வெண்ணெய் அளைந்த — ப்ரேவேசம்
மாதாவான யசோதை பிராட்டி -அவனுடைய அவதாரத்தின் மெய்ப்பாட்டால் -வந்த பால்ய அனுகுணமாக –
அவனை அனுசரித்துக் கொண்டு -காது பெருக்கி -திரியும் கடிப்பும் –முதலானவை இட்டு –
காது குத்தி -பெருக்கி தலைக் கட்டின அநந்தரம்-
பிள்ளைகளை காது பெருக்கினால் –
அந்த செடி நீங்க குளிப்பாட்டும் கிரமத்திலே-(அங்கச் செடி -பாட பேதம் )
(அந்தச் செடி என்றது -காதுப் புண் சவறு பாய்ந்து -அத்தால் வந்த அழுக்கு -என்றபடி -)
இவனை மஞ்சனமாட்ட வேணும் என்று உத்யோகித்து –
அதுக்கு வேண்டும் உபகரணங்களையும்–(எண்ணெய் புளிப்பழம் போல்வன ) சம்பாதித்து வைத்து –
நீராட வா -என்று அழைத்து -அவன் இசையாத அளவிலும்
விடாதே நிர்பந்தித்து -அவசியம் இன்று திரு மஞ்சனம் செய்ய வேண்டின ஹேதுவையும் அவனுக்கு அறிவித்து –
(ஓடாதே வாராய் –நீ பிறந்த திருவோணம் இன்று -இவற்றைக் கடாக்ஷித்து அருளிச் செய்கிறார்
ஆவணி விஜய முஹூர்த்தம் சரவண நக்ஷத்ரம் ஸ்ரீ வாமன திரு அவதாரம் )
திருமஞ்சனம் செய்தால் பின்பு திரு மேனிக்கு அலங்காராமாக சாத்துகைக்கு
உருப்பானவை பாகத் தான் தேடி வைத்த –
அங்க ராகாதிகளையும் காட்ட இசைந்து வருகைக்கு உடலாக அவனுக்கு
அபிமதமான அபூப பலாதிகளையும் முன்னிட்டு –
அவன் பக்கல் தனக்கு உண்டான ஸ்நேஹாதிகளையும் சொல்லி –
புழுதி அளைந்த பொன் மேனி காண நான் மிகவும் விரும்பி இருப்பேன் -ஆனாலும் கண்டவர்கள் –
ஒருத்தி பிள்ளை வளர்த்தபடி என் -என்று பழிப்பார்கள் –
அவ்வளவுமேயும் அன்றி -நீ புழுதியும் உடம்புமாய் இருக்கிறபடியை காணில்
உனக்கு அபிமதையான நப்பின்னை பிராட்டி சிரிக்கும் -என்றால் போலே சிலவற்றையும் சொல்லி –
அவனை வருந்தி உடன்படுத்தி மஞ்சனமாட்டிய பிரகாரத்தையும் –
தாமும் அனுபவிக்க ஆசைப் பட்டு
பாவன பிரகர்ஷத்தாலே -தத் அவஸ்தாபன்னராய் கொண்டு
அவள் அப்போது பேசின பாசுரங்களை எல்லாம் -தத் காலம் போலே அவனைக் குறித்து பேசி –
அவனை மஞ்சனம் ஆட்டுகையாகிற ரசத்தை தாமும் அனுபவித்து
ஹ்ருஷ்டராகிறார் இத் திருமொழியில்-
————————————————————
வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணென இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்
எண்ணெய்ப் புளி பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன்
நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் -2 4-1 – –
பதவுரை
வெண்ணெய் அளைந்த–வெண்ணெ யளைந்ததனாலான
குணுங்கும்–மொச்சை நாற்றத்தையும்
விளையாடு புழுதியும்–விளையாடுவதினாற் படிந்த புழுதியையும்
கொண்டு–(உடம்பிற்) கொண்டிருந்து, (அதனால்)
இவ் விரா–இன்றை இரவில்
தேய்த்து கிடக்க–(உடம்பைப் படுக்கையிலே) தேய்த்துக் கொண்டு படுத்திருக்கும்படி (விட)
உன்னை–உன்னை
திண்ணென–நிச்சயமாக
நான் ஒட்டேன்–நான் ஸம்மதிக்க மாட்டேன்,
எண்ணெய்–(தேய்த்துக் கொள்வதற்கு வேண்டிய) எண்ணெயையும
புளி பழம்–புளிப் பழத்தையும்
கொண்டு–ஸித்தமாக வைத்துக் கொண்டு
இங்கு–இங்கே
எத்தனை போதும்–எவ்வளவு காலமாக (வெகு காலமாக)
இருந்தேன்–(உன் வரவை எதிர்பார்த்து) இரா நின்றேன்,
நண்ணல் அரிய பிரானே–(ஒருவராலும ஸ்வ யத்நத்தால்) கிட்டக் கூடாத ஸ்வாமியே’
நாரணா–நாராயணனே’
நீராட–நீராடுவதற்கு
வாராய்–வர வேணும்.
வெண்ணெய் அளைந்த குணுங்கும் –
வெண்ணெய் அமுது செய்யும் போது அதில் உண்டான அபிநிவேச அதிசயத்தாலே –
தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி -என்று
கை நிறையும் அத்தனையும் வயிறு நிறையும் என்னும் மௌவ்க்யத்தாலே –
வெண்ணெய் தாழிக்கு உள்ளே திருக் கைகள் உள்ளளவும் நீட்டி அள்ளியும்-
முழுதும் வெண்ணெய் அளைந்து -என்கிறபடியே
வெண்ணெயை முழுக்க இருந்து அளைந்து – அமுது செய்கையாலே
திருமேனி எங்கும் வெண்ணெய் முடையாய் இறே இருப்பது –
விளையாடு புழுதியும் –
அதுக்கு மேலே -விளையாடப் புக்கால் புழுதியிலே போய் இருந்து அளைந்து விளையாடுகையாலே –
அந்த வெண்ணெய் பசையோடே திருமேனி எங்கும் புழுதியும் பற்றி இறே கிடப்பது கொண்டு –
இப்படி வெண்ணெயால் வந்த குணுங்கு நாற்றத்தையும் –
விளையாடின போதைப் புழுதியும் கொண்டு –
திண்ணென-
திண்ணியதாக-நிச்சயமாக என்றபடி –
இவ்விரா இத்யாதி –
இந்த ராத்ரியிலே உன்னைக் கண்டூதியாலே -( அரிப்பாலே )
உடம்பை படுக்கையில் தேய்த்துக் கொண்டு கிடக்க நான் சம்மதியேன்
திண்ணென ஒட்டேன்-
நிச்சயமாக உன்னை இப்படி கிடக்க ஒட்டேன் –
நான் நீராட்டியே விடுவேன் -என்ன
எனக்கு குளிக்கைக்கு வேண்டும் அவை கொண்டு வந்தாயோ -என்ன –
எண்ணைய்-இத்யாதி –
உன் திருமேனிக்கு முந்துற சாத்துகைக்கு எண்ணைய் காப்பும் –
பின்பு அது கழற்றுகைக்கு புளிக் காப்பும் கொண்டு
அநேகம் போது இல்லையோ நான் இருக்கிறது –
நண்ணல் அரிய பிரானே –
ஸ்வ யத்னத்தால் ஒருவருக்கும் கிட்ட ஒண்ணாத
உபகாரன் ஆனவனே –
நாரணா –
மேன்மைக்கும் நீர்மைக்கும் பிரகாசமான திரு நாமம் இறே இது –
நீர்மையிலே இறே இவளுக்கு இப்போது நோக்கு
நீராட வாராய் –
ஒட்டேன் என்று பிரேமத்தால் சொன்னாலும் –
உபகரணங்களை முன்னிட்டாலும்
பிரயோஜனம் இல்லையே –
நீ வந்தால் இறே பிரயோஜனம் உள்ளது –
ஆன பின்பு நீராட வர வேணும் என்று அபேஷிக்கிறாள்-
—————————————————–
(ஊராகத் தொட்ட அவதாரம் இது
உலகத்தைத் தொட்ட அவதாரம் அது
திருவோணத்தான் உலகு ஆளும் என்பார்களே )
கன்றுகளோடச் செவியில் கட்டெறும்பு பிடித்திட்டால்
தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிறந்த திருவோணம்
இன்று நீ நீராட வேண்டும் எம்பிரானே ஓடாதே வாராய் -2 4-2 – –
பதவுரை
நின்ற–நிலையாய் நின்ற
மராமரம்–(ஊடுருவ அம்பெய்து) சாய்த்தவனே’
கன்றுகள்–பசுவின் கன்றுகள்
ஓட–வெருண்டோடும்படி
செவியில்–(அக் கன்றுகளின்) காதில்
கட்டெறும்பு பிடித்து இட்டால்–கட்டெறும்பைப் பிடித்துப் போட்டால்
(அதனால் அக் கன்றுகள் வெருண்டு)
தென்றி–சிதறிப் போய்
கெடும் ஆகில்–(கண்டு பிடிக்க முடியாதபடி) ஓடிப் போய் விட்டால்,
(பின்பு நீ,)
வெண்ணெய்–வெண்ணையை
திரட்டி–திரட்டி
விழுங்குமா– விழுங்கும்படியை
காண்பன்–பார்ப்பேன்,
(வெண்ணெயே உனக்கு உண்ணக் கிடைக்கா தென்றபடி)
இன்று–இந்த நாள்
நீ பிறந்த–நீ அவதரித்த
திரு ஓணம்–ஸ்ரவண நஷத்ரமாகும் – (ஆகையால்)
நீ–நீ
நீர் ஆடவேண்டும் –எம்பிரான்’ ஓடாதே வாராய் –
கன்றுகள் சிதறி ஓடிப் போனால் -பசு கறவாது ஆகையாலே -பால் கிடைக்காமல் போகவே –
உனக்கு ஜீவனமான வெண்ணெய் குறைந்து விடும் -என்று கருத்து –
கன்று இத்யாதி –
இவள் அழைக்கச் செய்தேயும் வாராதே -லீலாபரனாய் நின்று –
கன்றுகள் வெருண்டு ஓடுகிறது காண்கைக்காக-அவற்றின் செவியிலே கட்டெறும்புகளைப் பிடித்திட –
அத்தைக் கண்டு சொல்கிறாள்-
கன்றுகள் வெருண்டு ஒடும்படியாக அவற்றின் செவியிலே முறியக் கடிக்கும் கட்டெரும்புகளை பிடித்து இட்டால் –
தென்றி இத்யாதி –
வெருண்டு ஓன்று போன வழி ஓன்று போகாதே சிதறி -காண ஒண்ணாதபடி ஓடிப் போய் விடுமாகில் –
வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன் –
வெண்ணெயில் உண்டான விருப்பத்தால் -அத்தை திரட்டி இருந்து –
நீ விழுங்கும் படியை காணக் கடவன் –
கன்று உண்டால் அன்றோ பசு கறக்கலாவது
பசு கறந்தால் அன்றோ பால் உண்டாவது
பால் உண்டாய் வெண்ணெய் உண்டாக வேணும்
ஆகையால் உன்னுடைய ஜீவனம் கிடாய் குறையப் புகுகிறது -என்கை-
நின்ற மரா மரம் சாய்த்தாய் –
ஓர் ஆஸ்ரிதனுடைய -சுக்ரீவனின் -ரிஷ்யமுக பர்வதத்தில் விருத்தாந்தம்
அதி சங்கையை போக்குகைக்காக –
நினைத்தபடி இலக்கு குறிக்க ஒண்ணாதபடி நெருங்கி நின்ற மராமரங்களை மறுபாடு உருவ எய்து சாய்த்தவனே –
நீ பிறந்த திருவோணம் இன்று –
நீ அவதரித்த திருவோணம் நஷத்ரம் காண் இன்று –
இது தான் வைஷ்ணவ நஷத்ரம் ஆகையாலும் –
அவதாராந்தரங்களிலே இந்த நஷத்ரம் அந்வயம் உண்டாக கூடுகையாகையாலும்
தர்மி ஐக்யத்தை பற்றி சொல்கிறது –
நீ நீராட வேண்டும் –
பிறந்த நாளைக்கும் குளியாது இருப்பார் உண்டோ –
சர்வதா நீ இன்று திரு மஞ்சனம் செய்ய வேணும் என்ன –
மாட்டேன் -என்று ஓடப் புக்க வாறே
எம்பிரானே ஓடாதே வாராய் –
என்னுடைய நாயகனே -ஒடலாகாது காண் -வாராய் -என்கிறாள் –
—————————————–
(ஸூத்ர தாரி
அர்ச்சிராதி போவதை நாடகமாக நடத்திக் காட்டுகிறானே வைகுண்ட ஏகாதசி அன்று
மூன்றாம் சுற்றில் வைகுண்ட வாசலில் எதிரில்
அது விராஜா நதி
சந்த்ர புஷ்கரணி
ஆயிரம் கால் மண்டபம் -ஸஹஸ்ர தூண்
மணல் வெளி நடை காட்டி அருளி
திரு மா மணி மண்டபம் நடுவில் -தனியாக ஆனந்தமாக எழுந்து அருளி
ஆழ்வார்கள் அனைவரும் பின்னால் சேவித்துக் கொண்டு இருப்பார்கள் –
தான் ஜீவாத்மா போல் நாடகம்
அதே போல் நீராட்டமும்
அழுக்கு போக்க காட்டி அருளுகிறார் –
ப்ரக்ருதி அழுக்கு -எண்ணெய்
தேக அழுக்கு -புளிப்பழம் )
பேய்ச்சி முலை உண்ணக் கண்டு பின்னையும் நில்லாது என் நெஞ்சம்
ஆய்ச்சியர் எல்லாரும் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன்
காய்ச்சின நீரோடு நெல்லிக் கடாரத்தில் பூரித்து வைத்தேன்
வாய்த்த புகழ் மணி வண்ணா மஞ்சனமாட நீ வாராய் -2 4-3 – –
பதவுரை
பேய்ச்சி–பூதனையினுடைய
முலை–முலையை
(அவளுடைய உயிரோடும்)
உண்ண–(நீ) உண்டு விட
கண்டு–(அதைப்) பார்த்தும்
(நான் அஞ்சி ஓட வேண்டி யிருக்க, அங்ஙனம் செய்யாமல்)
பின்னையும் என் நெஞ்சம் நில்லாது–பின்பும் என் மனங்கேளாமல்
ஆய்ச்சியர் எல்லாரும்–இடைச்சிகள் எல்லாரும்
கூடி–ஒன்று கூடி
அழைக்கவும்–கூப்பாடு போட்டுக் கதறவும்
நான்–(உன் மேல் அன்பு கொண்ட) நான்
முலை தந்தேன்–முலை (உண்ணக்) கொடுத்தேன்
நெல்லியொடு–நெல்லியை யிட்டு
காய்ச்சின–காய்ச்சின
நீர்–வெந்நீரை
கடாரத்தில்–சருவத்தில்
பூரித்து வைத்தேன்–நிறைத்து வைத்திருக்கிறேன்
வாய்த்த–பொருந்திய
புகழ்–யசஸ்ஸையும்
மணி–நீல மணி போன்ற
வண்ணா–நிறத்தையுமுடைய கண்ணனே!
மஞ்சனம் ஆட–நீராட
நீ வாராய் –
பேய்ச்சி இத்யாதி –
வஞ்சனையால் வந்த பேய்ச்சி -1-4-11–என்கிறபடியே –
தன் வடிவை மறைத்து –
என் வடிவைக் கொண்டு வந்த பேய்ச்சி உடைய முலையை –
அவள் முடியும்படி உண்டமை கண்டு இருக்கச் செய்தே
பின்னையும் நில்லாது என் நெஞ்சம் –
இத்தைக் கண்டால் அஞ்சி ஓட வேண்டி இருக்க –
பின்னையும்
என் நெஞ்சானது -உன் பக்கல் சிநேகம் அடியாக தரிக்க மாட்டாதே –
ஆய்ச்சி எல்லாரும் கூடி அழைக்கவும் –
பேய்ச்சி பட்டுக் கிடக்கிற படியும் –
நீ அவள் மேல் இருந்து முலை உண்கிறபடியையும் கண்டு –
இடைச்சிகள் எல்லாரும் பீதைகளாய் கூப்பிடச் செய்தேயும் –
நான் அஞ்சாமல் வந்து உன்னை எடுத்து –
முலையைத் தந்தேன் –
இப்படி அன்றோ எனக்கு உன் பக்கல் உண்டான சிநேகம் –
ஆன பின்பு நான் சொன்னது செய்ய வேணும் காண் -என்கை –
ஆதாய கிருஷ்ணம் ஸந்த்ரஸ்தா யசோதாபித் விஜோத்தமா
கோ புச்ச பிராமணே நாத பால தோஷம பாகரோத் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
காய்ச்சின நீர் இத்யாதி –
உன்னுடைய திருமேனிக்கு அனுகுணமாக நெல்லியோடே காய்ச்சின
திரு மஞ்சநத்தை கடாரத்திலே பூரித்து வைத்தேன் –
வாய்த்த இத்யாதி –
பேய்ச்சி உடைய வஞ்சனையில் அகப்படாதே -அவளை நிரசித்து –
உன்னை நோக்கித் தருகையாலே -நன்றான புகழை உடையவனாய் –
அனுபவிப்பார்க்கு ஆகர்ஷகம் ஆகும்படி
நீல ரத்னம் போன்ற வடிவை உடையவனே –
மஞ்சனம் ஆட நீ வாராய் –
மாணிக்கத்துக்கு மாசு ஏறினால் போல் -உன் திருமேனியில் வந்தேறியான
புழுதி முதலானவை போம் படி திருமஞ்சனம் செய்ய வர வேணும் –
——————————————-
கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே
மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகையும் நாறு சாந்தும்
அஞ்சனமும் கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய் -2 4-4 – –
பதவுரை
கஞ்சன்–கம்ஸனுடைய
புணர்ப்பினில்–கபடமான ஆலோசனையினாலே
வந்த–(நலிவதாக) வந்த
கடிய–(அஸுரா வேசத்தாலே) க்ரூரமான
சகடம்–சகடத்தை
உதைத்து–(திருவடிகளால்) உதைத்து முறித்து விட்டு,
வஞ்சகம்–வஞ்சனை யுள்ள
பேய் மகள்–பூதனை யானவள்
துஞ்ச–முடியும்படி
முலை–(அவளுடைய) முலையிலே
வாய் வைத்த–வாயை வைத்த
பிரானே–உபகாரகனே!
(உன் மேனி நிறம் பெறும்படி சாத்துவதற்கு உரிய)
மஞ்சளும்–மஞ்சளையும்
செங்கழுநீரின் வாசிகையும்–(நீராடிய பிறகு சாத்திக் கொள்ள வேண்டிய) செங்கழுநீர் மாலையையும்
நாறு சாந்தும்–பரிமளிதமான சந்தநத்தையும்
அஞ்சனமும்–(கண்களிலிடும்) மையையும்
கொண்டு வைத்தேன் —
அழகனே! நீராட வாராய் –
கஞ்சன் இத்யாதி –
கம்ச ப்ரேரிதனாய் வந்த அதி க்ரூரரான சகடாசுரனை -முலை வரவு தாழ்த்தி
சீறி நிமிர்த்த திருவடிகளாலே கலக்கு அழியும்படியாக உதைத்து
வஞ்சகம் இத்யாதி –
தாய் வடிவு கொண்டு வந்த வஞ்சகியான பேய்ச்சி முடியும்படியாக
அவள் முலையிலே-உன் திருப் பவளத்தை வைத்து -உண்ட உபகாரகன் ஆனவனே
சகடாசுரன் கையிலும் பூதனை கையிலும் அகப்படாமல்
உன்னை நோக்கி தந்த உபகாரகன் ஆனவன் அன்றோ என்கை –
மஞ்சளும் இத்யாதி –
உன் திருமேனிக்கு நிறம் பெற சாத்துகைக்கு ஈடான மஞ்சளும் –
உன் திருமுடிக்கு அலங்காரமாக சாத்த தக்க செங்கழுநீர் வாசிகையும் –
உன் திருமேனிக்கு அனுகுணமாம்படி ஆறிக் குளிர்ந்து மணத்து இருக்கிற சாந்தும் –
உன்னுடைய திருக் கண்களுக்கு சாத்துகைக்கு ஈடான அஞ்சனமும் கொண்டு வந்து வைத்தேன் –
அழகனே நீராட வாராய் –
இவை எல்லாம் மிகையாகும்படி அழகை உடையவனே –
உன் அழகு தோன்றும்படி திரு மஞ்சனம் செய்ய வர வேணும் –
(சர்வ ஸ்வ தானம் செய்து -அடங்காதவர்களையும் சேர்த்துக் கொள்ளப் பார்க்கிறான்
திருக்கார்த்திகை -செங்கழுநீரின் திரு வாசிகையில் எழுந்து அருளி
சக்கரத்தாழ்வார் சந்நிதி எழுந்து அருளி சொக்கப்பானை –
அன்று தான் அத்யயன உத்சவம் விண்ணப்பம்
அலங்கார அர்த்தம் -நெற்றியில் அடி அகன்று நுனி கூர்மையாக தெலுங்கு தேசம் கல்யாண வழக்கம் –
பார்ஸிங்கம் என்பர் இத்தையே )
————————————————-
அப்பம் கலந்த சிற்றுண்டி யக்காரம் பாலில் கலந்து
சொப்பட நான் சுட்டு வைத்தேன் தின்னல் உருதியேல் நம்பீ
செப்பிள மென் முலையாளர்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர்
சொப்பட நீராட வேண்டும் சோத்தம்பிரான் நீ இங்கே வாராய் -2 4-5 – –
பதவுரை
நம்பி–(பால சாபலத்தால்) பூர்ணனே!
செப்பு–பொற் கலசம் போன்ற
இள மெல் முலையார்கள்–இளமையான மெல்லிய முலையை யுடைய மாதர்கள்
சிறுபுறம் பேசி–(உன் மேலே) அற்பமான குற்றங்களை மறைவிற் சொல்லி
சிரிப்பர்–பரிஹஸிப்பார்கள். (அன்றியும்),
பாலில்–பாலிலே
அக்காரம்–வெல்லக் கட்டியை
கலந்து–சேர்த்துப் (பிசைந்து)
அப்பம்–அப்பத்தையும்
கலந்த–(அப்படியே) சேர்ந்த
சிற்றுண்டி–சிற்றுண்டியையும்
சொப்பட–நன்றாக
நான் சுட்டு வைத்தேன்
(நீ அவற்றை)
தின்னல் உறுதி ஏல்–தின்ன விரும்பினாயாகில்
சொப்பட–நன்றாக
நீர் ஆட வேண்டும்
பிரான்–ஸ்வாமியே!
சோத்தம்–உனக்கு ஓரஞ்சலி
இங்கே வாராய் –
அப்பம் இத்யாதி –
அப்பத்தையும் அத்தோடு சேர்ந்த சிற்றுண்டி ஆகிற அபூப விசேஷத்தையும் –
அக்காரம் பாலில் கலந்து -பாலிலே கருப்பு கட்டியை இட்டு பிசைந்து
சொப்பட இத்யாதி -நன்றாக தின்னல் உருதியேல் நம்பீ –
பிள்ளைத் தனத்தில் பூர்த்தியை உடையவனே -அமுது செய்ய வேணும் என்று –
அதிலே உற்று இருந்தாயாகில் -நீராட வேண்டும் என்று மேலே அந்வயம்-
செப்பு போலே இருக்கிற சந்நிவேசத்தை உடைத்தாய் –
இளையதாய் -ம்ருதுவாய் -இருக்கிற முலையை உடையவர்கள் –
சிறு புறம் பேசிச் சிரிப்பர் -நீ நீராடாமல் இருக்கிற வடிவை கண்டால் -தோற்றின புன்மைகளை
காணாத இடங்களில் சொல்லி சிரியா நிற்பர்கள்
சிறுமை -புன்மை
புறம் பேசுகையாவது -காணாத இடத்தே சொல்லுகை
சொப்பட நீராட வேண்டும் –
அதுக்கு இடம் அறும்படியாகவும் நன்றாக நீராட வேணும் -என்ன –
அவ்வளவிலும் அவன் வாராமையாலே –
சோத்தம்பிரான் இங்கே வாராய் –
பிரானே உன்னைத் தொழுகிறேன்
இங்கே வாராய் என்று அழைக்கிறாள்
——————————————-
எண்ணைய்க் குடத்தை உருட்டி இளம் பிள்ளை கிள்ளி எழுப்பிக்
கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே
உண்ணக் கனிகள் தருவன் ஒலி கடல் ஓத நீர் போலே
வண்ணம் அழகிய பிரானே மஞ்சனமாட நீ வாராய் – 2-4 6- –
பதவுரை
எண்ணெய் குடத்தை–எண்ணெய் நிறைந்த குடத்தை
உருட்டி–உருட்டி விட்டு
இள பிள்ளை–(உறங்குகிற) சிறு குழந்தைகளை
கிள்ளி–கையால் வெடுககெனக் கிள்ளி
எழுப்பி–(தூக்கம் வி்ட்டு) எழுந்திருக்கச் செய்து
கண்ணை–கண் இமையை
புரட்டி விழித்து–தலை கீழாக மாற்றி (அப் பூச்சி காட்டி) விழித்து
கழை கண்டு–பொறுக்க முடியாத தீம்புகளை
செய்யும்–செய்து வருகிற
பிரானே–ஸ்வதந்த்ரனே!
கனிகள்–(நில்ல) பழங்களை
உண்ண–(நீ) உண்ணும்படி
தருவன்–(உனக்குக்) கொடுப்பேன்
ஒலி–கோஷியா நின்ற
கடல்–கடலினுடைய
ஓதம்–அலைகளை யுடைய
நீர் போலே–ஜலம் போலே
வண்ணம் அழகிய–திருமேனியின் நிறம் அழகாயிருக்கப் பெற்ற
நம்பீ–உத்தம புருஷனே!
மஞ்சனம் ஆட நீ வாராய் –
எண்ணை இத்யாதி –
அகத்தில் உள்ளார் எல்லாரும் அந்ய பரராம்படியாக எண்ணைய்க் குடத்தை உருட்டி-
அத்தை இறைப்பார் வழிப்பராய் கொண்டு வ்யாகுலா படா நிற்கச் செய்தே-
இளம் பிள்ளை கிள்ளி எழுப்பி –
அத்தை விட்டு இங்கே ஓடி வர வேண்டும் படி -கிடந்தது உறங்குகிற
சிறு பிள்ளையை தேள் எறிந்தால் போல் வீரிட்டு கூப்பிடும்படியாக கிள்ளி எழுப்பி –
கண்ணைப் புரட்டி விழித்து-
அருகு நின்றவர்கள் முகத்திலே -அப் பூச்சி -என்று கண்ணின் இமையை
அகவாய் புறவாயாக புரட்டி விழித்து –
கழகண்டு செய்யும் பிரானே –
இப்படி துஸ் சஹமான தீம்புகளை செய்யும் ஸ்வ தந்த்ரன் ஆனவனே –
ஒருத்தர் கையிலும் அடங்காதானாய் இரா நின்றாயே ஆனாலும் நான்
இப்போது சொல்லிற்று செய்ய வேணும் காண் என்ற கருத்து –
உண்ணக் கனிகள் தருவன்-
நீ விரும்பி அமுது செய்யும்படி நாவல் பழம் முதலான பழங்களை தருவன் –
ஒலி கடல் இத்யாதி –
கோஷிக்கிற கடலின் திரைக் கிளப்பத்தை உடையான ஜலம் போலே
திருமேனியின் நிறம் அழகிய நம்பீ
மஞ்சன் ஆட நீவாராய் –
உன் திரு மேனியில் அழகு தோன்றும்படி
திருமஞ்சனம் ஆட நீ வர வேணும் –
—————————————–
கறந்த நல் பாலும் தயிரும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய்
பிறந்ததுவே முதலாக பெற்று அறியேன் எம்பிரானே
சிறந்த நல் தாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே
மறந்தும் உரையாட மாட்டேன் மஞ்சனம் ஆட நீ வாராய் – 2-4 7- –
பதவுரை
எம்பிரானே-!
கறந்த–(அந்தந்த காலங்களில்) கறந்த
நல் பாலும்–நல்ல பாலையும்
தயிரும்–தயிரையும்
கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய்–(தயிரைக்) கடைந்து உறியில் வைத்திருக்கிற வெண்ணெயையும்,
பிறந்ததுவே முதல் ஆக–(நீ) பிறந்தவன்று தொடங்கி
பெற்று அறியேன்-கண்டறியேன்
சிறந்த நல் தாய்–‘(எல்லாரினுங் குழந்தைக்குச்) சிறக்கின்ற பெற்ற தாயும்
(பிள்ளை மேல் குற்றம் உண்டானாலும் மறைக்கக் கடவ நல் -சிறந்த தாயார் )
அலர் தூற்றும்–பழி சொல்லுகின்றாளே
என்பதனால்–என்று சொல்லுவார்களே என்ற அச்சத்தினால்
பிறர் முன்னே–அயலா ரெதிரில்
மறந்தும்–ப்ராமாதிகமாகவும்
உரை ஆட மாட்டேன்–(உனக்குக் குறைவைத் தருஞ்) சொல்லைச் சொல்ல மாட்டேன்
மஞ்சனம் ஆட நீ வாராய்-
கறந்த இத்யாதி –
பிராப்த காலங்களிலே கறந்த நல்ல பாலும் –
பாலுக்கு நல்லது ஆவது நாழியும் உழக்கு நெய் போருகை
தயிரும் -அந்த பாலிலே உறைந்த தயிரும்
கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய் –
அப்படி இருந்துள்ள தயிரை கடைந்து –
தாழி யிலே சேர்த்து உறி மேல் வைத்த வெண்ணெயும்
பிறந்த இத்யாதி –
நீ பிறந்த அன்று தொடங்கி-என் நாயகனே -இவை நான் பெற்று அறியேன் –
சிறந்த இத்யாதி –
குற்றம் உண்டானாலும் மறைக்க கடவ மிகவும் ஸ்நேகினியான
தாயானவள் தான் பழி தூற்றா நின்றாள் என்று -லோகம் சொல்லும் அத்தை பற்ற –
அந்யருடைய முன்பு அபூர்த்தி பூர்வகமாகவும் வாய் விட மாட்டேன்
மஞ்சனம் ஆட நீ வாராய் –
இப்படி உன்னுடைய ஸ்நேகிநியான எனக்கு பிரியமாக
நீ மஞ்சனம் ஆட வர வேணும் –
—————————————
கன்றினை வாலோலை கட்டி கனிகள் உதிர எறிந்து
பின் தொடர்ந்தோடி ஓர் பாம்பை பிடித்துக் கொண்டாடினாய் போலும்
நின் திறத்தேன் அல்லேன் நம்பி நீ பிறந்த நல் திரு நாள்
நன்று நீ நீராட வேண்டும் நாரணா நீராட வாராய் -2 4-8 – –
பதவுரை
கன்றினை–கன்றினுடைய
வால்–வாலிலே
ஓலை கட்டி–ஓலையைக் கட்டி
(கன்றை)–(அஸுரத் தன்மையினால் உன்னைக் கொல்ல வந்த ஒரு) கன்றை
(எறி குணிலாகக் கொண்டு, அஸுராவேசமுள்ள விளா மரத்தின்)
கனிகள்–பழங்கள்
உதிர–(கீழே) உதிர்ந்து விழும்படி
எறிந்து–வீசி
பின்–பின்பு
ஓடி தொடர்ந்து–ஓடிப் போய்
ஓர் பாம்பை–(காளியனென்ற) ஒரு ஸர்ப்பத்தை
பிடித்துக் கொண்டு–பிடித்துக் கொண்டு
ஆட்டினாய் போலும்–ஆட்டினவனோ தான் (நீ);
நம்பி–ஒன்றிலும் குறைவில்லாதவனே!
(நான்)
நின் திறத்தேன் அல்லேன் –உன் விஷய மொன்றையு மறியாத வளாயிரா நின்றேன்
(அது கிடக்கட்டும்;)
நீ பிறந்த–நீ அவதரித்த
நல் திரு நாள்–திரு நிஷத்திரமாகும் (இந் நாள்);
(ஆகையால்)
நீ நின்று நீர் ஆட வேண்டும்
நாரணா ஓடாதே வாராய்
கன்றினை இத்யாதி –
கன்றுகள் மேய்க்க போன இடத்தே -வெருண்டு துள்ளி ஓடும் அது காண்கைக்காக
ஒரு கன்றை வாலிலே ஓலையைக் கட்டி -உன்னை நலிகைக்காக கன்றுகளின் நடுவே கலசி வந்த
நின்றதோர் ஆசுரமான கன்றை குணிலாகக் கொண்டு ஆசூரமான விளா வினுடைய
பழங்கள் உதிர எறிந்து –
பின் இத்யாதி –
அதுக்கு பின்பாக ஓடிச் சென்று -ஒரு பாம்பை பிடித்து கொண்டு ஆட்டினாயோ தான் –
நீ இப்போது செய்கிற தீம்பால் அவையும் செய்தாயாக நான் கேட்டதும் கூடும் இறே
(போம் பழி எல்லாம் அமணன் தலை மேல் போமே
கூனே சிதைத்த உண்டை வில் கோவிந்தா
சமந்தக மணி வ்ருத்தாந்தமும் அனுசந்தேயம் )
துடர்ந்து -என்று கதி வாசியாய் சென்று என்றபடி
நின் இத்யாதி –
உன் படிகள் எனக்கு ஒன்றும் தெரிகிறது இல்லை –
அது கிடக்கிடு
நீ பிறந்த திரு நல் நாள் –
நீ அவதரித்த விலஷனமான திரு நட்ஷத்ரம் இன்று காண்
நன்று நீராட வேண்டும் –
நன்றாக நீ திரு மஞ்சனம் செய்ய வேணும் –
ஒரு நாளும் நீராடாதாரும் பிறந்த நாளில் நீராடாதார் இல்லை இறே
நாரணா நீராட வாராய் –
சர்வ ஆத்மாக்களோடும் ஒழிக்க ஒழியாத சம்பந்தத்தை உடையவனே
என்னுடைய சொல்லை மறுத்து ஒடலாகாது காண் -வாராய் –
————————————-
பூணித் தொழுவினில் புக்கு புழுதி அளைந்த பொன் மேனி
காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாண் எத்தனையும் இலாதாய் நற்பின்னை காணில் சிரிக்கும்
மாணிக்கமே என் மணியே மஞ்சனம் ஆட நீ வாராய் -2 4-9 – –
பதவுரை
பூணி–பசுக்கள் கட்டிய
தொழுவினில்–கொட்டகையிலே
புக்கு–நுழைந்து
புழுதி அளைந்த–புழுதி மண்ணிலளைந்து அதனால் மாசு படிந்த
பொன் மேனி–(உனது) அழகிய உடம்பை
காண–பார்ப்பதற்கு
பெரிதும்–மிகவும்
உகப்பன்–(நான்) விரும்புவேன்
ஆகிலும்–ஆனாலும்
கண்டார்–(உன்னைப்) பார்ப்பவர்கள்
பழிப்பர்–‘(இவள் பிள்ளை வளர்ப்பது அழகாயிருக்கி்ன்றது’ என்று என்னை) ஏசுவார்கள்
(அன்றியும்)
எத்தனையும் நாண் இலாதாய்–சிறிதும் லஜ்ஜை யென்பதில்லாதவனே!
நப்பின்னை–நப்பின்னையானவள்
காணில்–நீ இப்படியிருப்பதைக் கண்டால்
சிரிக்கும்–சிரிப்பாள்
என் மாணிக்கமே! (என்) மணியே!
மஞ்சனம் ஆட நீ வாராய் –
பூண் இத்யாதி –
பசுக்களை அடைத்து திறந்து விடும் தொழுவிலே புக்கு –
ஜாதி உசிதமாக தொழுக்களிலே புகுந்து -விளையாடா நிற்கும் இறே –
புழுதி அளைந்த பொன் மேனி –
பால்ய அனுகுணமாக புழுதியை இருந்து அளைகையாலே
அது திருமேனி எங்கும் வியாப்தம் ஆனாலும் பொன்னுக்கு புழுதி ஏறினால் போல்
இருக்கும் படியைப் பற்ற சொல்லுகிறது
காணப் பெரிதும் உகப்பன் –
நீராடிக் காண்பதிலும் முக்த பாவம் தோற்றுகையாலே
இப்படி இருக்கிற உன் திருமேனியை காண்கைக்கு மிகவும் விரும்பி இருப்பன் –
ஆகிலும் கண்டார் பழிப்பர் –
நான் உகந்து இருந்தாலும் உன்னைக் கண்டவர்கள் –
ஒருத்தி பிள்ளை வளர்த்த படி என் -என்று ஏசுவார்கள் –
நாண் இத்தனையும் இலாதாய்
ஏக தேசமும் லஜ்ஜை இல்லாதவனே
நற்பின்னை காணில் சிரிக்கும் –
நீ புழுதியும் உடம்புமாய் இருக்கிற படியை
நற்பின்னை காணும் ஆகில் மைத்துனன் ஆனமையால் சிரிக்கும் –
நாட்டார் பழிக்கு அஞ்சுகிற மாத்ரமோ -நற்பின்னை சிரிப்புக்கு லஜ்ஜிக்க வேண்டாவோ
நீ செய்யாது ஒழிகிறது நிர் லஜ்ஜன் ஆகையாலே இறே என்று கருத்து –
மாணிக்கமே என் மணியே –
வடி வழகுக்கு ஒன்றே உபமானம் ஆவது ஓன்று இலாமையாலே
அங்கும் இங்கும் கதிர் பொருக்குகிறாள்
மாணிக்கம் போலேயும் -மரகதம் போலேயும் இருக்கிற வடிவு அழகை உடையவனே -என்கை
மஞ்சனம் ஆட நீ வாராய் –
இப்படி இருக்கிற உன் திருமேனியில் வந்தேறியான
அழுக்கு கழிந்து விளங்கும் படி
திரு மஞ்சனம் ஆட வர வேணும் –
———————————-
அவதாரிகை –
நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலைக் கட்டுகிறார் –
கார்மலி மேனி நிறத்து கண்ண பிரானை உகந்து
வார்மலி கொங்கை யசோதை மஞ்சனம் ஆட்டியவாற்றை
பார்மலி தொல் புதுவைக் கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல்
சீர்மலி செம்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே -2-4 10- –
பதவுரை
கார்–காளமேகத்திற் காட்டிலும்
மலி–சிறந்த
மேனி நிறத்து–திரு மேனி நிறத்தை யுடைய
கண்ண பிரானை–கண்ண பிரானை
உகந்து–விரும்பி
வார் மலி–கச்சுக்கு அடங்காமல் விம்முகின்ற
கொங்கை–ஸ்தனங்களையுடைய
அசோதை–யசோதைப் பிராட்டி
மஞ்சனம் ஆட்டிய–நீராட்டின
ஆற்றை–ப்ரகாரத்தை,-
பார்–பூமியிலே
மலி–சிறந்த
தொல்–பழமையான
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
கோன்–நிர்வாஹகரான
பட்டர் பிரான்–பெரியாழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
சீர் மலி–அழகு நிறைந்த
செந்தமிழ்–செந்தமிழாலாகிய
பாடல்–(இப்) பாசுரங்களை
வல்லார்–ஓத வல்லவர்கள்
யாதும்–சிறிதும்
தீவினை இலர்–பாவமில்லாதவராவர்.
கார்மலி மேனி நிறத்து –
நீர் கொண்டு எழுந்த காள மேகத்தில் காட்டில் மிகுத்து இருந்துள்ள திருமேனி நிறத்தை உடைய –
கண்ண பிரானை உகந்து –
ஆஸ்ரிதனுக்கு சுலபனாய் –
உபகாரனும் ஆனவனை ஆதரித்து கொண்டு
வார்மலி இத்யாதி –
கச்சில் அடங்காமல் -விம்மும்படியான முலையை உடைய
யசோதை பிராட்டி மஞ்சனம் ஆட்டிய பிரகாரத்தை
பார்மலி இத்யாதி –
பூமியில் அடங்காத ஏற்றத்தை உடைத்தாய் -பழையதாய் இருந்துள்ள
திருப் புதுவைக்கு நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளி செய்த
சீர்மலி செம்தமிழ் வல்லார் –
சீர் மலிகையாவது -சப்த லஷணங்களில் குறைவற்று இருக்கையாலே –
அழகு மிக்கு இருக்கை
அன்றிக்கே –
பகவத் குணங்களால் நிறைந்து இருக்கிற என்னுதல்
செம் தமிழ்
ஆர்ஜவ யுக்தமான தமிழ் –
அதாவது –
சப்தத்தின் உடைய பிரசன்னதையாலே
உள்ளில் கிடக்கிற அர்த்தம் தானே பிரகாசிக்கும் படியாக இருக்கை –
பாடல் –
பாட்டுக்கள் வல்லார்
இவற்றை சாபிப்ராயமாக வல்லவர்கள் –
தீவினை யாதும் இலரே
தீவினை ஒன்றும் இல்லாதவர் ஆவர் –
அவர்களுக்கு ஒரு துஷ் கர்மங்களும் இல்லை என்கை-
——————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –