ஸ்ரீ கோதை நாய்ச்சியார் தாலாட்டு

ஸ்ரீ வில்லிபுத்தூரில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரின் வளர்ப்பு புதல்வியான
ஸ்ரீ ஆண்டாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீ கோதை நாய்ச்சியாரின் வரலாற்றினை 316 செய்யுள் அடிகளுள் எடுத்துக் கூறுகிறது இந்நூல்.
காப்புச் செய்யுள் ஸ்ரீ திருவரங்கத்தில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ அரங்கநாதப் பெருமாள் மீது பாடப்பட்டுள்ளது.
இந்நூல் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

காப்புச் செய்யுள்–

சீரார்ந்த கோதையர் மேல் சிறப்பாகத் தாலாட்டப்
பாரோர் புகழ நிதம் பாடவே வேணு மென்று
காராந்த தென் புதுவைக் கண்ணன் திருக் கோயில்
ஏரார்ந்த சேனைய ர்கோன் இணையடியுங் காப்பாமே.

தென் புதுவை விட்டு சித்தன் திருவடியை நான் தொழுது
இன்பமுடன் தாலாட்டு இசையுடனே யான் கூறத்
தெங் கமுகு மா வாழை சிறந்தோங்கும் சீரங்கம்
நம் பெருமாள் பாதம் நமக்கே துணையாமே.

நூல்

சீரார்ந்த கோயில்களுஞ் சிறப்பான கோபுரமும்
காரார்ந்த மேடைகளுங் கஞ்சமலர் வாவிகளும்
மின்னார் மணி மகுடம் விளங்க வலங்கிருதமாய்ப்
பொன்னாலே தான் செய்த பொற் கோயில் தன்னழகும்
கோபுரத்து வுன்னதமுங் கொடுங்கை நவமணியும் 5

தார்புரத் தரசிலையுஞ் சந்தனத் திருத் தேரும்
ஆராதனத் தழகும் அம் மறையோர் மந்திரமும்
வேத மறையோரு மேன்மைத் தவத்தோருங்
கீத முறையாலே கீர்த்தனங்கள் தாமுழங்கப்
பாவலர்கள் பா மாலை பாடி மணி வண்ணனை 10

ஆவலாய்ப் போற்றி அனு தினமும் தான் துதிக்கக்
கச்சு முலை மாதர் கவிகள் பலர் பாட
அச்சுதனார் சங்கம் அழகாய்த் தொனி விளங்கத்
தித்தியுடன் வீணை செக முழுதுந் தான் கேட்க
மத்தள முழங்க மணியும் அந்தத் தவிலுடனே 15

உத்தமர் வீதி உலாவியே தான் விளங்க
பேரிகையும் எக்காளம் பின்பு சேகண்டி முதல்
பூரிகை நாதம் பூலோகம் தான் முழங்கத்
தும்புருவும் நாரதரும் துய்ய குழலெடுத்துச்
செம்பவள வாயால் திருக் கோயில் தான் பாட 20

அண்டர்கள் புரந்தரனும் அழகு மலரெடுத்துத்
தொண்டர்களும் எண்டிசையுந் தொழுது பணிந்தேத்த
வண்டுகளும் பாட மயிலினங்கள் தாமாடத்
தொண்டர்களும் பாடித் தொழுது பணிந்தேத்தப்
பண்பகரும் பாவலர்கள் பல்லாண்டிசை பாடச் 25

செண்பகப் பூ வாசனைகள் திருக் கோயில் தான் வீச
இந்திரனும் இமையோரும் இலங்கும் மலர் தூவச்
சந்திரனும் சூரியனுஞ் சாமரங்கள் தாம் போடக்
குன்று மணி மாடங்கள் கோபுரங்கள் தான் துலங்கச்
சென்று நெடு வீதியிலே திருவாய் மொழி விளங்க 30

அன்னம் நடை பயில அருவை மடலெழுதச்
செந்நெல் குலை சொரியச் செங்குவளை தான் மலரக்
கரும்பு கலகலெனக் கஞ்ச மலர் விரிக்கச்
சுரும்பு குழலூதத் தோகை மயில் விரிக்க
மாங்கனிகள் தூங்க மந்தி குதி கொள்ள 35

தேன் குடங்கள் விம்மிச் செழித்து வழிந்தோடச்
செந் நெல் விளையச் செக முழுதும் தான் செழிக்கக்
கன்னல் விளையக் கமுக மரம் தான் செழிக்க
வெம்புலிகள் பாயு மாமேரு சிகரத்தில்
அம்புலியைக் கவளமென்று தும்பி வழி மறிக்கும் 40

மும்மாரி பெய்து முழுச் சம்பாத் தான் விளையக்
கம்மாய்கள் தாம் பெருகிக் கவிங்கில மழிந்தோட
வாழையிடை பழுத்து வருக்கைப் பலாப் பழுத்துத்
தாழையும் பழுத்துத் தலையாலே தான் சொரியப்
புன்னையும் மலரப் புனத்தே கிளி கூவ 45

அன்னமும் பேசும் அழகான தென் புதுவை
தலை யருவி பாயும் தடஞ்சூழ்ந்த முக்குளமும்
மலையருவி பாயும் வயல் சூழ்ந்த தென் புதுவைப்
பவளமுடன் வச்சிரம் பச்சை மரகதமும்
தவளமொளி முத்துத் தான்கொழிக்கும் தென் புதுவை 50

காவணங்கள் மேவிக் கதிரோன் தனை மறைக்கும்
பூவணங்கள் சூழ்ந்து புதுமை மணங்கமழும்
தென்னை மடல் விரியச் செங்கரும்பு முத்தீனப்
புன்னை முகிழ் விரியப் புதுவை வனந்தனிலே
சீராரு மெங்கள்விட்டு சித்தர் நந்தவனமதனில் 55

இளந்துளசி முல்லை ஏகமாய்த் தானும் வைத்து
வைத்த பயிர்களுக்கு வளரவே நீர் பாய்ச்சி
உச்சிதமாய்ப் பயிர்கள் செய்து உவந்திருக்கும் வேளையிலே
பூமிவிண்டு கேட்கப் புகழ்பெருகு விட்டு சித்தன்
பூமிவிண்ட தலம் பார்த்துப் போனார் காண் அவ்வேளை 60

ஆடித் திருப் பூரத்தில் அழகான துளசியின் கீழ்
நாடி யுதித்த நாயகியைச் சொன்னாரார்
அப்போது விட்டு சித்தன் அலர் மகளைத் தானெடுத்துச்
செப்பமுடன் கண்ணே திருவாய் மலர்ந்தருள்வீர்
அய்யா உமக்கடியேன் அருமை மகளாக்கு 65

மெய்யார்ந்த தாயார் மேன்மைத் துளசி என்றாள்
அப்பேச்சுக் கேட்டு அவரும் பரவசமாய்ச்
செப்பமுடன் பெண்ணேந்தித் திருக் கோயில் தான் புகுந்து
புகுந்து மணிவண்ணன் பொன்னடிக் கீழ்ப் பெண்ணை விட்டு
ஊர்ந்து விளையாடி உலாவியே தான் திரிய 70

பெண் கொணர்ந்த விட்டுசித்தன் பெம்மானைத் தானோக்கி
பெண்வந்த காரணமென் பெம்மானே சொல்லுமென்றார்
அப்போது மணிவண்ணன் அழகான பெண்ணுனக்குச்
செப்பமுடன் வந்த திருக்கோதை நாயகியார்
என்று பேருமிட்டு எடுத்துக் குழந்தைதனை 75

உந்தன் மனைக்கே உவந்துதான் செல்லுமென்றார்
சொன்னமொழி தப்பாமல் சுந்தரியைத் தானெடுத்துக்
கன்னல் மொழி விரசைக் கையிலேதான் கொடுக்க
அப்போது விரசையரும் அமுதுமுலை தான்கொடுக்கச்
செப்பமுடன் தொட்டிலிலே சீராய் வளரவிட்டு 80

மாணிக்கங் கட்டி வயிரமிடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டில்
பேணி யுனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்கமே தாலேலோ மங்கையே தாலேலோ
அன்னமே தேனே அழகே அருமயிலே 85

சொர்னமே! மானே! தோகையரே தாலேலோ
பொன்னே! புனமயிலே! பூங்குயிலே! மான்றுளிரே!
மின்னே! விளக்கொளியே! வேதமே! தாலேலோ,
பிள்ளைகளும் இல்லாத பெரியாழ்வார் தம்மாவல்
பிள்ளைவிடாய் தீர்த்த பெண்ணரசே தாலேலோ! 90

மலடி விரசையென்று வையகத்தோர் சொன்ன
மலடுதனைத் தீர்த்த மங்கையரே தாலேலோ!
பூவனங்கள் சூழும் புதுவைப் புரிதனிலே
காவனத்தில் வந்துதித்த கன்னியரைச் சொன்னாரார்
கண்ணேயென் கண்மணியே! கற்பகமே தெள்ளமுதே! 95

பெண்ணே! திருமகளே! பேதையரே! தாலேலோ!
மானே! குயிலினமே! வண்டினமே! தாருவே!
தேனே! மதனாபி டேகமே! தெள்ளமுதே!
வானோர் பணியும் மரகதமே! மாமகளே!
என் இடுக்கண் நீங்க ஈங்குவந்த தெள்ளமுதே! 100

பூமலர்கள் சூழும் பூங்கா வனத்துதித்த
மாமகளே! சோதி மரகதமே! தாலேலோ!
வண்டினங்கள் பாடு வாழும் பூங்காவில்
பண்டு பெரியாழ்வார் பரிந்தெடுத்த தெள்ளமுதே!
செந்நெல்கள் முத்தீன்று செழிக்கும் புதுவையினில் 105

அன்னமே! மானே! ஆழ்வார் திருமகளே!
வேதங்க ளோதி வென்றுவந்த ஆழ்வார்க்குச்
சீதைபோல் வந்த திருமகளைச் சொன்னாரார்
முத்தே! பவளமே! மோகனமே! பூங்கிளியே!
வித்தே! விளக்கொளியே! வேதமே தாலேலோ! 110

பாமாலை யிட்டீர் பரமர்க்கு என்னாளும்
பூமாலை சூட்டப் புகழ்ந்தளித்த தெள்ளமுதே!
அஞ்சு வயதில் அவனியில் வந்துதித்துப்
பிஞ்சாய்ப் பழுத்த பெண்ணமுதே தாலேலோ!
எந்தை தந்தை யென்று யியம்பும் பெரி யாழ்வார்க்கு 115

வந்து விடாய் தீர்த்தாய் மாதேநீ தாலேலோ!
பொய்கை முத லாழ்வார்க்குப் பூமகளாய் வந்துதித்த
மை விழி சோதி மரகதமே! தாலேலோ!
உலகளந்த மாயன் உகந்து மணம் புணர
தேவாதி தேவர்கள் தெளிந்தெடுத்த தெள்ளமுதோ! 120

சொல்லை நிலையிட்ட சுந்தரராம் ஆழ்வார்க்குச்
செல்வப் பெண்ணாய் வந்த திருமகளைச் சொன்னாரார்
நாரணனை விட்டுவென்று நம்புமெங்க ளாழ்வார்க்குக்
காரணமாய் வந்துதித்த கற்பகத்தைச் சொன்னாரார்
உள்ள முருகி ஊசலிடும் பட்டருக்குப் 125

பிள்ளைவிடாய் தீர்த்த பெண்ணரசே தாலேலோ!
பாகவத வர்த்தம் பாடுமெங்க ளாழ்வார்க்குத்
தாகவிடாய் தீர்த்த தங்கமே தாலேலோ!
தென்புதுவை வாழுந் திருவிட்டு சித்தனுக்கு
அன்புடனே வந்துதித்த அன்னமே! தாலேலோ! 130

சாத்திரங்கள் ஓதும் சத்புருட ராழ்வார்க்குத்
தோத்திரங்கள் செய்து துலங்க வந்த கண்மணியே!
வாழைகளுஞ் சூழ்புதுவை வாழுமெங்க ளாழ்வார்க்கு
ஏழையாய் வந்துதித்த ஏந்திழையே! தாலேலோ!
கன்னல்களுஞ் சூழ்புதுவை காக்குமெங்க ளாழ்வார்க்குப் 135

பன்னுதமிழ் என்னாளும் பாடநல்ல நாயகமோ!
பல்லாண்டு பாடும் பட்டர்பிரா னாழ்வார்க்கு
நன்றாக வந்துதித்த நாயகியைச் சொன்னாரார்
எந்தாகந் தீர்த்து வேழேழு தலைமுறைக்கும்
வந்தருளுஞ் செல்வ மங்கையரே தாலேலோ! 140

என்றுநிதம் கோதையரை எடுத்து வளர்க்கையிலே
அன்றொருநாள் விட்டுசித்தன் அமுதுமலர் தொடுத்துவைக்கத்
தொடுத்துவைத்த மலரதனைச் சூடியே நிழல்பார்த்து
விடுத்துவைத்துக் கோதையரும் விளையாட்டி லேதிரிய
அப்போது விட்டுசித்தர் அநுட்டான முதல்செய்து 145

எப்போதும் போல்கோவிலுக் கேகவே வேணுமென்று
தொடுத்துவைத்த மாலைதன்னைச் சுவாமிக்கே சாத்தவென்று
எடுத்துமே வாழ்வாரும் நோக்கையில்கி லேசங்கொண்டு
என்னரசி கோதை குழல்போல யிருக்குதென்று
கண்ணாலே கோதையரைக் கட்டியே தானதுக்கிப் 150

பின்பு வனம்புகுந்து பிரியமாய்ப் பூக்கொய்து
அன்புடனே மாயனுக் கலங்கார மாய்ச்சாத்த
அப்போது மணவாள ஆழ்வாரைத் தான்பார்த்து
எப்போது மணங்காணேன் ஏதுகா ணாழ்வாரே!
என்று சொல்ல, ஆழ்வாரும் இருகையுந் தான்கூப்பித் 155

துன்றிவளர் கோதையரும் சூட்டியே தானும்வைத்தாள்
அம்மாலை தள்ளி அழகான பூக்கொணர்ந்து
நன்மாலை கொண்டு நாமுமக்குச் சாத்தவந்தேன்
என்றுசொல்ல, மணிவண்ணன் இன்பமாய்த் தான்கேட்டு,
நன்றாக வாழ்வாரே நானுமக்குச் சொல்லுகின்றேன் 160

உன்மகளும் பூச்சூடி ஒருக்கால் நிழல்பார்த்து
பின்பு களைந்து பெட்டியிலே பூ வைப்பாள்
அம்மாலை தன்னை ஆழ்வார் நீ ரெடுத்துவந்து
இம்மாலை சாத்தி யிருந்தீ ரிதுவரைக்கும்
இன்றுமுதல் பூலோக மெல்லாருந் தாமறிய 165

அன்றுமலர் கொய்து அழகாகத் தான்தொடுத்துக்
கோதை குழல்சூடிக் கொணர்வீர் நமக்குநிதம்
கீதமே ளத்தோடும் கீர்த்தனங்கள் தன்னோடும்
இன்றுமுதல் சூடிக்கொடுத்தா ளிவள்பேரும்
நன்றாகத்தான் வாழ்த்தும் நன்மையே தான்பெறுவீர்! 170

என்றுரைக்க மணிவண்ண னேகினர்காண் ஆழ்வாரும்
சென்றுவந்த மாளிகையில் சிறப்பா யிருந்துநிதம்
நீராட்டி மயிர் முடித்து நெடுவேற்கண் மையெழுதிச்
சீராட்டிக் கோதையரைச் சிறப்பாய் வளர்க்கையிலே
ஊரார் உறமுறையார் உற்றார்கள் பெற்றோர்கள் 175

சீரான வாழ்வாரைச் சிறப்பாகப் பெண்கேட்க
அப்போது விட்டுசித்தன் அன்பான கோதையரைச்
செப்பமுடன் மடியில் வைத்துத் திருமாலைதான் கொடுத்து
உனக்குகந்த பிள்ளைக்கு உகந்தே மலர்சூடி
மனைக்கா வலனென்று மகிழ்ந்தேத்தி வாழும் என்றார் 180

அவ்வார்த்தை கேட்டு அழகான கோதையரும்
செவ்வான வார்த்தையென்று திரும்பியே தானுரைப்பாள்
வையம் புகழய்யா மானிடவர் பதியென்று!
உய்யும் பெருமாள் உயர்சோலை மலையழகர்
இவர்கள் பதியன்றி இரண்டாம் பதியில்லை 185

அவர்கள் தமைத்தாமும் அனுப்பியே வையுமென்றார்
இவ்வார்த்தை கேட்டு இனத்தோர்க ளெல்லோரும்
செவ்வான வடிதேடித் தேசத்தே போனார்கள்
போனவுடன் விட்டுசித்தன் புன்னை புனமயிலே
ஞானமுடன் வந்துதித்த நாயகியைச் சொன்னாரார் 190

ஒப்பில்லாநோன்பு உகந்துதா னேற்கவென்று
மணிவண்ண னைத்தேடி மனக்கருத்தை யவர்க்குரைத்துப்
பணிசெய்த விருதுகளைப் பாரிப்பாய்த் தான்கேட்க
மகிழ்ந்து மணிவண்ணன் மகிழ்ந்து மறையோர்க்குப்
புகழ்ந்துதான் உத்தரவு பிரியமாய்த் தான்கொடுக்க 195

உத்தரவு வாங்கி உலகெல்லாந் தான்நிறைய
நித்தமோர் நோன்பு நேர்த்தியாய்த் தான்குளித்து
மாயவனை நோக்கி வந்தி மலரெடுத்து
மாயவனைப் போற்றி மணம்புணர வேணுமென்று
மார்கழி நீராடி மகிழ்ந்து திருப்பாவை 200

சீர்கள் குறையாமல் சிறப்பாகத் தான்பாடி
பாடிப் பறைகொண்டு பரமனுக்குப் பூமாலை
சூடிக் கொடுத்து தொழுது நினைந்திருக்க
மாயவனும் வாரார்மலர் மாலைகளுந் தாராமல்
ஆயன்முகங் காட்டாமல் ஆருமனுப்பாமல் 205

இப்படிச் செய்தபிழை யேதென்று நானறியேன்
செப்புங்கள் தோழியரே! திங்கள்முகக் கன்னியரே,
தோழியருந் தாமுரைப்பார் துய்யவட வேங்கடவன்
ஆழியுடன் வந்து அழகாய் மணம்புணர்வான்
என்றுசொல்லக் கோதையரு மிதயங் குழைந்து நிதம் 210

அன்றில் குயில்மேகங்கள் அரங்கருக்குத் தூதுவிட்டார்,
தூதுவிட்டு[ம்] வாராமல் துய்யவட வேங்கடவன்
எதிரிருந்து கொண்டார் இனிமேல் மனஞ்சகியேன்
என்று மனம்நொந்து இருக்க நிதங் கோதையரும்
சென்றுவந்து தோழியர்கள் செப்பவே யாழ்வார்க்கு 215

அச்சேதி கேட்டு ஆழ்வார் நடுநடுங்கிச்
சென்றுவந்து பிள்ளைவிடாய் தீர்த்த திருமகட்கு
மன்றலுஞ் செய்யாமல் வைத்திருந்தால் மோசம்வரும்
என்று திருமகளை எடுத்துச் சிவிகைவைத்துச்
சென்று திருவரங்கம் சேவிக்க வேணுமென்று 220

நல்லநாள் பார்த்து நடந்து திருவரங்கம்
எல்லையுங் கிட்டி இருந்து தென் காவிரியில்
நீராட்டஞ் செய்து நொடிப்போதில் செபமுஞ்செய்து
சீராட்ட வந்து திருமகளைத் தான்தேட
பல்லக்கில் காணாமல் பைந்தொடியுங் காணாமல் 225

எல்லோருங் காணாமல் என்மகளை யாரெடுத்தார்
நின்று மனம்நொந்து நாற்றிசையும் தான்தேடிச்
சென்று திருவரங்கந் திருக்கோயில் தான்புகுந்து
ஒருமனையா ளுடனேயே உலகளந்த மாயவனும்
திருமகளைத் தானெடுத்து செங்கண்மால் கொண்டொளித்தாய் 230

என்று சொல்ல வாழ்வாரு மிரங்கித் திருவரங்கர்
சென்றுங்களையர் திருவடியைத் தான்தொழுவீர்
அப்போது கோதையரும் அரங்கர் மடியைவிட்டு
எப்போது மைய ரிணையடியைத் தான்தொழுவார்
வாழ்த்தியே அய்யர் மகிழ்ந்து மகள்தனக்கும் 235

வாழ்த்தி யெடுத்து மகிழ்ந்து வரங்கருக்கும்
வாழிமுதல் பாடி மங்களமுந் தான்பாடி
ஆழிநீர் வண்ண அழகாய் மணம்புணர்வாய்
என்று சொல்லி யாழ்வாரும் இன்பமாய் அரங்கர்தமை
மன்றல்செய்ய வாருமையா மணவாளா வென்றுரைத்தார் 240

பங்குனி மாதம் பவர்ணமையில் உத்திரத்தில்
அங்குரஞ் செய்து அழகாய் மணம்புணர
வாருமையா வென்று மகிழ்ந்தேத்தி யரங்கரையும்
சீரணிந்த கோதையையுஞ் சிறப்பாகத் தானழைக்க
அப்போது நம்பெருமாள் ஆழ்வாரை விடைகொடுத்து 245

தப்பாமல் நான்வருவேன் சீர்கோதை தன்னோடும்
என்றுசொல்ல ஆழ்வாரும் ஏகினார் வில்லிபுத்தூர்
சென்றுதிரு மாளிகையில் சிறப்பாகத் தானிருந்து
கோதையர்க்கு மன்றல் கோலமாய்ச் செய்யவென்று
சீதையர்க்கு மன்றல் சிறப்பாகச் செய்யவென்று 250

ஓலையெழுதி உலகெல்லா மாளனுப்பி
கரும்பினால் கால்நிறுத்திக் கற்பகத்தால் பந்தலிட்டு
கரும்பினிடை வாழை கட்டிக் கஞ்சமலர் தொங்கவிட்டு
பூக்கள் கொணர்ந்து பூம்பந்தல் தான்போட்டு
மாங்கனிகள் தூக்கி வருக்கைப் பலாதூக்கித் 255

தேங்கனிகள் தூக்கிச் சிறப்பா யலங்கரித்து
மேளமுடன் மத்தளமு முரசமுந் தானடிக்கக்
காளமுடன் நாதசுரம் கலந்து பரிமாற
வானவர்கள் மலர்தூவி வந்து அடிபணியக்
கானவர்கள் பூக்கொய்து கலந்து பணிந்தேத்த, 260

இந்திரனும் எண்டிசையும் இறைஞ்சி மலர்தூவச்
சந்திரனுஞ் சூரியனும் சாமரைகள் தாம்போட
இரத்னமணி யாசனமும் இரத்தினக் கம்பளியும்
சித்ரமணி மண்டபமும் செம்பொன் குறடுகளும்,
ஆழ்வார் கிளையும் அயலோர்கிளை யெல்லோரும் 265

ஆழ்வார் திருமகளை அன்பாகப் போற்றவந்தார்
தூபங் கமழத் தொண்டர்களுந் தாம்பாட
தீபந் துலங்கத் திருவைண வோரிருக்க
வேதந் துலங்க மேன்மேலுஞ் சாத்திரங்கள்
கீத முரைக்கக் கீர்த்தனங்கள் தாமுழங்க, 270

வாத்தியார் புல்லெடுத்து மறைகள் பலவோதிப்,
பூரண கும்பமுதல் பொற்கலசந் தானும்வைத்து
நாரணனைப் போற்றி நான்மறைகள் தாமோத
இப்படிக்கு வாழ்வாரு மெல்லோருங் காத்திருந்தார்
சற்புருடர் வாராமல் தாமதமாய்த் தாமிருக்க, 275

கொற்றப்புள் ளேறிரங்கர் கொடிய வனங்கடந்து
வெற்றிச் சங்கு ஊதி வில்லிபுத்தூர் தன்னில்வந்து
மணவாள ராகி மணவறையில் தானிருந்து
மணஞ்செய்யும் வேளைகண்டு மறையோர்க்குத் தனங்கொடுத்தார்
ஆடைமுத லாபரணம் அணிமுலைப் பாற்பசுக்கள் 280

குடைமுதல் தானங் கொடுத்து நிறைந்தபின்பு
மந்திரக் கோடி யுடுத்து மணமாலை
அந்தரி சூட்டி அழகான கோதையர்க்கு
மத்தளங் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தலின்கீழ் 285

கைத்தலம் பற்றிக் கலந்து பெருமாளும்
ஆழ்வாரும் நீர்வார்க்க அழகான கையேந்தி
ஆழ்வார் திருமகளை அழகாகத் தான்வாங்கி
மன்றலுஞ் செய்து மகிழ்ந்து மதுவர்க்கம்
கன்றலு முண்டு கழித்துமே வாங்கிருந்தார் 290

அக்கினி வளர்த்து அழகா யலங்கரித்து
வாய்நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்,
பஞ்சிலை நாணல் படுத்து பரிதிவைத்து
ஓமங்கள் செய்து ஒருக்காலும் நீர்தூவி
காசு பணங்கள் கலந்துதா னங் கொடுத்து 295

தீவலஞ் செய்து திரும்பி மனையில்வந்து
இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பர்த்தாவாய்
நம்மை யுடையவன் நாராயணன் நம்பி
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி
அம்மி மிதித்து அருந்ததியுந் தான்பார்த்து 300

அரிமுதல் அச்சுதன் அங்கைமேலும் கைவைத்துப்
பொரி முகந்து பம்ப போற்றி மறையோரை
அட்சதைகள் வாங்கி அரங்கர் மணவறையில்
பட்சமுடனிருந்து பாக்கிலையுந் தான்போட்டுக்
கோதையுடன் கூடிக் குங்குமச் சப்பரத்தில் 305

சீதையுடன் கூடிச் சிறப்பாகத் தானிருந்தார்
அச்சேதி கேட்டு ஆழ்வார் மனமகிழ்ந்து
இச்சேதி வைபவங்கள் எங்குங் கிடையாது
என்று பெரியாழ்வார் இளகி மனமகிழ்ந்து
குன்று குடையெடுத்த கோனை மகிழ்ந்துநிதம், 310

வாழிமுதல் பாடி மங்களமுந் தான்பாடி
ஆழிமுதல் பாடி ஆழ்வாரும் போற்றி நின்றார்
வாழும் புதுவைநகர் மாமறையோர் தாம்வாழி!
ஆழிநிறை வண்ணன்முதல் ஆழ்வார்கள் தாம்வாழி!
கோதையரும் வாழி! கோயில்களும் தாம்வாழி! 315

சீதையரும் வாழி! செகமுழுதும் தாம்வாழி!

கோதை நாச்சியார் தாலாட்டு முற்றிற்று.

——————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: