Archive for October, 2015

திருவாய்மொழி – -2-9 –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள்–

October 28, 2015

எம்மா வீடு -பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியில் -நலம் அந்தம் இல்லாதோர் நாடு புகுவீர் -என்று இவர் தாமும் அருளிச் செய்து
சர்வேஸ்வரனும் இவருக்கும் இவர் பரிகரத்துக்கும் மோஷம் கொடுப்பானாகப் பாரிக்க -அத்தைக் கண்டு –
தேவரீர் எனக்கு மோஷம் தந்து அருளப் பார்த்ததாகில் இங்கனே தரப் பார்ப்பது
அதாகிறது -உனக்கு மோஷம் கொள் -என்று எனக்காகத் தருகை அன்றிக்கே -நமக்காகக் கொள் -என்று தேவர்க்கே
யாம் படியாகத் தர வேணும் -என்று -தாம் நினைத்து இருந்தபடியை அவன் திரு முன்பே பிரார்த்திக்கிறார் –
ஆனால் இது தான் பின்னை இத்தனை நாள் நிஷ்கர்ஷியாது ஒழிவான் என்-என்னில் -அவன் மேன்மேல் என குண அனுபவத்தை
பண்ணுவிக்கையாலே-அதுக்குக் காலம் போந்தது அத்தனை அல்லது இது நிஷ்கர்ஷிக்க அவகாசம் பெற்றிலர் –
ஆனாலும் இப்போது குண அனுபவமே அன்றோ பண்ணுகிறது என்னில் -அது அப்படியே
அவன் தம் பக்கலிலே மேன்மேல் எனப் பண்ணுகிற விருப்பத்தைக் கண்டு -இவனுக்கு இந்த வ்யாமோஹம் முடிய அநுவர்த்திப்பது ஒன்றாய் இருந்தது
நாம் இவனை மீட்டாகிலும் நம்முடைய பிராப்யத்தை நிஷ்கர்ஷிப்போம் என்று பார்த்து
நீ இங்கனே நில் -என்று அவனை நிறுத்தி வைத்து ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிறார்
எம்பார் -இத் திருவாய்மொழி அருளிச் செய்யப் புக்கால் இருந்தவர்களை யார் என்று கேட்டுக் கதவுகளையும் அடைப்பித்து
குஹ்யமாகவும் அருளிச் செய்வது –

ப்ராப்யமாகில் இப்படி அன்றோ இருப்பது இவர் நிஷ்கர்ஷிக்க வேண்டுகிறது என் -என்னில்
சர்வேஸ்வரன் இவ்வாத்மாவுக்கு சேஷியாய்-இவனும் சேஷ பூதனுமாய் அவனுடைய உபாய பாவமும் நித்தியமாய் இருக்கச் செய்தே
யன்றோ இவனுக்கு இன்று ச்வீகாரம் வேண்டுகிறது
அப்படியே அவன் ஸ்வ தந்த்ரன் ஆகையாலே நினைத்த போது நினைத்த படி கொள்வான் ஒருவன் ஆகையால் பிராப்தி சமயத்தில்
அனுபவம் இருக்கும் படியையும் நிஷ்கர்ஷித்துப் பெற வேணும் இறே-
உத்தரார்த்தத்திலும் இவ்வர்த்தத்தை சொல்லா நின்றது -இறே –
த்வயம் தன்னில் நிஷ்கர்ஷிக்க வேண்டுகிறது என் என்னில் பூர்வார்த்தத்தில் சொன்ன சாதனம் சர்வ பல ப்ரதமாகையாலே
-பிரயோஜனாந்த பரராய் சரணம் புகுவாருக்கும் அவற்றைக் கொடுத்து விடுவான் ஒருவன் இறே சர்வேஸ்வரன்
இது தன்னில் ஓடுகிறது என் என்னில் முக்தனாய் நிரதிசய ஸூக அனுபவத்தை பண்ணவுமாம் -ஆத்மா பிராப்தியைப் பெறவுமாம் –
-ஆத்மா வி நாசமே யாகவுமாம் – நரக அனுபவத்தை பண்ணவுமாம் -இவற்றில் எனக்கு ஒரு நிர்பந்தம் இல்லை
-உனக்காய் வரும் அன்று இவை இத்தனையும் வரவுமாம் -எனக்காய் வருமன்று இவை இத்தனையும் வேண்டா –
ஆன பின்பு தேவருக்கு உறுப்பாம் இதுவே எனக்கு வடிவாம் படி பண்ணி அருள வேணும்
என்று ஸ்வ பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார் –

இப்படிப் பட்ட பரிமாற்றம் தான் லோகத்தில் பரிமாறுகிறது ஓன்று அல்ல –
இவ்வாழ்வார் பக்கலிலே காணுதல் -இராமாயண புருஷர்களில் ஸ்ரீ பரத ஆழ்வான்-இளைய பெருமாள்
இவர்கள் பக்கலிலே காணுதல் செய்யும் அத்தனை –
கைகேயி ராஜன் -என்ற சொல் பொறுக்க மாட்டாமே திரளிலே வந்து கூப்பிட்டான் இறே
விலலாப சபா மத்யே -ஒரு திரளாக இருந்து என்னுடைய சேஷத்வத்தை அபஹரிப்பதே
தஸ்யபிர் முஷி தே நேவா யுகத மாக் ரந்திதம் ப்ருசம் -என்னும்படி இழந்த வஸ்துவுக்கு தக்கபடியாய் இருக்கும் இறே கூப்பீடும்
ஜ கர்ஹே ச -சந்த்யாவந்தனத்துக்கு பிற்பாடரை சிஷ்ட கர்ஹை பண்ணுவாரைப் போலே கர்ஹித்தான்
புரோஹிதம் -அழகியதாக இக்குடிக்கு முன்னாடி ஹிதம் பார்த்தாய்
சபா மத்யே புரோஹிதம் ஜ கர் ஹே -நியமாதி க்ரமம் ரஹசி போதயேத்-என்கிற நிலையும் பார்த்திலன்
ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -ஒருவனுக்கு இரண்டு வஸ்து சேஷமானால் ஒன்றை ஓன்று நிர்வஹிக்குமோ
ஆனால் ராஜ்ஜியம் தான் என்னை ஆண்டாலோ-தர்மம் வக்தும் இஹ அர்ஹசி–பெருமாள் காடேறப் போனார் -சக்கரவர்த்தி துஞ்சினான்
-நாடு அராஜமாகக் கிடக்க ஒண்ணாது -நின்றாரில் பிரதானர் தலையிலே முடியை வைக்க வேணும் என்று பார்த்தாய் அத்தனை போக்கி
இதுக்கு விஷய பூதனான என்னைப் பார்த்து வார்த்தை சொல்லிற்று இல்லை
கதம் தசரதாஜ்ஜாதோ பவேத் ராஜ்ய அபஹாரக -அவர் பொகட்டுப் போன ராஜ்யத்தை அபஹரித்து அவரைப் பிரித்து
அனந்தரத்திலே முடிந்தவன் வயிற்றிலே பிறந்தேனாம் படி எங்கனே நான் –

இளைய பெருமாள் நில் என்ன குருஷ்வ என்றார் இறே
அன்வயத்தாலே தரிக்கக் கடவ வஸ்துவை வ்யதிரேகத்து நிற்கச் சொல்லுகையாவது அழிக்கை இறே
குரு என்னாதே குருஷ்வ என்றார் இறே
ஆருடைய பிரயோஜனத்துக்கு ஆர் தான் இருக்கிறார்
உம்முடைய இழவுக்கு நீர் பதறாது இருக்கிறது என்
அநு சரம் பண்ணும் பிரகாரத்தை விதிக்கிறார்
நீர் தாம் நில் என்று அருளிச் செய்தது -நான் நிற்கச் சொல்லுகைக்கு யோக்யனாம் படி இருக்கை இறே
உம்முடைய சாயையை நில் என்று சொல்லிற்று இலீரே
சாயையோபாதி உம்மைப் பின் செல்வேனாக வேணும் –
நீரும் நிழலும் வாய்ந்து இருப்பதொரு பிரதேசத்தைப் பார்த்து பர்ண சாலையை அமையும் -என்ன நம் தலையில்
ஸ்வா தந்த்ர்யத்தை வைத்த போதே பெருமாள் நம்மைக் கை விட்டார் -என்று வேறு பட்டார்
ஏவ முக்தஸ்து ராமேண-இதுக்கு முன்பு எல்லாம் நம் குறையாலே இழந்தோம் என்று இருந்தோம் -இவர் தாமே நம் ஸ்வரூபம்
அழியக் கார்யம் பார்த்தார் -இனி நம் ஸ்வரூபம் என்று ஓன்று உண்டோ என்று வேறுபட்டார்
லஷ்மண -பாரதந்த்ர்யத்தை நிரூபகமாக உடையவர்
சமய தாஞ்ஜலி-நாம் நம் ஸ்வரூபத்தை அழித்துக் கொண்ட வன்று நோக்குகை யன்றிக்கே சேஷி தானே அழித்த வன்றும்
ஸ்வரூபத்தை தர வாயிற்று அஞ்சலி -சர்வ அபிமத சாதனம் ஆயிற்று
லீதா சமஷாம்-பண்ணின அஞ்சலிக்கு அந்ய பரதை பாவிக்க ஒண்ணாதவன் சந்நிதியிலே
காகுத்சம் -பிராட்டி சந்நிதியும் மிகையாம் படியான குடிப்பிறப்பை உடையவரை
இதம் வசனம் பிரவீத் -இவ்வார்த்தையை சொல்லுவானே என்று கொண்டாடுகிறார் ருஷி
பரவா நஸ்மி -உம்முடைய அஸ்மிதை போலே அல்ல காணும் என்னுடைய அஸ்மிதை

இப்படிக்கொத்த பார தந்த்ர்யத்தை யாயிற்று இவர் ஆசைப்படுகிறது
இது தான் ஒருவர் அபேஷிக்குமதுவும் அல்ல – அபேஷிப்பார் இல்லாமையாலே நாம் கொடுத்துப் போருமதுவும் அல்ல
அவ்வழி புல் எழுந்து போயிற்று காணும் -என்று அவன் அநாதரித்து இருக்க
புருஷன் அர்த்திக்க வருமது இறே புருஷார்த்தம் ஆவது
இப் பேறு இத்தனையும் நாம் பெற்றேனாக வேணும் என்று இவர் அபேஷிக்க-அவனும் தலை துலுக்கப் பெற்றாராய்த் தலைக் கட்டுகிறார்

——————————————

அவதாரிகை –

முதல் பாட்டில் -எவ்வகையாலும் விலஷணமான மோஷத்திலும் எனக்கு அபேஷை இல்லை –
உன் திருவடிகளை என் தலையிலே வைக்க வேணும் -என்கிறார் –

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-

எம்மா வீட்டுத் திறமும் செப்பம்
ஆழ்வீர்-மோஷத்தைக் கொள்ளும் என்றான் ஈஸ்வரன் -வேண்டா என்றார் –
மா வீடு கிடீர் –விலஷணமான மோஷம் கிடீர் -என்றான் -அதுவும் வேண்டா என்றார் –
எம் மா வீடு கிடீர் -ஐஸ்வர்யம் ஆத்ம லாபம் -என்று இருக்க வேண்டா -பரம புருஷார்த்த லஷண மோஷம் என்றான் -அதுவும் எனக்கு வேண்டா என்கிறார்
எவ்வகையாலும் நன்றான மோஷத்து இடையாட்டமும் செப்பம் -செப்போம் –சொல்லோம்
நீ பிரசங்கிக்கக் கடவை யல்ல -நான் பிரதிஷேதிக்கவும் கடவேன் அல்லேன்

எம்மா வீட்டுத் திறமும் செப்பம்-
ஒரு தமிழன் எம்மா வீட்டு விகல்பமும் செவ்வியவாம் என்றான் -அந்த பஷத்தில் வீட்டு விகல்பமாவது
சாலோக்ய -சாரூப்ய -சமீப்ய -சாயுஜ்யம் -என்கிறவை
செவ்வியவாகை யாவது -சா லோக்யாதிகள் எல்லாம் இம் மோஷத்தில் உண்டாகை-

ஆனால் உமக்கு வேண்டுவது என் என்னில்
நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து –
இது எனக்கு வேண்டுவது -செம் -என்று சிவப்பாய் -மா என்று கறுப்பாய்-
உன்னுடைய அகவாய் சிவந்து புறவாய் ச்யாமமாய் -விகாசம் செவ்வி குளிர்த்து நாற்றங்களுக்குத் தாமரையை ஒரு போலி
சொல்லலாம்படி இருக்கிற திருவடிகளைக் கொண்டு வந்து என் தலையிலே வைக்க வேணும்
அன்றிக்கே –
செம்மையால் நினைக்கிறது -செவ்வையாய் ஆஸ்ரிதற்கு வருந்த வேண்டாத படியான ஆர்ஜவத்தை உடைத்தாய்
மா -என்று மஹத்தையாய் -பரம பூஜ்யமான திருவடிகள் என்னவுமாம்
சேர்த்து -என்று சேர்க்க வேணும் -என்றபடி
கொக்குவாயும் படு கண்ணியும் போலே உன் திருவடிகளும் என் தலையும் சேர வேணும்
சேர்த்து என்று ல்யப்பாகை -வினை எச்ச மாதரம் -யன்றிக்கே விதியாய் -சேர்த்து அருள வேணும் -என்கை-
யாவந்த சரனௌ ப்ராது பார்த்திவவ் யஞ்ஜ நான்விதௌ சிரஸா தாரயிஷ்யாமி ந மே சாந்திர் பவிஷ்யதி -அயோத்யா-98-8-
பிள்ளாய் உன்னுள் வெப்பு ஆறுவது எப்போது என்றார்கள் –
பெருமாளும் தமக்கு வகுத்த முடி சூடி நானும் எனக்கு வகுத்த முடி சூடின அன்று என்றான் இறே
நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து
மயிர் கழுவிப் பூச்சூட இருப்பாரைப் போலே இவரும் ஈறில் இன்பத்து இரு வெள்ளத்தில் -2-4-8-முழுகிப் பூச்சூட இருக்கிறார் காணும்
அப்படியே செய்கிறோம் -என்றான்
அக்க்ரமம் பற்றாது
ஒல்லைக்
செய்து கொடு நின்று –செய்கிறோம் -என்ன வேணும்
இப்படித் த்வரிக்க வேண்டும் இடம் உண்டோ என்னில்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே –
நீ த்வரித்து வந்து விழும்படி அறியாயோ -பரமபதமாபன்ன -சர்வேஸ்வரன் தன்னைப் பேணாதே வந்து விழ வேண்டும்படியான ஆபத்து ஆயிற்று
மனஸா அசிந்தயத் -ஸ்ரீ விஷ்ணு தர்மம்-கூப்பீடு ஒவிற்று
கைம்மா துன்பம்
ஆனையும் தன்னளவிலே இறே நோவு படுவது -துதிக்கை முழுத்தின ஆபத்து இறே –
அப்படி -உமக்கு ஆபத்து உண்டோ என்ன -அங்கு முதலை ஓன்று -எனக்கு முதலை ஐந்து -அங்கு ஆயிரம் தேவ சம்வத்சரம்
-இங்கு அநாதி காலம் -அங்கு ஒரு சிறு குழி -இங்கு பிறவி என்னும் பிறவிக்கடல் -அதுக்கு சரீர நாசம் -எனக்கு ஆத்மா நாசம்
-ஆனையின் காலை யாயிற்று முதலை பற்றிற்று – இங்கு என்னுடைய நெஞ்சை யாயிற்று அருவித் தின்றிடுகிறது
-ஆனால் அதுக்கும் இதுக்கும் உள்ள வாசி பாராய்
பிரானே –
ஸ்ரீ கஜேந்த்ரனுடைய துக்கத்தைப் போக்கின இதுவும் -நமக்கு உபஹரித்தது -என்று இருக்கிறார்
அதுக்கு உதவினமை உண்டு உமக்கு என் என்ன
அம்மா –
அதுக்கும் எனக்கும் ஒவ்வாதோ தேவரோட்டை சம்பந்தம் -நீ ஸ்வாமி யன்றோ
நீர் ஆர் என்ன
வடியேன்
நான் சேஷ பூதன் -இருவர் உடைய -ச்வாமித்வ சேஷித்வ-அம்மா அடியேன் – ஸ்வரூபத்தையும் பற்றி -தவிர ஒண்ணாது -என்று அபேஷிக்கிறீரோ-என்ன
வேண்டுவது-
ராக பிராப்தம் -இதுவாகில் வேண்டுவது
இது செய்கிறோம் இதுவும் இன்னம் எதுவும் வேணும் என்றான்
ஈதே
நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து -என்ற இதுவே என்கிறார் –

————————————————————————————

அவதாரிகை –

முதல் பாட்டில் காயிகமான பேற்றை அபேஷித்தார்-இதிலே மானசமான பேற்றை அபேஷிக்கிறார்-

ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்
கைதா காலக் கழிவு செய்யலே –2-9-2-

கீழில் பாட்டில் ஈதே -என்னச் செய்தேயும் ஒரு அர்த்தத்தையே பலகால் கேட்டவாறே மற்று ஒன்றிலே தடுமாறிச் செல்லவும் கூடுமே –
இதிலே நிலை நின்றமை அறிய வேண்டும் -என்று -இதுவும் இன்னம் எதுவும் வேணும் -என்றான்
ஈதே -என்கிறார் –
நீர் இதிலே நிலை நின்றீர் என்னும் இடம் நாம் அறியும் படி என் என்ன –
யானுன்னைக் கொள்வது –
இருவருடையவும் தர்மியே இதிலே பிரமாணம்
ஸ்வாமியான உன் பக்கலிலே சேஷ பூதனான நான் கொள்ளுமது இதுவே –
நம்முடைய ஸ்வாமித்வமும்-உம்முடைய சேஷத்வமும் கிடக்கச் செய்தே யன்றோ நெடு நாள் இழந்து போந்தது
ஆனபின்பு நமக்கு அதி சங்கை வர்த்தியா நின்றது காணும் –
இது எத்தனை குளிக்கு நிற்கும் என்ன
எஞ்ஞான்றும் –
யாவதாத்மபாவி இதுவே எனக்கு வார்த்தை –
இதிலே நிலை நிற்கும்படி உம்மை இத் துச் சிஷை பண்ணு வித்தார் ஆர் -என்றான் ஈஸ்வரன்
இப்படி ஆர் கற்ப்பித்தார்-மற்றும் உண்டோ -தேவர் வடிவு அழகு இறே
என் மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்-
மை தோய்ந்து இருந்துள்ள தேஜஸ்சை யுடைத்தான மணியினுடைய நிறம் போன்ற திரு நிறத்தைக் காட்டி
என்னை அனந்யார்ஹன் ஆக்கி உன் சேஷித்வத்தை அறிவித்தவனே –
அழகிது உமக்குச் செய்ய வேண்டுவதாவது என் என்ன
எய்தா நின் கழல் யான் எய்த
ஸ்வ யத்னத்தால் ஒருவருக்கும் பிராபிக்க ஒண்ணாத திருவடிகளை -உன்னாலே பேறு-என்று இருக்கிற நான் ப்ராபிக்கும் படி பண்ணி –
அது நீர் மயர்வற மதிநலம் பெற்ற அன்றே பெற்றிலீரோ என்ன
ஞானக் கைதா –
இது நீ நினைத்து இருக்கும் அளவு போறாது -அது நான் பெற்றேன் என்று தெளியும்படி பண்ண வேணும்
அமிழ்ந்தினார்க்கு கை கொடுத்தால் போலே இருக்கையாலே ஜ்ஞான லாபம்
ஜ்ஞானமான கையைத் தா -என்கிறார் –
இங்கே எம்பாருக்கு ஆண்டான் அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-அதாவது –
ஒரு கிணற்றிலே விழுந்தவனுக்கு இரண்டு பேர் கை கொடுத்தால் எடுக்குமவர்களுக்கும் எளியதாய் ஏறுமவனுக்கும்
எளிதாய் இருக்கும் இறே -அப்படியே ஆகிறது என்று –
ஞானக் கை தா –
அங்கன் அன்றிக்கே -அது பின்னை பரபக்தி பர ஞான பரம பக்திகளை உடையார் பெரும் பேறன்றோ என்ன
ஞானக் கை தா –
அவற்றையும் தேவரே பிறப்பித்து தேவர் திருவடிகளைப் பெற பெற வேணும் என்னவுமாம்
அப்படியே செய்கிறோம் என்ன
காலக் கழிவு செய்யலே —
ஒல்லை என்றது தானே யன்றோ எனக்கு எப்போதும் வார்த்தை

——————————————————————————————–

அவதாரிகை –

இதில் வாசிகமான பேற்றை அபேஷிக்கிறார் –

செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என்
கையார் சக்கரக் கண்ண பிரானே
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல்
எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே –2-9-3-

செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என் கையார் சக்கரக் கண்ண பிரானே
கையும் திரு வாழியும் பொருந்தி இருக்கும் இருப்பைக் கண்டாயே
நம் பவ்யத்தை கண்டாயே
நம்மை அனுபவிக்கை அழகியதோ
ஷூத்ர விஷயங்களில் பிரவணனாய் அனர்த்தப் படுக்கை அழகியதோ -என்று
கையில் திரு வாழியையும் பவ்யதையும் காட்டி யாயிற்று இவருடைய விஷய பிராவண்யத்தைத் தவிர்த்தது –
சாஸ்திர ப்ரதா நாதிகளால் அன்று
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல் எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே —
துக்க நிவ்ருத்-ஜிதந்தே -என்கிறபடியே ஏதேனும் உத்க்ரமண சமயத்திலும் உன் திருவடிகளை நான் இளையாதே ஏத்தும் படி பண்ணியருள வேணும்
செறிந்த ச்லேஷமாவானது கண்டத்தை அடைக்கிலும் உன்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை நான் மறவாதே
ஏத்த வல்லேனாம் படி பண்ணி யருள வேணும்-
உத்க்ரமண தசை பார்த்து இருப்பார் காணும் கோழைப் பையலார் வந்து மிடறு பிடிக்க
நீர் சொல்லுகிற அது ஸூக்ருத பலம் அன்றோ என்ன
அருள் செய் –
இவன் பெற்றிடுவான் என்று இரங்கி யருள வேணும்
இது பின்னை சர்வர்க்கும் பிரயோஜனம் ஆகாதோ என்ன
எனக்கு
எனக்கு ஒருவனுக்கே செய்து அருள வேணும் –

————————————————————————————————

அவதாரிகை –

இத் திருவாய் மொழியிலே இவர் நிஷ்கர்ஷித்த பிராப்யமாவது -ஸ்ரக் சந்த நாதிகளோபாதி தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்று இறே
இவ்விடத்தில் எம்பார் அருளிச் செய்யும் படி –
சர்வேஸ்வரன் த்ரிவித சேதனரையும் ஸ்வரூப அனுரூபமாக அடிமை கொள்ளா நின்றான் -நாமும் இப்படி பெறுவோமே -என்று –
முக்தரும் நித்யரும்-தாங்களும் ஆனந்தித்து அவனையும் ஆனந்திப்பார்கள் -பத்தர் தாங்கள் ஆனந்தியாதே
அவனை ஆனந்திப்பார்கள் -இன்புறும் இவ்விளையாட்டுடையான் –3-10-7-இறே –
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் -தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்று பிரார்த்திப்பான் என்-
திரு உள்ளம் ஆனபடி செய்கிறான் என்று இராதே -என்று பிள்ளை திரு நறையூர் அரையர் எம்பாரைக் கேட்க
அது கேளீர் -முன்பு பிரிந்து அன்று -பின்பு பிரிவுக்கு பிரசங்கம் உண்டாயன்று -இரண்டும் இன்றி இருக்கத் திரு மார்வில் இருக்கச் செய்தே
-அகலகில்லேன் அகலகில்லேன் -என்னப் பண்ணுகிறது விஷய ஸ்வபாவம் இறே
-அப்படியே பிராப்ய ருசி பிரார்த்திக்கப் பண்ணுகிறது -என்று அருளிச் செய்தார் –

எம்மா வீட்டில் எம்மா வீடாய்-வைஷ்ணவ சர்வ ஸ்வமுமாய் -உபநிஷத் குஹ்யமுமாய் -சர்வேஸ்வரன் பக்கலிலே
அபேஷித்துப் பெறுமதுவாய்-இவ்வாத்மாவுக்கு வகுத்ததுமான பார தந்த்ர்யத்தை அவன் பக்கலிலே அபேஷிக்கிறார் –

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என் மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
முதலிலே ஆட்செய்ய -என்ன வேணும் -ஆட்செய் -என்று -ஸ்வா தந்த்ர்யத்தை வ்யாவர்த்திக்கிறது –
அதில் -எனக்கு ஆட்செய் -என்ன வேணும் -எனக்கு ஆட்செய் -என்று அப்ராப்த விஷயங்களை வ்யாவர்த்திக்கிறது –
அதில் எனக்கே ஆட்செய் என்று தனக்கும் எனக்கும் பொதுவான நிலையைத் தவிர்த்து -எனக்கே ஆட்செய் என்ன வேணும்
இது தான் ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி நிற்க வேணும்
க்ரியதாமிதி மாம் வத -என்கிறபடியே -இன்னத்தைச் செய் என்று ஏவிக் கொள்ள வேணும்
இப்படி ஒரு வார்த்தை அருளிச் செய்து நெடுங்கை நீட்டாக இருக்க ஒண்ணாது
என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுர வேணும்
புகுந்தாலும் போக்கு வரத்து உண்டாக ஒண்ணாது
ஸ்த்தாவர பிரதிஷ்டையாக எழுந்து அருளி இருக்க வேணும் –
இருந்து கொள்ளும் கார்யம் என் என்றால்
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
ஸ்ரக் சந்த நாதிகளோ பாதியாகக் கொள்ள வேணும்
அது சூடுமவனுக்கும் பூசுமவனுக்கும் உறுப்பாய் மிகுதி கழித்துப் பொகடும் அத்தனை இ றே
ஒரு மிதுனமாய் பரிமாறா நின்றால் பிறக்கும் இனிமையும் இரண்டு தலைக்கும் ஒத்து இருக்கும் இ றே
அங்கன் என்னுடைய ப்ரீதிக்கு நான் அன்வயித்தேன் ஆக ஒண்ணாது –

நின் என்றும் அம்மா என்றும் முன்னிலையாக சம்போதித்துக் கொண்டு போரா நிற்கச் செய்தே இங்குப் படர்க்கையாகச் சொல்லுவான் என் என்னில்
பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிற சமயத்திலே திரு முகத்தைப் பார்க்கில் வ்யவசாயம் குலையும் என்று கவிழ்ந்து இருந்து கையோலை செய்து கொடுக்கிறார்
எனக்கே கண்ணனை-
தனக்கே யாக என்ற பின்புத்தை எனக்கே இ றே -புருஷார்த்தம் ஆகைக்காக சொல்லுகிறது
ஒரு சேதனன் இ றே அபேஷிப்பான்-
நீர் அபேஷிக்கிற இது செய்வோமாகப் பார்த்தால் எல்லார்க்கும் செய்ய வேணும் காணும் என்ன
யான் கொள் –
ஸ்வரூப ஞானத்தை நீ பிறப்பிக்க -அத்தாலே ஸ்வரூப ஞானம் உடைய நான் ஒருவனுமே பெறும்படி பண்ண வேணும்
உமக்கும் எப்போதும் நம்மால் செய்யப் போகாது என்ன
சிறப்பே —
பல கால் வேண்டா -ஒரு கால் அமையும்
அது தன்னிலும் திருவாசலைத் திருக் காப்புக் கொண்டு ஒருவர் அறியாதபடி சிறப்பாக செய்யவும் அமையும்
சிறப்பாகிறது -ஏற்றம் -அதாவது -புருஷார்த்தம் –
ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தத்தைக் கொண்டருள வேணும் -என்றபடி
சிறப்பாவது -முக்தியும் சம்பத்தும் நன்றியும்
இவற்றில் நான் உன் பக்கல் கொள்ளும் மோஷம் உனக்கேயாக எனைக் கொள்ளுமதுவே –
உன் பக்கல் நான் கொள்ளும் சம்பத்து என்னவுமாம் -நன்றி என்னவுமாம் –

———————————————————————–

அவதாரிகை –

கீழ் மநோ வாக் காயங்கள் மூன்றாலும் உண்டான பேற்றை ஆசைப்பட்டு -இவை மூன்றாலும் உண்டான அனுபவத்தில் உன்னுடைய பரிதியிலே
அந்தர்பூதனாம் இதுக்கு மேற்பட எனக்காய் இருக்கும் ஆகாரத்தை தவிர்க்க வேணும் -என்றார்
-இது தான் சம்சாரிகள் பக்கல் பரிமாறுவது ஓன்று அல்ல -இவர் தாம் தம்மை யாராக நினைத்து இந்த பேற்றை அபேஷிக்கிறார் என்று
ஆராய்ந்து பார்ப்போம் என்று -நீர் ஆராயத்தான் நம்மை இப்படி அபேஷிக்கிறது என்ன
தேஹமே ஆத்மா என்பார் –
கேவல தேஹத்துக்கு இந்த்ரியம் ஒழிய அனுபவம் இல்லாமையாலே இந்த்ரியங்களே காண் ஆத்மா என்பார் –
அந்த இந்த்ரியங்களும் மனஸ் சஹகாரம் இல்லாத போது பதார்த்த க்ரஹணம் பண்ண மாட்டாமையாலே மனசே காண் ஆத்மா என்பார் –
அம் மனஸ்ஸூ தனக்கும் பிராணன்கள் சஹகரிக்க வேண்டுகையாலே பிராணன் காண் ஆத்மா என்பார் –
இவை எல்லாமே உண்டானாலும் அத்யவசாயம் வேணுமே -அதுக்கு கருவியான புத்தி தத்வமே காண் ஆத்மா என்பார் –
இவை அத்தனைக்கும் அவ்வருகாய் ஜ்ஞான குணகமாய் ஜ்ஞான ஸ்வரூபமாய் இருப்பது ஓன்று ஆத்மா என்பாராகா நிற்பார்கள் –
அதில் எனக்கு ஒரு நிர்பந்தம் இல்லை — ஏதேனுமாக உண்டான வஸ்து தேவர்க்கே உறுப்பாம் இதுவே வேண்டுவது -என்கிறார் –
வபுராதி ஷூ யோபி கோபி வா –ஸ்தோத்ர ரத்னம் -52-என்னுமா போலே –

சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே –2-9-5-

சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம் இறப்பில் எய்துக எய்தற்க –
நித்ய சம்சாரியாய்ப் போந்தவன் நித்ய ஸூ ரிகளுடைய அனுபவத்தைப் பெற்று அனுபவிக்கக் கடவதாகச் சொல்லுகிற மோஷம் –
பரிமித ஸூகத்தை உடைத்தான ஸ்வர்க்கம்
நிஷ்க்ருஷ்ட துக்கமேயான நரகம்
இவற்றை சரீர வியோக சமயத்திலே -பிராபிக்க -பிரபியாது ஒழிக-
இதுக்குக் கருத்து என் என்னில்
தேஹாதிரிக்தனாய் இருப்பான் ஒரு ஆத்மா யுண்டாகவுமாம்-தேஹமே ஆத்மா வாகவுமாம்-இதில் நிர்பந்தம் இல்லை என்கை –
தேஹாதிரிக்தமாய் இருப்பதொரு வஸ்து உண்டாகில் இறே ஸ்வர்க்காத் யனுபவங்கள் உள்ளது –
கேவல தேஹம் இங்கே தக்தமாக காணா நின்றோம் இறே
யானும்
ச சப்தத்தாலே நான் இப் பேறு இத்தனையும் பெறுவது காண் என்கிறார் –
ஸ்வரூப நிர்ணயித்ததில் நிர்பந்தம் இன்றிக்கே -நான் ஆரேனுமாக அமையும் -என்று இருக்கிற நானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
பிறக்கைக்கு ஹேதுவான கர்மம் இன்றிக்கே இருக்கச் செய்தே கர்ம வச்யரும் பிறவாத ஜன்மங்களிலே பிறக்க வல்ல சர்வாதிகனை
அஜாய மாநோ பஹூதா விஜாயதே –
மறப்பு ஓன்று இன்றி –
அவதாரங்களிலும் சேஷ்டிதங்களிலும் ஒரு மறப்பு இன்றிக்கே –
மறப்பு ஓன்று இன்றி –
இத்தலையில் உள்ளது எல்லாம் மறக்கலாம்
அத்தலையில் உள்ளது ஒன்றும் நழுவ ஒண்ணாது
என்றும் மகிழ்வேனே –
மகிழ்ச்சி என்றும் அனுபவம் என்றும் பர்யாயம்-அனுபவிப்பேன் என்கிறார்
ஆக -இத்தாலே -ஜீவாத்மா -ஸ்வரூபமும் வெளியிடுகிறார் –
பெருமான் -என்கையாலே தம்முடைய சேஷத்வமும்
மறப்பு ஓன்று இன்றி -என்கையாலே -ஜ்ஞாத்ருத்வமும்
என்றும் -என்கையாலே நித்யத்வமும்
மகிழ்வு -என்கையாலே போக்த்ருத்வமும் -அருளிச் செய்கிறார் யாயிற்று –

———————————————————————————

அவதாரிகை –

தேவாதி பதார்த்தங்களை உண்டாக்கினால் போலே என்னையும் உன்னை அனுபவிப்பேனாம் படி பண்ண வேணும் -என்கிறாராதல்-
அன்றியே
தேவாதி பதார்த்தங்களுக்கு ஒரோ ஸ்வபாவம் நியதமாம் படி பண்ணினால் போலே எனக்கு உன்னை அனுபவிக்குமது
நியத ஸ்வபாவமாம்படி பண்ணி யருள வேணும் என்கிறாராதல் –

மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே –2-9-6-

மகிழ் கொள் தெய்வம் –
போகய போக உபகரண போக ஸ்தானங்களாலே-மனுஷ்யரைக் காட்டில் ஆனந்த பிரசுரராய் இருந்துள்ள தேவர்கள் –
உலோகம் –
லோக்யத இதி லோகே -என்கிற படி சஷூராதி கரணங்களுக்கு விஷயமான அசித்து
அலோகம்
இவற்றைக் கிரஹிக்கும் சாதனங்களால் கிரஹிக்கப் படாதே -சாஸ்த்ரைக சமதிகம்யமான சித் வஸ்து
மகிழ் கொள் சோதி –
தாஹகமான தேச பதார்த்தம் -சந்திர ஸூ ர்யர்கள் என்னவுமாம்
மலர்ந்த வம்மானே –
இவற்றை உண்டாக்கின சர்வேஸ்வரனே
பஹூச்யாம் என்கிறபடியே தன விகாசம் ஆகையாலே -மலர்ந்த -என்கிறார்
சிதசித் விசிஷ்ட ப்ரஹ்மமே காரணமுமாய் கார்யமுமாகக் கடவது இறே
நீர் சொன்னவை எல்லாம் செய்தமை உண்டு -உமக்கு இப்போது செய்ய வேண்டுவது தான் என் -என்ன
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே –
என்னுடைய ஹிருதயம் உன்னை அனுபவித்து மகிழ்ச்சியை உடைத்தாம் படி பண்ண வேணும்
என்னுடைய வாக் வ்யவஹாரமும் அப்படியேயாகப் பண்ண வேணும்
என்னுடைய வியாபாரமும் ப்ரீதி புரஸ் சரமாக பண்ணும் கைங்கர்யமேயாக வேணும்
நானும் தனியே அனுபவித்து ப்ரீதியை உடையேனாம்படி பண்ண வேணும்
என்றும் இப்படி நான் உன்னை அனுபவிக்கும்படி வர வேணும் –

——————————————————————

அவதாரிகை –

தம்முடைய அபி நிவேசத்தாலே -எல்லாக் காலமும் என்னை அடிமை கொள்ள வர வேணும் -என்கிறார் –

வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்
பேராதே நான் வந்தடையும் படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே –2-9-7-

வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ் பேராதே நான் வந்தடையும் படி தாராதாய்
உன்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளின் கீழே புனராவ்ருத்தி இல்லாத பேற்றை நான் பெறும்படி உன்னை எனக்குத் தாராதே இருக்கிறவனே –
வாராத இன்னாப்பாலே -தாராதாய் -என்று இத்தை அவனுக்கு நிரூபகமாகச் சொல்லுகிறார் –
அந்ய பரோக்தியிலே பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார்
உன்னை என்னுள் வைப்பில் என்றும் ஆராதாய் —
தர நினையா விட்டால் நெஞ்சிலே பிரகாசிக்கிற அத்தை தவிர்க்க்கவுமாம் இறே
அகவாய் பெரிய திரு நாளாய்ச் செல்லா நின்றது –
உன்னை என்னுள் வைப்பில் என்றும் ஆராதாய்
நிரதிசய போக்யனான உன்னை பாஹ்ய சம்ச்லேஷம் பண்ணாத போது தரிக்க மாட்டாத என்னுடைய
ஹிருதயத்திலே உன்னைக் கொண்டு புகுந்து வைக்கும் இடத்தில் ஒரு நாளும் அமையாத படி இருக்கிறவனே
எனக்கு என்றும் எக்காலே –
எனக்கு -எல்லா காலத்திலும் எல்லா அவஸ்தையிலும்
வாராய்
வர வேணும்
உன் திருப் பாத மலர்க் கீழே -பேராதே யான் வந்து அடையும்படி தாராதாய் -என்னுதல்
வாராய் -என்னுதல் –

—————————————————————————————

அவதாரிகை –

அத்யல்ப காலமாகிலும் சேஷியாய்—{
எக்காலத்தும் –ஏதேனும் அற்ப காலமாவது -ஆளவந்தார் நிர்வாஹமாக திருமாலை ஆண்டான்
-எல்லா காலத்திலும் –இதுவே வேறு ஒன்றும் வேண்டேன் என்பதாக எம்பெருமானார் நிர்வாஹம் -)
என்னோடு சம்ச்லேஷிக்கப் பெறில்-பின்னை ஒரு காலமும் அதுவும் வேண்டா -என்று தமக்கு அடிமை செய்கையில்
உண்டான விடாயின் மிகுதியை அருளிச் செய்கிறார்

எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே –2-9-8-

எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று -எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
இதுக்கு ஆளவந்தார் அருளிச் செய்யும் படி -இனிக் கூறிட ஒண்ணாத படி சிறு கூறான அத்யல்ப காலத்திலும்
நீ ஸ்வாமி யான முறை தப்பாதபடி என் ஹிருதயத்திலே வந்து புகரப் பெறில்
மற்று எக்காலத்திலும்
இது ஒழிந்த எல்லாக் காலத்திலும்
யாதொன்றும் வேண்டேன் –
பின்னை இது தானும் வேண்டேன் –ஜ்வர சந்நிபதிதர் -ஒரு கால் நாக்கு நனைக்க -என்னுமா போலே
-ஷண காலமும் அனுபவிக்க அமையும் என்னும் படியான விஷயம் உண்டோ -என்ன
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என் அக்காரக் கனியே உன்னை யானே —
பகவத் அனுபவத்திலே மிக்காராய்-யத்ர ருஷய பிரதமஜா யே புராணா -என்கிறபடியே வேதத்தில் விமலராக
பிரதிபாதிக்கப் பட்டுள்ள நித்ய ஸூரிகள் அனுபவியா நின்றுள்ள
அக்காரம் போலவும் கனி போலவும் உண்டான உன்னுடைய போக்யாதிசயத்தை எனக்கு பிரகாசிப்பித்தவனே
அக்காரம் வ்ருஷமாய்-அது கோட்புக்கு பழுத்த பலம் போலே நிரதிசய போக்யமானவனே-
அக்காரக் கனி -என்கிற இது அவர்களுக்கு சர்வ வித போக்யங்களும் தானே என்னும் இடத்துக்கு உப லஷணம்-
உன்னை யானே —
இப்படி நிரதிசய போக்யனான உன்னை –
உன் சுவடு அறிந்த நான் –
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
இத்தை எம்பெருமானார் கேட்டருளி
இது பொருள் அழகியது –
இவ் வாழ்வாருடைய பிரக்ருதிக்குச் சேராது
பெறிலும் பெறாது ஒழியிலும் சிறுகக் கோல மாட்டார் -இங்கனேயாக வேண்டும் என்று அருளிச் செய்வர்
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் –
எல்லாக் காலத்திலும் எனக்கு சேஷியான நீ -நான் சேஷமான முறை தப்பாமே வந்து என் ஹிருதயத்திலே புகுரப் பெறில்
-எக்காலத்திலும்
-இக்காலம் எல்லாவற்றிலும்
மற்று யாதொன்றும் வேண்டேன்
பின்னை இது ஒழிந்த மற்று ஒன்றையும் வேண்டேன் –

——————————————————————————–

அவதாரிகை –

மிக்கார் வேத விமலர் விழுங்கும் -என்று நித்ய ஸூரிகள் நித்ய அனுபவம் பண்ணுகிற படியை அனுசந்தித்தார் –
அவர்களோடு ஒத்த பிராப்தி தமக்கு உண்டாய் இருக்க இழந்து இருக்கிற படியையும் அனுசந்தித்து அனர்த்தப் பட்டேன் -என்கிறார் –

யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-

யானே –
என் இழவு பகவத் க்ருதமல்ல –
அவன் எதிர் சூழல் புக்கு திரியா நிற்க -நானே கிடீர் விநாசத்தைச் சூழ்த்துக் கொண்டேன் -என்கிறார்
என்னை யறியகிலாதே-
ராஜ புத்ரன் வேடன் கையிலே அகப்பட்டு தன்னை வேடனாக பிரதிபத்தி பண்ணுமா போலே -சர்வேஸ்வரனுக்கு பிரகார பூதனான என்னை அறியாதே
யானே என்தனதே என்று இருந்தேன் –
அவனும் அவன் உடைமையும் என்ற இருக்கை தவிர்ந்து -நானும் என் உடைமையும் -என்று வகுத்துக் கொண்டு போந்தேன்
இருந்தேன் –
இப்படி நெடுநாள் போருகிற இடத்திலே ஒரு நாள் அனுதாபம் பிறக்கவுமாம் இறே –
அது அன்றிக்கே க்ருதக்ருத்யனாய் நிர்ப்பரனாய் இருந்தேன்
தீ வினையேன் வாளா விருந்தேன் -என்னுமா போலே -அஹம் சர்வம் கரிஷ்யாமி என்கைக்கு பிராப்தி உண்டாய் இருக்க
ஒரு கார்யம் இல்லாதாரைப் போலே கை ஒழிந்து இருந்தேன் –
முடிந்தேன் -என்றால் போலே இருக்கிறது இறே
ஒரு நாள் இழவே போந்திருக்க அநாதி காலம் இழந்து போந்தேன் –
அங்கன் அன்றோ அர்த்த தத்வம் -என்ன
யானே நீ –
அஹம் மநுரபவம் ஸூர்யச்ச–ப்ருஹத் உபநிஷத் –என்னா நிற்பார்கள் யாயிற்று முக்தர்
மத்தஸ் சர்வமஹம் சர்வம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-85 -என்னா நிற்பார் சம்சாரத்திலே தெளிவுடையார்
அஹம் பிரஹ்மாஸ்மி-நான் ராஜ புத்ரன் -என்னுமா போலே -நான் ப்ரஹ்மம் என்னலாம் படி இறே சம்பந்தம் இருக்கும் படி
ஸ வாஸூ தேவ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-5-என்றது வாஸூ தேவ சரீரம் என்றபடி இறே
என்னுடைமையும் நீயே
யஸ்யைத தஸ்ய தத்தனம் -ஸ்ரீ மகா பாரதம் –என்னுமா போலே
இது எங்கே பரிமாறக் கண்டு சொல்லும் வார்த்தை என்ன
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே —
நித்ய ஸூரிகள் அடைய இப்படி யன்றோ உன்னை அனுபவிப்பது
மஞ்சா க்ரோசந்தி என்கிறபடியே வானே ஏத்தும் என்கிறது –
எம் வானவர் ஏறே —
அவர்கள் தங்கள் சேஷத்வ அனுரூபமாக அடிமை செய்யா நிற்க அவனும் தன் சேஷித்வத்தால் வந்த உத்கர்ஷம் தோற்ற இருக்கும் இருப்பு
எம் -என்றது
எனக்கும் அவர்களோடு ஒத்த பிராப்தி உண்டாய் இருக்க இழந்து அனர்த்தப் பட்டேன் -என்கிறார் –

—————————————————————————————

அவதாரிகை –

யானே என் தனதே என்று இருந்தேன் -என்று நீர் அனுதபிக்கும் படி பண்ணினோம் ஆகில் உமக்குச் செய்ய வேண்டுவது
ஓன்று உண்டோ -நீர் இங்கனே கிடந்தது படுகிறது எதுக்காக -என்ன இதுக்காக -என்கிறார் –

ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி
தேறேல் என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே –2-9-10-

ஏறேல் ஏழும் வென்று
ஏறாகில் ஏழையும் வென்று நப்பின்னை பிராட்டியோட்டை
சம்ச்லேஷத்துக்கு பிரதிபந்தகமான ருஷபங்கள் ஏழையும் வென்று
ஏர் கொள் இலங்கையை –
தர்ச நீயமாய் கட்டுடைத்தான இலங்கையை -அஹோ வீர்ய மகோ தைர்யம் என்று திருவடி மதிக்கும் படியான இலங்கையை
பபூவ புத்திஸ்து ஹரீச்வரஸ்ய -ராவணனும் ஸ்த்ரீகளுமாய் இருக்கும் இருப்பை கண்டவாறே -தானும் ஒரு சமுதாயத்துக்குக்
கடவனாகையாலே -இங்கனே இருப்பதொரு புத்தி பிறந்தது –
யதீத்ருசீ இத்யாதி -பையல் தானும் ஸ்த்ரீகளுமாய் இருக்கும் இருப்பை -பெருமாளும் பிராட்டியுமாய் இருக்க சம்மதித்தான் ஆகில்
இந்த ஐஸ்வர்யம் குலையாது இருக்கலாயிற்றுக் கிடீர்
இமா யதா ராஷச ராஜ பார்யாஸ் ஸூ ஜாத மஸ் யேதி ஹி சாது புத்தே -சத்ருக்களுக்கும் நன்மை வேணும் என்று இருக்கும் புத்தியை உடையவனுக்கு –
நீறே செய்த
பிராட்டி அருளிச் செய்த படியே பஸ்ம சேஷமாம் படி பண்ணின
நெடுஞ்சுடர்ச் சோதி –
ராவணனை இப்பரிகரததோடே கொன்று கையும் வில்லுமான வீர ஸ்ரீ யோடு நின்ற நிலை –
அவ்விரோதிகளைப் போக்கினாப் போலே என்னுடைய விரோதிகளையும் போக்க வேணும் -என்கிறார் –
தேறேல் என்னை –
நப்பின்னை பிராட்டியோட்டை சம்ச்லேஷத்தில் பிரதிபந்தகம் போக்க அமையும் –
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் அளவில் அவளைப் பிரித்த ராவணனை முடிக்க அமையும்
அவர்களை உனக்காக வேண்டா -பண்டே உனக்கேயாய் இருக்கையாலே
இப்படியே இவன் விரோதிகளைப் போக்கி நமக்கு ஆக்கினோமாகில் இனி என் என்று இருக்க ஒண்ணாதே என்னளவில் .
தேறேன் -என்ற பாடமான போது -தெளியேன் என்னுதல் தரியேன் என்னுதல்
ஆனால் செய்ய வேண்டுவது என் என்ன
உன் பொன்னடி சேர்த்து ஒல்லை
நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து -என்று தொடங்கின அர்த்தத்தைத் தலைக் கட்டுகிறார்
உன் பொன்னடி
கல்லுக்கும் சைதன்யம் கொடுக்க வல்ல அடி யன்றோ
சேர்த்து -சேர்த்து அருள வேணும்
ஒல்லை -நான் இசைந்த போதே சடக்கெனத் திருவடிகளில் திவ்ய ரேகையோபாதி சேர்த்து அருள வேணும்
அவ்வளவும் போராது
வேறே போக எஞ்ஞான்றும் விடலே —
இவனுக்கு எல்லா உத்கர்ஷமும் பண்ணிக் கொடுத்தோம் ஆகில் இனி என் என்ன ஒண்ணாது
நீ எல்லா உயர்த்திகளும் பண்ணித் தந்தாலும் நான் எல்லாத் தாழ்வுகளும் பண்ணிக் கொள்வேன்
என்னை என் கையிலே காட்டித் தராது ஒழிய வேணும் –

————————————————————————-

அவதாரிகை –

இத் திருவாய் மொழி அப்யசிக்க வல்லார்கள் இத் திருவாய் மொழியில் சொன்ன முக்த பிராப்யத்தை பெறுவார் என்கிறார் –

விடலில் சக்கரத் தண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே –2-9-11-

விடலில் சக்கரத் தண்ணலை –
நாம் விடுகிறோம் என்று அதிசங்கை பண்ணுகிறது என் –
நாம் ஒருவரையும் விடோம் காணும் -என்று திருக் கையில் திரு வாழியைக் காட்டினான் –
விடலில் சக்கரத் தண்ணலை —
ஒரு காலும் விடாத திரு வாழியைக் கையிலே உடைய சர்வேஸ்வரனைக் கவி பாடிற்று
மேவல் விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒருவரையும் விடாத -அவன் ஸ்வ பாவத்தாலே கிட்டி
அவனை பிரியில் தரியாத படி -பரம உதாரரான ஆழ்வார் அருளிச் செய்தார்
வண்மை யாவது -இவ்வனுபவத்துக்கு பாசுரம் இட்டு உபகரித்த உபகாரம்
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும் –
இவ்வாத்மாவுக்கு அனர்த்த கந்தம் வாராதபடி ஹிதத்தை ஆராய்ந்து அருளிச் செய்த இது தான் -அவற்றில்
இப்பத்தும் கிளர்வார்க்கு கெடலில் வீடு செய்யும்
வரில் பொகடேன்-கேடில் தேடேன் -என்று இருக்கை யன்றிக்கே ஸ்ரத்த தாநராய் இருப்பார்க்கு -அனர்த்த கந்த ரஹிதமாய்-
அஹங்கார மமகாரங்கள் உடைத்த தன்றிக்கே
தனக்கே யாக வேணும் -என்று இவர் பிரார்த்தபடியே இவ்வாத்மவினுடைய ஸ்வரூப அனுரூபமான பேற்றைத் பண்ணித் தரும் –

முதல் பாட்டில் காயிகமான பேற்றை அபேஷித்தார்
இரண்டாம் பாட்டில் மானசமான பேற்றை அபேஷித்தார்
மூன்றாம் பாட்டில் வாசிகமான பேற்றை அபேஷித்தார்
நாலாம் பாட்டில் ஸ்வரூப அனுரூபமான பிராப்யத்தை நிஷ்கர்ஷித்தார்
அஞ்சாம் பாட்டில் நீர் ஆராய இப் பேற்றை அபேஷித்தீர் என்ன -நான் ஆராயிடுக -உன்னை அனுபவித்து மகிழும்படி பண்ணி யருள வேணும் என்றார்
ஆறாம் பாட்டில் த்ரிவித கரணங்களாலும் உன்னை ப்ரீதி புரஸ் சரமாக அனுபவிக்கும்படி பண்ணி யருள வேணும் என்றார் –
ஏழாம் பாட்டில் அப்படிச் சடக்கென செய்யாமையாலே இன்னாதானார்
எட்டாம் பாட்டில் ஸ்வரூப அனுரூபமாக நீ ஷண காலம் என்னோடு அனுபவிக்கப் பெறில் பின்புள்ள காலம் எல்லாம் வேண்டேன் -என்றார்
ஒன்பதாம் பாட்டில் உன்னை அனுபவிக்க இட்டுப் பிறந்து வைத்து அது கிடையாத படி நானே அனர்த்தத்தை சூழ்த்துக் கொண்டேன் -என்றார்
பத்தாம் பாட்டில் எனக்கு ஒரு நாளும் ஜ்ஞான விசேஷத்தைப் பண்ணித் தந்தோம் இறே என்று என்னை என் கையிலே காட்டித் தராது ஒழிய வேணும் என்றார்
நிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார்

—————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி – -2-8– –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

October 27, 2015

அணைவது அரவணை மேல் -பிரவேசம் –

சர்வேஸ்வரன் தம் பக்கல் பண்ணின வ்யாமோஹம் தம் ஒருவர் அளவிலும் அன்றிக்கே -தம்மோடு சம்பந்தம்
உடையார் அளவிலும் வெள்ளம் இட்ட படியை சொன்னார் கீழ் –
இத் திருவாய் மொழியில் -தம்மோட்டை சம்பந்தமே ஹேதுவான அவன் இப்படி விஷயீ கரிப்பானான பின்பு -சம்சாரிகளுக்கும் நம்மோட்டை
ஒரு சம்பந்தத்தை உண்டாக்கி அவன் கிருபைக்கு விஷயம் ஆக்குவோம் -என்று அவர்களுக்கு மோஷ பிரதத்வத்தை அருளிச் செய்கிறார் –
இத் திருவாய் மொழி தன்னை -ஈஸ்வரத்வம் சொல்லுகிறது என்று நிர்வஹிப்பாரும் உண்டு –
இருவரவர் முதலும் தானே -2-8-1- என்றும் தீர்த்தன் உலகளந்த -2-8-6-என்பததைக் கொண்டு –
மோஷ ப்ரதத்வம் சொல்லுகிறது -என்று பட்டர் அருளிச் செய்யும் படி -பிறவிக்கடல் நீந்துவார்க்கு புணைவன் -2-8-1- என்பதைக் கொண்டு –
இவை தான் ஒன்றை ஓன்று விட்டிராது -ஈஸ்வரன் யாயிற்று மோஷ பிரதானவன் -மோஷ பிரதானாம் போது ஈஸ்வரனாக வேணும் –

இது தன்னில் செய்ததாகிறது என்-என்னில் –
ஆழ்வாருக்கு முதல் தன்னில் அத்வேஷத்தைப் பிறப்பித்து –ஆபிமுக்யத்தைப் பிறப்பித்து ருசியை உண்டாக்கி
யாதானும் பற்றி நீங்கும் வ்ரதத்தை நல்வீடு செய்யும் -திரு விருத்தம் -95—மயர்வற மதி நலம் அருளினான் -1-1-1—
யானொட்டி என்னுள் இருத்துவம் என்றிலன் -1-7-7- அடிமைக் கண் அன்பு செய்வித்து –2-3-3-
இசைவித்து -என்னை -5-8-9–நின்னலால் இல்லை காண் -2-3-7-
இவர் விடிலும் தாம் விடாதே விரும்பி இது தான் இவர் தம்மளவில் இன்றிக்கே தம்மோடு சம்பந்தம் உடையார் அளவும்
இப்படியே பெருகிக் கரை புரளுகிறபடியை அனுசந்தித்து –
சர்வேஸ்வரன் ஸ்வபாவம் இதுவான பின்பு நாம் பெற்ற பேறு எல்லாரும் பெறும்படி பண்ணுவோம் என்று சம்சாரிகளை அடையப் பார்த்து
-அவர்களுக்கு மோஷ ப்ரதன்-என்னும் இடத்தை அருளிச் செய்கிறார்

இவர் தாம் பெற்றதாய் -பிறருக்கு உபதேசிக்கிற பேறு தான் -பிராட்டி திருவடி திரு வநந்த ஆழ்வானை பரிகரமாக யுடைத்தாய்
எத்தனை யேனும் அளவுடையார்க்கும் ஸ்வ யத்னத்தாலே ப்ராபிக்க அரிதாய் அவனாலே பெறப் பார்ப்பார்க்கு வருத்தம் அறப் பெறலாய்
சம்சாரத்தில் போகங்கள் போலே அஸ்திரமாய் இருக்கை யன்றிக்கே நித்தியமாய் –அவிசதமாய் இருக்கை யன்றிக்கே அத்யந்தம் ஸ்புடமாய்-
துக்க மிஸ்ரமாய் இருக்கை யன்றிக்கே ஸூ ககைதாநமாய்-மங்களமாய் உத்தமமாய் அபரிச்சின்னமாய்
இப்படி இருக்கிற முக்த பிராப்ய போகத்தை தமக்கும் தம் பரிகரத்துக்கும் அவன் கொடுப்பானாக பாரிக்கிற படியைக் கண்டு
சம்சாரிகளையும் ஈத்ருச போகிகளாம் படி பண்ண வேணும் என்று பார்த்து அவர்களைக் குறித்து ஹிதம் அருளிச் செய்ய
அது கேட்ட பின்பும் அவர்கள் பழைய நிலையில் நின்றும் குலையாதே மால்யமான் தொடக்கமானார் ராவணனுக்கு சொன்ன ஹிதம் போலே
அவர்கள் இத்தை அநாதரித்து இருக்க
நாம் நம்முடைய அனுபவத்தை விட்டு இவர்களோடு துவக்குண்கிற இதுக்கு பிரயோஜனம் என் என்று
வழி பறிக்கும் நிலத்தில் தம் கைப்பொருள் கொண்டு தப்பினார் ஹ்ருஷ்டராமா போலே -நாம் முந்துற முன்னம் இவர்களைப் போலே ஆகாது
ஒழியப் பெற்றோம் இறே-என்று ஸ்வ லாபத்தை அனுசந்தித்து இனியராகிறார் –

———————————————-

அவதாரிகை –

முக்த பிராப்ய போகத்தைச் சொல்லுகிறது -முதல் பாட்டுத் தான் இத் திருவாய் மொழிக்கு சங்க்ரஹமாய்
மேலுள்ள பாட்டுக்களில் ஒரு பதத்தை பற்றிப் போருமவையும் அது தன்னைப் பற்றி எழுமவையுமாய் இருக்கிறது –

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-

அணைவது அரவணை மேல் –
முக்த ப்ராப்ய போகம் தான் இருக்கிற படி -பர்யங்க வித்யையிலே சொல்லுகிற படியே -சர்வேஸ்வரனும் பிராட்டிமாரும் கூட
திரு வநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையில் இருக்கிற இருப்பிலே
இச் சேதனன் முக்தனாய் சென்று கிட்டினால் -அஹம் பிரஹ்மாஸ்மி -நான் ராஜ புத்திரன் ப்ரஹ்ம பிரகார பூதன் -என்னக் கடவன்
ஆகில் இங்கனே போராய் -என்றால் அவன் அங்கீகாரம் பெற்று மாதா பிதாக்கள் இருந்த படுக்கையில் பிரஜை சென்று ஏறுமா போலே
தமேவம் வித்பாதே நாத்யா ரோஹாதி என்று ஏறக் கடவனாகச் சொல்லுகிற அப் பேற்றைச் சொல்லுகிறது
அணைவது
தாபத்ரயங்களாலே நொந்த சம்சாரி சேதனன் -ஏஷ ப்ரஹ்ம பிரவிஷ்டோச்மி-என்கிறபடியே -அப்பெரிய மடுவிலே விழுந்து
தன் தாபம் எல்லாம் ஆறுமா போலே யாயிற்று
முதலில் இவை இல்லாதவன் -திரு வநந்த ஆழ்வான் மேல் அணைந்து -இவை உண்டாய்க் கழிந்தாரைப் போலே இருக்கும் படி
-விடாயர் மடுவில் விழுமா போலே யாயிற்று அணைவது
அரவணை மேல்
நாற்றம் குளிர்த்தி மென்மைகளை ஸ்வபாவகமாக உடைய திரு வநந்த ஆழ்வானோடே அணைவது –

புல்கும் அணையாம் -என்னக் கடவது இறே
அவனை சேஷ பூதன் அடிமை செய்து அல்லது தரியாதாப் போலே சேஷியும் சேஷ பூதனோடு அணைந்து அல்லது தரியாதானாய் இருக்கும் படி
பூம்பாவை யாகம் புணர்வது -என்கிறது இ றே மூவர்க்கும் போகம் ஒத்து இருக்கையாலே
போக்யதைக வேஷையாய்-நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை உடைய பெரிய பிராட்டியாரோடு கலந்து வர்த்திப்பது
ஆகம் புணர்வது –
ஆத்ம குணங்கள் குமரிருந்து போம் அத்தனை
அணைவது புணர்வது
ரம்ய மாவசதம் க்ருத்வா –அறுபதினாராயிரம் மலடு நின்ற
சக்கரவர்த்தி தன் ஆதரத்துக்கு போம்படி சமைத்த மாளிகைகளிலும் திரு உள்ளத்துக்கு பொருந்தி அழகியதாய் இருந்தது காட்டிலே
இளைய பெருமாள் சமைத்த ஆஸ்ரமம் ஆயிற்று
த்ரயகா ரமமாணா-நாயகரான பெருமாள் ரசம் அல்லவே பிராட்டி யுடையது
பிராட்டிக்கு பிறக்கும் ரசம் அல்லவே பெருமாளது
அப்படியே அச் சேர்த்தி கண்டு உகக்குமவர் இறே இளைய பெருமாள்
வநே -படை வீடர் காட்டிலே ரமித்தார்கள் என்று தோற்றாதே-காடர் காட்டிலே வர்த்தித்தால் போலே பொருந்தி இருந்த படியாகச் சொல்லிற்று யாயிற்று
சர்வேஸ்வரனும் பிராட்டிமாருமாக திரு வநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே இருக்கக் கண்டு உகந்து அடிமை செய்கை முக்த ப்ராப்ய போகமாகிறது

இருவரவர் முதலும் தானே
ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு காரண பூதனாய் இருக்கும்
ஸ ப்ரஹ்ம ஸ சிவா -என்கிற பிரசித்தியாலே -இருவரவர் -என்கிறார்
அவ்விபூதியைச் சொல்லுகிற இடத்தில் அணைவது புணைவது -என்கையாலே அது போக பூமியுமாய் நித்யமுமாய் இருக்கும் என்னும் இடமும்
இங்கு முதல் -என்கையாலே இவ்விபூதியில் கார்ய காரண பாவத்தால் வந்த சம்பந்தமும் -இது தான் ஆவதும் அழிவதாம் என்னும் இடமும் சொல்லுகிறது
இத்தால் ப்ரஹ்ம ருத்ரர்கள் சம்சார பக்தர்கள் என்னும் இடமும் ஈஸ்வரனே மோஷ ப்ரதனாக வல்லான் என்னும் இடமும் சொல்லுகிறார்
ஆக -ஆஸ்ரயணீயன் அவனே -ப்ரஹ்ம ருத்ராதிகள் ஆஸ்ரயணீயர் அல்லர் -என்கை
ஆ ப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தா ஜகத்தந்தர் வ்யவஸ்திதா பிராணின கர்மஜனித சம்சார வச வர்த்தின -என்னா நின்றது இறே
இப்படி ப்ரஹ்ம ருத்ரர்களுக்கும் காரண பூதன் ஆகையாலே வந்த மேன்மையை உடையவன் –
இணைவனாம் எப்பொருட்கும்
தேவாதி சகல பதார்த்தங்கள் தோறும் சஜாதீயனாய் வந்து அவதரிக்கும்
ப்ரஹ்ம ருத்ரர்கள் நடுவில் வந்து அவதரிப்பது -உபேந்த்ரனாவது
-சக்கரவர்த்தி ஸ்ரீ வசுதேவர்கள் அளவிலே வந்து பிறப்பது -மஹா வராஹமாவது -குப்ஜாம்மரமாவதாக நிற்கும்
இப்படி தாழ விட்டு பிறக்கிறது எதுக்காக என்னில்
வீடு முதலாம்
மோஷ பிரதனாகைக்காக
அவதரித்த இடங்களிலே பஷிக்கு மோஷத்தைக் கொடுப்பது பிசாசுக்கு மோஷத்தைக் கொடுப்பதாகா நிற்கும்
அவன் வந்து அவதரிப்பது மோஷ பிரதன் ஆகைக்காக வாக்கில் எல்லாரும் பின்னை முக்தராக வேண்டாவோ என்னில்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே —
சம்சாரம் என்ற ஒரு பெரும் கடல் -அது எங்களால் கடக்கக் போகாது பிரபலனான நீயே கழித்துத் தர வேண்டும் என்று
இருப்பார்க்கு பிரதிபூவாய் நின்று கடத்திக் கொடுக்கும்
புணையாம் அவன் என்றபடி -சர்வ பர நிர்வாஹகனாம் அவன் என்றபடி
சம்சார சாகரம் கோரம் அநந்த கிலேச பாஜனம்-த்வாமேவ சரணம் பிராப்ய -என்று இருப்பார்க்குக் கடத்திக் கொடுக்கும்
புணைவன் -என்று தெப்பமாவான் என்றுமாம் -விஷ்ணு போதம் -என்னக் கடவது இறே
ஏக தேசத்தைப் பற்றி நிற்கை யன்றிக்கே அக்கரையும் இக்கரையும் பற்றி நிற்கும் ஒடமாயிற்று –

———————————————————————————

அவதாரிகை –

என் தனி நாயகன் புணர்ப்பு என்கையாலே எம்பெருமான் தான் வேணுமோ -அவனோடு உள்ள சம்பந்தமே மோஷ ப்ரதம் -என்கிறார் –

நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –2-8-2-

நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
பிறவிக் கடல் நீந்துவார்க்கு -என்கிற அதினுடைய விவரணமாய் இருக்கிறது
நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும் நீந்தும் துயரில்லா வீடு முதலாம் -என்று பிரித்து யோஜிக்க்கவுமாம்
அன்றிக்கே ஒன்றாக வீட்டு விசேஷணம் ஆக்கவுமாம்
நீந்தும் –
என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தால் கடக்க அரிதான துக்கத்தை விளைப்பதான ஜனனம் தொடக்கமான மற்றும் உண்டான அபஷய விநாசாதிகளையும் கடத்தும்
துயரில்லா வீடு முதலாம்
துக்க கந்த ரஹிதமான மோஷத்துக்கும் ஹேதுவாம் -கடக்க அரிதான துக்கத்தை உடைத்தான ஜன்மம் தொடக்கமாக நீந்தும் துயரான
மற்று எவ்வெவையும் இல்லாத மோஷத்துக்கு ஹேதுவாம் என்னுதல்-
இவர் வீடு என்கிறது -சம்சார நிவ்ருத்தி மாதரத்தை அன்று -ஸூகபாவிக லஷணையான பகவத் பிராப்தியை
முக்திர் மோஷா மஹா நந்தா -என்னக் கடவது இறே-

இப்படி துக்கத்தைப் போக்கி வீடு முதலாக எங்கே கண்டோம் -என்னில் –
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த –
பரப்பு மாறப் பூத்துக் குளிர்ந்த புனலை உடைத்தான பொய்கையிலே போய்ப் போக்கு முதலையாலே இடர்ப்பட்ட ஆனையினுடைய
துக்கத்தை வாசனையோடு போக்கினவன் –
பூவில் செவ்வி அழியாமே-திருவடிகளிலே இட வேணும் என்று நினைத்து அது பெறாமையால் வந்த இடரைப் போக்கின
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே —
வைத்த வளையத்தோடு காணும் மடுவில் போய் விழுந்தது –
திருத் துழாயில் பரிமளம் போலே காணும் ஆனை இடரைக் கடந்தது
ஆனை இடராவது -சர்வேஸ்வரன் ஆபத் சகன் -என்று இருந்தோம் -இவன் இப்படி ஆபன்னனாக உதவாது ஒழிவதே –
நிர்க்குணனாய் இருந்தானீ-என்று நாட்டில் உள்ளோர் நினைக்கில் செய்வது என் -என்ற அத்தாலே வந்த இடராகிலுமாம்-
என் தனி நாயகன்-
ஆனை இடரைப் போக்குகை அன்றிக்கே நம் இடரைப் பரிஹரித்தால் போலே யாயிற்று இவர்க்கு இருக்கிறது
புணர்ப்பே —
அவனோட்டை சம்பந்தம் –
அவன் திருவடிகளிலே சம்பந்தம்
துக்க நிவ்ருத்தியையும் பண்ணி -ஸூக பாவைக லஷணம்-என்கிற பேற்றையும் தரும் –
தனி நாயகன் புணர்ப்பு –வீடு முதலாம் -என்று அந்வயம்-

—————————————————————————————–

அவதாரிகை –

இருவரவர் முதலும் தானே -என்கிற பதத்தை விவரியா நின்று கொண்டு -ஸ்ரீ யபதியான அவனுடைய
அதி மானுஷ சேஷ்டிதங்களை பிரத்யஷிக்கலாம் என்கிறது –

புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்
புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி
புணர்ந்த திருவாகித் தன் மார்வில் தான் சேர்
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே –2-8-3-

புணர்க்கும் அயனும் அழிக்கும் அரனும்-
இவற்றை ஸ்ருஷ்டிக்கையே தொழிலாய் இருக்கிற ப்ரஹ்மாவும்-சுடுதடி போலே இவற்றை யடைய அழித்துக் கொண்டு நிற்கிற ருத்ரனுமாம் –
ததா தர்சித பந்தானௌ சிருஷ்டி சம்ஹார காரகௌ-என்றும் -ஸ்ருஷ்டிம் தாதா கரிஷ்யாமி த்வாம் ஆவிச்ய ப்ரஜாபதே -என்கிறபடியே
அவன் அந்தராத்மாவாய் நின்று பிரவர்த்திப்பிக்க -இவற்றைச் செய்கிறார்கள் –
புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி புணர்க்கும் அயனும் அழிக்கும் அரனும்-
இவை தான் இவர்கள் செய்ய வல்லராவது அவன் திருமேனியைப் பற்றியிருந்த போதாயிற்று –
ஸ்த நந்த்ய பிரஜை வாயில் முலை வாங்கினால் தரியாதாப் போலே –
இத்தால் சாமா நாதி கரண்யத்தால்-அந்தர்யாமித்வம் சொல்லிற்று
புணர்ந்த தன் உந்தி -என்கையாலே -காரணத்வம் சொல்லிற்று
ஆகத்து மன்னி -என்கையாலே திரு மேனியைப் பற்றி லப்த ஸ்வரூபர்-என்னும் இடம் சொல்கிறது
புணர்ந்த திருவாகித் தன் மார்வில்
தன் திரு மார்வில் நித்ய சம்ச்லிஷ்டையாய் இருக்கிற பெரிய பிராட்டியாரை யுடையனாய் –
இது இப்போது சொல்லுகிறது என் என்னில் -ப்ரஹ்மாதிகளுக்கு நிர்வாஹகன் என்றவோபாதி ஸ்ரீ லஷ்மி சம்பந்தமும்
ஐஸ்வர் யத்துக்கு உடலாகையாலே –பெரிய பிராட்டியாரோடு சேர்த்தி நீர்மைக்கும் மேன்மைக்கும் உடலாய் இருக்கும் இறே
தான் சேர் புணர்ப்பன் –
சிருஷ்டி யர்த்தமாக ஏகார்ணவத்திலே சாய்ந்து அருளினவன் -என்னுதல்
தனக்குத் தகுதியான சேஷ்டிதங்களை உடையவன் என்னுதல்
பெரும் புணர்ப்பு எங்கும் புலனே —
ப்ரஹ்மாதிகள் அதிகரித்த கார்யங்களை அவர்கள் வழியாலே நடத்தியும் -தான் அதிகரித்த கார்யங்களை தானே நடத்தியும்
போருகையாலே -தன்னுடைய பெரும் புணர்ப்பு ஆனைத் தொழில்கள் எங்கும் காணலாய் இருக்கும் –

———————————————————————

அவதாரிகை –

அவனுடைய ஈஸ்வரத்தில் கண்ணழிவு அற்று இருந்தது -இனி இதுக்கு அவ்வருகு இல்லை என்று
நன்மை பெற வேணும் என்று இருப்பார் அவனைக் கடுக ஆஸ்ரயிக்கப் பாருங்கோள் என்கிறார் –

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
புலன் ஐந்து என்கிறது -விஷயங்களை யாய் -அவற்றிலே பிரவணமாகக் கடவவான பொறி ஐந்து உண்டு -ஸ்ரோத்ராதிகள்-
அவற்றுக்கு வச்யராகை தவிர்ந்து -சில பதார்த்தங்களை வறை நாற்றத்தைக் காட்டி முடிக்குமா போலே சப்தாதிகளிலே
மூட்டி நசிப்பைக்கையாலே இந்த்ரியங்களை பொறி என்கிறது
இத்தால் பரிச்சின்ன வஸ்து க்ராஹகமான இந்த்ரிய வச்யராகை தவிர்ந்து
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
நன்மைக்கு முடிவின்றிக்கே இருக்கிற நாட்டிலே புக வேண்டி இருப்பீர்
ஸ்வவிநாசம் காண் மோஷம் என்கை யன்றிக்கே ஆப்ததமரான இவர் நன்மைக்கு முடிவில்லாததொரு தேசவிசேஷம் உண்டாக அருளிச் செய்தார் இறே
புகுவீர்
இப் பேற்றுக்கு இசைவே அதிகாரம் என்கிறார்
அது ஒரு நாடு உண்டாய் – அத்தை பெற வேணும் என்ற நசை உண்டானாலும் பிரபல விரோதிகள் கிடக்குமாகில் பிரயோஜனம் இல்லையே என்னில்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
விரோதி போக்குகை நம் பணியோ-என்கிறார்
தடுமாறி முடிந்து போம் படி அசூர வர்க்கத்தை அழியச் செய்தான் –
அவனுடைய பலமுந்து சீரில் படிமின் –
பலம் முற்பட்டு இருக்கிற கல்யாண குணங்களிலே ப்ரவணர் ஆகுங்கோள்
ஸூ ஸூகம் கர்த்துமவ்யயம் -ஸ்ரீ கீதை -9-2–என்னும்படி
ஸ்மர்த்தவ்ய விஷய சாரச்யத்தாலே-சாதனா தசையே தொடங்கி இனிதாய் இருக்கும் இறே
ஓவாதே –
அபர்வணி கடல் தீண்டலாகாது -என்னுமா போலே ஒரு நியதி இல்லை இதுக்கு –
தமக்கு ரசித்த படியாலே இடைவிடாமல் அனுபவிக்கப் பாருங்கோள் என்கிறார் -என்றுமாம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் -என்னுமா போலே மாறாதே ஆஸ்ரயிக்கப் பாருங்கோள்

————————————————————————————–

அவதாரிகை –

கீழ் -இணைவனாம் எப்பொருட்கும் -என்றார் அத்தை உபபாதிக்கிறார் –

ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-

ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட-மற்று எவ்வெவையும்
கீழே நீந்தும் துயரப் பிறவி -என்கிறார் -அங்கே யானைக்கு துயர் விட்டுப் போனதே அது போலே இல்லாமல்
இதிலே ஒரு கால் விட்டுப் பிடிக்குமதுவும் இல்லை என்கிறார்
உச்சிவீடும் விடாதே துயரை விளைக்கக் கடவதான ஜன்மம் தொடக்கமான மற்றும் உண்டான ஐந்துக்கும் -அவற்றை உடைத்தான பதார்த்தங்களுக்கும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மூவா என்கிற இத்தை கீழோடு கூட்டுதல்
மூவா -தனி முதல் -என்று மேலே கூட்டுதல்
பிரவாஹ ரூபத்தாலே நித்தியமாய் போருகிற-இதுக்கு தனி முதல் -என்னுதல்
முசியாத அத்விதீய காரணமாய் என்னுதல் -முசியாத -சோம்பல் இல்லாமல்
தான் தன் பகலிலே வழி பட வேண்டும் என்று நினைத்து உபகரணங்களைக் கொடுத்து விட கொடுத்த உபகரணங்களைக் கொண்டு
வழி கெட நடவா நின்றால்-இப்போது இங்கனே போயிற்று யாகில் க்ரமத்திலே நம் பக்கல் ருசியைப் பிறப்பித்து மீட்டுக் கொள்கிறோம்
என்று அனுமதி தானத்தைப் பண்ணி உதாசீனனாய் இருக்கும் -இப்படி தன் நினைவைத் தப்பிப் போரச் செய்தேயும் கர்ஷகனாய் இருக்குமவன்
-ஒரு கால் பார்த்தது இ றே என்று சோம்பிக் கை வாங்காதே மேலே மேலே கோலுமா போலே
ஒருகால் அல்லால் ஒருகால் ஆகிலும் ஆகிறது -என்று சிருஷ்டியா நிற்கும்
சோம்பாது இப்பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா -பெரிய திருவந்தாதி -18-என்னக் கடவது இறே –
இப்படி இவன் சிருஷ்டித்து ரஷிப்பது எவ்வளவு என்னில்
மூ வுலகும் காவலோன் –
சிருஷ்டிக்கு கர்மீபவிக்கும் எல்லை யளவும்
கீழும் மேலும் நடுவும் -என்னுதல்
க்ருதகம் அக்ருதகம் க்ருதாக்ருதகம் -என்னுதல்
காவலோன்
சாஸ்திர ப்ரதா நாதிகளாலே ரஷிக்கை -இப்படி ரஷிப்பது தன் மேன்மை குலையாதே நின்றோ என்னில்
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
அகர்ம வச்யனானவன் கர்ம வச்யரோடு ஒக்கப் பிறந்தாயிற்று
மாவாகி –
ஹயக்ரீவ மூர்த்தியாய் அவதரித்த படி
யாமையாய் மீனாகி
வித்யா பிரகாசகமான அவதாரங்கள்
மானிடமாம்-
ராம கிருஷ்ணாதி யாவதாரங்கள் -அனுஷ்டேயார்த்த பிரகாசகமான அவதாரங்கள்
மர்யாதானாம் ச லோகஸ்ய கர்த்தா காரயிதா ச ச -என்றும்
யத் யதாசரதி ஸ்ரேஷ்ட -என்றும் சொல்லுகிறபடியே
இப்படி தாழ விட்டு அவதரிக்கிறவன் தான் ஆர் என்னில்
தேவாதி தேவ பெருமான்
மனுஷ்ய கந்தம் பொறாத தேவர்கள் கந்தம் பொறாத நித்ய ஸூரிகளுக்கு அவ்வருகானவன்
என் தீர்த்தனே —
நல்ல போக்யஜாதம் இருக்க நிஷித்த த்ரவ்யங்களை விரும்புவாரைப் போலே
தானும் தன்னுடைய குணங்களும் இருக்க -சப்தாதி விஷயங்களை விரும்பிப் போந்த என்னை
அவற்றை விட்டுத் தன்னையே விரும்படியான சுத்தியைப் பிறப்பித்த சுத்தியை உடையவன்
அன்றிக்கே -நான் இழிந்து ஆடும் துறை என்னுதல் –

—————————————————————————————

அவதாரிகை –

நீர் சொல்லுகிறவனுக்கு இந்த உத்கர்ஷம் எல்லாம் உண்டோ என்ன -முன்பே அர்ஜுனன் நிரூபித்து
நிர்ணயித்த அர்த்தம் நாம் இன்றி ஆராயும்படி குறை பட்டு இருந்ததோ -என்கிறார் –

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-

தீர்த்தன் –
பாதோ தகேன ஸ சிவ ஸ்வ சிரோதருதேன–ஸ்தோத்ர ரத்னம் -13-என்றும்
பாவனார்த்தம் ஜடாமத்யே யோக்யோஸ் மீத்யவதாரணாத் -என்றும் சொல்லுகிறபடியே
தன் திருவடிகளோட்டை ஸ்பர்சத்தாலே அசுத்தரையும் சுத்தராக்க வல்ல சுத்தியை உடையவன்
இது எப்போது தான் செய்தது என்னும் அபேஷையில்
உலகளந்த சேவடி -என்று அத்தை ஸ்மர்ப்பிக்கிறார்-
குறை கொண்டு -நான்முகன் திருவந்தாதி -9—தன்னுடைய ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டுக் கொண்டு -நான் முகன் குண்டிகை நீர் பெய்து –
அருகே நின்ற -தர்மதத்வம் இவன் நினைத்தவாறே ஜலமாய் இவன் குண்டிகையிலே பிரவேசித்தது
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி -ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளைக் கொண்டு ஸ்துதித்து
கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேலேறக் கழுவினான் –
யுக்த அயுக்த நிரூபணம் பண்ண அறியாதே இவன் அநீதியிலே கை வளரா நின்றான் -அது போக வேணும் -என்று இவன் ஜடையிலே
ஏறும்படி அவன் திருவடிகளை விளக்கினான்
ஸ்ரீ பாத தீர்த்தம் கொண்டு துஷ் புத்ரர்கள் தலையிலே தெளிக்குமா போலே –
இவ்விடம் தன்னில் கிருஷ்ணாவதாரத்துக்கும் வாமனாவதாரத்துக்கும் வரையாதே எல்லாரோடும் பொருந்துமது உண்டாகையாலே சொல்லுகிறார் –
மேல் பூந்தாமம் சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு பார்த்தன் தெளிந்து ஒழிந்த
அர்ஜுனனுக்கு ஒரு தேவதை பக்கலிலே ஒரு அஸ்தரம் பெற வேண்டுவதாய் அவன் அதுக்கு உத்யுக்தனான சமயத்திலே இவன்
ஸ்ரமத்தை ஆற்றுகைக்காக புஷ்பங்களை நம் காலில் இட்டு ஜீவி என்று அருளிச் செய்ய அவனும் திருவடிகளிலே இட
அந்த தேவதை ராத்ரியிலே ச்வப்னத்திலே அந்தப் புஷ்பங்களை தன் தலையிலே தரித்துக் கொண்டு வந்து
அஸ்த்ர பிரதானம் பண்ணிற்றதாக சொல்லக் கடவது இறே
அத்தை அருளிச் செய்கிறார்
பூ மாலை என்னுதல் -அழகிய மாலை என்னுதல்
அவையே
அவற்றோடு சஜாதீயங்கள் அன்றிக்கே
சிவன் முடி மேல் தான் கண்டு
பாடே பார்ச்வத்தில் அன்றிக்கே அவன் தலை மேல் கண்டானாயிற்று
தான் கண்டு
ஆப்தர் சொல்லக் கேட்கை அன்றிக்கே ஸ்ருதி ஸ்ம்ருதிகளாதல்-அன்றிக்கே தானே கண்டான் ஆயிற்று
பிரத்யபிஜ்ஞார்ஹமாம் படி பிரத்யஷித்து
பார்த்தன் தெளிந்து ஒழிந்த
அவன் சாரதியாய் தாழ நிற்கச் செய்தேயும் அவனுடைய ஈஸ்வரத்திலே கலங்காதே -ஸ து பார்த்தோ மஹா மநோ என்கிறபடியே
பேரளவுடைய அர்ஜுனன் நிரூபித்து நிர்ணயித்து -நம புரஸ்தாத ப்ருஷ்ட தஸ்தே-என்று அனுவர்த்தித்த
பைந்துழாயன் பெருமை
சர்வாதிகத்வ த்யோதகமான திருத் துழாய் மாலையை உடைய சர்வேஸ்வரன் உடைய பரத்வம்
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே
-இன்று சில அறிவு கேடர் செல்ல விட்டு வர விட்டு ஆராயும் அளவாய் இருந்ததோ —

———————————————————————————–

அவதாரிகை –

ஒருவன் அனுவர்த்தனம் கொண்டு நிச்சயிக்க வேணுமோ -அவனுடைய இஷ்ட சர்வ சேஷ்டா விஷயமாய் அன்றோ
இஜ்ஜகத்து இருக்கிறது -இதுவே போராதோ பரத்வ ஹேது -என்கிறார் –

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7-

கிடந்து –
திருப் பாற் கடலிலே கிடந்த படி யாதல் –
பிரதிசிச்யே -என்னும்படியாகக் கடல் கரையிலே சாய்ந்த படி யாதல்
பஹூம் புஜக போகாபம் -திரு வனந்த ஆழ்வான் மேலே சாய்ந்தால் போலே யாயிற்று திருக்கையை மடித்து சாய்ந்தால் இருக்கும் படி
அரி ஸூ தன-கிடந்த கிடக்கையிலே இலங்கை குடி வாங்க வேண்டும்படி இருக்கை
பிரதிச்யே மஹா ததே -ஒரு கடலோடு ஒரு கடல் ஸ்பரசித்துச் சாய்ந்தால் போலே இருக்கை –
இருந்து –
பரமபதத்திலே இருந்தபடி யாதல்
உடஜே ராம மாஸீ நம் -என்று ருஷிகள் ஆஸ்ரமத்திலே இருந்து
நின்று
திருமலையிலே நின்றபடி யாதல்
ராவணவத சம நந்தரத்திலே கையும் வில்லுமாய் லங்கத்வாரத்திலே நின்ற நிலை யாதல்
வாலியைக் கொன்று நின்ற நிலையாதல்
அவஷ்டப்ய ஸ திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம் ராமம் ராமானுஜம் சைவ பர்த்துச் சைவா நுஜம் சுபா -என்கிறபடியே
அவர்களுடைய ஸ்திரீகள் பக்கலிலே கேட்கும் இத்தனை இறே இவனுடைய பரத்வம்
தமஸ பரமோதாத சங்க சக்ர கதாதர -என்னுதல் –
த்வமேப்ரமேயச்ச -என்னுதல் -சொல்லா நிற்பார்கள் இறே

அளந்து
தன்னைதான பூமியை மஹா பலி போல்வார் இறாஞ்சிக் கொள்ள அத்தை எல்லை நடந்து மீட்டுக் கொண்டு
கேழலாய்க் கீழ்ப் புக்கு இடந்திடும் –
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராஹ வேஷத்தை பரிக்ரஹித்து -பிரளய சலிலத்துக்கு உள்ளே முழுகி
அண்டபித்தியிலே சேர்ந்த பூமியைப் பிரித்து எடுக்கும் –
தன்னுள் கரக்கும்
ரஷிக்க என்று ஒரு பேரை இட்டுக் கொண்டு கொம்பிலும் குளம்பிலும் கொள்ளாதே வயிற்றிலே வைத்து ரஷித்த படி
மேலொரு காலம் பிரளயம் வரும் -என்று ஏலக்கோலி பிரளயம் வந்தாலும் இங்குண்டோ என்று இளைத்துக் காட்டலாம் படி
முன்புத்தையது ஒன்றும் தெரியாதபடி வைக்கும்
உமிழும்
இவை என்பட்டன -என்று பார்க்கைக்காக பின்னை வெளிநாடு காண உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும்-
மிகப் பணைத்த திருத் தோள்களாலே -ஆரும்படியாகத் தழுவும்
பார் என்னும் மடந்தையை
ஸ்ரீ பூமிப் பிராட்டியை
பூமியை பிரகாரமாக வுடையவள் ஆகையாலே தத் வாசக சப்தத்தாலே சொல்லுகிறது
தன் விபூதியினுடைய ரஷணம் ஒரு தலையானால் அவன் படும் பாட்டை அனுசந்தித்து ஹ்ருஷ்டையாய்-அதுக்கு அபிமானியான
ஸ்ரீ பூமிப் பிராட்டி அணைக்கும் -அத்தாலே தானும் ஹ்ருஷ்டனாய் அணையா நிற்கும்
மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –
மால் -சர்வாதிகனான சர்வேஸ்வரன்
செய்கின்ற மால் -அவன் ஏறுகிற பிச்சை
ஆர் காண்பாரே -ஒருவராலே இவ்வளவு என்று பரிச்சேதிக்கலாய் இருந்ததோ –

———————————————————————–

அவதாரிகை –

அவனுடைய அத்புத கர்மங்களை தனித்தனியும்
திரளவும் பரிச்சேதிக்கப் போகாது எத்தனையேனும் அளவுடையார்க்கும் என்கிறார் –

காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா
சேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும்
ஏண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –2-8-8-

காண்பாரார் எம்மீசன் கண்ணனை –
சர்வேச்வரனாய் இருந்து வைத்து -கிருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்கு கையாளான் ஆனவனை
அவன் தானே காட்ட நான் கண்டால் போலே காண்பார்க்கு காணலாம் இத்தனை போக்கி ஸ்வ யத்னத்தால் சிலர்க்குக் காணப் புக்கால்
காணப் போமோ -அது கிடக்க -காண்பார் சில உண்டாயிற்று
என் காணுமாறு
எவ்வளவைத் தான் காண்பது
அளவுடையார் சிலர் காண இழிந்தார்கள் என்னா-விஷயத்தைப் பரிச்சேதிக்கப் போகாதே –
ஏன் தான் பரிச்சேதிக்கப் போகாது ஒழிகிறது என்னில் -இது வன்றோ அவனுடைய அபதானம் இருக்கிறபடி
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா-
அவனுடைய ஊண் ஆகிற ஒரு செயலைச் சொல்லப் பார்க்கில் சர்வ லோகங்களும் ஒரு அவதானத்துக்குப் போராது-
அபதானம் -செயல் -அவதானம் பிடிக்கு
இவ்வபதானத்தை உடையவன் ஒருவரால் பரிச்சேதிக்கலாய் இருக்கிறதோ –
அவனுடைய செயல் பரிச்சேதிக்க ஒண்ணாது என்கைக்கு ஸ்வரூபமோதான் பரிச்சேதிக்கலாய் இருக்கிறது என்கிறார்
சேண் பால் வீடோ -வுயிரோ மற்று எப்பொருட்கும் –
உயர்த்தியே ஸ்வபாவமாக உடைத்தான பரம பதம் என்ன -முக்தாத்மா ஸ்வரூபம் என்ன -மற்றும் உண்டான
தேவாதிகள் என்ன -இவற்றை உடைத்தான
ஏண்பாலும் சோரான்
எண்ணப் பட்ட பிரதேசங்கள் என்னுதல்
எட்டுத் திக்கும் வியாபித்து விடாதே நிற்கும் என்னுதல்
பரந்துளான் எங்குமே —
இப்படி வியாபிக்கும் இடத்தில் ஒரு குறை உண்டாம் படி இருக்கை அன்றிக்கே குறைவற வியாபித்து இருக்கும்
ஆனபின்பு வ்யாபக வஸ்துவை வ்யாபத்திலே ஓன்று பரிச்சேதித்துக் காண்கை-என்று ஒரு பொருள் உண்டோ –

——————————————————————————-

அவதாரிகை –

நீர் சொன்னது அனுபபன்னமாய் இருந்ததீ-ஒரு வஸ்துவே அநேக பதார்த்தங்களில் குறைவற வியாபித்து இருக்கும் என்றால்
இது கூடுமோ என்ன கெடுவிகாள்-அவன் சர்வகதத்வத்தை இசையாத இரணியன் பட்டது படாதே கிடி கோள்-என்கிறார் –

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9-

எங்கும் உளன் கண்ணன்-
இதுவாயிற்று அவன் சொன்ன தப்பு -சர்வேஸ்வரன் சர்வ கதன் என்றான்
மயா இதம் சர்வம் ததம் -ஸ்ரீ கீதை -9-4-
ந ததஸ்தி விநா யத் ச்யான்மயா –ஸ்ரீ கீதை -10-39–என்று அவன் சொன்ன வார்த்தை யாயிற்று இவன் தான் சொல்லிற்று
என்ற மகனைக் காய்ந்து
இவ்வர்த்தத்தை சத்ருவே சொன்னாலும் கேட்ட போதே காலில் விழ வேண்டும் வார்த்தை சொல்லிற்று
பிரமாண விருத்தமான அர்த்தத்தைச் சொல்லிலும் கொண்டாட வேண்டும்படி யாயிற்று சம்பந்தம்
பருவத்தாலும் கொண்டாட வேண்டும்
பள்ளியில் ஓதி வந்த -பள்ளி ஓதும் பருவத்தில் உள்ளவை அடைய கொண்டாட்டமாய் இருக்கும்
அதுக்கு மேலே தன் சிறுவன் -தன் வயிற்றில் பிறந்தவன் வார்த்தை மிகவும் பிரியமாய் இருக்கும்
வாயில் ஓர் ஆயிர நாமம் -அதுக்கு மேலே திரு நாமத்தைச் சொல்லிற்று
ஒள்ளியவாகிப் போந்த -இவை ஒன்றுமே இல்லை யாகிலும் சொன்ன போதே இனிமை தான் கொண்டாட வேணும்
ஆங்கு அதனுக்கு ஒன்றும் ஓர் பொறுப்பு இலனாகி -அசஹ்ய அபசாரம் இறே
பிள்ளையைச் சீறி -திரு நாமம் சொன்னதே ஹேதுவாக புத்திரன் அன்று என்று விட்டான் அவன்
திரு நாமம் சொன்னவர்களோடே தமக்கு எல்லா உறவும் உண்டாக நினைத்து இருக்கையாலே இவர் பிள்ளை என்கிறார்
மகனைக் காய்ந்து –
வயிற்றிலே பிறந்தவனே இருக்கச் செய்தேயும் திரு நாமம் சொல்லப் பொறுக்க மாட்டாமே சீறினான் யாயிற்று –
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
எங்கும் உளனாகில் நீ சொல்லுகிறவன் இங்கு இல்லையே இரானே என்று தூணை அடித்துக் காட்டினான்
அளந்திட்ட தூணை அவன் தட்ட -முன்பே நரசிம்ஹத்தை வைத்து நட்ட தூண் என்ன ஒண்ணாதே
தானே தனக்கு பொருந்தப் பார்த்து நறுக்கி நட்ட தூண் ஆகையாலே
அவன் தட்ட -பெரியாழ்வார் திருமொழி -1-7-9-வேறே சிலர் தட்டினார்கள் ஆகில் கையிலே அடக்கிக் கொண்டு வந்து தூணிலே
பாய்ச்சினார்கள் -என்னவுமாம் இறே -தானே யாயிற்று தட்டினானும்
அங்கு அப்பொழுதே
அத் தூணிலே அடித்த இடத்திலே -அவனுடைய பிரதிஜ்ஞ்ஞா சம காலத்திலே
அவன் வீயத் தோன்றிய
தன் தோற்றரவிலே அவன் பிணமாம் படி தோற்றின
அதிர்த்துக் கொண்டு புறப்பட்ட போதை அட்ட ஹாசமும் -நா மடித்துக் கொண்ட உதடும் -நெற்றியது கண்ணும்
-உச்சியது புருவமுமாய்க் கொண்டு
தோற்றின போதே பொசுக்கின பன்றி போலே உருகினான் ஆயிற்று பொன்னன் ஆகையாலே
என் சிங்கப்பிரான் பெருமை-
ஆஸ்ரித வர்க்கத்துக்காக நரசிம்ஹமாய் உபகரித்தவனுடைய பரத்வம்
யாராயும் சீர்மைத்தே –
இன்று சிலரால் ஆராயும் படி இருந்ததோ –

—————————————————————————————

அவதாரிகை –

இவர்களை விடீர் -நாம் முந்துற முன்னம் இவர்களைப் போலே ஆகாதே -அவனை அனுபவிக்கப் பெற்றோம் இறே
என்று ஸ்வ அனுபவ லாபத்தாலே ஹ்ருஷ்டராகிறார் –

சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-

சீர்மை கொள் வீடு சவர்க்க நரகு ஈறா ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும் –
சர்வ பிரகாரத்தாலும் நன்றான பரம பதம் -பரிமித ஸூகமான ஸ்வர்க்கம் -நிஷ்க்ருஷ்ட துக்கமேயான நரகம்
-இவை முடிவாக ஈரப் பாடுடையரான தேவர்கள் நடுவாக மற்றும் உண்டான திர்யக்காதிகளும்
வேர் முதலாய் வித்தாய் –
த்ரிவித காரணமும் தானேயாய்
பரந்து –
தத் ஸ்ருஷ்ட்வா -ததேவ அநு ப்ராவிசத் தத் அநு பிரவிச்ய சச்ச த்யச்சா பவேத் -என்கிறபடியே முந்துற இவற்றை யடைய உண்டாக்கி
பின்னை இவற்றினுடைய வஸ்துத்வ நாம பாக்த்வங்களுக்காக அநு பிரவேசித்து -இப்படி ஜகதாகாரனாய் நின்று
தனி நின்ற கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –
இப்படி ஜகத் சரீரனாய் நின்ற அளவே யன்றிக்கே தன்னுடைய வ்யாவ்ருத்தி தோற்றும்படி
ஸ்ரீ வைகுண்டத்திலே வர்ஷூக வலாஹகம் போலே இருக்கிற அழகிய திருமேனியை யுடையனாய் இருந்து வைத்து கிருஷ்ணனாய்
வந்து அவதரித்து எனக்குக் கையாளனானவனை நான் முந்துற முன்னம் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் -என்கிறார் –

————————————————————————————————–

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருவாய்மொழி அப்யசிக்க வல்லார்கள் இத் திருவாய் மொழியில் சொன்ன முக்த ப்ராப்ய போகத்தைப் பெறுவார் -என்கிறார் –

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –2-8-11-

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை –
பூ தலங்கள்-என்னுமா போலே திருக் கண்களின் பரப்பைப் பற்றச் சொல்லுகிறது
பரந்த சிவந்து இருந்துள்ள திருக் கண்களையும் -அவற்றுக்கு பரபாகமாம் படி கறுத்த திரு மேனியையும் உடைய சர்வேஸ்வரனைக் கவி பாடிற்று
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன் -பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார் –
வெள்ளத்திலே அலைவாரைப் போலே தேன் வெள்ளத்திலே வண்டுகள் அலையா நின்றுள்ள சோலையை உடைய
திரு வழுதி வள நாட்டை உடைய ஆழ்வார் அருளிச் செய்தது –
தலையான பண்ணிலே மேலே சொன்ன தமிழ் யாயிற்று இப்பிரபந்தம் தான்
அன்றியே -பண்ணின் மேலே சொன்ன -என்னுதல்
ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –
நாகஸ்ய ப்ருஷ்ட்டே -என்கிறபடியே பரமபதத்தில் தங்கள் வ்யாவ்ருத்தி தோற்ற இருந்து -எவ்வகையாலும் விலஷணமான
மோஷமானது தங்களுக்கு விதேயமாம் படி பெறுவார்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –
விண் தலை -தலையான விண்ணிலே என்னுதல்
அங்குள்ளார் தங்கள் ஆஜ்ஞ்ஞா அநு வர்த்தனம் பண்ணும் படியாகப் பெறுவார்
ஆத்மா லாபத்து அளவும் அன்றிக்கே பரம புருஷார்த்த லஷண மோஷத்தை ஆளப் பெறுவார்
வீற்று இருந்து –
சாம்சாரிகமான சங்கோசம் எல்லாம் தீரும் படி வீறு பட்டு இருந்து
ஆள்வர் எம்மா வீடே –
தன் பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான் -1-5-10-என்று எனக்கும் என் பரிகரத்துக்கும்
தருவானாக சமைத்து நிற்கிற பரம பதத்தை ஆளப் பெறுவார்

முதல் பாட்டில் இத் திருவாய் மொழியில் பரக்கச் சொல்லுகிற அர்த்தத்தை சங்க்ரஹேண அருளிச் செய்யா நின்று கொண்டு
சம்சாரம் ஆகிற இக்கடலைக் கடக்க வேணும் என்று இருப்பாருக்குக் கடத்திக் கொடுக்கும் என்றார்
இரண்டாம் பாட்டில் -அவன் வேணுமோ அவனோட்டை சம்பந்தமே கடத்தும் என்றார்
மூன்றாம் பாட்டில் அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்கள் பிரத்யஷிக்கலாம் என்றார்
நாலாம் பாட்டில் -அந்தமில் பேரின்பத்தைப் பெற வேணும் என்று இருப்பார் அவனை ஆஸ்ரயிங்கோள் என்றார்
அஞ்சாம் பாட்டில் -கீழ் இணைவனாம் எப்பொருட்கும் என்றத்தை விவரித்தார்
ஆறாம் பாட்டில் இவ் உத்கர்ஷம் எல்லாம் அவனுக்கு உண்டோ என்ன நாம் ஆராய வேண்டாதபடி அர்ஜுனன் பண்டே தெரிந்து அறுதியிட்டான் என்றார்
ஏழாம் பாட்டில் -ஒருவன் அநுவர்த்தனம் கொண்டு அறிய வேணுமோ -அவனுக்கு இஷ்ட சர்வ சேஷ்டா விஷயமாய் அன்றோ ஜகத்து இருக்கிறது என்றார்
எட்டாம் பாட்டில் வ்யாப்தி தொடக்கமான அவனுடைய அபதானங்கள் ஒருவரால் பரிச்சேதிக்க முடியாது என்றார்
ஒன்பதாம் பாட்டில் -அவனுடைய வ்யாப்தியை இசையாதார் ஹிரண்யன் பட்டது படுவர் என்றார்
பத்தாம் பாட்டில் -ஏவம் பூதனானவனை நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் என்றார்
நிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

—————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி – -2-7– –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

October 26, 2015

கேசவன் தமர் பிரவேசம் –

ஆடியாடியிலே -வாடி வாடும் -என்கையாலே ஒரு நீர்ச் சாவியாய் வாடினபடி சொல்லிற்று –
அந்த ஒரு நீர்ச் சாவியானது தீர காரார் கருமுகில் கலந்து
வர்ஷித்த படி சொல்லிற்று -அந்தாமத்து அன்பில் –
அப்படி வர்ஷித்த படியாலே -ஈறில் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன்-என்று வெள்ளமிட்டு பெருகின படி சொல்லிற்று வைகுந்தா மணி வண்ணனில்
எமர் கீழ் மேல் ஏழேழு பிறப்பும் மா சரிது பெற்று -என்கையாலே அவ்வெள்ளம் இரு கரையும் புரண்ட படி சொல்லுகிறது கேசவன் தமரில்
இவர் ஆடியாடியில் பட்ட ஆர்த்தி தீர வந்து கலந்த படி சொல்லிற்று அந்தாமத் தன்பு
அக்கலவியால் பிறந்த ப்ரீத்தி அவனதானபடி சொல்லிற்று -வைகுண்ட மணி வண்ணன் –
அந்த ப்ரீதி தான் ஆழ்வார் ஒருவர் அளவிலும் அன்றிக்கே நம்மோடு பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும்
வெள்ளமிட்டுப் பெருகின படியைச் சொல்லுகிறது இத் திருவாய் மொழியில்
சர்வேஸ்வரன் ஆழ்வாரோடு வந்து சம்ச்லேஷித்து அத்தாலே பிறந்த ப்ரீதி தம் ஒருவர் அளவிலும் அன்றிக்கே தம்மோடு
பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும் பெருகின படியை கண்டு -இது இவன் என் பக்கல்
பண்ணின பஷபாத அதிசயம் இ றே-என்று இனியராய் தம்மை விஷயீ கரிக்கைக்கு ஈடான குண சேஷ்டிதாதிகளை அனுசந்தித்து
அவற்றுக்கு வாசகமான திருத் த்வாதச நாமத்தாலே அவனைப் பேசி அனுபவிக்கிறார்
சர்வேஸ்வரன் ஒருவனை விஷயீ கரித்தால்-அது பின்னை அவன் அளவிலே நில்லாது இ றே –
மரணாந்தாநி வைராணி -ருஷிகள் குடியிருப்பை அழித்து -மைதிலியைப் பிரித்து நம் உயிர் நிலையிலே நலிந்தால் போலே
ஸ்ரீ ஜடாயு மகாராஜரை நலிந்து -இவை எல்லாம் செய்ய மாட்டானே இனி இவன்
நிர்வ்ருத்தம் ந பிரயோஜனம் –இவன் ஜீவிக்கிற நாளிலே நாம் செய்யும் நன்மை இவன் விலக்காது ஒளிவது காண் என்று இருந்தோம்
-அது அந்நாளிலே பெற்றிலோம் -நாம் தேடி இருந்தது முந்துற முன்னம் சித்திக்கப் பெற்றோம் இ றே
க்ரியாதாம் அஸ்ய சம்ஸ்கார -இவன் நான் செய்யும் நன்மை விலக்காதனான அளவு பிறந்த இன்றும் இழக்க வேணுமோ -வேண்டுவன செய்யப் பாரும்
மமாப்யேஷ யதா தவ —யுத்த -114-99–நீர் இறாய்த்து இருந்தீர் ஆகில் குடல் துடக்குடையாரிலே ஒருவன் செய்யும் அத்தனை அன்றோ
நாம் இவனுக்கு வேண்டுவன செய்ய நீர் பின்னைக் கடக்க நில்லீர்-என்றார் இறே

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பக்கல் ஓரம் ராவணன் அளவும் சென்றது இறே
மகாரஜர்க்கு சத்ரு என்று வாலியை நிரசித்து வைத்து மகா ராஜர் கண்ணா நீர் பொறுக்க மாட்டாதே
-சஞ்ஜாத பாஷ்ப -கிஷ்கிந்தா -23-24-என்று தாமும் கண்ண நீர் விழ விட்டார் இறே
தர்மே மனச்ச தே பத்ர –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-27-ஸ்ரீ மாலா காரர் பக்கலிலே விஷயீ காரம் அவர் சந்தானத்து அளவும் சென்றது இறே
ஸ்ரீ கண்டா கர்ணன் பக்கல் பண்ணின விஷயீ காரம் அவன் தம்பி யளவும் சென்று -நீ அவனுக்கு நல்லையாகில் அவன்
முன்னாகப் போ -என்று அருளிச் செய்தான் இ றே
குபேரன் கண்டா கர்ணனுக்கு திரு அஷ்டாஷர மந்த்ரமும் த்வாதச அசர மந்தரத்தையும் உபதேசித்து த்வாரகை சென்று
ஸ்ரீ கிருஷ்ணனை ஆஸ்ரயிக்க உபதேசித்தார் –
எம்பார் இத் திருவாய் மொழியை அருளிச் செய்யப் புக்கால் -ஸ்ரீ வைஷ்ணவன் ஆனேன் என்கிறார் என்பாராம்
வைஷ்ணத்வ சிஹ்னம் இ றே திரு த்வாதச திரு நாமம் –
ஆழ்வாருடைய நெடுமாற்கு அடிமையும் -எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமையும் இரண்டாயிற்று நெடுமாற்கு அடிமை –
அதில் எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமை இத் திருவாய் மொழி –

————————————————————–

அவதாரிகை –

சம்பந்தி சம்பந்திகள் பக்கலிலும் எம்பெருமான் அபிநிவிஷ்டனான படியைக் கண்டு
இது எல்லாம் என் பக்கல் உண்டான விஷயீ கார அதிசயம் இறே -என்று ஹ்ருஷ்டராகிறார் –

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-

கேசவன் தமர்
பிரசஸ்த கேசனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் -என்னுதல் –
விரோதி நிரசன சீலதையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்
தஸ்மாத் கேசவ நாமவான் -என்கிறபடியே சர்வ நிர்வாஹனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்
சர்வேஸ்வரன் உடையார் -என்றாயிற்று -ஆழ்வார் இவர்களை விரும்புகிறது
எமர் -என்று ஆழ்வாருடைய சம்பந்தம் கொண்டாயிற்று அவன் இவர்களை விரும்புகிறது
இத்தால் ஒரு வைஷ்ணவ அபிமானமே வேண்டுவது அவன் விஷயீ கரிக்கைக்க் என்றபடி
கேசவன் தமர்
அவனுடைய அவயவ சௌந்த்ர்யத்திலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
எமர் கீழ் மேல் ஏழேழு இறப்பும் கேசவன் தமரானார்கள் –
ஏகாஹம் அபி கௌந்தேய பூமிஸ் தமுதகம் குரு குலம் தாரயதே தாத சப்த சப்த ச சப்த ச –என்கிறபடியே தச பூர்வான் தசாபரான் ஆத்மா நஞ்ச —
மாசரிது பெற்று
விதி சூழ்ந்ததால் என்கிற ஆகஸ்மிக பகவத் கிருபை யாதல்
மாதவன் என்றதே கொண்டு என்கிற உக்தி மாத்ரத்தை யாதல்
தம் பெற்ற பேற்றை தம்மோடு சம்பந்தம் உடையாரும் பெறும்படியான பேற்றை பெற்று என்னுதல்
மா சரிது பெற்று
பெரும் சரிதுபெற்று -தடக்கை சதுரனைப் பெற்று என்றபடி
தந்தலையால் வந்ததாகில் இறே வா வதியாய் இருப்பது
இது பெற்று
காணக் காண அவன் சிரசா வஹிக்கிறபடி
நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
நம்மோடு சம்பந்தமுடையாரையும் அவன் இப்படி விஷயீ கரிக்கிறது நம்முடைய சம்பத்து இறே
நம்முடைய வாழ்வு –
ஸ்ரீ வைஷ்ணவ சம்பத்து
வாய்க்கின்றவா –
ஊற்று மாறாதே மேன்மேல் என பெருகி வருகிறபடி –ஏழ் படி கால் என்றது தான் ஓர் அளவு இல்லை –இன்று நம் அளவும் வரச் செல்லுகிறது இ றே –
இப்படி விஷயீ கரிக்கைக்கு ஹேது ஹேது என் என்னில்
ஈசன்-
வகுத்த ஸ்வாமி யாகையாலே
என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் –
கண் அழகாலே என்னை அனந்யார்ஹன் ஆக்கி தன வடிவளைகை என்னை அனுபவிப்பித்தவன்
விண்ணோர் நாயகன் எம்பிரான் எம்மான் –
நித்ய ஸூ ரிகளைத் தோற்ப்பிக்குமா போலே -என்னை அவ்வடிவு அழகைக் காட்டித் தோற்ப்பித்து-என்னை அவ்வடிவு அழகை அனுபவிப்பித்த உபகாரகன் –
நாராயணனாலே –
தன மேன்மையைப் பாரதே உகவாதாரையும் விட மாட்டாதபடி வத்சலனாய் உள்ளவனாலே சமிதை பாதி சாவித்திரி பாதியாக
வன்றிக்கே-அவனுடைய நிர்ஹேதுக கிருபையாலே –
திருக் கண்கள் அழகையும் திருமேனி அழகையும் -இரண்டையும் -காட்டி அருளியது காருண்யத்தாலே -என்றபடி
நாராயணனாலே -எமர் கீழ் மேல் ஏழேழு பிறப்பும் -கேசவன் தமரானார்கள் -மா சரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா
நாராயணனாலே என்ற இடம் -மாசதிரினுடைய உபபாதனம் -நாராயணன் ஆகிற பெரும் பேற்றைப் பெற்று கேசவன் அடியார்கள் ஆனார்கள் என்றவாறு –

—————————————————————————————

அவதாரிகை –

நாராயணனாலே என்று நாராயண சப்தம் பிரஸ்துதம் ஆயிற்றே -அதுக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக சப்தத்தை உபாதானம் பண்ணுகிறார்

நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –2-7-2-

நாரணன் -இதுக்கு அர்த்தம் என் என்னில்
முழு வேழ் உலகுக்கும் நாதன்
சர்வ ஸ்வாமி-
இவ்வர்த்தத்தில் பிரமாணம் என் என்னில்
வேதமயன்
நாராயண பரம் ப்ரஹ்ம இத்யாதிகளால் சர்வ ஸ்வாமி என்று ஓதப்படுகிறவன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன்
தன விபூதியில் காரணமாயும் -கார்யமாயும் -உதகா ஹரணம் ஆகிற பலமாயும் வரக் கடவதான இவற்றுக்கு நியந்தாவாய் உள்ளான் –
க்ரியா சாதனம் -அதடியாக வரும் கரியை -தத் சாத்தியமான கார்யம் -இவற்றுக்கு நிர்வாஹகனாய் இருக்கும் என்றுமாம்
காரணம் செயல்பாடு பலன் -என்றுமாம்
எந்தை
எனக்கு ஜனகன் ஆனவன்
சீரணங்கு
ஸ்ரீ யான அணங்கு -என்று தெய்வப் பெண் என்றபடி -பெரிய பிராட்டியார்
அன்றியே
சீரணங்கு அமரர்
நித்ய ஸூரிகளுக்கு விசேஷணம் ஆகவுமாம்
சேஷத்வ அனுரூபமான ஆத்மா குணங்களை தரியா நிற்பாராய்-அப்ராக்ருத ஸ்வ பாவரான நித்ய ஸூரிகள்
பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று வாரணத்தை மருப்பொசித்த பிரான்
இவ்வருகு உண்டான சம்சாரிகள் -இப்படி சிறியார் பெரியார் என்ற வாசி இன்றிக்கே எல்லாரும் எழுத்து வாங்கு ஏத்தும் படி நின்று
குவலயா பீடத்தின் கொம்பை அநாயாசேன முறித்த உபகாரகன் -ந சமம் யுத்த மித்யாஹூ-என்னும்படி யாக
என் மாதவனே —
நான் தோற்ற துறை
மாதவனான நாராயணன் எந்தை
ஸ்ரீ மன் நாராயணன் எனக்கு ஸ்வாமி என்கிறார்

————————————————————————————————-

அவதாரிகை –

கீழே மா சதிரிது பெற்று -என்றார் -இந் நன்மைக்கு அடி என் என்ன -நினைவு இன்றிக்கே இருக்க அந்தபுர வாசிகள் சொல்லும்
வார்த்தையைச் சொன்னேன் -என்கிறார் -ஜாமாதாதயிதஸ்தவேதி பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம் பச்யேம -என்றார் இ றே பட்டர் –

மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3-

மாதவன் என்றதே கொண்டு
நான் மாதவன் என்ற உக்தி மாதரத்தைக் கொண்டு
இத்தையே திரு உள்ளத்திலே குவாலாகக் கொண்டு
அல்லாத திரு நாமங்களுக்கும் இதுக்கும் வாசி அறிவதே என்று இத்
அல்லாத திரு நாமங்களுக்கும் இதுக்கும் வாசி அறியாத என்னை
இனி
முன்பு கழிந்த காலம் கழிந்தே விட்டது இ றே
மேல் அத்யல்ப காலமாய்த் தொடரா நின்றதாயிற்று ஈஸ்வரனுக்கு
பழுதே பல காலும் போயின என்று ஈஸ்வரனைக் கிட்டின சேதனன் இருக்கும் இருப்பைத் தான் என் பக்கலிலே இரா நின்றான்
புத்த்வா காலம் அதீ தஞ்ச முமோஹ-என்று இரா நின்றான் ஆயிற்று
இப்பால் பட்டது
அணைக்கு கிழக்குப் பட்ட நீரோ பாதி இ றே போன காலம்
இனி மேல் உள்ள காலமாகிலும்
யா தவங்களும் சேர்கொடேன் என்று
உன்னை யாதொரு தபஸ் ஸிலும் புக்கு கிலேசிக்க விடேன் என்று
அம்மி துணையாக ஆறு இழிகை இ றே இவனை விட்டு உபாயாந்தரத்தைப் பற்றுகை
அவங்கள் -நரக ஹேதுவான அவித்யாதிகள்
புறம்பே சில பிரயோஜனங்களைக் கொண்டு போக விடுதல் -அயோக்யன் என்று அகல விடுதல்
-உபாயாந்தர பரிக்ரஹம் பண்ண விடுதல் செய்யேன் என்று
என்று
ஏதத் வ்ரதம் மம-என்கிறபடியே சங்கல்ப்பித்து
என்னுள் புகுந்திருந்து
இப்படி சங்கல்பித்து நெடுங்கை நீட்டாக இருக்கை அன்றிக்கே
என் ஹிருதயத்திலே வந்து புகுந்து
புகுந்தாலும் போக்கு வரத்து உண்டாமாகில் வாலி போன வழியை அடைத்து மகா ராஜர் குறும்பு செய்தால் போலேயாம் என்று
ஸ்தாவர பிரதிஷ்டியாக இருந்து
புகுந்திருந்து
இவரை வர நிறுத்த ஒண்ணாதே இவருக்குமாக தான் புகுந்து இருந்தான் அத்தனை
புகுந்து செய்த கிருஷி ஏது என்னில்
தீதவம் கெடுக்கும்
தீ தாவது -பொய் நின்ற ஞானத்துக்கு முன்பு புத்தி பூர்வகமாகப் பண்ணிப் போந்த பாபம்
அவமாவது ஞானம் பிறந்த பின்பு ப்ராமாதிகமாகப் பண்ணினவை
இரண்டாலுமாக பகவத் பிராப்தி பிரதிபந்தக கர்மங்களைச் சொல்லுகிறது
அன்றிக்கே
கோக் நே சைவ ஸூ ராபே ச சோரே பக்ன வரதே ததா -நிஷ்க்ருதிர் விஹிதா சத்பி க்ருதக்னே நாஸ்தி நிஷ்க்ருதி என்கிறபடியே
நிஷ்க்ருதி உள்ள பாபங்களையும் இல்லாத பாபங்களையும் சொல்லிற்று ஆகவுமாம்
இவற்றைக் கெடுப்பது கஷாய பானத்தை பண்ணுவித்தோ என்னில்
அமுதம்
தன்னுடைய போக்யதையை அனுபவிப்பித்தாயிற்று
செந்தாமரை கட்குன்றம்
ரச நேந்த்ரியத்துக்கே யன்றிக்கே கண்ணுக்கும் போக்யமாய் இருக்கை
குன்றம்
இத்தலையில் தீதும் அவமும் போக்கினனாய் இருக்கை அன்றிக்கே தனக்கு உண்டாய் கழிந்தது என்று தோற்றும்படி
வடிவில் பிறந்த ஔஜ்வல்யம்
வ்யச நேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்று இருக்குமவன் இ றே

கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –
கோதாவது-த்ரவ்யாந்தர சம்சர்க்கத்தாலே வருமது
அவமாவது பாகத்தாலே வருமது
த்ர்ஷ்டாந்திகத்தில் கோதும் அவமும் ஆகிறது ஆன்ரு சம்சயத்துக்கு ஆதல் -இவனுக்கு உபகாரமாகவாதல் விஷயீ கரிக்கை
தனக்கு புறம்பாய் இருப்பதொரு போகய வஸ்து இல்லாதபடி தான் போக்யனாய் இருக்கும்
எம்மான்
நான் வேறு ஓன்று போக்கியம் என்று இராதபடி என்னைத் தோற்ப்பித்தவன்
என் கோவிந்தனே
‘கிருஷ்ணாவதாரமும் தமக்கு என்று இருக்கிறார்
ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோ -பெரியாழ்வார் திருமொழி -1-7-1-இ றே

—————————————————————————————-

அவதாரிகை –

என்னோடு பரம்பரயா சம்பந்தம் உடையாரையும் கூட என்னைப் போலே யாக்கினான் ஒருவனுடைய
சாமர்த்தியம் இருக்கும் படியே -என்று விஸ்மிதர் ஆகிறார் –

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழேழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே –2-7-4-

கோவிந்தன் –
ஸ்ரீ வைகுண்டத்தில் இல்லாததொரு சம்பத்து இ றே இது –
கோ சம்ருத்தியால் உண்டான ஐஸ்வர்யம் உள்ளது இங்கேயே இ றே –
குடக்கூத்தன் –
ப்ராஹ்மணர் ஐஸ்வர்யம் விஞ்சினால் யாகங்கள் பண்ணுமா போலே இடையர் ஐஸ்வர்யம் மிகுத்தால் செருக்குப் போக்கு விடுவது ஒன்றாயிற்று -குடக்கூத்தாவது -அவாக்ய அநாதர-என்று இருக்கக் கடவ வஸ்து தைர்ய பங்கம் பிறந்து செருக்குக்குத் தலைச் சாவி வெட்டி ஆடினபடி இ றே
கோவலன்
இவற்றுக்கு அடியான பிறப்புடையவன்-பிறந்து படைத்த ஐஸ்வர்யம் இ றே இது
என்று என்றே குனித்து
இக் குணங்களை மாறாதே சொல்லா நின்று கொண்டு -உடம்பு இருந்த இடத்தில் இராதே ஆடி –
அவனுடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அனுசந்தித்தால் இவருக்கு பேசாது இருக்க ஒண்ணாது இ றே –
தேவும் தன்னையும்
தேவும் -என்கிறது – ஐஸ்வர்யத்தை -தன்னை என்கிறது ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை -அது இ றே தானான தன்மை
ஆத்மானம் நாதி வர்த்தேதா -என்றான் இ றே ஆத்மபூதம் பரதம் நாதி வர்த்தேதா-என்கிறான் என்று சிலர் சொல்லுவார்கள் –
பட்டர் -நீரான தன்மை யாகிறது ஆஸ்ரித பரதந்த்ரனாகை-உம்முடைய தம்பி சொன்ன வார்த்தையை மறுத்து நீரான
தன்மையை இழவாதே கொள்ளும் என்கிறார் -என்றார்
உன் தன்மையை இழக்காதே பரதன் சொல் படி கேட்க வசிஷ்டர் பெருமாள் இடம் சொன்ன வார்த்தை –
பாடியாடத் திருத்தி –
என்று என்றே குனித்து என்கிற இடத்துக்கும் -பாடியாட -என்கிற இடத்துக்கும் வாசி என்-என்னில்
கீழ் சௌலப்ய பரம்
இங்கு ஐஸ்வர்யமும் செல்வமும் இரண்டும் உண்டு
விஷய பேதத்தால் சொள்ளவுமாம்
அன்றிக்கே என்று என்றே என்கிற இடம் அஹ்ருதயமான உக்தி மாத்ரமாய் -குனிக்கை யாவது உத்தியோகத்து அளவாய்
இங்கு சஹ்ருதயமாகப் பாடுவது ஆடுவதான படியாய்
என்று என்றே குனித்துப் பாடுவது ஆடுவதாம்படி -என்றாதல் –
திருத்தி –
தரிசு கிடந்த தரையைச் செய்காலாம் படி திருத்துவாரைப் போலே நித்ய ஸூ ரிகள் யாத்ரையே -யாத்ரையாம் படி திருத்தி –
என்னைக் கொண்டு -என் பாவம் தன்னையும் பாறக் கைத்து
என்னைக் கைக் கொண்டு -ஓர் உபாய அனுஷ்டானத்தை பண்ணுவித்து என்னில் -இப்போது இவர்க்கு அபசித்தாந்தமாம் —
பகவத் பிரசாதத்தாலே பெற்றார்க்கும் சொல்லுமதுக்கும் சேராது
ஆனால் என் சொல்லுகிறது என்னில் -சேற்றில் விழுந்த மாணிக்கத்தை எடுத்து கழுவி விநியோகம் கொள்ளுமா போலே என்னை
சுவீகரித்து என்னால் போக்கிக் கொள்ள ஒண்ணாத பாபங்களையும் உருமாய்ந்து போம்படி ஒட்டி
எமர் ஏழேழு பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன்
இது தான் என் ஒருவன் அளவன்றிக்கே என்னோடு சம்பந்தம் உடையார் ஏழேழு பிறப்பும் தன்னைக் கிட்டுகையே
ஸ்வ பாவமாக யுடையோம்பாம்படி பண்ணினான் –
எம்பிரான் விட்டுவே –
எனக்கு உபகாரகனான சர்வேஸ்வரன் –
நினைத்த கார்யம் செய்து தலைக் கட்ட வல்லவன்
சர்வ சக்தி மாட்டாதது உண்டோ -வ்யாப்தியும் தமக்காக -என்று இருக்கிறார் –

———————————————————————————-

அவதாரிகை –

திருமாலை யாண்டானோடே எம்பெருமானார் திருவாய் மொழி கேட்டருளுகிற நாளில் பாட்டுக்கள் தோறும் சில வார்த்தைகள் அருளிச் செய்து
இது அர்த்தமானாலோ -என்றால் -இது விஸ்வாமித்ரர் சிருஷ்டி -ஆளவந்தார் அருளிச் செய்யக் கேட்டறியேன் -என்று பணிக்குமாம் ஆண்டான்
ஆண்டான் இப்பாட்டுக்கு விச்வாமித்ர சிருஷ்டி வேண்டாவாய் இருந்ததீ-என்ன -இப்பாட்டால் தன அவயவ சௌந்தர்யத்தாலே
என்னைத் தனக்கு ஆக்கினான் -என்கிறார் -என்று அருளிச் செய்து அருளினாராம்
அதுவும் கிடக்க பட்டர் அருளிச் செய்வது ஓன்று உண்டு -ஆழ்வாரையும் ஆழ்வார் பரிகரத்தையும்-விஷயீ கரித்து அத்தாலே
திருமேனியிலே பிறந்த ஔஜ்வல்யத்தை சொல்லுகிறது -என்று
விசோதிதஜட ஸ்நாதசசித்ர மால்யாநுலேபன மகார்ஹவ ஸநோ ராமஸ் தஸ்தௌ தத்ர ஸ்ரீ யா ஜ்வலன் –யுத்த -131-15-என்று
பெருமாள் பிராட்டி உடன் பட்டாப்பிஷேக திருக் கோலத்துடன் நின்றாப் போலே என்றவாறு –

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-6-

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
மதகு திறந்தால் போலே விட்டு விளங்கா நின்றுள்ள -சிவந்த ஒளியை உடைத்தான தாமரை போலே யாயிற்று
நாம் தோற்று விழும் திருவடிகள் -தம்மை அணைத்த கை -குளிர நோக்கின திருக் கண்கள்
இவை உபமேயத்துக்கு உபமானம் நேராகப் போராமையாலே அது தன்னையே சிஷித்துச் சொல்கிறார்
அன்றிக்கே -விட்டுவுக்கு இலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் -என்று அந்வயம்-
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
சோபயன் தண்ட காரண்யம் -என்னுமா போலே இரா நின்றது வடிவு அழகு
தம்மை அணைத்த போதைக் குளிர்ந்த வடிவு இருந்தபடி –
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு
விட்டிலங்குகிற பிரகாசத்தை உடைய சந்தரனைப் போலே யாயிற்று ஸ்ரீ பாஞ்ச ஜன்யம்
சீர் சங்கு –
பகவத் பிரத்யாசத்தியாலே வந்த ஐஸ்வர்யம் -உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம் கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே –
பிரசாதத்தைச் சூடி கைப்புடையிலே கிடப்பாரைப் போலே அவன் வாயாலே ஊட்ட உண்டு -வடிவை பாராத் திருக்கையிலே சாயும் அத்தனை
சீர் சங்கு
உன் செல்வம் சால அழகியது -என்னும்படி வாயது கையதான ஐஸ்வர்யம் இ றே –
சக்கரம் பரிதி –
கண்டதில் மின்னிற்று ஒன்றை உபமானமாகச் சொல்லும் அத்தனை இறே -ஆதித்யனைப் போலே அன்றே திரு வாழி வாழ்வான் இருப்பது
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –
இவை இத்தனையும் தன புகராலே முட்டாக்கு இடுமாயிற்று திரு அபிஷேகம் –
சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து -ஆஸ்ரித விரோதி நிரசன்னா ஸ்வ பாவன் ஆனவனுக்கு –
விட்டுவுக்கு இலங்கு இத்யாதி -என்று முதலாக அந்வயம் –

——————————————————————————————–

அவதாரிகை –

தன பக்கல் நான் பிரவணன் ஆகைக்கு எம்பெருமான் வருந்திற்று எல்லாம் தன கிருபையாலே -என்கிறார் –

மது சூதனை யன்றி மற்றிலேன் என்றத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-

மது சூதனை யன்றி மற்றிலேன் என்று –
விரோதி நிரசன ஸ்வ பாவன் ஆனவனை ஒழிய வேறு சிலரைத் தஞ்சமாக வுடையேன் அல்லேன் என்றாயாயிற்று இவர் இருப்பது
சத்வம் தலை எடுத்த போது ஒரு கால் இவ்வார்த்தை சொல்லுமது நமக்கும் உள்ளது ஓன்று இ றே -இவர்க்கு வாசி என் என்னில்
எத்தாலும் கருமமின்றி –
அந்த உக்திக்குச் சேர்ந்த அனுஷ்டானம் உண்டாய் இருக்கும்
ப்ராப்ய ஆபாசங்களிலும் பிராபக ஆபாசங்களிலும் நெகிழ்ந்து -அவனை ஒழிந்த எல்லா வற்றாலும் ஒரு பிரயோஜனம் இன்றிக்கே இருப்பர்
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட -நின்றூழி யூழி தொறும்
ஸ்தோத்ராத்மகமான பாடல் -என்னுதல்
ஸ்துதிய குணங்களை விளாக்குலை கொள்ளும்படியான பாடல்கள் என்னுதல்
கல்பம் தோறும் கல்பம் தோறும் துதி சூழ்ந்த பாடல்களைக் கொண்டு பாடுவது ஆடுவதாம் படி பண்ணினான் –
நின்று
தேஹி மே-ததா தே- என்று பிரயோஜனங்களைப் பற்றி அகலுகை யன்றிக்கே இருக்கை-
இப்படி அவன் பண்ணுகைக்கு ஹேது என் -என்னச் சொல்கிறார் –
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய -விதி சூழ்ந்ததால்
விதி சூழ்ந்ததால் -எதிர் சூழல் புக்கு –
ஒருவனைப் பிடிக்க நினைத்தவன் அவன் போம் வரம்புக்கு எதிர் வரம்பே வருமா போலே -இவர் பிறந்த ஜன்மங்கள் தோறும்
தானும் எதிரே பிறந்து வந்தான் யாயிற்று
இவர் கர்மம் அடியாக பிறக்க -அவன் அனுக்ரஹத்தால் பிறந்து வந்த இத்தனை -சூழல் என்று அவதாரத்தைச் சொல்லக் கடவது இ றே –
னைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய -விதி சூழ்ந்ததால் -என்கிறார்
விதி என்கிறது பகவத் கிருபையை -பகவத் கிருபையை விதி என்பான் என் என்னில் -அவனுக்குத் தப்ப ஒண்ணாத தாகையாலே
நாம் நினைத்தவை தலைக் கட்ட வொட்டாத
கர்மம் போலே ஈஸ்வரன் நினைத்த கார்யங்களும் க்ருபா பரதந்த்ரனாய்த் தலைக் கட்ட மாட்டான்
வதார்ஹம் அபி காகுத்ஸ்த க்ருபயா பர்யபாலயத் -சுந்தர -38-34-
காகுத்ஸ்த-தங்களிலும் கிருபையே விஞ்சி ரஷித்துக் கொண்டு போரும் குடியிலே பிறந்தவர்
வதார்ஹமான காகத்துக்கு விட்ட அம்புக்கு உட்படக் கண்னழிவு பண்ணுமவர் இ றே –
எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே-
சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து -ஸ்ரீ வாமனனாய் வந்து அவதரித்து -மூன்று அடியாலே த்ரைலோக்யத்தையும் திருவடிகளின்
கீழே இட்டுக் கொண்டு எல்லாரோடும் பொருந்தின -சௌலப்யம் தானே பரத்வம் என்னும் படி என்னை விஷயீ கரிக்கைக்கு
ஒரு விதி சூழ்ந்தது -அம்மான் திருவிக்ரமனை என்னை அருள்கள் செய்ய -எனக்கு என்னவே ஒரு விதி சூழ்ந்தது

—————————————————————————————

அவதாரிகை –

உன்னுடைய குண அனுசந்தான பூர்வகமாக ஸ்துதி பிரணாமங்களைப் பண்ணிக் கொண்டு உன்னை அனுபவிக்கும்
இதுவே பிரயோஜனமாய் இருக்கும் மனஸை எனக்குத் தந்தாய் -என்கிறார் –

திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்த பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-

திரிவிக்ரமன் –
மூன்று அடிகளாலே சகல லோகங்களையும் தன கால் கீழே இட்டுக் கொண்டவன்
செந்தாமரைக் கண் எம்மான் –
நோக்காலே என்னைத் தன கால் கீழே இட்டுக் கொண்டவன்
என் செங்கனி வாய் -உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன்
இவர் ஜிதம்-என்ற பின்பு அவன் ஸ்மிதம் பண்ணின படி -என்னை அனந்யார்ஹன் ஆக்குகையாலே சிவந்த கனிந்த
திரு வதரத்தின் உருவிலே -அழகிலே -நிறத்திலே
பொலிந்த பரபாகத்தாலே சம்ருத்தமாய் பரிசுத்தமான ஸ்படிகம் போலே இருக்கிற திரு முத்து நிரையினுடைய நிறத்தை யுடையவன்
என்று என்று உள்ளி –
இதர விஷயங்களினுடைய ஸ்மிதத்தில் உண்டான ஸ்ம்ருதி அகவாய் கண்டவாறே விட்டு அல்லது நிற்க ஒண்ணாத தாய் இருக்கும் இ றே
இது மாறாதே அனுசந்திக்கலாம் இ றே
பரவிப் பணிந்த
அக்ரமாகக் கூப்பிட்டு -நிர்மமனாய்த் திருவடிகளில் விழுந்து
இப் பேறு தான் ஒரு நாள் உண்டாய் மற்றை நாள் மறுக்கை யன்றிக்கே
பல்லூழி யூழி நின் பாத பங்கயமே மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் –
கல்பம் தோறும் கல்பம் தோறும் பரம போக்யமான உன் திருவடிகளையே அநந்ய பிரயோஜனனாய்க் கொண்டு தொழும் மனசைத் தந்தாய் –
விஷயாந்தரங்கள் அஸ்தரம் ஆகையாலும் அபோக்கியம் ஆகையாலும் ஒன்றையே பற்றி நிற்க விஷயம் இல்லை யாகையாலே
மனஸ் ஸூ -சஞ்சலம் ஹி மன –ஸ்ரீ கீதை -6-34-என்று சஞ்சலமாய் இ றே இருப்பது
அப்படி இன்றியே நித்யமுமாய் நிரதிசய போக்யமுமாய் இருக்கையாலே மருவித் தொழும் மனசைத் தந்தாய் என்றுமாம்
பழைய நெஞ்சைத் திருத்தின அளவன்றிக்கே கருவுகலத்தில் ஒரு நெஞ்சைத் தந்தாய் –திவ்யம் ததாமி தே -ஸ்ரீ கீதை -11-8-போலே –
பழைய நெஞ்சு -இது என்று பிரத்யபிஜ்ஞை பண்ண ஒண்ணாத படி இரா நின்றது
என் வாமனனே –வல்லை காண்
கொள்கைக்கும் கொடுக்கைக்கும் உனக்கு ஒன்றேயோ பரிகரம்-
வாமன வேஷத்தைக் காட்டி என் நெஞ்சைத் திருத்தித் தந்தாய்
அவ்வழகாலே மகா பலி என்னது என்று இருந்த பூமியை அபகரித்தாய்
வல்லை காண் -என்று உகக்கிறார் –

———————————————————————————————

அவதாரிகை –

எம்பெருமான் தம் திறத்தில் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் காணாமல் தடுமாறுகிறார் –

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-

வாமனன் –
வடிவு அழகைச் சொல்லுதல் -என்னுதல்
நன்மைகளைத் தருமவன் என்னுதல் –
என் மரகத வண்ணன் –
ஸ்ரமஹரமான வடிவு அழகை என்னை அனுபவிப்பித்தவன்
தாமரைக் கண்ணினன்-
வடிவு அழகே அன்றிக்கே அகவாயில் தண்ணளிக்கு பிரகாசகமான திருக் கண்களை உடையவன்
காமனைப் பயந்தாய் –
வடிவு அழகாலே நாட்டை வெருட்டித் திரிகின்ற காமனுக்கு உத்பாதகன் ஆனவனே
அனுசந்தானாத்தாலே ஒரு வைசத்யம் பிறந்தவாறே முன்னிலை போலே தோற்றும் -அப்படியும் சொல்லிக் கூப்பிடுவார்
அதுக்கு மேலே சில பரிமாற்றங்களை ஆசைப்பட்டு அது கிடையாமையாலே படர்க்கையாகவும் சொல்லிக் கூப்பிடுவார்
இவை இரண்டுக்கும் அடி அபி நிவேசம்
என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
இத் திரு நாமங்களை இப்படி வாயாலே மாறாதே சொல்லா நிற்கத் திருவடிகளிலே விழுந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவான நெஞ்சு இன்றிக்கே மோஷத்துக்கே ஏகாந்தமான நெஞ்சை உடையனாய்
பரி சுத்த அந்தக்கரணனாய்-அதின் பலமாய் வருமதே ஜன்மம் போமது
பிறவித் துழுதி உண்டு –தூர் -துக்கம் -அது நீங்கும்
படியாக
என்னைத் தீ மனம் கெடுத்தாய்
அம்ருதத்தையும் விஷத்தையும் ஒக்க விரும்புவாரைப் போலே உன்னையும் உகந்து ஷூத்ர விஷயங்களையும்
உகக்கும் பொல்லாத நெஞ்சைத் தவிர்த்தாய்
நல்ல நெஞ்சைத் தந்த அளவன்றிக்கே -பொல்லாத நெஞ்சைக் கெடுப்பதும் செய்தாய் –
தேஷாம் சத்த யுக்தாநாம் பஜதாம் -ஸ்ரீ கீதை -10-10-
தேஷா மேவா நுகம் பார்த்தம் அஹம் அஜ்ஞ்ஞானாஜம் தம நாசயாமி -ஸ்ரீ கீதை -10-11-போலே
உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே —
பண்ணின உபகாரத்தின் கனத்தாலே பிரத்யுபகாரம் பண்ணி யல்லது தரிக்க மாட்டு கிறிலேன்-அதுக்கு விரகு காண் கிறிலேன்
நான் ஒரு உபகாரம் கொள்ளாது ஒழிதல்-நீ குறைவாளன் ஆதல் செய்யப் பெற்றிலேன் -புஷ்கலனாய் இருக்கிற
உனக்கு நான் எத்தைச் செய்வேன்

—————————————————————————————–

அவதாரிகை –

ஆடியாடியில் பிறந்த வ்யசனம் எல்லாம் நான் மறந்து மிகவும் பிரீதனாம் படி பண்ணி இந்த்ரியங்களைத் தான் இட்ட வழக்காக்கினான் என்கிறார் –
பக்தி பூர்வகமாக உன்னை அனுபவியா நிற்கச் செய்தே -பிரதி பந்தகங்களும் நீங்கி நிரதிசய ஹர்ஷமும் பிறக்கும்படி
உன்னை என்னுள்ளே வைத்தாய் என்று ப்ரீதர் ஆகிறார் என்னுமாம் –

சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –2-7-9-

சிரீ இதரன் –
பெரிய பிராடியாரைத் திரு மார்விலே உடையவன்
செய்ய தாமரைக் கண்ணன்
நீர் பாய்ந்த பயிர் செவ்வி பெற்று இருக்குமா போலே -அவள் திரு மார்விலே இருக்கையாலே குளிர்ந்த கண் அழகை உடையவன்
வஷஸ் ஸ்தலேந ஸ்ரீ யமுத்வஹன் விபு விஸ்தாரி பத்மோத் பல பத்ர லோசந –ஸ்ரீ விஷ்ணு தர்மம் என்கிறபடியே
என்று என்று
இப்படி மாறாதே சொல்லி
இராப்பகல் வாய் வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீ இய தீ வினை மாள
இன்பம் வளர வைகல் வைகல் இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –
இவர் பக்தி பரவசர் ஆகையாலே இவருடைய தேக யாத்ரை இருக்கும் படி என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும் படி
அன்றிக்கே -பட்டர் -இராப்பகல் வாய் வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீ இய தீ வினை மாள-என்கிற இடத்தளவும் ஆடியாடியிலே இவர்க்கு ஓடின தசையாய்
இன்பம் வளர வைகல் வைகல் இரீஇ உன்னை என்னுள் வைத்தனை-என்கிற இது அந்தாமத்து அன்பு தோடங்கி கேசவன் தமர் அளவும்
வர உண்டான பரிதியைச் சொல்லுகிறது -என்று
இராப்பகல் வாய் வெரீ இ -என்கிறது -இவள் இராப்பகல் வாய் வெரீ இ -என்றத்தை
அலமந்து -என்கிறது எங்கும் நாடி நாடி என்றத்தை
கண்கள் நீர் மல்கி -என்கிறது -தன குவளை ஒண் கண்ண நீர் கொண்டால் -என்றத்தை
வெவ்வுயிர்த்து உயிர்த்து-என்கிறது -உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் -என்றத்தை
மரீ இய தீ வினை மாள
ஆயிரம் ஆண்டு முதலையின் கையிலே ஆனை இடர் பட்டால் போலே -ஆடியாடியில் ஆற்றாமை
இவருக்கு இப்படி பொருந்தின விஸ்லேஷ வ்யசனம் ஆரும்படியாக
இன்பம் வளர
அந்தாமத்து அன்பு தொடங்கப் பிறந்த ப்ரீதி
வைகல் வைகல்
கழிகிற காலம் தோறும்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை
உன்னை என்னுள்ளே இருத்தி வைத்தனை
யென்னிருடீ கேசனே –
எனக்குப் பரிகரமாய் விரோதித்த இந்த்ரியங்களும் உன் பக்கலிலே படையற்றன
பரம சேஷியைக் கண்டார் த்வார சேஷிகள் அளவில் நில்லார்கள் இ றே –

———————————————————————————-

அவதாரிகை –

நமக்கு உபகாரகன் ஆனவனை நீ ஒரு காலும் விடாதே கண்டாய் -என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்

இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-

இருடீகேசன் எம்பிரான் –
தன்னை அறிகைக்கு பரிகரமாக தந்த இந்த்ரியங்களைக் கொண்டு சப்தாதி விஷயங்களை விரும்பி நான் அனர்த்தப் படாமே
தன்னையே அறிகைக்கு பரிகரமாம் படி பண்ணி உபகரித்த மகா உபகாரகன்
இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான் –
இவருடைய இந்த்ரிய வசதியைத் தவிர்த்த படி -இலங்கையில் ராஷச ஜாதியில் விபீஷணாதிகளை வைத்து முருடரான
ராவணாதிகளை நிரசித்தால் போலே யாயிற்று
எம்மான் அமரர் பெம்மான்
இந்த்ரியங்களுடைய இதர விஷய பிராவண்யத்தை தவிர்த்த மாத்ரம் அன்றிக்கே நித்ய ஸூரிகளுக்கு தன்னை அனுபவிக்கக்
கொடுக்குமா போலே -எனக்குத் தன்னை அனுபவிக்கத் தந்தவன் –
என்று என்று
இப்படிச் சொல்லா நின்று கொண்டு
தெருடியாகில் நெஞ்சே வணங்கு
தெருளுதியாகில் -ஜ்ஞான பிரகாச த்வாராமிகில் -நெஞ்சே வணங்கு -ஜ்ஞான இந்த்ரியங்களுக்கும் அறிவுக்கும் வாய்த்தலையான
ஏற்றம் உனக்கு உண்டாகில் உபகாரகன் ஆனவன் திருவடிகளிலே விழப் பார் –
திண்ணம் அறி
இத்தை ஒலக்க வார்த்தை என்று இராதே த்ருடமாகப் புத்தி பண்ணு
அறிந்து
அறிகை தானே போரும் பிரயோஜனம் -அதுக்கு மேலே
மருடி யேலும் விடேல் கண்டாய்
உனக்கு ஒரு பிச்சு உண்டு இ றே-அவன் வைலஷண்யத்தைப் பாரா வருவது –
நாம் இவ்விஷயத்தை தூஷிக்கை யாவது என்-என்று அயோக்ய அனுசந்தானத்தாலே அகலப் பார்ப்பது ஓன்று உண்டு -அத்தைத் தவிரப் பார் கிடாய் –
நம்பி பற்ப நாபனையே —
கெடுவாய் இவ்விஷயத்தை விட்டு புறம்பே போய் மண்ணை முக்கவோ
அவன் குண பூர்த்தி இருந்த படி கண்டாயே
வடிவு அழகு இருந்தபடி கண்டாயே
முன்பு நமக்கு உபகரித்த படி கண்டாயே –

——————————————————————————————–

அவதாரிகை –

அத்யந்த விலஷணனாய் இருந்து வைத்து -அத்யந்த ஸூ லபனாய் என்னை அடிமை கொண்டவன் -என்னை யல்லது அறியானானான் என்கிறார் –

பற்பநாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே –2-7-11-

பற்பநாபன் –
சகல ஜகத் உத்பத்தி காரணமான திரு நாபி கமலத்தை உடையவன்
உயர்வற உயரும் பெரும் திறலோன் –
பேசப் புக்கால் பரிச்சேதித்துப் பேச ஒண்ணாத படியான சௌர்ய வீர்யாதி குண ப்ரதையை உடையவன்
திறல் -பர அபிபுவன சாமர்த்தியம் –அல்லாத குணங்களுக்கும் உப லஷணம் இது –
காரணத்வ பிரயுக்தமான மேன்மை அது -பர அபிபவன சாமர்த்தியம் தொடக்கமான குணங்கள் அவை –
இப்படி இருக்கிறவன்
எற்பரன் –
மதேக சித்தன்
என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
ஔதார்யத்தில் பிரசித்தமாய் இருப்பது கல்பகம் இ றே -அதில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது -என்னை யாக்கிக் கொண்டு
அர்த்திகளை உண்டாக்கிக் கொடுக்கும் அது இல்லை இ றே அதுக்கு
எனக்கே –
ஒருவனுக்கே குறைவறக் கொடுக்குமது இல்லை இ றே அதுக்கு
தன்னைத் தந்த –
சில பிரயோஜனன்களை கொடுக்குமல்லது-தன்னைக் கொடுக்குமது இல்லை இ றே அதுக்கு
என்னமுதம் –
தான் போக்யமாய் இருக்குமது இல்லை இ றே அதுக்கு –
எனக்கு நிரதிசய போக்யமானவன் –
கார் முகில் போலும் வேங்கட நல வெற்பன் –
இந்த ஔதார்யத்துக்கு அடி திருமலையின் சம்பந்தம்
சஹ்யம் பற்றின ஔதார்யம் இ றே
கொடுத்தத்தை நினையாதே கொடுக்கும் மேகம் போன்ற ஸ்வ பாவத்தை உடைய திருமலையை தனக்கு வாசஸ் ஸ்தானமாக உடையவன்
விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே —
நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய் இருந்து வைத்து -ஆஸ்ரிதரான இடையருக்கும் இடைச்சிகளுக்கும் கட்டவும் அடிக்கவுமாம் படி
வந்து அவதரித்து அச் செயலாலே அடிமை கொண்டவன் –

——————————————————————————–

அவதாரிகை –

எற்பரன் என்கிறபடியே என்னளவில் அவன் செய்தால் போல் செய்வார்க்கு அவனைக் காணலாம் அல்லது
ஸ்வ யத்னத்தாலே அறிவோம் என்பார்க்கு ஆரியப் போகாது என்கிறார்

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வணனையே –2-7-12-

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை ஆமோ தரமறிய ஒருவர்கென்றே யாயிற்று ப்ரஹ்மாதிகள் சொல்லுவது
தாமோதரனை –
அவன் ஆஸ்ரித பரதந்த்ரனாய் நிற்கிற நிலையை அறியப் போமோ
தனி முதல்வன் –
சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் என்கிறபடியே த்ரிவித காரணமும்
தானேயாய் இருக்கிற இருப்பை அறியப் போமோ
ஞாலம் உண்டவனை –
உண்டாக்கி விடுகை யன்றிக்கே ஆபத் சகனாய் நிற்கும் நிலையை அறியப் போமோ –
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும் ஆமோ தரமறிய-
ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு என்னா நிற்பார்கள்-தாங்கள் எல்லாம் அறிந்தார்களாக நினைத்து தொழுமவர்கள்
ஆமோ தரம் அறிய ஒருவற்கு என்றே தொழும்வராய் -தாமோதரன் உருவாகிய சர்வேஸ்வரனுக்கு சரீரவத் விதேயரான
சிவர்க்கும் திசை முகர்க்கும் தரமறிய யாமோ
அல்லாதாரில் காட்டில் தாங்கள் அறிந்தார்களாக அபிமானித்து இருக்கிறவர்களாலே தான் அறியப்போமோ –
ஆரைத் தான் என்னில்
எம்மானை என்னாழி வணனையே —
குளப்படியில் கடலை மடுத்தால் போலே தான் குண ஆர்ணவமாய் இருக்கிற இருப்பை எனக்கு அறிவித்தவனை –
இப்படி அவன் தானே காட்டக் கண்ட நான் கண்டால் போலே காண்பார்க்கு காணலாம் அத்தனை அல்லது –
ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு அறியப் போமோ –
தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள் தாமோதரன் உருவாகிய
சிவற்கும் திசை முகற்கும் எம்மானை என்னாழி வணனையே தரமறிய ஆமோ -என்று அந்வயம் –

————————————————————————————————-

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றவர்களை இத் திருவாய் மொழி தானே எம்பெருமான் திருவடிகளைச் சேர்த்து விடும் -என்கிறார் –

வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூத்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே–2-7-11-

வண்ண மா மணிச் சோதியை –
அழகிய நிறத்தை உடைத்தாய் -பெரு விலையனான ரத்னம் போலே இருக்கிற விக்ரகத்தை உடையவனை –
வண்ணம் -நிறம்
மா மணி -மா கறுப்பு -கறுத்த மணி போலே -நீல ரத்னம் போன்ற வடிவில் தேஜஸ் சை உடையவன் -என்றுமாம் –
இவ் வழகைக் கொள்ளை கொள்ளும் போக்தாக்களைச் சொல்லுகிறது -அமரர் தலைமகனை –
ஒரு நாடாக அனுபவியா நின்றாலும் தன அழகைப் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கிறவனை
கண்ணனை
அவர்களே அனுபவித்துப் போகாமே -இங்கு உள்ளாரும் அனுபவிக்கும் படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனை
நெடுமாலைத்
ஒருவனை விஷயீ கரித்தால்-அவன் அளவில் தலைக் கட்டாத வ்யாமோஹத்தை உடையவனை –
தென் குருகூத்ச் சடகோபன் பண்ணிய -தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும் -பண்ணில்
வேதம் போலே பிறப்பிலி யன்று -அபௌருஷேயம்-என்னும் அதிலும் வீறு உண்டாய் இருக்கிறதாயிற்று-வக்த்ரு விசேஷத்தாலே
இவை பண்ணிலே யாயிற்று நடந்தது
பன்னிரு நாமப் பாட்டு-
வைஷ்ணத்வ சிஹ்னமான திரு நாமங்களை வைத்துப் பாடினவை –
இவை செய்வது என் என்னில்
அண்ணல் தாள் அணைவிக்குமே–
சர்வேஸ்வரன் திருவடிகளிலே சேர்த்து விடும்
இத் திருவாய் மொழி யோட்டை சம்பந்தம் தானே கேசவன் தமர் ஆக்கி விடும் –

முதல் பாட்டில் தம்மோடு சம்பந்தி சம்பந்திகளும் எல்லாரும் தம்மைப் போலே விஷயீ க்ருதரானார்கள் -என்றார்
இரண்டாம் பாட்டில் அதுக்கு அடி நாராயணன் ஆகையாலே என்றும் அந் நாராயண சப்தார்த்தத்தையும் அருளிச் செய்தார் –
மூன்றாம் பாட்டில் இப்படி விஷயீ கரிக்கைக்கு ஹேது சொன்னார் –
நாலாம் பாட்டில் சர்வ காலமும் தன்னையே அனுபவிக்கும் படி பண்ணினான் என்றார்
அஞ்சாம் பாட்டில் இப்படி தன்னை அனுபவித்ததனாலே அவன் வடிவில் வந்த புகரைச் சொன்னார்
ஆறாம் பாட்டில் இப்படி என்னை விஷயீ கரிக்கைக்கு அடி நிர்ஹேதுக கிருபை என்றார்
ஏழாம் பாட்டில் சர்வ காலமும் தன்னையே அனுபவிக்கும் படியான நெஞ்சைத் தந்தான் என்றார்
எட்டாம் பாட்டில் தந்த அளவன்றிக்கே விரோதியான நெஞ்சையும் போக்கினான் என்றார்
ஒன்பதாம் பாட்டில் தன்னுடைய கல்யாண குணங்களையே நான் அனுபவிக்கும் படி என் ஹிருதயத்திலே புகுந்தான் -என்றார்
பத்தாம் பாட்டில் அனுபவ விரோதியான இந்த்ரியங்களையும் தன் வழி யாக்கிக் கொண்டான் என்றார்
பதினோராம் பாட்டில் ஏவம் பூதனானவன் என்னை அல்லாது அறியானானான் என்றார்
பன்னிரண்டாம் பாட்டில் என்னைப் போலே காண்பார்க்கு காணலாம் அது ஒழிய ஸ்வ யத்னத்தால் அறியப் போகாது என்றார் –
நிகமத்தில் பலம் சொல்லித் தலைக் கட்டினார்

——————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி – -2-6– –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

October 24, 2015

பிரவேசம் –

ஆடியாடியிலே ஆர்த்தி தீர வந்து சம்ச்லேஷித்த படி சொல்லிற்று அந்தாமத்தன்பு –
அந்த சம்ச்லேஷத்தால் வந்த ப்ரீதி அவனது என்னும் இடம் சொல்லுகிறது இத் திருவாய் மொழி
பிரணயி ப்ரீத்யநுசந்தானம் காண் இது -என்று ஆளவந்தார் அருளிச் செய்யும் படி
ஆழ்வார் விஷயமாக ஈஸ்வரனுக்கு உண்டான ப்ரீதி சொல்லுகிறது இதில்
ஊனில் வாழ் உயிரிலே -ஆழ்வார் தாம் பகவத் அனுபவம் பண்ணி தமக்கு அவன் பக்கலில் உண்டான ப்ரேமம் அவன் அளவிலே பர்யவசியாதே
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ என்று ததீயர் அளவும் சென்ற படி சொல்லிற்று –
இத்திருவாய் மொழியில் -சர்வேஸ்வரன் ஆழ்வார் பக்கல் பண்ணின ப்ரேமம் இவர் ஒருவர் அளவன்றிக்கே சம்பந்தி சம்பந்திகள்
அளவும் வெள்ளம் இடுகிறபடி சொல்லுகிறது
இரண்டு தலைக்கும் ரசம் அதிசயித்தால் சம்பந்தி சம்பந்திகள் அளவிலும் செல்லும் இறே
எமர் கீழ் மேல் எழு பிறப்பும் விடியா வென் நரகத்து என்றும் சேர்தல் மாறினர்-என்கிறார் இறே

உபய விபூதி உக்தனாய் -சமஸ்த கல்யாண குணாத்மகனாய்-சர்வ பிரகார பரி பூர்ணனான தான் தன் படிகள் ஒன்றும் குறையாதபடி
வந்து இவரோடு சம்ச்லேஷித்து –அந்த சம்ச்லேஷம் தான் தன் பேறு என்னும் இடம் தோற்ற ஹ்ருஷ்டனாய் -அநாதி காலம்
எதிர் சூழல் புக்கு திரிந்த வஸ்துவை -ஒருபடி பிராபிக்க பெறுவோமே –இவர் தாம் இனி நம்மை விடில் செய்வது என் என்று அதிசங்கை பண்ணி
அவன் அலமாக்குகிற படியைக் கண்டு -நீ இங்கன் பட வேண்டா என்று அவன் அதி சங்கையை பரிஹரித்து அவனை உளன் ஆக்குகிறார்
வைதேஹி ரமசே கிச்சித் சித்ர கூடே மயா சஹ -அயோத்யா -94-18-என்றால் போலே யாயிற்று இதில் ரசமும்
மைதிலி உன்னை அறிந்தாயே -நம்மை அறிந்தாயே -கலக்கிற தேசம் அறிந்தாயே -என்றார் இறே பெருமாள்

——————————–

அவதாரிகை —
அந்தாமத் தன்பிலே ஆழ்வார் உடனே வந்து கலந்து தான் பெறாப் பேறு பெற்றானே இருக்கச் செய்தே -இவர் –
அல்லாவியுள் கலந்து -என்றும்
என் முடிவு காணாதே என்னுள் கலந்தான் -என்றும் தம்முடைய நைச்யத்தை அனுசந்தித்தவாறே
-வளவேழ் உலகு தலை எடுத்து இன்னம் இவர் நம்மை விடில் செய்வது என் என்று
எம்பெருமானுக்குப் பிறந்த அதி சங்கையை நிவர்த்திப்பிக்கிறார்

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி
வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1-

வைகுந்தா –
நித்ய விபூதி உக்தன் தம்முடனே வந்து கலந்தான் -என்று ஹ்ருஷ்டராகிறார் என்னும் இடம் தொடருகிறது
அவனது முதல் பேரைச் சொல்லுகிறார்
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள்-ஆர்ய புத்ர -என்னுமா போலேயும் திருவாய்ப்பாடியில் பெண்கள் கிருஷ்ணா -என்னுமா போலேயும் -வைகுந்தா -என்கிறார் –
போகம் உத்கூலமானால் பரஸ்பரம் நாம க்ரஹணத்தாலே தரிப்பது என்று ஓன்று உண்டு இ றே
மணி வண்ணனே
அணைத்த போதை ஸ்பர்சத்தாலே திமிர்த்துச் சொல்கிறார் -நீல ரத்னம் போலே குளிர்ந்த வடிவை உடையவனே
என் பொல்லாத் திருக் குறளா –
மகா பலி பக்கலிலே இரப்பாளனாய் நின்றால் போலே காணும் இவரைப் பெறுகைக்கு சிறாம்பி இரப்பாளனாய் நின்ற நிலை –
அழகிது -என்னில் நாட்டு ஒப்பம் என்று அழகில் விசஜாதியைச் சொல்லுதல்
கண் எச்சில் வாராமைக்கு கரி பூசுகிறார் என்னுதல்-
வைகுந்தா -என்று மென்மை சொல்லிற்று
மணி வண்ணனே -என்று வடிவு அழகு சொல்லிற்று –
என் பொல்லாத் திருக் குறளா -என்று சௌலப்யம் சொல்லிற்று –
இம் மூன்றும் கூடினதாயிற்று பரத்வமானது
என்னுள் மன்னி –
இந்த்ரன் ராஜ்ய லாபம் பெற்றுப் போனான்
மகா பலி ஔதார்ய லாபம் பெற்றுப் போனான்
அவ்வடிவு அழகுக்கு ஊற்று இருந்தது இவர் நெஞ்சிலே யாயிற்று
என்னுடைய ஹ்ருதயத்தே வந்து நித்ய வாசம் பண்ணி
வைகல் வைகல் தோறும் அமுதாய
கழிகிற காலம் தோறும் எனக்கு அபூர்வாம்ருதவத் போக்யனானவன் –
வானேறே –
நித்ய ஸூ ரிகளோடே கலந்து அவர்களை தோற்பித்து மேணானித்து இருக்குமா போலே யாயிற்று
இவரோடு கலந்து இவரைத் தோற்பித்து இருந்த இருப்பு -ஏறு என்கிறது —பின்பும் அவன் ஏற்றமே விஞ்சி இருக்கை –

தம்முடைய அனுபவ விரோதிகளைப் போக்கின படி சொல்லுகிறார் –
செய்குந்தா வரும் தீமை –
செய்யப்பட்டு -குந்தாவாய் -தப்பாவே -இருக்கும் தீமை என்னுதல்
செய்கும் -செய்யப்பட்டு தாவரும் தீமை -கடக்க அரிதான தீமை-என்னுதல்
உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் —
உன் பக்கலிலே நிஷித்த பரராய் இருப்பார்க்கு வாராதபடி பரிஹரித்து -ஆசூர பிரக்ருதிகள் மேலே போகும்படியான சுத்தியை உடையவனே
முன் பிரதிகூல்யம் பண்ணினவர்கள் அனுகூலித்து நாலடி வர நின்றவாறே பின்னை அவர்கள் சத்ருக்கள் மேலே பொகடுமாயிற்று
த்விஷந்த பாபக்ருத்யாம் -என்கிறபடியே கடலுக்கு தொடுத்த அம்பை அவன் முகம் காட்டினவாறே மருகாந்தரத்தில் அசுரர்கள் மேலே
விட்டால் போலே அங்கன் ஒரு போக்கடி கண்டிலனாகில்-உரஸா தாரயாமாச பார்த்தம் சஞ்ஜாத்ய மாதவ -என்று பகதத்வன் விட்ட சத்தியை
அர்ஜுனனைத் தள்ளி தன் அந்தப்புரத்திலே ஏற்றால் போலே தான் ஏறிட்டுக் கொண்டு அனுபவித்தல் செய்யும் அத்தனை
பாபங்களாவன தான் -அசேதனமாய் இருப்பன சில க்ரியா விசேஷங்களாய்-அவை செய்த போதே நசிக்கும்
கர்த்தா அஜ்ஞன் ஆகையாலே மறக்கும்
சர்வஜ்ஞ்ஞன் உணர்ந்து இருந்து பல அனுபவம் பண்ணுவிக்க அனுபவிக்கும் அத்தனை இ றே
அவன் மார்விலே ஏற்றுக் கொள்ளுகையாவது -பொறுத்தேன் -என்னத் தீரும் அத்தனை இ றே
செய்குந்தா–
அபூர்வம் காண் -சக்தி காண் –பல அனுபவம் பண்ணுவிக்கிறது என்னில் ஒரு சர்வஜ்ஞ்ஞன் செய்விக்கிறான் என்கை -அழகு இது இ றே –
குந்தம் என்று -குருந்தம் என்றபடியாய்-அதன் பூ வெளுத்தா யாயிற்று இருப்பது -அவ்வழியாலே சுத்தியை நினைக்கிறது-
அன்றிக்கே –
குந்தா -என்று திரு நாமம் -குமுத குந்தர குந்த -என்கிறபடியே –
உன்னை
-ஆஸ்ரீதபஷபாதியான உன்னை
நான் –
ஆடியாடியிலே விடாய்த்த நான் -நீ உஜ்ஜீவிப்பிக்க உன்னாலே உளேனான நான்
பிடித்தேன் கொள்
பிடித்தேனாகவே திரு உள்ளம் பற்று
முன்பு சொல்லிப் போரும் வார்த்தை யன்றோ இது என்னா -அங்கன் அல்ல
சிக்கென பிடித்தேன் கொள்
என்னைப் பெறுகைக்கு பூர்வஜனான நீ விடிலும் விடாத படி நான் பிடித்தேனாகவே திரு உள்ளம் பற்ற வேணும்
அவனை மாஸூச -என்கிறார் –

———————————————————————————

அவதாரிகை –

அவன் -இவர் நம்மை விடில் செய்வது என் -என்று அதிசங்கை பண்ணின படியைச் சொல்லிற்று கீழில் பாட்டில்
இவர் விடேன் என்ற பின்பு அவனுக்கு வடிவில் பிறந்த பௌஷ்கல்யம் சொல்கிறது இப்பாட்டில்

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –2-6-2-

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள் ஒக்கவே விழுங்கிப் புகுந்தான்
நாம் ஆழ்வாரை அனுபவிக்கும் போது-செருப்பு வைத்து தொழப் புக்கால் போலே ஆக ஒண்ணாது என்று பார்த்து
ஜகத் ரஷணத்துக்கு வேண்டும் சம்விதானம் எல்லாம் பண்ணி
அநந்ய பரனாய் அனுபவித்து போக மாட்டாதே இருந்தான் -ராஜாக்கள் அந்தப்புரத்தில் புகுவது நாட்டுக் கணக்கு அற்ற பின்பு இ றே
அத்யல்பமாய் இருப்பதொரு பதார்த்தமும் தன் பக்கலிலே நின்றும் பிரி கதிர்ப்பட்டு நோவு படாத படியாகத் தன் சங்கல்ப்ப சஹச்ர
ஏக தேசத்தில் லோகங்களை ஒரு காலே வைத்து இனி போராதபடி புகுந்தான்
சிக்கெனப் புகுந்தான்
அநந்ய பிரயோஜனமாகப் புகுந்தான் என்றுமாம்
புகுந்ததற் பின் மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் –
இவரோடு வந்து கலந்து -அக்கலவியில் அதி சங்கையும் தீர்ந்த பின்பாயிற்று -விகசித சஹஜ சார்வஜ்ஞனுமாய் விஜ்வரனுமாயாயிற்று
தனக்கு நித்ய தர்மமான ஜ்ஞானத்தை உடைத்தானே ஆத்மவஸ்து -கர்ம நிபந்தமாக ஒரு தேஹத்தை பரிஹரித்து இந்த்ரியத்வாரத்தை
அபேஷித்துக் கொண்டு பிரசரிக்க வேண்டும்படி போந்தது –
ஒரு நாள் வரையிலே பகவத் பிரசாதமும் பிறந்து ஜ்ஞான சங்கோசமும் கழியக் கடவதாய் இருக்கும் இறே
அங்கன் ஒரு ஹேதுவும் இன்றிக்கே இருக்கிறவனும் இவரோடு வந்து கலப்பதற்கு முன்பு சங்கு சீதா ஜ்ஞானனாய் இவரோடு கலந்த பின்பு
விகசிதமான ஜ்ஞான வெள்ளத்தை யுடையவனானான் —திவ்ய மங்கள விக்ரஹமும் புகர் பெற்றது இப்போது
துளக்கற்ற –
ஆடியாடியில் ஆற்றாமையால் வந்த உள் நடுக்கமும் தீர்ந்தானாய் இரா நின்றான் –
விஜ்வர -எண்ணக் கடவது இறே
இவர்நம்மை விடில் செய்வது என் -என்கிற உள் நடுக்கமும் அற்றது இப்போது
அமுதமாய் –
ப்ரமுமோத ஹ -என்கிறபடியே அவன் தம்மை விரும்பி போக்யமாய் நினைத்து இருக்கிற இருப்பு தமக்கு போக்யமாய் இருக்கிறபடி
எங்கும் – பக்க நோக்கு அறியான் –
ஆழ்வார் பக்கல் இவனுக்கு உண்டான அதிமாத்ரா ப்ராவண்யத்தைத் தவிர்க்க வேணும் -என்று நாய்ச்சிமார் திரு முலைத் தடத்தாலே
நெருக்கிலும் அவர்கள் பக்கலிலே கண் வைக்க மாட்டு கிறிலன்-
இங்கே ஆளவந்தாருக்கு குருகைக் காவல் அப்பன் அருளிச் செய்ததாக அருளிச் செய்யும் வார்த்தை
-அப்பன் ஸ்ரீ பாதததிலே ஒரு ரகஸ்ய விசேஷம் உண்டு என்று மணக்கால் நம்பி அருளச் செய்ய -அது கேட்க வேணும் என்று
ஆளவந்தாரும் எழுந்து அருள -கங்கை கொண்ட சோழ புரத்தேற
அப்பனும் அங்கே ஒரு குட்டிச் சுவரிலே யோகத்திலே எழுந்து அருளி இருக்க -இவரை சமாதி பங்கம் பண்ண ஒண்ணாது என்று சுவருக்கு புறம்பே பின்பே நிற்க
அப்பனும் யோகத்திலே எழுந்து அருளி இருக்கிறவர் திரும்பிப் பார்த்து இங்குக் சொட்டைக் குலத்தில் ஆரேனும் வந்தார் உண்டோ என்று கேட்டருள
அடியேன் -என்று ஆளவந்தாரும் எழுந்தருளி வந்து கண்டு -நாங்கள் பின்னே தெரியாத படி நிற்க இங்கனே அருளிச் செய்கைக்கு ஹேது என் என்னா
நானும் தானுமாக அனுபவியா நின்றால்-பெரிய பிராட்டியார் திரு முலைத் தடத்தாலே நெருக்கி அணைத்தாலும்-அவள் முகம் கூடப் பாராத
சர்வேஸ்வரன் என் கழுத்தை அமுக்கி நாலு மூன்று தரம் அங்கே எட்டிப் பார்த்தான்
இப்படி அவன் பார்க்கும் போது சொட்டைக் குலத்தில் சிலர் வந்தார் உண்டாக வேணும் என்று இருக்க வேண்டும் என்று இருந்தேன் காணும்
-என்று அருளிச் செய்தார் –
என் பைந்தாமரைக் கண்ணனே —
ஆடியாடியிலே வந்த தாபமும் தீர்ந்து திருக் கண்களும் குளிர்ந்து –

———————————————————————————————

அவதாரிகை –

நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகானவன் தன்னை நான் தேசிகனாய் அனுபவிக்கும் படி பண்ணின இதுவும் ஓர் ஔதார்யமே தான் என்கிறார் –

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரைப்
பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை
நாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –2-6-3-

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும்
ஒரு கால் திருக் கண்களாலே நோக்கினால் -அதிலே தோற்று ஜ்வர சந்நிதபரைப் போலே அடைவு கெட ஏத்தா நிற்பார்கள் ஆயிற்று நித்ய ஸூரிகள் —
ஸ்ருதோயமர்த்தோ ராமஸ்ய ஜாமதக்நஸய ஜல்பத -என்கிறபடி
தலைமகனை
இவர்கள் ஏத்தா நின்றாலும் -நிரவத்ய பர ப்ராப்தே -என்று அவன் பரனாய் இருக்கும் –
துழாய் விரைப் பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை
நித்ய ஸூரிகளைக் கண் அழகாலே தோற்பித்தான்
இவரைக் கண்ணியிலே அகப்படுத்தினான் –
மார்வில் மாலையைக் காட்டி மாலாக்கினான் –
விரை -பரிமளம் –விரையும் பூவும் மருவி இருந்துள்ள துழாய்க் கண்ணி எம்பிரானை
பொன்மலையை –
என்னோட்டைக் கலவியாலே அபரிச்சின்னமான அழகை உடையனாய் -கால் வாங்க மாட்டாதே இருக்கிறவனை –
நான் ஏத்தப் பெற்ற படியாலே வளர்ந்தபடி என்னவுமாம் –
ஆக இத்தால் அவரைப் பெற்ற பின்பு வளர்ந்து புகர் பெற்ற படி
நாம் மருவி –
அருவினையேன் என்று அகலக் கடவ நாம் கிட்டி
நன்கேத்தி –
நித்ய ஸூரிகள் ஏத்தக் கடவ விஷயத்தை நன்றாக ஏத்தி –
வானவர் சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனை எந்தையே என்பன் -என்று அகன்றவர் இறே
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று வேதங்களும் கூட மீண்ட விஷயத்தை மாறுபாடு உருவ ஏத்தி என்றுமாம் –
யுள்ளி –
நினைந்து என்று அனுசந்தானத்துக்கு பிராயச் சித்தம் பண்ணத் தேடாதே அனுசந்தித்து
வணங்கி –
குணபலாத் க்ருதராய் நிர்மமராய் வணங்கி –
வணங்கினால் உன் பெருமை மாசூணோதோ-என்னும் நாம் வணங்கி
நாம் மகிழ்ந்தாட
பகவத் அனுபவத்தால் வந்து ப்ரீதித்வம் கனாக் கண்டு அறியாத நாம் ஹிருஷ்டராய் அதுக்கு போக்குவிட்டு ஆட
–நா வலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே —
நாட்பூ அலருமா போலே ஜிஹ்வாக்ரத்திலே விகசியா நின்றுள்ள -சந்தஸ்ஸானது என் பக்கலிலே நிற்கும்படியாக தந்த இது தன்னை
ஸ்வபாவமாக உடையையே இருக்கிற பரம உதாரனே
நா வலர் பா –
மனஸ் சஹகாரமும் வேண்டாத படி இருக்கை –
தாமரைக் கண்ணனாய் – விண்ணோர் பரவும் தலைமகனாய் துழாய் விரைப்பூ மருவி கண்ணி எம்பிரானாய் பொன் மலையாய் இருக்கிற தன்னை
நாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர் பா மருவி நிற்கத் தந்த பான்மை ஏய்ந்த வள்ளலே-என்று சொல்லுகிறார் ஆகவுமாம்-
அன்றிக்கே –
தாமரைக் கண்ணனாய் – விண்ணோர் பரவும் தலைமகனாய் – துழாய் விரைப்பூ மருவி கண்ணி எம்பிரானாய் – பொன் மலையாய் இருக்கிற நீ
நாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே –
இதுவும் ஒரு ஸ்வபாவமே -வள்ளலே-பரம உதாரனே -என்றுமாம் –

—————————————————————————————-

அவதாரிகை –

நாம் மருவி நன்கேத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட -என்று தம்முடைய நைச்யத்தை அனுசந்தித்தவாறே
இவர் நம்மை விடில் செய்வது என் -என்று அவர் அதி சங்கை பண்ண நிர்ஹேதுகமாக உன் வடிவு அழகை நீ என்னை அனுபவிப்பிக்க
அனுபவித்து அத்தாலே சிதிலனான நான் உன்னை விட சம்பாவனை உண்டோ -என்கிறார் –

வள்ளலே மது சூதனா என் மரகத மலையே உனை நினைந்து
எள்கல் தந்த வெந்தாய் உன்னை எங்கனம் விடுகேன்
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே –2-6-4-

வள்ளலே
நிர்ஹேதுகமாக உன்னை எனக்குத் தந்த பரம உதாரனே
மது சூதனா
நீ உன்னைத் தரும் இடத்தில் நாம் ச்வீகரியாதபடி பண்ணும் விரோதிகளை -மதுவாகிற அசுரனை நிரசித்தால் போலே நிரசித்தவனே
என் மரகத மலையே
உன்னை நீ ஆக்கும்படி உன்னிலும் சீரியதாய் -ஸ்ரமஹரமாய் -அபரிச்சேத்யமான வடிவு அழகை யன்றோ எனக்கு ஔதார்யம் பண்ணிற்று
உனை நினைந்து எள்கல் தந்த வெந்தாய் -எள்கல் த்யாகம் ஈடுபாடு –
உன்னை அனுசந்தித்தால் இதர விஷயங்களை நான் விடும்படி பண்ணினவனே -என்னுதல்
அன்றிக்கே
எள்கலாவது-ஈடுபாடாய்-உன்னை அனுசந்தித்தால் -காலாளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் – என்கிறபடியே
அள்ளி எடுக்க வேண்டும்படி பண்ணித் தந்த என் நாயகனே -என்னுதல்

உன்னை எங்கனம் விடுகேன்
உதாரன் அல்ல என்று விடுவோ
விரோதி நிரசன் அல்லன் என்று விடவோ
உனக்கு வடிவு அழகு இல்லை என்றுவிடவோ
உன் விஷயத்தில் இப்படி ஈடுபட்ட நான் உன்னை விட சம்பாவனை உண்டோ -என்னுதல்
உன்னை அனுசந்தித்தால் இதர விஷயங்களிலே விரக்தனான நான் விட சம்பாவனை உண்டோ-என்னுதல்

இனி மேல் எல்லாம் அவன் அதிசங்கையைத் தீர்க்கிறார்
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து
கடலோடு ஒத்து இருந்துள்ள உன்னுடைய கல்யாண குணங்களை நாலு மூலையும் புக்கு வியாபித்து நான் மறு நனைந்து
ப்ரீதி ப்ரேரிதனாய்க் கொண்டு -அத்தாலே செருக்கி மிக்க ப்ரீதனாய்
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து
கர்ம நிபந்தமாக வருமவை
உன்னைப் பிரிந்து படுமவை
அயோக்யன் என்று அகன்று வருமவை –இத்யாதிகள் எல்லாவற்றையும் ஒட்டி
உய்ந்து போந்து இருந்தே —
உய்ந்து -சந்தமேனம்ததோ விது -என்கிறபடியே உஜ்ஜீவித்து
போந்து -சம்சாரிகளை விட்டு வ்யாவ்ருத்தனாய்
இருந்து -நிர்பரனாய் இருந்து -வள்ளலே மது சூதனா உன்னை எங்கனம் விடுகேன் –

———————————————————————————————

அவதாரிகை –

ஆத்மாந்த தாச்யத்திலே அதிகரித்த நான் உன்னை விட பிரசங்கம் உண்டோ -என்கிறார் –

உய்ந்து போந்து என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை
சிந்தை செய்த வெந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே –2-6-5-

உய்ந்து போந்து
நான் உளேனாய் -சம்சாரிகளில் வ்யாவ்ருத்தனாய்ப் போந்து
என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது அந்தமில் அடிமை அடைந்தேன்
என்னுடைய முடிவு இன்றிக்கே இருந்துள்ள கொடிய பாவங்களை வாசனையோடு போக்கி உன் திருவடிகளில் ஆத்மாந்த தாச்யத்திலே
அதிகரித்த நான் இனி விட பிரசங்கம் உண்டோ
விடுவேனோ
விஷயாந்தரங்களை விரும்பினேனோ விடுகைக்கு
ஸ்வரூப சித்தி இன்றிக்கே ஒழிந்து விடுகிறேனோ
தாஸ்ய அறிமலத்தில் சுவடி அறியாமல் விடுகிறேனோ
எனக்குத் தேகுட்டி விடுகிறேனோ
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை -சிந்தை செய்த வெந்தாய் –
அடிமையில் சுவடு அறிந்த திருவனந்த ஆழ்வான் உன்னை விடில் அன்றோ நான் உன்னை விடுவது
பெரு வெள்ளத்துக்கு பல வாய்த்தலைகள் போலே பகவத் அனுபவத்தால் வந்த ஹர்ஷத்துக்கு போக்குவீடாக பல தலைகளை உடையனாய்
மதுபானமத்தரைப் போலே ஆடா நிற்பானாய்–சைத்ய சௌகுமார்ய சௌகந்த்யங்களை உடையவனாய்
திரு வநந்த ஆழ்வான் மேலே திருப் பாற் கடலிலே -சகல பிராணிகளும் கரை மரம் சேர்ந்ததாம் விரகு என் -என்று
யோக நித்ரையிலே திரு உள்ளம் செய்த என் நாயகனானவனே –
யோக நித்தரை –
ஆத்மாநாம் வாசு தேவாக்யம் சிந்தயன்-என்கிறபடி தன்னை அனுசந்தித்தல்
சிந்தை செய்த வெந்தாய்
நீர்மையைக் காட்டி என்னை அனந்யார்ஹன் ஆக்கினவனை
உன்னைச் சிந்தை செய்து செய்தே –
தான் நினைக்கக்கு கிருஷி பண்ணின உன்னை நினைத்து வைத்து விட பிரசங்கம் உண்டோ –

———————————————————————————–

அவதாரிகை –

ஆஸ்ரிதனுடைய பிரதிஜ்ஞ்ஞா சமகாலத்திலே தோற்றுவான் ஒருவானான பின்பு எனக்கு ஒரு கர்த்த்வ்யாம்சம் உண்டோ -என்கிறார் –

உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என்
முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்
முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே –2-6-6-

உன்னைச் சிந்தை செய்து செய்து –
இனிமையாலே விட ஒண்ணாது இருக்கிற உன்னை மாறாதே அனுசந்தித்து
உன்னை –
யோக்யனுமாய் -பிராப்தனுமான உன்னை –
சிந்தை செய்து செய்து –
நிதித்யாசிதவ்ய -என்கிற விதி ப்ரேரிதனாய் இன்றிக்கே போக்யதையாலே விட மாட்டாதே அநவரத பாவனை பண்ணி
உன் நெடுமா மொழியிசை பாடியாடி
நெடுமையும் மஹத்தையும் -மொழிக்கும் இசைக்கும் விசேஷணம்-
இயலில் பெருமையும் -இசையில் பெருமையும் சொல்லுகிறது
இயலும் இசையும் கரை காண ஒண்ணாத படி இருக்கிற மொழியைப் பாடி -அது இருந்த இடத்திலே இருக்க ஒட்டாமை ஆடி –
என் முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான் –
என்னுடைய ப்ராக்தனமான கர்மங்களை வாசனையோடு போக்கினேன்
முழு வேர் -வேர் முழுக்க -என்றபடி -பக்க வேரோடு என்றபடி —
அவன் விரோதியைப் போக்கச் செய்தேயும் பலான்வயம் தம்மதாகையாலே -அரிந்தனன் யான் -என்கிறார் -எனக்கு பண்டே உபகரித்தவனே –
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த
உக்தி மாதரம் அன்றிக்கே நெஞ்சாலே இகழ்ந்தான் ஆயிற்று -இத்தால் அவன் விடுவது புத்தி பூர்வம் ப்ராதிகூல்யம் பண்ணினாரை-
கைக் கொள்ளுகைக்கு மித்ர பாவம் அமையும்
இரணியன் அகல் மார்வம் கீண்ட —
வரபலம் புஜபலம் ஊட்டியாக வளர்ந்த சரீரமானது திரு வுகிர்க்கு இரை போராமையாலே -அநாயாசேன கிழித்துப் பொகட்டானாயிற்று
என் முன்னைக் கோளரியே
நர சிம்ஹமுமாய் உதவிற்றும் தமக்காக என்று இருக்கிறார்
கோள் என்று மிடுக்காதல் -தேஜஸ் ஆதல் -மஹா விஷ்ணும் -என்கிற மிடுக்காதல் -ஜ்வலந்தம் என்கிற தேஜஸ் ஆதல்
ஆஸ்ரிதனுக்கு ஒருவனுக்குச் செய்ததும் தமக்குச் செய்ததாக நினைத்திராத வன்று பகவத் சம்பந்தம் இல்லையாம் அத்தனை
முடியாதது என் எனக்கே-
நீ பிரதிஜ்ஞ்ஞா சம காலத்திலேயே வந்து தோற்றுவாயாயிற்ற பின்பு எனக்கு முடியாதது உண்டோ –

———————————————————————————————-

அவதாரிகை –

என்னளவில் விஷயீ காரம் என்னுடைய சம்பந்தி சம்பந்திகள் அளவும் சென்றது கிடீர் -என்கிறார் –

முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே –2-6-7-

முடியாதது என் எனக்கேல் இனி
எனக்காகில் இனி முடியாதது -உண்டோ –எனக்கு இனி அநவாய்ப்பதமாய் இருப்பது ஓன்று உண்டோ –
நீர் இது என் கொண்டு சொல்லுகிறீர் என்ன –
முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து –
பிரளயாபத்தில் அகப்பட்ட பூமி -தன் வயிற்றிலே புகாத போது
படும் பாடு அடங்க தான் என் பக்கலிலே புகுராத போது படுவானாய் வந்து புகுந்தான் –
எனக்கு இனி முடியாதது உண்டோ
அடியேனுள் புகுந்தான் –
சம்பந்தத்தைப் பார்த்து புகுந்தான்
உட்கலந்தான் –
ஒரு நீராகக் கலந்தான்
தன் பக்கல் ஜகத்து புக்கால் போல் அன்றியே -உகந்து புகுந்தான் –
இவனுக்கும் ஜகத்துக்கும் செல்லாமை ஒக்கும் -உகப்பு இவ்விஷயத்தில் தன்னேற்றம் –
அகல்வானும் அல்லன் இனி
அந்த பூமிக்கு -பிரளயம் கழிந்த வாறே அகல வேணும் -இவனுக்கு அதுவும் இல்லை -முதலிலே பிரிவை பிரசங்கிக்க ஒட்டுகிறிலன் –
சேதனரைப் போலே -பாபத்தாலே அகன்று -ஒரு ஸூக்ருதத்தாலே கிட்டுமது இல்லையே இவனுக்கு –

உம்மை அவன் இப்படி விரும்பினான் ஆகில் பனை நிழல் போலே உம்மை நோக்கிக் கொண்டு விட அமையுமோ -என்ன
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து –
செடி -பாபம்
பாபத்தாலே பூரணமான துக்கங்கள் -தூறு மண்டின நோய்கள் எல்லாம் துரந்து -விஷய பிராவண்யத்தாலே வந்த நோய்
அயோக்ய அனுசந்தானத்தாலே வந்த நோய்
பகவத் அனுபவ விச்லேஷத்தாலே வந்த நோய்
இவற்றை எல்லாம் வாசனையோடு ஒட்டி
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து என்கிற இடத்தில் சொல்லிற்று இல்லையோ இது என்னில் -அங்குச் சொல்லிற்று -தம் அளவில்
-இங்கு தம் சம்பந்தி சம்பந்திகள் விஷயமாயிற்று
இப்படி இவர்கள் ஒட்டிற்று எத்தாலே என்னில்
எமர் –
வேறு ஒன்றால் அன்று -என்னோட்டை சம்பந்தமே ஹேதுவாக
சம்பந்தம் எவ்வளவு என்னில்
கீழ் மேல் ஏழ் பிறப்பும்
கீழ் ஏழு படிகாலும் -மேல் ஏழு படிகாலும் தம்மோடு ஏழு படிகாலுமாக-இருபத்தொரு படிகால்
விடியா வென்னரகத்து –
ஒரு நாள் வரையிலே கர்ம ஷயம் பிறந்தவாறே விடியுமது இறே யமன் தண்டல் -இது விடியா வென்னகரம் இறே
நரகம் -என்று புத்தி பிறக்கும் அதில் -தண்மை தோற்றாத நரகம் இது
என்றும் சேர்த்தல் மாறினரே –
என்றும் கிட்டக் கடவதான தண்மை தவ்ர்ந்தார்கள்
நானும் பிரார்த்திக்க வேண்டிற்று இல்லை
அவனும் நினைப்பிட வேண்டிற்று இல்லை
எத்தாலே என்னில் -என் பக்கல் அவன் பண்ணின பஷபாத ராஜ குலத்தாலே மாறிக் கொண்டு நின்றார்கள்
முடியாதது என் எனக்கேல் இனி -என்று அந்வயம் –

——————————————————————————————-

அவதாரிகை –

இப்படி கனத்த பேற்றுக்கு நீர் செய்த ஸூ க்ருதம் என் என்ன -ஒரு ஸூ க்ருதத்தால் வந்தது அல்ல
நான் பிறந்து படைத்தது என்கிறார் -அதுவும் ஓன்று உண்டு-அந்தாதியாகப் பிறந்து போந்தேன் -என்கிறார் –

மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறி
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்
பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று
ஏறி வீற்று இருந்தாய் உன்னை என்னுள் நீக்கல் எந்தாய் –2-6-8-

மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து
சபரிகரமாக உம்மை விஷயீ கரிக்க நீர் செய்தது என் என்ன
கடலுக்கு உள்ளே கிடந்த தொரு துரும்பு திரை மேல் திரையாக தள்ள வந்து கரையிலே சேருமா போலே மாறி மாறி பிறந்து
வாரா நிற்க திருவடிகளிலே கிட்டிக் கொண்டு நிற்கக் கண்டேன் இத்தனை
அனுபவித்து மீளுதல் -பிராயச் சித்தி பண்ணி மீளுதல் செய்யக் காலம் இல்லை யாயிற்று
அடியை யடைந்து உள்ளம் தேறி
உள்ளம் தேறி அடியை அடைந்தவர் அல்லர்
அடியை அடைந்தாயிற்று உள்ளம் தேறிற்று
உள்ளம் தேறி –
நெடுநாள் விஷய வாசனையாலும் பகவத் அலாபத்தாலும் உள்ள அந்த கரண காலுஷ்யம் போய் ஹிருதயம் தெளிந்து
தெளிந்த அளவே அன்றியே
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்
முடிவு இன்றிக்கே இருக்கிற பெரிய ஆனந்த சாகரத்திலே அவகாஹித்தேன்
திருவடி திரு வநந்த ஆழ்வான் இவர்கள் குமிழ் நீர் உண்கிற விஷயத்திலே இறே நான் அவகாஹிக்கப் பெற்றது –
ஆனால் உம்முடைய விரோதிகள் செய்தது என் என்ன அதுக்குக் கடவாரை கேளிகோள் என்கிறார்

பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று ஏறி வீற்று இருந்தாய்
அசுர வர்க்கத்தினுடைய பலவகைப் பட்ட குழாங்கள் ஆனவை பாறிப் பாறி நீர் எழுந்து போம் படியாக
பிரதிபஷத்தின் மேலே பாயா நின்றுள்ள அத்விதீயமான பறவையை மேற்கொண்டு உன்னுடைய வ்யாவ்ருத்தி தோன்ற இருந்தவனே –
பெரிய திருவடிக்கு அத்விதீயம்-அவன் கருத்து அறிந்து நடக்கையிலே தலைவனாகை –
அவன் பிரதிபஷ நிரசனத்துக்கு பண்ணின வியாபாரம் பெரிய திருவடி திருத் தோளிலே பேராதே இருந்தவனை
உன்னை என்னுள் நீக்கல் எந்தாய் —
ஸ்வாமியான நீ இனி ஒரு காலமும் உன்னை என் பக்கலிலும் நின்று பிரித்துக் கொண்டு போகாது ஒழிய வேணும்
உன்னை என்னுள் நீக்கல் –
என்னோடு இப்படிக் கலந்த உன்னை -உன்னுடைய கல்வியால் வந்த ரசம் அறிந்த என் பக்கல் நின்றும் நீக்க நினையாது ஒழிய வேணும்
தம்முடைய இனிமையாலே அதிசங்கை பண்ணுகிறார்
தன் உகப்பு அவனை எதிரிட்ட படி
எந்தாய்
விரோதியைப் போக்கிக் கலக்கைக்கு அடியான ப்ராப்தியைச் சொல்லுகிறது –

———————————————————————————

அவதாரிகை –

முதலிலே உன்னை அறியாது இருக்க -என்னை உன்னையும் உன் போக்யதையும் அறிவித்து
உன்னால் அல்லது செல்லாதபடி ஆக்கின நீ இனி என்னை விட்டுப் போகாது ஒழிய வேணும் -என்கிறார் –

எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைந்த வெம்
மைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே –2-6-9-

எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் –
ஸ்ரமஹரமான திருமலையிலே வந்து நின்று உன் ஸ்வாமித்வத்தை காட்டி என்னை செஷத்வத்திலே நிறுத்தினவனே
இலங்கை செற்றாய் –
பிராட்டியோட்டை சம்ச்லேஷ விரோதியைப் போக்கினாப் போலே என்னுடைய சேஷத்வ விரோதியைப் போக்கினவனே
மராமரம் பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா -ஆஸ்ரித விஷயத்தில் மழு வேந்திக் கொடுத்து கார்யம் செய்யும் படி –
பரந்த அடியை உடைத்தான மராமரங்கள் ஏழும் மாறுபாடுருவும் படியாக
பண்டே தொளையுள்ளது ஒன்றிலே ஓட்டினால் போலே அம்பைக் கோத்த வில் வலியை உடையவனே
கொந்தார் தண் அம துழாயினாய்
வைத்த வளையத்தோடு நின்றாயிற்று மராமரம் எய்தது
அவதாரத்துக்குச் சேர ஏதேனும் ஒன்றால் வளையம் வைக்கிலும் திருத் துழாய் அல்லது தோற்றாது இவருக்கு
கொந்தார் -தழைத்து இருக்கை
அமுதே
மராமரம் எய்கிற போது இலக்கு குறித்து நின்ற நிலை இவருக்கு போக்யமாய் இருக்கிறபடி
-உன்னை என்னுள்ளே குழைந்த வெம்
கலக்கிற இடத்தில் -ஏக தத்வம் என்னலாம் படி கலந்து இனி போவேன் என்றால் போகப் போமோ -போகிலும் கூடப் போம் இத்தனை
மைந்தா –
என்னோடு கலந்த இத்தாலே நவீக்ருதமான யௌவனத்தை உடையவனே
வானேறே
தன் போக்யதையை நித்ய ஸூரிகளை அனுபவிப்பித்து -அத்தாலே வந்த மேன்மை தோற்ற இருக்குமா போலே யாயிற்று
இவரை அனுபவிப்பித்து மேன்மை தோற்ற இருந்தபடி
இனி எங்குப் போகின்றதே-
உன்னால் அல்லது சொல்லாத படியான என்னை விட்டு உன்னை ஒழியக் கால ஷேபம் பண்ண வல்லார் பக்கல் போகவோ —
நித்ய ஸூரிகளை விடில் அன்றோ என்னை விடலாவது
இவர் நம்மை விடில் செய்வது என் என்று அவனுக்கு உண்டான அதி சங்கையை பரிஹரியா நிற்க நீ என்னை விட்டுப் போகாதே கொள்
என்கிற இதுக்கு கருத்து என் -என்னில்
விலஷண விஷயம் -தானும் கால் கட்டி -எதிர்த் தலையும் கால் கட்டப் பண்ணுமாயிற்று —

1-எந்தாய் -நீ சேஷி அல்லாமல் போகவோ
2-தண் திருவேங்கடத்துள் நின்றாய் -நீ தூரச்தனாய் போகவோ
3-இலங்கை செற்றாய் -நீ விரோதி நிரசன சீலன் அல்லாமல் போகவோ
4-மராமரம் பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா -ஆஸ்ரித விஷயத்தில் மழு ஏந்திக் கொடுத்து கார்யம் செய்யும் அவன் அல்லாமல் போகவோ
5-கொந்தார் தண் அம் துழாயினாய் -ஆஸ்ரித ரஷணத்துக்கு மாலையிட்டிலையாய் போகவோ
6-அமுதே-போகய பூதன் அல்லாமல் போகவோ
7-உன்னை என்னுள்ளே குழைந்த-ஒரு நீராக கலந்திலையாய் போகவோ
8- வெம் மைந்தா -நவீக்ருத ஸ்வ பாவன் அல்லாமல் போகவோ
9-வானேறே -மேன்மையன் அல்லாமல் போகவோ
10-இனி எங்குப் போகின்றதே-போகிலும் கூடப் போம் இத்தனை ஒழிய -ஏக தத்வம் என்னலாம் படி கலந்து தனித்துப் போகலாமோ

—————————————————————————————

அவதாரிகை –

நாம் போகாது ஒழிகிறோம் -நீர் நம்மை விடாது ஒழிய வேணுமே -என்ன -நீ பண்ணின உபகாரங்களைக் கண்டு வைத்து
விட சம்பாவனை உண்டோ என்கிறார் -கால த்ரயத்தாலும் சர்வ வித பந்துவுமான உன்னை விட சம்பாவனை இல்லை என்கிறார் –

போகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை உயிரா
கின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ
பாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கட
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே –2-6-10-

போகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை உயிராகின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ
கால த்ரயத்தாலும் பரிவுடைய தாய் செய்வதும் செய்து -ஹித காமனான தமப்பன் செய்வதும் செய்து ச பித்ரா ச பரித்யக்த -என்று
அவர்கள் விடும் அளவிலும் தான் தனக்கு பார்க்கும் ஹிதமும் ஹிதமும் பார்க்கும்படி சர்வ பிரகாரத்தாலும் ப்ராப்தனுமாய்
உபகாரகனுமான உன்னை உபகார ஸ்ம்ருதியை உடைய நான் கிட்டப் பெற்று வைத்து விட சம்பாவனை உண்டோ
பாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே
விதித என்கிறபடியே சத்ரு கோஷ்டியிலும் பிரசித்தமாம்படி பரம்பி இருப்பதாய் ஸ்வாபாவிகமான கல்யாண குணங்களை
உடையையாய்-தரை லோக்யத்துக்கு நிர்வாஹகனானவனே
பரமா தண் வேங்கட மேகின்றாய்
குணங்களுக்கும் ரஷணத்துக்கும் உன்னை எண்ணினால் பின்னை எண்ணலாவார் இல்லாதபடி சர்வாதிகனாய் இருக்கிருமவனே –
இப்படி சர்வாதிகனாய் இருந்து வைத்து -என்னை அடிமை கொள்ளுகைக்காக ஸ்ரமஹரமான திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனவனே
-உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ -என்று அந்வயம்-
தண் துழாய் விரை நாறு கண்ணியனே —
இவருடைய ஆர்த்தி எல்லாம் தீரும்படியாக வந்து விஷயீகரித்து-தன்னை அனுபவிப்பித்து -இவர் தன்னை விடில் செய்வது என் என்கிற
அதி சங்கையும் தீர்த்து தோளில் இட்ட மாலையும் பரிமளிதமாய் பிடித்து மோந்த இலைத் தொடை மாலையும் தானுமாய் நின்றபடி

———————————————————————————–

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார் ஆரேனும் ஆகவுமாம் -அவர்களுக்கு குல சரண கோத்ராதிகள்
அப்ரயோஜகம் -இவ்வாகாரத்தாலே அவர்கள் பகவதீயர் என்கிறார் –

கண்னித் தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வில் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே –2-6-11-

கணனித் தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப்
இப்போது யாயிற்று வளையம் செவ்வி பெற்றதும் -முடி நல தரித்ததும் -திருக் கண்கள் விகசிதம் ஆயிற்றும்
புகழ் நண்ணித்
அவன் தம் பக்கல் பண்ணின வயாமோஹ குணத்திலே அவகாஹித்து
தென் குருகூர்ச் சடகோபன் மாறன் –
ஓன்று திரு நாமம்
ஓன்று சத்ரு வர்க்கத்துக்கு ம்ருத்யுவாய் உள்ளவர் -என்கிறது
சொன்ன
எண்ணில் சோர்வில் அந்தாதி -ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
அவன் தம் பக்கல் பண்ணின வயாமோஹ அதிசயத்தை அனுசந்தித்து -அவற்றில் ஒன்றும் குறையாமே அருளிச் செய்த ஆயிரத்தில் இப்பத்து
இசையோடும் பண்ணில் பாட வல்லார்
இதில் அபி நிவேசத்தால் இசையோடும் பண்ணோடும் பாட வல்லவர்கள் –
பண்ணாகிறது -கானம்
இசையாகிறது -குருத்வ லகுத்வாதிகள் தன்னிலே நெகிழ்ந்து பொருந்துகை
அவர் கேசவன் தமரே –
அவர்கள் ஆரேனும் ஆகவுமாம்
குல சரண கோத்ராதிகள் அபிரயோஜகம்
விண்ணப்பம் செய்வார்கள் என்னுமா போலே இவ்வாகாரத்தாலே அவர்கள் பகவதீயர் –

முதல் பாட்டில் எம்பெருமான் இவர் நம்மை விடில் செய்வது என் -என்கிற அதி சங்கையைப் போக்கினார்
இரண்டாம் பாட்டில் -அது போன பின்பு அவனுக்குப் பிறந்த புது கணிப்பை சொன்னார்
மூன்றாம் பாட்டில் தமக்கு அவன் பண்ணின ஔதார்யத்தை அனுசந்தித்து வித்தரானார்
நாலாம் பாட்டில் அவன் உமக்குப் பண்ணின ஔதார்யம் ஏது என்ன இதர விஷய வைராக்கியம் என்றார்
அஞ்சாம் பாட்டில் இதர விஷய வைராக்ய பூர்வகமாக ஆத்மானந்த தாச்யத்திலே அதிகரித்த நான் இனி ஒரு நாளும் விடேன் -என்றார்
ஆறாம் பாட்டில் ஆஸ்ரிதற்கு உதவுவாயான பின்பு எனக்கு ஒரு குறையுண்டோ என்றார் –
ஏழாம் பாட்டில் என்னுடைய சம்பந்தி சம்பந்திகளுக்கும் ஒரு குறையில்லை என்றார்
எட்டாம் பாட்டில் இதுக்குத் தாம் அனுஷ்டித்த உபாயம் இன்னது என்றார்-
ஒன்பதாம் பாட்டில் இவர் அகவாய் அறிய வேணும் என்று ஓர் அடி பேர நிற்க இனிப் போக ஒண்ணாது என்கிறார்
பத்தாம் பாட்டில் -நாம் போகாது ஒழிகிறோம் நீர் தாம் போகாது ஒழிய வேணுமே என்ன-கால த்ரயத்தாலும் சர்வவித பந்துவுமான
உன்னை விட சம்பாவனை இல்லை என்றார்
நிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

—————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி – -2-5– –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

October 23, 2015

பிரவேசம் –

கஜ ஆகர்ஷதே தீரே -க்ராஹ ஆகர்ஷதே ஜலே -என்னுமா போலே இறே-கீழே ஆடியாடியிலே ஆழ்வாருக்கு பிறந்த வ்யசனம்-
அது எல்லாம் ஆறும்படியாக-அதந்த்ரிசமூபதி பரஹித ஹஸ்தம் -என்கிறபடியே பெரிய த்வரையோடே ஆயுத ஆபரணங்களை
அக்ரமமாகத் தரித்துக் கொண்டு மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து உள்ளே போய்ப் புக்கு
ஆனையை ஒரு கையாலும் முதலையை ஒரு கையிலுமாக -அணைத்து எடுத்து கொண்டு கரையிலே ஏறி
க்ராஹம் சக்ரேண மாதவ -என்கிறபடியே -பிரஜையின் வாயிலே முலையைக் கொடுத்து கிரந்தியைச் சிகித்சிப்பிக்குமா போலே –
பெரிய பிராட்டியாரும் தானுமாக இரண்டுக்கும் நலிவு வாராமே திரு வாழியாலே விடுவித்து சாத்தி யருளின
திருப்பரி வட்டத் தலையை சுருட்டி திருப் பவளத்திலே வைத்து அதினுடைய புண் வாயை வேது கொண்டு
திருக் கையாலே குளிர ஸ்பர்சித்து நின்றாப் போலே
இவரும்-வலம் கொள் புள்ளுயர்த்தாய்—2-4-4-என்று கூப்பிட்ட ஆர்த்த நாதம் செவிப்பட்டு -அழகிதாக நாம் ஜகந்நிர்வஹணம் பண்ணினோம்
-நாம் ஆரோனோம் என்று -பிற்பாட்டுக்கு-லஜ்ஜா பயங்களாலே விஹ்வலனாய்
-தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்கள் ஒப்பனை திவ்யாயுதங்கள் சேர்ந்த சேர்த்தி இவை எல்லாவற்றோடும் வந்து சம்ச்லேஷித்து
அத்தாலே ஹ்ருஷ்டனாய் க்ருதக்ருத்யனாய் இருக்கிற இருப்பை அனுபவித்து
அவ்வனுபவ ஜனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே தாம் பெற்ற பேற்றை- பேசி அனுபவிக்கிறார் –

———————————————————–

அவதாரிகை –

அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ என்று இவர் ஆசைப் பட்ட படியே வந்து கலந்தான் -என்கிறார் –

அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம்பொன் திருவுடம்பே –2-5-1-

அந்தாமத்தன்பு செய்து –
அழகிய தாமத்திலே பண்ணக் கடவ ச்நேஹத்தை -என் பக்கலிலே பண்ணி -தாமம் என்று ஸ்தானமாய்-
மஞ்சா க்ரோசந்தி போலே பரமபதத்தில் உள்ளார் பக்கலிலே பண்ணக் கடவ ச்நேஹத்தை கிடீர் என் ஒருவன் பக்கலிலும் பண்ணிற்று
தாமே அருளிச் செய்தார் இறே -முற்றவும் நின்றனன் -1-2-6- என்று
என்னாவி -சேர்
அவன் மேல் விழ -தான் இறாய்த்தமை தோற்றுகிறது
இவர் பூர்வ வ்ருத்தத்தை அனுசந்தித்து இறாயா நின்றார்
இதுவே ஹேதுவாக அவன் மேல் விழா நின்றான்
கமர் பிளந்த விடத்தே நீர் பாய்ச்சுவாரைப் போலே –
உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து -2-4-7–என்கிற ஆவியிலே காணும் வந்து சேருகிறது
சேர்
விடாயர் மடுவிலே சேருமா போலே வந்து சேரா நின்றான் –
இப்படி மேல் விழுகைக்கு ஹேது என் என்னில்
அம்மானுக்கு –
வகுத்த ஸ்வாமி யாகையாலே –
நித்ய விபூதியில் உள்ளாரோபாதி லீலா விபூதியில் உள்ளாருக்கும் வந்து முகம் காட்ட வேண்டும் பிராப்தியை உடையவனுக்கு –
இவரைப் பெற்ற பின்பு யாயிற்று அவன் சர்வேஸ்வரன் ஆயிற்று –
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று இவர் ஆசைப் பட்ட படியே நித்ய ஸூரிகளோடு வந்து கலந்தான் –
என்று ஆளவந்தார் அருளிச் செய்தாராக திருமாலை ஆண்டான் பணிக்கும் படி
ஆனால் அவர்களை ஆழி நூல் ஆரம் -என்றோ சொல்லுவது என்னில் சின்மயராய் இருக்கச் செய்தே பாரதந்த்ர்யம் சித்திக்காக
தங்களை அமைத்து வைத்து இருக்கும் அத்தனை இறே
அங்கன் இன்றிக்கே எம்பெருமானார் அருளிச் செய்யும் படி -இவரோடு சம்ச்லேஷிப்பதற்கு முன்பு அவனோடு ஒக்க இவையும்
அனுஜ்ஜ்வலமாய் அசத்சமமாய் -இவரோடு கலந்த பின்பு உஜ்ஜ்வலமாய் சத்தை பெற்ற படி சொல்லுகிறது -என்று
-கல்ப தரு வாடினால் அதில் பூவும் தளிரும் வாடும் இறே –

அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
அழகிய மாலையானது முடி சூடி வாழத் தொடங்கிற்று –
அன்றியே வாண் முடி என்றாய் -வாள் -என்று ஒளியாய் -நிரவதிக தேஜோ ரூபமான முடி என்றுமாம்
தாமம் -என்று தேஜஸ் ஆகவுமாம்
தேஜோ ரூபமான ஸ்ரீ பாஞ்சசன்யம் -தேஜோ ரூபமான திருவாழி-நூல் -திரு யஜ்ஞ்ஞோபவிதம் -ஆரம் -திருவாரம் –
இவை நித்ய ஸூரிகளுக்கு உப லஷணம்
உள –
நித்யரான இவர்கள் உளராகை யாவது என் -ச ஏகாகீ ந ரமேத-என்கிறபடியே இவரோடு கலப்பதற்கு முன்பே
அந்த விபூதியும் இல்லையே தோற்றுகையாலே –

செந்தாமரைத் தடங்கண் –
ஆர்த்தி எல்லாம் தீர இவரைப் பார்த்துக் கொண்டு நிற்கிற நிலை –
இவரோடு கலந்த பின்பாயிற்று திருக் கண்கள் செவ்வி பெற்றதும் விகசிதம் ஆயிற்றதும்
ஏக ரூபம் ஆனவற்றுக்கு எல்லாம் இதொரு விகாரம் பிறக்கிறது இறே
சதைக ரூப ரூபாயா -என்கிற இடத்தில் கர்மம் அடியாக வரும் விகாரம் இல்லை என்கிறதாயிற்று அத்தனை இறே
செங்கனிவாய் செங்கமலம்
சாடுசதங்கள் சொல்லுகிற திருவதரம் இருக்கிறபடி –சிவந்து கனிந்த அதரமானது -சிவந்து கமலம் போலே இரா நின்றது
செந்தாமரை யடிக்கள் –
நோக்குக்கும் ஸ்மித்துக்கும் தோற்று விழும் திருவடிகள் –திருவடிகளிலே விழுந்து அனுபவிக்கும் திருமேனி
செம்பொன் திருவுடம்பே —
ருக்மாபம் -என்னும்படி யாயிற்று இவரோடு கலந்த பின்பு திருமேனியில் பிறந்த புகர் தான் –

————————————————————————————-

அவதாரிகை –

தம்மோடு கலந்த பின்பு அவனுக்குப் பிறந்த புகரைச் சொல்லி -தம் உடம்பைப் பற்றி ப்ரஹ்ம ஈசா நாதிகள் சத்தையாம் படி
இருக்கிறவன் தான் என் உடம்பைப் பற்றி தாம் சத்தையாம்படி இரா நின்றான் என்கிறார் –

திருவுடம்பு வான்சுடர் செந்தாமரைக் கண் கை கமலம்
திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ்
ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ
ஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே –2-5-2-

திருவுடம்பு வான்சுடர் –
அணைந்த போதை ஸ்பர்ச ஸூகம் கொண்டு அருளிச் செய்கிறார் இறே
ஈஸ்வரனுக்கு விக்ரஹம் இல்லை விபூதி இல்லை என்கிறவர்கள் முன்பே ஆப்ததமரான இவர் திருவுடம்பு வான் சுடர் -என்னப் பெறுவதே –
ஈஸ்வரனுக்கு விக்ரஹம் இல்லை குணம் இல்லை என்கிறவர்கள் பண்ணி வைக்க மாட்டாத பாபம் இல்லை
அவர்களை அனுவர்த்தித்து அது கேட்க விடாதபடி பெருமாள் நமக்கு பண்ணின உபகாரம் என் -என்று அருளிச் செய்வர் ஜீயர்
-பட்டர் மூலம் சம்ப்ரதாயம் வந்ததை அனுசந்தித்து நஞ்சீயர் அருளிச் செய்த படி
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் துவக்கு உண்கிற திருமேனி இறே
இச்சா க்ருஹீதா அபிமதோறு தேஹ-என்று தனக்கும் அபிமதமாய் இருப்பதொரு ஓன்று இறே
தான் மதித்தார்க்கு ஏஷ சர்வஸ்வ பூதஸ்து-என்று கொடுப்பதும் திருமேனியையே
வான் சுடர் –
முதலிலே தேஜோ ரூபமான திருமேனி மிகவும் ஒளி பெற்றது இவரோட்டை கலவியாலே –
புறம்பு ஒளியாய் உள்ளு மண் பற்றி பற்றி இருக்கை யன்றிக்கே -நெய் திணுங்கினால் போலே தேஜஸ் தத்வமேயாய் இருக்கை –
தேஜசாம் ராசிமூர்ஜிதம் -என்கிறபடியே பஞ்ச சக்தி மயமாய் இருக்கச் செய்தே -ஷாட் குண்ய விக்ரஹன் -என்கிறது
குணங்களுக்கு பிரகாசகமாகை சுட்டி இறே –
செந்தாமரைக் கண்
கடாஷத்தாலே வவ்வலிட்டு சொல்லுகிற வார்த்தை –
கை கமலம்
கரேண ம்ருதுநா -என்கிறபடியே அணைத்த கை
இவர் ஒரு கால் சொன்னதைப் பல கால் சொல்லுவது என் என்னில் முத்துக் கோக்க வல்லவன் முகம் மாறிக் கோத்த வாறே
விலை பெறுமா போலே -இவரும் ஒரோ முக பேதத்தாலே மாறி மாறி அனுபவிக்கிறார்
திருவிடமே மார்வம்
அக்கையாலே அணைப்பிக்கும் பெரிய பிராட்டியாருக்கு இடம் திரு மார்பு
அயனிடமே கொப்பூழ்
சதுர்தச புவன ஸ்ரஷ்டாவானா ப்ரஹ்மா திரு நாபி கமலத்தை இருப்பிடமாகக் கொண்டு இருக்கும்
ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ
ஓரிடம் என்னாதே-ஒருவிடம் என்கிறது -ஒருவுதல் நீங்குதலாய்-நீங்கின இடம் என்றபடி –
என் நாயனான சர்வேஸ்வரனுக்கு நீங்கின இடமும் ருத்ரனுக்கு இருப்பிடமாயும் இருக்கும்
தாமஸ தேவதை இருப்பிடம் ஆகையாலே -நீங்கின இடம் என்று அநாதார உக்தி இருக்கிறபடி –
ஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே –
என்னோடு வந்து கலக்கிற இடத்தில் -நீங்கின இடம் ஒன்றும் இன்றிக்கே வந்து கலந்தான் –
அநந்ய பரையான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் திரு மேனியிலே இடம் கொடுத்து வைப்பதே –என்று இந்த சீல குணத்தை
அனுசந்தித்து வித்தராய் இருந்தார் முன்பு -ஏறவனை பூவனைப் பூ மகள் தன்னை -2-2-3-
இப்போது தமக்கு உடம்பு கொடுத்தபடி கண்டவாறே -அது பரத்வம் என்று தோற்றி இது என்ன சீல அதிசயமோ என்கிறார் –
ஒரு விடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கு திருவுடம்பு என்று தொடங்கி–அரனே ஒ -என்று அந்வயம் –

————————————————————————————–

அவதாரிகை –

ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களும் தன்னைப் பற்றி உளவாம்படி இருக்கிற சர்வேஸ்வரன் –
தான் என்னைப் பற்றி உளனாய் என்னோடு வந்து கலந்தான் என்கிறார் –

என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்
மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே –2-5-3-

என்னுள் கலந்தவன் –
அகஸ்ய ப்ராதா -என்னுமா போலே நிரூபகம் இருக்கிறபடி –நாராயணன் -வா ஸூ தேவன் -என்னுமா போலே என்னுள் கலந்தவன் -என்று காணும் அவனுக்குத் திரு நாமம் –
செங்கனிவாய் செங்கமலம்
சிவந்து கனிந்த வாய் -செங்கமலம் போலே இரா நின்றது
மின்னும் சுடர் மலைக்குக்
வாட்டமில் புகழ் வாமனன் கலந்த பின்பு வளர்ந்த படியும் -புகர் பெற்ற படியும் -தரையிலே கால் பாவி தரித்த படியும்
-திண்மையை உடையனான படியும் பற்ற -மலை -என்கிறார் –
கண் பாதம் கை கமலம்
முகம் அறிந்து கோத்த வாறே முத்து விலை பெறுமா போலே இவரும் திவ்ய அவயவங்களைச் சரியான விதத்திலே சேர்த்து அனுபவிக்கிறார் –
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள
ப்ரவாஹ ரூபத்தாலே நித்தியமான சகல லோகங்களும் தன சங்கல்பத்தைப் பற்றிக் கிடக்கிறன
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே —
தன் திரு உள்ளத்தை அபாஸ்ரயமாக யுடைத்தது அன்றிக்கே இருக்கிற வஸ்து யாதொன்று -அது நாஸ்தி சப்தத்துக்கு அர்த்தமாகிறது
அப்ரஹ்மாத்மகமாய் இருப்பதொரு பதார்த்தம் தான் இல்லை –ந ததஸ்தி விநா யத் ஸ்யாத்–ஸ்ரீ கீதை -10-39-என்றான் இறே –
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே —
அவை இவனைப் பற்றாத போது சத்தை இன்றிக்கே இருக்கிறது ஸ்வரூபத்தாலே
இவன் இவரை கலவாத போது சத்தை இன்றிக்கே இருக்கிறது பிரணயித்வ குணத்தாலே –

——————————————————————————————-

அவதாரிகை –

நீர் ஒரு கால் சொன்னதை ஒன்பதின் கால் சொல்லி இங்கனே கிடந்தது படுகிறது என் -என்ன
நான் அது தவிருகிறேன் -நீங்கள் இவ்விஷயம் ஒரு கால் இருந்த படியே எப்போதும் இருக்கும் படி பண்ண வல்லி கோளோ -என்கிறார்

எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-4-4-

எப்பொருளும் தானாய் –
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களும் தான் என்கிற சொல்லுக்கு உள்ளே பிரகாரமாம் படி -தான் பிரகாரியாய் –
ஸ்வ அதீநம் அல்லாதோரு பதார்த்தத்தைப் பெற்றுத்தான் இப்பாடு படுகிறானோ
மரகதக் குன்றம் ஒக்கும்
கீழ் -ஜகதாகாரணனாய் நிற்கும் நிலை சொல்லிற்று
இங்கு -அசாதாரண விக்ரஹம் தன்னையே சொல்லுகிறது
கீழ் -மின்னும் சுடர் -என்று தம்மோட்டைக் கல்வியால் வந்த புகரைச் சொல்லிற்று
அதற்கு ஆஸ்ரயமான அசாதாரண விக்ரஹத்தை சொல்லுகிறது இங்கே –
அப்பொழுதைத் -தாமரைப் பூக்
கீழ் தாமரையைச் சொன்ன விடம் தப்பச் சொன்னோம் என்று அழித்து பிரதிஜ்ஞை பண்ணுகிறார்
கேவலம் தாமரையை ஒப்பாகச் சொல்லில் செவ்வி யழிந்த சமயத்திலும் ஒப்பாகத் தொடங்குமே
அப்போது அலர்ந்த செவ்வியை உடைத்தான தாமரை
கண் பாதம்
கண் -பந்தத்தை விளைக்கும் கண்
பாதம் -பந்தம் அறிந்தால் அனுபவிக்க இழியும் துறை
கை கமலம்
தம்மோட்டை ஸ்பரசத்தாலே செவ்வி பெற்ற படி
இவை எல்லாம் அப்போது அலர்ந்த கமலம் போலே இருக்கும் –
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே —
கலா காஷ்டாதிகளாலும் பேதிக்க ஒண்ணாத அத்யல்ப காலம் அனுபவிப்பது -ஒரு நாள் அனுபவிப்பது -ஒரு மாசம் அனுபவிப்பது
ஓராண்டு அனுபவிப்பது கல்பம் தோறும் கல்பம் தோறும் அனுபவிப்பது -இப்படி காலம் எல்லாம் அனுபவியா நின்றாலும்
கீழ்ச் சொன்ன அப்பொழுதைக்கு அப் பொழுது என்னாராவமுதமே –
பூர்வ ஷணத்தில் அனுபவம் போலே வல்ல வாயிற்று உத்தர ஷணத்தில் அனுபவம் இருப்பது
தாராவாஹிக விஜ்ஞானத்தில் காலோபஷ்டம்பாதிகளால் வருவதொரு பேதம் உண்டு இறே-ஜ்ஞானத்துக்கு
-இங்கு விஷயம் தானே பேதியா நின்றதாயிற்று –

—————————————————————————————

அவதாரிகை –

இத்தனை போதும் தாமரையை சிஷித்து உபமானமாகச் சொல்லிப் போந்தார் -விஷயத்திலே அவகாஹித்தவாறே
நேர் கொடு நேர் உபமானமாக நின்றது இல்லை -அவற்றைக் கழித்து உபமேயம் தன்னையே சொல்லுகிறார்-

ஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –2-5–5–

ஆராவமுதமாய்
எப்போதும் புஜியா நின்றாலும் மேன்மேல் என த்ருஷ்ணையை விளைக்கும் அமிர்தம் போலே நிரதிசய போக்கினாய்
யல்லாவி யுள் கலந்த
இப்படி போக்யம் குறைவற்றால் போக்தாக்களும் அதுக்கு அனுரூபமாகப் பெற்றதோ
அல்லாவி
ஒரு வஸ்துவாக என்ன ஒண்ணாத என்னுடைய ஆவியோடு கிடீர் வந்து கலந்தது
தன்னையும் அறிந்திலன் என்னையும் அறிந்திலன்
அல் ஆவி
அசித்தைக் காட்டிலும் தம்மை குறைய நினைத்த படி
அசித்துக்கு இழவு இல்லையே -தன் ஸ்வரூபத்திலே கிடந்ததே
சேதனனாய் இருந்து வைத்து ஜ்ஞானம் பலம் இல்லாமையாலே அசித்தில் காட்டில் தம்மைக் குறைய நினைத்து இருக்கிறார்
உள் கலந்த
பெரு மக்கள் உள்ளவரான நித்ய ஸூ ரிகள் அளவில் கலக்குமா போலே தான் கலந்தானோ
என்னை ஆராவமுதாக நினைத்து -என்னளவாகத் தன்னை நினைத்துக் கிடீர் கலந்தது
உள் கலந்த
ஏக தத்வம் என்னலாம் படி கலந்தானாயிற்று
அவன் இப்படி கலந்தமை நீர் என் கொண்டு அறிந்தது
அவன் இப்படி கலந்தமை நீர் என் கொண்டு அறிந்தது என்னில் -வடிவிலே தொடை கொண்டேன் -என்கிறார்
காரார் கரு முகில் போல் –
என்னோட்டைக் கலவி பெறாப் பேறு என்னும் இடம் தன் வடிவிலே தோற்ற இரா நின்றான்
கார் காலத்திலே ஆர்ந்த கருமுகில் போலே -என்னுதல்
கார் என்று கறுப்பாய்-கருமை மிக்க முகில் என்னுதல்
இவ்வடிவை உடையவன் கிடீர் என்னோடு வந்து கலந்தான் -என்கிறார் –
என்னம்மான் கண்ணனுக்கு
அவ்வடிவு அழகாலே என்னை எழுதிக் கொண்ட கிருஷ்ணனுக்கு –
நேராவாய் செம்பவளம்
பவளமாகில் சிவந்தது அன்றோ இருப்பது என்னில் பிரவாளத்தை ஸ்படிக ஸ்தானத்திலே யாக்கி அவ்வருகே சிறந்த பவளத்தை கற்பித்தால்
அப்படி சிறந்த பவளமாயிற்று ஜாதியாக திருப் பவளத்துக்கு ஒப்பாகாதது
கண் பாதம் கை கமலம் நேரா –
குளிர நோக்கின கண் –நோக்குக்குத் தோற்று விழும் திருவடிகள் -திருவடிகளில் விழுந்தாரை எடுத்து அணைக்கும் கை –
இவற்றுக்குத் தாமரை ஜாதியாக ஒப்பாகா –
பேராரம் –
பெரிய வரை மார்பில் பேராரம் என்கிறபடியே -திருக் கழுத்துக்கு இருமடியிட்டுச் சாத்த வேண்டும்படியான ஆரம்
நீண் முடி –
ஆதி ராஜ்ய ஸூசகமான திரு அபிஷேகம்
நாண்
விடு நாண்
பின்னும் இழை பலவே —
அனுபவித்துப் போம் இத்தனை போக்கி என்னால் சொல்லித் தலைக் கட்டப் போமோ –

——————————————————————————————–

அவதாரிகை –

தம்முடனே கலந்து ஆற்றானாய்-அநேக சரீரம் பரிக்ரஹம் பண்ணி என்னை அனுபவியா நின்றான் கிடீர் -என்கிறார் –

பலபலவே யாபரண பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவு பண்பு என்னில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்
பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ–2-5-6-

பலபலவே யாபரணம்
ஜாதி பேதமும் வ்யக்தி பேதமும் இருக்கிற படி
திருக்கைக்கு சாத்துமவை என்றால் அநேகம்
அவை தன்னிலே இடைச்சரி கடைச்சரி என்று அநேகமாய் இருக்கும் இறே
பேரும் பலபலவே
அனுபவ சமயத்தில் நாம க்ரஹணத்துக்கு இழிந்த இடம் எல்லாம் துறை
சீலப்பேர் வீரப்பர் அநேகமாய் இருக்கும் இறே
பலபலவே சோதி வடிவு –
திரு நாமத்வாரா காணும் வடிவுகளும் பல
அப்ராக்ருத திவ்ய சம்ஸ்தானத்தை இதர சஜாதீயம் ஆக்குகையாலே எல்லாம் சோதி வடிவையே இருக்கும் இறே
சௌபரியைப் போலே அநேகம் வடிவைக் கொண்டாயிற்று இவரை அனுபவிக்கிறது
முக்தன் தன்னை அனுபவிக்கும் போது படுமா போலே தான் என்னை அனுபவிக்க பல வடிவு கொள்ளா நின்றான்
பண்பு என்னில்
பிரகாரங்களை அனுசந்திக்கில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்
கண்டு கேட்டு உண்டு உற்று மோந்து உண்டாகக் கடவதான ஐந்த்ரிய ஸூகங்களும்
பல பல த்ருஷடி பிரியமாய் இருக்குமவையும் புஜிக்குமவையும் ஸ்ரவண இந்த்ரிய விஷயமாய் இருக்குமவையுமாய் அநேகம் இறே
பாம்பனை மேலாற்கேயோ–
விஷயங்களைச் சொல்லுதல் -அவற்றை அறிக்கைக்கு சாமக்ரியையான ஜ்ஞானங்களைச் சொல்லுதல்
ஜ்ஞானமும் பல உண்டோ என்னில் -விஷயங்கள் தோறும் பேதிக்கும் இறே ஜ்ஞானமும்
ஸ்வ வ்யதிரிக்த விஷயங்களை எல்லாம் விஷயமாக உடையவனாய் -அவற்றை எல்லாம் அறியவும் வல்லனாய்
அவற்றை எல்லாம் அனுபவித்தால் வரும் ஏற்றத்தை யும் உடையவனாய் இருக்கும் இறே
பலபலவே ஞானமும்
இவை எல்லாம் ஒரு விஷயத்திலே உண்டாய் அனுபவிக்கும் என்னும் இடத்துக்கு உதாரணம் காட்டுகிறார்
ஸ்பர்ச இந்த்ரியத்துக்கு உண்டு -க்ராண இந்த்ரியத்துக்கு உண்டு -கண்ணுக்கு இனியதாய் இருக்கும் இவை தொடக்கமானவை எல்லாம் உண்டு இறே
பாம்பணை மேலாற்க்கு -பண்பு என்னில் -பலபலவே யாபரணம் பேரும் பலபலவே பலபலவே சோதி வடிவு
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம் பலபலவே ஞானமும்-ஒ –என்று அந்வயம் –

——————————————————————————————–

அவதாரிகை –

அயர்வறும் அமரர்களாய் இருந்து வைத்து –ஷீராப்தியிலே கண் வளர்ந்து அருளி ராம கிருஷ்ணாதி
யவதாரங்களைப் பண்ணிற்று எல்லாம் எனக்காக கிடீர் என்கிறார் –

பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும்
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே –2-5-7—

பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
ஆர்த்த ரஷணத்துக்காக திருப் பாற் கடலிலே நீர் உறுத்தாமைக்கு-சைத்ய சௌகந்த்ய சௌகுமார்யங்களை யுடையனான
திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளிற்றும்
காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும்
சுற்றுடைமைக்கும் -செவ்வைக்கும் மூங்கில் போலே இருந்துள்ள தோள் அழகையுடைய நப்பின்னை பிராட்டியோட்டை சம்ச்லேஷத்துக்கு
பிரதி பந்தகங்களான ருஷபங்கள் ஏழையும் ஒரு காலே ஊட்டியாக நெரித்துப் பொகட்டதும்
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்
மகா ராஜர் நீர் வாலியைக் கொல்ல மாட்டீர் என்ன -அவரை விஸ்வசிப்பைக்காக-தேனை உடைத்தாய் பணைத்து-அடி கண்டு
இலக்கு குறிக்க ஒண்ணாத படியாய் இருக்கிற மரா மரங்கள் ஏழையும் எய்ததும்
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே –
பூவை உடைத்தாய் தொடை யுண்ட -என்னுதல்
நல்ல தொடையை உடைத்தான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனாய்-ஆதி ராஜ்ய ஸூசகமான திரு அபிஷேகத்தை உடையனாய்
இவ் வழகு தன்னை நித்ய ஸூ ரிகளை அனுபவிப்பித்து அத்தால் வந்த மேன்மை தோற்ற -அழகியதாய்
யுத்த உன்முகமான ருஷபம் போலே மேனாணித்து இருக்கும் இருப்பு
பொன் முடியம் போரேறே –
பாற் கடலுள் பள்ளி யமர்ந்ததுவும் -பாம்பணை மேல் -என்று தனித் தனியே க்ரியையாகக் கடவது
இவை எல்லாம் எனக்காகக் கிடீர் என்றுமாம் –

———————————————————————————————–

அவதாரிகை –

அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து என் தண்மையைப் பாராதே என்னோடு வந்து கலந்த
இம் மகா குணத்தை என்னால் பேசி முடியாது -என்கிறார் –

பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரீ –2-5-8-

பொன் முடியம் போரேற்றை –
உபய விபூதிக்கும் கவித்த முடியை யுடையனாய் -அத்தால் வந்த சேஷித்வ வுரைப்புத் தோற்ற இருக்கிறவனை
எம்மானை
தன் சேஷித்வத்தில் எல்லையைக் காட்டி -என்னை சேஷத்வத்தின் எல்லையில் நிறுத்தினவனை
நால் தடம் தோள் தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
நாலாய் பணைத்து இருந்துள்ள தோள்களை
உடையவனாய் தன்னைப் பேசப் புக்கால் வேதங்களும் எல்லை காண மாட்டாத -யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று
மீளும்படி இருப்பானாய் இருக்கிற தண் துழாய் மாலையானை
எல்லை காண ஒண்ணாத வஸ்துவுக்கு லஷணம் போலே திருத் துழாய் மாலை –
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
அவன் பக்கல் நன்மைக்கு எல்லை காண ஒண்ணாதா போலே யாயிற்று இவர் பக்கல் தீமைக்கு எல்லை காண ஒண்ணாதே இருக்கிறபடி
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
என் அளவு பாராதே -அவிஜ்ஞாதா -என்கிறபடியே என் தண்மை பாராதே கண்ணைச் செம்பளித்து வந்து கலந்தான் என்னுதல்
அன்றிக்கே -ஆடியாடியிலே விச்லேஷித்த வியசனத்தாலே நான் முடியப்புக -அது காண மாட்டாதே என்னோடு கலந்தான் என்னுதல் –
சொல் முடிவு காணேன் நான் –
என்னோடு வந்து கலந்த ஒரு குணத்தையும் சொல்லில் -ஆனந்த குணம் ஒன்றையும் சொல்லப் புக்க வேதம் பட்டது படும் அத்தனை –
அவன் என்னை அனுபவிப்பிக்க -அத்தால் எனக்கு பிறந்த ரசம் அனுபவித்து விடும் அத்தனை அல்லது பாசுரம் இட்டுச் சொல்ல முடியாது என்றுமாம்
சொல்லுவது என் சொல்லீரீ –
இதர விஷயங்களை அனுபவித்து அவற்றுக்கு பாசுரம் இட்டுச் சொன்னீர்களாய் இருக்கிற நீங்கள் தான் சொல்ல வல்லிகளோ-

———————————————————————————–

அவதாரிகை –

பாசுரம் இல்லை என்னா கை வாங்க மாட்டாரே -சம்சாரிகளைப் பார்த்து -என் நாயகனான சர்வேஸ்வரனை
எல்லாரும் கூடியாகிலும் சொல்ல வல்லிகோளோ -என்கிறார்

சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனை
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்
அல்லிமலர் விரையோத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் –2-5-9-

சொல்லீர் என் அம்மானை –
ஷூத்ர விஷயங்களை அனுபவித்து -அவற்றுக்கு பாசுரம் இட்டு சொல்லி இருக்கிற நீங்களாகிலும் சொல்ல வல்லி கோளோ –
என் அம்மானை –
தன் குண சேஷ்டிதங்களாலே என்னை முறையிலே நிறுத்தினவனை
என்னாவி யாவி தனை
என் ஆத்மாவுக்கு அந்தராத்மாவாய் உள்ளவனை
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
திவ்யாத்ம ஸ்வரூப குணங்களுக்கு எல்லை காணிலும் விக்ரஹ குணங்களுக்கு எல்லை இன்றிக்கே இருக்கிற படி
அளவிறந்த கல்யாண குணங்களையும் நீல மணி போலே குளிர்ந்த வடிவு அழகையும் என்னை அனுபவிப்பித்தவனை
நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்
நித்யமுமாய் போக்யமுமான அமுதம்
ப்ராக்ருத போக்யன்களுள் தலையான அம்ருதம்
ஒருவராலும் ஸ்வ யத்னத்தாலே ப்ராபிக்க ஒண்ணாத மோஷ புருஷார்த்த முமாய்
அல்லிமலர் விரையோத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் —
போக்யதைக்கு தாமரைப் போவில் பரிமளத் தோடே
ஒத்து
இதர புருஷ சஜாதீயன் அல்லன் –
பெண் அல்லன் என்றவோ பாதி
ஆண் அல்லன் என்று அது தன்னையும் கழிக்கிறது
இத்தால் உபமான ரஹிதன் -என்றபடி –

———————————————————————————

அவதாரிகை –

என்னோடு கலந்த எம்பெருமான் படி பேசப் பெரிதும் மிறுக்குடைத்து-கடினமானது என்கிறார் –

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணும் கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே –2-5-10-

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்
நாட்டில் காண்கிற ஆண்களின் படியும் அல்லன் -அப்படியே ஸ்திரீகளின் படியும் அல்லன் –
உபயோக யோக்யம் அல்லாத நபும்சக பதார்த்தத்தின் படியும் அல்லன்-
நைனம் வாசா ச்த்ரியம் ப்ருவன் நைனமஸ்த்ரீ புமான் ப்ருவன் புமாம்சம் ந ப்ருவன் நைனம் வதன் வத்தி கச்சன அ இதி ப்ரஹ்ம-
ஆரணத்தில் இரண்டாம் ஒத்து –
ச வை ந தேவாஸூர மர்த்ய ந ஸ்திரீ ந ஷண்டோ ந புமான் நாயம் குண கர்ம ந சன்ன சாசன் நிஷேத சேஷோ ஜெயதாத சேஷ -என்று
இப்படி பட்டர் அருளிச் செய்தவாறே ஒரு தமிழன் -ஜீயா நாட்டில் காண்கிற மூன்று மூன்றும் படியும் அல்லனாகில்
சொல்லிற்றாகிற வஸ்து சூன்யமோ பின்னை -என்று கேட்க
பட்டரும் -பிள்ளாய் இயல் அறிவுக்கு போந்து இருதது இல்லையீ -ஆண் அல்லன் பெண் அல்லள் அல்லா யலியும் அல்லது என்றது அல்லையே
அல்லன் அல்லன் என்கையாலே புருஷோத்தமன் என்று சப்தம் தான் தோற்று விக்கிறது இல்லையோ -என்று அருளிச் செய்தார்
ஆண் அல்லன் பெண் அல்லன் என்கிற இத்தால் சஜாதீய விஜாதீய நிஷேதம் பண்ணின படி –
காணலும் ஆகான்
ஆண் பெண் அலி -என்கிற இவற்றைக் காணும் பிரமாணங்களால் காணப் படாதான் -இத்தால் ஏக பிரமாண கம்யத்வ சாம்யமும் இல்லை -என்கை
உளன் அல்லன்
அநாஸ்ரிதற்கு
இல்லை அல்லன்
ஆஸ்ரிதர்க்கு
அத்தை உபபாதிக்கிறது மேல்
பேணும் கால் பேணும் உருவாகும்
1–நீ எங்களுக்கு புத்ரனாய் வந்து பிறக்க வேணும் -என்று சிலர் இரந்தால்-அப்படியே வந்து பிறந்து -சபலம் தேவி சஞ்ஜாதம் ஜாதோஹம்
யத் தவோதராத் -என்று நிற்கும்
அன்றியே –
2-பேணுங்கால் -தன்னை அர்த்திக்கும் காட்டில் பேணும் உருவாகும் -தன்னைப் பேணி மறைக்க வேண்டும்படி வந்து அவதரிக்கும் -என்றுமாம்
அல்லனுமாம்
இப்படி தாழா நிற்கச் செய்தே சிசுபாலாதிகளுக்கு கிட்ட அரிதாம் படி இருக்கும் –
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே-
இவ்வோ நிலைகளை எனக்கு அறிவித்த சர்வேஸ்வரன் படிகளை பேச வென்றால் சால மிறுக்குடைத்து –

——————————————————————————————-

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார் உண்டாகில் அவர்கள் பரமபதத்தில் போய்
நித்ய அனுபவம் பண்ணப் பெறுவர் -என்கிறார் –

கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்த வம்மானை
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின வந்தாதி யோராயிரத்துள் இப்பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே –2-5-11-

கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்த வம்மானை –
தன் படிகளைப் பேசப்புக்கால்-ஆனந்த வல்லியில் -சொல்லுகிற படியே பேசித் தலைக் கட்ட ஒண்ணாது இருக்கிறவனை
பேச ஒண்ணாது ஒழிகிறது பரத்வம் அல்ல -குடக் கூத்தாடின செயல் ஒன்றுமே யாயிற்று
அம்மானை
குடக் கூத்தாலே என்னை அனந்யார்ஹம் ஆக்கினவனை –
விஷ்ணோர் ஜிஷ்ணோர் வாசுதேவாத் மஜச்ய –
கூறுதலே மேவிக்
பேச நிலம் அன்று என்று வேதங்கள் மீண்ட விஷயம் என்று தாமும் பேச ஒண்ணாது -என்று கை வாங்காதே –
அழகிதாகப் பேசக் கடவோம் என்று அத்யவசித்தார்
நான் சொல்லுவது என்-சொல்லீரோ என்னா-திரியவும் -சொல்லீர் என் அம்மானை என்று தொடங்குமவர் இறே
அத்யவசித்தத்து இத்தனையோ -கூறிற்றும் உண்டோ என்னில்
குருகூர்ச் சடகோபன் –
குருகூர்ச் சடகோபன் அன்றோ -கூறச் சொல்ல வேணுமோ -மயர்வற மதுநலம் அருளப் பெற்றவர்க்கு பேசத் தட்டுண்டோ –
கூறின வந்தாதி யோராயிரத்துள் இப்பத்தும் –
விஷயத்துக்கு அனுரூபமாகப் பேசித் தலைக் கட்டின அந்தாதி ஆயிரத்திலும் இப்பத்தையும் அப்யசிக்க வல்லார் உண்டாகில்
கூடுவர் வைகுந்தமே –
அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ –என்று ஆசைப் பட்டுப் பெறாதே
ஆடியாடியாய் வ்யசனப் படாதே -இப்பாசுர மாதரத்தை சொல்லவே நான் பிரார்த்தித்து பெற்ற பேறு பெறுவார்கள்
பித்ரு தனம் கிடந்தால் புத்திரன் அழித்து ஜீவிக்கும் அத்தனை இறே -ஆழ்வார் பட்ட வ்யசனம் பண்ண வேண்டா –
இது கற்றார்க்கு இவர் பேற்றிலே அந்வயம் –

முதல் பாட்டில் இவர் ஆசைப்பட்ட படியே அடியார்கள் குழாங்களோடு வந்து கலந்த படி சொன்னார்
இரண்டாம் பாட்டில் -தம்மோடு கலந்த பின்பு அவன் திரு மேனியும் திவ்ய அவயவங்களும் திவ்ய ஆயுதங்களும் நிறம் பெற்றது என்றார்
மூன்றாம் பாட்டில் -தம்மோடு கலந்து தான் சத்தை பெறுதல் -இல்லையாகில் இல்லையாம் படி வந்து கலந்தான் என்றார் –
நாலாம் பாட்டில் கீழ் இவனுக்கு திருஷ்டாந்தமாக சொன்னவை நேர் இல்லாமையாலே அவற்றை சிஷித்து சேர்த்து அனுபவித்தார்-
அஞ்சாம் பாட்டில் அது தானும் உபமானமாக நேர் இல்லாமையாலே அவற்றைக் கழித்து உபமேயம் தன்னையே அனுபவித்தார் –
ஆறாம் பாட்டில் இப்படி விலஷணன் ஆனவன் -முக்தன் தன்னை அனுபவிக்குமா போலே தான் என்னை அனுபவித்தான் என்றார்
ஏழாம் பாட்டில் தமக்காக ராம கிருஷ்ணாதி அவதாரங்களைப் பண்ணினான் -என்றார்
எட்டாம் பாட்டில் அவனை என்னால் பேச முடியாது -என்றார்
ஒன்பதாம் பாட்டில் துணை தேடிக் கொண்டு திரியவும் பேசுகையில் உபக்ரமித்தார்
பத்தாம் பாட்டில் இப்படிகளால் என்னோடு கலந்த இம் மகா குணம் ஒன்றையுமே பேச என்றால் சால மிறுக்குடைத்து என்றார்
நிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி – -2-4– –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

October 21, 2015

பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியில் -பருகிக் களித்தேனே -என்று ஹ்ருஷ்டராய் -அது தன்னை பாகவதர்களோடே உசாவி தரிக்க வேணும் என்று பாரித்து
அதுக்கு இவ்விபூதியில் ஆள் இல்லாமையாலே நித்ய விபூதியிலே நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணி அனுபவிக்கக் கோலி-நினைத்த போதே அத்திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறாமையாலே மிகவும் அவசன்னராய் தம்முடைய தசையை ஸ்வகீயரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமானுக்கு அறிவிக்கிறபடியை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –
முன் அஞ்சிறைய மடனாரையில்-தூது விட ஷமரானார்
வாயும் திரையுகளில் கண்ணால் கண்ட பதார்த்தங்கள் அடைய பகவ அலாபத்தாலே நோவு படுகிறவாகக் கொண்டு அவற்றுக்குமாக நோவு பட ஷமரானார்
அவ்வளவு அன்றிக்கே -ஆற்றாமை கரை புரண்டு –தாமான தன்மை இழந்து -ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய்
அது தன்னிலும் தன் தசை தான் வாய் விட்டுப் பேச மாட்டாதே பார்ச்வஸ்தர் அறிவிக்க வேண்டும்படியாய்-ஸ்திதி கமன சயநாதிகளிலே
ஒரு நியதி இன்றியிலே அரதியாய் நோவு பட -இப்பெண் பிள்ளை தசையை அனுசந்தித்த தாயார்
-ராம கிருஷ்ண்யாத் யவதாரங்களைப் பண்ணி -ஆர்த்தரானார் ஆர்த்தி எல்லாம் பரிஹரிக்கக் கடவ ஸ்வபாவரான நீர் உம்மை ஆசைப்பட்ட இவள்
நோவு படப் பார்த்து இருப்பதே -என்று எல்லா அளவிலும் அவனையிட்டு பரிஹரித்து கொள்ளும் குடி யாகையாலே
அவன் திருவடிகளிலே பொகட்டு-இவளிடை யாட்டத்தில் நீர் செய்ய இருக்கிறது என் என்று கேட்கிற பாசுரத்தாலே தம்முடைய தசையை அருளிச் செய்கிறார்
காசை இழந்தவனுக்கும் -பொன்னை இழந்தவனுக்கும் -ரத்னத்தை இழந்தவனுக்கும் ஒத்து இராது இறே கிலேசம் –
காசு -விபவம் –காசினை மணியைச் சென்று நாடி -பெரிய திருமொழி –7-10-4-
தங்கம் -அர்ச்சாவதாரம் -செம்பொனே திகழும் -நம்பியை -1-10-7-
இரத்தினம் – அடியவர்கள் குழாம் –செழு மா மணிகள் சேரும் -5-8-9-
அவதாரத்திலே பெரு நிலம் நல்லடிப்போதை -1-3-10-அனுபவிக்க ஆசைப்பட்டு கிடையாமையாலே வந்த ஆற்றாமை -அஞ்சிறைய மடநாரையிலே
நம்பியத் தென் குறுங்குடி நின்ற –1-10-9-என்று அர்ச்சாவதாரத்திலே அனுபவிக்க ஆசைப்பட்டு கிடையாமையாலே வந்த ஆற்றாமை -வாயும் திரைகளில்
இதில் -அவன் தனக்கும் பிராண பூதரான நித்ய ஸூரிகளை அனுபவிக்க ஆசைப்பட்டு கிடையாமையாலே வந்த ஆற்றாமையாலே
அவற்றிலும் அதுக்கு ஆற்றாமை விஞ்சி இருக்கும் –
நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறாமையாலே நோவு படுகிறதாகில்-பின்னை அவர்களைச் சொல்லிக் கூப்பிடாதே
அவனைச் சொல்லிக் கூப்பிடுவான் என் என்னில் -எங்கேனும் ஒரு காட்டில் ரத்னங்கள் பறி யுண்டாலும் நாட்டில் ராஜாவின் வாசலில்
அவன் பேர் சொல்லி இறே கூப்பிடுவது -அவர்களோட்டை சம்ச்லேஷத்துக்கும் கடவன் அவனாகையாலே அவனைச் சொல்லிக் கூப்பிடுகிறது
பகவத் விச்லேஷத்தில் உட்புக நின்றால் இறே பாகவத விச்லேஷம் தான் தெரிவது
கதான்வஹம் சமேஷ்யாமி பரதேன மஹாத்மநா சத்ருநேன ச வீரேண த்வயா ச ரகு நந்தன -ஸ்ரீ பரத ஆழ்வானோடும் -ஸ்ரீ சத்ருகன ஆழ்வானோடும்
கூடப் பெறாத கிழிக் குறையாலே-மனக்குறையாலே-கூட நிற்கிற இளைய பெருமாளோடும் கூடிற்றாய் தோற்றிற்று இல்லை இறே பெருமாளுக்கு
பணப்பை -கிழி-
குஹேன சஹிதோ ராம லஷ்மணேந ச சீதயா -கூடப் போன இளைய பெருமாளோடும் பிராட்டியோடும் கூடிற்றாய் தோற்றிற்று
ஸ்ரீ குஹப் பெருமாள் உடன் கூடின பின்பு இறே
இப்படி இறே அவன் தனக்கும் அந்வய வ்யதிரேகங்கள் இருக்கும் படி
ததீய சம்ச்லேஷத்தை ஆசைப்பட்டு பெறாமையாலே வந்த இழவு-பெற்ற பகவத் சம்ச்லேஷம் இழந்து அடியே பிடித்து
பிரார்த்திக்க வேண்டும்படியாய் வந்து விழுந்தது
வாயும் திரையுகளில் ஆர்த்தி தீர வந்து சம்ச்லேஷித்த சம்ச்லேஷம் முற்றுவதற்கு முன்னே வந்த பிரிவாகையாலும் ஆற்ற ஒண்ணாது இறே –

—————————————-

அவதாரிகை –

முதல் பாட்டில் ஆபத்தே செப்பேடாக -ஆஸ்ரிதன் பிரதிஜ்ஞா சமகாலத்திலேயே வந்து உதவும் ஸ்வபாவனானவனை
சொல்லிக் கூப்பிடா நின்றால் என்கிறாள்-

ஆடியாடி யகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடிவாடும் இவ்வாணுதலே –2-4-1-

ஆடியாடி –
ஸ்திதி கமன சய நாதிகளில் ஒரு நியதி இன்றிக்கே அரதியாலே படுகிற பாடு தான் திருத் தாயாருக்கு ஆகர்ஷகமாய் இரா நின்றதாயிற்று
ஸ்ரீ கௌசல்யையார் பெருமாளை பிரிந்து துடிக்கிற துடிப்பை -ந்ருத் யந்தீமிவ மாதரம் –அயோத்யா -40-25-என்றான் இறே
வடிவு அழகியார் வியாபாரங்கள் எல்லாம் இனிதாய் இருக்கும் இறே -பிரிந்து அழகு அழிந்து இருக்கிற சமயத்திலே இறே -சுபாம் -சுந்தர -29-1–என்றது –
முதல் ஆடி -என்றதுக்கு அவ்வருகே ஒரு நிலை இறே இரண்டாம் ஆடி –
முதலிலே சஞ்சாரம் அரிதாம் படி இருக்கச் செய்தே ஆற்றாமை பிரேரிக்க சஞ்சரியா நிற்கும்
குணா திக விஷயம் ஆகையாலே முடிந்து பிழைக்கவும் ஒட்டாதே -ராம கமன காங்ஷயா–பால -1-39-இன்னும் ஒரு கால் அவர் முகத்தில் விழிக்கலாம் ஆகில் அருமந்த பிராணனை பாழே போக்குகிறது என் -என்று ராஜ்யத்தையும் தொட்டுக் கொண்டு கிடந்தான் இறே -ஸ்ரீ பரத ஆழ்வான் நந்திக்ராமத்தில்
முதல் ஆடி -என்கிறதில் காட்டில் இருகால் மட்டு ஆடி என்றதில் அவசாதத்தின் மிகுதி -தாளம் கொண்டு அறியும் அத்தனை –
யகம் கரைந்து
சஞ்சாரம் செல்லா நிற்கச் செய்தே சஞ்சாரம் அடி அற்று இருக்கும் –
இவள் வியாபாரம் கண்ணுக்கு இலக்கானால் போலே அகவாயும் இவள் நெஞ்சுக்கு இலக்கை இருக்கிறபடி
மனஸ் தத்வம் நீராய் உருகிப் போயிற்று என்கிறாள்
இசை பாடிப்பாடி –
மநோ பூர்வோ வாக் உத்தர -என்கிற க்ரம நியமம் இல்லை
ஆற்றாமையால் கூப்பிடுகிற கூப்பீடு தான் பாட்டாய் தலைக் கட்டுகிறது அத்தனை
பண்ணை வென்ற இன் சொல் மங்கை இறே இவள் தான்
மதுரா மதுரா லாபா
ஆற்றாமையாலே துடித்த துடிப்பு ஆடல் ஆனால் போலே -ஆற்றாமையாலே கூப்பிடுகிற கூப்பீடு தான் பாட்டாய் விழா நின்றது
முதல் கூப்பீடு போல் அன்றிக்கே இரண்டாம் கூப்பீடு தளர்ந்து இருக்கும் இறே
கண்ணீர் மல்கி
உருகின மனஸ் தத்வம் -இசையாய் ப்ரவஹித்து -மிக்கது கண்ணீராய் பிரவஹிக்கிற படி -நெஞ்சு ஒழியப் பாய்கிற கண்ண நீர் இறே
மல்கி -மிக்கு
கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் வாரி ஸ்ரவதி சோகஜம் -சுந்தர -33-4-
ஆனந்த ஸ்ருவுக்கு யோக்யமான கண்களாலே சோகஸ்ரு பிரவஹிக்கிறது ஆர்குடி வேர் அற -என்று பட்டர் அருளிச் செய்யும் படி
-இராவணனுடைய குலம் என்றவாறு
அன்றிக்கே -பிள்ளான் -ஆரைச் சேதனராகக் கொண்டு -என்று பணிக்கும் -இந்த எழிலை அனுபவிக்க பெருமாள் இல்லாத போது
இத்தால் என்ன பயன் -என்றவாறே –இத்தையே விவரிக்கும் ஸ்லோகம் —புண்டரீக பலாசாப்யாம் விபர கீர்ண மிவோதகம் –
பாவியேன் இவ்வரவு உடைய பெருமாள் வரவாய்க் காணப் பெற்றது இல்லை – என்றார் இறே திருவடியும்

எங்கும் நாடி நாடி
தன ஆபத்தே செப்பேடாக வர சம்பாவனை இல்லாத திக்கையும் பார்க்கும் –
சா திர்யக் ஊர்த்த்வஞ்ச ததாப்ய தஸ்தாத்–சுந்தர -31-19-நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே வாராத் திரு நாமம் செவிப் பட்டவாறே
விலங்கப் பார்ப்பது -மேலே பார்ப்பது கீழே பார்ப்பது ஆனாள்
கீழ் பார்த்ததுக்கு கருத்து என் என்னில் -பூமியைப் பிளந்து கொண்டு புறப்பட்ட ஒருவன் திரு நாமம் சொல்ல சம்பாவனை உண்டாகில்
அல்லாத திக்குகளிலும் உள்ளது என்று பார்த்தாள்
அன்றிக்கே மாச உபவாசீகள் சோறு -என்றவாறே அலமாக்குமா போலே பார்த்தாள் என்னுதல்
அங்கன் இன்றிக்கே சிம்சுபா வருஷத்தை எங்கும் ஒக்கப் பார்த்தாள் -என்னுதல் –
தமசிந்தய புத்திம் ததர்ச-சுந்தர -31-19- அவன் வடிவு காண்பதற்கு முன்னே அகவாயை யாயிற்று பரிச்சேதித்தது-
இந்நிலத்திலே புகுந்து இடம் கொண்ட நாம் இருந்தவிடம் துருவி நிலை குத்த வல்ல நெஞ்சை உடையவன் அன்றோ என்று
பிங்காதிபதே ராமாத்யம் -சுந்தர -32-7-இவன் ஸ்வ தந்த்ரன் அல்லன் -ராஜ கார்யம் இவன் கையிலே உண்டு என்று அறிந்தாள்
வாதாத் மஜம் -சுந்த -32-7–பெருமாளுக்கு பிராண ஹேதுவான பிராட்டிக்கு பிராணங்களை கொடுக்கையாலே –
இவன் சர்வர்க்கும் பிராண ஹேதுவான வாயு புத்திரன் -என்று தோற்ற இருந்தான்
ஸூர்யம் இவ உதயஸ்தம்-சுந்தர -31-19- -இலங்கையிலும் கிழக்கு வெளுக்க அடியிட்டது
பெருமாள் ஆகிற ஆதித்ய உதயத்துக்கு அருணோதயம் -என்னலாம் படி இருந்தான்
ஆகை இறே இலங்கை நாலு மதிளுக்கு நடுவே ஹரி ஹரி -என்கிறபடியே இருக்கிறது
இப்படி வருகைக்கு சம்பாவனை இல்லாத திக்கிலும் தேடுவான் என் என்னில் சம்பாவனை இல்லாத இடத்தேயும் வந்து தோற்றுமவன் ஆகையாலே –
பத்துடை அடியவர்க்கு பின்பு அவதாரத்துக்கு அவ்வருகு இவர் போக மாட்டார் –
பரத்வத்தை விட்டு அவதாரத்திலே இழிகிறார் -கஜேந்திர ஆழ்வானுக்கு உதவியவனைத் தேடாமல் நரசிம்ஹனை தேடுகிறாள்
எங்கும் நாடி நாடி –
தன் கொய்சகம் உட்பட பாரா நின்றாள் என்று பட்டர் அருளிச் செய்யும் படி -அதுக்குக் கருத்து -கண்ணன் என் ஒக்கலையானே-என்று
அவன் இருந்த பிரதேசம் ஆகையாலே
நரசிங்கா வென்று
பிரகலாதனைப் போலே ஒரு தம்பம் இல்லாதபடி இருக்கையாலே வாடும்
மத்தஸ் சர்வமஹம் சத்யம் -என்னும் தெளிவு உடையவனுக்கு தோற்றினவன்-கலங்கின அபலைக்குத் தோற்றானோ என்னுமத்தாலே
தமப்பன் பகையானாலோ உதவலாவது -நீர் பகையானாலும் உதவலாகாதோ
ஜ்ஞான நிஷ்டர்க்கோ உதவலாவது -பக்தி நிஷ்டர்க்கு உதவலாகாதோ
ஆண்களுக்கோ உதவலாவது பெண்களுக்கு உதவலாகாதோ
சேராத வடிவு சேர்த்து உதவிலோ உதவலாவது இருந்தபடி உதவலாவார்க்கு உதவலாகாதோ
ஒரு அதிகாரி நியதி கால நியதி ஒரு அங்க நியதி என்கிற நிர்பந்தம் வேணுமோ இவளுக்கு
இவளுடைய ரஷணத்துக்கும் ஏதேனும் முகம் பண்ண வேணுமோ
வாடிவாடும்
கொம்பை இழந்த தளிர் போலே வாடும்
முதல் வாட்டம் தளிர் என்னும் படி இறே அனந்தரத்தில் வாட்டம்
வாடும்
தர்மிலோபம் பிறந்தது இல்லை -வரும் என்னும் ஆசையாலே முடியப் பெறுகிறிலள்
இவ்வாணுதலே
ஒளியுடன் கூடிய நுதலை உடைய இவள் -இவ் வழகுக்கு இலக்கானார் படுமத்தை இவள் படுவதே
இவள் முடிந்தால் உம்முடைய மேன்மையாலே இன்னம் இப்படி ஒரு வ்யக்தியை உண்டாக்கலாம் என்று இருக்கிறீரோ
தாதா யதா பூர்வம் கல்பயத் -என்கிறபடி சிருஷ்டிக்கலாம் என்று இருக்கிறீரோ
ஊனில் வாழ் உயிரிலே கல்வியால் உண்டான புகர் இன்னமும் அழிந்தது இல்லை காணும்
அம்பு பட்டு முடிந்தாரையும் நீரிலே புக்கு முடிந்தாரையும் முகத்திலே தெரியும் இறே
குணாதிக விஷய விரஹத்தாலே வந்த இழவு என்னும் இடம் முகத்தின் எழிலிலே தெரியாது நின்றது காணும்

———————————————————————————

அவதாரிகை –

நடுவே வாடும் இத்தனையோ வேண்டுவது -விரோதி கிடக்கச் செய்தே என்ன -பாணனுடைய பாஹூ வனத்திலும்
பிரபலமோ இவள் விரோதி -என்கிறாள் –

வாணுதல் இம்மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள் விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
காண நீர் இரக்கமிலீரே–2-4-2-

வாணுதல்
இவ்வவயவ சோபை போக ஹேதுவாகை யன்றிக்கே -நைகைக்கு உறுப்பாவதே-பெற்ற எனக்கு ஆகர்ஷண ஹேதுவான இது –
கைப்பிடித்த உமக்கு அநாதர ஹேதுவாவதே-
இயம் சீதா மம ஸூதா சஹ தர்ம சரீதவ ப்ரதீச்ச சைநாம் – பத்ரம் -தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா –
இம்மடவரல்
மடப்பம் வந்து இருக்கையாவது -மென்மையை உடையவளாகை-பிரிந்து கலக்கப் பொறாத சௌகுமார்யத்தை உடையவள்
பிராட்டி தசையைக் கண்ட திருவடியைப் போலே இருக்கிறது காணும் -இப் பெண் பிள்ளை தசையைக் கண்ட திருத் தாயாருக்கு –
துஷ்கரம் க்ருதவான் ராம -இவளைப் பிரிந்து சமாதானம் பண்ணி இருந்த பெருமாள் சால அரிதாகச் செய்தார்
ஹீநோ யதநயா பிரபு -இவளைப் பிரிந்து தேஹத்தை தரித்து இருந்தார் என்பது யாதொன்று அது சால அரிதாக செய்தார் –
பிரபு -ஆனை குதிரை ஏறவும் நாடாளவும் கற்றார் இத்தனை -ப்ரணய தாரையில் புதியது உண்டிலர்
மால்யவானில் பெருமாள் இருந்த போது மேக தர்சனத்திலே பட்ட பாட்டைக் கண்டு -வசிஷ்ட சிஷ்யன் ஒரு ஸ்திரீ நிமித்தமாக
இப்படிப் படுவதே என்று கர்ஹித்து சிரித்து இருந்தான் விரக்தன் ஆகையாலே
இப்போது இவளைப் பிரிந்து தேஹத்தை தரித்துக் கொண்டு இருப்பதே என்கிறான் ஆயிற்று விசேஷ்ஜ்ஞ்ஞன் ஆகையாலே
தாரயத்யாத்மநோ தேஹம் -இது ஏதேனும் இரவல் உடம்போ சுமந்து கொண்டு இருக்கைக்கு -போகாய தனம் அன்றோ -துக்காய தனமோ இது
-பிரிந்தால் க்ரமத்திலே கூடுகிறோம் -என்று தரித்து இருக்க வல்லல் அள்ளலே இவள்
உம்மைக்
இவள் படி யன்றோ உமக்கு உபதேசிக்க வேண்டுவது -உம்மை நீர் அறியாமை அல்லையே-நம்மைப் பிரிந்தார் பிழையார்கள்-என்று இருக்க வேண்டாவோ
வாணுதல் இம்மடவரல் உம்மை –
துல்ய சீல வயோ வ்ருத்தாம் -என்னும்படி காணும் இருக்கிறது
உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள்
விஷய அனுபவ ரூபமாய் இறே ஆசையும் இருப்பது
காணும் ஆசையுள்
உம்மோடு அணைய ஆசைப் பட்டாளோ-காட்சியிலும் அருமைப் படுத்துவீரோ
நைகின்றாள்
இவளை தரிப்பிக்க வேண்டா –
அடியில் நிலையிலே நிறுத்த அமையும்
உம்மை காணும் ஆசையுள் நைகின்றாள்
கடலிலே அழுந்தா நின்றாள்
ஆசை என்னும் கடல் இறே
வாடுகை தான் தேட்டமாம் படி யாயிற்று
விறல் வாணன் ஆயிரம் தோள் துணித்தீர்
நையும் இதுவேயோ வேண்டுவது பிரதிபந்தகம் கிடக்க -என்றே நீர் சொல்லுவது
பாணனுடைய பஹூ வனத்தில் பரப்புண்டோ இவளுடைய விரோதி வர்க்கம்
உஷா அநிருத்த கடகர் அன்றோ நீர்
பேரனுமாய் ஆணுமாகிலோ உதவலாவது -உம்மோடு கலந்த அபலைக்கு உதவலாகாதோ
உம்மைக் காண
கருமுகை மாலை தேடுவார் சூட வி றே தேடுவது -சும்மாட்டைக் கொள்ள வல்ல இறே
இவ்வஸ்துவை ஆசைப்படுவார் படுவது காட்சிக்காக யாயிற்று
அழைப்பன் திரு வேங்கடத்தானைக் காண -நான்முகன் -39
காரார் திருமேனி காணும் அளவும் -சிறிய திருமடல்
இவர் தாமும் -கண்களால் காண வரும் கொல் -3-8-8-என்று
நீர் இரக்கமிலீரே–
உம்மை இவள் காண்கைக்கு ஈடாக நீர் இரக்கத்தை உடையீர் ஆகிறிலீர்
நைவ தம்சான் என்கிற படியே நீர் நோவு படுக்கை தவிர்ந்தால் சாமான்யமான இரக்கமும் போக வேணுமோ
இவள் நைவு பேற்றுக்கு உபாயம் அல்ல -அவன் இரக்கம் பேற்றுக்கு சாதனம் -என்று காணும் திருத் தாயார் இருக்கிறது
இவள் நைவு அவன் இரக்கத்துக்கு பரிகரம்-அவன் இரக்கம் பேற்றுக்கு சாதனம் -என்று இருக்கிறாள்
தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் – -என்று தானே காட்டக் காணும் இத்தனை இ றே –

————————————————————————————-

அவதாரிகை –

இன்று இச் செயலை செய்யக் கடவதாக நினைத்த நீர் அன்று உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து-
உண்ணாது -ந மாம்சம் ராகவோ புங்க்தே ந சாபி சேவதே -சுந்தர -36-42-
உறங்காது -அநித்ரஸ் சததம் ராம -சுந்தர -36-44-அச்செயலை என்றிய செய்தீர் என்கிறாள் –

இரக்க மனத்தோடு எரியணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே –2-4-3–

இரக்க மனத்தோடு எரியணை அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் -நெஞ்சில் நெகிழ்ச்சியாதல்–ஈடுபாடாதல் –ஈரிப்பாதல் –
இரங்கின நெஞ்சை உடைய இவள் -எரியை அணைந்த அரக்கும் மெழுகும் போலே உருகா நின்றாள்
அரக்கும் மெழுகும் -என்கிற இரண்டையும் -நெஞ்சுக்கு ஒன்றும் இவள் தனக்கும் ஒன்றுமாக்கி நிர்வஹிப்பர் பிள்ளை திருநறையூர் அரையர்
நெஞ்சம் இவள் தனக்கு கையடைப்பாகையாலே இவள் தனக்கே இரண்டையும் ஆக்கி அருளிச் செய்வர் பட்டர்
விஷ்ணு நா சத்ருசோ வீர்ய -என்கிறபடியே
எல்லாம் இவள் தன் படிக்கு திருஷ்டாந்தமாக வேண்டும்படி இறே இவள் தன் நிலை
அக்னிக்கு உள்ளே புகில் கரிந்து போம் –கடக்க விருக்கில் வலிக்கும் -அக்னி சகாசத்தில் உருகா நிற்கும் இறே –
முடிந்து பிழைக்கவும் பெறாதே -தரித்து இருக்கவும் பெறாதே நோவுபடும் படி பண்ணுவீரே-இவள் தசை இது –
இரக்கம் எழீர் –
நீரும் இவளைப் போலே உருக வேணும் என்று வளைக்கிறோமோ-
நொந்தார் பக்கல் பண்ணும் கிருபையும் பண்ணி கிறிலீர்
இரக்க மனத்தை உடையாளாக நின்றாள் இவள்
நீர் இரக்கம் எழு கிறிலீர்
நீர் இரங்கா விடில் உம்மைப் போலே இருப்பதொரு நெஞ்சை இவளுக்கு கொடுத்தால் ஆகாதோ
இதற்கு என் செய்கேன்
உம்முடைய இரக்கம் ஒழிய ஏதேனும் உபாயாந்தர சாத்தியமோ இப்பேறு
என் செய்கேன்
உம்மை இரங்கப் பண்ணவோ -இவளை இரங்காமல் பண்ணவோ
அரக்கன் இலங்கை செற்றீருக்கே –
உமக்கு இரக்கம் இன்றிக்கே ஒழிந்தால் -இவள் இரங்குவது ஒரு செயலைச் செய்து வைக்க வேணுமோ
ஒரு பிரணயி நிக்கு உதவினவன் நமக்கு உதவானோ -என்று ஈடுபடா நின்றாள்
புழுக் குறித்து எழுத்தானால் போலே ஓன்று வாய்த்தத்தைக் கொண்டு -அது அன்யார்த்தம் -என்று இராதே நோவு படா நின்றாள்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே-இரக்க மனத்தோடு- இவள் -எரியணை அரக்கும் மெழுகும் ஒக்கும்-
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன் -என்று அந்வயம்

————————————————————————————

அவதாரிகை –

அரக்கன் இலங்கை செற்றீர் என்கிற இது நியத ஸ்வபாவம் அன்று காண்-காதா சித்கம் காண் -என்றாள் திருத் தாயார் –
அது பொறுக்க மாட்டாமை அது தன்னையே சொல்கிறாள்-

இலங்கை செற்றவனே யென்னும் பின்னும்
வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்க வெவ்வுயிர்க்கும் கண்ணீர் மிகக்
கலங்கிக் கை தொழும் நின்றிவளே –2-4-4-

இலங்கை செற்றவனே யென்னும்
எனக்குப் பண்டே உதவி உபகரித்தவனே -என்னா நின்றாள் –
முன்பு தனக்கு உதவினவன் இப்போது தனக்கு உதவாது ஒழிந்தால் போலே கூப்பிடா நின்றாள்
கடல் அடைத்தல்-மலை எடுத்தல் -அம்பு ஏற்றல் செய்ய வேணுமோ –என் பக்கல் வரும் போது என்ன பிரதிபந்தகம் உண்டு –
திருத் தாயார் இவள் விடுகைக்குச் சொன்னது தானே அவளுக்கு பற்றுகைக்கு உடலாய் விட்டது –

பின்னும் வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும்
அதுக்கு மேலே -விடாய் இருந்த விடத்தே சாய்கரம் போலே உயர வைத்துக் கொண்டு வந்து காட்டும் பரிகரம் உடையவனே -என்னா நின்றாள்
மிடுக்கை உடைய புள்ளை த்வஜமாக உடையவன் என்னுதல்
அன்றியே -புள்ளால் வஹிக்கப் பட்டவன் -என்னுதல்
கொண்டு வருகைக்கு பரிகரம் உண்டாய் இருக்கச் செய்தே வரக் காணாமையாலே -மனஸ் தத்வம் வேர் பறியும் படி நெடு மூச்சு எறியா நிற்கும்
தஹந்தீவமிவ நிச்வாசைர் வ்ருஷான் பல்லவ தாரிண -என்னுமா போலே
கண்ணீர் மிகக்
நெடு மூச்சாய்ப் புறப்பட்டு -புறப்படாதது கண்ணீராய் புறப்படா நின்றது
கலங்கிக் கை தொழும் –
தெளிந்து இருந்து தொழுமது இல்லை இறே பிரணயிநி
நின்றிவளே —
அவன் தொழும் படியான வேண்டற்பாடுடைய தான் தொழா நின்றாள் –

———————————————————————————

அவதாரிகை –

அவள் இப்படி கிலேசிக்கிற இடத்திலும் வரக் காணாமையாலே நிர்த்தயர் என்கிறார் –

இவள் இராப்பகல் வாய் வெரீஇத்தன
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தண்ணம் துழாய் கொண்டீர் என
தவள வண்ணர் தகவுகளே –2-4-5-

இவள் இராப்பகல் வாய் வெரீஇ
சீதேதி மதுராம் வாணீம் வ்யாஹரன் பிரதிபுத்யதே –என்று வாய் வெருவுவான் அவன் கிடீர்
அநித்ரஸ் சததம் ராம -நித்ரையோடே கால ஷேபம் பண்ண வேண்டும் செல்வுடையார் -சததம் அநித்ரராய் இருப்பர்-
ஸூப்தோபி ச – சததம் அனித்ர-என்று வைத்து -ஸூப்தோபி ச -என்கிறது
பராகர்த்த அனுசந்தான அபாவத்தைப் பற்ற –
நரோத்தம -அபிமத விச்லேஷத்தில் இங்கனே இருக்கையாலே புருஷோத்தவத்மம் ஆவது
இராப்பகல் –
பொய் நின்ற ஞானம் தொடங்கிஇவ்வளவு வாய் வெருவின வித்தை காணும்
வாய் வெரீஇ -வாய் வெருவி –
அவாதானம் பண்ணி சொல்லுகிறது ஒன்றும் இல்லை -வாசனையே உபாயாத்யராகச் சொல்லுகிறது இத்தனை –

தன குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள்
ஆனந்த ச்ரு பிரவஹிக்கக் கடவ -கண் -சோக ச்ரு பிரவஹியா நின்றது
இக் கண்ணுக்கு இலக்கானார் கண்ணிலே காணக் கடவ கண்ணீரைத் தன் கண்ணிலே கொண்டாள்
தன்னுடையவாய்-குவளைப் பூ போலே இருக்கிற அழகிய கண்களிலே கொண்டாள்
நம்மைச் செய்யச் சொல்கிறது என் –
வண்டு திவளும் தண்ணம் துழாய் கொண்டீர் –
விரஹ ஜ்வரத்தாலே வாடின இவள் மாறவில் மாலையை வாங்கி உம்முடைய மார்வில் செவ்வி மாறாத மாலையைக் கொடுக்கிறிலீர்
அவ்வண்டுகளுக்கு என்ன கண்ண நீரைக் கண்டு கொடுக்கிறீர்
திவளுகை -படுகை-அசைகை -ஒளி விடுகை – இவை இத்தனையும் சொல்லக் கடவது
என
இவை என் என்பின
தவள வண்ணர் தகவுகளே —
ஸூ த்த ஸ்வ பாவரான உம்முடைய தகவுகள் எங்கே போயிற்றன -என்று எம்பார் அருளிச் செய்யும் படி
அன்றிக்கே -பட்டர் -உம்மைப் போல் நாலு சிஷ்டர்கள் அமையும் இ றே அபலைகள் குடி கெட -என்றார் –

————————————————————————————————

அவதாரிகை –

இவள் அவசாதத்தைக் கண்ட திருத்தாயார் -நிர்த்தயர் -என்றாள் -இவள் அது பொறாதே-தகவுடையவனே என்று
அத்தை நிரூபகமாகச் சொல்லா நின்றாள் -என்கிறார் –

தகவுடையவனே யென்னும் பின்னும்
மிக விரும்பும் பிரான் என்னும் என
தகவுயிர்க்கு அமுதே என்னும் உள்ளம்
உகவுருகி நின்றுள்ளுளே–2-4-6-

தகவுடையவனே யென்னும்
கெடுவாய் ஆகாரத்தில் தகவு மறுக்குமோ -நம் குற்றம் காண்-என்னா நின்றாள்
தகவில்லை என்றவள் வாயைப் புதைத்தால் போலே வந்து தோற்றுவதே-என்று
அவன் வந்தால் பண்ணும் விருப்பத்தைப் பண்ணா நிற்கும் -அவன் வந்தால் செய்யும் உபகாரங்கள் -பூசும் சாந்தும் புனையும் கண்ணியும்-போல்வன –
பின்னும் மிக விரும்பும் –
பாவனா பிரகர்ஷம் இருக்கும் படி -உரு வெளிப்பாட்டாலே வந்தானாக எண்ணி உபசரிப்புகளை எண்ணுகிறாள்
பிரான் என்னும்
பெற்ற தாய்க்கு அவகாசம் வையாதே வந்து தோற்றுவதே -இது என்ன உபகாரம் தான் என்னும்
என தகவுயிர்க்கு அமுதே என்னும்
என்னுடைய பிரத்யகாத்மாவாவுக்கு போக்யனாவனே -என்னும்
நித்ய வஸ்து அழியாமல் நோக்கும் அமிர்தமாயிற்று இது
போக தசையில் சொல்லுமவை எல்லாம் சொல்லா நின்றாள்
உள்ளம் உகவுருகி நின்றுள்ளுளே-
உள் எனபது -மேல்
அமூர்த்தமானது மூர்த்தி பாவித்து உருகி த்ரவீ பூதமாய் மங்கிப் போகா நின்றது
உள்ளம் மிக உருகி நின்று தகவுடையவனே யென்னும் -பின்னும் மிக விரும்பும் பிரான் என்னும் -என தகவுயிர்க்கு அமுதே என்னும் –
இது நாம் பேச்சுக் கொண்டு அறிந்த அம்சம் உள்ளம்
உள்ளோடுகிறது -உள்ளுளே–வாசா மகோசரம்
உள்ளுளே-உருகி நின்று -என்பாரும் உண்டு –

————————————————————————————–

அவதாரிகை –

தன் நெஞ்சில் ஓடுகிறது பிறர் அறியாதபடி அடக்கமுடைய இவள் வாய் விட்டுக் கூப்பிடும்படி இவளை வஞ்சித்தான் -என்கிறாள்-

உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து என்
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என்
கள்வி தான் பட்ட வஞ்சனையே –2-4-7-

உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து
ஆந்தரமான மனஸ்ஸூக்கு தாரகமான ஆத்மா சருகாய் வருகிறபடி -அச்சேத்ய அயமதாஹ்ய அயமக்லேத்ய
அசோஷ்ய ஏவ ச –ஸ்ரீ கீதை -2-24-என்று அசோஷ்யம் என்று சொல்லுகிற இதுவும் போயிற்று -என்கிறாள் –
பாவபந்தம் அடியாக வருகிற நோய் ஆகையாலே அகவாயே பிடித்து வெந்து கொண்டு வருமாயிற்று
விடாயர் கற்பூர நிகரம் வாயிலே இடுமா போலே
என் வள்ளலே கண்ணனே என்னும் –
இவ்வளவான ஆர்த்திகளிலே வந்து உன்னை எனக்குக் கையாளாகத் தருமவனே என்னா நின்றாள்
பின்னும் வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும்
அதுக்கு மேலே -தாபார்த்தோ ஜல சாயி நம் -என்று என் விடாய்க்கு உதவ திருப் பாற் கடலிலே வந்து சாய்ந்து அருளிற்றே -என்னும்
இக்கிடை இவளுக்கு ஒரு படுக்கையிலே -அருகாமையில் -சாய்ந்தால் போலே இருக்கிறது காணும் –
என் கள்வி தான் பட்ட வஞ்சனையே —
தன் ஹிருதயத்தில் ஓடுகிறது பிறர் அறியாதபடி மறைத்துப் பரிமாறக் கடவ இவள் படும் பாடே இது
தான் பட்ட
ந ஜீவேயம் ஷணம் அபி -என்கிற தான் அவிக்ருதனாய் -இவள் விக்ருதையாவதே
வஞ்சனை –
அளவு படைக்கு பெரும் படை தோற்பது வஞ்சனையாலே இறே
பகலை இரவாக்கியும் ஆயுதம் எடேன் என்று எடுத்தும் செய்த செயல் போலே இவளை வஞ்சித்தீர் இத்தனை –

———————————————————————-

அவதாரிகை –

உம்மை அனுபவித்து -ஸூகிக்க வைத்தீர் அல்லீர் -கம்சனைப் போலே முடித்து விட்டீர் அல்லீர்
உம்மை ரஷகர் என்று இருந்த இவள் படும் பாடே இது என்கிறாள் –

வஞ்சனே என்னும் கை தொழும் தன்
நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும் விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்
தஞ்சம் என்று இவள் பட்டனவே –2-4-8-

வஞ்சனே என்னும் –
தாயார் வஞ்சித்தான் -என்னப் பொறுத்து இலள்-நான் அல்லேன் -என்றாலும் தவிர ஒண்ணாத படி வஞ்சித்து உன் திருவடிகளிலே
சேர்த்துக் கொண்ட உபகாரகனே -என்னா நின்றாள்
தானொட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து ஊனொட்டி நின்று என் உயிரில் கலந்து இயலுமவன் –1-7-7-அன்றோ
இப்படி என்னையும் அறியாதே வஞ்சித்து உன் திருவடிகளில் சேர்த்த உபகாரகனே என்னா நின்றாள்
கை தொழும் –
வஞ்சித்த உபகாரத்துக்குத் தோற்றுத் தொழும்
தன் நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும்
தாயார் சொன்ன குண ஹானிக்கு ஒரு பரிஹாரம் பண்ணினவாறே ஆற்றாமை போகாதே -தன் நெஞ்சம் வேவ நெடு மூச்சு எறியா நிற்கும்
ததோ மலின சம்வீதாம் ராஷசீ பிஸ் சமாவ்ருதாம் உபாவாசக்ருசாம் தீநாம் நிச்வசந்தீம் புன புன —
உள்ளம் மலங்க -2-7-4–என்று வெட்டி விழுந்தபடி சொல்லிற்று
உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து -2-4-7-என்கிற இடத்திலே உலர்ந்த படி சொல்லிற்று
இங்கே தன் நெஞ்சம் வேவ -என்கையாலே -நெருப்புக் கொளுத்தினால் போலே சொல்லுகிறது –

விறல்கஞ்சனை வஞ்சனை செய்தீர்
மிடுக்கனான கம்சனை அழியச் செய்தீர்
உம்மைத் தோற்பிக்க நினைத்தாரை நீர் தோற்பிக்குமவராய் இருந்தீர்
ஆஸ்ரித நாஸ்ரித விபாகம் அற-உமக்கு இரண்டு இடத்திலும் கார்யம் ஒன்றேயோ
உம்மைத் தஞ்சம் என்று இவள் பட்டனவே –
தஞ்சம் அல்லாரை தஞ்சம் என்று இருந்தால் சொல்லுமது போலே சொல்லுவதே
தஞ்சமாகிய தந்தை தாயோடு தானுமாய் -3-6-9-என்னும் சர்வ ரஷகனை காதுகரை சொல்லுமா போலே சொல்லுகிறாள் இறே-
மகள் தசையைப் பார்த்து இவள் பட்டனவே
ஒரு மகா பாரதத்துக்கு போரும் போலே -சம்சாரிகளைப்போலே உண்டு உடுத்து திரிய வைத்தீர் அல்லீர்
எங்களைப் போலே தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்னும் அளவில் இருக்கப் பெற்றிலள்
கம்சனைப் போலே முடித்தீர் அல்லீர்
என் வழி வாராதே -உம்மைத் தஞ்சமாகப் பற்றின இவளை எத்தனை படுத்த வேணும் –

—————————————————————————————–

அவதாரிகை –

இவள் பட்டன -என்கைக்கு என் பட்டாள்-என்ன படுவது எல்லாம் பட்டாளாகிலில் இவள் இனி என் படுவாள் -என்கிறாள் –

பட்டபோது எழுபோது அறியாள் விரை
மட்டலர் தண் துழாய் என்னும் சுடர்
வட்ட வாய் நுதி நேமியீர் நும்
திட்டமென் கொல் இவ்வேழைக்கே–2-4-9-

பட்டபோது எழுபோது அறியாள்
உதித்ததும் அஸ்தமித்ததும் அறிகிறிலள்-இவள் அறிவதும் ஏதேனும் உண்டோ என்னில்
விரை மட்டலர் தண் துழாய் என்னும்
விரை -இது ஒரு பரிமளமே
மட்டு -இது ஒரு தேனே
அலர் -இது ஒரு பூவே
தண் இது இரு குளிர்த்தியே
என்று திருத் துழாய் விஷயமாக ஒரு கோடியைச் சொல்லும்
உம்முடைய பேரும் தாரும் ஒழிய அறியாள் -என்கிறாள்
என்றவாறே -நம்மை ஆசைப் பட்டு இப்படிப் படப் பெற்றோமே -என்று அலாப்ய லாபத்தாலே கையிலே திரு வாலியை விதிர்த்தான்
சுடர் வட்ட வாய் நுதி நேமியீர்
சுடரையும்
வட்டமான வாயையும்
கூர்மையையும் உடைய திரு வாழியைக் கையிலே உடையீர்
இப்போது சுடர் வட்ட வாய் நுதி -என்கிற விசேஷணம்-என் என்னில்
பெண் பிள்ளையைக் காட்டில் திருத் தாயார் கையும் திரு வாழியுமான அழகிலே ஈடுபட்டு விசேஷணங்கள் இட்டு அனுபவிக்கிறாள் –
ஆஸ்ரித நாஸ்ரித விபாகம் அற உமக்கு அழிகைக்கு பரிகாரம் ஒன்றேயோ
ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே-1-7-1- என்று இறே இவர் தம்முடைய வார்த்தையும்
கையும் திருவாழியுமான அழகைக் கண்டால் நெஞ்சு அழியுமவர்கள் இறே
நும் திட்டமென் கொல்
ராவண ஹிரண்யாதிகளைப் போலே முடிக்க நினைக்கிறீரோ
நித்ய ஸூரிகளைப் போலே கையும் திருவாழியுமான அழகை அனுபவிக்கிறீரோ
தன்னையும் மறந்து உம்மையும் மறந்து சம்சாரிகளைப் போலே உண்டு உடுத்து திரிய வைக்கிறீரோ
இவள் பேற்றில் நீர் நினைத்து இருக்கிறது என்
இவ்வேழைக்கே–
அத்யந்த சபலையான இவள் விஷயத்தில் நீர் நினைத்து இருக்கிறது என் –

————————————————————————–

அவதாரிகை –

இவள் நோக்கும் ஒன்றும் ஒழிய அல்லாதது எல்லாம் ஒழித்தான் -இந் நோக்கு ஒன்றையும் நோக்கிக் கொள்ளீர் -என்கிறாள் –

ஏழை பேதை இராப்பகல் தன்
கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள் கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே –2-4-10-

ஏழை-
கிடையாது என்ற பிரமாண பிரசித்த மானதிலே-கிடைக்குமதில் பண்ணும் சாபலத்தை பண்ணுகை
பேதை
கிடையாது என்று அறிந்து மீளும் பருவம் அல்ல
நான் ஹிதம் சொன்னாலும் கேளாத பருவம்
இராப்பகல் தன் கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள்
ஆனந்த ஸ்ருவுக்குத் தகுதியாய்
கேழில் -கேழ் என்று ஒப்பாய் -இல் என்று இல்லாமையாய்-ஒப்பின்றிக்கே இருப்பதாய்
ஒண் கண் –
கண்ண நீர் இல்லாவிடிலும் கண்டார்க்கு ஆலத்தி வழிக்க வேண்டும் படியான கண் -சர்வ காலமும் அஸ்ரு பூர்ணம் ஆயிற்று
தாமரையில் முத்துப் பட்டால் போலே இக் கண்ணும் கண்ண நீருமாய் இருக்கும் இருப்பை காட்டில் எறிந்த நிலா வாக்குவதே
இவ்விருப்புக்கு கிருஷி பண்ணி பல வேளையில் இழப்பதே
பொன்னும் முத்தும் விளையும் படி இறே கிருஷி பண்ணிற்று
இப்போது இவள் இழவுக்கு அன்றியே அவன் இழவுக்கு யாயிற்று இவள் கரைகிறது

கிளர் வாழ்வை வேவ இலங்கை செற்றீர்
நடுவே கண்ணீர் விழ விடும் அத்தனையோ விரோதி கனத்து இருக்க -என்ன -ராவணனிலும் வழிதோ இவளுடைய விரோதி வர்க்கம்
உதீர்ணச்ய ராவணச்ய -என்கிறபடியே -தாயும் தமப்பனும் சேர இருக்கப் பெறாத ஐஸ்வர்யம் இறே
கிளர்ந்த ஐஸ்வர்யம் ஆனது வேம்படி இலங்கையை நிரசித்தீர்
ஒன்றை அழிக்க நினைத்தால் முதல் கிடவாமே அழிக்குமவராய் நின்றீர்
இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே —
இவளுடைய முக்தமான நோக்கு ஒன்றும் கிடக்கும் படி கார்யம் பார்க்க வேணும்
மாழை -என்று இளமை
நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே —
இவள் தானே முடிந்து போகிறாள்
நாங்கள் தானே இழக்கிறோம்
ஜீவிக்க இருக்கிற நீர் வேணுமாகில்-உம்முடைய ஜீவனத்தை நோக்கிக் கொள்ளப் பாரும்
வண்டார் பூ மா மலர் மங்கை மண நோக்கம் உண்டான் -8-10-1-

——————————————————————————-

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார் இவர் பிரார்த்த படியே நித்ய ஸூ ரிகள் திரளிலே போய்ப் புக்கு
சர்வேஸ்வரன் திருவடிகளிலே சூட்டு நன் மாலைப் படியே திருமாலை சாத்தி அடிமை செய்யப் பெறுவார்கள் -என்கிறார் –

வாட்டமில் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே –2-4-11-

வாட்டமில் புகழ் வாமனனை –
இவ்வளவில் வந்து முகம் காட்டிற்றிலன் ஆகில் அவன் புகழுக்கு வாட்டம் வந்தது இறே
வாமனனை -தன் உடமை பெறுகைக்கு இரப்பாளனாமவனிறே
இசை கூட்டி
பரிமளத்தோடே பூ அலருமா போலே இசையோடு புணர்ப்புண்டாயிற்று
வண் சடகோபன் சொல்
உதாரதீர் முனி -என்னுமா போலே மானஸ அனுபவ மாதரம் அன்றிக்கே -வாசகமாக்கி நாட்டை வாழ்வித்த ஔதார்யம்
அமை பாட்டோராயிரத்து –
அமைவு -சமைவாய் -சப்தார்த்தங்கள் நிறைந்து இருக்கை
இப்பத்தால் அடி சூட்டலாகுமே அந்தாமமே –
இப்பத்தையும் அப்யசிக்க வல்லவர்களுக்கு -செவ்வி மாலையைக் கொண்டு அவன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யம் பண்ணப் பெறலாம்
கைங்கர்யம் பண்ண வேணும் என்று ஆசைப்பட்டு -அதி பெறாமையாலே போலே காணும் இவ்வாற்றாமை எல்லாம் பிறந்தது
பித்ருதனம் புத்ரனுக்கு பிராப்தமானால் போலே இவ்வாற்றாமையால் வந்த கிலேசம் இது
கற்றவர்களுக்கு அனுபவிக்க வேண்டாதே அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று ஆசைப்பட்ட படியே
அத்திரளிலே போயப்புக்கு அனுபவிக்கப் பெறுவர்-என்கிறார் –

முதல் பாட்டில் ஆஸ்ரித ஆபத்தே செப்பேடாக உதவும் ஸ்வபாவனாவான் –இவளுடைய ஆபத்துக்கு வந்து உதவுகிறிலன்-என்றாள்
இரண்டாம் பாட்டில் விரோதி உண்டே -என்று நினைவாக பாணனுடைய பஹூ வனத்திலும் வலிதோ இவள் விரோதி என்றாள்
மூன்றாம் பாட்டில் இப்படி செய்த நீர் முன்பு அச் செயலை என்றிய செய்தீர் என்றாள்
நாலாம் பாட்டில் அது பொறுக்க மாட்டாமல் அது தன்னையே உபகாரமாகச் சொல்லா நின்றாள் -என்கிறாள்
ஐந்தாம் பாட்டில் அவ்வளவிலும் வாராமையாலே நிர்த்தயன் என்றாள் திருத் தாயார்
ஆறாம் பாட்டில் அது பொறுக்க மாட்டாமல் -கெடுவாய் ஆகரத்தில் தகவு மறுக்குமோ -அது நம் குறை காண் -என்றாள்
ஏழாம் பாட்டில் அவன் குண ஹானி தன்னையே குணமாகக் கொள்ளும் படி இவளை வஞ்சித்தான் என்கிறாள்
எட்டாம் பாட்டில் உம்மை அபாஸ்ரயமாக பற்றின இவள் படும் பாடே இது என்றாள்
ஒன்பதாம் பாட்டில் இவள் பேற்றில் நீர் செய்து அருள நினைக்கிறது என் என்றாள்
பத்தாம் பாட்டில் -சேஷித்தது நோக்கு ஒன்றுமே யாயிற்று -இது ஒன்றையுமே நோக்கிக் கொள்ளீர் -என்றாள்
நிகமத்தில் இத் திருவாய் மொழியை அப்யசித்தாருக்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார்

——————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி – -2-3– –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

October 20, 2015

பிரவேசம் –

வாயும் திரை யுகளில் ஆர்த்தி தீர வந்து சம்ச்லேஷித்ததைச் சொல்லுகிறது இத் திருவாய் மொழியில்
நடுவு ப்ராசங்கிகமாக ப்ரஸ்துதமான இத்தனை ஈஸ்வரத்வம்
தாம் பெற்ற பேற்றின் கனத்தைப் பார்த்தார்
அது தாம் அடியாக வந்ததாகில் இறே அளவு பட்டு இருப்பது -சர்வேஸ்வரன் அடியாக வந்ததாகையால் கனத்து இருக்கும் இறே
தாம் அனுபவித்த அனுபவத்துக்குள் எல்லா ரசங்களும் உண்டாய் அது தான் சமாப்யதிக வர்ஜிதமுமாய் இருந்தது
இப்படிப் பட்ட பேற்றுக்கு உசாத் துணை யாவார் யார் -என்று பார்த்த இடத்தில் சம்சாரத்தில் ஆள் இல்லாமையாலே
அவன் தன்னோடு ஒக்க பிராப்யருமாய் -அவனை நித்ய அனுபவம் பண்ணா நிர்பாருமாய் -பகவத் அனுபவத்துக்கு தேசிகருமாய்
இருக்கிற நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு -போதயந்த பரஸ்பரம் -ஸ்ரீ கீதை -3-11-பண்ணி அனுபவிக்கப் பெறுவது
எப்போதோ என்னும் அநவாப்தியோடே தலைக் கட்டுகிறார்
வாயும் திரையுகளியிலே ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திர்யக்குகளையும் சேதனங்களையும் சேர்த்தார் அங்கு
இங்கு சம்ச்லேஷத்தால் வந்த ப்ரீதிக்கு அறிவு நைசர்க்கிகமான -ஞானத்தை ஸ்வபாவமாகக் கொண்ட -நித்ய ஸூரிகளைத் தேடுகிறார் –

ராமஸ்து சீதயா சார்த்தம் விஜஹார பஹூன் ருதூன் மனச்வீ தத்கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித்த -பால -77-27-
ராமஸ்து -பெருமாளும் பிராட்டியும் ஏக தத்வம் என்னலாம் படி கலந்த கலவியைச் சொல்லுகிறது
பித்ரு சுச்ரூஷண பரரானார் -தர்மங்களை பிரவர்த்திப்பித்தார் தேவதா சாமாராதநம் பண்ணினார் -என்றாயிற்று சொல்லிக் கொண்டு போந்தது
இப்படிப் போந்த இவர் இப்போது வாத்ச்யாயனம் கற்றுக் காம தந்த்ரமேயோ நடத்திப் போந்தது -என்னும் படி வேறு பட்டார்
சீதயா சார்த்தம் -பரமபதத்திலே செவ்வியோடு வந்தவளும் பிற்பாடையாம்படி போகஸ்ரோதஸ்ஸிலே முற்பாடரானார்
விஜஹார -இப்படி பரிகாரச் செய்தேயும் போகோபோத்காதத்துக்கு அவ்வருகு பட்டிலர் –
பஹூன் ருதூன் -நஹூன் சம்வத்சரான் என்னாது ஒழிந்தது -அவ்வோ கால விசேஷங்களுக்கு அடுத்த போக உபகரணங்களை
கொண்டு புஜித்தார் என்று தோற்றுகைக்காக
மனச்வீ -சம்ச்லேஷத்தில் பிராட்டி கோலின அளவுக்கு அவ்வருகு பட்டு பரிமாறினார்
தத்கதஸ் -தஸ்யாம்-கத ஜாதி குணங்கள் த்ரவ்யத்துக்கு பிரகாரமாய் பிரிக்க ஒண்ணாதபடியாய் இருக்குமா போலே
பிரிக்க ஒண்ணாதபடி ஒரு நீராகக் கலந்தபடி
தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித்த -இவர் உயர்த்தியை அறிந்து இருப்பாள் ஒருத்தி யாகையாலே -அப்பெரியவன் இப்படி
தாழ விடுவதே -என்று அச்செயலிலே தன் நெஞ்சு துவக்கப்பட்டு -அது அது -என்று கிடக்குமாயிற்று –
அப்படியாயிற்று இங்குக் கலந்த கலவி தான் –

—————————————————–

அவதாரிகை –

ராஜ்யத்தை இழந்த ராஜபுத்ரனை ஒருவன் ராஜ்யத்தில் பிரவேசிப்பித்தால் -இவனாலே இப்பேறு பெற்றோம் -என்று
அவனைக் கொண்டாடுமா போலே கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு இட்டுப் பிறந்து வைத்து நெடுநாள் இழந்து கிடக்க
இந் நெஞ்சு இறே இத்தைத் தந்தது -என்று திரு உள்ளத்தைக் கொண்டாடுகிறார் –

ஊனில் வாழுயிரே நல்லை போ உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மது சூதன் என்னம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –2-3-1-

ஊனில் வாழுயிரே
ஊன் -என்று சரீரமாய் -வாழ்க்கையாவது -வர்த்திக்கையாய் -சரீரத்திலே வர்த்திக்கிற உயிர் -என்னுதல்
சரீரத்தைப் பற்றி அவ்வருகு ஓன்று அறியாதே வாழ்ந்து போன உயிர் -என்னுதல்
மாம்சளமான சரீரத்திலே இருந்து வைத்து வாழ்கிற உயிரே -பரம பதத்தைப் பெற்று அங்கே நாநாபவநத்தோடே அனுபவிக்கிற இடத்தையோ நீ உதவிற்று
மாம்சாஸ் ருக் பூய விண் மூத்ரஸ் நாயு மஜ்ஜாஸ்தி களான சரீரத்திலே நித்ய ஸூரிகள் அனுபவிக்கும் அனுபவத்தை அன்றோ நீ உபகரித்தது
இத்தால் -வாழுகையாவது-அனுபவிக்கையாய் -நெடு நாள் ப்ராக்ருத போகங்களைப் புஜித்து போந்த நீ அப்ராக்ருத போகத்திற்கு கை தர நிற்பதே -என்றபடி
மனசை உயிர் என்பான் என் என்னில் -ஆத்மாவுக்கு தர்ம பூத ஜ்ஞானம் நித்தியமாய் இருக்கச் செய்தே
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ-என்று பந்த மோஷங்களுக்கு ஹேது மனஸ்ஸூ என்கிற பிரதான்யத்தைப் பற்ற
உயிரே என்று ஆத்மாவை சம்போதிக்குமா போலே சம்போதிக்கிறார்
நல்லை போ
நல்லை வா -என்றபடி நல்லை நல்லை -என்று கொண்டாடுகிறார்
போ என்று சம்போதனம் ஆகவு மாம் -நல்லை போ என்று முழுச் சொல்லாய் நல்லை நல்லை என்னுதல் –
நடுவே என்னைக் கொண்டாடுகிறது என் -என்ன
உன்னைப் பெற்று
பந்த ஹேதுவாய்ப் போந்த நீ -மோஷ ஹேதுவாகப் பெற்று -ஈஸ்வரனும் என்றும் உண்டு -தத் சம்பந்தமும் அநாதி –
அவன் எதிர் சூழல் புக்கு திரியா நிற்கவும் நீ ஆபிமுக்யம் பண்ணாமையால் அன்றோ நெடும் காலம் இழந்தது
இன்று நீ ஆபிமுக்யம் பண்ணி அன்றோ இப் பேறு பெற்றது –நீர் பெற்ற பேறு ஏது என்ன -சொல்லுகிறார் மேல்

வானுளார் பெருமான் மது சூதன் என்னம்மான் தானும் யானும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து அவதரித்து -மதுவாகிற அஸூரனைப் போக்கினால் போலே
என்னோட்டை சம்ச்லேஷ விரோதியைப் போக்கி -என்னைத் தோற்பித்து -தன் பக்கலிலே கைங்கர்யத்திலே மூட்டின தானும்
-கைங்கர்யத்துக்கு விஷய பூதனான நானும்
வாயும் திரைகளில் கண்ணால் கண்ட பதார்த்தங்கள் அடங்கலும் பகவத் அலாபத்தாலே நோவுபடுகிறனவாக நினைத்து விடாய்த்த நானும் –
நெடுநாள் என்னைப் பெறுகைக்கு எதிர் சூழல் புக்கு விடாய்ப்பித்த தானும் -கிருஷி பண்ணின தானும் -கிருஷிக்கு விஷய பூதனான நானும்
எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
ஆயிரத்தில் ஒன்றும் -கடலில் குளப்படியும் போலே தானும் நானுமான சேர்த்தியிலே எல்லா ரசங்களும் பிறக்கும் படி சம்ச்லேஷித்தோம்
ஒழிந்தோம்
நித்ய விபூதியிலே புக்காலும் இப்பேற்றை அசையிட்டு இருக்குமத்தனை -அங்கு ஏற்றமாகச் செய்யலாவது இல்லை
இதினுடைய அவிச்சேதமே அங்கு உள்ளது
இப்படி இங்கே கலந்து இருக்க இனிப் பரமபதத்து ஏறத் தேடுகிறது உசாத் துணைக்காகவும் இது தான் விச்சேதி யாமைக்கும் யாயிற்று
என் போலே கலந்தது என்றால்

தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –
இதுக்கு ஆளவந்தார் அருளிச் செய்தாராக திருமாலை ஆண்டான் பணிக்கும் படி
-ஏக ஜாதீய த்ரவ்யங்கள் தன்னிலே கலந்தால் போலே என்று
-அதாவது -தேனும் தேனும் கலந்தால் போலவும் பாலும் பாலும் கலந்தால் போலவும்
நெய்யும் நெய்யும் கலந்தால் போலவும் கன்னலும் கன்னலும் கலந்தால் போலவும் அமுதும் அமுதும் கலந்தால் போலவும் -என்று
அங்கன் அன்றியே
எம்பெருமானார் அருளிச் செய்யும் படி -இவற்றை ரசவத பதார்த்தங்களுக்கு எல்லாம் உப லஷணமாக்கி-
தானும் நானுமான கலவிக்கு உள்ளே எல்லா ரசங்களும் பிறக்கும்படி சம்ச்லேஷித்தோம் என்கிறார் என்று –
சர்வ கந்தஸ் சர்வ ரச-என்கிற வஸ்துவோடே இறே கலக்கிறது
ஜ்ஞானாநந்த வஸ்துக்களுடைய சேர்த்தியிலே சர்வ ரசங்களும் பிறக்கும் படியாயிற்று கலந்தது
இவை எல்லாவற்றையும் சேர்த்துச் சொல்லும் போது வருவது ஒரு பரிமாணாதிக்யம் உண்டு இறே -அது தானே இறே த்ரவ்ய சத்பாவத்தில் பிரமாணம் –

——————————————————————————————

அவதாரிகை –

இப்பாட்டு பிரஸ்துதமான அளவிலே எம்பார் கோஷ்டியில் -இவ்வாத்மாவுக்கு பிரதம குரு ஆர் -என்று பிறந்ததாய்-
இருந்த முதலிகளில் சிலர் ஆசார்யன் அன்றோ என்றார்கள் –
-சிலர் ஆசார்யன் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயிக்கப் போரு-என்று அழைத்துக் கொண்டு போய்ச் சேர விட்ட ஸ்ரீ வைஷ்ணவன் பிரதம குரு என்றார்கள் –
அங்கன் அன்று காண் -அவன் இவனை அழைத்தாலும் இவன் அல்லேன் என்னாத படி -இசைவித்து என்னை -5-8-0–என்கிறபடியே
அகவாயிலே இருந்து இசைவித்த சர்வேஸ்வரன் காண் பிரதம குரு -என்று அருளிச் செய்தார் அகன்ற நம்மை அவன் திருவடிகளிலே சேர விட்டது
நெஞ்சு இறே என்று இவர் திரு உள்ளத்தைக் கொண்டாடப் புக்கவாறே நீர் வழி போவாரைக் கொண்டாடுகிறது என் அடி அறியாதே -என்ன
-ஆராய்ந்த வாறே -அதுக்கும் அடி அவனே இருந்தது -நடுவே நெஞ்சைக் கொண்டாடினோம் அத்தனை யாகாதே என்று அத்தை விட்டு
என்னையும் இசைவித்த சர்வேஸ்வரனை கொண்டாடீர் என்ன -தம் திரு உள்ளத்தை விட்டு சர்வேஸ்வரனை கொண்டாடுகிறார் –

ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
ஒத்தார் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2-

ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
என்னை இப்படி விஷயீ கரித்த நீ தான் ஒரு குறைவாளனாய்ச் செய்தாயோ
ஸ்ரீ யபதிக்கும் தன்னால் கழிக்க ஒண்ணாத படி இருப்பதொரு தாரித்ர்யம் உண்டு
ந தத் சமச்சாப்யாதி கச்ச த்ருச்யதே –என்கிறபடியே சமாதிக தரித்ரனாய் இருக்கும்
இது என்ன ஆச்சர்யம் தான் –
ஒத்தார் எப் பொருட்கும்
நீ யாராய் -என் பட்டாய் –
சமாதிக தரித்ரனாய் இருக்கிற நீயே இதர சஜாதீயனாய் வந்து அவதரித்தாய்
எப்பொருட்கும் ஒத்தாய்
ப்ரஹ்ம ருத்ரர்கள் நடுவே விஷ்ணு நாமாவாயும் இந்திர அனுஜனாயும்-ராம கிருஷ்ணாத் யவதாரங்களைப் பண்ணியும்
திர்யக்குகளோடே ஒக்க மஹா வராஹமாயும் -ஸ்தாவரஙகளோடு ஒக்க குப்ஜாம்ரமாயும் நிற்கும் நிலை
குப்ஜாம்ரமாய் நின்றதுக்கு கருத்து -செவ்வே நின்றாள் பெண்ணுக்கும் பேதைக்கும் ஏற ஒண்ணாது என்று எல்லாருக்கும் ஒக்க ஸூலபன் ஆகைக்கு
இப்படி இருக்கிறது என் என்னில் -மேன்மையோடு வரில் கிட்ட ஒண்ணாது -என்று அகலுவார்கள்
தாழ விட்டு வரில் காற்கடைக் கொள்ளுவார்கள் -ஆகையாலே சஜாதீயனாய் வந்து அவதரிக்க வேணும்
ப்ரஹ்மேச மத்ய கணநா கண நார்க்க பங்க்தா விந்த்ரா நுஜத்வ மதிதேஸ்தநய த்வயோகாத் இஷ்வாகு வம்ச யதுவம்ச ஜ நிச்ச ஹந்த
ச்லாக்யான் யமூன்யநுபமஸ்ய பரஸ்ய தாம்ன –அதி மானுஷ ஸ்தவம் -15-என்னக் கடவது இறே
இப்படி அவதரித்து செய்தது என் என்னில்
உயிராய்
இச் சேதனன் தான் தனக்குப் பார்க்கும் ஹிதத்தையும் பார்க்கக் கடவனாய் இருக்கை -தாரகனாயும் -என்னவுமாம்
என்னைப் பெற்ற அத்தாயாய்
தான் உண்டாகில் இறே தான் தனக்கு ஹிதம் பார்ப்பது –
வளர்த்துக் கொண்ட தாய் அன்றிக்கே -பெற வேணும் என்று நோன்பு நோற்று தன் சரீரத்தை ஒறுத்துப் பெற்று
-இவன் பிரியத்தையே நடத்தக் கடவ தாயாய்
தந்தையாய்த் –
இப்படி நோன்பு நோற்று வருந்தி வரம் கிடந்தது பெற்ற தாயும் இட்டுவைக்கைக்கு ஒரு பை மாத்ரமாம் படி
இவனுக்கு உத்பாதனாய் ஹிதம் பார்க்கும் தந்தையாய்
அவ்வளவு அன்றிக்கே
அறியாதன யறிவித்து
சரீரமேவ மாதாபிதரௌ ஜனயத -என்னும் அளவன்றிக்கே -ஜ்ஞான விகாசத்தைப் பண்ணித் தரும் ஆசார்யனுமாய்
ச ஹி வித்யாதஸ்தம் ஜநயதி தச்ச்ரேஷ்டம் ஜன்ம -என்கிறபடியே -ஏதத் வ்ரதம் மம-மாமேகம் சரணம் வ்ரஜ -என்னுமவன் இறே
அத்தா
மஹா உபகாரகன் ஆனவனே -இவ் உபகாரங்களை உடையவன் ஆகையாலே செய்தான் என்கிறார்
மாதா பிதா ப்ராதா நிவாசஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண -என்கிறார்
பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீயே மற்றையார் யாவாரும் நீயே –பெரிய திருவந்தாதி -5-என்றார் இறே
நீ செய்தன
ஓன்று இரண்டாகில் இறே இன்னது என்னாலாவது -ஆகையாலே நீ செய்தன -என்னும் இத்தனை
ஸ்வாமியான நீ சேஷபூதனான என் பக்கல் பண்ணின உபகாரங்கள்
அடியேன் அறியேனே –
உபகரித்த நீ அறியில் அறியும் அத்தனை
என்னால் சொல்லித் தலைக் கட்டப் போமோ அனுபவித்துக் குமிழி நீருண்டு போம் இத்தனை ஒழிய -என்கிறார்

——————————————————————————————-

அவதாரிகை –

ஆளவந்தார் அருளிச் செய்ததாக திருமாலை யாண்டான் பணிக்கும் படி
அறிவு நடையாடாத தசையிலே -சம்பந்த ஜ்ஞானத்தைப் பிறப்பித்து -பிறந்த ஜ்ஞானத்தை அழிக்கக் கடவதான தேக சம்பத்தோடு
பின்னையும் வைத்தாய் என்கிற இழவாலே சொல்லுகிறார் -என்றாம்
இத்தை எம்பெருமானார் கேட்டருளி -முன்னில் பாட்டுக்களும் பின்னில் பாட்டுக்களும் ப்ரீதியோடு நடவா நிற்க நடுவே அப்ரீதீ
தோற்றச் சொல்லுமது சேராது -ஆனபின்பு இங்கனே யாமித்தனை –
அறியா மா மாயத்து அடியேனை அறியாக் காலத்துள்ளே
அடிமைக் கண் அன்பு செய்வித்து வைத்தாயால்-என்கிறார் என்று இத்தையும் ஒரு உபகாரமாக்கி அருளிச் செய்தார்
அத்தா நீ செய்தன என்று நாம் பண்ணின உபகாரங்களைச் சொல்லா நின்றீர் அவற்றிலே நீர் மதித்து இருப்பதொரு
உபகாரத்தைச் சொல்லிக் காணீர் என்ன அத்தைச் சொல்லுகிறார் – கடந்த பாசுரத்தில் ஞான உபகாரத்தைச் சொல்லி
-இதில் பக்தி உபகாரத்தை உரைக்கிறார்

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –2-3-3-

அறியாக் காலத்துள்ளே
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ் நிகத -என்கிறபடியே அறிவு நடையாடாத பால்யத்திலே
அடிமைக் கண் அன்பு செய்வித்து
அடிமைக் கண் -அடிமையிலே -அஹம் சர்வம் கரிஷ்யாமி என்கிறபடியே அச்ப்ருஷ்டசம்சார கந்தரான நித்ய ஸூரிகளுடைய
பரிமாற்றத்தில் அன்றோ என்னை அன்வயிப்பித்தது
அன்பு செய்வித்து –
வரில் பொகடேன் -கெடல் தேடேன் -என்று இருக்கை அன்றிக்கே -குருஷ்வ -என்னும்படி பெறா விடில் முடியும் படி யன்றோ பண்ணிற்று
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
பிள்ளாய் ஊமத் தங்காய் தின்று பிரமித்தாரைப் போலே அசித் சம்ஸ்ருஷ்டனாய் இருக்கிற என்னைக் கிடீர் இப்படிப் பண்ணிற்று
அறிவு கேட்டைப் பண்ணக் கடவதான பிரகிருதி சம்ஸ்ருஷ்டனாய் இருக்கிற அடியேனை -இது எங்கு சிறைப் பட்டாலும்
நல்லது நம் வஸ்து அன்றோ -என்று
வைத்தாயால்
இத் தண்ணீர் பந்தலை வைத்தாயால் -என்கிறார்
அறியா மா மாயத்து அடியேனை அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்தாயால் -இதுக்கு ஒரு நல்ல நிதர்சனம் உண்டு
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே
நெஞ்சு அறியாதபடி கார்யம் செய்வாரைப் போலே திரு மார்வில் இருக்கிற நாச்சியாரும் கூட அறியாமே வாமன வேஷத்தை பரிக்ரஹித்து
கொள்வன் நான் மாவலி -என்றால் போலே -நிலம் மாவலி மூவடி என்று அனந்வித பாஷணங்களைப் பண்ணி –
பண்டும் இரந்து பழக்கம் உண்டாகில் இறே அந்வித பாஷணம் பண்ணுவது
அறியாமை வஞ்சித்தாய் –
சுக்ராதிகள் -இவன் சர்வேஸ்வரன் -தேவ கார்யம் செய்ய வந்தான் -உன் சர்வஸ்வத்தையும் அபஹரிக்க வந்தான் -என்றால்
அவர்கள் பாசுரம் செவிப் படாத படி தன் பேச்சாலே அவனை அறிவு கெடுத்து வஞ்சித்தான் யாயிற்று
எங்கு சிறைப் பட்டாலும் –தாமதாக கைக் கொள்வோம் என்று வெறுப்புடன் ஆளவந்தார் நிர்வாஹம் அடியாக அருளிச் செய்து
தண்ணீர் பந்தல் -கைங்கர்யத்தில் அன்பை வளர்த்து அருளினாய் -என்று எம்பெருமானார் நிர்வாஹம் அடியாக அருளிச் செய்கிறார் –
அப்படியே எனதாவியுள் கலந்து –
நான் இருக்கிற இடத்தளவும் வந்து -என்னோடு கலந்து -அத்யந்தம் அந்ய பரனான என் ஆத்மாவிலே புகுந்து உன் குண சேஷ்டிதங்களாலே வசீகரித்து
அறியாமைக் குறளாய் நிலம் மா வலி மூவடி என்று அறியாமை வஞ்சித்தால் போல எனது ஆவியுள் கலந்து
அறியா மா மாயத்து அடியேனை அறியா காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து வைத்தாயால் -என்று அந்வயம் –

—————————————————————————————–

அவதாரிகை –

வைத்தாயால் என்று அவன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து இங்கனே கிடந்து நெஞ்சாறல் படா நில்லாதே
பிரத்யுபகாரமாக உம்மதாய் இருப்பதொரு வஸ்துவைக் கொடுத்து நெஞ்சாறல் தீர மாட்டீரோ -என்ன
அப்படியே இறே செய்வது என்று அவன் திருவடிகளிலே ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணி அனுசயிக்கிறார் –

எனதாவியுள் கலந்த பெரு நல்லுதவிக் கைம்மாறு
எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பதுண்டே
எனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய்
எனதாவி யார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே –2-3-4-

எனதாவியுள் கலந்த
அநாதி காலம் சம்சாரத்திலே வாசனை பண்ணிப் போந்த என்னுடைய ஆத்ம வஸ்துவிலே கிடீர் வந்து கலந்தது
எனதாவி
வசிஷ்டன் சண்டாள ஸ்ரேணியிலே புகுந்தால் போலே தம்மை அனுசந்திக்கிறார்
நீசனேன் என்று இறே தம்மை அனுசந்திப்பது
உள் கலந்த –
அது தன்னிலும் கடக்க நின்று சில போக மோஷங்களை தந்து போகை அன்றிக்கே -எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் -என்னும்படி கலப்பதே
பெரு நல்லுதவிக்
உதவி –யாவது -உபகரிக்கை
நல்லுதவி -யாவது -பச்சை கொள்ளாதே உபகரிக்கை
பெரு நல்லுதவி -யாவது தன் பேறாக உபகரிக்கை
கைம்மாறு
இம் மஹோ உபகாரத்துக்கு -பிரத்யுபகாரமாக
எனதாவி தந்து ஒழிந்தேன்
என்னுடைய ஆத்ம வஸ்துவை தேவர் திருவடிகளிலே சமர்ப்பித்தேன்
அழகிது இது தான் எத்தனை குளிக்கு நிற்கும் என்றான் ஈஸ்வரன் –
இனி மீள்வது என்பதுண்டே
சத்யோ தசாஹமாகத் தந்தேன்
அழகிது நீர் தாம் ஆரத்தை ஆருக்கு தந்தீர் என்று ஆராய்ந்து பார்த்துக் காணும் -என்றான் ஈஸ்வரன் -ஆராய்ந்தவாறே
அவனதை அவனுக்கு கொடுத்ததாய் இருந்தது
எனதாவியாவியும் நீ
எனது ஆத்மாவுக்கு அந்தராத்மாவாக புகுந்து நிற்கிறாயும் நீயாய் இருந்தாய்
பகவத் அதீயமான வஸ்துவை நெடு நாள் நம்மது என்று இருந்து இத்தை இன்று அவன் பக்கலிலே
சமர்ப்பித்தோம் -சர்வஜ்ஞனாவன் என் நினைந்து இருக்கும் -என்று அத்தை அறிந்து அதுக்கு லஜ்ஜிக்கிறார்
உள்ளுவார் உள்லிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி -திருமாலை -34-
ஆத்ம சமர்ப்பணம் பண்ணா விடில் சர்வ முக்தி பிரசங்கமாம் -சமர்ப்பிக்கில் அவனதான வஸ்துவை அவனுக்கு கொடுத்ததாம்
-ஆனால் செய்ய அடுப்பது என்-என்னில்
பிராந்தி சமயத்தில் சமர்ப்பிக்கவும் வேணும் -தெளிந்தால் கொடுத்தோம் என்று இருக்கக் கடவன் அல்லன் –
மயா சமர்ப்பித்த -அதவா கிந்து சமர்ப்பயாமி தே-என்றார் இறே
பொழில் எழும் உண்ட எந்தாய் –
ஸ்வா பாவிகமான சேஷித்வம் கொண்டு சொல்ல வேணுமோ
பிரளய ஆபத்தில் வயிற்றிலே வைத்து நோக்கின அது போராதோ-நீ சேஷி என்கைக்கு –
எந்தாய் –
பிரளய ஆபத்தில் நசியாதபடி ஜகத்தை ரஷித்தால் போலே பிரிந்து நசியாதபடி என்னோடு கலந்து அடிமை கொண்டவன் -என்னவுமாம்
எனதாவியார் யான் யார்
பிரதேயமான வஸ்து ஆரது-பிரதாதா ஆருடையவன் –நான் என் ஆத்மாவை சமர்ப்பித்தேன் -என்னக் கடவேனோ –
தந்த நீ கொண்டாக்கினையே
முதலிலே இத்தை உண்டாக்கின நீயே கொண்டாய் யானாய் -உண்டாக்குகை யாவது என் நித்ய வஸ்துவை என்னில்
இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த சத்தா -என்று அவனுடைய நித்ய இச்சையாலே இறே இதினுடைய நித்யத்வம் –

—————————————————————————————–

அவதாரிகை –

ஜ்ஞான லாபமே அமையுமோ -ப்ராப்தி வேண்டாவோ -என்ன -எனக்கு பிரதம ஸூக்ருதமும் நீயேயாய்-என்னை சம்சாரிகளிலே
வ்யாவ்ருத்தன் ஆக்கின அன்றே பெற்றேனே யன்றோ என்கிறார் –

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்
கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய் யுனபாதம் சேர்ந்தேனே –2-3-5-

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்
இனி -மேலே அன்வயம்
யார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்-
எத்தனையேனும் அதிசயித ஜ்ஞானரானவர்களுடைய ஜ்ஞான விசேஷங்களாலும் ஸ்வ யத்னத்தாலே அறியப் பார்க்கும் அன்று
பேர்க்கப் பேராது இருக்கிற என் நாயகனே –
அதாவது -துர்யோதனனாலே பரிச்சேதித்தல் ராவணனால் எடுக்கலாய் இருத்தல் செய்ய அரிதாய் இருக்கை
கனிவார் வீட்டின்பமே
நீ என்றால் உள் கனிந்து பக்வமாய் இருக்குமவர்களுக்கு மோஷ ஸூகமானவனே
அன்றியே -நீ என்றால் இனியராய் இருக்குமவர்கள் இருப்பிடத்திலே வந்து அவர்களுக்கு ஆனந்தத்தை விளைக்குமவனே
அப்படி எங்கே கண்டோம் என்னில் -யசோதைப் பிராட்டி தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே-

என் கடல் படா வமுதே
அவ்விரண்டு கோடியிலும் எண்ண ஒண்ணாத படி இருக்கிற எனக்கு அயத்ன சித்த போக்யனானவனே
தனியேன் வாழ் முதலே
தனியேனான என்னுடைய அனுபவத்துக்கு பிரதம ஸூக்ருதம் ஆனவனே
ஏகாஷீ-ஏக கரணிகள் நடுவே இருந்தால் போலே பிராட்டி -இவருக்கும் தனியாய் இருக்கும் இறே சம்சாரத்தில் இருப்பு
பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் –
தனிமையில் வந்து உதவும் படியைச் சொல்லுகிறது
அத்விதீய மகா வராஹ வேஷத்தை பரிக்ரஹித்து -பிரளயம் கொண்ட புவனங்கள் ஏழையும் எடுத்து
நுனியார் கோட்டில் வைத்தாய்
நுனி -என்று கூர்மை -ஆருகை மிகுதி -கூர்மை மிக்க கோட்டிலே வைத்தாய் என்றபடி -இத்தால் ரஷ்ய வர்க்கத்தின் அளவில்லாத
ரஷகனுடைய பாரிப்பைச் சொல்கிறது
யுனபாதம் சேர்ந்தேனே –
பிரளயம் கொண்ட பூமியை எடுத்தால் போலே சம்சார பிரளயம் கொண்ட என்னை எடுத்த போதே -தேவர் திருவடிகளை நான் கிட்டினேனே யன்றோ
இமையோர் தலைவா இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்னும்படி அறிவை தந்த போதே உன் திருவடிகளைப் பெற்றேன் அன்றோ

—————————————————————————————————-

அவதாரிகை –

இனி உன் பாதம் சேர்ந்தேனே என்றார் –இனி என்று விசேஷிக்க வேணுமோ -பொய் நின்ற ஞானத்திலே நீ விசேஷ கடாஷம்
பண்ணின போதே கிட்டிற்றிலேனோ என்னுதல்-
அன்றிக்கே
-ஸ்வரூபத்தை அனுசந்தத்தவாறே ஸ்வாபாவிக சேஷத்வமேயாய் நிலை நின்ற ஆகாரம் -நடுவுள்ளது
வந்தேறியாகத் தோற்றுகையாலே சொல்லுகிறார் ஆகவுமாம் –

சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் திண் மதியைத்
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவருயிரை
சோர்ந்தே போகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே –2-3-6-

சேர்ந்தார் உண்டு
த்விதா பஜ்யேயமப்யேயம் ந நமேயம் து கஸ்யசித் -என்னும் நிர்பந்தம் இல்லாதவர்கள்
சேர்ந்தார் –
கெடுமரக்கலம் கரை சேர்ந்தால் போல் இவனைக் கிட்டினவர்கள்
அநாதி காலம் சம்சரித்துப் போந்த ஆத்மா சர்வேஸ்வரனை கிட்டுகையாவது -கரை சேருகை இறே –
இக்கரை ஏறினார்கள் இறே அவர்கள் –
தீ வினைகட்கு அரு நஞ்சைத்
அவர்களுடைய பிராப்தி பிரதிபந்தக கர்மங்களுக்கு ஆற்ற ஒண்ணாத நஞ்சானவனே
திண் மதியைத்
முன்பே சேர்ந்து இருக்குமவர்களுக்கு திண்ணியதான மதியை கொடுக்குமவனை
அம்பரீஷன் தமஸ்ஸூ பண்ணா நிற்க சர்வேஸ்வரன் இந்திர வேஷத்தைத் தரித்துக் கொண்டு சென்று உனக்கு வேண்டியவற்றை
வேண்டிக்கொள்என்ன -நான் உன்னை ஆராதிக்குமவன் அல்லேன் காண்-என்னை சமாதி பங்கம் பண்ணாதே போக வல்லையே
உன்னைக் கும்பிடுகிறேன் -என்றான் இறே
நாஹமா ராதயாமி த்வாம் தவ பத்ததோய மஞ்ஜலி -என்று தானே அழிக்கப் பார்க்கும் அன்றும் அழிக்க ஒண்ணாத படியான
திண்ணிய மதியைக் கொடுக்குமவனை –
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவருயிரை சோர்ந்தே போகல் கொடாச் சுடரை
ஜலான் மத்ச்யாத் விவோத் த்ருதௌ-என்று தன்னைத் பிரிய மாட்டாதே இருக்குமவர்கள் நெஞ்சை விட்டுப் போக மாட்டாதே
அவர்கள் உயிர் தன்னைப் பிரிந்து த்ரீவி பூதமாய் மங்கிப் போகக் கொடாதே -அது தன் பேறு-என்னும் இடம் வடிவிலே தோன்ற இருக்குமவனை
தீர்ந்தார் உண்டு -உபாயத்தில் துணிவுடையார்-அவர்களாகிறார்-பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே எண்டு இருக்குமவர்கள்
அவர்கள் தன்னைப் பிரிந்து நோவு படாதபடி அவர்கள் நெஞ்சிலே இருக்குமவன் -என்றுமாம்
அரக்கியை மூக்கு ஈர்ந்தாயை
பிராட்டியோட்டை அவர்கள் சம்ச்லேஷ விரோதியை போக்குமா போலே யாயிற்று -அவர்களுடைய விரோதிகளைப் போக்கும் படியும் –
ஆனால் இவனோ பின்னை மூக்கறுத்தான்-என்னில் -ஆம் கையால் அறுக்க வேணுமே -ராமஸ்ய தஷிணோ பாஹூ -என்னக் கடவது இறே
அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே —
சேஷ பூதனான நான் பண்டே அடைந்தேன் அன்றோ –
அநாதி காலம் இழந்த இழவைமறக்கும் படி வந்து கலக்கையாலே -இன்றோ பெற்றது -இவ்வாத்மா உள்ளவன்றே பெற்றேன் அல்லேனோ -என்றுமாம்
வாயும் திரையுகளில் -கீழ் சம்ச்லேஷித்த தேற்றம் கலங்கி விச்லேஷமாய்ச் சென்றால் போலே -இங்கு கலவியின் மிகுதியாலே
அத்தை மறந்து முன்பே பெற்றேன் அல்லேனோ-என்கிறார் என்றுமாம் -முதல் முன்னமே -பழையதாக -என்றபடி –

————————————————————————————-

அவதாரிகை

இப்படி தாம் பெற்ற பேற்றின் கனத்தையும் அனுசந்தித்து -இவ்விஷயத்தினுடைய போக்யதையும் அனுசந்தித்து
இது இருந்தபடி கண்டோமுக்கு தொங்காது போலே இருந்தது -என்று அதி சங்கை பண்ணி -தேவர் என்னைக் கைவிடில்
நான் உளேன் ஆகேன் என்னைக் கை விடாது ஒழிய வேணும் -என்கிறார் –

முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே–2-3-7-

முன் நல் யாழ் பயில் நூல் –
முன்னல் -என்கிற ஒற்றைப் போக்கி முனல் ஆக்கி முரல் ஆக்கி நிர்வஹிப்பாரும் உண்டு
அன்றிக்கே -முன்னல் என்றது உன்னலாய் – நினைத்தலாய் இனிமையாலே அது அது என்று வாய் புலற்றும் படி இருக்கை
அன்றிக்கே -முன் -சாஸ்திரத்தின் உடைய பழைமையாய் -ஆதியிலே உண்டாய் -நல் -அது தான் நன்றாய்
யாழ் பயில் நூல் -யாழ் விஷயமாக அப்யசிக்கப்படுமதான நூல் உண்டு சாஸ்திரம் -அந்த சாஸ்திர உக்தமான படியே
நரம்பின் முதிர் சுவையே
நரம்பிலே தடவப் பட்ட -அதிலே பிறந்த பண் பட்ட ரசம் போலே போக்யனானவனே
மிடற்றைச் சொல்லாது ஒழிந்தது –கர்ம அனுகுணமாக போது செய்யுமது உண்டாகையாலே அதுக்கு
இப்படி போக்யதை குறைவற்றால் போக்தாக்கள் வேணுமே -அவர்களைச் சொல்லுகிறது மேல் –
பன்னலார் பயிலும் பரனே
தெள்ளியார் பலர் கை தொழும் தேவனார் என்கிறபடியே -தாங்கள் பலராய்-பகவத் குணங்களுக்கு தேசிகராய் இருந்துள்ள நித்ய ஸூரிகள்
சதா அனுபவம் பண்ணா நின்றாலும் அனுபூத அம்சம் அளவுபட்டு அனுபாவ்ய அம்சமே பெருத்து இருக்கை
பவித்திரனே
நித்ய சம்சாரிகளுக்கும் நித்ய சித்தரோபாதி உன்னை அனுபவிப்பைக்கு யோக்யராம் படியான சுத்தியை பிறப்பிக்குமவன்
அன்றிக்கே பன்னலார் என்று முமுஷூக்களை யாக்கி அவர்கள் எப்போதும் அனுபவியா நின்றாலும் தொலையாத போக்யதையை
யுடையவையாய்ப் அவர்களுக்கு தவ அனுபவ விரோதியைப் போக்கும் சுக்தி யோகத்தை உடையவனே என்றுமாம்

கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
கன்னலே -எனக்கு நிரதிசய போக்யனானவனே
அமுதே -என்னைச் சாவாமல் ஜீவிப்பித்துக் கொண்டு போருமவனே
கார் முகிலே -ஔதார்யத்தைப் பற்ற
என் கண்ணா -தன்னைக் கொடுத்தபடி
இவ்வளவும் இவருடைய சங்கா ஹேது

நின்னலால் இலேன் காண்
உன்னை ஒழிய அரை ஷணம் ஜீவிக்க மாட்டேன்
உன்னை ஒழிய ரஷகரை உடையேன் அல்லேன் என்றுமாம்
என்னை நீ குறிக்கொள்ளே–
என்னைப் பார்த்து அருள வேணும் -என்னுதல்
என்னைத் திரு உள்ளம் பற்ற வேணும் என்னுதல்
என்னை
உன்னை ஒழிந்த வன்று அசித் பிராயனான என்னை
நீ
இதுக்கு தாரகனான நீ -என்றுமாம் –

—————————————————————————————————

அவதாரிகை –

என்னை நீ குறிக் கொள்ளே என்றவாறே அவன் குளிரக் கடாஷித்தான் -அத்தாலே
சகல வியசனங்களும் போய் அவனை அனுபவிக்கிறார் –

குறிக் கொள் ஞானங்களால் எனை யூழி செய்தவமும்
கிறிக் கொண்டு இப்பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்
நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே –2-3-8-

குறிக் கொள் ஞானங்களால்
யம நியம த்யவஹிதராய்க் கொண்டு சம்பாதிக்க வேணும் -ஜ்ஞான விசேஷங்களாலே -அவை யாவன
வேதனத்யாநோபாஸ நாத்யவஸ்த்தா விசேஷங்கள்
எனை யூழி செய்தவமும்
அநேக கல்பங்கள் கூடி ஸ்ரவணமாய் மனநமாய் த்ருவ அநு ச்ம்ருதியாய் -இங்கனே வரக் கடவ தபஸ் பலத்தை
கிறிக் கொண்டு
ஒரு யத்னம் இன்றிக்கே இருப்பதொரு விரகைப்-பற்றி அதாவது அவன் தன்னையே கொண்டு என்றபடி
-கிறி என்று அவனைக் காட்டுமோ என்னில் –பெரும் கிறியான் -என்னக் கடவது இ றே
இது தான் எத்தனை ஜன்மம் கூடி என்னில்
இப்பிறப்பே
இஜ் ஜன்மத்திலே -இஜ் ஜன்மம் எல்லாம் கூடியோ என்னில்
சில நாளில்
அல்ப காலத்திலேயே
அழகிது ப்ராபிக்க கடவீராய் நின்றீரோ -என்ன –
எய்தினன்
பிராபித்தேன்
யான்
இப்பேற்றுக்கு யத்னம் பண்ணாத நான்
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான்
தவம் எய்தினன் -என்கிற பலத்தைச் சொல்லுகிறார் ஆதல்
கிறிக் கொண்டு என்கிற உபாயத்தைச் சொல்லுகிறார் ஆதல்
உறிகளிலே சேமித்து கள்ளக் கயிறு உருவி வைத்த வெண்ணெயையும் பாலையும் தெய்வம் கொண்டதோ என்னும்படி
மறைத்து அமுது செய்த -அச் செயலாலே ஜகத்தை எழுதிக் கொண்டவனுடைய
பின் நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப்
அவன் பின்னே -நெறிப்பட்ட நெஞ்சை உடையனாய் –
யேன யேன ததா கச்சதி தேன தேன சஹ கச்சதி -என்கிறபடியே
அன்றியே -பின் நெறிக் கொண்ட என்கிறது -பிரபத்தியை
பின் நெறி என்கிறது பின்னே சொன்ன நெறி என்றபடி -நெறி -வழி
பிறவித் துயர் கடிந்தே –
பலத்தைச் சொன்ன இடத்தில் விரோதி நிவ்ருத்தியையும் சொல்லிக் கிடந்தது இறே -அத்தைச் சொல்லுகிறது
அன்றியே
பின் நெறிக் கொண்ட நெஞ்சனாய்
பாரத சமரத்திலே அர்ஜுனனுக்கு ஒரு அவஸ்தையைப் பிறப்பித்து இ றே உபாயத்தை உபதேசித்தது
இவர் வெண்ணெய் களவு காண போன இடத்திலே அடியொற்றிக் கொண்டு சென்று அவன் புக்க கிருஹத்திலே
படலைத் திருகி வைத்தாயிற்றுக் கேட்டுக் கொண்டது
பிறவித் துயர் கடிந்தே –
சர்வ பாபேப்யோமோஷயிஷ்யாமி-என்றே வைத்தான் இறே

———————————————————————————-

அவதாரிகை —
சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா -என்கிறபடியே -என்னுடைய சகல துரிதங்களும்
போம் படி- சர்வேஸ்வரனை அனுபவிக்கப் பெற்றேன் என்று ஹ்ருஷ்டர் ஆகிறார் –

கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படிவானம் இறந்த பரமன் பவித்ரன் சீர்
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே –2-3-9-

கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன்-
பரிமள பிரசுரமான திருத் துழாய் மாலையைஉடைய கிருஷ்ணன் -என்னுதல்
மது ச்யந்தியா நின்றுள்ள திருத் துழாயயை உடையவன் என்னுதல்
விண்ணவர் பெருமான்
இவ் வொப்பனை அழகாலே எழுதிக் கொள்வது -அனந்த வைனதேயாதிகளை யாயிற்று
படிவானம் இறந்த பரமன்
தன் படிக்கு வானில் உள்ளார் ஒப்பாகாத படியாக இருக்கும் பரமன்
பரம சாம்யா பன்னரான நித்ய ஸூரிகளும் தன் படிக்கு ஒப்பாகாத படியான மேன்மை உடையவன் என்னுதல்
தன் திருமேனிக்கு வானம் உண்டு மேகம் -அது ஒப்பாதாகாத படி இருக்கிறவன் என்னுதல் –
பவித்ரன்
இவ் வடிவு அழகை சம்சாரிகளுக்கும் அனுபவிக்கைக்கு யோக்யராம் படி பண்ணும் சுத்தியை உடையவனுடைய சீருண்டு–கல்யாண குணங்கள்
அவற்றை அடி காண ஒண்ணாத படி தூறு மண்டிக் கிடக்கிற சம்சாரிக சகல துரிதங்களும் போம்படி வந்து கிட்டி நாலு மூலையும் புக்கு அவஹாகித்து
அனந்யார்ஹனான நான் முழு மிடறு செய்து அனுபவித்து யமாதிகள் தலையிலேயும் அடியிட்டுக் களிக்கப் பெற்றேன்
படிந்து -கிட்டி /குடைந்து- எங்கும் புக்கு /-ஆடி அவஹாகித்து
அடியேன் வாய் மடித்து பருகி –
பெரு விடாயோடு அனுபவித்து
களித்தேனே
இதர விஷய ஸ்பர்சம் துக்கமே யானால் போலே பகவத் குண அனுபவம் களிப்பேயாகக் கடவது –

———————————————————————————–

அவதாரிகை –

களித்தேனே -என்னா–திரியட்டும் சம்சாரிகளோடே இருக்கை யன்றியே இவ்வனுபவத்துக்கு தேசிகரான நித்ய ஸூ ரிகள்
திரளிலே போய்ப் புகுவது எப்போதோ -என்கிறார் –

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10-

களிப்பும் –
இதர விஷய அனுபவத்தாலே வரும் களிப்பும்
கவர்வும்
அவை பெறாத போது ஆசைப்பட்டு வரும் கிலேசமும்
-அற்றுப்
போய்
பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
இவை இரண்டுக்கும் அடியான ஜன்மம் -அது புக்க விடத்தில் புகக் கடவதான வியாதி -அநந்தரம் வரும் ஜரை-
இத்தோடு யாகிலும் இருந்தால் ஆகாதோ என்று நினைத்து இருக்கச் செய்தே வரும் நிரந்வய விநாசம் -இவை யடைய வற்று
ஒளிக் கொண்ட சோதியமாய்
ரஜஸ் தமஸ்ஸூக்கள் கலாசின இந்த சரீரம் போலே அன்றியே -சுத்த சத்வ மயமாய் நிரவதிக தேஜோ ரூபமான சரீரத்தை யுடையோமாய்
உடன் கூடுவது என்று கொலோ
நான் எனக்கு என்று அகல வேண்டாத இவ்வுடம்பு உடையார் திரளிலே போய்ப் புக்கு நெருக்கப் பெறுவது என்றோ –
துளிக்கின்ற வான்நிலம்
வர்ஷிக்கையே ஸ்வபாவமாக உடைத்தான ஆகாசம் -அத்தாலே விளையக் கடவதான இந்த பூமி
இவற்றை கடற்கரை வெளியிலே நோக்கினால் போலே திவ்யாயுதங்களை தரித்து நோக்குகிற ஆச்சர்ய பூதன்
சுடர் ஆழி சங்கேந்தி அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே
பரம பதத்தில் ஆபரணமாகக் காட்சி தரும்
இங்கு ஆயுதமாய் இறே இருப்பது
இப்படி ரஷிக்கிறவனுடைய அந்த ரஷணத்தில் தோற்று இருப்பாராய்–அவன் தன்னோடு ஒக்க ப்ராப்யருமாய் பகவத் குணங்களுக்கு
தேசிகராய் இருப்பாருமாய் -போதயந்த பரஸ்பரத்துக்கு துணையாய் இருக்கிறவர்களுடைய குழாங்கள்
கலியர் -கலவரிசிச் சோறு உண்ண-என்னுமா போலே -அத்திரள்களிலே போய்ப் புகப் பெறுவது எப்போதோ -என்கிறார் –

—————————————————————————————————-

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருமொழியை பகவத் ஏக போகராய் இருப்பார் -என்னைப் போலே தனிப்படாதே திரளாக அனுபவியுங்கோள்-என்கிறார் –

குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி
குழாங்களாய் யடியீருடன் கூடி நின்றாடுமினே –2-3-11-

குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனைக்
புத்ர புத்ராதிகளும் -பந்துக்களுமான இவர்களாலே குழாம் கொண்டு வர பல புஜ பலத்தாலே தழைத்து வேரூன்றின
ரஷச்சினுடைய ஜாதியாக கிழங்கு எடுத்த சக்ரவர்த்தி திருமகனை -கரீஷ்யே மைதலீ ஹேதோரபிசாசம ராஷசம் -என்கிறபடியே
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன்
ஜனஸ்தானம் அடி யறுப்புண்ட பின்பு தண்ட காரண்யம் குடியேறினால் போலே
வாயும் திரை யுகளுக்குத் தப்பின ஆழ்வாரைக் காண வேணும் -என்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் அடையத் திரண்டதாயிற்று
நல்லார் நவில் குருகூர் -திருவிருத்தம் -100-இறே -சத்ருக்கள் இருந்த இருந்த இடங்களிலே வாய் புலற்றும் படியான தேசத்தில்
அத் தேசத்தில் உள்ளார் திரளச் சொல்ல வேண்டா விறே
தெரிந்துரைத்த
உள்ளபடி அனுசந்தித்துச் சொன்ன
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி
இவை பத்தும் –
திரண்டவர்களுக்கு ஜீவனம் வேணுமே –
குழாங்கொள் ஆயிரம்
தொண்டர்க்கு அமுது உண்ண –9-4-9-என்கிறபடியே
பத்துப் பாட்டு ஒரு திருவாய் மொழி
பத்துத் திருவாய்மொழி ஒரு பத்தாய்
இப்படி பத்து பத்தான ஆயிரம்
திரண்ட ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஜீவனம் வேணுமே
இவை பத்தும் உடன் பாடி
சாபிப்ராயமாக அப்யசித்து
குழாங்களாய்
என்னைப் போலே பருகிக் களித்தேனே -என்னா
குழாம் தேட இராதே
முற்படவே திரளாக இழியப் பாருங்கோள்
யடியீருடன் கூடி நின்றாடுமினே –
அவன் பக்கலிலே நிஷிப்த பரராய் இருக்கிற நீங்கள் நால்வர் இருவர் இங்கு இருக்கும் நாலு நாளும் த்யாஜ்யமான
அர்த்த காமங்களைப் பற்றி -சதுர்விதா பஜந்தே மாம் -ஸ்ரீ கீதை -7-16-
சிறு பாறு-என்னாதே-நம் பெரிய குழாத்திலே போய்ப் புகுமளவும் ஒரு மிடறாய் அனுபவிக்கப் பாருங்கோள்

முதல் பாட்டில் திரு உள்ளத்தைக் கொண்டாடினார்
இரண்டாம் பாட்டில் அத்தையும் இசைவித்து சர்வேஸ்வரனை கொண்டாடினார்
மூன்றாம் பாட்டில் தன நெஞ்சில் பட்டதொரு உபகாரத்தைச் சொன்னார்
நாலாம் பாட்டில் அதுக்கு பிரத்யுபகாரமாக ஆத்ம சமர்ப்பணம் பண்ணி அது தனக்கு அனுசயித்தார்
அஞ்சாம் பாட்டில் எனக்கு பிரதம ஸூக்ருதம் நீயேயான பின்பு உன் திருவடிகளைக் கிட்டினேன் அன்றோ என்கிறார்
ஆறாம் பாட்டில் இன்றோ கிட்டிற்று தேவர் எனக்கு விசேஷ கடாஷம் பண்ணின வன்றே பெற்றேனே யல்லேனோ-என்றார்
ஏழாம் பாட்டில் அவனுடைய போக்யதையை அனுசந்தித்து -உன்னைப் பிரியில் தரியேன் -என்றார்
எட்டாம் பாட்டில் இப்படி நிரதிசய போக்யனானவன் எளியதொரு விரகாலே லபிக்கப் பெற்றேன் -என்றாராதல் -அன்றிக்கே –
அநேக காலம் கூடிப் பண்ணின லபிக்கக் கடவ தப பலத்தை அவனைப் பின் சென்று எளிதாக லபித்தேன் -என்னுதல்
ஒன்பதாம் பாட்டில் என்னுடைய சகல கிலேசங்களும் போம்படி அனுபவித்து களித்தேன் -என்றார்
பத்தாம் பாட்டில் இப்படி இவனை அனுபவித்துக் களிப்பார் திரளிலே போய் புகப் பெறுவது எப்போதோ -என்றார்
நிகமத்தில் -இத் திருவாய் மொழியை சாபிப்ராயமாக அப்யசித்து நாலு நாளும் நால்வர் இருவர் உள்ளார் கூடி இருந்து அனுபவிக்கப் பாருங்கோள்-என்றார் –

——————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி – -2-2– –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

October 18, 2015

பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியில் இவர்க்குப் பிறந்த ஆற்றாமை பேச்சுக்கு நிலம் அன்று இறே
கடல் வெதும்பினால் விளாவ நீரில்லை -என்னுமா போலே ஆற்றாமையோடு முடிந்து போம் அத்தனை என்று இருந்தார் -அநந்தரம்
அவன் வந்து முகம் காட்டினவாறே ஆற்றாமை புக்கவிடம் கண்டிலர் -இதுக்கு அடி என் என்று பார்த்து ஆராய்ந்த வாறே
-இதர விஷயங்களினுடைய லாப அலாபத்து அளவில்லாத விஷய வைலஷண்யமாய் இருந்தது -பிரிந்த போது தன்னை ஒழிய வேறு ஓன்று
தோன்றாத படியாய் -கலந்த போதும் தன்னை ஒழிய மற்று ஓன்று தோற்றாத படியான விஷய வைலஷண்யமாய் இருந்தது –
இதுக்கு அடி என் என்று பார்த்தார் -சமஸ்த கல்யாண குணாத் மகனாகையாலேயாய் இருந்தது –
இது தனக்கு அடி என் என்று பார்த்தவாறே சர்வேஸ்வரன் ஆகையாலேயே இருந்தது
உயர்வற உயர்நலம் உடையவன் என்றால் அயர்வறும் அமரரர்கள் அதிபதி என்று இறே தோற்றுவது-
ஆக இங்கனே பிராசங்கிகமாக பிரச்துதமான ஈஸ்வரத்தை அனுசந்தித்து அத்தை அருளிச் செய்கிறார் –
கீழே –மூவா முதல்வா -2-1-10-என்று காரணத்வம் ப்ரஸ்துதம் ஆகையாலே அந்த காரணத்வத்தை உபபாதிக்கிறார் என்று பணிக்கும் பிள்ளான் –
முதல் திருவாய்மொழியிலும் சொல்லிற்று இல்லையோ ஈஸ்வரத்வம்-என்னில்
ஒரு கால் சொன்னோம் என்று கை வாங்கி இருக்க வல்லர் அல்லர் இவர்
ஒரு கால் சொல்லிற்று என்று கை வாங்கலாம் விஷயம் அன்று இது
இனித்தான் பகவத் விஷயத்தில் புனருக்தி தோஷாய யாகாது -ஒரு குணத்தையே எல்லா காலமும் அனுபவிக்க வல்லார் ஒருவர் இவர்
ஒரு குணம் தன்னையே இதுக்கு முன்பு அனுபவிப்பத்தது இக்குணம் என்று தோற்றாத படி ஷணம் தோறும் புதுமை பிறப்பித்து
அனுபவிப்பிக்க வல்லான் ஒருவன் அவன்
பயிலா நிற்கச் செய்தே பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் யாம் –பெரிய திருமொழி -8-1-9-எனபது
ஆகை இறே ஏக விஷயமே நித்ய ப்ராப்யம் ஆகிறது
இவர் தாமும் எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதம் –2-5-4-என்னா நின்றார்

ஆனாலும் இதுக்கு வாசி உண்டு
முதல் திருவாய் மொழியிலே பரத்வம் சொல்லா நிற்கச் செய்தே -அது ஸ்வ அனுபவமாய் இருக்கும்
அந்தப் பரத்வம் தன்னை எல்லார்க்கும் அனுபவிக்கலாம்படி பிறர் நெஞ்சிலே படுத்துகிறார் ஆகையாலே பர உபதேசத்தாலே பரத்வ அனுபவம் பண்ணுகிறார் –
அங்கு அந்வய முகத்தாலே பரத்வம் சொன்னார் -அந்வய வ்யதிரேகங்கள் இரண்டாலும் பரத்வம் சொல்லுகிறார் -இங்கு
அங்கு ஸ்ருதி சாயையாலே சொன்னார் -இங்கு இதிஹாச புராண பிரக்ரியையாலே சொல்லுகிறார்
அங்கு பரத்வத்திலே பரத்வம் -இங்கு அவதாரத்திலே பரத்வம் –

———————————————-

அவதாரிகை –

இந்தத் திருவாய் மொழியில் சொல்லுகிற பரத்வத்தை சங்க்ரஹேண அருளிச் செய்கிறார் –

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –2-2-1-

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
திண்ணன் -என்றது திண்ணம் -என்றபடி -அதாவது -த்ருடம் -என்றபடி
த்ருடமான வீடு என்று நித்ய விபூதிக்கு விசேஷணமாய்-தார்ட்யமாவது-ஆவிர்ப்பாவ திரோபாவ ஜன்ம நாச விகல்பங்கள்
-என்னுமவை இல்லாமையாலே கர்ம நிபந்தனமாக வரும் அழிவு இல்லை -என்கை
இச்சமாக வரும் விகாரங்கள் உண்டு -ஆனால் தோஷாயவும் அன்று -அது அழிவாயும் தோற்றாது இ றே
ஏதேனுமாக சம்சார விபூதியில் போலே கர்ம நிபந்தமாக வருமவை இல்லை -என்கை
திண்ணிதான நித்ய விபூதி தொடக்கமான எல்லா விபூதியையும் உடையனாய்
அன்றியே
திண்ணம் என்கிற இத்தை விட்டு வைத்து -வீடு முதல் முழுதுமாய் -மோஷ ப்ரப்ருத் யசேஷ புருஷார்த்த ப்ரதனாய் -என்னவுமாம் –

எண்ணின் மீதியன்
அசங்க்யேயமான கல்யாண குணத்தை உடையவன்
கீழ் விபூதி பரமான போது -எண்ணின் மீதியன் -என்றது குணபரமாகிறது
கீழ் குண பரமான போது எண்ணின் மீதியன் -என்றது விபூதி பரமாகிறது
வீடு முதல் முழுதுமாய் -என்ற போது மோஷ பிரதத்வத்தையே -நினைத்ததாகில் -எண்ணின் மீதியன் -என்றவிடம்
அனுக்தமான குணங்களைச் சொல்லுகிறது
எண்ணின் மீதியன் என்றவிடம் எண்ணுக்கு மேலாய் உள்ளான் என்றபடி
குணங்களாலே யாதல் விபூதியாலே யாதல் வந்த அபரிச்சேத்ய ஸ்வபாவதயைச் சொல்லுகிறது

எம்பெருமான்
குண விபூதிகளை யுடையனாய் இருக்கிற இருப்பைக் காட்டி
என்னை எழுதிக் கொண்டவன்
மண்ணும் விண்ணும் எல்லாம்
இப்படி இவற்றை உடையனாய் உடைமை நோவுபட விட்டு இருக்கை யன்றிக்கே பிரளய ஆபத்திலே வயிற்றிலே வைத்து நோக்கும் -என்கிறார்
பூம் யந்தரிஷாதிகளை வெள்ளம் கொள்ளப் புக எடுத்து வயிற்றிலே வைக்கிற விடத்திலே ஒன்றும் பிரிகதிர்படாமே-ஏக காலத்திலே
வைத்து ரஷித்த நம் கண்ணன்
உடன் உண்ட –
ரஷணம் அவனுக்கு தாரகம் ஆகையாலே -உண்ட -என்கிறது -இல்லை யாகில் -காக்கும் என்ன அமையும் –
கிருஷ்ணனோ பின்னை ஜகத்தை விழுங்கினான் -என்னில் -ஆம் கிருஷ்ணனே –
அங்காந்திட வையம் ஏழும் கண்டாள் இ றே யசோதை -ஆகையாலே சர்வ ரஷகனான கிருஷ்ணனே ஜகத்துக்கு திருஷ்டி
கிருஷ்ண ஏவ ஹி லோகாநாமுத்பத்திரபி சாப்யய கிருஷ்ணச்ய ஹி க்ருதே–பீஷ்ம பர்வ ராஜ ஸூயையாகம் என்கிற பிரமாண பிரசித்தி இருக்கிறபடி –
அல்லது இல்லை ஓர் கண்ணே –
இவ்வர்த்தத்தை ஒழிய சப்தத்தைக் கொண்டு போய் -பீலிக்கண் -என்று வ்யவஹரியா நின்றது இறே -அதுக்கும் கூச வேண்டும் படி இருக்கும்
மாலைக் கண் என்று இருப்பார்க்கு அல்லாதது எல்லாம் மாலைக் கண்ணாய்த் தோற்றும் இறே
இது திண்ணம் த்ருடம் -சத்யம் சத்யம் என்னுமா போலே –
நம் கண்ணன் கண் -என்கையாலே அன்வயத்தாலே பரத்வம் சொன்னார்
அல்லது இல்லை -என்கையாலே வ்யதிரேகத்தாலே பரத்வம் சொன்னார்

———————————————————————————

அவதாரிகை –

அல்லது இல்லை என்று நீர் சொல்லுவான் என் -ப்ரஹ்ம ருத்ரர்கள் ஈச்வரர்களாக அவர்களுக்கும் சில பிரமாணங்கள் உண்டாய் அன்றோ
போருகிறது என்னில் -அவர்கள் நிலையை ஆராய்ந்து பார்த்தால் தலை யறுப்பார் சிலரும் அறுப்புண்டு நிற்பார் சிலருமாகா நின்றார்கள்
அவர்கள் ஆபத்தைப் போக்கி ரஷியா நின்றான் இவன் -அவர்களோ இவனோ ஈஸ்வரன் -என்கிறார் –

ஏ பாவம் பரமே யேழு லகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரி யேறன்றியே –2-2-2-

ஏ பாவம்
ஏ -என்றது ஒ என்றபடி -விஷதாதிசய ஸூ சகம் இருக்கிற படி
ஏ பாவம்
ரத்ன கரீஷங்களுக்கு –ரத்னத்துக்கும் காய்ந்த விராட்டிக்களுக்கும் -வைஷம்யம் சொல்ல வேண்டுவதே
சேதனர் மந்த மதிகளாய்-பகவத் பரத்வம் உபபாதிக்க வேண்டுவதே என்னும் இன்னாப்பாலே -என்னே பாவம் -என்கிறார்
பரமே
பகவத் குண அனுபவம் பண்ணுகை ஒழிய இது நமக்கு பரமாவதே –
இது நமக்கு சாத்தியமாய் விழுவதே
யேழுலகும்
ஏழ் உலகங்களிலும் உண்டான சேதனர் -இருந்ததே குடியாக பாபங்களைக் கூடு பூரிக்க
ஈ பாவம் செய்து
பாபமானது ஈயும்படியாகச் செய்து -அழியும்படியாகப் பண்ணி
இது தான் சேதனர் அர்த்திக்கச் செய்கை அன்றிக்கே
அருளால் –
நிர்ஹேதுக கிருபையாலே

அளிப்பாரார்
இவர்களை ஈரக் கையாலே தடவி ரஷிப்பார் ஆர்
இவர்கள் பண்ணின பாபம்-அவன் அருளாலே போக்கில் போம் எத்தனை யல்லது
தாங்கள் பிராயச் சித்தம் பண்ணிப் போக்குகையாவது அவற்றை வர்த்திப்பிக்கை இறே
அளிப்பான் இவன் என்னாதே-ஆர் என்கிறது -அவர்களுக்கும் சத்வம் தலை எடுத்த போது -நீர் சொல்லுகிறவனே -என்று
இசைய வேண்டும் பிரசித்தியாலே -பாவ நஸ் சர்வ லோகா நாம் த்வமேவ -என்றும்
நஹி பாலான சாமர்த்தியம் ருதே -என்றும் சொல்லக் கடவது இறே
அவன் சர்வ விஷயமாகப் பண்ணின ரஷணம் கிடக்கிடீர் -தந்தாம் கால் தாம்தாம் நீட்டி முடக்க வல்லராய் இருக்கிறவர்களும்
ஓரோர் அளவிலே ஆபன்னரானால் அவற்றைப் போக்கி ரஷிக்கும் படியை பார்க்கலாகாதோ என்கிறார்
மா பாவம் விட
ஆனைக்கும் தனக்குத் தக்க வாதம் இறே
அல்லாதாரில் ஞான சக்த்யாதிகளாலே ஓர் ஆதிக்யம் உண்டு இறே அவர்களுக்கு
அவற்றைக் கொண்டு லோக குருவுமாய் தனக்குப் பிதாவுமாய் இருக்கிறவன் தலையை அறுத்துப் பாதகியாய் நின்றான் –
வாமாங்குஷ்ட னகாக்ரேண சின்னம் தஸ்ய சிரோ மயா–மத்ஸ்ய புராணம் என்கிறபடியே மஹா பாபமானது விடும் படியாக
அரற்குப் பிச்சை பெய் கோபால கோளரி யேறு-
அவன் தான் சம்ஹர்த்தாவான வேஷத்தோடு அதிகாரம் குலையாதே நின்று பாபத்தை விளைத்துக் கொள்ள இவன் அவனுக்கு
துக்க நிவர்த்தகன் ஆயிற்று -அங்கே இங்கே ஆவிர்பவித்து திரிகிற இடத்திலே யாயிற்று –
இவர்கள் எத்தனையேனும் உயர நின்றாலும் அனர்த்தத்தையே சூழ்த்துக் கொள்ளும் இத்தனை -அவன் எத்தனையேனும்
தன்னைத் தாழ விட்டாலும் ரஷகனாம் என்பதையும் சொல்லுகிறது
கோபாலருடைய மிடுக்கை உடைத்தான சிம்ஹ புங்கவம் -என்றபடி
கோபால கோளரி யேறு-
கோள் என்று மிடுக்காதல்
பிரதிபஷத்தைக் கொல்லும் என்னுதல்
நித்ய ஸூரிகளுக்கு நியந்தாவான இடையருக்கு நியாம்யனாய் பெற்ற மேணானிப்பு
கர்ம வச்யராய் ஆபன்னரான இவர்களை -ஈஸ்வரர்கள் என்போமா
ஆபத்துக்களைப் போக்கி ரஷிக்கிற இவன் ஈஸ்வரன் என்போமா
ஏறு அன்றி அருளால் அளிப்பாரார் -என்று அந்வயம்-

——————————————————————————

அவதாரிகை –

சௌசீல்யத்தாலும் த்ரிவிக்ரம க்ரமணம் ஆகிற அதி மானுஷ சேஷ்டிதத்தாலும் இவனே ஈஸ்வரன் என்கிறார்

ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை
வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேறன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மாறனில் மிக்குமோர் தேவுமுளதே–2-2

ஏறனைப் –
சர்வேஸ்வரன் கருட வாஹணன் என்று இறுமாந்து இருக்குமா போலே ஒரு எருத்தைத் தேடி கைக்கொள்ளாண்டிகளைப் போலே இறுமாந்து இருக்கும்
பூவனைப்
திரு நாபி கமலத்திலே அவ்யவதாநேந பிறந்தவன் அன்றோ என்று இறுமாந்து இருக்கும் சதுர்முகனை –
அதாவது பத்ம யோ நித்வத்தாலே அஜந என்று அபிமானித்து இருக்கை
பூ மகள் தன்னை
தாமரைப் பூவில் பரிமளம் உபாதாநமாக பிறந்தவளாய் -போக்யதைக வேஷையாய்-உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை –10-10-6-
என்னும்படியான பிரதாந்யம் தோற்ற இருக்கிறவளை
தன்னை -என்று
அவர்களில் இவளுக்கு உண்டான பிரதாந்யம் இருக்கிறபடி –
ஏறனை -பூவனை -என்கிற அநாதார உக்தியாலும் இவள் பிரதாந்யம் தோற்றுகிறது-
வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து –
விண் தொழ -வேறின்றி -தன்னுள் வைத்து -அந்ய பரரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் -அனந்யயையான – பெரிய பிராட்டியாருக்கும்
ஒக்க முகம் கொடுத்து வைக்கிற சீலத்தை அனுசந்தித்து விண்ணினுள்ளார் தொழா நிற்பார்கள்
ப்ரஹ்மாதிகள் எப்போதும் திருமேனியை பற்றி இருப்பார்களோ -என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க
ஒரோ ஆபத்துக்களில் திரு மேனியிலே இடம் கொடுக்கிறான் -அந்நீர்மையை விட மாட்டாமையாலே ஆழ்வார்கள் அத்தையே
புலற்றுகிரார்கள் அத்தனை இறே-என்று அருளிச் செய்தார்
வேறின்றி –
கூறாளும் தனியுடம்பன் -4-8-1–என்கிறபடியே வியவஸ்திதமாக உடம்பைக் கொடுக்கை
விண் தொழ –
மஞ்சா க்ரோசந்தி இதிவத் –
இங்குள்ளார் ஐஸ்வர்யம் என்று இருப்பார்கள் -அங்குள்ளார் சீலம் என்று தோற்றிருப்பார்கள்
மேறன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மேல் தன்னை -உபரிதந லோகங்களை –
அப்பால் மிக்கு -திரு நெடும் தாண்டகம் -5–என்கிறபடியே -விஞ்ச வளர்ந்த பூமிப் பரப்பு எல்லாம் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்ட
மாறனில் மிக்குமோர் தேவுமுளதே
மாறனில்-இவ்வதி மானுஷ சேஷ்டிதத்தை உடைய சர்வேஸ்வரனில் காட்டில் –
மிக்குமோர் தேவுமுளதே-ஒக்கப் பரிமாறா நிற்க -கட்டக்குடி -தாழ்ந்த குடி -என்று கழிக்கலாம் தெய்வம் தான் உண்டோ
-எல்லார் தலையிலும் காலை வைத்தவனை ஈஸ்வரன் என்னவோ -இவன் காலில் துகையுண்டவர்களை யீச்வரர்கள் என்னவோ –

————————————————————————————————-

அவதாரிகை –

சௌகுமார்யத்தாலும்-முதன்மையாலும் இவனே ஈஸ்வரன் -என்கிறார் –

தேவும் எப்பொருளும் படைக்க
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே –2–2-4–

தேவும் எப்பொருளும் படைக்க பூவில் நான்முகனைப் படைத்த
தேவ ஜாதியையும் சகல பதார்த்தங்களையும் உண்டாக்குகைக்காக ஒரு பூவிலே நாலு பூ பூத்தால் போலே சதுர்முகனை உண்டாக்கினவன் –
தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனையும் தகுமே —
தேவன் –
க்ரீடா த்யுதி ஸ்துதி மோத மத ஸ்வப்ன காந்தி கதிஷூ –பொருள்கள் உண்டே
சதுர்முக ஸ்ரஷ்டா வாகையாலே வந்த த்யுதியைச் சொல்லுதல் –
இது தன்னை லீலையாக உடையவன் -என்னுதல்-சௌந்தர் யாதிகளால் வந்த விளக்கம் -என்னுதல்
எம்பெருமானுக்கு அல்லால் –
ஸ்ருஷ்ட் யாத்யுபகாரத்தாலும்-சிருஷ்டிக்கு உறுப்பான குணங்களாலும் என்னை எழுதிக் கொண்டவனுக்கு அல்லது –
பூவும் பூசனையும் தகுமே —
சிக்குத் தலையனுக்கு பூத்தது ஆகாது
பிச்சை யுண்ணிக்கு பூசனை தகாது
பூத்தகுவது ஸூ குமாரனுக்கே
பூசனை தகுவது முதன்மை உடையவனுக்கே
இவனை ஒழிந்தவர்க்குத் தகாது -என்கிறார் –
ச ஏஷ ப்ருது தீர்க்காஷஸ் சம்பந்தீ தே ஜனார்த்தனா -என்று ஸ்ரீ பீஷ்மர் நெடும் போது அவன் பரத்வத்தை உபபாதித்துக் கொண்டு போந்து
ஸ்ருதி சித்தமான கண் அழகை உடையவன் காண் உங்களுக்கு மைத்துனனாய்ப் புகுந்து இருக்கிறான் -என்று பரத்வத்தை அவன் தலையிலே மாட்டெறிந்தார்
அர்ச்சமர்ச்சிதும் இச்சாமஸ் சர்வே சம்மந்துமர்ஹத -என்ற சஹதேவன் தலையிலே புஷ்ப வ்ருஷ்டியைப் பண்ணினார்கள் இறே
இத்தால் -பீஷ்மர் உடைய -ஜ்ஞானத்தில் காட்டில் -சஹதேவனுடைய -வைராக்யத்துக்கு உண்டான ப்ராதான்யம் சொல்லுகிறது

———————————————————————————-

அவதாரிகை –

புண்டரீகாஷன் ஆகையாலும் இவனே ஈஸ்வரன் -என்கிறார் –

தகும் சீர்த் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேலறிவார் யவரே –2-2-5-

தகும் சீர்த்-
ஸ்ரஷ்ட்ருத்வத்துக்கு உபயோகியான ஜ்ஞான சக்தியாதிகளை யுடையனான
தன் தனி முதலினுள்ளே-
கார்ய வர்க்கத்துக்கு அடைய காரணமான மூல பிரக்ருதியைச் சொல்லுதல்
பஹூச்யாம் என்கிற என்கிற அதுக்கும் அடியான சங்கல்ப ஜ்ஞானத்தைச் சொல்லுதல்
தனி முதல்
ஏக காரணம் என்று பரமாணு காரண வாதிகள் வ்யாவர்த்திக்கிறது
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தன்னோடும் ஆசைக்குப் பரலிடலாம் படியான தேவ ஜாதியையும்
வில்லை வளைத்த போதாக -அதிகம் மே நிரே விஷ்ணும் -என்னும் படி இ றே இவர்கள் மிகை
எப்பொருளும்
மற்றும் உண்டான சகல பதார்த்தங்களையும் உண்டாக்குகைக்குத் தகுவான் ஒருவன் –என்னும் இடத்தை தெரிவிப்பதாய்
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
ரஷகத்வம் இல்லையானாலும் தர்ச நீயமாய் குளிர்ந்து இருக்கிற திருக் கண்களை உடையனாய்
அக் கண் அழகாலே என்னை அடிமை கொண்டவனே -மிக்க தேஜசை உடையான்
திருவடி தோற்ற துறையிலே இவரும் தோற்றதே
ராம -சர்வாங்க ஸூந்தரராய் இருக்கை
கமல பத்ராஷ -அதிலே ஒரு சுழி யாயிற்று அமிழ்ந்து வார்க்கு வேண்டுவது
அக் கண் அழகுக்கு எல்லை என்-என்னில் சர்வ சத்த்வ மநோஹரே -திர்யக் சஜாதீயனாய் -பணையோடு பணை-தத்தித் திரிகிற
என் நெஞ்சினையும் அபஹரித்தான் அன்றோ
ரூப தாஷிண்ய சம்பன்ன பிரஸூத-தேக குணங்களாலும் ஆத்மா குணங்களாலும் குறையற்றது தான் ஔத்பத்திகமாய் இருக்கும்
ஜனகாத்மஜே -அற விஞ்சச் சொன்னாய் -இனி இங்கன் சொல்லலாவார் உண்டோ இல்லையோ –என்று பிராட்டிக்கு கருத்தாக
-ஜனகாத்மஜே -சுந்தர -35-8–பின்னை உம்மைச் சொல்லலாம் -நீரும் உண்டு
மிகும் சோதி மேலறிவார் யவரே
மிகும் சோதி –
பரஞ்சோதி ரூப சம்பாத்ய-நாராயண பரோ ஜ்யோதி -என்று நாராயண அநு வாகாதிகளிலே இவனே பரஞ்சோதிஸ்ஸூ -என்று ஓதப்படுகிறான்
மேலறிவார் யவரே
இவனை ஒழிய நாராயண அநுவாக சித்தமாய் இருப்பதொரு வஸ்து உண்டு என்று அறிவார் ஆரேனும் உண்டோ
யவரே –
வைதிக க -ஸ்தோத்ர ரத்னம் -11-என்னுமா போலே -அநந்ய பரமான நாராயண அநுவாகாதிகளாலே பிரதிபாதிக்கப் பட்ட
வைபவத்தை உடைய உன் பக்கலிலே பொறாமை கொண்டாடி இருப்பான் ஒரு வைதிகன் உண்டோ
-உண்டாகில் அவன் அவைதிகனாம் இத்தனை -தச்யோத் பத்திர் நிரூப்யதாம் -பத்மபுராணம் –

—————————————————————————————-

அவதாரிகை —
ஆபத் சகன் ஆகையாலும் இவனே ஈஸ்வரன் -என்கிறார் –

யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
அவர் எம் ஆழியம் பள்ளியாரே –2-2-6-

யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
சேதன வர்க்கத்தையும் -அசேதன வர்க்கத்தையும் -இப்படி இரண்டு வகையாகச் சொன்னவற்றைக் கூட்டி -இப்படி இருக்கிற
சகல பதார்த்தங்களும் பிரளய ஆபத்தில் தன் வயிற்றிலே சேரும்படியான போது
கவர்வின்றித்
கவர்கையாவது -க்ரஹிக்கை-அதாவது ஹிம்சையாய் -ஒருவரை ஒருவர் நெருக்காத படி
தன்னுள் ஒடுங்க நின்ற
தத் பஸ்யமஹம் சர்வம் தஸ்ய குஷௌ மகாதமன -என்னக் கடவது இறே
தன்னுள் -தன் சங்கல்ப ஏக தேசத்திலே என்னவுமாம்
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
இவர்கள் ரஷிக்கைக்கு உறுப்பான பரம்பின ஞான வெள்ளத்தை உடையனாய் -இப்படி ரஷிக்கப் பெற்றவிடம் தன் பேறு என்று
தோற்றும்படி இருக்கிற திவ்ய விக்ரஹத்தை உடையரான
அவர் எம் ஆழியம் பள்ளியாரே —
தாம் சம்சார மத்யஸ்தராய் இருக்கையாலே எல்லாரையும் கூட்டிக் கொண்டு எங்களுடைய ரஷண அர்த்தமாக வந்த
ஏகார்ணவத்தை அழகிய படுக்கையை உடையரானார்
பயலும் பள்ளியும் பாழியும் படுக்கை -நிகண்டு –இப்படி ஆபத்சகனாய் அணியனாகையாலே இவனே ஈஸ்வரன் என்கிறார் –

——————————————————————————————-

அவதாரிகை –

அகதி தகடி நா சாமர்த்த்யத்தாலும் இவனே ஈஸ்வரன் -என்கிறார் –

பள்ளி யாலிலை யேழுலகும் கொள்ளும்
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
உள்ளுள்ளார் அறிவார் அவன் தன்
கள்ள மாய மனக் கருத்தே –2-2-7-

பள்ளி யாலிலை யேழுலகும் கொள்ளும்
பள்ளி -படுக்கை -பவனாய் இருப்பதொரு ஆலந்தளிர்
யாலிலை யேழுலகும் கொள்ளும் -இப்படுக்கையிலே சப்த லோகங்களையும் வயிற்றிலே வைத்துக் கண் வளரும்
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
வள்ளல் -புக்க லோகங்களுக்கு அவ்வருகே இன்னம் கொண்டு வா -என்னும்படி இடமுடைத்தாய் இருக்கை
வல் வயிற்றுப் பெருமான் -உட்புக்க பதார்த்தங்களுக்கு பய பிரசங்கம் இன்றியே ஒழியும்படி மிடுக்கை உடைத்தாய் இருக்கை
இவ் வேழ் உலகும் உண்டும் இடமுடைத்தால் -பெரிய திருமொழி -11-5-2-
பெருமான் –
இப்படி ரஷிக்க வேண்டிற்று உடையவனாகை
அவனுடைய உள்ளுளாய கள்ளமாய மனக் கருத்தை உள்ளுள்ளார் அறிவார் அவன் தன் கள்ள மாய மனக் கருத்தே
யார் அறிவார்
கண்டது ஒன்றைச் சொன்ன வித்தனை போக்கி
உள்ளுள் -இன்னம் உள்ளே உள்ளே உண்டாய்
கள்ளமாய் -ஒருவருக்கும் தெரியாதபடியாய்
மாயமாய் ஜ்ஞாதாம்சம் ஆச்சர்யமாய் இருக்கிற அவனுடைய மனக்கருத்து -மநோ வியாபாரத்தை ஒருவரால் அறியலாய் இருந்ததோ

——————————————————————————–

அவதாரிகை –

சிருஷ்டியும் பால நமம் ஸ்வ அதீனமாக உடையானாகையாலே இவனே ஈஸ்வரன் -என்கிறார் –

கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள்
இருத்திக் காக்கும் இயல்வினரே –2-2-8-

கருத்தில் தேவும் எல்லாப் பொருளும் வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே
தன்னுடைய சங்கல்ப்பத்தில் தேவ ஜாதியையும் மற்றும் உண்டான சகல பதார்த்தங்களையும் வர்த்திப்பித்த -உண்டாக்கின -சிருஷ்டித்த
ஆச்சர்ய பூதனான சர்வேஸ்வரனை யன்றி
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள் இருத்திக் காக்கும் –
மூன்று லோகங்களையும் திண்ணிதான ஸ்திதியை யுடைத்தாம் படியாக திருத்தி –தம்முள் இருத்தி
அவ்வோ பதார்த்தங்களுக்கு அனுரூபமான ரஷணங்களையும் திரு உள்ளத்தே வைத்துக் காக்கும்
நஹி பாலன சாமர்த்தியம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-19–என்கிறபடியே ரஷணத்தைப் பண்ணும்
இயல்வினரே —
இத்தை இயல்வாக வுடையவர் –
ஸ்வபாவமாக யுடையவர் ஆர் –
மாயப்பிரானை அன்றி காக்கும் இயல்வினர் ஆர் -என்று அந்வயம்

——————————————————————————————–

அவதாரிகை —

ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்கள் மூன்றும் ஸ்வ அதீநமாம்படி இருக்கையாலும் இவனே ஈஸ்வரன் என்கிறார் –

காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன்னுந்தி யுள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ வுலகுகளே –2-2-9-

காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
ந சம்பதாம் சமாஹாரே -என்கிறபடியே பாலன கர்மத்தை ஸ்வபாவமாக உடையவன் –
ரஷண அர்த்தமாக கிருஷ்ணனாய் வந்து அவதரித்த சர்வேஸ்வரன்
சேர்க்கை செய்து
சம்ஹார காலம் வந்தவாறே கார்ய ரூப பிரபஞ்சம் அடைய தன் பக்கலிலே சேர்க்கை யாகிற செயலைச் செய்து –
தன்னுந்தி யுள்ளே வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர் ஆக்கினான் தெய்வ வுலகுகளே –
தன்னுடைய திரு நாபீ கமலத்திலே -தான் ஒரு கால் ஸ்ருஷ்டி என்று விட்டால் பின்பு தன்னையும் கேட்க வேண்டாதபடி
ஸ்ருஷ்டி ஷமனான சதுர்முகன் இந்திரன் மற்றும் உண்டானே தேவர்களோடு கூட இவர்களுக்கு இருப்பிடமான லோகங்களையும்
கட்டளைப்பட உண்டாக்கினான் -தன் உந்தியுள்ளே ஆக்கினான் –

————————————————————————————

அவதாரிகை –

இவ்வளவும் வர நான் பிரதிபாதித்த பரத்வத்தை நீங்கள் ஆஸ்ரயணீயராக நினைத்து இருக்கிறவர்கள்
மேல் எழுத்தைக் கொண்டு விஸ்வசியுங்கோள் என்கிறார்

கள்வா எம்மையும் ஏழுலகும் நின்
னுள்ளே தோற்றிய இறைவ என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே–2-2-10-

கள்வா –
சர்வேஸ்வரன் பக்கலில் வந்து வரம் கொள்ளுகிற இடத்தில் தேவர் இன்னம் எனக்கு ஒரு வரம் தர வேணும் -நீர் தந்த வரம் நிலை நிற்கும்படி
என் பக்கலிலே வந்து ஒரு வரம் பெற்று போக வேணும் என்று ஆர்த்திக்க -அப்படியே செய்கிறோம் என்று விட்டு -ருக்மிணிப் பிராட்டிக்கு
ஒரு பிள்ளை வேணும் என்று சென்று -நமோ கண்டாய கர்ணாயா -என்னுமா போலே ஏத்த அவனும் -உமயா சார்த்தமீசாநா-என்கிறபடியே
புறப்பட்டு -நீ கறுப்புடுத்து தாழ நின்ற நிலையிலே இச் செயலைச் செய்தால் இத்தை நாட்டார் மெய் என்று இருப்பார்களோ கள்வா -என்பர்கள்
தன் ஸ்வா தந்த்ர்யத்தை மறைத்து பர தந்த்ரனாய் நிற்கை இறே களவாகிறது
கைலாச யாத்ரையிலே நமோ கண்டாய கர்ணாய நம கடகடாயச –என்று ஸ்தோத்ரம் பண்ணின படியே கேட்ட பிராமணன்
-இதுக்கு முன்பு ஒருவரை ஸ்தோத்ரம் பண்ணி அறியாத வாயானாவாறே மீன் துடிக்கிற படி பாராய் -என்றான் நாத்தழும்ப நான்முகனும்
ஈசனுமாய் முறையால் ஏத்த -பெரிய திருமொழி -1-7-8-என்கிறபடியே ஸ்தோத்ரம் பண்ணி நாத்தழும்பு பட்டுக் கிடக்கிறது அன்றே –
இவன் தாழ நின்ற நிலையும் ஸ்தோத்ரம் பண்ணின நிலையும் களவு -என்னும் இடத்தை உபபாதிக்கிறது மேல்
எம்மையும் ஏழுலகும் நின்னுள்ளே தோற்றிய –
நீ இவற்றை மனைகிற போது -எங்களையும் மனைந்து பின்னை யன்றோ திர்யக் ஜாதிகளை உண்டாக்கிற்று
இறைவ என்று
இறைவா என்னா நிற்பார்கள்
இங்கனே சொல்லுகிறவர்கள் தான் ஆர் என்னில்
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
ராஜ சேவை பண்ணுவார் தந்தாம் அடையாளங்கள் உடன் சட்டையும் பிரம்புமாய் சேவிக்குமா போலே இவர்களும் தாம்தாம்
அடையாளங்கள் உடன் ஆயிற்று வந்து சேவிப்பது
இரவியர் மணி நெடும் தேரோடும் -இத்யாதி
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே–
சர்வேஸ்வரன் பெரிய பிராட்டியாரும் தானுமாய் இருக்கிற இருப்பிலே புகப் பெறாமையாலே திருப் பாற் கடலுக்கு இவ்வருகே கூப்பிட்டால்
இவர்களுக்கு காட்சி கொடுக்கைக்காக திருவடி திருத் தோளிலே ஏறிப் புறப்படும் ஆட்டத்து வெளியிலே ஆனைக்காலிலே துகை யுண்ணா நிற்பார்கள் –

————————————————————————————-

அவதாரிகை

நிகமத்தில் இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார்களுக்கு தேவதாந்த்ரங்கள் பக்கல்
ஈச்வரத்வ புத்தி பண்ணுகை யாகிற ஊனம் இல்லை -என்கிறார்

ஏத்த வேழுலகும் கொண்ட கோலக்
கூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே –2-2-11-

ஏத்த வேழுலகும் கொண்ட –
சங்கைஸ் ஸூராணாம்-என்கிறபடியே ஏத்த
அந்த ஹர்ஷத்தாலே சகல லோகங்களையும் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்ட
கோலக் கூத்தனை –
திரு வுலகு அளந்து அருளின போது வல்லார் ஆடினால் போலே யாயிற்று இருப்பது
அப்போதை வடிவு அழகை அனுபவிக்குமது ஒழிய இந்திரனைப் போலே ராஜ்ய ஸ்ரத்தை இல்லையே இவர்க்கு
குருகூர்ச் சடகோபன் சொல்
ஆப்திக்கு இன்னார் சொல்லிற்று என்னக் கடவது இறே
சடகோபன்
வேதாந்தத்தில் காட்டில் ஆழ்வார் பக்கலிலே பிறந்த ஆபிஜாத்யம்
வாய்ந்த வாயிரத்துள் –
இத்தனை போது இவர் பிரதிபாதித்த பர வஸ்து நேர் பட்டால் போலே யாயிற்று இப்பிரபந்தமும் நேர்பட்டபடி
வாச்யத்தில் காட்டில் வாசகம் நேர்பட்ட படி என்றுமாம்
அதாவது விஷயத்தை உள்ளபடி பேச வற்றாய் இருக்கை
இவை பத்துடன் ஏத்த வல்லார்க்கு
இத் திருவாய் மொழியை சஹ்ருதயமாக ஏத்த வல்லவர்களுக்கு
இல்லையோ ரூனமே —
இவ்வாத்மாவுக்கு ஊனமாவது அபர தேவதைகள் பக்கலிலே பரத்வ பிரதிபத்தி பண்ணுகையும்-பரதேவதை பக்கலிலே பரதவ புத்தி பண்ணாமையும்
இப்படி வரக் கடவதான ஊனம் இது கற்றார்க்கு இல்லை –

முதல் பாட்டில் -மேல் பரக்க அருளிச் செய்கிற இத் திருவாய் மொழியின் அர்த்தத்தை சங்க்ரஹேண அருளிச் செய்தார்
இரண்டாம் பாட்டு முதல் துக்க நிவர்த்தகன் ஆகையாலும்
சீலவான் ஆகையாலும்
ஸூகுமாரன் ஆகையாலும்
புண்டரீகாஷன் ஆகையாலும்
ஆபத்சகன் ஆகையாலும் அகடிதகடநா சமர்த்தன் ஆகையாலும்
ஸ்ருஷ்டி ஸ்திதிகளைப் பண்ணுகையாலும்
சம்சாரம் ஆகிற செயலைச் செய்கையாலும்
ஈஸ்வர அபிமாநிகலாய் இருக்கிறவர்களுடைய ஸ்தோத்ராதி களாலும்
இப்படி பஹூ பிரகாரங்களாலே -அவனுடைய பரத்வத்தை அருளிச் செய்து இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி – -2-1– –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

October 17, 2015

பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியில் -மணியை -வானவர் கண்ணனை -தன்னதோர் அணியை -என்று
சௌலப்யத்தையும்-மேன்மையையும் -வடிவு அழகையும் -சொல்லிற்று
இவை ஒரொன்றே போரும் இறே மேல் விழப் பண்ணுகைக்கு
இங்கன் அன்றிக்கே இவை மூன்றும் குறைவற்ற விஷயமானால் அனுபவியாது இருக்கப் போகாது இறே
-இவ்விஷயத்தை இப்போதே அனுபவிக்க வேணும் என்று பாஹ்ய சம்ச்லேஷ அபேஷை பிறந்தது –
அப்போதே நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே பிறந்த அவசாதாதிசயத்தை -எம்பெருமானோடே கலந்து பிரிந்து ஆற்றாமையாலே
நோவு படுகிறாள் ஒரு பிராட்டி -ஆற்றாமை கை கொடுக்க லீலா உத்யாநத்த்திலே புறப்பட்டு அங்கே வர்த்திக்கிற
பதார்த்தங்களைக் கண்டு அவையும் எல்லாம் பகவத் அலாபத்தாலே நோவு படுகிறனவாகக் கொண்டு
-அவற்றுக்குமாக தான் நோவு படுகிற பாசுரத்தாலே பேசுகிறார்

அஞ்சிறைய மட நாரையிலும் -இதுக்கு ஆற்றாமை கரை புரண்டு இருக்கும் –அதுக்கு அடி என் என்னில் –
பெரு நலம் கிடந்த நல்லடிப் போது அயர்ப்பிலன் அலற்றுவன் -1-3-10-என்று அவதாரத்திலே அனுபவிக்கக் கோலி பெறாததாகையாலே –
அது ஒரு காலத்திலேயாய்-நாம் பிற்பாடராகையால் என்று ஆறி இருக்கலாம் -இது அங்கன் அன்றிக்கே அவதாரத்திலே பிற்பாடர்க்கும்
இழக்க வேண்டாதபடி முகம் கொடுக்கைக்கு நிற்கிற இடம் இறே உகந்து அருளின நிலங்கள்
நம்பியைத் தென் குறுங்குடி நின்ற –1-10-9-என்று உகந்து அருளின நிலத்திலே அனுபவிக்க ஆசைப் பட்டு பெறாமையாலே வந்த
ஆற்றாமையாகையாலே இது கனத்து இருக்கும்
அஞ்சிறைய மட நாரையில்-தூது விடுகைக்கு தரிப்பு உண்டாயிற்று இதில் அங்கு தூது விட்டவையும் நோவு படுகிறனவாக-
அவற்றுக்குமாக தாமும் நோவு படுகிறார் –

அனுபவிக்கிற இவர் தம் படியாலும் இத் திருவாய்மொழிக்கு ஆற்றாமை கனத்து இருக்கும்
பத்துடை யடியவர்கு முன்பு அவ்விஷயத்தை அனுபவித்து பிரிந்த அளவால் உள்ள ஆற்றாமை இறே அதில் உள்ளது
அஞ்சிறைய மட நாரைக்கு பின்பு இவ்வளவும் வர அவனுடைய குணங்களை அனுபவித்து பிரிந்த பிரிவாகையாலே
ஆற்றாமை மிகவும் கனத்து இருக்கும் -இதில் பதில பயில விறே இனிதாய் இருக்கும் இவ்விஷயம்

நாரையாகில் வெளுத்து இருக்கையும்
அன்றிலாகில் வாய் அலகு நெகிழ்த்தவாறே கதறுகையும்
கடலாகில் எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி கூப்பிடுகையும்
காற்றாகில் சததகதியாய் திரிகையும்
மேகமாகில் நீராய் இற்றிற்று விழுகையும்
சந்த்ரனாகில் தேய்வதும் வளருவதுமாகக் கடவதும்
தமஸ்ஸாகில் பதார்த்த தர்சனம் பண்ண ஒட்டாது என்றும்
கழியாகில் அலைவாய் முகமாய் ஏறுவது வடிவதாகக் கடவது என்றும்
விளக்காகில் இற்றிற்று எரியக் கடவது என்றும்
இவற்றுக்கு இவை நியத ஸ்வபாவம் என்று அறியாதே -இவை எல்லாம் தம்மைப்போலே பகவத் விச்லேஷத்தாலே
வ்யசன படுகிறனவாகக் கொண்டு அவற்றுக்குமாக தாம் அநுசோகிக்கிறார்

இத் திருவாய் மொழியால் -இளைய பெருமாளில் காட்டில் இவர்க்கு உண்டான வ்யாவ்ருத்தி சொல்கிறது -எங்கனே என்னில்
மத்ச்யத்துக்கு ஜலம் தாரகமாக அறுதியிட்டார் அவர் -இவர் அந்த மத்ச்யத்தொடு ஜலத்தோடு தம்மோடு வாசியற
பகவத் குணங்களே தாரகம் என்று இருக்கிறார் -ஆகையாலே துக்கிகளாய்இருப்பார் தங்களோடு சம துக்கிகளைக் கழுத்தைக் கட்டிக் கொண்டு
கூப்பிட்டு ஆற்றாமைக்குப் போக்குவிட்டு தரிக்குமா போலே இவளும் கண்ணுக்கு இலக்கான பதார்த்தங்கள் எல்லாவற்றோடும்
கழுத்தைக் கட்டிக் கொண்டு கிடந்து நீ பட்டதோ நான் பட்டதோ என்று கூப்பிடுகிறாளாய் இருக்கிறது –
அபிவ்ருஷா பரிம்லா நா -என்னுமா போலே சேதன அசேதன விபாகம் அற நோவு படுத்த வற்றாய் இறே இவள் பிரிந்த விஷயம் தான் இருப்பது
உபதத் தோதகா நத்ய பலவலா நி சராம்சி ச -என்று ஆறுகளோடு-சிறு குழிகளோடு பெரும் குழிகளோடு வாசி யற கரை யருகும் சென்று
கிட்ட ஒண்ணாத படி ராம விரஹத்தாலே கொதித்தது இ றே
பரிசுஷ்க பலாசாநி வநான்யு பவநாநி ச -என்று சிறு காட்டோடு பெரும் காட்டோடு வாசி யற விரஹ அக்னி கொளுத்திற்று
பெருமாள்- சீதே ம்ருதஸ் தேச்வசுர பித்ரா ஹீ நோசி லஷ்மண-என்று ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு கிடந்தது கூப்பிட்டாப் போலே கூப்பிடுகிறார் இங்கு –

————————————————-

அவதாரிகை –

பிரிந்தார் இரங்குவது நெய்தல் நிலத்திலே யாகையாலே கடற்கரைச் சோலையைப் பற்ற இவள் பிரிவுக்கு இரங்கி இருக்கச் செய்தே
அங்கே ஆமிஷார்த்தமாக அவதானம் பண்ணிக் கொண்டு இருக்கிறது ஒரு நாரை கண்ணுக்கு இலக்காக
-அதின் உடம்பில் வெளுப்பைக் கண்டு -அதுவும் தன்னைப் போலே பிரிவாற்றாமையாலே வந்த வைவர்ண்யத்தோடே இருக்கிறதாகக் கொண்டு
-பாவியேன் நீயும் நான் அகப்பட்ட விஷயத்திலே அகப்பட்டு நெஞ்சு பரி உண்டாய் யாகாதோ -என்கிறாள்

வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –2-1-1-

வாயும் திரையுகளும் –
வாய்கை -கிட்டுகை-
பெரிய மலை போலே வந்து கிட்டுகிற திரைகள் மேலே தாவிப் போகா நின்றாலும் நினைத்தது கைப் புகுரும் அளவும்
சலியாதே இருக்குமாயிற்று -பகவத் த்யான பரர் இருக்குமா போலே இருக்கும் –
அலைகடல் நீர் குழம்ப அகடாடவோடி அகல் வானுரிஞ்ச முதுகில் மலைகளை மீது கொண்டு வருமீனை -பெரிய திருமொழி -11-4-1-
மறவாது இருப்பாருக்கு போலியாய் இரா நின்றது -அலைகள் மீது கொண்டு வருமீன் மறவாது இருக்கிற இதுவும் –
இத்தால் -மீனைக் குறிக்கோளாகக் கொண்ட நாரை என்கிறார் யாயிற்று -மேலே -திரையுகளும் -என்பதற்கு உதாரணம் காட்டுகிறார்
கிரயோ வர்ஷதாராபிர் ஹன்யமாநா ந விவ்யது அபிபூயமாநா வ்யச நைர் யதா தோஷஜ சேதச-ஸ்ரீ மாத20-15- பாகவதம் -10-என்று சொல்லக் கடவது இறே
நிரந்தரமாக வர்ஷதாரைகள் விழா நிற்கச் செய்தேயும் மலைகள் சலியா நின்றன –
என் போலே என்றால் -சர்வேஸ்வரனே ரஷகன் -என்று இருப்பார் தாப த்ரயங்களால் வந்த வ்யசனங்களுக்கு இடையாதே இருக்குமா போலே

கானல் மடநாராய்
வந்து கிட்டுகிற திரை உகளா நின்றுள்ள
கானலிலே -நெய்தல் நிலத்திலே இருக்கிற மட நாராய்
யாகங்களும் பண்ணிப் பவித்ரங்களும் முடித்திட்டு தார்மிகர் என்னும்படி திரியா நிற்பார்கள் இறே -பரஹிம்சை பண்ணா நிற்கச் செய்தே கிராமணிகள்
அப்படியே ஷூத்ர மத்ச்யங்கள் வந்தாலும் அநாதரித்து இருக்குமாயிற்று நினைத்தது கைப்புகுரும் அளவும்
பற்றிற்று விடாது ஒழிகை இறே மடப்பமாவது

ஆயும் -துஞ்சிலும்-நீ துஞ்சாயால்
என் பிறப்பே பிடித்து உறங்காத தாயும் உறங்கிலும்
அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
தங்கள் சத்தையே பிடித்து உறங்காத நித்ய ஸூரிகள் உறங்கிலும் நீ உறங்குகிறிலை
இவளைப் பெற்ற தாய்க்கு உறக்கம் இன்றிக்கே ஒழிவான் என் என்னில் -முன்பு எல்லாம் -இவளுக்கு சத்ருசனாய் இருப்பான் ஒருவனை
பெற்றுக் கொடுத்தோமாக வல்லோமே -என்று கண் உறங்காது
பின்பு நாயகனைப் பிரிந்து இவள் நோவு படுகிறபடியைக் கண்டு அத்தாலே கண் உறங்காது
பதி சம்யோக ஸூ லபம் வயோ த்ருஷ்ட்வா ச மே பிதா சிந்தார்ணவ கத -என்றாள் இறே பிராட்டி
ஒரு உபக்னத்திலே கொண்டு போய் சேர்த்து நோக்கில் நோக்கலாய் இல்லையாகில் கிடையாதபடியான பருவமாய் இரா நின்றது
இவளுக்கு ஈடாய் இருப்பான் ஒருவனைப் பெற்று அவன் கையிலே காட்டிக் கொடுத்தோமாக வல்லோமே -என்று எங்கள் ஐயர்
சிந்தார்ணவ கதரானார் என்றாள் இறே பிராட்டி
அப்படியே இ றே இவளைப் பெற்ற தாயாரும் கண் உறங்காதே படும்படி
அநிமிஷராய்-சதா தர்சனம் பண்ணுகிறவர்கள் ஆகையாலே நித்ய ஸூரிகளுக்கும் தானே நித்தரை இல்லையே —

நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
மானசவ்யதையும்-அத்தாலே வந்த வைவர்ண்யமும் தன பக்கலிலே காண்கையாலே-இவ்விரண்டும் அதுக்கு உண்டு என்று இருக்கிறாள்
மீதுரா
விஷம் ஏறினால் போலே உடம்பிலே பரக்க
எம்மே போல்
இப்படி கிலேசப் படுக்கைக்கு நான் ஒருத்தியும் என்று இருந்தேன் -நீயும் என்னைப் போலே ஆவதே
துக்க பரிபவங்களை பொறுத்து இருக்கையாலும் -பற்றிற்று விடாது இருக்கிறபடியாலும் -வைவர்ண்யத்தாலும் -என்னைப் போலே இரா நின்றாய் –
நீயும்
வ்ரஹ வ்யசனம் பொறுக்க மாட்டாத மார்த்தவத்தை உடைய நீயும்
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்க மாட்டாமைக்கு இருவரும் ஒத்தோமோ
திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே —
மானச வ்யதையும் வைவர்ண்யமும் இருந்தபடி கண்டேனுக்கு -நீயும் நான் அகப்பட்ட துறையிலே அகப்பட்டாய் ஆகாதே
மைந்தனை மலராள் மணவாளனையோ -1-10-4-நீயும் ஆசைப் பட்டது
நெஞ்சம் கோட்பட்டாயே —
நெஞ்சு பறியுண்டாயாகாதே
தோற புரை யன்றியே மாறுபாடுருவ வேர்ப்பற்றிலே நோவு பட்டாயாகாதே

—————————————————————————–

அவதாரிகை –

இப்படி நாரையைப் பார்த்து வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே அருகே நின்ற பனையிலே தங்கின அன்றிலானது
வாயலகு நெகிழ்ந்த வாறே கூப்பிட்டது -இதனுடைய ஆர்த்த த்வநியைக் கேட்டு –
பாவியேன் நீயும் என்னைப் போலே அகப்பட்டாய் ஆகாதே -என்கிறார் –

கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய வன்றிலே
சேடபட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆட்பட்ட வெம்மே போல் நீயும் அரவணையான்
தாட்பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே –2-1-2-

கோட்பட்ட சிந்தையையாய்க்
அபஹரிக்கப் பட்ட ஹ்ருதயத்தை உடையையே
அபஹ்ருதமான மனஸ் ஸூ என்று அறிந்தபடி என் என்னில்
அதினுடைய அடியற்ற த்வனி தான் -நெஞ்சு இழந்தது -என்று தோற்ற நின்றது காணும் இவளுக்கு
கூர்வாய வன்றிலே
தனியாய் இருப்பாரை இரு துண்டமாக இட வல்ல த்வனி யாயிற்று
கூர்வாய்
வாய் -என்று வார்த்தை
அன்றியே கூர்த்த வாய் அலகை உடைய -என்னுதல்

சேடபட்ட யாமங்கள் –
ராத்ரியாய் நெடுகுகை யன்றிக்கே யாமங்கள் தோறும் நெடுகா நின்றதாயிற்று -சேண் -நீண்ட என்றபடி
சேராது இரங்குதியால்
நெடுகுகிற யாமங்களில் படுக்கையில் சேராது ஒழிந்தாலும் தரிக்கலாம் இறே -அங்கனே செய்யாதே சிதிலையாய் நின்றாய்
ஆட்பட்ட வெம்மே போல்
நெஞ்சு பறியுண்டு-படுக்கையிலும் சேராதே -நோவு படுகைக்கு என்னைப் போலே நீயும் அவன் திருவடிகளிலே
தாஸ்ய பரிமளத்திலே யாகாதே அகப்பட்டது
நீயும் –
நாட்டாரில் வ்யாவ்ருத்தமாய் போந்து இருக்கிற நீயும்
பதிம் விச்வச்ய -யஸ் யாஸ்மி -என்று ஓதினாய் அல்லை
மயர்வற மதிநலம் பெற்றதாய் அல்லை
என்தனை உட்புகாத நீயும் இப்படியாவதே –

அரவணையான் -தாட்பட்ட தண் துழாய்த் தாமம்
திருமாலால் என்றது இறே கீழே
இருவருமானால் இருப்பது படுக்கையிலேயாய் இருக்குமே
அவனும் அவளுமாய்த் துகைத்த திருத் துழாய் மாலை பெற வேணும் -என்று அத்தையோ நீயும் ஆசைப் பட்டது
தாட்பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே —
சுடர் முடி மேல் -1-9-7- துழாய் ஒழிய அவர்கள் இருவரும் கூட துகைத்த துழாயையோ நீயும் ஆசைப் பட்டது
புழுகிலே தோய்ந்து எடுத்தால் போலே பரிமளத்திலே தெரியுமே
கலம்பகன் நாறுமே
தாளிணை மேல் அணி தண்ணம் துழாய் -4-2-5-என்று இ றே தான் கிடப்பது
தாமம் -ஒளியும் மாலையும்
காமுற்றாயே
சங்கத்து அளவில் நின்றிலை யாகாதே
பெறில் ஜீவித்தல் பெறா விடில் முடிதலான அவஸ்தையை ப்ராபித்தாய் யாகாதே –

————————————————————————————-

அவதாரிகை –

அன்றிலுனுடைய த்வநிக்கு இடைந்து இருக்கிற அளவிலே -கடல் என்று ஒரு மஹா தத்வமாய் -அது தன் காம்பீர்யம் எல்லாம் இழந்து
கரையிலே வருவது -கரை ஏற மாட்டாதே உள்ளே விழுவதாய்-எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி ஊமைக் கூறனாய்க்
கூப்பிடுகிற படியைக் கண்டு -பாவியேன் நீயும் ராம குணத்திலே அகப்பட்டு நான் பட்டது பட்டாயாகாதே -என்கிறாள் –

காமுற்ற கையறவோடு எல்லே யிராப்பகல்
நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே –2-1-3-

எல்லே கனை கடலே -தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த யாமுற்ற துற்றாயோ -காமுற்ற கையறவோடு
யிராப்பகல் முற்றவும் நீ கண் துயிலாய் -நெஞ்சுருகி யேங்குதியால் வாழி -என்று அந்வயம்
காமுற்ற கையறவோடு –
ஆசைப்பட்ட பொருள் இழவோடே-கைத்து -என்று பொருள் -அறவு -இழவு-ஆசைப்பட்ட பொருள் கை புகுராமையால் வந்த இழவோடே-
காமுறுகையும் இழவும் கடலுக்கு இன்றிக்கே இருக்க திருஷ்டாந்த பூதையான தனக்கு உண்டாகையாலே -இதுக்கும் உண்டு -என்று
அநு மித்துச் சொல்கிறாள்
எல்லே
இரவோடு பகலொடு வாசி அறக் கதறுகிறபடியைக் கண்டு தன் படிக்கு போலியாய் இருக்கையாலே தோழியை சம்போதிக்குமா போலே
சம்போதிக்கிறாள் -சிறையுறவு போலே -ஒதமும் நானும் உறங்காது இருந்தேனே –பெரிய திருமொழி -9-4-9-என்னக் கடவது இ றே
அன்றிக்கே -எல்லே -என்றது என்னே -என்று ஆச்சர்யமாதல்
யிராப்பகல் நீ முற்றக் கண் துயிலாய்
உறங்கக் கண்ட இரவுக்கும் உறங்காமைக்கு கண்ட பகலுக்கும் உன் பக்கல் ஒரு வாசி கண்டிலோமீ
நீ
உன் காம்பீர்யம் எல்லாம் எங்கே போயிற்று
நெஞ்சுருகி யேங்குதியால்
உறக்கம் இன்றிக்கே ஒழிந்தால் நெஞ்சு தான் அழியாது இருக்கப் பெற்றதோ -பேற்றுக்கு ஏற்ற -நெஞ்சு அழிந்து கூப்பிடா நின்றாய்
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான்
பாவியேன் -பரத்வத்திலே ஆசைப்பட மாட்டிற்று இல்லையாகாதே -பிரணயிநி விரஹம் பொறுக்க மாட்டாத
சக்கரவர்த்தி திருமகனை யாகாதே நீயும் ஆசைப்பட்டது
தென்னிலங்கை முற்றத் தீயூட்டினான் -விபீஷண க்ருஹம் இலங்கைக்குள் அன்று போலே -அவன் அவர்களுக்கு கூட்டில்லாதா போலே
அவனகமும் அவர்கள் அகங்களுக்கு கூட்டில்லை போலே காணும் -அவன் அகம் தாசோஹம் இ றே -அகம் -வீடு அஹம் மனம் என்றபடி
அன்றிக்கே
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான்
ராவண பயத்தாலே முன்பு அரை வயிறாக ஜீவித்த அக்னி ஒள்ளெரி மண்டி யுண்ண -என்கிறபடியே வயிறு நிறைய உண்டு ஜீவிக்கப் பெற்றதாயிற்று –பெருமாளை அண்டை கொண்ட பலத்தாலே -செந்தீயுண்டு தேக்கிட்டதே -பெரிய திருமொழி -10-9-1–என்னக் கடவது இ றே
-முற்ற -முழுவதும் -பூரணமாக என்றபடி
தாள் நயந்த யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே –
பரம பிரணயியான சக்கரவர்த்தி திருமகன் திருவடிகளை ஆசைப் பட்ட நான் பட்டது பட்டாயாகாதே நீயும்
தாள் நயந்தாரோடு -தோள் நயந்தாரோடு வாசி யறுவதே கிலேசப் படுக்கைக்கு -பிராட்டியோடு ஸ்ரீ பரத ஆழ்வானோடு வாசி அற்றது இ றே
சேது பந்தன நேரத்திலே பெருமாள் திருவடிகளை சமுத்ரம் அடைந்ததே -ஆழ்வார் பிராட்டி பாவத்தில் அவன் தோளை அடைந்தார் -என்றபடி
வாழி
இவ்வவசாதம் நீங்கி நீ ஜீவித்திடுக
கனை கடலே
வாய் விட்டுக் கூப்பிட மாட்டாதே விம்மல் பொருமலாய் படுகிறாய் ஆகாதே
கோஷிக்கிற கடலே -என்னவுமாம் –

——————————————————————————————–

அவதாரிகை –

காற்று என்று ஒரு வ்யாபக தத்வமாய் -அது தான் அபிமத விரஹ வ்யசனத்தாலே இருந்த இடத்தில் இருக்க மாட்டாதே
மடலூருவாரைப் போலே உடம்பிலே புழுதியை ஏறிட்டுக் கொண்டு வடிவு தெரியாத படியாய் ஜவர சந்நிபதிதரைப் போலே
குளிர்ந்து இருந்தது அத்தைப் பார்த்து நீயும் நான் பட்டது பட்டாயாகாதே -என்கிறாள் –

கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –2-1-4-

கடலும் மலையும் விசும்பும் துழாய்
காரார் திருமேனி காணும் அளவும் போய்–சிறிய திருமடல் -என்று ஷீராப்தியோடு திருமலையோடு பரமபதத்தோடு வாசி அறத்
தேடுவார்க்கு போலியாய் இருக்கிறபடி
ஊராய வெல்லாம் -ஒழியாமே தேடுவார்க்கு போலியாய் இருக்கிறபடி
தௌ வநாநி க்ரீம்ச்சைவ சரிதச்ச சராம்சி ச நிகிலேந விசின்வாநௌ சீதாம் தசரதாத் மஜௌ-என்று தேடித் திரிந்தவர்களுக்கு போலியாய் இரா நின்றது
சீதாம் -தேடிக் கண்டிலோம் என்று ஆறி இருக்கலாம் விஷயம் அன்று
தசரதாத் மஜௌ-தேடப் பிறந்தவர்கள் அல்லர் –அவர்கள் ஜீவிக்கை என்ற ஒரு பொருள் உண்டோ –இத்தால் சென்று அற்றது -என்றபடி

கடலும் மலையும் விசும்பும் துழாய்
அபரிச்சின்னமான கடல் -நிர்விவரமான மலை -அவகாச பிரதானம் பண்ணுகிற ஆகாசம் -அன்றியே அச்சமான ஆகாசம்
எம் போல் சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
ஜவர சந்நிபதிதரைப் போலே சென்று அற்றாயாகாதே என்னைப் போலே
சுடர் என்று ஆதித்யன்
சுடரைக் கொள்ளப் பட்டது என்றது ஆதித்யன் அஸ்தமித்த இரவோடு சுடரை உடைத்தான பகலொடு வாசி அற உறங்குகிறிலை
குளிர்ந்த வாடாய்
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ
அடல் -என்று மிடுக்கு -எதிரிகள் மிடுக்கைக் கொள்ளுதல் என்னுதல்
தான் மிடுக்காய் இருத்தல் என்னுதல்
ஏதத் வ்ரதம் மம என்ற அளவன்றிக்கே ஆஸ்ரித அர்த்தமாக அசத்திய பிரதிஜ்ஞனானவன் ஓரத்தளவு அகப்பட்டாய் ஆகாதே –
சக்கரத்தின் முனையில் -பஷபாதத்தில் என்றுமாம் –
பாரத சமரத்தில் சக்ர உத்தாரணத்தின் அன்று அர்ஜுனன் இளைத்துக் கை வாங்கினவாறே பண்ணின பிரதிஜ்ஞையை அழித்து
திரு வாழியைக் கொண்டு பீஷ்மரைத் தொடர்ந்தான் இ றே
ஏஹயேஹி -கெட்டு ஓடுகிறவன் பிற்காலித்து நின்று -எங்கள் அம்மை நாயனார் மாறி மாறி இடுகிற அடி இருக்கிற அழகு என் -என்றான்
புல்லாம்புஜ பத்ர நேத்ர-என்றும் -ஆணை மறுத்தால் சேதம் என்-சீறிச் சிவந்த கண் அழகைக் காணப் பெற்றால்
பிரசஹ்ய மாம் பாதய-ஆயுதம் எடேன் என்ற நீர் ஆயுதம் எடுத்தாலும் அடியேன் கையில் ஆயுதம் இருக்கில் தோலேன்
-ஆயுதத்தைப் பொகடச் சொல்லி தலை யறுத்து அருளீர்
லோக நாத -உமக்கும் வீரத்துக்கும் தோலேன் -முதன்மைக்குத் தோற்பேன்
அடல் கொள் படை யாழி
மிடுக்கை உடைத்தான படையாகிற திருவாழி
ஆழி யம்மானை
கையிலே திரு ஆழியை உடைய சர்வேஸ்வரனை யாகாதே நீயும் காண ஆசைப் பட்டதே
நீ உடலம் நோய் உற்றாயோ
பிரத்யுபகார நிரபேஷமாக உபகரிக்கும் நீ -சர்வ ரஷகமான சரீரத்திலே நோவு வரும்படி பட்டாய் யாகாதே -என்கிறாள்
சஞ்சாரம் இதுக்கு நியத ஸ்வபாவம் இ றே
ஊழி தோர் ஊழியே –
கல்பம் தோறும் கல்பம் தோறும் நோவு படா நிற்கச் செய்தே தவிராதபடி சரீராந்தமான நோவு கொண்டாய் யாகாதே
காலம் மாறி வரச் செய்தேயும் நோவு மாறாதே ஏக ரூபமாய் செல்லுகிறபடி

———————————————————————–

அவதாரிகை –

அவ்வளவில் ஒரு மேகமானது கரைந்து நீராய் விழப் புக்கது -நீயும் அவனுடைய விரோதி நிரசன சீலதையிலே அகப்பட்டாயாகாதே -என்கிறாள்

ஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே –2-1-5-

ஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு
கல்பம் தோறும் கல்பம் தோறும் நீராய் நெகிழ்கின்ற
லோகம் அடங்கும் வெள்ளமிட வேண்டும் படி நீரை முகந்து கொண்டு –
உனக்கு ஒரு நல்ல நிதர்சனம் உண்டு
தோழியரும் யாமும் போல் –
என் இழவுக்கு எம்மின் முன் அவனுக்கு மாயும் தோழிமாரையும்-9-9-5-என்னையும் போலே
நீராய் நெகிழ்கின்ற
கரைந்து நீராய் விழுகின்ற
வாழிய
ஜகத்துக்கு உபகாரகமாய் இருக்கிற நீ உன்னுடைய கண்ண நீர் நீங்கி வாழ்ந்திடுக
வானமே
மேகத்தைச் சொல்லுதல்
ஆகாசத்தைச் சொல்லுதல்
அதி ஸூஷ்மமான ஆகாசம் நீரை முகந்து கொண்டு சிதறி உருகி நீராய் விழுகிறது என்று நினைக்கிறாள்
வானம் என்று மேகத்துக்கு பெயர்
வான் கலந்த வண்ணன் –இரண்டாம் திருவந்தாதி -75-என்றது இறே
வானம் வழங்காது எனின் –திருக்குறள் -19-என்றான் இறே தமிழனும்
நீயும்
லோக உபகாரகமாக வடிவு படைத்த நீயும்
மதுசூதன் பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே
விரோதி நிரசன சீலனானவனுடைய வீர குணத்திலே அகப்பட்டு -அவன் பக்கல் உண்டான நசையாலே ஜீவிக்கவும் மாட்டாதே
முடியவும் மாட்டாதே நோவு படுகிறாய் யாகாதே
பாழிமை -பலம் -இடமுடமை -என்றுமாம் மனசில் தாரள இடம் கொண்டவன்
அவன் கண் பாசத்தால் -அவன் பக்கல் நசையாலே
விஷய அனுகூலமாய் இறே நசை இருப்பது
எவ்வளவு நசையுண்டு-அவ்வளவு நைவும் உண்டாம் இறே வ்யதிரேகத்தில்
நைவாயே -நைவே பலம்

—————————————————————————–

அவதாரிகை –

மேகத்தின் அருகே கலா மாத்ரமான-பிரதமை – சந்தரன் தோற்றினான் -அவனைப் பார்த்து உன் வடிவில் எழில் இழந்தாயாகாதே -என்கிறாள்

நைவாய வெம்மே போல் நாண் மதியே நீ இந்நாள்
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐ வாயரவணை மேல் ஆழிப் பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே –2-1-6-

நைவாய வெம்மே போல் –
நைவை யுடைய எங்களைப் போலே -என்னுதல்
நைவு தான் ஒரு வடிவு கொண்டால் போலே என்னுதல் –நைவு ஆய -என்றபடி
ச பங்காம் பூமியில் நின்றும் தோற்றின போது போலே இருந்தாள்
அநலங்காராம் -அத்தால் அழித்து ஒப்பிக்கும் அவர் அசந்நிதியாலே ஒப்பனை யழிந்து இருந்தாள்
விபத்மாமிவ பதமி நீம் –பெருமாள் வந்தாலும் இவ்வாஸ்ரயத்தை உண்டாக்க ஒண்ணாது என்னும்படி முதலிலே
தாமரை குடி போன பொய்கை போலே இருந்தாள்
அவ்யக்தலேகாமிவ சந்திர லேகாம் -சுந்தர -15-21–போய்த் தேய்ந்தற்ற படிக்கும் வைவர்ண்யத்துக்கும் நிதர்சனமாகச் சொல்லுகிறது
பாம் ஸூ பிரதிக்தாமிவ ஹேமலேகாம் -நற்சரக்குக்கு வந்த அழுக்கு என்று தோற்ற இருந்தாள்
ஷதப்ரூடாமிவ பாணலேகாம்-அம்புவாய் உள்ளே கிடக்க புறம்புவாய் சமாதானம் பண்ணினால் போலே -அகவாயில் இழவு பெரிது என்று தோற்ற இருந்தாள்
வாயுப்ரபக் நாமிவ மேகலேகாம் -பெரும் காற்றாலே சிதற அடியுண்ட மேகசகலம் போலே இருந்தாள்

நாண் மதியே-
நாளால் பூர்ணனான சந்த்ரனே -பண்டு பூர்ணனாகக் கண்டு வைக்குமே
நாட்பூ என்னுமா போலே இள மதியே என்றுமாம்
நீ இந்நாள்
தர்ச நீயனான நீ -இக்காலம்
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
இப்படி குறையற்று இருக்கக் கடவ நீ இக்காலத்தில் வந்தவாறே ஆகாசத்தில் கறுத்த இருளை போக்க மாட்டு கிறிலை என்னுதல்
எதிரி எளியன் ஆனால் சத்ருக்கள் கூட நின்று உறுமுமா போலே மேலிடா நின்றது
சஹாவஸ்ததானமும் உண்டாகா நின்றதீ
மாழாந்து தேம்புதியால்
ஒளி மழுங்கி குறைந்து இரா நின்றாய்
ஐவாயரவணை மேல்
அவருடைய பெரும் பொய்யிலே அகப்பட்டாயாகாதே நீ
தம் பாம்பு போலே நாவும் இரண்டு உளவாயிற்று-நாச் -10-3-என்கிறபடியே தமக்கு பொய் சொல்ல ஒரு வாய் உண்டாகில்
தம் பரிகரத்துக்கு அஞ்சு வாய் உண்டு -அவனுக்கு பள்ளித் தோழமை பலித்த படி
ஆழிப் பெருமானார்
அல்லாத பரிகரமோ தான் நன்றாக இருக்கிறது
தாம் பகலை இரவாக்க நினைக்கில் அதுக்கு பெரு நிலை நிற்கும் பரிகரம்
பேறு அவர்களே யானால் இழவிலும் இன்னாதாக பிராப்தி யுண்டு -என்கை
பெருமானார் –
அவர்களுக்கும் தம் பக்கலிலே பொய் ஓத வேண்டும் படி பொய்யால் பெரியவர்
பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை –பெரிய திருமொழி -10-7-4-என்னக் கடவது இறே
ஆழிப் பெருமானார் மெய் வாசகம் –என்னவே பொய் என்று பிரசித்தமாய் இருக்கும் போலே காணும்
பொய் என்னாது ஒழிவான் ஏன் என்னில் -பொய் என்னில் நாட்டார் பொய்யோ பாதி யாமே
மெய் வாசகம் கேட்டு
அவர் ஏதத் வ்ரதம் மம-என்ற வார்த்தை கேட்டே நீயும் இப்படி அகப்பட்டது
இப்போது உதவாமையாலே பொய் என்று இருக்கிறாள் இறே
ராமாவதாரத்தில் மெய்யும் கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் இறே ஆஸ்ரிதர்க்கு தஞ்சம்
உன் மெய்ந்நீர்மை தோற்றாயே
உன் வடிவில் எழில் இழந்தாயாகாதே
தர்ச நீயமான தண்ணளியேயாய் லோக உபகாரகமான உன் உடம்பின் ஒளியை யாகாதே இழந்தது –

———————————————————————-

அவதாரிகை –

மதி கெட்டவாறே-அந்தகாரம் வந்து மேலிட்டது -என்கிறாள்

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7-

கீழும் மேலும் போருகிறபடி யொழிய சப்த ஸ்வாரஸ்யத்தைப் பற்ற எம்பெருமானார் அருளிச் செய்து போருவது ஓன்று உண்டு
அம்மங்கி அம்மாளும் அத்தையே நிர்பந்தித்துப் போரும் -அதாகிறது தான் பிரிவற்றாதார் அநேகர் கூடக் கட்டிக் கொண்டு கூப்பிடா நிற்க
இருள் வந்து முகத்தை மறைக்க அத்தைப் பார்த்து -ஆற்றாமைக்கு போக்கு விட்டு தரிக்க ஒட்டாதே நீ வந்து நலியக் கடவையோ -என்கிறாள்
எம்மே போல் என்கிற பதார்த்தங்களை எல்லாம் கூட்டிக் கொண்டு சொல்லுகிறது –
தோற்றோம் மட நெஞ்சம்
பகவத் விஷயம் என்றால் விட மாட்டாதபடி சபலமான நெஞ்சை இழந்தோம் —
தோற்றேன் சொல்லாமல் தோற்றோம் என்பதால் முன்பு சொல்லிய அனைத்தையும் சேர்த்துக் கொள்ளுகிறார்
அன்றியே பவ்யமான நெஞ்சை இழந்தோம் -என்னுதல்
எம்பெருமான் நாரணற்கு
கெடுவாய் -வகுத்த விஷயத்தில் அன்றோ நாங்கள் நெஞ்சு இழந்தது
தன்னுடைமை என்றால் வத்சலனாய் இருக்குமவனுக்கு என்றோ இழந்தது -ஸூலபனுக்கு என்றுமாம் –
எம் ஆற்றாமை சொல்லி அழுவோமை –
ஆற்றாமை உடையார் -தந்தாம் ஆற்றாமை சொல்லிக் கூப்பிடக் கடவது அன்றோ
நாங்கள் பெறப் புகுகிறதொரு பிரயோஜனம் உண்டாய் -அத்தை விலக்கி நாம் பெற வேணும் -என்று தான் செய்கிறாய் அன்றோ
அவனைப் பெறவோ –போன நெஞ்சைப் பெறவோ -எங்கள் ஆற்றாமையாலே அழப் பெறோமோ-
நீ நடுவே
அல்லாதவற்றுக்கு உள்ளது அமையாதோ உனக்கு -அவனை நம்மில் நாம் கழுத்தைக் கட்டிக் கொண்டு கிடந்தது
கூப்பிடுகை ஒழிய பாத்ய பாதக பாவமுண்டோ –
நலிகைக்கு ஒரு ஹேது இன்றிக்கே இருக்கச் செய்தே –
வேற்றோர் வகையில் கொடியதாய்
வேற்றோர் உண்டு -சத்ருக்கள் வகை உண்டு -அவர்கள் நலியும் பிரகாரம் -அதிலும் கொடிதாக நலியா நின்றாய்
சத்ருக்கள் ஆனாலும் நோவுபட்டாரை ஐயோ என்ன வன்றோ வடுப்பது
எனையூழி மாற்றாண்மை நிற்றியே
காலதத்வம் உள்ளதனையும் சாத்ரவத்திலே நிற்கக் கடவையோ
ராவணாதிகள் பிரித்த இத்தனை
கூப்பிடப் பொறுத்தார்கள் நீர்மை யுடையார்
சஞ்ஜாத பாஷ்ப -என்று கண்ண நீரை விழ விட்டார்கள்
நீர்மை உடையார் படியும் கண்டிலோம்
சத்ருக்கள் படியும் கண்டிலோம்
உன்னது வ்யாவ்ருத்தமாய் இருந்ததீ
வாழி
காதுகரை -உடன் பிறந்தீர் என்னுமா போலே
கனையிருளே —
செறிந்த இருளே -என்னுதல்
கனை இருளை -கனைத்துக் கொண்டு செருக்கி வருகிற இருளை -என்னுதல்
அன்றியே –
பிரகரணத்தோடே சேர்ந்த பொருளாவது -தமஸ் -என்று ஒரு பதார்த்தமாய் -அது தான் ஒளி மழுங்கி அடங்கி இருக்கை ஸ்வபாவம் என்று அறியாதே
அபிமத விச்லேஷத்தாலே ஒளி மழுங்கி வாய் விட்டுக் கூப்பிடவும் மாட்டாதே நோவு படுகிறபடியைக் கண்டு
-உன் இழவு கனத்து இருந்ததீ -என்கிறாள் -வகுத்த விஷயத்தாலே நாம் எல்லாம் நெஞ்சு இழந்து கூப்பிடா நிற்க
நீ உன் ஆற்றாமையைக் காட்டி நலியா நின்றாய் -உன் அவசாதம் நீங்கி நீ ஜீவித்திடுக -என்கிறாள் –

—————————————————————————————–

அவதாரிகை –

அவ்விருளுக்கு இறாய்த்து-அங்கே இங்கே சஞ்சரியா நிற்க இருள் செறிந்தால் போலே இருப்பதொரு கழியிலே சென்று இழிந்தாள்-
அது மடல் எடுப்பாரைப் போலே கட்டோடு நிற்குமே -பாவியேன் சகடாஸூர நிரசனம் பண்ணின
அச்செயலிலே நீயும் அகப்பட்டாயாகாதே -என்கிறாள்

இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே –2-1-8-

இருளின் திணி வண்ணம் –
அச்சமான இருள் -வெளிறான இருள் அன்றிக்கே இருளின் புற இதழை வாங்கி வயிரத்தை சேரப் பிடித்தால் போலே இரா நின்றது
இருளின் திணி போலே இருக்கிற நிறத்தை உடைத்தாய் பெரு நீரையும் உடைத்தான கழியே
போய் மருளுற்று
மிகவும் அறிவு கெட்டு-மயர்வற மதிநலம் அருளப் பெற்றார் அறிவு கேட்டுக்கும் அவ்வருகே இரா நின்றதீ உன் அறிவு கேடு
இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
காலத்துக்கு ஓர் எல்லை காணிலும் உன் ஆற்றாமைக்கு ஓர் எல்லை காண்கிறிலோம்
உருளும் சகடம் உதைத்த பெருமானார் அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே —
காவலாக வைத்த சகடம் தானே அஸூராவேசத்தாலே ஊர்ந்து வர தாயும் கூட உதவாத சமயத்திலே
முலை வரவு தாழ்த்துச்சீறி நிமிர்ந்த திருவடிகளாலே முடித்து ஜகத்துக்கு சேஷியைத் தந்த உபகாரகன் பிரணயிநிக்கு உதவானோ என்னும் நசையாலே
அருளின் பெரு நசையால்
அருளின் கணத்துக்கு தக்கபடி இறே நசையின் கணம் இருப்பது
ஆழ்ந்து நொந்தாயே
தரைப் பட்டு நோவு பட்டாயாகாதே

————————————————————————————–

அவதாரிகை –

அக்கழிக்கு ஒரு கரை காண மாட்டாதே மீண்டு வந்து படுக்கையிலே விழுந்தாள்-அங்கு எரிகிற விளக்கைக் கண்டாள்-
அது உடம்பில் கை வைக்க ஒண்ணாத படி விரஹ ஜ்வரம் பற்றி எரியா நின்றது என்று அத்தைப் பார்த்து
நீயும் நோவு பட்டாயாகாதே -என்கிறாள் –

நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –2-1-9-

நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த
நோவ என்று புக்கால் நொந்து தலைக் கட்டக் கடவது அன்றிக்கே இருக்கிற ப்ரேம வியாதியானது
தொட்டார் மேலே தோஷமாம் படி மிருதுவாய் இருக்கிற ஆத்மாவைக் குறுத்து வற்றாக உலர்த்த
மெல்லாவி -பகவத் குண அனுபவத்தாலே நைந்து இருக்கை
காற்றுப் பட பொறாது இருக்கை
நந்தா விளக்கமே –
ஜ்வாலா பேத அனுமானம் இருந்து பார்க்கிறாள் அன்றே
சந்தான விச்சேதம் இன்றிக்கே உருவ நோவு படுகிறாயாகாதே
நீயும் அளியத்தாய்
நாட்டுக்குக் கண் காட்டியான நீ படும் பாடே இது
அளியத்தாய்
அருமந்த நீ -பரார்த்தமான உடம்பிலே உனக்கு நோவு வருவதே —
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
பதி சம்மாநிதா சீதா பர்த்தாரமஸி தேஷணா-என்ற பேறு பெற வேணும் என்றததையோ நீயும் ஆசைப் பட்டது –
செந்தாமரைத் தடங்கண்
முகத்தைப் பார்த்து குளிர நோக்கின போதைத் திருக்கண்களில் செவ்வி சொல்லுகிறது
செங்கனிவாய் –
இன்சொல் சொல்லலுகிற போதை திருவதரத்தில் பழுப்பைச் சொல்கிறது
எம்பெருமான் -அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே —
நோக்காலும் ஸ்மிதத்தாலும் என்னை அனந்யார்ஹை ஆக்கினவனுடைய அழகிய திருத் துழாய் மாலை பெற வேணும் பெற வேணும்
என்னும் ஆசையாலே
வேவாயே –
உக்கக்காலுக்கு -விசிறிக் காற்றுக்கு -உளையக்கடவ உன்னுடம்பே நெருப்பாக வேகிறாயாகாதே-

————————————————————————————-

அவதாரிகை –

இவள் அவசாதம் எல்லாம் தீர வந்து சம்ச்லேஷித்த எம்பெருமானைக் குறித்து இனி ஒரு நாளும் என்னை விடாது ஒழிய வேணும் -என்கிறார்

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10-

வேவாரா வேட்கை நோய் –
வேவ என்று தொடங்கினால் ஒரு கால் வெந்து தலைக்கட்ட மாட்டாதாயிற்று
அல்லாதவை போல் அன்றிக்கே ப்ரேம வியாதிக்கு உள்ளது ஒன்றாயிற்று இது தான்
மெல்லாவி –
சரீரத்தில் உண்டான சௌகுமார்யம் ஆத்மாவிலும் உண்டாய் இருக்கிறதாயிற்று இவர்க்கு
உள்ளுலர்த்த
கூடோக் நிரிவ பாதபம் என்கிறபடியே உள்ளே படிந்து புறம்பே வர வேவா நின்றதாயிற்று
அதாஹ்யமாய் இருப்பது கேவல அக்னியாகில் இ றே
மஹதா ஜ்வலதாநித்ய மகனி நேவாக்னி பர்வத -என்று வெந்த விடமே விறகாக வேவா நின்றது
ஓவாது இராப்பகல்
வேவாரா நோய் வேட்கை போலே இராப்பகல் ஓவாது ஒழிகிறபடி
உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
அகப்பட்டார்க்கு மீள ஒண்ணாத படி உன் பக்கலிலே விழ விட்டுக் கொண்டாய்-என்னுதல்
உன் பாலே வீழ்த்து
உன் பக்கலிலே விழ விட்டுக் கொண்டு
ஒழிந்தாய்
முகம் காட்டாதே கடக்க நின்றாய் -என்னுதல்

மாவாய் பிளந்து மருதிடை போய் மண்ணளந்த மூவா முதல்வா-
கேசி வாயை அநாயாசேன கிழித்து -யமலார்ஜூனங்களின் நடுவே போய் -மஹா பலி அபஹரித்துக் கொண்ட பூமியை எல்லை நடந்து மீட்டுக் கொண்டு
இப்படி உபகாரகங்களைப் பண்ணி பின்னையும் ஒன்றும் செய்யாதானாகக் குறைப்பட்டு இவற்றினுடைய ரஷகணத்திலே உத்யுக்தனாய் இருக்குமவனே
இப்படி எல்லாம் செய்யச் செய்தேயும் ஒன்றும் செய்யாதாரைப் போலே ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகளைப் பண்ணிணவனே
இனி எம்மைச் சோரேலே —
கேசி தொடக்கமான விரோதிகளைப் போக்கினால் போலே தம் விரோதியையும் போக்கி அவன் வந்து முகம் காட்டச் சொலுகிறார் ஆதல்
தம்முடைய ஆபத்தின் கனத்தால் வந்து முகம் காட்டும் -என்னும் விசுவாசத்தால் சொல்லுகிறாள் ஆதல்
இனி
புத்த்வா காலம் அதீதஞ்ச முமோஹா பரமாதுர-என்னுமா போலே முன்புள்ள காலம் இழந்த தாகிலும் இனி மேலுள்ள காலம் இவ் வஸ்துவைக் கை விடாது ஒழிய வேணும்
போன காலத்தை மீட்க ஒண்ணாது என்றதுக்கு சோகிக்கிறார்
ந மே துக்கம் ப்ரியா தூரே -என்னுடைய பிரியை யானவள் தூரத்தில் இருக்கிறாள் என்று அதுக்கு சோகிக்கிறேன் அல்லேன்
அது ஒரு பயணம் எடுத்து விடத் தீரும்
ந மே துக்கம் ஹ்ருதேதி வா -வலிய ரஷச்சாலே பிரிவு வந்தது என்று அதுக்கு சோகிக்கிறேன் அல்லேன் -அது அவன் தலையை அறுக்கத் தீரும்
ஏத தேவா நு சோசாமி-இது ஒன்றுமே எனக்கு சோக நிமித்தம்
வயோஸ்யா ஹ்யதி வர்த்ததே -போன பருவம் இப்பால் மீட்க ஒண்ணாது இறே

——————————————————————————–

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றார் கண்ணால் கண்டது எல்லாம் பகவத் அலாபத்திலே நோவு படுகிற சம்சாரத்திலே இருந்து
நோவு படாதே கண்டார் எல்லாம் பகவ லாபத்தாலே களித்து வர்த்திக்கும் நாட்டிலே புகப் பெறுவர் என்கிறார்

சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –2-1-11-

சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
இவ்வளவிலே வந்து இவரோடு கலந்து இவரை உளர் ஆக்குகையாலே -ஓன்று ஒழியாதபடி சகல பதார்த்தங்களுக்கும் ஈஸ்வரனாய்-
இவரோடு வந்து கலந்து அத்தாலே உஜ்ஜ்வலனாய் இருந்தான்
இவருக்கு வந்து முகம் காட்டுவதற்கு முன்பு சர்வேஸ்வரத்வமும் அழிந்தது போலே கிடந்தது –
இவர் ஒருத்தரையும் சோரக் கொடுக்கவே சர்வேஸ்வரத்வமும் அழியும் இறே
இவர் இழவு தீர வந்து முகம் காட்டின பின்பு எல்லா பொருட்கும் நிர்வாஹகனானான்
சோதிக்கே –
பேறு இழவுகள் இவரது அன்றிக்கே தன்னது என்னும் இடம் வடிவிலே புகரிலே தோற்றா நின்றது -க்ருதக்ருத்யன் -என்னும்படியானான் –

ஆராத காதல் –
இத் திருவாய் மொழியால் சொல்லிற்று யாயிற்று -கண்ணால் கண்ட பதார்த்தங்களுக்கு எல்லாம் -பகவத் அலாபத்தாலே
தம்மைப் போலே நோவு படுகிறவனவாகக் கொண்டு
அவற்றுக்குமாக தாம் நோவு படும்படியான இவருடைய அபிநிவேசமாயிற்று
காதல் -குருகூர்ச் சடகோபன்
காதலை இட்டாயிற்று இவரை நிரூபிப்பது
தம் படி சொல்லும் போதும் தாமே சொல்ல வேணுமே
ஓராயிரம் சொன்ன
இக்காதலோடே யாயிற்று ஆயிரமும் அருளிச் செய்தது
அவற்றுள் இவை பத்தும்
அல்லாதவை ஒரு தலையாக -இது ஒரு தலையாம் படி அக்காதல் முக்த கண்டமாகச் சொன்ன திருவாய் மொழியாயிற்று இது
இவை பத்தும் சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் –
இங்கே இருந்து கண்ணுக்கு இலக்கான பதார்த்தங்கள் அடங்கலும் பகவத் அலாபத்தாலே நோவு படுகிறவனவாக அனுசந்திக்குமவர்கள்
இவ்விருப்பை விட்டு கண்ணார் கண்டார் அடங்கலும் பகவ லாபத்தாலே களிக்கும் நித்ய விபூதி விடாதே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்
கண்டீர் என்று கையெடுத்துக் கூப்பிடுகிறார்
திண்ணனவே –
இது ஸூநிச்சிதம்
இவ்வருகே சிலரைப் பற்றி சொல்லிற்றோர் அர்த்தமாகில் இறே சம்சய விபர்யயங்கள் உள்ளது
பகவத் பிரபாவத்தைப் பற்றிச் சொன்னதாகையாலே இது தனக்கு எங்கேனும் சபதம் பண்ணலாம் –

முதல் பாட்டிலே தொடங்கி-நாரை தொடக்கமாக -அன்றில் -கடல் -காற்று -மேகம் -சந்தரன் -இருள் -கழி -விளக்கு –
இப்பதார்த்தங்களைக் குறித்து அநுசோகித்து -மிகவும் தளர்ந்த அளவிலே அவன் வந்து முகம் காட்ட -இனி என்னை
விடாது ஒழிய வேணும் -என்று இத் திருவாய் மொழி கற்றார்க்கு பலத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறார்

———————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி – -1-10- –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

October 16, 2015

பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியில் பிறந்த சர்வாங்க சம்ச்லேஷத்தை அனுசந்தித்து நிர்வ்ருத்தராகிறார் -என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும் படி
அதாவது நிர்வ்ருத்தி என்று ஸூ கமாய் -ஸூகிக்கிறார் -என்றபடி
கீழ்ப் பிறந்த சர்வாங்க சம்ச்லேஷ த்தை அனுசந்தித்து பட்டர் அருளிச் செய்வதோர் ஏற்றம் உண்டு –
அதாவது -உச்சியுள்ளே நிற்கும் என்று இறே கீழே நின்றது
பேற்றில் இனி இதுக்கு இவ்வருகு ஏற்றமாகச் செய்து கொடுக்கலாவது ஒன்றும் இல்லை
இனி இதினுடைய அவிச்சேதத்தையே பண்ணிக் கொடுக்கையே உள்ளது
பேறு கனத்து இருந்தது -இது வந்த வழி என்ன என்று ஆராய்ந்தார்
இப் பேற்றின் கனத்துக்கு ஈடாய் இருப்பதொரு நன்மை தம் தலையிலே இன்றிக்கே இருந்தது
இத்தலையிலும் ஏதேனும் உண்டாகப் பார்த்தாலும் அத்வேஷம் ஆதல் ஆபிமுக்யம் ஆதல் இறே உள்ளது
அத்தை சாதனமாகச் சொல்லப் போராதே
இத்தலையில் பரம பக்தி பர்யந்தமாகப் பிறந்தாலும் பேற்றின் கனத்துக்கு இத்தை ஒரு சாதனமாகச் சொல்லப் போராதே
ஒருவன் ஒரு எலுமிச்சம் பழம் கொடுத்து ராஜ்யத்தைப் பெற்றால் அது விலையாய் இராதே
சர்வேஸ்வரன் அடியாக வரும் பேற்றுக்கு இத்தலையால் ஓர் அடி நிரூபிக்கலாய் இராதே
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் –பெரிய திருவந்தாதி -56-என்னும் படி இறே இருப்பது

இவனை முதலிலே சிருஷ்டிக்கிற போது-இவன் தீய வழியைத் தப்பி நல்ல வழியே போக வேணும் என்று
உபகரணங்களைக் கொடுத்து விடுகையாலே இவன் தலையிலே பிறந்த நன்மைக்கு அடி அவனாய் இருக்கும் இறே –
இனி புத்த்யாதி சகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகன் ஆகையாலே -அத்வேஷம் தொடக்கமாக பரிகணநை நடுவாக பரமபக்தி பர்யந்தமாக
தானே பிறப்பிப்பான் ஒருவன் -நித்ய ஸூரிகள் பேற்றை அநாதி காலம் சம்சரித்துப் போந்த நமக்குத் தந்தான் -ஒரு விஷயீ காரம்
இருக்கும் படி என் -என்று -கீழில் திருவாய் மொழியில் உன்மஸ்தகமாகப் பிறந்த சம்ச்லேஷ ரசத்தை அனுசந்தித்து நிர்வ்ருத்தராகிறார் -என்று

————————

அவதாரிகை –

இத் திருவாய் மொழியில் சொல்லுகிற அர்த்தத்தை திரள அருளிச் செய்கிறார் -முதல் பாட்டில்
மஹா பலி தன் வரவை நினையாதே இருக்க அவன் பக்கலிலே தானே இரப்பாளனாக சென்று தன்னுடைமையை தன்னது
ஆக்கினால் போலே எனக்கு நினைவு இன்றிக்கே இருக்க தானே வந்து தன் வடிவு அழகை என் கண்ணுக்கு இலக்கு ஆக்கினான்
-என்று அவன் படியை அனுசந்தித்து இனியராகிறார் –

பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு
திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கம் என் கண் உளதாகுமே –1-10-1-

பொரு-
திரு உலகு அளந்து அருளுகிற போது -திவ்ய ஆயுதங்கள் நமுசி பிரப்ருதிகள் மேலே பொருத படியைச் சொல்லுதல்
திவ்ய ஆயுதங்கள் தான் ஒருவரை ஒருவர் அதி சங்கை பண்ணி பொருத படியைச் சொல்லுதல் -நமுசி பிரக்ருதிகளோடேபொரும் என்றது சேரும் இறே
இடங்கை வலம்புரி நின்றார்ப்ப -இரண்டாம் திருவந்தாதி -71-இடது திருக் கையிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யமானது அப்போதப்போது
பிறந்த விஜயத்தை அனுசந்தித்து ஆர்த்துக் கொண்டது
அங்கன் ஆர்த்துக் கொள்ள அவசரம் இன்றிக்கே திரு வாழி நெருப்பை உமிழ்ந்து விரோதிகளை வாய் வாய் என்று ஒடுங்கப் பண்ணிற்று
விடம் காலும் தீ வாய் அரவணை –
திரு வநந்த ஆழ்வான் உகவாதார் மேலே கிடந்த இடத்தே கிடந்தது நெருப்பை உமிழ்ந்தான்
விரோதி பூயிஷ்டமான இத்தேசத்திலே அவன் இப்படிச் செய்ய சொல்ல வேணுமோ
அங்கே உட்பட இப்படி செய்ய கடவ அவன் -ஆங்காரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்கார் அரவணை இறே
ஆங்கு -தேசம் அது
ஆரவாரம் அது -அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத -என்கிற ஆரவாரம்
அங்கே இது கேட்டு அப்படி படுகிறவர்கள் இங்கே இது கண்டால் இப்படிப் படச் சொல்ல வேணுமோ -இவர்கள் இப்படி அலமருகைக்கு அடி என் என்னில்
அரவணை மேல் தோன்றல்
திரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாக உடைய சர்வேஸ்வரன் காடு மேடையும் அளக்கைக்காக புஷ்ப ஹாச ஸூகுமாரமான திருவடிகளை
நிமிர்த்த போது எல்லாம் பட வேண்டாவோ
அவன் இப்படி வ்யாபரியா நின்றால் -தன்னில் தான் பொருது என்ற போது அஸ்த்தானே பய சங்கையாலே ஒருவரை ஒருவர் அதிசங்கை பண்ணிப் பொருகை
ராகவம் சரணம் கத -என்றவனை இறே வத்த்யதாம் -என்றது
பரதச்ய வதே தோஷம் நாஹம் பச்யாமி -என்றார் இறே இளைய பெருமாள்

மா
அவற்றின் வடிவின் பெருமையைச் சொல்லவுமாம்-அன்றியே ஆஸ்ரித விஷயத்தில் அவனில் காட்டில் இவர்களுக்கு உண்டான
பஷபாதத்தைச் சொல்லவுமாம் அவ்யாஹதாதி கிருஷ்ணச்ய -சக்ர அதீன்ய ஆயுதானி தம் ரஷந்தி சகலா பத்ப்யோ யேன விஷ்ணு ருபாசித –
கவிகள் ஆசைப்படும் எல்லா லஷணங்களும் இதில் உள்ள படி பண்ணி அருள வேண்டும் -தபஸ் பண்ணி பெற்ற ஆற்றல் இல்லை -பாதுகை
தலையில் சூடி பெற்ற சக்தி என்கிறபடியே சர்வேஸ்வரன் எதிரியானாலும் அவன் கையிலே காட்டிக் கொடாதே நோக்கும் மஹத்தையைச் சொல்கிறது
நீள் படை –
ஆயிரம் காதம் பறப்பதின் குட்டி ஐந்நூறு காதம் சிறகடிக் கொள்ளும் -என்னுமா போலே சர்வேஸ்வரன் அதிகரித்த கார்யத்திலே –
அவன் தன்னிலும் முற்பட்டு இருக்கை
நீள் படையான ஆழி சங்கத்தொடு கூட
திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
கதா புன -என்று நான் ஆசைப் பட்டுக் கிடக்கும் திருவடிகளைக் கொண்டு கிடீர் ஆசையில்லாதார் தலையிலே வைத்தது
திரு -ஐஸ்வர்ய ஸூசகமான த்விஜாராவிந்தாதிகளை யுடைத்தாய் இருக்கை
மா -பரம பூஜ்யமாய் இருக்கை
நீள் கழல் -ஆசாலேசம் உடையார் இருந்த விடம் எல்லையாக வளரும் திருவடிகள் –
ஏழ் உலகும் தொழ
ஒரு சாதனா அனுஷ்டானம் பண்ணாதாரும் தொழ
ஒரு
இவன் தானே இவ்வடிவை இன்னும் ஒரு கால் கொள்ள வேணும் -என்னிலும் வாயாதபடி அத்விதீயமாய் இருக்கை
மாணிக்
ஸ்ரீ யபதி என்று தோற்றாத படி இரப்பிலே தழும்பு ஏறுகை
குறளாகி
கோடியைக் காணி ஆக்கினால் போலே பெரிய வடிவைக் கண்ணாலே முகக்கலாம் படி சுருக்கின படி
நிமிர்ந்த
அடியிலே நீர் வார்த்துக் கொடுத்தவாறே நிமிர்ந்த படி
வாஸூதேவ தரு விறே–
நெய்தல் காடு அலர்ந்தால் போலே ஆகாச அவகாசம் அடைய தன் வடிவு அழகாலே பாரித்தபடி
அக் கரு மாணிக்கம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற தம்மாலும் பரிச்சேதிக்கப் போகிறது இல்லை காணும்
என் கண் உளதாகுமே –
ஏழ் உலகத்தில் உள்ளார் வாசி அறிந்திலர்கள் இறே
அவ்வாசி அறியுமவர் ஆகையாலே -என் கண் உளதாகுமே-என்கிறார்
கண் -என்று இடமாய் -என்னிடத்தாகும் என்னவுமாம்
கரு மாணிக்கம் -என்கையாலே கண் உளதாகும் -என்கிறது –

——————————————————————————————

அவதாரிகை –

பரம பக்திக்கும் பரிகணநைக்கும்-எண்ணுதலுக்கும் — ஒக்க முகம் காட்டும் -என்கிறார் –

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே –1-10-2-

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
பரம பக்தி உக்தராய்க் கொண்டு தொழில் -அவர்கள் கண் வட்டத்துக்கு அவ்வருகு போக மாட்டாதே நிற்கும்
தன்னை ஒழியச் செல்லாமையை உடையராய்க் கொண்டு தொழில் -தானும் அவர்கள் ஒழியச் செல்லாமையை உடையனாய் அவர்கள்
கண் வட்டத்தின் நின்றும் கால் வாங்க மாட்டாதே நிற்கும்
எண்ணிலும் வரும் –
கடம் படம் ஈஸ்வரன் என்றால் -நம்மை இல்லை என்னாதே-இவற்றோடு ஒக்க பரிகணித்தான் இறே -என்று வரும்
சதுர் விம்சதி தத்துவமாய் இருக்கும் அசித்து -பஞ்ச விம்சகன் ஆத்மா -ஷட் விம்சகன் ஈஸ்வரன் -என்றால்
நம்முடைய உண்மையையும் இவற்றோபாதி இசைந்தான் இறே என்று வந்து முகம் காட்டும் வரும்
வரும் -நிற்குமது இல்லை
இவன் போ என்ற போதும் அதுக்கு உடலாக வரும் அத்தனை
அன்றியே
எண்ணிலும் வரும்
இருபத்தொன்று -இருபத்திரண்டு ,இருபத்து மூன்று ,இருபத்து நான்கு ,இருபத்து அஞ்சு ,இருபத்தாறு -என்று எண்ணினால்
இருபத்தாறு நானே என்று வரும் -என்றுமாம் –

என்னினி வேண்டுவம்
பரம பக்திக்கும் பரிகணநைக்கும் ஒக்க முகம் காட்டுவானான பின்பு எனக்கு ஒரு குறை யுண்டோ –
அவன் இவன் பக்கல் அப்ரதிஷேதததுக்கு அவசரம் பார்த்து இருந்து முகம் காட்டுவானான பின்பு இவனுக்கு ஹித அம்சத்தில்
செய்ய வேண்டுவது உண்டோ -இப்படி இருக்கிற பகவத் ஸ்வரூபத்தை புத்தி பண்ணுகை இ றே இவன் பிரபன்னன் ஆகையாவது –
அவன் தன ஸ்வரூப உபதேசத்தைப் பண்ணி -உன்னால் வரும் இழவுக்கு அஞ்ச வேண்டா மாசுச -என்றால் போலே
இவரும் அவன் ஸ்வரூபத்தை அனுசந்தித்து -என் இனி வேண்டுவம் -என்கிறார்
அப்ரதிஷேதமே பேற்றுக்கு வேண்டுவது -அதுக்குப் புறம்பான யோக்யதை அயோக்யதைகள் அகிஞ்சித்கரம்
வேல் வெட்டி நம்பியார் நம்பிள்ளையை -பெருமாள் கடலை சரணம் புகுகிற இடத்தில்
ப்ராங்முகத்வாதி நியமங்களோடே சரணம் புக்காராய் இருந்தது -இவ்வுபாயம் இதர சாதனங்கள் போலே சில நியமங்கள் வேண்டி இருக்கிறதோ
என்று கேட்க -பெருமாள் தமக்கு -சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்து மர்ஹதி -என்று உபதேசித்தான் ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-
அவன் தான் பெருமாளை சரணம் புகுகிற இடத்தில் -கடலிலே ஒரு முழுக்கு இட்டு வந்தான் என்று இல்லை
ஆக இத்தால் சொல்லிற்று யாயிற்று என் என்னில் -பெருமாள் இஷ்வாகு வம்சராய் ஆசார ப்ரதானர் ஆகையாலே சில நியமங்களோடே சரணம் புக்கார் –
ராஜச ஜாதியன் ஆகையாலே அவன் நின்ற நிலையிலே சரணம் புக்கான் -ஆகையாலே யோக்யனுக்கு அயோக்யதை சம்பாதிக்க வேண்டா
-அயோக்யனுக்கு யோக்யதை சம்பாதிக்க வேண்டா -ஆகையால் சர்வாதிகாரம் இவ்வுபாயம் -என்று அருளிச் செய்தார்
பகவத் பிரபாவ ஜ்ஞானம் உடையாருக்கு இதுவே அர்த்தம் என்று தோற்றி இருக்கும்
கேவல கிரியா மாத்ரத்துக்கே பலப்ரதான சக்தி உள்ளது என்று இருப்பார்க்கு இவ்வர்த்தம் அனுபபந்தம் என்று தோற்றி இருக்கும் –

மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும் விண்ணுமாய் விரியும் எம் பிரானையே —
காரணமான பூத பஞ்சகத்துக்கும் உள்ளீடாய் -பஹூச்யாம் -என்கிறபடியே தன விகாசமேயாம் படி இருக்கிற உபகாரகன்
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழும்–எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்
தன்னை ஒழிந்த சகல பதார்த்தங்களும் தன் சங்கல்பத்தை பற்றி உளவாம்படி இருக்கிற சர்வேஸ்வரன் தன் பக்கல் ஆசாலேசம் உடையார்
சங்கல்பத்தைப் பற்றி தான் உளனாம் படி இருப்பானான பின்பு இவ்வாத்மாவுக்கு ஒரு குறை யுண்டோ -என்கிறார்
நல் வாயுவும் -என்றது -தாரகத்வத்தைப் பற்ற
விண்ணுமாய் -இவற்றுக்கு அந்தராத்மாவாய் நிற்கும் என்றபடி
விரியும் -பஹூச்யாம் என்றபடி விஸ்த்ருதனாகா நிற்கும்
எம்பிரான் -எனக்கு உபகாரகன் -பிரதமையை த்வதீயமாக்கி எம்பிரானை -என்று கிடக்கிறது

——————————————————————————————-

அவதாரிகை –

கண்டாயே -அவன் ஸ்வரூபம் இருந்தபடி -நீயும் உன் ஸ்வரூபத்துக்குச் சேர நிற்கப் பாராய் நெஞ்சே -என்கிறார்

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே –1-10-3-

எம்பிரானை –
கீழில் பாட்டில் அவன் நீர்மையை அனுசந்தித்து -என் நாயகனானவனை என்கிறார்
எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானைத் –
தம் அளவிலேயாய் அடி அற்று இருக்கை
அன்றிக்கே –
என் குடிக்கு நாயகன் ஆனவனை -என்கிறார்
இவர் இப்படி ஏத்தின வாறே -பிரயோஜனாந்தர பரருடைய அநந்ய பிரயோஜன பரருடைய பாசுரத்துக்கும் வாசி அறியுமவன் ஆகையாலே \
-இப்படி ஏத்துகிறவன் ஆர் -என்று குளிரக் கடாஷித்தான் –
தண் தாமரைக் கண்ணனை
தாநஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷூ நராதமான் ஷிபாமி -என்னுமவன் இப்படி கடாஷிக்கைக்கு ஹேது வென்-என்று பார்த்தார்
அருகே கடாஷிப்பிக்கிறார் உண்டாய் இருந்தது
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
கொம்பு போலவும் அரவு போலவும் இருப்பதாய் -அது தானும் நுண்ணியதாய் இருந்துள்ள இடையை உடைய
பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே உடையவனை
அரவு -என்கிற இத்தை அராவு என்று நீட்டிக் கிடக்கிறது -நச்சராவணை -திருச்சந்த விருத்தம் -85- என்னக் கடவது இ றே
அன்றியே
கொம்பை லகூ கரிக்கிற-இடை என்றுமாம் –
எம்பிரானைத் –
அச் சேர்த்திக்கு ஒரு கால் -எம்பிரானை -என்கிறார்
தொழாய்
தொழப் படும் விஷயம் ஒரு மிதுனமாயிற்று இருப்பது
மட நெஞ்சமே —
தொழுது எழு என்னலாம் படி பாங்கான நெஞ்சு அன்றோ -நீ –

———————————————————————————-

அவதாரிகை –

தாம் சொன்ன போதே மேல் விழுந்து தொழுதவாறே நெஞ்சைக் கொண்டாடி -நிகர்ஷ அனுசந்தானம் பண்ணி
நான் விச்லேஷித்த சமயத்திலும் நீ விடாதே கொள் -என்கிறார் –

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –1-10-4-

நெஞ்சமே நல்லை நல்லை –
சொன்ன கார்யத்தை சடக்கென செய்த சத்புத்ரர்களை மடியிலே வைத்துக் கொண்டாடும் மாதா பிதாக்களைப் போலே
இவரும் மார்விலே அணைத்துக் கொண்டாடுகிறார் -நெஞ்சை –
நெஞ்சமே நல்லை நல்லை —
நல்லை -என்ன அமையாதோ -நல்லை நல்லை என்கிற வீப்சைக்கு கருத்து என் -என்னில்
இவர் தாம் அவன் பக்கல் தூது விடுமா போலே தனக்கு இவர் தூது விடும்படி இவர் தம்மை விட்டு அவன் பக்கலிலே நிற்க வல்ல
நெஞ்சு ஆகையாலே -என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி அவருடை நீர் இன்னம் செல்லீரோ -திரு விருத்தம் -30—என்னும் படி
முந்துற்ற நெஞ்சு -பெரிய திருவந்தாதி -1–ஆகையாலே -நல்லை நல்லை -என்கிற மீமிசை –
என்னை இப்படி ச்லாகிக்கிறது தான் என்ன
உன்னைப் பெற்றால் என் செய்யோம் –
நீ என்னோடு ஒரு மிடறான பின்பு எனக்குச் செய்ய முடியாதது உண்டோ -நெஞ்சு ஒத்த பின்பு முடியாதது உண்டோ –
பலம் தருகைக்கு ஈஸ்வரன் உண்டு -விலக்காமைக்கு நீ உண்டு –இனிச் செய்ய முடியாதது உண்டோ –
இனி என்ன குறைவினம் –
உன்னைப் பற்றால் என் செய்யோம் -என்று சாத்யாம்சம் உண்டாகச் சொன்ன விடம் தப்பச் சொன்னோம் –
உன் பக்கல் விலக்காமையே பற்றாசாக அவன் கார்யம் செய்வானாக இருந்தால் சாத்யாம்சம் தான் உண்டோ
அவன் உபாய பாவம் நித்ய நிரபேஷம் ஆனால் சாத்யாம்சம் தான் உண்டோ
ஆனால் பின்னை க்ருத்யாம்சம் என் என்ன -சாத்யாம்சம் உண்டு கிடாய் என்கிறார்
மைந்தனை மலராள் மணவாளனைத் துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –
நான் அவனைக் கிட்டக் கொள்ள -வளவேழுலகு -தலை எடுத்து அகலப் பார்ப்பது ஓன்று உண்டு -நீ அப்போது அவனை விடாதே கிடாய்
மைந்தனை
இவ்விஷயத்தை -கெடுவாய் -சிலராலே விடப் போமோ –
மைந்து -இனிமை -அழகு -மிடுக்கு –
மலராள் மணவாளனைத்
பெரிய பிராட்டியார் அகலகில்லேன் இறையும் -என்னும் விஷயத்தை யன்றோ நான் உன்னை விடாதே கிடாய் என்கிறது
துஞ்சும் போதும்
அயோக்யன் -என்று அகலும் போதும் -விச்லேஷம் விநாச பர்யாயம் -என்கை
முஹூர்த்தம் அபி ஜீவாவ -என்னும் அது இறே-இவர்க்கு துஞ்சுகை யாகிறது
நான் அவனை அகன்று முடியும் அன்றும் -நீ அவனை விடாதே தொடரப் பார் கிடாய்
இவ்வேப்பங்குடி நீரை யன்றோ நான் உன்னைக் குடிக்கச் சொல்கிறது
பிராட்டி -அகலகில்லேன் இறையும் -என்கிற விஷயத்தை அன்றோ நான் உன்னை அனுபவிக்கச் சொல்கிறது –
விடாது தொடர் கண்டாய் –

———————————————————————————

அவதாரிகை –

கீழ் எண்ணிலும் வரும் என்ற எண் தானும் மிகையானபடி கண்டாயே -என்று அவன் படியை நெஞ்சுக்கு மூதலிக்கிறார் –

கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5-

கண்டாய் நெஞ்சே –
நான் சொன்ன படியே பலத்தோடு வ்யாப்தமான படி கண்டாயே
நெஞ்சே
ஜ்ஞான பிரசார த்வாரமான உனக்குச் சொல்ல வேண்டா விறே
கருமங்கள் வாய்க்கின்று
கார்யங்கள் பலிக்கும் இடத்தில்
ஓர் எண் தானும் இன்றியே வந்தியலுமாறு கண்டாயே –
எண்ணிலும் வரும் -என்றது தான் மிகையாம்படி வந்து பலித்துக் கொண்டு நிற்கிறபடி கண்டாயே
இயலுகை -பலிக்கை
பகவத் பிரபாவம் சொல்லுவார் சொல்லும் அளவல்ல காண்-
இத்தலையில் எண் இன்றிக்கே இருக்க பலிக்கும் என்னும் இடத்துக்கு உதாஹரணம் காட்டுகிறார் மேல்
உண்டானை உலகேழுமோர் மூவடி கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே —
பிரளயம் கொண்ட ஜகத்துக்கு -அவன் நம்மை வயிற்றிலே வைத்து நோக்கும் -என்னும் நினைவு உண்டோ
உலகு ஏழும் என்கிற இடம் இரண்டு இடத்திலும் கூட்டிக் கொள்வது
அவன் ஜகத்தை அடைய அளக்கிற போது-நம் தலையிலே திருவடிகளை வைக்கப் புகா நின்றான் -என்னும் நினைவு உண்டோ
இதுக்கு உதாஹரணம் தேடித் போக வேணுமோ ஓன்று
கண்டு கொண்டனை நீயுமே
விலக்குகைக்கு பரிகரம் உடைய நீயே யன்றோ கண்டு கொண்டாயே
பிரளய ஆபத்தில் அவற்றுக்கு ப்ரதிகூலிக்க பரிகரம் இல்லையே -இங்கு அவசரம் இல்லை
அறியில் விலக்குவர்கள் இறே -அசங்கிதமாக வருகையாலே பேசாது இருந்தார்கள் அத்தனை

———————————————————————————————–

அவதாரிகை —

இப்படி ஸூலபனானவன் நம்மை விடான் இறே -என்ன நம் அயோக்யதையை அநு சந்தித்து அகலாது ஒழியில்
நம்மை ஒரு நாளும் விடான் என்று திரு உள்ளத்துக்கு அருளிச் செய்கிறார் –

நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயுமீசன் மணி வண்ணன் எந்தையே –1-10-6–

நீயும் நானும் இந்நேர் நிற்கில் –
அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே -திரு விருத்தம் -3–நீயும் -உன்னைப் பரிகரமாக உடைய நானும் -பல அனுபவம் பண்ண விருக்கிற நாம்
இப்படி விலக்காதே இருக்கில் -ந நமேயம் -என்னும் பிராதிகூல்ய மநோரதம் இன்றிக்கே ஒழியில்
மேல் மற்றோர் நோயும் சார் கொடான் –
நிஷித்த அனுஷ்டானம் பண்ணி அகலவிடுதல்
தன்னை ஒழிய பிரயோஜனத்தைக் கொண்டு அகல விடுதல்
அயோக்ய அனுசந்தானம் பண்ணி அகல விடுதல்
வேறொரு சாதன பரிக்ரஹம் பண்ணி அகல விடுதல்
முன்பு பண்ணின பாப பல அனுபவம் பண்ணி அகலவிடுதல் -செய்ய விட்டுக் கொடான்
நெஞ்சமே சொன்னேன்
திருக் கோட்டியூர் நம்பியைப் போலே பிறர் வைத்து –இதம் தே நாத பஸ்காய—ஸ்ரீ கீதை -18-67—என்றவனைப் போலே படுகிறார்
சொன்னேன்
என்று -த்ரௌபதி குழல் விரித்துக் கிடக்கிற படியை பார்த்து செய்வது காணாமல் சொல்லிக் கொடு நின்றான்
அர்த்தத்தின் கனத்தைப் பார்த்து -கைப்பட்ட மாணிக்கத்தை கடலிலே பொகட்டோம்-என்று பதண் பதண்-என்றான் இறே –
இனி பிரதிபத்தி பண்ணாதார் இழக்கும் அத்தனை –

தாயும் தந்தையுமாய் –
மாதா பிதாக்களைப் போலே பரிவனாய் -அவர்கள் அளவன்றிக்கே
இவ்வுலகினில் வாயுமீசன்
பிரஜை கிணற்றில் விழுந்தால் ஒக்கக் குதிக்கும் மாதாவைப் போலே -சம்சாரத்தில் ஒக்க விழுந்து எடுக்குமவன்
இங்கு வந்து அவதரிக்கைக்கு ஹேது என் என்னில்
ஈசன்
பிராப்தன் ஆகையால்
அன்றிக்கே இங்கே வந்து அவதரித்து ஈரரசு தவிர்க்கையாலே ஈசன் ஆனான் என்னவுமாம் –
மணி வண்ணன் எந்தையே —
தன் வடிவு அழகைக் காட்டி என்னை விஷயாந்தர பிரவணன் ஆகாத படி மீட்டு தன் சேஷித்வத்தைக் காட்டி
என்னுடைய சேஷத்வத்தை நிலை நிறுத்தினவன்
தாயும் தந்தையுமாய் -இவ்வுலகினில் வாயும் மணி வண்ணனாய் எந்தையான ஈசன் -நீயும் நானும் இந் நேர் நிற்கில்
மேல் மற்றோர் நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன் -சத்யம் சத்யம் என்கிற படியே இது மெய் –

———————————————————————————–

அவதாரிகை –

கீழ் இவர் அஞ்சினால் போலே விடிந்தது -அயோக்யன் என்று அகலுகிறார் —

எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே –1-10-7-

எந்தையே என்றும் –
எனக்கு பரிவனானவனே என்றும்
எம்பெருமான் என்றும்
எனக்கு வகுத்த ஸ்வாமியே என்றும்
சிந்தையுள் வைப்பன்
எத்தனை விஷயங்களை நினைத்துப் போந்த நெஞ்சிலே வைத்தது
நான் அறிந்ததாக நெஞ்சிலே வைத்து தூஷித்த அளவேயோ
சொல்லுவன்
பிறர் அறியும் படி தூஷித்தேன்
இவ் வஸ்துவை அழிக்கைக்கு நான் ஒரு பாபகர்மா உண்டாவதா
பாவியேன்
சாத்விகனாய் இருப்பான் ஒருவன் தமோ குண அபிபூதனாய் ஒரு கிருஹத்தில் நெருப்பை வைத்து சத்வம் தலை எடுத்தவாறே
அனுதபிக்குமா போலே பாவியேன் -என்கிறார்
நீர் இங்கனே சொல்லுவான் என்
பகவத் விஷயத்தை நினைக்கையும் சொல்லுகையும் பாப பலமோ என்னில் புரோடாசத்தை நாய் தீண்டினால் போலே விலஷணர் உடைய
போகய வஸ்துவை அழிக்கை பாப பலம் அன்றோ
எந்தை எம்பெருமான் என்று வானவர் சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே —
நினையாவிடில் அரை ஷணம் தரிக்க மாட்டாதே நித்ய ஸூரிகள் நினைத்து அனுபவித்த அவ்வனுபவம் வழிந்து
எங்களுக்கு பரிவன் ஆனவனே ஸ்வாமியானவனே -என்று தங்கள் நெஞ்சிலே வைத்து சொல்லும்படியான ஐஸ்வர்யத்தை உடையவனை
நான் என் சொன்னேன்
இவ்வஸ்துவை ஒருவர் நம்பாதபடி அழித்தேன் -என்கிறார் –

———————————————————————————–

அவதாரிகை –

நாம் இதுக்கு முன்பு நினைத்தும் பேசியும் தப்பச் செய்தோம் -இனித் தவிரும் அத்தனை -என்று
அவன் குணங்கள் நடை யாடாதோர் இடத்திலே கிடக்க வேணும் -என்று போய்-ஒரு குட்டிச் சுவரிலே முட்டாக்கிகிட்டுக் கொண்டு கிடந்தார்
அங்கே வழி போகிறவன் ஒருவன் சுமை கனத்து -ஸ்ரீ மன் நாராயணன் -என்றான்
அச் சொல்லைக் கேட்டு தம்முடைய கரணங்கள் அங்கே பிரவணம் ஆகிறபடியை கண்டு விஸ்மிதர் ஆகிறார்

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8-

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும் மல்கும் கண் பனி நாடுவன்-
ஆழ்வார் பரிசரத்தில் ப்ரஹ்மசாரி எம்பெருமான் பேர் சொல்லுவார் இல்லை
அதில் அர்த்த அனுசந்தானம் பண்ண வேண்டா வாயிற்று இவர் நோவு படுக்கைக்கு -என் போலே என்னில் -விஷ ஹரண மந்த்ரம் போலே
அச்சொல் செவிப்பட்ட அளவில் கண்ணானது என்னை ஒழியவே நீர் மல்கப் புக்கது -நெஞ்சும் அவ்வளவிலே -எங்குற்றாய் -என்று தேடப் புக்கது
மாயமே –
அல்லேன் என்று அகலுகைக்கு நான் வேண்டிற்று
ஆவேன் என்று கூடுகைக்கு நான் வேண்டிற்று இல்லையீ
ஈதோர் ஆச்சர்யம் இருந்தபடி என்
அவன் பின்னைச் செய்கிறது என் என்னில்

அல்லும் நன்பகலும் இடைவீடின்றி நல்கி என்னை விடான் நம்பி நம்பியே —
தம் அபிசந்தி ஒழியவே தம்முடைய கரணங்களுக்கு பகவத் அனுபவமே யாத்ரையாம் படி அவன் மேல் விழுகிற காலம் ஆகையாலே
-நல்ல அல்லும் நல்ல பகலும் -என்கிறார் –
திவா ராத்ரம் விபாகம் அற எனக்கு ச்நேஹித்து பரிபூர்ணன் ஆனவன் என்னை சுவீகரித்து என்னை விட ஷமன் ஆகிறிலன்
அவன் பேர் மாதரம் கேட்ட அளவில் என் கண்ணானது பனி மல்கா நின்றது -நெஞ்சானது தேடா நின்றது -இது ஓர் ஆச்சர்யம் இருந்த படி என் -என்கிறார் –
இடைவீடின்றி
நான் ஒரு கால் தேடி விடா நின்றேன்
அவன் இடை விடாதே ச்நேஹியா நின்றான்
என்னை விடான் நம்பி நம்பியே
அபூர்ணனான என்னைப் பூர்ணனான தான் நம்பி விடுகிறிலன்
நம்பி
என்னை ஒரு மதிப்பனாக நினைத்து நம்பி அல்லும் நன் பகலும் இடைவீடின்றி நல்கி நம்பி என்னை விடான் மாயமே
நம்பியே
இவனையே பரி பூரணன் என்கிறது
சம்சாரி சேதனனைப் பெற்று பெறாப் பேறு பெற்றனாய் இருக்கிற இவனையே பரிபூரணன் என்கிறது லோகத்தார்

———————————————————————————-

அவதாரிகை –

நீர் தாம் இங்கனே கிடந்தது படா நில்லாதே -அவ்விஷயத்தை மறந்து சம்சாரிகளோ பாதி
உண்டு உடுத்து திரிய மாட்டீரோ என்ன நான் எத்தைச் சொல்லி அவனை மறப்பதோ என்கிறார் –

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–

நம்பியைத்
கல்யாண பரிபூர்ணனை
பரம பதத்திலே குணங்களுக்கு சத்பாவமே இறே உள்ளது
இங்கே இறே குணங்களுக்குப் பூர்த்தி
தென் குறுங்குடி நின்ற
கலங்கா பெரு நகரை கலவிருக்கையாக உடையவன்
அத்தை விட்டு என்னைப் பற்ற திருக் குறுங்குடியிலே அவசர ப்ரதீஷனாய் கொண்டு ஸ்தாவர பிரதிஷ்டையாக நின்றவன்
நம்பியைத் -தென் குறுங்குடி நின்ற
குணத்திலே குறை உண்டாதல்
தூரஸ்தன் என்னுதல் -செய்து நான் மறக்க வேணுமே
அச் செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
வடிவு அழகிலே குறை உண்டாய்த்தான் மறக்கவோ
அச் செம்பொன்
உபமான ரஹிதமாய்-ஓட்டற்ற செம்பொன் போலே நிரவதிக தேஜோ ரூபமாய் வாங்மனஸ்ஸூ க்களாலும் பரிச்சேதிக்க ஒண்ணாத
திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவன்
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
அவ வடிவு அழகை அனுபவிக்க இட்டுப் பிறந்த நித்ய ஸூரிகளைச் சொல்லுகிறது
ஆக்கரான இவருகில் வானவரைப் போல் அன்றியே மேலான நித்ய ஸூரிகளுடைய சத்தாதிகளுக்கும் தானே கடவனாய்
அவர்களுக்கு அனுபாவ்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனை
எம்பிரானை
அவர்கள் அனுபவிக்கும் படியை எனக்கு உபகரித்தவனை
என் சொல்லி மறப்பேனோ –
அபூர்ணன் என்று மறக்கவோ
அசந்நிஹிதன் என்று மறக்கவோ
வடிவு அழகு இல்லை என்று மறக்கவோ
மேன்மை இல்லை என்று மறக்கவோ
எனக்கு உபகாரகன் அன்று என்று மறக்கவோ
எத்தைச் சொல்லி மறப்பன் -என்கிறார் –

————————————————————————-

அவதாரிகை

ஆனாலும் வருந்தியாகிலும் மறந்தாலோ வென்ன-நெஞ்சில் இருளை அறுத்துக் கொண்டு
நிரந்தர வாசம் பண்ணுகிறவனை மறக்க விரகுண்டோ என்கிறார் –

மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியே –1-10-10-

மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
நான் சேதனனாய் நினைத்தேனாகில் அன்றோ மறப்பது
நினைத்தேன் நானான வன்று இறே மறக்க இடம் உள்ளது
ஜ்ஞானத்திருக்கு ஆஸ்ரயமாமது இறே அஜ்ஞ்ஞானத்துக்கும் ஆஸ்ரயம் ஆவது
அசித் கல்பனாய் கிடீர் நான் இருந்தது –

மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு -மறப்பற என்னுள்ளே-
இப்படி இருக்கிற நான் நினைத்தேனாகவும்
நினைவையும் என் தலையிலே ஏறிட்டு
பிறந்த ஜ்ஞானத்துக்கு விச்சேதம் ஏதும் வர ஒண்ணாது என்று பார்த்து
அழகிய திருக் கண்களாலே குளிர நோக்கிக் கொண்டு
தன்னைப் பற்றி எனக்கு வரும் விச்ம்ருதி போம்படி என் ஹிருதயத்திலே நித்ய வாசம் பண்ணுகிறவனை
மன்னினான் தன்னை
புறம்பே அந்ய பரதை உண்டு என்று தோற்ற இருக்கிறிலன்
மறப்பனோ இனி யான் என் மணியே
பெரு விலையனான ரத்னம் கை புகுந்தால் அத்தை முடிந்து அனுபவியாதே உதறுவார்களோ
மறப்பேனோ இனி
மறவாமைக்கு பரிகரம் அவன் கையிலே உண்டாய் இருக்க இனி மறக்க உபாயம் உண்டோ
கீழ் அநாதி காலம் நினைக்க விரகு இல்லாப் போலே இறே மேல் உள்ள காலமும் மறக்க விரகு இல்லாத படியும் –
யான்
அநாதி காலம் -மறந்தேன் உன்னை முன்னம் –பெரிய திருமொழி -6-2-2-என்கிறபடியே விஸ்மரித்துப் போந்த நான்
என் மணியையே –
பெரு விலையனாய் முடிந்து ஆளலாம்படி கை புகுந்து புகரை உடைத்தான நீல மணி போலே இருக்கிற தன்னை
எனக்கு அனுபவ யோக்யமாம்படி பண்ணி வைத்த பின்பு நான் அவனை அநாதரிப்பனோ –

—————————————————————————————-

அவதாரிகை –

நிகமத்தில் இப்பத்திக் கற்றவர்கள் நிரதிசய புருஷார்த்தமான பகவத் கைங்கர்யத்தை பெறுவார் -என்கிறார்

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே –1-10-11-

மணியை
முந்தானையில் முடிந்து ஆளலாம் படி கை புகுந்து இருக்கும் சௌலப்யம் சொல்லுகிறது
தென் குறுங்குடி நின்ற -என்கிற விடத்தில் சௌலப்யம்
வானவர் கண்ணனைத்
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதி -என்ற மேன்மையைச் சொல்லுகிறது
தன்னதோர் அணியை
அச் செம்பொன்னே திகழும் திருமூர்த்தி -என்கிற வடிவு அழகை நினைக்கிறது
இம் மூன்றும் கூடின பசும் கூட்டாயிற்று -பரதத்வம் ஆகிறது
தென் குருகூர்ச் சடகோபன் சொல் பணி செய் ஆயிரத்துள் இவை பத்து –
ஆழ்வார் அருளிச் செய்ததாய்
நாம் இங்குத்தைக்கு கிஞ்சித் கரித்ததாக வேணும் என்று சொற்கள் தானே என்னைக் கொள் என்னைக் கொள் என்று
மிடைந்த சொல் 1-7-11–என்கிறபடியே சொற்கள் பணி செய்த ஆயிரம் -என்னுதல்
சொல்லாலே பணி செய்த ஆயிரம் என்று வாசிகமான அடிமையைச் சொல்லுதல்
உடன் தணிவிலர் கற்பரேல்
சாபிப்ராயமாக கற்பராகில் –
தணிவு ஆகிறது -மெத்தென்கை
வரில் பொகடேன் -கெடில் தேடேன் -என்று இருக்கை அன்றிக்கே ஸ்ரத்தை மாறாதே கற்பராகில்
கல்வி வாயுமே
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திருவந்தாதி -67-என்கிறபடியே
ஜ்ஞானமாகில் பகவத் விஷயத்தை பற்றி அல்லது இராமையால் -இத்தை அப்யசிக்க -இதுக்குப் பலமாக கைங்கர்யத்தை இது தானே தரும்
கல்வி வாயுமே
கல்வி தானே பிரயோஜனமாம் -என்றுமாம் –

இத் திருவாய் மொழியில் மேல் பரக்க அருளிச் செய்யப் புகுகிற அர்த்தத்தை சங்க்ரஹேண முதல் பாட்டிலே அருளிச் செய்தார்
இரண்டாம் பாட்டில் பரம பக்திக்கும் பரிகணநைக்கும் ஒக்க முகம் காட்டும் என்றார்
மூன்றாம் பாட்டில் -கண்டாயே அவன் ஸ்வரூபம் இருந்தபடி -நீயும் உன் ஸ்வரூபத்துக்குச் சேர நிற்கப் பாராய் -என்றார்
நாலாம் பாட்டில் ஸ்வரூப அனுரூபமாக நெஞ்சு தொழுத வாறே நெஞ்சைக் கொண்டாடினார்
அஞ்சாம் பாட்டில் கீழ் எண்ணிலும் வரும் என்றது பலத்தோடு வ்யாப்தமான படியை நெஞ்சுக்கு அருளிச் செய்தார்
ஆறாம் பாட்டில் நாம் இருவரும் இப்படி இருக்கப் பெறில் நமக்கு ஒரு அனர்த்தமும் வாரா என்றார்
ஏழாம் பாட்டில் கீழ் இவர் அஞ்சினபடியே விடிந்த படி சொன்னார்
எட்டாம் பாட்டில் திரு நாம ஸ்ரவணத்தாலே தம்முடைய கரணங்களுக்கு பிறந்த விக்ருதியைச் சொன்னார்
ஒன்பதாம் பாட்டில் விக்ருதர் ஆகாதே மறந்தாலோ என்ன மறக்க ஒண்ணாது என்றார்
பத்தாம் பாட்டில் வருந்தியாகிலும் மறந்தாலோ என்ன என் ஹிருதயத்திலே இருக்கிறவனை மறக்கப் போமோ என்றார்
நிகமத்தில் கற்றார்க்கு பலம் சொன்னார்

————————————————————————————————-

சர்வ ஸ்மாத் பரன் என்றார்
பஜநீயன் என்றார்
அவன் தான் ஸூ லபன் என்றார்
ஸூலபனானவன் அபராத சஹன் என்றார்
அவன் சீலவான் என்றார்
ஸ்வாராதன் என்றார்
நிரதிசய போக்யன் என்றார்
அவனுடைய ஆர்ஜவ குணம் சொன்னார்
சாத்ம்ய போகப்ரதன் என்றார்
இப்படி ஏவம் பூதனானவன் நிர்ஹேதுகமாக விஷயீ கரிப்பான் ஒருவன் என்றார்
ஆகையாலே அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்து தலைக் கட்டினார் –

————————————————————————-

முதல் பத்தால் பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்
இரண்டாம் பத்தால் அந்த கைங்கர்யத்தில் களை அறுத்தார்
மூன்றாம் பத்தால் விரோதி கழிந்த கைங்கர்ய வேஷம் பாகவத சேஷ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார்
நாலாம் பத்தால் இப்படிப்பட்ட கைங்கர்யத்துக்கு விரோதி ஐஸ்வர்ய கைவல்யம் என்றார்
ஐந்தாம் பத்தால் அந்த விரோதியைப் போக்குவானும் அவனே என்றார்
ஆறாம் பத்தால் விரோதி நிரசன சீலனானவன் திருவடிகளிலே சரணம் புக்கார்
ஏழாம் பத்தால் இப்படி பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்தில்ய்ம் தக்தபட நியாயம் போலே
சம்சாரம் அனுவர்த்திக்கிற படியைக் கண்டு விஷண்ணர் ஆகிறார்
எட்டாம் பத்தால் இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தேயும் தக்தபட நியாயம் போலே நம்மை விடாதே அனுவர்த்திக்கிறது
நம்முடைய ஆத்மாத்மீயங்களில் நசை யறாத படியாலே என்று பார்த்து -அவற்றில் நசையில்லை என்கிறார்
ஒன்பதாம் பத்தால் இப்படி நசை யற்ற பின்பும் ரஷியாது ஒழிவான் என் -என்று அதிசங்கை பண்ண -நான் நாராயணன் சர்வ சக்தி உக்தன்
-உம்முடைய சர்வ அபேஷிதங்களையும் செய்து முடிக்கிறோம் -என்று அருளிச் செய்ய அவனுடைய சீல குணத்திலே ஆழம் கால் படுகிறார்
பத்தாம் பத்தால் ஆழ்வாருடைய பதற்றத்தைக் கண்டு திரு மோகூரிலே தங்கு வேட்டையாக வந்து தங்கி -இவருக்கு
அர்ச்சிராதி கதியையும் காட்டி -இவருடைய அபேஷித்த சம்விதானம் பண்ணின படியை அருளிச் செய்தார்

—————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்