்கு உரிமையின் தனங்கள்
பிச்சரின் கொடுத்து அவன் விடைகொண்டதன் பின்னர்
அச்சம் அற்று இவன் நம் மனைக்கு அம்மனை வழங்கும்
நிச்சம் இன்று-கொல் என்று-கொல் என நினைந்து இருந்தான்

மேல்
*பாண்டவர் பகலில் வேட்டையாடி, இரவில் துயில் இன்றி வாழ்தல்
$3.125

#125
விடவி வன் சினை நெடும் கொடி தழுவலின் மிடைந்த
அடவி எங்கணும் வேட்டையால் தங்கள் பேராண்மை
நடவி நன் பகல் இரவு கண் துயிலலர் நடந்தார்
புடவி தங்கள் வெண்குடை நிழல் குளிருமா புரப்போர்

மேல்
*புரோசனனுடன் நெருங்கிப் பழகிய பாண்டவர், ஒரு நாள் இரவில்,
*அவனையும் தம் மாளிகையில் துயிலச்செய்தல்
$3.126

#126
பாந்தளோடு ஒரு மனை-வயின் பயில்பவர் போல
வேந்தர் ஐவரும் மந்திர வலியினால் மிக்கோர்
காந்து நெஞ்சுடை அமைச்சனை கைவிடார் அணுகி
தாம் தம் மெய் என உயிர் என தனித்தனி சார்ந்தார்

மேல்
$3.127

#127
ஆங்கு ஓர் கங்குலின் அழைத்து நீடு அரசியல் உசாவி
ஈங்கு நீ துயில் வைகுதி எம்முடன் என்ன
பாங்கர் மெல் அணை பள்ளியும் பரிவு உற வழங்கி
தாங்களும் பொலம் சேக்கையில் தங்கினர் அன்றே

மேல்
*அரக்குமாளிகைக்கு வீமன் தீ வைத்து, தாயுடனும் சகோதரர்களுடனும்
*தப்பி, வனம் செல்லுதல்
$3.128

#128
உணர்வு அற துயில் உற்றபோது அற்றம் அங்கு உணரா
துணைவரை திரு தாய் பதம் தொழுக என சொல்லி
அணி கொள் கோயிலை தாதை நண்பனுக்கு இரை அளித்தான்
இணை இலா அமுது உரகர் கோனிடை நுகர்ந்து இருந்தான்

மேல்
$3.129

#129
முடியுடை தடம் கிரியினை முளி கழை-தொறும் உற்று
அடிநிலத்து உற சூழ்வருமாறு போல் அழலோன்
கொடி நிரைத்த பொன் கோபுர புரிசை சூழ் கோயில்
இடி இடித்து என வெடிபட சிரித்து எழுந்து எரித்தான்

மேல்
$3.130

#130
அ கணத்திடை அன்னையில் அணுகி ஆங்கு அவரை
தொக்க சித்திர தூண் அடி துவாரமே வழியா
பொக்கென கொடு போய் அகல் வனத்திடை புகுந்தான்
முக்கண் அற்புதன் முனிந்த ஊர் மூவரோடு ஒப்பான்

மேல்
*’குந்தியும் பாண்டவரும் எரிந்து வீழ்ந்தனர்’ என்று காலையில்
*மாளிகையைக் கண்டோர் கூறுதல
$3.131

#131
புரிந்த தீயினை கண்ணின் நீர் அவித்திட புகுந்து
பரிந்த நெஞ்சினை மீண்டும் அ பாவகன் சுடவே
கரிந்த கோயிலில் கார் இருள் புலர்ந்த பின் கண்டோர்
எரிந்து வீழ்ந்தனர் ஐவரும் யாயும் ஈண்டு என்றார்

மேல்
*செய்தி அறிந்து, அரசரும் முனிவர் முதலாயினாரும் வருந்துதல்
$3.132

#132
விருந்தராய் விடம் இட செல் ஐ வேடரும் தாயும்
இருந்த தீ மதி அமைச்சனோடு இறந்தமை உணரார்
திருந்து மா மதி பாண்டவர் செயலும் மற்று அறியார்
வருந்தினார் தமது உயிர் இழந்து என புவி மன்னர்

மேல்
$3.133

#133
போது பட்டு இருள் புகுந்து ஒளி போன வானகம் போல்
மாது பட்ட பார்_மடந்தை-தன் மதிமுகம் மழுங்க
தீது பட்டது குருகுல செல்வம் என்று இரங்கி
ஏது பட்டன முனிவரர் முதலினோர் இதயம்

மேல்
*செய்தி தெரிந்த துரியோதனனாதியரின் நிலை
$3.134

#134
கொட்பு அனல் சுட இறந்தமை கேட்டலும் குருக்கள்
துட்பதத்துடன் அழுதிடும் சுயோதனன் முதலோர்
உள் பனித்து மேல் வெயில் உற வெதும்பு நீர் ஒத்தார்
பெட்பு உற புவி முழுவதும் பெறும் கருத்து உடையோர்

மேல்
$3.135

#135
பொன் நலம் கொள மெழுகினால் ஆலயம் புனைந்து
துன்னு வெம் கதை படை மரு சுதனையே சுடுவான்
என்ன ஆண்மை-கொல் எண்ணினான் எண்ணினும் சுடுமோ
வன்னி தன் பெயர் மருச்சகன் என்பது மறந்தே

மேல்

@4. வேத்திரகீயச் சருக்கம்
*வீமன் தாயுடனும் துணைவருடனும் ஒரு மலைச் சாரலை அடைதல்
$4.1

#1
தோள் கரம் புறம்-தன்னில் அன்னையும் துணைவர் நால்வரும் தொக்கு வைகவே
கோள் கரந்த பல் தலை அரா என குகர நீள் நெறி கொண்டு போய பின்
தாள்களின் கதி தாள் பறிந்து வீழ் தரு வனத்தது ஓர் சாரல் மன்னினான்
மூள் கடும் கொடும் சின அனல் கண் மா மும்மத களிறு அனைய மொய்ம்பினான்

மேல்
*அங்கே இடிம்பி என்னும் அரக்கி வந்து, வீமன்மேல் காதல்கொண்டு உரையாடுதல்
$4.2

#2
அ வனத்தில் வாழ் அர_மடந்தை என்று ஐயம் எய்த ஓர் அடல் அரக்கி வந்து
இ வனத்தில் இ நள் இயாமம் நீ என்-கொல் வந்தவாறு இவர்கள் யார் என
செ வனத்து இதழ் கூர் எயிற்று எழும் தெள் நிலாவினில் திமிரம் மாறவே
வெவ் அனல் சுடர்க்கு ஒத்த ஓதியாள் வீமசேனனோடு உரை விளம்பினாள்

மேல்
$4.3

#3
யானும் வந்தவாறு உரைசெய்கேன் நினக்கு உரைசெய் நீ எனக்கு யார்-கொல் என்னலும்
தானும் அங்கு அவன்-தன்னொடு ஓதுவாள் தழுவும் ஆதரம் தங்கு சிந்தையாள்
ஊன் உகந்து தின்றிடும் இடிம்பன் என்று ஒருவன் இங்கு இராவணியை ஒத்து உளான்
மானுடம் கொள் மெய் கந்தம் ஊர்தலால் வரவு அறிந்தனன் வாள் அரக்கனே

மேல்
$4.4

#4
எம்முன் ஏவலால் யான் மலைந்திடற்கு எய்தினேன் நினை கொன்றும் என் பயன்
அம்ம வெற்பு இரண்டு அனைய பொன் புயத்து அழகு எறிக்கும் நீடு ஆர மார்ப கேள்
கொம்மை வெம் முலை தெரிவையர்க்கு உளம் கூசும் ஆசை நோய் கூறுகிற்பது என்று
எம்மனோர்களும் சொல்வர் யான் உனக்கு எங்ஙனே-கொலாம் இறுதி கூறுகேன்

மேல்
$4.5

#5
பெரும் சுழி பட கரை புரண்டு எழ பெருகும் யாறு பின் பிறழ் கலங்கல் போய்
அரும் சுவை படும் தெளிவினோடு சென்று ஆழி வேலை-வாய் அணையுமாறு என
பொரும் சினத்துடன் கொன்று தின்றிட போதரும் தொழில் பேதை நான் மெலிந்து
இரும் சிறை சுரும்பு இசைகொள் மாலையாய் இன்ப மால் உழந்து உன்னை எய்தினேன்

மேல்
$4.6

#6
நீடி இங்கு நான் நிற்கின் மாரனாம் நிருதன் நிற்க அ நிருதன் வெம்மையோடு
ஓடிவந்து எனை கொல்லும் உம்மையும் ஒரு கணத்திலே உயிர் செகுத்திடும்
நாடி என்-கொல் மற்று உய்ந்து போகலாம் நம்பி என்னை நீ நலன் உற தழீஇ
கோடி அம்பரத்திடை எழுந்து உனை கொண்டு போவல் ஓர் குன்றில் என்னவே

மேல்
*அவளது வேண்டுகோளை வீமன் மறுத்தல்
$4.7

#7
இரக்கம் இன்றியே தனி வனத்திலே இளைஞர் எம்முன் யாய் இவரை விட்டு எமை
புரக்க வல்லள் என்று ஒரு மடந்தை பின் போவது ஆடவர்க்கு ஆண்மை போதுமோ
வரை-கண் வாழ்வு கூர் நும்முன் எம் முனே மலைய எண்ணி மேல் வந்தபோது பார்
அரக்கன் ஆகில் என் அவுணன் ஆகில் என் அவனை ஓர் கணத்து ஆவி கொள்வனே

மேல்
*இடிம்பன் வந்து, தங்கையை வெகுண்டு மொழிதல்
$4.8

#8
இடிம்பை-தன் மனம் கொண்ட காளை இங்கு இவை இயம்பலும் நவை இடிம்பனும்
கொடும் பெரும் சினம் கதுவு கண்ணினன் குருதி நாறு புண் கூர் எயிற்றினன்
உடம்பு பெற்றது ஓர் இருள் முகத்திலே ஓர் இரண்டு வெம் சுடர் உதிக்கவும்
நெடும் பிறை கொழுந்து ஓர் இரண்டு வால் நிலவு எறிக்கவும் நின்ற நீர்மையான்

மேல்
$4.9

#9
இடி படுத்து எழுந்து எழிலி மின்னுமாறு என்ன நீடு குன்று எதிர் ஒலிக்கவே
வெடி பட சிரித்து இரு புறத்து நா மிளிர உள் புகைந்து ஒளிரும் வாயினான்
நெடி படுத்த வெம் கானம் எங்கணும் நிழல் படுத்தி வான் உற நிமர்ந்துளான்
கொடி படுத்த நுண் இடை இடிம்பையை கூவி அ இடை குறுகினான் அரோ

மேல்
$4.10

#10
உணவின் ஆசையால் கொல்ல வந்த நீ உவகை ஆசையால் உள் அழிந்து இவன்
கணவன் ஆம் என காதலிப்பதே கங்குல்வாணர்-தம் கடன் இறப்பதே
அணவு வெம் பசி கனல் அவிந்து போய் அநங்க வெம் கனல் கொளும் அடல் புலி
பிணவை அன்பினின் கலை நயப்பதே பேதை மானுடன் பேசுகிற்பதே

மேல்
*இடிம்பன் வீரம் பேசி, வீமனுடன் போர் செய்து, இறத்தல்
$4.11

#11
வார் அடா உனக்கு யாதுதானர்-தம் மகள் அடுக்குமோ வான மாதர் தோள்
சேர் அடா மலைந்து உயிரை மெய்யினை தின்று தேவர் ஊர் சேருவிப்பன் யான்
போர் அடாது உன்னோடு ஆளி ஏறு புன் பூஞை-தன்னுடன் பொர நினைக்குமோ
பார் அடா என் ஆண்மையை அரக்கர் கை பட்ட போதில் யார் பாரில் வைகினார்

மேல்
*பாதலம் புக்க வீமனை அரவு கடிக்க முன்னுள்ள விஷம் அகலுதல்
$4.12

#12
என்று சீறி மற்று இவன் அடுத்தல் கண்டு இணை இலா விறல் துணைவர் நால்வரும்
நின்ற யாயும் மற்று ஒரு புறத்திலே நிற்க மையல் கூர் நிருதவல்லியும்
வென்றி நல்குமா வந்த விந்தை போல் விழி பரப்ப மேல் வீமசேனனும்
சென்று கைகளால் பற்கள் நாவுடன் சிதற வாயினில் சென்று குத்தினான்

மேல்
$4.13

#13
குத்தினான் இவன் குணப_வல்சி தன் கூர் நக கரம் கொண்டு வீமன் மேல்
மொத்தினான் முனைந்து இருவரும் பொறார் முரணுடன் சினம் மூளமூளவே
தத்தினார் பிடுங்கிய மரங்களால் சாடினார் புய சயிலம் ஒன்றொடு ஒன்று
ஒத்தினார் இரண்டு அம்புதங்கள் வான் உரும் எறிந்தது ஒத்து ஓசை மிஞ்சவே

மேல்
$4.14

#14
வளர்ந்த திண் கரும் குன்று காந்தளை மலர்வது என்னவே வானகம் பட
கிளர்ந்த செம் புண்நீர் பொசியும் மெய்யினன் கேத நெஞ்சினன் கோத வாய்மையன்
தளர்ந்து வீழ் நிசாசரனும் ஆடகன்-தன்னை ஒத்தனன் பின்னை முன் உற
பிளந்த கோள் அரி-தன்னை ஒத்தனன் பிரதை என்னும் மின் பெற்ற காளையே

மேல்
*வீமனது ஆற்றலைக் குந்தி மகிழ்வுடன் நோக்குதலும்,
*தருமன் முதலியோரின் மகிழ்ச்சியும்
$4.15

#15
வன் திறல் இடிம்பனை வய கையால் உடல்
ஒன்று இரண்டு ஆகுமாறு உடன்ற மைந்தனை
அன்று கண்டனள் யாய் அரியின் பேடு தன்
கன்று திண் கரி பொர கண்டது என்னவே

மேல்
$4.16

#16
இளைஞரும் தம்முனும் இவன் அரும் பகை
களைகுவன் இனி என கண் களித்தனர்
விளைவு உறு காதலால் மெலிந்த பாவையும்
உளைவுடன் உவகையும் ஒருங்கின் எய்தினாள்

மேல்
$4.17

#17
பெரும் திறல் நிசாசர பிணத்தை அ வனத்து
இருந்துள பறவைகட்கு இருள் செய் கங்குலின்
விருந்து இட கொளுத்திய விளக்கு எனும்படி
அரும் திசை பொலிவுற அருக்கன் தோன்றினான்

மேல்
$4.18

#18
கரங்களால் நிசாசர இருளை காய்ந்துகொண்டு
இரங்கி நீள் வனத்திடை இரவில் மாழ்கிய
வரம் கொள் தாமரை முகம் மலர்த்தும் நீர்மையால்
உரம் கொள் வீமனுக்கு எதிர் உதய பானுவே

மேல்
*இடிம்பையின் காதல் குறிப்பை உணர்ந்து,
*வீமன் மணம் மறுத்து உரைத்தல்
$4.19

#19
எண் தகு கவர் மனத்து இடிம்பை மன்மதன்
மண்டு எரி சுடுதலின் வாடும் மேனியள்
கொண்ட வெம் காதலின் குறிப்பை அ வழி
கண்டனன் காணலன் செற்ற காளையே

மேல்
$4.20

#20
மாய்ந்தவன் துணைவி கேள் வதுவை இன்னமும்
ஏய்ந்திலன் எம்முனும் யாங்கள் மானுடர்
ஆய்ந்துகொள் முறைமையால் அரக்கர் பாவை நீ
காய்ந்தமை அறிதி முன் கணை இராமனே

மேல்
*குந்தி மைந்தரோடு உசாவி, இடிம்பையை
*மணக்குமாறு வீமனுக்கு உரைத்தல்
$4.21

#21
ஆசை கொள் அரக்கியோடு அனிலன் காதலன்
பேசிய கட்டுரை கேட்ட பெற்ற தாய்
ஓசை கொள் மைந்தரோடு உசாவி நண்பினால்
ஏசு அற உரைத்தனள் இனிமை கூரவே

மேல்
$4.22

#22
மறுத்து உரைப்பது கடன் அன்று மாந்தருக்கு
அறத்து இயல் ஆர்-கணும் அமைதல் வேண்டுமால்
உற தகும் இவளை நீ உம்முன் வாய்மையால்
கறுத்தவர் உயிர் கவர் காளை என்னவே

மேல்
*அங்கு, வியாதமுனி வந்து, பாண்டவர்க்கு நன்மொழி கூறுதல்
$4.23

#23
அ தினத்து அவர்-வயின் அவலம் நீக்குவான்
மெய் தவ பழ மறை வியாதன் வந்தனன்
பத்தியின் சிறுவரும் பணிந்து போற்றினார்
முத்தி பெற்றவரினும் முற்றும் சிந்தையார்

மேல்
$4.24

#24
தனி வனம் இகந்து நீர் சாலிகோத்திர
முனி வனம் சில பகல் வைகி முந்துற
மனன் உற பார்ப்பன மாக்கள் ஆகியே
இனிமையின் வேத்திரகீயம் எய்துவீர்

மேல்
*முனிவர் உரைத்தபடியே பாண்டவர்கள்
*முற்படச் சாலிகோத்திர வனம் சார்தல்
$4.25

#25
என தம படர் ஒழித்து இமையவன் செல
வனத்தை விட்டு அ வனம் மருவி வைகினார்
வினைப்படுத்து யாழினோர் முறையின் வேள்வி செய்
கன குழல் கன்னி-தன் காதலானொடே

மேல்
*இடிம்பையும் வீமனும் காதல் கூரக் கூடி வாழ்தல்
$4.26

#26
குந்தியை இரவும் நன் பகலும் கோது இலா
வந்தனை புரிதலின் மகிழ் இடிம்பையும்
வெம் திறல் வீமனும் விழைந்து வள்ளியும்
கந்தனும் என பெரும் காதல் கூரவே

மேல்
$4.27

#27
மான்மதம் கமழ் கொடி மந்திரம்-தொறும்
கான் மணம் கமழ் தடம் கா அகம்-தொறும்
தேன் மிகு சுனை நெடும் சிலம்பு அகம்-தொறும்
மேல் மணம் புரிந்தனர் வேட்கை விஞ்சவே

மேல்
*இடிம்பை கடோற்கசன் என்னும் புதல்வனைப் பெறுதல்
$4.28

#28
நிறம் திகழ் இருள் பிழம்பு என்ன நீண்டு அற
புறம் தரும் உரோமமும் பொருப்பு தோள்களும்
மறம் தரு கனை குரல் வாயும் ஆகவே
பிறந்தனன் கடோற்கசன் என்னும் பேரினான்

மேல்
*தந்தையரிடம் விடைபெற்று, கடோற்கசன்
*தாயுடன் செல்லுதல்
$4.29

#29
காதிய திறல் நரகாசுரன்-தனை
ஆதி வெம் கோலம் அன்று அளித்த ஆறு போல்
மேதினி மதித்த போர் வீமன் நல்கிய
சோதி அம் புதல்வனும் தொழுது சொல்லுவான்

மேல்
$4.30

#30
நிறையுடை தந்தையர் நீர் நினைத்தபோது
உறைவு இடத்து எய்தி ஆங்கு உரைத்த செய்குவேன்
இறைவ இ பணி விடை தருக என்று ஏகினான்
பிறை எயிற்று யாயொடும் பெற்ற பிள்ளையே

மேல்
*ஐவரும் அந்தண வேடம் பூண்டு, தாயுடன்
*வேத்திரகீய நகரம் சேர்தல்
$4.31

#31
சாத்திரம் மறை தெரி முனிவர் தன்மையின்
காத்திரம் மாறி அ காவல் வேந்தரும்
கோத்திரம் சூத்திரம் குடி உரைத்துளார்
வேத்திரகீய மா நகரில் மேயினார்

மேல்
*அந் நகர் வாழும் அந்தணர்களின் விருந்தினராய்
*ஐவரும் அன்னையும் வாழ்ந்து வருதல்
$4.32

#32
அந்தணர் ஐவரும் யாயும் அ நகர்
வந்துழி அதிதியர் வரவு காண்டலும்
முந்துபுமுந்துபு முகமன் கூறினார்
செம் தழல் வேள்வி கூர் ஆதிதேயரே

மேல்
$4.33

#33
நல் மனைவாழ்க்கையில் நயந்த சிந்தையான்
மன் மனை அனைய தன் மனையில் ஓர் முனி
தன்மனை அம்மனை தம்பிமாரொடும்
என் மனை வருக என எதிர்கொண்டு ஏகினான்

மேல்
$4.34

#34
ஒரு தினத்து அமுது என உள்ள நாள் எலாம்
வரும் முறைப்படி விருந்து அயின்று வைகினார்
அரு நெறி கடவுளர்க்கு அமுதம் ஊட்டுதல்
இருபிறப்பாளருக்கு என்றும் தன்மையே

மேல்
$4.35

#35
பொன்நகர் அணுகினர் போல நெஞ்சுற
தம் நகர் எனும்படி தாயும் மைந்தரும்
இ நகர் அநேக நாள் இருந்த எல்லையில்
அ நகர் புரிந்தது ஓர் ஆண்மை கூறுவாம்

மேல்
*பாண்டவர் வசித்த வீட்டுக்கு உரிய பார்ப்பனி ஒரு நாள் அழுது புலம்புதல்
$4.36

#36
மறையும் உருவினொடு அரிய குரு குல மகிபர் நெடு வன சரிதராய்
உறையும் வள மனை உடைய மடவரல் உருகு பிரதை-தன் உயிரனாள்
குறைவு இல் பொலிவினள் விரத நெறியினள் குழுவு நிதியினள் கொடுமையால்
இறையும் ஒழிவு அற இரு கண் அறல் வர எரி கொள் கொடி என இனையினாள்

மேல்
*’அழுவது என்?’ என்று குந்தி வினவ, அந்தணன் மனைவி
*பகன் என்னும் அசுரன் செய்தியை உரைத்தல்
$4.37

#37
மறுகி அழுவது என் மொழிக முனிவரன் மனைவி என இவள் வினவலும்
குறுகி அவளுடன் உரைசெய்குவள் உறு குறையை உளம் நனி குறையவே
முறுகு சின அனல் பொழியும் விழியினன் முகன் இல் பகன் எனும் முரணுடை
தறுகண் நிசிசரன் உளன் இ வள நகர் தழுவும் வனன் உறை தகுதியான்

மேல்
$4.38

#38
அருள் இல் இதயமும் நெறி இல் சரிதமும் அழகு இல் உருவமும் அதிர் குரல்
பொருள் இல் உரைகளும் உடையன் முழுது உடல் புலவு கமழ்தரு பொறியினன்
மருளும் நரியொடு கழுகு தொடர்தர வலிய பிணம் நுகர் சுவை அறாது
இருளின் மிசை இரு பிறைகள் என வளை எயிறு நிலவு எழும் இதழினான்

மேல்
$4.39

#39
அந்தகனும் மிக அஞ்சி முதுகிடும் அந்த நிசிசரன் இந்த ஊர்
வந்து குடியொடு கொன்று பலரையும் மன்ற மறுகிடை தின்ற நாள்
எந்தை முதலிய அந்தணரும் அவன் இங்கு வரு தொழில் அஞ்சியே
சிந்தை மெலிவுற நொந்து தலை மிசை சென்று குவிதரு செம் கையார்

மேல்
$4.40

#40
ஒன்றுபட எதிர் கொன்று பலர் உயிர் உண்பது அற நெறி அன்று நீ
இன்று முதல் இனி என்றும் முறைமுறை எங்கள் மனை-தொறும் விஞ்சையோர்
குன்றம் என ஒரு பண்டி அறு சுவை கொண்ட அடிசிலும் நம் குலம்
துன்றும் நரபலி ஒன்றும் இவை திறை தொண்டு புரிகுவம் என்றலும்

மேல்
$4.41

#41
அன்று முதல் அடல் வஞ்சகனும் இறை அன்பினொடு பெறு வன்பினால்
என்றும் நிலைபெற உண்டியுடன் மனை எங்கும் இடுபலி எஞ்சுற
தின்று திரிகுவன் இன்று என் மனை முறை சென்று பணி கவர் திங்கள் போல்
நின்று தளர்வுறுகின்றது எனது உயிர் நெஞ்சம் இலது ஒரு தஞ்சமே

மேல்
$4.42

#42
கன்னி இவள் பிறர் பன்னி எனது இரு கண்ணின் மணி நிகர் சன்மனும்
மன்னு குல முதல் பின்னை ஒருவரும் மண்ணின் உறு துணை இன்மையால்
இன்னல் பெரிது உளது என்ன புரிகுவது என்ன அறிகிலன் அன்னை கேள்
முன்னை மனை நிகழ் தன்ம முனிவனை முன்னில் இடர் நனி துன்னுமால்

மேல்
*தன் மக்களுள் ஒருவனை அனுப்பலாம் என்று குந்தி
*பார்ப்பனியைத் தேற்றி, வீமனது வலிமையையும் கூறுதல்
$4.43

#43
ஏதம் அற உறவான மனை_மகள் யாவும் உரைசெய யாதவன்
தீது இல் குல_மகள் ஆர்வமுடன் அவள் தேற ஒரு மொழி கூறுவாள்
ஆதி அனுமனொடு ஓதும் உவமையன் ஆடல் வலியுடை ஆண்மையான்
மோதி மிகு திறல் யாம சரிதனை மூளை உக உடல் கீளுமே

மேல்
$4.44

#44
கொவ்வை இதழ் மட நவ்வி அலமரல் குவ்வின் அனலினும் வெவ்வியோர்
ஐவர் உளர் சுதர் கை வில் விறலினர் அவ்வியமும் இலர் செவ்வியோர்
இ இவரில் எமை உய்வு கொளும் அவன் எவ்வெவ் உலகையும் வவ்வு திண்
பௌவம் என நனி தெய்வ முனிவரர் பைதல் அற நெறி செய்வனே

மேல்
*அந்தணனும் மனைவியும் பகனுக்கு அனுப்பும் பொருட்டு உணவு ஆக்குதல்
$4.45

#45
அவனை இடு பலி அருளுக என மொழி அளவில் மறலியும் உளைவுற
சிவனை வழிபடும் மகவை அருளிய செனக செனனியர் நிகர் என
தவனில் முதிர்தரு முனியும் வழுவு அறு தனது இல் அறனுடை வனிதையும்
துவனி அற மன மகிழ்வொடு இனிது அறு சுவைகொள் அமுது அடு தொழிலராய்

மேல்
$4.46

#46
தண் தரள மலை வெண் கயிலை மலை சங்க மலை என நங்கைமார்
மொண்டு சொரிதருகின்ற அடிசிலும் முந்து கறிகளும் வெந்த பால்
மண்டு நறு நெய்யொடு அந்த விடலையும் மைந்தர் அனைவரும் உண்டு தம்
பண்டி நிறைவுறு பின்பு பிறிதொரு பண்டி கெழுமிய பண்டமே

மேல்
*வீமன் அணிசெய்துகொண்டு, உணவு வண்டியை
*வனத்திற்கு ஓட்டிச் சென்று, பகனை நாடுதல்
$4.47

#47
வையம் முழுதுடை ஐயன் இளவலும் வைகலுடன் மனை வைகுவோர்
உய்யும்வகை புகல் ஐயை உரையினை ஒய்யென் விரைவொடு கைகொளா
வெய்ய பகன் உடல் பெய்த குருதியின் மெய்யை எழில் அணிசெய்தனன்
செய்ய மலர் கொடு செய்ய துகில் கொடு செய்ய கலவையின் மொய் கொடே

மேல்
$4.48

#48
துற்ற பல கறி செற்றி அமலை செய் துப்பு ஒர் இமகிரி ஒப்பு என
சற்றும் இடன் அற மொய்த்த சகடு இரு சக்ர உருளைகள் உய்க்கவே
உற்ற நிரைநிரை பத்திபட வலி ஒத்த பகடுகள் கட்டினான்
நெற்றி மிசை ஒரு கொற்ற அடல் அரி நிற்பது என ஒளிர் பொற்பினான்

மேல்
$4.49

#49
மண்டலம் கொள் வடிவுடன் அடல் பரிதி மண்ணில் வந்தது என மறுகினில்
கண்டகண்ட முனி குலம் அடங்க இரு கண் களிக்க வரு காட்சியான்
வெண் தரங்கம் என வீசு பேய்இரதம் மிஞ்சு கான நெறி மீது போய் அண்டர்
அண்ட முகடு உற வளர்ந்தனன் அரக்கன் நின்ற உழி அறியவே

மேல்
*வீமன் பகனைக் காணுதலும், வண்டியில் உள்ள சோற்றை அள்ளி உண்ணுதலும்
$4.50

#50
களிந்த வெற்பு உதவு நீல மா நதி அடுத்த குன்றில் ஒரு கழி முழை
தெளிந்த பற்களொடு நாவை மென்று நனி தின்று வெம் பசி கொள் தீயினால்
முளிந்து முற்றும் மனம் வேவவேவ நெடு மூச்சு எறிந்து புகை முகனுடன்
விளிந்தது ஒத்து வழி குழிய நின்று சுழல் விழி நிரைத்து அயரும் வெகுளியான்

மேல்
$4.51

#51
வெற்று எலும்பின் உயர் ஆசனம்-தனில் விகங்க நீழலிடை மேவர
சுற்றும் நின்று பல சம்புகங்கள் துதி சொல்ல அல்லல் மிகு துன்முகன்
உற்று நின்ற நிலை கண்டு உகந்து இவனை உயிர் ஒழிந்திட உடற்றினால்
இற்றை உண்டி கெடும் என்று பண்டியில் எடுத்த வல்சி நுகர் இச்சையான்

மேல்
$4.52

#52
வன்பினால் உரக பதி அளித்த நெடு வாரி ஆர் அமுதம் உண்ட கோ
முன் பின் ஆக உயர் சகடு இருந்து எதிர் முகந்துகொண்டு வரை முழையுளே
அன்பினால் அடையும் அன்னம் என்ன நிறை அன்னம் முற்றவும் அருந்தினான்
பின்பின் ஆக இது கண்டு வெம் பசி கொள் பகனும் எய்தி இவை பேசுவான்

மேல்
*அது கண்ட பகன் வீமனை நெருங்கி, வீரமொழி புகன்று, கைகளால் புடைத்தல்
$4.53

#53
புலி-தனக்கு இடு விடக்கை நின்றது ஒரு பூஞை தின்னுமது போல நீ
பலி அனைத்தையும் விழுங்கினால் இது பலிக்குமோ எளிமை பார் எனா
ஒலி பட கிரியில் உரும் எறிந்தது என ஓடி வந்து பிடர் ஒடியவே
வலி பட பணை விறல் தட கை கொடு மாறிமாறி முறை வீசினான்

மேல்
$4.54

#54
பக்கமும் பிடரும் ஒக்க முட்டிகள் படப்பட கவள பாரமாய்
விக்க நின்றன வயிற்று இரண்டு அருகும் வீழவீழ முன் விழுங்கலும்
புக்க பண்டமுடன் உன் உடல் தசை புசிப்பன் எங்ஙன் இவை போவது என்று
அ கடும் கையும் இளைத்து வெம் சினமும் ஆறி நின்றனன் அரக்கனே

மேல்
*துரியோதனனும் வீமனும் உட்பகை கொண்டு கதைப்
*போர் புரிய, அசுவத்தாமன் விலக்குதல்
$4.55

#55
அ சகட்டினில் ஒர் எள்துணை சுவடும் அற்ற பின் சிறிதும் அச்சம் அற்று
உச்சம் உற்ற வெயில் அர்க்கன் ஒத்து அவனொடு உத்தரித்து உரைசெய்து ஒட்டினான்
மெச்ச மெச்சும் உலகத்து அரக்கர்களில் விக்ரம திறலின் மிக்க நீ
கச்ச கச்ச பல கத்தை விட்டு உனது கட்டு உரத்தினொடு கட்டுவாய்

மேல்
$4.56

#56
சொல்லி என் பயன் அரக்கன் நீ மனிதன் யான் உனக்கு உரிய தொழில்களாம்
மல்லினும் படை விதத்தினும் செருவில் வல்ல வல்லன புரிந்து போர்
வெல்ல நெஞ்சம் உளதாகில் வந்து பொரு விறல் இடிம்பனையும் வென்று உனை
கொல்ல வந்தனன் என புகன்று இரு கை கொட்டி வாகு மிசை தட்டினான்

மேல்
*இருவரும் பொருதல
$4.57

#57
பட்டவர்த்தனர்கள் பொன் சிரத்தின் மலர் பொற்புடை சரணபற்பனும்
நெட்டு இருள் சரனும் வெற்பு வெற்பினொடு நிச்சயித்து உடல நிற்ப போல்
வட்டம் வட்டம் வர ஒட்டி ஒட்டி உறு மல் தொழில் செருவில் மட்டியா
முட்டி யுத்த நிலை கற்ற கற்ற வகை முற்ற முற்ற எதிர் முட்டினார்

மேல்
$4.58

#58
கரம் கரத்தொடு பிணங்கவும் தமது கால்கள் கால்களொடு கட்டவும்
சிரம் சிரத்தினொடு தாக்கவும் கொடிய சிங்க ஏறு அனைய திறலினார்
உரங்கள் இட்டும் வளர் தோள்கள் இட்டும் எதிர் ஒத்தி மல் சமர் உடன்ற பின்
மரங்கள் இட்டும் உயர் கற்கள் இட்டும் நெடு வாதினோடு இகலி மோதினார்

மேல்
$4.59

#59
உலா வரும் தனது தாதை ஒத்த வலி உடைய காளை கழல் உதையினால்
விலா ஒடிந்து தட மார்பு ஒடிந்து மிடல் வெரிந் ஒடிந்து படு வெம் பிண
புலால் அளைந்த இரு கவுள் ஒடிந்து பொரு புயம் ஒடிந்து கடை ஒத்த வாய்
நிலா எழும் கொடிய எயிறு ஒடிந்து செயல் இன்றி வாள் நிருதன் நிற்கவே

மேல்
*வீமன் பகனைக் கொன்று, அவன் உடலை
*வண்டியில் இட்டு, நகருக்கு மீண்டு வருதல்
$4.60

#60
உண்டி அற்று அயரும் யாதுதானன் அடியுண்டு மெய் தளர்வு ஒழிந்த பின்
மண்டியிட்டு எதிர் விழுத்தி மார்பின் இப மத்தகத்திடை மடங்கலின்
திண் திறல் பெரு மிடற்றை வன்பினொடு திருகி வீசி ஒரு செம் கையால்
பண்டியில் கடிதின் இட்டு மாருதி புகுந்தனன் பழைய பதியிலே

மேல்
*பகன் உடலை நகரை அடுத்த இடுகாட்டில் இட்டு வீமன் நீராட, சூரியனும் மறைதல்
$4.61

#61
ஏக சக்ர வனத்து இருந்த திறல் யாதுதானனை இமைப்பினில்
சாக முட்டியின் அடர்த்து மா முனிவர் தம் பதிப்புறன் அடுத்தது ஓர்
வே கரி கடு வனத்தில் இட்டு மலர் ஓடை மூழ்க விறல் வீமனும்
மோகரித்து அவுணரை தடிந்து கடல் முளரி நாயகனும் மூழ்கினான்

மேல்
*விளக்கு ஏற்றும் நேரத்தில் வீமன் வீட்டை
*அடைந்து, எல்லோருடனும் அளவளாவுதல்
$4.62

#62
வாச மா மணி விளக்கு எடுப்ப இவன் வந்து தாம் உறையும் மனை புகுந்து
ஈசனோடு உமை என தவம் புரியும் இருவர் தாள்களும் இறைஞ்சியே
நேசம் ஆன அருள் அன்னையை தொழுது தம்முனை தொழுது நெஞ்சுற
தேசினோடு இளைஞர் தொழ மகிழ்ச்சியொடு தழுவினான் முறைமை திகழவே

மேல்
*நகரத்தார் அகம் மகிழ்ந்து, வீமனைப் பாராட்டுதல்
$4.63

#63
அகம் மலர்ந்து முனி ஆசி சொற்றிடவும் அன்னை ஆர்வ உரை கூறவும்
முகம் மலர்ந்து உரிய துணைவர் ஆண்மை நிலை மொழியவும் சமர மொய்ம்பனை
சகம் மலர்ந்த திரு உந்தி மால்-கொல் இவன் என்று மற்று உள சனங்களும்
மிக மலர்ந்து புனல் ஓடையின் குழுமி நனி வியந்து இசை விளம்பினார்

மேல்

@5. திரௌபதி மாலை இட்ட சருக்கம்
*துருபதன் தன் மகளுக்குச் சுயம்வரநாள் குறித்தலும்,
*அரசிளங் குமரர் வந்து திரளுதலும்
$5.1

#1
இங்கு இவர் இவ்வாறு இந்த இருக்கையில் இருக்கும் நாளில்
அம் கண் மா ஞாலம் எங்கும் அரக்கு மாளிகையின் வீந்தார்
பங்கம் இல் குணத்தால் மிக்க பாண்டவர் என்று மாழ்க
துங்க வேல் துருபதன்-தான் சூழ்ந்தது சொல்லல் உற்றாம்

மேல்
$5.2

#2
வரத்தினால் பிறந்தவாறும் வான்மொழி புகன்றவாறும்
சிரத்தினால் வணங்கி கேட்ப தேசிகன் உரைத்தவாறும்
உரத்தினார் கெடாதவாறும் உணர்ந்து தன் பேதை இன்னம்
சரத்தினால் உயர்ந்த வின்மை தனஞ்சயற்கு உரியள் என்னா

மேல்
$5.3

#3
தான் வரித்தவற்கே எய்த உரியள் என் தனயை என்று
கான் வரி சுரும்பு உண் மாலை காவலர்க்கு ஓலை போக்க
மான் வரி கண்ணிக்கு ஏற்ற வதுவை நாள் மலர் பூ ஒன்றை
தேன் வரித்து என்ன வந்து திரண்டது குமரர் சேனை

மேல்
*சுயம்வரச் செய்தி கேட்டு, பாண்டவர்கள்
*தாயுடன் புறப்பட்டுச் செல்லுதல்
$5.4

#4
ஆங்கு அது நிகழ்ந்த மாற்றம் அந்தணன் ஒருவன் வந்தோன்
ஈங்கு இவர்க்கு உரைப்ப மைந்தர் ஐவரும் யாயும் கேட்டு
பாங்குடை பதியில் வாழும் பார்ப்பன மாக்களோடும்
தாங்க அரும் கொடிய கானம் தம் மன தேரில் போனார்

மேல்
*வழியில் வியாதன் தோன்றி, அடுத்து நிகழ இருக்கும்
*செய்தியைப் பாண்டவர்க்குக் குறிப்பாகக் கூறிப் போதல்
$5.5

#5
சார தந்திரத்தில் மிக்க தபோதனன் சதுர் வேதங்கள்
பாரதம்-தன்னோடு ஐந்தாம் படியினால் பகர்ந்த மூர்த்தி
நாரத முனியை ஒப்பான் நராதிபர் நடந்து செல்லும்
நீரத நெறியில் வாவி நிறைந்த நீர் என்ன நின்றான்

மேல்
$5.6

#6
வணங்கலும் வாழ்த்தி முந்த வந்து நீர் வாழ்வு செய்தீர்
இணங்கி நும் கேண்மை கொள்வான் இச்சையால் யாகசேனன்
அணங்கினை அன்று வேள்வி அழலிடை அளித்தான் அந்த
சுணங்கு அணி முலையாள் நாளை சூட்டுவள் தொடையல் மாதோ

மேல்
$5.7

#7
இ பகல் இரவும் வைகாது ஏகி ஆங்கு எய்தும் அங்கண்
அ பகல் மன்றல் பெற்றால் தோற்றுதல் ஆண்மை என்று
செப்பியே முனிவன் போக சிறுவரும் பெரிய கங்குல்
மை புற பார்த்தன் செம் கை மணி விளக்கு ஆர போனார்

மேல்
*கங்கைத் துறையில், சித்திரரதன் என்பவன்
*போரிட்டு, அருச்சுனனால் தோல்வியுறல்
$5.8

#8
புத்திரன் பேரர் கங்கை பூம் துறை அடைந்த போதில்
குத்திர விஞ்சை வேந்தன் குறுகி வெம் கொடும் போர் செய்ய
சித்திரத்தேரோன்-தன்னை தேவர் கோன் மதலை செம் தீ
அத்திரத்து இருந்தை தேரோன் ஆக்கினன் இமைப்பின் அம்மா

மேல்
*தோற்றவன் விசயனுக்குத் தோழனாக, பின்னர், வழியில்
*தௌமிய முனியைக் கண்டு வணங்கி, அம்முனியுடனே
*எஞ்சிய வழியையும் கடந்து போதல்
$5.9

#9
தோற்றவன் திரிந்து மீண்டு தோழன் அ விசயற்கு ஆக
ஆற்ற அரும் புனலும் யாறும் அவன் துணையாக நீந்தி
சாற்றும் உற்கச தீரத்து தௌமிய முனியை கண்டு
போற்றி மற்று அவன்-தனோடும் புன் நெறி புறம் விட்டாரே

மேல்
*உதய காலத்தில் பாண்டவர்க்கு நல் நிமித்தங்கள் தோன்றுதல்
$5.10

#10
புலர்ந்தன கங்குல் போதும் பொழிதரு பனியும் சேர
மலர்ந்தன மனமும் கண்ணும் வயங்கின திசையும் பாரும்
அலர்ந்தன தடமும் காவும் ஆர்த்தன புள்ளும் மாவும்
கலந்தன குருகும் பேடும் கலித்தன முரசும் சங்கும்

மேல்
$5.11

#11
குன்றமும் கொடிய கானும் கூர் இருள் கங்குல் நீங்கி
நன்றுநன்று உதவ வந்தீர் நடந்து நீர் இளைத்தீர் போலும்
என்று கொண்டு உவகையோடும் இன் மலர் கழுநீர் வாச
மன்றல் அம் தென்றல் வீசி வழி விடாய் தணித்தது அன்றே

மேல்
$5.12

#12
வெறி படு முளரி மொக்குள் விரி பதம் நோக்கி சுற்றும்
பொறி வரி வண்டின் ஈட்டம் புறத்து இருந்து இரங்க வண்டு ஒன்று
இறகரால் வீசி உள் புக்கு இன் மது நுகர்தல் கண்டு
நெறியில் நல் நிமித்தம் ஆக நெஞ்சுற நினைந்து சென்றார்

மேல்
$5.13

#13
வண் துறை மருங்கின் ஆங்கு ஓர் மாங்கனி வீழ்தல் கண்டே
தண் துறை மீன்கள் எல்லாம் தம்தமக்கு இரை என்று எய்த
விண்டு உறை கிழிய ஓடி வென்று ஒரு வாளை தன் வாய்
கொண்டு உறை வலிமை நோக்கி குறிப்பினால் உவகை கூர்ந்தார்

மேல்
$5.14

#14
மா குரல் அளக வல்லி வதுவையின் அழகு காண
தாக்கு உரல் அடி கொள் யானை தரணிபர் எவரும் வந்தார்
வீக்கும் நல் மிளிர் பொன் பூணீர் விரைவுடன் வம்-மின் என்று
கூக்குரல் விளிப்ப போலும் கோகில குரலும் கேட்டார்

மேல்
$5.15

#15
நீடுதல் இல்லை இன்றே நிருபதி கன்னி மன்றல்
கூடுதல் இவர்க்கு உண்டாகும் கொற்றவர் குறை பொறாதே
ஓடுதல் உண்மை என்னா தோகைகள் ஓகையோடும்
ஆடுதல் நோக்கிநோக்கி அகம் மகிழ்ந்து ஏகினாரே

மேல்
$5.16

#16
பூ எலாம் சுரும்பு மொய்ப்ப புனல் எலாம் புள்ளு வைக
மா எலாம் துணையின் மேவ மரன் எலாம் வல்லி புல்ல
ஏ எலாம் பயின்ற வில் கை ஏற்று இளம் சிங்கம் போல்வார்
கா எலாம் மருங்கு-தோறும் கண்டு கண் களித்து போனார்

மேல்
*துருபதனுக்கு உரிய பாஞ்சால நகரினுள் பாண்டவர் புகுதல்
$5.17

#17
வாரண மாயை சூழ்ந்த மாயவன் தோற்றம் போல
பேர் ஒளி பம்பி ஆர்க்கும் பேச அரும் சிறப்பிற்று ஆகி
பூரண கும்பம் பொன் கோபுரங்களால் பொலிந்து தோன்றும்
ஆரவம் மிகுந்த பல் புள் அகழி சூழ் புரிசை கண்டார்

மேல்
$5.18

#18
மங்கல முழவம் விம்ம மன்னு பல்லியங்கள் ஆர்ப்ப
சங்கு இனம் முழங்க எல்லா தானையும் பரந்து சூழ
எங்கணும் நெருங்கி வைகும் இராச மண்டலங்களோடும்
துங்க வேல் துருபதன்-தன் தொல்லை மா நகரி புக்கார்

மேல்
*அப்பொழுது, அந் நகர் இருந்த தோற்றம்
$5.19

#19
தொடங்கியும் தொடக்கம் தொட்டு துகள் அற வளர்ந்தும் மீள
மடங்கியும் செல்லுகின்ற மன்னுயிர் உலகம் எல்லாம்
முடங்கிய சார்ங்க செம் கை முகுந்தன் வாய் புகுந்து காலத்து
அடங்கிய உதரம் போன்றது அந்த மா நகரி அம்மா

மேல்
$5.20

#20
குழை புறம் கடந்த செம் கண் குறு நகை கொவ்வை செ வாய்
இழை பொலி முலையினாளுக்கு இற்றை நாள் வதுவை என்று
மழை புற மாடம் ஏறி வருநரை மலர் கை காட்டி
அழைப்பன போன்ற வீதி அணி கொடி ஆடை எல்லாம்

மேல்
*அந் நகரிலே, தாயை ஒரு குலாலன் மனையில் இருத்திவிட்டு,
*பாண்டவர் சுயம்வர மண்டபம் சேர்தல்
$5.21

#21
விண் தலம் புதைத்த பைம் பொன் துகில் இடு விதான நீழல்
மண்டு அகில் புகையில் மூழ்கி ஆவண மறுகில் செல்வம்
கண்டு கண்டு அரி ஏறு ஆனின் கவினுடை நெடும் தோல் போர்த்து
கொண்டன செயலார் ஆங்கு ஓர் குலாலனது இருக்கை சேர்ந்தார்

மேல்
$5.22

#22
ஆங்கண் நல் தவத்தால் மிக்க அன்னையை இருத்தி மைந்தர்
தாங்கள் முன் துணையாய் வந்த தாபதர்-தம்மோடு எய்தி
தூங்கணங்குரீஇயின் மஞ்ச தலம்-தொறும் தூங்குகின்ற
தேம் கள் மா தெரியல் வேந்தர் சேர்ந்த பேர் அவையில் ஆனார்

மேல்
*திரௌபதியின் மனநிலை
$5.23

#23
ஆதியில் குந்தி மைந்தர் ஐவர்க்கும் உரியள் ஆம் என்று
ஓதிய விதியினால் நெஞ்சு உலப்புறா உவகை கூர்வாள்
சோதிடம் பொய்யாது என்றும் தோன்றுவர் உரியோர் என்றும்
தாதியர் தேற்றத்தேற்ற தன் மன தளர்வு தீர்வாள்

மேல்
$5.24

#24
சூட்டிய தொடையல் மாலை தோழியர் வைகல்-தோறும்
தீட்டிய படங்களும் தம் சிந்தையும் பொலிவு கொள்ள
கோட்டிய சிலையினோடும் கொடி மணி தேரினோடும்
காட்டிய கோலம் அன்றி பிறிது ஒன்றும் காண்கிலாதாள்

மேல்
$5.25

#25
ஆண்டு எரி பிறந்த போதே அன்பினால் எந்தை நேர்ந்த
பூண் தெரி மார்பன் இன்று இ பொன் அவை பொலிய தோன்றி
ஈண்டு எரி முன்னர் மன்னர் இழிவுற வேட்டிலானேல்
மீண்டு எரி புகுவன் என்னும் எண்ணமே விழையும் நீராள்

மேல்
*தோழியர் திரௌபதியைக் கோலம் செய்து, சுயம்வர
*மண்டபத்திற்கு அழைத்து வருதல்
$5.26

#26
கோண் பிறை நுதலாள்-தன்னை கோதையர் பலரும் கூடி
சேண் புனல் பல கொண்டு ஆட்டி செழும் துகில் தொழுது சேர்த்தி
பூண்பன இசைய பூட்டி புகை கமழ் தாமம் சூட்டி
காண்பவர் ஆண்மை தேய காமவேள் கலகம் செய்தார்

மேல்
$5.27

#27
வந்தனர் குமரர் யாரும் வருக என மகிழ்ந்து போற்றி
சந்து அணி முலையினாளை தாயினும் பரிவு கூர்ந்தோர்
கந்தனும் உவமை ஆற்றா காவலர் காம தீயில்
இந்தனம் இடுவது ஏய்ப்ப வேத்தவை ஏற்றினாரே

மேல்
*திரௌபதியைக் கண்ட அரசர்களின் நிலையும், திரௌபதி
*பாண்டவரின் வரவை எதிர் நோக்குதலும்
$5.28

#28
வெம் கழல் படை கை வேந்தர் விழிகளால் விளங்கும் மேனி
பொங்கு அழல் பிறந்த பாவை பொற்பினை பொலிய நோக்கி
பைம் கழை தனுவோன் செம் கை பகழியால் பாவம் எய்தி
அங்கு அழல் பட்ட நெய் போல் அனைவரும் உருகினாரே

மேல்
$5.29

#29
மங்குலின் மங்குல் மூடி வயங்கு ஒளி மறைந்து தோன்றா
செம் கதிர் செல்வன் போல சீர் கெழு வடிவம் மாறி
அங்கு அவர் இருந்த தன்மை அறிந்ததோ செறிந்த பொய்கை
பங்கயம் போன்றதால் அ பரிவுறு பாவை பார்வை

மேல்
*அப்பொழுது திட்டத்துய்மன், ‘சுழலும் எந்திரத் திகிரியின் நடுவிலுள்ள
*இலக்கை எய்பவருக்கே திரௌபதி உரியள்’ என்று அறிவித்தல்
$5.30

#30
மன கடும் காதல் விம்ம மாலை தாழ் புயங்கள் வாட
எனக்குஎனக்கு என்றுஎன்று ஏமாந்து இருந்த காவலரை நோக்கி
சின கடம் ஒழுகும் கன்ன களிற்றினான் திட்டத்துய்மன்
நினைக்கவும் அரியது ஒன்றை நினைவினோடு உரைசெய்வானே

மேல்
$5.31

#31
சிலை இது சிலீமுகங்கள் இவை கடும் திரிகை வேகத்து
இலை முகத்து உழலுகின்ற எந்திர திகிரி நாப்பண்
நிலை இலா இலக்கும் அஃதே நெஞ்சுற யாவன் எய்தான்
கலை_வலீர் அவற்கே அந்த கன்னியும் உரியள் என்றான்

மேல்
*அது கேட்ட அரசர்களின் நிலை
$5.32

#32
இ சொல் பழன பாஞ்சாலர்க்கு இறைவன் புதல்வன் இயம்புதல் கேட்டு
அ சொல் தம்தம் செவிக்கு உருமேறு ஆக கலங்கும் அரவு அன்னார்
கச்சை பொருது புடை பரந்து கதித்து பணைக்கும் கதிர் ஆர
பச்சை குரும்பை இள முலை மேல் பரிவால் நாணம் பிரிவுற்றார்

மேல்
$5.33

#33
கண்போல் அம்பும் நுதல் போலும் கடும் கார்முகமும் காண்-தொறும் அ
திண் போர் வேந்தர் மன கலக்கம் செப்பும் தகைத்து அன்று ஆனாலும்
விண் போய் உழன்று சுழல் இலக்கை மெய்யே எய்து வீழ்த்தி மலர்
பெண் போல்வாளை கைப்பிடிக்கும் பேராசையினால் பேதுற்றார்

மேல்
*செவிலித் தாயர் அவையிலிருந்த அரசர்களை, ‘இவர்
*இன்னார் இன்னார்’ என்று சுட்டிக் காட்டி, அறிவித்தல்
$5.34

#34
திருந்து ஆர் மன்றல் குழல் அணங்கின் செவிலி தாயர் கடல் கடைந்து
வருந்தா அமுதம் நிகர்வாளை மயில் போல் கொண்டு மன் அவை புக்கு
இருந்தார் இருந்த காவலரை இன்னோர்இன்னோர் இவர் என்று
முருந்து ஆர் பவள துவர் இதழ் வாய் முகிழ் வாள் நகைக்கு மொழிகின்றார்

மேல்
$5.35

#35
மாற்றம் பிறிது ஒன்று உரையான் இ வன் போர் வில்லின் வலி நோக்கி
சீற்றம் சிந்தை கொண்டு அழல பொய்யே மலர்ந்த திரு முகத்தான்
ஏற்றம்-தன்னில் வேறு ஒருவர் இ பேர் உலகில் இலர் என்ன
தோற்றம் படைத்தோன்-தனை காட்டி துரியோதனன் மற்று இவன் என்றார்

மேல்
$5.36

#36
மணியின் கிரண வெயில் எறிப்ப மண் ஏழ் தாங்கும் நச்சு எயிற்று
பணியின் முடி நாயக தலையின் பாங்கே நிரைத்த பல் தலை போல்
துணியும் கொடுமை வகிர் அன்ன துணைவர் துச்சாதனன் முதலோர்
அணியும் கழல் கால் சுயோதனனுக்கு அருகு ஆசனத்தர் இவர் என்றார்

மேல்
$5.37

#37
உலைவந்து அயரும் சூல் மந்திக்கு உருகா நிலம் கீண்டு உதவு குல
கலை வன் பலவின் சுளை கீறி களிப்போடு அளிக்கும் காந்தார
தலைவன் சகுனி இவன் கண்டாய் தக்கோர் ஆடா சூதுக்கும்
நிலை வஞ்சனைக்கும் தரணிபரில் யாரே இவற்கு நிகர் என்றார்

மேல்
$5.38

#38
பேசாது ஒடுங்கும் பேர் அறிவால் பெரும் போர் வலியால் பிறப்பால் மெய்
தேசால் இயற்றும் பல படையால் திண் தோள் வலியால் செம் சிலை கை
ஆசான் மைந்தன் இவன்-தனக்கு இங்கு யாரே உவமை அமரரிலும்
ஈசானனை மற்று ஒரு சிறிது ஒப்பு எனலாம் அல்லது இலை என்றார்

மேல்
$5.39

#39
பெண்மைக்கு இரதி என வந்த பெண் ஆர் அமுதே பேர் உலகில்
உண்மைக்கு இவனே வலிக்கு இவனே உறவுக்கு இவனே உரைக்கு இவனே
திண்மைக்கு இவனே நெறிக்கு இவனே தேசுக்கு இவனே சிலைக்கு இவனே
வண்மைக்கு இவனே கன்னன் எனும் மன்னன் கண்டாய் மற்று இவனே

மேல்
$5.40

#40
அலத்தால் முன்னம் பிளந்த பகை அடர்ப்பான் கருதி பிளப்புண்ட
சலத்தால் யமுனை பிணித்தது என தயங்கும்படி சேர் தானையினான்
குலத்தால் உயர்ந்த வசுதேவன் குமரன் களப கொங்கையர் மெய்
நலத்தால் மகிழும் சிந்தையினான் நறும் தார் இராமன் இவன் என்றார்

மேல்
$5.41

#41
இந்த குரிசில் யது குலத்துக்கு எல்லாம் திலகம் எனுமாறு
வந்து உற்பவித்து பொதுவருடன் வளரும் கள்ள மா மாயன்
முந்த கஞ்ச மாமன் உயிர் முடித்தான் இவற்கு முகில் ஊர்தி
அந்த புரத்தில் ஆராமம் அந்தப்புரத்துக்கு ஆராமம்

மேல்
$5.42

#42
தண்ணம் துளவோன்-தனக்கு இளவல் இவன் காண் மின்னே சாத்தகி என்று
எண்ணும் போச குல தலைவன் எவரும் சூழ இருக்கின்றான்
கண்ணன்-தன்னை அவமதித்து கழறும் புன்சொல் கார்முகத்தை
திண்ணென் கருத்தான் ஈங்கு இவன் காண் சேதி பெருமான் சிசுபாலன்

மேல்
$5.43

#43
தார் வண்டு இமிர தேன் ஒழுகும் தடம் தோள் வீரன் சராசந்தன்
போர் வெம் சரத்தால் யாவரையும் புறம் கண்டு அன்றி போகாதான்
சீர் வண் மதுராபுரி விடுத்து துவாரகையினில் சென்று ஒதுங்க
கார்வண்ணனையும் நெடும் காலம் வென்றான் இவன் காண் என்றாரே

மேல்
$5.44

#44
பனைக்கை பிறை வெண் கோட்டு அயிராபதமே போலும் பகட்டில் இவன்
வினை-கண் புகுந்தால் எதிர் நின்று வேறு ஆர் இவனை வெல்கிற்பார்
முனை-கண் செம் கண் தீ உமிழும் முகத்தான் மாதே பகதத்தன்
தனக்கு தானே நிகர் என்ன தருக்கொடு ஈண்டே இருக்கின்றான்

மேல்
$5.45

#45
இவன் சல்லியன் என்று உரை சான்ற இகல் வேல் மன்னர்க்கு ஏறு அனையான்
இவன் தன் பகைவர் யாவரையும் இமையோர் ஆக்கும் எழில் நீலன்
இவன் தண் தமிழ் தேர் அடல் வழுதி இவன் தேர் இரவிகுல வளவன்
இவன் செம் தழலோன் மரபு ஆகி ஈர் ஏழ் உலகும் புகழ் சேரன்

மேல்
$5.46

#46
வில் ஆண்மையினால் வெம் கருப்பு வில்லோன்-தனக்கே நிகர் என்ன
பல்லார் புகழும் பான்மையினால் பதினெண் புவிக்கும் பதியாய
எல்லா அரசும் நின்பொருட்டால் ஈண்டே திரண்ட இன் அமுத
சொல்லாய் நல்லாய் மென் பூவாய் தோகாய் பாவாய் துரௌபதியே

மேல்
$5.47

#47
இவரில் தனது தோள் வலியால் அரி ஏறு என்ன எழுந்திருந்து அ
தவரில் புரி நாண் உற ஏற்றி தழல் கால் முனை வெம் சாயகத்தால்
பவரின் செறிய நிரைத்து உருளும் பல்வாய் திகிரி பயில் இலக்கை
கவரின் செழும் தார் புனைந்து அவனை கைக்கொண்டிடு நீ கடிது என்றார்

மேல்
*அரசர்களில் சிலர் சோர்வுற, சிலர் இலக்கை எய்யக் கிளர்ந்து எழுதல்
$5.48

#48
முத்த நகை பவள இதழ் குளிர் வெண் திங்கள் முகத்தாளை கைத்தாயர் மொழிந்த காலை
சித்திரம் ஒத்து உணர்வு அழிந்து தம்தம் பைம் பொன் திகழ் அரியாசனத்து இருந்தார் சிற்சில் வேந்தர்
அ தனுவின் பெருமையையும் இலக்கத்து உள்ள அருமையையும் கருதாமல் ஆண்மை கூறி
எத்தனைஎத்தனை வேந்தர் ஆசை கூர யான்யான் என்று எழுந்திருந்தார் யானை போல்வார்

மேல்
*கண்ணன் பலராமனிடம் பாண்டு மைந்தர் உரு மாறி இருந்தமை உரைத்து, கிளர்ந்தெழுந்த
*தன் குலத்தாரைத் தடுத்தல்
$5.49

#49
தனு எடுத்து நாண் பிணிப்பான் கிளரா நின்ற தன் குலத்தில் அவனிபரை தடுத்து வேத
பனுவலுக்கும் தவத்தினுக்கும் உரிய வேள்வி பார்ப்பன மாக்களின் இடையே பாண்டு மைந்தர்
அனு உருக்கொண்டு உரு மாறி இருந்த தன்மை அறிந்தருளி அலாயுதனோடு அருளிச்செய்தான்
மனு முறைக்கு வரம்பு ஆகி வருத்தம் வீட மா நிலம் மீது அவதரித்த வாசுதேவன்

மேல்
*அரசர் பலரும் வில் திறம் காட்ட முயன்று, தோல்வியுறுதல்
$5.50

#50
பலரும் உடன் அகங்கரித்து மேரு சார பார வரி சிலையின் நிலை பார்த்து மீண்டார்
பலரும் ஒரு கையில் பிடிக்க அடங்கா வில்லின் பருமை-தனை குறித்து மனம் பதைக்க போனார்
பலரும் மலர் கை படுத்தி பெயர்க்க மாட்டார் பணை தோள் நொந்து அமையும் என பயந்து நின்றார்
பலரும் எடுத்து அணி மணி நாண் பூட்ட வாரா பரிசொடு மற்று அதன் வலிமை பகர்ந்தே விட்டார்

மேல்
$5.51

#51
வல்லியம் போல் நடந்து தனு இரு கையாலும் வாரி எடுத்து எதிர் நிறுத்தி மல்லல் வாகு
சல்லியனும் நாண் ஏற்ற முடியாது அந்த தனுவுடனே தன் தனுவும் தகர வீழ்ந்தான்
வில்லியரில் முன் எண்ண தக்க வின்மை வேந்து அடு போர் பகதத்தன் வில் வேதத்தில்
சொல்லியவாறு எடுத்து ஊன்றி மற்றை கையால் தொல் வலி நாணியும் எடுத்து தோளும் சோர்ந்தான்

மேல்
$5.52

#52
பூ கதன் ஆகிய அன்றே பகைவர் எல்லாம் போற்ற வளர்ந்து உலகு ஆள புனைந்த மௌலி
மாகதனும் வில் எடுத்து வரி நாண் வில்லின் மார்பளவும் போக்கினான் வன் போர் நீலன்
சாகதன் என்று அவை துதிக்க நெடு நாண் கொற்ற தனு ஒரு சாண் என கொணர்ந்தான் சாணே அல்ல
வேக தனு நால் விரல் என்று உரைக்க நாணி வீக்கினான் வலம்புரி தார் வேந்தர் வேந்தே

மேல்
$5.53

#53
கலை வருத்தம் அற கற்ற கன்னன் என்னும் கழல் காளை அரன் இருந்த கயிலை என்னும்
மலை வருத்தம் அற எடுத்த நிருதன் என்ன மன் அவையில் வலியுடனே வந்து தோன்றி
நிலை வருத்தம் அற நின்று பரிய கோல நீள் வரி நாண் மயிர்க்கிடை கீழ் நின்றது என்ன
சிலை வருத்தம் அற வளைத்து வளைந்த வண்ண சிலை கால் தன் முடி தலையை சிந்த வீழ்ந்தான்

மேல்
*அந்தணர் வடிவுடன் இருந்த அருச்சுனன், அவையில் எழுந்து பேசி, திட்டத்துய்மனிடம்
*அனுமதி பெற்று, இலக்கை எய்தல்
$5.54

#54
அரவ நெடும் கொடி உயர்த்தோன் முதலா உள்ள அனைவரும் அங்கு ஒரு தனுவுக்கு ஆற்றார் ஆகி
உரவு மெலிந்து எழில் மாழ்கி செயல் வேறு இன்றி உள்ளம் அழிந்து இருந்ததன் பின் உருமேறு என்ன
கரவுடன் அந்தணர் நாப்பண் இருந்த கொற்ற கரு முகில் வாகனன் புதல்வன் கரிய மேனி
இரவிகுல சிறுவனை போல் எழுந்து மன்றல் இளம்_கொடி தம்முனை நோக்கி இயம்பினானே

மேல்
*பின்னும் ஆறு குழந்தைகளை ஆற்றில் எறிதல்
$5.55

#55
மன் மரபில் பிறந்து இரு தோள் வலியால் இந்த மண் ஆளும் அவர்க்கு அன்றி மறை நூல் வாணர்
தொல் மரபில் பிறந்தவரும் இலக்கு வீழ்த்தால் சூட்டுமோ தொடையல் இளம்_தோகை என்ன
தன் மரபுக்கு அணி திலகம் ஆன வீரன் தகவு அன்றோ மன்றலுக்கு தாழ்வோ என்றான்
வில் மரபில் சிறந்த நெடு வில்லை ஈசன் மேரு கிரி எடுத்தது என விரைவில் கொண்டான்

மேல்
$5.56

#56
கிளர் மகுட வய வேந்தர் நாண்கள் எல்லாம் கீழாக தனி நெடு நாண் கிளர ஏற்றி
தளர்வு அறு சாயகம் தொடுத்து கற்றோர் யாரும் தனு நூலுக்கு ஆசிரியன் தானே என்ன
உளர் திகிரி சுழல் இலக்கை அவையோர்-தங்கள் ஊக்கமுடன் விழ எய்தனன் உரவு தோளான்
வளரும் அரும் தவ வேள்வி முனிவர் ஆர்த்தார் வாச நறு மலர் சொரிந்து வானோர் ஆர்த்தார்

மேல்
*திரௌபதி அருச்சுனனுக்கு மாலை இடுதல்
$5.57

#57
தாம் சாரற்கு அரிய தனு வளைத்தான் என்று தரணிபர்-தம் முகம் கருக தனுவினோடும்
பூம் சாரல் மணி நீல கிரி போல் நின்ற பூசுரனை இவன் அவனே போன்ம் என்று எண்ணி
பாஞ்சாலர் பதி கன்னி இரு தன் செம் கண் பங்கயத்தால் பாங்காக பரிந்து நோக்கி
தேம் சார நறும் கழுநீர் செய்ய தாமம் செம் மணி கால் அருவி என சேர்த்தினாளே

மேல்
*அருச்சுனன் திரௌபதியோடும் சகோதரரோடும் செல்லுதல்
$5.58

#58
அந்தர துந்துபி முழங்க சங்கம் ஆர்ப்ப ஆனக துந்துபி முதல்வன் ஆதி ஆக
வந்திருந்த பேர் அவையை மதியான் ஆகி மாலை இடு பசும் செம்பொன் மாலையோடும்
சந்திரனும் உரோகிணியும் என்ன முன்னர் தான் வளைத்த தடம் சிலை கைத்தலத்தில் ஏந்தி
இந்திர சூனுவும் எழுந்து ஆங்கு ஏகலுற்றான் இரு புறமும் துணைவர் வர இணை இலாதான்

மேல்
*கங்கை சந்தனுவைக் கண்டித்தல்
$5.59

#59
பார்ப்பான் வந்து ஒரு கோடி அரசை சேர பரிபவித்து பாஞ்சாலன் பயந்த தெய்வ
சீர் பாவை-தனை வலியால் கொண்டுபோக செயல் இன்றி இருந்தீர் என் செய்தீர் என்று
வேர்ப்பு ஆடு நுதல் சிவந்த விழியன் ஆகி விழியிலான் மகன் கழற வெகுண்டு மேன்மேல்
ஆர்ப்பாக கொதித்து எழுந்தது உகாந்த காலத்து ஆர்க்கும் மகராலயம் போல் அரசர் ஈட்டம்

மேல்
*விசயனும் வீமனும் எதிர்த்துப் பொர, மறையவர்களும் இவர்களுடன் கூடிப் பொருதல்
$5.60

#60
முருத்து வாள் நகை துவர் வாய் முகத்தினாளை மூத்தோன் பின் நிறுத்தி அமர் முருக்குமாறு
மருத்துவான் திரு மகனும் மருத்தின் செல்வ மைந்தனுமே புரிந்திட்டார் மறையோர் உள்ளார்
உருத்து வாய் மடித்து எழுந்து கோகு தட்டிட்டு ஊன்றிய தண்டு எதிர் ஓச்சி உடன்ற வேந்தர்
கருத்து வார்தக வெருக்கொண்டு ஓடஓட கை உரம் காட்டினர் வளர்த்த கனலே அன்னார்

மேல்
*விசயன் மறையவரை விலக்கி, எதிர்த்த கன்னனை வெல்ல, வீமனிடம் சல்லியன் தோற்று ஓடுதல்
$5.61

#61
மிகைத்த முனிவரர் முனிந்த உறுதி நோக்கி வென்று எடுத்த வில் தட கை விசயன் சற்றே
நகைத்துநகைத்து அவர் அவரை விலக்கி என் முன் நமன் வரினும் பிளப்பல் என நவிலாநின்றான்
புகைத்த கனல் விழி கன்னன் தருக்கால் எள்ளி பூசுரன் என்று அவமதித்து புனை வில் வாங்கி
உகைத்த பகழியும் உகைத்தான் உரனும் தன் கை ஒரு கணையால் உடன் பிளந்தான் உருமேறு ஒப்பான்

மேல்
$5.62

#62
குன்றால் மெய் வகுத்து அனைய வீமன் தன் மேல் கொல் இயல் செய் சல்லியனை குத்தி வீழ்த்தி
கன்றால் முன் விளவு எறிந்த கண்ணன் என்ன கால் முடியோடு உற வளைத்து வான் மேல் வீசி
நின்றான் மற்று அவன் அயலே தெறித்து வீழ்ந்து நெஞ்சு ஒடிந்தான் இருவரும் முன் நில்லார் ஆகி
வென்றாலும் தோற்றாலும் வசையே வெம் போர் வேதியரோடு உடற்றல் என மீண்டு போனார்

மேல்
*கண்ணன் விலக்க ஏனைய அரசர்கள் தம்தம்
*நகரம் போய்ச் சேர்தல்
$5.63

#63
வண்ண நூல் முனிவர் அல்லர் மருத்துவான் மருத்து நல்கும்
அண்ணல் அம் குமரர் ஆம் என்று அயிர்ப்புறும் அரசர் யாரும்
கண்ணனால் விலக்கப்பட்டு கடி நகர்-தோறும் தங்கள்
எண்ணமும் பயனும் வேறா எய்தினர் என்ப மன்னோ

மேல்
*குயவன் வீடு சென்ற பாண்டவர், குந்தியிடம், ‘இன்று ஓர் ஐயம்
*பெற்றோம்; என் செய்வது?’ என்று கேட்டல்
$5.64

#64
அன்று இலக்கு எய்த கோவும் துணைவரும் ஆன வெம் போர்
வென்று கொற்றவையோடு ஒக்கும் மின்_இடை_பொன்னும் தாமும்
சென்று மட்கலம் செய் கம்மி செழு மனை முன்றில் எய்தி
இன்று பெற்றனம் ஓர் ஐயம் என் செய்வது இதனை என்றார்

மேல்
*’ஐவரும் ஒருசேர அருந்தும்’ என்று கூறி, உள்ளிருந்து
*வெளிவந்த குந்தி திரௌபதியைப் பார்த்தல்
$5.65

#65
உள் இருந்து அன்னை மைந்தர் உரைத்த சொல் கேட்டு தேவர்
தெள் அமுது என்ன மக்காள் சேர நீர் அருந்தும் என்னா
புள்ளினம் ஒடுங்கும் மாலை பொழுது இவள் புறம்பர் எய்தி
கள் அவிழ் கூந்தலாளை கரும்பு என விரும்பி கண்டாள்

மேல்
*தான் சொன்ன வார்த்தை குறித்துக் குந்தி இரங்குதலும்,
*தருமன் தேற்றத் தேறுதலும்
$5.66

#66
என் நினைந்து என் சொன்னேன் மற்று என் செய்தேன் என்று சோரும்
அன்னையை வணங்கி நின் சொல் ஆரண படியது ஆகும்
நின் நினைவு அன்றால் எங்கள் நெஞ்சிலும் நினைவு உண்டு என்றான்
தன் நிகர் இலாத கேள்வி சான்ற சீர் தருமன் என்பான்

மேல்
$5.67

#67
பார் அனைத்தினும் தன் நாமம் பரப்பிய பார்த்தன் என்னும்
வீரனை பயந்த பாவை விதி வழி இது என்று எண்ணி
மாரனுக்கு அரசு நல்கும் மங்கையும் தானும் அந்த
கார் இருள் கங்குல் மைந்தர் கட்டுரை கசிந்து கேட்டாள்

மேல்
*துருபதன் ஒற்றரால் செய்தி தெரிந்து, மறுநாள்
*அவர்களை அரண்மனைக்கு அழைத்து, உபசரித்தல்
$5.68

#68
பொன் தொடி கனக மாலை பொலம் குழை பூவை-தன்னை
பெற்ற பூபதி அ வீரர் பெருமித வாய்மை எல்லாம்
ஒற்றரால் உணர்ந்து நெஞ்சத்து உவகையோடு ஐயம் இன்றி
மற்றை நாள் வந்து கொற்ற வாழ் மனை கொண்டு புக்கான்

மேல்
$5.69

#69
அடுத்த பல் பொருளும் வைக்க ஆயுதம் அன்றி வேறு ஒன்று
எடுத்திலர் என்றும் வேத முனிவரர் அல்லர் என்றும்
கொடுத்தன சிறப்பினோடும் குரு மணி தவிசின் ஏற்றி
தொடுத்த தார் குருக்கள் என்றே துணிந்தனன் யாகசேனன்

மேல்
*துருபதன், ‘இன்று வதுவை செய்விப்போம்’ என்ன, தருமன்,
*’ஐவரும் இவளை மணப்போம்’ என்றல்
$5.70

#70
கை வரு சிலையின் வென்று கைப்பிடித்தவனுக்கு இன்றே
மை வரு கண்ணினாளை வதுவை செய்திடுதும் என்ன
நெய் வரு முனை கொள் கூர் வேல் நிருபனை நோக்கி யாங்கள்
ஐவரும் வேட்டும் என்றான் அசைவு இலா அறத்தின் மைந்தன்

மேல்
*தருமன் சொல்லால் துருபதன் தளர, அப்பொழுது வியாதன் தோன்றி,
*ஐவருக்கும் மணம் செய்வித்தற்குரிய முறைமையை விளக்குதல்
$5.71

#71
தருமன் மா மதலை சொல்லால் தளர்வுறு காலை மாலை
நிருப நின் மனத்தில் ஐயம் நீக்குக நீக்குக என்னா
துருபதன் முன்னர் வந்து தோன்றினன் சுருதி யாவும்
விரை மலர் விதியின் மிஞ்ச விதித்தருள் வியாதன் என்பான்

மேல்
$5.72

#72
தொழுது பொன் தவிசின் ஏற்றி சூழ்ந்தனர் இருந்து கேட்ப
முழுது உணர் கேள்வி ஞான முனி குலத்து அரசு போல்வான்
பழுது அறு கன்னி-தன்னை பாண்டவர் ஐவருக்கும்
எழுத அரு மறையின் வேள்வி இயற்றுதற்கு இயற்கை கேண்மோ

மேல்
*வியாதன் உரைத்த திரௌபதியின் முற்பிறப்பு வரலாறு
$5.73

#73
மூள் ஆர் அழல் உற்பவித்தாள் இவள் முன் பவத்தில்
நாளாயணி என்று உரை சால் பெரு நாமம் மிக்காள்
வாள் ஆர் தடம் கண் அவட்கு ஆரணவாணர்க்கு என்றும்
கேள் ஆன மௌற்கல்லியன் என்பவன் கேள்வன் ஆனான்

மேல்
$5.74

#74
காதில் கலந்த கடைக்கண்ணி-தன் கற்பும் அன்பும்
சோதித்தல் உன்னி தணியாத துவக்கு நோயன்
கோதித்த நெஞ்சன் பெரு மூப்பினன் கூர்ந்து நாளும்
வாதித்தல் அன்றி மகிழா மனை வாழ்வு பூண்டான்

மேல்
$5.75

#75
கச்சிற்கு அடங்கா முலையாள் அ கணவன் உண்ட
மிச்சில் புறத்து விரல் வீழவும் வீழ்தல் மிஞ்சி
குச்சித்தல் இன்றி நுகர்ந்தாள் கொடும் காம நோய்கொண்டு
இச்சித்த இன்பம் நுகராமல் இளைத்த மெய்யாள்

மேல்
$5.76

#76
அன்பன் தெரிவை வழிபாடு கண்டு ஆர்வம் எய்தி
துன்பம் பயந்த பிணியால் அழி தோற்றம் மாற்றி
தன் பங்கை ஈசன் திறை நல்க முன் சாபம் வாங்கும்
வன்பன் தனக்கும் கிடையாத வடிவு கொண்டான்

மேல்
$5.77

#77
மின்னே உனக்கு மிகு கற்புடை மீனும் ஒவ்வாள்
இன்னே வரம் வேண்டுவ வேண்டுக ஈண்டை என்ன
நின் நேயம் என்றும் பிரியா நலன் நேர்க என்றாள்
தன் நேர் இலாத மனைவாழ்வில் தவத்தில் மிக்காள்

மேல்
$5.78

#78
குன்றும் நதியும் மரனும் பைம் கொடியும் ஆகி
துன்றும் துணையாய் பல யோனிகள்-தோறும் எய்தி
நின்றும் சரித்தும் அரும் போகம் நெடிது துய்த்தார்
என்றும் பிரியாது இருவோரும் இதயம் ஒத்தே

மேல்
$5.79

#79
இந்த பிறப்பில் நலம் எய்தி இறந்த பின்னும்
சிந்தித்தவண்ணம் இவள் இந்திரசேனை ஆகி
அந்த பதியை அடைந்தாள் மற்று அவனும் அஞ்சி
வந்தித்த தொல்லை அரு மா தவம் மன்னி நின்றான்

மேல்
$5.80

#80
அன்னோன் அகல அவன் மேல் அவள் ஆசை விஞ்சி
என்னோ புரிவது இனி என்றலும் ஏந்தல் கூற்றால்
தன் ஓர் வடிவின் ஒரு கூறு ஒரு தையல் ஆளும்
முன்னோனை நோக்கி தவம் செய்தனள் மூரல் வாயாள்

மேல்
$5.81

#81
ஐந்து ஆனனத்தோன் அருள்செய்ய அழகில் மிக்காள்
ஐந்து ஆன சொல்லால் கணவன் தருக ஐய என்றாள்
ஐந்து ஆன சொல்லான் அளித்தான் மற்று அவனும் முன் நாள்
ஐந்து ஆன போகம் இவள் எய்தியவாறு அறிந்தே

மேல்
$5.82

#82
முன் நின்ற தேவன் மொழியின்படி கங்கை மூழ்கி
தன்னந்தனி நின்று அழுகின்ற அ தையல் கண்ணீர்
பொன் அம் கமல வனம் ஆன புதுமை நோக்கி
என் என்று இவளை இமையோர் பதி எய்தினானே

மேல்
$5.83

#83
அவனை தொடர்பால் வருக என்ன அவனும் ஆங்கண்
சிவனை சிறிதும் மதியாது எதிர் சென்ற காலை
இவனுக்கு என் மேன்மை என சீறலும் எஞ்சினான் போல்
புவனத்து எவரும் நகையாட புலம்பி வீழ்ந்தான்

மேல்
$5.84

#84
வெவ் ஆயுதங்கள் உதவாமல் விபுதநாதன்
இவ்வாறு வீழ மழுவாளி இமைப்பில் மீண்டும்
அ வாசவற்கு பிலம் ஒன்றில் அடைத்த வச்ர
கை வாசவர்கள் ஒரு நால்வரை காட்டினானே

மேல்
$5.85

#85
வன் பாதலத்தில் வரு நால்வரும் வானின் வந்த
புன் பாகசாதனனும் தன் அடி போற்றி நிற்ப
அன்பால் மகிழ்நர் இவட்கு ஐவரும் ஆதிர் என்று
மென் பாவை பங்கன் விதிக்க புவி மீது வந்தார்

மேல்
$5.86

#86
தருமன் பவனன் தினநாதன் தனயர்-தம்பால்
வரும் இந்த நால்வர் அவர் நால்வரும் மாலை மார்பா
தெருமந்த இந்த சிலை வீரன் இ தேவர்க்கு எல்லாம்
பெரு மன் பிறப்பிற்கு அவனே முன் பிதாவும் ஆனான்

மேல்
$5.87

#87
இ மாது தொல்லை அரு மா தவத்து எல்லை கண்ட
அ மாது இவள் காதலர் ஐவரும் ஆக என்று
தெவ் மாதர் முன் பூண் கவர் மன்னன் தெளியுமாறு
வெம் மா தவத்தோன் பெரு ஞான விழியும் ஈந்தான்

மேல்
*வியாதன் மொழியால் மனம் தெளிவுற்ற துருபதன்,
*திரௌபதியை ஐவருக்கும் ஒரு நல்ல நாளில் மணம் புரிவித்தல்
$5.88

#88
ஓதாது உணர்ந்து மறை நாலும் உருவு செய்த
வேதாவும் ஒவ்வா வியாதன் மொழி வெள்ள நீரால்
கோதான நெஞ்சை குளிப்பாட்டினன் கோடிகோடி
தூதான வண்டு துதை மாலை கொள் சோமகேசன்

மேல்
$5.89

#89
வியப்போடு தொல்லை முனி சொல் தலை மீது கொண்டு
பயப்போன் மகள் மேல் புரிகின்ற பரிவினுக்கும்
வய போர் நிருபர் பெருமைக்கும் வலிக்கும் ஈடா
நயப்போடு மன்றல் அயர்வித்தனன் நன்கு ஓர் நாளில்

மேல்
*தருமன் முதலிய ஐவரும் முறையே சடங்குடன் திரௌபதியை மணத்தல்
$5.90

#90
பாடும் சுருதி மறைவாணரும் பாரில் உள்ள
சூடும் கனக முடி வேந்தரும் தொக்கு நிற்ப
நீடும் கதிர் மா மணி தூண்கள் நிரைத்த பத்தி
ஆடும் கொடி மண்டபம் எய்தினர் அண்டர் போல்வார்

மேல்
$5.91

#91
குறிக்கும் பணிலம் முதல் ஆயிரம் கோடியாக
பிறிக்கும் கருவி இடம்-தோறும் பிளிறி ஆர்ப்ப
செறிக்கும் கழல் கால் அறன் மைந்தனை செம்பொன் வேதி
எறிக்கும் கிரண மணி பீடம்-அது ஏற்றினாரே

மேல்
$5.92

#92
இட தோள் இவட்கும் வல தோள் இ இறைவனுக்கும்
திடத்தோடு உரைத்த குறியின் பயன் சேர்ந்து தோய
விடத்தோடு அமுதம் கலந்து என்ன மிளிரும் வேல் கண்
வடத்தோடு விம்மும் முலையாளை வலத்தில் வைத்தார்

மேல்
$5.93

#93
கேள்விக்கு ஒருவன் எனும் தௌமியன் கீத வேத
வேள்விக்கு வேண்டுவன யாவும் விதியின் ஈட்டி
மூள்வித்த செம் தீ கரி ஆக முரசு உயர்த்த
வாள் வித்தகற்கு வரமான சடங்கு செய்தான்

மேல்
$5.94

#94
பல் மங்கலமும் உடன் வைகிய பண்பினாளை
நல் மங்கல பூண் துகிலோடு நயந்து சாத்தி
தன்மம் கலந்த மனத்தோனை அ தையலோடும்
தொல் மங்கல செம் சுடர் தீ வலம் சூழுவித்தார்

மேல்
$5.95

#95
கங்குல் பவள வனம் மீது கடல் தரங்கம்
பொங்கி தரள திரள் சிந்தி பொழியுமா போல்
அங்கி புறத்து திரு காப்பு அணி அம் கை ஏந்தி
செம் கண் கரிய குழலாள் பொரி சிந்தினாளே

மேல்
$5.96

#96
இவ்வாறு மன்றல் அயர்வித்த பின் ஈன்ற காதல்
வெவ் ஆர் அழலில் முறை மூழ்கினள் மீண்டு தோன்ற
மை வார் அளக வடமீன் நிகர் கற்பினாளை
அவ்வாறு மற்றை ஒரு நால்வரும் அன்று வேட்டார்

மேல்
*யாகசேனன் ஐவர்க்கும் பலவகை வரிசைகள் அளித்தல்
$5.97

#97
மாரன் கரும்பு வளரும்படி வார்த்த நீரால்
ஈரம் புலரா கரத்தோருக்கு யாகசேனன்
தேரும் பரியும் களிறும் திரள் சேனை யாவும்
பாரும் தனமும் உமது என்று பலவும் ஈந்தான்

மேல்
*பாண்டவர் மன்றல் பெற்ற செய்தி அறிந்து,
*துரியோதனாதியர் மீண்டு வந்து பொருதல்
$5.98

#98
ஆண்டு மன்றல் பெற்று அங்குரித்தார் இகல்
பாண்டு மைந்தர் எனும் சொல் பரவலும்
தாண்டு வெம் பரி தேர் தார்த்தராட்டிரர்
மீண்டும் வந்து அவர் மேல் வினை செய்யவே

மேல்
*போரில் பாண்டவர்க்குத் தோற்று, பகைவர்
*அனைவரும் தம் ஊருக்கு மீளுதல்
$5.99

#99
சென்ற சேனையும் திட்டத்துய்மன்னுடன்
நின்ற சேனையும் நேர் உறு பூசலில்
கொன்ற சேனை ஒழி குரு சேனையை
வென்ற சேனை வெகுண்டு வென்கண்டதே

மேல்
$5.100

#100
சாலும் வஞ்ச சகுனியொடு எண்ணிய
நாலு மைந்தரும் நச்சு எயிறு ஆகவும்
வாலும் மெய்யும் வருக்கங்கள் ஆகவும்
ஆலும் வெம் பகை ஆடு அரவு ஆனதே

மேல்
$5.101

#101
அந்த நாகம் அழல் உமிழ் கண் விடம்
சிந்த மேல் விடு சீற்றமும் தோற்றமும்
முந்த வார் சிலை கை முகில் வாகனன்
மைந்தன் வாளி மழைகளின் மாய்ந்தவே

மேல்
$5.102

#102
சமர வேழ முகாசுரன் சாய்ந்தனன்
குமரனால் என கோ நகுலன்-தனால்
அமரில் யானை அணி முகத்தோடு மெய்
தமர் பட புறம்தந்தனன் கன்னனே

மேல்
$5.103

#103
முன்னிட சமர் மோதும் சகுனியை
மின்னிடை புயங்கம் வெரு கொண்டு என
தன் இட கை தனுவொடும் தேரொடும்
பின்னிட பொருதான் அவன் பின்னவன்

மேல்
$5.104

#104
தண் மதி குடை தம்முனும் தம்பியும்
எண்ணும் மற்றை இளைஞர்கள் யாவரும்
கண் உற களம் காணும் முன் தீயினால்
வெண்ணெய் ஒத்து உடைந்தார் விறல் வீமனால்

மேல்
$5.105

#105
விரோசன கதிர் மைந்தனும் வேந்தனும்
சரோசன திறல் தம்பியும் மாமனும்
புரோசன பெயர் புன்மதி-தன்னை நொந்து
அரோசனத்துடன் அத்தினம் நண்ணினார்

மேல்
*பாண்டவர் பாஞ்சாலத்தில் சிறப்புற்றிருத்தல்
$5.106

#106
முந்து போரில் முதுகிடும் வேந்தரால்
விந்தை-தன்னையும் மேதக வேட்ட பின்
அந்த மா நகர் ஐவரும் மாமனும்
வந்த கண்ணனும் அன்புடன் வைகினார்

மேல்
*திருதராட்டிரன் பாண்டவர்க்கு அரசு அளிக்கக் கருதி,
*அவர்களை அத்தினாபுரிக்கு வரவழைத்தல்
$5.107

#107
தும்பை சூடிய வேல் துரியோதனன்
வெம்பு போரில் முதுகிட்டு மீண்ட பின்
தம்பி கூறு தருமனுக்கு ஈயுமாறு
அம்பிகேயன் அமைச்சரொடு எண்ணினான்

மேல்
$5.108

#108
தாதினால் பொலி தார் வரை மார்பரை
தூதினால் தங்கள் தொல் பதி சேர்த்தினான்
காதினால் பயன் இன்று என கண்கள் போல்
கோதினால் தெரியா மன கோளினான்

மேல்
*பாண்டவர் அரசு பெறும்பொருட்டு,
*அத்தினாபுரி வந்து தங்குதல்
$5.109

#109
வீடுமற்கும் விதுரற்கும் ஏற்க அ
நாடு முற்றும் நரபதி நல்கவே
ஆடு பொன் கொடி அ நகர் வைகினார்
நீடு வில் திறலோர் நெடும் காலமே

மேல்

@6. இந்திரப்பிரத்தச் சருக்கம்
*திருதராட்டிரன் தருமபுத்திரனுக்கு முடி சூட்டுவித்தல்
$6.1

#1
அத்தினபுரியில் ஐ_இரு_பதின்மர் ஐவர் என்று இரண்டு அற தம்மில்
ஒத்தனர் மருவ தெவ்வர் மெய் வெருவ உளம் மகிழ் நாளில் மற்று ஒரு நாள்
மைத்துனன் முதலாம் தமரையும் தக்க மந்திரத்தவரையும் கூட்டி
இ தினம் உயர்ந்த தினம் என மகுடம் சூட்டுதற்கு எண்ணினான் இகலோன்

மேல்
$6.2

#2
செழு முரசு உயர்த்த வேந்தனுக்கு இன்று திரு அபிடேக நாள் என்று
முழு முரசு அறைந்து நகரி கோடித்து முடி புனை கடி கொள் மண்டபத்தின்
எழு முரசு அதிர பகீரதி முதலாம் எ துறை புனல்களும் இயற்றி
தொழு முரசுடன் வெள் வலம்புரி முழங்க சுருதி மா முனிவரும் தொக்கார்

மேல்
$6.3

#3
அத்தியின் பலகை நவமணி அழுத்தி ஆடகத்து அமைத்து அரி முகத்தால்
பத்தி கொள் பீடத்து அழகுற இருத்தி பசும் பொனின் தசும்புகள் நிறைந்த
சுத்த நீர் வியாதன் தௌமியன் முதலோர் சொரிந்தனர் சோமன் வந்து உதித்து
சித்திர கிரியின் நெடு நிலா வெள்ளம் சீருடன் வழிய வார்த்து எனவே

மேல்
$6.4

#4
உதய மால் வரையில் உதய ராகத்தோடு உதித்த தேர் உதயன் என்று உரைப்ப
துதை அளி ததைந்த மாலையான் சென்னி சோதி மா மகுடமும் சூட்டி
பத யுகம் அரசர் முடிகளால் சிவப்ப பகர் விதி முடித்த பின் பலரும்
இதயம் ஒத்து அமிர்த மொழியவர் அடைவே இரு கை நீராசனம் எடுத்தார்

மேல்
*தம்பியர் சூழ, யானைமீது தருமன் நகர் வலம் வருதல்
$6.5

#5
ஒற்றையோடு இரட்டை வலம்புரி மிழற்ற ஒரு குடை மதி என நிழற்ற
கொற்றவர் முன் பின் போதர மடவார் குழு பொரி சிந்தி வாழ்த்து எடுப்ப
இற்றை நாள் எவரும் வாய்த்தவா என்ன ஏழ் உயர் இராச குஞ்சரம் மேல்
மற்றை நால்வரும் தன் சூழ்வர தருமன் மைந்தன் மா நகர் வலம் வந்தான்

மேல்
*திருதராட்டிரன் ஏவலால் தருமன் முதலியோர் கண்ணனுடன் காண்டவப்பிரத்தம் சேர்தல்
$6.6

#6
மா நகர் வலமாய் வந்து தன் குரவர் மலர் பதம் முறைமையால் வணங்கி
கோ நகர் இருக்கை அடைந்தனன் ஒரு நாள் கொற்றவன் ஏவல் கைக்கொண்டு
பேய் நகர் எனுமாறு யாவரும் வழங்கா பிறங்கு நீள் கானிடை அழிந்த
தூ நகர் முன்னோர் இருந்தது ஒன்று அந்த தொல் நகர் வைகுமா துணிந்தான்

மேல்
$6.7

#7
அம் கண் மா ஞாலம் முழுவதும் கொடுத்தற்கு ஆயர்-தம் பதியின் அங்குரித்த
செம் கண் மால் முதலாம் கிளைஞரும் வயிர தேர் மிசை சேனையும் தாமும்
வெம் கண் மாசுணத்தோன் எண்ணம் எ திசையும் வெளிப்பட வேந்தர் ஐவரும் போய்
தங்கள் மா தவத்தால் காண்டவபிரத்தம் என்னும் அ தழல் வனம் அடைந்தார்

மேல்
*கண்ணன் இந்திரனோடு விச்சுவகன்மாவையும் வருவிக்க,
*இந்திரன் ஒரு நகரம் அமைக்குமாறு விச்சுவகன்மாவை ஏவுதல்
$6.8

#8
போய் அவண் புகுந்த பொழுது பைம் கடலும் பூவையும் புயலும் நேர்வடிவின்
மாயவற்கு எவ்வாறு இவ்வுழி இவர்கள் வாழ்வது என்று ஒரு நினைவு எய்தி
நாயக கடவுள்-தன்னை முன்னுதலும் நாக நாயகனொடும் நடுங்கி
மேய கட்புலன்கள் களித்திட திருமுன் நின்றனன் விச்சுவகன்மா

மேல்
$6.9

#9
நுண்ணிதின் உணர்ந்தோர் உணர்தரும் சிற்ப நூல் அறி புலவனை நோக்கி
திண்ணிதின் அமரர் சேகரன் மொழிந்தான் தேவரும் மனிதரும் வியப்ப
மண்ணினும் புயங்கர் பாதலம் முதலாம் மற்று உள உலகினும் நமதாம்
விண்ணினும் உவமை இலது என கடிது ஓர் வியல் நகர் விதித்தி நீ எனவே

மேல்
*விச்சுவகன்மா சிறந்த நகரை அமைக்க, அது கண்டு யாவரும் வியத்தல்
$6.10

#10
தேவினும் தேவ யோனியில் பிறந்த திரளினும் சிறந்த யாவர்க்கும்
பூவினும் எவ்வெவ் உலகினும் முன்னம் புந்தியால் இயற்றிய புரங்கள்
யாவினும் அழகும் பெருமையும் திருவும் இன்பமும் எழுமடங்கு ஆக
நாவினும் புகல கருத்தினும் நினைக்க அரியது ஓர் நலம் பெற சமைத்தான்

மேல்
$6.11

#11
மரகதம் கோமேதகம் துகிர் தரளம் வைரம் வைதூரியம் நீலம்
எரி மணி புருடராகம் என்று இவற்றிற்கு ஆகரம் இந்த மா நகர் என்று
அரி முதல் இமையோர் அனைவரும் புகழ்ந்தார் ஆடக பொருப்பினை அழித்து
தரணியில் நகர் ஒன்று அமைத்தவா என்று தபதியர் யாவரும் வியந்தார்

மேல்
$6.12

#12
என் பதி அழகு குலைந்தது என்று எண்ணி இந்திரன் வெறுக்கவும் இயக்கர்
மன் பதி பொலிவு சிதைந்தது என்றிடவும் மற்றுள வானவர் பதிகள்
புன் பதி ஆகி போயின எனவும் புரை அறு புந்தியால் புவி மேல்
நன் பதி இது ஒன்று இயற்றினான் என்று நாரணாதிகள் துதித்திடவும்

மேல்
*கண்ணன் அந்த நகரத்துக்கு இந்திரப்பிரத்தம் என்று பெயரிடுதல்
$6.13

#13
சந்திராதபமும் தினகராதபமும் இரு பொழுதினும் எழ சமைத்த
மந்திராதிகளும் மஞ்சமும் மதிலும் மகர தோரண மணி மறுகும்
கொந்து இராநின்ற சோலையும் தடமும் கொற்றவன் கோயிலும் நோக்கி
இந்திராபதி அ இந்திரன் பெயரால் இந்திரப்பிரத்தம் என்று இட்டான்

மேல்
*இந்திரப்பிரத்த நகரின் மாண்பு
$6.14

#14
இமையவர் பதியில் உள்ளன யாவும் இங்கு உள இங்கு மற்று உள்ள
அமைவுறு பொருள்கள் அங்கு இல எனுமாறு அமைத்த வான் தொல் பதி அழகை
சமைவுற விரித்து புகழ்வதற்கு உன்னில் சதுர்முகத்தவனும் மெய் தளரும்
நமர்களால் நவில முடியுமே முடியாது ஆயினும் வல்லவா நவில்வாம்

மேல்
$6.15

#15
விதி மறை முறையில் சாந்தி செய் கடவுள் வேதியர் ஆரவம் ஒருசார்
மதி முறை தவறா அமைச்சர் சொல் விழையும் மன்னவர் ஆரவம் ஒருசார்
நிதி கெழு செல்வத்து அளகையோர் நெருக்கால் நிறைந்த பேர் ஆரவம் ஒருசார்
பதி-தொறும் உழவர் விளை பயன் எடுக்கும் பறை கறங்கு ஆரவம் ஒருசார்

மேல்
$6.16

#16
தோரண மஞ்ச தலம்-தொறும் நடிக்கும் தோகையர் நாடகம் ஒருசார்
பூரண பைம் பொன் கும்பமும் ஒளி கூர் புரி மணி தீபமும் ஒருசார்
வாரணம் இவுளி தேர் முதல் நிரைத்த வாகமும் சேனையும் ஒருசார்
நாரணன் வனச பத யுகம் பிரியா நலம் பெறும் மா தவர் ஒருசார்

மேல்
$6.17

#17
சிற்ப வல்லபத்தில் மயன் முதல் உள்ள தெய்வ வான் தபதியர் ஒருசார்
வெற்பகம் மருவி வீற்று வீற்று இருக்கும் விஞ்சையர் கின்னரர் ஒருசார்
அற்புத வடிவின் உருப்பசி முதலாம் அழகுடை அரம்பையர் ஒருசார்
பொற்புடை அமரர் புரியும் மெய் மகிழ்ந்து பொழிதரு பொன் மலர் ஒருசார்

மேல்
$6.18

#18
வரை எலாம் அகிலும் சந்தன தருவும் மான்மத நாவியின் குலமும்
திரை எலாம் முத்தும் பவள வண் கொடியும் செம் மணிகளும் மரகதமும்
கரை எலாம் புன்னை கானமும் கண்டல் அடவியும் கைதை அம் காடும்
தரை எலாம் பொன்னும் வெள்ளியும் பழன வேலி சூழ் சாலியும் கரும்பும்

மேல்
$6.19

#19
ஆலையில் கரும்பின் கண்களில் தெறித்த ஆரம் அ வயல் புறத்து அடுத்த
சோலையில் பயிலும் குயிலையும் சுருதி சுரும்பையும் நிரைநிரை துரப்ப
வேலையில் குதித்த வாளை ஏறு உம்பர் வியன் நதி கலக்கி வெண் திங்கள்
மாலையில் பயிலும் வானமீன் கொடி போல் வாவியில் குளிக்கும் மா மருதம்

மேல்
$6.20

#20
புரிசையின் குடுமி-தொறும் நிரை தொடுத்த பொன் கொடி ஆடையின் நிழலை
கிரி மிசை பறக்கும் அன்னம் என்று எண்ணி கிடங்கில் வாழ் ஓதிம கிளைகள்
விரி சிறை பறவின் கடுமையால் எய்தி மீது எழும் மஞ்சு என கலங்கி
பரிசயப்படு தண் சததள பொகுட்டு பார்ப்பு உறை பள்ளிவிட்டு அகலா

மேல்
$6.21

#21
கயல் தடம் செம் கண் கன்னியர்க்கு இந்து காந்த வார் சிலையினால் உயர
செயல்படு பொருப்பின் சாரலில் கங்குல் தெள் நிலா எறித்தலின் உருகி
வியப்பொடு குதிக்கும் தாரை கொள் அருவி விழைவுடன் படிவன சகோரம்
நயப்புடை அன்ன சேவல் பேடு என்று நண்ணலால் உளம் மிக நாணும்

மேல்
$6.22

#22
அரி மணி சிலையின் சலாகையால் வட்டம் ஆகவே அமைத்த சாலகம்-தோறு
எரி மணி குழையார் வதன மண்டலத்தில் எழிலுடன் மிளிரும் மை தடம் கண்
விரி மணி கதிரோன் அளிக்க முன் களிந்த வெற்பிடை வீழும் மா நதியின்
புரி மணி சுழியில் துணையொடும் உலாவி பொருவன கயல்களே போலும்

மேல்
$6.23

#23
இனத்தினால் உயர்ந்த இந்திரபுரியும் இந்திரப்பிரத்தமும் இரண்டும்
தனத்தினால் உணர்வால் கேள்வியால் அழகால் தக்கது ஒன்று யாது என துலைகொள்
மனத்தினால் நிறுக்க உயர்ந்தது ஒன்று ஒன்று மண் மிசை இருந்தது மிகவும்
கனத்தினால் அன்றி தாழுமோ யாரும் கண்டது கேட்டது அன்று இதுவே

மேல்
$6.24

#24
நிறக்க வல் இரும்பை செம்பொன் ஆம்வண்ணம் இரதமே நிகழ்த்திய நிகர்ப்ப
பிறக்கமும் வனமும் ஒழித்து அவண் அமைத்த பெரும் பதிக்கு உவமையும் பெறாமல்
மற கடும் களிற்று குபேரன் வாழ் அளகை வடக்கு இருந்தது நெடு வானில்
துறக்கமும் ஒளித்தது இலங்கையும் வெருவி தொடு கடல் சுழி புகுந்ததுவே

மேல்
$6.25

#25
வாவியும் புறவும் சோலையும் மலர்ந்த மலர்களும் மணிகளின் குழாமும்
மேவி எங்கெங்கும் மயங்கலின் தம்தம் வேரியும் வாசமும் தூதா
பூ இனம் சுரும்பை அழைக்கும் வண் பழன புது வளம் சுரக்கும் நாடு அனைத்தும்
ஓவியம் குறித்து பூ_மகள் வடிவை ஒப்பனை செய்தவாறு ஒக்கும்

மேல்
*பாண்டவர் இந்திரப்பிரத்த நகரில் குடி புகுதல்
$6.26

#26
பரிமள மதுபம் முரல் பசும் தொடையல் பாண்டவர் ஐவரும் கடவுள்
எரி வலம் புரிந்து முறைமுறை வேட்ட இன் எழில் இள_மயில் அன்றி
வரிசையின் அணுகி உரிமையால் அவனி மயிலையும் மன்றல் எய்தினர் போல்
புரி வளை தரளம் சொரி புனல் அகழி புரிசை சூழ் புரம் குடி புகுந்தார்

மேல்
*விச்சுவகன்மா காட்ட, பாண்டவர் கோபுரத்தின்
*மேலிருந்து அந் நகரின் சிறப்பைக் காணுதல்
$6.27

#27
உரம் குடி புகுந்த திண் தோள் உதிட்டிரன் முதலியோர் அ
புரம் குடி புகுந்து தங்கள் பொன் எயில் கோயில் எய்த
திரம் குடி புகுந்த கல்வி சிற்ப வித்தகன் தன் நெஞ்சால்
கரம் குடி புகாமல் செய்த கடி நகர் காட்டலுற்றான்

மேல்
$6.28

#28
நா புரப்பதற்கே ஏற்ற நவிர் அறு வாய்மை வேந்தர்
கோபுரத்து உம்பர் மஞ்ச கோடியில் நின்று தங்கள்
மா புரத்து உள்ள எல்லை வள மனை யாவும் மாதர்
நூபுரத்து அரவ வீதி அகலமும் நோக்கினாரே

மேல்
*நகரின் சிறப்பைப் பாண்டவர் பலவாறு வியந்து கூறுதல்
$6.29

#29
அரவின் வெம் சுடிகை கொண்ட அவிர் மணி சோதி மேன்மேல்
விரவி வந்து எறிப்ப பச்சை மெய் சிவப்பு ஏறிற்று ஆக
இரவி-தன் இரதம் பூண்ட எழு பெயர் பவன வேக
புரவியை ஐயுற்றே-கொல் புரி வலம் புரிவது என்பார்

மேல்
$6.30

#30
அருளுடை அறத்தின் வாழ்வாம் அ நகர் இல்லம் எங்கும்
இருளுடை இந்த்ரநீலத்து இயன்ற சாளரங்கள் நோக்கி
உருளுடை ஒற்றை நேமி உறு பரி தேரோன் சீற
தெருளுடை திமிரம் போன சில் நெறி போலும் என்பார்

மேல்
$6.31

#31
சமர் முக பொறிகள் மிக்க தட மதில் குடுமி-தோறும்
குமர் உற பிணித்த பைம் பொன் கொடி துகில் அசைவு நோக்கி
நமர் புர கிழத்தி உம்பர் நாயகன் புரத்தினோடும்
அமர் பொர பற்பல் கையால் அழைப்பது போலும் என்பார்

மேல்
$6.32

#32
தசும்பு உறும் அகிலின் தூபம் சாறு அடு கரும்பின் தூபம்
அசும்பு அறா மடையின் தூபம் அவி பெறும் அழலின் தூபம்
விசும்புற நான்கு திக்கும் மிசை மிசை எழுதல் நோக்கி
பசும் புயல் ஏழு அன்று இன்னும் பல உளவாகும் என்பார்

மேல்
$6.33

#33
அடுக்குற நிலம் செய் மாடத்து அணி உறு பெரும் பதாகை
மிடுக்கினால் அனிலன் எற்றி விசையுடன் எடுத்து மோத
உடுக்களும் நாளும் கோளும் உள்ளமும் உடலும் சேர
நடுக்கு உறுகின்ற இந்த நகர் வழி போக என்பார்

மேல்
$6.34

#34
துதை அளி முரலும் வாச சோலையின் பொங்கர்-தோறும்
விதம் உற எழுந்து காள மேகங்கள் படிதல் நோக்கி
கதிர் மணி அகழி மா மேகலையுடை நகர மாதின்
புகை நறு மலர் மென் கூந்தல் போலுமா காண்-மின் என்பார்

மேல்
$6.35

#35
ஈட்டிய மணியும் பொன்னும் எழில் பெற புடைகள்-தோறும்
பூட்டிய சிகரி சால புரிசையின் புதுமை நோக்கி
கோட்டிய நகரி என்னும் குல_கொடி மன்றல் எய்த
சூட்டிய சூட்டு போல துலங்குமா காண்-மின் என்பார்

மேல்
$6.36

#36
பணை இனம் பலவும் ஆர்ப்ப பைம் கொடி நிரைத்த செல்வ
துணை மணி மாடம் மன்னும் தோரண வீதி யாவும்
புணை வனம் நெருங்க நீடி பொழி புயல் கிழிக்கும் சாரல்
இணை வரை நடுவண் போதும் யாறு போல் இலங்கும் என்பார்

மேல்
*தருமன் விச்சுவகன்மாவுக்கு விடை கொடுத்து அனுப்புதல்
$6.37

#37
கண்ணுறு பொருள்கள் யாவும் கண்டுகண்டு உவகை கூர
எண் உறு கிளைஞரோடும் யாதவ குமரரோடும்
பண் உறு வேத வாழ்நர் பலரொடும் வைகி ஆங்கண்
விண் உறு தபதிக்கு அம்ம விடை கொடுத்தருளினானே

மேல்
*கண்ணன், இந்திரன் முதலியோர் தம்தம் பதிக்கு
*மீளுதலும், தருமன் சிறப்புற அரசாளுதலும்
$6.38

#38
கேசவன் முதலா உள்ள கிளைஞரும் கேண்மை தப்பா
வாசவன் முதலினோரும் மன்னு தம் பதிகள் புக்கார்
ஓச வன் திகிரி ஓச்சி உதய பானுவுக்கும் மேலாம்
தேசவன்-தானும் வையம் திசை முறை திருத்தி ஆண்டான்

மேல்
*ஒருநாள் நாரதமுனிவன் அங்கு வருதலும்,
*பாண்டவர் அம் முனிவனை உபசரித்தலும்
$6.39

#39
யாய் மொழி தலை மேல் கொண்டும் இளையவர் மொழிகள் கேட்டும்
வேய் மொழி வேய் தோள் வல்லி மென் மொழி விரும்பலுற்றும்
வாய்மொழி அறத்தின் மைந்தன் மா நகர் வாழும் நாளில்
ஆய் மொழி பாடல் யாழ் ஓர் அந்தணன் ஆங்கண் வந்தான்

மேல்
$6.40

#40
இந்த நாரதனை போற்றி இரு பதம் விளக்கி வாச
சந்தனாகருவின் தூபம் தவழ் மணி தவிசின் ஏற்றி
வந்தனா விதியில் சற்றும் வழு அற வழிபாடு எய்தி
அந்த நால்வரும் அ வேந்தும் ஆதி வாசவர்கள் ஆனார்

மேல்
$6.41

#41
வரம் மிகு கற்பினாளும் மாமியும் வணங்கி நிற்ப
சரிகமபதநி பாடல் தண்டு தைவரு செம் கையோன்
இரு செவி படைவீடு ஆக எம்பிரான் அளிக்கப்பெற்ற
பெரு முனி அவர்க்கு ஓர் வார்த்தை பெட்புற பேசுவானே

மேல்
*நாரதன் சுந்தோபசுந்தர் வரலாறு கூறி, திரௌபதி
*நிமித்தமாகப் பாண்டவர்க்கு ஒரு நியமம் உரைத்தல்
$6.42

#42
முராரியை முராரி நாபி முளரி வாழ் முனியை முக்கண்
புராரியை நோக்கி முன் நாள் புரி பெரும் தவத்தின் மிக்கார்
சுராரிகள்-தம்மில் சுந்தோபசுந்தர் என்று இருவர் தங்கள்
திராரி ஏவலினால் வந்த திலோத்தமை-தன்னை கண்டார்

மேல்
$6.43

#43
காண்டலும் அவள் மேல் வைத்த காதலால் உழந்து நெஞ்சில்
ஈண்டிய துயரத்தோடும் இருவரும் நயந்த போழ்து அ
பூண் தகு பொலிவினாள்-தன் பொருட்டு அமர் தம்மில் பூண்டு
மாண்டனர் என்னும் வார்த்தை மா நிலம் அறியும் அன்றே

மேல்
$6.44

#44
நீவிரும் விதியால் வேட்ட நேயம் உண்டேனும் மன்றல்
ஓவியம் அனையாள்-தன்னை ஓர் ஒர் ஆண்டு ஒருவர் ஆக
மேவினிர் புரியும் அங்ஙன் மேவும் நாள் ஏனையோர் இ
காவி அம் கண்ணினாளை கண்ணுறல் கடன்-அது அன்றே

மேல்
$6.45

#45
எண் உற காணில் ஓர் ஆறு இருதுவும் வேடம் மாறி
புண்ணிய புனல்கள் ஆட போவதே உறுதி என்று
வண்ண வில் திறலினார்க்கு வாய் மலர்ந்து அருளி மீண்டு
பண்ணுடை கீத நாத பண்டிதன் விசும்பில் போனான்

மேல்
*நாரதன் உரைத்தபடி ஐவரும் மனைவியுடன் வாழ்தல்
$6.46

#46
சொன்ன நாள் தொடங்கி ஐந்து சூரரும் தேவர் நாளுக்கு
இன்ன நாள் அவதி என்றே எண்ணி ஆங்கு இரதி கேள்வன்
அன்ன நாள் மலர் பைம் தாமத்து அறன் மகன் ஆதி ஆக
மின்னனாள்-தன்னை வேட்ட முறையினால் மேவினாரே

மேல்

@7. அருச்சுனன் தீர்த்த யாத்திரைச் சருக்கம்
*தருமனது நீதி தவறாத ஆட்சியில் ஒருநாள்,
*ஒரு மறையவன் வந்து முறையிடுதல்
$7.1

#1
துன்பம் பயம் மிடி நோய் பகை சோரம் கொலை எய்தாது
இன்பம் பொருள் அறன் யாவையும் இயல்பு ஆதலின் எய்தி
தன் பைம் குடை நிழல் மன்பதை தரியார் முனை மதியா
வன்பன் தனை நிகர் வாழ்வு உற வரு நாள்களில் ஒரு நாள்

மேல்
$7.2

#2
அறை ஓத வனம் சூழ் புவி அரசு ஆன அனைத்தும்
திறையோடு இடம் அற நிற்பது ஒர் திரு வாயில் மருங்கே
இறையோடு உயர் இரு கையும் எடுத்து எண்ணுற முறையோ
முறையோ என ஒரு வைதிக முனி வந்து புகுந்தான்

மேல்
*அருச்சுனன் அந்தணனுக்கு அபயம் அளித்து, வில் எடுக்கச்
*சென்ற இடத்தில், தருமனுடன் திரௌபதியைக் காணுதல்
$7.3

#3
கடை காவலர் குறை கூறலும் விசயன் கடிதில் தன்
புடை காவலர் தொழ வந்து புவித்தேவனை மறையின்
தொடை காவல இது என் என அவனும் தொடு கழலோய்
விடை காவலர் நிரை கொண்டனர் வில் வேடுவர் என்றான்

மேல்
$7.4

#4
அஞ்சாது ஒழி முனி நீ உனது ஆனின் கணம் இன்றே
எஞ்சாவகை தருவேன் என ஏவுக்கு ஒரு திலகன்
வெம் சாபம் எடுப்பான் வரு விசயன் தருமனுடன்
மஞ்சு ஆர் பொழில் விளையாடிடு மயில் சீறடி கண்டான்

மேல்
$7.5

#5
காணா மெய் நடுங்கா ஒளி கருகா மனம் மிகவும்
நாணா விரைவொடு சாயக நாண் வெம் சிலை கொள்ளா
சேணாம் நெறி செல்லா நனி சீறா அமர் வெல்லா
மாண் ஆநிரை மீளா ஒர் இமைப்போதினில் வந்தான்

மேல்
*அந்தணனது ஆநிரையை மீட்டு அளித்தபின், தருமனிடம்
*விடைபெற்று, அருச்சுனன் தீர்த்த யாத்திரை போதல்
$7.6

#6
தொறு கொண்டவர் உயிரும் தொறு நிரையும் கவர் சூரன்
மறுக்கம்படு மறையோன் மனம் மகிழும்படி நல்கி
பொறுக்கும் தவ முனி சொல்படி புனித புனல் படிவான்
நிறுக்கும் துலை நிகர் தம்முனை நிகழ்வோடு பணிந்தான்

மேல்
*விசயன் கங்கையில் நீராடும்போது அங்கு வந்த
*நாககன்னிகையருள் உலூபியை விரும்பி, பில
*வழியே அவள் பின் சென்று மணத்தல்
$7.7

#7
ஆடம்பர மன் வேடம் அகற்றி தொழுதகு தொல்
வேடம் பெறு மறையோருடன் விசயன் புரவிசயன்
சூடம் தரு பாகீரதி தோய் காலையில் அவணே
சேடன் தல மடவார் புனல் அயர்வான் எதிர் சென்றார்

மேல்
$7.8

#8
ஓடும் கயல் விழியாரில் உலூபி பெயரவளோடு
ஆடும் புனலிடை நின்றவன் அநுராகம் மிகுந்தே
நாடும் பில வழியே அவள் பின் சென்று நலத்தால்
நீடும் கொடி மணம் எய்தினன் முகில் போலும் நிறத்தான்

மேல்
*உலூபி இராவானைப் பெற்றெடுத்தல்
$7.9

#9
இம்மென்று அளி முரல் பாயலில் இன்பத்தை வளர்த்தும்
பொம்மென் பரிபுர நாள்மலர் பொன் சென்னியில் வைத்தும்
செம் மென் கனி இதழாளொடு சில் நாள் நலம் உற்றான்
அம் மென் கொடி அனையாளும் இராவானை அளித்தாள்

மேல்
*பின், விசயன் நாகலோகத்திலிருந்து மீண்டு வந்து,
*இமயமலைத் தீர்த்தங்களில் முழுகி, கிழக்கு
*நோக்கிச் செல்லுதல்
$7.10

#10
நாகாதிபன் மகள் மைந்தன் நலம் கண்டு மகிழ்ந்து
நாகாதிபன் மகன் மீளவும் நதியின் வழி வந்து
நாகாதிபன் வண் சாரலின் நல் நீர்கள் படிந்து
நாகாதிபன் விடும் மும்மதம் நாறும் திசை புக்கான்

மேல்
*யமுனை முதலிய நதிகளில் நீராடிய பின், தென் திசை
*நோக்கி வந்து, திருவேங்கடமலை முதலியவற்றில்
*நீராடி, இறைவனை வணங்குதல்
$7.11

#11
நெளிந்து ஆடு அரவு அணை ஐயன் நிறம் போல நிறக்கும்
களிந்தா நதி முதலாகிய கடவுள் நதி பலவும்
முளிந்து ஆர் அழல் எழு கான் நெறி முக்கோலினர் ஆகி
தெளிந்து ஆறிய பெரியோரொடு சென்று ஆடினன் அன்றே

மேல்
$7.12

#12
பத்திக்கு வரம்பாகிய பார்த்தன் பல தீர்த்தம்
அ திக்கினும் எ திக்கினும் ஆம் என்றவை ஆடி
சித்திக்கு ஒரு விதை ஆகிய தென் நாட்டினை அணுகி
தத்தி சொரி அருவி தட அரவக்கிரி சார்ந்தான்

மேல்
$7.13

#13
இச்சைப்படி தன் பேர் அறம் எண் நான்கும் வளர்க்கும்
பச்சை_கொடி விடையோன் ஒரு பாகம் திறை கொண்டாள்
செச்சை தொடை இளையோன் நுகர் தீம் பால் மணம் நாறும்
கச்சை பொரு முலையாள் உறை கச்சி பதி கண்டான்

மேல்
$7.14

#14
அயனார் புரி மக சாலையும் அணி அத்திகிரிக்கே
மயனார் செய் திரு கோயிலும் மா நீழலின் வைகு எண்
புயனார் உறை மெய் கோலமும் உள் அன்பொடு போற்றி
பயன் ஆர் புனல் நதி ஏழும் அ நகரூடு படிந்தான்

மேல்
$7.15

#15
பெற்றாள் சக அண்டங்கள் அனைத்தும் அவை பெற்றும்
முற்றா முகிழ் முலையாளொடு முக்கண்ணர் விரும்பும்
பற்றாம் என மிக்கோர் இகழ் பற்று ஒன்றினும் உண்மை
கற்றார் தொழும் அருணாசலம் அன்போடு கைதொழுதான்

மேல்
$7.16

#16
உருகும் கமழ் நெய் பால் இரு பாலும் கரை ஒத்து
பெருகும் துறை ஏழேழு பிறப்பும் கெட மூழ்கி
கருகும் கரு முகில் மேனியர் கவி ஞானியர் கண்ணில்
பருகும் சுவை அமுது ஆனவர் பாதம் தலை வைத்தான்

மேல்
$7.17

#17
ஐ_ஆனனன் இயல் வாணனை அடிமை கொள மெய்யே
பொய் ஆவணம் எழுதும் பதி பொற்போடு வணங்கா
மெய் ஆகம அதிகை திரு வீரட்டமும் நேமி
கையாளன் அகீந்திரபுரமும் கண்டு கைதொழுதான்

மேல்
$7.18

#18
இன்னம் பலபல யோனியில் எய்தா நெறி பெறவே
முன்னம் பலர் அடி தேடவும் முடி தேடவும் எட்டா
அன்னம் பல பயில் வார் புனல் அணி தில்லையுள் ஆடும்
பொன் அம்பல நாதன் கழல் பொற்போடு பணிந்தான்

மேல்
$7.19

#19
இலங்காபுரி முன் செற்றவன் இரு போதும் வணங்க
துலங்கு ஆடு அரவு அணை மேல் அறி துயில் கொண்டவர் பொன் தாள்
பொலம் காவிரி இருபாலும் வர பூதல மங்கைக்கு
அலங்காரம் அளிக்கும் தென் அரங்கத்திடை தொழுதான்

மேல்
*பல தீர்த்தங்கள் ஆடி, மதுரைக்கு வந்த விசயன்,
*பாண்டியனைக் கண்டு உரையாடுதல்
$7.20

#20
வளவன் பதி முதலாக வயங்கும் பதி-தோறும்
துளவம் கமழ் அதி சீதள தோயங்கள் படிந்தே
இள வண் தமிழ் எழுது ஏடு முன் எதிர் ஏறிய துறை சூழ்
தளவம் கமழ் புறவம் செறி தண் கூடல் புகுந்தான்

மேல்
$7.21

#21
குன்றில் இள வாடை வரும் பொழுது எல்லாம் மலர்ந்த திரு கொன்றை நாற
தென்றல் வரும் பொழுது எல்லாம் செழும் சாந்தின் மணம் நாறும் செல்வ வீதி
நன்று அறிவார் வீற்றிருக்கும் நான்மாடக்கூடல் வள நகரி ஆளும்
வென்றி புனை வடி சுடர் வேல் மீனவனை வானவர் கோன் மதலை கண்டான்

மேல்
$7.22

#22
அ நிலத்தினவர் அல்லா அந்தணரோடு இவன் அவனுக்கு ஆசி கூற
எ நிலத்தீர் எ பதியீர் எ திசைக்கு போகின்றீர் என்று போற்றி
சென்னியர்க்கும் வில்லவர்க்கும் மணிமுடி ஆம் கனை கழல் கால் செழியன் கேட்ப
கன்னியை கண்ணுற்று ஆட வந்தனம் என்றனன் மெய்ம்மை கடவுள் போல்வான்

மேல்
*பாண்டியன் அருச்சுனன் முதலியோருக்குச் சோலையில் விருந்து அளித்தல்
$7.23

#23
வெய்தின் மகபதி முடியில் வளை எறிந்து மீண்ட நாள் விண்ணின் மாதர்
கொய்து மலர் தொலையாத குளிர் தருக்கள் ஒரு கோடி கொண்டு போந்து
மை தவழ் தன் தடம் கோயில் வரூதமதன் ஒரு மருங்கு வைத்த காவில்
கைதவர் கோன் மற்று அவர்க்கு போனகம் செய்து அருந்தும் இடம் கற்பித்தானே

மேல்
*சோலையில் தோழியருடன் விளையாட வந்த பாண்டியன் மகள்
*சித்திராங்கதையைக் கண்டு, விசயன் காதல் கொள்ளுதல்
$7.24

#24
வேதியரோடு அ காவில் இளைப்பாறி இருந்த அளவில் மின் குழாம் போல்
தாதியரும் சேடியரும் தன் சூழ சிலை மதனன் தனி சேவிக்க
சோதி அரி சிலம்பு அரற்ற துணை நெடும் கண் செவி அளப்ப தொடி தோள் வீசி
ஆதி அரவிந்தை என நிருபன் மகள் விளையாடற்கு ஆங்கு வந்தாள்

மேல்
$7.25

#25
பச்சென்ற திரு நிறமும் சே இதழும் வெண் நகையும் பார்வை என்னும்
நச்சு அம்பும் அமுது ஊற நவிற்றுகின்ற மட மொழியும் நாணும் பூணும்
கச்சின்-கண் அடங்காத கன தனமும் நுண் இடையும் கண்டு சோர்ந்து
பிச்சன் போல் ஆயினன் அ பெண்_கொடி மெய்ந்நலம் முழுதும் பெறுவான் நின்றான்

மேல்
$7.26

#26
புத்திரர் வேறு இல்லாது புரிவு அரிய தவம் புரிந்து பூழி வேந்தன்
சித்திரவாகனன் பயந்த சித்திராங்கதை என்னும் செம் சொல் வஞ்சி
பத்திரமும் நறு மலரும் அவயவம் போல் விளங்குவன பலவும் கொய்து
மித்திர மா மகளிருடன் விரவி ஒரு செய்குன்றில் மேவினாளே

மேல்
*விசயன் சித்திராங்கதையைத் தனியிடத்துக் கண்டு,
*கந்தருவ முறையால் இன்பம் துய்த்தல்
$7.27

#27
முன் உருவம்-தனை மாற்றி முகில் வாகன் திரு மதலை மோகி ஆகி
தன் உருவம்-தனை கொண்டு சாமனிலும் காமனிலும் தயங்கும் மெய்யோன்
பொன் உருவம் என மலர்ந்து பொலிந்தது ஒரு சண்பகத்தின் பூம் தண் நீழல்
மின் உருவ நுண் இடையாள் விழி களிக்கும்படி நின்றான் வீரர் ஏறே

மேல்
$7.28

#28
வண்டானம் திரி தடத்து வரி வண்டின் இனம் பாட மயில்கள் ஆட
தண் தார் மெய் கிளி கூட்டம் சான்றோர்கள் உரை பயிற்ற தமிழ்கள் மூன்றும்
கொண்டாடி இளம் பூவை குழாம் தலை சாய்த்து உளம் உருகும் குன்றின் ஆங்கண்
கண்டாள் அ குமரனை தம் கொடி கயலை புறம் காணும் கண்ணினாளே

மேல்
$7.29

#29
செம் திருவை அனையாளும் திருமாலை அனையானும் சிந்தை ஒன்றாய்
வந்து இருவர் விலோசனமும் தடை இன்றி உறவாடி மகிழ்ச்சி கூர்ந்து
வெந்து உருவம் இழந்த மதன் மீளவும் வந்து இரதியுடன் மேவுமா போல்
கந்தருவ முறைமையினால் கடவுளர்க்கும் கிடையாத காமம் துய்த்தார்

மேல்
*பின், சித்திராங்கதை தோழியரிடம் வந்து, நிகழ்ந்தவற்றை உரைத்தல்
$7.30

#30
கூடி இருவரும் ஒருவர் என இதயம் கலந்ததன் பின் குறித்த தூ நீர்
ஆடிய வந்ததும் தன்னை அருச்சுனன் என்பதும் இள_மான் அறிய கூறி
நீடியது என்று ஐயுறுவர் நீ இனி ஏகு என உரைப்ப நெடுங்கண்ணாள் போய்
சேடியருக்கு அ ஞான்று நிகழ்ந்த எலாம் மகிழ்ந்து உருகி செப்பினாளே

மேல்
*சித்திராங்கதை காதல் நோயால் வருந்துதல்
$7.31

#31
கவுரியர் கோன் திரு மகளை கண் அனையார் கொண்டுபோய் கன்னிமாடத்து
அவிரும் மணி பரியங்கத்து ஐஅமளி ஏற்றிய பின் அனங்கன் போரால்
நவிருடை மா மயல் உழந்து நயனங்கள் பொருந்தாமல் நாண் உறாமல்
தவிர்க எனவும் தவிராமல் தன் விரகம் கரை அழிந்து தளர்ந்தாள் மன்னோ

மேல்
$7.32

#32
தங்கள் மலை சந்தனத்தை தழல் குழம்போ இது என்னும் தாபம் தோன்ற
தங்கள் கடல் தண் முத்தை கண் முத்தால் நீறு ஆக்கும் தக்கோர் ஆய்ந்த
தங்கள் தமிழ் குழல் இசையை தன் செவிக்கு விடம் என்னும் தபனன் ஏக
தங்கள் குல கலை மதியை தபனன் எனும் என் பட்டாள் தனி பொறாதாள்

மேல்
*செவிலித்தாயர் நிகழ்ந்தவற்றை மன்னனுக்கு அறிவித்தலும்,
*அது கேட்டு மன்னன் மகிழ்தலும்
$7.33

#33
அங்கு உயிர் போல் இரு மருங்கும் ஆய மட மகளிர் இருந்து ஆற்றஆற்ற
கங்குல் எனும் பெரும் கடலை கரை கண்டாள் கடல்புறத்தே கதிரும் கண்டாள்
இங்கு இவள் போய் மலர் காவின் எழில் விசயற்கு ஈடு அழிந்த இன்னல் எல்லாம்
சங்கு எறியும் தடம் பொருநை துறைவனுக்கு செவிலியராம் தாயர் சொன்னார்

மேல்
$7.34

#34
ஐம் தருவின் நீழலில் வாழ் அரியுடனே ஓர் அரியாசனத்தில் வைகி
புந்தி உற ஒருவரும் முன் பூணாத மணி ஆரம் பூண்ட கோமான்
அந்த உரை செவிப்படலும் அதி தூரம் விழைவுடன் சென்று ஆடு தீர்த்தம்
வந்தது நம் தவ பயன் என்று உட்கொண்டான் மகோததியும் வணங்கும் தாளான்

மேல்
*மையல் நோயால் இரவைக் கழித்த விசயன்,
*துயிலுணர்ந்து, அந்தணருடன் காலைக் கடன் செய்தல்
$7.35

#35
வழுதி திரு மகள் கொடுத்த மையலினால் வடிவமும் தன் மனமும் வேறா
பொழுது விடிவளவும் மதன் பூசலிலே கருத்து அழிந்து பூவாம் வாளி
உழுத கொடும் புண் வழியே ஊசி நுழைந்து என தென்றல் ஊரஊர
விழி துயிலா விசயனும் அ விபுதருடன் துயிலுணர்ந்து விதியும் செய்தான்

மேல்
$7.36

#36
பஞ்சவரின் நடுப்பிறந்தோன் பஞ்சவன் பேரவை எய்தி பஞ்ச பாண
வஞ்சகன் செய் வஞ்சனையால் மதிமயங்கி இருந்துழி அ மதுரை வேந்தன்
சஞ்சரிக நறு மலர் தார் தனஞ்சயன் என்று அறிந்து எழுந்து தழீஇ கொண்டு ஆங்கண்
அஞ்சல் இனி உனக்கு உரியள் யான் பயந்த கடல் பிறவா அமுதம் என்றான்

மேல்
*மன்னன் விசயனிடம் ஒரு வேண்டுகோள் விடுக்க, அவனும் அதற்கு இசைதல்
$7.37

#37
கேண்-மதி ஓர் மொழி முன்னம் கேண்மையின் நம் குலத்து ஒருவன் கிரீசன்-தன்னை
தாள் மலர் அன்புற பணிந்து தவம் புரிந்தான் மக பொருட்டால் தரித்த கொன்றை
நாள்மலரோன் வெளி நின்று அ நரபதிக்கு நின் குலத்து நரேசர் யார்க்கும்
வாள் மருவும் கரதலத்தோய் ஓர் ஒரு மா மகவு என்று வரமும் ஈந்தான்

மேல்
$7.38

#38
அன்று உரைத்த வரத்தின் வழி அனேகர் அவனிபரும் மகவு அளித்தார் ஒன்று ஒன்று
ஒன்று உரைக்க மறாது ஒழி நீ ஒரு மகவும் பெண் மகவாய் உதித்தது என்-பால்
நன்று உரைக்கும் மொழியாய் என் நவ்வி பெறும் மகவு எனக்கே நல்க வேண்டும்
என்று உரைத்தான் மன்றல் பெற இருந்தோனும் மாமன் உரைக்கு இசைந்தான் அன்றே

மேல்
*சித்திராங்கதைக்கும் விசயனுக்கும் திருமணம் நிகழ்தல்
$7.39

#39
தெண் திரை கைதொழு கழலோன் திரு மகட்கு வதுவை என சேர சோழர்
எண் திசையின் முடி வேந்தர் எல்லோரும் முனி கணத்தோர் எவரும் ஈண்ட
அண்டர் பிரான் அளித்த சிலை ஆண்தகையை அலங்காரம் அனைத்தும் செய்து
மண்டபம் ஒன்றினில் அறு கால் வண்ண மணி பலகையின் மேல் வைத்தார் அன்றே

மேல்
$7.40

#40
கோ_மடந்தை களி கூர புகழ்_மடந்தை களி கூர கொற்ற விந்தை
மா_மடந்தை களி கூர மண வினை ஒப்பனைக்கு உரிய மடந்தைமார்கள்
பூ_மடந்தை அனையாளை பூட்டிய வெண் தரள மணி பூண்களாலே
நா_மடந்தை நிகர் ஆக்கி நாயகன்-தன் வல பாகம் நண்ணுவித்தார்

மேல்
$7.41

#41
இந்திரனும் சசியும் என இறையோனும் உமையும் என எம்பிரானும்
செம் திருவும் என காமதேவும் இரதியும் என வெம் சிலை_வலோனும்
சந்து அணி பூண் முலையாளும் சதுர் மறையோர் சடங்கு இயற்ற தழல் சான்று ஆக
துந்துபியின் குலம் முழங்க சுரிசங்கின் குழாம் தழங்க துலங்க வேட்டார்

மேல்
*இருவரும் இன்பம் துய்த்து வாழும் நாளில், பப்புருவாகனன் என்னும்
*புதல்வனைப் பெற்றுச் சித்திரவாகனனுக்கு கொடுத்தல்
$7.42

#42
நோக்கிய கண் இமையாமல் நோக்கிநோக்கி நுண்ணிய மென் புலவியிலே நொந்துநொந்து
தேக்கிய செம் கனி இதழ் ஆர் அமுது உண்டுஉண்டு சேர்த்திய கை நெகிழாமல் சேர்ந்துசேர்ந்து
தூக்கிய பொன் துலையின் அநுராகம் மேன்மேல் தொடர அரும் பெரும் போகம் துய்த்தார் முன்னை
பாக்கியம் வந்து இருவருக்கும் பலித்தது அல்லால் பாயல் நலத்து இப்படி யார் பயன் பெற்றாரே

மேல்
$7.43

#43
பல் நாளில் நெடும் போகம் பயின்ற பின்னர் பப்புருவாகனன் என்னும் பைதல் திங்கள்
அன்னானை அவள் பயந்தாள் பயந்த போதே அ மகவை உவகையுடன் அவனும் ஈந்தான்
தென்னா என்று அளி முரல வேம்பின் தண் தார் தேம் பரிசில் வழங்கு புய தென்னர் கோவும்
நின்னால் என் மரபு நிலை பெற்றது என்று நேயமுடன் கவர்ந்து துயர் நீங்கினானே

மேல்
*பின், அருச்சுனன் சித்திராங்கதையை நீங்கி, வழுதிநாட்டுள்ள தீர்த்தங்கள் பலவற்றில் நீராடுதல்
$7.44

#44
பார்த்தன் அருச்சுனன் கரியோன் விசயன் பாகசாதனி சவ்வியசாசி பற்குனன் பார்
ஏத்து தனஞ்சயன் கிரீடி சுவேத வாகன் எனும் நாமம் படைத்த பிரான் யாழோர் இன்பம்
வாய்த்த இதழ் அமுத மொழி பேதை தாதை மனை இருக்க திரு வழுதி வள நாட்டு உள்ள
தீர்த்தம் முழுவதும் ஆடி அன்பால் தென்பால் திருமலையும் கைதொழுது சிந்தித்தானே

மேல்
$7.45

#45
கன்றிய வெம் கரன் முதலோர் களத்தில் வீழ கவி குல நாயகன் இதயம் கலங்கி வீழ
ஒன்று பட மரம் ஏழும் உததி ஏழும் ஊடுருவ சரம் தொடுத்த ஒரு வில் வீரன்
துன்றி எழுபது வெள்ளம் குரங்கின் சேனை சூழ் போத வாய்த்த திரு துணைவனோடும்
சென்ற வழி இன்றளவும் துளவம் நாறும் சேது தரிசனம் செய்தான் திறல் வல்லோனே

மேல்
$7.46

#46
வன் திரை வெம் களிற்று இனங்கள் இரண்டு பாலும் மலையாமல் இடும் கணையமரனே போலும்
தன் தலைகள் அமிழாமல் எடுப்பான் மேரு தாழ் கடலில் நீட்டியது ஓர் தட கை போலும்
அன்றி இரு பூ தலமும் இரு தட்டாக அகத்தியன் வாழ் குன்றினையும் அணி முக்கோண
குன்றினையும் சீர்தூக்கி நிறுப்பதாக கோகனதன் அமைத்த துலைக்கோலும் போலும்

மேல்
$7.47

#47
அண்டர் தம கங்கையினும் வரன் உண்டு என்று என்று அரம்பையரோடு அவனியில் வந்து ஆடும் கன்னி
தண் துறையும் தண் பொருநை பாவநாச தடம் துறையும் படிந்து நதி தடமே போந்து
பண்டு மழு படையோன் அ மழுவால் கொண்ட பாக்கிய பூமியும் சேரன் பதிகள் யாவும்
கண்டு மனம் களி கூர சென்று மேலை கடல் கண்டான் உரகதலம் கண்டு மீண்டான்

மேல்
*அரம்பையர் ஐவரின் சாபம் நீக்கி, விசயன் கோகன்னத்தை அடைதல்
$7.48

#48
அந்த நெடும் திசை புனல்கள் ஆடும் நாளில் ஐந்து தடத்து அரம்பையர் ஓர் ஐவர் சேர
இந்திரன் வெம் சாபத்தால் இடங்கர் ஆகி இடர் உழந்தோர் பழைய வடிவு எய்த நல்கி
சிந்து திரை நதி பலவும் சென்று தோய்ந்து திங்களுடன் அரவு உறவு செய்யும் வேணி
கொந்து அவிழும் மலர் இதழி தொடையோன் வைகும் கொடி மதில் சூழ் கோகன்னம் குறுகினானே

மேல்
*உடன் வந்த மறையவரைக் கோகன்னப்பதியில் இருத்தி, விசயன் துவாரகை சென்று,
*சுபத்திரையை மணக்க விரும்பி, துறவு வேடம் பூணுதல்
$7.49

#49
ஆகன்னம் உற செம்பொன் வரை வில் வாங்கி அவுணர் புரம் கட்டழித்தோன் அடியில் வீழ்ந்து
கோகன்ன வளம் பதியில் தன் பின் வந்த குல முனிவர்-தமை இருத்தி கோட்டு கோட்டு
நாகு அன்ன பெடையுடனே ஆடும் கஞ்ச நறை வாவி வண் துவரை நண்ணி ஆங்கண்
பாகு அன்ன மொழி கனி வாய் முத்த மூரல் பாவை நலம் பெற முக்கோல் பகவன் ஆனான்

மேல்
*அடுத்துள்ள இரைவதக கிரியில் விசயன் இருத்தலும், மழை மிகப் பொழிதலும்
$7.50

#50
வெம் கதிர் போய் குட திசையில் வீழ்ந்த பின்னர் வீழாமல் மாலையின்-வாய் மீண்டும் அந்த
செம் கதிர் வந்து எழுந்தது என மீது போர்த்த செய்ய ஆடையும் தானும் தீர்த்த வாரி
சங்கு அதிரும் மணி வீதி நகரி சூழ்ந்த தடம் சாரல் இரைவதக சயிலம் நண்ணி
பொங்கு அதிர் பைம் புயல் எழுந்து பொழியும் கங்குல் போய் ஒரு நீள் வட தருவின் பொதும்பர் சேர்ந்தான்

மேல்
$7.51

#51
இந்திரற்கு திரு மதலை மன்றல் எண்ணி யாதவர்_கோன் வளம் பதியில் எய்தினான் என்று
அந்தரத்தை நீலத்தால் விதானம் ஆக்கி அண்டம் உற இடி முரசம் ஆர்ப்ப ஆர்ப்ப
வந்து இரட்டை வரி சிலையால் பஞ்ச வண்ண மகர தோரணம் நாட்டி வயங்கும் மின்னால்
முந்துற தீபமும் எடுத்து தாரை முத்தால் முழு பொரி சிந்தின கால முகில்கள் அம்மா

மேல்
*விசயன் கண்ணனை நினைக்க, அவனும் அங்கு வந்து, விசயனது எண்ணத்தைத் தெரிந்து,
*மறுநாள் வருவதாகச் சொல்லி, துவாரகை சேர்தல்
$7.52

#52
யாம் கருதி வரும் கருமம் முடிப்பான் எண்ணில் இராமன் முதல் யது குலத்தோர் இசையார் என்று
பாங்குடனே தனக்கு உயிர் ஆம் துளப மௌலி பரந்தாமன்-தனை நினைந்தான் பார்த்தன் ஆக
பூம் கமல மலர் ஓடை அனையான் தானும் பொன் நெடும் தேர் பாகனுமே ஆக போந்து
நீங்கு அரிய நண்பினனாய் நெடு நாள் நீங்கு நேயத்தோன் நினைவின் வழி நேர்பட்டானே

மேல்
$7.53

#53
யதி ஆகி அவண் இருந்த தோழன்-தன்னை யது குல நாயகன் பரிவோடு இறைஞ்ச அன்பால்
அதியான நெடும் சுருதி ஆசி கூறி ஆகம் உற தழீஇ மகிழ்வுற்று ஆல நீழல்
மதி ஆர் செம் சடை முடியோன் என்ன வைகி வந்தவாறு உரைப்ப நெடுமாலும் கேட்டு
துதியாடி காலையிலே வருதும் என்று சொற்று இமைப்பில் மீளவும் போய் துவரை சேர்ந்தான்

மேல்
*இந்திரவிழாக் கொண்டாடப் பலராமன், சுபத்திரை முதலியோர் பரிவாரத்துடன் இரைவதக கிரிக்கு
*வருதலும், யாவரும் அங்கு இருந்த அருச்சுன முனிவனைத் தொழுதலும்
$7.54

#54
ஆதவன் வந்து உதிப்பதன் முன் மற்றை நாளில் அணி நகர் வாழ் சனம் அனைத்தும் அந்த குன்றில்
மாதவனது ஏவலினால் மழை காலத்து வாசவற்கு விழா அயர்வான் வந்த காலை
யாதவரில் போசரில் மற்று உள்ள வேந்தர் யாவரும் சூழ்வர நறும் தார் இராமன் வந்தான்
சூது அடர் பச்சிளம் கொங்கை பச்சை மேனி சுபத்திரையும் தோழியர்கள் சூழ வந்தாள்

மேல்
$7.55

#55
முக்கோலும் கமண்டலமும் செங்கல் தூசும் முந்நூலும் சிகையுமாய் முதிர்ந்து தோன்றும்
அ கோலம் அனைவரும் கைதொழுது நோக்கி அருள் நலம் பெற்று அகன்றதன் பின் அனைத்து உலோகத்து
எ கோல யோனிகட்கும் உயிராய் தோற்றம் ஈர்_ஐந்தாய் பாற்கடலினிடையே வைகும்
மை கோல முகில் வண்ணன்-தானும் எய்தி மன வணக்கம் புரிவோனை வணங்கினானே

மேல்
*கண்ணன் அருச்சுன முனியைத் தனியே கண்டு, சுபத்திரையைப்
*பெறச் சூழ்ச்சி உரைத்து, பின் சுபத்திரையை அழைத்து,
*முனிவனுக்குப் பணிவிடை செய்யுமாறு அவளைப் பணித்தல்
$7.56

#56
துன்னி இருவரும் ஒருப்பட்டு இருந்த காலை சுபத்திரை அ தடம் குன்றின் சூழல் ஓர்சார்
மின்னிய பைம் புயலின் எழில் இரேகை போல வெளிப்படலும் மெய் புளகம் மேன்மேல் ஏறி
கன்னி இளம் தளிர் கடம்பு மலர்ந்தது என்ன கண்ட விழி இமையாத காட்சி காணா
மன்னிய மா தவத்தோனை மந்த மூரல் மாதவன் மைத்துனமையினால் மகிழ்ச்சி கூர்ந்தே

மேல்
$7.57

#57
அடிகள் திருவுளத்து எண்ணம் எம்மனோர்கள் அறியின் இசையலர் பலர் இங்கு அறிவுறாமல்
கடி அயர்வுற்று உம் பதி கொண்டு அடைக என்றும் காவலர்க்கு கடன் என்றும் கசிய கூறி
கொடி இடை வெம் களப முலை கன்னி மானை கூய் அணங்கே மெய்ம்மை உற கொண்ட கோல
படிவ முனிக்கு இரு பருவம் பணித்த ஏவல் பரிவுடன் நீ புரி என்று பணித்திட்டானே

மேல்
*தன் மனையில் வந்துள்ள அருச்சுன முனியின் மாயவேடத்தைச் சுபத்திரை அறியாது,
*தோழியருடன் தனி அறையில் துயிலுதல்
$7.58

#58
உள் அடங்கிய காம வெம் கனல் புறத்து ஓடி
கொள்ளை கொண்டு உடல் மறைத்து என கூறையும் தானும்
மெள்ள வந்து தன் கடி மனை மேவிய வேட
கள்ள வஞ்சனை அறிந்திலள் கற்புடை கன்னி

மேல்
$7.59

#59
ஈங்கு வந்தது என் தவ பயன் என்று கொண்டு எண்ணி
ஆங்கு உவந்து ஒரு மனையிடை அரும் தவன் துயில
தூங்கு கண்ணினள் சுபத்திரை தோழியர் பலரும்
பாங்கு வைக மற்று ஒரு மனை புகுந்து கண்படுத்தாள்

மேல்
*அருச்சுனன் விரகக் கனலால் பல நாள் வெதும்புதல்
$7.60

#60
புடவி எங்கணும் புதைய வான் பொழிதரு புனலால்
அடவி ஆர் அழல் அவியவும் அவிந்திலது ஐயோ
தடவி வாடை மெய் கொளுத்திட தனஞ்சயற்கு அணங்கின்
விட விலோசன கடை தரு விரக வெம் கனலே

மேல்
$7.61

#61
மதனலீலையில் பழுது அற வழிபடும் பாவை
வதன வாள் மதி வந்து முன் நிற்கவும் மருண்டு அ
சதனம் மேவரும் தபோதனன்-தனக்கு வெம் மோக
விதன வல் இருள் விடிந்திலது ஆர் இருள் விடிந்தும்

மேல்
$7.62

#62
அற்றை நாள் முதல் அநேக நாள் அகில் மணம் கமழும்
கற்றை வார் குழல் கன்னிகை வழிபட கருத்தால்
இற்றை மா மதன் பூசலுக்கு என் செய்வோம் என்றுஎன்று
ஒற்றை அன்றில் போல் மெய் மெலிந்து உள்ளமும் உடைந்தான்

மேல்
*அருச்சுன முனியின் அவயவநலம் கண்டு, சுபத்திரை ஐயுறுதல்
$7.63

#63
நல் இலக்கணம் பலவுடை அவயவ நலத்தால்
வில் இலக்கண தழும்புடை கரங்களால் மிகவும்
தொல் இலக்கணம் பலவுடை சுபத்திரை ஒரு தன்
இல்லில் அ கணவனை இவன் யார்-கொல் என்று அயிர்த்தாள்

மேல்
*சுபத்திரை-அருச்சுனன் உரையாடல்
$7.64

#64
மங்கை அங்கு ஒரு நாள் அவன் மலர் அடி வணங்கி
எங்கும் வண் புனல் ஆடுதற்கு ஏகினீர் எனினும்
தங்கும் மா நகர் யாது என தபோதனன்-தானும்
எங்கள் மா நகர் இந்திரப்பிரத்தம் என்று இசைத்தான்

மேல்
$7.65

#65
என்ற காலையில் இந்திரன் மதலையை ஒழிய
நின்ற பேரை அ நெடும் கணாள் வினவலும் நிருபன்
வென்றி மன்னவர் யாரையும் வினவினை மின்னே
மன்றல் அம் தொடை விசயனை மறந்தது என் என்றான்

மேல்
*’இந்திரப்பிரத்தத்தில் விசயனை ஒழிந்த ஏனையோரை மட்டும்
*நீ வினவியது ஏன்?’ என்ற அருச்சுன முனிக்குச் சுபத்திரையின்
*தோழி மறுமொழி கூறுதல்
$7.66

#66
யாழின் மென் மொழி எங்கள் நாயகி இவள் அவனுக்கு
ஊழின் அன்புடை மன்றலுக்கு உரியளாதலினால்
வாழி வெம் சிலை விசயனை மறைத்தனள் என்னா
தோழி நின்றவள் ஒருத்தி கைதொழுதனள் சொன்னாள்

மேல்
$7.67

#67
பங்குனன் பெரும் தீர்த்த நீர் படிவதற்காக
பொங்கு தெண் திரை புவி வலம் போந்தனன் என்றே
அங்கு நின்று வந்தவர் உரைத்தனர் அவன் இப்போது
எங்கு உளான் என தெரியுமோ அடிகளுக்கு என்றாள்

மேல்
*பாங்கிக்கு அருச்சுன முனி உரைத்த மறுமொழியிலிருந்து,
*அவன் அருச்சுனனே எனச் சுபத்திரை உணர்தல்
$7.68

#68
பாங்கி நல் உரை தன் செவி படுதலும் விசயன்
தீங்கு இலன் பல திசைகளும் சென்று நீராடி
கோங்கு இளம் கொழு முகை நிகர் கொங்கையாள் பொருட்டால்
ஈங்கு வந்து நும் இல்லிடை இருந்தனன் என்றான்

மேல்
$7.69

#69
யதி உரைத்த சொல் கேட்டலும் யாதவி நுதல் வாள்
மதி வியர்த்தது துடித்தது குமுத வாய் மலரும்
புதிய கச்சு அணி குரும்பைகள் அரும்பின புளகம்
பதி இடத்து அரிவையர்க்கு உளம் ஆகுலம் படாதோ

மேல்
*அருச்சுனன் காதல் மிகச் சுபத்திரையின் கையைப் பற்றுதலும்,
*அச் செய்தியைச் சேடியர் சென்று தேவகிக்கு அறிவித்தலும்
$7.70

#70
உகவை முத்த மென் பவளமும் நீலமும் ஒளிர
அகவு பச்சிளம் தோகை போல் நின்ற அ அணங்கை
மிக விருப்ப நோய் வளர்தலின் மெலிந்த தோள் விசயன்
தகவுடை தன தட கையால் வளை கரம் தகைந்தான்

மேல்
$7.71

#71
தகைந்தபோது உயிர் சேடியர் தவிர்க என சில சொல்
பகர்ந்து போய் ஒரு மாதவி பந்தரில் புகுந்து
புகுந்த நீர்மையை தேவகி அறியுமா புகன்றார்
அகைந்த பல் பெரும் கிளைஞரில் ஆர்-கொலோ அறிந்தார்

மேல்
*யாதவர் யாவரும் வேறிடம் சென்றிருந்தமையால்,
*தேவகி ஒழிந்தோர்க்கு அச் செய்தி தெரியாமை
$7.72

#72
அறிவு உறாவகை அலாயுதன் முதல் வடமதுரை
செறியும் யாதவர் யாரையும் தன்னுடன் சேர்த்து
மறி கொள் செம் கையன் விழா அயர்வான் பெரும் தீவில்
உறியில் வெண் தயிர் உண்டவன் கொண்டு சென்றுற்றான்

மேல்
*அருச்சுனனும் சுபத்திரையும் நினைந்தபடி
*இந்திரனும் கண்ணனும் வந்து சேர்தல்
$7.73

#73
உற்ற கங்குலில் யாவரும் தணந்தவாறு உணர்ந்து
பெற்ற தன் பெரும் பிதாவினை முன்னினன் பெரியோன்
சிற்றிடை பெரும்_கொங்கையும் தம்முனை தியானம்
முற்ற முன்னினள் இருவரும் முன் முன் வந்துற்றார்

மேல்
*இந்திரனும் இந்திராணியும் மகிழ்ந்து இவ் இருவருக்கும்
*கலன் அணிய, கண்ணனது முயற்சியால்
*சுபத்திரை-அருச்சுனன் திருமணம் நடைபெறுதல்
$7.74

#74
இந்திராணியோடு எய்திய இந்திரன்-தன்னை
இந்திராபதி எதிர் கொள துவரை மா மூதூர்
சந்திராதவ மண்டபத்து இடு பொலம் தவிசில்
வந்து இரா வணங்கிய திருமகனுடன் மகிழ்ந்தான்

மேல்
$7.75

#75
பொரு அரும் புருகூதனும் புலோம கன்னிகையும்
இருவரும் தம கலன்களால் இவர் இருவரையும்
மரு வரும்படி அணிதலின் அணி கெழு வனப்பால்
ஒருவரும் பிறர் ஒப்பலர் என்னுமாறு உயர்ந்தார்

மேல்
$7.76

#76
பால் அரும் ததி நறு நெய் ஆய் பாடியில் கள்ளத்
தால் அருந்து அதி விரகனது அருளினால் விரைவில்
சால் அருந்ததி தலைவனும் தலைபெறும் பல நுண்
நூலரும் ததி உற புகுந்து ஆசிகள் நுவன்றார்

மேல்
$7.77

#77
தொடங்கி நாத வெம் முரசுடன் சுரிமுகம் தழங்க
சடங்கினால் உயர் ஆகுதி தழலவன் சான்றா
விடங்கினால் மிகு விசயன் அ கன்னியை வேட்டான்
மடங்கினார் தம பதி-தொறும் அவ்வுழி வந்தார்

மேல்
$7.78

#78
முன்னம் யாவையும் முடித்தருள் மொய் துழாய் முடியோன்
கன்னன் ஆர் உயிர் கொள வளர் காளையை தழீஇக்கொண்டு
அன்ன மென் நடை அரிவையர் பொருட்டு நீ இன்னம்
என்ன என்ன மா தவ உரு கொள்ளுதி என்றான்

மேல்
*கண்ணன் உரைத்தபடி சுபத்திரை தேர் செலுத்த,
*அருச்சுனன் இந்திரப்பிரத்தம் நோக்கிச் செல்லுதல்
$7.79

#79
காமன்_பயந்தோன்-தனது ஏவலின் காம பாலன்
வாம பதி-தன்னினும் வாசவ மா பிரத்த
நாம பதியே திசை ஆக நடக்கல் உற்றான்
தாம குழலாள் தனி தேர் விட சாப வீரன்

மேல்
*கண்ணன் பலராமனுக்குச் செய்தி சொல்ல, அவன்
*யாதவருடன் அருச்சுனனைத் தொடர்ந்து சென்று பொருதல்
$7.80

#80
வென்றி துவரை நகர் காவலர்-தம்மை வென்று
மன்றல் குழலின் இளையாளை வலிதின் எய்தி
குன்ற சிறகர் அரிந்தோன் மகன் கொண்டுபோனான்
என்று அ பலற்கு கடல்வண்ணன் இயம்பினானே

மேல்
$7.81

#81
சேல் ஆம் பிறப்பின் திருமால் இது செப்பும் முன்னே
காலாந்தகனும் வெருவும் திறல் காளை-தன்னை
நீலாம்பரனும் யது வீர நிருபர் யாரும்
நால் ஆம் படையோடு எதிர் சூழ்ந்து அமர் நாடினாரே

மேல்
*தடுத்தவர்களை வென்று, அருச்சுனன் சுபத்திரையுடன்
*இந்திரப்பிரத்தம் சேர்தல்
$7.82

#82
அஞ்சேல் அமரில் நுமர்-தம்மையும் ஆவி கொள்ளேன்
செம் சேல் அனைய விழியாய் என தேற்றி அந்த
மஞ்சே அனைய தடம் தேர் அவள் ஊர வந்த
வெம் சேனை முற்றும் புறம்தந்திட வென்று போனான்

மேல்
$7.83

#83
மடை பட்ட வாளை அகில் நாறும் மருத வேலி
இடை பட்ட தங்கள் வள நாடு சென்று எய்தி ஆங்கு
தொடை பட்ட திண் தோள் அறன் காளை துணைவரோடு
நடைபட்டு உருகி எதிர்கொள்ள நகரி புக்கான்

மேல்
*கண்ணன் பலராமனுடன் இந்திரப்பிரத்தம் சென்று
*உவகைமொழி கூறி, மணமக்களுக்கு வரிசை செய்தல்
$7.84

#84
முன் போர் விளைத்த முசல படை மொய்ம்பினானும்
தன் போல் உயர்ந்தோர் இலன் ஆன தடம் கண் மாலும்
பின் போய் இனிய மொழி ஆயிரம் பேசி மன்றற்கு
அன்போடு உதவும் உபசாரம் அனைத்தும் ஈந்தார்

மேல்
*பலராமன் துவாரகைக்கு மீள, கண்ணன் அருச்சுனனுடன்
*இந்திரப்பிரத்தத்தில் இருத்தல்
$7.85

#85
ஞால தெரிவை களி கூர நடாத்து செங்கோல்
தால துவசன் துவராபதி-தன்னில் வைக
நீல கடல்கள் இரண்டு ஆம் என நெஞ்சொடு ஒத்த
சீலத்தவனோடு அவண் வைகினன் செம் கண் மாலே

மேல்
*சுபத்திரை அபிமன்னுவைப் பெறுதல்
$7.86

#86
பல் நாள் இவர் இ பதி சேர்ந்த பின் பங்க சாத
மின் ஆளும் மார்பற்கு உயிர் போலும் விசயன் என்பான்
நல் நாளில் நன்மை தரும் ஓரையில் நல்க வஞ்சி
அன்னாளிடத்தில் அபிமன்னு அவதரித்தான்

மேல்
*திரௌபதியிடம் ஐவர்க்கும் ஐந்து புதல்வர்கள் தோன்றுதல்
$7.87

#87
வேதம் சிறக்க மனு நீதி விளங்க இ பார்
ஆதங்கம் ஆற வரும் ஐவரின் ஐவர் மைந்தர்
பூதங்கள் ஐந்தில் குணம் ஐந்தும் பொலிந்தவா போல்
ஓது அங்கியில் உற்பவித்தாள்-வயின் உற்பவித்தார்

மேல்
*படைக்கலம் முதலியன பயின்று சிறந்த ஆறு
*புதல்வரினும் அபிமன்னு சிறத்தல்
$7.88

#88
அ மாதுலனும் பயந்தோரும் அழகில் மிக்க
இ மா மகாருக்கு இயற்றும் விதி ஏய்ந்த பின்னர்
தெம் மாறு வின்மை முதலாய செயல்கள் யாவும்
கை மாறு கொண்டு நனி கைவருமாறு கண்டார்

மேல்
$7.89

#89
அரிதில் பயந்த அறுவோருளும் ஆண்மை-தன்னால்
இருதுக்களின் மேல் இள வேனிலின் தோற்றம் ஏய்ப்ப
மருதுக்கு இடை போம் மதுசூதன் மருகன் வெம் போர்
விருதுக்கு ஒருவன் இவன் என்ன விளங்கினானே

மேல்
*வசந்த காலத்தின் வருகை
$7.90

#90
உரனால் அழகால் உரையால் மற்று உவமை இல்லா
நர நாரணர்க்கு நலம் கூர்தரு நண்பு போல்வான்
அரனார் விழியால் அழிந்து அங்கம் அநங்கம் ஆன
மரனாருடன் நண்பு இசைந்தன்று வசந்த காலம்

மேல்

@8. வசந்த காலச் சருக்கம்
*சூரியன் உத்தராயணத்திற்குத் திரும்புதல்
$8.1

#1
நனி ஆடல் அனல்_கடவுள் யமன் நிருதி நண்ணு திசை நாள்கள்-தோறும்
முனியாமல் நடந்து இளைத்து முன்னையினும் பரிதாபம் முதிர்ந்தது என்று
தனி ஆழி தனி நெடும் தேர் தனி பச்சை நிற பரியை சயிலராசன்
பனியால் அ விடாய் தணிப்பான் பனி_பகைவன் பனி_செய்வோன் பக்கம் சேர்ந்தான்

மேல்
*வசந்த காலத்தின் ஆட்சி
$8.2

#2
கலக்கம் உற இள வேனில் கலகம் எழுந்திடும் பசும் தண் காவு-தோறும்
சிலைக்கு அணி நாண் முறுக்குவ போல் தென்றலின் பின் சூழல் அளிகள் சேர ஓட
உலை கனலில் கரும் கொல்லன் சிறு குறட்டால் தகடு புரிந்து ஒதுக்கி மாரன்
கொலை கணைகள் சமைப்பன போல் குயில் அலகால் பல்லவங்கள் கோதுமாலோ

மேல்
$8.3

#3
செங்காவி செங்கமலம் சேதாம்பல் தடம்-தொறும் முத்தீக்களாக
பைம் காவின் நெடும் சினை கை மலர் நறும் தேன் ஆகுதிகள் பலவும் வீழ்க்க
உங்கார மதுகரங்கள் ஓங்கார சுருதி எடுத்து ஓத வேள்வி
வெம் காமன் இரதியுடன் புரிந்து தன தென்றல் அம் தேர் மேல் கொண்டானே

மேல்
*கண்ணனும் அருச்சுனனும் தம் தேவியருடன், நகரத்தவரோடு
*கூட, வேனில் விழாக் கொண்டாட ஒரு சோலையை அடைதல்
$8.4

#4
தேவியரும் திருமாலும் செழு மலர் தார் தனஞ்சயனும் தேவிமாரும்
மேவி அனந்தரம் வேனில் விழவு அயர்வான் முரசு அறைந்து வீதி-தோறும்
ஓவியமும் உயிர்ப்பு எய்த உபேந்திரனும் இந்திரனும் உவமை சால
பூ இனமும் சுரும்பும் என புரம் முழுதும் புறப்பட வண் பொங்கர் சேர்ந்தார்

மேல்
*சோலையில் மகளிர் பூக் கொய்து விளையாடுதல்
$8.5

#5
கொண்டல் எழ மின் நுடங்க கொடும் சாபம் வளைவுற செம் கோபம் தோன்ற
வண் தளவும் நறும் குமிழும் வண்டு அணி காந்தளும் மலர மலைகள்-தோறும்
தண் தரள அருவி விழ தையலார் வடிவு-தொறும் சாயல் தோகை
கண்டு நமக்கு இளவேனில் கார்காலம் ஆனது என களிக்குமாலோ

மேல்
$8.6

#6
பாராமல் நகையாமல் பாடாமல் ஆடாமல் பாதம் செம் கை
சேராமல் முகராகம் வழங்காமல் இகழாமல் செ வாய் ஊறல்
நேராமல் நிழல்-அதனை நிகழ்த்தாமல் மலர்ந்து அழகு நிறைந்த நீழல்
ஆராமம்-தொறும் தங்கள் அவயவம் போல்வன கொய்தார் அணங்கு போல்வார்

மேல்
$8.7

#7
மாற்றாத பனிநீரால் மான்மத குங்கும மலய வாச சந்தின்
சேற்றால் அ சோலை எலாம் செங்கழுநீர் தடம் போன்ற சிந்தை தாபம்
ஆற்றாத காதலருக்கு அமுதான இளநீரால் அடர்ந்த பூக
தாற்றால் அம் மரகத செம் துகிரால் அ பொழில் போன்ற தடங்கள் எல்லாம்

மேல்
*அருச்சுனன் முதலியோர் தேவிமாரோடு நீர் விளையாடுதல்
$8.8

#8
மெய் கொண்ட மொழி விசயன் மெய்யின் எழில் இமையாமல் மேன்மேல் நோக்கும்
மை கொண்ட குழல் ஒருத்தி மற்று அவன் செம் கையில் சிவிறி மழை கண்டு அஞ்சி
பொய்கொண்டு வகுத்து அனைய மருங்கு அசைய தனபாரம் புளகம் ஏற
கைகொண்டு முகம் புதைத்து தன் விரல் சாளரங்களிலே கண்கள் வைத்தாள்

மேல்
$8.9

#9
நங்கை அங்கு ஓர் கொடிஅனையாள் வதன மதி சல மதியாய் நடுங்குமாறு
பங்குனன் தன் திரு செம் கை பங்கயத்தின் சிவிறியினால் பரிவு கூர
குங்குமம் கொள் புனல் விடவும் இமையாமல் புனல் வழியே கூர்ந்த பார்வை
செம் கலங்கல் புது புனலுக்கு எதிர் ஓடி விளையாடும் சேல்கள் போலும்

மேல்
$8.10

#10
நறை கமழ் தண் துழாய் மாலை நாரணற்கு நண்பான நரனார் செம் கை
உறையும் மலர் செந்திருவும் ஒவ்வாத பொற்புடையாள் ஒரு பொற்பாவை
நெறி தரு பைம் குழலின் மிசை வீசிய நீர் பெருக்கு ஆற்றின் நிறை நீர் வற்றி
அறல் படு நுண் கரு மணலின் அரித்து ஒழுகும் சின்னீரோடு அமைந்தது அம்மா

மேல்
$8.11

#11
விளிந்து மயில் புறங்கொடுக்கும் மெல்லியலாள் ஒருத்தி நெடு வேயும் பாகும்
சுளிந்து வரும் கட களிற்று சுவேதவாகனன் கடக தோளின் மீது
தெளிந்த நறும் கத்தூரி சேறு படு சிவிறியின் நீர் சிந்தும் தோற்றம்
களிந்த கிரி மிசை கடவுள் காளிந்தி பரந்தது என கவினும் மாதோ

மேல்
$8.12

#12
பிறை அனைய திலக நுதல் பேதை இளம் பிடி ஒருத்தி பிடித்த செம் கை
நறை கமழும் பொலம் சிவிறி நண்ணிய செம் சிந்தூர நாரம் வீச
அறை கழல் வெம் சிலை தட கை அருச்சுனன்-தன் திரு முகத்தில் ஆனபோது
நிறைமதி மேல் வாள் இரவி கரங்கள் நிரைத்து ஓடுவ போல் நிறத்த மாதோ

மேல்
*கண்ணனும் அருச்சுனனும் மனைக்கு மீளுதல்
$8.13

#13
பாண்டு மதலையும் காதல் பாவையரும் துழாயோனும் பாவைமாரும்
ஈண்டு பெரும் சனத்துடனே இவ்வண்ணம் இடம்-தோறும் இனிதின் ஆடி
ஆண்டு வரி சிலை மதனும் அவன் படையும் சேவிப்ப அழகு கூர
மீண்டு தம மனை-தோறும் நிரைநிரை வாள் விளக்கு ஏந்த மேவினாரே

மேல்
*இளவேனில் அகல, முதுவேனில் தோன்றுதல்
$8.14

#14
நெடு வேனில் புகுதர மேல் இளவேனில் அகன்றதன் பின் நிகர் இல் கஞ்ச
படு ஏய் வெள் வளையமும் தண் பட்டு ஆலவட்டமும் செம்படீர சேறும்
உடு ஏய் நித்தில தொடையும் ஊடு உறு மண்டப தடமும் ஒழுகி நீண்ட
வடு ஏய் கண் மடந்தையர்க்கும் மகிழ்நருக்கும் அமைந்தன வான் மனைகள் எல்லாம்

மேல்
*மடவாரைக் கூடிய கணவரும், கணவரைப் பிரிந்த மடவாரும் உற்ற நிலை
$8.15

#15
திலக நுதல் குறு வியர் தம் செவி பூவில் அளி இனத்தின் சிறகர் காற்றால்
புலர மது நுகர் மாதர் புன்முறுவல் இதழ் ஊறல் புதிதின் மாந்தி
இலகு பரிமள புளக ஈர முலை தடம் மூழ்கி இரதி கேள்வன்
கலகமிடும் பரிதாபம் அகற்றினார் இனிமையுடன் கலந்த கேள்வர்

மேல்
$8.16

#16
மார வசந்தனை அகன்று வயங்குறு வெம் கோடையினால் மறுகி ஆற்றாது
ஆர் அமளி மது மலரில் ஆர வடங்களில் பனிநீர் ஆர சேற்றில்
ஈர நெடும் குழல் இசையில் இயங்கிய சாமர காற்றில் இள நிலாவில்
பேர் அழலும் புகுந்தது என பிணங்கினார் தம் கேள்வர் பிரிந்த மாதர்

மேல்
*காற்றும் நீரும் கோடையில் வறட்சியுற்ற நிலை
$8.17

#17
கோடை வெயில் சுடச்சுட மெய் கொளுந்தி இறந்தன போல கொண்டல் கோடை
வாடை சிறு தென்றல் எனும் மாருதங்கள் எ மருங்கும் வழக்கம் இன்றி
ஆடையில் வெண்சாமரத்தில் ஆலவட்டத்தினில் உயிர்ப்பில் அழகு ஆர் நெற்றி
ஓடை முக மத கயத்தின் தழை செவியில் பல் இறகில் ஒளித்த மாதோ

மேல்
$8.18

#18
தாழி நறும் குவளை அம் தார் தருமன் மகன் அருள் புனலும் தரங்க வேலை
ஊழி நெடும் பெரும் புனலும் உடலில் உறு வெயர் புனலும் ஊறிஊறி
பாழி-தொறும் இறைக்கின்ற பைம் புனலும் அல்லது வெம் பருவம்-தன்னால்
பூழி படு கமர் வாய நானிலத்து புகலுதற்கு ஓர் புனலும் உண்டோ

மேல்
*கண்ணனும் அருச்சுனனும் உடன் இருத்தல்
$8.19

#19
நீகாரம் மழை பொழிய நித்தில வெண்குடை நிழற்ற நீல வாள் கண்
பாகு ஆரும் மொழி மடவார் மணி கவரி இரு மருங்கும் பயில வீச
கார்காலம் புகுந்து செழும் காள முகில் இரண்டு ஒருபால் கலந்தது என்ன
ஆகாரம் அழகு எறிப்ப இருவரும் ஆங்கு உடன் இருந்தார் ஆவி போல்வார்

மேல்

@9. காண்டவ தகனச் சருக்கம்
*தம் எதிரே வேதியர் வடிவில் வந்த அக்கினிதேவனைக் கண்ணனும்
*அருச்சுனனும் உபசரித்தலும், அக்கினிதேவனது வேண்டுகோளும்
$9.1

#1
இனிய பால் முகந்து ஒழுக்கும் ஆகுதி என இலங்கு முப்புரி நூலும்
தனது வெம் சிகை கொழுந்து என புறத்தினில் தாழ்ந்த செம் சடை காடும்
புனித வெண் புகை மருங்கு சுற்றியது என புனைந்த ஆடையும் ஆகி
மனித வேதியர் வடிவு கொண்டு அவர் எதிர் வன்னி வானவன் வந்தான்

மேல்
$9.2

#2
வந்த அந்தணன் வரவு கண்டு இருவரும் வந்து எதிர் வணங்கி தம்
சிந்தை அன்பொடு வேதிகை என திகழ் செம்பொனின் தவிசு ஏற்ற
அந்தணாளனும் குழிந்த பொன் கண்ணினன் அவி மணம் கமழ் வாயன்
உந்து வெம் பசி பெரிது வல்லே எனக்கு ஓதனம் இடுக என்றான்

மேல்
*’உண்டற்கு உரிய உணவு அளிப்போம்’ என்று இருவரும் உவகையோடு
*உரைக்க, அக்கினி தேவன் தான் விரும்பும்உணவுபற்றி எடுத்துரைத்தல்
$9.3

#3
கரிய மேனியர் இருவரும் செய்ய பொன் காய மா முனி உண்டற்கு
உரிய போனகம் இடுதும் இ கணத்து என உவகையோடு உரைசெய்தார்
அரியஆயினும் வழங்குதற்கு ஏற்றன அல்லஆயினும் தம்மின்
பெரியஆயினும் அதிதிகள் கேட்டன மறுப்பரோ பெரியோரே

மேல்
$9.4

#4
அளித்தும் என்ற சொல் தன் செவி படுதலும் பெற்றனன் போல் ஆகி
ஒளித்து வந்தனன் இரு பிறப்பினன் அலேன் உதாசனன் என் நாமம்
களித்து வண்டு இமிர் தொடையலீர் எனக்கு உணா காண்டவம் எனும் கானம்
குளித்து அருந்துதற்கு இடம் கொடான் அ வனம் கொண்டல் வாகனன் காவல்

மேல்
$9.5

#5
மிடைந்த நால் வகை மகீருகங்களும் நெடு வெற்பு இனங்களும் துன்றி
அடைந்த தானவர் அரக்கர் பேர் உரகருக்கு ஆலயங்களும் ஆகி
குடைந்து சோரி கொள் வாள் உகிர் அரி முதல் கொடு விலங்கினம் மிக்கு
கடைந்த கூர் எயிற்று ஆல தக்ககனும் வாழ் கானனம் அது கண்டீர்

மேல்
$9.6

#6
புகுந்து யான் முகம் வைக்கின் ஏழ் புயலையும் ஏவி அ புருகூதன்
தொகும் தராதல இறுதி போல் நெடும் புனல் சொரிந்து அவித்திடும் என்னை
முகுந்தன் ஆநிரை புரந்தவாறு என ஒரு முனைபட விலக்கின் பின்
மிகுந்த தாகமும் எண்ணமும் முடிந்திடும் வேண்டுவது இது என்றான்

மேல்
*’உன் இச்சைப்படி கொள்க!’ என்ற அருச்சுனனுக்குக் கண்ணன்
*அருளால் வில் முதலியவற்றை அக்கினிதேவன் கொடுத்தல்
$9.7

#7
என்ற போதில் உன் இச்சையின்படி உணா ஈந்தனம் இமைப்போழ்தில்
சென்று கொள்க என தனஞ்சயன் கூறலும் சிந்தை கூர் மகிழ்வு எய்தி
மன்றல் அம் துழாய் மாயவன் அருளினால் வடி கணை மாளாமல்
துன்று தூணியும் சாபமும் இரதமும் சுவேத வாசியும் ஈந்தான்

மேல்
*அருச்சுனன் போர்க்கோலம் பூண்டு, தேர் ஏறி, நாண் ஒலிசெய்தல்
$9.8

#8
ஈந்த வானர பதாகை நட்டு ஈர் இரண்டு இவுளியும் உடன் பூட்டி
ஆய்ந்த வன் தொழில் பாகனும் அருணனில் அழகுறும்படி தூண்ட
காய்ந்த சாயக நாழிகை கட்டி அ காண்டிவம் கரத்து ஏந்தி
வேய்ந்த மா மணி கவசமும் அருக்கனில் அழகுற மேற்கொண்டான்

மேல்
$9.9

#9
நெஞ்சில் மேலிடும் ஊக்கமோடு அணி திகழ் நெடும் புயம் பூரித்து
சிஞ்சினீ முகம் தெறித்தனன் தெறித்தலும் தெறித்த பேர் ஒலி கானின்
விஞ்சி வாழ்வன சத்துவம் அடங்க உள் வெருவுற உகாந்தத்து
மஞ்சின் நீடு உரும் ஒலி என பரந்தது வான் முகடுற மன்னோ

மேல்
*அக்கினி காண்டவ வனத்தில் பற்றி, அதை வளைத்துக் கொள்ளுதல்
$9.10

#10
ஆழி-வாய் ஒரு வடவையின் முகத்திடை அவதரித்தனன் என்ன
ஊழி-வாய் உலகு அனைத்தையும் உருக்குமாறு உடன்று எழுந்தனன் என்ன
வாழி வாழி என்று அருச்சுனன் கரத்தையும் வார் சிலையையும் வாழ்த்தி
பாழி மேனியை வளர்த்தனன் பாவகன் பவனனும் பாங்கானான்

மேல்
$9.11

#11
மூளமூள வெம் பசியொடும் சினத்தொடும் முடுகி வெய்துற ஓடி
வாளமாக ஒர் பவள மால் வரை நெடு வாரியை வளைந்து என்ன
காள மா முகில் ஊர்தி நந்தனம் நிகர் காண்டவம்-தனை அண்ட
கோளம் மீது எழ வளைந்தனன் வரை படி கொண்டலும் குடர் தீய

மேல்
*புகையும் அனலும் மண்டி மேலே எழுந்து ஓங்கிய தோற்றம்
$9.12

#12
ஆன ஆகுலம்-தன்னொடு தப்புதற்கு அணிபட பறந்து ஓங்கும்
தூ நிறத்தன கபோதம் ஒத்தன இடையிடை எழும் சுடர் தூமம்
கான மேதியும் கரடியும் ஏனமும் கட கரி குலம்-தாமும்
வானில் ஏறுவ போன்றன நிரைநிரை வளர்தரு கரும் தூமம்

மேல்
$9.13

#13
வரை தடம்-தொறும் கதுவிய கடும் கனல் மண்டலின் அகல் வானில்
நிரைத்து எழுந்த செம் மரகத கனக வாள் நீல வெண் நிற தூமம்
தரை தலத்தினின்று அண்டகோளகை உற சதமகன் தடம் சாபம்
உரைத்த தன் வளைவு அற நிமிர்ந்து அழகுற ஓடுகின்றது போலும்

மேல்
$9.14

#14
கருதி ஆயிர கோடி வெம் புயங்கம் இ கானிடை உள என்று
பருதி சூழ்வர வெருவு பல் குவடுடை பருப்பதங்களின் சாரல்
சுருதி வேள்வி நூறு உடையவன் சிறகு அற துணித்த வாய்-தொறும் பொங்கி
குருதி பாய்வன போன்றன கொளுந்திய கொழும் தழல் கொழுந்து அம்மா

மேல்
$9.15

#15
கோத்திரங்களின் கவானிடை கதுமென கொளுந்தி உற்று எரிகின்ற
தீ திறங்கள் செங்காந்தளும் அசோகமும் செங்குறிஞ்சியும் சேர
பூத்த ஒத்தன அன்றியும் குலிக நீர் பொழி அருவியும் போன்ற
பார்த்த கண்கள் விட்டு ஏகலாவகை நிறம் பரந்த தாதுவும் போன்ற

மேல்
$9.16

#16
தளைத்த பாதவ தலை-தொறும் பற்றின சருகு உதிர்த்து இளவேனில்
கிளைத்து மீளவும் பொறி அளி எழ வளர் கிசலயங்களும் போன்ற
திளைத்த வேர் முதல் சினை உற எரிவன தீப சலமும் போன்ற
வளைத்த கானிடை மெலமெல உள் புகு வன்னியின் சிகா வர்க்கம்

மேல்
$9.17

#17
தழைத்த பேர் ஒளி திவாகரன் கரங்கள் போய் தடவி அ அடவி-கண்
பிழைத்த கார் இருள் பிழம்பினை வளைந்து உடன் பிடித்து எரிப்பன போலும்
முழைத்த வான் புழை ஒரு கரத்து இரு பணை மும்மத பெரு நால் வாய்
மழைத்த குஞ்சர முகம்-தொறும் புக்கு உடன் மயங்கிய பொறி மாலை

மேல்
*வனத்தில் வாழும் பல பிராணிகள் எரியால் அழிதல்
$9.18

#18
அரி எனும் பெயர் பொறாமையின் போல் விரைந்து அழல் கொழுந்து உளை பற்ற
கிரி முழைஞ்சுகள்-தொறும் பதைத்து ஓடின கேசரி குலம் எல்லாம்
விரி உரோம வாலதிகளில் பற்றலின் விளிவுடை சவரங்கள்
எரி கொள் சோக வெம் கனலினால் நின்றுநின்று இறந்தன சலியாமல்

மேல்
$9.19

#19
எப்புறத்தினும் புகுந்து தீ சூழ்தலின் ஏகுதற்கு இடம் இன்றி
தப்புதல் கருத்து அழிந்து பேர் இரலையோடு உழை இனம் தடுமாற
மெய் புறத்து வெண் புள்ளி செம் புள்ளி ஆய்விடும்படி விரைந்து ஓடி
அ புறத்து வீழ் பொறிகள் அவ்வவற்றினை அலங்கரித்தன அன்றே

மேல்
$9.20

#20
காழுடை புற கழைகளின் துளை-தொறும் கால் பரந்து இசைக்கின்ற
ஏழ் இசைக்கு உளம் உருகி மெய் புளகு எழ இரைகொளும் அசுணங்கள்
தாழ் அழல் சுடர் சுடச்சுட வெடித்து எழு சடுல ஓசையின் மாய்ந்த
ஊழியில் புயல் உருமினால் மடிந்திடும் உரகர்-தம் குலம் போன்ற

மேல்
$9.21

#21
அனைய போதில் அ விபின சாலங்களின் ஆர் தருக்களின் நீண்ட
சினைகள்-தோறும் வாழ் சிகாவல கலாபம் மேல் செறிதரு தீ சோதி
பனையின் நீள் உடல் பணிகளை அலகினால் பற்றலின் படர் பந்தி
புனையும் மா மணி நிழல் பரந்து எழுந்து என பொலிந்து இலங்கின மாதோ

மேல்
$9.22

#22
ஆசுகன்-தனோடு அடவியை வளைத்தனன் ஆசுசுக்கணி மேன்மேல்
வீசுகின்றன புலிங்க சாலமும் புகல் வேறு எமக்கு இலது என்று
பாசிளம் கிளி பூவைகள் வெருவி மெய் பதைத்து உளம் தடுமாறி
பேசுகின்ற சொல் கேட்டலும் நடுங்கின பிற பறவைகள் எல்லாம்

மேல்
$9.23

#23
நெஞ்சில் ஈரமும் நீதியும் குடிபுகா நிருதர் சென்னியில் வன்னி
குஞ்சி நீடுற வளர்வ போல் அசைந்து செம் கொழுந்து விட்டன மேன்மேல்
வஞ்சி நேர் இடை அரக்கியர் நக முழு மதி சிவப்பு உற தீட்டும்
பஞ்சி போன்றன அவரவர் பத யுகம் பற்றிய சிகை வன்னி

மேல்
$9.24

#24
முப்புரங்களை முக்கணன் முனிந்த நாள் மூவர் அம் முழு தீயில்
தப்பினார் உளர் காண்டவ அடவி வாழ் தானவர் யார் உய்ந்தார்
பை புறத்து அணி மணி ஒளி பரந்து என பல் தலைகளில் பற்றி
வெப்பு உறுத்தலின் உரகரும் தங்கள் வாய் விடங்கள் கொன்று என வீழ்ந்தார்

மேல்
*காண்டவம் தீப்பற்றியது உணர்ந்த இந்திரன் அங்கு வந்து,
*கண்ணனும் அருச்சுனனும் எரிக்கு உதவியாய் நிற்றலைப் பார்த்தல்
$9.25

#25
புகை படப்பட கரிந்தன பொறியினால் பொறி எழுந்தன வானின்
மிகை படைத்த அ சுரபதி ஆயிரம் விழிகளும் கண போதில்
தகைவு அற கழை முதலிய தருக்களின் சடுல ஆரவம் மிஞ்சி
திகை அனைத்தினும் பரத்தலின் செவிகளும் செவிடு பட்டன சேர

மேல்
$9.26

#26
விரதம் மேற்கொண்டு செம்பொன் மால் வரையை விரி சுடர் சூழ்வருவது போல்
இரதம் மேல் கொண்ட அநுசனும் சுதனும் இமைப்பினில் பன் முறை தேர்ந்து
சரதம் மேற்கொண்டு சரிப்பதும் தனது தாவகம் பாவகன் புகுந்து
பரதம் மேற்கொண்டு நடிப்பதும் கருதி பார்த்தனன் பாகசாதனனே

மேல்
$9.27

#27
முந்தி வார் சிலை கை பற்குனன் தொடுத்த முரணுடை மூரி வெம் கணைகள்
உந்தி வாள் உரகர் சூடிகா மகுட கோடிகள் உடைத்தலின் உடைந்து
சிந்தி மீது எழுந்த மணிகளும் அனலின் சிகைகளில் தெறித்து எழு பொறியும்
இந்திராலயத்திற்கு ஏற்றிய தீபம் என்ன நின்று இலங்கின எங்கும்

மேல்
*தக்ககனைக் குறித்துக் கவன்ற இந்திரன், தீயை அவிக்க
*மேகங்களை ஏவி, தானும் சேனையுடன் போருக்குப் புறப்படுதல்
$9.28

#28
தானவர் புரங்கள் நீறு எழ முனிந்த தமனிய சிலை கை வெள் ஊர்தி
ஆனவன் நமது புரத்தையும் சுடுவான் அழன்றனன் போலும் என்று அஞ்சி
வானவர் நடுங்க வானவர்க்கு அரசு ஆம் வலாரியும் மனன் உற தளர்ந்து
கானவருடனே தக்ககன் என்னும் கட்செவி கெடும் என கரைந்தான்

மேல்
$9.29

#29
பரந்து எழு புகையால் தம் தம வடிவம் பண்டையின் பதின்மடங்கு ஆக
சுரந்திடும் புயல்கள் அனைத்தையும் நெடு நீர் சொரிந்து அவித்திடுக என சொல்லி
நிரந்தரம் அருகு விடாது தன் நிழல் போல் நின்ற வானவரையும் ஏவி
புரந்தரன்-தானும் ஈர் இரு மருப்பு பொருப்பின் வெம் பிடர் மிசை புகுந்தான்

மேல்
*மேகங்கள் கிளர்ந்து எழுந்து மழை பொழியவும், அனல் அவியாது மிகுதல்
$9.30

#30
ஏ அக விருத்த செவ்வியின் தனுவுக்கு ஏற்ற நாண் முறுக்கிவிட்டு என்ன
சேவக இமையோர் எண் திசா முகத்தும் செம் சுடர் வாள் விதிர்த்து என்ன
பாவகன் பகு வாய் நா விதிர்த்து என்ன பரந்த அ பாவகற்கு உணவு ஆம்
தாவகம் முழுதும் வளைந்துகொண்டு எழுந்த சலதர சஞ்சலா சாலம்

மேல்
$9.31

#31
ஏறிய களிறு பிளிறு நீடு ஒலியும் எடுத்த வில் தெறித்த நாண் ஒலியும்
சூறிய இமையோர் பெரு நகை ஒலியும் துந்துபி குழாம் அதிர் ஒலியும்
கூறிய அனலன் சடுல வல் ஒலியும் குறை பட திசை-தொறும் மிகுந்த
ஊறிய புவன பவன வேகத்தோடு உருமுடை முகிலின்-வாய் ஒலியே

மேல்
$9.32

#32
தூமமும் எமது பவனனும் எமது தோழன் அ தோயமும் எமதே
யாமும் இங்கு இவற்றோடு ஒன்றுதல் ஒழிதும் ஈர்_இரு பொருள்களும் பிரிந்தால்
மா முகில் எனும் பேர் எங்குளது அடர்த்து வாசவன் என் செயும் எம்மை
ஆம் முறை அறிதும் என்று கொண்டு அறவும் அகங்கரித்தனன் வெகுண்டு அழலோன்

மேல்
$9.33

#33
மூண்ட வெம் கனலை உருமின் வெம் கனலால் முருக்கி எம் கால் கையால் நெருக்கி
ஆண்டவன் களிற்றின் கரம் நிகர் தாரை அருவியின் கணங்களால் அவித்து
பாண்டவன் பகழி தொடுக்கினும் கண்ணன் பருப்பதம் எடுக்கினும் எங்கள்
காண்டவம் புரத்தும் என்று கொண்டு இழிந்து பொழிந்தன கணம் படு கனங்கள்

மேல்
$9.34

#34
காலை-வாய் அருக்கன் பனி நுகர்ந்து என்ன கட்டு அற காண்டவம் என்னும்
பாலை-வாய் உள்ள சராசரம் அனைத்தும் நுகர்தலின் பைம் புனல் வேட்டோன்
வேலை ஏழையும் மொண்டு ஏழு மா முகிலும் விதம் பட பொழிந்த தாரைகளால்
தாலு ஏழினையும் நனைத்தனன் நனைத்தும் தணிந்ததோ தன் பெரும் தாகம்

மேல்
$9.35

#35
எ கடல்களினும் இனி பசை இலது என்று ஏழ்_இரு புவனமும் நடுங்க
தொக்க அடல் உருமோடு எழும் எழு கொண்டல் சோனை அம் சுருவையால் முகந்து
மை கடல் வெளுக்க கறுத்த மெய் மகவான் வழங்கிய ஆகுதி அனைத்தும்
நெய் கடல் சொரிந்தது என்னுமாறு அருந்தி நீடு வான் முகடு உற நிமிர்ந்தான்

மேல்
*மழையைத் தடுக்க, அருச்சுனன் அம்பினால் சரக்கூடம் அமைத்தல்
$9.36

#36
தொழு தகு விசயன் தாலு ஏழ் உடையோன் சுடர் முடி நனைந்திடுவதன் முன்
எழு முகில் இனமும் பொழிதரு மாரி யாவையும் ஏவினால் விலக்கி
முழுது உலகமும் தன்னிடத்து அடக்கிய வான் முகடு உற முறைமுறை அடுக்கி
குழுமு வெம் கணையால் கனல் கடவுளுக்கு கொற்ற வான் கவிகையும் கொடுத்தான்

மேல்
$9.37

#37
ஆழ் தரு பரவை ஏழும் வற்றிடுமாறு அழித்த கார் உமிழ்ந்திடு நெடு நீர்
தாழ்தரு சரத்தால் மேய்ந்ததற்கு இடை ஓர் தனி திவலையும் பொசியாமல்
வீழ்தரும் அருவி பாவகன்-தனக்கு விசயன் அன்று அளித்த பொன் குடைக்கு
சூழ்தர நிரைத்து தூக்கிய முத்தின் சுடர் மணி தொடையல் போன்றனவே

மேல்
$9.38

#38
மண்டி மீது எழுந்த வன்னியின் சிகைகள் இந்திரன் மதலை வாளிகளால்
கண்ட கூடத்திற்கு அமைத்த செம்பவள காண் தகு தூண் திரள் காட்ட
அண்ட கூடத்திற்கு இந்திரன் பளிங்கால் அமைத்த பல் ஆயிர கோடி
சண்ட தூணங்கள் போன்றன பரந்து தனித்தனி முகில் பொழி தாரை

மேல்
*தக்ககன் மனைவியை அம்பு எய்து அருச்சுனன்
*வீழ்த்தலும், அவனது மகவை இந்திரன் காத்தலும்
$9.39

#39
தக்ககன்-தன்னை கூயினர் தேடி சாயக மண்டபம் சுற்றி
மிக்க விண்ணவர்கள் திரிதர அவன்-தன் மெல் இயல் மகவையும் விழுங்கி
அ கணம்-தன்னில் அந்தரத்து எழலும் வீழ்த்தினான் அம்பினால் துணித்து
செ கனல் உருவ சென்னியை உரகர் கன்னியை திருமணம் செய்தான்

மேல்
$9.40

#40
மருவு அயில் சத கோடியின் இறை ஐராவதத்தின் மும்மதத்தினால் நனைத்து
கரு வயிற்று எழிலி தாரையால் வருண கடவுள்-தன் கணைகளால் அவித்து
செரு-வயின் புரள ஒதுக்கி அ தோழன் சிறுவனை சென்று எடுத்து அணைத்தான்
ஒரு வயின் பிறந்தோனாதலின் மகவானுடன் உடன்றிலன் உதாசனனே

மேல்
$9.41

#41
அன்னை வாயொடு தன் வாலதி துணியுண்டு அலமரும் அச்சுவசேனன்
தன்னை வாசவன் போய் வீடு கண்டுழி அ தனஞ்சயன் தனது வெம் கணையால்
முன்னை வானவரை முனை முகம்-தன்னில் முதுகிடமுதுகிட முருக்கி
பின்னை வாரிதங்கள் ஏழையும் பொருது பின்னிடபின்னிட பிளந்தான்

மேல்
*தப்பிய தக்ககன் புதல்வனான அச்சுவசேனன்
*கன்னனை அடுத்து அம்பாக இருத்தல்
$9.42

#42
தீர மால் பொருது வீடு கண்டதன் பின் செக்கர் மெய் தக்ககன் பயந்த
பார மாசுணம் அ விசயனுக்கு யாவர் பகை என பலரையும் வினவி
சூரன் மா மதலை சரணமே அரணம் நமக்கு என தொழுது போய் எய்தி
வீர மா முனை வெம் பகழி ஆகியது எ மேதினியினும் பெரு வார்த்தை

மேல்
*தக்ககனைக் காணாமையால் இந்திரன் வெகுண்டு பொர,
*ஏனைய தேவர்களும் உடன் வந்து பொருதல்
$9.43

#43
தோழன் மா மகனை கண்ட பின் தனது தோழனை ஒருவயின் காணான்
வேழ மா முகத்தில் கை தலம் புடைத்தான் விழிகள் ஆயிரங்களும் சிவந்தான்
யாழ மாதிரத்தின் எதிரொலி எழுமாறு எயிற்று இள நிலவு எழ நகைத்தான்
தாழ மா நிலத்தில் நின்று அமர் விளைக்கும் தன் பெரும் தனயனை முனிந்தான்

மேல்
$9.44

#44
மேக சாலங்கள் இளைத்ததும் திளைத்து மேலிடு விண்ணவர் அணிந்த
யூக சாலங்கள் உடைந்ததும் கண்டான் உருத்து எழுந்து உள்ளமும் கொதித்தான்
ஏக சாபமும் தன் ஏக சாயகமும் இமைப்பு அளவையின் விரைந்து எடுத்தான்
பாகசாதனனும் ஏனைய திசையின் பாலரும் பகடு மேற்கொண்டார்

மேல்
$9.45

#45
தேவரும் கோடி தேவருக்கு ஒருவர் சிரங்களாய் நின்ற முப்பத்து
மூவரும் தம்தம் வாகம் மேற்கொண்டு முந்துற வந்துவந்து அணிந்தார்
யாவரும் புவனத்து இன்று-கொல் உகத்தின் இறுதி என்று இரங்கினர் நடுங்க
மே வரும் மனிதர் இருவரோடு அநேக விபுதரும் வெகுண்டு போர் விளைத்தார்

மேல்
*துவாதசாதித்தர் முதலியோர் அருச்சுனனுக்குத் தோற்று ஓடுதல்
$9.46

#46
பச்சை வாசிகளும் செய்யன ஆக பாகரும் பதங்களே அன்றி
தச்ச வாளிகளால் கரங்களும் இழந்து தனி பெரும் திகிரியும் தகர
உச்ச மா மகத்தில் பண்டு ஒடிந்து ஒடியாது ஒழிந்தன பற்களும் ஒடிய
அச்சமே துணையா அருக்கனும் ஒழிந்த அருக்கர் பன்னொருவரும் அகன்றார்

மேல்
$9.47

#47
மாறு பட்டுழி அ பற்குனன் கணையால் மழுக்களும் சூலமும் உடைய
நீறுபட்டு உடலில் நீற்றுடன் படிய நெடும் கொடி ஊர்தி ஏறுகளும்
ஏறுபட்டு அழிய சடையில் வார் நதியால் ஏறிய தூளி வான் நெறியும்
சேறு பட்டிடுமாறு ஓடினார் மீள பதினொரு திறல் உருத்திரரும்

மேல்
$9.48

#48
எண்ணிய வசுக்கள் எண்மரில் கங்கை என்னும் யாய் வயிற்றில் உற்பவித்த
புண்ணியன் ஒழிந்தோர் எழுவரும் தங்கள் புய வலிமையின் பொருதிடுவார்
நண்ணிய அமரில் விசயன் வெம் கணையால் நா புலர்ந்து உள்ளமும் நடுங்கி
அண்ணிய நிலயம் புகுந்தனர் என்றால் நிற்பரோ ஆயுள்_வேதியரே

மேல்
$9.49

#49
அருண வெம் கனலோன் கனலொடு கலந்தான் ஆசுகன் அவற்கு நண்பு ஆனான்
கருணை இல் யமனும் கானிடை மடியும் கணத்திலே கவலை உற்றனனால்
வருணனும் கடல்கள் வறத்தல் கண்டு அழிந்தான் மதியும் அ மதி முடித்தவனும்
இருள் நிற அரக்கன்-தானும் இங்கு இவரோடு எங்ஙனம் பொருதும் என்று இளைத்தார்

மேல்
*அருச்சுனன் அம்புகளால் மேகங்கள் சிதறி வெளிறி மீளுதல்
$9.50

#50
சொல் மழை பொழிந்து நாள்-தொறும் தனது தோள் வலி துதிக்கும் நாவலர்க்கு
பொன் மழை பொழியும் கொங்கர் பூபதி-தன் பொன் பதம் பொருந்தலர் போல
கல் மழை பொழியும் காள மா முகிலும் கடவுளர் துரந்தவன் கரத்தில்
வில் மழை பொழிய கற்களும் துகளாய் மேனியும் வெளிறி மீண்டனவே

மேல்
*இந்திரனோடு அருச்சுனன் கடுமையாகப் போர் செய்கையில், ஆகாயவாணி எழுதல்
$9.51

#51
மாயவன்-தனக்கு நேய மைத்துனனாம் மைந்தன் அ தந்தையை மதியான்
தூய வெம் கணையால் அவன் இடி துவசம் துணித்து அமர் தொடங்கும் அவ்வளவில்
காயம் எங்கணும் நின்று ஒலி எழ பரந்து காயம் இல் கடவுள் அ கடவுள்
நாயகன்-தனக்கு பரிவுடன் நவை தீர் நல்லுரை நவின்றதை அன்றே

மேல்
$9.52

#52
தமரினும் இனிய தக்ககன் முதலே தப்பினன் குரு நிலம் சார்ந்தான்
குமரனும் நும்மால் உய்ந்தனன் தூம கொடியனும் கொண்டலுக்கு அவியான்
நமர்களில் இருவர் நரனும் நாரணனும் நமக்கும் இங்கு இவர் சிறிது இளையார்
அமரினை ஒழி-மின் அமரினை ஒழி-மின் அமரரும் அமரர் நாதனுமே

மேல்
*ஆகாசவாணி கேட்ட இந்திரன் போரைத் துறந்து துறக்கம் போதல்
$9.53

#53
என்று கொண்டு உரைத்த மொழி செவிப்பட்ட எல்லையில் இரவி முன் இருள் போல்
துன்று தன் சேனை சுர கணம் சூழ சுரபதி துறக்கம்-அது அடைந்தான்
வென்று வெம் களம் கொண்டு அருச்சுனன் தனது வெற்றி கொள் சங்கமும் குறித்தான்
அன்று செம் திருமால் அருச்சுனன் பொருத ஆண்மை கண்டு அதிசயித்தனனே

மேல்
*தேவர், முனிவர், முதலியோர் அருச்சுனனைப் புகழ்தல்
$9.54

#54
வட மதுரையினும் தென் மதுரையினும் மதி குல நிருபர் கன்னியரை
கடி மணம் புரிந்தோன் வின்மையின் வன்மை கண்ணுற கண்ட வானவரும்
புடவியில் ஒருவரொடும் இனி பூசல் பொரேன் என போன வாசவனும்
முடி சடை மவுலி நாரதன் முதலாம் முனிவரும் முடிவு அற புகழ்ந்தார்

மேல்
*அக்கினியிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள்
$9.55

#55
மாசுணத்து அரசன் மந்திரம் அமைத்த வனத்திடை இருந்த மா மயனை
ஆசுசுக்கணி சென்று அடர்த்தலும் வெருவி அருச்சுனா அபயம் என்று அரற்ற
தேசுடை திகிரி செம் கண் மால் கருணை செய்தனன் தீவினை உறினும்
பேசுதற்கு அரிய பெரியவர் நினைக்கின் யார்-கொலோ பிழைத்திடாதவரே

மேல்
$9.56

#56
அழைத்து அடல் விசயன்-தனை துணை செய்க என்று ஆறு_பத்து யோசனை ஆகி
தழைத்த அ வனத்தை கனத்தை வென்கண்டு தழலவன் நுகர்ந்திடு காலை
பிழைத்தவர் மயனும் தக்ககன் மகவும் பெரும் தவன் ஒருவன் முன் கருப்பம்
இழைத்த நுண் சிறகர் கருநிற குரீஇயின் இனங்களும் அன்றி வேறு இலரால்

மேல்
*அக்கினிதேவன் கண்ணனையும் அருச்சுனனையும் வாழ்த்தித்
*துறக்கம் செல்ல, அவ் இருவரும் இந்திரப்பிரத்தம் சேர்தல்
$9.57

#57
என் பிற புகல்வது ஈர்_எழு புவனம் எம்பிரான் அருந்தியது என்ன
தன் பசி தணிய காண்டவ வனத்தில் சராசரம் உள்ளவை அனைத்தும்
வன்புடன் அருந்தி உதரமும் குளிர்ந்தான் வன்னி தன் வடிவமும் குளிர்ந்தான்
அன்புடை இருவர்க்கு ஆசியும் புகன்றான் அசைந்து போய் துறக்கமும் அடைந்தான்

மேல்
$9.58

#58
அமரரை முதுகு கண்ட காவலரும் அவரவர் ஆண்மைகள் உரைசெய்து
அமரில் அன்று எடுத்த பல் பெரும் கொடியால் அலங்கரித்து அமைத்த தம் தேர் மேல்
தமருடன் துணைவர் நால்வரும் நகர சனங்களும் மகிழ்ந்து எதிர்கொள்ள
தமர மு முரசும் முழங்க வெண் சங்கம் தழங்க வந்து அணி நகர் சார்ந்தார்

மேல்

@10. இராயசூயச் சருக்கம்
*கடவுள் வாழ்த்து
$10.1

#1
பாண்டவர்கள் புரிந்த தவ பயன் ஆகி அவதரித்து பகைத்து மேன்மேல்
மூண்ட வினை முழுவதுவும் முனை-தோறும் முரண் முருக்கி முகில் புகாமல்
காண்டவமும் கனல் வயிற்று கனல் தணிய நுகருவித்து காக்குமாறே
பூண்டருள் எம் பெருமானை போற்றுவார் எழு பிறப்பும் மாற்றுவாரே

மேல்
*பாண்டவர் முன்னிலையில் மயன் வந்து வணங்கி,
*குருபதிக்கு மண்டபம் ஒன்று அமைத்துத் தருவதாகக் கூறுதல்
$10.2

#2
வியன் உம்பர் பல கணமும் சுரபதியும் சென்று எழில் கொள் விசும்பில் மேவ
நயனங்கள் முதலான ஐம்புலனும் மனமும் போல் நகரி எய்தி
பயன் மிஞ்சு தொழிலினராய் பாண்டவரும் திருமாலும் பயிலும் வேலை
மயன் என்பான் வாய் புதைத்து வளம் பட வந்து ஒரு மாற்றம் வழங்கினானே

மேல்
$10.3

#3
உம்மால் இன்று அரு வினையேன் உயிர் பிழைத்தேன் நீர் தந்த உயிர்க்கு வேறு ஓர்
கைம்மாறு வேறு இல்லை குருகுலம் போல் எ குலமும் காக்குகிற்பீர்
தெம் மாற உலகு ஆளும் செங்கோன்மை குரு பதிக்கு சிற்பம் வல்லோர்
அம்மா என்று அதிசயிப்ப அரிய மணிமண்டபம் ஒன்று அமைக்கின்றேனே

மேல்
$10.4

#4
மேல் நாள் இ உலகு ஆண்ட விடபருவன் அசுர குல வேந்தர்_வேந்தன்
தான் ஆண்மையுடன் பொருது தரியலரை திறை கொணர்ந்த தாரா பந்தி
போல் நாளும் ஒளி வீசும் பல மணிகள் விந்து எனும் பொய்கை-தன்னில்
ஆனாமல் கிடப்பன உண்டு அவை இதற்கே உபதானம் ஆகும் என்றான்

மேல்
*மயன் குறித்தபடி மணிகள் கொணருமாறு தருமன் ஏவ,
*விரைவில் ஏவலர் கொண்டுவருதல்
$10.5

#5
என்பதன் முன் முப்பதின் மேல் இரட்டி கொள் நூறாயிரவர் எடுத்த பாரம்
வன்புடனே தரித்து வரை அசைந்தாலும் அசையாத வயிர தோளார்
அன்பு மிகும் விழி கருணை அறன் புதல்வன் ஏவலினால் அசுர தச்சன்
தன் பணி ஈது என பணிப்ப ஒரு நொடியில் கொடு வந்தார் தளர்வு இலாதார்

மேல்
*மயன் மண்டபம் கட்டி முடித்து, தருமன் தம்பியர்க்குக் கதையும் சங்கும் கொடுத்தல்
$10.6

#6
மீது அடுக்கி பசும் பொன்னால் சுவர் செய்து மரகத தூண் வீதி போக்கி
ஓது இடத்தில் சுருங்காமல் செழும் துகிர் உத்தரம் பரப்பி உலகு ஓர் ஏழும்
மாது இடத்தான் வைகுதற்கு வாய்க்குமதோ இது என்ன வரம்பு இல் கேள்வி
சோதிடத்தோர் நாள் உரைப்ப சுதன்மையினும் முதன்மை பெற தொடங்கினானே

மேல்
$10.7

#7
மனத்தாலும் திரு தகு நூல் வரம்பாலும் உரம் பயில் தோள் வலியினாலும்
இனத்தாலும் தெரிந்து தனது எண்ணிய எண்ணினுக்கு ஏற்ப எண் இல் கோடி
தினத்தாலும் செயற்கு அரிய செழு மணி மண்டபம் ஈர்_ஏழ் திங்கள் செய்தான்
தனத்தால் மிஞ்சிய தருமன் தம்பியர்க்கு தண்டுடன் வெண் சங்கும் ஈந்தான்

மேல்
*மயன் ஆக்கிய மண்டபத்தில் தருமன் குடி புகுதல்
$10.8

#8
அ தபதி தன் குறிப்பால் அமைத்த பெரு மண்டபத்தின் அளவு நீளம்
வித்தரமோடு உயர்ச்சி எனும் வனப்பு அனைத்தும் கண்டோர்கள் வியந்து கூற
கொத்து அலர் தார் மணி முரசு கொடி உயர்த்தோன் கனல் பிறந்த கொடியும் தானும்
எ தமரும் மன மகிழ குடி புகுந்தான் இறைஞ்சலருக்கு இடி ஏறு அன்னான்

மேல்
*நாரதன் அவைக்கு எழுந்தருள, தருமன் எதிர் சென்று வணங்கி உபசரித்தல்
$10.9

#9
தம்பியர்கள் நால்வருடன் தண் துழாய் முடியோனும் தானும் ஏனை
அம் புவி மன்னரும் முனிவர் அனைவரும் சூழ்தர இருந்த அமயம்-தன்னில்
தும்புரு நாரதன் என்னும் இருவரினும் நாரதனாம் தோன்றல் தோன்ற
பைம் பொன் மலர் தூய் எதிர் போய் பணிந்து இறைஞ்சி என் செய்தான் பாண்டு மைந்தன்

மேல்
$10.10

#10
ஏற்றினான் ஆசனத்தில் தனித்தனியே உபசாரம் யாவும் தந்து
மாற்றினான் வழி இளைப்பு மலர் அயன் போல் இருந்தோனை மகிழ்ச்சி கூர்ந்து
போற்றினான் நீ வர யான் புரி தவம் யாது என புகழ்ந்தான் பொதியில் தென்றல்
காற்றினால் அரும்பு நறும் சூதம் போல் புளகு அரும்பும் காயத்தானே

மேல்
$10.11

#11
யான் புரிந்த தவம் உலகில் யார் புரிந்தார் அவனிபரில் இசையின் வீணை
தேன் புரிந்த தெள் அமுதால் அமுது உண்டோர் செவி இரதம் தெவிட்டுவிப்பாய்
மான் புரிந்த திரு கரத்து மதி இருந்த நதி வேணி மங்கை பாகன்
தான் புரிந்த திரு கூத்துக்கு இசைய மகிழ்ந்து இசை பாடும் தத்வ ஞானி

மேல்
*இராயசூயம் செய்யுமாறு பாண்டு மொழிந்தான்’ என்று தருமனிடம் நாரதன் தெரிவித்தல்
$10.12

#12
என தருமன் மகன் கூற இளையோர்கள் தனித்தனி நின்று இறைஞ்ச நீல
கனத்து அனைய திருமேனி கண்ணனும் தன் மனம் களிப்ப கண்ணின் நோக்க
மனத்தில் அழுக்கு அணுகாத மா தவத்தோன் உதிட்டிரற்கு இ மாட கூடம்
தனத்தில் மிகு குபேரன் எழில் அளகையினும் இலது என்று சாற்றினானே

மேல்
$10.13

#13
மண் மிசை நால் விரல் நிற்கும் மணி மகுடத்து அணி அரங்கில் மண் உளோரும்
விண் மிசை வாழ்நரும் நெருங்க விராய அரு மறை சடங்கின் இராயசூயம்
கண் மிசை மா மணி நிகர் என் கான்முளையை புரிவி என காலன் ஊரில்
பண் மிசை வீணையின் கிழவன் பாண்டு மொழிந்தனன் எனவும் பகர்வுற்றானே

மேல்
*நாரதன் அகன்றபின், கண்ணன், ‘வேள்வி தொடங்கும்முன்
*சராசந்தனைக் கொல்ல வேண்டும்’ எனல்
$10.14

#14
தந்தை மொழி தனயருக்கு சாற்றி முனி அகன்றதன் பின் தம்பி ஆன
இந்திரனும் தன் மனத்தில் எண்ணமும் ஈண்டு ஆகும் என எண்ணி கூறும்
அந்த நரமேத மகம் இயற்றுதற்கு என்று அவனிபரை அடைய வாரி
பந்தம் உறு பெரும் சிறையில் படை கெழு வேல் சராசந்தன் படுத்தினானே

மேல்
$10.15

#15
சத கோடி-தனக்கு ஒளித்து தடம் கடலில் புகும் கிரி போல் தளர்ச்சி கூர்ந்து
சத கோடி முடி வேந்தர் தங்கள் உயிர் கொண்டு ஒளித்தார் சமருக்கு ஆற்றார்
சத கோடி சுரும்பு அரற்றும் தாராய் அ சராசந்தன்-தன்னை இன்னே
சத கோடி இப மதுகை சதாகதி_சேய்-தனை ஒழிய சாதிப்பார் யார்

மேல்
*தருமன் ஒருப்பட, கண்ணன் வீமனுடனும் அருச்சுனனுடனும்
*வேதியர் வடிவில் சென்று, சராசந்தனின் அவையைச் சார்தல்
$10.16

#16
ஆர மணம் கமழ் அசலம் அநேகம் உள ஆனாலும் அலையின் கூல
வாரிதியை மதிப்பதற்கு வல்லது மந்தரம் அன்றி மற்றும் உண்டோ
போர் விசயம் இவனுடன் முன் பொருதோரில் யார் பெற்றார் போதும் இப்போது
ஆரண மா முனிவரராய் என புகன்றான் அறன் மகனும் அஃதே என்றான்

மேல்
$10.17

#17
அரி விரசும் துழாய் மகுடத்து அரியும் இரண்டு அரிகள் அருள் ஆண்மையோரும்
எரி விரசும் நெடும் கானம் இரு தினத்தில் விரைந்து ஏகி எண் இல் காவல்
கிரிவிரச நகர் எய்தி கிரி தடம் தோள் மகதேசன் கிளரும் கோயில்
கரி விரசும் கோபுர பொன் திரு வாயில் புகுந்து உரைத்தார் காவலோர்க்கே

மேல்
$10.18

#18
வந்தனர் முனிவர் மூவர் என்று உரை-மின் மன்னவற்கு என அவர் உரைப்ப
தந்திடும் எனலும் புகுந்து நீடு அம் பொன் தவிசு இருந்து ஆசியும் சாற்ற
கந்து அடர் குவவு தோளில் வில் குறியும் காட்சியும் கருத்து உற நோக்கி
அந்தணர் அல்லீர் யாவர் நீர் என்றான் அ உரைக்கு அமலனும் உரைப்பான்

மேல்
*’நீவிர் அந்தணர் அல்லீர்; வேறு யார்?’ என்ற சராசந்தனுக்குத்
*தாம் வந்த காரணத்தைக் கண்ணன் எடுத்துரைத்தல்
$10.19

#19
யான் விது குலத்தில் யாதவன் இவரோ குருகுல தலைவனுக்கு இளையோர்
மான்மத மலர் தார் மன்ன கேள் ஒருவன் வாயுவின் மதலை மற்று ஒருவன்
வான் மதில் உடுத்த பொன் நகர்க்கு இறைவன் மதலை நின் வள நகர் காண்பான்
கான் மத களிற்றாய் முனிவராய் வந்தோம் காவலர்க்கு அணுக ஒணாமையினால்

மேல்
*வெகுளி பொங்கச் சராசந்தன் வீமனைப் போருக்கு வலிய அழைத்து, தன் மகன்
*சகதேவனுக்கு மணி முடி சூட்டிவிட்டு, போருக்கு எழுதல்
$10.20

#20
என்றுகொண்டு உண்மை யாதவன் உரைப்ப இரு புய வலியின் எண் திசையும்
சென்றுகொண்டு அடர்த்து தெவ்வர்-தம் உயிரும் திறைகளும் முறை முறை கவர்ந்து
வென்று கொண்டு அணிந்த வாகையோன் தினவு மிக்கன எமது இணை மேரு
குன்று கொண்டு அமைந்த தோள்கள் எம்முடன் நீர் குறித்து அமர் புரியும் என்று உரையா

மேல்
$10.21

#21
நீ எனில் ஆண்டு ஓர் ஒன்பதிற்று இரட்டி நெடும் சிறை கலுழன் முன் நெறிக்கொள்
ஈ என ஓடி மதுரை விட்டு ஆழி எயில் துவாரகை பதி புகுந்தாய்
நோய் என அசுரர்க்கு உடைந்து பொன் காவில் நுழை தரும் நூறு மா மகத்தோன்
சேய் எனின் இளையன் வீமனை விசும்பில் சேர்த்துவன் என விழி சிவவா

மேல்
$10.22

#22
மந்திர சுற்றத்தவர்களை அழைத்து மதலையை மகிதலம்-தனக்கு ஓர்
இந்திரன் எனவே மணி முடி புனைந்து அன்று யாவரும் தேவரும் வியப்ப
மந்தரகிரியும் விந்தமும் தம்மில் மலைவ போல் மல் அமர் மலைவான்
சந்து அணி தடம் தோள் கொட்டி ஆர்த்து எழுந்தான் தழல் உமிழ் விழி சராசந்தன்

மேல்
*சராசந்தனும் வீமனும் மற்போர் புரிந்து தளர்தல்
$10.23

#23
யாளி வெம் பதாகை வீமனும் அவனும் யாளியும் யாளியும் எனவே
தாளினும் சமர மண்டலங்களினும் தாழ் விரல் தட கை முட்டியினும்
தோளினும் சென்னித்தலத்தினும் மற்போர் சொன்ன போர் விதம் எலாம் தொடங்கி
நாளினும் திங்கள் ஒன்றினில் பாதி நள்ளிரவினும் சமர் நடத்தி

மேல்
$10.24

#24
பூதலம் நடுங்க எழு கிரி நடுங்க போதகத்தொடு திசை நடுங்க
மீதலம் நடுங்க கண்ட கண்டவர்-தம் மெய்களும் மெய் உற நடுங்க
பாதலம் நடுங்க இருவர் மா மனமும் பறை அறைந்து அயர்வுடன் நடுங்க
சாதல் அங்கு ஒழிந்த இடர் எலாம் உழந்து தங்களில் தனித்தனி தளர்ந்தார்

மேல்
*தெளிவு பெற்று எழுந்த வீமன் சராசந்தனது
*உடலை இரு கூறாகப் பிளந்து எறிதல்
$10.25

#25
கொல்ல என்று எண்ணும் இருவரும் ஒருவர் ஒருவரை கொல்லொணாமையினால்
மல் அமர் வலியும் இரு புய வலியும் இழந்து மா மகிதலத்து உறலும்
கல் அடர் செம்பொன் வரையின் மு குவடு காலுடன் பறித்த கால் கண்டு
நல்ல தன் மைந்தற்கு உணர்வு மீண்டு எய்த நலத்துடன் நல்கியது அன்றே

மேல்
$10.26

#26
மீளவும் மிருக துவசன் உற்று எழுந்து விதலையின் விழுந்த மேவலனை
தாளொடு தாள்கள் வலி உற தன் பொன் தட கையால் முடக்கு அற பிடித்து
வாள் உகிர் வாளால் கனகனை பிளந்த வண் துழாய் மணம் கமழ் மௌலி
கோள் அரி எனவே பிளந்து எறிந்து அண்ட கோளமும் பிளக்க நின்று ஆர்த்தான்

மேல்
*பிளவுபட்ட சராசந்தனின் உடற்கூறுகள் ஒன்றுபடவே, அவன் கிளர்ந்து பொர,
*வீமன் மீண்டும் அவனைப் பிளந்து, கண்ணன் குறிப்பித்தபடி பிளவுகளை
*அடி முடி மாறுபட இடுதல்
$10.27

#27
பிளந்து எறி பிளவு மீளவும் பொருந்தி பிளிறு மா மத கரி நிகர்ப்ப
கிளர்ந்து வெம் சமரம் தொடங்கலும் தனது கேதன கேசரி அனையான்
வளர்ந்த திண் புயத்தின் வலியினால் முன்னை மல் அமர் எழுமடங்கு ஆக
உளைந்திட மலைந்து வீழுமாறு உதைத்தான் ஓர் இரண்டு ஆனதால் உடலம்

மேல்
$10.28

#28
சீறி அ குரிசில் கீண்ட பேர் உடலை சென்னி தாள் செவ்வையின் இடாமல்
மாறி இட்டிடுக என்று ஆர் உயிர் துணையாய் வந்த மா மரகத வடிவோன்
கூறி இட்டிடாமல் குறிப்பினால் உரைப்ப குறிப்பை அ குறிப்பினால் குறித்து
வேறு இட புவியின் மிசை எறிந்தனனால் வீமன் வல்லபத்தை யார் உரைப்பார்

மேல்
*இறந்த சராசந்தனைக் குறித்து அருச்சுனன் கண்ணனை வினாவுதல்
$10.29

#29
சந்த சிகர சந்து அணியும் தடம் தோள் ஆண்மை சராசந்தன்
முந்த பொருத மல் அமரில் முரணோடு அழிந்து முடிந்ததன் பின்
இந்த புதுமை-தனை வியவா ஏத்தா இறைஞ்சா யதுகுல மா
மைந்தற்கு ஒரு வாசகம் உரைப்பான் மணி தார் புய வாசவன் மைந்தன்

மேல்
$10.30

#30
இன்று ஆர் அமரின் இவன் கையால் இறந்தோன் உடலம் ஒன்றியதும்
ஒன்றாது இரண்டு பட்டதும் யாம் உணரும்படி நீ உரைத்தருள்வாய்
குன்றால் அன்று மழை தடுத்த கொற்ற கவிகை கோபாலா
என்றான் என்ற பொழுது அவனும் இறந்தோன் சரிதம் இனிது உரைப்பான்

மேல்
*கண்ணன் கூறிய சராசந்தன் வரலாறு
$10.31

#31
வானோர் பகைவர்களில் ஒருவன் மகத குலத்து மாரத பேர்
ஆனோன் வயிற்றில் அவதரித்தான் அவன் காண் இந்த அடல் வேந்தன்
மீனோததி சூழ் மேதினியின் வேந்தர் குலத்தை வேரோடும்
தான் ஓர் ஆழி தனி நடத்தி தடிந்தான் அணிந்த சமர்-தோறும்

மேல்
$10.32

#32
எண்ணற்கு அரிய முடி வேந்தர் எண்ணாயிரவர் பசு ஆக
மண் இத்தனையும் தன் குடை கீழ் வைக்கும்படி மா மகம் புரிவான்
கண்ணி சிறையினிடை வைத்தான் கண் ஆயிரத்தோன் முதலாக
விண்ணில் பயிலும் தேவர்களும் இவன் பேர் சொல்ல வெருவுவரால்

மேல்
$10.33

#33
இவனை பயந்தோன் மகவு ஒன்றும் இன்றி சண்டகௌசிக பேர்
தவனை பணிந்து வரம் வேண்ட தவனும் தான் வாழ் தடம் சூதத்து
அவனிக்கு அரிய தீம் கனி ஒன்று அளித்தான் அளித்த அ
கனியை நவ நித்தில வாள் நகை இருவர் இல் வாழ்பவர்க்கு நல்கினனால்

மேல்
$10.34

#34
காசி தலைவன் கன்னியர் தம் கண் போல் வடு முற்றிய கனியை
ஆசின் பிளந்து தம் கொழுநன் அருளால் அமுது ஒத்து இனிது அருந்த
மாசு அற்று இலங்கும் மகவு இருவர்-வயினும் பகிர்ந்து வளர்ந்ததன் பின்
பாசத்துடனே ஓர் ஒருவர் பயந்தார் வடிவில் பப்பாதி

மேல்
$10.35

#35
ஒருவன் இருவர் உதரத்தும் உடன் உற்பவித்த உற்பாதம்
வெருவி மகத குல வேந்தன் வியல் மா நகரின் புறத்து எறிய
புரிசை வாயில் கண்டு அவற்றை புசிப்பாள் எடுத்து பொருத்தினளால்
தருமம் உணரா மனத்தி ஒரு தசை வாய் அரக்கி சரை என்பாள்

மேல்
$10.36

#36
தன்னால் ஒன்றுபடுதலும் அ தனயன்-தன்னை சராசந்தன்
என்னா அழைத்தி என மகதத்து இறைவற்கு அளித்து அங்கு ஏகினளால்
அ நாள் முதல் அ பெயர் படைத்தான் அதனால் இவ்வாறு ஆனது என
சொன்னான் அது கேட்டு உளம் மகிழ்ந்தார் சுரர் கோ மகனும் துணைவனுமே

மேல்
*கண்ணன் முதலிய மூவரும் இந்திரப்பிரத்தத்திற்கு மீளுதல்
$10.37

#37
வினை முற்றிய பின் மூவரும் நல் வினையே புரி போர் மன்னவரை
இனைதல் சிறை விட்டு இகல் மல்லால் இறந்தோன் மகனை எழில் மகுடம்
புனைவித்து அந்த நகரீசன் பொன் தாள் வணங்க அவன் ஏறும்
துனை பொன் தடம் தேர் ஊர்ந்து அறத்தின் சுதன் வந்து எதிர் கொண்டிட மீண்டார்

மேல்
*திக்குவிசயம் செய்யச் செல்வ குறித்து அருச்சுனன் அவையில் உரத்தல்
$10.38

#38
கருதற்கு அரிய நிதி அனைத்தும் கவர்ந்தோர் காட்ட கண்டு உவந்த
முரச கொடியோன் முன் வேதம் மொழிந்தோன் முதலாம் முனிவரரும்
அரச குழாமும் ஈண்டிய பேர் அவையில் கடவுள் அரசு ஈன்ற
வரி வில் குமரன் மாதிரங்கள் வெல்வான் ஏகும்வகை உரைத்தான்

மேல்
$10.39

#39
சுருதி படியே வர ராயசூய பெயர் மா மகம் தொடங்க
கருதி குண பால் எம்முன்னும் வட பால் யானும் கால் திசைக்கும்
நிருதி திசைக்கும் நடு எம்பி இவனும் சிலை வேள் நிரை மணி தேர்
வரு திக்கினில் இ இளையோனும் மலைவான் எழுக வருக எனா

மேல்
*வீமன் முதலிய நால்வரும் திக்குவிசயத்திற்குப்
*புறப்படுதலும், கண்ணன் துவாரகையை அடைதலும்
$10.40

#40
எண்ணும் சேனையுடன் விரவின் எழுந்தார் இவர் ஈர்_இருவோரும்
விண்ணும் கடவுள் ஆலயமும் முதலா உள்ள மேல் உலகும்
மண்ணும் புயங்க தலம் முதலாம் மற்று எ உலகும் மாதிரமும்
துண்ணென்றிட்ட ஐந்து வகை பெரும் பேர் இயத்தின் துவனியினால்

மேல்
$10.41

#41
நானம் கமழும் செங்கழுநீர் நறும் தார் வேந்தர் நால்வரையும்
மானம் பெறு திண் சேனையுடன் வளர் மாதிரத்து வகுத்து ஏவி
மீனம் கமடம் ஏனம் நரஅரியாய் நரராய் மெய் ஞான
ஆனந்தமும் ஆகிய நாதன் அன்றே துவராபதி அடைந்தான்

மேல்
*வீமன், அருச்சுனன், முதலிய நால்வரின் திக்குவிசயம்
$10.42

#42
வான் மருச்சுதனும் ஈர்_இரண்டு கடல் வய வரூதினியின் வர்க்கமும்
நால் மருப்பு ஒரு கை மும்மதத்து வய நாகம் மேவி வளர் திசையின் வாழ்
கோன் மதிக்க நெடு வங்கமும் திகழ் கலிங்கமும் தெறு குலிங்கமும்
தான் மலைத்து முனை முரண் மிகுத்து வரு தரியலாரை முனை தள்ளியே

மேல்
$10.43

#43
மற்றும் மற்றும் அவண் மருவு பாடைகளின் மன் குலத்தொடு தடிந்து மேல்
உற்ற உற்றவரை யானம் யாவையும் ஒடிந்து இடிந்து பொடியுண்ணவே
இற்றஇற்ற பல தலைகளால் அலை எறிந்து மோதி வரு குருதியால்
முற்றமுற்ற வரை இனமும் வார் குருதி நதியுமாய் எழ முருக்கியே

மேல்
$10.44

#44
அந்தஅந்த அவனிபர் எலாம் அபயம் அபயம் என்று அடி வணங்கவே
வந்த வந்த நிதி யாவையும் சிகர வட மகீதரம் என குவித்து
எந்த எந்த நரபாலர் பாரில் நிகர் என்ன என்ன அவர் இறை என
தந்த தந்த வித தந்தி மீது கொடு தங்கள் மா நகரி சாரவே

மேல்
$10.45

#45
விசைய வெம் பகழி விசயன் வெவ் விசையொடு இரு நிதி கிழவன் மேவி வாழ்
திசை அடைந்து கதிர் இரவி என்னும் வகை சீறி மாறு பொரு தெவ்வர் ஆம்
நிசை அழிந்து வெளி ஆக நால் வகை நெருங்கு சேனையொடு நிலனும் நின்று
அசைய வன்பினுடன் ஏகினான் எழு பராகம் எண் திசை அடைக்கவே

மேல்
*சந்தனு அன்பு கூர்ந்து அவள் எண்ணம் வினாதல்
$10.46

#46
பாரத பெயர் கொள் வருடம் ஆதி பல பாரின் உள்ள நரபாலரை
பேர் அற குலமும் வேரற பொருது பிஞ்ஞகன் கிரியும் இமயமும்
சேர மொத்தி அவண் உள்ள கந்தருவர் கின்னரேசர் பலர் திறை இட
போர் அடர்த்து உகம் முடிந்த காலை எழு புணரி என்ன நனி பொங்கியே

மேல்
$10.47

#47
விந்த மால் வரையும் ஏமகூடமுடன் நிடத நாம நெடு வெற்பும் மா
மந்தராசலம் விசால மாலிய மணி தடம் சிகர மலையுடன்
கந்தமாதனமும் நீல சைலமும் என புகன்ற பல கிரியில் வாழ்
அந்தராதிபர் நடுங்க மேரு கிரி அ புறத்து நனி அணுகியே

மேல்
$10.48

#48
அ திசை-கண் அரசான உத்தர குருக்கள் மேன்மையை அடக்கி மேல்
எ திசைக்கும் இவன் அன்றி வீரர் இலர் என்று தேவரும் இயம்பவே
மெத்து இசை பனி நிலா எழ சமர விசய கம்பமும் நிறுத்தினான்
முத்து இசைக்கும் மதி வெண்குடை கடவுள் முதல்வனான அரி புதல்வனே

மேல்
$10.49

#49
கரிகள் கோடி இரதங்கள் கோடி பவனத்தினும் கடுகு கவன வெம்
பரிகள் கோடி நவ கோடி மா மணிகள் பல் வகை படு பசும் பொனின்
கிரிகள் கோடி எனவே கவர்ந்து எழு கிரி புறம் தெறு கிரீடி வந்து
அரிகள் கோடி கிளர் சோலை சூழ் தம செல்வ மா நகரி அணுகினான்

மேல்
$10.50

#50
வடாது சென்ற வரி சிலை மகீபனினும் எழுமடங்கு மிகு வலியுடன்
குடாது சென்று இளைய வீர மா நகுலன் நகுலன் என்று குலைகுலையவே
அடாத மன்னரை அடர்த்து அடுத்தவரை அஞ்சல் என்று அமர் உடற்றினான்
இடாதவன் தனம் என கரந்தனர்கள் ஏனை மன்னவர்கள் யாருமே

மேல்
$10.51

#51
மாளவத்தினொடு கர்ப்படம் பொர வகுத்து எதிர்ந்த திரிகர்த்தமும்
தூள வண் புடை இருள் பிழம்பு எழ அருக்கனின் பெரிது சுடர் எழ
தாள வண் கதியுடை துரங்க ரத கச பதாதியொடு தகு சினம்
மூள வந்து எதிர் மலைந்த மன்னவரை முதுகு கண்டு அமர் முருக்கியே

மேல்
$10.52

#52
கூற்று இசைக்கும் என உடன் வரும் கடிய கொடிய சேனையொடு குமரனும்
காற்று இசைக்கும் என வருணனும் தனி கரு குலைந்து உளம் வெரு கொள
தோற்று இசைக்கும் வசை கொண்டு மற்று அவர்கள் சொரிதரும் திறைகள் வாரி அம்
மேல் திசைக்கும் ஒரு மேரு உண்டு என உயர்த்தினான் நிகர் இல் வீரனே

மேல்
$10.53

#53
அளவு இலாத திறையோடும் அ திசை உதித்து ஓர் இரவி ஆம் என
துளவ மாலை கமழ் மௌலி நாதன் உறை துவரை எய்தி உயர் சுருதியின்
கிளவியால் முனிவர் தொழு பதம் தொழுது கேசரி துவச வீரனுக்கு
இளவல் மீளவும் அரிப்பிரத்த நகர் எய்தி மன்னனை இறைஞ்சினான்

மேல்
$10.54

#54
குன்று இசைத்த கச ரத துரங்கம பதாதி சூழ இறைகொள்ளவும்
நின்று இசைத்துவரு பல பணை குலம் இரைக்கவும் கொடி நிரைக்கவும்
துன்று இசை பனி நிலா எழ கவிகை எண் இலாதன துலங்கவும்
தென் திசை படர்தல் மேயினான் நகுல நிருபனுக்கு இளைய செம்மலே

மேல்
$10.55

#55
அ திகை-கண் இரு கடலினுக்கு நடுவான மண்டலம் அனைத்தினும்
மத்திகை புரவி மண்டலேசரும் வயங்கு மா மகுட மகிபரும்
புத்தி கைக்க அமர் பொருது அழிந்து திறை பொழிய வாரி வளர் புய கிரி
பித்திகை தொடையல் நீலன் என்னும் நரபதி பெரும் பதி புகுந்த பின்

மேல்
$10.56

#56
அந்த மா நகரி காவலான சுடர் அங்கி சீறி எதிர் பொங்கி மேல்
வந்த வீரன் மிகு சேனை யாவையும் மயங்க வெம் புகை இயங்கவே
கந்து சீறு களி யானை மன்னன் அது கண்டு வெம் கனல் அவிப்பது ஓர்
இந்து மா முக சரங்கள் ஏழு நெடு நாவினான் அழிய ஏவினான்

மேல்
$10.57

#57
அஞ்சி அந்த அழலோனும் அப்பொழுது ஒர் அந்தணாளன் வடிவு ஆகியே
வஞ்சி அம் தொடையல் மன்னன் முன்பு வர வந்த மா முனியை மன்னன் நீ
எஞ்சி நின்று சுடுகின்ற காரணம் இது என்னை என்னலும் இயம்பினான்
மஞ்சு இவர்ந்த புகை வானவன் தனது வரவும் நீலன் வழிபாடுமே

மேல்
$10.58

#58
நீலன் இட்ட திறையான கோல மணி நீலம் ஆதி நவ நிதியமும்
சால மிக்க தமனியமும் வௌவி உயர் சாரல் விந்த சயில புறத்து
ஏல நெட்டு அடவி முறிய மோதி வெளியாக ஏழ் கடலையும் கடை
காலம் முற்றி எழு கால் எனும்படி கலக்கினான் எழு கலிங்கமும்

மேல்
$10.59

#59
சென்னி நாடு குட கொங்க நாடு திறை கொண்டு தென்னன் உறை செந்தமிழ்
கன்னி நாடு உறவுடன் புகுந்து மணி நித்தில குவைகள் கை கொளா
மன்னி நாடு கடல் கொண்ட கை முனிவன் வைகும் மா மலயம் நண்ணினான்
மின்னி நாடுற விளங்கு வெம் சமர வீர வாகை பெறு வேலினான்

மேல்
$10.60

#60
செகத்து இயங்கு தனி ஆழி ஐவரினும் இளைய காளையொடு சேனை அ
நகத்து இயைந்த பொழுது அவனி பவ்வம் உறு நவ்வென தலை நடுங்கவே
மிக தியங்கி நெடு மேரு வெற்பின் மிசை மேவு வானவர்கள் மீளவும்
அகத்தியன்-தனை வடக்கு இருத்தும் வகை உன்னினார்கள் சமமாகவே

மேல்
$10.61

#61
கல் நிலம்-கொல் என வலிய மெய் பெறு கடோற்கசன்-தனை அழைத்து நீ
தென்இலங்கை திறைகொண்டு மீள்க என இளைய தாதை உரைசெய்யவே
மின் இலங்கு அணி எயிற்று அரக்கர் குல வீரனாகிய விபீடணன்
தன் நிலம் கொதிகொள புகுந்து ஒரு சழக்கு அற சமர் உழக்கினான்

மேல்
$10.62

#62
யாரையோ உரைசெய் நீ என திறல் நிசாசராதிபன் இயம்பலும்
பாரை ஏழினையும் முழுதுடை குருகுலத்து மேன்மை பெறு பாண்டுவின்
பேரன் யான் விறல் இடிம்பன் மா மருகன் என அரக்கர் பெருமான் மனத்து
ஊரும் ஆதரவினோடு அழைத்து அவனை உவகையோடு மிக உறவு உறா

மேல்
$10.63

#63
நீ இலங்கையிடை வந்தது என்-கொல் என நீதியால் உயர் உதிட்டிரன்
ராயசூயம் எனும் நாம மா மகம் இயற்றுவான் விறலொடு எண்ணினான்
நேயமான இளையோர்கள் நால்வரும் நெடும் திசாமுகம் அடங்க வென்று
ஏய மா நிதி திரட்டல் உற்றனர்கள் யானும் நின் நகரி எய்தினேன்

மேல்
$10.64

#64
அற்பு அனைத்து உலகும் எண்ணவே அறன் அளித்த மன்னன் அழல் வேள்வியின்
கற்பனைக்கு உதவி தருக என பழைய கால் விழுத்த நெடு வேலை வீழ்
வெற்பனை புகல அந்த வீடணன் அளித்த நீடு உயர் வியன்தலை
பொற்பனைத்தரு ஒர் ஏழும் ஏழும் உடனே கவர்ந்து கழல் போற்றியே

மேல்
$10.65

#65
மீள வந்து இளைய தாதை பாதம் முடி மீது வைத்து ஒளி விளங்கு பொன்
பாளை அம் பனைகள் பற்பராகம் முதலான பல் மணி பரப்பினான்
நாள் இரண்டில் இமையோரொடு ஒத்த பெரு ஞான பண்டிதனும் நல் அறன்
காளை பைம் கழல் வணங்கினன் தனது பதி புகுந்து நனி கடுகியே

மேல்
$10.66

#66
ஆல் வரும் புரவி திண் தேர் அறன் மகன் அநுசர் ஆன
நால்வரும் சென்று திக்கு ஓர் நால் இரண்டினும் தன் செய்ய
கோல் வரும் படியே ஆக்கி கொணர்ந்தன திறைகள் கண்டான்
மேல்வரும் இராயசூய வேள்வி நாம் விளம்ப கேண்மோ

மேல்
*யாகத்திற்குக் கண்ணன் முதலியோரைத் தருமன்
*அழைக்க, அனைவரும் வருதல்
$10.67

#67
இரணியன் இரணியாக்கன் என்ற தானவரை வென்று ஆங்கு
அரணிய இலங்கை மூதூர் அரக்கனை அநுசனோடும்
மரணம் உற்றிட முன் சீறி மாமனை மலைந்து மற்றை
முரணிய பகையும் தீர்ப்பான் மூர்த்தியாய் பிறந்துளோனை

மேல்
$10.68

#68
விரைவினில் கொணருமாறு வீணை நாரதனை போக்கி
தரணிபர்க்கு எல்லாம் ஓலை தனித்தனி தூதின் போக்கி
வரனுடை சுருதி நான்கும் வகுத்தவன் ஆதி ஆன
இருபிறப்பாளர் யார்க்கும் உலூகனை ஏவினானே

மேல்
$10.69

#69
தானவர் தச்சன் வந்து சமைத்தது ஓர் சிற்பம்-தன்னை
வானவர் தச்சன் கண்டு மகிழும் மண்டபத்தின் வேந்தர்
ஆனவர் எவரும் ஈண்டி அந்தணர் எவரும் ஈண்டி
மானவர் எவரும் ஈண்டி வரம்பு அற நெருங்கினாரே

மேல்
*வந்தோர்களை வரவேற்று, கண்ணனையும் பலராமனையும்
*தம்பியருடன் சென்று தருமன் எதிர்கொள்ளுதல்
$10.70

#70
வரவர வந்தவந்த முனிவரை வணங்கி ஆசி
திரமுற பெற்று வேந்தர் சிறப்பு எலாம் திருக்கண் நோக்கி
நரபதி-தானும் மற்றை நால்வரும் நீலமேனி
இரவியை அனையான்-தன்னை உவகையோடு எதிர்கொண்டானே

மேல்
$10.71

#71
கர கத களிறு போலும் கனிட்டர் ஈர்_இருவரோடும்
துரகத தடம் தேர் விட்டு துழாய் மணம் கமழும் பொன் தோள்
மரகத கிரி அன்னானை வணங்கினன் தழுவி வெள்ளை
திருநிறத்தவன்-தன் செம்பொன் திருப்பதம் இறைஞ்சினானே

மேல்
*கண்ணனது பவனியைக் கண்ட மாதர்கள் நிலை
$10.72

#72
இரு புடை மருங்கும் திக்கு ஓர் எட்டையும் வென்றோர் போத
நிருபதி தேரில் போத நேமியான் களிற்றில் போத
சுரர் பெரும் தச்சன் செய்த தொல் நகர் வீதி புக்கார்
வரு திரு பவனி கேட்டார் வள நகர் மாதர் எல்லாம்

மேல்
$10.73

#73
ஈர் அடிகளினும் செம்பஞ்சு எழுதுவார் எழுதும் முன்னர்
ஓர் அடி எழுதி மின் போல் ஒல்கி வந்து இறைஞ்சுவாரும்
ஆர் அமுது அனைய கண்ணின் அஞ்சனம் எழுதுகின்ற
சீரிய கோலும் கையும் திரு தக தோன்றுவாரும்

மேல்
$10.74

#74
விரி துகில் வேறு உடாமல் விரை கமழ் தூ நீர் ஆடி
சுரி குழல் மேகம் மாரி துளித்திட எதிர்கொள்வாரும்
கரதல மலரில் சங்கும் கலாபமும் சிலம்பும் ஆர்ப்ப
தெருவு எலாம் தாமே ஆகி சீறடி சிவப்பிப்பாரும்

மேல்
$10.75

#75
வார் குழை பற்பராக மணி விளக்கு ஏற்றுவாரும்
நேர் இழை மருங்குல் வாட்டும் நிறை குடம் பூரிப்பாரும்
கார் இளம் கமுகும் பச்சை கதலியும் நிரைத்து தோள் ஆம்
தோரணம் நாட்டுவாரும் தூ மலர் சிந்துவாரும்

மேல்
$10.76

#76
மாதர்கள் எவர்க்கும் முன் போய் வணங்குதற்கு உன்னி சிந்தை
ஆதரவுடனே வந்தும் ஆவணம் அணுகுறாமல்
சூது அடர் கொங்கை பொன் தோள் சுரி குழல் சுமக்கல் ஆற்றா
பேதுறு மருங்குலோடும் பித்துறு பிடி அன்னாரும்

மேல்
$10.77

#77
இ வகை குழுக்கொண்டு ஆங்கண் எழு வகை பருவ மாதர்
செவ்வியும் அழகும் தேசும் செய்ய பூம் திருவோடு ஒப்பார்
மெய் வழி நின்ற போக மேகமே அனையான்-தன்னை
மை வழி கண்ணின் நோக்கி மனன் உற வணங்கினாரே

மேல்
$10.78

#78
மாடம் பயிலும் மணி தோரண வீதி
நீடு அஞ்சன கண் நெருங்கி தடுமாற
ஆடம்பர கொண்டல் அன்னானை ஆபாத
சூடம் கருதி தொழுதார் சில மாதர்

மேல்
$10.79

#79
கங்கை தரு பொன் கழலான் மணி மார்பில்
கொங்கை முகுளம் குழையும்படியாக
சங்கை அற மெய் தழுவுதற்கு தம்மினும் தம்
செம் கை மலர் பதற சென்றார் சில மாதர்

மேல்
$10.80

#80
வண்டு மலர் கரும்பு ஆம் வண்ண படையானை
கண்டு அனைய கண் நிறைந்த காயா மலர் வண்ணன்
செண்டு தரித்தோன் திருப்பவளத்து ஆர் அமுதம்
உண்டு மனத்தினால் உய்ந்தார் சில மாதர்

மேல்
$10.81

#81
வஞ்சம் பயில் சகட வாள் அசுரன் மாள விறல்
கஞ்சன் பட உதைத்த காலானை கண்டு உருகி
அஞ்சு அம்பு மெய் உருவ ஐம்புலனும் சோகம் உற
நெஞ்சம் தடுமாற நின்றார் சில மாதர்

மேல்
$10.82

#82
தங்கள் குல முன்றில் தலையாய மும்மதத்து
வெம் கண் மதமா மிசை வருவோன் மெய் நோக்கி
அம் கண் மிளிர அரும் புருவ வில் முரிய
திங்கள் நுதல் வேர்வு ஓட நின்றார் சில மாதர்

மேல்
$10.83

#83
கால முகிலும் மலர் காயாவும் அன்ன திரு
கோலம் உடையோன் குலவு மணி பூண் மார்பின்
மாலை நறும் துளப மன்றலுக்கு வாள் நயன
நீல வரி வண்டு ஆகி நின்றார் சில மாதர்

மேல்
*கண்ணன் குந்தியைப் பணிந்த பின், அரசவையில்
*வீற்றிருந்து, பாண்டவருடன் அளவளாவுதல்
$10.84

#84
மங்கையர் பலரும் இங்ஙன் மன்மத பாணம் நான்கின்
இங்கித இன்பம் எய்தி இன் உயிரோடு நிற்ப
பங்கு உற வந்த அந்த பாண்டவர் ஐவரோடும்
கொங்கு அவிழ் துளப தாரான் குந்தி வாழ் கோயில் புக்கான்

மேல்
$10.85

#85
கொற்றவர் ஐவர்-தம்மை குருகுலம் விளங்குமாறு
பெற்றவள் பாதம் போற்றி பிறப்பு இறப்பு அறுக்க வல்லோன்
மற்று அவள் வாழ்த்த வாழ்த்த மனம் மகிழ்ந்து அழலின் வந்த
பொன்_தொடி பணிவும் ஏனை பூவையர் பணிவும் கொண்டான்

மேல்
$10.86

#86
அரசவைக்கு அணிசெய் சிங்க ஆசனத்து இருத்தி வெற்றி
முரசுடை துவச வேந்தன் முகம் மலர்ந்து இருந்த காலை
விரை செய புரவி திண் தேர் வீமனை முதலோர் எங்கும்
உரை செல கவர்ந்த செல்வம் காட்டி நின்று உரைசெய்தாரே

மேல்
*சராசந்தன் மகனும் வீடுமன் முதலிய வேந்தர்களும் வருதல்
$10.87

#87
முன் நரமேதம் செய்வான் முடி சராசந்தன் என்னும்
கின்னரர் பாடும் சீரான் கிளப்ப அரும் சிறையில் வைத்த
அ நரபதிகளோடும் அவன் மகன் மாகதேசன்
எ நரபதிகளுக்கும் இரவியே என்ன வந்தான்

மேல்
$10.88

#88
அரும் பனை கொடியோன் ஆதி அரவு உயர்த்தவன் ஈறு ஆகும்
பொரும் படை சேனை வெள்ள பூருவின் குலத்து உளோர்கள்
கரும் பனை தட கை வெம் கண் கரி முதல் சேனையோடும்
இரும்பினை குழைக்கும் நெஞ்சர் யாவரும் ஈண்டி மொய்த்தார்

மேல்
$10.89

#89
இந்திரபுரிக்கும் இந்த இந்திரபுரிக்கும் தேவர்
அந்தரம் அறிவுறாமல் அதிசயித்து உவகை கூர
செம் திரு மடந்தைக்கு உள்ள செல்வங்கள் அனைத்தும் சேர
வந்தது போலும் வேள்வி மா நகர் தோற்றம் அம்மா

மேல்
*அந்தணர்கள் யாகசாலையில் வந்து கூடுதல்
$10.90

#90
தோரண வீதி-தோறும் தூரிய முழக்கம்-தன்னின்
ஆரண முழக்கம் மிஞ்ச அந்தணர் ஆகி உள்ளோர்
காரணம் உணர்ந்தோர் வேள்வி கனல் முகமாக தேவர்
பாரணம் பண்ண இட்ட பைம் பொன் வேதிகையில் சேர்ந்தார்

மேல்
*யாகசாலையின் தோற்றம்
$10.91

#91
சுடும் அனல் கலுழனாக சுருதியின்படியே கோட்டி
நடுவுற திசைகள் நான்கும் நான்கு வெள் ஏறு கோட்டி
வடு அற சமைத்த சாலை மண்டபம்-தன்னை நோக்கின்
கடவுளர்க்கு அமைத்த யாக தலம் என கவினிற்று அம்மா

மேல்
$10.92

#92
திருந்த மெய் ஞானமும் தெளிந்த தெய்வத
அரும் தவ முனிவர் பேர் அவையின் மேன்மையால்
பெரும் தகை நாபி அம் பெருமன் வாழ்வு போன்று
இருந்தது குருபதி யாக சாலையே

மேல்
$10.93

#93
யாதவ குலத்தினுக்கு இறைவன் ஆகிய
மாதவன் இணை அடி வணங்கி மற்று உள
பூதலத்து அரசு எலாம் பொருந்து பொற்பினால்
ஓத நீர் வண்ணன் வாழ் உலகு போன்றதே

மேல்
*வியாத முனிவன் தனி இடத்தில் பாண்டவர்க்கு
*உரைத்த செய்திகள்
$10.94

#94
விதியினும் உயர்ந்த தொல் வியாதன் மேதினி
பதிகள் ஆகிய திறல் பாண்டு மைந்தரை
மதியினில் ஒரு புடை வருக என்று அன்பினால்
திதி உற சில் மொழி செவியில் செப்பினான்

மேல்
$10.95

#95
இங்கிதத்து இந்திரர் என்பர் யாவரும்
சங்கரன் விதியினால் தரணி பாலராய்
வெம் கனல் தோன்றிய மின்னை ஐவரும்
மங்கலம் புவி_மகள் வழக்கின் எய்தினீர்

மேல்
$10.96

#96
ஓர் ஒரு தலைவராய் ஓர் ஒர் ஆண்டு உளம்
கூர் உவகையினொடும் கொழுநர் ஆயினீர்
ஆர் அழல் பிறந்த மான் அறத்தின் மைந்தற்கு
பேர் அழல் வளர்த்திடும் பெற்றி பெற்றனள்

மேல்
$10.97

#97
மைந்தர் நீர் நால்வரும் மகம் செய் வேந்தனே
தந்தையும் தாயும் இ தரும வல்லியே
இந்த வான் பிறப்பினுக்கு இற்றை நாள் முதல்
குந்தியும் பாண்டுவும் என்று கொண்-மினே

மேல்
*முனிவன் மொழிந்தபடி, தருமனுக்கும் திரௌபதிக்கும்
*வேள்விக்குரிய கோலம் செய்தல்
$10.98

#98
கனல் வரு மின்னையும் கணவன்-தன்னையும்
முனிவரன் மொழிந்திட முகூர்த்தம் ஆன பின்
புனை முடி திரு குழல் புழுகும் நானமும்
இனிமையின் சாத்தினார் எண் இல் மாதரே

மேல்
$10.99

#99
கதியொடு பிறை தவழ் கடுக்கை காட்டு நல்
நதி தரு புனல்கொடு நானம் ஆட்டினார்
விதிமுறை அறிந்தவர் வேள்விக்கு ஏற்பன
பதியுடன் அணிந்தனர் பாவை-தன்னையும்

மேல்
*தம்பியர் முதலியோருக்குத் தருமன் கடமைகளை வகுத்தல்
$10.100

#100
மாலை முன் வணங்கி கங்கை_மைந்தனை வணங்கி யாக
சாலையை நோக்கும் வேந்தன் தம்பியை நோக்கி முந்நீர்
வேலையின் மணலின் சாலும் மிகு சனம் அருந்த தேவர்
ஆலயத்து அமுதம் அன்ன அடிசில் நீ அளித்தி என்றான்

மேல்
$10.101

#101
நாவியின் மதமும் சாந்தும் நறும் பனி நீரும் தாரும்
வாவியில் காவில் உள்ள மலர்களும் மற்றும் யாவும்
மேவிய வரி வில் ஆண்மை விசயனை நல்குக என்றான்
தூ இலை பளிதம் ஏனை துணைவரை வழங்க சொன்னான்

மேல்
$10.102

#102
தானமும் தியாகம்-தானும் தபனன் மா மதலையான
மானவன் கொடுக்க என்றான் வரம்பு இலா நிதிகள் யாவும்
கானல் அம் கடல் சூழ் வையம் காவலன் காவல் என்றான்
ஏனையோர் பலரும் வேந்தன் ஏவலின் முறை நின்றாரே

மேல்
*தருமன் திரௌபதியுடன் ஓமகுண்டத்தின் முன் அமர்ந்திருந்த காட்சி
$10.103

#103
தழல் வளர் ஓம குண்ட தலத்தினில் வலத்தில் ஆதி
தழல் வரு பாவை வைக தருமன் மா மதலை ஆங்கண்
தழல் புரை வேதவாணர் தாள் இணை வணங்கி தானும்
தழல் என இருந்தான் எல்லா வினைகளும் தகனம் செய்வான்

மேல்
$10.104

#104
கட கரி உரிவை போர்த்த கண்_நுதல்_கடவுள் மாறி
இடம் வலமாக பாகத்து இறைவியோடு இருந்தவா போல்
உடல் கலை உறுப்பு தோலின் ஒளித்திட போர்த்து வேள்வி
கடனினுக்கு உரிய எல்லாம் கவினுற சாத்தினானே

மேல்
*தருமன் இராயசூயம் வேட்டல்
$10.105

#105
பொங்குறும் ஓம செம் தீ புகையினை போர்த்தது என்ன
பைம் கடல் பருகு மேகம் பரிதியை மறைத்தது என்ன
அங்கு உறுப்புடனே வெம் கோட்டு அரிண தொக்கு அருண மேனி
எங்கணும் புதைப்ப வேள்வி தொழிலிலே இதயம் வைத்தான்

மேல்
$10.106

#106
தருமன் மா மதலை அந்த சடங்கு சொற்படியே தொட்டு
புரிவுடை திசைகள் நான்கும் புற்களால் காவல் செய்து
விரி சுடர் தீகள் மூன்றும் விண்ணவர் முகங்கள் ஆக
சுருவையால் முகந்த நெய்யை சுருதியால் ஓமம் செய்தான்

மேல்
$10.107

#107
முழுது உணர் வரம்பு இல் கேள்வி முனிவரர் குழாமும் என்றும்
அழிவு இலா மலரோன் ஆதி அமரர்-தம் குழாமும் சூழ
எழு சுடர் முத்தீ பொங்க எழு பகல் ஓமம் செய்தான்
பழுது அறு பாண்டு செய்த மா தவம் பலித்தது ஒப்பான்

மேல்
*வேள்வி முடிவில் தருமன் தானமும் தியாகமும் செய்து, அபவிரதம் ஆடுதல்
$10.108

#108
இ முறை இராயசூய மா மகத்துக்கு எழுதொணா நான்மறை உரைத்த
அ முறை இமையோர் ஆனவர்க்கு எல்லாம் அரும் பெறல் அவி உணவு அருளி
மு முறை வலம் வந்து இருவரும் சுவாகை முதல்வனை முடி உற வணங்கி
தெம் முறை அரசர் இடு திறை அனைத்தும் தானமும் தியாகமும் செய்தான்

மேல்
$10.109

#109
ஏழு நாள் இவ்வாறு இமையவர் எவர்க்கும் இமகிரி-தனில் அயன் வேட்ட
ஊழி மா மகம் போல் இயற்றி எண் திசையின் உயர் புனல் யாவையும் சொரிய
ஆழி-வாய் முகிலும் மின்னுமே என்ன அரும் புனல் ஆடிய பின்னர்
வாழி பாடினர்கள் நாரதன் முதலோர் மங்கலம் பாடினர் புலவோர்

மேல்
*’முதற்பூசைக்கு உரியார் யார்” என வீடுமனைத் தருமன் வினாவுதல்
$10.110

#110
பெயர் பெறும் முனிவர் எவர்க்கும் எண் இரண்டு ஆம் பேர் உபசாரமும் வழங்கி
உயர்வு அற உயர்ந்த வேள்வியின் உயர்ந்தோன் உயர் குல பாவையும் தானும்
மயர்வு அறு ஞான வடிவமாய் நின்ற மாயனை மனனுற வணங்கி
அயர்வு அறு கங்கை_மகன் பதம் பணிவுற்று அறன் மகன் வினவினன் அம்மா

மேல்
$10.111

#111
பரிதியும் மதியும் வன்னியும் முதலாம் பல் வகை குலத்தும் உற்பவித்த
நரபதி குழாத்தில் யாவரே பெறுவார் நவிலும் முற்பூசை மற்று என்ன
கருதிய வசுக்கள் எண்மரில் ஒருவன் கங்கையின் திருமகன் தெய்வ
சுருதி மா மகம் செய் புனிதனை நோக்கி தொல் முனிவரையும் நோக்கி

மேல்
*வீடுமன் முனிவரைக் கேட்க, வியாதன்,
*’கண்ணனே முதற்பூசைக்கு உரியான்’ எனல்
$10.112

#112
ஆர்-கொலோ அக்ர பூசனைக்கு உரியார் அரசரில் அந்தணீர் உரை-மின்
பார் எலாம் தம்தம் குடை நிழல் புரக்கும் பார்த்திவர் யாரையும் உணர்வீர்
தார் உலாம் மார்பீர் என்றலும் வியாதன் தருமன் மா மதலையை நோக்கி
காரின் மா மேனி கரிய செம் திகிரி கண்ணனுக்கு உதவு என கதித்தான்

மேல்
*முனிவன் உரையை வேந்தர்கள், ‘நன்று!’ என்ன,
*சிசுபாலன் சினந்து கண்ணனைப் பழித்து உரைத்தல்
$10.113

#113
என்றபோது அந்த வேத்தவை இருந்தோர் யாவரும் இருந்துழி இருந்து
நன்று நான்மறையோர் சிகாமணி உரைத்த நவிர் அறு நல் உரை என்றார்
சென்ற போர்-தோறும் வென்றியே புனையும் சேதிப்பதி சிசுபாலன்
கன்றினான் இதயம் கருகினான் வதனம் கனல் என சிவந்தனன் கண்ணும்

மேல்
$10.114

#114
பூபாலர் அவையத்து முற்பூசை பெறுவார் புறங்கானில் வாழ்
கோபாலரோ என்று உருத்து அங்கு அதிர்த்து கொதித்து ஓதினான்
காபாலி முனியாத வெம் காமன் நிகரான கவின் எய்தி ஏழ்
தீ பால் அடங்காத புகழ் வீர கயம் அன்ன சிசுபாலனே

மேல்
$10.115

#115
சூரன் குலத்தோர் குபேரன் குலத்தோர் சுடர் பாவக
பேரன் குலத்தோர்கள் முதலோர் இருந்தார்கள் பெயர் பெற்ற பேர்
வீரம்-கொலோ வாகு சாரம்-கொலோ செல்வ மிச்சம்-கொலோ
பூர் அம்பு ராசி புவிக்கு என்றும் முதுவோர்கள் பொதுவோர்-கொலோ

மேல்
$10.116

#116
பராசர முனிவன் மதலை ஆம்படியே பகர்ந்தனை பழுது இலா மாற்றம்
இராச மண்டலத்தின் மரபினால் வலியால் ஏற்றமும் தோற்றமும் உடையோன்
சுராசுரர் வியக்கும் கஞ்சனை மலைவான் சூரன் மா மகன் வயிற்று உதித்தான்
தராதல மிசையே பிறந்து இவன் கற்றது எத்தனை இந்திரசாலம்

மேல்
$10.117

#117
சொற்றவா நன்று சுகன் திரு தாதை சூதிகை தோன்றிய பொழுதே
பெற்ற தாய்-தானும் பிதாவும் முன் வணங்க பேசலா உரை எலாம் பேசி
கற்ற மாயையினால் கன்னி அங்கு இருப்ப கார் இருள் காளிந்தி நீந்தி
அற்றை நாள் அண்டர் ஆனவர்க்கு எல்லாம் அரசனுக்கு அரு மகவு ஆனான்

மேல்
$10.118

#118
ஈன்ற தாய் வடிவம் கொண்டு உளம் உருகி இணை முலை தடத்து அணைத்து அமுதம்
போன்ற பால் கொடுப்ப பொழி முலை பாலோ பூதனை உயிர்-கொலோ நுகர்ந்தான்
சான்ற பேர் உரலால் உறி-தொறும் எட்டா தயிருடன் நறு நெய் பால் அருந்தி
ஆன்ற தாய் கண்டு வடத்தினின் பிணிப்ப அணி உரலுடன் இருந்து அழுதான்

மேல்
$10.119

#119
பாடினான் மறுகு பெரு நகை விளைப்ப பாவையர் மனை-தொறும் வெண்ணெய்க்கு
ஆடினான் அவர்கள் முகம்-தொறும் எச்சில் ஆக்கினான் கன்று முன் ஓட
ஓடினான் ஆவின் பேர் இளம் கன்றை உயிருடன் ஒரு தனி விளவில்
சாடினான் அரவின் முதுகையும் புள்ளின் தாலுவோடு அலகையும் பிளந்தான்

மேல்
$10.120

#120
பின்னிய குஞ்சி கோவலர் பயந்த பேதையர் பலரையும் களிந்த
கன்னியின் மருங்கும் ஓரையின் மருங்கும் கலை எலாம் நாணிட கவர்ந்தே
முன்னிய இன்ப செருக்கிலே மயக்கி மூரி வில் காமனும் ஆனான்
அன்னியன் அல்லன் மற்று இவன் பெருமை அரசரில் ஆர் அறியாதார்

மேல்
$10.121

#121
அண்டர்க்கு எல்லாம் அரசு ஆன ஆகண்டலனுக்கு அண்டர் இனிது
உண்டற்கு அமைத்த பால் அடிசில் உண்டான் ஒரு நாள் ஒரு தானே
கொண்டல் கல்மாரியை முன்னம் கோவர்த்தனமே குடையாக
சண்டப்ரசண்ட வேகமுடன் தடுத்தான் ஏறு படுத்தானே

மேல்
$10.122

#122
பம்பி பரந்த புல் மேயும் பசுவின் கன்றும் கோபாலர்
தம் புத்திரரும் அம்புயத்தோன் தன் மாயையினால் ஒளித்திடும் நாள்
எம் புத்திரரும் எம் கோவின் இளம் கன்றினமும் என தெளிய
வம்பின் புரிந்த மாயை இவன் அல்லால் யாவர் வல்லாரே

மேல்
$10.123

#123
அதிர பொரும் போர் அஞ்சினனோ அஞ்சாமை-கொலோ தெரியாது
மதுரை பதியும் தன் கிளையும் வாழ்வும் துறந்து வாரிதி-வாய்
எதிர் ஒப்பிலாத துவாரகை என்று இயற்பேர் படைத்த மா நகரில்
முதிர பொரும் போர் தம்முனுடன் இருந்தான் பல் நாள் முரண் அறுத்தே

மேல்
$10.124

#124
கஞ்சன் எனும் மாமனொடு காளை அமர் செய்தான்
வஞ்சனையினால் அமரும் எத்தனை மலைந்தான்
தஞ்சம் எனவே மருவு தமரில் ஒருதானே
மிஞ்சி விரகால் உரிய மேதினி புரந்தான்

மேல்
$10.125

#125
அன்னையும் தாதை-தானும் அரும் சிறை அகத்து வைக
முன் இரு மூவர் முன்னோர்-தங்களை முருக்குவித்தான்
பின் ஒரு தமையன்-தன்னை பெற்ற தாய் இருவர் என்று என்று
இ நிலம் சொல்ல வைத்தான் இவனை வேறு யாவர் ஒப்பார்

மேல்
$10.126

#126
என்றுகொண்டு எண்ணி நாவுக்கு இசைந்தன உரைகள் எல்லாம்
ஒன்றின் ஒன்று உச்சமாக உயர்ச்சியும் தாழ்வும் தோன்ற
கன்றிய மனத்தினோடும் கட்டுரைசெய்தான் மன்றல்
தென்றல் அம் சோலை சூழும் சேதி நாடு உடைய கோவே

மேல்
*கண்ணன் சினத்துடன் தேரில் ஏறி, சிசுபாலனைப் போருக்கு அழைத்தல்
$10.127

#127
திண்ணிய நெஞ்சினனான சிசுபாலன் தன் நெஞ்சில் தீங்கு தோன்ற
எண்ணிய மன் பேர் அவையின் இயம்பிய புன்சொற்கள் எலாம் எண்ணிஎண்ணி
புண்ணியர் வந்து இனிது இறைஞ்சும் பூம் கழலோன் வேறு ஒன்றும் புகலான் ஆகி
பண்ணிய தன் புரவி நெடும் பரு மணி தேர் மேற்கொண்டான் பரிதிபோல்வான்

மேல்
$10.128

#128
எ நாட்டில் அவனிபரும் ஈண்டிய இ தொல் அவையின் இசைத்த சேதி
நல் நாட்டுக்கு அதிபதியாம் நரபால நின் மாற்றம் நன்று நன்று
கல் நாட்டும் படியாக இருவோரும் பொருது அறிதும் கடிது ஏகு என்று
தன் நாட்டம் மிக சிவந்தான் கரிய வடிவினில் புனைந்த தண் துழாயோன்

மேல்
*நகர்ப்புறத்தில் கண்ணனும் சிசுபாலனும் தத்தம்
*சேனைகளுடன் எதிர்ந்து பொருதல்
$10.129

#129
சேதி குல நரபதியும் செரு புரிதற்கு அஞ்சுவனோ தேரில் ஆனான்
மோதி வலம்புரி ஊத முகில் இனங்கள் முழங்குவ போல் முரசம் ஆர்ப்ப
வேதியரோடு அவை இருந்த வேந்தர் எலாம் அதிசயிப்ப விமானம்-தோறும்
சோதி முடி அமரர் வர நகர் புறத்தில் அமர் புரிய தொடங்கினாரே

மேல்
$10.130

#130
ஆதி வரு கதி பரியும் அணி வயிர திண் தேரும் அனிலம் என்ன
மோதி வரு கட களிறும் காலாளும் பொறாது உரகர் முடிகள் சோர
யாதவனாம் நரபதியும் இரும் கிளையும் பெரும் கிளையோடு எதிர் இலாத
சேதி குல நரபதியும் செய்த அமர் சுராசுரரில் செய்தார் உண்டோ

மேல்
$10.131

#131
யானை மேல் வரு நிருபரும் திறல் யானை மேல் வரு நிருபரும்
சோனை மா முகில் ஏழுமே நிகர் என்ன அம்பு தொடுத்தலின்
தானை ஆறும் நிறைந்து பல் அணி ஆகி மிஞ்சிய சதுர் வித
சேனை யாவையும் மெய் சிவந்தன சிந்தை மா மலர் கருகவே

மேல்
$10.132

#132
ஓர் இரண்டு வரூதினிக்குளும் உயர் தடம் கிரி ஒப்பவே
ஈர் இரண்டு விதத்தினாலும் இயம்பல் உற்றன எண்ணில் பல்
தேர் இரண்டு அணி உருளினோடு உருள் சென்று முட்டின தீ இடி
கார் இரண்டு எதிர் மலையுமாறு என அண்ட பித்தி கலங்கவே

மேல்
$10.133

#133
சிங்கம் ஒன்றுடன் ஒன்று சீறு செருக்கு எனும்படி சேனை-வாய்
வங்கர் கொங்கணர் துளுவர் ஆரியர் மகதர் ஒட்டியர் மாளவர்
கங்கர் கொங்கர் தெலுங்கர் சீனர் கலிங்கர் சிங்களர் கௌசலர்
அங்கர் சோனகர் ஆன வீரர் அதிர்ந்து தங்களின் அமர் செய்தார்

மேல்
$10.134

#134
வெருவரும்படி கம்பு கொம்பு விதம்கொள் மா முரசு ஆதியா
இருவர்-தம் படைகளினும் ஊழி எழுந்த கால் என அதிர்தலால்
மருவி எண் திசை முகமும் நிற்பன மத்த வாரண கன்னமும்
திரு விரும்பு புயத்து வானவர் செவிகளும் செவிடு ஆனவே

மேல்
$10.135

#135
புடை பட கிளையாகி வந்து எதிர் பூ துரந்தரர் யாவரும்
தொடை பட பரிவுறு மனத்தொடு தொந்த யுத்தம் உடற்றினார்
குடை எடுத்தனர் இருவரும் பெறு கொடி எடுத்தனர் கொற்ற வெம்
படை எடுத்தனர் மா மறை பசுபாலனும் சிசுபாலனும்

மேல்
$10.136

#136
வேலினால் வடி வாளினால் வரி வில்லினால் உரைபெற்ற வெம்
கோலினால் இருவரும் முனைந்து இரு குன்றம் ஒத்தன தேரினார்
மாலினால் வரும் மத்த யானைகள் மலைவது ஒத்து மதித்த போர்
நூலினால் வழு அற மலைந்தனர் நுண்மை யாவினும் நுண்ணியார்

மேல்
$10.137

#137
வெம் சினம் முடுக ஒருவருக்கொருவர் வெல்லலும் தோற்றலும் இன்றி
வஞ்சினம் உரைசெய்து உள்ளமும் மெய்யும் வாகு பூதரங்களும் பூரித்து
எஞ்சினர்-தமை போல் இளைத்த பின் இனி வான் ஏற்றுதல் கடன் என கருதி
கஞ்சனை முனிந்தோன் இவன் முடி தலை மேல் கதிர் மணி திகிரி ஏவினனே

மேல்
*சிசுபாலன் மடிய, அவன் ஆவி சோதி வடிவாய்க் கண்ணன்
*திருவடி அடைந்தமை கண்டு, அனைவரும் வியத்தல்
$10.138

#138
ஏவிய திகிரி வீரரை துறக்கம் ஏற விட்டிடும் இரவியை போல்
மேவிய பகையாம் மைத்துனன் முடியை விளங்கு கோளகை உற வீசி
ஆவிகள் அனைத்தும் நிறைந்து ஒளி சிறந்த அச்சுதன் அலைகொள் பாற்கடலில்
தீவிய அமுதம் அமரருக்கு அளித்தோன் திரு கரம் சென்று சேர்ந்ததுவே

மேல்
$10.139

#139
சேதி மன்னவன்-தன் முடியினை நெடியோன் திகிரி சென்று அரிந்திட ஒரு பொன்
சோதி மற்று அவன்-தன் உடலின்-நின்று எழுந்து சுடரையும் பிளந்துபோய் மீண்டு
மாதிரம் அனைத்தும் ஒளியுற விளக்கி மண் அளந்தருள் பதம் அடைய
வேதியர் முதலோர் யாவரும் வேள்வி பேர் அவை வேந்தரும் கண்டார்

மேல்
$10.140

#140
ஈது ஒரு புதுமை இருந்தவா என்பார் இந்திரசாலமோ என்பார்
மாது ஒரு பாகன் அல்லது இ கண்ணன் மதி குலத்தவன் அலன் என்பார்
கோது ஒரு வடிவாம் புன்மொழி கிளைஞர் கூறினும் பொறுப்பரோ என்பார்
காது ஒரு குழையோன் இளவலை தேர் மேல் கண்டு தம் கண் இணை களிப்பார்

மேல்
*வியாத முனிவன் சிசுபாலனின் முற்பிறப்பு
*வரலாற்றைக் கூற, வீடுமன் முதலியோர் கேட்டல்
$10.141

#141
அதிசயித்து இவ்வாறு இருந்துழி இருந்தோர் அனைவரும் ஆழியான்-தன்னை
துதி செய தருமன் சுதன் முதல் எவரும் தொழுது எதிர் வந்து வந்து இறைஞ்ச
விதி என பொருத வெம் களத்திடை அ வியாத மா முனி எடுத்துரைப்ப
மதியுடை கடவுள் வீடுமன் முதலாம் மன்னவர் யாவரும் கேட்டார்

மேல்
$10.142

#142
ஐ வகை வடிவாய் எங்குமாய் நின்ற அச்சுதன் அமலன் ஆனந்தன்
செய் ஒளி திகழும் பங்கய கண்ணன் திருமகள் கொழுநனை காண
துய்ய செய் தவத்து துருவாச முனிவன் சேறலும் சுடர் கொள் வைகுண்ட
மெய் உறு கோயில் துவார பாலகர் அ வேத பண்டிதன்-தனை விலக்க

மேல்
$10.143

#143
விலங்கிய இருவர்-தம்மையும் அந்த வெம் சின முனிவரன் வெகுண்டு
துலங்கிய கோயில் துவாரம் விட்டு அவனி தோன்று-மின் போய் என சபித்தான்
அலங்கல் அம் துளவ மௌலியான் அது கேட்டு அந்தணன்-தனை எதிர்கொண்டு
கலங்கிய துவாரபாலர் நின் சாபம் கடப்பது எ காலமோ என்றான்

மேல்
$10.144

#144
என்றலும் முனிவன் பரிந்து இவர் எழு கால் இன்புறும் அன்பராய் வருதல்
அன்றி மும்மடங்கு பகைவராய் வருதல் அல்லது இங்கு உன் பதம் அணுகார்
மன்றல் அம் துளப மாலையாய் என்ன மலர்_மகள் மகிழ்நனும் அவரை
கன்றிய மறையோன் சாபம் நீர் கடக்கும் கருத்து மற்று யாது-கொல் என்றான்

மேல்
$10.145

#145
மற்று அவர் இறைவன் மலர் அடி வணங்கி வான் பிறப்பு ஏழ் உற மாட்டேம்
உற்று முப்பவமும் உனக்கு வெம் பகையாய் உற்பவித்து உன் பதம் உறுவேம்
வெற்றிகொள் முதிர் போர் நேமியாய் என்றார் விமலனும் கொடிய வெம் சாபம்
அற்றிடும்வகை அ வரம் அவர்க்கு அளித்தான் அசுரராய் அவரும் வந்து உதித்தார்

மேல்
$10.146

#146
இரணியன் இரணியாக்கன் என்று உரைக்கும் இயற்பெயர் இருவரும் எய்தி
முரணிய கொடுமை புரிந்து மூஉலகும் மொய்ம்புடன் கவர்ந்திடு நாளில்
அரணியின் அழல் போல் நரஅரி உருவாய் அச்சுதன் தூணில் அங்குரித்து
தரணியின் உகிரால் பிளந்து முன் உகத்தில் தன் பகை செகுத்தனன் பின்னும்

மேல்
$10.147

#147
அரக்கர்-தம் குலத்துக்கு அதிபதி ஆகி ஆண்டு போய் மீண்டும் அங்குரித்து
தருக்குடன் அவர்கள் இருவரும் முறையால் தம்பியும் தமையனும் ஆனார்
சிர குவையுடனே புய வரை நிரையும் சிந்த அ சிந்துவினிடையே
சர குவை சொரிந்தான் அமலன் அ உகத்து தசரதன்-தன் வயிற்று உதித்தே

மேல்
$10.148

#148
இந்த நல் உகத்தில் இறைவனுக்கு அன்னோர் இருவரும் கிளைஞராய் எய்தி
வந்தனர் வஞ்ச கஞ்ச மாமனும் இ மைத்துனன்-தானுமாய் மன்னோ
சிந்தையில் உணர்வீர் என்று கொண்டு உரைத்தான் சித்து அசித்து உணர்ந்தருள் முனியும்
அந்த மன் அவையில் இருந்துளோர் எல்லாம் அமலனை துதித்து அதிசயித்தார்

*வீடுமன் முதலியோர் கண்ணனைத் துதித்து வணங்குதல்

#149
வீடுமன் விதுரன் துரோணனே முதலாம் விரகு இலா உணர்வுடை வேந்தர்
நாடினர் மனத்தில் புளகம் உற்று உடலம் நயனம் நீர் மல்க நா குழறி
பாடினர் புகழ்ந்து பரவினர் பரவி பைம் துழாய் கமழ் மலர் பாதம்
சூடினர் சுருதிக்கு எட்ட ஒணாது ஒளிரும் சுடர் மணி துய்ய சோதியையே

*கண்ணன் சொற்படி, தருமன் எல்லோருக்கும் சிறப்புச் செய்தல்

#150
அப்பொழுது அமலன் அரும் சினம் ஒழிந்து ஆங்கு அருளுடை அறத்தின் மைந்தனை பார்த்து
இப்பொழுது அரசர் ஆனவர்க்கு எல்லாம் இரும் சிறப்பு உதவுக என்று இசைப்ப
முப்பொழுது உணரும் முனிவரன் பணியால் முறைமுறை பூசனை புரிந்தான்
மைப்பொழுது ஒளி கூர் வெண் நிலவு உமிழும் மதி குலத்து உதித்தருள் மன்னன்

*முனிவர்களும் கண்ணன் முதலியோரும் தத்தம் பதிக்கு மீளுதல்

#151
அரு மறை முறையால் அரசனை முனிவர் அனைவரும் ஆசி சொற்றருளி
தரு நிரை பயிலும் தம்தம விபினம் சார்ந்தனர் தகவுடன் மீள
கரு முகில் அனைய மேனி அம் கருணை கண்ணனும் கிளையுடன் துவரை
திரு நகர் அடைந்தான் சென்று வன் திறல் கூர் சேதிப பெரும் பகை செகுத்தே

#152
அராவ வெம் கொடியோன் ஆதியா உள்ள அரசரும் தம் நகர் அடைந்தார்
விராடனும் யாகசேனனும் முதலாம் வேந்தரும் தம் பதி புகுந்தார்
சராசன தட கை சல்லியன் முதலோர் கிளையுடன் தம் புரம் சார்ந்தார்
பராவ அரும் முதன்மை பாண்டவர் கடல் பார் பண்புற திருத்தி ஆண்டிருந்தார்

*தருமன் கொடைச் சிறப்பும் புகழும்

#153
முன் குலத்தவர்க்கும் முனி குலத்தவர்க்கும் மும்மத கை முக களிற்று
மன் குலத்தவர்க்கும் வான் குலத்தவர்க்கும் வரம்பு இலாவகை கலை தெரியும்
நன் குலத்தவர்க்கும் பொருள் எலாம் நல்கி நாள்-தொறும் புகழ் மிக வளர்வான்
தன் குல கதிர் போல் தேய்ந்து ஒளி சிறந்தான் தண்ணளி தருமராசனுமே

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ கீதா சாம்யமும் ஸ்ரீ திருவாய் மொழியின் ஏற்றமும்-ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்—சூரணை-189-190-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம்

February 27, 2022

சூரணை-189-

இனி மேல் இப் பிரபந்த பிரதிபாத்ய அர்த்தங்களை விஸ்த்ரேண பிரதி பாதிப்பதாக திரு உள்ளம் பற்றி ,
அதில் பிரதமத்திலே சாஷாத்க்ருத பகவத் தத்வரான இவர் -சம்சாரிகளுக்கு உஜ்ஜீவன அர்த்தம்
உபதேசம் பண்ணின இப் பிரபந்தம் –பிரதி பாத்ய அர்த்த சாம்யத்தாலே -பகவத் ப்ரணீத –
கீதோ உபநிஷத் -சமமாகச் சொல்லப் படும் என்கிறார் -மேல் –
(மேலே ஸ்ரீ கீதா சாம்யமும் இதன் ஏற்றமும் அருளிச் செய்கிறார் -மேல் ஐந்து ஸூத்ரங்களால்
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற அருளினான் அவ்வருமறையின் பொருள் அருளினான் ஸ்ரீ கீதாச்சார்யர்
அவர் அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
திருக்குருகூர் ஞானப்பிரான் சந்நிதியும் பிரதானம் -)

மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை
நின்மலமாக வைத்தவர்
ஞானப் பிரானை ஞானத்து வைமின் என்ற இது
தத்வ விவேக
நித்யத்வாநித்யத்வ
நியந்த்ருத்வ
சௌலப்ய
சாம்ய
அஹங்கார இந்திரிய தோஷ பல
மன பிராதான்ய
கரண நியமன
ஸூஹ்ருதி பேத
தேவாஸூர விபாக
விபூதி யோக
விஸ்வரூப தர்சன
சாங்க பக்தி பிரபத்தி த்வை வித்யாதிகளாலே
அன்றோதிய கீதா சமம் என்னும் ..

அதாவது
மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை —
எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் –முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை–திருவாய் -1-5-2-என்றும் –
எல்லையில் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கர்மங்களும் செய் –திருவாய் -3-10-8- -என்றும் சொல்லுகிறபடி
சர்வ காரணமாய் –அபரிசேத்யமான சங்கல்ப ரூப ஞானத்தை உடையவனாய் –
சூழ்ந்த அதனில் பெரிய சுடர் ஞான இன்பம் –திருவாய் -10-10-10-–என்கிறபடியே
பிரகிருதி புருஷ தத்வங்கள் இரண்டும் தன்னுள்ளே ஆகும் படி வியாபித்து –
தான் அபரிசேத்யமாய் – உஜ்ஜ்வலமாய் -ஞான ஆனந்த லஷணமாய் இருக்கிற –
ஸ்வரூபத்தை உடைய சர்வேஸ்வரனை –

நின்மலமாக வைத்தவர் –
எனது ஆவி உள்ளே நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து -திருவாய் -4-7-7-என்று
பரிபூர்ண ஞான ஸ்வரூபனான உன்னை என் நெஞ்சுக்குள்ளே விசத தமாக அனுபவித்து –
என்னும் படி சாஷாத் கரித்த இவ் ஆழ்வார் –.

ஞானப் பிரானை ஞானத்து வைம்மின் என்ற இது —
இரும் கற்பகம் சேர் வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா வர்க்கும்
எரி திரை வையம் முற்றும் ஏனத்து உருவாய் இடந்த –ஞானப் பிரானை
அல்லால் இல்லை நான் கண்ட நல்லது -திருவிருத்தம் -99-என்று
பிரளய ஆர்ணவ மக்னையான பூமியை -மகா வராஹமாக -உத்தரித்த -ஞான சக்திகளையும் –
ஸ்வாமித்வ பிராப்தியும் உடையவனாய் -ஸ்லோக த்வய முகத்தாலே சரமோ உபாயத்தை
வெளியிடுகையாலே -ஞான உபகாரனுமாய் இருப்பவனை – ஒழிய -சர்வருக்கும்
உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பது ஒன்றும் இல்லை –இது நான் அறுதி இட்ட விலஷணமான அர்த்தம் –
என்று பிரதம பிரபந்தத்தில் அருளிச் செய்த விஷயத்தை உபாயகமாகப் பற்றச் சொல்லுகிற அளவில் –

திரு குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைமின் உம்மை உய்யக் கொண்டு போகுறிலே–திருவாய் -4-10-9-என்று
உஜ்ஜீவிக்க வேண்டி இருந்தீர்களாகில் –அவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசத்தை
உங்கள் மானஸ ஜ்ஞானத்துக்கு விஷயம் ஆக்குங்கோள் என்று சம்சாரிகளை
குறித்து உபதேசித்த இப் பிரபந்தம் –

தர்ம சம்ஸ்தாபன அர்த்தமாக அவதரித்து அருளின ஸ்ரீ கிருஷ்ணன் –
அஸ்தான ஸ்நேஹ காருண்யா தர்ம அதர்ம தியா குலம்
பார்த்தம் பிரபன்ன முத்திஸ்ய சாஸ்திர அவதரணம் க்ருதம்–ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –5–என்கிறபடியே –
அஸ்தானத்தே உண்டான – பந்து ஸ்நேஹ காருண்யங்களாலும் – ஸ்வ தர்மத்தில் அதர்ம புத்தியாலும் கலங்கி –
நயோத்ஸ்யாமி–ஸ்ரீ கீதை -2-6- -என்று யுத்த அநிவ்ருத்தனாய் –
யச்ஸ்ரேயஸ் ஸ்யான் நிச்சிதம ப்ரூஹி தன்மே சிஷ்யத் தேஹம்
சாதிமாம் த்வம் பிரபன்னம்–ஸ்ரீ கீதை –2 7-என்ற அர்ஜுனனைத் தெளிவித்து
யுத்தே பிரவர்த்தன் ஆக்குகைக்கு வியாஜமாக –
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய–திருவாய் -4-8-6- -என்கிறபடியே
லோகத்துக்கு உஜ்ஜீவன சாஸ்த்ரமாம் படி எல்லாப் பொருளும் விரித்த ஸ்ரீ கீதையில் –

1 ,2 ,3 தத்வ விவேக –
பிரதமத்தில் –தேக ஆத்மா அபிமான கார்யமான பந்து சிநேகத்தையும் –
வத பீதியையும் மாற்றுகைக்காக தத்வ ஞானத்தை உபதேசிக்கத் தொடங்கின அளவிலே –
நத்வே வாஹம் ஜாது நாசம் நத்வம் நேமே ஜநாதிபா –
நசைவ நபவிஷ்யாம சர்வே வயமத பரம் –ஸ்ரீ கீதை -2-12–என்று
சர்வேஸ்வரனான தன்னோபாதி சகல ஆத்மாக்களும் நித்யர் என்று அருளிச் செய்கிற வழியிலே –
ஜீவ பர பேதம்–ஜீவர்களுக்கு பரஸ்பர பேதம் -ஆகிய இவற்றை தர்சிப்பித்து –

தேஹி நோஸ்மின் யதா தேக கௌமாரம் யௌவனம் ஜரா
ததா தேஹாந்தர ப்ராப்தி தீரஸ் தத்ர நமுஹ்யதி -2-13-– இத்யாதியாலே –
பிரகிருதி ஆத்மா விவேகத்தையும் சொல்லுகையாலே தத்வங்களினுடைய விவேகத்தையும் —

4 -நித்யத்வ அநித்யத்வ —
அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தாஸ் சரீரிண
அநாசின அப்ரமேயஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத -2-18-என்றும்
நஜாயதே ம்ரியதேவா கதாசித் நாயம் பூத்வா பவிதா வாநபூயஸ்
அஜோ நித்யஸ் சாஸ்வதோயம் புராணோ நஹன்யதே ஹன்யமானே சரீரே –2-20 -என்றும் ,
வாசாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாயா நவாணி க்ருஹணாதி நரோபராணி
ததா சரீராணி விஹாய ஜீர்ணான் யன்யாமி சம்யாதி நவாணி தேஹி –2-22-இத்யாதிகளாலே
ஆத்ம நித்யத்வ தேக அநித்யங்களையும்-

5 -நியந்த்ருத்வ –
பூமிராபோ நலோ வாயு கம்மனோ புத்தி ரேவச –
அஹங்கார இதீயம் மே பின்னா பிரகிருதி ரஷ்டதா–7-4-
அபரே யமித ஸ்த்வன்யாம் பிரகிருதி வித்தி மே பராம் –
ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத் -7-5-என்கிற படியே
சேதன அசேதன சரீரியாய் –
சர்வஸ்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதி ஜ்ஞாந மபோஹநஞ்ச -15-15-என்றும் –
ஈச்வரஸ் சர்வ பூதானாம் ஹ்ருத்தேசே ர்ஜூன திஷ்டதி
ப்ராமயன் சர்வ பூதானி யந்த்ராரூடானி மாயயா-18-61- -என்றும்
சொல்லுகிறபடி சர்வ ஜன ஹ்ருதிஸ்த்தனாய் -நின்று -சர்வ பிரவ்ருத்தி நிவ்ருத்திகளையும்
பண்ணுவிக்கை யாகிற ஈஸ்வரனுடைய நியந்தருத்வத்தையும் —

6 -சௌலப்ய –
தஸ்யாஹம் ஸூலப பார்த்த நித்ய யுக்தஸ்ய யோகின-8-11- –என்றும்
பரித்ராணாய சாதூனாம் ,விநாசாய துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே-4-8- -என்றும்
பக்திமான்கள் நிமித்தவாகவும் அவதார பிரயுக்தமாகவும் உண்டான அவன் சௌலப்யத்வத்தையும் ..

7 -சாம்ய –
சமோஹம் சர்வ பூதேஷு நமே த்வேஷ் யோஸ்தி நப்ரிய–9 -29-என்று
அவனுடைய ஆஸ்ரத்யநீயத்வே சர்வ சாம்யத்தையும்

8 -அஹங்கார தோஷ –
அஹங்கார விமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே-3-27 -என்று அஹங்கார தோஷத்தையும் –

9 -இந்திரிய பல–
யததோஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித
இந்திரியாணி ப்ரமாதீனி ஹரந்தி பிரசபம் மன -2-60-என்று
இந்திரிய பிராபல்யத்தையும்-

10 -மன ப்ராதன்ய –
சஞ்சலம் ஹி மன க்ருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோ ரிவ ஸூ துஷ்கரம்-6-34-என்றும் –
அசம்சயம் மஹாபாஹோ மனோ துர் நிக்ரஹம் சலம்
அப்யாசேனது கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே-6-35- -என்றும்
மற்ற இந்திரியங்களில் வைத்துக் கொண்டு மனசின் உடைய பிரதான்யத்தையும் –

11 -கரண நியமன –
தானி சர்வாணி சம்யம்ய யுக்த ஆசீத மத்பர
வசே ஹி யச்யேந்த்ரியாணி தஸ்ய பிரஜ்ஞா ப்ரதிஷ்டிதா -2-61- -என்றும் –
சர்வத்வாராணி சம்யம்ய மனோ ஹ்ருதி நிருத்த்யச – 8-12- என்றும்
கரண நியமனத்தையும் —

12 -ஸூஹ்ருதி பேத –
சதுர்விதா பஜந்தே மாம் ஜனாஸ் ஸூக்ருதி நோர்ஜுன
ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூராரர்தாத்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப-7-16- -என்று
ஸூஹ்ருதிகளுடைய பேதத்தையும் –

13 -தேவாசுர விபாக –
த்வௌ பூத சர்கவ் லோகேஸ்மின் தைவ ஆஸூர ஏவச-16-6-என்றும்
தைவீ சம்பத் விமோஷாய நிபாந்தயா ஸூரி மதா 16-4–என்று
தேவாசுர விபாகத்தையும்

14 -விபூதி யோக –
ஹந்ததே கத யிஷ்யாமி விபூதி ராத மநஸ் ஸூப பிராதான்யதஸ் குரு ஸ்ரேஷ்ட
நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே –10-9-என்றும்
ஆதித்யா நாமஹம் விஷ்ணு ஜ்யோதிஷாம்
ரவிரம்சுமான்-10-21- -இத்யாதியால் விபூதி யோகத்தையும் –

15 -விஸ்வரூப தர்சன –
பஸ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹ சர்வாம் ஸ்ததா பூத விசேஷ சங்கான்
ப்ரஹ்மாணம் ஈசம் கமலா சனஸ்தம் ருஷீம்ஸ் ச சர்வான் உரகாம்ச தீப்தான் 11-15-இத்யாதியாலே
விஸ்வரூப தர்சனத்தையும் –

16 -சாங்க பக்தி –
மன்மனா பவ மத் பக்தோ மத் யாஜி மாம் நமஸ்குரு
மாமே வைஷ்யசி யுக்த்வைவ மாத்மானம் மத்பராயணா -9-24–என்று
அங்க சஹிதையான பக்தியையும்-
(உபாய – சாதன -உபாசனை -பக்தி இது–என் விஷயமாக ஆறு தடவை சொல்கிறான் -)

17 -18 -பிரபத்தி த்வை இத்யாதி –
தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்தயா
மாமே வயே பிரபத்யந்தே மாயா மேதாம் தரந்திதே -7-14-என்றும்
தமேவ சரணம் கச்ச சர்வ பாவேன பாரத–18-62- -என்று
அங்கத்வேனவும்
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூ ச -18-66- –
ஸ்வதந்த்ரவேனும் –
இரண்டு படியாகவும் பிரபத்து உபதேசம் பண்ணினால் போலேயும்-

(ரஹஸ்ய த்ரயத்தில் தான் ஸ்வ தந்த்ர பிரபத்தி -கீதா பாஷ்யம் வேதாந்த அர்த்தம் சொல்ல வந்ததால் –
அங்க பிரபத்தி தான் இரண்டுமே )

இவரும்
1-2 -3–ஜீவ பர பேதமும்/ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் –
பிரகிருதி -ஆத்மா விவேகம்-ஆகிற தத்வ விவேகத்தையும் —
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -8-8-2-என்கிற இடத்தில் சப்தமாகவும் -ஆர்த்தமாகவும்
ஜீவ பர பேதமும்,ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் ,
( அடியேன் உத்தம புருஷன் இதனால் ஜீவ பரஸ்பர பேதம் -அடிமைத்தனம் அறிந்த அறியாத என்றும் பேதமும் உண்டே )
சென்று சென்று பரம் பரமாய்-8-8-5- -என்று
ஆத்மாவுக்கு தேக விலஷணத்தைச் சொல்லுகையாலே பிரகிருதி -ஆத்மா விவேகம்
ஆகிற தத்வ விவேகத்தையும் —

4 — நித்யத்வ -அநித்யத்வங்களையும்
மின்னின் நிலையிலே மன் உயிர் ஆக்கைகள்-1-2-2- -என்றும் –
உள்ளதும் இல்லதும் -1-2-8–என்றும்
சித் அசித் தத்வங்களின் நித்யத்வ -அநித்யத்வங்களையும்-

5–நியந்தருத்வத்தையும்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்து-1-1-7- -என்றும் –
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்து -1-1-19–என்றும்
சேதன அசேதன சரீரியாய்
நின்றனர்-1-1-6- -இத்யாதிப் படியே
அவற்றின் சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் ஸ்வ ஆதீனம் ஆகும் படி இருக்கிறவனுடைய
நியந்தருத்வத்தையும்-

6 -அவனுடைய சௌலப்யத்தையும்
பத்துடை அடியவர்க்கு எளியவன் -1-3-1–என்றும் –
பல பிறப்பாய் எளிவரும் இயல்வினன் -1-3-2- -என்றும்
ஆசா லேசம் உடையாரை பற்றவும் அவதார பிரயுக்தமாகவும் உண்டான
அவனுடைய சௌலப்யத்தையும்-

7 -சாம்யத்தையும்
பற்றிலன் ஈசன் முற்றவும் நின்றனன் –1-2-6–என்று
அவனுடைய ஆஸ்ரணியத்வே சாம்யத்தையும்-
(போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும் மாற்றே மாற்றல் இலையே நினக்கு
மாற்றோரும் இலர் கேளிரும் இலர் எனும் வேற்றுமை இன்றது போற்றுநர்ப் பெறினே–பரிபாடல் -4-51/54-)

8 -அஹங்கார தோஷத்தையும்
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -1-2-3–என்று
சம்சார ஹேது அதுவேயாக சொல்லுகையாலே -அஹங்கார தோஷத்தையும்-

9 -இந்திரிய பலத்தையும்
விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம் புலன்-7-1-6- -என்று
இந்திரிய பலத்தையும்-

10 -மனோ பிரதான்யத்தையும்
மனத்தை வலித்து -5-1-4-என்று
மனோ நியமத்தின் சொல்லுகையாலே மனோ பிரதான்யத்தையும்-

11 -கரண நியமனத்தையும்
உள்ளம் உரை செயல் உள்ள விம் மூன்றையும் உள்ளிக் கெடுத்து -1-2-8–என்று
கரண நியமனத்தையும்-( மத் பர அவன் இறை உள்ளில் ஒடுங்கு இவர் )

12 -ஸூஹ்ருதி பேதத்தையும் –
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்-4-1-1– -என்கையாலே
ஆர்த்தனான பிரஷ்டை ஐஸ்வர்ய காமன்
இறுகல் இறப்பு-4-1-10– என்னும் -என்கையாலே
ஜிஜ்ஞாசுவான கேவலன் –
குணம் கொள் நிறை புகழ் மன்னர் -4-1-8–இத்யாதியாலே
அர்த்தார்த்தியான அபூர்வ ஐஸ்வர்ய காமன்
திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து உய்ம்மின்-4-1-1- -என்கையாலே
ஜ்ஞாநியாகிற பகவத் சரணார்த்தி -என்கிற ஸூஹ்ருதி பேதத்தையும் –

13 -தேவ அசுர விபாகத்தையும்
அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் –5-2-5–என்றும் ,
நண்ணா அசுரர் –நல்ல அமரர் -10-7-5–என்று
தேவ அசுர விபாகத்தையும்-

14 -விபூதி யோகத்தையும்
புகழு நல் ஒருவன் -3-4-1–என்றும் –
நல் குரவும்-6-3-1- -என்றும் –
மாயா வாமனன்-7-8-1- -என்றும் –
இவைகளில் விபூதி யோகத்தையும் –

15 -விஸ்வரூப தர்சனத்தையும் –
நீராய் நிலனாய் தீயாய் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனாய் -6-9-1–என்று
விஸ்வரூப தர்சனத்தையும் –

16 -சாங்க பக்தியையும்
வணக்குடை தவ நெறி வழி நின்று புற நெறிகளை கட்டு உணக்குமின் பசையற-1-3-5-என்றும் –
மேவித் தொழுது உய்மினீர்கள் வேதப் புனித விருக்கை நாவில் கொண்டு அச்சுதன்
தன்னை ஞான விதி பிழையாமை-5-2-9-என்றும் –
மாலை நண்ணி –காலை மாலை –கமல மலர் இட்டு-தொழுது எழுமினோ -9-10-1–என்றும் -சாங்க பக்தியையும் –

17 –18 –இரண்டு வகையான பிரபத்தியும் உபதேசிக்கையாலே
அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து -1-3-5–என்று
அவன் அருளி செய்த பிரபத்தி ரூப ஞானத்தை சகாயமாக கொண்டு அத்தை அறிந்து என்கையாலே –
பக்தி அங்கத் வேனவும் –
மற்று ஓன்று இல்லை-9-1-7–என்றும் –
சரணமாகும் -9-10-5-என்கிற வற்றால்
ஸ்வதந்திர வேனேவும் –
இரண்டு வகையான பிரபத்தியும் உபதேசிக்கையாலே-

ஏதத் பிரதி பாத்யர்த்த சாம்யத்தைக் கொண்டு
மாயோன் அன்று ஓதிய வாக்கு–நான்முகன் –71 -என்கிற
ஸ்ரீ கீதை உடன் ஒக்க சொல்லப் படும் என்கை ..

பிரபத்தி த்வை இத்யாதிகளாலே -என்கிற இடத்தில்-ஆதி -சப்தத்தாலே –
19-அவதார ரஹச்ய வைபவம்
ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாமேதி சோர்ஜுனா–4-9-என்றார் போலே
இவை பத்தும் வல்லார் அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அம் சிறை-1-3-11- -என்று
சொன்ன அவதார ரஹச்ய வைபவம் –

20-ஸ்வ ஆராதன்-
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி –
ததஹம் பக்த்வுபஹ்ருத மஸ்நாமி பிரயதாத்மன -9-26– என்றார் போலே –
பிரிவகை இன்றி நன்னீர் தூயப் புரிவதுவும் புகை பூ-1-6-1–என்று சொன்ன
அவன் ஸ்வ ஆராதத்தை முதலாக கீழ் அனுக்தங்களையும் –

21-கர்ம யோகம் தொடங்கி ஆச்சார்ய அபிமானம் பர்யந்தம் உபதேசம்
தேக ஆத்மா அபிமானிகளை க்ரமத்திலே பிராப்ய சாதனங்களின் எல்லையில் மூட்டுகையும் –
சாத்யோ உபாயங்களில் பரந்து சித்தோ உபாயத்தை மறைத்து உபதேசிக்கும் இடத்தில்
வைபவம் தோற்ற வெளி இடுகையுமான வற்றையும் நினைக்கிறது –

———————————-

சூரணை -190-

ஆக ஸ்ரீ கீதையோடு திரு வாய் மொழிக்கு உண்டான சாம்யம் சொல்லிற்று கீழ் .
அதில் இதுக்கு உண்டான ஆதிக்யத்தை பல ஹேதுக்களாலும் சொல்கிறது மேல் …
பிரதமம் வக்த்ரு வைலஷண்யத்தால் வந்த ஏற்றம் சொல்கிறது இதில் ..
(பிரபந்த உதய ஹேது வைலக்ஷண்யம் அடுத்ததில் -191-
உபக்ரம உபஸம்ஹார ப்ரக்ரியை வைலக்ஷண்யம் -192-
ப்ரதிபாத்ய அர்த்த வைலக்ஷண்யம் -193 —-கீழே-189- ப்ரதிபாத்ய அர்த்த சாம்யம் பார்த்தோம்
ப்ராமாண்ய உதகர்ஷ வைலக்ஷண்யம் -194- )

அது தத்வ உபதேசம்
இது தத்வ தர்சி வசனம்-

அதாவது
அந்த ஸ்ரீ கீதை பிரபந்தம் –
தத்வம் ஜிஜ்ஞா சமா நாநாம் ஹேதுபிஸ் சர்வதோமுகை
தத்வமேகோ மஹாயோகீ ஹரிர் நாராயண பர –பாரதம் -சாந்தி பர்வம் -347-83-என்கிறபடியே –
தத்வ பூதனான சர்வேஸ்வரன் தானே உபதேசித்தது ..(ஞானம் இச்சா ஜிஜ்ஞாஸூ )

இப் பிரபந்தம் –
தத் வித்தி ப்ரனிபாதேன பரி பிரச் நேன சேவையா
உபதேஷ்யந்தி தே ஞானம் ஞானிநஸ் தத்வ தர்சின –4-34-என்று
ஜ்ஞான உபதேசத்துக்கு ஆப்த தமராக அவன் தான் அருளிச் செய்த
தத்வ தர்சிகளில் தலைவரான ஆழ்வார் வசனம் என்கை ..

இத்தால் சொல்லிற்று ஆய்த்து ..
அஹம் க்ருதஸ்னஸ்ய ஜகத பிரபவ பிரளயஸ் ததா
மத்த பரதரம் நாந்யத் கிஞ்சி தஸ்தி தனஞ்சய –7-6-என்றும்
மா மேகம் சரணம் வ்ரஜ –18-66-என்றும்
இப்படி ஸ்வ வைபவத்தை ஸ்யமேவ அருளிச் செய்கையாலே ஸ்வ பிரசம்சை போலே
இருக்கையாலே -அது மந்த மதிகளுக்கு விஸ்வசநீயம் ஆகாது ..
(ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பி ஸ்ரீ வைஷ்ணவ நம்பியான ஐதிக்யம் )

சுத்த சத்வ ஜ்ஞானரான இவர்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட
நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே -2-2-1-என்றும் –
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா -கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை -5-2-7–என்றும் –
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்
திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்மினோ -9-1-10–என்று
இப்படி மத்யஸ்தமாக நின்று தத் வைபவத்தை உபதேசிக்கையாலே ,
இது மந்த மதிகளுக்கும் விஸ்வ நீயமாய் இருக்கும் என்கிற ஆதிக்யம் –

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பிராட்டி புருஷகாரத்வம் -ஸ்ரீ பிராட்டி சரம ஸ்லோகம் –

February 27, 2022

பாபாநாம்வா சுபாநாம்வா வதார்ஹானாம் ப்லவங்கம்
கார்யம் கருணம் ஆர்யேன நகச்சின்னா பராயதி-யுத்த 116-44-

கருணை உடன் செயல் பட்டால் ஆர்யன் என்று சொல்லி –ஜாதி பிரயுக்த கர்மம் அவர்களது என்றும் –
பிலவங்கம் உன் ஜாதிக்கு மன்னிக்காதது ஸ்வரூபம் என்றும் சொல்லி மன்றாடினாள் –
திருவடியை பொறுப்பிக்கும் அவள் தன் சொல் வழி வரும் அவனை பொறுப்பிக்க
சொல்ல வேண்டா இறே–முமுஷுப்படி -என்று திருவடி விஷயமாகவும் புருஷி கரித்தமையை
அருளி செய்தார் இறே இவர் தானே —

மித்ரம் ஔ பயிகம் கர்த்தும் ராம ஸ்தானம் பரீப்சதா
வதம் தா நிச்சதா கோரம் த்வயா அசௌ புருஷர்ஷப -சுந்த -21-20-

ராவணன் பிராட்டி முன் நின்று ஜல்பிக்க புக்கவாறே -பிரஜை நலிந்தால் தாய் சீறாள்- அன்றோ
தாயான முறையாலே அவன் கேட்டினைக் கண்டு ஹிதம் செய்து அருளுகிறாள்–
சரணாகத வத்சலன் -சரணாகதன் சொல்லாமல் மித்ரன் -என்றாவது போக ஹிதம் செய்து அருளுகிறாள்–
அவர் திருவடிகளிலே சரணம் புகு என்றால் அவன் தாழ்வாக நினைத்து இசையான் என்பதாலே -தோழமை கொள் என்கிறாள் –
அன்றிக்கே அவர் -தோழைமை -என்ற அளவாலே -என்றார் ஆதலின் -இவள் -தோழமை கொள் -என்கிறாள் என்னுதல்
அவ்வருகு போனாலும் பரம சாம்யா பத்தியை தான் அவன் கொடுப்பது-

எனக்கு பகைவராய் இருப்பாரோடு உறவு செய்ய வேண்டுகிறது என் என்னுமே
ஸ்த்தானம் பரீப்சதா -கெடுவாய் வழி பரிப்பாருக்கும் தரையிலே கால் பாவி நின்று கொள்ள வேணுமே –
ஆதலால் உன் குடி இருப்பை ஆசைப்பட்டாயாகில் இத்தனையும் செய்ய வேண்டும்–
எனக்கு ஒரு குடி இருப்பு வேண்டுமோ
ஆகாசத்தில் சஞ்சரிக்கிறவனாய் அன்றோ இருப்பது நான் என்பது–ராவணனுக்கு கருத்தாக அருளிச் செய்கிறாள்
வதம் சா நிச்சதா –கோரம்
அவர் அம்புகள் ஆகாசத்தில் நடவாவோ -என்கிறாள்
கோரம் -சிங்க விளக்கை எரித்து கொல்லாதே நற்கொலையாக கொல்லும் போதும்–அவரைப் பற்ற வேண்டும் காண் –
த்வயா
பல சொல்லி என் உனக்கு அவர் வேண்டும்
அசௌ
அவர்படி உனக்கு தோற்றுகிறது இல்லையா
உரு வெளிப்பாட்டிலே முன்னிலை இவளுக்கு–அச்சத்தாலே முன்னிலையாக தோற்றும் அவனுக்கு
தீரக் கழிய அபராதம் செய்து நிற்கும் என்னைக் கை கொள்ளுவாரோ -என்ன
புருஷ ரிஷப –
நீ செய்தவற்றை ஒன்றாக நினைத்து இருப்பவர் அல்ல –புருஷோத்தமன் காண் -என்கிறாள்-

————-

தேவிமார் ஆவார் திருமகள் -திவு கிரீடா விஜிகீஷிர் -தாது
அவர்கள் புருவம் நெறித்த இடத்தில் உனக்கு கார்யம் செய்யும்படி–வல்லபைகளாய் இருக்கிற
பெரிய பிராட்டியாரும் ஆண்டாளாரும்-என்றது
குற்றம் செய்யாதவன் யாவன் -என்று பொறைக்கு உவாத்தாய் இருக்கும் ஒருத்தி-
பொறுப்பது எதனை – குற்றம் தான் உண்டோ என்று
அந்த பொறை விளையும் பூமியாய் இருக்கும் ஒருத்தி என்ற படி-
ஆக -அவர்கள் இங்கே இருக்க எனக்கு இழக்க வேண்டுகிறது என்

———-

பிராட்டி சரம ஸ்லோகம் -யுத்த காண்டம் -116-45
பாபானாம் வா சுபானாம் வா
உம் அபிப்ராயம் பாபம் -எம் அபிப்ராயம் சுபம்
கார்யம் கருணம் ஆர்யேன
வதகார்ஹயம்-கொல்லத்தக்க
ந கச்சின் ந அபராத்யதி

கண்டேன் கண்களால்
அஸி தேக்ஷிணா –
கண்ணே ஸர்வ அவயங்களும் சமம்
லகு தரா ராமஸ்ய கோஷ்ட்டி

—————–

ஸ்ரீ யதே -அனைவராலும் ஆஸ்ரயிக்கப் படுகிறாள்

ஸ்ரயதே ச பரம் பரம் –தான் நாராயணனை ஆஸ்ரயிக்கிறாள்
அமுதனினில் வரும் பெண்ணமுது தானே சென்று திரு மார்பிலே அமர்ந்தாளே
தேவர்கள் கூட்டம் பார்த்துக் கொண்டே இருக்கச் செய்தேயும் -வெட்கப்படாமல் -பெண்கள் நடுவில் வெட்கப்பட வேண்டாமே
அவன் ஒருவனே புருஷோத்தமன்
மணி வல்லி பேச்சு வந்தேறி அல்லவே

விஷ்ணு பத்னி -ஜெகன் மாதா இரண்டையும் காட்டிய படி

ஸ்ரீ -ஸ்ருனோதி -நமது விண்ணப்பங்களைக் கேட்க்கிறாள்

ஸ்ரீ ஸ்ராவயதி -அவனையும் கேட்ப்பிக்கிறாள் -அவனிடம் உசித உக்திகளைச் சொல்லிக் கேட்ப்பிக்கிறாள்

ஸ்ரீ -ஸ்ருணாதி-தோஷங்களைப் போக்குவித்து அருளுகிறாள் -தாய் அன்றோ
ராக்ஷஸிகளை தண்டிக்க விரும்பிய -திருவடியை
பிலவங்கமே -சீதா ராமர் கோஷ்ட்டி அறியாமல் பேசுகிறாயே -என்றாளே

ஸ்ரீ நாதி ச குணை ஜகத் -குண பரிபூர்ணை
அநசூயை ஸீதா பிராட்டி சம்வாதம் அறிவோமே
த்ரிஜடை இருப்பு அறிவோமே
வடக்கு வாசல் வழியாக செருப்பையும் பையில் வைத்து தெற்கு வாசல் வழியாக வந்து
கடைகளில் பொருள்கள் வாங்கு மீண்டு வரும் பொழுது வாசலிலே இருந்து வெறும் அஞ்சலிக்கே
ஐஸ்வர்யம் அக்ஷரம் பரமம் பதம் அளித்தும் மேலும் கொடுக்க ஒன்றுமே இல்லையே என்று
வெட்கம் அடைந்து தலை குனிந்து -பட்டர்

———–

ஸ்ரீ வசன பூஷணம்

இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது –
மகா பாரத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது –-சூரணை-5-

இவை இரண்டாலும் புருஷகார வைபவமும் –உபாய வைபவமும் -சொல்லிற்று ஆய்த்து –சூரணை-6-

புருஷகாரம் ஆம் போது கிருபையும் பாரதந்த்ர்யமும் அநந்யார்ஹத்வமும் வேணும்-சூரணை -7-

பிராட்டி முற்பட பிரிந்தது தன்னுடைய கிருபையை வெளி இடுகைக்காக –
நடுவில் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளி இடுகைக்காக –
அநந்தரம் பிரிந்தது அனந்யார்ஹத்வத்தை வெளி இடுகைக்காக –சூரணை-8-

சம்ச்லேஷ விஸ்லேஷங்கள் இரண்டிலும் புருஷகாரத்வம் தோற்றும் –சூரணை-9-

ஸம்ஸ்லேஷ தசையில் ஈஸ்வரனைத் திருத்தும்
விஸ்லேஷ தசையில் சேதனனைத் திருத்தும் –சூரணை-10-

இருவரையும் திருத்துவதும் உபதேசத்தாலே –சூரணை-11-

உபதேசத்தாலே இருவருடையவும் கர்ம பாரதந்த்ர்யம் குலையும் –சூரணை-12-

உபதேசத்தாலே மீளாத போது சேதனனை அருளாலே திருத்தும் –
ஈஸ்வரனை அழகாலே திருத்தும் –சூரணை -13-

—————

ஸ்ரீ வசன பூஷணம்–வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள் –

இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது –
மகா பாரத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது –-சூரணை-5-

பிராட்டி என்னாதே-சிறை இருந்தவள் -என்று அருளி செய்தது –
அவளுடைய தய அதிசயத்தை பிரகாசிப்பைக்காக –
தேவ தேவ திவ்ய மகிஷியான தன் பெருமையும் –
சிறை இருப்பின் தண்மையையும் பாராதே -தேவ ஸ்திரீகள் சிறையை விடுவிக்கைக்காக தான்
சிறை இருந்தது தயா பரவசை யாய் இறே -பிரஜை கிணற்றில் விழுந்தால் ஒக்க குதித்து எடுக்கும் மாதாவை போலே –
இச் சேதனர் விழுந்த சம்சாரத்திலே தானும் ஒக்க வந்து பிறந்து -இவர்கள் பட்டதை தானும் பட்டு -ரஷிக்கையாலே –
நிருபாதிக மாத்ருவ சம்பந்தத்தால் வந்த நிரதிசய வாத்சல்யத்துக்கு -பிரகாசகம் இறே இது –

இந்த குணாதிக்யத்தை வெளி இடுகைகாக இறே பரமாச்சார்யரான
நம் ஆழ்வார் தனி சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள்-என்று -திரு வாய் மொழி -4 -8 -5 -அருளி செய்தது –
அவருடைய திவ்ய சூக்தி இறே இவர் இப்படி
அருளி செய்கைக்கு மூலம் –சிறை இருந்ததாலே விளப்புற்றாளே-

சிறை இருப்பு தண்மை ஆவது -கர்ம நிமந்தம் ஆகிலே இறே –
ஆஸ்ரிதரான தேவர்கள் உடைய ஸ்த்ரீகள் சிறையை விடுவிக்கைக்காக தன் அனுக்ரகத்தாலே தானே வலிய செய்தது ஆகையாலே –
ஏற்றத்துக்கு உடலாம் இத்தனை இறே -சம்சாரிகளோடு ஒக்க கர்ப வாசம் பண்ணி பிறக்கிற இது –
பல பிறப்பாய் ஒளி வரும் -திரு வாய் மொழி -1 -3 -2-என்னும் படி சர்வேஸ்வரனுக்கு தேஜஸ் கரமாகிறது –
கர்ம நிமந்தம் அன்றிக்கே அனுக்ரக நிபந்தனம் ஆகை இறே –
ஆன பின்பு -இதுவும் அனுக்ரக நிபந்தனம் ஆகையாலே -இவளுக்கு தேஜஸ் கரமாம் இத்தனை –

இத்தை ராவண பலாத்காரத்தாலே வந்ததாக நினைப்பார் இவள் சக்தி விசேஷம் அறியாத ஷூத்ரர் இறே –
சீதோ பவ -என்றவள் நஷ்டோபவ -என்ன மாட்டாள் அன்றே –
ஆகையால் இது தன் அனுக்ரகத்தாலே பர ரஷண அர்த்தமாக செய்த செயலாகையாலே இதுவே இவளுடைய தயாதி
குணங்களுக்கு பிரகாசம் என்று திரு உள்ளம் பற்றி ஆய்த்து இவள் -சிறை இருந்தவள் -என்று அருளி செய்தது –

ஸ்ரீ ராமாயணம் எல்லாம் இவள் ஏற்றம் சொல்லுகிறது என்னும் இடம் –
காவ்யம் ராமாயணம் க்ருத்ச்னம் சீதாயாஸ் சரிதம் மஹத் -என்று ஸ்ரீ வால்மீகி பகவான் தானே வாயோலை இட்டு வைத்தான் இறே –
ஸ்ரீ மத் ராமாயண மபி பரம் ப்ரானிதி தவச் சரித்ரே -என்று அருளி செய்தார் இறே பட்டர் –
உம்முடைய சரித்ரத்தாலே பிராண தாரணம் -என்கிறார் -பிரகர்ஷமாக உஜ்ஜீவிக்கிறது –

———–

இவை இரண்டாலும் புருஷகார வைபவமும் –உபாய வைபவமும் -சொல்லிற்று ஆய்த்து –சூரணை-6-

அபராத பூயிஷ்டரான சேதனருக்கு ஆஸ்ரயணீயை யாம் அளவில் –
அகில ஜகன் மாதா வான சம்பத்தாலும் –த்வம் மாதா சர்வ லோகாநாம் – –
க்ருபாதிகளாலும் –நிருபாதிக நித்ய -பிரியம் ஏக – தண்ட கரத்வ ஸ்வா தந்தர்ய கந்தமே இல்லையே பிராட்டிக்கு –
அவனுக்கு அபிபூதமாக மறைக்கப்பட்டு இருக்குமே —
நடுவொரு புருஷகாரம் வேண்டாதபடி -தண்ணீரை ஆற்ற தண்ணீர் வேண்டாமே –வந்து ஆஸ்ரயிகலாம்படியாய்-
அபராதங்களை பார்த்து சீறி –ஷிபாமி -ந ஷமாமி -என்னும் ஈஸ்வர ஹ்ருதயத்தை திருத்தி

பெருமாளை திருத்தி என்னாமல் ஈஸ்வரனை என்றது -இவனுடைய பெருமையைக் காட்டி
அவனையும் நியமிக்கும் இவளது பெருமையைக் காட்ட –
அவர்களை அங்கீகரிப்பிக்கும் புருஷகார பூதை யானவள் வைபவமும்
எல்லாருக்கும் இவளை பற்றி ஸ்வரூப லாபம் -இவளுக்கு அவனைப்பற்றி ஸ்வரூப லாபம்
அங்கீகரித்தால் பின்னை அவள் தானே சித குரைக்கிலும்-என் அடியார் அது செய்யார் -என்று
மறுதலித்து தான் திண்ணியனாய் நின்று ரஷிக்கும்-
என் அடியார் அது செய்யார் -எப்பொழுது இவன் அடியார் ஆனார் -நம் அடியார் என்னாமல் -என் அடியார் -என்பதால்
பிராட்டி மகிழ்ந்து -தன் புருஷகாரம் இல்லாமலும் கைக் கொள்ளுவேன் –என்கிறான் –

இது தன்னை –
மத் ப்ராப்திம் பிரதி ஜன்நூனாம் சம்சாரே பததாமத லஷ்மீ புருஷகாரத்வே நிர்திஷ்டா பரமர்ஷிபி
மமாபிச மதம்ஹ்யதேத் நான்யதா லஷணம் பவேத் –பாஞ்சராத்ரம் -என்றும் –
என்னை அடைய -சம்சாரத்தில் ஆழ்ந்த ஜனங்களுக்கு லஷ்மி புருஷகாரமாக -ரிஷிகள் சொல்வார் –
என் திரு உள்ளமும் அதுவே –

அந்நிய லக்ஷணம் நாஸ்தி –
அஹம் மத் ப்ராப்த் உபாயோவை சாஷாத் லஷ்மீ பதிஸ் ஸ்வயம்
லஷ்மீ புருஷகாரேன வல்லபா ப்ராப்தி யோகி நீ
ஏஹச்யாச்ச விசேஷோயம் நிகமாந்தேஷூ சப்த்யதே -என்றும் –
லஷ்மி பதியான நான் உபாயமாக இருக்கிறேன் -பிரசித்தம் –
நானே உபாயம் -வை சப்தம் -அவளை புருஷகாரமாக இருக்கும் பொருட்டு வைத்துள்ளேன் –
இந்த பாவனைகள் வேதாந்தத்தில் உள்ளதே

அகிஞ்சன்யைக சரணா கேசித் பாக்யாதிகா புன மத்பதாம் போருஹத் வந்தவம் ப்ரபத்யே ப்ரீத மானசா
லஷ்மீம் புருஷகாரேன வ்ருதவந்தோ வரானன மத் ஷாமாம் ப்ராப்ய சேநேச ப்ராப்யம் ப்ராபகம் ஏவ மாம்
லப்த்வா க்ருதர்த்தா ப்ராப்ச்யந்தே மாமே வானன்ய மானசா -என்று
சேனாபதி ஆழ்வானுக்கு பாஞ்சராத்ரத்தில் -ஆகிஞ்சன்யம் பற்றாசாக -திருவடிகளை பற்றி -ப்ரீதியான மனதுடன் –
அவளை புருஷகாரமாக பற்றி –
என்னுடைய க்ஷமையை ஏற்றுக் கொண்டு -பிரப்பயமான என்னை பிராபகமாக கொண்டு –
கருமுகை மாலையை சும்மாடு ஆக்கி –பகவத் சாஸ்த்ரத்திலே தானே அருளி செய்தான் இறே –

பூ மேல் இருப்பாள் வினை தீர்க்கும் என்னும் இடங்களில் -புருஷகாரமாகவே பர்யவசிக்கும் –
உபாயத்வம் த்வனிக்கும் சப்தங்களுக்கு பிரதி நீயத்வ தர்மமே சித்தம் —

இச் சேதனனுக்கு இருவரோடும் சம்பந்தம் உண்டாய் இருக்க ஈஸ்வர சமாஸ்ரயணதுக்கு இவள் புருஷகாரமாக வேண்டுகிறது என் என்னில் –
மாத்ருத்வ பிரயுக்தமான வாத்சல்யாதி ரேகத்தாலும் -அவனை போல காடின்ய மார்த்தவங்கள் -கலந்து இருக்கை-அன்றிக்கே –
கேவல மார்த்தவமே யாய் -பிறர் கண் குழிவு காண மாட்டாதே பிரகிருதி யாகையாலும் —
ஹித புத்தியால் திருத்த தண்டித்தாலும் -இவன் துக்கப்பட்டு கண் கலங்க விட மாட்டாள் இவள் –
விமுகரையும் அபிமுகர் ஆக்குகைக்கு கிருஷி பண்ணும் அவள் ஆகையாலும்
குற்றவாளர்க்கும் கூசாமல் வந்து காலிலே விழலாம் படி இருப்பவளாய்—பும்ச்த்வ பிரயுக்தமான காடின்யத்தோடே பித்ருத்வ
பிரயுக்தமான ஹித பரதையாய் உடையவனாய் –இரண்டும் உண்டே புருஷோத்தமனுக்கு -குற்றங்களை பத்தும் பத்துமாக கணக்கிட்டு
க்ரூர தண்டங்களை பண்ணுகையாலே -குற்றவாளர்க்கு முன் செல்ல குடல் கரிக்கும் படி-அத்யந்த பயங்கரமாய் – இருக்கும்
ஈஸ்வரனை உசித உபாயங்களாலே குற்றங்களைஅடைய மறப்பித்து கூட்டி விடும் அவளாய் இருக்கையாலே
அபராதமே வடிவான இச் சேதனன் அவனை ஆஸ்ரயிக்கும் அளவில் இவள் புருஷகாரமாக வேணும் –
ஆகை இறே அவனை உபாயமாக வரிக்க இழிகிற அளவில் இவளை புருஷகாரமாக முன் இடுகிறது-

———

புருஷகாரம் ஆம் போது கிருபையும் பாரதந்த்ர்யமும் அநந்யார்ஹத்வமும் வேணும்-சூரணை -7-

இம் மூன்று குணத்திலும் வைத்து கொண்டு -கிருபையானது -ஸ்ரிங் சேவாயாம்-என்கிற தாதுவிலே
நிஷ்பந்தமான ஸ்ரீ சப்தத்தில் ஸ்ரீ யதே என்கிற கர்மணி வ்யுத்த பத்தியிலும் –
ஸ்ரியதே ஸ்ரீ –பாரதந்த்ர்யா அனந்யார்ஹத்வங்கள் இரண்டும் –
ஸ்ரீ யதே என்கிற கர்த்தரி வ்யுத்பத்தியிலும் -ஸ்ரேயதே –நித்ய யோக வாசியான மதுப்பிலும் -ஸ்ரீ மத்-சித்தம் இறே –
ஸ்ரீ -நித்ய யோக மத் ப்ரத்யயம் – –அவனை ஆஸ்ரயிக்கிறாள் -பாரதந்தர்யம் அநந்யார்ஹத்வம் -இருப்பதால்
நாம் ஆஸ்ரயிக்கிறோம் -கிருபை இருப்பதால் –

தேவ்யா காருண்யா ரூபாயா -என்று தத் குண சாரத்வத்தாலே காருண்யம் தானாக சொல்லும்படியான
தன்னுடைய பரம கிருபையை பிரகாசிப்பைக்காக —என்கை

தேவ ஸ்திரீகள் சிறையை விடுவிகைக்காக தான் சிறை இருக்கையாலும் -அவ் இருப்பில் தன்னை
அல்லும் பகலும் தர்ஜன பர்ஜநம் பண்ணி அருவி தின்ற க்ரூர ராஷசிகள் -ராவணன் பராஜிதனாகவும்
பெருமாள் விஜயீகளாகவும்-திரிஜடை சொப்பனம் கண்டதாலே பீத பீதைகளாய் நடுங்குகிற தசையில் -சரணாகதி பண்ணாத திசையிலும் –
லகுதரா ராம கோஷ்ட்டி -இதனாலே பரம கிருபை என்றார் —

பவேயம் சரணம் ஹி வ -என்று நீங்கள் நோவு படுகிற சமயத்துக்கு நான் இருந்தேன் -நீங்கள் அஞ்ச வேண்டா என்று –
அபய பிரதானம் பண்ணுகையாலும்-அது உக்தி மாத்ரமாய் போகாமே -ராவண வத அநந்தரம்
தனக்கு சோபனம் சொல்ல வந்த திருவடி அவர்களை சித்ர வதம் பண்ணும்படி காட்டித் தர வேணும் என்ன –
அவனோடே மன்றாடி ராஜ சம்ஸ்ரைய வச்யானாம்-இத்யாதியாலே–சாமான்யமாக சொல்லி – அவர்கள் குற்றத்தை குணமாக
உபபாதித்தும் -மர்ஷயா மீஹா துர்பலா -என்று பிறர் நோவு கண்டு பொறுத்து இருக்க தக்க நெஞ்சுரம்
தனக்கு இல்ல்லாமையை முன்னிட்டும் –
கார்யம் கருண மார்யென ந கச்சின் நா பராத்யதி -என்று
அவனுக்கும் இரங்கி அல்லது நிற்க ஒண்ணாதபடி உபதேசித்தும் –
இப்படி ஒரு நிலை நின்று தான் அடியில் பண்ணின பிரதிக்ஜை அநு குணமாக
ஆர்த்ரா பராதரைகளை ரஷிக்கையாலும்-கையில் உள்ள ஈரமும் காயாத முன்பு -என்றபடி -தன்னுடைய கிருபையை வெளி இட்டாள் இறே-

அனன்யா ராகவேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா -அன்யாஹி மயா சீதா –

————-

பிராட்டி முற்பட பிரிந்தது தன்னுடைய கிருபையை வெளி இடுகைக்காக –
நடுவில் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளி இடுகைக்காக –
அநந்தரம் பிரிந்தது அனந்யார்ஹத்வத்தை வெளி இடுகைக்காக –சூரணை-8-

சம்ச்லேஷ விஸ்லேஷங்கள் இரண்டிலும் புருஷகாரத்வம் தோற்றும் –சூரணை-9-

ராவண வத அநந்தரம் ராஷசிகளை சித்ர வதம் பண்ணுவதாக உத்யுக்தனாய் நிற்கிற
திருவடியை குறித்து -பாபானாம்வா சுபானாம்வா வதார்ஹானாம் ப்லவங்கம
கார்யம் கருண மார்யென ந கச்சித் ந பராத்யதி -என்று அவன்-திருவடி – இரங்கத் தக்க
வார்த்தைகளை சொல்லி அவர்கள் அபராதங்களை பொறுப்பிகையாலும்-இங்கு புருஷகாரம் பண்ணுவது திருவடி இடம் -ரஷிக்க-
இது தேறுமோ என்னில்- சேதனர் அநிஷ்டம் போக்குவதே –

உபய தசையிலும்-இவள் புருஷகாரத்வம் தோற்றா நின்றது இறே திருவடி ராஷசிகளை அபராத அநு குணம்
தண்டிக்கும் படி காட்டித் தர வேணும் என்ற அளவில்
பிராட்டி அவனுடன் மன்றாடி ரஷித்த இத்தனை அன்றோ –
மாதர் மைதிலி ராஷசீஸ் த்வயி ததை வார்த்த்ர அபராதாஸ் த்வயா ரஷந்த்யா
பவனாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா காகம் தஞ்ச விபீஷணம்
சரணமித் யுக்தி ஷமவ் ரஷதாஸ் சா நஸ் சந்திர மகா கசஸ் சூகயது ஷாந்தீ ச்தவாகச்மிகீ -என்று
பவனாத்மஜன் நிமித்தமாக ரஷித்தாள் என்று அன்றோ பட்டரும் அருளி செய்தது –

கருணை உடன் செயல் பட்டால் ஆர்யன் என்று சொல்லி –ஜாதி பிரயுக்த கர்மம் அவர்களது என்றும் –
பிலவங்கம் உன் ஜாதிக்கு மன்னிக்காதது ஸ்வரூபம் என்றும் சொல்லி மன்றாடினாள் –
திருவடியை பொறுப்பிக்கும் அவள் தன் சொல் வழி வரும் அவனை பொறுப்பிக்க
சொல்ல வேண்டா இறே–முமுஷுப்படி -என்று திருவடி விஷயமாகவும் புருஷி கரித்தமையை
அருளி செய்தார் இறே இவர் தானே —

——–

ஸம்ஸ்லேஷ தசையில் ஈஸ்வரனைத் திருத்தும்
விஸ்லேஷ தசையில் சேதனனைத் திருத்தும் –சூரணை-10-

இருவரையும் திருத்துவதும் உபதேசத்தாலே –சூரணை-11-

ஈஸ்வரனை திருத்துவது -இச் சேதனனுடைய குற்றங்களை கணக்கிட்டு நீர் இப்படி தள்ளிக்
கதவடைத்தால் இவனுக்கு வேறு ஒரு புகல் உண்டோ -உமக்கும் இவனுக்கும் உண்டான பந்த
விசேஷத்தை பார்த்தால் -உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -என்கிறபடியே-
என் பிழையே நினைந்து அருளி -ஏவகாரத்தால் மற்றவை எல்லாம் மறந்தீர் —
நாரமும் அயனும் சம்பந்தம் அறியாமல் அந்த நாரங்களுக்குள் உள்ள ஸ்ரீ சொல்ல வேண்டும் படி –
குடிநீர் வழித்தாலும் போகாதது ஓன்று அன்றோ -உபாதி மூலம் வந்த தாஸ்யமானால் கும்ப நீர் உடைத்து அறுக்கலாம் –
ஆத்மசம்பந்தம் இத்தாலும் போகாதே —

ஸ்வம்மான இவனை லபிக்கை ஸ்வாமியான
உம்முடைய பேறாய் அன்றோ இருப்பது -எதிர் சூழல் புக்கு திரிகிற உமக்கு நான் சொல்ல வேணுமோ –
ரக்ஷணா சாபேஷனாய் வந்து இவனை ரஷியாத போது -உம்முடைய சர்வ ரஷகத்வம் விகலம் ஆகாதோ —
நல்கித் தான் காத்து அளிக்கும் நாரணன் —
லோக பார்த்தாராம் -லோகத்துக்குள் நான் இல்லையோ -சீதை கேட்டால் போலே -என்னையும் உளள்-போலே
அநாதிகாலம் நம்முடைய ஆஞ்சாதி லங்கனம் பண்ணி நம்முடைய சீற்றத்துக்கு இலக்காய் போந்த இவனை
அபராத உசித தண்டம் பண்ணாதே -அத்தை பொறுத்து அங்கீகரித்தால் சாஸ்திர மரியாதை குலையாதோ
என்று அன்றோ திரு உள்ளத்தில் ஓடுகிறது -இவனை ரஷியாதே அபராத அநு குணமாக நியமித்தால்
உம்முடைய க்ருபாதி குணங்கள் ஜீவிக்கும்படி என்-அவை ஜீவித்தாவது இவனை ரஷித்தால் அன்றோ –
நியமியாத போது சாஸ்திரம் ஜீவியாது -ரஷியாத போது க்ருபாதிகள் ஜீவியாது -என் செய்வோம் என்ன வேண்டா –
சாஸ்த்ரத்தை விமுகர் விஷயம் ஆக்கி -க்ருபாதிகளை அபிமுகர் விஷயம் ஆக்கினால் இரண்டும் ஜீவிக்கும் –
ஆன பின் இவனை ரஷித்து அருளீர் என்னும் உபதேசத்தாலே —
இவ் உபதேச க்ரமம் இவர் தாம் அருளி செய்த பரந்தபடியிலும் –
ஆச்சான் பிள்ளை அருளி செய்த பரந்த ரஹச்யத்திலும் விஸ்தரேன காணலாம் –

பிதேவ த்வத் பிர யேத் ஜன நி பரிபூர்ணா கஸி ஜனே ஹிதே ஸ்ரோதோ வ்ருத்தையா
பவதிச சுதாசித் கலுஷதீ -கிமேதன் நிர்தோஷ -க இஹா ஜகதீதி த்வமுசிதைரூபாயைர்
விஸ்மார்ய ச்வஜநயசி மாதா ததாசி ந–ஸ்ரீ குண ரத்ன ஸ்லோகம் -என்று
அபராத பரிபூர்ண சேதன விஷயமாக ஹித பரனான சர்வேஸ்வரன் திரு உள்ளம் சீரும் படியையும் –
அத்தசையில் இச்சீற்றத்துக்கு அடி என் எனபது -இவன் தீர கழிய செய்த அபராதம் என்றவன் சொன்னால் –
மணல் சோற்றிலே கல் ஆராய்வார் உண்டோ –
இந்த ஜகத்தில் அபராதம் அற்று இருப்பார் யார் -என்பதே உசித உபாயங்களால் -அபராதங்களை
மறப்பித்து பிராட்டி சேர்த்து அருளும்படியையும் அருளி செய்கையாலே உபதேசத்தாலே
ஈஸ்வரனை திருத்தும் படி ஸங்க்ரஹேன பட்டரும் அருளி செய்தார் இறே-

தம் பிழையும் படைத்த பரப்பும் –அபராத சஹத்வம் பாராமல் – –மறப்பித்த தூது நாலுக்கும் விஷயம் –
அவதார தசையிலும் -பிராண சம்சய மா பன்னம் த்ருஷ்ட்வா சீதாத வாயசம்
த்ராஹி த்ராஹீதி பார்த்தார முவாச தாயாய விபும் -என்று வாசா மகோசரமான மகா அபராதத்தை பண்ணின
காகத்தை தலை அறுப்பதாக விட்ட ப்ரஹ்மாச்த்தரத்துக்கு ஒரு கண் அழிவு கற்ப்பித்து பெருமாள் ரஷித்து
அருளிற்றும்-இவள் உபதேசத்தாலே என்னும் இடம் -பாதம புராணத்திலே சொல்லப் பட்டது இறே –
த்ராஹி த்ராஹி -காப்பாற்ற வேண்டும் -என்பதே உபதேசம் -கிருபையை ரஷித்து அருள வேண்டும் என்றபடி

இனி சேதனனை திருத்துவது –
உன் அபதாரத்தின் கனத்தை பார்த்தால் உனக்கு ஓர் இடத்தில் காலூன்ற இடமில்லை –
ஈச்வரனானவன் நிரந்குச ச்வாதந்த்ரன் ஆகையாலே -அபராதங்களை பத்தும் பத்தாக கணக்கிட்டு
அறுத்து அறுத்து தீர்த்தா நிற்கும் -இவ் அனர்ததத்தை தப்ப வேண்டில் -அவன் திருஅடிகளில் தலை
சாய்க்கை ஒழிய வேறு ஒரு வழி இல்லை -அபராத பரி பூர்ணனான என்னை அவன் அங்கீகரிக்குமோ
தண்டியானோ என்று அஞ்ச வேண்டா -ஆபிமுக்க்ய மாத்ரத்திலே அகில அபராதங்களையும் பொறுக்கைக்கும்-
போக்யமாக கொள்கைக்கும் ஈடான குணங்களாலே–ஷமா வாத்சல்யம் – புஷ்கலன் என்று லோக பிரசித்தனாய் இருப்பான் ஒருவன் –
ஆனபின்பு நீ சுகமே இருக்க வேணும் ஆகில் அவனை ஆஸ்ரயிக்க பார் -என்றும் பரம ஹித உபதேசத்தாலே –
அப்படி எங்கே கண்டோம் என்னில் –அவனும் ஹித காமன் -இவள் பரம ஹிதை-
பாபிஷ்டனாய் வழி கெட நடந்து திரிகிற ராவணனை குறித்து –
1-மித்ரா மவ்பயிகம் கர்த்தும் ராம / -2-ஸ்தானம் பரீப்சதா /-3-வதஞ்ச அநிச்சதா கோரம்
4-த்வயா ஸௌ புருஷர்ஷப–இந்த நாலையும் கீழே விவரித்து அருளுகிறார் –

விதிதஸ் சஹி தர்மஞ்சச் சரணாகத வத்சல
தேன மைத்ரீ பவது தே யதி ஜீவிது மிச்ச்சசி-என்று

1-பெருமாள் உடன் உறவு கொண்டாடுகை காண் உனக்கு பிராப்தம் -உசிதம் –
2-அது செய்ய பார்த்திலை யாகில் வழி யடிப்பார்க்கும் தரையில் கால் பாவி நின்று-வழி அடிக்க வேணுமே –
உனக்கு ஓர் இருப்பிடம் வேண்டி இருந்தாய் ஆகிலும் அவரைப் பற்ற வேணும் –அவர் அல்லாத ஒரு ஸ்தலம் இல்லை காண்
3–எளிமையாக எதிரி காலிலே குனிந்து இவ் இருப்பு இருப்பதில் காட்டில் –
பட்டு போக அமையும் என்று இருந்தாயோ -உன்னை சித்ரவதம் பண்ணாமல் நல் கொலையாக கொல்லும்
போதுமவரை பற்ற வேணும் காண்
4–நான் பண்ணின அபதாரத்துக்கு என்னை அவர் கைக் கொள்வாரோ
என்று இருக்க வேண்டா -ஆபிமுக்க்யம் பண்ணினால் முன்பு செய்த அபராதத்தை பார்த்து சீரும்
அந்த புன்மை அவர்பக்கல் இல்லை காண் -அவர் புருஷோத்தமர் காண் -சரணாகதி பரம தர்மம் என்று அறிந்தவராய் –
சரணாகத தோஷம் பாரத வத்சலராக எல்லாரும் அறியும் படி காண் பெருமாள் இருப்பது –
நீ ஜீவிக்க வேண்டும் என்று இச்சித்தாய் ஆகில் அவரோடு உனக்கு உறவு உண்டாக வேணும் என்று
இப்படி அச்சம் உறுத்தி உபதேசித்தாள் இறே —

மைத்ரே– நட்ப்புக்கும் சப்தம் தர்மம் -சரணாகதியை இவனுக்கு தர்மம் -அறிந்தவன்
அவன் திருந்தாது ஒழிந்தது இவளுடைய உபதேச குறை அன்றே –
அவனுடைய பாப பிரசுர்யம் இறே இப்படி உபயரையும் உபதேசத்தாலே என்கையாலே
ஸ்ரூஸ்ரா -என்கிற தாதுவிலே
நிஷ்பன்னமான ஸ்ரீ சப்தத்தில்
ச்ருணோதி ச்ராவயதி என்கிற வ்யுத்பத்திகளில் -வைத்து கொண்டு –
ச்ராவயதி என்கிற வ்யுத்பத்தி அர்த்தம் சொல்லப் பட்டது-

ச்ராவயதி -என்கிறது ஈஸ்வர விஷயமாக
பூர்வர்கள் கிரந்தங்களில் பலவற்றிலும் காணப் பட்டதாகிலும்

அதவா
விமுகா நாமபி பகவத் ஆஸ்ர்யேன உபதேச ஸ்ராவயித் ர்த்வம்
விதிதஸ் சஹி தர்மனஜஸ் சரணாகத வத்சல
தேன மைத்ரீ பவது தே யதி ஜீவிது மிச்சசி
இதி ராவணம் பிரத்யு உபதேசாத் -என்று தத்வ தீபத்திலே சேதன விஷயமாகவும்–கேட்ப்பிக்கிறாள்- வாதி கேசரி அழகிய மணவாள
ஜீயர் அருளி செய்கையாலே இவ் இடத்திலும் சேதன விஷயமாகவும் சொல்லக் குறை இல்லை –

ச்ருணோதி -கேட்க்கிறாள்-
ச்ராவயதி -கேட்க்கும் படி செய்கிறாள்-இருவரையும் –

—-

உபதேசத்தாலே இருவருடையவும் கர்ம பாரதந்த்ர்யம் குலையும் –சூரணை-12-

உபதேசத்தாலே மீளாத போது சேதனனை அருளாலே திருத்தும் –
ஈஸ்வரனை அழகாலே திருத்தும் –சூரணை -13-

ஈஸ்வரனை அழகாலே திருத்துகை யாவது –
ஒம் காண் போ உனக்கு பணி அன்றோ இது -என்று உபதேசத்தை உதறினவாறே
கண்ணைப் புரட்டுதல்-கச்சை நெகிழ்த்துதல்-செய்து தன் அழகாலே அவனை
பிச்சேற்றி தான் சொன்னபடி செய்து அல்லது நிற்க மாட்டாத படி பண்ணி
அங்கீகார உன்முகன் ஆக்குகை-

ஆக -புருஷகாரம் ஆம் போது-7- -என்று தொடங்கி-இவ்வளவாக
புருஷகாரத்வ உபயோகிகளான குண விசேஷங்களையும் –
அவை தன்னை தானே வெளி இட்டபடியையும் –
சம்ச்லேஷ விச்லேஷங்கள் இரண்டிலும் புருஷீகரிக்கையும் –
தத் பிரகார விசேஷங்களையும் –
சொல்லிற்று ஆய்த்து-

—————————

அருள் தரும் அடியார் பால் மெய்யை வைத்துத்
தெருள் தர நின்ற தெய்வ நாயக நின்
அருள் எனும் சீர் ஓர் அரிவை யானது என
இருள் செக வெமக்கோர் இன்னொளி விளக்காய்
மணி வரை யன்ன நின் திரு வுருவில்
அணி அமர் ஆகத்து அலங்கலாய் இலங்கி
நின் படிக்கு எல்லாம் தன் படி ஏற்க
வன்புடன் நின்னோடு வதரித்து அருளி
வேண்டுரை கேட்டு மிண்டவை கேட்பித்து
ஈண்டிய வினைகள் மாண்டிட முயன்று
தன்னடி சேர்ந்த தமர் உனை அணுக
நின்னுடன் சேர்ந்து நிற்கும் நின் திருவே –-மும்மணிக்கோவை -1-

ஸ்ரீ தேசிகன் தெய்வ நாயகனைச் சரணம் அடையத் திரு உள்ளம் கொண்டு முதலில் செங்கமல வல்லித்தாயார் இடம்
செய்யும் புருஷகார ப்ரபத்தியை முதல் பாசுரத்தால் வெளியிடுகிறார் -ஸ்ரீ சப்தார்த்தம் அருளுகிறார் –

அருள் தரும் அடியார் பால் மெய்யை வைத்துத் தெருள் தர நின்ற தெய்வ நாயக நின்

1-அருள் எனும் சீர் ஓர் அரிவை யானது என
2-இருள் செக வெமக்கோர் இன்னொளி விளக்காய்
ஓர்–ஒப்பற்ற விலக்ஷணமான -நந்தா விளக்கு -தானே தனக்கு விளங்கும் நமக்கும் காட்டும் –
இன்–மங்களம் -மாசு படியாத- குளிர்ந்த- அனுகூலமான விளக்கு – ஒளி விளக்கு -அதிக தேஜஸ்
உண்மை காட்டும் -நாலா பக்கமும் – தன்னையும் காட்டும் விளக்கு
ஆபீ முக்கியம் மாத்திரத்தாலே –அவனை காட்டுபவள்–தீபம் பின் பக்கம் இருளாக காட்டும் -அது போலே இல்லையே
அவனுக்கே விளக்காக இருந்து விளங்குபவள் –விளக்கின் ஒளி -இவள் -தீர்க்க சமஸ்
கார் இருள் -போக்கும் -தீப பிரகாசர் -மிதுனம் –மஹத்தியா பிரபை

3-மணி வரை யன்ன நின் திரு வுருவில் -அணி அமர் ஆகத்து அலங்கலாய் இலங்கி
குன்றில் இட்ட விளக்கு -குடத்தில் வைத்த விளக்கு இல்லை – மேல் இருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனனே —
வரை -மலை என்றும் –பர்யந்தம் அதுவரை இதுவரை
கடலின் அடி வரை மந்தரம் வரை சென்றது -அது தாங்குமவரை கூர்ம மூர்த்தியை நாம் வணங்குவோம் –
பகவான் திரு உருவம் ரத்ன பர்வதம் –பத்து ஒற்றுமைகள் உண்டே –

தோஷம் இல்லா-அகில ஹேய ப்ரத்ய நீக
பெருமை நிலைப்பாடு -கௌரவம் கொடுக்கும் -தன்னை தொழுவார்க்கு நின் வடிவு அழகு மறவாதார் பிறவாதார் –
ஸ்திரம் -நிலை நிற்குமே – போக்யம்-மனத்துக்கு இனியான்-அஸ்ப்ருஷ்ட சிந்தா பதம் –
பிரகாசகம் -இயல்பாகவே -அணையா -ரத்ன தீப பிரகாசம் –அறிவு மலர வைக்கும் – மஹார்க்கம் விலையனான –
மங்களம் -பாராட்டுக்கு உரியவை – ஸூ ரக்ஷம்–எளிதில் ரஷிக்கலாமே –
ஸூ க்ரம்-முந்தானையில் முடிந்து ஆளலாம்-மனசில் கிரகிக்க எளியவன்
இந்த பத்து சாம்யம்

மணி வரை –அன்ன நின் திரு உருவம் –
பச்சை மா மலை போல் மேனி
திகழ் பசும் சோதி –மரகத்தைக் குன்றம் –கண் வளருவது போல் -திருவாசிரியம் –
மணி வரையும் மா முகிலும் –போல் இருந்த மெய்யானை மெய்ய மலையானை –கை தூக்கி தொழா கை அல்ல கண்டோமே –
என்னுள் திகழும் மணிக் குன்றம் ஓத்தே நின்று -திருவாய் மொழி – அவனே திரு மலை -ஸ்வரூபமும் ரூபமும் –
ரத்ன பர்வத –யதா ரத்னம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம் —கிருஷ்ணன் இடம் மனோ ரதங்கள் சக்திக்கு ஏற்க கொள்கிறான்
ரத்ன பர்வத்தில் ஏறி சக்திக்கு தக்க கொள்வது போலே -இங்கே ஸ்வரூபம் உவமை –
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை -திரு நறையூர் நம்பி –நின் -மணி வரை -நீ மணி வரை -உன்னிடம் திரு –
மணியும் வரையும் போல -மணிவரை என்றுமாம்-
மணியும் வரையும் அன்ன என்றுமாம் –நீள் வரை போல் மெய்யனார் -நம் பாணனார் –
விட்டிலங்கு –மலையே திரு உடம்பு -திரு வாய் மொழியிலும் —
கருவரை போல் நின்றானை கண்ணபுரத்தம்மானை -பெரிய திருமொழி
நீரார் மழை முகிலே நீள் வரையே ஒக்கும் -தனித் தனியாகவும்
நீல மரதகம் மழை முகில் – வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே தெய்வ நாயகனை
இமயம் மேய எழில் மணித் திரளை – -குடந்தை மேய குரு மணித் திரளை -முத்துஒளி மரகதமே –
கலியன் உரை தேசிகன் கருத்தில் குடி கொண்டு இருக்குமே -பை விரியும் –திருச்சேறை
கூற்றினை குரு மா மணிக் குன்றினை -படு கடலுள் மணி வரை போல் மாயவன் -மை விரியும் -திரு மேனி -கருமை மிக்கு
படுக்கையில் பை விரியும் -பணங்கள்- பள்ளி கொண்ட பரமன் –

மணி வரை யன்ன நின் திரு வுருவில் -அணி அமர் ஆகத்து அலங்கலாய் இலங்கி
திரு மார்பில் -மலை போன்ற மார்பில் –ஸ்வரூபம் -விக்ரகம் -மார்பு -மூன்றுக்கும் –
மணி வரை யன்ன -நின் – மணி வரை யன்ன -நின் திரு உருவில் –
மணி வரை யன்ன நின் திரு வுருவில் -அணி அமர் ஆகத்து -என்றபடி –
பண்புகள் பொது -மூன்றுக்கும் –மலைக்கு –
1-ஓங்கி நிற்கும் / 2-சிலா மாயம் -/ 3-திண்மை உறுதி /4- செல்ல அறியாது துர்லபம் /5-தபஸ்விகள் ரிஷிகள் நாடுவார்கள் /
6-ஷமா ப்ருத் -மலை-பூமியை தாங்கிக் கொண்டு இருக்கும்-பொறுமை – / 7- எல்லா உலகும் தாங்கு/
8-கயவர் கவர்ந்து போக முடியாதே -/9-இயற்க்கை எழில் /10-நதிகள் -குரு பரம்பரை ஆரம்பம் -பத்தும் உண்டே
உயரம் -உன்னதி உத்துங்கதி -நித்ய உன்னதர்கள் –வான மா மலையே அடியேன் தொழ வந்து அருளே –ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம் –
ப்ராம்சூ-நெடிய உயர்ந்தவன் -வான் அளாவியவன் –பெற்றி-ஸ்வபாவம் –நெடியானே வேங்கடவா –நின் கோயிலின் வாசல் –

4-நின் படிக்கு எல்லாம் தன் படி ஏற்க -வன்புடன் நின்னோடு வதரித்து அருளி

5-வேண்டுரை கேட்டு
மீண்டவை கேட்பித்து –
ஈண்டிய வினைகள் மாண்டிட முயன்று
தன்னடி சேர்ந்த தமர் உனை அணுக –
நின்னுடன் சேர்ந்து நிற்கும் நின் திருவே

————————————————

ரமாவின் பெருமை சொல்ல வந்ததே ராமாயணம் -சீதாயா சரிதம்

கந்தம் கமழும் குழலீ -அவனுக்கும் வாசம் கொடுக்கும்
உந்து மத கயிற்றில் ஆறு அர்த்தங்களும் உண்டே

———–

அநுபவ ரசிகர்களான ஆழ்வார்கள் எம்பெருமானை யானையாகவே பல இடங்களில் பேசுவார்கள்.
யானைக்கும் எம்பெருமானுக்கும் பல விதங்களில் ஒத்த கருத்து நிலவும்

1.யானையை எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அபூர்வ வஸ்து போலவே இருந்து பரமாநந்தம் பயக்கும்.
எம்பெருமானும் எப்பொழுதும் நாள், திங்கள், ஆண்டு ஊழி யூழி தோறும்
*அப்பொழுதைக்கு
அப்பொழுது*
என்னாராவமுதம் என்னும்படி யிருப்பான்.
2.யானையின் மீது ஏற வேண்டியவன் யானையின் காலைப் பற்றியே ஏறவேண்டும்.
எம்பெருமானிடம் சென்று சேர வேண்டியவர்களும் அவனது திருவடியைப் பற்றியே சேர வேண்டும்.
3.யானை தன்னை கட்ட தானே கயிற்றை எடுத்துக் கொடுக்கும். எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் (திருச்சந்த விருத்தம்) என்கிறபடியே,
எம்பெருமானை கட்டுப் படுத்தும் பக்தியாகிற கயிற்றை அவன் தந்தருள்வான்.
4. யானையை நீராட்டினாலும் அடுத்த ஷணத்திலேயே அழுக்கோடு சேரும் எம்பெருமான் சுத்த ஸத்த்வ மயனாய் பரம பவித்ரனாய்
இருக்கச் செய்தேயும் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குமுடைய நம் போல்வாரோடு
சேர திருவுள்ள மாயிருப்பான் வாத்ஸல்யத்தாலே.
5.யானையைப் பிடிக்க வேண்டில் பெண் யானையைக் கொண்டே பிடிக்க வேண்டும்
அதன் போன்றே பிராட்டியின் புருஷாகாரமின்றி எம்பிரான் வசப்படான் .
6.யானை பாகனுடைய அனுமதியின்றி தன்னிடம் வருபவர்களை தள்ளி விடும்.
எம்பெருமானும் வேதம் வல்லார் துணைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து என்கிறபடியே
பாகவதர்களை முன்னிட்டு புகாதாரை அங்கீகரித்தருளான்.
7. யானையின் மொழி யானைப் பாகனுக்குத் தெரியும், எம்பெருமானின் மொழி திருக்கச்சி நம்பிகள் போல்வார்க்கே தெரியும்
(பேரருளானப் பெருமானோடே பேசுபவர் நம்பிகள்).
8. யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பல கோடி நூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும்
எம்பெருமான் அமுது செய்து சேஷித்த பிரசாதத்தாலே பல கோடி பக்த வர்கங்கள் உஜ்ஜீவிக்கக் காண்கிறோம்.
9.யானைக்கு கை நீளம் எம்பெருமானும் அலம் புரிந்த நெடுந்தடக்கையன் இறே
நீண்ட அந்தக் கருமுகிலை யெம்மான் தன்னை”(பெரிய திருமொழி 205-2)
10.யானை இறந்த பின்பும் உதவும் எம்பெருமானும் தீர்த்தம் பிரசாதித்துத் தன்னுடைய சோதிக்கு எழுந்தருளின பின்பும்
இதிஹாச புராணங்கள் உணர்த்தி உதவுகின்றன.
11. யானை ஒரு கையே உள்ளது எம்பெருமானுக்கும் கொடுக்கும் கையொழிய கொள்ளும் கையில்லை
12. யானை பாகனுக்கு ஜீவனங்கள் சம்பாதித்துக் கொடுக்கும். எம்பெருமானும் அர்ச்சக பரிசாரகம் ப்ரப்ருதிகளுக்கு சம்பாத்யத்திற்கு வழி செய்கிறார்.
13. யானை மெல்ல அசைந்து அசைந்து செல்லும். எம்பெருமானும் உலா வரும் பொழுது அசைந்து அசைந்து வருவார்.
14. யானை சாதுவானது எம்பெருமானும் சாதுவானவரே

—————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்: மரபு போற்றலும் புதுமை படைத்தலும் – முனைவர் ஸ்ரீ கு. சு. செந்தில் அவர்கள்

February 26, 2022


ஸ்ரீ பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்:
மரபு போற்றலும் புதுமை படைத்தலும் முனைவர் கு. சு. ஸ்ரீ செந்தில் அவர்கள்

உதவிப்பேராசிரியர். தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி – (சுழல் – II),
மீனம்பாக்கம், சென்னை – 600061.

முன்னுரை

தமிழில் பிரபந்தம் என்னும் புதிய இலக்கிய வகை உருவாக்கத்திற்குத் தொல்காப்பியம் அடித்தளமிட்டிருக்கிறது.
பிரபந்தம் என்னும் சொல்லுக்கு நன்கு கட்டப்பட்டது என்பது பொருள்.
சங்க இலக்கியமும் சிலப்பதிகாரமும் இவ்விலக்கிய வகை மேலும் வளர்ச்சி பெறுவதற்கு உறுதுணை புரிந்தன.
பாட்டியல் நூல்கள் தமிழில் 96 வகை பிரபந்தங்கள் உள்ளதாகக் கூறுகின்றன.
ஆனால் இவ்வெண்ணிக்கையைக் கடந்து பல இலக்கிய வகை உள்ளதை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
பிரபந்தத்தை முதன்முதலில் தோற்றுவித்தவராகக் காரைக்கால் அம்மையாரைக் கூறுவர்.
இவர் புதுவகை பிரபந்தத்தைத் தோற்றுவித்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனையை உண்டாக்கினார்.
அதன் பின் நாயன்மார்களும் ஆழ்வார்களும் இறைவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பிரபந்தம் புனையத் தொடங்கினர்.
19ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தனித்தமிழ் இயக்க வளர்ச்சியினால் பிரபந்தத்தைச் சிற்றிலக்கியம் எனக் கூறத்தொடங்கினர்.
இச்சொல் பொருளுடையதன்று என்று கூறுபவர்களும் உண்டு.
பிற்காலத்தில் குமரகுருபரர், பிள்ளைப்பெருமாள் ஐயங்கார், மீனாட்சிசுந்தரம் பிள்ளை போன்றவர்கள் மிகுதியான பிரபந்தங்களை இயற்றினர்.
இவர்களில் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தம் படைப்புகளில் மரபினைப் போற்றிப் பா புனைந்திருக்கிறார்.
அதே வேளையில் அட்டப்பிரபந்தத்தில் எவரும் கூறாத புதுமையான யாப்பு வடிவங்களையும் தொடையமைதிகளையும் பயன்படுத்தியிருக்கிறார்.
அந்த வகையில் இவர் அட்டப்பிரபந்தத்தில் செய்திருக்கிற யாப்புப் புதுமையினைக் கண்டு காட்டுவதே இக்கட்டுரையின் அடிப்படை நோக்கமாகும்.

ஸ்ரீ பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்

பிள்ளைப்பெருமாள் ஐயங்காருக்கு அழகிய மணவாளதாசர், இரங்கநாத தாசர் எனும் சிறப்புப் பெயர்களும் உண்டு.
சோழநாட்டில் உள்ள ‘திருமங்கை’ என்னும் ஊரில் பிறந்தவர். வெண்மணி என்னும் ஊரினர் என்றும் கூறுவர்.
பதுமநாப பட்டரின் மகனார்; மணவாள மாமுனிகளின் மாணவர்க்கு மாணவர் என்றும் கூறுவர்.
தொல்காப்பியம் முதலான பேரிலக்கணங்களையும் சங்கத்தமிழ் நூல்களையும் வைண சமய நூல்களையும் நன்கு கற்றுத் தேர்ச்சி பெற்றவர்.
தமிழ், வடமொழி எனும் இருமொழிகளிலும் புலமை பெற்றவர்.
திருமால் மீது கொண்ட அளவு கடந்த பக்தியினால் அவர் பாடிய எட்டு பிரபந்தங்களின் தொகுப்பிற்கு அட்டப்பிரபந்தம் என்பது பெயர்.
‘அட்டப்பிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்’ எனும் வழக்கு அதன் மேன்மையினை எடுத்துக்காட்டுகின்றது.

அட்டப்பிரபந்தத்தில் உள்ள எட்டு பிரபந்தங்களையும் ஒருவரே பாடவில்லை;
மணவாளதாசர் என்னும் பெயரைக் கொண்ட வெவ்வேறு காலத்தில் வாழ்ந்த புலவர்கள் பாடிப் பின்னர் தொகுக்கப்பட்டு
ஒருவர் மீது வழங்குகிறது என்று கலைக்களஞ்சியம் (தொ.7, ப. 372) கூறுகின்றது.
ஆனால் வைணவ சமயத்தினர் இந்நூல் ஒருவராலேயே இயற்றப்பட்டது என்னும் கருத்தினராக இருக்கின்றனர்.
திருநறையூர் நம்பி மேகவிடுதூது, பரப்பிரம விவேகம், திருவரங்க யமகவந்தாதி, திருவேங்கடத் திரிபந்தாதி,
திருவரங்கக் கோவை, எதிராசரந்தாதி முதலிய பிரபந்தங்களையும் இவர் எழுதியதாகக் கூறுவர்.

காலம்

பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் காலம் குறித்து ஆய்வாளர்களிடையேக் கருத்து வேறுபாடு நிலவுகின்றது.
“1123இல் தோன்றிய பட்டருடைய மாணவராக விளங்கியமையால் இவரது காலம்
கி.பி. 12ஆம் நூற்றாண்டு” (தொ.1, ப. 887) என்று வாழ்வியல் களஞ்சியம் குறிப்பிடுகின்றது.
ஆனால் கலைக்களஞ்சியம் 13ஆம் நூற்றாண்டு (தொ.7, ப. 372) என்று வரையறை செய்கின்றது.
நா. இராமானுசம், சைவ எல்லப்ப நாவலர் பாடிய அருணைக் கலம்பகமும்,
அய்யங்கார் பாடிய திருவரங்கக் கலம்பகமும் ஒரே காலத்தில் பாடப்பெற்றவை என்னும் காரணத்தைக் கூறி
16ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவர் வாழ்ந்திருக்கிறார்
(நா. இராமானுசம், 1980, ப.104) எனக் குறிப்பிட்டுள்ளார்.
“ஐயங்கார் 16ஆம் நூற்றாண்டில் தமிழ்நூல் செய்திருக்கிறார்” (மு. அருணாசலம் 2005, 274) என்று மு. அருணாசலம் சுட்டுகின்றார்.
ந.சி. கந்தையா பிள்ளை, பாலூர் கண்ணப்ப முதலியார், கா. சுப்பிரமணிய பிள்ளை ஆகியோர்
இவர் 17ஆம் நூற்றாண்டினர் எனக் கருத்துரைத்துள்ளனர்.
அட்டப்பிரபந்தத்திற்கு உரையெழுதிய மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை, இவர் “பட்டர் என்பவரிடம் அருங்கலை பயின்றவர்,
கி.பி. 1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் அவையில் பணிபுரிந்தார்” (ப. 5) என்று குறிப்பிட்டுள்ளார்.
மேற்குறித்த ஆய்வாளர்களில் பலரும் அவர் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பதை ஏற்றுக்கொள்வதால் அக்கருத்து இங்கு வலுப்பெறுகிறது.
திருமலை நாயக்கரின் அரசவையில் அரசியல் பணியில் இவர் ஈடுபட்டிருந்தாலும் இவருடைய மனம் எப்பொழுதும்
இறைவனையே நினைத்துக் கொண்டிருந்தது என்றும், இவரின் இறையாற்றலை உணர்ந்த அரசன்,
இறைப்பணியாற்ற அப்பணியிலிருந்து விடுவித்தார் என்றும் கூறுவர்.

திருவரங்கக் கோயிலில் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் வீற்றிருக்கும் பொழுது அரங்கத்தானைப் புகழ்ந்து
திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத்து மாலை, திருவரங்கத்தந்தாதி, சீரங்கநாயகர் ஊசல் திருநாமம் முதலிய பிரபந்தங்களைப் பாடினார்.
இவர் திருவரங்கத்தானைத் தவிர வேறு தலத்துப் பெருமாளைப் பாடாத இயல்பினர்.
ஆதலால் வேங்கடத்தான் இவரால் பாடப்பெற வேண்டுமென எண்ணி இவர் கனவில் தோன்றி,
“வேங்கடத்தான் மீது சில நூல்கள் பாடுவாயாக!’ எனக் கூற,
வேங்கடமலையில் குரங்குகள் அதிகமாக இருப்பதால் ‘அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடேன்’ என இகழ்ந்துரைத்தார்.
பிறகு வேங்கடத்தான் அய்யங்காருக்கு கண்டமாலை என்னும் நோயை உண்டாக்க,
அது வேங்கடத்தான் உண்டாக்கியது என்பதை உணர்ந்த பின்னர் அத்தெய்வத்தின்மீது
திருவேங்கடத்தந்தாதி, திருவேங்கடமாலை, அழகரந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி என்னும் நூல்களைப்
பாடியதாகத் தமிழ்ப் புலவர் வரலாற்றுக் களஞ்சியம் (ப.36) கூறுகின்றது.

திருவரங்கத்தில் இருந்த இவரிடம் திருவானைக்காவில் வசித்த சைவர்கள் வருகை தந்து சிவன் மீது சில பாடல்களைப்
பாடவேண்டியதாகவும், அதற்கு இவர் மறுத்ததாகவும் அதனால் அவர்கள் பெருமாள் கோயில் பசுவைக் கட்டி வைத்துக் கொண்டு
இவரைப் பாடச் சொன்னதாகவும்
“மங்கை பாகன் எனத்தொடங்கி அங்ஙண் ஞாலம் உண்டபோது வெள்ளி வெற்பகன்ற, ஆதலால்
அரங்கனன்றி வேறு தெய்வம் இல்லையே’ எனச் சிவனைக் குறைகூறுவதாகப் பாடி முடித்தாகவும்,
இதனால் சைவர்களுக்கும் இவருக்கும் சொற்போர் மூண்டதாகவும் கூறுவர்.
குமரகுருபரருக்கும் இவருக்கும் சமயப்போர் நிகழ்ந்தது என்றும் கூறுவர்.
ஆனால் மு. அருணாசலம் இது பொய்க்கதை என்று கூறி மறுத்திருக்கிறார்.

பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் முதலிய ஆழ்வார்களின் கருத்துகளைத் தம் பிரபந்தங்களில் இவர் பயன்படுத்தியுள்ளார்.
திருவரங்கக் கோயில் முன்பு தியானத்தில் இருக்கும் பொழுது கோயிலுக்குரிய முடப்பசு காலிடறி இவர்மீது விழுந்ததாகவும்
அதன் விளைவாகத் தம் 70ஆம் அகவையில் இறுதி எய்தினார் என்றும் வாழ்வியல் களஞ்சியம் கூறுகின்றது.

பா வடிவங்கள்: மரபும் புதுமையும்

பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் எழுதிய பிரபந்தங்களில் முதலாவதாக அமைவது திருவரங்கக் கலம்பகம் ஆகும்.
இதில் நேரிசை வெண்பா, நேரிசை ஆசிரியப்பா, மயங்கிசை கொச்சகக் கலிப்பா, கலிவிருத்தம், கலிநிலைத்துறை,
கலித்தாழிசை, கலிநிலை வண்ணத்துறை, கட்டளைக்கலிப்பா, கட்டளைக்கலித்துறை, தரவுகொச்சகக் கலிப்பா,
குறளடி வஞ்சிப்பா, வஞ்சித்துறை, வஞ்சி விருத்தம், வியனிலை மருட்பா, வேற்றொலி வெண்டுறை,
அறுசீர், எழுசீர், எண்சீர் ஆசிரிய சந்த விருத்தம், அறுசீர், எழுசீர், எண்சீர், பன்னிருசீர், பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்,
எண்சீர், நாற்பத்தெண்சீர் ஆசிரிய வண்ண விருத்தம் என்னும் பா, பாவின வடிவங்கள் இடம் பெற்றுள்ளன.
இவரது ஏனையப் பிரபந்தங்களை விட இக்கலம்பகம் பொருளமைதியிலும் யாப்பு முறையிலும் சிறப்பு நிலையில் அமைந்து
கற்போருக்கு உவகையைத் தருகின்றது. பல்வேறு பா, பாவின வடிவங்களில் திறம்பட கவிதை புனைகிற ஆற்றல்
இவருக்கு இருந்ததை இக்கலம்பகம் உணர்த்துகின்றது.

திருவரங்கத்துமாலை, திருவரங்கத்தந்தாதி, திருவேங்கடத்தந்தாதி, அழகரந்தாதி ஆகியவற்றில்
முறையே 112, 107, 103, 103 எனும் எண்ணிக்கையிலான கட்டளைக்கலித்துறைச் செய்யுட்கள் இடம் பெற்றுள்ளன.

சீரங்கநாயகர் ஊசல் திருநாமத்தில் 35 எண்சீர் ஆசிரிய விருத்தச் செய்யுளும்
திருவேங்கடமாலை, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி ஆகியவற்றில் முறையே 104, 117 நேரிசை வெண்பாக்களும் அமைந்துள்ளன.
இதன் வழியாக ஆசிரியர் பிள்ளைப்பெருமாள் ஐயங்காருக்குக் கட்டளைக்கலித்துறைச் செய்யுளில் மிகுதியாக ஈடுபாடு இருந்ததையும்
அதன் வழியாகத் திருமாலின் அருளிச்செயல்களைச் சிறந்த முறையில் பாடியுள்ளதையும் அறியமுடிகிறது.
இதற்கு அடுத்த நிலையில் நேரிசை வெண்பாவில் மிகுதியான பாடல்களைப் பாடியிருப்பதை அறிய முடிகிறது.

அட்டப்பிரபந்தத்தில் இடம்பெறும் நேரிசை ஆசிரியப்பா, நேரிசை வெண்பா, தரவு கொச்சகக் கலிப்பா,
மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா, குறளடி வஞ்சிப்பா, வியனிலை மருட்பா ஆகியன மரபான யாப்பமைதியிலேயே அமைந்துள்ளன.
இவற்றில் புதுமை எதுவும் காணப்பெறவில்லை.
ஆனால் பாவினத்தில், குறிப்பாக, ஆசிரிய விருத்தத்தில் விருத்தப்பாவியல் எனும் நூல் கூறாத
புதிய வாய்ப்பாட்டு அமைப்பில் பல பாடல்கள் காணப்படுகின்றன.
அதிலும் குறிப்பாக, அறுசீர், எண்சீர், பதினான்குசீர் ஆசிரிய விருத்தத்தில் இவரால் பல புதுமைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
முதல் அடி என்ன வாய்ப்பாட்டு அமைப்பில் அமைகிறதோ ஏனைய அடிகளும் அதே வாய்ப்பாட்டு அமைப்பில் அமைவதே விருத்தம் என்பர்.
சில இடங்களில் விளச்சீர் வரவேண்டிய இடத்தில் காய்ச்சீர் வரலாம்; அவ்வாறு வருவது குறையில்லை.

அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர் ஆசிரிய விருத்தத்திற்கு விருத்தப்பாவியல் ஏழு வகையான வாய்ப்பாட்டு அமைப்பைக் கூறுகின்றது.
திருவரங்கக் கலம்பகத்தில் அமைந்துள்ள இவ்வகையிலான 12 பாடல்களில் இரு பாடல்கள்
விருத்தப்பாவியல் கூறாத “விளம், விளம், விளம், விளம், விளம், விளம்” என்னும்
புதிய அமைப்பு முறையில் அமைந்து காட்சி தருகின்றன.

“காலமு ணர்ந்தகு றத்திநான்
கருதினை ஒன்றது சொல்லுவேன்” (அட். பா. 75)

எனும் இப்பாடலின் ஏனைய அடிகளும் 54ஆவது பாடலும் மேற்கூறிய வாய்ப்பாட்டு அமைப்பிலேயேத் திகழ்கின்றன.
இதில் அனைத்துச் சீர்களும் விளச்சீராக அமைந்து கற்போருக்கு இன்பத்தைத் தருகின்றன.

எழுசீர் ஆசிரிய விருத்தம்

திருவரங்கக் கலம்பகத்தில் 42, 73, 103 என்னும் பாடல்கள் எழுசீர் ஆசிரிய விருத்தமாக அமைந்துள்ளன.
இப்பாடல்கள் விருத்தப்பாவியல் கூறுகின்ற “விளம் மா விளம் மா விளம் விளம் மா” என்னும் வாய்ப்பாட்டு
முறையிலேயே அமைந்திருக்கின்றன. இதில் புதுமை ஏதும் இடம்பெறவில்லை.

எண்சீர் ஆசிரிய விருத்தம்

விருத்தப்பாவியல் எண்சீர் ஆசிரிய விருத்தத்திற்கு மூன்று வகையான வாய்ப்பாட்டு அமைப்புகளை மட்டுமே இலக்கணமாகக் கூறுகின்றது.
திருவரங்கக் கலம்பகத்தில் இவ்வகையில்17 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
அதில் ஆறு வாய்ப்பாட்டு அமைப்புகளை இவர் புதியதாகப் படைத்திருக்கின்றார்.

“கற்றார் எனினும் பதினால் உலகும்
கண்டார் எனினும் தண்டா மிகுபற்(று)” (அட். பா. 11)

என்னும் பாடல் “மா மா மா மா மா மா மா மா” என்னும் வாய்ப்பாட்டு அமைப்பு முறையில் அமைந்துள்ளது.
இப்பாடலின் ஏனைய அடிகளும் 52ஆவது பாடலும் இவ்வாய்ப்பாட்டு அமைப்பிலேயேத் திகழ்கின்றன.
இவ்விரு பாடல்களின் அனைத்துச் சீர்களும் மாச்சீராக அமைந்து கற்போருக்கு உவகையைத் தருகின்றன.

“உண்டுமிழ் வாசமுடன் தண்டலை மாருதம்வந்
துலவிய சாளரமும் குலவிய வாள்நிலவும்” (அட். பா. 90)

இப்பாடல் “விளம் காய் விளம் காய் விளம் காய் விளம் காய்” என்னும் வாய்ப்பாட்டு அமைப்பில் அமைந்துள்ளது.
இதன் ஏனைய அடிகளும், 16 ஆவது பாடலும் இவ்வமைப்பு முறையில் அமைந்து காட்சி தருகின்றன.

“மருவு தந்தையும் குருவும் எந்தையும்
மருள்கெ டுப்பதும் அருள்கொ டுப்பதும்” (அட். பா. 20)

எனத் தொடங்கும் பாடல், “மா விளம் மா விளம் மா விளம் மா விளம்” என்னும் வாய்ப்பாட்டு அமைப்பில் உள்ளது.
69ஆவது பாடலும் இம்முறையிலேயே அமைந்துள்ளது.

“உருமாறிப் பலபிறப்பும் பிறந்துஞ் செத்தும்
ஊசலா டுவதடியேன் ஒழியும் வண்ணம்” (அட்.பா. 64)

இது“காய் காய் மா தேமா காய் காய் மா தேமா” என்னும் வாய்ப்பாட்டினதாகும்.
திருவரங்கக் கலம்பகத்தில் உள்ள 21, 94, 99 என்னும் பாடல்களும் இவ்வமைப்பில் அமைந்துள்ளன.

“இருளினும் வெளியினும் மருளினும் தெருளினும்
இன்பமே அடையினும் துன்பமே மிடையினும்” (அட். பா.34)

இப்பாடல் “விளம் விளம் விளம் விளம் விளம் விளம் விளம் விளம்” என்னும் வாய்ப்பாட்டு முறையில் அமைந்துள்ளது.
திருவரங்கக் கலம்பகத்தின் 56, 83ஆவது பாடல்களும் இம்முறையினதாகும்.

“குருகுறங்கு கானலே! கருநிறங்கொள் பானலே!
கொடியிருண்ட ஞாழலே! நெடியகண்டல் நீழலே!” (அட். பா.37)

என்னும் இப்பாடல் “காய் விளம் காய் விளம் காய் விளம் காய் விளம்” என்னும் அமைப்பு முறையில் உள்ளது.
மேற்காட்டிய அனைத்து வாய்ப்பாட்டு அமைப்புகளும் இவ்வாசிரியரால் புதுமையாகப் படைக்கப்பட்டனவாகும்.

சீரங்கநாயகர் ஊசல் திருநாமத்தில் 35 எண்சீர் ஆசிரிய விருத்தப்பாக்கள் இடம்பெற்றுள்ளன.
இப்பாடல்கள் அனைத்தும் “காய் காய் மா தேமா காய் காய் மா தேமா” எனும் ஒற்றை வாய்ப்பாட்டு முறையிலேயே அமைந்துள்ளன.
விளச்சீர் வரவேண்டிய இடத்துக் காய்ச்சீரும் காய்ச்சீர் வரவேண்டிய இடத்து விளச்சீரும் சில பாடல்களில் இடம் பெற்றுள்ளனவே தவிர,
இப்பாடல்களில் புதுமை ஏதும் அவரால் நிகழ்த்தப்பெறவில்லை.

பன்னிரு சீர் ஆசிரிய விருத்தம்

திருவரங்கக் கலம்பகத்தில் 38, 39, 55, 78 ஆகிய பாடல்கள் பன்னிருசீர் ஆசிரிய விருத்தமாக அமைந்துள்ளன.
இப்பாடல்கள் விருத்தப்பாவியல் கூறுகின்ற “மா மா காய் மா மா காய் மா மா காய் மா மா காய்” எனும் வாய்ப்பாட்டு
அமைப்பிலேயே காட்சி தருகின்றன.இவ்வமைப்பு முறையில் அவர் ஏதும் புதுமை நிகழ்த்தவில்லை.

பதினான்கு சீர் ஆசிரிய விருத்தம்

பதினான்கு சீர் ஆசிரிய விருத்தத்திற்கு விருத்தப்பாவியல் தனியே இலக்கணம் வகுக்கவில்லை.
அதன் உரையில் எண்சீர் விருத்த அமைப்புகள் இரட்டித்துப் பதினான்கு சீராக வரும் எனக் கூறப்பட்டுள்ளது.
திருவரங்கக் கலம்பகத்தில் 7 பாடல்கள் பதினான்குசீர் ஆசிரிய விருத்தமாக அமைந்துள்ளன.
அதில் 5 பாடல்கள் இரண்டு புதிய அமைப்பு முறைகளில் காட்சி தருகின்றன.

“மானை எய்தவர் இன்னம் என்மட
மானை எய்திலர் நேமியால்
மாலை தந்தவர் பைந்து ழாய்மது
மாலை தந்திலர் இந்திரன்” (அட். பா. 33)

என்னும் இப்பாடலடி “மா விளம் மா விளம் மா விளம் விளம் மா விளம் மாவிளம் மா விளம் விளம்” என்னும்
அமைப்பு முறையில் அமைந்துள்ளது. இப்பாடலின் ஏனைய அடிகளும் 71ஆவது பாடலும் இவ்வகையினதாகும்.

“வாடி ஓட வனசம் அன்ன
இருகண் வெள்ளம் அருவிபோல்
மருவி யோட மதனன் வாளி
யுருவி யோட வாடைபூ” (அட். பா. 45)

இப்பாடலடி “மா மா மா மா மா மா விளம் மா மா மா மா மா மா விளம்” என்னும் அமைப்பு முறையில் அமைந்துள்ளது.
இப்பாடலின் ஏனைய அடிகளும் 59, 87 ஆகிய பாடல்களும் இவ்வமைப்பு முறையிலேயே அமைந்துள்ளன.

பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் திருமால் மீது கொண்ட அளவு கடந்த பக்தியினால் மட்டும் பா புனையவில்லை.
தமிழ் யாப்பு மீதும் அவருக்கு மிகுந்த பற்று இருந்திருக்கிறது என்பதை உணரமுடிகிறது.
திருவரங்கக் கலம்பகத்தில் அமைந்துள்ள ஆசிரிய விருத்தப்பாக்களில் குறிப்பாக அறுசீர், எண்சீர், பதினான்கு சீர்களில்
அமைந்துள்ள பாக்களில், இவர் மிகுதியாகப் புதுமை படைத்திருக்கிறார் என்பதை இவ்வாய்வின் வழி அறியமுடிகிறது.

தொடையமைதி: மரபும் புதுமையும்

பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் மரபிலக்கணங்கள் கூறுகின்ற தொடை வகைகளைப் பின்பற்றி அட்டப்பிரபந்தத்தில் உள்ள
பிரபந்தங்களை இயற்றியுள்ளார். நூலின் முதலாவதாக அமைந்த திருவரங்கக் கலம்பகத்தில் புதுமையான
பலவகை தொடையமைதிகளைப் படைத்துள்ளார்.

மோனை

அடிதோறும் முதலெழுத்து ஒத்து வருவது அடி மோனையாகும். தொல்காப்பியம், யாப்பருங்கலக் காரிகை, யாப்பருங்கலம்
முதலான மரபிலக்கண நூல்கள் மோனைக்கு இலக்கணம் வகுத்துள்ளன.
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தம் பிரபந்தத்தில் ஒன்று, ஐந்தாம் சீரில் அமையும் மத்திம மோனையை மிகுதியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
இவ்வகை மோனை கட்டளைக்கலித்துறைப் பாக்களில் இடம்பெறுவன.
இதற்கு அடுத்த நிலையில் நேரிசை வெண்பாவில் பொழிப்பு மோனையை மிகுதியாகக் கையாண்டிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து தலையாகு மோனை, அதம மோனை, உத்தம மோனை ஆகியனவற்றுக்கு இடம் தந்துள்ளார் என்பதைக் காணமுடிகிறது.

எதுகை

இரண்டாம் எழுத்து ஒன்றி வருவதை எதுகை என்பர்.
மோனையைப் போல எதுகையையும் இலக்கண ஆசிரியர்கள் பல வகையாகப் பாகுபடுத்தியுள்ளனர்.
அதில் தலையாகு எதுகை என்பதும் ஒன்று. சீர் முழுதும் ஒன்றி வருவதை இவ்வகை எதுகையாகக் கூறுவர்.
திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத்து மாலை, திருவேங்கடமாலை, திருவேங்கடத்தந்தாதி, அழகரந்தாதி
நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி ஆகிய பிரபந்தங்களில் தலையாகெதுகை சிறந்த நிலையில் அமைந்து காட்சி தருகின்றன.
இதற்கு அடுத்த நிலையில், இரண்டடி எதுகை பாடல்களில் மிகுதியாக இடம் பெற்றுள்ளன.
முதல் இரண்டடி ஓர் எதுகையாகவும் அடுத்த இரண்டடியும் மற்றொரு எதுகையாகவும் அமைவது இவ்வகையாகும்.
திருவரங்கக் கலம்பகம், திருவேங்கடமாலை, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி ஆகிய மூன்றிலும்
இவ்வகை எதுகை சிறப்பு நிலையில் இடம்பெற்றுள்ளன.

அடியெதுகை, பொழிப்பு எதுகை, ஒரூஉ எதுகை, மேற்கதுவாய் எதுகை, கடையிணை எதுகை, பின் எதுகை, இடைபுணர் எதுகை
ஆகியன அருகிய நிலையிலேயே இடம்பெற்றுள்ளன.
ஆகவே பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தலையாகெதுகை, இரண்டடி எதுகை என்னும் இரு அமைப்பு முறைகளுக்கு
முதன்மை கொடுத்திருக்கிறார் என்பதை இவ்வாய்வின்வழி அறியமுடிகிறது.

கழிநெடிலடிகளில் புதுமை

ஐந்து சீர்களுக்கு மேற்பட்ட சீர்களையுடைய அடியைக் கழிநெடிலடி எனக் கூறுவர்.
திருவரங்கக்கலம்பகத்தில் 61ஆவது பாடல் அறுசீர் ஆசிரிய விருத்தமாக அமைந்துள்ளது.
இப்பாடலில் எதுகை சிறப்பு நிலையில் அமைந்து காட்சியளிக்கிறது.

“இரும்புவனம் விரும்புவனம் அணியரங்கர்
பணியரங்கர் இயம நண்ப!” (அட். பா. 61)

இப்பாடலின் முதல் இருசீர் ஓரெதுகை பெற்றும் அடுத்த இருசீர் வேறொரு எதுகை பெற்றும் வந்திருப்பதைக் காணலாம்.

திருவரங்கக் கலம்பகத்தில் 42, 73 ஆகிய பாடல்கள் எழுசீர் ஆசிரிய விருத்தமாக அமைந்துள்ளன.

“இரவியை இரவில் மதியினை மதியுள்
இறையினை இறையும்எண் ணரிய” (அட். பா.73)

இப்பாடலின் முதல் இருசீரும் ஓர் எதுகை பெற்றும், அடுத்த இருசீரும் வேறோர் எதுகை பெற்றும்
அதற்கடுத்த இருசீரும் மற்றுமோர் எதுகை பெற்றும் அமைந்திருக்கிறது.
இத்தகைய அமைப்பு முறையில் இப்பாடலின் ஏனைய மூன்று அடிகளும் அமைந்து கற்போர் மனதில் நிலைத்திருக்கிறது.

திருவரங்கக் கலம்பகத்தில் எண்சீர் ஆசிரிய விருத்தமாக அமைந்த 16, 20, 34, 37, 89 ஆகிய பாடல்களில்
எதுகை சிறப்பு நிலையில் அமைந்து காட்சிதருகின்றன.

“அரவில் நடித்தாலும் உரவில் ஒடித்தாலும்
அடவி கடந்தானும் புடவி இடந்தானும்” (அட். பா.16)

என்னும் பாடலில் ஒன்று, மூன்றாம் சீர் ஓர் எதுகையாகவும் இரண்டு, நான்காம் சீர் மற்றொரு எதுகையாகவும்
ஐந்து, ஏழாம் சீர் வேறோர் எதுகையாகவும் ஆறு, எட்டாம் சீர் பிறிதொரு எதுகையாகவும் அமைந்திருக்கின்றன.
இப்பாடலின் ஏனைய அடிகளும்மேற்சுட்டிய எண்ணிக்கையில் அமைந்துள்ள பாடல்களும் இவ்வமைப்பு முறையிலேயே அமைந்து காட்சியளிக்கின்றன.

ஒன்றுக்கொன்று முரண்படுகிற முரண்தொடை பற்றிய பாடல்களையும், இயைபுத்தொடை பற்றிய பாடல்களையும்
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் பாடியுள்ளார்.
அட்டப்பிரபந்தத்தில் திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத்தந்தாதி, திருவேங்கடத்தந்தாதி, அழகரந்தாதி,
நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி ஆகிய பிரபந்தங்கள் அந்தாதித் தொடை அமைப்பிலேயே அமைந்துள்ளன.
இதன்வழியாக அந்தாதித் தொடை அமைய பாடல்கள் பாடுவதில் இவர் வல்லவராகத் திகழ்ந்திருக்கிறார் என்பதையும்
அத்தொடையமைதிக்குத் தம் நூல்களில் முதன்மை கொடுத்திருக்கிறார் என்பதையும் அறியமுடிகிறது.

தொகுப்புரை

அட்டப்பிரபந்தம் ஒருவரால் இயற்றப்படவில்லை; மணவாளதாசர் என்னும் பெயரைக் கொண்ட வெவ்வேறு காலத்தில்
வாழ்ந்த புலவர்களால் இயற்றப்பட்டது என்னும் கருத்து நிலவுகிறது.
இதற்கு வலுவான சான்றாதாரம் இல்லை என்றாலும் அக்கருத்தை முழுக்கப் புறந்தள்ளிவிடவும் இயலவில்லை.
ஏனெனில் அவர் எழுதிய அட்டப்பிரபந்தத்தில் உள்ள எட்டு பிரபந்தங்களில் திருவரங்கக் கலம்பகம்
மொழி நடையாலும் யாப்பமைதியாலும் பெரிதும் வேறுபட்ட ஒன்றாகத் திகழ்கிறது.
இக்கலம்பகத்தில் அவர் மரபைப் போற்றிப் பா புனைகின்ற அதேவேளையில் புதுமைகள் பலவற்றை படைத்திருப்பதையும் அறியமுடிகிறது.

விருத்தப்பாவியல் எனும் நூல் பிற்காலத்ததாக இருந்தாலும், அது தமிழில் உள்ள விருத்த அமைப்பு முறைகளைக்
கண்டு காட்டுவதாகவும் அதன் இலக்கணத்தை முறைப்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது.
அந்நூல் கூறாத பல அமைப்பு முறைகளில் குறிப்பாக அறுசீர், எண்சீர், பதினான்குசீர் ஆசிரிய விருத்தப்பாக்களில்
மிகுதியான புதுமைகளை ஆசிரியர்படைத்திருக்கிறார்.
அவர் கட்டளைக் கலித்துறையில் மிகுதியான செய்யுட்களை இயற்றியிருந்தாலும் விருத்தப்பாவில் அளவிலா
ஈடுபாடு உடையவராகத் திகழ்ந்திருக்கிறார்.
ஐந்து சீர்களுக்கு மேற்பட்ட கழிநெடிலடிகளில் குறிப்பாக ஆசிரிய விருத்தத்தில் மோனை, எதுகை ஆகியன சிறந்த முறையில்,
மனங்கொள்ளத்தக்க வகையில் அமைந்து காட்சிதருகின்றன.
இது கற்போருக்கு உவகையைத் தருவதாகவும் தமிழ் யாப்பின்மீது அவருக்கிருந்த பற்றை வெளிக்காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது.

—————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ பரவாதி கேசரி ஸ்வாமிகள் அருளிச் செய்த -ஸ்ரீ சைல வைபவம் -ஸ்ரீ அபி நவ பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்த மா முனி ஊசல் பிரபந்தம் —-

February 26, 2022

கூறுகேன் உலகீரே குங்குமத்தோள் அரங்கேசர்
மாறன் மறைப்பொருளைக் கேட்க மணவாள மா முனியை
ஏறும் மணை தனில் இருத்தி இரு நிலத்தில் தாம் இருந்து
வீறுடனே செவி சாத்தி விரை யடி பூசனை யாற்றி –1-

ஏறும் மணை–உயர்ந்த ஆசனம்
இரு நிலத்தில் -பூமியில் தாம் இருந்து
பூசனை யாற்றி –ஆராதனை செய்து

——-

ஆறு இரண்டு புரம் சூழ அரங்கம் முதல் நூற்று எட்டும்
கூறிய சீர் சயிலத்தைக் கொண்டாடி உரைக்க வெனா
ஊறிய தேன் பெருக்கு என்ன யுன்னி யதை யுகந்து யுரைத்தான்
சேறு வளர் கமலை மைந்தன் சிந்தை மகிழ்ந்து ஒருப்பட்டே –2-

ஆறு இரண்டு -உபய காவேரி
புரம் சூழ அரங்கம் –ஆராத அருள் அமுதம் பொதிந்த கோயில் –திருவரங்கம் எனத் திகழும் கோயில் தானே
முதல் நூற்று எட்டும் -ஈர் இருபதாம் சோழம் ஈர் ஒன்பதாம் பாண்டி -ஓர் பதின்மூன்றாம் மலை நாடு –
ஓர் இரண்டாம் சீர் நடுநாடு -ஆறோடு ஈர் எட்டுத் தொண்டை அவ்வட நாடு ஆறு இரண்டு கூறு திருநாடு ஒன்றாக்கொள்
கூறிய சீர் சயிலத்தைக் கொண்டாடி உரைக்க -ஸ்ரீ சைல என்று தொடங்கும் மந்த்ரம்
யுன்னி -சிந்தித்து
சேறு வளர் கமலை -பங்கயச் செல்வி
ஒருப்பட்டே –சம்மதித்து

———-

பட்டர் பிரான் முதலாய பதின்மர் கலை பழிச் சலிலும்
சிட்டர்களாய்த் தினம் தோறும் திருமண் இடு வேளையினும்
இட்ட முற யுணும் பொழுதத்து ஒண் கர நீர் ஏற்கையினும்
அட்ட திக்கும் விளங்க உரைத்தார் ஆரியர்கள் அனைவருமே –3-

சீர் அணிந்த பாண்டியன் தன் நெஞ்சு தன்னில் துயக்கற மால் பரத்துவத்தைத் திறமாச் செப்பி
வாரணம் மேல் மதுரை வலம் வரவே வானில் மால் கருட வாகனனாயத் தோன்ற வாழ்த்தும்
ஆழ்வாராதலால் முதலில் எடுத்து அருளுகிறார் –
பழிச்சல் -துதித்தல்
சிட்டர் -நல்லோர் -கல்வி நிரம்பிய சான்றோர்
திருமண் இடு வேளை -புண்ட்ரம் தரிக்கும் போது பன்னிரு திருநாமப் பாடல்கள் அனுசந்தேயம்

———

ஆரியர்கள் கொண்டாடி யாசரித்த தனியனைத் தான்
பேரியலும் தொண்டர் குழாம் பெரும் பேறாக் கொண்டனரால்
சீரியராய் வாழ எண்ணில் செக தலத்தீர் கற்று உணர்மின்
தாரியலும் அரங்கருக்கும் தமிழ் மறைக்கும் மணமாமே -4-

————-

மணவாள மா முனியை வழுத்து உறவோர் பயன் பெறுவர்
குணமாகக் கொண்மின் இதைக் கொடும் பிறவிப் பிணி அகல்வீர்
பண வாள் அரவு இவராம் பகைத்தாரே யுய்தல் இலர்
மணமுடைய மந்திர மா மதிக் கொள்ளீர் தனியனையே –5-

———

தனியன் என்று பேர் சாற்றித் தண் அரங்கர் முன்னர்
இனிய திருப் பவளத்தாலே -முனி வரனார்
மாறன் மறை முப்பத்து ஆறாயிரத்தின் மாண் பொருளைக்
கூற உபதேசித்தார் கொண்டு –6-

முனி வரனார் -சடகோப மா முனிவர்
மாண் பொருள் -சிறந்த கருத்து
முப்பத்து ஆறாயிரம் -ஈடு

———

தேசம் எங்கும் ஈது திருப்பதிகள் தோர் உரைக்க
நேச முற வரங்கர் நேமித்தார் -ஏசுமவர்
பாதகராய் எரி வாய் பாழ் நரகில் துய்ப்பர் இன்னல்
வேதனார் உள்ள மட்டு மெய்த்து –7-

வேதனார் -பிரமன்
எய்த்து -வருந்தி

———

எய்யத் துணிய இராவணியைக் கொன்றவன் காண்
செய்ய நெறி விளங்கும் சேடன் அவன் -வையம்
தனை வளர்க்குமாறு வர யோகி தானாய்
வினை யறுத்து வீடு அருளும் வேந்து–8-

இராவணி -இராவணன் மகன் இந்திரஜித்
கொன்றவன் -இலக்குவன்
செய்ய நெறி -சரணாகதி மார்க்கம்
சேடன் -அநந்தன்
வையம் -பூமி
வரயோகி -ஸ்ரீ மணவாள மா முனிகள்
வேந்து -முனி யரசன்
வீடு -பரம புருஷார்த்த மோக்ஷம்

————

வேந்தராய் மண்ணாண்டு விண்ணேறலாம் எளிதாய்த்
தோய்ந்த உறவாய் இருக்கிற்று எல்லுலகீர் -ஓர்ந்து உய்ய
ஏதி கொடு காலன் இழிந்தமர்மே வான் விண்ணோர்
நாதனும் வந்தே வணங்கு நன்கு –9-

ஏதி-ஆயுதம்

————

வணங்கினார் சீர் பெற்றார் வரன் முறையால் வீடணர் போல்
இணங்கினார் ஓர் ஒருவர் இரு நிலத்தில் சிறப்புற்றார்
பிணங்கினார் பேய்ப்பிறவிப் பேதையர்கள் தமைக்கண்டே
உணங்கினார் தாமதராய் உட் சினந்தார் தென்றவரே –10-

வீடணர் -விபீஷணர்
உணங்கினார் -காய்கின்றவர்
தாமதர் -மந்தர்
சினந்தார் -கோபமுடையார் –

————

தென் கலையாம் தமிழ் வேதச் சீர் சைல தனியன் எனும்
நன் கலையை யுள் கசிந்து நவிற்று பெருந்தகை மாந்தர்
மின் கலையும் புரி நூலும் மேல் நோக்கு புண்டரமும்
தென் கலையும் வட கலையும் திகழ் நாவர் ஆகுவாரே –11-

தென் கலை -அழகிய கலை
மின் -ஒளி வீசும்
மேனோக்கு புண்ட்ரம் -ஊர்த்வ புண்ட்ரம்

———–

ஆகுகல் என் இனி எனக்கோர் ஆராவமுதாய என்
சோகம் அற யுளத்தடத்து துலங்கு வர வர யோகி
சேகறு செம் மலர்த்தாளும் சீர் சைலத் தனியனும் இன்று
ஓகை யுறப் பெற்றனனால் ஒலி கடல் தரணியீரே — 12-

ஆராவமுதாய அடியேனாவி அகமே தித்திப்பாய் –திருவாய் மொழி -5-8-10-
சேகறு -குற்றம் அற்ற
ஓகை -உவகை

————-

தாராணியோர் வாழ எண்ணித் தானே திரு வனந்தன்
பேரணியும் குருகை நகர் பிறங்க நனிப் பேர் அருளால்
சீரணியும் மணவாள மா முனியாய்ச் செனித்தனனால்
தார் அணியும் அரங்கருக்குத் தமிழ் மறைத் தேசிகன் எனவே — 13-

பிறங்க -விளங்க
செனித்தனன் -அவதரித்து அருளினன்
தேசிகன் -ஆச்சார்யன் –

————–

தமிழ் மறையோர் ஓதுவரேல் தனியன் இது மற்றும் இல்லை
திமிரம் அற மெய்ஞ்ஞானச் செழும் சுடர் சேர் மனமுடையீர்
அமிழாமல் சமுசாரத் தாழ் கடலைக் கடத்தி ஒரு
நிமிடத்தில் நித்யராய் நிறுத்தும் பேர் இன்பத்தே —14-

————-

பத்துத் திசைகளினும் பண மணிகள் சுடர் எறிப்ப
முத்தி தரும் அரங்கருக்கும் மூவணையாய்ச் சூழ்ந்து இலங்கும்
எத்திசையும் பணிந்து ஏத்தும் எம் பெரிய முனியாகும்
அத்தன் எழில் வர யோகி யாயிவராய் அரவரசே –15-

முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் வந்தார்
முத்தி தரும் எதிராசர் பொன்னடியே நம் பெரிய ஜீயர்
அத்தன் -உயர்ந்தோன்
அரவரசு -ஆதி சேஷன் –

————-

அரவேறு மேவி அறி துயில் கொள்ளும் அரங்கர் உரை
வர யோகி சீர் சைலத்தின் பெரும் புகழ் வைபவத்தை
விரகால் இசை மறையோர் திலகன் தமிழ் வீறுடைய
பரவாதி கேசரி பாப் பதினைந்து பணித்தனன் –16-

—————————-

பண வாள் அரவப் பளியில் பங்கயக் கண் துயில் அவனி
யுணவாளற்கு ஈடு அளித்தான் உத்தம நம்பிக்கு அருள் மெய்க்
குணவாளன் விளைக்கு மறை கூறாமல் தமிழ் விளக்கும்
மணவாள மா முனிவன் மலரடி சந்ததம் பணிவாம் –பொதுப்பாயிரம் -4–கூரேச விஜயத் துதி

——-

ஸ்ரீ திருமாலிருஞ்சோலை மலை ஸ்ரீ அழகர் பிள்ளைத் தமிழ்–ஆசிரியர்: ஸ்ரீ கவி காளருத்திரர்–

மணவாளமாமுனிகள்

குணவா யதித்தெற்று வேலைஞா லத்திருட்
கொள்ளைவெயில் சீத்தகற்றும்
கோகனக மணவாள னெனவடியர் தொல்லைநாட்
கொண்டவினை யிருளகற்றும்
மணவாள மாமுனிவன் மகிழ்வுடன் கருணைபொழி
மலர்விழியி னெம்மைநோக்கி
வயிறுபசி யாமனா வறளாம னாளுமறை
வாய்த்தவிரு நாலெ ழுத்தே
உணவாக நஞ்செவியி லிருபுறமும் வழியவார்த்
துயிர்தளிர்ப் பித்தவெங்கோன்
ஒளியீட்டு திருநாட்டு வழிகாட்டு தாட்கமல
முளமீது வைப்பனெட்டைப்
பணவா ளராவுலக முடைநாறு வெண்ணெய்பேய்ப்
பாவைதன் முலையுளமுதம்
பருகிச் செவந்தவாய் மாலலங் காரனைப்
பாடுமென் கவிதழையவே. (13)

————-

ஸ்ரீ அபி நவ பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்த மா முனி ஊசல் பிரபந்தம்

திரு வாழப் புவி மகளாம் கோதை வாழ
தெய்வ நாயகன் வாழப் பதின்மர் வாழக்
குருவான நாதமுனி முதலோர் வாழக்
கோட்டி நகரோனாதி ஐவர் வாழத்
திருவாய்ந்த பெரும் பூதூர்ச் சிங்கம் வாழச்
சிரீ வர மங்கைப் பதி வாழ் எதியும் வாழ
மருவாரும் வண் துளவோன் அடியார் வாழ
மணவாள மா முனிவர் ஆடீர் ஊசல் –1-

வர மங்கை மா முனியோர் வடம் தொட்டு ஆட்ட
வட திருவேங்கட முனியோர் வடம் தொட்டு ஆட்டப்
பரவஸ்து பட்டர் பிரான் எறும்பி அப்பா
பணிவுடன் பின் இரு மருங்கு வடம் தொட்டு ஆட்டத்
தர மிகு இரண்டு அண்ணர் கவரி வீசத்
தக்க திருவால வட்டம் தெருள் அப்புள்ளார்
வர குண அப்பிள்ளை இரு மருங்கில் ஓச்ச
மணவாள மா முனிவர் ஆடீர் ஊசல் –4-

சிரம் அதனில் சிகை அசைய ஆடீர் ஊசல்
திருமண் உறு முகம் அசைய ஆடீர் ஊசல்
சரமதனை வென்ற ஜெயக்கொடி போல் காண் முத்
தண்டு இலகு கரம் அசைய ஆடீர் ஊசல்
உரமதில் முந்நூல் அசைய ஆடீர் ஊசல்
உயர் துளவ வடம் அசைய ஆடீர் ஊசல்
வர வனச வடம் அசைய ஆடீர் ஊசல்
மணவாள மா முனிவர் ஆடீர் ஊசல்–5-

சாதுரிய மாமொழிந்த குருகை மாறன்
தமிழ்த் திருவாய் மொழியாம் பால் புணரி தன்னைக்
காதலுடன் ஞானம் எனும் மத்தை நாட்டிக்
கடைந்து அதிலே சாரமதாத் திரண்டு வந்த
மாதுரிய நாள் நூற்றந்தாதியான
வண் சுதையைத் திருமாலின் அன்பர்க்கு ஈந்து
மாதுறவோர் மாதுறவோர் தொழவே வந்த
மணவாள மா முனிவர் ஆடீர் ஊசல்–9-

பால் புணரி -திருப்பாற் கடல்
மா துறவோர் -பெரிய துறவிகளும்
மாது உறவோர் -இல்லற தர்மத்தினர்
சுதை -அம்ருதம்

பன்னிருவர் எதிராசர் உதித்த மாதம்
பகர் திரு நக்ஷத்ரத்தோடு அவர்களூர்கள்
நல் நயமாம் தமிழ் மறைக்கு இங்கு உரைகள் கூறும்
நா வலராம் ஆரியர்கள் மகிமையோடும்
உன்னும் உலகாரியனார் நூலின் சீர்மை
உணர்ந்த படி உபதேச ரத்ன மாலை
மன்னுலகில் மாலடியார்க்கு அமுதம் ஈந்த
மணவாள மா முனிவர் ஆடீர் ஊசல்–11-

சோலை திகழ் அரங்க நகர் அப்பன் அந்நாள்
தூய தமிழ் மறைக்கு வரயோகியாம் நீர்
சீலமுடன் ஈடு சேவிக்கும் போது
சீர்ச் சி சைல தயா பாத்ரம் என்றோர்
பாலகனாய் வந்து நலத் தனியன் தன்னைப்
பகர்ந்து ஏகவே அதனைத் ததீயர் யாரும்
மாலினது மொழி என்றே வழுத்தும் சீர்த்தி
மணவாள மா முனிவர் ஆடீர் ஊசல் –14-

வீற்று இருக்கும் சீர் தெய்வ நாதன் வாழி
மின்னு மணி வர மங்கை கோதை வாழி
நாற்றமுறு மகிழ் மாலை மாறன் வாழி
ஞானியராம் மற்று ஆழ்வார்கள் வாழி
மாற்றலரை வென்ற எதிராசன் வாழி
மணவாள மா முனியும் குருவும் வாழி
தோற்று புகழ் வர மங்கை யோகி வாழி
தூய மனத் ததியர்களும் வாழி வாழியே -14

ஆரியர் வாழ் வர மங்கை யோகி தன்னால்
அபி நவ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என்றும்
பேரிசை கொள் சாமி நாத ஐயராதிப்
பெரியோரால் அபி நவக் கார் மேகம் என்றும்
பேர் இசைந்தோன் சியார்ச்சைந்தான் மகுடம் கொள் நாள்
பெற்ற விரு தணிகரத்தோன் கவர்னர் கோஷன்
ஆரு வகையால் குலுக்கும் கையோன் பேரை
அனந்த கிருஷ்ணன் இயற்றினன் இவ்வூசல் பாவே –16-

சின்னக்கலியன் ராமானுஜ ஜீயர் -வானமா மலை -பட்டம் -25-சந்நிதியியில்
சாமிநாத ஐயர் சென்னை கவர்னர் கோஷன் துரை மகனார்
இவர்களும் கொண்டாடி தங்கத்தோடா பாரிஸில் பெற்றாராம் –

———-

ஸ்ரீ வர மங்கை கலம்பகம் -கவி பூஷணம் ஸ்ரீ நரசிம் மாச்சாரியார்

குணவாளார் ஆகும் எதிராசர் தாள் மிசைக்கொண்ட பக்தி
தணவாத யுள்ளத்தன் மாறன் மறைப்பொருள் தண் அரங்கர்
பண வாள் அரவணை நின்று உற்றுக் கேட்கப் பணித்த அத்தன்
மணவாள மா முனிவன் மலர்ப்பாதம் வணங்குதுமே –காப்புச் செய்யுள் –4-

தனமும் திரியும் தரணியும் வெக்கித்
தினமும் திரியும் திரிபார் -மனமே
குணவாள மா முனியை கொண்ட றொண் டனாநம்
மணவாள மா முனியை வாழ்த்து – இவர் அருளிய
சூடிக் கொடுத்த நாய்ச்சியார் ஸ்தோத்ர மாலை நூலில் காப்புச் செய்யுள் -4-

————

பெரும் தொகைப் பாசுரங்கள்

சுருதித் தமிழ் மொழியும் சடகோபர் துணை அடியைக்
கருதிப் பரவும் எதிராசன் கவி யமுதம்
வரு திக்கு அறிய வுரை செய் வர முனி வண் புகழ்ப் போய்ப்
பருதிக் கதிர் செல்லு மண்டலம் ஏறப் பரந்ததுவே –1865-

வாது செய வென்று சில வாதியர்கள் வந்து மிக மனமுறிய நிற்பர் ஒரு பால்
வாழி எனவே பெரிய சாபமற நின்று சிலர் வந்தனைகள் செய்வர் ஒரு பால்
போதும் இனி வாதம் உன பாதம் அருள் என்று அடி புகழ்ந்து சிலர் நிற்பர் ஒரு பால்
பொங்கி வரும் எங்கள் வினை மங்க அருள் என்று சிலர் போற்றி செய்து நிற்பர் ஒரு பால்
ஈதிவை கிடக்க மறை நூல் தமிழ் தெரிந்து சிலர் இன்பமுற வாழ்வர் ஒரு பால்
ஏதமற வாதுலர்கள் பேதையர் மயக்கற விறைஞ்சி யயன் நிற்பர் ஒரு பால்
மா தகவினான் உலகம் ஏழையும் அளிக்க என வந்த எதிராசன் அடி சேர்
மா முனிவர் தீபம் அருளாளு மணவாள முனி மன்னு மடம் வாழும் வளமே –1866-

மண்ணாடு வாழ வந்தான் மணவாள முனிவன் வண்மைக்
கண்ணார் அருளுக்கு இலக்காக வாழவும் கண்டவன் தன்
திண்ணார் அடிகளில் குற்றேவல் செய்து திரியவு நாம்
எண்ணாது இருக்க நடுவே நமக்கு வந்து எய்தியதே –1867-

பொன்னி தனில் குளிர் நகரம் தனில் புகுதப் பெற்றோம்
பொருவரும் சீர் நம்பெருமாள் பதம் புகழப் பெற்றோம்
மன்னிய சீர் மணவாள மா முனி என் ஐயன்
வாழ்ந்து இருக்கும் மடம் தன்னில் வந்து இருக்கப் பெற்றோம்
சென்னி தனில் அவன் அடியார் பதம் சூடப் பெற்றோம்
திருமலை ஆழ்வாரில் ஒன்றும் சிறந்து இருக்கப் பெற்றோம்
பின்னை யவர்க்கு அந்தரங்கர் பேர் அருளும் பெற்றோம்
பெரும் திவத்தில் இன்பம் இங்கே பெருகவும் பெற்றோமே –1868-

பூதூரில் வந்து உதித்த புன்னியனோ பூம் கமழும்
தாதார் மகிழ் மார்பன் தான் இவனோ -தூதூர
வந்த நெடுமாலோ மணவாள மா முனிவன்
எந்தை இவர் மூவரிலும் யார் –திரு நாராயண புரத்து ஆயி ஸ்வாமிகள் அருளிச் செய்தது –

————–

ஈதோ திருவரசு ஈதோ மணம் கொல்லை
ஈதோ திருவாலி என்னுமூர் -ஈதோ தான்
வெட்டும் கலியன் வேல் வெற்றி திருமால் எழுத்து
எட்டும் பறித்த இடம்

நாமார் பெரிய திரு மண்டபமார் நம்பெருமாள்
தாமாக என்னைத் தனித்து அழைத்து -நீ மாறன்
செந்தமிழ் வேதத்தின் செழும் பொருளை நாளும் இங்கே
வந்து யுரை என்று ஏவுவதே வாய்ந்து –

————–

வல்லார்கள் வாழ்த்தும் குருகேசர் தம்மை மனத்து வைத்துச்
சொல்லார வாழ்த்தும் மணவாள நாயனார் தொண்டர் குழாம்
எல்லாம் தழைக்க எதிராச விம்சதி இன்று அளித்தோன்
புல்லார விந்தத் திருத்தாள் இரண்டையும் போற்று நெஞ்சே –அருகில் இருந்த முதலிகள் விஞ்ஞாபித்து அருளியது –

————

ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் மா முனி மேல் அன்புப்பெருக்கு

நெடியான் அருள் சூடும் படியான சடகோபன்
அடி சேர் அடியார்க்கு அடையா இடர் தானே

அருமறை முடியினரும் பொருள் தந்த
வர வர முனியின் திருவடி வாழியே

வர வர முனி அடி வணங்கும் வேதியர்
திருவடி யிணைகள் என் சிரம் மேல் சேர்க்கவே

————

மா முனிகள் திருநாடு அலங்கரித்தது
ருதிரோத்காரி வருஷம் மாசி மாதம் கிருஷ்ண பக்ஷ துவாதசி

மஹதீ குரு பங்க்தி ஹார யஷ்ட்டி –யதி ராஜேந நிபத்த நாயக ஸ்ரீ
வேதாந்த தேசிகர் ஸர்வஞ்ஞராகையாலே -பின்னால் திருவவதரிக்கப் போகும் மா முனிகளின்
அவதாரம் அறிந்து விண்ணப்பம் செய்து
பொலிக பொலிக பொலிக என்று மங்களா ஸாஸனம் செய்து அருளினார்

ருஷீ ணாம் புனராத்யாநாம் வாஸம் அர்த்த அநு தாவதி
பெரியார் வாய் வழி சொல்லையே அர்த்தம் பின் தொடர்ந்து செல்லுமே
இவர் அருளிச் செய்ததாலேயே பெரிய பெருமாள் மா முனிகளுக்குத் தாமே சிஷ்யராக அமைந்து
குரு பரம்பரை ஹாரம் நிறைவு படச் செய்து அருளினார்

மா முனிகளின் தீர்த்த திவசத்தை இன்றும் தாமே நடத்தி வைத்து அருளுகிறார் –

——————-

வடக்கு திரு வீதிப்பிள்ளை சிஷ்யர் கிடாம்பி ஸ்ரீ ரெங்காச்சார்யார்
அவர் குமாரரும் சிஷ்யரும் கேசவாச்சார்யர்
அவர் குமாரரும் சிஷ்யரும் ஸ்ரீ நிவாஸாச்சார்யார்
அவர் குமாரரும் சிஷ்யரும் கேசவாச்சார்யர்
அவர் குமாரரும் சிஷ்யரும் ஸ்ரீநிவாஸாச்சார்யார்
இவர் திரு நாராயண புரத்தில் அவதாரம் -இவரே ஆதி வண் சடகோப யதீந்த்ர மஹா தேசிகன்
அஹோபில மட மூலஸ்தர் –
இவர் நடாதூர் அம்மாளின் திருப்பேரனான ஸ்ரீ வரத விஷ்ணு வாசர் இடம் கிரந்த காலஷேபம் பண்ணினார்
இவர் காலம் -கிபி 1379-1458

———

மா முனிகள் கலி 4472 சாதாரண வருஷம் -ஐப்பசி சுக்ல பஷ சதுர்த்தி -வியாழக்கிழமை
மூலம் நக்ஷத்ரம் திரு அவதாரம்
கி பி -1370-1443-
சிக்கில் கிடாரம் திகழக் கிடந்தான் திரு நா வீறுடைய அண்ணர் திருக்குமாரர்

இவரது திருநாமங்கள்
பெரிய ஜீயர்
சவும்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்
காந்தோ பயந்தா
வர வர முனி
வர யோகி
இராமானுசன் பொன்னடி
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்
யதீந்த்ர பிரவணர்
அழகிய மணவாள ஜீயர்
ஸ்வேத வார்னர் ஆகையால் வெள்ளை ஜீயர்

வடமதுரை ஜீர்ண உதாரணம் செய்து அருளினார்
வானமா மலை ஜீயர் பிரியாது ஆட் செய்து இருப்பார்
கோயில் கந்தாடை அண்ணன் உடையவருக்கு முதலியாண்டான் போல் பாதுகா ஸ்தாநீயர்
எரும்பி அப்பா வடுக நம்பி போல் தேவு மற்று அறியாதே அத்யந்த அபிமதர்
பட்டர் பிரான் ஜீயர் எம்பாரைப் போல் பதச்சாயா பன்னராய் இருப்பர்
அப்பிள்ளார் மட நிர்வாஹகர்
பிரதிவாதி பயங்கர அண்ணா கூரத்தாழ்வானைப் போல் உஸாத் துணை

———

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரவாதி கேசரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..

ஸ்ரீ கீதா ஸ்லோகம்-இரண்டாம் அத்தியாயம் –ஸாங்கிய யோகம்– 2-12 -ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ கீதா பாஷ்யம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் —

February 25, 2022

ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ கீதா பாஷ்யம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –
இரண்டாம் அத்தியாயம் –ஸாங்கிய யோகம்– 2-12

அஸ்தான ஸ்நேக காருண்ய தர்ம அதர்ம தியாகுலம்
பார்த்தம் ப்ரபன்ன முத்திச்ய சாஸ்திர ரவதரணம் க்ருதம்—ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–5-

காட்டக் கூடாத இடத்தில் ஸ்நேஹம் -காருண்யம் -தர்ம அதர்ம விவேகம் இல்லாமல் –மூன்று தோஷங்கள் –

நித்யாத்ம அசங்க கர்மேஹா கோசரா சாங்க்ய யோக தீ
த்வதீய ஸ்திததீ லஷா ப்ரோக்தா தந் மோஹ சாந்தயே —ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்—6-

நித்ய ஆத்ம அஸங்க கர்ம ஈஹா கோசரா – நித்யமான ஆத்ம தத்துவமென்ன, பற்றற்ற கர்மாநுஷ்டானமென்ன
இவற்றை விஷயமாகக் கொண்டதாய்,
ஸ்திததீ லக்ஷா – ஸ்திதப்ரஜ்ஞ தசையை லக்ஷியமாகக் கொண்டதான,
ஸாங்க்ய யோக தீ – ஆத்ம ஜ்ஞானமும், கர்ம யோகத்தைப் பற்றிய அறிவும்,
தந் மோஹ ஶாந்தயே – அர்ஜுனனின் மயக்கம் நீங்குவதற்காக,
த்விதீயே – இரண்டாம் அத்தியாயத்தில்,
ப்ரோக்தா – உபதேசிக்கப்படுகிறது.

சாங்க்ய யோகம் -உண்மையான அறிவு -ஆத்மாவை பற்றி
பற்றுதல் இல்லாத கர்ம யோகம் பண்ண -மோகம் மயக்கம் தீர்க்க -ஞான யோகி
கலக்க மாட்டாத-ஸ்திரமான புத்தி யுடன் -செய்வதை உபதேசிக்கிறார் –
ஞான யோகம் அடைய கர்ம யோகம் -ஆத்மாவின் நித்யத்வம் சொல்லி –

12 -30 ஆத்மா நித்யம் சொல்லி
31 –கர்ம யோகம் –53 வரை
53–72 வரை ஞான யோகம் -சொல்கிறான் –

புருஷார்த்தம் பெருமை முதலில் சொல்லி
அப்புறம் உபாயம் —

சாங்க்யம்-அறிவு -அறிவால் அறியப்படும் -ஆத்மா -என்று இங்கு பொருள்
யோகம் -நழுவாமல் நியத அனுஷ்டானம் செய்வது -கர்ம யோகம் –
இரண்டையும் பற்றின தீ ஞானம் சொல்லப்படுகிறது இதில்
அந்த அர்ஜுனனின் மோஹம் தீர்க்க
சரணாகதி செய்த அவன் -கலக்கம் போக்க –
இங்கு யுத்தம் செய்வதே இவனுக்கு வர்ணாஸ்ரம தர்மம்

எப்படிப்பட்ட தீ என்றும் இதிலே உண்டே
நித்ய ஆத்மா –
அசங்க கர்ம ஈஹா -பற்று இல்லாத -கர்மங்களின் அனுஷ்டானம் –
கோசார -இரண்டையும் விஷயமாக

லஷ்யம் என்ன
ஸ்தித தீ லஷா -நிலை நின்ற அறிவு -இதுவே ஞான யோகம் –
தீ -ப்ரதிஞ்ஞா -அடைவதே குறிக்கோள் -லஷ்யம்
புலன்களைக் கட்டுப்படுத்து த்யானம் செய்வதே –

இவை அனைத்தையும் அழகாக சுருக்கமாக சொல்லும் ஸ்லோகம் –

கீழே முதல் ஆறு அத்தியாயங்கள் சுருக்கம் பார்த்தோம்
நான்கு படிக்கட்டுகள்
1-கர்ம யோகம் -பற்று அற்ற வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானம் -மனது தூய்மை ஆக்கி பின்பு –
இதுவே மேலே செல்ல அதிகாரம் தரும்
2-ஞான யோகம் -புலன்களை அடக்கி ஜீவாத்மா சாஷாத் காரத்துக்கு அடிப்படை –
கேள்வி ஞானம் போல் இது -இதுவே -மேலே செல்ல அதிகாரம் தரும்
3-யோகம் -ஆத்ம சாஷாத்காரம் அடைவது-ஆழ்ந்த மனதில் பதிந்து – –
நித்யம் அணு சேஷத்வம் இத்யாதி ஆத்மஸ்வரூபம் நன்றாக அறிந்து -இடைவீடின்றி அனுபவம்
4-ஆத்ம அநு பூதி ஸித்த்யர்த்தே –கண்டபடியால் பிறந்த -ஆத்ம அனுபவம்

இவற்றுள் முதல் இரண்டும் இதிலே விஸ்தாரமாக உள்ளன

—————————————————-

ந த்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா—
ந சைவ ந பவிஷ்யாம ஸர்வே வயமத பரம்—৷৷2.12৷৷

ந = இல்லை
து = நீ
எவ = நிச்சயமாக
அஹம் = ஸர்வேஸ்வரனான நான்
ஜாது = முற்காலத்தில் எப்போதும்
ந = இல்லை
அஸம் = இருத்தல்
ந = இல்லை
த்வம் = நீ
ந = இல்லை
இமே = இவர்கள்
ஜநாதி⁴பா: = ஜனா + அதிபா = ஜனங்களை ஆளும் மனிதர்கள்
ந = இல்லை
எவ = நிச்சயமாக
ந = இல்லை
ப⁴விஷ்யாம: = இருப்போம்
ஸர்வே = அனைவரும்
வயம் = நாம்
அத = இதில் இருந்து, இங்கிருந்து
பரம் = எதிர் காலத்தில்

சர்வேஸ்வரனான நான் முக்காலத்தில் எப்போதும் இல்லாமல் இருந்தேன் என்பது இல்லை –
எப்போதும் நான் உள்ளவனே யாவேன்
நீயும் எப்போதும் இல்லாமல் இருந்தாய் என்பதும் இல்லை -நீயும் எப்போதும் உள்ளவனே யாவாய்
இவ்வரசர்களும் எப்போதும் இல்லாமல் இருந்தார்கள் என்பதும் இல்லை -இவ்வரசர்களும் எப்போதும் உள்ளவர்களே
நாம் அனைவரும் இதற்கு மேல் உள்ள காலத்திலும் இருக்க மாட்டோம் என்பது இல்லவே இல்லை –
நான் அனைவரும் எப்போதும் இருக்கவே போகிறோம் –

நான் நேற்றைக்கு இருந்தேன் இல்லை என்பது இல்லை –அஹம் ஜாது–ந ஆஸம் இது ந
நீ இன்று இருக்கிறாய் அல்ல என்பது இல்லை –
இரட்டை இல்லை சொல்லி திடமாக -தன்னை -அவனை -ராஜாக்களை -ஜனாதிப –

ஆத்ம நித்யம் –மற்ற புற மதங்களை போக்கி –
சஜாதீய விஜாதீய ஸூகத பேதங்கள் இல்லை என்பர் அத்வைதிகள் –
த்ரிவித நிர்விசேஷ திரிவித பேத ரஹித சின் மாத்ர ப்ரஹ்மம்
நித்யோ நித்யோனாம் சேதன சேதனாம் ஏகோ பஹு நாம் யோ விஹதாதி காமான்
நாராயணனே நமக்கே பறை தருவான் –

அனு ஷங்கமும் அத்யாஹாரமும் செய்து இந்த ஸ்லோகார்த்தம் அறிய வேண்டும்
உத்பத்தி அழிவு இல்லை
ஆத்மா -உடல் -உண்மையாக அறியும் தர்ம யுத்தம் -மூன்றும் இதில் உண்டே
அர்ஜுனனுக்கு யுத்தமே வர்ணாஸ்ரமம்
உபாயம் வழி ப்ராபகம் கர்மாநுஷ்டானம் -உபேயம் இலக்கு -ஜீவாத்மா இப்பொழுது –
பெருமையை இதில் சொல்லி -தேகத்தை விட வேறுபட்டது
இலக்குக்கு பெருமையைச் சொல்லி -ஆசை விளைக்க வேண்டுமே -ஆகவே அத்தை முதலில் சொல்ல வேண்டுமே
நாராயணனே பறை தருவான் உபதேசத்தில் பறை இலக்கு முதலில் தருவான் உபாயம் பின்பு
அனுஷ்டான வேளையில் கறவைகள் முதலில் உபாயம் சிற்றம் சிறுகாலை உபேயம் போல் உண்டே

இரண்டு ந பிரயோகம் -double negative -உறுதியாக மனதில் படி
அர்ஜுனன் வில்லாளி -சொல்லாமல் அர்ஜுனனைத் தவிர சிறந்த வில்லாளி இல்லை போல்
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் போல்
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -தேச கால வஸ்து அபரிச்சேத்யன் -அநாதி நிதான -ஸாஸ்வதம்-அநந்தன் – –
தான் நித்யம் -ஆதி அந்தம் இல்லாமல் -பிரசித்தம் -அத்தை த்ருஷ்டாந்தம் ஆக்கி -நீயும் இந்த மன்னர்களும் நித்யம்
ஜீவர்கள் அணு -இருந்தாலும் நித்யம் -பூத பவ்ய பவத் பிரபு -ஸ்வாமி
பரமாத்மா -ஸர்வேஸ்வரன் எப்போதுமே நிலையாக இருக்க வேண்டும் என்றால்
புகப்பட்ட பொருள்களும் இயக்கப்படும் பொருள்களும் நித்தியமாக இருக்க வேண்டுமே

அர்ஜுனன் அறிந்த ஒன்றை த்ருஷ்டாந்தமாகக் காட்டி
நாரதர் வியாசர் பீஷ்மர் போல்வார் உபதேசித்து உள்ளவற்றை நேராகக் கண்டேன்-
புருஷன் சாஸ்வதம் என்று விஸ்வரூபம் கண்டதும் சொல்கிறானே
ந ஸ ஸீதா அஹம் –அக்குளத்தில் மீன் என்பதற்கு இளைய பெருமாள் பிராட்டியைத் திருஷ்டாந்தம் ஆக்கினார் அன்றோ
பாஸ்கரனும் பிரபையும் போல் பிரசித்தம் -அஹம் அபி ராகவா –
நான்காம் அத்தியாயத்தில் அவதார ரஹஸ்யம் அருளிச் செய்து – தவ ச அர்ஜுன -பிரசித்தமான -அத்தை
த்ருஷ்டாந்தம் ஆக்கி -உனக்கு உள்ள பிறவிகள் போல் பஹு –ஜென்மம் –
உனக்கு கர்மாதீனம் -எனக்கு கிருபாதீனம் -அப்ராக்ருதம் -என்று காட்டி அருளுகிறார் –

நான் முற்காலத்தில் இல்லாமல் இருந்தேன் என்பது இல்லை
நீ முற்காலத்தில் இல்லாமல் இருந்தாய் என்பது இல்லை
இந்த அரசர்களும் முற்காலத்தில் இருந்தார்கள் என்பது இல்லை
ஆஸம் -சொல்லுக்கு இவ்வாறு மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும்
ந ஆஸீ -ந ஆஸந் -அத்யாஹாரம் இங்கு
ஜாதி -அனுஷங்கம்
அனுஷங்கம் -முன் இடத்தில் உள்ள சொற்களை மேல் சேர்த்து சொல்வது
அத்தியாஹம் -புதிதாக சேர்த்துக் கொள்வது -தருவித்து கொள்வது

முற்காலத்தில் இல்லை என்றது உத்பத்தி இல்லை
பிற்காலத்தில் -ஸர்வே வயம்- நாம் அனைவரையும் இருக்க மாட்டோம் என்பது இல்லை -அழிவும் இல்லை –
நிகழ் காலம் சொல்லவில்லையே என்றால்
கத்யத்திலும் -அன்ருதம் ந உக்த பூர்வம் ந வஷ்யே -முன்பும் பொய் சொல்ல இல்லை
பின்பும் பொய் சொல்லப்போவது இல்லை -ஸுக்ரீவனுக்கு பெருமாள் சொன்ன
ராமனுக்கு இரண்டாவது பேச்சு இல்லை மேலும் சொல்லி -ராமோ -த்விர் ந பாஷதே –
நிகழ் காலத்தை வரும் காலத்தில் இறந்த காலத்திலும் சேர்க்கலாம் அன்றோ என்றுமாம்

12-38 ஸ்லோகம் வரை சாங்க்யம் அர்த்தம்
மேல் கர்மயோகம்
தத்வம் -உண்மைப்பொருள் -தத்வ ஞானம் மோக்ஷம் அஞ்ஞானம் ஸம்ஸாரம்
அத்வைதிகள் ஒரே தத்வம் -சாங்க்யர் இரண்டு -நம் சம்ப்ரதாயம் தத்வ த்ரயம்
தத்வம் அஸி -சர்வம் கலு இதம் ப்ரஹ்மம் அபேத சுருதிகள்
போக்தா போக்யம் ப்ரேரி தாரம் ச மத்வா -ஷரம் அக்ஷரம் -பேத ஸ்ருதிகள்
அஹம் ப்ரஹ்மாஸ்மி -அவன் எனக்குள் ஆத்மா –யஸ்ய ப்ருத்வீ சரீரம் யஸ்ய ஆத்மா சரீரம் -கடக ஸ்ருதி
இந்த ஸ்லோகம் தத்வ த்ரயங்களையுமே சொல்லுமே

ருஜு ஆர்ஜவம் -சூர்ப்பணகை இடம் கூட -இவனோ கிருஷ்ணாஸ்ரய இத்யாதி -கலக்கம் போக்க உபதேசம்
தேஹாத்ம அபிமானம் போக்கி
ஜீவ பரமாத்ம பேதமும் -நீ இவர்கள் -ஜீவ பேதமும்-காட்டி அருளி
உடல் முற்காலத்தில் இல்லாமல் இருந்ததே-பிற் காலத்தில் அழியப்போகிறது –
நேராக இது பற்றி ஸ்லோகத்தில் இல்லை என்றாலும் உள்ளுறைப் பொருள் உண்டே –
இவ்வாறு தத்வ த்ரய உபதேசம் பண்ணி அருளுகிறார் –

நான் அறிகிறேன் என்னுடைய உடல் -உத்திகளும் வாசியைக் காட்டுமே
ப்ரத்யக்ஷம் கொண்டு அசேதனம் அறிகிறோம்
அனுமானம்
சப்தம் வேதம் கொண்ட ஜீவ பரமாத்ம ஞானம் பெறுகிறோம் –
இந்த்ரியங்களைக் கொண்டு அறிகிறோம் -அவற்றுக்கு அறிவு இல்லையே
கரணம் கருவி என்று சொன்னாலே கர்த்தா இருக்க வேண்டுமே -இந்திரியங்களுக்கு அதிஷ்டானம் இயக்க ஜீவாத்மா வேண்டுமே
நியாய மதத்தால் அனுமானத்தால் மட்டும் ஈஸ்வரனை அறியலாம்
உண்டாக்கியவன் -குயவன் குடத்துக்கு -போல் என்பர் –
ஸாஸ்த்ர யோநித்வாத் -நம் ஸம்ப்ரதாயம் –
பாதக ஞானம் கொண்டு -கயிறு பாம்பு இல்லை அறிவது -மஞ்சள் காமாலை -காரணமாகவும் தப்பாக க்ரஹிக்கலாம் –

ந ஜாயதே ம்ருத்யதே வேதமும் ஆத்மா நித்யம் என்பதைக் காட்டும்
அனைவருக்கும் ஒரே ஆத்மா என்றால் ஒருவர் துக்கமும் சுகமும் படக் கூடாதே
கூடிற்றாகில் நல்லுரைப்பு -கூடாமையைக் கூடினால் –அது அதுவே -ஸாம்யம் என்பது ஓன்று அல்ல –
ஆனந்தத்தில் ஸாம்யம் -ஸாலோக்யம் சாரூப்பியம் -சாயுஜ்யம்
பரமம் ஸாம்யம் உபைதி-கர்ம பந்தம் அற்று -ஸ்வ ஸ்வரூபம் ஆவிர்பாவம் பெற்று –
நிகர் ஸாம்யம் சொன்னாலே இரண்டு வியக்தி இருக்க வேண்டுமே

———-

৷৷2.12৷৷ அஹஂ ஸர்வேஷ்வரஃ தாவத் அதோ வர்தமாநாத் பூர்வஸ்மிந் அநாதௌ காலே
ந நாஸம் அபி து ஆஸம். த்வந்முகாஃ ச ஏதே ஈஷிதவ்யாஃ க்ஷேத்ரஜ்ஞா
ந நாஸந் அபி த்வாஸந். அஹஂ ச யூயஂ ச ஸர்வே வயமதஃ பரம் அஸ்மாத் அநந்தரே காலே
ந சைவ ந பவிஷ்யாமஃ அபி து பவிஷ்யாம ஏவ.

யதா அஹஂ ஸர்வேஷ்வரஃ பரமாத்மா நித்ய இதி ந அத்ர ஸஂஷயஃ,
ததைவ பவந்தஃ க்ஷேத்ரஜ்ஞா ஆத்மாநஃ அபி நித்யா ஏவ இதி மந்தவ்யாஃ.
ஏவஂ பகவதஃ ஸர்வேஷ்வராத் ஆத்மநாஂ பரஸ்பரஂ ச பேதஃ பாரமார்திகஃ,
இதி பகவதா ஏவ உக்தம் இதி ப்ரதீயதே. அஜ்ஞாநமோஹிதஂ ப்ரதி தந்நிவரித்தயே
பாரமார்திகநித்யத்வோபதேஷஸமயே’அஹம்”த்வம்”இமே”ஸர்வே”வயம்’ இதி வ்யபதேஷாத்.

ஔபாதிகாத்மபேதவாதே ஹி ஆத்மபேதஸ்ய அதாத்த்விகத்வேந தத்த்வோபதேஷஸமயே பேதநிர்தேஷோ ந ஸஂகச்சதே.
பகவதுக்தாத்மபேதஃ ஸ்வாபாவிகஃ, இதி ஷ்ருதிஃ அபி ஆஹ
‘நித்யோ நித்யாநாஂ சேதநஷ்சேதநாநாமேகோ பஹூநாஂ யோ விததாதி காமாந்.’ (ஷ்வேதா0 6.13) இதி.

நித்யாநாஂ பஹூநாஂ சேதநாநாஂ ய ஏகஃ சேதநோ நித்யஃ ஸ காமாந் விததாதி இத்யர்தஃ.
அஜ்ஞாநகரிதபேததரிஷ்டிவாதே து பரமபுருஷஸ்ய பரமார்ததரிஷ்டேஃ
நிர்விஷேஷகூடஸ்தநித்யசைதந்யாத்மயாதாத்ம்யஸாக்ஷாத்காராத் நிவரித்தாஜ்ஞாநதத்கார்யதயா
அஜ்ஞாநகரிதபேததர்ஷநஂ தந்மூலோபதேஷாதிவ்யவஹாராஃ ச ந ஸஂகச்சந்தே.

அத பரமபுருஷஸ்ய அதிகதாத்வைதஜ்ஞாநஸ்ய பாதிதாநுவரித்திரூபம் இதஂ பேதஜ்ஞாநஂ
தக்த படாதிவத் ந பந்தகம் இதி உச்யேத, ந ஏதத் உபபத்யதே;
மரீசிகாஜலஜ்ஞாநாதிகஂ ஹி பாதிதம் அநுவர்தமாநம் அபி ந ஜலாஹரணாதிப்ரவரித்திஹேதுஃ.
ஏவம் அத்ர அபி அத்வைதஜ்ஞாநேந பாதிதஂ பேதஜ்ஞாநம் அநுவர்தமாநம் அபி மித்யார்தவிஷயத்வநிஷ்சயாத்
ந உபதேஷாதிப்ரவரித்திஹேதுஃ பவதி. ந ச ஈஷ்வரஸ்ய பூர்வம் அஜ்ஞஸ்ய ஷாஸ்த்ராதிகததத்த்வஜ்ஞாநதயா
பாதிதாநுவரித்திஃ ஷக்யதே வக்தும்;

’யஃ ஸர்வஜ்ஞஃ ஸர்வவித்’ (மு0 உ0 2.1.9)
பராஸ்ய ஷக்திர்விவிதைவ ஷ்ரூயதே ஸ்வாபாவிகீ ஜ்ஞாநபலக்ரியா ச.’ (ஷ்வேதா0 6.8)’
வேதாஹஂ ஸமதீதாநி வர்தமாநாநி சார்ஜுந. பவிஷ்யாணி ச பூதாநி மாஂ து வேத ந கஷ்சந৷৷’ (கீதா 7.26)
இதி ஷ்ருதிஸ்மரிதிவிரோதாத்.

கிஂ ச பரமபுருஷஷ்ச இதாநீந்தநகுருபரம்பரா ச அத்விதீயாத்மஸ்வரூபநிஷ்சயே ஸதி அநுவர்தமாநே
அபி பேதஜ்ஞாநே ஸ்வநிஷ்சயாநுரூபம் அத்விதீயம் ஆத்மஜ்ஞாநஂ கஸ்மை உபதிஷதி இதி வக்தவ்யம்.
ப்ரதிபிம்பவத்ப்ரதீயமாநேப்யஃ அர்ஜுநாதிப்யஃ இதி சேத், ந ஏதத் உபபத்யதே;
ந ஹி அநுந்மத்தஃ கோபி மணிகரிபாணதர்பணாதிஷு ப்ரதீயமாநேஷு ஸ்வாத்மப்ரதிபிம்பேஷு தேஷாஂ
ஸ்வாத்மநஃ அநந்யத்வஂ ஜாநந் தேப்யஃ கமபி அர்தம் உபதிஷதி.

பாதிதாநுவரித்திஃ அபி தைஃ ந ஷக்யதே வக்தும்; பாதகேந அத்விதீயாத்மஜ்ஞாநேந
ஆத்ம வ்யதிரிக்தபேதஜ்ஞாநகாரணஸ்ய அஜ்ஞாநாதேஃ விநஷ்டத்வாத்.
த்விசந்த்ரஜ்ஞாநாதௌ து சந்த்ரைகத்வஜ்ஞாநேந பாரமார்திகதிமிராதிதோஷஸ்ய த்விசந்த்ரஜ்ஞாநஹேதோஃ
அவிநஷ்டத்வாத் பாதிதாநுவரித்திஃ யுக்தா. அநுவர்தமாநம் அபி ப்ரபலப்ரமாணபாதிதத்வேந அகிஞ்சித்கரம்.

இஹ து பேதஜ்ஞாநஸ்ய ஸவிஷயஸ்ய ஸகாரணஸ்ய அபாரமார்திகத்வேந
வஸ்து யாதாத்ம்யஜ்ஞாநவிநஷ்டத்வாத் ந கதஞ்சித் அபி பாதிதாநுவுத்திஃ ஸஂபவதி.
அதஃ ஸர்வேஷ்வரஸ்ய இதாநீந்தநகுருபரம்பராயாஃ ச தத்த்வஜ்ஞாநம் அஸ்தி சேத்
பேததர்ஷந தத்கார்யோபதேஷாத்யஸஂபவஃ. பேததர்ஷநமஸ்தி இதி சேத்,

அஜ்ஞாநஸ்ய தத்தேதோஃ ஸ்திதத்வேந அஜ்ஞத்வாத் ஏவ ஸுதராம் உபதேஷோ ந ஸஂபவதி.
கிஂ ச குரோஃ அத்விதீயாத்மவிஜ்ஞாநாத் ஏவ ப்ரஹ்மாஜ்ஞாநஸ்ய ஸகார்யஸ்ய விநஷ்டத்வாத் ஷிஷ்யஂ
ப்ரதி உபதேஷோ நிஷ்ப்ரயோஜநஃ. குருஃ தஜ்ஜ்ஞாநஂ ச கல்பிதம் இதி சேத்,

ஷிஷ்யதஜ்ஜ்ஞாநயோஃ அபி கல்பிதத்வாத் ததபி அநிவர்த்தகம். கல்பிதத்வேபி பூர்வவிரோதித்வேந நிவர்த்தகம் இதி சேத்,
ததாசார்யஜ்ஞாநேபி ஸமாநம் இதி தத் ஏவ நிவர்தகஂ பவதி, இதி உபதேஷாநர்தக்யம் ஏவ;
இதி கரிதம் அஸமீசீநவாதைஃ நிரஸ்தைஃ.

———–

৷৷2.12৷৷ஏவமுபாயோபேயநிவர்த்யஸ்வபாவாநபிஜ்ஞஂ ப்ரதி த்ரிதயோபதேஷாய புபுத்ஸோத்பாதிதா;
அத பாரலௌகிகபலோபாயாநுஷ்டாநாதிகாரித்வாய தேஹாதிரிக்தத்வேநாவஷ்யஂ ஜ்ஞாதவ்யஂ
புருஷார்ததயோபேயமாத்மாநஂ தத்ப்ராப்தீச்சாமுகேந ததுபாயேச்சாஜநநாய
ப்ரதமமேவோபதிஷதீத்யபிப்ராயேணாஹ ‘ப்ரதமமிதி’.’ஷரிண்வித்யநேந’ ப்ரகரிதஷ்லோகஸ்ய
ப்ரதிவாதிவாக்யவதுபாலம்பமாத்ரார்ததாவ்யுதாஸாய அவதாநாபாதநார்தத்வஂ வ்யஞ்ஜிதம்.

ஜீவேஷ்வரரூபேஷ்வாத்மஸு நித்யத்வே ஷீக்ரஸம்ப்ரதிபத்தியோக்யாஂஷஂ ப்ரதமமாஹேத்யபிப்ராயேணாஹ ‘அஹமிதி’.
ஈஷ்வரஸ்யாஹங்க்ரஹஃ ஸர்வநியந்தரித்வகர்ப இதி தத்வ்யபதேஷபலிதமாஹ
‘ஸர்வேஷ்வர’ இதி.’தாவதிதி’ ஸம்ப்ரதிபத்திஸூசநம்.’அதஃ பரம்’ இத்யத்ர அதஷ்ஷப்தார்தஂ,
தஸ்ய பூர்வவாக்யேபி யதார்ஹமநுஷங்கஂ, ஜாதுஷப்தாபிப்ரேதஂ ச ஆஹ ‘அத’ இத்யாதிநா.
அநபிமதபக்ஷநிஷேதாய வ்யதிரேகரூபேபி வாக்யே துஷப்தத்யோதிதமந்வயமாஹ
‘அபித்வாஸமிதி’.’ந த்வஂ நேமே’ இதி பேதநிர்தேஷேபி க்ஷேத்ரஜ்ஞத்வாகாரேண ஸமுதாயீகுர்வந்,

ஈஷ்வராபேக்ஷயா யுஷ்மதிதஂஷப்தார்ததயா பலிதமீஷிதவ்யத்வாகாரஂ ச ஸாதாரணஂ தர்ஷயந்,
ஸந்நிஹிதநிதர்ஷநபராயா ஏகதேஷோக்தேஸ்தாத்பர்யதோ ப்ரஹ்மாதிஸகலக்ஷேத்ரஜ்ஞவிஷயத்வஂ சாஹ ‘த்வந்முகா’ இதி.
துஷப்தாநுஷங்கஂ க்ரியாபதே விபக்திவிபரிணாமஂ ச தர்ஷயதி
‘அபித்வாஸந்நிதி’.
’ந த்வஂ நேமே ஜநாதிபாஃ’ இத்யத்ர’ந த்வேவ’ இத்யேததநுஷஜ்ய, ந த்வஂ நாஸீஃ,
நேமே ஜநாதிபா நாஸந் இத்யந்வயஃ.’ஸர்வே வயம்’ இத்யஸ்ய
பூர்வோக்தஜீவேஷ்வரஸமுதாயே ஸம்ப்ரதிபத்தவ்யாஂஷஂ விவிநக்தி ‘அஹஂ சேதி’.
’த்யதாதீநாஂ மிதஃ ஸஹோக்தௌ யத்பரஂ தச்சிஷ்யதே’ வார்திகஂ.அஷ்டா.1.2.72
இதி யுஷ்மதஸ்பதோரத்ரைகஷேஷஃ. ஏவமுத்தரத்ர’பவந்தஃ’ இத்யத்ராபி மந்தவ்யம்.
காலாநந்த்யாத் பர்வதாதீநாமிவாதிஸ்திராணாமபிகதாசித் நாஷஃ ஸ்யாதித்யுத்ப்ரேக்ஷாஂ நிவாரயதி ‘அபிது பவிஷ்யாம ஏவேதி’.

அப்ரஸ்துதஸ்வநிர்தேஷஸ்ய தரிஷ்டாந்தார்ததாஂ தத்ர’அஹமிதி’
நிர்தேஷாபிப்ரேதஸர்வேஷ்வரத்வ-ஸர்வாத்மத்வ-ரூபநித்யத்வோபபத்திஂ,
தார்ஷ்டாந்திகே ச நித்யத்வஸம்பாவநாமாஹ ‘யதேதி’.’ஸர்வேஷ்வரஃ’
காலத்ரயவர்திநஃ ஸர்வஸ்யாதிபதிஃ கதஂ ந காலத்ரயவர்தீ, கதஂ ச ஸர்வேஷாஂ நியந்தா கேநசித்கதாசிந்நிருத்த்யேத?
இதி பாவஃ.’பரமாத்மா’ ‘தேஷகாலஸ்வரூபாநவச்சிந்நவ்யாப்திஃ’
இதி பரமாத்மபதநிருக்திஃ. ததா ச வ்யாப்தத்வாத் வ்யாப்யைரஸ்ய ந நாஷஃ,
ஸர்வாத்மத்வேந ஸர்வகாலவர்தித்வஂ ச ஸித்தமிதி பாவஃ.

நநு யஃ ப்ரத்யக்ஷயோக்யே தேஹாதிரிக்தே ஜீவேபி ஸஂஷேதே, ஸ கதஂ ததோ வ்யதிரிக்தேத்யந்தாகோசரே பரமாத்மநி
நிஃஸஂஷயஃ ஸ்யாத்? உச்யதே ந ஹ்யஸாவர்ஜுநஃ,’புருஷஂ ஷாஷ்வதஂ திவ்யம்’ 10.12 இத்யாதேஃ
ஸ்வயஂ வக்தா நாரதாஸிததேவலவ்யாஸாதிபரமர்ஷிஷதவசநவிதிதபரப்ரஹ்மபூதபரமபுருஷஸ்வபாவஃ,
ப்ரத்யக்ஷீகரிதபுரந்தரலோகஸகலாஸ்த்ரமந்த்ரதபஃப்ரபாவாதிஃ, நிரதிஷயகுருதேவதாபக்திஃ,
அஸ்கலிதஸகலவர்ணாஷ்ரமாசாரஃ, தர்மலோபபயவிஹ்வலஃ,
தேஹாதிரிக்தமாத்மாநமீஷ்வரஂ சாத்யந்தாநித்யதயா வா நாஸ்தீதி ப்ராம்யதி ஸஂஷேதே வா.
தத்ப்ரகாரவிஷேஷாநபிஜ்ஞதயைவ ஹி தஸ்ய ஷோகாதிஃ. ததோயமீஷ்வரஂ தந்நித்யதாஂ ச
ஸர்வேஷ்வரத்வாதிஸித்தாஂ ஸாமாந்யதோ மந்யதே; லோகதரிஷ்ட்யா ஜந்மவிநாஷாதிதர்ஷநாத்.
“ந ப்ரேத்ய ஸஂஜ்ஞாஸ்தி” பரி.உ.2.4.12 இத்யாதிஷ்ருத்யர்தாபாதப்ரதீத்யா ச ஜீவப்ரகார விஷேஷாஂஸ்தத்த்வதோ
ந ஜாநாதீதி ந கஷ்சித்தோஷஃ.’க்ஷேத்ரஜ்ஞா ஆத்மாந’ இதி யதா ஜீவாத் பரமாத்மநோ வைலக்ஷண்யேந
ஜீவஸ்வபாவாஸ்தஸ்மிந்ந பவந்தி, ததா க்ஷேத்ராத்விலக்ஷணத்வேந வக்ஷ்யமாணேந
க்ஷேத்ரகதமநித்யத்வாதிகஂ தந்நியந்தரி ஜீவே ந ஷங்கநீயமிதி பாவஃ.

அத குமதிஸௌசிகவிநிர்மிதாநாமாமூலசூடமகடிதவிகடிதஜரத்கர்படஷகலகந்தாஸகந்தாநாஂ ப்ரபந்தாநாஂ தோஷாந்
ஸ்தாலீபுலாகந்யாயேந நிதர்ஷயந், ப்ரதமஂ ஷாஸ்த்ரோபக்ரமவிரோதஂ ஷாஸ்த்ரப்ரவரித்த்யநுபபத்திஂ ச வததி
‘ஏவமித்யாதிநா’. ஏவஂ தத்த்வோபதேஷப்ரவரித்தஷாஸ்த்ராரம்போக்திப்ரகாரேணேத்யர்தஃ.
’பகவதஃ ஸர்வேஷ்வராதிதி’. உபயலிங்காத் ஸர்வநியந்துஃ அஹமிதி நிர்திஷ்டாதித்யர்தஃ.
யதீஷ்வராஜ்ஜீவாநாஂ பேதஃ பாரமார்திகோ ந ஸ்யாத், உபயலிங்கத்வதுஃகித்வாதிஸ்வபாவஸங்கரஃ ஸ்யாத்,
யதி சாத்மநாஂ மிதோபேதஃ ஸத்யோ ந ஸ்யாத், பத்தமுக்தஷிஷ்யாசார்யாதிவ்யவஸ்தாநுபபத்திஃ ஸ்யாதிதி பாவஃ.
’பகவதைவ’ ந து ரத்யாபுருஷகல்பேந கேநசித்.
யத்வா’த்வமேவ த்வாஂ வேத்த, யோஸி ஸோஸி’ யஜுஃகாடகே1ப்ர.6
“ஸோ அங்க வேத யதி வா ந வேத” றக்ஸஂ.8.7.11
இத்யுக்தேர்பகவதா ஸ்வேநைவ ஸ்வஸ்ய ஸ்வஷரீரபூதஜீவாநாஂ ச தத்த்வமுக்தமிதி ப்ரதீயத இத்யபிப்ராயஃ.

‘அஜ்ஞாநமோஹிதமிதி’ ந ஹி ஸ்வயஂ பம்ப்ரம்யமாணஸ்யாப்தேநாபி ப்ராந்திரேவோத்பாதநீயேதி பாவஃ.
புத்தாத்யவதாரேணாஸுராதிப்ய இவாயஂ உபதேஷஃ கிஂ ந ஸ்யாதித்யத்ரோக்தஂ’தந்நிவரித்தய’ இதி.
மோஹநிவரித்த்யர்தா கீதோபநிஷதிதி பவத்பிரபி ஸ்வீகரித்ய வ்யாக்யாநாதி ச கரிதமிதி பாவஃ.
’தேஹபேதாபிப்ராயேண பஹுவசநம், நாத்மபேதாபிப்ராயேண’ இதி’ஷங்கரோக்தஂ’ தூஷயதி ‘பாரமார்திகேதி’. ந ஹ்யஸௌ’ந த்வேவாஹம்’ இத்யாதிக்ரந்தோ ப்ராந்திநிவரித்த்யர்தோ மந்த்ரபாடஃ, யேந பேதநிர்தேஷஸ்யாந்யபரதாஂ மந்யேமஹி; கிந்த்வஸௌ தத்த்வார்தோபதேஷரூப இதி பாவஃ.’அஹம்’ இதி ப்ரத்யக்த்வேந,’த்வம்’ இதி ஸ்வாபிமுகசேதநாந்தரத்வேந,’இமே’ இதி ஸ்வபராங்முகாநேகசேதநத்வேந,’ஸர்வே’ இதி ஏகோபாதிஸங்கரிஹீதாநேகவ்யக்தித்வேந,’வயம்’ இதி ஸ்வேந ஸஹாத்மதயைகவர்கீகரிதாநந்தவ்யக்தித்வேந இதி பாவஃ.’இதி வ்யபதேஷாதிதி’ ந ஹ்யத்ர நாஹமிதி கஷ்சிதஸ்தி, ந ச த்வமிதி நாப்யந்ய இதி ப்ரத்யாதேஷஃ கரித இதி பாவஃ. பாஸ்கரமதே பேதஸ்ய ஸத்யோபாதிப்ரயுக்தத்வாத் பேதநிர்தேஷ உபபத்யத இதி ஷங்காயாஂ தத்ராபி ஸாமாந்யத உக்தஂ தூஷணமபரிஹார்யமித்யாஹ ‘ஔபாதிகேதி’.’ஹிஷப்த’ உபாதிபேதோபஹிதஸ்ய பரோக்தகடாகாஷாத்யுதாஹரணேஷ்வபி பேதாஂஷாதாத்த்விகத்வாப்யுபகமபரஃ. உபாதிஸத்யத்வேபி யதைகஸ்யைவ முகசந்த்ராதேர்மணிகரிபாணஸரித்ஸமுத்ராதிபிஃ ஸத்யைரப்யுபாதிபிர்பேதோபாரமார்திகஃ, யதா சைகஸ்யைவாகாஷாதேர்கடமணிகாதிஸத்யோபாதிபிரபி ஸஂயோகபேதாதிரிக்தோ நோபாத்யதீநோ பேதஃ, ஏவமந்தஃகரணாதிபிஃ ஸத்யைரப்யுபாதிபிர்நிரவயவத்வேந சேதநபேதநாத்யயோக்யஸ்ய ஸர்வத்ர பரிபூர்ணஸ்ய ப்ரஹ்மணோ பேதோபாரமார்திக இத்யப்யுபகந்தவ்யம். ததஷ்ச தத்த்வோபதேஷஸமயே தத்விபரீதோபதேஷோ ஹிதோபதேஷிநோ ந கடத இதி பாவஃ.

த்வயோரபி பக்ஷயோஃ ஷ்ருதிவிரோதோபி தூஷணம், ஸ்வபக்ஷே ச ஷ்ருத்யைகார்த்யாந்ந புத்தாகமாதிவந்மோஹநார்தத்வஷங்கேத்யபிப்ராயேணாஹ ‘பகவதிதி’. யத்வா பாஸ்கரபக்ஷதூஷணாயைவ ஷ்ருதிருபாத்தா; ததஷ்ச கைமுத்யேந ஷங்கரபக்ஷோபி தூஷிதஃ. அபிஷப்தஃ ப்ரமாணத்வயஸமுச்சயே.’பகவதுக்தாத்மபேத’ இத்யநேந ஷ்ரௌதவதேவ ப்ரமாணாந்தரநைரபேக்ஷ்யஂ ஸூச்யதே. ஷ்ருதிரபி நித்யா ததாஜ்ஞாரூபதயைவ ஹி ப்ரமாணம். “நித்யோ நித்யாநாம்” ஷ்வே.உ.6.13 இத்யத்ராபி’பவித்ராணாஂ பவித்ரம்’ ம.பா.13.149.10 இத்யாதிவத்யோஜநயா ஜீவாநித்யத்வபர்யவஸிதமர்தாந்தரப்ரமஂ நிரஸ்யந், நித்யத்வபஹுத்வசேதநத்வஸாமாநாதிகரண்யேந நிருபாதிகமேவாத்மநாஂ பஹுத்வஂ சேதநத்வஂ சேதி ப்ரதர்ஷயந், தத ஏவாத்மாநித்யத்வவாதிநாஂ ஸௌகதாதீநாஂ அவித்யாதிமூலபேதவாதிநாஂ ஷங்கராதீநாஂ ஆகமாபாயிசைதந்யவாதிநாஂ வைஷேஷிகாதீநாஂ சிச்சக்திமாத்ரநித்யத்வவாதிநாமந்யேஷாமபி நிராஸமபிப்ரயந், ப்ரதமாந்தபதசதுஷ்டயஸாமாநாதிகரண்யபலாதீஷ்வரைக்யஂ ததைக்யஸ்ய ஹிரண்யகர்பருத்ரேந்த்ராதிவத்காலாதிபேதாபேத்யத்வேந ப்ரவாஹேஷ்வரபக்ஷப்ரதிக்ஷேபஂ ஷ்ருத்யந்தராதிப்ரஸித்தநித்யசைதந்யஂ ப்ரஸராதிகஂ ச ஸூசயந்,’யதாக்நேயஃ’ யஜுஃ3.9.17 இத்யாதிவதநுவாதலிங்கஸத்பாவேப்யப்ராப்தத்வபலேந விஷிஷ்டவிதித்வஂ ச வ்யஞ்ஜயந், ஸர்வதா ஸர்வத்ர ஸர்வேஷாஂ சேதநாநாமேக ஏவேஷ்வரஸ்தத்தத்கர்மஸமாராதிதஸ்தத்ததநுரூபாண்யபேக்ஷிதாநி கரோதீதி ஷ்ருத்யர்தமாஹ ‘நித்யாநாமிதி’.
புநஃ ஸிஂஹாவலோகிதேந ஷங்கரமதஸ்யோபதேஷாநுபபத்திரூபஂ ஷாஸ்த்ராரம்பமூலகாதமாஹ ‘அஜ்ஞாநேதி’. கிமயஂ பகவாந் ஸ்வேந ஜ்ஞாதமர்தமுபதிஷதி, அஜ்ஞாதஂ வா? ஜ்ஞாதமபி ஸாக்ஷாத்கரிதம், ஷ்ருதமாத்ரஂ வா? உபயத்ராபி ததஜ்ஞாநஂ நிவரித்தம், அநிவரித்தஂ வா? தந்நிவரித்தாவபி தத்கார்யபேதப்ரமோ நிவர்ததே, ந வா? இதி விகல்பமபிப்ரேத்ய ஸாக்ஷாத்காராதஜ்ஞாநதத்கார்யநிவரித்திபக்ஷே தூஷணமாஹ ‘பரமபுருஷஸ்யேதி’. க்ஷேத்ரஜ்ஞஸ்ய ஹி அபரமார்ததரிஷ்டிஃ ஸ்யாதிதி பாவ.’நிர்விஷேஷேத்யாதி’ நிர்விஷேஷத்வஂ ஸஜாதீயவிஜாதீயஸ்வகதபேதராஹித்யம், கூடஸ்தத்வஂ மாயாநிஷ்டத்வஂ, ஸாதாரண்யஂ நிர்விகாரத்வஂ வா. ஸ்வயமவிக்ரியமாணஸ்யாபி கூடஸ்ய யதா ஸ்வஸஂஸர்கிணாமயஃப்ரபரிதீநாஂ விகாரஹேதுத்வஂ தத்வத் தத ஏவ

‘நித்யத்வஂ’ காலாநவச்சிந்நத்வம்.’யாதாத்ம்யம்’ உக்தப்ரகாரம்; அயதாஸாக்ஷாத்காரோஸ்மதாதீநாமபி பரைரப்யுபகத இதி தத்வ்யுதாஸாய’யாதாத்ம்யஸாக்ஷாத்காரோக்திஃ’. அஜ்ஞாநஂ அவித்யா; தத்கார்யஂ பேதப்ரமஃ. ஆதிஷப்தேநாநுஷ்டாபநாதி கரிஹ்யதே. உபதேஷாதிவ்யவஹாரோ ஹி உபதேஷ்யார்த தத்வாசகாதிகாரிஷிஷ்யாசார்யப்ரயோஜநபேதாதிநாநாவிதபேததர்ஷநமூலஃ. பேததர்ஷநஂ சாஜ்ஞாநேநைவ கரிதமிதி த்வந்மதம். ததஷ்சாஜ்ஞாந தத்கார்யநிவரித்தௌ கதஂ தத்கார்யபரம்பராநுவரித்திரிதி வ்யாகாதாபஸித்தாந்தஷாஸ்த்ராநாரம்போபதேஷாபாவநிஷ்பலபரிஷ்ரமத்வஷ்ருதிவிரோதாதிதோஷஷதமுந்மிஷேதிதி பாவஃ.
அத்வைதஜ்ஞாநாதஜ்ஞாநநிவரித்தாவபி வாஸநாதிவஷாத்பேதப்ரமஸ்யாநுவரித்திஂ தஸ்ய சாபந்தகத்வமாஷங்கதே ‘அதேதி’.’தக்தபடாதிவதிதி’ யதா தக்தபடாதேஃ படாதிப்ரதிபாஸவிஷயத்வேபி ந படாதிகார்யகரத்வம், தத்வதத்ர பேதப்ரமஸ்யாநுவரித்தஸ்யாபி ந ஸஂஸாரஹேதுத்வமிதி பாவஃ.’நைததுபபத்யதே’ இதி ‘தரிஷ்டாந்தமாத்ரமுக்தஂ, நதூபபத்திஃ, ப்ரத்யுதாநுபபத்திஷ்ச வித்யத இதி பாவஃ. அநுபபத்திஂ ஸோதாஹரணாமாஹ ‘மரீசிகேதி’. ஏவமத்ர ப்ரஸங்கஃ விப்ரதிபந்நபேதஜ்ஞாநமத்வைதஜ்ஞாநபாதிததயா மித்யார்தவிஷயமிதி நிஷ்சிதஂ சேத், ந ஸ்வவிஷயாநுரூபப்ரவரித்திஹேதுஃ ஸ்யாத்; யதா பாதிதாநுவரித்தஂ மரீசிகாஜலஜ்ஞாநம் இதி. ஏவஂ ச பாதிதாநுவரித்தபேதஜ்ஞாநஂ தக்தபடாதிவத் ந ஸ்வகார்யகரமிதி பாதிதாநுவரித்திபலாபாவாத் ஸ்வேஷ்டவ்யாகாத இதி பாவஃ. ஷ்ருதமாத்ரபக்ஷேபி நிர்விஷேஷவிஷயஸாக்ஷாத்காரஷ்ரவணயோர்விஷயாநதிரேகேணாஜ்ஞாநநிவரித்திரநுபபந்நேதி கரித்வாத ஸர்வேஷ்வரே பாதிதாநுவரித்திஸ்வரூபஂ தூஷயதி ‘ந சேதி’. ஈஷ்வரத்வாதேவ பூர்வமஜ்ஞ இதி வக்துஂ ந ஷக்யதே, அநீஷ்வரத்வப்ரஸங்காத். ஈஷ்வரோபி சேத் பூர்வமஜ்ஞஃ, தஸ்ய ஷாஸ்த்ராதிகமோபி ந ஸம்பவதி, தததிகஜ்ஞாநவதோந்யஸ்ய ஷாஸ்த்ரோபதேஷ்டுரபாவாத். பாவேபி ஸ ஏவேஷ்வரோநீஷ்வரோ வா ஸந் குதஃ ஸித்தஜ்ஞாந இத்யநவஸ்தாதிதோஷாத். ந ச ப்ரவாஹேஷ்வரபாரம்பர்யமஸ்தி, தஸ்ய தூஷிதத்வாத். ந சேஷ்வரஃ ஸ்வகரிதேந ஷாஸ்த்ரேண தத்த்வமவகச்சதி, வேதாநித்யத்வாந்யோந்யாஷ்ரயாதிப்ரஸங்காத். ந சாநாதீநேவ வேதாந் ஸ்மரித்வா தைரர்தமதிஜகாம; ஸ்மரித்யாதிஹேதோஃ பூர்வோபலம்பஸ்யாப்யுபதேஷ்ட்ரபாவாதிதுஃஸ்தத்வாத், இத்யாதிதோஷாநபிப்ரேத்யோக்தஂ’பூர்வமஜ்ஞஸ்யேத்யாதி’. ஈஷ்வரஸ்ய பூர்வமஜ்ஞத்வே ஷாஸ்த்ராதீநஜ்ஞாநத்வே ததுபதேஷ்ட்ரந்தரஸத்பாவே ப்ராந்த்யநுவரித்தௌ ச ஷ்ருதிஸ்மரிதிவிரோதமாஹ ‘யஃ ஸர்வஜ்ஞ’ இதி. ஸ்வரூபதஃ ப்ரகாரதஷ்ச ஸர்வஂ ஜாநாதி வேத்தீதி விவக்ஷயா ஸர்வஜ்ஞஸர்வவிச்சப்தயோரபுநருக்திஃ; ஸர்வஂ விந்ததி ப்ராப்நோதீதி வா ஸர்வவித்.
ஏவமுபதேஷஸ்ய ஹேத்வநுபபத்திருக்தா. அதோபதேஷ்டரிதாபி நோபபத்யத இத்யாஹ ‘கிஞ்சேதி’.’இதாநீந்தநேதி’. ந கேவலமீஷ்வரகரிதஃ ப்ரதம ஏவோபதேஷோநுபபந்நஃ, அபித்வத்யதநோபீதி; குமதிமடபதிபரம்பராயாஃ ஷிஷ்யாந்நகுக்ஷிம்பரேஃ ஷிஷ்யாத்யபாவாத்ப்ராயோபவேஷநஂ ப்ரஸஜ்யத இதி பாவஃ. அஜ்ஞாதோபதேஷபக்ஷாநுபபத்திமபிப்ரேத்யாஹ ‘ஸ்வரூபநிஷ்சயேதி’. ந ஹ்யேதேநுபலப்தார்தாஃ, நாபி ஸந்திக்தார்தாஃ, நாபி விப்ரலம்பகாஃ, ந ச பரோக்தாநுவாதிநஃ, நாபி பாலோந்மத்தாதிவத்யதோபநதஜல்பாகாஃ, இதி பாவஃ.’கஸ்மா’ இதி. ஸ்வஸ்மை பரஸ்மை வா? பூர்வத்ர பிந்நதயா நிஷ்சிதாய, அந்யதா வா? பிந்நதயேத்யத்ராபி ஸத்யதயா நிர்ணீதாய, அஸத்யதயா வா? பரஸ்மா இத்யத்ராபி தாத்த்விகாய, அதாத்த்விகாய வா? அதாத்த்விகத்வேபி ததா ப்ரதீதாய, அந்யதா வா? இதி விகல்ப்ய ப்ரஷ்ட்ரே ததுத்தரஂ வக்தவ்யமித்யர்தஃ. தத்ர ஸ்வஸ்யைவ பிந்நஸ்ய ஸத்யத்வநிஷ்சயேபஸித்தாந்தாஜ்ஞத்வாதிதோஷப்ரஸங்கஃ. அஸத்யத்வநிஷ்சயே வந்த்யாதநயாதிப்ய இவாநுபதேஷஃ. அபிந்நதயா நிஷ்சிதாய ஸ்வஸ்மை சேத், அர்ஜுநாதிப்ரதிபாஸமந்தரேண ஸர்வதோபதேஷஃ ஸ்யாத்; ந ச தத்ரோபதேஷஸ்ய கிஞ்சித்ப்ரயோஜநமஸ்தி; பரஸ்மை தாத்த்விகாயேதி து ஷரீரபேதேபி பவாந்நாப்யுபகச்சதி; அதாத்த்விகதயைவ ப்ரதீதாய பரஸ்மை சேத், பூர்வவதேவாநிர்வசநீயத்வேநாஸத்த்வேந வா நிஷ்சிதேப்யஃ ப்ரதிபிம்பவந்த்யாஸுதாதிப்யோப்யுபதேஷப்ரஸங்கஃ; அதாத்த்விகஸ்யைவ பரஸ்ய தாத்த்விகத்வபோதே து தத்த்வவேதித்வமேவ ந ஸ்யாதிதி ந தத்த்வோபதேஷித்வஸித்திரிதி ஸ்திதே, பரமார்தத ஏகத்வேபி ப்ராந்த்யா பிந்நதயா ப்ரதீயமாநேப்யோ பாதகஜ்ஞாநபலேநாபிந்நதயா நிஷ்சிதேப்யஷ்சேதி பக்ஷஂ ஷங்கதே ‘ப்ரதிபிம்பவதிதி’. தூஷயதி ‘நேதி’. அநுபபத்திஂ விவரிணோதி ‘ந ஹீதி’.’அநுந்மத்த’ இதி ஈஷ்வராதேருந்மாத ஏவ பவதா ஸ்வீகரிதஃ ஸ்யாதிதி பாவஃ.’கோபீதி’ கிமுதேஷ்வர இதி பாவஃ.’அநந்யத்வஂ ஜாநந்நிதி’ அநந்யத்வமஜாநந்தோ பாலாதயஃ காமமுபதிஷேயுஃ; அத்ரோபதேஷ்டுரந்யத்வாத்யவஸாயே ப்ராந்தத்வாதிப்ரஸங்க இதி பாவஃ.’கமபீதி’ லௌகிகமலௌகிகஂ வா தரிஷ்டார்தமதரிஷ்டார்தஂ வா, கிஂ புநர்மோக்ஷார்தமித்யர்தஃ.
பாதிதாநுவரித்திஸ்வரூபமப்யுபகம்ய பூர்வஂ தூஷணாந்தரமுக்தம்; இதாநீஂ தந்மதே ததேவ ந ஸித்யதீத்யாஹ ‘பாதிதேதி’. உபபாதயதி ‘பாதகேநேதி’. ந ஹி காரணாபாவே கார்யஂ கடேத, ந ச தோஷநிவரித்தௌ ப்ராந்திநிவரித்திர்ந ஸ்யாதிதி வக்துஂ

யுக்தம்.’அநாதேரிதி’. ஸ்வரூபதஃ ப்ரவாஹதோ வா அநாதேரந்யாநிவர்த்யதயைதாவந்தஂ காலமநுவரித்தஸ்ய பேதஜ்ஞாநகாரணபூதஸ்ய தோஷஸ்ய யதி அத்வைதஜ்ஞாநேநாபி நாஷோ ந ஸ்யாத், நித்யஸஂஸாரித்வஂ ப்ரஹ்மணஃ ஸ்யாதிதி பாவஃ. அத்ராஜ்ஞாநாதேரிதி கஷ்சித்பாடஃ, தத்ராதிஷப்தேந பேதப்ரமஸ்தத்விஷயஷ்ச கரிஹ்யதே. பரைருதாஹரிதே தரிஷ்டாந்தே பாதிதாநுவரித்தேருபபத்திமாஹ ‘த்விசந்த்ரேதி’.’பாரமார்திகேதி’ ந ஹி பாரமார்திகஂ பாத்யேத, ததாஸதி பாதாபாதவிப்லவப்ரஸங்காதிதி பாவஃ.’த்விசந்த்ரஜ்ஞாநஹேதோரிதி’ ந ஹி பாதகஜ்ஞாநேந பூர்வஜ்ஞாநஸ்ய காரணஂ பாத்யதே, இந்த்ரியாதேரபி பாதப்ரஸங்காத். அதோ விஷய ஏவாரோபிதஸ்தததிஷ்டாநவிஷயேண விருத்தாகாரக்ராஹிணா ஜ்ஞாநேந பாத்யஃ. ந சாத்ர திமிராதித்விசந்த்ரஜ்ஞாநஸ்ய சந்த்ரைகத்வஜ்ஞாநஸ்ய வா விஷயஃ. பவதஸ்து ஸமஸ்தபேதப்ரமோபாதாநஸ்யாஜ்ஞாநவாஸநாதேஃ ஸாக்ஷிசைதந்யவிஷயத்வாத், பாதகஜ்ஞாநஸ்ய சாத்விதீயாத்மவ்யதிரிக்தஸமஸ்தபாவகோசரத்வாத், காரணஸ்யாப்யநாதேர்பாத ஏவேதி பாவஃ.’யுக்தேதி’ ஸாமக்ர்யநுவரித்தௌ கார்யாநுவரித்திருபபந்நேதி பாவஃ. யதி ப்ராந்திரநுவரித்தா கதஂ தர்ஹி தத்கார்யவிஸ்மயபயாதிநிவரித்திரித்யத்ராஹ ‘அநுவர்தமாநமபீதி’.’ப்ரபலஷப்தேந’ பரபக்ஷே பேதப்ரமதத்பாதகயோரவிஷேஷஃ ஸூசிதஃ. த்வயோரபி ஹி அஜ்ஞாநகாரணத்வஂ தைராஷ்ரிதம், அந்யதா ஸத்யத்வயப்ரஸங்காத். ததாச ஸதி கிஂ கஸ்ய பாதகஂ பாத்யஂ வா?. ந ச தோஷமூலத்வஂ பாதகஜ்ஞாநஸ்யாஜ்ஞாதமிதி வாச்யம், ப்ரதமமேவ ஷ்ரவணவேலாயாஂ ப்ரஹ்மவ்யதிரிக்தஸமஸ்தமித்யாத்வப்ரத்யயாத். ந சாஜ்ஞாதமிதி தாவதா தத்த்வஸித்திஃ; ஸத்யரஜதபாதகேந ஷுக்திகாஜ்ஞாநேநாஜ்ஞாததோஷேணாபி தத்த்வதோ ரஜதஸ்வரூபபாதாபாவாத். தோஷமூலத்வாவிஷேஷேபி பூர்வத்வபரத்வாப்யாஂ பாத்யபாதகவ்யவஸ்தேதி சேத், ந; தோஷமூலத்வே ஜ்ஞாதே ஸதி பரத்வஸ்யாகிஞ்சித்கரத்வாத், ப்ராந்ததயாவகதேநோக்தஸர்வபாதகவாக்யவத். அந்யதா ஷூந்யமேவ தத்த்வமிதி மாத்யமிகவாக்யேந தோஷமூலதயா ஜ்ஞாதேநாபி பரத்வமாத்ரேண ஸஂவிந்மாத்ரஸ்யாபி பாதஃ ஸ்யாத்.
அத காரணஸ்யாபி பாத்யதயா விஷயத்வாபாரமார்திகத்வலக்ஷணஂ தரிஷ்டாந்தாத்வைஷம்யஂ விவரிண்வந் பாதிதாநுவரித்த்யஸம்பவஂ நிகமயதி ‘இஹ த்விதி’.’ந கதஞ்சிதபி’ அநாத்யஜ்ஞாநேந வா பேதஜ்ஞாநவாஸநாதிபிர்வேத்யர்தஃ. ஜ்ஞாதஂ வா அஜ்ஞாதஂ வேதி விகல்பாபிப்ராயேணோபக்ராந்தாமுபதேஷகாரணாத்யநுபபத்திஂ விகல்பஸ்போரணேநோபஸஂஹரதி ‘அத இதி’.’ஸுதராமிதி’ ஜாநதஸ்து பாதிதாநுவரித்தௌ தரிஷ்டாந்தமாத்ரமபி தாவதஸ்தி; அஜாநத உபதேஷே ஸோபி நாஸ்தீதி பாவஃ.
உபதேஷஸ்ய காரணாத்யநுபபத்திருக்தா, அதாநர்தக்யமாஹ ‘கிஞ்சேதி’. ப்ரதிபிம்பவத்ப்ரதீயமாநேப்ய இத்யாதிநா பூர்வமேவ ஜீவாஜ்ஞாநபக்ஷஸ்யாபி தூஷிதத்வாத்ப்ரஹ்மாஜ்ஞாநபக்ஷே அதிகதூஷணமிதமுச்யதே. தே கலு’ஏகமேவ ப்ரஹ்மாவித்யாஷபலமேக ஏவ ஜீவஃ; ஸ்வப்நதரிஷ இவைகஸ்யைவ தஸ்ய ப்ரமாத் ஸ்வப்நதரிஷ்டபுருஷாதய இவாந்யே ஜீவாதயஃ ப்ரதிபாந்தி; தஸ்யைகஸ்யைவாநிஷ்சிததேஷவிஷேஷஸ்திதேரநிர்ணீதகாலேந பவிஷ்யதா தத்த்வஜ்ஞாநஜாகரேண ஸமஸ்தஃ ப்ரபஞ்சோ஀பி ஸ்வப்நப்ரபஞ்சவத்பாத்யதே’ இதி வர்ணயந்தி. தத்ராயமுபதேஷ்டா வாஸுதேவாதிர்குருஃ ஸ ஏவ, தத்தரிஷ்டோ வா? ஷிஷ்யோப்யர்ஜுநாதிஃ ஸ ஏவ, தத்தரிஷ்டோ வா? இதி விகல்பமபிப்ரேத்ய குருஃ ஸ ஏவேதி பக்ஷே, தூஷணமாஹ ‘குரோரிதி’.’ஸகார்யஸ்யேதி’ ஷிஷ்யாசார்யத்வாதேரபீதி பாவஃ; தேநோபதேஷ்ட்ரபாவஃ ப்ரஷ்ட்ரபாவ உபதேஷபரிகராபாவஷ்சோக்தோ பவதி. குரோஸ்தத்தரிஷ்டத்வபக்ஷமநுவததி ‘குருரிதி’. ந ஹி ஸ்வப்நதரிஷா கல்பிதபுருஷவிஜ்ஞாநேந ஸ்வப்நோ பாத்யேத; தத்வதத்ராபி குரோர்ஜ்ஞாநேந ப்ரபஞ்சபாதாபாவாத்தத்பாதாயோபதேஷஃ ஸப்ரயோஜந இதி பாவஃ. தூஷயதி ‘ஷிஷ்யேதி’.
‘அயஂ பாவஃ’ ந தாவதத்ரார்ஜுநாதிஃ ஸ ஏவ ஜீவ இதி தரிதீயகல்பே ப்ரமாணமுபலபாமஹே; ந ச’அயஂ மம ஷிஷ்யோ ஜீவோ முக்தோ பவிஷ்யதி, அஹஂ த்வநேந ஸ்வப்நதரிஷேவ கல்பிதஃ’ இத்யாசார்யோபி மந்யதே, ததா ஸதி ஸ்வஸஂஹாரகாரிணே மஹாபகாரிணே தஸ்மை நோபதிஷேத், ஸ்வயஂ ஹி ஸ்வப்நஸ்வபாவாந்நியமேநைவ நிவரித்தஃ ஸ்யாதிதி ந மோக்ஷோபாயமாசரேத்; ஷிஷ்யோபி யதி ஸ்வப்நதரிஷ்டவத்குருஂ மந்யேத, ததோ ந ஷ்ருணுயாத். குருதஜ்ஜ்ஞாநவிஷேஷயோஃ ஸ்வப்ராந்திகல்பிததயா ஸ்வயமேவ தஜ்ஜ்ஞாநவிஷயவிஷேஷஂ ஜாநந் ததஃ கிமர்தஂ ஷ்ருணோதி? ஸ்வகல்பிதோபதேஷ்டரிஜநிதோபதேஷப்ரமாத் ஸ்வப்ராந்திநிவரித்திரிதி ச ஹாஸ்யம், தமந்தரேணாபி ஸ்வப்ரத்யக்ஷப்ரமாதபி தந்நிவரித்த்யுபபத்தேஃ. ந ச ஜ்ஞாதார்தேப்யர்ஜுநேத்ய யாவத் ப்ரமநிவரித்திர்தரிஷ்யதே, அதஃ ஷிஷ்யோப்யாசார்யவத்ஸமஸ்தப்ரபஞ்சஸ்வப்நதரிஷாந்யேநைவ தரிஷ்ட இதி சதுர்தஃ கல்பஃ பரிஷிஷ்யதே. ததஷ்ச ஷுகவாமதேவாதிஜ்ஞாநவதர்ஜுநாதிஜ்ஞாநமபி நாஜ்ஞாநநிவர்தகமிதி நிஷ்பலஃ ஷிஷ்யாசார்யாணாஂ கரிஷ்ணார்ஜுநாதீநாஂ த்ரிவர்கபரித்யாகேநாபவர்கார்த ப்ரயாஸ இதி ஷாஸ்த்ராரம்போநுபபந்நஃ.
அத பரிஹாஸகாகுபூர்வமபச்சேதநயமாஷங்க்ய பரிஹரதி ‘கல்பிதத்வேபீத்யாதிநா’. ஏவமுபதேஷாநுபபத்தௌ தஸ்ய

ஸர்வத்ரஷ்டுரேகஸ்யாபி ஜீவஸ்ய கதாசிதபி மோக்ஷாயோகாத் ஷாஸ்த்ரப்ரயோஜநமபி நாஸ்தீதி ததோபி ஷாஸ்த்ராரம்பாநுபபத்திரிதி பலிதம். ஏவஂ ஷாஸ்த்ரோபதேஷஸ்ய ததுபதேஷ்டுஸ்தச்ச்ரோதுஸ்தத்ப்ரயோஜநஸ்ய சாநுபபத்தௌ ஸாமாந்யதஃ ஸர்வஸ்மிந்நபி பரமதே தூஷிதே கிமவாந்தரதூஷணைரித்யந்யபரதயோபஸஂஹரதி ‘இதி கரிதமிதி’. கரிதஂ அலமித்யர்தஃ.’அஸமீசீநவாதைரித்யநேந’ பாஸ்கராதிமதேப்யேவஂவிததூஷணஷதஂ ஷாரீரகபாஷ்யாத்யுக்தஂ ஸ்மாரிதம்.

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழி – -பக்தாம்ருதம் -தொண்டர்க்கு அமுது -ஸ்ரீ உ வே ஸ்ரீவத்ஸாங்க தாஸன் ஸ்வாமிகள் —

February 25, 2022

ஸ்ரீ திருவாய் மொழி -வானின் மீது ஏற்றி அருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக்கூத்தனையே –

குளப்படியில் தேங்கினால் குருவி குடித்துப் போம்
வீர நாராயண புரத்து ஏரியில் தேங்கினால் நாடு விளையும்
பெரிய பெருமாள் ஆகிற பெரும் கடலிலே –
ஆழ்வார் ஆகிற காளமேகம் படிந்து பருகிய தத் கல்யாண குண அம்ருதம்
எம்பெருமானார் ஆகிய பொய்கையிலே தேங்கி
ஆச்சார்யர்கள் ஆகிற மதகுகள் வழியே புறப்பட்டு ஸம்ஸாரி சேதனராகிற பயிரை நோக்கிப் பாய்ந்து ரக்ஷிக்கிறது

———-

திருவருள் மால் சேனை முதலி சடகோபன் நாதமுனி
சீர் உய்யக்கொண்டார் மணக்கால் நம்பி சென்றாம் ஆளவந்தார்
குரு மாலாதரர் குருகைப் பிரார்க்கு அன்பாம் எதிராசர்
கோவிந்தர் கூரேசர் பட்டர் வேதாந்த முனி
இரு கண்ணர்க்கு அன்புடைய நம்பிள்ளை இவர் ஈடு அளித்தற்கு
ஏய்ந்த மாதவர் பற்ப நாபர் இவர் அருளாளர் திருவடி
ஊன்றிய தேவப்பெருமாள் கைக்கொண்டு அருளும்
திருமலை ஆழ்வார் பதங்கள் முன்பு என்னுள் சேர்ந்தனவே –மா முனிகள் அருளிச் செய்த பகவத் விஷய தனியன் –

நம்பிள்ளை -ஈயுண்ணி மாதவர் -அவரது திருக்குமாரர் பத்மநாபர் –
அருளாளப்பெருமாள் திருவடி ஊன்றிய நாலூர்ப்பிள்ளை
அவர் திருகுமாரர் தேவராஜர் என்னும் நாலூராச்சான் பிள்ளை
அவரது சிஷ்யர் திருவாய் மொழிப்பிள்ளை மூலம் மா முனிகள் இடம் வந்த சேர்ந்ததே –

———-

அர்த்த பஞ்சகமே திருவாய் மொழிக்கு வாக்யார்த்தம் என்று ஸ்ரீ வங்கி புரத்து நம்பி பணிப்பாராம்
உயர்வற -திண்ணன் வீடு – அணைவது – ஒன்றும் தேவு -பர ஸ்வரூபம்
பயிலும் சுடர் ஒளி -ஏறாளும் இறையோன் -கண்கள் சிவந்து -கரு மாணிக்க மலை -ஜீவ ஸ்வரூபம்
நோற்ற நோன்பிலேன் -ஆராவமுது – மாநேய் நோக்கு -பிறந்தவாறும் -உபாய ஸ்வரூபம்
எம்மா வீடு -ஒழிவில் காலம் -நெடுமாற்கு அடிமை -வேய் மரு தோளிணை -புருஷார்த்த ஸ்வரூபம்
வீடுமின் முற்றவும் -சொன்னால் விரோதம் -ஒரு நாயகம் -கொண்ட பெண்டீர் -விரோதி ஸ்வரூபம்

————

கலவியில் அந்யாபதேசம் -கரு மாணிக்க மலை -வேய் மரு தோளிணை
பிரிவில் அந்யாபதேசம் -அஞ்சிறைய மடநாராய் போல்வன

தீர்க்க சரணாகதி இதுவே
முதல் மூன்று பத்துக்கள் உத்தரார்த்தம்
மேல் மூன்று பூர்வார்த்தம்
மேல் மூன்றில் உபாயத்துக்கு வேண்டிய குணங்களையும் -சம்சாரத்தில் தமக்கு நசை அற்றபடியையும்
அவனுக்கும் நமக்குமுள்ள நிருபாதிக சம்பந்தத்தையும் அருளிச் செய்கிறார்
கடைப் பத்தாலே தாம் பிரார்த்தித்த படியே பேறு பெற்றமையை அருளிச் செய்கிறார்

———

எம்மா வீடே -தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே -தேவரீருக்கே யாம்படியாக –
அத்யந்த பாரதந்தர்யத்துக்கு அனுகுணமான கைங்கர்யமே
சர்வ பிரபந்த பிரதானம்
கடிகைத் தடம் குன்றின் மேல் விளங்கும் அக்காரக்கனியின் ப்ராதான்யம் ஸித்தம் -என்பர் ஆத்தான் ஜீயர் அரும்பதத்தில் –

வேதாந்த விசாரம் ப்ரஹ்ம ஸூத்ரங்கள்
ரஹஸ்ய த்ரய விசாரம் திருவாய் மொழி

பரத்வம் போலே வேதம்
அவதாரங்கள் போலே இதிஹாஸ புராணங்கள்
அர்ச்சாவதாரம் போலே திருவாய் மொழி –
தான் தோன்றி வேதம் போல் அன்றி இவர் பக்கலிலே பிறந்து ஸர்வாதிகாரம் ஆனது
வண் புகழ் நாரணன் என்று உபக்ரமித்து வாழ் புகழ் நாரணன் என்று உப ஸம்ஹாரம் –

எம்பெருமானார் உகந்த திருவாய் மொழி -இன்னுயிர்ச் சேவல் -9-5-
ஆளவந்தார் உகந்த திருவாய் மொழி -அறுக்கும் வினை -9-8-
ஆழ்வார் பலம் பெற்றது -ஆழி எழ -7-4-
ஆழ்வார் பலம் இழந்தது -கற்பார் இராமன் -7-5–

அவனது ஆர்த்தி தீர பிரார்த்தனை -ஆராவமுதே -5-8-
தனது ஆர்த்தி தீர பிரார்த்தனை -பண்டை நாளாலே -9-2-

மடல் -மாசறு சோதி -5-3-
ஊடல் -மின்னிடை -6-2-

காலைப்பூசல் -மல்லிகை கமழ் -9-9-
மாலைப்பூசல் -வேய் மரு தோளிணை -10-3-

பாகவதர்கள் சேஷிகள் -பயிலும் சுடர் ஒளி -3-7-
பாகவதர்கள் போக்யர் -நெடுமாற்கு அடிமை -8-10-

பன்னிரு நாமப்பாட்டு -கேசவன் தமர் -2-7-

திருவாழி ஆழ்வானை அடிக்கடி வாய் வெருவிய சதகம் -வைகல் பூங்கழி-6-1-
திருவடிகளை அடிக்கடி வாய் வெருவிய சதகம் -உலகம் உண்ட -6-1-
திருத்துழாயை அடிக்கடி வாய் வெருவிய சதகம் -பாலனாய் -4-2-
வடமதுரையை அடிக்கடி வாய் வெருவிய சதகம் -கொண்ட பெண்டிர் -9-1-
ஸ்ரீ பூமி நீளை களை அடிக்கடி வாய் வெருவிய சதகம் -அறுக்கும் வினை -9-8-

நான்கு பாதங்களிலும் ஏற்கும் -3-9-11-
நான்கு பாதங்களிலும் திருவடி -4-9-11-

நான்கு பாதங்களிலும் தீர்த்த -7-10-11-
நான்கு பாதங்களிலும் நேர் பட்ட -8-9-11-
நான்கு பாதங்களிலும் சூழ்ந்த -10-10-10-
நான்கு பாதங்களிலும் அவா -10-10-11-

——————-

முதல் தூது அஞ்சிறைய மட நாராய் -1-4- வ்யூஹத்தில் -அபராத ஸஹத்வம் பற்றாசாக
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் அடலாழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி -1-4-10-
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கே -1-4-7-
தேவரீர் பொறை வயிறு நிறைய எங்களால் குற்றம் செய்யப் போமோ
என் பிழை அநாதி காலம் ஆர்ஜிதமானாலும் தேவரீர் க்ஷமைக்கு எவ்வளவு போரும்

இரண்டாம் தூது விபவத்தில் -ஆர்த்த ரக்ஷணம் பற்றாசாகத் தூது -வைகல் பூங்கழி-6-1-
மாறில் போர் அரக்கன் மதில் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின் -6-1-10-
புணர்த்த பூம் தண் துழாய் முடி நம்பெருமானைக் கண்டு புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே -6-1-5-
ஆர்த்த ரக்ஷணத்துக்கு திரு அபிஷேகத்தில் வளையம் -தனி மாலை இட்டு இருப்பானே

மூன்றாம் தூது பரத்வத்திலே-ஸாரஸ்யம்-அடியார்கள் உடன் ஏக ரஸ்யம் – பற்றாசாகத் தூது -பொன்னுலகு ஆளீரோ -6-8-
வானவர் கோனைக் கண்டு -6-8-4-
விண்ணவர் கோனைக் கண்டு -6-8-9-
முன் உலகங்கள் எல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன் என் நலம் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே -6-8-1-
ஏஹி பஸ்ய சரீராணி என்னுமா போலே வடிவைக் காட்டுகிறாள்
நமக்குப் பணி குறையை அறிவிக்கையை -மேல் உள்ளது எல்லாம் அவன் பணியே

இப்பதிகத்திலே எங்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே -6-8-5-என்று அந்தர்யாமியைச் சொல்லும்
இவளைச் சித்த அபஹாரம் பண்ணித் தனிமைப் படுத்திய இது உமக்குத் தக்கதோ என்று கேட்பதே

நான்காம் தூது -அர்ச்சையிலே -சவுந்தர்யம் பற்றாசாக -எங்கானல் -9–7-
தக்கிலமே கேளீர்கள் –செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செங்கனிவாய் அக்கமலத்து இலை போலும் திருமேனி அடிகளுக்கே -9-7-3-
தமரோடு அங்கு உறைவார்க்கு -9-7-2-
அவர் அழகை நினைப்பூட்டவே திரு மூழிகே களத்தார் வாராது இருப்பாரோ

நான்கு தூது பதிகங்களில் பிராட்டி சம்பந்தம் உண்டே

—-

முதல் பத்தில் பரத்வம் -பரபரன் -1-1-8-
இரண்டாம் பத்தில் -காரணத்வம் -எப்பொருட்க்கும் ஆதி -2-1-1-
மூன்றாம் பத்தில் -வியாபகத்வம் -முழுதியன்றாய் -3-1-8-
நான்காம் பத்தில் -நியந்த்ருத்வம் -மறுகலில் ஈசன் -4-1-10-
ஐந்தாம் பத்தில் -காருணிகத்வம்-அருள் செய் -5-1-9-
ஆறாம் பத்தில் -சரண்யத்வம் -வன் சரண் -6-3-7-
ஏழாம் பத்தில் -சக்தித்வம் -பெரு மாயனே -7-1-1-
எட்டாம் பத்தில் ஸத்ய காமத்வம் -தேவி மாராவார் -8-1-1-
ஒன்பதாம் பத்து -ஆபத் சகத்வம் -முற்றவும் யுண்ட பிரான் -9-1-1-
பத்தாம் பத்தில் -ஆர்த்தி ஹரத்வம் -காளமேகம் -10-1-1-

இந்தப் பத்து அர்த்தங்களும் கங்குலும் பகலும் -7-2 திருவாய் மொழியிலே காணலாம்

———–

அயர்வரும் அமரர்கள் அதிபதி எவன் அவன் இவருக்கு மயர்வற மதிநலம் அருளினன்
மறவாமைக்காக என்னுள் மன்னினான்
நெஞ்சமே நல்லை நல்லை -மலராள் மணவாளனைத் துஞ்சும் போதும் தொடர் -என்றபடி
திருக் கல்யாண குணங்களை தம்முடைய திரு உள்ளத்தோடே அனுபவித்தார்
தனி இருந்து அனுபவிக்க மாட்டாமையாலே சம்சாரிகளைத் திருத்த வீடுமின் முற்றவும் தொடங்கி
த்யாஜ்யமான ஸம்ஸார தோஷத்தையும்
உபாதேயமான பகவத் குணங்களையும்
அவனைப் பஜிக்க வேண்டிய பிரகாரத்தையும்
வண் புகழ் நாரணன் -என்று பற்றுக்கோடான திரு மந்த்ரத்தையும் உபதேசித்து
எளிவரும் இயல்பினன் என்று அவனது ஸுலப்யத்தையும்
அபராத ஸஹத்வத்தையும்
ஸுசீல்யத்தையும்
புரிவதுவும் புகை பூவே என்று ஆராதனைக்கு எளியவனானமையும்
தூய அமுதைப் பருகிப் பருகி ஆஸ்ரயணம் போக்யம் என்பதையும்
நீர் புரை வண்ணன் என்று ஆர்ஜவ குணத்தையும்
என்னுடைச் சூழல் உளானே –உச்சியில் உளானே -என்று சாத்மிக்க ஸாத்மிக்க போக ப்ரதத்வத்தையும்
எண்ணிலும் வரும் என்று பரமபக்தனுக்கு முகம் காட்டுவது போல் முகம் காட்டும் சாம்யத்தையும் காட்டி அருளி
அவனைத் தொழுதால் வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி ஆக்கம் தருமே என்றும்
பக்தி பண்ணத் தொடங்கும் போதே
அங்கொடு உடனே வினை மாளும் -என்று பஜன விரோதிகள் அனைத்தும் தொலையும் என்று அறிவித்து
ஆனபின்பு -அம்பகவன் வணக்குடைத் தவ நெறி வழி நின்று
நும் இரு பசை அறுத்து
தேவதாந்த்ர பஜனம் தவிர்ந்து
அவன் விஷயமான ஞானத்தைக் கொண்டு
நன்று என நலம் செய்து
அநந்ய ப்ரயோஜனராய் பக்தியைப் பண்ணுங்கோள் என்று
ஸம்ஸாரிகளுக்கு அகவிருளைப் போக்கி ஞான பக்தியை உபதேசித்து பகவத் பஜனத்திலே மூட்டுகிறார் முதல் பத்திலே –

————

வேர் முதல் முத்தாய் -ஸர்வ காரண பூதன் ஆழ்வாருக்கு அறியாதன அறிவித்து அருள
அந்த ஞான பலமான மோக்ஷத்தை -அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று
ஆசைப்பட்டுப் பெறாமையாலே
வாடி வாடும் இவ்வாணுதலே -என்றபடி அவசன்னராக
அது தீரும் படி சிக்கெனைப் புகுந்தான் -என்றபடி வந்து ஸம்ஸ்லேஷித்துப் ப்ரீதன் ஆனான் –
அந்த ப்ரீதி ஆழ்வார் உடம் மட்டும் இன்றி இவர் ஸம்பந்த சம்பந்திகள் அளவும் வெள்ளம் இட்டு
அந்தப் ப்ரீதியாலே இவன் ஆழ்வாருக்கு மோக்ஷத்தைப் கொடுக்கப் புக
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -என்று எம்மா வீட்டில் ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணினார்
அதன் பிறகு கீழ்ச் சொன்ன பரத்வத்தை விளக்க
ஸ்ரீ யபதித்தவ
சேஷ ஸாயித்வ
புண்டரீகாக்ஷத்வ
மோக்ஷ ப்ரதத்வாதி
லக்ஷணங்களை வெளியிட்டு
கள்வா என்ற வசனத்தையும்
தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் சேர்ந்த பூந்தாமம் சிவன் முடி மேல் -என்றபடி காட்சியையும் தர்சிப்பித்து
ஆஸ்ரியர்க்கு ருசி பிறக்கைக்க
த்யாஜ்யமான ஸம்ஸாரிக துக்கம் என்ன
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர் -என்றபடி ப்ராப்யமான மோக்ஷத்தின் ஆனந்தம் என்ன –
ஸம்ஸாரிக நிவ்ருத்தி பூர்வகமாக மோக்ஷ ப்ராப்திக்கு உறுப்பான ஸாதனத்தினுடைய ரஸம் என்ன
இவற்றை முன்னிட்டு ஸ குண ப்ரஹ்ம உபாஸனத்தை விதித்து
சூது என்று களவும் சூதும் செய்யாதே -என்று அதற்கு அங்கமான நிஷித்த அனுஷ்டான தியாகமும்
மாலிருஞ்சோலை சார்வதும் சதிரே -என்றபடி ஷேத்ர வாஸம் முதலானவையும் செய்ய வேணும் என்று
அருளிச் செய்கிறார் இரண்டாம் பத்தில் –

————

ஏழ்ச்சிக் கேடின்றி எங்கனும் நிறைந்த எந்தாய் -என்றும்
யாவையும் எவரும் தானாய் -என்றபடி
கார்ய வர்க்கங்களான சேதன அசேதனங்களையும் வியாபித்து
வியாப்ய கத தோஷம் தட்டாமல்
கீழே ஆழ்வார் நிஷ்கர்ஷித்த மோக்ஷத்துக்குப் பலனாக
தன்னுடைய திவ்ய மங்கள விக்ரஹ அனுபவத்தை
முடிச் சோதியாய் -திருவாய் மொழியிலே இவர் தாம் பெற்றவராக செய்து அருளிய அளவிலே
இவரும் -நிலைப் பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடுயிரே -என்றபடி தரித்து
அதனால் உண்டான உகப்பின் மிகுதியாலே
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா யடிமை செய்ய வேண்டும் நாம் -என்றபடி ஆவல் கிளர்ந்து
அதுக்குத் தகுதியாக -புகழு நல் ஒருவனிலே -காட்டிக் கொடுத்த விபூதி விஸ்தாரத்தைப் பேசி அத்தாலே
எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பரந்தும் துள்ளாதார் தம்மால் கருமம் என் சொல்லீர் -என்றபடி
கரை புரண்ட ப்ரேமம் யுடையராய்
அந்தப்பிரமம் எம்பெருமான் அளவிலே அடங்காமல்
தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே -என்றபடி
பாகவத சேஷத்து அளவும் சென்று
அந்த பாகவதருக்கு நிரூபகம் பகவானுடைய வை லக்ஷண்யம் ஆகையால்
அத்தை முடியானே பதிகத்திலே
நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே
வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர் தம் நாயகனே
கைகளால் ஆரத் தொழுது உன்னை
கண்களால் காண வரும் கொல்
என்றபடி ஒவ்வொரு கரணமும் மற்றவற்றின் செயலை விரும்பும் படி பெரு விடாய் படைத்தவராய்
வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் -என்று
தம்முடைய வை லக்ஷண்யத்தை வெளியிட்டு அருளி –
எம்பெருமானை அனுபவிக்க
யான் இறையேனும் இடர் இலேனே -தளர்விலேனே -என்று இடையூறு இன்றிக்கே
அபரிமித ஆனந்தத்தை யுடையவராய்
ஸம்ஸாரிகள் அவன் பரத்வத்தைக் கண்டு அஞ்சி பின் வாங்காமல் மேல் விழுந்து ஆஸ்ரயிக்கும் படி
நெஞ்சினால் நினைப்பான் எவன் அவனாகும் நீள் கடல் வண்ணனே -என்று
அர்ச்சாவதார ஸுலப்யத்தை உபதேசித்து
அர்ச்சிராதி கதியாலே திரு நாட்டை பெறுமிக்குவனான எம்பெருமான்
தன்னை ஒரு சொல் சொல்லுவார் யாரோ என்று காலத்தை என்று எதிர் நோக்கினவனாய் நிற்க
அவனை விட்டுப் புறம்பே
ஒரு சொல்லுக்கும் பாத்தம் போராதே சிறு மானிடரைக் கவி பாடுவதால் என்ன பயன்
அத்தாலே ஸ்வரூபம் பெற்றிலீர் கோள் -அபிமதம் பெற்றிலீர் கோள்
ஸர்வ அபேக்ஷிதங்களையும் தருமவன் -தன்னுடன் சாம்யாபத்தியைத் தருமவன் -அவனைக்
கவி பாடி வாய் படைத்த பிரயோஜனம் பெறுவீர் என்று
பகவத் விஷயத்திலே வாக்கு சபலமாம் படி அடிமை செய்வது உரியது என்று உபதேசித்து
அவர்களையும் தம்மைப் போலவே கைங்கர்ய பரராம் படி செய்து அருள்கிறார்
மூன்றாம் பத்திலே

———-

கீழே முழுதுமாய் முழுதியன்றாய் -என்று எம்பெருமானுடைய வியாபகத்வம் -ஆகாஸ வியாப்தி போல் அன்றிக்கே
வீற்று இருந்து ஏழு உலகம் தனிக்கோல் செல்ல -என்றபடி நியமித்து போவதாலே -இப்படி ஸர்வ நியாந்தாவாய் இருக்கிறவன்
ஆழ்வார் தனது விஷயத்திலே கைங்கர்யங்களிலே பாரித்தது போலே
பாலனாய் ஏழு உலகு உண்டு -என்றபடி வேறே தேச வேறே கால அபதானங்களையும் அந்த அந்த தேச காலங்களில் போலவே அனுபவிக்கப் பாரித்து
அப்படியே இவருக்கு சமகாலமாக்கி அனுபவிப்பித்து இவர் இழவைத் தீர்த்து இவருடைய த்ரி கரண வியாபாரங்களையும் போக்யமாகக் கொள்ள
ஆழ்வார் அந்த ப்ரணயித்வ குணத்திலே தோற்று விரஹ அவஸ்தையிலே
பேய்ச்சி முலை சுவைத்தார்க்கு என் பெண் கொடி ஏறிய பித்தே -என்று
போலியான பொருள்களையும் ஸம்பந்த பொருள்களையும் அவனாகவே கருதும்படி பித்தேறி
ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்பக் கண்ட சதிர் கண்டு -என்றபடி
திரு நாட்டின் அனுபவத்தையும் ஆசைப்பட்டுக் கூப்பிட
அவ்விருப்பையே ப்ரத்யக்ஷமாகக் காட்டி அனுபவிப்பிக்க
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே -என்றபடி அனுபவித்து
இப்படி முக்த உலகத்தை மாநஸமாகப் பெற்று
உன்னித்து மற்ற ஒரு தெய்வம் தொழாள்-என்றபடி தேவதாந்தர விரக்தியை யுடையராய்
ஐங்கருவி கண்ட இன்பம் ஒழிந்தேன் என்றும்
சற்று இன்பம் ஒழிந்தேன் -என்றும்
ஐஸ்வர்ய கைவல்ய அல்ப அஸ்த்ரத்வாதி தோஷங்களையும்
ஆடு கள் இறைச்சி போன்ற நிஷித்த பதார்த்தங்களாலே ஷூத்ர தெய்வ பஜன தாழ்வினையும்
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே -என்பவற்றை வெளியிட்டு அருளி
ஸர்வேஸ்வரனே ரக்ஷகன் என்றும் இவர்கள் ரஷ்ய வர்க்கங்கள் என்றும்
கண்டும் தெளிய கில்லீர்
பிரகிருதி சம்பந்தம் நீக்க -நீள் குடக் கூத்தனுக்கு ஆட் செய்வதே உறுவது என்று
அவனை ஆஸ்ரயித்துத் தப்பப் பாருங்கோள்
அவன் திருவடிகளிலே கைங்கர்யமே சீரிய புருஷார்த்தம் என்று
உபதேசித்து பகவத் ஸமாஸ்ரயணத்தை ருசிப்பிக்கிறார் நான்காம் பத்திலே

———–

பரத்வம் -காரணத்வம் -வியாபகத்வம் -நியந்த்ருத்வம் -குணங்களால் ஏற்றம் உடைய ஸர்வேஸ்வரன்
ஆ ஆ என்று அருள் செய்து
தானே இன்னருள் செய்து -என்றபடி கிருபா ப்ரவாஹம் உடையவன்
அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் யான் ஆர்
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்
என்றபடி அவன் எங்கே
நித்ய சம்சாரிகளுக்கும் இவ்வருகில் உள்ள அடியேன் எங்கே
நைச்யம் பாவித்து அகல நினைத்தாரையும் தனது பக்கலிலே சேர்த்துக் கொள்ளும் படியான
கிருபா வெள்ளம் உடையவன்
ஆழ்வாருக்கு கீழ் பிறந்த வைராக்யம் பலனாக
பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த-என்னும் படி
பக்தியும் பாகவத சமாகத்தையும் யுடைய ஆழ்வார்
தம்மையும் தம்மால் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களையும் காண வந்த
நித்ய ஸூரிகளையும் ஸ்வேத தீப வாசிகளான சித்தர்களையும் கண்டு
பொலிக பொலிக பொலிக என்று மங்களா ஸாஸனம் பண்ணி
அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் என்றபடி தேடிப்பிடித்து
நிறுத்தினான் தெய்வங்களான அத்தெய்வ நாயகன் தானே -என்றபடி
தேவர்களும் அவனை ஆஸ்ரயித்தே தம் தாம் பதவி பெற்றார்கள்
நீங்களும் ஆஸ்ரயிக்கப் பெற்றால்
கலியும் கெடும் கண்டு கொண்மின்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே என்றபடி
பாகவத உத்தமர் களை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள்
என்று உபதேசித்துத் திருத்தி
கண்ணுக்கு இனியன கண்டீர் தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்றபடி
பாகவத ஸமூஹம் காண இனிதாம்படியான ஞானம் உடையோருக்கு
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் -என்றபடி
ப்ராப்ய த்வரைக்கு அடியான பக்தியை உபதேசிக்கிறார் ஐந்தாம் பத்தில் –

———-

கீழ் பத்தில் பேசின பரம கிருபையினாலே
வானவர் வானவர் கோனொடும்
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்
போது அறிந்து வானரங்கள் என்கிறபடி
நித்ய ஸூரிகள் -ஸம்ஸாரிகள் -ப்ரயோஜன பரர் -அநந்ய ப்ரயோஜனர் -திர்யக்குகள் வாசி இன்றி
ஸர்வ சமாஸ்ரயணீயனாய்
மெய்யமர் காதல் சொல்லி -பக்தி பாரவசஸ்யத்தாலே அநந்ய கைதியான ஆழ்வாருக்கு
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -என்று காட்டிக்கொடுக்கப் பெற்றவர்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் என்று நாடொறும் ஏக சிந்தையனாய்
விச்சேதம் இல்லாத வியவசாயத்தை வைகல் பூங்கழிவாயில் தூது அனுப்பி அறிவித்தார்
அவன் சிறிது விளம்பிக்கவே ப்ரணய ரோஷம் தலை எடுத்து
அழித்தாய் உன் திருவடியால் என்று அவன் பரிகரித்தவாறே அவனுடைய சாமர்த்தியத்தை அனுசந்தித்தார்
பிறந்த வாற்றிலே பண்ணின பிரபத்தி பலித்து நண்ணி நான் வணங்கப் பெற்றேன் -என்று
குரவை ஆய்ச்சியரில் பலித்த வாறே பிரபத்தி பண்ணுவதாகக் கோலினார்
பிதரம் மாதரம் தாரான் படியே
சிறு மான் இவள் நம்மைக் கை வலிந்து என்றபடி தாமாகவே கை விட்டும்
இழந்தது சங்கே என்றபடி தாமாகவே போகக் கண்டும்
இன்று எனக்கு உதவா நின்ற -என்று உபேக்ஷித்து அகன்று போயும்
நெய்யமர் இன்னடிசில் நீச்சல் பாலோடு மேவீரோ என்று ததீயாருக்குப் போக்யமாக ஸமர்ப்பித்தும்
பாவியேனை பல நீ காட்டிப் படுப்பாயோ என்று
த்யாஜ்ய அம்சங்களை ஸவாசனமாக விட்டார்
விட்டதை எல்லாம் பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள் யாவையும் திருமால் நாமங்களே என்கிறபடி
தமக்குப் பற்றுகிற விஷயமாகவே நினைத்து
சாலப்பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ
கூவிக்கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -என்று ஆர்த்தியுடன்
குறளாய் அகல் ஞாலம் கொண்ட -சர்வ ஸூ லபமான திருவடிகளை திருமலையில் கண்டு
த்வயத்தில் பூர்வ வாக்ய ப்ரக்ரியையாலே
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா என்று சரணம் புகுந்தார்
பத்துடை அடியவர் தொடங்கி அஞ்சாம் பத்து அளவும் உபதேசித்த ஸாத்ய உபாய பக்தி யோகத்தில் அசக்தருக்கு
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே என்று
தம்முடைய பிரபத்தி -ஸித்த உபாய -நிஷ்டையை பிரகாசிப்பித்தார் ஆறாம் பத்திலே –

——–

மாயா வாமனனே -விசித்ர சக்தி யுக்தனான ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளை
அந்தோ அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையுமே -என்றபடி பிரபத்தி பண்ணின தம்மை
விஷயங்களில் மூட்டித் தன் பக்கலிலே சேராதபடி ஸம்ஸாரத்திலேயே வைக்கக் கண்டு
உண்ணிலாவிய ஐவரால் குமை தீற்றி என்னை யுன் பாத பங்கயம் நண்ணிலா வகையே நலிவான்
இன்னம் எண்ணுகின்றாய் -என்று வருந்திக் கூப்பிட்டு
தம் தசை தாமே பேசமாட்டாமல் இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் என்றபடி தளர்ந்து
தோழிமீர்காள் அன்னை யர்காள் என்னைத் தேற்ற வேண்டாம் -என்று நெஞ்சு பறியுண்டவராக இருக்க
ஆழி எழ -யில் தனது விஜயங்களைக் காட்டித் தரிப்பிக்க
அந்தத் தயாரிப்பும் கற்பார் இராமனிலே
இப்படி நிருபாதிக கிருபாவாளனாய் -ஸர்வ ஸூ லபனாய் இருந்தும் ஸம்ஸாரிகள் இழந்து போகிறார்களே என்று
பழைய ஆர்த்தியே தலையெடுத்து
பற்ப நாபாவோ பற்ப பாதா ஓ தாமரைக் கண்ணா ஓ தனியேன் தனி ஆளாவோ என்று
அவனது அவயவங்கள் மானஸ அனுபவமாய் நலிய
உபாய பூதனான உனக்கோ ஞான சக்திகளிலே குறை இல்லை
எனக்கோ ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வ ஆர்த்திகளிலே குறை இல்லை
இப்படி இருக்க ஸம்ஸாரத்திலே இன்னம் வைத்து இருக்க ஹேது என் என்று மடி பிடித்துக் கேட்க
நமக்கும் நம்முடையாருக்கும் இன்பமாகத் திருவாய் மொழி பாடுவிக்க வைத்தோம் காண் என்ன
வியாசாதிகள் முதல் ஆழ்வார்கள் போல்வார் இருக்க தம்மைக் கொண்டு பாடுவித்த இந்த உதவிக்கு கைம்மாறு காணாமல்
என் சொல்லி நிற்பேனோ –
திருவாறன் விளையிலே மிதுனத்திலே பெரிய ஓலக்கத்திலே திருவாய் மொழி கேட்பித்து
அடிமை செய்வது தவிர வேறே கைம்மாறு இல்லை என்று
திட அத்யாவஸ்யத்தை உடையவராய் இருக்க
எம்பெருமான் பரமபதம் தரப் பாரிப்பவராக இவரது அத்யாவசாயத்தை சோதிக்க
திருவாறன் விளை யுறை தீர்த்தனுக்கு அற்ற பின் -சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லா
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்று ஓன்று இலம்
உள்ளித் தொழுமின் தொண்டீர் -என்று
திருவாறன் விளையே ப்ராப்யம்
அங்கு எழுந்து அருளி நிற்கிறவன் உபாயம் என்று
தாம் அறுதியிட்ட உபாய உபேயங்களை தமது உகப்பாலே வெளியிட்டு அருளுகிறார் ஏழாம் பத்திலே –

————

கீழ்ப் பத்திலே பேசின ஸர்வ சக்தி யோகத்தாலே
நல்ல கோட்பாட்டு உலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்து -என்றபடி
நித்யமாகக் கல்பிக்கப்பட்ட போக்ய போக உபகரண போக ஸ்தானங்களை யுடையவன் ஆகையாலே
ஸத்ய காமனான ஸர்வேஸ்வரன் ஆழ்வாரைத் தரிப்பிக்க நினைத்தான் –எதற்காக என்னில்
ஆழ்வார் கீழே கிடைத்த வாசிக அடிமையும் மறந்து
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கி
பகவத் குணத்திலும் ஸ்வரூபத்திலும் அதிசங்கை பண்ணி
அவர் உகந்து அமர்ந்த செய்கை யுன் மாயை அறிவு ஒன்றும் சங்கிப்பேன் வினையேன் –
அவன் ஆஸ்ரித பரதந்த்ரன் என்பதிலே அதி சங்கை
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ யின்னே யானால்
சிறந்த நின் தன்மை அது விது வுது என்ற அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் என்று
ஸகல பதார்த்தங்களையும் பிரகாரமாக உடையவன் என்பதிலும் அதி சங்கை
ஸம்ஸாரங்களை அனுசந்தித்து
நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல் -என்று ஸம்ஸார தோஷங்களை அனுசந்தித்து அஞ்சினார்
இந்தக் கலக்கமும்
அதி சங்கையையும்
அச்சத்தையும் –
தீர்க்கும்படி தரிப்பிக்க நினைத்த எம்பெருமான்
தாள்களை எனக்கே தலைத்தலைச் சிறப்பத் தந்த -என்று முன்பு செய்து போந்த
உபகாரத்தை நினைப்பூட்டினான்
ஆழ்வார் அத்தாலே க்ருதஞ்ஞராய்
பேர் உதவிக் கைம்மாறா தோள்களை ஆரத்தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் -என்றபடி
ஆத்ம சமர்ப்பணம் பண்ணினார்
அத்தாலே எம்பெருமானும் பெறாப் பேறு பெற்றவராய் இவருக்கு உண்டான ஆத்ம குணங்களால்
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க்கண்கள் ஆயிரத்தாய் -என்றபடி மிகவும் மகிழ்ந்தவனாய்
ஒருக்கடுத்து உள்ளே யுறையும் பிரான் கண்டீர் -என்று ஆழ்வார் திரு உள்ளத்திலே இருந்து அனுபவிப்பித்து
மூன்று தத்துக்குப் பிழைத்த இவர்
வள வேழ் உலகு -பொரு மா நீள் படை -அந்தாமத்து அன்பு -மூன்றிலும் நைச்ய அனுசந்தானம் -தத்து -கண்டம்
இனி ஆழ்வார் அகலாமைக்காக
ஞான ஆனந்த மயம்
அநந்யார்ஹம்
ததீய சேஷத்வம் அளவும் செல்லும் பாரதந்தர்ய ஸ்வரூபம்
போன்ற ஆத்ம லக்ஷண்யத்தைப் பிரகாசிப்பித்தான்
அதனால் யாதாத்ம்ய ஸ்வரூபம் அறிந்த ஆழ்வார்
ப்ராப்யம்-திவ்ய தேசம் ஒன்றும் பிராபகம்-ஸர்வேஸ்வரன் ஒன்றாய் -இரு கரையராக இல்லாமல்
ப்ராப்யமாகச் சொன்ன திவ்ய தேசமே ப்ராபகமும் என்று
நண்ணு திருக்கடித்தான நகரே -இடர் கெட உள்ளத்துக் கொள்மின் என்று காட்டி
அவர்களை பிராப்ய விஷயம் ஒன்றிலேயே ஊன்றச் செய்து அருளுகிறார் எட்டாம் பத்தில் –

——-

அவாப்த ஸமஸ்த காமனாகையாலே ஒன்றையுமே அபேக்ஷிக்காலால்
அகல் ஞாலம் படைத்து இடந்தான் அவனே அஃது உண்டு உமிழ்ந்தால்
ஆலிலை மேலால் அமர்ந்தான்
இவ்வாறு ஸர்வவித ரக்ஷகனான ஸர்வேஸ்வரன்
கீழே ஆழ்வாருக்கு பிரகாசிப்பித்த ஆத்ம ஸ்வரூப யாதாத்ம்ய ஞான பலமான
ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யத்தை அனுபவிக்கையில் உண்டான த்வரை
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
கனிவாய் சிவப்ப நீ காண வாராய்
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை கொடு வினையேனும் பிடிக்க
நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே
பிராட்டிக்கு பத்து மாதங்கள்
பரதாழ்வானுக்கு பதினான்கு வருஷங்கள்
கோபிமாருக்கு ஒரு மாலைப்பொழுது வரை
உள்ள வியஸனங்கள் அனைத்தும் ஆழ்வாருக்கு ஒரு நொடிப்பொழுதில் உண்டான த்வரைக்கு ஈடாக எம்பெருமான்
நாளை வதுவை மணம் என்று நாளிட்டு -என்று நாச்சியாருக்கு நாள் இட்டால் போலே
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் என்று சரீர அவசானத்திலே பேறு தப்பாது என்று அறுதியிட்டுக் கொடுக்க
ஹ்ருஷ்டராய் -இன்னும் தமது உபதேசத்தால் திருந்தாதவரை பரம காருண்யத்தாலே
கொண்ட பெண்டீர் மக்கள் உற்றார் -ஆபாச பந்துக்களை விட்டு அவனையே ஸர்வவித பரம பந்து
ரக்ஷகன் -உபாயம் -ப்ராப்யன் -போக்யன் -என்று நிரூபித்து உபதேசித்து
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் என்று ஸித்த உபாயத்தை உபதேசித்தும்
இந்த மஹா விச்வாஸம் பிறக்கைக்கு ஈடாக
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
தேனை வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின் என்று
அங்க ஸஹிதமான பக்தியை உபதேசித்தும்
அதுக்கு சக்தர் அல்லார்க்கு
சரணமாகும் தனது தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
என்று ஸூ கரமாய் ஸர்வாதிகாரமாய் உள்ள பிரபத்தியை வெளியிட்டும்
அதிகார அனுகுணமாக ஸர்வ உபாயங்களையும் வெளியிட்டு அருளுகிறார் ஒன்பதாம் பத்தில் –

————

ஆபத் ஸகனானவன் ஆஸ்ரிதருடைய ஆபத் ரக்ஷண அர்த்தமாக திவ்ய மங்கள விக்ரஹத்தோடே தோன்றி
துன்பத்தைப் போக்கும் இயல்பினன் –
கீழே நாள் இட்டுக் கொடுத்ததின் பலமாக அர்ச்சிராதி கதியாலே பரமபதத்துக்கு ஏறப் போகையாலே
திரு மோகூர்-ஆத்தன் -பதினெட்டு நாடான் -வழித்துணையாகப் பற்றி
மீள்கின்றது இல்லை பிறவித்துயர் கடிந்தோம் -என்று இனி பேற்றிலே தடையில்லை என்று நிச்சயித்து
எல்லா அர்த்த விசேஷங்களை வெளியிட வேண்டும்படியான தசை வந்தவாறே
பிரதம பாத்திரமான தமது திரு உள்ளத்துக்கு
பணி நெஞ்சே நாளும் பரம பரம் பரனை
வாழி மனமே கைவிடேல் -என்றும்
நெஞ்சு போன்ற ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடும் கூத்தே
எண்ணுமின் எந்தை நாமம்
பேசுமின் கூசமின்றி
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண அனந்த புர நகர் புகுதும் இன்றே
என்று கர்தவ்ய
ஸ்மர்தவ்ய
வக்தவ்ய
த்ரஷ்டவ்ய
வஸ்தவ்யாதிகளை -வெளியிட்டு
முதல் பத்தில் பிணக்கற அறு வகை என்கிற பாசுரத்தில் உபக்ரமித்த பக்தி யோகத்தை
சார்வே தவ நெறியோடே உப ஸம்ஹரித்து
ஸம்ஸாரிகளுக்கு
தாள்வாய் மலரிட்டு நாள் வாய் நாடீரே
சுனை நன் மலரிட்டு நினைமின் நெடியானே -என்கிறபடியே ஸூ கரமாக ஆஸ்ரயணீயத்தை உபதேசித்து

அனுபவ கைங்கர்யங்களிலே தமக்குத் தோள் தீண்டியரானவர்களை
செஞ்சொல் கவிகாள் என்று விளித்து
உயர் காத்திடகு ஆட் செய்மின் -என்று
அவனுடைய சீல குண ஆழங்காலிலே அகப்படாமல் இருக்க உபதேசித்தும்

தம் திருமேனியிலுக்கே அதி வ்யாமோஹம் பண்ணும் அவனுக்கும்
பொங்கைம் புலனும் பொறி ஐந்தும் கரும இந்திரியம் ஐம் பூதம் இங்கு இவ்வுயிர் ஏய் ப்ரக்ருதி மானாங்கார மனங்களான
உம் மா மாயை மங்க ஒட்டு -மங்க இசை -என்று சரீர தோஷங்களை உணர்த்தி
பின்னை தமக்குப் பரதந்த்ரனாய் தம்மைப் பரமபதம் கொண்டு போகும் ஆதரத்துடன் உள்ள அவனை நோக்கி
இன்று என்னைப் பொருளாக்கி -பாசுரத்தால்
அவனை மடி பிடித்து புறம்பே போக விட்டதுக்கு ஹேது என்ன என்று கேட்க

அவன் இந்திரிய வஸ்த்யதை போன்ற காரணங்களை சொல்ல
அனைத்தும் தமது அதீனமே என்று அறிந்தவன் ஆகையால் இவருக்கு போக்கடி சொல்லுகை அரிது என்று உணர்ந்து
அர்ச்சிராதி கதி என்ன
ஆதி வாஹிக ஸத்காரம் என்ன
திவ்ய தேச பிராப்தி என்ன
அங்குள்ளார் உடைய பஹு மானம் என்ன
ஆனந்தமய ஆஸ்தானத்திலே இருப்பு என்ன
பகவச் சரணாரவிந்த பிராப்தி என்ன
இவ்வளவும் காட்டிக் கொடுக்கக் கண்டு

அது மானஸ அனுபவ மாத்ரமாய் -பாஹ்ய கரண யோக்யம் இல்லாமையாலே
திருவாணை நின்னாணை கண்டாய் -என்று தடுக்க
உம்முடைய ஸ்வரூபத்தோடே விருத்தம் அன்றோ காணும் என்ன
அதுக்கு ஆழ்வார்
நேசம் செய்து உன்னோடே என்னை உயிர் வேறு அன்றி ஒன்றாகவே கூசம் செய்யாது கொண்டாய் என்று தொடங்கி
முதல் தனி வித்தேயோ -பாசுரம் அளவாக எம்பெருமானான் வாய் திறவ ஒண்ணாத படி பல கோடிகளைச் சொல்லி
தாம் இட்ட ஆணை பெறா ஆணை அன்று என்று நிரூபித்தார்

இவ்வளவும் பேசுகைக்குக் காரணம்
அதனில் பெரிய என் அவா -என்னும்படி தத்வத்த்ரயத்தையும் விளாக்குலை கொள்ளும் படி ஆழ்வாரது பரமபக்தியே
அதுவும் மிக அல்பம் என்னலாம் படி அன்றோ அவனது அபி நிவேசம்

இப்படி கரைபுரண்ட அபி நிவேசத்தோடே வந்து தம்முடைய சகல தாபங்களையும் போக்கி அருளினபடியை
யாவரும் அறியும்படி வெளியிட்டு அருளுகிறார் பத்தாம் பத்தில் –

————

எம்பெருமானோ மதுர வாறு
அவனைப் பற்றிய ஞானமும் அமுத வாறு
அதைப் பெட்ரா ஆழ்வார் அந்தணர் தம் அமுது
அமுதிலும் ஆற்ற இனியனான ஆராவமுதனின்
தேனே மலரும் திருப்பாதத்தைத் தலையிலே அணியும் ஆசைப்பட்ட ஆசையோ
ஆர் உயிர் உருகி யுக்க நேரிய காதல் அன்பிலீன் தேறல் அமுத வெள்ளம்
அங்கனம் ஆசைப்பட்டு அனுபவித்த அனுபவம் உள்ளடங்காமல் சொல்லாய் வெளி வந்த அருளிச் செயலும்
அமுது ஒழுகுகின்ற தமிழான தொண்டர்க்கு அமுது -பக்த அம்ருதம்
அத்தைக் கொண்டு அவனது சீர் அமுதக்கடலில் அமிழ்ந்து இருப்பதே
அம்ருத சாகர அந்தர் நிமஞ்சனம்

—————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே ஸ்ரீவத்ஸாங்க தாஸன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ விஷ்ணு தர்மம் –ஸ்ரீ மாங்கள்ய விருத்தி ஸ்லோகம் —

February 24, 2022

விஷ்ணு புராணத்தின் ஒரு பகுதியே விஷ்ணு தர்மம். விசிஷ்டாத்வைதத்தின் முக்கிய இதிகாசம் விஷ்ணு தர்மம். சதனீகர் என்னும் மன்னர் ‘பகவானை அடையும் வழி எது’ என்னும் தன் கேள்வியை செளனகர் என்னும் ரிஷியிடம் கேட்டதற்கு அவர் அளித்த விளக்கமே விஷ்ணு தர்மம்.

ஸ்ரீ விஷ்ணு தர்மம்
ஸ்ரீ மாங்கள்ய விருத்தி ஸ்லோகம்
ஸ்ரீ தால்ப்யர் னென்கிற மகரிஷி ஸ்ரீ புலஸ்ய மஹரிஷி இடம் கேட்பதாக – ஸம்வாதம் -மூலமாக பிறந்த ஸ்லோகம்

தால்ப்ய உவாஸ
கார்ய ஆரம்பேஷு ஸர்வேஷு துஸ் ஸ்வப்னேஷு ச சத்தம
அமங்கல்யேஷு த்ருஷ்டேஷு யஜ் ஜப்த்தவ்யம் தத் உச்யதாம் –1-
யேந ஆரம்பாஸ் ச ஸித்த்யந்தி துஸ் ஸ்வப்னஸ் சோப ஸாம்யதி
அமங்கலா நாம் திருஷ்டா நாம் பரிகாதஸ் ச ஜாயதே –2-

ஏதாவது நற்காரியங்கள் தொடங்கும் போதும் -தீய கனாக்கள் கண்ட போதும் அமங்கல வஸ்துக்களைப் பார்க்க நேரும் போதும்
எத்தை ஜபிக்க வேணுமோ அத்தை தேவரீர் அருள வேணும்

எத்தை ஜபித்தால் தொடங்கின கார்யங்கள் எல்லாமே ஸித்தி பெறுமோ
தீய கனாக்கள் கெட்ட பலன்களைத் தராமல் ஒழியுமோ
கண்ட அமலங்கள் கெடுதலை விளையாமல் போகுமோ
அத்தைச் சொல்ல வேண்டும் என்று பிரார்த்திக்க

——

புலஸ்ய உவாஸ
ஜநார்தநம் பூத பதிம் ஜகத் குரும் ஸ்மரன் மனுஷ்யஸ் ஸததம் மஹா முநே
துஷ்டான்யசேஷாண்யபஹந்தி ஸாதயத்யஸேஷ கார்யாணி ச யான்ய பீப்ஸதி –3-

சகல பிராணிகளுக்கும் சேஷியாய் -ஸகல சேதனர்களுக்கும் அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்குபவராய் –
ஜனார்த்தனன் என்ற திருநாமம் கொண்ட பெருமாளை
இடைவீடு இன்றி சிந்தனை செய்யும் மனிதன் ஸகலவிதமான கெடுதல்களை தவிர்த்துக் கொள்கிறான்
சாதித்திக் கொள்ள விரும்பும் சகல காரியங்களையும் நிறைவேற்றிக் கொள்கிறான் –

———

ஸ்ருணுஷ்வ ஸான்யத் கததோ மமாகிலம் வதாமி யத் நே த்விஜ வர்ய மங்களம்
ஸர்வார்த்த சித்திம் பிரததாதி யத் ஸதா நிஹந்த்ய சேஷாணி ச பாதகாநி–4-

மேலும் நான் உரைக்கக் கேளீர்
ஸர்வார்த்த ஸித்தியைத் தரவல்லதும் ஸகல பாதகங்களையும் தொலைக்க வல்லதான
மங்கள ஸ்தவம் யாது ஓன்று உண்டோ -அது தன்னைச் சொல்லா நின்றேன் –

————-

ப்ரதிஷ்டிதம் யத்ர ஜகத் சராசரம் ஜகத் த்ரயே யோ ஜகதஸ் ச ஹேது
ஜகத் ச பாத் யத்தி ச யஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி –5-

இது முதல் ஸ்தோத்ரம் தொடக்கம்
ப்ரதிஷ்டிதம் யத்ர ஜகத் சராசரம்
கிருஷ்ணே திஷ்டதி ஸர்வ மேதத் அகிலம் -என்கிறபடியே
ஸகல சராசரங்களும் யாவன் ஒரு எம்பெருமான் பக்கலிலே ப்ரதிஷ்டிதம் பெற்று இருக்கின்றனவோ

ய ஜகத் த்ரயே
நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த அல்லிக் கமலக் கண்ணன் என்கிறபடியே
யாவன் ஒருவன் மூன்று உலகினுள்ளும் பிரதிஷ்டித்தனாய் இரா நின்றானோ

யச் ச ஜகதஸ் ஹேது
ஸகல ஜகத் காரண பூதன் யாவன் ஒருவனோ
தான் ஓர் உருவே தனி வித்தாய் -வேர் முதல் வித்தாய் -த்ரிவித காரணமும் யாவன் ஒருவனோ
சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் உபாதான காரணம்
ஞான ஸக்த்யாதி விஸிஷ்ட ப்ரஹ்மம் ஸஹகாரி காரணம்
ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம் நிமித்த காரணம்

ய ஜகத் ச பாதி ச யத்தி
காரண பூதன் ஒருவனாய்
ரக்ஷக ஸம்ஹாரங்கள் வேறு ஒருவராய் இருக்கை அன்றிக்கே
ஸ்திதி ஸம்ஹாரங்களுக்கும் இவனே கர்த்தா
அத்தி -என்று ஸ்ருதி சாயையிலும் ஸூத்ர சாயையிலும் ஸம்ஹரதியைச் சொன்னவாறு
ஆக ஸகல ஜகத்துக்கும் ஆதார பூதனாயும்
ஆதேய பூதனாயும்
தத்புருஷ ஸமாஸமும் பஹு வரீஹீ ஸமாஸமும்
ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார கர்த்தனாயும்
இரா நின்ற ஸர்வேஸ்வரேஸ்வரன்

யஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி —
எனக்கு மங்கள விவ்ருத்தி ப்ரதானாக வேணும் என்றதாயிற்று
ஸர்வதா -மத்யம தீப நியாயத்தாலே மூன்றாம் பாதம் நான்காம் பாதம் இரண்டுடன் அன்வயம்

———-

வ்யோ மாம்பு வாய்வகனி மஹீ ஸ்வரூபைர் விஸ்தார வான் யோ அணு தரோணு பாவாத்
அஸ்தூல ஸூஷ்மஸ் ஸததம் பாரேச்வரோ மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி–6-

வ்யோ மாம்பு வாய்வகனி மஹீ ஸ்வரூபைர் விஸ்தார வான்
நீராய் நிலனாய்த் தீயாய் காலாய் நெடு வானாய் -என்கிறபடியே
பஞ்ச பூதங்களாக விரிந்தும்

யோ அணு தரோணு பாவாத்
அணு பாதார்த்தங்களிலும் அணுவாய்

அஸ்தூல ஸூஷ்மஸ் ஸததம் பாரேச்வரோ
ஸ்தூல வஸ்துவாயும் ஸ்தூல இதர வஸ்துவாயும் ஸூஷ்ம வஸ்துவாயும் ஸூஷ்ம இதர வஸ்துவாயும்
இருக்கும் பரம புருஷன்

மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி —
எனக்கு மாங்கள்ய விருத்தியைத் தந்து அருள வேணும்

சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் சுருங்கியும் பெருக்குவாரை இன்றியே பெருக்கம் எய்த பெற்றியோய்

————-

யஸ்மாத் பரஸ்மாத் புருஷாத நந்தாத் அநாதி மத்யாததிகம் ந கிஞ்சித்
ஸ ஹேது ஹேது பரமேஸ்வரேஸ்வரோ மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி–7-

யஸ்மாத் பரஸ்மாத் புருஷாத் அநந்தாத்
அநந்தத்வமாவது -பரிச்சேத ரஹிதத்வம்-தேச கால வஸ்து -த்ரிவித பரிச்சேத ராஹித்வத்தைச் சொல்கிறது
எப்பொருளும் தானாய் -வஸ்து பரிச்சேத ரஹிதன்

அநாதி மத்யாததிகம்
ஆதியும் அந்தமும் இல்லாதவன்
ஆகவே மத்யமும் இல்லாதவன்

ந கிஞ்சித் ஸ ஹேது ஹேது
கார்ய பதார்த்தங்களை எல்லாமே காரண பூதன்

ஸ ஹேது -பதம் கார்ய பதார்த்தங்களைச் சொல்லுகிறது —
ஹேதுவுடன் கூடியதாகில் அது கார்யமாகவேதானே இருக்க வேண்டும்

பரமேஸ்வரேஸ்வரோ –
பரமேஸ்வரன் என்ற பேர் பெற்றவனுக்கும் ஈஸ்வரனானவன்

மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி–
அப்படிப்பட்டவன் எனக்கு மாங்கள்ய விவ்ருத்தி பிரதனாக வேணும் –

————-

ஹிரண்ய கர்பாஸ்யுத ருத்ர ரூபீ ஸ்ரு ஜத்யசேஷம் பரிபாதி ஹந்தி ச
குணாக் ரணீர் யோ பகவான் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி–8-

ஹிரண்ய கர்பாஸ்யுத ருத்ர ரூபீ ஸ்ரு ஜத்யசேஷம் பரிபாதி ஹந்தி ச
நான்முகனை ஆவேசித்து ஸ்ருஷ்டியும்
ருத்ரனை ஆவேசித்து ஸம்ஹாரத்தையும்
ஸ்வேந ரூபேண நின்று ரக்ஷணத்தையும்
பண்ணிப்போருவதாக ஸாஸ்த்ரம் சொல்வதையே பூர்வ அர்த்தம் சொல்லுகிறது

குணாக் ரணீர் யோ பகவான்
குண ஸப்தம் குணவான்களைச் சொல்லுகிறது –
குணவான்களுக்குள்ளே தலைவன் என்கை
ஸமஸ்த கல்யாண குண அம்ருதமாய் இருப்பவன் என்றவாறு

ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி–
அப்படிப்பட்டவன் எனக்கு மாங்கள்ய விவ்ருத்தி பிரதனாக வேணும் –

————-

பரஸ் ஸூராணாம் பரமோஸ் ஸூராணாம் பரோ யதீநாம் பரமோ முனீ நாம்
பரஸ் ஸமஸ்தஸ்ய ச யஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி–9-

—————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தால்ப்ய மகரிஷி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ புலஸ்ய மஹரிஷி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம்–ஸ்ரீரங்கம் மோகனரங்கன்–

February 24, 2022

ஆன்மிகம் என்று மட்டும் இல்லாமல் மருத்துவத் துறையிலும் பழங்காலத்தில் தீர்க்கவியலா சில நோய்களுக்கு
இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைப் படித்தல் என்பதையே வைத்தியமாக விதித்துள்ளனர் என்பதைச்
சரக ஸம்ஹிதை என்னும் பழங்காலப் பெரும் மருத்துவ கிரந்தத்தைப் பார்த்தாலே தெரியும்.
( ‘விஷ்ணும் ஸஹஸ்ரமூர்தானம் சராசரபதிம் விபும் | ஸ்துவந் நாமஸஹஸ்ரேண ஜ்வராந் ஸர்வாந் அபோஹதி ||’ –
சரக ஸம்ஹிதா, சிகித்ஸா ஸ்தானம், ஜ்வர சிகித்ஸா). மனோ வியாதிகள், தீய கனவுத் தொல்லைகள்,
பீதியினால் ஏற்படும் உள்ளக் கோளாறுகள் என்று பலவற்றிற்கும் கைகண்ட மருந்தாக வழிவழி மக்களின் அனுபவமாக இருப்பது
ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம படனம்.
உலக ஆசைகள் என்னும் பவ நோயைவிடக் கொடிய நோய் என்ன உண்டு?
அறியாமை இருளை விடப் பேய் பிசாசுகளின் பிறப்பிடம் வேறு என்ன வேண்டும்?
இந்த நோயை அகற்றும் உன்னத மருந்தும், இந்த இருளை ஓட்டும் உத்தம ஒளியும் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் என்று நிச்சயம் சொல்லலாம்.

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்கு Aufrecht அவர்களின் கணக்குப்படி 15 வியாக்கியானங்கள்
பட்டியலிடப்படுகின்றன என்று தகவல் தருகிறார் ஸ்ரீ அநந்தகிருஷ்ண சாஸ்திரியார். அவை –

1) ப்ருஹத் பாஷ்யம்
2) விஷ்ணு வல்லபம்
3) ஆநந்த தீர்த்தரின் உரை
4) கிருஷ்ணாநந்தரின் உரை
5) கங்காதர யோகீந்திரரின் உரை
6) பாரசர பட்டரின் பாஷ்யம்
7) மஹாதேவ வேதாந்தியின் உரை
8) ரங்கநாதாசாரியரின் உரை
9) ராமாநந்த தீர்த்தரின் உரை
10) ஸ்ரீராமாநுஜரின் உரை
11) வித்யாரண்ய தீர்த்தரின் உரை
12) பிரஹ்மாநந்த பாரதியின் உரை
13) ஸ்ரீ சங்கராசாரியரின் உரை
14) சுதர்சன பட்டரின் உரை
15) கோவிந்த பட்டரின் உரை

இவையும் சிலவே. இவை தவிர சுலோக ரூபத்தில் நாமங்களை விளக்கிக் காரிகைகளாகச் செய்யப்பட்ட நூல்களும் உண்டு.

—-

கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:|
கிம் ஜபந் முச்யதே ஜந்து: ஜன்ம ஸம்ஸார பந்தநாத்||

தர்மங்கள் அனைத்தினும் உயர்ந்த தர்மம் என நீர் கருதும் தர்மம் எது?
பிறவிச் சுழற்சியெனும் பெருந்தளையினின்றும் எதை ஜபிப்பதால் மானிடர் விடுபடல் ஆகும்?

இவ்வாறு யுதிஷ்டிரன் கேட்க பீஷ்மன் உரைத்த பதில்தான் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்.
இதில் ஜந்து என்னும் சொல்லைப் பயன்படுத்தியி