1. கடல் காண் படலம்
530. மூன்றரைக் கோடியின் உகத்து ஓர் மூர்த்தியாய்த்
தான் திகழ் தசமுகத்து அவுணன், சாலவும்
ஆன்ற தன் கருத்திடை, அயனோடே மயன்
தோன்றுற நினைதலும், அவரும் துன்னினார். (11-1)
531. வந்திடும் அவர் முகம் நோக்கி, மன்னவன்,
‘செந் தழல் படு நகர் அனைத்தும் சீர் பெறத்
தந்திடும், கணத்திடை’ என்று சாற்றலும்
புந்தி கொண்டு அவர்களும் புனைதல் மேயினார். (11-2)
2. இராவணன் மந்திரப் படலம்
532. மின் அவிர் குழைகளும் கலனும் வில் இட,
சென்னியின் மணி முடி இருளைச் சீறிட,
அன்னபேர் அவையின் ஆண்டு இருந்த ஆண்டகை
முன்னியது உணர்த்துவான், முறையின் நோக்கினான். (6-1)
533. மோதரன் முதலிய அமைச்சர் தம் கணக்கு
ஓதும் நூறாயிர கோடியோரொடும்,
காது வெஞ் சேனையின் காவலோர் கணக்கு
ஓதிய வெள்ள நூறவர்கள்தம்மொடும். (10-1)
534. கும்பகம் மேவியோன், குறித்த வீடணத்
தம்பியர் தம்மொடும், தருக்கும் வாசவன்
வெம் புயம் பிணித்த போர் வீரன் ஆதியாம்,
உம்பரும் போற்றுதற்கு உரிய, மைந்தரும்,
535. மாலியவான் முதல் வரம்பு இல் முந்தையோர்
மேலவர் தம்மொடும், விளங்கு சுற்றமாம்
சால்வுறு கிளையொடும், தழுவி, மந்திரத்து
ஏலுறும் இராவணன் இசைத்தல் மேயினான்: (10-3)
536. பின்னும் ஒன்று உரைத்தனன்: ‘பிணங்கு மானிடர்
அன்னவர் அல்லர்; மற்று அரக்கர் என்பதற்கு
இந் நிலை பிடித்தனை; இறைவ! நீ’ எனா,
முன் இருபக்கன் ஈது உரைத்து முற்றினான். (21-1)
537. ‘எரி விழி நுதலினன், இசையும் நின் தவத்து
அருமை கண்டு, அளித்தனன் அழிவு இலாதது ஓர்
பெரு வரம் என்றிடின், பேதை மானிடர்
இருவரும் குரங்கும் என் செய்யல் ஆவதே?’ (26-1)
538. ‘கறை மிடற்று இறை அன்று; கமலத் தேவு அன்று;
நிறை கடல் துயில் பரன் அன்று; நின்று வாழ்
சிறு தொழில் குரங்கொடு சிறிய மானிடர்
உறு திறத்து உணர்ச்சியின் உறுதி யாவதோ?’ (40-1)
539. ‘ஓது பல் அருந் தவம் உஞற்றல் இலதேனும்,
கோதுறு குலச் சிறுமை கொண்டுடையதேனும்,
வாதுறு பகைத் திறம் மலிந்துடையதேனும்,
நீதியதில் நின்றிடின் நிலைக்கு அழிவும் உண்டோ? (52-1)
540. ‘உந்து தமரோடு உலகினூடு பல காலம்
நந்துதல் இலாது இறைவன் ஆயிட நயந்தோ,
சிந்தையில் விரும்புதல் மங்கையர் திறத்தோ,
புந்திகொடு நீ தவம் முயன்ற பொறை மேனாள்? (52-2)
541. ‘ஆசைகொடு வெய்தில் இரு மானிடரை அஞ்சி,
காசு இல் ஒரு மங்கையவளைத் தனி கவர்ந்தும்,
கூசியதனால் விளையவும் பெறுதல் கூடாய்,
வீசு புகழ் வாழ்வு வெறிதே அழிவது ஆமோ?
542. ‘நிரம்பிடுகில் ஒன்றுஅதை நெடும் பகல் கழித்தும்,
விரும்பி முயல்வுற்று இடைவிடாது பெறல் மேன்மை;
வரும்படி வருந்தினும் வராத பொருள் ஒன்றை
நிரம்பும் எனவே நினைதல் நீசர் கடன், ஐயா! (52-4)
543. ‘ஆசு இல் பல அண்டம் உனதே அரசுஅது ஆக
ஈசன் முன் அளித்தது, உன் இருந் தவ வியப்பால்;
நீசர் தொழில் செய்து அதனை நீங்கியிடலாமோ?–
வாச மலரோன் மரபில் வந்த குல மன்னா! (52-5)
544. ‘ “ஆலம் அயில்கின்றவன் அருஞ் சிலை முறித்து,
வாலியை வதைத்து, எழு மராமரமும் உட்க,
கோல வரி வில் பகழி கொண்டுடையன்” என்றார்;
சீலம் உறு மானிடன் எனத் தெளியலாமோ? (52-6)
545. ‘ஆதிபரனாம் அவன் அடித் துணை வணங்கி,
சீதையை விடுத்து, “எளியர் செய் பிழை பொறுக்க” என்று
ஓதல் கடனாம்’ என ஒருப்பட உரைத்தான்;
மூதுரை கொள்வோனும், ‘அதுவே முறைமை’ என்றான். (52-7)
546. என்று அவன் உரைத்திட, இராவணனும், நெஞ்சம்
கன்றி, நயனத்திடை பிறந்தன கடைத் தீ;
‘இன்று முடிவுற்றது உலகு’ என்று எவரும் அஞ்ச,
குன்று உறழ் புயக் குவை குலுங்கிட நகைத்தான். (52-8)
547. நகைத்து, இளவலைக் கடிது நோக்கி, நவில்கின்றான்;
‘பகைத்துடைய மானுடர் வலிச் செயல் பகர்ந்தாய்;
திகைத்தனைகொலாம்; எனது சேவகம் அறிந்தும்,
வகைத்திறம் உரைத்திலை; மதித்திலை;
என்?–எம்பி! (52-10)
548. ‘புரங்கள் ஒரு மூன்றையும் முருக்கு புனிதன்தன்
வரங்களும் அழிந்திடுவதோ? மதியிலாதாய்!
தரம்கொடு இமையோர் எனது தாள் பரவ, யான்
என்
சிரம்கொடு வணங்குவதும், மானுடன் திறத்தோ? (52-10)
549. ‘பகுத்த புவனத் தொகை எனப் பகர் பரப்பும்,
மிகுத்த திறல் வானவரும், வேத முதல் யாவும்,
வகுத்து, அரிய முத்தொழில் செய் மூவரும் மடிந்தே
உகுத்த பொழுதத்தினும், எனக்கு அழிவும்
உண்டோ? (52-11)
550. ‘நிறம்தனில் மறம் தொலைய, நீ துயில் விரும்பி,
துறந்தனை, அருஞ் சமரம்; ஆதல், இவை
சொன்னாய்;
இறந்துபட வந்திடினும், இப் பிறவிதன்னில்
மறந்தும் உளதோ, சனகன் மங்கையை விடுத்தல்?’ (52-12)
551. எனக் கதம் எழுந்து அவன் உரைக்க, இளையோனும்,
நினைத்தனன், மனத்திடை நிறுத்து உறுதி சொல்ல;
‘சினத்தொடும் மறுத்த இகழ்வு செய்தனன்; இது
ஊழின்
வினைத் திறம்; எவர்க்கும் அது செல்வது அரிது
அன்றே!’ (52-13)
552. கறுத்து அவன் உரைத்திடு கருத்தின் நிலைகண்டே,
‘பொறுத்தருள் புகன்ற பிழை’ என்று அடி வணங்கி,
உறுத்தல் செய் கும்பகருணத் திறலினோனும்,
‘மறுத்தும் ஒரு வாய்மை இது கேள்’ என
உரைத்தான்: (52-14)
553. ‘ஏது இல் கருமச் செயல் துணிந்திடுதல் எண்ணி,
தீதொடு துணிந்து, பினும் எண்ணுதல் சிறப்போ?
யாதும் இனி எண்ணியதில் என்ன பயன்? ஐயா!
போதியது நம் அரசு, பொன்ற வரு காலம்.
554. என, அவன் அடித் துணை இறைஞ்சி, வாய்
புதைத்து,
இனிய சித்திரம் என ஏங்கி நின்று, தான்
நனை மலர்க் கண்கள் நீர் சொரிய, நல் நெறி
வினை பயில் வீடணன் விளம்பல் மேயினான்: (74-1)
555. ‘சானகி, உலகு உயிர் எவைக்கும் தாய் எனல்
ஆனவள், கற்பினால் எரிந்தது அல்லது,
கோ நகர் முழுவதும் நினது கொற்றமும்,
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ?’ (74-2)
556. ‘ஈசன்தன்வயின் வரம் கொளும்முன்னம், யான்
அவனை
வீசும் வான் சுடர் வரையொடும் விசும்பு உற
எடுத்தேன்;
ஆசு இல் அங்கது கண்டு அவன் அரும் பதத்து
ஊன்றக்
கூசி, என் வலி குறைந்திலென், பாதலத்து
அமர்ந்தேன்; (116-1)
557. ‘அமர்ந்து, நீங்குதற்கு அருமை கண்டு, “அவன் பதம்
அகத்தே
சுமந்து, நீ தவம் புரிக!” எனச் சுக்கிரன் உரைப்ப,
தமம் திரண்டு உறும் புலப் பகை சிமிழ்திதிடத்
தருக்கி
நிமிர்ந்து நின்றனென், நெடும் பகல் அருந் தவ
நிலையின் (116-2)
558. நின்று பல் பகல் கழிந்திட, நிமலன் நெஞ்சு உருகி,
“நன்று, நன்று!” என நயந்து, எனை வரும்படி
அழைத்து,
“ஒன்றினாலும் நீ அழிவு இலாது உகம் பல கழியச்
சென்று வாழுதி எனத் தந்த வரம் சிதைந்திடுமோ? (116-3)
559. ‘கார்த்தவீரியன், வாலி என்று அவர் வலி கடக்கும்
மூர்த்தம் என்னிடத்து இல் எனக் கோடலை; முதல்
நாள்
சீர்த்த நண்பினர் ஆயபின், சிவன் படை உவர்மேல்
கோத்து, வெஞ் சமம் புரிந்திலென், எனது உளம்
கூசி. (116-4)
560. ‘இந்த மெய்ம்மை நிற்கு உரைப்பது என்? இவ் வரம்
எனக்குத்
தந்த தேவனுக்குஆயினும் என் வலி தவிர்த்துச்
சிந்த ஒண்ணுமோ? மானிடர்திறத்து எனக்கு அழிவு
வந்தது என்று உரைத்தாய்; இது வாய்மையோ?–
மறவோய்! (116-5)
561. ‘ஆயது ஆக, மற்று அந்த மானுடவரோடு அணுகும்
தீய வான் குரங்கு அனைத்தையுஞ் செறுத்து,
அற நூறி,
தூய வானவர் யாரையும் சிறையிடைத் தொடுத்துக்
காய்வென்’ என்று தன் கண் சிவந்து இனையன
கழறும். (116-6)
3. இரணியன் வதைப் படலம்
562. ‘ஓதும் ஆயிர கோடியின் உகத்து ஒரு முதல் ஆய்,
தாது உலாவிய தொடைப் புயத்து இரணியன்
தமரோடு
ஆதி நாள் அவன் வாழ்ந்தனன்; அவன் அருந்
தவத்துக்கு
ஏது வேறு இல்லை; யார் அவன்போல் தவம்
இழைத்தார்?
(இப் படலத்தின் தொடக்கச் செய்யுளாக, ‘வேதம் கண்ணிய’
எனத் தொடங்கும் பாடலின் முன்னர். அமைந்துள்ளது)
563. ‘இந்த இந்திரன் இமையவர் அவனுக்கு ஓர்
பொருளோ?
உந்தும் அண்டங்கள் அனைத்தினும் உள்ள
இந்திரரும்
அந்த நான்முகர் உருத்திரர் அமரர் மற்று எவரும்,
வந்து, இவன் பதம் முறை முறை வணங்கிட
வாழ்ந்தான். (2-1)
564. ‘திருமகட்கு இறை உலகினும், சேண்படு புரம் மூன்று
எரிபடுத்திய ஈசன்தன் பொருப்பினும், ஏகி,
சுரர் எனப்படும் தூயவர் யாவரும் தொழுது, ஆங்கு
“இரணியாய நம!” என்று கொண்டு ஏத்தல்
கேட்டிருக்கும். (5-1)
565. ‘ “ஓம் அரியாய நம!” என ஒழிவுறாது ஓதும்
நாம நான் மறை விடுத்து அவன்தனக்கு உள்ள
நாமம்,
காமமே முதல் குறும்பு எறி கடவுளர் முனிவர்-
ஆம் அது ஓதுகில், அவன் தனக்கு ஒப்பவர் யாரோ? (9-1)
566. ஆலும் வெவ் வலி அவுணர் கோன் அருந் தவப்
பெருமை
ஏலுமோ, எமக்கு இயம்பிட? இறைவ! மற்று அவன்
பேர்
மூல மா மறை இது என, மூஉலகு உள்ளோர்
தாலமே மொழிந்திட்டது சான்று எனத் தகுமால். (10-1)
567. ‘குனிப்பு இலாத பல் ஆயிர கோடி அண்டத்தின்
நுனிக்கும் வானவர் முதலிய உயிர்த் தொகை
நோக்கில்,
அனைத்தும் அன்னவன் ஏவலைத் தலைக்கொண்டு,
அங்கு அவன் பேர்
நினைத்து வாழ்த்திட, மூவர்போல் ஒரு தனி
நின்றான். (18-1)
568. ‘அன்னவன், புகழ், சீலம், நல் அறம், தனி மெய்ம்மை,
உன்னும் நான் மறையோடு அருள் நீதியும்
பொறையும்
இன்ன யாவும் மற்று உருவு கொண்டுளது என
உவந்தே,
மன்னுயிர்த் தொகை மகிழ்ந்திட, ஒரு தனி
வாழ்ந்தான் (19-1)
569. ‘நடுங்கி அந்தணன், நாப் புலர்ந்து அரும் புலன்
ஐந்தும்
ஒடுங்கி, உள்ளுயிர் சோர்ந்து, உடல் பதைத்து, உளம்
வெருவி,
“அடங்கும், இன்று நம் வாழ்வு” என அயர்ந்து
ஒருபடியாய்ப்
பிடுங்கும் மெல் உரை, புதல்வனுக்கு இனையன
பேசும். (23-1)
570. ‘என்று, அவ் வேதியன் இவை இவை இயம்பலும்,
இது கேட்டு,
ஒன்று மெய்ப்பொருள் உணர்ந்துள சிறுவனும்,
“உரவோய்!
நன்று நீ எனக்கு உரைத்தது?” என்று, இன் நகை
புரிந்து, ஆங்கு,
“இன்று கேள் இதின் உறுதி” என்று எடுத்து இவை
உரைப்பான்: (24-1)
571. ‘என்னும் வாசகம் கேட்டலும், எழுந்து நின்று,
இறைவன்
பொன்னின் வார் கழல் பணிந்து, வாய் புதைத்து,
அரும் புதல்வன்,
“மன்னர் மன்ன! யான் பழுது ஒன்றும்
உரைத்திலென்; மரபால்
உன்னும் உண்மையை உரைத்தனென்;கேள்”
என உரைப்பான். (39-1)
572. ‘அழிவு இல் வச்சிர யாக்கை என் அருந் தவத்து
அடைந்தேன்;
ஒழிவு இல் ஆயிர கோடி கொள் உகம் பல கழியத்
தெளிவு பெற்று, இறை பூண்டுளேன்; யான் அலால் தெய்வம்,
மொழி இல் மூடரும், வேறு உளது ஆம் என்று
மொழியார். (55-1)
573. ‘உயிர்க்கு உயிர் ஆகி நின்று உதவும் பான்மை, பார்
அயிர்க்குறும் நேயர் தம் செயலில் காண்டல்போல்,
பயிர்ப்பு உறும் அதனிலே பாசம் நீக்கி, வேறு
அயிர்ப்பு அறும் அறிவினில் அறிவர், சீரியோர். (67-1)
574. ‘நான்முகத்து ஒருவனும், நாரி பாகனும்,
தான் அகத்து உணர்வதற்கு அரிய தத்துவத்-
தோன் இகத்தொடு பரம் இரண்டும் எங்குமாய்,
ஊனகத்து உயிரகத்து உலவும் மூர்த்தியான். (67-2)
575. ‘வையமேல் இனி வரும் பகை உள எனின்,
வருவது ஒன்று என்றாலும்,
“உய்ய உள்ளுளே ஒருவனை உணர்ந்தனென்”
என்று என் முன் உரைசெய்தாய்;
செய்ய வேண்டுவது என் இனி? நின் உயிர்
செகுக்குவென்; சிறப்பு இல்லாப்
பொய்யிலாளனைப் பொருந்திய பெரும் பகை
போய பின், புகழ் ஐயா!
(79-1)
576. ‘ “இவனை ஏழ் நிலை மாளிகை உம்பர்மேல் ஏற்றிப்
புவனம் தன்னிலே நூக்கும்” என்று அவுணர் கோன்
புகல,
புவனம் உண்டவன் கழல் இணைப் புண்ணியன்
தன்னைப்
பவனன்தன்னிலும் வெய்யவர் பற்றியே எடுத்தார். (98-1)
577. ‘உற்று எழுந்தனர், மாளிகை உம்பர்மேல் கொண்டு,
கற்று அறிந்தவர்க்கு அரசனைக் கடுந் திறல்
அவுணர்
பற்றி நூக்கலும், பார் மகள் பரிவுடன், நார் ஆர்
நல் தவற்கு ஒரு தீங்கு இலை என அவண்
நயந்தாள். (98-2)
578. ‘ஓதத்தில் மிதந்து ஓடிய கலமேல்
தீது அற்றே தெளிவோடு திகழ்ந்தான்;
வேதத்து உச்சியின் மெய்ப் பொருள் நாமம்
ஓதிப் பின்னும் உரைப்பதை உற்றான்: (103-1)
579. ‘கயம் மேவும் இடங்கர் கழற் கதுவ,
பயம் மேவி அழைத்தது பன்முறை உன்
நயம் மேவிய நாமம்; மதக் கரி அன்று
உயுமாறு உதவுற்றிட, வந்திலையோ? (112-1)
580. ‘வேதன் சிரம் ஒன்றை வெறுத்தமையால்,
காதும் பிரமக் கொலை காய, உலைந்து,
ஓது உன் திரு நாமம் உரைத்த சிவன்
ஏதம் கெட வந்து, இரவு ஓட்டிலையோ? (112-2)
581. ‘அது கண்டு, அடல் வஞ்சகர், அப் பொழுதில்,
கதம் மிஞ்சிய மன்னன் முனே கடுகி,
“புதல்வன் இறவாது பொருப்பு முநீர்
மிதவைப்பட மேவினன்” என்றனரால். (113-1)
582. ‘மிடல் கொண்டு அவர் வீசு கரம் பொடிபட்டு
உடல் சிந்திட, உட்கினர்; “மற்று அவனுக்கு
ஒடிவு ஒன்று இலது” என்று அவர் ஓதும் முனம்,
விடம் அஞ்ச எழுந்தனன், வெய்யவனே. (116-1)
583. ‘நாணி நின் எதிரே ஆண்டு நடுவதாயினது ஓர்
செம் பொன்
தூணில் நின்றனனே அன்றி, தோன்றியது இலது’
என்று ஒன்ற,
வேணுதண்டு உடையோன் வெய்ய வெள்ளியே
விளம்ப, வெள்ளி
காண வந்து அனைய சீயம் கணத்திடைக் கதிர்த்தது
அம்மா! (128-1)
584. ‘ஈது அவன் மகிழ்தலோடும், இரணியன் எரியின்
பொங்கி,
“சாதலை இல்லா என் முன் தருக்குறு மாயம்
எல்லாம்
போதும்; ஓர் கணத்தில் இன்னே போக்குவேன்
போக்குவேன்” என்று
ஓதினன், அண்ட கோளம் உடைந்திட உருத்துச்
சொல்வான். (128-2)
585. அப் புறத்து அளவுஇல் கோடி அண்டங்கள்
அனைத்து உள்ளாக,
வெப்புறும் அனந்த கோடி வெள்ளம் என்று உரைப்பர்,
மேலாம்
துப்புடைக் கனகன் சேனைத் தொகை; அவை
அனைத்தும் செந் தீ
ஒப்புற நகைத்து, நீறாய் எரித்தது, ஓர் கடவுள் சீயம். (142-1)
586. ‘இத் திறம் அமரின் ஏற்று, ஆங்கு இருவரும்
பொலிந்தகாலை,
பொய்த்திறற் கனகன் வேண்டும் போர் பல இயற்றி,
பின்னும்,
எத்தனை கோடி கோடி மாயங்கள் இயற்ற, நோக்கி,
முத்தனும் முறுவல்கொண்டு, ஆங்கு அவை எலாம்
முடித்து நின்றான். (149-1)
587. நெருப்பு எனக் கனகன் சீறி, நிலம் முதல் புவனம்
அஞ்ச,
பொருப்பு இனம் எவையும் சிந்திப் பொடிபடக்
குதித்து, போர் வாள்
தரிப்புறச் சுழற்றித் தாக்க வருதலும், தரும மூர்த்தி
பருப்பதம் கடந்த தோளான் பதம் இரண்டு ஒரு கை
பற்றா, (149-2)
588. ‘அழிவு இலான் வயிர மார்பத்து, அமலன் மானுடம்
ஆம் சீய
எழில் உலாம் உருவு கொண்டு, ஆங்குஇரு கையின்
உகிர் வாள் ஓச்சி,
கழியவே, பிளத்தலோடும், கனக மா மேரு விண்டு
கிழியவே, குருதி ஓதம் கிளர்ந்தபோல் கிளர்ந்தது
அம்மா! (153-1)
589. ‘இரணியன் வயிர மார்பும் இரு பிளவாகக் கீறிக்
கரை அறும் அவுண வெள்ளப் படை எலாம் கடிதின்
மாய்த்து,
தரை முதல் ஆன அண்டப் பரப்பு எலாம் தானே
ஆகி,
கருணை கொள் அமலன் பல்வேறு உயிர் எலாம்
காத்து நின்றான். (153-2)
590. ‘மங்கை ஒரு பாகன் முதல் அமரர், மா மலர்மேல்
நங்கைதனை ஏவுதலும், நாராயணக் கடவுள்
சிங்கல் இலா மானுடம் ஆம் சீய உருவம் போக்கி,
பொங்கு பரஞ் சுடராய் எங்கும் பொலிய நின்றான். (164-1)
591. ‘ஈது ஆங்கு அமலன் இயம்ப, எழிற் புதல்வன்
நாதாங்கு அரு மறையும் நாடற்கு அரிய செழும்
பாதாம்புய மலரில் பல் முறையும் தான் பணிந்து,
‘வேதாந்த மெய்ப்பொருளே!’ என்று விளம்பலுற்றான். (168-1)
592. ‘ “சீலம் உறுவோய்!’ உனக்குச் செப்பும் திருநாமம்
மேலோர் புகழ் பிரகலாதன்” என, விரும்பி,
நால் வேத வாய்மை நனி மா தவத்தோரும்,
மேலாம் அமரர்களும், யாரும், விளம்ப’ என்றான். (173-1)
4. வீடணன் அடைக்கலப் படலம்
593. சிரத்தொகை அனைத்தையும் துளக்கி, தீ எழக்
கரத்தொடு கரம் பல புடைத்து, ‘காளை! நீ
உரைத்திடும் உறுதிகள் நன்று, நன்று!’ எனாச்
சிரித்தனன், கதம் எழுந்து இனைய செப்புவான்: (1-1)
594. ‘அன்று வானரம் வந்து, நம் சோலையை அழிப்ப,
“கொன்று தின்றிடுமின்” என, “தூதரைக் கோறல்
வென்றி அன்று” என விலக்கினை; மேல் விளைவு
எண்ணித்
துன்று தாரவன்-துணை எனக் கோடலே துணிந்தாய். (6-1)
595. ‘நேர் வரும் உறுதியின் நிலை உரைத்தனென்;
சீரிது என்று உணர்கிலை; சீறிப் பொங்கினாய்;
ஓர்தரும் அறிவு இலார்க்கு உரைக்கும் புந்தியார்,
தேர்வுறின், அவர்களின் சிறந்த பேதையோர்.’ (11-1)
596. ‘மற்று ஒரு பொருள் உளது என்? நின் மாறு இலாக்
கொற்றவ! சரண்’ எனக் கூயது ஓர் உரை
உற்றது, செவித்தலத்து; ஐயன் ஒல்லென
நல் துணைவரை முகம் நயந்து நோக்குறா, (33-1)
597. ‘ “எந்தையே இராகவ! சரணம்” என்ற சொல்
தந்தவர் எனைவரோ? சாற்றுமின்!’ என,
மந்தணம் உற்றுழீஇ, வய வெஞ் சேனையின்
முந்தினர்க்கு உற்றதை மொழிகுவாம்அரோ: (33-2)
598. ‘மேலைநாள், அமுதமும் விடமும் வெண்கடல்
மூலமாய் உதித்தன; முறையின் முற்றுதல்
சாலுமோ, ஒன்று எனக் கருதல் தக்கதோ–
ஞால நாயக!–தெரிந்து எண்ணி நாடிலே? (86-1)
599. ‘ஒருவயிறு உதித்தனர், அதிதி, ஒண் திதி,
இருவர்; மற்று அவரிடத்து எண்ணில், எம்பிரான்!
சுரரொடு சுடு சினத்து அவுணர் தோன்றினார்;
கருதின் மற்று ஒன்று எனக் கழறலாகுமோ? (86-2)
600. ‘எப்பொருள்? ஏவரே? உலகின் ஓர் முறை
ஒப்பினும், குணத்து இயல் உணரின், பேதமாம்
அப் பொருள் நலன் இழிவு இரண்டும் ஆய்ந்து,
அகம்
மெய்ப் பொருள் கோடலே விழுமிது’ என்பரால். (86-3)
601. ‘ஆவலின் அடைக்கலம் புகுந்துளான் கருத்து
ஓவலின் இவர் தமக்கு உணர ஒண்ணுமோ?
தேவர்கள் தேவன் நீ; தெளியின், அன்னவர்க்
கூவி, இங்கு அறிவது கொள்கை ஆகுமால். (91-1)
602. மோதி வந்து அடரும் சீய முனிவினுக்கு உடைந்து,
வேடன்
மீது ஒரு மரத்தில் சேர, வேண்டு உரை அரிக்குச்
சொல்லி,
பேதம் அற்று இருந்தும், அன்னான் பிரிந்த
வஞ்சத்தை ஓர்ந்தும்,
காதலின் கனி காய் நல்கிக் காத்ததும் கவியது
அன்றோ? (116-1)
603. என்ன முன் பருதிமைந்தன் எழுந்து அடி வணங்கி,
‘எந்தாய்
சொன்னதே துணிவது அல்லால், மறுத்து ஒரு
துணிவும் உண்டோ?
உன் உளத்து உணராது ஏது? உனக்கு அரிது
யாதோ?’ என்னாப்
பன்னி, மற்று அவரை எல்லாம் பார்த்திருந்து
உரைக்கலுற்றான். (117-1)
604. வானவர் இதனைக் கூற, வலங்கொடு தானை
வைப்பை,
தானை அம் தலைவரோடும் சார்ந்த வீடணனும்,
‘தாழாது
ஊனுடைப் பிறவி தீர்ந்தேன்’ என மனத்து உவந்து,
ஆங்கு அண்ணல்
தேன் உகு கமல பாதம் சென்னியால் தொழுது
நின்றான். (151-1)
5. இலங்கை கேள்விப் படலம்
605. திரு மறு மார்பனை இறைஞ்ச, செல்வனும்,
அருள் சுரந்து, அரக்கனை அருகு இருத்தியே,
‘அரு வரை அனைய தோள் அறிஞ! நீ புகல்
பொருள் உளது எமக்கு; அது புகலக் கேட்டியால். (14-1)
606. மருக் கிளர் தாமரை வாச நாள்மலர்
நெருக்கிடு தடம் என இருந்த நீதியான்.
திருக் கிளர் தாமரை பணிந்த செம்மலை,
‘இருக்க, ஈண்டு எழுந்து’ என இருந்தகாலையில். (14-2)
607. ‘வலம் பெறு தசமுகன் தவத்தின் மாட்சி கண்டு,
இலங்குறு மலர் அயன் எண் இல் யோசனைத்
தலம் கொடு சமைத்து, நல் நகரும் தந்து, இதற்கு
“இலங்கை” என்று ஒரு பெயர் ஈந்த மேலைநாள். (18-1)
608. ‘ஆய இந் நகரிடை, அரக்கர் ஆகிய
தீயவர் தொகையினைத் தெரிக்கின், எண் இல் நாள்
போயிடத் துணிந்து, அவை புந்தி ஓரினும்
ஓயுமோ? அறிந்தவை உரைப்பென், ஆழியாய்! (19-1)
609. ‘பேயர்கள் என்ன யான் பிதற்ற, பேர்கிலா
மா இரும் புற மதில் வகுத்த மாப் படை
ஏயின நாள் எலாம் எண்ணும் பித்தர்கள்
ஆயிர வெள்ளமே அறிந்தது, ஆழியாய்! (28-1)
610. ‘ஈங்கு இவை அன்றியும், ஏழு தீவினும்,
ஓங்கு பாதலத்தினும், உயர்ந்த வானத்தும்,
தாங்கிய சக்கர வாளச் சார்பினும்,
ஆங்கு அவன் படைதனக்கு அளவை இல்லையால். (30-1)
611. ‘ஆயவர் அளவிலர், அறத்தை நுங்கிய
தீயவர், தேவரைச் செறுத்து, தேவர் ஊர்
காய் எரி படுத்திய கடுமையார்களில்,
நாயக! அறிந்தமை நவிலக் கேட்டியால். (32-1)
612. ‘இன்னும் மைந்தர்கள் இயம்பின், மூவாயிர கோடி
என்ன உண்டு; அவர் இரதமும், கரிகளும், பரியும்,
துன்னும் ஆள் வகைத் தொகுதியும், செறிந்திட,
மேல்நாள்
பன்னகாதிபன் உலகினைப் பரிபவப் படுத்தோர். (51-1)
613. கோ…ன் குடைப்பரா கடு களிற்றை மீக்கொள்ளா
வாடலிந்திர……ளடைவர வமரிற்
கோடி வெங்கரி கோள் அரி கண்டெனக் குலையா
ஓடினான் தரு முதலியர் பிற விழுந் துருகி. (56-1)
614. ‘பண்டு அவன் தவத்து உமை ஒரு பாகன் முன்
கொடுக்கும்
திண் திறல் பெறும் வானகத் தேர் ஒன்றின்
இவர்ந்தே,
அண்ட கோடிகள் எவற்றினும் புகுந்து, அரசுரிமை
கொண்டு மீளுவான் ஒரு கணத்து இலங்கையில்,
கொடியோன். (58-1)
615. ‘சுற்று தன் கிளைப் பரப்பொடும் தொலைவு இன்றி
வாழ்தற்கு
உற்ற மூன்றரைக் கோடியின் உகம் அவன் தவத்தின்
பெற்றனன், சிவன் கொடுத்திடப் பெரு வரம்;
பெரியோய்!
இற்று அவன் செயல்’ என்று கொண்டு இனையன
உரைப்பான்: (58-2)
616. “ஈது நிற்க, மற்று எந்தை! நீ ஏவிய தூதன்
மோது வாரிதி கடந்து, ஒரு கணத்தினில் முடுகி,
ஆதி நாயகிதன்னைக் கண்டு, அணி நகர் அரணும்,
காது வெஞ் சினத்து அரக்கர்தம் வலிமையும்,
கடந்தான். (59-1)
617. மழுவும் ஈட்டியும் தோட்டியும் முசலமும் மலையும்
தழுவு மாப் படை முடிவு இலாது அதனொடும் தாமும்,
எழுவர் சூட்சியின் தலைவர்கள், கிளர் ஒளி இரவிக்
குழுவின் வாய்ப்படு புழு என, வழுவுறக் குறைந்தார். (63-1)
618. ‘இலங்கை வெந்தது; வேறு இனி இயம்புவது
எவனோ?
அலங்கலோடு செஞ் சாந்தமும், அன்று தான்
அணிந்த
கலன்களோடும் அச் சாத்திய துகிலொடும், கதிர்
வாள்
இலங்கை வேந்தனும் விசும்பிடை ஏழு நாள்
இருந்தான். (65-1)
6. வருணனை வழி வேண்டு படலம்
619. என்று உரைத்து, இன்னும் சொல்வான்; ‘இறைவ!
கேள்; எனக்கு வெய்யோர்
என்றும் மெய்ப் பகைவர் ஆகி, ஏழு பாதலத்தின்
ஈறாய்
நின்றுள தீவின் வாழ்வார், நிமல! நின் கணையால்,
ஆவி
கொன்று எமைக் காத்தி!’ என்றான்; குரிசிலும்
கோறலுற்றான். (78-1)
7. சேது பந்தனப் படலம்
620. சாற்று மா முரசு ஒலி கேட்டு, தானையின்
ஏற்றமோடு எழுந்தனர், ‘எறி திரைக் கடல்
ஊற்றமீது ஒளித்து, ஒரு கணத்தில் உற்று, அணை
ஏற்றதும்’ எனப் படைத் தலைவர் யாருமே. (4-1)
621. வல் விலங்கு வழாத் தவர் மாட்டு அருள்
செல் வலம் பெறுஞ் சிந்தையின் தீர்வரோ?
‘இவ் விலங்கல் விடோம் இனி’ என்பபோல்,
எல் வயங்கும் இரவி வந்து எய்தினான். (25-1)
622. தம் இனத்து ஒருவற்கு ஒரு சார்வு உற,
விம்மல் உற்று, விடாது உறைவோர்கள்போல்,
செம்மை மிக்க குரக்கினம் சேர்க்கையால்,
எம் மலைக் குலமும் கடல் எய்துமே, (29-1)
623. இன்னவாறு அங்கு எழுபது வெள்ளமும்,
அன்ன சேனைத் தலைவரும், ஆழியைத்
துன்னி நின்று, விடாது இடை தூர்த்தலால்,
பொன் இலங்கை தொடுத்து அணை புக்கதே. (65-1)
8. ஒற்றுக் கேள்விப் படலம்
624. என்று, நளனைக் கருணையின் தழுவி, அன்பாய்
அன்று வருணன் உதவும் ஆரமும் அளித்து
துன்று கதிர் பொற்கலனும் மற்றுள தொகுத்தே,
‘வென்றி, இனி’ என்று, படையோடு உடன்
விரைந்தான். (4-1)
625. இறுத்தனன்–ஏழு-பத்து வெள்ளமாம் சேனையோடும்,
குறித்திடும், அறுபத்தேழு கோடியாம் வீரரோடும்,
பொறுத்த மூ-ஏழு தானைத் தலைவர்களோடும்,
பொய் தீர்
அலத்தினுக்கு உயிராய் என்றும் அழிவு இலா
அமலன் அம்மா! (13-1)
(நளனுக்கு முடி சூட்டு படலம்)
626. என்று மகிழ் கொண்டு, இரவி மைந்தனை இராமன்,
‘வன் திறலினான் நளன் வகுத்த அணை, மானக்
குன்றம் நெடுநீரின்மிசை நின்று இலகு கொள்கை
நன்று என முயன்ற தவம் என்கொல்?நவில்க!’ என்றான். (13-2)
627. நவிற்றுதிர் எனக் கருணை வள்ளல் எதிர் நாமக்
கவிக்கு இறைவன் எய்தி, இரு கை மலர் குவித்தே,
‘புவிக்கு இறைவ! போதின் அமர் புங்கவனிடத்தே
உவப்புடன் உதித்தவர்கள் ஓர் பதின்மர் என்பார். (13-3)
628. ‘மலரவனிடத்தில் வரு காசிபன், மரீசி,
புலகனுடன் அத்திரி, புலத்தியன், வசிட்டன்,
இலகு விசுவன், பிருகு, தக்கன், இயல்பு ஆகும்
நலம் மருவு அங்கிரவு எனப் புகல்வர் நல்லோர். (13-4)
629. ‘மக்கள்தனில் ஒன்பதின்மர் வானம் முதலாக
மிக்க உலகைத் தர விதித்து, விசுவப் பேர்
தொக்க பிரமற்கு ஒரு தொழில்தனை விதித்தான்
அக் கணம் நினைத்தபடி அண்டம் முதல் ஆக. (13-5)
630. ‘அன்ன தொழிலால் விசுவகன்மன் எனல் ஆனான்,
பொன்னுலகை ஆதிய வகுத்திடுதல் போல,
நென்னல் இகல் மாருதி நெருப்பினில் அழிந்த
நன் நகரம் முன்னையினும் நன்கு உற அளித்தான். (13-6)
631. ‘மூ-உலகின் எவ் எவர்கள் முன்னு மணி மாடம்
ஆவது புரிந்து, மயன் ஆகவும் இருந்தான்;
தேவர் இகல் மா அசுரர் சொற்ற முறை செய்தற்கு
ஆவளவில் வானவர்கள் தச்சன் எனல் ஆனான். (13-7)
632. ‘அன்னவன் இயற்கை அறிதற்கு அரிய; மேல்நாள்
பன்னு மறை அந்தணன் விதித்தபடி, பார்மேல்
மன்னும் இறையோர் எவரும் வந்தபடி தானே
உன்னும் அவன் மைந்தன் நளன் என்றிட (13-8)
உதித்தான்.
633. ‘தாயரொடு தந்தை மகிழும் தனையன், வானின்
மேய மதி போல வளர் மெய்யின் மணி மாட
நாயகம்அது ஆன திரு வீதியில் நடந்தே
ஏய சிறு பாலருடன் ஆடி மனை எய்தும். (13-9)
634. ‘சிந்தை மகிழ் இல்லில் விளையாடு சிறுவன், தேர்
தந்தை வழிபாடுபுரியும் கடவுள்தன்னை
வந்து திகழ் மா மணி மலர்த்தவிசினோடே
கந்த மலர் வாவியினிடைக் கடிதின் இட்டான். (13-10)
635. ‘மற்றைய தினத்தின் இறை எங்கு என மருண்டே
பொற்றொடி மடந்தையை விளித்து, “உரை” என,
போய்
நல் தவ மகச் செயல் நடுக்கி, அயல் நண்ணிச்
சொற்றனள் எடுத்து; வழிபாடு புரி தூயோன். (13-11)
636. ‘பூசனை புரிந்தவன் வயத்து இறை புகாமே
கோசிகம் அமைத்து, மணி மாடம்அது கோலி,
நேசம் உற வைத்திடவும், நென்னல் என ஓடி
ஆசையின் எடுத்து, அவனும் ஆழ்புனலில் இட்டான். (13-12)
637. ‘இப்படி தினந்தொறும் இயற்றுவது கண்டே
மெய்ப் புதல்வனைச் சினம் மிகுத்திட வெகுண்டும்,
அப்படி செய் அத்திறம் அயர்த்திலன்; “இவன்தன்
கைப்படல் மிதக்க” என ஓர் உரை கதித்தான். (13-13)
638. ‘அன்று முதல் இன்னவன் எடுத்த புனல் ஆழா
என்று அரிய மாதவர் இசைத்தபடி இன்னே
குன்று கொடு அடுக்க, நிலைநின்றது, குணத்தோய்!
என்று நளன் வன்திறம் எடுத்துமுன் இசைத்தான். (13-14)
639. சொற்றவை அனைத்தையும் கேட்டு, தூய் மறை
கற்றவர் அறிவுறும் கடவுள், ‘இத் தொழில்
முற்றுவித்தனை உளம் மகிழ, மொய்ம்பினோய்!–
மற்று உனக்கு உரைப்பது என், முகமன்?
வாழியாய்!’ (13-15)
640. ‘ஐயன் நல் இயற்கை, எப் பொருளும் அன்பினால்
எய்தினர் மகிழ்ந்திட ஈயும், எண்ணினால்;
செய் தொழில் மனக்கொள, செய்த செய்கை கண்டு
உய் திறம் நளற்கும் அன்று உடைமை ஆதலான். (13-16)
641. ‘இத் திறம் புரி நளற்கு இன்பம் எய்தவே
வித்தக இயற்றிட வேண்டும்’ என்றனன்;
உத்தமன் உரைப்படி உஞற்றற்கு எய்தினார்
முத் திறத்து உலகையும் ஏந்தும் மொய்ம்பினார். (13-17)
642. இங்கு இவை தாதையை எண்ணும் முன்னமே
அங்கு அவன் வணங்கினன், அருகின் எய்தினான்;
‘புங்கவ நின் மகற்கு இனிய பொன் முடி
துங்க மா மணிக் கலன் தருதி, தூய்மையாய்!’ (13-19)
643. என்றலும், மணி முடி, கலன்கள், இன் நறாத்
துன்று மா மலர்த் தொடை, தூய பொன்-துகில்,
குன்று எனக் குவித்தனன்; கோல மா மலர்
மன்றல் செய் விதானமும் மருங்கு அமைத்து அரோ. (13-19)
644. முடி புனை மண்டபம் ஒன்று முற்றுவித்து,
இடி நிகர் பல் இயம் இயம்ப, வானரர்
நெடிய வான் கங்கையே முதல நீத்த நீர்
கடிது கொண்டு அணைந்தனர் கணத்தின் என்பவே. (13-20)
645. நளன்தனை விதிமுறை நானம் ஆடுவித்து,
இளங் கதிர் அனைய பொன்-துகிலும் ஈந்து, ஒளிர்
களங்கனி அனையவன் ஏவ, கண் அகல்
வளம் திகழ் மண்டப மருங்கின் எய்தினான். (13-21)
646. ஆனதோர் காலையின் அருக்கன் மைந்தனும்
ஏனைய வீரரும் இலங்கை மன்னனும்
வானரர் அனைவரும் மருங்கு சூழ்வர,
தேன் நிமிர் அலங்கலும் கலனும் சேர்த்தியே, (13-22)
647. பொலங்கிரி அனைய தோள்-தம்பி போந்து, ஒளி
இலங்கிய மணி முடி இரு கை ஏந்தினான்,
அலங்கல் அம் தோள் நளற்கு அன்பின்
சூட்டினான்–
‘குலங்களோடு இனிது வாழ்க!’ என்று கூறியே. (13-23)
648. இளையவன் திரு மலர்க் கையின் ஏந்திய
ஒளி முடி புனைந்திட உலகம் ஏழினும்
அளவு இலா உயிர்த்தொகை அனைத்தும் வாழ்த்தியே
‘நளன் இயற்றிய தவம் நன்று’ என்று ஓதினார். (13-24)
649. முடி புனை நளன் எழுந்து, இறைவன் மொய் கழல்
அடிமிசை வணங்கிட, அவனுக்கு அந்தம் இல்
படி புகழ் ஆசிகள் பகர்ந்து, ‘பார்மிசை
நெடிது உற நின் குலம்!’ என நிகழ்த்தினான். (13-25)
650. மற்றையர் அனைவரும் அருள் வழங்கவே
பொன்-திரள் மணி முடி புனைந்த போர்க் களிறு
உற்று, அடி வணங்கிட, உவந்து தாதையும்,
பெற்றனன் விடை கொடு, பெயர்ந்து போயினான். (13-26)
651. இன்னணம் நிகழ்ந்தபின், இனிதின், எம்பிரான்
தன் நிகர் சேதுவை நோக்கி, தையலாள்
இன்னல் தீர்த்திட எழுந்தருள எண்ணினான்;
பின் அவண் நிகழ்ந்தமை பேசுவாம்அரோ. (13-27)
652. கேட்டலும், நளன் என்று ஓதும் கேடு இலாத் தச்சன்,
கேள்வி
வாட்டம் இல் சிந்தையான், தன் மனத்தினும் கடுகி,
வல்லே
நீட்டுறும் அழிவு இல்லாத யோசனை நிலையதாகக்
காட்டினன், மதிலினோடும் பாசறை, கடிதின் அம்மா! (14-1)
653. போயினன், அமலன் பாதம் பொருக்கென வணங்கி,
‘இன்னே
ஆயினது அணி கொள் பாடி நகர் முழுது, அமல!’
என்றான்;
நாயகன்தானும், வல்லே நோக்கினன் மகிழ்ந்து,
‘நன்று!’ என்று
ஏயினன், எவரும் தம்தம் பாசறை இருக்க என்றே. (16-1)
654. அவ் வகை அறிந்து நின்ற வீடணன், அரியின்
வீரர்க்கு
ஒவ்வுற உருவம் மாறி அரக்கர் வந்தமை அங்கு ஓத,
செவ்விதின் மாயச் செய்கை தெளிந்திடுமாறு, தாமே
கைவலியதனால் பற்றிக் கொண்டனர், கவியின் வீரர். (25-1)
655. என அவர் இயம்பக் கேட்ட இறைவனுக்கு, இலங்கை
வேந்தன்
தனது ஒரு தம்பி, ‘அன்னோர் சாற்றிய வாய்மை
மெய்யும்
எனது ஒரு மனத்தில் வஞ்சம் இருந்ததும், இன்னே
காண்டி;
நினைவதன்முன்னே விஞ்சை நீக்குவென்’ என்று
நேர்ந்தான். (29-1)
656. ஆங்கு அவர் புகலக் கேட்ட ஐயனும், அவரை நோக்கி,
‘ஈங்கு இது கருமமாக எய்தினீர்என்னின், நீர் போய்,
தீங்கு உறும் தசக்கிரீவன் சிந்தையில் தெளியுமாறே
ஓங்கிய உவகை வார்த்தை உரையும்’ என்று
ஓதலுற்றான். (32-1)
657. இன்னவாறு இவர்தம்மை இங்கு ஏவிய
மன்னர் மன்னவன் ஆய இராவணன்
அன்ன போது அங்கு அளவு இல் அமைச்சரோடு
உன்னும் மந்திரத்து உற்றதை ஓதுவாம்: (38-1)
658. சொல்லும் மந்திரச் சாலையில், தூய் மதி
நல் அமைச்சர், நவை அறு கேள்வியர்,
எல்லை இல்லவர் தங்களை நோக்கியே,
அல் அரக்கர் பதியும் அங்கு ஓதுவான். (41-1)
659. ‘ஈது எலாம் உரைத்து என் பயன்? இன்று போய்க்
காதி, மானுடரோடு கவிக் குலம்
சாதல் ஆக்குவென், தான் ஓர் கணத்து’ எனும்
போதில், மாலியவானும் புகலுவான்: (46-1)
660. என்னும் வாய்மை இயம்புறு போதினில்,
முன்னமே சென்ற ஒற்றர் முடுகி, ‘எம்
மன்னவர்க்கு எம் வரவு உரைப்பீர்!’ எனா,
துன்னு காவலர்தம்மிடைச் சொல்லினார். (52-1)
661. வருணன் அஞ்சி, வழி கொடுத்து ‘ஐய! நின்
சரணம்’ என்று அடி தாழ்ந்து, அவன் தன் பகை
நிருதர் வெள்ளம் அனந்தம் நிகழ்த்து முன்,
திரிபுரச் செயல் செய்தது, அங்கு ஓர் கணை. (60-1)
662. செவித் துளை இருபதூடும், தீச் சொரிந்தென்னக்
கேட்டு
புவித்தலம் கிழிய, அண்டம் பொதிர் உற, திசையில்
நின்ற
இபத் திரள் இரிய, வானத்து இமையவர் நடுங்க,
கையால்
குவித் தடம் புயமே கொட்டி, கொதித்து இடை
பகரலுற்றான். (66-1)
663. தானை அம் தலைவன் ஈது சாற்றலும், தறுகண்
வெம் போர்க்
கோன் அழன்று உருத்து, ‘வீரம் குன்றிய மனிதரோடு
வானரக் குழுவை எல்லாம் வயங்கும் என் கரத்தின்
வாளால்
ஊன் அறக் குறைப்பென் நாளை, ஒரு கணப்
பொழுதில்’ என்றான்! (70-1)
664. மன்னவர் மன்னன் கூற, மைந்தனும் வணங்கி,
‘ஐயா!
என்னுடை அடிமை ஏதும் பிழைத்ததோ? இறைவ!
நீ போய்,
“மன்னிய மனித்தரோடும் குரங்கொடும் மலைவென்”
என்றால்,
பின்னை என் வீரம் என்னாம்?’ என்றனன்,
பேசலுற்றான்: (70-2)
665. ‘இந்திரன் செம்மல் தம்பி, யாவரும் எவரும் போற்றும்
சந்திரன் பதத்து முன்னோன்’ என்றனர்; ‘சமரை
வேட்டு,
வந்தனர்; நமது கொற்றம் வஞ்சகம் கடப்பது என்னும்
சுந்தரன் அவனும் இன்னோன்’ என்பதும் தெரியச்
சொன்னார். (75-1)
666. எரி எனச் சீறி, இவ்வாறு உரைத்து, இரு மருங்கில்
நின்ற
நிருதரைக் கணித்து நோக்கி, ‘நெடுங் கரி, இரதம்
வாசி,
விருதர்கள் ஆதி வெள்ளப் படைத் தொகை
விரைந்து, நாளைப்
பொரு திறம் அமையும்’ என்னா, புது மலர்ச் சேக்கை
புக்கான். (88-1)
9. இலங்கை காண் படலம்
667. கண்டு அகம் மகிழ்ந்து, ஆங்கு அண்ணல், கடி நகர்
இலங்கை மூதூர்
விண்தலம் அளவும் செம் பொற் கோபுரம், விளங்கும்
வீதி,
மண்டபம், சிகர கோடி, மாளிகை, மலர்க் கா ஆதி
எண் திசை அழகும் நோக்கி, இளவலுக்கு இயம்பு
கின்றான். (6-1)
10. இராவணன் வானரத் தானை காண் படலம்
668. ‘ஏறிட்ட கல்லு வீழும் இடம் அற, எண்கினாலே
நாறு இட்டதென்ன ஒவ்வோர் ஓசனை நாலுபாலும்
சூறிட்ட சேனை நாப்பண் தோன்றுவோன் இடும்பன்
என்றே
கூறிட்ட வயிரத் திண் தோள் கொடுந் தொழில்
மடங்கல் போல்வான் (27-1)
669. ‘மற்று இவன் படையில் ஒன்னார் அன்றி,
வானவர்களே வந்து
உற்றனர் எனினும், பற்றி உயிர் உகப் பிசைந்திட்டு
ஊத,
கொற்றவன் அருளும் கொண்டோன்; குடாவடிக்கு
இறைவன்; கூற்றம்
பெற்றவன்; அடைந்தோர்தம்மை உயிர் எனப் பேணும்
நீரான். (27-2)
670. ‘ஆங்கு அவன் எதிரே வேறு ஓர் ஆடகக் குன்றம்
ஒன்றை
வாங்கு நீர் மகரவேலை வந்து உடன்
வளைந்ததென்ன
ஓங்கு மைம் முகத்தின் தானையுள் பொலிந்திடுவான்,
வெற்றி
ஓங்கிய குவவுத் திண் தோள் வினதன் என்று
உரைக்கும் வெய்யோன். (27-3)
671. ‘அன்னவன்தனக்கு வாமத்து ஐம்பது கோடி யூகம்
தன்னை வந்து இடையில் சுற்ற, தட வரை என்ன
நிற்பான்,
கொல் நவில் குலிசத்து அண்ணல் கொதித்து
எதிர்கொடுக்கு மேனும்,
வென்னிடக் குமைக்கும் வேகதெரிசி என்று
உரைக்கும் வீரன். (27-4)
672. பிளக்கும் மன்பதையும், நாகர் பிலனையும்; கிளக்கும்
வேரோடு
இளக்கும் இக் குடுமிக் குன்றத்து இனம் எலாம்
பிடுங்கி, ஏந்தி,
அளக்கர் கட்டவனும் மாட்டாது அலக்கணுற்றிட
விட்டு, ஆர்க்கும்
துளக்கம் இல் மொய்ம்பர் சோதிமுகனும் துன்முகனும்
என்பார். (27-5)
673. ‘குன்றொடு குணிக்கும் கொற்றக் குவவுத் தோள்
குரக்குச் சேனை
ஒன்று பத்து ஐந்தொடு ஆறு கோடி வந்து ஒருங்கு
சுற்ற,
மின் தொகுத்து அமைந்த போல விளங்கு எயிறு
இலங்க, மேருச்
சென்றென வந்து நிற்பான், திறல் கெழு
தீர்க்கபாதன். (27-6)
674. ‘நூற்றிரண்டாய கோடி நோன் கவித் தானை சுற்ற,
காற்றின் மா மகற்குக் கீழ்பால் கன வரை என்ன
நிற்பான்,
கூற்றின் மா மைந்தன்; கூற்றும் குலுக்கமுற்று
அலக்கண் எய்தச்
சீற்றமே சிந்தும் செங் கண் தெதிமுகன் என்னும்
சீயம். (27-7)
675. ‘நாடில், இங்கு இவர் ஆதியாய் நவின்ற மூ-எழுவர்
ஆடல் வெம் படைத் தலைவர்கள் ஆறு பத்து ஏழு
கோடி வீரர்கள், குன்று எனக் குவவிய தோளாய்!
கூடு சேனையும் எழுபது வெள்ளமாய்க் குறிப்பார். (33-1)
676. ‘அழிவு இலா வலி படைத்துள நம் படை அரக்கர்
ஒழிவு இலாத பல் ஆயிர வெள்ளத்துக்கு உறை ஓர்
துளியும் ஒவ்விடா எழுபது வெள்ளத்தின் தொகை
சேர்
எளிய புன் குரங்கு என் செயும்?’ என்றனன்,
இகலோன். (35-1)
11. மகுட பங்கப் படலம்
677. பிடித்தவன் விழித் துணை பிதுங்கிட நெருக்கி,
இடித்து அலம்வரக் கதறி எய்த்திட, இரங்காது
அடிக் கொடு துகைத்து அலை கடற்குள் ஒரு
கையால்
எடுத்து உக, இராவணன் எறிந்து, இகலின்
ஆர்த்தான். (22-1)
678. எறிந்திட விழுந்து, இரவி சேய் அறிவு சோர்வுற்று,
அறிந்ததொர் இமைப்பளவில் ஆகமது தேறி,
பிறிந்திலன் எனத் தொனி பிறந்திட, மருங்கில்
செறிந்து, ‘அமர் அரக்கனொடு செய்வென்!’ என
வந்தான். (22-2)
679. என இவை அமலன் கூற, இரு கையும் எடுத்துக்
கூப்பி,
மனம் மிக நாணி, ஒன்றும் வாய் திறந்து
உரைக்கலாற்றான்,
பனியினை வென்றோன் மைந்தன் பின்னரும்
பணிந்து நின்றே
அனகனுக்கு அன்பினோடும் அடுத்தமை
அறையலுற்றான். (38-1)
680. என்றனன்; என்றலோடும், இணை அடி இறைஞ்சி,
ஆங்கு,
குன்று உறழ் குவவுத் திண் தோள் கொற்ற வல்,
வீரற் காண,
தன் தனி உள்ள நாணால் தழல் விழிக் கொலை
வெஞ் சீயம்
நின்றென, எருத்தம் கோட்டி, நிலனுற நோக்கிக்
கூறும். (38-2)
681. ஏர் அணி மாட கூடம் இலங்கிய இலங்கை வேந்தை
காரணம் ஆக வாலால் கட்டிய வாலி, அன்றிப்
போரணம் ஆளும் அம்பால் புடைத்த மால் பாதம்
போற்றி
காரணச் சுடரோன் மைந்தன் தலைவனை
வணங்கிச் சொல்லும் (38-3)
682. இரவி போய் மறையும் முன்பு, அங்கு இராமனும்
இலங்கை நின்ற
வரை இழிந்து, அனைவரோடும் வந்து, தன்
இருக்கை எய்தி,
நிருதர்தம் குலத்தை எல்லாம் நீறு எழப் புரியுமாறே
பொரு திறம் முயன்ற செய்கை புகலுவான்
எடுத்துக்கொண்டாம். (49-1)
683. தெய்வத் தாமரையோன் ஆகி யாவையும் தெரியக்
காட்டி,
மெய் வைத்த அருளினாலே அவை எலாம் விரும்பிக்
காத்து
சைவத்தன் ஆகி, யாவும் தடிந்திடும் செயலின்
மேவும்
கை வைத்த நேமியோன்தன் கால் வைத்த
கருத்தமே, யாம். (49-2)
684. பூசலைக் குறித்து இராமன், பொரும் கவிச் சேனை
வெள்ளம்
மாசு அற வகுத்து, நாலு திக்கினும் வளையச்
செய்து,
பாசமுற்றுடைய நண்பின் படைத் துணை
யவர்களோடும்
பாசறை இருந்தான்; அந்தப் பதகனும் இழிந்து
போனான். (49-3)
12. அணி வகுப்புப் படலம்
685. இறைவன் மற்று இதனைக் கூற, எறுழ் வலி
அமைச்சர் பொங்கி,
‘பிறை முடிப் பரமனோடும் பெரு வரை எடுத்த
மேலோய்!
உறு சமர்க்கு எம்மைக் கூவி, ஏவிடாதொழிந்தாய்;
யாமும்
சிறு தொழில் குரங்கு அது என்ற திறத்தினும்
தாழ்த்தது என்றார். (11-1)
686. அமைச்சர் மற்று இதனைக் கூறி, ‘அரச! நீ
விடைதந்தீமோ?
இமைப்பிடைச் சென்று, வந்த குரங்குஇனப் படையை
எல்லாம்
கமைப்பு அறக் கடிது கொன்றே களைகுவம்’ என்ற
போதில்,
சுமைத் தட வரைத் தோள் கும்பகருணன்சேய்
நிகும்பன் சொல்வான்: (12-1)
687. எரி நெருப்பு என்னப் பொங்கி, இராவணன் என்னும்
மேலோன்
உரை செறி அமைச்சரோடும், உறு படைத்
தலைவரோடும்,
கரி, பரி, இரதம், காலாள், கணக்கு அறும் வெள்ளச்
சேனை
மருவுற, திசை நான்கு உம்பர் வகுத்து, அமர் புரியச்
சொன்னான். (17-1)
688. இம் முறை அரக்கர் கோமான் அணி வகுத்து
இலங்கை மூதூர்,
மும் மதில் நின்ற தானை நிற்க, மூதமைச்சரோடும்
விம்முறு சேனை வெள்ளத் தலைவர்க்கு விடையும்
நல்கி
கம்மெனக் கமழும் வாச மலர் அணை கருகச்
சேர்ந்தான். (22-1)
13. அங்கதன் தூதுப் படலம்
689. ‘சூளுறும் வஞ்சனாகத் தோன்றிய இலங்கை வேந்தன்
கோளுறும் சிறையை நீக்கி, குரை கழல் வணங்கும்
ஆகில்
வீழுறும் இலங்கைச் செல்வம் வீடணற்கு அளிப்பென்;
எம்பி
ஆளுறும் அயோத்திதன்னை இராவணற்கு
அளிப்பென்; என்றான். (7-1)
690. ‘தப்பு இல வீடணற்கு இலங்கை, தானமாச்
செப்பிய வாய்மைதான் சிதையலாகுமோ?
இப்பொழுது இராவணன் ஈங்கு வந்திடில்,
அப்பொழுது, அயோத்தி நாடு அளிப்பென்
ஆணையே.’ (7-2)
691. அரி முதல் தேவர் ஆதி அமரிடைக் கலந்த போதும்,
வரி சிலை இராமன் வாளி வந்து உயிர் குடிப்பது
அல்லால்,
புரம் ஒரு மூன்றும் தீயப் பொடி
செய்தோன்தன்னொடு, அந் நாள்,
அரு வரை எடுத்த வீரன் ஆண்மைக்கும் அவதி
உண்டோ? (17-1)
692. வந்தது என், குரங்கு? ஒன்று இல்லை, அடைத்தது
என், கடல் வாய்? மந்தி
சிந்தையின் களியால் என் பேர் தெரியுமோ?
தெரியாது ஆகில்,
இந்த எம் பதியைக் காக்கும் இறைவனோ? அறிதும்;
எங்கள்
விந்தை எம் பெருமான்! வாழி! வீடணன் என்னும்
வேந்தன். (19-1)
693. ‘முந்த ஓர் தசக்கிரீபன் ஆக்கையை மொய்ம்பால்
வீக்கும்
அந்த ஆயிரத்தோளானை அரக்கிய மழுவலாளன்
வந்து எதிர்கொள்ள, வீரச் சிலையும் வெவ் வலியும்
வாங்கும்
சுந்தரத் தோளன் விட்ட தூதன் நான்’ என்னச்
சொன்னான். (20-1)
694. ‘பசை அறு சிந்தையானைத் தமரொடும் படுத்த
போதும்,
இசை எனக்கு இல்லை அன்றே’ என்பது ஓர் இகழ்வு
கொண்டான்;
வசை அற இசைக்கும் ஊரை வளைக்கவும்
வந்திலாதான்,
திசையினை வென்ற வென்றி வரவரச் சீர்த்தது!’
என்றான். (36-1)
695. ஆதி அம் பரன், அங்கதன் ஓதல் கேட்டு,
‘ஈது அவன் கருத்து என்றிடின் நன்று’ எனா,
சோதியான் மகன் ஆதித் துணைவருக்கு
ஓதினான், அங்கு அமரர்கள் உய்யவே. (43-1)
14. முதற் போர் புரி படலம்
696. ஆதி நாயகன் அங்கு அது கூறுமுன்;
பாதமீது பணிந்து, அருள் பற்றியே,
காது வெம் படைக் காவலர் ஆதியோர்
மோது போரை முயலுதல் மேயினார். (3-1)
697. அந்த வேலை, அரக்கர் அழன்று கண்,
சிந்து தீயில் திசை எரி சேர்த்தவன்
முந்து உரைத்த முறைமையின் முந்துற
வந்து எதிர்த்தனர், வாயில்கள்தோறுமே. (15-1)
698. அன்ன போது அங்கு அரக்கர் பிரான் படை
உன்னும் ஆயிர வெள்ளம் உடன்று எழா,
கன்னி மா மதிலின் புறம் காத்து, உடன்
முன்னி வெஞ் சமர் மூண்டு எழுந்துற்றதே. (15-2)
699. ஆனை பட்ட; அடு பரி பட்டன;
தானை பட்ட, தார் இரதம்; கணை
சோனைபட்டது; துன் அரும் வானரச்
சேனை பட்டது; பட்டது செங்களம். (50-1)
700. ஆர்த்த போதில், அருந் திறல் சிங்கனும்,
சூர்த்த நோக்குடைச் சூரனும், துற்கனும்,
கூர்த்த வெங் கதிர்க் கோபனொடு ஆதியாய்,
வேர்த்து, அரக்கர் வியன் படை வீசினார். (55-1)
701. போர் செய் காலை, இடும்பனும் பொங்கி, அக்
கார் செய் மேனி அரக்கனைக் கைகளால்
மேருமீது இடி வீழ்ந்தெனத் தாக்கலும்;
சோர்வு இலாத அரக்கனும் துள்ளினான். (65-1)
702. வரு சுமாலி மகன் பிரகத்தன் அங்கு
இரதம் ஒன்றதின் ஏறினன்; பின்னரும்
வரி நெடுஞ் சிலை வேறு ஒன்று வாங்கியே,
சொரியும் மா மழைபோல், சரம் தூவினான். (72-1)
703. வால் அறுந்து, வயிறு துணிந்து, இரு
கால் அறுந்து, கழுத்து அறுந்து, அங்கம் ஆம்
மேல் அறுந்து விளிந்தன-வெஞ் சமர்
ஆலும் வானரச் சேனை அனேகமே. (72-2)
704. நீலன் நெஞ்சிடை அஞ்சு நெடுஞ் சரம்
ஆலம் அன்ன அரக்கன் அழுத்தலும்,
சால நொந்தனன்; நொந்து, தருக்கு அறா,
கால வெங் கனல்போல் கனன்றான் அரோ. (72-3)
705. கனலும் வெங் கண் அரக்கன், கடுஞ் சிலை
புனையும் தேர் பரி பாகொடு போய் அற,
நினைவதற்குமுன் நீலன் அங்கு ஓர் நெடுந்
தனி மராமரம்தான் கொண்டு, தாக்கினான். (72-4)
706. நிருதர் தானை உடைந்தது; நேர்கிலாத்
தரும கோபன், சதமகன், சண்டியோடு
எரிமுகன் இவர் ஆதி இராக்கதர்
செருவின், வெற்றி திகழ, வந்து எய்தினார். (79-1)
707. ஏவி, மற்று அயல் நின்ற அரக்கரை,
‘தா இல் என் ஒரு தேரினைத் தம்’ எனக்
கூவ, மற்று அவர் கொண்டு உடன் நண்ணினார்,
தேவர் ஆதியர் நெஞ்சம் திடுக்கென. (93-1)
708. ஆய்வு அருஞ் சத கோடி அடல் பரி
மாய்வு அருந் திரைபோல் வரப் பூண்டது;
தேயம் எங்கும் திரிந்தது; திண் திறல்
சாய, இந்திரனே பண்டு தந்தது. (93-2)
709. ஏறினான் இடத் தோள் துடித்தே; அறக்
கூறினான், ‘குரங்கோடு மனிதரை
நீறது ஆக்குவென்’ என்று, நெருப்பு எழச்
சீறினான், சிவன் போல அத் தேரின்மேல். (94-1)
710. ‘அண்ட கோடி அகிலமும் இன்றொடே
விண்டு நீங்குறும்’ என்று உயர் விண்ணவர்,
கொண்ட ஆகுலத்தால், மனம் கூசியே,
புண்டரீகன் பதியிடைப் போயினார். (99-1)
711. வெள்ளம் ஆங்கு அளப்பில; வெள்ளம், வாம் பரி;
கொள்ளை யார் அதன் கணக்கு அறிந்து கூறுவார்?
உள்ளம் ஆய்ந்து ஓது இரு நூறு வெள்ளம் ஆம்
கள்ள வாள் அரக்கர்கள் கடலின் சூழவே. (105-1)
712. நிருதர்கள் எவருமே நோக்கி நின்று போர்
பொருதனர், அயில் முதல் படைகள் போக்கியே;
மரமொடு மலைகளைப் பிடுங்கி, வானரர்
செருவிடைத் தீயவர் சிதறத் தாக்கினார். (119-1)
713. அண்ட கோளகை வெடித்து, அவனி கீண்டுற,
எண் திசாமுகங்களும் இடிய, ஈசனைக்
கொண்ட வான் கயிலையும் சிகர கோடிகள்
விண்டு நீங்கியதுஎனில், விளம்ப வேண்டுமோ? (123-1)
714. வச்சிர வரைப் புயத்து அரக்கன் வாங்கிய
கைச் சிலை நாண் ஒலி கலந்த காலையில்,
அச்சம் இல் புரந்தரன் ஆதி தேவர்கள்,
உச்சிகள் பொதிர் எறிந்து, உரம்
மடங்கினார். (123-2)
715. இப் புறத்து உயிர்கள் எல்லாம் இரிந்திட, அரக்கர்
கோமான்
கைப் படு சிலையை வாங்கி, கால மா மழையும்
எஞ்ச,
முப் பறத்து உலகம் எல்லாம் மூடியது என்ன, மூளும்
அப்பு மா மாரி சிந்தி, அண்டமும் பிளக்க ஆர்த்தான். (127-1)
716. ஆர்த்தவன் பகழி மாரி சொரிந்து, அரிச் சேனை
எல்லாம்
தீர்த்து, ஒரு கணத்தில் போக்க, செங் கதிர்ச்
சிறுவன் தானும்
பார்த்து, உளம் அழன்று பொங்கி, பரு வலி
அரக்கனோடும்
போர்த் தொழிற்கு ஒருவன் போலப் பொருப்பு ஒன்று
ஆங்கு ஏந்திப் புக்கான் (127-2)
717. அலக்கணுற்று அனுமன் சோர, அங்கதன் முதலாம்
வீரர்
மலைக்குற மரங்கள் வாங்கி வருதல் கண்டு,
அரக்கன், வாளி
சிலைக்கிடை தொடுத்து, அங்கு ஏந்து மா மலை
சிதைத்திட்டு, அன்னோர்
கலக்கமுற்று இரிய, ஒவ்வோர் பகழியின் காய்ந்து
கொல்வான். (138-1)
718. நகைத்து, ‘இது புரிந்தான்கொல்லோ?’ என்பதன்
முன்பு, நாண்வாய்த்
துகைத்து ஒலி ஒடுங்காமுன்னம், சோனை அம்
புயலும் எஞ்ச,
மிகைப் படு சரத்தின் மாரி வீரனுக்கு இளையோன்
மேவும்
பகைப் புலத்துஅரக்கன் சேனைப் பரவைமேல்
பொழிவதானான். (143-1)
719. எரி முகப் பகழி மாரி இலக்குவன் சிலையின்
கோலிச்
சொரிதர, களிறு, பொன் தேர், துரங்கமோடு
இசைந்த காலாள்
நிருதர்கள் அளப்பு இல் கோடி நெடும் படைத்
தலைவர், வல்லே
பொரு களமீதில் சிந்திப் பொன்றினர் என்ப
மன்னோ. (153-1)
720. எதிர் வரும் அரக்கர் கோமான் இலக்குவன்தன்னை
நோக்கி,
‘மதியிலி! மனிதன் நீயும் வாள் அமர்க்கு ஒருவன்
போலாம்!
இது பொழுது என் கை வாளிக்கு இரை’ என
நகைத்தான்; வீரன்
முதிர்தரு கோபம் மூள, மொழிந்து அமர்
முடுக்கலுற்றான் (156-1)
721. அரக்கன் மனம் கொதித்து, ஆண்தகை
அமலன்தனக்கு இளையோன்
துரக்கும் பல விசிகம் துகள்பட நூறினன்; அது
கண்டு,
அருக்கன் குல மருமான், அழி காலத்திடை எழு
கார்
நெருக்கும்படி, சர தாரையின் நெடு மா மழை
சொரிந்தான். (158-1)
722. ‘மாயத்து உரு எடுத்து, என் எதிர் மதியாது, இது
பெரிது என்–
றே இத் தரை நின்றாய்; எனது அடல் வாரி
சிலையிடையே
தீ ஒத்து எரி பகழிக்கு இரை செய்வேன் இது
பொறுத்தேன்;
ஞாயத்தொடும் ஒரு குத்து அமர் புரிதற்கு எதிர்
வரும் நீ. (171-1)
723. கல் தங்கிய முழுமார்பிடைக் கவியின் கரம்அதனால்
உற்று ஒன்றிய குத்தின் வலிஅதனால் உடல்
உளைவான்,
பற்று இன்றிய ஒரு மால் வரை அனையான், ஒரு
படியால்
மல் தங்கு உடல் பெற்று ஆர் உயிர் வந்தாலென
உய்ந்தான். (179-1)
724. கொதித்து ஆங்கு அடல் அரக்கன் கொடுங் கரம்
ஒன்றதின் வலியால்
மதித்தான் நெடு வய மாருதி மார்பத்திடை வர, மேல்
புதைத்து ஆங்குறும் இடிஏறு எனப் பொறி சிந்திய
புவனம்;
விதித்தான் முதல் இமையோர் உளம் வெள்கும்படி
விட்டான். (184-1)
725. உருத்து, வெஞ் சினத்து அரக்கன் அங்கு ஒரு
கையின் புடைப்ப,
வரைத் தடம் புய மாருதி மயங்கியது அறிந்து, ஆங்கு
இரைத்த திண் பரித் தேர்நின்றும் இரு நிலத்து
இழியச்
சரித்து, வானரம் மடிந்திட, சர மழை பொழிந்தான். (186-1)
726. உருத்து இலக்குவன் ஒரு கணத்து அவன் எதிர்
ஊன்றிக்
கரத்தின் வெஞ் சிலை வளைக்குமுன், கடுஞ்
சினத்து அரக்கன்
சிரித்து, வெம் பொறி கதுவிட, திசைமுகம் அடையப்
பொருத்தி, வெஞ் சரம் பொழிந்து, ‘இவை விலக்கு’
எனப் புகன்றான். (200-1)
727. பண்டை நாள் தரு பனித் திரைப் புனல் சடை
ஏற்றுக்
கொண்ட தூயவன், கொடுந் தொழில் நிருதர்கள்
குழுமி
மண்டு வாள் அமர்க் களத்தில், அம் மலர்க் கழல்
சேறல்
கண்டு, கூசலன் நிற்கும் என்றால், அது கடனே? (216-1)
728. அனைய கண்டு, இகல் அரக்கருக்கு இறைவன், அப்
பொழுதில்,
மனம் நெருப்பு எழக் கொதித்து, ‘ஒரு மனிதன் என்
வலியை
நினையகிற்றிலன்; நெடுஞ் சமர் என்னொடும்
துணிந்த
வினையம் இன்றொடும் போக்குவென்’ என விழி
சிவந்தான். (225-1)
729. அடுக்கி நின்றிடு பகிரண்டப் பரப்பு எலாம் அதிர,
துடிக்கும் நெஞ்சகத்து இமையவர் துளங்குற, கூற்றும்
நடுக்கம் உற்றிட, நல் அறம் ஏங்கிட, கயிலை
எடுக்கும் திண் திறல் அரக்கனும் சிலையை
நாண்எறிந்தான் (225-2)
730. எறிந்து அடல் சிலை வளைத்து, ஒரு கணத்திடை
எரியின்
நிறம் தகும் பல நெடுஞ் சுடர்ப் பகழிகள், நெறியின்
அறிந்திடற்கு அரிது ஆகிய அளப்பு இல் பல் கோடி
செறிந்திட, திசை வானகம் வெளி இன்றிச்
செறித்தான். (225-3)
731. ஐயன் நோக்கினன், ‘நன்று!’ என நகைத்து, அவன்
சிலைவாய்
எய்த வெஞ் சரம் பொடிபட, யாவையும் முருக்கி,
வெய்தின் அங்கு அவன்மேற் செல, எழு கணை
விடுத்தான்;
கைதவன், கணை ஏழு கொண்டு, அக் கணை
கடிந்தான். (225-4)
732. எய்து வெள்ளம் நூற்று-இரண்டு எனத் திரண்ட
கால் வயவர்,
மொய் கொள் சேனை அம் தலைவர்கள், முரண்
கரி, பரி, தேர்,
வெய்ய வீரர்கள், அளப்பிலர் கோடியர், விறல் சேர்
ஐயன் வெஞ் சரம் அறுத்திட, அனைவரும்
அவிந்தார். (236-1)
733. அறுத்த வில் இழந்து அழியுமுன், ஐ-இரு கரத்தும்
பொறுத்து வெஞ் சிலை, நாண் ஒலி புடைத்து, அடற்
பகழி
நிறுத்தி வீசினன்–நெடுந் திசை விசும்பொடு
நிமிரக்
கறுத்த வான் முகில் கல் மழை பொழிதரும்
கடுப்பின். (240-1)
734. நிரைக்கும் ஐ-இரு சிலையிடைச் சர மழை நிருதன்
துரக்க, மாருதி, உடல் உறு குருதிகள் சொரிந்த;
குரக்கு வான் படை குறைந்தன; கூசி வானவர்கள்
இரக்கமுற்று உலைந்து ஓடினார்; இருண்டது எவ்
உலகும். (240-2)
735. எறுழ் வலிப் புயந்து இராகவன் இள நகை எழும்ப,
முறுவலித்து, அவன் பகழிகள் யாவையும் முருக்கி,
பிறை முகச் சரம் ஐ-இரண்டு ஒரு தொடை பிடித்து,
ஆங்கு
உறுதி அற்றவன் சிலை ஒரு பத்தையும்
ஒறுத்தான். (240-3)
736. ‘வளைத்த வில்லும் இரதமும் மற்றும் நின்
கிளைத்த யானையும் சேனையும் கெட்டது; இங்கு
இளைத்து நின்றனை; இன்று போய் நாளை வா,
விளைக்கும் வெஞ் சமர் செய் விருப்பு உள்ளதேல்’. (255-1)
737. என்று இராமன் இயம்ப, இராவணன்
ஒன்றும் ஓதலன்; ‘உள்ளத்தின், என் வலி
நின்ற நேர்மை நினைத்திலன், மானிடன்;
நன்று சொன்னது!’ என நகைத்து ஏகினான். (255-2)
15. கும்பகருணன் வதைப் படலம்
738. என்று எடுத்து உரைத்தோன், பின்னும் உளம்
கனன்று, இனைய சொல் வான்;
‘வன் திறல் மனிதன் வெம் போர் எவரினும்
வலியனேனும்,
பொன்றுதல் இல்லா என்னைப் போர் வெலற்கு
எளிதோ? காலம்
ஒன்று அல; உகங்கள் கோடி உடற்றினும்,
ஒழிவதுஉண்டோ? (31-1)
739. ‘மானிடன் என்றே நாணி, கடவுள் மாப் படைகள்
யாதும்
யான் எடுத்து ஏகல் விட்டேன்; இன்றை வெஞ்
சமரம் போக,
தான் அமர் அழிந்தேன் என்னத் தக்கதோ?’
என்றான், அந்த
மானம் இல் அரக்கன்; பின்னர், மாலியவானும்
சொல்வான்: (31-2)
740. ‘ “முப்புரம் எரிந்தோன் ஆதி தேவரும்
முனிவர்தாமும்,
தப்பு அற உணர்தற்கு எட்டாத் தருமமே, கை வில்
ஏந்தி,
இப் பிறப்பு இராமன் என்றே, எம்மனோர் கிளையை
எல்லாம்
துப்பு அற, முருக்க வந்தான்” என்ற சொல்
பிழைப்பது உண்டோ? (31-3)
741. ‘ஆதலின் இறைவ! கேட்டி; அவன் பெருந் தேவி
ஆன
மாதினை விடுத்து, வானோர் முனிவரர் வருந்தச்
செய்யும்
தீதினை வெறுத்து, தேவர் தேவனாம் சிலை இராமன்
பாதமே பணியின், நம்பால் பகை விடுத்து, அவன்
போம்’ என்றான். (33-1)
742. ‘என்றும் ஈறு இலா அரக்கர் இன்ப மாய வாழ்வு
எலாம்
சென்று தீய, நும் முனோன் தெரிந்து தீமை
தேடினான்;
இன்று இறத்தல் திண்ணமாக, இன்னும் உன்
உறக்கமே?’
அன்று அலைத்த செங் கையால் அலைத்து
அலைத்து, உணர்த்தினார். (45-1)
743. சாற்றிய சங்கு தாரை ஒலி அவன் செவியில் சார,
ஆற்றலின் அமைந்த கும்பகருணனுக்கு அதுவும்
தாராட்டு
ஏற்றதுஒத்து, அனந்தல் முன்னர்க்கு இரட்டி
கொண்டு உறங்க, மல்லர்,
கூற்றமும் குலைய, நெஞ்சம் குறித்து இவை
புரியலுற்றார். (51-1)
744. அன்னவர் உரைப்பக் கேளா, அரசன் மோதரனை
நோக்கி,
‘மின் எனும் எயிற்று வீர எம்பியைக் கொணர்தி!’
என்ன,
‘இன்னதே செய்வென்’ என்னா, எழுந்து அடி
வணங்கிப் போவான்,
பொன் என விளங்குவான் போய்த் தன் பெருங்
கோயில் புக்கான். (54-1)
745. இனைய கும்பகருணன், இராக்கதர்
தனை முனிந்து இடிஏறு எனச் சாற்றினான்;
‘எனை நெடுந் துயில் போக்கியது என்?’ என,
மனம் நடுங்கினர், வாய் புதைத்து ஓதினார். (69-1)
746. வட்ட விண்ணையும் மாதிரம் எட்டையும்
கட்டி, வீரம் கணிப்பு அரும் காவலான்
தொட்ட பல் கலனும் சுடர் மௌலியும்
தெட்ட சோதி திளைப்ப நின்றான் அரோ. (76-1)
747. என்ற போதில் எறுழ் வலிச் செம் மணிக்
குன்றம் ஐ-இரண்டு ஏந்திக் குல வரை
சென்றது என்னத் திரிந்து உலகு யாவையும்
வென்ற வீரன் இனைய விளம்பினான். (77-1)
748. அக் கணத்து அரக்கர் கோன், ‘அளப்பு இல் யானை,
தேர்
மிக்க வான் புரவி, கால் வயவர் வெள்ளமோடு,
ஒக்க வான் படைப் பெருந் தலைவர் ஒன்று அறப்
புக்குமின், இளவலைப் புறத்துச் சூழ்ந்து’ என்றான். (99-1)
749. வெள்ளம் நூறு இரதம்; மற்று இரட்டி வெங் கரி;
துள்ளு வான் பரி அதற்கு இரட்டி; தொக்குறும்
வெள்ளி வேல் அரக்கர் மற்று இரட்டி; மேம்படும்
கொள்ளை வான் படைப் பெருந் தலைவர்
கோடியால். (102-1)
750. அன்ன போது இராவணற்கு இளவல் ஆகிய
மின்னு வேல் கும்பகன் என்னும் மேலையோன்,
துன்னு போர் அணிகலம் யாவும் சூடியே,
தன் ஒரு தேரினைத் தொழுது தாவினான். (103-1)
751. தொண்டகம், துடி, கன பேரி, துந்துமி,
திண்டிமம், படகம், மா முரசு, திண் மணிக்
கண்டைகள், கடையுகத்து இடிக்கும் ஓதையின்
எண் திசை செவிடு எறிதரச் சென்று உற்றதால். (106-1)
752. எழு கருங் கடல் கரை எறிந்திட்டு, ஊழி நாள்,
முழுது உலகு அடங்கலும் மூடும் தன்மையின்
தழுவியது என, தசமுகன் தன் ஆணையால்,
கிளர் பெரும் படைக் கடல் கெழுமிப்
போந்ததால், (106-2)
753. இரைக்கும் மும் மதம் பொழி தறுகண் யானையின்,
நெருக்கமும், நெடுங் கொடித் தொகையின் தேர்க்
குலப்
பெருக்கமும், புரவிகள் பிறங்கும் ஈட்டமும்
அரக்கர்தம் பெருக்கமும், ஆயது எங்குமே. (106-3)
754. நாற்படை வகை தொகை நடக்க, தூளிகள்
மேற்பட, விசும்பகம் மறைந்த; வெண் திரைப்
பாற்கடல் எனப் பொலி கவிப் பெரும் படை
காற் படு கதியினின் கரந்தது, ஓடியே. (108-1)
755. குரக்கினப் பெரும் படை குலைகுலைந்து போய்
வெருக் கொள, விசும்பிடை வெய்ய மாயையின்
அரக்கன் இன்று அமைத்தது ஓர் உருக்கொலாம்? நினது
உருக் கொடே கரிய குன்று உற்றவேகொலாம்? (111-1)
756. ஏழு யோசனைக்கு மேலாய் உயர்ந்திடும் முடி
பெற்றுள்ளான்;
சூழி வெங் கரிகள் தாங்கும் திசை எலாம் சுமக்கும்
தோளான்;
தாழ்வு அறு தவத்தின் மேலாம் சதுமுகன்
வரத்தினாலே
வீழ் பெருந் துயிலும் பெற்றான்-வெங் கடுங் கூற்றின்
வெய்யோன். (114-1)
757. சிலை பொழி பகழி, வேல், வாள், செறி சுடர்க்
குலிசம், ஈட்டி,
பல வகைப் படைகள் வாங்கி, நிருதர்கள் பல் போர்
செய்தார்;
மலையொடு மரங்கள் ஓச்சி, வயிரத் தோள்
கொண்டு, மாறாக்
கொலை அமர் எடுத்து, வாகை குரங்குகள் மலைந்த
அம்மா. (172-1)
758. பற்றினன் வசந்தன்தன்னை, பனைத் தடங்
கைகளாலே;
எற்றினன், ‘இவனை மீள விடவொண்ணாது’ என்று
சொல்லி,
‘கொற்றமும் உடையன்’ என்னா, குழம்பு எழப்
பிசைந்து கொண்டு
நெற்றியில் திலதமாக இட்டனன்-நிகர் இலாதான். (177-1)
759. அளப்பு இல் வெங் கரிகள், பூதம், அளி, வெம்
பரிகள் பூண்டு, ஆங்கு
இழுப்ப வந்து உடைய தேர் விட்டு, இரு நிலத்து
இழிந்து, வெம் போர்க்
களப் படக் கவியின் சேனைக் கடல் வறந்து உலைய,
‘கையால்
குளப் படுக’ என்று வெய்யோன் குறித்து, உளம்
கனன்று புக்கான். (177-2)
760. நிகர் அறு கவியின் சேனை நிலை கெட, சிலவர்
தம்மைத்
துகள் எழக் கயக்கி ஊதும்; சிலவரைத் துகைக்கும்,
காலின்;
தகர் படச் சிலவர்தம்மைத் தாக்கிடும், தடக்
கைதன்னால்;
புகவிடும் சிலவர்தம்மை, விசும்பிடைப் போக,
வெய்யோன். (177-3)
761. வலிதினின், சிலவர்தம்மை வன் கையால் பற்றிப்
பற்றி,
தலையொடு தலையைத் தாக்கும்; சிலவரைத் தனது
தாளால்
நிலமதில் புதைய ஊன்றி மிதித்திடும்; சிலவர்
நெஞ்சைக்
கொலை நகப் படையின் கீறி, குருதி வாய்மடுத்துக்
கொள்ளும். (177-4)
762. கடும் பிணக் குவையினூடே சிலவரைப் புதைக்கும்;
கண்ணைப்
பிடுங்குறும் சிலவர்தம்மை; சிலவரைப் பிடித்து,
வெய்தின்
கொடுங் கொலை மறலி ஊரில் போய் விழக் குறித்து
வீசும்;
நெடும் பெரு வாலின் பற்றிச் சிலவரைச் சுழற்றி
நீக்கும். (177-5)
763. பருதி மண்டலத்தில் போகச் சிலவரைப் பற்றி வீசும்;
குருதி வாய் பொழியக் குத்திச் சிலவரைக்
குமைக்கும்; கூவித்
திரிதரத் தேவர் நாட்டில் சேர்த்திடும் சிலவர்தம்மை;
நெரிதரச் சிலவர்தம்மைக் கொடுங் கையின்
நெருக்கும் அன்றே. (177-6)
764. ஆயிர கோடி மேலும் அடல் குரங்குஅதனை வாரி,
வாயிடைப் பெய்து மூட, வயிற்றிடைப் புகுந்து, வல்லே
கூய் உளம் திகைத்து, பின்னும் கொடியவன்
செவியினூடே,
போயது வெளியில் மீண்டும், புற்றிடைப் பறவை
என்றே. (179-1)
765. அவ் வழி அரியின் சேனை அதர்பட வசந்தன்
என்பான்
தவ் அழி வீரன் நாலு வெள்ளத்தின் தலைவன்
என்றான்;
எவ் வழி? பெயர்ந்து போவது எங்கு? என இரு
குன்று ஏந்தி,
வெவ் வழிஇசை அக் கும்பகருணன்மேல் செல்ல
விட்டான். (180-1)
766. விசைந்திடு குன்றம் நின்ற விண்ணவர் இரியல்
செல்ல,
இசைந்திடு தோளின் ஏற்றான், இற்று நீறு ஆகிப்
போக;
வசந்தனைச் சென்று பற்றி வாசம் கொண்டுவந்து
கையால்
பிசைந்து சிந்தூரமாகப் பெரு நுதற்கு அணிந்து
கொண்டான். (180-2)
767. நீலனை அரக்கன் தேரால் நெடு நிலத்து இழியத்
தள்ளி,
சூலம் அங்கு ஒரு கை சுற்றி, ‘தொடர்ந்திடும்
பகைஞர் ஆவி
காலன் ஊர்தன்னில் ஏற்றி, கடிதில் என் தமையன்
நெஞ்சில்
கோலிய துயரும்தீர்ப்பென்’ எனக் கொதித்து, அமரின்
ஏற்றான். (186-1)
768. செய்துறு பகையை வெல்வார், நின்னைப் போல்
அம்மை செய்து,
வைதுறு வந்த போது, வலுமுகம் காட்டி, யாங்கள்
தகைதுறு வினையை வென்று கடன் கொள்வார்
மார்க்கமுள்ளார்;
எய்துறும் இதற்கு என் போல் உன் தகை சிலை
உதவி என்றான். (193-1)
769. மாருதி போதலோடும், வயப் படைத் தலைவர், மற்று
ஓர்
மாருதம் என்னப் பொங்கி, வரையொடு மரங்கள்
வாரி,
போர் எதிர் புகக் கண்டு, அன்னோர் அனைவரும்
புரண்டு போரில்
சோர்தர படைகள் வாரிச் சொரிந்து, அடல் அரக்கன்
ஆர்த்தான். (203-1)
770. மழுவொடு கணிச்சி, சூலம், வாள், மணிக் குலிசம்,
ஈட்டி,
எழு, அயில், எஃகம் என்று இப் படை முதல்
எவையும் வாரி,
மழை எனப் பொழிந்து, நூறு யோசனை வரைப்பில்
மேவும்
அளவு அறு கவியின் சேனை அறுத்து, ஒரு
கணத்தில் வந்தான். (203-2)
771. இலக்குவன் கொடுமரத்திடை எறியும் வெம் பகழி
கலக்கம் அற்றிடும் அரக்கர்தம் கரங்களைக் கடிந்தே.
முலைக்குவட்டு, அவர் கன்னியர், முன்றிலின் எறிய,
விலக்க அரும் விறலாளி கண்டு, அவர் உயிர்
விளிந்தார். (226-1)
772. வடி சுடர்ப் பெரும் பகழிகள் ஏற்றின வதனத்து
அடல் அரக்கரும் சிலர் உளர்; அவர் தலை அறுத்து,
ஆங்கு
உடன் எடுத்து, அவர் மனையினுக்கு உரிய
கன்னியர்பால்
இட, உவப்பொடும் புழுக்கினர், ஊன் இவை
அறியார். (226-2)
773. குஞ்சரத் தொகை, தேர்த் தொகை, குதிரையின்
தொகை, மேல்
விஞ்சு வாள் எயிற்று அரக்கர்தம் தொகை எனும்
வெள்ளம்
பஞ்சினில் படும் எரி என, இலக்குவன் பகழி
அஞ்செனப் படு கணத்து, அவை அனைத்தையும்
அழித்த. (227-1)
774. வந்து அம் மாப் படை அளப்பு இல வெள்ளங்கள்
மடிய,
அந்தி வான் எனச் சிவந்தது, அங்கு அடு களம்;
அமரில்
சிந்தி ஓடிய அரக்கரில் சிலர், ‘தசமுகனுக்கு
இந்த அற்புதம் உரைத்தும்’ என்று ஓடினர், இப்பால் (227-2)
775. உரைத்து, நெஞ்சு அழன்று, ‘ஒரு கணத்து இவன்
உயிர் குடித்து, என்
கருத்து முற்றுவென்’ எனச் சினம் கதுவிட, கடுந்
தேர்
பரித்த திண் திறல் பாகரை, ‘பகைவனுக்கு எதிரே
பொருத்தும்’ என்று அடல் கும்பகன் பொருக்கெனப்
புகன்றான். (228-1)
776. நாண் தெறித்தனன், பகிரண்டப் பரப்பொடு நவை
போய்
மாண்ட விண்ணவர் மணித் தலை துளங்கிட, வயப்
போர்
பூண்ட வானரம் நின்றதும் புவியிடை மறிய,
தூண்டி, மற்று அவன் இலக்குவன்தனக்கு இவை
சொல்வான்: (233-1)
777. அது கண்டார் அடல் வானவர், ஆசிகள் கூறித்
துதி கொண்டார்; அடல் அரக்கனும் துணை விழி
சிவந்து ஆங்கு,
‘இது கண்டேன்; இனிக் கழிந்தது, உன் உயிர்’ எனக்
கனன்றே
கொதி கொண்டான், அடல் சிலையினைக் குழைவுற
வளைத்தான். (240-1)
778. புக்க போதில், அங்கு இலக்குவன் பொருக்கெனத்
துயர் தீர்ந்து,
அக் கணம்தனில் அரக்கர்தம் பெரும் படை அவிய,
மிக்க வார் சிலை வளைத்து, உரும் ஏறொடு
விசும்பும்
உட்க, நாண் எறிந்து, உக முடிவு என, சரம்
பொழிந்தான். (248-1)
779. ‘காய் கதிர்ச் சிறுவனைப் பிணித்த கையினன்,
போயினன் அரக்கன்’ என்று உரைத்த போழ்தின்வாய்,
நாயகன் பொருக்கென எழுந்து, நஞ்சு உமிழ்
தீ அன வெகுளியன், இனைய செய்தனன். (272-1)
780. ஆயிரம் பேய் சுமந்து அளித்தது, ஆங்கு, ஒரு
மா இருங் கேடகம் இடத்து வாங்கினான்;
பேய் இரண்டாயிரம் சுமந்து பேர்வது ஓர்
காய் ஒளி வயிர வாள் பிடித்த கையினான். (299-1)
781. வீசினன் கேடகம்; விசும்பின் மீன் எலாம்
கூசின; அமரரும் குடர் குழம்பினார்;
காய் சின அரக்கனும் கனன்ற போது, அவன்
நாசியும் செவியும் வெங் குருதி நான்றவே. (299-2)
782. கும்பகன் கொடுமையும், குலைகுலைந்து போம்
வெம்பு வெஞ் சேனையின் மெலிவும், நோக்கிய
நம்பனும் அரக்கன் கை நடுவண் பூட்டுறும்
செம் பொனின் கேடகம் சிதைத்து வீழ்த்தினான். (301-1)
783. ஆயிரம் பெயரவன் அறுத்து மாற்றுறப்
போயின கேடகம் புரிந்து நோக்கினான்;
பேய் இரண்டாயிரம் சுமக்கப் பெற்றுடை
மா இருங் கேடகம் கடிதின் வாங்கினான். (301-2)
784. போயின கேடகம் போக நோக்கினன்,
ஆயிரம் பெயரவன், அறியும் முன்பு; அவன்
பேய் இரண்டு ஆயிரம் பேணும் கேடகம்
‘ஏ’ எனும் அளவினில் எய்தச் சென்றதால். (301-3)
785. ஆலம் உண்டவன் முதல் அளித்தது, அன்னவன்
சூலம் உண்டு; அளப்பு இல கோடி பேய் சுமந்து,
ஓலம் இட்டு அமரர்கள் ஓட, ஊழியில்
காலன் ஒத்தவன் கரத்து அளித்தது, அக் கணம். (310-1)
786. பிடித்தனன் வலக் கையில் சூலம், பெட்பொடு;
முடித்தனன், பூசனை மனத்தின் முன்னியே;
விடுத்தனன், ‘பகைவனை வென்று மீள்க’ எனா;
தடுப்ப அரிது எனத் தளர்ந்து, அமரர் ஓடினார். (315-1)
787. சூலம் அங்கு அது வரும் துணிவை நோக்கியே,
ஞால நாயகன், அரிக் கடவுள் ஏந்திய
கால வெங் கனல் படை கடிதின் ஏவி, அச்
சூலம் அற்று இரண்டு எனத் துணித்து வீழ்த்தினான். (315-2)
788. அழிந்தது சூலம்; அங்கு அமரர் யாவரும்
தொழும் தகை அமலனைப் புகழ்ந்து துள்ளியே,
‘கழிந்தது, எம் மனத் துயர்’ என்று கண்ணன் மேல்
பொழிந்தனர், அவன் பெயர் புகன்று, பூமழை. (315-3)
789. வந்த வெஞ் சேனைகள் வளைந்த எல்லையில்
இந்திரன் முதலினர் ஏத்த, வள்ளலும்
சுந்தர நெடுங் கணை மாரி தூவினான்;
சிந்தியது, அப் பெருஞ் சேனை வெள்ளமே. (315-4)
790. இரண்டு பத்து நூறு எனும் படை வெள்ளம்
மற்று இன்றொடு முடிவு எய்திப்
புரண்டு தத்துறப் பொழிந்தனர், இருவர் தம்
பொரு சிலைக் கணை மாரி;
இருண்டது எத்திசை மருங்கினும், பறவையின்
இனம் பல படி மூடி;
திரண்ட வச்சிரக் கதை கரத்து எடுத்தனன்,
கும்பகன் சினம் மூள.
(321-1)
791. என்ற போதில், அரக்கனும் நோக்கினன்,
‘எம்பிரான் நுவல் மாற்றம்
நன்று, நன்று!’ எனா, சிரம் துளக்கினன்,
நகைத்து, இவை இவை நவில்கின்றான்;
‘வென்றி தந்து, தம் புறம் கொடுத்து ஓடிய
விண்ணவர் எதிர் போரில்
பொன்றுமாறு இளைத்து, இன்று போய் வருவெனேல்,
புகழுடைத்தது போலாம்.’
(324-1)
792. இனைய திண் திறல் அரக்கனுக்கு அவ் வழி
இதயத்தில் பெரு ஞான
நினைவு எழுந்தது; ‘இங்கு இவன் பெருங் கடவுள்;
மற்று இவன் பத நிழல் காண
வினை அறுந்தது; வேறு இனிப் பிறப்பு இலை’
என்று, தன் மன வேகம்-
தனை மறந்தனன்; மறந்து அவன் தன்மையை
நினைந்தனன், கருத்தோடும்.
——————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-