கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்த்ராச்ரயம் ஆச்ரயே!
ஞானப்ரமேய ஸாராபி வக்தாரம் வரதம் முனிம்!!
ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம் !
சதுர்த்தாச்ரம ஸம்பன்னம் தேவராஜ முனிம் பஜே !!
சுருளார் கருங்குழல் தோகையர் வேல் விழியில் துவளும்
மருளாம் வினை கெடும் மார்க்கம் பெற்றேன் மறை நான்கும் – சொன்ன
பொருள் ஞான ஸாரத்தைப் புந்தியில் தந்தவன் பொங்கொளிசேர்
அருளாள மாமுனியம் பொற்கழல்கள் அடைந்த பின்னே.
———
எல்லா வேதங்களுக்குள்ளும் மறைந்திருக்கும் உயர் பொருளும்
வேதப் பொருளைத் தெளிவு பட எடுத்துரைக்கும் மற்றைய சாஸ்திரங்கள் சொல்வதும்
ஆகிய சரணாகதி நன்னெறியைக் காட்டிக் கொடுத்த
ஆசார்யன் திருவடிகளே தஞ்சமாகும் என்று கூறும் கருத்தை இப் பாடலில் சொல்லப்படுகிறது.
வேதம் ஒரு நான்கினுள் பொதிந்த மெய்ப்பொருளும்
கோதில் மனு முதல் நூல் கூறுவதும் தீதில்
சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே
அரணாகும் என்னும் அது –31-
பதவுரை:
தீதில்–குற்றமில்லாத
சரணாகதி–அடைக்கல நெறியை
தந்த–தனக்கு காட்டிக் கொடுத்த
தன்னிறைவன்–தனக்கு தெய்வமான ஆசார்யனுடய
தாளே–திருவடிகளே
அரணாகும்–தஞ்சமாகும்
என்னுமது–என்று சொல்லப்படும் அடைக்கல நெறியே
ஒரு நான்கு வேதம்–ஒப்பற்ற ரிக்கு, யஜுர், சாம, அதர்வணம் என்று சொல்லப்படும் நாலு வகை வேதங்களிலும்
உட்பொதிந்த–நிதி போல் உள்ளே மறைந்து கிடக்கும்
மெய்ப் பொருளும்–உண்மைப் பொருளும்
கோதில் –குற்றமற்ற
மனுமுதநூல்–மனு முதலான சாஸ்திரங்களும்
கூறுவதும்–உரைக்கும் கருத்துக்களும் (எல்லாம்)
அதுவே–ஆச்சார்யனை அடைக்கலம் புகும் நெறியே யாகும்
வேதம் ஒரு நான்கின் உட்பொதிந்த மெய்ப்பொருளும்:
இங்கு’ஒரு’ என்ற சொல் வேதத்தின் ஒப்பற்ற தன்மையைக் கூறுகிறது.
அதாவது
ஒரு மனிதனால் உருவாக்கபடாதது. எழுதா மறை என்றும் கூறப்படுவது.
ஐயம், திரிபு, மயக்கம் முதலிய குற்றங்கள் எதுவுமே இல்லாதது.
உள்ளதை உள்ளபடி கூறுவது முதலிய சிறப்புக்கள் பற்றி ஒப்பில்லாதது என்று பொருள்.
நான்கு:
“வேதம் ரிக்கு,யஜுர் , சாம ,அதர்வணம் என்று நான்கு வகையாகும்.
இத்தகைய வேதங்கள் தம்முள்ளே எட்டு புரி கொண்ட கயிற்றினால் ஒரு பொருளைக் கட்டி வைப்பது போல
எட்டு எழுத்துக் கொண்ட திருமந்திரத்தினுள் பரம்பொருளை மறைத்து வைத்துள்ளது.”
அதாவது
அஷ்டாக்ஷர மகா மந்திரம் எல்லா வேதத்தின் உள்ளேயும் நிதி போல் மறைந்து கிடக்கிறது என்பதாம்.
(எட்டினோடிரண்டெனும் கயிற்றினால் மனந்தனைக் கட்டி (திருச்சந்தவிருத்தம்,)
“வேதம்” அனைத்தையும் அளக்கும் கருவி என்ற சொல்லால்
இம்மந்திரப் பொருளைச் சொல்லும் மற்றைய எல்லா நூல்களிலும் சிறப்புடையது என்பதும்
“நான்கு” என்பதால்
அவ் வேதத்தில் எங்கேனும் ஒரு மூலையில் சொல்லப்படும் பொருளாயில்லாமல்
“அனேக கிளைகளாக விரிந்துள்ள வேதமனைத்துக்கும் உட்பொருள் இவ் வஷ்டாசார மந்திரப் பொருள்
மேல் நோக்கில் இல்லாமல் உள்ளே சேமித்து வைக்கப்பட்ட நிதி போன்றது என்பதும்
“மெய்ப் பொருள்” என்றதால்
அம் மறைப் பொருள் பொருளைக் கூறுகிறது என்பதும் அறியக் கிடக்கிறது.
கோதில் மனு முதனூல் கூறுவதும்:
கோது-குற்றம் .
அது இல்லாமையாவது குற்றமில்லை.
அதாவது
ஒன்றை வேரு ஒன்றாகத் திரித்துக் கூறும் குற்றமில்லாமை என்று பொருள்.
உதாரணமாக முத்துச் சிப்பியின் வெண்மையைப் பார்த்து வெள்ளி என்று வேறாகச் சொல்லாமல் முத்துச்சிப்பி என்றே சொல்வது.
இத்தகைய குற்றங்கள் எதுவும் இல்லாதது மனுதர்ம சாஸ்திரம்.
“கோதில்” என்ற அடைமொழி மனுவுக்குச் சொன்ன போது
மனு சொன்னது மருந்து என்று கூறப்பட்ட அதன் சிறப்பு உணரப்படும்.
அதில் எந்த ஆராய்ச்சியும் செய்ய வேண்டாம் என்ற கருத்து.
இவ் வடைமொழி ஏனைய வற்றிற்கு ஆன போது அந்தந்த நூல்களுடைய நம்பிக்கையை சொல்லுகிறது.
அதாவது
ஐயம் திரிபு அறஉள்ளதை உள்ளபடி சொல்லுதல் .
அவையாவன
சாத்வீக ஸ்ம்ரிதிகளும் ஸ்ரீ விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம், மகாபாரதம் முதலிய இதிகாசங்களும்,
பாஞ்சராத்ரம் முதலிய ஆகமங்களுமாகிற சாஸ்திரங்களுமாம்.
இத்தகைய மனு முதலிய சாஸ்திரங்கள் எல்லாம் ஒரே குரலால் வேதத்தின் இதயமான
அஷ்டாக்ஷர மகா மந்திரத்தின் உள்ளே மறைவாக பொதிந்து கிடக்கும் சரணாகதிப் பொருளை
வெளிப்படையாக விளக்கமாக உரைப்பவை அன்றோ மனு முதலிய நூல்களுக்குப் பணி.
ஆகவே சரணாகதி தத்துவமே வேதம் முதலிய நூல்களாலும் சொல்லப்படும் நெறியாகும்
என்பது இதனால் உணர்த்தப்பட்டது.
தீதில் சரணாகதி தந்த:
எந்தக் குற்றமும் சொல்ல முடியாதது. சரணாகதி நெறியைக் காட்டிக் கொடுத்த அதே நூல்களில் சொல்லப்பட்ட
ஏனைய கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் முதலிய நெறிகளுக்கு
“இன்னார் செய்யக் கூடாது ” என்பன போன்ற கட்டுப்பட்டுக் குற்றமும்
அன்னெறிகளைக் கடைப்பிடிகையில் நூல்கள் சொன்னபடி செய்யமுடியாத நழுவுதல் குற்றமும் உள்ளன.
சரணாகதியாகிற எளிய வழி இருக்கையில் மேற்கூறிய அரிய வழியைப பின்பற்றுகை தேவையற்றது.
குற்றங்கள் எதுவும் சொல்ல முடியாதது. சரணாகதி ஆகிற நெறி நேரடியாக இறைவனைப் பற்றுவது. இதுவே தன சிறப்பு.
(ப்ரபத்தி) -ஈஸ்வர என்பது பகவத் விஷய வாக்கியம். சரணாகதி என்பதற்கு இறைவன் என்றே பொருள் சொல்லப்படுகிறது.
இத்தகைய சரணகதியாகிற நெறியை வறுமையுடவனுக்கு அளப்பரும் சீரிய நிதியைக் கொடுப்பது போல
காட்டிக் கொடுத்த என்றவாறு. இத்தகைய சரணாகதி நெறியை உபதேசித்த என்று பொருள்.
தன்னிறைவன்:
தன்னுடைய ஆசார்யனை “மாடும் மனையும்:” என்கிற பாடலில் எட்டெழுத்தும் தந்தவனே என்று கூறப்பட்டது.
இப் பாடலில் “சரணாகதி தந்தவன்: என்று கூறப்படுகிறது. இதிலிருந்து எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்ததற்கும்
சரணாகதி மந்திரத்தை உபதேசித்ததற்கும் நீண்ட வேறுபாடு இருப்பது புலனாகிறது.
அதாவது
இங்கு “சரணாகதி” என்ற சொல்லல் மறைத்துக் கூறப்பட்டது. அங்கு எட்டெழுத்து என்று வெளிப்படையாகச் சொல்லப்பட்டது.
திருமந்திரம், த்வயம்,சரமச்லோகம் எனப்படும் மூன்று மந்திரங்களுள் முதல் இறுதி மந்திரங்களின் பொருளை மறைத்து
மந்திரத்தை வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டு வருவது முன்னோர்களின் பழக்கமாகும்.
அவை போலன்றி சரணாகதியைக் கூறும் த்வயம் எனப்படும் மந்திரத்தின் பொருளை மறைப்பதோடு
இம்மந்திரத்தின் ஒலி வடிவையும் மறைத்து மனதுக்குள்ளேயே கூறி வரும் மரபு கூறப்படுகிறது.
இதனால் த்வய மந்திரத்தின் சிறப்பு அறியக் கிடக்கிறது.
இதைப்பற்றி நஞ்சீயர் என்னும் ஆசார்யன் கூறுகையில்
” த்வய மந்திரத்தில் பகவானுடைய அழகிய திருமேனி பற்றியும் அதன் குணங்களும் பரமாத்ம இலக்கணமும்
அவனது எண்ணில் பல குணங்களும் நித்யர்களும் முக்தர்களும் பேரின்பமாய் இருப்பது போல
இங்கு வீடு பேறு அடைவதில் ஆசையினால் சரணாகதி பண்ணின அடியார்க்கு
த்வய மந்திரத்தின் உருவமே பேரின்பமாயிருக்கும் என்று கூறியதாகச் சொல்லப்படும் வார்த்தையை ஈண்டு எண்ணிப் பார்க்கலாம்.
இத்தகைய மிகவும் சீரிய சரணாகதியைக் கூறும் மந்திரமான த்வய மந்திரத்தை அன்றோ சீடனாகிற
இவனுக்கு ஆசார்யன் உபதேசித்தது. தனக்கு த்வய மந்திரத்தை உபதேசித்த ஆசார்யனே “இறைவன்” என்பதாம்.
தன்னிறைவன் என்றதால் எல்லோரும் தெய்வமான பகவானைப் போல அல்லாமல்
தனக்கே தெய்வமாக விளங்குவது பற்றித் தன்னிறைவன் என்று கூறப்பட்டது.
தாளே:
அத்தகைய தனக்குத் தெய்வமாய் விளங்கும் ஆசார்யன் திருவடிகளே.
தாளே என்ற சொல்லை மட்டும் நோக்குகையில்
பகவானாகிற இறைவனைப் பற்றினவர்களுக்கும்
ஆசார்யனாகிற இறவனைப் பற்றினவர்களுக்கும் ஆகிய இருவருக்கும் திருவடிகளே தஞ்சம் என்ற பொருள் புலனாகிறது.
தாளே என்ற யிடத்திலுள்ள ஏகாரத்தால்
சீடனுக்குச் செய்யும் நன்மைகளைப் பிறர் உதவியின்றி தானே செய்யும் என்கிற சிறப்பும் உணரக் கிடக்கிறது.
அரணாகும் என்றுமது:
அரண் என்பது தஞ்சம்.
அதாவது
ஆசார்யன் திருவடிகளே தனக்குத் தஞ்சமாகும் என்று பொருள்.
இறைவன் என்ற சொல்லில் தலைமை, நெறி,பயன் என்ற மூன்று கருத்தும் பொதுவாகச் சொல்லப்படும்.
இம்மூன்றுமாய் இருப்பவன் இறைவன்.
தன்னிறைவன் என்றதில் தலைமையும்
‘அரணாகும்’ என்றதில் நெறியும் கூறப்பட்டன.
பயன் கூறாமல் போனாலும் அதையும் இங்கு கூட்டிக் கொள்ள வேணும்.
அதாவது
ஆசார்யன் திருவடிகளே தனக்குத் தலைமையாகவும்
தஞ்சமாகவும் (நெறி)
அடைய வேண்டிய பயனாகவும் இருக்கிற ஏற்றம் சொல்லப்படுகிறது
————
‘மாடும் மனையும் ‘ என்ற பாடலில் ;
பெரிய திருமந்திரம்’ என்று சொல்லப்படும் திருவஷ்டாசார மந்திரத்தை உபதேசம் பண்ணின ஆசார்யன் திருவடிகளே
எல்லாப் பயனுமாகும் என்றறிந்து கொள்ளாத அறிவிலிகளோடு ஏற்படும் உறவை அறவே விட்டிடுகை
சாஸ்திரக் கட்டளையாகும் என்று கூறப்பட்டது.
‘வேதம் ஒரு நான்கின் என்ற 31ம் பாடலில்
அனைத்து சாஸ்திரங்களும் கூறுவது ‘சரணாகதிப் பொருளை உள்ளடிக்கிய த்வய மந்திரத்தை உபதேசித்த
ஆசார்யன் திருவடிகளே தஞ்சமாகும் ‘ என்று கூறப்பட்டது.
இப்படி ஆசார்யனின் சிறப்பு விளக்கப்பட்டது.
இவ்வறு கீழ்ச் சொன்ன இரண்டு பாடல்களில் சிறப்பிக்கப்பட்ட ஆசார்யனை பகவானுடைய
(இராமன், கண்ணன் முதலிய அவதாரங்கள் ) போல ஓர் சிறப்பு அவதாரம் என்று ஈடு படவேண்டும்.
அவ்வாறு ஈடு படாமல் மனிதத் தோற்றமாகவே எண்ணும் மூடர்களுக்கு வரக்கூடிய கேடுகளையும் ,
பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திருக்கோயில்களில் அமையப் பெற்ற இறை உருவங்களை
எந்தப் பொருளால் உருவாக்கப்பட்டது போன்ற ஆராச்சிகள் பண்ணும் மூடனுக்கும்
வரக்கூடிய கேடுகளையும் இப் பாட்டு எடுத்துக் காட்டுகிறது.
மானிடவர் என்றும் குருவை மலர் மகள் கோன்
தான் உகந்த கோலம் உலோகம் என்றும் -ஈனமதா
வெண்ணுகின்ற நீசர் இருவருமே எக் காலும்
நண்ணிடுவர் கீழா நரகு –32-
பதவுரை:
குருவை –தனக்கு மந்திரத்தை உபதேசம் பண்ணின ஆச்சார்யனை
மானிடவன் என்றும்–சாதாரண மனிதர்களைப் போல் இவரும் ஒரு மனிதர் என்றும்
மலர் மகள் கோன் –தாமரையாள் நாயகனான ஸ்ரீமன் நாராயணன்
தானுகந்த கோலம்–தான் விரும்பி ஏற்றுக் கொண்டதான சிலை வடிவங்ககளை
உலோகம் என்றும்–பஞ்ச லோகம் முதலிய பொருட்கள் என்றும்
ஈனமதா –கீழ்த் தரமாக
எண்ணுகின்ற–நினைக்கின்ற
நீசர்–கீழ் மக்களான
இருவரும்–இவர்கள் இருவருமே
எக்காலும்–காலம் உள்ளவரையும்
நரகு–நரகத்தை
நண்ணிடுவர்–அடைவார்கள்
மானிடவன் என்றும் குருவை:
பிறவிப் பெருங்கடலில் உழலும் ஆன்மாக்களை அக் கடலிலிருந்து கரையேற்றுவிப்பதற்காக தெய்வம்
மனித உருவங்கொண்ட குரு வடிவத்தில் தோன்றி இருக்கிறான் என்ற நம்பிக்கை கொள்ள வேணும் .
நாராயணனாகிற தேவனே மனித வடிவம் கொண்டான் என்று நூல்கள் பகர்கின்றன.
இவ்வாறு தெய்வமாகக் கூறப்படும் குருவை மனிதன் என்று நினைக்கிறவனது எண்ணம் பொல்லாதது என்றும்
அவன் கற்ற கல்வி எல்லாம் பயனற்றது என்றும் சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.
மலர்மகள் கோன் தானுகந்த கோலம் உலோகம் என்றும்:
திருமகள் நாயகனான பகவான் தான் விரும்பி ஏற்றுக் கொண்ட சிலை உருவத்தை பஞ்ச லோகங்கள் என்றும்
மற்றும் வேற வேறு பொருட்கள் என்றும் அதாவது மரம் முதலிய பொருட்கள் என்று
ஆராய்ச்சி செய்வது மிகவும் பாபகரமாகும்.
இந்த உருவங்களை “உமருகந்தவுருவம் நின்னுருவம்” (திருவாய்மொழி 8-1-4) என்ற பாடலில்
நம்மாழ்வார் விளக்கி இருக்கிறார்.
அதாவது
தன்னிடத்தில் அன்புடையவர்கள் எந்த உருவத்தில் தன்னை வழிபட என்று விரும்புகிறர்களோ அந்த உருவமாகத் தான் ஆகிறான்.
அவ்வுருவத்தில் தனக்கே உரித்தான தெய்வீகத் திருவுருவத்தில் தான் செய்யும் விருப்பத்தை இந்த சிலை உருவத்திலும் செய்கிறான்.
இந்த ‘உருவம்’ என்பது பக்தன் நிர்மாணித்த உருவம்.
அதனால் இதுவும் தெய்வீக உருவமாக ஆகிறது.
இப்படி ஒரு பக்தன் நிர்மாணித்த விக்ரஹத்தில் தனக்கே உரித்தான தெய்வீக உருவத்தில்
தான் செய்யும் விருப்பத்தைச் செய்வதால் அவனுடைய விருப்பத்தைப் பொறுத்து இதுவும் தெய்வீகமகி விடுகிறது.
அவ்வுருவத்திற்கு அணிவிக்கும் ஆபரணங்களும் மற்றும் அனைத்தும் உலகியலுக்கு மாறுபட்டு தெய்வீகமாக ஆகிறது.
இதை “அப்ராக்ருதம்” என்று சாஸ்திரம் கூறும்.
இந்த சாஸ்திர நுட்பத்தை அறியாதார் மேலெழத் தோன்றுகிற பஞ்சலோகம் முதலான உருவத்தையே பார்த்து
அதி அராய்ச்சி பண்ணுவது கொடிய பாபமாக சாஸ்திரம் கூறுகிறது.
இப்பாபம் எது போரது எனில்
‘பெற்ற தாயிடம் தான் பிறந்த இடத்தைக் குறித்து ஆராய்ந்து பார்ப்பது போலும்” என்று
சாஸ்திரம் மிகக் கொடூரமாக கூறியுள்ளது.
ஈனமதா:
தாழ்வாக –
மிகவும் தாழ்வாக எண்ணுகின்ற நீசர்கள்
அதாவது ‘குருவை மனிதன்’ என்றும் ;
தெய்வ உருவத்தைப் பஞ்சலோகம் முதலியன என்றும் எண்ணுகின்ற கீழ்த்தரமானவர்கள் என்பதாம்.
கீழ்த்தரம் என்றால் இவர்களைக் காட்டிலும் தாழ்ந்தவர்கள் இல்லை என்ற கருத்து.
அதாவது மந்திரோபதேசம் செய்த ஆசார்யனையும்,
வழிபாட்டிற்குரிய இறை உருவங்களையும் கீழ்க்கூறிய வண்ணம் தாழ்வாக நினைப்பவர்கள்
கர்ம சண்டாளர்கள் என்று சொல்லப்படும் பாபிகள் ஆவர் என்பதாம்.
அதாவது
எண்ணத்தால் தாழ்ந்தவராவர். ‘
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்று கூறும் தமிழ் வழக்கு இங்கு காணத் தக்கதாகும்.
‘உயர்வை எண்ண வேண்டிஅய் உள்ளத்தில் தாழ்வை எண்ணுவது பாபமாகும்.
இருவருமே:
அதாவது கீழ்ச் சொன்ன குருவை மனிதனாக எண்ணுபவனும்
இறைவனது திருவுருவங்களை உலோகமாக எண்ணுபவனும்
ஆக இவ் விருவரும் ஓரி நிகரான பாபிகளாயிருப்பதால் மேல் கூறப் போகும் கேடு
இவ்விருவருக்குமே உரித்தாகும்.
(இருவருக்கும் வரும் கேடாவது)
எக்காலும் நண்ணிடுவர் கீழாம் நரகு:
எல்லாக் காலத்திலும்
அதாவது, காலம் என்கிற தத்துவம் உள்ளதனையும் கீழான நரகத்தை அடைவர் என்று பொருள்.
கீழாம் நரகு என்றால்
இதுக்கு மேல் கீழான நரகம் என்று ஒரில்லை என்று சொல்லத்தகுந்த நரகம் என்பதாம்.
நரகம் என்பது இன்பம் கலவாது துன்பத்தை மட்டுமே அனுபவிக்கும் இடம் என்று பொருள்.
இத்தகைய ‘நரகத்தை எக்காலும் நண்ணிடுவர்’ என்றது.
நரகத்திலேயே பிறந்து நரகத்திலேயே வளர்ந்து நரகத்திலேயே முடிவதாம்.
கரையேறுவதற்கு அரிதான கரை காண முடியாத பிறவிப் பெருங்கடலில் மாறி மாறி பல பிறப்புகளிலும் பிறந்து
இங்கேயே உழன்று வரும் மூடர்கள் ஆவார்கள் என்றும் கூறலாம்.
ஆகவே மேற்கூறிய இரண்டு பாபிகளும் துன்பத்திலிருந்து விடுபடுதல் இல்லை என்றவாறாம் .
குருவை மானிடன் என்று கருதுவோரையும்
கடவுள் திருவுருவத்தை உலோகம் என்று கருதுவோரையும் உடன் கூறுவதால்
இது உடன் நவிற்சிப் பொருள் என்ற இலக்கணத்தின் பால் படும்.
————-
அருகில் இருக்கிற ஆசார்யனை மனிதன் என்று கைவிட்டு
நீண்ட தொலைவிலுள்ள (கட்புலனாகாத) இறைவனை
‘வேண்டின சமயத்தில் உதவுவான்’ என்று நினைத்து அவ் இறைவனை ஆவலுருகிறவன்
அறிவு கெட்டவன் ஆவான் என்னும் உண்மையைத் தக்க உதாரணத்துடன் இதில் எடுத்துரைக்கப்படுகிறது.
எட்டவிருந்த குருவை இறை அன்று என்று
விட்டு ஓர் பரனை விருப்புறுதல்-பொட்டெனத் தன்
கண் செம்பளித்திருந்து கைத்துருத்தி நீர் தூவி
அம்புதத்தைப் பார்த்து இருப்பானற்று –33-
பதவுரை:
எட்ட இருந்த–மிக அருகில் எட்டும் இடத்தில் இருக்கிற
குருவை –ஆசார்யனை
இறையன்று–தலைவன் இல்லை என்று
விட்டு–புறக்கணித்து
ஓர் பரனை–அணுக அரிதாயிருக்கும் கடவுளை
விருப்புறுதல்–அடைய வேணுமென்று அவாவுதல்
(எது போன்றது எனில்)
பொட்டன–சடக்கென்று
தன் கண்–தன்னுடைய கண்ணை
செம்பளித்திருந்து –மூடிக் கொண்டிருந்து(மேல் விளைவதை ஆராயாதிருந்து)
கைத்துருத்தி நீர் –விடாய் தணிக்க வைத்திருந்த துருத்தி நீரை
தூவி–தரையில் ஊற்றி விட்டு
அம்புதத்தை–மேகத்தின் நீரை
பார்த்திருப்பானற்று–எதிர் நோக்கி இருப்பவன் போல ஆகும்.
எட்ட இருந்த குருவை:
எட்டுதல்-கிட்டுதல் அருகில் என்று பொருள் .
அதாவது
கை அருகில் இருக்கும் ஆசார்யனை என்று பொருள்.
கட்புலனுக்கு இலக்காய் எப்பொழுதும் பார்த்துக்
கொண்டிருப்பதற்கு உரியவனாயும் தனக்குக் காப்பாளர் வேண்டியபோது
காப்பாளனகவும்,
இனியனாய் இருக்கையும்.
ஆத்ம நலனுக்கு உதவியாய் இருப்பவனும்
எப்பொழுதும் கலந்து பரிமாறுவதற்கு உரியனாய்த்
தனக்கு அருகில் இருப்பவனும் ஆனா ஆசார்யனை என்று பொருள்.
இறையன்று என்று விட்டு:
இவர் தலைவர் இல்லை என்று குருவை விட்டிட்டு
31ம் பாடலில் ‘சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே அரணாகும்’ என்று
கூறியதற்கு மாறாக அவ் ஆசார்யனைத் தனக்குத் தலைவனாகக் கொள்ளாமல் ‘நம்மைப் போன்றவர்’ என்று
மனிதன் எண்ணத்தால் அவரைத் தலைமையாக மதிப்பதை விட்டு
ஓர் பரனை விருப்புறுதல்:
எல்லோருக்கும் மேலானவனாக விருக்கும் கடவுளை அவாவுறுதல் என்று பொருள்.
அதாவது
சாஸ்திரங்களினால் அறியத் தக்கவனாய் மிகத் தொலைவில் இருப்பவனைத்
தனுக்கு அணுக அரியனாய் இருக்கும் கடவுளைத் தன்னைக் காப்பவனாகவும் இன்யனாகவும் கருதி
அவனை அடைய வேணுமென்று ஆசைப்படுதலாம்.இது எது போன்றது என்றால்
பொட்டென:
சடக்கென்று பின்வரும் விளைவை ஆராயாமல் என்பதாம்.
தன் கண் செம்பளித்திருந்து:
தூங்குவாரைப் போல தன்னுடைய கண்களை மூடிக்கொண்டிருந்து
பின் வரும் விளைவை அறியாமல் என்ற கருத்து.
கைத்துருத்தி நீர் தூவி:
விடாய் பிறந்த போது விடாய் அகற்றிக் கொள்ளலாம் என்றெண்ணி துருத்தி (water can) யில் நிரப்பித்
தன் கைவசம் இருக்கிற குடிநீரைப்ப் பூமியில் வார்த்து விட்டு.
அம்புதத்தைப் பார்த்திருப்பான் அன்று:
மேகத்திலுள்ள நீரை விடாய் தணிப்பதற்கு உதவும் என்று நினைத்து
வானத்தில் உள்ளதும் மிக்கத் தொலைவில் இருப்பதுமான மழைத் தண்ணீரையே
எதிர் பார்த்திருப்பான் செயல் போன்றது என்று பொருள்.
அவனைப் போல் என்றது அவன் செயல் போல என்றவாறு.
பரனை விருப்புறுதல் தொழிலுக்கும்
அம்புதத்தைப் பார்த்திருப்பான் செயலுக்கும்
பொருத்தமாயிருப்பதால் இதற்குத் தொழில் உவமம் என்று பெயர்.
இப் பாடல் கருத்துக்கு “ஸ்ரீ வசனபூஷனத்தில்”
‘விடாய் பிறந்த போது கரச்தமான உதகத்தை உபேக்ஷித்து ஜீமுத ஜலத்தையும் சாகர ஜலத்தையும்
ஸரித் ஸவித்தையும் வாபீ கூப பயஸ்ஸுக்களையும் வாஞ்சிக்கக் கடவனல்லன்
என்ற வாக்கியத்தை மேற்கோளாகக் காண்க.
————–
மிகவும் எளியனாய்த் தனக்குக் கிடைத்திருக்கிற ஆசார்யனை மானிடத் தோற்றத்தாலே புறக்கணித்து
மிக அரியனாய் யோகங்கள்முதலிய அநேக முயற்சிகள் செய்து காண வேண்டிய இறைவனை
வேண்டிய சமயத்தில் நமக்கு உதவுவான் என்று நினைத்து அவனைப் பின்தொடர்தல் அறியாமை ஆகும்
என்னும் கருத்தை மேலும் ஒரு உதாரனத்தாலே இதி சொல்லப்படுகிறது.
பற்று குருவைப் பரன் அன்று என இகழ்ந்து
மற்றோர் பரனை வழிபடுதல் -எற்றே தன்
கைப் பொருள் விட்டு ஆரேனும் காசினியில் தாம் புதைத்த
அப்பொருள் தேடித் திரிவான் அற்று –34-
பதவுரை:
பற்று குருவை–தன்னாலே பற்றப்படுகிற ஆசார்யனை
பரன் அன்று என்று–இவன் இறைவன் இல்லை என்று
மற்றோர் பரனை –வேறு ஒரு கடவுளை
வழிப்படுதல்–தனக்குத் தஞ்சமாகக் கொள்ளுதல் எது போன்றது எனில்
தன் கைப்பொருள்–தன் கையில் இருக்கும் பணத்தை
விட்டு–அல்பம் என்ற நினைவால்
ஆரேனும்–எவராயினும்
தாம்–தாங்கள்
காசினியில்–பூமிக்குள்ளே
புதைத்த –புதைத்து வைத்த
அப்பொருள்–அந்தப் புதைப் பொருளை
தேடித்திரிவான்–தேடித்திரிபவன் செயல் போன்றதாகும்
எற்றே –என்ன மடமையோ?
பற்று குருவை:
தன்னாலே பற்றப் பட்டிருக்கிற ஆசார்யனை.
அதாவது
மிக எளியனாய்த் தனக்கு வேண்டும் போது தன்னைக் காக்கும் துணையாகவும்
பழகுவதற்கு இனியனாகவும் தன்னால் குருவாகப் பற்றப்பட்டிருக்கும் ஆசார்யனை என்று பொருள்.
பரன் அன்று என இகழ்ந்து:
ஆசார்யனை பகவானுடைய தோற்றமாகச் சொல்லி இருக்க, அதில் நம்பிக்கை கொள்ளாமல்
மானிடவன் என்று கருதும் தீய எண்ணத்தினால்
‘இவன் பகவானுடைய தோற்றமில்லை மனிதனே ‘ என்று சிறுமை செய்து அவனைப் புறக்கணித்து.
மற்றோர் பரனை வழிப்படுதல்:
வேறு ஒரு இறைவனை வழிபடுகை.
அதாவது
‘மிகவும் அரியனாய்த் தன் கட்புலனுக்குத் தோன்றாமல் யோகம் முதலிய அரிய முயற்சிகள் செய்து
மிக வருந்திக் காணத்தகும் இறைவனைத் தனக்குக் காவல் துணையாகவும் பழக இனியனாகவும் நினைத்து
அப்பரனை அடைவதற்காக அவனைப் பின் தொடர்க’ என்பதாகும்.
எற்றே:
என்னே! இரக்கப் பொருளில் வந்தது.
இவன் புறக்கணித்த ஆசார்யனுக்கும் பற்றிக் கொண்ட இறைவனுக்கும் உள்ள வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு
மன வேதனையுடன் என்னே! என்று மனம் நொந்து கூறும் கருத்தைக் காட்டுகிறது.
எற்றே– என்னே என்று இளி வரவில் வந்த இடைச் சொல்.
இது எது போன்றது எனில்.
தன் கைப்பொருள் விட்டு:
தன் கைப் பொருளை உதறி எறிந்து விட்டு, வேண்டின போது பயன் படுத்திக் கொள்ளும்படி
தன் முந்தானையில் கட்டி வைத்திருக்கும் பணத்தை அல்பம் என்று எண்ணி உதறி விட்டு
ஆரேனும் காசினியில் தாம் புதைத்த:
யாராவது பூமிக்குள் புதைத்து வைத்த
அதாவது
முன்பின் தெரியாத யாராவது பூமிக்கு மேல் இல்லாமல் பூமிக்கு உள்ளே அவர்கள் புதைத்து வைத்த
அப்பொருள் தேடித் திரிவான் அற்று:
அவன் புதைத்த பணத்தை தான் அடைவதற்காகப் பூமியைத் தோண்டித் தோண்டித் திரிபவன் செயல் போல என்று பொருள்
(திரிபவன் போல என்பதற்குத் திரிபவன் செயல் போல என்று பொருள் சொல்லப்பட்டது)
மற்றோர் பரனை வழிபடுதல் என்னும் செயலுக்கு உதாரணமாகச் சொல்லுவதால்
தேடித் திரிபவன் செயல் போல என்று கூறப்பட்டது.
இதுவும் தொழிலுவமம் ஆகும்.
ஆகவே அருகிலுருக்கும் குருவைப் புறக்கணித்து விட்டுக் காண முடியாது நெடுந்தொலைவிலிருக்கும் கடவுள் பின் செல்லுதல்
தன் கையிலுள்ள பொருளை அற்பம் என்று எண்ணி உதறிவிட்டு யாரேனும் பூமியில் பணத்தைப்
புதைத்து வைத்திருக்க மாட்டார்களா என்று பேராசையுடன் பூமியைத் தோண்டித் தோண்டித் திரிகின்ற
அறிவிலியின் செயல் போன்றது என்று மன நோவுடன் ஐயோ என்று இரங்கிக் கூறுவதாக அமைந்துள்ளது இப்பாடல்.
இப்பாடல் கருத்தை ஸ்ரீவசனபூஷணத்தில்
‘ கைப்பட்ட பொருளைக் கைவிட்டுப் புதைத்த பொருளை கணிசிக்கக் கடவனல்லன்’
என்று கூறியுள்ளது காண்க.
————-
அருகில் இருப்பவனாய் எளியவனுமான ஆசார்யனைப் புறக்கணித்துவிட்டு
மிகத் தொலைவில் இருப்பவனுமாய்க் கிட்டுதற்கு அரியவனுமான இறைவனை ஆசைப்படுவார்
அறிவிலிகளாவர் என்று இரண்டு உதாரணங்களால்
(எட்டவிருந்த, பற்றுகுருவை) என்ற 33, 34 பாடல்களால் காட்டப்பட்டது.
‘இவ்வாறு குருவினிடத்தில் அன்பு இல்லாதவனுக்குப் பகவான் ஒரு நாளும் அருள் பண்ண மாட்டான்.
தண்டித்தே தீருவான் என்பதை உதாரணத்துடன் உணர்த்துகிறது இப்பாடல்.
என்றும் அனைத்து உயிர்க்கும் ஈரம் செய் நாரணனும்
அன்றும் தன்னாரியன் பால் அன்பு ஒழியில்-நின்ற
புனல் பிரிந்த பங்கயத்தைப் பொங்கு சுடர் வெய்யோன்
அனல் உமிழ்ந்து தானுலர்த்தி யற்று –35-
பதவுரை:
நின்ற புனல்–தனக்கு ஆதாரமாய் இருக்கின்ற தண்ணீரை
பிரிந்த–விட்டு அகன்ற
பங்கயத்தை–தாமரைப் பூவை
பொங்கு சுடர்–கிளர்ந்து எழுகின்ற ஒளியுடைய
வெய்யோன்–உஷ்ண கிரணத்தை உடைய சூரியன்
தான்–முன்பு மலரப் பண்ணின அவன் தானே
அனலுமிழ்ந்து–பின் நெருப்பைக் கக்கி
உலர்த்தியற்று–உலர்த்துவது போன்றதாகும்.
என்றும் –எப்பொழுதும்—எக்காலத்திலும்,-
அதாவது கழிவு, நிகழ்வு, எதிர்வு ஆகிய முக்காலங்களிலும் என்று பொருள்.
அனைத்துயிர்க்கும்–எல்லா உயிர்களுக்கும்-எல்லா ஆன்மாக்களுக்கும்
ஈரஞ்செய்–கருணை காட்டும்
நாரணனும்–நாராயணனும்
தன்னாரியன்பால் –தனக்கு ஆதரமான குருவினிடத்தில்
அன்பு ஒழியில் –பக்தி அகன்று போனால்
அன்றும் –சீற்றத்தால் எரிப்பான்.
ஈரம் செய் நாரணனும்:
அருளே பண்ணிக் கொண்டிருக்கும் நாராயணனும்.
இங்கு நாராயணன் என்று கூறியது
உயிர்க்கும் இறைவனுக்கும் பிரிக்க முடியாத உறவைக் காட்டுகிறது.
அதாவது
‘நாரம் ‘ என்றால் அனைத்து உயிர்கள்
‘அயனம்’ என்றால் உயிர்களுக்கும் உயிராய் உள் நின்று அவற்றைத் தாங்கி நின்று இயக்குகின்றதோ
அது போன்று அனைத்து உயிர்களுக்கும் உயிராய் நின்று அனைத்தையும் நடத்துபவன் என்ற பொருளை
நாரம்+ அயனம் என்ற இரண்டு சொற்களும் கூடி நின்று நாராயணன் என்ற ஒரு சொல்லாகி
மேற் சொன்ன கருத்தைக் காட்டுகிறது.
இக்கருத்தை
‘உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது’ என்ற ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவையில் காண்க.
‘”நான் உன்னையன்றிலேன் நாரணனே நீ என்னை அன்றி இலை’” என்று திருமழிசை ஆழ்வாரும் கூறினார்.
இதனால்
அறிவுடைய ஆன்மாவாகிற பொருளும் அறிவில்லாத ஜடப் பொருளுமாகிய நாரங்கள்
அனைத்துக்கும் உயிராய் உள் நின்று பொருள் அனைத்தையும் இயக்குபவன், நாராயணன் என்று
நாராயண பதத்தினுடைய கருத்தைக் கூறியவாறாம்.
இதனால்
அனைத்து உயிர்கள் செய்யும் குற்றங்களையும் குணமாகக் கொள்ளுபவன். வத்சலன் என்ற
பகவானுடைய சிறப்புக் குணம் இங்கு தெளியப்படுகிறது.
இவ்வாறு அனைத்து உயிர்களுக்கும் அருளே செய்யும் இயல்புடை யவனும்
அன்றும்: சீறுவான்
‘அன்றுதல்’ சீறுதல் தண்டனை செய்வான் என்று பொருள்.
‘அன்றிய வாணன்’ (பெரிய திருமொழி -1275) என்றவிடத்தில் அ
ன்றிய என்ற சொல் கோபித்த என்ற பொருளில் வழங்கியது போல இங்கும் அப்பொருளில் வந்தது.
எப்பொழுது இவ்வாறு அக்கருனைக் கடலான இறைவன் சீறி எழுவான் என்றால் அதைக் கூறுகிறது மேல் தொடர்.
தன்னாரியன்பால் அன்பு ஒழியில்:
தன் குருவினிடம் பக்தியில்லையானால் (சீறுவான்)
அதாவது
கீழே எட்டயிருந்த குருவை‘ பற்று குருவை’ என்ற இரண்டு பாடல்களிலும்
குருவின் மனிதத் தோற்றத்தைப் பார்த்து இவன் இறை அன்று என்றும்,
‘பரன் அன்று என்றும்’ நினைத்து விட்டு விடுதல் கூறப்பட்டது.
அவ்வாறு குருவினிடம் அன்பு அகன்றால் என்று பொருள்.
இதற்குத் தக்க உதாரணம் மேல் தொடரால் சொல்லப்படுகிறது.
நீன்ற புனல் பிரிந்த பங்கயத்தை:
மிக்க ஒளியுடையவனும் உஷ்ண கிரணங்களை உடையவனுமான சூரியன்.
அதாவது
‘செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கு அல்லால்’ என்று குலசேகராழ்வார் சொன்னதற்கிணங்க
அதாவது
தாமரை சூரிய ஒளிக்கல்லாமல் வேறு ஒளிக்கு மலராது என்பது இயல்பு.
நீரைப் பிரியாமல் இருக்கும் பொழுது எக்காலத்திலும் தன்னுடைய கிரணங்களால் அலற்த்திக் கொண்டு வரும் சூரியன்.
அனல் உமிழ்ந்து தான் உலர்தியற்று:
நெருப்பைக் கக்கி தானே அத்தாமரையை உலர்த்துவது போன்றது ஆகும்.
இதனால் நீரைப் பிரியாமல் இருக்கும்போது தாமரையை அலர்த்தி வந்த சூரியன்
நீரைப் பிரிந்த போது தனது உஷ்ண கிரணத்தைக் கக்கி அத்தாமரையை உலர்த்திவிடுவது போல.
ஆசார்யனிடம் அன்பு குறையாமல் தொடர்பு கொண்ட காலத்தில் எப்பொழுதும் இவனுக்கு அருள் செய்து வந்த பகவான்,
குருவினிடம் அன்பு குலைந்து அவனை விட்டுப் பிரிந்த போது அப்பகவானே இவனைக் கோபித்து அழித்து விடுவான் என்பதாம்.
இங்கு அருள் செய்வது என்றால் சீடனுடைய அறிவை விளங்க வைப்பன் என்றும்
கோபித்து அழித்து என்றால் இவனுடைய அறிவை மங்க வைத்து விடுவான் என்றும் அறியவேணும்
தனக்கு மந்திரோபதேசம் செய்த ஆசார்யனிடம் அன்பு அகன்றால்
எல்லா உயிர்களுக்கும் கருணை காட்டும் நாராயணனும் கூடச் சீறிவிடுவான் இது எது போன்றது எனில்
தண்ணீரை ஆதாரமாகக் கொண்டு நின்ற தாமரையை அத்தண்ணீரைப் பிரித்துக் கரையில் சேர்த்தால்
அத்தாமரை உஷ்ண கிரணங்களையுடைய சூரியன் அனலைக் கக்கி உலர்த்துவது போன்றதாம்.
அதாவது
சீடனுடைய உயிர் தத்துவத்தை விளங்க வைக்கும் இறைவனே குருபக்தி குலைந்ததும் தண்டித்து விடுவான்.
சீடனின் நல்லறிவை மறைத்து அறிவிலியாக்கி விடுவான்.
சீடன் அறிவுடையவனாக இருந்து அது இல்லாதவனாகிவிடுவான் என்ற கருத்து
‘ உளரெனினும் இல்லாரோடொப்பர்.’ என்று வள்ளுவர் கூறியது போல் குருபக்தி குலையக் கூடாது என்பதாம்.
இப்பாடலில் கூறிய கருத்தை ஸ்ரீவசனபூஷணத்தில்
“தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரித்தால் அத்தை உலர்த்துமாப் போலே
ஸ்வரூப விகாசத்தைப் பண்ணும் ஈஸ்வரன் தானே ஆசார்ய சம்பந்தங்குலைத்து வாடப் பண்ணும்” என்று கூறியுள்ளது காண்க.
————-
நற்சீடனாய் நல்லாசிரியனிடம் மிக்க அன்புடயவனாய் இருப்பவனுக்கு
அனைத்து திவ்ய தேசங்களும் தன் ஆசார்யனே யன்றி வேறில்லை என்று கூறப்படுகிறது.
வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற் குன்று முதல்
செல்லார் பொழில் சூழ் திருப்பதிகள் எல்லாம்
மருளாம் இருளோட மத்தகத்துத் தன் தாள்
அருளாலே வைத்த வவர் –36-
பதவுரை:
வில்லார் –ஒளி நிறைந்த
மணி –ரத்தினங்களை
கொழிக்கும்–குவித்துத் தள்ளும்
வில்லார் மணி கொழிக்கும் – வில்-ஒளி ஆர் -மிகுதி-ஒளி மிகுந்த ரத்தினங்களை
வேங்கடம்–அழகிய திருமலை முதலான
செல்லார்–மேகங்கள் வந்து படிகின்ற
பொழில் –சோலைகளாலே
சூழ்–சூழப்பட்ட
திருப்பதிகள் எல்லாம்–திவ்ய தேசங்கள் எல்லாம்
மருளாம் இருள்–அறியாமையாகிற இருளை
ஓட–விரைவில் அகலும்படி
மத்தகத்து–சீடன் தலைமேல்
தன்தாள் –தம்முடைய திருவடிகளை
அருளாலே–மிக்க கருணையினாலே
வைத்த –வைத்து அருளின
அவர் –ஆசார்யரான அவரே ஆவார்
” நன்மணி வண்ணனுர் ஆவியும் கோளரியும்
பொன்மணியும் முத்தமும் பூமரமும் – பன்மணி
நீரோடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடுமுடை வேங்கடம்.” –(நான்முகன் திருவந்தாதி – 48)என்ற திருமழிசைப்பிரான் பாடலில்
யாழிகளையும் சிங்கங்களையும் பொன், ரத்தினம்,முத்து முதலிய பொருட்களையும்
மற்றும் அனேக மணிகளையும் பூமரங்களையும் இழுத்துக்கொண்டு புரண்டு விழுகின்ற அருவிகளோடு
காடுகளையும் வானரங்களையும் வேடர்களையும் உடைய திருவேங்கடம் என்று உரைத்ததை இங்கு ஒப்பு நோக்குக.
வேங்கடப் பொற்குன்று முதல்:
இவ்வாறு சிறப்பிக்கப் படுகின்ற திருவேங்கடம் என்ற பெயர் கொண்டதாய்
எல்லா இயற்கைகளாலும் மிக அழகான திருமலை முதலான
செல்லார் பொழில் சூழ்:
உயர்ந்து நிற்பதால் மேகங்கள் வந்து படியும்படி இருக்கும் சோலைகளாலே சூழ்ந்த
(செல்-மேகம்-ஆர்த்த-படிதல்)
திருப்பதிகள் எல்லாம்:
பகவான் உகந்து எழுந்தருளியுள்ள திவ்ய தேசங்களெல்லாம்
மருளாம் இருளோட:
அறியாமையாகிற இருள் விரைவில் அகல
மத்தகத்துத்தன் தாள் அருளாலே வைத்த அவர்:
சீடனது முடியில் தன்னுடைய திருவடிகளைத் தம்முடைய கருணையினாலே வைத்தருளின குருவானவர்
அருளாலே வைத்தார் என்றதால் இதற்கு காரணம் எதுவுமில்லை என்பதாம்.
சீடனது பணிவிடை முதலியவற்றைக் காரணமாகச் சொல்லலாமல்லவா?
அப்படி எதையும் எதிர்பார்த்து அருளவில்லை என்பது கருத்து.
இங்கு திருமலை முதலான அர்ச்சா ஸ்தலங்களைக் குறிப்பிட்டது
ஏனைய பரமபதம், பாற்கடல் முதலிய இடங்களைக் கூட்டிகொள்ளவேணும் என்பது குறிப்பு.
ஆகவே பகவான் எழுந்தருளியுள்ள பரமபதம், திருப்பாற்கடல், இராமன், கண்ணன் முதலிய விபவ அவதாரங்கள்,
எல்லாப் பொருள் உள்ளும் மறைந்திருக்கும் அந்தர்யாமித்வம் ஆகிய ஐந்து நிலைகளும் அடங்கும்.
ஆக இவ்வைந்து நிலைகளும் தனக்கு ஆச்சார்யனே என்று இருக்க வேண்டும் என்பது கருத்து.
இக்கருத்தை சீடனிலக்கணம் சொல்லும் ஸ்ரீவசனபூஷணத்தில்
” பாட்டுக் கேட்குமிடமும் கூப்பீடு கேட்குமிடமும் குதித்த இடமும் வளைத்த இடமும் ஊட்டுமிடமும்
எல்லாம் வகுத்த இடமே என்றிருக்கக் கடவன்” என்று கூறப்பட்டுள்ளது ஒப்பு நோக்குக.
இதன் பொருள்,
பாட்டுக் கேட்குமிடம் – பரமபதம்
கூப்பீடு கேட்குமிடம் – திருப்பாற்கடல்
குதித்த இடம் – இராமன், கண்ணன் முதலிய விபவ அவதாரங்கள்
வளைத்த இடம் – அந்தர்யாமித்வம் (உள்ளும் புறமும் உளனாயிருத்தல்)
ஊட்டுமிடம் – விக்ரஹ வடிவில் எழுந்தருளி சேவை கொடுக்கும் திருக்கோயில்கள்
இவையெல்லாம் – இவ்வைந்து நிலைகளும் ஆச்சார்யனே என்று இருக்க வேண்டும்
வகுத்த இடம் – ஆச்சார்யன் என்பதாம்
108 திருத்தலங்களும் மற்றும் பகவான் எழுந்தருளியுள்ள அனைத்து இடங்களும் ஆச்சார்யனே என்று
இருப்பதுவே நற் சீடனிலக்கணமாகும் .
இதனால் அச்சர்யனை பகவான் எழுந்தருளி இருக்கும் இடங்களுக்கு ஒப்பாகக் கருத வேண்டும் என்பது கருத்து.
“இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலைஎன்னும்
பொருப்பிடம் மாயனுக் கென்பர் நல்லோர் அவை தன்னொடு வந்
திருப்பிடம் மாயன் இராமானுசன் மனத்தின்றவன் வந்
திருப்பிடம் என்றன் இதயத்துள்ளே தனக்கின்புறவே” –(இராமனுச நூற்றந்தாதி 106)
என்ற நூற்றந்தாதி பாடலும் இக்கருத்து பற்றியே சொல்லப்பட்டது.
————
பணம், உயிர், உடல் முதலான அனைத்தும் அச்சார்யனுடைய சொத்தாக நினைத்திருப்பாரது மனம்
இறைவனுக்கு எந்நாளும் இருப்பிடமாகும் என்கிறது இப்பாடல்.
பொருளும் உயிரும் உடம்பும் புகலும்
தெருளும் குணமும் செயலும் -அருள் புரிந்த
தன்னாரியன் பொருட்டாச் சங்கற்பம் செய்பவர் நெஞ்சு
எந்நாளும் மாலுக்கு இடம் –37-
பதவுரை:
பொருளும்–தன்னுடைய செல்வமும்
உயிரும் –தன் உயிரும்
உடம்பும் –தன் உடம்பும்
புகலும் –தன் குடியிருப்பும்
தெருளும்–தன் அறிவும்
குணமும்–தன்னுடைய நற்பண்புகளும்
செயலும்–தான் செய்யும் அனைத்துக் காரியங்களும்
அருள் புரிந்த–தன்னைச் சீடனாக ஏற்றுக் கருணை காட்டிய
தன்னரியன் பொருட்டா–தன்னுடய ஆச்சாரியனுக்கு உடமையாக
சங்கற்பம் செய்பவர்–எண்ணி இருப்பவர்
நெஞ்சு–இதயம்
எந்நாளும்–எக்காலத்திலும்
மாலுக்கு –பகவானுக்கு
இடம்–உறையுமிடமாகும்.
பொருளும்:
தனக்குரிய அனைத்துச் செல்வங்களும்
உயிரும்:
தன்னுடைய மூச்சும்
உடம்பும்:
தன்னுடைய சரீரமும்
புகலும்:
தன்னுடைய குடியிருப்பும்
தெருளும்:
தன்னுடைய கல்வி அறிவும்
குணமும்:
தன்னிடமுள்ள அடக்கம் முதலிய நற்குணங்களும்
செயலும்:
தான் செய்யும் அனைத்துச் செயல்பாடுகளும் இவற்றை எல்லாம் அருள் புரிந்த தன் ஆரியன் பொருட்டா:
அதாவது காணிக்கை கொடுத்தல் , பணிவிடை செய்தல் முதலிய எதையும் எதிர் நோக்காமல்
தன்னிடம் கருணை காட்டித் தன்னைச் சீடனாக ஏற்றுத் தனக்கு மந்திரங்களை உபதேசம் செய்த ஆச்சார்யனுக்குச் சொந்தமானதாக
சங்கற்பம் செய்பவர் நெஞ்சு:
எப்பொழுதும் எண்ணி இருப்பவர் இதயம்
எந்நாளும் மாலுக்கிடம்:
எல்லாக் காலமும் பகவானுக்கு விருப்பத்துடன் உறையுமிடமாகும் சீடன் தன்னுடைய எல்லாவற்றையும்
தன்னுடைய ஆச்சார்யனுக்கு உடமையாகும் என்று எண்ணுவதால் இத்தகைய தூய நெஞ்சு
இறைவனுக்கும் விரும்பி உறையுமிடமளிக்கிறது .
மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரை ஆச்சார்யனாக அடைந்தவர்.அவரைத் தவிர ” தேவு மற்று அறியேன்: என்று
வேறு தெய்வத்தை அறியாதவராக இருந்தார்.
அன்னையாயத்தனா என்னை யாண்டிடும் தன்மையான் சடகோபனென் நம்பியே” என்று
அனைத்தும் நம்மாழ்வாரே என்று வாழ்ந்தவர்.
அத்தகைய தூய ஆச்சார்ய அன்புடயவரது இதயத்தைத் தனக்கு இருப்பிடமாகக் கண்ணன் விரும்பினான்.
தேவு மற்று அறியாத இவருடைய இதயம் தேவபிரானுக்கு உகந்து உரைஉமிடமாகும் என்ற கருத்துச் சொல்லப்பட்டது.
“தெருளாகும் மதுரகவி நிலை தெளிந்தோன் வாழியே” என்று இந்நூலாசிரியர் போற்றப்பட்டவர்.
அதனால் இவருடைய ஒழுக்க நெறியான குருபக்தியும் குறிப்பாக உய்த்துரைக்கபடுகிறது.
ஸ்ரீ ஆண்டாள் நிலையும் இதுவாகவே சொல்லப்பட்டுள்ளது.
“வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே”
(நாச்சியார் திருமொழி 10-10) என்று கூறியது காண்க.
————–
ஆச்சார்ய வைபவம் 26வது பாடலான ‘தப்பில் குருவருளால்’ என்ற
பாடல் தொடங்கி 37வது பாடலான ‘பொருளும் உயிரும்’ என்ற பாடல் வரை பல கோணங்களில் கூறப்பட்டது.
அதாவது
(26) குருவருளால் இறைவனிடம் சரணாகதி பண்ணினவர் வைகுந்தம் சென்று அங்கு இறை அடிமை செய்வர் ,
(27) ஆசார்யனை அணுகாதவர் வைகுந்தம் சேராமல் இடத் அழுந்துவார் என்றும்
(29) குருவின் அருள் பெற்றவர் இடரை வென்று எளிதில் வீடு அடைவர் என்றும்
(30) குருவை அணுகாதவர் உறவை விடுகை சாஸ்திரக் கட்டளை என்றும்
(31) வேதம் முதலிய நூல்கள் கூறுவதெல்லாம் குருவின் திருவடிகளே தஞ்சமாகும் என்றும்
(32)குருவை மனிதனாக எண்ணுபவன் நரகு எய்துவான் என்றும்
(33+34) அருகில் இருக்கும் குருவைப் புறக்கணித்துத் தொலைவில் இருக்கும் இறைவனைத் தொடர்வது அறியாமையாகும் என்றும்
(35) குருவினிடம் அன்பு ஒழிந்தால் கருணையுடைய கடவுளே சுட்டு சாம்பலாக்கி விடிவான் என்றும்
(36) கடவுள் குடியிருக்கும் திருத்தலங்களும் பிறவும் குருவே என்று இருப்பதுவுமே
நற் சீடன் இலக்கணம் என்றும் தன்னுடைய செல்வம் உயிர் அனைத்தும் குருவுக்கு உடைமையாகும்
என்று எண்ணுவனது இதயம் கடவுள் உறையுமிடமாகும் என்றும்
(36)பொருளும், உயிரும், உடம்பும், புகழும், தெருளும், குணமும், செயலும் மற்றும் வேண்டுவதை
எல்லாம் ஆசார்யன் தன்னருளால் சீடனுக்குத் தேறுவான்–என்றும் சொல்லியதை நினவு கூர்தல் வேண்டும்.
“குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா ஏன்னும் நாமம்” (திருமங்கை ஆழ்வார்)
இங்கு நாராயணா என்னும் இறைவன் நாமத்தைச் சொன்னவர்க்கு எல்லாம் கிட்டும் என்று சொன்னது போல
குரு பக்தனுக்கு பொருள் முதலிய அனைத்தையும் அருளுவான் என்பதாம்.
ஆகையால் குரு பகவானுடைய தோற்றமே ஆவார் என்ற கருத்துப் புலனாகிறது.
அதனால் அனைவருக்கும் குருவின் திருவடிகளை எப்பொழுதும் எண்ணியிருப்பதுவே பொருத்தமுடையது என்றும்
கூறி நூலின் கருத்து இத்துடன் முடிக்கப்படுகிறது.
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே குருவாகித் தன்னருளால் -மானிடர்க்காய்
இந்நிலத்தே தோன்றுதலால் யார்க்கும் அவன் தாளிணையை
உன்னுவதே சால வுறும் –38-
பதவுரை:
தேனார் – தேன் நிரம்பிய
கமலம் – கமலப்பூவை இருப்பிடமாக உடைய
திருமாமகள் – பெரிய பிராட்டியாருக்கு
கொழுநன – கணவனான பகவான்
தானே – மேலான தானே
குருவாகி – மனித உருவத்தில் குருவாகி வந்து
தன்னருளால் – தன்னுடைய மிக்க கருணையினால்
மானிடர்க்கா -திருந்த தக்க மனிதர்களைத் திருத்துவதற்காக
இந்நிலத்தே – இப்பூவுலகத்தே
தோன்றுதலால் – மனிதனாக அவதரித்ததனால்
யார்க்கும் – அனைத்துத் தரப்பினர்க்கும்
அவன் தாளிணையை – தலைவனான குருவின் திருவடிகளை
உன்னுவதே – எப்பொழுதும் எண்ணி இருப்பதுவே
சாலவுறும் – மிகவும் பொருத்தமாகும்
தேனார் கமலத் திருமாமகள் கொழுநன்:
பிராட்டி தாமரையில் இருப்பதால் அவளது உராய்தல் பட்டு அது அழகு பெற்றது.
மேலும் தேன் இடையறாமல் ஒழுகுவதால் மேலும் அழகியதாய் உள்ளது.
இவ்வாறு தாமரைக்கு அழகு கொடுக்கும் பெரிய பிராட்டியாருக்கு மணாளன் என்று பகவான் சிறப்பிக்கப்பட்டான்
“திரு” என்று பெரிய பிரட்டியாருக்குப் பெயர். இது ஸ்ரீ என்னும் வடசொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்.
திருப்பாவையில் ஸ்ரீ ஆண்டாள் “திருவே துயிலெழாய்” என்று கூறினாள்.
தானே திருவுக்கு மணாளனானதால் தனக்கு ஒப்பும் உயர்வும் இல்லாதவன்.
“திருவுடையார் தேவரெனில் தேவர்க்கும் தேவன்
மருவு திருமங்கை மகிழ்நன் கொழுநன் -ஒருவனே
அல்லோர் தலைவரெனல், அன்பினால் மெய் மறந்து
புல்லோரை நல்லரேணல் போம்: (மதுரை தமிழ்ச் சங்கப் புலவர் திரு.நா. அப்பனையங்கார்)
இதனால் அனைவருக்கும் மேலானவன் திருமாமகள் கொழுநன என்பதாம்.
குருவாகி:
தனது தெய்வ உருவத்தை மறைத்துக் கொண்டு மனித உருவத்தில் ஆசார்யனாய்
இவ்வாறு உருவம் மாறிவரக் காரணம் என்னவெனில்.
தன்னருளால்:
தன்னுடைய மிக்க பெரும் கருணை என்று சொன்னதால் இதற்கு வேறு காரணமில்லை என்பது கருத்து.
இப்படி உருவம் மாறி வந்தது யாருக்காகவென்றால்
மானிடர்க்கா:
மனித உடலிலே பிறந்து சாஸ்திரங்களுக்குக் கட்டுப்பட்டு உபதேசத்திலே திருந்தி
சேமத்தைப் பெற உரியரான ஆன்மாக்களுக்காக என்பது பொருள்.
இந்நிலத்தே தோன்றுதலால்:
குழந்தை கிணற்றிலே விழுந்தால் உடன் குதிக்கும் தாயைப் போல ஆன்மாக்கள்
பிறவிப் பெருங்கடலில் அழுந்திக் கிடக்கிற இப்பூமியில் பிறக்கையால்
யார்க்கும்:
அந்தணர் முதலிய சாதி வேறுபாட்டாலும் பிரமச்சர்யம் முதலிய நிலை வேறு பாட்டாலும்
ஆண், பெண் என்ற வேறுபாட்டாலும் பலவகைப் பட்டிருக்கும் ஆன்மாக்கள் அனைவருக்கும்
அவன் தாளிணையை உன்னுவதே:
“அவன்” என்ற தில் இறைவனுடைய அனைத்துச் சிறப்புக்களும் அடங்கி உள்ளன.
அதாவது
ஆன்மாக்கள் அனைவருக்கும் தலைவனாய் புகளிடமாய்ப் பயனாய் இருக்கிறவன் என்பதும்,
அவனுடைய திருவடிகள் இரண்டையும் அடைவதே லட்சியமாகவும் அடையத் தகுந்ததாகவும்
அடைவதற்கு வழியாகவும் என்றிப்படிப்பட்ட சிறப்புக்களை எண்ணியிரு ப்பதுவே என்று பொருள்.
“உன்னுவதே” என்ற ஏகாரத்தால்
இது தவிர வேறு ஒன்று எண்ண வேண்டாம் என்பது குறிப்பு.
சாலவுறும்:
மிகவும் பொருத்தம்.
சால- மிகவும்.
உறும்- பொருத்தம்.
இதனால் மேல் சொன்னபடி எண்ணியிருப்பது
ஆன்மாவின் இயல்புக்கு மிகவும் பொருத்தமாகும் என்பதாம்.
“திருமாமகள் நாயகனான பகவானே இடர்கடலில் துவளும் மனிதர்களை உபதேசத்தால் கரை எற்றுவதற்காகத்
தன்னுடய மிக்க கருணை குணத்தால் குருவாகி மனித உருவத்தில் தோன்றுகிறான்.
அவன் அனைத்து உயிர்களுக்கும் தலைவனாயும் புகழையும் அடையத் தகுந்தவனாயும் இருக்கிறான்.
அத்தகையவனுடைய திருவடிகளே அனைத்துயிர்க்கும் அடைய வேண்டிய லட்சியப் பொருளாகவும்
அவசியம் அடையத் தகுந்ததாகவும் அடைவதற்கு வழியாகவும்
எப்பொழுதும் மனதில் நினைத்த வண்ணம் இருப்பது தான் ஆன்மாக்களின் சேமத்திற்கு மிகவும் பொருத்தமானதாகும்.
”இப்படி எண்ணுவது தவிர வேறு காரியங்கள் செய்தால் பயனேதுமில்லை.
ஆகவே “குரு” என்பவன் கடவுளுடைய தோற்றமாய் மனிதர்களின் நலத்திற்காகவே அவதரித்திருப்பவன் என்றும்
அவன் திருவடிகளை நினைத்திருப்பதுவே ஆன்மாக்கள் அனைவருக்கும் தகுந்ததாகும் என்று உரைக்கப்பட்டது.
இதை எழுத்தறிவித்தவன் இறைவனாகும்” என்ற பிக எளிய தொடரால் பண்டை தமிழர்கள் உணர்த்தினர்.
———–
மேல் கூறிவந்த குருவின் சிறப்பை அறிந்து குருவினிடத்திலேயே ஒன்றி நிற்பார் பெருமையை அறிபவர்
மிக்க அறிவாளியாக இருப்பார்கள் அன்றோ!
குரு பக்தி உடையவரின் பெருமையை அறிய மாட்டாத உலோகர்கள்
“பகவானைக் காட்டிலும் குருவையே லட்சியமாகக் கொண்டு அவர்பின் திரிகிறார்களே என்று
பழி தூற்றுவார்களேயானாலும் அதற்குத் தக்க விடை யிறுக்கிரது இப்பாடல்.
மேல் சொன்ன உலோகர்கள் கூறும் கேள்விக் குறியில் மற்றொரு கருத்தும் உள்ளடங்கி இருக்கிறது.
அதாவது பகவானிடத்தில் அவனுடைய உருவம், குணம், செயல் அவதாரங்கள் ,கதைகள் முதலியவற்றில்
ஈடுபாடு கொண்டுள்ள பகவத் பக்தர்கள் குருவின் மேன்மை அறியாமல் குரு பக்தர்களை நோக்கி
” கடவுள் பின் செல்லாமல் மனிதனான குருவின் பின் செல்கிறீர்களே ” என்று குரு பக்தர்களை நோக்கி
இகழ்ந்து பேசுவதற்கும் வாய்ப்பிருந்தால்
இப்பாடல் மூலம் சாமான்யரான உலோகர்க்கும் சிறப்புடயரான பகவத் பெருமை நிலை நாட்டப்படுகிறது.
அதனால் குரு பக்தர்களைப் பழித்தால் அப்பழிப்பும் அவர்களுக்குத் துதியாகும் என்று கூறப்படுகிறது.
இது வஞ்சப் புகழ்ச்சியணி என்ற இலக்கணத்தின் பாற்படும்.
இதற்கு ஓர் உதாரணம் காணலாம்.
”உடையவர் காலத்தில் ஒரு நாள் திருவரங்கத்தில் பெருமாள் திருப்புன்னை அருகில் எழுந்தருளி நிற்க,
உடையவரும் மற்றும் பக்த ஜனகளும் பெருமாள் புறப்பாடு காண பெரும் திரளாய்க் கூடியிருக்கும் சமயத்தில்,
சிலர் பெருமாள் திருமுன்பு உடையவர் திருவடிகளைத் தண்டனிட்டு அவரை ஆதரித்து நிற்கிற வேளையில்,
சோழ மன்னன் அவைப்புலவரான “உடையார் சுப்ரமணிய பட்டர்” என்பவர்
இக்காட்சியை அருகில் வந்து இவ்வாறு வினவினார்.
“ஜீயரே, நாம் உம்மிடம் கேட்டுத் தெரிய வேண்டிய ஒன்று உண்டு” என்று சொல்ல
உடையவரும்”அது என்னது” என்று கேட்க
அப்பொழுது பெருமாள் புறப்பாட்டில் எழுந்தருளியிருக்கும்போது உம்மைச் சிலர் வணங்கிச் செல்கிறார்களே!
அவர்களும் உம்மை வணங்குவதில் மிகவும் விருப்புடையவராக இருக்கிறார்கள்.
நீரும் அவர்கள் வணங்குவதைக் குறித்து பெருமாள் திருமுன்பு என்னை வணங்க வேண்டாம் என்று கூறுவதில்லை.
இப்படிப் பேசாமல் இருந்ததற்கு என்ன காரணம் என்று கேட்டார்.
இவ்வாறு கேட்டதற்கு உடையவரும் கீழ் வருமாறு பதில் கூறினார்.
“இந்த கேள்வி அவசியம் கேட்கப் பட வேடியது தான். ஆனாலும் நீர் கேட்பது அதிசயமாயிருக்கிறது.” என்று பதில் கூறினார்.
அதற்கு சுப்ரமணிய பட்டர் எனக்கு அப்படி என்ன சிறப்பு? என்று கேட்க
அதற்கு பதிலாக நீர் ராஜ சேவை பண்ணித் திரிகிறீர் அல்லவா?
ராஜாவிடம் ஒருவன் ஒரு காரியத்தைப் பெற்றுப் போகவந்தால் ராஜாவினுடைய பாதுகைகளை எடுத்துத்
தலையிலே வைத்துக் கொண்டு கௌரவிப்பான். அப்பொழுது அதனைப் பார்த்த அரசன்
“தன் பாதுகைகளைத் தலையில் வைத்துக் கொண்டாடும் அவனை அரசன் தன்னிடம் அன்பு காட்டுவதற்காகவன்றோ
அவ்வாறு செய்கிறான் என்று மகிழ்ந்து அவனுடைய விருப்பத்தை நிறைவேற்றி வைப்பன்.
விருப்பத்தைப் பாதுகையா செய்விக்கிறது? அரசன் அல்லவா செய்கிறான்.
தனது பாதுகையைத் தலையில் தாங்கும் ஒருவனை அரசன் அன்பு செய்து
அவனவன் விருப்பத்தை நிறைவேற்றுவதை நீர் பார்த்ததில்லையா?
அது போல இங்கும் பெருமாள் அரசன் போலேயும் , அடியேன் அவருடைய பாதுகையைப் போலேயும் இருப்பதால்
பகவானுடைய அருள் வேண்டி அவனுடைய பாதுகையான என்னை வணகிப் போகிறார்கள்.
என்னிடம் அன்புடயவரைப் பெருமாள் அன்பு செய்கிறார்.
ஆகவே தான் பெருமாள் திருமுன்பு என்னை வணங்கிப் போகிறார்கள் என்று உடையவர் பதிலுரைத்தார்.
சுப்ரமணிய பட்டரும் இவ்வரும் பெரும் பெருமை உடையவர் வாய் மூலம் அறிந்து மிகவும் களிப்புற்றார்.
“இச்செய்தியைத் திருவிருத்த உரையில் காணலாம்)
ஆகவே பகவத் பக்தியுடையவர் ஆசார்ய பக்தி உடையவரைப் பார்த்து குறைவாக நினைப்பார் என்பதும்
அவ்வாறு நினைப்போர்க்கு ஆசார்ய பக்தி உடையாரின் பெருமை தெரிய வேண்டுமென்றும்
அவர்களது பெருமை தெரியாமல் ஒருகால் அவர்களைத் தூற்றினாலும்
அது அவர்களது பெருமையையே காட்டும் என்னும் நுண் கருத்து இப்பாடலில் கூறப்படுகிறது.
அலகை முலை சுவைத்தாற்கு அன்பர் அடிக்கு அன்பர்
திலதம் எனத் திரிவார் தம்மை -உலகர் பழி
தூற்றில் துதியாகும் தூற்றாதவர் இவரைப்
போற்றிலது புன்மையே யாம் –39-
பதவுரை:
அலகை முலை – பூதனையாகிற பேயின் முலைப்பாலை
சுவைத்தாற்கு – பருகின கண்ணனுக்கு
அன்பரடிக்கு – பக்தர்களான அடியவர்களின் திருவடிகளில்
திலதமென – நெற்றித் திலகம் போன்று சிறப்புடையவர் என்று கூறும்படி
திரிவார் தம்மை – நடமாடுகிற பெரியோர்களை
உலகர் – உலகியலில் வாழ்பவர்கள்
பழி தூற்றில் – இறைவன் பின் செல்லாமல் மனிதன் பின் செல்கிறார்களே என்று பழித்துப் பேசினால்
துதியாகும் – அது இவர்களது அடியார் பக்தியை வெளிப்படுத்துவதால் போற்றுவதேயாகும்.
அவர் – அந்த உலகர்கள்
தூற்றாது – அவ்வாறு பழிக்காமல்
இவரை – அடியார் பக்தரான இவரை
போற்றில் – நல்லவர் என்று புகழ்ந்தால்
அது – அப்புகழ்ச்சி
புன்மையேயாம் – பழிப்பதேயாகும்
அலகைமுலை சுவைத்தாற்கு:
அலகை என்று பேய்க்கு பெயர்..
திருவள்ளுவரும் “வையத்துள் அலகையா வைக்கப்படும்” பேயை அலகை என்று கூறினார்.
இங்கு அலகை என்றது பூதனையாகிற அரக்கியை,
திருவாய்ப்பாடியில் கண்ணன் ஒளித்து வளரும்போது கம்சனால் ஏவப்பட்ட பூதனை என்ற அரக்கி
யசோதை உருவத்தில் அங்கு வந்து குழந்தையாகிற கண்ணனை மடியில் எடுத்து வைத்து
முலைப்பாலுடன் சேர்த்து வைத்த விஷத்தையும் கொடுத்தாள்.
கண்ணன் அவ்விடப் பாலையும் அவளது உயிரையும் ஒரே சமயத்தில் சுவைத்து உறிஞ்சி உண்டான்.
இவ்வரலாறு அலகை முலை சுவைத்தாற்கு என்று குறிக்கப்படுகிறது. இதைத் திருமங்கையாழ்வார்
“பெற்ற தாய் போல் வந்த பேய்சசி பெருமுளையூடு உயிரை வற்ற வங்கி உண்டவாயன்” என்றும்
“கண்சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை மண்சோற முலையுண்ட மாமதலொய்” என்றும் கூறினார்.
நம்மாழ்வாரும்
“விடப்பால் அமுதா (க) அமுது செய்திட்ட மாயன்” என்று கூறினார்.
இவ்வாறு கண்ணபிரானின் சரிதையில் மனம் பறிகொடுத்த அன்பர்கள் என்றவாறாம்.
அன்பரடிக்கன்பர்:
இவ்வாறான கண்ணபிரான் கதையில் மனம் பறியுண்ட பக்தர்களின் திருவடிகளில் அன்பு பூண்டவர் என்று பொருள்.
பூதனைக் கண்ணனைக் கொல்ல வந்தாள். கண்ணன் அவளை முடித்தான்.
இச்சரிதத்தை நினைக்கும் பக்தர்கள் “தன்னைக் கொல்ல வந்த பூதனையைத் தான் கொன்று உலகத்துக்கு எல்லாம்
ஆணி வேரான தன்னை நமக்குக் காத்துக் கொடுத்தானே.!
அப் பேயைக் கொல்லாமல் போனால் கண்ணன் நமக்கு கிடைப்பானா? என்று அவனது குணங்களுக்கு அடிமையாகி
அவனிடம் ஈடுபட்டு காதலே மிகுந்த தொண்டர்களாகிறார்கள்.
அவர்களது திருவடிகளில் காதல் செய்பவர்களுக்கு “அன்பரடிக்கன்பர்” என்று சிறப்பு.
திலதமெனத் திரிவார் தம்மை:
இப்படி அடியார்க்கு அடியாராய் அடியார் பால் அன்புடையாராய் உலகத்துக்கே இவர்கள் ஒரு திலகம் என்று
பேரரறிஞர்கள் கொண்டாடும்படி நடமாடித் திரிகின்ற பெரியோர்களை என்று பொருள்.
அல்லது “அடியார்க்கு அடியாராய் இருப்பார்க்கு இவர்கள் திலகமாய் விளங்குபவர்கள் என்று
அறிவுடையார் கொண்டாடும்படி நடமாடி திரியும் பெரொயோர்கள் என்றும் சொல்லலாம்.
(திலதம்-பெண்கள்நெற்றிகரமானது மங்களகரமானது)
இதனால் அடியார்க்கு அடியாராய் இருப்பாரின் சிறப்புக் கூறப்பட்டது.
இச்சிறப்பினை நம்மாழ்வார் “பயிலும் சுடரொளி”, “நெடுமாற்கடிமை” என்ற இரண்டு திருவாய்மொழிகளிலும்
திருமங்கையாழ்வார் “கன்சோரவெங்குருதி”நண்ணாத வாள வுணரிடைப்புக்கு ” என்ற இரண்டு திருமொழிகளிலும்,
குலசேகராழ்வர் “தேட்டறும் திறன்” என்னும் திருமொழியிலும்,
தொண்டரடிப்பொடியாழ்வார் :மேம்பொருளுக்கு மேலிற்பாட்டுக்களிலும்
மற்றும் இதிகாச புராணங்களிலும் கூறிச் சிறப்பித்தத்தைக் காணலாம்.
ஸ்ரீவசனபூஷணம் சூத்திரம் 226ல் இவ்வாறு கூறப்பட்டுளதைக் காணலாம்.
உலகர் பழிதூற்றில் துதியாகும்: இப்படிப் பெருமைப் பட நிற்கும் அடியாரை சாதி, ஆசிரமம்,முதலிய வேறுபாடுகள்
ஒன்றும் பாராமல் “பாகவதர் (பகவத் பக்தர்) என்கின்ற ஒன்றை மட்டுமே பார்த்து
அதையே பற்றுக் கோடாகக் கொண்டு பகவானைக் காட்டிலும் இவர்களே அடையத் தகுந்தவர்கள் என்று நினைத்து
அவர்கள் பின்னால் திரிகிரார்கள் என்று சாமான்யரான உலகர்கள் பழி கூறினால்
அப்பழி அவ்வடியார்க்கு அடியாராகும் குணங்களை வெளிப்படுத்துவதால் பாராட்டப் படுவதாகுமேயொழிய பழியாகாது.
தூற்றாது அவர் இவரைப் போற்றில் அது புன்மையேயாம்:
உலகோர்கள் (சாமான்யர்கள்) இவ்வாறு அடியார்க்கு அடியாரை மேற்சொன்ன பழிகளைக் கூறாமல்
தங்களுக்காகச் செய்ய வெடிய சாஸ்திர ஒழுக்கங்கள் எவையும் தாங்கள் செய்ய வேண்டாத போதிலும்
சாமான்யரான உலகத்தார் கெட்டுப் போவார்களே என்னும் இரக்கத்தால் அவர்களுக்காகச் செய்யும் சில ஒழுக்கங்கள் உண்டலவா?
அவ்வொழுக்கங்களை மனப்பூர்வமாகச் செய்யாமல் மேல்வாரியாகச் செய்கையில் அவற்றைக் கண்டு,:
”சாஸ்திரப்படி தங்களைகடமைகளைச் செய்யும் நல்லொழுக்கம் உடையவர்களாக இருக்கிறார்களே ” என்று
புகழ்மது பேசினால் அது அவ்வடியார்க்கு அடியாராய் இருக்கும் இவர்கள் தகுதிக்குப் பொருந்தாததால்
மேல் வாரியாக அவைகள் செய்யும் ஒழுக்கம் குற்றமுடையதேயாகும்.
அதாவது நிந்தைக்கே இடமாகும். என்றவாறு
பகவானுடைய அடியார்க்கு அன்பு பூண்ட அடியார்.
அடியார்க்கு அடியார்: “உலகத்துக்கே திலத” மென்று அல்லது “அடியார்க்குத் திலத” மென்று சான்றோர்களால்
புகழும்படி நடமாடித் திரியும் பெரியோர்களை என்றவாறு
சாமான்ய உலகர்கள் “பகவானைப் புறக்கணித்து அவரடியாரிடம் ஈடுபட்டுத் திரிகிறார்களே” என்று
பழி சொன்னால் அப்பழி துதியிலே சேர்ந்ததாகும்.
அவ்வாறு துதிக்காமல் இவ்வுலகர்கள் அவர்கள் மேல் வாரியாகச் செய்யும் நல்லொழுக்கங்களைப் பார்த்து புகழ்வரேல்
அப் புகழ்ச்சி அவர்கள் நிலைமைக்குப் பழிப்பாகவேயாகும். இதனால் அடியார்க்கு அடியாராம் சிறப்புக் கூறப்பட்டது.
“இராமாயணத்தில் நல அறம் நிறுத்தத் தோன்றிய இராமன், இலக்குவன், பரதன், சத்ருக்கனன் என்னும்
இந்நால்வருள் சத்ருக்கனனது ஒழுக்கமே அனைவரிலும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.
அதற்குக் காரணம் இராமபக்தனான பரதனுக்குத் தொண்டு செய்து பரதன் அடியனை
(இராமனுக்கு அன்பர் பரதன். பாரதரடிக்கு அன்பன் சத்ருக்கனன்)
அடியார்க்கு அடியாராய் இருக்கும் சிறப்புக் கூறப்பட்டதாம்.”
” தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டனம் சடகோபன் ”
அடியார் அடியார் அடியார் எங்கோக்கள்” என்ற நம்மாழ்வார்
அவாவுற்ற அடியார்க்கு அடியாராம் நிலையும் இங்கு ஒப்பு நோக்குக.
மற்றும் ” அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன்: என்று திருப்பாணரும்,
அடியார்க்கு என்னை ஆட்படுத்தாய்” என்று தொண்டரடிபொடிகளும்
“அடியார்கள் எம் தம்மை விற்கவும் பெறுவார்களே” என்று பெரியாழ்வாரும்
“தொண்டர் தொண்டர்கலாவர்” என்று குலசேகரரும்
அடியார்க்கு அடியாராம் தன்மையை ஆசைப்பட்டுப் பேசியிருப்பதையும் உற்று நோக்குக.
இந்நூல் ஆசிரியரான ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானாரும் இராமனுஜருக்கு அடியாராய் வாழ்ந்து
“அன்பரடிக்கன்பர்: என்றும்
“திலதமெனத் திரிவார்” என்றும் இங்கு கூறிய சிறப்புக்கு எடுத்துக்காட்டாக இவ்வாசிரியர் திகழ்ந்தார் என்பதையும் உணரலாம்.
இதைப் பற்றியே மதுரகவியாழ்வாரையும் இவரையும் இணைத்து
தெருளாரும் மதுரகவி நிலை தெளிந்தோன் வாழியே” என்று இவர் போற்றப்பட்டார்.
அடியார்க்கு அடியாராய் வாழ்பவரின் சிறப்புக்கு மேலும் பல உதாரணங்கள் காணலாம்.
திருவரங்கத்து அமுதனார் இராமானுஜரடியார்க்கு அடியாராய் வாழ்ந்து இராமனுஜ நூற்றந்தாதி பாடினார்.
பட்டருக்கு நஞ்சீயர் அடியாராய் வாழ்ந்தார் என்பது பட்டர் வைபவத்தில் காணலாம்.
மணவாளமாமுனிகளும் இவ்வாறே அடியார்க்கு அடியாராய் யதிராஜவிம்சதை பாடினார்.
எறும்பியப்பா என்னும் ஆசாரியர் மணவாள மாமுனிகளுக்கு அடியாராய்”
பூர்வ தினசரி: முதலிய ஸ்தோத்திரங்களைப் பண்ணினார்.
அதில் ஒன்று “செருக்கில்லாதவர்களும் ஆசார்ய நிஷ்டைகளில் இருப்பவரும் சாஸ்திர சாரார்த்தங்களை அறிந்தவரும்
பணத்தாசை பெண்ணாசை முதலிய ஆசை அற்றவர்களும் பெருமையுற்றவர்களும் அனைத்து உயிர்களிடத்திலும் அன்புடயவர்களும்,
கோபம், உலோபம் முதலிய குற்றங்களைக் கடிந்தவர்களுமான மணவாளமாமுனிகளின் அடியார்களோடு அடியேனுக்கு
என்றும் உறவு உண்டாகட்டும் என்று கூறிய வார்த்தைகளையும் காணலாம்.
ஆக
“ஆழ்வார்களும் ஆசார்யர்களும் அடியார்க்கு அடியாராக இருப்பதையே விருபினார்கள்.
இதுவே அறிய வேண்டிய சாரங்களின் சாரமாகும்.”
அதனால் இக்கருத்து நூல் இறுதியில் கூறப்பட்டது.
—————
ஆசார்ய பக்தியும் அடியார்க்கு அடியராய் இருக்கும் அடியார் பக்தியும்
கீழே பல பாடல்களால் விளக்கமாக எடுத்துரைக்கபட்டது.
இப்படி விளக்கமாகக் கூறினாலும் அவ்வடியார்களின் பெருமை உலகோர்க்கு உணர்த்த வேண்டியதாயுள்ளது.
அவர்க்ள் சொற்கள் ஆசார்யனைப் பற்றியும் அடியார்களைப் பற்றியும் உள்ளன.
அவர்கள் செயலும் ஆசார்ய கைங்கர்யமாகவும் அடியார் தொன்டாகவும் உள்ளன.
இவர்களுடய குறிக்கோள் அப்படியே உள்லன. உலகியலுக்கு வேறாக உள்ளது.
இதற்கு உதாரணமாக வடுக நம்பி வரலாற்றைக் காணலாம்.
வடுக நம்பி உடையவருக்கு பால் காய்ச்சிக் கொண்டிருக்கும் பொழுது பெருமாள் பெரிய திரு நாளில்
அலங்காரஙளுடன் வீதியில் புறப்பட்டருள உடயவரும் பெருமாளை சேவிக்கப் புறப்பய்ட்டு
“வடுகா பெருமாளை சேவிக்க வா” என்ரு கூப்பிட,
அப்பொழுது வடுகா நம்பியும் “உம்முடய பெருமாளை சேவிக்க வந்தால் என்னுடய பெருமாளுக்குக் காய்ச்சுகின்ற
பால் பொங்க்ப் போகும். ஆதலால் வர இயலாது” என்று வராமலே இருந்துவிட்டர்.
இவ்வாறான உதாரணங்கள் பலவும் காணலாம்.
இத்தகை யவர்களுடய ஒழுக்கத்தையும் நாட்டர் பார்க்கையில் உலகியலுக்கு மாறாகத் தோன்றுவதால்
அவர்களுடைய ஒழுக்கத்தைப் பழிக்கக் கூடுமல்லவா?
மேலும் நாட்டார் என்னும் இவ்வெண்ணம் போலவே இறைவனடியார்களும் அடியார்கடியாரை நோக்கி
இது என்ன இவர்களுடய ஒழுக்கம்? பகவானை அணுகாமல் ஆசர்யனயும் அடியார்களையும் பின் தொடர்கிறார்களே?
அருள் செய்பவன்பகவானாயிருக்க இவர்களைத் தொடர்வது எதற்காக?
என்று இவர்கள் மீது பழி சொன்னால் என்ன செய்வது? என்ற வினா எழுகிறது.
நாட்டார்க்கும் பகவத் பக்தருக்கும் தோன்றும் இவ்வெண்ணெங்களுக்குப் பதில் சொல்லப்படுகிறது.
இப்பாடலில் மேலும் இவ்வாறு பதில் சொல்கிற முகத்தால் அப்பெரியார்களுடய பேச்சுக்களும் செயல்களும் பார்வைகளும்
உலகத்தாருடய நடத்தைகளும் வேறு பட்டிருக்கும் என்றும் இதுவே அவர்களுடய சிறப்பு என்றும் சொல்லி
இந்நூல் முடிக்கப்படுகிறது.
அல்லி மலர்ப்பாவைக்கு அன்பர் அடிக்கு அன்பர்
சொல்லும் அவிடு சுருதியாம் -நல்ல
படியாம் மனு நூற்கு அவர் சரிதை பார்வை
செடியார் வினைத் தொகைக்குத் தீ –40-
பதவுரை:
அல்லிமலர்ப் பாவைக்கு — பெரிய பிராட்டியாரிடத்தில்
அன்பர் –காதலனாயிருக்கும் பகவானுடய
அடிக்கு அன்பர் — திருவடிகளில் பக்தராயிருக்குமவர்க்ள்
அவிடு சொல்லும் — வேடிக்கையாகச் சொல்லும் வார்த்தையும்
சுருதியால் — வேதத்துக்கு ஒப்பாகும்
அவர் சரிதை — அவர்களுடய செயல்கள்
மனுநூற்கு நல்லபடியாம் — மனுதர்ம ஸாஸ்திரத்திற்குநல்ல உதாரணமாகும்.
பார்வை — அவர்களுடய நோக்கு
செடியார்– தூறு மண்டிக்கிடக்கிற
வினைத் தொகைக்கு– பாவ கூட்டத்தை அழிப்பதற்கு
தீ–நெருப்புப் போன்றதாகும்.
அல்லிமலர்ப் பாவைக்கு –
தாமரையில் தோன்றிய இலக்குமிக்கு (அன்பர்) அவளிடம் அன்பாகவே இருக்கும் பகவான்.
பகவானே இப்பிராட்டியை முன்னிட்டு “அவளுக்கு அன்பனே” என்று அழைத்து
பகவானே அறிவதற்குப் பிராட்டி அடையாளமாய் இருப்பாள்” என்னும் குறிப்புத் தெரிகிறது.
மேலும் பிராட்டியிடம் அவன் ஆராத காதலாகயிருப்பான் என்னும் கருத்தும் புலனாகிறது.
இத்தகய பிராட்டியிடத்தில் அன்பனாய் இருக்கும் பகவானுடய திருவடிகலில் அன்புடயவர்கள்
“அல்லிமலர்ப் பாவைக்கு அன்பரடிக்கு அன்பர்” என்று சொல்லப்பட்டனர்.
அதாவது
இறைவன் திருவடிகலில் செய்யும் அன்பையே தங்களுக்கு அடையாளமாகக் கொண்டிருக்கும் பாகவதர்கள்.
சொல்லும் அவிடு சுருதியாம்:
அத்தகைய பாகவதர்கள் வேடிக்கை வினோதமாகச் சொல்ல்ம் வார்தைகள் வேதக் கருத்துக்க்களய் இருப்பதால்
வேதம் போன்று நம்பிக்கை உடையதாய் ஏற்கலாயிருக்கும் என்பதாம்.
குரு பரம்பரையில் இத்தகைய வார்த்தைகளைக் காணலாம்.
உடையவைர் வார்த்தை, பட்டர் வார்த்தை, ஆழ்வான் வார்த்தை, நம்பிள்ளை வார்த்தை, திருக்கோளூர் பெண்பிள்ளை வார்தை
என்று இப்படிப் பெரியோர்கள் சொல்லும் வார்த்தைக்ள் எல்லாம் வேத வேதாந்தங்களை எளிமையாகச் சொன்ன வார்த்தைகளாகும்.
”வாய் தந்தன கூறுதியோ மறை தந்த வாயால்” என்று கம்ப நாட்டாழ்வாரும்
இராமபிரான் இலக்குவனை நோக்கிக் கூறும் கவியில் குறிப்பிட்டார்.
“பேடையைப் பிடித்துத் தன்னைப் பிடிக்க வந்தடைந்த பேதை வேடனுக்கு உதவி செய்து
விறகிடை வெந்தீ மூட்டி பாடுறு பஸியை நோக்கித் தன் உடல் கொடுத்த பைம்புள்
வீடு பெற்று உயர்ந்த வார்தை வேதத்தின் விழுமிது அன்றோ” என்ற கம்பராமாயணப் பாடலில் சொல்லப்பட்ட
புறாக் கதையில் புறாவின் வாயினால் சொல்லப்பட்ட சரணாகதி
தர்மம் வேதத்தைக் காட்டினாலும் சிறப்பானதாகச் சொல்லப்பட்டுள்ளது அறியலாம்.
நல்லபடியாம் மனுநூற்கு அவர் சரிதை:
அவர்களுடய சரிதையாவது அவர்களுடய நடத்தையாகும்.
அதாவது
மனுநூலில் சொல்லப்பட்ட ஒழுக்க நெறிகளுக்கு அடியார்களுடைய அன்றாட நடத்தைகள் மாதிரியாக விளங்கும் .
தர்ம ஸாஸ்திரஙள் வர்ணாஸ்ரமஙளுக்கு ஏற்ப அவரவர்க்குரிய ஒழுக்கஙளைக் கட்டளையிட்டுள்ளன.
அவற்றைக் கற்றுணர்ந்தவர்கள் அதன்படி ஒழுகுவார்கள். சாதாரண மக்கள் அதைக் கற்கவோ கற்றபடி நடக்கவோ இயலாது.
ஆனாலும் தர்மஸாஸ்திரங்களைக் கற்றுணர்ந்த மேலோர்கள் நடப்பதைப் பார்த்து சாதரண மக்களும் அவற்றைக் கடைப் பிடிப்பார்கள்.
ஆகவே அத்தகைய பெரியோர்களுடைய நடத்தை மற்றவர்கள் பின் பற்றுவதற்குரியதாக இருக்கிறது.
அவர்களுடைய நடத்தயைக் கொண்டு தர்ம ஸாஸ்திரம் உண்டாயிற்று. என்று சொல்லும்படியாகவும் இருக்கும்.
அப்பொழுது இவர்களுடய நடத்தை அசல் போலவும் ஸாஸ்திரங்களிலே சொல்லப்பட்டவை நகல் போலவும் இருக்கிறது.
அவ்வாறு இவர்களுடைய ஒழுக்கதிற்கு நம்பிக்கைக் கூறப்பப்டுகிறது.
இதற்கு உதாரணமாக கம்ப ராமாயணத்தில் ஓரிடம் காணலாம்.
“எனைத்து உளமறை அவை இயம்பற் பாலன
பனைத்திறன் கரக்கரிப் பரதன் செய்கையே
அனைத்டிறம் அல்லன அல்ல: அன்னது
நினைத்திலை என்வயின் நேய நெஞ்ஜினால்”–(கம்பராமாயணம் -அயோத்தியா காண்டம் -திருவடி சூட்டு படலம்)
இது இராமபிரான் இலக்குவனை நோக்கிக் கூறுவதாகும்.
உலகத்துக்கெல்லம் ஒழுக்கங்களை வரையருத்துக் கூறுகிறது.வேதம்.
பரதனுடய ஒழுக்கம் எவையோ அவை வேதத்தில் கூறப்பட்டவையே.
அவனிடத்தில் காணப்படாத ஒழுக்கங்கள் வேதத்தில் கூறிருந்தாலும் அவை ஏற்கத் தக்கதல்ல.
பரதனது நடையில் உள்ளன எவையோ அவையே ஏற்கத் தக்கனவாம் என்ற உண்மையை
இராமன் இலக்குவனுக்கு எடுத்துரைப்பதாகக் கம்பன் கூறியுள்ளான்.
இங்குச் சொல்லப்பட்ட பரதன் சரிதை: மனு நூற்கு நல்லபடியாம்” என்று கூறப்படும் கருத்துக்கு ஒப்பு நோக்கலாம்.
பார்வை செடியார் வினைத் தொகைக்குத் தீ
பாகவதப் பெருமக்களான அப் பெரியோர்களுடய பார்வையானது தூறு மண்டிக் கிடக்கிற வினைக் குவியலை
அழிக்க வல்லதாக இருக்கும்.
அதாவது
பெரியோர்களுடைய பார்வை வல்வினை இருந்த சுவடு தெரியாமல் போக்கும் ஆற்றலுடயதாகும் என்பதால்
ஆன்ம ஞானத்தைக் விரிவு படுத்தும் என்பது உட்கருத்து.
பெரிய பிராட்டியாருக்கு அன்பான பகவானுடைய திருவடிகளில் அன்பு செய்வார்
வினோதமாகச் சொல்லும் வார்தைகளும் வேதமாகவே ஏற்றுக் கொள்ளப்படும்.
அவர்களுடைய நடைத்தைகள் ஒழுக்க நெறியைக் கற்பிக்கும் நூலான மனு நூலாகும்.
சரியான அசலாய் விளந்கும்
அதாவது
இவர்கள் ஒழுக்கம் அசலாகவும் நூலில் சொல்லப்படுவது நகலாகவும் கொள்ளப்படும்.
இவர்களுடைய பார்வை தூரு மண்டிக்கிடக்கிற பாவக் குவியலுக்கு தீ பொன்று அழிக்கும் கருவியாய் இருக்கும்.
இவர்களுடைய பார்வை பட்டவர்கள் வினையிலிருந்து விடுபட்டு தூயவராய் ஜ்ஞாநத்தைப் பெற்று வாழ்வார்கள் என்பதாம்.
——————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –