Archive for February, 2012

ஸ்ரீ முமுஷுப்படி-திருமந்திர பிரகரணம்-சூரணை-1-6-ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் —

February 23, 2012

சூரணை-1
முமுஷுக்கு அறிய வேண்டிய ரகஸ்யம் மூன்று –

முமுஷு ஆகிறவன் மோஷத்திலே இச்சை உடையவன் ஆவான் –
யேமுச்ல் மோஷனே ஏ இறே தாது –
இத்தால் சம்சார விமோசனத்தில் இச்சை பிறந்தவனுக்கு என்ற படி-

(சம்சார நிர்வேதம் முதல் படி அன்றோ-விட்டே பற்ற வேண்டுமே-
பகவத் ப்ராப்தியில் இச்சை வந்தால் தான் சம்சார நிவ்ருத்தியில் இச்சை உண்டாகும்
மால் பால் மனம் சுளிப்ப மங்கையர் தோள் கை விட்டு என்றபடி
பலம் ப்ராப்யம் உபேயம் புருஷார்த்தம் பேறு -பர்யாய சொற்கள்
உபாயம் பிராபகம் ஆறு-பர்யாய சொற்கள் )

ஆத்ம ப்ராப்தி காமனுக்கும் முமுஷ்த்வம் உண்டே ஆகிலும் இவ்விடத்தில் அவன் விவஷிதன் அன்று –
அவனுக்கு ரகஸ்ய த்ரய ஞான அபேஷை இல்லை இறே –
ஆகையால் இவர் முமுஷு என்கிறது -பகவத் ப்ராப்தி காமதயா சம்சார நிவ்ருத்தியிலே இச்சை பிறந்தவனை –

ஏவம் பூதன் ஆனவனுக்கு அறிய வேண்டிய ரகஸ்யம் மூன்று என்றது –
இவனுக்கு அவசியம் ஞானதவ்யமாய் உள்ளது ஸ்வரூப உபாய புருஷார்த்தங்கள் ஆகையாலும்
அவற்றை இந்த ரகஸ்ய த்ரயம் உள்ளபடி பிரதிபாதிக்கை யாலும் –
ரகஸ்ய த்ரயமே அறிய வேண்டும் என்கை–
ஸ்வ ஞானம் பிராபக ஞானம் ப்ராப்ய ஞானம் முமுஷுபி ஞான த்ரய உபாதேயம் ஏதத் அந்யந்ந கிஞ்சன –
என்னக் கடவது இறே –

ரகஸ்யம் மூன்று என்று இவர் உத்தேசிக்கிறது
திருமந்த்ரமும்
த்வயமும்
சரம ஸ்லோகமும் ஆகிற
இவற்றை என்னும் இடம் மேலே ஸூஸ்பஷ்டம்-

இவற்றை ரகஸ்யங்கள் என்கிறது –
சகல வேதார்த்த சாரார்த்த பிரதிபாதகதயா பரம குஹ்யங்கள் ஆகையாலே —

ஆக
இவ் வாக்யத்தால் –
அதிகாரி நிர்தேசமும் –
தத் ஞாதவ்ய நிர்தேசமும்
பண்ணி அருளினார் ஆய்த்து-
(நான் யார் -என்ன அறிய வேண்டும் -இவற்றைச் சொன்னவாறு
கோவிந்தா உனக்கே நாம் ஆட் செய்வோம் -திருமந்திர யாதாம்யார்த்தம் )

———————————————

சூரணை -2
அதில் பிரதம ரகஸ்யம் திருமந்தரம் –

இனி அந்த ரகஸ்ய த்ரயத்திலும் பிரதம ரகஸ்யம் ஏது என்னும் ஆகாங்கஷையிலே அருளிச் செய்கிறார் –
அதாவது –
அந்த ரகஸ்ய த்ரயத்திலும் வைத்து கொண்டு -இவ் அதிகாரிக்கு பிரதமம் -ஞாதவ்யமான ரகஸ்யம் –
ஸ்வரூப யாதாம்ய பரமாய் –த்யாஜ்ய  உபாதேய  விபாக ஞானத்தை
பரிபூர்ணமாக பிறப்பிக்குமதான திரு மந்த்ரம் என்கை –

அநந்யார்ஹ சேஷத்வம்–அநந்ய சரணத்வம் –அநந்ய போக்யத்வம் -ஆகிற
ஆகார த்ரயத்தையும் -பிரதிபாதிக்கையாலே –
சேதன ஸ்வரூப யாதாம்ய பிரதிபாதன பரமாய் –

தத் அனுகுண த்யாஜ்ய உபாதேய விபாகத்தையும் –
ஸூஸ்பஷ்டமாய் பிரதி பாதியா நின்று உள்ள இம்மந்த்ரத்தாலே -ஸூஷிததானவனுக்கு இறே
மற்றை ரகஸ்யங்கள் இரண்டிலும் பிரதிபாதிக்க படுகிற உபாய  உபேயங்கங்களில் அபேஷை ஜனிப்பது –
ஆகையால் ஸ்வரூப யாதாம்ய பரமான திரு மந்த்ரம் பிரதம ரகஸ்யம் என்னக் குறை இல்லை –

இன்னமும் பிரணவத்துக்கு மந்திர சேஷம்  விவரணமாப் போலே –
மந்திர சேஷத்துக்கு த்வயம் விவரணமாய் –
த்வயத்துக்கு சரம ஸ்லோகம் விபரணமாய் இறே  இருப்பது –
அந்த நியாத்தாலும் இதனுடைய பிரதாம்யம்  சித்தம் இறே –

(அ விளக்கம் உ ம -ஓம்
அதுக்கு விளக்கம் நமோ நாராயணாயா
அதுக்கு விளக்கம் த்வயம்
அதுக்கு விளக்கம் சரம ஸ்லோகம்
விவரண விவரணி பாவம்-இம் மூன்றுக்கும் உண்டே )

ஆக இவை எல்லாவற்றையும் திரு உள்ளம் பற்றி ஆய்த்து –
பிரதம ரகஸ்யம் திரு மந்த்ரம் -என்று இவர் அருளிச் செய்தது –

இத்தை மந்த்ரம் என்கிறது –
மந்தாராம் த்ராயத இதி மந்திர -என்கிறபடியே
சப்த சக்தியாலும் –
அர்த்த போதனத்தாலும் –
தன்னை அனுசந்திப்பார்க்கு ரஷகம் ஆகையாலே –

சப்த சக்தியாலே ரஷகமாம் -ஜப ஹோமாதிகளாலே கார்யம் கொள்ளும் உபாசகருக்கு –
அர்த்த போதனத்தாலே ரஷகமாம் -ஈச்வரனே உபாயம் என்று இருக்கும் பிரபன்னருக்கு –

அர்த்த போதனத்தாலே ரஷகம் ஆகையாவது –
தேகாசக்தாத்ம புத்திர் யதி பவதி பதம் சாது வித்யாத் த்ருதீயம்
ஸ்வாதந்த்யாந்தோ யதி ஸ்யாத்  பிரதமம்
இதர சேஷித்வ தீச்சேத் த்வதீயம்
ஆத்ம த்ரானோந் முகச்சே நம இதி ச பதம்
பாந்தவாபாச லோலச் சப்தம் நாராயணாக்யம்
விஷய சபல தீச்சேத சதுர்த்தீம் பிரபன்ன -ஸ்ரீ அஷ்ட ஸ்லோகி –
என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்த படி தன்னை அனுசந்திப்பார்க்கு –

1-தேக ஆத்மா அபிமானமும் (த்ருதீய -மகாரம்-ஞானமயன் – அறிந்து போக்க வேண்டும்- )
2-ஸ்வாதந்த்ரியமும் (பிரதமம் -அகாரம் அறிந்து போக்க வேண்டும்–அறிவுடையவன் என்று அறிந்து
நிமிந்து செருக்கி ஸ்வ தந்திர அபிமானம் போக்க -அ ஆய ம-அவனுக்கு அடிமை )
3-அந்ய சேஷத்வமும் (த்விதீயம் உகாரம் -அவனுக்கே அடிமை )
4-ஸ்வ ரக்ஷணே ஸ்வான்வயமும்
5-அபந்து சங்கமும்
6-விஷய பிராவணயமும்
மேலிடாத படி பண்ணி ஸ்வரூப அனுரூபமாக நடக்கும் படி நோக்குகை –

—————————————–

சூரணை -3-
திருமந்த்ரத்தின் உடைய சீர்மைக்கு போரும்படி பிரேமத்தோடே பேணி அனுசந்திக்க வேணும் –

இனிமேல் இம் மந்த்ரத்தின் உடைய வைபவத்தை விஸ்தரேண பிரதிபாதிப்பதாக திரு உள்ளம் பற்றி
பிரதமம் இதனுடைய அனுசந்தான க்ரம கதன முகத்தாலே இதன் வைபவத்தை அருளிச் செய்கிறார் –

திரு மந்த்ரத்துக்கு சீர்மை யாவது –
ரூசோ யஷும்ஷி சாமானி ததைவ ஆதர்வணா நிச சர்வ அஷ்டாஷரச்ந்தச்தம் -என்கிறபடியே
(சகல வேத ஸங்க்ரஹமாய் -மற்று எல்லாம் பேசிலும் என்கிறபடியே
ஞாதவ்ய சகலார்த்த பிரதிபாதகமாய் -)

மந்த்ரானாம் பரமோ மந்திர குக்யானாம் குக்யமுத்தமம்
பவித்ரம் ச பவித்ராணாம் மூல மந்த்ரஸ் சநாதன-என்கிறபடியே –
மந்த்ரங்களில் வைத்து கொண்டு பரமமான மந்த்ரமாய் –
குஹ்யங்களில் வைத்து கொண்டு உத்தமமான குஹ்யமாய் –
பவித்ரங்களிலும் பவித்ரமாய் இருக்கிற கௌரவம்-
சீர்மைக்கு போரும் படி -என்றது -தகும்படி என்கை –

பிரேமத்தோடு  பேணி அனுசந்திக்கை ஆவது -இத்தை அனுசந்திக்கும் அளவில்
சுஷ்க ஹ்ருதயனாய் )வறட்டு நெஞ்சம்) இருந்து அனுசந்திக்கை அன்றிக்கே -இதன் வைல்ஷண்ய ஞானம் அடியாக
இதின் பக்கல் தனக்கு உண்டான பிரேமத்தோடே
குஹ்யானாம் குஹ்யமான இது அசல் அறியாதபடி -( அநதகாரிகள் செவிப்படாத படி )
மந்த்ரம் யத்நேன கோபயேத்-என்கிற படி பேணிக் கொண்டு அனுசந்திக்கை –
இப்படி அனுசந்திக்க வேணும் என்கையாலே -பிரகாரந்தரேண அனுசந்திக்க லாகாது என்கிற நியமம் தோற்றுகிறது-

——————————————-

சூரணை -4
மந்த்ரத்திலும்
மந்த்ரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும்
மந்திர பிரதனனான ஆசார்யன் பக்கலிலும்
ப்ரேமம் கனக்க உண்டானால் கார்ய கரமாவது –

இப்படி தன் பக்கல் பிரேமம் உண்டாகவே
இம் மந்த்ரம் இவனுக்கு கார்ய கரமோ என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது

ஞாதவ்யார்த்த ஞாபகமான இம் மந்த்ரம் தன்னிலும் –
சேஷித்வ சரண்யத்வ பிராப்யத்வங்கள் ஆகிற
ஆகார த்ரய யுக்ததயா இம் மந்த்ரத்துக்கு வாச்ய வஸ்துவாய் இருக்கிற சர்வேஸ்வரன் விஷயத்திலும் –

தன் மந்த்ரம் ப்ராஹ்மாணாதீனம் – என்கிறபடியே
இம்மந்த்ரம் ஆச்சார்யா அதீனமாய் இருப்பது ஓன்று ஆகையாலே –
இத்தை யதா பிரதி பத்தி யுக்தனாய் கொண்டு -தனக்கு உபகரித்த ஆச்சர்ய விஷயத்திலும் –

தத் தத் வை லஷண அனுரூபமாக ப்ரேமம் அதிசயம் உண்டானால்
இம் மந்த்ரம் இவனுக்கு கார்ய கரம் ஆவது என்கை –

மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்திர பிரதே குரவ த்ரிஷூ பக்திஸ்
சதா கார்ய சா ஹி பிரதம சாதனம் -என்னக் கடவது இறே —

(ஒன்றை விட அடுத்தத்தில் பிரேமம் கனக்க உண்டாக வேண்டும் -)

————————————–

சூரணை-5
சம்சாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து –
ஈஸ்வர கைங்கர்யத்தையும்  இழந்து –
இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே –
சம்சாரம் ஆகிற பெரும் கடலில் விழுந்து நோவு பட –
சர்வேஸ்வரன் தன் கிருபையாலே -இவர்கள் தன்னை அறிந்து கரை மரம் சேரும் படி –
தானே சிஷ்யனுமாய் -ஆச்சார்யனுமாய் நின்று –
திரு மந்த்ரத்தை வெளி இட்டு அருளினான் –

(நர நாராயணன் -சிஷ்யன் ஆச்சர்யனுமாய் -முதலில் சொன்னது நாம் தானே இழந்து உள்ளோம்)

இனி இம் மந்த்ரத்தின் உடைய அவதரண பிரகார கதன முகத்தாலே இதனுடைய அப்ரிதம வைபவத்தை
அருளிச் செய்கிறார் –
சம்சாரிகள் ஆகிறார் அநாதி அசித் சம்பந்தத்தால் பிரவாக ரூபேண வருகிற –
அவித்யா கர்ம வாசன ருசி விவசராய் -ஜன்ம மரணாதி க்லேச பாகிகளாய் திரிகிற -பக்த சேதனர் —

தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து -என்றது –
தாஸாபூதா ஸ்வ தஸ் சர்வே ஹ்யாத்மான பரமாத்மனா
நான்யதா லஷணம் தேஷாம் பந்தே மோஷே ததைவ ச -என்கிற படியே –
ஸ்வத சித்தமான பகவத் சேஷத்வத்தை லஷணமாக உடையராய் இருக்கிற தங்களையும் –

பதிம் விச்வச்ய ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்த்திதம் -இத்யாதிகளில் சொல்லுகிற படியே
தங்களுக்கு நிருபாதிக சேஷியாய் இருக்கிற ஈஸ்வரனையும் அறியாது என்கை-

ஆனால் அறியாமல் என்னாதே–மறந்து என்பான் என் ?-
முன் ஒரு கால் நினைத்து பின்பு
அந் நினைவுக்கு பிரச்யுதி வந்த இடத்தில் இறே மறந்து என்னாலாவது என்னில் –
மறந்தேன் உன்னை முன்னம் -பெரிய திரு மொழி -6-2-2-என்கிறபடியே
ஸ்வத சித்தமான சம்பந்தத்தை உணர்ந்தால் முன்பு நினைத்து இருந்த அர்த்தத்தை மறந்தால் போலே
இருக்கும் சம்பந்தத்தில் உறைப்பை நினைத்து அருளிச் செய்தாராம் இத்தனை –

ஈஸ்வர கைங்கர்யத்தையும் இழந்து -என்றது
கீழ் சொன்ன அஞ்ஞானத்தாலே வகுத்த சேஷியான ஈஸ்வர விஷயத்தில் கைங்கர்யம் ஆகிற பரம புருஷார்த்தையும்
ப்ராபிக்கப் பெறாதே என்கை —

புருஷார்த்தத்தின் உடைய கௌரவத்தையும் -அதுக்கு இட்டுப் பிறந்து வைத்து
கிட்டப் பெறாமல் கிடந்த படியையும் நினைத்து -இழந்து என்கிறார் –

இழந்தோம் என்கிற இழவுமின்றிக்கே-என்றது
ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூப ஞானமும் புருஷார்த்த ஞானமும் இல்லாமையாலே –
ஸ்வ சேஷத்வ அனுரூபமான சேஷி விஷய கைங்கர்ய ரூப புருஷார்த்தத்தை
இழந்தோம் என்கிற அலாப க்லேச அனுசந்தானமும் இன்றிக்கே என்கை-

சம்சாரம் ஆகிற பெரும் கடலில் விழுந்து நோவு பட என்றது –
சம்சார சாகரம் கோரம் அநந்த க்லேச பாஜனம் -என்கிறபடியே –
அநந்த க்லேச பாஜனமாய் -ஒருவராலும் ஸ்வ யத்னத்தாலே கரை காண அரிதாம் படி இருக்கிற
சம்சாரம் ஆகிற மகா சமுத்ரத்துக்கு உள்ளே விழுந்து -தாப த்ரய அபிபூதராய் கொண்டு -க்லேசப்பட என்கை –

இத்தால் –
தங்களையும் -ஈஸ்வரனையும் அறியாமையாலும் –
புருஷார்த்தத்தை  அறியாமையாலும் –
சம்சார சாகரத்துக்கு உள்ளே கிடந்தது நோவு படா நிற்க -விரோதியான சம்சாரம் தன்னையும்
தந் நிஸ்த்ரண உபாயத்தையும் -அறியாமையாலும் –
ஞாதவ்யமான அர்த்த பஞ்சகத்திலும் ஒன்றையும் அறியாமல் கிடந்தார்கள் என்கை –

ப்ராப்யச்ய ப்ரஹ்மணோ ரூபம் -இத்யாதிப்படியே -சகல சாஸ்த்ரங்களுக்கும் பிரதிபாதிப்பது
அர்த்த பஞ்சகத்தையும் இறே –
இவ்வர்த்தங்களை இவர்களுக்கு ஸூக்ரகமாக அறிவிக்கைக்காக சகல சாஸ்திர ஸங்க்ரஹமான
திரு மந்த்ரத்தை சர்வேஸ்வரன் வெளி இட்ட பிரகாரத்தை சொல்லுகிறது மேல் –

சர்வேஸ்வரன் தந் கிருபையால் என்றது –
ஈசேசித வியசம்பந்தாத் அநிதம் பிரதமாதபி -என்கிற படியே அநாதியாக ஈச்வரனோடு உண்டான ஈசே சிதவ்ய
சம்பந்தத்தை உடையனான எம்பெருமான் –
ஏவம் சம்ஸ்ருதி  சக்ரச்தே ப்ராம்ய மானே ஸ்வ கர்மபி
ஜீவே துக்கா குலே விஷ்ணோ க்ருபா காப்யு பஜாயதே -என்கிறபடியே –
இவர்கள் படுகிற துக்க தர்சன மாத்ரத்தால் உண்டான தன்னுடைய நிர்கேதுக கிருபையாலே என்கை –

இவர்கள் தன்னை அறிந்து கரை மரம் சேரும் படி -என்றது –
இப்படி சம்சார சாகரத்திலே கிடந்தது நோவுபடுகிற இவர்கள் –
த்வாமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷின-என்றும்
சம்சார ஆர்ணவ மக்நானாம் விஷயாக்ராந்த சேதஸாம்
விஷ்ணு போதம் விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம் -என்றும் சொல்லுகிறபடி
சம்சார நிஸ்தரண உபாய பூதனான தன்னை அறிந்து சம்சார சாகரத்தை கடந்து
அக்கரை படும்படி என்கை –
(வைகுந்தன் என்னும் தோணி -நாவாய் முகுந்தன் )

தானே சிஷ்யனுமாய் ஆச்சார்யனுமாய் நின்று -என்றது
நர நாராயணனாய் உலகத்து அறநூல் சிங்காமை விரித்தவன்–பெரிய திருமொழி–10-6-1- என்கிறபடியே
நர நாராயண ரூபேண அவதரித்து -நரனான தான் சிஷ்யனுமாய்
நாராயணனான தான் ஆச்சார்யனுமாய் நின்று என்கை –

திரு மந்த்ரத்தை வெளி இட்டு அருளினான் -என்றது
சகல சாஸ்திர சங்க்ரகமாய்-அந்த சாஸ்திர தாத்பர்யமான அர்த்த பஞ்சகத்தையும்
ஸூஸ்பஷ்டமாக பிரதிபாதியா நிற்கும் திரு மந்த்ரத்தை பிரகாசிப்பித்தது அருளினான் என்கை-

அருளிச் செய்தான் என்னாதே வெளி இட்டு அருளினான் -என்றது –
இப்போது தான் ஒன்றை நியமித்து சொன்னான் அல்லன் –
அநாதி யானத்தை பிரகாசிப்பித்தான் இத்தனை என்னும் இடமும்
அதி குஹ்யமாய் உள்ளதை இவர்கள் துர் கதி கண்டு சகிக்க மாட்டாமையாலே
பிரகாசிப்பித்தான் என்னும் இடம் தோற்றுகைக்காக–

—————————————————-

சூரணை-6
சிஷ்யனாய் நின்றது சிஷ்யன் இருக்கும் இருப்பு -நாட்டார் அறியாமையாலே –
அத்தை அறிவிக்கைக்காக –

ஆனால் ஆசார்யனாய் நின்று வெளி இட்டு அருள அமையாதோ ?
சிஷ்யனாய் நின்றது எதுக்காகா ?-என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது

ஆசார்யனாய் நின்று வெளி இட்டு அருளின  அளவு அன்றிக்கே -தானே சிஷ்யனுமாய் கொண்டு நின்றது –
ஆச்திகோ தர்ம சீலச்த சீலவான் வைஷ்ணவ ச சுசி
கம்பீரச் சதுரோ தீரச் சிஷ்ய இத்யபிதீயதே -என்றும் –

சரீரம் வசூ விஞ்ஞானம் வாசா கர்ம குணா நசூன் குர்வர்த்தம்
தாரேயேத்யஸ்து ச சிஷ்யோ நேதர ஸ்ம்ருத -என்றும் –

சத்புத்திஸ் சாதுசேவி சமுசித சரிதஸ் தத்வ போதாபிலாஷி
ஸூஸ்ருஷி சத்யக்தமான ப்ரநிபாதன பர பிரச்னகால பிரதீஷ
சாந்தோ தாந்தோ அனசூயஸ் சரண முபகதஸ் சாஸ்திர விசுவாச சாலி
சிஷ்ய ப்ராப்த பரீஷாம் க்ருதவிதபிமத்தஸ் தத்வதச் சிஷணீய–நியாஸ விம்சதி -இத்யாதிகளில் சொல்லுகிறபடியும்

சாத்யாந்திர நிவ்ருத்தியும் –
பல சாதன சிஸ்ருஷையும் –
ஆர்த்தியும்
ஆதரமும்
அனசூயையும்
உடையனாய்  இருக்கையும் ஆகிற சிஷ்ய லஷணம் லோகத்தில் உள்ளார் அறியாமையாலே –
அத்தை ஸ்வ அனுஷ்டானத்தாலே அறிவிக்கைக்காக என்கை-

உபதேசத்தால் அறிவிக்கும் அளவில் -ஸ்வோத்கர்ஷம் தேடிக் கொள்ள வந்தான் இத்தனை என்று
நினைக்கவும் கூடும் –
அனுஷ்டானத்தில் அறிவிக்கும் அளவில் நமக்கும் இது வேணும் என்று
விஸ்வசித்து பரிக்ரஹிக்கைக்கு உடலாய் இருக்கும் இறே-

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முமுஷுப்படி -அவதாரிகை -ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் —

February 21, 2012

ஸ்ரீ மா முனிகள் ரஹஸ்ய அர்த்த ஸம்ப்ரதாய பரம்பரைக்கு அருளிச் செய்த தனியன்
தாயம்
ப்ரதாயம்
ஸம் ப்ரதாயம்
ஸூத்த ஸத்வ சம்ப்ரதாயம் அன்றோ இது

லோக குருஸ் குருபிஸ் ஸஹ பூர்வைஸ் கூர குலோத்தம தாஸம் உதாரம்
ஸ்ரீ நக பதயபி ராமவரே ஸு தீப்ரஸயாந குருஸ் சபேஜஹம் –

——

ஸ்ரீ ஈயுண்ணி பத்ம நாபர் அருளிச் செய்த ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் விஷயமான தனியன்

லோகாச்சார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே
ஸம்ஸார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம

——–

பூர்வ உக்த குரு பரம்பரைக்கு ப்ரத்யேக தனியன்கள்
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ கூர குலோத்தம தாசர் விஷயமான தனியன்

லோகாச்சார்ய கிருபா பாத்ரம் கௌண்டின்ய குல பூஷணம்
ஸமஸ்த ஆத்ம குண வாஸஸ் வந்தே கூர குலோத்தமம்

—-

ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை விஷயமான தனியன்

நமஸ் ஸ்ரீ சைல நாதாயா குந்தீ நகர ஜன்மனே
ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலிநே

——–

ஸ்ரீ மா முனிகளுக்கு மாதா மஹாரான ஸ்ரீ கோட்டூர் அழகிய மணவாளப் பெருமாள் பிள்ளை தனியன்

லோகாச்சார்ய பதாம் போஜ ராஜ ஹம்ஸாயி தாந்தரம்
ஞான வைராக்ய ஜலதி வந்தே ஸும்ய வர குரும்

———-

ஸ்ரீ மா முனிகள் அருளிச் செய்த திகழக் கிடந்தான் திரு நா வீறுடைய பிரான் தாதர் அண்ணரையன் விஷயமான தனியன்

ஸ்ரீ ஜிஹ்வா வததீச தாஸம் அமலம் அசேஷ ஸாஸ்த்ர விதம்
ஸூந்தர வர குரு கருணா கந்தளிதா ஞான மந்த்ரம் கலயே –

————-

ஸ்ரீ வானமாலை ஜீயர் அருளிச் செய்த தனியன் –

கோதில் உலகாசரியன் கூர குலோத்தம தாதர்
தீதில் திருமலை ஆழ்வார் செழும் குரவை மணவாளர்
ஒதரிய புகழ் திரு நாவீறுடைய பிரான் தாதருடன்
போத மணவாள மா முனிவன் பொன்னடிகள் போற்றுவனே –

வாழி யுலகாரியன் வாழி யவன் மன்னு குலம்
வாழி முடும்பை என்னு மா நகரம் -வாழி
மனம் சூழ்ந்த பேர் இன்ப மல்கு மிகு நல்லார்
இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு

ஒது முடும்பை யுலகாரியன் அருள்
ஏது மறவாத வெம்பெருமான் நீதி
வழுவாச் சிறு நல்லூர் மா மறையோன் பாதம்
தொழுவார்க்கு வாரா துயர் —

முடும்பை குலத்துக்கும் இடத்துக்கும் பெயர்

————–

ஸ்ரீ யபதியாய்–ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் –நித்ய முக்த அனுபாவ்யனாய் -நிரதிசய ஆனந்த யுக்தனாய் –
இருக்கிற சர்வேஸ்வரன் —
அந்த நித்ய ஸூரிகளோபாதி தன்னை அனுபவித்து நித்ய கைங்கர்ய ரசராய்
வாழுகைக்கு பிராப்தி உண்டாய் இருக்கச் செய்தேயும் –அத்தை இழந்து –அசந்நேவ-என்கிறபடியே
அசத் கல்பராய் கிடக்கிற சம்சார சேதனர் உடைய இழவை அனுசந்தித்து -அத்யந்த வியாகுல சித்தனாய் –

இவர்கள் கரண களேபரங்களை இழந்து இறகு ஒடிந்த பஷி போலே கிடக்கிற தசையிலே –
கரணாதிகளைக் கொடுத்து -அவற்றைக் கொண்டு வியபிசரியாதே தன்னை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிகைக்கு உடலாக –
அபுருஷேயமாய்-நித்ய நிர் தோஷமாய் -ஸ்வத பிரமாணமான வேதத்தையும் -தத் உப ப்ரும்ஹணங்களான
ஸ்ம்ருதி இதிகாச புராணங்களையும் ப்ரவர்ப்பித்த இடத்திலும் –

அந்த சாஸ்திர அப்யாசத்துக்கு அநேக யோக்யதை வேண்டுகையாலே –
அவ்வழியாலே ஞானம் பிறந்து சேதனர் உஜ்ஜீவிக்கை அரிதாய் இருக்கிற படியை திரு உள்ளம் பற்றி –
சகல சாஸ்திர தாத்பர்யங்களையும் ஸூக்ரகமாக இவர்கள் அறியலாம் படி பண்ண வேண்டும் என்று
ஸ்வரூப உபாய புருஷார்த்த யாதாத்ம்ய பிரதிபாதகமான
ரகஸ்ய த்ரயத்தையும் ஸ்வயமேவ ஆசார்யனாய் நின்று பிரகாசிப்பித்து அருளினான்-

அதில்
திருமந்த்ரத்தை ஸ்ரீ பதரிகாஸ்ரமத்தில் ஸ்வ அம்ச பூதனான ஸ்ரீ நரன் விஷயமாக பிரகாசிப்பித்தான் –
த்வயத்தை ஸ்ரீ விஷ்ணு லோகத்திலே ஸ்வ மகிஷியான ஸ்ரீ பிராட்டி விஷயமாக பிரகாசிப்பித்தான் –
சரம ஸ்லோகத்தை திருத் தேர் தட்டிலே ஸ்வ ஆஸ்ரீதனான ஸ்ரீ அர்ஜுனன் விஷயமாக பிரகாசிப்பித்தான் –
ஆகையால் இறே
ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் என்று குரு பரம்பராதியிலே ஸ்ரீ ஈஸ்வரனை அனுசந்திக்கிறது –

இனி இந்த ரகஸ்ய த்ரயம் தான் சப்தம் ஸூக்ரமமாய் இருந்ததே ஆகிலும் –
அர்த்தம் உபதேச கம்யம் ஆகையாலும் –
அது அறிந்தே எல்லார்க்கும் உஜ்ஜீவிக்க வேண்டுகையாலும் –
அந்த ரகஸ்ய த்ரயத்திலும் –
பூர்வாச்சார்யர்கள் உடைய உபதேச பரம்பரா ப்ராப்தமான அர்த்த விசேஷங்களை
சர்வருக்கும் ஸூக்ரமாகவும் ஸூவ்யக்தமாகவும் ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் –
தம்முடைய பரம கிருபையாலே -இப்பிரபந்த முகேன அருளிச் செய்கிறார் –

முன்பே ரகஸ்ய த்ரய விஷயமாக மூன்று பிரபந்தம் இட்டு அருளி  இருக்க செய்தேயும் -அதில்
யாத்ருக்சிகப்படி அதி ஸங்க்ரஹம் ஆகையாலும் –
பரந்த படி -அதி விஸ்ருதம் ஆகையாலும் –
ஸ்ரீ யபதிப்படி உபய தோஷம் இன்றிக்கே இருந்ததே ஆகிலும் -சம்ஸ்க்ருத வாக்ய பகுளம் ஆகையாலே –
பெண்ணுக்கும் பேதைக்கும் அதிகரிக்கப் போகாமை யாலும் –

த்ரிவித தோஷம் இல்லாத படி இன்னமும் ஒரு பிரபந்தம் இட வேண்டும் என்று திரு உள்ளம் பற்றி
எல்லா வற்றுக்கும் பின்பு இறே முமுஷுப்படி ஆகிற இப் பிரபந்தம் இட்டு அருளிற்று –

ஆகை இறே அல்லாத பிரபந்தங்கள் கிடக்க -இத்தை எல்லாரும் அதிகரிக்க போருகிறது –
இன்னமும் பூர்வ பிரபந்தங்களில் அனுக்தமான அர்த்த விசேஷங்களும் இப் பிரபந்தத்திலே
உண்டு ஆகையாலும் இதுவே எல்லார்க்கும் ஆதரணீயமாய் இருக்கும் .

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திரு விருத்தம் -42-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –

February 21, 2012

(தலைமகன் கடாக்ஷம் வியந்து தலை மகள் பேசும் பாசுரம்
பொரு மா நீள் படை -1-10-இதன் விவரணம்
எம்பிரான் தட–கமலத் தடம் போல் கண்கள் பொலிந்தன
மேல் கமல வர்ணனை

மென் கால் கமலம் -தானே ஒடிந்து விடும்படி மெல்லிய
அதுக்கும் மேல்
காற்று
அதுவும்
வன் காற்று அறைய
ஒருங்கே சாய்ந்து விட –
ஆனாலும் தாமரைக்கு ஒன்றும் ஆகாமல்
கிடந்தது அலர்ந்த

இதே போல் அவன் திருக்கண்கள்
திருவிக்ரமனின் திருக்கண்கள்
மண்ணும் விண்ணும் எனது காலுக்குள்ளே லேசம் அடங்கி உள்ளதை நீங்களே பாருங்கோள்
என்று சொல்வதை போல்
வான் நிமிர்ந்த -தற் குறிப்பு ஏற்று அணி –

மிதிலா தேச கொடிகள் அசைந்து ராமனை வரவேற்பது போல் -ஒல்லை வா என்று
அழைப்பன போல்வன போல்
அதே போல் இங்கு -நடந்த செயலை -அந்த அளந்த ஹேதுவைச் சொல்லாமல் -இவர் குறிப்பை ஏற்றி
மண்ணும் விண்ணும் -என்றும்
விண்ணும் மண்ணும் என்றும் பாட பேதம் -இது -மோனைக்கு பொருத்தம்
தன் பால் என்றும் தன் கால் என்றும் பாடபேதம்
தன்னிடம் ஈடுபட்டு இருக்கும் ஆழ்வார் என்றபடி –
லோக விக்ராந்த சரணம்
உலகு அளந்த பொன்னடி அடைந்து உய்ந்த ஆழ்வார் )

( எம்பிரானை -தந்தை –தண் தாமரைக் கண்ணன் –
அந்த திருவாய் மொழியில் உண்டே

பொருமா நீள் படை* ஆழி சங்கத்தொடு,*
திருமா நீள் கழல்* ஏழ் உலகும் தொழ,*
ஒரு மாணிக் குறள் ஆகி,* நிமிர்ந்த,* அக்
கரு மாணிக்கம்* என் கண்ணுளது ஆகுமே.

தடம் -தளம் -ளகார டகார பேதம்
பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே —-8–

யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ )

அவதாரிகை –
வாடையின் கீழ் ஜீவிக்கை அரிது -இனி முடியும் அத்தனை -என்று
வார்த்தை சொன்னவாறே குளிர நோக்கினான் –

(ஒருங்கே ஆழ்வாரை மட்டும்
மருங்கே -எங்கும் பார்க்காமல் -பக்க நோக்கு அறியாமல் கடாக்ஷித்தான்
ஸ்வா பதேசம் பெரியவாச்சான் பிள்ளையே இதில் அருளிச் செய்கிறார்

வன் காற்றறைய வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த
மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும்
என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த
தன் பால் பணிந்த என் பால் எம்பிரான் தடக் கண்களே -42-

பாசுரம் -42-வன் காற்று அறைய ஒருங்கே மறிந்து –
தலைவி தலைவன் கண் அழகில் ஈடுபட்டு உரைத்தல் –
பொரு மா நீள் படை -1-10-

பதவுரை

எம் பிரான்–எம்பெருமானுடைய
கட கண்கன்–பெரிய திருக் கண்களானவை (எங்ஙனம் விளங்குகின்றனவென்றால்.)
மண்ணும் விண்ணும்–மண்ணுலகமும் விண்ணுலகமுமாகிய விசாலமான இடமிரண்டும்
என் காற்கு–எனது இரண்டு பாதங்களின் அளவுக்கு
அளவு இன்னும் காண்மின்–இடம் போதாத அற்புதத்தை பாருங்கள்
என்பான் ஒத்து–என்று (அந்தந்த உலகங்களிலுள்ளார்க்குக் கூறி) ஒரு வித்தை காட்டுபவன் போன்று
வான் நிமிர்ந்த–மேலுலகை நோக்கி வளர்ந்த
தன்–தன்னுடைய
கால்–திருவடிகளை
பணிந்த–வணங்கின
என்பால்–என்னிடத்து.
வன் காற்று அறைய–பெருங்காற்று வீசுதலால்
ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த–ஒரு பக்கமாகச் சாய்ந்து கிடந்து மலர்ந்த
மென்கால்–மெல்லிய நாளத்தை யுடைய
கமலம் தடம்போல்–தாமரைத் தடாகம் போல
பொலிந்தன–அழகு மிக்கு விளங்கின-

வியாக்யானம் –

வன் காற்று இத்யாதி –
மென் கால் கமலமாவது –
மிருதுவான காற்றும் கூட பொறாத படியான மெல்லிய தாளை உடைத்தான கமலமாவது –

இதில் வன் காற்றாவது –
அது தான் கண் பாராதே அறைவது –

ஒருங்கே –
ஏகதோ முகமாக

மறிந்து கிடந்து அலர்ந்த –
மற்றை அருகே புரியில் தர்மி லோபம் வரும் என்னும் படி ஆவது

இத்தால்
சம்சாரிகளில் ஒருவன் ஓரடி வாரா நின்றால்
அவன் பக்கல் வைத்த கடாஷத்தை மாறிப்- பெரிய பிராட்டியார் பக்கலிலே வைக்க என்றாலும்
அது தான் அரிது ஆம் படி இருக்கை–

என் பைம் தாமரைக் கண்ணன்
எங்கும் பக்கம் நோக்கு அறியான் -என்ன கடவதிறே-

(ஆறு படிகள்
1-ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் -ஆறு படிகள்
1-ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம்
2-யதிருச்சயா ஸூஹ்ருதம்
3-கடாக்ஷம் இத்யாதி
2-யதிருச்சயா ஸூஹ்ருதம்
3-கடாக்ஷம் இத்யாதி
மென் கால் -ஆபி முக்கியம் கூடப் பொறாத
வன் காற்று பூர்ண பிரபத்தி -முக்கரண
அறைவது ஆர்த்த பிரபத்தி
ஓரடி வாரா நின்றால் -மித்ர பாவனையே போறும் என்று இருப்பவன் அன்றோ )

மென் கால் கமலம் –
ப்ரக்ருத்யா தர்ம சீலஸ்ய-என்ன கடவதிறே –

(இயற்கையிலே தர்ம சீலன் -எல்லார் இடத்திலும்
அப்படி இருக்கும் -ராகவனுக்கும் ருசிகரமான இருந்தது
அந்த ஸ்லோகத்தில் உள்ள பதம் -விவரணம் மேல் )

இதொரு கடல் இடை சுவராய் கடவா நின்றது –
இத்தை கடந்து அவ்வருகு பட்டோமாம் விரகென்-என்று
பெருமாள் முதலிகள் அடைய கேட்க –
ஸ்ரீ விபீஷண ஆழ்வான்
1-தான் அணித்தாக கை கண்ட உபாயம் ஆகையாலும் –
2-சர்வ ஹிதங்களுக்கும் சாதனம் சரணா கதி -என்று அத்யவசித்து இருக்கையாலும் –
3-பல வியாப்தி இதுக்கு உள்ளது ஆகையாலும் –
பெருமாளுக்கு இந்தக் கடலை சரணம் புக அடுக்கும் -என்றான் –

சமுத்ரம் –
பெரியவர்களை வசீகரிக்கும் உபாயம் இது அல்லதில்லை –

ராகவோ ராஜா –
ஒரு குடிப் பிறப்பும் இன்றிக்கே
அளவுடையாரும் அன்றிக்கே இருப்பாருக்கும் இது பலிக்கும் ஆனால்
இவை உடையாருக்கு சொல்லவும் வேணுமோ ?

சரணம் கந்து மர்கதி –
வசிஷ்ட சிஷ்யர் பக்கலில் இது பலிக்கக் கண்ட படியாலே
அறிவில்லாத கடலின்  பக்கலிலும் அது பலிக்கும் என்று இருக்கிறான் –

(அதிகாரி நியமம் இல்லை
கால தேச பிரகார நியதி களும் இல்லை
கேவல விஷய நியதி மட்டும் உள்ளது என்பதை மறந்து பேசினான் )

சாதேவேச்மின் பிரயுஜ்யதாம் –
எருது கெடுத்தாருக்கும் ஏழே கடுக்காய்
(குழந்தை பெறுவதுக்கும் ஏழே கடுக்காய் ) -என்று

(அஹம் அஸ்ய அபராத ஆலய -அகிஞ்சனன் அகதி
த்வமே உபாய பூதா பிரார்த்தனா மதி சரணாகதி
சாதேவேச்மின் பிரயுஜ்யதாம்
சா தேவ தேவனான ஸ்ரீ மானாகிற அவன் இடம் மட்டுமே சொல்லப்பட வேண்டும் )

மென் கால் கமலம் –
காற்று தான் வேண்டா வாயிற்று -தண் காலின் மென்மை-

மித்ர பாவேன-
அவன் பக்கலில் பாவமே அமையும் –
அவனை விடில் என்னை இழக்கும் அத்தனை இறே-
அவன் பக்கல் கிடையாதது ஒன்றை வேணும் என்றால் துராராதானம் இத்தனை இறே –
இவன் பக்கல் பெற்றது கொள்ளும் இத்தனை இறே –
இவனால் செய்ய முடியாதது ஒன்றைச் சொல்லுகை யாவது கை விட நினைத்து சொல்லிற்றாம் இத்தனை இறே –

ஆர்த்தோ வா யதி வா த்ருப்த –
ராகவம் சரணம் கத –
என்ற உக்தி திரு  செவி பட்ட போதே
இவன் நெஞ்சில் தளர்த்தியை திரு உள்ளம் பற்றினார் பெருமாள் –

உக்தியே இவன் பக்கல் உள்ளது –
நினைவு வேறு ஒரு படி -என்று அறிந்த முதலிகள் –
ராம பக்தியால்-
நினைவு ஒன்றாய் செயல் ஒன்றாய் இருக்கிறவன்
வத்யன் -என்றே இருந்தார்கள் –

(அரும்பதம்
சரணாகதி ஸ்லோகம்
காற்றுத்தானும் வேண்டாவாயிற்று தனது காலின் மேன்மை
அவன் ஸுஹார்த்தம் எதுவுமே வெண்டாதே
ஆபி முக்கிய ஸூ சகமான ஆர்த்த ப்ரபத்தியும் வேண்டா
மானஸ பிரபத்தியும் வேண்டா
மித்ரா பாவேந உண்டே
ஆனால் ஆர்த்த பிரபத்தியோ திருப்த பிரபத்தியோ
சரணம் சொன்ன எதிரியாகவோ -பரேஷாவாக – இருக்கட்டும் -துல்ய விகல்பமாக உள்ளதே
ஆர்த்தியாலோ த்ருப்தியாலோ கொடுப்பவன் இல்லையே
பிரபத்தியால் கொடுக்கிறான் என்றபடி
அதிகாரி வேண்டுமே
புருஷனையும் புருஷகாரத்தையும் நோக்கும்
தன்னைப் பார்த்தே கொடுக்கிறான்
இத்தையே மேல் வியாக்யானம் விளக்கும் )

ஆர்த்தன் ஆகையாவது –
இத் தலையை பெறில் ஜீவித்தும்
பெறா விடில் முடியும் படி யுமாய் இருக்கை– 

த்ருப்தன் ஆகையாவது –
நெஞ்சு இன்றிக்கே இருக்கச் செய்தே
நம்முடைய அனுகூல பாஷணங்களை
பிறர் அனுகரிக்குமா போலே
நெஞ்சு இன்றிக்கே இருக்க செருக்காலே சொல்லுகை –

(நாம் திரு நாமங்களைச் சொல்ல -அவற்றை ஆபேஷித்து
கண்ணன் கள்வன் -என்று சொல்லுமவரும் உண்டே
இருவரும் அநு காரத்தோடே சொல்லுகிறார்கள் போல்
திருப்த ப்ரபன்னன் -வாய் வார்த்தையாகச் சொல்லி
ஆர்த்த ப்ரபன்னன்
நாமும் புகல் ஒன்றும் இல்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே –
ஆழ்வாரைப் போலே சொல்லுவது
நெஞ்சு இன்றிக்கே சொல்வது போல் )

(அவனுக்கு உடன் பேறு
இவனுக்கு சரீர அவசானத்தில் பேறு
பலம் வேறுபாடு உண்டே என்னில்
இவன் பெறுவதற்குத் தயாராக இல்லை
ஆகவே பலத்தில் வேறுபாடு இல்லையே
கோவிந்த ஸ்வாமி அனுபவம் பார்த்தோம்
18 நாடான் பெரும் கூட்டம் உண்டே )

ஆர்த்தன் ஆகவுமாம் த்ருப்தன் ஆகவுமாம்-
ஆர்த்யோபாதி த்ருப்திக்கும் பல ஐக்க்யம் உண்டாம் படி
எங்கனே எனில்
இவனைப் பார்க்கும் அன்று இது விசாரிக்க வேணுமே –
சரண்யனுக்கு வேண்டுவது சொல்லுகிறது இறே இதில் –

ஆர்த்தியோபாதி த்ருப்தியும் இதுக்கு பரிகராம்படி (சாதனமாம்) எங்கனே எனில் –
ஆர்த்தி பரிகரமான இடத்தில் –
இதுவும் பல வியாப்தமாகக் கண்டு போருகிறது –
ஆகையாலே
ஆகிஞ்சன்யமே ஆயிற்று அதுக்கு பரிகாரம் –

த்ருப்தனுக்கு –
இதுக்கு பரிகரமான ஆர்த்தியும் கூட இல்லையாய் இருந்தது
இனி நாமே ஆகாதே உள்ளோம் -என்று அதுக்கும்
அவன் இரங்கும் என்று பரிகரமாக தட்டில்லை –

(விபீஷணன் சரணாகதி பெருமாள் திரு உள்ளம் படி ஆர்த்த பிரபத்தி
முதலிகள் திரு உள்ளம் படி திருப்த பிரபத்தி
ஆர்த்தி உள்ள சாதனம் உள்ளவருக்குக் கொடுக்க
அது கூட இல்லாமல் இருந்தால் கொடுப்பத்துக்குச் சொல்ல வேண்டுமே
நீசனேன் நிறை ஒன்றும் இல்லேன் என்பவரைத் தானே பூர்ண கடாக்ஷம் பண்ணி
எங்கும் பக்க நோக்கு அறியாமல் இருந்து மேல் விழுந்து கொள்ளுவானே
இரக்கமே பரிகரம் என்றதாயிற்று -)

பரேஷாம் கத அரி –
சத்ருக்களில் வைத்து கொண்டு சரணாகதனான சத்ரு –
அதாவது –
உக்தி மாத்ரமேயாய் கார்யத்தில் சாத்ரவமே முடிய நடவா நிற்கை –
அன்றிக்கே –
கொன்றேன் பல்லுயிரை -அன்றே வந்து அடைந்தேன் -பெரிய திரு மொழி -1-9-3-
என்னுமா போலே கொன்ற கறை கழுவாதே -வந்து புகுருகை –
(கொத்தின ரத்தத்துடன் வந்த காகாசூரனை -பரமா கிருபையா -கொண்டு ரஷித்தானே )

ப்ராணான் பரித்யஜ்ய ரஷி தவ்ய –
அவர்கள் பக்கலிலே வாசி உண்டாலும் -ரஷிக்கும் இடத்தில் இருவரையும் ஒக்க
பிராணன்களை அழிய மாறி ரஷிக்க படும் –

ப்ராணாநபி பரித்யஜ்ய -என்னாது ஒழிந்தது –
அவன் செய்ததுக்கு பிராணனை அழிய மாறி
ரஷிக்கும் அதுவும் போராது என்று நினைத்து இருந்த படியால் –

(பிராணனை விட்டாவது ரக்ஷிக்க வேண்டாம் என்று இல்லாமல்
பிராணனை விட்டே ரக்ஷிக்க வேண்டும்
இதுவும் அவன் சரணம் என்ற சொன்னதுக்குப் போராது என்று எண்ணு மவன் அன்றோ –
கபோத உபாக்யானம் -புறா கதை -அறிவோமே )

க்ருதாத்மன-
இவனுடைய ரஷணத்துக்கு செய்தது ஓன்று அன்று –
தன்னுடைய ஸ்வரூப சித்திக்காக –
(க்ருதாத்மன திருத்தப்பட்ட மனசை யுடையவன்
ராகவ வம்சம் -தர்மம் தெரிந்தவன் ராகவன் ஆனபடியால் )

ஒருவனோடு ஒன்றை அப்யசித்து சிஷித்தமனவாய் இருக்கும் அவனுக்கு
(வசிஷ்டரால் சிஷை பெற்ற பெருமாள் )
இத்தனை செய்ய வேண்டி வரும் எப்படி பட்டவன் உடைய என்றால் –

(அரும் பதம் –
பிரபத்தி சாதனமாக இருந்தால் பலத்தில் வேறுபாடு கொள்ளலாம்
இது சித்த உபாயம்
அதுக்குத்தக்க பலத்தில் வேறுபாடு இருக்காதே –
அதுக்கு வேண்டிய அதிகாரி விசேஷணமே இவை )

மண்ணும் விண்ணும் இத்யாதி –
பூமந்தரிஷாதி களடைய என்னுடைய காலுக்கு அளவு போராதே இருக்கிற படி பாருங்கோள்
என்பாரைப் போலே ஆயிற்று
ஆகாச அவகாசத்தை அடைய தன் திரு மேனியாலே நிரப்பிற்று-
(ஒண் மிதியில் இத்யாதி )

பரப்பை உடைத்தான பூமியும் ,
எல்லோருக்கும் அவகாச பிரதானம் பண்ணுகிற ஆகாசமும்
என் காலுக்கு அளவு போராது இருக்கிற படியை பாருங்கோள்
என்பாரை போலே யாற்று அளந்து கொண்டது
ஒண் மிதியில் இத்யாதி

நான் அளக்க புகா நின்றேன் –
உங்கள் தலையிலே என் காலை வைக்க புகா நின்றேன் -என்னில்
ந நமேயம்-என்று ஒட்டோம்-என்று
ஆணை இடுவார்கள் இறே –
அதுக்காக
இது ஓர் ஆஸ்ர்யம் பாருங்கோள் -என்பாரைப் போலே ஆயிற்று அளந்தது –

இப்போ தத் அபதானத்தை சொல்ல வேண்டுவான் என் என்னில் –
இத் தலையில் அபிமுக்யம்  இன்றிக்கே இருக்க –
தானே அவதரித்து வந்து மேல் விழுந்து எல்லார் தலையிலும் திரு அடிகளை வைக்கும் அவன் இறே
இவர்கள் பேற்றுக்கு தான் கிருஷி பண்ணுமவன் ஆயிற்று –

(நான் ஒட்டுவேன் என்னுள் இருத்துவன் என்று இல்லாமல் வெட்டிக் கொண்டு
போனாலும் விடாமல் தலையிலே தனது திருவடி வைப்பவன் )

இத்தால் –
மென் கால் கமலம் -என்றதை நினைக்கிறது

வான் நிமிர்ந்த தன் பால் பணிந்த என் பால் –
இத்தால் இந்த அனுகூல்யத்துக்கு அடியான மூல ஸூஹ்ருதமும் தானே என்கிறது
தான் முற்பட வணங்கி
பின்னை இத் தலையை வணங்குவித்தான் –
முற் தீமை (முயற்சி)செய்தான் தானே என்கை–

(திருக் கமல பாதம் வந்து -பின் அரைச் சிவந்த ஆடை மேல் சென்றது சிந்தை )

தான் முற்பட்டு இவனை அனுகூலிக்கும் படி பண்ணி
பின்னை-நீ அனுகூலித்தாய் -என்று
இவன் தலையிலே ஏறிட்டு  இரங்கும் அவன் ஆயிற்று –

தன் பால் பணிந்த -என்கையாலே –
வன் காற்று அறைய-என்கிறதை நினைக்கிறது –

என் பால் -என்கையாலே –
ஒருங்கே மருந்து கிடந்து  அலர்ந்த -என்றதை நினைக்கிறது

எம் பிரான் தடம் கண்களே –
இவன் பேற்றுக்கு தான் வருந்தினான் ஆயிராதே –

இத்தால்
பேறு தன்னது என்று தோற்றும் படி ஆயிற்று
திரு கண்களில் விகாசம்-

(மென் கால் கமலம் என்றது –
ஆபி முக்ய ஸூசகமான மானஸ ப்ரபத்தியையும் பொறாத அவனுடைய
ஸுவ்ஹார்த்தம்–ஸூஹ்ருத் பாவம்
வன் காற்று -பூர்ண பிரபத்தி
அறைகை –ஆர்த்த பிரபத்தி )

தாத்பர்யம்
இப்படி ஆர்த்தரான தன் படியைக் கண்டு
பூர்ண கடாக்ஷம் பண்ணி அருளிய படியை
நாயகி பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
திருவிக்ரம அபதானத்தில் -சகல லோகங்களையும் திருவடிக் கீழ் இட்டுக்கொண்ட அவன்
திருவடிகளில் சரணம் புகுந்த எனது விஷயத்தில்
திரு உள்ளத்தால் கிருபை உந்த
கடாக்ஷம் –
ஸூஹ்ருதம் –
ஸுஹார்த்தம்
இவற்றுள் எது முன்னால் என்று சொல்ல முடியாதே
அவ் வழியாலே வந்து என் மேல் வில் விழுந்து என்னைக் கடாக்ஷித்து
விஷயீ கரித்த குளிர்ந்த அழகிய திருக்கண்கள்
மெல்லிய கொடியில் பூத்த தாமரை தடாகம் போல் திருக்கண்கள் தோன்றுகின்றன என்கிறார் –

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திரு விருத்தம் -41-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –

February 14, 2012

(இரவு நலிய கீழ்
மேலும் வாடைக்காற்று நலிகிறது இதில்
புன் வாடை – மந்த மாருதம்
வாடைக்கு வருந்தின தலை மகள் வார்த்தை
அருள் அருளாத–தனது கருணையால் என்னை வந்து காத்தருளாத
அருள் உண்டு
இன்று எனக்கு அருளவில்லை
இதுக்கு என் பேரிலும் அவன் பேரிலும் பழி சொல்லுகிறார்களே
திக்கு எட்டும் பரவும் படி காற்றின் கைங்கர்யம் –
நீராகி கேட்டவர்கள் நெஞ்சு அழிய மாலுக்கும் ஏரார் விசும்பில்
இருப்பு அரிதாம் படி கதறுகிறார் இதில் – )

அவதாரிகை-
எம்மை நோக்குவது என்று கொலோ -என்று
எமக்கு ரஷகர் ஆவார் யாரோ என்று இருந்த இவளுக்கு
ஒரு காற்று வந்து ரஷிக்கிறபடி –என்று
சத் ஆகாரமாகிய இவை பாதகம் ஆகிற படி-

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் ஓங்கு அசுரர்
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்
மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே–41-

பாசுரம் -41-என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் –
வாடைக்கு வருந்திய தலைவி வார்த்தை –
நீராய் நிலனாய் -6-9-

பதவுரை

என்றும்–எப்பொழுதும்
புன்–கொடுமை செய்கிற
வாடை இது–இந்த வாடையை
கண்டு அறிதும்–கண்டறிவோம்!
இவ்வாறு வெம்மை உருவம்–இப்படிப்பட்ட (வாடையினுடைய) வெப்பத்தின் தன்மையையும்
சுவடும்–குறிப்பையும்-பிரகாரத்தையும்
ஒன்றும்–ஒருவிதத்தாலும்
தெரியிலம்–அறிகின்றிலோம்;
ஓங்கு அசுரர்–வலிமையாற் கிளர்கின்ற அசுரர்கள்
பொன்றும் வகை–அழியும்படி
புள்ளை–கருடப் பறவையை
ஊர்வான்–ஏறி நடத்துகிற எம்பெருமான்
அருள் அருளாத–தனது கருணையால் என்னை வந்து காத்தருளாத
இ நாள்–இக் காலத்திலே
வன் காற்று–வலிய வாடையானது
என்னை–என்னை
மன்றில் நிறை பழி–வெளியிலே பரவி நிறைகிற பழிப்பை
தூற்றி–அயலாரை விட்டுத் தூற்றுவித்து
நின்று அடும்–அப்பாற் போகாமல் நிலை நின்று அழிக்கினறது

வியாக்யானம்-
என்றும் புன் வாடை இது கண்டு அறிதும்
சிறை கூடத்தில் பிறந்து வளர்ந்தாரை போலே காற்றுக்கு உடல் கொடுத்து போந்த படி –

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூராழி வெண் சங்கு ஏந்திக் கொடியேன் பால்
வாராய் ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே –6-9-1-

ஞாலத்தூடே நடந்து நின்றும் கிடந்தும் இருந்தும்
சாலப் பல நாள் உகம் தோறும் உயிர்கள்காப்பானே
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ -6-9-3-

புன் வாடை –
மந்த மாருதம்

இது கண்டு அறிதும் –
இப்படி ஒத்தது ஓன்று கண்டு அறியோம் –

போந்ததை  இது என்று சொல்வான் என் எனில்
சர்வதா சாத்ருச்யம் உண்டாய் இருக்கும் அவை எல்லாவற்றிலும்
தத் தத் வியவகார யோக்யதையும் உண்டாகையாலே —
ஜாதியை சொன்ன அத்தனை ஒழிய
வியக்தியை சொல்லிற்று அன்று –
பிரிவாற்றாமை ஒன்றையே அதிகப்  படுத்தும் ஜாதி

(இது என்று படுத்தும் ஸ்வ பாவம் -ஜாதி
வாடை என்று இந்த வியக்தி )

இவ்வாறு வெம்மை ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம்  –
இப்படி பட்ட வெவ்விய ஸ்வாபத்தை உடைத்ததாய் இருப்பது ஒன்றும் காண்கிறிலோம்   —

ஓங்கு அசுரர் பொன்றும் வகை புள்ளை ஊர்வான் –
பிரிவாற்றாமை மெலிந்து இருக்கிறவர்கள் அன்றியிலே
சேஷ பூதராய் ஒசிந்து இருக்கிறவர்கள் அன்றியிலே –

(ஓசித்த நுண்ணிடை இடவாய்ச்சியார் அல்லவே
ஊண் மல்கி -அஹங்காரத்தால் உடல் பெருத்து இருப்பார்களே )

ம மேதம் என்று ரஜஸ் தமஸ்ஸூக்களால் பிரசுரமான வடிவை உடையவராய் இருக்கிற அசுரர்
பொன்றும் படி பெரிய திரு அடியை நடத்துகிற சர்வேஸ்வரனுடைய அருள் மறுத்த இந்நாள் –
திரு அடி உடைய திருக் குளம்பால் அசுரரைத் துகைத்தாரைப் போலே
இவ் வாடையும் துகைக்கக் காணும் நினைக்கிறது

அருள் அருளாத இந்நாள்
தாய் முலைப் பால் மறுத்த இந்நாள்– 

மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே-
இவள் அங்கே பெருகைக்கு அன்றியிலே – பழி சுமைக்குக்கு உருப்பாயிற்று .
லோகம் அடங்க -ஒருத்தி-(பெருமானைப்) பிரிந்த அளவிலே ஒரு காற்றுக்கு யீடு பட்டு துடிப்பதே -என்று
பழி சொல்லும் படி ஆயிற்று –

நிறை பழி –
தன் அளவிலே அன்றியிலே
இவள் காற்றிலே ஈடு பட (அவன்)வாராது ஒழிவதே -என்று
நாயகனுக்கும் பழி ஆன படி –
காற்று எங்கும் பரவி -அவனுக்கும் பழி வரும் படி செய்வதால் தூற்றுகிறாள்

நின்று எம்மை வன் காற்று அடுமே –
ஒரு கால் நலிந்து போகிறது இல்லை –

எம்மை-
இக் காற்றுக்கு தடவிப் பிடிக்க வேண்டும் படி ஆஸ்ரயம் காண ஒண்ணாத என்னை –
வலிதான காற்று சத்தையை முடியா நின்றது –

வன் காற்று –
நீர்மை கலவாத காற்று

அடுமே –
ஸ்திரீ வதமே என்று பார்க்கிறது இல்லை-

ஸ்வாபதேசம்
இத்தால்
நெடு நாள் பொருந்திப் போந்த சம்சாரம் தானே
பகவத் ப்ராவண்யம் உறைக்க உறைக்க
இதில் பொருந்தாத படியான நிலை பிறந்த படி சொல்லுகிறது –

தாத்பர்யம்
பகவத் விஸ்லேஷம் பிறந்த தமக்கு
சம்சாரம் அஸஹ்யமாம் படியைச் சொல்லி வாடையில் அகப்பட்ட நாயகி வார்த்தையால் அருளிச் செய்கிறார்
ஓ ஸஹியே
நான் நாயகனைப் பிரிந்து பிரிவாற்றாமையால் வருந்த வாடைக் காற்று நலி வதை
முன்பே நெடும்காலமாக அறிவேனாகிலும்
இப்பொழுது கருட வாஹனான -பரம காருணிகனுடைய அனுக்ரஹத்துக்கும் கூட விஷய பூதர் ஆகாமல் இருக்க
அவன் இடத்தில் அன்பு -ப்ரேமம் உள்ள என் மேல் வீசி நலிகிறதே
இதனால் ஊரெல்லாம் நாயகனையும் கூட பழிக்கும் படி நலிய
இப்போது தான் இதன் கொடுமையான ஸ்வபாவம் அறிந்தேன்
இது அதி அஸஹ்யமாய் உள்ளதே

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திரு விருத்தம் -40-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –

February 14, 2012

(நோற்ற நோன்பு -ஆராவமுது -மானேய் நோக்கு -திருவல்ல வாழ் -மூன்றும் அர்ச்சையிலே சரணாகதி –
அடுத்து பிறந்தவாறும் -அவதாரத்தில் சரணாகதி

இருள் கண்டு இரங்கிய தலைமகள் வரவை விருப்பி உரைத்தல்
உற்றார் விரைந்து கூட்டி வருவது எப்போது என்று உரைத்தல்
இரவு விசன பாசுரம் இது என்றுமாம்
ஸூர்யன் அஸ்தமனம் -கல்லில் மலையிலே சேர -இரவுப்பொழுது புகுந்து -எங்கும் சூழ்ந்து
ஞாலம் மணாளன் -பொன் தேவி மணாளன் -சாத்தி அருளும் திருத்துழாயை சூட்டி என்னை ரஷிப்பது எப்போதோ

காண்பது எஞ்ஞான்று கொலோ ? வினையேன் கனி வாய் மடவீர் !
பாண் குரல் வண்டினொடு பசும் தென்றலும் ஆகி எங்கும்
சேன் சினை யோங்கு அமரச் செலும் கானல் திரு வல்ல வாழ்
மாண் குரல் கோல பிரான் மலர் தாமரை பாதங்களே –5-9-6

பாதங்கள் மேல் அணி பூத் தொழக் கூடும் கொல் ? பாவை நல்லீர் !
ஓத நெடும் தடத்துள் உயர் தாமரை செம் கழுநீர்
மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் திரு வல்ல வாழ்
நாதன் இன் ஞாலம் உண்ட நம்பிரான் தன்னை நாள் தொறுமே–5-9-7

சரணாகதி கூடச் சேர்ந்து அதில்
பாசுரம் தோறும் திருவடி பிரஸ்தாபம் உண்டே அதில் )

அவதாரிகை-
சர்வாதிகனை கவி பாடின இவளுக்கு ஒரு பகலை கவி பாடும்படி பிறந்த
தசையை சொல்லுகிறது-

(ஏற்கும் புகழ் -அவனுக்குத் தக்க தெய்வக்கவி ஏற்கும் பாடல் அருளியவர் அன்றோ )

கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய குழாம் விரிந்த
நீல கங்குல் களிறு எல்லாம்  நிறைந்தன நேரிழையீர்
ஞால பொன் மாதின் மணாளன் துழாய் நாங்கள் குழல் சூழற்க்கே
ஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று கொலோ -40-

பாசுரம் -40-கோலப் பகல் களிறு ஓன்று கல் புய்ய குழாம் –
இருள் கண்ட தலைவி தோழியிடம் திருமண விருப்பம் கூறுதல் –
மானேய் நோக்கு -5-9-

பதவுரை

கோலம்–அலங்காரத்தை யுடைய
பகல்–ஸூர்யனாகிய
களிறு ஒன்று–ஒப்பில்லாததொரு யானை
கல் புய்ய–அஸ்தமன பர்வதத்தில் மறைய,
குழாம் விரிந்த–திரளாகப் பரந்த
நீலம்–நீலநிறத்தையுடை
கங்குல்–இரவாகிய
களிறு எல்லாம்–யானைகளெல்லாம்
நிறைந்தன–அடைவே எதிரில் வந்து சேர்ந்தன.
நேர் இழையீர்–தகுதியான ஆபரணங்களை யுடையவர்களே!
ஞாலம்–பூ தேவிக்கும்
பொன் மாதின்–ஸ்ரீ தேவிக்கும்
மணாளன்–நாயகனான எம்பெருமான்
துழாய்–(தனது) திருத்துழாய் மாலையை
நங்கள் சூழ் சூழற்கே–எமது அடர்ந்த தலை மயிரிலே
ஏல புனைந்து–தகுதியாகச் சூட்ட
என்னைமார்–எமது தாய்மார்
எம்மை நோக்குவது–என்னைப் பார்ப்பது
என்று கொலோ–என்றைக்கோ?

வியாக்யானம்-

கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய-
தர்சநீயமாய்
அத்வதீயமான பகல் களிறு கல்லிலே சேர –
அச்தமய பர்வதத்தே புக –

தர்சநீயமான பகல் என்பான் என் என்னில் –
இந்திரியங்கள் தனி தனியே ஸ்வ விஷயங்களை கிரகிக்கையாலே
தரித்து இருக்கலாம் –

குழாம் விரிந்த இத்யாதி-
ராஜாக்கள் போக பள்ளிகள் வந்து புகுருமா போலே –
ஆதித்யன் அஸ்தமித்தவாறே –
ராத்ரியானது-குழாம்  குழாமாக வந்து விஸ்ருதமான படி –

இந்திரியங்கள் எல்லாமொக்க உபத்ரதமாய் ஏக விஷயத்தையே காணும் ஆகையாலே
அலாப தசையில் ராத்திரி பாதகம் ஆகிற படி-

நீல கங்குல் இத்யாதி –
கறுத்த ராத்ரியானது களிறுகள் எல்லாம் கையுமணியும் வகுத்தன –

ராத்ரியை பஹு வசனமாக சொல்லுவான் என் என்னில் –
கல்பங்கள்
ஊழிகள் என்னுமா போலே

நேரிழையீர்
இவ்வாணை காலிலே துகை உண்கைக்கு நான் ஓர் அபலை இறே-
ஊரார் இவளை தரிப்பிக்கைக்காக தாங்கள் ஒப்பனையோடு இருப்பார்கள் இறே-

ஞானப் பொன் மாதின் மணாளன்
அவன் தனி இருந்தது அன்று கிடீர் நான் இந்நோவு படுகிறது –
ஸ்லாக்கியமான ஸ்ரீ பூமிப் பிராட்டியும் தானும் கூட இருக்கிற இருப்பிலே –
நிதி உடையார்-எல்லா விநியோகமும் கொள்ளுகிறோம் என்று அஞ்சாது இருக்குமா போலே
இவளுக்கும்-
இவள் உண்டு என்று சொல்லி
அஞ்சாது இருக்கலாய் இறே இருப்பது –

(கோலத் திருமா மளோடு கூடி சாலப் பலகால் உயிர்கள் உகந்து காப்பவன் அன்றோ
அவளும் நின் ஆகத்தின் இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாதவள் அன்றோ )

மாதின் மணாளன் –
இவளுடைய போக்யதையாலே பிச்சேறி இறே இருப்பது –
இவள் பக்கலில் இவனுக்கு உண்டான வியாமோகம் இத்தனையும்
தனக்கு உறுப்பு என்று இருக்கிறாள் –
(அல்லி மலர் மகள் போக மயக்குகள் -அம்மான் )

துழாய் இத்யாதி –
அவனுடைய பிரமச்சரியத்தே சூடின மாலை அன்றிக்கே –
அவனும் அவளுமாக துகைத்த மாலையை ஆசை படுகிறாள் –

ராஜ குமரன் புழுகு  நெய்யிலே பூவை தோய்த்து சூடுமா போலே-
இவன் தான் –
சர்வ கந்த சர்வ ரச தத்வம் இறே –
வாசம் செய் பூம் குழலாள் -திருவாய்மொழி -10-10-2-என்று
அங்குத்தைக்கும் வாசம் கொடுக்கும் படி இறே இவள் இருப்பது –
அப்படி பட்ட மிதுனமாய் இருக்கும் இருப்பிலே சூடி துகைத்தைதை இறே
இவள் ஆசை படுகிறது –

நாங்கள் சூழ் குழற்கே  ஏலப் புனைந்து –
பின்னையும் பரிகாரம் இது அல்லது இறே

ஏல-
ஏற்க்கவே –
அத்தை சத்தை அழிவதற்கு முன்னே புனைந்து –
(இது தான் இவளுக்கும் ஏற்கும் என்றபடி )

என்னைமார் –
விலக்கும் தாய் மாரை இட்டு இறே பரிகாரம் தேடுகிறது –
வழி அடிகாரரை தண்ணீர் வேண்டுமா போலே –

எம்மை நோக்குவது என்று கொலோ –
இப்படி நமக்கு ரஷை பெறுவது என்றோ-

தாத்பர்யம்
கீழே அவன் அழகை மாநசமாக அனுபவித்த ஆழ்வார்
பின்பு அந்த அழகைப் பிரத்யக்ஷமாகப் பார்த்து அனுபவிக்க மாட்டாமல்
அதுவும் தளர்ந்து
அருகில் உள்ள பாகவதர்கள் எப்பொழுது சேர்ப்பார்களோ
என்று வினவும் பாசுரம்
நாயகன் உடன் சேர வேண்டும் என்னும் நாயகியின் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
பிரசாதம் நாம் உள்ள இடத்திலே கிட்டும்
நம்மைக் கொண்டு போய் எப்போது திருவடியில் சேர்ப்பார்களோ என்கிறார்
ஓ சகிகளே
என்னைத் தேற்றுகைக்காக நீங்கள் அலங்கரித்து வந்தீர்கள்
இதனால் நான் தேறவில்லை
ஆஸ்வாசகரமான பகலும் அஸ்தமித்து
எங்கும் இரவாக அநேக வடிவம் கொண்டு நலியத் தொடங்கிற்று
இப்பொழுது எனது பிராணன் தரிக்கும் படி
ஸ்ரீ பூமி வல்லபன் திருத் துழாய் சூட்டி அவன்
திருவடிகளில் எப்பொழுது சேர்ப்பார்களோ என்கிறார்

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்